S. Ramakrishnan's Blog, page 6

June 9, 2025

குற்றமுகங்கள் 15 பச்சைக்கண் லிஸ்டர்

1899ம் ஆண்டுப் பச்சைக்கண் லிஸ்டர் என அழைக்கப்பட்ட ஜோசப் லிஸ்டர் பெல்காமில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். நாற்பது வயதிருக்கும். தீவிர காளி பக்தராகக் கருதப்பட்ட லெஸ்டர் நெற்றியில் குங்குமம் அணிந்து கொண்டார். மாதம் ஒருமுறை விசேச காளி பூஜைகளை நடத்தியதோடு தானே சிவப்பு ஆடையைக் கட்டிக் கொண்டு காளி நடனம் ஆடியதும் உண்டு.

லெஸ்டரைத் தேடி சாமியார்களும், மாந்திரீகம் அறிந்தவர்களும் வந்து போவது வழக்கம். அவர் பழைய கோட்டையினுள் ஏதோ புதையலைத் தேடிக் கொண்டிருந்ததாக மக்கள் பேசிக் கொண்டார்கள். இயற்கையான புத்திசாலித்தனமும், அப்பாவியான தோற்றமும் கொண்டவரால் மட்டுமே மக்களை ஏமாற்ற முடியும் என லிஸ்டர் அறிந்திருந்தார்.

நகரின் முக்கிய வணிகர்கள், அதிகாரிகளை மகிழ்ச்சிப்படுத்த ஆங்கில நடன நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஏற்பாடு செய்து வந்தார். அதன் காரணமாக லிஸ்டர் மீது நன்மதிப்பு உருவாகியிருந்தது.

ஒரு நாள் லிஸ்டரின் தவறான சிகிட்சை காரணமாக லெக்கி என்ற கர்ப்பிணிப் பெண் இறந்து போனாள். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அவரது மருத்துவமனையை உடைத்து நொறுக்கியதோடு அவரையும் தாக்கி கையை உடைத்தார்கள்.

டாக்டர் லிஸ்டர் ஒரு போலி மருத்துவர் என அவரது உதவியாளராகப் பணியாற்றிய முனீம் வாக்குமூலம் அளித்த காரணத்தால் அவர் மீது பொதுவிசாரணை நடைபெற்றது. இதில் அவரிடம் சிகிட்சை பெற்ற நோயாளிகள் சாட்சியம் அளித்தார்கள். ஒருவன் தனது பல்லை லிஸ்டர் பிடுங்கியதில் காது கேளாமல் போய்விட்டதாகப் புகார் செய்தான். இன்னொரு பெண் தனது நாக்கின் நுனியை லிஸ்டர் வெட்டிவிட்டதாகச் சொன்னாள்.

லிஸ்டர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கபட்டார். நீதிமன்றமே மருத்துவர் குழுவை அவரை விசாரிப்பதற்காக நியமித்தது. அதன் தலைவராக டாக்டர் எட்வர்ட் பக்லி நியமிக்கபட்டார். விசாரணையின் போது லிஸ்டர் முன்னுக்குப் பின்னாகத் தகவல்களை வழங்கினார். அது அவர் மீதான சந்தேகத்தை அதிகமாக்கியது. லிஸ்டர் தான் உண்மையான மருத்துவர் என்பதற்கான சான்றுகள் தன்னிடமிருப்பதாகவும் கூறியதோடு ராணுவ மருத்துவமனை அளித்த நற்சான்றிதழ் ஒன்றினையும் சமர்பித்தார்.

பக்லி அதனை நம்பவில்லை. தன்னுடைய கண்முன்னால் அவர் ஒரு குடல்அறுவை சிகிட்சையை நடத்திக் காட்ட வேண்டும் என்று ஆணையிட்டார்.

அறுவைசிகிட்சைக்கான நாள் குறிக்கபட்டது. டாக்டர் பக்லியோடு அன்று டாக்டர் ரால்ப் அலெக்ஸ்க்கும் விசாரணை அதிகாரியாகக் கலந்து கொண்டார்.

அறுவை சிகிட்சை துவங்குவதற்கு முன்பாக லிஸ்டர் தனக்கு மருத்துவம் தெரியாது என்பதை ஒத்துக் கொண்டதோடு, தான் இரண்டு ஆண்டுகள் மீரட் ராணுவ மருத்துவமனையில் மருந்து கொடுக்கும் பணியாளராக வேலை செய்த உண்மையை ஒத்துக் கொண்டார். கடந்த பனிரெண்டு ஆண்டுகளாக அவர் வேறுவேறு ஊர்களில் மருத்துவராக நடித்து ஏமாற்றியிருப்பது தெரியவந்தது.

மருத்துவ மோசடிகளை விடவும் அவர் பழைய கலைப்பொருட்களைத் திருடி விற்ற கதையும், ஏழு பெண்களைத் திருமணம் செய்து கொண்ட விஷயமும் விசாரணையில் தெரிய வந்தது.

போலி மருத்துவர்களுக்கு என்ன தண்டனை அளிப்பது என அன்றைய சட்டத்தில் இல்லை. ஆகவே திட்டமிட்ட மோசடிக்கான அதிகபட்ச தண்டனையை அளிக்க வேண்டும் எனப் பக்லி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்

லிஸ்டர் திருமணம் செய்து கொண்ட ஏழு பெண்களும் வசதியானவர்கள். அழகிகள். அவர்கள் குடும்பத்துடன் லிஸ்டர் நெருங்கிப் பழகியிருக்கிறார். தான் கர்சன் பிரபுவின் உறவினர் என்றும் இங்கிலாந்தில் தனக்கு மிகப்பெரிய சொத்து இருப்பதாக நம்ப வைத்திருக்கிறார். அவரது காளி பக்தி மற்றும் தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் பெண்வீட்டாரை நம்ப வைத்திருக்கிறது.

ஆச்சரியமானதும் ஆனால் நம்பமுடியாதது போலத் தோன்றுவதுமான செய்தி என்னவென்றால் வேறு வேறு ஆண்டுகளில் அவரது ஏழு திருமணங்களும் ஜனவரி 19 அன்றே நடந்தேறியிருக்கின்றன. திருமணம் செய்து கொண்ட பெண்ணோடு ஒன்றோ இரண்டோ ஆண்டுகள் வசித்திருக்கிறார். பின்பு இங்கிலாந்திற்கு அவசர வேலையாகச் சென்று வருவதாகக் கிளம்பியிருக்கிறார். மீண்டும் அவர்களைச் சந்திக்கவேயில்லை.

லிஸ்டர் மீதான விசாரணையின் போது அவரது ஐந்து மனைவிகள் நேரில் வந்திருந்தார்கள். வராத இருவர் அது தனது கணவரில்லை என்று மறுத்தார்கள். எந்தப் பெண்ணும் தன்னை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டதாக லிஸ்டர் மீது புகார் தரவில்லை. லிஸ்டருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது.

விடுதலையாகி வந்த லிஸ்டர் இங்கிலாந்திற்குக் கப்பல் ஏறினார். அந்தக் கப்பலில் வந்த பியாரா என்ற பார்சி பணக்காரப் பெண்ணுடன் பேசிப் பழகி கப்பலிலே திருமணம் செய்து கொண்டார். அந்தத் திருமண விபரம் குறித்து இசபெல்லா கப்பலின் பதிவேடு தெரிவிக்கிறது. ஆறு வாரங்களுக்குப் பின்பு கப்பல் லண்டனை அடைந்த போது பியாரா மட்டுமே தரையிறங்கினார். லிஸ்டரைக் காணவில்லை. கப்பலில் இருந்த லிஸ்டருக்கு என்ன ஆனது என பியாராவால் கண்டறிய முடியவில்லை. ஆனால் அவள் தன் வாழ்நாளின் கடைசி வரை லிஸ்டரின் மனைவியாகவே அறியப்பட்டாள்•

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 09, 2025 21:00

June 8, 2025

அன்பால் மட்டுமே வெல்ல முடியும்

ஸ்டான்லி கிராமர் இயக்கிய Guess Who’s Coming to Dinner 1967ல் வெளியான திரைப்படம். 58 ஆண்டுகளைக் கடந்த போதும் இன்றைக்கும் இது பொருத்தமான படமே.

1967 வரை, அமெரிக்காவின் பதினேழு மாகாணங்களில் கறுப்பின இளைஞனை வெள்ளைக்காரப் பெண் திருமணம் செய்து கொள்வது சட்டவிரோதமாகவே கருதப்பட்டது , அந்தச் சூழலில் தான் இக்கதை நடக்கிறது.

டாக்டர் ஜான் பிரெண்டிஸ் என்ற கறுப்பின இளைஞனைக் காதலிக்கும் வெள்ளைக்காரப் பெண் ஜோயி அவனைத் தனது பெற்றோர்களைச் சந்திக்க அழைத்துச் செல்வதில் படம் துவங்குகிறது. அவர்கள் விமான நிலையத்திலிருந்து உற்சாகமாக வீடு திரும்புகிறார்கள்.

ஹவாய் தீவிற்கு விடுமுறைக்குச் சென்ற போது அங்கே டாக்டர் ஜானை சந்திக்கும் ஜோயி அவனைக் காதலிக்கத் துவங்குகிறாள். பத்து நாட்களில் அந்தக் காதல் திருமணத்தை நோக்கி நகர்ந்துவிடுகிறது. ஜோயியின் தந்தை மாட் நாளிதழ் ஒன்றின் ஆசிரியர். அம்மா கலைக்கூடம் ஒன்றை நடத்தி வருகிறாள். வசதியான குடும்பம்.

ஜோயியின் பெற்றோர் அவர்கள் காதலை எதிர்பார்க்கவில்லை. தங்கள் எதிர்ப்பை வெளிப்படையாகக் காட்டுகிறார்கள். ஆனால் ஜோயி தான் டாக்டர் ஜானைத் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவிக்கிறாள். இதனை ஏற்க முடியாத தந்தை அவளுடன் கோபித்துக் கொள்கிறார்

ஜோயியின் தாயும் தந்தையும் மகளின் பிடிவாதம் குறித்து அறிந்தவர்கள் ஆகவே அவர்கள் டாக்டர் ஜானிடம் வெளிப்படையாகத் தங்களால் அந்த திருமணத்தை ஏற்க முடியாது என்று அறிவிக்கிறார்கள்.

டாக்டர் ஜானிற்கு 37 வயது ஜோயியின் வயதோ 23. ஜானின் தந்தை தபால்காரராக இருந்தவர். ஏழை. இத்தனை வேறுபாடுகளையும் சுட்டிக்காட்டி மகளின் திருமணத்தை ஏற்க மறுக்கிறார் ஜோயி தந்தை.

இதற்கிடையில் டாக்டர் ஜான் தனது தந்தை தாயை ஜோயின் வீட்டில் நடக்கும் விருந்தில் கலந்து கொள்ள வரவழைக்கிறான். ஜான் தனது தந்தையிடம் காதலை மறைக்கிறான். போனில் அதைப்பற்றிப் பேசும் காட்சி அபாரமானது. அவர்கள் விமானத்தில் புறப்பட்டு வருகிறார்கள். அவர்கள் வீட்டிற்குள் நுழையும் போது கண்களிலே தங்கள் மனநிலையை வெளிப்படுத்திவிடுகிறார்கள். குறிப்பாக ஜானின் அம்மா சிறப்பான கதாபாத்திரம். அவர் தன் மனதை வெளிப்படுத்தும் இடமே முக்கிய முடிவை எடுக்க வைக்கிறது.

ஜோயி அழகான இளம் பெண். அவள் தனது காதலில் உறுதியாக இருக்கிறாள். இப்படி ஒரு கறுப்பினத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டால் நாளை உன் பிள்ளைகள் என்ன ஆவார்கள். அவர்களுக்குச் சமூக மதிப்பு கிடைக்காதே என தந்தை மிரட்டுகிறார். அதற்கு ஜோயி உறுதியான பதிலைத் தருகிறாள்.

ஜோயியின் பெற்றோர்களிடம் ஜான் அமைதியாக, பண்பாக நடந்து கொள்கிறான். கறுப்பின இளைஞனாக அவன் சந்தித்து வந்த கடினமான பாதையைப் பற்றி விவரிக்கிறான். மருத்துவத்தில் அவன் பெற்றுள்ள பட்டம். அவனது சேவை மனப்பான்மை, ஐக்கிய நாடுகள் சபையின் மருத்துவக் குழுக்களில் பணியாற்றுகிறான் என்பதையெல்லாம் ஜோயியின் தந்தை அறிந்து கொள்கிறார். ஆனாலும் திருமணத்திற்கு சம்மதிக்க முடியவில்லை..

ஜோயின் பெற்றோர் போலவே டாக்டர் ஜானின் பெற்றோரும் மகனின் காதலை ஏற்கவில்லை. அவர்கள் வெள்ளைக்காரப் பெண்  வேண்டாம் என்கிறார்கள்.  அந்த திருமணம் நிலைக்காது எனப்பயப்படுகிறார்கள்.

ஜோயியின் வீட்டுப் பணிப்பெண் டில்லி கறுப்பினத்தைச் சார்ந்தவள். ஆனால் அவள் டாக்டர் ஜானை ஏற்க மறுக்கிறாள். ஜோயியை விட்டு விலகிப் போய்விடும் படி மிரட்டுகிறாள். அவளின் இந்த வெளிப்பாட்டை டாக்டர் ஜான் நன்றாகப் புரிந்து கொள்கிறார். அதனால் தான் அவளிடம் கோபம் கொள்வதில்லை.

இரண்டு பெற்றோர்களும் பேசிக் கொள்ளும் காட்சி அற்புதமானது. குறிப்பாக டாக்டர் ஜானின் அம்மாவும் ஜோயியின் அம்மாவும் காதலைப் புரிந்து கொள்கிறார்கள். பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டியது தங்கள் கடமை என உணர்கிறார்கள். ஆனால் இருவரின் தந்தையும் காதலை ஏற்பதில்லை. சமூகக் கட்டுபாடு, பண்பாடு. எதிர்காலம் குறித்த அச்சம் எனத் தயங்குகிறார்கள்.

ஜோயியின் தந்தையோடு கோல்ஃப் விளையாடும் நண்பரான மான்சிக்னர் அபூர்வமான கதாபாத்திரம். அவர் செய்தியை கேள்விபட்டவுடனே அந்தக் காதலை அங்கீகரிக்கிறார். ஜோயியின் தந்தைக்குச் சமூக மாற்றத்தைப் புரிய வைக்க முயற்சிக்கிறார்.

ஜானும் அவரது தந்தையும் பேசிக் கொள்ளும் காட்சி மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக எழுதப்பட்டிருக்கிறது. அவர்களுக்குள் உண்மையான விவாதம் நடக்கிறது. அவர்கள் தங்கள் தலைமுறை வேறுபாடுகளைப் பற்றி விவாதிக்கிறார்கள். சண்டையிடுகிறார்கள். தந்தையிடம் ஜான் மன்னிப்பு கேட்கும் போது நாமும் கலங்கிவிடுகிறோம்.

புரிந்து கொள்ளாத பெற்றோர்களை ஜோயியும் ஜானும் எப்படிச் சம்மதிக்க வைக்கிறார்கள் என்பதை அழகாகக் காட்டுகிறார்கள்.

ஸ்பென்சர் டிரேசி ஜோயியின் தந்தை மாட்டாக நடித்திருக்கிறார். டாக்டர் ஜானாகச் சிட்னி போய்ட்டியர் நடித்துள்ளார். இருவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒரு வீட்டில் நடக்கும் இரவு விருந்திற்குள் நடக்கும் மோதல்கள். உணர்ச்சிப்பெருக்கில் நடைபெறும் நிகழ்வுகள். காரசாரமான விவாதங்கள், கண்ணீர் சிந்தும் நிமிஷங்கள் என ஒரு தேசம் சந்தித்த சமூக நிகழ்வுகளின் மறுவடிவமாக படம் மாறியிருக்கிறது. அதுவே இப்படத்தை இன்றும் புதுமை மாறாமல் வைத்திருக்கிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 08, 2025 09:53

June 7, 2025

மழையின் தாளம்

மழை தரும் அனுபவத்தின் பல்வேறு பரிமாணங்களைச் சிறந்த இசையோடு கவித்துவமாக விவரித்துள்ளது இந்த ஆவணப்படம். 1967ல் பூனே திரைப்படக் கல்லூரியில் பயின்ற ஆர்.கே. ராமச்சந்திரன் இயக்கிய டிப்ளமோ பிலிம்.

பல்வேறு வகையான வாழ்க்கைச் சூழல் கொண்டவர்கள் மழையை எதிர்கொள்ளும் விதம் அற்புதமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. . மழைத் தண்ணீரில் விளையாடியபடி செல்லும் பள்ளிச்சிறார்கள். மழைக்கு முன்பும் பின்புமான மனநிலை. தாகத்தில் தண்ணீர் குழாயினை உறிஞ்சும் நாய். பேனா விற்பவர், கடைச்சிப்பந்தி, அழகான பெண்ணுக்கு இடம் தரும் இளைஞன், வீடு திரும்பும் கணவர், என மழையின் காட்சிகளை சிறந்த இசையோடு கலைநேர்த்தியாக ராமசந்திரன் உருவாக்கியுள்ளார்

இணைப்பு

https://youtu.be/CSULb4W_8As?si=cN0NNcL8J66IblCv

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 07, 2025 05:59

June 6, 2025

தற்செயலின் மாயம்

தேசாந்திரி யூடியூப் சேனல் சார்பாக வெளியாகியுள்ள எனது புதிய உரை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 06, 2025 22:33

June 5, 2025

விட்டோரியோ ஸ்டோராரோ : ஒளியின் ஞானம்.

உலகப் புகழ்பெற்ற சினிமா ஒளிப்பதிவாளர் விட்டோரியோ ஸ்டோராரோ தனது திரையுலக அனுபவத்தையும் ஒளி பற்றிய ஞானத்தையும் பகிர்ந்து கொள்ளும் சிறப்பான உரை. ஒளிப்பதிவாளருக்கு இருக்க வேண்டிய அடிப்படை ஈடுபாடுகள், காட்சிகளை உருவாக்குவதில் வெளிப்படும் உன்னத கலையாற்றல் பற்றி விவரிக்கிறார்.

இளம் ஒளிப்பதிவாளர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் அவசியம் காண வேண்டிய காணொளி.

இதில் ஸ்டோராரோ இருளுக்கும் ஒளிக்குமான தொடர்பை, உணர்ச்சிகளுக்கும் வண்ணங்களுக்குமான தொடர்பை மிக அழகாக விவரிக்கிறார். பிளேட்டோவின் ஞானம் மற்றும் காரவாஜியோ ஒவியங்களிலிருந்து தான் கற்றுக் கொண்ட பாடங்களைச்  சொல்கிறார். அவரது புகழ்பெற்ற திரைப்படங்களான தி கன்ஃபார்மிஸ்ட் தி லாஸ்ட் எம்பரர், ரெட்ஸ் அபோகாலிப்ஸ் நவ் படங்களின் ஒளிப்பதிவு குறித்தும் சிறப்பாக விவரிக்கிறார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 05, 2025 21:06

June 4, 2025

நடமாடும் சினிமா

நான்ஸி நிமிபுட்ரின் இயக்கியுள்ள ONCE UPON A STAR என்ற தாய்லாந்து திரைப்படத்தைக் காணும் போது எனது சிறுவயது நினைவுகள் பீறிட்டன.

எனது கிராமத்தில் பீடிக்கம்பெனி சார்பாக இலவசமாகத் திரையிடப்படும் திரைப்படங்களைக் கண்டிருக்கிறேன். ஒரு வேனில் பீடி விளம்பரம் செய்தபடியே கிராமத்தை சுற்றிவருபவர்கள் இரவில் ஊர் மைதானத்தில் திரைக்கட்டி படம் போடுவார்கள். 16mm ஃபிலிம் புரொஜெக்டர் பயன்படுத்துவார்கள். எம்.ஜி.ஆர் படமா, சிவாஜி படமா என்பது எந்தப் பீடிக்கம்பெனி என்பதற்கு ஏற்ப மாறுபடும்.

வா ராஜா வா, கோமாதா என் குலமாதா, காவல்காரன். தாய்க்கு தலைமகன், சவாலே சமாளி போன்ற திரைப்படங்களைத் திரையிட்டுப் பார்த்திருக்கிறேன்.

மாலை ஆறு மணிக்கெல்லாம் திரைக்கட்டி விடுவார்கள். ஆனால் என்ன படம் என்று சொல்ல மாட்டார்கள். பீடி விளம்பரத்திற்கான நோட்டீஸ். இலவச பீடி விநியோகம் நடந்து முடிந்த பின்பே படத்தைத் திரையிடுவார்கள். ஆபரேட்டர் அருகில் அமர்ந்து கொண்டு ஓடி முடித்த ரீல்களைப் பத்திரமாக மரப்பெட்டிக்குள் வைப்பதற்கு உதவி செய்வான் கூடப் படித்த முத்துராமன். இதற்காக அவனுக்கு எட்டணா கிடைக்கும்.

படம் ஆரம்பிக்கும் முன்பாக இடம் பிடிக்க ஊர்மக்கள் பாய் அல்லது சாக்குக் கொண்டு வந்து விரித்துவிடுவார்கள். மாட்டுவண்டியை ஒரமாகப் போட்டு அதில் அமர்ந்து படம் பார்ப்பவர்களும் உண்டு. சைக்கிளில் அமர்ந்து பார்ப்பவர் உண்டு. கயிற்றுகட்டிலைக் கொண்டு வருகிறவர்கள் ஒரமாகப் போட்டுக் கொள்ள வேண்டும் என்பது கட்டுப்பாடு. பீடி விளம்பரத்திற்கும் கோமாதா என் குலமாதாவிற்கும் என்ன தொடர்பு எனத் தெரியவில்லை. அதை நிறைய முறை போட்டிருக்கிறார்கள்.

ஒருமுறை மின்சாரம் துண்டிக்கபட்ட போது இருட்டிற்குள் யாரோ ஒரு ரீலைத் திருடிக் கொண்டுபோய்விட்டார்கள். பீடிக் கம்பெனி ஆட்கள் ஊர் முழுவதும் தேடியும் அந்த ரீல் கிடைக்கவில்லை. அந்த வருஷத்தோடு அந்த பீடிக்கம்பெனி வருவது நின்று போனது.

மருந்துக் கம்பெனி விளம்பரத்திற்காக ஊர் ஊராகச் சென்று படம் காட்டும் குழுவினரைப் பற்றியதே ONCE UPON A STAR திரைப்படம்.

இன்று திரைப்படங்களில் ஒரு நடிகருக்கு பதிலாக வேறு ஒருவர் டப்பிங் பேசுவது போல இவர்கள் மௌனப் படத்தைத் திரையிட்டு அதில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் குரல் கொடுக்கிறார்கள். பெண் குரலில் கூட ஆணே பேசுகிறான்.

ஒரு பழைய வேன். அதற்குள் ஒரு 16mm ஃபிலிம் புரொஜெக்டர், படப்பெட்டி, மைக், திரை மற்றும் இதர உபகரணங்கள். விற்பனைக்கான மருந்துகள். நான்கு பேர் அதில் தொலை தூர கிராமங்களை நோக்கி பயணம் செய்கிறார்கள்.

காவோ, மனித் மற்றும் மேன் என மூவர் அந்தப் பயணக்குழுவில் இருக்கிறார்கள். மூவரில் மனித் மட்டுமே அனைத்து வேலைகளையும் செய்கிறான். அவன் திறமைசாலி. சினிமாவில் சாதிக்க வேண்டும் எனக் கனவு காணுகிறவன்.

புகழ்பெற்ற திரைப்பட நடிகர் மித்ர் சாய்பாஞ்சா படங்களை அதிகம் காட்டுகிறார்கள். அவருக்கு மனித் குரல் கொடுக்கிறான் இலவசமாகத் திரையிடப்படும் படத்தின் இடைவேளையில் தங்களின் மருந்துகளை விற்பனை செய்கிறார்கள். அதன் வசூலுக்கு ஏற்ப அவர்களுக்கு ஊதியம் தரப்படுகிறது.

மருந்துக் கம்பெனிகளுக்குள் போட்டி என்பதால் எந்த நடிகருக்கு யார் சிறப்பாகக் குரல் கொடுப்பவர். எந்தப் படத்திற்குக் கூட்டம் அதிகமாகச் சேர்கிறது என்பதில் பலத்த போட்டி ஏற்படுகிறது.

மனித்தின் குழுவில் ருவாங்கே என்ற இளம்பெண் இணைந்து கொள்கிறாள். கதாநாயகிக்கு குரல் கொடுக்கிறாள். அது மிகுந்த வரவேற்பை பெறுகிறது. அதன்பிறகு அவர்கள் ஜோடியாகச் செயல்பட ஆரம்பிக்கிறார்கள். தன்னை யாரும் நெருங்க கூடாது என்பதற்காகத் தனக்குச் சிபிலிஸ் நோய் இருப்பதாகப் பொய் சொல்கிறாள் கே.

காவோவும் மனித்தும் கேயைக் காதலிக்கிறார்கள், அவள் யாரை விரும்புகிறாள் என்பதை அறிந்து கொள்ளத் தனித்தனியாக அணுகுகிறார்கள், கே தனது எதிர்காலத்திற்கெனத் திட்டம் வைத்திருக்கிறாள். அதை அறிந்து கொள்ளும் மனித் அவள் தனது விருப்பத்தின்படி செயல்பட அனுமதிக்கிறான்.

நால்வரின் பயண அனுபவமும், அவர்களுக்குள் ருவாங்கேயை காதலிப்பதில் ஏற்படும் போட்டியும், திரையிடுவதில் ஏற்படும் பிரச்சனையும் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. தீரவத் ருஜிந்தமின் ஒளிப்பதிவும் மனித் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சுகோல்லாவத் கனாரோட் நடிப்பும் சிறப்பானது.

1960களின் பிற்பகுதியில் தாய்லாந்தின் கிராமப்புற பார்வையாளர்கள் எப்படியிருந்தார்கள். அன்றைய திரையுலகம் எவ்வாறு இயங்கியது என்பதைப் படம் உண்மையாக விவரிக்கிறது. திரை நட்சத்திரத்தின் வாழ்க்கையும் குரல் கொடுப்பவரின் வாழ்க்கையும் ஒரே புள்ளியில் இணைகின்றன.

தாய்லாந்தின் அழகிய கிராமப்புறப் பகுதிகள் வழியாகச் செல்லும் இந்தச் சினிமா பயணம் தாய்லாந்து சினிமாவின் புகழ்பெற்ற நட்சத்திரம் மித்ர் சாய்பாஞ்சாவுக்குச் சிறப்பான அஞ்சலியை செலுத்துகிறது

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 04, 2025 05:10

June 3, 2025

குற்றமுகங்கள் 14 ஜோரூ தொங்கா

கன்யாகுமரி முதல் கஞ்சம் வரையிலான பரந்த பகுதியை உள்ளடக்கிய மதராஸ் பிரசிடென்சியில் 986 காவல் நிலையங்கள் இருந்தன. அத்தனை காவல்நிலையங்களும் ஜோரூ தொங்காவை அறிந்திருந்தன. அவன் காவல் நிலையங்களில் மட்டுமே திருடுவான். அதுவும் காவலர்கள் வசூல் செய்து வைத்துள்ள தண்டத்தொகை, லத்தி, வாள், மைக்கூடு, தொப்பி, பதிவேடு போன்றவற்றைத் திருடிக் கொண்டுவிடுவான்.

போலீஸிடம் திருடுவது என்பது பகிரங்கமான சவால். அதில் வெற்றி பெறுவதைத் தனது அசாத்திய திறமையாக ஜோரூ தொங்கா நினைத்தான். போலீஸ் நிலையத்தில் திருடு போய்விட்டால் அதை வெளியே சொல்ல மாட்டார்கள். உயர் அதிகாரிகளுக்குத் தெரிவதற்கு முன்பாகத் திருடிய பொருளை மீட்டுவிட முயலுவார்கள். சில சமயம் ஜோரூ தொங்காவிடமே களவுக்கூலி கொடுத்து பொருளை மீட்டுப் போவதும் உண்டு.

ஜோரூ தொங்கா சித்தூரில் வளர்ந்தவன். அவனது அப்பா நாடக கலைஞர்களுக்கு ஒப்பனை செய்தவர். அம்மா ஒரு நடிகை என்றார்கள். ஜோரூவிற்கு மூன்று வயதாக இருக்கும் போது அவனது அம்மா தற்கொலை செய்து கொண்டுவிட்டாள். ஆகவே ஜோரூவை தன்னால் வளர்க்க முடியாது எனப் பாட்டி வீட்டில் கொண்டு போய்விட்டார் அவனது தந்தை. பின்பு அவன் தனது தந்தையைக் காணவேயில்லை. சித்தூரில் வசித்த பாட்டி இறந்த பின்பு அவன் மரம்செடி கொடிகள் போலத் தானாக வளர்ந்து விட்டான்

ஜோரூ இரண்டு மூன்று முறை காவலர்களால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறான். எங்கேயும் அவன் தனது குற்றங்களை மறுத்ததில்லை. “போலீஸ்காரர்களுக்குப் போதுமான கவனம் இல்லை. அதை நிரூபிக்கவே திருடினேன்“ என்பான். நீதிபதி தியோபால்ட் அதைக் கேட்டுச் சிரித்திருக்கிறார்.

“திருடிய பொருட்களை எங்கே வைத்திருக்கிறான்“ என வழக்கறிஞர் கேட்டபோது அதுக்குத் துப்புக்கூலி கொடுக்க வேண்டும் எனக் கையை நீட்டினான் ஜோரூ.

அந்தக் காலக் காவல்நிலையங்களில் இரண்டே அரிக்கேன் விளக்கு இருந்தன. இரவு ரோந்து சுற்ற தீப்பந்தங்களைப் பயன்படுத்தினார்கள். காவலர்களுக்குத் துப்பாக்கி வழங்கப்படவில்லை. நடந்து தான் ரோந்து சுற்ற வேண்டும். அதிகாரிகளுக்குக் குதிரை வழங்கப்பட்டிருந்தது.

சில காவல்நிலையங்களில் அவர்களே உணவு தயாரித்துக் கொள்ளவும் வேண்டும். ஸ்டேஷனிலே உறங்குவதற்கான போர்வை தலையணை வைத்திருப்பார்கள். காவல்நிலையத்தின் துப்பரவு பணிக்கென ஆட்களை வைத்திருந்தார்கள். அவர்களுக்குச் சம்பளம் கொடுக்க மாட்டார்கள்.

புகார் கொடுக்க வரும் கிராமவாசிகளிடமிருந்து காய்கறிகள், தேங்காய் நாட்டுகோழி, வாத்து துவங்கி ஆடு மாடுகள் வரை இனாமாக வாங்கிக் கொள்வார்கள். அப்படி வாங்கிய ஆடு மாடுகளை ஸ்டேஷன் வாசலில் ஏலமிடுவார்கள். சந்தை வியாபாரி கோல்சா அதைக் குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்வான். அப்படிக் காவலர்களால் இனமாகப் பெறப்பட்ட இரண்டு ஆடுகளைக் கூட ஜோரூ தொங்கா திருடியிருக்கிறான்.

திருடிய ஆட்டை காட்டுக்கோவிலில் வெட்டி ஊருக்கே கறிச்சோறு போட்டான். அந்தக் கறிச்சோறு சாப்பிடுவதற்காகக் காவலர்களும் வந்திருந்தார்கள். அவர்கள் சாப்பிட்டு முடித்தபின்பே அது தங்களிடம் திருடிய ஆடு என்பதைத் தெரிந்து கொண்டார்கள்.

காட்டில் ஒற்றை யானையைப் பார்ப்பது ஆபத்து என்பது போலத் தனியே வரும் காவலருக்கு ஜோரூ தொங்காவை பார்த்தால் பயம். வாயில் ஏதோவொரு பச்சிலையை மென்று கொண்டிருப்பான். அந்த எச்சிலை காவலர் கண்ணில் துப்பிவிடுவான். அடுத்த நிமிஷம் பார்வை மறைந்துவிடும். காவலரின் பொருட்களைப் பறித்துக் கொண்டு மாயமாகி விடுவான். கண்விழித்துப் பார்க்கும் காவலர் ஒரு வெற்றிலையில் களிம்பு போல ஏதோ இருப்பது தெரியும். அதை ஜோரூ விட்டுப் போயிருப்பான். அந்தக் களிம்பை கண்ணில் போட்டுக் கொண்டால் பார்வை மீண்டும் இயல்பாகிவிடும்.

ஜோரூ எப்போதாவது பிடிபட்டு விடுவான். அப்போது வேறுவேறு ஊர்களில் இருந்து காவலர்கள் தேடிவந்து அவனை ஆசை தீர அடிப்பார்கள். அப்போது ஜோரூ வலியை மறைத்துக் கொண்டு சிரிப்பான். அத்தோடு “அடிப்பதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது, நன்றாக அடிக்கட்டும்“ என்றும் சொல்லுவான்.

“இவ்ளவு அடியும் உதையும் வாங்கிச் சிறைக்குப் போகிறாயோ. இந்தத் திருட்டில் உனக்கு என்ன லாபமிருக்கிறது“ என இன்ஸ்பெக்டர் நானாபாய்க் கேட்டிருக்கிறார். “இதெல்லாம் ஒரு விளையாட்டு, இருட்டு இல்லேன்னா நட்சத்திரத்தால ஜொலிக்க முடியாது, அப்படித் தான் திருடனும் போலீசும்“ என்றான் ஜோரூ.

இப்படியே ஜோரூ தொங்காவை விட்டுவைத்தால் காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடும் என நினைத்த போலீஸ் சூப்பிரண்டன்ட் டைரெல் அவனது இரண்டு பாதங்களையும் அம்மிக்கல்லால் நசுக்கி நடக்க முடியாமல் செய்தார். அவனால் கால்களைத் தரையில் ஊன்றவே முடியாமல் போனது.

அதன்பிறகான காலத்தில் வாரம் ஒருமுறை ஜோரூ தொங்கா கைகளைத் தரையில் ஊன்றி இழுத்து இழுத்து ஊர்ந்து வந்து காவல்நிலையத்தின் முன்பாகச் சப்தமிடுவான்.

அவனது குரலைக் கேட்ட மாத்திரம் ஏதாவது ஒரு காவலர் வெளியே வந்து அவனது சோற்றுச் செலவிற்கான சில்லறைகளைக் கையில் கொடுத்து அனுப்பி வைப்பார்.

அப்போது காவலரை குனியச் சொல்லி அவரது தொப்பியை எடுத்து வானை நோக்கி வீசி “காக்கா தூக்கிட்டுப் போயிருச்சி“ என்று சிரிப்பான் ஜோரூ.

செல்லமாக அவனது தலையில் தட்டி “உன்னைத் திருத்தமுடியாதுடா“ என்று மண்ணில் விழுந்த தொப்பியை எடுத்து அணிந்து கொள்வார் காவலர்.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 03, 2025 00:40

May 30, 2025

குற்றமுகங்கள்- 13 பச்சைஅங்கி பிஸ்வாஸ்

அந்த வழக்கு 1879ம் ஆண்டுக் கொல்கத்தா நீதிமன்றத்தில் நடைபெற்றது.

நாகோஜி என்ற சாமியாரைக் கொலை செய்ததாகப் பச்சை அங்கி பிஸ்வாஸ் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் பிறவி ஊமை என்றும் நாகோஜியின் சீடராகப் பல ஆண்டுகள் இருந்தவர் என்றும் சொன்னார்கள்.

ஆனால் பச்சை அங்கி பிஸ்வாஸ் நீதிமன்றத்தில் பேசினார். அதுவும் ஆங்கிலத்தில் சரளமாகப் பதில் அளித்தார். ஆகவே அவர் யார். எதற்காக இப்படி ஒளிந்து வாழ்கிறார் என்பதைக் கண்டறியும் படியாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

பச்சை அங்கி பிஸ்வாஸிற்கு நாற்பது வயதிருக்கும். ஆறடிக்கும் மேலான உயரம். தீர்க்கமான கண்கள். தோள்பட்டை வரை புரண்ட சுருண்ட கேசம். கீழ் உதட்டில் ஒரு மச்சம்.

ஒரு மனிதனின் கடந்தகாலத்தைப் போன்ற புதிர்பாதை வேறு எதுவுமில்லை. அதுவும் தன்னை மறைந்துக் கொள்ள விரும்புகிறவன் தனது கடந்தகாலத்தை அழிப்பதில்லை. பல்வேறு கடந்தகாலங்களை உருவாக்கி விடுகிறான். இதில் எது உண்மை என யாராலும் கண்டறிய முடியாது.

பச்சை அங்கி பிஸ்வாஸ் என்பது இறந்துவிட்டதாகக் கருதப்படும் நீலாம்பூர் ஜமீன்தார் ஷியாம் சௌத்ரி என்று சொன்னார்கள். அதற்குக் காரணம் ஷியாம் சௌத்ரியின் இடது கையில் இரண்டு விரல்கள் ஒட்டிக் கொண்டிருந்தன. அது போலவே பச்சை அங்கி பிஸ்வாஸிற்கும் விரல்கள் ஒட்டிக் கொண்டிருப்பதாகக் கண்டறிந்தார்கள்.

அந்த உண்மை வெளிப்பட்டவுடன் ஷியாம் சௌத்ரியின் மனைவி பார்கவி மற்றும் மாமனார் ரதீஷ் பாபு  எவ்வளவு செலவு செய்தாவது பிஸ்வாஸை வழக்கிலிருந்து விடுவிக்க முன்வந்தார்கள். இதற்காக இங்கிலாந்தின் புகழ்பெற்ற வழக்கறிஞர் ரோலன் ஸ்மித்தை நியமித்தார்கள்.

ஷியாம் சௌத்ரியின் வீட்டுபணியாளர்கள். கணக்கர், மற்றும் அவரது மனைவி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்கள். ஆனால் நீதிமன்றத்தில் பச்சை அங்கி பிஸ்வாஸ் தான் ஷியாம் சௌத்ரி இல்லை என்று உறுதியாகச் சொன்னார். அதைக் குடும்பத்தினர் நம்பவில்லை. ஷியாம் சௌத்ரி ஏன் வீட்டை விட்டு ஒடினார். அவர்கள் குடும்பத்திற்குள் என்ன நடந்தது என்பது குறித்து நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பட்டது. அதற்குச் சௌத்ரி குடும்பம் பதில் அளிக்க மறுத்துவிட்டது.

பணியாளர்களில் ஒருவர் மட்டும் அது ஷியாம் சௌத்ரியில்லை. அவரைக் கொல்வதற்கு ஷியாம் சௌத்ரியின் மனைவியே ஆள் அனுப்பிவைத்தார். அதை நேரில் கண்டிருக்கிறேன் என்றார்.

அந்தப் பணியாளர் பித்துபிடித்தவர் என்று சொல்லி சாட்சியத்தை நீதிமன்றம் ஏற்க கூடாது என வழக்கறிஞர் வாதிட்டார். ஷியாம் சௌத்ரியை ஏன் அவரது மனைவியே கொல்ல முயன்றார் என நீதிமன்றம் விசாரிக்க முற்படவில்லை.

அதே நேரம் பர்த்வானில் உள்ள கோவில்பூசாரி கங்காராம் அது தனது இளைய மகன் ராதாநாத் என்று அடையாளம் காட்டினார். அவன் கோவில்பணிகளில் தனக்கு உதவியாக இருந்த நாட்களில் மங்கள் தேப்பின் மனைவி சாரதாவோடு பழக்கம் ஏற்பட்டு அவளைக் கூட்டிக் கொண்டு ஒடிப்போனான் என்று அடையாளம் காட்டினார்.

நீதிமன்றம் சாரதாவைக் கண்டறிந்து சாட்சியம் சொல்ல அழைத்து வரும்படி உத்தரவிட்டார்கள். காசியின் படித்துறை ஒன்றில் பிச்சைக்காரியைப் போல வாழ்ந்து கொண்டிருந்த சாரதாவை அவர்கள் கண்டறிந்து நீதிமன்றம் அழைத்து வருவதற்கு ஒன்பது மாதங்களானது.

அவள் பச்சைஅங்கி பிஸ்வாஸைப் பார்த்த மாத்திரம் அது தனது காதலன் ராதாநாத் இல்லை. அவன் என் முன்னே நின்றிருந்தால் வெறும் கையால் கொன்றுவிடுவேன் என்று சொன்னாள்.

ஆனால் பச்சை அங்கி பிஸ்வாஸை தான் காசியில் படகோட்டியாகப் பார்த்திருக்கிறேன். தங்க கருடன் கொடியுடன் படகில் சுற்றியலைந்த திருடன் துலால் என்றாள். இது வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. கங்கையில் படகோட்டுகிறவர்கள் மற்றும் வாரணாசியின் காவல் அதிகாரி இருவர் சாட்சியம் சொல்வதற்காக அழைத்து வரப்பட்டார்கள்.

அவர்கள் பச்சை அங்கி பிஸ்வாஸை பார்த்த மாத்திரம் அது துலால் தான் என்று உறுதியாகச் சொன்னார்கள். கங்கை நதித் திருடன் துலால் கர்ணனைப் போல நதியில் மிதக்கவிடப்பட்ட குழந்தை என்றார்கள். அவனைப் படகோட்டி விஸ்வன் வளர்த்தான். இளைஞனான துலால் படகில் செல்லும் பயணிகளைத் தாக்கி அவர்களின் நகை பொருட்களைக் கொள்ளையடித்தான். நதியில் அவனைத் துரத்திச் சென்று எவராலும் பிடிக்க முடியாது. யாரோ ஒரு பெண்ணின் காதலில் விழுந்தான். அவள் சென்ற படகு நதியில் மூழ்கியதில் அவள் இறந்துவிட்டாள்.  அதன்பிறகு  துலாலை கங்கையில் காணமுடியவில்லை.  . அவனுக்கு என்ன ஆனது, எதற்காக இப்படி ஊமை போல ஒளிந்து வாழ்ந்து சாமியாரைக் கொலை செய்தான் என அவர்களுக்குப் புரியவில்லை.

பச்சை அங்கி பிஸ்வாஸ் தனக்குப் படகோட்டத் தெரியாது என்பதோடு தான் வாழ்நாளில் காசிக்கு சென்றதேயில்லை என நீதிமன்றத்தில் பதில் அளித்தார். அவரது உண்மையான அடையாளத்தைக் கண்டறிவது எளிதானதில்லை என நீதிமன்றம் உணர்ந்து கொண்டது.

அதே நேரம் வீட்டைவிட்டு ஒடிய ஜமீன்தார் ஷியாம் சௌத்ரிக்கு, கோவில் பூசாரி ராதாநாத்திற்கு, திருடன் துலாலிற்கு என்ன ஆனது, அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா, எங்கே ஒளிந்து வாழுகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்தது. அவர்கள் குறித்த தனி வழக்கு நீதிமன்றத்திற்கு வராதவரை அதை விசாரிக்கத் தேவையில்லை என நீதிமன்றம் முடிவு செய்தது.

வழக்கின் புதிய திருப்பமாகப் பச்சை அங்கி பிஸ்வாஸைப் போலவே கொல்லப்பட்ட துறவி ஏகோஜிக்கு இரண்டுவிரல்கள் ஒட்டிக் கொண்டிருந்தன என்று அவரது சீடர்களில் ஒருவன் சாட்சியம் அளித்தான்.

துறவி நாகோஜி தான் பழைய ஜமீன்தார் ஷியாம் சௌத்ரி எனத் தெரிந்தவுடன் பச்சை அங்கி பிஸ்வாஸைத் தூக்கிலிட வேண்டும் என ஷியாம் சௌத்ரியின் மாமனார் கூக்குரலிட்டார். தான் நியமித்திருந்த வழக்கறிஞரை பிஸ்வாஸிற்கு எதிராக வழக்காடும்படி உத்தரவிட்டார்.  

ஒரு நட்சத்திரம் வானில் ஒளிந்து கொள்ள முடிவு செய்தால் யாரால் கண்டுபிடிக்க முடியும். அப்படித்தான் பிஸ்வாஸ் வாழ்க்கையும் ஆனது.

நாலரை ஆண்டுகள் இந்த வழக்கு நடந்தது, முடிவில் பச்சை அங்கி பிஸ்வாஸ் கொலை செய்ததற்கான சாட்சியம் எதுவும் கிடைக்கவில்லை என விடுதலை செய்யப்பட்டார். அவர் யார் என்ற உண்மை கண்டறியப்படவேயில்லை. வானில் செல்லும் பறவைகள் தனது தடயம் எதையும் விட்டுச் செல்வதில்லை. சில மனிதர்களின் வாழ்க்கையும் அது போலத் தான்.

இதன் நான்கு மாதங்களுக்குப் பிறகு மிர்சாபூர் படித்துறையில் ஒருவர் இறந்துகிடந்தார். யாரோ அவரை அடித்துக் கொன்றிருந்தார்கள். இறந்துகிடந்தவர் அணிந்திருந்த பச்சை அங்கியை வைத்து அவர் பிஸ்வாஸ் தானா எனச் சந்தேகம் வந்தது. ஆனால் அதையும் எவராலும் உறுதிப்படுத்த முடியவில்லை.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 30, 2025 21:51

May 29, 2025

புவனாவின் சமையலறை

குறுங்கதை

••

கண்ணாடி முன்னால் நின்றபடியே ஸ்ரீநாத் சப்தமாகச் சொல்வது கேட்டது.

“ நேரமாகிருச்சி.. லஞ்ச் பேக் பண்ணிட்டயா.. சாப்பிட டிபன் ரெடியா“

புவனா ரசம் வைப்பதற்காகக் கொத்தமல்லி தழைகளும் தக்காளியும் எடுத்து சமையல்மேடையின் மீது வைத்திருந்தாள். பத்து நிமிஷம் இருந்தால் ரசம் ரெடியாகிவிடும். ஆனால் நேரமாகிவிட்டது என அவசரப்படுத்துகிறார். ரசம் வைக்க வேண்டாம் என முடிவு செய்தபடியே லஞ்ச்பாக்ஸில் அவசரமாகச் சோறு, குழம்பு, முட்டைக்கோஸ் பொறியல். வெண்டைக்காய் பச்சடியை, எடுத்து வைத்தாள். மோரை பாட்டிலில் ஊற்றினாள்.

சாப்பிடுவதற்காக இட்லியும் தேங்காய் சட்னியும் தட்டில் வைத்து டேனிங் டேபிளில் கொண்டு போய் வைத்தாள். ஸ்ரீநாத் தட்டைக் கவனிக்காமலே சாப்பிட்டு முடித்து அலுவலகம் கிளம்பினான்.

அலாரம் அடித்து நின்று போனது போலானது வீடு. டைனிங் டேபிள் நாற்காலியில் அமர்ந்தபடியே விரல்நுனியால் தேங்காய் சட்னியை தொட்டு ருசித்தாள். உப்பு குறைவாக இருந்தது. அவர்களுக்குத் திருமணமாகி பதினாலு வருஷங்கள் ஆகிவிட்டது. குழந்தைகள் இல்லை. அடுக்கு மாடிக் குடியிருப்பில் வீடு. ஸ்ரீநாத் விடுமுறை நாளில் கூட குறித்த நேரத்தில் தான் சாப்பிடுவார். ஆகவே அவசரமில்லாமல் ஒரு நாள் கூட அவளால் சமைக்க முடியவில்லை. அடிப்பிடித்துக் கொண்ட குக்கரை கழுவும் போது தனது வாழ்க்கையும் அப்படி ஆகிவிட்டதோ என அவளுக்குத் தோன்றும்.

ஸ்ரீநாத் படிப்பதற்காக வாங்கி வெறுமனே புரட்டிவிட்டு போட்ட தினசரி பேப்பரை கையில் எடுத்துக் கொண்டு ஹாலிற்குச் சென்றாள். சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டு பேப்பர் படித்தாள். இனிமேல் தான் குளிக்க வேண்டும்.

பத்தரை மணிக்கு தான் டிபன் சாப்பிடுவாள். மதிய உணவைச் சாப்பிட மூன்று மணியாகிவிடும். அதுவும் தரையில் அமர்ந்து தான் சாப்பிடுவாள். சில சமயம் ஜன்னலோரமாகத் தரையிலே படுத்து பகல் உறக்கம் கொள்வதும் உண்டு.

அன்றைய மாலையில் இரவுக்கான சப்பாத்தி செய்வதற்காகக் கோதுமை மாவு எடுக்கப் போகும் போது தக்காளியும் கொத்துமல்லியும் பிரிட்ஜில் வைக்காமல் வெளியே இருப்பதைக் கவனித்தாள். கழுவிய ஈரம் கூட மாறாமல் புதிதாக இருப்பது எப்படி என யோசித்தபடியே அதைச் சமையல் மேடையிலே விட்டுவைத்தாள். அன்றிலிருந்து அவளது சமையலறையினுள் ஒரு மாற்றம் உருவானது.

கீரையோ, காய்கறியோ எதுவும் சமையலறைக்குள் வந்துவிட்டால் வாடுவதில்லை. பழங்கள் கெட்டுப் போகாமல் இருந்தன. கறிவேப்பிலை வாடவில்லை. தோசை மாவு கெட்டுப்போகவில்லை. கேரட் நிறம் இழக்கவில்லை. தனது பிரிட்ஜில் இருந்த பொருட்கள் அத்தனையும் வெளியே எடுத்து போட்டுவைத்தாள். எதுவும் கெடவில்லை. எதுவும் அழுகிப்போகவில்லை. இந்த உலகிலிருந்து சமையலறை துண்டிக்கப்பட்டுவிட்டதோ எனத் தோன்றியது.

தனது சமையலறை இப்படி மாறிப்போனதை நினைத்துப் புவனா சந்தோஷம் கொண்டாள். அந்தச் சந்தோஷத்தின் அடுத்த நிலையைப் போல அவளுக்குச் சமையலறையில் இருந்த பாத்திரங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியே பாடிக் கொண்டிருப்பது கேட்கத் துவங்கியது.

டம்ளரின் பாடலும் கரண்டியின் பாடலும் வேறு வேறாக ஒலித்தன. கண்ணாடி பாட்டில்கள் கனத்த குரலில் பாடின. வெட்டுக்கத்தியின் குரல் விநோதமாகயிருந்தது. மாபெரும் இசைக்கூடம் ஒன்றினுள் இருப்பதைப் போல உணர்ந்தாள்.

வீட்டின் சமையலறை அற்புதத்தின் நிகழ்வெளியாக மாறிவிட்டதை ஸ்ரீநாத்திடம் சொன்ன போது அவன் கோபித்துக் கொண்டான். இதெல்லாம் அவளது பகற்கனவு எனத் திட்டினான். அத்தோடு இதை யாரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதே என எச்சரிக்கையும் செய்தான். புவனா தலையாட்டிக் கொண்டான்.

ஒவ்வொரு நாளும் சமையலறைக்குள் நுழைந்தவுடன் அவள் பரவசமடைந்தாள். தேநீர்குவளையுடன் சேர்ந்து பாடினாள். தண்ணீர் பானையின் சங்கீதத்தைக் கேட்டு ரசித்தாள். வெண்கல ஸ்பூனின் உரத்த குரல் அவளுக்குப் பிடித்திருந்தது.

அதன் பிந்திய நாட்களில் தன்னிடம் ஒரு மாற்றம் உருவாகிவருவதை உணர்ந்தாள். சமையல் அறைக்கு வெளியே ஒரு வயதிலும் சமையலறைக்குள் இன்னொரு வயதிலும் இருப்பது போன்ற உணர்வது. அது நிஜமா எனத் தெரியவில்லை. ஆனால் இந்த உணர்வு அவளுக்குச் சந்தோஷத்தையும் தந்தது. சங்கடத்தையும் தந்தது. சமையலறைப் பொருட்களைப் போலத் தானும் மாறாத இளமையுடன் இருக்க முடியுமா என ஏங்கினாள். அந்த ஏக்கம் வாடாத கீரைகளை, அழுகாத பழங்களைத் தொடும் போது வளர்ந்தது.

இந்த ஏக்கம் முற்றிய ஒரு நாளில் ஹோல்டரில் வைத்திருந்த ஒரு முட்டை தவறி தரையில் விழுந்து உடைந்து போனது. குனிந்து அதைச் சுத்தம் செய்துவிட்டுத் திரும்பிய போது பச்சைக்காய்கறிகள் அவள் கண்முன்னால் வாட ஆரம்பித்தன. அவசரமாகத் தண்டுக்கீரை வாடிப்போனது. கறிவேப்பிலையின் இலைகள் உதிர்ந்து போயின. பாத்திரங்கள் வாய் மூடி மௌனமாகின.

வாடிக் கொண்டிருக்கும் காய்கறிகள் பழங்களிடம் என்னடா ஆச்சு உங்களுக்கு என்று கேட்டாள். பதிலற்ற மௌனம் சமையலறையில் நிரம்பியது.

அடுத்த நாளில் அது வழக்கமான சமையலறையாக மாறியது. புவனா அதைப் பற்றி ஸ்ரீநாத்திடம் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 29, 2025 00:02

May 28, 2025

தாகூரின் ஓவியங்கள்

தாகூரின் ஓவியங்கள் குறித்த சிறந்த ஆவணப்படம் Painter Rabindranath.

இதனை சுகந்தா ராய் இயக்கியுள்ளார்.

பன்முக ஆளுமை கொண்ட தாகூர் தனது அறுபது வயதிற்குப் பின்பாகவே ஓவியம் வரையத் துவங்கினார். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்திருக்கிறார்.

1930களில் இவரது ஓவியக் கண்காட்சி ஐரோப்பாவில் நடைபெற்றிருக்கிறது.

அவரது 1700 ஓவியங்கள் ரவீந்திர சித்ரவளி என நான்கு புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளன.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 28, 2025 03:38

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.