S. Ramakrishnan's Blog, page 148

January 5, 2021

வெயிலில் அமர்தல்

புதிய சிறுகதை









நியூசிலாந்திலிருந்து கிளம்பும் போது வர்ஷினிக்கு அப்படி ஒரு யோசனை இருக்கவேயில்லை. அவள் பெங்களூரில் உள்ள தனது அபார்ட்மெண்டிற்குத் தான் போக வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள். விமான டிக்கெட் கூடப் பெங்களூருக்கே போட்டிருந்தாள். ஆனால் பயணம் கிளம்பும் முதல் நாள் டிக்கெட்டை சென்னைக்கு மாற்றினாள்.





அப்பா அம்மாவோடு சில நாட்கள் இருக்கலாம் என நினைத்து சென்னைக்குப் பயணம் செய்தாள். ஆனால் சென்னைக்கு வந்த இரண்டாம் நாள் அங்கே இருக்கப் பிடிக்கவில்லை. அப்பாவிடம் பெங்களூர் போவதாகச் சொல்லிவிட்டு இரவுப்பேருந்து பிடித்துத் திருநெல்வேலிக்குச் சென்றாள். அங்கிருந்து பதினைந்து நிமிஷ தூரத்தில் இருந்தது அவளது பூர்வீக ஊர்.





சுற்றிலும் பச்சைக்கம்பளம் போல வயல்கள் நிரம்பிய சிறிய கிராமம். நூறு வீடுகளுக்குள் குறைவாகத் தானிருந்தது. இன்னமும் பேருந்து வசதி வரவில்லை. பக்கத்து ஊரில் இறங்கி வயல் வழியாக நடந்து தான் போய் வர வேண்டும். வர்ஷினி பள்ளி நாட்களில் அங்கே வந்திருக்கிறாள். அதன் பிறகு சொந்த ஊருக்குப் போனதேயில்லை.





அண்ணா பல்கலைகழகத்தில் கல்லூரி படிப்பு முடிந்தவுடன் பெங்களூருக்கு வேலைக்குப் போய்விட்டாள். ஐந்தாண்டுகள் அங்கே வேலை. அந்தச் சம்பாத்தியத்தில் அங்கே தனக்கென ஒரு பிளாட்டை வாங்கியிருந்தாள். பெங்களூரில் அலுவலகத்திற்குப் போய் வருவது தூரம். ஆகவே பெரும்பான்மை நேரம் அவள் அலுவலகம் விட்டு அறைக்குத் திரும்ப இரவாகிவிடும். விடுமுறை நாள் உறங்குவதற்கே போதாது. ஒன்றிரண்டு மழை நாட்களைத் தவிர வேறு நல்ல நினைவுகளில்லை.









பெங்களூரிலிருந்து கம்பெனி சார்பில் அமெரிக்காவில் மூன்று ஆண்டுகள். பின்பு ஒன்றரை வருஷம் லண்டனில். ஒரு ஆண்டுக் கென்யா. பின்பு அங்கிருந்து நியூசிலாந்து என அவள் வாழ்க்கை சொந்த மனிதர்களை விட்டு வெகுதூரம் விலகிப் போனது.





அமெரிக்காவில் இருந்த நாட்களில் ஏற்பட்ட காதல். அதைத் தொடர்ந்த திருமணம். அந்தத் திருமணத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள். பிரிவு. விவாகரத்து என அவள் வாழ்க்கை ஜெயிண்ட் வீல் போல உயரத்திற்குப் போய் வேகமாகக் கிழே இறங்கிவிட்டது. எல்லாவற்றையும் பார்த்தாகிவிட்டது போன்ற அலுப்பு அவளுக்கு முப்பதைந்து வயதிற்குள் ஏற்பட்டுவிட்டது. பணம் மட்டுமே அவளது கவனம். அதைச் சம்பாதிப்பதற்காக ஒடிக் கொண்டேயிருந்தாள்.





ஆனால் இந்த விடுமுறையில் ஊருக்குப் போய்வரலாம் என நினைத்தபோது அவளுக்கு எங்கே போவது என்ற கேள்வி தான் முதலில் எழுந்தது. அப்பா அம்மாவை சந்தித்தால் பழைய கதைகளைக் கிளறிக் கொண்டிருப்பார்கள். மறுமணம் பற்றிய பேச்சு உருவாகும். திரும்பவும் ஒரு திருமணத்தில் அவளுக்கு விருப்பமில்லை. தேவையுமில்லை என நினைத்தாள்.





வேலை வேலை என மூழ்கிப்போனதால் உலகம் மிகவும் சுருங்கிப் போயிருந்தது. மண்டைக்குள் எப்போதும் அலுவலகக் குழப்பங்கள். சாப்பாட்டில் விருப்பமில்லை. வெளியே நடக்கும் வேடிக்கைகள் எதிலும் ஈடுபாடில்லை. டிவியில் சினிமா பாட்டு போட்டால் கூட அவளால் ரசித்துக் கேட்க முடியவில்லை. சில நாட்கள் பாதி உறக்கத்தில் எழுந்து அலுவலக வேலையைக் கவனிக்க ஆரம்பித்துவிடுவாள். கார் ஒட்டும் போது கூட அவள் சாலையோர மரங்களில் பூத்திருக்கும் மலர்களை ரசிப்பதில்லை. கசங்கிய காகிதம் போல அவள் வாழ்க்கை மாறியிருந்தது.





••





தாத்தா வீடு பழைய காலத்து அமைப்பில் பெரிய தூண்களுடன் இருந்தது. நாலைந்து அறைகள். ஹாலில் பெரிய ஊஞ்சல். வீட்டை சுற்றிலும் எட்டு அடி உயரத்தில் கோட்டைச் சுவர்கள். வீட்டின் பின்பக்கம் கிணறு. அதை ஒட்டிய குளியல் அறை. வெந்நீர் அடுப்பு. நாலைந்து தென்னை மரங்கள்.இரண்டு வாழைமரங்கள். ஒரு கொய்யா மரம். துணி துவைக்கும் அகலமான கல். நெல் அவிப்பதற்காகப் பெரிய வெண்கல அண்டா. ஒரு காலத்தில் பசுமாடு கட்டப்பட்டிருந்த சிறிய மாட்டுதொழுவம். கோட்டைச்சுவரை ஒட்டி தானே முளைத்திருக்கும் விதவிதமான பூச்செடிகள். தாழப்பறக்கும் தட்டான்கள்.









தாத்தா கண்ணுசாமிக்கு எண்பத்தி மூன்று வயதாகியிருந்தது. ஆனால் திடமாக இருந்தார். எப்போதும் நெற்றி நிறையத் திருநிறு பூசி துவைத்த வேஷ்டி கட்டியிருப்பார். மேல் சட்டை அணிவதில்லை. ஒரு கதர் துண்டினை போர்த்திக் கொண்டிருப்பார். அவரைத் தேடி யாரும் வருவதில்லை. அவரும் வெளியே போவதுமில்லை. அதிகபட்சம் கிணற்றடி வரை செல்வார். தானே தண்ணீர் இறைத்துக் குளிப்பது வழக்கம்.





தாத்தாவிற்குத் தேவையான சாப்பாடு செய்து தருவதற்காக லட்சுமியம்மாள். என்ற பெண்மணி வேலைக்கு இருந்தார். லட்சுமியம்மாளின் வீடு தெற்குதெருவில் இருந்தது. ஐம்பது வயதைக் கடந்த பெண். கணவன் இல்லாதவர். நான்கு பிள்ளைகளைத் தனியே வளர்ந்து படிக்க வைத்து வேலைக்கு அனுப்பியிருக்கிறார். லட்சுமியம்மாள். காலை எட்டு மணிக்கு வந்து அவருக்குத் தேவையான டிபன் செய்து தந்துவிட்டு தாத்தாவின் உடைகளைத் துவைத்துப் போடுவார். பின்பு மதியச்சமையல் செய்துவைத்துவிட்டு போய்விடுவார். தாத்தா இரவில் பழங்களை மட்டுமே சாப்பிடுவது வழக்கம். பகலில் ஒரு சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே தேவாரம் படித்துக் கொண்டிருப்பார். அந்தப் புத்தகம் எப்போதும் அவரது மார்பில் கிடக்கும். அவ்வளவு பெரிய வீட்டில் இரண்டே டியூப் லைட்டுகள் இருந்தன. மற்றவை குண்டு பல்புகள். ரேடியோ, டிவி என எதுவும் கிடையாது. முன்பு அவருக்குத் தபால்கள் அடிக்கடி வருவதுண்டு. இப்போது தபால்களும் கிடையாது.





தாத்தா வீட்டின் படியேறிய போது அவளுக்கு ஏழு வயதின் நினைவுகள் பீறிட்டன. இதே படிக்கட்டில் நின்று அவள் கோடைமழையை வேடிக்கை பார்த்திருக்கிறாள். கூண்டுவண்டியில் பயணம் செய்திருக்கிறாள். அப்போது வீடு நிறைய ஆட்கள். இப்போது ஒருவருமில்லை.





கதவைத் தள்ளி உள்ளே நுழைந்தபோது சாய்வுநாற்காலியிலிருந்து லேசாகக் கண்ணை விழித்தபடியே தாத்தா யார் எனப் பார்த்தார்





அருகில் சென்ற வர்ஷினி தாத்தா என வாஞ்சையாக அழைத்தாள். அவரது முகத்தில் லேசான புன்னகை படர்ந்தது. சைகையால் அப்படி உட்கார் என்பது போல முக்காலியை காட்டினார்





அவள் முக்காலியில் அமர்ந்தபடியே“ இப்போ நியூசிலாந்தில் இருக்கேன். ஒன்றரை மாசம் லீவு. அதான் கிளம்பி வந்துட்டேன்“ என்றாள். தாத்தா தலையசைத்தபடியே அவளை ஏறிட்டு பார்த்தபடியே இருந்தார்.





அவள் சுவரில் இருந்த பழைய காலப் புகைப்படங்களைப் பார்த்தபடியே சொன்னாள்





“எதுவும் மாறவேயில்லை. வீடு அப்படியே இருக்கு“





தாத்தா மெல்லிய குரலில் கேட்டார்





“நீ சாப்பிட்டயா“





ஜங்ஷனில் சாப்பிட்டதாகப் பொய் சொன்னாள். தாத்தா தனது கையிலிருந்த புத்தகத்தைக் கிழே வைத்துவிட்டு எழுந்து கொண்டார். மேல்துண்டு நழுவியது. குனிந்து எடுக்கும் போது தாத்தாவின் மார்பு எலும்புகள் துருத்திக் கொண்டு தெரிவதைக் கண்டாள். தாத்தா மிகவும் மெலிந்து போயிருந்தார். கைநரம்புகள் புடைத்திருந்தன. விரல் நகங்கள் வெளிறியிருந்தன.





தாத்தா துண்டினை எடுத்து மேலே போட்டுக் கொண்டபடியே சொன்னார்





“அந்த ரூம் பூட்டியிருக்கும். சாவி எடுத்துக்கோ“





சரியெனத் தலையாட்டிவிட்டு ஆணியில் மாட்டப்பட்டிருந்த சாவிக் கொத்தை எடுத்து தெற்கு பார்த்திருந்த ஒரு அறையின் கதவைத் திறந்தாள். அந்த அறையில் ஒரு மரக்கட்டில் இருந்தது. அதில் படுக்கையோ, தலையணையோ எதுவுமில்லை. அலமாரியில் நிறையக் கரப்பான்பூச்சிகள் ஒடின. சிறிய கயிற்றுகொடியில் ஒரு சிவப்பு கதர் துண்டு தொங்கிக் கொண்டிருந்தது.





தாத்தா தனது சாய்வுநாற்காலியில் சாய்ந்து கொண்டபடியே சொன்னார்





“லட்சுமியம்மா வந்தவுடன் சுத்தம் பண்ணி தரச் சொல்றேன்“





அவ்வளவு தான் அவர்களுக்குள் நடந்த உரையாடல் அதன்பிறகு தாத்தா அவளிடம் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. வர்ஷினி இருந்த அறையில் மின்சார விசிறியில்லை. ஆகவே ஜன்னலைத் திறந்துவிட்டாள். அகலமான ஜன்னல். இரும்புக் கம்பிகள் மழையில் நனைந்து துருவேறியிருந்தன. கோட்டைச்சுவர் கண்ணில்பட்டது. எதற்காக இவ்வளவு உயரமான சுவர் என்பது போல அதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.





பேருந்தில் வந்த களைப்பு படுத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. அவளாகவே இன்னொரு அறைக்குள் போய்த் தலையணை போர்வை இருக்கிறதா எனத் தேடினாள். எதையும் காணவில்லை. தனது பெட்டியில் இருந்து மாற்று உடைகளை எடுத்து அணிந்து கொண்டு பின்கட்டிற்கு நடந்தாள்.





மிகப்பெரிய சமையலறை. பத்து பேர் உட்கார்ந்து சாப்பிடும் அளவு பெரியது சிறுவயதில் அங்கே மதிய நேரம் தாயம் ஆடுவார்கள். தண்ணீர் பானைகள் வைக்கும் மேடை. ஒரு ஸ்டவ் அடுப்பு. ஒரு கேஸ் அடுப்பு. பத்து பதினைந்து பாத்திரங்கள். சில்வர் தட்டு டம்ளர்கள். சமையல் அறையில் இருந்த பெரிய அலமாரி பூட்டப்பட்டிருந்தது. மூடப்பட்டிருந்த பின்வாசற்கதவைத் திறந்து வர்ஷினி நடந்தாள்.





கிணற்றடி சுத்தமாக இருந்தது. குனிந்து பார்த்தபோது கிணற்றில் தண்ணீர் ஆழத்திலிருந்தது. துணி துவைக்கும் கல்லை விரலால் தொட்டுப்பார்த்தாள். குளிர்ச்சி மாறவேயில்லை. வாழை மரத்தின் இலைகள் காற்றில் ஆடிக் கொண்டிருந்தன. ஒரு நாற்காலியை கொண்டு வந்து போட்டு அங்கேயே உட்கார்ந்து கொள்ளலாம் போலிருந்தது.





அவள் கிணற்றிலிருந்து ஒரு வாளி தண்ணீர் இறைத்தாள். குளிர்ச்சியான தண்ணீர். முகத்தில் தண்ணீர் பட்டவுடன் சிரிப்பு வந்தது. கைநிறைய அள்ளி கழுத்தை சுற்றிலும் துடைத்துக் கொண்டாள். ஒரு அணில் தென்னைமரத்திலிருந்து இறங்கி அவளைப் பார்த்தபடியே ஒடியது‘





லட்சுமியம்மாள். வருவதற்காக வர்ஷினி காத்திருக்கத் துவங்கினாள்





••





லேப்டாப். செல்போன். கடிகாரம் கேமிரா என எதையும் வர்ஷினி தன்னோடு கொண்டுவரவில்லை. சென்னையிலே எல்லாவற்றையும் விட்டு வந்திருந்தாள். நாலைந்து உடைகள் கொண்ட சிறிய பெட்டி. பணம் வைத்துள்ள. சிறிய ஹேண்ட்பேக் மாத்திரைகள். தலைவலி தைலம் நாப்கின் அதிலிருந்தன. படிக்கப் புத்தகம் கூட எடுத்து வரவில்லை. குறிப்பாக எப்போதும் காதில் மாட்டிக்கொள்ளும் ப்ளுடூத் இயர்போன் கூட எடுத்து வரவில்லை. வெறுமனே வந்திருந்தாள். சின்ன வயதில் அப்படித் தானே தாத்தா ஊருக்கு வருவது வழக்கம். அந்த எண்ணமே கிளம்பும் போது மேலோங்கியிருந்தது





நியூசிலாந்தில் அவள் தங்கியிருந்த அறை மூன்றாவது மாடியில் இருந்தது. சில நாட்கள் தான் எதற்காக இப்படி ஒரு நாட்டில் ஒரு தெரிந்த மனிதர் கூட இல்லாத இடத்தில் வசிக்கிறோம் என்று தோன்றும். தன்னுடைய ஊர் என்று எதைச் சொல்லிக் கொள்வது. அப்பா வேலை காரணமாக ஏதேதோ ஊர்களில் இடமாறுதல் செய்து கொண்டேயிருந்தார். அவளும் அண்ணன் தம்பிகளும் ஆளுக்கு ஒரு ஊரில் பிறந்தார்கள். அம்மாவின் தந்தையான கண்ணுசாமி தாத்தா வீடும் ஊரும் தான் அவளுக்குப் பிரியமான இடம். கோடை விடுமுறைக்கு அங்கே தான் வருவது வழக்கம். அதுவும் வளர்ந்த பிறகு துண்டிக்கபட்டுப் போனது.





ஏன் பெரிய உலகை நோக்கி இவ்வளவு அவசர அவசரமாக ஒடினோம். சிறிய உலகில் தான் அன்றைய மனிதர்கள் வாழ்ந்தார்கள். அந்தச் சந்தோஷம் தனக்கு ஏன் கிடைக்கவில்லை என்று யோசித்தபடியே இருப்பாள். காரணம் தெரியாத துக்கம் மனதை அழுத்தும். இதற்குப் பதில் கிடையாது என அவளே சமாதானம் சொல்லிக் கொள்வாள். சில நாட்கள் இந்த மனச்சோர்வு அதிகமாகும் போது எங்காவது பயணம் கிளம்பிப் போவாள். புதிய காற்று. புதிய வானம். புதிய மனிதர்கள் மனதை மாற்றிவிடுவார்கள்.





••





லட்சுமியம்மாள் மரஅலமாரியில் இருந்து போர்வை தலையணை கொண்டு வந்திருந்தாள். இன்னொரு அறையில் சுருட்டி வைக்கபட்டிருந்த மெத்தையும் கொண்டு வந்து போட்டாள். அறையைச் சுத்தம் செய்து குடிநீருக்காகச் சிறிய கூஜாவை கொண்டுவந்து வைத்துவிட்டு அவள் படிப்பதற்காக ஒரு மரநாற்காலி ஒன்றையும் அறைக்குள் கொண்டு வந்து போட்டிருந்தாள்.





“மரநாற்காலியை கிணற்றடியில் போடுங்க. அங்கே தான் உட்காரப்பிடிக்கிறது“ என்றாள் வர்ஷினி





“அங்கே புழு பூச்சி வரும்மா“ எனத் தயங்கினாள் லட்சுமியம்மாள்.





“கிணற்றை ஒட்டி போடுங்க. நான் பாத்துகிடுறேன்“ என்றாள் வர்ஷினி





“வெயில் படுற மாதிரி போடவா. இளம் வெயில்ல உட்கார்ந்தா சுகமா இருக்கும் “என்றாள் லட்சுமியம்மாள்.





“உங்க இஷ்டம்“ எனச்சொல்லி சிரித்தாள் வர்ஷினி





“நீங்க வரப்போறது முன்னாடியே தெரிஞ்சா. டிபன் செய்து வச்சிருப்பேன்“ என்றாள்





“பரவாயில்லை. மதியம் சாப்பிட்டு கிடுறேன். தாத்தா சாப்பிட்டரா“





“அவருக்கு தினம் மூணு இட்லி தான். காபி டீ எதுவும் குடிக்க மாட்டார். உங்களுக்கு வேணும்னா டீ போட்டு தர்றேன்“





“எனக்கு வேணாம். எனக்கும் தாத்தாவுக்குக் குடுக்கிற இட்லியோட நாலு சேர்த்து குடு“





“அது எப்படிப் பசியாறும். ரெண்டு தோசை கூடத் தர்றேன்“





“அவ்வளவு சாப்பிட முடியாது“





“எள்ளுபொடி வச்சி தோசை சாப்பிட்ட நல்லாயிருக்கும். எள்ளு பொடி போட்டு வைக்குறேன்“ என்றாள் லட்சுமியம்மாள்.





“இருக்கிறது போதும்“ என்றாள் வர்ஷினி





“வராத விருந்தாளி வந்து இருக்கீங்க. அய்யா வீட்ல தனியாவே தானே இருக்காரு.. யாரும் விருந்தாளி வர்றதேயில்லை“





“அதான் நான் வந்துட்டேன்“





“உங்களுக்குக் கத்திரிக்காய் பிடிக்குமா. சாம்பார்ல போடலாமா“





“உங்க இஷ்டம். நீங்க எதைச் சமைச்சி தந்தாலும் சாப்பிடுவேன்“





“அய்யாவும் இப்படித் தான். எதுவும் வேணும்னு கேட்கவே மாட்டார்“ என்றபடியே லட்சுமியம்மாள். சமையல் அறைக்குள் ஒரு பூனை போவதை கவனித்தவள் போலச் சொன்னாள்





“இந்த பூனையை விரட்டக்கூடாதுனு அய்யா சொல்லியிருக்கார். அது பாட்டுக்கு வீட்டுக்குள்ளே சுத்திகிட்டு இருக்கும்“. எனச் சொல்லி சிரித்தாள்.





வர்ஷினி கட்டிலில் படுத்துக் கொண்டபடியே சொன்னாள்





“நான் தூங்கி எழுந்து சாப்பிட்டுகிடுறேன். “





“இருந்து பரிமாறிட்டு போறன் “என்றாள் லட்சுமியம்மாள்.





“நானே போட்டு சாப்பிட்டுகிடுவேன்“. என்றபடியே கண்களை மூடிக் கொண்டாள். அவளுக்கு அம்மாவின் நினைவு வந்தது. தானே போட்டு சாப்பிட அம்மா விடமாட்டாள். எந்த இரவாக இருந்தாலும் எழுந்து வந்து அவளே பரிமாறுவாள்.





“தனியே போட்டுகிட்டா சாப்பாடு இறங்காது“ என்று சொல்லுவாள் அம்மா. அனுபவம் நிறைய விஷயங்களைப் பழக்கமாக்கிவிடுகிறது.





••





தாத்தா வீட்டிற்கு வந்த இரண்டு நாட்களில் ஒரு வார்த்தை கூடத் தாத்தா அவளிடம் எதையும் பேசவில்லை. அவளது வாழ்க்கை பற்றிக் கேட்டுக் கொள்ளவில்லை. லட்சுமியம்மாள்.யும் அப்படித்தான். அவள் தன் கடந்தகாலம் தன்னை விட்டு கரைந்து போய்விட்டது போல உணர ஆரம்பித்தாள்





காலை நேரம் எழுந்து கிணற்றடியில் போட்டிருந்த நாற்காலியில் வர்ஷினி உட்கார்ந்து கொள்வாள். காலைவெயில் உடலில் படுவது அத்தனை சுகமாகயிருந்தது. நத்தை ஊர்ந்து போவது போல மெதுவாக வெயில் அவள் உடலில் ஊர்ந்து போனது. தலையில் இருந்து கால்நகம் வரை வெயில் இறங்கியது. மெல்ல தானும் ஒரு வாழை மரம் போலாகிவிட்டதாக உணர்ந்தாள். வாழை தனது அகலமான இலைகளை அசைப்பதை போலக் கைகளை அசைத்தாள். வெயில் வாழை இழையினுள் இறங்கி மெல்ல அதன் நரம்புகளை மீட்டுகிறது. இலையின் நுனி வெட்கப்படுவது போல அசைகிறது. காற்றால் தன்னை எதுவும் செய்ய முடியாது என்று சொல்வது போல ஒரு ஜோடி எறும்புகள் ஊர்ந்து கொண்டிருந்தன.





திடீரென வாழைமரம் முன்பு பார்த்திராத அதிசயம் போலிருந்தது. எத்தனை அழகு. எவ்வளவு பச்சை. அதிலும் வாழை மரத்திலிருந்து தொங்கும் பூ. அதன் கருஞ்சிவப்பு வண்ணம். கிழிந்து காற்றில் ஆடும் இலைகளின் நடனம். அவள் தானே ஒரு வாழை போலாகிவிட்டதாக உணர்ந்தாள்.





கிணற்றடி ஒரு மாயவெளிபோலிருந்தது. இந்தக் கிணற்றடியில் தான் பாட்டி அமர்ந்திருப்பாள்.. பாத்திரம் துலக்கியிருப்பாள். துணி துவைத்திருப்பாள். பாட்டியின் பெயர் விசாலம். பனிரெண்டு வயதில் அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. எட்டுப் பிள்ளைகள். அதில் ஐந்து குழந்தைபருவத்திலே இறந்துவிட்டன. நான்கில் இரண்டாவது அவளது அம்மா. பாட்டி எப்படியிருப்பாள். அவளது புகைப்படம் கூட அந்த வீட்டில் கிடையாது. ஆனால் அந்தக் கிணற்றடி பாட்டியின் நினைவை ஆழமாகக் கிளறியது. பாட்டி முப்பது வயதிற்குள் இறந்துவிட்டாள். இந்த வீட்டினை தவிர வேறு எந்த ஊருக்கும் அவள் சென்றதேயில்லை. உலகம் என்பது இந்த வீடு மட்டுமே. புகை அடுப்பின் முன் நின்றபடியே அவள் வாழ்க்கை கழிந்து போனது. அப்பாவை திருமணம் செய்து கொண்டதால் அம்மாவின் வாழ்க்கை சென்னை, கோவை சேலம் திருச்சி என நாலைந்து நகரங்களைக் கண்டிருக்கிறது. ஆனால் தன் வாழ்க்கை அப்படியில்லை. எத்தனை நாடுகள். எவ்வளவு ஊர்கள். பெரிய உலகில் வாழுவதால் மட்டும் ஒருவர் சந்தோஷமாக இருந்துவிட முடியாது.





பாட்டியை பற்றி நினைத்தபடியே அவள் வெயிலிற்குத் தன்னை ஒப்புக்கொடுத்திருந்தாள். வெயில் அவளைச் சுத்தம் செய்தது. இத்தனை ஆண்டுகாலமாக ஒடியோடி அவள் சலித்துப் போயிருந்தாள். அந்தச் சலிப்பை வெயில் பஞ்சால் துடைத்துச் சுத்தம் செய்தது போல மாற்றியது. துடைத்து வைத்த கண்ணாடி போலாகிவிட்டதாக உணர்ந்தாள்.





வெயில் இத்தனை உயிர்ப்புத் தரக்கூடியது என்பதை இங்கு வந்த பிறகே உணர்ந்தாள். கிணற்றடியை விட்டு எழுந்து கொள்ள மனமேயில்லை. தானே கிணற்றில் தண்ணீர் இறைத்து குளித்தாள். தொப்பூழில் தண்ணீர் பட்டது என்னவோ செய்தது. தொடைகளில் தண்ணீர் வழிந்தோடும் போது தானே ஒரு வாழைமரம் போல உணர்ந்தாள். பூனை அவள் குளிக்கும் போது தள்ளி நின்று பார்த்தபடியே இருந்தது. ஈரத்தலையைக் கோதியபடியே பெயர் தெரியாத பூக்களைப் பறித்து வந்தாள். சிரிப்பு. தன்னை அறியாத சிரிப்பு முட்டிக் கொண்டேயிருந்தது.





ஒரு தட்டில் மூடிவைத்திருந்த இட்லிகளைச் சாப்பிட்டாள். புதிதாக இன்றைக்குத் தான் முதன்முதலில் இட்லி சாப்பிடுவது போல ருசியாக இருந்தது. செல்போன் அழைப்பு இல்லை. லேப்டாப் இல்லை. அலுவலகத் தொந்தவுரவு எதுவுமில்லை. தென்னை மரத்தில் ஒடியாடும் அணில் போலத் தானும் விருப்பமான விஷயங்களை மட்டுமே செய்து கொண்டிருக்கலாம் என்றிருந்தது.





காற்று, மிதமான காற்று, வேகமான காற்று. பகல் காற்று, மாலைக்காற்று இரவுக்காற்று, பின்னிரவுக் காற்று எனக் காற்றின் குளிர்ச்சி இத்தனை இதம் தரும் என்பதை இங்கு வந்த பிறகே உணர்ந்து கொண்டாள். பகலும் இரவும் காற்றடித்துக் கொண்டேயிருந்தது. இரவில் ஆற்றின் நீரோட்டம் போன்ற சீரான காற்று.





கூந்தலை காற்று கோதிவிடுவது சந்தோஷமாக இருந்தது. பிடறியில் காற்றின் விரல்கள் தொடும்போது அவள் சிரித்துக் கொண்டாள்.





காலை வெயில் ஏறிய பிறகு கொய்யாமரத்திற்கு ஒரு குயில் வருகிறது. அந்தக் குயில் விட்டுவிட்டுப் பாடுகிறது. எத்தனை இனிமையான குரல். பகலின் தனிமையைக் குயிலின் குரல் போக்கிவிடுகிறது. அந்தக் குயில் சில நேரம் நிதானமாக, உலகிற்கு எதையோ சொல்ல முயற்சிப்பது போலக் குரல் தருகிறது.





குயிலின் ஒசை நின்றபிறகு ஏற்படும் நிசப்தம் அலாதியானது. பாத்திரங்கள் கிழே விழுந்துவிட்டபிறகு உருவாகும் நிசப்தமான உருளல் நினைவிற்கு வந்து போனது. குயிலோசை என்பது ஒரு மலர். அரூபமான மலர். அதன் வாசனை தான் இனிய பாடலாக மாறியிருக்கிறது.





குயிலுக்குப் பிறகு மதிய நேரம் ஒரு ஜோடி காகங்கள் கோட்டை சுவர் மீது வந்து அமரும். அந்தக் காகங்கள் அசைவற்ற ஒவியம் போல அமர்ந்திருக்கும். சில சமயம் கைகளை வீசிப் பார்ப்பாள். காகம் அசையவே அசையாது. பயமற்றுப் போன காகங்கள். தானும் அப்படிதானே ஆகிவிட்டேன். எந்தப் பயமும் தன்னிடமில்லை. தன் உடல் மீது கொண்டிருந்த கவனம் கூட மறைந்து போய்விட்டது. கொடியில் உலரும் புடவைப் போலத் தன் உடல் எடையற்று ஆகிவிட்டதாக உணர்ந்தாள்.





இதுவெல்லாம் சாத்தியம் தானா என்று கூட நினைத்து பார்த்ததில்லை. ஆனால் எளிதாக நடந்தேறியது.





தாத்தாவை கடந்து போகையில் லேசாகத் திரும்பிப் பார்த்து சிரிப்பார். சில நாட்கள் அவள் வீட்டில் உதிர்ந்த மல்லிகைப்பூக்களைக் கட்டினாள். பூஜை செய்தாள். சில நாட்கள் லட்சுமியம்மாளுக்குப் பதிலாக அவளே சமைத்தாள். வீட்டினை சுத்தம் செய்தாள். தனி ஆளாகத் தாயம் ஆடினாள். பகல் முழுவதும் தூங்கினாள். இரவில் நட்சத்திரங்களை வேடிக்கை பார்த்தாள்.





தண்ணீருக்குள் வசிக்கும் மீன்கள் பூமியோடு தனக்குத் தொடர்பும் வேண்டாம் என வாழுவது போலத் தன் வாழ்க்கையும் மாறிவிட்டதாக உணர்ந்தாள். சட்டென அவளுக்கு வயது கரைந்து போய்விட்டது போலவும் பதின் வயதின் துடிப்பு மறுபடி மனதில் பீறிடுவதாகவும் உணர்ந்தாள். அது போன்ற நேரத்தில் அவள் மெல்லிய குரலில் தனக்குப் பிடித்தமான பாடலைப் பாடுவாள். அதைத் தாத்தா கேட்டக்கூடும். யாரும் கேட்காவிட்டாலும் பிடித்தமான பாடலை தனியே பாடுவது சந்தோஷமாகவே இருந்தது





ஒவ்வொரு நாளும் அவள் வெயிலில் அமர்ந்தாள். அலையின் முன்னால் விளையாடும் சிறுமியை போலவே உணர்ந்தாள். பத்து நாட்களில் அவளுக்கு உடலும் மனதும் மாறியிருந்தது. யாரும் அவளைப் பெயர் சொல்லி அழைக்கவில்லை. அடுத்தவருக்காக ஒரு வேலையைச் செய்யவில்லை. ஒரு பைசா பணத்தை வெளியே எடுக்கவில்லை. ஷாப்பிங் போகவில்லை. எந்த மாத்திரை மருந்து எடுத்துக் கொள்ளவில்லை. இவ்வளவு எளிமையானது தானா வாழ்க்கை. ஏன் இதைச் சிக்கலாக்கிக் கொண்டோம் எனத் தோணியது.





••





பகல் மிக நீண்டதாக இருந்தது. பாதரசம் போன்று மினுங்கும் வெயில். பகலில் சற்றுப் பிரகாசம் அதிகம். காலடி சப்தமே கேட்காத வீதி. சைக்கிள் கூடக் கடந்துபோவதில்லை. மரத்தின் இலையசைவு கேட்கும் துல்லியம். ஜன்னலுக்கு வெளியே ஒரு மஞ்சள் நிற வண்ணத்துபூச்சி பறந்து கொண்டிருந்தது. எங்கே போவது என வழி தெரியாத குழந்தையைப் போலிருந்தது அதன் பறத்தல். சுவரின் நிழல் நீண்டுகொண்டிருந்தது. இத்தனை நீண்ட பகலாக இருந்த போதும் அலுக்கவில்லை.





என்ன செய்வது எனத்தெரியாத ஒரு பகலின் போது தாத்தாவிடம் அவளாகவே கேட்டாள்





“நான் வேணும்னாலும் தேவாரம் வாசிக்கட்டுமா“





தாத்தா மறுப்புச் சொல்லாமல் தன் மடியில் வைத்திருந்த புத்தகத்தை அவளிடம் நீட்டினார்





அவள் மெல்லிய குரலில் தேவாரம் படிக்கத் துவங்கினாள்





“தோடுடைய செவியன்விடை





யேறியோர் தூவெண்மதிசூடிக்





காடுடையசுட லைப்பொடிபூசிஎன்





உள்ளங்கவர் கள்வன். “





தாத்தாவின் கண்களில் கண்ணீர் கசிவது தெரிந்தது. அவள் தொடர்ந்து படித்துக் கொண்டேயிருந்தாள். அவர் கைவிரல்கள் அசைந்தபடியே இருந்தன. வாசித்து முடித்தபோது நாவில் தித்திப்பு படருவது போல உணர்ந்தாள். புத்தகத்தைத் தாத்தா கையில் கொடுத்தபோது அவர் அவளது கைகளைப் பற்றிக் கொண்டபடியே சொன்னார்





“உங்க அம்மா நல்லா பாடுவா“





அம்மா பூஜை செய்யும் போது பாடுவதைக் கேட்டிருக்கிறாள். தன்குரலில் அம்மாவின் சாயல் வெளிப்படுகிறதா என யோசித்தாள். தாத்தாவின் சாய்வுநாற்காலி அருகிலே உட்கார்ந்து கொண்டாள். இருவரும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் மிக நெருக்கமாக உணர்ந்தாள்.





**





லட்சுமியம்மாளின் வீட்டிற்குப் போய் அவளைக் பார்க்க வேண்டும் என்று ஒரு நாள் காலையில் தோன்றியது. அவளிடம் சொன்னால் வரவேண்டாம் என்று தடுத்துவிடுவாள். ஆகவே சொல்லிக் கொள்ளாமல் அவள் வீட்டினை விசாரித்துப் போன போது லட்சுமியம்மாள் மாவு இடித்துக் கொண்டிருந்தாள். அவளைக் கண்டதும் வியப்பும் மகிழ்ச்சியுமாக “வாங்கம்மா“ என்றாள்





“எப்பவும் வேலைதானா“ எனக்கேட்டாள் வர்ஷினி





“செய்து முடியலை. அவ்வளவு வேலை கிடைக்கு. காபி போடவா“ எனக்கேட்டாள் லட்சுமியம்மாள்.





“ஒரு நாளைக்குப் பத்து காபி குடிச்சிட்டு இருந்தவ. இங்கே வந்து காபி குடிக்கிறதை விட்டுட்டேன். மோர் இருந்தா குடுங்க“ என்றாள் வர்ஷினி





“எங்க வீடு ரொம்பச் சின்னது. தலை இடிக்கும்“ என வெட்கத்துடன் சொன்னாள் லட்சுமியம்மாள்.





அவள் வீட்டின் அருகிலும் ஒரு வாழைமரமிருந்தது. அதைக் கவனித்தபடியே கேட்டாள்





“வாழைப்பூக்குள்ளே ஒரு கள்ளன் இருக்கிறானு சொல்வாங்களே“





“அது ஒரு கதைம்மா. கள்ளன்னா நிஜ கள்ளன் இல்லை “என்றபடியே அவள் இடித்த மாவை அலுமினிய பாத்திரம் ஒன்றில் அள்ளிக் கொண்டாள்.





“உங்க பிள்ளைகள் நாலு பேரும் வெளியூர்ல தான் இருக்காங்களா“ எனக்கேட்டாள் வர்ஷினி





“ரெண்டு மக மெட்ராஸ்ல இருக்காங்க. கடைசிப்பையன் மதுரையில இருக்கான். ஒருத்தன் துபாய்ல“ என்று சொல்லி சிரித்தாள்





“பிள்ளைகள் வருவாங்களா“ எனக்கேட்டதும் அவள் முகம் மாறியது.





“வருஷத்துக்கு ஒரு தடவை வர்றதே அபூர்வம். பெரிய ஆளா ஆகிட்டாங்க. வேலை இருக்கும். இந்த ஊர்ல என்ன இருக்கு“.





“நீங்க இங்கே தானே இருக்கீங்க“ என்றாள் வர்ஷினி





“இந்த கிழவியை யாரு நினைக்கா“ என்றபடியே லட்சுமியம்மாள். சேலையால் தன்னை மீறி வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள். கொத்துமல்லி இலைகளைக் கிள்ளிப் போட்டு மோர் கொண்டுவந்து தந்தாள் லட்சுமியம்மாள்.. அவளை அழைத்துக் கொண்டு இருவரும் ஏரிக்கரை வரை நடந்தார்கள். ஊரை சுற்றிலும் வயல்கள். நிறைய மரங்கள் கொண்ட ஏரிக்கரை. கரையை ஒட்டிய சிறிய கோவில். இயந்திரத்தின் ஒசையே கேட்காத ஊர். இன்னமும் காலை நான்கு மணிக்கு எழுந்துவிடுகிறார்கள். இரவு ஏழு மணிக்குள் ஊர் அடங்கிவிடுகிறது





“ஊர்ல யார் வீட்ல டிவி இருக்கு“ எனக்கேட்டாள் வர்ஷினி





“அது நிறைய வீட்ல இருக்குமா. ஆனா.. சப்தம் வெளியே கேட்காது. சினிமா போட்டா பார்ப்பாங்க. நியூஸ் கேப்பாங்க. டீச்சர் வீட்ல தான் எப்பவும் டிவி ஒடிக்கிட்டு இருக்கும். “





வரும்வழியில் வயலில் கொக்குகள் தரையிறங்குவதை இருவரும் நின்று பார்த்தபடியே இருந்தார்கள். வானின் தூதுவர்கள் போலக் கொக்குகள் பூமியில் தரையிறங்கிக் கொண்டிருந்தன





**





தாத்தாவிடம் அவளாகவே பேச்சு கொடுத்தாள். பத்து வார்த்தை பேசினால் தாத்தா ஒரு வார்த்தை பதில் தருவார்





“ஏன் தாத்தா பாட்டியோடு ஒரு போட்டோ கூட எடுத்துகிடலை“





“எடுத்து “எனக்கேட்டார் தாத்தா





“வீட்ல மாட்டி வச்சிருக்கலாம்லே“





“வீட்ல பொம்பளை படத்தை மாட்டக்கூடாது“





“சரஸ்வதி படம் மாட்டியிருக்குல்லே“





“அது சாமி“.





“சாமின்னாலும் பொண்ணு தானே“





தாத்தா பதில் சொல்லவில்லை





“தனியா இருக்கிறது கஷ்டமா இல்லையா தாத்தா“





“தனியா எங்கே இருக்கேன்“ என்று கேட்டார் தாத்தா





“ஆமாம் தானே. தனியே எங்கேயிருக்கிறார். வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு ஒரு ஆள் தனியே வசிப்பது போலத் தெரிகிறது. ஆனால் அவர் தனியாக இல்லை..பூனை, அணில். குயில். லட்சுமியம்மாள். வெயில் காற்று எல்லாமும் சேர்ந்து ஒன்றாகி அல்லவா இருக்கிறது. தாத்தா யாரும் பிரவேசிக்க முடியாத தண்ணீர் மாளிகை ஒன்றினுள் வசிப்பது போல அல்லவா வாழ்கிறார்“





தாத்தாவிடம் அவள் ஏதேதோ கேட்டாள். நிறைய நேரம் அவர் மௌனமாகவே இருந்தார். பதில் சொல்லியிருந்தாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை.





**





அவள் அறைக்குள் ஒரு சிவப்பு நிற ஒடு கொண்ட பூச்சி வந்திருந்தது. கட்டிலின் மீது நின்றிருந்த அந்தப் பூச்சியைப் பார்த்தபடியே இருந்தாள். அதை விரட்ட வேண்டும் என்று தோன்றவேயில்லை. சிவப்பு நிற ஒடு மினுமினுத்தது. அந்தப் பூச்சி தியானிப்பது போல அமர்ந்திருந்தது. பின்பு அது சட்டெனப் பறந்து ஜன்னலை விட்டு வெளியேறிது. அவளும் பூச்சியின் பின்னாலே பறந்து போவது போலவே உணர்ந்தாள்





**





பெருநகரங்களில் வசிப்பவர்களுக்குச் சதா பேச்சு வேண்டும். சத்தம் வேண்டும். சலசலப்பு வேண்டும். வாழ்க்கை என்பது முடிவற்ற பேச்சுக்கச்சேரி தான். ஆனால் இங்கே பேச்சிற்கே அவசியமில்லை. தேவையான போது குறைவாகப் பேசினால் போதும். சைகை, தலையசைப்பு. சிறு சிரிப்பு. ஒன்றிரண்டு வார்த்தைகள் இவ்வளவு போதுமானதாகயிருந்தது. அதுவும் கூட இரவில் தேவைப்படவில்லை. அவள் வசித்த பெரிய நகரங்களில் மிதமிஞ்சிய விளக்குகள். இரவெல்லாம் ஒளிரும் விளக்குகள். வெளிச்சம் அதிகமாக அதிகமாகத் தனிமை அதிகமாகிவிடுகிறது. இருட்டு தான் தனிமையின் துணை. அதுவும் குறைவான வெளிச்சத்தில் ஏற்படும் நெருக்கம் அலாதியானது. பகலின் வெளிச்சத்தை ஒரு போதும் இரவால் வெல்ல முடியாது.





ஏழு மணிக்கு இரவு உணவை முடித்துக் கொண்டு வர்ஷினி தன் அறைக்குப் போய்விடுவாள். கட்டிலில் படுத்தபடியே வெளியே கேட்கும் பூச்சிகளின் சங்கீதத்தை ரசித்துக் கொண்டிருப்பாள். சில நேரம் பூனை சப்தமிடும்.ஆற்றின் கரையில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வே ஏற்படும். இரவின் அகன்ற கைகள் அவளைத் தழுவி கொள்ளும். தன்னை மறந்து உறங்குவாள். விடிகாலை வெளிச்சம் வரும்போது விழிப்பே வராது. கண்விழித்தபோது மனது அத்தனை சாந்தமாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்.





**





பதினாறாம் நாள் பகலில் திடீரென யாருக்காவது போன் செய்ய வேண்டும் என்பது போன்ற விருப்பம் உண்டானது. யாரோடும் பேசாமலே இருந்துவிட்டால் அவர்கள் என்ன நினைப்பார்கள். கற்பனையாக எதையாவது நினைத்துப் பயப்படுவார்கள் தானே. செய்துமுடிக்கப்படாத வேலைகள் என்னவாகியிருக்கும். தான் கட்ட வேண்டிய மாத தவணைகள் சரியாகச் செலுத்தப்பட்டிருக்குமா. பெங்களூர் வீட்டினை ஒரு ஆளுக்கு வாடகைக்கு விட்டால் கூடுதல் வாடகை கிடைக்குமே என்பது போல எண்ணங்கள் குமிழ்விடத்துவங்கின. திடீரென அலுவலகம் போகவேண்டும் என்ற ஆசை உண்டானது. பரபரப்பு இல்லாமல் என்ன வாழ்க்கை.





அன்றிரவு அவளுக்கு நல்ல தூக்கமில்லை. திடீரெனத் தான் தொடர்பில்லாத ஏதோ ஒரு உலகிற்குள் வாழ்ந்து கொண்டிருப்பது போல உணர்ந்தாள். ஒரு வேளை தான் விசாலம் பாட்டியாகிவிட்டோமோ என்று கூடத் தோன்றியது.





லட்சுமியம்மாள் தரும் சாப்பாட்டில் ஏதோ குறை இருப்பது போல உணர்ந்தாள். நாக்குத் திடீரெனக் காபிசினோ காபிக்கு ஏங்கியது. காரை ஒட்டி எத்தனை நாளாகிவிட்டது என்று நினைத்துக் கொண்டாள். ஏடிஎம் வரிசையில் நிற்பது போலக் கனவு கண்டாள்.





தண்ணீரிலிருந்து வெளியே வந்த ஆமை போலத் தன்னை உணர ஆரம்பித்தாள்.





இதமான காற்றும் வெயிலும் குளிர்ச்சியும் கூட அவள் மனக்குழப்பங்களைத் தீர்க்க முடியவில

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 05, 2021 19:11

அஞ்சலி

தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பாளியான ஆ.மாதவன் காலமானார். அவரது மறைவிற்கு எனது இதயப்பூர்வமான அஞ்சலி .









திருவனந்தபுரத்தில் வாழ்ந்து வந்த ஆ. மாதவன் அவர்களை பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். மிகப் பண்பான மனிதர். அவரது சிறுகதைகள் தனித்துவமானவை. அவரைப் பற்றி கதாவிலாசத்தில் நான் எழுதிய கட்டுரையை வாசித்து விட்டு மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். நன்றி தெரிவித்தார்.





நகுலனைப் பார்க்கச் செல்லும் போதெல்லாம் அவரையும் காண்பது வழக்கம்.. வாசகர் வட்டம் வெளியிட்ட அவரது புனலும் மணலும் முக்கியமான நாவல். ஆ. மாதவன் கதைகள் என்ற தலைப்பில் அவரது சிறுகதைகளின் மொத்த தொகுப்பும் வெளியாகியுள்ளது









1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 05, 2021 18:17

ஆறாம் நாள் உரை – ஜாக் லண்டன்

உலக இலக்கியம் குறித்து நான் ஆற்றி வரும் பேருரைகள் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.





இந்தப் பேருரைகளின் ஆறாம் நாளில் ஜாக் லண்டன் எழுதிய கானகத்தின் குரல் (The Call of the Wild) குறித்து உரையாற்றுகிறேன்.





 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 05, 2021 18:01

வங்கச் சிறப்பிதழ்

சொல்வனம் தன் 12 ஆண்டுக் காலச் செயல்பாட்டில் பல்வேறு சிறப்பான மொழியாக்கங்களைத் தந்திருக்கிறது. முக்கியப் படைப்பாளிகளுக்குச் சிறப்பிதழ்கள் வெளியிட்டுள்ளது.









தற்போது வங்காள இலக்கியத்திற்குச் சிறப்பிதழ் ஒன்றை வெளியிடுவதாக அறிவித்துள்ளது





வங்க இலக்கியத்திலிருந்து தமிழுக்கு நிறைய மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. நீலகண்ட பறவையைத் தேடியும். பொம்மலாட்டமும், பதேர்பாஞ்சாலியும், காட்டின் உரிமையும், ஆரோக்கிய நிகேதனமும், கறையானும் மறக்கமுடியாத படைப்புகள்.





வங்க இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்த திரு.சு.கிருஷ்ணமூர்த்தி மிகுந்த பாராட்டிற்குரியவர்.





இந்திய இலக்கியத்தின் ஊற்றுக்கண்ணாக விளங்கிய வங்க இலக்கியத்தையும், அதன் முக்கியப் படைப்பாளிகளையும் கொண்டாடும் சொல்வனத்தின் முயற்சி மிகுந்த பாராட்டிற்குரியது.





நீங்கள் வாசித்த, நேசித்த வங்கப் படைப்பாளிகள், நாவல்கள் பற்றி சிறப்பிதழுக்குப் பங்களிப்புச் செய்யுங்கள்.





தமிழுக்கு வளம் சேர்க்கும் தீவிர இலக்கியச் செயல்பாட்டினைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் சொல்வனத்திற்கு எனது வாழ்த்துகள்





படைப்புகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
solvanam.editor@gmail.com n

2 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 05, 2021 17:55

ஐந்தாம் நாள் உரை – ஸ்டெபான் ஸ்வேக்

உலக இலக்கியம் குறித்து நான் ஆற்றி வரும் பேருரைகளின் ஐந்தாம் நாள் உரை ஸ்டெபான் ஸ்வேக் பற்றியது





ஸ்ருதி டிவியில் இந்த நிகழ்வு நேற்று மாலை ஒளிபரப்பானது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 05, 2021 17:38

ஓவியங்களை எரித்தவர்கள்.





இரண்டாம் உலகப்போரின் போது நாஜி ராணுவம் திட்டமிட்டு பல்வேறு நாடுகளிலிருந்தும் கலைப்பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றது. குறிப்பாகப் பாரீஸ் ம்யூசியங்களிலிருந்த அரிய ஓவியங்களைத் கொள்ளையடித்தார்கள்.





இக் கொள்ளைக்குப் பயந்து கலைப்பொருள் சேகரிப்பவர்கள் வங்கியின் பாதுகாப்பு அறையில் தங்கள் அரிய கலைப்பொருட்களை ஒளித்து வைத்தார்கள். அப்படியும் அவர்களால் ஓவியங்களைக் காப்பாற்ற முடியவில்லை.





வங்கியின் பாதுகாப்பு அறைகளை உடைத்து ஓவியங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. ஐம்பதாயிரத்திற்கும் மேலான அரிய ஓவியங்கள் சிற்பங்கள். கொள்ளை போயின. இதில் மீட்கப்பட்டது வெறும் அறுபது சதவீதம் மட்டுமே என்கிறார்கள்.





நாஜிகளால் மலினமான கலைப்படைப்புகள் என்று வகைப்படுத்தப்பட்டவை வீதியில் வீசி எறியப்பட்டன. ஹில்டெபிரான்ட் குர்லிட் மற்றும் அவரது சகாக்கள் மலினமான கலைப்படைப்புகள் என்று முத்திரை குத்தி பெர்லினில் 1,004 ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் மற்றும் 3,825 நீர் வண்ண ஓவியங்களுக்குத் தீ வைத்தார்கள்.





பல்வேறு ம்யூசியங்களில் அங்கு பணியாற்றியவர்கள் உதவியோடு அரிய ஓவியங்கள் குகையினுள் மறைத்து வைக்கப்பட்டன. சீதோஷ்ண நிலை மாற்றத்தால் அந்த ஓவியங்கள் அழிந்துவிடாமல் பாதுகாக்கக் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் முடிவிற்குப் பிறகே இந்த ஓவியங்கள் மீண்டும் ம்யூசியத்திற்குக் கொண்டுவரப்பட்டன.





1940களில் மறைக்கப்பட்ட, திருடப்பட்ட கலைப்பொருட்களைத் தேடும்பணி இன்றும் நடந்து வருகிறது. பெர்லினில் பழைய குடியிருப்பு ஒன்றினை இடித்துக் கட்டுவதற்காக நடைபெற்ற கட்டுமானப்பணியின் போது வீட்டுச்சுவர் ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கலைப்பொருட்களை இப்போது கண்டறிந்திருக்கிறார்கள்.









ஹிட்லரின் மறைவிற்குப் பிறகுக் கலைப்பொருட்கள் ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தால் தனிநபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டன. அவர்கள் உலகின் கண்ணில் படாமல் இக்கலைப்பொக்கிஷங்களை ஒளித்துப் பாதுகாத்து வந்தனர். முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த தலைமுறையினர் இதனை விற்பனை செய்ய முற்படும் போது தான் அது திருடப்பட்ட ஓவியம் என்று உலகிற்குத் தெரிய வந்தது.





1972ல் சுவிட்சர்லாந்திலுள்ள ஒருவரது வீட்டின் அறையில் மாட்டப்பட்டிருந்த ஜார்ஜ் பரோக்கின் ஓவியம் ஒன்றினை அவர்களின் குடும்பம் தேவையற்றது என்று நினைத்து வீதியில் தூக்கி எறிந்தார்கள். அதைத் தற்செயலாகக் கண்டெடுத்த ஒரு பேராசிரியர் பாரீஸிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டு வந்த ஓவியம் என்ற உண்மையை ஆராய்ந்து, ஏலத்தில் விற்பனை செய்தார். ஐம்பது கோடிக்கும் அதிகமான விலைக்குப் போனது.





இப்படிப் புகழ்பெற்ற ஓவியர்களின் காணாமல் போன  ஓவியங்களில் சில இன்றும் தேடப்பட்டு வருகின்றன. இந்தச் சந்தையைப் பயன்படுத்தி நகல் ஓவியங்களை மூல ஒவியம் போலவே உருவாக்கி விற்பதும் நடந்துவருகிறது





நாஜி ராணுவத்தின் திட்டமிட்ட கலைக்கொள்ளையைப் பற்றிய ஆவணப்படமே Nazi Art Thieves. யூத கலைசேகரிப்பாளர்கள் மூவரிடமிருந்து திருடப்பட்ட மூன்று முக்கிய ஓவியங்களை அவர்களின் குடும்பம் இன்று எப்படி நீதிமன்றத்தை அணுகி மீட்டார்கள் என்பதை அழகாக விவரிக்கிறது ஆவணப்படம்









நாஜி ராணுவம் பாரீஸில் நுழைவதற்கு முன்பாகவே எந்தெந்த கலைப்பொருட்களைக் கொள்ளையடிக்க வேண்டும் என்ற பட்டியலைக் கையில் வைத்திருந்தது. இந்தப் பணியைச் செய்யும் பொறுப்பு தனிப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அப்படிக் கொள்ளையடிக்கப்பட்ட ஓவியங்களை பெர்லின் கொண்டு சென்றார்கள். ஹிட்லர் நேரடியாக இவற்றை பார்வையிட்டார்.





இதைப்பற்றி ஜான் ஃபிராங்கன்ஹெய்ம் இயக்கி 1964ல் வெளியான தி டிரைன் என்ற திரைப்படம் விவரிக்கிறது. ஒரு ரயிலின் மூலம் பாரீஸில் இருந்த அரிய ஓவியங்களை பெர்லின் கொண்டு செல்ல முயல்கிறார்கள். அதை எப்படித் தந்திரமாகத் தடுத்து நிறுத்தினார்கள் என்பதைப் படம் சுவாரஸ்யமாக விவரிக்கிறது.





கலைப்பொருட்களை கொள்ளை அடித்ததில் முக்கிய நபராகக் கருதப்படுகிறவர் ஹில்டெபிரான்ட் குர்லிட். இவர் ஒரு நாஜி ஆதரவாளர். கலைப் பொருள் விற்பனையாளர், ஆர்ட் கேலரி ஒன்றின் இயக்குநர். இவரது தனிப்பட்ட சேமிப்பில் கிளாட் மோனட், ரெனார், பால் செசான், ஹென்றி மாட்டிஸ், ஹென்றி லாட்ரெக், மார்க் சாகல், காமில் பிஸ்ஸாரோ, ரோடின், கஸ்டேவ் கோர்பெட் மற்றும் பால் க்ளீ, போன்றவர்களின் ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன.





வெளிநாடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட கலைப் படைப்புகளைச் சந்தைப்படுத்துவதற்காக, நாஜிகளால் ஏற்படுத்தப்பட்ட ஆணையத்தால் விற்பனையாளராக அங்கீகரிக்கப்பட்டவர் குர்லிட். ஐரோப்பா முழுவதுமிருந்து 16,000 ஓவியங்கள், கலைப்படைப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை ஏலத்தில் விற்றுப் பணம் திரட்ட நாஜி முடிவு செய்தது. அதற்குக் குர்லிட் முக்கியப் பொறுப்பாளராக விளங்கினார்.





1945 இல் குர்லிட் தனது மனைவி மற்றும் இருபது பெட்டிகள் நிறையக் கலைப் பொருட்களுடன் தப்பியோட முற்பட்ட போது அமெரிக்க ராணுவத்தால் பிடிக்கப்பட்டார். ராணுவ விசாரணையின் போது அந்தக் கலைப்பொருட்கள் தனக்குச் சொந்தமானவை. அவற்றை முறையாக விலை கொடுத்து வாங்கியதாகத் தெரிவித்தார். ஆனால் அதற்கான சான்றுகளை அவரால் தர இயலவில்லை. அவரிடமிருந்து 115 கலைப்பொருட்களைப் பறிமுதல் செய்தார்கள். முறையான விசாரணையின் பிறகு அவை திருடப்பட்ட கலைப்பொருட்கள் எனக் கண்டறியப்பட்டன.





புகழ்பெற்ற ஓவியங்களை முக்கிய நாஜி தலைவரும் ராணுவத்தளபதியுமான வில்ஹெம் கோரிங் தனது சேமிப்பிற்காகக் கொண்டு சென்றார்.  இரண்டாம் உலகப்போரின் பிறகு நடைபெற்ற நூரென்பெர்க் விசாரணையில் இவரும் விசாரிக்கப்பட்டார். தண்டனைக்கு முன்பாகத் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார் கோரிங்.





கலைப்பொருட்களைக் கொள்ளையடித்ததில் கோரிங்கின் பங்கு மிக முக்கியமானது. இந்த ஆவணப்படத்தில் அதை நாம் ஆதாரத்துடன் காணமுடிகிறது. ம்யூசியத்தின் பெயரால் எப்படிக் கோரிங் ஓவியங்களைக் தனதாக்கிக் கொண்டார் என்பதை ஆதாரத்துடன் விவரிக்கிறார்கள்.





தங்கள் குடும்பத்திற்குச் சொந்தமான ஓவியங்கள். கலைப்பொருட்களை இழந்தவர்கள் இன்று அதற்கான சான்றுகளுடன் விண்ணப்பிக்கிறார்கள். இதற்காகத் தனியே ஒரு சர்வதேசப் பதிவேடு செயல்படுகிறது. அதில் எந்த ஓவியம் எங்கே, எப்போது கொள்ளை போனது என்ற தகவல் இடம் பெற்றிருக்கிறது. மீட்கப்படும் ஒவியங்களை இந்தப் பதிவேட்டினைக் கொண்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கிறார்கள். இதற்கு நீதிமன்றம் வழி காட்டுகிறது. சில நேரம் இந்த ஓவியங்களை இத்தனை ஆண்டுகள் காட்சிப் படுத்தியதற்காக ம்யூசியம் இழப்பீடும் வழங்குகிறது.





Nazi Art Thieves. ஆவணப்படத்தில் மூன்று ஓவியங்கள் திருடுபோன வரலாறு விவரிக்கப்படுகிறது. முதலாவது ஓவியம் க்யூபிச ஓவியரான ஜார்ஜ் பரோக்கின் Man with a Guitar. இரண்டாவது ஓவியம் இகோன் சீலேயின் Herbstsonne, மூன்றாவது ஓவியம் ஹென்றி மாட்டிஸ் வரைந்த Sitting Woman. மூன்றும் யூத கலைச்சேகரிப்பாளர் வசமிருந்தவை.





தற்போது மேன் வித் எக் கிதார் ஓவியம் நியூயார்க்கில் உள்ள நவீன கலை அருங்காட்சியகத்தில் (MoMA) காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனை நேரில் கண்டிருக்கிறேன்.









கலைப்பொருட்கள் சேகரிப்பாளரான பால் ரோசன்பெர்க்கிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஓவியங்களை அவரது வழித்தோன்றல்கள் இன்று உரிமை கொண்டாடுகிறார்கள். இதற்காக அவர்கள் நீதிமன்றத்தை நாடி தங்கள் உரிமையை நிலைநாட்டியிருக்கிறார்கள்.





ரோசன்பெர்க்கின் பேத்தி மரியான் இந்த ஆவணப்படத்தில் தாங்கள் எவ்வாறு திருடுபோன ஓவியங்களைக் கண்டறிந்தோம் என்பதைப் பற்றி விரிவாக எடுத்துச் சொல்கிறார்.





பால் ரோசன்பெர்க், ஒவியர்களான ஹென்றி மாட்டிஸ் மற்றும் பிகாசோவிற்கு நெருக்கமானவராக இருந்தார். அவரது காட்சியகத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட படைப்புகளில், 65 மட்டும் இன்னும் மீட்கப்படவில்லை





ரோசன்பெர்க் குடும்பத்தால் கலைப்பொருட்கள் குறித்த தகவல்களை அறிய புலனாய்வாவார்கள் நியமிக்கப்பட்டார்கள். அவர்களின் முடிவில்லாத தேடலின் காரணமாக டென்மார்க், ஜெர்மனி, கலிபோர்னியா, நியூயார்க் மற்றும் வெனிஸ் நாடுகளில் உள்ள இடைத்தரகர்கள் மூலம் ஓவியம் எங்கேயிருக்கிறது என்ற உண்மை கண்டறியப்பட்டது.





ஜெர்மன் அரசாங்கம் நாஜிகளால் திருடப்பட்ட கலைப்படைப்புகளை அவர்களின் உரிமையாளர்களுக்குத் திருப்பித் தர உதவுமாறு உத்தரவிட்டிருக்கிறது. அதன் காரணமாகவே ரோசன்பெர்க் குடும்பம் இழந்த தங்கள் ஒவியத்தை மீட்டிருக்கிறார்கள். இன்று அது குடும்ப சொத்தாக கருதப்படுகிறது.





சூசன் ரொனால்ட் Hitler’s Art Thief என்றொரு நூலை எழுதியிருக்கிறார். அதில் இந்தக் கலைப்பொருட்களைக் கொள்ளையடித்தவர்களின் பின்னுள்ள வரலாற்று உண்மையைத் துல்லியமாக விவரித்துள்ளார்





இந்த ஆவணப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஓவியம் மெல்லக் கதையாவதை உணர்ந்தேன். அது கைமாறிக் கைமாறி சென்று கொண்டேயிருப்பதும் எங்கோ மறைத்து வைக்கப்படுவதும். பின்பு நீண்ட இடைவெளியின் பின்பு கண்டறியப்படுவதும்,அதற்கான உரிமை கோரி குடும்பத்தினர் வழக்காடுவதும் அப்படியே ஒரு நாவல் போலிருக்கிறது.





இந்த ஒவியங்களைப் பற்றி தெரியாத யாரோ ஒருவரின் வீட்டில் அது மாட்டப்பட்டிருக்கும் விசித்திரத்தை நினைத்துப் பாருங்கள். அல்லது எங்கோ ஒரு நிலவறையில் இன்றும் அந்த ஒவியம் மரப்பெட்டியினுள் மறைந்து கிடப்பதை நினைத்துப் பாருங்கள். ஒவியர்களின் வாழ்க்கை மட்டுமில்லை அவர்கள் வரைந்த ஒவியங்களும் விசித்திரமான விதியைக் கொண்டிருக்கின்றன.





கலையை அழிப்பதன் மூலம் சுதந்திர சிந்தனைகளை அழிக்கவே நாஜிகள் முற்பட்டார்கள். புத்தகங்களுக்கு தீவைத்து எரித்தவர்கள் அதன் அடுத்த கட்டமாக ஒவியங்களுக்கு நெருப்பு வைத்தார்கள். ஆயுதங்களைக் கண்டு பயப்படாத நாஜிகள் ஏன் கலையைக் கண்டு பயந்தார்கள். காரணம் அது தனிமனிதனை விழிப்படையச் செய்துவிடும். சிந்தனை செய்ய தூண்டும். புதிய மாற்றங்களை உருவாக்க வைக்கும். கொடுங்கோன்மையின் முதற்செயல் கலைகளை அழிப்பதே





அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தவர்களை காலம் புறந்தள்ளிவிட்டது.  ஆனால் அவர்களால் அழித்துவிட முயன்ற கலைகளும் கலைஞர்களும் தான் இன்றும் கொண்டாடப்படுகிறார்கள். காலம் இந்த உண்மையை தான் உலகிற்கு சொல்கிறது. அதன் அடையாளமாகவே ஒவியங்கள் மீட்கப்படுவதை நினைக்கிறேன்.  





••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 05, 2021 00:32

January 4, 2021

ஐந்தாம் நாள் பேருரை

உலக இலக்கியப் பேருரையின் ஐந்தாம் நாளில் ஸ்டெபான் ஸ்வேக் எழுதிய தி ராயல் கேம் பற்றி உரை நிகழ்த்துகிறேன்





 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 04, 2021 17:49

நான்காம் நாள் உரை – ஐசக் பெஷவிஸ் சிங்கர்

உலக இலக்கியம் குறித்து நான் ஆற்றி வரும் பேருரைகளின் நான்காம் நாள் உரை ஸ்ருதி டிவியில் ஒளிபரப்பாகியுள்ளது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 04, 2021 07:16

January 3, 2021

நான்காம் நாள் பேருரை

ஏழு உலக இலக்கியப் பேருரைகளில் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஐசக் பாஷவிஸ் சிங்கர் எழுதிய – “கிம்பல் மற்றும் கதைகள்” குறித்த உரை இன்று மாலை 6 30 மணிக்கு ஒளிபரப்பாகும்





 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 03, 2021 19:41

மூன்றாம் நாள் உரை – ஈடிபஸ் அரசன்

உலக இலக்கியம் குறித்து ஆற்றி வரும் பேருரைகளின் மூன்றாம் நாள் உரை : ஈடிபஸ் அரசன்.





ஸ்ருதி டிவியில் ஒளிபரப்பாகியது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 03, 2021 06:40

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.