S. Ramakrishnan's Blog, page 11
May 7, 2025
விருது விழா
பாரதிய பாஷா பரிஷத் விருது பெறுவதற்காக எனது மனைவியுடன் ஏப்ரல் 30 மாலை கொல்கத்தாவிற்குச் சென்றிருந்தேன். விமானநிலையத்திலிருந்து நான் தங்குவதற்காக அறை ஒதுக்கபட்டிருந்த மீரா இன் போவதற்கு ஒன்றரை மணி நேரமானது. கடுமையான வாகன நெருக்கடி. இதற்கு முன்பாக கொல்கத்தாவிற்கு நான்கு முறை சென்றிருக்கிறேன். அதே குப்பையும் தூசியும் அழுக்கும் படிந்த நிலை. புதிய மேம்பாலங்களைக் காண முடிந்தது. தொண்ணூறுகளில் பார்த்த டிராம்களைக் காணமுடியவில்லை. நிறுத்தப்பட்டுவிட்டதாகச் சொன்னார்கள். ஏதோ ஒரு இடத்தில் மட்டும் பழைய நினைவாக டிராம் இயக்குகிறார்கள் என்றார் காரோட்டி.
மீரா கோவிலின் மாடியை விருந்தினர் அறையாக மாற்றியிருக்கிறார்கள். சின்னஞ்சிறிய அறைகள். அதில் ஒன்றை ஒதுக்கியிருந்தார்கள். கோவிலின் மாடியில் தங்கியிருந்தது புதிய அனுபவம். மாலை முழுவதும் பக்திப்பாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. மறுநாள் காலை ஆறு மணிக்கு நடைப்பயிற்சிக்கு கிளம்பினால் வாசற்கதவைத் திறக்க எவருமில்லை. விடுதிக் காவலர் உறங்கிக் கொண்டிருந்தார். ஏழு மணிக்கு மேல் தான் கதவைத் திறப்பார்கள் என்றார்.
கொல்கத்தாவின் தினசரி வாழ்க்கை மிக மெதுவாக துவங்கக் கூடியது. அதிகாலையில் காபி குடிப்பதற்கு கூட வழியில்லை. சாலையோர தேநீர் கடைகளில் காபி கிடைப்பதில்லை. ஒன்பது மணிக்கு தான் உணவகங்கள் ஆரம்பமாகின்றன. அங்கும் அவல் உப்புமா, பூரி தவிர வேறு எதுவுமில்லை. கொல்கத்தாவின் வெயில் முறுகிய வெல்லப்பாகு போலிருந்தது. நிறைய பூங்காங்கள் உள்ள நகரம். ஆயினும் உஷ்ணம் மிக அதிகமாகவே இருந்தது.
மே 1 மாலை ஷேக்ஸ்பியர் வீதியில் இருந்த பாரதிய பாஷா பரிஷத்திற்குச் சொந்தமான அரங்கில் விழா நடைபெற்றது. அரங்கு நிறைந்த கூட்டம்.
பிரசிடென்சி பல்கலைகழக மேனாள் துணைவேந்தர் அனுராதா லோகியா விருது வழங்கினார். தலைமை உரை, சிறப்புரை, அறிவிப்புகள் என யாவும் பெங்காலி மற்றும் இந்தியில் நடைபெற்றன. எவரும் ஆங்கிலத்தில் பேசவில்லை. எனது ஏற்புரையைத் தமிழில் வழங்கினேன். உரையின் ஆங்கில வடிவத்தை அவர்களுக்கு முன்னதாக அனுப்பி வைத்திருந்தேன். ஆனால் அவர்கள் அதனை அச்சிட்டுப் பகிரவில்லை. ஏற்புரை என்பதால் மூன்று நிமிஷங்கள் மட்டுமே வழங்கப்பட்டன.







April 29, 2025
லாஸ்லோவின் நூலகம்
“தி ப்ரூடலிஸ்ட்” படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி லாஸ்லோ டோத் நூலகம் ஒன்றை வடிவமைப்பதாகும். அதுவும் வாசிப்பதற்கு ஏற்ற விளக்குடன் கூடிய நாற்காலி ஒன்றையும் வடிவமைக்கிறான்.

தொழிலதிபர் ஹாரிசன் லீ வான் ப்யூரனுக்காக அந்த நூலகத்தை வடிவமைக்கும்படி அவரது மகன் லாஸ்லோவை அழைக்கிறான்.
லாஸ்லோ டோத் நாஜி வதைமுகாமிலிருந்து தப்பிப் பிழைத்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்த கட்டிடக்கலை நிபுணர். மொழி மற்றும் கலாச்சாரத் தடைகளைத் தாண்டி தனது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஆகவே நூலகத்தை மறுஉருவாக்கம் செய்யும் போது அதைத் தனது கனவின் வடிவமாக மாற்ற முனைகிறார்.
நூலகம் என்பது புத்தகங்கள் அடுக்கபட்ட இடமோ, வாசிப்பு அறையோ இல்லை. அது ஒரு தனித்துவமிக்க வெளி. வாசிப்பு என்பதை உன்னதமாக நிகழ்வாக மாற்ற முயலுகிறார். வெளிச்சம் பாயும் நாடகமேடையில் தனித்து அமர்ந்துள்ள கதாபாத்திரம் போல வாசிப்பவரை உணர வைக்கிறார்.
உயர்ந்த கூரை, புத்தங்களை அடுக்குவதற்காக அவர் உருவாக்கிய முறை, சுவர்களின் வண்ணம். திரைச்சீலை என யாவும் நேர்த்தியாக உருவாக்கபடுகின்றன . ஆனால் ஹாரிசனுக்கு அந்த வடிவமைப்பு பிடிக்கவில்லை. அதில் தங்கள் குடும்பப் பெருமை வெளிப்படவில்லை என நினைக்கிறான். நூலகக் குவிமாடக் கண்ணாடி கிழே விழுந்து உடைவது அவர்கள் அதிகாரத்தின் சிதறலேயாகும். இதன் காரணமாக அவர்களுக்குள் கருத்துமோதல் உருவாகிறது. லாஸ்லோ வெளியேற்றப்படுகிறார்.

லாஸ்லோவின் அழகியல் சொற்களுக்கு அப்பாற்பட்டது. தான் உருவாக்கிய கட்டிடம் தனது அழகைக் காட்டிக் கொண்டிருக்க வேண்டும் என அவர் நினைப்பதில்லை. மாறாக உண்மையான அழகை உணரச் செய்ய வேண்டும் என்றே விரும்புகிறார்.
மானசீகமாக லாஸ்லோ உருவாக்கிய நாற்காலியில் அமர்ந்து கையில் விருப்பமான புத்தகம் ஒன்றை வைத்து படிப்பது போல கற்பனை செய்து கொள்கிறேன். கலை தரும் மகிழ்ச்சிக்கு நிகரே கிடையாது.
••
நாவல்வாசிகள் 4
இந்து தமிழ் திசை நாளிதழில் ஞாயிறு தோறும் வெளியாகிவரும் நாவல்வாசிகள் தொடரின் நான்காவது பகுதி வெளியாகியுள்ளது
காலச்சுவடு இதழில்
இம்மாத காலச்சுவடு இதழில் மறைந்த முத்துகாமிக்ஸ் நிறுவனர் சௌந்திரபாண்டியன் குறித்து எழுதியிருக்கிறேன்
April 27, 2025
கொல்கத்தா தமிழ் சங்கவிழா
கொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கம் சார்பில் மே 3 சனிக்கிழமை மாலை ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்நிகழ்வில் திரு. சி.முருகன் ஐஏஎஸ் கலந்து கொண்டு தலைமையுரை ஆற்றுகிறார்.
இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.
April 24, 2025
கொல்கத்தா /விருது விழா
பாரதிய பாஷா பரிஷத் விருது வழங்கும் விழா கொல்கத்தாவில் மே 1 வியாழன் மாலை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக ஏப்ரல் முப்பது மதியம் கொல்கத்தா செல்கிறேன்.
மூன்று நாட்கள் கொல்கத்தாவில் தங்கியிருப்பேன்.
கொல்கத்தாவில் வசிக்கும் வாசகர்கள் / நண்பர்கள் சந்திக்க விரும்பினால் 9600034659 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

தஸ்தாயெவ்ஸ்கியின் கனவுகள்
பியோதர் தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கை சார்ந்து இரண்டு நாடகங்களை எழுதியிருக்கிறேன்.
இரண்டும் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. சிறப்பான வரவேற்பும் கிடைத்தது.



இத்தோடு அவரது Notes from Underground யை அடிப்படையாகக் கொண்டு மரணவீட்டின் குறிப்புகள் என்ற நாடகத்தை எழுதியிருக்கிறேன். அந்த நாடகமும் பலமுறை மேடையேற்றப்பட்டிருக்கிறது. சென்ற ஆண்டு வெளி ரங்கராஜன் அந்த நாடகத்தை நிகழ்த்திக் காட்டினார். நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த மூன்று நாடகங்களையும் தொகுத்து ஒரே நூலாகத் தேசாந்திரி பதிப்பகம் வெளியிடவுள்ளது.
அதன் தலைப்பு “ தஸ்தாயெவ்ஸ்கியின் கனவுகள்“
April 22, 2025
ஜெயமோகன் பிறந்த நாள்
எனது அன்பிற்குரிய நண்பர் ஜெயமோகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

தமிழ் இலக்கியத்திற்கு மிகுந்த பெருமை சேர்க்கும் வகையிலான அவரது படைப்புகளுக்கும், தீவிர இலக்கிய செயல்பாட்டிற்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.
இடக்கை நாவல் மொழியாக்கம்
எனது இடக்கை நாவல் இந்தி மற்றும் கன்னடத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இரண்டும் விரைவில் வெளியிடப்படவுள்ளன.
அஞ்சலி : போப் பிரான்சிஸ்
போப் பிரான்சிஸ் மறைவிற்கு எனது மனமார்ந்த அஞ்சலி.

போப் பிரான்சிஸ் தனது வாழ்க்கை வரலாற்றை Hope என்ற பெயரில் புத்தகமாக எழுதியிருக்கிறார். பொதுவாக இது போன்ற வாழ்க்கை வரலாற்றைப் போப்பாண்டவரின் மறைவிற்குப் பின்பாகவே எழுதுவார்கள். வெளியிடுவார்கள். ஆனால் போப் பிரான்சிஸ் தான் வாழும் காலத்திலே தனது சுயசரிதையை வெளியிட்டுள்ளார். இதனை எழுத ஆறு ஆண்டுகள் செலவிட்டிருக்கிறார். இதில் அவரது குடும்ப வரலாறும் இளமைக்கால நினைவுகளும் எழுதப்பட்டிருக்கின்றன.
போப் பிரான்சிஸ் இலக்கியத்தின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர். இளம் ஜேசுட் பாதிரியாக இருந்த நாட்களில் லத்தீன் அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளரான ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸைச் சந்தித்து உரையாடியிருக்கிறார். நண்பராகப் பழகியிருக்கிறார்..
தனது இளமைக்காலத்தில் போப் பிரான்சிஸ் இலக்கியம் மற்றும் உளவியல் கற்பிக்கும் ஆசிரியராக இருந்தார் அப்போது அவரது பெயர் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ.
பெர்கோக்லியோ அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸில் – 1936 இல் பிறந்தவர். இத்தாலிய குடும்பத்தைச் சார்ந்தவர். அவரது பெற்றோர் மரியோ மற்றும் ரெஜினா. ஐந்து குழந்தைகளில் பெர்கோக்லியோ மூத்தவர்.
சிறுவயது முதலே புத்தகம் படிப்பதில் அதிக விருப்பம் கொண்டிருந்தார். இத்தாலிய நாவல்கள் மற்றும் நாடகங்களை விரும்பி வாசித்திருக்கிறார்.
கால்பந்து விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். சிறந்த கால்பந்தாட்ட வீர்ராக வேண்டும் எனக் கனவு கண்டார், போப்பாக இருந்த போதும் தொலைக்காட்சி பார்ப்பதை முற்றிலும் தவிர்த்து வந்தார் என்பதால் முக்கியமான கால்பந்தாட்ட போட்டிகளின் போது எந்த அணி எவ்வளவு கோல் அடித்தது என்ற தகவலை உதவியாளர் சிறிய துண்டு சீட்டில் எழுதி அவரது மேஜையில் வைத்துவிடுவது உண்டு.
Sports typically unite rather than divide. They build bridges and not walls எனத் தனது சுயசரிதையில் எழுதியிருக்கிறார்
அரசியல் மற்றும் வணிகத்தில் நிலவும் பேராசைக்கு எதிராகப் போப் பிரான்சிஸ் வெளிப்படையாகப் பேசினார். அரசியல் அதிகார போட்டிகள். பாலியல் வன்முறை. லஞ்சம் மற்றும் சுற்றுசூழல்சீர்கேடுகளைக் கடுமையாக விமர்சித்தார். வாடிகனில் தனக்கு வழங்கப்பட்ட பிரம்மாண்டமான அறையைத் தவிர்த்து எளிமையான சிறிய அறை ஒன்றில் வசித்து வந்தார். ஆர்ச்பிஷப்பாக இருந்த போது பேருந்து ரயில் எனப் பொதுப்போக்குவரத்தில் மட்டுமே பயணம் செய்து வந்திருக்கிறார்.
டுவிட்டர். ஃபேஸ்புக் மற்றும் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கைக் கொண்ட முதல் போப் இவர்தான். செல்ஃபி எடுத்துக் கொண்ட முதல் போப்பும் இவர் தான்.

பெர்கோக்லியோ 1965 ஆம் ஆண்டின் வசந்தகாலத்தில் அர்ஜென்டினாவின் சாண்டா ஃபேவிலுள்ள பள்ளி மாணவர்களிடம் கதைகள் குறித்துப் பேசுவதற்காக ஜோர்ஜ் லூயி போர்ஹெஸை அழைத்தார். அந்தச் சந்திப்பில் துவங்கிய நட்பு நீண்டகாலம் தொடர்ந்திருக்கிறது.

அப்போது போர்ஹெஸுக்கு வயது 66. முற்றிலும் பார்வையிழந்தவர். பெர்கோக்லியோவுக்கு 28 வயது. போர்ஹேஸ் அர்ஜென்டினாவின் புகழ்பெற்ற எழுத்தாளர். ஆனால் பெர்கோக்லியா இளம் பாதிரி. இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலக்கியம் மற்றும் உளவியலைக் கற்பிக்கும் பணியைச் செய்து வந்தார்.
இளம் பெர்கோக்லியோவின் புத்திசாலித்தனமும் இலக்கிய ஆர்வமும் போர்ஹெஸை மிகவும் கவர்ந்திருக்கிறது. ஆகவே அந்த அழைப்பை ஏற்று எட்டு மணி நேரம் கோச் வண்டியில் பயணம் செய்து சாண்டா ஃபே பள்ளியில் உரையாற்றியிருக்கிறார்.
தன்னிடம் பயின்ற மாணவர்களின் பதினான்கு சிறுகதைகளைத் தொகுத்து பெர்கோக்லியோ சிறிய நூலாகக் கொண்டுவந்திருக்கிறார். அதற்குப் போர்ஹெஸ் முன்னுரை எழுதியிருக்கிறார். தனிச்சுற்றுக்கான அந்த நூல் குறைவான பிரதிகளே வெளியிடப்பட்டது
2013 இல் அவர் போப் பிரான்சிஸாக ஆனபோது புதிய முன்னுரையுடன் அந்த நூல் மீண்டும் வெளியானது. அதில், போப் பிரான்சிஸ் தனது மாணவர்களின் கதை எழுதும் திறமை குறித்துத் தான் அடைந்த ஆச்சரியத்தையும், போர்ஹெஸ் அதனை வெளியிடுவதற்கு எவ்வளவு ஊக்கப்படுத்தினார் என்பதையும் நினைவு கூர்ந்திருக்கிறார்
போர்ஹெஸின் மரணத்திற்குப் பின்பு அவரது மனைவியான மரியா கோடாமா ரோமிற்குச் சென்று போர்ஹெஸ் வசமிருந்த கதைகளின் முதற்பதிப்பை போப்பிற்குப் பரிசாக வழங்கினார்.

போர்ஹெஸை தான் பணியாற்றிய பள்ளிக்கு உரையாற்ற அழைத்த போது அவரது படைப்புகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி ஐந்து நாட்கள் அந்தக் கதைகளை வாசிக்க வைத்திருக்கிறார்.
தனது படைப்புகளை மாணவர்கள் ஆழ்ந்து படித்திருப்பது போர்ஹெஸை மகிழ்ச்சிப்படுத்தியது. அன்று மாணவராக இருந்த மரியோ என்பவர் போர்ஹெஸின் உரை மறக்க முடியாத ஒன்றாக இருந்தாக பதிவு செய்திருக்கிறார்.
தனது அழைப்பை ஏற்றுப் போர்ஹெஸ் வருகை தந்த நிகழ்வை தனது சுயசரிதையில் போப் பிரான்சிஸ் பதிவு செய்திருக்கிறார்.
நன்றி
Who Is Pope Francis? Stephanie Spinner
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

