Jeyamohan's Blog, page 89
May 26, 2025
சூட்சுமபுரீஸ்வரர் கோயில்
[image error]கிழக்கு நோக்கிய இந்தக் கோவிலின் ராஜகோபுரம் மூன்று அடுக்குகளைக் கொண்டது. இக்கோயிலில் கொடிமரம் (த்வஜஸ்தம்பம்) இல்லை. இக்கோயிலில் உள்ள சிவபெருமான் தெய்வீக (திவ்ய) லிங்கம். லிங்கம் மண்ணால் ஆனது என்பதால் ஆவுடைக்கு மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. லிங்கத்தின் மீது எப்போதாவது ஒருமுறை புனுகு மட்டும் பூசப்படும்
சூட்சுமபுரீஸ்வரர் கோயில்
காவியம் – 36
கானபூதி சொன்னது. ஊர்வசி பாட்னாவுக்கு வந்து சில நாட்களுக்குள் அவளுக்குக் குரல்கள் கேட்கத் தொடங்கின. அவளுடைய வலதுசெவியில் ஒரு பெண்குரல் ”உன்னை விடமாட்டேன். நீ என்னைப் போல் சீரழிந்து தெருவில் இறப்பாய். அது வரை நான் அடங்கமாட்டேன்” என்றது. அவள் திடுக்கிட்டு திரும்பிப் பார்க்கும்போது மெல்லிய சிரிப்பொலியுடன் இன்னொரு இளங்குரல் இன்னொரு செவியில் ”நீ எங்களைப் போலவே சாகப்போகிறாய் நாங்கள் உன்னை விடப்போவதில்லை” என்றது.
“யார்? யார்?” என்று அவள் அஞ்சி திரும்பித் திரும்பி கேட்பாள். அந்தக் குரல்கள் தன் தலைக்குள்ளிருந்து கேட்கின்றனவா என்று எண்ணினால் தலைக்குள் இருந்து கேட்பது போலிருக்கும். அருகிருக்கும் அறைக்குள் இருந்து எவரோ ஒளிந்து நின்று தன்னிடம் பேசுகிறார்கள் என்று எண்ணினால் அது உண்மை என்றே தோன்றும்.
அவள் திரும்பத் திரும்ப தன் அருகிலிருக்கும் அறைகளை சட்டென்று கதவைத்திறந்து உள்ளே பார்த்தாள். சிறு சிறு பெட்டிகளைத் திறந்து பார்த்தாள். ஒவ்வொரு முறையும் கதவுக்குப் பின்னால் யாரோ இருக்கிறார்கள் அல்லது திரைக்குப் பின்னால் யாரோ இருக்கிறார்கள் என்று எண்ணி தேடினாள்.
தொடக்கத்தில் கொஞ்சம் விசித்திரமாக இருந்த அவளுடைய அந்த நடத்தை கொஞ்சம் கொஞ்சமாக விபரீதமாக ஆவதாக ருக்மிணி தேஷ்பாண்டே நினைத்தாள். “என்ன பார்க்கிறாய்?” என்றாள்.
“இல்லை, ஏதோ சத்தம் கேட்டது” என்று அவள் சொன்னாள். “யாரோ பேசுகிறார்கள்”
“இந்த வீட்டில் எதிரொலிகள் நிறைய இருக்கின்றன. ஒரு காலத்தில் இங்கே நிறைய பொருட்கள் இருந்தன. பொருட்கள் இல்லாமல் ஆகும்போது எதிரொலி கேட்கிறது” என்று ருக்மிணி தேஷ்பாண்டே சொன்னாள்.
ஊர்வசி அந்தக் குரல்களை மேலும் மேலும் துல்லியமாகக் கேட்கத்தொடங்கினாள். ”ஏற்கனவே நீ கருவுற்ற உன்னுடைய குழந்தைகளைக் கொன்றது நாங்கள்தான். உன் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் கொல்வோம். அதகாகத்தான் இங்கு வந்திருக்கிறோம்” என்று அந்தக் குரல் சொன்னது.
இன்னொரு பெண் குரல் “நீ மீண்டும் மீண்டும் கருவுறுவாய். உன்னுடைய எல்லாக் குழந்தைகளையும் நாங்கள் கொல்வோம்” என்றது.
முதற்குரல் “விடவே மாட்டோம்… எங்களை பல ஜாதிக்காரர்கள் புணர்ந்தார்கள். எங்கள் ரத்தத்தைச் சாக்கடையாக்கினார்கள்… நாங்கள் விட மாட்டோம்” என்றது. “நாங்கள் உன் குலத்தையே அழிப்போம்”
“நீயும் பலசாதிச் சாக்கடைகள் கலந்து தெருவில் அழியவேண்டும்… அதுவரை உன்னை விடமாட்டோம்”
அந்தக் குரல்கள் மாறிமாறி இடைவெளியே இல்லாமல் பேசின. அவள் ஒரு கணம் சொந்தமாக யோசிக்க அவை இடம் அளிக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவை அவளை தொட்டுத்தொட்டு அழைத்துப் பேசத்தொடங்கின. படுக்கவோ உட்காரவோ முடியவில்லை. நடந்துகொண்டும் எதையேனும் செய்துகொண்டும் இருந்தால் அவற்றை சமாளிக்க முடிந்தது.
ஒரு நாள் தனக்கு பைத்தியம் பிடிக்கவிருக்கிறது என்னும் எண்ணம் அவளுக்கு தோன்றியது. இது பைத்தியமேதான். பைத்தியங்களுக்குத்தான் குரல்கள் கேட்கும் என அவள் அறிந்திருந்தாள்.
அவள் மனம் உடைந்து இருண்ட மூலையில் அமர்ந்து குமுறி அழுதாள். அவள் அழுவதை வேலைக்காரர்கள் பார்த்துவிட்டு ருக்மிணியிடம் சொன்னார்கள்.
ருக்மிணி அவளிடம் திரும்பத் திரும்பக் கேட்டாள் ”என்ன நிகழ்கிறது? ஏன் அழுகிறாய்?”
பலமுறை கேட்டபின், அதட்டி வற்புறுத்தப்பட்டபோது ஊர்வசி தன் காதில் கேட்கும் குரல்களைப்பற்றி சொன்னாள்.
“அது குரல்கள் அல்ல, நீயே கற்பனை செய்துகொள்வதுதான். பெண்களுக்கு நான்கு ஐந்து மாதம் கர்ப்பம் இருக்கும்போது அந்த மாதிரியான சில பிரமைகள் உருவாகும். இந்த சமையலறையில் யாராவது பேசினால் காற்றில் அந்தக்குரல் மிதந்து போய் அறைகளின் சுவர்களில் எதிரொலித்து, சம்பந்தமில்லாத இடங்களில் இருந்து கேட்கும். எனக்கே சில நேரங்களில் பேச்சொலிகளும் சிரிப்பொலிகளும் கேட்பதுண்டு. ஆனால் அவையெல்லாம் எதிரொலிகள் என்று எனக்குத் தெரிந்தபிறகு அது எனக்கு பொருட்டாக இருப்பதில்லை” என்று ருக்மிணி சொன்னாள்.
“இல்லை. இது வேறு… தெளிவாக என் பக்கத்தில் வந்து சொல்கிறார்கள், சிரிக்கிறார்கள். இந்தக்குரல்களை இதுவரை நான் கேட்டதே இல்லை” என்று அவள் சொன்னாள்.
“நீ கடவுளைக் கும்பிடு. கர்ப்பிணிப்பெண்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள் கங்கைக்கரையில் உள்ளன நான் கூட்டிச்செல்கிறேன்” என்று ருக்மிணி சொன்னாள்.
கங்கைக்கரையில் அமைந்த வெவ்வேறு பெண் தெய்வங்களின் ஆலயங்களுக்கு அவள் ஊர்வசியைக் கூட்டிச்சென்றாள். இரு கால்களையும் விரித்து பிறப்புறுப்பை அகலத்திறந்து படுத்திருக்கும் லஜ்ஜாகௌரியின் சிறு கோயிலில் குங்குமத்தை அள்ளி அப்பிறப்புறுப்பில் போட்டு வணங்கி தன் நெற்றியில் போட்டுக்கொண்டு திரும்பி வந்தாள். மண்டையோட்டு மாலையணிந்து கையில் ஆயுதங்களுடன் நிற்கும் அகோர காலபைரவனின் முன்னால் நின்று வணங்கி வந்தார்கள்.
ஒவ்வொரு முறையும் கோவில்களுக்குச் சென்று வரும்போதும் அனைத்தும் சரியாகிவிட்டதென்றும், முற்றிலும் விடுபட்டு விட்டாள் என்றும் ஊர்வசி நினைத்தாள். கோவில்களில் நிற்கும்போது அந்தக்குரல்கள் கேட்கவில்லை. முற்றிலும் அவளுடைய உள்ளம் அவளுடையதாகவே இருந்தது. அப்போது அவள் அதுவரை கேட்டதெல்லாம் வெறும் பிரமைகள் என்றும், அவற்றை மிக எளிதாகக் கடந்துவிட முடியும் என்றும் அவள் நினைத்தாள். இவ்வளவு எளிமையான விஷயங்களுக்காகவா இத்தனை சோர்வுற்றோம் என்றும் எண்ணிக்கொண்டாள்.
ஆனால் திரும்ப வரும்போது ஒவ்வொன்றும் வேறொன்றாயின. வீட்டை நெருங்க நெருங்க ஏதோ நிகழப் போகிறது என்று பதற்றம் பிடித்துக்கொள்ளும். காரிலேயே நெளிந்து நெளிந்து அலைய ஆரம்பிப்பாள். சன்னல் வழியாக வெளியே பார்த்து ஒவ்வொன்றாக தேடிக்கொண்டிருப்பாள். திடீரென்று எதிர்பாராத ஒரு தலை திரும்பி அவளை ஒருகணம் கண்ணுக்குக் கண் பார்த்துவிட்டு செல்லும். அம்முகத்திலிருந்த வெறிப்பும் சிரிப்பும் அவளை திடுக்கிடச்செய்து மூச்சொலியுடன் அலறச்செய்யும்.
“என்ன? என்ன?” என்று ருக்மிணி கேட்பாள்.
”யாரோ பார்க்கிறார்கள் என்னைப் பார்க்கிறார்கள்”
”எல்லாம் உன் பிரமை. பேசாமலிரு .காலபைரவனை நினைத்துக்கொள். லஜ்ஜா கௌரியை நினைத்துக்கொள்” என்று ருக்மிணி சொல்வாள்.
மீண்டும் சன்னல் வழியாக அவள் வெளியே பார்ப்பதைப் பார்த்து ”நீ வெளியே பார்க்காதே” என்பாள்.
அவள் வெளியே பார்க்காமல் கண்களை மூடிக்கொண்டே வருவாள். அதுவரை பார்த்த காட்சிகள் கண்களுக்குள் ஓட அதிலிருந்து ஒரு முகம் திரும்பி அவளை கண்ணோடு கண் பார்த்து , அந்த வெறித்த சிரிப்புடன் அணுகி வரும். திடுக்கிட்டு அலறி அவள் எழுந்து அமர்வாள்.
“எப்படியாவது இதைக் கடந்து விடு. இன்னும் சில மாதங்கள் தான். நீ குழந்தை பெற்றுவிடுவாய். அதோடு எல்லாம் சரியாகிவிடும். இது ஒரு பேற்றுக்கால மனச்சிக்கல்தான்” என்றே ருக்மிணி அவளுக்கு ஆறுதல் சொல்வாள். ”எனக்கும் இந்த மாதிரியான ஏராளமான மனப்பிரமைகள் இருந்தன. இது ஒன்றும் பிரச்னையே இல்லை. அமைதியாக இரு அமைதியாக இரு”
வீட்டை நெருங்கி படிகளில் ஏறும்போது அவள் உள்ளம் படபடத்துக் கொண்டிருக்கும். எங்கோ ஓர் இடத்திலிருந்து ஒரு கேள்வி வரப்போகிறது. சிரிப்பொலி கேட்கப்போகிறது. எப்போது? எங்கு? அறைகளுக்குள் நடப்பாள். ஆடைகளைக் களைந்து மாற்றாடைகளை அணிவாள். முகத்தையும் கைகால்களையும் கழுவிக்கொண்டு அமர்ந்து டீ குடிப்பாள். கண்ணாடியில் பார்த்து தலை வகிட்டை சரி செய்து கொள்வாள். படுக்கை விரிப்பை சரி செய்து, தலையணையை சாய்த்து வைத்து, சரிந்து அமர முயல்வாள். ஒவ்வொன்றிலும் அவள் கவனம் எப்போது அந்தக் குரல் கேட்கத்தொடங்கும் என்பதிலேயே இருக்கும். முற்றிலும் அது கேட்காதோ என்ற எண்ணம் கூட வரும். அகன்றுவிட்டதா, மெய்யாகவே அகன்றுவிட்டதா காலபைரவனின் ஆற்றல் அவளைக் காத்துவிட்டதா?
“எப்படிக்காக்க முடியும்?” என்று அவள் காதருகே ஒரு குரல் எக்களித்தது. ”நாங்கள் உன்னுடனேயே தான் இருக்கிறோம். உன் குழந்தைகளுடன்தான் செல்லப்போகிறோம்.”
“நாங்கள் உன்னை விடவே போவதில்லை. எங்களை நீ விலக்கவே முடியாது. ஏனென்றால் நாங்கள் உன் சாபத்தை வரமாக வாங்கி வந்திருப்பவர்கள்”
அவள் இருகாதுகளையும் கைகளால் பொத்திக்கொண்டு வீறிட்டு அலறி அறையைவிட்டு வெளியே ஓடி அதே விசையில் கூடத்தில் விழுந்தாள். வேலைக்காரர்களும் ருக்மணியும் தேடி ஓடிவந்து அவளைத்தூக்கி உட்கார வைத்து அவள் முகத்தில் நீர் தெளித்தார்கள்.
அவள் வெறியுடன் ”என்னை விடமாட்டார்கள்! என்னைவிட மாட்டார்கள்! இந்தப் பேய்கள் என் குழந்தையை கொன்றுவிட்டுத்தான் அடங்குவார்கள்” என்று கதறினாள்.
அதன்பிறகு ருக்மிணி அவளை மருத்துவர்களிடம் கூட்டிச் செல்லத்தொடங்கினாள். மருத்துவர்கள் அவளுக்கு மெல்லிய உளச்சிதைவின் தொடக்கம் இருப்பதை சொன்னார்கள். ருக்மிணியிடம் “தொடக்கம்தான். மாத்திரைகள் தருகிறோம்” என்றனர்.
ஊர்வசியிடம் “ஒரு சிறு மரப்பிரமை. சரியாகிவிடும். மாத்திரைகளைச் சாப்பிடுங்கள்” என்றார்கள்.
அவள் ”மிகத்தெளிவான குரல்கள். மிக வலுவான குரல்கள்… அவை விடாப்பிடியாக காதில் கேட்கின்றன. நான் சற்றும் எண்ணியிராத விஷயங்களை சொல்கின்றன. வெறும் பிரமையல்ல. மெய்யாகவே குரல்கள் கேட்கின்றன” என்றாள்.
டாக்டர்கள் “அதெல்லாம் நம் மனம் கற்பனை செய்வதுதான்… சரியாகிவிடும்” என்றனர்.
ஆனால் டாக்டர்கள் ருக்மிணியிடம் வேறுமாதிரி சொன்னார்கள். ”குரல்கள் கேட்பது ஸ்கிசோஃபிர்னியாவின் தொடக்கம்” என்று மருத்துவர் ரவீந்தர் குப்தா சொன்னார். ”ஆனால் மாத்திரைகள் மிக எளிதாக அதை கட்டுப்படுத்திவிடும்… நம்பிக்கையுடன் இருங்கள்.”
அவள் அவர் அளித்த மாத்திரைகளை அச்சத்துடன் தயங்கித்தான் விழுங்கினாள். ஆனால் அவை தன்னை அமைதிப்படுத்துவதை உணர்ந்து கொண்டாள். அவள் மெல்ல தரையில் அமர்வாள். அந்தத் தரை ஒரு மாபெரும் பனிப்பரப்பாகும். குளிர்ந்து வழுக்கும் பனிப்பரப்பு. அதில் அவள் வழுக்கி வழுக்கிச் செல்லத் தொடங்குவாள். அந்தச் சரிந்த பரப்பை அவள் அள்ளி அள்ளி பற்றப் பற்ற அது கைகளிலிருந்து நழுவிச் சென்று கொண்டே இருக்கும். வழுக்கிச் செல்வதின் விரைவு கூடிக்கூடி ஒரு கட்டத்தில் மிக விரைவாக அவள் சென்று அடியிலாத ஆழம் கொண்ட ஏதோ ஒன்றில் விழுந்து அந்த ஆழத்திற்குள் பறந்து கீழிறங்கிச் சென்று கொண்டே இருப்பாள்.
அதன்பிறகு நினைவு வரும்போது அவள் கட்டிலில் படுத்திருப்பாள். அவள் முகம் பல மடங்கு வீங்கிப்போயிருக்கும் உடல் முழுக்க நீர் நிரம்பிய ஒரு பெரிய தோல் குடுவை போலிருக்கும். உதடுகள் உலர்ந்து அவற்றை அசைக்கும்போது அவை உடைந்துவிடும் என்று தோன்றும். கண்ணிமைகள் எடைகொண்டு அந்த எடை தாளாமல் சரிந்து சரிந்து கண்களை மூடிக்கொண்டே இருக்கும். அவள் மெல்லிய குரலில் “தண்ணீர்! தண்ணீர்!” என்று கேட்க பணிப்பெண்கள் தண்ணீர் கொண்டு கொடுப்பார்கள்.
தண்ணீர் குடித்து எழுந்தமர்ந்து, கழிப்பறைக்கு சென்றுவிட்டு, மெல்ல நடந்து கூடத்திற்கு வந்து அமர்வாள். சுற்றியிருக்கும் வீடு எழுந்தமைந்து எழுந்தமைந்து அலைபாய்ந்து கொண்டிருக்கும். நேர் எதிரிலிருக்கும் சுவரைப் பார்த்தால் அந்தச்சுவர் திரைச்சீலை போல நெளியத்தொடங்கும். தொலைதூரத்துக் குரல்கள் சட்டென்று மிக அருகே கேட்கும். மிக அருகே நின்று பேசும் குரல்கள் மயங்கி மயங்கி உருக்கொண்டு அலைக்கழிக்கும். அந்த அவஸ்தை பல நிமிடங்கள் தொடரும்.
மிக மெதுவாக அவள் ஒவ்வொன்றாக எண்ணி எண்ணி தன்னைத் தொகுத்து, தான் எங்கிருக்கிறோம் என்றும் என்னவாக இருக்கிறோம் என்றும் வகுத்துக்கொண்டு, மீண்டு வருவாள். உடல் அசைக்க முடியாத எடைகொண்டிருப்பது போலிருக்கும். கைகளைத் தூக்கி மடியில் வைப்பதற்கே மிகப்பெரிய அளவில் மூளையைச் செலுத்தி முயலவேண்டியிருக்கும். தன் தோளிலிருந்து சரிந்த முந்தானையை சரிசெய்வதற்கே பத்து நிமிடங்களுக்கு மேல் அவளுக்குத் தேவைப்படும். கைகளுக்கு அவளுடைய எண்ணம் சென்று சேரவே நீண்ட நேரமாகும். கைகளை நோக்கி தன் எண்ணம் ஓடிச்செல்வதைக்கூட அவளால் உணர முடியும். எண்ணிய ஒன்றை சொல்வதற்கு பல நிமிடங்களாகும். அவள் உள்ளம் சொற்களை உணர்ந்தபின் அச்சொற்களை நாக்கை நோக்கி செலுத்தமுடியாது. நாக்கு அசைவில்லாமலிருக்கும். பேசத்தொடங்கும்போதே ஓரிரு சொற்களிலேயே குரல் உடைந்து அழத்தொடங்குவாள்.
ஆனால் அந்தக்குரல்கள் நின்றுவிட்டிருந்தன. தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிடுந்தோறும் அந்தக் குரல்களைக் கேட்பது இல்லாமலாயிற்று. தூக்கம் அவளுக்கு பிடித்திருந்தது. மிகப்பாதுகாப்பாக ஒரு அபாயகரமான இடத்தைக் கடந்துவிட்டது போல ஒவ்வொரு தூக்கத்துக்குப் பிறகும் உணர்ந்தாள். ஆகவே அவள் அந்த மாத்திரைகளை விரும்பத்தொடங்கினாள். மாத்திரைகளை தரும்படி அவளே கேட்டு வாங்குவாள். அவற்றை சாப்பிட்டுவிட்டு, வெண்மையான விரிப்பு பரவிய மெத்தையில் படுத்து, இதமாக கைகால்களைப் பரப்பிக்கொள்ளும்போது கையும் காலும் தனித்தனியாக துண்டிக்கப்பட்டு தனித்தனி உறுப்புகளாக அவள் அந்த மெத்தை முழுக்க பரவிக்கிடப்பதாகத் தோன்றும். அவள் கைகள் அவளிடமிருந்து அகன்று செல்லும். கால்கள் அவளைவிட்டு விலகிச்செல்லும். அவை அறையைவிட்டு வெளியே விலகி விலகி செல்ல அவள் அந்தப்பகுதி முழுக்க பரவி மிகப்பெரிய இடத்தை நிரப்பிக் கிடப்பாள். ஒவ்வொரு உறுப்பும் மெத்தையில் அழுந்தி அழுந்தி புதைந்து போகும். அவள் உடல் மெல்லிய சேற்றில் புதைவது போல அந்த மெத்தைக்குள் புதைந்து போகும்.
உடல் முற்றிலும் புதைந்த போனபிறகு அவள் மட்டும் தனித்து அந்தக் கட்டிலருகே மிகச்சிறிய உருவத்தில் அமர்ந்திருப்பது போல இருக்கும். ஒரு விரலளவுக்கான ஒன்றாக. மூன்று அங்குலம் மட்டுமே கொண்ட உருவம். ஆத்மா மூன்று அங்குலம் கொண்டது என்று யாரோ எங்கோ சொன்னார்கள். யார்? இவ்வளவு சிறிய தன்னை யாரோ பிடித்து ஒரு சிறு டப்பாவுக்குள் அடைத்துக்கொள்ள முடியும். ஒரு சிமிழில் அடைத்து கடலில் வீசிவிடமுடியும். அவ்வாறு அமர்ந்திருக்கும்போது அவள் அருகே இருவர் அமர்ந்திருப்பதை அவள் பார்த்தாள். இரு கரிய நிழல்கள்.
அந்நிழல்கள் தன்னுடைய நிழல்கள் தான் என்று அவள் முதலில் எண்ணினாள். ஆனால் இரண்டு நிழல்கள் எப்படி வந்தன? மெல்லக் கைநீட்டி ஒரு நிழலைத் தொட்டபோது அது நீர்ப்பிம்பம் போல அதிர்ந்து விலகிக்கொண்டது. திரும்பி இன்னொரு நிழலைப் பார்த்தபோது அது மிக அருகே வந்திருப்பதைக் கண்டாள். அந்த நிழலுருவத்துக்கு கண்களும் பற்களும் இருந்தன. மிக அருகே அது மின்னும் கண்களுடன் சிரிப்பது போல் இருந்தது.
”நீங்கள் யார்?” என்று அவள் கேட்டாள்.
”நாங்கள் தொலை தூரத்திலிருந்து வருகிறோம். மிகத்தொலைவிலிருந்து…”
”எங்கிருந்து? எங்கிருந்து?” என்று அவள் கேட்டாள்
”நீ பிரதிஷ்டானபுரி என்று கேள்விப்பட்டிருக்கிறாயா?”
”இல்லை” என்று அவள் சொன்னாள்.
”அதன் இன்றைய பெயர் பைத்தான். நெடுந்தொலைவில் இருக்கிறது அந்த ஊர். அங்கே ஒரு மாளிகை இருக்கிறது. அந்த மாளிகையின் எல்லா வாசல்களும் பூட்டப்பட்டிருக்கின்றன. அதற்கு உள்ளே போகவும் வெளியே வரவும் எந்த வாசலும் கிடையாது. முற்றிலும் இருண்ட மாளிகை. அந்த மாளிகை ஒருகாலத்தில் ஒரு மாபெரும் கல்விச்சாலையாக இருந்தது. ஆயிரக்கணக்கான நூல்கள் கொண்ட நூலகம் அங்கு இருந்தது. பலநூறு பேர் அங்கு வந்து மொழிகளையும் இலக்கியமும் கற்றுத் தேர்ந்தார்கள். அங்கே அறிஞர்கள் கூடி விவாதம் செய்தார்கள். அழகிய திண்டுகளும் அமர்விடங்களும் கொண்டதாக அது இருந்தது…”
“அந்த மாளிகையின் எல்லா வாயில்களும் இன்று பூட்டப்பட்டிருக்கிறது” என்று கிரீச்சிட்டு கூவியது இன்னொரு நிழல். “வெளியே அது புழுதியும் அழுக்கும் படிந்து மட்கி பாழடைந்துவிட்டது. உள்ளே அதன் புத்தகங்கள் அனைத்தும் நைந்து மட்கி செடிகளால் மூடப்பட்டு காடாகிவிட்டன. அந்தக்காட்டுக்குள் பறவைகளும் விலங்குகளும் செறிந்திருக்கின்றன. இரவு எந்நேரமும் அங்கே குடியிருக்கிறது. அந்த மாளிகையை எல்லாப் பக்கமும் மூடியது யார்?”
”யார்?” என்று அவள் கேட்டாள்.
”நீ! நீதான் அதை மூடினவள். அதற்காக உன்னை பழிவாங்கத்தான் நாங்கள் வந்திருக்கிறோம். உன்னையும் உன் குடும்பத்தையும் முற்றாக பழி வாங்குவோம். கடைசியில் துளிக்குருதி வரை குடித்தபிறகுதான் அடங்குவோம்.”
”நான் எதுவும் செய்யவில்லை, எனக்கு எதுவும் தெரியாது. என்னை எதற்கு பழிவாங்குகிறீர்கள்?” என்றாள்.
”நீ துக்காராமை அறிந்திருக்கிறாயா?”
”இல்லை, அப்படி எவரையுமே நான் கேள்விப்பட்டதில்லை” என்று அவள் சொன்னாள்.
”உனது கணவனின் தங்கை ராதிகா தேஷ்பாண்டே அவனைத்தான் காதலித்தாள். மணந்து கொண்டாள்”
”அது எனக்குத் தெரியாது… எனக்குத் தெரியாது…” என்று அவள் சொன்னாள்.
”ராதிகா தேஷ்பாண்டேயை உன் கணவன் அனுப்பிய கொலைகாரன் ஒரே வெட்டில் கழுத்தையும், இன்னொரு வெட்டில் வயிற்றையும் கிழித்து வீழ்த்தினான்.”
”இல்லை எனக்குத் தெரியாது தெரியாது” என்று அவள் சொன்னாள்.
”அவளை இழுத்து சென்று ஒரு பெரிய சாக்கில் கட்டி உடன் இரண்டு பெரிய இரும்பு வளையங்களைக் கட்டி ஓர் ஏரியில் வீசினார்கள். அவள் உடல் மட்கி சதைக்கூழாகக் கண்டெடுக்கப்பட்டது. அப்படியே எரித்துவிட்டார்கள்.”
”தெரியாது. எனக்குத் தெரியாது எனக்கு எதுவுமே தெரியாது” என்று அவள் அலறினாள். ”நீ ஏதோ உளறுகிறாய். என்னை தவறுதலாகப் பிடித்திருக்கிறாய்.”
மறுபக்க நிழல் அவளைத் தொட்டு உலுக்கி ”இங்கே இங்கு பார் அது பொய். உன்னை குழப்புவதற்காக பொய் சொல்கிறது. உன்னிடம் உண்மையை சொல்வதற்காக நான் வந்திருக்கிறேன்.”
”சொல், என்ன உண்மை?” என்று அவள் கேட்டாள்.
”நீ குழந்தை பெறுவது உன்னுடைய மாமியாருக்கு பிடிக்கவில்லை. அவள் உனக்கு விஷமூட்டுகிறாள். உன் சாப்பாட்டில் உப்பு போல கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தை ஏற்றுகிறாள். அந்த குரல்கள் கூட உன் மாமியார் உனக்கு வைத்த சூனியம்தான். நன்றாக எண்ணிப்பார், ஒவ்வொரு முறையும் நீ கருவுற்றபோது உன் வீட்டுக்கு உன் மாமியார் வந்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவர் சென்று சிலநாட்களில் உன் கரு கலைந்திருக்கிறது. நீ நஞ்சூட்டப்பட்டாய் உன் குழந்தைகள் நஞ்சூட்டப்பட்டு கொல்லப்படுகின்றன.”
”ஏன்?” என்று அவள் கேட்டாள்.
”ஏனெனில் உனக்குக் குழந்தை பிறக்கக்கூடாதென்று உன் மாமியார் எண்ணுகிறாள். உனக்கு குழந்தை பிறந்தால் உன் கணவன் உன்னிடம் அன்பாக இருப்பான் என்று அவள் நினைக்கிறாள். உன்னை அவனிடமிருந்து பிரிக்க திட்டமிடுகிறாள்.”
”ஏன்?” என்று அவள் மீண்டும் கேட்டாள்
”உன் கணவனுக்கு முதற்குழந்தை பிடிக்கவில்லை. ஆனால் பெண் குழந்தை பிறந்தால் அவன் உன்னுடன் ஒட்டுதலாக இருக்கக்கூடும். அப்படி ஆகக்கூடாது என்று அவள் நினைக்கிறாள்.”
”அப்படியா?”
மறுபக்க நிழல் அவளை தொட்டு உசுப்பி அழைத்தது. “இதோ பார், இவர்கள் பசப்புகிறார்கள். உன் மாமனாரின் குடும்பத்தில் இருக்கும் பெண்பழி யாருக்குத் தெரியாது?”
அவள் திகைத்து விழித்துக்கொண்டாள். அவள் அறைக்குள் வெயில் நிறைந்திருந்தது. ஜன்னல் வழியாக வந்த இலைகளின் நிழல்கள் அறைக்குள் கூத்தாடிக்கொண்டிருந்தன.
(மேலும்)
பேய்கள் எழும் காலம் – கடலூர் சீனு
திருவண்ணாமலை பகுதியில் ஒரு சிறிய சமணப் பயணம் முடித்துத் திரும்பி, அந்த உணர்வு நிலையின் தொடர்ச்சியாக அப்படியே மீண்டும் என காண்டீபம் நாவலை சிறு சிறு இடைவெளிகள் விட்டு இரண்டு நாட்களில் வாசித்து முடித்தேன். புனைவு அளிக்கும் உத்வேக கற்பனை, நிலம் அளிக்கும் அக விரிவு, இதனோடு தொடர்பு கொண்ட அடிப்படை பண்பாட்டுச் செய்திகள், அது சென்று தொடும் உள்ளாழம், இவையெல்லாம் ஒன்று கூடினால் அதில் எழுந்து பறந்த என்னால், அந்த வானிலிருந்து மீண்டும் தரைக்கு வருவதே ஆகாத காரியம்.
இளைப்பாற ஏதேனும் கேளிக்கைப் படம் பார்க்கலாம் என்றால், அது இளைப்பாறலுக்கு பதிலாக வேறு எதையாவது கிளர்த்தி விடுகிறது. உதாரணத்துக்கு நான் இந்த வருடம் இதுவரை அரங்கில் சென்று பார்த்த ஒரே ஒரு படமான மர்மர் படத்தை சொல்லலாம். கிட்டத்தட்ட ஜீரோ பட்ஜெட்டில், நல்ல ஒளிப்பதிவு, நல்ல சவுண்ட் டிசைனிங், நல்ல மேக்கிங் கில் எடுக்கப்பட்ட திகில் படம். தங்களது யூடியூப் சேனலுக்காக அமானுஷ்ய விஷயங்களை படம் பிடிக்க காட்டுக்குள் செல்கிறார்கள் ஐவர். என்ன செய்தால் அங்குள்ள அமானுஷ்ய ஆற்றலை கிளர்த்த முடியுமோ அதை செய்கிறார்கள். அந்த அமானுஷ்ய ஆற்றல் என்ன செய்தது அந்த ஐவரும் தப்பித்தார்களா இதுதான் கதை. கதையாகவும் படமாகவும் சுவாரசியமான ஒன்றுதான். ஆனால் இதன் கான்செப்ட் எனக்கு கடுமையான ஒவ்வாமையை அளித்தது.
சப்த கன்னியர்கள், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட பௌர்ணமி இரவில், குறிப்பிட்ட காட்டுக்குள் குறிப்பிட்ட குளத்தில் வந்து குளிக்கிறார்களாம். அதை இவர்கள் படம் பிடிக்கிறார்களாம். அந்த சப்த கன்னிகள் இவர்களை தனித்தனியே தலையை வெட்டி குருதியை குடித்து கொன்று விடுகிறதாம். யோசித்துப் பாருங்கள் கன்னி மேரி எனும் தெய்வத்தைக் கொண்டு, இதே கான்செப்டில் இப்படி ஒரு படம் எடுக்கப்பட்டால் அதை முதல் காட்சி தாண்டினால் அரங்கில் பார்க்க முடியுமா? மாறாக மர்மர் படம் வெகுமக்கள் ஊடகத்தில் வைத்து செய்த இந்த ஆபாசமான திரித்தல் வேலையை மறுதலித்து இங்கே ஒரே ஒரு முனகல் கூட எழவில்லை. அடிப்படையில் இந்த கான்செப்ட்டே மேலை மரபின் கோதிக் இலக்கியம் வகையை தழுவியது. அந்த கோதிக் இலக்கியத்தில் இத்தகு அமானுஷ்யங்கள் நிகழ ஒரு நோக்கம் இருக்கும். மாறாக இதில் திரித்தல் என்பதை தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை.
ஆகவே இம்முறை இளைப்பாற திரைப்படத்தை உதறி, கிராபிக் நாவல்கள் வாசிக்கலாம் என்று முடிவு செய்து சில கிராபிக் நாவல்கள் வாசித்தேன். கிராபிக் நாவல் வாசிப்பதில் இரண்டு வசதி உண்டு.அது நல்ல கிராபிக் நாவல் எனில், அது ஒரே நேரத்தில் காட்சி இன்பம் வாசிப்பு இன்பம் இரண்டையுமே தர வல்லதாக இருக்கும். மேற்கண்ட கிராபிக் நாவல் அட்டைப்படத்தில் இரண்டு சுவாரஸ்யங்கள் காணலாம். முதலாவது இது காமிக்ஸ் நிறுவன வெளியீடு எனும் செய்தி. இரண்டாவது இது கிராபிக் நாவல் எனும் செய்தி. காமிக்ஸ் எனும் நூற்றாண்டு கால பொது வகை மாதிரிக்குள் இருந்து கிராபிக் நாவல் எனும் தனி பிரிவு, தனக்கான தனி வரையறைகளை முன்வைத்து கிளைத்த ஆண்டு 1970. வில் ஐஸ்னர் எனும் சித்திரக் கதை ஆசிரியர்தான் தனது, கடவுளுடன் ஒப்பந்தம் மற்றும் பிற கதைகள் என்ற தலைப்பில் அமைந்த சித்திரக் கதையை அதன் முன்னுரையில் அது கிராபிக் நாவல் என்று சொல்லி அந்த பெயரை முதன் முதலாக காயின் செய்கிறார். மெல்ல மெல்ல திரண்ட அதன் வடிவக் கூறினை ஆர்ட் ஸ்பீகல்மேன் எனும் வரைகலை நாவல் ஆசிரியர் தனது மவுஸ் எனும் கிராபிக் நாவல் வரிசை வழியே முழுமை செய்கிறார். 2000 களில் கிராபிக் நாவல் என்பது காமிக்ஸ் என்பதில் இருந்து விலகி, முதிர்ந்த ரசனை கொண்டோர் ஈடுபடத்தக்க அல்லது அவர்களுக்கானது என்று மட்டுமே ஆன தனித்ததொரு கலைப் பிரதியாக நிலைபெற்றது.
சினிமா கலை அதன் உச்சம் தொட்ட பிறகு பரிணாம வளர்ச்சி கண்ட கலை இது எனில் சினிமா அளிக்கும் அனுபவத்தில் இருந்து கிராபிக் நாவல் அளிக்கும் அனுபவம் எங்கு வேறுபடுகிறது? சினிமாவில் காட்சி சட்டகங்களில் அதன் தொழில்நுட்பம் அதன் மேல் படிய வைக்கும் காலத்தின் களிம்பு உண்டு. மாறாக நல்ல கிராபிக் நாவலில் அதன் காட்சி சட்டகங்கள் காலத்தின் பிடிக்கு ஒரு எட்டு தள்ளி நிற்கும் தனித்ததொரு ஓவியக் கலை வெளியால் ஆனது.
சினிமா அசையும் பிம்பங்களை கொண்டு தாக்கத்தை உருவாக்குவதை தனது அடிப்படை அலகாக கொண்டது. கிராபிக் நாவல் நிலைத்த பிம்பங்களை கொண்டு தாக்கத்தை உருவாக்குவதை தனது அடிப்படை அலகாக கொண்டது. சினிமாவில் அதன் அடிப்படையான நிகழ் பிம்பத்துக்கு எந்த அளவு தேவையோ அந்த அளவுக்கு மட்டும் கதையை, இசையை, ஓவியத்தை அது எடுத்துக் கொள்ளும். மாறாக கிராபிக் நாவல் கதை, ஓவியம் இந்த இரண்டை மட்டுமே இரு சிறகுகள் என்று கொண்ட பறவை. சினிமாவில் அது தனது நிகழ் பிம்பம் கொண்டு ஒரே ஒரு ஷாட் ஐ எத்தனை நிமிடம் வேண்டுமானாலும் நீட்டித்துக் கொள்ளும். கிராபிக் நாவல் தனது நிலை பிம்பம் கொண்டு ஒரே ஒரு காட்சி சட்டகத்தை ஒரு ஷாட் என்று உணர வைக்கும். சினிமாவில் (ஷாட்கள் சேர்ந்தால் சீன். சீன்கள் சேர்ந்தால் சீக்வென்ஸ். அனைவரும் அறிந்த மெல் கிப்சன் இயக்கிய அப்போகலிப்டோ படம் வெறும் மூன்றே சீக்வென்ஸில் நிகழ்ந்து முடியும் ) ஒரே ஒரு சீக்வென்சில் படம் எடுப்பது என்பதெல்லாம் பரிசோதனை முயற்சியாகவே செய்ய முடியும். மாறாக ஒரே ஒரு சீக்வென்ஸ் கொண்டு நிகழும் கதைகளை கிராபிக் நாவலில் மிக இலகுவாக கொண்டு வந்து விட முடியும். தனித்துவமான வலிமையான சில காட்சிப் படிமங்கள் கொண்ட வெளிப்பாடு, ஒரு தீவிர இலக்கிய பிரதியின் குறு நாவலோ, நாவலோ போல கூர்மை, அடர்த்தி, உள்ளடுக்குகள், விரிவு, ஆழம், கற்பனை சாத்தியங்கள், சொல்லாமல் காட்டாமல் உணர்த்தி செல்லும் சப் டெக்ஸ்ட் இவை கொண்ட உள்ளடக்கம் இவற்றின் சரி விகித கலவையாகவே நல்ல கிராபிக் நாவல் அமையும்.
மற்றபடி இந்த கிராபிக் நாவல் தனித்ததொரு கலைப் பிரதியாக கிளைக்க, அது எதிர் கொண்ட சவால்களை கடக்க அதற்கு மிக வசதியாக இருந்த பல களங்களில் முதன்மையான மூன்றில், முதலாவது உருவெளி தோற்றங்கள் வழியே அலைக்கழியும் பாத்திரங்கள் நிகழும் களம்,இரண்டாவது ஹாலோகாஸ்ட் சூழல் பின்னணி கொண்ட களம், மூன்றாவது கோதிக் பாணி இலக்கியங்கள் நிகழும் களம். மேற்கண்ட டோடோ ஃபராகி கதை எழுதிய, பாஸ்குவாலே ஃரைசென்ட்டா ஓவியங்கள் வரைந்த, s. விஜயன் மொழியாக்கம் செய்த லயன் காமிக்ஸ் வெளியீடான பனியில் ஒரு குருதிப்புனல் கிராபிக் நாவலும் கோதிக் லிட்ரேச்சர் வகைமாதிரியை சேர்ந்ததே.
கோதிக் இலக்கியம் எனும் வகைமை குறித்து நான் அறிய விரும்பியது விஷ்ணுபுரம் நாவலுக்கு பிறகே. எழுத்தாளர் சுஜாதா விஷ்ணுபுரம் குறித்து எழுத நேரும்போதெல்லாம் அந்த நாவல் இந்த வகைமையை சேர்ந்தது என்று குறிப்பிடுவார். அதன் பிறகே அது குறித்து தேடி சென்று வாசித்தேன். (கோதிக் இலக்கிய வகைமை கொண்ட வெளிப்பாட்டுக் கூறுகள் சில விஷ்ணுபுரம் நாவலில் உண்டு, ஆனால் விஷ்ணுபுரம் கோதிக் வைகைமைக்குள் வராது) 12 ஆம் நூற்றாண்டு துவங்கி 16 ஆம் நூற்றாண்டு வரை மேலை மரபில் நிகழ்ந்த கோதிக் கலை என்பது தனி. பண்படாத அல்லது காட்டுவாசித்தனமான என பொருள்படும் அதன் பெயர்க்காரணம் உள்ளிட்டு அது சார்ந்த அனைத்தும் தனி. கோதிக் இலக்கியம் என்பது 18 ஆம் நூற்றாண்டில் பிரிட்டனில் துவங்கிய ஒரு இலக்கிய அலை. பிரைம் ஸ்டோகர் டிராகுலா அதன் செவ்வியல் பிரதி. எட்கர் ஆலன் போ அந்த அலையின் முதன்மை ஆளுமைகளில் ஒருவர்.
நெல்லையில் நெல்லையப்பர் கோயில் பூதத்தார் முக்கு எதிரே காவல் பிறை தெருவில் எங்கள் வீடு. தெரு முனையில் இடதுபக்கம் மிகச் சிறிய உச்சினி மாகாளி அம்மன் கோயில். துடியான தெய்வம். 35 வருடம் முன்பு வரை, வருடம் ஒரு முறை அந்த அம்மன் கோயில் கொடைக்கு 108 ஆடுகள் பலி தர படும். தெருவெங்கும் கொழுங்குருதி வழிந்தோடும். அதில் மிதித்து நடந்து சிவந்த பாதங்களோடுதான் எங்கள் வீட்டுக்குள் போக முடியும். 35 வருடம் முன்னர் இது நிலை என்றால், பல்லவர் காலம் எல்லாம் எப்படி இருந்திருக்கும்? உலகெங்கும் இது எப்படி இருந்திருக்கும்?
மிக பின்னர் எங்கள் பகுதியில் யாதவர் செல்வாக்கு ஓங்கியது. அந்த கோயில் சார்ந்த அனைத்தும் யாதவர் கைகளுக்கு போக, அங்கே ஓடிய குருதி நின்று, குருதி பிரசாதம் குங்கும பிரசாதமாக மாறியது. ஆம் உயிர் பலியைதான் ஒழித்தார்களே தவிர உயிர் பலி கேட்ட தெய்வத்தை அல்ல. இந்திய நில பண்பாட்டின் உள்ளுறை என்று அமைந்த இந்த அம்சம் உலகின் பிற பகுதிகளில் கிடையாது. கிறிஸ்துவம் நுழைந்த நிலங்களில் எல்லாம் அந்த நிலத்தின் முந்தைய தெய்வங்களை எல்லாம் அடித்துப் புதைத்து பாதாள இருளுக்குள் அதற்கும் கீழ் நரக நெருப்புக்குள் தள்ளியது. 18 ஆம் நூற்றாண்டில் உலகு தழுவி நிகழ்ந்து கொண்டிருந்த போர்கள், பஞ்சங்கள், கொள்ளை நோய்கள் இவற்றின் பின்புலத்தில் அப்பண்பாடு தனது கலை வழியே தனது ஆழத்தை துறுவிப் பார்க்கையில், அந்த ஆழத்தில் இருந்து எழுந்து வந்தவை கிறிஸ்துவ கூட்டு நனவிலி சாத்தான் என புனைந்து வைத்திருந்த பாகணீய மதங்களின் தெய்வம். அவை இரத்தம் குடிப்பவை. மனிதனின் ஆன்மாவை திருடிக் கொண்டு அவனை நிரந்தரமாக நடை பிணம் என்றாகி தனது நரக குழிக்குள் தனக்கு அடிமையாக்கி வைத்துக் கொள்பவை. அந்த பின்புலத்தை மையம் கொள்வதே கோதிக் இலக்கியம். கோதிக் என்பதற்கு தோராயமாக அமானுஷ்யம் என்று பொருள் கொள்ளலாம்.
கோதிக் இலக்கிய வகைமைக்குள் வரும் மேற்கண்ட இந்த கிராபிக் நாவல், எக்ரியன் என்ற எழுத்தாளரின் பார்வைக் கோணம் வழியே சொல்லப்படுகிறது. 1812 ஆம் ஆண்டு கட்டாய இராணுவ சேவையாக நெப்போலியன் படையில் சேர்ந்து, ரஷ்ய எல்லைப்புற பனி வெளியில் ரஷ்யாவை ஊடுருவும் நெப்போலியன் படை ஒன்றில் பணி செய்கிறார் எக்ரியன். கடும் பனி. பட்டினி. படை வீரர்கள் ஒவ்வொருவராக செத்து விழுகிறார்கள். அந்த பனிப் பாலை நிலத்தில் ஒரு பெண் உதவி கேட்டு அவர்கள் வழியில் குறுக்கிட, அந்த பெண்ணை பின் தொடர்ந்தால் நிச்சயம் ஒரு கிராமம் வரும். அதை இருக்கும் ஆயுதங்களை கொண்டு அடிமை செய்தால் இப்போதைய சூழலில் இருந்து தப்பிக்க முடியும் என்று கேப்டன் கணக்கு போட, படை மொத்தமும் அந்த பெண்ணை தொடர்ந்து அவளது கிராமத்துக்கு போகிறது. அதுவோ ஒரு சபிக்கப்பட்ட பூமி. மனித ஆற்றலை மீறிய ஏதோ ஒன்று அவர்களை துரத்துகிறது. அவர்கள் ஓடி சென்று கண்ணில் பட்ட பாழடைந்த தேவாலயத்தில் தஞ்சம் அடைகிறார்கள். அந்த ஆலயத்தின் பாதிரியார் இறந்து போய் தூக்கில் தொங்கிக்கொண்டு இருக்கிறார். வாசலை மூடி படையினர் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் ஏற்பாடுகளில் பொழுது நள்ளிரவை தொட, செத்துப்போன பாதிரியார் எழுந்து வந்து படையினரை தாக்குகிறார். படையினர் தப்பிக்க மீண்டும் வாசலை திறந்து வெளியே ஓட, அந்த சபிக்கப்பட்ட நிலத்தின், எல்லா நடைபிணங்களும் இவர்களைத் தாக்க வருகின்றன. இவர்கள் தப்பித்து ஓடி திசை தவறி, நரகத்தின் வாசலை திறந்து விடுகிறார்கள், நெருப்புக் குழிக்குள் இருந்து பாதாள பேய்கள் எழுந்து வருகின்றன. படையினரின் ஆன்மாவை சூறையாட அவர்களை துரத்துகின்றன. பாதாள சாத்தான்கள் வசம் சிக்கி தங்கள் ஆன்மாவை இழந்து, நரக குழியில் நடை பிணமாக நிரந்தரமாக உழல்வதை விட தற்கொலை செய்து கொள்வது மேல் என்று கேப்டன் முடிவு செய்கிறார். அதற்கு முன்பாக தனது படையினரை தனது கைகளால் தானே கொன்று விட முடிவு செய்கிறார். முதல் வீரனாக எக்ரியனை தேர்வு செய்து அவனது மூச்சுக் குழாயை ஒரே வெட்டில் துண்டிக்கிறார்.
இதுதான் அங்கே நடந்தது என்றும், இதை ஜெனரல் வசம் இப்படி சொல்லிகொண்டிருப்பதால் கேப்டன் எங்கோ தோற்று விட்டார் என்று நினைக்கிறேன் என்றும் ஜெனரல் வசம் எக்ரியன் சொல்லி முடிக்க, கேட்டு முடித்த ஜெனரல் எழுந்து அறை கதவை திறக்க உள்ளே கேப்டன் நுழைகிறார். எழுத்தாளருக்கு எல்லாம் புரிந்து விடுகிறது. போரின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்க செயல்படுத்த மூவரும் ஒன்றுபட்டு கிளம்புகிறார்கள்.
ஓவியர் பாஸ்குவாலே இத்தகு களங்களுக்கே உரித்தான வகையில், துர் கனவு போலும் சாயலில், ஜப்பானிய நீர் வண்ண ஓவியங்களின் முறையில் நாவலுக்கான ஓவியங்களை தீட்டி இருக்கிறார். கருப்பு வெள்ளையில், பகலா இரவா என்று சூழல் மயங்கிய பனி வெளியின் தசையை எரிக்கும் உறைகுளிர் நிலையை ஒவ்வொரு ஓவியம் வழியாகவும் மனம் அந்த சில்லிப்பை உணரும் வண்ணம் அவற்றை தீட்டி இருக்கிறார். மெல்லிய வெண்மை விரவிய கரிய பின்புலம். காட்சி பின்னே பின்னே போக, அது உறைந்து போன பிணம் ஒன்றின் விழி. அழுகிய குதிரை சடலத்துக்குள் அதையே உணவாகவும், குளிருக்கு காப்பாகவும் கொண்டு அதற்கும் புதைந்து கிடந்த ஒருவனை (கொசாக்) வெளியே இழுத்து போட்டு சுட்டேன் என்று சொன்னபடி அறிமுகம் ஆகும் கேப்டன். முற்றிலும் அமானுஷ்ய சித்தரிப்பின் உச்சமாக தீட்டப்பட்ட நரக குழி என்று கனவிலும் வந்து துரத்தும் ஹாண்டிங் ஆன சில படிமங்கள் கொண்ட நாவல். கேப்டன், படை வீரனான எழுத்தாளர் எல்லோரும் சாத்தான்கள் வசம் எங்கே தோற்று போகிறார்கள் என்பதை சொல்லாமல் சொல்லி விடுகிறது நாவல். தனது ஆன்மாவை சாத்தான்கள் திருடிவிடாது இருக்கத்தானே அந்த பாதிரியார் தற்கொலை செய்துகொண்டிருப்பார்?
துர்கனவு போன்ற காட்சி சித்தரிப்புகளும், முடிவில் இருந்து வாசகன் மனதுக்குள் கதை வேறு வகையில் துவங்கும் சப் டெக்ஸ்ட் டும் கொண்ட இந்த கிராபிக் குறுநாவல் உணர்த்தும் செய்தி மிக வலிமையானது.
வரலாறு நெடுக எந்த காலம் ஆயினும் சரிதான், உலகம் முழுக்க எந்த நிலம் என்றாலும் சரிதான். பின்புலம் என்ன காரணம் என்றாலும் சரிதான். போர் என்பது நடைபிணங்களின் கர்மம். மனிதம் இழிந்து மண்ணை நனைக்கும் குருதியை எற்று அமைதி நிலைபெறும் என்ற எந்த நிச்சயமும் இல்லை. ஆனால் அந்தக் குருதியைக் குடிக்க இருள் உலகிலிருந்து பாதாள தெய்வங்கள் எழுந்து வரும். அது மட்டும் நிச்சயம்.
கடலூர் சீனு
புதுவை வெண்முரசுக் கூடுகை-82
வணக்கம். மகாபாரதத்தை நவீன இலக்கியமாக மறு ஆக்கம் செய்த எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு பெருநாவல்நிரையின் மீதான கலந்துரையாடல் 2017ம் ஆண்டு முதல் புதுவையில் மாதாந்திர கூடுகையாக நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக 2025ம் ஆண்டு முழுவதும் வெண்முரசின் ஒன்பதாவது நூலான “வெய்யோன்” குறித்து நிகழவிருக்கிறது.
புதுவை வெண்முரசுக் கூடுகையின் 82 வது அமர்வு 30-05-2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சியில் நண்பர் இராச மணிமேகலை உரையாற்றுவார்.
நிகழ்விடம் : கிருபாநிதி அரிகிருஷ்ணன் “ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி, # 27, வெள்ளாழர் வீதி , புதுவை -605 001. தொடர்பிற்கு:- 9943951908 ; 9843010306
பேசு பகுதி: வெண்முரசு நூல் – 9. “வெய்யோன்” பகுதி 5 பன்னிரண்டாவது பகடை – 41 – 45 அத்தியாயம். (1 – 5 )
நிகழ்ச்சியில் பங்குகொள்ள வெண்முரசு வாசகர்களையும்ஆர்வமுள்ளவர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.
கிருபாநிதி அரிகிருஷ்ணன்
What is the use of philosophy to a common man?

What is the use of philosophy for an ordinary person? I am not ashamed to say I am an ordinary person with very ordinary tastes and lifestyle. I would rather not be a scholar or intellectual. Why should I read and learn philosophy? Can you explain?
What is the use of philosophy to a common man?வெறுப்பு பற்றிய காணொளி பார்த்தேன். சில நண்பர்களுக்கு அனுப்பினேன். இந்த வகையான உணர்ச்சிகள் எப்போதுமே இருந்துகொண்டிருப்பவைதான். ஆனால் இப்போது எல்லாருக்குமே ஊடகம் அமைந்துள்ளது. எவர் வேண்டுமென்றாலும் மறைந்து நின்று பேசலாம். பெரும்கூட்டமாக கூடலாம். இது அளிக்கும் வசதிகள் மனிதர்களின் வெறுப்பை பலமடங்காகப் பெருக்கிக்கொண்டிருக்கின்றன.
வெறுப்பு கடிதம்May 25, 2025
வாசிப்பைப் பற்றி மீண்டும்…
வாசிப்பின் இன்றியமையாமை பற்றி தெரிகிறது. வாசிக்காமல் வாழவே முடியாதென்ற நிலை. ஆனால் வாசிக்க முடியவில்லை. என்னிடம் வாசிப்பு பற்றி இத்தனை கேள்விகள் வருவது இதனால்தான். ஆகவே மீண்டும் வாசிப்பைப் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கிறேன்.
“கடல்”- சினிமாவுக்குப் பத்தாண்டுகளுக்குப் பின் நாவல்…
நான் 2016 ல் சிங்கப்பூரில் எழுத்தாளர்- பேராசிரியராக சில மாதங்கள் பணியாற்றியபோது பொதுவான மாணவர்கள், மற்றும் காட்சிக்கலைப் பேராசிரியர்களுக்காக சினிமா பற்றி ஒரு வகுப்பை எடுக்கவேண்டியிருந்தது. நான் சினிமாக்காரன் என்பதனால் அதற்கு எதிர்பார்ப்பும் வரவேற்பும் மிகுதியாக இருந்தது. கதையில் இருந்து திரைக்கதையும் திரைக்கதையில் இருந்து சினிமாவும் உருவாவதைப் பற்றி இரண்டு மணிநேரம் வகுப்பெடுத்தேன். சினிமா பற்றி நான் நடத்திய ஒரே வகுப்பு அதுதான்.
அவ்வகுப்புக்காக முன்னரே தயாரித்துக்கொண்டு சென்றிருந்தேன். இரண்டு காட்சித்துண்டுகளை அங்கே காண்பித்தேன். நான்கடவுள், மற்றும் கடல் படங்களில் இருந்து. முதலில் ஏழாம் உலகம் நாவலில் இருந்து ஒரு பகுதியை வாசித்தேன். பிச்சைக்காரர்களின் உலகுக்குள் நாவல் செல்லும் அந்த நரகக் காட்சி. அதன்பின் அதையொட்டி நான் கடவுள் சினிமாவுக்காக நான் எழுதிய திரைக்கதைக் காட்சி. அதன்பின் அந்தக்காட்சி படத்தில் எப்படி வந்தது என்று. நாவலில் அது வெவ்வேறு பார்வைகளின் வழியாக துண்டுதுண்டாக வெளிவரும். திரைக்கதையில் ஓர் இடம், ஒரே காட்சிக்கோணமாக எழுதப்பட்டது.
ஆனால் சினிமாவில் அது ஒரே நீளமான ஷாட். தாண்டவன் நடந்து வந்து பாதாளத்திற்கு இறங்கி உள்ளே சென்றுகொண்டே இருப்பான். முதலில் நம் பார்வையில் அவன். அதன்பின் அவன் பார்வையில் அந்த உலகம். அது இரண்டு ஷாட்கள். ஆனால் ஒரே ஷாட் ஆக இணைக்கப்பட்டிருந்தன. நவீன எடைகுறைந்த காமிராக்கள் இல்லாத காலகட்டத்தில் எடுக்கப்பட்ட அக்காட்சி ஓர் அற்புதம். பாதாளம் என்பதை அனுபவமாக ஆக்கிக் காட்டியது அது. இன்று திரைப்பட மாணவர்கள் அக்காட்சியை தனியாக கூர்ந்து பயில்கிறார்கள்.
அதேபோன்று ஒரு காட்சி கடலில். நான் கடல் கதையை மணி ரத்னம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நாவலாகவே எழுதினேன். என் எல்லா நாவல்களையும்போல அது அடிப்படையான ஒரு கேள்வியில் இருந்து வெடித்துக் கிளைபிரிந்து வளர்ந்து சென்ற ஒரு படைப்பு. அதை அவரும் நானும் திரைக்கதையாக்கினோம். அவர் அதை இயக்கினார்.
நாவலில் இருந்து ஒரு காட்சியை வாசித்தேன். சாம் கிராமத்தாரால் சிறைக்கு அனுப்பப்படும் காட்சி. அது ஒரு சிலுவையேற்றம்தான். அதில் காட்டிக்கொடுக்கும் யூதாஸ்தான் செலினா. நாவலில் அது ஓர் உணர்ச்சிகரமான நினைவுகூரல், அல்லது நாடகீயத் தன்னுரை. அந்தக் காட்சியின் திரைக்கதை வடிவம் ஒரு காட்சிச்சித்தரிப்பு. ஆனால் அது சினிமாவில் பல உள்ளோட்டங்கள் கொண்டது. அந்த தேவாலயம், அதன் படிக்கட்டுகளினூடாக சாம் மேலேறுவது. அங்கிருந்த முகங்கள். ஒரு மேலைச் செவ்வியல் ஓவியத்திற்குரிய ஒளிப்பதிவு.
அனைத்திற்கும் மேலாக செலினா பொன்னொளியில் தேவதையாக கட்டப்பட்டிருந்தாள். திரைக்கதையில் இல்லாமல் இயக்குநர் காட்சி வழியாக உருவாக்கிய கூடுதல் அர்த்தம் அது. அவள் யூதாஸ் அல்ல மக்தலீனாதான் என்று அவர் காட்சி வழியாக அடிக்கோடிட்டிருந்தார். சினிமா என்னும் textஇன் subtext அது.(உண்மையில் சினிமாக்கல்வி என்பது இவற்றை எல்லாம் அடையாளம் காணக் கற்றுக்கொள்வதுதான்).
நீண்ட இடைவெளிக்குப்பின் கடல் சினிமாவின் அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். வணிகரீதியாக தோல்வியடைந்த சினிமாவை அதில் பணியாற்றிய எல்லாரும் மறக்க விரும்புகிறார்கள். நானும்தான். கடல் நாவலின் விரிவை சினிமா சுருக்கமாகவே முன்வைக்க முடிந்தது. கிறிஸ்தவத் தொன்மவியலில் அறிமுகமே அற்ற தமிழ் ரசிகர்களால் அதை உள்வாங்க முடியவில்லை. காதல் – வில்லன் என்ற அளவிலேயே எடுத்துக்கொண்டார்கள். ஆனால் இன்று கடல் சினிமாவை மிக விரும்பிக் கொண்டாடும் ஒரு சிறு இளைய ரசிகர் வட்டம் உருவாகியுள்ளது.
ஆகவே கடல் நாவலை நூலாக வெளியிட்டாலென்ன என்னும் எண்ணம் உருவானது. பல கணிப்பொறிகள் மாறியதனால் நாவல் என்னிடம் இல்லை. மணி ரத்னத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல்களில்தான் இருந்தது. பல வடிவங்களில் மாற்றங்களுடன். அவற்றை தொகுத்து நாவலை முழுமையாக்கினேன். இப்போது வெளிவருகிறது.
இது வேறொரு அனுபவம். நாவல் என்பது மிகப்பெரிய பேசுதளம் கொண்டது. அதில் ஏராளமான சினிமாக்கள் அடங்கியுள்ளன. விரிந்து விரிந்து செல்லும் அதன் கதைப்பின்னல். உணர்ச்சிகளின் நேரடி வெளிப்பாடான எண்ணங்கள், தன்னுரைகள், உரையாடல்கள். பிரம்மாண்டமான காட்சிப்பரப்புகள். இது பாவம்- மீட்பு என்னும் மகத்தான மானுடநாடகத்தின் சித்தரிப்பு.
சினிமாவாக வெளிவந்த ஒரு படைப்பு பத்தாண்டுகளுக்குப் பின் நாவலாக வருவதென்பது மிக அரிதாகவே நிகழ்வது. தமிழில் முன்னுதாரணம் ஏதுமில்லை. சினிமா நாவல் என்னும் இரு கலைகளை புரிந்துகொள்ள இது உதவலாம். இரு கலைகளின் வழியாக மானுடனின் அழியாத துயரையும், என்றுமுள மீட்பையும் உணரவும் உதவும் என நினைக்கிறேன்.
கடல் வாங்க
தொடர்புக்கு : contact@vishnupurampublications.comPhone : 9080283887
காவியம் – 35

கானபூதி சொன்னது. திருமணம் ஆகி கணவனுடன் பாட்னாவுக்கு வந்து அந்த பெரிய மாளிகையில் அவனுடன் தங்கி, அவனுடைய மூர்க்கமான காமத்துக்கு தன்னை அளிக்கும்போது ஊர்வசி ஒரு மெல்லிய சந்தேகத்தை தன்னுள் கொண்டிருந்தாள். அவளுடைய மாதவிலக்கு தள்ளிப்போயிருந்தது. அது ஆனந்த்குமார் ராய்சௌத்ரியின் குழந்தையா என்று அவள் பதற்றம் கொண்டிருந்தாள். தனியாக இருக்கும்போது விரல்களை விட்டு நாட்களை எண்ணிக்கொண்டிப்பதே அவள் வழக்கமாக இருந்தது ஓர் எண்ணிக்கையில் நாட்கள் சரியாக வந்தன. இன்னொரு முறை பிழையாகச் சென்றன.
தன் கணவன் பெண்களை நன்கறிந்தவன் என்பதை முதல் இரவிலேயே அவள் புரிந்துகொண்டாள். அவன் ராய்சௌத்ரியின் இன்னொரு வடிவமாக இருந்தான். பெண் அவளுக்கு உடல் மட்டும்தான். காமம் என்பது தனக்கான நுகர்வுதான். உண்மையில் அது அவளுக்கு மிகப்பெரிய ஆறுதலையே அளித்தது. தான் எவரையும் ஏமாற்றவில்லை என்றே அவள் சொல்லிக்கொள்ள முடிந்தது. திருமணமான ஒரு மாதத்திலேயே அவள் உடல் நலமற்று மருத்துவரை சந்தித்தபோது அவளுக்கு சிஃபிலிஸ் தொடக்க நிலையில் இருப்பதை அவர் சொன்னார். ஆனால் அஸ்வத் தேஷ்பாண்டே அதை அவன்தான் அவளுக்கு அளித்ததாக எண்ணிக்கொண்டிருந்தான். முன்னரே அவனும் அந்நோய்க்கு மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவள் கருவுற்றிருப்பதை அறிந்த மருத்துவர் கருவைக் கலைப்பதே நல்லது என்றார். ஆனால் அத்தகவலை தெரிந்துகொண்ட ருக்மணி தேஷ்பாண்டே அதை உறுதியாக மறுத்துவிட்டாள். ‘இந்த வீட்டின் முதல் குழந்தையைச் சிசுப்படுகொலை செய்தால் இந்த வம்சம் அற்றுப்போய்விடும்’ என்று அவள் சொன்னாள். அந்த விவாதத்திற்குள்ளேயே நுழையாமல் அஸ்வத் தேஷ்பாண்டே ஒதுங்கிக்கொண்டான். அந்த உணர்ச்சிகரமான மிரட்டலுக்கு ஊர்வசி பணியவேண்டியிருந்தது. குழந்தை பெரிய சிக்கல்கள் எதுவும் இல்லாமல் பிறந்தது அவளுக்கு ஆறுதலை அளித்தது. அதன் முகத்திலும் சாயலிலும் எங்கேனும் ஆனந்த்குமார் ராய்சௌத்ரியின் சாயல் உள்ளதா என்று அவள் ஒவ்வொரு முறையும் பார்த்துக்கொண்டிருந்தாள். குழந்தை அவளைப்போலவே இருந்தமையால் நாளடைவில் அந்த சந்தேகத்திலிருந்து விலகிச் சென்றாள்.
ருக்மணி தேஷ்பாண்டே அதற்கு விஃபவ் தேஷ்பாண்டே என்று பெயரிட்டாள். ஒவ்வொன்றாக எண்ணி அஞ்சி கணக்கிட்டு, அஞ்சிய எதுவுமே நிகழாமல் ஒவ்வொன்றும் சீராக முடிய அடுத்த கணக்கிடல்களுக்கு சென்று கொண்டிருந்ததாகவே அவளுடைய திருமணத்தின் முதல் ஆண்டுகள் இருந்தன. பின்னர் அந்த ஒட்டுமொத்த நாடகத்தில் ஒரு பகுதியை மிகச்சரியாக நடிக்க அவள் கற்றுக்கொண்டாள். தன்னுடைய இடமென்ன என்று புரிந்துகொண்டு அந்த எல்லைகளை வகுத்துக்கொண்டாள்.
விஃபவ் தேஷ்பாண்டே ஒன்றாம் வகுப்பிலிருந்தே டார்ஜிலிங்கில் இருக்கும் உயர்தரமான தங்கிப் படிக்கும் பள்ளியில் சேர்க்கப்பட்டான். அவன் வாழ்க்கை முழுக்க அங்குதான் கழிந்தது. ஓராண்டில் ஒரு மாதகாலம் அவனுக்கு விடுமுறை வந்தபோது பெரும்பகுதியை அவன் தன் பாட்டி தாத்தாவுடன் பாட்னாவில் செலவழிக்கத்தான் விரும்பினான். தன் தந்தை பணியாற்றும் தொலைதூர சிற்றூர்களுக்குச் சென்று தங்குவதில் அவனுக்கு விருப்பமில்லை. அவன் அடம்பிடித்து பாட்னாவிலேயே தங்கினான். அவன் அப்படி அடம்பிடிப்பதை அவன் பாட்டியும் தாத்தாவும் பெருமையாக எண்ணினர்.
அவனுடைய பார்வையில் அவனது அம்மா எப்போதும் நரம்புத் தளர்ச்சி கொண்டவள் போல இருந்தாள். அனைவரையுமே வெறுத்து விலக்கி தன்னுள் தான் ஆழ்ந்து எப்போதும் அழத்தயாராக இருப்பது போலத் தோன்றினாள். அவன் தந்தை பெரும்பாலும் வீட்டுக்கு வருவதோ தாயுடன் நெருக்கத்தை வைத்துக்கொள்வதோ இல்லை. அங்கிருக்கும் போலீஸ்காரர்கள் அவனை ஒரு பெரிய மனிதரை போல் நடத்தினார்கள். அவர்களை அவன் அதிகாரம் செய்ய முடியும், அதில் மெல்லிய மகிழ்ச்சியும் அடைய முடியும். ஆனாலும் அங்கே விளையாடுவதற்கான எல்லா வாய்ப்புகளும் மூடிக்கிடந்தன.
பாட்னாவில் விடுமுறை உற்சாகமானதாக இருந்தது அவன் தாத்தா அவனுடன் நிறைய நேரத்தை செலவழித்தார். பாட்டியை அவன் பொருட்படுத்தவில்லை. அவன் பாட்னாவின் தெருக்களை மிக விரும்பினான். அங்கு நிகழும் கிரிக்கெட் போட்டிகள், சைக்கிள் போட்டிகள் என அவனுக்கு பொழுதுபோக்குகள் நிறைய இருந்தன. பின்னர் அவன் பாட்னாவின் கங்கைக்கரைப் படிக்கட்டுகளில் நிகழும் சீட்டாட்டங்களில் ஈடுபாடு கொண்டான். பான்பராக் போடவும், பணம் வைத்து சூதாடவும் தொடங்கினான். அவனுக்கு முதல் பெண் அனுபவமும் அங்கே ஒரு முதிய பரத்தையிடம் அமைந்தது. அதன்பின் அவன் எவரையுமே பொருட்படுத்தவில்லை. அவன் முகமும் மிக வேகமாக மாறிக்கொண்டிருந்தது.
ஊர்வசி தேஷ்பாண்டே தாய் எனும் அனுபவம் இல்லாதவளாகத்தான் வாழ்ந்தாள். விஃபவ் பிறந்தபின் தொடர்ச்சியாக அவளுக்குச் செய்யப்பட்ட பாலியல் நோய்க்கான சிகிச்சைகளின் காரணமாக இரண்டுமுறை அவளுக்கு கரு கலைந்தது. நான்காவது குழந்தைக்காகத்தான் அவளை ஹரீந்திரநாத் தேஷ்பாண்டேயின் இல்லத்துக்கு அனுப்பியிருந்தார்கள். அங்கு அவள் வந்த நாள் முதலே அந்தக் கருவும் கலைந்துவிடும் என்ற அச்சத்தை அடைந்தாள். அப்போது அவளுக்கு உண்மையிலேயே ஒரு குழந்தை தேவைப்பட்டது. ஏனென்றால் விஃபவ் பிறந்தபோது அந்தக் குழந்தையை அவள் வெறுத்தாள். அந்தக் குழந்தை தன் உடலில் இருந்த அனைத்து சத்தையும் உறிஞ்சி சாப்பிடுகிறது என்ற எண்ணம் இருந்தது. ஒவ்வொரு முறையும் அதைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு பழைய நினைவுகள், விருப்பங்கள் வெறுப்புகள் என்று அலைக்கழித்து அந்தக்குழந்தையை அவள் குழந்தையாக ஒருபோதும் குழந்தையாகப் பார்க்க முடியாதபடி செய்தது.
அதன் பிறகு கருவுற்றபோது அந்தக்குழந்தை ஒரு பெண்ணாக இருக்கும் என்று அவள் நினைத்தாள். அது மூன்று மாதத்தில் கலைந்தபோது கடும் அச்சம் கொண்டாள். அந்தக் குழந்தையைப் பற்றி அவள் ஏராளமான கற்பனைகள் செய்திருந்தாள். அதன் முகத்தையே அவள் பார்த்திருந்தாள். நெடுங்காலம் அவள் கனவுகளில் அந்தக் குழந்தை வந்துகொண்டிருந்தது. அவள் விழித்தெழும்போது அருகே அந்தக் குழந்தை கையாட்டி சிணுங்கியபடி கிடந்தது. திடுக்கிட்டு அவள் எழுந்து மின்விளக்கைப் போட்டால் மறைந்தது. பலமுறை அவள் அருகே இருந்து தூங்கிக்கொண்டிருந்த கணவனை உசுப்பி என் அருகே குழந்தையைப் பார்த்தேன் என்று சொன்னாள். எப்போதும் மது போதையில் தூங்கும் வழக்கம் கொண்டிருந்த அவன் ‘அது கனவு, பேசாமல் படு’ என்று சொல்லி குழறியபடி புரண்டு படுத்தான். இரவெல்லாம் அவள் தூங்காமல் விழித்து படுக்கையில் அமர்ந்து அந்தக்குழந்தை அங்கு வந்துவிடும் என்று எதிர்பார்த்தவள் என்பது போல் அமர்ந்திருந்தாள்.
மீண்டும் கருவுற்ற போது முந்தைய குழந்தை நினைவிலிருந்து அகன்று பிறிதொரு குழந்தை அங்கே வந்தது. அது கலைந்தபோது இரு குழந்தைகளும் அவளை துரத்தத் தொடங்கின. அவள் குழந்தைகளின் குரல்களை மாறி மாறிக் கேட்கக் கூடியவளானாள். நடந்து செல்லும்போது சட்டென்று ஒரு குழந்தையின் குரல் கேட்க நின்று திடுக்கிட்டு திரும்பிப் பார்ப்பாள். அவள் உடல் துடிக்கத்தொடங்கிவிடும். சன்னல்கள் வழியாகப் பார்த்துக் கொண்டிருக்கும்போது சாலையில் குழந்தைகளுடன் போகிறவர்களை அவள் கடைசி எல்லை வரைக்கும் கண்களால் தொடர்ந்து பார்ப்பாள்.
அவர்களில் ஏதேனும் ஒரு குழந்தை திரும்பி அவளைப் பார்த்துவிட்டால் அவள் உடல் தூக்கிவாரிப்போடும். கைகால்கள் உதறத்தொடங்கும். அது தன் குழந்தையின் பார்வை என்று அவள் உணர்வாள். ஓடிவந்து வேலைக்காரர்களிடம் பிதற்ற ஆரம்பிப்பாள். “இன்று ஒரு குழந்தை சாலையில் என்னைப் பார்த்தது. அவ்வளவு தொலைவிலிருந்து என்னைப் பார்த்தது. அதற்குள் என்னுடைய குழந்தையின் ஆவி இருக்கிறது. என்னுடைய குழந்தைதான் மறுபிறப்பாக அங்கே பிறந்திருக்கிறது. இல்லாவிட்டால் அது ஏன் என்னைப் பார்க்கவேண்டும்? இவ்வளவு தூரத்திலிருந்து ஏன் என்னைப் பார்க்க வேண்டும்?” என்று புலம்புவாள்.
வேலைக்காரர்கள் அவளுடைய அர்த்தமற்ற புலம்பல்களுக்கு பெரிதும் பழக்கப்பட்டிருந்தார்கள். அதை எப்போதுமே அவர்கள் புன்னகையுடன் ஆமோதித்தார்கள். ”நம் குழந்தை நம்மிடம் தேடி வந்துவிடும் மேம்சாப். அது ஒருபோதும் நம்மை விட்டு விலகாது” என்று அவர்கள் சொன்னார்கள்.
மூன்றாவது குழந்தை கலைந்தபோது அவள் அந்த குழந்தையைத் தற்செயலாகப் பார்க்க வாய்த்தது. அவள் உடலில் இருந்து ரத்தச்சேற்றுடன் நழுவிய அதை தாதிகள் ஒரு வெண்ணிறமான பாத்திரத்தில் எடுத்து வைத்தபோது அரைமயக்கத்தில் எச்சில் வழிய திரும்பிய அவள் கண்முன் அது தெரிந்தது. அரை மயக்கத்திற்குரிய அத்தனை புலன்கூர்மையுடன் அவள் அதைப் பார்த்தாள். நீண்டநேரம் துல்லியமாக அதைப் பார்த்துக்கொண்டே இருந்ததுபோல் அவள் உணர்ந்தாள். ஆனால் அரைக்கணம்தான் அவள் உண்மையில் பார்த்திருந்தாள். சிறிய தலையும், மிகச்சிறிய கைகால்களுமாக சுருண்டிருந்த அது சற்றே பெரிய இறால்மீன் போலிருந்தது.
நீண்டகாலம் ஊர்வசியை அந்த சிறிய உருவம் தொடர்ந்து வந்து வதைத்தது. கனவுகளில் அவள் முன் அது தோன்றும், அதன் சிறிய மண்டையின் கண்கள் திறந்து அவளைப் பார்க்கும். புழுவின் கண்கள். புழுவின் வாய். அது ஒரு பெரிய புழு. அவளுக்கு ஒற்றைத்தலைவலி வருவதுண்டு. தலைச்சுற்றலும் குமட்டலும் எடுக்கும். வெளிச்சத்தைப் பார்க்கமுடியாது. இருண்ட அறைக்குள் தலையில் ஒரு துண்டைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருக்கும்போது அந்த இருளுக்குள் மிக அருகே அது அமர்ந்திருக்கும். கைநீட்டினால் தொட்டுவிடலாம் என்பதுபோல. ஒருமுறை கனவில் அவள் தன் அடிவயிற்றில் வாழைப்பூவுக்குள் மடல்கள் அடர்ந்திருப்பதுபோல ஏராளமான சிறு குழந்தைகள் செறிந்து தொற்றியிருப்பதைக் கண்டு அலறி விழித்துக்கொண்டாள்.
மீண்டும் கருவுற்றபோது ஊர்வசி தேஷ்பாண்டே பெரும்பாலும் டாக்டர்களிடமிருந்து டாக்டர்களுக்குச் சென்று கொண்டிருந்தாள். ”இந்தக் குழந்தையை தங்கவைக்க வேண்டும்” என்று அவள் டாக்டர் ப்ரியா முகர்ஜியிடம் சொன்னாள். ”இந்தக் குழந்தை தங்காவிட்டால் நான் தற்கொலை செய்துகொள்வேன்” என்றாள்.
”இதென்ன பேச்சு? உங்கள் கருப்பை சற்று பலவீனமாக இருக்கிறது. கவனமாக இருந்தால் குழந்தை பிறந்துவிடும். இதெல்லாமே வெறும் உடற்கூறியல் விஷயங்கள் இதில் தவறு சரி, பாவ புண்ணியம் ஒன்றும் கிடையாது” என்று டாக்டர் ஆறுதல் சொன்னார்.
”இத்தனை குழந்தைகள் தவறுவதென்றால் ஏதோ பெரும் பாவம் இருக்கிறது” என்று ஊர்வசி சொன்னாள். ”இவர்களுடைய குடும்பத்தில் ஏதோ ஒரு சாபம் இருக்கிறது. இல்லையென்றால் என்னுடைய குழந்தைகள் இவ்வளவு தொடர்ச்சியாக கலைந்து கொண்டிருக்காது. அந்தக் குழந்தைகளுக்கு இங்கு வந்து பிறக்க விருப்பமில்லை.” வெளிறிய முகத்துடன் டாக்டரின் கைகளைப் பற்றிக்கொண்டு “இப்படி நூற்றுக்கணக்கான குழந்தைகள் இறந்திருக்கின்றன இங்கே” என்றாள்.
அப்போது எங்கோ யாரோ பேச்சுவாக்கில் ஃபணீந்திரநாத் தேஷ்பாண்டே தன்னுடைய மனைவியையும் குழந்தைகளையும் ஊரில் கைவிட்டுவிட்டு வந்தவர் என்ற செய்தியைச் சொன்னார்கள். அவள் அதைப் பிடித்துக்கொண்டாள். ஃபணீந்திரநாத்தின் மனைவி சோனார்கஞ்சில் விபச்சாரியாக வாழ்ந்தாள். அவள் அனைத்து சாதியினராலும் புணரப்பட்டாள். அவருடைய மகளும் எல்லா சாதியினராலும் புணரப்பட்டாள். அவர்களுடைய உடம்பு சீழ் பிடித்து அழுகி அவர்கள் அங்கே இறந்தார்கள். அவர்கள் தங்களில் உருவான குழந்தைகளை கருவறுத்துக்கொண்டே இருந்தார்கள். “அந்தக் குழந்தைகளை நான் பார்த்தேன்… நான் என் கண்களால் பார்த்தேன். ஒவ்வொன்றின் கண்களையும் நானே பார்த்தேன்” என்று அவள் டாக்டரிடம் சொல்லி அழுது மயங்கிவிழுந்தாள்.
அந்தப்பெண்களின் உடலிலிருந்து மூதாதையரின் சாபம் இந்தக் குடும்பத்தின் மேல் விழுந்திருக்கிறது என்று அவள் நம்பினாள். தன் கணவருடனான ஒரு சண்டையில் ஆக்ரோஷமாக அவனை வசைபாடும்போது அவள் சொன்ன அந்த வரி அவளுக்கே உடனே உண்மை என்று தோன்ற ஆரம்பித்து ஒவ்வொருநாளும் வளர்ந்து ஆட்கொண்டது. ஒரு சில நாட்களுக்குள் பல்வேறு சாதியினரால் புணரப்பட்டு கைவிடப்பட்டு சிதைந்து அழிந்த அந்த இரண்டு பெண்களையும் அவள் மிக அருகே என பார்க்க ஆரம்பித்தாள். அந்தப்பெண்கள் தன்னைத் தொடர்வதாக நினைக்கத் தொடங்கினாள். அவளுக்கு ஒவ்வொரு நாளும் பதற்றம் ஏறிக்கொண்டிருந்தது.
அவர்களுக்கான பிராயச்சித்தம் செய்ய வேண்டும், அவர்கள் ஆத்மா சாந்தியடையும்படி சடங்குகளைச் செய்ய வேண்டும் என்று அவள் கணவனிடம் சொன்னாள். ”உளறாதே” என்று அவன் கையோங்கி அடிக்க வந்தான்.
“ஆமாம், அடிக்க வாருங்கள். இப்படி நம் குழந்தைகள் சாவது எதனால் என்று நினைக்கிறீர்கள். நான் எல்லா பூசாரிகளிடமும் கேட்டுவிட்டேன். நம்மைத் தொடர்ந்து அந்த இரண்டு பெண்களும் சாபம் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அந்த ஆத்மாக்களை நாம் கரையேற்றவில்லை என்றால் இந்தக்குடும்பத்தில் குழந்தைகள் வாழாது. விஃபவ் கூட ஆபத்திலிருக்கிறான் என்று ஒரு சோதிடர் சொன்னார்” என்றாள்.
அந்தக் கோபத்தில் அவள் சொன்னது இன்னும் அவளுக்குள் தீவிரமாக கிளர்ந்தெழுந்தது. விஃபவ் ஆபத்திலிருக்கிறான் என்று சொல்லத்தொடங்கினாள். அப்போது ஒருமுறை பாட்னாவில் படகில் கங்கையில் சென்ற விஃபவ் படகு கவிழ்ந்து நீரில் விழுந்தான். படகோட்டிகள் உடனடியாக அவனைத் தூக்கி கரையேற்றிவிட்டாலும் கூட அந்தச் செய்தி வந்தபோது அவள் மயங்கி விழுந்தாள். ஆஸ்பத்திரியில் மயக்கம் தெளிந்தவுடன் வெறிகொண்டவளாக எழுந்து அருகே நின்ற பணிப்பெண்களையும் தாதிகளையும் அடித்துக் கூச்சலிட்டாள். கண்ணாடிப் புட்டிகளையும் பாத்திரங்களையும் எடுத்து வீசினாள். அவளுக்கு மயக்க ஊசி போட்டு படுக்க வைத்தனர்.
மறுநாள் விழித்துக்கொண்டபோது அருகிருந்த கணவனை பாய்ந்து பிடித்து அவன் சட்டையைக் கிழித்து வெறிகொண்டு கூச்சலிட்டாள். ”உன்னுடைய குடும்பத்தின் சாபத்தால் என்னுடைய குடும்பம் அழிகிறது. நான் சாகிறேன். விஃபவும் சாகப்போகிறான். நீ இன்னொரு பெண்ணைக்கட்டி அவள் வாழ்க்கையையும் அழிக்கப்போகிறாய்” என்று கூச்சலிட்டாள். ”நீ பாவி. உன் குடும்பம் முழுக்க சாபம் நிறைந்திருக்கிறது… உன்னை ஆயிரம் கருக்குழந்தைகளின் ஆவிகள் துரத்திவருகின்றன… நீ நாசமாகப் போவாய்.”
அப்போது அவள் கணவனும் அதிர்ந்துவிட்டிருந்தான். அவன் ஒன்றுமே சொல்லவில்லை. கிழிந்த சட்டையுடன் வெளியே சென்று ஒதுங்கி நின்று புகை பிடித்துக்கொண்டிருந்தான். அவள் அலறி அலைந்து மயங்கி விழுந்தாள். தாதியரால் தூக்கி படுக்க வைக்கப்பட்டு மீண்டும் அமைதிப்படுத்தும் ஊசி போடப்பட்டது. ஒரு வாரத்துக்குப் பிறகு அவர்கள் இருவரும் கிளம்பிச் சென்று மறைந்த இரு பெண்களுக்கும் விரிவான நீர்ச்சடங்குகளையும் பிராயச்சித்த சடங்குகளையும் பல ஆயிரம் ரூபாய் செலவில் செய்தார்கள்.
அங்கே அப்பெண்களுக்கு சடங்குகளைச் செய்த பாண்டா அவர்களிடம் “உக்கிரமான சாபம் இருக்கிறது… பெண் சாபம்” என்றார்.
“ஆமாம்” என்று அவன் சொல்வதற்குள் அவள் சொன்னாள். “அந்த சாபத்தால்தான் நாங்கள் அழிந்து கொண்டிருக்கிறோம்.”
“பிராயச்சித்தம் செய்யவேண்டும். சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்பு கோரவேண்டும்…”
“என்னென்ன சடங்குகள்?” என்று அவள் கேட்டாள்.
“பிராமணபோஜனம்… பிராமண தானம்… இங்கே கங்கைக்கு முன் விழுந்து வணங்கி மன்னிப்பு கோரவேண்டும்”
அந்தச் சடங்குகள் செய்தபோது அவள் கணவன் அமைதியிழந்தவனாக இருந்தான். அவளுக்கு அச்சடங்குகளைச் செய்யும்போது ஒருவிதமான வஞ்சம் தீர்க்கும் இன்பம் எழுந்தது.
சடங்குகளை முடிக்கும்போது அவள் பாண்டாவிடம் “குலக்கலப்பு பாவம் அல்லவா? அதற்கும் பிராயச்சித்தம் செய்யவேண்டும் அல்லவா?” என்றாள்.
“ஆம், அது கொலைபோன்ற பாவம்… அதற்கு கண்டிப்பாக பிராயச்சித்தம் செய்யவேண்டும்”
“நீ வருகிறாயா இல்லையா?” என்று அஸ்வத் கூச்சலிட்டான்.
“நான் வருகிறேன்… எனக்கென்ன? வம்சமே அற்றுப்போகவேண்டும் என்று எழுதியிருந்தால் நான் செய்வதற்கு என்ன இருக்கிறது?” என்று ஊர்வசி சீற்றத்துடன் சொன்னாள்.
“சாப், அப்படி நிகழ்ந்திருந்தால் அதற்குண்டானதைச் செய்தே ஆகவேண்டும்.”
“ரத்தக்கலப்பு நடந்து குழந்தை பிறந்திருந்தால்தான் அந்தக் குலத்திற்குள் கெட்ட ரத்தம் கலந்திருப்பதாக அர்த்தமா பண்டிட்ஜி?” என்று ஊர்வசி கேட்டாள்.
“தேவையே இல்லை. ஒரு குலத்தில் ஒரு பெண்ணை கீழ்க்குலத்தான் ஒருமுறை அடைந்தான் என்றால்கூட பாவம்தான்… பழி அந்தக் குடும்பத்தை அழிக்கும்” என்றார் பாண்டா. “ஒரு துளி விந்துவில் ஒரு லட்சம் குழந்தைகள் இருக்கின்றன. அவை பிறக்காவிட்டாலும் கூட சாகமுடியும்.”
“நான் எதுவும் சொல்லவில்லை… ஊரின் அழுக்கெல்லாம் ஆற்றிலே வந்து சேர்வதுபோல இந்தக் குடும்பத்தின் பாவம் எல்லாம் என் உடம்பில் வந்து சேர்ந்துவிட்டது… என்னால் சாப்பிடமுடியவில்லை. நடமாட முடியவில்லை. என்னைச் சுற்றி இந்தப் பாவம் சாக்கடைபோல பரவியிருக்கிறது. மலம்போல நாற்றம் அடிக்கிறது” அவள் குமட்டி கங்கைப் படித்துறையிலேயே வாந்தி எடுக்க தொடங்கினாள்.
“நான் நினைத்தேன்…” என்றார் பாண்டா. அவளுக்கு தண்ணீர் கொடுத்து ஆறுதல்படுத்தினார்.
”என்னால் முடியவில்லை பண்டிட்ஜீ… நான் செத்துக்கொண்டிருக்கிறேன். யாருக்குமே நான் சொல்வது கேட்கவில்லை. சாக்கடையில் புழுக்கள்போல இவர்கள் பாவத்திலே திளைக்கிறார்கள்.”
“வாயைமூடு நாயே” என்று அவள் கணவன் அவளை ஓங்கி அறைந்தான்.
அவள் வீறிட்டலறியபடி தன் கைகளை ஒன்றுடன் ஒன்று மோதி கண்ணாடி வளையல்களை உடைத்தாள். ஒரு கையால் நெற்றிக்குங்குமத்தை அழித்து இன்னொரு கையால் கருகுமணி மாலையை அறுத்துவீசிவிட்டு “நான் சாகிறேன்… கங்கையிலேயே சாகிறேன்” என்று கூச்சலிட்டபடி ஓடினாள்.
அஸ்வத் பாய்ந்து அவளை பிடித்து சுழற்றி தரையில் வீசினான். தரையில் படுத்து அவள் அழுதாள். தரையை கையால் அறைந்தபடி வெறிகொண்டு கத்தினாள்.
”சரி… சரி, சடங்குகளைச் செய்வோம்… பாண்டா, உங்களுக்குத் தேவையானதை தருகிறேன்… சடங்குகளைச் செய்வோம்” என்று அவன் சொன்னான்.
சடங்குகள் தொடங்கியபோது அவள் எழுந்து வீங்கிய முகத்துடன் படிக்கட்டில் அமர்ந்திருந்தாள். பகையுடன் அனைவரையும் பார்த்துக்கொண்டிருந்தாள். சடங்கு முடிந்தபின் பாண்டா அவன் கையால் மீண்டும் அவள் கழுத்தில் கருகுமணி மாலையைக் கட்டச்செய்தார்.
அதன் பிறகு சாதிக்கலப்பு செய்த அந்த இரு பெண்களும், அவர்களின் பிறக்காமலேயே செத்துப்போன குழந்தைகலும் அடங்கிவிட்டனர் என்று ஊர்வசி நினைத்தாள். எல்லாம் சீரடைந்து வருவதாக அவளுக்குத் தோன்றியது. மீண்டும் அவள் சற்று அமைதிநிலையை அடைந்தாள். அவள் கணவன் அவளைத் தன் பிறந்த வீட்டுக்கு கொண்டு வந்து விட்டபோது அவள் சற்று நிம்மதியிழந்தாலும் கூட வேறு வழியில்லை என்று அவளுக்குத் தெரிந்திருந்தது.
அஸ்வத் வேலைபார்த்த ஊரில் அவனுடன் தங்க அவளுக்கு பிடிக்கவில்லை. அது ஒரு பழைய பிரிட்டிஷ் காலத்து மாளிகை. பல கட்டிடங்களை ஒன்றுடன் ஒன்று ஓடுபோட்ட ஓர் இடைகழியால் இணைத்து ஒற்றைக்கட்டிடமாக ஆக்கியிருந்தார்கள். அவள் இருந்த கட்டிடத்தின் அறைக்குள் அவள் ஒரு மணியை அடித்தால் மட்டுமே வேலைக்காரர்கள் வந்தார்கள். வேலைக்காரர்களின் இடத்தில் எப்போதும் பேச்சும் சிரிப்பும் கேட்டுக்கொண்டிருக்கும். ஊர்வசி அங்கு செல்ல முடியாது. அவர்கள் அவளிருக்கும் இடத்திற்கு வரும்போது இயந்திரங்கள் போல் இருந்தார்கள்.
ஊர்வசி அங்கு இருந்த நான்கு மாத காலமும் தன்னுடைய அந்த தனித்த படுக்கை அறையிலேயே சிறையில் போல் இருந்தாள். ஆகவே பாட்னாவுக்குச் செல்லலாம் என்று கணவன் சொன்னபோது அவள் இயல்பாக ஒத்துக்கொண்டு அங்கே வந்தாள். அந்த இல்லத்தின் முன் கார் நின்றபோது முதற்கணமே அவள் ஒவ்வாமையை அடைந்தாள். வாந்தி வருவதுபோல குமட்டி வாயைப் பொத்திக்கொண்டாள். நீண்ட கார்ப்பயணமும் கர்ப்பமும்தான் காரணம் என நினைத்துக் கொண்டாள்.
“சிதைந்து அழிந்துகொண்டிருந்த உள்ளம். அதன்மேல் தொற்றி ஏறிக்கொண்டன நிழல்கள். காட்டில் நீயே பார்த்திருப்பாய். நலிந்த விலங்கின்மேல்தான் ரத்தம் உண்ணும் உண்ணிகள் பெருகும். அவற்றை அவ்விலங்கால் விலக்கக்கூட முடியாது. அது அவற்றை விரும்புவதுபோல, தன்னை அவற்றுக்கு விரும்பி அளிப்பதுபோலக்கூட தோன்றும்.” என்றது கானபூதி.
(மேலும்)
யாழ்ப்பாணன்
பாரதி ,நாமக்கல் கவிஞர் மரபிலான நவீன மரபுவழிச் செய்யுள்களை எழுதியவர். நினைவேக்கம், சமூகப்பிரச்சினைகளை கவிதைகளாக எழுதினார். யாழ்ப்பாணன் அவர்களின் கவிதைகள் எளிய நடையில் உயர்ந்த கருத்துக்கள் அழகுறப் பொதிந்தவையாக உள்ளன என்று நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை பாராட்டியிருக்கிறார்.

May 24, 2025
முதலிடத்தில் இருக்கும் எழுத்தாளன் நான் !
[image error]தினமணி இதழில் 2022 ஏப்ரலில் வெளிவந்த பேட்டி.
எழுத்தாளர் ஜெயமோகன் 60 வயதை எட்டியுள்ளார் .அவரது இளமைப் பருவம், திருமணம், எழுத்து … குறித்து தினமணி வாசகர்களுக்காக மனம் திறந்து பேசுகிறார்.
உங்களின் 60 வயதை ஒட்டிய பேட்டி என்பதால் உங்கள் ஊரைப் பற்றியும் – பெற்றோர் பற்றியும் படிப்பு முதலானதைப் பற்றியும் அறியலாமா?
எனது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள திருவரம்பு .அதன் அருகில் தான் திற்பரப்பு அருவி உள்ளது. திருவரம்பில் மகாதேவர் கோயில் மையமானது .அதை ஒட்டிய தொன்மையான வீடுகளில் ஒன்று என்னுடையது. எங்கள் குடும்பம் முந்நூறாண்டுகளுக்கும் மேலாக அங்கே வாழ்ந்தது என்பதற்கான சான்றுகள் உள்ளன. ‘கணபதியம் வளாகம்’ என்பது வீட்டுப் பெயர்.
‘வயக்க வீடு’ என்பது அப்பாவின் குடும்பப் பெயர்.
என் அப்பா பாகுலேயன் பிள்ளை பத்திரப்பதிவுத்துறை ஊழியராக இருந்தார்.அம்மா விசாலாட்சி நல்ல இலக்கிய வாசகி.அவருடைய அண்ணன் ஒருவர் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்தார். ஆகவே அம்மா இளமையிலேயே தமிழ், ஆங்கிலம், மலையாளம் மூன்று மொழிகளிலும் நிறைய வாசிப்பவர் .எனக்கு இலக்கிய அறிமுகம் அம்மாவிடமிருந்து தான் .எங்கள் இல்லத்தில் நல்ல நூல் சேகரிப்பு இருந்தது. அம்மா என்னை ஓர் எழுத்தாளன் ஆக வேண்டும் என்று சொல்லிச் சொல்லி வளர்த்தார். நான் இன்னொரு தொழிலையோ அடையாளத்தையோ கற்பனை செய்ததே இல்லை.
நான் வணிகவியல் இளங்கலை வரை படித்தேன். இறுதியாண்டு படிக்கும்போது என் நண்பன் ராதாகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டான்.
அது என்னை நிலைகுலையச் செய்தது .பல உளச்சிக்கல்களுக்கு ஆன்மிக நிலையழிவுக்கும் ஆளானேன். ஊரை விட்டு ஓடிப்போனமையால் படிப்பை முடிக்கவில்லை.
சிறுவயதில் துறவியாக ஆசைப்பட்டதாகக் கூறியிருக்கிறீர்கள் .அது உண்மையா ? காசி – திருவண்ணாமலை –பழனி என்று சுற்றியதெல்லாம் எந்த ஆண்டுகளில் ?
நான் எனது 18 வயதில் ஒரு முறையும் 19 வயதில் இன்னொரு முறையும் ஊரை விட்டு ஓடிப் போனேன் .1981 82 இல் துறவியாக அலைந்திருக்கிறேன். துறவி என்று சொல்ல முடியாது. அப்போது ஆழ்ந்த உளச்சிக்கல் இருந்தது .ஆகவே தனியாக அலைந்தேன். பெரும்பாலும் சாமியார்களுடன் இருந்தேன் என்று சொல்லலாம். திருவண்ணாமலை, காசி, ஹரித்வார், பழனி ஆகிய ஊர்களில் இருந்திருக்கிறேன். குறுகிய காலம் .மொத்தமாக ஒன்றரை ஆண்டுகள்.
வேலைவாய்ப்பு –திருமணம் பற்றி கூறலாமா ? ரசிகையாகி – வாழ்க்கை துணைவர் ஆனவரை எப்போது சந்தித்தீர்கள்? முதலில் விருப்பத்தைத் தெரிவித்தவர் யார்? அந்த அனுபவம் ? அவரது ஊருக்குச் சென்றிருக்கிறீர்களா?
1984ஆம் ஆண்டு நவம்பரில் நான் காசர்கோடு (வடகேரளம்)தொலைபேசி நிலைய ஊழியனாக தற்காலிகப் பணியில் சேர்ந்தேன். அங்கே 1988 வரை பணியாற்றினேன். 1997 வரை தருமபுரி மாவட்டத்தில் பணியாற்றிய பின்னர், நாகர்கோவில் வந்தேன். 2008 இல் தக்கலை தொலைபேசி நிலையத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றேன். 2004 இல் திரைத்துறைக்குள் நுழைந்தேன் .அது முதல் நீண்ட விடுப்பில்தான் இருந்தேன்.
நான் தருமபுரியில் பணியாற்றும் போது 1990 இல் என் முதல் நாவல்’ ரப்பர்’ வெளிவந்தது .அகிலன் நினைவுப் பரிசு பெற்ற நாவல் அது .அந்த நாவலை வாசித்து விட்டு அப்போது மதுரை வேளாண் கல்லூரியில் மாணவியாக இருந்த அருண்மொழி நங்கை எனக்கு ஒரு வாசகர் கடிதம் எழுதினார். நவீன இலக்கியம் புரியாமல் அந்நியமாக இருப்பதைப் பற்றி எழுதியிருந்தார். நான் விரிவான பதில்கள் போட்டேன். பின்னர் நான் கேரளத்தில் பி.கே. பாலகிருஷ்ணனைச் சந்திக்கச் சென்றபோது மதுரையில் வேளாண் கல்லூரிக்குச் சென்று அருண் மொழியைச் சந்தித்தேன். அந்த கடிதங்களில் இருந்த கூர்மையும் கூடவே இருந்த கள்ளமின்மையும்தான் நான் அவரை நோக்கிச் செல்ல காரணம். நேரில் சந்தித்தபோது பெரும் பிரியம் ஏற்பட்டது.
இலக்கிய ஆர்வம் கொண்ட அதேசமயம் சிறுமியைப் போல துறுதுறுப்பாக இருந்த அருண்மொழியை நான் மிக விரும்பினேன். என் காதலை தெரிவித்து கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்துக்கு அவர் தந்தி அடித்து பதில் அளித்தார். தன் சம்மதத்தைக் கடிதம் வழியாக தெரிவித்தால் அது வந்து சேர நாலைந்து நாள்கள் ஆகுமே.
அதுவரை நான் தவிக்கக்கூடாது என அந்த தந்தியை அடித்திருந்தார். அவ்வாண்டே திருமணம் செய்து கொண்டோம். இப்போது அருண்மொழி அந்த நினைவுகளை ஒரு நீண்ட கட்டுரையாக எழுதி இருக்கிறார்.
நாராயணகுரு, நடராஜகுரு, நித்ய சைதன்ய யதி உள்ளிட்ட நிறைய குருமார்கள் மீது பிடித்தம் இருக்கிறதே ….? இவர்கள் உங்களது வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கங்கள்? இவர்களைப் பற்றி அறிமுகம் என்ன?
நான் இளமையிலேயே சாவுகளைச் சந்தித்தவன்.சாவு வாழ்க்கை மேல் அடிப்படையான கேள்விகளை உருவாக்கி விடுகிறது .அவை ஆன்மீகமான அலைக்கழிவை உருவாக்கின. எனது 28 வயதுக்குள் பல துறவிகளைச் சந்தித்தேன் .அவர்கள் எனக்கு வழிகாட்டவில்லை .அது அவர்களின் பிழை அல்ல. என் உலகம் இலக்கியம். ஆகவே இலக்கியம் வழியாகவே ஓர் ஆசிரியர் என்னிடம் பேச முடியும் .இலக்கியம் நன்கறிந்த மெய்ஞானியாக நான் சந்தித்தவர் குரு. நித்ய சைதன்ய யதி .அவர் நடராஜகுருவின் மாணவர். நடராஜகுரு நாராயண குருவின் மாணவர். நடராஜகுரு மேலைத் தத்துவத்தில் சார் போன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். நித்ய சைதன்ய யதி தத்துவம், உளவியல் ஆகியவற்றில் முனைவர் பட்டம் பெற்றவர். மாபெரும் இலக்கியவாதி. ஆகவே அவருக்கு நான் மாணவன் ஆனேன். அவர் காலடியில் அமர்ந்து கற்றுக் கொண்டேன்.
தத்துவம் என்பது உரிய ஆசிரியர் அமையாமல் கற்றுக் கொள்ள முடியாத ஒரு துறை. ஆன்மிகம் என்பது ஆசிரியர் வழிகாட்டினாலொழிய உள்ளே செல்லவே முடியாத ஒரு களம். என் தத்துவ, ஆன்மிக தேடல்களால் நான் என் மெய்யாசிரியரைக் கண்டு கொண்டேன். இலக்கியவாதிக்கு தத்துவ அடித்தளம் இருந்தாக வேண்டும் .
தத்துவம் என்பது ஒரு பாடமாக நூல்கள் வழியாகக் கற்கத்தக்கது அல்ல. தத்துவப் படுத்தல் என்பது ஓர் அறிவுச் செயல்பாடு. அதை ஆசிரியர்தான் கற்பிக்க முடியும். எதையும் தத்துவார்த்தமாக அணுக நித்ய சைதன்ய யதியிடமிருந்து கற்றேன் . தத்துவார்த்த அணுகுமுறை என்பது எந்த விஷயமானாலும் அதன் சாராம்சம் என்ன ஒட்டுமொத்தம் என்ன என்று பார்ப்பது. அதைக் கற்பித்தவர் நித்யா தான்.
எழுத்து என்று வரும்போது உங்களது சிந்தனைப் போக்கு ஆரம்பத்தில் எப்படி இருந்தது ?
நான் எழுத ஆரம்பித்தது மிக இளமையில் .பள்ளி நாட்களிலேயே சிறுவர் இதழ்களில் எழுதிக் கொண்டிருந்தேன் .கல்லூரியில் படிக்கும்போது பல்வேறு பெயர்களில் வார இதழ்களில் கதைகள் எழுதியிருக்கிறேன். அதன் பின்னர் எழுதுவது நின்றது. பின்னர் காசர்கோட்டில் வேலைக்குச் சேர்ந்த போது மீண்டும் எழுதலானேன். 1986 இல் சுந்தர ராமசாமி அறிமுகமானார்.அவ்வாண்டே மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவி வர்மா அறிமுகமானார்.
இருவரும் என்னை இலக்கியத்தில் வழி நடத்தினர். சிற்றிழ்களில் தீவிரமாக எழுதத் தொடங்கினேன். 1987 இல் கணையாழியில் ‘ நதி’ என்னும் சிறுகதையும் தீபம் இதழில் ‘ரோஜா பயிரிடுகிற ஒருவர்’ என்னும் சிறுகதையும் வெளிவந்தன. கொல்லிப் பாவை இதழில் ‘கைதிகள்’ என்னும் கவிதை வெளிவந்தது
இவைதான் என் தொடக்க கால எழுத்துகள்.
என் இலக்கியப் பார்வை சுந்தர ராமசாமியும் ஆத்தூர் ரவிவர்மாவும் வடிவமைத்தது. ஓர் இலக்கியவாதி எந்த அரசியலியக்கத்துக்கும், எந்த அமைப்புக்கும், எந்த சிந்தனை முறைக்கும் முழுமையாக தன்னை அளித்துவிடக்கூடாது என்பதே என் முதல் நிலைப்பாடு.
இலக்கியவாதி முழுக்க முழுக்க தர்க்கபூர்வமாக, நடைமுறைத் தன்மையுடன் பேச வேண்டியதில்லை .அவன் உள்ளத்துக்கு தோன்றியதை எழுதவும் பேசவும் வேண்டும். அதில் சில விஷயங்கள் தவறாக இருக்கலாம். சில விஷயங்கள் சமூகத்தால் ஏற்கப்படாமல் இருக்கலாம். ஆனால் அவன் தன்னியல்பாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் க அவன் எதற்காகவும் தன் வெளிப்பாட்டை கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடாது. எதற்கும் அஞ்சவும் கூடாது .என் இலக்கிய கொள்கை என்பது இதுதான் .
என் கதைகள் எல்லாமே தன்னியல்பாக வெளிவருபவை. எந்தத் திட்டமும் இருக்காது.
பெரும்பாலான சமயங்களில் ஒரு சின்ன காட்சி மட்டும் மனதில் தோன்றும். சில சமயம் வெறுமே முதல் வரி மட்டும் மனதில் எழும். உடனே எழுத ஆரம்பித்து விடுவேன் .ஆனால் நாவல்கள் அப்படி அல்ல. தெளிவான திட்டமிடல் அவற்றில் இருக்கும் .நாவலின் கரு என்பது ஓர் அடிப்படையான கேள்விதான் .அது மனதில் எழுந்ததும் நாவலின் களம் பற்றி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து விடுவேன்.
கதை ,நாவல் எழுதிய அனுப்பவும்?
‘விஷ்ணுபுரம் ‘ நாவலுக்கு ஏழு ஆண்டுகால ஆராய்ச்சி தேவைப்பட்டது . வெண்முரசு நாவல் தான் நான் திட்டமிடத் தொடங்கியது 1990இல் . 2014இல் ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்குப் பிறகே எழுத ஆரம்பித்தேன் .நடுவே பல நூறு நூல்களை வாசித்தேன் .ஏராளமாகப் பயணம் செய்தேன். குறிப்புகள் மட்டும் ஆயிரம் பக்கங்களுக்கும் மேல் கையில் இருந்தன .ஆனால் இந்த திட்டமிடல் எல்லாமே நாவலின் வடிவம் கட்டமைப்பு சார்ந்தவை மட்டுமே. நாவலை உணர்ச்சிகளும் சரி கதாபாத்திரங்களும் சரி சித்தரிப்பும் சரி எழுத எழுத உருவாகி வருபவை மட்டுமே.
பொதுவாக ஒரே ஸ்ட்ரோக்கில் அல்லது மூச்சில் ஒரு சிறுகதையையோ நாவலையோ எழுதி விடுவீர்களா? இல்லை திருத்தங்கள் மேற்கொள்வீர்களா?
சிறுகதைகள் அனைத்தையும் ஒரே மூச்சில் எழுதி விடுவதே என் வழக்கம் .ஏனென்றால் எனக்கே கதை தெரிந்திருக்காது. கதையை எழுத எழுத எனக்குள் அது விரிந்து வரும். அந்த ஆர்வமே எழுத வைக்கும் .அத்துடன் நான் எழுத்தை யோசித்துச் செய்வதில்லை .ஒரு கனவு போல அது நிகழ்கிறது .நடுவே விட்டு விட்டால் ஒருவேளை அப்படியே நின்று விடக்கூடும். ஆகவே எழுதிக் கொண்டே செல்வேன் .சிறுகதைகள் மட்டுமல்ல ‘குமரித்துறைவி’ போன்ற சிறிய நாவல்கள் கூட ஒரே மூச்சில் எழுதியவைதான். தொடர்ச்சியாக 30 மணி நேரம் எழுதி ‘குமரித்துறைவி’யை முடித்தேன்.
கணினியில் நேரடியாகவே டைப் செய்து விடுவீர்களா? இல்லை எழுதி வைத்து டைப் செய்கிறீர்களா?
நான் 2000 ஆம் ஆண்டில் கணிப்பொறியை வாங்கினேன். அன்று முதல் கணிப்பொறியில் நேரடியாக தட்டச்சிடுவதே வழக்கம். கையால் எழுதுவதில்லை. பேசும் வேகத்திலேயே தட்டச்சிடுவேன். ஆனால் அதற்கு முன் ‘விஷ்ணுபுரம்’, ‘பின் தொடரும் நிழலின் குரல்’ எல்லாம் கையால் தான் எழுதினேன். விஷ்ணுபுரம் நாவலை மூன்று முறை செம்பிரதி எடுத்திருக்கிறேன்.
நான் படைப்புகளில் சோதனை முயற்சிகளை வேண்டுமென்றே செய்வதில்லை .ஆனால் நான் ஒரு படைப்பில் முன்வைக்கும் கேள்விகளுக்கு உகந்த முறையில் அதற்குத் தேவையான வடிவத்தை உருவாக்கிக் கொள்கிறேன். உதாரணம் விஷ்ணுபுரம் நாவல் நேரடி நிகழ்வுகளும் அந் நிகழ்வுகள் கதையாக ஆனபின் உள்ள வடிவமும் அக்கதைகள் நூல்களாக எழுதப்பட்ட வடிவ மும் ஒரே சமயம் கலந்து வருவதாக உள்ளது . அந்நாவல் நம் புராண மரபை ஆராயும் படைப்பு. புராணங்கள் அப்படித்தான் உள்ளன. அவை ஒரே சமயம் கற்பனையாகவும் வாழ்க்கையாகவும் உள்ளன. ஆகவே அவ் வடிவம் தேவையாகிறது.
நிறைய சோகங்கள் உங்கள் வாழ்க்கையில் …அதைத் திரும்பிப் பார்க்க விரும்புவீர்களா?
என் இளமைக்கால வாழ்க்கையில் பல சோகங்கள் நிகழ்ந்தன .அவற்றிலிருந்தே எழுத்தாளன் ஆனேன். என் அம்மாவும் அப்பாவும் தற்கொலை செய்து கொண்டனர். இன்றும் அந்த நினைவுகள் கடுமையானவை. ஆனால் நான் 30 ஆண்டுகளுக்கு முன்னரே இனி என் வாழ்க்கையில் துயரத்துடன் இருப்பதில்லை, சோம்பி இருப்பதில்லை என்று முடிவு செய்தேன் ,அதன்பின் ஒவ்வொரு நாளையும் எழுத்தும் வாசிப்பும் பயணமுமாகவே செலவிடுகிறேன். ஒரு பொழுதையும் வீணடிப்பதில்லை .எதையும் எண்ணி துயரமடைந்து செலவழிக்க எனக்கு நேரமில்லை.நான் செய்ய வேண்டிய பெரிய பணிகள் எஞ்சியிருக்கின்றன.
இன்றைய தமிழ்ச் சிறுகதை உலகம் எப்படி இருக்கிறது?
இன்றைய தமிழ்ச் சிறுகதை களத்தில் ஏராளமான புதிய குரல்கள் அறிமுகமாகி இருக்கின்றன.பா. திருச்செந்தாழை, ராம் தங்கம், லட்சுமி சரவணக்குமார், லெ.ரா.வைரவன், அரிசங்கர், விஷால் ராஜா, சுரேஷ் பிரதீப், கார்த்திக் பாலசுப்ரமணியம், அனோஜன் பாலகிருஷ்ணன், அகரமுதல்வன், கார்த்திக் புகழேந்தி, ஜி. எஸ் .எஸ். வி. நவீன், கமலதேவி ,கனகலதா, குணா கந்தசாமி, மயிலன் சின்னப்பன் என பலர் தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் படைப்புகளில் பொதுவாக இன்றைய நவீன வாழ்க்கை உருவாக்கும் உறவுச் சிக்கல்கள் கருக்களாகின்றன. இன்று பெரிய அரசியல் கனவுகள் இல்லை .என் தலைமுறையில் உலகை மாற்றிவிடலாம் என்னும் நோக்கம் எழுத்துகளின் உள் கிடையாக இருந்தது. இன்றைக்கு அந்த நம்பிக்கை எவரிடமும் இல்லை .அதனால் உருவாகும் எதிர்காலக் கனவுகள் இல்லாத வெறுமை இவர்களின் பொதுவான பேசு பொருளாக உள்ளது. அதற்குரிய வடிவங்களை இவர்கள் அழுத்தமாக உருவாக்கி வருகின்றனர்.
இதேபோன்று நாவல் உலகம் ? புதிய முயற்சிகள் நடப்பதாகக் கருதுகிறீர்களா?
பெரிய அளவில் நாவல் முயற்சிகள் நிகழ்வதில்லை.புதிய தலைமுறை இன்று சிறுகதைகள் வழியாக தங்கள் மொழியையும் வடிவத்தையும் கண்டடைகிறார்கள்.சுனில் கிருஷ்ணன் எழுதிய’ நவ கண்டம் ‘நவீன் எழுதிய ‘பேய்ச்சி’, ‘சிகண்டி’, தூயன் எழுதிய ‘கதீட்ரல்’ போன்றவை அண்மையில் வெளிவந்த நாவல்களில் குறிப்பிடத்தக்கவை. என் மகன் அஜிதன் எழுதிய ‘மைத்ரி’ என்னும் நாவல் இவ்வாண்டு வெளிவந்துள்ளது. எல்லா வரியும் கவிதையாக நிகழ்ந்த ஒரு அரிய படைப்பு அது.
திராவிட இயக்கங்களின் தாக்கங்கள் நிறைய உண்டு. அவற்றிலிருந்து நீங்கள் எவ்வாறு மாறுபடுகிறீர்கள்? எதனால் இந்த முரண் ?
திராவிட இயக்கங்களின் அரசியல் தாக்கம் ,மொழி, பண்பாட்டில் அவற்றின் தாக்கம் ஆகியவற்றை நான் மறுப்பதில்லை. திராவிட இயக்கம் ஒரு பரப்பிய இயக்கம்.
ஒரு பரப்பிய இயக்கம் மக்களிடம் ஏற்கெனவே உள்ள நோக்கங்கள் ,கோபங்கள் ஆகியவற்றை ஒன்றாகத் திரட்டி ஓர் அமைப்பாக ஆக்குகிறது. அவ்வகையில் தமிழகத்தில் இடைநிலை சாதியினர் அதிகாரம் பெறுவதற்கு வழி வகுத்தது திராவிட இயக்கமே. தமிழகத்தின் பொருளியல் வளர்ச்சியும் சமூக வளர்ச்சியும் அதனால் ஊக்கம் பெற்றன.
தமிழகத்தில் இருந்த சாதி வேற்றுமைப் பார்வைகள் தமிழ் மொழி மேல் இருந்த உதாசீனப் பார்வை ஆகியவற்றை எதிர்த்து இல்லாமலாக்கியதும் திராவிட இயக்கமே. அதை எப்போதும் ஏற்றுத்தான் பேசி வருகிறேன் .ஆனால் பரப்பியல் இயக்கம் எப்போதுமே அதற்கு முன்னால் இருந்த அறிவியக்கங்களில் இருந்தே தன் கொள்கையை எடுத்துக்கொண்டு அதை மக்களிடம் கொண்டு செல்லும்.
சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் அந்த அறிவியக்கங்களைத்தான் கருத்தில் கொள்ள வேண்டும். அதிலிருந்தே தங்கள் சிந்தனைகளை முன்னால் கொண்டு செல்ல வேண்டும். பரப்பியல் இயக்கம் எப்போதுமே கருத்துகளையும் கொள்கைகளையும் மிக மிக எளிமையாக ஆக்கிவிடும். எளிமையாக ஆக்கினால் தான் பொதுமக்களிடம் அவற்றைக் கொண்டு செல்ல முடியும் .அந்த எளிமையான கருத்துகளையும் கொள்கைகளையும் ஒட்டி சிந்திக்கும் சிந்தனையாளனும் எழுத்தாளனும் மிக மேலோட்டமான படைப்புகளை உருவாக்குகிறார்கள். அவர்களின் எழுத்துக்களில் சமநிலை இல்லாத ஒற்றைப்படையான கோஷங்கள் நிறைந்திருக்கும். அதைத்தான் நான் நிராகரிக்கிறேன். இது நான் சொல்வது மட்டுமல்ல. நவீன இலக்கியத்தின் பிதாமகர்களான புதுமைப்பித்தன், க .. சுப்பிரமண்யம், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் என அனைவருமே சொன்ன விஷயம் தான். நான் திராவிட இயக்கம் உருவாக்கிய அரசியல் கோஷங்களை நிராகரிக்கிறேன் .ஆனால் திராவிட இயக்கம் எந்தெந்த அறிவியக்கங்களில் இருந்து தன் கொள்கைகளை எடுத்துக் கொண்டதோ அந்த அறிவியக்கங்களை எல்லாமே ஆழ்ந்து கற்கிறேன். தமிழிசை இயக்கம் தனித்தமிழ் இயக்கம்,தனித்தமிழியக்கம், தமிழ் பதிப்பியக்கம் பற்றி எல்லாம் மிக விரிவாக எழுதியிருக்கிறேன். தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், மறைமலை அடிகள் முதல் இரா. இளங்குமரனார், ச. பாலசுந்தரம் வரை எத்தனை ஆளுமைகள் பற்றி மிக மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறேன் என்று பாருங்கள். என் அளவுக்கு அவற்றைப் பற்றி விரிவாக எழுதிய திராவிட இயக்கத்து எழுத்தாளர்கள் இல்லை.
திருமாவளவன் பிடித்தமானவராக ஆனது எப்படி? ஆன்மிகம் சார்ந்த அவரின் கருத்துக்களை எப்படி எதிர்கொள்வீர்கள் ?அல்லது அது பற்றிய விமர்சனம் உண்டா?
நான் தலித் மக்கள் மீதான சுரண்டல், அடக்குமுறை ஆகியவற்றைக் கண்கூடாகவே கண்டவன் .நம் அரசியலும் சரி அரசாங்கமும் சரி இன்று இடைநிலைச் சாதிகள் சார்ந்தவை. எல்லா அரசியல் இயக்கங்களும் இடைநிலைச் சாதிகளைச் சார்ந்தவைதான். ஆகவே தலித் மக்களுக்காக ஓர் இயக்கம் உருவாகி வந்தபோதுதான் அந்த மக்களின் உரிமைகளைக் கூறவும் அநீதிகளைத் தட்டிக் கேட்கவும் முடிந்தது .அந்த இயக்கத்தின் தலைவர் திருமாவளவன். ஆகவே அவர் ஒரு தார்மிக சக்தி என்று நம்புகிறேன். அவர் அறிவியக்கத்தின் மீது மதிப்பு கொண்டவர். பண்பட்ட மனிதர். அவருடைய அரசியலை நான் ஏற்கவில்லை .அவர் மதம், ஆன்மிகம் பற்றிச் சொல்லும் கருத்துகளுக்கு நேர் எதிரான கருத்துகளையே நான் சொல்லி வருகிறேன் .ஆனால் அவர் இந்து மதம், சனாதனவாதிகள் பற்றிச் சொல்லும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் உரிமை அவருக்கு உண்டு என நினைக்கிறேன் .ஆயிரமாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக நின்று பேசுபவர். அவர் இந்து மதத்தின் எல்லா கீழ்மைகளையும் தேக்க நிலைகளையும் சுட்டிக்காட்ட வேண்டும். இந்து மதமும் சனாதனிகளும் தங்கள் கடந்த கால கீழ்மைகளுக்காக தலைகுனிய வேண்டும். தங்களை அவற்றில் இருந்து மீட்டுக் கொள்ள வேண்டும். அவ்வகையில் நம் மனசாட்சியுடன் பேசும் குரல் அவர். அது நமக்கு வலிக்கிறது என்றால் அந்த வலி நமக்குத் தேவை. அந்த வலி நம்மை மீட்கும் சக்தி கொண்டது.
சோவியத் யூனியன் சிதைந்த போது – ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ வெளியானது .சோவியத் யூனியன் சிதைந்து 30 ஆண்டுகளும் உங்கள் நாவல் வெளிவந்த 20 ஆண்டுகளும் கடந்த நிலையில் தற்போதைய எண்ணம் எவ்வாறு இருக்கிறது?
சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியை ஒட்டி ‘பின் தொடரும் நிழலின் குரல்’ வெளிவந்தது .இன்று ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த நாவல் புதிய தலைமுறையினரால் வாசிக்கப்படுகிறது .இன்று பலருக்கு சோவியத் ரஷ்யா என்றால் என்ன என்று தெரியவில்லை .பலர் லெனின், ஸ்டாலின் பெயர்களை எல்லாம் கூகுளில் தேடி தெரிந்து கொள்கிறார்கள். இன்னும் நூறாண்டுகளில் சோவியத் ரஷ்யாவையே இந்த நாவல் தான் தமிழில் நினைவூட்டிக் கொண்டிருக்கும் .ஆனால் அந்த நாவல் உருவாக்கிய கேள்விகள் என்றுமிருக்கும்.
கருத்தியல் குருட்டுத்தனம் பற்றி அந்நாவல் பேசுகிறது. ஒரு வலிமையான கருத்தியலை அதாவது கொள்கையை நாம் நம்பிவிட்டால் அதுவே சரி என தோன்றி விடுகிறது. வேறு எல்லாமே தப்பு என தோன்றுகிறது. அந்தக் கொள்கையின் பொருட்டு நாம் கொலை கூட செய்கிறோம். சொந்த பெற்றோரை, ஆசிரியர்களை அவமானம் செய்கிறோம் .ஆனால் அந்த கருத்தியல் அல்ல கு கொள்கை பின்னால் தவறாக ஆகுமென்றால் நாம் செய்த வை எல்லாம் இல்லை என ஆகி விடுமா என்ன? நாம் தனி மனிதர்கள் பத்தாயிரம் பேர் சேர்ந்து ஒன்றைச் சொன்னால் நம்மால் அதை எதிர்த்து உண்மை என்ன என்று கண்டறிய முடிவதில்லை. அதற்கான கல்வியோ உளவலிமையோ நமக்கு இருப்பதில்லை.
அப்படியென்றால் தனி மனிதனாக நாம் எப்படி உண்மையை அறிய முடியும்? இந்தக் கேள்வியைத்தான் பின் தொடரும் நிழலின் குரல் கேட்கிறது. அதற்கான விடையைச் சொல்கிறது. அந்நாவலில் இயேசு கிறிஸ்து வந்து அந்த விடையைச் சொல்கிறார். இன்று கம்யூனிசம் வலுவிழந்து விட்டது. ஆனால் புதிய கொள்கை வெறிகள் வந்துவிட்டன. இந்த பிரச்சினை என்றும் இருக்கும். அதைத்தான் பின் தொடரும் நிழலின் குரல் பேசுகிறது.
நீங்கள் வலது சரியாக இருக்கிறீர்கள் என்ற விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
வலது சாரி, இடதுசாரி என்ற பிரிவினை எல்லாம் அரசியல் களத்தில் அந்தந்த சூழலில் சொல்லப்படுவது.நேற்று வரை காங்கிரஸ் வலதுசாரி கட்சி என்றார்கள். இன்றைக்கு அது இடதுசாரி என்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகள் இடதுசாரி என்றால் முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கையை ஆதரிக்கும் தி.மு.க , அ.தி.மு.க. இரண்டுமே வலதுசாரிக் கட்சிகள்தான். சிந்தனையில் இப்படி எளிமையான பிரிவினை கிடையாது. சிந்தனையாளர்கள் மேல் இந்தப் பிரிவினையை போடுபவர்களுக்கு சிந்தனை துறையில் அடிப்படை அறிமுகமே இல்லை என்று தான் பொருள். உலகத்தில் உள்ள எந்த சிந்தனையாளரையும் இடதுசாரி, வலதுசாரி என பிரித்து வகைப்படுத்த முடியாது.
நீங்கள் எதிர்பார்க்கிற கருத்துச் சுதந்திரம் கிடைக்கிறதா?
கருத்துச் சுதந்திரம் என்பது எல்லையற்ற ஒன்று அல்ல. எந்த சமூகத்திலும் எதையும் சொல்லும் உரிமையில்லை. நான் உலகமெங்கும் பார்த்த வரையில் இந்தியாவில் தான் மிக மிக அதிகமான கருத்து சுதந்திரம் உள்ளது. இது இன்னமும் கல்வி அறிவில்லாத கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாடு .சிந்தனையையோ இலக்கியத்தையோ கேள்வி கூட பட்டிராத கோடானு கோடி பேர் இங்கே வாழ்கிறார்கள். சமூக ஊடகங்கள் வழியாக எந்த விஷமியும் அவர்களை எளிமையாக தூண்டிவிட முடியும் என்னும் நிலை உள்ளது. எல்லா கருத்துகளையும் விஷமிகள் வேண்டுமென்றே திரிக்கிறார்கள். ஆகவே கருத்துகளை மிகக் கவனமாக கையாள வேண்டி இருக்கிறது. அது ஒரு கட்டுப்பாடு. நாமே போட்டுக் கொள்ள வேண்டியது.
சாகித்ய அகாதெமியின் செயல்பாடு எப்படி இருக்கிறது?
சாகித்ய அகாதெமி என்பது ஓர் துணை அரசு நிறுவனம் .அதில் பங்கேற்பவர்கள் கல்வித்துறை சார்ந்தவர்கள் .அவர்களின் அதிகாரம்தான் அங்கே உள்ளது. பேராசிரியர்களில் பெரும்பாலானவர்களுக்கு இலக்கிய அறிமுகமோ அடிப்படை வாசிப்போ கிடையாது .ஆகவே அவர்கள் வேறு வேறு சிபாரிசுகளுக்கு ஆட்பட்டு அடிக்கடி சாதாரணமானவர்களுக்கு விருதுகளை அளித்து விடுகிறார்கள் .வலிமையான விமர்சன இயக்கம் வழியாகவே சரியான எழுத்தாளர்களுக்கு விருதுகள் சென்று சேரும்படி செய்ய முடியும். கேரளத்திலும் கர்நாடகத்திலும் நிகழ்வது இதுதான் .
தமிழகத்தில் குறிப்பிட்ட சிலர் இந்த வகை அமைப்புகளில் ஊடுருவி தங்கள் சுயநல நோக்கங்களை செயல்படுத்துகிறார்கள். அவர்கள் எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தங்கள் நிறங்களை உடனே மாற்றிக்கொண்டு அதில் ஒட்டிக்கொள்வார்கள்.ஆகவே விமர்சகர்களின் கூர்மையான கண்காணிப்பு தேவைப்படுகிறது.
பத்ம விருதை தவிர்த்தது ஏன் ? அது உயரிய விருதல்லவா?
அரசு அளிக்கும் விருதுகளை ஏற்க வேண்டாம் என்று எனக்குத் தோன்றியது. பத்ம விருதுக்காக என் நண்பர்கள் முயற்சி செய்தனர். சில முக்கியமான ஆளுமைகளின் பரிந்துரையும் இருந்தது. ஆனால் அரசியல் சூழல் மாறிக்கொண்டிருப்பதைக் கண்டேன். அதை ஏற்றுக் கொண்டால் நான் என் கருத்துகளை சமரசம் செய்ய வேண்டி இருக்கும் என்று தோன்றியது. ஆகவே மறுத்துவிட்டேன்.
சினிமா உலகில் உங்களது தற்போதைய இடம் நீங்கள் விரும்பியது தானா?
சினிமாவில் என்றல்ல எங்கும் நான் விரும்புவது அக்களத்தில் முதலிடத்தை . இன்று சினிமாவில் முதல் இடத்தில் இருக்கும் எழுத்தாளன் நான்தான்.
சினிமாவில் நீங்கள் விரும்பியதைச் செய்ய முடிகிறதா?
சினிமாவில் நான் சாதிக்க விரும்பியது என ஏதுமில்லை. தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை சராசரியானது. பொழுதுபோக்குக்காகவே அவர்கள் சினிமா பார்க்கிறார்கள். இங்கே சினிமா விமர்சகர் கூட பொது ரசனை ஒட்டிய பார்வை கொண்டிருக்கிறார்கள். சினிமா விமர்சனமே ஒரு தொழிலாக ஆகிவிட்டது .ஆகவே சினிமாவில் உள்ள நுட்பங்கள் ஆழங்கள் கவனிக்கப்படுவதில்லை.
உதாரணமாக நான் ‘பொன்னின் செல்வன்’ சினிமாவில் எந்த விமர்சகராவது அதிலுள்ள நகைகளின் வடிவமைப்பில் இருந்த மிகப்பெரிய கற்பனை, உழைப்பு பற்றி ஒரு வரி சொல்கிறார்களா என்று பார்த்தேன். கடம்பூர் மாளிகைக்கும் பழையாறை மாளிகைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை எவராவது சுட்டிக்காட்டுகிறார்களா என்று பார்த்தேன். மிகச் சுருக்கமாக பிரிவின் நஞ்சு என்பதைச் சொல்லும் சில வசனங்கள் அதிலுள்ளன. அதை ஒருவராவது சொல்கிறாரா என்று பார்த்தேன். எவருமே சொல்லவில்லை.
பொத்தாம் பொதுவாக கலை இயக்கம் பரவாயில்லை, வசனங்கள் சில இடங்களில் கூர்மை .இப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆச்சரியம் என்னவென்றால் ரவிவர்மனின் ஒளிப்பதிவு பல இடங்களில் ஒரு கிளாசிக் ஓவியத்தன்மையை கொண்டிருந்தது. அதற்கான ஒளியை அமைத்திருந்தார். அதை ஒளிப்பதிவு சுமார் , தெளிவாக இல்லை என சிலர் எழுதினர். பொன்னியின் செல்வனை எந்த வகையில் சேர்ப்பது என்று கூட மலையாள விமர்சகர் தான் சொல்ல வேண்டி இருந்தது. அதை ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ் ‘ போன்ற மாயாஜால படத்துடனோ அல்லது ‘டிரான்ஸ்பார்மர்ஸ்’ மற்றும் ‘பாகுபலி’ போன்ற குழந்தைகள் படத்துடனோ ஒப்பிடக்கூடாது. அதை ‘டிராய்’ அல்லது ‘எலிசபெத்’ போன்ற படங்களுடன் ஒப்பிட வேண்டும். அப்படி ஒப்பிட்டால் அது அவற்றின் தரத்தை அடைந்திருப்பதைக் காணலாம். இங்கே மிக கொஞ்சம் பேர் அவர்களுக்கு உகந்த அரசியல் கருத்து சினிமாவில் சொல்லப்பட்டால் ரசிப்பார்கள் .அதுவும் நல்ல சினிமாரசனை அல்ல. ஆகவே சினிமாவில் எழுத்தாளனாக நான் செய்ய ஆசைப்படுவது ஒன்றுமில்லை. விளைவாக ஏமாற்றமும் இல்லை. நான் இயக்குநருக்கு கதையில் உதவி செய்பவன் மட்டுமே. கதையை இயக்குநரின் தேவைக்கு ஏற்ப செய்து கொடுப்பவன் ,அவ்வளவுதான். அது ஒரு தொழில். அந்தத் தொழில் மிகச் சிறப்பாகவே செல்கிறது .என் பொருளாதார சுதந்திரம் சினிமாவால் வந்தது. இலக்கியத்திலும் சிந்தனைக் களத்திலும் நான் எண்ணிய பல விஷயங்களை சினிமாவில் இருப்பதால்தான் செய்ய முடிகிறது .சினிமாவில் நான் விரும்பியது அது மட்டுமே.
அங்காடித்தெரு ,பொன்னியின் செல்வன் அனுபவங்கள் எத்தகையது?
என் முதல் வெற்றிப்படம் நான் கடவுள் .அதன்பின் அங்காடித்தெரு, சர்க்கார், பாபநாசம் என பல படங்கள் வெற்றி அடைந்தவை. நான் எழுதியவற்றில் 2.0, பொன்னியின் செல்வன் இரண்டும் சரித்திர வெற்றிகள். 2.0 படத்தை விக்ரம் படம் தான் முந்தியது.அதை இப்போது பொன்னின் செல்வன் முந்தியிருக்கிறது. தமிழ் சினிமாக்களில் மட்டுமல்ல இந்திய சினிமாக்களிடையே அதிக வணிக வெற்றி பெற்ற படம் இப்போதைக்கு பொன்னின் செல்வன் தான். அதற்கு படத்தின் சரித்திரம் சார்ந்த அழகியல் கண்களை நிறைக்கும்படி காட்சிப்படுத்தப்பட்டிருந்ததே முதன்மைக் காரணம். அடுத்தபடியாக அந்தப் படத்தை உலகம் முழுக்க கொண்டு சென்று சேர்த்த லைக்கா போன்ற மாபெரும் நிறுவனம் இரண்டாவது காரணம் .ஆனால் இணையாகவே சரளமான திரைக்கதை ஓட்டத்தை உருவாக்கியதும் காரணம். அதில் என் பங்கு முக்கியமானது. அந்தப் படத்தின் வசனங்கள் செந்தமிழில் அமைந்தாலும் எளிமையாக இருந்ததும் சுருக்கமாக இருந்ததும் வெற்றிக்குக் காரணம் .அப்படி இருந்தமையால்தான் அந்த வசனங்களை எல்லா மொழிகளிலும் நன்றாக மொழிமாற்றம் செய்ய முடிந்தது. சுருக்கமாக சப்டைட்டில் போட முடிந்தது. ஆகவே தான் உலகம் முழுக்க சென்றது. பொன்னியின் செல்வன் வசனங்களுக்கு தமிழகத்தில் மட்டுமல்ல ஹிந்தியிலும் தெலுங்கிலும் மலையாளத்திலும் கூட சிரிப்பும் கைத்தட்டலும் விழுகின்றன. அவ் வசனங்களின் மொழியாக்க வடிவங்கள் அந்தந்த மொழிகளில் ஒற்றை வரிகளாவே புகழ்பெற்றிருக்கின்றன .அந்த வகையில் எனக்கு மிகுந்த மன நிறைவு .என் சினிமா தொழிலில் இந்த ஆண்டு ஓர் உச்சம். என் இரண்டு படங்கள் ஒரே மாத
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
