S. Ramakrishnan's Blog, page 12
March 26, 2025
சால் பெல்லோ கேட்ட கதை
யூ.ஆர். அனந்தமூர்த்தியின் சுயசரிதையான Suragiல் அனந்தமூர்த்தித் தான் பழகிய எழுத்தாளர்கள் மற்றும் பல்வேறு இலக்கியச் சந்திப்புகள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.

அதில் அமெரிக்காவில் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான சால் பெல்லோவை கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான ஏ.கே.ராமானுஜன் வீட்டில் சந்தித்த நிகழ்வை எழுதியிருக்கிறார்.
அந்தச் சந்திப்பின் போது சால் பெல்லோ அணிந்திருந்த அழகான சட்டையைப் பாராட்டிய ராமானுஜத்தின் மனைவி மோலி இது உங்கள் பணக்கார அண்ணன் பரிசாக அளித்ததா என்று கேட்கிறார்.
தனது கோடீஸ்வர அண்ணன் ஒருமுறை அணிந்துவிட்டு தனக்கு அளிக்கும் சட்டைகளைப் பல காலமாகத் தான் அணிந்து வந்ததாகவும், தற்போது தானே தனக்கான ஆடைகளை வாங்கிக் கொள்வதாகவும் சொல்கிறார். சால்பெல்லோ ஐந்து முறை திருமணம் செய்து கொண்டவர். அதைப் பற்றியும் மோலி கேலியாகக் குறிப்பிடுகிறார்.

இந்தச் சந்திப்பின் போது வைக்கம் முகமது பஷீரின் பாத்துமாவின் ஆடு கதையைச் சால் பெல்லோவிடம் அனந்தமூர்த்திச் சொல்கிறார்.

கதையில் வரும் கதாபாத்திரங்கள் ஒருவரையொருவர் ஏமாற்றுகிறார்கள். அப்படி நடந்து கொள்வதற்கு அவரவர்களுக்கு என ஒரு காரணமும் இருக்கிறது. கதையில் வரும் ஆடு பஷீரின் கையெழுத்துப் பிரதிகளைத் தின்றுவிடுகிறது. இவ்வளவு குழப்பங்கள் இருந்தால் அவர்களுக்குள் வெறுப்பில்லை. இதே கதையைக் காஃப்கா எழுதியிருந்தால் அது கசப்பான துர்கனவை போலிருக்கும். ஆனால் பஷீர் மிகுந்த நகைச்சுவையாக எழுதியிருக்கிறார். அதில் பஷீரின் பேரன்பு முழுமையாக வெளிப்படுகிறது. அதனால் நிகரற்ற கலைப்படைப்பாக மாறிவிடுகிறது என்கிறார்.
அந்தக் கதை சால் பெல்லோவிற்குப் பிடித்திருக்கிறது. பஷீரைப் பாராட்டுவதுடன் இந்தியாவில் இது போன்ற கதைகள் எவ்வளவு அழகாக எழுதப்படுகின்றன என்றும் பாராட்டுகிறார்.
ஆங்கில இலக்கியத்தில் ஊறித் திளைத்த அனந்தமூர்த்திப் பஷீரை சால் பெல்லோவிற்கு அறிமுகம் செய்து வைக்கிறார். அவரது எழுத்தின் எளிமை மற்றும் பேரன்பை அடையாளம் காட்டுகிறார். சால் பெல்லோவின் பால்யகாலம் பஷீரின் கதைகளில் வருவது போன்றதே. ஆகவே அவருக்கு அந்தக் கதை உடனே பிடித்துவிடுகிறது.
இந்தியக் குடும்பம் என்பது ஒரு ஆக்டோபஸ். அதன் எட்டு கைகளும் வேறு வேறு பக்கம் அலைந்து கொண்டிருப்பதே வழக்கம். ஆக்டோபஸ் தனது கைகளால் நினைவு கொள்ளக்கூடியது என்கிறார்கள். இந்தியக் குடும்பங்கள் பிரச்சனைகளால் தான் உயிர்துடிப்புடன் விளங்குகின்றன. அதன் அடையாளமாகவே பஷீரின் பாத்துமாவின் ஆடுவை உணர்கிறேன்.
இந்தியக் குடும்பத்தினுள் ஒருவன் தன்னைக் காஃப்காவாக உணர்வது எளிது. ஆனால் அவன் காஃப்காவாக நடந்து கொள்ள முடியாது. பெரும்பாலும் இந்திய காஃப்கா துறவிற்குள் சென்றுவிடுவான். அல்லது வீட்டை விட்டு ஒடிவிடுவான்.
இந்தியாவிற்கு வரும் திட்டம் ஏதேனும் இருக்கிறதா எனச் சால்பெல்லோவிடம் அனந்தமூர்த்திக் கேட்கிறார். இந்தியாவின் வறுமையை என்னால் காண இயலாது என்று சால் பெல்லோ பதில் அளிக்கிறார். இந்த மனப்பதிவிற்குக் காரணம் பதேர் பாஞ்சாலி படத்தில் வரும் துர்காவின் மரணம். அது சால் பெல்லோவின் மனதில் ஆழமாகப் பதிந்து போயிருக்கிறது. அந்த நாவல் சித்தரிக்கும் காலம் வேறு என்ற உணர்வே அவருக்கு ஏற்படவில்லை. இந்தியா பற்றிய எதிர்மறையான பிம்பம் அமெரிக்கப் படைப்பாளிகள் பலருக்கும் இருந்திருக்கிறது. அதையே சால் பெல்லோவிடம் காணுகிறோம்.

அனந்தமூர்த்தியின் புத்தகம் முழுவதும் கன்னட இலக்கியவாதிகள் பற்றிய பெருமிதமும் அதன் மரபும் நவீனத்துவமும் பற்றிய பார்வைகளும் வெளிப்படுகின்றன. கவிஞர் அடிகாவை அவர் கொண்டாடுகிறார். கன்னட எழுத்தாளர்களுக்கும் அங்குள்ள மடங்களுக்குமான உறவு விசித்திரமானது. கன்னட இலக்கியத்தினை உலக அளவில் கொண்டு சென்றதன் பின்புலத்தை அனந்தமூர்த்தியின் வரிகளில் முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது.
கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைகழகத் துணைவேந்தராகப் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தது பற்றிய பகுதி சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. கேரள அரசு அவரை விரும்பி அழைத்துத் துணைவேந்தராக்கியிருக்கிறது. மலையாள படைப்புலகின் முக்கியப் படைப்பாளிகளுடன் அவருக்கு இருந்த நட்பு பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார்.
இந்தியப் பிரதமர்கள் வி.பி.சிங் மற்றும் ராஜீவ் காந்தியைச் சந்தித்து உரையாடியது பற்றிய பகுதி சிறப்பானது.
தனது நாவல்கள் திரைப்படமானதைப் பற்றிக் குறிப்பிடும் போது அவை தனக்கு முழுமையான திருப்தியை தரவில்லை என்பதை வெளிப்படையாகக் குறிப்பிடுகிறார். தனது ரஷ்யப் பயணம் மற்றும் சீனப்பயணம் குறித்தும் விமர்சனப்பூர்வமாக எழுதியிருக்கிறார். இரண்டிலும் அவரது கோபம் முழுமையாக வெளிப்படுகிறது.
தனக்கு எதிராக நடந்து கொண்ட கன்னட எழுத்தாளர்களைப் பெயர் சொல்லி எழுதியிருப்பதோடு அவர்கள் மீது கடுமையான விமர்சனத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். சாகித்ய அகாதமி, நேஷனல் புக் டிரஸ்ட் போன்ற இந்தியாவின் உயரிய இலக்கிய அமைப்புகள் யாவிலும் அவர் பெரிய பதவிகளை வகித்திருக்கிறார். அந்த நினைவுகள் பெரிதும் கசப்பானவையாகவே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
தனது படைப்புகள் மற்றும் எழுத்தின் நுட்பங்கள் பற்றிய அனந்தமூர்த்தியின் வெளிப்படையான எண்ணங்கள் முக்கியமானவை. தனது சொந்த பிரச்சனைகள், வேதனைகளை உலகிற்குச் சொல்வது மட்டும் எழுத்தாளனின் வேலையில்லை. அவன் தனது காலத்தின் குரலை கேட்கிறான். சக மனிதர்களின் வேதனைகளை, துயரை புரிந்து கொள்கிறான். அதைத் தனதாக உணர்கிறான். அவர்களுக்காகக் குரல் கொடுக்கிறான். ஒன்றை உரத்து சொல்வதை விடவும் உணரச் செய்வதே இலக்கியத்தின் முதன்மையான பணி என்று சொல்லும் அனந்தமூர்த்திக் குவெம்புவை உதாரணமாகச் சொல்கிறார்
குவெம்புவின் கதை ஒன்றில் ஒரு வீட்டில் பாகம் பிரிக்கிறார்கள். வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாவற்றையும் இரண்டாக்குகிறார்கள், விளையாட்டு சிறுவனாக இருந்த வாசுவை அழைத்து இரண்டில் ஒன்றை தொடச் சொல்கிறார்கள். அவன் எதைத் தொடுகிறானோ அது அவனது குடும்பத்திற்குரியது. அந்தச் சிறுவனின் விரல் நுனியில் குடும்பத்தின் எதிர்காலமிருக்கிறது. இந்த எதிர்பாராத சுமையைத் தாங்க முடியாமல் சிறுவன் மயங்கி விழுந்துவிடுகிறான்.
எழுத்தின் வல்லமை என்பது இது போன்ற பெரிய அனுபவங்களைச் சொற்களின் வழியே முழுமையாக உணர்த்திவிடுவதே என்கிறார். தராசின் சிறிய முள் தான் இரண்டு பக்க எடையினையும் சமமாக்குகிறது. அந்த முள்ளைப் போல வாசு சிறியதாக இருக்கிறான் என்றே அதை வாசிக்கும் போது உணர்ந்தேன்
உலகம் முழுவதும் பயணம் செய்த அனந்தமூர்த்தி தன்னை இந்தியாவின் இலக்கியப்பிரதிநிதியாகவே வெளிப்படுத்திக் கொள்கிறார். இவ்வளவு பெரிய புத்தகத்தில் தமிழ் இலக்கியம் மற்றும் எழுத்துலகோடு அவரது தொடர்பு சரியாக குறிப்பிடப்படவில்லை என்பது குறையே.
***
இருளுக்கும் ஒளிக்கும் இடையில்
ஜெஸ்ஸி ஐசன்பெர்க்கின் புதிய படமான ” A Real Pain” இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்கள் இணைந்து மேற்கொள்ளும் பயணத்தை விவரிக்கிறது. அத்துடன் வாழ்க்கையைப் பற்றிய இரண்டு பார்வைகளையும் முன் வைக்கிறது. எது உண்மையான வலி என்பதை விசாரணை செய்கிறது. இயல்பான நகைச்சுவையும் தேர்ந்த நடிப்பும் கொண்ட இந்தப் படம் யூதப்படுகொலை பற்றிய இந்த தலைமுறையின் புரிதலை அழகாக வெளிப்படுத்துகிறது.

டேவிட் மற்றும் பென்ஜி இருவரும் தனது பாட்டி வாழ்ந்த பூர்வீக வீட்டைக் காணுவதற்காகப் போலந்தில் ஒரு சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்கள். அது ஒரு நினைவுச் சுற்றுலா. ஹிட்லரின் வதை முகாமில் படுகொலை செய்யப்பட்ட யூதர்களின் நினைவிடங்களைக் காணும் பயணம். இரண்டு யூதர்கள் மேற்கொள்ளும் இந்தப் பயணம் அவர்களின் குடும்ப வரலாற்றையும் கடந்தகாலத் துயர்களை எப்படிப் புரிந்து கொள்வது என்பதையும் பேசுகிறது.
நெருங்கிய உறவினர்களான டேவிட் மற்றும் பென்ஜி இப்போது பிரிந்து வாழ்கிறார்கள். பாட்டியின் கடைசி ஆசையே அவர்களை ஒன்றுசேர்க்கிறது. தங்கள் குடும்பத்தின் துயர வரலாற்றையும், சொந்த கலாச்சார வேர்களையும் தேடி அவர்கள் போலந்தில் மேற்கொள்ளும் பயணம் இருவருக்குமான உறவை ஆழமாக்குகிறது. பென்ஜி எவ்வளவு அற்புதமான மனிதன் என்பதை உலகிற்கு அடையாளம் காட்டுகிறது.
விமான நிலையத்திலே பென்ஜி வேறுபட்டவன். சுதந்திர மனப்பாங்கு கொண்டவன் என்பது புரிந்துவிடுகிறது. அவன் விமான நிலையப் பரிசோதனை அதிகாரிகளிடம் நடந்து கொள்ளும் விதம் நல்ல உதாரணம். அவனுக்கு நேர் எதிராகப் படபடப்பும் அவசரமும் கொண்டவன் டேவிட். தனக்குத் தானே பேசிக் கொள்கிறவன். வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்கிறவன். ஆனால் தனக்குள் தீராத தனிமை கொண்டவன்.

பயணத்தின் ஊடாக டேவிட்டின் அகம் திறந்து கொள்கிறது. அவன் இந்நாள் வரை மறைத்து வைத்த வலிகள் வெளிப்படுகின்றன. அவற்றைப் பென்ஜி சரியாகப் புரிந்து கொள்கிறான். ஆற்றுப்படுத்துகிறான்.
எதையும் விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் பென்ஜி யூத நினைவிடத்தில் சட்டென மாறிவிடுகிறான். இறந்தவர்களை எப்படி நடத்த வேண்டும் என வழிகாட்டி ஜேம்ஸ்க்கு கற்றுத் தருகிறான். கடந்தகாலத்தின் துயரம் என்பது வெறும் செய்தியில்லை. அது ஆறாத வடு என்பதை உணர்த்துகிறான்.
இது போல யூதப்படுகொலை நடந்த முகாம்களை, நினைவிடங்களைக் காணுவது என்பது இன்று ஒரு இன்பச்சுற்றுலா. வணிகம். அதுவும் வசதியான யூதர்கள் மேற்கொள்ளும் பயணம். இது போன்ற விசேச சுற்றுலாக்களை எப்படி நிர்வகிக்கிறார்கள் என்பதைப் படத்தில் கேலியாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

வழிகாட்டியாக வரும் இளைஞனுக்கு யூதப்படுகொலையும் அது சார்ந்த இடங்களும் அவன் படித்துத் தெரிந்து வைத்திருந்த தகவல்களே. அவற்றை மிகையான குரலில் அவன் வெளிப்படுத்தும் போது பென்ஜி கோபம் கொள்கிறான். எங்கே அவனது வழிகாட்டுதல் தேவையற்றது என்பதைப் புரிய வைக்கிறான். அவர்கள் இருவருக்கும் இடையே நடைபெறும் உரையாடல் அபாரமானது.
பயணத்தின் ஊடே பாட்டியின் வீட்டினைத் தேடி கண்டுபிடிக்கிறார்கள். அது பூட்டிக்கிடக்கிறது. அதில் யாரோ குடியிருக்கிறார்கள். தாங்கள் வந்து சென்றதன் நினைவாக அந்த வீட்டின் வாசலில் ஒரு கல்லை வைக்கிறார்கள். கல் என்பது நினைவின் உறைந்த வடிவமாகிறது. பக்கத்து வீட்டில் வசிப்பவர் அவர்களின் இச் செயலுக்காகக் கோவித்துக் கொள்கிறார். அவரது மகன் அதனைப் புரிந்து கொள்கிறான். டேவிட் மற்றும் பென்ஜி கல்லை மலராக மாற்றிய அந்தக் காட்சி என் மனதில் தங்கிவிட்டது.
பென்ஜியும் டேவிட்டும் மேற்கொள்ளும் ரயில் பயணம் அழகானது. முதல்வகுப்புப் பெட்டியில் பயணிக்கும் போது ஏற்படும் குற்ற உணர்வும், தாங்கள் இறங்க வேண்டிய ரயில் நிலையத்தைத் தவறவிட்டு மேற்கொள்ளும் பயணமும் சிறப்பானது. யூத வரலாற்றில் ரயில் என்பது ஒரு அடையாளச் சின்னம். யூதர்களைக் கூட்டம் கூட்டமாக ரயிலில் ஏற்றிக் கொண்டு போய் முகாமில் அடைத்து வன்கொலை செய்தார்கள் என்பது வரலாறு.
கடந்த காலத்தின் வலியை நாம் சுமந்து கொண்டேயிருக்க வேண்டுமா. அல்லது அதை மறந்துவிடலாமா. இன்றைய வாழ்க்கையில் நாம் பிறரது வலியை சுமக்கத் தயாராக இருக்கிறோமா. என்ற கேள்விகளைப் படம் எழுப்புகிறது.
போர் வீரர்களின் நினைவுச்சின்னத்தின் முன்பாக டேவிட் பதட்டமான மற்றும் பயபக்தியான மனநிலையைப் பேணுகையில், பென்ஜி சிலைகளுக்கு இடையில் நின்று வேடிக்கையான செல்ஃபிக்குப் போஸ் கொடுக்கிறான். வரலாற்றின் வீரம் இன்றும் வெறும் காட்சிப் பொருளே.
எந்தவொரு புதிய இடத்திலும் நண்பர்களை உருவாக்கும் முதல் நபர் பென்ஜியே ஆனால் படத்தின் முடிவில் அவன் தனது தனிமைக்கே திரும்புகிறான். அது ஊர் திரும்பும் டேவிட்டை வேதனைப்படுத்துகிறது. பயணத்தின் முடிவில் டேவிட் வீடு திரும்புவது அழகான காட்சி. பயணம் அவனைப் புதிய மனிதனாக்கியிருக்கிறது.

ஒரு காட்சியில் வதைமுகாமின் சுவரில் படிந்துள்ள விஷ வாயுவால் ஏற்பட்ட கறையைக் காண்கிறோம், . முகாமில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களின் செருப்புகள் நிரப்பட்ட பெட்டகத்தைக் காணுகிறோம். யூதப்படுகொலையின் துயரை அந்தக் காட்சித்துண்டுகள் முழுமையாக உணர்த்திவிடுகிறது.
பென்ஜியைப் போல வாழ்க்கையை இவ்வளவு எளிதாக எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ முடியும், அடுத்தவருடன் பழகவும் உதவி செய்யவும் முடியும் என்பதை டேவிட் நன்றாக உணர்ந்து கொள்கிறான். மனதில் இருந்த நீண்ட கால வலியிருந்து விடைபெறுகிறான்.
இந்தப் பயணத்தில் வரும் ஒவ்வொருவரும் ஒரு வகை வலியின் அடையாளமே.
பென்ஜியால் அடுத்தவரின் துயரை எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் மகிழ்ச்சிப்படுத்த முடிகிறது. அவன் தனது நிகழ்காலத்தை மகிழ்ச்சியின் நற்கணங்களாக மாற்றுகிறான். ஆனால் அவனுக்காக யாருமில்லை. குடும்பமில்லை. தனித்துச் செல்லும் பறவையைப் போலவே விடைபெறுகிறான். அது தான் உண்மையான வலி போலும்.
••
March 25, 2025
குற்றமுகங்கள் -7 நூபுரன்
மெட்ராஸ் பிரசிடென்சியின் முதல் ரயில் சேவை ஜூலை 1, 1856 அன்று ராயபுரம் ரயில் நிலையத்திலிருந்து துவங்கியது. 300-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் முதல் ரயில் புறப்பட்டுச் சுமார் மூன்றரை மணி நேரம் பயணத்தின் பின்பு வாலாஜாவை அடைந்தது. ரயிலின் வரலாறு இதுவாக இருந்தாலும் ரயிலில் பிறந்த முதல் குழந்தையின் வரலாறு 1894ல் துவங்குகிறது.

நூபுரன் தான் ரயிலில் பிறந்த முதல் குழந்தை. அவனது அம்மாவின் பெயர் தனராணி. ஒடும் ரயிலில் நடந்த பிரவசமது. ரயிலில் யார் பிரவசம் பார்த்தது என்று தெரியவில்லை. ஆனால் ரயிலின் ஓசையே நூபுரன் கேட்ட முதல் சப்தம்.
ரயிலில் பிறந்த குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் ரயிலில் இலவசமாகப் பயணம் செய்து கொள்ளலாம் என்று பயணிகளில் ஒருவர் சொன்னார். தனராணி அதை நம்பவில்லை. ரயிலில் குழந்தை பிறந்தது அதிர்ஷ்டமில்லை என்று மட்டும் நம்பினாள்.
மாட்டுவண்டிகள் செல்வதற்கே சரியான பாதையில்லாத அவளது சொந்த கிராமமான தென்வடலில் அவனை வளர்த்தாள். ரயிலில் பிறந்த நினைவு நூபுரனுக்குள் இருந்திருக்கக் கூடும். அவன் சிறுவனாக இருந்த போது ஒரு இடத்தில் நிற்காமல் ஒடிக்கொண்டேயிருந்தான்.
தனது பத்தாவது வயதில் அவன் நேரில் ரயிலைப் பார்த்த போது அது தன்னுடைய பிறந்த வீடு என்றே உணர்ந்தான். கனத்த இரும்பின் சப்தம் அவனை மகிழ்ச்சி கொள்ளச் செய்தது. ரயிலின் கூடவே அவனும் ஒடினான். ரயிலின் வேகத்தில் இணைந்து ஒட தனக்கும் இரும்பாலான கால்கள் வேண்டும் என்று ஆசைப்பட்டான். ரயிலின் கரும்புகை அவனை ஏக்கம் கொள்ள வைத்தது.
ஊர் திரும்பிய நூபுரன் ரயிலைப் போலவே சப்தமிட்டான். அதன் பிந்திய நாட்களில் ரயில் நம்முடையது தானா என அம்மாவிடம் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தான். அவனைச் சமாதானப்படுத்த அம்மா அது உன்னுடைய சொத்து என்றாள்.
நூபுரன் அதை முழுமையாக நம்பினான். தனக்குரிய ரயிலை தானே சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே தனது பதினைந்தாவது வயதில் வீட்டைவிட்டு ஒடிப் போனான்.
அதுவே அவனது முதல் ரயில் பயணம். அதன் பிறகான ஆண்டுகளில் எத்தனையோ ரயில்களில் எங்கெங்கோ பயணம் செய்துவிட்டான். எதற்கும் டிக்கெட் வாங்கியது கிடையாது. எந்த ரயில் நிலையத்திலும் இறங்கிக் கொள்வான். டிக்கெட் கேட்கும் பரிசோதகரிடம் தான் ரயிலில் பிறந்தவன் என்று வாதிடுவான்.
“உங்கப்பனா ரயிலை விட்டிருக்கிறான். தண்டம் கெட்டு“ என அவர்கள் சண்டையிடும் போது நூபுரன் வெறும் கையை விரித்துக் காட்டுவான். ரயில் தான் அவனைக் குற்றம் செய்ய வைத்தது. தனது முதல் திருட்டை அவன் நிகழ்த்தியது ரயிலில் தான்.
ரயிலில் பயணம் செய்கிறவர்கள் ஈரத்துணி தரையில் கிடப்பதைப் போல நெகிழ்ந்து போயிருக்கிறார்கள். பெரிய தொட்டில் ஒன்றில் உறங்கும் குழந்தையைப் போலத் தன்னை உணருகிறார்கள். ரயிலின் வேகத்தில் காற்று முகத்தில் ஏற்படுத்தும் குறுகுறுப்பின் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள். ஆண்களை விடவும் பெண்களை ரயில் அதிக சந்தோஷப்படுத்துகிறது என்பதை நூபுரன் கண்டறிந்தான்.
ரயிலில் ஏறியதும் மனிதர்கள் தன் இயல்பை மீறி நடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்களின் குரல் மாறிவிடுகிறது. தனது வாழ்க்கை நிகழ்வுகளை எவரிடமும் பகிர்ந்து கொள்ளத் துவங்கிவிடுகிறார்கள். ரயில் பயணம் என்பது பலநூறு நடிகர்கள் ஒரே மேடையில் தோன்றி நடிக்கும் நாடகம்.
சில பயணிகளின் அலட்சியம் மற்றும் அதிகாரம் தான் அவர்களின் பொருளை திருடும்படியாக நூபுரனைத் தூண்டியது. பெரும்பாலும் அவன் பகலில் தான் திருடுவான். அதுவும் திருடிய பொருளோடு ஒடும் ரயிலில் இருந்து குதித்து விடுவான். அது ஒரு சாகசம். அப்படித் தாவிக் குதிக்கும் போது கவண் கல்லில் இருந்து கல் பறப்பது போன்ற இன்பத்தை அடைந்தான்.
மோதிரம், செயின், பயணப்பெட்டிகள், கூஜா, கைகடிகாரம், வெண்கல பானை, எனத் திருடிய அவன் ஒருமுறை ஜேம்ஸ் ஏ. காக்ஸ் என்ற வெள்ளைக்கார அதிகாரியின் தொப்பி மற்றும் துப்பாக்கி இரண்டினையும் திருடிச் சென்றான்.
அந்த நாட்களில் ரயில்வே நிறுவனங்கள் பயணிகளின் சொத்துக்கள் மற்றும் பொருட்களைப் பாதுகாக்க தங்களுக்கென “வாட்ச் அண்ட் வார்டு” ஊழியர்களைக் கொண்டிருந்தன, அவர்களால் திருட்டை தடுக்க முடியவில்லை.
நூபுரன் தன்னை நித்ய ரயில் பயணியாகக் கருதினான். உறங்குவது என்றால் கூடச் சிறிய ரயில் நிலையம் ஒன்றின் கடைசி இருக்கையினையே தேர்வு செய்தான். ரயில் நிலையத்தில் கிடைக்கும் உணவிற்கு என்றே ஒரு ருசியிருக்கிறது. ரயில் நிலையக்காற்று என்றும் இருக்கிறது. அதை வேறு இடங்களில் உணர முடியாது.
இந்த நாட்களில் தன்னைப் போல ரயில் திருடர்களாக இருக்கும் பலரை அவன் கண்டுகொண்டான். அதில் இருவர் பெண்கள். அவர்கள் திருமண வீட்டிற்குப் போவது போல மிக அழகாக ஒப்பனை செய்து கொண்டு ரயிலில் ஏறுவார்கள். பயணிகளுடன் சிரித்துச் சிரித்துப் பேசுவார்கள். எவரும் அவர்களைச் சந்தேகம் கொள்ள முடியாது. உறங்கும் பெண்களின் கழுத்தில் உள்ள நகைகளை, கைவளையல்களைத் திருடிக் கொண்டு நழுவி விடுவார்கள்.
நூபுரன் அந்தப் பெண்களுடன் ஸ்நேகமாக இருந்தான். அவர்களில் ஒருத்தி புளிப்பு உருண்டை சாப்பிடுவதில் விருப்பம் கொண்டிருந்தாள். சிறிய உருண்டை புளியை எப்போதும் வாயில் ஒதுக்கிக் கொண்டிருப்பாள். ஒருமுறை அவன் மீதான அன்பில் அந்த எச்சில் புளி உருண்டையை நூபுரனுக்குக் கொடுத்தாள். பல்கூசும் புளிப்பை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்போது அவன் முகம் போன போக்கை பார்த்து அவள் சிரித்தது நூபுரனால் மறக்க முடியவில்லை.
பணப்பெட்டி துவங்கி வரை பழக்கூடைகள் ரயிலில் பல்வேறு வகையான பொருட்கள் திருட்டுப் போனது. நூபுரன் யாரோடு இணைந்தும் திருட்டில் ஈடுபடவில்லை. திருடிய நகையைத் துளையிடப்பட்ட இளநீர் ஒன்றுக்குள் வைத்து ரயிலில் இருந்து நூபுரன் வீசி எறிந்துவிடுவான். மறுநாள் பகலில் அதை எடுத்துக் கொள்வது வழக்கம்.

மதராஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்த சொத்து வழக்கு ஒன்றுக்காக ராவ் பகதூர் வேதலாசம் அடிக்கடி ரயிலில் போய் வருவதுண்டு. அவரது தலைப்பாகையில் வைரக்கல் பதிந்திருக்கும். ரயில் பயணத்திலும் அதை அணிந்திருப்பார். பயணத்தின் போது அவருடன் இரண்டு வேலையாட்கள் ஒரு கணக்குபிள்ளை உடன்வருவார்கள் பயணத்திற்கென பட்டுத் தலையணை, படுக்கை, விசிறி, வெள்ளி கூஜாவில் பசும்பால் கொண்டு வருவார்கள். ராவ் பகதூரின் வேலையாட்கள் ரயில்பெட்டியில் தரையில் தான் அமர வைக்கபட்டார்கள்.
அவரது தலைப்பாகையை நூபுரன் கொள்ளையடித்துச் சென்றது செய்திதாள்களில் கூட இடம்பெற்றது. ஒரு முறையில்லை. ஐந்து முறைகள் ராவ் பகதூர் வேதாசலத்தின் பொருட்களை நூபுரன் கொள்ளையடித்திருக்கிறான். அத்தனையும் அவரது வேறுவேறு ரயில் பயணத்தில்.
ஒரு முறை அவர் கைதுப்பாக்கியுடன் பயணம் செய்தார். காவலுக்கு நான்கு ஆட்களையும் வைத்திருந்தார். நூபுரன் எப்படித் திருடினான் என்று எவருக்கும் தெரியவில்லை. அந்த முறை அவர் இடுப்பில் அணிந்திருந்த வெள்ளி அரைநாண் களவு போயிருந்தது.
பாம்புப்பிடாரன் போல வந்து நூபுரன் அதைத் திருடிச் சென்றான் என்றும் அவனது மகுடிக்குள் திருடிய வெள்ளி நாணை மறைத்துக் கொண்டு விட்டான் என்றும் சொல்கிறார்கள்
வெள்ளைகார துரைகளிடம் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி ராவ்பகதூர் திருடனைத் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்திய போதும் நூபுரனை கண்டுபிடிக்க முடியவில்லை. அவனது தலைக்கு ஆயிரம் ரூபாய்த் தருவதாகக் கூட அறிவித்தார்கள்.
இந்தத் தொடர் திருட்டுகள் தனக்கு இயற்கை விடுகிற எச்சரிக்கை என்பது போல உணர்ந்த ராவ்பகதூர் தான் வழக்காடிக் கொண்டிருந்த கேஸில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். ஒன்பது வருஷங்களாக இழுத்தடித்துக் கொண்டிருந்த சொத்துவழக்கு நொடித்துப் போய்க் கடனில் மூழ்கியிருந்த ஆறுமுகத்தின் பக்கம் ஜெயமாகியது.
நூபுரனை பிடிப்பதற்காக இங்கிலாந்திலிருந்து பனிரெண்டு துப்பாக்கி வீர்ர்கள் வரவழைக்கபட்டார்கள். அவர்கள் மாறுவேஷத்தில் பயணிகள் போல ரயிலில் சென்றார்கள். சந்தேகப்படுகிறவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தார்கள். இதில் நூபுரன் எந்த ரயிலில் வைத்து அவர்களிடம் அகப்பட்டான் என்று தெரியவில்லை. ஆனால் அவன் ரயிலில் இருந்து தப்பிக் குதிக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டான்.
இறந்து கிடந்த அவனது உடல் இரண்டு நாட்களுக்குத் தண்டவாளத்தின் ஓரத்தில் கிடந்தது. மூன்றாம் நாளில் உடலை ஒலைப்பாயில் சுருட்டி கூட்ஸ் ரயிலில் கொண்டு போனார்கள் எனக் கான்ஸ்டபிள் ஃபிரைட்மேன் தனது அறிக்கையில் பதிவு செய்திருக்கிறார். அவன் ரயிலில் பிறந்தவன் என்ற தகவல் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
முர்ரே ஹாமிக் மதராஸின் காவல்துறை ஆணையராக இருந்த போது இந்த அறிக்கை சமர்ப்பிக்கபட்டிருக்கிறது.
••
March 23, 2025
நாவல்வாசிகள்
இந்து தமிழ் திசை நாளிதழில் நாவல்வாசிகள் என்ற புதிய தொடரை ஆரம்பிக்கிறேன்.
அது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

March 21, 2025
குற்றமுகங்கள் 6 லாப்பன்
1828 இல் லண்டன் காவல்துறை போலீஸ் கெஜட் என்றொரு பத்திரிகையைத் துவக்கியது அதில் இங்கிலாந்தில் மட்டுமின்றி இந்தியாவிலும் தேடப்படும் குற்றவாளிகளின் முழு விவரங்களைச் சித்திரங்களுடன் வெளியிட்டது. அத்துடன் விசித்திரமான குற்றங்கள் மற்றும் அது தொடர்புடைய நம்பிக்கைள். சடங்குகள் பற்றிய செய்திகளையும் வெளியிட்டார்கள். அக்டோபர் 1834ல் வெளியான இதழில் மதராஸ் தொடர்புடைய ஒரு செய்தி இடம் பெற்றிருந்தது

அது லாப்பனைப் பற்றியது.
திருடர்கள் அதிர்ஷ்டத்தை உறுதியாக நம்பினார்கள். எந்தப் பொருளை எந்த நாளில் எந்த நேரத்தில் திருட வேண்டும் எத்தனை பேர் சேர்ந்து திருட்டிற்குப் போக வேண்டும். தப்பிப் போவதாக இருந்தால் எந்தத் திசையில் போக வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வதில் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அதற்காகவே அவர்கள் லாப்பனை நாடினார்கள்.
லாப்பனுக்கு எழுபது வயதிருக்கும். கோரையான தாடி. உடைந்த முன்பற்கள். மஞ்சள் படிந்த கண்கள். அவனது கைகள் சதா நடுங்கிக் கொண்டேயிருந்தன.
லாப்பன் திருடர்களுக்கான நாள்காட்டி ஒன்றினை உருவாக்கியிருந்தான். அது கிரக சஞ்சாரங்கள் மற்றும் திருடர்களின் வாய்மொழியிலிருந்து உருவாக்கபட்டது என்றார்கள்.
லாப்பன் திருடனில்லை. அவன் மதராஸ் காய்கறி சந்தையில் குப்பைகளைச் சுத்தம் செய்பவனாகத் தனது பனிரெண்டு வயதில் வேலைக்குச் சேர்ந்தான். சந்தை அவனுக்கு நிறையக் கற்றுக் கொடுத்தது. குறிப்பாக ஜனங்களை ஏமாற்றும் சிறுதந்திரங்களை, இனிப்பு பேச்சுகளை மற்றும் விநோத நம்பிக்கைகளை.
சில ஆண்டுகளிலே லாப்பன் சந்தையில் தனியே கடை போட்டுவிட்டான். அதிர்ஷ்டம் அவனுக்குத் துணை நின்றது. வியாபாரத்தில் கிடைத்த பணத்தை அங்குள்ள சிறுவணிகர்களுக்கு வட்டிக்குக் கொடுத்தான். அதிலும் வருவாய்ப் பெருகியது. லாப்பன் முதலாளி என்று அவனை அழைக்க ஆரம்பித்தார்கள். சந்தையில் ஒரு வரிசை முழுவதும் லாப்பனின் கடைகளே இருந்தன.
லாப்பன் காய்கறி சந்தைக்குள் ஒரு கோவிலைக் கட்டினான். சந்தைவாசிகள் மட்டுமின்றி வெளியிலிருந்தும் ஆட்கள் வந்து அந்தக் கோவிலை வணங்கிப் போகத் துவங்கினார்கள். சந்தை வணிகர்கள் தங்கள் முதல் விற்பனையில் கிடைக்கும் பணத்தைக் கோவிலுக்குக் கொடுத்தார்கள். அக் கோவில் கட்டியது லாப்பனுக்குப் பெரிய புகழை உருவாக்கியது. அந்த மகிழ்ச்சியில் கோவிலுக்குத் தங்க வாகனம் வாங்கிக் கொடுத்தான் லாப்பன்.
இப்படிப் பணமும் புகழுமாக லாப்பன் இருந்த நாட்களில் லாப்பனின் மனைவி என்று சொல்லிக் கொண்டு ஒரு இளம்பெண் சந்தைக்கு வந்து கடையாட்களிடம் பணம் வசூலிக்கத் துவங்கினாள்.

பிரமிக்க வைக்கும் அழகை கொண்டிருந்த அவளைப் பார்த்து வியந்த கடைக்காரர்கள் இவளை எப்படி லாப்பன் திருமணம் செய்து கொண்டான் என்று ஆச்சரியப்பட்டார்கள். அவளிடம் லாப்பனுக்குத் தர வேண்டிய பணத்தைத் தந்தார்கள். அவளது நான்கு குதிரைகள் பூட்டிய கோச் வண்டியில் கூடை கூடையாக மாம்பழங்களை ஏற்றினார்கள்.
அன்று மாலை லாப்பனுக்கு விஷயம் தெரிய வந்தது. தனக்குத் திருமணமே ஆகவில்லை. இது ஒரு மோசடி என லாப்பன் கொதித்துப் போனான். அந்தப் பெண் யார் என்று தேட ஆரம்பித்தான்.
அவள் காய்கறி சந்தையில் மட்டுமின்றி, ஜவுளிக்கடை, நகைகடை எனப் பல இடங்களில் லாப்பனின் பெயரைச் சொல்லி தேவையானவற்றை வாங்கிக் கொண்டு போனாள். அவளுடைய ஒளிரும் அழகையும் பேச்சின் வசீகரிக்கும் தன்மையை எல்லோரும் வியந்தார்கள்
ஆத்திரம் தாங்க முடியாத லாப்பன் அவளை எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும் எனத் தனது ஆட்களை அனுப்பி வைத்தான். அவர்களால் அந்தப் பேரழகியை கண்டறிய முடியவில்லை
ஒரு வெள்ளிக்கிழமை அவள் லாப்பன் கடையின் முன் வந்து நின்றாள். அப்படி ஒரு மயக்கும் அழகியை லாப்பன் கண்டதேயில்லை. அவள் சொல்லும் பொய்யை ஏற்றுக் கொண்டுவிடலாம் என்பது போலிருந்தது. அவள் லாப்பனிடம் கைகளை நீட்டி வீட்டிற்குப் பணம் கொடுங்கள் என்று கேட்டாள். லாப்பன் நீட்டிய கைகளைப் பற்றிக் கொண்டு கேட்டான்
“உன்னை எப்போது திருமணம் செய்து கொண்டேன் என்று சொல்“
அவள் சிரித்தபடியே லாப்பனின் இடுப்பில் இருக்கும் மச்சத்தைப் பற்றிச் சொன்னாள். கூடவே லாப்பனை அவள் திருமணம் செய்து கொண்டதற்கான சாட்சிகளாக இருவர் தன்னோடு வந்திருப்பதாகத் தெரிவித்தாள்.
அந்த இருவர் லாப்பனின் கடைக்கு வெளியே நின்றிருந்தார்கள். அவர்கள் லாப்பன் தங்கள் சகோதரியை எங்கே எப்போது திருமணம் செய்து கொண்டான் என்று சாட்சியம் சொன்னார்கள். சந்தை அதனை நம்பியது. லாப்பன் அந்தப் பொய்யை உண்மையாக்க விரும்பி அவளை ஊர் அறிய மனைவியாக ஏற்றுக் கொள்வதாகச் சொன்னான்.
அவள் அதற்குச் சம்மதம் தெரிவிப்பது போலக் கூடையில் இருந்த கொய்யாப்பழம் ஒன்றை பாதிக் கடித்து மீதியை அவனிடம் நீட்டினாள். லாப்பன் அந்தக் கனியை உண்டான். அது அவனது விதியை மாற்றி அமைத்தது. அந்தப் பெண் லாப்பனின் கையைப் பற்றிக் கொண்டு சந்தையிலிருந்து தனது கோச் வண்டியை நோக்கி சென்றதை பலரும் வேடிக்கை பார்த்தார்கள். பின்பு லாப்பன் திரும்பி வரவில்லை.
எங்கே சென்றான். என்ன ஆனான் என்று தெரியவில்லை. லாப்பனின் கடைகளை அதில் வேலை செய்வதர்களே எடுத்துக் கொண்டார்கள். லாப்பன் கட்டிய கோவிலையும் கைவிட்டார்கள். சந்தை கொஞ்சம் கொஞ்சமாக லாப்பனை மறந்து போனது. புதிய வணிகர்கள் சந்தையில் தோன்றினார்கள்.

நீண்ட பல வருஷங்களுக்குப் பின்பு அந்தச் சந்தைக்கு ஒட்டி உலர்ந்து போன வயிற்றுடன் ஒரு கிழவன் வந்திருந்தான். அவன் கூட ஒரு நாய்க்குட்டி. அது லாப்பன் என எவருக்கும் தெரியவில்லை. அவன் தனது பழைய கடைகள் உருமாறியிருப்பதைப் பார்த்தான். தன்னை யாரும் அடையாளம் கண்டுவிடக் கூடாது என்றே விரும்பினான். ஆனால் சந்தையில் நாவற்பழம் விற்கும் ரஞ்சிதம் என்ற பெண் அவனை அடையாளம் கண்டுவிட்டாள். அவள் அதிர்ச்சியோடு கிழவனைப் பார்த்து சொன்னாள்
“லாப்பன் முதலாளி. “
அது தான் இல்லையென்று லாப்பன் தலையாட்டினான். ஆனால் அவள் விடவில்லை. சந்தையே கேட்கும்படி சப்தமிட்டாள். அது லாப்பன் தானா. ஏன் இப்படி உருக்குலைந்து போனான் என வியாபாரிகள் ஒன்றுகூடி அவனை வெறித்துப் பார்த்தார்கள்.
லாப்பனுடன் நெருங்கிய பழகிய மயூரன் என்ற வணிகன் மட்டும் கேட்டான்
“அந்த பெண் உன்னை ஏமாற்றிவிட்டாளா“
“இல்லை. நான் விரும்பி ஏமாந்துவிட்டேன்“.
“யார் அவள். ஏன் உன்னை இப்படிப் பொய் சொல்லி திருமணம் செய்து கொண்டாள். “
லாப்பன் நடுங்கும் குரலில் சொன்னான்
“அது தான் எனக்கும் புரியவில்லை. எது அவளை என்னை நோக்க வர வைத்து. ஏமாற்ற வைத்தது. அவள் திருடர் கூட்டத்தைச் சேர்ந்தவள். அவளுடன் வந்தவர்களும் திருடர்கள். நான் திருடர்களின் கூட்டத்தில் முப்பது ஆண்டுகளைச் செலவு செய்துவிட்டேன். பூனை தனது குட்டியை கவ்வி கொண்டு போவது போல அவள் என்னைக் கவ்விக் கொண்டுவிட்டாள். என்ன மயக்கம் என்று புரியவேயில்லை. சுடரை காற்று விழுங்கிக் கொள்வதைப் போல அவள் என்னை விழுங்கிக் கொண்டுவிட்டாள். என்னால் அவளிடமிருந்து விடுபடவே முடியவில்லை“
“இப்போது எப்படி வந்தாய். அவள் எங்கே“
“பத்து ஆண்டுகளுக்கு அவள் இறந்துவிட்டாள். அதுவும் கருநாகம் கடித்து“.
சாவதற்கு முன்பாக அவள் எனது கைகளைப் பற்றிக் கொண்டு சொன்னாள்
“நான் உயிரோடு இருக்கும் போதே ஒடிவிடு. “
அவசரமாக எழுந்து ஒடினேன். அவளது குரல் கேட்டால் கூடத் திரும்பி விடுவேனோ எனப் பயமாக இருந்தது. வட இந்தியாவில் ஊர் ஊராக ஒடிக் கொண்டேயிருந்தேன். நிற்காத ஒட்டத்தின் முடிவில் இங்கே வந்திருக்கிறேன்.
அவன் சொல்லியதைக் கேட்டு சந்தை திகைத்துப் போனது. அவன் தன்முன்னிருந்தவர்களைப் பார்த்து கேட்டான்.
“நான் ஏன் அந்தப் பெண்ணோடு கடையை விட்டு வெளியேறி போனேன். உங்களில் யாராவது பதில் சொல்லுங்கள்“.
எவரிடமும் பதில் இல்லை. லாப்பன் அதன்பிறகு சந்தையை விட்டு போகவில்லை. அங்கேயே வசிக்க ஆரம்பித்தான்.
திருடர்களோடு வாழ்ந்த அனுபவத்திலிருந்து லாப்பன் ஒரு நாட்காட்டியை உருவாக்கினான். அந்த நாட்காட்டியின் உதவியைக் கொண்டு திருடர்களின் நிமித்திகனாக உருமாறினான்.
தன்னை ஏமாற்றிய வஞ்சகம் செய்த திருடர்களுக்கு ஏன் நாள் குறித்துக் கொடுத்தபடி இருக்கிறான் என்று எவருக்கும் புரியவில்லை. அந்தப் பெண் கொடுத்த முத்தம் அவன் தலையில் விஷமாக ஏறியிருக்கிறது. அதை மாற்றவே முடியாது. லாப்பனின் விதியை அந்தப் பெண் எழுதி முடித்துவிட்டாள் என்றார்கள்.
லாப்பன் இறந்த போது அவனது பெட்டியிலிருந்த திருடர்களின் நாட்காட்டியை திறந்து பார்த்தார்கள். அது தோலில் பைண்ட் செய்யப்பட்ட புத்தகம். அதில் எதுவும் எழுதப்படவில்லை. வெற்றுக் காகிதங்கள். லாப்பன் திருடர்களின் நாட்காட்டியை தனது மனதில் வைத்திருந்தான் என்கிறார்கள். நிஜம் தானா என்று தெரியவில்லை.
லாப்பனின் நாட்காட்டியைப் பற்றிப் போலீஸ் கெஜட்டில் எழுதிய ஜோ.மார்டின் இது முற்றிலும் கற்பனை கதையாகவும் இருக்கக் கூடும் என்கிறார். திருடர்களின் வசிப்பிடம் கதை தான் என்று அவருக்குத் தெரிந்திருக்கிறது.
••
March 17, 2025
குற்ற முகங்கள் – 5 மூன்றாந்தரன்
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் திருடர்களுக்கென ஒரு நாடக அரங்கம் மதராஸில் இருந்தது. அதன் நடிகர்கள் யாவரும் திருடர்களே. பார்வையாளர்களும் திருடர்களாகவே இருந்திருக்கக் கூடும்.
அந்த நாடகம் நடத்தப்படும் இடமும் நேரமும் ரகசியமாக அறிவிக்கபடும். அந்த இரவில் திருடர்கள் ஒன்று கூடுவார்கள். ஆண்களே பெண் வேஷமிட்டு நடித்த அந்த நாடகம் பெரும்பாலும் வேடிக்கையான கதையைக் கொண்டிருந்தது. குறிப்பாக வெள்ளைக்கார துரை மற்றும் அவரது மனைவி அல்லது காதலி பற்றிய கதைகளே நிகழ்த்தப்பட்டது.

இந்த நாடகங்களை எழுதிய நாடக ஆசிரியர் யார் எனத் தெரியவில்லை. உண்மை சம்பவங்களின் தொகுப்பாகவே அந்த நாடகம் நடத்தப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக லெய்மன் துரையின் விருந்து என்ற நாடகம் புகழ்பெற்றது. அந்த நாடகத்தில் லெய்மன் என்ற கிழக்கிந்திய கம்பெனி அதிகாரி ஒரு நாள் தனது வீட்டிற்கு நகரிலுள்ள ஐந்து பிச்சைகாரர்களை விருந்திற்கு அழைக்கிறான்.
இந்த விருந்தில் கலந்து கொள்ளப் பிச்சைகாரர்களுக்குள் ஒரு போட்டி வைக்கிறான். அதில் வென்றவர்கள் மட்டுமே விருந்திற்குத் தேர்வு செய்யப்படுவார்கள். அப்படித் தேர்வாகி வந்த ஐந்து பிச்சைகாரர்கள் லெய்மன் துரையின் மனைவி கேத்தரின் மீது ஆசை கொண்டு, அவனைக் கட்டிப் போட்டு அவன் முன்னால் அவளிடம் ஆசை வார்த்தை பேசுகிறார்கள். லெய்மன் துரையின் மனைவியை அடைவதில் அவர்களுக்குள் ஏற்பட்ட போட்டி எப்படிக் கொலையில் முடிகிறது என்பதே நாடகம்
இந்த நாடகம் முழுக்கக் கேலியும் கிண்டலும் நிரம்பியது. கேத்தரினாக நடிப்பதற்குத் தான் போட்டி. அவளைப் போலவே பூவேலைப்பாடு கொண்ட தொப்பி, கவுன் அணிந்து கையில் விசிறியோடு நடிகர் மேடைக்கு வரும் போது பார்வையாளர்கள் விசில் அடித்துக் கொண்டாடுவார்கள்.
லெய்மன் துரையின் முன்னால் அவனது மனைவியைக் காதலிப்பதில் ஏற்படும் போட்டி வேடிக்கையின் உச்சமாக இருக்கும் என்றார்கள். குடிபோதையில் கேத்தரின் ஆடும் நடனம். லெய்மன் துரையின் மீது குதிரேயற்றம் செய்யும் பிச்சைகாரனின் வேடிக்கை. அந்த வீட்டின் தாதியாக இருந்த கிழவியைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாகப் பிச்சைகாரன் எடுக்கும் முடிவு எனத் தொடர் சிரிப்பலையை உருவாக்கும் நாடகம் திருடர்களுக்கு மிகவும் விருப்பமானது
திருடர்கள் குடும்பக் கதைகளை விரும்புவதில்லை. காதல் கதையை விடவும் பெண்ணைத் தூக்கிச் சென்று அடையும் கதைகளை அதிகம் விரும்பினார்கள். அரசர்களின் முட்டாள்தனத்தையும், வணிகர்களின் பேராசையினையும் பற்றிய நாடகங்களே அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தன.
இந்த நாடகம் எங்கே நடக்கிறது எனக் கண்டுபிடித்துவிட்டால் கூண்டோடு திருடர்களைப் பிடித்துவிடலாம் எனக் காவல் படையினர் தேடியலைவதுண்டு. சில தடவை பொய்யாக அவர்களே ரகசியமான ஒரு இடத்தில் நாடகம் நடக்கப்போவதாக அறிவிப்பு செய்தும் பார்த்திருக்கிறார்கள். அந்தப் பொறியில் திருடர்கள் மாட்டவேயில்லை.
திருடர்களின் நாடகத்தில் கோமாளி கிடையாது. வெள்ளைக்கார அதிகாரி தான் கோமாளி. ஒரு காட்சியில் மேடையிலே அவன் அணிந்திருந்த ஆடைகளைப் பிடுங்கி நிர்வாணமாக ஆட விடுவார்கள். புட்டத்தில் சவுக்கடி விழும். அப்போது எழும் சிரிப்பொலி அரங்கையே உலுக்கிவிடும்.
திருடர்களின் நாடக அரங்கில் சில விநோத நடைமுறைகள் இருந்தன. அவர்கள் நடிப்பதாகச் சொல்லி மேடையிலே குடிப்பார்கள். நிஜமாகச் சண்டையிட்டுக் கொள்வார்கள். ஒரு முறை நிஜக்கத்தியால் ஒருவனை நிஜமாகக் குத்தியதும் நடந்திருக்கிறது. பார்வையாளர்களில் ஒருவர் திடீரென நாடகத்திற்குள் பங்கேற்பதும் உண்டு. ஆபாச பேச்சுகளும் வசைகளும் அடிதடிகளும் நிறைந்த அந்த நாடகம் அவர்களுக்குப் புதுவகையான போதையாக இருந்தது
எவ்வளவு சண்டை கூச்சல்கள் வந்தாலும் நாடகம் பாதியில் நிற்காது. முழுமையாக நடந்தேறவே செய்யும். நாடகத்தின் முடிவில் அதில் சிறப்பாக நடித்த ஒருவருக்கு மூன்றாந்தரன் என்ற பட்டம் அளிக்கபடும். அவன் அந்த இரவில் நகரில் எங்கு வேண்டுமானாலும் திருடலாம். அவனைத் தவிர அன்று வேறு திருடர்கள் எவரும் திருட்டில் ஈடுபட மாட்டார்கள்.
அப்படி ஒருவன் லெய்மன் துரையாக நடித்துப் பார்வையாளர்களின் கைதட்டுகளை வாங்கி அன்றிரவு மூன்றாந்தரனாகத் தேர்வு செய்யப்பட்டான்.
அவனுக்கு இருபது வயதே ஆகியிருந்தது. கல்லால் செய்த உலக்கை போல உறுதியாக இருந்தான். வெள்ளைகாரர்கள் அணியும் கோட் மற்றும் தொப்பி அணிந்து கொண்டு தப்பும் தவறுமாக ஆங்கிலச் சொற்களை உளறும் போது அவனுக்கே மகிழ்ச்சியாக இருந்தது. அடுத்தவன் தன் மனைவியைக் காதலிப்பதை லெய்மன் பாராட்டும் காட்சியில் அவன் உண்மையிலே பிச்சைக்காரனை முத்தமிட்டான். உதடினைக் கடித்துவிட்டான் என்றே சொல்ல வேண்டும்.

மரக்கட்டையில் செய்த சாவி ஒன்றை அவன் கையில் பரிசாகக் கொடுத்து நகரில் நீ விரும்பிய இடத்தில் விரும்பிய பொருட்களைத் திருடிக் கொள்ளலாம் என்று திருடர்கள் ஒரே குரலில் சொன்னார்கள்.
மூன்றாந்தரன் அன்றிரவு நகரின் வீதி வீதியாகச் சுற்றியலைந்தான். பெரியதும் சிறியதுமான வீடுகள் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தன. வானில் கலங்கிய நிலவு. எதைத் திருடுவது என்று அவனுக்குத் தெரியவில்லை.
வீடுகளில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களைப் பார்க்கும் போது அவனை அறியாமலே பரிவு ஏற்பட்டது.
பொம்மையின் கழுத்தில் உள்ள சங்கிலியை பறிப்பது வீரமா என்ன. இப்படி உறக்கத்திடம் தன்னை ஒப்படைத்துக் கொண்டு ஆழ்ந்து துயில் கொண்டுள்ள மனிதர்களின் பொருட்களை அறியாமல் திருடுவதில் என்ன சாகசமிருக்கிறது என்று யோசித்தான்.
அந்த ஊரில் உள்ள வீடுகள், கடைகள் யாவும் அவனுக்கு விளையாட்டுப் பொருட்கள் போலிருந்தன.
விடியும் வரை அவன் ஊரை சுற்றியலைந்தும் எதைத் திருடுவது தனக்கு என்ன தேவை என்று அவனால் கண்டறிய முடியவில்லை. சலிப்புற்றவனாக அந்த இரவு வேகமாக முடியட்டும் என வேகமாக நடந்தான்.
கலையாத இருளில் கடற்கரையின் மணலில் படுத்து அவன் உறங்கியும் விட்டான். நண்டு மணலில் ஊர்ந்து கொண்டிருப்பது போலப் பகலின் வெளிச்சம் மணலில் உறங்கும் அவன் மீது ஊர்ந்து கொண்டிருந்த போது அவன் திருடர்களில் ஒருவனாக எவருக்கும் தோன்றவில்லை
••
நீளும் கரங்கள்
சமீபத்தில் நான் படித்த சிறந்த புத்தகம் சஞ்சயன் செல்வமாணிக்கம் எழுதிய ஒட்டகச்சிவிங்கியின் மொழி. காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இலங்கையின் ஏறாவூரைச் சேர்ந்த சஞ்சயன் நோர்வேயில் வசிக்கிறார். கணினித்துறையில் பணியாற்றுகிறார்,

இதிலுள்ள கட்டுரைகள் அவரது சொந்த அனுபவத்திலிருந்து எழுதப்பட்டிருக்கின்றன. தான் நேசித்த மனிதர்களை. அவர்களின் தனித்துவத்தை, நட்பை, உறவை சிறப்பாக எழுதியிருக்கிறார்.
ஒவ்வொரு கட்டுரையும் ஒரு முழுநாவலாக எழுத வேண்டிய அளவு விஷயங்களைக் கொண்டிருக்கின்றது. ஆனால் அதை நான்கு அல்லது ஐந்து பக்க அளவிற்குள் கச்சிதமான வடிவில் சிறப்பாக எழுதியிருக்கிறார்.
இந்தக் கட்டுரைகளின் பலம் அதன் காட்சிப்பூர்வமான சித்தரிப்பு மற்றும் நுணுக்கமான மொழிநடை. கட்டுரை என்றாலும் அதில் வரும் மனிதர்கள் பேசிக் கொள்வதை நம்மால் கேட்க முடிகிறது. சஞ்சயனின் சுயபகடி மற்றும் சரியான உணர்ச்சி வெளிப்பாடு இக்கட்டுரைகளை மிகவும் நெருக்கம் கொள்ள வைக்கிறது.
“ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் கொடுக்ககூடிய அதியுயர்ந்த பரிசு சரிந்து அழுவதற்குத் தோளும், அழுது பிதற்றும் போது எதுவும் பேசாது கேட்டுக் கொண்டிருக்கும் காதுகளுமே. உங்களைச் சுற்றி இப்படியானவர்கள் இருப்பார்கள். அடையாளம் கொள்ளுங்கள் “என்கிறார் சஞ்சயன். இந்தத் தொகுப்பில் அவரே சிலரை அடையாளம் காட்டியிருக்கிறார்.

சஞ்சயனுக்கு நேர்ந்த அனுபவங்கள் என்றாலும் சில கட்டுரைகளை வாசித்து முடித்தவுடன் நாம் கண் கலங்கிவிடுகிறோம். இழப்பின் வலி நம்மையும் பற்றிக் கொள்கிறது
தீராத பேச்சுகள் கட்டுரையில் வரும் மனிதரின் கோபம் அசலானது. அவர் வாய் ஓயாத பேச்சின் வழியே தனது கடந்தகாலத் துயரங்களைக் கடந்து போக விரும்புகிறார். தன்னை மறைத்துக் கொள்ளவே பேச்சு பலநேரம் பயன்படுகிறது.
“கடலுக்கு அலைகள் வேண்டியிருப்பது போல மனிதனுக்குப் பேசிக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது. அலைகளை ஏற்றுக் கொள்ளும் கரைகளைப் போல நாம் ஏன் நடந்து கொள்வதில்லை“ என்று கேட்கிறார் சஞ்சயன்.
தோழமையின் தோள்கள் கட்டுரையில் முதல் சந்திப்பிலே பிறேமசிறி தனது நட்பின் கரங்களை நீட்டிவிடுகிறார். அவர் சஞ்சயனை வெறும் பயணியாகக் கருதவில்லை. சிலரோடு மட்டுமே பார்த்த முதல் நிமிஷத்திலிருந்து நம்மால் நெருக்கமாகி விட முடிகிறது.
அப்படியான பிறேமசிறியோடு சஞ்சயனின் நட்பு தொடர்கிறது. ராணுவ நெருக்கடிகளை எதிர் கொள்ளும் சூழலில் அவர் செய்யும் உதவிகள் பிறேமசிறியைச் சொந்த சகோதரனைப் போல உணர வைக்கிறது.
பல ஆண்டுகளுக்குப் பின்பாக வயோதிகத்தில் தனியே வாழும் பிறேமசிறியை தனது மகளுடன் சந்திக்கச் செல்கிறார் சஞ்சயன். அவரது மகள்களுக்குப் பிறேமசிறி ஆசி தரும் அந்த தருணம் உணர்ச்சிப்பூர்வமானது. உண்மையானது. கடைசிச் சந்திப்பிலும் சஞ்சயன் விரும்பிய ரொட்டி இடம்பெறுகிறது. ஆழமான உணர்ச்சிகளை வெளிப்படுத்த உணவால் மட்டுமே முடிகிறது போலும்.
கணிணி பழுதுபார்ப்பதற்காகச் சென்ற வீட்டில் சஞ்சயன் ஒரு முதியவரைக் காணுகிறார் அவர் பார்க்கின்சன் நோயால் அவதிப்படுகிறவர். கூடவே மறதியும் சேர்ந்து கொள்கிறது. மருத்துவமனை அவருக்கென விசேச கணிணி ஒன்றை உருவாக்கியிருக்கிறது. அதன் பழுதை நீக்குகிறார் சஞ்சயன். விடைபெறும் போது அந்த முதியவர் தனது குடும்பத்திற்கு எழுதிய கடிதம் ஒன்றைப் படிக்கத் தருகிறார். விசித்திரமான கடிதமது.
அந்தக் கடிதத்தில் தனது நோயைப் பற்றிக் குறிப்பிடும் முதியவர் தனது நடவடிக்கைகள் திடீரென மாறிப்போனதற்கு நோயே காரணம். இந்தப் புதிய வாழ்க்கைக்கு நான் பழகிக் கொள்ள வேண்டும். அதற்கு உங்கள் அனைவரின் உதவியும் தேவை, என்னை என் நோயுடன் நேசியுங்கள் என்று எழுதியிருக்கிறார்.
அந்த முதியவர் தான் ஒட்டகச்சிவிங்கியின் மொழியைப் பற்றிச் சொல்கிறார்.
“ ஒட்டகச்சிவிங்கி உலகத்திலேயே நீளமான கழுத்தையுடையதால் அதன் கண்கள் மிக உயரத்தில் இருக்கும். ஆதலால் எதையும் தெளிவாகப் பார்க்க முடிகிறது. ஒட்டகச்சிவிங்கியின் காதுகள் பெரியவை அவை நீ மற்றவர்கள் பேசுவதைக் கேட்க வேண்டும் என்று குறிக்கிறது. அனைத்து ஜீவராசிகளின் இதயங்களுடன் ஒப்பிடும் போது ஒட்டகச்சிவிங்கியின் இதயமே பெரியது. இது அன்பினைக் காட்டுகிறது என்கிறார்கள். “
இந்த முதியவரோடு நட்புடன் பழகியதைப் பற்றி எழுதும் சஞ்சயன் “நான் ஒட்டகச்சிவிங்கியின் மொழியைக் கற்றுக் கொண்டிருந்தேன்“ என்கிறார்.
அவர் மட்டுமில்லை. நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டியது ஒட்டகச்சிவிங்கியின் அன்பு மொழியே.
இந்தத் தொகுப்பிலுள்ள முஸ்தபாவின் ஆடு என்ற கட்டுரை நிகரற்றது. அதன் கடைசிப் பத்தியை வாசிக்கும் போது நானும் முஸ்தபாவின் கைகளைப் பற்றிக் கொண்டேன்.
பாலஸ்தீனத்தில் அவர் சந்தித்துப் பழகிய முகமட், சஞ்சயனின் இரண்டாம் தாயான எம்மி, முன்பின் தெரியாத மனிதரை தனது வீட்டிற்குள் வைத்து பல காலமாகப் பராமரிக்கும் பெண். வறுமையிலும் நோயிலும் சகமனிதனின் வலியை தனதாக நினைத்த ஓகோத் எனக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள பலரும் தனது தூய அன்பால் ஒளிருகிறார்கள்.
வாழ்க்கையைப் பற்றிய ஒராயிரம் புகார்களும் வெறுப்பு பேச்சுகளும் நிரம்பிய இன்றைய சூழலில் இது போன்ற அபூர்வ மனிதர்களைச் சஞ்சயன் அடையாளம் காட்டியிருப்பது முக்கியமானது. பாராட்டிற்குரியது.
“மொழி புரியாது விக்கிவிக்கி அழும் மனிதனின் மேல் இரக்கம் வந்தது. அவனது மொழி எனக்குப் புரியவில்லை. ஆனால் அந்த வலியின் மொழியினையும் வேதனையையும் புரியுமளவு எனக்கு மென்னுணர்வு இருந்தது“ என ஒரு கட்டுரையில் சஞ்சயன் எழுதியிருக்கிறார்.
அந்த மென்னுணர்வு தான் இந்த 28 கட்டுரைகளையும் எழுத வைத்திருக்கிறது. அதுவும் ஒட்டகச்சிவிங்கியின் மொழியில்.
•••
March 15, 2025
குற்றமுகங்கள் – 4 பெஜவாடா ரந்தேரி
அன்றைய மெட்ராஸ் ராஜஸ்தானி நான்கு மாநிலங்களை உள்ளடக்கியது. பெஜவாடா ரந்தேரி இதில் எந்த மாநிலத்தில் எந்த ஊரில் வசித்தான் என்று தெரியவில்லை. ஆனால் அவனது விளம்பரம் தமிழ் மற்றும் ஆங்கிலப் பத்திரிக்கைகளில் வெளியாவது வழக்கமாகயிருந்தது.

“வட இந்தியா யாத்ரா ஸ்பெஷல். இது எங்களுடைய 14 வது யாத்திரை. 1931ம் வருஷம் பிப்ரவரி முதல் வாரத்தில் மதராஸிலிருந்து புறப்படும். துங்கபத்ரா பண்டரிபுரம், நாசிக், பரோச், நர்மதை, அஹமதாபாத், மவுண்ட் அபு ,அஜ்மீர் ஜெய்பூர், ஆக்ரா, மதுரா, டெல்லி, குருசேத்திரம், ஹரித்துவார், லக்னோ பிரயாகை, அலஹாபாத், காசி, கயா, கல்கத்தா, பூரி, ஸிம்ஹாசலம், ராஜ் மஹேந்திரி வழியாக மதராசுக்குத் திரும்பி வரும். மூன்றாவது வகுப்புச் சார்ஜ். ரூ 90 இரண்டாவது வகுப்புச் சார்ஜ் ரூ 225
நூறு பேர்கள் மட்டுமே யாத்திரைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்பதால் முன்பதிவு அவசியம். தனி ரயிலில் பயணம் நடைபெறும். யாத்ரீகர்களுக்கெனக் கும்பகோணம் கணேசய்யர் சமையல். பயணத்தில் வெற்றிலை பாக்கு, முறுக்கு அதிசரம் இலவசமாக வழங்கப்படும், முன்பதிவிற்கு அணுகவும். பெஜவாடா ரந்தேரி கம்பெனி, நம்பர் 14, செகண்டு லைன் பீச். மதராஸ் “என விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது
அந்த அலுவலகத்தில் சேஷாசலம் என்ற குமாஸ்தா மட்டுமே இருந்தார். அவர் முன்பாகச் சிவப்பு பேரேடு ஒன்றிருந்தது. அதில் முன்பதிவு செய்பவர்களின் பெயர் முகவரி குறித்துக் கொள்ளப்பட்டது. வக்கீல் அச்சுதன் நாயர் முதல் டாக்டர் ராமதீர்த்தம் வரை பலரும் இந்த யாத்திரைக்குப் பதிவு செய்திருந்தார்கள். ராயங்குடி மிட்டாதார் தனது மனைவியுடன் பயணத்திற்குப் பதிந்திருந்தார்.
பயணத்தேதியன்று சில்வர் கூஜா, தலையணை. போர்வை, ஸ்வெட்டர். வெள்ளித்தட்டு டம்ளர், ஸ்பூன். சகிதமாக ரயில் நிலையத்திற்கு அனைவரும் வந்து காத்திருந்தார்கள். எந்தப் பிளாட்பாரத்திலிருந்து ரயில் புறப்படுகிறது என்று தெரியவில்லை. இரவு பனிரெண்டரை வரை பிளாட்பாரத்தில் காத்திருந்த பின்பு அப்படி ஒரு யாத்ரா ஸ்பெஷல் ரயில் மதராஸில் இருந்து புறப்படவேயில்லை என்பதையும், பெஜவாடா ரந்தேரி தங்களை ஏமாற்றி ஒடிவிட்டான் என்பதையும் அறிந்து அதிர்ச்சியடைந்தார்கள்.
மதராஸில் அவன் குறிப்பிட்டிருந்த முகவரியில் விசாரித்த போது இரண்டு மாத வாடகைக்கு அந்தக் கட்டிடத்தை எடுத்திருந்தான் என்றும் குமாஸ்தாவிற்குச் சம்பளம் பாக்கியுள்ளதாகவும் கண்டுபிடித்தார்கள். முன்பதிவு செய்த பணம் முழுவதையும் ஒரு இளம்பெண் வந்து வாங்கிக் சென்றாள் என்றும் அவள் ரந்தேரியின் மனைவியா, அல்லது காதலியா எனத் தெரியவில்லை என்றார்கள்.
ரந்தேரி ஒரு போதும் தனி ஒரு ஆளை ஏமாற்றவில்லை. அவன் கூட்டத்தை ஏமாற்றினான். அதுவும் படித்தவர்களை மட்டுமே ஏமாற்றினான். இந்த உலகில் புத்திசாலிகளே அதிகம் ஏமாறுகிறார்கள்.

உண்மையில் பெஜவாடா ரந்தேரி என்று ஒருவரேயில்லை. அது ஒரு ரகசிய அமைப்பு. அவர்கள் திட்டமிட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று காவல்துறை அதிகாரி ஜே.வி. நெல்சன் தனது புலனாய்வு அறிக்கையில் தெரிவித்தார்.
பெஜவாடா ரந்தேரி இப்படி மதராஸில் இருந்தவர்களை ஏமாற்றியது போலவே காசியில் இருந்து ராமேஸ்வரம், மதுரை உள்ளிட்ட தென்னாட்டு யாத்திரைக்கு அழைத்துப் போவதாக வட இந்தியர்களையும் ஏமாற்றியிருக்கிறான். கல்கத்தாவில் இருந்து துவாரகைக்கு யாத்திரை, ராஜஸ்தானிலிருந்து பூரி ஜெகனாதர் கோவில் யாத்திரை என்று பல்வேறு விதங்களில் விளம்பரம் கொடுத்து இந்தியா முழுவதையும் ஏமாற்றியிருக்கிறான்.
இந்திய ரயில்வே துறையே இந்த மோசடி பற்றி எச்சரிக்கையாக இருக்கும்படி பொது அறிவிப்பினை வெளியிட்டது. மோசடி நடைபெற்ற எல்லா இடங்களிலும் இதே போல ஒரு குமாஸ்தா இருந்திருக்கிறார். ஒரு இளம் பெண் தான் பணத்தைப் பெற்றுக் கொண்டு போயிருக்கிறாள்.
இதன்பிறகான நாட்களில் பேப்பரில் விளம்பரம் வெளியிடுகிறவர்கள் அத்தாட்சிச் சான்று தர வேண்டும் என்பதைப் பத்திரிக்கைகள் கட்டாயமாக்கினார்கள்.
யாத்திரை மோசடிகள் ஒடுக்கப்பட்டதன் பின்பாகப் பெஜவாடா ரந்தேரி மந்திர மை என்றொரு மோசடியைத் துவக்கினான். இதன்படி நகரின் முக்கியப் பிரமுகர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி வைத்தான்.
“ஐயா, உங்கள் கையெழுத்து நிமிர்ந்தும் தீர்க்கமாயுமிருப்பதால் சத்தியத்தில் பிரியமுள்ளவராயும் கபடற்றவராயுமிருப்பீர்கள். எக்காரியத்தையும் துணிந்து செய்ய வல்லவராக இருப்பீர்கள். ஆனால் கையெழுத்திலுள்ள அட்சரங்கள் சீராக அமையப்பெறாது ஒடுங்கியிருப்பதால் உங்களுக்குத் தொழிலிலும் குடும்பத்திலும் மிகப் பெரிய தீங்குகள் நேரிடக்கூடும். இதனால் பொருள்சேதமும் உயிர்சேதமும் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆகவே நாங்கள் அனுப்பும் மந்திரமையில் தொட்டு எழுதும்போது உங்கள் கையெழுத்து மந்திர எழுத்தாக மாறி சகல சுபீட்சங்களும் உங்களுக்கு வந்து சேரும். நீங்கள் குபேர சம்பத்து அடைவீர்கள் என்பது உறுதி.
இந்த மந்திரமையைப் பெறுவதற்கு ரூபாய் நூறு அனுப்பி வைத்தால் உங்கள் வீடு தேடி மைப்புட்டியும் விசேச பேனாவும் வந்து சேரும். உங்கள் தலையெழுத்தை மாற்றப்போகும் மையிற்காக நூறு ரூபாய் செலவு செய்யத் தயங்க வேண்டாம். இவண் லோகோபகாரி“ என்றிருந்தது.

ரந்தேரி குறிப்பிட்ட முகவரிக்குப் பணம் அனுப்பியவர்களுக்கு மைப்புட்டியும் பேனாவும் வந்து சேர்ந்தது. ஆனால் அந்த மைப்புட்டியும் பேனாவும் எட்டு அணாவிற்கு மேல் பெறாதது என்று அவர்கள் அறிந்த போது தங்கள் விரலில் தாங்களே சுத்தியலால் அடித்துக் கொண்டது போல உணர்ந்தார்கள்.
ரந்தேரியிடம் ஏமாந்தவர்களில் பதினாறு பேர் யாத்திரைக்குப் பதிவு செய்தும் மந்திர மை வாங்கியும் இரண்டு முறை ஏமாந்திருக்கிறார்கள். அதில் இரண்டு பேர் பி.ஏ. பட்டம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்று ஒன்பது வகையான மோசடிகளில் ஈடுபட்ட பெஜவாடா கும்பல் தெருநாய் ஒன்றால் மாட்டிக் கொண்டது விசித்திரமானது. காவல்துறையின் விசாரணையின் போது கனகம்மா என்ற பெண்ணும் அவளது இரண்டு சகோதரர்களும் இணைந்து இந்தக் குற்றங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.
கனகம்மாளும் அவளது சகோதரர்களும் ராமாயப்பட்டினத்தில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்கள். அந்த ஊரிலிருந்த நாய்கள் அவர்களை எங்கே பார்த்தாலும் வெறிக் கொண்டது போலக் குலைத்தன. எந்த வேஷத்தில் வந்தாலும் நாய்களிடமிருந்து தப்ப முடியவில்லை. சில நேரம் அவர்களின் பின்னால் நாய் கூட்டமே குரைத்தபடி பின்தொடர்ந்தன. தூக்கமின்மையால் அவதிப்பட்ட கனகம்மாவால் நாயின் இடைவிடாத குரைப்பொலியை தாங்க முடியவில்லை
இதற்காகவே அவர்கள் ரயிலிலே ஊர்விட்டு ஊர் சென்றபடியே இருந்தார்கள். ஆனால் எந்த ஊருக்குப் போய் இறங்கினாலும் அங்குள்ள நாய்கள் அவர்களை ஆவேசமாகக் குரைத்தன. துரத்தின.
ஒரு நாள் கனகம்மா தங்கியிருந்த வீட்டின் முன்பாகச் செம்பட்டை நிறத்திலிருந்த நாய் ஒன்று வானை நோக்கி தலையை உயர்த்தி ஊளையிட்டபடி நின்றிருந்தது. அவர்கள் ஆத்திரத்தில் கடுகும் மஞ்சளும் கலந்த தண்ணீரை அதன்மீது ஊற்றி விரட்டினார்கள். ஆனாலும் அந்த நாய் போக மறுத்தது. இரவிலும் அதன் குரலை அடக்க முடியவில்லை. எதற்காக நாய் இப்படிப் பகலிரவாக ஊளையிடுகிறது எனச் சந்தேகம் கொண்டு காவல்துறையினர் விசாரித்த போது பெஜவாடா கும்பல் வசமாகச் சிக்கிக் கொண்டது.
குற்றம் என்பது ஒரு பள்ளம். ஒரு விரிசல். அது நீதியால் நிரப்பபட்டுவிடும் என்கிறார்கள். கனகம்மா விஷயத்தில் அப்படித் தான் நடந்திருக்கிறது.
March 13, 2025
குற்ற முகங்கள் 3 உயரன் அவிபாதி
சுமார் 228 ஆண்டுகளுக்கு முன்பு மதராஸ் ஜார்ஜ் கோட்டையின் உள்ளே கொலை மற்றும் திருட்டிற்காக உயரன் அவிபாதி மற்றும் இரண்டு பிச்சைக்காரர்களுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதில் அவிபாதியின் கழுத்திற்கு ஏற்ப சிறிய தூக்கு கயிறு தயாரிக்கபட்டது. ஒன்பது கொலைகள் செய்ததாகக் கைது செய்யப்பட்ட அவிபாதி நான்கு அடி எட்டு அங்குல உயரம் கொண்டிருந்தான்.
தூக்கிலிடப்பட்ட போது அவனுக்கு வயது முப்பது. ஒவ்வொரு கொலையும் தனது உயரத்தை ஒரு அங்குலம் உயர்த்திவிட்டதாக அவன் நம்பினான்.
பிறப்பிலே குள்ளனாக இருந்த அவிபாதி தனது உயரம் குறித்து மிகுந்த தாழ்வுணர்வு கொண்டிருந்தான். பொது இடங்களில் அவனைப் பலரும் கேலி செய்வதால் கோபம் கொண்டான். இதற்காகவே பகலில் வீதியில் நடமாடாமல் ஒளிந்து வாழ்ந்தான்.
வசதியான குடும்பத்தில் பிறந்தவன் அவிபாதி. ஆனால் பணத்தால் தனது உயரத்தை அதிகமாக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்டிருந்தான்.
தரையில் நிற்கும் போது அவன் குள்ளமானவன் என்று தெரிவதால் தரையில் நிற்க மறுத்தான். இரவில் பூம்பூம்மாடு போல அலங்கரிக்கபட்ட காளை ஒன்றின் மீது அமர்ந்து பவனி வந்தான். பனைமர உயரத்தில் மரக்கோபுரம் அமைத்து அங்கே தங்கிக் கொண்டான். வில் வித்தையில் நிகரற்றவனாக இருந்தான். என்ன சாகசங்கள் செய்தாலும்.உலகம் அவனைக் குள்ளன் என்றே அழைத்தது.,
குற்றமே மனிதனின் உயரத்தை பெரிதாக்குகிறது என்று அவிபாதி கண்டுபிடித்தான். அதுவும் பட்டப்பகலில் சலவைத்துறையில் வைத்து வெங்குராவ் என்பவனை வெண்கலப் பூண் போட்ட தடியால் அடித்துக் கொலை செய்த போது அவிபாதி ஆறடிக்கும் மேலாக வளர்ந்து நிற்பதாக உணர்ந்தான். அவனது குரூர கொலையைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் அவன் விஸ்வரூபம் கொண்டது போலவே பயந்தார்கள்.
கொத்தவாலின் ஆட்களிடமிருந்து தப்பி ஒளிந்து கொண்டுவிட்ட அவனைக் கைது செய்வதற்காகக் காவல்படையினர் தேடுதலை மேற்கொண்டார்கள். தப்பி வாழும் போது உண்மையில் தான் விடுவிடுவென வளர்ந்து கொண்டிருப்பதாக அவிபாதி உணர்ந்தான். காவலர்களுக்குப் பயந்து பல்வேறு வேஷங்கள் புனைந்து கொண்டான். சில காலம் கரடி உருவம் கொண்டு சுற்றியலைந்தான் என்கிறார்கள்.
இந்த நாட்களில் அவன் தன்னை உயரன் அவிபாதி என்று அழைத்துக் கொண்டான். குட்டையான ஆண்களைப் பெண்கள் விரும்புவதில்லை என்பதை நினைத்து ஆத்திரம் கொண்டான் தனது உயரத்தை உலகிற்கு அடையாளம் காட்டுவது போல இரட்டையர்களான கோகிலா கோமளா இருவரையும் ஒரே மேடையில் வைத்துத் திருமணம் செய்து கொண்டான்.
அவர்கள் இருவரும் ஆறடிக்கு சற்று குறைவான உயரம் கொண்டிருந்தார்கள். மாநிறத் தோற்றம், அந்தத் திருமணத்திற்கு வரும் போது அவன் கட்டைக்காலில் நடந்து வந்தான் என்றார்கள். அதாவது உயரமான ஒரு மூங்கில் கழியில் குறுக்குக் கொம்பு ஒன்றைக் கட்டி அதன்மேல் ஏறிநின்று கைகளால் கழியைப் பற்றிக்கொண்டு தத்தித் தத்தி நடந்து வந்திருக்கிறான். தாலி கட்டும் போது மணப்பெண்கள் இருவரும் மண்டியிட்டு தான் அமர்ந்திருந்தார்கள். தன்னைப் போலப் பிள்ளை பிறந்துவிடக் கூடாது என்று நினைத்த அவிபாதி இரண்டு மனைவிகளையும் முத்தமிட மட்டுமே செய்தான் என்றும் சொல்கிறார்கள்.

இரண்டரை வருஷங்கள் தேடிச்சலித்து முடிவில் வெள்ளைக்கார அதிகாரி ஜான் ஆர். மெக்லேன் அவனைக் கைது செய்த போது இந்தக் குள்ளனா கொலையைச் செய்தவன் என்று நம்பமுடியாமல் திகைத்துப் போனார். அதை விடவும் அவன் இரண்டு பெண்களைத் திருமணம் செய்திருந்ததைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
நீதி விசாரணையின் முடிவில். அவனுக்கு விசித்திரமான தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி அவிபாதி மரத்தாலான சுழலும் பொறி ஒன்றினுள் நிறுத்தப்பட்டான். சூரிய வெளிச்சம் நேரடியாக அவன் கண்ணில் விழும்படி அந்தப் பொறி உருவாக்கபட்டிருந்தது. சூரியனின் நகர்விற்கு ஏற்ப அந்தப் பொறியும் இயங்கும் என்பதால் காலை முதல் சூரியன் மறைவது வரை அவனது கண்கள் சூரியனை பார்த்தபடியே இருக்க வேண்டும். தன்னை அறியாமல் அவன் கண்களை மூட முயன்றால் பொறியிலிருந்த ஊசி கண்ணுக்குள் சொருகிவிடும். ஆகவே அவன் இடைவிடாமல் சூரிய வெளிச்சத்தைப் பார்த்துக் கொண்டிருந்து ஒரே நாளில் குருடாகிப் போனான்.
இந்தத் தண்டனைக்குப் பின்பு அவிபாதி தான் ஒரு பற்குச்சியை விடவும் சிறியதாகிவிட்டது போல உணர்ந்தான். பழிவாங்க வேண்டும் என்ற ஒரேயொரு உணர்வு மட்டுமே அவனிடம் கொப்பளித்தது. தன்னை அவமானப்படுத்திய ஜான் ஆர். மெக்லேனின் மகள் மற்றும் மனைவியை இரண்டு பிச்சைக்காரர்களின் உதவியோடு கொலை செய்தான். அந்தக் கொலைகளின் காரணமாக அவன் மதராஸின் அச்சமூட்டும் பெயராக உருமாறினான்.
அதன் பின்பாக அவன் செய்த கொலைகள் எதற்கும் காரணம் கிடையாது. யாரை கொலை செய்தான் என்று கூட ஆள் அடையாளம் அவனுக்குத் தெரியாது. கொலைகளின் வழியே உயரமாகிக் கொண்டேயிருந்தான்.
கடந்தகால அவமானங்களின் கசப்பினை மனது உணரும் நாளில் அவன் திருட்டும் கொலைகளும் செய்திருக்கிறான். முடிவில் அவனையும் இரண்டு பிச்சைக்காரர்களையும் வேப்பேரி நாடக கொட்டகை ஒன்றில் வைத்து கைது செய்தார்கள்.
அதன் சில நாட்களிலே தூக்கு தண்டனையும் நிறைவேற்றப்பட்டது. இறந்த அவனது உடலை வெள்ளைக்காரர்களே புதைத்தார்கள். அவனது விருப்பப்படி உடலைப் புதைக்க ஆறடி குழி தோண்டப்படவில்லை. ஒரே குழியில் இரண்டு பிச்சைக்காரர்களுக்கு நடுவே நோயில் இறந்த சிறுவனின் உடலைப் போல அவிபாதியின் உடலும் சேர்த்துப் புதைக்கப்பட்டது.
சில மாதங்களின் பின்பு அந்தச் சமாதியின் மீது ஒற்றைப் புல் வளர்ந்து காற்றில் ஆடிக் கொண்டிருந்தது. அது ஏதோ சொல்லிக் கொண்டிருப்பது போலிருந்தது. அது உயரன் அவிபாதியின் கதை தானோ என்னமோ.
March 12, 2025
குற்றமுகங்கள்- 2 தங்கப்பல் மோனி
தங்கப்பல் மோனியின் பூர்வீகம் எதுவெனத் தெரியவில்லை. ஆனால் அவன் சீனத்தகப்பனுக்கும் தெலுங்குப் பெண்ணிற்கும் பிறந்தவன் என்றார்கள். சப்பை மூக்கும் சீனப் புருவமும் கொண்டிருந்தான். தொங்கு மீசை வைத்துவிட்டால் சீனனே தான். மசூலிப்பட்டினத்தின் துறைமுகத்தில் மோனி வளர்ந்தான். அந்த நாட்களில் சுவரின் வெடிப்பில் வளரும் செடியைப் போலிருந்தான்.

யார் யாரோ வீசி எறிந்த எச்சில் உணவுகளைச் சாப்பிட்டான். ஒரு கப்பலை விழுங்கி விடுமளவிற்கு அவனுக்குப் பசியிருந்தது. உணவு கிடைக்காத இரவுகளில் நட்சத்திரங்களைப் பறித்து உண்ண முயற்சித்தான். கோபம் தான் அவனை வளர்ந்தது. மௌனத்தைச் சிறிய கத்தியைப் போல மாற்றி வைத்துக் கொண்டான். அலட்சியத்தைத் தொப்பியாக அணிந்து கொண்டான்.
தனது பதினாறாவது வயதில் கப்பல் மாலுமியான சார்லஸ் ஃப்ரையட் என்பவனோடு மோனி சண்டையிட்டு ஒரு விரலை இழந்துவிட்டான். அதுவும் மோதிர விரல். ஆகவே மோனியின் வலது கையில் நான்கு விரல்களே இருந்தன. அது தான் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்தது என்று மோனி நம்பினான்.
அவனைக் கப்பல் எலி என்று அழைத்தார்கள். திருடுவதில் உள்ள சாமர்த்தியம் தான் காரணம். துறைமுகத்திற்கு எந்தக் கப்பல் வந்து நின்றாலும் அதிலிருந்த பொருட்களில் ஒருபகுதி காணாமல் போய்விடும். யார் திருடுகிறார்கள். எப்படித் திருடுகிறார்கள். கடலில் அதை எப்படிக் கொண்டு போகிறார்கள் என்று கண்டறிய முடியாது. ஆனால் அதை மோனி செய்திருப்பான். கடலைக் கூட்டாளியாகக் கொள்ளாமல் திருட முடியாது என்பது அவனது நம்பிக்கை.
இங்கிலாந்தில் பிளேக் நோய் பரவிய காலத்தில் புறப்பட்ட இம்பீரியல் என்ற கப்பல் மசூலிப்பட்டினம் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்திருந்தது. அந்தக் கப்பலில் வந்த அனைவரும் இறந்துவிட்டார்கள் என்றும் அதில் ஏற்றப்பட்டிருந்த பொருட்களைத் துறைமுகத்தில் இறக்கி வைத்தால் அங்கும் பிளேக் வந்துவிடும் என்று வெள்ளைக்காரர்கள் பயந்தார்கள்.
துர்நாற்றம் வீசிய அந்தக் கப்பலை ஏறிட்டுப் பார்த்தால் கூடக் கொள்ளைநோய் வந்துவிடும் என நம்பினார்கள்.

கைவிடப்பட்ட அந்தக் கப்பலில் இருந்த சரக்குகளை மோனி தனது ஆட்களோடு திருடுவதற்காகச் சென்றான். இறந்த உடல்களின் விரல்களைக் கருமித் தின்னும் எலிகள் அவர்களின் காலடியோசை கேட்டு ஒடின. கப்பலில் இருந்த பொருட்களைத் தனதாக்கிக் கொண்டு இறந்த உடல்களுடன் கப்பலை தீவைத்து எரித்தான். அன்றிரவு முழுவதும் மோனி உற்சாகமாக நடனமாடினான்.
பிளேக் கப்பலில் கிடைத்த பொருட்களை விற்ற பணம் தான் மோனியை பணக்காரனாக்கியது. அதன்பின்பு மோனி எப்போதும் பட்டு அங்கி அணியத் துவங்கினான். வெள்ளியில் செய்த பல்குச்சியை வைத்துக் கொண்டான். பாரசீக மதுவை அருந்தினான். முயல்கறியை விரும்பி சாப்பிட்டான்.
தன்னைக் கௌரவமான ஆளாகக் காட்டிக் கொள்ளத் தனது முன்பற்களில் இரண்டை அவனே உடைத்துக் கொண்டு தங்கப்பல் கட்டிக் கொண்டான். அதன்பிறகே அவனைத் தங்கப்பல் மோனி என்று அழைக்கத் துவங்கினார்கள்.
மோனிக்கு மூன்று காதலிகள் இருந்தார்கள். ஆனால் அவர்களில் எவரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. திருடனாக இருந்தாலும் அவன் இரவில் தனியே செல்ல பயப்பட்டான். அவனுடன் எப்போதும் ஏழெட்டு பேர் உடனிருந்தார்கள். அவன் காதலியை அணைத்தபடி உறங்கும் போது கூடக் கட்டிலை ஒட்டி இரண்டு அடியாட்கள் தரையில் உறங்குவார்கள்.
கிணற்றடியில் குளிக்கும் போது கூடத் துண்டை வைத்துக் கொண்டு ஒருவன் திரும்பி நின்றபடி இருக்க வேண்டும்.
மோனியிடம் திருடுவதில் கைதேர்ந்த முப்பது பேருக்கும் மேலாக இருந்தார்கள். அவர்கள் வெட்டுக்கிளிகள் போல ஒன்றாகச் செல்வார்கள். திருடுவார்கள். மோனி கொடுப்பதைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வார்கள். திருடச் செல்லும் போது எல்லோரும் ஊமையாகிவிட வேண்டும். ஒரு வார்த்தை கூட உதட்டிலிருந்து வெளிப்பட்டுவிடக்கூடாது என்பது அவனது நம்பிக்கை.
மசூலிப்பட்டினத்திலிருந்த கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளால் அவனை ஒடுக்க முடியவில்லை.
இந்நிலையில் மசூலிப்பட்டினத்தில் ஒரு செய்தி வேகமாகப் பரவியது. அதாவது தங்கப்பல் மோனி திருடனில்லை. அவன் முந்திய பிறவியில் பெரிய மகான். ஞானி. அவன் வணிகர்களிடமிருந்து எதைத் திருடிச் சென்றாலும் திருட்டுக் கொடுத்தவருக்கு அதிர்ஷ்டம் வந்துவிட்டதாக அர்த்தம். ஆகவே மோனி திருடியதற்காக எவரும் வருத்தமடைய வேண்டாம். அவன் திருடுவதற்கு அனுமதியுங்கள்.
யார் இதை உருவாக்கினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் வணிகர்கள் இதை நம்பத் துவங்கினார்கள். கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் இதைக் கேட்டு கேலி செய்தார்கள்.
அதன்பிறகு மோனி கப்பலிலோ, துறைமுகத்திலோ எதைத் திருடிச் சென்றாலும் வணிகர்கள் சந்தோஷப்பட்டார்கள். அதிர்ஷ்டத்தின் கை தங்களைத் தொடுவதாக உணர்ந்தார்கள். இதனால் மோனிக்குத் திருடுவதில் ஒரு தடையும் ஏற்படவில்லை.
சில நேரம் வணிகர்கள் தங்கள் இடத்திற்கு வந்து திருடும்படியாக மோனிக்கு அழைப்பு விடுத்தார்கள். துறைமுகம் வந்து சேரும் சரக்குக் கப்பலில் ஒரு பங்கு மோனிக்கு எனத் தனியே பிரித்து அளிக்கபட்டது.
திருடுவதில் தடைகள் இல்லாத போது திருடன் நனைந்த பஞ்சைப் போலாகி விடுகிறான். தன்னால் எந்த அதிர்ஷ்டமும் கிடைக்காது என்று தங்கப்பல் மோனி கூச்சலிட்ட போதும் எவரும் அதை ஏற்கவில்லை.
ஒரு நாள் தங்கப்பல் மோனிக்கு ஒரு விசித்திர கனவு வந்தது. அதில் அவன் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் மாட்டு வண்டியில் கொண்டு வரப்படுகிறான். சாலையில் வேடிக்கை பார்க்கும் ஆட்கள் அவனைக் கல்லால் எறிகிறார்கள். மோனியை தூக்கு மேடைக்கு அழைத்துப் போகிறார்கள். அப்போது கூட்டத்திலிருந்த ஒரு சிறுவன் தனக்கு மோனியின் தங்கப்பல் வேண்டும் என்று கேட்கிறான். தட்டி எடுத்துக் கொள் என ஒரு கல்லை கொடுத்து அனுப்புகிறார்கள். கைகள் கட்டப்பட்ட நிலையில் உள்ள மோனியின் தலையைப் பிடித்துக் கொண்டு அந்தச் சிறுவன் ரத்தம் சொட்ட சொட்ட இரண்டு பற்களையும் தட்டி எடுக்கிறான். வலி தாங்க முடியாமல் மோனி அலறுகிறான். அந்தப் பையன் மகிழ்ச்சியோடு கைகளை உயர்த்திக் காட்டுகிறான். அதில் இரண்டு தங்கப் பற்கள். கூட்டம் ஆரவாரம் செய்கிறது.
என்ன கனவு இது. இப்படி நடக்கக் கூடுமா. மோனி குழம்பிப் போனான். மசூலிபட்டனத்திலிருந்து உடனே வெளியேறி போய்விட வேண்டும் என்று முடிவு செய்தான். அதை யாரிடமும் அறிவிக்காமல் நள்ளிரவில் சிறிய படகில் புறப்பட்டுச் சென்றான்.
அந்த இரவில் கடலில் வைத்து மோனி கொல்லப்பட்டான். யார் அவனைக் கொன்றார்கள் என்று தெரியவில்லை. ஆனால் கொன்றவன் மோனியின் இரண்டு தங்கப்பற்களைப் பிடுங்கிச் சென்றிருந்தான்.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
