S. Ramakrishnan's Blog, page 7
May 27, 2025
இசையே வாழ்க்கை
சிறந்த இசைக்காக ஐந்து ஆஸ்கார் விருதுகள், 26 கிராமி விருதுகள் , ஏழு பாஃப்டா விருதுகள் , மூன்று எம்மி விருதுகள் மற்றும் நான்கு கோல்டன் குளோப் விருதுகள் பெற்றுள்ள இசைக்கலைஞர் ஜான் வில்லியம்ஸ் பற்றிய ஆவணப்படம் Music By John Williams. இதனை லாரன்ட் பௌசெரியோ இயக்கியுள்ளார்.

92 வயதான ஜான் வில்லியம்ஸ் தனது பெற்றோர் மற்றும் இளமைக்கால நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார். ஜாஸ் இசை மீதான அவரது தீராத ஆர்வம். மற்றும் பியானோ நிகழ்ச்சிகளை நடத்திய நாட்களைப் படம் அழகாக விவரிக்கிறது.
ஜான் வில்லியம்ஸின் தந்தை ஒரு இசைக்கலைஞர். ஹாலிவுட் திரைப்பட இசைக்குழுவில் பணியாற்றியவர். ஆகவே தனது மகனை சிறந்த பியானோ இசைக்கலைஞராக உருவாக்க சிறுவயது முதலே பயிற்சிகள் கொடுத்திருக்கிறார்.
திரையுலகில் ஜான் வில்லியம்ஸ் அறிமுகமான போது சந்தித்த நெருக்கடிகள் ஏராளம். ஸ்டீவன் ஸ்பீல்பெர்கின் நட்பு அவரைத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக மாற்றியது. அவர் வழியாகவே இயக்குநர் லூகாஸ் அறிமுகமாகியிருக்கிறார். ஸ்டார் வார்ஸ் உருவாகியிருக்கிறது.

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படத்திற்கு அவர் எவ்வாறு தனித்துவமாக இசையமைக்கிறார் என்பதை விவரிப்பது சுவாரஸ்யமானது. Superman, Harry Potter, ET, Jaws, Indiana Jones, Schindler’s List, Saving Private Ryan, Harry Potter series. போன்ற படங்களின் இசையமைப்பு குறித்து ஜான் வில்லியம்ஸ் தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
இசையமைப்பதற்காக வீட்டில் தனியறை இல்லாத காலங்களில் ஸ்டுடியோவிலே நாள் முழுவதையும் கழித்தேன். எனது மனைவி பார்பரா ரூயிக் ஒரு பாடகி. ஆகவே அவர் எனது இசை ஆர்வத்தைப் புரிந்து கொண்டார். பரபரப்பான திரையிசைப் பணிகளுக்கு நடுவே 41வயதில் திடீரென மனைவியை இழந்த போது வாழ்க்கை முற்றிலும் வெறுமையாகிப் போனது. அப்போது என்னை மீட்டது இசையே. இசை தான் எனது வாழ்க்கை. எனது மீட்சி என்கிறார் ஜான் வில்லியம்ஸ்
அறுபது ஆண்டுகளுக்கு மேலாக ஹாலிவுட் படங்களுக்கு இசை அமைத்திருந்தாலும் தான் மிகவும் குறைவாகவே சினிமா பார்க்க கூடியவன் என்கிறார். ஜான் வில்லியம்ஸின் சிரிப்பு அத்தனை அழகானது. அவரும் ஸ்பீல்பெர்க்கும் சந்தித்துக் கொள்ளும் போது வயதைக் கடந்து இருவரும் பதின்வயது நண்பர்களாகி விடுகிறார்கள்.
கிளாசிக்கல் இசை நிகழ்ச்சி. புகழ்பெற்ற இசைக்க்குழுவை வழிநடத்தும் இசை நடத்துனர் பணி என அவரது பன்முகத்திறமையை ஆவணப்படம் சிறப்பாகப் பதிவு செய்துள்ளது.
ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் இசையை அவர் மக்கள் முன்பாக நேரடியாக நிகழ்த்திக் காட்டும் நிகழ்வு சிலிர்ப்பூட்டுகிறது.
“Music is enough for a lifetime, but a lifetime is not enough for music.”என்கிறார் ஜான் வில்லியம்ஸ். நிகரற்ற இசையமைப்பாளரின் ஆளுமையை இந்த ஆவணப்படம் சிறப்பாக விவரித்துள்ளது.
May 26, 2025
சமையற்கலைஞரின் ஞானம்.
நீங்கள் விரும்பும் ஒரு தொழிலைத் தேர்வு செய்து அதில் உங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவு செய்து உச்சநிலையை அடைய முடிந்தால் அதுவே வாழ்வின் உண்மையான வெற்றி என்கிறார் சமையற்கலைஞர் ஜிரோ ஓனோ.

ஜப்பானின் புகழ்பெற்ற உணவகம் சுகியாபாஷி ஜிரோ. தோக்கியோவில் உள்ளது. பத்து இருக்கைகள் மட்டுமே கொண்ட சிறியதொரு உணவகம். அங்கே சுஷி எனப்படும் மீன் உணவு புகழ்பெற்றது. ஒரு மாதகாலத்திற்கு முன்பு பதிவு செய்தால் மட்டுமே சாப்பிட இடம் கிடைக்கும்.
அங்கே உணவிற்கான கட்டணம் அதிகம். ஆனால் அதன் தரத்திற்காக அவ்வளவு பணம் கொடுக்கலாம் என்கிறார்கள் வாடிக்கையாளர்கள்.
ஜிரோ தனது உணவகம் பற்றிய அனுபவங்களையே பகிர்ந்து கொள்கிறார். ஆனால் அதில் வெளிப்படும் ஞானம் நம் அனைவருக்கும் பொதுவானது. அவர் வாழ்வின் உண்மையான மகிழ்ச்சி எதுவென அடையாளம் காட்டுகிறார். தனது வேலையை ஒருவர் எவ்வளவு நேசமிக்க முடியும் என்பதற்கு அடையாளமாக இருக்கிறார்.
ஜப்பானின் உயரிய விருதுகளில் ஒன்று இந்த உணவகத்தை நடத்தும் ஜிரோ ஓனோவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. விருதுவழங்கும் நாளில் கூட அவரது உணவகத்திற்கு விடுமுறை விடப்படவில்லை. காலையில் விருது பெற்றுவிட்டு மதியம் தனது உணவகத்திற்க்கு வந்துவிட்டார்.
எண்பது வயதைக் கடந்த அவரது அனுபவங்களையும் அவரது இரண்டு மகன்களையும் பற்றிய ஆவணப்படம் Jiro Dreams of Sushi மிக நேர்த்தியாக உருவாக்கபட்டிருக்கிறது

இது சுஷி உணவகம் பற்றிய ஆவணப்படமாக இருந்தாலும் ஜிரோ ஓனோவின் வாழ்க்கை மற்றும் ஜப்பானிய உணவு முறைகள், சந்தை மற்றும் மாறிவரும் உணவுப்பழக்கம். தந்தை மகன் உறவு பற்றியதாகவும் விரிகிறது. புகழ்பெற்ற தந்தையின் நிழலில் வளரும் பிள்ளைகள் சந்திக்கும் பிரச்சனைகளை அவரது இரண்டு மகன்களும் வெளிப்படையாகப் பகிர்ந்திருக்கிறார்கள்.
தனது உணவகத்திற்கு ஒருவர் பயிற்சியாளராக வந்தால் பத்தாண்டுகளுக்கு பின்பே அவருக்கான பதவி கிடைக்கும். அதுவரை அவர் உணவு தயாரிப்பதில் தனது ஈடுபாட்டினைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும் என்கிறார் ஜிரோ.
சமைப்பதில் காட்டும் அவரது ஆர்வத்தை அதை வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறுவதிலும் காட்டுகிறார். சாப்பிடுகிறவர்கள் முகத்தில் வெளிப்படும் மகிழ்ச்சியே அவரை சந்தோஷம் கொள்ள வைக்கிறது. தியானப்பயிற்சி அளிக்கும் குருவைப் போலவே அவர் நடந்து கொள்கிறார்.
மீன் உணவுகளை சமைக்கும் அந்த உணவகத்திற்குத் தேவையான மீன்களை எப்படித் தேர்வு செய்கிறார்கள் என்பதையும் விரிவாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். அதில் டூனா மீன்களை விற்பனை செய்பவரின் நேர்காணல் சிறப்பாக உள்ளது. இது போல அவர்கள் பயன்படுத்தும் அரிசி. அதை வேக வைக்கும் விதம். உணவு சமைப்பதற்கான மரபான முறைகள், பரிமாறும் விதம் ஆகியவையும் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடல் உணவுகளை மட்டுமே அவர் தனது உணவகத்தில் வழங்குகிறார். மதுவோ, வேறு சிற்றுண்டிகளோ அங்கு வழங்கப்படுவதில்லை. எவ்வளவு புகழ்பெற்றிருந்தாலும் அதிக இருக்கைகளை அவர் உணவகத்தில் ஏற்படுத்தவில்லை. இசை நிகழ்ச்சியின் நடத்துனர் எவ்வளவு கவனமாக இசையை நிகழ்த்துவாரோ அது போலவே உணவகத்தை நடத்துகிறார். இதன் மாறாத தரத்தின் காரணமாக உலகின் 6வது சிறந்த உணவகமாக தரவரிசைப்படுத்தியிருக்கிறார்கள்.

ஒருவர் தனது வேலையில் முழுமையாக மூழ்குதல் வேண்டும். அதன் வழியே தனது திறமையை மேம்படுத்திக் கொண்டேயிருக்க முடியும். தொடர்ச்சியான கற்றல் மற்றும் மேம்பாடு இல்லாத எவராலும் உச்சநிலையை அடைய முடியாது. ஆகவே வணிக வெற்றிகளை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் தனது திறமைகளை ஒருவர் இடைவிடாமல் மேம்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும். அதற்கு அயாரத உழைப்பும் புதியன செய்வதில் நாட்டமும் முழுமையான ஈடுபாடும் தேவை.
ஒவ்வொரு நாளும் தனது தரத்தை விட்டுக் கொடுக்காமல் உணவு தயாரிப்பது எளிதானதில்லை. ஆனால் அதில் வெற்றி அடைவதன் மூலமே வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற முடியும் என்கிறார் ஜிரோ. தனது வேலையின் மீது ஒருவர் சலிப்படைந்து அதை பற்றி புகார் சொல்லிக் கொண்டேயிருந்தால் அவரால் வெற்றியை அடைய முடியாது. வாடிக்கையாளர்களின் அன்பை பெறுவதற்கு அவர்களுக்கான இருக்கை துவங்கி அவர்கள் வலது கை பழக்கம் கொண்டவர்களா இடது கை பழக்கம் கொண்டவர்களா என்பது வரை அறிந்து வைத்து அதற்கேற்ப உணவு பரிமாற வேண்டும் என்றும் சொல்கிறார்.
வெப்பநிலையைப் பொறுத்து மணமும் சுவையும் மாறுபடக்கூடியது. ஆகவே சூடான உணவை எப்படி வழங்குவது என்பதை கவனமாகத் திட்டமிட வேண்டும். உணவகத்தில் அனைவரும் இணைந்து ஒரே அலைவரிசையில் வேலை செய்யும் போது தான் சாத்தியமாகும், என்று சொல்கிறார் ஜிரோ
ஜிரோவின் மூத்த மகன் யோஷிகாசுவுடனான அவரது உறவு மற்றும் இளையமகனின் ஆதங்கம், தனது மரபை பிள்ளைகள் தொடர்வதில் உள்ள மகிழ்ச்சி ஆகியவற்றை ஆவணப்படத்தில் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்கள். 85 வயதான ஜிரோ ஓனோ, உணவு சமைப்பதை கலைப்படைப்பாக மாற்றுகிறார். அதை ஆவணப்படத்தில் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
••
மண்டியிடுங்கள் தந்தையே மொழியாக்கம்
எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவல் இந்தி மற்றும் மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்படுகிறது. இந்த மொழிபெயர்ப்புகள் ஆண்டின் இறுதிக்குள் வெளியாக கூடும்.

May 23, 2025
வழிவிடும் வானம்
குட்டி இளவரசன் நாவலை எழுதிய பிரெஞ்சு எழுத்தாளர். அந்த்வான் து செந்த்-எக்சுபெரியின் ( Antoine de Saint-Exupery) வாழ்க்கை வரலாற்றை மையமாக் கொண்டு Saint-Exupéry திரைப்படம் வெளியாகியுள்ளது. இதனை இயக்கியிருப்பவர் பாப்லோ அகுவேரோ. 2024ல் வெளியான திரைப்படம்.

எக்சுபெரி தபால்கள் கொண்டு செல்லும் விமானத்தின் விமானியாகப் பணியாற்றியவர். ஏர்மெயிலில் தான் பணியாற்றிய அனுபவங்களை இரண்டு நாவல்களாக எழுதியிருக்கிறார்.

இப்படத்தின் கதை 1930ல் நிகழ்கிறது. பிரெஞ்சு நிறுவனமான ஏரோபோஸ்டெலின் அர்ஜென்டினா கிளையில் விமானிகளாக ஹென்றி குய்லூமெட் மற்றும் எக்சுபெரி பணியாற்றுகிறார்கள்.
ஒருமுறை தபால் கொண்டு செல்லும் விமானம் கடுமையான புயல்மழைக்குள் சிக்கிக் கொள்கிறது. காற்றின் வேகத்தைச் சமாளிக்க முடியாமல் விமானி எக்சுபெரி தடுமாறுகிறார். இன்றிருப்பது போல அன்று நவீன உபகரணங்கள் விமானத்தில் கிடையாது. அவரது நண்பரான ஹென்றி குய்லூமெட் இன்னொரு விமானத்தில் பறந்தபடியே உதவிகள் செய்கிறார். இருவரும் இணைந்து முடிவில் தரையிறங்கும் பாதையைக் கண்டறிகிறார்கள். விமானம் பத்திரமாகத் தரையிறங்குகிறது. மனிதர்களை விடவும் அவர்கள் கொண்டு வந்த தபால்களே முக்கியமானது எனச் சொல்கிறது விமான நிறுவனம்.

படத்தின் இந்தத் துவக்க காட்சிகள் சிறப்பாக உள்ளன. விமான நிறுவனம் பாதுகாப்புக் காரணங்களைச் சொல்லி ஆட்குறைப்பில் ஈடுபட முனைகிறது. இதனை ஏற்க மறுத்த எக்சுபெரி ஆண்டிஸ் மலைத்தொடரைக் கடந்து வருவதற்கான மாற்றுவான்வழியை உருவாக்க முனைகிறார். விமானத்தில் புதிய விளக்குகள் பொருத்தப்படுகின்றன. புதிய வழித்தடம் திட்டமிடப்படுகிறது.
அர்ஜென்டினாவிற்கும் சிலிக்கும் இடையில் தபால்பைகளைக் கொண்டு செல்வதற்காக ஹென்றி குய்லூமெட் விமானத்தில் புறப்படுகிறார். 1930 ஜூன் 13 வெள்ளிக்கிழமை மோசமான வானிலை காரணமாக விமானம் ஆண்டிஸ் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளாகிறது.

மனித நடமாட்டமேயில்லாத பகுதியில் உறைபனியின் ஊடாக உயிருக்கு போராடிய நிலையில் ஹென்றி குய்லூமெட் நடக்கிறார். அவரைக் கண்டறிந்து மீட்பதற்காக எக்சுபெரி அதே பாதையில் பயணிக்கிறார். Wind, Sand and Stars புத்தகத்தில் அந்த அனுபவம் விவரிக்கபட்டிருக்கிறது
சாத்தியமற்றதாகக் கருதப்பட்ட அந்தத் தேடலில் எப்படி எக்சுபெரி ஈடுபடுகிறார் என்பதே படத்தின் மையக்கதை.
அந்தக் கால விமானப்போக்குவரத்து நிறுவனங்களின் செயல்பாடுகள். மின்விளக்குகள் இல்லாத ஒடுதளங்கள் மற்றும் விமான நிலையத்தின் தொடர்பு அறை, என நூற்றாண்டுகளுக்கு முந்தைய விமானசேவையைத் துல்லியமாகச் சித்தரித்துள்ளார்கள்.

1929 ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவுக்குக் குடிபெயர்ந்த, செந்த்-எக்சுபெரி, அங்குப் பிரெஞ்சு விமான அஞ்சல் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். அந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு சதர்ன் மெயில் மற்றும் நைட் ஃப்ளைட் ஆகிய நாவல்களை எழுதியிருக்கிறார். தமிழில் விடியலைத் தேடிய விமானம் என வெளியாகியுள்ளது. பறத்தலின் இன்பத்தை ஒருவர் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த நூலை அவசியம் படிக்க வேண்டும்.
இதில் இரவுநேர விமானப்பயணத்தின் நிஜமான சவால்களை எழுதியிருக்கிறார். மேலும் விமானியின் மனநிலை மற்றும் வானிலிருந்து காணும் அழகிய காட்சிகள். விமானிகளுக்குள் உருவாகும் நட்பு மற்றும் நிர்வாகத்தின் கெடுபிடிகள் பற்றியும் சிறப்பாக எழுதியிருப்பார். இந்த அனுபவங்களையே இப்படமும் விவரிக்கிறது.
குறிப்பாக நண்பரைத் தேடி மேற்கொள்ளும் ஆண்டிஸ் மலைப் பயணத்தின் போது வெளிப்படும் நிலவெளிக்காட்சிகள் அபாரமானவை. விமானத்துடன் நாமும் கூடவே பறப்பது போன்று அழகான காட்சிகள். ஒளிப்பதிவாளர் கிளேர் மாதன் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

எக்சுபெரியின் எழுத்துலகம் பற்றியோ, சொந்த வாழ்க்கை பற்றியோ படம் அதிகம் கவனம் கொள்ளவில்லை. மாறாக அவரது நட்பு மற்றும் துணிச்சலான பறத்தலை மட்டுமே விவரிக்கிறது. விமானியான எக்சுபெரியின் உலகை மட்டுமே நாம் காணுகிறோம்.
விமானத்தில் பறந்தபடியே அவர் கனவு காணுகிறார். அல்லது உலகம் கனவில் வெளிப்படும் காட்சிகள் போன்று தோற்றமளிக்கிறது. தனது சொந்த உடலை இயக்குவது போலவே விமானத்தைக் கையாளுகிறார். உறுதியான நம்பிக்கையும் தைரியமும் ஆழ்ந்த அன்புமே அவரை இயக்குகிறது.
நட்பின் பல்வேறு பரிமாணங்களையே குட்டி இளவரசனிலும் காணுகிறோம். அவன் எல்லோருடன் நட்பு பாராட்டுகிறான். அவனால் நரியுடன் கூட நட்பாகப் பழக முடிகிறது. ஹென்றி குய்லூமெட்டின் கதை நம்ப முடியாத நிஜம். ஒருவகையில் அவரும் ஒரு குட்டி இளவரசனே.
May 20, 2025
எஸ்.ரா 100 இணைய நிகழ்வு
நாளை 21.5.25 மாலை நடைபெறுகிற எஸ் ரா நூறு இணைய நிகழ்வில் எனது நான்கு நூல்கள் குறித்த உரைகள் இடம்பெறுகின்றன. இதனை முனைவர். வினோத், முனைவர் ஸ்ரீதர் மற்றும் முனைவர் நாகஜோதி இணைந்து ஒருங்கிணைப்பு செய்கிறார்கள்.

யாத்ரிக்
இயக்குநர் மணி கவுல் 1966ல் பூனே திரைப்படக்கல்லூரியில் பயின்ற நாட்களில் இயக்கிய டிப்ளமோ திரைப்படத்தை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார்கள்.
இதே திரைப்படக் கல்லூரியில் பயின்ற பல்வேறு இயக்குநர்கள். ஒளிப்பதிவாளர்கள் படங்களையும் FTIIOfficial இணைப்பில் காண முடிகிறது.
மணி கவுலின் படம் அவரது பிந்தைய சாதனைகளின் துவக்கப்புள்ளியாக உள்ளது.
இப்படத்தை அஜந்தாவில் படமாக்கியிருக்கிறார். இசையும் ஒளிப்பதிவும் அவருக்கே உரித்தான தனித்துவமிக்க அழகியலும் கொண்ட இந்தப்படம் எனக்குப் பிடித்திருந்தது.

இணைப்பு :
May 19, 2025
குற்றமுகங்கள் -12 கண்துஞ்சார்
கண்துஞ்சார் மனிதர்களிடம் எதையும் திருடவில்லை. அவர் கடவுளிடம் மட்டுமே திருடினார். அவர் தன்னுடைய வாழ்நாளில் முப்பத்தியாறு கோவில்களில் திருடியிருக்கிறார். அதில் நகைகள், ஐம்பொன் சிலைகள் மற்றும் கோவில் மணிகள் அடக்கம்.

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் மதராஸ் ராஜஸ்தானியில் இருந்த பல கோவில்களில் மூன்று காலப் பூஜைகள் நடக்கவில்லை. கோவிலுக்கென இருந்த நிலமும் சொத்துகளும் பிறரால் அனுபவிக்கபட்டன. அது போலவே கோவிலின் நகைகள் மற்றும் ஐம்பொன் சிலைகள் கோவில் நிர்வாகியாக இருந்த நிலச்சுவான்தார் வசமே இருந்தன. அவர்கள் விழா நாட்களின் போது மட்டுமே கோவிலுக்குரிய நகைகளைக் கொண்டு வருவார்கள். அப்போதும் அதற்குப் பெரிய பாதுகாப்பு வசதிகளோ, காவலோ கிடையாது.
கோவில் நகைகள் அடக்கிய பெட்டகம் ஒன்றை நான்கு பேர் மாட்டுவண்டியில் கொண்டு வந்த போது அதைக் கண்துஞ்சார் ஒற்றை ஆளாகக் கொள்ளையடித்திருக்கிறார். இந்த வண்டிக்கு பாதுகாவலாக வந்தவர்கள் நாலு பேர். அவர்கள் கையில் குத்தீட்டி வைத்திருந்தார்கள். அவர்களைத் தாக்கி வண்டியோடு பெட்டகத்தைக் கண்துஞ்சார் கொண்டு போய்விட்டார்.
கண்துஞ்சாருக்கு கடவுள் மீது என்ன கோபம் எனத் தெரியவில்லை. ஆனால் அவர் கோவிலில் மட்டுமே திருடினார். கண்துஞ்சாருக்கு என்ன வயது என்றோ, எப்படி இருப்பார் என்றோ யாருக்கும் தெரியாது. அவரது உண்மையான பெயர் கண்துஞ்சார் தானா என்றும் தெரியாது.
கடவுளின் மீது கோபம் கொள்ளாதவர் யார் இருக்கக் கூடும். கடவுளிடம் போடுகிற சண்டை என்பது தண்ணீருக்குள் கைதட்டுவது போன்றது. யாரும் கேட்க முடியாது.
கண்துஞ்சார் வந்துவிடப்போகிறார் என்று பயந்து பல்வேறு கோவில்களில் இராக்காவல் போட்டார்கள். கண்துஞ்சார் பெயரைச் சொல்லி கோவில் நிர்வாகிகளே கொஞ்சம் நகைகளைத் திருடிக் கொண்டார்கள்.

வேப்பங்குடியில் இருந்த வேஷக்காரன் முனுசாமி சயனநாதர் கோவில் திருவிழாவின் போது கண்துஞ்சார் வேஷம் கட்டிக் கொண்டு களவு ஆட்டம் என்ற வேடிக்கை நிகழ்ச்சியை ஆடிக்காட்டிய போது தான் மக்கள் இப்படித் தான் கண்துஞ்சார் இருப்பார் என்று கண்டார்கள்.
உண்மையில் கண்துஞ்சாரைப் பற்றிய கதைகளை உருவாக்கியது முனுசாமியே. தனக்கு அவரை நேரில் தெரியும் என்றும். அவர் வெள்ளைக்காரர்களால் நாடுகடத்தப்பட்டவர்களின் குடும்பங்களை வாழ வைப்பதற்காகவே கோவில் நகைகளைக் கொள்ளையடிக்கிறார். கடவுளால் கைவிடப்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்காகவே அப்படி நடந்து கொள்கிறார் என்றார் முனுசாமி.
அந்தக் கதையைப் பலர் நம்பாத போதும் கண்துஞ்சாரைப் பற்றிய களவு ஆட்டம் மிகவும் புகழ்பெறத் துவங்கியது. முனுசாமியைப் போலவே தென்மாவட்டங்களிலும் சில கூத்துக்கலைஞர்கள் கண்துஞ்சார் வேஷம் கட்ட ஆரம்பித்தார்கள்.
அதன்பிறகான வருஷங்களில் கோவில் திருவிழா தோறும் கண்துஞ்சார் ஆட்டம் தவறாமல் நடைபெற்றது. இந்த வருஷம் கண்துஞ்சாராக யார் வேஷம் கட்டப்போகிறார்கள் என்று மக்கள் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். இந்த வேடிக்கைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்ததை உண்மையான கண்துஞ்சார் அறிந்திருக்கக் கூடும். அவர் தனது திருட்டை தொடர்ந்து கொண்டேயிருந்தார்
கோவில்கொள்ளைகளைத் தடுப்பதற்காக உருவாக்கபட்ட காவல்பிரிவின் தலைவராக நியமிக்கபட்ட டக்ளஸ் ஹாமில்டன் கண்துஞ்சாரைப் பிடிப்பதற்காகக் கோவில் தோறும் மாறுவேஷத்தில் ஆட்களை உலவ விட்டிருந்தார்.
ஒராண்டிற்குப் பிறகு பெருமல்லபாடு கோவிலில் திருட முயன்றபோது கண்துஞ்சார் ஹாமில்டனின் ஆட்களால் கைது செய்யப்பட்டார். அது கண்துஞ்சார் தானா என அவர்களால் நம்ப முடியவில்லை. காரணம் கைது செய்யப்பட்ட நபருக்கு நாற்பது வயதிருந்தது. மீசையில்லாத முகம். ஏறு நெற்றி. வழுக்கை தலை. ஒரு கண்ணில் பூ விழுந்திருந்தது. சாய வேஷ்டி கட்டியிருந்தார். உறுதியான உடற்கட்டு. இவரால் எப்படி இத்தனை கோவில்களைக் கொள்ளையடிக்க முடிந்தது என ஹாமில்டனுக்கு வியப்பாக இருந்த்து.
இது உண்மையான கண்துஞ்சாரில்லை. அவரது நகல். அவர் இப்போது வெளியே வருவதில்லை என்று பலரும் சொன்னார்கள். பிடிபட்ட நபரிடம் விசாரணை நடந்தது. அவர் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அது ஹாமில்டனின் சந்தேகத்தை அதிகப்படுத்தியது.
ஒருவேளை கண்துஞ்சார் தன்னைத் தேடும் நாடகத்தை முடித்து வைக்க இப்படி ஒரு ஆளை அனுப்பியிருக்கிறாரோ என்றும் நினைத்தார்.
கண்துஞ்சாரைப் பற்றிய கதைகளை உடைக்க வேண்டும் என்பதற்காகவே அவரை ஒரு மாட்டுவண்டியில் ஏற்றி ஊர் ஊராக அழைத்துப் போய்ப் பிடிபட்ட கரடியை வேடிக்கை காட்டுவது போலச் செய்தார்கள். சில ஊர்களில் மக்கள் விரும்பும் தண்டனையை அவருக்கு அளிக்கலாம் என்று சொன்னார்கள். கல்லெறிவது முதல் சாணத்தைக் கரைத்து ஊற்றுவது வரை பல்வேறு தண்டனைகளை மக்கள் அளித்தார்கள். கண்துஞ்சார் தனது வலியை தாங்கிக் கொண்டார்.
முடிவில் பெருமல்லபாடு கோவிலின் முன்பாக நரிக்கூண்டு போலப் பெரிய இரும்புக்கூண்டு ஒன்றை உருவாக்கி அதற்குள் கண்துஞ்சாரை அடைத்தார்கள். கடவுளின் கருணை இருந்தால் நீ உயிர்வாழ்வதற்காக உணவு கிடைக்கும் என்று சொன்னார்கள். குடிப்பதற்குத் தண்ணீர் கூட வழங்கப்படவில்லை. நாவுலர்ந்து பட்டினி கிடந்து எலும்புகள் துருத்திக் கொண்டு புடைத்த நேரத்தில் கூடக் கண்துஞ்சார் ஒரு வார்த்தை பேசவில்லை. எவரிடமும் மன்றாடவில்லை. அது தான் அவர் கண்துஞ்சார் என்பதை அடையாளப்படுத்தியது.
ஹாமில்டன் கண்துஞ்சார் ஆட்டத்தை எங்கும் இனி நிகழ்த்தக்கூடாது என்ற உத்தரவைப் பிறப்பித்தார்
கண்துஞ்சார் தண்ணீரும் உணவும் இன்றி மரணத்துடன் போராடிய போது ஒரு நாள் இடியுடன் கூடி பெருமழை பெய்தது. வாயைத் திறந்து மழைத்தண்ணீரை குடித்தபடி கண்துஞ்சார் சிரித்துக் கொண்டார். கடவுளுடன் அவரது கோபம் தீர்க்கபட்டது போலிருந்தது. மறுநாள் சிரித்தமுகத்துடன் கண்துஞ்சார் இறந்து கிடந்தார்.
••
May 18, 2025
வரலாற்றின் சாட்சியம்
சிப்பாய் எழுச்சியின் போது முக்கியப் போராளியாக விளங்கிய மங்கள் பாண்டே தூக்கிலிடப்பட்ட இடத்தைக் காணுவதற்காகப் பரக்பூர் சென்றிருந்தேன்.

காலனிய வரலாற்றில் பரக்பூர் முக்கிய ராணுவ மையமாக விளங்கியது1772 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் பிரிட்டிஷ் கன்டோன்மென்ட்டாகப் பரக்பூர் மாற்றப்பட்டது
அங்குள்ள காவல்துறையினருக்கான பயிற்சிக்கல்லூரி வளாகத்திலுள்ள ஆலமரத்தில் மங்கள் பாண்டே தூக்கிலிடப்பட்டிருக்கிறார். அந்த மரம் இப்போதும் உள்ளது.

இந்த இடம் தற்போது போலீஸ் பயிற்சிப் பள்ளி வளாகத்தினுள் இருப்பதால் முன் அனுமதி பெற வேண்டும். நண்பர் சதிஷ் இதற்கு உதவி செய்தார்.

மங்கள் பாண்டே தூக்கிலிடப்பட்ட ஆல மரத்தடியில் நின்றேன். அந்த மரம் வரலாற்றின் சாட்சியமாக மாறியுள்ளது. அதன் இலைகள் அசையும் போது கடந்தகாலத்தின் கதைகள் உயிர்பெறவே செய்கின்றன. பரக்பூரில் மங்கள் பாண்டே நினைவாக ஒரு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதில் அவரது உருவச்சிலை உள்ளது. மகாத்மா காந்தியின் அஸ்தியின் மீது கட்டப்பட்ட நினைவுச்சின்னத்துடன் கூடிய, காந்தி படித்துறையும் பரக்பூரில் உள்ளது. கங்கை நதியின் அழகினை படித்துறையில் நின்றபடியே ரசித்தேன்.
••

கொல்கத்தாவின் புகழ்பெற்ற விக்டோரியா நினைவகத்தில் தாமஸ் டேனியல் (1749-1840) மற்றும் வில்லியம் டேனியல் (1769-1837) வரைந்த அரிய ஓவியங்கள் காட்சிக்கு வைக்கபட்டுள்ளன. அந்த ஓவியங்கள் அடங்கிய புத்தகம் வைத்திருக்கிறேன். ஆனால் நேரில் காணும் அனுபவம் பரவசமூட்டியது. நண்பர் கோபால்சுவாமி எங்களுடன் வந்திருந்தார். வரலாற்றில் அதிக ஆர்வம் கொண்டவர்.
வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் பார்வையாளர்கள் பலரும் கையிலும் தண்ணீர் பாட்டில் வைத்திருந்தார்கள். ஆனால் நுழைவாயிலில் உள்ளே தண்ணீரைக் கொண்டு செல்ல முடியாது எனப் பறித்துவிடுகிறார்கள். அவரவர் பெயர் எழுதி பாட்டிலை வெளியே வைத்துவிட்டுப் போய் திரும்ப வரும் போது எடுத்துக் கொள்ள வேண்டுமாம். எதற்காக தண்ணீரைத் தடுக்கிறார்கள் என்று ஒரு பெண் ஆத்திரப்பட்டார். பாதுகாப்பு காரணங்களுக்காக என்று ஒரு காவலர் விளக்கினார். அந்தப் பெண் தனது பாட்டிலில் இருந்த தண்ணீர் முழுவதையும் அவர் கண்முன்னே குடித்து முடித்து காலி பாட்டிலை வீசி எறிந்தார்.
1784ல் தாமஸ் டேனியல் மற்றும் அவரது மருமகன் வில்லியம் டேனியல் இருவரும் ஓவியர்களாக இந்தியாவிற்கு வந்தார்கள். பின்பு வில்லியமின் தம்பி சாமுவேல் அவர்களுடன் இணைந்து கொண்டார். இந்தியா முழுவதும் பயணம் செய்து அவர்கள் வரைந்த வண்ண ஓவியங்கள் பேரழகானவை.

இந்த ஓவியங்களின் வண்ணம் மற்றும் துல்லியமான சித்தரிப்பு வியப்பூட்டக்கூடியது. தமிழகத்தின் முக்கிய நிலக்காட்சிகள் மதுரை தஞ்சை நகரக்காட்சிகளை இவர்கள் வரைந்திருக்கிறார்கள்.
தாமஸ் தனது தேவைக்களுக்காகக் கொல்கத்தாவில் ஒரு அச்சுக்கூடத்தை உருவாக்கினார். வில்லியம் நீர்வண்ண ஓவியங்களை வரைந்து வந்தார். இவர்கள் இந்திய ஓவியர்களுடன் இணைந்து ஓவியங்களை அச்சிட்டு வெளியிட முனைந்தார்கள். கொல்கத்தாவின் பழைய நீதிமன்றம், எழுத்தர்களின் மாளிகை, தேவாலயம். கிளைவ் தெரு உள்ளிட்ட முக்கியமான இடங்களை வரைந்து அவற்றை அச்சிட்டு விற்பனை செய்தார்கள்

இந்தியா முழுவதும் சுற்றிவந்த வில்லியம் தனது பயணவிபரங்களைப் பதிவு செய்வதற்காக ஒரு நாட்குறிப்பு வைத்திருந்தார், அதில் அவர்கள் சந்தித்த மக்கள், சென்ற இடங்கள் மற்றும் ஓவியம் வரைந்த அனுபவம் பற்றி நிறையத் தகவல்களைப் பதிவு செய்திருக்கிறார்.


டேனியல்ஸ் மார்ச் 29, 1792 அன்று மதராஸிற்கு வந்து சேர்ந்தார்கள். அங்கிருந்து தங்களின் தென்னிந்திய பயணத்தை மேற்கொண்டார்கள். அவர்களுடன் பல்லக்குத் தூக்கிகள். பணியாளர்கள். சுமை தூக்குபவர்கள் என ஒரு குழுவே இணைந்து பயணம் செய்தது. அவர்கள் ஜூலை 3 ஆம் தேதி மதுரையை அடைந்தார்கள். மதுரையின் பழைய அரண்மனை மற்றும் தெப்பக்குளம் குளம் உள்ளிட்ட அருகிலுள்ள இடங்களை வரைந்தார்கள். பின்பு ராமேஸ்வரத்தில் உள்ள கோயில்களைக் கண்டார்கள். அங்கிருந்து தெற்கு நோக்கி பயணம் மேற்கொண்டு பாபநாசம் வரை சென்றார்கள். திரும்பி வந்து தஞ்சை பகுதியினைப் பார்வையிட்டார்கள். இந்தக் காலகட்டத்தில் வரையப்பட்டதே திருச்செங்கோடு கோவிலின் ஓவியம்.

அந்த ஓவியம் கொல்கத்தா விக்டோரியா நினைவகத்தில் இடம்பெற்றுள்ளது. ஒவியத்தின் கீழே தரப்பட்ட தகவல் சரியானதாகயில்லை. காலனிய ஆட்சியின் அடையாளமாக உள்ள விக்டோரியா நினைவகத்தினுள் ஆள் உயர கிளைவ் சிலை உள்ளது. மைய மண்டபத்தின் நடுவே விக்டோரியா ராணி சிலை காணப்படுகிறது. பிரம்மாண்டமான இந்த வளாகம் பத்து ஆண்டுகள் கட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பணிகள் நடந்த விதம் பற்றிய புகைப்படத் தொகுப்பினை பார்வையிட்டேன்.
••


பால்தசார் சோல்வின்ஸ் வரைந்த வங்காள ஓவியங்களின் சிறப்புக் கண்காட்சியைக் கொல்கத்தாவில் கண்டேன். இதில் அவரது நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன.



இந்தியாவில் அச்சுத் தயாரிப்பின் ஆரம்பகால முன்னோடிகளில் ஒருவருமான பிரான்சுவா பால்தசார் சோல்வின்ஸ் 1760ல் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப்பில் பிறந்தவர்.
கடல் ஓவியராகப் பயிற்சி பெற்ற சோல்வின்ஸ் 1791-1803 வரை கொல்கத்தாவில் வசித்திருக்கிறார். இந்த நாட்களில் இந்தியவியலில் ஆர்வம் கொண்ட வில்லியம் ஜோன்ஸின் நட்பு உருவானது. அவரது உத்வேகத்தால் தான் கண்ட கேட்ட மனிதர்களை வரைந்திருக்கிறார்.


கிழக்கிந்திய கம்பெனியின் சார்பில் அந்தமான் மற்றும் நிகோபார் மக்களையும் நிலப்பரப்பினையும் ஒவியமாக வரைந்திருக்கிறார். இருநூறுக்கும் மேற்பட்ட தனி ஓவியங்களை தொகுத்து தனிநூலாகவும் வெளியிட்டிருக்கிறார்
இருநூறு ஆண்டுகளுக்கு முந்திய வங்களாத்தின் சமூகக் கட்டமைப்பு. சாதிய படிநிலைகள். ஒடுக்குமுறை, திருவிழா மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் குறித்து இவரது ஓவியங்களின் வழியே தெரிந்து கொள்ள முடிகிறது.

இந்திய சமூகத்தின் அன்றாட வாழ்வையைப் பால்தசார் சோல்வின்ஸ் திறம்பட வரைந்திருக்கிறார். குறிப்பாகக் கிராமியக் கலைகள் மற்றும் கலைஞர்களை அவர் வரைந்துள்ள விதம் பாராட்டிற்குரியது.

சோல்வின்ஸ் தான் கேட்டு அறிந்த விஷயங்களை வரையும் போது தவறு செய்திருக்கிறார். அதில் ஒன்று தஞ்சாவூர் ராஜா என ஒருவரை வரைந்திருப்பது. அது ஒரு தவறான சித்தரிப்பு. சரபோஜி மன்னர்கள் பற்றிய தகவலை வைத்துக் கொண்டு அவர் வரைந்திருக்கலாம்.

சோல்வின்ஸின் ஓவியங்களில் காணப்படும் பெண் நடனக் கலைஞர்கள், மிளிர்கிறார்கள். அவரது ஓவியத்தின் பின்னே எழுதப்படாத கதைகள் மறைந்திருக்கின்றன

பதினெட்டாம் நூற்றாண்டு வங்காளத்தில் கணவன் இறந்தவுடன் பெண்களைச் சிதையில் இறங்கச் செய்யும் பழக்கம் இருந்தது. இந்த நிகழ்வை சோல்வின்ஸ் ஓவியமாக வரைந்திருக்கிறார். அதில் சிதைபுக இருக்கும் பெண் முகத்தில் தனக்குச் சதியில் விருப்பமில்லை என்பது அழுத்தமாக வெளிப்படுகிறது. அதை உணர்ந்தவர்கள் போலப் பெண்ணின் உறவினர்கள் அழுகிறார்கள்.

தனது காலகட்டதை ஆவணப்படுத்தும் விதமாகச் சோல்வின்ஸ் வரைந்த ஓவியங்களை கண்காட்சியில் அழகாகக் காட்சிப் படுத்தியிருந்தார்கள்.
••
May 17, 2025
எஸ்.ரா 100 தொடர் நிகழ்வுகள்
எனது நூறு நூல்களுக்கான விமர்சனக்கூட்டங்கள் வாரந்தோறும் இணையத்தில் தொடர் நிகழ்வுகளாக நடைபெறுகின்றன. அஞ்சிறைத்தும்பி இலக்கிய அமைப்பின் சார்பில் பேராசிரியர் வினோத் இதனை ஒருங்கிணைப்பு செய்கிறார்
இன்றைய நிகழ்வில் ஐந்து நூல்கள் குறித்து உரையாற்றுகிறார்கள்.


விருப்பமான அனைவரும் நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன்
May 15, 2025
குற்றமுகங்கள் 11 பட்லர் லெஸ்லீ
பட்லர் லெஸ்லீ என்று அழைக்கப்பட்ட ராமேந்திரன் மதராஸ் ராஜஸ்தானியின் பகுதியாக இருந்த கண்ணனூரில் வாழ்ந்தவர். கல்கத்தாவிற்குச் செல்லும் போது அவரது பெயர் லெஸ்லீ. மதராஸில் அறை எடுத்து தங்கும் போது அவரது பெயர் சுகுமார். மூன்று பெயர்களில் வாழ்ந்த அவர் இறந்த போது வயது 39.

ஜேனி என்ற ஆங்கிலோ இந்தியத் தாயிற்கும் வணிகரான வி.வி.சந்திரனுக்கும் பிறந்த மகன் என்கிறார்கள். விவிசியின் குடும்பத்தினர் இதனை ஏற்கவில்லை. காற்றில் அடித்துச் செல்லப்பட்ட விதை எங்கே விழுந்து முளைத்தாலும் அதற்கு மரம் பொறுப்பாகாது என்றார்கள்.
ராமேந்திரனுக்குச் சிறுவயது முதலே சரியாகப் பேச்சுவரவில்லை. ஆகவே எதையும் எழுதிக்காட்டச் செய்தார். இதற்காக எப்போதும் பென்சிலும் காகிதமும் வைத்திருந்தார். எட்டு வயதில் தந்தையால் பாரக்பூர் அழைத்துச் செல்லப்பட்ட ராமேந்திரன் அங்கே ராணுவ அதிகாரி வீட்டில் சில ஆண்டுகள் பட்லராகப் பணியாற்றியிருக்கிறார். அதனால் பட்லர் லெஸ்லீயாக மாறினார்.
1886 ஆம் ஆண்டு ராமேந்திரன் மீது ஒரு நீதிமன்ற வழக்குத் தொடுக்கபட்டது. அதன்படி அவர் ஆங்கிலேயர்களிடம் சாராயம் மற்றும் கள் விற்பதற்கான உரிமை பெற்றதாகவும் அந்த உரிமையைத் தவறாகப் பயன்படுத்திக் கள்ளவணிகம் செய்ததோடு அரசிற்குச் செலுத்த வேண்டிய இருபத்திமூன்றாயிரம் ரூபாயைச் செலுத்தமாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கிற்கு வாதடுவதற்காகப் ராமேந்திரன் மும்பையிலிருந்து வழக்கறிஞர் கே.சி.மசானியை வரவழைத்தார். நாலரை ஆண்டுகள் நடைபெற்ற அந்த வழக்கில் ராமேந்திரன் மீது தவறில்லை என்றும் அவர் அபாரதமாக ஆயிரம் ரூபாய்க் கட்டினால் போதும் என்று தீர்ப்பளிக்கபட்டது கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை உருவாக்கியது. அத்தோடு ராமேந்திரன் கவர்னர் வரை எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார் என்பதையும் தெளிவாக்கியது.
ராமேந்திரன் மாதம் ஒருமுறை வங்காளத்திற்குப் பயணம் செய்துவந்தார். அவர் கிழக்கு இந்திய கம்பெனியின் அபின் வணிகத்திற்கு ரகசியமாக உதவினார், அதன் காரணமாகவே அவருக்கு நிறையப் பணம் கிடைத்தது என்று சொல்கிறார்கள். கல்கத்தாவில் அவரது பெயர் லெஸ்லீ. பத்திரிக்கையாளர். ஒரே விடுதியில் ஒரே அறையில் தான் எப்போதும் தங்குவது வழக்கம்.
ராமேந்திரன் தனது வாழ்நாள் முழுவதும் நிலம் வாங்கிக் கொண்டேயிருந்தார். எந்தெந்த ஊர்களில் எவ்வளவு நிலங்களை வாங்கினார் என்று முழுமையாகக் கண்டறிய முடியவில்லை. இவ்வளவு வாங்க எப்படிப் பணம் கிடைத்தது. யாரை வைத்து எப்படி வாங்கினார் என்பது குறித்த விவாதங்கள் வழக்கின் போது பேசப்பட்டன. அவரது குடும்பத்திற்கே அந்த விபரங்கள் முழுமையாகத் தெரியவில்லை.
ராமேந்திரன் நிலம் மற்றும் வீடுகள் வாங்குவதற்கென்றே பனிரெண்டு பேர் கொண்ட குழுவை வைத்திருந்தார். அவர்கள் அபயகாரிகள் என அழைக்கப்பட்டார்கள். அவர்கள் யாருக்கு கடன் கொடுத்தால் எளிதாக நிலத்தைக் கைப்பற்ற முடியும் என அறிந்திருந்தார்கள். பழைய திவான்களுக்கு உதவி செய்வதன் மூலம் அவர்களின் நிலத்தைக் கைப்பற்றினார்கள். கோவில் நிலத்தினைப் பெயர் மாற்றித் தனதாக்கிக் கொண்டார்கள். கணவனை இழந்த பெண்களுக்குச் சொந்தமான நிலத்தைச் சொற்ப பணத்தில் பெற்றார்கள். ஒரு பசுவை விலைக்கு வாங்கிவிட்டுப் பசு கட்டப்பட்டிருந்த நிலமே தங்களுடையது எனப் பத்திரம் பதிந்து கொண்டார்கள். இப்படியாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் அவருக்குச் சொந்தமாகியது.

ராமேந்திரனுக்குச் சொந்தமாக 121 வீடுகள் இருந்தன என்கிறார்கள். தனது தந்தையைப் போலவே அவரும் ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அதே நேரம் உள்ளூரில் மரியாதை வேண்டும் என்பதற்காகத் தாணுப்பிள்ளை குடும்பத்து பெண்ணையும் திருமணம் செய்து கொண்டார். மொத்தம் 32 படுக்கைகளுடன் 20 குளியலறைகள் கொண்ட பெரிய வீடு ஒன்றைக் கட்டிக் கொண்டு வாழ்ந்தார்.
இரண்டு மனைவிகள் மூலமாக அவருக்குப் பதினாறு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் நால்வர் பிறந்த சில மாதங்களில் இறந்து போனார்கள். ஒரே வீட்டில் இரண்டு மனைவிகளுடன் ராமேந்திரன் வாழ்ந்து வந்தார். அதிகமாக நிலமுள்ளவன் ஆயிரம் கைகள் கொண்டவனாகப் பலம் பெறுகிறான் என்று ராமேந்திரன் நம்பினார். எந்த ஊரில் இடம் வாங்குகிறாரோ அதன் பெயரை தனது உடம்பில் பச்சைகுத்திக் கொண்டார். அவரது முதுகு, கைகள், தொடை, கழுத்து என எங்கும் எழுத்துக்களாக இருந்தன.
இவ்வளவு சொத்திற்கு அதிபதியாக இருந்த ராமேந்திரனுக்குத் திடீரென ஒரு நாள் உணவு ஒவ்வாமை ஏற்பட்டது. எதைச் சாப்பிட்டாலும் குமட்டிக் கொண்டு வாந்தி வந்தது. அவரால் வாழைப்பழத்தைக் கூடச் சாப்பிட முடியவில்லை. இதற்கான வைத்தியம் செய்வதற்காக அவர் புகழ்பெற்ற ஆயுர்வேத வைத்தியர்களிடம் சென்றார். அவர்கள் கொடுத்த மருந்தால் சற்று குணமானது. ஆனால் காகம் சாப்பிடுகிற அளவைப் போல உணவைக் கொறிக்க முடிந்ததேயன்றி வயிறு நிறையச் சாப்பிட முடியவில்லை.
ஆங்கில வைத்தியம் செய்து கொள்வதற்காக அவர் மதராஸிற்குச் சென்றார். டாக்டர் டெகார்ட்டிடம் சிகிட்சை எடுத்துக் கொண்டார். இரண்டரை மாத சிகிட்சைக்குப் பிறகு நலமடைந்து சொந்த ஊர் திரும்பினார்.
அதன் மறுநாள் அவரது வீட்டில் பெரிய விருந்து நடைபெற்றது. நூற்றியெட்டு வகைப் பதார்த்தங்கள் அதில் இடம்பெற்றன. இலையின் முன்னால் அமர்ந்த போது ராமேந்திரனுக்குத் தன்னை அறியாமல் கண்ணீர் வந்தது. அவர் ஒரு வாய்ச் சோறு சாப்பிட்டிருப்பார். அப்படியே மயங்கி இலையில் விழுந்து இறந்து போனார்.
ராமேந்திரன் சொத்துக்கு அவரது இரண்டு மனைவியர் மற்றும் உறவினர்கள் சண்டையிட்டுக் கொண்டார்கள். வழக்கு தொடுத்தார்கள். கோர்ட் எந்தெந்த ஊர்களில் எவ்வளவு நிலம் அவரது பெயரில் இருந்த்து எனக் கணக்கெடுக்கும்படி உத்தரவிட்டது. அந்தக் கணக்கெடுப்பிற்கு முன்பாகவே அவரது அபயகாரிகள் பத்திரங்களைத் தங்களின் பெயருக்கு மாற்றிக் கொண்டுவிட்டார்கள். பல வீடுகள் வாடகைக்குக் குடியிருந்தவர்களுக்கே சொந்தமானது.
ராமேந்திரன் பலரையும் ஏமாற்றி நிலங்களைக் கையகப்படுத்திய விபரம் வழக்கின் போது தெரிய வந்தது. அதில் மூன்று கொலைகளும் சம்பந்தப்பட்டிருந்தன ஆகவே அவரது சொத்து முழுமையாகப் பறிமுதல் செய்யப்பட்டது.
நூறு வீடுகளின் அதிபதியாக இருந்த ராமேந்திரனின் பிள்ளைகள் குடியிருக்க வீடின்றி வீதிக்கு வந்தார்கள். அதில் ஒரு பையன் மனநிலை பாதிக்கபட்டு கிழிந்த சட்டையோடு பஜாரைச் சுற்றிக் கொண்டிருந்தான்.
ராமேந்திரனுக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது என்பதை யாராலும் கண்டறிய முடியவில்லை. அவர் ஆடம்பரமாக வாழ்ந்த வாழ்க்கையை விடவும் கையில் சோற்றோடு இறந்த நிகழ்வு தான் மக்கள் மனதில் அழியாமலிருந்தது.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
