S. Ramakrishnan's Blog, page 5
June 23, 2025
குற்றமுகங்கள் -17 கோளாம்பி
1828 நவம்பர் 20 அன்று கொச்சி இராஜ்ஜியத்தின் திவான் உத்தராதி தம்பிரானின் பசு திருடு போயிருந்தது.

நெற்றியில் சங்கு அடையாளம் கொண்ட அந்தப் பசுவை அவர் மகாலட்சுமியின் அவதாரமாகவே கருதினார். நேத்ரி என்று பெயரிடப்பட்ட அந்தப் பசுவிற்காகவே சொர்க்க மண்டபத்தினைக் கட்டியிருந்தார்.
பசுவைக் கயிற்றால் கட்டக்கூடாது என்பதற்காக வெள்ளிச்சங்கிலியை அணிவித்திருந்தார். பசு நின்றிருந்த அந்த மண்டபத்தில் காலையும் மாலையும் சாம்பிராணி போடுவார்கள். மண்டபத் தூண்களுக்கு இடையே சேலையால் தடுப்பு உருவாக்கி மணப்பெண்ணைப் பாதுகாப்பது போல வெளியாள் கண் படாமல் பசுவைப் பாதுகாத்தார்கள்.
உத்தராதி தம்பிரான் காலையில் குளத்தில் குளித்துக் கரையேறி நேராகச் சொர்க்க மண்டபத்திற்குத் தான் வருவார். ஐந்து வகை மலர்கள் தூவிப் பசுவை வணங்குவார். அந்தப் பசு தான் திருடு போயிருந்தது. அதைத் திருடியவன் கோளாம்பி என்றார்கள்.
கோளாம்பி என்பது எச்சில் துப்பும் கிண்ணம். வெற்றிலை மடித்துத் தருவதும் வெற்றிலை எச்சிலைத் துப்பும் கோளாம்பியை ஏந்தியபடி நிற்பதுமாகயிருந்த ராக்கனின் பெயரே கோளாம்பியாக மாறியிருந்தது.

கேசவன் தம்பிரான் குட்டநாட்டிலிருந்து ராக்கனை பனிரெண்டு வயதில் அழைத்து வந்திருந்தார். வீட்டு வேலைகள் பழகிய அவன் சில வருஷங்களில் அடைப்பக்காரனாக மாறினான். திவான் எங்கே சென்றாலும் ராக்கன் உடன் சென்றான். திவானின் ஆசை நாயகிகளுக்கு என்றே அவன் வெற்றிலையில் சேர்த்து தரும் பஷ்பம் ஒன்றை தயாரித்து வைத்திருந்தான்.
வீட்டுப் பணிப்பெண்களில் ஒருத்தியை தம்பிரான் அவனுக்குத் திருமணம் செய்து வைத்திருந்தார். ஆனால் திருமணம் நடந்த இரண்டாம் நாளே அந்தப் பெண் குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள். அவர்களுக்குள் என்ன நடந்த்து என எவருக்கும் தெரியவில்லை. அவளுக்காகக் கோளாம்பி ஒரு சொட்டுக் கண்ணீர் விடவில்லை .
கோவில் சிலையைப் போல எப்போதும் ஒரே முக பாவத்தில் கோளாம்பி இருந்தான். எவருடனும் பேச மாட்டான். எதற்கும் சிரிக்க மாட்டான். அவன் சாப்பிடும் போது யாரும் அதைப் பார்த்துவிடக் கூடாது என்பதற்காகக் கதவை மூடிக் கொண்டுவிடுவான். சட்டியில் எவ்வளவு சோறு வைத்திருந்தாலும் சாப்பிட்டு முடித்துவிடுவான். வெறும் சோறோ, கஞ்சியோ தான் வேண்டும். அதற்குத் தொடுகறிகளோ, துவையலோ எதுவும் வேண்டாம்.
கொடுங்கலூர் பரணி திருவிழாவிற்குக் கோளாம்பி தவறாமல் போய்விடுவான். தம்பிரானிடமோ, எஜமானியிடமோ அதற்கு அனுமதி கேட்க மாட்டான். அந்த ஏழு நாட்கள் அவனுக்கானவை.
அந்த நாட்களில் தம்பிரான் வெற்றிலை போட்டுக் கொள்ள மாட்டார். கோளாம்பியை தவிர வேறு எவரையும் நம்பி வெற்றிலை போட்டுக் கொள்ள முடியாது. விஷம் தடவிய வெற்றிலையால் கொன்றுவிடுவார்கள் என்ற பயமிருந்தது.
ஒரு நாளில் தம்பிரான் எத்தனை முறை வெற்றிலை போட்டுக் கொள்வார். எந்த நேரத்தில் எத்தனை வெற்றிலைகள் மடித்துத் தர வேண்டும், அவரது தலை எச்சிலை துப்ப எந்தப்பக்கம் திரும்பும் எனக் கோளாம்பிக்கு மட்டும் தான் தெரியும். பல சமயம் தம்பிரான் கோபத்தில் அவன் மீதே எச்சிலைத் துப்பியிருக்கிறார். உடனே குளத்திற்குச் சென்று குளித்துவிட்டு வந்துவிடுவான்.
கோளாம்பியை வீட்டுப் பெண்களுக்குப் பிடிக்கவில்லை. நரிப்பயல் என்று திட்டினார்கள். அப்படித் திட்டுவதற்கான காரணம் எதையும் அவர்கள் வெளியே சொன்னதில்லை.
கோளாம்பி அப்படி ஒரு முறை கொடுங்கலூர் பரணி பார்த்துவிட்டு திரும்பி வரும் போது ஏழு வயதுச் சிறுமி ஒருத்தியை அழைத்து வந்திருந்தான். அவள் யாரெனத் தம்பிரான் கேட்டதற்குப் பதில் சொல்லவில்லை. அவளையும் வீட்டுவேலைகளுக்கு வைத்துக் கொண்டார்கள்.
மாலு என்ற அந்தச் சிறுமி எதைச் செய்யச் சொன்னாலும் கோளாம்பி செய்தான். அதனைத் தம்பிரான் கோவித்துக் கொண்டாலும் அவன் செய்யத் தவறவில்லை. அந்தச் சிறுமி கோளாம்பியின் மகள் தான் என்று பணிப்பெண்கள் பேசிக் கொண்டார்கள். ஆனால் மாலுவின் முகச்சாடை வேறாக இருந்தது. தாயைக் கொண்டு பிறந்திருப்பாள் என்றார்கள்.

மாலு ஒருநாள் தம்புராட்டியின் மயில்விசிறியைத் திருடிவிட்டாள் என்று தூணில் கட்டிவைத்து அடித்த போது கோளாம்பி கண்ணீர்விட்டு அழுதான். அவளுக்குப் பதிலாகத் தன்னை அடிக்கும்படி வேண்டினான். அத்தோடு தெய்வம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று உரக்கச் சப்தமிட்டான்.
இது நடந்த நான்காம் நாள் மாலு வீட்டைவிட்டு ஒடிப்போனாள். அவளைத் தேடிக் கொண்டு கோளாம்பியும் புறப்பட்டுப் போனான். அவன் மீது தம்பிரானுக்கு வந்த கோபத்தில் அந்த நாயை இனி வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.
ஆனால் ஆறாம் நாள் அந்தச் சிறுமியோடு கோளாம்பி திரும்பி வந்து வீட்டு வாசலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தங்களை மன்னிக்கும்படி வேண்டினான். தம்பிரான் மன்னிக்கவில்லை. வெயில் உச்சிக்கு ஏறும்வரை அவன் வாசலிலே விழுந்துகிடந்தான். தம்பிரான் அவனை மட்டும் வீட்டிற்குள் அனுமதிப்பதாகவும் மாலுவை தோட்டத்து வேலைக்காகக் காயங்கரை அனுப்பி வைக்கப்போவதாகவும் சொன்னார். கோளாம்பி தன்னையும் காயங்கரை அனுப்பிவிடும்படி மன்றாடினான்.
அவள் யார் என்ற உண்மையைச் சொல்லும்படி தம்பிரான் கோபத்தில் சப்தமிட்டார்.
“எனக்குத் தெரியாது எஜமானே. அவள் பரணி திருவிழா கூட்டத்தில் திடீரென என் கையைப் பிடித்துக் கொண்டாள். நான் வீடு திரும்பும் போது என் கூடவே வந்துவிட்டாள். அது தான் உண்மை“ என்றான்.
தம்பிரானால் அதனை நம்ப முடியவில்லை. ஆனாலும் காயங்கரையில் உள்ள தோட்டத்திற்கு மாலுவை அனுப்பி வைப்பதில் தம்பிரான் உறுதியாக இருந்தார்.
அதன்பிறகு மாலுவைக் காணுவதற்காகவே கோளாம்பி அடிக்கடி காயங்கரை போய்வந்து கொண்டிருந்தான். மாலு ஆசைப்படுகிறாள் என்று தம்பிரான் வீட்டில் இருந்து சந்தனப்பொடி. கேசத்தைலம், சங்கு வளையல், ஜரிகை ரிப்பன் எனச் சிறுசிறுப் பொருட்களைத் திருடி வரத்துவங்கினான் . மாலு என்ற குட்டிக்குரங்கு கோளாம்பி என்ற குரங்காட்டியை ஆட்டுவைக்கிறது என்று காயங்கரை பணியாளர்கள் கேலி பேசினார்கள்.
கோளாம்பி காயங்கரை வரும்நாட்களில் அவனும் மாலுவும் இரவெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள். என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை. விடிகாலையில் கோளாம்பி கிளம்பி போகும் போது எதையோ தனக்குத் தானே பேசிக் கொண்ட படி நடந்தான்.
மாலு அவனைத் திருடனாக்கினாள். எதைப்பற்றியும் யோசிக்காமல் அவள் கேட்டதை எல்லாம் திவான் வீட்டிலிருந்து திருடிக் கொண்டு வந்து கொடுத்தான். ஒரு சிறுமியின் மனதில் இத்தனை ஆசைகள் இருக்குமா என வியப்பாக இருந்தது.
அவள் ஒருநாள் தம்பிரானுக்கு மட்டுமே தரப்படும் நேத்ரி பசுவிலிருந்து தனக்குப் பால் கொண்டுவரும்படியாகச் சொன்னாள். அதை மட்டும் தன்னால் செய்ய முடியாது என்று மறுத்தான் கோளாம்பி. அந்தப் பாலை கொண்டுவராவிட்டால் தன்னைப் பார்க்க வரவேண்டாம் என மாலு கோவித்துக் கொண்டாள்.
இதற்காகவே கோளாம்பி பின்னிரவில் சொர்க்க மண்டபத்திற்குச் சென்று பித்தளைச் செம்பு ஒன்றில் பால் கறந்தான். அதைத் துணியால் மறைத்துக் கொண்டு காயங்கரைக்கு நடக்கத் துவங்கினான்.
ஆனால் மாலு அங்கேயில்லை. அவள் ஒடிப்போயிருந்தாள். கோளாம்பி அழுதான். மாலுவைத் தேடிக் கொண்டு கிளம்பினான். இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவன் வீடு திரும்பிய போது தனியே வந்திருந்தான். பித்துப்பிடித்தவன் போல கண்கள் மஞ்சளேறியிருந்தன. இருண்டு போன முகம். செம்புழுதி படிந்த கால்கள். அவனை இனி அடைப்பக்காரனாக வைத்துக் கொள்ள முடியாது எனத் தம்பிரான் துரத்திவிட்டார்.
மாலுவிற்கு என்ன ஆனது என எவருக்கும் தெரியவில்லை.
இது நடந்த இரண்டு வாரங்களுக்குப் பின்பு தான் தம்பிரானின் பசு திருடு போனது. கோளாம்பியைக் கண்டுபிடித்துத் தனது பசுவை மீட்டுவருவதற்காகத் இருபத்தியோறு வீரர்களை தம்பிரான் அனுப்பி வைத்தார்.
அவர்கள் பதினாறு நாட்கள் குதிரையில் சுற்றியலைந்தும் கோளாம்பியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் ஒருவேளை மலபார் பிரதேசத்திற்குள் போயிருக்கக் கூடும் எனத் தம்பிரானிடம் தெரிவித்தார்கள்.
அவர் தலச்சேரியின் துணை ஆட்சியராக இருந்த தாமஸ் எச். பாபருக்கு அவசரக்கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார். அதற்குப் பதில் எழுதிய தாமஸ் பாபர் ஒரு பசுவைத் தேடிக் கண்டுபிடித்து ஒப்படைப்பதை விடவும் தங்களுக்கு முக்கியப் பணிகள் இருப்பதால் அவர் புதிதாகப் பசு ஒன்றை வாங்கிக் கொள்ளும்படியாகத் தெரிவித்திருந்தார். இது திவானின் கோபத்தை அதிகமாக்கியது. வெள்ளைக்காரர்களை மிக மோசமான வசையால் திட்டினார்.
அவர்கள் பசுவைத் தேடிக் கொண்டிருந்த நாட்களில் உத்தராதி தம்பிரான் புது அடைப்பக்காரனை நியமித்திருந்தார். ராஜேந்து என்ற அந்த அடைப்பக்காரன் கிளிமானூர் அரண்மனையில் வேலைக்கு இருந்தவன். வைத்திய சாஸ்திரம் கற்றவன் என்றார்கள்.
அவன் ஒரு நாள் மதியம் ஊஞ்சலில் அமர்ந்திருந்த தம்பிரானுக்கு வெற்றிலை மடித்து நீட்டிய போது தூண் அருகே கோளாம்பி நிற்பது போன்ற நிழல் தெரிந்தது. யார் நிற்கிறார் என்று பார்க்கும்படி ராஜேந்துவிடம் சொல்லியபடி வெற்றிலை எச்சிலை துப்புவதற்காகத் தம்பிரான் தலை திரும்பிய போது ஊஞ்சலிலிருந்து விழுந்து இறந்து போனார். அவரது திறந்த வாயில் எச்சில் சக்கை ஒட்டியிருந்தது
வெற்றிலையில் விஷம் தடவி கோளாம்பி கொன்றுவிட்டான் என்றார்கள். கோளாம்பி எப்படி அந்த வீட்டிற்குள் வந்தான். ராஜேந்துவிற்க்குத் தெரியாமல் எப்படி வெற்றிலையில் கோளாம்பி விஷம் தடவினான் என்று தெரியவில்லை. ஒருவேளை ராஜேந்துவை அனுப்பியதே கோளாம்பி தானா.
காயங்கரையிலிருந்த மாலுவை தம்பிரானின் ஆட்கள் தான் மாட்டுவண்டியில் ஏற்றிக் கொண்டு போய்க் காசிக்குப் போகும் யாத்ரீகர்களுடன் அனுப்பி விட்டார்கள் என்பதைக் கோளாம்பி தெரிந்து கொண்டதால் தான் இப்படி நடந்து கொண்டான் என்றார்கள்.
காசியின் வீதிகளில் நெற்றியில் சங்கு கொண்ட பசுவை கூட்டிக்கொண்டு ஒருவன் சுற்றியலைகிறான் என்று ஊர் திரும்பிய யாத்ரீகர்கள் சொன்னார்கள். அது கோளாம்பி தானா என்று தெரியவில்லை. மாலுவை கண்டுபிடிக்கத் தான் அப்படி அலைகிறானா. மாலு யார் என்ற உண்மை வெளிப்படவேயில்லை. ஒருவேளை கோளாம்பி சொன்னது தான் உண்மையா.
••
June 20, 2025
நினைவின் கரையில் நிற்கிறோம்
ஞானபீடம் பரிசு பெற்ற எழுத்தாளர் குர் அதுல்ஜன் ஹைதர் குறித்த ஆவணப்படம்
மகத்தான இந்திய நாவல்களில் ஒன்றாக இவரது அக்னி நதி நாவல் கொண்டாடப்படுகிறது.

கோமாளியின் ஞானம்
லைம்லைட் சாப்ளினின் மிகச் சிறந்த திரைப்படம். எப்போதெல்லாம் மனச்சோர்வு அடைகிறீர்களோ அப்போது இந்தப் படத்தைப் பாருங்கள். மருந்தாக வேலை செய்யும். புதிய நம்பிக்கையை, உற்சாகத்தை, மகிழ்ச்சியை உருவாக்கும். இப்படத்தின் வசனங்களைத் தனியே அச்சிட்டு சிறுநூலாக வெளியிடலாம்.

படத்தின் ஒரு காட்சியில் சாப்ளின் அரங்க மேடையில் உள்ள ஒரு பூவைப் பறித்துத் தனது பாக்கெட்டிலிருந்து உப்பை எடுத்து அதில் போட்டு ஆசையாக ருசித்துத் தின்னுகிறார். அது தான் சாப்ளினின் முத்திரை.
பூவை ஒரு போதும் உண்ணும் பொருளாக நாம் கருதியதில்லை. சாப்ளின் அதை வேடிக்கையாகச் செய்கிறார். காதலுற்றவனின் செயல் போலவே அது வெளிப்படுகிறது. இன்னொரு காட்சியில் ஈயுடன் உரையாடுகிறார். சூரிய ஒளியின் கதகதப்பை கொண்டாடுகிறார்.
Life is a desire, not a meaning. Desire is the theme of all life! It makes a rose want to be a rose and want to grow like that. And a rock want to contain itself and remain like that.
என்று டெர்ரியிடம் சொல்லும் போது ரோஜா மற்றும் பாறை எப்படியிருக்கும் என நடித்துக் காட்டுகிறார். அதை டெரி ரசிக்கவே ஜப்பானிய மரம் எப்படி இருக்கும் என நடித்துக் காட்டுகிறார். அத்தோடு பல்வேறு மரங்களின் இயல்பை நடித்துக் காட்டுவார். அபாரமான காட்சியது.

சாப்ளினின் கடைசிப் படம் லைம் லைட். புகழ்பெற்ற கோமாளி நடிகரான கால்வெரோ மக்கள் தன்னை ரசிப்பதில்லை என உணர்ந்து தனிமையில். குடியில் நாட்களைக் கழிக்கிறார். ஒரு நாள் தற்கொலை செய்ய முயலும் டெரி என்ற இளம்பெண்ணைக் காப்பாற்றித் தனது அறையில் தங்க வைக்கிறார். பாலே நடனக்காரியான டெரி ஆழமான மனப்பாதிப்பை கொண்டிருக்கிறாள். அவளால் எழுந்து நடக்க முடியவில்லை. அவளுக்குச் சிகிட்சை அளிக்கும் கால்வெரோ புதிய நம்பிக்கை அளித்துப் புகழ்பெற்ற நடனக்காரியாக மாற்றுகிறார்.
ஒரு காட்சியில் நோயுற்ற நிலையில் இருக்கும் டெரியின் படுக்கை அருகில் சாப்ளின் செல்கிறார். அவள் இருமுகிறாள். அவசரமாகச் சிறிய அலமாரியை திறந்து உள்ளே இருந்து ஒரு மருந்து பாட்டிலை எடுக்கிறார். அவளுக்கு மருந்து தரப்போகிறாரோ என நாம் நினைத்தால் அவர் மவுத்வாஷால் தனது வாயைச் சுத்தம் செய்து கொள்கிறார். இது தான் சாப்ளினின் வெளிப்பாடு.
மக்கள் ஏன் தனது நகைச்சுவைக்குச் சிரிக்க மறுக்கிறார்கள். சலிப்பாகி அரங்கை விட்டு வெளியே போகிறார்கள் என்று அவருக்குப் புரியவில்லை. பெயரை மாற்றிக் கொண்டு புதிய ஆள் போலக் கால்வெரோ மேடையில் தோன்றி வேடிக்கை செய்கிறார். அப்போதும் புறக்கணிப்புத் தொடர்கிறது.
மக்கள் உங்களை விரும்பவில்லை, உங்கள் காலம் முடிந்துவிட்டது என அரங்க நிர்வாகி சொல்வதைக் கால்வெரோவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மக்கள் மீண்டும் தன்னை ரசிப்பார்கள் என்று நம்புகிறார். அதற்காகப் போராடுகிறார்.

லைம்லைட் படத்தின் திரைக்கதை வசனத்தை சாப்ளின் மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறார். படத்தின் இசையும் அவரே. அற்புதமான இசை. தனியிசைக்கென்றே காட்சிகள் வைத்திருக்கிறார். படத்தில் இடம்பெற்றுள்ள பாலே நடனக்காட்சி மிகவும் சிறப்பானது.
இப்படத்தில் அவரும் பஸ்டர்கீட்டனும் இணைந்து நடித்திருக்கிறார்கள். கீட்டனுக்கு அதிக முக்கியத்துவமில்லை. படத்தில் இசைக்கலைஞராக நடித்திருப்பது சாப்ளினின் மகன் சிட்னி.
மைக்கேல், ஜோசபின் மற்றும் ஜெரால்டின் என்ற சாப்ளினின் மூன்று பிள்ளைகளும் லைம்லைட்டின் தொடக்கக் காட்சியில் தோன்றுகிறார்கள். .
டெரியின் கதாபாத்திரம் சாப்ளினின் அம்மா ஹன்னாவின் சாயலில் உருவாக்கபட்டிருக்கிறது. சாப்ளின் லைம்லைட்டை எழுத இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகச் செலவிட்டார் . இந்தக் கதையை முதலில் ஒரு நாவலாக எழுதினார். ஃபுட்லைட்ஸ் என்ற அந்த நாவலை பின்பு திரைக்கதையாக மாற்றியிருக்கிறார்.
வழக்கமான படங்களில் நாம் காணும் சாப்ளின் வேறு. இதில் வெளிப்படும் சாப்ளின் வேறு. இதில் வயதான சாப்ளினைக் காணுகிறோம். அவரது நடை மட்டுமே பழைய படங்களை நினைவுபடுத்துகிறது. கோமாளிகளுக்கும் வயதாகும் என்பது ஏற்க முடியாத உண்மை. இப்படத்தில் கைவிடப்பட்ட மேடைக்கலைஞனின் சோகத்தைத் தனித்துவமான உணர்வுடன் வெளிப்படுத்தியிருக்கிறார்.

நடக்க முடியாத நிலையில் படுக்கையில் கிடக்கும் டெரியிடம் அவர் உரையாடும் காட்சி நம்பிக்கையின் வெளிச்சத்தைப் படரவிடுகிறது..
I know a man without arms who can play a scherzo on a violin and does it all with his toes. The trouble is you won’t fight! You’ve given in, continually dwelling on sickness and death. But – there’s something just as inevitable as death, and that’s life. Life, life, life! Think of the power that’s in the universe, moving the earth, growing the trees. That’s the same power within you if you only have courage and the will to use it
கால்வெரோவும் மூன்று இசைக்கலைஞர்களும் ஒன்றாக அவரது வீட்டில் குடித்துவிட்டு இசைக்கும் காட்சி அபாரமானது. இசையே அவர்களின் மீட்சி.
தான் ஏன் கோமாளியாக மாறினேன் என்பதைப் பற்றி டெரியிடம் விளக்கும் போது கால்வெரோ இப்படிச் சொல்கிறார்
`விளையாடுவதற்குப் பொம்மை இல்லையே என ஏங்கிய நாட்களில் எனது அப்பா என்னுடைய தலையைச் சுட்டிக்காட்டிச் சொல்லுவார்.இது தான் இதுவரை உருவாக்கப்பட்டதிலே மிகப்பெரிய விளையாட்டுப் பொருள். இங்கேதான் எல்லா மகிழ்ச்சியின் ரகசியமும் இருக்கிறது.

கால்வெரோவும் டெர்ரியும் காதல் கொள்வதில்லை. மாறாக ஆழமான பிணைப்பை கொண்டிருக்கிறார்கள். உங்களுக்காக எதையும் செய்வேன் என்கிறாள் டெர்ரி. அது நன்றியுணர்விலிருந்து உருவான வெளிப்பாடு.
டெர்ரி விரைவில் ஒரு புதிய பாலே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெறுகிறாள், அதில் கால்வெரோவும் கோமாளியாகச் சிறிய வேடத்தில் நடிக்கிறார். நிகழ்ச்சி பெரிய வரவேற்பை பெறுகிறது. ஆனால் அந்த வெற்றி கால்வெரோவிற்கு முழுமையான மகிழ்ச்சியைத் தரவில்லை. அது தனது வெற்றியில்லை என அவர் உணர்ந்து கொள்கிறார். அரங்கிலிருந்து வெளியேறிப் போகிறார்.
தியேட்டர் டிரஸ்ஸிங்-ரூமில் கால்வெரோ தனது மேக்கப்பைத் துடைத்துவிட்டு, கண்ணாடியைப் பார்த்து, தோல்வியின் பிம்பத்தைக் காணுகிறார். தன்னைத் தானே இனியும் ஏமாற்றிக் கொள்ள முடியாது என உணர்கிறார். நடிப்பை துறக்கிறார்.
இசைக்கலைஞராக ஒரு மதுவிடுதியில் பணியாற்றும் நாட்களில் அவர் சில்லறைகளுக்காகத் தனது தொப்பியை நீட்டுகிறார். அங்கே அவரைச் சந்திக்கும் அரங்க உரிமையாளர் மீண்டும் நடிக்க அழைக்கும் போது கால்வெரோ அதை எளிதாக உதறிப்போகிறார். கலைஞனின் மனதை சிறப்பாகச் சித்தரிக்கும் காட்சிகள் இவை.

எல்லோரும் என்னிடம் மிகவும் அன்பாக இருக்கிறார்கள். அது என்னைத் தனிமையாக உணர வைக்கிறது. என்று ஒரு காட்சியில் கால்வெரோ சொல்கிறார். இதே குரலை தஸ்தாயெவ்ஸ்கியிடம் கேட்கமுடியும். இளவரசன் மிஷ்கின் இப்படி உணருகிறான். குற்றமும் தண்டனை நாவலில் மர்மலதேவ் இதே குற்றவுணர்வை கொண்டிருக்கிறான்.
Time is the great author. Always writes the perfect ending என ஒரு காட்சியில் கால்வெரோ சொல்கிறார். அது அவரது வாழ்விலும் நடந்தேறுகிறது.
இன்னொரு காட்சியில் கால்வெரோவும் டெரியும் பேசிக் கொள்கிறார்கள்
Calvero: I want to forget the public.
Terry: Never. You love them too much.
Calvero: I’m not so sure. Maybe I love them, but I don’t admire them.
Terry: I think you do.
Calvero: As individuals, yes. There’s greatness in everyone. But as a crowd, they’re like a monster without a head that never knows which way it’s going to turn. It can be prodded in any direction.
இது சாப்ளினின் வாக்குமூலம். அவர் மனதின் ஆழத்திலிருந்து வெளிப்படும் குரல். லைம் லைட்டில் நாம் சாப்ளினின் சொந்த வாழ்க்கையின் எதிரொலிகளைக் கேட்கிறோம். திரையால் இதிகாசங்களை உருவாக்க முடியும் என்று போர்ஹெஸ் ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார். அந்த வரிசையில் வரும் ஒரு படம் லைம்லைட்
••
June 18, 2025
மறைந்திருக்கும் உண்மை
பல்வேறு தேசங்களை, இனங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக வாழும் அமெரிக்காவில் இன்றும் இனவெறி இருக்கிறது. ஆனால் அது வெளிப்படையாகத் தெரிவதில்லை. ரகசியமாக மறைந்திருக்கிறது. பல நேரங்களில் ஆசிய இனத்தவர்களுக்கு எதிராக வெளிப்படுகிறது என்று A Great Divide திரைப்படம் விவரிக்கிறது.
பொதுவெளியில் பேசத்தயங்குகிற உண்மையை மிகவும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் இயக்குநர் ஜீன் ஷிம். இந்தப் படம் பேசும் விஷயங்கள் தங்கள் வாழ்வில் நடந்துள்ளதாக அமெரிக்காவில் வாழும் கொரியர்கள் பலரும் தெரிவித்துள்ளார்கள். 2020ல் அமெரிக்காவில் ஆசிய இனத்தவருக்கு எதிராக இனவெறி நேரடியாக வெளிப்பட்டதைக் கண்டேன். அந்தக் கோபமே இந்த படத்தை உருவாக்கத் தூண்டியது என்கிறார் இயக்குநர்

பெஞ்சமின் என்ற பதின்வயது பையனின் பார்வை வழியாகக் கதை விவரிக்கபடுகிறது.
லீயின் குடும்பம் கலிபோர்னியாவிலிருந்து வெளியேறி வயோமிங்கில் குடியேறுகிறார்கள். புதிய பள்ளியில் பெஞ்சமினுக்கு இடம் கிடைக்கிறது. பள்ளிக்குச் சமர்ப்பிக்க வேண்டிய ஒரு கட்டுரைக்காகத் தனது குடும்பத்தின் கடந்தகால நினைவுகளைப் பெஞ்சமின் அறிந்து கொள்ளத் துவங்குகிறான்.

படம் மூன்று வாக்குமூலங்களைக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா என்ற தேசம் புகலிடம் தேடிவந்த தங்களை நியாயமாக நடத்தவில்லை. இனவேற்றுமையுடன் நடத்தியது. அவமானப்படுத்தியது என்று குற்றம் சாட்டுகிறார் ஹால்மோனி என்ற கொரியப் பாட்டி.
தகுந்த படிப்பு, திறமை இருந்தும் தான் வேலை செய்த அமெரிக்க நிறுவனம் தன்னை இனவேற்றுமையுடன் நடத்தியது. சக ஊழியர்கள் தன்னை உருவக்கேலி செய்தார்கள். தனது வளர்ச்சியை நிறுவனம் தடுத்து நிறுத்தியது என்று குற்றம் சாட்டுகிறார் பாட்டியின் மருமகன் ஐசக்
பள்ளியில் தான் சகமாணவியால் அவமானப்படுத்தபட்டேன். வீட்டில் எனது அம்மாவே என்னைப் புரிந்து கொள்ளவில்லை. எனது வாழ்க்கை நானாக உருவாக்கிக் கொண்டது என்று ஹால்மோனியின் மீதும் குற்றம் சுமத்துகிறாள் அவரது மகள் ஜென்னா
இந்த மூன்றையும் கேட்டு அறிந்து கொள்ளும் பெஞ்சமின் வயோமிங்கில் இனவெறுப்பை நேரடியாகச் சந்திக்கிறான். பொய் குற்றம்சாட்டப்பட்டுக் குற்றவாளி போல நடத்தப்படுகிறான். அவனது குடும்பமே பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறது. இதிலிருந்து அவர்கள் எப்படி விடுபட்டார்கள் என்பதே படத்தின் முடிவு.
வயோமிங் மேற்குஅமெரிக்காவின் இயற்கை எழில் சூழ்ந்த மாநிலமாகும். பெரிய மாநிலமாக இருந்தாலும் மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்டிருக்கிறது. கானுயிர் காப்பகமான வயோமிங்கில் காட்டெருமை, கடமான் மற்றும் பாம்புகள் அதிகமிருக்கின்றன. இங்கே சிறப்பு வனப்பாதுகாப்புப் பிரிவு செயல்படுகிறது.

கொரியர்களான பெஞ்சமினையும் அவனது குடும்பத்தையும் பலரும் ஜப்பானியர் அல்லது சீனர் என்றே நினைக்கிறார்கள். கேலி செய்கிறார்கள். சில இடங்களில் அவர்கள் வெளிப்படையாக அவமானப்படுத்தபடுகிறார்கள். படத்தில் உணவகம் ஒன்றில் அவர்கள் நடத்தப்படும் காட்சி இதற்கான உதாரணம். காவல்துறை அதிகாரியிடம் வெளிப்படும் வெறுப்பு, ரேஞ்சர் நடந்து கொள்ளும் விதம். பெஞ்சமினையும் எல்லியையும் மிரட்டும் மெக்நேதரிடம் வெளிப்படும் கோபம் இவையே இனவெறியின் அடையாளங்கள்.
1945ல் கொரியா இரண்டாகப் பிளவு பட்ட போது வன்முறை வெடித்தது. அதிலிருந்து தப்பி அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த ஹால்மோனியும் அவரது கணவரும் கையில் சொற்ப பணத்துடன் புதிய வாழ்க்கையைத் துவங்குகிறார்கள். ஹால்மோனியின் கணவர் கொரியாவில் பல்கலைகழப்படிப்பை முடித்தவர். ஆகவே அமெரிக்கப் பல்கலைகழகத்தில் சேர்ந்து உயர்கல்வி பெற முயற்சிக்கிறார். கட்டணம் செலுத்த முடியாத நிலையில் தனது ஆசையைக் கைவிட்டு பிழைப்பிற்காக லாண்டரி ஒன்றில் வேலை தேடிக் கொள்கிறார்.
பாட்டியின் மனதில் தனது பேரனாவது புகழ்பெற்ற கல்வி நிலையத்தில் சேர்ந்து படித்துப் பட்டம் பெற வேண்டும் என்ற ஆசையுள்ளது. பேரனின் பள்ளிக்கட்டுரைக்காகத் தனது கடந்தகால நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் பாட்டியும் பேரனும் பேசிக் கொள்ளும் காட்சிகள் அற்புதமானவை. பாட்டியிடம் வெளிப்படும் நிதானம். மனவுறுதி, தனது கடந்தகால வலிகளைத் தெளிவாக வெளிப்படுத்தும் விதம், மகளின் கோபத்தை ஏற்றுக் கொள்ளும் மனது சிறப்பாகக் காட்சிப்படுத்தபட்டுள்ளது

பெஞ்சமினின் பதின்வயது ஆசைகள், அவனுக்கும் எல்லிக்கும் இடையில் வளரும் காதல். பொதுவெளியில் அவன் காட்டும் தயக்கம், புதிய அனுபவத்தைப் பெற முயற்சிக்கும் துடிப்பு படத்தில் மிகவும் அழகாக வெளிப்படுகிறது. எல்லி இன்றைய தலைமுறையின் அடையாளம். பெஞ்சமினிடம் விடைபெறும் கடைசிக் காட்சியில் அவள் முதிர்ச்சி அடைந்த பெண்ணாக நடந்து கொள்கிறாள்.
கொரியர்களின் இசை, தொலைக்காட்சி நாடகம். உணவு, பண்பாட்டு நம்பிக்கைகளையும் படம் ஊடு இழையாக வெளிப்படுத்துகிறது. கார் பயணத்தில் ஜாக் வெளிப்படுத்தும் மகிழ்ச்சி. அதற்கு காரணமான பாடல். பெஞ்சமின் காதலைச் சொல்லும் தருணங்களில் வெளிப்படும் தொலைக்காட்சி நாடக காட்சி உதாரணம் போன்றவை அழகானது. ரே ஹுனாக்கின் அற்புதமான கேமரா வயோமிங்கின் அழகைச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளது. நிலக்காட்சிகள் மறக்கமுடியாதவை.
இனவெறியைப் பற்றிப் பேசும் படம் வனவேட்டை, பணம்பறிப்பு. வீடியோ சாட்சியம் என வழக்கமான திசையில் சென்று முடிகிறது. அதுவே இதன் பலவீனம்.
June 16, 2025
குற்றமுகங்கள் 16 மண்டே ராணி
மண்டே ராணியை உங்களுக்குத் தெரிந்திருக்காது. அவள் பந்தயக்குதிரை ஒட்டியள். . அவளது குதிரையின் பெயர் மண்டே. ஆண்கள் மட்டுமே குதிரைப்பந்தய ஜாக்கியாக இருந்த காலத்தில் இங்கிலாந்தின் முதல் பெண் ஜாக்கியாக அறியப்பட்டடாள்.

பிரிட்டனின் குதிரைப்பந்தய விதிகளின் படி பெண்கள் ஜாக்கியாகப் பணியாற்ற இயலாது, இருப்பினும் 1804 ஆம் ஆண்டிலேயே பெண்கள் ஆண்களைப் போல மாறுவேடமிட்டு சவாரி செய்ததாகப் பதிவுகள் குறிப்பிடுகின்றன. ஜான் போவெல் என்ற ஆண் அடையாளத்துடன் ஒரு பெண் ஜாக்கியாகப் பணியாற்றினாள் என்கிறார்கள். ஆனால் அந்த உண்மை நிரூபிக்கபடவில்லை.
மண்டே ராணி மதராஸில் தான் பிறந்தாள். அவளது அம்மா ருக்மணி மேஜர் வைட்டின் வீட்டில் ஆயாவாக வேலை செய்தாள். அந்தக் குடும்பம் இங்கிலாந்து புறப்பட்ட போது ருக்மணி தனது மகளுடன் இங்கிலாந்து சென்றாள். மேஜர் வைட்டின் மனைவி கிளாராவிற்குப் பணிவிடைகள் செய்ததோடு அவளின் ஆறு குழந்தைகளுக்கும் தாதியாக இருந்திருக்கிறாள்.
ஜாக்கிகளுக்கு உயர வரம்பு இல்லை என்றாலும், எடை வரம்புகள் காரணமாக அவர்கள் குள்ளமான தோற்றத்திலே இருந்தார்கள். மண்டே ராணி ஐந்தடி உயரம் கொண்டிருந்தாள். ஒடுங்கிய முகம். சற்றே பெரிய காதுகள். மூன்று முறை குதிரைப்பந்தயத்தில் கிழே விழுந்து காலையும் இடுப்பையும் உடைத்துக் கொண்டாள் என்றாலும் அவளது நடை வேகமாகவே இருந்தது. ஆண்களைப் போன்ற உடை. ஆண்கள் அணிவது போன்ற தொப்பி. ஆண்களைப் போலவே குடி, மற்றும் மடக்கு கத்தி வைத்திருந்தாள்.
1859ம் ஆண்டு எப்சம் டெர்பி போட்டி மைதானத்தில் இளவரசருக்குச் சொந்தமான மிடில்டன் குதிரையைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றாள் என்பதற்காகவும், போட்டியைக் காண வந்திருந்த மேஜர் வைட் மற்றும் அவரது மனைவி கிளாராவைக் கொன்றாள் என்பதற்காகவும் மண்டே ராணி கைது செய்யப்பட்டாள்.
அவளைத் தூக்கிலிடுவதற்காக அழைத்து வரப்பட்ட போது ஜாக்கிகள் அணியும் உடையை அணிந்திருந்தாள் என்றார்கள்.
1851 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி இங்கிலாந்தின் லிவர்பூலுக்கு அருகிலுள்ள நடைபெற்ற கிராண்ட் நேஷனல் குதிரைப் பந்தயத்தில் மண்டே ராணியின் குதிரை வெற்றிபெற்றது. அதனைப் பாராட்டும் விதமாகக் குதிரையின் உரிமையாளரான ஹாமில்டன் மிகப்பெரிய விருந்திற்கு ஏற்பாடு செய்ததோடு குதிரையோடு அவள் நிற்கும் சிலை ஒன்றையும் செய்து வைக்கும்படி உத்தரவிட்டார். இங்கிலாந்தின் எந்த ஜாக்கிக்கும் கிடைக்காத பெருமையது.
மண்டே ராணியின் உண்மையான பெயர் பவானி. மண்டே ராணியின் அம்மா திடீரென ஒரு நாள் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு ஹைகேட் சிறையில் அடைக்கப்பட்டாள். இந்த நிகழ்வின் காரணமாகப் பத்து வயதான பவானி மேஜர் வைட் வீட்டிலிருந்து துரத்தப்பட்டாள்
அதன் பிந்திய நாட்களில் வீதி தான் அவளை வளர்ந்தது. அவள் பசிக்காகத் திருடினாள். சாரட் வண்டி ஒட்டுகிறவர்களுக்கு உதவி செய்தாள். தேவாலயத்தின் வெளியே பிச்சை எடுத்தாள். ஒரு கால் உடைந்தவனும் குடிகாரனும் குதிரைப்பந்தய வீரனுமான கிறிஸ் கிரீன் அவளைத் தன்னோடு வசிக்க அழைத்துச் சென்றான்

பந்தயக்குதிரைகளைச் செலுத்துவதற்கு அவனே பயிற்சி கொடுத்தான். மிக மோசமான வசைகளும் பிரம்பு அடியுமாக அந்தப் பயிற்சியை அளித்தான். குதிரையின் மீது ஒரு ஈ அமர்ந்து கொள்வது போலத் தான் நீ அமர்ந்திருக்க வேண்டும் என்று எப்போதும் சப்தமிட்டான்.
குதிரைப்பந்தயம் என்பது வெறும் விளையாட்டில்லை. அது ஒரு அதிகாரப் போட்டி. அதற்குள் அரசியல் இருக்கிறது. பந்தயத்தில் மோசடிகள், குற்றங்கள் மறைந்திருக்கின்றன என்பதைப் பவானி அறிந்து கொண்டாள்.
அந்த நாட்களில் எப்சம் டெர்பி மிகப்பெரிய குதிரைப்பந்தயமாகக் கருதப்பட்டது. இதில் அரச குடும்பத்தின் குதிரைகளும் பங்கேற்றன. அந்தப் போட்டியில் டார்லி என்ற அரச குடும்பத்தைச் சார்ந்த குதிரை தொடர்வெற்றியை பெற்றது. அந்தக் குதிரையை ஒட்டியவர் வில்லியம் எட்வால்.
குதிரைப்பந்தய உலகில் மனிதர்களை விடவும் குதிரைகள் விசித்திரமான கதைகள் கொண்டிருந்தன. அதன் இனத்தூய்மை முதன்மையாகக் கருதப்பட்டது. குதிரையின் வெற்றி அதன் உரிமையாளருக்கு மிகப்பெரிய கௌரவத்தையும் பெருமையினையும் உருவாக்கியது. ஆனால் குதிரையோட்டிகள் அடிமைகளைப் போலவே நடத்தப்பட்டார்கள். தண்டிக்கப்பட்டார்கள். பந்தய மைதானத்திலே சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
பவானிக்குக் குதிரைபந்தயம் தனது இருப்பையும் அடையாளத்தையும் காட்டிக் கொள்வதற்கான சவாலாக இருந்தது. ஆறு முறை அவள் பெண் என்பதற்காகப் போட்டியில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கபட்டாள். ஹாமில்டன் பிரபு அவளைத் தனது குதிரையின் ஜாக்கியாக நியமித்த பிறகே பந்தயத்தில் கலந்து கொண்டாள். மண்டே என்ற அவளது குதிரை 52 தொடர்வெற்றிகளைப் பெற்றது. எந்த வெற்றியிலும் அவள் சிரிக்கவில்லை. மகிழ்ச்சியை வெளிப்படுத்தவில்லை. பகிர்ந்து கொள்ள முடியாத வேதனை அவளது கண்களில் படர்ந்திருந்தது.
மண்டே ராணி. இளவரசரின் குதிரையை ஐந்து முறை தொடர்ந்து தோற்கடித்தாள். அந்த ஆத்திரம் காரணமாக அவளது குதிரையை அடையாளம் தெரியாத நபர் பந்தய மைதானத்தில் வைத்து நெற்றியில் சுட்டார். மண்டே சுடப்பட்டதை ராணியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மைதானத்திலே இறந்துவிடும் என அனைவரும் கருதிய குதிரை பிழைத்துக் கொண்டது. ஆனால் அதன் இடது கண் பார்வை பறிபோனது. அந்தக் குதிரை இனி பந்தயத்தில் ஜெயிக்காது என ஹாமில்டனும் நினைத்தார். ஆனால் அதே டெர்பியில் மண்டே மீண்டும் வெற்றிப் பெற்றது.
அந்த வெற்றி செல்லாது என அறிவித்ததோடு குதிரைக்குப் பாம்பின் நஞ்சை புகட்டி பந்தயத்தில் கலந்து கொள்ளச் செய்தாள் என மண்டே ராணி கைது செய்யப்பட்டாள். விசாரணையின் முடிவில் அவள் ஜாக்கியாகச் செயல்பட முடியாத தடை உருவானது.
மண்டே ராணியின் சிலையை ஹாமில்டன் பிரபு அகற்றியதோடு அதை உடைத்துப் போடவும் உத்தரவிட்டார். மண்டே ராணியின் தலையை மட்டும் உடைத்துவிட்டார்கள். மண்ணில் விழுந்து கிடந்த அந்தக் குதிரைச்சிலையின் மீது பெய்யும் மழை உலகம் மறந்துவிட்ட மண்டே ராணியை நினைவுபடுத்துவது போலிருந்தது.
••
வானவன்
குட்டி இளவரசன் நாவலை எழுதிய அந்த்வான் து செந்த்-எக்சுபெரியின் வாழ்வினை மையமாகக் கொண்டு தி பிரின்ஸ் ஆஃப் தி ஸ்கைஸ் நாவல் வெளியாகியுள்ளது. , “தி லைப்ரரியன் ஆஃப் ஆஷ்விட்ஸ்” நாவல் மூலம் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரான அன்டோனியோ இடுர்பே இதனை எழுதியுள்ளார்.


அன்டோனியோ ஒரு ஸ்பானிஷ் பத்திரிகையாளர், எழுத்தாளர். ஸ்பானிஷ் இதழான லா வான்கார்டியாவில் பணியாற்றுகிறார். சிறார்களுக்காக நிறைய எழுதியுள்ளார். அவருக்கு மிகவும் விருப்பமான எழுத்தாளர் எக்சுபெரி என்பதால் அவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் நாவலை எழுதியிருக்கிறார்.
எக்சுபெரி மற்றும் ஜீன், ஹென்றி என்ற அவரது இரண்டு நண்பர்கள் குறித்தும் விரிவாகப் பேசும் இந்த நாவல் விமானத் தபால்சேவையில் அவர்கள் எவ்வாறு இயங்கினார்கள் என்பதை விவரிக்கிறது
1920களின் பாரிஸில் தொடங்கும் கதை சஹாரா பாலைவனம், செனகல், பால்மிரா, பியூனஸ் அயர்ஸ், படகோனியா, நியூயார்க் எனப் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்கிறது. எக்சுபெரியோடு இணைந்து நாமும் வானில் பறக்கிறோம்.
நாவல் விவரிக்கும் காலம் விமானச் சேவையின் ஆரம்ப நாட்கள், விமானிகள் ஒவ்வொரு முறை வானில் பறக்கும் போதும் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அவர்கள் கடக்க வேண்டிய கடினமான சூழ்நிலைகள் நாம் அறியாதவை. அவற்றை நாவலில் அன்டோனியோ துல்லியமாக விவரித்துள்ளார்.. இந்த மூன்று விமானிகள் எவ்வாறு விமானச் சேவையின் முன்னோடிகளாகவும் அசாதாரணமான, துணிச்சலான ஹீரோக்களாகவும் ஆனார்கள் என்பதை நாவலில் சிறப்பாகச் சித்தரித்துள்ளார்.
••
June 13, 2025
இணைய வழி நிகழ்ச்சி
எனது நூறு புத்தகங்களுக்கான விமர்சன நிகழ்வு இணைய வழியாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அதன் நிறைவு விழா நாளை நடைபெறுகிறது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.
காலை10,30 மணிக்கு நிகழ்வு துவங்குகிறது. எனது உரையைத் தொடர்ந்து வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.
எஸ்.ரா நூறு நிகழ்வை ஏற்பாடு செய்து சிறப்பாக நடித்தி முடித்துள்ள முனைவர். சு.வினோத் மற்றும் அஞ்சிறைத் தும்பி இலக்கிய அமைப்பிற்கு எனது மனம் நிறைந்த நன்றி.
பேராசிரியர் வினோத்தின் அழைப்பை ஏற்று எஸ்.ரா நூறு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அனைவருக்கும் எனது அன்பும் நன்றியும்

எஸ்.ரா நூல்கள் 100
நாள் : 15/6/25 ஞாயிறு
காலை 10.30 AM
Vinod S is inviting you to a scheduled Zoom meeting.
Join Zoom Meeting
https://us04web.zoom.us/j/77727323793?pwd=epqtpVZ8vA9l9YwmIYfgQHNkSI5Wd3.1
Meeting ID: 777 2732 3793
Passcode: 8kraDk
சுமன்
எம்.ஜி. பவேரியா இயக்கத்தில் ஜெயா பாதுரி நடித்துள்ள FTII டிப்ளமோ திரைப்படம் சுமன். 1970ம் ஆண்டு வெளியானது .
கறுப்பு வெள்ளையில் அழகான காட்சிகளைக் கொண்டிருக்கிறது. சின்னஞ்சிறிய கிராமமும் துள்ளியோடும் ஜெயா பாதுரியின் விளையாட்டுதனமும் வசீகரிக்கின்றன.
கிராமத்திற்கு வரும் குரங்காட்டி, படம் காட்டுபவர். கோவிலில் சாமி முன்பாக உள்ள காசைத் திருடி ஐஸ் வாங்குவது. தோழி வீட்டிற்குச் சென்று சந்திப்பது, கிராமவீதிகளில் தன்னிஷ்டம் போல சுற்றியலைவது போன்ற காட்சிகள் கடந்த காலத்தின் நினைவைத் தூண்டுகின்றன.
பதின்ம வயதில் ஏற்படும் உடல் மன மாற்றங்களை, உணர்ச்சிகளை ஜெயா பாதுரி சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
அழகான ஒளிப்பதிவு. நேர்த்தியான பின்னணி இசை. அர்த்தமுள்ள படமாக உருவாக்கபட்டுள்ளது.

இணைப்பு.
June 11, 2025
காலத்தால் அழியாத உண்மை
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான சிக்ரிட் அன்ட்செட் எழுதிய கிறிஸ்டின் லாவ்ரான்ஸ்டேட்டர் நாவல் ஆயிரம் பக்கங்களுக்கும் மேலானது. மூன்று தொகுதிகளாக வெளியாகியுள்ளது. நாவலில் வரும் கிறிஸ்டியன், சிக்ரிட்டின் மாற்றுவடிவம் போலவே சித்தரிக்கபடுகிறாள். சிக்ரிட்டின் சொந்த வாழ்க்கை அவரது நாவலை விடவும் திருப்பங்களைக் கொண்டது. துயரத்தால் நிரம்பியது.

14ம் நூற்றாண்டில் கதை நடக்கிறது. மலைகிராமம் ஒன்றில் வாழும் லாவ்ரான்ஸின் மகளான கிறிஸ்டின் விளையாட்டுதனமானவள். ஒரு நாள் தனது தங்கை உல்விட்டோடு விளையாடிக் கொண்டிருக்கும் போது அடுக்கி வைத்திருந்த மரக்கட்டைகள் சரிந்து விழுந்துவிடவே உல்விட் காயமடைகிறாள். அதில் அவள் உயிர் பிழைக்கமாட்டாள் என்ற நிலை உருவாகிறது.
கிறிஸ்டின் அம்மா சூனியக்காரி ஆஷில்ட்டை அழைத்து வந்து மகளைக் குணப்படுத்தப் போவதாகச் சொல்கிறாள். கடவுளால் தன் மகளைக் காப்பாற்ற முடியாவிட்டால் தான் சாத்தனின் கதவையும் தட்டுவேன் என்கிறாள்.
தனது கணவனை விஷம் கொடுத்துக் கொன்றதாக ஊர்விலக்கம் செய்யப்பட்டுத் தனியே வாழ்ந்து வரும் ஆஷில்ட்டை அழைத்து வருகிறார்கள். அவள் மருந்து கொடுத்து உல்விட்டைக் குணப்படுத்துகிறாள். கட்டையை ஊன்றி நடக்குமளவு உல்விட் தயாராகிறாள்.. திருமணத்திற்கு முன்பே கிறிஸ்டின் தனது கன்னித்தன்மையை இழந்திருக்கிறாள். அதைச் சூனியக்காரி ஆஷில்ட் அறிந்திருக்கிறாள். அது குறித்து கிறிஸ்டினிடம் பேசுகிறாள். பரிகசிக்கிறாள்.
சைமன் டாரேவை கிறிஸ்டின் திருமணம் செய்து கொள்ளப் போகும் போது எதிர்பாராத பிரச்சனை உருவாகி தடைஏற்படுகிறது. இதற்கிடையில் அவளைப் பண்ணையில் வேலை செய்யும் ஒருவன் பலவந்தமாகப் பாலியல் உறவு கொள்ள முற்படுகிறான். அவனைக் கல்லால் தாக்கிவிட்டு தப்பியோடுகிறாள் கிறிஸ்டின். இதைப் பற்றி அவதூறு பேசியவனுடன் ஆர்னே சண்டையிடும் போது எதிர்பாராமல் கொல்லப்படுகிறான். நிலச்சரிவு போல எதிர்பாராமல் அவளது வாழ்க்கையின் உறுதி தகர்ந்து போகிறது.
துயரத்திலிருந்து விடுபடுவதற்காக ஒராண்டு காலம் கிறிஸ்டின் ஒஸ்லோவில் அமைந்துள்ள பெனடிக்டைன் மடாலயம் ஒன்றில் கன்னியாஸ்திரியாக சேருகிறாள். அங்கே புதிய தோழிகள் அறிமுகமாகிறார்கள்.
ஒரு நாள் எதிர்பாராதவிதமாக எர்லெண்ட் என்ற படைத் தளபதியை சந்திக்கிறாள். அவர்களுக்குள் காதல் அரும்புகிறது. வாழ்வின் இனிமையை மீண்டும் அறியத் துவங்குகிறாள். எர்லெண்ட் நீதிபதியின் மனைவியான எலைனுடன் சேர்ந்து வாழுகிறவன். அவனுக்குப் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்ற உண்மையை அறிந்து கொள்ளும் போது அதிர்ச்சி அடைகிறாள்.
ஆனாலும் அவன் மீதான காதலில் இணைந்து வாழ்வது எனமுடிவு செய்கிறாள். எர்லெண்டுடன் அவனது ஹுசாபி எஸ்டேட்டுக்கு செல்கிறார். அது மோசமாக நிர்வகிக்கப்படுவதைக் கிறிஸ்டின் கண்டுபிடிக்கிறாள். தானே பொறுப்பேற்று அதை ஒழுங்கமைக்கத் தொடங்குகிறாள் அவர்கள் புதிய வாழ்வினை துவங்குகிறார்கள். கிறிஸ்டினுக்குக் குழந்தைகள் பிறக்கிறார்கள்.
இந்நிலையில் அரசிற்கு எதிராக எர்லெண்ட் சதி செய்கிறான். அந்த முயற்சி தோல்வி அடையவே அவனது சொத்துகள் யாவும் பறி முதல் செய்யப்படுகின்றன. எல்லாவற்றையும் இழந்த கிறிஸ்டின் மீண்டும் தனது தந்தையின் பண்ணைக்குத் திரும்புகிறாள். அங்கேயும் எர்லெண்டால் பிரச்சனைகள் ஏற்படுகிறது.
காலம் ஒடுகிறது. அவளது பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். அவர்களின் திருமணம் நடக்கிறது. தனது மூன்றாவது மகனிடம் பண்ணையை ஒப்படைத்த பிறகு, கிறிஸ்டின் ட்ரொன்ட்ஹெய்முக்குத் திரும்புகிறாள்
நாடெங்கும் பிளேக் நோய் பரவுகிறது. நோய் பாதித்தவர்களுக்குச் சிகிட்சை அளிக்கும் பணியில் ஈடுபடுகிறாள். கடைசியில் அவளையும் பிளேக் தொற்றுகிறது. மரணத்தை எதிர்கொள்ளக் காத்திருக்கிறாள்.
கிறிஸ்டினின் வாழ்க்கைச் சரிதம் போல எழுதப்பட்டுள்ள இந்த நாவல் நார்வேயின் அரசியல், சமூக, வரலாற்று நிகழ்வுகளையும் கதையின் ஊடாகப் பேசுகிறது. குறிப்பாகக் கிறிஸ்துவச் சமயம் முன்வைக்கும் நம்பிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை நாவல் விவாதிக்கிறது.
கிறிஸ்டின் சைமனைத் திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொண்டு இன்னொருவனின் காதலை ஏற்றுக் கொள்கிறாள். அவளால் யாரைத் திருமணம் செய்வது என முடிவு செய்ய முடியவில்லை. அவளுக்காக இறந்த காதலனின் நினைவிலிருந்து விடுபடமுடியாமல் தவிக்கிறாள். அச்சமும் ஆசைகளுமே நம்மை வழிநடத்துகின்றன என்கிறாள் கிறிஸ்டின்
மடாலய வாழ்க்கை அவளுக்குப் பொருந்தவில்லை. அவள் எர்லெண்டை காதலிக்க ஆரம்பிக்கிறாள். அந்தக் காதலும் அவள் விரும்பிய வாழ்க்கையை அளிக்கவில்லை. கிறிஸ்டினின் குற்றவுணர்வு நாவலில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளது.

கிறிஸ்டினின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளில் பாதிக்கும் மேலாகச் சிக்ரிட் அன்ட்செட் வாழ்வில் நடந்திருக்கிறது. அவளும் இது போலக் காதல் திருமணம் செய்து கொண்டிருக்கிறாள். கணவனால் ஏமாற்றப்பட்டிருக்கிறார். கைக்குழந்தையோடு தனியே வாழ ஆரம்பித்துத் தனக்கென ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.
கிறிஸ்டினின் சிறுவயதில் பண்ணையில் நடைபெறும் நிகழ்வுகள். மதநம்பிக்கைகள். சைமனைத் திருமணம் செய்து கொள்வதற்கான நிச்சயம் செய்யும் போது நடக்கும் சடங்குகள். புனித ஒலாவ் பண்டிகை, கிராமப்புற நம்பிக்கைகள். சூனியக்காரிகளுக்கு எந்த வாக்குறுதியும் தந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை. கிறிஸ்துவ மடாலயத்தில் நடைபெறும் நிகழ்வுகள் எனப் பல்வேறு ஊடுஇழைகளைக் கொண்டு நாவலை சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்
கிறிஸ்டின் லாவ்ரான்ஸ்டேட்டர் போன்ற செவ்வியல் நாவல் வெறும் கதையை மட்டும் சொல்வதில்லை. மாறாக வாழ்வின் உண்மையான அர்த்தம் என்ன என்ற கேள்வியை எழுப்புகிறது. நாம் ஆசைப்படுவதற்கும் நமக்குக் கிடைப்பதற்குமான இடைவெளியை விவாதிக்கிறது. வாழ்வின் போக்கினை யார் தீர்மானிப்பது. அது காட்டாறு போலத் தன்னியல்பாகச் செல்லக்கூடியதா என்ற விசாரணையை மேற்கொள்கிறது. நன்மையும் தீமையும் பிரிக்க முடியாத படி ஒன்று கலந்திருப்பதாகக் நாவலில் ஒரு கதாபாத்திரம் சொல்கிறது. தாமஸ் ஹார்டியின் நாவல்களில் வரும் பெண் கதாபாத்திரம் போன்ற சாயலில் கிறிஸ்டின் உருவாக்கபட்டிருக்கிறார். கன்னித்தன்மை என்பதை பற்றிய விவாதத்தை கிறிஸ்டின் வழியாக சிக்ரிட் முன்னெடுக்கிறார்.
நாவலில் கிறிஸ்டினின் கனவுகள் எதுவும் நிறைவேறுவதில்லை. ஆனால் அவள் மகிழ்ச்சியான தருணங்களைத் தானே உருவாக்கிக் கொள்கிறாள். அது நீடிக்க வேண்டும் என்றும் விரும்புகிறாள். ஆனால் அவளது மகிழ்ச்சி நீடிப்பதில்லை. இயற்கை சதா மாறிக் கொண்டேயிருப்பது போலவே அவளது வாழ்வும் மாற்றம் கொள்கிறது.
மகள், காதலி, மனைவி, தாய் என்ற நான்கு நிலைகளில் கிறிஸ்டினிடம் வெளிப்படும் உணர்வுகளையும் அவளது மனப்போராட்டங்களை நாவல் மிகவும் சிறப்பாகச் சித்தரித்துள்ளது.
பெரிய நாவல்களை வாசிப்பதென்பது இன்றைய காலத்தின் வேகவாசிப்பிற்கு மாற்றானது. இது போன்ற நாவல்கள் மலையேற்றதைப் போல நம்மைச் சோதிக்கின்றன. ஆனால் மலையின் உச்சியை அடையும் போது நாம் காணும் விரிந்த, முழுமையான காட்சிகளைப் போல வாழ்வின் பிரம்மாண்டத்தை நாவல் முடியும் போது உணர முடிகிறது. நார்வேயில்,அதுவும் 14ம்நூற்றாண்டில் நடக்கும் கதை என்றாலும் கதையில் இடம்பெற்றுள்ள பல்வேறு நிகழ்வுகள் தமிழ் வாழ்க்கையோடு பொருந்திப் போகின்றன. கிறிஸ்டினின் அன்னை மற்றும் தந்தை நம் ஊரின் மனிதர்களைப் போலவே நெருக்கம் கொள்கிறார்கள்.
கிறிஸ்துவ நம்பிக்கைகள். பைபிள் கதைகள். நார்வேயின் தொல்கதைகள். புராணங்கள். உண்மையான வரலாற்று நிகழ்வுகள், பிளேக் பாதித்த நாட்கள் என நாவலைப் பல்வேறு பின்னல்களால் உருவாக்கியுள்ளார். கதையை வளர்த்துச் செல்வதிலும் கதாபாத்திரங்களின் உணர்ச்சி வெளிப்பாட்டினை எழுதுவதிலும். அபூர்வமான தருணங்களை உருவாக்குவதிலும் சிக்ரிட் அன்செட் மிகச் சிறந்த நாவலாசிரியராக மின்னுகிறார்.
••
June 9, 2025
வரையப்பட்ட பழங்கள்
“Poetry is an awareness of the world, a particular way of relating to reality.” என்கிறார் திரைப்பட இயக்குநர் ஆந்த்ரேய் தார்கோவெஸ்கி. அது ஓவியத்திற்கும் பொருந்தக்கூடியதே.

காமில் பிஸ்ஸாரோவின் ஆப்பிள் அறுவடை ஓவியம் 1888 ஆம் ஆண்டு வரையப்பட்டது, இந்த ஒவியத்தில் வண்ணங்களின் இணக்கம் மற்றும் துடிப்பு வசீகரமாகவுள்ளது. மரத்தின் சற்றே வளைந்த வடிவம் அதற்குத் தனி அழகை உருவாக்குகிறது. இது போன்ற சற்றே வளைந்த வடிவமாகவே கலைஞனும் இருக்கிறான். அந்த வளைவு இயற்கையாக உருவானது. வளைந்த மரம் என்பதால் அதன் கனிகள் கசந்து போவதில்லை. அந்த வளைவு மரத்திற்குத் தனித்துவத்தை அளிக்கிறது.
ஆப்பிளைச் சேகரிக்கும் பெண்கள் குனிந்திருக்கிறார்கள். அவர்களின் ஆடை வண்ணமே முதலில் கவர்கிறது. ஆப்பிள் பறிக்கும் ஆண் நேர்த்தியாக உடை அணிந்திருக்கிறான். விரிந்து பரந்திருக்கும் சூரிய வெளிச்சத்தை மரத்தின் நிழல்களே சமநிலை செய்கிறது. அதுவும் பின்புலத்தில் காட்டப்படும் வண்டியும் குதிரையும் அத்தனை அழகாக இருக்கிறது.
வழக்கமாக நிழலை வரைவதைப் போலப் பிஸ்ஸாரோ வரையவில்லை. உதிர்ந்த இலைகளின் அடர்த்தியைப் போல வரைந்திருக்கிறார். நீண்ட நேரமாக நடக்கும் அறுவடைப் பணியின் நடுவே இந்தக் காட்சி இடம்பெறுகிறது என்பதைக் குறிப்பது போலச் சேகரிக்கபட்ட பழங்கள் கொண்ட கூடை காணப்படுகிறது.
ஆப்பிள் அறுவடை செய்யும் அன்றாடக் காட்சி ஏன் ஓவியத்தில் முதன்மையாகிறது. இது ஆப்பிள் அறுவடையை மட்டும் குறிக்கவில்லை. மாறாகத் தொடரும் நிகழ்வு ஒன்றின் சிறு துண்டை அடையாளப்படுத்துகிறது. வேறு வேறு இசைத்துணுக்குகள் ஒன்று சேர்ந்து ஓலிப்பது போல இந்தக் காட்சி உருமாறுகிறது. ஆப்பிள் மரமோ, மனிதர்களோ அல்ல பிரகாசமாகச் சூரியனே ஓவியத்தினைச் சிறப்பாக்குகிறது,
ஆப்பிள் அறுவடை என்பது காலமாற்றத்தின் அடையாளம். அது பிஸ்ஸாரோ வின் அகவுணர்வின் வெளிப்பாடாகவும் மாறுகிறது, பாயிண்ட்லிசம் பாணியில் வரையப்பட்ட இந்த ஓவியத்தில் வண்ணப்புள்ளிகள் உயிர்ப்புடன் விளங்குகின்றன.
ஒரு ஆப்பிளையோ, பேரிக்காயினையோ, அல்லது திராட்சை பழங்களையோ ஓவியத்தில் காணும் போது வியப்பான பொருளைப் பார்ப்பது போலிருக்கிறது. பயன்பாட்டிலிருந்து ஒரு பொருளை துண்டித்தவுடன் அது விசித்திரமாகிவிடுகிறது.
பழங்களைப் பொறுத்தவரை அதைக் காலத்தின் குறியீடாகத் தத்துவம் கருதுகிறது. கவிதை அதனைக் கனிவின் வெளிப்பாடாகவும் இச்சையின் வடிவமாகவும் பதிவு செய்கிறது. பழங்களை வரைவதென்பது ஓவியத்தில் முக்கியப் பயிற்சி. குறிப்பாகப் பழங்களின் வடிவம், நிறம் மற்றும் அதன்மீது படரும் வெளிச்சம். நீர்துளிகள் மற்றும் அதன் இருப்பு நுண்மையாக வெளிப்படுத்தபடுகிறது.
மரத்தடியில் உதிர்ந்து கிடக்கும் பழமும், கூடையில் வைக்கப்பட்டுள பழமும் ஒன்றல்ல. இரண்டின் இடமும் இருப்பும் வேறுவேறு பொருள் தரக்கூடியதே. ஓவியம் வாடாத மலர்களை உருவாக்கியதைப் போலக் காலத்தின் பிடியிலிருந்து பழத்தை விடுவிக்கிறது.
கலைவிமர்சகர் டேவன்போர்ட் ஆப்பிள் மற்றும் பேரிக்காய் பற்றி அழகாக எழுதியிருக்கிறார், பேரிக்காய் மனிதனுக்கும் தெய்வீகத்திற்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்துகிறது. அதே நேரம் ஆப்பிள் விலக்கப்பட்ட கனியாகக் கருதப்படுகிறது. ஆப்பிள் வழியாகவே தீமை உலகிற்கு அறிமுகமாகிறது. பேரிக்காய் வழியே அது சமன் செய்யப்படுகிறது என்கிறார் டேவன்போர்ட்.
ஆப்பிளும் பேரிக்காயும் ஒன்றாக இடம்பெற்றுள்ள ஒவியம் என்பது குறீயிட்டு பொருள் கொண்டது. டேவன்போர்ட் வீட்டில் இந்த இரண்டு மரங்களும் ஒன்றாகப் பிணைந்து நின்றிருந்தன என்கிறார்கள். நியூட்டனின் காலடியில் ஆப்பிள் விழுந்ததிற்குப் பதிலாகப் பேரிக்காய் விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் எனக் கேள்வி எழுப்புகிறார்.
கருவுறுதல், நல்ல அதிர்ஷ்டம் மற்றும் நீண்ட ஆயுளை ஆப்பிள் குறிப்பதாக நம்புகிறார்கள், கஜகஸ்தானில் பெண்கள் கருவுறுதலுக்காக ஆப்பிள் மரத்தின் கீழ் அடியில் படுத்துக் கொள்வது வழக்கம்.. இது போலவே ஆர்மீனியாவில்மணமக்கள் நல்ல அதிர்ஷ்டத்திற்காக ஒரு ஆப்பிளை வீச கூரையின் மீது ஏறி வீசுகிறார்கள். கிரேக்கப் புராணத்தில் வரும் தங்க ஆப்பிள் என்பது விசுவாசத்தின் அடையாளமாகும்.
மத்திய கிழக்கு நாடுகளில் கதை சொல்லி தனது கதையை முடிக்கும் போது மூன்று ஆப்பிள்கள் சொர்க்கத்திலிருந்து விழுந்தன: ஒன்று இந்தக் கதையைச் சொல்பவருக்கு, மற்றொன்று கதையைக் கேட்டவருக்கு, மூன்றாவது கதையில் வருபவருக்கு என்கிறார். ஆப்பிள் என்பது வான்வுலகின் பரிசாகக் கருதப்படும் மரபது.

பிஸ்ஸாரோவின் ஆப்பிள் அறுவடையைப் போலவே செசானின் ஆப்பிள்களும் புகழ்பெற்றவை. செசானின் ஓவியம் 1877 ஆம் ஆண்டு வரையப்பட்டது. அந்த எட்டு ஆப்பிள்கள் மாறாத வாழ்வின் இனிமையை அடையாளம் காட்டுவதாகச் சொல்கிறார்கள். வேறு வேறு ஆப்பிள்களின் இடையே ஒரு இணைப்பு மற்றும் சமநிலை உணர்வை உருவாக்குகிறார் செசான். அவர் வண்ணத்தையும் ஒளியையும் பயன்படுத்தும் அழகு வியப்பூட்டக்கூடியது.
தனது மாடல்களிடம் ஒரு ஆப்பிளாக இருங்கள் என செசான் உத்தரவிடுவார் என்கிறார்கள். ஒருவர் ஆப்பிளாக இருப்பது என்பது அசைவற்ற நிலை மட்டுமில்லை. முழுமையாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் நிலையுமாகும்.. தன்னையே ஆப்பிளுடன் செசான் ஒப்பிட்டுக் கொள்கிறார்.
உலகின் பார்வையில் ஆப்பிள் கொண்டிருக்கும் மதிப்பு பயன்பாடு கருதியது. ஆனால் அதைச் சமயம், வரலாறு, காலமாற்றம். கலையின் முழுமை, உணர்ச்சியின் வடிவம் எனப் பல்வேறு நிலைகளுக்கான அடையாளப் பொருளாக ஓவியமே மாற்றுகிறது. அசைவற்ற நிலையில் உறைந்துள்ள பழங்கள் மகத்தான சிற்பங்களைப் போலவே காட்சியளிக்கின்றன. பரவசம் தருகின்றன
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
