S. Ramakrishnan's Blog, page 9

April 27, 2025

கொல்கத்தா தமிழ் சங்கவிழா

கொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கம் சார்பில் மே 3 சனிக்கிழமை மாலை ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்நிகழ்வில் திரு. சி.முருகன் ஐஏஎஸ் கலந்து கொண்டு தலைமையுரை ஆற்றுகிறார்.

இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 27, 2025 19:24

April 24, 2025

கொல்கத்தா /விருது விழா

பாரதிய பாஷா பரிஷத் விருது வழங்கும் விழா கொல்கத்தாவில் மே 1 வியாழன் மாலை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக ஏப்ரல் முப்பது மதியம் கொல்கத்தா செல்கிறேன்.

மூன்று நாட்கள் கொல்கத்தாவில் தங்கியிருப்பேன்.

கொல்கத்தாவில் வசிக்கும் வாசகர்கள் / நண்பர்கள் சந்திக்க விரும்பினால் 9600034659 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 24, 2025 07:39

தஸ்தாயெவ்ஸ்கியின் கனவுகள்

பியோதர் தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கை சார்ந்து இரண்டு நாடகங்களை எழுதியிருக்கிறேன்.

இரண்டும் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. சிறப்பான வரவேற்பும் கிடைத்தது.

இத்தோடு அவரது Notes from Underground யை அடிப்படையாகக் கொண்டு மரணவீட்டின் குறிப்புகள் என்ற நாடகத்தை எழுதியிருக்கிறேன். அந்த நாடகமும் பலமுறை மேடையேற்றப்பட்டிருக்கிறது. சென்ற ஆண்டு வெளி ரங்கராஜன் அந்த நாடகத்தை நிகழ்த்திக் காட்டினார். நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த மூன்று நாடகங்களையும் தொகுத்து ஒரே நூலாகத் தேசாந்திரி பதிப்பகம் வெளியிடவுள்ளது.

அதன் தலைப்பு தஸ்தாயெவ்ஸ்கியின் கனவுகள்“

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 24, 2025 04:31

April 22, 2025

ஜெயமோகன் பிறந்த நாள்

எனது அன்பிற்குரிய நண்பர் ஜெயமோகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

தமிழ் இலக்கியத்திற்கு மிகுந்த பெருமை சேர்க்கும் வகையிலான அவரது படைப்புகளுக்கும், தீவிர இலக்கிய செயல்பாட்டிற்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 22, 2025 04:17

இடக்கை நாவல் மொழியாக்கம்

எனது இடக்கை நாவல் இந்தி மற்றும் கன்னடத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இரண்டும் விரைவில் வெளியிடப்படவுள்ளன.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 22, 2025 04:10

அஞ்சலி : போப் பிரான்சிஸ்

போப் பிரான்சிஸ் மறைவிற்கு எனது மனமார்ந்த அஞ்சலி.

போப்  பிரான்சிஸ் தனது வாழ்க்கை வரலாற்றை Hope என்ற பெயரில் புத்தகமாக எழுதியிருக்கிறார். பொதுவாக இது போன்ற வாழ்க்கை வரலாற்றைப் போப்பாண்டவரின் மறைவிற்குப் பின்பாகவே எழுதுவார்கள். வெளியிடுவார்கள். ஆனால் போப்  பிரான்சிஸ் தான் வாழும் காலத்திலே தனது சுயசரிதையை வெளியிட்டுள்ளார். இதனை எழுத ஆறு ஆண்டுகள் செலவிட்டிருக்கிறார். இதில் அவரது குடும்ப வரலாறும் இளமைக்கால நினைவுகளும் எழுதப்பட்டிருக்கின்றன.

போப் பிரான்சிஸ் இலக்கியத்தின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர். இளம் ஜேசுட் பாதிரியாக இருந்த நாட்களில் லத்தீன் அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளரான ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸைச் சந்தித்து உரையாடியிருக்கிறார். நண்பராகப் பழகியிருக்கிறார்..

தனது இளமைக்காலத்தில் போப்  பிரான்சிஸ் இலக்கியம் மற்றும் உளவியல் கற்பிக்கும் ஆசிரியராக இருந்தார் அப்போது அவரது பெயர் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ.

பெர்கோக்லியோ அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸில் – 1936 இல் பிறந்தவர். இத்தாலிய குடும்பத்தைச் சார்ந்தவர். அவரது பெற்றோர் மரியோ மற்றும் ரெஜினா. ஐந்து குழந்தைகளில் பெர்கோக்லியோ மூத்தவர்.

சிறுவயது முதலே புத்தகம் படிப்பதில் அதிக விருப்பம் கொண்டிருந்தார். இத்தாலிய நாவல்கள் மற்றும் நாடகங்களை விரும்பி வாசித்திருக்கிறார்.

கால்பந்து விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். சிறந்த கால்பந்தாட்ட வீர்ராக வேண்டும் எனக் கனவு கண்டார், போப்பாக இருந்த போதும் தொலைக்காட்சி பார்ப்பதை முற்றிலும் தவிர்த்து வந்தார் என்பதால் முக்கியமான கால்பந்தாட்ட போட்டிகளின் போது எந்த அணி எவ்வளவு கோல் அடித்தது என்ற தகவலை உதவியாளர் சிறிய துண்டு சீட்டில் எழுதி அவரது மேஜையில் வைத்துவிடுவது உண்டு.

Sports typically unite rather than divide. They build bridges and not walls எனத் தனது சுயசரிதையில் எழுதியிருக்கிறார்

அரசியல் மற்றும் வணிகத்தில் நிலவும் பேராசைக்கு எதிராகப் போப் பிரான்சிஸ் வெளிப்படையாகப் பேசினார். அரசியல் அதிகார போட்டிகள். பாலியல் வன்முறை. லஞ்சம் மற்றும் சுற்றுசூழல்சீர்கேடுகளைக் கடுமையாக விமர்சித்தார். வாடிகனில் தனக்கு வழங்கப்பட்ட பிரம்மாண்டமான அறையைத் தவிர்த்து எளிமையான சிறிய அறை ஒன்றில் வசித்து வந்தார். ஆர்ச்பிஷப்பாக இருந்த போது பேருந்து ரயில் எனப் பொதுப்போக்குவரத்தில் மட்டுமே பயணம் செய்து வந்திருக்கிறார்.

டுவிட்டர். ஃபேஸ்புக் மற்றும் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கைக் கொண்ட முதல் போப் இவர்தான். செல்ஃபி எடுத்துக் கொண்ட முதல் போப்பும் இவர் தான்.

பெர்கோக்லியோ 1965 ஆம் ஆண்டின் வசந்தகாலத்தில் அர்ஜென்டினாவின் சாண்டா ஃபேவிலுள்ள பள்ளி மாணவர்களிடம் கதைகள் குறித்துப் பேசுவதற்காக ஜோர்ஜ் லூயி போர்ஹெஸை அழைத்தார். அந்தச் சந்திப்பில் துவங்கிய நட்பு நீண்டகாலம் தொடர்ந்திருக்கிறது.

அப்போது போர்ஹெஸுக்கு வயது 66. முற்றிலும் பார்வையிழந்தவர். பெர்கோக்லியோவுக்கு 28 வயது. போர்ஹேஸ் அர்ஜென்டினாவின் புகழ்பெற்ற எழுத்தாளர். ஆனால் பெர்கோக்லியா இளம் பாதிரி. இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலக்கியம் மற்றும் உளவியலைக் கற்பிக்கும் பணியைச் செய்து வந்தார்.

இளம் பெர்கோக்லியோவின் புத்திசாலித்தனமும் இலக்கிய ஆர்வமும் போர்ஹெஸை மிகவும் கவர்ந்திருக்கிறது. ஆகவே அந்த அழைப்பை ஏற்று எட்டு மணி நேரம் கோச் வண்டியில் பயணம் செய்து சாண்டா ஃபே பள்ளியில் உரையாற்றியிருக்கிறார்.

தன்னிடம் பயின்ற மாணவர்களின் பதினான்கு சிறுகதைகளைத் தொகுத்து பெர்கோக்லியோ சிறிய நூலாகக் கொண்டுவந்திருக்கிறார். அதற்குப் போர்ஹெஸ் முன்னுரை எழுதியிருக்கிறார். தனிச்சுற்றுக்கான அந்த நூல் குறைவான பிரதிகளே வெளியிடப்பட்டது

2013 இல் அவர் போப்  பிரான்சிஸாக ஆனபோது புதிய முன்னுரையுடன் அந்த நூல் மீண்டும் வெளியானது. அதில், போப் பிரான்சிஸ் தனது மாணவர்களின் கதை எழுதும் திறமை குறித்துத் தான் அடைந்த ஆச்சரியத்தையும், போர்ஹெஸ் அதனை வெளியிடுவதற்கு எவ்வளவு ஊக்கப்படுத்தினார் என்பதையும் நினைவு கூர்ந்திருக்கிறார்

போர்ஹெஸின் மரணத்திற்குப் பின்பு அவரது மனைவியான மரியா கோடாமா ரோமிற்குச் சென்று போர்ஹெஸ் வசமிருந்த கதைகளின் முதற்பதிப்பை போப்பிற்குப் பரிசாக வழங்கினார்.

போர்ஹெஸை தான் பணியாற்றிய பள்ளிக்கு உரையாற்ற அழைத்த போது அவரது படைப்புகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி ஐந்து நாட்கள் அந்தக் கதைகளை வாசிக்க வைத்திருக்கிறார்.

தனது படைப்புகளை மாணவர்கள் ஆழ்ந்து படித்திருப்பது போர்ஹெஸை மகிழ்ச்சிப்படுத்தியது. அன்று மாணவராக இருந்த மரியோ என்பவர் போர்ஹெஸின் உரை மறக்க முடியாத ஒன்றாக இருந்தாக பதிவு செய்திருக்கிறார்.

தனது அழைப்பை ஏற்றுப் போர்ஹெஸ் வருகை தந்த நிகழ்வை தனது சுயசரிதையில் போப் பிரான்சிஸ் பதிவு செய்திருக்கிறார்.

நன்றி

Who Is Pope Francis? Stephanie Spinner

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 22, 2025 02:32

April 19, 2025

எஸ்.ரா நூல்கள் 100

எனது நூறு நூல்கள் குறித்து இணையத்தில் தொடர் கூட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளார் தமிழ் பேராசிரியர் முனைவர். சு.வினோத். அவருக்கு எனது மனம் நிறைந்த அன்பும் நன்றியும்.

அஞ்சிறைத்தும்பி இலக்கிய அமைப்பின் மூலம் இந்த இணைய வழி நிகழ்வு நடைபெறுகிறது.

நாளைக் காலை பத்துமணிக்கு அதன் முதல் நிகழ்வு துவங்குகிறது.

அனைவரும் இதில் கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.

நிகழ்ச்சி விபரம்

எஸ்.ரா நூல்கள் 100
Vinod S is inviting you to a scheduled Zoom meeting.

Join Zoom Meetinghttps://us04web.zoom.us/j/77727323793?pwd=epqtpVZ8vA9l9YwmIYfgQHNkSI5Wd3.1
Meeting ID: 777 2732 3793

Passcode: 8kraDk

நிகழ்வு குறித்து கூடுதலாக அறிந்து கொள்ளவும், இணைய வழி இணைவதில் தேவைப்படும் உதவிக்கும் பேராசிரியர் வினோத் அவர்களைத் தொடர்பு கொள்ளவும்

தொலைபேசி எண் 9443869129

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 19, 2025 07:15

குற்றமுகங்கள் 9 மகரன் காண்டீபன்

புகையால் எழுதப்படும் பெயர்கள் நிலைப்பதில்லை. ஆனால் அதன் வசீகரம் அபூர்வமானது. அப்படிச் சிகரெட் புகையைக் கொண்டு தனது பெயரை எழுதிக் காட்டத் தெரிந்தவன் மகரன் காண்டீபன். ஐந்தரை அடி உயரம். வயது முப்பதுக்குள்ளிருக்கும். கட்டை மீசை. மஞ்சள் படிந்த கண்கள். உரிந்த தோல் கொண்ட உதடுகள். தன்னை எரித்துக் கொள்ளும் போதும் சிகரெட் மௌனமாக இருக்கிறது என்பதாலே அதை மகரனுக்குப் பிடித்துப் போனது.  

இங்கிலீஷ் கிளப்பில் நடக்கும் குத்துசண்டை போட்டிகளின் போது சிகரெட் விற்பனை செய்வது மகரனின் வேலை. இதற்கான உரிமையை அவன் கர்னல் மார்டினிடமிருந்து பெற்றிருந்தான். அந்த நாட்களில் இங்கிலீஷ் கிளப்பிற்குள் இந்தியர்கள் அனுமதிக்கபடவில்லை.

கிளப்பின் பந்தாட்ட மைதானத்தையும் சூதாட்ட அரங்கினையும் சுத்தம் செய்வதற்காகத் தினமும் வரும் பணியாளர்கள் கூடப் பின்வாசல் வழியாகக் காலில் துணிகளைக் கட்டிக் கொண்டே உள்ளே வர வேண்டும் என்ற நடைமுறை இருந்தது.

மகரன் காண்டீபன் சிகரெட் விற்பனை செய்யும் உரிமையைப் பெறுவதற்கு முன்பாகப் புகைக் கலைஞனாக வேலை செய்தான்.

மதராஸின் எழும்பூரில் 1854ல் புதிதாகத் துவங்கப்பட்ட அருங்காட்சியகத்தினைக் காண மக்களைக் குறைவாக வந்தார்கள். கூட்டத்தை ஈர்க்கும் விதமாக அதன் இயக்குநராக இருந்த எட்வர்ட் கிரீன் பல்பர் பல புதுமைகளை மேற்கொண்டார். அதன்படி ஒட்டகம், சிறுத்தை கரடி. வரிக்குதிரை போன்ற உயிருள்ள விலங்குகளைக் கொண்டு வந்து காட்சிப்படுத்தினார். அவற்றை மக்கள் நெருங்கிப் பார்வையிடவும் அனுமதித்தார்.

அப்படியும் கூட்டம் திரளாத போது தனிநபர் வேடிக்கை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார். மணலைக் கயிறாகத் திரித்துக் காட்டும் நிகழ்ச்சி. ஆறடி நீளமுள்ள வாளை விழுங்கி காட்டும் நிகழ்ச்சி. பாம்பு மனிதன் ஷோ எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில் ஒன்றாக மகரன் காண்டீபனின் புகைவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது

மரமேஜை ஒன்றின் மீது ஏறிக் கொண்டு மகரன் காண்டீபன் ஒரே நேரத்தில் வாயில் ஆறு சிகரெட்டுகளைப் பற்ற வைத்துப் புகைவிடுவான். வளைய வளையமாக அந்தப் புகை வெளியேறுவதைக் கண்டு மக்கள் ரசித்துக் கைதட்டுவார்கள். அது போலவே புகையால் தனது பெயரை எழுதிக் காட்டுவான். இது மட்டுமின்றிக் காது வழியாகச் சிகரெட் புகையைவிடுவது, எரியும் சிகரெட்டினை வாயினுள் விழுங்கிக்காட்டுவது போன்ற வேடிக்கைகளையும் செய்து வந்தான்.

எட்வர்ட் கிரீன் பல்பர் அவனது உடையே சிகரெட் போல இருந்தால் நன்றாக இருக்கக் கூடும் என நினைத்து பொன்னிற மேல் சட்டையும் வெள்ளை பேண்டும் பரிசாக வழங்கினார். அத்தோடு அவன் ஒரு நடமாடும் சிகரெட் என்ற பட்டத்தையும் வழங்கினார்.

மகரன் காண்டீபன் விசேச உடையினை அணிந்து கொண்டு தனது புகைவிடும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தி புகழ்பெற்றான். அதிலும் ஒருமுறை இரண்டு குரங்குகளைச் சிகரெட் புகைக்க வைத்துக் காட்டியது பெரிய வரவேற்பைப் பெற்றது.

இதன் தொடர்ச்சியாக மார்க் அண்ட் கோ வழியாக இங்கிலாந்திலிருந்து பல்வேறு விதமான சிகரெட் ரகங்களை வரவழைத்து விற்பனை செய்ய ஆரம்பித்த மகரன் சிப்பாய்களுக்குள் சிகரெட் பிடிக்கும் போட்டி ஒன்றையும் வெற்றிகரமாக நடத்திக் காட்டினான்.

இந்தப் புகழின் காரணமாகவே அவன் இங்கிலிஷ் கிளப்பில் சிகரெட் விற்பனை செய்வதற்கான அனுமதி கிடைத்தது. அங்கே வாரம் சனிக்கிழமை மாலை குத்துசண்டை நடப்பது வழக்கம்.

ராணுவ அதிகாரிகளும் கப்பல் மாலுமிகளும் கம்பெனி வணிகர்களும் அதைக் காண ஒன்று கூடுவார்கள். அந்தக் குத்துசண்டையில் பெரும்பாலும் ஆங்கிலேயர்கள் மட்டுமே ஈடுபடுவார்கள். குத்துசண்டை அரங்கிலே மதுவும் சிகரெட்டும் விற்கபடும்.

இங்கிலிஷ் கிளப்பில் பெண்களுக்கு அனுமதி கிடையாது. ஆனால் பெண்பித்துக் கொண்ட வெள்ளைக்கார அதிகாரிகளை மகிழ்ச்சிப்படுத்த ஆண் உடையில் பெண்களை அழைத்து வந்து அவர்களுடன் சரசமாடச் செய்தான் . இதனால் கம்பெனி அதிகாரிகளிடம் நிறையச் சலுகைகளைப் பெற முடிந்தது.

குத்துசண்டை வீரனான சார்லஸ் பிராங்க் ஒரு நாள் மகரக் கண்டியனை அழைத்துக் கப்பலின் மேற்தளத்தில் ஒரு குத்துசண்டை போட்டியினை ஏற்பாடு செய்தால் நிறையப் பணம் சம்பாதிக்கலாம் என்ற யோசனையைச் சொன்னான். கிடைக்கும் வருவாயில் பாதிப்பாதியாகப் பிரித்துக் கொள்வோம் என மகரக் கண்டியன் அன்றே ஒப்பந்தம் செய்து கொண்டான்.

கோல்டன் டவர் கப்பலில் முதன்முறையாகக் குத்துசண்டை ஏற்பாடானது. இதனைக் காணுவதற்காக ஐந்து ஸ்டார் பகோடா நாணயங்கள் கட்டணமாக வைக்கப்பட்டிருந்தது.

கப்பலின் மேற்தளத்தில் நடைபெற்ற போட்டியினைக் காண ஆங்கிலேயர்கள் திரளாக வந்திருந்தார்கள். போட்டியின் போது மதுவும் சிற்றுண்டிகளும் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டன. அந்தப் போட்டி மகரன் காண்டீபனின் வாழ்க்கையைத் திசைமாற்றியது. இவ்வளவு பணத்தை எளிதாக சம்பாதிக்க முடியும் என்பது வியப்பளித்தது

தனது போட்டிகளுக்காகவே அவன் ஒரு பழைய கப்பலை விலைக்கு வாங்கினான். அதில் குத்துச்சண்டை போட்டிகளைத் தொடர்ந்து நடத்த ஆரம்பித்தான். அவனிடம் பணம் குவிய ஆரம்பித்தது.

குத்துசண்டையில் வெள்ளைக்காரர்களுடன் இந்தியர்களும் மோதுவதற்கு ஏற்பாடு செய்தான். அந்தப் போட்டியில் வெள்ளைக்கார வீரன் தோற்றால் கூட ஐம்பது பொற்காசுகள் வழங்கப்படுமென அறிவித்தான். தனது கப்பலில் குத்துசண்டையிடுவதற்காக அவனே வீர்ர்களைத் தயார் செய்யவும் ஆரம்பித்தான்.

குத்துச் சண்டை போட்டிகளின் போது தானே சொந்தமாகத் தயாரித்த சிகரெட்டுகளை நேவி கட் சிகரெட் டின்னில் அடைத்து 88 பிராண்ட் சிகரெட் என விற்பனை செய்ய ஆரம்பித்தான். புதிய சிகரெட்டின் வாசனை வெள்ளைக்காரர்களுக்குப் பிடித்துப் போனது.  

கப்பலில் நடக்கும் குத்துச்சண்டை போட்டியும் புகையும் மதுவும் ஆங்கிலேயர்களை மிகவும் உற்சாகம் கொள்ள வைத்தது.

அதன்பிறகு மதராஸின் முக்கிய நபராக மகரன் காண்டீபன் உருமாறினான்.

ராணுவ அதிகாரிகள் தரும் விருந்தில் அவனும் கையில் ஒயின் கோப்பையை ஏந்தினான். நடனம் ஆடினான். ஆறு குதிரைகள் கொண்ட சாரட் ஒன்றை சொந்தமாக வைத்துக் கொண்டான். கப்பலிலே வசிக்கத் துவங்கிய காண்டீபன் தனது பணியாளர்களாக வெள்ளைக்கார பெண்களை மட்டுமே வைத்துக் கொண்டிருந்தான்

போலி சிகரெட்டுகளைத் தயாரிப்பதற்காக வேப்பேரியில் இருந்த பழைய நாடக கொட்டகை ஒன்றை விலைக்கு வாங்கினான். அதனுள் ரகசியமாகச் சிகரெட் தயாரிக்கும் பணி நடந்தது. கம்பெனி ராணுவ அதிகாரிகளில் சிலர் இங்கிலாந்து செல்லும் போது 88 சிகரெட் டின்களைக் கையோடு கொண்டு சென்றார்கள்.

லண்டனிலும் மகரன் காண்டீபனின் சிகரெட்டிற்கு வரவேற்பு அதிகமானது. கம்பெனி அதிகாரிகளில் ஒருவரான சார்லஸ் எட்வர்ட் இந்தச் சிகரெட்டுகளை இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யும் உரிமையைப் பெற்றுக் கொண்டார். இப்படியாக மகரனிற்குப் பல்வேறு வழிகளிலும் பணம் கொட்ட ஆரம்பித்தது

குத்துச்சண்டை போட்டிகளை மட்டும் கப்பலில் நடத்தாமல் சூதாட்டம், நிர்வாண நடனம். துப்பாக்கி சுடும் போட்டி எனப் பல்வேறு கேளிக்கைகளையும் ஏற்பாடு செய்தான். ஒவ்வொரு ஞாயிறு அன்றும் அவனது கப்பலில் இசை நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். அன்று கரையில் இருந்தபடியே ஒளிரும் கப்பலையும் அதில் இசைக்கப்படும் சங்கீதத்தையும் மக்கள் ரசித்தார்கள்.

மதராஸின் புதிய கவர்னராக ஜார்ஜ் ஹாரிஸ் நியமிக்கப்பட்டார். அதைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் அவரது கையைக் குலுக்கி தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டான் காண்டீபன். முதற்சந்திப்பிலே அவன் ஒரு ஏமாற்றுக்காரன் என ஜார்ஜ் ஹாரிஸ் உணர்ந்து கொண்டுவிட்டார். அதன் சில நாட்களில் அவர் கப்பலில் நடைபெறும் குத்துசண்டை போட்டிகளுக்குத் தடைவிதித்ததோடு கம்பெனி அதிகாரிகள் எவரும் அதில் கலந்து கொள்ளக்கூடாது என உத்தரவும் பிறப்பித்தார்.

மகரன் காண்டீபனின் செல்வாக்கு இங்கிலாந்து வரை இருந்த்து. அவன் இங்கிலாந்திற்குச் சென்று விக்டோரியா ராணியை நேரில் சந்தித்து விசேச அனுமதிக் கடிதம் பெற்றுவந்தான். அதனை கவர்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தங்களுக்குள் இருந்த நட்பை உறவாக்கிக் கொள்ளவும் காண்டீபனை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வதற்காகவும் குத்துசண்டை வீரனான சார்லஸ் பிராங்க் தனது சகோதரி கிளாராவை மகரன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தினான்.

காண்டீபனால் அதை மறுக்க முடியவில்லை. அடுத்தச் சில நாட்களில் அவன் மதம் மாறி கிளாரன்ஸ் ஆஷ்லேயாக மாறினான். மதராஸ் தேவாலயத்தில் கிளாராவைத் திருமணம் செய்து கொண்டான்.

திருமணம் நடந்த மூன்றாம் நாளிரவு கிளாரா படுக்கையில் இறந்துகிடந்தாள். அவளைக் கொன்றது கிளாரன்ஸ் எனக் கைது செய்தார்கள். தான் அப்போது கப்பலில் இருந்ததாக அவன் கூச்சலிட்டான். ஆனால் பிராங்க் நம்பவில்லை.

போலி சிகரெட் தயாரித்தது. கம்பெனி அதிகாரிகளை மதுவால் மயக்கி காரியம் சாதித்துக் கொண்டது, மனைவியைத் தாக்கி கொன்றது என மகரன் காண்டீபன் மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டன.

கவர்னர் அவன் தூக்கிலிடப்பட வேண்டும் என விரும்பினார். அவனுக்கு இருந்த செல்வாக்கின் காரணமாக குற்ற விசாரணை ஒன்றரை ஆண்டுகள் நடந்தது. அதன் தீர்ப்பு வருவதற்குள் மகரன் மதராஸை விட்டு தலைமறைவாகி விட்டான். எங்கே சென்றான் என்று யாருக்கும் தெரியவில்லை.

1879ல் ஆஸ்திரேலியாவின் ஃபிளிண்டர்ஸ் தீவில் ஒரு வசித்த ஒரு கிழவன் ஒரே நேரத்தில் ஆறு சிகரெட்டுகளைப் பிடிப்பதையும் அவன் காற்றில் தனது பெயரை புகையால் எழுதிக் காட்டுவதையும் கண்டதாக ஜெர்மன் பயணி ஃபிரடெரிக் ஷாஃபர் எழுதியிருக்கிறார். ஒருவேளை அது மகரன் காண்டீபனாக இருக்கவும் கூடும். அவனது மனைவி கிளாராவை யார் கொன்றார்கள் என்ற புதிர் மட்டும் கடைசிவரை தீர்க்கப்படவேயில்லை

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 19, 2025 04:14

April 18, 2025

ஆனந்த விகடனில்

இந்த வார ஆனந்த விகடனில் எனது நேர்காணல் வெளியாகியுள்ளது. வெ.நீலகண்டன் இந்த நேர்காணலை எடுத்துள்ளார்

நன்றி

ஆனந்தவிகடன்

வெ.நீலகண்டன்

புகைப்படம் : ராகேஷ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 18, 2025 05:03

April 16, 2025

நெதர்லாந்திலிருந்து ஒரு பரிசு

எனது பிறந்த நாளுக்காக நெதர்லாந்தில் வசிக்கும் நண்பர் சரவணன் வான்கோ அருங்காட்சியகத்தில் கிடைக்கும் Van Gogh – The Potato Eaters 3D Print வாங்கி அனுப்பியுள்ளார்.

எனக்கு மிகவும் பிடித்த ஓவியமது. அதைப் பற்றி ஒரு குறுங்கதை எழுதியிருக்கிறேன். காலம் இதழில் வெளியாகியுள்ளது

முப்பரிமாணத்தில் அந்த வீடும் மனிதர்களும் அசைவதைக் காணும் போது அந்த வீட்டிற்குள் நாமிருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. .

சரவணனுக்கு எனது மனம் நிறைந்த நன்றி.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 16, 2025 04:36

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.