S. Ramakrishnan's Blog, page 155

December 17, 2020

புத்தக வெளியீட்டுவிழா

தேசாந்திரி பதிப்பகம் சார்பில் டிசம்பர் 25 மாலை எனது ஆறு நூல்களின் வெளியீட்டு விழா நேரலையில் நடைபெறவுள்ளது. அதன் அழைப்பிதழைப் பகிர்ந்திருக்கிறேன்.





விருப்பமான வாசகர்கள், நண்பர்கள் இந்த நேரலை நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்





ஸ்ருதி டிவி யூடியூப் பக்கம் மற்றும் ஸ்ருதி டிவி முகநூல் பக்கத்தில் இந்த நேரலை ஒளிபரப்பாகும்.





2 likes ·   •  1 comment  •  flag
Share on Twitter
Published on December 17, 2020 22:53

December 16, 2020

இலக்கியப் பேருரை

டிசம்பர் 18 வெள்ளிகிழமை மாலை 4 மணிக்கு பி ஃபார் புக்ஸ் புத்தகக் கடையில் கிரேக்க நாடகமான ஈடிபஸ் குறித்து சிறப்புரை நிகழ்த்த இருக்கிறேன்









சிறிய இடம் என்பதால் குறைவான நபர்களே கலந்து கொள்ள முடியும், ஆகவே முன்பதிவு செய்தல் அவசியம்.





9042461472 தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.









முகவரி





பி ஃபார் புக்ஸ் எஸ் ஜிபி நாயுடு காம்ப்ளெக்ஸ் தண்டீஸ்வரம் பேருந்து நிறுத்தம்
பாரதியார் பார்க் எதிரில் வேளச்சேரி சென்னை 31





 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 16, 2020 04:11

December 14, 2020

நேரலை நிகழ்ச்சி

தேசாந்திரி வெளியீடு 2020



டிசம்பர் 25 மாலை எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா தேசாந்திரி பதிப்பகத்தில் நடைபெறவுள்ளது.





வழக்கமாக ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறும் எனது புத்தக வெளியீட்டு விழா இந்த ஆண்டு கரோனா காரணமாக அரங்க நிகழ்வாக நடைபெறவில்லை.





ஆகவே டிசம்பர் 25 மாலை நாலரை மணிக்கு தேசாந்திரி பதிப்பகத்திலிருந்து ஸ்ருதி டிவி நேரலை நிகழ்ச்சியின் மூலம் புத்தக வெளியீடு மற்றும் வாசகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெறவுள்ளது.





இதில் விருப்பமான வாசகர்கள் கலந்து கொண்டு கேள்விகள் கேட்கலாம்.









நேரலை விபரங்கள் குறித்து கூடுதல் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.





 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 14, 2020 23:35

December 13, 2020

நூலக மனிதர்கள் 29 கதையும் திரையும்.






ஒரு திரைக்கதையை எழுதுவதற்காகத் தான் ரவிச்சந்திரன் பொதுநூலகத்திற்கு வருகை தர ஆரம்பித்தான். அவனைப் போன்ற உதவி இயக்குநர்களுக்கு நூலகம் தான் எழுதுவதற்கான இடம். பூங்காவில் அமர்ந்து எழுத முடியாது. எந்த நேரமும் ஆள் நடமாட்டம் சப்தம் இருக்கும். தனியே அமர்ந்து எழுதுவதற்கு இவ்வளவு பெரிய நகரில் இடமே கிடையாது.





நூலகத்தில் தேவையான புத்தகங்களை எடுத்துப் படித்துக் கொள்ளலாம். எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தாலும் கேள்வி கேட்கமாட்டார்கள். சில நேரம் அவனைப் போன்ற உதவி இயக்குநர்கள் யாராவது வந்து சேர்ந்துவிட்டால் ஒன்றாகத் தேநீர் குடிக்கலாம். சேர்ந்து சாப்பிடப் போகலாம். சினிமா உதவி இயக்குநர்களுக்குப் பொதுநூலகங்கள் தான் ஒரே புகலிடம்.





சினிமாவின் மற்ற துறைகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் திரைக்கதை எழுதுவதற்கு எந்தப் பயிற்சியும் கிடைப்பதில்லை. இன்றிருப்பது போல அன்று திரைப்படப்பள்ளிகள் தனியார் நிறுவனங்களும் கிடையாது.





திரைப்படம் ஒன்றில் சேர்ந்து பணியாற்றித் திரைக்கதையை கற்றுக் கொள்வதே ஒரே வழி. அதுவும் இயக்குநர் திரைக்கதையின் ரகசியங்களைக் கற்றுத் தர மாட்டார். நாமாகக் கற்றுக் கொள்ள வேண்டியது தான். ஆகவே ரவிச்சந்திரன் இவ்வளவு ஆயிரம் புத்தகங்கள் உள்ள நூலகத்தில் திரைக்கதை எழுத வழி கிடைக்காதா என்று முட்டி மோதிக் கொண்டிருந்தான்.





திரைத்துறையில் ஆண்டுக்கு ஐநூறு கோடிக்கும் மேல் பணம் செலவழிக்கப்படுகிறது. ஆனால் திரைக்கலையைப் பயில விரும்புகிறவர்களுக்கு எனத் தனி நூலகம் கிடையாது. வழிகாட்டும் நூல்கள் கிடையாது. திரைப்படத்துறையின் சார்பிலே அது போன்ற பெரிய நூலகமும் திரையிடலும், இலவச திரைக்கல்வியும் பயிற்றுவிக்கலாம் தானே.





1990களின் துவக்கத்தில் ரவிச்சந்திரன் சினிமாவில் சேருவதற்காகச் சென்னைக்கு வந்து சேர்ந்தான். ஒரு புது இயக்குநரிடம் சேருவதற்கே ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. நான்கு நண்பர்களுடன் ஒரு அறையில் தங்கியிருந்தான். அதற்கு மாதம் நூறு தர வேண்டும். சாப்பாட்டுச் செலவு, பயணம், டீ சிகரெட் என இன்னும் முந்நூறு தேவைப்படும். ஆனால் அதற்கு ஏற்ப வருமானம் கிடையாது. கடன் வாங்கித் தான் வாழ்க்கையை ஒட்டினான்.





அவனைப் படம் பண்ணச் சொல்லி ஒரு தயாரிப்பாளர் முன்வந்திருந்தார். அவர் திருப்பூரைச் சேர்ந்தவர். வெளிநாட்டு ஏற்றுமதி செய்கிறவர். அவர் சென்னைக்கு வரும் ஒவ்வொரு முறையும் ரவிச்சந்திரன் அறையில் தான் தங்கிக் கொள்வார். ரவிச்சந்திரன் சாப்பிடும் மெஸ்ஸில் தான் சாப்பிடுவார். டவுன்பஸ்ஸில் தான் போய்வருவார்.
இப்படி இருப்பவர் எப்படிப் படம் எடுப்பார் என்று ரவிச்சந்திரனிடம் கேட்டேன்





அவருக்கு எண்பது லட்சம் பணம் வரவேண்டியது இருக்கு. அது வந்தவுடனே படம் ஆரம்பிச்சிர வேண்டியது தான்





இப்படிச் சொல்லிச் சொல்லியே ஒரு வருஷத்தை அந்தத் தயாரிப்பாளர் கடத்திக் கொண்டு போனார். அவர் தன் சொந்தவேலைகளை முடிக்க ரவிச்சந்திரனை பயன்படுத்திக் கொண்டார் என்பதே உண்மை. இது ரவிச்சந்திரனுக்கும் தெரிந்திருக்ககூடும். ஆனாலும் எப்படியாவது எண்பது லட்சம் கைக்கு வந்து படத்தை ஆரம்பித்துவிடுவார் என்றொரு ஆசை மனதில் ஒட்டிக் கொண்டிருந்தது.





ரவிச்சந்திரன் இவருக்காக முதலில் ஒரு காதல் கதைக்குத் திரைக்கதை வடிவம் எழுத ஆரம்பித்தான். நூலகத்திலிருந்து சிறுகதைத் தொகுப்புகளாக எடுத்து வந்து படிப்பான். அதில் விவரிக்கப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகளைத் தனது நோட்டில் குறித்துக் கொள்வான். மாலை நேரம் அவனது நண்பன் சேகரைச் சந்தித்து அன்று படித்த கதையினை எப்படி மாற்றம் செய்து திரைக்கு ஏற்ப காட்சியாக்குவது என்று விவாதிப்பான். இப்படித் தினமும் ஒன்றிரண்டு காட்சிகளை அவன் சேகரித்துக் கொண்டிருந்தான்





[image error]




ஒரு நாள் என்னிடம் குறுகிய வழி நாவலைப் படித்துக் கண்ணீர்விட்டதாகவும் அதைத் திரைப்படமாக்க நினைத்திருப்பதாகச் சொல்லி அதற்கு யாரிடம் உரிமை பெற வேண்டும் என்று கேட்டான்.





அது ஆந்த்ரே ழீடு எழுதிய பிரெஞ்சு நாவல் க.நா.சுப்ரமண்யம் மொழியாக்கம் செய்திருக்கிறார். க.நா.சு டெல்லியில் வசிக்கிறார் என்றேன்.





அப்படியானால் அவரைத் தேடிப்போய்ப் பார்த்து உரிமை வாங்க இயலாது. ஒரு Thanks card போட்டுவிடுகிறேன் என்று சொல்லி ஆசையாக அதற்குத் திரைக்கதை எழுதினான்.
அன்றாடம் நூலகத்தில் வைத்து காட்சிகளை எழுதுவான். ஒரு நாள் எழுதிய காட்சி ஒன்றைப் படித்துக் காட்டினான். அதில் குறுந்தொகை பாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது .காதல் சுவையைக் கூட்டுவதற்காக அப் பாடலை சேர்ந்து இருப்பதாகவும் அதைத் தனியே இசையமைத்து சேர்க்கவுள்ளதாகவும் சொன்னான்





குறுகிய வழிக்கான திரைக்கதை எழுதிக் கொண்டிருக்கும் போதே தயாரிப்பாளர் வெறும் காதல்கதை போதாது என்று சொன்னதால் அதில் ஒரு கொலை மற்றும் துப்பறியும் விஷயங்களைச் சேர்க்கப் போவதாகச் சொன்னான். இதற்காக நூலகத்திலிருந்த பெரிமேசன் துப்பறியும் புத்தகங்களைத் தீவிரமாகப் படித்தான்.





சில நாட்களில் ஒரு கொலை ரெடியானது. கூடவே அதைக் கண்டுபிடிக்கப் போகும் துப்பறியும் நிபுணரும் ரெடியானார். இப்போது கதையில் இரண்டு ஹீரோ. துப்பறியும் நிபுணராகப் புதுமுகத்தைப் போட்டுவிடலாம் என்று சொன்னான் ரவிச்சந்திரன். குறுகிய வழியில் ஒரு கொலை என்று தலைப்பும் வைத்துக் கொண்டான்.





தனது திரைக்கதையோடு அவன் திருப்பூர் புறப்பட்டுப் போனான். ஒரு வார காலத்தின் பின்பு திரும்பி வந்து துப்பறியும் கதையை மட்டும் வைத்துக் கொண்டு குறுகியவழியின் காதல் கதையை நீக்கிவிடப் போவதாகவும் அதற்குப் பதிலாகக் கிராமத்திலுள்ள சாதிப் பிரச்சனையை முன்வைத்து புதிய திரைக்கதையை எழுத இருப்பதாகச் சொன்னான்.





இதற்காகக் கி.ரா. பூமணி, சூரியதீபன். மேலாண்மை பொன்னுசாமி எனத் தேடித்தேடிப் படித்தான். கிராமத்தில் நடைபெறும் துப்பறியும் கதையாகத் திரைக்கதை உருமாறியது. இந்த வடிவம் மிகவும் திருப்திகரமாக வந்துள்ளதாகச் சொல்லியபடியே தனது நண்பர்கள் பலருக்கும் அதை வாசிக்கத் தந்தான்





திருப்பூர் தயாரிப்பாளர் தாமதமாகவே வேறு இரண்டு தயாரிப்பாளர்களிடம் சென்று தனது கதையைச் சொல்லியும் வந்தான். அவர்களுக்குக் கதை பிடிக்கவில்லை. இரண்டு மாத காலத்தில் அவனுக்கே தனது திரைக்கதையைப் பிடிக்காமல் போனது. அதை அப்படியே போட்டுவிட்டு இந்த முறை புதுமைப்பித்தனின் துன்பக்கேணியினைப் பீரியட் படமாக எடுக்கலாம் என்று அதற்குத் திரைக்கதை எழுத ஆரம்பித்தான்.





தேயிலைத் தோட்ட வேலைக்குச் சென்று வந்த குடும்பங்களைப் பற்றிக் கள ஆய்வு செய்யப்போவதாகச் சொல்லி மதுரையைச் சுற்றியுள்ள ஊர்களுக்குச் சென்று வந்தான்.
எப்படியாவது ஒருமுறை இலங்கைக்குப் போய் வந்துவிட்டால் திரைக்கதை முடிந்துவிடும் என்று சொல்லிக்கொண்டேயிருந்தான். ஆனால் இந்தக் கதையை அவனது நண்பர்களுக்கே பிடிக்கவில்லை. இது கமர்சியலாக வரவில்லை. ஆகவே எந்த ஹீரோவும் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று அவனிடம் சொன்னார்கள். அவனுக்கும் அது நிஜம் என்று புரிந்தது. ஆனாலும் அந்தத் திரைக்கதையோடு திரைப்பட நிறுவனங்களில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தான். ஒன்றும் நடக்கவேயில்லை. நிராகரிப்பு மட்டுமே மிச்சம்.





இந்தக் கதை மலையாளத்திற்குப் பொருத்தமானது என்று யாரோ சொல்லிவிடவே கொச்சிக்குச் சென்று ஒரு மாதகாலம் தயாரிப்பாளர்களைத் தொடர்பு கொள்ள முயன்று தோற்றுத் திரும்பிவந்தான். அந்த நாட்களில் நிறைய மலையாளம் படம் பார்த்தான். ஆகவே இனிமேல் புதியபாணியில் திரைக்கதை எழுத வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.





தொடர்ந்த ஏமாற்றங்கள். கசப்பான அனுபவங்கள் அவனை மிகவும் சோர்வடையச் செய்திருந்தன. நூலகத்திற்கு வந்தால் நியூஸ் பேப்பர் தவிர வேறு எதையும் படிக்க மாட்டான். அடிக்கடி சிகரெட் பிடிக்க வெளியே எழுந்து போய்விடுவான். பல நாட்கள் மதியம் சாப்பிட மாட்டான். ஒரு நாள் பட்டினத்தார் பாடல்களை நோட்டில் எழுதிக் கொண்டிருந்தான். அதன்பிறகு அவனைப் பொதுநூலகத்தில் காணவில்லை.





அவனது நண்பனிடம்என்ன ரவியை ஆளக் காணவேயில்லை என்று ஒரு நாள் கேட்டேன்





அவனுக்குப் போன வாரம் கல்யாணம் ஆகிருச்சி , ஊர்லயே செட்டில் ஆகிட்டான் என்றான் அந்த நண்பன்





அப்போ சினிமா





அதெல்லாம் அவ்வளவு தான். மாமனார் லாரிகம்பெனி வச்சிருக்கார். அதுலயே வேலை செய்யப்போறானாம்.





அதன்பிறகு ரவிச்சந்திரனைப் போலவே வேறு உதவி இயக்குநர்கள் நூலகத்தில் அமர்ந்து திரைக்கதைக்கான குறிப்புகளை எழுதிக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். ஒரு நாள் ரவிச்சந்திரனை திரும்பவும் பொது நூலகத்தில் கண்டேன். ஆள் உருமாறியிருந்தான். கோரையான தாடி. தூக்கமில்லாத கண்கள். சட்டையில் சிகரெட் பாக்கெட். தீப்பெட்டி.





என்ன ரவி.. எப்படியிருக்கே. கல்யாண வாழ்க்கை எப்படியிருக்கு என்று கேட்டேன்





செட் ஆகலைண்ணா. வொய்போட சண்டை போட்டு வந்துட்டேன். என்னை மாதிரி கலைஞனுக்கு லாரிகம்பெனி வேலை எப்படி ஒத்துவரும். என் பொண்டாட்டி சினிமாக்காரன்னாலே கேவலமாக நினைக்குறா. மாமனார் பெரிய இம்சை. அதான் கிளம்பி வந்துட்டேன். ஊர்ல இருக்கும் போது நாட்டியக்காரினு ஒரு உருது நாவல் படிச்சேன். செமையான கதை. அதுக்குத் திரைக்கதை எழுதிகிட்டு இருக்கேன். இந்தக் கதையைப் படமாக்கினால் நிச்சயம் சில்வர் ஜுப்ளி தான்.





அதன்பிறகு ரவிச்சந்திரன் எப்போதும் போலக் காலை முதல் மாலை வரை நூலகத்தில் அமர்ந்து நாட்டியக்காரிக்கு திரைக்கதை எழுதிக் கொண்டிருந்தான்.
ஒரு நாள் என்னிடம்Umrao Jaan படம் பாத்து இருக்கீங்களா என்று கேட்டான்.





[image error]



ரேகா நடிச்ச படம் தானே. பாத்து இருக்கேன் என்றேன்

அந்த படத்தோட கதை தான் நான் படிச்ச உருது நாவல். அது தெரியாமல் அதுக்கு உட்கார்ந்து ஸ்கிரீன் பிளே எழுதிகிட்டு இருக்கேன். நேத்து தான் நம்ம சேகர் சொன்னான். அந்தப் படம் ஹிட்டாண்ணா





ஆமா. பாட்டு ரொம்ப நல்லா இருக்கும் என்றேன்





இப்போ என்ன செய்றது. எழுதுனது எல்லாம் வேஸ்டா





எனக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை. ரவிச்சந்திரன் ஒரு சிகரெட் பற்றவைத்தபடியே சொன்னான்





நம்ம நேரம் சரியில்லை. பேசாமல் குறுகிய வழி ஸ்கிரிப்டை திரும்ப எடுக்க வேண்டியது தான். அந்தக் கொலை கிலை எல்லாம் தூக்கிட்டு வெறும் லவ் ஸ்டோரியா சொன்னா ஒடும்





நானும் தலையாட்டிக் கொண்டேன். ரவிச்சந்திரன் சில நாட்களில் ஊருக்கு திரும்பிப் போய்விட்டதாகச் சொல்லிக் கொண்டார்கள். அதன்பிறகு அவனைப் பார்க்கவேயில்லை.





ரவிச்சந்திரன் அமர்ந்து எழுதும் நாற்காலியில் வேறு ஒரு இளைஞன் புதிய கனவோடு எதையோ எழுதிக் கொண்டிருந்தான். சென்னைக்கு வந்து தன் கனவுகளைத் தொலைத்து ஏமாற்றத்துடன் ஊர் திரும்பிப் போனவர்களில் ரவியும் ஒருவனாகிப் போனான். ஆனால் அன்று துவங்கி இன்றுவரை சினிமா உதவி இயக்குநர்களுக்கு நூலகம் தான் ஒரே ஆறுதலான இடமாகயிருக்கிறது.





ரவி இப்போது லாரிக்கம்பெனியில் வேலை செய்கிறானா அல்லது வேறு ஏதாவது தொழில் செய்கிறானா எனத் தெரியாது. ஒருவேளை சொந்த ஊரில் உள்ள நூலகத்தில் அமர்ந்து இன்றும் ஏதாவது புதிய திரைக்கதையை எழுதிக் கொண்டிருக்கக் கூடும்.
**

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 13, 2020 00:01

December 12, 2020

சிந்துபாத்தின் மனைவி






நாளை டிசம்பர் 13 ஞாயிறு மாலை தியேட்டர் லேப் அரங்கில் எனது சிந்துபாத்தின் மனைவி நாடகம் நிகழ்த்தப்படவுள்ளது. இதனை ஜெயராவ் இயக்கியுள்ளார்.
அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.
முகவரி
தியேட்டர் லேப்
No 6 Mahaveer Complex, Munusamy Salai, K K Nagar West, Chennai – 600078,
(Near Discovery book palace)
Ph : 097888 58881

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 12, 2020 04:27

December 11, 2020

நூலக மனிதர்கள். 28 சாட்சியாய் ஒரு புகைப்படம்.






மனோகர் அந்த முறை ஒரு ஒவியரை நூலகத்திற்கு அழைத்துக் கொண்டு வந்திருந்தார். வழக்கம் போலவே நூலகரிடம் சென்று ரெபரென்ஸ் பகுதியிலுள்ள மாவட்ட சுதந்திரப் போராட்ட மலரைக் காண வேண்டும் என்று கேட்டார்.





மனோகர் எப்போது நூலகத்திற்கு வந்தாலும் அந்த மலரைக் கேட்டு வாங்கிப் பார்ப்பது வழக்கம். சில நேரம் உறவினர்கள் சிலரை அழைத்து வந்தும் அந்த மலரைக் காட்டியிருக்கிறார். அந்த மலரில் அவரது தாத்தா கிருஷ்ணப்பாவின் புகைப்படம் ஒன்றிருக்கிறது. அதுவும் ஊர்வலம் ஒன்றில் கொடியை ஏந்தியபடி முன்னால் நடந்து வரும் புகைப்படம்.





கிருஷ்ணப்பா சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்குப் போனவர். ஆனால் அவர் சுதந்திரப் போரில் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று கூட அவர்கள் வீட்டில் கிடையாது. ஆகவே அந்த மலர் தான் ஒரே சாட்சியம். எப்படியாவது அந்த மலரின் பிரதி ஒன்றை விலைக்கு வாங்கிவிட வேண்டும் என்று மனோகர் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார். ஆனால் அது விலைக்குக் கிடைக்கவில்லை.





ஆகவே ஒவ்வொரு முறையும் தன் தாத்தா புகைப்படத்தைக் காட்டுவதற்காக உறவினர் எவரையாவது நூலகத்திற்கு அழைத்து வருவது அவரது வழக்கம். அன்றைக்கும் அப்படித் தான் அவரது ஓவியரை அழைத்துக் கொண்டு வந்திருந்தார்.





நூலகத்தில் இரவல் கொடுக்காத புத்தகங்களை வெளியே எடுத்துச் செல்ல முடியாது. இன்றிருப்பது போல ஜெராக்ஸ் அல்லது ஸ்கேன் செய்து கொள்வதோ, செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொள்வதோ போன்ற வசதிகள் அப்போது கிடையாது. ஆகவே தன் தாத்தாவின் படத்தை வரைந்து எடுத்துக் கொள்வது என்று மனோகர் முடிவு செய்திருந்தார்





அந்த ஓவியர் மலரின் பக்கங்களைப் புரட்டியபடியே இருந்தார். மகாத்மா காந்தி தமிழ்நாட்டிற்கு வந்த புகைப்படங்களில் இருந்து பல்வேறு சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளின் புகைப்படங்கள் அதிலிருந்தன. பெயர்கள் மட்டுமே அறிந்திருந்த பலரை அந்த மலரின் தான் முதன்முறையாக பார்க்க முடிந்தது.





இளமையான அந்த முகங்களைக் காண அத்தனை சந்தோஷமாக இருந்தது. இவர்களை எல்லாம் மக்கள் மறந்துவிட்டார்கள். குருதிசிந்திப் போராடி சிறைக்குப் போன ஒருவருக்கும் சிலைகள் கிடையாது. நினைவகங்கள் கிடையாது. குடும்ப உறுப்பினர்களே கூட அவர்களை மறந்து போய்விட்டார்கள். நல்லவேளை இவற்றை எல்லாம் தொகுத்து மலராக வெளியிட்டிருக்கிறார்கள். இந்த நினைவு மலர் இல்லாமல் போயிருந்தால் இவர்களின் தியாகம் உலகம் அறியாமலே போயிருக்கக் கூடும்





மனோகர் சொன்னார்





எங்க தாத்தா நல்லாஇங்கிலீஷ்ல பேசுவார். லெட்டர் எழுதுவார். காந்திக்கே லெட்டர் போட்டு இருக்கார். ஆனா அதை எல்லாம் இப்போ தேடிக் கண்டுபிடிக்க முடியாதுல்ல





உங்க வீட்ல வேற போட்டோ எதுவும் இல்லையா





அந்தக் காலத்தில போலீஸ்காரங்க வீட்டுக்கு வந்து சோதனை போடுவாங்கன்னு பயந்து போட்டோ, டயரி, துண்டுபிரசுரம் எல்லாத்தையும் எரிச்சி போட்டுட்டாங்க. அய்யாசாமினு ஒரு தியாகி வீட்ல இருந்த ஒரு குரூப் போட்டோவுல இருந்து தான் இப்போ வீட்ல மாட்டியிருக்கத் தாத்தா படத்தை எடுத்தோம். இப்படிக் கொடிபிடிச்சிகிட்டு போற போட்டோ அவங்க வீட்லயும் இல்லை





மதுரையில இப்படி ஒருத்தர் நேதாஜியோட படையில் இருந்துருக்கார். பழைய போட்டோ ஒன்றைப் பத்திரமா வைத்திருந்தார். நான் தான் அதை ஓவியமாக வரைந்து கொடுத்தேன்.





நூலகர் ஒவியர் அந்தப் புகைப்படத்தைப் பார்த்து வரைவதை வியப்போடு பார்த்தபடியே சொன்னார்





வெளிச்சம் வரலைன்னா. வெளியே வச்சி வரைஞ்சிட்டு கொண்டுவாங்க





கிழே போனா மேஜையில வச்சி வரையலாம் என்றார் மனோகர்





ஒவியர் ஐநூறு பக்கங்களைக் கொண்ட அந்த மலரை கையில் எடுத்துக் கொண்டு கீழே இறங்கி போனார்





பொதுநூலகம் என்பது இப்படி ஆவணக்காப்பகம் போலவும் செயல்படுகிறது. கடிதங்கள், டயரிகள். புகைப்படங்கள் ஆவணங்களைப் பத்திரப்படுத்தி வைக்கும் பழக்கம் பலருக்கும் கிடையாது. அதன் மதிப்பை அவர்கள் உணர்வதேயில்லை.





பிழைப்பிற்காகப் பர்மாவிற்கும் இலங்கைக்கும் கூலி வேலைகளுக்குப் போனவர்கள் தன் குடும்பத்தினருக்கு நிறையக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அந்தக் கடிதங்கள் காலவெள்ளத்தில் மறைந்து போய்விட்டன. கப்பல் பயணம் சென்றவர்கள் அது பற்றிக் குறிப்புகளை எழுதியிருக்கிறார்கள். அந்தக் குறிப்புகள் என்னவாகியது என்று தெரியவில்லை.





டாக்டர் சவரிராயன் 1935ல் எழுதியுள்ள வாழ்க்கை வரலாற்று நூலில் அவரது வீட்டிற்குக் காபி எப்படி அறிமுகமானது என்பதை பற்றி எழுதியிருக்கிறார். திருநெல்வேலி மாவட்டத்தின் குக்கிராமத்தில் வாழ்ந்த அவர்களுக்குக் கிறிஸ்துவப் பாதிரி மூலம் காபி அறிமுகமாகிறது. சவரி ராயனின் அம்மா காபி குடிப்பதில் விருப்பம் கொண்டிருந்தார். ஆனால் அவரது தந்தை காபி கொடுப்பதைத் தவறான பழக்கமாகக் கருதினார். இதனால் ரகசியமாக அம்மாவும் சவரிராயனும் காலையில் காபி தயாரித்துக் குடிப்பார்கள். அப்பாவிற்குத் தெரியவந்தால் பெரிய சண்டையாகிவிடும் என்கிறார் சவரிராயன்.





இன்று காபி குடிக்காத வீடே கிடையாது. ஆனால் இந்தப் பழக்கம் எப்படி அறிமுகமானது என்பதை ஒருவரின் நேரடி அனுபவம் பதிவு செய்திருக்கிறது. இது போலவே சவரிராயன் எழுதிய எனது உலகச் சுற்றுப்பயணம் நூலில் அன்றைக்கு எப்படி விசா வழங்கினார்கள். லண்டனுக்குப் போய் வர ஆகும் செலவு. இலங்கையில் இருந்த கடவுசீட்டுமுறைகள் எனச் சுவாரஸ்யமாகத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் நிறையப் பழைய புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.





காலத்தில் மறைந்து போன மனிதர்களும் நினைவுகளும் புத்தகம் வழியாக அழியாத் தோற்றம் கொண்டுவிடுகிறார்கள்.





மனோகரும் ஓவியரும் மாலை வரை நூலகத்தில் அமர்ந்து வரைந்தார்கள். அப்படியே புகைப்படத்தில் உள்ளதைப் போல அச்சு அசலாக ஓவியம் வரையப்பட்டிருந்தது. நூலகர் வியந்து பாராட்டினார்





எங்க அப்பா ஒரு ஆர்டிஸ்ட். ஆனா அவருக்கு ஒரு போட்டோ கூடக் கிடையாது. எத்தனையோ படங்கள் வரைந்த அவர் தன்னை வரைந்துகிடவே இல்லை. போட்டோ எடுக்கவும் இல்லை. அப்பா அம்மா ரெண்டு பேருக்கும் போட்டோ கிடையாது. எங்க நினைவுல தான் அவங்க இருக்காங்கஎன்றார் ஓவியர்





மனோகர் நூலகரிடம் மலரைக் கொடுத்துவிட்டுச் சொன்னார்





ரொம்ப நன்றி சார். இந்தப் பொஸ்தகம் இல்லேன்னா.. தாத்தா போட்டோ கிடைத்திருக்காது. நல்ல வரைஞ்சிருக்கார். அப்படியே எங்க தாத்தாவை நேர்ல பாக்குற மாதிரி இருக்கு.





இப்படி எத்தனையோ பேர் இந்திய சுதந்திர போராட்டத்திற்குப் பங்களித்துள்ளார்கள். அவர்களில் பலருக்கும் புகைப்படம் கூட மிஞ்சவில்லை.





இந்திய சுதந்திரப் போராட்டம் முழுமையான ஆவணப்படுத்தப்படவில்லை. கிடைத்த தகவல்கள். புகைப்படங்கள். டயரிகள். பதிவுகளை வைத்துக் கொண்டே சிறப்பு மலர்களை வெளியிட்டிருக்கிறார்கள்.





பொது நூலகத்தை விட்டால் வேறு எங்கே இது போன்ற தகவல்கள் ஆவணங்களைக் காண முடியும். நூற்றாண்டில் ஒரு ஊர் எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த மாற்றங்களை உருவாக்கியவர்கள் யார். எப்படி கல்வி நிலையங்கள் உருவாகின, மக்களின் பண்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டன என்று ஊரின் வரலாறு எழுதப்படவேயில்லை. லண்டன் நகரம் பற்றியும் பாரீஸ் நகரம் பற்றியும் எத்தனையோ புத்தகங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் மதுரையை பற்றி எத்தனை புத்தகம் வெளியாகியிருக்கிறது.





[image error]




சிப்பியின் வயிற்றில் முத்து என்ற- போதிசத்வ மைத்ரேய எழுதிய வங்காள நாவலை வாசித்தேன். அது தூத்துக்குடியை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல். அதில் விருதுநகரை அடுத்த கொக்கலாஞ்சேரியில் ரயில் நிற்பது கூட விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த அளவு தமிழில் கூட யாரும் எழுதவில்லை. உள்ளூர் வரலாறு நினைவுகள் எங்கோ எழுதிவைக்கப்பட்டுள்ளதைக் கண்டு வியந்து போனேன். மறுபக்கம் குற்றவுணர்வாகவும் இருந்தது.





வரலாறு இன்று திரிக்கப்படுகிறது. மறைக்கப்படுகிறது. பொய்யான நிகழ்வுகளை வரலாற்றின் பெயரில் உலவவிடுகிறார்கள். இதனை மறுப்பதற்கும் உண்மையை அடையாளம் காட்டவும் நிஜமான ஆவணங்களைக் கொண்ட புத்தகங்களே துணைநிற்கின்றன.





••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 11, 2020 23:36

கடலின் காட்சிகள்





யாழினி ஆறுமுகம்
••

தங்களது சிறுகதைகள் தொகுப்பான “அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது” தற்போது தான் படித்தேன்.
ஒவ்வொரு கதையும் அருமை. வரலாற்றையும், நினைவுகளையும், நடப்பு உலகையும் தனது அடித்தளமாகக் கொண்டு உருவாகியிருக்கின்றன என்று கூறியுள்ளீர்கள். ஆனால் உருவாக்கியுள்ளீர்கள் என்று தான் கூறுவேன். கிரேக்கத்து முயல் கதை மிகவும் அருமை. பின்னிரவுத் திருடன், பெரிய வார்த்தை, இருபது வயதின் அவமானங்கள், வயதின் கனவுகள் கதைகள் எல்லாம் மனதின் சிக்கல்களை மிக நுட்பமாக போகிற போக்கில் கதை மாந்தர்கள் சொல்லிக் கொண்டே போகிறார்கள். ஒவ்வொரு கதையும் வெகு இயல்பான, சரளமான நடை.





“தரமணியில் கரப்பான் பூச்சிகள்” கதையில் “மனிதர்கள் அடுத்தவரை ஏமாற்றுவதில் அலாதியான ஆனந்தம் அடைகிறார்கள், ஏமாற்றியதைப் பற்றி பெருமை பேசுகிறார்கள், மனிதர்கள் மிகவும் விசித்திரமானவர்கள்” என்று கூறுவதெல்லாம் உண்மையிலும் உண்மை என்றே தோன்றுகிறது.





“ரசவாதியின் எலி”கதையில்”வெளிச்சம் மட்டுமே உலகின் இயல்பாகவும், இருள் விலக்கப்படவும், ஒதுக்கப்படவும் வேண்டியது என்று முடிவு செய்து
விட்டார்கள். ஆனால் உண்மையில் இருளும், வெளிச்சமும் எதிரான இரண்டல்ல, ஒன்றைப் புரிந்து கொள்ள இன்னொன்று அவசியமானது “
மனிதனுடைய எல்லா நடத்தைகளிலும் இதைப் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம் என்றே தோன்றுகிறது.





” அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது ” எங்கோ அதிகாரத்தில் உள்ள ஒருவரின் அற்ப சந்தோசத்திற்காக திரிசடை தீவில் ஒன்பது ஆண்டுகள் கழித்ததன் மூலம் டக்ளஸ் வேறு ஒரு உலகை புரிந்து கொண்டதன் மூலம் , வாழ்க்கை அர்த்தமுள்ளது தான் என்று தெரிந்து கொண்டான் என்றே கருதுகிறேன்.





ஒவ்வொரு கதையையும் படிக்கும் நேரத்தை விட அக்கதையின் சிரத்தன்மையையும், படித்து முடித்தவுடன் ஏற்படும் எண்ண ஓட்டமும், கிளர்ச்சியுமே அதிக நேரத்தை எடுத்துக் கொள்கிறது. இது தான் படைப்பின், படைப்பாளியின் வெற்றி என்றே கருதுகிறேன்.





••
அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது
தேசாந்திரி வெளியீடு





Rs 125.00
https://www.desanthiri.com/
CALL :
(044) 236 44947
(+91) 9600034659
D1, Gangai apartments, 110,
Sathya garden, Saligramam,
Chennai – 600 093

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 11, 2020 21:40

December 10, 2020

உறவின் மதிப்பு.






ஃபின்னிஷ் இயக்குனர் கிளாஸ் ஹாரோ இயக்கிய திரைப்படம் ONE LAST DEAL.





கலைப்பொருட்களை விற்பனை செய்யும் ஒலாவி முதுமை மற்றும் வணிக நெருக்கடிகள் காரணமாக ஓய்வு பெற முயல்கிறார். குடும்பத்தை விடவும் அவருக்குக் கலைப்பொருட்கள் விற்பனை மீதே நாட்டம் அதிகம். ஆகவே கேலரியில் தனியே வசிக்கிறார். கலைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் தான் அவரது நண்பர்கள்.





கலையின் மீதான ரசனை மற்றும் விற்பனை முறைகளில் ஏற்பட்ட பெரும் மாற்றங்கள் அவரைப் போன்ற தீவிர கலை ஆர்வலர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கலையின் மதிப்பைச் சந்தை முடிவு செய்யக்கூடாது என அவர் நினைக்கிறார். அத்தோடு தன்னைப் போன்ற நேர்மையான கலை ஆர்வலர்கள் இனி வணிகம் செய்து வாழமுடியாது என்ற உண்மையைப் புரிந்து கொள்கிறார். ஆகவே கடைசியாக ஒரு வணிகம் செய்துவிட்டு தொழிலை விட்டு ஒதுங்கிவிட வேண்டும் என்று முடிவு செய்கிறார்.





[image error]



ஒரு ஏலத்தில், பழைய ஓவியம் ஒன்று அவரது கவனத்தை ஈர்க்கிறது. அந்த ஓவியத்தில் அதை வரைந்தவர் யார் எனப் பெயரில்லாத காரணத்தால் குறைவான விலைக்கு மதிப்பிடப்பட்டிருக்கிறது. அது ஒரு புகழ்பெற்ற ஒவியம் என நம்பும் ஒலாவி அதை விலைக்கு வாங்கி விற்பது என முடிவு செய்கிறார். அவர் கைவசம் அந்த ஓவியத்தை வாங்குமளவு பணமில்லை. ஆகவே பலரிடமும் கடன் கேட்கிறார். ஒலாவியின் உள்ளுணர்வு அது ஒரு கடைசி அதிர்ஷ்டம் என்று அவரை நம்ப வைக்கிறது.





ஒலாவியின் மகள் லியா தன் மகன் ஓட்டோவுடன் தனித்துவாழுகிறார். அவளைக் கூடப் பல ஆண்டுகளாக ஒலாவி பார்க்கவில்லை. ஒரு நாள் ஓட்டோவிற்குப் பயிற்சி சான்றிதழ் தேவைப்படுகிறது. ஆகவே அவன் உங்களுடன் வேலை செய்யட்டும் என லியா அனுப்பி வைக்கிறாள். விருப்பமில்லாமல் அவனைத் தன் கடையில் பணியாற்ற அனுமதிக்கிறார். தாத்தா இல்லாத நேரத்தில் ஒரு கலைப்பொருளைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து காட்டுகிறான் ஓட்டோ. இது அவன் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.





இந்த நிலையில் அந்த ஓவியம் யார் வரைந்தது என்று தேட ஆரம்பிக்கிறார் ஒலாவி. இதற்கு ஓட்டோ உறுதுணை செய்கிறான். குறிப்பாக இணையவழியாக அவன் தகவலைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். விளையாட்டு பையனாக இருந்தவனுக்குக் கலையுலகம் அறிமுகமாகிறது.





[image error]



அந்த ஓவியம் பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்ய ஓவியரான இலியா ரெபின் வரைந்த இயேசு கிறிஸ்து என்பதைக் கண்டுபிடிக்கிறான். ஆனால் இலியா ஏன் அதில் தன் கையெழுத்துப் போடவில்லை என்ற கேள்வி எழுகிறது. இதற்கான பதிலைத் தேடுகிறார்கள். அத்தோடு இலியா ரெபின் ஓவியங்களின் பட்டியலில் அந்த ஓவியம் பற்றி ஏதாவது குறிப்பு இருக்கிறதா என்று தேடி அலைகிறார்கள். முடிவில் அது ரெபின் வரைந்த ஓவியம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள்





ஏலத்தில் அந்த ஓவியத்தை எடுக்கப் பலத்த போட்டி உருவாகிறது. ஏல நிறுவனத்தில் இலியா ரிபின் ஓவியத்தை விலைக்கு வாங்க முயற்சிக்கும் போது நமக்கு அவருடன் சேர்ந்து பதைபதைப்புத் தொற்றிக் கொள்கிறது.





பெரும்தொகை கொடுத்து ஒலாவி அதை விலைக்கு வாங்குகிறார். இதற்காக மகளிடம் கடன் கேட்கிறார்.பேரன் சேமித்து வைத்த பணத்தைக் கடன் வாங்குகிறார்.
அரும்பாடு பட்ட வாங்கிய அந்த ஓவியத்தை விற்பதில் பிரச்சனை துவங்குகிறது. உண்மையை அறிந்த ஏல நிறுவனம் மூலம் புதிய குழப்பங்கள் உருவாகிறது. ஒலாவி அந்த ஓவியத்தை என்ன செய்தார் என்பதே படத்தின் கிளைமாக்ஸ்.





பெயர் தெரியாத ஓவியத்தின் உண்மையைத் தேடும் கிழவரின் கதை எனத் தோற்ற அளவில் தெரிந்தாலும் பேரனுக்கும் தாத்தாவிற்குமான உறவு எப்படி உருவாகிறது. எவ்வாறு வலுப்பெறுகிறது. ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறார்கள் என்பதையே படம் சித்தரிக்கிறது.





[image error]



ஒலாவி கடந்தகாலத்தைச் சேர்ந்தவர். இன்றைய தொழில்நுட்பங்கள் எதிலும் அவருக்கு ஆர்வம் கிடையாது. ஆன்லைன் விற்பனை போன்றவற்றை விட்டு ஒதுங்கியே இருக்கிறார். அவரிடம் கம்ப்யூட்டர் கூடக் கிடையாது. ஆனால் ஓட்டோ எப்போதும் கையில் ஒரு ஐபேட் வைத்துக் கொண்டிருக்கிறான். நவீனத் தொழில்நுட்பத்தின் சகல சாத்தியங்களையும் அவன் கைக்கொள்ளுகிறான். ஒலாவி இந்த மாற்றத்தைப் புரிந்து ஏற்றுக் கொள்வதை மிக நேர்த்தியாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள்.





தன் மகளிடம் ஒலாவி கடன் கேட்கும் காட்சியில் அவள் இத்தனை ஆண்டுகளாகத் தன்னைக் கைவிட்ட நீங்கள் இப்போது எப்படி உதவி கேட்கிறீர்கள் என்று கேட்கிறாள். ஒலாவியிடம் பதில் இல்லை.





ஒலாவி ஓவியத்தின் பின்னணியை ஆராயத் தொடங்குவதும் கொஞ்சம் கொஞ்சமாக உண்மைகள் வெளிப்படுவதும் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.





இலியா ரெபின் லியோ டால்ஸ்டாய் உள்ளிட்ட முக்கிய எழுத்தாளர்கள் பலரையும் ஓவியம் வரைந்திருக்கிறார். ரஷ்யாவின் மிக முக்கிய ஓவியர்களில் ஒவியர். கதையின் வழியாக நாம் இலியாவின் ஓவிய உலகையும் அறிந்து கொள்ள ஆரம்பிக்கிறோம்.





[image error]



ஒலாவி தனது கேலரியை நிரந்தரமாக மூடி வெளியேறும் காட்சி துயரமானது. தன்னுடைய கேலரியை பேருந்தில் இருந்தபடியே அவர் திரும்பி பார்க்கிறார். எத்தனை நினைவுகள். எவ்வளவு சந்தோஷங்கள்.





மதிப்பு மிக்க ஓவியத்தைக் கண்டறியும் அவர் அதைவிடவும் மதிப்பு மிக்கது உறவுகளே என்று முடிவில் உணருகிறார். விலைமதிப்பில்லாத ஒவியத்தை விடவும் உயர்வானது தாத்தாவின் அன்பு என்பதை ஓட்டோவும் உணர்ந்து கொள்கிறான்.





“I love art more than virtue, more than people, more than family, more than friends, more than any kind of happiness or joy in life. I love it secretly, jealously, like an old drunkard என்று சொல்கிறார் ஓவியர் இலியா ரிபின். இதன் பிரதிபலிப்பு போலவே ஒலாவி உருவாக்கப்பட்டிருக்கிறார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 10, 2020 05:02

December 9, 2020

புதிய புத்தகங்கள் 6 நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து





சிறார்களுக்காக எழுதப்பட்ட கதை.





அரசுப் பள்ளி ஒன்று மாணவர்களுக்காக பள்ளிப் பேருந்து ஒன்றை வாங்க முயற்சிக்கிறது. அதில் ஏற்படும் சிக்கல்கள், வேடிக்கையான நிகழ்வுகளை மையமாகக் கொண்டது.





ஓவியர் ராஜன் படங்கள் வரைந்திருக்கிறார்.





தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 09, 2020 23:06

புதிய புத்தகங்கள் 5 அவளது வீடு





தேர்வு செய்யப்பட்ட இருபது சிறுகதைகளின் தொகுப்பு. பத்து வாசகர்கள் இதில் உள்ள கதைகளைத் தேர்வு செய்து உதவியிருக்கிறார்கள்.





தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 09, 2020 23:02

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.