முயலின் தோழன்

Roald & Beatrix: The Tail of the Curious Mouse தொலைக்காட்சிக்காகத் தயாரிக்கப்பட்ட திரைப்படமாகும்,





எழுத்தாளர் ரோல்ட் டாலின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை முதன்மையாகக் கொண்டு இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் எழுத்தாளரான ரோல்ட் டால், சார்லி அண்ட் தி சாக்லேட் ஃபேக்டரி, மாடில்டா, தி ஃபென்டாஸ்டிக் மிஸ்டர் ஃபாக்ஸ்’ போன்ற புகழ்பெற்ற சிறார் படைப்புகளை எழுதியவர்





ரோல்ட் டால் சவுத் வேல்ஸில் உள்ள லாண்டாஃப் நகரில் பிறந்தவர். இவரது பெற்றோர் நார்வேயைச் சார்ந்தவர். தொழில்நிமித்தம் இவரது தந்தை இங்கிலாந்திற்குக் குடிபெயர்ந்தார். ஆறு வயதான ரோல்ட் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் பீட்ரிக்ஸ் பாட்டர் எழுதிய முயல் கதைகளை விரும்பி படித்து வந்தார். இரவில் படுக்கையிலும் அப் புத்தகம் துணையாக இருந்தது..









அந்த நாட்களில் பீட்ரிக்ஸ் பாட்டரின் புதிய புத்தகம் எப்போது வரும் எனச் சிறுவர்கள் காத்துக் கிடந்தார்கள்.





ஓவியரான பீட்ரிக்ஸ் தனது புத்தகங்களுக்கான வண்ண ஓவியங்களைத் தானே உருவாக்கினார். தி டேல் ஆஃ பீட்டர் ராபிட் அவரது புகழ்பெற்ற சிறார் நூல். அதில் வரும் முயல் உருவத்தை இன்றும் சிறுவர்கள் நேசிக்கிறார்கள்





விலங்குகளை நேசிப்பதில் ஆர்வம் கொண்ட பாட்டர் முயலையும் பன்றியினையும் எலிகளையும் முக்கியக் கதாபாத்திரமாக்கி கதைகள் எழுதியிருக்கிறார். காளான்களை ஆராய்ந்து இவர் வரைந்த ஓவியங்கள் தாவரவியல் துறையில் இவருக்குப் பெரும்புகழைப் பெற்றுத் தந்தது.





பாட்டர் முப்பது புத்தகங்களை எழுதியிருக்கிறார் அதில் இருபத்தி மூன்று குழந்தைகளின் கதைகள் மிகவும் பிரபலமானவை.





புத்தகங்களிலிருந்து கிடைத்த வருமானம் மற்றும் அத்தையின் குடும்பச் சொத்தைக் கொண்டு கும்ப்ரியான் பகுதியில் பெரிய பண்ணையை விலைக்கு வாங்கிய பாட்டர் குடியேறினார்





NPG P1825; Beatrix Potter (Mrs Heelis)



மலைவளத்தைப் பாதுகாப்பதில் அதிக ஈடுபாடு காட்டிய பாட்டர் ஆடு வளர்ப்பில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வந்தார். பாட்டரின் புத்தகங்கள் முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. திரைப்படமாகவும் அனிமேஷன் படமாகவும் வெளியாகியிருக்கிறது.





கண் பார்வை மங்கத் துவங்கிய பாட்டர் புதிய கதையை எழுத மனமின்றி வீட்டுப்பன்றியைப் பராமரித்துக் கொண்டு முயலுடன் பேசிக் கொண்டு நாட்களைக் கடத்துகிறார். அங்கிருந்து தான் படம் துவங்குகிறது.





வெளியாட்களின் வருகையை விரும்பாத அவர் கிறிஸ்துமஸ் சங்கீத பாடுகிறவர்களைக் கூடத் துரத்தியடிக்கிறார். சாலி என்று அழைக்கப்படும் செல்லப்பன்றி வீட்டில் அவருடனே உலவுகிறது.





கிறிஸ்துமஸ் விருந்திற்காக ஒரு வாத்தை அறுத்துச் சமைக்க முடிவு செய்து அதைத் துரத்துகிறார். அந்த வாத்துப் பிடிபடாமல் தப்பியோடுகிறது. வாத்தை துரத்தியோடும் பாட்டர் அதைக் கடுமையாக எச்சரிக்கிறார். அந்த வாத்து எப்படியே தப்பிவிடுகிறது.





பாட்டரின் கண்களைப் பரிசோதனை செய்ய வந்த மருத்துவர் அவர் கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும் என்கிறார். அது பாட்டருக்குப் பிடிக்கவில்லை. மருத்துவர் தந்த கண்ணாடியை ஓரமாகப் போட்டுவிட்டு மங்கலான பார்வையுடன் அவர் வீட்டின் ஜன்னல் வழியே உலகை வேடிக்கை பார்த்தபடியே இருக்கிறார்.









இருநூறு மைலுக்கு அப்பால் வசித்து வந்த ஆறு வயதான ரோல்ட் டால் கதைகள் படித்துப் படித்துக் கற்பனையுலகில் சஞ்சரிக்கிறான்.





ஒரு நாள் அவனது தந்தை திடீரென இறந்துவிடுகிறார். அவரது உடல் வைக்கப்பட்ட அறைக்குள் போகும் ரோல்ட் கண்களை மூடிக் கொள்கிறான். இனி தனது வாழ்க்கை என்னவாகும் என்ற பயம் ஏற்படுகிறது





அம்மா சோஃபி அவனை ஒரு போர்டிங் ஸ்கூலில் சேர்த்துவிடப் போகிறாள் என்று தெரிந்தவுடன் வீட்டை விட்டு ஓடிப்போக முயல்கிறான்.





அப்போதும் கையில் பீட்டர் ராபிட் புத்தகமிருக்கிறது. அந்த முயலின் கண்களை நேராகப் பார்க்க ரோல்ட் ஆசைப்படுகிறான். எழுத்தாளரை விடவும் அவரது கதைகளில் வரும் உலகைக் காணவே ரோல்ட் அதிகம் விரும்புகிறான்.









வீட்டை விட்டு கிளம்பும் போது, அவனது இறந்து போன சகோதரி வைத்திருந்த பொம்மை, தனக்கு ஒரு புதிய உடையைக் கிறிஸ்துமஸ் தாத்தா பரிசாகத் தர வேண்டும் என ஒரு வேண்டுதல் கடிதத்தை ரோல்ட் டாலிடம் தருகிறது. அந்தக் கடிதத்தைத் தன் பையில் வைத்திருக்கிறான் ரோல்ட்.





ரயில் நிலையத்தில் காத்திருக்கும் அவனைக் கண்டுபிடித்துவிடுகிறாள் அவனது அம்மா. இருவரும் ஒன்றாகப் பீட்ரிக்ஸ் பாட்டரைத் தேடி அவரது வீட்டிற்குப் போவது என முடிவு செய்கிறார்கள்





இருநூறு மைலுக்கும் அப்பால் இருந்த பாட்டரின் வீடு நோக்கி அவர்களின் பயணம் துவங்குகிறது.





ஒரு எழுத்தாளரைக் காண தன் மகனை அழைத்துக் கொண்டு ஒரு பெண் பயணம் செய்கிறாள் என்பது மகிழ்ச்சியாக இருந்தது. அந்த எழுத்தாளருக்கு தனக்கு இப்படி ஒரு இளம் வாசகன் இருப்பது தெரியாது. அந்தச் சிறுவனுக்கோ பாட்டர் ஒரு தேவதை. கதைகள் சொல்லும் தேவதை. ஆகவே ஆசையாக அவரைக் காணப் பயணம் மேற்கொள்கிறான்.





இதற்கிடையில் பீட்ரிக்ஸின் புதிய கதையை வெளியிடுவதற்காகப் பதிப்பகத்திலிருந்து ஒரு பெண் கும்ப்ரியான் இல்லத்திற்கு வருகிறாள். பாட்டர் எழுதிய கதையைப் படித்துப் பார்க்கிறாள். அதில் சில இடங்களைத் திருத்த வேண்டும் என்று கட்டளையிடுகிறாள். அது பாட்டருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் பதிப்பாளரின் கட்டாயத்தால் மாற்றுவதற்குச் சம்மதிக்கிறார்.





இந்தச் சூழலில் பாட்டரின் வீட்டிற்கு வரும் ரோல்ட் அங்கிருந்த வளர்ப்பு நாயிற்கு உணவு கொடுத்து தனதாக்கிக் கொள்கிறான். வீட்டு முயலுடன் பேசுகிறான். யாரோ ஒரு விளையாட்டு சிறுவன் கேட்டைத் தாண்டி உள்ளே வந்திருக்கிறான் என்று நினைத்து அவனைத் துரத்துகிறாள் பாட்டர்.





அவளிடமிருந்து தப்பிய ரோல்ட் பழைய பொருட்கள் போட்டு வைத்துள்ள ஒரு அறையில் ஒளிந்து கொள்கிறான். எங்கே ஒளிந்திருந்தாலும் தண்டிப்பேன் என்று அவள் சப்தமிடுகிறாள். அவளிடமிருந்து தப்பிப்போக முயற்சிக்கையில் பாட்டர் அவனைப் பிடித்துவிடுகிறாள்.





அவளைக் கண்டுபயப்படாமல் அவளது கதையைத் தான் எவ்வளவு விரும்பி வாசித்தேன் என்று ரோல்ட் மனம் திறந்து சொல்கிறான். அவனது பேச்சு மற்றும் அவன் வைத்திருந்த கடிதம் பாட்டரின் மனதை மாற்றுகிறது.





தனது பதிப்பாளர் சொன்ன திருத்தங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. சிறுவர்கள் தன்னை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். தன் கதையை முழுமையாக நேசிக்கிறார்கள் என்பதைப் பாட்டர் உணர்ந்து கொள்கிறார். அதற்குக் காரணமாக இருந்த ரோல்ட்டினை நன்றியோடு நினைவு கொள்கிறார்.





கதைப்புத்தகம் ஒரு சிறுவனுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதைப் படத்தில் மிக அழகாகச் சித்தரித்துள்ளார்கள்.





படத்தின் ஒரு காட்சியில் மகனைத் தனியே விட்டுச் செல்லும் சோபியாவிடம ஆருடம் சொல்லும் பெண் உன் மகன் எதிர்காலத்தில் மிகப்பெரிய எழுத்தாளன் ஆவான் என்று சொல்கிறான். அதைக் கேட்டு சோபியா மிகுந்த சந்தோஷம் அடைகிறாள். அந்தக் கனவு பின்னாளில் உண்மையானது. ரோல்ட்டின் புத்தகங்கள் பீட்ரிக்ஸ் பாட்டரை விடவும் பலமடங்கு விற்பனையானது என்பதே வரலாறு





பாட்டருக்கு ஏன் யாரையும் பிடிக்கவில்லை. உலகம் அவரை முட்டாள் என நினைக்கிறது. பைத்தியக்காரதனமான வேலைகளைச் செய்கிறவள் எனப் பரிகாசம் செய்கிறது. அவளைப் புரிந்து கொள்ளாத உலகை அவள் துரத்துகிறாள். விலக்கி வைக்கிறாள்.





வசதியான குடும்பத்தில் பிறந்த பாட்டர் சிறுவயதிலிருந்தே புத்தகம் படிப்பதிலும் ஒவியம் வரைவதிலும் மிகுந்த ஈடுபாடு காட்டி வந்தார்.





கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது பீட்ரிக்ஸ் மற்றும் அவரது சகோதரரும் தங்கள் சொந்த வடிவமைப்பில் கிறிஸ்துமஸ் அட்டைகளையும், சிறப்பு வாழ்த்து அட்டைகளையும் உருவாக்கினார்கள்.





அவளது கற்பனையில் உருவான ஓவியத்தில் எலிகள் மற்றும் முயல்கள் வண்ண உடைகளுடன் ஸ்டைலாகப் போஸ் கொடுத்தன.. . இந்த வாழ்த்து அட்டைகள் தனது நண்பர்களுக்குத் தவறாமல் அனுப்பி வைத்தார் பாட்டர்.





மெல்லப் பாட்டரின் ஓவிய வாழ்த்து அட்டைகள் புகழ்பெறத் துவங்கின. அவற்றை ஒன்று சேர்த்து ஒரு கதைப்புத்தகம் ஆக்கலாமே என்ற யோசனையை ஆனி என்ற தாதி சொல்லவே அதன்படி பாட்டர் சிறார்களுக்கான கதைப் புத்தகம் ஒன்றை எழுதினாள். அதில் இந்த ஓவியங்கள் இணைக்கப்பட்டன. தானே சொந்த செலவில் அதை அச்சிட்டு விநியோகம் செய்தாள். அந்தப் புத்தகத்திற்குக் கிடைத்த வரவேற்பே அவரை எழுத்தாளராக்கியது.





இதன்பிறகு வார்ன் & கோ என்ற பதிப்பகம் அவரது புத்தகங்களை வெளியிட முன்வந்தது. பாட்டரின் புத்தகங்கள் பெரும் வெற்றியைப் பெற்றது. கதையில் வரும் முயல் உருவத்திற்குப் பாட்டர் காப்புரிமை பெற்றார். ஆகவே அந்த முயல் உருவம் பதித்த அட்டைகள். முத்திரைகள், போர்வைகள். கலைப்பொருட்கள் வழியாக அவருக்குப் பெரும்பணம் குவியத் துவங்கியது.





தாவரவியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த பாட்டர் காளான்களைத் துல்லியமாகப் படம் வரைந்து கொடுத்திருக்கிறார். தன் பண்ணையிலிருந்த மலர்களையும் அழகான வண்ண ஓவியங்களாக வரைந்திருக்கிறார்.





டிசம்பர் 22, 1943 அன்று நிமோனியா மற்றும் இதய நோயால் பாட்டர் இறந்தார், அவரது நாலாயிரம் ஏக்கர் பண்ணை மற்றும் கால்நடைகள் உள்ளிட்ட அனைத்து சொத்துகளை, இயற்கை பாதுகாப்புப் பணியில் செயல்படும் தேசிய அறக்கட்டளைக்குத் தானமாக உயில் எழுதியிருந்தார். இன்றும் அவர்களே அந்தச் சொத்தைப் பராமரிப்புச் செய்து வருகிறார்கள்.





படத்தின் இறுதிக்காட்சியில் தான் பாட்டரும் ரோல்ட்டும் சந்தித்துக் கொள்கிறார்கள். உரையாடுகிறார்கள். ஆனால் அதற்கு முன்பாக ரோல்டின் தோழனைப் போலவே பாட்டரின் புத்தகம் உடனிருக்கிறது. அது தான் புத்தகத்தோடு ஒரு சிறுவன் கொள்ளும் அற்புத உறவு. பீட்டர் ராபிட் கதையின் அத்தனை வரிகளையும் அவன் மனதிலே பதிய வைத்திருக்கிறான். புதிய புத்தகம் எப்போது கிடைக்கும் என்று ஏங்குகிறான். கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் தனக்குப் பரிசாகப் பாட்டரின் புதிய புத்தகம் வேண்டும் என்று வேண்டுகிறேன். முடிவில் அது பலிக்கிறது





பீட்ரிக்ஸ் பாட்டர். ஒரு விளையாட்டு சிறுமியாகவே எப்போதும் நடந்து கொள்கிறாள். செத்துப் போன எலி ஒன்றை ஒரு டீக்கோப்பையில் போட்டு வைத்திருப்பது. பன்றியைக் கொஞ்சி விளையாடுவது. வாத்தைத் துரத்தி ஓடுவது என நிறைய வேடிக்கைகள் செய்கிறாள்.





ரோல்ட் மற்றும் பாட்டரின் கதைகளுக்குள் கண்பார்வையற்ற எலியின் கதையும் ஊடாடுகிறது. அந்த எலிகளின் வாழ்க்கையை வரைகலை மூலம் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள்.





பனிபொழியும் பாட்டரின் வீடும். கணப்பு அடுப்பு வெளிச்சத்தில் அமர்ந்திருக்கும் பாட்டரும் மறக்கமுடியாத பிம்பங்களாகி விடுகிறார்கள். ரயில்வே நிலையத்தில் என்ஜின் டிரைவருடன் ரோல்ட் பேசும் காட்சி சிறப்பானது.





பெரியவர்களின் உலகிற்குள் சிறுவர்கள் இல்லை. அவர்கள் தங்களுக்கான தனியுலகில் வாழுகிறார்கள். பெரியவர்கள் அவ்வப்போது சிறார்களைத் தங்கள் உலகிற்குள் இழுத்துக் கொண்டு வருகிறார்கள். மிரட்டுகிறார்கள். பணிய வைக்கிறார்கள். ஆனால் சிறார்கள் அதிலிருந்து தப்பி தங்கள் உலகிற்குள் மீண்டும் போய்விடுகிறார்கள்.





சிறார்கள் உலகில் கற்பனை தான் யதார்த்தம். அங்கே மாயமும் மந்திரமும் இயல்பானவை. அவர்கள் பூமியை மனிதர்கள் மட்டும் வாழும் இடமாக நினைப்பதில்லை. பெரியவர்களின் காரணக் காரியப்பேச்சு மற்றும் செயல்கள் சிறார்களை எரிச்சலூட்டுகின்றன. அதிலிருந்து தப்பிக்கப் பகல்கனவு காண ஆரம்பிக்கிறார்கள். அப்படிப் பகல்கனவு கண்ட சிறுவனே ரோல்ட். அந்தக் கனவு தான் வளர்ந்து அவனைப் பின்னாளில் பெரிய எழுத்தாளராக்குகிறது.









பாட்டரின் வீட்டுவாசலில் மகனைத் தனியே விட்டு அவனது அம்மா விலகிப்போய்விடுகிறாள். அந்தச் சுதந்திரம் தான் அவள் மகனை எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறார் என்பதன் அடையாளம். மகன் எழுத்தாளரைச் சந்தித்துத் திரும்பும் வரை ஒரு காபிஷாப்பில் காத்திருக்கிறாள். அவர்கள் சந்திப்பில் என்ன நடந்தது என அம்மாவிற்குத் தெரியாது.





இந்தப் புரிதலும் மகன் விரும்பிய சந்தோஷத்தை உருவாக்கித் தருவதும் எத்தனை அழகானது. அது தான் ரோல்டை எழுத்தாளராக்கியது என்பேன்.





••

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 11, 2021 03:46
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.