S. Ramakrishnan's Blog, page 8
May 14, 2025
தேசிய நூலகத்தினுள்
கொல்கத்தாவின் தேசிய நூலகம் இந்தியாவின் மிகப்பெரிய நூலகமாகும். பிரிட்டிஷ் காலத்தில் இம்பீரியல் நூலகமாகச் செயல்பட்டது. இந்தியாவில் வெளியாகும் அனைத்து மொழிகளின் நாளிதழ்கள்,வார இதழ்கள், புத்தகங்கள் இங்கே சேமித்து வைக்கபடுகின்றன.


தமிழ்நாட்டு நூலகங்களுக்கு நாம் புத்தக விநியோகம் செய்யும் போது அதன் ஒரு பிரதியை இங்கே அனுப்பி வைக்க வேண்டியது கட்டாயம். அலிப்பூரில் உள்ள தேசிய நூலக வளாகம் மிகப்பெரியது. முப்பது ஏக்கர் பரப்பளவில் உள்ளது. ஒரு காலத்தில் இது கவர்னரின் மாளிகையாகச் செயல்பட்டிருக்கிறது. சுற்றிலும் மரங்கள் சூழ்ந்த பெரிய பெரிய கட்டிடங்கள். நுழைவாயிலில் பாதுகாப்புச் சோதனை நடைபெறுகிறது.
பிரம்மாண்டமான நூலகக் கட்டிடம். அதன் முகப்பில் தாகூரின் சிலை. அவரது குடும்பம் பொதுநூலகத்துறை உருவாகப் பெரிதும் உதவியிருக்கிறது.

இது அரிய நூல்களுக்கான ஆவணக்காப்பகமாகவும், நூலகர்களுக்குப் பயிற்சி தரும் இடமாகவும், ஆய்வாளர்களுக்கான ஆய்வு மையமாகவும், அரசு வெளியீடுகள் அறிக்கைகளுக்கான காப்பகமாகவும் செயல்படுகிறது. இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருப்பதாகச் சொன்னார்கள்.

சர்வதேச அளவிலான ஏழாயிரம் கல்விசார்ந்த இதழ்கள், ஆய்வறிக்கைகள் இங்கே அனுப்பி வைக்கபடுகின்றன. அரிய நூல்களை மின்வடிவத்திற்கு மாற்றிப் பொதுப்பகிர்வு செய்து வருகிறார்கள். பிரம்மாண்டமான வாசிப்பு அறை, மொழி வாரியாகத் தனித்தனிப் பிரிவுகள், ஆய்வாளர்களுக்கான தனிப்பகுதி, போட்டிதேர்வு எழுதுகிறவர்கள் அதிகம் வந்து படிக்கிறார்கள்.

நூலகத்தின் நான்கு கட்டிடங்களிலும் குளிரூட்டப்பட்ட தனித்தனி வாசிப்பு அறைகள் உள்ளன. ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு நூலகத்தைப் பயன்படுத்த விரும்பும் வாசகர் அதற்கென உள்ள தற்காலிக உறுப்பினர் அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம். தேசிய நூலகத்தில் குழந்தைகளுக்கெனத் தனிப் பிரிவு உள்ளது.
தேசிய நூலகத்தின் தமிழ்ப்பிரிவை காணச் சென்றிருந்தேன். 1963 ஆம் ஆண்டுத் தமிழ்ப் பிரிவு உருவாக்கப்பட்டது. இந்தப் பிரிவில் வையாபுரி பிள்ளை சேமிப்பில் இருந்த நூல்கள் யாவும் பாதுகாக்கபட்டுவருகின்றன. இங்கே 1723 ஆண்டு அச்சிடப்பட்ட தமிழ் பைபிள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தமிழ் பிரிவினுள் ஆயிரக்கணக்கான தமிழ்நூல்கள் கட்டுக்கட்டாகக் கட்டிக்கிடக்கின்றன. அவற்றைப் பகுத்து அட்டவணை செய்வதற்குப் போதுமான பணியாளர்கள் இல்லை என்றார்கள்.
தமிழ்ப்பிரிவின் நிர்வாகியாக இருப்பவர் விடுமுறையில் இருப்பதால் ஒரேயொரு பணியாளர் மட்டுமே இருந்தார். தமிழ்நூல்களைப் பிரித்து வகைப்படுத்தி அட்டவணைப்படுத்தும் பணிக்கு நிறையப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்றார். தமிழகத்தில் நூலகக்கல்வி பயிலுகிற மாணவர்களுக்கு உதவித்தொகை அளித்து இன்டென்ஷிப் முறையில் இந்தப் பணிக்கு அனுப்பி வைக்கலாம்.
தேசிய நூலகம் நிறையக் கருத்தரங்குகள் மற்றும் கண்காட்சிகளை நடத்துகிறது. அரிய நூல்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளைக் கற்றுத் தருகிறது. அதன் இணையதளம் வழியாக மின்நூல்களை பார்வையிட முடியும். வெளிமாநில உறுப்பினர்களுக்கு அஞ்சல் வழியாகவும் நூல்களை கடன்தருகிறார்கள்.
••

கொல்கத்தாவின் காலேஜ் ரோடு புத்த கடைகளால் நிரம்பியது. சாலையின் இருபுறமும் வரிசை வரிசையாகப் புத்தகக் கடைகள். அதுவும் பழைய புத்தகங்கள் விற்கும் கடைகள் அதிகம் உள்ளன. நடைபாதையிலும் பழைய புத்தகங்களைக் குவித்துப் போட்டிருக்கிறார்கள். அறுபது விழுக்காடு புத்தகக் கடைகள் பாடப்புத்தகங்கள் மற்றும் போட்டித்தேர்வுகள் மற்றும் பொதுநூல்கள் விற்கும் கடைகளே. சுற்றிலும் கல்லூரிகள் இருப்பதால் நிறைய மாணவர்களைக் காண முடிந்தது.
வங்காள இலக்கியம் சார்ந்த பழைய புத்தகங்கள் விற்பவர்களே அதிகமிருக்கிறார்கள். பழைய புத்தகம் என்றாலும் அதன் விலையை அதிகமாகவே கேட்கிறார்கள். எந்தக் கடையில் ஒரு புத்தகத்தைக் கேட்டாலும் உடனே அவர் தொலைபேசியில் அழைத்து மற்றகடைகளில் விசாரித்து அதைப் பெற்றுத் தந்துவிடுகிறார்.

இந்தச் சாலையில் தான் கொல்கத்தாவின் புகழ்பெற்ற இந்தியன் காபி ஹவுஸ் உள்ளது. இது 300 ஆண்டுகள் பழமையான கஃபே ஆகும், இங்கே எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் மாணவர்கள் கூடுகிறார்கள். மணிக்கணக்கில் அமர்ந்து பேசுகிறார்கள்.
மதியம் பனிரெண்டு மணிக்கு தான் இந்தக் காபி ஹவுஸ் திறக்கபடுகிறது. அதற்கு முன்னதாகவே வெளியே ஆட்கள் காத்திருக்கிறார்கள். சென்னையின் டிரைவ் இன் உட்லண்ட்ஸ் போலவே இருந்தது.


காபி ஹவுஸ் உள்ளே புகழ்பெற்ற எழுத்தாளர்களின் உருவப்படங்களை வரைந்திருக்கிறார்கள். கையில் புத்தகங்களும் வந்து சேர்ந்த இளைஞர் பட்டாளம் எங்கள் அருகில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்கள் இங்கே வந்து அமர்ந்து முழுத்திரைக்கதையினையும் எழுதிவிடுவார்கள் என்றார்கள். கொல்கத்தாவின் மற்ற இடங்களுடன் ஒப்பிடும் போது இங்கு வழங்கப்பட்ட காபி நன்றாகவே இருந்தது. இங்கேயே புத்தக வெளியீடுகள் நடப்பது உண்டு. மாலை நேரம் வந்திருந்தால் இந்த இடம் புகைமண்டலமாக இருந்திருக்கும். அவ்வளவு சிகரெட் பிடிப்பார்கள் என்றார் உடன்வந்த ரவி.


தமிழகத்தோடு ஒப்பிடும் போது வங்கமொழி நூல்களின் அச்சாக்கம் சிறப்பாக இல்லை. விலையும் அதிகமாக உள்ளது. தமிழ்பதிப்புத் துறை அச்சாக்கத்தில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. குறிப்பாகப் புத்தக உருவாக்கத்திலுள்ள நேர்த்தியும் அழகும் சர்வதேச தளத்தில் உள்ளது. இதனைப் பிற மாநிலங்களில் வெளியிடப்படும் நூல்களைக் காணும் போது நன்றாக உணர முடிகிறது.

ஆங்கில இலக்கியம் சார்ந்த நூல்களை மட்டுமே விற்கும் பழைய புத்தகக் கடை ஒன்றினைக் கண்டேன். அதனை நடத்துகிறவர் ஆங்கிலப் பேராசிரியர் போல அத்தனை நூல்களையும் பட்டியிலிட்டு விவரித்தார். தமிழ்நாட்டினை விடவும் வங்கத்தில் சிறார்களுக்கு நிறையப் புத்தகங்கள் அழகிய வண்ணத்தில் வெளியிடப்படுகின்றன. நேரடியாக வங்கமொழியில் வெளியான காமிகஸ் புத்தகங்களைக் கூடக் காண முடிந்தது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பழைய புத்தகச் சந்தை இதுவென்றார்கள். நடக்க நடக்க முடிவற்று கடைகள் வந்து கொண்டேயிருப்பது அதனை உணரச் செய்தது.
சுவை புதிது
எரிக் பெஸ்னார்ட் இயக்கிய Delicious ஒரு சமையற்கலைஞரின் வாழ்க்கையை விவரிக்கிறது. பாரீஸின் முதல் உணவகமாகக் கருதப்படும் Delicious உருவான விதம் பற்றியதாகக் கதை அமைந்துள்ளது. வரலாற்றுப்பூர்வமாக இது முதல் உணவகமில்லை. திரைக்கான கற்பனையில் உருவாக்கபட்டிருக்கிறது.

பிரான்சின் உயர்தட்டுவாழ்க்கையில் விருந்து மிகவும் முக்கியமானது. அதிகப்படியான உணவு என்பது அதிகாரத்தின் அடையாளமாகவும் அந்தஸ்தை வெளிப்படுத்த கூடியதாகவும் பிரபுக்கள் கருதினார்கள். அப்படிப்பட்ட ஒரு விருந்து தயாரிக்கபடுவதில் தான் படம் துவங்குகிறது.
வெள்ளிப்பாத்திரங்கள். கரண்டிகள், உணவுமேஜையில் செய்யப்படும் அலங்காரம், உணவு தயாரிக்கபடும் போது ஏற்படும் மணம், விருந்து பரிமாறப்படும் விதம் என உண்மையான விருந்துக்கூடத்திற்குள் நாமிருப்பது போன்ற நெருக்கத்தைப் படம் ஏற்படுத்துகிறது.
சமையல்காரர் பியர் மான்செரோன் திறமையானவர். ஆனால் தற்பெருமை மிக்கச் சாம்ஃபோர்ட் பிரபுவிடம் பணிபுரிகிறர். ஒரு நாள் பிரபு தனது விருந்தினர்களுக்காக ஆடம்பரமான இரவு உணவைத் தயாரிக்கும்படி உத்தரவிடுகிறார்.

மான்செரோனும் அவரது சமையற் குழுவும் நாற்பது விதமான உணவு வகைகளைத் தயாரிக்கிறார்கள். அதில் புதிய ருசியாக உருளைக்கிழங்கு துண்டுகள் மற்றும் ட்ரஃபிள்ஸுடன் கலக்கப்பட்ட பேஸ்ட்ரியை உருவாக்குகிறார். அதற்கு தி டெலிசியஸ் என்று பெயரிடுகிறார். புதிய உணவின் ருசியை அவர்கள் ஏற்றுக் கொண்ட போதும் பொய்யாகப் பாராட்டுகிறார்கள். உருளைக்கிழங்கு பன்றிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் உணவு என்கிறார் ஒரு விருந்தினர். அதைப் பியர் ஏற்கவில்லை.
விருந்தினர்களின் முன்பாகவே தனது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார். இச்செயல் விருந்தினர்களைக் கோபம் கொள்ள வைக்கிறது. பியர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சாம்ஃபோர்ட் உத்தரவிடுகிறார். பியர் மறுக்கவே, அவர் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்படுகிறார்.

தனது தந்தை நடத்திய பழைய விடுதிக்கு திரும்பும் பியர் அதனைச் சரிசெய்து புதிய பயண விடுதியாக மாற்றுகிறார். பயணிகளின் தேவைகளை இலவசமாகச் செய்து கொடுக்கிறார்.
பியரின் மகன் உருவாகிவரும் சமூக மாற்றங்களை கவனிக்கிறான். பிரபுகளுக்கு எதிரான மனநிலை உருவாகி வருவதை அறிந்து கொள்கிறான்.
ஒரு நாள் அங்கே வரும் இளம்பெண் லூயிஸ் பியரிடம் உதவியாளராகப் பணியாற்ற ஆசைப்படுகிறாள். பியர் அதை ஏற்கவில்லை.. அவள் யார், எதற்காக அங்கே வந்து சேர்ந்தாள் என்பது கொஞ்சம் கொஞ்சமாக விவரிக்கபடுகிறது.
ஆரம்பத்தில் அவளை ஏற்க மனமில்லாத பியர் கொஞ்சம் கொஞ்சமாக அவளைப் புரிந்து கொள்கிறார். அவர்கள் இணைந்து புதியதொரு உணவகத்தை நடத்த திட்டமிடுகிறார்கள். அதை எவ்வாறு நடத்துகிறார்கள் என்பதே படத்தின் பிற்பகுதி.

உணவகம் முதன்முதலில் எப்படி ஆரம்பிக்கபட்டது. உணவிற்கான கட்டணம் மற்றும் உணவுப்பட்டியலை எழுதிப்போடும் முறை எவ்வாறு அறிமுகமானது என்பதையும் இப்படத்தில் நேரடியாக காணுகிறோம்
உணவு தயாரிப்பதும் ஒரு கலையே. சமையற்கலையினையும் சமையற்கலைஞர்களையும் பற்றி நிறைய திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இப்படம் முதல் உணவகத்தின் கதையை விவரிப்பதோடு பிரெஞ்சுப் புரட்சியால் ஏற்பட்ட கொந்தளிப்புகளையும் கவனப்படுத்துகிறது. ஜீன்-மேரி ட்ரூஜோவின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது.
இன்று உலகமே கொண்டாடும் உருளைக்கிழங்கு ஒரு காலத்தில் சாப்பிட உகந்த ஒன்றாகக் கருதப்படவில்லை என்ற உண்மையைப் படம் சுட்டிக் காட்டுகிறது. சமையற்கலையின் வழியாகப் பிரெஞ்சு சமூகத்தின் கடந்தகால நிகழ்வுகளையும் வரலாற்றையும் படம் அழகாக வெளிப்படுத்துகிறது.
••
May 13, 2025
சாந்திநிகேதனின் மணியோசை
கொல்கத்தாவிலிருந்து மூன்றரை மணி நேர தூரத்திலுள்ளது சாந்திநிகேதன். இந்தியாவின் தனித்துவமிக்கக் கல்வி வளாகத்தைத் தாகூர் உருவாக்கியிருக்கிறார். கலைகளும் இசையும் இலக்கியமும் அனைத்து மொழிகளும் அறிவியலும் பொருளாதாரமும் கற்றுக் கொடுக்கபடும் சர்வதேசக் கல்வி நிலையமாகச் செயல்படுகிறது சாந்தி நிகேதன். இன்று அதன் பெயர் விஸ்வபாரதி பல்கலைகழகம்.



இயற்கையான சூழல். மரத்தடி வகுப்பறைகள். சிறந்த ஆசிரியர்கள். பெரிய கலைக்கூடங்கள். மரபும் நவீனமும் இணைந்த கல்விமுறை, இங்கே வடகிழக்கிலிருந்து நிறைய மாணவர்கள் வந்து கல்வி பயிலுகிறார்கள். சீன. ஜப்பானிய, கொரிய மாணவர்களும் கூட இங்கே வந்து பயிலுகிறார்கள். சாந்தி நிகேதனில் நடைபெறும் மேளா மிகவும் புகழ்பெற்றது.
கொல்கத்தாவிலிருந்து காரில் அதிகாலையில் புறப்பட்டேன். கொல்கத்தாவை விட்டு வெளியேறி போல்பூர் செல்லும் பர்த்வான் நெடுஞ்சாலையைப் பிடிப்பதற்கே ஒரு மணி நேரமாகிவிட்டது. புறவழிச்சாலைகள் யாவும் ஒன்று போலவேயிருக்கின்றன. சாலையோரம் மண்வீடுகளைக் காண முடிந்தது. சில இடங்களில் பனங்கூட்டங்கள் தொலைவில் தென்பட்டன.
நமது நெடுஞ்சாலையோர வாழ்க்கை போலச் சாலையோர விற்பனையாளர்களைக் காண முடியவில்லை. பெட்ரோல் நிலையங்களும் கூட அரிதாகவே தென்பட்டன. கார் டிரைவர் கூகுள்மேப் உதவியோடு வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தார். வழக்கம் போலவே அந்த மேப் தவறான பாதையைக் காட்டவே வழிமாறி வேறு பாதையில் பயணிக்கத் துவங்கிவிட்டோம்.
காரோட்டி ஒரு இடத்தில் காரை நிறுத்தி மெக்கானிக் ஷாப் ஒன்றில் பர்த்வான் செல்லும் வழியை விசாரித்தார். நாங்கள் வந்த பாதையிலே திரும்பி போய்ப் பாலத்தின் அடியில் சென்று வலதுபுறம் போக வேண்டும் என்று மெக்கானிக். ஆலோசனை சொன்னார் அதன்படி காரைத் திருப்பினோம். பர்த்வான் பகுதியில் முந்திய நாள் மழைபெய்திருக்கிறது. ஆகவே காற்றில் ஈரமிருந்தது. வானில் நிறைய மேகக்கூட்டங்களைக் காண முடிந்தது.
தமிழகத்தின் நாற்கரசாலையைப் போல அதிக வாகன நெருக்கடியில்லை. ஆனால் சீரற்ற சாலைகள். குறுகலான பாலத்தின் அடியினைக் கடந்து செல்ல வேண்டிய தேவை. பெயர்பலகைகள் இல்லாத சாலைத்திருப்பங்கள் எனக் குழப்பமாக இருந்தது.
இரவில் திரும்பி வரும் போது உண்மையான நெருக்கடியைக் கண்டோம். வரிசை வரிசையாக லாரிகள். கார்கள் அதுவும் ஒவ்வொரு சிக்னலிலும் அரைமணி நேரம் காத்திருக்க வேண்டிய நீண்ட வரிசை. காலை பார்த்த அந்தச் சாலை தானா என வியப்பாக இருந்தது.

சாந்தி நிகேதனைப் பற்றி நிறைய எழுதப்பட்டிருக்கிறது. அங்கே பணியாற்றிய ஒவியர்கள். இசைக்கலைஞர்கள். கல்வியாளர்கள் தங்கள் நினைவுகளை எழுதியிருக்கிறார்கள். தாகூரும் தனது நினைவுக்குறிப்பில் எழுதியிருக்கிறார். சாந்திநிகேதனும் ஸ்ரீநிகேதனும் தாகூரின் இரண்டு சிறகுகள் எனலாம்.
மேற்கு வங்க மாநிலத்தின் பிர்பூம் மாவட்டத்தில், போல்பூர் எனுமிடத்தில் சாந்திநிகேதன் அமைந்துள்ளது. இன்றும் அது கிராமப்பகுதியே. தாகூர் குடும்பம் பிரம்மசமாஜத்தைச் சார்ந்தது. ஆகவே தாகூரின் தந்தை தேவந்திரநாத் இயற்கையோடு இணைந்த ஆசிரமம் ஒன்றை உருவாக்க விரும்பினார். அதற்காக அவர் வாங்கிய இடமே சாந்தி நிகேதன்.
ஏழு ஏக்கர் நிலத்தில் தேபேந்திரநாத் தாகூர் தியானத்திற்காக ஒரு சிறிய ஓய்வறையைக் கட்டினார், மேலும் 1888 ஆம் ஆண்டில் பிரம்மவித்யாலயா மற்றும் சிறிய நூலகத்தை உருவாக்கினார். 1925 முதல் இந்தப் பள்ளி பாத-பவனா என்று அறியப்பட்டது.
பூபந்தங்கா என்ற கிராமம் தான் சாந்திநிகேதனாக உருமாறியது. பூபந்தங்கா என்பது வழிப்பறிக் கொள்ளைக்காரனின் பெயர். அவன் மனம்மாறி சரண் அடைந்த காரணத்தால் அந்தப் பெயர் ஏற்பட்டது என்கிறார்கள்.
சாந்திநிகேதனின் தெற்கு எல்லை நெல் வயல்களின் பரந்த சமவெளியில் இணைகிறது. ஒரு பக்கம் காடு. சுற்றிலும் விவசாயப் பண்ணைகள். சாந்தி நிகேதனுள் நிறைய மரங்கள் காணப்படுகின்றன. கரடுமுரடாக இருந்த இந்தப் பகுதியினைத் திருத்தி வெளியில் இருந்து கொண்டு வரப்பட்ட வளமான மண்ணால் அழகான தோட்டங்களை உருவாக்கிறார்கள்.

சிற்பி ராம்கிங்கர் பைஸ் உருவாக்கிய அழகிய சிற்பங்கள் இயற்கையோடு இணைந்து காணப்படுகின்றன. பேரழகான இச்சிற்பங்களை இயற்கையின் அங்கமாகவே பார்வையாளர்கள் கருதுகிறார்கள். குறிப்பாகச் சந்தால் குடும்பம் ஒன்றின் சிற்பம் மிகவும் அழகாக உருவாக்கபட்டிருக்கிறது.
சாந்திநிகேதனில் மழைக்காலத்தின் முதல் நாளில் இன்றும் வெறுங்காலுடன், குடை இல்லாமல், மாணவர்கள் வருகை தந்து மழையைக் கொண்டாடுகிறார்கள்.
சாந்தி நிகேதன் ஆரம்பத்தில் சிறிய பள்ளியாக விளங்கியது. நோபல் பரிசு பெற்ற பின்பு தாகூர் இதனை இந்தியாவின் உயரிய கல்வி மையமாக உருவாக்க முனைந்தார். ஆகவே மொழிகளுக்கான மையம், கலைப்பள்ளி, இசைப்பள்ளி. எனப் பல்வேறு துறைகளை உருவாக்கி அதற்காக நந்தலால் போஸ் போன்ற புகழ்பெற்ற ஒவியக்கலைஞர்கள். இசைக்கலைஞர்கள், சிற்பிகள், மொழியியல் அறிஞர்களை வரவழைத்துப் பாடம் கற்றுதரச் செய்தார். கேரளாவிலிருந்து கதகளிகலைஞரை வரவழைத்து அக்கலையைக் கற்பிக்கச் செய்திருக்கிறார்.
சாந்திநிகேதனுள் தாகூரின் பூர்வீக வீடு. பருவ காலத்திற்கு ஏற்ப அவர் தங்குகின்ற வேறு வேறு வடிவமைப்பில் கட்டப்பட்ட வீடுகள். அவரது ரோஜா தோட்டம், தியான மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. கலாபவன் என்ற பெரிய ஓவியக்கூடம் மற்றும் அச்சுக்கூடம், நூலகம் அமைந்துள்ளது. நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் வீடும் சாந்திநிகேதனுள் இருக்கிறது.

தேபேந்திரநாத் தாகூர் மற்றும் தாகூர் தியானம் செய்த சாத்திம் மரங்களின் கீழ் உள்ள இடம் அப்படியே பாதுகாக்கபட்டு வருகிறது. விஸ்வபாரதியின் எல்லா முக்கிய நிகழ்வுகளும் இங்கே தான் துவங்குகின்றன. இந்தப் பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஏழு இலைகள் கொண்ட சாத்திம் மரத்தின் கிளையே பட்டமாக அளிக்கபடுகிறது
பழைய கட்டிடங்கள் எதையும் மாற்றாமல் அப்படியே பாதுகாத்து பராமரித்து வருகிறார்கள். சாந்திநிகேதனை ஒருவர் முழுமையாகப் பார்ப்பதற்கு இரண்டு மூன்று நாட்கள் தேவைப்படும். அத்தனை சிறப்புப் பகுதிகள் இருக்கின்றன.
குழந்தைகளுக்கு இயற்கையோடு இணைந்த கல்வி வழங்குதல் இதன் தனிச்சிறப்பாகும் இதற்காகத் திறந்தவெளி வகுப்பறைகள் காணப்படுகின்றன. மரத்தடியில் அமைக்கபட்ட அந்த வகுப்பறைகளைக் காணுவது மகிழ்ச்சி அளித்தது. எனது சிறுவயதில் அப்படி ஒரு வேப்பமரத்தடி வகுப்பில் படித்திருக்கிறேன்.
ஸ்ரீநிகேதன் என்பது கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படும் பகுதியாகும். அங்கே இயற்கை வேளாண்பொருட்கள். கலைப்பொருட்கள் மற்றும் கைத்தறிப்பொருட்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

தாகூரின் ஐந்து வீடுகள் கூட்டாக உத்தராயண வளாகம் என்று அழைக்கப்படுகிறது, உபாசனா கர் என அழைக்கப்படும் பிரார்த்தனை மண்டபம் பெல்ஜிய கண்ணாடிகளால் உருவாக்கபட்டது. இது சாந்திநிகேதனின் மிகவும் அழகிய இடங்களில் ஒன்றாகும்
தாகூரின் பூர்வீக இல்லம் இப்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டிருக்கிறது. அங்கே அவருக்கு அளிக்கபட்ட பரிசுப்பொருட்கள் யாவும் காட்சிக்கு வைக்கபட்டிருக்கின்றன. தாகூர் வரைந்த ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. ஜப்பானியக்கலைப்பொருட்கள். சீனக்கலைப்பொருட்கள் கண்ணாடி அலமாரி முழுவதும் காணப்படுகின்றன. இன்னொரு அலமாரியில் லியோ டால்ஸ்டாயின் டெத்மாஸ் காணப்படுகிறது.

இது 1910 ஆம் ஆண்டு லியோ டால்ஸ்டாய் இறந்தவுடன் அவரது முகத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பிளாஸ்டர் வார்ப்பாகும். ரஷ்ய சிற்பி செர்ஜ் மெர்குரோஃப் என்பவரால் இந்த முகமூடி உருவாக்கப்பட்டது. 1930 ஆம் ஆண்டுச் சோவியத் ஒன்றியத்திற்கு விஜயம் போது ரவீந்திரநாத் தாகூருக்கு இதனைப் பரிசாக வழங்கியிருக்கிறார்கள். தாகூர் டால்ஸ்டாயை (1828-1910) ஒருபோதும் சந்தித்ததில்லை என்றாலும், அவர் டால்ஸ்டாயின் புத்தகங்களை வாசித்திருக்கிறார். தாகூர் பதிமூன்று நாட்கள் சோவியத் ஒன்றியத்தில் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
இந்திய இலக்கியவாதிகளில் அதிக நாடுகளுக்குப் பயணம் செய்தவர் தாகூராகத் தான் இருக்கக் கூடும். நாம் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களைக் கொண்டாடுவது போல அர்ஜென்டினாவில் தாகூரைக் கொண்டாடுகிறார்கள்.
தாகூரின் ஆடைகள், அவரது கைத்தடி, பேனா, படைப்புகளின் கையெழுத்துப் பிரதிகள், அவர் பயன்படுத்திய காலணிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தாகூர் மிகவும் அழகான ஆடைகளை அணியக்கூடியவர். அவரது பயணத்தின் போது முப்பது பெட்டிகளில் உடைகள் கொண்டு செல்வார்களாம். அது போல அவர் ஹோமியோபதி மருந்து எடுத்துக் கொள்ளக்கூடியவர். அந்த மருந்துப்புட்டிகள் அங்கே காணப்படுகின்றன. தாகூரின் விதவிதமான மூக்குக் கண்ணாடிகள் காணப்படுகின்றன.

தாகூர் பயன்படுத்திய WBA 8689 எண் உள்ள செடான் கார் ஒன்று வெளியே காட்சிக்கு வைக்கபட்டிருக்கிறது. இந்தக் காரில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ் மற்றும் ஜெகதீஷ் சந்திர போஸ் போன்ற ஆளுமைகள் ஏறியிருக்கிறார்கள். 1938 ஆம் ஆண்டில் தாகூர் இரண்டு செடான் கார்கள் வாங்கியிருக்கிறார். ஒன்று கொல்கத்தாவிலும் மற்றொன்று சாந்தி நிகேதனிலும் பயன்படுத்தபட்டிருக்கிறது. அன்று ஒரு செடான் காரின் விலை £400.

தாகூர் எழுதிய கடிதங்களைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். அவரது கையெழுத்து அச்சிடப்பட்டது போலிருக்கிறது. தாகூருக்கு வழங்கப்பட்ட நோபல்பரிசு சில ஆண்டுகளுக்கு முன்பு திருடு போனது. அதைக் காவல்துறை உதவியோடு மீட்டார்கள். ஆகவே அவரது நோபல்பரிசு விருதின் நகல்வடிவத்தை வைத்திருக்கிறார்கள். அவரது கீதாஞ்சலி நூலின் முதற்பதிப்பை அங்கே காணலாம். தாகூர் நோபல் பரிசு பெறக் காரணமாக இருந்த கவிஞர் யேட்ஸ் மற்றும் கீதாஞ்சலி பற்றி எழுதிய கவிஞர் எஸ்ரா பவுண்ட் ஒவியங்களையும் இங்கே காண முடிகிறது.

விஸ்வபாரதி பல்கலைகழகத்தின் தமிழ்துறை தலைவராக இருப்பவர் முனைவர் செந்தில் பிரகாஷ். எனது நீண்டகால வாசகர். அவர் எனது வருகையை அறிந்து கொண்டு வரவேற்றுச் சாந்திநிகேதனைச் சுற்றிக்காட்டியதோடு சிறந்த மதிய உணவினையும் ஏற்பாடு செய்திருந்தார். எனது சிறுகதைகள். கட்டுரைகளை அவரது வகுப்பறையில் அறிமுகம் செய்துள்ளதாகவும் இடக்கை நாவலின் சில பகுதிகளை வங்கமொழியில் மொழிபெயர்த்து அறிமுகம் செய்துள்ளதாகவும் செந்தில் தெரிவித்தது மகிழ்ச்சி அளித்தது. அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்தேன்.
இந்தப் பயணத்தில் எங்களுடன் பிலிம் டிவிசன் ரவி உடன் வந்திருந்தார். நீண்டகாலம் கொல்கத்தாவில் வசிப்பவர். சென்னை திரைப்படக்கல்லூரியில் பயின்றவர். அவர் சாந்திநிகேதனின் பவுஷ்மேளாவைக் கண்டிருக்கிறார். புகழ்பெற்ற அந்தத் திருவிழா பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

பேராசிரியர் செந்திலுடன் வளாகத்திலுள்ள பசுமையான தோட்டங்கள், புகழ்பெற்ற சிற்பங்கள் மற்றும் ஓவியங்களைப் பார்வையிட்டேன். சாந்திநிகேதனின் முதல் மாணவர்களில் ஒருவரின் நினைவாகப் பெயரிடப்பட்ட சந்தோஷாலயா, இளம் மாணவர்களுக்கான விடுதியாகச் செயல்படுகிறது

வெண்கல மணி மற்றும் ஸ்தூபி போன்ற வடிவமைப்பைக் கொண்ட கண்டதாலாவைக் காட்டினார். அங்குள்ள மணி ஒலிப்பதன் வழியாகவே இன்றும் வகுப்பு முடிவதை அறிவிக்கிறார்கள் என்றார்.
சாந்திநிகேதனிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் கோபாய் ஆற்றின் கரையில் அமர் குடிர் அமைந்துள்ளது. இது ஒரு கூட்டுறவு சங்கம். இங்கே கலைப்பொருட்கள், உடைகள் மலிவு விலையில் விற்பனை செய்கிறார்கள்.

இந்த வளாகத்தில் பவுல் எனப்படும் கிராமிய இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சியைப் பார்த்தேன். மெய்மறக்கச் செய்யும் இசை.
சாந்திநிகேதனிலிருந்து கொல்கத்தா திரும்பி வரும் பயணத்திலும் வழிமாறிவிட்டோம். சின்னஞ்சிறிய கிராமச்சாலைகளில் கார் சென்றது. கிராமவாழ்க்கையில் பெரிய மாற்றமில்லை. வங்கநாவல்களில் படித்திருந்த கிராமத்தின் சாயலில் தானிருக்கிறது. தலைவர்களின் சிலைகள் மற்றும் சினிமா விளம்பரங்களை எங்கேயும் காண முடியவில்லை. சிற்றூர் ஒன்றின் தேநீர் கடையில் மண்கலயத்தில் தேநீர் அருந்தினோம். கத்திரிக்காயில் பஜ்ஜி போடுகிறார்கள். அதையும் ருசித்தேன்.

கொல்கத்தா நெடுஞ்சாலையைக் கண்டுபிடித்துச் சேர்வதற்கு நிறைய நேரமானது. அந்தச் சாலையில் கடுமையான வாகன நெருக்கடி. சிக்னலில் நின்றால் இன்னும் நேரம் அதிகமாகிவிடும் என ஏதேதோ குறுக்குவழிகளில் காரை செலுத்தினார்.

கொல்கத்தாவின் டான்குனி டோல் பிளாசா நெருங்கியதும் மாநகரின் ஒளிரும் விளக்குகள் கண்ணில் பட்டன, அப்போது போது தான் களைப்பை உணரத் துவங்கினேன். அன்றைய கனவில் நிறைய அன்னங்கள் நீந்தும் ஏரியைக் கண்டேன். ஒன்று இரண்டில்லை. நூற்றுக்கணக்கான அன்னங்கள் நீரில் நீந்துகின்றன. காலை கண்விழித்தபோது அந்தக் கனவைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்.. சாந்திநிகேதனில் எனது மனம் லயத்துப் போயிருந்தது. அதன் வெளிப்பாடு தான் இந்தக் கனவு போலும் என நினைத்துக் கொண்டேன்.

தாகூரின் சொந்த வாழ்க்கை துயரத்தின் இழைகளால் பின்னப்பட்டது. அவரது அம்மா சாரதா தேவி புகைப்படத்தை அருங்காட்சியத்தில் பார்த்தேன். அவர் பதினைந்து குழந்தைகளின் தாய். ஆகவே பிள்ளைகளைச் சரியாகக் கவனித்துக் கொள்ள முடியவில்லை. தாகூரின் 14 வது வயதில் அம்மா இறந்து போய்விட்டார். சிறுவயது முதலே தாயின் அன்பிற்காகத் தாகூர் ஏங்கியிருக்கிறார்.
தாகூரின் மனைவியும் இளவயதில் இறந்து போய்விட்டார். மிருணாளினி தேவி பத்து வயதாக இருந்தபோது ரவீந்திரநாத்தை மணந்தார். அப்போது தாகூரின் வயது 22. அவர்களுக்கு ஐந்து பிள்ளைகள். மிருணாளினி தேவி தனது 29வயதில் இறந்து போனார்.

சகோதரர் ஜோதிரிந்திரநாத் தாகூரின் மனைவி காதம்பரி தேவி. அவருக்கும் தாகூருக்கும் இடையில் ரகசியக் காதல் இருந்தது என்கிறார்கள். காதம்பரி 1884 இல் தற்கொலை செய்து கொண்டார். அது தாகூரின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. காதம்பரியின் நினைவாக நிறையக் கவிதைகள் எழுதியிருக்கிறார்.
தாகூரின் மகள் மதுரிலதா. இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டவள். பதினைந்து வயதில் அவளுக்குத் திருமணம் செய்துவைக்கபட்டது. காசநோயின் காரணமாகத் தனது 32வது வயதில் அவள் இறந்து போனாள். இப்படித் துயரத்தின் சுழிக்காற்றில் சிக்குண்டவராகவே தாகூர் வாழ்ந்திருக்கிறார்.

தாகூரின் Stray Birds மிகச்சிறந்த கவிதைத்தொகுப்பு. அந்தக் கவிதைகளில் அவரது அகம் முழுவதும் வெளிப்படுகிறது. துக்கத்தின் அணையா சுடரை அக்கவிதைகளில் காணமுடிகிறது.
தாகூர் நாடகப்பயிற்சி மேற்கொள்ளும் அறையினுள் நின்றிருந்தேன். அந்த நாடகக் காட்சிகள் உலகிலிருந்து மறைந்துவிட்டன. காலம் மாறிவிட்டது. ஆனாலும் தாகூரின் புகழ் மறையவில்லை. தாகூரின் இசையும் இலக்கியமும் கலைகளும் இன்று வங்கத்தின் பண்பாட்டு அடையாளமாக மாறியிருக்கின்றன. தலைமுறைகள் தாண்டியும் தாகூரின் பெயரை உச்சரித்துக் கொண்டேயிருக்கிறார்கள். அவரை வணங்குகிறார்கள். அதனைச் சாந்திநிகேதனில் கண்கூடாகவே காண முடிகிறது.
.
May 11, 2025
குற்றமுகங்கள் 10 பூச்சா ஜக்காரி
1871ம் ஆண்டு மதராஸின் கார்டன் சாலையில் வசித்த பூச்சா ஜக்காரி கைது செய்யப்பட்ட போது அவரது வீட்டில் 1650 ஜோடி செருப்புகள் கைப்பற்றப்பட்டன. அத்தனையும் திருட்டுச் செருப்புகள். இத்தனை செருப்புகளைத் திருடிய போதும் ஜக்காரி தன் வாழ்நாளில் செருப்பு அணிந்ததில்லை.

ராபர்ட் லோகன் துரையின் குதிரை மீது வெற்றிலை எச்சிலைத் துப்பிவிட்டதற்காகவே அவரைக் கைது செய்தார்கள். அதன் பிறகே அவர் பதினெட்டு வருஷங்களாகச் செருப்பு திருடி வந்தவர் என்பது தெரிய வந்தது
கைக்குழந்தையை வைத்திருக்கும் பெண்ணைப் போல எப்போது தனது கையில் பூனையொன்றை வைத்திருப்பார் ஜக்காரி. அதனாலே அவரைப் பூச்சா ஜக்காரி என்று அழைத்தார்கள். எழுபது வயதிருக்கும் அடர்ந்த வெள்ளைதாடி வயிறு வரை விழுந்திருக்கும். வட்ட தலைக்குல்லா. இடது கையில் சிறிய மரப்பெட்டி, வலது கையில் பூனை. தூக்கத்தில் நடப்பவர் போன்ற மெதுவான நடை.

மதராஸின் எம்பயர் லாட்ஜ் வாசலில் அமர்ந்தபடி காதில் குரும்பு எடுக்கும் வேலையைச் செய்து வந்தார். இதற்காக ஒரு மரப்பலகையை வைத்திருப்பார். காது சுத்தம் செய்ய வருபவரை அந்தப் பலகையில் உட்காரச் சொல்லி தனது மரப்பெட்டியை திறந்து அதிலிருந்த மூன்று விதமான காது குடைப்பானை வெளியே எடுப்பார். எதிரிலிருப்பவர் காதை இழுத்துப் பிடித்துக் கொண்டு கிணற்றில் எட்டிப் பார்ப்பது போலப் பார்ப்பார். காது சுத்தம் செய்வதற்கு முன்பாக அவரது கையில் இரண்டு அணா காசினைக் கொடுத்துவிட வேண்டும்.
அதன்பிறகே தனது குடைப்பானைக் கொண்டு காதிலுள்ள அழுக்குகளைச் சுத்தப்படுத்துவார். காதின் தோற்றம் தாயின் கர்ப்பத்திலுள்ள சிசுவைப் போன்றது. ஆகவே அதைப் பிறந்த குழந்தையைப் போலக் கையாள வேண்டும் என்பார்.
சில நேரம் குழந்தைகள் காதுக்குள் எறும்பு அல்லது பூச்சி புகுந்துவிடும். வலியில் துடித்துப் போய்விடுவார்கள். அப்போது சிறிய புட்டியில் வைத்திருந்த மஞ்சள் தைலத்தில் ஒரு சொட்டு விட்டு அந்த எறும்பை வெளியே எடுத்துவிடுவார். இதற்காக அவர் கட்டணம் வாங்குவதில்லை.
திருமணம் செய்து கொள்ளாத ஜக்காரி வைத்திருந்த பூனையின் பெயர் லோலி. அதன் கழுத்தில் சிவப்பு நிற துணிப்பட்டை ஒன்றை கட்டியிருப்பார். பூனைகளுக்கு ரகசிய வழிகள் யாவும் தெரியும். அவை ஒரு நாள் தன்னை சொர்க்க லோகத்திற்கு அழைத்துப் போய்விடும் என நம்பினார்.
பூச்சா ஜக்காரிக்கென நண்பர்களோ, உறவினர்களோ எவருமில்லை. அவரைத் திருடினாக்கியது பூனையே. தனக்குத் தேவையில்லாத ஜரிகைத்துணி, சோப் டப்பா, கிழிந்த தொப்பி, முட்டை ஒடு, மரக்கரண்டியை லோலி கொண்டு வந்து அவரது வீட்டில் போட்டது. தனக்குத் தேவையில்லாத ஒன்றை கொண்டு வருவதில் பூனை காட்டிய ஆர்வமே அவரைச் செருப்புத் திருடனாக்கியது.

கோவில்வாசலில் கழட்டிவிடப்பட்ட செருப்புகளில் விருப்பமானதைத் திருடிக் கொண்டு போய்விடுவார். அந்தப் பழக்கம் மெல்ல வளர்ந்து மக்கள் கூடும் இடங்களில் தனக்கு விருப்பமான செருப்பினைத் தேர்வு செய்து அதைத் திருடுவதைச் சவாலாகக் கருதினார். அப்படி ராலே துரையின் மனைவி செருப்பைத் திருடியிருக்கிறார். பார்சி வணிகரான ருஸ்தம் அணியும் வெள்ளைச் செருப்பைத் திருடியிருக்கிறார். கப்பல் மாலுமிகள் அணியும் விசேச தோல்செருப்புகளைக் கூட திருடியிருக்கிறார்.
தனது வீட்டில் திருடிய செருப்புகளைத் துணி காயப்போடுவது போல ஒரு கொடிக்கயிற்றில் தொங்க விடுவார். செருப்புகளின் எண்ணிக்கை அதிகமானவுடன் மரப்பெட்டி ஒன்றை செய்து அதில் போட்டு வைக்கத் துவங்கினார். சில நாட்கள் அந்தக் காலணிகளை வைத்து விசித்திரமான விளையாட்டுகளை விளையாடினார்.
பெண்கள் அணியும் ரோஜா நிறக் காலணியில் ஒன்றையும் கறுப்பு நிறமுள்ள ஆண்கள் அணியும் காலணி ஒன்றையும் சேர்த்து நடனமாடச் செய்வார். இரண்டு காலணிகளுக்குள் திருமணம் செய்து வைப்பார். ஒன்றின்மீது ஒன்றாகக் காலணியை அடுக்கிக் கோபுரம் செய்வார். தனக்கு மிகவும் பிடித்த காலணிகளுக்குச் செல்லப் பெயர் கூட வைத்துக் கொண்டிருந்தார். இந்த வேடிக்கைகள் அவரை மிகவும் மகிழ்ச்சி அடையச் செய்தன.
செருப்புத் திருடுவதைப் பெரிய குற்றமாக அவர் நினைக்கவில்லை. பெரும்பாலும் செருப்பைத் திருட்டு கொடுத்தவர்கள் தன்னைவிட்டுப் பாவம் நீங்கிவிட்டதாகவே கருதினார்கள். ஆனால் வெள்ளைக்கார நீதிபதிகளும் ராணுவ அதிகாரிகளும் அப்படி நினைக்கவில்லை. அதிலும் வெள்ளைக்காரச் சீமாட்டிகள் தங்கள் செருப்பு திருடு போனதை மன்னிக்க முடியாத குற்றமாகக் கருதினார்கள்.
ஒரு நாள் எம்பயர் லாட்ஜ் வாசலில் வேலையில்லாமல் பூச்சா ஜக்காரி வெற்றிலை போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தார். எச்சிலைத் துப்புவதற்காக எழுந்து கொள்ள முயன்ற போது கால்தடுமாறவே. பக்கத்தில் நின்றிருந்த லோகன் துரையின் குதிரை மீது எச்சிலைத் துப்பிவிட்டார். அதை யாரும் கவனிக்கவில்லை. ஆனாலும் அவருக்குக் கைகால்கள் நடுங்கியது. அடிவயிற்றைக் கலக்கிக் கொண்டு வந்தது. அவசரமாகத் தனது வீட்டிற்கு நடக்கத் துவங்கினார். அன்று மாலையே இரண்டு காவலர்கள் அவரைக் கைது செய்ய வந்திருந்தார்கள். அப்போது தான் அவர் ஒரு செருப்புத் திருடர் என்பது கண்டுபிடிக்கபட்டது
நீதிமன்றத்தில் பூச்சா ஜக்காரி தனது திருட்டை ஒத்துக் கொண்டதோடு சிறையில் தன்னோடு பூனையை வைத்துக் கொள்ள அனுமதிக்கும்படி கேட்டார். நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை. பூச்சா ஜக்காரி சிறையில் அடைக்கபட்டார்.
ஆனால் அதன்பிறகு விசித்திரமான நிகழ்வு உருவானது. தங்கள் துரதிருஷ்டத்திலிருந்து விடுபடுவதற்காக மக்கள் பழைய செருப்புகளைப் பூச்சா ஜக்காரி வீட்டு ஜன்னல் வழியாகவும், கூரையின் மீதும் எறிய துவங்கினார்கள். அந்த வீடு பழைய செருப்புகளால் நிறைந்து போனது. பாவம் அந்தப்பூனை, வீசி எறியப்படும் செருப்புகளுக்குப் பயந்து அந்த வீட்டிற்குத் திரும்ப வரவேயில்லை.
••
May 10, 2025
பியர் கிரிபாரியின் கதைகள்
ஒரு உருளைக்கிழங்கின் காதல் கதை என்றொரு சிறார்கதையைப் பிரெஞ்சு எழுத்தாளர் பியர் கிரிபாரி (Pierre Gripari) எழுதியிருக்கிறார். அக்கதையில் ஒரு சிறுவன் தனது வீட்டின் சமையலறையிலிருந்து ஒரு உருளைக்கிழங்கைத் திருடி, அதன் முகத்தைக் கத்தியால் செதுக்குகிறான். இதனால் உருளைக்கிழங்கிற்குக் கேட்கவும் பேசவும் பார்க்கவும் திறன் ஏற்படுகிறது.

பேசத் தெரிந்த அந்த உருளைக்கிழங்கு தான் வெறும் உருளைக்கிழங்காக நடத்தப்படுவதை விரும்பவில்லை. தனக்கெனத் தனியே வாழ்க்கை இருப்பதாக நம்புகிறது. சிறுவனின் வீட்டைவிட்டு வெளியேறி உடைந்து கிடந்த கிதார் ஒன்றை வழியில் சந்திக்கிறது. கிதாரும் உருளைக்கிழங்கும் நண்பர்களாகிறார்கள்.
அவர்களை நாடோடி ஒருவன் அடையாளம் கண்டு சர்க்கஸிற்கு விற்றுவிடுகிறான். அங்கே இரண்டும் இணைந்து இசை நிகழ்ச்சி நடத்துகின்றன. உருளைக்கிழங்கும் கிடாரும் சர்க்கஸின் நட்சத்திரங்களாகின்றன ஒரு நாள் பணக்கார சுல்தான் அழகி உருளைக்கிழங்கினை அடைய ஆசைப்படுகிறார். விலைக்கு வாங்குகிறார். இதனால் கிதார் வேதனையடைகிறது. உருளைக்கிழங்கின் வாழ்க்கை என்னவானது என்பதைக் கதையின் முடிவு விவரிக்கிறது. உருளைக்கிழங்கின் கேள்விகள் வழியாக அழகு பற்றிய நமது பார்வையை கிரிபாரி மாற்றுகிறார்.

கிரேக்க தந்தைக்கும் பிரெஞ்சு தாயிற்கும் மகனான 1925 ஜனவரி 7, இல் பியர் கிரிபாரி பாரிஸில் பிறந்தார். நுரையீரல் பாதிப்பு காரணமாக டிசம்பர் 23, 1990 இல் மரணமடைந்தார். இளம் வயதில் பெற்றோரின் விவாகரத்தைத் தொடர்ந்து அவரது அன்னையால் வளர்க்கப்பட்டார்.
சார்த்தரின் வழிகாட்டுதலின் கீழ் சோர்போன் பல்கலைகழகத்தில் கிரிபாரி தத்துவம் பயின்றார். பின்பு சில ஆண்டுகள் அங்கே பேராசிரியராகத் தத்துவத்தைக் கற்பித்தார். 1950கள் மற்றும் 1960களில் நாடகங்கள், சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுதினார். ஆனால் அது பெரிய வெற்றியை அடையவில்லை. 1970 களின் பிற்பகுதியில் அவரது சிறார் நூல்கள் புகழ்பெறத் துவங்கின. இவர் வசித்த ப்ரோகா (Rue Broca). வீதியினைக் கதைக்களமாகக் கொண்டு நிறையக் கதைகளை எழுதியிருக்கிறார். இன்று அந்த வீதியில் அவரது கதையில் வரும் கதாபாத்திரங்களை ஓவியமாக வரைந்திருக்கிறார்கள். அவரது வீடு நினைவில்லமாக மாற்றப்பட்டிருக்கிறது.
பியர் கிரிபாரியின் கதைகளில் வெளிப்படும் பகடி நிகரற்றது. தேவதைக்கதைகளைத் தலைகீழாக மாற்றி நவீன சூழலில் நடப்பது போல எழுதுகிறார். அவர் வசித்த ப்ரோகா வீதி பல்வேறு கலாச்சார மக்கள் ஒன்றிணைந்து வாழ்ந்த பகுதி என்பதால் அவரது கதைகளிலும் பல்லினப் பண்பாடு வெளிப்படுகிறது- வாரம் ஒரு நாள் அந்த வீதியில் உள்ள சிறார்களை வரவழைத்து ஒரு கதை சொல்லி புதிய கதைகளைச் சொல்வதாக எழுதியிருக்கிறார். அந்த கதை சொல்லி வேறு யாருமில்லை. கிரிபாரி தான்.
அவரது எழுத்தில் சாத்தானும். சூனியக்காரியும், அரக்கனும். பூதங்களும் புதிய உருவம் கொள்கிறார்கள். சமகால நிகழ்வுகளால் அலைக்கழிக்கபடுகிறார்கள். கடவுளும் வீட்டுப்பாடம் எழுதுகிறார். அரக்கன் ரயில் நிலையத்தில் காத்திருக்கிறான். வியப்பூட்டும் அவரது கற்பனையால் கதையை வளர்த்து எடுத்துச் செல்லும் விதம் பிரமிக்க வைக்கிறது. குறிப்பாக கதையில் வரும் உரையாடல்கள். சிறார்களுக்கு புரியும் வகையில் எளிமையாக எழுதப்பட்டிருந்த போதும் அதன் ஆழ்ந்த பொருளும் தத்துவார்த்த வெளிப்பாடும் சிறப்பாக உள்ளன.
இவரது Good Little Devil சற்றே நீண்ட கதை. இதில் நரகத்தில் வசிக்கும் அழகான குட்டிசாத்தான் ஒன்று தான் ஏன் கொம்புடன், கெட்டவனாகக் கருதப்படுகிறோம் என்று கவலைப்படுகிறது. பள்ளிக்கூடம் சென்று ஒழுங்காகப் படிக்கிறது. மற்ற குட்டிசாத்தான்களைப் போல மோசமாகப் பேசுவதோ, சண்டையிடுவதோ கிடையாது. ஆசிரியர் சொன்ன வீட்டுப்பாடங்களைச் சரியாகச் செய்து முடிக்கிறது.
தன்னுடைய பிள்ளை இப்படிக் கெட்டுப்போகிறதே என அதன் அப்பா அம்மா சாத்தான்கள் கவலைப்படுகிறார்கள். நல்ல சாத்தான் என்று பெயர் வாங்க மாட்டான் என்று அப்பா வருந்துகிறார். ஏன் வகுப்பில் எந்தத் துஷ்டத்தனமும் செய்வதில்லை என அம்மா கடிந்து கொள்கிறாள்.
அந்தக் குட்டிசாத்தானை எங்கே அனுப்பினாலும் பண்பாக நடந்து கொள்கிறது. அடுத்தவர் மீது அன்பு செலுத்துகிறது. அதனிடம் துளி கூடத் தீமையைக் காண முடியவில்லை. பாரிஸ் பெருநகரத்திற்கு அந்தக் குட்டிச்சாத்தான் வருகை தருகிறது. அதன் நெருக்கடிகளுக்குள் அன்பை யாசிக்கிறது. போப்பினைச் சந்திக்க ரோம் நகரம் செல்கிறது
இப்படியாகத் தனது நீண்ட பயணத்தின் முடிவில் சொர்க்கத்தின் கதவைத் தட்டுகிறது. சொர்க்கத்தின் காவலாளியால் நம்ப முடியவில்லை. ஆனால் அந்தக் குட்டிசாத்தான் எந்தப் பாவமும் செய்யவில்லை. நன்மையை மட்டுமே செய்து வருகிறது என்ற காரணத்தால் அதைக் கடவுளைக் காணுவதற்கு அனுமதி அளிக்கிறான். கடவுளும் அதற்குப் பரிட்சை வைக்கிறார். அதுவும் கணிதப்பரிட்சை. பியர் கிரிபாரியின் இக்கதை அவரது காலகட்ட அரசியலை. சமய அதிகாரத்தைக் கேலி செய்கிறது. கடவுளும் குட்டிச்சாத்தானும் பேசிக் கொள்ளும் இடம் அழகாக எழுதப்பட்டிருக்கிறது.
சிவப்புச் சாக்ஸ் அணிந்த அரக்கன் கதையில் எப்போதும் பிரகாசமான சிவப்புச் சாக்ஸ் அணிந்திருந்த ஒரு அரக்கன் நிலத்தடியில் வசிக்கிறான். பிரம்மச்சாரியாக வாழும் அவன் திருமணம் செய்து கொள்ள வேண்டிப் பெண் தேடுகிறான். இதற்காக ஒரு நாள் பூமியை துளைத்துக் கொண்டு வெளியே வருகிறான்.
தனது வீட்டில் வேக வைத்த முட்டைகளைச் சாப்பிட தயாரான மிரியேல் என்ற இளம் பெண்ணின் முன்பாகத் தோன்றுகிறான். அவள் பயந்துவிடுகிறாள். பார்த்த மாத்திரம் அவளைக் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் அரக்கன் சொல்கிறான். அவள் சம்மதிக்கவில்லை. ஆகவே பாதிரியை சந்தித்துத் தனது விருப்பத்தைச் சொல்கிறான்.
அவர் உனது உருவம் மிகப் பெரியது. ஆகவே தேவாலயத்திற்குள் நுழைய முடியாது. உன்னுடைய உருவம் சுருங்க வேண்டும், அதன்பிறகு தான் கல்யாணம் செய்ய முடியும் என்கிறார்.
அதற்காக அரக்கன் ஒரு சீன மந்திரவாதியை தேடி பயணம் செய்கிறான் அந்த மந்திரவாதியோ ரோமிற்குப் போய்ப் போப்பை பார்க்கும்படி ஆலோசனை சொல்கிறான்.
முடிவில் அரக்கன் ஒரு மனிதனைப் போல உருவத்தில் சிறியவனாகிறான். இப்போது அவனிடமிருந்த அதிசய சக்திகள் யாவும் மறைந்துவிடுகின்றன. ஊர் திரும்ப ரயிலில் போக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அவனிடமோ பணமில்லை. கண்ணீர் விடுகிறான். அரக்கனின் திருமணம் என்னவாகிறது எனக் கதை விரிகிறது. இதில் வரும் அரக்கன் அழுக்கான தனது காலணியை அணிந்து கொண்டே அலைகிறான். காதலின் பொருட்டு அல்லாடுகிறான்.

அவரது வேறு ஒரு கதையில் ஒரு இளவரசன் கடற்கன்னியைக் காதலிக்கிறான். . இன்னொரு கதையில் மொழிபெயர்ப்பாளரான எலியின் உதவியுடன் மாயமீன்களைத் தேடுகிறார்கள். மற்றொரு கதையில் தனது சாவிற்குப் பிறகும் பேயாக வந்து தங்க நாணயங்களை எண்ணிக் கொண்டிருக்கிறான் ஒரு பணக்காரன். இப்படியாக விசித்திரங்கள் நிரம்பிய பியர் கிரிபாரியின் ப்ரோகா தெருக் கதைகள் மறக்கமுடியாதவை. வாசிக்கும் நமது வயதையும் மறையச் செய்யக்கூடியவை.
May 9, 2025
அலிப்பூர் சிறை அருங்காட்சியகம்
சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்தியாவின் முக்கியத் தலைவர்கள் சிறைவைக்கபட்டிருந்த கொல்கத்தாவின் அலிப்பூர் மத்திய சிறைச்சாலை தற்போது மியூசியமாக மாற்றப்பட்டிருக்கிறது. அதனைக் காணுவதற்காகச் சென்றிருந்தேன்.

15.2 ஏக்கர் பரப்பளவில் உள்ளது சிறைச்சாலை. செங்கல்-சிவப்பு சுவர்களால் ஆன கட்டிடங்கள். பதினெட்டு அடி உயர சுற்றுச்சுவர், வளாகத்தினுள் நிறைய மரங்கள். சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்படங்கள். வரலாற்றின் சாட்சியமாக உள்ள தூக்குமேடை, சுதந்திரப் போராட்டகால நாளிதழ் செய்திகள், ஒவியங்களைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.





நேரு. நேதாஜி, பி.சி. ராய், சி.ஆர். தாஸ், கவிஞர் காஸி நஸ்ருல் இஸ்லாம் அடைத்து வைக்கபட்ட அறைகளைப் பார்வையிட்டேன். சிறையினுள் தலைவர்கள் நாற்காலியில் அமர்ந்திருப்பது போலச் சிலை வடித்திருக்கிறார்கள். உறுதியான கற்சுவர்கள். இரும்புக்கதவுகள். அதன் துருப்பிடித்த தாழ்ப்பாள். கறைபடிந்த தரை யாவிலும் காலம் உறைந்திருக்கிறது.
சரித்திரப் புத்தகங்களில் படித்திருந்த அலிப்பூர் சதிவழக்கும் அரவிந்தரும் நினைவில் வந்தபடி இருந்தார்கள். இந்தச் சிறைச்சாலையின் வரலாறு கண்ணீரால் எழுதப்பட வேண்டியது.


ஜனவரி 1930 முதல் செப்டம்பர் 1930 வரை இங்கே நேதாஜி சிறை வைக்கபட்டிருந்திருக்கிறார். அது போலவே பிப்ரவரி 17 முதல் மே 7, 1934 வரை நேரு சிறையில் அடைக்கபட்டிருந்தார். அவரைப் பார்ப்பதற்காக இந்திராகாந்தி வந்து அமரும் மரத்தடியில் இந்திரா காந்தியின் சிலையினையும் அமைத்திருக்கிறார்கள்.
1757 ஆம் ஆண்டு நடைபெற்ற பிளாசிப் போருக்குப் பின்னால் சிறைச்சாலைகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை ஆங்கிலேயர்கள் உணர்ந்தார்கள். அதற்கு முன்பாகச் சிறிய சிறைச்சாலைகள் இருந்த போதும் அது கம்பெனியின் கட்டுப்பாட்டில் இல்லை.
ஆகவே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முதன்முதலில் டாக்கா சிறைச்சாலை (1790) உருவாக்கபட்டது. அதைத் தொடர்ந்து மிட்னாபூர் சிறைச்சாலை (1792 ஏற்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக உருவாக்கபட்டதே அலிப்பூர் பிரசிடென்சி சிறைச்சாலை. அது 1864 ஆம் ஆண்டுக்குப் பிறகு மத்திய சிறைச்சாலையாக மாற்றப்பட்டது.

இப்போதுள்ள அலிப்பூர் சிறைச்சாலை 1906 இல் கட்டப்பட்டது. இதில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த கைதிகளுக்காகப் பிரிக்கப்பட்ட தனித்தனிப் பகுதிகள், உயர்ந்த காவல்கோபுரம், தூக்குமேடை, மருத்துவமனை, தனிமைச்சிறைக்கூடம் அமைக்கபட்டிருக்கிறது. அந்தக் காலச் சிறைதண்டனைகள் மிகவும் கொடூரமானவை. அதுவும் அரசியல் கைதிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகள் பயங்கரமானவை. அதை அடையாளப்படுத்துவது போலத் தண்டனைக் காட்சி ஒன்றை சிலையாகச் செய்திருக்கிறார்கள்.

மரணத் தண்டனை கைதிகளுக்காக மூன்று தண்டனை அறைகள் காணப்படுகின்றன. ஒரு கைதி தூக்கிலிடப்படுவதை மற்றவர்கள் காணும் வகையில் அறைகளை அமைத்திருக்கிறார்கள்.

தூக்கிலிடப்பட்ட அரசியல் கைதிகளின் நினைவாக அவர்கள் புகைப்படத்துடன் கூடிய தனிக்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. தூக்கு மேடைக்கு அருகில் ஒரு பிரேத பரிசோதனை அறை உள்ளது. தேசவிடுதலைக்காகத் தூக்கிலிடப்பட்டவர்களின் சராசரி வயது இருபது முதல் முப்பதுக்குள். மரணதண்டனை விதிக்கபட்ட கைதிகளில் ஒருவர் நான்கு மாதங்களுக்குள் 110 கடிதங்கள் எழுதியிருக்கிறார்.

இந்தச் சிறையில் தான் புரட்சியாளர் குதிராம் போஸ் தூக்கிலிடப்பட்டார். அப்போது அவரது வயது 18. இந்த நினைவகத்தினுள் நாள் முழுவதும் வந்தேமாதரம் பாடல் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. அதைக் கேட்கும் போது மிகுந்த உணர்வெழுச்சி ஏற்படுகிறது.
சித்தரஞ்சன் தாஸ் 1921 ஆம் ஆண்டுப் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றதால், கைது செய்யப்பட்டு இதே சிறையின் 8வது அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். அவர் புத்தகம் படிப்பதற்குப் போதுமான வெளிச்சம் இல்லாத காரணத்தால் சிறையின் வெளியே படிப்பதற்கான மேடை அமைக்கபட்டது. சித்தரஞ்சன் தாஸ் அதில் குனிந்து படிப்பது போன்ற சிலை வைக்கபட்டிருக்கிறது

சிறைக்கைதிகளுக்கான மருத்துவமனை, அச்சுக்கூடம், நெசவுக்கூடம், பயிற்சிக்கூடங்கள் தனியே காணப்படுகின்றன. கவிஞர் காஸி நஸ்ருல் இஸ்லாம் அடைத்து வைக்கபட்ட சிறையினுள் அவர் எழுதிய கவிதைநூல்கள் யாவும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. புதிதாக உருவாக்கபட்ட அருங்காட்சியகம் என்பதால் தூய்மையாக, சிறப்பான பராமரிப்பில் வைத்திருக்கிறார்கள்.

காமராஜர் தனது 27 வயதில் உப்புசத்தியாகிரகத்தில் கைது செய்யப்பட்டு இதே அலிப்பூர் சிறையில் அடைக்கபட்டிருக்கிறார். இரண்டு ஆண்டுச் சிறைவாசத்தை அனுபவித்திருக்கிறார். அதைப் பற்றிய குறிப்புகளோ, அவர் இருந்த சிறை பற்றிய குறிப்போ அருங்காட்சியத்தில் காணப்படவில்லை.
இந்தச் சிறையில் ஒளிஒலிக்காட்சி ஒன்றும் நடைபெறுகிறது. அது மாலை நேரம் நடைபெறுவதால் நான் காணவில்லை.
May 7, 2025
விருது விழா
பாரதிய பாஷா பரிஷத் விருது பெறுவதற்காக எனது மனைவியுடன் ஏப்ரல் 30 மாலை கொல்கத்தாவிற்குச் சென்றிருந்தேன். விமானநிலையத்திலிருந்து நான் தங்குவதற்காக அறை ஒதுக்கபட்டிருந்த மீரா இன் போவதற்கு ஒன்றரை மணி நேரமானது. கடுமையான வாகன நெருக்கடி. இதற்கு முன்பாக கொல்கத்தாவிற்கு நான்கு முறை சென்றிருக்கிறேன். அதே குப்பையும் தூசியும் அழுக்கும் படிந்த நிலை. புதிய மேம்பாலங்களைக் காண முடிந்தது. தொண்ணூறுகளில் பார்த்த டிராம்களைக் காணமுடியவில்லை. நிறுத்தப்பட்டுவிட்டதாகச் சொன்னார்கள். ஏதோ ஒரு இடத்தில் மட்டும் பழைய நினைவாக டிராம் இயக்குகிறார்கள் என்றார் காரோட்டி.
மீரா கோவிலின் மாடியை விருந்தினர் அறையாக மாற்றியிருக்கிறார்கள். சின்னஞ்சிறிய அறைகள். அதில் ஒன்றை ஒதுக்கியிருந்தார்கள். கோவிலின் மாடியில் தங்கியிருந்தது புதிய அனுபவம். மாலை முழுவதும் பக்திப்பாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. மறுநாள் காலை ஆறு மணிக்கு நடைப்பயிற்சிக்கு கிளம்பினால் வாசற்கதவைத் திறக்க எவருமில்லை. விடுதிக் காவலர் உறங்கிக் கொண்டிருந்தார். ஏழு மணிக்கு மேல் தான் கதவைத் திறப்பார்கள் என்றார்.
கொல்கத்தாவின் தினசரி வாழ்க்கை மிக மெதுவாக துவங்கக் கூடியது. அதிகாலையில் காபி குடிப்பதற்கு கூட வழியில்லை. சாலையோர தேநீர் கடைகளில் காபி கிடைப்பதில்லை. ஒன்பது மணிக்கு தான் உணவகங்கள் ஆரம்பமாகின்றன. அங்கும் அவல் உப்புமா, பூரி தவிர வேறு எதுவுமில்லை. கொல்கத்தாவின் வெயில் முறுகிய வெல்லப்பாகு போலிருந்தது. நிறைய பூங்காங்கள் உள்ள நகரம். ஆயினும் உஷ்ணம் மிக அதிகமாகவே இருந்தது.
மே 1 மாலை ஷேக்ஸ்பியர் வீதியில் இருந்த பாரதிய பாஷா பரிஷத்திற்குச் சொந்தமான அரங்கில் விழா நடைபெற்றது. அரங்கு நிறைந்த கூட்டம்.
பிரசிடென்சி பல்கலைகழக மேனாள் துணைவேந்தர் அனுராதா லோகியா விருது வழங்கினார். தலைமை உரை, சிறப்புரை, அறிவிப்புகள் என யாவும் பெங்காலி மற்றும் இந்தியில் நடைபெற்றன. எவரும் ஆங்கிலத்தில் பேசவில்லை. எனது ஏற்புரையைத் தமிழில் வழங்கினேன். உரையின் ஆங்கில வடிவத்தை அவர்களுக்கு முன்னதாக அனுப்பி வைத்திருந்தேன். ஆனால் அவர்கள் அதனை அச்சிட்டுப் பகிரவில்லை. ஏற்புரை என்பதால் மூன்று நிமிஷங்கள் மட்டுமே வழங்கப்பட்டன.







April 29, 2025
லாஸ்லோவின் நூலகம்
“தி ப்ரூடலிஸ்ட்” படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி லாஸ்லோ டோத் நூலகம் ஒன்றை வடிவமைப்பதாகும். அதுவும் வாசிப்பதற்கு ஏற்ற விளக்குடன் கூடிய நாற்காலி ஒன்றையும் வடிவமைக்கிறான்.

தொழிலதிபர் ஹாரிசன் லீ வான் ப்யூரனுக்காக அந்த நூலகத்தை வடிவமைக்கும்படி அவரது மகன் லாஸ்லோவை அழைக்கிறான்.
லாஸ்லோ டோத் நாஜி வதைமுகாமிலிருந்து தப்பிப் பிழைத்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்த கட்டிடக்கலை நிபுணர். மொழி மற்றும் கலாச்சாரத் தடைகளைத் தாண்டி தனது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஆகவே நூலகத்தை மறுஉருவாக்கம் செய்யும் போது அதைத் தனது கனவின் வடிவமாக மாற்ற முனைகிறார்.
நூலகம் என்பது புத்தகங்கள் அடுக்கபட்ட இடமோ, வாசிப்பு அறையோ இல்லை. அது ஒரு தனித்துவமிக்க வெளி. வாசிப்பு என்பதை உன்னதமாக நிகழ்வாக மாற்ற முயலுகிறார். வெளிச்சம் பாயும் நாடகமேடையில் தனித்து அமர்ந்துள்ள கதாபாத்திரம் போல வாசிப்பவரை உணர வைக்கிறார்.
உயர்ந்த கூரை, புத்தங்களை அடுக்குவதற்காக அவர் உருவாக்கிய முறை, சுவர்களின் வண்ணம். திரைச்சீலை என யாவும் நேர்த்தியாக உருவாக்கபடுகின்றன . ஆனால் ஹாரிசனுக்கு அந்த வடிவமைப்பு பிடிக்கவில்லை. அதில் தங்கள் குடும்பப் பெருமை வெளிப்படவில்லை என நினைக்கிறான். நூலகக் குவிமாடக் கண்ணாடி கிழே விழுந்து உடைவது அவர்கள் அதிகாரத்தின் சிதறலேயாகும். இதன் காரணமாக அவர்களுக்குள் கருத்துமோதல் உருவாகிறது. லாஸ்லோ வெளியேற்றப்படுகிறார்.

லாஸ்லோவின் அழகியல் சொற்களுக்கு அப்பாற்பட்டது. தான் உருவாக்கிய கட்டிடம் தனது அழகைக் காட்டிக் கொண்டிருக்க வேண்டும் என அவர் நினைப்பதில்லை. மாறாக உண்மையான அழகை உணரச் செய்ய வேண்டும் என்றே விரும்புகிறார்.
மானசீகமாக லாஸ்லோ உருவாக்கிய நாற்காலியில் அமர்ந்து கையில் விருப்பமான புத்தகம் ஒன்றை வைத்து படிப்பது போல கற்பனை செய்து கொள்கிறேன். கலை தரும் மகிழ்ச்சிக்கு நிகரே கிடையாது.
••
நாவல்வாசிகள் 4
இந்து தமிழ் திசை நாளிதழில் ஞாயிறு தோறும் வெளியாகிவரும் நாவல்வாசிகள் தொடரின் நான்காவது பகுதி வெளியாகியுள்ளது

காலச்சுவடு இதழில்
இம்மாத காலச்சுவடு இதழில் மறைந்த முத்துகாமிக்ஸ் நிறுவனர் சௌந்திரபாண்டியன் குறித்து எழுதியிருக்கிறேன்

S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
