S. Ramakrishnan's Blog, page 145

January 24, 2021

புதிய நிறுவனம்

எனது மகன் ஹரி பிரசாத் White Knights என்ற Creative Agency ஒன்றினை ஜனவரி 28 வியாழன் அன்று துவக்குகிறான்.

ஹரியும் அவனது நண்பர்களும் ஒன்றிணைந்து இந்த நிறுவனத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அனைவரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் மீடியா சயின்ஸ் பயின்றவர்கள்.

பிராண்டிங் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கிற்கான இந்த நிறுவனம் தனிநபர் மற்றும் நிறுவனங்களின் விளம்பரம் மற்றும் வடிவமைப்புப் பணிகள் அனைத்தையும் மேற்கொள்ளும்.

குறிப்பாகப் பிராண்டிங், அனிமேஷன், லோகோ டிசைனிங், சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்வது, போட்டோ ஷுட், இணையதள வடிவமைப்பு, வீடியோ, மின்னஞ்சல் பிரச்சாரங்கள், மொபைல் வழியான மார்க்கெட்டிங் போன்ற பணிகளை முதன்மையாக மேற்கொள்ள இருக்கிறார்கள்.

இந்தப் புதிய நிறுவனத்திற்கு உங்கள் வாழ்த்துகளையும் ஆதரவினையும் வேண்டுகிறேன்

https://www.facebook.com/White-Knights-Creative-Agency-104357408321130/

••

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 24, 2021 20:07

January 23, 2021

நூலக மனிதர்கள் 32 ரகசிய விளையாட்டு.

நூலகரை முக்கியக் கதாபாத்திரமாகக் கொண்டு தமிழில் ஏதாவது நாவல் எழுதப்பட்டிருக்கிறதா, அல்லது திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறதா என ஒரு வாசகர் மின்னஞ்சலில் கேட்டிருந்தார்.

நான் அறிந்தவரை நூலகக் காட்சிகள் சினிமாவில் இடம்பெற்றிருக்கின்றன. நூலகர் ஒரு கதாபாத்திரமாக நாவலில். சினிமாவில் வந்திருக்கிறார். நூலகரின் வாழ்க்கையை விவரிக்கும் நாவல் எதையும் வாசிக்கவில்லை. ஆங்கிலத்தில் ஏராளம் இருக்கின்றன. ஹாலிவுட் படங்களில் நூலகரை மையக் கதாபாத்திரமாகக் கொண்டு நிறையப் படங்கள் வெளியாகியுள்ளன. நியூயார்க் பொது நூலகம் நிறையப் படங்களில் காட்டப்பட்டிருக்கிறது. ஹாரிபோட்டரில் வரும் நூலகம் போல விசித்திரமான நூலகங்களை மையமாகக் கொண்டு படங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

சினிமாவில் காட்டப்படும் நூலகங்கள் போல நிஜ நூலகம் இருப்பதில்லை.

நான் வேலை செய்த ஒரு சினிமா படப்பிடிப்பின் போது கதாநாயகி வீட்டு அலமாரியில் நிறையப் புத்தகங்களை ஆர்ட் டிபார்ட்மெண்ட் அடுக்கியிருந்தார்கள். என்ன புத்தகம் என்று பார்ப்பதற்காக அதைக் கையில் எடுத்தேன். அவை உண்மையான புத்தகங்களில்லை. புத்தகம் போல அட்டையில் செய்யப்பட்டவை. புத்தகத்தின் ரேப்பர்களை மட்டும் அதில் ஒட்டியிருக்கிறார்கள்.

ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் செலவு செய்து படப்பிடிப்பு நடத்துகிறவர்கள் ஏன் உண்மையான புத்தகங்களைக் காட்சியில் வைக்கலாமே என்று கேட்டதற்கு இது போல அட்டையில் செய்து வைத்துவிட்டால் எந்தப் படத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்கள்.

சினிமாவில் நூலகம் காதலர்கள் சந்தித்துக் கொள்ளும் இடம். அல்லது துப்பறியும் நிபுணர் ரகசியம் ஒன்றைத் தேடி வரும் இடம். சில நேரங்களில் பேராசிரியராக வரும் கதாபாத்திரம் நூலகத்தில் மிகப் பெரிய சைஸ் புத்தகம் ஒன்றைப் புரட்டி ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார். கல்லூரி கதை என்றால் நூலகத்திற்குக் காதல் கடிதம் கொடுக்கக் கதாநாயகன் வருவான். நூலகத்தின் உண்மையான மதிப்பை வெளிப்படுத்தும் ஒரு காட்சியைக் கூடத் திரையில் கண்டதாக நினைவில்லை.

சினிமா படப்பிடிப்பின் போது கையில் ஒரு புத்தகம் வைத்துப் படித்துக் கொண்டிருந்தால் உங்களை அறிவாளி என்று நினைப்பார்கள். பல நேரங்களில் உங்களைத் தீண்டத்தாகத ஒருவரைப் போலவே நடத்துவார்கள். அதிலும் ஆங்கிலப் புத்தகங்களைத் தான் படித்துக் கொண்டிருக்க வேண்டும். தமிழ்ப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தால் மதிப்புக் குறைவு.

சினிமா நடிகர்கள் புத்தகம் படிக்கிறார்கள் என்பதை இன்றும் வியப்பாகப் பார்க்கிறார்கள். அது ஏன் என்று புரியவில்லை. நான் அறிந்தவரை ஆழ்ந்து வாசிக்கக்கூடிய திரைக்கலைஞர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் சேமிப்பில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இருப்பதை நானே நேரில் கண்டிருக்கிறேன்.

நூலகம் சார்ந்த நினைவுகள் ஒவ்வொருவருக்கும் ஒருவிதமாக மனதில் பதிந்திருக்கிறது. ஒருமுறை புத்தகக் கண்காட்சிக்கு வந்த பெண் தனது சிறுவயதில் அப்பா நூலகத்திலிருந்து எடுத்து வந்த புத்தகங்களைப் படித்துக் காட்டுவார். அல்லது அந்தக் கதையைச் சொல்லுவார். அப்பா சொல்லிக்கேட்ட கதைகளைத் திரும்ப வாசிப்பதற்காக அந்தப் புத்தகங்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். நிறையப் புத்தகங்கள் இப்போது கிடைக்கவில்லை. கிடைத்த புத்தகத்தைப் புரட்டி வாசித்தால் அதில் அப்பாவின் குரல் கேட்கிறது. இன்று அப்பா எங்களை விட்டு மறைந்து போய்விட்டார். ஆனால் அவர் வாசித்த புத்தகத்தைப் புரட்டும் போது அவரது குரல் கேட்கிறது. கண்ணீருடன் தான் படிக்கிறேன் என்றார்.

தந்தை நூலகத்திற்குச் சென்று எடுத்து வந்த புத்தகங்கள் மகளை எவ்வளவு பாதித்திருக்கிறது பாருங்கள். இப்படி நூறு நூறு அனுபவங்கள் நூலகம் சார்ந்து இருக்கின்றன.

சிறார் புத்தகம் ஒன்றில் கம்பளிப்பூச்சி ஒன்று நூலகராக இருக்கும். அந்த நூலகத்திற்கு விலங்குகள் சென்று புத்தகங்கள் எடுத்துவரும். ஒரு எலி மனிதர்களிடம் தங்களை எப்படிக் காப்பாற்றிக் கொள்வது என்று புத்தகத்தைப் படிக்க எடுத்துக் கொண்டு போகும். யார் அதை எழுதினார்கள் என்று அந்தக் கதையில் இடம்பெறவில்லை. ஆனால் பத்துவயதில் படித்த போதும் இன்றும் மறக்கமுடியவில்லை கண்ணாடி அணிந்த கம்பளிபூச்சியின் முகம் மனதில் ஒளிர்ந்தபடியே இருக்கிறது

பள்ளி வயதில் நூலகத்தில் ஒரு பையனைப் பார்த்தேன். அவன் பெயர் பாஸ்கர். பதிமூன்று வயதிருக்கும். பாஸ்கர் வண்ணப்படமுள்ள புத்தகமாகத் தான் வாசிக்க எடுப்பான். அந்தப் புத்தகத்தினை ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிப் படிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்வான். உண்மையில் ஒரு பக்கத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பான். அப்படி என்ன பார்க்கிறான் என்று புரியாது. ஒருமுறை அவனிடம் கேட்டபோது ஓவியத்திலுள்ள மாயக்கம்பளம் எங்கே கிடைக்கும் என யோசித்துக் கொண்டிருந்ததாகச் சொன்னான்.

பாஸ்கர் தான் ஒரு நாள் என்னிடம் கால இயந்திரம் பற்றிய சிறார் கதை ஒன்றிலிருந்த படத்தைக் காட்டி ஏன் வட்டமாக இயந்திரம் இருக்கிறது என்று கேட்டான். எனக்குப் புரியவில்லை. ஏன் கால இயந்திரம் வட்டமாக இருக்கிறது என்று நானும் அவனிடம் கேட்டேன். காலம் வட்டமானது. அதனால் கால இயந்திரம் வட்டமாக இருக்கிறது என்றான். அவன் சொன்ன பதில் அப்போது புரியவில்லை.

ஆனால் ஒரு புத்தகத்தை வாசிக்கத் துவங்கும் ஒருவன் அதில் என்ன கண்டறிகிறான் என்று எவராலும் புரிந்து கொள்ள முடியாது என்பதை அறிந்து கொண்டேன். அதே புத்தகத்தை நானும் படித்திருக்கிறேன். எனக்கு அந்தச் சந்தேகம் வரவில்லை. கேள்வி எழவில்லை.

விசித்திரமாக யோசிக்கிறான் என்பதாலே பாஸ்கரை எனக்குப் பிடித்துப் போனது. ஒரு நாள் அவன் நான் ஒரு விளையாட்டை உருவாக்கியிருக்கிறேன். இங்கே விளையாடுவோமா என்று கேட்டான். என்ன விளையாட்டு என்று கேட்டேன்.

நூலகத்தில் உள்ள ஒரு புத்தகத்தில் தான் பலூன் படம் ஒன்றை வரைந்து வைத்துள்ளதாகவும் அது எந்தப் புத்தகம் என்று கண்டுபிடித்துக் கொண்டு வரவேண்டும் என்றான். கண்டுபிடித்துவிட்டால் என்ன தருவாய் என்று கேட்டேன். அவன் தான் பாக்கெட்டிலிருந்து சிறிய விசில் ஒன்றை எடுத்து இதைத் தந்துவிடுகிறேன் என்றான்.

வேகமாக நூலக அடுக்கினுள் ஒடி எந்தப் புத்தகத்தினுள் அவன் பலூன் வரைந்திருக்கிறான் என்று வேகவேகமாகப் புரட்டிப் பார்த்தேன். கண்டுபிடிக்க முடியவில்லை. நூலகர் ஏன் புத்தகங்களைத் தள்ளிவிடுகிறேன் என்று கோவித்துக் கொண்டார். ஒரு மணி நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. நூலக நேரம் முடிந்து போன காரணத்தால் நாளை தேடுவோம் என்று பிரிந்து சென்றோம்

மறுநாள் நூலகம் திறந்தவுடனே உள்ளே நுழைந்து விளையாட்டினைத் தொடர்ந்தேன். அன்று மதியம் வரை தேடியும் கண்டுபிடிக்கமுடியவில்லை. முடிவில் அந்தப் பையன் தானே எடுத்து வருவதாகச் சொல்லி ஒரு பெரிய புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்தான். அதில் ஒரு பக்கம் பென்சிலில் பலூன் வரையப்பட்டிருந்தது.

“இது பெரியவர்கள் படிக்கும் புத்தகம்“ என்றேன்

“நான் இதுல இருக்கிற போட்டோக்களைப் பார்ப்பேன்“ என்றான் பாஸ்கர்.

அன்று முதல் நூலகத்தில் இது போலப் புதிய விளையாட்டுகளை விளையாட ஆரம்பித்தோம்.

நூலின் தலைப்பின் நடுவே ஒரு வார்த்தையைப் புதிதாகச் சேர்த்துவிடுவேன். அதாவது இரும்புக்கோட்டை ரகசியம் என்று தலைப்பு இருந்தால் இரும்புக் கோட்டை இட்லி ரகசியம் என மாற்றிவிடுவேன். அவன் அதைக் கண்டுபிடிக்க வேண்டும். அவன் கண்ணில் படாதபடி புத்தகத்தை ஏதாவது இடுக்கில் ஒளித்து வைத்துவிடுவேன். ஆனால் அவன் எப்படியோ கண்டுபிடித்து எடுத்து வந்துவிடுவான்

பாஸ்கர் சில புத்தகங்களில் குறிப்பிட்ட வார்த்தைகளை அடிக்கோடு போட்டுவிடுவான். அந்த வார்த்தைகளைக் கண்டறிந்து அதை ஒன்று சேர்த்து என்ன வாக்கியம் எனக் கண்டுபிடிக்க வேண்டும். அதை என்னால் ஒரு போதும் முழுமையாகச் செய்ய முடியவே முடியாது. அவன் தான் ஜெயிப்பான். நூலகம் இப்படி விளையாட்டுக் களமாக மாறியதை ஒரு நாள் நூலகர் கண்டுபிடித்துவிட்டார். அதன் பிறகு எங்களை நூலக அடுக்கிற்குள் நுழைய அனுமதிக்கவேயில்லை.

நாளிதழ்களில் பாஸ்கர் இது போலவே ஒரு விளையாட்டினை உருவாக்கினான். குறிப்பிட்ட சொல் எந்தப் பேப்பரில் உள்ள எந்தச் செய்தியில் வெளியாகியிருக்கிறது என்று கண்டறிய வேண்டும். நாளிதழை முழுவதுமாகப் புரட்டிப் படித்தால் மட்டுமே அதைக் கண்டுபிடிக்க முடியும். ஆழ்ந்த வாசிப்பை அவன் விளையாட்டாக மாற்றியது வியப்பாக இருந்தது.

நிறையப் புதிய சொற்களை அதன்வழியே கற்றுக் கொண்டேன். நூலகத்தில் இப்படி அறிவு சார்ந்த விளையாட்டுகளை ஏன் அனுமதிக்கக் கூடாது என்று இன்று தோன்றுகிறது. வெறும் வாசிப்பை விடவும் வாசிப்பு சார்ந்த விளையாட்டுகள். நாடகங்கள். கூடி வாசித்தலுக்கான களமாக நூலகத்தை நாம் மாற்றி அமைக்க வேண்டும். அதற்கெனச் சிறப்பு வசதிகள் உருவாக்கப்பட்டால் சிறார்கள் அதிகப் பயன் அடைவார்கள்

பாஸ்கர் நூலகத்தை விந்தைகளின் உலகமாக அடையாளம் காட்டினான். ஒரு நாள் அவன் ஒரு புத்தகத்திலிருந்த வண்ணப்படம் ஒன்றை காட்டினான். அதில் கனவுகளைப் பதிவு செய்யும் இயந்திரம் ஒன்று இருப்பதாகவும் அதைத் தலையில் மாட்டிக் கொண்டுவிட்டால் நம் கனவுகளைப் பதிவு செய்துவிடும் என்றும் சொன்னான்

கேட்கவே அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. எத்தனை விநோதமான கனவுகள் காலை எழுந்தவுடன் மறந்து போய்விடுகின்றன. அந்த இயந்திரம் எங்கேயிருக்கிறது என்று கேட்டேன். தானே அதைப் போன்ற ஒன்றைச் செய்ய இருப்பதாகச் சொன்னான். எப்படி எனப் புதிராகக் கேட்டேன். அதைப்பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறேன் என்றான்.

விசித்திரங்களை நோக்கிய அவனது தேடலும் முயற்சியும் பிரமிப்பூட்டியது. ஒருநாள் நூலகத்திலிருந்த புத்தகம் ஒன்றிலிருந்து மேப் ஒன்றைக் கிழித்துத் தன் பையில் வைத்திருந்தான் என அவனைப் பிடித்துவிட்டார்கள்.

இனி பாஸ்கரை நூலகத்திற்குள் அனுமதிக்க முடியாது என்று தடுத்துவிட்டார் நூலகர். அதன்பிறகு பாஸ்கரைப் பார்க்கவேயில்லை. ஆனால் இறுகி உறைந்து போயிருந்த புத்தகங்களைக் கலைத்துப் போட்டு சுவாரஸ்யமான விளையாட்டினை உருவாக்கிய அவனது செயலை மறக்க முடியவில்லை.

புத்தகத்தின் அட்டையைப் பார்த்துப் புத்தகத்தை எப்படி முழுமையாகப் புரிந்து கொள்ளமுடியாதோ அது போலத் தான் நூலகத்திற்கு வரும் மனிதர்களும். அவர்களின் தோற்றதை வைத்து அவர்கள் என்ன படிப்பார்கள். எதில் ஆர்வம் காட்டுவார்கள் என்று கண்டறியமுடியாது.

ஒருவர் புத்தகம் படிக்கும் போது அதன் பக்கங்களின் வழியே என்ன உணருகிறார். என்ன பார்க்கிறார் என்று எவராலும் கண்டறிய முடியாது. வாசிப்பு எளிமையானது போலத் தோன்றினாலும் அது ரகசியமான செயல்பாடே.

••

2 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 23, 2021 20:39

கன்னிமாரா நூலகத்தில்

சென்னை கன்னிமாரா நூலகத்தினுள் புதுப்பிக்கபட்ட நிரந்தர புத்தகக் கண்காட்சி நேற்று துவங்கப்பட்டது. பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன் இதனைத் தொடங்கி வைத்தார்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் சார்பில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி பதிப்பகத்திற்கெனத் தனி ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது.

எனது நூல்கள் யாவும் அங்கே விற்பனைக்கு கிடைக்கின்றன.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 23, 2021 08:47

January 22, 2021

காலைக்குறிப்புகள் 28 தனிமையும் கனவுகளும்

எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் தனது நேர்காணல் ஒன்றில் அன்றாடம் தனக்கு வரும் கனவுகளை ஒரு நோட்டில் குறித்து வைத்துக் கொண்டு வருவதாகச் சொல்கிறார். அவற்றை என்ன செய்வார் என்று சொல்லவில்லை. கனவுகளிலிருந்து எழுதுவதற்கான கருவைப் பெறுவதாக எழுத்தாளர்கள் பலரும் சொல்லியிருக்கிறார்கள். ரஸ்கின் பாண்டிற்கும் கனவு வழிகாட்டவே செய்கிறது.

திப்புசுல்தான் தனது கனவுகளை இது போலத் தொடர்ந்து பதிவு செய்து வந்ததோடு அவற்றிற்கு விளக்கம் என்னவென்று ஆராய்ந்துமிருக்கிறார். அவை தனி நூலாக வெளிவந்துள்ளன.

ரஸ்கின் பாண்டின் சிறார்கதைகைள் தலைமுறைகள் தாண்டி இன்றும் வாசிக்கப்பட்டு வருகின்றன. பள்ளி பாடப்புத்தங்களில் இடம்பெற்ற இவரது சிறுகதைகளைப் படிக்காத இந்திய மாணவர்களே இருக்கமாட்டார்கள். நானும் என் பள்ளி நாட்களில் படித்திருக்கிறேன்.

தனது நேர்காணலில் ரஸ்கின் பாண்ட். எழுபது ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன் என்கிறார். நீண்டகாலமது. எழுத்து தான் அவரது நினைவாற்றலைத் தக்கவைத்திருக்கிறது. துல்லியமாகத் தன்னால் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை எழுதமுடியும். அதற்கு நினைவாற்றலே காரணம் என்கிறார்.

இயற்கையோடு இணைந்து வாழுகிறவர் என்பதால் அவரது கதைகளில் பறவைகளும் விலங்குகளும் குளிரும் பனியும் மழையும் ஒன்று சேர்ந்து வெளிப்படுகிறது.

எப்படி இன்றும் கதைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறீர்கள் என்று கேட்டதற்கு உணவு உண்பது, தண்ணீர் குடிப்பது போல எழுத்தும் அன்றாடச் செயல்பாடாக மாறிவிட்டது. எழுதுவதற்கு முன்பு கதையை முழுவதுமாக மனதில் உருவாக்கிக் கொண்டே எழுத அமருவேன். எழுதுகிற வேலை என்பது மனதிலிருப்பதைப் பிரதியெடுப்பது மட்டுமே என்கிறார்.

ஒவ்வொரு எழுத்தாளருக்கும் இப்படி ஒரு பாணி இருக்கிறது. எவரும் எவரையும் பின்பற்றமுடியாது.

ரஸ்கின் பாண்டின் வீடு மிசோரியில் உள்ளது. வீட்டின் ஜன்னலைத் திறந்தால் தூரத்து மலைகள் சுற்றிலும் அடர்ந்த மரங்கள். மலைநகர வாழ்க்கை தன்னைச் சுதந்திரமாக உணர வைக்கிறது. எழுத வைக்கிறது என்கிறார்.

சிறார்களுக்கான புத்தகங்களை மட்டுமே எழுதி ஒருவர் இத்தனை பேரும் புகழும் பெற்றிருப்பது ஆச்சரியமானது. ஆங்கிலத்தில் எழுதியதால் அவரால் எழுத்தை நம்பி வாழ முடிந்திருக்கிறது. பென்குவின் போன்ற பதிப்பகங்கள் அவரைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டன. பத்திரிக்கைகளில் பத்திகள் எழுதினார். அரசின் சார்பாகப் பல்வேறு திட்டப்பணிகளையும் மேற்கொண்டிருக்கிறார்.

அவரது சில கதைகள் திரைப்படமாகியிருக்கின்றன. பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியிருக்கிறது. ஆகவே தனித்துச் சுதந்திரமாக வாழும் அளவிற்கு வசதியாகவே இருக்கிறேன் என்கிறார் ரஸ்கின் பாண்ட்.

ரஸ்கின் பாண்ட் என்ற பெயரைப் பற்றி நேர்காணல் செய்கிறவர் கேட்டபோது தான் பிரிட்டிஷ் வம்சாவளியைச் சார்ந்தவர். பஞ்சாப் மாநிலத்தின் கசௌலியில் பிறந்தவன். தன் தந்தை அலெக்சாண்டர் பாண்ட் ஜாம்நகர் அரசரின் மகளுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் பணியைச் செய்துவந்தார். ஆகவே குடும்பம் ஜாம்நகரில் வசித்தது. என்று பதில் சொல்கிறார்

அவரது நினைவுகள் கடந்தகாலத்தினுள் பறக்கத்துவங்குகிறது. தனது பழைய புகைப்படங்களைப் புரட்டி வாழ்வின் கடந்து போன பக்கங்களை நினைவு கொள்கிறார்.

ரஸ்கின் மற்றும் அவரது சகோதரி எலன் இருவரும் ஆறு வயது வரை ஜாம்நகரில் வாழ்ந்தனர். பின்னர் ரஸ்கினின் தந்தை பிரிட்டிஷ் விமானப்படையில் சேரவே அவரும் சகோதரியும் அம்மாவுடன் பாட்டி வீடான டெஹ்ராடூனிற்கு இடம்மாறினார்கள். முசோரியில் உள்ள போர்டிங் ஸ்கூலில் ஆரம்பக் கல்வியைப் பயின்றார். கல்லூரி படிப்பே கிடையாது.

ரஸ்கின் பாண்டிற்கு எட்டுவயதான போது அவரது அம்மா ஒரு பஞ்சாபியைத் திருமணம் செய்து கொண்டுவிட்டார். அது குடும்பத்தில் பெரிய பிரச்சனையை உருவாக்கியது.

அம்மா வேறு திருமணம் செய்து கொண்டுவிடவே ரஸ்கின் தந்தையுடன் வசிக்கப் புதுதில்லிக்குச் சென்றார். தந்தையின் நேசமே தன்னை உருவாக்கியது என உணர்ச்சிப்பூர்வமாகச் சொல்கிறார் பாண்ட். இந்த அன்பு நீடிக்கவில்லை. இரண்டு ஆண்டுகளில் எதிர்பாராமல் தந்தை இறக்கவே ரஸ்கின் நிலைகுலைந்து போனார்.

மீண்டும் தாயோடு சேர்ந்து வாழ டெஹ்ராடூனிற்கே சென்றார். அன்பிற்கான ஏக்கம். தனிமை, தந்தையில்லாத வருத்தம் எனச் சொந்த வாழ்க்கையின் துயரம் அவரை எழுதும்படி தூண்டியது. 1951 இல் தனது பதினாறாவது வயதில் எழுதத் துவங்கிய ரஸ்கின் பாண்ட் இன்றுவரை எழுதிக் கொண்டேயிருக்கிறார்.

சொந்த வாழ்வின் துயரங்களை எழுத்தாளன் கலையாக மாற்றிவிடுகிறான். அந்தப் படைப்பில் துயரத்தின் சாயலே இல்லை. பதின்வயதின் கனவுகளும் சந்தோஷமும் ஏக்கமும் மட்டுமே வெளிப்படுகிறது. பதின்வயதில் ஏற்பட்ட காதல் தோல்வியும், பிரிவும் தன் படைப்பில் சோகத்தை உருவாக்கியது உண்மை என்றாலும் விரைவில் அதிலிருந்து விடுபட்டுவிட்டேன் என்கிறார் ரஸ்கின் பாண்ட்

குழந்தைகளுக்காக அவர் எழுதிய உலகம் வண்ணமயமானது. சுவாரஸ்யமானது. சிறார்களின் மனதைத் துல்லியமாகச் சித்தரித்த கதைகள் அவை. அவர் ஒருபோதும் சிறார்களுக்கு அறிவுரை சொல்வதில்லை. ஒருமுறை பள்ளி ஒன்றுக்குச் சிறப்பு ஆசிரியராக ஒரேயொரு வகுப்பு எடுக்க அவரை அழைத்திருந்தார்கள். மாணவர்களின் விளையாட்டுத்தனத்தையும் குறும்பினையும் கண்டிக்க மனமின்றிச் சுதந்திரமாக அனுமதித்தார். வகுப்பில் ஒரே களேபரம் ஏற்பட்டுத் தலைமை ஆசிரியர் தலையிட்டு வகுப்பை அமைதிப்படுத்தியிருக்கிறார். தன்னால் சிறுவர்களின் விளையாட்டுத்தனத்தைக் கண்டிக்கமுடியாது. அது உற்சாகமான மனதின் வெளிப்பாடு. அதை ஏன் தடுக்க வேண்டும் என்று கேட்கிறார் ரஸ்கின் பாண்ட். இந்த மனநிலை தான் அவர் குழந்தைகளுக்காக எழுதுவதன் முக்கியக் காரணி.

முப்பது வயதில் காமன்வெல்த் பரிசை பெற்றபிறகே அவருக்கான இலக்கிய இடம் உறுதியானது. தனது புத்தகங்களுக்கான பதிப்பாளரைத் தேடி லண்டன் சென்ற பாண்ட் அங்கே சில காலம் வசித்தார். பின்பு இந்தியா திரும்பி 1963 முதல் முசோரியில் வசிக்கத் துவங்கினார்.

திருமணம் செய்து கொள்ளாத ரஸ்கின் பாண்ட் தனது வளர்ப்புப் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். மாதம் ஒருமுறை முசோரியிலுள்ள புத்தகக் கடை ஒன்றுக்கு வருகை தந்து தன் புத்தகங்களில் கையெழுத்துப் போடுகிறார். வாசகர்களுடன் உரையாடுகிறார்.

ஜேம்ஸ் பாண்ட் புகழ்பெறுவதற்கு முன்பே எழுத ஆரம்பித்த பாண்ட் நான் தான். ஆகவே எனக்கு ஜேம்ஸ்பாண்டால் ஒரு பிரச்சனையுமில்லை என வேடிக்கையாகச் சொல்கிறார்.

பலரும் அவரை வெளிநாட்டவர் என்றே இன்றும் நினைக்கிறார்கள். அவரோ நான் இந்தியாவில் பிறந்தவன். இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறவன் என்கிறார். சாகித்ய அகாதமி விருது, பத்மபூஷண் விருது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார் ரஸ்கின் பாண்ட்.

The Room on the Roof இவரது முக்கியமான நாவல். இது ரஸ்டி என்ற ஆங்கிலோ இந்தியச் சிறுவனைப் பற்றியது. ரஸ்கின் பாண்டின் சொந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பாகவே இந்தக் கதை எழுதப்பட்டிருக்கிறது. ரஸ்கினின் காதல் நிகழ்வுகளே மீனாவின் மீதான ரஸ்டியின் காதலாக வெளிப்படுகிறது.

தன்னை எவரும் புரிந்து கொள்ளவில்லை. அன்புகாட்டவில்லை என்ற ரஸ்கினின் குழந்தைப்பருவ ஏக்கம் அவரது கதைகளில் தொடர்ந்து வெளிப்படுகிறது.

சிறுவர்கள் ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது அதன் அர்த்தங்களைப் பற்றிக் கவலைப்படாமல் வாசிக்கிறார்கள். அர்த்தங்களை முழுமையாகப் புரிந்து கொள்வது மிக அபூர்வமாகவே காணப்படுகிறது. நிகழ்வுகளின் சுவாரஸ்யமும் விநோதமுமே அவர்களைத் தொடர்ந்து படிக்க வைக்கிறது.

ஒருவன் தன் பத்து வயதில் அணிந்து கொண்ட சட்டை அவனுடைய இருபதாம் வயதில் அவனுக்குப் பொருந்துவதில்லை. ஆனால் அவன் பத்து வயதில் படித்த புத்தகம் அவனுக்கு எண்பது வயது ஆகும் போதும் பிடித்தமானதாகவே இருக்கிறது. கூடவே வளர்ந்து கொண்டிருக்கிறது. அது தான் நல்ல புத்தகத்தின் அடையாளம்.

எழுத்து வாசகனுக்கு மட்டும் மீட்சியளிப்பதில்லை. எழுத்தாளனுக்கும் சொந்த வாழ்க்கையின் துயரங்களிலிருந்து விடுபட்டு மீட்சி அளிக்கவே செய்கிறது.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 22, 2021 05:44

January 21, 2021

காலைக்குறிப்புகள் -27 தன்னை இழந்தவர்கள்

லாக்டவுன் நாட்களில் அரசு உயரதிகாரியாக உள்ள எனது நண்பர் தனது பிள்ளைகளுடன் கேரம் விளையாடத் துவங்கினார். ஆரம்பத்தில் மதிய நேரம் மட்டுமே விளையாடிக் கொண்டிருந்தவருக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகமாகிவிடவே இரவு பதினோறு மணி வரை சலிக்காமல் விளையாட ஆரம்பித்தார். மகனுக்கோ, மகளுக்கோ விருப்பமில்லை என்று எழுந்து கொள்ள முயன்றால் கோபம் கொண்டுவிடுவார்.  அவருக்காக மனைவி நீண்ட நேரம் துணையாக விளையாட வேண்டியிருந்தது.

இது போலவே காலை ஆறுமணிக்கெல்லாம்  கையில் காபியுடன்  மகளை விளையாட அழைக்க ஆரம்பித்துவிடுவார். இதனால் அவரது குடும்பமே எரிச்சலானது. ஆனால் அவரால் கேரம் விளையாடுவதை நிறுத்த இயலவில்லை.

லாக்டவுன் என்பதால் அலுவலகம் போகவில்லை. வெளியே யாரையும் சந்திக்கவும் முடியாது என்பதால் சதா விளையாடிக் கொண்டேயிருந்தார். சில நாட்கள் இரவில் யாரும் விளையாட வராத போது தானே தனியாக விளையாடுவார். மாறி மாறி இரண்டு பக்கமும் எழுந்து உட்கார்ந்து காய்களைச் சிதறடிப்பார்.

அது ஒரு விளையாட்டு என்பதே அவருக்கு மறந்து போக ஆரம்பித்தது. விளையாடுவதற்கு ஆட்கள் வேண்டும் என்பதற்காகவே மனைவி பிள்ளைகளை அழைத்துக் கொண்டு காஞ்சிபுரத்தை அடுத்த சொந்த ஊருக்குக் கிளம்பிப் போனார். அங்கே அவரது பூர்வீக வீடு இருந்தது. வீட்டில் நிறைய ஆட்கள் இருந்தார்கள். ஆகவே ஊருக்குப் போன சில நாட்களில் அவருடன் விளையாட எப்போதும் துணையிருந்தார்கள். ஆனால் அவர்களும் நாள் முழுவதும் கேரம் ஆடுவது என்றால் எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.

முகத்திற்கு நேராகச் சொல்லிவிட்டாலும் அவரால் கேரம் விளையாடுவதை நிறுத்திக் கொள்ளமுடியவில்லை. அவரது கைவிரல்கள் சிவந்து வீக்கம் கொண்டுவிட்டன. ஏதோ கேரம் விளையாட்டில் சாம்பியன் ஆக முயன்றவர் போல வெறியோடு விளையாடிக் கொண்டிருந்தார். மனைவியும் பிள்ளைகளும் பயந்து போனார்கள். அவரைத் திசைதிருப்புவதற்காக வேறு விளையாட்டுகளை விளையாட அழைத்தார்கள். அவர் எதிலும் கலந்து கொள்ளவில்லை. அவர் பகலிரவாக விளையாடினார். திடீரென ஒரு நாள் மதியம் பாதி விளையாட்டில் எழுந்து கொண்டு கேரம்போர்டினைத் தூக்கி கிணற்றில் போட்டுவிட்டார்.

எதற்காக அப்படிச் செய்தார். என்ன நடந்தது என்று எவருக்கும் தெரியவில்லை. ஆனால் அதன்பிறகு அவர் கேரம் விளையாடவேயில்லை. அதைப் பற்றி யாராவது பேசினாலும் கோபம் கொள்ள ஆரம்பித்தார்.

சூதாட்டத்தில் தான் இப்படி நடக்கும் என்பார்கள். சூதில் மட்டுமில்லை. தனக்கு விருப்பமான விஷயம் எதிலும் ஆழ்ந்து ஈடுபட ஆரம்பித்துவிட்டால் பின்பு அதைக் கைவிடுவது எளிதானதில்லை. இந்த நண்பருக்குக் கேரம் விளையாடுவது பொழுதுபோக்கிற்கானது என மறந்து போய்விட்டது.

மற்றவர்களைப் பற்றி அவர் பொருட்படுத்தவேயில்லை. தனது வெற்றியை மிகப்பெரிய விஷயமாகக் கருதினார். குடும்பத்தினரின் கஷ்டங்கள். கேலிப்பேச்சுகள் எதையும் அவர் கண்டுகொள்ளவில்லை. ஏன் இப்படி ஆனது. மனம் ஏன் திடீரென இத்தனை மூர்க்கமாகிவிடுகிறது. என ஒருவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை

இந்த ஒரு விஷயத்தைத் தவிர அவரது வழக்கமான செயல்பாடுகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இனிமையாகப் பேசினார். நடந்து கொண்டார்.

தீவிரமான வெறியோடு விளையாடிக் கொண்டிருந்தவர் எப்படி ஒரு புள்ளியில் அதிலிருந்து வெளியே வந்தார் என்பது குடும்பத்தினருக்குப் புதிராக இருந்தது. அவருக்கும் அது திடீர் ஞானமாகத் தோன்றியிருக்கக் கூடும்.

லாக்டவுன் நெருக்கடி ஒருவரை எந்த அளவு மூர்க்கம் கொள்ள வைக்கும் என்பதற்கு இவரே ஒரு உதாரணம்.

இரண்டு நாட்களுக்கு முன்பாக லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான பெர்னான்டோ ஸோரன்டினோ. (Fernando Sorrentino) எழுதிய The Horn Player சிறுகதையை வாசித்தேன். இதே பித்து நிலையின் மாற்று வடிவம் போல அந்தக் கதை எழுதப்பட்டிருந்தது. வாசிக்க வாசிக்க என் நண்பரின் முகமே கண்ணில் வந்து கொண்டிருந்தது.

வங்கி ஒன்றில் வேலை செய்யும் ஊழியர் ஒருவருக்குத் திடீரென ஹார்ன் இசைக்கருவியை வாசிப்பதில் ஆர்வம் உண்டாகிறது. ஆரம்பத்தில் அவர் தட்டுத்தடுமாறி வாசிக்கிறார். குளியல் அறையில் யாரும் அறியாமல் வாசித்துக் கொண்டிருக்கிறார். மெல்ல அந்தப் பழக்கம் தீவிரமடைய ஆரம்பிக்கிறது. பக்கத்து வீட்டுக்காரரைப் பற்றிய கவலையின்றி அவர் சப்தமாக ஹார்ன் வாசிக்கிறார். பகலிரவாக வாசிக்கிறார். ஞாயிறு வெளியே கூடச் செல்வதில்லை. மனைவி தொல்லை தாங்கமுடியாமல் காதில் பஞ்சு அடைத்துக் கொள்கிறாள். எங்கே சென்றாலும் ஹார்ன்னை உடன் கொண்டு செல்லுகிறார்.

ஒரு நாள் அலுவலகத்திற்கு இசைக்கருவியைக் கொண்டு செல்லும் அவர் ஓய்வு நேரத்தில் தனியே வாசிக்க ஆரம்பிக்கிறார். தன்னை மறந்து அதிகச் சப்தமாக அவர் வாசிக்கிறார். கழிப்பறை வாசலில் அலுவலகமே திரண்டு நிற்கிறது. மேலாளர் அவரைக் கோவித்துக் கொள்கிறார். ஆனால் தான் ஒரு தவறும் செய்யவில்லை. ஹார்ன் வாசிப்பது தனது விடுதலை உணர்வின் வெளிப்பாடு என்பது போலவே நினைக்கிறார்.

அலுவலக ஊழியர்கள் கேலி செய்கிறார்கள். அதை அவர் கண்டுகொள்ளவில்லை. அலுவலகத்திற்கு இனி ஹார்ன் கொண்டு வரக்கூடாது என்று எச்சரிக்கப்படுகிறார். இதனால் அடிக்கடி ஏதாவது ஒரு பொய்க் காரணத்தைச் சொல்லிக் கொண்டு வீட்டுக்கு ஒடி ஹார்ன் வாசிக்கத் துவங்குகிறார். கணவரின் இந்த விபரீத செயலைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவரது மனைவி அவரை விட்டு விலகிப் போய்விடுகிறாள்.

ஒரு நாள் அவரது வங்கியில் கடன் கேட்டு ஒரு வணிகர் வருகிறார். அவரது பேச்சு வங்கி ஊழியருக்கு எரிச்சலூட்டுகிறது. தன்னுடைய வீட்டிற்கு அவசரமாகப் போய் ஹார்ன் எடுத்து வருகிறார். அந்த மனிதரின் முகத்திற்கு எதிராக ஹார்ன் வாசிக்கிறார். அது ஒரு எச்சரிக்கை போல , மிரட்டல் போல, எதிர்ப்புணர்வு போல அமைகிறது. அலுவலகம் ஒன்று திரண்டு தடுத்தபோதும் அவர் இசைப்பதை நிறுத்தவில்லை. அவரது வாசிப்பின் வேகம் அதிகமாகிறது

மேனேஜர் அவர் மீது பாய்ந்து ஹார்ன் இசைக்கருவியைப் பிடுங்கமுயற்சிக்கிறார். ஊழியர் விலகிக் கொள்ளவே மேலாளர் கீழே விழுந்து அடிபடுகிறார். தான் செய்யும் காரியத்தின் விபரீதத்தைப் புரிந்து கொள்ளாமல் ஹார்ன் வாசித்தபடியே இருக்கிறார். முடிவில் அவரது வேலை போகிறது. தனக்கு விருப்பமான ஹார்னுடன் வெளியேறுகிறார்

அப்போது தான் தான் ஒரு மனச்சுழலில் சிக்கிக் கொண்டிருப்பது அவருக்குப் புரிகிறது. ஹார்னை தூக்கி எறிகிறார். அவரது எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடுகிறது.

இந்தக் கதையில் வரும் நிகழ்வுகள் அபத்தமாகத் தோன்றினாலும் மனிதர்கள் அறிந்தே இப்படியான பித்துக் கொள்கிறார்கள் எனத் தோன்றுகிறது

என் நண்பர் கேரம் விளையாடி போது ஏற்பட்ட தீவிர ஈடுபாடும் இந்த ஹார்ன் இசைப்பவரின் செயலும் ஒன்று தான். லாக்டவுன் நண்பரைச் செயலற்றவராக மாற்றியிருந்தது. அலுவலகம், அதிகாரம், பரபரப்பு என இருந்தவருக்கு அந்த உலகம் தன்னை விட்டு பறிக்கப்பட்டதும் விளையாட்டில் தனது அதிகாரத்தை, வேகத்தைக் காட்டத் துவங்கிவிட்டார்.

இதே நெருக்கடி தான் வங்கி ஊழியருக்குக் கதையில் நடக்கிறது. அவர் வங்கி வேலையில் சலிப்படைந்து போயிருக்கிறார். வாடிக்கையாளர்கள் இல்லாத மதிய நேரங்களில் வங்கி ஊழியர்கள் வெட்டி அரட்டை அடிக்கிறார்கள். வம்புப் பேச்சு பேசுகிறார்கள் என்று எரிச்சல் அடைகிறார். ஆனால் அவர்களுடன் தான் வேலை செய்ய வேண்டும். அதிலிருந்து தப்பவே அவர் ஹார்ன் இசைக்க ஆரம்பிக்கிறார். அவர் ஒரு இசைக்கலைஞரில்லை. ஆனால் அவருக்கு ஒரு புதிய வெளிப்பாடு தேவைப்படுகிறது. அதை ஹார்ன் பூர்த்தி செய்துவிட்டது

ஹார்ன் வாசிப்பவர் வேலை போன காரணத்தால் இசையிலிருந்து விலகிப்போகிறார். என் நண்பருக்கோ தானே அது நடந்துவிட்டது. கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணீர் ஒரு நிலையில் ஆவியாகி மறைந்துவிடுவது போன்ற நிலையது

இந்தக் கதையை வாசிக்கும் ஒருவருக்கு இப்படி எல்லாம் நடக்குமா. மிகை கற்பனை என்று தான் தோன்றக்கூடும். ஆனால் இந்த லாக்டவுன் கால வாழ்க்கையானது இது இயல்பான வெளிப்பாடு தான் என அடையாளம் காட்டிவிட்டது.

பொருளாதார நெருக்கடிகள் ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் இது போன்ற புதிய மனநெருக்கடிகளை லாக்டவுன் காலத்தில் பலரும் சந்தித்திருக்கிறார்கள்.

சிலர் ஒரு நாளில் ஏழெட்டு முறை சாப்பிட்டிருக்கிறார்கள். சிலர் அதிகமான நேரம் உடற்பயிற்சி செய்து கைகால் வலி ஏற்பட்டுச் சிகிச்சை எடுத்திருக்கிறார்கள். சிலருக்கு இரவில் உறக்கம் வரவேயில்லை. சிலர் ஒரு நாளில் ஐந்து சினிமா பார்த்திருக்கிறார்கள். ஒன்றிரண்டு பேர் புதிய கலைகளைக் கற்றுக் கொள்ள முயன்று உடனிருப்பவர்களின் பொறுமையைச் சோதித்திருக்கிறார்கள். தோட்டவேலைகள். மீன் வளர்ப்பது, பொம்மை செய்வது, சமைக்கக் கற்றுக் கொள்வது, என ஏதேதோ வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். வெளியுலகம் என்பது எத்தனை ஆயிரம் பற்சக்கரங்கள் கொண்டது என்பதை ஊரடங்கு காலத்தில் தான் முழுமையாக அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது

நெருக்கடி காலங்களில் மனிதர்கள் ஏன் விசித்திரமாக நடந்துகொள்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளப் பெர்னான்டோ ஸோரன்டினோவின் கதை உதவுகிறது.

சூதாட்டக்கூடத்தில் அறிந்தே தஸ்தாயெவ்ஸ்கி தோற்றிருக்கிறார். வெளியே மனைவி தனக்காகக் காத்திருக்கிறாள் என்று உணர்ந்த போதும் அவரால் வெளியே போக முடியவில்லை. சூது அவரை இழுத்துக் கொண்டிருந்தது. வங்கி ஊழியர் தன் சந்தோஷத்தைக் கண்டறிகிறார். அதை நீடிக்க விரும்புகிறார். உலகம் அதைப்பற்றி என்ன நினைக்கிறது எனத் தஸ்தாயெவ்ஸ்கிக்கோ, வங்கி ஊழியருக்கோ, என் நண்பருக்கோ முக்கியமில்லை. காரணம் அவர்கள் தனியுலகில் சஞ்சரிக்கிறார்கள். விடுபட்ட பிறகே அதன் அபத்தத்தை உணருகிறார்கள். இழப்பை நினைத்து வருந்துகிறார்கள்.

இலக்கியமே இந்தப் புதிரான மனநிலையை அவிழ்த்துக்காட்டுகிறது. உலகிற்குப் புரிய வைக்கிறது.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 21, 2021 00:12

January 20, 2021

வாழ்க்கை பொன்னிறமாகயில்லை

பெங்களூருவிலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கோலார் தங்கவயல். KGF எனப்படும் கோலார் தங்கவயலின் வரலாற்றை விளக்கும் ஆவணப்படமான After the gold பார்த்தேன். Youtubeல் இப்படியான அபூர்வமான படங்களும் இருக்கின்றன. தேடிப்பார்க்கிறவர் குறைவு. இந்த ஆவணப்படத்தை ஜானகி நாயர் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு. ஆர்.வி.ரமணி. மிக முக்கியமான ஆவணப்படமிது.

KGF திரைப்படத்தில் கோலார் தங்கவயல் அடிமைகளின் உலகமாகச் சித்தரிக்கப்பட்டது. அந்தப் படத்திற்கு நிஜவரலாற்றிற்கும் சம்பந்தமில்லை. அது ஒரு கற்பனைக் கதை. ஆனால் ஜானகி நாயரின் ஆவணப்படம் கோலார் தங்க வயல் எப்படி உருவானது என்பதில் துவங்கி அங்கே வேலைக்காகச் சென்ற தமிழ் மக்கள் எவ்வளவு இன்னல்களை அனுபவித்தார்கள். கோலாரின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு உருவானது என்பதை விரிவாக, முறையான சான்றுகளுடன் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.

சுரங்கத்தினுள் செல்லும் தொழிலாளர்களுடன் கேமிரா கூடவே பயணிக்கிறது. தங்க சுரத்தினுள் அவர்கள் வேலை செய்யும் விதம். அவர்களின் குடியிருப்பு. முப்பது நாற்பது ஆண்டுகள் வேலை செய்து ஓய்வு பெற்றவர்களின் அனுபவங்கள். தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள். தலித் மக்கள் சந்தித்த சாதிக் கொடுமைகள். புத்த சங்கம் உருவான விதம். திராவிட இயக்கம் வேரூன்றியது. அங்கே நடைபெற்ற ஸ்ட்ரைக். இன்று கோலார் கைவிடப்பட்ட நிலையிலுள்ள அவலம் என ஒட்டுமொத்தமான சித்திரம் ஒன்றை ஆவணப்படம் அளிக்கிறது.

1800 ஆங்கிலேயர் கோலாரைக் கைப்பற்றிய போது பழைய மாரிக்குப்பம் பகுதி இளைஞர்களைச் சேர்த்துக்கொண்டு தங்கச்சுரங்க வேலைகளை ஆரம்பித்தார்கள். தங்கம் கிடைப்பது உறுதியானதும் சுரங்கம் தோண்டும் வேலைக்காக வட ஆற்காடு, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர் பகுதியிலிருந்த தலித் மக்களை அழைத்துக் கொண்டு போனார்கள். தமிழகத்திலிருந்து மட்டுமின்றி ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்திலிருந்தும் பெருவாரியான மக்கள் வரவழைக்கப்பட்டார்கள். இவர்கள் சுரங்கத்திற்கு அருகிலேயே முகாம் அமைத்துத் தங்க வைத்துச் சுரங்கப்பணியில் ஈடுபத்தபட்டார்கள். பின்பு தட்டி வீடுகள் எனப்படும் சிறிய குடியிருப்புகள் உருவாகின.

கோலார் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்துகளில் இறந்தவர்கள் பற்றிய பதிவேட்டில் உள்ள தகவல்களை ஒரு காட்சியில் காட்டுகிறார்கள். கண்ணீர் வரவழைக்கும் காட்சியது. நாலாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சுரங்க விபத்தில் இறந்து போயிருக்கிறார்கள். தூசியும் வெடிமருந்து புகையும் ஒன்று சேர்ந்து தொழிலாளர்களின் நுரையீரலைப் பாதித்த காரணத்தால் பலரும் காசநோய் வந்து இறந்து போயிருக்கிறார்கள்.

கொத்தடிமைகளைப் போல இவர்களைப் பிரிட்டிஷ் அரசு நடத்தியிருக்கிறது. உழைப்பிற்கு ஏற்ப ஊதியம் கேட்டுப் போராடி சங்கம் அமைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகச் சம்பள உயர்வு பெற்றிருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தோழர்களின் நேர்காணல் கோலாரின் போராட்ட வரலாற்றைச் சொல்கிறது

கோலாரில் ஜான் டெய்லர் அண்ட் சன்ஸ் ஆங்கிலேய நிறுவனம்தான் ஆரம்பத்தில் சுரங்கம் தோண்டத் தொடங்கியது. அடிப்படை வசதிகள் இன்றித் தொழிலாளர்கள் சுரங்க பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். சுரங்க விபத்தில் இறந்தவர்களின் முகத்தைக் கூடப் பார்க்கமுடியாது. பெட்டியில் அடைத்துக் கொண்டுவந்து புதைத்துவிடுவார்கள் என்று ஒருவர் நேர்காணலில் குறிப்பிடுகிறார்.

ராபர்ட்சன்பேட், ஆண்டர்சன்பேட் என்ற ஆங்கிலேய அதிகாரிகளின் பெயரால் அங்கே குடியிருப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன. வெள்ளைக்கார அதிகாரிகளுக்கான கோல்ஃப் கோர்ஸ், டென்னிஸ் கோர்ட், கிளப், பார்கள் மற்றும் மாளிகைகள் உருவாக்கப்பட்டன. அவர்களின் வழிபாட்டிற்காகத் தேவாலயம் ஒன்றும் உருவாக்கப்பட்டிருக்கிறது

இன்னொரு புறம் சாதிக் கொடுமையால் அவதிப்பட்ட மக்களை மீட்கப் பௌத்த சங்கம் இயங்கியிருக்கிறது. இவர்கள் உதவியால் அயோத்திதாசர் கொண்டு வந்த தமிழன் இதழ் பற்றியும் அதில் வெளியான கட்டுரைகள் குறித்தும் ஆவணப்படம் விரிவாக விளக்குகிறது

1929 வரை சுரங்கத் தொழிலாளர்களுக்குப் பொழுது போக்கு வசதிகள் எதுவும் கிடையாது. ஆனால் வெள்ளைக்காரர்கள் தங்களுக்கான கிளப்பில் உல்லாசமாகக் குடித்து நடனமாடிக் கொண்டிருந்தார்கள். இந்தநிலையில் மக்கள் தலைவர் பூசாமி முயற்சியால், 1930 இல் நியூ இம்பீரியல் ஹாலை ஆங்கிலேயர்களிடமிருந்து குத்தகைக்கு எடுத்துத் தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. குத்தகையை நீடிக்க ஆங்கிலேய நிர்வாகம் மறுத்த காரணத்தால் அங்கே ஜுபிலி ஹால்’ என்ற புதிய திரையரங்கே கட்டியிருக்கிறார்கள். நந்தனார் திரைப்படம் தலித் மக்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ளது. அதைத் திரையிட அனுமதிக்கமாட்டோம் என மக்கள் போராடி அந்தப் படத்தைத் திரையிடாமல் தடுத்திருக்கிறார்கள். அதைப் பற்றிய பதிவும் இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

கோவிந்தன் என்ற தொழிற்சங்க தலைவரின் மகள் காலப்போக்கில் கோலார் எவ்வாறு மாறிவிட்டது என்பதை பற்றி அழகாக பேசியிருக்கிறார். கோலாரில் தனது தந்தை இன்றும் எவ்வளவு நேசிக்கப்படுகிறார், நினைவுகூரப்படுகிறார் என்பதைப் பற்றி உணர்ச்சிப்பூர்வமாக பேசியிருக்கிறார் பேசுகிறார்கே.ஜி.எஃப் இல் முதல் இடதுசாரி தொழிற்சங்கத்தை ஏற்பாடு செய்வதில் கோவிந்தன் முக்கிய பங்கு வகித்தார். அதைத் தொடர்ந்து. தொழிற்சங்கங்களை ஒழுங்கமைக்கத் தொடங்கிய முதல் இளம் தலைவர் வாசன் ஆவார், பின்னர் அவருடன் கோவிந்தன் மற்றும் எம். சி. நரசிம்மன் ஆகியோர் இணைந்து செயல்பட்டார்கள். அவர்கள் சிவப்பு முக்கோணம் என்று அடையாளப்படுத்தபட்டார்கள். இவர்களின் முயற்சியால் தான் சுரங்கத் தொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் உரிமைகளையும் கிடைத்தன.வருங்கால வைப்பு நிதி, டிஏ மற்றும் பிற போன்ற சலுகைகளுக்கான கோரிக்கையை வலியுறுத்தி கேஜிஎஃப் வரலாற்றில் 78 நாட்கள் நீண்ட வேலைநிறுத்தம் நடைபெற்றது.

கோலாரிலுள்ள கல்வி நிறுவனங்கள். வழிபாட்டு ஸ்தலங்கள். கல்லூரியில் படிப்பவர்களின் எதிர்கால வாழ்க்கை குறித்த கவலைகள், மார்வாடிகள் எப்படிக் கோலாருக்கு வந்தார்கள். வட்டிக்கடைகள். வணிக நிறுவனங்கள் எவ்வாறு உருவாகின. இந்திய அரசு இந்தச் சுரங்கத்தை ஏற்று நடத்தத் துவங்கிய பிறகு உருவான மாற்றங்கள். எனக் கோலார் தங்கவயலின் அகபுற விஷயங்களை அழுத்தமாகப் படம் பதிவு செய்திருக்கிறது.

தங்கம் எடுப்பதற்கான தயாரிப்புச் செலவினங்கள் அதிகமான காரணத்தாலும் 2001ல் சுரங்கத்தில் தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டன. 140 ஆண்டுக்கால சுரங்கப்பணி அத்தோடு முடிவிற்கு வந்தது.

இன்று மலைமலையாகக் குவித்துக் கிடக்கும் குப்பைகளுக்குள் நிலக்கரி தேடிப் பொறுக்குகிறார்கள். மணல்துகளில் கலந்துள்ள தங்கத்தை அலசி எடுக்கிறார்கள். சுரங்கம் மூடப்பட்ட காரணத்தால் பெருவாரியான தமிழர்கள் பிழைப்பைத் தேடி பெங்களூருக்குக் குடிபெயர்ந்தார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோலார் தங்கவயல் டவுன்ஷிப்பிற்குப் போயிருந்தேன். இன்றைய அதன் வாழ்க்கை கடந்தகாலத்திலிருந்து மாறுபட்டது. கோலார் பற்றி எழுதப்பட்ட புத்தகங்களைப் படித்திருக்கிறேன். அதில் கிடைக்காத அனுபவம் இந்த ஆவணப்படத்தில் கிடைக்கிறது. அந்த வகையில் இந்த ஆவணப்படம் கோலார் குறித்த ஒட்டுமொத்தமான ஒரு பார்வையை உருவாக்கிவிடுகிறது என்பேன்.

என் நண்பர் வேலூர் லிங்கம் கோலாரில் வசித்தவர். தன் பால்ய நாட்களைக் கோலாரில் கழித்தவர். அது குறித்து நிறையச் சொல்லியிருக்கிறார். இந்த ஆவணப்படம் பார்த்த போது அவர் தனது கோலார் வாழ்க்கை நினைவுகளைப் பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியது.

•••

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 20, 2021 01:12

January 19, 2021

காலைக்குறிப்புகள்- 27 மணலில் வரைந்த ஓவியம்

பிக்காஸோவை பற்றி ரே பிராட்பரி ( Ray bradbury) ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். அதன் பெயர் In a Season of Calm Weather. பாப்லோ பிக்காஸோ ஓவியங்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த பிராட்பரி அவரை முக்கியக் கதாபாத்திரமாக்கி இக் கதையை எழுதியிருக்கிறார்.

ஜார்ஜ் ஸ்மித் என்ற அமெரிக்கன் தன் மனைவியுடன் பிரான்சிலுள்ள கடற்கரை ஒன்றுக்கு விடுமுறைக்குச் செல்கிறான். ஸ்மித் பிக்காஸோவின் தீவிர ரசிகன். பிக்காஸோவை ஒவியவுலகின் கடவுளாக நினைப்பவன். அவர்கள் விடுமுறைக்குச் சென்றிருந்த கடற்கரைக்குச் சில மைல் தொலைவில் பிக்காஸோ தங்கியிருக்கிறார் என்ற செய்தியை கேள்விப்பட்ட ஸ்மித் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறான்.

எப்படியாவது ஐந்தாயிரம் டாலர் பணம் சேர்த்து அதைக் கொண்டு போய்ப் பிக்காஸோ கையில் கொடுத்து அவருக்கு விருப்பமான எதையாவது வரைந்து வாங்கிக் கொண்டுவிட வேண்டும் என்று கனவு காணுகிறான் ஸ்மித்

மனைவியுடன் கடற்கரையில் இருக்கும் போது இதே கடற்கரையில் எங்கோ ஒரு தொலைவில் பிக்காஸோவும் இருக்கிறார் என்ற நினைப்பு அவனை மேலும் மகிழ்ச்சிப்படுத்துகிறது. எப்படியாவது அவரை ஒருமுறை சந்தித்துவிட முடியாதா என்று ஏங்குகிறான். இதைப் புரிந்து கொண்ட அவனது மனைவி அதெல்லாம் சாத்தியமற்ற விஷயம். வந்த இடத்தில் சுகமாகக் கடலில் நீந்தி மகிழ்வோம் என்கிறாள்.

பிக்காஸோவின் கண்கள் வழியாகவே அந்தக் கடற்கரையை, சூரியனை, மலர்களை, கடற்கரையோர வசிப்பிடங்களை ஸ்மித் காணுகிறான். அவை பிக்காஸோவின் வண்ணங்களால் ஒளிர்கின்றன. தான் பிக்காஸோவின் ஓவிய உலகினுள் நுழைந்து திரிவது போலவே உணருகிறான்.

கடலில் அவனைக் குளிக்கச் சொல்லிவிட்டு மனைவி விடுதி அறைக்குத் திரும்பிப் போகிறாள். தனியே மணலில் திரியும் ஸ்மித் தொலைவில் ஒரு மனிதனைக் காணுகிறான். அந்த மனிதன் மணலில் புதைந்துகிடந்த ஐஸ்கிரீம் குச்சி ஒன்றை எடுத்து மணலில் படம் வரைய ஆரம்பிக்கிறான். ஆசையாக, சிறுவர்கள் விளையாடுவது போலத் தன்னை மறந்து ஒவியம் வரைகிறான். கிரேக்கச் சிங்கங்கள், மத்திய தரைக்கடல் ஆடுகள், தங்கம் நிறம் கொண்ட கன்னிப்பெண்கள், மனிதமுகமும் குதிரை உடலும் கொண்ட தேவதைகள். மலர்களை வாறி இறைத்தபடியே ஓடும் குழந்தைகள். கொம்புடைய குதிரைகள்., என வசீகரமான தோற்றங்கள் உருவாகின்றன. திடீரென மண்ணில் முளைத்துவிட்ட உருவங்கள் போல உயிரோட்டமாக இருந்தன.

தொலைவில் நின்றபடியே அதைக் கவனிக்கும் ஸ்மித்திற்கு அது பிக்காஸோ தான் என்று தெரிகிறது. தான் சந்திக்க விரும்பிய பிக்காஸோ தன் கண்முன்னே மணலில் வியப்பூட்டும் ஓவியத்தை வரைந்து கொண்டிருக்கிறார். அங்கே அவர்கள் இருவரையும் தவிர எவருமேயில்லை. இந்தத் தருணம் கடவுள் தனக்குத் தந்த பரிசு என நினைக்கிறான் ஸ்மித்.

பிக்காஸோ தான் படம் வரைவதை ஒருவர் பார்த்துக் கொண்டிருப்பதை உணரவேயில்லை. திடீரென அவர் யாரோ தன்னைப் பார்ப்பதை அறிந்தவர் போலப் புன்முறுவல் செய்கிறார். அவருடன் கைகுலுக்க வேண்டும் எனப் பரபரப்புக் கொள்கிறான். ஆனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறான். பிக்காஸோ அந்த ஓவியத்தை அப்படியே விட்டு நடக்கத் துவங்குகிறார்

மணலில் வரையப்பட்ட ஓவியத்தை முன்பின்னுமாக நடந்து ஸ்மித் ரசிக்கிறான். அறைக்கு ஓடிப்போய் ஒரு கேமிரா எடுத்து வந்து அதைப் புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று துடிக்கிறான். அதற்குள் சூரியன் மறைந்துவிடுமே என்று கவலையாக இருக்கிறது. மணலில் வரையப்பட்ட ஓவியத்தை எப்படிக் காப்பாற்றுவது. அந்த மணலை அள்ளி விழுங்கிவிட வேண்டியது தானா.

மாபெரும் கலைஞன் வரைந்த மணல் ஓவியத்தை என்ன செய்வது எனத் தெரியவில்லை. மெல்லச் சூரியன் மறைந்து கொண்டுவருகிறது. கண்ணிலிருந்து அந்த ஒவியம் மறைவதற்குள் முழுமையாக, ஆசை தீர அதைப் பார்த்து அனுபவித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அது தான் ஒரே தீர்வு

முழுமையாக ஓவியத்தை ரசிக்கிறான். இருள் கவிகிறது. மெல்ல தன் அறைக்குத் திரும்புகிறான். அவன் நீண்ட நேரம் கடலில் குளித்துத் திரும்பியிருக்கிறான் என நினைத்துக் கொண்டு மனைவி விசாரிக்கிறாள். அவளிடம் தூரத்தில் அலைகள் வரும் சப்தம் கேட்கிறதா என்கிறான். அவளுக்கு அந்தச் சப்தம் கேட்கவில்லை.

அலை அந்த ஒவியத்தை அழிக்கப்போகிறது என்பதை ஸ்மித் உணர்ந்து கொள்வதுடன் கதை முடிகிறது

உண்மையில் இந்த நிகழ்வு ஸ்மித்தின் கற்பனையில் நிகழுகிறதா. அல்லது நிஜம் தானா. பிக்காஸோவை அவன் பார்த்தது உண்மையா. சிறுவனைப் போலப் பிக்காஸோ மணலில் ஓவியம் வரைவது அவனது கற்பனையா. இல்லை நிஜம் தானா.

நிஜம் என்றாலும் கற்பனை என்றாலும் பிக்காஸோ கடற்கரை மணலில் ஓவியம் வரையும் காட்சி அற்புதமாகவுள்ளது. அவர் வரைந்த ஓவியத்தைப் படிக்கும் நாம் கண்ணில் காணமுடிகிறது. எவரும் ஒரு போதும் சொந்தம் கொள்ள முடியாத அந்த மணல் ஓவியம் இயற்கையின் அங்கம் போல மாறிவிடுகிறது

பிக்காஸோவை நேரில் சந்திக்கும் போது ஸ்மித் ஏன் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. பிக்காஸோ அந்தக் கடற்கரையில் ஒரு விளையாட்டு சிறுவன் போல நடந்து கொள்கிறார். அவர் யாரோ வீசி எறிந்து போன ஐஸ் குச்சியில் படம் வரைகிறார். அது தான் பெருங்கலைஞனின் எளிமை. அசலான வெளிப்பாடு.

தூரிகைகள் இன்றி ஐஸ்குச்சியில் வரைந்தாலும் அவரால் அற்புதமான உருவங்களை வரைந்துவிட முடிகிறது. தான் வரைந்த உருவங்களை அவர் ரசிக்கிறார். கடலுக்குச் சமர்ப்பணம் செய்துவிட்டது போல அந்த ஓவியத்தை அப்படியே விட்டுப் போகிறார்

பிக்காஸோவை பற்றிய The Mystery of Picasso படத்தில் கேமிராவின் முன்பாகப் பிக்காஸோ படம் வரைகிறார். கோடுகள் கொஞ்சம் கொஞ்சமாக உயிர்பெறுகின்றன. அபூர்வமான அனுபவத்தைத் தரும் படமது.

ஸ்மித் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்துப் பிக்காஸோவின் சிறிய ஓவியம் ஒன்றை விலைக்கு வாங்கக் கனவு காணுகிறான். இங்கோ அவன் கண்முன்னால் பெரிய ஓவியம் மண்ணில் மலர்ந்திருக்கிறது. ஆனால் அதைச் சொந்தம் கொண்டாட முடியாது.

மறக்கமுடியாத பொன்னிற ஒளி வீசும் அந்தியை நாம் எப்படிச் சொந்தம் கொண்டாட முடியாதோ. பூரண நிலவின் வெண்ணிற பொழிவை எப்படி நமக்கு மட்டுமானது எனக் கைப்பற்றி வைத்துக் கொள்ள முடியாதோ அந்த இடத்திற்கு ஒரு கலைப்படைப்பும் சென்றுவிடுகிறது.

இந்த இடத்தில் கலை இயற்கையென மாறுகிறது. அது தான் ரே பிராட்பரியின் சிறப்பு. எழுத்தின் வழியே இது போன்ற அபூர்வமான தருணத்தை உருவாக்கியதே இந்தக் கதையின் தனித்துவம்.

பிக்காஸோ வரைந்த ஓவியம் அலையால் அழிக்கபட்டுவிட்டாலும் ஸ்மித்தின் மனதில் அழிவற்ற ஓவியமாக எப்போதும் இருக்கப்போகிறது. அது தான் அவனுக்குக் கிடைத்த பரிசு. இந்த ஒவியத்தை வரைந்த பிக்காஸோவும் அதைப் பார்த்த ஸ்மித்தும் தவிர உலகில் வேறு யாரும் அதைப் அறிய மாட்டார்கள். ஸ்மித் அந்த வகையில் அதிர்ஷ்டசாலி.

ஒரு வேளை மொத்த கதையும் பிக்காஸோவின் நினைவில் தனித்திருக்கும் ஸ்மித் கற்பனை செய்ததாகவும் இருக்கக் கூடும். அதுவும் சாத்தியம் தானே. அவன் ஒரு கனவுலகவாசி என்பது கதையின் முதல்பகுதியிலே சொல்லப்படுகிறது. அவன் புற உலகை பிக்காஸோவின் படைப்பாகவே கருதுகிறான்.

இந்தக் கதையின் தலைப்பு வேர்ட்ஸ்வொர்த்தின் கவிதை ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. வேர்ட்ஸ்வொர்த் அழகினைப் பற்றி மிகச்சிறப்பாக எழுதியவர். அவரது கவிதையின் ஒரு வரியைத் தலைப்பாக்கியது பொருத்தமானது.

இந்தக் கதை 1957ம் ஆண்டு, பிளேபாய் பத்திரிகையில் வெளியானது. கதைக்குக் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு காரணமாக 90 நிமிஷங்கள் ஓடக்கூடிய படமாகவும் இது உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்திற்கு ரே பிராட்பரியே திரைக்கதையை எழுதியிருக்கிறார்.

ஸ்மித்தைப் போலப் பிக்காஸோவை காணுவதற்காக நாட்கணக்கில் அவர் வீட்டின் முன்பாகக் காத்துக்கிடந்தவர்களைப் பற்றியும் பிக்காஸோவின் காலணியைத் திருடிப் போன திருடனைப் பற்றியும் வாசித்திருக்கிறேன். இந்தக் கதையில் அதிக உரையாடல்கள் இல்லை. குறிப்பாகப் பிக்காஸோவும் ஸ்மித்தும் பேசிக் கொள்வதேயில்லை. இந்த மௌனம் தான் இளம்படைப்பாளி கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாகும்

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 19, 2021 03:42

January 18, 2021

நூலக மனிதர்கள் 31 அஞ்சல் அட்டை மனிதர்

அவர் எப்போது பொதுநூலகத்திற்கு வரும்போதும் கையில் அஞ்சல் அட்டைகளுடன் தான் வருவார். எழுபது வயதிருக்கும். நடிகர் எஸ்.வி.சுப்பையாவின் சாயல் கொண்டவர். உயரமும் அவரைப் போலவே இருக்கும். உடைந்த மூக்குக்கண்ணாடியை நூல் கொண்டு கட்டியிருப்பார். ரப்பர் செருப்புகள். பெட்ரோல் பங்க் ஒன்றில் கணக்குவழக்கு பார்த்துக் கொண்டிருந்தார். அந்தக் காலத்துப் பி.ஏ.. கதர் வேஷ்டி சட்டை தான் எப்போதும் அணிந்திருப்பார்.

நாளிதழ்கள் பகுதியைத் தவிர வேறு எங்கும் போக மாட்டார். தமிழ் ஆங்கில நாளிதழ்கள் அத்தனையும் உட்கார்ந்து படிப்பார். படித்து முடித்தபிறகு செய்தித் தாளில் வெளியான விஷயங்களில் உள்ள பிழைகள். தகவல் தவறுகள். அல்லது மாற்றுக்கருத்துகளை உட்கார்ந்து எழுதுவார். பின்பு அவற்றைத் தபால் அலுவலகத்தில் கொண்டு போய்ச் சேர்ப்பார். இது அவரது தினசரி பழக்கம்

ஆங்கில நாளிதழ்களில் அவரது கடிதங்கள் லெட்டர்ஸ் டு எடிட்டர் பகுதியில் வெளியாகியிருக்கின்றன. தமிழ் நாளிதழ்கள் அவரைக் கண்டுகொள்ளவேயில்லை. அவருக்கு அதைப்பற்றிக் கவலை கிடையாது.

நியூஸ் பேப்பருக்குப் பொறுப்புணர்வு வேண்டும். தன்னைப் போல அதன் தவறுகளைக் கண்டுபிடித்துச் சுட்டிக்காட்டும் ஒருவன் இருக்கிறான் என்ற பயம் தேவை. இல்லாவிட்டால் அவர்கள் தொடர்ந்து தவறு செய்தபடியே இருப்பார்கள் என்பார்

நாளிதழ்களில் எப்படி அவர் இத்தனை தவறுகளைக் கண்டறிகிறார். எப்படி இவ்வளவு வேகமாக. கோபமாகப் பதில் எழுதிப் போடுகிறார் என்று வியப்பாக இருக்கும். ஆங்கில நாளிதழில் வெளியான அவரது கடிதங்களைச் சில நேரம் நூலகரிடம் காட்டுவதுண்டு.

“நம்ம லைப்ரரி பற்றி நல்லதா ஏதாவது எழுதுங்கள்“ என்பார் நூலகர்

அவரிடம் அதைக் கேட்டுக் கொண்டதாகப் பாவனைக் கூட இருக்காது. ஒருமுறை நாளிதழில் பாபு ஜகஜீவன் ராம் புகைப்படத்திற்குப் பதிலாக வேறு ஒருவரின் புகைப்படம் அச்சாகியிருந்தது. அதைக் கதர் வேஷ்டி அணிந்தவரால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. சப்தமாக இடியட் என்று கத்தினார்

அதைக்கேட்ட வாசகர்கள் சிலர் திரும்பிப் பார்த்தார்கள். அந்த நியூஸ் பேப்பரை கையில் எடுத்துக் கொண்டு நூலகரிடம் வந்து யாரு பாபு ஜெகஜீவன்ராம்னு கூடத் தெரியாதவன் எதுக்கு நியூஸ் போடுகிறான் என்று கோபமாகப் பொறிந்து தள்ளினார்.

நூலகரும் தலையைத் தலையை ஆட்டி கேட்டுக் கொண்டிருந்தார். மறுநாள் அவரது கடிதம் பேப்பரில் வெளியாகியிருந்தது. கூடவே பத்திரிக்கை தவறுக்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டிருந்தது.

ஏன் ஒருவர் நாளிதழ்களின் மனசாட்சி போல நடந்து கொள்கிறார் என்று எவருக்கும் புரியவில்லை. அவரோ அது தன் கடமை என்பது போல நடந்து கொண்டார். ஒருமுறை கூட அவரது புகைப்படம் எந்த நியூஸ் பேப்பரிலும் வெளியானதில்லை. ஆகவே அவர் தான் கடிதங்கள் எழுதுகிறார் என்று எவருக்கும் தெரியாது.

பத்திரிக்கை செய்திகளுக்குக் கொதித்துப் போகிற நபர் உள்ளூர் நிகழ்வுகள் எதையும் கண்டு கொள்ளமாட்டார். நூலகத்திற்கு வரும் சாலை மோசமாக இருப்பது பற்றியோ, நகரில் அதிகமாகி வரும் தண்ணீர் தட்டுபாடு பற்றியே ஒரு முறை கூட அவர் புகார் சொன்னதில்லை. அவரது உலகம் அச்சிடப்பட்ட செய்திகள். அதன் தவறுகள் மறுப்புகள் மட்டுமே.

தினசரி இதற்காகக் காசு செலவு செய்து தபால் போடுகிறாரே என்று நூலகர் கேட்டதற்கு “அது பேப்பர் படிக்கிற நம்ம கடமை. நியூஸ் பேப்பரை எல்லோரும் புரட்டத்தான் செய்றாங்க. நான் ஒருத்தன் தான் முழுசா படிக்கிறேன். எனக்குப் புத்தகம் படிக்கிறதில் ஆர்வம் கிடையாது. நியூஸ் படிக்கிறதில் தான் ஆர்வம். என்கிட்ட பணமிருந்தால் இந்தியாவில் வெளியாகிற எல்லா இங்கிலீஷ் பேப்பரையும் வாங்கிப் படிப்பேன்“ என்றார். அவர் சொல்லும் வரை அப்படியான இங்கிலீஷ் பேப்பர்கள் வெளியாகிறது என்று கூட எவருக்கும் தெரியாது.

ஒரு நாள் சர்வே எடுப்பதற்காகத் தமிழ் நாளிதழைச் சார்ந்த சிலர் நூலகத்திற்கு வந்திருந்தார்கள். அவர்களிடம் நூலகர் கதர்வேஷ்டிகாரரைப் பற்றிச் சொல்லி அவர் கீழே படித்துக் கொண்டிருப்பார். அவரிடம் பேசுங்கள் என்று அனுப்பினார். அவரைத் தேடி வந்து சர்வே எடுப்பவர்கள் தங்கள் பத்திரிக்கை பற்றிக் கேட்டார்கள்

“உங்க பத்திரிக்கை ஒரு குப்பை. அதுல வர்ற நியூஸ்ல பாதித் தப்பு. சொன்னா கோவிச்சிகிட கூடாது. உங்க பேப்பரை பஜ்ஜி சாப்பிடத் தான் யூஸ் பண்ணமுடியும்

அவர்கள் முகம் வெளிறிப்போய்விட்டது. இப்படி ஒருவர் பதில் சொல்லுவார் என்று எதிர்பார்க்கவில்லை.

சர்வே எடுப்பவர்களில் ஒருவர் கோபத்தைக் காட்டிக் கொள்ளாமல் “எங்க பத்திரிக்கையில் என்ன மாற்றம் கொண்டுவரணும்னு நினைக்குறீங்க“ எனக்கேட்டார்

அவ்வளவு தான் மறுநிமிடம் ஆங்கிலச் செய்தித்தாளை எடுத்து வைத்துக் கொண்டு அதில் செய்தி எப்படித் தலைப்பிடப்பட்டிருக்கிறது. எந்தச் செய்தியை எப்படி வெளியிடுகிறார்கள். எவ்வளவு சுருக்கமாக, தெளிவாக எழுதியிருக்கிறார்கள் என்று விரிவாகப் பாடம் எடுப்பது போல விளக்க ஆரம்பித்துவிட்டார்

அவர்கள் உறைந்து போய்க் கேட்டுக் கொண்டிருந்தார்கள். செய்திகளை வெளியிடும் முறையைப் பற்றிச் சொன்னதுடன் ஆங்கிலச் செய்தித்தாளில் எந்த வாக்கியத்தில் என்ன தவறு உள்ளது. அதற்கு மாற்றாக எப்படி எழுதியிருக்க வேண்டும் என்பதைச் சொல்லிக் கொண்டிருந்தார்.

சர்வே எடுக்க வந்தவர்கள் பேயறைந்தது போல வெளியேறிப் போனார்கள். நூலகரிடம் வந்து சொன்னார்

“நல்லா நாக்கை பிடுங்கிகிடுற மாதிரி கேட்டு அனுப்பி வச்சேன். பேப்பர் படிக்கிறவன் என்ன முட்டாளா“

“தமிழ் பேப்பர்ல ஏன் உங்க லெட்டர்ஸ் எதையும் போடுறதுல்ல“ என்று கேட்டார் நூலகர்

“தப்பு சொன்னா யாரு கேட்டுகிடுவா. நிறைய நாள் போன் பண்ணிக் கூடச் சொல்லியிருக்கிறேன். ஒருத்தனும் கேட்டுகிடலை. தலைவர்களோட பெயர்களைச் சுருக்கி வெளியிடுறது அவமானம். வெளிநாட்டுப் பிரதமர், ஜனாதிபதி பேரைத் தப்பு தப்பான உச்சரிப்பில் வேற எழுதி வைக்கிறான். அதை என்னாலே சகிக்க முடியலை. “

அதைக்கேட்டு நூலகர் சிரித்தார்.

ஆற்றாமையோடு கதர் வேஷ்டி அணிந்தவர் சொன்னார்

“ஐம்பது வருஷமாகப் பேப்பர் படிச்சிட்டு இருக்கேன். வர வர பேப்பர்ல போட்டிருக்கிற செய்தியை நம்ப முடியலை. முன்னாடி எல்லாம் பேப்பர்ல செய்தி வந்துட்டா அது தான் நிஜம். கோட்டுக்குக் கொண்டு போய் அதைச் சாட்சியாகக் காட்டலாம். இப்போ எந்த நியூஸையும் நம்ப முடியலை. நேத்து நம்ம ஊர்ல ஒரு கட்சிக்கூட்டம் நடத்துச்சி. ஐம்பது பேர் வந்திருந்தாங்க. அதைப் பேப்பர்ல அலை கடல் எனக் கூட்டம்னு போடுறான். வெளியூர்ல படிக்கிறவன் நம்பத்தானே செய்வான். கட்சி பேப்பர்ல போட்டா கூட அவன் பேப்பர் போடுறானு விட்ருவேன். ஆனா பொதுவான பேப்பர்காரன் போடுறான். அதை நான் ஏத்துகிட மாட்டேன். பேப்பர்ல வெளியிடுறானோ, இல்லையோ என் கோபத்தை ஒரு லெட்டரா எழுதி போட்டுக்கிட்டு தான் இருப்பேன்“.

“இத்தனை வருஷம் லெட்டர் போட்டு இருக்கீங்க. எப்போதாவது இதைப் பாராட்டி பத்திரிக்கை உங்களுக்கு லெட்டர் போட்டு இருக்கா“

“ஒரு பயலும் அப்படிப் போடலை. தேடிவந்து உதைக்காமல் விட்டு வைத்திருக்கிறானே. அதை நினைத்து சந்தோஷப்பட்டுகிட வேண்டியது தான்“

அதைக் கேட்டு நூலகர் சப்தமாகச் சிரித்தார். தவறுகளைச் சுட்டிக்காட்டும் போது வாசகரின் பொறுப்புணர்வு வெளிப்படுகிறது என்று ஏன் ஒருவருக்கும் தெரிவதில்லை . தன் பொறுப்பற்ற செயலை ஒருவர் கண்டிக்கிறார் என்ற புரிதல் கூடவா இல்லாமல் போய்விடும்.

இன்றுள்ளது போல அன்று இத்தனை தொலைக்காட்சி சேனல்கள் கிடையாது. செய்திகளின் பேராறு ஓடவில்லை. முக்கியச் செய்திகள் வெளியாவதற்கே ஒரு நாள் தேவைப்பட்டது. செய்தித் தாளில் ஒருவரின் படம் இடம்பெற்றுவிட்டால் அது பெரிய விஷயமாகக் கருதப்பட்டது. கதர் வேஷ்டி அணிந்த மனிதர் போல மனசாட்சியின் குரலை ஒலிப்பவர்கள் ஊருக்கு ஒருசிலர் இருந்தார்கள்.

ஆனால் இன்று எது நிஜம் எது பொய் எனப் பிரித்து அறியமுடியாதபடி செய்திகள் பெருகிவிட்டன.

ஒரு காலத்தில் புகைப்படம் பொய் சொல்லாது என்றார்கள் ,நம் காலத்திலோ புகைப்படமும் பொய் சொல்லும் வீடியோவும் பொய் சொல்லும் என நிரூபிக்கபட்டுவிட்டது.

இப்போது நாம் செய்திகளை நம்புவது ஊசலாட்டத்தில் இருக்கிறது. சந்தேகத்துடன் தான் செய்திகளைக் கேட்கிறோம். பின்தொடருகிறோம். செய்திகளால் உருவான அச்சம் நம்மை நிம்மதியற்றுச் செய்துவிடுகிறது.

என்றோ நூலகத்திற்கு அஞ்சல் அட்டையுடன் வந்த அந்த மனிதரைப் பற்றி இன்றைக்கு நினைக்கையில் வியப்பானவராகத் தோன்றுகிறார்.

நம் காலத்தில் உண்மையின் குரலை ஒலிக்கும் மனிதர்கள் குறைந்து கொண்டேவருகிறார்கள்.

கண்களை அகலத் திறக்கச் சொல்லிவிட்டு நாக்கை ஒடுக்கிவிட்டது நம் காலம்.

அது தான் பெருந்துயரம்.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 18, 2021 22:10

காலைக்குறிப்புகள் -26 தற்செயலின் வரைபடம்

ரஷ்யக் கவிஞர் அன்னா அக்மதோவாவின் குறிப்பு ஒன்றில் ஒரு நிகழ்வு விவரிக்கபடுகிறது.

ஒரு நாள் தோழியுடன் நடந்து சென்று கொண்டிருக்கும் போது ஒரு பாலத்தின் அருகில் ஏதோ யோசனையுடன் நின்றுவிட்டார். தோழி அவரிடம் என்ன யோசனை என்று கேட்டதற்குக் கவிஞரும் தன் தோழியுமான மரினா ஸ்வெட்டேவா எப்படியிருக்கிறாள் என்று விசாரித்திருக்கிறார். உடனே தோழி ஆச்சரியமாக, இதே இடத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு மெரினா உன்னைப் பற்றி விசாரித்தாள். ஒரே இடத்தில் நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்டது ஆச்சரியமாக இருக்கிறது. இது எப்படிச் சாத்தியம் எனக் கேட்டாள்.

அன்னாவிற்கும் அது ஆச்சரியமாகவும் புதிராகவுமே இருந்தது. அந்தப் பாலத்தின் அருகே வரும்வரை தான் மரினாவைப் பற்றி நினைக்கவில்லை என்றும், அப் பாலம் அவளை நினைவுபடுத்திவிட்டது என்றும் சொன்னார்.

கிட்டதட்ட இது போன்ற பதிலை தான் மரினாவும் சொன்னாள். ஒரு பாலம் ஏன் கவிஞரை நினைவுபடுத்துகிறது என்று கேட்டார் தோழி.

கவிஞர்கள் பாலத்தைப் போன்றவர்கள் . பாலம் தனிமையானது. பாலம் கடந்து செல்லும் வழி. அங்கே யாரும் தங்கிவிடுவதில்லை. சாலையை விடவும் உயர்ந்து நின்ற போதும் சாலையின் சந்தோஷம் பாலத்திற்குக் கிடையாது என்றார் அன்னா அக்மதேவா.

அன்னாவின் வாழ்க்கையும் மரினாவின் வாழ்க்கையும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றதே. அன்னா அக்மதோவா மரினாவைப் பற்றி நலம் விசாரித்த ஒன்றிரண்டு நாட்களில் மரினா தற்கொலை செய்து கொண்டு இறந்து போனாள்.

மரினா ஸ்வேடேவா 1922 இல் ரஷ்யாவை விட்டு வெளியேறி 1939 இல் மாஸ்கோவுக்குத் திரும்புவதற்கு முன்பு பாரிஸ், பெர்லின் மற்றும் ப்ராக் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்தார்.அவரது கணவர் செர்ஜி எஃப்ரான் மற்றும் மகள் அரியட்னா எஃப்ரான் ஆகியோர் உளவு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்; அவரது கணவர் தேசத்துரோகி என அறிவிக்கபட்டு தூக்கிலிடப்பட்டார்.

மெரினாவும் அவரது பதினாறு வயது மகனும் வெளியேறி எலாபுகாவுக்குப் புறப்பட்டனர். அவளிடம் பணம் இல்லை, வேலை இல்லை, கவிதை எழுதும் உத்வேகம் அவளை விட்டு வெளியேறியிருந்தது. பேரழிவிற்குள்ளான, ஏமாற்றமடைந்த, தனிமையில் இருந்த ஸ்வெட்டேவாவுக்கு வாழ்வின் மீதான பிடிப்பேயில்லை. அவள் ஆகஸ்ட் 31, 1941 அன்று தற்கொலை செய்து கொண்டாள். இதன் சில தினங்களுக்கு முன்பாகத் தான் அன்னா அவளைப் பற்றி விசாரித்தது நடந்தது.

அன்னா அக்மதோவா ரஷ்யக் கவிஞர். நிக்கோலாய் குமிலியோவ்வை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அது முறையான திருமணமில்லை. அவர்கள் சேர்ந்து வாழ்ந்தார்கள். குமிலேவ் தொடர்ந்து பயணம் செய்கிறவர். ஆகவே பெரும்பாலான நேரங்களில் தனித்தனியாக வாழ்ந்தனர்; குமிலியேவ் பலமுறை ஆப்பிரிக்காவுக்குப் பயணம் செய்திருக்கிறார். அவர்களின் காதல் உறவினை முறித்துக் கொள்வதாகக் குமிலியேவிடம் சொன்னபோது அவர் அவளுக்குச் சந்தோஷம் தருவதாக இருந்தால் அந்தப் பிரிவினை தான் ஏற்றுக் கொள்வதாகச் சொன்னார்.

எதிர்ப்புரட்சியாளர் என்ற தவறான குற்றச்சாட்டில் 1921 இல் குமிலியோவ் சுட்டுக் கொல்லப்பட்டார். அது அன்னாவினை நிலைகுலையச் செய்தது. அதன் சில வருஷங்களுக்குப் பிறகு அன்னாவின் மகன் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டான். அவனைச் சிறையிலிருந்து மீட்பதற்காக அன்னா போராடினார்.

ஒரே வாழ்க்கையைத் தான் இரண்டு பெண் கவிகளும் வாழ்ந்திருக்கிறார்களோ என்று தோன்றியது. அன்னா தன் குறிப்பேட்டில் பதிவு செய்துள்ள சம்பவத்தைத் தற்செயல் எனக் கருத வேண்டியதில்லை. தற்செயலாகத் தோன்றினாலும் அது ஒருவகை நினைவூட்டல். அந்தப் பாலத்தின் முன்னால் அவர்கள் ஒருவரையொருவர் நினைத்துக் கொள்வது இணைபிரியாத நேசத்தின் அடையாளம்.

ஞானக்கூத்தன் பாலம் குறித்து ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அதில்

கல்லும் கலவையும் கொண்டு

கரணையால் தடவித் தடவி

சாவிப் பொத்தல் மாதிரித் தெரியும்

ஆட்கள் சிலரால் கட்டப்பட்டாலும்

கட்டிடம் இல்லை பாலம்.

முன்னாளெல்லாம் பாலம்

தியானித்திருக்கும் நீருக்கு மேலே

இந்நாளெல்லாம் பாலம்…

நிலத்திலும் உண்டு அதன் முதுகெலும்பு.

என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. நீருக்கு மேல் பாலம் தியானித்திருக்கும் என்பது முக்கியமான வரி. தண்ணீரைக் கடக்கத்தான் அந்தக் காலத்தில் பாலம் அமைத்தார்கள். இன்று நிலத்திலும் பாலம் தேவைப்படுகிறது. உருவாக்கப்படுகிறது.  அந்த வகையில் நவீன வாழ்க்கையின் அடையாளம் பாலம்.

சொந்த வாழ்வின் துயரங்களுக்குள் அமிழ்ந்து கிடந்த இரண்டு பெண்கவிகளும் அது குறித்துப் புலம்பவில்லை. சுய இரக்கம் தேடிக் கொள்ளவில்லை. அவர்களின் கவிதை எரிகல்லைப் போல வேகமும் ஒளியும் கொண்டிருக்கிறது.

இரண்டு பெண்கவிகளும் ரஷ்யாவிலிருந்து வெளியேறி வாழ்ந்தவர்கள். புகலிடத்தில் தங்கள் கவிதைகளை எழுதினார்கள். வாழும் போது அவர்களுக்கான கௌரவமும் புகழும் கிடைக்கவில்லை.

மாஸ்கோவில் ஏற்பட்ட ஒரு பஞ்சத்தின் போது, மரினா தனது மகளுக்கு உணவளிக்கக் குடும்ப ஆதரவோ பணமோ இல்லாமல் ஒரு அனாதை இல்லத்தில் தங்க வைத்தார், மகள் அங்கே பட்டினியால் இறந்து போனாள்.

அன்னா அக்மதோவா, ஒசிப் மண்டேல்ஸ்டாம், மரினா ஸ்வெட்டேவா, போரிஸ் பாஸ்டெர்னாக் ஆகிய நால்வரும் நெருக்கமான நண்பர்கள். நால்வர் அணி என்றே அவர்களைக் குறிப்பிடுகிறார்கள். கவிதையே அவர்களை ஒன்று சேர்த்தது.

தற்செயல்களின் பின்னுள்ள புதிரைத் தான் கவிஞர்கள் எழுதுகிறார்கள். கவிதையில் தற்செயல் என்பது விந்தையானது. அன்றாட வாழ்க்கையில் தற்செயல் பெரிய விஷயமில்லை.முக்கியத்துவம் தரப்படுவதுமில்லை. ஆனால் தற்செயல்களின் ஒழுங்கினையும், வெளிப்பாட்டினையும் கவிஞர்கள் ஆராய்கிறார்கள். தற்செயலின் வரைபடத்தை அவர்கள் உருவாக்குகிறார்கள்.

நாம் ஒருவரை எப்போது நினைத்துக் கொள்கிறோம் என்பது முக்கியமானது. நினைவில் சிலர் குறிப்பிட்ட வயதில். குறிப்பிட்ட தோற்றத்தில் உறைந்து விடுகிறார்கள். காலம் அவர்களுக்கு நரையும் நோவும் தந்து முதுமையின் பள்ளத்தாக்கில் உலவச் செய்யக்கூடும். ஆனால் அவர்கள் எவர் மனதிலோ அழியா இளமையுடன் இருக்கிறார்கள்

இளவரசன் ஜெங்கி என்பவன் அப்படி உலகின் நினைவில் என்றும் இளமையானவனாக, காதலின் அடையாளமாக இருக்க விரும்புகிறான். அவனுக்கும் வயதாகிறது. பார்வை மங்குகிறது. அழகான பெண்ணை அடையாளம் காணமுடியவில்லை. ஆனால் இந்த உண்மை உலகிற்குத் தெரியக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறான். மலைப்பகுதியில் ஒதுங்கி வாழுகிறான். மார்க்ரெட் யூரிசனாரினின் கதையில் ஜெங்கியின் நினைவில் அவனை மிகவும் நேசித்த பெண்ணுக்கு இடமேயில்லை. அப்படியானது தான் வாழ்க்கை.

தற்செயல்களின் புத்தகத்தை எவராவது உருவாக்க நினைத்தால் அது முடிவில்லாமல் வளர்ந்து கொண்டேயிருக்கும்.

1916ல் முதன்முறையாக அன்னாவின் கவிதைகளை வாசித்தார் மரினா. அந்தக் கவிதைகள் மிகவும் பிடித்திருந்தன. ஆகவே அவரைச் சந்திக்கப் பீட்டர்ஸ்பெர்க்கிற்கு வருகை தந்தார். ஆனால் அன்னா அப்போது ஊரில்லை. அந்த ஏமாற்றத்தை மரினாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மரினா இது பற்றி ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். தான் எழுதிய கவிதைகளை அன்னாவிற்கு அனுப்பிக் கருத்துக் கேட்பது மரினாவின் வழக்கம். அன்னா தன் கைப்பையில் எப்போதும் மரினாவின் கவிதைகளை வைத்திருப்பார். அடிக்கடி எடுத்து படித்துக் கொள்வார். மரினா தன் கவிதைகளை அன்னா அக்மதோவாவிற்கு சமர்பணம் செய்திருக்கிறார்.

சுழிக்காற்றில் சிக்கிக் கொண்டதைப் போல வாழ்க்கையில் எதிர்பாராத இழப்புகள், துயரங்களுக்குள் சிக்கித் தவித்தார் அன்னா. அதிகாரத்தின் மீதான பயம். தனிமை. நண்பர்களின் மரணம் இவை அவரை மிகுந்த துயரம் கொள்ளச் செய்தன. கவிதை ஒன்று தான் அவரது ஒரே ஆறுதலாக இருந்தது. கவிதையின் வழியாகவே அவர் தனது மீட்சியை அடைத்தார்.

அன்னாவின் சிறிய குறிப்பு அவரைப்பற்றியும் மரினாவை பற்றியுமான பல்வேறு நினைவுகளைக் கொந்தளிக்கச் செய்துவிட்டது. தற்செயலின் மீதான வியப்பு குறையவேயில்லை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 18, 2021 03:08

January 17, 2021

கவிஞனின் நாட்கள்

அனிதா தேசாயின் புகழ்பெற்ற நாவல் In Custody. இதனை மெர்சண்ட் ஐவரி தயாரிப்பில் திரைப்படமாக்கியிருக்கிறார்கள். முக்கிய வேஷத்தில் சசிகபூர், ஓம்பூரி, ஷப்னா ஆஸ்மி நடித்திருக்கிறார்கள். புகழ்பெற்ற உருது கவிஞர் நூர் ஷாஜெஹானாபாடியை சந்தித்து ஒரு நேர்காணலை மேற்கொள்ளத் தேவன் சர்மா முயல்வதே மையக்கரு.

மிர்பூரில் உள்ள ராம் லால் கல்லூரியில் இந்தி இலக்கியம் கற்பிக்கும் ஆசிரியரான தேவனுக்கு உருதுக் கவிதைகள் மீது மிகுந்த ஈடுபாடு. வீட்டிலிருந்து தேவன் கல்லூரிக்குக் கிளம்புவதில் படம் ஆரம்பமாகிறது. அவர் மனைவி பள்ளிக்குச் செல்லும் மகனை அனுப்பி வைப்பதில் பரபரப்பாக இருக்கிறார். கல்லூரிக்கு நேரமாகிவிட்டது என்று தன் அவசரத்தைக் காட்டுகிறார் தேவன். டீக்குடிக்கக் கூட அவருக்கு நேரமில்லை.

உருது கவிஞராக வேண்டும் என்ற தனது வாழ்க்கை லட்சியங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மனைவி, மகன் எனச் சொந்த வாழ்க்கையின் நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கிறார் தேவன்.

கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் அவரைக் கேலி செய்கிறார்கள். வகுப்பறையில் கூச்சல் போடுகிறார்கள். தேவனும் நன்றாகக் கவிதைகள் எழுதக்கூடியவர். அவரது சக ஆசிரியர், ஏன் உருது மொழியில் கவிதைகள் எழுதுகிறார் எனக் கேட்கிறார். தேவன் உருது மொழியின் சிறப்புகளை எடுத்துச் சொல்கிறார். கவித்துவப் பாரம்பரியம் கொண்ட உருது மொழி இன்று கைவிடப்பட்டு அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என ஆதங்கப்படுகிறார்.

உருதுக் கவிதைகளைத் தன் மனதிலிருந்து அழகாகப் பாடுகிறார் தேவன். அவரது தந்தை வழியாக அவருக்கு உருதுக் கவிதைகள் அறிமுகமாகியிருந்தன. இந்த நிலையில் தற்செயலாக அவரைத் தேடி வரும் பால்ய நண்பன் முராத் தனது இலக்கிய இதழில் உருது கவிதைகளுக்கெனச் சிறப்பிதழ் கொண்டுவர இருப்பதால் நூர் சாகிப்பின் நேர்காணல் ஒன்றைச் செய்து தரும்படி கேட்டுக் கொள்கிறான்.

தனது ஆதர்சக் கவிஞரைச் சந்திக்கும் பாக்கியம் கிடைக்கிறதே எனத் தேவன் உடனே ஒத்துக்கொள்கிறார். நூர் சாகிப்பிற்கு ஒரு கடிதம் தருகிறான் முராத். அதைக் கையில் எடுத்துக் கொண்டு போபாலில் வசிக்கும் கவிஞர் நூர் ஷாஜெஹானாபாடியைச் சந்திக்கப் புறப்படுகிறார் தேவன்.

அவரது மனைவி ஏதோ புதிய வேலைக்கு முயற்சி செய்வதற்குத் தான் போபால் போகிறார் போல என நினைத்துக் கேள்வி கேட்கிறாள். அதற்குத் தேவன் கோவித்துக் கொள்கிறார்.

போபாலின் குறுகலான, பழமையான வீதிகளுக்குள் நடந்து பழைய கால வீடுகளைக் கடந்து ஆங்காங்கே விசாரித்து விசாரித்துக் கவிஞர் நூர் ஷாஜெஹானாபாடி வீட்டினை அடையாளம் காணுகிறார். சிதைந்து போன பழைய காலத்து வீடு. அழுக்காகவும் மோசமாகவும் உள்ள அந்த வீடே அவர் இன்று இருக்கும் நிலையின் அடையாளம் போலிருக்கிறது. வீட்டுக்கதவைத் தட்டுகிறார்.

நூர் சாகிப்பின் முதல் மனைவி அவரை விருப்பமில்லாமல் வரவேற்கிறார். நூர் சாகிப் இளம்பெண் ஒருத்தியைச் சேர்த்துக் கொண்டு வாழுவதும் அவள் வழியாக ஒரு குழந்தையைப் பெற்றிருப்பதும் தெரிய வருகிறது. உடைந்து கிடந்த படிகளின் வழியே ஏறி நூர் சாகிப் அறைக்குப் போகிறார். அந்த அறை இருண்டு போயிருக்கிறது.

பருத்த உடலுடன் வீங்கிய கண்களுடன் போதை கலையாமல் நூர் சாகிப் படுக்கையில் கிடக்கிறார். தான் கொண்டுவந்த கடிதத்தை அவரிடம் நீட்டுகிறார் தேவன்.

நூர் சாகிப்பிற்குப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் என்றாலே பிடிக்காது. ஆகவே எரிச்சலுடன் தேவனைத் துரத்திவிட முயலுகிறார். தேவன் தான் அவரது கவிதைகளை ஆழ்ந்து படித்தவன் எனச் சொல்லி சில கவிதைகளை மனதிலிருந்து பாடிக்காட்டுகிறார். அவரது குரலின் வசீகரத்தில் மயங்கி நூர் அவரது வேண்டுகோளை ஏற்றுக் கொள்கிறார்.

அன்றாடம் ஒரு இளங்கவிஞர்கள் பலரைக் கூட்டி வைத்துக் கொண்டு குடிப்பதும் பிரியாணி சாப்பிடுவதும் கவிதைகள் பாடுவதுமாக நூர் சாகிப்பின் வாழ்க்கை இருப்பதை நேரடியாகக் காணுகிறார் தேவன். உண்மையில் நூர் சாகிப்பைத் தேடி வருகிறவர்கள் குடிப்பதற்காக மட்டுமே வருகிற ஒட்டுண்ணிகள் என்பதைத் தேவன் புரிந்து கொள்கிறார்.

இது போலவே இரண்டாவது மனைவியின் கட்டுப்பாட்டில் தான் நூர் சாகிப் இருக்கிறார். அவள் வேண்டுமென்றே அவரை அவமானப்படுத்துகிறாள். அடிமை போல நடத்துகிறாள் என்பதையும் காணுகிறார்.

எவ்வளவு பெரிய கவிஞர். எவ்வளவு மோசமாக வீட்டில் நடத்தப்படுகிறார் என்று மனக்கஷ்டமடைகிறார். நேர்காணல் செய்வதற்கு இயலாத சூழலில் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகிறார் தேவன்.

சில நாட்களுக்குப் பிறகு தேவனுக்கு நூர் சாகிப்பிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது. தன்னை வந்து சந்திக்கும்படி எழுதியிருக்கிறார். இந்த முறை அவரைத் தேடிப் போகையில் நூர் சாகிப்பின் இளம் மனைவி கஜல் பாடல்களைப் பாடுவதைக் கேட்கிறார். அவள் நூர் சாகிப்பின் கவிதைகளைத் திருடி தனது கவிதை எனப் பெருமையாகப் பாடுகிறாள். கைதட்டு வாங்குகிறாள். நிறையப் பணமும் அவளுக்குக் கிடைக்கிறது. இதைக் கண்டு தேவன் கோவித்துக் கொள்ளும் போது தான் அந்தப் பெண்ணின் அழகில் மயங்கி ஏமாந்து போன விஷயத்தைச் சொல்கிறார் நூர் சாகிப்.

நேர்காணல் செய்வதற்கு நூர் சாகிப் ஒத்துக் கொள்ளவே அதை ஏன் வீடியோவாகப் பதிவு செய்து கொள்ளக்கூடாது என்ற யோசனை உருவாகிறது. புதிதாக ஒரு வீடியோ கேமிரா வாங்க பணம் தேடி அலைகிறார் தேவன்.

உருது விரிவுரையாளரான சித்திக் மூலம் அவரது கல்லூரியே உதவி செய்கிறது. ஆனால் அவர்கள் தந்த பணத்தில் டேப்ரிக்காடர் தான் வாங்க முடிகிறது. அதுவும் பழைய ரிக்காடர். அதை இயக்க ஒரு பையனையும் கடைக்காரர் அனுப்பி வைக்கிறார்.

நூர் சாகிப்பை நேர்காணல் செய்வதற்கும் அவரது குரலைப் பதிவு செய்வதற்கும் பணம் வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார் அவரது முதல் மனைவி. வேறுவழியின்றி அதற்குப் பணம் தேடி அலைகிறார் சித்திக் வழியே மறுபடியும் உதவி கிடைக்கிறது. அந்தப் பணத்தினை முதல் மனைவியிடம் கொடுக்கிறார்

அவள் தங்கள் குடியிருப்பிற்குப் பக்கத்திலுள்ள வேசையர் விடுதி ஒன்றில் ஒரு அறையை ஏற்பாடு செய்து அங்கே வைத்து நேர்காணல் எடுத்துக் கொள்ளும்படி செய்கிறாள்.

அங்கேயும் நூர்சாகிப்பின் அபிமானிகள் திரண்டு விடுகிறார்கள். குடியும் பிரியாணியுமாகக் கூத்தடிக்கிறார்கள். தேவன் நினைத்தது போல அவரை நேர்காணல் செய்யவோ, கவிதைகளை அவரது குரலில் பதிவு செய்யவோ இயலவில்லை. இடையில் டேப்ரிக்கார்டர் வேறு கோளாறு ஆகிவிடுகிறது. கடன்வாங்கிச் செய்த ஏற்பாடு இப்படி ஆகிவிட்டதே என நிலைகுலைந்து போகிறார் தேவன்.

இதற்கிடையில் உண்மையை அறிந்து கொண்ட இரண்டாவது மனைவி இம்தியாஸ் முதல் மனைவியோடு சண்டையிடுகிறாள். தன்னை ஏமாற்றிவிட்டதாகத் தேவன் மீது கோவித்துக் கொள்கிறாள். கல்லூரி நிர்வாகமும் தேவன் மீது கோபம் கொள்கிறது

வாழ்க்கை நெருக்கடிகள் ஒரு கவிஞனை எந்த அளவு ஒடுக்கி வைத்திருக்கிறது என்பதை உணருகிறார் தேவன். அவருக்கு நூர் சாகிப் மீது பரிதாபமும் வருத்தமும் ஏற்படுகிறது. முடிவில் நூர் சாகிப் தான் எழுதிய கவிதைகளைத் தேவனிடம் ஒப்படைத்துவிட்டு இறந்து போகிறார்.

ஒரு இளங்கவிஞனுக்கும் மூத்த கவிஞருக்குமான உறவும் அன்பும் படத்தில் அழகாக வெளிப்படுத்தப்படுகிறது. பணமும் புகழும் நிலையற்றவை என்பதை நூர் உணர்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவரது இளம்மனைவி இம்தியாஸ் இதற்காகவே அவரை ஒட்டிக் கொண்டிருக்கிறாள்.

கவிதையின் வழியே தான் என்றும் வாழக்கூடியவன். தன் மனதிலுள்ள கவிதைகளை உண்மையில் அதை நேசிக்கும் ஒருவர் முன்பு தான் வெளிப்படுத்துவேன் என்கிறார் நூர் சாகிப். அவரது உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு உற்ற தோழனாக மாறுகிறான் தேவன்.

நூர் சாகிப் தன் வீட்டில் புறாக்களை வளர்க்கிறார். அந்தப் புறாக்கள் அவரது தோளில் அமர்ந்து கொள்கின்றன. சுதந்திரம் மற்றும் கவிதையின் அடையாளம் போலவே புறா காட்டப்படுகிறது. அந்தப் புறாக்களைக் கடைசியில் இம்தியாஸ் கூண்டிலிருந்து பறக்கவிடுகிறாள். தன்னுடைய புறாக்கள் தன்னைவிட்டுப் போய்விட்ட பிறகு வாழ்க்கையில் இனி நம்பிக்கையில்லை என வருந்துகிறார் நூர் சாகிப்

தேவனும் நூர் சாகிப்பும் ஞானி ஒருவரின் அடக்க ஸ்தலத்திற்குத் தொழுகை செய்வதற்காகச் செல்லும் காட்சி மிக அழகானது . மெய்மறந்து அவர்கள் ஒன்றிணைகிறார்கள்.

இது போலவே உருது ஆசிரியரான சித்திக்கின் பழைய மாளிகை இடிக்கப்படும் காட்சியும் ஒரு குறியீடு போலவே இருக்கிறது.

ஒரு நாள் இரவில் தேவன் படுக்கையிலிருந்து எழுந்து கைம்பெண்கள் கையில் விளக்குடன் பிரார்த்தனைக்குச் செல்வதைக் காணுகிறார். அப்போது அவரது மனைவி அவரை ஆறுதல் படுத்தி உறங்க அழைத்துப் போகிறாள். நிர்கதியான அந்தப் பெண்களின் பிரார்த்தனையைப் போன்றதே தேவனின் ஈடுபாடும்.

இன்னொரு காட்சியில் குடித்து வாந்தி எடுத்து மயங்கிக் கிடக்கும் நூர் சாகிப்பைக் கண்டு அவரது இரண்டாம் மனைவி திட்டுகிறாள். அவர் கவிதை எழுதி வைத்திருந்த காகிதங்களை வாந்தியைத் துடைத்துப் போடுவதற்காகத் தேவனிடம் வீசி எறிகிறாள். இதில் தேவன் அதிர்ச்சி அடைகிறார்.

நூர் சாகிப்பின் தோற்றம் பிரெஞ்சு எழுத்தாளர் பால்சாக் போலவே இருக்கிறது. குடி, ருசியான சாப்பாடு. எழுத்து எனப் பால்சாக் போலவே நூரும் வாழுகிறார். பெயரும் புகழுமான தனது கடந்தகாலம் தன்னைவிட்டுப் போய்விட்டது என நூர் வருத்தமான குரலில் சொல்கிறார். குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் வாழ முடியாது என்பதே நிஜம். வயதும் நோயும் அவரை முடக்கிவிடுகின்றன.

Clear Light of Day நாவலிலும் அனிதா தேசாய் உருது கவிதைகளின் இன்றைய நிலையைப் பற்றி ஆதங்கமாகவே எழுதியிருக்கிறார். அதன் தொடர்ச்சி போலவே இந்தக் கதையிலும் மையக்கதாபாத்திரம் உருதுக் கவிஞராக உருவாக்கப்பட்டிருக்கிறது.

அனிதா தேசாய் தனது நேர்காணலில் “தான் வளர்ந்த பழைய டெல்லியில் இன்றும் உருதுக் கவிதைகள் ஓதப்படுவதைக் கேட்கிறேன். ஆனால் உருது மொழி பயிலுவது பொதுவெளியில் குறைந்து விட்டது. இந்திய பிரிவினை அதற்கு முக்கியக் காரணம். உருதுக் கவிதைகளுக்கென நீண்ட பாரம்பரியம் உள்ளது. மிகச்சிறந்த உருது கவிதைகளை வாசித்திருக்கிறேன்.

உருதுக் கவிதை ஆங்கிலத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அது கிளாசிக்கல் வகையைச் சேர்ந்தது, தூய்மையானது. நீங்கள் ஒரு புதுக்கவிதையை உருது மொழியில் எழுத இயலாது. அதன் பாரம்பரியத்தை. மரபைக் கைவிட்டு கவிதை எழுதுவதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். கவிதை கட்டாயம் மரபுக்குள் இருக்க வேண்டும். நாவலில் வரும் இமிதியாஸ் கவிதைகள் எழுதுகிறவள். அதை நூர் சாகிப் அங்கீகரிப்பதில்லை. அது காலமாற்றத்தின் அடையாளம்.

இந்தக் கதையும் உண்மை சம்பவம் ஒன்றின் பின்புலத்தில் தான் எழுதப்பட்டவை. நூர் சாகிப் எவரது பாதிப்பில் உருவாக்கப்பட்டார் என்ற உண்மையைக் கூற நான் விரும்பவில்லை. ஆனால் அந்த வாழ்க்கை நிஜமானது“. என்று சொல்கிறார் .

நாவலில் நூரின் மரணத்தைப் பற்றித் தேவன் கனவு காணுகிறார்.ஆனால் படத்தில் அது காட்சியாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது.

நூர் மற்றும் தேவன் இருவரும் சிறை வாழ்க்கை போலச் சிறிய வட்டத்திற்குள் வாழுகிறார்கள். தேவனின் மனைவியிடமும் எதிர்பார்ப்புகள், கனவுகள் இருக்கிறது. ஆனால் அதை அவள் அடக்கிக் கொள்கிறாள். இமிதியாஸ் வெளிப்படுத்துகிறாள். இயலாமையால் கோபம் கொள்கிறாள்.

கவிதை தான் தேவனின் ஒரே ஆறுதல். விடுதலை. சுதந்திர வெளி. ஆகவே அவர் நூரை தேடிச் செல்லும் காட்சிகளில் சந்தோஷமாக இருக்கிறார். இதையே தான் நூரும் வெளிப்படுத்துகிறார்

நூர் சாகிப்பாக நடித்துள்ள சசிகபூரும், தேவனாக நடித்துள்ள ஒம்பூரியும் இமிதியாஸாக நடித்துள்ள ஷப்னா ஆஸ்மியும் சிறப்பாக நடித்துள்ளார்கள். நூர் சாகிப் வீட்டிலுள்ள பாட்டி தனித்துவமான கதாபாத்திரம்.

ஒரு காட்சியில் நூர் சாகிப் தேவனிடம் உருதுக்கவிதைகளை இவ்வளவு நேசிக்கும் நீ ஏன் இந்தி ஆசிரியராக வேலை செய்கிறாய் என்று கேட்கிறார். அதற்குத் தயக்கத்துடன் தேவன், என் குடும்பத்திற்காக என்று பதில் சொல்கிறார். அந்தப் பதில் அவருக்கானது மட்டுமில்லை. நூரும் அப்படித் தான் வாழுகிறார்.

உருதுக் கவிஞரைப் பற்றிய படம் என்பதால் சிறப்பான இசை இடம்பெற்றிருக்கிறது. தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

நூரின் நோய்வாய்ப்பட்ட உடல் ஒரு குறியீடு போலவே காட்டப்படுகிறது. கனவிற்கும் யதார்த்தத்திற்கும் இடையில் அல்லாடுகிறார் தேவன். அவரைக் கல்லூரி ஆசிரியர்கள் புரிந்து கொள்ளவில்லை. குடும்பம் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் நூர் சாகிப் புரிந்து கொள்கிறார். ஒரு காட்சியில் சித்திக் அவன் ஒரு அதிர்ஷ்டசாலி என்கிறார். அந்த அதிர்ஷ்டம் கவிஞனுடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு. கவிதைகளின் பாதுகாவலான இருப்பதே தேவனிற்குக் கிடைத்த பரிசாகும்.

கவிஞனின் நாட்கள் கசப்பானவை. அவை கவிதைகளைப் போலக் காற்றில் பறக்ககூடியதாகயில்லை என்ற உண்மையைப் படம் அழுத்தமாகவே சொல்கிறது.

••

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 17, 2021 06:03

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.