Jeyamohan's Blog, page 87
May 30, 2025
காவியம் – 40

கானபூதி சொன்னது. தொன்மையான இந்நகரின் பெயர் பிரதிஷ்டானபுரி. சுப்ரதிஷ்டிதம் என்று அழைக்கப்பட்ட தொல்நகர் ஒன்றை மீண்டும் நிறுவியபோது இதற்கு பிரதிஷ்டானபுரி என்று பெயரிடப்பட்டது. அப்பெயர் இந்நகருக்கு வந்தமைக்குக் காரணங்கள் என பல சொல்லப்படுவதுண்டு. இந்நகரைக் கட்டிய அரக்கர் குலத்துச் சிற்பியான மயன் இது எந்நிலையிலும் அழியக்கூடாது என்பதற்காக இதற்கு ’நிலைபெறு நகர்’ என்று பெயரிட்டதாகக் புராணங்கள் சொல்கின்றன. இந்நகர் கோதாவரியின் கரையில் இருந்த உறுதியான பாறைகளின் மீது மேலும் பாறைகளை வெட்டி அடுக்கிக் கட்டப்பட்டமையால் இப்பெயர் அமைந்தது என்று சிற்பநூல்கள் சொல்கின்றன. அழியாத கதைகளால் ஆனது என்பதனால் இப்பெயர் என்று இதை காவியங்கள் சொல்கின்றன.
அசுரர்களின் நகரங்களான மாகிஷ்மதியும் இலங்கையும் ஒரு காலத்தில் விண்ணில் மிதந்து நின்றிருந்தன என்று சூலசிரஸ் என்னிடம் சொன்னான். அரக்கர்களால் மேகங்களில் பறக்க முடியும். அவர்கள் தேவை என்றால் மட்டும்தான் மண்ணுக்கு வருவார்கள். பருந்துகளைப் போல மண்ணில் உள்ள அனைத்தையும் விண்ணில் இருந்தே அவர்கள் ஆட்சி செய்தார்கள். அவர்களில் பத்து தலைகளும் இருபது கைகளையும் கொண்ட ராவணனைப் போன்றவர்கள் உண்டு, நூறு தோள்களும் நூறு கைகளும் கொண்ட கார்த்தவீரியார்ஜுனர்களும் உண்டு. வானில் கட்டப்பட்டிருந்த மாபெரும் நகரான சுப்பிரதிஷ்டானம் பின்னர் தேவர்களால் அழிக்கப்பட்டது. அது கீழே விழுந்து உடைந்து துண்டுகளாகி மண் முழுக்கப் பரவியது. அவற்றில் எஞ்சிய ஒரு பகுதியே கோதாவரிக்கரையில் இருக்கும் இந்நகரம். இதன் பெரும்பகுதி மண்ணுக்குள் ஆழத்தில் புதைந்து கிடக்கிறது.
நான் புதையுண்ட பெருநகர் மீது உருவான காட்டில் வாழ்ந்தேன். என் கால்களுக்குக் கீழே இருந்து விம்மல்களும், அழுகைகளும், அவ்வப்போது சிரிப்புகளும் என்னை வந்தடைந்தன. நான் ஒவ்வொரு ஓசை வழியாகவும் ஒன்றிலிருந்து ஒன்றென தொடுத்துச் செல்லும் நூறு கதைகளை அறிந்தேன். கதைகள் என்னுள் பெருகிக்கொண்டே இருக்க, இங்கே வாழ்ந்தேன். கதைகளைக் கொண்டு கதைகளை அகழ்ந்தெடுத்தேன். கதைகளை வீசி கதைகளை வீழ்த்தினேன். கதைகளை தூண்டிலாக்கி கதைகளை பிடித்தேன். கதைகளை பொறியாக்கி கதைகள் சிக்குவதற்காகக் காத்திருந்தேன். எவராவது எப்போதாவது இங்கே வழிதவறி வந்தால் அவர்களிடம் பேசமுற்பட்டேன். அவர்களிடம் கதைகளைக் கேட்கவும், அவர்களிடம் கதைகளைச் சொல்லவும் நான் துடித்தேன். பெரும்பாலும் அவர்கள் என் குரலைக் கேட்டதுமே பீதியடைந்து ஓடினார்கள். ஓடும்போதே விழுந்து உயிர்விட்டவர்களும் உண்டு. என்னை அஞ்சாதவர்களிடம் மட்டுமே என்னால் பேசமுடிந்தது.
அந்நாட்களில் ஒருமுறை, கோதாவரியில் நீர் பெருகிச் சென்று பின் வடிந்து சேற்றுப்பரப்பாக இந்நிலம் ஆகிவிட்டிருந்தபோது, முதிரா இளைஞன் ஒருவன் முழங்கால் வரை புதைந்த சேற்றை அளைத்தபடி நடந்து, விழுந்து கிடந்த பெரிய மரங்களின் மேல் ஏறித் தாவி, கிளைகளில் இருந்து கிளைகளுக்குத் தொற்றிக்கொண்டு, இங்கே வந்தான். என் அருகே வந்தபோது அவன் தளர்ந்து விட்டிருந்தான். இந்த மரத்தின் கிளையைப் பற்றிக்கொண்டு மூச்சிளைத்தவன் அப்படியே சரிந்து விழுந்தான். நான் அவனை கூர்ந்து பார்த்தேன். அவன் உடலெங்கும் ரத்தம் உலர்ந்த காயங்கள் இருந்தன. நெஞ்சில் ஓர் அம்பு ஆழமாகப் பதிந்திருந்தது. அவன் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.
அவனை நான் உலுக்கி எழுப்பினேன். என்னை அவன் பார்த்தபோது காய்ச்சலில் சிவந்திருந்த கண்களில் அச்சம் எழவில்லை. “நீ பைசாசம் அல்லவா? அப்படியென்றால் நான் இறந்துவிட்டேனா? என் முன்னோர்களுடன் வந்து சேர்ந்துவிட்டேனா?” என்று கேட்டான். “என் முன்னோர்கள் ஒரு கதைசொல்லும் பிசாசை அறிவார்கள். அதை அவர்கள் கனவுகளில் கண்டிருக்கிறார்கள். அது பாதாளத்தில் வாழ்வது… நீ அதுதானா?”
“உன் முன்னோர்கள் பாதாளத்திலா வாழ்கிறார்கள்?” என்று நான் கேட்டேன்.
“ஆமாம், நாங்கள் நிஷாதர்கள். எங்களை எரிப்பதில்லை, புதைக்கிறார்கள். ஏனென்றால் என் முன்னோர் விதைகளாக புதைந்து வேர்களாக மண்ணுக்குள் பரவுபவர்கள்… நீ யார்? பாதாளத்தில் வாழும் பிசாசா?” என்று அவன் கேட்டான்.
“நான் கானபூதி என்னும் கதைசொல்லும் பிசாசு. ஆனால் நான் வாழ்வது இங்கேதான்” என்று நான் சொன்னேன்.
“என்னை என் முன்னோருடன் சேர்த்துவிடு” என்று அவன் சொன்னான். “உன் கண்கள் அழகானவை. நீ என்னை கருணையுடன் பார்க்கிறாய்…”
அவனை நான் காப்பாற்றினேன். விழித்ததும் அவன் சுற்றுமுற்றும் பார்த்தான். திடுக்கிட்டு எழுந்து தன் நெஞ்சில் கைவைத்தான். அவனுடைய புண்கள் பொருக்கோடியிருந்தன. அவன் மேல் நான் ஒரு பெரிய கொம்புத்தேன் கூட்டை தொங்கவிட்டிருந்தேன். அதிலிருந்து தேன் அவன் மேல் வழிந்துகொண்டிருந்தது. தேன் அவன் புண்களை ஆற்றியது. தேனையும் இலைகளில் இருந்து சொட்டிய மழைநீரையும்தான் அவன் சிலநாட்களாக மயக்கநிலையில் குடித்துக்கொண்டிருந்தான்.
“கானபூதி என்னும் பிசாசே, நீதான் என்னை காப்பாற்றினாய். நீ என் மூதாதையைப் போல. உன்னை வணங்குகிறேன்” என்று அவன் கூவினான்.
அதைக் கேட்டு சிரித்துக்கொண்டே நான் அவன் முன் தோன்றினேன். “நீ நலம்பெற்று விட்டாய்… உன் ஊருக்குத் திரும்பிச் செல்” என்று சொன்னேன்.
“என் ஊர் இப்போது இல்லை. எங்கள் ஊர்கள் எவையும் இப்போது இல்லை. அவற்றை எரியூட்டிவிட்டனர். இந்நகரின் தாழ்ந்த சதுப்புநிலம் முழுக்க நிஷாதர்களாகிய நாங்கள்தான் வாழ்ந்தோம். இப்போது என் குலமும் குடும்பமும் அழிந்துவிட்டன. நான் மட்டும் தப்பி இந்தக் காட்டுக்குள் ஓடிவந்தேன்” என்று அவன் சொன்னான்.
“என்ன நடந்தது?” என்று நான் அவனிடம் கேட்டேன். “என்னிடம் சொல். நான் உனக்கு உதவுகிறேன்”
“உன்னால் அவர்களை எதிர்க்க முடியுமா? அல்லது எனக்காக வந்து போராடத்தான் முடியுமா?”
”என்னால் கதைகளைச் சொல்லமுடியும். உனக்கான கதைகளை நான் அளிப்பேன். கதைகள்தான் எல்லாமே. வெல்லும் கதைகளும் தோற்கும் கதைகளும் மட்டும்தான் இங்கே உள்ளன”
அவன் சொன்னான். “நாங்கள் நிஷாதர்கள். இந்நிலம் முழுக்க நாங்களே வாழ்ந்தோம். ஒரு காலத்தில் இது நிஷதநாடு என்றே அழைக்கப்பட்டது… எங்கள் குடியில் அரசர்களும் பேரரசர்களும்கூட வாழ்ந்ததுண்டு. புகழ்பெற்ற மன்னன் நளன் நிஷாதன் என்று நீ அறிந்திருப்பாய்”
“ஆம்” என்று நான் சொன்னேன்.
“நாங்கள் விந்திய மலையின் மேல் வாழ்ந்த பழங்குடியினரின் வம்சத்தில் தோன்றியவர்கள். எங்கள் அன்னையர் இந்த கோதாவரியில் மலையிலிருந்து மிதந்து வந்தவர்கள். அங்கே மலையில் வாழும் எங்கள் முதற்குடிகள் தங்கள் பெண்களில் ஒருத்தியை கோதாவரிக்கு அளிப்பதுண்டு. அவளை ஆடை அணிகள் அணிவித்து, கல்மாலைகள் சூட்டி, மூங்கில் தெப்பத்திலேற்றி, கோதாவரியில் விட்டு விடுவார்கள். அந்தப் பெண்கள் கோதாவரியில் வரும்போது அசுரர்களால் கவர்ந்து கொள்ளப்பட்டு மனைவியாக்கப் படுவார்கள். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அசுரர்களாக இருப்பதில்லை. மனிதர்கள் என்பதனால் அவர்களை மண்ணில் வாழவிட்டார்கள். ஆனால் அவர்களுக்குத் தந்தையராக அசுரர்கள் அமைந்தார்கள்.
சுப்ரதிஷ்டானத்தை ஆட்சி செய்த அசுரர்களின் ஆட்சிக்காலத்தில் எங்கள் பெண்கள் தங்கத்தில் மாலைகள் அணிந்திருந்தார்கள். வெள்ளியில் காலணிகள் அணிந்தார்கள். எங்கள் இல்லத்தில் பெரிய மாடங்கள் அமைத்திருந்தன. அங்கே அசுர குலத்தின் கொடிகள் பறந்தன. இரவுகளில் விண்ணில் பெரிய சிறகுகளுடன் அசுர குலத்து தந்தையர் பறந்து வந்து எங்கள் மாளிகை முற்றங்களில் இறங்கி எங்கள் அன்னையருடன் கூடி வாழ்ந்தார்கள். எங்கள் மாடங்களின் பெரிய உப்பரிகைகளில் அசுரர்கள் வந்துவிட்டால் பெரிய விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும் என்று மரபிருந்தது. நட்சத்திரங்களைப் பார்ப்பது போல பிற ஊர்க்காரர்கள் தொலைவிலிருந்து எங்கள் மாளிகையின் விளக்குகளைப் பார்ப்ப்பார்கள்.
அசுர குலம் அழிக்கப்பட்டது. அசுரர்கள் தீராத ஆசையும் வீரமும் கொண்டவர்கள். ஆகவே அவர்கள் தங்கள் விண்ணிலிருந்த நகரங்களை மிகப்பெரிதாக கட்டிக்கொண்டே இருந்தார்கள். அவை நுரைபோலவும் மேகங்களைப் போலவும் பெருகிக்கொண்டே இருந்தன. சுப்ரதிஷ்டானம் அந்தியின் ஒளியில் வானில் தீப்பற்றி எரிவதுபோல சுடர்விட்டது. அசுரர்களின் வளர்ச்சியைக் கண்டு இந்திரன் அஞ்சி விஷ்ணுவிடமும் சிவனிடமும் சென்று முறையிட்டார். “மண்ணில் இருந்து வளர்வது எதுவும் விண்ணை நோக்கித்தான் வருகிறது. எல்லைமீறி வளர்வது விண்ணை அழித்துவிடும்… விண்ணவர்கள் அழிந்தால் தெய்வங்களும் இல்லை” என்றான்.
சிவன் தன்னுடைய சூலாயுதத்தை எடுத்துக்கொண்டு அசுரர்களைக் கொல்வதற்கு கிளம்பியபோது விஷ்ணு அவரைத் தடுத்தார். ”இப்போது அவர்களை நம்மால் வெல்ல முடியாது. அவர்களுடைய ஆற்றல் ஓங்கியிருக்கிறது. அவர்கள் நம்பிக்கையும் உறுதியாக இருக்கிறது. நம்பிக்கையும் ஆற்றலும் இணைவது காற்றும் தீயும் இணைவது போல. அவர்களின் நம்பிக்கை குறையட்டும்; அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. அவர்களின் நம்பிக்கை இப்போது பெருகிக்கொண்டிருக்கிறது. தடையில்லாமல் பெருகும் நம்பிக்கை கொண்டவர்கள் அழியும் நிலையில் இருக்கிறார்கள். மண்ணில் எவரும் தன்னைத்தான் நம்பக்கூடாது. தன்னைவிட பெரிதொன்றை நம்பவேண்டும். அசுரர்கள் தங்களை மட்டுமே நம்புபவர்கள். தங்களை மட்டுமே நம்புபவர்கள் பெருகிப் பெருகி ஏதோ ஒரு இடத்தில் தங்கள் எல்லைகளைக் கடப்பார்கள். தாங்கள் இந்தப்பிரபஞ்சத்தில் எந்த அளவோ அதைவிட அதிகமாக எடுத்துக்கொள்ள ஆரம்பிப்பார்கள். அது அவர்களின் பலவீனமாக மாறும். அங்கிருந்து அவர்களின் வீழ்ச்சி தொடங்கும்”.
விஷ்ணு சொன்னார் “ஒரு கோட்டை ஏற்கனவே சரியத்தொடங்கிவிட்டதென்றால் அதை இடிப்பது மிக எளிது. இவர்களின் நகரங்களின் எடை கூடிக்கொண்டிருக்கிறது. எங்கோ ஓரிடத்தில் அவை விண்ணில் மிதக்க முடியாமல் ஆகும். மண் நோக்கி இறங்கத் தொடங்கும். அவர்கள் எதையோ ஒன்றைச் செய்து அதை மீண்டும் விண்ணில் ஏற்றிவிடலாம் என்று நினைப்பார்கள். அவற்றின் அளவையும் எடையையும் குறைத்து விடலாம் என்ற எண்ணம் மட்டும் அவர்களுக்கு வரவே வராது. அவர்களின் ஆணவம் அதற்கு ஒத்துக்கொள்ளாது. அத்தருணத்தில் நாம் தாக்குவோம். அவர்களை வெல்வோம்” என்று விஷ்ணு சொன்னார்.
ஆகவே பன்னிரண்டாயிரம் ஆண்டுகள் சிவனும் விஷ்ணுவும் இந்திரன் முதலிய தேவர்களும் காத்திருந்தார்கள். மாகிஷ்மதி முதலில் எடைமிகுந்து சரியத் தொடங்கியது. அதை தேவர்கள் விஷ்ணுவின் தலைமையில் சூழ்ந்து தாக்கினார்கள். நூறு ஆண்டுகள் நடந்த போரில் மாகிஷ்மதி பற்றி எரிந்து உடைந்து துண்டுகளாக மண்ணில் சரிந்தது. மாகிஷ்மதியை ஆண்ட அசுரர்களின் ஆதிக்கம் முடிவடைந்தது. அவர்கள் ஒவ்வொருவராக கொல்லப்பட்டு மண்ணில் வீழ்த்தப்பட்டனர். ஆயிரம் கைகள் கொண்டவர்கள் ஆலமரங்களாக மண்ணில் முளைத்தெழுந்தனர். நூறு கைகள் கொண்டவர்கள் அரசமரங்களாக ஆனார்கள். அவர்கள் பெருங்காடுகளாக மாறி தங்கள் உடைந்த நகரங்களைத் தழுவி மேலெழுந்து செறிந்து வானத்தின் கீழ் பசுமைகொண்டு நின்றிருந்தார்கள். ஒருவரையொருவர் வேர்களாலும் கிளைகளாலும் பற்றிக் கொண்டு காற்றில் ஓலமிட்டு சுழன்றாடினர்.
அதன்பின் ஒவ்வொரு நகரமாக விழுந்தது. இறுதியாக சுப்பிரதிஷ்டானம் விழுந்தது. மண்ணில் விழுந்த சுப்பிரதிஷ்டானத்தை வென்ற தேவர்கள் எட்டாக பகுத்தனர். அதன் மையப்பகுதிக்கு யாதவன் ஒருவனின் குலம் உரிமைகொண்டது. அந்த யாதவன் தன் கன்றுகளை மேய விட்டுவிட்டு புல்லாங்குழல் இசைப்பதுண்டு. ஒவ்வொரு முறை புல்லாங்குழலை வாயில் வைப்பதற்கு முன்பும் அவன் வானை நோக்கி ‘சந்திரனுக்கு இந்த இசை அர்ப்பணம்’ என்று சொல்வான். ஒவ்வொரு இரவிலும் சந்திரன் எழுந்ததுமே தன்னந்தனியாக அமர்ந்து அவன் இசைக்கத் தொடங்குவான். சந்திரனே அவனுடைய இசையை ஒவ்வொரு நாளும் கேட்டு மகிழத் தொடங்கினான். நூறாண்டுகள் அந்த யாதவன் சந்திரனுக்காக இசைப்பதை ஒரு தவம் என்று இயற்றிக்கொண்டிருந்தான்.
கீழே விழுந்த நகரங்களை தேவர்கள் பங்கிட்டபோது அவர்கள் ஒவ்வொரு தெய்வத்திற்கும் அதற்குரிய பங்கை அளித்தனர். சூரியனுக்கான பங்கை சூரியவம்சத்தை சேர்ந்த மன்னர்கள் அடைந்தார்கள். சந்திரனுக்குரிய பங்கை சந்திரனுக்குரிய மன்னர்கள் அடைந்தார்கள். மாகிஷ்மதி, சுப்பிரதிஷ்டானம் ஆகியவற்றில் சந்திரனுக்கு கிடைத்த பங்கை அவர் தனக்கு இசை படைத்து தவம் செய்த அந்த யாதவனின் வாரிசுகளுக்கு அளித்தார். அவ்வாறுதான் சுப்பிரதிஷ்டானத்தில் யாதவர்களின் அரசகுலம் உருவானது. அவர்கள் எங்கள் சாதியினரின் மாளிகைகளை பிடுங்கிக்கொண்டார்கள். எங்களை அடித்து துரத்தி கோதாவரியின் சதுப்புக்கு இடம் பெயரச்செய்தார்கள். எங்கள் மாளிகைகளை அவர்கள் தங்கள் அரண்மனையின் தலைநகரமாக மாற்றிக்கொண்டார்கள். அங்கே அவர்களின் கொடிகள் பறந்தன.
எங்களை அவர்கள் இருண்டவர்கள் என்றும் அழுக்கானவர்கள் என்றும் சொன்னார்கள். தங்கள் குழந்தைகளிடம் எங்களைப்பற்றி அவ்வாறு சொல்லி வளர்த்தனர். ஆகவே தலைமுறைகளாக அவர்கள் எங்களை வெறுத்தனர். நாம் அஞ்சுபவர்களை வெறுக்கிறோம். வெறுப்பவர்களை அருவருக்கிறோம். அருவருப்பவர்களை அழிப்பதற்கு அவர்கள் அருவருப்பானவர்கள் என்பதே போதிய காரணமாக ஆகிறது. அவர்கள் ஏதேனும் காரணங்கள் சொல்லி எங்களைத் தாக்கிக்கொண்டே இருந்தனர். உண்பதற்கான உணவும் ஒடுங்குவதற்கான குடிலும் அன்றி எதுவுமே எங்களிடம் மிஞ்சக்கூடாது என்று அவர்கள் எண்ணினர். சற்றேனும் நாங்கள் தலையெடுத்தால் அவர்களின் தெய்வங்களை அவமதித்ததாகவோ, அவர்களின் நகரத்தை அசுத்தம் செய்ததாகவோ, அவர்களின் குலத்தில் ஊடுருவ முயன்றதாகவோ சொல்லி எங்களை தாக்கினார்கள். ‘அடிபட்ட பாம்பின் வால் நெளிந்தால் தலையில் மீண்டும் அடி’ என்று ஒரு பழமொழி அவர்களிடம் இருந்தது.
எங்கள் கதைகள்தான் எங்களைக் காத்தன. எங்களிடம் நாங்கள் பிறப்பாலேயே இழிவானவர்கள், இயல்பிலேயே அசுத்தமானவர்கள், அறிவற்றவர்கள், அச்சமும் மூர்க்கமும் மட்டுமே கொண்டவர்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது. அதை எங்கள் அகம் நம்பாமல் காத்தவை எங்கள் கதைகள். மாகிஷ்மதியில் பறந்த எங்கள் கொடிகளை நாங்கள் கனவுகளில் பார்த்துக்கொண்டேதான் இருந்தோம். ஆகவே நூறுமுறை தேர்ச்சக்கரங்கள் ஏறிச் சென்றபின்னரும் சிதைந்த உடலுடன் உயிருடனிருக்கும் பாம்பு போல நாங்கள் துடித்து நெளிந்துகொண்டேதான் இருந்தோம். எங்கள் நஞ்சு எப்போதும் மிச்சமிருந்தது. கண்கள் எப்போதும் விழித்துப் பார்த்துக்கொண்டேதான் இருந்தன.
வழக்கமான ஒரு சிறுபூசல்தான். எங்கள் குலத்தைச் சேர்ந்த ஒருவனை யாதவன் காலால் உதைத்து அழுக்குநீர் ஓடைக்குள் தள்ளிவிட்டான். சீற்றத்துடன் எழுந்த அவன் அழுக்குநீரை அள்ளி அந்த யாதவன் மேல் வீசினான். ஆளும் குலத்தவன்மேல் அழுக்குநீர் வீசப்பட்டது என்ற செய்தி பரவியதும் அவர்கள் திரண்டு ஆயுதங்களுடன் வந்து எங்களை தாக்கினார்கள். கண்ணில்பட்டவர்களை எல்லாம் கொன்றனர். குடிசைகளைக் கொளுத்தினர். இம்முறை நாங்கள் என் தலைமையில் திருப்பித் தாக்கினோம். நான் பல ஆண்டுகளாகவே பொறுமையிழந்திருந்தேன். என்னுடன் நூறு இளைஞர்கள் இருந்தனர். எங்களைத் தாக்கவந்த முதல் அணியை நாங்கள் அடித்து துரத்தினோம். அவர்கள் சென்று பெரும்படையாக மீண்டும் வந்தனர்.
“எங்களிடம் சீற்றம் மட்டுமே இருந்தது. ஆயுதங்கள் இல்லை. நாங்கள் இருந்த இடம் பள்ளமானது. அங்கே நின்று போரிடுவதற்குக் கூட இடமில்லை. என் துணிச்சலால் என் குலத்திற்கே முழுமையான அழிவை கொண்டுவந்துவிட்டேன்” என்று அவன் சொன்னான். மனம் உடைந்து அழுதபடி “என் கண்ணெதிரே எனக்கு வேண்டியவர்கள் அனைவருமே அழிவதைக் கண்டேன்… இனி நான் அங்கே திரும்ப கூடாது. நான் காட்டில் செத்து அழிவதே சரியானது” என்றான்.
நான் அவனிடம் “நான் உனக்கு அழியாத கதை ஒன்றை தருகிறேன்” என்றேன். “வீரியம் மிக்க விதை போன்றது இந்தக் கதை. இது முளைக்கும், இதை நம்பி உன் குடியினர் வாழமுடியும். இது உனக்கு படையும் ஆயுதமுமாக மாறும்.”
என் இடது கையை மண்ணில் வைத்து “இது ஒரு கதை. என் கதைகள் எல்லாமே இரட்டைக்கதைகள். ஒன்றுடன் ஒன்று இணைபவை, பிரிபவை, அதனூடாக எப்போதும் இயங்கிக்கொண்டிருப்பவை…” என்றேன்.
வலதுகையை மண்ணில் வைத்து “இது இன்னொரு கதை. இந்தக் கதைகளில் திரண்டுவரும் கேள்விகள் உண்டு. அக்கேள்விகளுக்கு நீ விடையளித்தாய் என்றால் மட்டும்தான் இக்கதைகள் உன்னுடன் வரும். நீ விடையளிக்கவில்லை என்றால் இந்தக் காட்டைப் பற்றி நீ கொண்டிருக்கும் எல்லா நினைவுகளும் மறைந்து இங்கே வழியறியாமல் சிக்கிக்கொள்வாய்… இங்கேயே எவரும் அறியாமல் செத்து மண்ணில் புதைவாய். ஆம் என்றால் உன் கையை மண்ணில் பதித்துக்கொள்” என்றேன்.
“ஆம், இதையும் எங்கள் கதைகளில் சொல்லியிருக்கிறார்கள்” என்றபடி அவன் தன் கையை மண்ணில் பதியவைத்துக்கொண்டான்.
“துவஸ்த மனுவின் மகனும் அசுரர்குடியின் அரசனுமான சுத்யும்னனால் கட்டப்பட்டது பிரதிஷ்டானபுரி” என்று நான் கதை சொல்லத் தொடங்கினேன். “அதற்கு முன் அங்கிருந்த தொல்நகரமாகிய சுப்பிரதிஷ்டானம் அசுரர்களால் உருவாக்கப்பட்டது. இறுதியாக அது யாதவர்களால் ஆட்சி செய்யப்பட்டது. யாதவ மன்னனும் தத்துவ ஞானியுமான கிருஷ்ணணின் வம்சத்தில் வந்தவர்கள் அந்த ஆட்சியாளர்கள். லவணர்கள் என்னும் தொன்மையான அசுரர் குடியில் இருந்து உருவாகி வந்தது கிருஷ்ணனின் யாதவகுலம். அவர்கள் கடல்கொண்ட துவாரகையை ஆட்சி செய்தார்கள். அவர்கள் பாணாசுரனின் குடியிலும், சம்பராசுரனின் குடியிலும் பெண்கொண்டனர். துவாரகையை இழந்தபின் தெற்கே பரவினர். விந்தியமலையின் அடிவாரத்தில் கோதாவரியின் கரையில் தொன்மையான பிரதிஷ்டானபுரியை அவர்கள் மீண்டும் எழுப்பினர்.”
ஆயிரம் ஆண்டுகள் யாதவர்கள் சுப்பிரதிஷ்டானத்தை ஆட்சி செய்தார்கள். அவர்களின் குலம் பெருகி பாரதவர்ஷம் முழுக்கப் பரவிக்கொண்டே இருந்தது. நெடுந்தொலைவுக்கு அவர்கள் பரவியபோது அவர்களின் மொழி திரிபடைந்து வெவ்வேறு மொழிகளாகியது. சென்ற இடங்களில் அவர்கள் பெண்களை வென்று மணம் கொண்டபோது நிறமும் முகமும் மாறின. அவர்கள் தங்களை ஒன்றாக்கும் கதைகளையும் மறந்தனர். எனவே காலப்போக்கில் ஒருவரை ஒருவர் அறியாதவர்களானார்கள். அவர்களில் எவர் வல்லமைகொண்டார்களோ அவர்கள் மற்றவர்களின் நிலங்களை வென்று பேரரசர்களாக ஆக விரும்பினார்கள். ஆகவே படைகொண்டு சென்று தாக்கினார்கள். நகர்களைக் கொள்ளையிட்டனர். பெண்களை கவர்ந்தனர். ஆண்களை அடிமைகளாக இழுத்துச் சென்றனர்.
நூறாண்டுகள் யாதவர்களின் அரசுகள் மாறிமாறிப் போரிட்டு ஆற்றலிழந்தன. அப்போது வடமேற்கே இருந்து சகர்கள் என்னும் சிவந்த இனத்தவர் அவர்களின் நாடுகளைத் தாக்கினார்கள். அதன் பின் சுண்ணம்போல் வெளுத்த ஹூணர்கள் தாக்கினார்கள். மலையில் இருந்து பாறைக்கூட்டம் சரிந்து சமவெளியை அடைந்து அனைத்தையும் நொறுக்குவதுபோல அவர்கள் யாதவ அரசுகளின் மேல் இறங்கினர். அவர்கள் சென்ற வழியில் அழிவுகளும் இடிபாடுகளும் தவிர எதுவுமே எஞ்சவில்லை. வடக்கில் இந்திரப்பிரஸ்தம் வீழ்ந்தது. காம்பில்யமும், உஜ்ஜையினியும் வீழ்ந்தன. ஒவ்வொரு நகரமாக சரிந்து, ஒன்று இன்னொன்றின் மேல் விழுவதுபோல வீழ்ச்சியை விரைவாக்கின.
இறுதியாக சுப்பிரதிஷ்டானமும் வீழ்ந்தது. அந்நகரை சகர்களின் படைகள் பன்னிரு நாட்கள் சூறையாடின. அரண்மனைகளை இடித்து தீவைத்தன. ஆண்கள் மூக்கு வெட்டப்பட்டு, நெற்றியில் சூடுபோடப்பட்டு அடிமைகளாக அடையாளப்படுத்தப்பட்டனர். விதைப்பைகளில் துளையிடப்பட்டு அதனூடாக கயிறு செலுத்தப்பட்டு ஒருவரோடு ஒருவர் சேர்த்துக் கட்டப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டனர். பெண்கள் போர்வீரர்களிடையே பங்கிடப்பட்டனர். முதியவர்கள் கொன்று கோதாவரியில் வீசப்பட்டனர். பிரதிஷ்டானபுரி அழுகும் பிணங்களும் புகைந்துகொண்டிருக்கும் கட்டிடங்களுமாக எஞ்சியது. அங்கே எஞ்சிய இடிபாடுகளிலும் குப்பைகளிலும் இருந்து பொறுக்கி உண்ணும் சிலர் மட்டுமே வாழ்ந்தனர்.
அப்போது காட்டில் இருந்து அசுரகுடியைச் சேர்ந்த இளைஞனான சுத்யும்னன் தன்னை ஆதரிக்கும் காட்டுமனிதர்கள் சிலருடன் வந்து அந்நிலத்தைக் கைப்பற்றிக் கொண்டான். அவன் அழிந்து மறைந்த நகரை மீண்டும் கட்டி எழுப்பினான். துவஸ்தமனுவின் வம்சத்தில் வந்தவன் என தன்னை அறிவித்துக்கொண்ட சுத்யும்னன் விரைவாக அங்கே வலுவான ஓர் அரசை உருவாக்கினான். ஏனென்றால் படைவீரர்களாகிய யாதவர்கள் கொல்லப்பட்டபோது நிஷாதர்களும் பிறரும் காடுகளுக்குள் சென்று பதுங்கி வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் அவன் அழைப்பை ஏற்று வந்து அவனுடன் சேர்ந்துகொண்டனர். பிற ஊர்களில் இருந்தும் நிஷாதர்கள் அங்கே வந்துசேர்ந்துகொண்டே இருந்தனர். அவர்களுக்கு நூற்றாண்டுகளாக அடக்கிவைக்கப்பட்ட சீற்றமும் ஆங்காரமும் இருந்தது.
சுத்யும்னனின் அவைக்கு அறிஞர்களும் ஞானிகளும் வந்தனர். பிரஹஸ்பதி முனிவரின் வழிவந்தவரும் சாங்கிய மகாதரிசனத்தில் ஞானியுமான பரமேஷ்டி அவனுடைய முதன்மை ஆசிரியரானார். அவருடைய வழிகாட்டலில் அங்கே கோதாவரியின் கரையில் தான் கட்டிய புதிய நகரத்திற்கு சுத்யும்னன் பிரதிஷ்டானபுரி என்று பெயரிட்டான். அவனுடைய சோமகுலம் அங்கே பெருகியது. அவன் மகன் புரூரவஸில் இருந்து மன்னர்களின் வரிசை உருவாகிக்கொண்டே இருந்தது. அஸ்மக ஜனபதத்தின் தலைமையிடமாக அது திகழ்ந்தது. பின்னர் மூலகப் பெருங்குடியின் நிலங்களை அது தன்னுள் இணைத்துக்கொண்டது.
“அஸ்மாகர்களின் வம்சத்தில் வந்த நான்கு குலங்களைச் சேர்ந்த மன்னர்கள் பிரதிஷ்டானபுரியை ஆட்சி செய்தனர். அஸ்மாகர்களின் நான்காவது வம்சமே சாதவாகனர் என அழைக்கப்பட்டது. நூறுதேர்களைக் கொண்டவர்கள் என்று அதற்குப் பொருள். அதன் முதல் மாமன்னன் பிரதிவிந்தியன் சதகர்ணி என பெயர் பெற்றான்.” என்று நான் சொன்னேன்.
அவன் என்னைப் பார்த்தபடி கதையில் ஆழ்ந்து அமர்ந்திருந்தான்.
நான் என் வலக்கையை கண்களால் சுட்டிக்காட்டிச் சொன்னேன் “இந்தக் கதையின் கேள்வி இது. சுத்யும்னன் யார்?”
அவன் என் கண்களை கூர்ந்துநோக்கி “நான்தான்” என்றான்.
(மேலும்)
தங்கப்புத்தகம், அஜிதன் உரையாடல்
அன்புள்ள ஜெ,
விஷ்ணுபுரம் ஐரோப்பிய வட்டம் சார்பாக நடைபெற்ற ‘தங்க புத்தகம்‘ குறித்த உரையாடல் நிகழ்வில் அஜிதனின் உரை நுட்பமாகவும் தெளிவாகவும் இருந்தது. புனைவு களியாட்ட கதைகளில் அடர்ந்த தத்துவ செறிவு நிறைந்த கதைகள் தங்க புத்தக தொகுதியிலேயே அதிகம் உள்ளன.
இந்த கதைகளின் நுண் பிரதிகளை தத்துவத்தில் தேர்ச்சியும் படைப்பூக்கமும் கொண்ட புனைவெழுத்தாளருமான அஜிதன் தன் உரையில் சுட்டிக்காட்டினார். விரிவான தத்துவ பின்புலத்தில் நவீன(நவினத்துவ அல்ல) இலக்கிய அழகியலுடன் எழுதும் இலக்கிய வகைமையை தமிழில் உருவாக்கியவர் ஜெயமோகன். தத்துவத்தை தவிர்த்தல் என்ற நவீனத்துவ அழகியலுக்கு நேரேதிரானது இது.
தத்துவ கொள்கைகள் விளக்கப்படும் அலிகரி(Allegory) என்ற மரபான வடிவத்திலிருந்து இலக்கிய உத்திகளின் மூலமாக உயர்ந்த கதைகளாக( fable) இவை உறுமாறுவதை பற்றி சொன்னார். இத்தொகுப்பினுள் நுழைய அசோகமித்திரனின் ‘பிரயாணம்‘ ஒரு நல்ல தொடக்கமாக அமையலாம். அரேபிய பாலைவன படிமம் சூபி தத்துவத்திற்கும், அடர் காடு வேதாந்தத்திற்கும் எப்படி பொருத்தமோ , திபெத்திய பனி நிலம் பெளத்த சூனிய தரிசனத்தை பிரதிபலிக்கும் படிமமாக அமைகிறது.
முடிவில்லாத மாற்றமே பிரபஞ்ச தர்மமாக பெளத்தம் சொல்கிறது(அநிச்சா). அதனாலேயே பிரதி எடுக்க இயலாததாகவும் ஆகிறது.
‘கரு‘ கதை தன்னுள் ஏற்படுத்திய ஆழ்ந்த பாதிப்பையும், அடையாளம்( identity) மற்றும் மறுப்பு (negative) முதலான மேலை தத்துவ கருதுகோள்கள் முதல் பெளத்த –வேதாந்தம் இணையும், மாறுபடும் இடங்கள் வரை அழகான விளக்கம் கொடுத்தார். தீவிர தத்துவ பார்வையுடன் மட்டும் அல்ல மாறுபட்ட வாசக கோணங்களிலும் அணுக தக்க சாத்திய கூறுகள் உள்ள தொகுப்பு இது. வாசக சட்டகத்தை விரிவாக்கிய அஜிதனுக்கும் நிகழ்வை ஒருங்கிணைந்த ஷர்மிளா மற்றும் ஸ்ரீராம் இருவருக்கும் நன்றிகள்.
வாசு
ஆம்ஸ்டர்டாம்.
Can we separate religion from philosophy?

I am listening. your talks on YouTube almost every everyday. I think you are trying to separate the philosophy of religion from religion. Is it really possible to do so? I am skeptical in this matter.
Can we separate religion from philosophy?த்துவம் என்றால் வாழ்க்கையையே தர்க்கபூர்வமாக அறிவதற்கான அடிப்படைப் பயிற்சி என அறிந்துகொண்டேன். உண்மையில் இன்றைக்கு நம் கல்விமுறையில் அடிப்படைத் தத்துவக்கல்வி கண்டிப்பாக இருந்தாகவேண்டும். நமக்கு எத்தனை படித்தாலும் தர்க்கசிந்தனையே இல்லாமலிருப்பதற்கான காரணமே தத்துவப்பயிற்சி இல்லாமலிருப்பதுதான்.
வரலாறு, தத்துவம் கடிதம்குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருதுவிழா
கவிஞர் சோ. விஜயகுமார் இந்த ஆண்டுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதை பெறுகிறார். விருதுவிழா வரும் 8 ஜூன் 2025 அன்று சென்னை கவிக்கோ அரங்கில் நிகழ்கிறது.
சிறப்பு விருந்தினராக கன்னட -ஆங்கில எழுத்தாளர் வசுதேந்திரா கலந்துகொள்கிறார். நிகழ்வில் கவிஞர் போகன் சங்கர், கவிஞர் விஜயலட்சுமி ஆகியோர் பங்கெடுக்கிறார்கள்.
காலைமுதல் இலக்கிய அரங்கம் நிகழும். இந்நிகழ்வில் சிறுகதை அரங்கில் விஜய ராவணன் மற்றும் ரம்யா படைப்புகள் பற்றிய ஓர் உரையாடலும், கவிதை அரங்கில் கவிஞர் றாம் சந்தோஷ் மற்றும் சசி இனியன் படைப்புகள் பற்றிய ஓர் உரையாடலும் நிகழ்கின்றன.
ஒரு விவாத அரங்கில் கவிதை பற்றி கவிஞர் போகன் சங்கர், வெய்யில் ஆகியோருடன் மனுஷ்யபுத்திரனும் கலந்துகொள்கிறார். வசுதேந்திராவுடன் ஓர் அமர்வும் உள்ளது.
நண்பர்கள் காலைமுதல் நிகழ்வில் கலந்துகொள்ளவேண்டும் என அழைக்கிறேன்
ஜெ
சோ. விஜயகுமார் தமிழ் விக்கி குமரகுருபரன் குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது
May 29, 2025
இலக்கியம் என்னும் மாபெரும் கல்வி
தமிழ்ச்சூழலின் பெரும் சிக்கல்களில் ஒன்று இலக்கியம் என்பது நற்போதனை அல்லது பொழுதுபோக்கு என்றுதான் நாம் குடும்பங்களிலும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் எல்லாம் சொல்லிச்சொல்லி வளர்க்கப்பட்டிருக்கிறோம். அந்த முன்முடிவுகளில் இருந்து நம் உள்ளங்களை மீட்டு இலக்கியம் என்பது ஓர் உயர்தரக் கல்வி என்பதை உணராதவரை இலக்கியம் நோக்கி வரவே நம்மால் முடியாது.
காவியம் – 39

கானபூதி தன் வலது உள்ளங்கையை மண்ணில் பொத்தி வைத்துக்கொண்டு சொன்னது. “வழக்கம்போல இதுவும் இரண்டு ஓட்டங்களாக பின்னிச் செல்லும் கதை…” இடது உள்ளங்கையை மண்ணில் பொத்திக்கொண்டு தொடர்ந்தது. “இந்தக் கதையின் இன்னொரு பக்கம் இது… நான் எதைச் சொல்லப்போகிறேன் என்று இப்போது எனக்கே தெரியாது.”
நான் தலையசைத்தேன்.
“மிகத்தொன்மையான கதை இது. எவரெவரோ சொல்லி, எவரெவரோ மாற்றி, எங்கெல்லாமோ முட்டி எதிரொலித்து அலையலையாகச் சென்றுகொண்டே இருப்பவை கதைகள்” என்று கானபூதி சொல்லத் தொடங்கியது.
ஷட்ஜன், ரிஷபன், காந்தாரன், மத்மயன், பஞ்சமன், தைவதன், நிஷதன் என்று ஏழு வித்யாதரர்கள் இருந்தார்கள். இவர்கள் எழுவருக்கும் சேர்ந்து விண்ணில் செல்லும்போது ஒரு பேரழகியாகிய கந்தர்வ கன்னியைப் பார்த்து காமம் கொண்டனர். அவள் பெயர் சுருதி. உள்ளத்தால் எழுவருமே அவளை புணர்ந்தனர். அவர்களின் கனவுகளில் அவள் தோன்றி எழுவருக்கும் மனைவியாக ஆனாள். அவர்கள் எழுவரும் அவளை மணக்கும்படி தனித்தனியாக அவளிடம் கேட்டார்கள். எவரை மணப்பது என்று அவளுக்குத் தெரியவில்லை. எழுவரையும் அவள் தன் கனவில் புணர்ந்திருந்தாள்.
ஆகவே அவள் சிவனை எண்ணி தவமிருந்தாள். சிவன் அவள் முன் தோன்றியதும் தான் செய்யவேண்டியது என்ன என்று அவள் கேட்டாள். அவள் எழுவருக்கும் மனைவியாக ஆவதுதான் ஒரே வழி என்று சிவன் சொன்னார். ஒருவருடன் இருக்கையில் இன்னொருவரை எண்ணாமலிருந்தாலே அவள் கற்பு தவறாதவள் ஆவாள் என்றார். அதன்படி அவள் எழுவரையும் மணந்துகொண்டாள். ஒவ்வொருவருக்காகவும் அவள் ஒவ்வொரு உருவத்தையும் எடுத்துக் கொண்டாள்.
ஆனால் ஒருபோதும் அவள் ஒருவருடன் இருக்கையில் இன்னொருவரை எண்ணாமல் இருக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் ஒவ்வொருவரும் இன்னொருவரிடமிருந்து கொண்ட வேறுபாடே அவர்களின் அடையாளமாக இருந்தது. ஷட்ஜனுடன் இருக்கவேண்டும் என்றால் ரிஷபனை எண்ணி அவனிடமிருந்து அவனை வேறுபடுத்தியே ஆகவேண்டியிருந்தது. ரிஷபனையோ காந்தாரனிடமிருந்து வேறுபடுத்த வேண்டியிருந்தது. ஆகவே ஒருவனிடம் கூடும்போது எழுவர் மீதும் அவள் உள்ளம் தாவிச் சென்றுகொண்டே இருந்தது. அவர்களும் அவளை உணர்ந்து கொண்டனர். அவர்கள் எழுவரையும் இணைப்பவள் அவளே என்று அறிந்தனர். அவர்கள் அவளைப் புணர்ந்து எழுபத்திரண்டு குழந்தைகளை ஈன்றனர்.
அந்தக் கதையை சிவன் கைலாயமலையில் வைத்து பார்வதியிடம் சொன்னார். கதை முடிந்தபின் “தேவி, இந்தக் கேள்விக்கு பதில் சொல். சுருதி கற்பு நெறி கொண்டவளா இல்லையா?” என்றார். “சரியான பதிலைச் சொல்வாய் என்றால் கீழே மண்ணுலகில் மானசசரோவரத்தில் ஒரு வாடாத பொற்தாமரை மலரும்”
கதை தொடங்கியபோது சிவனின் காலடியில் தாழம்பூ வடிவில் குடியிருப்பவனாகிய புஷ்பதந்தன் என்னும் சிவகணத்தான் அங்கே வந்தான். அவனை வாசலில் காவலுக்கு நின்ற நந்தி தடுத்தார். புஷ்பதந்தன் அவருடன் சண்டையிட்டான். அதன்பின் திரும்பிச் சென்று தாழம்பூ மணமாக மாறினான். உள்ளே ஈசனுடன் இருந்த தேவி “நல்ல மணம்” என்று அதை முகர்ந்தபோது அவன் அவளருகே சென்றுவிட்டான். அந்தக் கதையை அவன் முழுமையாகக் கேட்டான்.
சிவனின் கேள்விக்கு பார்வதி “அவள் கற்பிழந்தவள்தான்” என்று பதில் சொன்னாள்.
“அவ்வாறென்றால் அவள் ஏன் கற்பிழந்த பெண்களுக்கான இருண்ட உலகை அடையவில்லை? கந்தர்வப் பெண்களுக்குரிய ஒளியும் அழகும் உடையவளாகவே நீடிக்கிறாளே?” என்றார் சிவன்.
“அவள் கற்பிழந்திருந்தாலும் ஏழு கணவர்களையும் ஒருங்கிணைப்பவளாக இருக்கிறாள். அவள் இல்லையென்றால் அவர்கள் சிதறி அழிவார்கள். விலங்குகளும் பறவைகளும் மனிதர்களும் ஒருங்கே நீர் உண்ணும் ஊருணிக்கு அந்தக் கொடையாலேயே பேரழகு உருவாகிறது” என்று பார்வதி சொன்னாள்.
ஆனால் அவள் குனிந்து பார்த்தபோது மானசசரோவரத்தில் பொன்மலர் பூத்திருக்கவில்லை. சிவன் புன்னகைத்தார். மனம் வாடிய பார்வதி துயருடன் திரும்பிச் சென்றாள்.
அந்தக் கதையைக் கேட்டுக்கொண்டிருந்த புஷ்பதந்தன் தன் மனைவி ஜயையிடம் அந்தக் கதையைச் சொன்னான். “அன்புக்குரியவளே நீ சொல், உன் பதில் என்ன?”
ஜயை நீண்டகாலம் முன்பு மண்ணில் ஒரு மாபெரும் கிழங்காக விளைந்தவள். அந்தக் கிழங்கைக் கண்டு திகைத்த மலைக்குடிகள் அது இறைவனுக்குரியது என்று படைத்தார்கள். அது கைலாயத்தில் ஒரு பெண் பூதகணமாக மாறியது. புஷ்பதந்தனுக்கு மனைவியாகியது.
ஜயை புன்னகைத்து “எனக்கு விண்ணுலகின் நெறிகள் என்ன என்று தெரியாது. ஆனால் நான் முளைத்தெழுந்த பாதாளத்தின் அறம் என்ன என்று தெரியும். அதை நான் சொல்லமுடியும்” என்றாள்.
“சொல்” என்றான் புஷ்பந்தந்தன்.
“அவள் கற்புள்ளவள்தான். ஏனென்றால் அவள் மக்களைப் பெற்றுப் பெருகினாள். பெருங்கற்பு என்பது பேறுடைமைதான்” என்றாள் ஜயை.
மறுநாள் மானசரோவரில் நீராடுவதற்காகச் சென்ற பார்வதி அங்கே ஒரு பொற்தாமரை விரிந்து ஒளிவிடுவதைக் கண்டாள். அந்த பொற்தாமரையிடம் அவள் “நீ யார்?” என்று கேட்டாள்.
“என் பெயர் கீதை” என்று அவள் சொன்னாள் “நேற்றிரவு கைலாயத்தில் ஒரு பெண் என் அன்னை சுருதியைப்பற்றி சொன்ன ஓர் உண்மையே நான் ஆக இங்கே மலர்ந்திருக்கிறது. இனி இது மானுடர்க்குரியதாக என்றும் இருக்கும்.”
சீற்றத்துடன் பார்வதி சிவனை நோக்கிச் சென்றாள். தவத்தில் இருந்த சிவனிடம் சென்று மூச்சிரைக்க “நான் பிழையாகச் சொன்னதை திருத்திய பெண் யார்? என்னிடம் மட்டும் சொன்ன அக்கதையை இன்னொருவர் எப்படி அறிந்தனர்? உங்களுக்கு இன்னொரு மனைவி உண்டு என்று நானறிந்தது உண்மையா?” என்றாள்.
சிவன் சிரித்து “சுருதி கற்புள்ளவளா என்ற கேள்விக்கு நேற்று பதில் சொன்னவர் யார்?” என்றார்.
அருகே நின்ற ஜயை “அது என்னிடம் என் கணவர் கேட்ட கேள்வி… நான் அதற்குப் பதில் சொன்னேன்” என்றாள்.
“அதுதான் அங்கே பொன்மலராக விரிந்தது” என்றார் சிவன்.
“அந்தக்கதையை இவள் கணவன் எப்படி அறிந்தான்? அவர் எப்படி உள்ளே வந்தான்?” என்று பார்வதி சீறினாள்.
அங்கே தாழம்பூ வடிவில் இருந்த புஷ்பதந்தன் பணிந்து “தேவி, ஈசன் உங்களுக்குச் சொன்ன கதையை தெரிந்துகொண்டாக வேண்டும் என்னும் ஆவலில் தாழம்பூவின் மணமாக அருகே வந்தேன். உங்களிடம் அவர் சொன்ன கதையைக் கேட்டேன்” என்றான்.
பார்வதி மேலும் கோபம் கொண்டாள். ”கணவனும் மனைவியும் இருக்கும் இடத்தில் எப்படி அந்நியனாகிய நீ நுழையலாம்” என்று அவனை கண்டித்தாள்.
“பூதகணங்கள் இறைவனின் பாதத்தின் தூசுத்துகள்கள்… ஆகவே எப்போதும் உடனிருக்கலாம்” என்று புஷ்பதந்தன் சொன்னான்.
அதைப் பார்வதி ஏற்றுக்கொள்ளவில்லை. ”நீ இப்படி இங்கே இறைவன் சொன்ன எத்தனை கதைகளைக் கேட்டாய்?” என்றாள்.
“தேவி, நான் இங்கே சதகோடி கதைகளைக் கேட்டேன்…” என்று புஷ்பதந்தன் சொன்னான். “கதைகளைக் கேட்கும் ஆர்வத்தால்தான் நான் அவற்றைச் செவிகொண்டேன்…”
“அவற்றில் உனக்கு நினைவிருப்பவை எவை?”
“எல்லாமே ஒரு சொல் மறக்காமல் நினைவில் கொண்டிருக்கிறேன்” என்று புஷ்பதந்தன் சொன்னான்.
”மண்ணில் ஐந்து பூதங்களிலும் ஆத்மாவிலும் வாழ்க்கை நிகழ்கிறது. அதில் இருந்து ஒலி மட்டுமே வானை அடைகிறது. மண்ணில் இருந்து விண்ணை அடைபவை கதைகள். விண்ணுலகங்கள் கதைகளால் ஆனவை. இங்கு அவை பெருகிக்கொண்டே இருக்கின்றன. நீ கேட்ட கதைகள் மண்ணில் லட்சம் கதைகளாக திகழ்கின்றன. நீ இப்போதே மண்ணில் மானுடனாக பிறப்பாய். அந்த லட்சம் கதைகளையும் கேட்டு அறிவாய்” என்று பார்வதி சாபமிட்டாள்.
புஷ்பதந்தன் அவள் காலடியில் பணிந்து “தேவி, நான் எப்போது திரும்புவேன்?” என்று கேட்டான்.
“நீ கேட்ட அந்த லட்சம் கதைகளையும் முழுக்க அங்கே விட்டுவிட்டால்தான் உனக்கு விடுதலை. உன் கதைகளை முழுக்க ஒரு சொல் விடாமல் கேட்டு, ஒரு சொல் மறக்காமல் நினைவில் வைத்திருப்பவன் ஒருவனைச் சந்தித்தால் அவனிடம் அனைத்தையும் சொல். உன் அகம் முழுமையாக ஒழியும்போது நீ வெறும் ஒலியாக மாறுவாய். பஞ்சபூதங்களாலான உடலை அங்கே விட்டு மந்திரவடிவமாக விண்ணில் எழுந்து இங்கே வருவாய்” என்று பார்வதி சொன்னாள்.
“நான் இந்த விந்தியமலைக் காட்டில் இந்த நிழல்கள் சூழ இருந்துகொண்டிருக்கையில் ஒருநாள் ஒரு முதியவர் தள்ளாடிய நடையுடன் வந்து இந்த மரத்தடியில் அமர்ந்தார்” என்று கானபூதி தொடர்ந்து அந்தக்கதையைச் சொன்னது.
நான் அவரை பயமுறுத்துவதற்காக அவர் முன் ஒரு நிழலாக அசைந்தேன். மரத்தில் ஒரு புடைப்பாக எழுந்தேன். பைசாசிக மொழியில் உறுமினேன். களைத்துத் தூங்கிக்கொண்டிருந்த அவர் விழித்தெழுந்து என்னைப் பார்த்தார். வழக்கமாக பயணிகள் அஞ்சி நடுங்கி எழுந்து ஓடுவதையே கண்டிருக்கிறேன். அவர் புன்னகையுடன் “நீ சொன்ன இந்தச் சொற்களில் நான்கை நான் விஜயபுரியில், கிரிவல்லபன் என்னும் வணிகன் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவனுக்கு பேய்பிடித்திருந்தது. நிழல்கள் அவனுள் இருந்து பேசிக்கொண்டிருந்தன என்றனர். அப்படியென்றால் நீ அந்த நிழல்களில் ஒருவனா?” என்று கேட்டார்.
நான் அவர் முன் உருக்கொண்டு “ஆம், பைசாசிகனாகிய என் பெயர் கானபூதி” என்றேன். “நான் என் நிழல்படையுடன் வாழும் காடு இது. இங்கே நாங்கள் வைதிகர்கள் வருவதை விரும்புவதில்லை. அவர்களைக் கொன்று எலும்புகளை வைத்து தாயம் விளையாடுவது எங்கள் வழக்கம்.”
“நான் வைதிகன் அல்ல” என்று அவர் சொன்னார்.
“அப்படியென்றால் நீங்கள் யார்? பார்க்க அந்தணர் போலிருக்கிறீர்கள்” என்று நான் சொன்னேன். “நீங்கள் அந்தணர்தான். உயிருக்காக பொய் சொல்கிறீர்கள். நான் அதை நம்பப் போவதில்லை…”
என் நிழல்படைகள் அவரைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டன. அவை வெறித்த கண்களும், இளித்த வாயுமாக நடனமிட்டன.
“என் பெயர் வரருசி…” என்று அவர் சொன்னார். “என் கதையைச் சொல்கிறேன் நான் அந்தணனா என்று நீ சொல்லவேண்டும். நீ நான் அந்தணனே என்று நிறுவினால் நான் என் உடலை உனக்கு அளிக்கிறேன்… நாம் இந்த ஆட்டத்தை ஆடுவோம்.”
கதைகளை வைத்து ஆடுவதில் இருந்து என்னால் தப்பவே முடியாது. ஆகவே நான் அதற்கு ஒப்புக்கொண்டேன். அவர் தன் கையை மண்ணில் வைத்தார். நான் என் கையை மண்ணில் வைத்தேன்.
”நான் விண்ணில், புஷ்பதந்தன் என்னும் சிவகணமாக இருந்து சாபத்தால் மண்ணுக்கு வந்தேன் என்று என் ஜாதகத்தைக் கணித்த சமீகன் என்னும் சோதிடன் சொன்னான். அந்தக் கதையைச் சொல்கிறேன்” என்று அவர் சொல்லத் தொடங்கினார்.
நான் கௌசாம்பி என்னும் நகரில் சோமதத்தன் என்னும் பிராமணனின் மகனாகப் பிறந்தேன். என் தாய் வசுதத்தை. ஆனால் என் தந்தைக்கு ஒரு சாபம் இருந்தது. அவர் பிராமணனாகப் பிறந்தவர். காட்டில் அவர் வேதம் பயிலும்போது தொலைவில் ஒரு வேடன் மானிறைச்சியைச் சுடும் வாசனை வந்தது. கடும் உண்ணாநோன்பிருந்து வேதம் கற்றுக்கொண்டிருந்த அவருடைய நாக்கில் எச்சில் ஊறி அவருடைய வேதச் சொல் திரிபடைந்தது. அதை அவருடைய ஆசிரியர் கண்டார்.
என் தந்தை வேதம் கற்பதில் முதல் மாணவராக திகழ்ந்தார். ஒருமுறை கேட்டதை மறுமுறை அப்படியே சொல்லும் ஆற்றல்கொண்டிருந்த அவரை ஆசிரியர் மிக விரும்பினார். ஆனாலும் தவறு நிகழ்ந்ததனால் சீற்றம்கொண்ட ஆசிரியர் ”நீ இனிமேல் வளர்பிறைக் காலத்தில் வேடனாகவும் தேய்பிறைநாட்களில் அந்தணனாகவும் இருப்பாய். வேடனாக உன் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளும்போது ஒரு சொல் எஞ்சாமல் வேதங்களை மறப்பாய். அந்தணனாக இருக்கும்போது வேடனாக வாழ்ந்ததன் பாவங்கள் உன்னை தொடராது” என்று சாபம் அளித்தார்.
அது சாபம் அல்ல, வரம். என் தந்தை தன் விருப்பங்களை எல்லாம் வேடனாக நிறைவுசெய்துகொண்டார். ஊன் உண்டார், காட்டில் அலைந்தார், விரும்பிய பெண்களை புணர்ந்தார். ஆகவே அந்தணனாக இருந்தபோது அவருக்கு எந்த சலனமும் இல்லாமல் உள்ளத்தைக் குவிக்கமுடிந்தது. ஆகவே அவர் நிகரற்ற வேத பண்டிதராக விளங்கினார். அவரை அரசர்கள் கொண்டாடினார்கள். வேதசபைகளில் அவரைக் கண்டு அனைவரும் வணங்கினார்கள். அவர் அக்னிசிகன் என்னும் வேடனாகக் காட்டில் பாதிநாட்கள் அலைவதை எவரும் அறிந்திருக்கவில்லை.
காட்டில் அலைகையில் என் தந்தை அங்கே ஒரு காட்டுப்பெண்ணைப் பார்த்து அவளை ராட்சசத மணமுறைப்படி தூக்கிச் சென்று புணர்ந்தார். அவள் பெயர் கராளி. ஆனால் அவள் வசுதத்தை என்ற பெயருள்ள ஒரு அந்தண முனிவரின் மகள். அவருடைய அன்றாட வேள்விக்கான சமித்துகளை சேகரிக்க காட்டுக்குள் சென்றவள் அங்கே இரு மான்கள் புணர்வதை வேடிக்கை பார்த்து நேரம் மறந்து நின்றுவிட்டாள். அவள் திரும்பி வந்தபோது வேள்வி தாமதமானதலால் சினந்த தந்தை அவளை ஓராண்டுக் காலம் காட்டுப்பெண்ணாக அலையும்படி சாபம் இட்டார். அதன்படி அவள் அங்கிருந்த காட்டுமக்களுடன் சென்று அவர்களின் குடிலில் தங்கி வாழ்ந்து வந்தாள். கனிகளும் கிழங்குகளும் சேகரிக்க அவள் காட்டுக்குள் வந்தபோதுதான் என் தந்தை அவளைப் பார்த்தார்.
என் தாய் காட்டுப்பெண்ணாக வாழ்வதன் கடைசிநாளில் அவளை என் தந்தை புணர்ந்தார். அவள் தன் தந்தையிடம் திரும்பிச் சென்று அந்தணப்பெண்ணாக வாழத் தொடங்கியதும் என்னைக் கருவுற்றாள். குழந்தையுடன் அவள் காம்பில்யத்தில் வைதிகராக திகழ்ந்த என் தந்தையைத் தேடிவந்தாள். குழந்தையையும் தன்னையும் ஏற்கும்படி கோரினாள். அவள் அந்தணப் பெண்ணாகவும் என் தந்தை அந்தணராகவும் இருந்தமையால் அவளை அவர் மணந்துகொண்டார். நான் அந்தணனாக காம்பில்யத்தில் வளர்ந்தேன். வேதங்களையும் வேதாங்கங்களையும் கற்றுக்கொண்டேன். என் ஏழுவயதில் ஒரே ஒருமுறை நான்கு வேதங்களையும் ஓதக்கேட்டு முழுக்க அப்படியே மனப்பாடம் செய்தேன். ஆகவே மகாவைதிகன் என அறியப்பட்டேன்.
வேடனாக காட்டுக்குச் சென்ற என் தந்தை அங்கே புலியால் கொல்லப்பட்டார். நான் என் தாயுடன் வளர்ந்தேன். காம்பில்யத்தில் புகழ்பெற்ற வைதிகனாகவும், அரச சபைகளில் மதிக்கப்படுபவனாகவும் திகழ்ந்தேன். உரிய ஆசிரியர்களைத் தேடி அலைந்து அறுபத்துமூன்று கலைகளையும் கற்றுக்கொண்டேன். உபவர்ஷன் என்னும் பிராமணனின் மகளாகிய உபகோசை என்னும் பெண்ணை முதலில் மணந்தேன். அவளில் எனக்கு விதேகன், வித்யவான், வித்யாதீர்த்தன், வித்யாசாகரன், வித்யுத்ப்ரபன், வித்யுதாக்ஷன், வித்யுமாலி, வித்யுந்தரன், வித்யோதன், விதாதா, வினதன், விந்த்யன் என பன்னிரண்டு மகன்கள் பிறந்தனர்.
அதன்பின் நான் தெற்கே சென்றேன். கேரளத்து நிலத்தில் ஆதி என்னும் சண்டாள குலத்துப் பெண்ணை மணந்தேன். அவளிலும் எனக்கு பன்னிரண்டு மகன்கள் பிறந்தனர். மேழத்தூர் அக்னிஹோத்ரி, ரஜகன், உளியனூர் பெருந்தச்சன், வாயில்லாக்குந்நில் அப்பன், வள்ளுவன், காரய்க்கல் மாதன், வடுதலையன், உப்புகூற்றன், பாணன், நாறாணத்து பிராந்தன், அகவூர்சாத்தன், பாக்கனார் என்னும் பன்னிருவரின் வழிவந்தவர்கள் அங்கே பன்னிரு குலங்களாகப் பெருகியிருக்கின்றனர். பறைச்சிபெற்ற பன்னிருகுலத்தார் என அறியப்படுகிறார்கள்.
உபகோசையில் நான் பெற்ற பன்னிருவரில் பதினொருவர் வைதிகர்கள், விதேகன் என்னும் முதல்மைந்தன் வேடன். ஆதியில் நான் பெற்ற பன்னிருவரில் முதல்மைந்தன் வைதிகனாகிய மேழத்தூர் அக்னிஹோத்ரி. இன்று அவன் குலம்தான் அங்கே வேதங்களுக்கு அதிகாரம் கொண்டிருக்கிறது. எஞ்சியோர் வேடமிட்டு ஆடுதல், தச்சு, வேட்டை என எல்லா தொழிலும் செய்கிறார்கள்” என்று வரருசி சொன்னார். “இப்போது சொல், நான் பிராமணனா அல்லவா?”
நான் திகைத்து அமர்ந்திருந்தேன். முடிவற்ற கதைகளைக் கொண்ட என்னால் அந்தக் விடுகதைக்குப் பதில் சொல்லமுடியவில்லை. அவர் புன்னகையுடன் “சொல்” என்றார்.
நான் கையை விலக்கிக்கொண்டு “எனக்குத் தெரியவில்லை, தோற்றேன்” என்றேன்.
அவர் தன் கையை விலக்காமல் புன்னகைத்து “நான் கங்கை, யமுனை, கோதாவரி சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி என்று ஏழு பேராறுகள் ஓடும் முழு நிலத்தையும் நடந்தே அறிந்தேன். அங்கே நிறைந்து நின்ற வாழ்க்கையை முழுமையாக அறிந்துகொண்டேன். என்னிடம் இந்த உலகம் நிகழ்வதைப் பற்றிய ஒருலட்சம் கதைகள் உள்ளன. அவற்றை நான் உனக்குச் சொல்கிறேன். அக்கதைகளில் ஏதோ ஒன்றில் நீ கேட்டதற்குப் பதில் உண்டு” என்றார். “ஆனால் ஒருமுறை சொன்ன கதையை திரும்பச் சொல்ல மாட்டேன். நடுவே கதையை நிறுத்தினால் மீண்டும் தொடங்கவும் மாட்டேன்.”
“எனக்கு வேறு வழியில்லை…” என்று நான் சொன்னேன்.
அவர் கதைகளைச் சொல்லத் தொடங்கினார். நான் அவர் சொன்ன ஒவ்வொரு சொல்லையும் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் சொல்லி முடித்தபோது என் ஐயம் தீர்ந்திருந்தது. அவர் கையை எடுத்துக் கொண்டு “இறுதிச் சொல் எப்போதும் ஓம்” என்றார்.
“என்ன சொன்னார்? அவர் என்ன சொன்னார்?” என்று நிழல்கள் என் காதருகே கிசுகிசுத்தன.
“அது இந்த ஒரு லட்சம் கதைகளில் ஒரு வரி அல்ல, இந்த ஒரு லட்சம் கதைகளின் ஒட்டுமொத்தம்” என்று நான் சொன்னேன்.
அவர் தன் பொட்டலத்துடன் எழுந்துகொண்டார். “நான் இந்தக் கதைகளை எல்லாம் ஒரு சொல் மிச்சமில்லாமல் எவரிடமேனும் சொல்லவேண்டும் என்று எனக்கு ஆணை. ஒரு சொல் தவறவிடாமல் கேட்கும் ஒருவரிடம் மட்டுமே சொல்லவும் வேண்டும். இதோ அந்த தேடல் முடிவடைந்தது. இனி என்னிடம் கதைகள் இல்லை” என்றார்.
”ஆனால் அத்தனை கதைகளும் என்னிடம் வந்து நிறைந்துவிட்டன. சூலசிரஸ் சொன்ன கதைகளுடன் இங்கே நான் வாழத்தொடங்கியபோது வந்துசேர்ந்த கதைகளும் இணைந்து என்னிடம் இப்போது முடிவில்லாத கதைகள் உள்ளன. நான் எப்படி இவற்றில் இருந்து விடுபடுவேன்?”
அவர் “அதுவும் கதையாகச் சொல்லப்பட்டுள்ளது” என்றார் வரருசி. “புஷ்பதந்தன் பார்வதியால் சாபமிடப்பட்டபோது அவனுடைய நண்பனாகிய மால்யவான் அவனுக்காக பரிந்து பேசினான். தேவி, காலடிப் புழுதிக்கு தனக்கான பாதை என ஒன்று உண்டா என்று அவன் கேட்டான். தேவி சினம்கொண்டு அவனையும் மண்ணில் பிறக்கும்படிச் சாபமிட்டாள். அவன் உன்னைத் தேடிவருவான். இதே ஐயத்தை உன்னிடம் அவன் கேட்பான். அவனிடம் இக்கதைகளைச் சொல்….”
நான் “நான் காத்திருக்கிறேன்” என்றேன். “காத்திருப்பது ஒன்றையே நான் அறிந்திருக்கிறேன்.”
“காத்திருக்கும்போது சொல்லப்பட்டவைதான் கதைகள். கதைகள் சொல்பவர்கள் அனைவருமே காத்திருப்பவர்கள்தான்” என்றபின் வரருசி கிளம்பிச் சென்றார்.
சுவையை வரமாகப் பெற்றவர், சொற்சுவையிலும் கதைச்சுவையிலும் திளைத்தவர். அனைத்தையும் கைவிட்டுவிட்டு எடையற்றவராக நடந்து பாதராணயரின் பதரி தவநிலையத்தை அடைந்தார். அங்கே தன் தவத்தால் தேவியை நீலநிறமான காளி வடிவில் அக்னியில் வரவழைத்தார். தன் உடலை அவளுக்கு உண்பதற்காக அளித்தார். அவர் உடல் அழிந்ததும் தேவி இளஞ்சிவப்பு நிறமான பார்வதியாகத் தோன்றினாள். அவளுக்கு தன் ஆத்மாவை அவர் அளித்தார். தேவி அவரை குட்டியானையின் தந்தம்போன்ற அழகான தாழைமடலாக ஆக்கி கையிலெடுத்துக்கொண்டாள். அவர் விண்ணுலகுக்கு திரும்பிச் சென்றார்.
“நான் மீண்டும் காத்திருக்கலானேன். என்னைத் தேடி மால்யவானின் மானுடப்பிறப்பு வந்து இங்கே அமர்வது வரை” என்று கானபூதி சொன்னது. “அது இரண்டாவது கதை”
(மேலும்)
சொல்லாழி இலக்கியக்கூட்டம்,பெங்களூர்
வரும் 1 ஜூன் 2025, ஞாயிறு அன்று ‘சொல்லாழி’ பதினாலாவது உரையாடல் அமர்வு, Atta Galatta அரங்கில், எஸ்.எல்.பைரப்பா அவர்களின் ‘வம்ச விருட்சம்’ நாவலுடன் நடைபெறும்.
நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் கே.நல்லதம்பி ஐயா அவர்களும் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
நேரம்: 4:45PM – 7:00PM.
இடம்: https://maps.app.goo.gl/LNciLq3vCEngKwGo6
https://www.commonfolks.in/books/d/vamsa-virutcham
நன்றி.
சொல்லாழி – பெங்களூரு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.
பிறமதக்கல்வி, கடிதம்
இஸ்லாமிய தத்துவ வகுப்புகளுக்கு ஏன் பொதுவாக ஆர்வமில்லாமல் இருக்கிறது என சொல்லியிருந்தீர்கள். இஸ்லாமியரும் கிறிஸ்தவரும் பிறரை மதமாற்றம் செய்வதில் மிகத்தீவிரமாக இருக்கிறார்கள். ஆகவே பிற மதங்களை மட்டமாகச் சித்தரித்துப் பேசுவது அவர்களின் வழக்கம். நாம் இன்னொரு மதத்தைச் சேர்ந்தவர்களிடம் அப்படிப் பேசுவதில்லை. ஆனால் அவர்கள் தயக்கமே இல்லாமல் பேசுவார்கள்.
பிறமதக்கல்வி, கடிதம்As an ex-government servant, I can definitely say almost all government development projects are failures; they can achieve nothing. We all know this. Still, we are arguing for power politics because we are interested only in power, and we imagine we are getting power through it.
May 28, 2025
கவிஞனின் ஏரிக்கரையில்…
வேர்ட்ஸ்வெர்த் மேல் அருண்மொழிக்கு மோகம் அதிகம். சின்னவயதிலேயே உருவானது. அவரது இயற்கை வர்ணனைக் கவிதைகளை திரும்பத் திரும்ப படிப்பாள். சம்பந்தமில்லாமல் எல்லா உரைகளிலும் வேர்ட்ஸ்வெர்த் நுழைவதும் உண்டு. தஞ்சை என்னும் ‘தண்ணியில்லாக் காட்டில்’ பிறந்து வளர்ந்ததனால் உருவான பற்று என்று நான் சொல்வதுண்டு. நானெல்லாம் வேர்ட்ஸ்வெர்த்துக்கே பாடம் கற்பிக்கும் தகுதிகொண்டவன், எங்கள் ஊர் அப்படி என்பேன்.
வேர்ட்ஸ்வெர்த் வாழ்ந்த நகருக்கு வரும் திட்டமும் அருண்மொழியும் லண்டன் முத்து என சான்றோராலும், காட்ஜெட் முத்து என பகைவர்களாலும் அழைக்கப்படும் முத்துக்கிருஷ்ணன் கேசவனால் உருவாக்கப்பட்டது. முத்து என்னிடம் ‘அக்கா லண்டன் வராங்க. அப்டியே லேக் டிஸ்ட்ரிக்ட் போறாங்க… நீங்களும் வரலாம்’ என்று சொன்னபோது நானும் சேர்ந்துகொள்ள முடிவெடுத்தேன். காவியம் எழுதிக்கொண்டிருந்தேன். நடுவே ஓர் ஓய்வு என்பது நாவலில் இருந்து விலக்கிவிடும் என்ற சந்தேகமும் இருந்தது. ஆகவே கடந்த சில நாட்களாக வீட்டிலேயே அமர்ந்து வெறிகொண்டவனாக எழுதி 25 அத்தியாயம் முன்னால் சென்றுவிட்டேன்.
ஆனாலும் விட்டுவிடக்கூடாது. ஆகவே ஒவ்வொரு நாளும் காலை எழுந்ததுமே இரண்டு அத்தியாயங்களை கூர்ந்து வாசித்து திருத்துகிறேன் – உண்மையில் என்னால் எதையும் திருத்த முடியாது. வாசிப்பதுதான் வழக்கம். இதில் சில அத்தியாயங்களை எழுதும்போது அவற்றின் கசப்பால் நானே வேகமாகக் கடந்து சென்றிருக்கிறேன். முழுக்க எழுத்துப்பிழைகள். விஷ்ணுபுரம் பதிப்பகம் மீனாம்பிகைதான் சரிசெய்து கொண்டிருக்கிறார். இந்நாவலுக்குள் இருந்து வெளிவராமலேயே திரும்பி வந்துவிட்டேன் என்றால் வெற்றி என்று பொருள்.
விந்தையான சவால்தான். இந்த பகுதி பிரித்தானியாவின் வடக்கே. ஆகவே ஆர்ட்டிக் காற்று நேரடியாகவே வீசும் இடம். லண்டனைவிட ஓரிரு டிகிரி குளிர் அதிகம். ஆண்டில் பெரும்பாலும் எல்லா நாட்களிலும் மழை. இது வசந்தகாலம். ஏரிகள், பெரும் புல்வெளிகள், மழைமுகில் திரண்ட வானம் எல்லாமே ஒரு மங்கலான ஒளியில் சுடர்விட்டுக்கொண்டிருக்கின்றன. நான் அவற்றில் என்னையறியாமலேயே ஈடுபட்டிருக்கிறேன். ஆனால் நாவலின் கடும்கசப்பை தக்கவைக்கப் போராடிக்கொண்டும் இருக்கிறேன். அவ்வப்போது மறந்துவிட்ட அரிய ஏதோ நினைவுக்கு வருவதுபோல, எவரோ ஓங்கி ஓர் அடி போடுவதுபோல மித்ரன் காட்சனின் நினைவும் வந்துசெல்கிறது. இதுவும் வாழ்க்கையின் ஒரு சுவை, ஒரு காலகட்டம் போல.
இந்த ஊரில்தான் வேர்ட்ஸ்வெர்த் பிறந்தார். விண்டர்மீர் (Windermere) என்னும் ஏரியின் பெயர்தான் இந்த ஊருக்கும். வேர்ட்ஸ்வெர்த்தும் குடும்பமும் நீண்டநாட்கள் வாழ்ந்த Dove Cottage என்னும் வீடு இங்கே அருகே Grasmere என்னும் இடத்தில் உள்ளது. இந்த ஏரிக்கரை ஒரு சுற்றுலா மையம். ஆனால் மொத்தச் சுற்றுலாவுமே வேர்ட்ஸ்வெர்த்தின் நினைவை ஒட்டியே உள்ளது. அவர் வாழ்ந்த வீடு, அவர் நடந்த இடம், அவர் அமர்ந்த உணவகம் என அவர் நினைவை இந்த ஊரே சொல்லிக்கொண்டிருக்கிறது. பளிச்சிடும் நீர் நிறைந்த ஏரிகளும், கண்நிறைக்கும் பசுமையலைகளான புல்வெளிகளும் இன்னும் தீவிரமாக அவரைப்பற்றிச் சொல்கின்றன.
வழக்கமாக பயணங்களில் தீவிரமான அலைச்சல்கள் இருக்கும். ஒவ்வொரு நாளும் நிகழ்வுகள், சந்திப்புகள், வெவ்வேறு இடங்களுக்குச் செல்லுதல். தூங்குவதும் விழிப்பதும் மட்டுமே நமக்குரிய பொழுதுகள். அது ஒரு வகையான கொண்டாட்டம். இந்தப் பயணத்தில் ஒன்றுமே செய்யாமல் ஒரு வாரம் என்பதுதான் அருண்மொழியின் திட்டமாக இருந்திருக்கிறது. ஆகவே இந்த ஏரிக்கரையில் , மிதமான குளிர் கொண்ட வசந்தகாலச் சூழலில் பெரும்பாலும் அமைதியாக நாட்கள் செல்கின்றன.
இந்நாட்களில் ஒரு புதியவழக்கத்தை தொடங்கியிருக்கிறேன். ஊரில் இருக்கும்போதே மீண்டும் கையால் எழுதத்தொடங்கினால் என்ன என்னும் எண்ணம் எழுந்தது. நல்ல காகிதம், பேனா ஆகியவற்றை பற்றிய இழப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. எழுதும்போது உருவாகும் அகக்கூர்மை தட்டச்சிடும்போது அமைவதில்லையோ என்னும் எண்ணமும் உள்ளது. செல்லுமிடமெல்லாம் குறிப்பேட்டுடன் செல்வதும், அதைப்பற்றி ஏதேனும் எழுதிக்கொள்வதும் பழையகாலப் பயணிகளின் வழக்கம். அண்மையில் வாசித்த நூல் ஜெர்மானிய அறிவியலாளரும் சாகசப்பயணியுமான அலக்ஸாண்டர் வான் ஹம்போல்ட் பற்றிய இயற்கையை கண்டுபிடித்தல் என்னும் வாழ்க்கை வரலாறு. அதில் ஹம்போல்டின் குறிப்புகளை பற்றி வாசிக்கையில் ஒரு குறிப்பேட்டை கையில் வைத்திருக்க ஆசை எழுந்தது.
நாகர்கோயில் அலக்ஸாண்டிரியா பிரஸ் ரோடு கடைக்குச் சென்று ஒரு சின்ன டைரி வாங்கி வந்தேன். ஆனால் இங்கே வந்தபோது நண்பர் டாக்டர்.பார்கவி (ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர்) இரண்டு அழகிய டைரிகளை அளித்தார். ஒன்றில் நாட்குறிப்புகள் எழுதத் தொடங்கினேன். இன்னொன்றில் சும்மா கவிதைகள். எனக்கான கவிதைகள், வெளியிடுவதற்கானவை அல்ல, பெரும்பாலும் வெளிவர வாய்ப்பில்லை, ஆகவே எவரும் பீதி அடையவேண்டியதில்லை.
இந்த வகையான தங்குமிடங்களை இப்போது அதிகம் விரும்ப ஆரம்பிக்கிறேன். ஓர் இடத்திற்குச் சென்று அந்த இடத்திலேயே ஒரு குட்டி ‘ரொட்டீன்’ உருவாவது. அந்த இடம் நாம் ‘சென்றுபார்த்த’ இடமாக அன்றி நாம் ‘வாழ்ந்த’ இடமாக ஆவது. இந்த இடம் அப்படி ஆகிக்கொண்டிருக்கிறது. கவிஞன் மறைந்து இருநூறாண்டுகள் ஆகின்றன. ஆனால் அவனுடன் இங்கே இந்த ஏரிக்கரையில் தங்கமுடிகிறது. அவனுடைய உதிரி வரிகள் அவ்வப்போது கடல்மணலில் அரிய கிளிஞ்சல்கள் போல தட்டுப்படுகின்றன. சிலசமயம் அவற்றை தொட்டு எடுப்பதற்குள் மறைந்தும் விடுகின்றன.
ஓர் ஏரிக்கரையில், ஒரு மலையடிவாரத்தில் தொடர்ச்சியாகத் தங்குவது என்பது ஒருவகையான ‘மலையை விழுங்கும்’ அனுபவம் என தோன்றுகிறது. அந்த மாபெரும் இருப்பு கொஞ்சமாக நம்மை ஆட்கொள்ள தொடங்குகிறது. நாம் அதன் அகவடிவம் ஒன்றை நமக்காக உருவாக்கிக்கொள்கிறோம். நாம் அதை சுருக்கிக்கொள்ளாமல் இருந்தால் நமக்குள்ளும் அதன் பேருருவம் நிலைகொள்ளத் தொடங்குகிறது. சிற்றலைகளுடன் குளிர்ந்துகிடக்கும் ஓர் ஏரியை எனக்குள் தேக்கியபடி இங்கே அமர்ந்திருக்கிறேன். அவ்வாறு சில நாட்களுக்கு முன் கோதாவரியை வைத்துக்கொண்டு பைத்தானில் அமர்ந்திருந்தேன்.
வேர்ட்ஸ்வெர்த் இங்கே நீண்டகாலம் தங்கியிருக்கிறார். அவருடைய தங்கை டோரதி அவருடனேயே நீண்டகாலம் வாழ்ந்தவர். வேர்ட்ஸ்வெர்த் கவிதைகள் அளவுக்கே டோரதியின் நாட்குறிப்புகளும் கவித்துவமானவை. இயற்கையை அதற்கப்பாலுள்ள பிறிதொரு மெய்மையின் வெளிப்பாடாகக் கருதும் ஆன்மிகப்பார்வை கொண்டவை வேர்ட்ஸ்வெர்த்தின் கவிதைகள். கற்பனாவாதம் (Romanticism), இயற்கைவாதம் (Naturalism)என்னும் இரண்டு இயக்கங்களின் தோற்றுவாய் அவரும் அவர் நண்பர் கூல்ரிட்ஜும் என்றும் சொல்லப்படுகிறது. ஒன்று அழகியல் இயக்கம். இன்னொன்று அதன் ஆன்மிகசாரமாக அமைந்த தரிசனம்.
வேர்ட்ஸ்வர்த்தின் இல்லத்திற்கும் நினைவகத்திற்கும் சென்றோம். வசதியான வீடுதான். இந்த வசந்த காலத்திலேயே இல்லத்திற்குள் விளக்கு தேவையாக இருக்கிறது. அப்படியென்றால் ஆண்டு முழுக்க அரை வெளிச்சமே இருந்திருக்கும். அல்லது அரையிருள். ஆகவேதான் அவருக்கு மேகம் திறந்து மண்ணில்கொட்டும் வசந்தகால வெளிச்சம் தெய்வத்தின் அருளென்றே தோன்றியிருக்கிறது. வேர்ட்ஸ்வெர்த் கவிதைகளை மட்டும் வைத்துப் பார்த்தால் நீங்காத வசந்தம் வாழும் நிலம் இது.
நண்பர் லண்டன் முத்து எங்களுடன் பல ஆண்டுகளாக பயணங்களுக்கு வருபவர். 2010 வாக்கில் நாங்கள் சென்ற அருகர்களின் பாதை பயணத்திற்காக ஜெர்மனியில் இருந்து வந்து கலந்துகொண்டார். இப்போது அந்தப்பயணமெல்லாம் வரலாற்றின் பகுதியாக ஆகிவிட்டது. பயணத்தோழர்கள் அனைவருமே வாசகர்களுக்கு நாவல்களின் கதாபாத்திரங்கள் போல அறிமுகமானவர்களாக ஆகிவிட்டார்கள். அவருடன் அவர் மகன் சித் வந்திருக்கிறார். முத்து ஒரு சாகசவிரும்பி. ஏரியில் படகோட்டுவது, மலைகளில் ஏறுவது என பலவகை செயல்பாடுகள் உண்டு. (அவரை நான் கம்போடியா பயணத்தில் நீச்சல்போட்டியில் இரண்டு முறை வென்றேன் என்பதும் வரலாற்றில் நினைவுகூரப்படவேண்டிய ஒன்று.)
லண்டன் வந்து இரண்டு நாட்கள் தங்கிவிட்டுத்தான் இங்கே வந்தோம். அங்கே இரண்டுநாட்கள் வீட்டில் நண்பர் கோமதி இல்லத்தில் தங்கினோம். கோமதி எழுத்தாளரும்கூட, லண்டனில் இருந்து வெளிவரும் இதழ்களில் எழுதுகிறார். ஒருநாள் ஷேக்ஸ்பியரின் ஊரான ஸ்டிராட்போர்டு ஊரில் நண்பர்கள் பிரசாத் – அனிதா இல்லத்தில் தங்கினோம். அங்கே நண்பர்கள் வந்து சந்தித்தார்கள். கூட்டமாக பேசியபடியும் சிரித்தபடியும் அலைந்துகொண்டிருந்தோம். எப்போதும் என் வாழ்வின் கொண்டாட்டங்களில் முதன்மையானவை பயணங்கள், நண்பர்களுடன் இருப்பது ஆகியவை. வாழ்க்கையையே ஒரு பயணத்தில் இருந்து அடுத்தது என்றுதான் வகுத்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் பயணம் முடிந்ததும் ஜூனிலேயே ஒரு சிக்கிம் பயணம். ஜூலையில் ஐரோப்பா பயணம். அக்டோபரில் அமெரிக்கா பயணம்…
இந்தப் பயணத்தில் ஒரு செவ்வியல் கவிஞனின் ஊரில் இருந்து ஒரு கற்பனாவாதக் கவிஞனின் ஊருக்கு வந்திருக்கிறோம். நான் இதுவரை சென்ற கவிஞர்களின், எழுத்தாளர்களின் ஊர்களை நினைவுகூர்கிறேன். ஷேக்ஸ்பியரின் ஊருக்கு நான் செல்வது இரண்டாவது முறை. எமர்சனின் வால்டோ போல எக்காலமும் அழியாத உணர்வுகளாக என்னில் நிறைந்திருக்கும் சில ஊர்கள் உண்டு. அவற்றைப் பற்றி மட்டும் ஒரு தனிநூல் எழுதலாம் என்னும் எண்ணம் உருவாகிறது. நினைவுகளையும் தரவுகளையும் திரட்டிக்கொண்டு எழுதவேண்டும்.
இன்னும் மூன்றுநாட்கள் இங்கே இருப்போம். இதே ஏரியைப் பார்த்தபடி. இப்போது பார்கவியும் அவர் அம்மாவும் உடனிருக்கிறார். இன்னும் ஓரிரு நண்பர்கள் வரக்கூடும். இந்நாட்கள் அருண்மொழிக்குரியவை. அவள் தனக்கான ஒரு மனநிலையில் சிறுமியைப்போல கொண்டாடிக் கொண்டிருக்கிறாள். வேர்ட்ஸ்வெர்த் வரிகளை மனப்பாடம் செய்து சொல்லிக்கொள்வது. தனக்குத்தானே சிரித்து மகிழ்வது. கவிதையை அப்படி ரசிக்கும் மனநிலையை வாழ்க்கை முழுக்க நீட்டிக்கமுடியும் என்றால் எல்லா நாட்களும் இனியவைதான். அப்படி யோசிக்கும்போது நல்ல வாசகர் இலக்கியத்தின் படைப்பாளியை விட அதிருஷ்டம் கொண்டவர் என்று தோன்றுகிறது. படைத்தலின் அவஸ்தைகள் இல்லை, இன்பம் மட்டுமே அவருக்கு உள்ளது.
I wandered lonely as a cloudThat floats on high o’er vales and hills,When all at once I saw a crowd,A host, of golden daffodils;Beside the lake, beneath the trees,Fluttering and dancing in the breeze.நான் உடனிருக்கிறேன். கூடுமானவரை உள்நோக்கி திரும்பியபடி. அமைதி என்பது மௌனமாகச் சிதறிப்பரந்து கொண்டிருத்தல் என்றால் இது அதுதான். அமைதி என்பது எண்ணியிராத கணத்தில் சட்டென்று குவிதல் என்றால் இது அதுவும்தான். முகில்களைப்போல தனித்து அலைவது என்று கவிஞர் சொல்வது இதைத்தான்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
