S. Ramakrishnan's Blog, page 2
September 30, 2025
குற்றமுகங்கள் 24 ஜம்னா
ஜம்னா என்பது ஒருவரின் பெயரில்லை. அது ஒரு குழுவின் அடையாளம். பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவர்கள் விதிஷாவின் தெற்கே பரவியிருந்தார்கள்.

அவர்கள் துறவிகளுக்கு எதிரானவர்கள். துறவிகளைத் தொந்தரவு செய்யக்கூடியவர்கள். யாத்திரைக்காகச் செல்லும் துறவிகள் இரவு நேரம் சாவடியில் தங்கும் போது அவர்களின் தண்டம், கப்பரை மற்றும் நீர்குவளைகளைத் திருடிவிடுவார்கள்.
திருட்டுக் கொடுத்த பொருளுக்காகத் துறவிகள் கவலைப்படக்கூடாது. புகார் அளிக்கக் கூடாது என்பது பொதுவிதி. ஆனால் தன்னுடைய பொருளை பறிகொடுத்த துறவி மிகுந்த கோபம் கொள்வான். திருடனைச் சபிக்கவும் செய்வான்.
இது போன்ற தொந்தரவுகள் தொடர்ந்து வந்ததால் துறவிகளில் ஒருவர் விழித்திருந்து காவல் காக்க வேண்டும் என்ற நடைமுறை உருவானது. ஆனாலும் ஜம்னாக்களைத் தடுக்க முடியவில்லை
ஜம்னாக்கள் வாழ்க்கையைக் கொண்டாடுகிறவர்கள். அவர்கள் எப்போதும் ஆட்டம் பாட்டமுமாக இருந்தார்கள். விதவிதமான உணவுகளை ருசித்தார்கள். பகலில் சூரியனைப் போலவும் இரவில் சந்திரனைப் போலவும் இருந்தார்கள். ஜம்னாக்களின் மகிழ்ச்சி அதிகமாகும் போது அவர்கள் ஒருவர் மீது மற்றவர் ஏறி நின்று மனிதகோபுரத்தை உருவாக்குவார்கள்.
வாழ்க்கை இன்பங்களை ஒருவன் நிராகரிப்பதோ, கேலி செய்வதோ அவர்களைக் கோபப்படுத்தியது. விலங்குகளோ, மரம்செடி கொடிகளோ துறவு கொள்வதில்லை என்று உரக்கக் கத்தினார்கள்.
துறவிகள் உறங்கும் போது மட்டுமின்றிக் கானகத்தைக் கடந்து செல்லும் போதும். ஆற்றங்கரைகளில் காத்திருந்த போதும் ஜன்மாக்கள் தொந்தரவு செய்தார்கள். இதில் காட்டுப்பாதையில் செல்லும் துறவிகளை ஆயுதங்களுடன் வழிமறித்த ஜன்மாக்கள் அவர்களை நடனமாடச் செய்தார்கள். கழுதைகளின் கால்களைக் கட்டிவிடுவது போல நடக்க முடியாதபடி கால்களில் கயிற்றைக் கட்டி வேடிக்கை செய்தார்கள். துறவிகள் ஆற்றைக் கடக்கப் படகில் செல்லும் போது அவர்கள் படகை கவிழ்த்து விட்டார்கள். ஜம்னாக்களுக்குப் பயந்து சில துறவிகள் பயணம் செய்வதையே கைவிட்டார்கள்.
ஜம்னாக்களை இப்படியே விடக்கூடாது என நினைத்த திரிபோத மடத்தின் ஆச்சாரியார் லோகானந்தா கவர்னருக்கு ஒரு கடிதம் எழுதியதோடு மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஹென்றி ஆண்டர்சனை நேரிலும் பார்த்து முறையிட்டும் வந்தார்.
ஹென்றி ஆண்டர்சனுக்கு இந்தப் புகாரே வேடிக்கையாக இருந்தது. இங்கிலாந்திலும் புனிதயாத்திரை செல்கிறவர்களைத் திருடும் கும்பல் இருந்தது. அவர்கள் இரவுவிடுதியில் தங்கியிருக்கும் யாத்ரீகர்களின் பொருட்களைக் கொள்ளையடித்து விடுவார்கள். காணிக்கை செலுத்தக் கொண்டு செல்லும் வெள்ளிப் பொருளை அடைவதற்குக் கொலைகளும் நடந்திருக்கின்றன. இது போன்ற குற்றசெயல்களுக்கு விடுதி உரிமையாளர் துணையிருப்பார் என்றார் ஆண்டர்சன்.
ஜம்னாக்களை ஒடுக்குகிற வெள்ளைக்கார அதிகாரிக்குத் தங்கள் மடத்தின் சார்பில் தங்கவாள் தரப்படும் என்றார் ஆச்சார்யா லோகானந்தா.
ஹென்றி ஆண்டர்சன் ஜம்னாக்களை ஒடுக்குவதற்காகத் தனிப்பிரிவு ஒன்றை உருவாக்கினார். அதற்குத் தலைவராக ஆலன் டேவிஸை நியமித்தார்.
ஆலன் டேவிஸ் ஜம்னாக்களைப் பற்றிய தகவல்களைத் தேடி திரட்டிய போதும் வியப்பளிப்பதாக இருந்தது

ஜம்னாக்கள் வேறு எந்தக் குற்றத்திலும் ஈடுபடுவது கிடையாது. அவர்கள் ஊரில் எவர் வீட்டில் குழந்தை பிறந்தாலும் அதனைக் கொண்டாடுவார்கள். பௌணர்மி நாளில் உறங்கமாட்டார்கள். ஆற்றங்கரையில் ஒன்று கூடி விருந்து குடி ஆட்டம் என இரவெல்லாம் கொண்டாடுவார்கள். தண்ணீருக்குள் ஒளிந்து கொள்ளக்கூடியவர் என்பதால் அவர்களைத் துரத்திப்பிடிப்பது எளிதானதில்லை.
ஆலன் டேவிஸ் ஜம்னாக்களின் பௌர்ணமி கொண்டாட்டத்தைக் காண விரும்பினார். அதற்காக ஆற்றங்கரையை ஒட்டிய குன்றின் மீது தனியே ஏறி அமர்ந்து கொண்டார். வெண்ணிற இரவில் அவர் கண்ட காட்சியைப் போன்ற ஒரு கொண்டாட்டத்தை வாழ்நாளில் கண்டதில்லை.
இறைச்சி வேகும் மணம். விதவிதமான மலர்களைச் சூடிய ஆடையில்லாத பெண்கள். மதுப் பீப்பாய்கள். இசையும் நடனமும் கூச்சலும் கலந்த கொண்டாட்டம். நிலவு வெளிப்பட்டத்திலிருந்து நிலவு மறையும் வரை அந்தக் கொண்டாட்டம் முடியவில்லை.
அவ்வளவு போதையிலும் ஜம்னாக்களில் ஒருவன் கூடத் தடுமாறி விழவில்லை. உறங்கவில்லை. ஆணும் பெண்ணும் உற்சாகத்தை அதிகமாக்கிக் கொண்டேயிருந்தார்கள். இவ்வளவு திளைப்பில் மூழ்கியவர்களுக்குத் துறவிகளைப் பிடிக்காமல் போவது இயல்பு தான் என்று ஆலன் டேவிஸிற்குத் தோன்றியது.
இவர்களை ஆயுதம் கொண்டு ஒடுக்குவதை விடவும் பொய்கதைகளைக் கொண்டு எளிதாக ஒடுக்கிவிடலாம் என்று ஆலன் டேவிஸ் கண்டுபிடித்தார். அதன்படி துறவிகளிடம் அவர்கள் தங்கும் இடத்தில் இரவெல்லாம் இசையும் பாட்டுமாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.
அத்தோடு இமயத்தின் அருகே கறுப்பு நதி ஒன்று ரகசியமாக ஒடிக்கொண்டிருப்பதாகவும். தேனை விடவும் இனிப்பான அந்த நதிநீரில் ஒருவர் குளிப்பதன் மூலம் வானில் பறந்து திரியும் சக்தியை பெற்று விடுவார்கள் என்றும். பூமியில் இல்லாத இன்பங்களை அதன் மூலம் அனுபவிக்க முடியும் என்று துறவிகள் நம்புவதாகக் கதை கட்டினார்.
ஜம்னாக்கள் கறுப்பு நதியை நம்பினார்கள். வானில் பறந்து திரிவதன் மூலம் பூமியில் இல்லாத இன்பத்தைப் பெற முடியும் எனக் கனவு கண்டார்கள். ஆகவே அவர்கள் துறவிகளுக்கு முன்பாக ரகசிய நதியைக் கண்டறிவதற்குப் புறப்பட்டார்கள். பகலிரவாக அந்தப் பயணம் நீண்டது. கங்கை நதிக்கரையில் ஜம்னாகள் தங்கியிருந்த போது ஆலன் டேவிஸ் தனது படையைக் கொண்டு அவர்களை வேட்டையாடி அழித்தார் என்கிறார்கள்.
ஜம்னாக்களை ஏமாற்றுவதற்காக உருவாக்கபட்ட கறுப்பு நதியைப் பற்றிய கதையை நிஜமென நம்பிக் கொண்டு அதைத் தேடி அலையும் கூட்டம் பின்னாளில் உருவானது. இந்தியர்கள் நிஜத்தை விடவும் கதைகளை அதிகம் நம்பக் கூடியவர்கள் என்று ஆலன் டேவிஸ் எழுதியதை அச்செயல் நிரூபிப்பதாக அமைந்திருந்தது.
September 29, 2025
காஃப்காவின் நிழல்
பெஞ்சமின் பாலிண்ட்டின் Kafka’s Last Trial: The Case of a Literary Legacy புத்தகத்தைப் படிக்கும் போது அது காஃப்காவின் விசாரணை நாவலைப் போலவே இருப்பதை உணர முடிகிறது.

காஃப்காவின் படைப்புகள் யாருக்குச் சொந்தம் என்பது குறித்த நீதிமன்ற வழக்கு பற்றிய இப்புத்தகம் ஜெருசலேமில் ஒரு கோடை காலத்தின் காலை நேரத்தில் முற்றிலும் கறுப்பு நிறத்தில் உடையணிந்த 82 வயதான ஈவா ஹோஃப், இஸ்ரேலிய உச்ச நீதிமன்றத்தின் வளைந்த மர பெஞ்சில் தனது கைகளைப் பற்றிக் கொண்டு அமர்ந்திருந்தார் எனத் துவங்குகிறது
நீதிமன்றத்தில் கறுப்பு அங்கி அணிந்த ஒன்பது வழக்கறிஞர்கள் அரை வட்ட மேஜையில் அமர்ந்திருந்தனர். மூன்று தரப்பினருக்கு குரல் கொடுக்க அவர்கள் காத்திருந்தனர் உயரமான மேடையில் மூன்று நீதிபதிகள் கொண்ட ஒரு குழு அமர்ந்திருந்தது.

ஈவா தன்னைச் சந்திக்க வரும் பத்திரிகையாளர்களைத் தவிர்த்தார் அவர்கள் தன்னைப் பொய்யாகச் சித்தரிப்பதாகக் கருதினாள்..எட்டு வருட காலம் நடந்த வழக்கு விசாரணை 2016ல் அதன் உச்சக்கட்டத்தை எட்டியது. விசாரணையின் ஆரம்பக் கட்டங்கள் – சட்ட நெறிமுறை, பதிப்புரிமை மற்றும் அரசியல் சிக்கல்கள் நிறைந்ததாக இருந்தன.
காஃப்கா இன்று அடைந்திருக்கும் புகழை அவர் தனது வாழ்நாளில் அடையவில்லை. அவரது முக்கியமான படைப்புகள் யாவும் மரணத்திற்குப் பின்பே வெளியாகின. அதற்கு அவரது நண்பர் மேக்ஸ் பிராடிற்கு நன்றி சொல்கிறார்கள். அவர் தான் காஃப்காவின் கையெழுத்துப்பிரதிகளைப் பாதுகாத்து வைத்து வெளியிட்டவர்.
காஃப்கா, தனது நண்பரான மேக்ஸ் பிராடிடம், தனது மரணத்திற்குப் பின்பாக வெளியிடப்படாத அனைத்து கையெழுத்துப் பிரதிகள், கடிதங்கள் மற்றும் ஆவணங்களை எரித்துவிடும்படியாகச் சொல்லியிருந்தார். பிராட் அதனைச் செய்யவில்லை.

மேக்ஸ் பிராடிடம் சில கையெழுத்துப் பிரதிகளை மட்டுமே ஒப்படைத்திருந்ததாகவும் காஃப்காவின் மரணத்திற்குப் பிறகு அவரது மேஜை மற்றும் அறையிலிருந்த கையெழுத்துப் பிரதிகளைப் பிராட் தானாக எடுத்துக் கொண்டார் என்றும் சொல்கிறார்கள். இருவருக்கும் இடையில் அவ்வளவு நெருக்கமான நட்பு இருந்தது. நீதிமன்றத்தில் எந்தக் கையெழுத்துப்பிரதிகளைப் பிராட் தானாக எடுத்துக் கொண்டார் என்ற கேள்வி எழுந்தது. அவற்றைத் துல்லியமாக அடையாளம் காண முடியவில்லை.
நாஜி அச்சம் காரணமாகத் தனது நாட்டைவிட்டு வெளியேறும் போது பிராட் அவற்றை ஒரு பெட்டியில் வைத்து எல்லை கடந்திருக்கிறார். அப்படிக் கடத்திவரப்பட்ட கையெழுத்துபிரதிகளுடன் இஸ்ரேலில் வசித்திருக்கிறார்.
ஜெருசலத்தில் பிராடின் உதவியாளராகவும் காதலியாகவுமிருந்த எஸ்தர் ஹோஃப் காஃப்காவின் சில கையெழுத்துப் பிரதிகளைத் தனதாக்கிக் கொண்டு. அவற்றின் முழுஉரிமை தனக்கு மட்டுமே சொந்தம் என அறிவித்தார். இதன் காரணமாகக் காஃப்காவின் படைப்புகளை வெளியிடுவதில் நெருக்கடி ஏற்பட்டது.
காஃப்காவின் மூன்று சகோதரிகள் நாஜி முகாமில் கொல்லப்பட்டடார்கள். அவரது உறவினர்களில் பலரும் உலகப்போரில் இறந்து போனார்கள். ப்ராட் இறந்தபோது , காஃப்காவின் கையெழுத்துப் பிரதிகளைத் தனது இரண்டு மகள்களிடம் விட்டுச் சென்றார், அவர்களில் இளையவர் தான் ஈவா. அவர் தான் இந்த வழக்கின் நாயகி.
ஜெருசலேமில் உள்ள தேசிய நூலகம் மற்றும் மார்பாக்கில் உள்ள ஜெர்மன் இலக்கிய ஆவணக் காப்பகம் இரண்டும் காஃப்காவின் படைப்புகளுக்கு உரிமை கோரின.
காஃப்கா யூதர் என்பதால் அவரது படைப்புகள் இஸ்ரேலுக்குச் சொந்தமானது என்றது தேசிய நூலகம் – காஃப்கா ஒரு ஜெர்மன் எழுத்தாளர், அவர் இஸ்ரேலில் ஒருபோதும் கால் பதிக்கவில்லை. ஆகவே அவர் ஜெர்மனிக்கே சொந்தம் என்றது ஜெர்மனி ஆவணக் காப்பகம் . ஈவா ஹோஃப் அந்த இருவருக்கும் எந்த உரிமையும் கிடையாது. யாவும் தனக்கே சொந்தம் என்றார், இதனால் மும்முனைப் போட்டி உருவானது.

காஃப்காவின் கையெழுத்துப் பிரதிகள் கடிதங்கள். ஆவணங்கள் என இருபதாயிரம் பக்கங்கள் வரை இருந்தன. ஈவா அவற்றைச் சூரிச் மற்றும் டெல் அவிவில் உள்ள வங்கிகளில் பாதுகாப்பாக வைத்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது காஃப்கா தன்னை யூதராக அடையாளப்படுத்திக் கொள்ளவேயில்லை என்ற வாதம் முன்வைக்கபட்டது, படைப்பின் உரிமை குறித்த பல்வேறு சட்ட நுணுக்கங்கள் விசாரணையின் போது முன்வைக்கபட்டன.
காஃப்காவின் சகோதரிகளைக் கொன்றது நாஜி ஜெர்மன் அரசு. ஆகவே அவரது படைப்புகள் ஜெர்மனிக்கு சொந்தமானதில்லை என்ற வாதமும் நீதிமன்றத்தில் எடுத்து வைக்கபட்டது. காஃப்காவின் காதலி மிலேனா ஜெசென்ஸ்கா, ரேவன்ஸ்ப்ரூக் வதை முகாமில் கொல்லப்பட்டார் ஒருவேளை காஃப்கா வாழ்ந்திருந்தால், அவரும் ஒரு முகாமில் அடைக்கபட்டு கொல்லப்பட்டிருப்பார் என்றும் நீதிமன்றத்தில் வாதிட்டார்கள்.
எஸ்தர் காப்காவின் கையெழுத்துப் பிரதிகளைப் பலருக்கும் விற்றுப் பணம் சம்பாதித்திருக்கிறார். 1988 ஆம் ஆண்டில், விசாரணை நாவலின் கையெழுத்துப் பிரதியை கிட்டத்தட்ட $2 மில்லியனுக்கு ஏலம் விட்டிருக்கிறார். ஆகவே அவருக்குத் தார்மீகமாக இதனைப் பாதுகாக்கும் உரிமை கிடையாது என இஸ்ரேலின் தேசிய நூலகம் சார்பில் வாதம் முன்வைக்கபட்டது. .
பல ஆண்டுகளுக்கு முன்பாக இதே பிரச்சனை எழுந்த போது மாவட்ட நீதிமன்றம். ஈவாஹோஃப் தனது வாழ்நாளில் இதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் அவருக்கு முழு உரிமை உண்டு எனத் தீர்ப்பளித்தது. ஆகவே தற்போதைய நடவடிக்கைகள் அனைத்து தேவையற்றவை என்றும் நீதிபதிகள் முன் ஈவாவின் வழக்கறிஞர் ஜோஹர் வாதிட்டார்.
ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள் தேசிய நூலகத்திற்கு வந்து, அங்குப் பாதுகாத்து வைக்கபட்டுள்ள பல்வேறு எழுத்தாளர்களின் கையெழுத்துபிரதிகளைப் பார்வையிடுவதாகவும், காஃப்காவின் ஆவணங்கள் தங்களின் ஒப்படைக்கபட்டால் அவை முறையாகப் பாதுகாக்கபடும் பயன்படுத்தபடும் என்று தேசிய நூலகம் சார்பான வழக்கறிஞர் தெரிவித்தார்
மேக்ஸ் பிராட் 1884 இல் பிராகாவில் இருந்த ஒரு யூத நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் மூன்று குழந்தைகளில் மூத்தவராகப் பிறந்தார், சட்டக்கல்லூரியில் அவர் பயின்ற போது உடன் படித்தவர் தான் ஃபிரான்ஸ் காஃப்கா. இருவரும் இருந்த தத்துவ ஈடுபாடு மற்றும் ரசனை ஆழமான நட்பை உருவாக்கியது. அவர்கள் தினமும் ஒன்றாகச் சுற்றினார்கள். இலக்கியம், தத்துவம் குறித்து விவாதித்தார்கள்.
ஃபிரான்ஸ் காஃப்காவிடம் அசாதாரணத் திறமை இருப்பதாகப் பிராட் நம்பினார். அவர்கள் ஒன்றாகச் சினிமா பார்த்தார்கள். ஆற்றில் நீந்தினார்கள். பயணம் செய்தார்கள். இலக்கிய விவாதம் செய்தார்கள். மேக்ஸ் பிராட் நிறையக் கதைகள் எழுதியிருக்கிறார். அவற்றைக் காஃப்கா கையெழுத்திலே வாசித்து விமர்சனம் செய்திருக்கிறார். காஃப்காவின் படைப்புகளை அச்சில் கொண்டுவர வேண்டுமென விரும்பி அவரை முக்கியப் பதிப்பகம் ஒன்றிடம் அறிமுகம் செய்து வைத்தவர் பிராட். காஃப்காவின் காதல். திருமண முறிவு. தந்தையோடான கசப்பான உறவு. சுய குழப்பங்கள் இவற்றைப் பிராட் நன்கு புரிந்து கொண்டிருந்தார். ஆகவே தான் காஃப்காவின் மரணத்திற்குப் பின்பு அவரது கையெழுத்துப் பிரதிகளை எரிக்கவில்லை.
ஒரு திரைப்படத்தினைப் போலவே பெஞ்சமின் பாலிண்ட்டின் புத்தகம் நீதிமன்ற தீர்ப்பு நாளில் இருந்து துவங்குகிறது. ஈவாவின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர். வழக்கின் விபரம். நடைபெற்ற முக்கிய விசாரணைகள். சாட்சிகள் எனத் துப்பறியும் கதையைப் போலப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது
விசாரணையின் முடிவில் இஸ்ரேல் அரசு வென்றது. காஃப்காவின் கையெழுத்துப் பிரதிகள் உட்பட அனைத்தையும் ஈவா ஹோஃப் இஸ்ரேல் தேசிய நூலகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அதற்கு ஈடாக அவருக்கு எந்த இழப்பீடும் கிடைக்காது என்றும் தீர்ப்பளித்தது.

காஃப்கா இறந்து 92 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது படைப்புகளின் உரிமை தீர்மானிக்கப்பட்டது. தனது எதிர்ப்பை காட்டும்விதமாக ஈவா தனது தலையை மொட்டை அடித்துக் கொண்டார். அவரது மேல்முறையீடு நிராகரிக்கபட்டது. ஈவாவின் பொறுப்பில் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கபட்டிருந்த ஆறு பெட்டிகள் பலத்த காவலுடன் இஸ்ரேலிய தேசிய நூலகத்தை வந்து அடைந்தன. அவற்றில் இருந்த கடிதங்கள். கதைகளின் கையெழுத்துபிரதிகள். நாட்குறிப்புகளைத் தனியே பிரித்தார்கள். அதன்பிறகு காஃப்கா உலகிற்குச் சொந்தமானவராக மாறத் துவங்கினார்.
இந்த விசாரணையின் போது ஒரு எழுத்தாளரின் படைப்புகள் அவரது சொந்த தேசத்தில் தான் பாதுகாக்கபட வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. நாட்டைவிட்டு வெளியேறிய ரஷ்ய மற்றும் பிறதேச எழுத்தாளர்கள் அதனை விரும்பவில்லை. ஆகவே எழுத்தாளர் விரும்பும் நாட்டில் அவரது படைப்புகள் பாதுகாக்கபட வேண்டும் என்பதே சரி என்ற பரிந்துரை முன்வைக்கப்பட்டது. இன்று நோபல் பரிசு பெற்ற மார்க்வெஸின் படைப்புகள் உள்ளிட்ட பல்வேறு மூலப்பிரதிகள். குறிப்பேடுகள் அமெரிக்கப் பல்கலைகழங்களால் பாதுகாக்கபட்டு வருகின்றன.
எழுத்தாளனின் கையெழுத்துப் பிரதிகள். குறிப்பேடுகள் கடிதங்கள் வெறும் பரிசுப் பொருட்களில்லை. ஆகவே அவற்றைக் கையாளத் தெரியாதவர்கள் வசம் ஒப்படைக்கக் கூடாது என்று இலக்கியவாதிகள் பலரும் குரல் கொடுத்தார்கள். ஆனால் இன்றும் சர்வதே அளவில் நடக்கும் ஏலத்தில் புகழ்பெற்ற எழுத்தாளரின் கடிதம் ஏலத்திற்கு விடப்படுகிறது. கோடிக்கணக்கில் பணம் கொடுத்து அதனை வாங்கிய எவரோ ஒருவர் தனது அலங்கார அலமாரியில் வைத்துப் பெருமை அடைகிறார்.
காஃப்காவின் படைப்புகளைப் பதிப்பிக்கும் பணியும் எளிதாகயில்லை. அவரது திருத்தங்களை முறையாகக் கண்டறிந்து பதிப்பிக்கவும் ஆங்கில மொழியாக்கத்தைச் செம்மைப்படுத்தவும் போராட வேண்டியிருந்தது. இன்றும் அவரது படைப்புகளுக்குப் புதிய மொழிபெயர்ப்புகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.
காஃப்கா தனது காதலிகளில் ஒருவரான மிலேனா ஜெசென்ஸ்காவுக்கு எழுதிய தனிப்பட்ட கடிதங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன, ஆனால் மிலேனாவின் கடிதங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.
காஃப்கா தனது படைப்புகளை எரித்துவிடச் சொன்னதற்கு எந்த நேரடி சான்றும் கிடையாது. அது மாக்ஸ் பிராடால் உருவாக்கபட்ட கற்பனை. ஒருவேளை அவர் தன்னை முதன்மைப்படுத்திக் கொள்ள இப்படி ஒரு நாடகத்தை உருவாக்கியிருக்கலாம் என்ற விமர்சனம் இன்று வரை மறைமுகமாக இருந்து வருகிறது.
ஒவ்வொரு பத்து நாட்களுக்கும் ஒருமுறையும் காஃப்காவின் படைப்புகள் குறித்த ஒரு புதிய புத்தகம் ஏதேனும் ஒரு மொழியில் வெளியிடப்படுகிறது என நியூயார்க்கர் தகவல் தருகிறது. அது உண்மையே.
காஃப்காவின் எழுத்துகள் பெற்ற கவனத்தை, புகழை மேக்ஸ் பிராடின் படைப்புகள் பெறவில்லை. அவர் இன்றும் காஃப்காவின் நிழலாகவே கருதப்படுகிறார். அதற்காகவே கௌரவிக்கபடுகிறார். நிச்சயம் அது மேக்ஸ் பிராடிற்கு வருத்தம் தருவதாகவே இருந்திருக்கும்.
September 28, 2025
குற்றமுகங்கள் 23 தாம்பே
குற்றத்தின் காரணவியல் என்ற புத்தகத்தை எழுதிய டாக்டர் ஆர்.ஜே. பிராங் இந்தியாவில் ஒன்பது ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். அதில் இரண்டு ஆண்டுகள் தென்னிந்தியாவில் களஆய்வு செய்ததாக நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

இவரது ஆய்வின் நோக்கம் எந்தப் பருவ காலத்தில் எது போன்ற குற்றங்கள் அதிகமாகின்றன என்பதைக் கண்டறிவதாகும். அவர் தனது கள ஆய்வில் விசித்திரமான பல உண்மைகளைக் கண்டறிந்தார். இந்தியாவில் அதிகபட்ச கொலைகள் வெப்பமான மாதங்களில் நடைபெறுகின்றன ஆகஸ்ட் மாதத்தில், கிராமப்புற தீ விபத்துகள் அதிகமாகின்றன. அக்டோபர் முதல் ஜனவரி வரை, சாலைகளில் நடைபெறும் குற்றங்கள் அதிகமாகின்றன என்று பட்டியலிடுகிறார். இந்த நூலின் பின் இணைப்பாகச் சில குற்றவாளிகளையும் அவர்களின் விசித்திர இயல்புகளையும் தொகுத்தளித்துள்ளார். அதில் ஒருவராகத் தாம்பே குறிப்பிடப்படுகிறார்.
தாம்பே என்றொரு நகல்குற்றவாளியிருந்தான். அவனது பிரச்சனை என்னவென்றாவ் அவனால் எந்தப் புதிய குற்றத்தையும் செய்ய முடியவில்லை என்பதே. உலகின் எல்லாக் குற்றங்களும் முன்னதாக யாராலோ செய்யப்பட்டிருக்கின்றன. அதைத் திரும்பத் திரும்ப நகலெடுக்கிறார்கள். புதிய குற்றம் என்பது ஒரு கண்டுபிடிப்பு. அதை நிகழ்த்தும் போது அறிய முடியாது. தொடரப்படுவதன் வழியே அது முதல்குற்றமென்ற அங்கீகாரத்தைப் பெறும்.

தாம்பே புதிய குற்றம் ஒன்றை செய்ய விரும்பினான். அதற்காக நிறைய யோசித்தான். இரண்டுவகைக் குற்றங்களை ஒன்று கலப்பதன் மூலம் ஒரு குற்றத்தை புதிதாக உருவாக்கிவிடலாம். ஆனால் அதனை அவன் விரும்பவில்லை. அசலாக ஒன்றை செயல்படுத்த நினைத்தான். பல குற்றங்கள் வயதாகி தளர்ந்துவிட்டதை அவன் அறிவான். இப்போது தீவட்டி கொள்ளையர்கள் எங்கேயிருக்கிறார்கள்.
நகல் குற்றவாளியாக இருப்பதை நினைத்து எவரும் வருத்தப்படுவதில்லை. ஆனால் தாம்பே வருத்தப்பட்டான். ஆகவே புதிய குற்றத்தினைக் கண்டறிய அவன் பழைய குற்றவாளிகளுடன் உரையாடினான். அவர்கள் செய்ய விரும்பிய குற்றங்களைக் கேட்டறிந்தான். அதில் ஏதாவது புதியது இருக்கக் கூடுமோ என ஆராய்ந்தான். பேசப்படும் போது குற்றம் வளர்ந்துவிடுகிறது. அதன் தோற்றம் விசித்திரமாகி விடுகிறது.
இந்தத் தேடுதலில் அவன் ஒரு துறவியைச் சந்தித்தான். துறவி அவனைப் பார்த்து சிரித்தபடியே சொன்னார்
“நீயும் நானும் பிறந்ததே நகலெடுப்பு தானே. குற்றத்திற்கு மூன்று தாயிருக்கிறார்கள். ஒருவர் இருட்டு. மற்றவர் பசி. மூன்றாமவர் சுகம். இவர்கள் தான் குற்றத்தை உருவாக்குகிறார்கள். அவர்களிடம் கேட்டுப்பார் பதில் கிடைக்கும்“
துறவியின் பதில் தாம்பேயிற்குப் புரியவில்லை. அவன் சந்தை வணிகனிடம் சென்று தனது சந்தேகத்தைக் கேட்டான்
“வேடிக்கையாக இருக்கிறது உனது கேள்வி. அனுமதிக்கபட்ட எதுவும் குற்றமில்லை. சந்தர்ப்பம் அனுமதிக்கப்பட்டதையும் குற்றமாக்கும் என வணிகர்கள் அறிவார்கள். குற்றத்திற்கு மூன்று தந்தையிருக்கிறார்கள். பேராசை என்ற ஒருவர். அதிகாரம் என்ற இன்னொருவர். சந்தர்ப்பம் என்ற மூன்றாவது நபர். இவர்களே குற்றத்தை உருவாக்குகிறார்கள். ஒருவேளை உன் கேள்விக்கான விடை அவர்களுக்குத் தெரிந்திருக்ககூடும்“ என்றார்
தாம்பே இந்தப் பதிலாலும் ஏமாற்றமே அடைந்தான். இரவொன்றில் கணிகை ஒருத்தியை சந்தித்தான். அவள் தான் பதில் சொல்வதற்கு முன்பாகத் தனது கால்விரல்களையும் பாதங்களையும் அழுத்திவிடச் சொன்னாள். அப்படி எவரும் தாம்பேயிடம் கேட்டதில்லை
“திருடர்களின் கைகளுக்கு விநோத சக்தியிருக்கிறது. அவர்கள் கால்களை அமுக்கிவிட்டால் கிடைக்கும் சுகம் அலாதியானது“ என்றாள்.
இரண்டு தாமரைமொக்குகள் போலிருந்த அந்தப் பாதங்களைத் தாம்பே மெதுவாக அமுக்கிவிட்டான். விரல்களை நீவிவிட்டான். கண் அயர்ந்தவள் போல இருந்த கணிகை சொன்னாள்
“உடல் தான் குற்றத்தின் கேந்திரம். குற்றத்திற்கு மூன்று சகோதரிகள் இருக்கிறார்கள். ஒருத்தியின் பெயர் சஞ்சலம், மற்றொருத்தியின் பெயர் வேட்கை. மூன்றாவதாக இருப்பவள் அகங்காரம். இவர்களே குற்றத்தை உருவாக்குகிறார்கள். அவர்களிடம் கேட்டுப்பார்“ என்றாள்
தாம்பே குழப்பமடைந்தான். அவனால் புதிய குற்றம் எதுவெனக் கண்டறிய முடியவில்லை. முடிவில் தனக்கு உரிமையான பொருட்களைத் தானே திருடிக் கொள்ளத் துவங்கினான். அப்போது அவனைப் புத்தி பேதலித்தவன் என்று சிலரும் ஞானி என்று சிலரும் அழைக்கத் துவங்கினார்.
தாம்பே போன்றவர்களை இந்தியாவைத் தவிர வேறு எங்கும் காண முடியாது. அவனைப் புரிந்து கொள்வதும் எளிதானதில்லை என்று டாக்டர் ஆர்.ஜே. பிராங் குறிப்பிடுகிறார்,
••
September 26, 2025
திரைப்பயணி 12
திரைப்பயணி தொடரின் 12 வது பகுதியில் Cinema Paradiso திரைப்படம் பற்றி உரையாற்றியுள்ளேன்
September 21, 2025
குற்றமுகங்கள் 22 தகையார்
சிறாக்குடியில் வசித்த தகையாருக்கு எழுபது வயதிருக்கும். ஆறரை அடி உயரம். நெற்றியில் குங்குமம் வைத்திருப்பார். உறுதியான உடற்கட்டு. நரைத்த தலைமயிர். நெய் தடவி வளர்த்த அடர்த்தியான மீசை. தாடி. இடது காதில் இரண்டு மயிர் நீண்டிருந்தது. எருமைத்தோல் செருப்பு அணிந்திருப்பார். இடுப்பில் ஒரு குறுவாள் சொருகப்பட்டிருக்கும்.

தகையார் தானாக எதையும் திருட மாட்டார். யாராவது திருடித் தரும்படி வேண்டுகோள் வைத்தால் மட்டுமே திருடுவார். அதுவும் அந்த வேண்டுகோள் நியாயமாக இருக்கும் பட்சத்தில் தான் திருடுவார். அப்படித் திருடிக் கொடுப்பதை ஒரு சேவையாகக் கருதினார்.
இதனை வெள்ளைக்கார அதிகாரிகள் புரிந்து கொள்ளவில்லை. அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க விரும்பினார்கள். ஆனால் தகையார் எப்படித் திருடுகிறார் என அவர்களால் கண்டறிய முடியவில்லை. அவர் திருடியதற்கு எந்தச் சாட்சியமும் இல்லை.
தகையாரின் வீடு மிகப் பெரியது. அந்த வீட்டின் அறைகளை ஒன்றோடு ஒன்று இணைந்துள்ள விதம் விநோதமானது. நிஜமான கதவுகளையும் பொய்க்கதவுகளையும் பொருத்தியிருந்தார். பொய்கதவினை திறக்கவே முடியாது.
எந்த அறையில் தகையார் உறங்குகிறார் என்பதை யாரும் கண்டுபிடிக்க முடியாது. தகையாரிடம் உதவி கேட்பதற்காக வருகிறவர்கள் அவரை நேரில் சந்திக்க இயலாது. அவரது வீட்டில் காடி அப்பையா என்றொரு எழுத்தர் இருந்தார். அவரிடம் தான் முறையிட வேண்டும்.
எதை எல்லாம் திருட வேண்டும் , ஏன் திருட வேண்டும் என்று ஜனங்கள் சொல்லும் கதைகளை அன்றாடம் கேட்ட காடி அப்பையாவிற்கு மனிதர்களின் விருப்பம் அச்சமூட்டியது.
தகையாரிடம் வேண்டுதல் கொடுப்பதற்காக எப்போதும் அவரது வீட்டின் வாசலில் மக்கள் காத்திருந்தார்கள். வேண்டுகோள் நிறைவேறாத போது என்றாவது அது நடந்துவிடும் என வீட்டின் முன்பாகவே காத்துகிடந்தார்கள். அவர்களுக்குத் தகையாரே உணவளித்தார்.

தகையாரை எச்சரிக்கை செய்வதற்காகக் காவல்துறை அதிகாரி ஜோர்டன் செம்பழுப்பு நிறக் குதிரையில் சிறாக்குடி வந்திருந்தான். அவனை வீட்டுவாசலில் நிறுத்தி அனுமதி கிடைக்கும்வரை காத்திருக்கும்படியாகச் சொன்னார் அப்பையா. இரண்டு நாட்கள் காத்திருப்பின் பின்பு மூன்றாம் நாள் ஜோர்டனை தனது வீட்டிற்குள் வரும்படி தகையார் அழைத்தார்.
வீட்டின் சுவர்களில் பெரியதும் சிறியதுமாக நிறையக் கண்கள் வரையப்பட்டிருப்பதைக் கண்ட ஜோர்டன் அதிர்ச்சியோடு நடந்தான்.
அந்த அறை மிகப்பெரியதாக இருந்தது. தென்பக்கச் சுவரில் மயிலின் ஒவியம் மிகப்பெரியதாக வரையப்பட்டிருந்தது. அந்த ஓவியத்தைப் பார்த்தபடியே ஜோர்டனுக்கு முதுகுகாட்டி நின்றிருந்தார் தகையார், ஜோர்டனை அவர் திரும்பி பார்க்கவேயில்லை. அது தன்னை அவமதிப்பதாகவே ஜோர்டன் உணர்ந்தான்.
“ திருட்டுச் செயல்களை நிறுத்திக் கொள்ளாவிட்டால் கைது செய்து தூக்கிலிட வேண்டியது வரும்“ என ஜோர்டன் எச்சரிக்கை செய்தான்.
“தான் செய்வது குற்றமில்லை. உபகாரம். இது எனது நீதி பரிபாலனம்“ என்றார் தகையார்
ஜோர்டன் ஆத்திரத்துடன் “திருடுவது நீதிபரிபாலனத்தில் எப்படி வரும் “எனக்கேட்டான்.
“எங்கள் நீதியை கேள்விகேட்பதற்கு நீங்கள் யார். என் மீது யார் புகார் அளித்திருக்கிறார்கள். என்னை விசாரணை பண்ணும் உரிமையை யார் உங்களுக்கு அளித்தது. “எனக் கோபமாகக் கேட்டார் தகையார்
“இந்தியாவை விக்டோரியா மகாராணியின் ஆட்சி செய்கிறார். நாங்கள் அவரது ஊழியர்கள். அதிகாரம் செய்வதற்கு எங்களுக்குச் சகல உரிமைகளும் அளிக்கபட்டிருக்கிறது“ என்றான் ஜோர்டன்
“உங்கள் அதிகாரத்தை வைத்து முடிந்தால் இந்த வீட்டிலிருந்து வெளியேறி போங்கள்“ என்றபடியே தகையார் எழுந்து தனக்குப் பின்னால் இருந்த கதவைத் தள்ளி திறந்து வெளியேறிப் போனார்.
ஜோர்டன் வெளியேறும் வாசல்கதவை திறந்து அடுத்த அறைக்குள் வந்தான். அவனால் வீட்டிலிருந்து வெளியேற முடியவில்லை. வீட்டிற்குள்ளாகவே சுற்றிக் கொண்டிருந்தான். பகல்முடிந்து இரவாகியது. இருட்டிற்குள் நடந்து கொண்டேயிருந்தான். எப்படி வெளியேறுவது எனத் தெரியாமல் அலறினான். கதவு என நினைத்துக் கொண்டு சுவரைத் திறக்க முயன்று தோற்றான்.
மயங்கி கிடந்த அவனை யார் வீட்டின் வெளியே தூக்கிப் போட்டார்கள் எனத் தெரியவில்லை. அவன் கண்விழித்தபோது மரத்தடியில் கிடந்தான். சூரியன் ஒளிர்ந்து கொண்டிருந்தது. ஆத்திரமும் குழப்பமும் கொண்ட ஜோர்டன் தகையாரின் வீட்டை வெறித்துப் பார்த்தான். அது விநோதமான மலர் ஒன்றைப் போலத் தோன்றியது.
தகையாரைப் பற்றி ஜோர்டன் அனுப்பிய குறிப்பின் அடிப்படையில் மதராஸ் கம்பெனியின் பத்தொன்பதாவது படைப்பிரிவு இரண்டு பீரங்கி மற்றும் நூற்று இருபது வீரர்களுடன் தகையாரை கைது செய்வதற்காக அனுப்பி வைக்கபட்டது.
அவர்களைத் தகையார் வீட்டுவாசலில் காத்திருந்த மக்கள் தடுத்துச் சண்டையிட்டார்கள். படைப்பிரிவு அவர்களை அடித்து ஒடுக்கியது. நிறையப் பேர் சண்டையில் கொல்லப்பட்டார்கள். தகையார் வீட்டிற்குள் சென்றால் மீள முடியாது என்பதால் வீட்டை பீரங்கி வைத்து தகர்த்தார்கள்.
வீடு தரைமட்டமாக நொறுங்கியது. ஆனால் தகையாரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் வயல் எலியைப் போலப் பூமிக்குள் ஒளிந்து கொண்டிருப்பார் என்று மக்கள் நம்பினார்கள்.
தகையார் இல்லாத காலத்திலும் அவரிடம் வேண்டுதல் போடுவது மாறவில்லை. தனது மனதிலுள்ள குறையைச் சொல்லி தகையாரே செய்து கொடுங்கள் என இருளில் ஒரு கல்லை எடுத்து வீசினால் அவர் செய்துகொடுத்துவிடுவார் என்று மக்கள் நம்பினார்கள். கம்பெனியால் இந்த நம்பிக்கையைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. புரிந்து கொள்ளவும் முடியவில்லை.
••
September 20, 2025
கார்லோஸின் பொய்கள்
கிளாடியா ரெய்னிக்கே இயக்கிய ரெய்னாஸ் Reinas (Queens) திரைப்படம் 2024ல் வெளியானது. இப்படம் பதின்வயதுப் பெண்ணின் மனநிலையை, உணர்ச்சிகளை, ரகசியங்களை மிகவும் அழகாகப் பதிவு செய்துள்ளது.

பதின்வயது பெண்ணான அரோரா தனது தோழிகளுடன் உரையாடும் விதம். தங்கை லூசியாவிடம் ரகசியத்தைப் பகிர்ந்து கொள்வது. அம்மாவிற்கும் மகளுக்கும் வரும் சண்டை. உணவகத்தில் சாப்பிடும் விதம் எனப் படம் நிஜமான உணர்ச்சிகளை, நிஜமான விதத்தில் வெளிப்படுத்தியுள்ளது. அரோரா மற்றும் லூசியா இருவரும் அழகான கதாபாத்திரங்கள்.
1992 ஆம் ஆண்டு லிமா நகரில் கதை நடக்கிறது. பெருவின் உள்நாட்டுப் போர் மற்றும் பொருளாதாரச் சரிவின் காரணமாகக் கிளர்ச்சியாளர் லிமா நகரில் தொடர் தாக்குதல்களை நடத்துகிறார்கள். அவர்களை ஒடுக்க ராணுவம் மற்றும் காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுக்கிறது. இந்தச் சூழலில் நாட்டிலிருந்து வெளியேறி தனது பிள்ளைகளுடன் அமெரிக்கா செல்ல முடிவு செய்கிறாள் எலினா
கணவன் கார்லோஸை பிரிந்து வாழும் எலெனா தனது மகள்களைத் தன்னோடு அமெரிக்கா அழைத்துப் போவதற்குக் கணவனின் ஒப்புதல் கடிதத்தை எதிர்பார்க்கிறாள்.

தேசத்தை விட்டு தனது பிள்ளைகள் பிரிந்து போவதற்கு முன்பாக அவர்களுடன் கொஞ்சம் நேரத்தை செலவிடக் கார்லோஸ் விரும்புகிறான். அதனை எலோனா அனுமதிக்கிறாள்.
தனது காரில் அவர்களைக் கடற்கரைக்கு அழைத்துப் போகிறான். சிறுமி லூசியாவிடம் தான் காவல்துறையின் சீக்ரெட் ஏஜெண்ட் என்று பொய் சொல்கிறான். அவளுடன் உற்சாகமாகக் கடலில் நீந்துகிறான். அதே கடற்கரையில் மூத்தமகள் தனது ஆண்நண்பர்களுடன் பழகுவதைக் காணுகிறான். கடன் வாங்கிய காரில் லிமாவிற்கு வெளியே அமைந்துள்ள மணற்குன்றிற்கு அழைத்துப் போய் மகிழ்ச்சிப்படுத்துகிறான்.
அந்தப் பயணத்தில் கார்லோஸ் தனது இரண்டு மகள்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பதைப் பற்றி மட்டுமே நினைக்கிறான். அவனது பார்வை அவர்கள் மீதே குவிந்திருக்கிறது
பிள்ளைகளின் பயண அனுமதியை தனது கணவன் தர மாட்டான் என எலெனா நினைக்கிறாள். ஆகவே அவனிடமிருந்து எப்படியாவது அனுமதி கடிதம் வாங்கிவிட வேண்டும் என நினைக்கிறாள்.
நீண்டகாலத்தின் பின்பு தந்தையோடு மகிழ்ச்சியான நேரத்தை செலவிட்ட அரோரா அவருடன் லிமாவிலே தங்கிவிட விரும்புகிறாள். இதனை எலெனா ஏற்கவில்லை.

ஒரு இரவில் தந்தையைத் தேடி அரோரா மற்றும் லூசியா வீட்டைவிட்டு வெளியேறிச் செல்கிறார்கள். ஊரடங்கு காலம் என்பதால் காவல்துறை அவர்களைக் கைது செய்கிறது. காவல்துறையின் வாகனத்தில் செல்லும் போது அரோராவிடம் வெளிப்படும் அச்சம் நிஜமானது. காணாமல் போன பிள்ளைகளைத் தேடி வரும் எலெனா அவர்களைக் காவல்நிலையத்தில் கண்டுபிடித்து மீட்கிறாள்.
கார்லோஸை அவனது நண்பர்கள் முட்டாள். பைத்தியக்காரன் என்று சொல்கிறார்கள். அவன் தனது வேலை மற்றும் வசிப்பிடத்தை மறைத்துக் கொண்டு வாழுகிறான். பிள்ளைகளின் மனதில் தான் நல்லவன் என்ற எண்ணம் உருவாக வேண்டும் என்பதற்காக எதையும் செய்யத் தயாராகயிருக்கிறான். அதற்காகவே நிறையப் பொய்கள் சொல்கிறான்.
கார்லோஸ் எங்கே வசிக்கிறான், எப்படி வாழ்கிறான் என்பது அந்தக் குடும்பத்திற்குத் தெரியாது. அவன் பழைய கார் ஒன்றை ஒட்டுகிறான். அது தான அவனது வீடு. கையில் உள்ள காயத்தைக் காட்டி தான் ஒரு முதலை வேட்டைக்காரன் என்று சொல்கிறான். கார் டிக்கியை திறந்து அதிலிருந்த தனது உடை ஒன்றை எடுத்து மாற்றிக் கொள்கிறான். பொருளாதார ரீதியாக அவன் ஒரு தோற்றுப் போன மனிதன் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தனது பிள்ளைகளின் முன்னால் கார்லோஸ் தனது நிஜத்தைக் காட்ட விரும்பவில்லை. காவல்நிலையத்தில் கூட நடிக்கவே செய்கிறான்.
உண்மையில் கார்லோஸ் மற்றும் எலோனா இவரும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக, நல்வாழ்வுக்காகப் போராடுகிறார்கள்.
அரோராவிற்குத் தனது தோழிகள் மற்றும் காதலனை விட்டு அமெரிக்கா செல்வதற்குப் பிடிக்கவில்லை. ஆனால் சிறுமியான லூசியா அம்மாவோடு வெளிநாடு போக விரும்புகிறாள். அவர்கள் இருவருக்குள்ளும் ஏற்படும் சண்டை. கோபம். நெருக்கம் மிகவும் அழகாகக் காட்சிப்படுத்தபட்டிருக்கிறது
பதின்வயது பிள்ளைகளின் உலகம் பெற்றோர் அறியாதது. ரகசிய ஆசைகள் நிரம்பியது. மகளின் உணர்ச்சிகளை, ரகசியங்களை எலோனா உணர்ந்து கொள்கிறாள். அவளைச் சமாதானப்படுத்த முயலுகிறாள். ஆனால் தன்னை மகள் புரிந்து கொள்ளாத போது ஆத்திரம் அடைகிறாள். மூடப்பட்ட கதவின் முன்னால் எலோனா நிற்கும் காட்சி மறக்க முடியாதது. அது வெறும் கதவில்லை. மறுப்பு. இடைவெளி. நிராகரிப்பு. அதை அவள் முழுமையாக உணர்ந்துவிடுகிறாள்.
வீட்டில் நடக்கும் விருந்தின் போது எல்லோரும் சேர்ந்து குடும்பப் புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொள்கிறார்கள். அப்போது வீட்டின் பணிப்பெண் அந்தப் புகைப்படத்தில் இடம்பெற விரும்பவில்லை என விலகிக் கொள்கிறார். தான் அவர்கள் குடும்பத்துடன் இருந்தாலும் அவர்களில் ஒருவரில்லை என்று அழுத்தமாகச் சொல்கிறாள். அது தான் கார்லோஸின் குரலும். அதைப் படத்தில் கார்லோஸ் தனது பார்வையிலே உணரச் செய்கிறான்.
மின்சாரம் துண்டிக்கபட்ட வீட்டில் மெழுகுவர்த்தி ஒளியில் அரோராவை தேடுவது. காவல்துறை வாகனத்தில் அரோரா மீது டார்ச் அடிக்கபடுவது. மணற்குன்றுக் காட்சிகள். கடற்கரை காட்சிகள். என படத்தின் ஒளிப்பதிவு சிறப்பானது. அரோராவாக லுவானா வேகா நன்றாக நடித்துள்ளார்.
இயக்குநர் ரெய்னிக்கே தனது பத்து வயதில் பெருவிலிருந்து வெளியேறியவர். ஆகவே இப்படம் அவரது சொந்த வாழ்க்கையிலிருந்து உருவாக்கபட்டிருக்கிறது. கைவிடப்பட்ட கார்லோஸின் வாழ்க்கை ஒரு தளம். எலோனாவின் அமெரிக்கக் கனவு மறுதளம். இரண்டிற்கும் நடுவே பிள்ளைகள் ஊசலாடுகிறார்கள். அதனைப் படம் மிகவும் இயல்பாக, நேர்மையாகப் பதிவு செய்துள்ளது.
திரைப்பயணி 11
திரைப்பயணி தொடரின் 11 வது பகுதியில் Doctor Zhivago திரைப்படம் குறித்து உரையாற்றியுள்ளேன்
September 18, 2025
இஸ்தான்புல்லின் கண்
அரா குலார் (Ara Güler) துருக்கியின் தலைசிறந்த புகைப்படக்கலைஞர். இவர் தன்னை Visual Historian என்றே அடையாளப்படுத்துகிறார். 2018ல் காலமான இவரது புகைப்படங்களை வரலாற்று ஆவணங்களாகக் கருதுகிறார்கள். இஸ்தான்புல்லின் கண் என்று இவரைக் கொண்டாடுகிறார்கள்.

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஓரான் பாமுக் இஸ்தான்புல் குறித்த தனது நூலில் இவரைக் குறிப்பிடுகிறார். அத்துடன் இவரது புகைப்படங்களையும் பயன்படுத்தியிருக்கிறார்.
புகழ்பெற்ற ஆளுமைகளை மட்டுமின்றி தினசரி வாழ்க்கை காட்சிகளையும் அற்புதமாகப் படம் பிடித்திருக்கிறார்.
பிக்காசோ, டாலி உள்ளிட்ட புகழ்பெற்ற ஓவியர்களையும் திரை நட்சத்திரங்களையும் இவர் எடுத்த புகைப்படங்கள் அபாரமானவை. இவர் எடுத்த யாசர் அராபத்தின் புகைப்படம் டைம் இதழின் அட்டையில் இடம்பெற்றுள்ளது.
இஸ்தான்புல்லின் மாறிவரும் முகத்தை அரா குலார் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக வீதிகள். கடைகள். வாகனங்கள். பணியிடக் காட்சிகள், கட்டிடக்கலையின் உருவான மாற்றங்களை இவரது புகைப்படங்களின் வழியே துல்லியமாக அறிந்து கொள்ள முடிகிறது
அந்தக் கறுப்பு வெள்ளை புகைப்படங்கள் காலத்தின் ஒவியமாகக் கருதப்படுகின்றன.



அவரது புகைப்படங்களின் சிறப்பம்சம் ஒளி மற்றும் நிழலின் நாடகமாகும். புகைப்படத்தில் வெளிப்படும் ஆழ்ந்த உணர்ச்சி வெளிப்பாடு தனித்த அழகியலை உருவாக்குகிறது.
புகைப்படக்கலைஞராக மட்டுமின்றிப் பத்திரிக்கையாளராகவும் ‘குலார் விளங்கினார். இவரைப் பற்றிய இந்தச் செய்தி தொகுப்பில் குலார் தனது பார்வையில் புகைப்படக்கலையைப் பற்றிச் சிறப்பாக விவரிக்கிறார்.
Thanks
Ara Güler
Museum of Islamic Art
September 17, 2025
செய்தியும் கதையும்
தமிழக அரசால் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தின் அழைப்பில் நேற்று அங்கே சென்று செய்தியும் கதையும் என்ற தலைப்பில் உரையாற்றினேன்.

கதையும் செய்தியும் எப்படி வேறுபடுகிறது, நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்களான ஹெமிங்வே, மார்க்வெஸ் போன்றவர்கள் எப்படிப் பத்திரிக்கையுலகிலிருந்து எழுத்தாளர்களாக உருவானார்கள். பாரதியார், காந்தியடிகள் நடத்திய பத்திரிக்கைகள். தமிழ் இலக்கியத்தின் தனித்துவமான விஷயங்கள். டிஜிட்டில் உலகில் செய்தியின் இடம் மற்றும் தரம். இளம் பத்திரிக்கையாளர் பயில வேண்டிய அடிப்படைகள் விஷயங்கள் எவை என்பது குறித்து எனது உரை அமைந்தது.
இந்நிகழ்வில் இதழியலில் முதுகலை டிப்ளமோ பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
எனது உரையைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடல் உற்சாகமாக இருந்தது.
சென்னை இதழியல் நிறுவனத்தின்’ தலைமை இயக்குநர் ஏ.எஸ். பன்னீர்செல்வம் அவர்களைச் சந்தித்து உரையாடியது மகிழ்ச்சி அளித்தது.
இந்த நிகழ்விற்குக் காரணமான நண்பரும் இதழியல் நிறுவன இயக்குநருமான எம். குணசேகரன் அவர்களுக்கு அன்பும் நன்றியும்
••
September 15, 2025
தி காட் ஃபாதர் / சிறப்புக் காட்சி.
தி காட் ஃபாதர் படத்தின் சிறப்புக் காட்சிகள் சென்னையின் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன. நேற்று இரவு அதனைக் காணுவதற்காகச் சென்றிருந்தேன். அரங்கு நிறைந்த கூட்டம். பெரிதும் இளைஞர்கள். அதிலும் திரைத்துறையில் பணியாற்றும் இளைஞர்கள். தி காட் ஃபாதர் படத்தை எல்டி, ப்ளூ ரே டிஸ்க் வழியாகப் பலமுறை பார்த்திருக்கிறேன். ஆயினும் அதனைத் திரையில் காணுவது பரவசமளிக்கும் அனுபவம்.

1972ல் வெளியான இப்படம் ஐம்பது ஆண்டுகளைக் கடந்ததை முன்னிட்டு 2022ல் சிறப்புக்காட்சிகளைத் திரையிட்டார்கள். அன்றும் இதே அளவு வரவேற்பும் கூட்டமும் இருந்தது. அப்போதும் திரையரங்கிற்குச் சென்று பார்த்தேன். மூன்று மணி நேரத் திரைப்படம்.
நேற்று திரையில் மார்லன் பிராண்டோ பெயர் ஒளிரும் போது அரங்கில் விசில் சப்தமும் கைதட்டுகளும் ஒங்கி ஒலித்தன. விட்டோ கோர்லியோனாக அவரைத் தவிர யாரும் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது. அவரது உடல்மொழி, உடை. பேசும் விதம். கண்களில் உணர்ச்சியைக் காட்டும் அழகு என அற்புதம் செய்திருக்கிறார்.
படத்தின் துவக்க காட்சியில் எழும் நினோ ரோட்டாவின் இசை நிகரற்றது. படத்தின் தனிச்சிறப்புகளில் முக்கியமானது நினோ ரோட்டாவின் இசை. மனதை விட்டு நீங்காத இசைக்கோர்வைகள்.
கார்டன் வில்லிஸ் ஒளிப்பதிவு அபாரம். கதாபாத்திரங்களின் மனநிலையை வெளிப்படுத்தும் ஒளியும் இருளும் கலந்த காட்சிகள் மூலம் தனித்த அழகியலை உருவாக்கியுள்ளார்.
அல் பசினோ, ஜேம்ஸ் கேன், ராபர்ட் டுவால், ஸ்டெர்லிங் ஹேடன், டயானா கீட்டன் எனத் தேர்ந்த நடிகர்கள். சிறந்த கலை இயக்கம். நேர்த்தியான இசை, படத்தொகுப்பு. கொப்போலாவின் இயக்கம் என ஹாலிவுட் சினிமாவிற்குத் தி காட் ஃபாதர் புதிய பாதையை உருவாக்கியது.

இத்தாலிய பண்பாட்டினையும் உணவினையும் வழிபாட்டு முறையினையும் படம் நுணுக்கமாகப் பதிவு செய்துள்ளது. அமெரிக்காவில் குடியேறிய இத்தாலியர்களின் வரலாறும் பங்களிப்பும் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. அதில் இந்தக் குற்றவுலகம் எப்படி உருவானது என்பதையும் பதிவு செய்திருக்கிறார்கள்.
குற்றவுலகிற்கும் அறம் தேவைப்படுகிறது. விசுவாசத்தை பிரதானமாக நினைக்கிறார்கள். ஐந்து குடும்பங்கள் ஒன்று சேர்ந்து நடத்தும் கூட்டத்தில் அந்த அறம் குறித்து விவாதிக்கபடுகிறது. பகையை கைவிடுவது எளிதானதில்லை. மகனை இழந்த இரண்டு தந்தைகள் பேசிக் கொள்வது அழகான காட்சி.
குற்றவுலகின் நாயகர்கள் எதிர்பாராத மரணத்தை சந்திக்கிறார்கள். அவர்கள் சாவு மின்சாரம் துண்டிக்கபடுவது போல சட்டென நடந்து முடிந்துவிடுகிறது. படத்தின் முடிவில் அப்படியான உணர்வே ஏற்படுகிறது.
கோர்லியோன் குடும்பத்தின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்துகிறார். குடும்ப உறவுகளின் நெருக்கம் மற்றும் உணர்ச்சிபூர்வமான வெளிப்பாடு படத்தில் சிறப்பாக காட்சிப்படுத்தபட்டிருக்கிறது. தனது தங்கை அடிபட்டதைக் கண்டு சன்னி ஆவேசமடைவது, சன்னியின் இறப்பு செய்தியை அவனது அம்மாவிடம் எப்படி சொல்வது என்ற தயக்கம். மகள் மீது கோர்லியோன் காட்டும் அன்பு, பேரனுடன் அவர் விளையாடுவது என குடும்ப உறவுகளை படம் அழகாக சித்தரித்துள்ளது.
பிரான்சிஸ் ஃபோர்டு கொப்போலாவின் பூர்வீகம் இத்தாலி. அவரது தந்தை ஒரு இசைக்கலைஞர். அவர் அமெரிக்காவில் குடியேறி இசைத்துறையில் பணியாற்றியுள்ளார். ஆகவே தான் கொப்போலாவை இந்தப் படத்தின் இயக்குநராகத் தேர்வு செய்தார்கள்
இதன் திரைக்கதையை எப்படி எழுதினோம் என மரியோ புசோ ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.
இயக்குநருக்கான சம்பளத்துடன் படத்தின் வசூலில் ஆறு சதவீதம் தருவதாகக் கொப்போலாவுடன் தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தார்கள்.ஆகவே படம் அடைந்த வெற்றி அவருக்குப் பெரிய பணத்தை அள்ளிக் கொடுத்தது.
நேற்று இந்தப் படத்தினைப் பார்த்தபோது நியூயார்க் நகரில் செயல்பட்ட ஐந்து இத்தாலிய அமெரிக்க மாஃபியா குடும்பங்களைப் பற்றிப் படம் அதிகமாக விவரிக்கவில்லை என்பது புரிந்தது.
போர்ஹெஸ் தனது புனைவில் நியூயார் கேங்ஸ்டர் மாங்க் ஈஸ்ட்மேன் குறித்தும் அவனுக்கும் போட்டியாளரான இருந்த பால் கெல்லியின் ஃபைவ் பாயிண்ட்ஸ் கும்பலைப் பற்றியும் குறிப்பிடுகிறார். இதனை மையமாகக் கொண்டே Gangs Of New York படம் உருவாக்கபட்டிருக்கிறது.
குற்றவுலகமான போதை மருந்து, கடத்தல். மது, சூதாட்டம், அரசியல், மோசமான காவல்துறை, பேராசை கொண்ட வணிகர்கள் என யாவும் இந்தப் படத்தில் ஒன்று கலந்துள்ளன.
தி காட்பாதர் படத்திற்கு முன்னோடியாக உள்ளவை ஹாலிவுட்டின் Film noir படங்களே. அவை குற்றவுலகை, அதன் மனிதர்களை நிஜமாகச் சித்தரித்தன. Film noir படங்களிலிருந்து தி காட்பாதர் பெண் கதாபாத்திரங்களை உருவாக்குவதில் வேறுபட்டிருக்கிறது. இதில் வரும் பெண்கள் குற்றவாளியைக் காதலிப்பவர்கள். தியாகம் செய்பவர்கள். அல்லது அந்த உலகை பற்றி அறிந்து கொள்ளாமல் குழந்தை, குடும்பம் என வாழ்க்கையை நடத்துகிறவர்கள். கோர்லியோனின் மனைவி. மைக்கேலின் மனைவி, மைக்கேலின் தங்கை என எல்லாப் பெண்களும் குற்றவுலகால் விழுங்கப்பட்டவர்களே.
படத்தின் துணைகதாபாத்திரங்கள் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறார்கள். மனதில் நிற்கும்படியாக நடிப்பும் அமைந்துள்ளது. பெரிதும் அரங்கிற்குள்ளாகப் படமாக்கபட்டிருந்தாலும் 1940களின் காலகட்டத்தை மறுஉருவாக்கம் செய்வதில் துல்லியமாகச் செயல்பட்டிருக்கிறார்கள்.
போலீஸ் மைக்கேல் மீது கைவைக்கும் போது தான் கதை உண்மையான திருப்பத்தைத் துவங்குகிறது. அங்கிருந்து மைக்கேல் உருமாறிவிடுகிறான்.
படத்தில் இடம்பெற்றுள்ள பல வசனங்களைத் திரையரங்கில் கைதட்டிக் கொண்டாடினார்கள். இந்தியத் தணிக்கை காரணமாகப் படத்தில் சில காட்சிகளைத் துண்டித்திருக்கிறார்கள்.
சிறிய அரங்கில் திரையிடுவதற்குப் பதிலாகப் பெரிய அரங்கில் இதனைத் திரையிட்டிருந்தால் இன்னும் அதிகமானோர் பார்த்திருக்க முடியும். செய்வார்கள் என்றே நினைக்கிறேன்.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

