S. Ramakrishnan's Blog, page 149

January 11, 2021

ஃபிலிப் லார்கின்

சொல்வனம் டிசம்பர் இதழில் கவிஞர் ஃபிலிப் லார்கின் பற்றி மிகச்சிறப்பான கட்டுரை ஒன்றை நம்பி எழுதியிருக்கிறார்

ஃபிலிப் லார்கின்: கவிதைகளை வாசித்திருக்கிறேன். Kingsley Amis உடனான அவரது நட்பு மற்றும் அவருக்கு எழுதிய கடிதங்களைப் படித்திருக்கிறேன். A Girl in Winter என்ற அவரது நாவல் நூலகத்தில் பணியாற்றும் கேதரின் வாழ்க்கையில் பனிரெண்டு மணிநேரங்களை விவரிக்கக்கூடியது.

லார்கினின் நேர்காணல் ஒன்றில் உங்களைப் போலவே நூலகராக வேலை செய்தவர் ஜோர்ஜ் லூயி போர்ஹெஸ் என்று கேள்விகேட்பவர் சொல்லும் போது லார்கின் யார் போர்ஹெஸ் என்று கேட்கிறார். அந்தப் பதிலை என்னால் மறக்கமுடியாது. லார்கின் உரைநடையும் கவித்துவமானது.

நான் அறிந்தவரை லார்கின் பற்றி தமிழில் எழுதப்பட்ட முதற்கட்டுரை இதுவே. லார்க்கின் கவிதையுலகை அறிந்து கொள்வதுடன் நம்பியின் கவிதை வாசிப்பு மற்றும் புரிதலின் ஆழத்தையும் நாம் அறிந்து கொள்கிறோம்.

நம்பியின் கட்டுரைகளைத் தொடர்ந்து வாசிக்கும் போது அவர் தன் கட்டுரைகளை ஒரு இசைக்கோர்வை போல உருவாக்குவதாக உணருகிறேன். காரணம் அது மையப்பொருளைச் சுற்றி மூன்று நான்கு இழைகளை ஒன்றிணைக்கிறது. சஞ்சரித்தலை முதன்மையாகக் கொண்டிருக்கிறது. கடினமான விஷயங்களை மிக எளிமையாகவும், எளிமையான விஷயங்களை ஆச்சரியமாகவும் மாற்றுகிறது.

ஒளியின் மீது நம்பிக்கு உள்ள விருப்பம் அவரது கட்டுரைகளில் தொடர்ந்து வெளிப்படுகிறது. அது போலவே கவித்துவமான வெளிப்பாட்டின் ஊடாகப் பேச்சுவழக்கில் மொழிதலையும் அவரது கட்டுரைகளில் காணமுடிகிறது.

நம்பி எதிலும் ஒரு இயக்கத்தை விரும்புகிறார். இறுக்கமான விஷயங்களை நோக்கிச் செல்கிறார். இரண்டு குரல்கள் கொண்டதாகவே அவரது கட்டுரைகள் காணப்படுகின்றன. ஒரு குரல் படைப்பின் நுட்பங்களை ஆழ்ந்து வெளிப்படுத்துகிறது. மற்றொரு குரல் நடப்பு வாழ்வின். நிகழ்வின், சுய அனுபவங்களிலிருந்து வெளிப்படும் குரல். இந்தக் குரல் பல நேரங்களில் பரிகாசம் போல ஒலிக்கிறது. அல்லது வியப்படைகிறது. தன்னைச் சிறியோனாகக் கருதுகிறது.

ஆனால் படைப்பின் நுட்பத்தைப் பற்றிப் பேசும் குரலோ அபூர்வமான தருணங்களை, நிகழ்வுகளை ஒரு கண்டுபிடிப்பு போல ஆராய்ந்து முன்வைக்கிறது. இது போலவே நம்பியின் கட்டுரை இரு வேறு வயதுடையவர்கள் எழுதியது போலவும் எனக்குத் தோன்றுகிறது. இது என் தனிப்பட்ட வாசிப்பாகக் கூட இருக்கலாம்.

“The bottle is drunk out by one;

At two, the book is shut;

At three, the lovers lie apart,

Love and its commerce done;

And now the luminous watch-hands

Show after four o’clock,

Time of night when straying winds

Trouble the dark”

“ஒரு மணிக்குள் பாட்டில் பருகித் தீர்க்கப்படுகிறது;

இரண்டு மணிக்குப் புத்தகம் மூடி வைக்கப்படுகிறது;

மூன்று மணிக்கு, காதலர்கள் விலகிப் படுத்திருக்கிறார்கள்;

காதலும் அதன் கொள்ளல் கொடுத்தல்களும் ஆயிற்று;

ஒளிரும் கடிகாரக் கரங்கள் இப்போது

மணி நான்கு கடந்ததைக் காட்டுகின்றன,

இருளைத் தடுமாறச் செய்யும் தடம் புரள் காற்று

வீசி வரும் இரவின் அந்நேரம்”

என லார்க்கின் கவிதை ஒன்றை மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்தக் கவிதையில் Love and its commerce done; என்ற வரிக்குக் காதலும் அதன் கொள்ளல் கொடுத்தல்களும் ஆயிற்று; என மொழியாக்கம் செய்திருப்பது சிறப்பு.

எவ்வளவு அழகான வார்த்தைகள். கொள்ளல் கொடுத்தல் என்பதை இப்படி ஒரு இடத்தில் பயன்படுத்துவது அவரது தனித்துவம்.

இது போலவே Time of night when straying winds என்பதற்கு இருளைத் தடுமாறச் செய்யும் தடம் புரள் காற்று என மொழியாக்கம் செய்திருப்பது அசல் கவிதை வரி போலவே மாற்றுகிறது.

லார்கின் கவிதைகளை மட்டுமில்லை. நம்பியின் இந்தக் கட்டுரையினையும் புரிதலின் உன்னதம் என்றே சொல்வேன்

•••

ஃபிலிப் லார்கின்: சாதாரண உன்னதம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 11, 2021 19:03

இளம்வாசகி

எனது நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து என்ற சிறார் நூலுக்கு பதினோறு வயது சிறுமி ரியா எழுதியுள்ள விமர்சனம்.

உன் அன்பான வாசிப்பிற்கு நன்றி ரியா.

••

பெயர் : ரியா ரோஷன்

வகுப்பு : ஆறாம் வகுப்பு

வயது :11

இடம் :சென்னை

புத்தகம் :நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து

ஆசிரியர்:எஸ். ராமகிருஷ்ணன்

பதிப்பகம் :தேசாந்திரி

விலை : Rs.70

சனிக்கிழமை நான் புத்தக கண்காட்சிக்கு சென்றேன். நான் வாங்கிய புத்தகங்களில் ஒரு புத்தகத்தின் அட்டைப்படம்  என்னை மிகவும் கவர்ந்தது. அதுதான்  எஸ்.ரா அவர்களின் ‘நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து’.இந்த புத்தகத்தையே முதலாவதாக படித்து புத்தக விமர்சனம் எழுதலாம் என்று முடிவு செய்தேன்.இந்த புத்தகம் இப்போது தான் வெளிவந்து இருக்கிறது. சரி கதைக்கு உள்ள போகலாமா?

கதை :-

மேக்கரை என்ற ஊரில் இருக்கும் அரசு பள்ளியில் என்ன இலவச கல்வி மற்றும் இலவச உணவு இருந்தாலும்  மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. பெற்றோர்கள் ஐந்து மாடிக்கட்டடம் உள்ள விக்டோரியா ஆங்கில பள்ளிக்கே பிள்ளைகளை அனுப்ப விரும்பினார்கள். இதை தெரிந்த அரசுப் பள்ளியின் தலைமையாசிரியர் பழனியப்பன் வெவ்வேறு கிராமங்களுக்குப் போய் மாணவர்களை தங்கள் பள்ளியில் சேர்க்கும் படி கேட்டார். அதற்கு பெற்றோர்கள் முதலில் ஒரு பேருந்தை ஏற்பாடு செய்தால் தான் நாங்கள் எங்கள் பிள்ளைகளை அனுப்புவோம் என்று சொல்கின்றார்கள். பழனியப்பனும் ஒத்துக்கொண்டு இந்த அரசு பள்ளியில் படித்த சுந்தரம் ஐ.ஏ.எஸ் மற்றும் பிற பழைய மாணவர்களிடம்  உதவி கேட்கிறார். அவர்களின்  உதவி மூலம் ஒரு பஸ்ஸையும், டிரைவரையும் ஏற்பாடு செய்கிறார். இது தெரிந்த விக்டோரியா பள்ளியின் நிர்வாகி ராஜலக்ஷ்மி அரசு பள்ளிக்கு எதிராக பல சதிவேலைகள் செய்கிறார். அவர் முன்னாள் MLA வின் மனைவி. அதிகார   பலத்தோடு  அரசு பள்ளியை எதிர்க்கிறார்.இந்த அரசு பள்ளிக்கும் விக்டோரியா பள்ளிக்கும் நடக்கும் போட்டியே இந்த கதை.

இந்த கதையில் எனக்கு பிடித்த விஷயங்கள் :-

1. சேது என்ற மாணவனும் மற்ற மாணவர்களும் ஒரு கோப்பையை வென்று இருப்பார்கள். அதை சேது தன் தாயிடம் காண்பிக்க வேண்டுமென ஆசைப்படுவான். அவன் கோரிக்கையை ஏற்று தலைமை ஆசிரியர் பழனியப்பன்,பரிசு வென்றவர்களின் அம்மாக்களை பாராட்டு விழாவிற்கு  அழைப்பார்.  சேது தன் தாயிடம்  காண்பிக்கும் அன்பும் மரியாதையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

2. அரசு பள்ளியில் படித்து நிறைய பேர் பெரிய ஆள் ஆகி இருக்கிறார்கள். நாம் அரசு பள்ளியில் தமிழ் வழி கல்வியில்  படித்தால் சாதிக்க முடியாது என்று இல்லை. நாம்  எந்த பள்ளியில் படித்தாலும்  சாதிப்பது நம் கையில் தான்.

3. சேதுவின் தந்தை ஒரு முன்னாள் ராணுவ வீரர். அதனால் அவரையே இந்த பஸ்சுக்கு டிரைவர் ஆக போட்டுவிடலாம்,குழந்தைகளை பத்திரமாக கொண்டு போய்விடுவார் என்று தலைமையாசிரியர் பழனியப்பன் சொல்லுவார். இந்தக்கதையில் ராணுவத்தின் முக்கியத்துவமும் இருக்கும்.

4. இந்த அரசு பள்ளியின் மாணவர்கள் குளத்தை சரி செய்வது, இயற்கை வேளாண்மை, கிராமப்புற தள்ளுவண்டி நூலகம் போன்ற நல்ல வேலைகளை செய்கிறார்கள்.

நன்றி

ரியா ரோஷன்

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 11, 2021 18:30

முயலின் தோழன்

Roald & Beatrix: The Tail of the Curious Mouse தொலைக்காட்சிக்காகத் தயாரிக்கப்பட்ட திரைப்படமாகும்,





எழுத்தாளர் ரோல்ட் டாலின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை முதன்மையாகக் கொண்டு இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் எழுத்தாளரான ரோல்ட் டால், சார்லி அண்ட் தி சாக்லேட் ஃபேக்டரி, மாடில்டா, தி ஃபென்டாஸ்டிக் மிஸ்டர் ஃபாக்ஸ்’ போன்ற புகழ்பெற்ற சிறார் படைப்புகளை எழுதியவர்





ரோல்ட் டால் சவுத் வேல்ஸில் உள்ள லாண்டாஃப் நகரில் பிறந்தவர். இவரது பெற்றோர் நார்வேயைச் சார்ந்தவர். தொழில்நிமித்தம் இவரது தந்தை இங்கிலாந்திற்குக் குடிபெயர்ந்தார். ஆறு வயதான ரோல்ட் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் பீட்ரிக்ஸ் பாட்டர் எழுதிய முயல் கதைகளை விரும்பி படித்து வந்தார். இரவில் படுக்கையிலும் அப் புத்தகம் துணையாக இருந்தது..









அந்த நாட்களில் பீட்ரிக்ஸ் பாட்டரின் புதிய புத்தகம் எப்போது வரும் எனச் சிறுவர்கள் காத்துக் கிடந்தார்கள்.





ஓவியரான பீட்ரிக்ஸ் தனது புத்தகங்களுக்கான வண்ண ஓவியங்களைத் தானே உருவாக்கினார். தி டேல் ஆஃ பீட்டர் ராபிட் அவரது புகழ்பெற்ற சிறார் நூல். அதில் வரும் முயல் உருவத்தை இன்றும் சிறுவர்கள் நேசிக்கிறார்கள்





விலங்குகளை நேசிப்பதில் ஆர்வம் கொண்ட பாட்டர் முயலையும் பன்றியினையும் எலிகளையும் முக்கியக் கதாபாத்திரமாக்கி கதைகள் எழுதியிருக்கிறார். காளான்களை ஆராய்ந்து இவர் வரைந்த ஓவியங்கள் தாவரவியல் துறையில் இவருக்குப் பெரும்புகழைப் பெற்றுத் தந்தது.





பாட்டர் முப்பது புத்தகங்களை எழுதியிருக்கிறார் அதில் இருபத்தி மூன்று குழந்தைகளின் கதைகள் மிகவும் பிரபலமானவை.





புத்தகங்களிலிருந்து கிடைத்த வருமானம் மற்றும் அத்தையின் குடும்பச் சொத்தைக் கொண்டு கும்ப்ரியான் பகுதியில் பெரிய பண்ணையை விலைக்கு வாங்கிய பாட்டர் குடியேறினார்





NPG P1825; Beatrix Potter (Mrs Heelis)



மலைவளத்தைப் பாதுகாப்பதில் அதிக ஈடுபாடு காட்டிய பாட்டர் ஆடு வளர்ப்பில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வந்தார். பாட்டரின் புத்தகங்கள் முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. திரைப்படமாகவும் அனிமேஷன் படமாகவும் வெளியாகியிருக்கிறது.





கண் பார்வை மங்கத் துவங்கிய பாட்டர் புதிய கதையை எழுத மனமின்றி வீட்டுப்பன்றியைப் பராமரித்துக் கொண்டு முயலுடன் பேசிக் கொண்டு நாட்களைக் கடத்துகிறார். அங்கிருந்து தான் படம் துவங்குகிறது.





வெளியாட்களின் வருகையை விரும்பாத அவர் கிறிஸ்துமஸ் சங்கீத பாடுகிறவர்களைக் கூடத் துரத்தியடிக்கிறார். சாலி என்று அழைக்கப்படும் செல்லப்பன்றி வீட்டில் அவருடனே உலவுகிறது.





கிறிஸ்துமஸ் விருந்திற்காக ஒரு வாத்தை அறுத்துச் சமைக்க முடிவு செய்து அதைத் துரத்துகிறார். அந்த வாத்துப் பிடிபடாமல் தப்பியோடுகிறது. வாத்தை துரத்தியோடும் பாட்டர் அதைக் கடுமையாக எச்சரிக்கிறார். அந்த வாத்து எப்படியே தப்பிவிடுகிறது.





பாட்டரின் கண்களைப் பரிசோதனை செய்ய வந்த மருத்துவர் அவர் கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும் என்கிறார். அது பாட்டருக்குப் பிடிக்கவில்லை. மருத்துவர் தந்த கண்ணாடியை ஓரமாகப் போட்டுவிட்டு மங்கலான பார்வையுடன் அவர் வீட்டின் ஜன்னல் வழியே உலகை வேடிக்கை பார்த்தபடியே இருக்கிறார்.









இருநூறு மைலுக்கு அப்பால் வசித்து வந்த ஆறு வயதான ரோல்ட் டால் கதைகள் படித்துப் படித்துக் கற்பனையுலகில் சஞ்சரிக்கிறான்.





ஒரு நாள் அவனது தந்தை திடீரென இறந்துவிடுகிறார். அவரது உடல் வைக்கப்பட்ட அறைக்குள் போகும் ரோல்ட் கண்களை மூடிக் கொள்கிறான். இனி தனது வாழ்க்கை என்னவாகும் என்ற பயம் ஏற்படுகிறது





அம்மா சோஃபி அவனை ஒரு போர்டிங் ஸ்கூலில் சேர்த்துவிடப் போகிறாள் என்று தெரிந்தவுடன் வீட்டை விட்டு ஓடிப்போக முயல்கிறான்.





அப்போதும் கையில் பீட்டர் ராபிட் புத்தகமிருக்கிறது. அந்த முயலின் கண்களை நேராகப் பார்க்க ரோல்ட் ஆசைப்படுகிறான். எழுத்தாளரை விடவும் அவரது கதைகளில் வரும் உலகைக் காணவே ரோல்ட் அதிகம் விரும்புகிறான்.









வீட்டை விட்டு கிளம்பும் போது, அவனது இறந்து போன சகோதரி வைத்திருந்த பொம்மை, தனக்கு ஒரு புதிய உடையைக் கிறிஸ்துமஸ் தாத்தா பரிசாகத் தர வேண்டும் என ஒரு வேண்டுதல் கடிதத்தை ரோல்ட் டாலிடம் தருகிறது. அந்தக் கடிதத்தைத் தன் பையில் வைத்திருக்கிறான் ரோல்ட்.





ரயில் நிலையத்தில் காத்திருக்கும் அவனைக் கண்டுபிடித்துவிடுகிறாள் அவனது அம்மா. இருவரும் ஒன்றாகப் பீட்ரிக்ஸ் பாட்டரைத் தேடி அவரது வீட்டிற்குப் போவது என முடிவு செய்கிறார்கள்





இருநூறு மைலுக்கும் அப்பால் இருந்த பாட்டரின் வீடு நோக்கி அவர்களின் பயணம் துவங்குகிறது.





ஒரு எழுத்தாளரைக் காண தன் மகனை அழைத்துக் கொண்டு ஒரு பெண் பயணம் செய்கிறாள் என்பது மகிழ்ச்சியாக இருந்தது. அந்த எழுத்தாளருக்கு தனக்கு இப்படி ஒரு இளம் வாசகன் இருப்பது தெரியாது. அந்தச் சிறுவனுக்கோ பாட்டர் ஒரு தேவதை. கதைகள் சொல்லும் தேவதை. ஆகவே ஆசையாக அவரைக் காணப் பயணம் மேற்கொள்கிறான்.





இதற்கிடையில் பீட்ரிக்ஸின் புதிய கதையை வெளியிடுவதற்காகப் பதிப்பகத்திலிருந்து ஒரு பெண் கும்ப்ரியான் இல்லத்திற்கு வருகிறாள். பாட்டர் எழுதிய கதையைப் படித்துப் பார்க்கிறாள். அதில் சில இடங்களைத் திருத்த வேண்டும் என்று கட்டளையிடுகிறாள். அது பாட்டருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் பதிப்பாளரின் கட்டாயத்தால் மாற்றுவதற்குச் சம்மதிக்கிறார்.





இந்தச் சூழலில் பாட்டரின் வீட்டிற்கு வரும் ரோல்ட் அங்கிருந்த வளர்ப்பு நாயிற்கு உணவு கொடுத்து தனதாக்கிக் கொள்கிறான். வீட்டு முயலுடன் பேசுகிறான். யாரோ ஒரு விளையாட்டு சிறுவன் கேட்டைத் தாண்டி உள்ளே வந்திருக்கிறான் என்று நினைத்து அவனைத் துரத்துகிறாள் பாட்டர்.





அவளிடமிருந்து தப்பிய ரோல்ட் பழைய பொருட்கள் போட்டு வைத்துள்ள ஒரு அறையில் ஒளிந்து கொள்கிறான். எங்கே ஒளிந்திருந்தாலும் தண்டிப்பேன் என்று அவள் சப்தமிடுகிறாள். அவளிடமிருந்து தப்பிப்போக முயற்சிக்கையில் பாட்டர் அவனைப் பிடித்துவிடுகிறாள்.





அவளைக் கண்டுபயப்படாமல் அவளது கதையைத் தான் எவ்வளவு விரும்பி வாசித்தேன் என்று ரோல்ட் மனம் திறந்து சொல்கிறான். அவனது பேச்சு மற்றும் அவன் வைத்திருந்த கடிதம் பாட்டரின் மனதை மாற்றுகிறது.





தனது பதிப்பாளர் சொன்ன திருத்தங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. சிறுவர்கள் தன்னை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். தன் கதையை முழுமையாக நேசிக்கிறார்கள் என்பதைப் பாட்டர் உணர்ந்து கொள்கிறார். அதற்குக் காரணமாக இருந்த ரோல்ட்டினை நன்றியோடு நினைவு கொள்கிறார்.





கதைப்புத்தகம் ஒரு சிறுவனுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதைப் படத்தில் மிக அழகாகச் சித்தரித்துள்ளார்கள்.





படத்தின் ஒரு காட்சியில் மகனைத் தனியே விட்டுச் செல்லும் சோபியாவிடம ஆருடம் சொல்லும் பெண் உன் மகன் எதிர்காலத்தில் மிகப்பெரிய எழுத்தாளன் ஆவான் என்று சொல்கிறான். அதைக் கேட்டு சோபியா மிகுந்த சந்தோஷம் அடைகிறாள். அந்தக் கனவு பின்னாளில் உண்மையானது. ரோல்ட்டின் புத்தகங்கள் பீட்ரிக்ஸ் பாட்டரை விடவும் பலமடங்கு விற்பனையானது என்பதே வரலாறு





பாட்டருக்கு ஏன் யாரையும் பிடிக்கவில்லை. உலகம் அவரை முட்டாள் என நினைக்கிறது. பைத்தியக்காரதனமான வேலைகளைச் செய்கிறவள் எனப் பரிகாசம் செய்கிறது. அவளைப் புரிந்து கொள்ளாத உலகை அவள் துரத்துகிறாள். விலக்கி வைக்கிறாள்.





வசதியான குடும்பத்தில் பிறந்த பாட்டர் சிறுவயதிலிருந்தே புத்தகம் படிப்பதிலும் ஒவியம் வரைவதிலும் மிகுந்த ஈடுபாடு காட்டி வந்தார்.





கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது பீட்ரிக்ஸ் மற்றும் அவரது சகோதரரும் தங்கள் சொந்த வடிவமைப்பில் கிறிஸ்துமஸ் அட்டைகளையும், சிறப்பு வாழ்த்து அட்டைகளையும் உருவாக்கினார்கள்.





அவளது கற்பனையில் உருவான ஓவியத்தில் எலிகள் மற்றும் முயல்கள் வண்ண உடைகளுடன் ஸ்டைலாகப் போஸ் கொடுத்தன.. . இந்த வாழ்த்து அட்டைகள் தனது நண்பர்களுக்குத் தவறாமல் அனுப்பி வைத்தார் பாட்டர்.





மெல்லப் பாட்டரின் ஓவிய வாழ்த்து அட்டைகள் புகழ்பெறத் துவங்கின. அவற்றை ஒன்று சேர்த்து ஒரு கதைப்புத்தகம் ஆக்கலாமே என்ற யோசனையை ஆனி என்ற தாதி சொல்லவே அதன்படி பாட்டர் சிறார்களுக்கான கதைப் புத்தகம் ஒன்றை எழுதினாள். அதில் இந்த ஓவியங்கள் இணைக்கப்பட்டன. தானே சொந்த செலவில் அதை அச்சிட்டு விநியோகம் செய்தாள். அந்தப் புத்தகத்திற்குக் கிடைத்த வரவேற்பே அவரை எழுத்தாளராக்கியது.





இதன்பிறகு வார்ன் & கோ என்ற பதிப்பகம் அவரது புத்தகங்களை வெளியிட முன்வந்தது. பாட்டரின் புத்தகங்கள் பெரும் வெற்றியைப் பெற்றது. கதையில் வரும் முயல் உருவத்திற்குப் பாட்டர் காப்புரிமை பெற்றார். ஆகவே அந்த முயல் உருவம் பதித்த அட்டைகள். முத்திரைகள், போர்வைகள். கலைப்பொருட்கள் வழியாக அவருக்குப் பெரும்பணம் குவியத் துவங்கியது.





தாவரவியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த பாட்டர் காளான்களைத் துல்லியமாகப் படம் வரைந்து கொடுத்திருக்கிறார். தன் பண்ணையிலிருந்த மலர்களையும் அழகான வண்ண ஓவியங்களாக வரைந்திருக்கிறார்.





டிசம்பர் 22, 1943 அன்று நிமோனியா மற்றும் இதய நோயால் பாட்டர் இறந்தார், அவரது நாலாயிரம் ஏக்கர் பண்ணை மற்றும் கால்நடைகள் உள்ளிட்ட அனைத்து சொத்துகளை, இயற்கை பாதுகாப்புப் பணியில் செயல்படும் தேசிய அறக்கட்டளைக்குத் தானமாக உயில் எழுதியிருந்தார். இன்றும் அவர்களே அந்தச் சொத்தைப் பராமரிப்புச் செய்து வருகிறார்கள்.





படத்தின் இறுதிக்காட்சியில் தான் பாட்டரும் ரோல்ட்டும் சந்தித்துக் கொள்கிறார்கள். உரையாடுகிறார்கள். ஆனால் அதற்கு முன்பாக ரோல்டின் தோழனைப் போலவே பாட்டரின் புத்தகம் உடனிருக்கிறது. அது தான் புத்தகத்தோடு ஒரு சிறுவன் கொள்ளும் அற்புத உறவு. பீட்டர் ராபிட் கதையின் அத்தனை வரிகளையும் அவன் மனதிலே பதிய வைத்திருக்கிறான். புதிய புத்தகம் எப்போது கிடைக்கும் என்று ஏங்குகிறான். கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் தனக்குப் பரிசாகப் பாட்டரின் புதிய புத்தகம் வேண்டும் என்று வேண்டுகிறேன். முடிவில் அது பலிக்கிறது





பீட்ரிக்ஸ் பாட்டர். ஒரு விளையாட்டு சிறுமியாகவே எப்போதும் நடந்து கொள்கிறாள். செத்துப் போன எலி ஒன்றை ஒரு டீக்கோப்பையில் போட்டு வைத்திருப்பது. பன்றியைக் கொஞ்சி விளையாடுவது. வாத்தைத் துரத்தி ஓடுவது என நிறைய வேடிக்கைகள் செய்கிறாள்.





ரோல்ட் மற்றும் பாட்டரின் கதைகளுக்குள் கண்பார்வையற்ற எலியின் கதையும் ஊடாடுகிறது. அந்த எலிகளின் வாழ்க்கையை வரைகலை மூலம் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள்.





பனிபொழியும் பாட்டரின் வீடும். கணப்பு அடுப்பு வெளிச்சத்தில் அமர்ந்திருக்கும் பாட்டரும் மறக்கமுடியாத பிம்பங்களாகி விடுகிறார்கள். ரயில்வே நிலையத்தில் என்ஜின் டிரைவருடன் ரோல்ட் பேசும் காட்சி சிறப்பானது.





பெரியவர்களின் உலகிற்குள் சிறுவர்கள் இல்லை. அவர்கள் தங்களுக்கான தனியுலகில் வாழுகிறார்கள். பெரியவர்கள் அவ்வப்போது சிறார்களைத் தங்கள் உலகிற்குள் இழுத்துக் கொண்டு வருகிறார்கள். மிரட்டுகிறார்கள். பணிய வைக்கிறார்கள். ஆனால் சிறார்கள் அதிலிருந்து தப்பி தங்கள் உலகிற்குள் மீண்டும் போய்விடுகிறார்கள்.





சிறார்கள் உலகில் கற்பனை தான் யதார்த்தம். அங்கே மாயமும் மந்திரமும் இயல்பானவை. அவர்கள் பூமியை மனிதர்கள் மட்டும் வாழும் இடமாக நினைப்பதில்லை. பெரியவர்களின் காரணக் காரியப்பேச்சு மற்றும் செயல்கள் சிறார்களை எரிச்சலூட்டுகின்றன. அதிலிருந்து தப்பிக்கப் பகல்கனவு காண ஆரம்பிக்கிறார்கள். அப்படிப் பகல்கனவு கண்ட சிறுவனே ரோல்ட். அந்தக் கனவு தான் வளர்ந்து அவனைப் பின்னாளில் பெரிய எழுத்தாளராக்குகிறது.









பாட்டரின் வீட்டுவாசலில் மகனைத் தனியே விட்டு அவனது அம்மா விலகிப்போய்விடுகிறாள். அந்தச் சுதந்திரம் தான் அவள் மகனை எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறார் என்பதன் அடையாளம். மகன் எழுத்தாளரைச் சந்தித்துத் திரும்பும் வரை ஒரு காபிஷாப்பில் காத்திருக்கிறாள். அவர்கள் சந்திப்பில் என்ன நடந்தது என அம்மாவிற்குத் தெரியாது.





இந்தப் புரிதலும் மகன் விரும்பிய சந்தோஷத்தை உருவாக்கித் தருவதும் எத்தனை அழகானது. அது தான் ரோல்டை எழுத்தாளராக்கியது என்பேன்.





••

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 11, 2021 03:46

January 10, 2021

தந்தை எனும் அதிகாரம்

தந்தையும் தனயர்களும் என்ற தலைப்பில், இவான் துர்கனேவ் ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அந்தத் தலைப்பு எனக்குப் பிடித்தமானது. காரணம், தலைமுறைகள் மாறினாலும் தந்தைக்கும் தனயனுக்குமான உறவிலுள்ள எதிர் நிலை மாறவேயில்லை.





தந்தையாக இருப்பது என்பது ஒரு அதிகாரம்.எல்லாத் தந்தைகளுக்கும் அது பொருத்தமானதே.தனயன் என்பது ஒரு மீறல். ஒரு விடுபடல். சுதந்திரம். எல்லாக் காலத்திலும் மகன் தந்தையினைக் கடந்து போகவும் மீறிச் செயல்படவுமே முயற்சிப்பான். அதுவே இயல்பு. மகன் வளர்ந்து பெரியவன் ஆகி திருமணமாகி மகனோ, மகளோ பெற்றவுடன் அவனும் தந்தையின் வேஷத்தை புனையத் துவங்குவான். தன் தந்தையைப் போல நிச்சயம் நடந்து கொள்ளமாட்டான். அவரைவிடச் சிறப்பாக, சுதந்திரமாக, கட்டுபாடுகள் அற்றுப் பிள்ளைகளை வளர்க்க முற்படுவான். ஆனால் அதில் அவன் எவ்வளவு வெற்றி அடைகிறான் என்பதைக் காலம் தான் முடிவு செய்கிறது.









காஃப்காவிற்கு அவரது தந்தையைப் பிடிக்காது. தந்தையின் கெடுபிடிகள். அறிவுரைகள்.கண்காணிப்பு குறித்து வேதனையுடன் கடிதம்





எழுதியிருக்கிறார்.உண்மையில் காஃப்காவின் அப்பா ஒரு குறியீடு.அவரைப் போலத் தானே புதுமைப்பித்தனின் அப்பாஇருந்தார். மகாகவி பாரதியின் அப்பா நடந்து கொண்டார். சுந்தர ராமசாமி தனது தந்தையின் கண்டிப்பு மற்றும் அறிவுரைகள்  பற்றி எழுதியிருக்கிறாரே.இந்தியாவிற்கே தந்தையான மகாத்மா காந்தியை அவரது பிள்ளைகளுக்குப் பிடிக்கவில்லையே. காந்தியின் மகன் அவருக்கு எதிராகக் குரல் எழுப்பினானே?





தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வரும் தந்தை தனது  சந்தோஷமே முக்கியம் என நினைப்பவர். தனது சுகத்திற்காக எதையும் செய்ய முற்படுகிறவர்.மகாபாரத்தில் அப்படி யயாதி வருகிறாரே. நாவலில் வரும் கரமசோவ் தஸ்தாயெவ்ஸ்கியின் நிஜதந்தையின் சாயலில் உருவாக்கப்பட்டவரே. கோகோலின் தாரஸ்புல்பாவில் வரும் தந்தை, பிள்ளைகளை மிகவும் நேசிப்பவன். ஆனால் இனப்பெருமைக்காக மகனைக் கொல்லக் கூடியவன். மகாபாரத்தில் வரும் பாண்டு, நோயாளியான தந்தை. திருதாரஷ்டிரன், பார்வையற்றவன். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த பயமே அவனை இயக்குகிறது. பாரபட்சமாக நடந்து கொள்ளச் செய்கிறது. தசரதன் போன்ற தந்தைக்கு நால்வரில் மூத்தவன் ராமன் மீது தான் பாசம் அதிகமாக இருக்கிறது. அப்படி எத்தனையோ குடும்பங்களில் மூத்த பையனை அதிகம் நேசிக்கும் தந்தை இருக்கதானே செய்கிறார்கள்?





தந்தைக்கும் மகனுக்குமான இடைவெளி, புரிதல். கருத்துமோதல் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டே வருகிறது. ஐம்பது வருஷங்களுக்கு முந்தைய திரைப்படத்தில், வளர்ந்த பையனை தந்தை அடிக்கும் காட்சியைக் காண முடிகிறது.





நவீன இலக்கியத்திலும் காதல் திருமணத்தை ஏற்றுக் கொள்ளாத தந்தை, சொத்து தரமுடியாது எனச் சண்டையிடும் தந்தை. பொறுப்பில்லாமல் குடும்பத்தை விட்டு ஓடிய தந்தை. மகள் வயதுடைய இளம்பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட தந்தை எனத் தந்தையின் பல்வேறு வடிவங்களைக் காண முடிகிறது.





தந்தையிடம் சண்டையிட்டு வீட்டை விட்டு ஒடிய பையன்கள் இருக்கிறார்கள். தாயிடம் சண்டையிட்டு அப்படி ஒடியவர்கள் இருக்கிறார்களா எனத் தெரியவில்லை.





குடும்பப் பொறுப்புகளை மறந்து சுயநலத்துடன் ஓடிப்போன தந்தையை இலக்கியம் பதிவு செய்கிறது. அப்படியான பெண் பற்றிக் குறைவான பதிவுகளே காணப்படுகிறது.









தந்தைக்கும் மகளுக்குமான உறவு இந்தத் தலைமுறையில் மிகவும் மாறியிருக்கிறது. பெண்ணைப் படிக்கவைப்பது. வேலைக்கு அனுப்பி வைப்பது, விரும்பியவரை திருமணம் செய்து தருவது எனத் தந்தை மிகவும் மாறியிருக்கிறார். தந்தையை ஒரு தோழனைப் போலப் பெண்கள் நினைக்கிறார்கள். தந்தைக்குச் சவரம் செய்துவிடும் மகளைப் பற்றி நானே ஒரு கதை எழுதியிருக்கிறேன்.





தந்தையைப் பற்றி உயர்வாக எழுதப்பட்டவை யாவும் பெண்களால் எழுதப்பட்டதே. அபூர்வமாக ஆண்களில் ஒரு சிலர் தந்தையின் தியாகத்தை, பொறுப்புணர்வை உருகி எழுதியிருக்கிறார்கள். பொதுவில் தந்தையோடு கொண்ட வெறுப்பு, பிணக்கு தான் அதிகம் எழுதப்பட்டிருக்கிறது.





தந்தை ஒரு தலைமுறையின் அடையாளம். அவரது வெற்றி தோல்விகள் பிள்ளைகளின் மீது படிவதை தவிர்க்க முடியாது. தந்தையின் அவமானங்களைப் பிள்ளைகள் அறிவதில்லை. தந்தை ஒரு பிரபலமாக இருந்தால் அந்த நிழல் தன் மீது விழக்கூடாது எனப் பிள்ளைகள் நினைக்கிறார்கள். அது சரியே.





வீட்டில் அரசனைப் போல உத்தரவுகள் போடும் தந்தை, அலுவலகத்தில் கைகட்டி நிற்பதுடன் கூப்பிட்ட குரலுக்கு ஓடுவதும், தேநீர் வாங்கித் தருவதையும், உட்கார நேரமில்லாமல் கால்நடுக்க நிற்பதையும் கண்ட எனது நண்பன், தன் இயலாமையைத் தான் அப்பா வீட்டில் காட்டுகிறார் என்பதைப் புரிந்து கொண்டேன் என்று சொன்னான். அது தான் உண்மை.





தந்தையாக நடந்து கொள்ளும்போது ஒருவன் கண்ணுக்குத் தெரியாத சுமைகளைச் சுமக்க துவங்கிவிடுகிறான். கற்பனை பயத்தில் உலவ ஆரம்பிக்கிறான். மகன் அல்லது மகளை இப்படித் தான் உருவாக்க வேண்டும் என்று கனவு காணுகிறான். பெரும்பான்மை தந்தையின் கோபத்திற்குக் காரணம் முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதில் தானிருக்கிறது. என்ன படிக்க வேண்டும் என்பதில் துவங்கி, என்ன உடைகள் வாங்க வேண்டும். என்ன சாப்பிட வேண்டும் என்பது வரை தானே முடிவு செய்ய வேண்டும் எனத் தந்தை நினைக்கிறார். இன்று தான் அந்த மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.





ஒரு மகள் பிறந்தவுடன் அவளது திருமணத்தைப் பற்றித் தந்தை கனவு காணத்துவங்கிவிடுவான். அவளுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடந்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்வான் என்று, சீனர்கள் சொல்கிறார்கள். யியுன் லி எழுதிய சீனச் சிறுகதையில், அமெரிக்காவில் வாழும் மகள் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் எனத்





தனியே வாழுகிறாளே என்று தந்தை கவலை அடைகிறார். அவளைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும் என்று, தேடி வருகிறார். அவளோ என் வாழ்க்கையை நான் தீர்மானித்துக் கொள்வேன். நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் என்று கேட்கிறாள். இந்தக் கவலை இன்று உருவானதில்லை. அது நீ பிறந்த நாளில் இருந்து உருவானது என்கிறார், தந்தை. அது தான் மேற்சொன்ன நம்பிக்கையின் அடையாளம்.





சீனத் தந்தையிடமிருந்து தமிழகத்திலுள்ள தந்தைகள் வேறுபட்டவர்களில்லை. மகள் மீது கூடுதல் அன்பு தந்தைக்கு இயல்பாகவே இருக்கிறது. மகளும் தாயை விடத்தந்தையை அதிகம் நேசிக்கவே செய்கிறாள்.





புத்தனாவது சுலபம் என்றொரு சிறுகதையைஎழுதியிருக்கிறேன். அது இன்றைய தந்தையின்மனநிலையை விளக்ககூடியது. தன்னையும் மகனையும் பிரிப்பது மகன் வைத்திருக்கும் பைக் எனத் தந்தை நினைக்கிறார். தன் விருப்பங்களை ஏன் மகன் புறக்கணிக்கிறான் என்று புரியாமல் தடுமாறுகிறார். மகனைப் பற்றிக் காரணமில்லாமல் பயப்படுகிறார். இது நம் காலத்தின் குரல் இந்தத் தலைமுறையில் மகனோ, மகளோ தந்தையைப் புரிந்து கொண்ட அளவில் சென்ற தலைமுறையில் புரிதல் ஏற்படவில்லை.









தந்தை பெரும்பாலும் அன்பை வெளிப்படுத்த தெரியாதவர். மொழியற்றவர். அவரது கெடுபிடிகளும் கோபமான பேச்சும், தோரணையும், உத்தரவுகளும் அவர் மீதான அச்சத்தை எப்போதும் மனதில் ஆழமாகப் பதிய வைத்துவிடுகிறது. தந்தை தன் மீது கொண்டிருக்கும் அன்பை பலரும் கடைசிவரை தெரிந்துக் கொள்ளாமலேயே போவதுதான் வேதனை.





உதிரிப்பூக்கள் படத்தில் வரும் விஜயன் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு தான் அந்த வீடு கலகலப்பாக மாறும். அப்படித்தான் பெரும்பான்மை குடும்பங்களில் இன்றும் நிலைமை இருக்கிறது.





இந்தத் தலைமுறையில் பிள்ளைகளுடன் அன்றாடம் உரையாடவும், அன்பை வெளிப்படுத்தும் விதமாக நடந்து கொள்ளவும், கூடி விவாதிக்கவும் நண்பர்களைக் கொண்டாடவும் ஒன்றாகப் பயணிக்கவும் பெற்றோர்கள் தயராகியிருக்கிறார்கள். அந்த மாற்றம் உறவில் புதிய சந்தோஷத்தை உருவாக்கியிருக்கிறது





மகன் அல்லது மகளின் வெற்றியை உருவாக்குவதில் தந்தைக்குள்ள பங்கு மிக முக்கியமானது. விளையாட்டு வீரர்களைப் பாருங்கள். தன் மகன் விரும்பும் விளையாட்டில் அவனை வெற்றியடையச் செய்ய அவனது தந்தை விடிகாலையில் அவனுடன் மைதானத்திற்கு ஓடுகிறார்.தேவையான உதவிகள் செய்கிறார். போக வேண்டிய ஊர்களுக்கு எல்லாம் அழைத்துப் போகிறார். கடன் வாங்குகிறார். கஷ்டப்படுகிறார். மகன் அடையும் வெற்றிதான் அவரது ஒரே கனவு. டெண்டுல்கரின் தந்தை அப்படித் தானே நடந்து கொண்டிருக்கிறார். தங்கல் என்ற இந்தி திரைப்படம் அப்படி ஒரு தந்தையினைத் தானே காட்டுகிறது.





காய்ச்ச மரம் என்றொரு சிறுகதையைக் கி.ராஜநாராயணன் எழுதியிருக்கிறார். தன் பிள்ளைளை ஒரு தந்தை எவ்வளவு நேசிக்கமுடியும். அப்படிபட்ட தந்தை தாயை பிள்ளைகள் எப்படி நடத்துகிறார்கள் என்பதை, மிகவும் உருக்கமாக எழுதியிருப்பார். அப்படி முதுமையில் துரத்தப்பட்ட தந்தைகள் வேதனைக்குரியவர்கள்.





ஷேக்ஸ்பியரின் கிங் லியர் தான், தந்தை பிள்ளைகளிடம் எதைக் கேட்க கூடாது. எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஓர் உதாரணம். கிங் லியரின் மனைவில ஒரு போதும் பிள்ளைகளிடம் அப்படி தன்னை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்று கேட்டிருக்கமாட்டாள்.





பண்பாடும் சமூகமும் தந்தைக்குள் ஏற்படுத்தி வைத்திருக்கும் பயம் எளிதானதில்லை. ஊடகங்கள் அந்த பயத்தை அதிகமாக்குகின்றன. ஆனால், இந்த பயம் அர்த்தமற்றது. தந்தை நாற்பது வயதில் அடைந்த வெற்றியை. உயரத்தை, பையன் இருபது வயதிலே அடைந்துவிடுகிறான். அது தான் இந்தத் தலைமுறையின் சாதனை.





நிறைய இளைஞர்கள் தன் தந்தையின் விருப்பத்தைப் புரிந்து அவரைத் தோழனாக நடத்துகிறார்கள். தந்தையிடம் ரகசியங்களை மறைப்பதில்லை. பணம் கேட்பதும் பணம் கொடுப்பதும் அத்தனை எளிதாக மாறியிருக்கிறது. தந்தையும் வயதை உதறி இளமையின் உற்சாகத்துடன் நடந்து கொள்கிறார். அந்த மாற்றம் தான் நம் காலத்தில் உறவில் ஏற்பட்ட புதிய வரவு என்று சொல்வேன்





••





அந்திமழை இதழில் வெளியான கட்டுரை. ஜனவரி 2021

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 10, 2021 05:04

திசை எட்டும்

சிறந்த மொழிபெயர்ப்பாளரும் நண்பருமான குறிஞ்சி வேலன் மொழிபெயர்ப்பிற்கென்று திசை எட்டும் இதழை மிகுந்த ஈடுபாட்டுடன் தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்த கொரோனா காலத்தில் இதழைத் தயாரிப்பது கடினமான பணி. அதிலும் சிறப்பாக முயன்று திசை எட்டும் 65-66 வது இதழைக் கொண்டு வந்திருக்கிறார். அவருக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள்





இந்த இதழில் எனது இரண்டு குமிழ்கள் சிறுகதையை வின்சென்ட் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார்





வின்சென்டிற்கு எனது அன்பும் நன்றியும்





 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 10, 2021 04:39

நூரெம்பெர்க் விசாரணை

நூரெம்பெர்க் வழக்கு விசாரணை உலக வரலாற்றில் மிக முக்கியமானது. ஹிட்லரின் நாஜிக் கொடுமைகளை விசாரிக்க நூரெம்பெர்க்கில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில், சர்வதேச நீதிபதிகள் முன்பாக நாஜி ராணுவ தளபதி, அன்றைய அமைச்சர்கள். உயரதிகாரிகள். நீதிபதிகள் எனப் பலரும் நீதி விசாரணை செய்யப்பட்டார்கள்.





இந்த விசாரணையைப் பற்றி Judgment at Nuremberg என்றொரு படம் 1961ல் வெளியானது. மிகச் சிறந்த படமிது.





அந்தத் திரைப்படத்தில் ஹிட்லர் மட்டும் குற்றவாளியில்லை அவரை மிகப்பெரிய ஆளுமையாகக் கொண்டாடிய அனைவரும் குற்றத்திற்கு உடந்தையானவர்களே. அப்படி அவரை நாயகனாகக் கொண்டாடிய தேசங்களுக்கும் இந்தக் குற்றத்தில் பங்கு இருக்கிறது என்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. நாஜி அரசின் உத்தரவிற்கு அடிபணிந்து செயல்பட்ட அத்தனை பேரும் குற்றவாளிகள் தான் என்று படம் சுட்டிக்காட்டுகிறது





நூரெம்பெர்க் நீதி விசாரணையைப் பற்றிய தொலைக்காட்சித் தொடர் ஒன்று 2000ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. மூன்று மணிநேரம் கொண்ட அந்தத் தொடரைக் கண்டேன். (Nuremberg -miniseries)









நூரெம்பெர்க் விசாரணையின் அறியப்படாத விஷயங்களைப் படம் விரிவாக அறிமுகப்படுத்துகிறது. இந்தத் தொலைக்காட்சி தொடர் ஜோசப் பெர்சிகோ எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது





இரண்டாம் உலகப் போரின் முடிவில், நாஜி விமானப்படையின் தளபதி ஹெர்மன் கோரிங் அமெரிக்க ராணுவத்திடம் சரணடைய ஒரு காரில் தன் குடும்பத்துடன் வந்து இறங்குகிறார். விமானப்படை தளபதியிடம் சரண்டைகிறார். அமெரிக்க ராணுவம் கோரிங்கையும் அவரது குடும்பத்தினையும் தங்கள் விருந்தினர் போல நடத்துகிறார்கள். புகைப்படம் எடுத்து சந்தோஷப்படுகிறார்கள்.





இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரூமனின் உத்தரவின் பேரில் அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ராபர்ட் எச். ஜாக்சனை நூரென்பெர்க் விசாரணையை நடத்த அழைப்பு விடுக்கிறார்கள். அவர் அரசிடம் சில நிபந்தனைகளை விதிக்கிறார். அதை அரசு ஏற்றுக் கொள்கிறது.





ஜாக்சன் நீதி விசாரணையை எங்கே, எப்படி நடத்துவது என்பது பற்றி முடிவு செய்ய நூரெம்பெர்க்கிற்குப் பயணம் செய்ய ஆரம்பிக்கிறார். இங்கிருந்து தான் படம் துவங்குகிறது. ஜாக்சனுடன் அவரது உதவியாளரான எல்ஸி டக்ளஸ் பயணிக்கிறாள்.









நாஜி ராணுவம் நடத்திய குற்றங்களுக்காகக் கோரிங், ஆல்பர்ட் ஸ்பியர் மற்றும் பலர் போர்க்குற்றவாளிகளாகக் கைது செய்யப்பட்டு லக்சம்பெர்க்கிலுள்ள பேட் மொன்டோர்ஃப் என்ற இடத்தில் அடைக்கப்படுகிறார்கள். நீதிமன்ற விசாரணைக்கு அழைக்கப்படும் வரை அவர்களுக்குப் பலத்த காவல் விதிக்கப்படுகிறது.





இந்தக் கைதிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க மனநல நிபுணர் குஸ்டாவ் கில்பர்ட் நியமிக்கப்படுகிறார். அவர் ஒரு யூதர். அவர் கைதிகளின் உரிமைகளுக்காக வாதிடுகிறார். தாங்கள் நிச்சயம் கொல்லப்படுவோம் என்று போர் குற்றவாளிகள் நினைக்கிறார்கள். வருந்துகிறார்கள்.





நூரெம்பெர்க்கிற்கு வருகை தரும் ஜான்சன் இடிபாடுகளுக்குள் பயணம் செய்து புகழ்பெற்ற நூரென்பெர்க் நீதி சபை கட்டிடத்தைக் காணுகிறார். அக் கட்டிடம் இடிந்து சரியும் நிலையில் இருக்கிறது. அதைப் புதுப்பித்து அங்கேயே நீதிவிசாரணையை நடத்த வேண்டும் என்று விரும்புகிறார். இதற்கான பணிகள் உடனே துவங்குகின்றன. மூன்று நாடுகளின் சார்பில் மூன்று நீதிபதிகள் இந்த விசாரணையை மேற்கொள்ள நியமிக்கப்படுகிறார்கள்.





ஜாக்சன் எப்படி ஆதாரங்களைத் திரட்டி நீதி விசாரணையை நடத்த இருக்கிறார் என்பது விரிவாகக் காட்டப்படுகிறது. படத்தின் சிறப்பு கோரிங்கின் பிடிவாதமான செயல்கள். சிறைப்பட்ட போதும் அவர் தான் எந்தத் தவற்றையும் செய்யவில்லை.  என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுகிறார்.





ஹிட்லர் மாபெரும் வரலாற்று நாயகன் என மற்றவர்களை மீண்டும் விசுவாசியாக மாற்றுகிறார். அவரிடம் மரணபயமில்லை. சிறைக்காவலர்களைக் கூடத் தன்னுடைய பேச்சில் மயக்கிவிடுகிறார். நீதிமன்றத்திலும் தன்னுடைய தரப்பு நியாயமானது என்றே சொல்கிறார். அவரை ஜாக்சன் நீதி விசாரணை செய்யும் காட்சிகள் மறக்கமுடியாதது.





நீதி விசாரணை துவங்கும் நாளில் தாங்கள் எவரும் குற்றவாளிகள் அல்ல என்று பிரதிவாதிகள் சொல்கிறார்கள். ஆகவே அவர்கள் செய்த குற்றத்தை நிரூபிக்கும் பொறுப்பு ஜாக்சனிடம் ஒப்படைக்கப்படுகிறது.





அவர் இதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தின் முன்பு எடுத்து வைக்கிறார். யூதர்களுக்கு எதிரான படுகொலைக் காட்சிகள் நீதிமன்றத்தில் ஒளிபரப்பாகிறது. வதை முகாம்களின் கொடூரத்தை இந்த ஆவணப்படம் வெளிப்படுத்துகிறது. படத்தில் உண்மையான ஆவணக்காட்சிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.









அதைக் காண முடியாமல் நீதிமன்றத்திலே பலர் கண்ணீர் விடுகிறார்கள். தலைகவிழ்ந்து கொள்கிறார்கள். பார்வையாளராக நாமும் அதிர்ச்சியில் உறைந்துவிடுகிறோம். ஆனால் இக் காட்சிகள் கோரிங்கை உலுக்கவில்லை. அவர் இப்படி எல்லாம் நடந்தது தனக்குத் தெரியாது என்று சொல்கிறார். இவை யாவும் புனைந்து உருவாக்கப்பட்டவை என்று மறுப்பு தெரிவிக்கிறார். ஆனால் நீதிபதிகளால் கூட இந்தக் காட்சிகளைக் காண முடியவில்லை. மன வருத்தம் கொண்டவர்களாக நீதிமன்றத்தை ஒத்தி வைக்கிறார்கள்.





ஜாக்சனின் நீதிமன்ற உரைகள் மிக விரிவாக நாஜிக் குற்றங்களை விளக்குகின்றன. அவர்கள் காட்டிய இனவெறி. முகாமில் அவர்கள் யூதர்களைக் கொன்று குவித்தது. அதன் பின்னிருந்த ராணுவத்தின் மறைமுக உத்தரவுகள் எனச் சாட்சிகளை அடுக்கிக் கொண்டே போகிறார். ஆனால் இந்த உத்தரவுகளில் கையெழுத்துப் போட்டவர்கள் அவை பொய்யான தகவல்கள் என மறுக்கிறார்கள்.





குறுக்கு விசாரணையில் ஜாக்சனின் முனைப்பை முடக்க வேண்டும் என்பதே கோரிங்கின் நோக்கம். அதில் அவர் நிறைய நேரங்களில் வெற்றி பெறுகிறார். குற்றவாளிகள் அனைவரும் ஒன்றாகக் கோரிங்கை ஆதரிக்கிறார்கள். இதனால் ஜாக்சன் சோர்ந்து போகிறார். அவரது அணுகுமுறையைச் சோர்வடையத் தொடங்குகிறது.





கோரிங்கை தனிமைப்படுத்தி வைக்காவிட்டால் அவர் மற்ற கைதிகளைத் தூண்டிவிடுவதை நிறுத்தமுடியாது என்று ஜாக்சன் நன்றாக உணருகிறார். இதன்படி கோரிங் தனிமைப்படுத்தப்படுகிறார்.





நீதி விசாரணையின் துவக்கத்திலிருந்தே ரஷ்யா தனி நிலைப்பாடு எடுக்கிறது. ரஷ்ய ராணுவத் தளபதி தன் அதிகாரத்தை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டிருக்கிறார். ஆரம்பக் காட்சியிலே ஜாக்சன் அதைச் சாதுர்யமாகக் கையாண்டு மோதலை தடுத்துவிடுகிறார்.





ஜாக்சன் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரான ஜெர்மானியரின் மனைவி ஒரு கிறிஸ்துமஸ் விருந்தில், ரஷ்ய ராணுவ அதிகாரிகளுக்குச் சேவை செய்யமுடியாது. அவர்கள் தன் மகனைக் கொன்றவர்கள் என்று மறுக்கிறார். இதனால் ரஷ்யத் தளபதி கோபம் அடைகிறார். அவரைச் சமாதானப்படுத்தும் விதமாக எல்சி தானே உணவு தட்டினை எடுத்துப் போய்ப் பரிமாறுகிறாள்.









தனிமைச் சிறையில் அடைக்கப்பட்ட கோரிங் தனது காவலரான லெப்டினென்ட் டெக்ஸ் வீலிஸுடன் நட்பாகப் பழக ஆரம்பித்து நெருக்கமாகிறார். டெக்ஸ் அவருக்காக மதுவைப் பரிசாக அளிக்கிறான். கோரிங்கை மிகப்பெரிய ஆளுமையாக நினைக்கிறான். கோரிங்கின் பரிசுகளை ஏற்றுக் கொள்கிறான். தன் தரப்பு நியாயங்களை அவனிடம் விளக்குகிறார் கோரிங். அதில் தானும் அமெரிக்காவும் ஒரே எண்ணம் கொண்டவர்கள் என்று அழுத்தமாகச் சொல்கிறார்.





ஆஷ்விட்சின் கொடூரத்தை நீதிமன்றத்தில் வெளிப்படுத்துகிறார் ஜாக்சன். இதனால் நாஜி ஆட்சியின் குற்றங்களுக்கான கூட்டுப் பொறுப்பை அவர்கள் ஏற்க வேண்டும் என்று வாதிடுகிறார். நீண்ட குறுக்குவிசாரணைக்குப் பிறகு நீதி விசாரணை முடிவு பெறுகிறது.





முடிவில் கோரிங் மற்றும் சிலர் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறார். ஒன்றிரண்டு பேர்களுக்கு இருபது ஆண்டுகள் தண்டனை கிடைக்கிறது. தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள் துப்பாக்கிச் சூடு மூலம் கொல்லப்பட வேண்டும் என்ற கோரிக்கையைக் கோரிங் எழுப்புகிறார். ஆனால் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிடுகிறது.





தூக்குலிடுவதற்கு முன்பாகக் கோரிங் தன் அறையிலே தற்கொலை செய்து கொள்கிறார். மற்றவர்கள் தூக்கிலிடப்படுகிறார்கள். முடிவில் ஜாக்சன் நீதியை நிலை நாட்டியவராக அமெரிக்கா திரும்புகிறார்.





யூதரான மனநல மருத்துவர் கில்பெர்ட்டை கோரிங் சந்தித்து உரையாடும் காட்சி முக்கியமானது. அதில் கோரிங் யூதப்படுகொலைக்காக வருத்த மடைவதேயில்லை. அவர் யூதர்கள் மீது எவ்வளவு வெறுப்புக் கொண்டிருந்தார் என்பது அவரது பேச்சில் தெளிவாக வெளிப்படுகிறது





இதே போல இன்னொரு காட்சியில் கோரிங்கின் மனைவி குழந்தையை மனநல மருத்துவர் சந்தித்து உரையாடும் காட்சியும் முக்கியமானது. அதில் ஹிட்லர் தங்களை அழித்துவிடும்படி உத்தரவிட்டிருந்ததாகவும் அதிலிருந்து தப்பிக்கவே அமெரிக்க ராணுவத்திடம் சரணடைந்ததாகவும் சொல்கிறாள்.





Judgment at Nuremberg படத்தில் இடம்பெற்றது போல நீதிமன்றக் காட்சிகள் வலுவாக இல்லை. ஜாக்சன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு திரைக்கதையை உருவாக்கியதால் படம் அழுத்தமாக மனதில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஜாக்சனாக அலெக் பால்ட்வின் சிறப்பாக நடித்திருக்கிறார். இப்படத்தில் வரலாற்றுத் தகவல்கள் துல்லியமாக இல்லை என்ற விமர்சனம் உள்ளது.





இரண்டாம் உலகப்போரில் ரஷ்யாவின் பங்களிப்பை ஒத்துக் கொள்ளாத மனநிலையே படம் முழுவதும் வெளிப்படுகிறது. குறிப்பாக ரஷ்ய ராணுவத் தளபதி, அதிகாரிகள் அனைவரும் முட்டாள் போலவே சித்தரிக்கப்படுகிறார்கள். அது ஹாலிவுட்டின் வழக்கமான தந்திரமாகும்.





நூரெம்பெர்க் விசாரணையை அமெரிக்கா தான் முன்னின்று நடத்தியது என்ற பிம்பத்தை உருவாக்கவே இந்தப் படம் முயலுகிறது. அது வரலாற்று உண்மையில்லை.





நீதிவிசாரணையின் ஊடாக ஜாக்சனுக்கும் அவரது உதவியாளருக்கும் ஏற்படும் நெருக்கம். காதல் காட்சிகள் கதையின் போக்கோடு ஒட்டவேயில்லை.









இடிபாடுகளுடன் உள்ள நூரெம்பெர்க் வீதியினுள் கார் பயணிப்பதும். நீதிமன்ற காட்சிகள். மிக அழகாகப் படமாக்கப்பட்டுள்ளன.





ஜெர்மானியர்கள் எப்படிக் கட்டுப்பாடுகளுக்கு பழக்கப்பட்டு, யாரோ ஒருவரின் விசுவாசியாக, உத்தரவுகளை அப்படியே நிறைவேற்றுகிறவர்களாக இருந்தார்கள். அது மரபாக எப்படி அவர்களிடம் தொடர்கிறது என்பதைப் படம் விளக்குகிறது. உத்தரவிற்குக் கட்டுபடுவது ஜெர்மானியர்களின் இயல்பு. அதை ஹிட்லர் நன்றாக உணர்ந்து கொண்டிருந்தார். ஆகவே அவர் தன் இஷ்டம் போல உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தார். கட்டளைக்குப் பணியும் அவர்களும் ஹிட்லரின் உத்தரவுகளை அப்படியே நிறைவேற்றி வந்தார்கள் என்பதைக் கில்பெர்ட் விளக்குகிறான்.





எந்த இடத்தில் நீதிமறுக்கபட்டதோ அதே இடத்தில் நீதி நிலைநாட்டப்படுகிறது என்பதே படத்தின் முக்கியச் செய்தியாக இருக்கிறது.





••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 10, 2021 04:27

January 9, 2021

கூடுதலான எனது கைகள்

எமிதால் மஹ்மூத் (Emtithal Mahmoud) சூடானியக் கவிஞர். அமெரிக்காவில் வசிக்கிறார். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் அமைப்பின் நல்லெண்ண தூதராகச் செயல்பட்டு வரும் இவர் கென்யா, கிரீஸ் மற்றும் ஜோர்டானில் உள்ள அகதிகள் முகாம்களுக்குச் சென்று, அகதிகளின் நிலைமை குறித்து ஆராய்ந்து எழுதி வருகிறார்.





மஹ்மூத் சூடானின் டார்பூரில் பிறந்தவர், 1998 இல் அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்தார். அங்கே பிலடெல்பியாவில் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார் பின்னர் அவர் யேல் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பயின்றார்





யேல் பல்கலைக்கழகத்தில் பயின்ற நாட்களில் கவிதைகள் எழுதத் துவங்கினார். இவரது முதல் கவிதைத் தொகுப்பு Sisters’ Entrance 2018ல் வெளியானது.









Sisters’ Entrance கவிதைத் தொகுப்பினை சமீபத்தில் படித்தேன். மிகச்சிறந்த கவிதைகள். இளந்தலைமுறையின் புதுக்குரலைக் கவிதையில் கேட்க முடிகிறது





முதன்முறையாகக் குண்டுவெடிப்பதைக் காணும் சிறுமியின் கண்களின் வழியே தன்னைச் சுற்றிய உலகின் அதிகார வெறியை எமிதால் எழுதுகிறார்.





நான் என் அம்மாவிடம்





அவளுடைய பலத்தை எனக்குக் கொடுக்கச் சொன்னேன்.





அவள் ஒரு முழுக் கிரகத்தையும் தூக்க ஆரம்பித்தாள்





தன் முதுகிலிருந்து.





என ஒரு கவிதையைத் துவங்குகிறார். எல்லாப் பெண்களும் தன் தாயிடமிருந்து அவரது பலத்தையே யாசிக்கிறார்கள். ஒரு பெண்ணால் இன்னொரு பெண்ணிற்குப் பலத்தைத் தர இயலுகிறது. இந்தப் பலம் உடல் ரீதியானதில்லை. மனரீதியானது. நெருக்கடிகளை எதிர்கொண்டு வாழுவதற்கும், எல்லாக் கஷ்டங்களையும் தாண்டி வாழ்வின் மீது நம்பிக்கை கொள்ளவும் தேவையான பலமது. அதைப் பெண்கள் எப்படியோ பெற்றுவிடுகிறார்கள். எமிதாலின் குரலில் ஒலிப்பது நம் வீட்டுப் பெண்ணின் அகமே.





கடவுள் ஒரு கவிஞர்.





அவர் வானத்தைத் திறந்து,





தன்னுடைய வார்த்தைகளைக் கொட்டினார் நம்





தோலின் மீது





என்று ஒரு கவிதையில் சொல்கிறார். அதன்படி கறுப்பின பெண் என்ற அடையாளம் கடவுளின் சொல்லிலிருந்து உருவானதாகக் குறிப்பிடுகிறார்.









நம்பிக்கை என்பது





மாற்றத்தக்கதல்ல





ஆனால், குற்ற உணர்வைப் போலல்லாமல்,





அது பிரகாசமாக எரிகிறது





இணைந்திருத்தல் மூலம்





என்றொரு கவிதையை எழுதியிருக்கிறார்.





ஒன்றிணைவதன் வழியே தான் நம்பிக்கை ஒளிர ஆரம்பிக்கிறது. நம்பிக்கை பிரகாசமாக எரிகிறது என்பது அழகான வரி.





நம் மூதாதையர்கள் மண்ணிலிருந்தே





இந்த உடலை உருவாக்கினார்கள்





என் வீட்டு ஆண்களுக்கு அல்ல





அந்த எலும்புகளிலுள்ள





களிமண்ணிற்கே நான் விசுவாசமாகயிருப்பேன்





என்று இன்னொரு கவிதையில் சொல்கிறார்





இவரது கவிதைகளில் ஆப்பிரிக்கப் பெண் என்ற அடையாளம் குறித்த பொதுப்புத்தியைக் கேள்விகேட்கிறார். கேலிப்பேச்சுகளில் பெண்ணைப் பசுவாகக் கருதும் பழக்கம் உலகம் முழுவதும் வழக்கம் ஏன் அனுமதிக்கப்படுகிறது என்று கோபம் கொள்கிறார்.





குண்டுவெடிப்பு. துர்மரணம். குருதிக்கறை படிந்த நிலம். வன்முறையின் உச்சமான தினப்பொழுதுகள் என நீளும் வாழ்க்கைக்குள்ளிருந்து ஒரு பெண்ணின் தவிப்பை, நினைவுகளை, கோபத்தை, தனித்துவமான உணர்வுகளை மிக அழகாகக் கவிதையில் எழுதியிருக்கிறார் எமிதால்.





இந்தக் கவிதைகளை வாசிக்கையில் மிக நெருக்கமாக உணர்ந்தேன்.





என் இருகைகளில் ஒன்றைத் தருகிறேன்





எடுத்துக் கொள்





எனது குரலைத் தருகிறேன்





உன் வழிகாட்டியாக்கிக் கொள்





என்று ஒரு கவிதையில் தாய் தன் மகளுக்குச் சொல்கிறாள்.





எமிதாலின் கவிதைகளின் வழியே அவரது வாழ்க்கையை மட்டுமில்லை சூடானியப் பெண்களின் தலைமுறை கடந்த கோபத்தையும், ஏக்கத்தையும், அன்பையும் அறியமுடிகிறது என்பதே இந்தத் தொகுப்பின் தனிச்சிறப்பு.





••

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 09, 2021 00:52

January 8, 2021

பொங்கல் புத்தகத் திருவிழா

சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள டிரேட் சென்டர் எதிரில் PMAC EXPO HALLல் ஜனவரி 8 முதல் ஜனவரி 18 வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.





இந்தக் கண்காட்சியில் தேசாந்திரி அரங்கு அமைத்துள்ளது. அரங்கு எண் 5





தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 வரை இந்தக் கண்காட்சி செயல்படும்





வழக்கமாக நடைபெறும் நந்தனம் புத்தகக் கண்காட்சி இந்த ஆண்டு தாமதமாகிற காரணத்தால் சிறிய புத்தகக் கண்காட்சியினை சென்னை வாசகர் வட்டம் ஏற்பாடு செய்திருக்கிறது. இதில் ஐம்பது அரங்குகள் அமைக்கபட்டுள்ளன





தேசாந்திரி அரங்கில் எனது நூல்கள் யாவும் விற்பனைக்கு கிடைக்கின்றன





















 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 08, 2021 18:02

January 7, 2021

துணையெழுத்து சிறப்பு பதிப்பு

ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுச் சாதனை புரிந்துள்ள துணையெழுத்து ,சிறப்புப் பதிப்பாக கெட்டி அட்டையில் வெளியிடப்பட்டிருக்கிறது





இதன் விலை ரூ 475









தேசாந்திரி பதிப்பகம்





D1, Gangai apartments, 110,
Sathya garden, Saligramam,
Chennai – 600 093
CALL US
(044) 236 44947
(+91) 9600034659
desanthiripathippagam@gmail.com





ஆன்லைனில் வாங்க :





https://www.desanthiri.com/

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 07, 2021 22:57

கர்னலின் நாற்காலி சிறப்பு பதிப்பு

கர்னலின் நாற்காலி -குறுங்கதைகளின் தொகுப்பு சிறப்புப் பதிப்பாக கெட்டி அட்டையில் வெளியாகியுள்ளது









இதன் விலை ரூ 470.





தேசாந்திரி பதிப்பகம்





D1, Gangai apartments, 110,
Sathya garden, Saligramam,
Chennai – 600 093
CALL US
(044) 236 44947
(+91) 9600034659
desanthiripathippagam@gmail.com





ஆன்லைனில் வாங்க :





https://www.desanthiri.com/

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 07, 2021 22:52

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.