Jeyamohan's Blog, page 90
May 24, 2025
க. கணபதிப்பிள்ளை
[image error]க. கணபதிப்பிள்ளை ஈழத்து தமிழறிஞர், பேராசிரியர், வரலாற்றாசிரியர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், கல்வெட்டாய்வாளர். மொழியியல், ஒலிப்பியல், கல்வெட்டியல், நாடகம், இலங்கை வரலாறு என விரிவான பங்களிப்பு செய்துள்ளார்.
க. கணபதிப்பிள்ளை
காவியம் – 34

கானபூதி சொன்னது. எப்போதுமே ஒருவரை நிழல்களில் ஒன்று மட்டும் சென்று பற்றிக்கொள்வதில்லை. மனிதனுக்கு இரு செவிகள். இரண்டு கண்கள். இரண்டு மூக்குத்துளைகள். ஒன்று மட்டுமே இருப்பவற்றுக்கும் இரண்டு பணிகள். இரண்டுக்கும் இடையேயான ஒத்திசைவுதான் மனிதனின் இருப்பு. அந்த இணைவைச் சிதைப்பதன் வழியாகவே நிழல்கள் மனிதனுடன் விளையாடுகின்றன.
செவி தான் நிழல்கள் மனிதனை அணுகும் முதன்மை வாசல்கள். ஏனென்றால் செவி ஏற்கனவே இரண்டாகத்தான் செயல்படுகிறது. ஒலிகளை அருகில் என்றும், தொலைவில் என்றும் அது பிரித்துக் கொண்டிருக்கிறது. வேண்டியவை, வேண்டாதவை என்று பிரித்துக் கொண்டிருக்கிறது. இரண்டு நிழல்கள் சென்று மனிதர்களை இருபக்கமும் அணுக்கமாகப் பின்தொடர்ந்து செவிகளில் பேசத்தொடங்குகின்றன. இரண்டு செவிகளிலும் இரண்டு உரையாடல்கள் தொடர்ந்து நிகழும்போது மனிதர்கள் தங்கள் ஒருமையை இழக்கத் தொடங்குகிறார்கள்.
மனிதர்கள் உள்ளம் என்பது ஒருமை கொண்டிருக்கையில் மட்டுமே பயன்படும் கருவி. விலங்குகளின் உள்ளம் வெளியே இருக்கும் பருப்பொருள் வெளியுடன் முழுமையாகத் தன்னை பிணைத்துக் கொண்டிருப்பதனால் இயல்பாகவே ஓர் ஒருமையை அடைந்து விட்டிருக்கிறது. என்றோ எப்போதோ மனிதன் தனக்குள் தனியாக இயங்கும் உள்ளம் என்ற ஒன்றை உருவாக்கிக்கொண்டான். அதன்பின் இயல்பான ஒருமை என்று ஒன்று அவனுக்கு அமையவே இல்லை. பிரிவதன் வழியாக, சிதறுவதன் வழியாக மட்டுமே செயல்படமுடியும் என்னும் பெரும் சாபம் மானுட உள்ளம் மீது கவிந்திருக்கிறது.
மனஒருமையை மனிதர்கள் புறஉலகை நோக்கித் தன் அகத்தை முழுமையாகச் செலுத்திக் கொள்ளும்போது, அல்லது புறஉலகு மட்டுமே முற்றிலும் அவர்களை ஆட்கொண்டிருக்கும்போது மட்டும் அடைகிறார்கள். எளியோர் அடையும் மனஒருமை என்பது அது மட்டுமே. பசியாலும் அச்சத்தாலும் ஆட்கொள்ளப்படும்போது வேறேதும் இல்லாத நிலை வருகிறது. ஆகவே ஒவ்வொரு கணமும் வாழ்தலுக்காக போராடுபவர்கள் தவிர்க்க முடியாத மனஒருமையைக் கொண்டிருக்கிறார்கள். வாழ்வதற்கான போராட்டம் குறையும்போது உள்ளம் ஒருமையை இழக்கிறது. புறஉலகின் பிடியிலிருந்து அது நழுவி தனக்கான தனி அலைச்சல் பாதைகளை உருவாக்கிக்கொள்கிறது.
உள்ளம் அவ்வாறு விடுபட்டு அலையத்தொடங்கிய பின்னர் மானுடர் தெய்வங்களை நாடுகிறார்கள். படிகமணி மாலையையும் ருத்ராக்ஷ மாலையையும் கையில் ஏந்தி அமர்ந்து, ராம நாமத்தையோ சிவ நாமத்தையோ சொல்லி, உருட்டி உருட்டி கை வழியாக ஒழுகிச் செல்லும் காலத்தில் தன் உள்ளத்தை நிறுத்தி, ஒருமை கொள்ளச்செய்ய முயல்கிறார்கள். பலகோடி முறை இறைவனின் நாமங்களை சொல்கிறார்கள். மூடிய அறைகளின் முன் தெய்வங்களுக்கு முன் தோத்திரப்பாடல்களை பாடுகிறார்கள். கண்மூடி தியானத்திலும் யோகத்திலும் அமர்ந்திருக்கிறார்கள். நூல்களை பாராயணம் செய்கிறார்கள். என்னென்னவோ முறைகளில் தங்கள் உள்ளத்தை தொகுத்துக்கொள்ள இடைவிடாது முயன்று கொண்டிருப்பதே உள்ளத்தின் பிளவின் அலைக்கழிப்பில் இருந்து சற்றேனும் விடுபடுவதற்கான வழியாக இருக்கிறது.
ஆனால் உலகியல் அவ்வாறு ஒருவரை விட்டுவிடுவதில்லை. வெளியுலகில் அதன் போராட்டங்கள் இல்லாமல் ஆகும்போது அது தன்னை வெறும் உணர்வுகளாகவும் கற்பனைகளாகவும் உருமாற்றிக்கொண்டு மனிதர்களைச் சூழ்ந்துகொள்கிறது. கற்பனை எதிரிகள், கற்பனை அபாயங்கள், நிகழாத இழப்புகள் என உள்ளம் உலகியலை பெருக்கிகொண்டே இருக்கிறது. வஞ்சங்கள், துரோகங்கள், பகைகள், வெறுப்புகள், காழ்ப்புகள், சதிகள், வெற்றி, தோல்விகள் என்று புறவுலகமே அகத்தில் நுரைத்து நிறைந்து கவியத் தொடங்குகிறது. ஒருவரை ஒன்றென்று அமைய முடியாதபடி அது பத்து திசைகளிலும் திறந்து இழுத்து சிதைக்கிறது.
செல்வந்தர்களின் இல்லங்களில் பொருளீட்டுவதற்கு என்று ஒருவர் அமைந்துவிடுகிறார். அப்பொருளைக் கொண்டு வாழ்வது மட்டுமே அக்குடும்பத்தில் பிற அனைவருடைய வாழ்க்கை ஆகிறது. அவர்களின் இல்லத்துப் பெண்கள் ஆடம்பரங்களுடன், வசதிகளுடன் தனித்துவிடப்படுகிறார்கள். நீ தேடும் அனைத்தும் இதோ என்கிறது குடும்பம். ஏன் இப்படி இருக்கிறாய், நீ மகிழ்ச்சியாகத்தானே இருந்தாக வேண்டும், இதற்கு அப்பால் என்ன வேண்டும் உனக்கு என்று அதட்டுகிறது. நீ மனநோயாளி என்று குற்றம்சாட்டுகிறது. நன்றியில்லை என சீறுகிறது. இத்தனைக்குப் பிறகும் நிறைவில்லை என்றால் செத்துத்தொலை என கசப்பைக் கொட்டுகிறது.
ஆனால் புறஉலகம் இல்லாமல் வாழ்வது எளிதல்ல. போராடி, அடைந்து, ஏங்கி, தேடி, தவித்து, அடைந்து, சலித்து மீண்டும் ஏங்குவது என்ற உலகியலின் வழிகளை முழுமையாக அடைத்துவிட்டு, தேவையான அனைத்தையும் சுற்றிலும் பரப்பிவைத்துவிட்டு வாழ்ந்துகொள் என்று சொன்னால் மனிதர்களால் வாழமுடிவதில்லை. உள்ளே சிதறிப்பெருகும் அனைத்தையும் அவர்கள் எப்படி எதைக்கொண்டு தொகுத்துக் கொள்ள முடியும்? மனம் என்பது அருவமான பெருக்கு. அதைக் கட்டுப்படுத்த திட்டவட்டமான பருப்பொருட்களால் ஆன வெளியுலகம் தேவை. அது இல்லையேல் அது கரையில்லாத கொப்பளிப்புதான்.
ஆகவே செல்வந்தர்களின் இல்லத்துப் பெண்களின் உள்ளம் ஒவ்வொரு கணமும் பெருகும் நச்சு ஊற்று போன்றிருக்கிறது. நூறு நூறு கிளைகளுடன் வளரும் விஷச்செடி போலிருக்கிறது. அவர்கள் தங்களைத் தொகுத்துக்கொண்டு ஒற்றை ஆளுமையாகத் திகழும் தருணங்கள் இரண்டேதான். ஒன்று, நுகர்வு,. உணவு, ஆடை அணிகள், பிற கொண்டாட்டங்கள் ஆகியவற்றில் அவர்கள் தங்களை மறக்கும் தருணங்கள். இன்னொன்று, அவர்களே அகத்தில் உருவாக்கிக்கொண்டிருக்கும் கற்பனையான புறஉலகம் வீரியம் கொள்ளும்போது. அதாவது வஞ்சங்களின், காழ்ப்புகளின், சீற்றங்களின், கசப்புகளின் பொய்வெளி உக்கிரம் அடையும்போது.
அவர்கள் அவ்விரு தளங்களையும் அவர்கள் தங்கள் தர்க்கத்தால் தொடர்ந்து இணைத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு நுகர்பொருளைத் தொடர்ந்து போய், அதைக்கொண்டே வஞ்சங்களுக்கும் காழ்ப்புகளுக்கும் சென்று, அதை அதன் உச்சம் வரை கொண்டு நகர்த்தி, அங்கே உணரும் ஒரு வெறுமையில் திகைத்து அப்படியே கைவிட்டு இன்னொரு நுகர்பொருளை நோக்கி வருகிறார்கள். என் ஆடையைக் கண்டு அவள் பொறாமை கொண்டாள் என்கிறார்கள். இந்த நகை இவளை தூங்கவிடக்கூடாது என்கிறார்கள். அவளுடைய வைரம் எனக்கு இல்லையே என கண்ணீர்விடுகிறார்கள்.
இயல்பாகவே சிதறிக்கொண்டிருக்கும் மானுட உள்ளத்தைச் சிதறடிப்பது நிழல்களுக்கு மிக எளிதானது. அவர்கள் ஏற்கனவே சிதறடித்து வைத்திருக்கும் உள்ளத்தின் வெவ்வேறு தரப்புகளை எடுத்து மாறி மாறி அவர்களிடமே கூற வேண்டியதுதான் செய்ய வேண்டிய விஷயம். ஒருபோதும் அவர்கள் ஒருங்கு கூடாமல் பார்த்துக்கொள்வது மட்டும் போதும். அதுவே அவர்களை முற்றாக சிதைந்தழியச் செய்துவிடும். எனது நிழல்கள் அவ்விளையாட்டை தொடர்ந்து ஆடிக்கொண்டிருப்பவை. ஏனென்றால் மானுடரை தங்கள் முடிவில்லாத வினாக்களுக்கு இரையாக்கி, அதன் வழியாகத் தங்கள் விடைகளை அடைய முடியும் என்ற நம்பிக்கையே அவற்றை இங்கே வாழச்செய்கிறது.
ஊர்வசி தேஷ்பாண்டே இளமையிலேயே வலுவிழந்த உள்ளம் கொண்டவளாக இருந்தாள். இரண்டு சகோதரர்களுக்குத் தங்கையாக அவள் பிறந்தாலும் அவர்கள் இருவரும் அவளைத் தங்கள் பணிப்பெண்ணாகவே கருதினார்கள். ஏனென்றால் அவர்களின் சிற்றூரில் அவர்களால் ஏவப்படத்தக்க ஒரே மானுட உயிராக அவளே இருந்தாள். அங்கு அந்தணச் சிறுவர்கள் பிறருடன் விளையாட முடிந்ததில்லை. தந்தையிடம் சென்று மொழியும் ஆசாரங்களும் கற்றுக்கொள்வதும், தந்தையின் பூஜைகளுக்கு உதவுவதும், அவருடன் சென்று அவர் பணியாற்றிய சிறிய ஆலயங்களுக்கும் அரண்மனையின் எட்டு வழிபாட்டிடங்களுக்கும் பூசையில் உதவுவதும் மட்டுமே அவர்களின் அன்றாடம் என்று இருந்தது. தந்தையின் முன் மறுசொல்லற்ற பணிவும், பிற அனைவர் முன்னும் பணிந்த விலக்கமும் அவர்களுக்கு சொல்லப்பட்டிருந்தது. அன்னையை அவர்கள் பார்ப்பதே அரிதாக இருந்தது. ஒவ்வொரு முறையும் அவர்கள் வெளியே இருந்து பெற்றுக்கொண்டே இருந்த அதிகாரத்தை இன்னொருவர் மேல் செலுத்துவதற்கு அவள் மட்டுமே வழியாக இருந்தாள். ஆணைகளைப்பெறுபவர் அந்த ஆணைகளின் ஒரு பகுதியையாவது திருப்பிச் செலுத்தாவிட்டால் அவர்களால் இந்த பூமியில் வாழமுடியாது. அடிமைகளே கீழ்த்தரமான ஆண்டைகளாகவும் ஆகிறார்கள்.
ஆகவே ஊர்வசி இளமையிலேயே தன் இரு அண்ணன்களிடம் இருந்தும் அடிகளையும் அவமதிப்புகளையும் பெற்று வாழ்ந்தாள். ஏழு வயது வரை அவளை பள்ளிக்கு அனுப்பும் எண்ணமே அவள் தந்தைக்கு இருக்கவில்லை. உள்ளூரின் பள்ளி ஆசிரியர் அவர்களின் வீட்டுக்குத் தேடி வந்து அவள் தந்தையிடம் அவளைப் பள்ளியில் சேர்ப்பது பற்றிக் கேட்டபோது கூட அவர் அதற்கு தயங்கினார். ஆனால் அந்தணர்கள் உலகம் முழுக்க கல்வி கற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றும், கல்வி கற்காத பெண்ணை எவருக்கும் மணம் புரிந்து கொடுக்க முடியாது என்றும் அவர் சொன்னபோது, அதை மட்டும் அஞ்சி மகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினார்.
ஏற்கனவே தாயிடமிருந்து மொழியும், கணிதமும் அடிப்படைக் கல்வியாகப் பெற்றிருந்த ஊர்வசி நேரடியாக இரண்டாவது வகுப்பிலேயே சேர்ந்தாள். அவளுக்கு வெல்வதற்குரிய வெளியுலகமாக இருந்தது பள்ளியில் பயிற்றுவிக்கப்பட்ட பாடங்கள் மட்டுமே. படிப்பில் அசாதாரணமான ஆற்றலை வெளிப்படுத்துபவளாக ஓரிரு ஆண்டுகளிலேயே ஊர்வசி அறியப்பட்டாள். அவளுடைய ஊரின் ஜமீன்தார் குடும்பம் அப்போது தேயிலைத் தோட்ட உடைமையாளர்களாகவும், ஊரின் எல்லா வியாபாரங்களையும் தங்கள் கைக்குள் வைத்திருப்பவர்களாகவும் இருந்தனர். அவர்கள் அவளுக்கு உபகாரச் சம்பளம் அளிக்க முன்வந்தார்கள். ஆகவே பள்ளியிறுதி வகுப்பு முடிந்ததுமே அவள் அருகே உள்ள கல்லூரியில் சேர்ந்தாள். தந்தைக்கு அவள் கல்லூரிக்கு சென்று வருவதில் தயக்கமும் பயமும் இருந்தது. அவளைப் போன்ற அழகிகள் அப்பகுதியில் மிகக்குறைவாகவே இருந்தார்கள் என்று அவர் அறிந்திருந்தார். ஆனால் ஜமீன்தார் என்று அப்போதும் அழைக்கப்பட்டு வந்த பீர்பகதூர் ராய்சௌத்ரியின் பேச்சுக்குமுன் மறுசொல் எடுக்க முடியவில்லை.
ஆங்கில இலக்கியம் இரண்டாவது ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது ஊர்வசி அவள் கல்லூரிக்குச் செல்லும் வழி முழுக்க அத்தனை இளைஞர்களாலும் கொண்டாடப்படுபவளாக திகழ்ந்தாள். கல்லூரிக்குச் செல்வது வரை அவள் தனக்கிருந்த பெண்ணெனும் கவர்ச்சியை உணர்ந்திருக்கவில்லை. ஊரில் அவளை சிறுமியென்றும், பிராமணப்பெண் என்றும் மட்டுமே பார்த்தனர். எவருடைய மகள் என்றும், எவருடைய தங்கை என்றும் மட்டுமே அவளை கருதினர். கல்லூரிக்குச் செல்வதற்காக பேருந்து காத்து கிளை விரிந்த கொன்றை மரத்தின் கீழ் மார்போடு புத்தகங்களை அணைத்துக்கொண்டு நின்றிருக்கையில் அவள் வெறும் உடல் மட்டுமாக இருந்தாள். வெண்ணிறத் தோல் மட்டுமாகவும், விரிந்த கண்கள் மட்டுமாகவும், சிவந்த உதடுகள் மட்டுமாகவும், சிவந்த சிறு பருக்கள் கொண்ட கன்னம் மட்டுமாகவும். முலைகளாகவும் தொடைகளாகவும்.
ஒவ்வொரு கண்ணும் தன்னை எப்படி தொட்டு வருடிச் செல்கிறது என்று அவளுக்குத் தெரிந்தது. அது அளித்த உளக்கிளர்ச்சியும் பரவசமும் அவளை கல்லூரி வாழ்க்கையையே ஒரு பெரிய கனவாக மாற்றிக்கொள்ளச் செய்தன. அவள் எவரையும் ஏறிட்டுப் பார்ப்பதில்லை. தனியாகச் செல்வதும் இல்லை. அவளுக்கு என்று மூன்று தோழிகள் இருந்தனர். அவர்களுடன் ஓரிரு சொற்கள் பேசி, குனிந்து புன்னகைத்தபடி, எவரையுமே ஏறிட்டுப் பார்க்காமல் அவள் பேருந்தில் ஏறி கல்லூரிக்குச் சென்றாள். வகுப்பில் அவள் தனக்கான இடத்தில் தன் புத்தகங்களுடனும் குறிப்பேடுகளுடனும் தனியாக இருந்தாள். வகுப்பில் முழுக்கவனத்தையும் படிப்பிலேயே செலுத்தினாள். மனப்பாடம் அவளுக்கு எளிதாக அமைந்தது. ஆங்கில இலக்கியத்தில் எதையுமே அவள் புரிந்துகொள்ளவில்லை. பேசும் எதையும் செவிகளால் பெற்று உள்வாங்கிக் கொள்ளும் பயிற்சி அவளுக்கு இருக்கவில்லை. ஏனெனில் அவளுடன் எப்போதும் எவருமே பேசியதில்லை. புத்தகங்களில் கண்ணுக்குப்படும் எழுத்துகளை அப்படியே நினைவுகூர்ந்து, அச்சு எடுத்தது போன்று அழகிய எழுத்துகளில் திரும்ப எழுதிவிட அவளால் இயன்றது. ஆகவே வகுப்பில் அவள் முதலிடத்தில் இருந்தாள். ஆசிரியர்களுக்கு விருப்பமானவளாகவும் வகுப்பில் அடிக்கடி பாராட்டப்படுபவளாகவும் திகழ்ந்தாள்.
‘அழகும் அறிவும் முழுதும் அமைவது மிக அபூர்வம். இவள் கலைவாணியின் பிறப்பு’ என்று ஆசிரியர் சூரியக்குமார் மஜும்தார் வகுப்பிலேயே சொன்னார். பள்ளியில் அது ஆசிரியர்களிடமிருந்து மாணவர்களிடையே பிரபலம் அடைந்தது. அதுவரை அவளைக் கவனிக்காதிருந்த பள்ளியின் விளையாட்டு வீரனும் அருகிலிருந்த சம்பா ராஜ் என்னும் ஜமீந்தாரின் மகனுமாகிய ஆனந்த்குமார் ராஜ்சௌத்ரி அவளைக் கவனிக்க அது வழி வகுத்தது. அவன் நண்பர்கள் அவனுக்குரிய பெண் அவளேதான் என்று அவனிடம் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். அக்கல்லூரியில் இன்னொரு ஆண் அவளை வெல்வதென்பது அவனுக்கு இழைக்கப்படும் அவமதிப்பென்றே சித்தரித்தார்கள். அவன் அதை நம்பத்தொடங்கியதும் அவளிடம் தன் காதலைத் தெரிவிக்க முனைந்தான்.
ஆனந்த்குமார் அவனுடைய பதினைந்து வயது முதல் பெண்களை அறியத் தொடங்கியவன். அவன் இல்லத்திலிருந்த இருபதுக்கும் மேற்பட்ட பணிப்பெண்களில் அனைவரையுமே அவன் புணர்ந்திருந்தான். அவனை வளர்த்த செவிலித்தாயிலிருந்து அச்செவிலித்தாயின் இளைய மகள் வரை. அவனுக்கு பெண்களிடம் எந்த வேறுபாடும் இருக்கவில்லை. கல்லூரிக்கு வந்த பிறகு கல்லூரியில் அவன் குறிவைக்கும் எந்தப் பெண்ணையும் அவனால் வீழ்த்திவிட முடியுமென்றும் அவன் தன் நண்பர்களிடம் திரும்பத் திரும்ப நிரூபித்துக்கொண்டிருந்தான். ஆனால் அவனுடைய முதன்மை ஆர்வம் வேசிகளிடம்தான் இருந்தது. வேசிகள் அளிக்கும் சரசநாடகங்களை அஞ்சி நடுங்கி படுக்கைக்கு வந்து, பிணம்போல கிடந்து, உறவுக்குப்பின் அழுதபடி எழுந்து செல்லும் எளிய பெண்கள் அளிக்கவில்லை என்று அவன் சொன்னான். ஒரே நாளில் ஊர்வசி சர்மாவை வென்றுவிடுவேன் என்று சூளுரைத்து அவன் அவளை அணுகினான்.
எளிய பெண்களை போகத்தில் பயிற்சி கொண்ட ஆனந்த்குமார் போன்றவர்கள் எளிதில் வென்றுவிட முடியும். உண்மையான காதல் கொண்டவர்கள் பொதுவாகப் பெண்களை அறியாதவர்கள். அவர்கள் தயங்கித் தடுமாறி, பெரும்பாலும் தோற்றுவிடும் இடத்தில் பெண்வேட்டையர்கள் எளிதில் ஊடுருவிச் செல்வார்கள். மெய்யான காதல் கொண்டவர்களிடம் இருக்கும் தயக்கமும் பயமும் அவர்களின் பலவீனமாக பெண்களால் புரிந்துகொள்ளப்படும். காதலர்கள் காதலியை நேருக்குநேர் கண்களால் சந்திக்க முடியாமல் அலைக்கழிவார்கள். ஆனால் காமத்தை நன்கறிந்தவர்களின் தன்னம்பிக்கையும் வெட்கமின்மையும் பெண்களால் ஆற்றலென்றும் ஆண்மையென்றும் புரிந்துகொள்ளப்படும். பெண்வேட்டையர்கள் வேட்டையை அறிந்தவர்கள். அவர்கள் பெண்களை கண்களுக்குள் நோக்கிப் பேசுவார்கள், பெண்கள் கண்களைத் தாழ்த்திக்கொள்ளச் செய்வார்கள். அதுவே முதல்வெற்றியாக அமையும்.
ஆனந்த்குமார் அவளிடம் நிமிர்ந்த தோள்களுடன், நேர்ப்பார்வையுடன், அவளுக்கென்றே சொல்லப்படுவது போன்ற ஆழ்ந்த தணிந்த குரலில் பேசினான். அவளுடைய அழகை ஒவ்வொருமுறையும் புகழ்ந்தான். அவனுடைய செல்வத்தையும் சமூக இடத்தையும் அறிந்திருந்த அவள் முன் அவன் ஒவ்வொரு நாளும் தன்னை தணித்து இறக்கிக்கொண்டும் இருந்தான். ஒரு மதயானையை தன் முன் மத்தகம் தாழ்த்தி பணிய வைத்த நிறைவை அவளுக்கு அளித்தான். அவன் பேசிய எல்லாச் சொற்களுமே அவளைப் புகழ்வதாக இருந்தன. ஆனால் நேரடியாக அவளைப் புகழ்வது போல அமையவுமில்லை. அவளிடம் அவன் பேசிய எல்லா பேச்சுமே காமத்தை மறைமுகமாக உள்ளடக்கியவையாக இருந்தன, அவளைச் சிரிக்கவும் நாணவும் வைத்தன. ஆனால் அவை எல்லைமீறாதவை என்னும் தோற்றமும் கொண்டிருந்தன.
அவன் தன்னுடைய பிழைகளை அவள் முன் அறிக்கையிட்டான். எப்படி பல பெண்களால் தான் ஏமாற்றப்பட்டு ஒழுக்கமின்மை நோக்கி செல்ல நேர்ந்தது என்றும், அதை எண்ணி எண்ணி அவன் வருந்துவதாகவும் சொல்லி, குரலிடறக் கண்ணீர் மல்கினான். அவளைப் பார்த்தபின் மற்ற பெண்களெல்லாம் வெறும் பொருளற்ற சதைப்பிண்டங்கள் என்று தோன்றுவதாகவும், தன்னுடைய எரிந்தடங்கிய சாம்பலிலிருந்து தானே உயிர்த்தெழுந்து மீண்டு வருவதாகவும் சொன்னான். அவனை வெல்லும் விருப்பத்தை அவளில் தூண்டிவிட்டு, வென்றுவிட்டதான நிறைவையும் அவளுக்கு அளித்தான். முற்றிலும் அவள் முன் பணிவதாக நடித்து, வெறும் எட்டு நாட்களில் அவளை அவன் வென்றான்.
தங்கிப் படிப்பதற்காக அவன் தந்தை அவனுக்கு அமைத்துக் கொடுத்த பங்களாவுக்கு அவளை பேசி கவர்ந்து அழைத்துச் சென்று புணர்ந்தான். அங்கே செல்லும்போதே அவள் அறிந்திருந்தாள். அவள் உள்ளம் முள்முனையில் பதைப்பும் பரவசமுமாக தத்தளித்துக் கொண்டுதான் இருந்தது. அவனும் அவள் அதைவிரும்பி வந்திருப்பதை நன்றாகவே உணர்ந்திருந்தான். அவள் உடலில் உள்ளே நெருப்பு எரியும் செம்புக்கலம் போல வெம்மையின் நிறமாற்றம் உருவாவதை, கண்களில் நீர்மை பரவி, மூச்சு எழுந்தடங்க, கழுத்தும் கன்னமும் புல்லரித்திருக்க, அவள் தவிப்பதை அவன் கண்டான். அவளில் இருந்து எழுந்த மெல்லிய நறுமணத்தை அவன் பெண்களில் நூறுநூறு முறை அறிந்திருந்தான். ஆனால் அவளை ஏமாற்றி, பேசிக் கட்டாயப்படுத்தி அதற்குக் கொண்டுசெல்வது போல நடித்தான்.
பின்னர் எதையோ இழந்துவிட்டோம் என்று எண்ணி அவள் அழுதபோது அவளைக் களங்கப்படுத்திவிட்டேன் என்று சொல்லி அவன் தானும் அழுதான். அவள் தன்னை சமாதானப்படுத்தும்படி செய்தான். பின்னர் தொடர்ந்து அவளைத் தவிர்த்து அவளைக் களங்கப்படுத்திய பெருந்துயரில் ஆழ்ந்திருப்பதாக நடித்தான். அவளே முன்வந்து அவனை தேற்றி மீண்டும் மீண்டும் அவனுக்குத் தன்னை தந்து அத்துயரிலிருந்து அவனை மீட்கும்படிச் செய்தான். விலகி அலைந்த அவனை முதலில் அவளே வந்து சமாதானம் செய்தாள். கொன்றை மரங்களின் மறைவில் அவனை அள்ளி அணைத்து முலைகளுடன் அவன் தலையைச் சேர்த்துக்கொண்டாள். அவன் விம்ம அவள் கண்ணீர் அவன் தலைமேல் சொட்டியது.
அவர்கள் உறவு ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து கொண்டே சென்றது. அவர்கள் தொடர்ந்து உறவு கொள்வது அவன் நண்பர்கள் அனைவருக்கும் தெரிந்திருந்தது. அந்தப் பங்களாவிலேயே அவனுடைய நண்பர்களாகவும் ஏவலர்களாகவும் தனித்து விடுதிகளில் தங்கி செலவு செய்ய முடியாத நான்கு மாணவர்கள் தங்கியிருந்தார்கள். ஒவ்வொரு முறையும் அவர்களை வெளியே அனுப்பிவிட்டுத்தான் அவன் அவளை காமத்திற்கு கொண்டு சென்றான். அவர்கள் அவனுக்கும் ஊர்வசிக்குமான உறவை வெளியே சொல்லிப் பரப்பினார்கள். அதைப்பற்றி மிக அந்தரங்கமான சில செய்திகள் தங்களுக்குத் தெரியும் என்று சொல்லிக்கொண்டால் அவனுக்கு அணுக்கமானவர்கள் என காட்டிக்கொள்ள முடியும் என நினைத்தார்கள்.
அவள் அவனை உள்ளூர எங்கோ கசந்திருந்தாள். முதலில் அவன் பல பெண்களிடம் உறவு கொண்டவன் என்பது அவளுக்கொரு இனிய ஆர்வத்தையே அளித்தது. அவன் பிற பெண்களுடன் உறவு கொள்வதை எண்ணும்போதே அவளுக்குக் கிளர்ச்சி தோன்றியது. அவனுடன் பேசும்போதே அவனைக் கண்டித்துத் திருத்துவது போல அவன் பிற பெண்களுடன் கொண்ட உறவைப் பற்றி அவள் கேட்டாள். அவன் அவற்றை விவரித்து சொல்லும்போது அவள் முகம் சிவந்து, நெற்றி வியர்த்து, கிளர்ச்சி அடைவதைக் கண்டு அவள் உள்ளம் செல்லும் திசையென்ன என்று தெரிந்துகொண்டான். பெண்ணை அறிந்தவன் பெண்களுடனான எந்தப் பேச்சையும் காமத்தை உள்ளடக்கியதாக ஆக்கிக்கொள்ளவும் காமத்தை சித்தரிப்பதாக விரித்துக்கொள்ளவும் வேண்டுமென்று அறிந்திருப்பான்.
ஆனால் அவளுடன் உறவு நிலைத்த பிறகு அவன் முன்பு பிற பெண்டிரிடம் கொண்ட உறவுகள் அவளைத் துன்புறுத்தத் தொடங்கின. இப்போதும் அவனுக்கு அந்த உறவுகள் இருக்கின்றனவா என்று அவள் சந்தேகம் கொண்டாள். திரும்பத் திரும்ப அவனிடம் அதைப்பற்றி அவனிடம் கேட்டு அவனை எரிச்சலுட்டினாள். அவன் ஒவ்வொரு முறையும் உறவுக்குப்பின் ஒருமணி நேரமாவது அவளுக்கு மட்டுமே அவன் விசுவாசமாக இருப்பதாகச் சொல்லி நிரூபிக்க வேண்டுமென்று எதிர்பார்த்தாள். அவன் எத்தனை ஆதாரங்கள் அளித்தாலும் தன் கற்பனையால் அவற்றைக் கடந்து சென்றாள். அவனைக் காணாத போதெல்லாம் அவன் ஏதோ பெண்ணுடன் இருக்கிறான் என்று எண்ணி எண்ணி அவள் கொதித்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு முறை அவனைக் காணும்போதும் அவள் மனம் உடைந்து கண்ணீர் விட்டது அதனால்தான். அதை அவனுக்கு முன் பிரிவுத்துயர் என்று திரித்துக் காட்டிகொள்ள அவள் முயன்றாள்.
அவளுடைய எல்லா நாடகங்களையும் அவன் அறிந்திருந்தான். ஏனெனில் இளமையிலிருந்தே பல்வேறு வடிவங்களில் அதைக் கண்டிருந்தான். பெண்பித்தர்கள் பெண்களை நன்கு அறிந்திருப்பதனாலேயே பெண்களை எளிதில் கடந்தும் செல்கிறார்கள். பெண்களில் சலிப்பு கொள்கிறார்கள். சவால் என்பதற்கு மேலாக அவர்களை ஈர்க்கும் மர்மம் ஏதும் பெண்களிடம் இருப்பதில்லை. ஒரு பெண்ணின் உள்ளத்தின் திசைகள் விரல் விட்டு எண்ணத்தக்கவையே என்று ஆனந்த்குமார் தன் நண்பர்களிடம் சொல்வதுண்டு. உடல் அன்றி ஏதும் பெண்ணிடமில்லை என்று பெண்பித்தர்கள் எண்ணுவதுண்டு. தங்களிடம் சிக்கும் பெண்களை வெறும் உடலாக ஆக்கிக்கொள்வது தாங்களே என அவர்கள் அறிவதில்லை.
ஒரு கட்டத்தில் அனைத்து பாடங்களிலும் அவள் தோல்வியடைந்தாள். அருகே ஆரம்பப்பள்ளி ஆசிரியர் பயிற்சிக்குப் படித்துவந்த அவள் தமையன்களுக்கு அவள் தோல்வியடைந்த தகவல்தான் முதலில் தெரிந்தது. அதிர்ச்சி அடைந்து அதைப்பற்றி அவர்கள் விசாரித்தபோது ஆனந்த்குமார் ராய்சௌத்ரியைப் பற்றிய செய்தியை அறிந்துகொண்டார்கள். அவளைப் படிப்பை நிறுத்தி வீட்டுக்குள் வைத்து அவளுடைய தந்தை அவளுக்கு மணமகன் தேடத்தொடங்கினார். மிகத் தொலைவில் அவளை மணம் செய்து அனுப்பிவிட வேண்டுமென்று எண்ணி அதற்கான தரகர்களை அணுகினார்கள். இரண்டுமாதங்களுக்குள்ளாகவே அஸ்வத் தேஷ்பாண்டே திருமண யோசனை அவருக்கு முன் வந்தது.
தன் மகனுக்கு பெண் பார்க்கத் தொடங்கியபோது தான் ஹரீந்திரநாத் தேஷ்பாண்டே தன்னுடைய சாதி எவ்வளவு முக்கியமென்பதை உணர்ந்தார். அவருடைய தந்தையை கொடைவள்ளல் என்று கொண்டாடியவர்கள், அவர் கட்டிய ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் வழிபட்டவர்கள், அவரை ஒவ்வொரு நாளும் ஏதேனும் சிறு நன்கொடைக்காக அணுகிக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் அவர் மகனுக்கு பெண் பார்க்கத் தொடங்கியதுமே அவருடைய சாதியின் பின்புலமென்ன என்று கேட்கத் தொடங்கினார்கள். அந்தணர்களில் சற்றே படித்த, பெரிய குடும்பத்துப் பெண்ணை அவர் மகனுக்குத் திருமணம் செய்து கொடுக்க எவரும் முன்வரவில்லை. அத்துடன் போலீஸ் அதிகாரியாகிய அவன் டேராடூனில் மாட்டு இறைச்சி தின்னாமல் பயிற்சியை முடிக்க முடியாதென்று வதத்தியும் பரவியிருந்தது.
இருபது முறை திருமணம் தட்டிப்போனபிறகு மனம் சோர்ந்திருந்த ஹரீந்திரநாத் தேஷ்பாண்டே தொலைதூரத்திலிருந்து அழகியும் படித்தவளும் பாரம்பரியம் மிகுந்த பிராமணக்குடும்பத்தில் பிறந்தவளுமாகிய ஊர்வசி சர்மாவின் ஆலோசனை வந்தபோது மறுகணமே ஒத்துக்கொண்டார். அவளுக்கு அவர்கள் நகையேதும் போட முடியாதென்று, திருமணத்தையும் மிக எளிய முறையில் நடத்தி வைக்க முடியுமென்றும் சொன்னபோது, ’அது எங்களுக்கு முக்கியமல்ல நான் சேர்த்துவைத்த பணமே என் மகனுக்கு நிறைய இருக்கிறது’ என்று சொன்னார். ’இங்கே என் மகனுக்கும் எனக்கும் இருக்கும் சமூகநிலையை பேண வேண்டிய பொறுப்பு மட்டுமே அவளுக்கு உள்ளது. அத்துடன் பிராமணர்களாகிய நாம் மதுபர்க்கப் பணம் கொடுத்துதான் மணம் புரியும் வழக்கம். ஏழைப்பிராமணர்கள் பெண்களிடமிருந்து வரதட்சணை வாங்கும் பழக்கம் எல்லாம் நேற்று வந்தது. எங்கள் குடும்பத்தில் அந்த வழக்கம் இல்லை’ என்றார்.
ஊர்வசி அறியாமலேயே அவளைப் பெண்பார்த்தார்கள். கோயிலுக்கு அவள் சென்று வழிபட்டுவிட்டு வீட்டுக்கு வரும்போது கோவிலில் நின்றிருந்தவன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்தாலும் அவள் உள்ளம் ஆனந்த்குமார் ராய்சௌத்ரியின் நினைப்பிலேயே சுழன்று கொண்டிருந்ததனால் அவள் அதைப்பொருட்படுத்தவில்லை. அடுத்த வாரமே திருமணம் நிச்சயமாகி, திருமண நாள் குறிக்கப்பட்டபோதுதான் அவளுக்கே எல்லாம் தெரிந்தது. திடுக்கிட்டு அவள் தன் தோழியினூடாக ஆனந்த்குமார் ராய்சௌத்ரிக்கு செய்தி அனுப்பினாள். அவன் பிருத்விராஜனைப்போல காரில் வந்து தன்னை தூக்கிகொண்டு செல்வதாக கற்பனை செய்துகொண்டு இருந்தாள். ஆனால் தோழி திரும்பி வந்து ராய்சௌத்ரி ஊரில் இல்லை, கிரிக்கெட் பயிற்சிக்காக பம்பாய்க்குச் சென்றிருப்பதாக சொன்னாள்.
ஒன்றும் செய்வதற்கில்லை என்ற எண்ணம் வந்ததும் தனக்கு ஏற்பட்ட பெரும் நிம்மதியை ஊர்வசி வியப்புடன் உணர்ந்தாள். பாட்னா தொலைதூரம் என்ற எண்ணமே அவளுக்கு விடுதலையை அளித்தது. வரவிருக்கும் கணவன் முகமே அவள் நினைவில் பதிந்திருக்கவில்லை, அவனைப் பற்றியோ மணவாழ்க்கையைப் பற்றியோ அவள் எண்ணவே இல்லை. கிளம்பிச்செல்வதைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்தாள். கிளம்பியபின் அவள் ஆனந்த்குமார் ராய்சௌத்ரியை விருப்பத்துடனோ துயரத்துடனோ எண்ணிப் பார்க்கவில்லை.
(மேலும்)
A Lazy Wet Morning, Some Stray Thoughts

It is an engrossing book that gives a picture of Jeyamohan’s extraordinary life and the society of the south of India, with some interesting folk stories vastly different from East India, where I grew up. It feels like we are from a different country and a different time. The diversity of India, its society, religious practice, folklore and politics are awesome and boggle us, to say the least. Yet we have cohabited for a few thousand years, since the beginning of time. Although we see many discouraging changes around us now, I remain hopeful that we will endure forever.
A Lazy Wet Morning, Some Stray Thoughts and The Book – Of Men, Women and Witches – Journal Day 14Buy Of Men, Women and Witches
தங்கத் திருவோடு
The small speech about the scales of life is crucial to me. I have been actively seeking a meaningful life for the past few months. I know I can’t live without money and a job. I am not going to give up anything. But actually the problem is we are deeply immersed in a mad race of social status, which is entirely based on money and consumerism.
Our own scales- A letterஇது 1995 ல் நடைபெற்றது. குரு நித்யா ஒரு வகுப்புக்காக வந்து அமர்ந்தார். அவர் கையில் ஓர் இறகை கொண்டுவந்திருந்தார். வெண்ணிறமான பெரிய இறகு. முகத்தில் வழக்கமான கூர்மை.
தங்கத் திருவோடு
May 23, 2025
காணொளி உலகில் வாசிப்பு
வழக்காமான கேள்விதான். இது காணொளிகளின் யுகம். இப்போது வாசிப்பு எப்படி சாத்தியம்? உண்மையில் வாசிக்கத்தான் முடியுமா? வாசித்துத்தான் தெரிந்துகொள்ள முடியுமா? காணொளிகளே போதாதா? இளையதலைமுறை அது போதும் என நினைக்கிறது.அதற்கான என் பதில்.
மானின் நிழல்
நாவல்கள் எழுதும்போது முற்றிலும் அந்த மனநிலையிலேயே இருந்துகொண்டிருப்பேன். வெண்முரசின் இறுதிக்கட்ட நாவல்களில் போரிலும் பேரழிவிலும் வாழ்ந்துகொண்டிருந்தேன். உச்சகட்ட கொந்தளிப்பின் நாட்கள் அவை. இப்போது எழுதிக்கொண்டிருப்பது காவியம், தொன்மமும் சமகால வரலாறும் ஒன்றையொன்று ஊடுருவும் படைப்பு.
அதில் நிழல்களைப் பற்றி வந்துகொண்டே இருக்கிறது. நிழல்கள் எப்படி நம்மை தொடர்ந்துகொண்டே இருக்கின்றன, ஆட்கொள்கின்றன என்னும் சித்தரிப்பு. முதல் அத்தியாயமே நிழல்களைப் பற்றிய அச்சமூட்டும் சித்தரிப்பு வழியாகத்தான். நான் சொல்லும் நிழல்களை fantoms என்று சொல்லலாம். உள்ளுருவகங்கள். கற்பனைகள், கனவுகள், பேய்கள் – எவையோ சில. நாவல் நிழல்கள் ஆட்கொள்ளும் உள்ளத்தினூடாக முன்னகர்கிறது.
அந்த மனநிலையில், உள்ளூர நாவலின் தொடர்ச்சி ஓடிக்கொண்டிருக்க எதையோ செய்துகொண்டிருந்தபோது இந்நிழலைப் பார்த்தேன். கொம்பில்லாத மான் ஒன்று காதுகளை பின்னால் மடித்து மேய்ந்துகொண்டிருந்தது. ஒரு கணம் திடுக்கிட்டு பின்னகர்ந்துவிட்டேன். சற்று நடுக்கம் விலகியபிறகுதான் முழுத்தோற்றத்தையும் கவனித்தேன். தண்ணீர்க்குழாய். நான் பல்தேய்த்துக் கொண்டிருந்தேன்.
இளமையிலேயே எனக்கு நிழல்களைப் பார்க்கும் வழக்கம் உண்டு. சிறுவனாக இருக்கையில் வீட்டு திண்ணையில் நின்றுகொண்டு, வாயில் விரலை வைத்துச் சப்பிக்கொண்டு வெளியே பார்த்துக்கொண்டு முழுப்பகலும் நின்றிருப்பேன் என்று என் அம்மா சொல்வாள். நான் என்ன பார்க்கிறேன் என்றே கண்டுபிடிக்க முடியாது. வெறும் தோட்டத்தையும் பாதையையும் பார்த்துக்கொண்டிருப்பேன்.
நான் என்ன பார்த்தேன் என்று என்னால் இன்று சொல்லிவிட முடியும். ஏனென்றால் என் நினைவில் நிறைந்திருப்பவை இரண்டு வயதுக்குள் நான் பார்த்த நிழல்கள். மரங்களின், விலங்குகளின், பறவைகளின் நிழல்கள். அவை இணைந்தும் பிரிந்தும், வெவ்வேறு ஒளிக்கோணங்களிலும் உருவாகும் நிழலுருவங்கள். அவற்றில் நான் பார்த்த அரக்கர்கள், தேவதைகள், பறக்கும் குதிரைகள், தரையில் இழையும் முதலைகள், எங்கும் நெளிந்துகொண்டிருக்கும் பல்லாயிரம் நாகங்கள்.
நிழல்கள் என் படைப்புகளில் நிறைந்திருப்பதை என் வாசகர்கள் அறியமுடியும். என்னால் ஏன் ஒரு பொருளை நாம் அதன் நிழலை தவிர்த்துவிட்டுப் பார்க்கமுடியும் என்பதைப் புரிந்துகொள்ளவே முடிந்ததில்லை. திரும்பத் திரும்ப ஒவ்வொன்றையும் அதன் நிழலையும் இணைத்தே நான் எழுதிக்கொண்டிருக்கிறேன். தமிழில் என் இந்த மனநிலையைப் பகிரும் ஒரே எழுத்தாளர் புதுமைப்பித்தன்தான். செல்லம்மாள் கதையின் உச்சமே அவள் நெஞ்சைப் பிடுங்குவதுபோல வந்து நின்றிருக்கும் பிரமநாயகம் பிள்ளையின் கையின் நிழல்தான்.
தொடக்க காலக் கதைகளில் ஒன்றில் வெளியே செல்லும் அசைவுகள் நிழலாக தலைகீழாக அறைக்குள் அசைவும் ஒரு சித்திரம் உண்டு. அது நானேதான். இருண்ட அறையை மூடி, சிறு துளை வழியாக சுவரில் விழும் நிழல்களைப் பார்த்தபடி காசர்கோடு நகரில் முழுநாளும் நான் அமர்ந்திருப்பதுண்டு.
நிழலாட்டம் என்றே ஒரு கதை எழுதியிருக்கிறேன். நிழலையே மையமாக்கி எழுதப்பட்ட கதை டார்க்தீனியம். பிறகும் எண்ணிப்பார்க்கையில் எத்தனை நிழல்கள். ஒரு கதையில் பல விளக்குகளில் நிழல்கள் பெருகும் ஓர் உருவத்தை எழுதியிருக்கிறேன். அசையும் விளக்கொளியில் நிழல்கள் சுழன்றுவரும் காட்சி.
என் இளமையில் மண்ணெண்ணை விளக்குகள்தான். என் வீட்டில்கூட மின்விளக்கு வரவில்லை. மண்ணெண்ணை விளக்கு நிழல்களை உருவாக்குவது. என் வீடெங்கும் நிழல்கள் நடமிட்டுக்கொண்டிருக்கும். அம்மா கையில் சிறிய மண்ணெண்ணை விளக்குடன் நடமாடுவாள். அம்மாவின் நிழல் பெருகி அவள் தலைக்குமேல் படமெடுத்து உடன் சென்றுகொண்டிருக்கும். சுவர்களில் மடிந்து அவளை நோக்கி குனிந்து வரும்.
காட்சிகளை நிழல்கள் முழுமையாக்குகின்றன. அத்துடன் நிழல்கள் தங்களுக்கே உரிய ஓர் உலகைக் கொண்டிருக்கின்றன. இப்படி எண்ணிப்பாருங்கள், இங்கே ஒருவரால் உருவங்களைப் பார்க்கமுடியாது, நிழல்களை மட்டுமே பார்க்கமுடியும் என்றால் அவர் அடையும் உலகம் எத்தகையதாக இருக்கும்? நிழல்கள் அப்போது அவற்றின் மூல உருவங்களால் வரையறை செய்யப்படாது. அவை சுதந்திரமடைந்துவிட்டிருக்கும். முற்றிலும் புதிய அர்த்தங்களை உருவாக்கியிருக்கும்.
ஒரு தண்ணீர்க்குழாய் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் மான் ஆகிறது. அது நம் காட்சியின் அமைப்பு. அந்த தர்க்கம் சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் நாம் அறிந்ததுதான் இப்பிரபஞ்சமா என்ன? ஒரு தண்ணீர்க்குழாய் மான் என்று தன்னை நமக்கு காட்டுவதில் நாமறியாத ஏதேனும் விளையாட்டு இருக்குமா?
காவியம் – 33

கிருஷ்ணதீர்த் என்னும் சிற்றரசுக்கு அவத் நாட்டில் இருந்து பதினெட்டு பிராமணர்கள் நூற்றெட்டு நாட்கள் இடைவிடாமல் நடந்து கங்கையைக் கடந்து சென்று சேர்ந்தார்கள். அவர்கள் அவத் நாட்டில் அதற்குமுன் நூறு தலைமுறைக் காலமாக வாழ்ந்தவர்கள். அங்கே அவர்கள் வைதிகர்களாகவும் பௌராணிகர்களாகவும் சோதிடர்களாகவும் பணியாற்றினார்கள். ஒவ்வொருவருக்கும் வகுக்கப்பட்டிருக்கும் எளிமையான அன்றாடத்தை அணுவின்றி திரும்ப நிகழ்த்துவதே வாழ்வென்று கருதி அவ்வாறு வாழ்ந்தார்கள்.
ஒன்றையே திரும்பத் திரும்பச் செய்து வாழும் வாழ்விலுள்ள நிறைவென்பதே அதில் கேள்விகளே இல்லை என்பதனால் உருவாவதுதான். ஒரு செயல் எதன்பொருட்டு? ஓர் உறவின் பொருளென்ன? ஒரு நிகழ்வின் விளைவென்ன? இத்தகைய எல்லாக் கேள்விக்கும் ’அதுவே வழிவழியாக நிகழ்வது. முன்னோர் என்ன செய்தார்களோ அதுவே உண்மை. முன்னோர் என்ன எண்ணினார்களோ அதுவே விடை’ என்ற எளிய பதில் அவர்களுக்கு நிறைவளிப்பதாக இருந்தது.
அங்கே பிறந்த ஒவ்வொரு குழந்தையும் நூறு ஆயிரம் பதில்களுடன்தான் பிறந்தது. கேள்விகளை பிறகுதான் உருவாக்கிக்கொண்டது. அந்தக் கேள்விகள் பதில்களின் மேல் முட்டையிட்டு, குஞ்சு பொரித்து, அப்பதில்களை உண்டு அதில் அமர்ந்து வாழ்ந்தன. ஒரு நாடு என அவத் சிறு குட்டையாகத் தேங்கிப்போன ஒன்று. அவ்வண்ணம் தேங்கிப்போன ஆயிரம் பல்லாயிரம் குட்டைகளாலானதாக இருந்தது ஜம்புத்வீபம் என்று நெடுங்காலமாக அழைக்கப்பட்ட பாரதநிலம். அவத் அருகிருக்கும் இன்னொரு பெரிய குட்டையுடன் எப்போதாவது வெள்ளம் வரும்போது மட்டுமே தொடர்பு கொண்டது. ஒவ்வொரு வெள்ளத்திலும் அதில் தேங்கியிருந்த சிறிதளவு நீர் பெருக்குடன் கலந்தது. வெள்ளத்திற்கு பின் மேலும் சேறும் மேலும் குப்பையும் பெற்றது.
தேங்கியிருந்தமையினாலேயே மேல் பகுதி தெளிந்தும் அடிப்பகுதி கலங்கியும் அது நீடித்தது. தேக்கத்தின் மீது தோன்றும் அசைவில்லாத வானம் அமைதி என்றும் தெளிவு என்றும் அழகு என்றும் பொருள் கொள்ளப்பட்டது. சேற்றிலிருந்து முளைவிட்டெழுந்த குவளையும் தாமரையும் அழகுகள் என்றும் தெய்வபீடங்கள் என்றும் கருதப்பட்டன. ஒவ்வொரு சிறு தேங்கலிலும் அங்கேயே முளைத்து வளரும் பாசிகளும் சிற்றுயிர்களும் இருந்தன. அதிலேயே பிறந்து அதிலேயே மடிந்து அடுத்த தலைமுறைக்கு உணவாகி மறையும் மீன்கள் வாழ்ந்தன.
அவ்வண்ணம் அவத் நாட்டை ஆட்கொண்ட ஒரு வெள்ளம் சுல்தான்களின் படையெடுப்பு. அது அந்நகரின் மீது பிறிதொரு கொடியை பறக்கவிட்டது என்பதற்கு அப்பால் உண்மையான மாற்றங்கள் எதையும் நிகழ்த்தவில்லை. உழவர்கள் என்றும்போல உழுது, நாலில் ஒரு பங்கையோ, இரண்டு பங்கையோ, மூன்று பங்கையோ வரி செலுத்தினர். வணிகர்கள் எப்போதும் போல வாங்கி விற்று அடைந்த லாபத்தில் ஒரு சிறு பங்கை வெளிக்காட்டி அதற்கு பாதியை வரியெனக் கட்டி எஞ்சியவற்றை தங்கள் உடைமையென எண்ணி அவற்றை எவ்வகையிலும் பயன்படுத்த முடியாதவர்களாக மகிழ்ந்திருந்தனர். சிலர் பிடிபட்டு சித்ரவதைக்கு ஆளாகி முற்றாக இழந்தனர். மீண்டும் நம்பிக்கையை ஈட்டிக்கொண்டு பொருள் சேர்க்கத்தொடங்கினர்.
ஷத்ரியர்கள் படையெடுத்து வந்த எதிரியுடன் மோதி போரிட்டு, தோற்ற பின்னர் அவர்களுக்கே தங்கள் வேல்களையும் வாள்களையும் அளித்து அவர்களுக்கு கீழே முன்பு போன்றே படைவீரர்களாக தொடர்ந்தனர். போரிடுவதன்றி வேறொன்றும் தெரியாதவர்களுக்கு படையென்ற ஒன்று அடையாளமாகவும் பாதுகாப்பாகவும் தேவைப்பட்டது, மனிதர்களுக்கு கூரை தேவைப்படுவது போல. அரசும், நிர்வாகமும் அப்படியே நீடித்தன.
இடம்பெயரக் கட்டாயப்படுத்தப்பட்டப்பவர்கள் அந்தணர்கள் மட்டுமே. எளிய மக்களை நம்பி ஊர்களில் வாழ்ந்த அந்தணர்கள் தங்கள் தலைக்கு மேல் கொடிகளின் இடமாற்றம் நிறமாற்றம் பற்றி எதுவுமே அறிந்திருக்கவில்லை. ஆனால் அரண்மனையை நம்பி வாழ்ந்த அந்தணர்கள் தங்கிய மரம் முறிக்கப்பட்ட பறவைகள் போல் சட்டென்று வெற்று வானில் சுழன்று பறக்க நேரிட்டது. அவர்கள் அங்கிருந்து வாய்ப்புள்ள திசைகளை நோக்கி சென்றார்கள்.
அவர்களின் ஒரு சிறு குழு ஒவ்வொரு புதிய நாடாகத் தேடி தேடி கிழக்கு நோக்கிச் சென்று கொண்டே இருந்தது. படகுகளில் நெடுந்தூரம் பயணம் செய்து அவர்கள் பாடலிபுத்திரத்தை அடைந்தனர். அங்கிருந்து படகினூடாக கயைக்கு சென்றனர். ஒவ்வொரு நிலத்திலும் அவர்களுக்கு முன்னரே வந்த அந்தணர்கள் குடியேறியிருந்தனர். சில இடங்களில் அவர்கள் விரும்பப் படவில்லை. இறுதியாக அவர்கள் கண்டடைந்தது அன்று வங்காளத்தை ஆண்டிருந்த அரசர்களின் கீழ் சிற்றசர்களாகப் பணிபுரிந்த கிருஷ்ணதீர்த் என்னும் மிகச்சிறிய அரசை. அது ஓர் அரசே அல்ல, ஒரு நிலக்கிழாரின் ஆதிக்கப்பகுதி மட்டுமே. ஆனால் அன்றைய வங்காளத்தின் நிலைகுலைந்த அரசியல்சூழலில் அவர்கள் அங்குமிங்கும் கப்பங்களைக் கட்டி, அனைவருக்கும் பணிந்து கொடியையும் கிரீடத்தையும் தக்கவைத்துக் கொண்டிருந்தனர்.
கிருஷ்ணதீர்த் அரசில் அதற்கு முன் அந்தணரென்று இருவரே இருந்தனர். கிருஷ்ணதீர்த் எவ்வகையிலும் பொருளோ சிறப்போ கொண்டதாக இருக்கவில்லை. பழம்பெருமை என்றும் அதற்கு ஒன்றும் இருக்கவில்லை. அதன் சிற்றரசர்கள் அருகிலிருந்த துர்காபூர் என்னும் சிற்றரசின் உறவினர்கள். துர்காபூர் சிற்றரசர் வேட்டைக்கு சென்றபோது ஒரு அழகிய இளம்பெண்ணைக் கண்டு அக்கணமே தூக்கி தன் குதிரைமேல் அமர்த்தி தன் அரண்மனைக்கு கொண்டு சென்றார் என்றும், அவளுடைய கணவனும் குழந்தைகளும் குடும்பத்தினரும் திரண்டு சென்று அரசரிடம் நியாயம் கேட்டு மன்றாடினார்கள் என்றும் பேச்சுக்கதைகளின் படி சொல்லப்பட்டது.
துர்க்காபூரின் சிற்றரசர் தன் புதிய மனைவியின் அழகில் மயங்கியிருந்தமையால் அவள் உறவினர்களைக் கொல்லத் துணியவில்லை. தன் குழந்தைகள் முன்பு போல மாடு மேய்த்து வாழ்வது தன் புதிய கணவருக்கு இழுக்கு என்று புதிய அரசி சொல்லி அவரை ஏற்க வைத்தாள். ஆகவே அவ்விரு குழந்தைகளுக்கும் தொலைதூரத்தில் சதுப்பு நிலமாகிய சமர்பூர் என்னும் இடம் அளிக்கப்பட்டது. அங்கே அறுபது குடிசைகளும் நூற்று ஐம்பது மீனவர்களும் மட்டுமே இருந்தனர். அவர்கள் கங்கையில் மீன் பிடித்து அவற்றை தலையிலேற்றி உள் கிராமங்களுக்கு கொண்டு சென்று விற்பவர்கள்.
சமர்ப்பூருக்கு குடிவந்த புதிய ஆட்சியாளர்கள் அப்பகுதியை தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்தனர். அவர்கள் பிடிக்கப்படும் மீன்களுக்கும் விற்கப்படும் மீன்களுக்கும் வரிகொண்டனர். அதைக்கொண்டு தங்களுக்கு ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டார்கள். அந்தக் குலவரிசையில் வந்த ராம்பகதூர் என்னும் ஆட்சியாளர் கங்கைக்கரைச் சதுப்பில் ஒரு பெரிய கால்வாயை வெட்டி கங்கைக்கு கொண்டு செல்வதன் வழியாக அச்சதுப்பை வரளச்செய்ய முடியும் என்று கண்டு கொண்டார். சதுப்பு வறண்டதும் அது வளமான விளைநிலமாக மாறியது. அதை அங்கு வந்து குடியேறும் விவசாயிகளுக்கு அளித்தார்.
விவசாயிகள் விளைவித்த கரும்பும் நெல்லும் சமர்ப்பூரை வளம் கொண்டதாக்கின. அதன்பின் மேலும் விவசாயிகள் அங்கு வந்தனர். மேலும் கால்வாய்களினூடாக கங்கை நீர் வடியச்செய்து கங்கைக்கு கொண்டு செல்லப்பட்டது. புதிய விளைநிலங்கள் உருவாகி வந்தன. ஆயிரம் வீடுகளும் இருபத்தெட்டாயிரம் குடிமக்களும் கொண்டதாக சமர்ப்பூர் மாறியபோது அந்தப்பகுதியின் பெயரை அரசர் கிருஷ்ணதீர்த் என்று மாற்றிக்கொண்டார். கங்கையில் ஒரு படித்துறையும் சிறியகோயிலும் கட்டி அது புனிதமானது என அறிவித்தார். அரசகுடும்பம் அங்கேதான் முன்னோருக்கு நீர்க்கடன்கள் செய்தது.
துர்க்காபூர் சிற்றரசருக்கு கப்பம் கட்டி அவரிடம் இருந்தே கிருஷ்ணதீர்த்தின் அரசர் என்னும் பட்டத்தையும், கொடியையும், சிம்மாசனத்தையும், கிரீடம் வைக்கும் உரிமையையும் பெற்றுக்கொண்டார். அதன்பின் அப்பகுதி வங்காள நவாப்களின் ஆட்சிக்குச் சென்றபோது நவக்கிராமம் என்று பெயர் பெற்றது. ஒன்பது தனி ஊர்களாக பிரிந்தது. அதன்பின் வெள்ளையர்கள் தலையெடுத்தார்கள். எல்லாக்காலகட்டத்திலும் முறையாகக் கப்பம் கட்டும் காரணத்தினாலேயே தங்கள் தலைக்குமேல் என்ன நிகழ்கிறதென்று தெரியாமலேயே அதன் அரசர்கள் அங்கே வாழ்ந்தார்கள். அதுவே அப்பகுதியை வளமாக வாழச்செய்தது. சிற்றரசர்கள் நாணல்கள் போல. வெள்ளம் சென்ற தடம் அவற்றின் வளைவின் திசையிலேயே தெரியும்.
அங்கு வந்து சேர்ந்த அந்தணர்கள் அரசரின் அவையால் வரவேற்கப்பட்டனர். அரசர் ராம்பகதூர் சிங் தனக்கான கொடியடையாளத்தையும் முடியடையாளத்தையும் பெற்றுக் கொண்டு அதிக காலம் ஆகவில்லை. அவர் மகன் தேஜ்வீர் சிங் ஆட்சி அமைத்திருந்தார். தனக்கென ஓர் அந்தணர் அவை வேண்டும் என்று அவர் எண்ணியிருந்தபோது அந்தக்குழு அங்கே வந்தது. அவர்களுக்குரிய சிறுவீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. அவர்கள் அரண்மனையில் ஒவ்வொரு நாளும் வந்து அரசருக்கு பள்ளியெழுச்சியும் நீராட்டும் பாடவேண்டுமென்றும், அவை கூடும்போது அரசரின் புகழ் பாடும் கவிதைகளையும் சோதிட ஊகங்களையும் கூற வேண்டும் என்றும் வகுக்கப்பட்டது. இரவில் பள்ளி உறக்கத்திற்கு பாடிவிட்டு அவர்கள் தங்கள் வீடு திரும்பலாம். அவர்களுக்குரிய பாலும் நெய்யும் காய்கறிகளும் ஒவ்வொரு நாளும் குடியானவர்களால் கொண்டு கொடுக்கப்பட்டன. அவர்களுக்குரிய நெல் ஆறுமாதங்களுக்கு ஒருமுறை அவர்களின் களஞ்சியங்களுக்கு வந்து சேர்ந்தது. அவ்வப்போது அரண்மனையிலிருந்து சிறு பரிசில்களும் அவர்களுக்குக் கிடைத்தன.
அவர்கள் அங்கு வந்த எட்டாவது மாதத்தில், ஒவ்வொருவரும் நீண்ட அலைக்கழிப்பையும் பயணத்தின் இழப்புகளையும் துயரங்களையும் மறந்து அந்நிலத்தில் படிந்து வாழத்தொடங்கிய காலத்தில், அந்தணர்களில் ஒருவரான சசீந்திரநாத் தேஷ்பாண்டேயின் மனைவியை அரசர் ஆலயத்திலிருந்து வெளிவரும்போது ஒரு தூணின் மறைவில் பாதி முகமாகவும் ஒரு கண்ணாகவும் பார்த்தார். அன்றிரவே அவருடைய தூதர்கள் வந்து அவளை அரசரின் படுக்கைக்கு அனுப்பவேண்டும் என்று கேட்டார்கள். திடுக்கிட்டுப் போன சசீந்திரநாத் தன்னுடைய அந்தணர் குழு தலைவரிடம் சென்று முறையிட்டார். அந்தணர் குழுக்கள் ஆலயத்தின் பின்பக்கம் கங்கையின் கரையில் தர்ப்பைப்புல் விரிக்கப்பட்ட நிலத்தில் அமர்ந்து அதை விவாதித்தனர். தனது சொற்களுக்கு சாட்சியாக ஒரு அகல் விளக்கை அவர்கள் ஏற்றி வைத்திருந்தனர். நிகழ்வதென்ன, செய்யவேண்டியதென்ன என்று அவர்கள் பேசிக்கொண்டார்கள்.
அவர்களின் தலைவராகிய ராமானந்த் சர்மா கைநீட்டி உரத்த குரலில் சொன்னார். “ஒன்று நாம் வகுத்துக்கொள்வோம். நாம் இந்நிலத்திலிருந்து இங்கு இனி கிளம்பிச்செல்வதாக இல்லை. ஏனெனில் இங்கிருந்து நாற்பது நாட்கள் நடந்தால் கடல் வருகிறது. அதுவரைக்கும் எந்த நாட்டில் நமக்கு இடமிருக்கும் என்று நமக்குத் தெரியாது. கடலுக்குச் சென்று அங்கே மூழ்கி இறப்பதா இங்கு நீடிப்பதா என்று தான் நாம் பேசவேண்டும்.”
“நாம் கிழக்காகச் செல்வோம்” என்று எவரோ சொன்னார்.
“கிழக்காகச் சென்றால் வெறும் மூங்கில்களும் மஞ்சள் முகம் கொண்ட மிலேச்சர்களும் நிறைந்த காமரூபம் மட்டும்தான் வருகிறது. அங்கு செல்ல விரஜர்களாகிய அந்தணர்களுக்கு அனுமதியில்லை. விரிஜ நாட்டிலும் கௌடநாட்டிலும் மட்டுமே நாம் வாழவேண்டும் என்பது நம் முன்னோர் வகுத்த வழி.”
”அப்படியென்றால் நமது பெண்களை அரசர்களுக்கு அனுப்புவதும் முன்னோர் வகுத்த வழியா?” என்று அவர் கேட்டார்.
“நமது பெண்கள் என்று கூறியவர் யார்?” என்று அவரை நோக்கி ராமானந்த் சர்மா திரும்பினார். ”நாம் இங்கு பெண்களுடன் வரவில்லை. நம்முடைய பெண்களையும் பெண்குழந்தைகளையும் அங்குள்ள ஆட்சியாளர்களுக்கு அளித்துவிட்டு நாம் மட்டுமே கிளம்பி வந்தோம். அதுதான் பல்லாயிரம் ஆண்டுக்காலம் நம்முடைய மரபு. அதுதான் நம்மால் செய்யக்கூடியதும் கூட. தெரியாத ஊர்களுக்கு பெண்களைக் கூட்டிச்செல்வது அவர்களை அழிப்பதுதான். நாம் இங்கு மணந்துகொண்டிருக்கும் மனைவிகள் இங்குள்ள வெவ்வேறு குலங்களிலிருந்து நம்மால் விலைகொடுத்து வாங்கப்பட்டவர்கள்…”
“நாம் அதை முன்னரும் செய்திருக்கிறோம்… பெண்களை தானம்பெற நமக்கு அனுமதி உண்டு” என்று ஒருவர் சொன்னார்.
“அந்தணனின் குலம் என்பது அவனுடைய குருதியால் மட்டுமே கணக்கிடப்பட வேண்டும். அவனுடைய விந்துவை ஏந்தும் கருப்பை அவன் குலத்தை தீர்மானிப்பதில்லை. இது தொல்புராணங்கள் அனைத்தும் சொல்லும் நெறியாகும். மகாபாரதத்திலிருந்தும் ராமாயணத்திலிருந்தும் எந்தக் கதையை எடுத்துப் பார்த்தாலும் இதை நீங்கள் பார்க்கலாம். மீனவப்பெண்ணாகிய சத்யவதியில் பிறந்த குழந்தைகள் மீனவனாகக் கருதப்படவில்லை. ஷத்ரியராகவே கருதப்பட்டன. அந்தணர் பொன்னையும் பெண்ணையும் தானமாகப் பெற்றுக்கொள்ளலாம். பெற்றுக்கொண்டவற்றை தன் அந்தண நோன்பால் அவன் தனக்குரியதாக அவன் ஆக்கிக்கொள்ளலாம்”
ராமானந்த் சர்மா தொடர்ந்து சொன்னார் “பொன் அது ஈட்டப்பட்டமையால் தன்னில் சேர்த்துக்கொண்டிருக்கும் அத்தனை பாவங்களையும் அந்தணனை வந்தடைந்ததும் இழக்கிறது. ஆகவே அந்தணன் திருடனிடமிருந்தும், கொலைகாரனிடமிருந்தும், கொடியவனாகிய அரசனிடமிருந்தும் கூட பொன்னைப் பெற்றுக்கொள்ளலாம். எக்குலத்திலிருந்தும் பெண்ணை ஏற்றுக்கொள்ளலாம். ஏற்றுக்கொண்ட பெண்கள் அந்தணன் கைபட்டு அவன் வேள்வி மிச்சத்தை உண்டு அந்தண விந்துவை ஏற்கும் தகுதி பெறுகிறார்கள். அவர்கள் கருவில் பிறக்கும் குழந்தைகள் அந்தண குலத்தைச் சேர்ந்தவையாகின்றன. எந்நிலையிலும் அப்பெண்கள் அந்தண தகுதியை அடையமுடியாதென்பது உண்மை. ஆனால் அவர்களின் குருதியில் முளைத்தவை அந்தணத் தகுதி கொண்டவையேதான். அவ்வாறுதான் இங்கே நாம் பெண்களை மணம் கொண்டோம்.”
“இவர்கள் இங்குள்ள வேளாண்குடியினர்” என்று ஒருவர் சொன்னார்.
“ஆமாம், ஆனால் இந்த அரசு அமைந்து, இந்த அரசர் இவர்களுக்கு வேளாண்நிலத்தை உருவாக்கி அளிப்பதற்கு முன்பு இவர்கள் அனைவருமே சமர்களாக இருந்தனர்” என்று ராமானந்த் சர்மா சொன்னார்.
“அந்தணப் பெண்களை நாம் அரசர்களுக்கு அளிக்க ஒப்புதல் உண்டா?” என்று இளைய அந்தணர் கேட்டார்.
ராமானந்த் சர்மா பதிலை யோசித்துவிட்டே வந்திருந்தார். “அதற்கு சாஸ்திர சம்மதம் இல்லை. அது பழிபாவமும் ஆகும். ஆனால் அதற்கு பரிகாரங்கள் உண்டு. அரசனிடம் சென்று வந்த பெண்ணை ஒரு மாதகாலம் விலக்கி தனியாகக் குடிலில் வைக்கலாம். அவள் கருவுற்றால் அது அரசரின் கருவாகக் கருதப்படும். அது அரசரின் குழந்தையென்றே அவர் பொறுப்பேற்க வேண்டும். ஒருமாதம் அவள் கருவுறாவிட்டால் அவளுக்கான மீட்புச் சடங்குகளைச் செய்து அவளை மீண்டும் அந்த அந்தணனே தன் மனைவியாக்கிக் கொள்ளலாம்” என்றார்.
“இது அரசருக்குப் பிடித்தமானதாகவே இருக்கும்” என்று ஒருவர் குரல் மட்டுமாகச் சொன்னார்.
“நாம் சொல்வதை நம் தெய்வங்கள் ஏற்கவில்லை என்றால் இந்த விளக்கு அணைந்துவிடும்” என்றார் ராமானந்த் சர்மா. “நம் சொற்களுக்கு அக்னியே சாட்சி. நாம் அனைவரும் சுடர்தொட்டு இதை சங்கல்பமாக ஏற்போம்”
அது அங்குள்ள அனைவருக்கும் உவப்பானதாக இருந்தது. அவ்வாறாக அவளை அலங்கரித்து அரண்மனைக்கு அனுப்பி வைத்தனர். அதுவே ஒருசடங்காக மாறியது. அவர்களின் பெண்கள் அனைவரும் ஒரு சுழற்சி முறையில் அரண்மனைக்குச் சென்று வந்தனர். அவர்கள் கருவுற்றாலும் கூட ஒரு மாதம் கழித்து அவள் கருவுற்றாளா என்று நோக்கும் பொறுப்பிலிருந்த சலவைக்காரி கருவுறவில்லை என்று அறிவிக்கவேண்டும் என்பதும், அவள் மீண்டும் கங்கைக்கரையில் நிகழும் ஒரு சிறுசடங்கினூடாக தன் முந்தைய கணவனுக்கே மனைவியாவாள் என்பதும் மறைமுகமாக ஏற்கப்பட்டது. அரசரிடமிருந்து ஒரு பெண்கூட கருவுறவில்லை.
சில ஆண்டுகளுக்குள் அரண்மனைக்குச் செல்லும் பெண்கள்தான் அழகிகள் என்பதும், அவர்களுக்கு உயர்ந்த பரிசுகளும் அவர்களின் கணவர்களுக்கு அரசரின் அனுதாபமும் கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாகியது. அதற்காக தங்கள் பெண்களை அலங்கரித்து கோயில்களுக்கு அனுப்பவும் தொடங்கினார்கள். அரசரிடம் அப்பெண்களைப் பற்றிச் சொல்லி ஈடுபாட்டை உருவாக்க பாங்கர்கள் உருவானார்கள். அவர்கள் அப்பெண்களை வர்ணித்தும், அவர்கள் எழுதுவதுபோலவும் விரகதாபக் கவிதைகள் எழுதி அரசரிடம் அளித்தார்கள். அந்தக் கவிதைகள் பல தலைமுறைகளாக பெருகி அது அங்கே ஓர் இலக்கிய வகைமையாகவே அறியப்பட்டது.
கிருஷ்ணதீர்த் நவக்கிராமமாக ஆனபோது ஒவ்வொன்றும் தனித்தனி ஜமீன்தார்களின் ஆட்சிக்கு அளிக்கப்பட்டன. கிருஷ்ணதீர்த் ஆட்சியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் அங்கே ஜமீன்குடும்பங்களாக ஆனார்கள். அவர்கள் தங்களுக்குள் மணவுறவுகளை மேற்கொண்டனர். அவற்றில் ஒன்றான சுமாங் வங்காளத்தில் காலிம்போங் மாவட்டத்தில் அமைந்திருந்தது. அது உண்மையில் ஒரு காடு, பின்னர் ஒரு தேயிலைத் தோட்டமாக ஆகியது. அதன் ஆட்சியாளராக இருந்த ராஜ்பகதூர் ராய்சௌதுரி குடும்பம் தங்களை பழைய கிருஷ்ணதீர்த் அரசகுடும்பத்தின் நேரடி வம்சம் என்று சொல்லிக்கொண்டது.
ஆனால் பிரிட்டிஷ் காப்டன் ஒருவன் அங்கே புலி வேட்டைக்கு வந்தபோது ராஜ்பகதூர் ராய்சௌதுரியின் மூதாதையான கோபால்நாத் அவரை தன் இல்லத்தில் தங்கவைத்ததாகவும், கோபால்நாத்தின் இளம் அழகியான இரண்டாவது மனைவி தீப்சிகா காப்டனுடன் எட்டு இரவுகளைச் செலவிட்டதாகவும், அரசகுடும்பத்தினர் தன்னை போதிய அளவு உபசரிக்கவில்லை என்று சீற்றம் கொண்டிருந்த காப்டன் ஜமீன் உரிமையை பறித்து கோபால்நாத்துக்கு வழங்கியதாகவும் அவர் கோபால்நாத் ராய்சௌதுரி என்ற பெயருடன் அப்பகுதியின் ஜமீன்தாராக ஆனதாகவும் ஊரில் கதைகள் ரகசியமாக பேசப்பட்டன. ராய்சௌதுரி குடும்பத்தில் அவ்வப்போது நீலக்கண்களும் சிவப்புப்பூனைமுடியுமாக குழந்தைகள் பிறப்பது சான்றாகச் சுட்டிக்காட்டப்பட்டது.
சுமாங்கை ஆட்சி செய்த ராய்சௌதுரி குடும்பம் கிருஷ்ணதீர்த்தில் இருந்து மூன்று பிராமணக்குடும்பங்களை குடியேற்றி ஊரிலுள்ள துர்க்கை, ராதாகிருஷ்ணன், சிவன் என்னும் மூன்று கோயில்களை பூஜைசெய்யும் பொறுப்பை அளித்தது. அவர்கள் அரண்மனையில் சோதிடர்களாகவும் கவிஞர்களாகவும் திகழ்ந்தனர். அரச அறிவிப்புகளையும் கடிதங்களையும் எழுதினர். அரசகுடும்பத்து குழந்தைகளுக்கு ஆசிரியர்களாகவும் பணியாற்றினார்கள். பின்னர் அங்குள்ள செல்வந்த குடும்பங்களின் குழந்தைகளுக்கும் சம்ஸ்கிருதமும் வங்காளமொழியும் கணிதமும் கற்பித்தனர். அந்தக் குடும்பங்களில் ஒன்றில்தான் ஊர்வசி பிறந்தாள்.
(மேலும்)
பீட்டர் புரூக்ஸ்
நாடக ஆசிரியர், திரைப்பட இயக்குநர். மகாபாரத காவியத்தை பிரெஞ்சு மொழியில் ஒன்பது மணி நேர நாடகமாக இயக்கியவர்.

What kind of meditation classes?
வாழ்க்கையின் அளவு கோல் நமக்கு நாமே நிர்ணயிப்பது என்பது உண்மை.எல்லோருக்குமான வாழ்க்கையின் அளவுகோல் என்பது வகுக்கப்பட முடியாது. மனிதன் தன்னிலையில் வளரும் போது அவனே அவனுடைய அளவுகோலை மாற்றிக்கொள்கிறான்.பிறருடன் ஒப்பீடு செய்யும் போது தன்னுடைய வளர்ச்சியை அவனே தடை செய்து கொள்கிறான் என்பது உண்மை..
வாழ்வின் அளவுகோல், கடிதம்I saw your video about meditation (dhyana) and yoga classes. Some people from my own family had sent me the link to the video, so I have known about these training camps for a while. But how are these different from the meditation and yoga classes that are nowadays organised everywhere else?
What kind of meditation classes?
May 22, 2025
கோவை சொல்முகம் சந்திப்பு
கோவை சொல்முகம் வாசகர் குழுமம் ஒருங்கிணைக்கும் 67வது இலக்கிய கூடுகை வரும் ஞாயிறன்று கோவையில் நிகழவுள்ளது.
அமர்வு 1:
வெண்முரசு கலந்துரையாடல் – 48
நூல் – கிராதம்
முழு நாவல் விவாதம்
அமர்வு 2:
நாவல் – ‘கத்தியின் விளிம்பு‘
– வில்லியம் சோமர்செட்மாம்
ஆர்வமுள்ள இலக்கிய வாசகர்கள் அனைவரையும் இதில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
நாள் : 25-மே-25,
ஞாயிற்றுக்கிழமை.
நேரம் : காலை 10:00
இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், வடவள்ளி, கோவை.
Google map : https://maps.app.goo.gl/rEKLkhumw9r6XPGV9
தொடர்பிற்கு :
பூபதி துரைசாமி – 98652 57233
நரேன் – 73390 55954
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
