S. Ramakrishnan's Blog, page 10

May 19, 2025

குற்றமுகங்கள் -12 கண்துஞ்சார்

கண்துஞ்சார் மனிதர்களிடம் எதையும் திருடவில்லை. அவர் கடவுளிடம் மட்டுமே திருடினார். அவர் தன்னுடைய வாழ்நாளில் முப்பத்தியாறு கோவில்களில் திருடியிருக்கிறார். அதில் நகைகள், ஐம்பொன் சிலைகள் மற்றும் கோவில் மணிகள் அடக்கம்.

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் மதராஸ் ராஜஸ்தானியில் இருந்த பல கோவில்களில் மூன்று காலப் பூஜைகள் நடக்கவில்லை. கோவிலுக்கென இருந்த நிலமும் சொத்துகளும் பிறரால் அனுபவிக்கபட்டன. அது போலவே கோவிலின் நகைகள் மற்றும் ஐம்பொன் சிலைகள் கோவில் நிர்வாகியாக இருந்த நிலச்சுவான்தார் வசமே இருந்தன. அவர்கள் விழா நாட்களின் போது மட்டுமே கோவிலுக்குரிய நகைகளைக் கொண்டு வருவார்கள். அப்போதும் அதற்குப் பெரிய பாதுகாப்பு வசதிகளோ, காவலோ கிடையாது.

கோவில் நகைகள் அடக்கிய பெட்டகம் ஒன்றை நான்கு பேர் மாட்டுவண்டியில் கொண்டு வந்த போது அதைக் கண்துஞ்சார் ஒற்றை ஆளாகக் கொள்ளையடித்திருக்கிறார். இந்த வண்டிக்கு பாதுகாவலாக வந்தவர்கள் நாலு பேர். அவர்கள் கையில் குத்தீட்டி வைத்திருந்தார்கள். அவர்களைத் தாக்கி வண்டியோடு பெட்டகத்தைக் கண்துஞ்சார் கொண்டு போய்விட்டார்.

கண்துஞ்சாருக்கு கடவுள் மீது என்ன கோபம் எனத் தெரியவில்லை. ஆனால் அவர் கோவிலில் மட்டுமே திருடினார். கண்துஞ்சாருக்கு என்ன வயது என்றோ, எப்படி இருப்பார் என்றோ யாருக்கும் தெரியாது. அவரது உண்மையான பெயர் கண்துஞ்சார் தானா என்றும் தெரியாது.

கடவுளின் மீது கோபம் கொள்ளாதவர் யார் இருக்கக் கூடும். கடவுளிடம் போடுகிற சண்டை என்பது தண்ணீருக்குள் கைதட்டுவது போன்றது. யாரும் கேட்க முடியாது.

கண்துஞ்சார் வந்துவிடப்போகிறார் என்று பயந்து பல்வேறு கோவில்களில் இராக்காவல் போட்டார்கள். கண்துஞ்சார் பெயரைச் சொல்லி கோவில் நிர்வாகிகளே கொஞ்சம் நகைகளைத் திருடிக் கொண்டார்கள்.

வேப்பங்குடியில் இருந்த வேஷக்காரன் முனுசாமி சயனநாதர் கோவில் திருவிழாவின் போது கண்துஞ்சார் வேஷம் கட்டிக் கொண்டு களவு ஆட்டம் என்ற வேடிக்கை நிகழ்ச்சியை ஆடிக்காட்டிய போது தான் மக்கள் இப்படித் தான் கண்துஞ்சார் இருப்பார் என்று கண்டார்கள்.

உண்மையில் கண்துஞ்சாரைப் பற்றிய கதைகளை உருவாக்கியது முனுசாமியே. தனக்கு அவரை நேரில் தெரியும் என்றும். அவர் வெள்ளைக்காரர்களால் நாடுகடத்தப்பட்டவர்களின் குடும்பங்களை வாழ வைப்பதற்காகவே கோவில் நகைகளைக் கொள்ளையடிக்கிறார். கடவுளால் கைவிடப்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்காகவே அப்படி நடந்து கொள்கிறார் என்றார் முனுசாமி.

அந்தக் கதையைப் பலர் நம்பாத போதும் கண்துஞ்சாரைப் பற்றிய களவு ஆட்டம் மிகவும் புகழ்பெறத் துவங்கியது. முனுசாமியைப் போலவே தென்மாவட்டங்களிலும் சில கூத்துக்கலைஞர்கள் கண்துஞ்சார் வேஷம் கட்ட ஆரம்பித்தார்கள்.

அதன்பிறகான வருஷங்களில் கோவில் திருவிழா தோறும் கண்துஞ்சார் ஆட்டம் தவறாமல் நடைபெற்றது. இந்த வருஷம் கண்துஞ்சாராக யார் வேஷம் கட்டப்போகிறார்கள் என்று மக்கள் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். இந்த வேடிக்கைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்ததை உண்மையான கண்துஞ்சார் அறிந்திருக்கக் கூடும். அவர் தனது திருட்டை தொடர்ந்து கொண்டேயிருந்தார்

கோவில்கொள்ளைகளைத் தடுப்பதற்காக உருவாக்கபட்ட காவல்பிரிவின் தலைவராக நியமிக்கபட்ட டக்ளஸ் ஹாமில்டன் கண்துஞ்சாரைப் பிடிப்பதற்காகக் கோவில் தோறும் மாறுவேஷத்தில் ஆட்களை உலவ விட்டிருந்தார்.

ஒராண்டிற்குப் பிறகு பெருமல்லபாடு கோவிலில் திருட முயன்றபோது கண்துஞ்சார் ஹாமில்டனின் ஆட்களால் கைது செய்யப்பட்டார். அது கண்துஞ்சார் தானா என அவர்களால் நம்ப முடியவில்லை. காரணம் கைது செய்யப்பட்ட நபருக்கு நாற்பது வயதிருந்தது. மீசையில்லாத முகம். ஏறு நெற்றி. வழுக்கை தலை. ஒரு கண்ணில் பூ விழுந்திருந்தது. சாய வேஷ்டி கட்டியிருந்தார். உறுதியான உடற்கட்டு. இவரால் எப்படி இத்தனை கோவில்களைக் கொள்ளையடிக்க முடிந்தது என ஹாமில்டனுக்கு வியப்பாக இருந்த்து.

இது உண்மையான கண்துஞ்சாரில்லை. அவரது நகல். அவர் இப்போது வெளியே வருவதில்லை என்று பலரும் சொன்னார்கள். பிடிபட்ட நபரிடம் விசாரணை நடந்தது. அவர் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அது ஹாமில்டனின் சந்தேகத்தை அதிகப்படுத்தியது.

ஒருவேளை கண்துஞ்சார் தன்னைத் தேடும் நாடகத்தை முடித்து வைக்க இப்படி ஒரு ஆளை அனுப்பியிருக்கிறாரோ என்றும் நினைத்தார்.

கண்துஞ்சாரைப் பற்றிய கதைகளை உடைக்க வேண்டும் என்பதற்காகவே அவரை ஒரு மாட்டுவண்டியில் ஏற்றி ஊர் ஊராக அழைத்துப் போய்ப் பிடிபட்ட கரடியை வேடிக்கை காட்டுவது போலச் செய்தார்கள். சில ஊர்களில் மக்கள் விரும்பும் தண்டனையை அவருக்கு அளிக்கலாம் என்று சொன்னார்கள். கல்லெறிவது முதல் சாணத்தைக் கரைத்து ஊற்றுவது வரை பல்வேறு தண்டனைகளை மக்கள் அளித்தார்கள். கண்துஞ்சார் தனது வலியை தாங்கிக் கொண்டார்.

முடிவில் பெருமல்லபாடு கோவிலின் முன்பாக நரிக்கூண்டு போலப் பெரிய இரும்புக்கூண்டு ஒன்றை உருவாக்கி அதற்குள் கண்துஞ்சாரை அடைத்தார்கள். கடவுளின் கருணை இருந்தால் நீ உயிர்வாழ்வதற்காக உணவு கிடைக்கும் என்று சொன்னார்கள். குடிப்பதற்குத் தண்ணீர் கூட வழங்கப்படவில்லை. நாவுலர்ந்து பட்டினி கிடந்து எலும்புகள் துருத்திக் கொண்டு புடைத்த நேரத்தில் கூடக் கண்துஞ்சார் ஒரு வார்த்தை பேசவில்லை. எவரிடமும் மன்றாடவில்லை. அது தான் அவர் கண்துஞ்சார் என்பதை அடையாளப்படுத்தியது.

ஹாமில்டன் கண்துஞ்சார் ஆட்டத்தை எங்கும் இனி நிகழ்த்தக்கூடாது என்ற உத்தரவைப் பிறப்பித்தார்

கண்துஞ்சார் தண்ணீரும் உணவும் இன்றி மரணத்துடன் போராடிய போது ஒரு நாள் இடியுடன் கூடி பெருமழை பெய்தது. வாயைத் திறந்து மழைத்தண்ணீரை குடித்தபடி கண்துஞ்சார் சிரித்துக் கொண்டார். கடவுளுடன் அவரது கோபம் தீர்க்கபட்டது போலிருந்தது. மறுநாள் சிரித்தமுகத்துடன் கண்துஞ்சார் இறந்து கிடந்தார்.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 19, 2025 23:48

May 18, 2025

வரலாற்றின் சாட்சியம்

சிப்பாய் எழுச்சியின் போது முக்கியப் போராளியாக விளங்கிய மங்கள் பாண்டே தூக்கிலிடப்பட்ட இடத்தைக் காணுவதற்காகப் பரக்பூர் சென்றிருந்தேன்.

மங்கள்பாண்டே தூக்கிலிடப்பட்ட மரம்

காலனிய வரலாற்றில் பரக்பூர் முக்கிய ராணுவ மையமாக விளங்கியது1772 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் பிரிட்டிஷ் கன்டோன்மென்ட்டாகப் பரக்பூர் மாற்றப்பட்டது

அங்குள்ள காவல்துறையினருக்கான பயிற்சிக்கல்லூரி வளாகத்திலுள்ள ஆலமரத்தில் மங்கள் பாண்டே தூக்கிலிடப்பட்டிருக்கிறார். அந்த மரம் இப்போதும் உள்ளது.

இந்த இடம் தற்போது போலீஸ் பயிற்சிப் பள்ளி வளாகத்தினுள் இருப்பதால் முன் அனுமதி பெற வேண்டும். நண்பர் சதிஷ் இதற்கு உதவி செய்தார்.

மங்கள் பாண்டே தூக்கிலிடப்பட்ட ஆல மரத்தடியில் நின்றேன். அந்த மரம் வரலாற்றின் சாட்சியமாக மாறியுள்ளது. அதன் இலைகள் அசையும் போது கடந்தகாலத்தின் கதைகள் உயிர்பெறவே செய்கின்றன. பரக்பூரில் மங்கள் பாண்டே நினைவாக ஒரு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதில் அவரது உருவச்சிலை உள்ளது. மகாத்மா காந்தியின் அஸ்தியின் மீது கட்டப்பட்ட நினைவுச்சின்னத்துடன் கூடிய, காந்தி படித்துறையும் பரக்பூரில் உள்ளது. கங்கை நதியின் அழகினை படித்துறையில் நின்றபடியே ரசித்தேன்.

••

கொல்கத்தாவின் புகழ்பெற்ற விக்டோரியா நினைவகத்தில் தாமஸ் டேனியல் (1749-1840) மற்றும் வில்லியம் டேனியல் (1769-1837) வரைந்த அரிய ஓவியங்கள் காட்சிக்கு வைக்கபட்டுள்ளன. அந்த ஓவியங்கள் அடங்கிய புத்தகம் வைத்திருக்கிறேன். ஆனால் நேரில் காணும் அனுபவம் பரவசமூட்டியது. நண்பர் கோபால்சுவாமி எங்களுடன் வந்திருந்தார். வரலாற்றில் அதிக ஆர்வம் கொண்டவர்.

வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் பார்வையாளர்கள் பலரும் கையிலும் தண்ணீர் பாட்டில் வைத்திருந்தார்கள். ஆனால் நுழைவாயிலில் உள்ளே தண்ணீரைக் கொண்டு செல்ல முடியாது எனப் பறித்துவிடுகிறார்கள். அவரவர் பெயர் எழுதி பாட்டிலை வெளியே வைத்துவிட்டுப் போய் திரும்ப வரும் போது எடுத்துக் கொள்ள வேண்டுமாம். எதற்காக தண்ணீரைத் தடுக்கிறார்கள் என்று ஒரு பெண் ஆத்திரப்பட்டார். பாதுகாப்பு காரணங்களுக்காக என்று ஒரு காவலர் விளக்கினார். அந்தப் பெண் தனது பாட்டிலில் இருந்த தண்ணீர் முழுவதையும் அவர் கண்முன்னே குடித்து முடித்து காலி பாட்டிலை வீசி எறிந்தார்.

1784ல் தாமஸ் டேனியல் மற்றும் அவரது மருமகன் வில்லியம் டேனியல் இருவரும் ஓவியர்களாக இந்தியாவிற்கு வந்தார்கள். பின்பு வில்லியமின் தம்பி சாமுவேல் அவர்களுடன் இணைந்து கொண்டார். இந்தியா முழுவதும் பயணம் செய்து அவர்கள் வரைந்த வண்ண ஓவியங்கள் பேரழகானவை.  

இந்த ஓவியங்களின் வண்ணம் மற்றும் துல்லியமான சித்தரிப்பு வியப்பூட்டக்கூடியது. தமிழகத்தின் முக்கிய நிலக்காட்சிகள் மதுரை தஞ்சை நகரக்காட்சிகளை இவர்கள் வரைந்திருக்கிறார்கள்.

தாமஸ் தனது தேவைக்களுக்காகக் கொல்கத்தாவில் ஒரு அச்சுக்கூடத்தை உருவாக்கினார். வில்லியம் நீர்வண்ண ஓவியங்களை வரைந்து வந்தார். இவர்கள் இந்திய ஓவியர்களுடன் இணைந்து ஓவியங்களை அச்சிட்டு வெளியிட முனைந்தார்கள்.  கொல்கத்தாவின் பழைய நீதிமன்றம், எழுத்தர்களின் மாளிகை, தேவாலயம். கிளைவ் தெரு உள்ளிட்ட முக்கியமான இடங்களை வரைந்து அவற்றை அச்சிட்டு விற்பனை செய்தார்கள்

மதுரை

இந்தியா முழுவதும் சுற்றிவந்த வில்லியம் தனது பயணவிபரங்களைப் பதிவு செய்வதற்காக ஒரு நாட்குறிப்பு வைத்திருந்தார், அதில் அவர்கள் சந்தித்த மக்கள், சென்ற இடங்கள் மற்றும் ஓவியம் வரைந்த அனுபவம் பற்றி நிறையத் தகவல்களைப் பதிவு செய்திருக்கிறார்.

டேனியல்ஸ் மார்ச் 29, 1792 அன்று மதராஸிற்கு வந்து சேர்ந்தார்கள். அங்கிருந்து தங்களின் தென்னிந்திய பயணத்தை மேற்கொண்டார்கள். அவர்களுடன் பல்லக்குத் தூக்கிகள். பணியாளர்கள். சுமை தூக்குபவர்கள் என ஒரு குழுவே இணைந்து பயணம் செய்தது. அவர்கள் ஜூலை 3 ஆம் தேதி மதுரையை அடைந்தார்கள். மதுரையின் பழைய அரண்மனை மற்றும் தெப்பக்குளம் குளம் உள்ளிட்ட அருகிலுள்ள இடங்களை வரைந்தார்கள். பின்பு ராமேஸ்வரத்தில் உள்ள கோயில்களைக் கண்டார்கள். அங்கிருந்து தெற்கு நோக்கி பயணம் மேற்கொண்டு பாபநாசம் வரை சென்றார்கள். திரும்பி வந்து தஞ்சை பகுதியினைப் பார்வையிட்டார்கள். இந்தக் காலகட்டத்தில் வரையப்பட்டதே திருச்செங்கோடு கோவிலின் ஓவியம்.

அந்த ஓவியம் கொல்கத்தா விக்டோரியா நினைவகத்தில் இடம்பெற்றுள்ளது. ஒவியத்தின் கீழே தரப்பட்ட தகவல் சரியானதாகயில்லை. காலனிய ஆட்சியின் அடையாளமாக உள்ள விக்டோரியா நினைவகத்தினுள் ஆள் உயர கிளைவ் சிலை உள்ளது. மைய மண்டபத்தின் நடுவே விக்டோரியா ராணி சிலை காணப்படுகிறது. பிரம்மாண்டமான இந்த வளாகம் பத்து ஆண்டுகள் கட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பணிகள் நடந்த விதம் பற்றிய புகைப்படத் தொகுப்பினை பார்வையிட்டேன்.

••

பால்தசார் சோல்வின்ஸ் வரைந்த வங்காள ஓவியங்களின் சிறப்புக் கண்காட்சியைக் கொல்கத்தாவில் கண்டேன். இதில் அவரது நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்தியாவில் அச்சுத் தயாரிப்பின் ஆரம்பகால முன்னோடிகளில் ஒருவருமான பிரான்சுவா பால்தசார் சோல்வின்ஸ் 1760ல் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப்பில் பிறந்தவர்.

கடல் ஓவியராகப் பயிற்சி பெற்ற சோல்வின்ஸ் 1791-1803 வரை கொல்கத்தாவில் வசித்திருக்கிறார். இந்த நாட்களில் இந்தியவியலில் ஆர்வம் கொண்ட வில்லியம் ஜோன்ஸின் நட்பு உருவானது. அவரது உத்வேகத்தால் தான் கண்ட கேட்ட மனிதர்களை வரைந்திருக்கிறார்.

கிழக்கிந்திய கம்பெனியின் சார்பில் அந்தமான் மற்றும் நிகோபார் மக்களையும் நிலப்பரப்பினையும் ஒவியமாக வரைந்திருக்கிறார். இருநூறுக்கும் மேற்பட்ட தனி ஓவியங்களை தொகுத்து தனிநூலாகவும் வெளியிட்டிருக்கிறார்

இருநூறு ஆண்டுகளுக்கு முந்திய வங்களாத்தின் சமூகக் கட்டமைப்பு. சாதிய படிநிலைகள். ஒடுக்குமுறை, திருவிழா மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் குறித்து இவரது ஓவியங்களின் வழியே தெரிந்து கொள்ள முடிகிறது.

இந்திய சமூகத்தின் அன்றாட வாழ்வையைப் பால்தசார் சோல்வின்ஸ் திறம்பட வரைந்திருக்கிறார். குறிப்பாகக் கிராமியக் கலைகள் மற்றும் கலைஞர்களை அவர் வரைந்துள்ள விதம் பாராட்டிற்குரியது.

சோல்வின்ஸ் தான் கேட்டு அறிந்த விஷயங்களை வரையும் போது தவறு செய்திருக்கிறார். அதில் ஒன்று தஞ்சாவூர் ராஜா என ஒருவரை வரைந்திருப்பது. அது ஒரு தவறான சித்தரிப்பு. சரபோஜி மன்னர்கள் பற்றிய தகவலை வைத்துக் கொண்டு அவர் வரைந்திருக்கலாம்.

சோல்வின்ஸின் ஓவியங்களில் காணப்படும் பெண் நடனக் கலைஞர்கள், மிளிர்கிறார்கள். அவரது ஓவியத்தின் பின்னே எழுதப்படாத கதைகள் மறைந்திருக்கின்றன

பதினெட்டாம் நூற்றாண்டு வங்காளத்தில் கணவன் இறந்தவுடன் பெண்களைச் சிதையில் இறங்கச் செய்யும் பழக்கம் இருந்தது. இந்த நிகழ்வை சோல்வின்ஸ் ஓவியமாக வரைந்திருக்கிறார். அதில் சிதைபுக இருக்கும் பெண் முகத்தில் தனக்குச் சதியில் விருப்பமில்லை என்பது அழுத்தமாக வெளிப்படுகிறது. அதை உணர்ந்தவர்கள் போலப் பெண்ணின் உறவினர்கள் அழுகிறார்கள்.

தனது காலகட்டதை ஆவணப்படுத்தும் விதமாகச் சோல்வின்ஸ் வரைந்த ஓவியங்களை  கண்காட்சியில் அழகாகக் காட்சிப் படுத்தியிருந்தார்கள்.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 18, 2025 00:45

May 17, 2025

எஸ்.ரா 100 தொடர் நிகழ்வுகள்

எனது நூறு நூல்களுக்கான விமர்சனக்கூட்டங்கள் வாரந்தோறும் இணையத்தில் தொடர் நிகழ்வுகளாக நடைபெறுகின்றன. அஞ்சிறைத்தும்பி இலக்கிய அமைப்பின் சார்பில் பேராசிரியர் வினோத் இதனை ஒருங்கிணைப்பு செய்கிறார்

இன்றைய நிகழ்வில் ஐந்து நூல்கள் குறித்து உரையாற்றுகிறார்கள்.

விருப்பமான அனைவரும் நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 17, 2025 22:17

May 15, 2025

குற்றமுகங்கள் 11 பட்லர் லெஸ்லீ

பட்லர் லெஸ்லீ என்று அழைக்கப்பட்ட ராமேந்திரன் மதராஸ் ராஜஸ்தானியின் பகுதியாக இருந்த கண்ணனூரில் வாழ்ந்தவர். கல்கத்தாவிற்குச் செல்லும் போது அவரது பெயர் லெஸ்லீ. மதராஸில் அறை எடுத்து தங்கும் போது அவரது பெயர் சுகுமார். மூன்று பெயர்களில் வாழ்ந்த அவர் இறந்த போது வயது 39.

ஜேனி என்ற ஆங்கிலோ இந்தியத் தாயிற்கும் வணிகரான வி.வி.சந்திரனுக்கும் பிறந்த மகன் என்கிறார்கள். விவிசியின் குடும்பத்தினர் இதனை ஏற்கவில்லை. காற்றில் அடித்துச் செல்லப்பட்ட விதை எங்கே விழுந்து முளைத்தாலும் அதற்கு மரம் பொறுப்பாகாது என்றார்கள்.

ராமேந்திரனுக்குச் சிறுவயது முதலே சரியாகப் பேச்சுவரவில்லை. ஆகவே எதையும் எழுதிக்காட்டச் செய்தார். இதற்காக எப்போதும் பென்சிலும் காகிதமும் வைத்திருந்தார். எட்டு வயதில் தந்தையால் பாரக்பூர் அழைத்துச் செல்லப்பட்ட ராமேந்திரன் அங்கே ராணுவ அதிகாரி வீட்டில் சில ஆண்டுகள் பட்லராகப் பணியாற்றியிருக்கிறார்.  அதனால் பட்லர் லெஸ்லீயாக மாறினார்.

1886 ஆம் ஆண்டு ராமேந்திரன் மீது ஒரு நீதிமன்ற வழக்குத் தொடுக்கபட்டது. அதன்படி அவர் ஆங்கிலேயர்களிடம் சாராயம் மற்றும் கள் விற்பதற்கான உரிமை பெற்றதாகவும் அந்த உரிமையைத் தவறாகப் பயன்படுத்திக் கள்ளவணிகம் செய்ததோடு அரசிற்குச் செலுத்த வேண்டிய இருபத்திமூன்றாயிரம் ரூபாயைச் செலுத்தமாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கிற்கு வாதடுவதற்காகப் ராமேந்திரன் மும்பையிலிருந்து வழக்கறிஞர் கே.சி.மசானியை வரவழைத்தார். நாலரை ஆண்டுகள் நடைபெற்ற அந்த வழக்கில் ராமேந்திரன் மீது தவறில்லை என்றும் அவர் அபாரதமாக ஆயிரம் ரூபாய்க் கட்டினால் போதும் என்று தீர்ப்பளிக்கபட்டது கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை உருவாக்கியது. அத்தோடு ராமேந்திரன் கவர்னர் வரை எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார் என்பதையும் தெளிவாக்கியது.

ராமேந்திரன் மாதம் ஒருமுறை வங்காளத்திற்குப் பயணம் செய்துவந்தார். அவர் கிழக்கு இந்திய கம்பெனியின் அபின் வணிகத்திற்கு ரகசியமாக உதவினார், அதன் காரணமாகவே அவருக்கு நிறையப் பணம் கிடைத்தது என்று சொல்கிறார்கள். கல்கத்தாவில் அவரது பெயர் லெஸ்லீ. பத்திரிக்கையாளர். ஒரே விடுதியில் ஒரே அறையில் தான் எப்போதும் தங்குவது வழக்கம்.

ராமேந்திரன் தனது வாழ்நாள் முழுவதும் நிலம் வாங்கிக் கொண்டேயிருந்தார். எந்தெந்த ஊர்களில் எவ்வளவு நிலங்களை வாங்கினார் என்று முழுமையாகக் கண்டறிய முடியவில்லை. இவ்வளவு வாங்க எப்படிப் பணம் கிடைத்தது. யாரை வைத்து எப்படி வாங்கினார் என்பது குறித்த விவாதங்கள் வழக்கின் போது பேசப்பட்டன. அவரது குடும்பத்திற்கே அந்த விபரங்கள் முழுமையாகத் தெரியவில்லை.

ராமேந்திரன் நிலம் மற்றும் வீடுகள் வாங்குவதற்கென்றே பனிரெண்டு பேர் கொண்ட குழுவை வைத்திருந்தார். அவர்கள் அபயகாரிகள் என அழைக்கப்பட்டார்கள். அவர்கள் யாருக்கு கடன் கொடுத்தால் எளிதாக நிலத்தைக் கைப்பற்ற முடியும் என அறிந்திருந்தார்கள். பழைய திவான்களுக்கு உதவி செய்வதன் மூலம் அவர்களின் நிலத்தைக் கைப்பற்றினார்கள். கோவில் நிலத்தினைப் பெயர் மாற்றித் தனதாக்கிக் கொண்டார்கள். கணவனை இழந்த பெண்களுக்குச் சொந்தமான நிலத்தைச் சொற்ப பணத்தில் பெற்றார்கள். ஒரு பசுவை விலைக்கு வாங்கிவிட்டுப் பசு கட்டப்பட்டிருந்த நிலமே தங்களுடையது எனப் பத்திரம் பதிந்து கொண்டார்கள். இப்படியாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் அவருக்குச் சொந்தமாகியது.

ராமேந்திரனுக்குச் சொந்தமாக 121 வீடுகள் இருந்தன என்கிறார்கள். தனது தந்தையைப் போலவே அவரும் ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அதே நேரம் உள்ளூரில் மரியாதை வேண்டும் என்பதற்காகத் தாணுப்பிள்ளை குடும்பத்து பெண்ணையும் திருமணம் செய்து கொண்டார். மொத்தம் 32 படுக்கைகளுடன் 20 குளியலறைகள் கொண்ட பெரிய வீடு ஒன்றைக் கட்டிக் கொண்டு வாழ்ந்தார்.

இரண்டு மனைவிகள் மூலமாக அவருக்குப் பதினாறு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் நால்வர் பிறந்த சில மாதங்களில் இறந்து போனார்கள். ஒரே வீட்டில் இரண்டு மனைவிகளுடன் ராமேந்திரன் வாழ்ந்து வந்தார். அதிகமாக நிலமுள்ளவன் ஆயிரம் கைகள் கொண்டவனாகப் பலம் பெறுகிறான் என்று ராமேந்திரன் நம்பினார். எந்த ஊரில் இடம் வாங்குகிறாரோ அதன் பெயரை தனது உடம்பில் பச்சைகுத்திக் கொண்டார். அவரது முதுகு, கைகள், தொடை, கழுத்து என எங்கும் எழுத்துக்களாக இருந்தன.

இவ்வளவு சொத்திற்கு அதிபதியாக இருந்த ராமேந்திரனுக்குத் திடீரென ஒரு நாள் உணவு ஒவ்வாமை ஏற்பட்டது. எதைச் சாப்பிட்டாலும் குமட்டிக் கொண்டு வாந்தி வந்தது. அவரால் வாழைப்பழத்தைக் கூடச் சாப்பிட முடியவில்லை. இதற்கான வைத்தியம் செய்வதற்காக அவர் புகழ்பெற்ற ஆயுர்வேத வைத்தியர்களிடம் சென்றார். அவர்கள் கொடுத்த மருந்தால் சற்று குணமானது. ஆனால் காகம் சாப்பிடுகிற அளவைப் போல உணவைக் கொறிக்க முடிந்ததேயன்றி வயிறு நிறையச் சாப்பிட முடியவில்லை.

ஆங்கில வைத்தியம் செய்து கொள்வதற்காக அவர் மதராஸிற்குச் சென்றார். டாக்டர் டெகார்ட்டிடம் சிகிட்சை எடுத்துக் கொண்டார். இரண்டரை மாத சிகிட்சைக்குப் பிறகு நலமடைந்து சொந்த ஊர் திரும்பினார்.

அதன் மறுநாள் அவரது வீட்டில் பெரிய விருந்து நடைபெற்றது. நூற்றியெட்டு வகைப் பதார்த்தங்கள் அதில் இடம்பெற்றன. இலையின் முன்னால் அமர்ந்த போது ராமேந்திரனுக்குத் தன்னை அறியாமல் கண்ணீர் வந்தது. அவர் ஒரு வாய்ச் சோறு சாப்பிட்டிருப்பார். அப்படியே மயங்கி இலையில் விழுந்து இறந்து போனார்.

ராமேந்திரன் சொத்துக்கு அவரது இரண்டு மனைவியர் மற்றும் உறவினர்கள் சண்டையிட்டுக் கொண்டார்கள். வழக்கு தொடுத்தார்கள். கோர்ட் எந்தெந்த ஊர்களில் எவ்வளவு நிலம் அவரது பெயரில் இருந்த்து எனக் கணக்கெடுக்கும்படி உத்தரவிட்டது. அந்தக் கணக்கெடுப்பிற்கு முன்பாகவே அவரது அபயகாரிகள் பத்திரங்களைத் தங்களின் பெயருக்கு மாற்றிக் கொண்டுவிட்டார்கள். பல வீடுகள் வாடகைக்குக் குடியிருந்தவர்களுக்கே சொந்தமானது.

ராமேந்திரன் பலரையும் ஏமாற்றி நிலங்களைக் கையகப்படுத்திய விபரம் வழக்கின் போது தெரிய வந்தது. அதில் மூன்று கொலைகளும் சம்பந்தப்பட்டிருந்தன ஆகவே அவரது சொத்து முழுமையாகப் பறிமுதல் செய்யப்பட்டது.

நூறு வீடுகளின் அதிபதியாக இருந்த ராமேந்திரனின் பிள்ளைகள் குடியிருக்க வீடின்றி வீதிக்கு வந்தார்கள். அதில் ஒரு பையன் மனநிலை பாதிக்கபட்டு கிழிந்த சட்டையோடு பஜாரைச் சுற்றிக் கொண்டிருந்தான்.

ராமேந்திரனுக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது என்பதை யாராலும் கண்டறிய முடியவில்லை. அவர் ஆடம்பரமாக வாழ்ந்த வாழ்க்கையை விடவும் கையில் சோற்றோடு இறந்த நிகழ்வு தான் மக்கள் மனதில் அழியாமலிருந்தது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 15, 2025 03:11

May 14, 2025

தேசிய நூலகத்தினுள்

கொல்கத்தாவின் தேசிய நூலகம் இந்தியாவின் மிகப்பெரிய நூலகமாகும். பிரிட்டிஷ் காலத்தில் இம்பீரியல் நூலகமாகச் செயல்பட்டது. இந்தியாவில் வெளியாகும் அனைத்து மொழிகளின் நாளிதழ்கள்,வார இதழ்கள், புத்தகங்கள் இங்கே சேமித்து வைக்கபடுகின்றன.

தமிழ்நாட்டு நூலகங்களுக்கு நாம் புத்தக விநியோகம் செய்யும் போது அதன் ஒரு பிரதியை இங்கே அனுப்பி வைக்க வேண்டியது கட்டாயம். அலிப்பூரில் உள்ள தேசிய நூலக வளாகம் மிகப்பெரியது. முப்பது ஏக்கர் பரப்பளவில் உள்ளது. ஒரு காலத்தில் இது கவர்னரின் மாளிகையாகச் செயல்பட்டிருக்கிறது. சுற்றிலும் மரங்கள் சூழ்ந்த பெரிய பெரிய கட்டிடங்கள். நுழைவாயிலில் பாதுகாப்புச் சோதனை நடைபெறுகிறது.

பிரம்மாண்டமான நூலகக் கட்டிடம். அதன் முகப்பில் தாகூரின் சிலை. அவரது குடும்பம் பொதுநூலகத்துறை உருவாகப் பெரிதும் உதவியிருக்கிறது.

இது அரிய நூல்களுக்கான ஆவணக்காப்பகமாகவும், நூலகர்களுக்குப் பயிற்சி தரும் இடமாகவும், ஆய்வாளர்களுக்கான ஆய்வு மையமாகவும், அரசு வெளியீடுகள் அறிக்கைகளுக்கான காப்பகமாகவும் செயல்படுகிறது. இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருப்பதாகச் சொன்னார்கள்.

சர்வதேச அளவிலான ஏழாயிரம் கல்விசார்ந்த இதழ்கள், ஆய்வறிக்கைகள் இங்கே அனுப்பி வைக்கபடுகின்றன. அரிய நூல்களை மின்வடிவத்திற்கு மாற்றிப் பொதுப்பகிர்வு செய்து வருகிறார்கள். பிரம்மாண்டமான வாசிப்பு அறை, மொழி வாரியாகத் தனித்தனிப் பிரிவுகள், ஆய்வாளர்களுக்கான தனிப்பகுதி, போட்டிதேர்வு எழுதுகிறவர்கள் அதிகம் வந்து படிக்கிறார்கள்.

நூலகத்தின் நான்கு கட்டிடங்களிலும் குளிரூட்டப்பட்ட தனித்தனி வாசிப்பு அறைகள் உள்ளன. ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு நூலகத்தைப் பயன்படுத்த விரும்பும் வாசகர் அதற்கென உள்ள தற்காலிக உறுப்பினர் அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம். தேசிய நூலகத்தில் குழந்தைகளுக்கெனத் தனிப் பிரிவு உள்ளது.

தேசிய நூலகத்தின் தமிழ்ப்பிரிவை காணச் சென்றிருந்தேன். 1963 ஆம் ஆண்டுத் தமிழ்ப் பிரிவு உருவாக்கப்பட்டது. இந்தப் பிரிவில் வையாபுரி பிள்ளை சேமிப்பில் இருந்த நூல்கள் யாவும் பாதுகாக்கபட்டுவருகின்றன. இங்கே 1723 ஆண்டு அச்சிடப்பட்ட தமிழ் பைபிள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தமிழ் பிரிவினுள் ஆயிரக்கணக்கான தமிழ்நூல்கள் கட்டுக்கட்டாகக் கட்டிக்கிடக்கின்றன. அவற்றைப் பகுத்து அட்டவணை செய்வதற்குப் போதுமான பணியாளர்கள் இல்லை என்றார்கள்.

தமிழ்ப்பிரிவின் நிர்வாகியாக இருப்பவர் விடுமுறையில் இருப்பதால் ஒரேயொரு பணியாளர் மட்டுமே இருந்தார். தமிழ்நூல்களைப் பிரித்து வகைப்படுத்தி அட்டவணைப்படுத்தும் பணிக்கு நிறையப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்றார். தமிழகத்தில் நூலகக்கல்வி பயிலுகிற மாணவர்களுக்கு உதவித்தொகை அளித்து இன்டென்ஷிப் முறையில் இந்தப் பணிக்கு அனுப்பி வைக்கலாம்.

 தேசிய நூலகம் நிறையக் கருத்தரங்குகள் மற்றும் கண்காட்சிகளை நடத்துகிறது. அரிய நூல்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளைக் கற்றுத் தருகிறது. அதன் இணையதளம் வழியாக மின்நூல்களை பார்வையிட முடியும். வெளிமாநில உறுப்பினர்களுக்கு அஞ்சல் வழியாகவும் நூல்களை கடன்தருகிறார்கள்.

••

கொல்கத்தாவின் காலேஜ் ரோடு புத்த கடைகளால் நிரம்பியது. சாலையின் இருபுறமும் வரிசை வரிசையாகப் புத்தகக் கடைகள். அதுவும் பழைய புத்தகங்கள் விற்கும் கடைகள் அதிகம் உள்ளன. நடைபாதையிலும் பழைய புத்தகங்களைக் குவித்துப் போட்டிருக்கிறார்கள். அறுபது விழுக்காடு புத்தகக் கடைகள் பாடப்புத்தகங்கள் மற்றும் போட்டித்தேர்வுகள் மற்றும் பொதுநூல்கள் விற்கும் கடைகளே. சுற்றிலும் கல்லூரிகள் இருப்பதால் நிறைய மாணவர்களைக் காண முடிந்தது.

வங்காள இலக்கியம் சார்ந்த பழைய புத்தகங்கள் விற்பவர்களே அதிகமிருக்கிறார்கள். பழைய புத்தகம் என்றாலும் அதன் விலையை அதிகமாகவே கேட்கிறார்கள். எந்தக் கடையில் ஒரு புத்தகத்தைக் கேட்டாலும் உடனே அவர் தொலைபேசியில் அழைத்து மற்றகடைகளில் விசாரித்து அதைப் பெற்றுத் தந்துவிடுகிறார்.

இந்தச் சாலையில் தான் கொல்கத்தாவின் புகழ்பெற்ற இந்தியன் காபி ஹவுஸ் உள்ளது. இது 300 ஆண்டுகள் பழமையான கஃபே ஆகும், இங்கே எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் மாணவர்கள் கூடுகிறார்கள். மணிக்கணக்கில் அமர்ந்து பேசுகிறார்கள்.

மதியம் பனிரெண்டு மணிக்கு தான் இந்தக் காபி ஹவுஸ் திறக்கபடுகிறது. அதற்கு முன்னதாகவே வெளியே ஆட்கள் காத்திருக்கிறார்கள். சென்னையின் டிரைவ் இன் உட்லண்ட்ஸ் போலவே இருந்தது.

காபி ஹவுஸ் உள்ளே புகழ்பெற்ற எழுத்தாளர்களின் உருவப்படங்களை வரைந்திருக்கிறார்கள். கையில் புத்தகங்களும் வந்து சேர்ந்த இளைஞர் பட்டாளம் எங்கள் அருகில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்கள் இங்கே வந்து அமர்ந்து முழுத்திரைக்கதையினையும் எழுதிவிடுவார்கள் என்றார்கள். கொல்கத்தாவின் மற்ற இடங்களுடன் ஒப்பிடும் போது இங்கு வழங்கப்பட்ட காபி நன்றாகவே இருந்தது. இங்கேயே புத்தக வெளியீடுகள் நடப்பது உண்டு. மாலை நேரம் வந்திருந்தால் இந்த இடம் புகைமண்டலமாக இருந்திருக்கும். அவ்வளவு சிகரெட் பிடிப்பார்கள் என்றார் உடன்வந்த ரவி.

தமிழகத்தோடு ஒப்பிடும் போது வங்கமொழி நூல்களின் அச்சாக்கம் சிறப்பாக இல்லை. விலையும் அதிகமாக உள்ளது. தமிழ்பதிப்புத் துறை அச்சாக்கத்தில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. குறிப்பாகப் புத்தக உருவாக்கத்திலுள்ள நேர்த்தியும் அழகும் சர்வதேச தளத்தில் உள்ளது. இதனைப் பிற மாநிலங்களில் வெளியிடப்படும் நூல்களைக் காணும் போது நன்றாக உணர முடிகிறது.

ஆங்கில இலக்கியம் சார்ந்த நூல்களை மட்டுமே விற்கும் பழைய புத்தகக் கடை ஒன்றினைக் கண்டேன். அதனை நடத்துகிறவர் ஆங்கிலப் பேராசிரியர் போல அத்தனை நூல்களையும் பட்டியிலிட்டு விவரித்தார். தமிழ்நாட்டினை விடவும் வங்கத்தில் சிறார்களுக்கு நிறையப் புத்தகங்கள் அழகிய வண்ணத்தில் வெளியிடப்படுகின்றன. நேரடியாக வங்கமொழியில் வெளியான காமிகஸ் புத்தகங்களைக் கூடக் காண முடிந்தது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பழைய புத்தகச் சந்தை இதுவென்றார்கள். நடக்க நடக்க முடிவற்று கடைகள் வந்து கொண்டேயிருப்பது அதனை உணரச் செய்தது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 14, 2025 21:19

சுவை புதிது

எரிக் பெஸ்னார்ட் இயக்கிய Delicious ஒரு சமையற்கலைஞரின் வாழ்க்கையை விவரிக்கிறது. பாரீஸின் முதல் உணவகமாகக் கருதப்படும் Delicious உருவான விதம் பற்றியதாகக் கதை அமைந்துள்ளது. வரலாற்றுப்பூர்வமாக இது முதல் உணவகமில்லை. திரைக்கான கற்பனையில் உருவாக்கபட்டிருக்கிறது.

பிரான்சின் உயர்தட்டுவாழ்க்கையில் விருந்து மிகவும் முக்கியமானது. அதிகப்படியான உணவு என்பது அதிகாரத்தின் அடையாளமாகவும் அந்தஸ்தை வெளிப்படுத்த கூடியதாகவும் பிரபுக்கள் கருதினார்கள். அப்படிப்பட்ட ஒரு விருந்து தயாரிக்கபடுவதில் தான் படம் துவங்குகிறது.

வெள்ளிப்பாத்திரங்கள். கரண்டிகள், உணவுமேஜையில் செய்யப்படும் அலங்காரம், உணவு தயாரிக்கபடும் போது ஏற்படும் மணம், விருந்து பரிமாறப்படும் விதம் என உண்மையான விருந்துக்கூடத்திற்குள் நாமிருப்பது போன்ற நெருக்கத்தைப் படம் ஏற்படுத்துகிறது.

சமையல்காரர் பியர் மான்செரோன் திறமையானவர். ஆனால் தற்பெருமை மிக்கச் சாம்ஃபோர்ட் பிரபுவிடம் பணிபுரிகிறர். ஒரு நாள் பிரபு தனது விருந்தினர்களுக்காக ஆடம்பரமான இரவு உணவைத் தயாரிக்கும்படி உத்தரவிடுகிறார்.

மான்செரோனும் அவரது சமையற் குழுவும் நாற்பது விதமான உணவு வகைகளைத் தயாரிக்கிறார்கள். அதில் புதிய ருசியாக உருளைக்கிழங்கு துண்டுகள் மற்றும் ட்ரஃபிள்ஸுடன் கலக்கப்பட்ட பேஸ்ட்ரியை உருவாக்குகிறார். அதற்கு தி டெலிசியஸ் என்று பெயரிடுகிறார். புதிய உணவின் ருசியை அவர்கள் ஏற்றுக் கொண்ட போதும் பொய்யாகப் பாராட்டுகிறார்கள். உருளைக்கிழங்கு பன்றிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் உணவு என்கிறார் ஒரு விருந்தினர். அதைப் பியர் ஏற்கவில்லை.

விருந்தினர்களின் முன்பாகவே தனது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார். இச்செயல் விருந்தினர்களைக் கோபம் கொள்ள வைக்கிறது. பியர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சாம்ஃபோர்ட் உத்தரவிடுகிறார். பியர் மறுக்கவே, அவர் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்படுகிறார்.

தனது தந்தை நடத்திய பழைய விடுதிக்கு திரும்பும் பியர் அதனைச் சரிசெய்து புதிய பயண விடுதியாக மாற்றுகிறார். பயணிகளின் தேவைகளை இலவசமாகச் செய்து கொடுக்கிறார்.

பியரின் மகன் உருவாகிவரும் சமூக மாற்றங்களை கவனிக்கிறான். பிரபுகளுக்கு எதிரான மனநிலை உருவாகி வருவதை அறிந்து கொள்கிறான்.

ஒரு நாள் அங்கே வரும் இளம்பெண் லூயிஸ் பியரிடம் உதவியாளராகப் பணியாற்ற ஆசைப்படுகிறாள். பியர் அதை ஏற்கவில்லை.. அவள் யார், எதற்காக அங்கே வந்து சேர்ந்தாள் என்பது கொஞ்சம் கொஞ்சமாக விவரிக்கபடுகிறது.

ஆரம்பத்தில் அவளை ஏற்க மனமில்லாத பியர் கொஞ்சம் கொஞ்சமாக அவளைப் புரிந்து கொள்கிறார். அவர்கள் இணைந்து புதியதொரு உணவகத்தை நடத்த திட்டமிடுகிறார்கள். அதை எவ்வாறு நடத்துகிறார்கள் என்பதே படத்தின் பிற்பகுதி.

உணவகம் முதன்முதலில் எப்படி ஆரம்பிக்கபட்டது. உணவிற்கான கட்டணம் மற்றும் உணவுப்பட்டியலை எழுதிப்போடும் முறை எவ்வாறு அறிமுகமானது என்பதையும் இப்படத்தில் நேரடியாக காணுகிறோம்

உணவு தயாரிப்பதும் ஒரு கலையே. சமையற்கலையினையும் சமையற்கலைஞர்களையும் பற்றி நிறைய திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இப்படம் முதல் உணவகத்தின் கதையை விவரிப்பதோடு பிரெஞ்சுப் புரட்சியால் ஏற்பட்ட கொந்தளிப்புகளையும் கவனப்படுத்துகிறது. ஜீன்-மேரி ட்ரூஜோவின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது.

இன்று உலகமே கொண்டாடும் உருளைக்கிழங்கு ஒரு காலத்தில் சாப்பிட உகந்த ஒன்றாகக் கருதப்படவில்லை என்ற உண்மையைப் படம் சுட்டிக் காட்டுகிறது. சமையற்கலையின் வழியாகப் பிரெஞ்சு சமூகத்தின் கடந்தகால நிகழ்வுகளையும் வரலாற்றையும் படம் அழகாக வெளிப்படுத்துகிறது.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 14, 2025 00:41

May 13, 2025

சாந்திநிகேதனின் மணியோசை

கொல்கத்தாவிலிருந்து மூன்றரை மணி நேர தூரத்திலுள்ளது சாந்திநிகேதன். இந்தியாவின் தனித்துவமிக்கக் கல்வி வளாகத்தைத் தாகூர் உருவாக்கியிருக்கிறார். கலைகளும் இசையும் இலக்கியமும் அனைத்து மொழிகளும் அறிவியலும் பொருளாதாரமும் கற்றுக் கொடுக்கபடும் சர்வதேசக் கல்வி நிலையமாகச் செயல்படுகிறது சாந்தி நிகேதன். இன்று அதன் பெயர் விஸ்வபாரதி பல்கலைகழகம்.

இயற்கையான சூழல். மரத்தடி வகுப்பறைகள். சிறந்த ஆசிரியர்கள். பெரிய கலைக்கூடங்கள். மரபும் நவீனமும் இணைந்த கல்விமுறை, இங்கே வடகிழக்கிலிருந்து நிறைய மாணவர்கள் வந்து கல்வி பயிலுகிறார்கள். சீன. ஜப்பானிய, கொரிய மாணவர்களும் கூட இங்கே வந்து பயிலுகிறார்கள். சாந்தி நிகேதனில் நடைபெறும் மேளா மிகவும் புகழ்பெற்றது.

கொல்கத்தாவிலிருந்து காரில் அதிகாலையில் புறப்பட்டேன். கொல்கத்தாவை விட்டு வெளியேறி போல்பூர் செல்லும் பர்த்வான் நெடுஞ்சாலையைப் பிடிப்பதற்கே ஒரு மணி நேரமாகிவிட்டது. புறவழிச்சாலைகள் யாவும் ஒன்று போலவேயிருக்கின்றன. சாலையோரம் மண்வீடுகளைக் காண முடிந்தது. சில இடங்களில் பனங்கூட்டங்கள் தொலைவில் தென்பட்டன.

நமது நெடுஞ்சாலையோர வாழ்க்கை போலச் சாலையோர விற்பனையாளர்களைக் காண முடியவில்லை. பெட்ரோல் நிலையங்களும் கூட அரிதாகவே தென்பட்டன. கார் டிரைவர் கூகுள்மேப் உதவியோடு வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தார். வழக்கம் போலவே அந்த மேப் தவறான பாதையைக் காட்டவே வழிமாறி வேறு பாதையில் பயணிக்கத் துவங்கிவிட்டோம்.

காரோட்டி ஒரு இடத்தில் காரை நிறுத்தி மெக்கானிக் ஷாப் ஒன்றில் பர்த்வான் செல்லும் வழியை விசாரித்தார். நாங்கள் வந்த பாதையிலே திரும்பி போய்ப் பாலத்தின் அடியில் சென்று வலதுபுறம் போக வேண்டும் என்று மெக்கானிக். ஆலோசனை சொன்னார் அதன்படி காரைத் திருப்பினோம். பர்த்வான் பகுதியில் முந்திய நாள் மழைபெய்திருக்கிறது. ஆகவே காற்றில் ஈரமிருந்தது. வானில் நிறைய மேகக்கூட்டங்களைக் காண முடிந்தது.

தமிழகத்தின் நாற்கரசாலையைப் போல அதிக வாகன நெருக்கடியில்லை. ஆனால் சீரற்ற சாலைகள். குறுகலான பாலத்தின் அடியினைக் கடந்து செல்ல வேண்டிய தேவை. பெயர்பலகைகள் இல்லாத சாலைத்திருப்பங்கள் எனக் குழப்பமாக இருந்தது.

இரவில் திரும்பி வரும் போது உண்மையான நெருக்கடியைக் கண்டோம். வரிசை வரிசையாக லாரிகள். கார்கள் அதுவும் ஒவ்வொரு சிக்னலிலும் அரைமணி நேரம் காத்திருக்க வேண்டிய நீண்ட வரிசை. காலை பார்த்த அந்தச் சாலை தானா என வியப்பாக இருந்தது.

சாந்தி நிகேதனைப் பற்றி நிறைய எழுதப்பட்டிருக்கிறது. அங்கே பணியாற்றிய ஒவியர்கள். இசைக்கலைஞர்கள். கல்வியாளர்கள் தங்கள் நினைவுகளை எழுதியிருக்கிறார்கள். தாகூரும் தனது நினைவுக்குறிப்பில் எழுதியிருக்கிறார். சாந்திநிகேதனும் ஸ்ரீநிகேதனும் தாகூரின் இரண்டு சிறகுகள் எனலாம்.

மேற்கு வங்க மாநிலத்தின் பிர்பூம் மாவட்டத்தில், போல்பூர் எனுமிடத்தில் சாந்திநிகேதன் அமைந்துள்ளது. இன்றும் அது கிராமப்பகுதியே. தாகூர் குடும்பம் பிரம்மசமாஜத்தைச் சார்ந்தது. ஆகவே தாகூரின் தந்தை தேவந்திரநாத் இயற்கையோடு இணைந்த ஆசிரமம் ஒன்றை உருவாக்க விரும்பினார். அதற்காக அவர் வாங்கிய இடமே சாந்தி நிகேதன்.

ஏழு ஏக்கர் நிலத்தில் தேபேந்திரநாத் தாகூர் தியானத்திற்காக ஒரு சிறிய ஓய்வறையைக் கட்டினார், மேலும் 1888 ஆம் ஆண்டில் பிரம்மவித்யாலயா மற்றும் சிறிய நூலகத்தை உருவாக்கினார். 1925 முதல் இந்தப் பள்ளி பாத-பவனா என்று அறியப்பட்டது.

பூபந்தங்கா என்ற கிராமம் தான் சாந்திநிகேதனாக உருமாறியது. பூபந்தங்கா என்பது வழிப்பறிக் கொள்ளைக்காரனின் பெயர். அவன் மனம்மாறி சரண் அடைந்த காரணத்தால் அந்தப் பெயர் ஏற்பட்டது என்கிறார்கள்.

சாந்திநிகேதனின் தெற்கு எல்லை நெல் வயல்களின் பரந்த சமவெளியில் இணைகிறது. ஒரு பக்கம் காடு. சுற்றிலும் விவசாயப் பண்ணைகள். சாந்தி நிகேதனுள் நிறைய மரங்கள் காணப்படுகின்றன. கரடுமுரடாக இருந்த இந்தப் பகுதியினைத் திருத்தி வெளியில் இருந்து கொண்டு வரப்பட்ட வளமான மண்ணால் அழகான தோட்டங்களை உருவாக்கிறார்கள்.

சிற்பி ராம்கிங்கர் பைஸ் உருவாக்கிய அழகிய சிற்பங்கள் இயற்கையோடு இணைந்து காணப்படுகின்றன. பேரழகான இச்சிற்பங்களை இயற்கையின் அங்கமாகவே பார்வையாளர்கள் கருதுகிறார்கள். குறிப்பாகச் சந்தால் குடும்பம் ஒன்றின் சிற்பம் மிகவும் அழகாக உருவாக்கபட்டிருக்கிறது.

சாந்திநிகேதனில் மழைக்காலத்தின் முதல் நாளில் இன்றும் வெறுங்காலுடன், குடை இல்லாமல், மாணவர்கள் வருகை தந்து மழையைக் கொண்டாடுகிறார்கள்.

சாந்தி நிகேதன் ஆரம்பத்தில் சிறிய பள்ளியாக விளங்கியது. நோபல் பரிசு பெற்ற பின்பு தாகூர் இதனை இந்தியாவின் உயரிய கல்வி மையமாக உருவாக்க முனைந்தார். ஆகவே மொழிகளுக்கான மையம், கலைப்பள்ளி, இசைப்பள்ளி. எனப் பல்வேறு துறைகளை உருவாக்கி அதற்காக நந்தலால் போஸ் போன்ற புகழ்பெற்ற ஒவியக்கலைஞர்கள். இசைக்கலைஞர்கள், சிற்பிகள், மொழியியல் அறிஞர்களை வரவழைத்துப் பாடம் கற்றுதரச் செய்தார். கேரளாவிலிருந்து கதகளிகலைஞரை வரவழைத்து அக்கலையைக் கற்பிக்கச் செய்திருக்கிறார்.

சாந்திநிகேதனுள் தாகூரின் பூர்வீக வீடு. பருவ காலத்திற்கு ஏற்ப அவர் தங்குகின்ற வேறு வேறு வடிவமைப்பில் கட்டப்பட்ட வீடுகள். அவரது ரோஜா தோட்டம், தியான மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. கலாபவன் என்ற பெரிய ஓவியக்கூடம் மற்றும் அச்சுக்கூடம், நூலகம் அமைந்துள்ளது. நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் வீடும் சாந்திநிகேதனுள் இருக்கிறது.

தேபேந்திரநாத் தாகூர் மற்றும் தாகூர் தியானம் செய்த சாத்திம் மரங்களின் கீழ் உள்ள இடம் அப்படியே பாதுகாக்கபட்டு வருகிறது. விஸ்வபாரதியின் எல்லா முக்கிய நிகழ்வுகளும் இங்கே தான் துவங்குகின்றன. இந்தப் பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஏழு இலைகள் கொண்ட சாத்திம் மரத்தின் கிளையே பட்டமாக அளிக்கபடுகிறது

பழைய கட்டிடங்கள் எதையும் மாற்றாமல் அப்படியே பாதுகாத்து பராமரித்து வருகிறார்கள். சாந்திநிகேதனை ஒருவர் முழுமையாகப் பார்ப்பதற்கு இரண்டு மூன்று நாட்கள் தேவைப்படும். அத்தனை சிறப்புப் பகுதிகள் இருக்கின்றன.

குழந்தைகளுக்கு இயற்கையோடு இணைந்த கல்வி வழங்குதல் இதன் தனிச்சிறப்பாகும் இதற்காகத் திறந்தவெளி வகுப்பறைகள் காணப்படுகின்றன. மரத்தடியில் அமைக்கபட்ட அந்த வகுப்பறைகளைக் காணுவது மகிழ்ச்சி அளித்தது. எனது சிறுவயதில் அப்படி ஒரு வேப்பமரத்தடி வகுப்பில் படித்திருக்கிறேன்.

ஸ்ரீநிகேதன் என்பது கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படும் பகுதியாகும். அங்கே இயற்கை வேளாண்பொருட்கள். கலைப்பொருட்கள் மற்றும் கைத்தறிப்பொருட்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

தாகூரின் ஐந்து வீடுகள் கூட்டாக உத்தராயண வளாகம் என்று அழைக்கப்படுகிறது, உபாசனா கர் என அழைக்கப்படும் பிரார்த்தனை மண்டபம் பெல்ஜிய கண்ணாடிகளால் உருவாக்கபட்டது. இது சாந்திநிகேதனின் மிகவும் அழகிய இடங்களில் ஒன்றாகும்

தாகூரின் பூர்வீக இல்லம் இப்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டிருக்கிறது. அங்கே அவருக்கு அளிக்கபட்ட பரிசுப்பொருட்கள் யாவும் காட்சிக்கு வைக்கபட்டிருக்கின்றன. தாகூர் வரைந்த ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. ஜப்பானியக்கலைப்பொருட்கள். சீனக்கலைப்பொருட்கள் கண்ணாடி அலமாரி முழுவதும் காணப்படுகின்றன. இன்னொரு அலமாரியில் லியோ டால்ஸ்டாயின் டெத்மாஸ் காணப்படுகிறது.

இது 1910 ஆம் ஆண்டு லியோ டால்ஸ்டாய் இறந்தவுடன் அவரது முகத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பிளாஸ்டர் வார்ப்பாகும். ரஷ்ய சிற்பி செர்ஜ் மெர்குரோஃப் என்பவரால் இந்த முகமூடி உருவாக்கப்பட்டது. 1930 ஆம் ஆண்டுச் சோவியத் ஒன்றியத்திற்கு விஜயம் போது ரவீந்திரநாத் தாகூருக்கு இதனைப் பரிசாக வழங்கியிருக்கிறார்கள். தாகூர் டால்ஸ்டாயை (1828-1910) ஒருபோதும் சந்தித்ததில்லை என்றாலும், அவர் டால்ஸ்டாயின் புத்தகங்களை வாசித்திருக்கிறார். தாகூர் பதிமூன்று நாட்கள் சோவியத் ஒன்றியத்தில் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

இந்திய இலக்கியவாதிகளில் அதிக நாடுகளுக்குப் பயணம் செய்தவர் தாகூராகத் தான் இருக்கக் கூடும். நாம் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களைக் கொண்டாடுவது போல அர்ஜென்டினாவில் தாகூரைக் கொண்டாடுகிறார்கள்.

தாகூரின் ஆடைகள், அவரது கைத்தடி, பேனா, படைப்புகளின் கையெழுத்துப் பிரதிகள், அவர் பயன்படுத்திய காலணிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தாகூர் மிகவும் அழகான ஆடைகளை அணியக்கூடியவர். அவரது பயணத்தின் போது முப்பது பெட்டிகளில் உடைகள் கொண்டு செல்வார்களாம். அது போல அவர் ஹோமியோபதி மருந்து எடுத்துக் கொள்ளக்கூடியவர். அந்த மருந்துப்புட்டிகள் அங்கே காணப்படுகின்றன. தாகூரின் விதவிதமான மூக்குக் கண்ணாடிகள் காணப்படுகின்றன.

தாகூர் பயன்படுத்திய WBA 8689 எண் உள்ள செடான் கார் ஒன்று வெளியே காட்சிக்கு வைக்கபட்டிருக்கிறது. இந்தக் காரில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ் மற்றும் ஜெகதீஷ் சந்திர போஸ் போன்ற ஆளுமைகள் ஏறியிருக்கிறார்கள். 1938 ஆம் ஆண்டில் தாகூர் இரண்டு செடான் கார்கள் வாங்கியிருக்கிறார். ஒன்று கொல்கத்தாவிலும் மற்றொன்று சாந்தி நிகேதனிலும் பயன்படுத்தபட்டிருக்கிறது. அன்று ஒரு செடான் காரின் விலை £400.

தாகூர் எழுதிய கடிதங்களைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். அவரது கையெழுத்து அச்சிடப்பட்டது போலிருக்கிறது. தாகூருக்கு வழங்கப்பட்ட நோபல்பரிசு சில ஆண்டுகளுக்கு முன்பு திருடு போனது. அதைக் காவல்துறை உதவியோடு மீட்டார்கள். ஆகவே அவரது நோபல்பரிசு விருதின் நகல்வடிவத்தை வைத்திருக்கிறார்கள். அவரது கீதாஞ்சலி நூலின் முதற்பதிப்பை அங்கே காணலாம். தாகூர் நோபல் பரிசு பெறக் காரணமாக இருந்த கவிஞர் யேட்ஸ் மற்றும் கீதாஞ்சலி பற்றி எழுதிய கவிஞர் எஸ்ரா பவுண்ட் ஒவியங்களையும் இங்கே காண முடிகிறது.

விஸ்வபாரதி பல்கலைகழகத்தின் தமிழ்துறை தலைவராக இருப்பவர் முனைவர் செந்தில் பிரகாஷ். எனது நீண்டகால வாசகர். அவர் எனது வருகையை அறிந்து கொண்டு வரவேற்றுச் சாந்திநிகேதனைச் சுற்றிக்காட்டியதோடு சிறந்த மதிய உணவினையும் ஏற்பாடு செய்திருந்தார். எனது சிறுகதைகள். கட்டுரைகளை அவரது வகுப்பறையில் அறிமுகம் செய்துள்ளதாகவும் இடக்கை நாவலின் சில பகுதிகளை வங்கமொழியில் மொழிபெயர்த்து அறிமுகம் செய்துள்ளதாகவும் செந்தில் தெரிவித்தது மகிழ்ச்சி அளித்தது. அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்தேன்.

இந்தப் பயணத்தில் எங்களுடன் பிலிம் டிவிசன் ரவி உடன் வந்திருந்தார். நீண்டகாலம் கொல்கத்தாவில் வசிப்பவர். சென்னை திரைப்படக்கல்லூரியில் பயின்றவர். அவர் சாந்திநிகேதனின் பவுஷ்மேளாவைக் கண்டிருக்கிறார். புகழ்பெற்ற அந்தத் திருவிழா பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

பேராசிரியர் செந்திலுடன் வளாகத்திலுள்ள பசுமையான தோட்டங்கள், புகழ்பெற்ற சிற்பங்கள் மற்றும் ஓவியங்களைப் பார்வையிட்டேன். சாந்திநிகேதனின் முதல் மாணவர்களில் ஒருவரின் நினைவாகப் பெயரிடப்பட்ட சந்தோஷாலயா, இளம் மாணவர்களுக்கான விடுதியாகச் செயல்படுகிறது

வெண்கல மணி மற்றும் ஸ்தூபி போன்ற வடிவமைப்பைக் கொண்ட கண்டதாலாவைக் காட்டினார். அங்குள்ள மணி ஒலிப்பதன் வழியாகவே இன்றும் வகுப்பு முடிவதை அறிவிக்கிறார்கள் என்றார்.

சாந்திநிகேதனிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் கோபாய் ஆற்றின் கரையில் அமர் குடிர் அமைந்துள்ளது. இது ஒரு கூட்டுறவு சங்கம். இங்கே கலைப்பொருட்கள், உடைகள் மலிவு விலையில் விற்பனை செய்கிறார்கள்.

இந்த வளாகத்தில் பவுல் எனப்படும் கிராமிய இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சியைப் பார்த்தேன். மெய்மறக்கச் செய்யும் இசை.

சாந்திநிகேதனிலிருந்து கொல்கத்தா திரும்பி வரும் பயணத்திலும் வழிமாறிவிட்டோம். சின்னஞ்சிறிய கிராமச்சாலைகளில் கார் சென்றது. கிராமவாழ்க்கையில் பெரிய மாற்றமில்லை. வங்கநாவல்களில் படித்திருந்த கிராமத்தின் சாயலில் தானிருக்கிறது. தலைவர்களின் சிலைகள் மற்றும் சினிமா விளம்பரங்களை எங்கேயும் காண முடியவில்லை. சிற்றூர் ஒன்றின் தேநீர் கடையில் மண்கலயத்தில் தேநீர் அருந்தினோம். கத்திரிக்காயில் பஜ்ஜி போடுகிறார்கள். அதையும் ருசித்தேன்.

கொல்கத்தா நெடுஞ்சாலையைக் கண்டுபிடித்துச் சேர்வதற்கு நிறைய நேரமானது. அந்தச் சாலையில் கடுமையான வாகன நெருக்கடி. சிக்னலில் நின்றால் இன்னும் நேரம் அதிகமாகிவிடும் என ஏதேதோ குறுக்குவழிகளில் காரை செலுத்தினார்.

கொல்கத்தாவின் டான்குனி டோல் பிளாசா நெருங்கியதும் மாநகரின் ஒளிரும் விளக்குகள் கண்ணில் பட்டன, அப்போது போது தான் களைப்பை உணரத் துவங்கினேன். அன்றைய கனவில் நிறைய அன்னங்கள் நீந்தும் ஏரியைக் கண்டேன். ஒன்று இரண்டில்லை. நூற்றுக்கணக்கான அன்னங்கள் நீரில் நீந்துகின்றன. காலை கண்விழித்தபோது அந்தக் கனவைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்.. சாந்திநிகேதனில் எனது மனம் லயத்துப் போயிருந்தது. அதன் வெளிப்பாடு தான் இந்தக் கனவு போலும் என நினைத்துக் கொண்டேன்.

தாகூரின் சொந்த வாழ்க்கை துயரத்தின் இழைகளால் பின்னப்பட்டது. அவரது அம்மா சாரதா தேவி புகைப்படத்தை அருங்காட்சியத்தில் பார்த்தேன். அவர் பதினைந்து குழந்தைகளின் தாய். ஆகவே பிள்ளைகளைச் சரியாகக் கவனித்துக் கொள்ள முடியவில்லை. தாகூரின் 14 வது வயதில் அம்மா இறந்து போய்விட்டார். சிறுவயது முதலே தாயின் அன்பிற்காகத் தாகூர் ஏங்கியிருக்கிறார்.

தாகூரின் மனைவியும் இளவயதில் இறந்து போய்விட்டார். மிருணாளினி தேவி பத்து வயதாக இருந்தபோது ரவீந்திரநாத்தை மணந்தார். அப்போது தாகூரின் வயது 22. அவர்களுக்கு ஐந்து பிள்ளைகள். மிருணாளினி தேவி தனது 29வயதில் இறந்து போனார்.

காதம்பரி

சகோதரர் ஜோதிரிந்திரநாத் தாகூரின் மனைவி காதம்பரி தேவி. அவருக்கும் தாகூருக்கும் இடையில் ரகசியக் காதல் இருந்தது என்கிறார்கள். காதம்பரி 1884 இல் தற்கொலை செய்து கொண்டார். அது தாகூரின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. காதம்பரியின் நினைவாக நிறையக் கவிதைகள் எழுதியிருக்கிறார்.

தாகூரின் மகள் மதுரிலதா. இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டவள். பதினைந்து வயதில் அவளுக்குத் திருமணம் செய்துவைக்கபட்டது. காசநோயின் காரணமாகத் தனது 32வது வயதில் அவள் இறந்து போனாள். இப்படித் துயரத்தின் சுழிக்காற்றில் சிக்குண்டவராகவே தாகூர் வாழ்ந்திருக்கிறார்.

தாகூரின் Stray Birds மிகச்சிறந்த கவிதைத்தொகுப்பு. அந்தக் கவிதைகளில் அவரது அகம் முழுவதும் வெளிப்படுகிறது. துக்கத்தின் அணையா சுடரை அக்கவிதைகளில் காணமுடிகிறது.

தாகூர் நாடகப்பயிற்சி மேற்கொள்ளும் அறையினுள் நின்றிருந்தேன். அந்த நாடகக் காட்சிகள் உலகிலிருந்து மறைந்துவிட்டன. காலம் மாறிவிட்டது. ஆனாலும் தாகூரின் புகழ் மறையவில்லை. தாகூரின் இசையும் இலக்கியமும் கலைகளும் இன்று வங்கத்தின் பண்பாட்டு அடையாளமாக மாறியிருக்கின்றன. தலைமுறைகள் தாண்டியும் தாகூரின் பெயரை உச்சரித்துக் கொண்டேயிருக்கிறார்கள். அவரை வணங்குகிறார்கள். அதனைச் சாந்திநிகேதனில் கண்கூடாகவே காண முடிகிறது.

.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 13, 2025 02:39

May 11, 2025

குற்றமுகங்கள் 10 பூச்சா ஜக்காரி

1871ம் ஆண்டு மதராஸின் கார்டன் சாலையில் வசித்த பூச்சா ஜக்காரி கைது செய்யப்பட்ட போது அவரது வீட்டில் 1650 ஜோடி செருப்புகள் கைப்பற்றப்பட்டன. அத்தனையும் திருட்டுச் செருப்புகள். இத்தனை செருப்புகளைத் திருடிய போதும் ஜக்காரி தன் வாழ்நாளில் செருப்பு அணிந்ததில்லை.

ராபர்ட் லோகன் துரையின் குதிரை மீது வெற்றிலை எச்சிலைத் துப்பிவிட்டதற்காகவே அவரைக் கைது செய்தார்கள். அதன் பிறகே அவர் பதினெட்டு வருஷங்களாகச் செருப்பு திருடி வந்தவர் என்பது தெரிய வந்தது

கைக்குழந்தையை வைத்திருக்கும் பெண்ணைப் போல எப்போது தனது கையில் பூனையொன்றை வைத்திருப்பார் ஜக்காரி. அதனாலே அவரைப் பூச்சா ஜக்காரி என்று அழைத்தார்கள். எழுபது வயதிருக்கும் அடர்ந்த வெள்ளைதாடி வயிறு வரை விழுந்திருக்கும். வட்ட தலைக்குல்லா. இடது கையில் சிறிய மரப்பெட்டி, வலது கையில் பூனை. தூக்கத்தில் நடப்பவர் போன்ற மெதுவான நடை.

மதராஸின் எம்பயர் லாட்ஜ் வாசலில் அமர்ந்தபடி காதில் குரும்பு எடுக்கும் வேலையைச் செய்து வந்தார். இதற்காக ஒரு மரப்பலகையை வைத்திருப்பார். காது சுத்தம் செய்ய வருபவரை அந்தப் பலகையில் உட்காரச் சொல்லி தனது மரப்பெட்டியை திறந்து அதிலிருந்த மூன்று விதமான காது குடைப்பானை வெளியே எடுப்பார். எதிரிலிருப்பவர் காதை இழுத்துப் பிடித்துக் கொண்டு கிணற்றில் எட்டிப் பார்ப்பது போலப் பார்ப்பார். காது சுத்தம் செய்வதற்கு முன்பாக அவரது கையில் இரண்டு அணா காசினைக்  கொடுத்துவிட வேண்டும்.

அதன்பிறகே தனது குடைப்பானைக் கொண்டு காதிலுள்ள அழுக்குகளைச் சுத்தப்படுத்துவார். காதின் தோற்றம் தாயின் கர்ப்பத்திலுள்ள சிசுவைப் போன்றது. ஆகவே அதைப் பிறந்த குழந்தையைப் போலக் கையாள வேண்டும் என்பார்.

சில நேரம் குழந்தைகள் காதுக்குள் எறும்பு அல்லது பூச்சி புகுந்துவிடும். வலியில் துடித்துப் போய்விடுவார்கள். அப்போது சிறிய புட்டியில் வைத்திருந்த மஞ்சள் தைலத்தில் ஒரு சொட்டு விட்டு அந்த எறும்பை வெளியே எடுத்துவிடுவார். இதற்காக அவர் கட்டணம் வாங்குவதில்லை.

திருமணம் செய்து கொள்ளாத ஜக்காரி வைத்திருந்த பூனையின் பெயர் லோலி. அதன் கழுத்தில் சிவப்பு நிற துணிப்பட்டை ஒன்றை கட்டியிருப்பார். பூனைகளுக்கு ரகசிய வழிகள் யாவும் தெரியும். அவை ஒரு நாள் தன்னை சொர்க்க லோகத்திற்கு அழைத்துப் போய்விடும் என நம்பினார்.

பூச்சா ஜக்காரிக்கென நண்பர்களோ, உறவினர்களோ எவருமில்லை. அவரைத் திருடினாக்கியது பூனையே. தனக்குத் தேவையில்லாத ஜரிகைத்துணி, சோப் டப்பா, கிழிந்த தொப்பி, முட்டை ஒடு, மரக்கரண்டியை லோலி கொண்டு வந்து அவரது வீட்டில் போட்டது. தனக்குத் தேவையில்லாத ஒன்றை கொண்டு வருவதில் பூனை காட்டிய ஆர்வமே அவரைச் செருப்புத் திருடனாக்கியது.

கோவில்வாசலில் கழட்டிவிடப்பட்ட செருப்புகளில் விருப்பமானதைத் திருடிக் கொண்டு போய்விடுவார். அந்தப் பழக்கம் மெல்ல வளர்ந்து மக்கள் கூடும் இடங்களில் தனக்கு விருப்பமான செருப்பினைத் தேர்வு செய்து அதைத் திருடுவதைச் சவாலாகக் கருதினார். அப்படி ராலே துரையின் மனைவி செருப்பைத் திருடியிருக்கிறார். பார்சி வணிகரான ருஸ்தம் அணியும் வெள்ளைச் செருப்பைத் திருடியிருக்கிறார். கப்பல் மாலுமிகள் அணியும் விசேச தோல்செருப்புகளைக் கூட திருடியிருக்கிறார்.

தனது வீட்டில் திருடிய செருப்புகளைத் துணி காயப்போடுவது போல ஒரு கொடிக்கயிற்றில் தொங்க விடுவார். செருப்புகளின் எண்ணிக்கை அதிகமானவுடன் மரப்பெட்டி ஒன்றை செய்து அதில் போட்டு வைக்கத் துவங்கினார். சில நாட்கள் அந்தக் காலணிகளை வைத்து விசித்திரமான விளையாட்டுகளை விளையாடினார்.

பெண்கள் அணியும் ரோஜா நிறக் காலணியில் ஒன்றையும் கறுப்பு நிறமுள்ள ஆண்கள் அணியும் காலணி ஒன்றையும் சேர்த்து நடனமாடச் செய்வார். இரண்டு காலணிகளுக்குள் திருமணம் செய்து வைப்பார். ஒன்றின்மீது ஒன்றாகக் காலணியை அடுக்கிக் கோபுரம் செய்வார். தனக்கு மிகவும் பிடித்த காலணிகளுக்குச் செல்லப் பெயர் கூட வைத்துக் கொண்டிருந்தார். இந்த வேடிக்கைகள் அவரை மிகவும் மகிழ்ச்சி அடையச் செய்தன.

செருப்புத் திருடுவதைப் பெரிய குற்றமாக அவர் நினைக்கவில்லை. பெரும்பாலும் செருப்பைத் திருட்டு கொடுத்தவர்கள் தன்னைவிட்டுப் பாவம் நீங்கிவிட்டதாகவே கருதினார்கள். ஆனால் வெள்ளைக்கார நீதிபதிகளும் ராணுவ அதிகாரிகளும் அப்படி நினைக்கவில்லை. அதிலும் வெள்ளைக்காரச் சீமாட்டிகள் தங்கள் செருப்பு திருடு போனதை மன்னிக்க முடியாத குற்றமாகக் கருதினார்கள்.

ஒரு நாள் எம்பயர் லாட்ஜ் வாசலில் வேலையில்லாமல் பூச்சா ஜக்காரி வெற்றிலை போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தார். எச்சிலைத் துப்புவதற்காக எழுந்து கொள்ள முயன்ற போது கால்தடுமாறவே. பக்கத்தில் நின்றிருந்த லோகன் துரையின் குதிரை மீது எச்சிலைத் துப்பிவிட்டார். அதை யாரும் கவனிக்கவில்லை. ஆனாலும் அவருக்குக் கைகால்கள் நடுங்கியது. அடிவயிற்றைக் கலக்கிக் கொண்டு வந்தது. அவசரமாகத் தனது வீட்டிற்கு நடக்கத் துவங்கினார். அன்று மாலையே இரண்டு காவலர்கள் அவரைக் கைது செய்ய வந்திருந்தார்கள். அப்போது தான் அவர் ஒரு செருப்புத் திருடர் என்பது கண்டுபிடிக்கபட்டது

நீதிமன்றத்தில் பூச்சா ஜக்காரி தனது திருட்டை ஒத்துக் கொண்டதோடு சிறையில் தன்னோடு பூனையை வைத்துக் கொள்ள அனுமதிக்கும்படி கேட்டார். நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை. பூச்சா ஜக்காரி சிறையில் அடைக்கபட்டார்.

ஆனால் அதன்பிறகு விசித்திரமான நிகழ்வு உருவானது. தங்கள் துரதிருஷ்டத்திலிருந்து விடுபடுவதற்காக மக்கள் பழைய செருப்புகளைப் பூச்சா ஜக்காரி வீட்டு ஜன்னல் வழியாகவும், கூரையின் மீதும் எறிய துவங்கினார்கள். அந்த வீடு பழைய செருப்புகளால் நிறைந்து போனது. பாவம் அந்தப்பூனை, வீசி எறியப்படும் செருப்புகளுக்குப் பயந்து அந்த வீட்டிற்குத் திரும்ப வரவேயில்லை.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 11, 2025 05:13

May 10, 2025

பியர் கிரிபாரியின் கதைகள்

ஒரு உருளைக்கிழங்கின் காதல் கதை என்றொரு சிறார்கதையைப் பிரெஞ்சு எழுத்தாளர் பியர் கிரிபாரி (Pierre Gripari) எழுதியிருக்கிறார். அக்கதையில் ஒரு சிறுவன் தனது வீட்டின் சமையலறையிலிருந்து ஒரு உருளைக்கிழங்கைத் திருடி, அதன் முகத்தைக் கத்தியால் செதுக்குகிறான். இதனால் உருளைக்கிழங்கிற்குக் கேட்கவும் பேசவும் பார்க்கவும் திறன் ஏற்படுகிறது.

பேசத் தெரிந்த அந்த உருளைக்கிழங்கு தான் வெறும் உருளைக்கிழங்காக நடத்தப்படுவதை விரும்பவில்லை. தனக்கெனத் தனியே வாழ்க்கை இருப்பதாக நம்புகிறது. சிறுவனின் வீட்டைவிட்டு வெளியேறி உடைந்து கிடந்த கிதார் ஒன்றை வழியில் சந்திக்கிறது. கிதாரும் உருளைக்கிழங்கும் நண்பர்களாகிறார்கள்.

அவர்களை நாடோடி ஒருவன் அடையாளம் கண்டு சர்க்கஸிற்கு விற்றுவிடுகிறான். அங்கே இரண்டும் இணைந்து இசை நிகழ்ச்சி நடத்துகின்றன. உருளைக்கிழங்கும் கிடாரும் சர்க்கஸின் நட்சத்திரங்களாகின்றன ஒரு நாள் பணக்கார சுல்தான் அழகி உருளைக்கிழங்கினை அடைய ஆசைப்படுகிறார். விலைக்கு வாங்குகிறார். இதனால் கிதார் வேதனையடைகிறது. உருளைக்கிழங்கின் வாழ்க்கை என்னவானது என்பதைக் கதையின் முடிவு விவரிக்கிறது. உருளைக்கிழங்கின் கேள்விகள் வழியாக அழகு பற்றிய நமது பார்வையை கிரிபாரி மாற்றுகிறார்.

கிரேக்க தந்தைக்கும் பிரெஞ்சு தாயிற்கும் மகனான 1925 ஜனவரி 7, இல் பியர் கிரிபாரி பாரிஸில் பிறந்தார். நுரையீரல் பாதிப்பு காரணமாக டிசம்பர் 23, 1990 இல் மரணமடைந்தார். இளம் வயதில் பெற்றோரின் விவாகரத்தைத் தொடர்ந்து அவரது அன்னையால் வளர்க்கப்பட்டார்.

சார்த்தரின் வழிகாட்டுதலின் கீழ் சோர்போன் பல்கலைகழகத்தில் கிரிபாரி தத்துவம் பயின்றார். பின்பு சில ஆண்டுகள் அங்கே பேராசிரியராகத் தத்துவத்தைக் கற்பித்தார். 1950கள் மற்றும் 1960களில் நாடகங்கள், சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுதினார். ஆனால் அது பெரிய வெற்றியை அடையவில்லை. 1970 களின் பிற்பகுதியில் அவரது சிறார் நூல்கள் புகழ்பெறத் துவங்கின. இவர் வசித்த ப்ரோகா (Rue Broca). வீதியினைக் கதைக்களமாகக் கொண்டு நிறையக் கதைகளை எழுதியிருக்கிறார். இன்று அந்த வீதியில் அவரது கதையில் வரும் கதாபாத்திரங்களை ஓவியமாக வரைந்திருக்கிறார்கள். அவரது வீடு நினைவில்லமாக மாற்றப்பட்டிருக்கிறது.

பியர் கிரிபாரியின் கதைகளில் வெளிப்படும் பகடி நிகரற்றது. தேவதைக்கதைகளைத் தலைகீழாக மாற்றி நவீன சூழலில் நடப்பது போல எழுதுகிறார். அவர் வசித்த ப்ரோகா வீதி பல்வேறு கலாச்சார மக்கள் ஒன்றிணைந்து வாழ்ந்த பகுதி என்பதால் அவரது கதைகளிலும் பல்லினப் பண்பாடு வெளிப்படுகிறது- வாரம் ஒரு நாள் அந்த வீதியில் உள்ள சிறார்களை வரவழைத்து ஒரு கதை சொல்லி புதிய கதைகளைச் சொல்வதாக எழுதியிருக்கிறார். அந்த கதை சொல்லி வேறு யாருமில்லை. கிரிபாரி தான்.

அவரது எழுத்தில் சாத்தானும். சூனியக்காரியும், அரக்கனும். பூதங்களும் புதிய உருவம் கொள்கிறார்கள். சமகால நிகழ்வுகளால் அலைக்கழிக்கபடுகிறார்கள். கடவுளும் வீட்டுப்பாடம் எழுதுகிறார். அரக்கன் ரயில் நிலையத்தில் காத்திருக்கிறான். வியப்பூட்டும் அவரது கற்பனையால் கதையை வளர்த்து எடுத்துச் செல்லும் விதம் பிரமிக்க வைக்கிறது. குறிப்பாக கதையில் வரும் உரையாடல்கள். சிறார்களுக்கு புரியும் வகையில் எளிமையாக எழுதப்பட்டிருந்த போதும் அதன் ஆழ்ந்த பொருளும் தத்துவார்த்த வெளிப்பாடும் சிறப்பாக உள்ளன.

இவரது Good Little Devil சற்றே நீண்ட கதை. இதில் நரகத்தில் வசிக்கும் அழகான குட்டிசாத்தான் ஒன்று தான் ஏன் கொம்புடன், கெட்டவனாகக் கருதப்படுகிறோம் என்று கவலைப்படுகிறது. பள்ளிக்கூடம் சென்று ஒழுங்காகப் படிக்கிறது. மற்ற குட்டிசாத்தான்களைப் போல மோசமாகப் பேசுவதோ, சண்டையிடுவதோ கிடையாது. ஆசிரியர் சொன்ன வீட்டுப்பாடங்களைச் சரியாகச் செய்து முடிக்கிறது.

தன்னுடைய பிள்ளை இப்படிக் கெட்டுப்போகிறதே என அதன் அப்பா அம்மா சாத்தான்கள் கவலைப்படுகிறார்கள். நல்ல சாத்தான் என்று பெயர் வாங்க மாட்டான் என்று அப்பா வருந்துகிறார். ஏன் வகுப்பில் எந்தத் துஷ்டத்தனமும் செய்வதில்லை என அம்மா கடிந்து கொள்கிறாள்.

அந்தக் குட்டிசாத்தானை எங்கே அனுப்பினாலும் பண்பாக நடந்து கொள்கிறது. அடுத்தவர் மீது அன்பு செலுத்துகிறது. அதனிடம் துளி கூடத் தீமையைக் காண முடியவில்லை. பாரிஸ் பெருநகரத்திற்கு அந்தக் குட்டிச்சாத்தான் வருகை தருகிறது. அதன் நெருக்கடிகளுக்குள் அன்பை யாசிக்கிறது. போப்பினைச் சந்திக்க ரோம் நகரம் செல்கிறது

இப்படியாகத் தனது நீண்ட பயணத்தின் முடிவில் சொர்க்கத்தின் கதவைத் தட்டுகிறது. சொர்க்கத்தின் காவலாளியால் நம்ப முடியவில்லை. ஆனால் அந்தக் குட்டிசாத்தான் எந்தப் பாவமும் செய்யவில்லை. நன்மையை மட்டுமே செய்து வருகிறது என்ற காரணத்தால் அதைக் கடவுளைக் காணுவதற்கு அனுமதி அளிக்கிறான். கடவுளும் அதற்குப் பரிட்சை வைக்கிறார். அதுவும் கணிதப்பரிட்சை. பியர் கிரிபாரியின் இக்கதை அவரது காலகட்ட அரசியலை. சமய அதிகாரத்தைக் கேலி செய்கிறது. கடவுளும் குட்டிச்சாத்தானும் பேசிக் கொள்ளும் இடம் அழகாக எழுதப்பட்டிருக்கிறது.

சிவப்புச் சாக்ஸ் அணிந்த அரக்கன் கதையில் எப்போதும் பிரகாசமான சிவப்புச் சாக்ஸ் அணிந்திருந்த ஒரு அரக்கன் நிலத்தடியில் வசிக்கிறான். பிரம்மச்சாரியாக வாழும் அவன் திருமணம் செய்து கொள்ள வேண்டிப் பெண் தேடுகிறான். இதற்காக ஒரு நாள் பூமியை துளைத்துக் கொண்டு வெளியே வருகிறான்.

தனது வீட்டில் வேக வைத்த முட்டைகளைச் சாப்பிட தயாரான மிரியேல் என்ற இளம் பெண்ணின் முன்பாகத் தோன்றுகிறான். அவள் பயந்துவிடுகிறாள். பார்த்த மாத்திரம் அவளைக் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் அரக்கன் சொல்கிறான். அவள் சம்மதிக்கவில்லை. ஆகவே பாதிரியை சந்தித்துத் தனது விருப்பத்தைச் சொல்கிறான்.

அவர் உனது உருவம் மிகப் பெரியது. ஆகவே தேவாலயத்திற்குள் நுழைய முடியாது. உன்னுடைய உருவம் சுருங்க வேண்டும், அதன்பிறகு தான் கல்யாணம் செய்ய முடியும் என்கிறார்.

அதற்காக அரக்கன் ஒரு சீன மந்திரவாதியை தேடி பயணம் செய்கிறான் அந்த மந்திரவாதியோ ரோமிற்குப் போய்ப் போப்பை பார்க்கும்படி ஆலோசனை சொல்கிறான்.

முடிவில் அரக்கன் ஒரு மனிதனைப் போல உருவத்தில் சிறியவனாகிறான். இப்போது அவனிடமிருந்த அதிசய சக்திகள் யாவும் மறைந்துவிடுகின்றன. ஊர் திரும்ப ரயிலில் போக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அவனிடமோ பணமில்லை. கண்ணீர் விடுகிறான். அரக்கனின் திருமணம் என்னவாகிறது எனக் கதை விரிகிறது. இதில் வரும் அரக்கன் அழுக்கான தனது காலணியை அணிந்து கொண்டே அலைகிறான். காதலின் பொருட்டு அல்லாடுகிறான்.

அவரது வேறு ஒரு கதையில் ஒரு இளவரசன் கடற்கன்னியைக் காதலிக்கிறான். . இன்னொரு கதையில் மொழிபெயர்ப்பாளரான எலியின் உதவியுடன் மாயமீன்களைத் தேடுகிறார்கள். மற்றொரு கதையில் தனது சாவிற்குப் பிறகும் பேயாக வந்து தங்க நாணயங்களை எண்ணிக் கொண்டிருக்கிறான் ஒரு பணக்காரன். இப்படியாக விசித்திரங்கள் நிரம்பிய பியர் கிரிபாரியின் ப்ரோகா தெருக் கதைகள் மறக்கமுடியாதவை. வாசிக்கும் நமது வயதையும் மறையச் செய்யக்கூடியவை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 10, 2025 02:50

May 9, 2025

அலிப்பூர் சிறை அருங்காட்சியகம்

சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்தியாவின் முக்கியத் தலைவர்கள் சிறைவைக்கபட்டிருந்த கொல்கத்தாவின் அலிப்பூர் மத்திய சிறைச்சாலை தற்போது மியூசியமாக மாற்றப்பட்டிருக்கிறது. அதனைக் காணுவதற்காகச் சென்றிருந்தேன்.

15.2 ஏக்கர் பரப்பளவில் உள்ளது சிறைச்சாலை. செங்கல்-சிவப்பு சுவர்களால் ஆன கட்டிடங்கள். பதினெட்டு அடி உயர சுற்றுச்சுவர், வளாகத்தினுள் நிறைய மரங்கள். சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்படங்கள். வரலாற்றின் சாட்சியமாக உள்ள தூக்குமேடை, சுதந்திரப் போராட்டகால நாளிதழ் செய்திகள், ஒவியங்களைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.

நேரு. நேதாஜி, பி.சி. ராய், சி.ஆர். தாஸ், கவிஞர் காஸி நஸ்ருல் இஸ்லாம் அடைத்து வைக்கபட்ட அறைகளைப் பார்வையிட்டேன். சிறையினுள் தலைவர்கள் நாற்காலியில் அமர்ந்திருப்பது போலச் சிலை வடித்திருக்கிறார்கள். உறுதியான கற்சுவர்கள். இரும்புக்கதவுகள். அதன் துருப்பிடித்த தாழ்ப்பாள். கறைபடிந்த தரை யாவிலும் காலம் உறைந்திருக்கிறது.

சரித்திரப் புத்தகங்களில் படித்திருந்த அலிப்பூர் சதிவழக்கும் அரவிந்தரும் நினைவில் வந்தபடி இருந்தார்கள். இந்தச் சிறைச்சாலையின் வரலாறு கண்ணீரால் எழுதப்பட வேண்டியது.

ஜனவரி 1930 முதல் செப்டம்பர் 1930 வரை இங்கே நேதாஜி சிறை வைக்கபட்டிருந்திருக்கிறார். அது போலவே பிப்ரவரி 17 முதல் மே 7, 1934 வரை நேரு சிறையில் அடைக்கபட்டிருந்தார். அவரைப் பார்ப்பதற்காக இந்திராகாந்தி வந்து அமரும் மரத்தடியில் இந்திரா காந்தியின் சிலையினையும் அமைத்திருக்கிறார்கள்.

1757 ஆம் ஆண்டு நடைபெற்ற பிளாசிப் போருக்குப் பின்னால் சிறைச்சாலைகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை ஆங்கிலேயர்கள் உணர்ந்தார்கள். அதற்கு முன்பாகச் சிறிய சிறைச்சாலைகள் இருந்த போதும் அது கம்பெனியின் கட்டுப்பாட்டில் இல்லை.

ஆகவே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முதன்முதலில் டாக்கா சிறைச்சாலை (1790) உருவாக்கபட்டது. அதைத் தொடர்ந்து மிட்னாபூர் சிறைச்சாலை (1792 ஏற்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக உருவாக்கபட்டதே அலிப்பூர் பிரசிடென்சி சிறைச்சாலை. அது 1864 ஆம் ஆண்டுக்குப் பிறகு மத்திய சிறைச்சாலையாக மாற்றப்பட்டது.

இப்போதுள்ள அலிப்பூர் சிறைச்சாலை 1906 இல் கட்டப்பட்டது. இதில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த கைதிகளுக்காகப் பிரிக்கப்பட்ட தனித்தனிப் பகுதிகள், உயர்ந்த காவல்கோபுரம், தூக்குமேடை, மருத்துவமனை, தனிமைச்சிறைக்கூடம் அமைக்கபட்டிருக்கிறது. அந்தக் காலச் சிறைதண்டனைகள் மிகவும் கொடூரமானவை. அதுவும் அரசியல் கைதிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகள் பயங்கரமானவை. அதை அடையாளப்படுத்துவது போலத் தண்டனைக் காட்சி ஒன்றை சிலையாகச் செய்திருக்கிறார்கள்.

மரணத் தண்டனை கைதிகளுக்காக மூன்று தண்டனை அறைகள் காணப்படுகின்றன. ஒரு கைதி தூக்கிலிடப்படுவதை மற்றவர்கள் காணும் வகையில் அறைகளை அமைத்திருக்கிறார்கள்.

தூக்கிலிடப்பட்ட அரசியல் கைதிகளின் நினைவாக அவர்கள் புகைப்படத்துடன் கூடிய தனிக்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. தூக்கு மேடைக்கு அருகில் ஒரு பிரேத பரிசோதனை அறை உள்ளது. தேசவிடுதலைக்காகத் தூக்கிலிடப்பட்டவர்களின் சராசரி வயது இருபது முதல் முப்பதுக்குள். மரணதண்டனை விதிக்கபட்ட கைதிகளில் ஒருவர் நான்கு மாதங்களுக்குள் 110 கடிதங்கள் எழுதியிருக்கிறார்.

குதிராம் போஸ்

இந்தச் சிறையில் தான் புரட்சியாளர் குதிராம் போஸ் தூக்கிலிடப்பட்டார். அப்போது அவரது வயது 18. இந்த நினைவகத்தினுள் நாள் முழுவதும் வந்தேமாதரம் பாடல் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. அதைக் கேட்கும் போது மிகுந்த உணர்வெழுச்சி ஏற்படுகிறது.

சித்தரஞ்சன் தாஸ் 1921 ஆம் ஆண்டுப் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றதால், கைது செய்யப்பட்டு இதே சிறையின் 8வது அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். அவர் புத்தகம் படிப்பதற்குப் போதுமான வெளிச்சம் இல்லாத காரணத்தால் சிறையின் வெளியே படிப்பதற்கான மேடை அமைக்கபட்டது. சித்தரஞ்சன் தாஸ் அதில் குனிந்து படிப்பது போன்ற சிலை வைக்கபட்டிருக்கிறது

நஸ்ருல் இஸ்லாம்

சிறைக்கைதிகளுக்கான மருத்துவமனை, அச்சுக்கூடம், நெசவுக்கூடம், பயிற்சிக்கூடங்கள் தனியே காணப்படுகின்றன. கவிஞர் காஸி நஸ்ருல் இஸ்லாம் அடைத்து வைக்கபட்ட சிறையினுள் அவர் எழுதிய கவிதைநூல்கள் யாவும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. புதிதாக உருவாக்கபட்ட அருங்காட்சியகம் என்பதால் தூய்மையாக, சிறப்பான பராமரிப்பில் வைத்திருக்கிறார்கள்.

காமராஜர் தனது 27 வயதில் உப்புசத்தியாகிரகத்தில் கைது செய்யப்பட்டு இதே அலிப்பூர் சிறையில் அடைக்கபட்டிருக்கிறார். இரண்டு ஆண்டுச் சிறைவாசத்தை அனுபவித்திருக்கிறார். அதைப் பற்றிய குறிப்புகளோ, அவர் இருந்த சிறை பற்றிய குறிப்போ அருங்காட்சியத்தில் காணப்படவில்லை.

இந்தச் சிறையில் ஒளிஒலிக்காட்சி ஒன்றும் நடைபெறுகிறது. அது மாலை நேரம் நடைபெறுவதால் நான் காணவில்லை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 09, 2025 09:34

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.