S. Ramakrishnan's Blog, page 6

July 15, 2025

புதிய மொழி

தாவோ கோவிலுக்குச் செல்வது எப்படி என்றொரு ஆங்கிலக் கவிதை தொகுப்பை மலையாள கவிஞர் சச்சிதானந்தன் வெளியிட்டுள்ளார். இருமொழிகளில் வெளியாகியுள்ள இந்தத் தொகுப்பை INTERNATIONAL POETRY NIGHTS IN HONG KONG வெளியிட்டுள்ளது. இதில் மிகச்சிறந்த கவிதைகள் இடம்பெற்றுள்ளன

இந்தத் தொகுப்பின் முதல்கவிதை திக்குவாய் பற்றியது. மிக அழகாக எழுதியிருக்கிறார். இந்தக் கவிதை திக்குவாயை ஒரு குறீயிடாக மாற்றுகிறது. திக்குவாய் குறித்த கேலிகள். அவமானங்களைப் புறந்தள்ளி அதனைப் புதியதொரு மொழியாக அறிவிக்கிறது.

••

திக்குவாய் என்பது ஒரு குறையல்ல.

அது ஒரு பேச்சு முறை.

திக்குவாய் என்பது வார்த்தைக்கும் அதன் அர்த்தத்திற்கும்

இடையில் விழும் மௌனம்,

எல்லோரும் திக்கிப் பேசும் போது,

திக்குவாய் அவர்களின் தாய்மொழியாக மாறுகிறது:

இப்போது நம்மிடம் இருக்கும் மொழியைப் போல.

மனிதனைப் படைத்தபோது கடவுளும் திக்கிப் பேசியிருக்கக வேண்டும்.

அதனால்தான் மனிதனின் அனைத்து வார்த்தைகளும்

வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டுள்ளன.

அவரது பிரார்த்தனைகள் முதல் கட்டளைகள் வரை,

அனைத்தும் தடுமாறுகின்றன.

கவிதையைப் போல,

கே. சச்சிதானந்தன்.

(நீண்ட இக்கவிதையின் சில பகுதிகளை மட்டுமே மேலே கொடுத்துள்ளேன்.)

கவிதை என்பதே சொல்ல வந்ததை முழுமையாகச் சொல்ல முடியாமல் திக்கிப் பேசியதே ஆகும். அது நேரடி பொருளைத் தராது. நாமாகப் பொருள் கொள்ள வேண்டும் என்ற கவிஞரின் பார்வை சிறப்பானது.

இந்தியாவின் சிறந்த கவிஞர்களில் ஒருவராக அறியப்படும் கே. சச்சிதானந்தனின் கவிதைகள் முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியுள்ளன. அவரும் நிறைய உலகக் கவிதைகளை மலையாளத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

கவிதையில் திக்குவாய் குறித்த சச்சிதானந்தனின் பார்வை நமக்குள் படிந்திருந்த பொதுப்பிம்பத்தை மாற்றுகிறது.

ஒருவர் திக்கிப் பேசும் போது படிகளில் உருண்டோடும் கோலிகளைப் போலச் சொற்கள் தாவித்தாவி வெளிப்படுவதாகவும், திக்கிப் பேசும் போது சொல் இசையாவது போலவும் உணரச் செய்கிறது.

புதிய மொழியைக் கற்றுக் கொள்ளும் போது நாம் எல்லோரும் திக்குவாயர்களே என்பதைப் புரிய வைக்கிறது.

••

,

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 15, 2025 04:57

July 14, 2025

போரும் காதலும்

ஜெர்மானிய எழுத்தாளர் எரிக் மரியா ரெமார்க்கின் A Time to Love and a Time to Die நாவல் போரின் துயர நாட்களை விவரிக்கிறது. ஹெமிங்வேயின் A Farewell to Arms நாவலைப் போன்ற கதைக்களம் கொண்டது. இதில் போர் முனையிலிருந்து வீடு திரும்பி வரும் சிப்பாய் கிரேபரின் காதலும், பெற்றோரை தேடும் அவனது இடைவிடாத பயணமும் விவரிக்கபடுகிறது.

போரை முதன்மைப்படுத்திய ஐரோப்பிய நாவல்களுக்கும் ரஷ்ய நாவல்களுக்கும் நிறைய வேறுபாடிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளின் போர் நாவல்களில் ஜெர்மனி மீது கடுமையான விமர்சனம் வைக்கபடுகிறது. போரை சமூகக் குற்றமாக கருதும் எண்ணம் அழுத்தமாக வெளிப்படுகிறது. ஆனால் ரஷ்யப் போர் நாவல்களில் தேசப்பற்று. வீரம். மற்றும் பெருமிதம் மேலோங்கியிருக்கிறது. அது ரஷ்ய ராணுவத் தலைமை பற்றி எந்த விமர்சனத்தையும் முன்வைப்பதில்லை.

எரிக் மரியா ரெமார்க் முதலாம் உலகப் போரின் போது இம்பீரியல் ஜெர்மன் இராணுவத்தில் பணியாற்றியவர். போரில் குண்டுவீச்சின் காரணமாக இடது கால், வலது கை மற்றும் கழுத்தில் காயமடைந்தவர்.  இராணுவ மருத்துவமனையில் சிகிட்சை பெற்று  நலமடைந்திருக்கிறார். ஆகவே போர் முனையில் நடைபெறும் நிகழ்வுகளை தனது எழுத்தில் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார்.

போருக்குப் பின்பு ஒராண்டு காலம் பள்ளி ஆசிரியராக பணியாற்றியிருக்கிறார்.  சில காலம் நூலகராகவும் பத்திரிக்கையாளராகவும் வேலை செய்த அனுபவம் அவருக்கு உண்டு

போரிலிருந்து வீடு திரும்பிய பிறகு, போரின் துயரநினைவுகளும் அவரது அன்னையின் மரணமும் அவருக்கு மிகுந்த மன அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த துயரிலிருந்து விடுபடவே எழுத ஆரம்பித்தார். போர் அவரது எழுத்தின் ஊற்றுக்கண்ணாக மாறியது.  

••

இரண்டு ஆண்டுகளாகத் தனது வீட்டிற்குத் திரும்பாமல் போர்முனையில் கழிக்கும் கிரேபருக்கு மூன்று வாரங்களுக்கு விடுமுறை அளிக்கபடுகிறது. அவன் தனது சொந்த ஊருக்குத் திரும்புகிறான். பெர்லின் நகரம் விமானத்தாக்குதலில் அழிக்கபட்டு சிதைந்த நிலையில் இருக்கிறது.. நேச நாடுகளின் குண்டுவீச்சு இரவும் பகலும் தொடர்கிறது.

அவனது பெற்றோர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. அவனது வீடும் நொறுக்கிக் கிடக்கிறது. அவர்கள் குடியிருந்த வீதி அடையாளம் தெரியாதபடி சிதறுண்டு போயிருக்கிறது. உயிர் பிழைத்து வெளியேறிப் போனவர்கள் தங்கள் வீட்டுக்கதவில் சில தகவல்களை ஒட்டிப் போகிறார்கள். கிரேபர் தனது பெற்றோர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முனைகிறான். எதுவும் கிடைக்கவில்லை.

தனது பெற்றோர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள, குடும்ப மருத்துவரான டாக்டர் க்ரூஸைத் தேடிச் செல்கிறான். டாக்டர் வீட்டில் அவரது மகள் எலிசபெத் மட்டுமே வசிக்கிறாள். அவள் கிரேபரைச் சந்தேகப்படுகிறாள். ஒருவேளை நாஜி ராணுவம் இப்படி ஆள் அனுப்பிக் கண்காணிக்கிறதோ எனப் பயப்படுகிறாள். கிரேபர் தனது நோக்கத்தைச் சொன்னதும் அவள் கிரேபரைப் புரிந்து கொள்கிறாள்.

நாஜி ஆட்சியைப் பற்றி விமர்சனம் செய்த காரணத்திற்காக டாக்டர் க்ரூஸ் கைது செய்யப்பட்டு வதைமுகாமில் அடைக்கபட்டிருக்கிறார். என்றாவது தனது தந்தை திரும்பி வரக்கூடும் என எலிசபெத் அதே வீட்டில் காத்துக் கொண்டிருக்கிறாள்.

தனது பெற்றோர்களுக்குக் கொடுப்பதற்காகக் கொண்டு வந்த பரிசினை எலிசபெத்திற்கு அளிக்கிறன் கிரேபர். அவள் அதை ஏற்க மறுத்துவிடுகிறாள். அது கிரேபருக்கு ஆத்திரத்தை உண்டாக்குகிறது. தன்னை அவள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாள் எனக் கோபத்தை வெளிப்படுத்துகிறான்.

அவனைப் போலவே நகரின் இடிபாடுகளுக்குள் தனது உறவுகளைத் தேடும் போர் வீர்ர்களுக்கான முகாமில் கிரேபர் தங்குகிறான். அந்த முகாமில் மனைவியை இழந்த ஒருவர் அவளைத்தேடி நகரெங்கும் அலைகிறார். கால் உடைந்த ராணுவ அதிகாரி எப்போதும் சீட்டுவிளையாடிக் கொண்டேயிருக்கிறார். கிரேபர் தனது தேடுதலை தொடர்கிறான். அப்போது நாஜிகளுக்குப் பயந்து பலரும் ரகசியமாக ஒளிந்து வாழ்வதை அறிந்து கொள்கிறான்.

ராணுவத்தில் பணியாற்றுவதால் எல்லைப்பகுதியில் என்ன நடக்கிறது என்பதை அவன் யாரிட்டும் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. அது போலவே தலைநகரில் என்ன நடந்தது என்பதை அவனும் அறிந்திருக்கவில்லை.

1944ல் அவனது படைப்பிரிவு உக்ரேனிய கிராமம் ஒன்றில் முகாமிடுகிறது. பனியில் இறந்து கிடந்த ஜெர்மானிய ராணுவ அதிகாரி ஒருவரின் உடலை அடையாளம் கண்டு புதைக்கிறார்கள். கிராமத்தில் போராளியாகச் சந்தேகிக்கும் உக்ரேனியர்களை ராணுவம் சுட்டுக் கொல்கிறது. அதைக் கண்டு கிரேபர் வருத்தம் அடைகிறான். அப்பாவி பொதுமக்களை ஏன் ராணுவம் வேட்டையாடுகிறது எனக் குற்றவுணர்வு கொள்கிறான். அந்த நினைவுகள் ஊர்வந்த பின்பும் அவனை அலைக்கழிக்கிறது.

எலிசபெத் சீருடைகள் தைக்கும் தொழிற்சாலையில் பணியாற்றுகிறாள். அது கட்டாயப்பணி. ராணுவத்தின் தேவைக்காக அந்தத் தொழிற்சாலை இயங்குகிறது. கிரேபரை மறுபடியும் சந்திக்கும் எலிசபெத் அவனிடம் மன்னிப்பு கேட்கிறாள். அவர்களுக்குள் புதிய நட்பு உருவாகிறது.

ஒரு நாள் தற்செயலாகக் கிரேபர் தனது பழைய வகுப்புத் தோழனான ஆஸ்கார் பைண்டிங்கை சந்திக்கிறான். அவன் இப்போது நாஜி கட்சியின் பிராந்திய தலைவராக இருக்கிறான். அரண்மனை போன்ற வீடு. ஆடம்பர வசதிகள். சேவகர்கள். அவன் கிரேபரை தனது வீட்டிலே தங்கிக் கொள்ளும்படி அழைக்கிறான். நீண்ட காலத்தின் பின்பு அவனது வீட்டில் கிரேபர் சுகமாகக் குளிக்கிறான். குடிக்கிறான். தன்னால் வதைமுகாமில் இருக்கும் எவரையும் விடுதலை செய்ய முடியும் எனப் பைண்டிங் சொல்கிறான். ஆகவே டாக்டர் க்ரூஸை விடுதலை செய்வதற்குத் தன்னால் ஏதாவது செய்ய முடியுமா எனக் கிரேபர் யோசிக்கிறான்.

கிரேபரும் எலிசபெத்தும் காதலிக்கிறார்கள். கிரேபர் தனது நண்பரான முன்னாள் ராணுவ அதிகாரியிடமிருந்து அழகான சீருடையைக் கடன்வாங்கி அணிந்து கொண்டு எலிசபெத்தை உயர் ரக விடுதி ஒன்றுக்கு விருந்திற்கு அழைத்துப் போகிறான்.  போர் நடக்கும் காலம் என்பதால் ஆடம்பர விருந்துகள் தடைசெய்யப்பட்டிருந்தன. ஆயினும் ராணுவத்தினருக்காகவும் பிரபுக்களுக்காகவும் இது போன்ற உயர் ரக விடுதிகள் செயல்பட்டன.

அந்த விடுதியில் என்ன வகையான ஒயின் கிடைக்கும், எப்படி அதைப் பெற வேண்டும் என்று ராணுவ அதிகாரி அவனுக்குப் பாடம் கற்பித்திருக்கிறார். எலிசபெத் அந்த விருந்தில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறாள். ஆனால் எதிர்பாராமல் நடக்கும் வான்வழித் தாக்குதலில் விருந்து நடக்குமிடம் நொறுங்கிப் போகிறது. பலரும் காயமடைகிறார்கள்.

அந்த விருந்தின் போது எரிக் மரியா ரெமார்க் எழுதுகிறார்

”After his years close to death the wine was now not just wine, the silver not just silver, and the music that stole into the room from somewhere not just music – they were all symbols of that other life, the life without death and destruction, the life for life’s sake that had already become almost a myth and a hopeless dream.”

தனது விடுமுறைக்காலம் முடிவதற்குள் எலிசபெத்தைத் திருமணம் செய்து கொள்ளக் கிரேபர் விரும்புகிறான். இதற்காகத் திருமணப் பதிவு மையத்திற்குப் போகிறார்கள். அங்கே நடக்கும் ரகசிய விசாரணையில் எங்கே திருமணம் நிறுத்தப்படுமோ என்ற நிலை ஏற்படுகிறது. ஆனால் அவர்கள் முறையாகத் திருமணம் செய்து கொள்கிறார்கள். புதிய வாழ்க்கையைத் துவங்குகிறார்கள்.

பெர்லின் மீது நடக்கும் தொடர் விமானதாக்குதலில் அவர்களின் குடியிருப்பு நொறுங்கி போகிறது. வசிக்க வீடில்லை. இடிந்த அருங்காட்சியகம் ஒன்றில் இரவைக் கழிக்கிறார்கள். இதற்கிடையில் வதைமுகாமிலிருந்து எலிசபெத்தை நேரில் வரச் சொல்லி ஒரு கடிதம் வருகிறது. அது கிரேபரை அச்சப்படுத்துகிறது.

பாழடைந்த கட்டிடத்தில் வசித்து வரும் தனது பழைய பேராசிரியர் போல்மேனைச் சந்தித்து அக் கடிதம் குறித்து ஆலோசனை செய்கிறான் யூதர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறார் என அவரும் காவல்துறையின் கண்காணிப்பில் இருக்கிறார். ஆகவே வெளிப்படையாகப் பேச மறுக்கிறார்.

எலிசபெத்தின் கடிதத்தை மறைத்துக் கொண்டு அவனே நேரடியாக விசாரணை அலுவலகம் செல்கிறான். ஆனால் அங்கே டாக்டர் க்ரூஸின் மரணத்தை அறிந்து கொள்கிறான். அதை எலிசபெத்திற்கு அவன் தெரிவிப்பதில்லை.

கிரேபர் போர்முனைக்குத் திரும்பிப் போகிறான். இப்போது அவன் மாறியிருக்கிறான். தனது மனசாட்சிக்கு விரோதமாக நடந்து கொள்ளக் கூடாது என்ற முடிவில் இருக்கிறான். அந்த முடிவு அவனை எங்கே கொண்டு செல்கிறது என்பதை நாவல் விவரிக்கிறது.

போரும் பேரழிவுமாக உள்ள இந்த உலகிற்கு ஒரு குழந்தை தேவையா. ஆகவே நாம் குழந்தை பெற்றுக் கொள்ளக்கூடாது என்று  சொல்கிறான் கிரேபர். இந்த உலகை இப்படியே விட்டுவிட முடியாது. அதை மாற்றுவதற்குக் குழந்தைகள் தேவை என்கிறாள் எலிசபெத்.

அந்த நம்பிக்கை எலிசபெத்தின் குரல் மட்டுமில்லை. அது தான் எரிக் மரியாவின் அடையாளம்.

வீடு திரும்பும் போது கிரேபர் தனது கடந்தகாலத்தை நினைவு கொள்கிறான். எரிக் மரியா ரெமார்க் அதை எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார் பாருங்கள்

“He thought of the breakfast table at home. His mother had a blue and white checked tablecloth and there had been honey and rolls and coffee with hot milk. The canary had sung and in summer the sun had shone upon the rose geraniums in the window. At that time he had often rubbed the dark green leaves between his hands smelling the strong, foreign perfume and thinking of foreign lands. Since then he had seen plenty of foreign lands but not the way he had dreamed of at that time.”

All Quiet on the Western Front நாவலின் மூலம் போரின் அவலத்தை மிகவும் யதார்த்தமாகவும் உண்மையாகவும் எழுதியவர் எரிக் மரியா ரிமார்க். இந்த நாவலில் போரை அதிகம் விவரிக்கவில்லை. அழிவிற்கு மத்தியில் துளிர்விடும் காதலைப் பேசுகிறார். இடிபாடுகளுக்குள் முளைத்து வரும் தாவரம் போன்றதே அந்தக் காதல். இந்த நாவலில் பேராசிரியர் போல்மென் போன்று யூதர்களைக் காப்பாற்றிய ஜெர்மனியரை சிறப்பாக அடையாளம் காட்டுகிறார். போரையும் காதலையும் சொன்னவிதத்தில் இந்த நாவல் இன்றும் முக்கியமானதே.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 14, 2025 03:59

July 12, 2025

அலமாரியில் உறங்குகிறவன்.

போலந்து எழுத்தாளர் ஸ்லாவோமிர் மிரோசெக் (Slawomir Mrozek) கதை ஒன்றில் ஒருவன் தனது அறையில் உள்ள படுக்கை, பீரோ, மேஜை மூன்றும் நீண்டகாலமாக ஒரே இடத்தில் இருப்பதை நினைத்துச் சலிப்படைகிறான்.

அறையில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என விரும்பி அலமாரியை நகர்த்தி வேறு பக்கம் வைக்கிறான். படுக்கையை அந்தப் பக்கம் திருப்புகிறான். மேஜையை ஒரமாக நகர்த்திவிடுகிறான். இந்த மாற்றம் பிடித்திருக்கிறது. ஆனால் சில நாட்களில் மீண்டும் அறையின் தோற்றம் சலிப்பை உருவாக்குகிறது.

இந்த முறை அறையின் நடுவில் அலமாரியை வைத்துவிட்டுப் படுக்கை மற்றும் மேஜையை இடம் மாற்றுகிறான். இதனால் அறையில் நடப்பதற்குச் சிரமமாக உள்ளது. ஆனால் மாற்றத்தை விரும்பி ஏற்றுக் கொள்கிறான். இதுவும் சில நாட்களில் பழகிப்போகிறது.

இந்த முறை ஏதாவது பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைத்து படுக்கைக்குப் பதிலாக அலமாரியில் உறங்குவது என முடிவு செய்கிறான். அது சௌகரிய குறைவு. எந்த அலமாரியும் மனிதனை உறங்க விடாது. அதற்குள் கால்களை மடக்கி உறங்குவது சிரமம் எனப் பல்வேறு யோசனைகள் வந்தாலும் புதிய மாற்றத்தை அனுபவிக்க வேண்டும் என அவன் அலமாரியினுள் உறங்க ஆரம்பிக்கிறான்.

கால்களில் வீக்கம் மற்றும் முதுகுவலி உருவாகிறது. ஆனால் அதைத் தாங்கிக் கொண்டு குறிப்பிட்ட காலம் வரை அலமாரியினுள் உறங்குகிறான். ஆனால் அதுவும் சலித்துப் போகிறது.

பழையபடி அலமாரியை இடம் மாற்றுகிறான். படுக்கையைச் சுவரை ஒட்டி போடுகிறான். அருகில் மேஜையை வைக்கிறான். முன்பு இருந்த நிலைக்கு அறை திரும்பிவிடுகிறது. எப்போதாவது திரும்பச் சலிப்பு வரும் போது தான் அலமாரியின் உறங்கிய அந்தப் புதுமையை நினைத்துப் பார்த்து மகிழ்ந்து கொள்கிறான்.

இது மிரோஜெக்கின் கதையில் வரும் நிகழ்வு மட்டுமில்லை. நமது அறை அல்லது வீடு இதே சலிப்பை ஏற்படுத்துகிறது. நாமும் இப்படிப் பொருட்களை இடம் மாற்றி வைத்துக் கொண்டேயிருக்கிறோம். உண்மையில் மாற வேண்டியது பொருட்களில்லை. நாம் தான்.

நமது வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. புதிய விஷயங்கள் எதுவுமில்லை. சிலந்தியைப் போல வாழப் பழகிவிட்டிருக்கிறோம். பொருட்களின் இடமும் இருப்பும் அதை நினைவுபடுத்துகின்றன. ஆணியில் தொங்கவிடப்பட்ட மஞ்சள் பையை போலாகிவிட்டிருக்கிறது நமது அன்றாட வாழ்க்கை. தேவையின் போது மஞ்சள் பை யார் கையிலாவது கொஞ்ச நேரம் இருக்கிறது. பயன்படுத்தப்படுகிறது பின்பு அதே ஆணி. அதே அசையாத இருப்பு.

பொருட்களை இடம் மாற்றியவுடன் வீட்டில் புதிய மாற்றம் வந்துவிட்டது போலத் தற்காலிக சந்தோஷம் கொள்கிறோம். உண்மையான மாற்றம் வருவதுமில்லை. அதை நோக்கி நாம் நகர்வதுமில்லை.

மிரோஜெக்கின் இக்கதை அரசியல் நையாண்டி கொண்டது. போலந்தில் நடந்த மாற்றங்கள் யாவும் அலமாரியில் உறங்கியவனின் கதை தான் என்கிறார். மிரோஜெக்கின் கதைகளில் வெளிப்படும் நகைச்சுவை அபாரமானது. இக்கதையில் வருபவனின் வயதோ, வேலையோ எதுவும் நமக்குத் தெரியாது. ஆனால் அவனது சலிப்பு உண்மையானது. அந்த மாற்றம் நாம் விரும்புவது.

How To Make Millions Before Grandma Dies என்ற தாய்லாந்து திரைப்படத்தில் பாட்டி வீட்டிற்கு வரும் பேரன் அறையைச் சுத்தம் செய்யும் போது சாமி படம் ஒன்றை சற்று நகர்த்தி வைத்துவிடுகிறான். இதற்கா பாட்டி கோவித்துக் கொள்கிறாள். சாமி எந்தப் பக்கம் பார்த்தாலும் ஒன்று தானே என்கிறான் பேரன். அப்படியில்லை. சாமியின் இடத்தை மாற்றக்கூடாது. அதனதன் இடம் என்பது ஒரு அடையாளம். உறுதிப்பாடு. சாமியும் இடம் மாறினால் கோவித்துக் கொள்ளும் என்கிறாள் பாட்டி..

பொருட்கள் இடம் மாறியவுடன் ஏற்படும் வெற்றிடம் நமக்கு எதையோ சொல்கிறது. வீட்டுச் சுவரில் மாட்டப்பட்ட எல்லாப் புகைப்படங்களையும் ஒவியங்களையும் அகற்றியபின்பு வெற்றுசுவராக மாறும் போது விசித்திரமான தோற்றம் உருவாகிறது. சுவர்களின் மௌனத்தை மறைப்பதற்குத் தான் இத்தனை புகைப்படங்களை, ஒவியங்களை மாற்றிவைத்திருக்கிறோமோ என்றும் தோன்றுகிறது

மிரோஜெக்கின் கதையைப் போலவே பீட்டர் பிக்ஃசெல் (Peter Bichsel) எழுதிய மேஜை என்றால் மேஜை  சிறுகதையில் தனது வீட்டிலுள்ள பொருட்களின் பெயர்களை மாற்றிவிடுகிறார் ஒரு கிழவர். அதே பொருள் வேறு பெயரில் அழைக்கபடும் போது புதியதாகிறது. அவர் தனக்கென ஒரு சொந்தமொழியை உருவாக்கிக் கொள்கிறார். அந்த மொழிக்குள்ளாக வாழ ஆரம்பிக்கிறார்.

உண்மையில் ஒவ்வொருவருக்கும் ஒருவகை சொந்த மௌனம் இருக்கிறது. எந்த இருவரின் மௌனமும் ஒன்று போலிருப்பதில்லை. அவரவர் மௌனத்திற்குள் ஆழ்ந்து போயிருக்கிறார்கள். நீருக்குள்ளிருந்த மீன் மேற்பரப்பிற்கு வருவது போல எப்போதாவது மொழியின் தளத்திற்கு வருகிறார்கள். உரையாடுகிறார்கள். ஆனால் மனதின் ஆழத்தில் உள்ள மௌனம் அப்படியே இருக்கிறது.

மிரோஜெக்கின் இன்னொரு கதையில் சிறுவர்கள் ஒன்று கூடி பனிமனிதனை செய்கிறார்கள். பனிமனிதனுக்கு மூக்கு செய்வதற்காகக் கேரட்டை வைத்துவிடுகிறார்கள். அன்றிரவு அந்தச் சிறுவர்களின் பெற்றோர்களைத் தேடிவரும் அதிகாரி அந்த மூக்குத் தன்னைக் குறிப்பதாகச் சொல்லி கோவித்துக் கொள்கிறார். அந்தப் பனிமனிதன் கூட்டுறவு சங்க முறைகேட்டினை அடையாளம் காட்டுவதாக இன்னொருவர் கோபம் கொள்கிறார். பனிமனிதன் சட்டையில் உள்ள பொத்தான்கள் உயரதிகாரியை குறிக்கிறது. ஆகவே உங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும் எனப் பெற்றோர்களை எச்சரிக்கை செய்கிறார்கள்.

சிறுவர்களோ தங்களுக்கு அப்படி எந்த எண்ணமும் கிடையாது என்று மறுக்கிறார்கள். அதிகாரத்தின் மிரட்டலுக்குப் பயந்து பெற்றோர்கள் சிறுவர்களை தண்டிக்கிறார்கள். மறுநாள் அது போலவே பனியில் விளையாடச் சிறுவர்கள் செல்கிறார்கள். இந்த முறை அவர்கள் தங்களை மிரட்டியவர்களின் உருவத்திலே பனிச்சிற்பம் செய்ய முடிவு செய்கிறார்கள். அது அவர்களுக்கு மிகுந்த வேடிக்கையான விஷயமாகிறது.

மிரோஜெக் ஒரு நாடகாசிரியர் என்பதால் அவரால் கதைக்குள்ளும் சிறிய நாடகத் தருணத்தை உருவாக்க முடிகிறது. அது இரண்டு கதைகளிலும் அழகாக வெளிப்படுகிறது. இந்தக் கதைகளை அப்படியே ஒருவரால் நாடகமாக்கிவிட முடியும் என்பதே இதன் சிறப்பு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 12, 2025 07:32

திரைப்பயணி

உலகின் சிறந்த திரைப்படங்களை அறிமுகம் செய்யும் விதமாக திரைப்பயணி என்ற காணொளித் தொடரைத் துவங்கியுள்ளேன்.

தேசாந்திரி யூடியூப் சேனலில் இதனைக் காணலாம். இந்த தொடரின் முதல் பகுதி நேற்று வெளியாகியுள்ளது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 12, 2025 05:59

July 10, 2025

கடல் திரும்பும் திமிங்கலம்

ஈரானிய அனிமேஷன் இயக்குனர் ஹொசைன் மொலாயெமி மற்றும் ஷிரின் சோஹானி இயக்கத்தில் வெளியான இன் தி ஷேடோ ஆஃப் தி சைப்ரஸ் சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதைப் பெற்றிருக்கிறது.

20 நிமிஷங்கள் கொண்ட இந்தப் படத்தில் உரையாடலே கிடையாது. நான்கு கதாபாத்திரங்கள்.

போரின் பாதிப்பால் மனஅழுத்தம் கொண்ட தந்தை. அவரைக் கவனித்துக் கொள்ளும் மகள். கரையொதுங்கிய ஒரு திமிங்கலம். நான்காவது கதாபாத்திரமாக இருப்பது கடல்.

இந்தப் படத்தை உருவாக்க ஆறு ஆண்டுகள் ஆனது என்கிறார் இயக்குநர். ஷிரின் சோஹானியின் தந்தை ஒரு சிப்பாய். ஈராக் போரின் காரணமாக அவரது ஒரு கண் பறிபோயிருந்தது. போரின் விளைவாகத் தீவிர மன அழுத்தம் ஏற்பட்டுச் சிகிட்சை எடுத்து வந்தார். ஆகவே அவரது சாயலில் படத்தில் வரும் கேப்டனை உருவாக்கியிருக்கிறார்கள்.

தந்தையும் மகளும் யாருமற்ற கடற்கரையொன்றில் வசிக்கிறார்கள். தந்தையின் அடக்க முடியாத கோபத்துடன் படம் துவங்குகிறது. அந்தக் கோபம் மீன் தொட்டியைச் சிதறடிக்கிறது. மகள் தந்தையிடம் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறுகிறாள். அப்போது கடற்கரையில் ஒரு திமிங்கலம் கரையொதுங்கியிருப்பதைக் காணுகிறாள்.

அதை மீண்டும் கடலுக்கு அனுப்புவதற்காக அதன் மீது தண்ணீர் ஊற்றுகிறாள். தந்தையோ படகில் கயிற்றைக் கட்டி திமிங்கலத்தைக் கடலுக்குள் இழுத்து செல்ல முயன்று தோல்வி அடைகிறார். திமிங்கலம் அசையவேயில்லை. அதனை வெயில் மற்றும் கடற்பறவைகளிடமிருந்து பாதுகாக்க மகள் போராடுகிறாள்.

தந்தை திமிங்கலத்தைக் கடலில் சேர்க்க புதிய வழியைக் கண்டறிகிறார். அபாயமான அந்த வழியினைச் செயல்படுத்துகிறார்.

ஹெமிங்வேயின் The Oldman and the Sea நாவலின் மறுவடிவம் போல இப்படத்தை உணர்ந்தேன். நாவலில் சாண்டியாகோ தனது தூண்டிலில் சிக்கிய மீனுடன் போராடுகிறான். இதிலோ கரையொதுங்கிய மீனை திரும்ப அனுப்பி வைக்கப் போராடுகிறார் கேப்டன். நாவலில் வரும் சிறுவனுக்குப் பதில் இதில் மகள் இடம்பெற்றிருக்கிறாள்.

கரையொதுங்கியிருக்கும் திமிங்கலம் என்பது ஒரு குறியீடு. அவர்களுக்கு வெளியே உள்ள வாழ்க்கை தான் அந்தத் திமிங்கலம். செயலற்றதாக உள்ள திமிங்கலத்தைத் தனது இயல்பு உலகிற்கு அவர்கள் அனுப்பி வைக்க வேண்டும். அந்த மாற்றம் அவர்கள் வாழ்க்கைக்கும் தேவையானது. இதனைத் தந்தை ஒருவிதமாகவும் மகள் ஒருவிதமாகவும் மேற்கொள்கிறார்கள்,

தந்தையின் கோபம் என்பது போரின் பின்விளைவு என்பதை மகள் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறாள். தந்தையால் தன்னை நிதானப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அவர் கடந்தகாலத்தின் துர்நினைவுகளால் துரத்தப்படுகிறார். நினைவிலிருந்து இடைவெட்டி மின்னும் போர்களக் காட்சிகள் அழகாக உருவாக்கபட்டுள்ளன.

கரையொதுங்கிய திமிங்கலத்தின் மீது வெயில்படுகிறது. அதைத் தடுக்க மகள் அதன் மீது தண்ணீரைத் தெளித்துக் குளிர்ச்சிப்படுத்துகிறாள். ஈரமான துணிகளை விரிக்கிறாள். வண்ணத் துணிகளுடன் உள்ள திமிங்கலத்தின் தோற்றம் விநோதமாகவுள்ளது.

தந்தை ஒரு காட்சியில் ஆணி அடித்துப் புகைப்படம் ஒன்றை மாட்ட முயலுகிறார். அப்போது வெளிப்படும் அவரது கோபம். கடந்தகால நினைவுகள் அவரை எந்த அளவிற்குப் பாதித்துள்ளதை என்பதை நன்றாக உணர வைக்கிறது

தந்தை ஒரு சைப்ரஸ் மரத்தைப் போன்றவர், பாரசீகக் கலாச்சாரத்தில் சைப்ரஸ் வலிமை, அழியாமை மற்றும் துக்கத்தின் அடையாளமாகும்.

கடல் தந்தையின் மனநிலையை அடையாளப்படுத்துகிறது. கடலின் கொந்தளிப்பு மற்றும் அமைதி இரண்டும் அவரது வெளிப்பாடே.

படத்தின் அனிமேஷன் பிரமிக்க வைக்கிறது. இந்தத் திரைப்படம் கையால் நெய்யப்பட்ட பாரசீக கம்பளம் போன்றது என்கிறார் இயக்குநர். அது உண்மையே.

வண்ணத்தேர்வு மற்றும் கேமிரா கோணங்கள்.கதாபாத்திர வடிவாக்கம், காட்சிகள். வரையப்பட்ட விதம், அஃப்ஷின் அஸிஸியின் இசை, என யாவிலும் மிகுந்த கலை நேர்த்தியைக் காண முடிகிறது.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 10, 2025 05:12

கோவை புத்தகத் திருவிழாவில்

கோவை புத்தகத் திருவிழா 20255 கொடீசியா அரங்கில் ஜுலை பதினெட்டு துவங்கி பத்து நாட்கள் நடைபெறுகிறது.

இதில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது

அரங்கு எண் 67.

ஜுலை 19 சனிக்கிமை முதல் ஜுலை 21 திங்கள் வரை மூன்று நாட்கள் புத்தகத் திருவிழாவில் இருப்பேன்.

விருப்பமான வாசகர்கள். நண்பர்கள் சந்திக்கலாம்

ஜுலை 21 திங்கள் மாலை ஆறுமணிக்கு கொடீசியா அரங்கில் ``புத்தகங்களின் சரித்திரம்`` என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன்.

ஜோஹன்னஸ் குட்டன்பெர்க் கி.பி. 1450 ஆம் ஆண்டில் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். இது ஐரோப்பாவில் புத்தகங்களை அச்சிடுவதில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. அன்றிலிருந்து இன்றைய மின்புத்தகக் காலம் வரை புத்தகங்கள் கடந்து வந்த மாற்றங்களை, வெற்றி தோல்விகளை, தடைகளை, வழக்குகளை, விரிவாகப் பேச இருக்கிறேன்.

அத்தோடு நூலகங்கள் உருவான விதம். உலகப்போரின் போது புத்தகங்களைக் காக்க நடைபெற்ற தீரச்செயல்கள். காலனிய ஆட்சி காலத்தில் இந்தியாவில் புத்தகங்கள் அச்சிடப்பட்ட வரலாறு. புத்தகங்களை கடத்தியவர்கள். அரிய நூல் சேகரிப்பாளர்கள். ரகசியப் புத்தகங்கள் எனப் புத்தகங்களின் அறியப்படாத வரலாற்றையும் நினைவுகளையும் பற்றியதாக எனது உரை அமையும்.

**

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 10, 2025 00:06

July 7, 2025

குற்றமுகங்கள் 18 திருத்தேரி

சந்திரகிரி கொலை வழக்கு என்ற துப்பறியும் நாவல் வெளியான ஆண்டு 1937 ஆக இருக்கலாம். அதை எழுதியவர் சோம.வெங்கடலட்சுமி. எட்டணா விலையில் அந்த நாவல் விற்கபட்டது.

யாரோ ஒரு வழக்கறிஞர் தனது அடையாளத்தை மறைத்துக் கொண்டு பெண் பெயரில் கதை எழுதி வெளியிட்டிருக்கிறார் என்று பேசிக்கொண்டார்கள்.

பாண்டுரங்கன் அந்த நாவலை விலை கொடுத்து வாங்கவில்லை. அது போல நாவல் ஒன்றை தான் எழுதியிருப்பதாகவும், அதை அச்சிட வேண்டும் என்றும் கோபால்ராவ் அச்சகத்திற்கு வந்த திருத்தேரி கொடுத்த புத்தகத்தைத் தான் படித்தான்.

திருத்தேரிக்கு நாற்பது வயதிருக்கும். வட இந்தியர்கள் அணிவது போன்ற பைஜாமா ஜிப்பா உடையை அணிந்திருந்தார். வெற்றிலைக்காவி படிந்த பற்கள். இரண்டு கைகளிலும் ஒரே போன்ற பச்சைக்கல் மோதிரம் அணிந்திருந்தார்.

பாண்டுரங்கனுக்கு அவனது அத்தையின் வழியாகவே புத்தகம் படிக்கும் ஏற்பட்டது. வள்ளல் குருநாதன் இலவச நூலகத்தில் நிறையப் புத்தகங்களை எடுத்துப் படித்திருக்கிறான். அந்த ஆசையில் தான் அச்சகத்தில் அச்சுக்கோர்க்கும் பணியில் சேர்ந்தான்.

அவனது அச்சகத்தில் திருமண அழைப்பிதழ்கள், மருந்துக்கம்பெனி மற்றும் ஏலக்கடை நோட்டீஸ்கள், நாடக விளம்பரங்களை அச்சிட்டார்கள். ஒன்றிரண்டு பக்திபாடல் புத்தகங்களையும் அச்சிட்டுக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இப்படி ஒரு துப்பறியும் நாவலை அச்சிட வேண்டும் என ஒருவர் கேட்டு வந்த போது முதலாளிக்கு கொலை, திருட்டு போன்ற புத்தகங்களை அச்சிட்டால் தெய்வகுற்றமாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது.

திருத்தேரி தனது நாவலை அவசரமாக அச்சிட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் அச்சுக்கூலி இரண்டு மடங்கு அதிகம் தருவதாகவும் சொன்னதால் உடனடியாக அச்சுக்கோர்க்கும்படி பாண்டுரங்கத்திடம் ஒப்படைத்தார்.

அச்சிடக் கொடுத்துள்ள நாவலை விடவும் சந்திரகிரி கொலை வழக்கை படிப்பதில் தான் பாண்டுரங்கனுக்கு ஆர்வம் அதிகமிருந்தது. ஆகவே அதனை முதலில் படிக்க ஆரம்பித்தான்.

முதல் பக்கத்திலே அங்குராஜின் கொலை நடந்துவிடுகிறது. அவரைக் கொன்றவர் யார் எனக் கண்டறிய போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் வருகிறார். விசாரணை செய்கிறார். சந்தேகத்திற்குரிய நபர்களைப் பின்தொடருகிறார். கடைசியில் குற்றவாளி ஒரு பெண்ணாக இருக்கிறாள். கனகம்மாள் எப்படி அந்தக் கொலையைச் செய்தாள் என்பதை இன்ஸ்பெக்டர் நாவலின் இறுதியில் விவரிக்கிறார்.

நாவலை படித்து முடித்தவுடன் அத்தனையும் கண்முன்னே நடந்தது போல வியப்பாக இருந்தது. எப்படி சோம.வெங்கடலட்சுமியால் இப்படி ஒரு நாவலை எழுத முடிந்தது. இது அவரது கற்பனையா, உண்மைக்கதையா,. அல்லது யாராவது எழுதி அவள் பெயரில் வெளியிட்டு விட்டார்களா எனக் குழப்பமாக இருந்தது.

சோம. வெங்கடலட்சுமி பற்றி தெரிந்து கொள்ள தங்கள் அச்சகத்தின் வாடிக்கையாளரும் ஜோதிடருமான ரங்கம்பிள்ளையைச் சந்தித்தான். அவரும் இந்த நாவலைப் படித்திருந்தார்.

“அந்தம்மா குடியாத்ததுல இருக்காங்க. ராவ்பகதூர் சோமசுந்தரத்தோட மகள். இந்தக் கதையில வர்றது எல்லாம் அவங்க குடும்பத்துல நடந்தது. அங்குராஜ் அந்தம்மாவோட சொந்த அண்ணன்“.

“அப்போ கொலை செய்த கனகம்மா யாரு“ என்று கேட்டான் பாண்டுரங்கன்.

“அது கற்பனை. இன்னைக்கு வரைக்கும் அந்தக் கொலையை யார் செய்ததுனு கண்டுபிடிக்க முடியலை“

“கதையில வர்றது எல்லாம் நிஜமில்லையா“

“அட முட்டாளே. கதையில எது நிஜம் எது பொய்யுனு கண்டுபிடிக்க முடியாது. ஒரு வேளை வெங்கடலட்சுமியே அந்தக் கொலையைச் செய்திருக்கலாம்“

“தானே ஒரு கொலை செய்துட்டு அதை யாராவது கதையா எழுதுவாங்களா“.

“அப்படியும் நடக்கலாம். மனுச மனசை யாராலும் புரிஞ்சிகிட முடியாது. எத்தனை கேஸ்ல இப்படிப் பாத்துருக்கேன் தெரியுமா“

அதைக் கேட்டதும் பாண்டுரங்கனுக்குச் சோம.வெங்கடலட்சுமியை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகமானது. ஆனால். குடியாத்தம் வரை போய் வருவதற்கான பணம் அவன் கையில் இல்லை. லீவும் கிடைக்கவில்லை.

இதற்கிடையில் திருத்தேரி அச்சிடுவதற்காகக் கொடுத்த துப்பறியும் நாவலின் கையெழுத்துப் பிரதியைப் படிக்க ஆரம்பித்தான்.

ஆச்சரியம் அதுவும் சந்திரகிரி கொலை வழக்கினைப் பற்றியதே. இந்தக் கதையிலும் அங்குராஜ் கொல்லப்படுகிறான். இன்ஸ்பெக்டர் வருகிறார். கதையின் ஆரம்பத்திலே கனகம்மா மீது சந்தேகம் வந்துவிடுகிறது. ஆனால் உண்மையான குற்றவாளி அவள் இல்லை என இன்ஸ்பெக்டர் கண்டுபிடித்துவிடுகிறார். கொலையைச் செய்தவர் அங்குராஜின் தந்தை ராவ்பகதூர் சோமசுந்தரம் அவர் ஏன் அந்தக் கொலையைச் செய்தார் என்பதை இன்ஸ்பெக்டர் கடைசியில் விளக்குகிறார்.

இதைப்படித்து முடித்தவுடன் பாண்டுரங்கத்திற்கு இரண்டில் எது நிஜம் என்ற கேள்வி எழுந்தது.

சோம.வெங்கடலட்சுமி நாவலுக்குப் போட்டியாக நாவல் எழுதிய திருத்தேரி யார் எனத் தெரிந்து கொள்ள விரும்பி அவர் கொடுத்திருந்த முகவரிக்குச் சென்றான்.

திருவல்லிகேணி கணபதி மெஸ் சந்துக்குள் இருந்த ஒரு வீட்டில் திருத்தேரி குடியிருந்தார். பாண்டுரங்கத்தைப் பார்த்தவுடன் “புக் ரெடியாகிருச்சா“ என்று கேட்டார்.

அவன் இல்லையென்று தலையாட்டிவிட்டு “இந்த நாவல் சோம.வெங்கடலட்சுமி. எழுதி ஏற்கனவே வெளியாகியிருக்கு. நாம வேற பேர்ல திரும்பப் போட்டா.. கோர்ட் கேஸ் ஆகிரும்னு முதலாளி பயப்படுறாங்க“ என்றான்

“அது வேற நாவல். இது வேற நாவல்“

“நான் சந்திரகிரி கொலைவழக்குப் படிச்சிருக்கேன். ரெண்டும் ஒண்ணு தான். கனகம்மாவுக்குப் பதிலா உங்க நாவல்ல ராவ்பகதூர் கொலை செய்றார். “

“அது தான் உண்மை. கனகம்மா கொலை செய்யலை. அப்படி ஒரு பொண்ணே அந்த வீட்ல கிடையாது “

“அது உங்களுக்கு எப்படித் தெரியும்“

“இது உண்மையில நடந்த கதை. எனக்கு நல்லா தெரியும். ஏன்னா நான் தான் சோம. வெங்கடலட்சுமியோட புருஷன். அவங்க அப்பாவை காப்பாற்றுவதற்காக இப்படி ஒரு நாவலை எழுதியிருக்கா.. இப்போ உலகமே கனகம்மாவை கொலையாளியா நினைக்குது.

“நீங்க போலீஸ்ல சொல்ல வேண்டியது தானே“.

“ நான் சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க ரெண்டு வருஷம் முன்னாடியே எனக்குச் சித்தபிரம்மைனு வீட்டைவிட்டு துரத்திவிட்டாங்க.. அதான் நாவலா எழுதியிருக்கேன். “

“நீங்க சொல்றது தான் உண்மைனு நாங்க எப்படி நம்புறது. “

“அவ சொன்ன கதையை நம்புறீங்க. நான் சொல்ற உண்மைய நம்பமாட்டீங்களா“

“நீங்களும் கதை தான் எழுதியிருக்கீங்க. “

“அவளோடது கற்பனை.. என்னோடது நிஜம்“

“படிக்கிறவங்களுக்கு ரெண்டு ஒண்ணு தான்“.

“எது நிஜம்னு படிக்கிறவங்க முடிவு செய்யட்டும். நீங்க வெளியிடுங்க. கேஸ் போட்டா நான் நடத்துறேன். “

திருத்தேரியின் நாவலை அவர்கள் அச்சிட்டுக் கொடுத்தார்கள். ஆனால் அது வரவேற்பு பெறவில்லை. எந்தப் பத்திரிக்கையிலும் அதற்கு விமர்சனம் வரவில்லை. ஆனால் சோம.வெங்கடலட்சுமியின் நாவல் திரைப்படமாக உருவாக்கபட்டது. பெரிய வெற்றியை அடைந்தது.

இந்த நிலையில் ஒரு நாள் திருத்தேரி தனது அறையில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருந்தார். அவரை யார் கொன்றது என்று தெரியவில்லை. அந்த நிகழ்வைத் தனது அடுத்த நாவலாகச் சோம. வெங்கடலட்சுமி எழுதினாள்.

இதில் திருத்தேரியைக் கொன்றது கனகம்மாளின் கணவன் சாம்பசிவம். அவன் கொலையை எப்படித் திட்டமிட்டுச் செய்தான் என்று விரிவாக விளக்கியிருந்தாள். அந்த நாவல் வெற்றிபெறவில்லை. அத்தோடு திருத்தேரி கொலைவழக்கு காவல்துறையின் தீவிர விசாரணைக்கும் உள்ளானது. அதில் சில உண்மைகள் வெளிப்பட்டன.

சொத்தை அடைவதற்காகத் திருத்தேரியும் அவரது மனைவி சோம. வெங்கடலட்சுமியும் இணைந்து அங்குராஜை கொலை செய்திருக்கிறார்கள். அதைத் திசைதிருப்ப அங்குராஜிற்கு ஒரு காதலி இருப்பது போலச் சோம. வெங்கடலட்சுமி நாவல் எழுதி உலகை நம்ப வைத்திருக்கிறாள்.

ராவ் பகதூர் ஊதாரியான தனது மருமகன் திருத்தேரி மீது சந்தேகம் கொண்டு கண்காணிக்கச் செய்திருக்கிறார். ஆகவே சோம. வெங்கடலட்சுமியே தனது தந்தையைக் கொலை வழக்கில் மாட்டிவிட இன்னொரு நாவலை எழுதி அதைத் திருத்தேரி பெயரில் வெளியிட வைத்திருக்கிறாள்.

இந்தச் சதியை அறிந்து ஆத்திரமான ராவ் பகதூர் ஆளை அனுப்பித் திருத்தேரியை கொலை செய்திருக்கிறார். அதை மறைப்பதற்காகத் தனது மகளை வற்புறுத்தி இன்னொரு நாவலையும் எழுத செய்திருப்பதும் தெரிய வந்தது.

நிஜத்தை விடவும் எழுத்தில் குற்றம் பிரம்மாண்டமாகிறது. சிக்கலானதாகிறது. கதையில் இடம்பெறும் ஒரு துளி ரத்தம் ஒளிரும் சூரியனைப் போல உருமாறி விடுகிறது. நடந்து முடிந்தபின்பு விஸ்வரூபமாக வளர்ந்துவிடும் தாவரம் குற்றமே.

காவல்துறை கைது செய்வதற்குள் ராவ்பகதூர் தற்கொலை செய்து கொண்டதோடு தனது எல்லாச் சொத்துகளையும் கூன்போக்கி மடத்திற்கு எழுதி வைத்துவிட்டார்.

குடியிருக்கும் வீட்டைத் தவிர எல்லாவற்றையும் வெங்கடலட்சுமி இழந்தாள் . நிழலைப் போல ஒடுங்கிப் போனாள். மூடிய கதவிற்குப் பின்பாக அவளுக்கு என்ன நடந்தது எனத் தெரியவில்லை. அதன் பின்பாக அவள் எதையும் எழுதவில்லை.

பாதியில் கைவிடப்பட்ட நாவலின் துணை கதாபாத்திரம் ஒன்றைப் போலானது அவளது வாழ்க்கை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 07, 2025 00:59

July 5, 2025

விழித்திரு

குடிப்பதற்கு ஒரு டம்ளர் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் ஒருவனின் இரவு வாழ்க்கையை விவரிக்கிறது ஜாக்தே ரஹோ.

1956ல் வெளியான இந்தி திரைப்படம். எழுத்தாளர் கே.ஏ. அப்பாஸின் கதை. சோம்பு மித்ரா இயக்கியுள்ளார், ஒற்றை வரிக் கதையைக் கொண்டு மிகச் சிறப்பான படத்தை ராஜ்கபூர் எடுத்திருக்கிறார்.

கல்கத்தாவின் ஒரு இரவில் படம் தொடங்குகிறது

ஏழை விவசாயியான ராஜ்கபூர் வேலை தேடி நகரத்திற்கு வருகிறார். கிராமவாசியான அவருக்குப் பெயர் கிடையாது. அவர் ஒரு அடையாளம் மட்டுமே. அவரது தோற்றத்தைக் கண்டு பலரும் துரத்துகிறார்கள். காவலர் அவரைத் திருடன் என நினைத்து எச்சரிக்கை செய்கிறார். பசியில் வாடி அலையும் அவர் தாகத்தில் எங்காவது தண்ணீர் கிடைக்கிறதா எனத் தேடுகிறார். அவ்வளவு பெரிய நகரில் எங்கும் குடிநீர் கிடைக்கவில்லை. தெருக்குழாயில் காற்று தான் வருகிறது.

தண்ணீர் கிடைக்ககூடும் எனக் குடியிருப்பு ஒன்றில் ரகசியமாக நுழைந்துவிடுகிறார். குழாயில் தண்ணீர் குடிக்க முயலும் போது அவரைத் திருடன் என நினைத்துக் காவலாளி கூக்குரல் எழுப்புகிறான்.பயந்து தப்பியோடுகிறார் அவரைக் குடியிருப்புவாசிகள் துரத்துகிறார்கள். யாரைத் துரத்துகிறோம் எனத் தெரியாமல் அவர்கள் ஆவேசமாகக் கையில் தடியோடு வரும்காட்சி வேடிக்கையானது. இந்தத் திடீர் திருடன் பிரச்சனையால் ரகசியமாகச் சந்திக்கத் திட்டமிட்ட காதல்ஜோடி பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார்கள்.

கிராமவாசி ஒரு வீட்டின் சமையலறையில் ஒளிந்து கொள்கிறார். சில நிகழ்வுகளைச் சந்திக்கிறார். வேறு ஒரு வீட்டில் குடிகாரக் கணவனால் தினமும் துன்புறுத்தப்படும் ஒரு பெண்ணைச் சந்திக்கிறார், அது போலவே மோசடி செய்ய நினைக்கும் பொய்யர்கள். பித்தலாட்ட பேர்வழிகள் எனப் பலரையும் காணுகிறார் அந்தக் குடியிருப்பினுள் இரவு முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கிறார்.

சினிமாவிற்குத் தேவை பெரிய கதையில்லை.சிறிய கதைக்கரு. அதன் இணைப்பாக விரியும் நிகழ்வுகள். காட்சிகளின் நம்பகத்தன்மை. மற்றும் சீரான வளர்ச்சி. இவற்றைச் சரியாகப் பின்னிவிட்டால் நல்ல திரைக்கதை வந்துவிடும் என்பதற்கு இப்படம் ஒரு உதாரணம்.

நகரத்தில் இரவு காவலாளிகள் தெருவில் வலம் வரும்போது ‘ ஜாக்தே ரஹோ, ஜாக்தே ரஹோ!’ என்று சப்தம் எழுப்புகிறார்கள். நம்மைச் சுற்றி நடப்பதைப் பற்றி எதுவும் அறியாமல தூங்கிவிட்டால் நாம் ஏமாற்றப்பட்டு விடுவோம். இது ஏமாற்றுதனங்கள் நிறைந்த நகரம் என நினைவுபடுத்துவது போலிருக்கிறது அந்த எச்சரிக்கை ஒலி

இரவெல்லாம் தாகம் தீராமல் தவித்த விவசாயி அதிகாலையில் ஒரு இளம்பெண் கோவிலில் பாடுவதைக் காணுகிறார். அந்தப் பெண் கிராமவாசிக்குக் குடிக்கத் தண்ணீர் குடிப்பதுடன் படம் நிறைவு பெறுகிறது.

படத்தின் ஒளிப்பதிவும் இசையும் சிறப்பானது. குறிப்பாக விடிகாலை வெளிச்சத்தில் அந்தப் பெண் பாடும் பாடல் காட்சி மறக்கமுடியாதது.

இந்தக் கதையில் வரும் குடிநீருக்கு பதிலாக ஒரு மனிதன் இரவு உறங்குவதற்கு நகரில் இடம் தேடினால் இதே நிகழ்ச்சிகளைத் தான் சந்திக்க வேண்டியது வரும். அந்த வகையில் இப்படம் இன்றும் பொருத்தமாக இருக்கிறது.

ஜாக்தே ரஹோ.திரைப்படம் சோவியத் யூனியனில் சப்டைட்டிலுடன் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இப்படத்தின் நல்ல பிரதி youtubeல் காணக்கிடைக்கிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 05, 2025 06:23

July 1, 2025

ஹிந்தி மொழியாக்கம்

ஹிந்தி இலக்கியத்திற்கான சர்வதேச இதழில் எனது சிறுகதை “கேள்வியின் நிழல்“ மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

இதனை மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் அலமேலு கிருஷ்ணன்

நன்றி

அலமேலு கிருஷ்ணன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 01, 2025 22:15

தெலுங்கு மொழியாக்கம்

kathavasudha இணைய இதழில் எனது `சிற்றிதழ்` சிறுகதையின் தெலுங்கு மொழியாக்கம் வெளியாகியுள்ளது


இதனை மொழிபெயர்ப்பு செய்துள்ளவர் ஜிலெல்லா பாலாஜி

இணைப்பு

తమిళ కథ : చిరు సంచిక

நன்றி

ஜிலெல்லா பாலாஜி

kathavasudha

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 01, 2025 22:04

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.