S. Ramakrishnan's Blog, page 148

January 19, 2021

காலைக்குறிப்புகள்- 27 மணலில் வரைந்த ஓவியம்

பிக்காஸோவை பற்றி ரே பிராட்பரி ( Ray bradbury) ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். அதன் பெயர் In a Season of Calm Weather. பாப்லோ பிக்காஸோ ஓவியங்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த பிராட்பரி அவரை முக்கியக் கதாபாத்திரமாக்கி இக் கதையை எழுதியிருக்கிறார்.

ஜார்ஜ் ஸ்மித் என்ற அமெரிக்கன் தன் மனைவியுடன் பிரான்சிலுள்ள கடற்கரை ஒன்றுக்கு விடுமுறைக்குச் செல்கிறான். ஸ்மித் பிக்காஸோவின் தீவிர ரசிகன். பிக்காஸோவை ஒவியவுலகின் கடவுளாக நினைப்பவன். அவர்கள் விடுமுறைக்குச் சென்றிருந்த கடற்கரைக்குச் சில மைல் தொலைவில் பிக்காஸோ தங்கியிருக்கிறார் என்ற செய்தியை கேள்விப்பட்ட ஸ்மித் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறான்.

எப்படியாவது ஐந்தாயிரம் டாலர் பணம் சேர்த்து அதைக் கொண்டு போய்ப் பிக்காஸோ கையில் கொடுத்து அவருக்கு விருப்பமான எதையாவது வரைந்து வாங்கிக் கொண்டுவிட வேண்டும் என்று கனவு காணுகிறான் ஸ்மித்

மனைவியுடன் கடற்கரையில் இருக்கும் போது இதே கடற்கரையில் எங்கோ ஒரு தொலைவில் பிக்காஸோவும் இருக்கிறார் என்ற நினைப்பு அவனை மேலும் மகிழ்ச்சிப்படுத்துகிறது. எப்படியாவது அவரை ஒருமுறை சந்தித்துவிட முடியாதா என்று ஏங்குகிறான். இதைப் புரிந்து கொண்ட அவனது மனைவி அதெல்லாம் சாத்தியமற்ற விஷயம். வந்த இடத்தில் சுகமாகக் கடலில் நீந்தி மகிழ்வோம் என்கிறாள்.

பிக்காஸோவின் கண்கள் வழியாகவே அந்தக் கடற்கரையை, சூரியனை, மலர்களை, கடற்கரையோர வசிப்பிடங்களை ஸ்மித் காணுகிறான். அவை பிக்காஸோவின் வண்ணங்களால் ஒளிர்கின்றன. தான் பிக்காஸோவின் ஓவிய உலகினுள் நுழைந்து திரிவது போலவே உணருகிறான்.

கடலில் அவனைக் குளிக்கச் சொல்லிவிட்டு மனைவி விடுதி அறைக்குத் திரும்பிப் போகிறாள். தனியே மணலில் திரியும் ஸ்மித் தொலைவில் ஒரு மனிதனைக் காணுகிறான். அந்த மனிதன் மணலில் புதைந்துகிடந்த ஐஸ்கிரீம் குச்சி ஒன்றை எடுத்து மணலில் படம் வரைய ஆரம்பிக்கிறான். ஆசையாக, சிறுவர்கள் விளையாடுவது போலத் தன்னை மறந்து ஒவியம் வரைகிறான். கிரேக்கச் சிங்கங்கள், மத்திய தரைக்கடல் ஆடுகள், தங்கம் நிறம் கொண்ட கன்னிப்பெண்கள், மனிதமுகமும் குதிரை உடலும் கொண்ட தேவதைகள். மலர்களை வாறி இறைத்தபடியே ஓடும் குழந்தைகள். கொம்புடைய குதிரைகள்., என வசீகரமான தோற்றங்கள் உருவாகின்றன. திடீரென மண்ணில் முளைத்துவிட்ட உருவங்கள் போல உயிரோட்டமாக இருந்தன.

தொலைவில் நின்றபடியே அதைக் கவனிக்கும் ஸ்மித்திற்கு அது பிக்காஸோ தான் என்று தெரிகிறது. தான் சந்திக்க விரும்பிய பிக்காஸோ தன் கண்முன்னே மணலில் வியப்பூட்டும் ஓவியத்தை வரைந்து கொண்டிருக்கிறார். அங்கே அவர்கள் இருவரையும் தவிர எவருமேயில்லை. இந்தத் தருணம் கடவுள் தனக்குத் தந்த பரிசு என நினைக்கிறான் ஸ்மித்.

பிக்காஸோ தான் படம் வரைவதை ஒருவர் பார்த்துக் கொண்டிருப்பதை உணரவேயில்லை. திடீரென அவர் யாரோ தன்னைப் பார்ப்பதை அறிந்தவர் போலப் புன்முறுவல் செய்கிறார். அவருடன் கைகுலுக்க வேண்டும் எனப் பரபரப்புக் கொள்கிறான். ஆனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறான். பிக்காஸோ அந்த ஓவியத்தை அப்படியே விட்டு நடக்கத் துவங்குகிறார்

மணலில் வரையப்பட்ட ஓவியத்தை முன்பின்னுமாக நடந்து ஸ்மித் ரசிக்கிறான். அறைக்கு ஓடிப்போய் ஒரு கேமிரா எடுத்து வந்து அதைப் புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று துடிக்கிறான். அதற்குள் சூரியன் மறைந்துவிடுமே என்று கவலையாக இருக்கிறது. மணலில் வரையப்பட்ட ஓவியத்தை எப்படிக் காப்பாற்றுவது. அந்த மணலை அள்ளி விழுங்கிவிட வேண்டியது தானா.

மாபெரும் கலைஞன் வரைந்த மணல் ஓவியத்தை என்ன செய்வது எனத் தெரியவில்லை. மெல்லச் சூரியன் மறைந்து கொண்டுவருகிறது. கண்ணிலிருந்து அந்த ஒவியம் மறைவதற்குள் முழுமையாக, ஆசை தீர அதைப் பார்த்து அனுபவித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அது தான் ஒரே தீர்வு

முழுமையாக ஓவியத்தை ரசிக்கிறான். இருள் கவிகிறது. மெல்ல தன் அறைக்குத் திரும்புகிறான். அவன் நீண்ட நேரம் கடலில் குளித்துத் திரும்பியிருக்கிறான் என நினைத்துக் கொண்டு மனைவி விசாரிக்கிறாள். அவளிடம் தூரத்தில் அலைகள் வரும் சப்தம் கேட்கிறதா என்கிறான். அவளுக்கு அந்தச் சப்தம் கேட்கவில்லை.

அலை அந்த ஒவியத்தை அழிக்கப்போகிறது என்பதை ஸ்மித் உணர்ந்து கொள்வதுடன் கதை முடிகிறது

உண்மையில் இந்த நிகழ்வு ஸ்மித்தின் கற்பனையில் நிகழுகிறதா. அல்லது நிஜம் தானா. பிக்காஸோவை அவன் பார்த்தது உண்மையா. சிறுவனைப் போலப் பிக்காஸோ மணலில் ஓவியம் வரைவது அவனது கற்பனையா. இல்லை நிஜம் தானா.

நிஜம் என்றாலும் கற்பனை என்றாலும் பிக்காஸோ கடற்கரை மணலில் ஓவியம் வரையும் காட்சி அற்புதமாகவுள்ளது. அவர் வரைந்த ஓவியத்தைப் படிக்கும் நாம் கண்ணில் காணமுடிகிறது. எவரும் ஒரு போதும் சொந்தம் கொள்ள முடியாத அந்த மணல் ஓவியம் இயற்கையின் அங்கம் போல மாறிவிடுகிறது

பிக்காஸோவை நேரில் சந்திக்கும் போது ஸ்மித் ஏன் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. பிக்காஸோ அந்தக் கடற்கரையில் ஒரு விளையாட்டு சிறுவன் போல நடந்து கொள்கிறார். அவர் யாரோ வீசி எறிந்து போன ஐஸ் குச்சியில் படம் வரைகிறார். அது தான் பெருங்கலைஞனின் எளிமை. அசலான வெளிப்பாடு.

தூரிகைகள் இன்றி ஐஸ்குச்சியில் வரைந்தாலும் அவரால் அற்புதமான உருவங்களை வரைந்துவிட முடிகிறது. தான் வரைந்த உருவங்களை அவர் ரசிக்கிறார். கடலுக்குச் சமர்ப்பணம் செய்துவிட்டது போல அந்த ஓவியத்தை அப்படியே விட்டுப் போகிறார்

பிக்காஸோவை பற்றிய The Mystery of Picasso படத்தில் கேமிராவின் முன்பாகப் பிக்காஸோ படம் வரைகிறார். கோடுகள் கொஞ்சம் கொஞ்சமாக உயிர்பெறுகின்றன. அபூர்வமான அனுபவத்தைத் தரும் படமது.

ஸ்மித் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்துப் பிக்காஸோவின் சிறிய ஓவியம் ஒன்றை விலைக்கு வாங்கக் கனவு காணுகிறான். இங்கோ அவன் கண்முன்னால் பெரிய ஓவியம் மண்ணில் மலர்ந்திருக்கிறது. ஆனால் அதைச் சொந்தம் கொண்டாட முடியாது.

மறக்கமுடியாத பொன்னிற ஒளி வீசும் அந்தியை நாம் எப்படிச் சொந்தம் கொண்டாட முடியாதோ. பூரண நிலவின் வெண்ணிற பொழிவை எப்படி நமக்கு மட்டுமானது எனக் கைப்பற்றி வைத்துக் கொள்ள முடியாதோ அந்த இடத்திற்கு ஒரு கலைப்படைப்பும் சென்றுவிடுகிறது.

இந்த இடத்தில் கலை இயற்கையென மாறுகிறது. அது தான் ரே பிராட்பரியின் சிறப்பு. எழுத்தின் வழியே இது போன்ற அபூர்வமான தருணத்தை உருவாக்கியதே இந்தக் கதையின் தனித்துவம்.

பிக்காஸோ வரைந்த ஓவியம் அலையால் அழிக்கபட்டுவிட்டாலும் ஸ்மித்தின் மனதில் அழிவற்ற ஓவியமாக எப்போதும் இருக்கப்போகிறது. அது தான் அவனுக்குக் கிடைத்த பரிசு. இந்த ஒவியத்தை வரைந்த பிக்காஸோவும் அதைப் பார்த்த ஸ்மித்தும் தவிர உலகில் வேறு யாரும் அதைப் அறிய மாட்டார்கள். ஸ்மித் அந்த வகையில் அதிர்ஷ்டசாலி.

ஒரு வேளை மொத்த கதையும் பிக்காஸோவின் நினைவில் தனித்திருக்கும் ஸ்மித் கற்பனை செய்ததாகவும் இருக்கக் கூடும். அதுவும் சாத்தியம் தானே. அவன் ஒரு கனவுலகவாசி என்பது கதையின் முதல்பகுதியிலே சொல்லப்படுகிறது. அவன் புற உலகை பிக்காஸோவின் படைப்பாகவே கருதுகிறான்.

இந்தக் கதையின் தலைப்பு வேர்ட்ஸ்வொர்த்தின் கவிதை ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. வேர்ட்ஸ்வொர்த் அழகினைப் பற்றி மிகச்சிறப்பாக எழுதியவர். அவரது கவிதையின் ஒரு வரியைத் தலைப்பாக்கியது பொருத்தமானது.

இந்தக் கதை 1957ம் ஆண்டு, பிளேபாய் பத்திரிகையில் வெளியானது. கதைக்குக் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு காரணமாக 90 நிமிஷங்கள் ஓடக்கூடிய படமாகவும் இது உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்திற்கு ரே பிராட்பரியே திரைக்கதையை எழுதியிருக்கிறார்.

ஸ்மித்தைப் போலப் பிக்காஸோவை காணுவதற்காக நாட்கணக்கில் அவர் வீட்டின் முன்பாகக் காத்துக்கிடந்தவர்களைப் பற்றியும் பிக்காஸோவின் காலணியைத் திருடிப் போன திருடனைப் பற்றியும் வாசித்திருக்கிறேன். இந்தக் கதையில் அதிக உரையாடல்கள் இல்லை. குறிப்பாகப் பிக்காஸோவும் ஸ்மித்தும் பேசிக் கொள்வதேயில்லை. இந்த மௌனம் தான் இளம்படைப்பாளி கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாகும்

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 19, 2021 03:42

January 18, 2021

நூலக மனிதர்கள் 31 அஞ்சல் அட்டை மனிதர்

அவர் எப்போது பொதுநூலகத்திற்கு வரும்போதும் கையில் அஞ்சல் அட்டைகளுடன் தான் வருவார். எழுபது வயதிருக்கும். நடிகர் எஸ்.வி.சுப்பையாவின் சாயல் கொண்டவர். உயரமும் அவரைப் போலவே இருக்கும். உடைந்த மூக்குக்கண்ணாடியை நூல் கொண்டு கட்டியிருப்பார். ரப்பர் செருப்புகள். பெட்ரோல் பங்க் ஒன்றில் கணக்குவழக்கு பார்த்துக் கொண்டிருந்தார். அந்தக் காலத்துப் பி.ஏ.. கதர் வேஷ்டி சட்டை தான் எப்போதும் அணிந்திருப்பார்.

நாளிதழ்கள் பகுதியைத் தவிர வேறு எங்கும் போக மாட்டார். தமிழ் ஆங்கில நாளிதழ்கள் அத்தனையும் உட்கார்ந்து படிப்பார். படித்து முடித்தபிறகு செய்தித் தாளில் வெளியான விஷயங்களில் உள்ள பிழைகள். தகவல் தவறுகள். அல்லது மாற்றுக்கருத்துகளை உட்கார்ந்து எழுதுவார். பின்பு அவற்றைத் தபால் அலுவலகத்தில் கொண்டு போய்ச் சேர்ப்பார். இது அவரது தினசரி பழக்கம்

ஆங்கில நாளிதழ்களில் அவரது கடிதங்கள் லெட்டர்ஸ் டு எடிட்டர் பகுதியில் வெளியாகியிருக்கின்றன. தமிழ் நாளிதழ்கள் அவரைக் கண்டுகொள்ளவேயில்லை. அவருக்கு அதைப்பற்றிக் கவலை கிடையாது.

நியூஸ் பேப்பருக்குப் பொறுப்புணர்வு வேண்டும். தன்னைப் போல அதன் தவறுகளைக் கண்டுபிடித்துச் சுட்டிக்காட்டும் ஒருவன் இருக்கிறான் என்ற பயம் தேவை. இல்லாவிட்டால் அவர்கள் தொடர்ந்து தவறு செய்தபடியே இருப்பார்கள் என்பார்

நாளிதழ்களில் எப்படி அவர் இத்தனை தவறுகளைக் கண்டறிகிறார். எப்படி இவ்வளவு வேகமாக. கோபமாகப் பதில் எழுதிப் போடுகிறார் என்று வியப்பாக இருக்கும். ஆங்கில நாளிதழில் வெளியான அவரது கடிதங்களைச் சில நேரம் நூலகரிடம் காட்டுவதுண்டு.

“நம்ம லைப்ரரி பற்றி நல்லதா ஏதாவது எழுதுங்கள்“ என்பார் நூலகர்

அவரிடம் அதைக் கேட்டுக் கொண்டதாகப் பாவனைக் கூட இருக்காது. ஒருமுறை நாளிதழில் பாபு ஜகஜீவன் ராம் புகைப்படத்திற்குப் பதிலாக வேறு ஒருவரின் புகைப்படம் அச்சாகியிருந்தது. அதைக் கதர் வேஷ்டி அணிந்தவரால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. சப்தமாக இடியட் என்று கத்தினார்

அதைக்கேட்ட வாசகர்கள் சிலர் திரும்பிப் பார்த்தார்கள். அந்த நியூஸ் பேப்பரை கையில் எடுத்துக் கொண்டு நூலகரிடம் வந்து யாரு பாபு ஜெகஜீவன்ராம்னு கூடத் தெரியாதவன் எதுக்கு நியூஸ் போடுகிறான் என்று கோபமாகப் பொறிந்து தள்ளினார்.

நூலகரும் தலையைத் தலையை ஆட்டி கேட்டுக் கொண்டிருந்தார். மறுநாள் அவரது கடிதம் பேப்பரில் வெளியாகியிருந்தது. கூடவே பத்திரிக்கை தவறுக்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டிருந்தது.

ஏன் ஒருவர் நாளிதழ்களின் மனசாட்சி போல நடந்து கொள்கிறார் என்று எவருக்கும் புரியவில்லை. அவரோ அது தன் கடமை என்பது போல நடந்து கொண்டார். ஒருமுறை கூட அவரது புகைப்படம் எந்த நியூஸ் பேப்பரிலும் வெளியானதில்லை. ஆகவே அவர் தான் கடிதங்கள் எழுதுகிறார் என்று எவருக்கும் தெரியாது.

பத்திரிக்கை செய்திகளுக்குக் கொதித்துப் போகிற நபர் உள்ளூர் நிகழ்வுகள் எதையும் கண்டு கொள்ளமாட்டார். நூலகத்திற்கு வரும் சாலை மோசமாக இருப்பது பற்றியோ, நகரில் அதிகமாகி வரும் தண்ணீர் தட்டுபாடு பற்றியே ஒரு முறை கூட அவர் புகார் சொன்னதில்லை. அவரது உலகம் அச்சிடப்பட்ட செய்திகள். அதன் தவறுகள் மறுப்புகள் மட்டுமே.

தினசரி இதற்காகக் காசு செலவு செய்து தபால் போடுகிறாரே என்று நூலகர் கேட்டதற்கு “அது பேப்பர் படிக்கிற நம்ம கடமை. நியூஸ் பேப்பரை எல்லோரும் புரட்டத்தான் செய்றாங்க. நான் ஒருத்தன் தான் முழுசா படிக்கிறேன். எனக்குப் புத்தகம் படிக்கிறதில் ஆர்வம் கிடையாது. நியூஸ் படிக்கிறதில் தான் ஆர்வம். என்கிட்ட பணமிருந்தால் இந்தியாவில் வெளியாகிற எல்லா இங்கிலீஷ் பேப்பரையும் வாங்கிப் படிப்பேன்“ என்றார். அவர் சொல்லும் வரை அப்படியான இங்கிலீஷ் பேப்பர்கள் வெளியாகிறது என்று கூட எவருக்கும் தெரியாது.

ஒரு நாள் சர்வே எடுப்பதற்காகத் தமிழ் நாளிதழைச் சார்ந்த சிலர் நூலகத்திற்கு வந்திருந்தார்கள். அவர்களிடம் நூலகர் கதர்வேஷ்டிகாரரைப் பற்றிச் சொல்லி அவர் கீழே படித்துக் கொண்டிருப்பார். அவரிடம் பேசுங்கள் என்று அனுப்பினார். அவரைத் தேடி வந்து சர்வே எடுப்பவர்கள் தங்கள் பத்திரிக்கை பற்றிக் கேட்டார்கள்

“உங்க பத்திரிக்கை ஒரு குப்பை. அதுல வர்ற நியூஸ்ல பாதித் தப்பு. சொன்னா கோவிச்சிகிட கூடாது. உங்க பேப்பரை பஜ்ஜி சாப்பிடத் தான் யூஸ் பண்ணமுடியும்

அவர்கள் முகம் வெளிறிப்போய்விட்டது. இப்படி ஒருவர் பதில் சொல்லுவார் என்று எதிர்பார்க்கவில்லை.

சர்வே எடுப்பவர்களில் ஒருவர் கோபத்தைக் காட்டிக் கொள்ளாமல் “எங்க பத்திரிக்கையில் என்ன மாற்றம் கொண்டுவரணும்னு நினைக்குறீங்க“ எனக்கேட்டார்

அவ்வளவு தான் மறுநிமிடம் ஆங்கிலச் செய்தித்தாளை எடுத்து வைத்துக் கொண்டு அதில் செய்தி எப்படித் தலைப்பிடப்பட்டிருக்கிறது. எந்தச் செய்தியை எப்படி வெளியிடுகிறார்கள். எவ்வளவு சுருக்கமாக, தெளிவாக எழுதியிருக்கிறார்கள் என்று விரிவாகப் பாடம் எடுப்பது போல விளக்க ஆரம்பித்துவிட்டார்

அவர்கள் உறைந்து போய்க் கேட்டுக் கொண்டிருந்தார்கள். செய்திகளை வெளியிடும் முறையைப் பற்றிச் சொன்னதுடன் ஆங்கிலச் செய்தித்தாளில் எந்த வாக்கியத்தில் என்ன தவறு உள்ளது. அதற்கு மாற்றாக எப்படி எழுதியிருக்க வேண்டும் என்பதைச் சொல்லிக் கொண்டிருந்தார்.

சர்வே எடுக்க வந்தவர்கள் பேயறைந்தது போல வெளியேறிப் போனார்கள். நூலகரிடம் வந்து சொன்னார்

“நல்லா நாக்கை பிடுங்கிகிடுற மாதிரி கேட்டு அனுப்பி வச்சேன். பேப்பர் படிக்கிறவன் என்ன முட்டாளா“

“தமிழ் பேப்பர்ல ஏன் உங்க லெட்டர்ஸ் எதையும் போடுறதுல்ல“ என்று கேட்டார் நூலகர்

“தப்பு சொன்னா யாரு கேட்டுகிடுவா. நிறைய நாள் போன் பண்ணிக் கூடச் சொல்லியிருக்கிறேன். ஒருத்தனும் கேட்டுகிடலை. தலைவர்களோட பெயர்களைச் சுருக்கி வெளியிடுறது அவமானம். வெளிநாட்டுப் பிரதமர், ஜனாதிபதி பேரைத் தப்பு தப்பான உச்சரிப்பில் வேற எழுதி வைக்கிறான். அதை என்னாலே சகிக்க முடியலை. “

அதைக்கேட்டு நூலகர் சிரித்தார்.

ஆற்றாமையோடு கதர் வேஷ்டி அணிந்தவர் சொன்னார்

“ஐம்பது வருஷமாகப் பேப்பர் படிச்சிட்டு இருக்கேன். வர வர பேப்பர்ல போட்டிருக்கிற செய்தியை நம்ப முடியலை. முன்னாடி எல்லாம் பேப்பர்ல செய்தி வந்துட்டா அது தான் நிஜம். கோட்டுக்குக் கொண்டு போய் அதைச் சாட்சியாகக் காட்டலாம். இப்போ எந்த நியூஸையும் நம்ப முடியலை. நேத்து நம்ம ஊர்ல ஒரு கட்சிக்கூட்டம் நடத்துச்சி. ஐம்பது பேர் வந்திருந்தாங்க. அதைப் பேப்பர்ல அலை கடல் எனக் கூட்டம்னு போடுறான். வெளியூர்ல படிக்கிறவன் நம்பத்தானே செய்வான். கட்சி பேப்பர்ல போட்டா கூட அவன் பேப்பர் போடுறானு விட்ருவேன். ஆனா பொதுவான பேப்பர்காரன் போடுறான். அதை நான் ஏத்துகிட மாட்டேன். பேப்பர்ல வெளியிடுறானோ, இல்லையோ என் கோபத்தை ஒரு லெட்டரா எழுதி போட்டுக்கிட்டு தான் இருப்பேன்“.

“இத்தனை வருஷம் லெட்டர் போட்டு இருக்கீங்க. எப்போதாவது இதைப் பாராட்டி பத்திரிக்கை உங்களுக்கு லெட்டர் போட்டு இருக்கா“

“ஒரு பயலும் அப்படிப் போடலை. தேடிவந்து உதைக்காமல் விட்டு வைத்திருக்கிறானே. அதை நினைத்து சந்தோஷப்பட்டுகிட வேண்டியது தான்“

அதைக் கேட்டு நூலகர் சப்தமாகச் சிரித்தார். தவறுகளைச் சுட்டிக்காட்டும் போது வாசகரின் பொறுப்புணர்வு வெளிப்படுகிறது என்று ஏன் ஒருவருக்கும் தெரிவதில்லை . தன் பொறுப்பற்ற செயலை ஒருவர் கண்டிக்கிறார் என்ற புரிதல் கூடவா இல்லாமல் போய்விடும்.

இன்றுள்ளது போல அன்று இத்தனை தொலைக்காட்சி சேனல்கள் கிடையாது. செய்திகளின் பேராறு ஓடவில்லை. முக்கியச் செய்திகள் வெளியாவதற்கே ஒரு நாள் தேவைப்பட்டது. செய்தித் தாளில் ஒருவரின் படம் இடம்பெற்றுவிட்டால் அது பெரிய விஷயமாகக் கருதப்பட்டது. கதர் வேஷ்டி அணிந்த மனிதர் போல மனசாட்சியின் குரலை ஒலிப்பவர்கள் ஊருக்கு ஒருசிலர் இருந்தார்கள்.

ஆனால் இன்று எது நிஜம் எது பொய் எனப் பிரித்து அறியமுடியாதபடி செய்திகள் பெருகிவிட்டன.

ஒரு காலத்தில் புகைப்படம் பொய் சொல்லாது என்றார்கள் ,நம் காலத்திலோ புகைப்படமும் பொய் சொல்லும் வீடியோவும் பொய் சொல்லும் என நிரூபிக்கபட்டுவிட்டது.

இப்போது நாம் செய்திகளை நம்புவது ஊசலாட்டத்தில் இருக்கிறது. சந்தேகத்துடன் தான் செய்திகளைக் கேட்கிறோம். பின்தொடருகிறோம். செய்திகளால் உருவான அச்சம் நம்மை நிம்மதியற்றுச் செய்துவிடுகிறது.

என்றோ நூலகத்திற்கு அஞ்சல் அட்டையுடன் வந்த அந்த மனிதரைப் பற்றி இன்றைக்கு நினைக்கையில் வியப்பானவராகத் தோன்றுகிறார்.

நம் காலத்தில் உண்மையின் குரலை ஒலிக்கும் மனிதர்கள் குறைந்து கொண்டேவருகிறார்கள்.

கண்களை அகலத் திறக்கச் சொல்லிவிட்டு நாக்கை ஒடுக்கிவிட்டது நம் காலம்.

அது தான் பெருந்துயரம்.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 18, 2021 22:10

காலைக்குறிப்புகள் -26 தற்செயலின் வரைபடம்

ரஷ்யக் கவிஞர் அன்னா அக்மதோவாவின் குறிப்பு ஒன்றில் ஒரு நிகழ்வு விவரிக்கபடுகிறது.

ஒரு நாள் தோழியுடன் நடந்து சென்று கொண்டிருக்கும் போது ஒரு பாலத்தின் அருகில் ஏதோ யோசனையுடன் நின்றுவிட்டார். தோழி அவரிடம் என்ன யோசனை என்று கேட்டதற்குக் கவிஞரும் தன் தோழியுமான மரினா ஸ்வெட்டேவா எப்படியிருக்கிறாள் என்று விசாரித்திருக்கிறார். உடனே தோழி ஆச்சரியமாக, இதே இடத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு மெரினா உன்னைப் பற்றி விசாரித்தாள். ஒரே இடத்தில் நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்டது ஆச்சரியமாக இருக்கிறது. இது எப்படிச் சாத்தியம் எனக் கேட்டாள்.

அன்னாவிற்கும் அது ஆச்சரியமாகவும் புதிராகவுமே இருந்தது. அந்தப் பாலத்தின் அருகே வரும்வரை தான் மரினாவைப் பற்றி நினைக்கவில்லை என்றும், அப் பாலம் அவளை நினைவுபடுத்திவிட்டது என்றும் சொன்னார்.

கிட்டதட்ட இது போன்ற பதிலை தான் மரினாவும் சொன்னாள். ஒரு பாலம் ஏன் கவிஞரை நினைவுபடுத்துகிறது என்று கேட்டார் தோழி.

கவிஞர்கள் பாலத்தைப் போன்றவர்கள் . பாலம் தனிமையானது. பாலம் கடந்து செல்லும் வழி. அங்கே யாரும் தங்கிவிடுவதில்லை. சாலையை விடவும் உயர்ந்து நின்ற போதும் சாலையின் சந்தோஷம் பாலத்திற்குக் கிடையாது என்றார் அன்னா அக்மதேவா.

அன்னாவின் வாழ்க்கையும் மரினாவின் வாழ்க்கையும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றதே. அன்னா அக்மதோவா மரினாவைப் பற்றி நலம் விசாரித்த ஒன்றிரண்டு நாட்களில் மரினா தற்கொலை செய்து கொண்டு இறந்து போனாள்.

மரினா ஸ்வேடேவா 1922 இல் ரஷ்யாவை விட்டு வெளியேறி 1939 இல் மாஸ்கோவுக்குத் திரும்புவதற்கு முன்பு பாரிஸ், பெர்லின் மற்றும் ப்ராக் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்தார்.அவரது கணவர் செர்ஜி எஃப்ரான் மற்றும் மகள் அரியட்னா எஃப்ரான் ஆகியோர் உளவு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்; அவரது கணவர் தேசத்துரோகி என அறிவிக்கபட்டு தூக்கிலிடப்பட்டார்.

மெரினாவும் அவரது பதினாறு வயது மகனும் வெளியேறி எலாபுகாவுக்குப் புறப்பட்டனர். அவளிடம் பணம் இல்லை, வேலை இல்லை, கவிதை எழுதும் உத்வேகம் அவளை விட்டு வெளியேறியிருந்தது. பேரழிவிற்குள்ளான, ஏமாற்றமடைந்த, தனிமையில் இருந்த ஸ்வெட்டேவாவுக்கு வாழ்வின் மீதான பிடிப்பேயில்லை. அவள் ஆகஸ்ட் 31, 1941 அன்று தற்கொலை செய்து கொண்டாள். இதன் சில தினங்களுக்கு முன்பாகத் தான் அன்னா அவளைப் பற்றி விசாரித்தது நடந்தது.

அன்னா அக்மதோவா ரஷ்யக் கவிஞர். நிக்கோலாய் குமிலியோவ்வை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அது முறையான திருமணமில்லை. அவர்கள் சேர்ந்து வாழ்ந்தார்கள். குமிலேவ் தொடர்ந்து பயணம் செய்கிறவர். ஆகவே பெரும்பாலான நேரங்களில் தனித்தனியாக வாழ்ந்தனர்; குமிலியேவ் பலமுறை ஆப்பிரிக்காவுக்குப் பயணம் செய்திருக்கிறார். அவர்களின் காதல் உறவினை முறித்துக் கொள்வதாகக் குமிலியேவிடம் சொன்னபோது அவர் அவளுக்குச் சந்தோஷம் தருவதாக இருந்தால் அந்தப் பிரிவினை தான் ஏற்றுக் கொள்வதாகச் சொன்னார்.

எதிர்ப்புரட்சியாளர் என்ற தவறான குற்றச்சாட்டில் 1921 இல் குமிலியோவ் சுட்டுக் கொல்லப்பட்டார். அது அன்னாவினை நிலைகுலையச் செய்தது. அதன் சில வருஷங்களுக்குப் பிறகு அன்னாவின் மகன் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டான். அவனைச் சிறையிலிருந்து மீட்பதற்காக அன்னா போராடினார்.

ஒரே வாழ்க்கையைத் தான் இரண்டு பெண் கவிகளும் வாழ்ந்திருக்கிறார்களோ என்று தோன்றியது. அன்னா தன் குறிப்பேட்டில் பதிவு செய்துள்ள சம்பவத்தைத் தற்செயல் எனக் கருத வேண்டியதில்லை. தற்செயலாகத் தோன்றினாலும் அது ஒருவகை நினைவூட்டல். அந்தப் பாலத்தின் முன்னால் அவர்கள் ஒருவரையொருவர் நினைத்துக் கொள்வது இணைபிரியாத நேசத்தின் அடையாளம்.

ஞானக்கூத்தன் பாலம் குறித்து ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அதில்

கல்லும் கலவையும் கொண்டு

கரணையால் தடவித் தடவி

சாவிப் பொத்தல் மாதிரித் தெரியும்

ஆட்கள் சிலரால் கட்டப்பட்டாலும்

கட்டிடம் இல்லை பாலம்.

முன்னாளெல்லாம் பாலம்

தியானித்திருக்கும் நீருக்கு மேலே

இந்நாளெல்லாம் பாலம்…

நிலத்திலும் உண்டு அதன் முதுகெலும்பு.

என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. நீருக்கு மேல் பாலம் தியானித்திருக்கும் என்பது முக்கியமான வரி. தண்ணீரைக் கடக்கத்தான் அந்தக் காலத்தில் பாலம் அமைத்தார்கள். இன்று நிலத்திலும் பாலம் தேவைப்படுகிறது. உருவாக்கப்படுகிறது.  அந்த வகையில் நவீன வாழ்க்கையின் அடையாளம் பாலம்.

சொந்த வாழ்வின் துயரங்களுக்குள் அமிழ்ந்து கிடந்த இரண்டு பெண்கவிகளும் அது குறித்துப் புலம்பவில்லை. சுய இரக்கம் தேடிக் கொள்ளவில்லை. அவர்களின் கவிதை எரிகல்லைப் போல வேகமும் ஒளியும் கொண்டிருக்கிறது.

இரண்டு பெண்கவிகளும் ரஷ்யாவிலிருந்து வெளியேறி வாழ்ந்தவர்கள். புகலிடத்தில் தங்கள் கவிதைகளை எழுதினார்கள். வாழும் போது அவர்களுக்கான கௌரவமும் புகழும் கிடைக்கவில்லை.

மாஸ்கோவில் ஏற்பட்ட ஒரு பஞ்சத்தின் போது, மரினா தனது மகளுக்கு உணவளிக்கக் குடும்ப ஆதரவோ பணமோ இல்லாமல் ஒரு அனாதை இல்லத்தில் தங்க வைத்தார், மகள் அங்கே பட்டினியால் இறந்து போனாள்.

அன்னா அக்மதோவா, ஒசிப் மண்டேல்ஸ்டாம், மரினா ஸ்வெட்டேவா, போரிஸ் பாஸ்டெர்னாக் ஆகிய நால்வரும் நெருக்கமான நண்பர்கள். நால்வர் அணி என்றே அவர்களைக் குறிப்பிடுகிறார்கள். கவிதையே அவர்களை ஒன்று சேர்த்தது.

தற்செயல்களின் பின்னுள்ள புதிரைத் தான் கவிஞர்கள் எழுதுகிறார்கள். கவிதையில் தற்செயல் என்பது விந்தையானது. அன்றாட வாழ்க்கையில் தற்செயல் பெரிய விஷயமில்லை.முக்கியத்துவம் தரப்படுவதுமில்லை. ஆனால் தற்செயல்களின் ஒழுங்கினையும், வெளிப்பாட்டினையும் கவிஞர்கள் ஆராய்கிறார்கள். தற்செயலின் வரைபடத்தை அவர்கள் உருவாக்குகிறார்கள்.

நாம் ஒருவரை எப்போது நினைத்துக் கொள்கிறோம் என்பது முக்கியமானது. நினைவில் சிலர் குறிப்பிட்ட வயதில். குறிப்பிட்ட தோற்றத்தில் உறைந்து விடுகிறார்கள். காலம் அவர்களுக்கு நரையும் நோவும் தந்து முதுமையின் பள்ளத்தாக்கில் உலவச் செய்யக்கூடும். ஆனால் அவர்கள் எவர் மனதிலோ அழியா இளமையுடன் இருக்கிறார்கள்

இளவரசன் ஜெங்கி என்பவன் அப்படி உலகின் நினைவில் என்றும் இளமையானவனாக, காதலின் அடையாளமாக இருக்க விரும்புகிறான். அவனுக்கும் வயதாகிறது. பார்வை மங்குகிறது. அழகான பெண்ணை அடையாளம் காணமுடியவில்லை. ஆனால் இந்த உண்மை உலகிற்குத் தெரியக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறான். மலைப்பகுதியில் ஒதுங்கி வாழுகிறான். மார்க்ரெட் யூரிசனாரினின் கதையில் ஜெங்கியின் நினைவில் அவனை மிகவும் நேசித்த பெண்ணுக்கு இடமேயில்லை. அப்படியானது தான் வாழ்க்கை.

தற்செயல்களின் புத்தகத்தை எவராவது உருவாக்க நினைத்தால் அது முடிவில்லாமல் வளர்ந்து கொண்டேயிருக்கும்.

1916ல் முதன்முறையாக அன்னாவின் கவிதைகளை வாசித்தார் மரினா. அந்தக் கவிதைகள் மிகவும் பிடித்திருந்தன. ஆகவே அவரைச் சந்திக்கப் பீட்டர்ஸ்பெர்க்கிற்கு வருகை தந்தார். ஆனால் அன்னா அப்போது ஊரில்லை. அந்த ஏமாற்றத்தை மரினாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மரினா இது பற்றி ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். தான் எழுதிய கவிதைகளை அன்னாவிற்கு அனுப்பிக் கருத்துக் கேட்பது மரினாவின் வழக்கம். அன்னா தன் கைப்பையில் எப்போதும் மரினாவின் கவிதைகளை வைத்திருப்பார். அடிக்கடி எடுத்து படித்துக் கொள்வார். மரினா தன் கவிதைகளை அன்னா அக்மதோவாவிற்கு சமர்பணம் செய்திருக்கிறார்.

சுழிக்காற்றில் சிக்கிக் கொண்டதைப் போல வாழ்க்கையில் எதிர்பாராத இழப்புகள், துயரங்களுக்குள் சிக்கித் தவித்தார் அன்னா. அதிகாரத்தின் மீதான பயம். தனிமை. நண்பர்களின் மரணம் இவை அவரை மிகுந்த துயரம் கொள்ளச் செய்தன. கவிதை ஒன்று தான் அவரது ஒரே ஆறுதலாக இருந்தது. கவிதையின் வழியாகவே அவர் தனது மீட்சியை அடைத்தார்.

அன்னாவின் சிறிய குறிப்பு அவரைப்பற்றியும் மரினாவை பற்றியுமான பல்வேறு நினைவுகளைக் கொந்தளிக்கச் செய்துவிட்டது. தற்செயலின் மீதான வியப்பு குறையவேயில்லை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 18, 2021 03:08

January 17, 2021

கவிஞனின் நாட்கள்

அனிதா தேசாயின் புகழ்பெற்ற நாவல் In Custody. இதனை மெர்சண்ட் ஐவரி தயாரிப்பில் திரைப்படமாக்கியிருக்கிறார்கள். முக்கிய வேஷத்தில் சசிகபூர், ஓம்பூரி, ஷப்னா ஆஸ்மி நடித்திருக்கிறார்கள். புகழ்பெற்ற உருது கவிஞர் நூர் ஷாஜெஹானாபாடியை சந்தித்து ஒரு நேர்காணலை மேற்கொள்ளத் தேவன் சர்மா முயல்வதே மையக்கரு.

மிர்பூரில் உள்ள ராம் லால் கல்லூரியில் இந்தி இலக்கியம் கற்பிக்கும் ஆசிரியரான தேவனுக்கு உருதுக் கவிதைகள் மீது மிகுந்த ஈடுபாடு. வீட்டிலிருந்து தேவன் கல்லூரிக்குக் கிளம்புவதில் படம் ஆரம்பமாகிறது. அவர் மனைவி பள்ளிக்குச் செல்லும் மகனை அனுப்பி வைப்பதில் பரபரப்பாக இருக்கிறார். கல்லூரிக்கு நேரமாகிவிட்டது என்று தன் அவசரத்தைக் காட்டுகிறார் தேவன். டீக்குடிக்கக் கூட அவருக்கு நேரமில்லை.

உருது கவிஞராக வேண்டும் என்ற தனது வாழ்க்கை லட்சியங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மனைவி, மகன் எனச் சொந்த வாழ்க்கையின் நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கிறார் தேவன்.

கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் அவரைக் கேலி செய்கிறார்கள். வகுப்பறையில் கூச்சல் போடுகிறார்கள். தேவனும் நன்றாகக் கவிதைகள் எழுதக்கூடியவர். அவரது சக ஆசிரியர், ஏன் உருது மொழியில் கவிதைகள் எழுதுகிறார் எனக் கேட்கிறார். தேவன் உருது மொழியின் சிறப்புகளை எடுத்துச் சொல்கிறார். கவித்துவப் பாரம்பரியம் கொண்ட உருது மொழி இன்று கைவிடப்பட்டு அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என ஆதங்கப்படுகிறார்.

உருதுக் கவிதைகளைத் தன் மனதிலிருந்து அழகாகப் பாடுகிறார் தேவன். அவரது தந்தை வழியாக அவருக்கு உருதுக் கவிதைகள் அறிமுகமாகியிருந்தன. இந்த நிலையில் தற்செயலாக அவரைத் தேடி வரும் பால்ய நண்பன் முராத் தனது இலக்கிய இதழில் உருது கவிதைகளுக்கெனச் சிறப்பிதழ் கொண்டுவர இருப்பதால் நூர் சாகிப்பின் நேர்காணல் ஒன்றைச் செய்து தரும்படி கேட்டுக் கொள்கிறான்.

தனது ஆதர்சக் கவிஞரைச் சந்திக்கும் பாக்கியம் கிடைக்கிறதே எனத் தேவன் உடனே ஒத்துக்கொள்கிறார். நூர் சாகிப்பிற்கு ஒரு கடிதம் தருகிறான் முராத். அதைக் கையில் எடுத்துக் கொண்டு போபாலில் வசிக்கும் கவிஞர் நூர் ஷாஜெஹானாபாடியைச் சந்திக்கப் புறப்படுகிறார் தேவன்.

அவரது மனைவி ஏதோ புதிய வேலைக்கு முயற்சி செய்வதற்குத் தான் போபால் போகிறார் போல என நினைத்துக் கேள்வி கேட்கிறாள். அதற்குத் தேவன் கோவித்துக் கொள்கிறார்.

போபாலின் குறுகலான, பழமையான வீதிகளுக்குள் நடந்து பழைய கால வீடுகளைக் கடந்து ஆங்காங்கே விசாரித்து விசாரித்துக் கவிஞர் நூர் ஷாஜெஹானாபாடி வீட்டினை அடையாளம் காணுகிறார். சிதைந்து போன பழைய காலத்து வீடு. அழுக்காகவும் மோசமாகவும் உள்ள அந்த வீடே அவர் இன்று இருக்கும் நிலையின் அடையாளம் போலிருக்கிறது. வீட்டுக்கதவைத் தட்டுகிறார்.

நூர் சாகிப்பின் முதல் மனைவி அவரை விருப்பமில்லாமல் வரவேற்கிறார். நூர் சாகிப் இளம்பெண் ஒருத்தியைச் சேர்த்துக் கொண்டு வாழுவதும் அவள் வழியாக ஒரு குழந்தையைப் பெற்றிருப்பதும் தெரிய வருகிறது. உடைந்து கிடந்த படிகளின் வழியே ஏறி நூர் சாகிப் அறைக்குப் போகிறார். அந்த அறை இருண்டு போயிருக்கிறது.

பருத்த உடலுடன் வீங்கிய கண்களுடன் போதை கலையாமல் நூர் சாகிப் படுக்கையில் கிடக்கிறார். தான் கொண்டுவந்த கடிதத்தை அவரிடம் நீட்டுகிறார் தேவன்.

நூர் சாகிப்பிற்குப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் என்றாலே பிடிக்காது. ஆகவே எரிச்சலுடன் தேவனைத் துரத்திவிட முயலுகிறார். தேவன் தான் அவரது கவிதைகளை ஆழ்ந்து படித்தவன் எனச் சொல்லி சில கவிதைகளை மனதிலிருந்து பாடிக்காட்டுகிறார். அவரது குரலின் வசீகரத்தில் மயங்கி நூர் அவரது வேண்டுகோளை ஏற்றுக் கொள்கிறார்.

அன்றாடம் ஒரு இளங்கவிஞர்கள் பலரைக் கூட்டி வைத்துக் கொண்டு குடிப்பதும் பிரியாணி சாப்பிடுவதும் கவிதைகள் பாடுவதுமாக நூர் சாகிப்பின் வாழ்க்கை இருப்பதை நேரடியாகக் காணுகிறார் தேவன். உண்மையில் நூர் சாகிப்பைத் தேடி வருகிறவர்கள் குடிப்பதற்காக மட்டுமே வருகிற ஒட்டுண்ணிகள் என்பதைத் தேவன் புரிந்து கொள்கிறார்.

இது போலவே இரண்டாவது மனைவியின் கட்டுப்பாட்டில் தான் நூர் சாகிப் இருக்கிறார். அவள் வேண்டுமென்றே அவரை அவமானப்படுத்துகிறாள். அடிமை போல நடத்துகிறாள் என்பதையும் காணுகிறார்.

எவ்வளவு பெரிய கவிஞர். எவ்வளவு மோசமாக வீட்டில் நடத்தப்படுகிறார் என்று மனக்கஷ்டமடைகிறார். நேர்காணல் செய்வதற்கு இயலாத சூழலில் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகிறார் தேவன்.

சில நாட்களுக்குப் பிறகு தேவனுக்கு நூர் சாகிப்பிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது. தன்னை வந்து சந்திக்கும்படி எழுதியிருக்கிறார். இந்த முறை அவரைத் தேடிப் போகையில் நூர் சாகிப்பின் இளம் மனைவி கஜல் பாடல்களைப் பாடுவதைக் கேட்கிறார். அவள் நூர் சாகிப்பின் கவிதைகளைத் திருடி தனது கவிதை எனப் பெருமையாகப் பாடுகிறாள். கைதட்டு வாங்குகிறாள். நிறையப் பணமும் அவளுக்குக் கிடைக்கிறது. இதைக் கண்டு தேவன் கோவித்துக் கொள்ளும் போது தான் அந்தப் பெண்ணின் அழகில் மயங்கி ஏமாந்து போன விஷயத்தைச் சொல்கிறார் நூர் சாகிப்.

நேர்காணல் செய்வதற்கு நூர் சாகிப் ஒத்துக் கொள்ளவே அதை ஏன் வீடியோவாகப் பதிவு செய்து கொள்ளக்கூடாது என்ற யோசனை உருவாகிறது. புதிதாக ஒரு வீடியோ கேமிரா வாங்க பணம் தேடி அலைகிறார் தேவன்.

உருது விரிவுரையாளரான சித்திக் மூலம் அவரது கல்லூரியே உதவி செய்கிறது. ஆனால் அவர்கள் தந்த பணத்தில் டேப்ரிக்காடர் தான் வாங்க முடிகிறது. அதுவும் பழைய ரிக்காடர். அதை இயக்க ஒரு பையனையும் கடைக்காரர் அனுப்பி வைக்கிறார்.

நூர் சாகிப்பை நேர்காணல் செய்வதற்கும் அவரது குரலைப் பதிவு செய்வதற்கும் பணம் வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார் அவரது முதல் மனைவி. வேறுவழியின்றி அதற்குப் பணம் தேடி அலைகிறார் சித்திக் வழியே மறுபடியும் உதவி கிடைக்கிறது. அந்தப் பணத்தினை முதல் மனைவியிடம் கொடுக்கிறார்

அவள் தங்கள் குடியிருப்பிற்குப் பக்கத்திலுள்ள வேசையர் விடுதி ஒன்றில் ஒரு அறையை ஏற்பாடு செய்து அங்கே வைத்து நேர்காணல் எடுத்துக் கொள்ளும்படி செய்கிறாள்.

அங்கேயும் நூர்சாகிப்பின் அபிமானிகள் திரண்டு விடுகிறார்கள். குடியும் பிரியாணியுமாகக் கூத்தடிக்கிறார்கள். தேவன் நினைத்தது போல அவரை நேர்காணல் செய்யவோ, கவிதைகளை அவரது குரலில் பதிவு செய்யவோ இயலவில்லை. இடையில் டேப்ரிக்கார்டர் வேறு கோளாறு ஆகிவிடுகிறது. கடன்வாங்கிச் செய்த ஏற்பாடு இப்படி ஆகிவிட்டதே என நிலைகுலைந்து போகிறார் தேவன்.

இதற்கிடையில் உண்மையை அறிந்து கொண்ட இரண்டாவது மனைவி இம்தியாஸ் முதல் மனைவியோடு சண்டையிடுகிறாள். தன்னை ஏமாற்றிவிட்டதாகத் தேவன் மீது கோவித்துக் கொள்கிறாள். கல்லூரி நிர்வாகமும் தேவன் மீது கோபம் கொள்கிறது

வாழ்க்கை நெருக்கடிகள் ஒரு கவிஞனை எந்த அளவு ஒடுக்கி வைத்திருக்கிறது என்பதை உணருகிறார் தேவன். அவருக்கு நூர் சாகிப் மீது பரிதாபமும் வருத்தமும் ஏற்படுகிறது. முடிவில் நூர் சாகிப் தான் எழுதிய கவிதைகளைத் தேவனிடம் ஒப்படைத்துவிட்டு இறந்து போகிறார்.

ஒரு இளங்கவிஞனுக்கும் மூத்த கவிஞருக்குமான உறவும் அன்பும் படத்தில் அழகாக வெளிப்படுத்தப்படுகிறது. பணமும் புகழும் நிலையற்றவை என்பதை நூர் உணர்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவரது இளம்மனைவி இம்தியாஸ் இதற்காகவே அவரை ஒட்டிக் கொண்டிருக்கிறாள்.

கவிதையின் வழியே தான் என்றும் வாழக்கூடியவன். தன் மனதிலுள்ள கவிதைகளை உண்மையில் அதை நேசிக்கும் ஒருவர் முன்பு தான் வெளிப்படுத்துவேன் என்கிறார் நூர் சாகிப். அவரது உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு உற்ற தோழனாக மாறுகிறான் தேவன்.

நூர் சாகிப் தன் வீட்டில் புறாக்களை வளர்க்கிறார். அந்தப் புறாக்கள் அவரது தோளில் அமர்ந்து கொள்கின்றன. சுதந்திரம் மற்றும் கவிதையின் அடையாளம் போலவே புறா காட்டப்படுகிறது. அந்தப் புறாக்களைக் கடைசியில் இம்தியாஸ் கூண்டிலிருந்து பறக்கவிடுகிறாள். தன்னுடைய புறாக்கள் தன்னைவிட்டுப் போய்விட்ட பிறகு வாழ்க்கையில் இனி நம்பிக்கையில்லை என வருந்துகிறார் நூர் சாகிப்

தேவனும் நூர் சாகிப்பும் ஞானி ஒருவரின் அடக்க ஸ்தலத்திற்குத் தொழுகை செய்வதற்காகச் செல்லும் காட்சி மிக அழகானது . மெய்மறந்து அவர்கள் ஒன்றிணைகிறார்கள்.

இது போலவே உருது ஆசிரியரான சித்திக்கின் பழைய மாளிகை இடிக்கப்படும் காட்சியும் ஒரு குறியீடு போலவே இருக்கிறது.

ஒரு நாள் இரவில் தேவன் படுக்கையிலிருந்து எழுந்து கைம்பெண்கள் கையில் விளக்குடன் பிரார்த்தனைக்குச் செல்வதைக் காணுகிறார். அப்போது அவரது மனைவி அவரை ஆறுதல் படுத்தி உறங்க அழைத்துப் போகிறாள். நிர்கதியான அந்தப் பெண்களின் பிரார்த்தனையைப் போன்றதே தேவனின் ஈடுபாடும்.

இன்னொரு காட்சியில் குடித்து வாந்தி எடுத்து மயங்கிக் கிடக்கும் நூர் சாகிப்பைக் கண்டு அவரது இரண்டாம் மனைவி திட்டுகிறாள். அவர் கவிதை எழுதி வைத்திருந்த காகிதங்களை வாந்தியைத் துடைத்துப் போடுவதற்காகத் தேவனிடம் வீசி எறிகிறாள். இதில் தேவன் அதிர்ச்சி அடைகிறார்.

நூர் சாகிப்பின் தோற்றம் பிரெஞ்சு எழுத்தாளர் பால்சாக் போலவே இருக்கிறது. குடி, ருசியான சாப்பாடு. எழுத்து எனப் பால்சாக் போலவே நூரும் வாழுகிறார். பெயரும் புகழுமான தனது கடந்தகாலம் தன்னைவிட்டுப் போய்விட்டது என நூர் வருத்தமான குரலில் சொல்கிறார். குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் வாழ முடியாது என்பதே நிஜம். வயதும் நோயும் அவரை முடக்கிவிடுகின்றன.

Clear Light of Day நாவலிலும் அனிதா தேசாய் உருது கவிதைகளின் இன்றைய நிலையைப் பற்றி ஆதங்கமாகவே எழுதியிருக்கிறார். அதன் தொடர்ச்சி போலவே இந்தக் கதையிலும் மையக்கதாபாத்திரம் உருதுக் கவிஞராக உருவாக்கப்பட்டிருக்கிறது.

அனிதா தேசாய் தனது நேர்காணலில் “தான் வளர்ந்த பழைய டெல்லியில் இன்றும் உருதுக் கவிதைகள் ஓதப்படுவதைக் கேட்கிறேன். ஆனால் உருது மொழி பயிலுவது பொதுவெளியில் குறைந்து விட்டது. இந்திய பிரிவினை அதற்கு முக்கியக் காரணம். உருதுக் கவிதைகளுக்கென நீண்ட பாரம்பரியம் உள்ளது. மிகச்சிறந்த உருது கவிதைகளை வாசித்திருக்கிறேன்.

உருதுக் கவிதை ஆங்கிலத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அது கிளாசிக்கல் வகையைச் சேர்ந்தது, தூய்மையானது. நீங்கள் ஒரு புதுக்கவிதையை உருது மொழியில் எழுத இயலாது. அதன் பாரம்பரியத்தை. மரபைக் கைவிட்டு கவிதை எழுதுவதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். கவிதை கட்டாயம் மரபுக்குள் இருக்க வேண்டும். நாவலில் வரும் இமிதியாஸ் கவிதைகள் எழுதுகிறவள். அதை நூர் சாகிப் அங்கீகரிப்பதில்லை. அது காலமாற்றத்தின் அடையாளம்.

இந்தக் கதையும் உண்மை சம்பவம் ஒன்றின் பின்புலத்தில் தான் எழுதப்பட்டவை. நூர் சாகிப் எவரது பாதிப்பில் உருவாக்கப்பட்டார் என்ற உண்மையைக் கூற நான் விரும்பவில்லை. ஆனால் அந்த வாழ்க்கை நிஜமானது“. என்று சொல்கிறார் .

நாவலில் நூரின் மரணத்தைப் பற்றித் தேவன் கனவு காணுகிறார்.ஆனால் படத்தில் அது காட்சியாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது.

நூர் மற்றும் தேவன் இருவரும் சிறை வாழ்க்கை போலச் சிறிய வட்டத்திற்குள் வாழுகிறார்கள். தேவனின் மனைவியிடமும் எதிர்பார்ப்புகள், கனவுகள் இருக்கிறது. ஆனால் அதை அவள் அடக்கிக் கொள்கிறாள். இமிதியாஸ் வெளிப்படுத்துகிறாள். இயலாமையால் கோபம் கொள்கிறாள்.

கவிதை தான் தேவனின் ஒரே ஆறுதல். விடுதலை. சுதந்திர வெளி. ஆகவே அவர் நூரை தேடிச் செல்லும் காட்சிகளில் சந்தோஷமாக இருக்கிறார். இதையே தான் நூரும் வெளிப்படுத்துகிறார்

நூர் சாகிப்பாக நடித்துள்ள சசிகபூரும், தேவனாக நடித்துள்ள ஒம்பூரியும் இமிதியாஸாக நடித்துள்ள ஷப்னா ஆஸ்மியும் சிறப்பாக நடித்துள்ளார்கள். நூர் சாகிப் வீட்டிலுள்ள பாட்டி தனித்துவமான கதாபாத்திரம்.

ஒரு காட்சியில் நூர் சாகிப் தேவனிடம் உருதுக்கவிதைகளை இவ்வளவு நேசிக்கும் நீ ஏன் இந்தி ஆசிரியராக வேலை செய்கிறாய் என்று கேட்கிறார். அதற்குத் தயக்கத்துடன் தேவன், என் குடும்பத்திற்காக என்று பதில் சொல்கிறார். அந்தப் பதில் அவருக்கானது மட்டுமில்லை. நூரும் அப்படித் தான் வாழுகிறார்.

உருதுக் கவிஞரைப் பற்றிய படம் என்பதால் சிறப்பான இசை இடம்பெற்றிருக்கிறது. தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

நூரின் நோய்வாய்ப்பட்ட உடல் ஒரு குறியீடு போலவே காட்டப்படுகிறது. கனவிற்கும் யதார்த்தத்திற்கும் இடையில் அல்லாடுகிறார் தேவன். அவரைக் கல்லூரி ஆசிரியர்கள் புரிந்து கொள்ளவில்லை. குடும்பம் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் நூர் சாகிப் புரிந்து கொள்கிறார். ஒரு காட்சியில் சித்திக் அவன் ஒரு அதிர்ஷ்டசாலி என்கிறார். அந்த அதிர்ஷ்டம் கவிஞனுடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு. கவிதைகளின் பாதுகாவலான இருப்பதே தேவனிற்குக் கிடைத்த பரிசாகும்.

கவிஞனின் நாட்கள் கசப்பானவை. அவை கவிதைகளைப் போலக் காற்றில் பறக்ககூடியதாகயில்லை என்ற உண்மையைப் படம் அழுத்தமாகவே சொல்கிறது.

••

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 17, 2021 06:03

January 16, 2021

சிறிய மனிதனும் பெரிய உலகமும்.

வில்லியம் சரோயன் (William Saroyan) எழுதிய தி ஹ்யூமன் காமெடி 1943ல் வெளியான சிறந்த நாவல். இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் கலிபோர்னியாவின் இதாக்காவில் கதை நிகழுகிறது. பதினான்கு வயதான ஹோமரைப் பற்றியதே நாவல்.

அவன் பகுதி நேரமாகத் தந்தி அலுவலகத்தில் வேலை செய்கிறான். அவனது அம்மா, சகோதரி பெஸ் மற்றும் தம்பி யுலிஸஸ் என அவனது உலகம் மிகச்சிறியது.

தந்தி அலுவலகத்தில் இரவு நேரம் தந்தி வந்தால் அதைக் கொண்டு கொடுப்பதற்கு ஆள் தேவை என்பதால் அவனைத் தற்காலிக பணியில் சேர்த்துக் கொள்கிறார்கள். வயதும் தகுதியும் இல்லாத போதும் அவனது கம்பீரமான தோற்றம் பணிவு காரணமாக வேலை கிடைத்துவிடுகிறது.

பிறந்த நாளுக்கு வாழ்த்து வரும் தந்தியைப் பாடலாகப் பாடிக் கொடுக்க வேண்டும் என்பது விதி. இதற்காக ஹோமர் பாடிக் காட்டுகிறான். அதை அலுவலகமே ரசிக்கிறது

ஹோமரின் தந்தை இறந்தபிறகு அம்மா குடும்பச் சுமையை ஏற்று நடத்துகிறாள். ஹோமரின் தம்பி நான்கு வயதான யுலிஸஸ், அப்பாவியான சிறுவன். ஆனால் சாகசங்களில் விருப்பம் கொண்டவன். பயமற்று துணிச்சலாக எதையும் செய்ய முற்படுகிறவன். நாவலின் துவக்கத்தில் அவன் கடந்து செல்லும் ரயிலுக்குக் கைகாட்டுகிறான். அந்த ரயிலில் எவரும் பதிலுக்குக் கைகாட்டவில்லை. இதனால் யுலிஸஸ் ஏமாற்றமடைகிறான்.

ரயிலில் ஊருக்குத் திரும்பிச் செல்லும் கறுப்பின இளைஞன் எதிர்பாராதவிதமாகத் தன் கைகளை அசைத்து சந்தோஷத்தை வெளிப்படுத்துவதுடன் தான் வீடு திரும்பிக் கொண்டிருப்பதாகச் சப்தமாகச் சொல்கிறான். இந்தச் செய்கை யுலிஸஸை மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது.

யார் இந்த இளைஞன். இத்தனை நாள் எங்கேயிருந்தான். இப்போது எந்த ஊருக்குச் செல்கிறான் என்று யூலிசிஸ் யோசிக்கிறான். அதைப் பற்றி அம்மாவிடம் சொல்கிறான். அவள் வீடு திரும்புகிறவர்கள் சந்தோஷமானவர்கள் என்கிறாள். யுலிஸஸிற்கு அது புரியவில்லை.

ஹோமரின் அண்ணன் மார்கஸ் ராணுவத்தில் பணியாற்றுகிறான். அவனது படைப்பிரிவு யுத்தமுனையில் செயல்படுகிறது. யுத்தகளத்தில் நிறைய வீரர்கள் இறந்து போகிறார்கள். அந்தத் துயரச் செய்தியைத் தந்தியாகக் கொண்டு போய்க் கொடுக்கும் ஹோமர் அதைத் தனது சொந்த துயரமாக நினைக்கிறான். அதுவும் மொழிதெரியாத பெண்ணிடம் துயரச்செய்தியை ஹோமர் பகிர்ந்து கொள்ள முற்படுவது உணர்ச்சிப்பூர்வமானது.

வேலை செய்து சம்பாதித்த பணத்துடன் வீடு திரும்பும் ஹோமர் பெரிய மனிதன் போலவே நடந்து கொள்கிறான். அம்மாவும் அவனைப் பெரியவன் போலவே நடத்துகிறான். படிக்க வேண்டிய வயதில் வேலைக்குப் போய்ச் சம்பாதிக்க வேண்டிய நெருக்கடி கொண்டவர்கள் துயரமானவர்கள். அந்த வயதிற்குரிய விளையாட்டுத்தனம் மறைந்து போய் அவர்களின் இயல்பு சட்டென மாறிவிடுகிறது. வறுமை ஒருவனை வயது மீறி நடந்து கொள்ளவைக்கிறது.

ஹோமர் அப்படித் தான் நடந்து கொள்கிறான். வீட்டின் பொருளாதாரத் தேவையைப் பகிர்ந்து கொள்வதில் அவனுக்குச் சந்தோஷம்.

இதாக்காவின் தந்தி நிலையத்தின் ஆபரேட்டராக உள்ள க்ரோகன் நீண்டகாலமாகப் பணியாற்றுகிறவர். திறமைசாலி. மிகுந்த அனுபவம் கொண்டவர். ஆனால் பெருங்குடிகாரர். போதையில் மயங்கியிருந்தால் தன் தலையில் தண்ணீர் ஊற்றி எழுப்ப வேண்டும். அத்தோடு ஓடிப்போய் சூடான காபி வாங்கிக் கொண்டுவந்து கொடுத்தால் இயல்பு நிலைக்கு வந்துவிடுவேன் என்கிறார் க்ரோகன். தன்னை வெளியே எங்காவது சந்திக்க நேர்ந்தால் கண்டு கொள்ளக்கூடாது என்றும் உத்தரவு போடுகிறார். அவர் உத்தரவுப்படியே நடக்கிறான் ஹோமர்

அவரோடு ஹோமருக்கு உள்ள உறவு தந்தை மகன் போலிருக்கிறது. எவ்வளவு போதையிலும் அவர் தந்தியைத் தவறாக எழுதுவதில்லை.அவருக்கு அடிக்கடி நெஞ்சுவலி ஏற்படுகிறது. ஆனாலும் மருத்துவர்கள் சொன்ன எச்சரிக்கையை அவர் கண்டுகொள்வதில்லை.

ஹோமரின் திறமையைப் புரிந்து கொண்டு அவனைப் பாராட்டுகிறார். அன்பு காட்டுகிறார். தந்தி நிலையத்தின் மேலாளராக இருப்பவர் ஸ்பாங்க்லர். அவருக்கும் ஹோமரை மிகவும் பிடித்துப் போகிறது. அவர் ஒரு தடை தாண்டி ஓடும் விளையாட்டு வீரர். ஆகவே அவரைப் போலப் பந்தயத்தில் ஒடி ஜெயிக்க வேண்டும் என நினைக்கிறான் ஹோமர்.

வீட்டில் ஹோமர் உடற்பயிற்சிகள் செய்வதில் ஆர்வம் காட்டுகிறான். அத்துடன் பள்ளியில் நடக்கும் ஒட்டப்பந்தயப் போட்டியில் அவன் கலந்து கொள்கிறான். அவனைப் பிடிக்காத ஆசிரியர் அதைத் தடுக்க முயல்கிறார். ஆனால் ஹோமர் முறையான காலணிகள் கூட இல்லாமல் போட்டியில் கலந்து கொண்டு தடை தாண்டி ஓடுகிறான். முறையான பயிற்சி இல்லாத போதும் அவனால் முதலிடத்திற்குப் போட்டிப் போட்டு ஓட முடிகிறது.

தந்தி அலுவலகத்தில் இரவில் நடக்கும் நிகழ்வுகளைச் சரோயன் அழகாக விவரித்திருக்கிறார். ஹோமருக்கும் அவன் தம்பிக்குமான உறவும் நேர்த்தியாக வெளிப்பட்டுள்ளது. குறிப்பாக ஊர்சுற்றியலையும் யுலிஸஸ் வழியாகச் சிறார்களின் உலகம் நுட்பமாக எழுதப்பட்டிருக்கிறது

தன் வயதுக்கு மீறிய விஷயங்களைப் புரிந்து கொள்ளும் ஹோமர் தன்னைச் சுற்றி நடக்கும் அன்றாட நிகழ்வுகளின் வழியே சுகதுக்கங்களைப் புரிந்து கொள்கிறான். அமைதியாக எதிர்கொள்கிறான். முடிவில் சொந்த வாழ்க்கையில் ஏற்படும் துயரத்தின் போது பெரிய மனித சுபாவம் அவனிடம் முழுமையாக வெளிப்படுகிறது. ஹோமர் இனி சிறுவனில்லை என்பதுடன் நாவல் நிறைவுபெறுகிறது.

வீட்டில், பணியிடத்தில் என ஹோமர் தன்னால் முடிந்தவரை அனைவருக்கும் உதவிகள் செய்கிறான். மற்றவர்களின் சந்தோஷத்திற்காகப் பாடுபடுகிறான். அவனது கனவுகள், ஆசைகளை விடவும் மற்றவர்களின் விருப்பமே அவனுக்குப் பெரிதாகத் தோன்றுகிறது.

ஹோமரின் தந்தையைப் பற்றி நினைவுகளின் வழியே குடும்பத்தில் தந்தை இல்லாத வெற்றிடத்தை ஹோமர் பூர்த்தி செய்ய முயல்வதை உணர முடிகிறது.

ஒரு நாள் சாலையில் மூன்று ராணுவ வீரர்களைச் சந்திக்கும் ஹோமரின் சகோதரி பெஸ் மற்றும் தோழி அவர்களுடன் ஒன்றாகத் தந்தி அலுவலகம் போகிறார்கள். தம்பிக்கு வீட்டிலிருந்து கொண்டு போன உணவை தருகிறாள் அக்கா. பிறகு அந்த வீர்ர்களுடன் ஒன்றாகச் சினிமாவிற்குப் போகிறார்கள். பிரியும் போது ராணுவ வீர்ர்களுக்கு முத்தம் தருகிறார்கள். வீட்டைப் பிரிந்துள்ள அவளது அண்ணனும் இப்படித் தான் அன்பிற்காக ஏங்கிக் கொண்டிருப்பான் என நினைக்கிறாள் பெஸ்.

லியோனலும் யுலிஸஸும் பொது நூலகம் ஒன்றுக்குள் செல்லும் காட்சி மிக அழகானது. அவர்கள் முதன்முறையாக நூலகத்திற்குள் செல்கிறார்கள் அவர்களுக்குப் படிக்கத் தெரியாத போது புத்தகங்களில் உள்ள படங்களைப் பார்க்க விரும்புகிறார்கள். நூலகர் அவர்களை உள்ளே அனுமதிக்கிறார். வியப்போடு புத்தக அடுக்கினை பார்வையிடுகிறார்கள். அது புதிய அனுபவமாகயிருக்கிறது.

வில்லியம் சரோயன் ஒரு ஆர்மீனியர், புகலிடம் தேடி அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தவர். 1940 ஆம் ஆண்டில் நாடகத்திற்கான புலிட்சர் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது, மேலும் 1943 ஆம் ஆண்டில் அவரது ஹ்யூமன் காமெடி நாவல் திரைப்படமாக்கப்பட்டபோது சிறந்த கதைக்கான அகாடமி விருதைப் பெற்றார். அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த சரோயனின் வாழ்க்கையே இந்த நாவலில் வெளிப்படுகிறது.

ஏன் இந்த நாவலில் கிரேக்கப் பெயர்கள், இடங்கள் இடம்பெறுகின்றன என்று வாசிப்பில் சந்தேகம் வரவே செய்கிறது. சரோயன் ஒருவேளை இந்தக் கதையைக் கிரேக்கத் தொன்மத்தின் நவீன உருவாக்கம் போலப் புனைந்திருக்கிறாரோ என்று யோசிக்கச் செய்கிறது. ஆனால் அப்படியான எந்த அறிகுறியும் இல்லை. ஒருவேளை இந்தக் கிரேக்கப் பெயர்கள் நினைவில் பதிந்து போனவை என்பதால் தன் நாவல் நினைவின் ஊசலாட்டத்தைச் சொல்வதால் இப்படிப் பயன்படுத்தியிருப்பாரோ என்னவோ.

இரண்டாம் உலகப் போரில் ஒரு சிப்பாய் வாழ்க்கை என்னவாகிறது என்று ஒரு தளத்திலும் சிறுநகர வாழ்க்கை எப்படியிருக்கிறது. அந்த நகரைப் போர் எப்படிப் பாதிக்கிறது என்பதை இன்னொரு தளத்திலும் இருஇழைகளாகப் பின்னி கதையைக் கொண்டு செல்கிறார் சரோயன்

இறந்தவரின் நினைவுகள் நம் நெஞ்சில் இருக்கும்வரை, பகிர்ந்து கொள்ளவும் மக்கள் எஞ்சியிருக்கும் வரை யாரும் உண்மையில் இறக்க மாட்டார்கள் என்கிறார் சரோயன்.

சிறிய நகர வாழ்க்கையின் சந்தோஷங்களை, அபூர்வமான மனிதர்களைச் சரோயனின் திறம்படச் சித்தரித்திருக்கிறார். அவரும் இது போன்ற ஒரு சிறிய நகரத்தில் வளர்க்கப்பட்டவர். ஆகவே அதை எழுத்தில் துல்லியமாகக் கொண்டுவர முடிந்திருக்கிறது.

அன்பு தான் குடும்பத்தை ஒன்றிணைக்கிறது. அன்பை உருவாக்கவும் முன்னெடுக்கவுமே ஹோமர் முயல்கிறான். அவனுக்கு முடிவில் எஞ்சியிருப்பது குடும்பத்தின் சந்தோஷம் மட்டும் தான். துயரத்திலும் கூடக் குடும்பங்கள் தனக்கான இயல்பான பிணைப்பைக் கொண்டுள்ளன, இந்தப் பிணைப்பை இன்னும் வலிமையாக்க மற்ற குடும்ப உறுப்பினர்களின் குறைபாடுகளை ஏற்றுக் கொண்டு நேசிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும் என்கிறார் சரோயன்.

குடும்ப உறவில் கசப்புணர்வுகள் தலைதூக்கி விட்டால் குடும்பம் சிதைவதைத் தவிர்க்க முடியாது. ஆகவே அன்பின் செயல்களால் குடும்பம் வளர்ச்சி அடையவேண்டும். நேசமே மனித உறவுகளை வலிமையாக்குகிறது என்பதை ஹோமரின் வழியே அடையாளப்படுத்துகிறார்.

கதையை ஒரு காவிய பயணமாக வாசிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும். இது அன்றாட வாழ்வின் ஊடாகச் செல்லும் பயணமாகும். நாவலின் தலைப்பு தாந்தேயின் டிவைன் காமெடியை நினைவுபடுத்துகிறது. விளையாட்டுத்தனத்திலிருந்து விடுபட்டு முழுமனிதனாக ஒருவன் அடையும் வளர்ச்சிப் பயணமாகவும் இதைக் கருதலாம்.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 16, 2021 04:26

January 15, 2021

நிழல் வேட்டை

23 Paces to Baker Street 1956 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க திரில்லர் திரைப்படம். ஹென்றி ஹாத்வே இயக்கியது.

பிலிப் ஹன்னன்  என்ற பார்வையற்ற நாடக ஆசிரியர் ஒருவர் குற்ற நிகழ்வு ஒன்றினைக் கண்டறிவதே இந்த திரைப்படம். Don’t Breathe, ஒப்பம் , ராஜ் தி கிரேட் போன்ற படங்களுக்கு இதுவே முன்னோடி.

தன்னைச் சுற்றி நடக்கும் உரையாடல்களைத் துல்லியமாக நினைவில் பதிவு செய்து கொள்ளும் திறன் கொண்டவர் பிலிப். நாடக ஆசிரியராக இருப்பதால் கற்பனை ஆற்றலும் அதிகம். அன்றாடம் தான் எழுத வேண்டிய விஷயங்களைத் தன்னுடைய குரலில் பதிவு செய்து கொடுத்துவிடுகிறார். அவரது ஒலிப்பதிவு கூடத்திலிருந்து தான் படம் துவங்குகிறது.

அவருக்கு பாப்  மேத்யூ என்ற  உதவியாளர் இருக்கிறார். அவர் பிலிப் பதிவு செய்து தரும் விஷயங்களை அப்படியே டைப் செய்து அனுப்பிவிடுகிறார். பிலிப்பின் முன்னாள் உதவியாளரும் காதலியுமான ஜீன் ஒரு நாள் அவரைத் தேடி வருகிறாள்.

லண்டனில்  வாட்டர்லூ பிரிட்ஜ் மற்றும் சேரிங் கிராஸ் ஸ்டேஷனுக்கு இடையில் தேம்ஸ் ஆற்றின் கரையில் உள்ள அழகான குடியிருப்பில் வசிக்கிறார் பிலிப். பார்வையற்ற போதும் அவரால் வெளியிலுள்ள இயக்கங்களை துல்லியமாக அறிந்து சொல்ல முடிகிறது.

குறிப்பாகப் படகில் செல்லும் காட்சியில் மாலை நேரத்துச் சூரியனின் பொன்னிற அழகை மிகச்சரியாக விவரிக்கிறார்.  கடந்தகாலத்தில் தவிர்க்க முடியாத சூழலால் அவரால் ஜீனை மணந்து கொள்ள முடியவில்லை. அவளும் விலகிப்போய் விடுகிறாள்

நீண்டகாலத்தின் பிறகு அவள் தன்னைச் சந்திக்க வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறார். அவளுக்குத் தனது வீட்டின் ஜன்னலைத் திறந்து லண்டன் நகரக் காட்சிகளை அறிமுகம்செய்து வைக்கிறார். நலம் விசாரிக்கிறார். அவள் தங்களின் பழைய உறவை நினைவுபடுத்தவே அவளிடமிருந்து தப்பிக்க அருகிலுள்ள மதுவிடுதிக்குப் போகிறார்.

அது பிலிப் ஹன்னன்  வழக்கமாகச் செல்லும் உள்ளூர் பப். அன்று தற்செயலாக ஒரு உரையாடலைக் கேட்கிறார். யார் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. திரைமறைவின் பின்னால் ஒரு ஆணும்  பெண்ணும் சேர்ந்து  குற்றம் புரிவதற்குத் திட்டமிடுகிறார்கள். என்ன குற்றம். கொலையா, கடத்தலா என எதுவும் தெரியவில்லை. ஆனால் அவர்கள் பேச்சில் குறிப்பிட்ட நாளில் அதைச் செய்ய இருப்பதை அறிந்து  கொள்கிறார்

அந்த உரையாடலை அப்படியே மனதில் பதியவைத்துக் கொண்டு தன் வீட்டிற்குத் திரும்புகிறார். ஒரு சொல் மாறாமல் அதைப் பதிவு செய்து அந்த டேப்பை போலீஸ் அதிகாரிகளுக்குப் போட்டுக் காட்டுகிறார்.

யார் அவர்கள். என்ன குற்றம் செய்யப்போகிறார்கள் என்று தெரியாமல் எப்படித் தடுப்பது. இது ஒருவேளை அவரது கற்பனையாகக் கூட இருக்கலாம் என்று நினைக்கிறார் போலீஸ் அதிகாரி.

காவல்துறையின் ஒத்துழைப்பு கிடைக்காத பிலிப் ஹன்னன்   தானே அந்த குற்றவாளிகளைக் கண்டறிய முயல்கிறார்.

முதல் புள்ளியாக அந்தப் பெண் யார் என்று தேட ஆரம்பிக்கிறார். அவள் ஒரு வீட்டில் வேலை செய்தவள், அந்த வீட்டு எஜமானி ஒபரா பார்க்கப் போயிருக்கிறாள் என்பதை வைத்துக் கொண்டு எந்த வீட்டில் செய்தாள் என கண்டுபிடிக்க முயல்கிறார் பிலிப்.

இதற்கு உதவியாளர் பாப் மேத்யூஸ் மற்றும்  காதலி ஜீன் உதவி செய்கிறார்கள். தனது புத்திசாலித்தனத்தைக்  கொண்டு அந்தப் பெண் வேலை செய்த வீட்டினை பிலிப் கண்டுபிடிக்கிறார். அந்த வீட்டினைத் தேடிப் போகிறார். ஆனால் அவள் வேலையை விட்டு நின்றுவிட்டதாக தெரிய வருகிறது

அவளை எந்த நிறுவனம் வேலைக்கு அனுப்பியது என விசாரித்து அங்கே போகிறார்கள். அங்கேயும் அவளைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. மதுவிடுதியில் பேசிய பெண் அணிந்திருந்த செண்ட் வாசனையை வைத்து அவளைத் தான் கண்டுபிடித்துவிட முடியும் என உறுதியாகச் சொல்கிறார் பிலிப்

பல்வேறு இடங்களில் விசாரித்தும் அந்தப் பெண்ணை கண்டுபிடிப்பது எளிதாகயில்லை. ஆகவே நியூஸ்பேப்பரில் ஒரு விளம்பரம் கொடுக்கிறார். முகம் தெரியாத ஒரு ஆளிடமிருந்து போன் வருகிறது. ஒரு பெண் அவரைத் தேடி அவரது இருப்பிடத்திற்கே வருகை தருகிறாள். அவள் தான் குற்றவாளி  என நினைக்கும் பிலிப் ரகசியமாக அவளைப் பின்தொடரும்படி பாப்பை அனுப்பி வைக்கிறார். பாப் அவளைப் புகைப்படம் எடுக்கச் செய்யும் முயற்சிகள் வேடிக்கையாக இருக்கின்றன. அவளைப் பின்தொடர்ந்து போய் மழையில் நனைந்து வீடு திரும்புகிறார் பாப்.

அந்தப் பெண்ணோடு இருந்த ஆண் யார். அவர்கள் என்ன குற்றம் செய்ய இருக்கிறார்கள் என்பதைக் கண்டறியும் பிலிப் அதைத் தடுத்து நிறுத்த முயல்கிறார். தங்களை பிலிப் ஹன்னன்  பின்தொடர்வதை அறிந்து கொண்ட குற்றவாளி அவரை தந்திரமாக மடக்கிக் கொல்ல  முயல்கிறான். தேடிப்போய் ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார்.

பிலிப் உண்மையை எப்படிக் கண்டறிந்தார். என்ன குற்றம் நடந்தது. அதை எப்படித் தடுக்க முயன்றார் என்பதை மிகச் சுவாரஸ்யமாக விவரிக்கிறார்கள்.

பார்வையற்ற ஒருவர் தனது நினைவுத்திறன் மற்றும் வாசனையை அறிவதன் மூலம் எப்படி ஒரு குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறார் என்பதை அறுபது ஆண்டுகளுக்கு முன்பாகவே திரையில் காட்டிவிட்டார்கள். அதுவும் முதற்காட்சியில் துவங்கி கடைசி காட்சி வரை பரபரப்பு. வேகம். நம்மால் யூகிக்க முடியாத கதைப்போக்கு.

ஹிட்ச்காக்கின் Rear Window படத்தின் பாதிப்பிலிருந்து இதை உருவாக்கியிருக்கிறார்கள். ஹிட்ச்காக்கின் படம் பெற்ற பெரும்வெற்றி அந்த பாணி திரைப்படங்கள் உருவாகக் காரணமாக இருந்திருக்கிறது. அதில் சக்கர நாற்காலியில் இருக்கும் கதாநாயகன் எதிர்வீட்டில் ஒரு குற்றம் நடக்க இருப்பதை அறிந்து கொள்கிறான். அதைத் தடுக்க காவல்துறையை நாடுகிறான். உதவி கிடைக்காத போது தானே கண்டுபிடிக்க முயல்கிறான். ஆனால் ஹிட்ச்காக் கதையில் எதிர் வீட்டில் நடப்பதைக் கதாநாயகனால் காணமுடிகிறது. இதில் பிலிப்பிற்கு யார் குற்றவாளி என்றே தெரியாது. துப்பறியும் முறையில் அவனது புத்திசாலித்தனம் வெளிப்படுகிறது.

பிலிம் நுவார் படங்களை இயக்கிய  ஹென்றி ஹாத்வே படம் என்பதால் திரைக்கதையைச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள்.

சில கதைகள் சினிமாவில் ஒவ்வொரு பத்தாண்டிலும் திரும்பத் திரும்ப மறுவடிவம் பெற்றபடியே இருக்கின்றன. அத்தகைய கதைகளில் ஒன்றே இத்திரைப்படம். நாளையே இதே கதைக்கருவை மையமாகக் கொண்டு ஒரு திரைப்படம் உருவானாலும் அதுவும் வெற்றிகரமாக ஒடவே செய்யும்.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 15, 2021 03:03

உலக இலக்கியத்தின் சாளரம்.

வாசிப்பை நேசிப்போம் குழுவில் கா.மூர்த்தி எழுதியுள்ள புத்தக விமர்சனம்.

••••

நூல் : கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்

ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன்

பதிப்பகம் : தேசாந்திரி

ஒரு வருடத்தில் எந்தெந்த புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று ஒரு லிஸ்ட் தயாரிப்பதற்கு ஒரு “Shortcut”

1.  எஸ்ரா அவர்கள் எழுதிய புத்தகங்களைப் படிக்க வேண்டும்

2. எஸ்ரா பரிந்துரைக்கும் புத்தகங்களைப் படிக்க வேண்டும் இதை முடித்தால் அந்த ஒரு வருடத்திற்கு பலதரப்பட்ட புத்தகங்களைப் படித்த அனுபவம் கிடைக்கும்.

இந்த இரண்டுமே சேர்ந்து நடந்தால் எப்படி இருக்கும்? அதுதான் இந்த புத்தகம். இந்த வருடத்தின் மிக முக்கியமான புத்தகங்களில் இது ஒன்று. மொத்தம் 26 உலக இலக்கிய கட்டுரைகள், அத்தனையும் தகவல் களஞ்சியங்கள். உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களின் முக்கிய படைப்புகள் பற்றியும் இந்த நூல் நமக்கு ஒரு அறிமுகம் தருகிறது. இதற்கு முன்பாகவும் எஸ்ரா அவர்கள் உலக இலக்கியத்தைப் பற்றிய புத்தகங்கள் வெளியிட்டு இருந்தாலும் இந்தப் புத்தகம் இதுவரை வெளிவந்த புத்தகத்தை விட ஒரு படி மேலாகவே இருக்கிறது.

இதில் எஸ்ரா அவர்கள் முன்னுரையில் குறிப்பிடுகிறார் “நாம் பயன்படுத்தும் செல்போனில் துவங்கி வீட்டுச் சமையலறை வரை சர்வதேச  தயாரிப்புகளை வாங்குகிறோம், பயன்படுத்துகிறோம் ஆனால் ஒவ்வொரு வருடமும் உலக அளவில் வெளிவரும் புத்தகங்களையோ அல்லது எழுத்தாளர்களைப் பற்றி வாசிப்பது மிகவும் அரிதாகவே இருக்கிறது”.  எவ்வளவு உண்மை?

இந்தப் புத்தகத்தில் கிட்டத்தட்ட ஒரு 50 எழுத்தாளர்களைப் பற்றிய அறிமுகமாவது நமக்குக் கிடைக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஐந்து லட்சம் பிரதிகள் விற்கும் புத்தகத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? உவமைகள், உருவகங்கள் இன்றி கவிதை எழுதும் கவிஞரை உங்களுக்குத் தெரியுமா? எந்தெந்த  நாவல்கள் திரைப்படமாக வந்திருக்கிறது என்ற தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா? 42 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள எழுத்தாளரின் படைப்புகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள உலகப் புகழ்பெற்ற புத்தகங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?- இந்த நூலில் குறிப்பிட்ட அனைத்து புத்தகங்களையும் அல்லது எழுத்தாளர்களைப் பற்றியும் நாம் முழுமையாக வாசித்து விட முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை ஆனால் குறைந்தபட்சம் இவர்களைப் பற்றியாவது நாம் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த நூலில் இறுதியாக எஸ்ரா அவர்கள் குறிப்பிடும் ஒரு கருத்து மிகவும் முக்கியமானது. அயல்நாடுகளில் அவர்களுடைய எழுத்தாளர்களைப் பற்றிய ஆவணப்படங்கள் தொடர்ந்து எடுக்கப்படுவதாகவும், அது பல கல்வி நிலையங்களில் திரையிடப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  அதற்கு அவர்கள் தீவிரமான ஆய்வு மேற்கொண்டு கடின உழைப்போடு பெரும் பொருட் செலவுடன் உருவாக்கப்படுகிறது , ஆனால் இந்தியாவிலோ சாகித்திய அகடமி மட்டுமே ஆண்டுதோறும் சிறந்த இந்திய எழுத்தாளர்களைப் பற்றிய ஆவணப் படங்களை உருவாக்கி வருகிறது. அது பெரும்பாலும் நியூஸ் ரீல்  போலவே தயாரிக்கப்படுவதால் அதை யாரும் அதிகமாக பார்ப்பதில்லை என்று வருத்தத்துடன் குறிப்பிடுகிறார்

சமகாலத்தில் தன்னுடைய எழுத்தைத் தவிர்த்து மற்ற எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களது படைப்புகளைப் பற்றியும் தொடர்ந்து அறிமுகப்படுத்துவதில் எஸ்ரா அவர்கள் எப்போதும் முன்னிலையில் இருக்கிறார். நாம் பரீட்சைக்குத் தயார் செய்யும்பொழுது “Important Questions” என்று நம்முடைய ஆசிரியர்கள் நமக்குக் குறித்துத் தருவார்கள். அதுபோல்தான் நமக்கு எஸ்ரா அவர்கள் இந்த நூலைப் படைத்துள்ளார். இந்த ஒரு புத்தகம் உலக இலக்கியங்களைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளவும், உலக இலக்கியங்களைத் தொடர்ந்து வாசிக்கவும் பெரிய உந்துதலாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

நன்றி

வாசிப்பை நேசிப்போம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 15, 2021 01:57

நீர்மை

என்.எஸ்.மனோகரன் மிகச்சிறந்த ஓவியர். சென்னை ஒவியக்கல்லூரியின் முதல்வராக இருந்தவர். கும்பகோணம் ஒவியக்கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி நிறைய இளம் ஓவியர்களை உருவாக்கியவர்.

மனோகரின் நீர்வண்ண ஓவியங்கள் மிகவும் புகழ்பெற்றவை. கிராமிய வாழ்வின் காட்சிகளைத் தனது தூரிகையின் வழியே நுட்பமான கலைப்படைப்பாக உருவாக்குகிறார்.

சீன நிலக்காட்சி ஓவியங்களில் காணமுடிகிற நுட்பமும் எளிமையும் இவரது ஓவியங்களிலும் காணமுடிகிறது. குறிப்பாக ஒளியும் நிழலும், வசீகரமாக வண்ணங்களைப் பயன்படுத்தும் விதமும் புதிய ஓவிய மொழியாக வெளிப்படுகின்றன.

ஓவியர் என்.எஸ். மனோகரன் வாழ்க்கை மற்றும் ஓவியங்கள் குறித்த ஆவணப்படமான நீர்மை மிகுந்த கலைநேர்த்தியுடன் உருவாக்கப்பட்டுள்ளது

அசோகன் நாகமுத்து இதனை இயக்கியிருக்கிறார். இளவேனில் இதனைத் தயாரித்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மிக அழகான கோணங்களின் வழியே காட்சிகளைப் பதிவு செய்திருக்கிறார் இளவேனில். குறிப்பாக மனோகர் நீர்வண்ண ஓவியத்தை வரையும் காட்சி பரவசமூட்டுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக வயல்வெளி, வளைந்து செல்லும் சாலை, அதில் நடக்கும் ஆண்பெண் உருவங்கள் லயத்தோடு உயிர்பெறுகிறார்கள். குறிப்பாகப் பனைமரங்கள் சிறிய தீற்றலில் உயிர்பெறும் விந்தை மறக்கமுடியாதது

ஆடு வரைவதில் மனோகர் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இந்த ஆவணப்படத்திலும் ஆடு ஒன்றை மனோகர் வரைகிறார். அந்தக் காட்சியில் ஆட்டின் உருவம் மட்டுமில்லை அதன் உடல்மொழியும் உணர்ச்சிகளும் துல்லியமாக வெளிப்படுகின்றன. ஆட்டின் முதுகில் நிற்கும் குருவியின் அழகு நிகரற்றது.

மனோகரின் ஓவியங்கள் குறித்துப் புகழ்பெற்ற ஓவியர்கள் ஆர்.எம். பழனியப்பன், இளையராஜா, சந்தான கிருஷ்ணன் ஆகியோரின் நேர்காணலின் வழியே மனோகரின் ஆளுமையும் தனித்துவமும் திறம்பட வெளிப்படுகிறது.

மனோகரின் மனதில் தஞ்சை மண்ணின் கிராமிய வாழ்க்கை மிகவும் ஆழமாகப் பதிந்திருக்கிறது. அதன் வெளிப்பாடே அவரது உயிரோட்டமான ஓவியங்கள்..

காலம் தான் அவரது உண்மையான கருப்பொருள். காலமாற்றத்தில் கைவிடப்பட்ட, இடிந்து போன. தொலைந்து போன பண்பாட்டு அடையாளங்களை அவர் தொடர்ந்து மீள் உருவாக்கம் செய்து வருகிறார். புதிய மோஸ்தர்கள், போலியான வெளிப்பாட்டு வடிவங்களைத் தாண்டி அசலாகத் தனது மண்ணின் கலைஞனாக ஓவியங்களை வரைந்து வரும் மனோகரன் அவர்களுக்கு எனது மனம் நிரம்பிய வாழ்த்துகள்.

நீர்மை ஆவணப்படத்தின் வழியே மனோகரின் நிகரற்ற கலையாளுமை சிறப்பாகக் கவனப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணமாக இருந்த இளவேனில் மற்றும் அசோகன் நாகமுத்துவிற்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள்.

Neermai | நீர்மை | Documentary on art works of N.S.Manoharan

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 15, 2021 01:11

January 13, 2021

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 13, 2021 17:43

January 11, 2021

நதிமுகம் தேடி

ராம் தங்கம் நம்பிகை தரும் இளம்படைப்பாளி. இவரது திருக்கார்த்தியல் நல்ல சிறுகதைத் தொகுப்பு. இவரது ராஜவனம் என்ற நாவலை வாசித்தேன். எண்பது பக்கங்கள் கொண்ட சிறிய நாவல். முகளியடி மலையிலுள்ள நந்தியாற்றின் மூலம் காணச் செல்லும் பயணத்தின் கதை.

காடு நூறாயிரம் உயிர்களின் வாழ்விடம். காட்டின் பிரம்மாண்டம் அதன் மரங்கள். காட்டில் எப்போது இருள் மிச்சமிருக்கிறது. பாதைகளை அழிப்பது தான் காட்டின் இயல்பு. மழைக்காலத்தில் காடு கொள்ளும் ரூபம் விசித்திரமானது.

கோபாலும் அவன் நண்பர்களும் முகளியடி மலையை நோக்கி செல்கிறார்கள். அவர்களின் பயணம் மெல்ல காட்டின் இயல்புகளை அறியத் துவங்குவதாக அமைகிறது. பயமும் வசீகரமும் ஒன்று கலந்த அந்தப் பயணத்தின் ஊடாக காட்டில் வாழும் விலங்குகள் பறவைகளை அவதானித்தபடியே நடக்கிறார்கள். காட்டின் சங்கீதத்தைக் கேட்கிறார்கள. காணிகளின் குடியிருப்பிற்குச் செல்லும் வரை காட்டின் மீது மயங்கியவர்களாகவே நடக்கிறார்கள். புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள்.

காணிகளின் குடியிருப்பினை அடைந்த போது கோபால் தனது தந்தை வனக்காவலர் ராஜசேகர் என மூட்டுக்காணியிடம் சொல்கிறான். ஆன ராஜசேகரா என்று மூட்டுக்காணி கேட்கிறார். அந்த இடத்திலிருந்து கதை தன் உச்சத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பிக்கிறது. காணிகளின் நினைவில் ராஜசேகர் என்றும் நிலைத்திருக்கிறார். அவன் ராஜசேகரின் மகன் என்பதை அறிந்து கொண்ட காணிகள் அவனிடம் நெருக்கம் கொள்கிறார்கள். அன்பு காட்டுகிறார்கள். காணிகளுக்கு ராஜசேகர் செய்த உதவிகளும், காட்டுயானைகளை பாதுகாக்க அவர் எடுத்த முயற்சிகளும் அழகாக எழுதப்பட்டுள்ளன

உண்மையில் இந்தப் பயணம் நினைவுகளின் வழியே கோபால் தன்னைக் கண்டறியும் பயணமாகவே அமைகிறது. காணிகளின் உலகை ராம் தங்கம் மிக நன்றாக எழுதியிருக்கிறார்

எளிய மொழியில் நேரடியான கதை சொல்லுதலின் வழியே நம்மையும் காட்டிற்குள் கைபிடித்து அழைத்துச் செல்கிறார்.

வாழ்த்துகள் ராம் தங்கம்

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 11, 2021 20:04

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.