அன்றாடம் – 3 திரும்பக் கேட்டவர்

நகைச்சுவையே முழு உண்மை என்கிறார் ஹங்கேரிய எழுத்தாளர் ஃபிரிட்ஸ் கரிந்தி, இதே கருத்தையே மிலன் குந்தேராவும் கொண்டிருந்தார். இவர்கள் நகைச்சுவை என்பதை அசட்டுத்தனமான ஒன்றாகக் கருதவில்லை. உயர்ந்த கலைவெளிப்பாடாகக் கருதினார்கள்.

Fritz Karinthy

நகைச்சுவை தனது வெளிப்பாடு முறையால் சிரிக்க வைத்தாலும் அதனுள் உண்மை புதைந்திருக்கிறது என்கிறார் கரிந்தி.

இவரது The Refund என்ற ஒரங்க நாடகத்தில் தனது பள்ளிபடிப்பு வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் பயன்படவில்லை என உணரும் வாஸர்கோஃப் தான் படித்த பள்ளியிடம் கல்விக் கட்டணத்தைத் திரும்பத் தர வேண்டும் என்று வாதிடுகிறான்.

பள்ளிக்கூடத்திற்கும் அவனுக்கும் நடக்கும் விவாதங்கள் வேடிக்கையானவை.

1938 ஆம் ஆண்டு வெளியான இந்த நாடகம் ஹங்கேரியில் மட்டுமின்றிப் பல்வேறு நாடுகளிலும் மேடையேற்றப்பட்டிருக்கிறது.

நாற்பது வயதான. வாஸர்கோஃப்பிற்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை, அவர் எந்த வேலைக்குச் சென்றாலும் எதற்கும் தகுதியற்றவர் என்று துரத்திவிடுகிறார்கள். ஒரு நாள் அவரது வகுப்புத் தோழர் ஒருவரைச் சந்திக்கிறார். பள்ளியில் படித்த படிப்பால் பிரயோசனமில்லை என்பதால் அவர் தனது தனது கல்விக் கட்டணத்தைத் திரும்பப் பெறுவது நல்லது என்று நண்பர் ஆலோசனை சொல்கிறார் அதை ஏற்றுக் கொண்ட வாஸர்கோஃப் . இதற்காக தான் படித்த பள்ளிக்குச் செல்கிறார்.

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் கட்டிய பள்ளிக்கட்டணத்தைத் திரும்பத் தரும்படி கேட்கிறார். இதைக் கேட்ட பள்ளி முதல்வர் அதிர்ச்சி அடைகிறார். என்ன பதில் சொல்வது எனப் புரியாமல் பள்ளியின் மற்ற ஆசிரியர்களை அழைத்து அவசரக் கூட்டம் நடத்துகிறார்

கணித ஆசிரியர் இதற்கு ஒரு தீர்வை முன்மொழிகிறார். அதன்படி நாம் வாஸர்கோஃப்பிடம் சில கேள்விகள் கேட்போம். அதற்கு அவர் எந்தப் பதில் சொன்னாலும் அது சரியானது என்று வாதிடுவோம். இதன் மூலம் அவர் அறிவாளி என்பது நிரூபணமாகிவிடும். இதற்குக் காரணம் அவரது படிப்பு, ஆகவே அவரது பள்ளிக்கட்டணத்தைத் திருப்பத் தர முடியாது என்போம் என்கிறார்.

ஆசிரியர்கள் அனைவரும் இந்தத் திட்டத்தை ஏற்கிறார்கள். வாஸர்கோஃப் வாய்மொழித் தேர்விற்குச் சம்மதம் தெரிவிக்கிறார்.

சரித்திர ஆசிரியர் அவரிடம் முப்பது ஆண்டுகாலப் போர் எத்தனை வருஷம நடந்தது என்று கேட்கிறார். இதற்கு வாஸர்கோஃப், ‘முப்பது வருடப் போர்’ ஏழு மீட்டர் நீடித்தது என்று பதில் சொல்கிறார். வரலாற்று ஆசிரியருக்கு இந்தப் பதிலை எப்படிச் சரியென்று நிரூபிப்பது எனத் தெரியவில்லை

ஆனால் கணித ஆசிரியர் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டின் அடிப்படையில் வாஸர்கோஃப், அளித்த பதில் சரியானது என்பதை நிரூபித்துவிடுகிறார்.

இப்படியாக இயற்பியல் ஆசிரியர், புவியியல் ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கும் வாஸர்கோஃப் முட்டாள்தனமாகப் பதில் தருகிறார். அதைக் கணித ஆசிரியர் தனது திறமையால் சரியான பதில் என விளக்குகிறார்.

முடிவில் கணித ஆசிரியர் அவரிடம் ஒரு கடினமான கேள்வியையும் ஒரு எளிதான கேள்வியையும் கேட்கிறார்.

வாஸர்கோஃப். எளிதான கேள்விக்குத் தவறான பதிலைக் கொடுக்கிறார், கணித தேர்வில் அவர் தோல்வியடைந்ததால், அவர் கேட்ட கல்விக் கட்டணத்தைத் திருப்பித் தந்துவிடுகிறோம் என்கிறார் ஆசிரியர்

அதன்படி அவருக்குப் பள்ளிக்கூடம் தர வேண்டிய தொகை எவ்வளவு என்று கேட்கிறார். , வாஸர்கோஃப் சரியான தொகையின் பட்டியலைக் கொடுக்கிறார். கணித ஆசிரியர் இதுவே அவருடைய கடினமான கேள்வி என்றும், அவர் சரியான பதிலைக் கொடுத்தார் என்றும் பாராட்டுகிறார்.

ஆகவே வாஸர்கோஃப் கணித தேர்வில் வெற்றி பெற்றதால் பள்ளிக்கட்டணத்தைத் திரும்பித்தரத் தேவையில்லை என அனைவரும் முடிவு செய்கிறார்கள்.

வாஸர்கோஃப் என்றால் விசித்திரமான நபர் என்று பொருள். கல்வியின் தரம் மற்றும் படிப்பு வேலைக்குப் பயனற்று போய்விட்ட சூழலை விமர்சனம் செய்யும் இந்த நாடகம் எழுப்பும் கேள்விகள் இன்றைக்கும் பொருந்தக்கூடியதே.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 28, 2025 06:58
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.