S. Ramakrishnan's Blog, page 142
March 3, 2021
தீவிற்கு வரும் பறவை
புத்தக வாசிப்பாளர்களையும் இலக்கிய ஈடுபாட்டினையும் கொண்டாடும் திரைப்படங்கள் உலகெங்கும் வெளியாகியுள்ளன. ஹாலிவுட்டில் ஆண்டிற்கு ஒரு படம் இந்த வகைமையில் உருவாக்கபட்டு வெற்றியடைகிறது. இரண்டாயிர வருடப்பழமையான தமிழ் இலக்கியத்தில் அதன் முக்கிய நாவல்கள் காப்பியங்கள் இன்றும் திரைப்படமாக்கபடவில்லை. இந்த இலக்கியங்களைக் கொண்டாடுவதை வாழ்க்கையாகக் கொண்ட மனிதர்கள் பற்றியோ, இலக்கிய அமைப்புகள் பற்றியோ எவ்விதமான ஆவணப்பதிவுகளும் கிடையாது

இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆய்வுப்பணிக்காகத் தமிழகத்திலுள்ள இலக்கிய அமைப்புகளைத் தொகுக்க முற்பட்டேன். தொல்காப்பியம் திருக்குறள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், மணிமேகலை, போன்ற நூல்களைத் தொடர்ந்து பேசியும் விவாதித்தும் வரும் அமைப்புகள் நூற்றுக்கும் மேலிருக்கின்றன. பாரதி. பாரதிதாசன். பெயரில் நிறைய அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. நவீன இலக்கியத்தினைக் கூடி விவாதிக்கும் அமைப்புகளும் ஐம்பதுக்கும் மேலிருக்கின்றன. இவை மட்டுமின்றிக் கல்லூரி மற்றும் பல்கலைகழக அளவில் உள்ள இலக்கிய அமைப்புகள். நூலகத்தில் செயல்பட்டு வரும் வாசகர் வட்டம். திருவள்ளுவர் மன்றம், போன்றவையும் அறக்கட்டளைகள் மூலம் நடத்தப்படும் இலக்கிய நிகழ்வுகள். கருத்தரங்குகள் என அன்றாடம் ஏதாவது ஒரு இலக்கிய நிகழ்ச்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டேதானிருக்கின்றன. சனி ஞாயிறு என்றால் ஐந்தோ பத்தோ நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இப்படி ஆண்டு முழுவதும் இலக்கியம் பேசப்பட்டு வருவது தமிழ்நாட்டில் மட்டும் தான் நடக்கிறது என்பேன்.

இலக்கிய அமைப்புகளில் சில ஐம்பதாண்டுகள் நூறு ஆண்டுகள் பழமையானதாக இருக்கின்றன. அவர்கள் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். விருதளிக்கிறார்கள். இவர்களைப் பற்றிய முழுமையான பதிவுகள் நம்மிடமில்லை.
ஆனால் உலகம் முழுவதும் இலக்கிய அமைப்புகளின் செயல்பாடுகள் முறையாக ஆவணப்படுத்தபடுகின்றன. அது குறித்த நூல்களும், ஆவணப்படங்களும், திரைப்படங்களும் உருவாக்கப்படுகின்றன. அப்படியான ஒரு திரைப்படத்தை தான் நேற்று பார்த்தேன்.

The Guernsey Literary and Potato Peel Pie Society திரைப்படம் இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மன் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த கார்ன்சி தீவில் செயல்பட்டு வந்த ஒரு இலக்கிய அமைப்பின் கதையை விவரிக்கிறது.
மைக் நியூவெல் இயக்கிய டான் ரூஸ் மற்றும் டாம் பெசுச்சா ஆகியோரால் எழுதப்பட்ட இந்தத் திரைப்படம் ஒரு எழுத்தாளரின் வழியே கடந்தகால நிகழ்வுகளை விவரிக்கிறது.
1941 ஆம் ஆண்டில், கார்ன்சி தீவில் கதை துவங்குகிறது. அந்தத் தீவு, ஜெர்மன் ஆக்கிரமிப்பின் கீழுள்ளது. போர்காலம் என்பதால் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. ஒரு நாள் இரவு ஊரடங்கினை மீறியதற்காக நான்கு நண்பர்கள் ராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். அவர்களை ராணுவத்தினர் விசாரணை செய்யும் போது தாங்கள் ஒரு புக் கிளப்பை சேர்ந்தவர்கள். ஒன்று கூடி புத்தகம் பற்றி விவாதித்துவிட்டு வருவதாகச் சொல்கிறார்கள்.

உங்கள் புத்தக அமைப்பின் பெயரென்ன என்று கேட்கையில் மனதில் தோன்றிய ஒரு பெயரை சட்டெனச் சொல்கிறார்கள். அப்படி உருவானது தான் The Guernsey Literary and Potato Peel Pie Society . கைது செய்யப்படாமல் தவிர்ப்பதற்காக உருவாக்கபட்ட இந்த இலக்கிய அமைப்பு எப்படி வளர்ந்த்து என்பதைப் படம் விவரிக்கிறது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனவரி 1946 இல், எழுத்தாளர் ஜூலியட் ஆஷ்டன் அறிமுகமாகிறார் அவரது புதிய புத்தகம் அப்போது வெளியாகியிருக்கிறது. The Times Literary Supplement இதழுக்காக அவர் இலக்கியத்தின் நன்மைகள் குறித்து வாழ்வியல் கதைகள் எழுதி வருகிறார். இவரது கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்த Charles Lamb’s Essays of Elia மீது அபிமானம் கொண்ட டாவ்ஸி ஆடம்ஸிடமிருந்து அவளுக்கு ஒரு கடிதம் வருகிறது. அதில் தான் சார்ல்ஸ் லாம்ப்பின் இன்னொரு புத்தகத்தை வாங்க விரும்புவதாகவும் அது லண்டனில் எந்தப் புத்தக் கடையில் கிடைக்கும் என்று விசாரித்து எழுதப்பட்டிருக்கிறது. அந்தக் கடித்த்தில் வாரம் வெள்ளிக்கிழமை இரவு தங்கள் அமைப்பு ஒன்று கூடி படித்த புத்தகங்கள் பற்றி விவாதிப்பதாக டாவ்ஸி ஆடம்ஸ் எழுதியிருக்கிறார்.
இந்த இலக்கிய அமைப்பினை பற்றித் தெரிந்து கொள்ள ஜூலியட் ஆர்வம் காட்டுகிறாள். அத்தோடு டாவ்ஸி ஆடம்ஸ் கேட்டிருந்த புத்தகத்தை அவளே விலைக்கு வாங்கிப் பரிசாக அனுப்பி வைக்கிறாள். இதற்காக நன்றி தெரிவித்துப் பதில் கடிதம் எழுதுகிறான் டாவ்ஸி ஆடம்ஸ்.
கார்ன்சி என்பது பிரிட்டனின் நார்மண்டி கடற்கரையில் உள்ள சேனல் தீவுகளில் இரண்டாவது பெரியது ஆகும்.
கார்ன்சி தீவில் செயல்பட்டு வரும் புத்தக அமைப்பினை பற்றி எழுதுவதற்காக அந்தத் தீவிற்குப் பயணம் மேற்கொள்கிறார் ஜுலியட். இது அவளது பதிப்பாளருக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் அவன் ஏற்பாடுகளைச் செய்து தருகிறான். அவள் பயணம் துவங்கும் நாளில் மார்க் என்ற அமெரிக்கக் காதலன் அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகத் தெரிவிக்கிறான். அதை ஜுலியட் ஏற்றுக் கொள்கிறார்
கார்ன்சி தீவிற்கு வரும் ஜுலியட் அங்கே செயல்பட்டு வரும் புத்தக அமைப்பின் உறுப்பினர்களைச் சந்திக்கிறாள். தீவிற்கு வரும் புதிய பறவையை போலிருக்கிறது அவளது வருகை.

அவளை ஒரு நட்சத்திர எழுத்தாளர் போன்று நடத்துகிறார்கள். அங்கே டாவ்ஸி ஆடம்ஸ் மகளைச் சந்திக்கும் ஜுலியட் அவனுடன் ஒன்றாக அறைக்குத் திரும்புகிறாள். புத்தக அமைப்பினைப் பற்றி எழுதுவதை அமெலியா விரும்பவில்லை என்று அவளுக்குப் புதிராக இருக்கிறது
இந்நிலையில் இந்த அமைப்பினை உருவாக்கிய எலிசபெத் என்ற பெண் ஜெர்மானியர்களால் முகாமிற்குக் கொண்டு செல்லப்பட்ட விஷயத்தை ஜுலியட் அறிந்து கொள்கிறாள். அவளுக்கு என்ன நடந்த்து என்பதைப் பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறாள். எதிர்பாராத உண்மைகள் வெளிப்பட ஆரம்பிக்கின்றன. இதற்கிடையில் டாவ்ஸி ஆடம்ஸ் அந்தப் பெண்ணின் உண்மையான தந்தையில்லை என்பதும் அவளுக்குத் தெரிய வருகிறது.
The Guernsey Literary and Potato Peel Pie Society அமைப்பின் வரலாற்றை ஆராயத்துவங்கி ஜெர்மானிய ஆக்ரமிப்பின் போது நடைபெற்ற கசப்பான அனுபவங்களை, நினைவுகளை அறிந்து கொள்கிறாள். அவற்றை ஒரு நூலாக எழுத முற்படுகிறாள். இதற்கிடையில் தீவிற்கு வருகை தரும் காதலன் மார்க் அவள் திருமண நிச்சயதார்த்த மோதிரத்தை விரலில் அணிந்து கொள்ளவில்லை என்பதற்காகக் கோவித்துக் கொள்கிறான். அவள் மார்க்கை விட்டு விலகிப் போக ஆரம்பிக்கிறாள். அவள் அறிந்து கொண்ட உண்மைகளை அவளை எவ்விதமாகப் பாதித்தன என்பதைப் படம் அழகாக விவரிக்கிறது
படம் முடியும் போது நாம் உடனே சார்ல்ஸ் லாம்ப் கட்டுரைகளை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் உருவாகிறது. பள்ளி பாடப்புத்தகத்தில் லேம்ப்பின் கட்டுரைகளை நம்பில் பலரும் வாசித்திருப்போம். சிறந்த கட்டுரையாளர். நகைச்சுவையாக எழுதக்கூடியவர்
ஒரு சிறிய தீவில் உயிருக்குப் பயந்த சிலர் ஒன்றுகூடி நடத்தும் இலக்கிய அமைப்பு என்பது அவர்களுக்கான நம்பிக்கையின் வெளிச்சம் . புத்தக வாசிப்பு என்பது அவர்களுக்கான மீட்சி. வெள்ளிகிழமை இரவு தோறும் அவர்கள் ஒன்றுகூடுகிறார்கள். அது வெறும் சந்திப்பில்லை. மாறாகக் கூட்டு நம்பிக்கையின் அடையாளம்
இரண்டாம் உலகப்போரின் போது யூதர்களைக் கைது செய்து முகாமில் அடைத்து சித்ரவதை செய்தார்கள். அந்த நிலையிலும் சிலர் ரகசியமாக ஒன்று கூடி புத்தக வாசிப்பினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இரவில் நடக்கும் கதைவாசிப்பின் வழியே அவர்கள் உயிர்வாழ்வதற்கான நம்பிக்கையைப் பெற்றிருக்கிறார்கள்.
ஜூலியட் ஆஷ்டன் போரினால் பாதிக்கபட்டவள். அவளது பெற்றோர் போரில் மடிந்து போனார்கள். லண்டனின் உயர்தட்டு வாழ்க்கையினை வாழ்ந்து வரும் அவளுக்கு வரும் ஒரு கடிதம் அவள் வாழ்க்கையை மாற்றிவிடுகிறது. ஒத்தரசனை கொண்ட ஒருவரைப் புரிந்து கொள்ளும் ஆஷ்டன் அவனுக்காகத் தானே புத்தகத்தைத் தேடி வாங்குகிறாள். கார்ன்சி தீவிற்குச் செல்லும் அவள் ,
டாவ்ஸி ஆடம்ஸ் பற்றிய கற்பனையோடு செல்கிறாள். தனக்குத் திருமணம் நிச்சயமாகி விட்டதை அவள் மறைந்து கொள்கிறாள். டாவ்ஸி ஆடம்ஸ் அவளை வரவேற்கும் விதமும் பழகும் விதமும் மிக அழகாக உருவாக்கபட்டுள்ளது.
ஒவ்வொரு புத்தகமும் உண்மையில் ஒரு தீவே. அந்தத் தீவிற்குள் வாசகன் பயணம் செய்து புதிய மனிதர்களை அடையாளம் காணுகிறான். அவர்களின் கடந்தகாலத்தைப் புரிந்து கொள்கிறான். அவர்கள் மீது அன்பு காட்டுகிறான். பிரியும் தருணத்தில் அந்த உலகிலிருந்து எளிதாக விடுபடமுடியவில்லை. அப்படியான ஒரு அனுபவத்தைத் தான் மொத்த படமும் நமக்குத் தருகிறது
••
March 2, 2021
இந்தியக் கலைகள்
இந்தியக் கலைகள், நாடகம். நிகழ்த்துக் கலைகள், வரலாறு, அகழ்வாய்வு, இயற்கை வரலாறு, கட்டிடக்கலை, பண்பாடு குறித்த முக்கியக் கட்டுரைகளை வெளியிட்டு வரும் Marg இதழை நீண்டகாலமாகவே வாங்கி வாசித்து வருகிறேன்.




இது காலாண்டு இதழாக வெளிவருகிறது. ஒரு இதழின் விலை ரூ250. அழகான வண்ணப்படங்களுடன் சிறந்த கட்டுரைகளுடன் இதழ் வெளியாகிறது. மின்னிதழாகவும் இதை வாசிக்க இயலும்.
எழுத்தாளர் முல்க் ராஜ் ஆனந்த் 1946 ஆம் ஆண்டில் மார்க் பவுண்டேஷனை உருவாக்கினார். இந்தியக் கலைகள் குறித்த ஆய்வுமையமாக இது உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனமே மார்க் இதழை வெளியிடுகிறது.

ஒவ்வொரு இதழும் ஒரு குறிப்பிட்ட மையப்பொருளைக் கொண்டு உருவாக்கப்படுகிறது.
இந்தியக் கலைகள் குறித்த ஆய்வு நூல்களையும் மார்க் பவுண்டேஷன் வெளியிட்டு வருகிறது

பிரபஞ்சனின் நினைவு
இந்தப் புத்தகக் கண்காட்சி துவங்கிய நாளில் இருந்தே பிரபஞ்சனைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்கிறேன். அவர் இல்லாத வெறுமை மனதைப் பெருந்துயரம் கொள்ளச் செய்கிறது. எத்தனை அன்பான மனிதர். அவரோடு புத்தகக் கண்காட்சியில் சுற்றியலைந்த நாட்கள் மனதில் நிழலாடுகின்றன
அவரைப் பற்றி முன்பு எழுதிய கட்டுரையினை நேற்று திரும்பப் படித்துக் கொண்டிருந்தேன். மனதில் அவர் இல்லாத வலி மேலும் அதிகமாகியது
••

பிரபஞ்சனின் இணையற்ற தோழமை என்ற எனது கட்டுரையின் ஒரு பகுதி :
பிரபஞ்சன் என்றால் மனதில் தோன்றும் முதல் பிம்பம் சிரித்துக் கொண்டேயிருக்கும் அவரது முகம். இனிமையான குரலில் வரவேற்று நலம் விசாரிக்கும் பண்பு. கையில் காசேயில்லாமல் அறையில் அவர் தனித்துவிடப்பட்டிருந்த நாளில் கூடச் சந்தித்திருக்கிறேன். அப்போதும் அந்தச்சிரிப்பு மாறியதேயில்லை. அது வாழ்க்கையைப் பார்த்துச் சிரிக்கும் சிரிப்பு. நீ என்னைக் குப்புறத்தள்ளி விட்டதாக நினைக்கிறாய். நான் ஒரு எழுத்தாளன். பொருளாதாரக் கஷ்டங்களால் ஒரு போதும் விழுந்துவிடமாட்டேன் என இறுமாறுப்புடன் வெளிப்பட்ட புன்னகை.
தனது கஷ்டங்கள், உடல்நலப்பிரச்சனைகள் குறித்து ஒரு போதும் அவர் புலம்பியவரில்லை. எவரிடமும் கையேந்தி நின்றவரில்லை. அதே நேரம் தனது சந்தோஷங்களைத் தனித்துக் கொண்டாடியதேயில்லை. தன் மகிழ்ச்சியை நண்பர்களுக்கு பகிர்ந்து தருவதில் நிகரற்றவர். அவரது அறை எப்போதும் நண்பர்களுக்காக திறந்தேயிருந்தது. அதிலும் என்னைப் போல எழுத்தாளர் ஆக வேண்டும் என வேலையில்லாமல் அலைபவர்களுக்கு அந்த அறை நிரந்தரப் புகலிடமாகவே இருந்தது.
இளம் எழுத்தாளர்களை அவரைப் போல பாராட்டிக் கொண்டாடிய இன்னொருவரை நான் கண்டதில்லை. சில நேரங்களில் இவ்வளவு பெரிய வார்த்தைகளால் புகழ்கிறீர்களே என அவரிடமே கேட்டிருக்கிறேன்.
பாராட்டு தானே ராமகிருஷ்ணன் எழுத்தாளனை மகிழ்ச்சியடையச் செய்கிறது. ஆயிரம் ரூபாய் கொடுப்பதை விடவும் அவனது கதை கவிதை சிறப்பாக உள்ளது. நீ மிக நன்றாக எழுதுகிறாய் என்று பாராட்டு சொல்வதை தானே படைப்பாளி பெரியதாக நினைக்கிறான். நல்ல படைப்புகளை யார் எழுதினாலும் எந்தப் பத்திரிக்கையில் வந்தாலும் தேடிப் படித்து உடனே பாராட்டக்கூடியவன். அது எனது கடமை என்று சொன்னார் பிரபஞ்சன்.
இந்தப் பண்பு அவரை எப்போதும் இளந்தலைமுறை படைப்பாளியோடு தோழனாக இருக்க வைத்தது.
புதுச்சேரி மண்ணின் வரலாற்றையும் அவர் ஆழமாக அறிவார். இதை விரிவாக எழுதியும் இருக்கிறார் எழுத்து, இசை,கலை,பண்பாடு எல்லாம் மனிதர்களை ஒருவரோடு ஒருவரை இசைவிக்கத்தானே அன்றி வேறு எதற்கும் இல்லை. அன்பால் இணைந்து, அன்பால் புரிந்து கொண்டு அன்பே பிரதானமாக ஒரு உலகத்தை உருவாக்கும் தொழிலையே நான் செய்கிறேன் என்பதில் எனக்குப் பெருமிதம் உண்டு. மனித குலம் அன்பினால் மட்டுமே தழைக்கும், என்பதே என் செய்தி எனப் பிரபஞ்சனே தன்னைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அது முற்றிலும் உண்மை
புதுமைப்பித்தன் காலம் முதல் இன்று வரை தமிழ் எழுத்தாளர் எழுத்தை மட்டுமே நம்பி வாழமுடியாத நிலைதான் நிலவுகின்றது. பிழைப்பிற்காகவே பத்திரிக்கை துறையில் வேலை செய்தார். பத்திரிக்கைகள் தனக்கான உலகமில்லை என்று அறிந்து கொண்டபிறகு எழுத்தை மட்டுமே நம்பி வாழுவது என முடிவு செய்து கொண்டார். அதைப்பற்றி அவரிடம் கேட்டபோது. அது ஒரு தற்கொலை முயற்சி எனத் தெரிந்துமே அதில் ஈடுபட்டேன் என்று சிரித்தபடியே சொன்னார்.
1970களில் ‘இல்லஸ்டிரேடட் வீக்லி’ போல அழகான இலக்கியப் பத்திரிகை தமிழில் நடத்தவேண்டும் என்பது அவரது கனவாக உருவானது. இதற்காக புதுவையில் பாரதி அச்சகம்’ என்ற பெயரில் அச்சகம் ஒன்றைக் காந்தி வீதியில், சின்னப்பிள்ளையார் கோயில் பக்கத்தில் தொடங்கினார். மனைவியின் நகையை விற்று டிரடில் மெஷின் வாங்கினார். அதில் பாரதியாரின், ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற கவிதையைக் கம்போஸ் பண்ணி அச்சேற்றினார். ஆனால் அது முழுமையாக அச்சாகவில்லை.
அப்போது தான் அந்த மிஷின் உடைந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. தன்னை ஏமாற்றி விற்றிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தார்.. வேறுவழியின்றி அந்த அச்சகத்தைச் சொற்ப விலைக்கு விற்பனை செய்தார். சிறந்த பத்திரிக்கை ஒன்றை நடத்த வேண்டும் என்பது அவரது கனவுகளில் ஒன்றாக இருந்தது. ஆனால் அது கடைசி வரை நிறைவேறவேயில்லை
பிரபஞ்சன் ஒப்பனை செய்து கொள்வதிலும் நேர்த்தியாக உடைகள் அணிந்து கொள்வதிலும் அதிக ஈடுபாடு கொண்டவர். அழகான தோற்றம் கொண்டவர். உயர் ரக ஜிப்பா அணிந்து அவர் கூட்டங்களுக்கு வருவதைக் காண அத்தனை வசீகரமாகயிருக்கும். காபியை விரும்பிக் குடிப்பவர் என்பதால் அவருக்குச் சரவணபவன் காபி மீது கூடுதல் விருப்பம். அங்கே பணியாற்றுகிற அத்தனை பணியாளர்களையும் அவர் அறிவார். அவர்கள் குடும்ப நலன்களைக் கேட்டுக் கொள்வார். ஒருமுறை ஒரு சர்வருக்கு உடல் நலமில்லை என அறிந்து பைநிறைய ஆரஞ்சு பழங்களை வாங்கி அளிப்பதை நேரில் கண்டிருக்கிறேன். மகாகவி பாரதியிடம் இது போன்ற அன்பு இருந்த்தாகச் சொல்லியிருக்கிறார்கள். அதே அன்பு பிரபஞ்சனிடமும் இருந்தது.
புதுவையில் இருந்து சினிமாத்துறையில் பிரவேசிக்க வேண்டியே அவர் சென்னைக்கு வந்தார். ஆனால் அந்த ஆசை ஒன்றிரண்டு வருஷங்களிலே வடிந்துவிட்டது, காரணம் அவர் பட்ட அவமானங்களே. ஆனால் கரந்தை தமிழ் கல்லூரியில் முறையாக தமிழ் கற்றவர் என்பதால் பத்திரிக்கை துறையிலும் எழுத்து துறையிலும் தனது கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தார். பிரபஞ்சனின் கதைகள் அதிகமும் பெண்களின் துயரத்தை பேசின. எளிய மனிதர்களின் வாழ்க்கையை கவனத்துடன் அக்கறையுடன் அன்புடன் அவர் எழுதினார்.
தனது வம்சத்திலே பெண் பிள்ளைகள் கிடையாது. எல்லோருக்கும் ஆண்பிள்ளைகள் தான். எனக்கும் ஆண்பிள்ளைகள் தான். ஆகவே நான் சந்திக்கும் இளம்பெண்களை மகளைப் போல நினைத்துக் கொள்வேன் என்று ஒருமுறை பிரபஞ்சன் சொன்னார். அவரது மகள் போல நேசித்த பெண் படைப்பாளிகள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் நூலிற்கு முன்னுரை எழுதியிருக்கிறார். வெளியீட்டு விழாக்களில் பேசி அவர்களைக் கொண்டாடியிருக்கிறார். அவர்களின் சொந்த வாழ்க்கையில் துயரம் கவ்வும் போதெல்லாம் முடிந்த உதவிகளை செய்திருக்கிறார். அந்த வகையில் அவர் எத்தனையோ பெண் படைப்பாளிகளின் தந்தை என்றே சொல்வேன்
வரலாற்றை மீள்ஆய்வு செய்வதிலும் வரலாற்று உண்மைகளை உலகம் அறியச் செய்வதிலும் அதிக ஆர்வம் கொண்டவர். புதுவையின் வரலாற்றை விவரிக்கும் ஆனந்தரங்கம் பிள்ளை டயரியை முதன்மையாகக் கொண்டு அவர் உருவாக்கிய வானம் வசப்படும், மிகச்சிறப்பான வரலாற்று நாவல். அந்நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. அந்த விருது அறிவிக்கபட்ட நாளில் அவரைத் தேடிச் சென்று வாழ்த்துச் சொன்னேன். தமிழில் நல்ல வரலாற்று நாவல்கள் இல்லை என்று நீண்ட குறையிருந்து வந்தது. அந்தக்குறையை போக்கும் ஒரு நாவலை நான் எழுதியிருக்கிறேன் என்பது மகிழ்ச்சி என்று சொன்னார். அது வெறும் தற்பெருமையில்லை. இலக்கியவாதி தன் படைப்பின் மீது கொண்ட மரியாதை.
••
இந்து தமிழ் நாளிதழில்
இன்றைய இந்து தமிழ் நாளிதழில் புதிய சிறார் நூல்களை அறிமுகம் செய்திருக்கிறார்கள். அதில் எனது சிறார் நூல்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்கள்.

மாறுபட்ட நூல்கள்
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ‘நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து’, ‘அபாய வீரன்’ ஆகிய சிறார் கதைத் தொகுப்புகள், ‘அண்டசராசரம்’ என்கிற நாவல் ஆகியவை வெளியாகியுள்ளன. (தேசாந்திரி வெளியீடு, தொடர்புக்கு: 9600034659).





நன்றி
இந்து தமிழ் நாளிதழ்
எனது பரிந்துரைகள் -4
புத்தகக் கண்காட்சியினை முன்னிட்டு ஐம்பதுக்கும் அதிகமான புதிய கவிதைநூல்கள் வெளியாகியுள்ளதாக அறிந்தேன். ஒரு சில நூல்களை மட்டுமே காண முடிந்தது. இளங்கவிஞர்களுக்கு எனது வாழ்த்துகள்.

நேஷனல் புக் டிரஸ்ட் அரங்கில் 50 சதவீத தள்ளுபடியில் மிகச்சிறந்த நாவல்கள் கிடைக்கின்றன. இந்திய அளவில் புகழ்பெற்ற இந்த நாவல்கள் இனி மறுபதிப்பு வருமா என்பது சந்தேகமே. ஒருவேளை வந்தாலும் அதன் விலை மிக அதிகமாக இருக்கும். நூறு ரூபாயில் இரண்டு மூன்று முக்கியமான நாவல்களை இங்கே வாங்கிவிட முடியும்.
கவிதாலயம், ஏணிப்படிகள். மித்ரவந்தி, மய்யழிக்கரையில், கயிறு, ஆதவன் சிறுகதைகள், இயந்திரம், இது தான் நம் வாழ்க்கை உயிரற்ற நிலா, கங்கைத்தாய், கன்னடச்சிறுகதைகள் போன்ற நூல்கள் இங்கே கிடைக்கின்றன. இவை மிகச்சிறந்த புத்தகங்கள். குறைந்த பிரதிகளே உள்ளன. வாங்கத் தவறவிடாதீர்கள்.
சுகுமாரன் கவிதைகள்

நவீன தமிழ்கவிதையுலகில் தனித்துவமும் அபாரமான கவித்துவமும் கொண்ட மிகப் பெரும் ஆளுமை கவிஞர் சுகுமாரன். அவரது கவிதைகளின் மொத்தத் தொகுப்பு காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இளங்கவிஞர்கள் அவசியம் வாங்க வேண்டிய புத்தகமிது. கவிதையை நேசிக்கும் அனைவரும் வாங்கிப் படித்துப் பாதுகாக்க வேண்டிய சிறந்த நூல்.

காஃப்கா கடற்கரையில்

ஹாருகி முரகாமி

தமிழில்: கார்த்திகைப் பாண்டியன்
எதிர் வெளியீடு
ஜப்பானிய எழுத்தாளரான ஹாருகி முரகாமியின் புகழ்பெற்ற நாவலை கார்த்திகைப் பாண்டியன் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.காஃப்காவின் சிறுகதைகளை முரகாமி ஜப்பானிய மொழியில் மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்த நாவல் காஃப்காவின் மனநிலையை கொண்ட ஒரு கதாபாத்திரத்தின் வாழ்வினை முதன்மைப்படுத்துகிறது. எதிர் வெளியீடாக வந்துள்ளது.
வேப்பங்கிணறு

தேனீ சீருடையான்

அன்னம் – அகரம் பதிப்பகம்
தேனீ சீருடையான் சிறந்த நாவலாசிரியர். இவரது நிறங்களின் உலகம் தமிழில் வெளியான மிகமுக்கியமான நாவல். சீருடையானின் புதிய நாவலிது. அன்னம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
கள்ளர் மடம்

மதுரை வட்டாரச் சிறப்புக் கதைகள்
சி. சு. செல்லப்பா

பதிப்பாசிரியர்: கால சுப்ரமணியம்
கருத்து=பட்டறைபதிப்பகம்
தமிழ் இலக்கியத்தின் முன்னோடி படைப்பாளி சி.சு.செல்லப்பா எழுதிய முக்கிய சிறுகதைகளின் தொகுப்பு.
ஞானக்கூத்தன் நேர்காணல்கள்

பதிப்பாசிரியர்: : திவாகர் ரங்கநாதன்
காலச்சுவடு பதிப்பகம்
கவிஞர் ஞானக்கூத்தனின் நேர்காணல்களின் தொகுப்பு. தமிழின் சங்கக் கவிதைகள் துவங்கி சமகால வாழ்க்கை வரை ஞானக்கூத்தனின் பார்வைகள் தனித்துவமானவை.
நினைவுகளின் ஊர்வலம்

எம். டி. வாசுதேவன் நாயர்
தமிழில்: : டி. எம். ரகுராம்
சந்தியா பதிப்பகம்
ஞானபீடம் பரிசு பெற்றுள்ள மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயரின் இளமைப்பருவத்தை விவரிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு. டி.எம். ரகுராம் ஒரு ஆங்கிலக் கவிஞர். . தமிழில் இந்த நூலை சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.
மிதக்கும் உலகம்

ஜப்பானியக் கவிதைகள் | மர அச்சு ஓவியங்களுடன்
தமிழில் ப. கல்பனா, பா. இரவிக்குமார்
பரிசல் பதிப்பகம்
தேர்வு செய்யப்பட்டஜப்பானிய கவிதைகளின் தொகுப்பு. மிக அழகான ஒவியங்களுடன் வெளியிட்டிருக்கிறார்கள். பேராசிரியர் இரவிக்குமார் மற்றும் பேராசிரியர் ப..கல்பனா இருவரும் இணைந்து கவிதைகளை சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்.
நானும் எனது இலக்கியத் தேடலும்.
(தினமணி நாளிதழில் இன்று வெளியான கட்டுரை.)

எது நான் படித்த முதல் புத்தகம் என்று யோசித்துப் பார்த்தால் விடை காணமுடியவில்லை. ஆனால் மூன்று நான்கு வயதுகளிலே வண்ணப்படம் உள்ள புத்தகத்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்த நினைவு இருக்கிறது.
என் வீட்டில் புத்தகம் படிக்கும் ஆர்வம் எல்லோரிடமும் இருந்தது. ஆகவே வார இதழ்கள், மாத இதழ்கள். புதிய புத்தகங்கள் வீட்டிற்கே வந்துவிடும். படித்த புத்தகங்களைப் பற்றி வீட்டில் காரசாரமாக விவாதிப்பார்கள். ஆகவே புத்தக வாசிப்பு வீட்டில் தான் முதலில் அறிமுகமானது.
“மல்லாங்கிணர்’ எனும் எனது கிராமத்தின் நூலகத்திலிருந்த நூற்றுக்கணக்கான புத்தகங்களைப் படித்துத் தான் நான் உருவானேன். அதன் பின்பு புத்தகம் வாங்குவதற்காகப் பழைய புத்தகக் கடைகளைத் தேடி ஊர் ஊராகச் செல்ல ஆரம்பித்தேன். எனது சேமிப்பில் உள்ள அரிய நூல்கள் யாவும் பழைய புத்தகக் கடைகளில் வாங்கியவையே. புத்தகங்கள் தான் என்னை எழுத்தாளனாக உருவாக்கின.
கால இயந்திரத்தில் ஏறி வேறுவேறு காலங்களுக்குப் பயணம் செய்வது போன்ற அனுபவத்தையே புத்தகங்களும் தருகின்றன. “பொன்னியின் செல்வனை’ப் புரட்டியதும் சோழர் காலத்திற்குப் போய்விடுகிறீர்கள். “போரும் அமைதியும்’ வாசிக்கையில் ரஷ்யப்பனியில் நனைய ஆரம்பிக்கிறீர்கள். சங்க கவிதைகளை வாசிக்கையில் நாமும் சங்க காலத்திற்கே போய்விடுகிறோம். மனிதனின் வாழ்க்கை கால அளவில் மிகச்சிறியது. ஆனால் இந்த வாழ்க்கைக்குள் ஓராயிரம் வாழ்க்கைகளை, பல்லாயிரம் அனுபவங்களைப் புத்தகம் வழியே அனுபவித்துவிட முடிகிறது. ஒரு நல்ல ஆசிரியர் எப்போதும் துணையிருப்பது போலச் சிறந்த புத்தகம் நமக்கு வழிகாட்டுகிறது.
சிறிய கிராமங்களில், சிறிய நகரங்களில் வசிப்பவர்களுக்கு புத்தகங்கள் வாங்குவதற்குக் கடைகள் கிடையாது. பெரிய நகரங்களைத் தேடிப்போய்ப் புத்தகம் வாங்க வேண்டும். இன்றும் அதே நிலை தான் உள்ளது.
ஐந்தாயிரம் பேர், பத்தாயிரம் பேர் படிக்கும் பல்கலைக்கழக வளாகத்தில் கூடப் புத்தகக் கடை கிடையாது. தமிழ்நாட்டில் ஐநூறுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இதில் ஒன்றில் கூடப் புத்தகக் கடை கிடையாது. அண்ணாபல்கலைக்கழகமாவது இதை முன்னெடுக்கலாம்.
எனது கல்லூரி நாட்களில் புத்தகம் வாங்குவதற்காகவே பயணம் செய்யத் துவங்கினேன். கல்கத்தா, மும்பை, திருவனந்தபுரம், பெங்களூர் என்று சென்று வருவேன். லத்தீன் அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸிற்கு நோபல் பரிசு கிடைத்த செய்தியைப் படித்த உடனே அவரது புத்தகம் வாங்க வேண்டும் என்று தேடினேன். தமிழ்நாட்டில் எங்கும் கிடைக்கவில்லை. ஆகவே அவரது புத்தகம் வாங்குவதற்காகவே டெல்லிக்குப் பயணம் செய்தேன். அங்கேயும் உடனே கிடைக்கவில்லை. காத்திருந்து புத்தகம் வாங்கி வந்து படித்தேன்.
இன்று அந்தக் காத்திருப்பு, நீண்ட பயணம் யாவும் தேவையற்றதாகிவிட்டது. வீட்டிலிருந்தபடியே எந்தப் புத்தகத்தையும் ஆன்லைன் விற்பனையகம் மூலம் பெறமுடிகிறது. தமிழ்நாட்டில் பெரிய, சிறிய நகரங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடைபெறுகின்றன. இதனால் புத்தகங்களைத் தேடும் என்னைப் போன்ற வாசகர்களுக்கு மிகப்பெரிய வாசல் திறந்து விடப்பட்டிருக்கிறது.
பள்ளி வயதில் காமிக்ஸ் புத்தகங்களை விரும்பிப் படித்தேன். இன்றும் கிராபிக் நாவல்கள். மாங்கா போன்ற வரைகலை புத்தகங்களை விரும்பிப் படிக்கிறேன்.
ரஷ்ய இலக்கியங்களின் மீது அதிக ஈடுபாடு எனக்குண்டு. அவற்றை அறிமுகம் செய்து நிறைய எழுதியிருக்கிறேன். பேசி யிருக்கிறேன். அது போலவே சர்வதேச இலக்கியங்களை அறிமுகப்படுத்தி இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறேன். பேசியிருக்கிறேன். இந்த ஆண்டு அப்படி ஏழு நாட்கள் உலக இலக்கியம் குறித்து நான் ஆற்றிய உரைகள் இணையத்தில் காணக் கிடைக்கின்றன. அவற்றைப் பார்த்த கையோடு அந்த நூல்களையும் வாங்கி வாசிக்கிறார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி.
இதுவரை முப்பதாயிரத்துக்கும் அதிகமான புத்தகங்களைச் சேகரித்திருக்கிறேன். புத்தகங்களை வைத்துக் கொள்ளப் போதுமான இடம் தான் இல்லை. தற்போது எனது நூலகத்தை மின்னூல்களாக மாற்றிப் பாதுகாத்து வருகிறேன்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் சென்னை புத்தகக் கண்காட்சிக்குப் போய் வருகிறேன். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போல எனது பண்டிகை இந்தப் புத்தகக் கண்காட்சி நாட்களே. வாசகர்களைச் சந்திப்பதும் உரையாடுவதும் விரும்பிய புத்தகங்களைத் தேடி வாங்குவதும் இனிமையான அனுபவம்.
இந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். காரில் உள்ளே நுழைய இயலவில்லை. எங்கும் ஜனத்திரள். இவ்வளவு வாசகர்கள் ஆசையாகப் புத்தகம் வாங்கச் செல்கிறார்கள் என்பதும் வாங்கிய புத்தகங்களை இரண்டு கைகளிலும் தூக்கமுடியாமல் தூக்கி வருகிறார்கள் என்பதும் பெருமகிழ்ச்சியைத் தந்தது.
கரோனா காரணமாக ஏற்பட்ட ஊரடங்கு நிலை நமது அன்றாட வாழ்க்கையை முற்றிலும் முடக்கிவிட்டது. மக்கள் பொருளாதார ரீதியாகவும் மனரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இன்று அதிலிருந்து மீண்டுவர மக்கள் புதிய நம்பிக்கையை, உத்வேகத்தைப் பெறப் புத்தகங்களை நாடுகிறார்கள் என்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.
காந்தியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் டி.ஜி. டெண்டுல்கரின் எட்டு தொகுதிகளை இந்த ஆண்டுப் புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். “பிறக்கும் தோறும் கவிதை’ என்ற கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன் கட்டுரைத் தொகுப்பு. நேமிசந்த்ரா எழுதி கர்நாடக சாகித்ய அகாதமி விருது பெற்ற “யாத் வஷேம்’ என்ற நாவல், கவிஞர் ஞானக்கூத்தன் மொத்த கவிதைகளின் தொகுப்பு, நபகோவ் இன் அமெரிக்கா, மோகன் ராகேஷ் சிறுகதைகள் போன்றவற்றை வாங்கினேன்.
ரீடர் என்ற வார்த்தை பொதுவாக வாசகரைக் குறிப்பதாக மட்டுமே நம்பியிருந்தேன். ஆனால் பார்வையற்றவர்களுடன் பழகிய பிறகு தான் அது தனக்காகப் புத்தகம் வாசிக்கும் நபரைக் குறிக்கும் சொல் என்பதை அறிந்து கொண்டேன். இந்தக் கண்காட்சியிலும் பார்வையற்றவர்கள் துணையோடு வருகை தந்து விருப்பமான புத்தகங்களை வாங்கிச் சென்றார்கள்.
அவர்களின் ஒரே வேண்டுகோள். பார்வையற்றவர்களுக்கான பிரையில் வெளியீடுகள். ஆடியோ புத்தகங்கள் கொண்ட தனி அரங்கு ஒன்றைக் கண்காட்சி அமைக்க வேண்டும் என்பதாகும். வருங்காலத்திலாவது அந்தக் கனவு நனவாக வேண்டும்.
நன்றி :
தினமணி நாளிதழ்
வல்லினம் இதழில்
வல்லினம் இணைய இதழில் எனது புதிய சிறுகதை கறுப்பு ரத்தம் வெளியாகியுள்ளது.
அஞ்சலி
காந்தியவாதியும் மிகச்சிறந்த சுற்றுச்சூழல் செயல்பாட்டாளருமான அருமை நண்பர் டாக்டர் ஜீவா ( ஈரோடு) இன்று காலமானார்.

எளிமையும் ஆழ்ந்த ஞானமும் கொண்ட அற்புதமான மனிதர். நிறைய மொழியாக்க நூல்களை வெளியிட்டுள்ளார். கூட்டுறவு மருத்துவமனைகளை உருவாக்கியதில் முன்னோடி.
அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்
February 28, 2021
புத்தகக் காட்சி தினங்கள் -3
சனிக்கிழமை இருந்த கூட்டத்தைப் போல நேற்று இரண்டு மடங்கு அதிக கூட்டமிருந்தது. எனது கார் உள்ளே செல்ல இயலவில்லை. நீண்ட நேரம் காத்திருந்து உள்ளே சென்றேன். திருவிழாக் கூட்டம். இத்தனை பேர் புத்தகங்களை ஆசையாக வாங்குகிறார்கள் என்பது சந்தோஷம் அளித்தது
நீண்ட நேரம் முகக் கவசம் அணிந்து கொண்டு இருப்பது மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது. மேலும் புகைப்படம் எடுக்கும் அனைவரும் முகக்கவசத்தை நீக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆகவே கண்காட்சியில் நிறைய நேரம் முகக்கவசம் அணிய இயலவில்லை. சானிடைசர் வைத்து கைகளைச் சுத்தம் செய்து கொள்கிறேன்.

நேற்று மாலை வானம் பதிப்பகம் மணிகண்டன் அவர்களின் மகன் ரமணாவின் புத்தக வெளியீடு. சிம்பாவின் சுற்றுலா என்ற சிறார் கதை. ரமணா ஆறு வயதான இளம் எழுத்தாளர். அவரது நூலை வெளியிட்டு வாழ்த்தினேன். எட்டு வயது, பத்து வயதில் என சுற்றிலும் நிறைய சிறார் எழுத்தாளர்கள். இத்தனை சிறுவர்கள் கதை எழுத வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை உருவாக்கியது.



தனது நூலிற்கான ராயல்டி தொகையாக ஆயிரம் ரூபாயை விழா அரங்கில் ரமணா பெற்றுக் கொண்டான். போராடாமல் ராயல்டி பெறும் அதிர்ஷடசாலியான எழுத்தாளர் என்று கேலியாகச் சொன்னேன். நிகழ்வினை எழுத்தாளர் அகரமுதல்வன் தொகுத்து வழங்கினார்.

நேற்று என்னிடம் கையெழுத்துப் பெற வந்த ஒரு வாசகர் புத்தகத்தின் 11 வது பக்கத்தில் கையெழுத்துப் போடச்சொன்னார். இது என்ன புது பழக்கம் எனக்கேட்டேன். நான் எல்லா நூலிலும் 11 வது பக்கத்தில் தான் கையெழுத்து வாங்குவேன் என்றார். எழுத்தாளர்களை விடவும் வாசகர்கள் விசித்திரமானவர்கள்

ஆன்டன் செகாவைப் பற்றிய எனது உரைகளைக் கேட்டு. அவரது சிறுகதைகளை வாசித்த ஒரு இளம்வாசகர் செகாவ் மீதான அபிமானத்தால் 2018ம் ஆண்டு ரஷ்யாவிற்கு பயணம் செய்து செகாவ் நினைவில்லத்தையும், ரஷ்ய எழுத்தாளர்கள்களின் நினைவகங்களையும் பார்த்து திரும்பியிருக்கிறார். நிஜமாகவா என வியப்புடன் கேட்டேன். அவர் தன் செல்போனில் இருந்த புகைப்படங்களைக் காட்டினார். தான் சேமித்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு திடீரென ரஷ்யப்பயணம் புறப்பட்டு விட்டதாகவும் செகாவ் பற்றிய எனது உரையே இதற்கான தூண்டுதல் என்று சொன்னார். எப்படி எல்லாம் வாசகர்கள் நடந்து கொள்கிறார்கள் பாருங்கள்.

கதாவிலாசம் நூலின் ஒரு பிரதியை ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் வாங்கிச் செல்லும் ஒரு வாசகர் நேற்று வந்திருந்தார். அந்த நூல் வெளியானது முதல் ஆண்டு தோறும் அதன் ஒரு பிரதியை வாங்கிப் போகிறேன். பிடித்த சினிமாவை திரும்பத் திரும்ப பார்ப்பது போல எனக்கு இந்தப் புத்தகத்தை திரும்ப திரும்ப படிக்கப் பிடிக்கும். அட்டை கிழிந்து போகும் அளவு படித்துவிடுவேன். அதனால் ஆண்டுக்கு ஒருமுறை புத்தகக் கண்காட்சியில் புதிய பிரதி ஒன்றை வாங்கிக் கொண்டு விடுகிறேன் என்றார். இப்படியான வாசகர்கள் இருப்பது பெரும் அதிர்ஷ்டம்
எம். ஓ. பி வைணவ மகளிர் கல்லூரி மாணவிகள் பத்து பேர் நேற்று என்னைச் சந்தித்து கேள்விபதில் நிகழ்ச்சி ஒன்றினைப் பதிவு செய்தார்கள். நல்ல கேள்விகளை கேட்டார்கள். வாசிப்பின் மீது மாணவிகள் கொண்டுள்ள ஈடுபாட்டினை பெரிதும் பாராட்டினேன்
சென்னை ஒவியக்கல்லூரி மாணவர்கள் நேற்று தேசாந்திரி அரங்கிற்கு வருகை தந்து பிகாசோவின் கோடுகள். சித்திரங்களின் விசித்திரங்கள். ஆயிரம் வண்ணங்கள் என்ற எனது ஒவியம் குறித்த நூல்களை வாங்கிக் கொண்டு போனார்கள். ஒவியக்கல்லூரிக்கு ஒரு நாள் வந்து உரையாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்கள். அவசியம் வருவதாகச் சொன்னேன்.

கடலூர் சீனு தனது நண்பர்களுடன் அரங்கிற்கு வருகை தந்து உரையாடினார். இனிமையான சந்திப்பு.
சென்னையும் நானும் காணொளித் தொடரின் இரண்டாவது சீசனை வெளியிடுங்கள் என்று இரண்டு இளைஞர்கள் கோரிக்கை வைத்தார்கள். அந்தக் காணொளித் தொடர் நிறையப் பேருக்குப் பிடித்திருப்பது சந்தோஷம் தருகிறது.

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவர் தனது பிள்ளைகளுடன் வந்திருந்தார். நியை நூல்களை வாங்கினார். எனது இடக்கை நாவல் குறித்து மருத்துவ நண்பர்கள் ஒரு இணையவழி உரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளதாகச் சொன்னார். நேரமிருந்தால் அவசியம் கலந்து கொள்வதாகச் சொன்னேன்.
எனது ஏழு நாள் உலக இலக்கியச் சொற்பொழிகளையும் கேட்ட ஒரு வாசகர் அந்த நூல்களை புத்தகக் கண்காட்சியில் வாங்கிக் கொண்டு வந்து அதில் எனது கையெழுத்தினைப் பெற்றுக் கொண்டு போனார். உங்கள் உரையை கேட்டதும் அவற்றை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது என்றார்.
வித்தியாசமான வாசகர்களைச் சந்திப்பதும் அவர்களுடன் உரையாடுவதும் மகிழ்ச்சியான அனுபவமாகவே இருக்கிறது. புத்தகக் கண்காட்சி இல்லாவிட்டால் இதற்கான சந்தர்ப்பமேயில்லாமல் போய்விடும்.
••
புத்தகக் காட்சி தினங்கள் -2
நேற்று புத்தகக் கண்காட்சியில் நல்லகூட்டம். நீண்ட காலத்தின் பின்பு அலை அலையாகப் புத்தகம் வாங்க வந்த மக்களைக் காணச் சந்தோஷமாக இருந்தது.

வழக்கமாக எந்த வரிசையில் எந்தக் கடைகள் இருக்கின்றன என்ற பட்டியல் ஒன்றை பபாசி அளிப்பார்கள். சில நேரம் அது தன்னார்வலர்கள் முயற்சியிலும் வெளியிடப்படும். இந்த ஆண்டு அப்படி எந்தத் தகவலும் தெரியாத காரணத்தால் தேசாந்திரி அரங்கு எங்கே இருக்கிறது எனத் தெரியாமல் அலைந்து திரிந்து நிறைய பேர் சிரமப்பட்டிருக்கிறார்கள்.
பபாசி கடைகளின் பட்டியலை வெளியிட்டால் வருகை தருகிறவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
எட்டாவது வழியாக வந்தால் அதன் கடைசியில் தேசாந்திரி அரங்கு உள்ளது. அரங்க எண் 494 மற்றும் 495.
தனது புத்தகத்தை வெளியிடுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு இளைஞர்கள் பலரும் வந்து கொண்டேயிருக்கிறார்கள். இவர்களுக்கு உதவி செய்வது போல ஒரு அரங்கினை அமைத்து புதிய எழுத்தாளர், கவிஞர்கள் எப்படித் தனது நூலை வெளியிட இயலும் என்பதற்கு வழிகாட்டும் பயிற்சி செய்தால் நன்றாக இருக்கும். குறைந்த பட்சம் ஒரு நாள் மாலை அமர்வினையாவது பொது அரங்கில் ஏற்பாடு செய்யலாம்.

பப்ளிகேஷன் டிவிசன் அரங்கில் மிக நல்ல நூல்கள் மலிவு விலையில் கிடைக்கின்றன. குறிப்பாக காந்தி மற்றும் நேரு குறித்த அரிய நூல்கள் நிறைய இருக்கின்றன. காந்தியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் MAHATMA – Volumes 1 to 8 by D.G. Tendulkar இங்கே கிடைக்கிறது
தேசாந்திரி அரங்கில் ஆன்டன் செகாவ். தஸ்தாயெவ்ஸ்கி. டால்ஸ்டாய் உருவம் கொண்ட அழகிய போஸ்ட்கார்டுகளை இலவசமாக விநியோகம் செய்து வருகிறோம். ஆசையாகப் பெற்றுக் கொண்டு போகிறார்கள்.
நேற்று எனது பத்து நூல்கள் மறுபதிப்பாக வெளிவந்துள்ளது. இன்னும் பத்து நூல்கள் இரண்டு நாட்களில் வெளியாகும். துணையெழுத்து கெட்டி அட்டை பதிப்பாக வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரத்திலிருந்து வந்திருந்த ஒரு குடும்பம் நேற்று எனது அத்தனை நாவல்களையும் ஒரு சேர வாங்கினார்கள். அத்தனை நூலிலும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன். புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.
அமெரிக்காவில் வசிக்கும் எனது மகனுடன் அலைபேசியில் பேசுங்கள் என்று ஒருவர் தனது போனை என்னிடம் கொடுத்தார். அமெரிக்காவிலுள்ள வாசகர் வீடியோ காலில் என்னுடன் உரையாடி தேவையான புத்தகங்களைச் சொன்னார். அவரது பெற்றோர் அதை வாங்கிக் கொண்டு போனார்கள். அமெரிக்காவில் வசித்தபடியே சென்னை புத்தகக் கண்காட்சியில் புத்தகம் வாங்குமளவு உலகம் சுருங்கிவிட்டது நல்ல முன்னேற்றமே.
தினமும் நாலைந்து புத்தகங்களைத் தேடி வாங்குவது எனது வழக்கம். நேற்று நான் வாங்கிய புத்தகங்கள்





வாசக சாலை நண்பர்கள் அனைவரையும் இரவு சந்தித்தேன். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படம்
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

