S. Ramakrishnan's Blog, page 12
April 19, 2025
எஸ்.ரா நூல்கள் 100
எனது நூறு நூல்கள் குறித்து இணையத்தில் தொடர் கூட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளார் தமிழ் பேராசிரியர் முனைவர். சு.வினோத். அவருக்கு எனது மனம் நிறைந்த அன்பும் நன்றியும்.

அஞ்சிறைத்தும்பி இலக்கிய அமைப்பின் மூலம் இந்த இணைய வழி நிகழ்வு நடைபெறுகிறது.
நாளைக் காலை பத்துமணிக்கு அதன் முதல் நிகழ்வு துவங்குகிறது.
அனைவரும் இதில் கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.

நிகழ்ச்சி விபரம்
எஸ்.ரா நூல்கள் 100
Vinod S is inviting you to a scheduled Zoom meeting.
Join Zoom Meetinghttps://us04web.zoom.us/j/77727323793?pwd=epqtpVZ8vA9l9YwmIYfgQHNkSI5Wd3.1
Meeting ID: 777 2732 3793
Passcode: 8kraDk
நிகழ்வு குறித்து கூடுதலாக அறிந்து கொள்ளவும், இணைய வழி இணைவதில் தேவைப்படும் உதவிக்கும் பேராசிரியர் வினோத் அவர்களைத் தொடர்பு கொள்ளவும்
தொலைபேசி எண் 9443869129
••
குற்றமுகங்கள் 9 மகரன் காண்டீபன்
புகையால் எழுதப்படும் பெயர்கள் நிலைப்பதில்லை. ஆனால் அதன் வசீகரம் அபூர்வமானது. அப்படிச் சிகரெட் புகையைக் கொண்டு தனது பெயரை எழுதிக் காட்டத் தெரிந்தவன் மகரன் காண்டீபன். ஐந்தரை அடி உயரம். வயது முப்பதுக்குள்ளிருக்கும். கட்டை மீசை. மஞ்சள் படிந்த கண்கள். உரிந்த தோல் கொண்ட உதடுகள். தன்னை எரித்துக் கொள்ளும் போதும் சிகரெட் மௌனமாக இருக்கிறது என்பதாலே அதை மகரனுக்குப் பிடித்துப் போனது.

இங்கிலீஷ் கிளப்பில் நடக்கும் குத்துசண்டை போட்டிகளின் போது சிகரெட் விற்பனை செய்வது மகரனின் வேலை. இதற்கான உரிமையை அவன் கர்னல் மார்டினிடமிருந்து பெற்றிருந்தான். அந்த நாட்களில் இங்கிலீஷ் கிளப்பிற்குள் இந்தியர்கள் அனுமதிக்கபடவில்லை.
கிளப்பின் பந்தாட்ட மைதானத்தையும் சூதாட்ட அரங்கினையும் சுத்தம் செய்வதற்காகத் தினமும் வரும் பணியாளர்கள் கூடப் பின்வாசல் வழியாகக் காலில் துணிகளைக் கட்டிக் கொண்டே உள்ளே வர வேண்டும் என்ற நடைமுறை இருந்தது.
மகரன் காண்டீபன் சிகரெட் விற்பனை செய்யும் உரிமையைப் பெறுவதற்கு முன்பாகப் புகைக் கலைஞனாக வேலை செய்தான்.
மதராஸின் எழும்பூரில் 1854ல் புதிதாகத் துவங்கப்பட்ட அருங்காட்சியகத்தினைக் காண மக்களைக் குறைவாக வந்தார்கள். கூட்டத்தை ஈர்க்கும் விதமாக அதன் இயக்குநராக இருந்த எட்வர்ட் கிரீன் பல்பர் பல புதுமைகளை மேற்கொண்டார். அதன்படி ஒட்டகம், சிறுத்தை கரடி. வரிக்குதிரை போன்ற உயிருள்ள விலங்குகளைக் கொண்டு வந்து காட்சிப்படுத்தினார். அவற்றை மக்கள் நெருங்கிப் பார்வையிடவும் அனுமதித்தார்.
அப்படியும் கூட்டம் திரளாத போது தனிநபர் வேடிக்கை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார். மணலைக் கயிறாகத் திரித்துக் காட்டும் நிகழ்ச்சி. ஆறடி நீளமுள்ள வாளை விழுங்கி காட்டும் நிகழ்ச்சி. பாம்பு மனிதன் ஷோ எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில் ஒன்றாக மகரன் காண்டீபனின் புகைவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது
மரமேஜை ஒன்றின் மீது ஏறிக் கொண்டு மகரன் காண்டீபன் ஒரே நேரத்தில் வாயில் ஆறு சிகரெட்டுகளைப் பற்ற வைத்துப் புகைவிடுவான். வளைய வளையமாக அந்தப் புகை வெளியேறுவதைக் கண்டு மக்கள் ரசித்துக் கைதட்டுவார்கள். அது போலவே புகையால் தனது பெயரை எழுதிக் காட்டுவான். இது மட்டுமின்றிக் காது வழியாகச் சிகரெட் புகையைவிடுவது, எரியும் சிகரெட்டினை வாயினுள் விழுங்கிக்காட்டுவது போன்ற வேடிக்கைகளையும் செய்து வந்தான்.
எட்வர்ட் கிரீன் பல்பர் அவனது உடையே சிகரெட் போல இருந்தால் நன்றாக இருக்கக் கூடும் என நினைத்து பொன்னிற மேல் சட்டையும் வெள்ளை பேண்டும் பரிசாக வழங்கினார். அத்தோடு அவன் ஒரு நடமாடும் சிகரெட் என்ற பட்டத்தையும் வழங்கினார்.
மகரன் காண்டீபன் விசேச உடையினை அணிந்து கொண்டு தனது புகைவிடும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தி புகழ்பெற்றான். அதிலும் ஒருமுறை இரண்டு குரங்குகளைச் சிகரெட் புகைக்க வைத்துக் காட்டியது பெரிய வரவேற்பைப் பெற்றது.
இதன் தொடர்ச்சியாக மார்க் அண்ட் கோ வழியாக இங்கிலாந்திலிருந்து பல்வேறு விதமான சிகரெட் ரகங்களை வரவழைத்து விற்பனை செய்ய ஆரம்பித்த மகரன் சிப்பாய்களுக்குள் சிகரெட் பிடிக்கும் போட்டி ஒன்றையும் வெற்றிகரமாக நடத்திக் காட்டினான்.
இந்தப் புகழின் காரணமாகவே அவன் இங்கிலிஷ் கிளப்பில் சிகரெட் விற்பனை செய்வதற்கான அனுமதி கிடைத்தது. அங்கே வாரம் சனிக்கிழமை மாலை குத்துசண்டை நடப்பது வழக்கம்.
ராணுவ அதிகாரிகளும் கப்பல் மாலுமிகளும் கம்பெனி வணிகர்களும் அதைக் காண ஒன்று கூடுவார்கள். அந்தக் குத்துசண்டையில் பெரும்பாலும் ஆங்கிலேயர்கள் மட்டுமே ஈடுபடுவார்கள். குத்துசண்டை அரங்கிலே மதுவும் சிகரெட்டும் விற்கபடும்.
இங்கிலிஷ் கிளப்பில் பெண்களுக்கு அனுமதி கிடையாது. ஆனால் பெண்பித்துக் கொண்ட வெள்ளைக்கார அதிகாரிகளை மகிழ்ச்சிப்படுத்த ஆண் உடையில் பெண்களை அழைத்து வந்து அவர்களுடன் சரசமாடச் செய்தான் . இதனால் கம்பெனி அதிகாரிகளிடம் நிறையச் சலுகைகளைப் பெற முடிந்தது.

குத்துசண்டை வீரனான சார்லஸ் பிராங்க் ஒரு நாள் மகரக் கண்டியனை அழைத்துக் கப்பலின் மேற்தளத்தில் ஒரு குத்துசண்டை போட்டியினை ஏற்பாடு செய்தால் நிறையப் பணம் சம்பாதிக்கலாம் என்ற யோசனையைச் சொன்னான். கிடைக்கும் வருவாயில் பாதிப்பாதியாகப் பிரித்துக் கொள்வோம் என மகரக் கண்டியன் அன்றே ஒப்பந்தம் செய்து கொண்டான்.
கோல்டன் டவர் கப்பலில் முதன்முறையாகக் குத்துசண்டை ஏற்பாடானது. இதனைக் காணுவதற்காக ஐந்து ஸ்டார் பகோடா நாணயங்கள் கட்டணமாக வைக்கப்பட்டிருந்தது.
கப்பலின் மேற்தளத்தில் நடைபெற்ற போட்டியினைக் காண ஆங்கிலேயர்கள் திரளாக வந்திருந்தார்கள். போட்டியின் போது மதுவும் சிற்றுண்டிகளும் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டன. அந்தப் போட்டி மகரன் காண்டீபனின் வாழ்க்கையைத் திசைமாற்றியது. இவ்வளவு பணத்தை எளிதாக சம்பாதிக்க முடியும் என்பது வியப்பளித்தது
தனது போட்டிகளுக்காகவே அவன் ஒரு பழைய கப்பலை விலைக்கு வாங்கினான். அதில் குத்துச்சண்டை போட்டிகளைத் தொடர்ந்து நடத்த ஆரம்பித்தான். அவனிடம் பணம் குவிய ஆரம்பித்தது.
குத்துசண்டையில் வெள்ளைக்காரர்களுடன் இந்தியர்களும் மோதுவதற்கு ஏற்பாடு செய்தான். அந்தப் போட்டியில் வெள்ளைக்கார வீரன் தோற்றால் கூட ஐம்பது பொற்காசுகள் வழங்கப்படுமென அறிவித்தான். தனது கப்பலில் குத்துசண்டையிடுவதற்காக அவனே வீர்ர்களைத் தயார் செய்யவும் ஆரம்பித்தான்.
குத்துச் சண்டை போட்டிகளின் போது தானே சொந்தமாகத் தயாரித்த சிகரெட்டுகளை நேவி கட் சிகரெட் டின்னில் அடைத்து 88 பிராண்ட் சிகரெட் என விற்பனை செய்ய ஆரம்பித்தான். புதிய சிகரெட்டின் வாசனை வெள்ளைக்காரர்களுக்குப் பிடித்துப் போனது.
கப்பலில் நடக்கும் குத்துச்சண்டை போட்டியும் புகையும் மதுவும் ஆங்கிலேயர்களை மிகவும் உற்சாகம் கொள்ள வைத்தது.
அதன்பிறகு மதராஸின் முக்கிய நபராக மகரன் காண்டீபன் உருமாறினான்.
ராணுவ அதிகாரிகள் தரும் விருந்தில் அவனும் கையில் ஒயின் கோப்பையை ஏந்தினான். நடனம் ஆடினான். ஆறு குதிரைகள் கொண்ட சாரட் ஒன்றை சொந்தமாக வைத்துக் கொண்டான். கப்பலிலே வசிக்கத் துவங்கிய காண்டீபன் தனது பணியாளர்களாக வெள்ளைக்கார பெண்களை மட்டுமே வைத்துக் கொண்டிருந்தான்
போலி சிகரெட்டுகளைத் தயாரிப்பதற்காக வேப்பேரியில் இருந்த பழைய நாடக கொட்டகை ஒன்றை விலைக்கு வாங்கினான். அதனுள் ரகசியமாகச் சிகரெட் தயாரிக்கும் பணி நடந்தது. கம்பெனி ராணுவ அதிகாரிகளில் சிலர் இங்கிலாந்து செல்லும் போது 88 சிகரெட் டின்களைக் கையோடு கொண்டு சென்றார்கள்.
லண்டனிலும் மகரன் காண்டீபனின் சிகரெட்டிற்கு வரவேற்பு அதிகமானது. கம்பெனி அதிகாரிகளில் ஒருவரான சார்லஸ் எட்வர்ட் இந்தச் சிகரெட்டுகளை இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யும் உரிமையைப் பெற்றுக் கொண்டார். இப்படியாக மகரனிற்குப் பல்வேறு வழிகளிலும் பணம் கொட்ட ஆரம்பித்தது
குத்துச்சண்டை போட்டிகளை மட்டும் கப்பலில் நடத்தாமல் சூதாட்டம், நிர்வாண நடனம். துப்பாக்கி சுடும் போட்டி எனப் பல்வேறு கேளிக்கைகளையும் ஏற்பாடு செய்தான். ஒவ்வொரு ஞாயிறு அன்றும் அவனது கப்பலில் இசை நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். அன்று கரையில் இருந்தபடியே ஒளிரும் கப்பலையும் அதில் இசைக்கப்படும் சங்கீதத்தையும் மக்கள் ரசித்தார்கள்.
மதராஸின் புதிய கவர்னராக ஜார்ஜ் ஹாரிஸ் நியமிக்கப்பட்டார். அதைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் அவரது கையைக் குலுக்கி தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டான் காண்டீபன். முதற்சந்திப்பிலே அவன் ஒரு ஏமாற்றுக்காரன் என ஜார்ஜ் ஹாரிஸ் உணர்ந்து கொண்டுவிட்டார். அதன் சில நாட்களில் அவர் கப்பலில் நடைபெறும் குத்துசண்டை போட்டிகளுக்குத் தடைவிதித்ததோடு கம்பெனி அதிகாரிகள் எவரும் அதில் கலந்து கொள்ளக்கூடாது என உத்தரவும் பிறப்பித்தார்.
மகரன் காண்டீபனின் செல்வாக்கு இங்கிலாந்து வரை இருந்த்து. அவன் இங்கிலாந்திற்குச் சென்று விக்டோரியா ராணியை நேரில் சந்தித்து விசேச அனுமதிக் கடிதம் பெற்றுவந்தான். அதனை கவர்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
தங்களுக்குள் இருந்த நட்பை உறவாக்கிக் கொள்ளவும் காண்டீபனை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வதற்காகவும் குத்துசண்டை வீரனான சார்லஸ் பிராங்க் தனது சகோதரி கிளாராவை மகரன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தினான்.
காண்டீபனால் அதை மறுக்க முடியவில்லை. அடுத்தச் சில நாட்களில் அவன் மதம் மாறி கிளாரன்ஸ் ஆஷ்லேயாக மாறினான். மதராஸ் தேவாலயத்தில் கிளாராவைத் திருமணம் செய்து கொண்டான்.
திருமணம் நடந்த மூன்றாம் நாளிரவு கிளாரா படுக்கையில் இறந்துகிடந்தாள். அவளைக் கொன்றது கிளாரன்ஸ் எனக் கைது செய்தார்கள். தான் அப்போது கப்பலில் இருந்ததாக அவன் கூச்சலிட்டான். ஆனால் பிராங்க் நம்பவில்லை.
போலி சிகரெட் தயாரித்தது. கம்பெனி அதிகாரிகளை மதுவால் மயக்கி காரியம் சாதித்துக் கொண்டது, மனைவியைத் தாக்கி கொன்றது என மகரன் காண்டீபன் மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டன.
கவர்னர் அவன் தூக்கிலிடப்பட வேண்டும் என விரும்பினார். அவனுக்கு இருந்த செல்வாக்கின் காரணமாக குற்ற விசாரணை ஒன்றரை ஆண்டுகள் நடந்தது. அதன் தீர்ப்பு வருவதற்குள் மகரன் மதராஸை விட்டு தலைமறைவாகி விட்டான். எங்கே சென்றான் என்று யாருக்கும் தெரியவில்லை.
1879ல் ஆஸ்திரேலியாவின் ஃபிளிண்டர்ஸ் தீவில் ஒரு வசித்த ஒரு கிழவன் ஒரே நேரத்தில் ஆறு சிகரெட்டுகளைப் பிடிப்பதையும் அவன் காற்றில் தனது பெயரை புகையால் எழுதிக் காட்டுவதையும் கண்டதாக ஜெர்மன் பயணி ஃபிரடெரிக் ஷாஃபர் எழுதியிருக்கிறார். ஒருவேளை அது மகரன் காண்டீபனாக இருக்கவும் கூடும். அவனது மனைவி கிளாராவை யார் கொன்றார்கள் என்ற புதிர் மட்டும் கடைசிவரை தீர்க்கப்படவேயில்லை
••
April 18, 2025
ஆனந்த விகடனில்
இந்த வார ஆனந்த விகடனில் எனது நேர்காணல் வெளியாகியுள்ளது. வெ.நீலகண்டன் இந்த நேர்காணலை எடுத்துள்ளார்


நன்றி
ஆனந்தவிகடன்
வெ.நீலகண்டன்
புகைப்படம் : ராகேஷ்
April 16, 2025
நெதர்லாந்திலிருந்து ஒரு பரிசு
எனது பிறந்த நாளுக்காக நெதர்லாந்தில் வசிக்கும் நண்பர் சரவணன் வான்கோ அருங்காட்சியகத்தில் கிடைக்கும் Van Gogh – The Potato Eaters 3D Print வாங்கி அனுப்பியுள்ளார்.

எனக்கு மிகவும் பிடித்த ஓவியமது. அதைப் பற்றி ஒரு குறுங்கதை எழுதியிருக்கிறேன். காலம் இதழில் வெளியாகியுள்ளது
முப்பரிமாணத்தில் அந்த வீடும் மனிதர்களும் அசைவதைக் காணும் போது அந்த வீட்டிற்குள் நாமிருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. .
சரவணனுக்கு எனது மனம் நிறைந்த நன்றி.
April 14, 2025
ஸ்வரித்தின் கவிதை
அமெரிக்காவில் வாழும் 13 வயதான ஆட்டிச நிலையாளர் ஸ்வரித் கோபாலன் சிறப்பாகக் கவிதைகள் எழுதுகிறார். அவரது ஆங்கிலக் கவிதைகளை வாசித்திருக்கிறேன். தனது உணர்வுகளை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார். ‘Loud Echoes of the Soul’ என அவரது ஆங்கிலக்கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. சிறந்த கவிதைக்காக இங்கிலாந்தில் இருந்து வழங்கப்படும் விருதைப் பெற்றிருக்கிறார்.

அவரது கவிதை ஒன்றின் தமிழாக்கம் பெரியார் பிஞ்சு இதழில் வெளியாகியுள்ளது. நல்ல கவிதை. நேர்த்தியான மொழியாக்கம்


ஸ்வரித் இளையராஜா இசையின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர். தனக்கு விருப்பமான திரைப்படங்கள் குறித்தும் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் பற்றியும் ஸ்வரித் தொடர்ந்து சிறப்பாக எழுதிவருகிறார். அவருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.
ஸ்வரித் கோபாலன் தன்னைப் பற்றி எழுதிய குறிப்பு
••

நான் ஸ்வரித், 13 வயதான ஆட்டிச நிலையாளர். பேச முடியாத . உலகத்துடன் தொடர்புகொள்வதற்கு நான் எழுத்துகளைத் தட்டச்சுச் செய்கிறேன்.
எனக்கும் மற்றவர்களைப் போலவே வலுவான உணர்வுத் தேவைகள் இருக்கின்றன. ஆனால் அவை வித்தியாசமாக வெளிப்படுகின்றன. பிறருடன் தொடர்பில்லாத வாழ்க்கை அர்த்தமற்றது. எனக்கு நரம்பியல் பொதுவான (நியூரோடிபிகல்) மற்றும் நரம்பியல் வேறுபட்ட (நியூரோடைவர்ஸ்) நண்பர்கள் இருக்கிறார்கள். இவர்களுடைய தொடர்பு முறைகளும் வாழ்க்கை அனுபவங்களும் வேறுபட்டவையாக இருந்தாலும், அனைவரும் என்னைச் சம அளவில் புரிந்து கொள்கிறார்கள்; சம அளவில் நட்பையும் அன்பையும் தருகிறார்கள்; என்னை அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள்.
என் போராட்டம், உணர்வுகள் இல்லாமையில் அல்ல; சிந்தனையும் செயலும் ஒருங்கிணையாத வெளிப்பாடே எனது சவால்.
எல்லோரையும் போல் இயல்பாகப் பேசுவதையும் தாண்டி உறவுத் தொடர்புகள் இருக்கின்றன என்பது என் நம்பிக்கை.
மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதில் ஆட்டிச நிலையாளர்களுக்குச் சிக்கல் இருப்பதாக இருக்கும் ஆழமான தவறான புரிதலை பெற்றோரும், எங்களைப் பராமரிப்பவர்களும் எதிர்த்துப் பேசுங்கள்.
மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்புகளைத் தயவுசெய்து உருவாக்குங்கள்.
எங்கள் உணர்வுகள் புரிந்துகொள்ளப்படுவதற்கு அவை பேச்சின் மூலம் தான் வெளிப்படுத்தப்பட வேண்டுமா?
••
எங்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை ஆட்டிச அனுபவம் கொண்டவர்களே தலைமை ஏற்று வழிநடத்த வேண்டும். ஆனால், சமூகம் வகுத்துள்ள “தலைவருக்கான’ வரையறைகள் எங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்படவில்லை. தலைமைக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் பெரும்பாலும் எங்களால் எட்ட முடியாத பண்புகளையும் திறன்களையும் சார்ந்தது. எங்களை உள்ளடக்கி ஏற்கும் வாய்ப்பு இல்லாத நிலையில் தவறான பிரதிநிதித்துவத்திற்கே வழிவகுக்கின்றன.
தலைமையை மீண்டும் வரையறுப்போம்! எங்களிடம் அனுபவமும், தெளிவான பார்வையும் இருக்கும்போது – நாங்கள் ஏன் பின்னணியில் இருக்க வேண்டும்? எங்களைப் பாதிக்கும் முடிவுகளில் மட்டுமல்ல, எதிலும் நாங்கள் வாகனத்தை ஓட்டுபவர்களாக இருக்க வேண்டும், பயணிகளாக அல்ல.
“நாங்கள் இல்லாமல் எங்களைப் பற்றியது எதுவும் இல்லை!”
உண்மையான அனுபவங்களை எப்போது தலைமை பிரதிபலிக்கத் தொடங்கும்?
••
தூத்துக்குடியில்
எனது பிறந்தநாளை முன்னிட்டுத் தூத்துக்குடியில் சலூன் நூலகம் நடத்தும் நண்பர் பொன். மாரியப்பன் தபால் பெட்டி எழுதிய கடிதம் நூலைத் தபால் ஊழியர்களுக்கு வழங்கிச் சிறப்பித்துள்ளார்
நூலக மனிதர்கள் இயக்கம் சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் தபால் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆசிரியர் R.ஜெயபால் அவர்கள் தலைமையில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் H சாய் ராமன் , சுங்க இலாகா அதிகாரி அசோ குமார் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்துள்ளார்கள்
பொன்.மாரியப்பன், ஆசிரியர் ஜெயபால் மற்றும் நூலக மனிதர்கள் அமைப்பின் நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி





.
நிரந்தர விருந்தாளி
ஃபெர்னான்டோ ஸோரன்டினோவின் கதை ஒன்றில் ஸோரன்டினோ குடும்பத்தினர் பக்கத்துவீட்டில் உள்ளவர்களுடன் நட்பாகப் பழகுவதற்காகச் சிறிய பரிசு ஒன்றை அளிக்கிறார்கள். உடனே பக்கத்துவீட்டு வில்ஹெல்ம் அதை விடப் பெரிய பரிசு ஒன்றை திரும்ப அனுப்பி வைக்கிறார். அது போட்டி மனப்பான்மையை உருவாக்கிடவே ஒருவரையொருவர் மிஞ்சும் வகையில் பெரிய பெரிய பரிசுகளை மாறி மாறிக் கொடுத்துக் கொள்கிறார்கள். முடிவில் அது பேரழிவினை உருவாக்குகிறது.
பக்கத்துவீட்டுக்காரரின் நட்பு பற்றிய இந்த வேடிக்கையான கதையின் எதிர்வடிவம் போலவே ஜே சாங்கின் 4PM கொரிய திரைப்படத்தினை உணர்ந்தேன். மாறுபட்ட கதைக்களனும் கதாபாத்திரங்களும் கொண்ட திரைப்படம். Amélie Nothomb எழுதிய The Stranger Next Door கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கபட்டிருக்கிறது

ஒய்வு பெற்ற தத்துவப் பேராசிரியர் ஜங்-இன் தனது மனைவி ஹியூன்-சூக்கோடு சியோலின் நகரவாழ்க்கையிலிருந்து விடுபட்டு கிராமப்புறத்திலுள்ள புதிய வீட்டிற்குக் குடியேறுகிறார். அழகான மரவீடு. இயற்கையோடு இணைந்த சுற்றுப்புறம். அவர்கள் வீட்டின் அருகே ஒரு பழைய வீடு தென்படுகிறது. அதில் யார் வசிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் அந்த வீட்டில் விளக்கு கூட எரிவதில்லை என்பதைக் காணுகிறார்கள்.
மறுநாள் அந்த வீட்டில் வசிப்பவர்களுடன் நட்பு பாராட்டுவதற்காகச் செல்கிறார்கள். வீடு பூட்டிக்கிடக்கிறது. ஆனால் உள்ளே யாரோ இருப்பதை உணருகிறார்கள். ஆகவே மாலை நான்கு மணிக்கு தேநீர் விருந்திற்கு வரும்படி அழைப்புக் கடிதம் ஒன்றினை கதவிடுக்கில் வைத்துவிட்டு வருகிறார்கள்
அன்று மாலை நான்கு மணிக்கு பேராசிரியரின் வீட்டுக்கதவு தட்டப்படுகிறது. பக்கத்துவீட்டில் வசிக்கும் டாக்டர் பார்க் யூக்-நாம் வெளியே நிற்கிறார். அவரது தோற்றமே விசித்திரமாக உள்ளது.
அவரை வீட்டிற்குள் அழைத்து இருக்கையில் அமர வைத்து தேநீர் தருகிறார்கள். அவர் ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை. தேநீரை குடிக்கவுமில்லை. ஏதோ யோசனையில் அமர்ந்தபடி அவர்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார். என்ன கேட்டாலும் ஒரு வார்த்தையில் மட்டுமே பதில் பேசுகிறார். அவரை எப்படிக் கையாளுவது எனத் தெரியாமல் திகைத்துப் போகிறார்கள். அவரோ இரண்டு மணி நேரம் தியானம் செய்வது போல மௌனமாக அமர்ந்திருந்து விட்டு ஆறுமணிக்கு கிளம்பி போய்விடுகிறார்.
அவர் ஏன் இப்படி விசித்திரமாக நடந்து கொண்டார் என்று அவர்களுக்குப் புரியவில்லை. இரவில் அதை நினைத்துச் சிரித்துக் கொள்கிறார்கள்.

மறுநாளும் அதே நான்கு மணிக்கு அழைப்பு மணி ஒலிக்கிறது. அதே டாக்டர் வாசலில் நின்று கொண்டிருக்கிறார். இன்றைக்கும் அதே இருக்கையில் அமர்ந்தபடி தேநீர் கேட்கிறார். அவர்களின் கேள்விக்கு ஒன்றிரண்டு வார்த்தைகளில் பேசுகிறார். மற்றபடி அதே தியானநிலையில் இரண்டு மணி நேரம் அமர்ந்துவிட்டு புறப்படுகிறார். எதற்காக இரண்டாவது நாள் அவர்களைத் தேடி வந்தார் என்று அவர்களுக்குக் குழப்பமாகிறது
அதன்பிறகு தினமும் மாலை நான்குமணிக்கு டாக்டர் பார்க் யூக்-நாம் அவர்கள் வீட்டுக் கதவை தட்டுகிறார். உரிமையோடு உள்ளே வந்து உட்கார்ந்து கொள்கிறார். வெறித்துப் பார்க்கிறார். இரண்டு மணி நேரம் அமைதியாக இருந்துவிட்டு வெளியேறி போய்விடுகிறார். . இந்தத் தொல்லையை அவர்களால் சமாளிக்கமுடியவில்லை. அவரை எப்படித் துரத்துவது என்றும் தெரியவில்லை. அவர் நிரந்தர விருந்தாளியாக மாறிவிடுகிறார்.
இந்தத் தொந்தரவால் பேராசிரியரின் மனைவி ஹியூன் பயந்து போகிறார் ஒரு வேளை டாக்டர் ஒரு சைகோவாக இருக்ககூடுமோ என நினைத்துப் புலம்புகிறாள்.

டாக்டர் யூக்-நாமை வெளியே அனுப்பவோ அல்லது வருவதை நிறுத்த சொல்லவோ பேராசிரியர் ஜங்-இன் மிகவும் தயங்குகிறார். எனவே ஒரு நாள் அவர்கள் மதியம் மூன்று மணிக்கு அருகிலுள்ள காட்டிற்குள் சென்று விட்டுத் தாமதமாக வீடு திரும்ப வேண்டும் என முடிவு செய்கிறார்கள். அவர்கள் திரும்பி வரும் போது மழை பிடித்துக் கொள்கிறது. அவசரமாக வீடு திரும்பும் போது டாக்டர் மழையோடு அவர்கள் வீட்டின் முன்பு காத்துநிற்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார்கள்.
அதன் மறுநாள் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகப் பேராசிரியர் சொன்னாலும் டாக்டர் கேட்பதில்லை. உரிமையோடு அவர்கள் வீட்டிற்குள் வந்து அமர்ந்து கொள்கிறார். தேநீர் வேண்டுமெனக் கேட்கிறார். டாக்டரின் அச்சமூட்டும் மௌனத்தை அவர்களால் ஏற்க முடியவில்லை.
இந்த நிலையில் வெளிநாட்டில் வசிக்கும் பேராசிரியரின் வளர்ப்பு மகள் ஊர் திரும்புகிறாள். அவள் தங்களின் வீட்டிற்கு அழையா விருந்தாளியாக வரும் பார்க் யூக்-நாமின் விநோத நடவடிக்கைகளைக் கண்டு எரிச்சல் அடைகிறாள். தந்தை ஏன் இதனை அனுமதிக்கிறார் எனக் கோவித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி போய்விடுகிறாள்.
இதனைத் தாங்க முடியாத பேராசிரியர் ஆத்திரத்தில் பார்க் யூக்-நாமைத் தாக்குகிறார். அப்படியும் டாக்டரின் வருகையைத் தடுக்க முடியவில்லை. இப்போது பேராசிரியர் முழுவதுமாக வன்முறையைக் கையாளத் துவங்குகிறார். அதன் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது.
நான்கு மணி ஆனவுடன் பேராசிரியரும் அவர் மனைவியும் அடையும் பதட்டத்தைப் படம் சிறப்பாகச் சித்தரித்துள்ளது. குறிப்பாகத் தனது கோபத்தை வெளிப்படுத்த டாக்டருடன் தொடர்பில்லாத தத்துவ விஷயங்களைப் பேராசிரியர் பேசுகிறார். டாக்டர் அதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அது போலவே கடைசிக்காட்சியில் காரில் வரும் போது வெளிப்படும் டாக்டரின் சிரிப்பு நம்மையும் அச்சப்பட வைக்கிறது. படத்தில் நம்மை அதிகம் கவருபவர் அந்த டாக்டரே.
டாக்டர் ஏன் அப்படி நடந்து கொள்கிறார் என்பதற்கும் சரியான காரணமிருக்கிறது. படத்தின் துவக்கத்தில் வரும் பேராசிரியரின் வகுப்பறைக்காட்சியும் கார் விபத்தும் ஒட்டுமொத்த படத்திற்கான திறவுகோல் போலிருப்பதாக உணர்ந்தேன். அன்பான விருந்தோம்பல் எப்படித் தொந்தரவான மற்றும் பதட்டமான அனுபவமாக மாறிவிடக்கூடும் என்பதைப் படம் அழகாக விவரிக்கிறது.
படத்தில் வரும் பேராசிரியர் ஜோர்ஜ் லூயி போர்ஹெஸின் தீவிர வாசகர். போர்ஹெஸ் பற்றி ஒரு காட்சியில் பேசுகிறார். போர்ஹெஸின் கதையில் வரும் புதிர்பாதை போன்றதே டாக்டரின் நான்கு மணி வருகையும்.
••
April 13, 2025
நாவல்வாசிகள் /2
எனது புதிய பத்தியான நாவல்வாசிகளில் புகழ்பெற்ற வங்க நாவலான நீலகண்டப் பறவையைத் தேடி குறித்து எழுதியிருக்கிறேன்.
பிறந்தநாள் விழா/ புகைப்படங்கள்
நேற்று கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற எனது பிறந்த நாள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது. நிறைய நண்பர்கள், வாசகர்கள் வந்திருந்து வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றி










S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

