S. Ramakrishnan's Blog

September 5, 2025

திரைப்பயணி -9

உலக சினிமாவை அறிமுகப்படுத்தும் திரைப்பயணி காணொளித் தொடரின் 9 வது பகுதி வெளியாகியுள்ளது. இதில் LA STRADA  குறித்து உரையாற்றியுள்ளேன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 05, 2025 22:36

இணைய நிகழ்வு

செப்டம்பர் 6 சனிக்கிழமை மாலை எனது நூலக மனிதர்கள் புத்தகம் குறித்த மதிப்புரை நிகழ்வு இணைய வழியாக நடைபெறுகிறது.

விருதை விருட்சம் சார்பில் நடைபெறும் இந்த நிகழ்வில் நூல் குறித்து அம்பாள் ஆர். முத்துமணி பேசுகிறார்.

விருதை விருட்சம் நூல் வாசிப்பு அனுபவம் -2

Time: Sep 06, 2025 07:30 PM India
Join Zoom Meeting
https://us05web.zoom.us/j/77727323793...
Meeting ID: 777 2732 3793
Passcode: 8kraDk

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 05, 2025 01:57

மதுரை புத்தகத் திருவிழாவில்

இன்று துவங்கியுள்ள மதுரை புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது.

அரங்கு எண் 205.

எனது அனைத்து நூல்களும் அங்கே கிடைக்கும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 05, 2025 01:49

September 4, 2025

நெருப்பின் சாட்சியம்

இன் தி ஃபயர் ஆஃப் வார் நியூசிலாந்து பூர்வகுடிகளான மாவோரி இனத்தின் கடைசி யுத்தத்தை மையமாகக் கொண்டது. 1864 ஆம் ஆண்டு நியூசிலாந்தில், பிரிட்டிஷ் ராணுவம் ஒராக்காவ் என்ற இடத்தில் மாவோரி படைகளைத் தாக்கியது. அந்த நிகழ்வினை தான் படம் விவரிக்கிறது. இந்தப் போர் மார்ச் 30 முதல் ஏப்ரல் 2, 1864 வரை தே அவமுட்டுவிலிருந்து தெற்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிஹிகிஹி நகருக்கு அருகில் நடந்தது

1840 இல், மாவோரி தலைவர்களுக்கும் பிரிட்டிஷ் அரசிற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் உருவானது. அதன்படி அவர்கள் பூர்வகுடி நிலத்தை ஆக்ரமிக்கவோ, அவர்களை மதம் மாற்றம் செய்யவோ, பண்பாட்டு விஷயங்களில் தலையிடவோ கூடாது என்று அறிவிக்கபட்டது. ஆனால் ஆங்கிலேயர்கள் ஒப்பந்தத்தை மீறி கணிசமான அளவு மாவோரி நிலத்தைக் ஆக்ரமித்துக் கொண்டார்கள். இதனை எதிர்த்த மாவோரிகளைக் கைது செய்து தண்டித்தார்கள். ,

மாவோரி மக்கள் ஒன்றுதிரண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராட துவங்கியதும் அவர்களை ராணுவத்தின் துணை கொண்டு ஒடுக்கினார்கள். ஆங்கிலேயர்கள் வடக்கே படேரங்கியில் உள்ள பாதுகாப்புகளை மீறி, ரங்கியாவோஹியா கிராமத்தை சூறையாடினர், அங்கு மாவோரி பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். இந்த வரலாற்றுப் பின்புலத்தில் தான் படம் நிகழுகிறது.

ஆயுதம் ஏந்திய மிகப் பெரிய பிரிட்டீஷ் படையைக் குறைவான வீரர்களைக் கொண்ட பூர்வகுடிகளால் எப்படிச் சந்திக்க முடியும் என இனக்குழு தலைவர் மனியபோடோ கேள்வி எழுப்புவதில் படம் துவங்குகிறது . நமது சுதந்திரத்திற்காகக் கடைசி வரை போராடுவோம் எனக் குலத் தலைவன் உறுதியாக நிற்கிறான்.

போருக்கான ஆயுத்தங்களைத் துவங்குகிறார்கள். இந்த நிலையில் போர்கடவுள் ஒரு இளம்பெண் மூலமாக ஆசி வழங்குகிறாள். கிரேக்கத்திலும் இது போலப் போருக்கு முன்பாக அருள் வேண்டுவார்கள். கடவுளின் ஆசியில்லாமல் போர் நடத்தமாட்டார்கள். மாவோரி போர் கடவுளான பபதுவானுகுவின் பிரதிநிதியாகத் திருமணம் செய்து கொள்ளாத இளம்பெண்ணைத் தான் தேர்வு செய்வார்கள். அவள் அமானுஷ்ய திறன் கொண்டவளாக கருதப்படுவாள். சில சடங்குகள் மூலம் அவள் கடவுளின் உத்தரவை அறிவிப்பாள்.

தெய்வ அருள் கொண்ட இளம் பெண் தான் படத்தின் முக்கியக் கதாபாத்திரம். தான் போர்கடவுளின் குரலாக இருக்க விரும்பவில்லை. எல்லோரையும் போல மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்க விரும்புவதாகக் கோபு என்ற பெண் சொல்கிறாள். ஆனால் அதனை இனக்குழு அனுமதிக்கவில்லை. அவள் ஒரு பல்லியை வைத்திருக்கிறாள். அது நாக்கை சுழற்றுகிறது. அதனை விடுவித்தாலும் அவளையே சுற்றிவருகிறது. போரின் நடுவே அவள் தப்பியோடிவிடக் கூடாது என்பதற்காகக் கிணற்றில் அடைத்து வைக்கிறார்கள். அவளால் ஹக்கியின் கடந்தகாலத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது. ஹக்கியின் அன்னையைப் பற்றி அவள் சரியாகவே சொல்கிறாள்.

மாவோரிகள் பச்சை குத்தி கொள்வதில் ஆர்வமானவர்கள். முகத்திலும் உடம்பிலும் சித்திரங்களை வரைந்து கொள்கிறார்கள். இது பாரம்பரியத்தின் அடையாளமாகவும், மூதாதையர் ஆவிகளுடனான தொடர்பாகவும் செயல்படுகிறது. இப்படத்தில் போரிடும் இனக்குழு தலைவர்கள் அது போன்ற முகச்சித்திரம் கொண்டிருக்கிறார்கள்.

பூர்வகுடிப் பெண்ணிற்கும் ஆங்கிலேய தந்தைக்கும் பிறந்தவன் ஹக்கி . பதின் பருவத்திலிருக்கிறான். அவனது தாய் போரின் போது கொல்லப்படுகிறாள். தந்தை ஒரு பிரிட்டீஷ் சிப்பாய்.

ஹக்கி துஹோ படைகளால் பிடிபடுகிறான். மாவோரிகள் அவனைப் போருக்கான களப்பலியாகக் கொடுக்க முடிவு செய்கிறார்கள். அவன் மீது கொண்ட அன்பின் காரணமாகக் கோபு அவனைப் பலியிடக் கூடாது எனக் கட்டளை இடுகிறாள்.

இது தெய்வத்தின் வாக்கு என்பதால் அவரை உயிரோடு விடுகிறார்கள். தப்பிச் செல்ல முயலும் ஹக்கி தன்னுடன் வந்துவிடும்படி கோபுவையும் அழைக்கிறான். அவள் தயங்குகிறாள். இதனிடையில் பிரிட்டீஷ் ராணுவம் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்கிறது. துப்பாக்கி சண்டை துவங்குகிறது. மாவோரிகளில் பலரும் களத்திலே செத்து மடிகிறார்கள். ஆனாலும் அவர்கள் சரணடைய விரும்பவில்லை. பெண்களும் ஆயுதமேந்தி போராடுகிறார்கள்.

இந்நிலையில் பழங்குடியினருக்கு வெடிமருந்து கலந்து தருவதில் ஹக்கி உதவி செய்கிறான். அவர்களுக்காகச் சண்டையிடுகிறான். ஆனால் பிரிட்டீஷ் படைகள் மாவோரிகளை மோசமாகத் தாக்கி அழித்து ஒழிக்கிறார்கள். இதில் உயிர்தப்பி ராணுவத்திலிருந்த தனது வெள்ளைக்கார தந்தையிடம் ஹக்கி அடைக்கலமாகிறான். அவரது முகாமில் தங்குகிறான்.

மறைந்து வாழும் கோபுவையும் இனக்குழுவின் பெண்களையும் காப்பாற்ற ஹக்கி திட்டமிடுகிறான். அது எதிர்பாராத விளைவை உருவாக்குகிறது. மாவோரி பண்பாட்டின் அடையாளங்களையும் அவர்கள் போர்முறைகளையும் நம்பிக்கைகளையும் படம் விவரிக்கிறது. மாவோரி மொழியிலே படம் உருவாக்கபட்டிருக்கிறது. முக்கிய நடிகர்களும் அந்த இனத்தைச் சேர்ந்தவர்களே.

Original Maori War

திரைக்கதை எழுத்தாளர் டிம் வொரால் மற்றும் இயக்குனர் மைக் ஜோனாதன் இணைந்து மாவோரிகள் வரலாற்றின் அறியப்படாத உண்மைகளைப் படத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்கள். வனநெருப்பு நடந்த உண்மைகளின் சாட்சியம் போலிருக்கிறது. குதிரையில் நோயுற்ற குழந்தையை ஏற்றி நடத்திச் செல்லும் காட்சி. போர் களத்தில் அனைவரும் சேர்ந்து முழங்குவது. கைவிடப்பட்ட கோபியை காப்பாற்ற ஹக்கி முயலுவது. முகாமில் தந்தையுடன் ஹக்கி முரண்படுவது எனத் தேர்ந்த காட்சிகள் சிறப்பாக உருவாக்கபட்டுள்ளன. இருளும் ஒளியும் கலந்து போர்கள அனுபவத்தினை நிஜமாக்குகிறது ஒளிப்பதிவு. அந்த வகையில் தேர்ந்த ஒளிப்பதிவு. சிறந்த கலை இயக்கம், இசையமைப்பாளர் ஆர்லி லிபர்மேன் வழங்கியுள்ள இனிமையான மரபிசை எனப் படம் சிறந்த அனுபவத்தைத் தருகிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 04, 2025 09:21

August 31, 2025

இந்தி இதழில்

வாகர்த் என்ற இந்தி இலக்கிய இதழில் எனது கட்டுரை இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 31, 2025 02:01

August 30, 2025

திரைப்பயணி -8

திரைப்பயணி காணொளித் தொடரின் எட்டாவது பகுதியில் The Last Emperor திரைப்படம் குறித்துப் பேசியுள்ளேன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 30, 2025 05:21

August 25, 2025

குற்றமுகங்கள் 20 ஜுகூர்

1893ல் வட இந்திய கிராமங்களில் மணப்பெண் கடத்தல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமண வீட்டிற்குள் புகுந்து மணப்பெண்ணை யாரோ கடத்திப் போய்விடுகிறார்கள். யார் அவன் என்றோ, பெண்ணை எப்படிக் கடத்திக் கொண்டு போகிறான் என்றே கண்டறிய முடியவில்லை.

இந்தக் கடத்தலுக்குப் பயந்து மணப்பெண் யார், எங்கே திருமணம் நடக்கிறது என்ற தகவல்களை ரகசியமாக வைத்துக் கொண்டார்கள். மணப்பெண்ணை ஊர்வலமாக அழைத்து வருவதை நிறுத்திக் கொண்டார்கள். குடும்பத்தினர் தவிர வேறு எவரும் திருமணத்திற்கு அழைக்கபடவுமில்லை. இவ்வளவு எச்சரிக்கையாக நடந்தாலும் மணப்பெண் கடத்தல் தொடரவே செய்தது.

ரூபியா கௌர் என்ற பெண் தான் முதலில் கடத்தப்பட்டவள். அவளது திருமணம் சிக்ரா என்ற கிராமத்தில் நடைபெறுவதாக இருந்தது. அதற்காக முந்திய நாள் மாலையே மணப்பெண்ணை அழைத்துக் கொண்டு வந்து உறவினர் வீட்டில் தங்க வைத்திருந்தார்கள்.

பின்னிரவில் வீட்டிற்குள் மாறுவேஷத்தில் வந்த ஒருவன் ரூபியாவைக் கடத்திக் கொண்டு போய்விட்டிருந்தான். மணமகள் காணாமல் போன விஷயம் காலையில் தெரிய வந்து கிராமமே அவளைத் தேடினார்கள். கண்டுபிடிக்க முடியவேயில்லை.

இதன் தொடர்ச்சியாகச் சில மாதங்களில் சிக்ராவை ஒட்டியே பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் திருமணத்திற்கு முன்பாகக் கடத்தப்பட்டார்கள். யார் இவர்களைக் கடத்திக் கொண்டு போவது. அந்தப் பெண்கள் என்ன ஆனார்கள் என்பதைக் கண்டறிவதற்காகக் காவல்அதிகாரி வில்லியம் டேவி தலைமையில் காவல்படை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்கள். அவர்கள் கண்டறிந்த தகவல்கள் வியப்பூட்டுவதாக இருந்தன

கன்னோஜ் பகுதியில் சொர்க்கத் திருமணம் என்றொரு சடங்கு நடைபெறுகிறது. மரணத்தருவாயில் இருக்கும் கிழவர்கள் இறந்தபின்பு சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் என்பதற்காக மணமேடையிலிருந்து ஒரு பெண்ணைக் கடத்தி வந்து திருமணம் செய்து கொள்ள வேண்டும். இதற்காக வசதியான கிழவர்கள் பணம் கொடுத்துப் பெண்ணைக் கடத்தி வரச் செய்கிறார்கள்

இந்தக் கடத்தலில் ஈடுபடுகிறவன் பெயர் ஜுகூர். அது அவனது உண்மையான பெயரில்லை. அவன் தெற்கிலிருந்து வந்தவன். காதில் பெண்கள் அணிவது போலக் கம்மல் அணிந்திருப்பான். அவன் ஒரு கூட்டத்தை வைத்திருந்தான். அவர்கள் மாறுவேஷத்தில் கிராமங்களில் சுற்றியலைந்து எங்கே திருமணம் நடைபெற இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பார்கள்.

பின்பு மணமகன் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றோ, மேளம் வாசிப்பவர்களில் ஒருவரைப் போலவே மாறுவேஷம் புனைவார்கள். மணப்பெண் தங்கியுள்ள வீட்டில் தக்னம் என்றொரு வாசனைப்பொடியை காற்றில் தூவிவிடுவார்கள். அந்த வாசனையை நுகர்ந்தவுடன் எவராலும் விழிப்பு கொள்ளவே முடியாது. அப்படித்தான் மணப்பெண்ணைக் கடத்துகிறார்கள்.

கடத்தப்பட்ட பெண்ணை எப்படி எங்கே கொண்டு போகிறார்கள். இந்த விற்பனை யார் மூலமாக நடைபெறுகிறது என டேவியால் கண்டறிய முடியவில்லை. ஆகவே அவரே ஒரு திருமணத்திற்கு ஏற்பாடு செய்து மணப்பெண்ணைக் கடத்தவரும் ஜுகூரை பிடிப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தார். அந்தத் திருமணத்தில் மணப்பெண் கடத்தப்படவில்லை.

கிராமம் தோறும் ஜுகூருக்கு தகவல் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள், அவர்களை முதலில் கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். சந்தேகத்தின் பெயரில் பலரையும் விசாரித்தார்கள். அவரால் ஜுகூரை கண்டறிய முடியவில்லை. பல்வேறு குற்ற கும்பல்களை விசாரித்த போது ஜுகூரை பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை.

இதே நேரம் பிஜ்னோர் மாவட்டத்தில் மணப்பெண் கடத்தல் பரவியது. ஜுகூரைத் தேடி அங்கேயும் டேவி சுற்றியலைந்தார்.

சொர்க்கத் திருமணம் தடைசெய்யப்படுவதாகவும் அதில் ஈடுபட நினைப்பவர்களுக்குக் கடுமையான தண்டனை அளிக்கபடும் எனக் காவல்துறை அறிவித்தது. கங்கை கரையோர கிராமங்கள் யாவும் கண்காணிக்கப்பட்டன. எங்கும் ஒரு சொர்க்கத் திருமணமும் நடைபெறவில்லை. மணப்பெண் கடத்தல் மெல்ல குறைந்து போனது. ஜுகூரை கைது செய்ய அவரால் முடியவில்லை.

தனது பணி ஒய்வுக்கு முன்பாக வில்லியம் டேவி ஒருமுறை சிக்ரா கிராமத்திற்கு வருகை தந்தார். அப்போது புனுகு விற்கும் ஒருவனிடமிருந்து தகவல் ஒன்றை கேள்விபட்டார். அதை அவரால் நம்ப முடியவில்லை.

மணமகள் கடத்தல் என்பதே பொய். அது ஒரு நாடகம். தான் காதலித்தவனுடன் ஒரு பெண் ஒடிப்போவதற்காக நடத்தப்பட்ட நாடகமது. இதை முதலில் வெற்றிகரமாகச் செய்தவள் ரூபியா. அவள் தனது காதலன் பாகலுடன் ஒடிப்போவதற்காக ஜுகூரை உருவாக்கினாள்.

இது போலக் காதலித்து வீட்டை விட்டு ஓடிப்போகும் பெண்கள் அந்தக் கதையை வளர்த்தெடுத்தார்கள். ஊரை நம்ப வைத்தார்கள். அதில் பிறந்தது தான் சொர்க்கத் திருமணம்.

இதைக் கேட்டு டேவி அதிர்ச்சி அடைந்தார். அவன் சொல்வதை எப்படி நம்புவது எனக் கேட்டார். ரூபியா இப்போது லதியா என்ற கிராமத்தில் வசிப்பதாகச் சொன்னான். டேவி அவளைத் தேடிச் சென்றார்.

ரூபியா உண்மையை ஒத்துக் கொண்டாள். அவளும் காதலனும் இணைந்து உருவாக்கிய நாடகமது என்பதை விளக்கினாள். இந்தக் கதையைப் பரவலாக்கியது கங்கை நதிப் படகோட்டிகள். அவர்களுக்கு விசித்திரமான கதைகளைச் சொல்வது பிடிக்கும். ஆகவே அக்கதை வட இந்தியா முழுவதும் பரவியது.

ஜுகூர் என்று ஒருவன் நிஜமாகயில்லை. அவனைப் பிடிப்பதற்காக இரண்டு ஆண்டுகள் பகலிரவாகத் தான் சுற்றியலைந்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என டேவிக்குப் புரிந்தது.

ரூபியாவிடமிருந்து விடைபெறும் போது அவளது நான்கு வயது பையனைக் கண்டார். அவனுக்கு ஜுகூர் என ரூபியா பெயர் வைத்திருந்தாள்

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 25, 2025 20:35

August 23, 2025

திரைப்பயணி -7

உலக சினிமாவை அறிமுகப்படுத்தும் திரைப்பயணி தொடரின் 7 வது பகுதி வெளியாகியுள்ளது. இதில் சாப்ளின் நடித்து இயக்கிய லைம்லைட் திரைப்படம் குறித்துப் பேசியிருக்கிறேன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 23, 2025 02:49

August 21, 2025

கனவில் பிறந்த உலகம்.

ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படங்கள் பெரும்பாலும் விலங்குகளை மையப்படுத்தியோ, தேவதை கதைகளையோ, விஞ்ஞானப்புனைவுகளையோ மையப்படுத்தி உருவாக்கப்படுகின்றன.

இதற்கு மாறாக இயற்கையின் பிரம்மாண்டத்தை, மனிதர்கள் இயற்கையோடு கொள்ள வேண்டிய உறவினை. போரின் விளைவுகளை, சிறார்களின் வியப்பூட்டும் கற்பனைகளை ஜப்பானிய அனிமேஷன் படமாக ஹயாவோ மியாசாகி உருவாக்குகிறார். அதே ஜப்பானில் வெளியாகும் அனீம் படங்கள் முற்றிலும் வேறுபட்டவை. அவை தனியொரு திரைப்பட வகைமையாகும்.

சீனா, பிரான்ஸ் மற்றும் ஈரானிலும் வரலாற்றுப் பின்புலத்தைக் கொண்ட அனிமேஷன் படங்களைச் சமீபமாக உருவாக்குகிறார்கள். அவை பெரிய வெற்றியை பெறவில்லை. இந்தியாவில் அனிமேஷன் திரைப்பட உருவாக்கம் மிகவும் குறைவு. சமீபமாகச் சிலர் புராணக்கதைகளை அனிமேஷன் திரைப்படமாக வெளியிடுகிறார்கள். அவை வணிக ரீதியான வரம்புகளுக்குள்ளே அடங்கி நிற்கின்றன.

வெகு அரிதாகவே அரசியலை முதன்மைப்படுத்தி Persepolis. Waltz with Bashir போன்ற அனிமேஷன் படங்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் ஒலிக்கும் உண்மையின் குரல் வலுவானது. அந்த வரிசையில் 2023ல் வெளியாகியுள்ள Four Souls of Coyote சிறப்பான அனிமேஷன் படமாகும்.

அமெரிக்காவின் பூர்வகுடி இந்தியர்கள் தங்கள் நிலத்தில் எண்ணெய் குழாய் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்துகிறார்கள். அந்தப் போராட்ட களத்தில் உள்ளவர்களை ஊக்கப்படுத்துவதற்காகக் குலத்தந்தை போன்ற கிழவர் பூர்வகுடிகளின் பழங்கதை ஒன்றினைச் சொல்லத் துவங்குகிறார்.

பூமியில் இயற்கை எப்படி உருவானது உயிரினங்கள் எவ்வாறு தோன்றின . மனிதன் தோன்றிய விதம். நன்மை தீமை உருவான விதம். மனிதனின் பேராசை ஏற்படுத்திய விளைவுகள் எனப் படம் தனித்துவமான கதையை விவரிக்கிறது.

உலகை சிருஷ்டிக்கும் படைப்பாளி ஒரு கிழவர். அவர் கனவுகளின் அடிப்படையில் உலகைக் கட்டமைக்கிறார். முதலில் மலை, மரம் செடிகொடிகள் நீர்நிலைகள் உருவாகின்றன. வாத்து தான் அவர் உருவாக்கிய முதற்பறவை. அவருக்குக் கோபம் அதிகம். அதைக் கட்டுப்படுத்த முடியாத போது இடிமின்னல் பிறக்கிறது அது பறக்கும், பேசும் பாம்பாகச் சித்தரிக்கப்படுகிறது.

கொயோட் என்பது வட அமெரிக்காவின் சமவெளிகளில் வாழும் ஒரு வகை ஓநாய். அந்தக் கொயோட்டினை படைப்பாளி உருவாக்குகிறார். அதன் தவறான செயல்கள், தந்திரங்கள் எவ்வாறு அழகான வாழ்விடத்தை சிதைக்கிறது எனப் படம் விரிவு கொள்கிறது.

ஆரம்பத்தில் பூமி சொர்க்கத்தைப் போல அமைதியாக, அழகாக விளங்குகிறது. அங்கு அனைத்து விலங்குகளும் இணைந்து வாழுகின்றன.. எல்லோரும் தாவரங்களை மட்டுமே உண்ணுகிறார்கள்.

பசிக்காக இன்னொரு உயிரை கொல்வதைக் கொயோட் அறிமுகப்படுத்துகிறது. அது முதலில் ஒரு வாத்தைக் கொல்கிறது. முதல் கொலையின் பின்பாக உலகம் இரண்டாகப் பிளவுபடுகிறது. தான் உருவாக்கிய உயிர்களுக்குள் ஏற்படும் மோதலைப் படைப்பாளி காணுகிறார். அவரால் உலகின் தீமைகளைத் தடுக்க முடியவில்லை.

கொயோட்டிற்கு மரணமில்லை. அது ஒவ்வொரு முறை அழிக்கப்படும் போதும் புதிய உருவம் எடுத்தபடியே இருக்கிறது. நான்கு ஆன்மாக்கள் கொண்டதாகக் கருதப்படுகிறது. உண்மையில் அது ஒரு அடையாளம். இதில் வரும் படைப்பாளி புனிதரில்லை. அவர் பலவீனங்கள் கொண்டவராகவே சித்தரிக்கபடுகிறார். கனவிலிருந்தே உலகம் தோன்றுகிறது.

Only when the last tree has died, the last river has been poisoned and the last fish has been caught will we realise that we can’t eat money.” எனப் படத்தின் மையக்கருத்தை துவக்கத்திலே தெரிவித்துவிடுகிறார்கள்

ஆரோன் கௌடர் உருவாக்கியுள்ள Four Souls of Coyote மிக முக்கியமான அனிமேஷன் படமாகும். இதன் திரைக்கதையை எழுத்தாளர் கெசா பெரெமெனி எழுதியுள்ளார்

படத்தின் பெரும்பான்மை காட்சிகள் கையால் வரையப்பட்டிருக்கின்றன. 2D மற்றும் 3D ஐ ஒருங்கிணைத்து உருவாக்கியுள்ள காட்சிகள், மாறுபட்ட கதை சொல்லும் முறை, மற்றும் படத்தொகுப்பு மிகச்சிறப்பாக உள்ளது. 100 நிமிஷங்கள் ஒடும் இந்த ஹங்கேரிய அனிமேஷன் படம் மிகவும் தனித்துவமானது,

பூர்வகுடியினருக்கே உரித்தான வண்ணங்கள். கதாபாத்திரங்களின் முக அமைப்புகள். நிலம் சார்ந்த பண்பாட்டு அடையாளங்கள். அழகான நிலப்பரப்புகள் எனத் துல்லியமாக உருவாக்கியுள்ளார்கள். வியப்பூட்டும் கேமிரா கோணங்கள், பிரம்மாண்டமான இயற்கை காட்சிகள் மிகுந்த நேர்த்தியுடன் உருவாக்கபட்டுள்ளன

எண்ணெய் குழாய் பதிப்பதற்காகக் கையகப்படுத்தபடும் அந்த நிலத்தின் வரலாற்றை அவர்கள் முடிவில் அறிந்து கொள்கிறார்கள். பூமியை காக்க வேண்டியது அனைவரின் கடமை என்பதை உணருகிறார்கள்.

பெரும்பான்மை ஹாலிவுட் படங்களில் பூர்வகுடி இந்தியர்கள் நாகரீகமற்ற, குரூரமான வேட்டையாடிகளைப் போலவே சித்தரிக்கபட்டிருக்கிறார்கள். அவர்களைக் கொன்று நிலத்தைக் கைப்பற்றிய வெள்ளைவீரர்களை நாயகராகச் சித்தரித்தே படங்கள் உருவாக்கபட்டுள்ளன. இந்தப் படம் அதற்கு மாற்றாகப் பூர்வகுடிகளுக்கே உரித்தான தொன்மக்கதையை, நம்பிக்கையை, சாகசங்களை நேர்மையாகப் பதிவு செய்துள்ளது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 21, 2025 06:46

August 19, 2025

ஆப்பிளுடன் ஒரு நடனம்

புதிய சிறுகதை. ஆகஸ்ட் 20.2025

அது இரண்டரை நிமிஷ வீடியோ.

விஜயராகவனின் வாட்ஸ்அப்பில் வந்திருந்தது. இரண்டு நாட்களுக்குள் பத்து முறைக்கும் மேலாகப் பார்த்துவிட்டிருந்தார். துனிசியாவைச் சேர்ந்த ஒரு இளம்பெண் தலையில் ஆப்பிள் ஒன்றை வைத்துக் கொண்டு ஆடுகிறாள். பூக்கள் நிரம்பிய அடர்நீல பாவாடை. முடிச்சிட்ட வெண்ணிற ஜாக்கெட். காதில் இரண்டுவகை காதணிகள். கையில் பட்டாம்பூச்சி உருவம் கொண்ட பிரேஸ்லெட். அவள் சுழன்றாடும் வேகத்திலும் ஆப்பிள் தலையிலிருந்து கீழே விழவில்லை.

அந்தப் பெண்ணிற்கு இருபது வயதிற்குள் இருக்கக் கூடும். பாலாடைக் கட்டி போன்ற வாளிப்பான உடல். வட்ட முகம். கூழாங்கற்கள் போன்ற அழகான, பெரிய கண்கள். அந்தக் கண்களில் வெளிப்படும் சிரிப்பு தான் அவளைத் திரும்பத் திரும்பப் பார்க்கும் படி தூண்டுகிறது.

அவள் ஆடும் நடனத்திற்குப் பெயர் எதுவுமில்லை. உண்மையில் அவள் யாருடனோ விளையாடுகிறாள், அந்த நடனத்தை யார் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என வீடியோவில் தெரியவில்லை.

தலையில் ஆப்பிளை வைத்துக் கொண்டு அவளால் எப்படி இவ்வளவு வேகமாகச் சுழன்றாட முடிகிறது. நிச்சயம் இப்படிப் பல நாட்கள் ஆடிப் பழகியிருப்பாள். சிறுவயதில் துவங்கிய பழக்கமாக இருக்கக் கூடும்.

நமது ஊரில் கரகாட்டம் ஆடும் பெண்கள் கும்பம் வைத்துக் கொண்டு ஆடுவதில்லையா. அப்படித் தான் இதுவும். என்று தோன்றியது

ஆனால் அவள் தலையில் வைக்கபட்ட ஆப்பிள் ஒரு கனியைப் போல இல்லாமல் கிரீடம் போல மாறியிருந்தது.

சிறுவயதில் பம்பரத்தை சுழலவிட்டுக் கையில் வாங்கிக் கொள்ளத் தருவார்கள். உள்ளங்கையில் பம்பரம் சுழலும் போது ஏற்படும் கூச்சம். நெருக்கம். அலாதியான உணர்வு அவளது நடனத்தைப் பார்க்கும் போதும் ஏற்பட்டது.

விஜயராகவன் ஒவ்வொரு முறை அந்த வீடியோவைக் காணும் போதும் நடனமாடும் அவளது கைகள் காற்றில் ஏதோ எழுதுவதைப் போல உணர்ந்தார்.

அவள் நடனத்தின் போது தனது தலையில் ஆப்பிள் இருப்பதை மறந்திருந்தாள். பீறிடும் உற்சாகம். தனது உடலைத் தாமரை மலரென விரிக்கும் துடிப்பு. இளமை. இளமை. இளமை. அது தான் இப்படி ஆட வைக்கிறது. அவளது தலையில் இருப்பது ஆப்பிள் இல்லை. அவளது வயது.

அந்த வீடியோவை தனது தம்பிக்கு அனுப்பி வைக்கலாமா என விஜயராகவன் நினைத்தார். ஆனால் கவர்ச்சி நடனம் எனத் தவறாக நினைத்து விடுவானோ என்று தயக்கமாக இருந்தது.

கரீம்நகரில் வேலை செய்யும் அவரது தம்பி சந்தானகோபாலன் அன்றாடம் இருபது முப்பது வீடியோவை அவருக்கு அனுப்பி வைத்துவிடுகிறான். அவை பெரும்பாலும் ஜோதிடம், காமெடி அல்லது சாப்பாடு தொடர்பான வீடியோவாக இருக்கும். அவரும் பதிலுக்குச் சில நேரம் ஷேர் மார்க்கெட் தொடர்பான வீடியோவை அனுப்பி வைப்பார்.

விஜயராகவன் வேலை செய்யும் ஏடன் என்ற அமெரிக்க நிறுவனம் பங்குச்சந்தை தொடர்பான பணிகளையும் மேற்கொண்டிருந்தது. அதே நிறுவனத்தின் இன்சூரன்ஸ் பிரிவில் அவர் வேலையில் இருந்தார். இதற்கு முன்பாகவும் இரண்டு பெரிய இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பணியாற்றி அனுபவம் இருந்த காரணத்தால் இந்த நிறுவனத்தில் நல்ல சம்பளமும் மேலாளர் பதவியும் கிடைத்தது. ஆனால் ஒரே போன்ற சலிப்பூட்டும் வேலை. ஒரே அன்றாடம். இடைவிடாத அலுவலக மீட்டிங். திட்டமிடல். பொய் சிரிப்புகள். தூசி படிந்து கண்ணாடி ஜன்னல் மங்கிவிடுவதைப் போலத் தினசரிவாழ்க்கையின் கசடுகள் அவர் மீது நிறையவே படிந்திருந்தன.

அவரது ஒரே மகள் வர்ணா பெண்கள் கல்லூரி ஒன்றில் பிபிஏ படித்துக் கொண்டிருந்தாள். காதில் எப்போது இயர்பட்ஸை மாட்டிக் கொண்டிருப்பாள். பாட்டுக்கேட்கிறாளா. எவருடனாவது பேசிக் கொண்டிருக்கிறாளா என எதுவும் தெரியாது. வீட்டில் அவர்களுடன் பேசும் போது இடது காதில் உள்ள இயர்பட்ஸை மட்டும் கழட்டிவிட்டுக் கொள்வாள்.

நான்கு மாதங்களுக்கு முன்பாக ஒருநாள் விஜயராகவனின் வாட்ஸ் அப்பை யாரோ ஹேக் செய்து அதன்வழியே ஆபாச படங்களைப் பலருக்கும் அனுப்பி வைத்துவிட்டார்கள். அவரது பெயரில் நடந்த பகிர்வைப் பற்றி அறிந்த போது அதிர்ச்சியாக இருந்தது. முகம் தெரியாத ஒருவனால் தான் குற்றவாளியாக்கபடுவதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

“பணம் கேட்டு ஏமாற்றாம.. இப்படிச் செக்ஸ் படம் மட்டும் அனுப்பி வச்சானேனு சந்தோஷப்படுங்க“ என்றார் சக ஊழியர் உமாபதி.

இது என்ன வகைச் சமாதானம் என அவருக்குப் புரியவில்லை. ஒருவன் அவமானப்பட வேண்டும். ஏமாற்றப்பட வேண்டும் எனப் பலரும் விரும்புகிறார்கள். அது போன்ற தருணத்தில் உள்ளூற ரசிக்கிறார்கள். மகிழ்கிறார்கள். அதைக் கண்கூடாக விஜயராகவன் அறிந்து கொண்டார்.

பிக்பாக்கெட் அடிப்பவனுக்கும் பைக் திருடுகிறவனுக்கும் ஒரு உருவம் இருக்கிறது. ஆனால் செல்போனில் இப்படி மோசடி செய்பவனுக்கு உருவமில்லை. அவன் ஒருவனுமில்லை. ஒரு வலைப்பின்னல். கறுப்பு சிலந்தி.

குழப்பத்தில் அவருக்குக் கைகள் நடுங்கத் துவங்கின. உடனடியாகத் தனது செல்போனை மாடியிலிருந்து வீசி எறிய வேண்டும் போலிருந்தது.

மதிய உணவு நேரத்தின் போது அலுவலக நண்பரான ராஜேந்திரன் “இது ஒண்ணும் பெரிய பிரச்சனையில்லை“ என்று சொன்னதோடு சில ஆலோசனைகளையும் சொன்னார்

“ராகவா.. நீ முதல்ல இந்த சிம்மைக் கழட்டித் தூக்கி போடு.. நாளைக்கே புது சிம் வாங்கிக்கோ. கொஞ்ச நாளைக்கு யாருக்கும் வாட்ஸ்அப் அனுப்பாதே. இந்த மாதிரி மோசடி எல்லாம் பல்கேரியாவில் இருந்து ஒரு கேங் செய்றதா சொல்றாங்க“

பல்கேரிய ஆள் எதற்காகத் தனது வாழ்க்கையோடு விளையாடுகிறான். தன்னை அவமானப்படுத்துகிறான். அவருக்குத் திடீரெனத் தனது செல்போனை கையாளுவது அபாயகரமான ஆயுதம் ஒன்றைக் கையாளுவதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

அவருக்கு நடந்ததைப் பற்றிக் கேள்விபட்ட நிர்வாக அதிகாரி அன்சாரியும் சொன்னார்

“டெக்னாலஜியாலே உருவாகிற பிரச்சனைகள் எல்லாமே புதுசு. விநோதமானது. அதை நாம புரிஞ்சிகிடவே முடியாது. திடீர்னு இன்னைக்குக் காலைல என்னோட பேங்க் அக்கவுண்டை ஓபன் பண்ண முடியலை. பாஸ்வேர்ட் தப்புனு வருது. இதே பாஸ்வேர்ட் தான் இத்தனை நாளா யூஸ் பண்ணிட்டு இருக்கேன். அரைமணி நேரம் போராடி பார்த்து முடியலை. ஆபீஸ்ல வந்து அக்கவுண்டை ஒபன் பண்ணினா.. தானா ஒபன் ஆகுது… இதை எப்படிப் புரிஞ்சிகிடுறது. சொல்லுங்க“

இதைக் கேட்டு ராஜேந்திரன் வேடிக்கையாகச் சொன்னார்

“மெஷினுக்கும் புத்திகெட்டு போகும்னு புரியுது“

அவர்கள் சப்தமாகச் சிரித்தார்கள். ஆனால் விஜயராகவன் சிரிக்கவில்லை. அவர் வெளிக்காட்டிக் கொள்ள முடியாத கவலையால் பீடிக்கபட்டார். ஆபாசப்படத்தைத் தான் அனுப்பியதாக நினைத்துத் தன்னைத் தவறாக நினைப்பவர்களும் இருப்பார்களே. அவர்களிடம் எப்படி விளக்கம் சொல்வது. தொடர்பில் உள்ள அனைவருக்கும் தான் ஆபாசப்படம் அனுப்பவில்லை எனத் தகவல் அனுப்பினால் அது இன்னும் பெரிய வெட்ககேடு இல்லையா.

கதவிடுக்கில் அடிபட்ட விரலில் வலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாவது போல அவரது கவலை இரவிற்குள் அதிகமாகியிருந்தது.

வீடு திரும்பிய இரவில் தனது வாட்ஸ்அப்பில் இருந்து ஏதேனும் வீடியோ அல்லது மெசேஜ் வந்ததா என மனைவி மற்றும் மகளிடம் கேட்டார்

“எப்பவும் குட்மார்னிங் மெசேஜ், அதுவும் ஒரு ரோஜாப்பூ தானேப்பா அனுப்புவே“ என்றாள் மகள் வர்ணா

அப்படி அனுப்பி வைப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை. மலர்கள் மீது என்ன கோபம். தினமும் நிஜமான ரோஜாப்பூவை கொடுத்தால் ஒரு வேளை சந்தோஷப்படுவாளோ என்னவோ.

அவரது மனைவி பானு அன்றாடம் ஒரு கோவிலின் வீடியோவை அவர் பார்க்க வேண்டும் என்று அனுப்பி வைக்கிறாள். இவ்வளவு ஆயிரம் கோவில்கள் இருப்பது இப்போது தான் அவருக்குத் தெரிய வந்தது.

பானு அடிக்கடி சிம்மை மாற்றிக் கொண்டேயிருப்பாள். எல்லாமும் ப்ரீபெய்டு சிம். அதனைக் குறிப்பிட்ட காலம் பயன்படுத்துவாள். பின்பு மாத கட்டணத்தை டாப்அப் செய்யமாட்டாள். ஆகவே அவரது செல்போனில் பானுவின் எண்களை வொய்ப் 1 வொய்ப் 2 வொய்ப் 3 வொய்ப் 4 என வரிசையாகப் பெயர் பதிவு செய்திருந்தார். சில நேரம் வொய்ப் 3 எனப் போன் அடிக்கும் போது அவரை அறியாமல் சிரிப்பு வருவதுண்டு.

ராஜேந்திரன் சொன்ன ஆலோசனைப் படி புதிய சிம் ஒன்றை வாங்கிக் கொண்டார் பழைய சிம் கார்டைத் தூக்கிப்போட்டார். இனிமேல் வாட்ஸ்அப்பை பயன்படுத்தவே கூடாது என்றும் நினைத்துக் கொண்டார்.

“ஏன்பா சிம்ம மாத்திட்டே“ என மகள் கேட்டாள்

“நெட்வொர்க் சரியில்லை“ என்று பொய் சொன்னார்

அலுவலக நிர்வாகப் பணிகளுக்காகப் புதிய வாட்ஸ்அப் குரூப் ஆரம்பித்துள்ளதாகச் சொல்லி ராஜேந்திரன் கட்டாயப்படுத்தியதால் திரும்பவும் வாட்ஸ்அப்பை பயன்படுத்த துவங்கினார் ஆனால் பல்கேரியாக்காரனை நினைத்து மனதிற்குள் அச்சமாகவும் இருந்தது.

புதிய வாட்ஸ் அப் குரூப்பில் உள்ள மாதவனோ, ராஜியோ தான் ஆப்பிளுடன் நடனமாடும் பெண்ணின் வீடியோவை ஷேர் செய்திருந்தார்கள்.

நடனமாடும் துனிசியப் பெண் வீடியோவைக் காணக்காண அவருக்குள் ரகசிய ஆசையொன்று முளைவிட ஆரம்பித்தது. அந்தப் பெண்ணைப் போலத் தலையில் ஒரு ஆப்பிளை வைத்து ஆடிப் பார்த்தால் என்னவென்று தோன்றியது. அப்படி நினைக்கும் போதே சந்தோஷமாகவும் கூச்சமாகவும் இருந்தது.

வீட்டில் தனது அறையை மூடிக் கொண்டு ஆடிப் பார்க்க வேண்டும் என முடிவு செய்து கொண்டபடியே அலுவலகம் விட்டு வரும் போது பழக்கடையில் காரை நிறுத்தி ஆப்பிள் வாங்கினார்.

அவர் ஒரு ஆப்பிளை தலையில் வைத்து பார்ப்பதை கடைக்காரன் விநோதமாகப் பார்த்தான்

“சிம்லா ஆப்பிள் சார்.. மாவா இருக்கும்“ என்றான்

துனிசியப் பெண் தலையில் வைத்தாடும் ஆப்பிளைப் போல இல்லாமல் கடையில் இருந்த ஆப்பிள் அளவில் சிறியதாக இருந்தது

“கொஞ்சம் பெரிய ஆப்பிளா இல்லையா“ எனக்கேட்டார்

“அது டேஸ்டா இருக்காது சார்… சின்ன ஆப்பிள் தான் ருசி“ என்றான் கடைக்காரன்

“ஆடிப்பார்ப்பதற்குத் தானே“ என மனதிற்குள் சொல்லிக் கொண்டு ஆப்பிள்களை வாங்கிக் கொண்டார்.

வீட்டிற்குப் போனதும் எப்போதும் போல அவரது சாப்பாட்டு பையை வெளியே எடுத்துப் பார்க்கும் பானு ஆப்பிள்களைப் பார்த்தவுடன் சப்தமாகக் கேட்டாள்

“இந்த ஆப்பிள் எங்கே வாங்குனீங்க“

“கார்னர் கடைல“

“உங்களை நல்லா மாற்றியிருக்கான். இது பேரிக்காய் மாதிரி நறுச் நறுச்னு இருக்கும். இனிக்காது. “

“பரவாயில்லை. நான் ஆப்பிள் சாலட் சாப்பிடப் போறேன்“ என்று பொய் சொன்னார்

பானு விநோதமாகப் பார்த்தபடி கேட்டாள்

“உங்களுக்குச் சாலட் பிடிக்குமா“

அவர் பதில் சொல்லவில்லை. ஆனால் ரகசியமாக ஒரு ஆப்பிளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டார். ஆப்பிளை தனது தலையில் வைத்துக் கொண்டார். கண்ணாடி முன்பாக நின்று தலையில் ஆப்பிள் சரியாக நிற்கிறதா எனப் பார்த்துக் கொண்டார்

பின்பு துனிசியப் பெண்ணைப் போலக் கைகளை விரித்து ஆட முயன்றார்.

ஆப்பிள் தலையிலிருந்து கீழே விழுந்து உருண்டோடியது. மூன்று நான்கு முறை தலையில் ஆப்பிளை வைத்து ஆட முயன்றும் தோல்வியில் முடிந்தது வருத்தமாக்கியது. ஈரமான ஆப்பிளை வெள்ளை துண்டிற்குள் வைத்து மறைத்தபடியே குளியல் அறைக்கதவை திறந்து வெளியே வந்தார். மனைவிக்குத் தெரியாமல் ஆப்பிளை மேஜையில் கொண்டு போய் வைத்தார்

சிறிய விஷயங்களைச் செய்ய முடியாமல் போவதில் அடையும் ஏமாற்றம் அதிக வலி தரக்கூடியது என்று உணர்ந்தார்.

துனிசியப்பெண் தலையில் ஏதேனும் பசையை வைத்து ஒட்டிக் கொண்டிருப்பாளோ என்று சந்தேகம் வந்து வீடியோவை திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டேயிருந்தார். ஆப்பிள் தலையில் தானே நிற்கிறது.

அடுத்த நாள் அந்த ஆப்பிளை பையில் போட்டு அலுவலகத்திற்குக் கொண்டு சென்றார். லிப்டில் தனியே செல்லும் போது தலையில் வைத்துப் பார்த்துக் கொண்டார். அலுவலகத்தின் கழிப்பறையினை மூடிக்கொண்டு தலையில் ஆப்பிளை வைத்து ஆட முயன்று தோற்றார்.

வீட்டில், அலுவலகத்தில், மொட்டைமாடியில். என எங்கே சென்றாலும் யாராவது பார்த்து விடுவார்களோ என்று தயக்கமும் கூச்சமும் ஏற்பட்டது. ஆகவே யாரும் பார்க்காத கடற்கரை பகுதிக்குப் போய்த் தலையில் ஆப்பிளை வைத்து ஆடிப் பார்க்க வேண்டும் என முடிவு செய்து கொண்டார்.

வழக்கமாக அலுவலகம் விட்டு வீட்டுக்குப் போவதற்குப் பதிலாகக் கடற்கரை சாலையில் காரை ஒட்டிக் கொண்டு வெகுதூரம் சென்றார்.

மணல்மேடு ஒன்றினை ஒட்டி காரை நிறுத்திவிட்டு ஆப்பிளுடன் கடலை நோக்கி நடந்தார். வழியில் அறுந்த செருப்பு ஒன்று மணலில் தனியே கிடந்தது. நாய் ஒன்று மண்ணைக் கிளறிக் கொண்டிருந்தது.

தொலைவில் ஒரு காதல் ஜோடி கண்ணில் பட்டது. அவர்கள் தன்னைப் பார்க்க மாட்டார்கள் என்ற முடிவோடு தனது பையிலிருந்த ஆப்பிளை வெளியே எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு நடனமாட முயன்றார்.

ஆப்பிள் உருண்டு கடலை நோக்கி ஒடியது. அதைப்பிடிக்கப் போய்த் தடுமாறி விழுந்தார். வேகமாகப் பாய்ந்த அலை அவரை ஈரமாக்கியது. நனைந்த உடைகளுடன் மணல் ஒட்டிய ஆப்பிளை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டார்

ஈரமான ஆப்பிள் என்பதால் தானோ என்னவோ அது தலையில் உறுதியாக நின்றது. அவர் கைகளை விரித்து ஆட முயன்றபோது உடல் எடைக்கல்லைப் போல இறுக்கமாக இருப்பதை உணர்ந்தார். உடல் வளைய மறுக்கிறது. கைகளை எளிதாகச் சுழற்ற முடியவில்லை. கழுத்தை இடது பக்கம் திருப்பும் போது வலிக்கிறது. சீரற்று அடைக்கப்பட்ட பஞ்சுத் தலையணைப் போலத் தனது உடல் இருப்பதை உணர்ந்து கொண்டார்.

ஒரு முறை சுழன்று வட்டமிடுவதற்குள் ஆப்பிள் விழுந்துவிடுகிறது. அந்த ஆப்பிள் அவரைக் கேலி செய்வதைப் போல உணர்ந்தார்.

பதினைந்து வயதில் இப்படி ஹாக்கி விளையாட வேண்டும் என ஆசை உருவாகி தினம் காலை எழுந்து மைதானத்திற்குப் போய்த் தீவிரமாக ஹாக்கி கற்றுக் கொண்ட நாட்கள் மனதில் வந்து போனது. வேலைக்குப் போன பிறகு ஹாக்கி மட்டையைக் கையில் தொடவேயில்லை. இப்போது வரை அவர் ஹாக்கி விளையாடுகிற ஒரு போட்டோ கூட அவரிடம் கிடையாது. அவரது மனைவி கூட நம்ப மறுத்துவிட்டாள்.

இத்தனை வருஷங்களில் அவர் எதையும் செய்து பார்க்க ஆசைப்பட்டதில்லை. எத்தனையோ முறை நண்பர்கள் சீட்டாட அழைத்திருக்கிறார்கள். அதில் தனக்கு விருப்பமில்லை என மறுத்திருக்கிறார்.. இன்னொரு முறை அலுவலக விருந்தில் மியூசிகல் சேர் போட்டி நடந்தது. அதில் கலந்து கொள்ள முடியாது எனக் கோபமாகவே மறுத்துவிட்டார்.

இவ்வளவு உறுதியாக இருந்த தன்னை இந்த இரண்டரை நிமிஷ வீடியோ எப்படி மாற்றியது என அவருக்கே புரியவில்லை. ஒருவேளை பல்கேரியாக்காரன் தனது பெயரை கெடுக்க முயன்ற போது ஏற்பட்ட அச்சம் தான் இப்படி உருமாறியிருக்கிறதோ என்றும் தோன்றியது.

அந்த நடனத்தை வெறும் விருப்பமாக மட்டுமின்றிப் பந்தயம் போல உணர்ந்தார். அதில் வெல்வது தனக்குத் தானே கொடுத்துக் கொள்ளும் பரிசு. அப்படியான பரிசு எதையும் தனக்கு இத்தனை ஆண்டுகளாகத் தான் கொடுத்துக் கொள்ளவில்லை. சிறுவயதில் மரம் ஏறும் போதும், சுழித்தோடும் ஆற்றில் நீந்திக் குளிக்கும் போதும் இந்தப் பந்தயத்தை உணர்ந்திருக்கிறார்.

அலுவலகத்தில் தினமும் அவரது மேஜையில் ஒரு ஆப்பிள் இருப்பதை ராஜி தான் கண்டுபிடித்திருக்க வேண்டும்

“ஏன் சார் தினமும் ஆப்பிளை கொண்டு வர்றீங்க.. சாப்பிடாமல் வீட்டுக்குக் கொண்டு போறீங்க“ எனக்கேட்டாள்

“இது சாப்பிடுற ஆப்பிள் இல்லை“ என்று மட்டும் பதில் சொன்னார்

ஒருவேளை பூஜையில் வைத்து மந்திரித்த ஆப்பிளாக இருக்கக் கூடும் என நினைத்துக் கொண்டு கேட்டாள்

“எத்தனை நாள் சார் இப்படிப் பூஜை பண்ணி ஆப்பிள் வச்சிகிடணும்“

“அது என் வொய்ப்க்கு தான் தெரியும்“ என்றார்

அவர் ஆப்பிள் கொண்டு வரும் செய்தி அலுவலகம் முழுவதும் பரவியது. அவர் தனது காரின் முன்பாக நின்றபடி தலையில் ஆப்பிளை வைப்பதை பார்த்த வேலாயுதம் “பித்துப் பிடிச்சா தலைல எலுமிச்சம்பழம் தானே தேய்ப்பாங்க. சார் ஏன் ஆப்பிளை வைக்கிறார்“ எனக் கேலி செய்தான்.

ஆனால் இரண்டு மூன்று வாரங்களாகியும் அவரால் ஆப்பிளை தலையில் நிற்க வைக்க முடியவில்லை. விடுமுறை நாள் ஒன்றில் ஹோட்டலில் ஒரு ரூம் எடுத்து நாள் முழுவதும் இந்த நடனத்தைப் பயிற்சி செய்து பார்த்தார். ஏமாற்றமே மிஞ்சியது. இந்தத் தோல்வி அவரை மிகுந்த வருத்தமடையச் செய்தது.

வீட்டில் திடீரெனப் பின்னிரவில் எழுந்து கொண்டு கிச்சனுக்கு வந்து ஆப்பிளை வெளியே எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு கைகளைச் சுழற்ற முயன்று பார்ப்பார். ஆப்பிள் கிழே விழுந்து உருண்டுவிடும். அவரது விநோத நடத்தை மகளையும் மனைவியையும் கவலை கொள்ளச் செய்திருக்கக் கூடும்.

வர்ணா தான் முதலில் கேட்டாள்

“உனக்கு என்னப்பா. ஆச்சு. ஏன் என்னமோ மாதிரி இருக்கே“

“இல்லையே.. நல்லா தானே இருக்கேன்“

“நோ.. நடு ராத்திரில எழுந்து ஏன் தலையில ஆப்பிள் வச்சிகிடுறே“

“அது ஒரு டான்ஸ்மா“

“டான்ஸா.. நீ ஏன் அதைப் பண்ணுறே.. “

“நீ இந்த வீடியோவை பாரு புரியும்“ என மகளுக்கு அந்தத் துனிசியப் பெண்ணின் வீடியோவைக் காட்டினார். அவளுக்கு அந்த வீடியோ பிடிக்கவில்லை. எரிச்சலோடு சொன்னாள்.

“இது மாதிரி ஆயிரம் வீடியோ பாத்துருக்கேன்.. தலைல நிறையப் பானை வச்சிகிட்டு ஆடுற டான்ஸ் கூட இருக்கு. இதெல்லாம் கிம்மிக்ஸ். “

“இந்த பொண்ணு ஆப்பிளை வச்சிட்டு அழகா ஆடுறா. “ என்றார் விஜயராகவன்.

“அதுக்காக நீயும் ஆடுவியா. உனக்கு என்னமோ ஆகிருச்சி,, நாம ஒரு டாக்டரை பாக்கலாம்பா. “

அவளிடம் எப்படிப் புரியவைப்பது எனத்தெரியாமல் சொன்னார்

“ இதெல்லாம் ஜஸ்ட் பார் ஃபன். “

“அதுக்கு ஒரு தடவை செய்யலாம். நீ நிறைய நாள் நடுராத்திரில இப்படிச் செய்றே.. அம்மா ரொம்பப் பயப்படுறா.. உனக்காக நாகாத்தம்மன் கோவில்ல வேண்டுதல் பண்ணியிருக்கா“

“எனக்கு ஒண்ணும் இல்லை. ஐ ஆம் ஆல்ரைட்“

“அப்படின்னா.. இப்பவே இந்த ஆப்பிளை தூக்கி எறி“

“இல்லை. வர்ணா.. ஐ ஆம் கோயிங் டு பிராக்டிஸ் “ என்றார்

“அதான் ஏன்னு கேட்குறேன். நீயும் வீடியோ எடுத்து போடப்போறயா“

“நான் டான்ஸ் ஆடுனா. யார் பார்ப்பா“

“தெரியுதில்லை. பின்னே ஏன் இப்படிப் பண்ணுறே“

“இப்போ நான் என்ன பண்ணனும்னு சொல்றே“

“இனிமே நீ ஆப்பிளை தொடவே கூடாது நம்ம வீட்ல ஆப்பிளே இருக்கக் கூடாது. “

“ஒகே. உங்களுக்குப் பிடிக்கலைன்னா.. விட்டுருறேன்“ என்று கோபத்துடன் கழிப்பறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டார்.

அவரது மனது சமாதானம் கொள்ளவில்லை. தான் விரும்புகிற ஒன்றை தனது சொந்த வீட்டிலே செய்ய முடியவில்லை. இவர்கள் ஏன சிறிய ஆசைகளைக் கூடப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்று கோபமாக வந்தது. ஆற்றின் சுழலுக்குள் சிக்கிக் கொண்டதைப் போல ஆப்பிள் நடனத்திற்குள் தான் சிக்கிக் கொண்டுவிட்டதாக உணர்ந்தார். அன்றைய கனவில் அவர் நடனம் ஆட முயன்று தோற்றார். ஆப்பிள் தலையில் நிற்கவேயில்லை.

அதன் பிறகான நான்கு நாட்கள் எப்போதும் போல அலுவலகம் சென்றார். வீடு திரும்பினார். ஐந்தாம் நாள் அலுவலகம் விட்டு திரும்பி வரும் போது பழக்கடையில் காரை நிறுத்தி ஆப்பிள் வாங்கினார்.

வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் மகளை அழைத்தார்

“நான் இப்போ உங்களுக்காக ஆப்பிள் டான்ஸ் ஆடிக் காட்டப் போறேன்“

திகைத்துப் போன பானு கோபத்துடன் கேட்டாள்

“நீங்க அதை விடவேயில்லையே“

“ஒரு டிரை.. இப்போ பாரு“

என அவர் தான் வாங்கிக் கொண்டுவந்த ஆப்பிளை தலையில் வைத்தார். அவர் கையை உயர்த்துவதற்குள் ஆப்பிள் தலையில் இருந்து உருண்டு கிழே ஒடியது. யாரும் அதை எடுத்து தரவில்லை

“வர்ணா.. நீ வேணும்னா.. தலைல ஆப்பிள் வச்சி டான்ஸ் டிரை பண்ணேன்“ என்றார்

அவள் கோபத்துடன் கேட்டாள்

“கொலை பண்ணுற வீடியோ பாத்தா.. நாமளும் கொலை செய்தா எப்படி இருக்கும்னு டிரை பண்ணுவியாப்பா“

“அதுவும் இதுவும் ஒண்ணுல்லைம்மா. இது சும்மா ஜாலி“

பானு கோபத்துடன் வெடித்தாள்

“உங்களுக்கு ஆபீஸ் ஸ்ட்ரெஸ் அதிகமானா.. தியானம் பண்ணுங்க. இப்படி லூசு மாதிரி எதையாவது பண்ணிட்டு இருக்காதீங்க“.

“ ஏன் பானு இவ்வளவு கோவிச்சிகிடுறே. டான்ஸ் ஆடுறது தப்பா “

“டான்ஸ் ஆடுறதுக்கு நீங்க என்ன பச்ச பப்பாவா. வர்ணாவுக்குக் கல்யாணம் ஆயிருந்தா.. இந்நேரம் பேரன் பேத்தி பிறந்திருப்பாங்க. அந்த ஞாபகம் இருக்கட்டும். பாக்கிறதை எல்லாம் மனசுல வச்சிகிட கூடாது. அப்பப்போ மறந்துரணும். அது உங்களாலே முடியலை. எதைப் பாக்கணும். எதைப் பாக்க கூடாதுனு உங்க கண்ணுக்கு ஒரு பூட்டு போடணும்.. அப்படி ஏதாவது மெஷின் வந்திருக்கானு பாத்து சொல்லுங்க. அதை உடனே வாங்கிருவோம். “

அவளது கோபத்தை ஏற்றுக் கொண்டவரைப் போல அமைதியாக இருந்தார். அவருக்குள் குழப்பமான எண்ணங்கள் தோன்றி மறைந்தன. தன் மீதே அவருக்குக் கோபம் வந்தது. வருத்தம் உருவானது. கயிறு அறுந்து வானில் அலையும் பட்டத்தைப் போல உணர்ந்தார்.

தரையில் உருண்டு கிடந்த ஆப்பிளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

பின்பு குனிந்து ஆப்பிளை கையில் எடுத்து வெறிகொண்டவரை போலக் கடித்துத் தின்னத் துவங்கினார்.

அதைத் திகைப்போடு பார்த்த மகளிடம் விஜயராகவன் சப்தமாகச் சொன்னார்

“நான் ஆப்பிள் திங்குறதை வீடியோ எடு.. சந்தானத்துக்கு ஷேர் பண்ணுவோம். குரூப்ல போட்டுவிடுவோம்.. “

வாயில் எச்சில் ஒழுக அப்பா பேசுவதை வர்ணா அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போதும் அவளது ஒரு காதில் இயர் பட்ஸ் மாட்டப்பட்டே இருந்தது.

•••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 19, 2025 20:42

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.