S. Ramakrishnan's Blog, page 7
June 30, 2025
புதுமைப்பித்தன் உரை
நேற்று நடைபெற்ற புதுமைப்பித்தன் களஞ்சியம் நிகழ்வில் நான் ஆற்றிய உரை. ஸ்ருதி டிவி வெளியிட்டுள்ளது.
நன்றி
கபிலன்/ ஸ்ருதி டிவி
June 29, 2025
புதுமைப்பித்தன் களஞ்சியம் வெளியீட்டு விழா
ஆ.இரா. வேங்கடாசலபதி தொகுத்துள்ள புதுமைப்பித்தன் களஞ்சியம் நூலின் வெளியீட்டு விழா நாளை நடைபெறுகிறது
அதில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.
சென்னை அடையாறில் உள்ள எம்ஐடிஎஸ் அரங்கில் நாளை பிற்பகல் மூன்று மணிக்கு (30.6.25) இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
புதுமைப்பித்தன் நினைவு நாளில் இந்த விழா நடப்பது மிகவும் பொருத்தமானது.

காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தத் தொகுப்பு நூல் புதுமைப்பித்தன் மறைவிற்குப் பின்பு அவர் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகள். அஞ்சலிகள் மற்றும் புதுமைப்பித்தன் குடும்ப நிதி குறித்த தகவல்கள். சுந்தர ராமசாமி தொகுத்த புதுமைப்பித்தன் நினைவு மலர். சிங்கப்பூரில் வெளியான புதுமைப்பித்தன் குறித்த விமர்சனக் கட்டுரைகள். மலேயாவில் வெளியான புதுமைப்பித்தன் நினைவு மலர், புதுமைப்பித்தனின் கவிதைகள் குறித்த விவாதங்கள். இடதுசாரிகளின் விமர்சனப் பார்வைகள், கமலா விருத்தாசலம் எழுதிய நினைவுக்குறிப்புகள், புதுமைப்பித்தனோடு பழகியவர்களின் நினைவுப்பதிவுகள் என விரிவான தகவல்களை, அரிய ஆவணங்களைக் கொண்டிருக்கிறது.

புதுமைப்பித்தனின் சிறுகதைகளைச் செம்பதிப்பாக கொண்டு வந்து சிறப்பித்த ஆ. இரா. வேங்கடாசலபதி தனது அயராத உழைப்பு மற்றும் தேடலின் விளைவாக இந்த பெருந்தொகுப்பினைக் கொண்டு வந்துள்ளார். 1167 பக்கங்களைக் கொண்டிருக்கிறது.
அவருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.
June 28, 2025
வரலாறும் கவிதையும்
சீனாவின் புகழ்பெற்ற மூன்று கவிஞர்களான வாங் வெய், லி பெய், மற்றும் காவ் ஷி வாழ்வை ஒரே திரைப்படத்தில் காண முடிகிறது. 2023ல் வெளியான Chang An என்ற அனிமேஷன் திரைப்படம் சீனக் கலை மற்றும் கலாச்சாரத்தின் பொற்காலமான டாங் அரசமரபைக் கொண்டாடுகிறது. இரண்டே முக்கால் மணி நேரத் திரைப்படத்திற்குள் ஒரு நூற்றாண்டின் வாழ்வைக் காண முடிகிறது.

எட்டாம் நூற்றாண்டு சீனாவின் துல்லியமான சித்தரிப்பு. அழகிய நிலக்காட்சிகள். விழாக்கள் மற்றும் போட்டிகள். யுத்தம் நடக்கும் விதம். பழைய அரண்மனைகள். நடனப்பெண்கள், அரசியல்மோதல்கள் எனப் படம் டாங் வம்சத்தின் முக்கிய நிகழ்வுகளைச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளது.
போர்களத்தில் எதிரியின் தாக்குதலுக்கு உள்ளாகி பின்வாங்கும் தளபதி காவ் ஷியின் பார்வையில் படம் விரிவடைகிறது.
காவ் ஷி டாங் வம்சத்தில் ஒரு முன்னணி தளபதியாகவும் கவிஞராகவும் இருந்தவர். போர்களத்தில் தோல்வியுற்று தனது வாழ்வை முடித்துக் கொள்ள முயலும் காவ்வைத் தேடி வரும் அரசப் பிரதிநிதி கவிஞர் லி பெய் பற்றி விசாரிக்கிறார்.

தனது நண்பன் லிபெய் பற்றிய கடந்த கால நினைவுகளைக் காவ் ஷி விவரிக்கத் துவங்குகிறார். அவர்களின் நட்பு துவங்கிய விதம். அரசாங்க பணியில் சேருவதற்காக மேற்கொண்ட முயற்சிகள். தனது வீரத்தை பயன்படுத்திப் படைப்பிரிவில் சேருவதற்காக முயலும் காவ் ஷியின் போராட்டம், போர்களத்தில் வெளிப்படும் காவ் ஷியின் வீரம் எனப் படம் இரண்டு நண்பர்களின் வாழ்க்கையை விரிவாகப் பேசுகிறது.
வணிகரின் மகன் என்பதால் லிபெய்யால் அரசாங்க பணியில் சேர இயலவில்லை. அன்றைய சீனாவில் செல்வம் படைத்த வணிகர் என்றாலும் சமூகத்தின் இரண்டாம் தட்டில் இருப்பவராகவே கருதப்பட்டார்கள். ஆகவே அரச பரம்பரையினருக்கு கிடைக்கும் மரியாதை கிடைக்காது. அதிகாரத்தில் இருக்கும் ஒருவரின் பரிந்துரையைப் பெறாமல் அரசாங்க வேலை கிடைக்காது. இந்த இரண்டும் இல்லாத லி பெய் அரண்மனை காவலர்களால் துரத்தியடிக்கபடுகிறார்.

லி பெய்யும் காவ் ஷியும் ஒன்றாகப் பயணம் செய்கிறார்கள். குடிக்கிறார்கள். கவிதை பாடுகிறார்கள். புகழ்பெற்ற சீனக்கவிதைகள் காட்சிகளாக மாறும் அற்புதத்தைத் திரையில் காணுகிறோம்.
ஹாலிவுட் அனிமேஷன் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது சீன அனிமேஷன். இதில் ஒவியத்திலிருப்பது போன்று வண்ணங்கள் மற்றும் சட்டகங்களை உருவாக்குகிறார்கள். சீன நிலக்காட்சி ஒவியங்கள் உயிர் பெறுவது போன்ற காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. சிறந்த இசை படத்திற்குப் பெரிதும் துணை செய்கிறது

சீனாவில் இரவு நேரத்தில் மது அருந்தும் கவிஞர்கள் மகிழ்ச்சியின் ஒரு தருணத்தைப் படம்பிடிக்க அங்கேயே ஒரு கவிதை இயற்றுவார்கள். அதைப் பரிசாக அங்கே விட்டுவிடுவார்கள். அப்படிக் கவிதைகளாகத் தொங்கும் மதுவிடுதி ஒன்று படத்தில் இடம்பெறுகிறது. மதுவிடுதியில் நிரந்தரமாக உங்கள் கவிதை இடம் பெற வேண்டும் என்றால் உயர்குடி பிறந்தவராக இருக்க வேண்டும். மற்ற கவிஞர்களுக்கு அந்த மரியாதை கிடைக்காது. அப்படி ஒரு மதுவிடுதியில் லிபெய்யின் புகழ்பெற்ற கவிதை பாடப்படுகிறது. அதனை மதுவிடுதி ஏற்கவில்லை. ஆனால் மக்கள் மனதில் அந்தக் கவிதை நிரந்தரமாகி விடுகிறது.
வாங் வெய் சிறந்த கவிஞர் மட்டுமின்றிச் சிறந்த இசைக்கலைஞரும் ஆவார். அரச குடும்பத்தினருக்காக அவர் இசை நிகழ்ச்சி நடத்தும் காட்சி படத்தில் இடம்பெற்றுள்ளது. அங்கே அவருக்குக் கிடைக்கும் வரவேற்பு. மற்றும் பாராட்டு அன்று அவர் பெற்றிருந்த புகழைக் காட்டுகிறது.

தொடர்ந்து போரில் ஈடுபடும் காவ் ஷி தான் ஒராண்டாகக் கவிதை எதையும் எழுதவில்லை என்று கவலைப்படுகிறார். திருமணத்தின் வழியாகத் தனக்கு உயர்குடி அந்தஸ்து கிடைக்க்கூடும் என்பதால் அரச பரம்பரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை லிபெய் திருமணம் செய்து கொள்ள முயலுகிறார். அதைக் காவ் ஷி ஏற்கவில்லை. திருமணத்தின் பின்பு லி பெய் அவமானங்களைச் சந்திக்கிறார். அந்தக் குடும்பம் அவரை வெளியேற்றுகிறது. அரண்மனையிலிருந்து கவிதை பாட அழைப்பு கிடைத்தும் அவரது சுதந்திரமனப்பான்மை காரணமாகத் துரத்தப்படுகிறார். வாழ்வில் பொருளாதார ரீதியாக அவரால் வெற்றி பெற முடியவில்லை. அவர் ஒரு போதும் கவிதையை விற்பனைப் பொருளாகக் கருதவில்லை. முடிவில் ஒரு தாவோயிஸ்ட் ஞானியாக மாறுகிறார்.
லிபெய்யின் வாரிசாகக் கருதப்படும் கவிஞர் டு ஃபூ இதில் சிறுவனாக வருகிறார். அவர் காவ் ஷியோடு கவிதை பேசுகிறார்.
லி பெய் உடனான காவ் ஷியின் உறவு இணைந்தும் முரண்பட்டும் செல்கிறது. தலைமைத்துவத்திற்கான காவோவின் நேர்மையான அணுகுமுறை வேறு. லியின் கவலையற்ற, கலகத்தனமான இயல்பு வேறு. எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும் அவர்கள் ஆழமான நட்பினைக் கொண்டிருக்கிறார்கள்.
இறுதிப் போரின் முடிவில் வெற்றியை அடைந்த, காவோ ஷி தனது ஈட்டியை கீழே போட்டுவிட்டு தனது கவிதைகளுடன் தலைநகருக்குத் திரும்புகிறார். அங்கே தனது கவிதைகளை அவர் வாசிப்பதை ஒரு சிறுவன் கேட்டுக் கொண்டிருக்கிறான். கவிதையின் இடம் என்றும் நிரந்தரமானது என்பதைப் படம் அழகாக வெளிப்படுத்துகிறது.

லிபெய்யின் கவிதைகளை நீங்கள் வாசித்திருந்தால் அந்தக் கவிதைகள் எந்தச் சூழலில் எப்படி எழுதப்பட்டன என்பதை இந்தப் படத்தின் வழியே அறிந்து கொள்ள முடியும். ஒரு வேளை அவரது கவிதைகள் உங்களுக்கு அறிமுகமாகவில்லை என்றாலும் படத்தின் வழியே அவரது கவிதைகளையும் கவிதை எழுதும் தருணங்களையும் அறிந்து கொள்வீர்கள்.
அனிமேஷன் திரைப்படம் என்ற அளவில் இப்படம் கவிஞர்களின் வாழ்க்கையைக் குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டுமே காட்சிப்படுத்துகிறது. அதுவும் போர்களச் சூழலுக்கு நடுவே கதை நடக்கிறது என்பதால் லி பெய்யின் வாழ்வு படத்தில் மிகவும் சுருக்கமாகச் சித்தரிக்கபட்டுள்ளது.
லி பெய்யின் வரலாற்றை The Banished Immortal: A Life of Li Bai எனச் சீன எழுத்தாளர் Ha Jin தனி நூலாக எழுதியிருக்கிறார். அதில் விரிவான தகவல்கள், உண்மைகள் எழுதப்பட்டிருக்கின்றன.
சீனாவில் இந்தப் படத்தைப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் திரையிடுகிறார்கள். தங்கள் பாடத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு முக்கியக் கவிஞர்களின் வாழ்க்கையை மாணவர்கள் அனிமேஷன் படமாகப் பார்த்து ரசிக்கிறார்கள். தங்கள் வரலாற்றையும் இலக்கியத்தையும் சீனத் திரையுலகம் எளிதாக அடுத்தத் தலைமுறையிடம் கொண்டு சேர்க்கிறது.
மிக அழகான இந்த அனிமேஷன் திரைப்படத்தை LOVE LETTER TO GOLDEN AGE OF POETRY என்று விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். அது உண்மையே.
June 25, 2025
உப்பின் குரல்
குஜராத்தின் கட்ச் பாலைவனப்பகுதியில் எப்படி உப்பு விளைவிக்கபடுகிறது என்பதைப் பற்றிய ஆவணப்படம். ஃபரிதா பச்சாவின் மை நேம் இஸ் சால்ட். மிகச்சிறந்த ஒளிப்பதிவு. ஆவணமாக்கம் எனப் பல்வேறு சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கிறது.

லிட்டில் ரான் ஆஃப் கட்ச் என அழைக்கபடும் இந்தப் பாலைவனப் பகுதி உப்புக் கனிமங்கள் கொண்ட சதுப்பு நிலமாகும். மழைக்காலத்தில் இங்கே தண்ணீர் நிரம்புகிறது.. அக்டோபரில் தண்ணீர் வடிந்த பிறகு, உப்பு விளைவிக்கும் தொழிலாளர்கள் தங்களின் குடும்பத்துடன் இங்கே தற்காலிகமாகக் குடியேறுகிறார்கள்.
கிணறு தோண்டி அதில் சுரக்கும் உப்புத் தண்ணீரை டீசல் பம்பினைப் பயன்படுத்தி வெளியேற்றி தாங்கள் உருவாக்கி வைத்துள்ள உப்புவயலில் செலுத்துகிறார்கள். பின்பு சூரிய வெப்பத்தால் தண்ணீர் தானே ஆவியாகி உப்பு படிகங்களாக மாறும் வரை காத்திருக்கிறார்கள்.

அப்படி உப்பு விளைவிப்பதற்காகச் சனபாய் குடும்பம் தங்கள் துருப்பிடித்த டிராக்டரில் வந்து சேருவதில் படம் துவங்குகிறது.

அவர்கள் பாலைவனத்தில் தற்காலிகமான குடியிருப்பை உருவாக்குகிறார்கள். மின் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். உப்பு கலந்த களிமண் நிலத்தில் மரபான முறையில் கிணறு தோண்டுகிறார்கள். டீசல் இயந்திரத்தின் மூலம் கிணற்றிலுள்ள உப்புத் தண்ணீரை வெளியே எடுக்கிறார்கள். உப்பு வயலில் தண்ணீரைப் பாய்ச்சுகிறார்கள். உப்பு விளையத் துவங்குகிறது.
சனபாய் போல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இந்த உப்பு விளைவிக்கும் தொழிலில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் கடின உழைப்பாளிகள். பராம்பரியமாக உப்பு விளைக்கும் கலையை அறிந்தவர்கள். அவர்கள் ஆணும் பெண்ணுமாக இணைந்து உழைக்கும் விதம். தற்காலிக குடியிருப்பில் சிறுவர்கள் செய்ய வேண்டிய வேலைகள் மற்றும் பருவகால மாற்றத்தால் ஏற்படும் சிரமங்கள் எனப் பாலைவன வாழ்வினை ஆவணப்படம் உண்மையாக விவரிக்கிறது.
சனபாயின் இரண்டு பிள்ளைகள் தினமும் காலை 11 மணிக்கு, உப்பு வயலில் வேலை முடிந்ததும் பள்ளிக்குச் சைக்கிளில் செல்கிறார்கள். அந்தப் பாலைவனத்தில் அவர்களுடன் விளையாட வேறு யாருமில்லை. ஆகவே காகித பூக்களைச் செய்கிறார்கள். கதை பேசுகிறார்கள்.
சனபாய் குடும்பம் தொலைவில் வசிக்கும் இன்னொரு குடும்பத்துடன் கண்ணாடி சில்லில் சூரிய ஒளியினை ஒளிரச் செய்வதன் மூலம் தொடர்பு கொள்கிறார்கள். சனபாயின் மனைவி தேவுபென் விறகு வெட்டுவதற்காக வெகு தொலைவு நடந்து செல்கிறார். வாரத்திற்கு ஒரு முறை வரும் ஒரு தனியார் டேங்கரிலிருந்து குடும்பத்திற்கான குடிதண்ணீரை வாங்குகிறார்கள். அங்கே செல்போன் வேலை செய்கிறது ஆனால் சிக்னல் கிடைப்பது எளிதாகயில்லை.
உப்பு விளைவிப்பதற்கு முன்பாகவே சனபாய் ஒரு பெரிய தொகையை உப்பு வியாபாரியிடமிருந்து முன்பணமாக வாங்கியிருக்கிறார்.. டீசல் பம்பிற்குத் தேவையான டீசல் வாங்கவும் அவருக்குப் பணம் தேவை. மற்றும் குடும்பத்தோடு பாலைவனத்தில் வசிக்கத் தேவையான உணவுப் பொருட்களை வாங்க வேண்டும். எட்டு மாத காலப் பாலைவன வாழ்க்கை எதிர்பாராத சிரமங்களைக் கொண்டது.

யாருமற்ற பாலைவனத்தினுள் டீசல் இயந்திரம் ஒடும் விநோத சப்தம். தொலைவில் வரும் வாகனத்தின் நகர்வு. இரவு வானில் மின்னும் நட்சத்திரங்கள். சனபாயின் காத்திருப்பு, பாலைவன மேகங்கள். சனபாய் குடும்பத்தின் சமய நம்பிக்கைகள், விளைந்த உப்பை அவர் பரிசோதிக்கும் விதம் என இந்த ஆவணப்படம் ஒளிரும் தருணங்களைக் கொண்டிருக்கிறது
ஏப்ரல் மாதத்தில், உப்பு வியாபாரி தனது ஆளை உப்பைப் பரிசோதிக்க அனுப்புகிறார். அவர் உப்பினை பரிசோதனை செய்துவிட்டு அதன் தரம் சரியில்லை என்கிறார். ஆகவே சனபாய் ஒப்புக்கொண்ட விலை கிடைக்காமல் போகிறது. சனபாயிற்கு வேறு வழியில்லை. அடுத்த ஆண்டு இதை விடச் சிறந்த உப்பை விளைவிக்கும் வரை காத்திருக்க வேண்டும். எட்டு மாதகால உழைப்பிற்குப் பின்பு அவர்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி புறப்படுகிறார்கள். அடுத்த ஆண்டுத் திரும்ப வந்து எடுத்துக் கொள்வதற்காகத் தங்கள் டீசல் இயந்திரத்தை, கருவிகளைப் புதைத்துவிட்டுப் போகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இதே வாழ்க்கை தொடர்கிறது.
உப்பு விளைவிப்பவர்களின் வாழ்க்கையை மிகவும் நெருக்கமாக உணர வைத்த விதத்தில் இந்த ஆவணப்படம் முக்கியமானது.
June 23, 2025
குற்றமுகங்கள் -17 கோளாம்பி
1828 நவம்பர் 20 அன்று கொச்சி இராஜ்ஜியத்தின் திவான் உத்தராதி தம்பிரானின் பசு திருடு போயிருந்தது.

நெற்றியில் சங்கு அடையாளம் கொண்ட அந்தப் பசுவை அவர் மகாலட்சுமியின் அவதாரமாகவே கருதினார். நேத்ரி என்று பெயரிடப்பட்ட அந்தப் பசுவிற்காகவே சொர்க்க மண்டபத்தினைக் கட்டியிருந்தார்.
பசுவைக் கயிற்றால் கட்டக்கூடாது என்பதற்காக வெள்ளிச்சங்கிலியை அணிவித்திருந்தார். பசு நின்றிருந்த அந்த மண்டபத்தில் காலையும் மாலையும் சாம்பிராணி போடுவார்கள். மண்டபத் தூண்களுக்கு இடையே சேலையால் தடுப்பு உருவாக்கி மணப்பெண்ணைப் பாதுகாப்பது போல வெளியாள் கண் படாமல் பசுவைப் பாதுகாத்தார்கள்.
உத்தராதி தம்பிரான் காலையில் குளத்தில் குளித்துக் கரையேறி நேராகச் சொர்க்க மண்டபத்திற்குத் தான் வருவார். ஐந்து வகை மலர்கள் தூவிப் பசுவை வணங்குவார். அந்தப் பசு தான் திருடு போயிருந்தது. அதைத் திருடியவன் கோளாம்பி என்றார்கள்.
கோளாம்பி என்பது எச்சில் துப்பும் கிண்ணம். வெற்றிலை மடித்துத் தருவதும் வெற்றிலை எச்சிலைத் துப்பும் கோளாம்பியை ஏந்தியபடி நிற்பதுமாகயிருந்த ராக்கனின் பெயரே கோளாம்பியாக மாறியிருந்தது.

கேசவன் தம்பிரான் குட்டநாட்டிலிருந்து ராக்கனை பனிரெண்டு வயதில் அழைத்து வந்திருந்தார். வீட்டு வேலைகள் பழகிய அவன் சில வருஷங்களில் அடைப்பக்காரனாக மாறினான். திவான் எங்கே சென்றாலும் ராக்கன் உடன் சென்றான். திவானின் ஆசை நாயகிகளுக்கு என்றே அவன் வெற்றிலையில் சேர்த்து தரும் பஷ்பம் ஒன்றை தயாரித்து வைத்திருந்தான்.
வீட்டுப் பணிப்பெண்களில் ஒருத்தியை தம்பிரான் அவனுக்குத் திருமணம் செய்து வைத்திருந்தார். ஆனால் திருமணம் நடந்த இரண்டாம் நாளே அந்தப் பெண் குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள். அவர்களுக்குள் என்ன நடந்த்து என எவருக்கும் தெரியவில்லை. அவளுக்காகக் கோளாம்பி ஒரு சொட்டுக் கண்ணீர் விடவில்லை .
கோவில் சிலையைப் போல எப்போதும் ஒரே முக பாவத்தில் கோளாம்பி இருந்தான். எவருடனும் பேச மாட்டான். எதற்கும் சிரிக்க மாட்டான். அவன் சாப்பிடும் போது யாரும் அதைப் பார்த்துவிடக் கூடாது என்பதற்காகக் கதவை மூடிக் கொண்டுவிடுவான். சட்டியில் எவ்வளவு சோறு வைத்திருந்தாலும் சாப்பிட்டு முடித்துவிடுவான். வெறும் சோறோ, கஞ்சியோ தான் வேண்டும். அதற்குத் தொடுகறிகளோ, துவையலோ எதுவும் வேண்டாம்.
கொடுங்கலூர் பரணி திருவிழாவிற்குக் கோளாம்பி தவறாமல் போய்விடுவான். தம்பிரானிடமோ, எஜமானியிடமோ அதற்கு அனுமதி கேட்க மாட்டான். அந்த ஏழு நாட்கள் அவனுக்கானவை.
அந்த நாட்களில் தம்பிரான் வெற்றிலை போட்டுக் கொள்ள மாட்டார். கோளாம்பியை தவிர வேறு எவரையும் நம்பி வெற்றிலை போட்டுக் கொள்ள முடியாது. விஷம் தடவிய வெற்றிலையால் கொன்றுவிடுவார்கள் என்ற பயமிருந்தது.
ஒரு நாளில் தம்பிரான் எத்தனை முறை வெற்றிலை போட்டுக் கொள்வார். எந்த நேரத்தில் எத்தனை வெற்றிலைகள் மடித்துத் தர வேண்டும், அவரது தலை எச்சிலை துப்ப எந்தப்பக்கம் திரும்பும் எனக் கோளாம்பிக்கு மட்டும் தான் தெரியும். பல சமயம் தம்பிரான் கோபத்தில் அவன் மீதே எச்சிலைத் துப்பியிருக்கிறார். உடனே குளத்திற்குச் சென்று குளித்துவிட்டு வந்துவிடுவான்.
கோளாம்பியை வீட்டுப் பெண்களுக்குப் பிடிக்கவில்லை. நரிப்பயல் என்று திட்டினார்கள். அப்படித் திட்டுவதற்கான காரணம் எதையும் அவர்கள் வெளியே சொன்னதில்லை.
கோளாம்பி அப்படி ஒரு முறை கொடுங்கலூர் பரணி பார்த்துவிட்டு திரும்பி வரும் போது ஏழு வயதுச் சிறுமி ஒருத்தியை அழைத்து வந்திருந்தான். அவள் யாரெனத் தம்பிரான் கேட்டதற்குப் பதில் சொல்லவில்லை. அவளையும் வீட்டுவேலைகளுக்கு வைத்துக் கொண்டார்கள்.
மாலு என்ற அந்தச் சிறுமி எதைச் செய்யச் சொன்னாலும் கோளாம்பி செய்தான். அதனைத் தம்பிரான் கோவித்துக் கொண்டாலும் அவன் செய்யத் தவறவில்லை. அந்தச் சிறுமி கோளாம்பியின் மகள் தான் என்று பணிப்பெண்கள் பேசிக் கொண்டார்கள். ஆனால் மாலுவின் முகச்சாடை வேறாக இருந்தது. தாயைக் கொண்டு பிறந்திருப்பாள் என்றார்கள்.

மாலு ஒருநாள் தம்புராட்டியின் மயில்விசிறியைத் திருடிவிட்டாள் என்று தூணில் கட்டிவைத்து அடித்த போது கோளாம்பி கண்ணீர்விட்டு அழுதான். அவளுக்குப் பதிலாகத் தன்னை அடிக்கும்படி வேண்டினான். அத்தோடு தெய்வம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று உரக்கச் சப்தமிட்டான்.
இது நடந்த நான்காம் நாள் மாலு வீட்டைவிட்டு ஒடிப்போனாள். அவளைத் தேடிக் கொண்டு கோளாம்பியும் புறப்பட்டுப் போனான். அவன் மீது தம்பிரானுக்கு வந்த கோபத்தில் அந்த நாயை இனி வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.
ஆனால் ஆறாம் நாள் அந்தச் சிறுமியோடு கோளாம்பி திரும்பி வந்து வீட்டு வாசலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தங்களை மன்னிக்கும்படி வேண்டினான். தம்பிரான் மன்னிக்கவில்லை. வெயில் உச்சிக்கு ஏறும்வரை அவன் வாசலிலே விழுந்துகிடந்தான். தம்பிரான் அவனை மட்டும் வீட்டிற்குள் அனுமதிப்பதாகவும் மாலுவை தோட்டத்து வேலைக்காகக் காயங்கரை அனுப்பி வைக்கப்போவதாகவும் சொன்னார். கோளாம்பி தன்னையும் காயங்கரை அனுப்பிவிடும்படி மன்றாடினான்.
அவள் யார் என்ற உண்மையைச் சொல்லும்படி தம்பிரான் கோபத்தில் சப்தமிட்டார்.
“எனக்குத் தெரியாது எஜமானே. அவள் பரணி திருவிழா கூட்டத்தில் திடீரென என் கையைப் பிடித்துக் கொண்டாள். நான் வீடு திரும்பும் போது என் கூடவே வந்துவிட்டாள். அது தான் உண்மை“ என்றான்.
தம்பிரானால் அதனை நம்ப முடியவில்லை. ஆனாலும் காயங்கரையில் உள்ள தோட்டத்திற்கு மாலுவை அனுப்பி வைப்பதில் தம்பிரான் உறுதியாக இருந்தார்.
அதன்பிறகு மாலுவைக் காணுவதற்காகவே கோளாம்பி அடிக்கடி காயங்கரை போய்வந்து கொண்டிருந்தான். மாலு ஆசைப்படுகிறாள் என்று தம்பிரான் வீட்டில் இருந்து சந்தனப்பொடி. கேசத்தைலம், சங்கு வளையல், ஜரிகை ரிப்பன் எனச் சிறுசிறுப் பொருட்களைத் திருடி வரத்துவங்கினான் . மாலு என்ற குட்டிக்குரங்கு கோளாம்பி என்ற குரங்காட்டியை ஆட்டுவைக்கிறது என்று காயங்கரை பணியாளர்கள் கேலி பேசினார்கள்.
கோளாம்பி காயங்கரை வரும்நாட்களில் அவனும் மாலுவும் இரவெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள். என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை. விடிகாலையில் கோளாம்பி கிளம்பி போகும் போது எதையோ தனக்குத் தானே பேசிக் கொண்ட படி நடந்தான்.
மாலு அவனைத் திருடனாக்கினாள். எதைப்பற்றியும் யோசிக்காமல் அவள் கேட்டதை எல்லாம் திவான் வீட்டிலிருந்து திருடிக் கொண்டு வந்து கொடுத்தான். ஒரு சிறுமியின் மனதில் இத்தனை ஆசைகள் இருக்குமா என வியப்பாக இருந்தது.
அவள் ஒருநாள் தம்பிரானுக்கு மட்டுமே தரப்படும் நேத்ரி பசுவிலிருந்து தனக்குப் பால் கொண்டுவரும்படியாகச் சொன்னாள். அதை மட்டும் தன்னால் செய்ய முடியாது என்று மறுத்தான் கோளாம்பி. அந்தப் பாலை கொண்டுவராவிட்டால் தன்னைப் பார்க்க வரவேண்டாம் என மாலு கோவித்துக் கொண்டாள்.
இதற்காகவே கோளாம்பி பின்னிரவில் சொர்க்க மண்டபத்திற்குச் சென்று பித்தளைச் செம்பு ஒன்றில் பால் கறந்தான். அதைத் துணியால் மறைத்துக் கொண்டு காயங்கரைக்கு நடக்கத் துவங்கினான்.
ஆனால் மாலு அங்கேயில்லை. அவள் ஒடிப்போயிருந்தாள். கோளாம்பி அழுதான். மாலுவைத் தேடிக் கொண்டு கிளம்பினான். இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவன் வீடு திரும்பிய போது தனியே வந்திருந்தான். பித்துப்பிடித்தவன் போல கண்கள் மஞ்சளேறியிருந்தன. இருண்டு போன முகம். செம்புழுதி படிந்த கால்கள். அவனை இனி அடைப்பக்காரனாக வைத்துக் கொள்ள முடியாது எனத் தம்பிரான் துரத்திவிட்டார்.
மாலுவிற்கு என்ன ஆனது என எவருக்கும் தெரியவில்லை.
இது நடந்த இரண்டு வாரங்களுக்குப் பின்பு தான் தம்பிரானின் பசு திருடு போனது. கோளாம்பியைக் கண்டுபிடித்துத் தனது பசுவை மீட்டுவருவதற்காகத் இருபத்தியோறு வீரர்களை தம்பிரான் அனுப்பி வைத்தார்.
அவர்கள் பதினாறு நாட்கள் குதிரையில் சுற்றியலைந்தும் கோளாம்பியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் ஒருவேளை மலபார் பிரதேசத்திற்குள் போயிருக்கக் கூடும் எனத் தம்பிரானிடம் தெரிவித்தார்கள்.
அவர் தலச்சேரியின் துணை ஆட்சியராக இருந்த தாமஸ் எச். பாபருக்கு அவசரக்கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார். அதற்குப் பதில் எழுதிய தாமஸ் பாபர் ஒரு பசுவைத் தேடிக் கண்டுபிடித்து ஒப்படைப்பதை விடவும் தங்களுக்கு முக்கியப் பணிகள் இருப்பதால் அவர் புதிதாகப் பசு ஒன்றை வாங்கிக் கொள்ளும்படியாகத் தெரிவித்திருந்தார். இது திவானின் கோபத்தை அதிகமாக்கியது. வெள்ளைக்காரர்களை மிக மோசமான வசையால் திட்டினார்.
அவர்கள் பசுவைத் தேடிக் கொண்டிருந்த நாட்களில் உத்தராதி தம்பிரான் புது அடைப்பக்காரனை நியமித்திருந்தார். ராஜேந்து என்ற அந்த அடைப்பக்காரன் கிளிமானூர் அரண்மனையில் வேலைக்கு இருந்தவன். வைத்திய சாஸ்திரம் கற்றவன் என்றார்கள்.
அவன் ஒரு நாள் மதியம் ஊஞ்சலில் அமர்ந்திருந்த தம்பிரானுக்கு வெற்றிலை மடித்து நீட்டிய போது தூண் அருகே கோளாம்பி நிற்பது போன்ற நிழல் தெரிந்தது. யார் நிற்கிறார் என்று பார்க்கும்படி ராஜேந்துவிடம் சொல்லியபடி வெற்றிலை எச்சிலை துப்புவதற்காகத் தம்பிரான் தலை திரும்பிய போது ஊஞ்சலிலிருந்து விழுந்து இறந்து போனார். அவரது திறந்த வாயில் எச்சில் சக்கை ஒட்டியிருந்தது
வெற்றிலையில் விஷம் தடவி கோளாம்பி கொன்றுவிட்டான் என்றார்கள். கோளாம்பி எப்படி அந்த வீட்டிற்குள் வந்தான். ராஜேந்துவிற்க்குத் தெரியாமல் எப்படி வெற்றிலையில் கோளாம்பி விஷம் தடவினான் என்று தெரியவில்லை. ஒருவேளை ராஜேந்துவை அனுப்பியதே கோளாம்பி தானா.
காயங்கரையிலிருந்த மாலுவை தம்பிரானின் ஆட்கள் தான் மாட்டுவண்டியில் ஏற்றிக் கொண்டு போய்க் காசிக்குப் போகும் யாத்ரீகர்களுடன் அனுப்பி விட்டார்கள் என்பதைக் கோளாம்பி தெரிந்து கொண்டதால் தான் இப்படி நடந்து கொண்டான் என்றார்கள்.
காசியின் வீதிகளில் நெற்றியில் சங்கு கொண்ட பசுவை கூட்டிக்கொண்டு ஒருவன் சுற்றியலைகிறான் என்று ஊர் திரும்பிய யாத்ரீகர்கள் சொன்னார்கள். அது கோளாம்பி தானா என்று தெரியவில்லை. மாலுவை கண்டுபிடிக்கத் தான் அப்படி அலைகிறானா. மாலு யார் என்ற உண்மை வெளிப்படவேயில்லை. ஒருவேளை கோளாம்பி சொன்னது தான் உண்மையா.
••
June 20, 2025
நினைவின் கரையில் நிற்கிறோம்
ஞானபீடம் பரிசு பெற்ற எழுத்தாளர் குர் அதுல்ஜன் ஹைதர் குறித்த ஆவணப்படம்
மகத்தான இந்திய நாவல்களில் ஒன்றாக இவரது அக்னி நதி நாவல் கொண்டாடப்படுகிறது.
கோமாளியின் ஞானம்
லைம்லைட் சாப்ளினின் மிகச் சிறந்த திரைப்படம். எப்போதெல்லாம் மனச்சோர்வு அடைகிறீர்களோ அப்போது இந்தப் படத்தைப் பாருங்கள். மருந்தாக வேலை செய்யும். புதிய நம்பிக்கையை, உற்சாகத்தை, மகிழ்ச்சியை உருவாக்கும். இப்படத்தின் வசனங்களைத் தனியே அச்சிட்டு சிறுநூலாக வெளியிடலாம்.

படத்தின் ஒரு காட்சியில் சாப்ளின் அரங்க மேடையில் உள்ள ஒரு பூவைப் பறித்துத் தனது பாக்கெட்டிலிருந்து உப்பை எடுத்து அதில் போட்டு ஆசையாக ருசித்துத் தின்னுகிறார். அது தான் சாப்ளினின் முத்திரை.
பூவை ஒரு போதும் உண்ணும் பொருளாக நாம் கருதியதில்லை. சாப்ளின் அதை வேடிக்கையாகச் செய்கிறார். காதலுற்றவனின் செயல் போலவே அது வெளிப்படுகிறது. இன்னொரு காட்சியில் ஈயுடன் உரையாடுகிறார். சூரிய ஒளியின் கதகதப்பை கொண்டாடுகிறார்.
Life is a desire, not a meaning. Desire is the theme of all life! It makes a rose want to be a rose and want to grow like that. And a rock want to contain itself and remain like that.
என்று டெர்ரியிடம் சொல்லும் போது ரோஜா மற்றும் பாறை எப்படியிருக்கும் என நடித்துக் காட்டுகிறார். அதை டெரி ரசிக்கவே ஜப்பானிய மரம் எப்படி இருக்கும் என நடித்துக் காட்டுகிறார். அத்தோடு பல்வேறு மரங்களின் இயல்பை நடித்துக் காட்டுவார். அபாரமான காட்சியது.

சாப்ளினின் கடைசிப் படம் லைம் லைட். புகழ்பெற்ற கோமாளி நடிகரான கால்வெரோ மக்கள் தன்னை ரசிப்பதில்லை என உணர்ந்து தனிமையில். குடியில் நாட்களைக் கழிக்கிறார். ஒரு நாள் தற்கொலை செய்ய முயலும் டெரி என்ற இளம்பெண்ணைக் காப்பாற்றித் தனது அறையில் தங்க வைக்கிறார். பாலே நடனக்காரியான டெரி ஆழமான மனப்பாதிப்பை கொண்டிருக்கிறாள். அவளால் எழுந்து நடக்க முடியவில்லை. அவளுக்குச் சிகிட்சை அளிக்கும் கால்வெரோ புதிய நம்பிக்கை அளித்துப் புகழ்பெற்ற நடனக்காரியாக மாற்றுகிறார்.
ஒரு காட்சியில் நோயுற்ற நிலையில் இருக்கும் டெரியின் படுக்கை அருகில் சாப்ளின் செல்கிறார். அவள் இருமுகிறாள். அவசரமாகச் சிறிய அலமாரியை திறந்து உள்ளே இருந்து ஒரு மருந்து பாட்டிலை எடுக்கிறார். அவளுக்கு மருந்து தரப்போகிறாரோ என நாம் நினைத்தால் அவர் மவுத்வாஷால் தனது வாயைச் சுத்தம் செய்து கொள்கிறார். இது தான் சாப்ளினின் வெளிப்பாடு.
மக்கள் ஏன் தனது நகைச்சுவைக்குச் சிரிக்க மறுக்கிறார்கள். சலிப்பாகி அரங்கை விட்டு வெளியே போகிறார்கள் என்று அவருக்குப் புரியவில்லை. பெயரை மாற்றிக் கொண்டு புதிய ஆள் போலக் கால்வெரோ மேடையில் தோன்றி வேடிக்கை செய்கிறார். அப்போதும் புறக்கணிப்புத் தொடர்கிறது.
மக்கள் உங்களை விரும்பவில்லை, உங்கள் காலம் முடிந்துவிட்டது என அரங்க நிர்வாகி சொல்வதைக் கால்வெரோவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மக்கள் மீண்டும் தன்னை ரசிப்பார்கள் என்று நம்புகிறார். அதற்காகப் போராடுகிறார்.

லைம்லைட் படத்தின் திரைக்கதை வசனத்தை சாப்ளின் மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறார். படத்தின் இசையும் அவரே. அற்புதமான இசை. தனியிசைக்கென்றே காட்சிகள் வைத்திருக்கிறார். படத்தில் இடம்பெற்றுள்ள பாலே நடனக்காட்சி மிகவும் சிறப்பானது.
இப்படத்தில் அவரும் பஸ்டர்கீட்டனும் இணைந்து நடித்திருக்கிறார்கள். கீட்டனுக்கு அதிக முக்கியத்துவமில்லை. படத்தில் இசைக்கலைஞராக நடித்திருப்பது சாப்ளினின் மகன் சிட்னி.
மைக்கேல், ஜோசபின் மற்றும் ஜெரால்டின் என்ற சாப்ளினின் மூன்று பிள்ளைகளும் லைம்லைட்டின் தொடக்கக் காட்சியில் தோன்றுகிறார்கள். .
டெரியின் கதாபாத்திரம் சாப்ளினின் அம்மா ஹன்னாவின் சாயலில் உருவாக்கபட்டிருக்கிறது. சாப்ளின் லைம்லைட்டை எழுத இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகச் செலவிட்டார் . இந்தக் கதையை முதலில் ஒரு நாவலாக எழுதினார். ஃபுட்லைட்ஸ் என்ற அந்த நாவலை பின்பு திரைக்கதையாக மாற்றியிருக்கிறார்.
வழக்கமான படங்களில் நாம் காணும் சாப்ளின் வேறு. இதில் வெளிப்படும் சாப்ளின் வேறு. இதில் வயதான சாப்ளினைக் காணுகிறோம். அவரது நடை மட்டுமே பழைய படங்களை நினைவுபடுத்துகிறது. கோமாளிகளுக்கும் வயதாகும் என்பது ஏற்க முடியாத உண்மை. இப்படத்தில் கைவிடப்பட்ட மேடைக்கலைஞனின் சோகத்தைத் தனித்துவமான உணர்வுடன் வெளிப்படுத்தியிருக்கிறார்.

நடக்க முடியாத நிலையில் படுக்கையில் கிடக்கும் டெரியிடம் அவர் உரையாடும் காட்சி நம்பிக்கையின் வெளிச்சத்தைப் படரவிடுகிறது..
I know a man without arms who can play a scherzo on a violin and does it all with his toes. The trouble is you won’t fight! You’ve given in, continually dwelling on sickness and death. But – there’s something just as inevitable as death, and that’s life. Life, life, life! Think of the power that’s in the universe, moving the earth, growing the trees. That’s the same power within you if you only have courage and the will to use it
கால்வெரோவும் மூன்று இசைக்கலைஞர்களும் ஒன்றாக அவரது வீட்டில் குடித்துவிட்டு இசைக்கும் காட்சி அபாரமானது. இசையே அவர்களின் மீட்சி.
தான் ஏன் கோமாளியாக மாறினேன் என்பதைப் பற்றி டெரியிடம் விளக்கும் போது கால்வெரோ இப்படிச் சொல்கிறார்
`விளையாடுவதற்குப் பொம்மை இல்லையே என ஏங்கிய நாட்களில் எனது அப்பா என்னுடைய தலையைச் சுட்டிக்காட்டிச் சொல்லுவார்.இது தான் இதுவரை உருவாக்கப்பட்டதிலே மிகப்பெரிய விளையாட்டுப் பொருள். இங்கேதான் எல்லா மகிழ்ச்சியின் ரகசியமும் இருக்கிறது.

கால்வெரோவும் டெர்ரியும் காதல் கொள்வதில்லை. மாறாக ஆழமான பிணைப்பை கொண்டிருக்கிறார்கள். உங்களுக்காக எதையும் செய்வேன் என்கிறாள் டெர்ரி. அது நன்றியுணர்விலிருந்து உருவான வெளிப்பாடு.
டெர்ரி விரைவில் ஒரு புதிய பாலே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெறுகிறாள், அதில் கால்வெரோவும் கோமாளியாகச் சிறிய வேடத்தில் நடிக்கிறார். நிகழ்ச்சி பெரிய வரவேற்பை பெறுகிறது. ஆனால் அந்த வெற்றி கால்வெரோவிற்கு முழுமையான மகிழ்ச்சியைத் தரவில்லை. அது தனது வெற்றியில்லை என அவர் உணர்ந்து கொள்கிறார். அரங்கிலிருந்து வெளியேறிப் போகிறார்.
தியேட்டர் டிரஸ்ஸிங்-ரூமில் கால்வெரோ தனது மேக்கப்பைத் துடைத்துவிட்டு, கண்ணாடியைப் பார்த்து, தோல்வியின் பிம்பத்தைக் காணுகிறார். தன்னைத் தானே இனியும் ஏமாற்றிக் கொள்ள முடியாது என உணர்கிறார். நடிப்பை துறக்கிறார்.
இசைக்கலைஞராக ஒரு மதுவிடுதியில் பணியாற்றும் நாட்களில் அவர் சில்லறைகளுக்காகத் தனது தொப்பியை நீட்டுகிறார். அங்கே அவரைச் சந்திக்கும் அரங்க உரிமையாளர் மீண்டும் நடிக்க அழைக்கும் போது கால்வெரோ அதை எளிதாக உதறிப்போகிறார். கலைஞனின் மனதை சிறப்பாகச் சித்தரிக்கும் காட்சிகள் இவை.

எல்லோரும் என்னிடம் மிகவும் அன்பாக இருக்கிறார்கள். அது என்னைத் தனிமையாக உணர வைக்கிறது. என்று ஒரு காட்சியில் கால்வெரோ சொல்கிறார். இதே குரலை தஸ்தாயெவ்ஸ்கியிடம் கேட்கமுடியும். இளவரசன் மிஷ்கின் இப்படி உணருகிறான். குற்றமும் தண்டனை நாவலில் மர்மலதேவ் இதே குற்றவுணர்வை கொண்டிருக்கிறான்.
Time is the great author. Always writes the perfect ending என ஒரு காட்சியில் கால்வெரோ சொல்கிறார். அது அவரது வாழ்விலும் நடந்தேறுகிறது.
இன்னொரு காட்சியில் கால்வெரோவும் டெரியும் பேசிக் கொள்கிறார்கள்
Calvero: I want to forget the public.
Terry: Never. You love them too much.
Calvero: I’m not so sure. Maybe I love them, but I don’t admire them.
Terry: I think you do.
Calvero: As individuals, yes. There’s greatness in everyone. But as a crowd, they’re like a monster without a head that never knows which way it’s going to turn. It can be prodded in any direction.
இது சாப்ளினின் வாக்குமூலம். அவர் மனதின் ஆழத்திலிருந்து வெளிப்படும் குரல். லைம் லைட்டில் நாம் சாப்ளினின் சொந்த வாழ்க்கையின் எதிரொலிகளைக் கேட்கிறோம். திரையால் இதிகாசங்களை உருவாக்க முடியும் என்று போர்ஹெஸ் ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார். அந்த வரிசையில் வரும் ஒரு படம் லைம்லைட்
••
June 18, 2025
மறைந்திருக்கும் உண்மை
பல்வேறு தேசங்களை, இனங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக வாழும் அமெரிக்காவில் இன்றும் இனவெறி இருக்கிறது. ஆனால் அது வெளிப்படையாகத் தெரிவதில்லை. ரகசியமாக மறைந்திருக்கிறது. பல நேரங்களில் ஆசிய இனத்தவர்களுக்கு எதிராக வெளிப்படுகிறது என்று A Great Divide திரைப்படம் விவரிக்கிறது.
பொதுவெளியில் பேசத்தயங்குகிற உண்மையை மிகவும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் இயக்குநர் ஜீன் ஷிம். இந்தப் படம் பேசும் விஷயங்கள் தங்கள் வாழ்வில் நடந்துள்ளதாக அமெரிக்காவில் வாழும் கொரியர்கள் பலரும் தெரிவித்துள்ளார்கள். 2020ல் அமெரிக்காவில் ஆசிய இனத்தவருக்கு எதிராக இனவெறி நேரடியாக வெளிப்பட்டதைக் கண்டேன். அந்தக் கோபமே இந்த படத்தை உருவாக்கத் தூண்டியது என்கிறார் இயக்குநர்

பெஞ்சமின் என்ற பதின்வயது பையனின் பார்வை வழியாகக் கதை விவரிக்கபடுகிறது.
லீயின் குடும்பம் கலிபோர்னியாவிலிருந்து வெளியேறி வயோமிங்கில் குடியேறுகிறார்கள். புதிய பள்ளியில் பெஞ்சமினுக்கு இடம் கிடைக்கிறது. பள்ளிக்குச் சமர்ப்பிக்க வேண்டிய ஒரு கட்டுரைக்காகத் தனது குடும்பத்தின் கடந்தகால நினைவுகளைப் பெஞ்சமின் அறிந்து கொள்ளத் துவங்குகிறான்.

படம் மூன்று வாக்குமூலங்களைக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா என்ற தேசம் புகலிடம் தேடிவந்த தங்களை நியாயமாக நடத்தவில்லை. இனவேற்றுமையுடன் நடத்தியது. அவமானப்படுத்தியது என்று குற்றம் சாட்டுகிறார் ஹால்மோனி என்ற கொரியப் பாட்டி.
தகுந்த படிப்பு, திறமை இருந்தும் தான் வேலை செய்த அமெரிக்க நிறுவனம் தன்னை இனவேற்றுமையுடன் நடத்தியது. சக ஊழியர்கள் தன்னை உருவக்கேலி செய்தார்கள். தனது வளர்ச்சியை நிறுவனம் தடுத்து நிறுத்தியது என்று குற்றம் சாட்டுகிறார் பாட்டியின் மருமகன் ஐசக்
பள்ளியில் தான் சகமாணவியால் அவமானப்படுத்தபட்டேன். வீட்டில் எனது அம்மாவே என்னைப் புரிந்து கொள்ளவில்லை. எனது வாழ்க்கை நானாக உருவாக்கிக் கொண்டது என்று ஹால்மோனியின் மீதும் குற்றம் சுமத்துகிறாள் அவரது மகள் ஜென்னா
இந்த மூன்றையும் கேட்டு அறிந்து கொள்ளும் பெஞ்சமின் வயோமிங்கில் இனவெறுப்பை நேரடியாகச் சந்திக்கிறான். பொய் குற்றம்சாட்டப்பட்டுக் குற்றவாளி போல நடத்தப்படுகிறான். அவனது குடும்பமே பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறது. இதிலிருந்து அவர்கள் எப்படி விடுபட்டார்கள் என்பதே படத்தின் முடிவு.
வயோமிங் மேற்குஅமெரிக்காவின் இயற்கை எழில் சூழ்ந்த மாநிலமாகும். பெரிய மாநிலமாக இருந்தாலும் மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்டிருக்கிறது. கானுயிர் காப்பகமான வயோமிங்கில் காட்டெருமை, கடமான் மற்றும் பாம்புகள் அதிகமிருக்கின்றன. இங்கே சிறப்பு வனப்பாதுகாப்புப் பிரிவு செயல்படுகிறது.

கொரியர்களான பெஞ்சமினையும் அவனது குடும்பத்தையும் பலரும் ஜப்பானியர் அல்லது சீனர் என்றே நினைக்கிறார்கள். கேலி செய்கிறார்கள். சில இடங்களில் அவர்கள் வெளிப்படையாக அவமானப்படுத்தபடுகிறார்கள். படத்தில் உணவகம் ஒன்றில் அவர்கள் நடத்தப்படும் காட்சி இதற்கான உதாரணம். காவல்துறை அதிகாரியிடம் வெளிப்படும் வெறுப்பு, ரேஞ்சர் நடந்து கொள்ளும் விதம். பெஞ்சமினையும் எல்லியையும் மிரட்டும் மெக்நேதரிடம் வெளிப்படும் கோபம் இவையே இனவெறியின் அடையாளங்கள்.
1945ல் கொரியா இரண்டாகப் பிளவு பட்ட போது வன்முறை வெடித்தது. அதிலிருந்து தப்பி அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த ஹால்மோனியும் அவரது கணவரும் கையில் சொற்ப பணத்துடன் புதிய வாழ்க்கையைத் துவங்குகிறார்கள். ஹால்மோனியின் கணவர் கொரியாவில் பல்கலைகழப்படிப்பை முடித்தவர். ஆகவே அமெரிக்கப் பல்கலைகழகத்தில் சேர்ந்து உயர்கல்வி பெற முயற்சிக்கிறார். கட்டணம் செலுத்த முடியாத நிலையில் தனது ஆசையைக் கைவிட்டு பிழைப்பிற்காக லாண்டரி ஒன்றில் வேலை தேடிக் கொள்கிறார்.
பாட்டியின் மனதில் தனது பேரனாவது புகழ்பெற்ற கல்வி நிலையத்தில் சேர்ந்து படித்துப் பட்டம் பெற வேண்டும் என்ற ஆசையுள்ளது. பேரனின் பள்ளிக்கட்டுரைக்காகத் தனது கடந்தகால நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் பாட்டியும் பேரனும் பேசிக் கொள்ளும் காட்சிகள் அற்புதமானவை. பாட்டியிடம் வெளிப்படும் நிதானம். மனவுறுதி, தனது கடந்தகால வலிகளைத் தெளிவாக வெளிப்படுத்தும் விதம், மகளின் கோபத்தை ஏற்றுக் கொள்ளும் மனது சிறப்பாகக் காட்சிப்படுத்தபட்டுள்ளது

பெஞ்சமினின் பதின்வயது ஆசைகள், அவனுக்கும் எல்லிக்கும் இடையில் வளரும் காதல். பொதுவெளியில் அவன் காட்டும் தயக்கம், புதிய அனுபவத்தைப் பெற முயற்சிக்கும் துடிப்பு படத்தில் மிகவும் அழகாக வெளிப்படுகிறது. எல்லி இன்றைய தலைமுறையின் அடையாளம். பெஞ்சமினிடம் விடைபெறும் கடைசிக் காட்சியில் அவள் முதிர்ச்சி அடைந்த பெண்ணாக நடந்து கொள்கிறாள்.
கொரியர்களின் இசை, தொலைக்காட்சி நாடகம். உணவு, பண்பாட்டு நம்பிக்கைகளையும் படம் ஊடு இழையாக வெளிப்படுத்துகிறது. கார் பயணத்தில் ஜாக் வெளிப்படுத்தும் மகிழ்ச்சி. அதற்கு காரணமான பாடல். பெஞ்சமின் காதலைச் சொல்லும் தருணங்களில் வெளிப்படும் தொலைக்காட்சி நாடக காட்சி உதாரணம் போன்றவை அழகானது. ரே ஹுனாக்கின் அற்புதமான கேமரா வயோமிங்கின் அழகைச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளது. நிலக்காட்சிகள் மறக்கமுடியாதவை.
இனவெறியைப் பற்றிப் பேசும் படம் வனவேட்டை, பணம்பறிப்பு. வீடியோ சாட்சியம் என வழக்கமான திசையில் சென்று முடிகிறது. அதுவே இதன் பலவீனம்.
June 16, 2025
குற்றமுகங்கள் 16 மண்டே ராணி
மண்டே ராணியை உங்களுக்குத் தெரிந்திருக்காது. அவள் பந்தயக்குதிரை ஒட்டியள். . அவளது குதிரையின் பெயர் மண்டே. ஆண்கள் மட்டுமே குதிரைப்பந்தய ஜாக்கியாக இருந்த காலத்தில் இங்கிலாந்தின் முதல் பெண் ஜாக்கியாக அறியப்பட்டடாள்.

பிரிட்டனின் குதிரைப்பந்தய விதிகளின் படி பெண்கள் ஜாக்கியாகப் பணியாற்ற இயலாது, இருப்பினும் 1804 ஆம் ஆண்டிலேயே பெண்கள் ஆண்களைப் போல மாறுவேடமிட்டு சவாரி செய்ததாகப் பதிவுகள் குறிப்பிடுகின்றன. ஜான் போவெல் என்ற ஆண் அடையாளத்துடன் ஒரு பெண் ஜாக்கியாகப் பணியாற்றினாள் என்கிறார்கள். ஆனால் அந்த உண்மை நிரூபிக்கபடவில்லை.
மண்டே ராணி மதராஸில் தான் பிறந்தாள். அவளது அம்மா ருக்மணி மேஜர் வைட்டின் வீட்டில் ஆயாவாக வேலை செய்தாள். அந்தக் குடும்பம் இங்கிலாந்து புறப்பட்ட போது ருக்மணி தனது மகளுடன் இங்கிலாந்து சென்றாள். மேஜர் வைட்டின் மனைவி கிளாராவிற்குப் பணிவிடைகள் செய்ததோடு அவளின் ஆறு குழந்தைகளுக்கும் தாதியாக இருந்திருக்கிறாள்.
ஜாக்கிகளுக்கு உயர வரம்பு இல்லை என்றாலும், எடை வரம்புகள் காரணமாக அவர்கள் குள்ளமான தோற்றத்திலே இருந்தார்கள். மண்டே ராணி ஐந்தடி உயரம் கொண்டிருந்தாள். ஒடுங்கிய முகம். சற்றே பெரிய காதுகள். மூன்று முறை குதிரைப்பந்தயத்தில் கிழே விழுந்து காலையும் இடுப்பையும் உடைத்துக் கொண்டாள் என்றாலும் அவளது நடை வேகமாகவே இருந்தது. ஆண்களைப் போன்ற உடை. ஆண்கள் அணிவது போன்ற தொப்பி. ஆண்களைப் போலவே குடி, மற்றும் மடக்கு கத்தி வைத்திருந்தாள்.
1859ம் ஆண்டு எப்சம் டெர்பி போட்டி மைதானத்தில் இளவரசருக்குச் சொந்தமான மிடில்டன் குதிரையைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றாள் என்பதற்காகவும், போட்டியைக் காண வந்திருந்த மேஜர் வைட் மற்றும் அவரது மனைவி கிளாராவைக் கொன்றாள் என்பதற்காகவும் மண்டே ராணி கைது செய்யப்பட்டாள்.
அவளைத் தூக்கிலிடுவதற்காக அழைத்து வரப்பட்ட போது ஜாக்கிகள் அணியும் உடையை அணிந்திருந்தாள் என்றார்கள்.
1851 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி இங்கிலாந்தின் லிவர்பூலுக்கு அருகிலுள்ள நடைபெற்ற கிராண்ட் நேஷனல் குதிரைப் பந்தயத்தில் மண்டே ராணியின் குதிரை வெற்றிபெற்றது. அதனைப் பாராட்டும் விதமாகக் குதிரையின் உரிமையாளரான ஹாமில்டன் மிகப்பெரிய விருந்திற்கு ஏற்பாடு செய்ததோடு குதிரையோடு அவள் நிற்கும் சிலை ஒன்றையும் செய்து வைக்கும்படி உத்தரவிட்டார். இங்கிலாந்தின் எந்த ஜாக்கிக்கும் கிடைக்காத பெருமையது.
மண்டே ராணியின் உண்மையான பெயர் பவானி. மண்டே ராணியின் அம்மா திடீரென ஒரு நாள் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு ஹைகேட் சிறையில் அடைக்கப்பட்டாள். இந்த நிகழ்வின் காரணமாகப் பத்து வயதான பவானி மேஜர் வைட் வீட்டிலிருந்து துரத்தப்பட்டாள்
அதன் பிந்திய நாட்களில் வீதி தான் அவளை வளர்ந்தது. அவள் பசிக்காகத் திருடினாள். சாரட் வண்டி ஒட்டுகிறவர்களுக்கு உதவி செய்தாள். தேவாலயத்தின் வெளியே பிச்சை எடுத்தாள். ஒரு கால் உடைந்தவனும் குடிகாரனும் குதிரைப்பந்தய வீரனுமான கிறிஸ் கிரீன் அவளைத் தன்னோடு வசிக்க அழைத்துச் சென்றான்

பந்தயக்குதிரைகளைச் செலுத்துவதற்கு அவனே பயிற்சி கொடுத்தான். மிக மோசமான வசைகளும் பிரம்பு அடியுமாக அந்தப் பயிற்சியை அளித்தான். குதிரையின் மீது ஒரு ஈ அமர்ந்து கொள்வது போலத் தான் நீ அமர்ந்திருக்க வேண்டும் என்று எப்போதும் சப்தமிட்டான்.
குதிரைப்பந்தயம் என்பது வெறும் விளையாட்டில்லை. அது ஒரு அதிகாரப் போட்டி. அதற்குள் அரசியல் இருக்கிறது. பந்தயத்தில் மோசடிகள், குற்றங்கள் மறைந்திருக்கின்றன என்பதைப் பவானி அறிந்து கொண்டாள்.
அந்த நாட்களில் எப்சம் டெர்பி மிகப்பெரிய குதிரைப்பந்தயமாகக் கருதப்பட்டது. இதில் அரச குடும்பத்தின் குதிரைகளும் பங்கேற்றன. அந்தப் போட்டியில் டார்லி என்ற அரச குடும்பத்தைச் சார்ந்த குதிரை தொடர்வெற்றியை பெற்றது. அந்தக் குதிரையை ஒட்டியவர் வில்லியம் எட்வால்.
குதிரைப்பந்தய உலகில் மனிதர்களை விடவும் குதிரைகள் விசித்திரமான கதைகள் கொண்டிருந்தன. அதன் இனத்தூய்மை முதன்மையாகக் கருதப்பட்டது. குதிரையின் வெற்றி அதன் உரிமையாளருக்கு மிகப்பெரிய கௌரவத்தையும் பெருமையினையும் உருவாக்கியது. ஆனால் குதிரையோட்டிகள் அடிமைகளைப் போலவே நடத்தப்பட்டார்கள். தண்டிக்கப்பட்டார்கள். பந்தய மைதானத்திலே சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
பவானிக்குக் குதிரைபந்தயம் தனது இருப்பையும் அடையாளத்தையும் காட்டிக் கொள்வதற்கான சவாலாக இருந்தது. ஆறு முறை அவள் பெண் என்பதற்காகப் போட்டியில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கபட்டாள். ஹாமில்டன் பிரபு அவளைத் தனது குதிரையின் ஜாக்கியாக நியமித்த பிறகே பந்தயத்தில் கலந்து கொண்டாள். மண்டே என்ற அவளது குதிரை 52 தொடர்வெற்றிகளைப் பெற்றது. எந்த வெற்றியிலும் அவள் சிரிக்கவில்லை. மகிழ்ச்சியை வெளிப்படுத்தவில்லை. பகிர்ந்து கொள்ள முடியாத வேதனை அவளது கண்களில் படர்ந்திருந்தது.
மண்டே ராணி. இளவரசரின் குதிரையை ஐந்து முறை தொடர்ந்து தோற்கடித்தாள். அந்த ஆத்திரம் காரணமாக அவளது குதிரையை அடையாளம் தெரியாத நபர் பந்தய மைதானத்தில் வைத்து நெற்றியில் சுட்டார். மண்டே சுடப்பட்டதை ராணியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மைதானத்திலே இறந்துவிடும் என அனைவரும் கருதிய குதிரை பிழைத்துக் கொண்டது. ஆனால் அதன் இடது கண் பார்வை பறிபோனது. அந்தக் குதிரை இனி பந்தயத்தில் ஜெயிக்காது என ஹாமில்டனும் நினைத்தார். ஆனால் அதே டெர்பியில் மண்டே மீண்டும் வெற்றிப் பெற்றது.
அந்த வெற்றி செல்லாது என அறிவித்ததோடு குதிரைக்குப் பாம்பின் நஞ்சை புகட்டி பந்தயத்தில் கலந்து கொள்ளச் செய்தாள் என மண்டே ராணி கைது செய்யப்பட்டாள். விசாரணையின் முடிவில் அவள் ஜாக்கியாகச் செயல்பட முடியாத தடை உருவானது.
மண்டே ராணியின் சிலையை ஹாமில்டன் பிரபு அகற்றியதோடு அதை உடைத்துப் போடவும் உத்தரவிட்டார். மண்டே ராணியின் தலையை மட்டும் உடைத்துவிட்டார்கள். மண்ணில் விழுந்து கிடந்த அந்தக் குதிரைச்சிலையின் மீது பெய்யும் மழை உலகம் மறந்துவிட்ட மண்டே ராணியை நினைவுபடுத்துவது போலிருந்தது.
••
வானவன்
குட்டி இளவரசன் நாவலை எழுதிய அந்த்வான் து செந்த்-எக்சுபெரியின் வாழ்வினை மையமாகக் கொண்டு தி பிரின்ஸ் ஆஃப் தி ஸ்கைஸ் நாவல் வெளியாகியுள்ளது. , “தி லைப்ரரியன் ஆஃப் ஆஷ்விட்ஸ்” நாவல் மூலம் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரான அன்டோனியோ இடுர்பே இதனை எழுதியுள்ளார்.


அன்டோனியோ ஒரு ஸ்பானிஷ் பத்திரிகையாளர், எழுத்தாளர். ஸ்பானிஷ் இதழான லா வான்கார்டியாவில் பணியாற்றுகிறார். சிறார்களுக்காக நிறைய எழுதியுள்ளார். அவருக்கு மிகவும் விருப்பமான எழுத்தாளர் எக்சுபெரி என்பதால் அவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் நாவலை எழுதியிருக்கிறார்.
எக்சுபெரி மற்றும் ஜீன், ஹென்றி என்ற அவரது இரண்டு நண்பர்கள் குறித்தும் விரிவாகப் பேசும் இந்த நாவல் விமானத் தபால்சேவையில் அவர்கள் எவ்வாறு இயங்கினார்கள் என்பதை விவரிக்கிறது
1920களின் பாரிஸில் தொடங்கும் கதை சஹாரா பாலைவனம், செனகல், பால்மிரா, பியூனஸ் அயர்ஸ், படகோனியா, நியூயார்க் எனப் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்கிறது. எக்சுபெரியோடு இணைந்து நாமும் வானில் பறக்கிறோம்.
நாவல் விவரிக்கும் காலம் விமானச் சேவையின் ஆரம்ப நாட்கள், விமானிகள் ஒவ்வொரு முறை வானில் பறக்கும் போதும் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அவர்கள் கடக்க வேண்டிய கடினமான சூழ்நிலைகள் நாம் அறியாதவை. அவற்றை நாவலில் அன்டோனியோ துல்லியமாக விவரித்துள்ளார்.. இந்த மூன்று விமானிகள் எவ்வாறு விமானச் சேவையின் முன்னோடிகளாகவும் அசாதாரணமான, துணிச்சலான ஹீரோக்களாகவும் ஆனார்கள் என்பதை நாவலில் சிறப்பாகச் சித்தரித்துள்ளார்.
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

