S. Ramakrishnan's Blog, page 16
January 21, 2025
கேளா வரம்
புதிய சிறுகதை
அந்த நபர் ரயிலில் பாஸ்கரனுக்கு எதிராக அமர்ந்திருந்தார்.
இரண்டாம் வகுப்பு குளிர்சாதன பெட்டியின் முதல்பகுதியது. மற்ற இரண்டு பயணிகள் வரவில்லை. ஒருவேளை விழுப்புரத்தில் ஏறுவார்களோ என்னவோ. அந்த நபர் ஆங்கில வார இதழ் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார்..

அந்த நபருக்கு ஐம்பது வயதிற்குள் இருக்கக் கூடும்.. சிவப்பான, மெலிந்த உடல். பட்டையான கோல்ட் பிரேம் போட்ட கண்ணாடி. இடது புருவத்தில் ஒரேயொரு நரைமயிர் நீட்டிக் கொண்டு தெரிந்தது. சிகரெட் பிடிப்பவர் போலத் தோலுரித்த உதடுகள். ஆரஞ்சுவண்ண போலோ டீ ஷர்ட். வெளிர் சந்தன நிற பேண்ட். இரண்டு கையிலும் மோதிரம் அணிந்திருந்தார்.
பாஸ்கரன் தனது டிராவலிங் பேக்கை கிழே தள்ளி வைத்துவிட்டு உட்கார்ந்ததையோ, செல்போனை சார்ஜரில் போட்டதையோ அவர் கவனித்தது போலத் தெரியவில்லை.
ரயிலில் இப்போதெல்லாம் புத்தகம் படிப்பவர்களைக் காண்பது அரிதாகிவிட்டது. ரயில் புறப்படுவதற்கு முன்பாக மாத்திரை சாப்பிட்டுவிட வேண்டும் என நினைத்துக் கொண்டான். தண்ணீர் பாட்டில் கொண்டு வர மறந்து போயிருந்தான்
எதிரே இருப்பவர் வைத்துள்ள தண்ணீர் பாட்டில் கண்ணில் பட்டது.
“சார்.. மாத்திரை சாப்பிட கொஞ்சம் தண்ணி வேண்டும். எடுத்துகிடவா“ என்று கேட்டான்
எதிரேயிருந்தவர் வார இதழை விட்டுக் கண்ணை விலக்கி தலையாட்டினார். அவன் தனது பையின் சைடு ஜிப்பை திறந்து மாத்திரை அட்டையை எடுத்துக் கொண்டான்.
“தூக்கமாத்திரையா“ என எதிரே இருப்பவர் கேட்டார்
“ஆமாம். இதைப் போடாமல் என்னால் தூங்க முடியாது“ என்றான்
“நானும் அதே கேஸ் தான். ஆனால் எனக்குத் தூக்க மாத்திரை போட்டாலும் தூக்கம் வருவதில்லை. ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் தூங்கினால் அதிர்ஷ்டம்“
பாஸ்கர் தனது மாத்திரையை விழுங்கிவிட்டு அவரிடம் “நீங்கள் எங்கே போகிறீர்கள். மதுரைக்கா “என்று கேட்டான்
“இல்லை சிவகாசி“..
“காலை ஐந்து மணிக்கு போய்விடும். நான் அதைத் தாண்டி ராஜபாளையம் போகிறேன்“ என்றான் பாஸ்கர்
“சிவகாசி எனது அம்மாவின் ஊர். எப்போதோ சிறுவயதில் போயிருக்கிறேன். பல வருஷங்களுக்குப் பின்பு இப்போது போகிறேன்“ என்றார் அந்த நபர்
“இப்போது எங்கே இருக்கிறீர்கள்“
“கொரியாவில்“.
“என்ன வேலை“
“அதை எப்படிச் சொல்வது எனத் தெரியவில்லை. என்னுடைய வேலை வரம் கொடுப்பது“
அதைக்கேட்டவுடன் தன்னை அறியாமல் புன்னகைத்தபடி பாஸ்கர் கேட்டான்
“நீங்கள் என்ன முனிவரா“
“அது போன்ற ஆள் தான். ஆனால் என் கையில் கமண்டலமோ, பெரிய தாடி மீசையோ கிடையாது. என்னால் வரம் அளிக்க முடியும்“
அதை நம்ப முடியாதவன் போலப் பாஸ்கர் சொன்னான்
“என்னால் கூடத் தான் வரமளிக்க முடியும் ஆனால் பலிக்கணுமே“
“உங்கள் கையில் உள்ள மொபைலில் அருட்பெருஞ்சேகரன் என அடித்துப் பாருங்கள். என்னைப் பற்றிப் போட்டிருப்பார்கள். “.

பாஸ்கர் உடனே தனது செல்போனில் அருட்பெருஞ்சேகரன் என டைப் செய்தான். ஆங்கிலத்திலும் கொரியாவிலும் அவரைப் பற்றிய வீடியோக்கள். செய்திகள் வந்தன. அதில் ஒரு பெரிய தொழிலதிபர் தனக்குக் கிடைத்த வரம் பற்றி உணர்ச்சிபூர்வமாகப் பேசிய காணொளி இருந்தது.
“நிஜம் தான். இவரிடம் வரம் வாங்கியதாகத் தான் சொல்கிறார். ஒரு சாதாரண ஆளால் எப்படி வரம் கொடுக்க முடியும்“. எனப் பாஸ்கர் யோசித்தான்.
“நிறைய வீடியோ இருக்கு.. நீங்க சாமியரா“
“இல்லை. சாமானியன். “
“வரம் கொடுக்கிறது எல்லாம் கதைனு நினைச்சிட்டு இருந்தேன் . நிஜமா இந்தக் காலத்தில் ஒருவரால் வரம் கொடுக்க முடியுமா“
“வரம் கிடைக்கும்னு நம்புறவங்க இருக்காங்களே. அது எதனால் “
“எப்படியாவது கஷ்டம் தீரணும்லே“
“வரம் கொடுக்கிறதுக்கு மனசும் நம்பிக்கையும் தான் வேணும். “
“எதை வரமா கேட்டாலும் உங்களாலே தர முடியுமா“
“முடியாது. எது உண்மையான தேவையோ அதை வரமாத் தர முடியும்“
“நீங்க வரம் கொடுத்தால் எப்படிப் பலிக்கும். உங்களுக்கு அவ்வளவு சக்தி இருக்கா “
“இருப்பதாக நான் நம்புகிறேன். என்கிட்ட வரம் கேட்பவரும் நம்புகிறார். இன்னைக்கும் சாபம் பலிக்கும் என்று எல்லோரும் நம்புகிறார்களே. பிறகு வரம் பலிக்கும் என்று மட்டும் ஏன் நம்ப மறுக்கிறார்கள்“ என்று கேட்டார்
“வரம் கொடுப்பது கடவுளின் வேலையில்லையா“
“நீங்கள் யாரையும் காதலித்தது இல்லையா. காதலித்திருந்தால் காதலியால் வரம் அளிக்க முடியும் என்பதை உணர்ந்திருப்பீர்கள்“ என்று சொல்லி சிரித்தார்
“நீங்கள் கொடுக்குற வரம் உடனடியாகப் பலிக்குமா“
“அதை என்னால் சொல்ல முடியாது. நம்பிக்கையற்ற நீங்களும் என்னிடம் வரம் கேட்க ஆசைப்படுகிறீர்கள் போலிருக்கிறதே“
“அப்படியில்லை. சும்மா தெரிந்து கொள்ளக் கேட்டேன்“
“வரம் கேட்பது தவறில்லை. எதைக் கேட்பது என்பது தான் குழப்பம். அதனால் தான் மனிதர்கள் முன்பு கடவுள் தரிசனமாகிறதில்லை. “
“இப்படி திடீர்னு ரயிலில் ஒருவர் வரம் வேண்டுமா என்று கேட்டால் என்ன பதில் சொல்வதுனு தெரியலை“ எனச் சிரித்தான் பாஸ்கர்
“இன்னும் நிறைய நேரமிருக்கிறது. உங்களுக்கு எப்போ கேட்க தோணுதோ அப்போ கேளுங்கள்“
“உங்களால் எப்படி வரம் தர முடியுது“
“நிச்சயம் நான் கடவுள் இல்லை. ஆனால் சொற்களை நம்புகிறவன். சொல்லின் சக்தியை அறிந்தவன். அதை விளக்கி சொல்ல முடியாது. “
“வரம் கொடுப்பதற்குக் கட்டணம் கேட்பீங்களா “ எனக்கேட்டான்
“உங்களிடம் கட்டணம் கேட்க மாட்டேன். உங்கள் மகள் கீர்த்தனாவிற்கும். மனைவி சௌமியாவிற்கும் நான் தரும் பரிசாக வைத்துக் கொள்ளுங்கள்“
“அவங்களை உங்களுக்கு எப்படித் தெரியும். நீங்கள் யார். என்னோடு விளையாடுகிறீர்களா“ எனக் குழப்பத்துடன் கேட்டான் பாஸ்கரன்.
“தென்காசி கோர்ட்டில் நீங்கள் திங்கள்கிழமை சந்திக்கப் போகும் வழக்கின் எண்ணை கூட என்னால் சொல்ல முடியும். மருத்துவர் நாடி பார்ப்பது போல இதுவும் சாத்தியம் தான்“
“என்னால் நம்ப முடியவில்லை. “
“நம்ப வேண்டும் என அவசியமில்லை. பயணத்தில் அந்நியரை நம்பக் கூடாது என்று தானே பழக்கபடுத்தபட்டிருக்கிறோம்“
“நீங்கள் எத்தனை வருஷமாகக் கொரியாவில் வசிக்கிறீங்க“
“கடந்த ஆறு வருஷமா, அதற்கு முன்பு சவுத் ஆப்ரிக்காவில் இருந்தேன். அதற்கு முன்பு மாசிடோனியாவில். நிறையச் சுற்றிவிட்டேன்“
“எப்போதிலிருந்து வரம் கொடுக்கத் துவங்கினீங்க“
“பத்திரிக்கையாளர் போலக் கேட்கிறீர்கள். அவர்களுக்குச் சொல்லும் பொய்யை உங்களுக்கும் சொல்லவா“ எனச் சிரித்தார்.
தாம்பரத்தில் மூன்றாவது நபர் ஏறி அவர்கள் அருகில் அமர்ந்தார். அவர் தனது பெட்டியை வைத்தவுடன் “படுத்துக் கொள்ள வேண்டியது தானே“ எனக் கேட்டார்
“உங்கள் இஷ்டம்“ என்று சொன்னார் பாஸ்கரின் எதிரே இருந்தவர்
“நீங்கள் பேசிக் கொண்டிருப்பதற்குக் குறுக்கே வந்துவிட்டேனா“ எனக் கேட்டார் வந்த பயணி
“ஆமாம். இவர் என்னிடம் வரம் வேண்டும் என்று கேட்கிறார்“
அதை வேடிக்கையான பேச்சாக எடுத்துக் கொண்டு “யாரும் யாருக்கும் வரம் தரலாமே“ என்று சொல்லியபடி தனது படுக்கையை விரிக்க ஆரம்பித்தார் மூன்றாவது பயணி
“விளையாட்டுக்காகச் சொல்கிறார்“ என்றார் பாஸ்கர்
“ரயிலில் இப்படி விளையாடினால் தான் உண்டு. வீட்டில் முடியாதே“ என்றார் மூன்றாவது பயணி
அதைக்கேட்ட பாஸ்கர் ஆமோதிப்பது போலத் தலையசைத்துக் கொண்டான்
வரம் கொடுப்பதாகச் சொன்னவர் “எனக்கு குடும்பமே கிடையாது“ என்று சொல்லிச் சிரித்தார்
பாஸ்கர் எதிரே இருப்பவரை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பத்துடன் தனது படுக்கையை விரித்தான். வரம் கொடுப்பதாகச் சொன்னவர் தனது செல்போனில் யாருடனோ ஏதோ மொழியில் பேசிக் கொண்டிருந்தார். பாஸ்கர் படுத்துக் கொண்டான்
வரம் கொடுப்பதாகச் சொல்கிறாரே. பொய்யனாக இருப்பாரா. காசு பறிக்கப் போடும் பித்தலாட்டமா, இவரிடம் நாம் வரம் கேட்கலாமா. ஒரு வேளை கேட்டு நடந்துவிட்டால் நல்லது தானே. மனம் பல்வேறாகக் குழம்பிக் கொண்டிருந்தது. தூக்கமாத்திரை போட்டது கண்ணை அழுத்த ஆரம்பித்த்து. அவனை அறியாமல் உறங்கிப் போனான்.
விடிகாலை குளிரில் தூக்கம் கலைந்து எழுந்த போது எதிரே இருந்த ஆளைக் காணவில்லை. அதற்குள் சிவகாசி வந்துவிட்டதா என்ன. தனது செல்போனில் மணியைப் பார்த்தான். நான்கு தான் ஆகியிருந்தது. அந்த ஆள் எங்கே போனார் என்று தெரியவில்லை. ஒருவேளை வேறு ஊரில் இறங்கிவிட்டாரா எனத் தெரியவில்லை
சிவகாசியில் ரயில் நின்ற போது அவர் பிளாட்பாரத்தில் தென்படுகிறாரா எனக் கீழே இறங்கி நின்று பார்த்தான். ஆளைக் காணவில்லை
ராஜபாளையத்தில் இறங்கி தனது வீட்டிற்குப் போனபோது ரயில் பயணத்தில் சந்தித்தவரைப் பற்றிப் பாஸ்கர் யாரிடமும் சொல்லவில்லை.
அன்றிரவு மனைவி மற்றும் மகளிடம் சொன்னான்
இருவரும் ஒரே குரலில் “வரம் கேட்டிருக்க வேண்டியது தானே“ என்றார்கள்
“அவர் என்ன கடவுளா.. ரயில்ல என்னைப் போல டிக்கெட் எடுத்து வர்ற பயணி தானே. அந்த ஆள் வரம் கொடுத்தா எப்படி நடக்கும்“ எனக் கேட்டான் பாஸ்கர்
“நடந்தா நல்லது தானே. நல்ல சந்தர்ப்பத்தை வேஸ்ட் பண்ணீட்டிங்களே“ என்றாள் மனைவி
“அவரோட போன் நம்பர் வாங்குனீங்களா டாடி“ எனக்கேட்டாள் மகள்
“இல்லை“ எனத் தலையாட்டினான்
“நீங்க கேட்காட்டியும் அவரா வரம் கொடுத்து இருக்கலாம். இந்தக் காலத்துல வரம் கொடுக்க யாரு இருக்கா“ என ஆதங்கப்பட்டாள் மனைவி.
“அவர் கிட்ட என்ன வரம் கேட்குறதுனு தெரியலை“ என்றான் பாஸ்கர்
“உங்க சாமர்த்தியம் அவ்வளவு தான்“ எனச் சலித்துக் கொண்டாள் மனைவி
எவ்வளவோ கடனிருக்கிறது. மகள் கல்யாணம் பற்றிய கனவு இருக்கிறது. பெரிய கார், பங்களா வசதி என எத்தனையோ தேவைகள் இருக்கிறது. ஆனால ஏன் எதையும் கேட்க தோணவில்லை.
வரம் கேட்கிறவர்கள் பெருகி விட்ட இந்த உலகில் வரம் கொடுப்பவர்கள் ஏன் மறைந்து போனார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
அவரை என்றைக்காவது திரும்பப் பார்க்க நேர்ந்தால் என்ன வரம் கேட்க வேண்டும் என்று தனது ஆசைகளில் ஒன்றை தேர்வு செய்து கொண்டான். ஆனால் அதைக் கேட்கலாமா வேண்டாமா என்பதில் அவனுக்குக் குழப்பமே மிஞ்சியிருந்தது.
வரம் கொடுப்பவர்
புதிய சிறுகதை
அந்த நபர் ரயிலில் பாஸ்கரனுக்கு எதிராக அமர்ந்திருந்தார்.
இரண்டாம் வகுப்பு குளிர்சாதன பெட்டியின் முதல்பகுதியது. மற்ற இரண்டு பயணிகள் வரவில்லை. ஒருவேளை விழுப்புரத்தில் ஏறுவார்களோ என்னவோ. அந்த நபர் ஆங்கில வார இதழ் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார்..

அந்த நபருக்கு ஐம்பது வயதிற்குள் இருக்கக் கூடும்.. சிவப்பான மெலிந்த உடல். பட்டையான கோல்ட் பிரேம் போட்ட கண்ணாடி. இடது புருவத்தில் ஒரேயொரு நரைமயிர் நீட்டிக் கொண்டு தெரிந்தது. சிகரெட் பிடிப்பவர் போலத் தோலுரித்த உதடுகள். ஆரஞ்சுவண்ண போலோ டீ ஷர்ட். வெளிர் நிற பேண்ட். இரண்டு கையிலும் மோதிரம் அணிந்திருந்தார்.
பாஸ்கரன் தனது டிராவலிங் பேக்கை கிழே தள்ளி வைத்துவிட்டு உட்கார்ந்ததையோ, செல்போனை சார்ஜரில் போட்டதையோ அவர் கவனித்தது போலத் தெரியவில்லை.
ரயிலில் இப்போதெல்லாம் புத்தகம் படிப்பவர்களைக் காண்பது அரிதாகிவிட்டது. ரயில் புறப்படுவதற்கு முன்பாக மாத்திரை சாப்பிட்டுவிட வேண்டும் என நினைத்துக் கொண்டான். தண்ணீர் பாட்டில் கொண்டு வர மறந்து போயிருந்தான்
எதிரே இருப்பவர் வைத்துள்ள தண்ணீர் பாட்டில் கண்ணில் பட்டது.
“சார்.. மாத்திரை சாப்பிட கொஞ்சம் தண்ணி வேண்டும். எடுத்துகிடவா“ என்று கேட்டான்
எதிரேயிருந்தவர் வார இதழை விட்டுக் கண்ணை விலக்கி தலையாட்டினார். அவன் தனது பையின் சைடு ஜிப்பை திறந்து மாத்திரை அட்டையை எடுத்துக் கொண்டான்.
“தூக்கமாத்திரையா“ என எதிரே இருப்பவர் கேட்டார்
“ஆமாம். இதைப் போடாமல் என்னால் தூங்க முடியாது“ என்றான்
“நானும் அதே கேஸ் தான். ஆனால் எனக்குத் தூக்க மாத்திரை போட்டாலும் தூக்கம் வருவதில்லை. ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் தூங்கினால் அதிர்ஷ்டம்“
பாஸ்கர் தனது மாத்திரையை விழுங்கிவிட்டு அவரிடம் “நீங்கள் எங்கே போகிறீர்கள். மதுரைக்கா “என்று கேட்டான்
“இல்லை சிவகாசி“..
“காலை ஐந்து மணிக்கு போய்விடும். நான் அதைத் தாண்டி ராஜபாளையம் போகிறேன்“ என்றான் பாஸ்கர்
“சிவகாசி எனது அம்மாவின் ஊர். எப்போதோ சிறுவயதில் போயிருக்கிறேன். பல வருஷங்களுக்குப் பின்பு இப்போது போகிறேன்“ என்றார் அந்த நபர்
“இப்போது எங்கே இருக்கிறீர்கள்“
“கொரியாவில்“.
“என்ன வேலை“
“அதை எப்படிச் சொல்வது எனத் தெரியவில்லை. என்னுடைய வேலை வரம் கொடுப்பது“
அதைக்கேட்டவுடன் தன்னை அறியாமல் புன்னகைத்தபடி பாஸ்கர் கேட்டான்
“நீங்கள் என்ன முனிவரா“
“அது போன்ற ஆள் தான். ஆனால் என் கையில் கமண்டலமோ, பெரிய தாடி மீசையோ கிடையாது. என்னால் வரம் அளிக்க முடியும்“
அதை நம்ப முடியாதவன் போலப் பாஸ்கர் சொன்னான்
“என்னால் கூடத் தான் வர மளிக்க முடியும் ஆனால் பலிக்கணுமே“
“உங்கள் கையில் உள்ள மொபைலில் அருட்பெருஞ்சேகரன் என அடித்துப் பாருங்கள். என்னைப் பற்றிப் போட்டிருப்பார்கள். “.

பாஸ்கர் உடனே தனது செல்போனில் அருட்பெருஞ்சேகரன் என டைப் செய்தான். ஆங்கிலத்திலும் கொரியாவிலும் அவரைப் பற்றிய வீடியோக்கள். செய்திகள் வந்தன. அதில் ஒரு பெரிய தொழிலதிபர் தனக்குக் கிடைத்த வரம் பற்றி உணர்ச்சிபூர்வமாகப் பேசிய காணொளி இருந்தது.
“நிஜம் தான். இவரிடம் வரம் வாங்கியதாகத் தான் சொல்கிறார். ஒரு சாதாரண ஆளால் எப்படி வரம் கொடுக்க முடியும்“. எனப் பாஸ்கர் யோசித்தான்.
“நிறைய வீடியோ இருக்கு.. நீங்க சாமியரா“
“இல்லை. சாமானியன். “
“வரம் கொடுக்கிறது எல்லாம் கதைனு நினைச்சிட்டு இருந்தேன் . நிஜமா இந்தக் காலத்தில் ஒருவரால் வரம் கொடுக்க முடியுமா“
“வரம் கிடைக்கும்னு நம்புறவங்க இருக்காங்களே. அது எதனால் “
“எப்படியாவது கஷ்டம் தீரணும்லே“
“வரம் கொடுக்கிறதுக்கு மனசும் நம்பிக்கையும் தான் வேணும். “
“எதை வரமா கேட்டாலும் உங்களாலே தர முடியுமா“
“முடியாது. எது உண்மையான தேவையோ அதை வரமா தர முடியும்“
“நீங்க வரம் கொடுத்தால் எப்படிப் பலிக்கும். உங்களுக்கு அவ்வளவு சக்தி இருக்கா “
“இருப்பதாக நான் நம்புகிறேன். என்கிட்ட வரம் கேட்பவரும் நம்புகிறார். இன்னைக்கும் சாபம் பலிக்கும் என்று எல்லோரும் நம்புகிறார்களே. பிறகு வரம் பலிக்கும் என்று மட்டும் ஏன் நம்ப மறுக்கிறார்கள்“ என்று கேட்டார்
“வரம் கொடுப்பது கடவுளின் வேலையில்லையா“
“நீங்கள் யாரையும் காதலித்தது இல்லையா. காதலித்திருந்தால் காதலியால் வரம் அளிக்க முடியும் என்பதை உணர்ந்திருப்பீர்கள்“ என்று சொல்லி சிரித்தார்
“நீங்கள் கொடுக்குற வரம் உடனடியாகப் பலிக்குமா“
“அதை என்னால் சொல்ல முடியாது. நம்பிக்கையற்ற நீங்களும் என்னிடம் வரம் கேட்க ஆசைப்படுகிறீர்கள் போலிருக்கிறதே“
“அப்படியில்லை. சும்மா தெரிந்து கொள்ளக் கேட்டேன்“
“வரம் கேட்பது தவறில்லை. எதைக் கேட்பது என்பது தான் குழப்பம். அதனால் தான் மனிதர்கள் முன்பு கடவுள் தரிசனமாகிறதில்லை. “
“இப்படி திடீர்னு ரயிலில் ஒருவர் வரம் வேண்டுமா என்று கேட்டால் என்ன பதில் சொல்வதுனு தெரியலை“ எனச் சிரித்தான் பாஸ்கர்
“இன்னும் நிறைய நேரமிருக்கிறது. உங்களுக்கு எப்போ கேட்க தோணுதோ அப்போ கேளுங்கள்“
“உங்களால் எப்படி வரம் தர முடியுது“
“நிச்சயம் நான் கடவுள் இல்லை. ஆனால் சொற்களை நம்புகிறவன். சொல்லின் சக்தியை அறிந்தவன். அதை விளக்கி சொல்ல முடியாது. “
“வரம் கொடுப்பதற்குக் கட்டணம் கேட்பீங்களா “ எனக்கேட்டான்
“உங்களிடம் கட்டணம் கேட்க மாட்டேன். உங்கள் மகள் கீர்த்தனாவிற்கும். மனைவி சௌமியாவிற்கும் நான் தரும் பரிசாக வைத்துக் கொள்ளுங்கள்“
“அவங்களை உங்களுக்கு எப்படித் தெரியும். நீங்கள் யார். என்னோடு விளையாடுகிறீர்களா“ எனக் குழப்பத்துடன் கேட்டான் பாஸ்கரன்.
“தென்காசி கோர்ட்டில் நீங்கள் திங்கள்கிழமை சந்திக்கப் போகும் வழக்கின் எண்ணை கூட என்னால் சொல்ல முடியும். மருத்துவர் நாடி பார்ப்பது போல இதுவும் சாத்தியம் தான்“
“என்னால் நம்ப முடியவில்லை. “
“நம்ப வேண்டும் என அவசியமில்லை. பயணத்தில் அந்நியரை நம்பக் கூடாது என்று தானே பழக்கபடுத்தபட்டிருக்கிறோம்“
“நீங்கள் எத்தனை வருஷமாகக் கொரியாவில் வசிக்கிறீங்க“
“கடந்த ஆறு வருஷமா, அதற்கு முன்பு சவுத் ஆப்ரிக்காவில் இருந்தேன். அதற்கு முன்பு மாசிடோனியாவில். நிறையச் சுற்றிவிட்டேன்“
“எப்போதிலிருந்து வரம் கொடுக்கத் துவங்கினீங்க“
“பத்திரிக்கையாளர் போலக் கேட்கிறீர்கள். அவர்களுக்குச் சொல்லும் பொய்யை உங்களுக்கும் சொல்லவா“ எனச் சிரித்தார்.
தாம்பரத்தில் மூன்றாவது நபர் ஏறி அவர்கள் அருகில் அமர்ந்தார். அவர் தனது பெட்டியை வைத்தவுடன் “படுத்துக் கொள்ள வேண்டியது தானே“ எனக் கேட்டார்
“உங்கள் இஷ்டம்“ என்று சொன்னார் பாஸ்கரின் எதிரே இருந்தவர்
“நீங்கள் பேசிக் கொண்டிருப்பதற்குக் குறுக்கே வந்துவிட்டேனே“ எனக் கேட்டார் வந்த பயணி
“ஆமாம். இவர் என்னிடம் வரம் வேண்டும் என்று கேட்கிறார்“
அதை வேடிக்கையான பேச்சாக எடுத்துக் கொண்டு “யாரும் யாருக்கும் வரம் தரலாமே“ என்று சொல்லியபடி தனது படுக்கையை விரிக்க ஆரம்பித்தார் மூன்றாவது பயணி
“விளையாட்டுக்காகச் சொல்கிறார்“ என்றார் பாஸ்கர்
“ரயிலில் இப்படி விளையாடினால் தான் உண்டு. வீட்டில் முடியாதே“ என்றார் மூன்றாவது பயணி
அதைக்கேட்ட பாஸ்கர் ஆமோதிப்பது போலத் தலையசைத்துக் கொண்டான்
வரம் கொடுப்பதாகச் சொன்னவர் “எனக்கு குடும்பமே கிடையாது“ என்று சொல்லி சிரித்தார்
பாஸ்கர் எதிரே இருப்பவரை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பத்துடன் தனது படுக்கையை விரித்தான். வரம் கொடுப்பதாகச் சொன்னவர் தனது செல்போனில் யாருடனோ ஏதோ மொழியில் பேசிக் கொண்டிருந்தார். பாஸ்கர் படுத்துக் கொண்டான்
வரம் கொடுப்பதாகச் சொல்கிறாரே. பொய்யனாக இருப்பாரா. காசு பறிக்கப் போடும் பித்தலாட்டமா, இவரிடம் நாம் வரம் கேட்கலாமா. ஒரு வேளை கேட்டு நடந்துவிட்டால் நல்லது தானே. மனம் பல்வேறாகக் குழம்பிக் கொண்டிருந்தது. தூக்கமாத்திரை போட்டது கண்ணை அழுத்த ஆரம்பித்த்து. அவனை அறியாமல் உறங்கிப் போனான்.
விடிகாலை குளிரில் தூக்கம் கலைந்து எழுந்த போது எதிரே இருந்த ஆளைக் காணவில்லை. அதற்குள் சிவகாசி வந்துவிட்டதா என்ன. தனது செல்போனில் மணியைப் பார்த்தான். நான்கு தான் ஆகியிருந்தது. அந்த ஆள் எங்கே போனார் என்று தெரியவில்லை. ஒருவேளை வேறு ஊரில் இறங்கிவிட்டாரா எனத் தெரியவில்லை
சிவகாசியில் ரயில் நின்ற போது அவர் பிளாட்பாரத்தில் தென்படுகிறாரா எனக் கீழே இறங்கி நின்று பார்த்தான். ஆளைக் காணவில்லை
ராஜபாளையத்தில் இறங்கி தனது வீட்டிற்குப் போனபோது ரயில் பயணத்தில் சந்தித்தவரைப் பற்றிப் பாஸ்கர் யாரிடமும் சொல்லவில்லை.
அன்றிரவு மனைவி மற்றும் மகளிடம் சொன்னான்
இருவரும் ஒரே குரலில் “வரம் கேட்டிருக்க வேண்டியது தானே“ என்றார்கள்
“அவர் என்ன கடவுளா.. ரயில்ல என்னைப் போல டிக்கெட் எடுத்து வர்ற பயணி தானே. அந்த ஆள் வரம் கொடுத்தா எப்படி நடக்கும்“ எனக் கேட்டான் பாஸ்கர்
“நடந்தா நல்லது தானே. நல்ல சந்தர்ப்பத்தை வேஸ்ட் பண்ணீட்டிங்களே“ என்றாள் மனைவி
“அவரோட போன் நம்பர் வாங்குனீங்களா டாடி“ எனக்கேட்டாள் மகள்
“இல்லை“ எனத் தலையாட்டினான்
“நீங்க கேட்காட்டியும் அவரா வரம் கொடுத்து இருக்கலாம். இந்தக் காலத்துல வரம் கொடுக்க யாரு இருக்கா“ என ஆதங்கப்பட்டாள் மனைவி.
“அவர் கிட்ட என்ன வரம் கேட்குறதுனு தெரியலை“ என்றான் பாஸ்கர்
“உங்க சாமர்த்தியம் அவ்வளவு தான்“ எனச் சலித்துக் கொண்டாள் மனைவி
எவ்வளவோ கடனிருக்கிறது. மகள் கல்யாணம் பற்றிய கனவு இருக்கிறது. பெரிய கார், பங்களா வசதி என எத்தனையோ தேவைகள் இருக்கிறது. ஆனால ஏன் எதையும் கேட்க தோணவில்லை.
வரம் கேட்கிறவர்கள் பெருகி விட்ட இந்த உலகில் வரம் கொடுப்பவர்கள் ஏன் மறைந்து போனார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
அவரை என்றைக்காவது திரும்பப் பார்க்க நேர்ந்தால் என்ன வரம் கேட்க வேண்டும் என்று தனது ஆசைகளில் ஒன்றை தேர்வு செய்து கொண்டான். ஆனால் அதைக் கேட்கலாமா வேண்டாமா என்பதில் அவனுக்குக் குழப்பமே மிஞ்சியிருந்தது..
January 16, 2025
ரகசிய வாக்கெடுப்பு
சென்ற ஆண்டு வெளியான திரைப்படங்களில் சர்வதேச அளவில் அதிகம் பேசப்பட்டது Conclave, எட்வர்ட் பெர்கர் இயக்கியுள்ளார். புதிய போப்பை எப்படித் தேர்வு செய்கிறார்கள் என்ற ரகசிய வாக்கெடுப்பினை விவரிக்கிறது இந்தத் திரைப்படம்

இதே கதைக்கருவைக் கொண்டு 2006ல் கிறிஸ்டோஃப் ஷ்ரூவ் இயக்கிய The Conclave படம் வெளியாகியிருக்கிறது. அதனைப் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே பார்த்திருக்கிறேன். அப்படம் சில்வியஸ் ஏனியாஸ் பிக்கோலோமினி என்ற கார்டினல் எழுதிய நாட்குறிப்பின் அடிப்படையில் உருவாக்கபட்டது.
அதை விடவும் இன்றைய Conclave வாக்கெடுப்பு முறை மற்றும் அதற்குள் செயல்படும் அதிகாரப்போட்டியினைத் துல்லியமாகப் பதிவு செய்துள்ளது.குறிப்பாகப் போப்பின் மறைவை ஒட்டி நடக்கும் சடங்குகள். கார்டினல்களின் வருகை. மற்றும் அவர்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகள்.மோதல்களை விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

போப்பினை தேர்வு செய்யும் உரிமை கார்டினல்களுக்கு மட்டுமே இருக்கிறது. அவர்கள் சிஸ்டைன் தேவாலயத்தில் ஒன்று கூடுகிறார்கள். புதிய போப்பாக வருவதற்கு ஆசைப்படுகிறவர் கார்டினல்களைச் சரிக்கட்டுகிறார். வழக்கமான தேர்தல்களில் நடைபெறும் ரகசிய பேரம் மற்றும் கூட்டணி இங்கேயும் உருவாக்கபடுகிறது.
இந்த ரகசிய வாக்கெடுப்பினை நடத்தும் கார்டினல் லாரன்ஸ் பார்வையில் படம் விவரிக்கபடுகிறது. அவர் போ பதவிக்கு ஆசைப்படுவதில்லை. ஆனால் அவரும் ஒரு போட்டியாளராக்கபடுகிறார்.
ரகசிய வாக்கெடுப்பில் அதிகபட்ச எண்ணிக்கை கிடைக்காத போது அந்த வாக்குசீட்டுகள் தீயிட்டு எரிக்கபடுகின்றன. அந்தக் கரும்புகை வானில் பரவுகிறது. அதை வைத்துக் கொண்டே மக்கள் போப் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்பதை அறிந்து கொள்கிறார்கள்.
எட்கர் பெர்கர் இப்படத்தினைத் துப்பறியும் கதைகளின் பாணியிலே இயக்கியிருக்கிறார். ஒவ்வொன்றாக அவிழம் பிரச்சனைகள். அதற்குள் மறைத்திருக்கும் ரகசியம். அதற்கான விடை. எனப் படம் விரிகிறது.
தீர்க்கப்படாத ரகசியம் ஒன்றின் காரணமாக ஏதோ உண்மை மறைக்கபடுவதாக உணரும் லாரன்ஸ் அதைக் கண்டறிய முயலுகிறார். உண்மை வெளியாகிறது. ஆனால் அது பார்வையாளனுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
அமெரிக்கத் தேர்தல் நேரத்தில் இது போன்ற திரைப்படம் வெளியாவது தற்செயல் இல்லை. இரண்டினையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டிய அவசியமுள்ளது. குறிப்பாக அதிபராகத் தேர்வு செய்யப்படுகிறவரின் கடந்தகால ரகசியங்களை வெளிப்படுத்துவது. அவரது இருண்ட உண்மைகளை வெளிக்கொண்டுவருவது தேர்தல் உத்தியாகப் பயன்படுத்தபடுகின்றன. அதே செயல் இப்படத்திலும் வெளிப்படுகிறது. ஆப்கான் திருச்சபையைச் சேர்ந்த கார்டினல் பற்றிய செய்திகள் மறைமுக அரசியலைக் கொண்டிருக்கின்றன.
போப்பை தேர்வு செய்யும் ரகசிய வாக்கெடுப்பு பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை. சில்வியஸ் என்ற கார்டினல் தான் அதைத் தனது நாட்குறிப்பில் பதிவு செய்திருந்தார். அதன்பிறகே இது வெளிச்சத்திற்கு வந்தது.

போப் இறந்த பிறகு, அவரது மோதிரம் விரலில் இருந்து அகற்றப்பட்டு அழிக்கப்படுகிறது, இது ஆவணங்களில் போப்பின் முத்திரையைப் போலியாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான செயல்பாடு. அது போலவே அவரது அறை அரக்கு முத்திரை வைத்து மூடப்படுகிறது. போப்பை தேர்வு செய்யும் ரகசிய வாக்கெடுப்பிற்கான வாக்குசீட்டுகள். தேர்வின் இரகசியத்தைப் பேணுவதற்கான புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளும் காட்டப்பட்டுள்ளன. வயர்லெஸ் சிக்னல் ஜாமர்கள் பொருந்துகிறார்கள். வெளியே வன்முறை நடக்கிறது.
தாமஸ் லாரன்ஸ் என்ற கதாபாத்திரத்தில் ரால்ப் ஃபியன்ஸ் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆஸ்கார் விருது கிடைக்ககூடும். படத்தின் ஒளிப்பதிவு அபாரமானது. படத்தில் திருச்சபையின் செயல்பாடுகள் சரியாகச் சித்தரிக்கப்படவில்லை, போப் தேர்வினை அகதா கிறிஸ்டியின் துப்பறியும் நாவல் போலக் காட்டியிருக்கிறார்கள் என எதிர்ப்புக்குரல்கள் கிளம்பின. ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் இப்படம் உள்ளது. விருதுகளையும் வெல்லக்கூடும்.
போரும் மதமும் சினிமாவிற்கான எப்போதுமான கதைக்கருக்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கருப்பொருளில் படம் வெளியாகி சர்வதேச கவனத்தையும் விருதுகளையும் பெறுவது வழக்கம். அந்த வரிசையில் தான் இப்படமும் உள்ளது.
படத்தில் கார்டினல்கள் உணவருந்தும் காட்சியும் படிக்கட்டுகளில் ஏறிவரும் காட்சியும் உடைந்து சிதறும் கண்ணாடி ஜன்னலும் மறக்க முடியாதவை.
Conclave படத்தை இயக்கிய எட்வர்ட் பெர்கர் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தை இயக்கப்போகிறார் என்கிறார்கள். அதற்கான முன்னோட்டமாகவே இப்படம் இருக்கிறது. All Quiet on the Western Front (2022) படத்தையும் பெர்கர் தான் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
January 14, 2025
மாற்ற முடியாத விஷயங்கள்
இஸ்ரேலிய எழுத்தாளர், அமோஸ் ஓஸின் நேர்காணல்கள் தொகுப்பு. What Makes an Apple?: Six Conversations about Writing, Love, Guilt, and Other Pleasures

இந்த நேர்காணல்களில் தனது எழுத்து, பால்யகால நினைவுகள். காதல் மற்றும் அரசியல் நிலைப்பாடு குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். நேர்காணலை எடுத்துள்ள ஷிரா ஹதாத் அமோஸை ஆழ்ந்து வாசித்துச் சரியான கேள்விகளை முன்வைக்கிறார். ஓஸின் பதில்களை ஏற்றுக் கொள்ள முடியாது என முகத்துக்கு நேராக மறுக்கிறார். அத்துடன் அவரது முந்தைய நேர்காணல்களில் சொன்ன பதிலை இடைவெட்டி நினைவுபடுத்துகிறார்.
அமோஸ் ஓஸ் பெரிதும் அசோகமித்ரனை நினைவுபடுத்துகிறார். குறிப்பாகத் தனது குடும்பம் மற்றும் அன்றாட வாழ்க்கை பற்றிய அசோகமித்ரனின் பதிவுகளில் காணப்படும் அதே கேலி. கிண்டலை ஓஸிடமும் காணமுடிகிறது.
அமோஸ் ஓஸின் ஹீப்ரு இலக்கியப் பேராசிரியராகவும் இருந்தவர். அவரது புகழ்பெற்ற நாவல் A Tale of Love and Darkness . தனது அன்னையின் தற்கொலையை மையமாகக் கொண்டு அந்த நாவலை எழுதியிருக்கிறார்.

அந்த நாவலின் ஒரு இடத்தில் சிறுவனான ஓஸ் தனது அன்னையிடம் நான் பொய் சொல்லலாமா அம்மா என்று கேட்கிறார். அம்மா அதற்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்துவிட்டு சில நேரங்களில் பொய் சொல்லலாம் என்கிறார். பொய் குறித்த குற்றவுணர்விலிருந்து அந்தச் சிறுவன் விடுபடுகிறான். இந்த நேர்காணலில் அமோஸ் பொய் சொல்வது படைப்பாற்றலின் முக்கிய அம்சம் என்று குறிப்பிடுகிறார்.
காதல், பாலுறவு சார்ந்த விருப்பம் பற்றி வெளிப்படையாகப் பேசும் ஒஸ் தனது பெயரை மாற்றிக் கொண்டது மற்றும் ஜெருசலேம் நகரினைப் பற்றிய நினைவுகளையும் விரிவாகப் பதிவு செய்துள்ளார்.
ஒரு எழுத்தாளராகத் தனது அன்றாடப் பழக்கவழக்கங்கள் மற்றும் எழுதும் முறை அவர் குறிப்பிடுவது முக்கியமானது. தினமும் காலை நாலரை மணிக்கு எழுந்து இருண்ட வீதியில் நடைபயிற்சிக்குச் செல்லும் அவரது மாறாத பழக்கம் எழுதுவதற்கு எவ்வளவு முக்கியமாக இருக்கிறது என்பதை விளக்குகிறார். தான் ஒரு போதும் அலாரம் வைத்து எழுந்து கொள்வதில்லை. விடுமுறை நாட்களில் கூட இந்தப் பழக்கம் மாறாதது என்கிறார்.
கிட்டதட்ட இது போன்ற பழக்கத்தையே ஜப்பானிய எழுத்தாளர் ஹரூகி முரகாமியும் கைக்கொள்கிறார். எழுதுவதற்கான நேரத்தை ஒதுக்குவது. அதைத் தொடர்ந்து கடைபிடிப்பது எவ்வளவு முக்கியமானது என்பதை ஓஸ் அழுத்தமாக வலியுறுத்துகிறார்
ஒரு நாள் விடிகாலையில் அப்படி நடைபயிற்சிக்குச் செல்லும் போது ஒரு வீட்டில் எரியும் விளக்கையும் இருட்டில் நின்றபடி சாலையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் இளம்பெண்ணையும் காண்கிறார். அந்தக் காட்சி ஒரு கதையில் வருவது போலிருந்தது என்கிறார்.
அந்தப் பெண் எதற்காக இருட்டில் நிற்கிறாள். என்ன பிரச்சனை என்று அவளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்ததாகவும் கூறும் ஓஸ் அவளைப் பற்றி உடனே கதை எதையும் எழுதவில்லை. ஆனால் ஒரு நாள் அவள் நிச்சயம் என் படைப்பினுள் வெளிப்படுவாள். அப்படித் தான் நிஜவாழ்க்கை புனைவாக மாறுகிறது என்கிறார்.
ஓஸின் தந்தை, மாமனார். மைத்துனி என அவரது குடும்பத்தில் பலரும் நூலகர்கள். ஆகவே புத்தகங்களுடன் உள்ள உறவு மரபாகத் தொடரக் கூடியது என்கிறார். தான் சிறுவயதாக இருந்த போது ஒரு புத்தகமாக மாற வேண்டும் என்பதே தனது ஒரே ஆசையாக இருந்தது என்கிறார்.

தன்னைச் சுற்றி நடக்கும் இயக்கங்களை அவதானிப்பதே எழுத்தாளின் முதன்மையான வேலை. தான் மருத்துவமனையிலோ, ரயில் நிலையத்திலோ, விமான நிலையத்திலோ வரிசையில் நிற்கும்போது ஒருபோதும் செய்தித்தாளைப் படிப்பதில்லை அதற்குப் பதிலாக, மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதைக் கேட்கிறேன், சில வேளை அவர்களின் உடையைக் கவனிக்கிறேன். அவர்களின் காலணிகளைப் பார்க்கிறேன் – ஒருவர் அணிந்துள்ள காலணியை வைத்து அவரை மதிப்பிட்டுவிட முடியும். காலணிகள் எப்போதும் எனக்கு நிறையச் சொல்கின்றன என்கிறார் ஓஸ்.,
ஒரு பறவையைக் காணும் சிறுவன் அது எப்படிப் பறக்கிறது எனத் தெரிந்து கொள்ளப் பறவையைப் பிய்த்துப் பார்க்க விரும்புகிறான். உலகம் அவனைப் புரிந்து கொள்வதில்லை. கண்டிக்கிறது. குரூரம் என நினைக்கிறது. உண்மையில் அது குரூரமில்லை. தேடல். உள்ளார்ந்த ஆசை என்கிறார் அமோஸ்.
தனது வீட்டைக் கடந்து செல்லும் தனது நண்பர்களில் ஒருவர் வீட்டின் முன்பாக வந்து நின்று கலைந்த தலையைச் சீப்பால் வாறிச் சரிசெய்து கொள்வது வழக்கம். காரணம் ஒருவேளை அவரை ஒரு கதாபாத்திரமாக எழுத வேண்டியது வந்தால் கலைந்த தலையோடு இருக்கக் கூடாதில்லையா எனக் கேலியாகச் சொல்கிறார் ஓஸ்.
உண்மையில் மனிதர்கள் கதாபாத்திரங்ளாக மாற விரும்புகிறார்கள். கதாபாத்திரங்களுடன் தன்னை ஒப்பிட்டு பார்த்துக் கொள்கிறார்கள். கதாபாத்திரங்களின் பெயரை தனக்கு வைத்துப் பார்த்து ரசிக்கிறார்கள்.
எழுத்தாளர்களின் தலை பின்னால் திரும்பக் கூடியது. சாதாரண மனிதர்களால் அது இயலாது. எழுத்தாளனின் தலை எப்போதும் கடந்தகாலத்தைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறது. கடந்தகாலத்திலிருந்தே கதைகளைப் பலரும் உருவாக்குகிறார்கள். அது தனிப்பட்ட ஒருவரின் கடந்தகாலமாக இருக்கலாம் அல்லது தேசத்தின், இனத்தின், பண்பாட்டின். ஊரின், வீதியின், வரலாற்றின் கடந்தகாலமாகவும் இருக்கலாம். எழுத்தாளன் மிகவும் பொறுமைசாலியாக இருக்க வேண்டும். அவசரம் படைப்பைக் கொன்றுவிடும்.
பாலுறவின் மீதான விருப்பம் பற்றிக் குறிப்பிடும் ஓஸ் difference between animal sexuality and human sexuality is the story என்கிறார். உண்மை விலங்குகளின் பாலின்ப வேட்கையில் கதை கிடையாது. மனிதர்களுக்குக் கதை வேண்டும். மனிதர்களின் பாலுறவு ஒரு கதையுடன் தொடர்புடையது. அந்தக் கதை நம் மனதினுள் ஆழப் பதிந்திருக்கிறது. ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் தொடுவதற்கு முன்பே, ஒரு குறிப்பிட்ட கதை அவர்கள் மனதில் விழித்துக் கொள்கிறது. எல்லா இன்பங்களும் கதைகளாகவே மிஞ்சுகின்றன.
பலசரக்குகடைக்காரன் தனது கடையைத் திறந்து வைத்து காத்திருப்பவன் போல எழுத்தாளனும் தனது எழுதும்மேஜையின் முன்பாக நாள் தவறாமல் அமர்ந்திருக்க வேண்டும். சில வேளை பத்துப் பக்கம் எழுத நேரிடும். சில நாட்கள் எதையும் எழுத முடியாமலும் போய்விடும். பலசரக்கு கடைக்காரன் எப்படி குற்றவுணர்வில்லாமல் காத்திருக்கிறானோ அப்படி எழுத்தாளனும் பொறுமையாகக் காத்துகிடக்கவே வேண்டும் என்கிறார் ஓஸ்
என்னை விடச் சிறப்பாக எழுதும் ஒரு எழுத்தாளன் மீது நான் பொறாமை கொள்ளக்கூடும். ஆனால் என்னை விடப் புகழ்படைத்த ஒரு எழுத்தாளன் மீது ஒரு போதும் பொறாமை கொள்ள மாட்டேன். பணமோ, புகழோ, புத்தக விற்பனையோ ஒரு எழுத்தாளனை முடிவு செய்துவிடாது. குறைவான பிரதிகள் விற்பனையாகின்றன உலகின் தலை சிறந்த எழுத்தாளர்கள் பலரை நான் அறிவேன் என்கிறார்
இந்த நேர்காணலின் ஊடாகத் தஸ்தாயெவ்ஸ்கி, வில்லியம் பாக்னர். காஃப்கா எனத் தனக்குப் பிடித்தமான இலக்கியவாதிகளைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிடுகிறார் ஓஸ்.
literature is actually the cousin of gossip, of the human thirst to know what is happening behind other people’s shuttered blinds, to know what their secrets are என்று ஓஸ். குறிப்பிடுவது உண்மையே.
January 12, 2025
காலம் இதழில்
கனடாவிலிருந்து வெளியாகும் காலம் இதழில் எனது புதிய சிறுகதை வெளியாகியுள்ளது


புத்தகத் திருவிழா – நன்றி
சென்னை புத்தகத் திருவிழா இனிதே நிறைவடைந்தது. நிறைய வாசகர்கள், நண்பர்களைச் சந்தித்து உரையாடியது மகிழ்ச்சி அளித்தது. பலரும் புத்தகங்களில் கையெழுத்து பெற்றுக் கொண்டார்கள். புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் காட்டும் அன்பும் அக்கறையும் தான் என்னைத் தொடர்ந்து எழுத வைக்கிறது, என் சார்பிலும் தேசாந்திரி பதிப்பகம் சார்பிலும் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி,
இந்தக் கண்காட்சியினுள் ஆறு புத்தக வெளியீட்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டேன். அங்கே இளம் படைப்பாளிகள் பலரையும் சந்திக்க முடிந்தது சந்தோஷமளித்தது.
வெளியூர்களில் இருந்தும் வெளிநாட்டிலிருந்தும் என்னைச் சந்திக்க வந்திருந்த வாசர்களின் அன்பு நிகரற்றது. அவர்களுக்கு நன்றி.
ஸ்ருதி டிவி அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்து காணொளியாக வெளியிட்டார்கள். கபிலன், சுரேஷ் மற்றும் ஸ்ருதி டிவி ஒளிப்பதிவாளர்கள் அனைவருக்கும் நன்றி
தி இந்து தமிழ்திசை நாளிதழ், தினமணி, மற்றும் தொலைக்காட்சி, இணைய இதழ்கள். யூடியூப்பர்கள், முகநூல் பதிவர்கள் எனப் பலரும் தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல்கள் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அனைவருக்கும் நன்றி

January 8, 2025
நூல் வனம் வெளியீட்டு விழா
இன்று(09.01.2025) மாலை சென்னை புத்தகக் காட்சியில் நூல் வனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஏழு நூல்களை வெளியிடுகிறேன்

பாரோவின் அரியணை
த டென் கமாண்ட்மெண்ட்ஸ், பென்-ஹர் போன்ற ஹாலிவுட்டின் பிரம்மாண்டமான படங்கள் ஏற்படுத்திய பாதிப்பில் உருவாக்கபட்ட திரைப்படம் பாரோ. போலந்து நாட்டில் தயாரிக்கபட்ட இப்படம் 1966ல் வெளியானது.

மூன்று ஆண்டுகள் பெரும்பொருட்செலவில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். படத்தில் வரும் பாலைவனக் காட்சிகளுக்கு மட்டும் ஆயிரம் பேருக்கும் மேலான துணை நடிகர்கள் பயன்படுத்தபட்டிருக்கிறார்கள
இப்படத்திற்காக கலை இயக்குநர் 3000 விக்குள் மற்றும் 3000 ஜோடி காலணிகள், கிட்டத்தட்ட 9000 ஆயுதங்கள் மற்றும் 600 பாரம்பரிய ஆடைகளை உருவாக்கியிருக்கிறார். அது போலவே 4000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போன்ற ஒரு படகை மறுஉருவாக்கம் செய்திருக்கிறார்கள். கூடுதலாக ஒரு செயற்கை தீவினையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
ஹாலிவுட் படங்கள் போல அரங்கத்திற்குள்ளாகவே படமாக்கப்படாமல் உண்மையான நிலவெளியில் இப்படத்தை உருவாக்கியிருப்பது பாராட்டிற்குரியது.
ஹாலிவுட் பிரம்மாண்டங்களைத் தாண்டிய காட்சியப்படுத்துதல், மற்றும் கேமிரா, நடிப்புப் படத்தைத் தனித்துவமாக்குகிறது. ஜெர்சி கவாலெரோவிச் இதனை இயக்கியுள்ளார். போல்ஸ்லாவ் ப்ரூஸின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. போலந்து சினிமாவில் இப்படம் அடைந்த வெற்றி மற்றும் வசூல் செய்யத் தொகை இந்நாள் வரை முறியடிக்கபடவில்லை.

படத்தின் துவக்க காட்சியின் கண்முன்னே விரியும் பாலைநிலமும் அதில் நடைபெறும் போர்காட்சியும் வரலாற்றில் இப்படிதான் நடந்திருக்கும் என நம்மை நம்ப வைக்கிறது.
எகிப்தின் மன்னரான 13வது ராம்சேயின் கதையைச் சொல்லும் இப்படம் அக் காலத்தில் மதகுருக்கள் எவ்வளவு செல்வாக்குடன் விளங்கினார்கள். மதகுருவை எதிர்த்து மன்னரால் கூட எதுவும் செய்யமுடியாத நிலை எப்படி உருவானது என்பதை விவரிக்கிறது
பண்டைய எகிப்திய ஆட்சியாளர்களான, பாரோக்கள் மன்னராக மட்டுமின்றி மதத் தலைவராகவும் அறியப்பட்டார்கள். கடவுளின் பிரதிநிதியாகவே மக்கள் அவரைக் கருதினார்கள். அவர் எகிப்திய தெய்வங்களுக்குச் செய்ய வேண்டிய சடங்குகளை முன் நின்று நடத்துவது வழக்கம். அவரால் கலந்து கொள்ள முடியாத போது அவரது பிரதிநிதியாக மதகுரு ஒருவரை நியமிப்பது வழக்கம்.. மதகுருக்களுக்கெனத் தனிச் சபையிருந்தது. அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் தலையிடுவார்கள். சுகபோக வாழ்க்கையை மேற்கொண்டார்கள்.
பாலைவனத்தில் சண்டையிடச் சென்ற இளவரசன் ராம்சே தற்செயலாகச் சாரா என்ற அழகான யூதப் பெண்ணைச் சந்திக்கிறான். அவளைக் காதலிக்கிறான். திருமணம் செய்து கொள்கிறான். அதை மன்னர் ஏற்கவில்லை.
இளவரசன் ராம்சே மதகுரு ஹெர்ஹோரின் அதிகாரத்தை எதிர்க்கிறான். தான் மன்னராகப் பதவியேற்றால் மதகுருவின் அதிகாரத்தைப் பறித்துவிடுவேன் என்று வெளிப்படையாக அறிவிக்கிறான். அத்தோடு தனது தந்தை ஹெர்ஹோரின் பேச்சைக் கேட்டு நடப்பதைக் கண்டிக்கிறான்.

ராம்சேயின் காதல் மற்றும் திருமண வாழ்க்கையை விவரிக்கும் படம் அதற்குள் மதம் எப்படிக் குறுக்கிடுகிறது. சதி செய்கிறது என்பதை உண்மையாக விவரித்துள்ளது. குறிப்பாக யூத மனைவிக்குப் பிறந்த குழந்தையை ஏற்க முடியாது என ராம்சேயின் அன்னை வாதிடும் காட்சி மற்றும் ராம்சேயை மயக்க மதகுருக்கள் செய்யும் ஏற்பாடு. வழிபாடு செய்யச் சென்ற ராம்சேயின் முன்னால் தோன்றி மறையும் காமாவின் பிம்பம் எனத் தொடரும் காட்சிகள் சிறப்பாக உள்ளன
தேசத்தின் அனைத்து நிலங்களும் மன்னருக்கே சொந்தமாக இருந்தன. அவர் சட்டங்களை இயற்றினார், வரியை வசூலித்தார் மற்றும் படைத் தளபதியாகப் பணியாற்றினார். அத்தோடு கடவுளின் பிரதிநிதியாகவும் செயல்பட்டார். நைல் நதி விவசாயம் மற்றும் வணிகத்திற்குப் பேருதவியாக இருந்தது. மன்னர்களுக்கு இணையாக வணிகர்கள் விளங்கினார்கள்.
தந்தையின் இறப்பிற்குப் பின்பு மன்னராகப் பதவியேற்கும் ராம்சேயை செயல்பட விடாமல் மதகுருக்கள் தடுக்கிறார்கள். வன்முறையை ஏவிவிடுகிறார்கள். தங்கள் வசமுள்ள பொக்கிஷத்தை தரமறுக்கிறார்கள். இளம் பாரோ ராம்சே எகிப்தில் சீர்திருத்தம் செய்ய நினைக்கிறான். ஆனால் அதை மதகுருக்கள் விரும்பவில்லை. அவர்கள் சதி செய்து அவனை அகற்ற நினைக்கிறார்கள்
பாரோவின் கருவூலம் காலியாக இருக்கும் நேரத்தில் மதகுருக்கள் ரகசிய இடம் ஒன்றில் பெரும் பொக்கிஷங்களை வைத்திருப்பதை ராம்சே அறிந்து கொள்கிறான். அதை மீட்டு மக்களுக்குப் பயன்படுத்த நினைக்கிறான்.ஆனால் கடவுளின் சொத்தை விட்டுதர முடியாது என மதகுருக்கள் மறுக்கிறார்கள்.

இளவரசன் ராம்சே ஃபீனீசிய வணிகர் ஒருவரிடம் கடன் வாங்கும் காட்சி படத்தில் இடம்பெற்றுள்ளது. அந்தக் கால வணிகர்கள் பெற்றிருந்த செல்வாக்கு மற்றும் அவர்கள் மன்னரிடமே வட்டி வசூல் செய்யும் விதம் பற்றிப் படம் உண்மையாகச் சித்தரித்துள்ளது
படத்தில் பயன்படுத்தபட்டுள்ள உடைகள். மற்றும் கலைப்பொருட்கள் யாவும் வரலாற்றுபூர்வமாக ஆராயப்பட்டுச் சரியாகப் பயன்படுத்தபட்டிருக்கின்றன. குறிப்பாக மன்னரின் அரண்மனை, அவரது உடைகள். ராஜசபை. மதகுருக்களின் உடை மற்றும் கோவில்கள் துல்லியமாகச் சித்தரிக்கபட்டிருக்கின்றன. கிசா பிரமிடுகளின் பின்னணியில் சில காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்கள்.
நைல் நதியில் ராம்சே தனது மனைவி சாராவுடன் படகில் செல்லும் காட்சி மிக அழகானது. எகிப்திய ஒவியம் ஒன்று உயிர்பெற்றது போல அந்தக்காட்சி உருவாக்கபட்டிருக்கிறது. வேட்டையின் நடுவில் ராம்சே தனது அன்னையைச் சந்திக்கிறான். மகாராணி வரும் படகு. அதில் நிற்கும் அவளது தோரணை . அவளை எதிர்கொள்ள முடியாமல் சாரா அடையும் குற்றவுணர்வு மிக நேர்த்தியாகப் படமாக்கபட்டுள்ளது. அது போலவே காமா மீதான காதல் மற்றும் அவளது துரோகமும் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது.
புதிதாகக் கட்டப்பட்ட கால்வாயை போர் வீரர்கள் அழிக்கும் போது அதை உருவாக்கியவன் எழுப்பும் ஒலம் மறக்க முடியாதது. அவனால் அதிகாரத்திற்கு எதிராக எதுவும் செய்ய முடியவில்லை. ஆகவே தன்னைப் பலி கொடுத்துக் கொள்கிறான். அந்தக் காட்சி ராம்சேயின் மனதை வேதனைப்படுத்துகிறது.

கிரகணம் ஏற்படுவதை அறிந்த மதகுரு அதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் காட்சி முக்கியமானது. கதாபாத்திரங்களின் கூடவே செல்லும் கேமிரா மிக அழகான கோணத்தில் எதிர்பாராத நகர்வுகளுடன் காட்சியைப் பதிவு செய்துள்ளது.
படத்தில் பலரும் அந்தக் கால வழக்கப்படி இடுப்புத் துணிகளை மட்டுமே அணிந்திருக்கிறார்கள், மதகுருக்கள் மொட்டையடித்த தலையுடன் காணப்படுகிறார்கள். சாண வண்டுகள் மண் உருண்டையை உருட்டிச் செல்லும் துவக்க காட்சி உருவகம் போலக் காட்சியளிக்கிறது.
எகிப்திய அதிகாரப் படிநிலையினையும் அதற்குள் ஏற்படும் மோதல்களையும் படம் மிக நுட்பமாகச் சித்தரித்துள்ளது.

படம் பார்த்துக் கொண்டிருந்த போது நினைவில் மந்திரிகுமாரி திரைப்படம் வந்து போனது. அதிலும் மதகுருவிற்கும் மன்னருக்குமான அதிகார போட்டியே சித்தரிக்கபடுகிறது. மதகுருவாக நடித்துள்ள நம்பியார் பாரோவில் வரும் வில்லன் போலவே மொட்டையடித்த தலையுடன் சித்தரிக்கபட்டுள்ளார். ஆனால் மந்திரிகுமாரி பாரோவிற்கு முன்பாக உருவாக்கபட்ட திரைப்படம். 1950ல் வெளியானது.
ஹாலிவுட் படங்களில் இல்லாத நுண் சித்தரிப்பும் வரலாற்று உண்மையும் போலந்தின் நிகரற்ற படங்களில் ஒன்றாக இதனை வைத்திருக்கிறது.
January 6, 2025
மிலன் குந்தேரா நாவல்
செக் எழுத்தாளர் மிலன் குந்தேராவின் வாழ்வின் தாள முடியா மென்மை நாவலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இதனைப் புகழேந்தி மொழியாக்கம் செய்திருக்கிறார்.
இந்த நூலின் வெளியீட்டு விழா இன்று மாலை புத்தகத் திருவிழாவில் உள்ள காலச்சுவடு பதிப்பக அரங்கில் நடைபெறுகிறது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்

January 2, 2025
உதவி தேவை
அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் ஒரு உதவி தேவைப்படுகிறது. டப்ளினில் வசிக்கும் நண்பர்கள் யாரேனும் இருந்தால் தொடர்பு கொள்ளவும்
எனது மின்னஞ்சல் முகவரி
writerramki@gmail.com
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
