தங்கப்புத்தகம், அஜிதன் உரையாடல்
அன்புள்ள ஜெ,
விஷ்ணுபுரம் ஐரோப்பிய வட்டம் சார்பாக நடைபெற்ற ‘தங்க புத்தகம்‘ குறித்த உரையாடல் நிகழ்வில் அஜிதனின் உரை நுட்பமாகவும் தெளிவாகவும் இருந்தது. புனைவு களியாட்ட கதைகளில் அடர்ந்த தத்துவ செறிவு நிறைந்த கதைகள் தங்க புத்தக தொகுதியிலேயே அதிகம் உள்ளன.
இந்த கதைகளின் நுண் பிரதிகளை தத்துவத்தில் தேர்ச்சியும் படைப்பூக்கமும் கொண்ட புனைவெழுத்தாளருமான அஜிதன் தன் உரையில் சுட்டிக்காட்டினார். விரிவான தத்துவ பின்புலத்தில் நவீன(நவினத்துவ அல்ல) இலக்கிய அழகியலுடன் எழுதும் இலக்கிய வகைமையை தமிழில் உருவாக்கியவர் ஜெயமோகன். தத்துவத்தை தவிர்த்தல் என்ற நவீனத்துவ அழகியலுக்கு நேரேதிரானது இது.
தத்துவ கொள்கைகள் விளக்கப்படும் அலிகரி(Allegory) என்ற மரபான வடிவத்திலிருந்து இலக்கிய உத்திகளின் மூலமாக உயர்ந்த கதைகளாக( fable) இவை உறுமாறுவதை பற்றி சொன்னார். இத்தொகுப்பினுள் நுழைய அசோகமித்திரனின் ‘பிரயாணம்‘ ஒரு நல்ல தொடக்கமாக அமையலாம். அரேபிய பாலைவன படிமம் சூபி தத்துவத்திற்கும், அடர் காடு வேதாந்தத்திற்கும் எப்படி பொருத்தமோ , திபெத்திய பனி நிலம் பெளத்த சூனிய தரிசனத்தை பிரதிபலிக்கும் படிமமாக அமைகிறது.
முடிவில்லாத மாற்றமே பிரபஞ்ச தர்மமாக பெளத்தம் சொல்கிறது(அநிச்சா). அதனாலேயே பிரதி எடுக்க இயலாததாகவும் ஆகிறது.
‘கரு‘ கதை தன்னுள் ஏற்படுத்திய ஆழ்ந்த பாதிப்பையும், அடையாளம்( identity) மற்றும் மறுப்பு (negative) முதலான மேலை தத்துவ கருதுகோள்கள் முதல் பெளத்த –வேதாந்தம் இணையும், மாறுபடும் இடங்கள் வரை அழகான விளக்கம் கொடுத்தார். தீவிர தத்துவ பார்வையுடன் மட்டும் அல்ல மாறுபட்ட வாசக கோணங்களிலும் அணுக தக்க சாத்திய கூறுகள் உள்ள தொகுப்பு இது. வாசக சட்டகத்தை விரிவாக்கிய அஜிதனுக்கும் நிகழ்வை ஒருங்கிணைந்த ஷர்மிளா மற்றும் ஸ்ரீராம் இருவருக்கும் நன்றிகள்.
வாசு
ஆம்ஸ்டர்டாம்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

