S. Ramakrishnan's Blog, page 143
February 11, 2021
தேசாந்திரி புதிய வெளியீடுகள்-1
சென்னை புத்தகக் கண்காட்சியினை முன்னிட்டு தேசாந்திரி பதிப்பகம் புதிய நூல்களை வெளியிடுகிறது. அச்சில் இல்லாத எனது நூல்களின் மறுபதிப்பு மற்றும் புதிய நூல்கள் வெளியாகின்றன
சிறார்களுக்காக நான் எழுதிய கதைகளின் தொகுப்பு கதைக்கம்பளம் என்ற பெயரில் ஏழு சிறு நூல்களாக முன்பு வெளியாகியிருந்தது. அதைத் தொகுத்து நான்கு நூல்கள் ஒன்று சேர்ந்த ஒரே புத்தகமாக வெளியிடுகிறோம்
கடலோடு சண்டையிடும் மீன் என்ற தலைப்பில் வெளியாகிறது.

அண்டசராசரம்
நேதாஜியால் உருவாக்கபட்ட ஆசாத் வங்கியில் சேமித்து வைக்கபட்ட பணம், அவரது மரணத்திற்குப் பிறகு என்னவானது என்பதைக் கண்டறியும் துப்பறியும் கதையாக எழுதப்பட்டது அண்டசராசரம். சிறார்களுக்கான இந்த நாவலில் சர்க்கஸ் முதலாளியான ஒரு வயதான துப்பறியும் நிபுணரும், டீக்கடை பையன் ஒருவனும் இணைந்து இந்தப் புதிரின் விடையை கண்டறிகிறார்கள்.

அக்கடா
குண்டூசி ஒன்றின் பயணத்தை விவரிக்கும் இந்த சிறார் நாவல் சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் விசித்திரங்களையும் கொண்டிருக்கிறது. வெவ்வேறு வகையான குண்டூசிகள், அவற்றின் வாழ்க்கை, அவர்களுக்குள் ஏற்படும் மோதல் எனப் புதிய கதைவெளியினை அறிமுகம் செய்கிறது இந்த நூல்

ஆலீஸீன் அற்புத உலகம்
உலகப் புகழ்பெற்ற சிறார் நாவலான ஆலீஸின் அற்புத உலகினை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக நான் மொழியாக்கம் செய்தேன். பள்ளி மாணவர்களுக்குப் பரிசு அளிப்பதற்கான புத்தகமாக இதனை உருவாக்கினோம். முன்னதாக மூன்று பதிப்புகள் வெளியாகியிருக்கிறது. தற்போது அதன் புதிய பதிப்பினை தேசாந்திரி வெளியிடுகிறது

பிப்ரவரி 24 முதல் நந்தனம் YMCA வில் சென்னைப் புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது. காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை இந்தக் கண்காட்சி நடைபெறும்
உலகின் ஒரு நாள்
கரோனா முடக்கம் காரணமாக உலகமே ஸ்தம்பித்துப் போயிருந்த சூழ்நிலையில், உலகெங்கிலும் உள்ள மக்களின் அன்றாட வாழ்க்கை ஒரு நாளில் எப்படியிருந்தது என்பதை ஆவணப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

ஜூலை 25, 2020 அன்று, உலகெங்கும் மக்கள் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு செலவிட்டார்கள் என்பதே இந்த ஆவணப்படத்தின் மையக்கரு.
உட்கார்ந்த இடத்திலிருந்தபடியே ஒருவன் உலகின் ஒருநாளைக் காணுவது எளிய விஷயமில்லை. படத்தைப் பார்க்கப் பார்க்க மனதில் சந்தோஷம் பீறிடுகிறது.
உலகைப் பற்றிய நமது எண்ணங்களை, வீண்பயத்தை, குறுகிய மனப்பாங்கினை முற்றிலும் மாற்றிவிடுகிறது இந்த ஆவணப்படம்.
கரோனா காரணமாக முடங்கிய வாழ்க்கை மனிதர்களின் அடிப்படை இயல்பை முடக்கவில்லை. பிறப்பு, இறப்பு, திருமணம், காதல், செக்ஸ், சண்டை, போராட்டம், வெற்றி, சாதனை, பிரிவு, சாகசம், பயணம், தனிமை, ஆட்டம் பாட்டம். விருந்து, நினைவுகள் என வாழ்வின் அத்தனை விஷயங்களும் அந்த ஒரு நாளில் எப்படி நடந்தன என்பதை வெகு அழகாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.
உலகைப் பற்றிய நமது மதிப்பீடு பெரும்பாலும் செய்திகளின் வழியாகவும் தொலைக்காட்சி வழியாகவுமே நமக்குள் சேகரமாகிறது. எப்போதும் நாம் வசிக்கும் ஊரும், நமது மாநிலமும், நமது தேசமும் மட்டுமே நம் கவனத்திலிருக்கிறது. ஆனால் உலகின் பிரம்மாண்டத்தையும் ஒப்பற்ற இயற்கை வெளிகளையும் மனித வாழ்க்கையின் பல்வேறு நிலைகளையும் காணக்காண உலகம் எவ்வளவு பெரியது என்பதை உணர முடிகிறது.
உங்கள் வாழ்க்கையில் எதை மாற்ற விரும்புகிறீர்கள். எதைக் கண்டு பயப்படுகிறீர்கள். இப்போதை வாழ்க்கையைப் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன என்பது போன்ற கேள்விகளை எழுப்பி அதற்கான பதிலை வீடியோவாகப் பதிவு செய்து அனுப்பி வைக்கும்படி யூடியூப் நிறுவனம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
192 நாடுகளிலிருந்து 65 மொழிகளில் 324,705 வீடியோக்களை மக்கள் அனுப்பியிருக்கிறார்கள். இந்த காணொளிகளில் இருந்து முக்கியமான காட்சிகளைத் தொகுத்து ஒன்றரை மணி நேர ஆவணப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.
ஜூலை 25, 2020 விடிகாலையில் படம் துவங்குகிறது. சூரியன் உதயமாவதற்கு முந்தைய இருண்ட வானம். விடிகாலையின் கலையும் இருட்டு, உலகின் ஒரு மூலையில் கர்ப்பிணிப் பெண் ஒருத்தி வீட்டிலே பிரவசத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார். இன்னொரு கர்ப்பிணிப் பெண் மருத்துவமனையில் வலியில் துடிக்கிறார். வேறு வேறு இடங்களில் பிறப்பு நடைபெறுகிறது. தங்கள் குழந்தையைக் கையில் ஏந்தித் தாயும் தந்தையும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
கரோனா பற்றியோ, ஊரடங்கு பற்றியோ எந்தக் கவலையுமின்றிக் குழந்தைகள் பூமிக்கு அறிமுகமாகிறார்கள். எல்லா நாளும் உலகின் விருந்தாளிகளாகக் குழந்தைகள் பிறந்தபடியே இருக்கிறார்கள். அவர்கள் தான் சந்தோஷத்தின் திறவுகோலைக் கொண்டுவருகிறார்கள்.
பிறப்பில் துவங்கிய படம் மெல்லக் காலைநேரக் காட்சிகளை அறிமுகம் செய்கிறது. துயில் கலையாத சிறார்கள். பெரியவர்கள். இளைஞர்கள். வீட்டுவேலை செய்யும் பெண்கள். உடற்பயிற்சி செய்பவர்கள். வீட்டிற்குள் இருந்தபடியே ஆள் அற்ற வீதியை வேடிக்கை பார்ப்பவர்கள். மொட்டை மாடியில் வந்து நின்று உலகைக் காணுகிறவர்கள். துப்பரவு பணியாளர்கள். பூச்சி மருந்து அடிப்பவர்கள். தியானம் செய்பவர்கள் , காலியான மைதானங்கள். விளையாட்டுக்கூடங்கள், ஏரியில் குளிப்பது. ஆற்றில் நீந்துவது, பனியில் நடப்பது, பாலைவனத்தில் வாழ்க்கை. நாடோடிகளின் அதிகாலை என வாழ்க்கை தான் எத்தனை விதமாக இருக்கிறது.

எத்தனை எத்தனை காலைக் காட்சிகள். வழக்கமான நாட்களாக இருந்தால் அலுவலகம், படிப்பு, வேலை எனப் பரபரப்பாக ஓட வேண்டியிருக்கும். ஊரடங்கில் வீட்டிற்குள் முடங்கி இருக்க வேண்டிய சூழல் என்பதால் இணையவழியாக வீட்டிலிருந்தபடியே வேலை செய்கிறார்கள். காலை உணவு தயாரிக்கப்படுகிறது. ஆயிரமாயிரம் உணவு வகைகள். புதுப்புது சுவைகள்.
இந்த நாளின் பகல் துவங்குகிறது. ஒரு இளம்பெண் தன் காதலை வெளிப்படுத்துகிறாள். ஒரு காதலன் காதலியை நினைத்து ஏங்குகிறான். ஒரு இளம் பெண் முதன்முறையாகக் காதலனுடன் இன்பம் அனுபவிக்கிறாள். திருமணத்திற்கு ஒரு பெண் சம்மதம் தெரிவிக்கிறாள். ஒரு ஆண் இன்னொரு ஆணை முத்தமிடுகிறான். விதவிதமான திருமணங்கள் நடைபெறுகின்றன
கல்லூரி ஒன்றில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. முகக்கவசம் அணிந்த மாணவர்கள் பட்டம் பெறுகிறார்கள். அவர்களின் உற்சாகம் குறையவில்லை. செருப்பு தைக்கும் ஒருவர் யாருமில்லாத வீதியில் வேலை கிடைக்குமா எனச் சுற்றி அலைகிறார். வீட்டில் தனியே ஒருவர் வயலின் இசைக்கிறார். ஒரு பெண் படகினை ஏரிக்குக் கொண்டு செல்கிறாள். காவலர்கள் பாதுகாப்பு பணியினை மேற்கொள்கிறார்கள். மருத்துவமனை பரபரப்பாக இயங்குகிறது.
ஒரு ஆண் ஆடுமேய்க்கக் கிளம்புகிறான். ஒரு நடுத்தர வயது ஆள் பசுக்களை மேய்ச்சலுக்குக் கொண்டு போகிறான். மருத்துவர்கள் கவச உடை அணிந்த கரோனா வார்டுக்குள் போகிறார்கள். ஆள் இல்லாத ரயில் ஓடுகிறது. சிறார்கள் பட்டம் விடுகிறார்கள். ஒருவன் ஆகாசத்தில் பறக்கிறான். திருநங்கை ஒருவர் வீடு வீடாகச் சென்று பாட்டுப்பாடி யாசகம் பெறுகிறார். சாலையிலுள்ள போக்குவரத்து கண்ணாடியை ஒருவன் துடைக்கிறான். மத வழிபாடு செய்கிறான் வேறு ஒருவன். இன்னொருவன் ரயிலைத் துரத்திச் சென்று படம்பிடிக்கிறன. ஒரு ஆள் பனிக்கட்டிகளை உருக்கிக் குடி நீர் சேகரிக்கிறார். காடு. மலை, பனிப்பிரதேசம், தீவு பாலைவனம் பெருநகரம் சிறுநகரம் கிராமம் என விதவிதமான வாழ்விடங்கள். வேறுவேறு வகையான வாழ்க்கை. இப்படிப் பகல் கொஞ்சம் கொஞ்சமாகக் கடந்து போகிறது
வாழ்க்கை இத்தனை வண்ணமயமானதா. நம் கவலைகள். பிரச்சனைகள் என்ற சிறிய வட்டத்திற்குள் ஏன்முடங்கிக் கிடக்கிறோம் என்ற எண்ணத்தைப் படம் ஆழமாக நமக்குள் உருவாக்குகிறது.
எல்லா நெருக்கடிகளையும், துயரங்களையும் தாண்டி மனிதர்கள் உற்சாகமாகவே செயல்படுகிறார்கள். சந்தோஷத்தை அனுபவிக்கிறார்கள். பகிர்ந்து தருகிறார்கள். தொலைவிலுள்ள பிள்ளைகளை நினைத்துக் கண்ணீர் விடுகிறார்கள். இந்த வாழ்க்கையின் மீது பெரிய புகார்கள் எதுவுமில்லை.
ஒட்டுமொத்த ஆவணப்படத்திலும் ஒருவர் கூடக் கரோனா பற்றிப் புலம்பவில்லை. வாழ்க்கையின் மீது சலிப்பு கொள்ளவில்லை. மாறாக முகக் கவசம் அணிந்தபடியே ஒன்று கூடுகிறார்கள் நடனமாடுகிறார்கள். ஒன்றாக விருந்து உண்ணுகிறார்கள். இளைஞர்களின் உலகை மிக அழகாகப் படம் பதிவு செய்துள்ளது. செல்போன், ஐபேட், லேப்டாப் என அவர்கள் இணைய வெளியில் எப்படிச் சஞ்சரிக்கிறார்கள். வீடியோ எடுத்துப் பகிர்ந்து கொள்கிறார்கள். காதலையும் காணொளி வழியாக வெளிப்படுத்துகிறார்கள் என விசித்திரமான அவர்களின் செயல்களைச் சுவாரஸ்யமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்
மரணப்படுக்கையில் இருக்கும் ஒருவன் இன்னும் நான் இறக்கவில்லை. என்னுடன் பேசுங்கள் என்கிறான். செயற்கை கை பொருத்தப்பட்ட பெண் அந்தக் கையால் டம்ளரில் தண்ணீர் ஊற்றுகிறாள். ஒரு பெண் தனது நீலக்கிளிக்கு பறக்கப் பயிற்சி தருகிறாள்.. இப்படி ஒரு நாளுக்குள் எத்தனையோ காட்சிகள். உணர்ச்சிகள்.
இத்தனை விதமான மனிதர்களை ஒருசேரப் பார்க்கும் போது வாழ்க்கையின் மீது புதிய பிடிப்பும் நம்பிக்கையும் ஏற்படுகிறது. இதில் சில காட்சிகளில் இந்திய வாழ்க்கையும் இடம்பெற்றிருக்கிறது.
இதனை ரிட்லி ஸ்காட் தயாரித்துள்ளார் , அகாடமி விருது வென்ற கெவின் மெக்டொனால்ட் இயக்கியுள்ளார்.
ஜூலை 25, 2020 அன்று நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்று எனது நாட்குறிப்பில் பார்த்தேன். வீட்டில் அடைந்துகிடந்தபடியே புத்தகம் படித்திருக்கிறேன். சினிமா பார்த்திருக்கிறேன். மொட்டைமாடியில் புறாக்களுக்கு தானியம் போட்டிருக்கிறேன். செய்திகள் எதையும் கேட்கக்கூடாது என்று முடிவு செய்த காரணத்தால் அன்று டிவி பார்க்கவில்லை. இரவில் ஜான் டன்னின் கவிதைகளைப் படித்திருக்கிறேன். பண்டிட் ஜஸ்ராஜ் இசை கேட்டிருக்கிறேன். இரண்டு பக்கம் எழுதியிருக்கிறேன். வேறு அந்த நாளில் குறிப்பிடும்படியாக எதுவுமில்லை.
அந்த நாளில் உலகம் எப்படி இயங்கியிருக்கிறது என்பதைக் கண்டவுடன் எனது நாள் எவ்வளவு சலிப்பூட்டுவதாக இருந்திருக்கிறது என்ற குற்றவுணர்ச்சியே மேலிடுகிறது.
ஆனாலும் எதிர்பாராத மழையில் நனையும் ஆனந்தம் போல இந்தப்படம் இந்த நாளை மிகவும் மகிழ்ச்சிக்குரியதாக்கிவிட்டது
••
February 9, 2021
மூத்தோர் பாடல் -1 மதுரைக்காட்சிகள்.
நகரம் கதைகளின் விளைநிலம். பெரிய நகரங்கள் நிறைய கதைகளைக் கொண்டிருக்கின்றன. லண்டன், பாரீஸ், மாஸ்கோ, நியூயார்க். பீட்டர்ஸ்பெர்க், டோக்கியோ, ரோம், பெர்லின் ஆகிய நகரங்கள் பற்றி இலக்கியத்தில் நிறைய எழுதப்பட்டிருக்கின்றன. இவற்றுக்கு முன்னோடி போல தமிழ் இலக்கியமே நகரங்களைக் கொண்டாடி அதன் பெருமைகளை எழுத்தில் பதிவு செய்திருக்கிறது.
தமிழ் இலக்கியம் பதிவு செய்துள்ளது போல இந்தியாவின் வேறு எந்த மொழியிலும் நகரின் பெருமைகள் கவிதையில் எழுதப்படவில்லை. சிலப்பதிகாரம் பூம்புகாரைப் போற்றுகிறது. மதுரைக்காஞ்சியோ மதுரையைக் கொண்டாடுகிறது. அதிலும் மதுரை மாநகரின் இரவு வாழ்க்கையை மிக விரிவாகப் பேசுகிறது. இன்று வரை இவ்வளவு துல்லியமாக மதுரையின் இரவு வாழ்க்கை நவீன நாவல்களில் கூடப் பதிவு செய்யப்படவில்லை.

நான்காம் நூற்றாண்டில் ஒரு நகரைப் பாடுவதும் அதன் பெருமைகளை எடுத்துச் சொல்வதும் புதுமையாகும். நகரம் பிரதானமாக ஆட்சி அதிகாரம் செய்வதற்கும் வணிகத்திற்காகவும், புதிய தொழில்களுக்குமாகவே உருவாக்கப்படுகிறது. நகரவாழ்வில் காலம் முக்கியமானது. வேலை என்பது கால அளவை வைத்தே நிர்ணயிக்கபடுகிறது. காலமே பணமாக மாறுகிறது. நகரின் பகலும் இரவும் கிராமத்தின் பகலிரவைப் போன்றதில்லை. ஆண்டிற்கு ஒருமுறையோ இருமுறையோ தான் கிராமத்தில் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. நகரிலோ அன்றாடம் கொண்டாட்டம் தான். புதிய மனிதர்களை அதிகம் காணமுடிகிற இடம் நகரமே.
பகலும் இரவும் இயங்கிய அங்காடிகளைப் பற்றி மதுரைக்காஞ்சி விரிவாகப் பதிவு செய்திருக்கிறது. அல்லங்காடி எனப்படும் இரவு நேரக்கடைகள் மதுரையின் தனிச்சிறப்பு. இன்று வெளிநாடுகளில் இரவு முழுக்கத் திறந்து வைத்திருக்கும் ஷாப்பிங் மால்களை, கடைகளைக் காணுகிறோம். அவை இரவிலும் வணிகம் நடைபெறும் இடங்கள். ஆனால் அல்லங்காடி என்பது இரவில் மட்டுமே நடக்கும் கடைகள். மதுரையில் இப்படிச் சிறிய சிறுகடைகள் மாலை நேரம் தான் தோன்றுகின்றன. பின்னிரவோடு அவை முடிந்துவிடுகின்றன. இட்லிக் கடைகள் பரோட்டா கடைகள் மட்டுமில்லை. ஏலம் போடுகிறவர்கள். சோன்பப்டி விற்பவர், பழைய ஆடைகளை விற்பவர், தள்ளுவண்டிக் கடைகள் எனப் பல்வேறு சிறு வணிகர்கள் மாலை நேரம் தான் தனது விற்பனையைத் துவங்குகிறார்கள்.
மதுரையில் பகலை விடவும் இரவு வசீகரமானது. பரபரப்பானது. எங்கள் ஊரான மல்லாங்கிணறு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மல்லிகை தோட்டங்கள் நிறைய இருக்கின்றன. இந்த ஊர்களில் இரவு நாலு மணிக்கெல்லாம் மல்லிகைப் பூக்களைப் பறிக்க ஆரம்பித்துவிடுவார்கள். இந்தப் பூக்கள் மதுரையில் உள்ள பூமார்க்கெட்டிற்குக் கொண்டு செல்லப்படும். காலை முதல் விமானத்தில் வெளிநாடு செல்லும் இந்த மதுரை மல்லிகைகளுக்குத் தனிவரவேற்பு இருக்கிறது.
ஆகவே கலையாத இருளில் பெண்கள் மல்லிகை தோட்டத்தில் பூப்பறிப்பார்கள். அந்தக் காட்சி மறக்கமுடியாதது. பூ கண்ணில் தெரியாது. ஆனால் சரியாக அதைக் கொய்து எடுப்பார்கள். பறித்த பூக்களைப் போட்டு வைக்க நார்க்கூடை வைத்திருப்பார்கள். அல்லது மடியில் போட்டுக் கொள்வார்கள். சேகரித்த பூக்களை மதுரைக்குக் கொண்டு போய் விற்றுவருவது இளைஞர்களின் வேலை.
எனது நண்பனுடன் அதிகாலையில் பைக்கில் பூமார்க்கெட்டிற்குச் சென்றிருக்கிறேன். மதுரையைச் சுற்றிலும் இன்றும் கிராமங்களே அதிகமுள்ளன. மரங்கள் அடர்ந்த நெடுஞ்சாலையின் வழியே மதுரைக்குள் நுழையும் போது எதிர்கொள்ளும் காற்றும். தூரத்து மதுரையின் வெளிச்சமும் மனதை அவ்வளவு சந்தோஷப்படுத்தும்.

கிராமவாசிகளுக்கு மதுரை என்பது சந்தோஷத்தின் அடையாளம். மதுரையை நெருங்க நெருங்க துயில் கலைந்த வீதிகளில் ஆட்களின் நடமாட்டத்தைக் காண முடியும். எத்தனை அழகான வீதிகள். மதுரையின் காலை நேரத்திற்கென்றே தனியழகு இருக்கிறது.
சென்னையைப் போல அது விடிந்தவுடன் பரபரப்பினை அடைவதில்லை. சாவகாசமாக விழிக்கிறது. காபி கடைகள் அல்லது டீக்கடைகளில் ஒலிக்கும் பாடலும், திருநீறு பூசிய பாய்லரும், குளித்துத் திருநீறு பூசி நிற்கும் டீமாஸ்டரின் தெளிந்த முகமும், அழகென்ற சொல்லுக்கு முருகா என ஒலிக்கும் டிஎம்எஸ்ஸின் பக்திப்பாடலும், நியூஸ் பேப்பரை அகலவிரித்துப் படித்தபடியே அரசியலை அலசும் ஆட்களும், கையில் தூக்கு வாளியுடன் காபி வாங்க வந்து நிற்கும் கலைந்த தலையும் ரப்பர் வளையல்களும் அணிந்த சிறுமியும். வீட்டுவாசலில் தான் போட்ட கோலத்தைத் தானே தள்ளி நின்று ரசிக்கும் பெண்ணும், கோல் ஊன்றியபடியே தள்ளாடி நடந்து டீக்கடை நோக்கி வரும் பெரியவரும், கொதிக்கும் எண்ணெய்யில் உள்ளங்கையில் தட்டி ஒட்டையிட்ட உளுந்தவடையைச் சுட்டு எடுக்கும் முண்டா பனியன் அணிந்த ஆளின் சிரத்தையும், அடைத்துச் சாத்தப்பட்ட கடைகளின் வாசலில் வேஷ்டியை இழுத்துப் போர்த்தி உறங்கும் ஆளின் பித்தவெடிப்புக் கொண்ட கால்களும், ரிக்சாவிலே சுருண்டுகிடக்கும் போதைக்காரனும், சாக்பீஸால் ஹோட்டல் வாசலில் இட்லி ரெடி என எழுதும் ஹோட்டல் பணியாளரும், விரிந்த கண்களுடன் சாலை வெறித்துப் பார்த்தபடியே இருக்கும் துண்டிக்கப்பட்ட ஆட்டின் தலையும், உரித்துத் தொங்கவிடப்பட்ட ஆட்டின் உருவமும் கால் எலும்புகளை வாங்க காத்திருக்கும் துணிப்பை வைத்திருக்கும் ஆளும், ஆட்டு ரத்தம் வாங்கிச் செல்ல சிலவர் தூக்கு வாளியுடன் நிற்கும் ஆணும், புண்ணாகிப் போன பருத்த தன் யானைக்காலிற்குப் பவுடர் போட்டுக் கொண்டிருக்கும் ரோகியும், கோவில் கோபுரத்தின் விளக்கொளியும், நடந்து செல்லும் சிற்பம் போலக் கச்சிதமான உடற்கட்டுடன், ஈரம்சொட்டும் கூந்தலுடன் கோவிலுக்குச் செல்லும் இளம்பெண்ணும், புதிதாக ஒட்டப்பட்ட சினிமா போஸ்டரை நெருங்கி நின்று ஒவ்வொரு எழுத்தாக வாசிக்கும் காக்கி டவுசர் அணிந்த ஆளின் முதுகும், பால்கேனுடன் மணி ஒலித்தபடி செல்லும் பால்காரனின் தனித்த குரலும், அகத்தி கீரை கட்டுகளுடன் வரும் கிராமத்துப் பாட்டியும், ஊருக்கு வரும் மகளை வரவேற்க அவசரமாக ரயில் நிலையம் நோக்கிச் செல்லும் தந்தையின் ஆவலமான முகமும், தண்ணீர் பிடிக்கக் குடத்துடன் அலையும் பெண்களும், பொதுக்கழிப்பறை வாசலில் பீடி புகைத்தபடியே காத்திருக்கும் ஆளின் செவ்வரி ஒடிய கண்களும், மேல்சட்டை அணியாமல் தெருவில் விளையாடப் பந்துடன் நிற்கும் சிறுவனின் கலையாத தூக்கமும், பசுவும், குரங்குகளும் கோழிகளும், அகன்ற வீதியில் கம்பீரமாக அலையும் செங்கொண்டை சேவலும், சாதுவாகச் செல்லும் பூனைகளும், தலையை மட்டும் தூக்கிப் பார்த்துவிட்டுச் சோம்பலாய் படுத்துக் கொள்ளும் தெருநாயும், கோபுரத்துக் கிளிகளும், வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை அணிந்து கட்சித்தலைவரை வரவேற்க டிராவலர்ஸ் பங்களா நோக்கிச் செல்லும் ஆளின் கனவுகளும், பூவணிகர்கள், பழவணிகர்கள். வெற்றிலை வணிகர்கள். எனப் பலதரப்பட்ட வணிகர்களின் பரபரப்பான பேச்சும் வேகமும் கொண்டது தானே மதுரை.
நாங்கள் பூமார்க்கெட்டிற்குள் நுழையும் போது மலைமலையாகக் கொட்டி வைக்கப்பட்ட மதுரைமல்லிகைப் பூக்களைக் காணுவோம். வாடிக்கையாக விற்கும் கடையில் தான் வியாபாரம் செய்வார்கள். அன்று மார்க்கெட்டில் பூ என்ன விலை என்று எழுதிப்போட்டிருப்பார்கள். கொண்டுபோன பூவை கடையில் விற்றுவிட்டுக் கையில் ரொக்கத்தை வாங்கிவிட்டால் உடனே செல்லும் இடம் சாப்பாட்டுக்கடை தான்.
காய்கறி மார்கெட்டில் இங்கிலீஷ் காய்கறிகளை வாங்க ஆட்கள் திரண்டிருப்பார்கள். பட்டர்பீன்ஸ், முட்டைக்கோஸ், கேரட் பீட்ரூட், பீன்ஸ், காலிபிளவர் போன்றவை தான் இங்கிலீஷ் காய்கறிகள். இவற்றை மொத்தமாக வாங்கிக் கொண்டு போவதற்காக சில்லறை வியாபாரிகள் நிறைந்திருப்பார்கள்.
பூ விற்பவர்களுக்காகவே மதுரையில் ஐந்து மணிக்கெல்லாம் ஹோட்டலை திறந்துவிடுகிறார்கள். சூடான பூரியைப் பொறித்துக் கோபுரம் போல அடுக்கியிருப்பார்கள். விரும்பியதைச் சாப்பிட்டு, வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு ஏழு மணிக்குள் ஊர் திரும்பிவிடுவார்கள். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த இந்த மதுரைக்காட்சிகள் மனதில் அழியாச்சித்திரமாக உருக்கொண்டிருக்கிறது
பூவணிகம் போலவே பழக்கடைகள். அதுவும் இப்படிப் பின்னிரவில் தான் துவங்குகிறது. செகண்ட் ஷோ சினிமா விட்டு வெளியே வரும்போது பழம் ஏற்றிவந்த லாரிகள், வேன்களை வீதியோரம் காணமுடியும். மதுரையின் அல்லங்காடிகள் என்பது ஒரு தனியுலகம். இன்று வரை அதன் முழுமையை இலக்கியம் பதிவு செய்யவில்லை.
வணிகர்களில் தான் எத்தனை விதமான மனிதர்கள். பெரும்பாலும் இவர்கள் கறாரான வணிகர்களில்லை. உறவினைப் பேணுவதில் அத்தனை நெருக்கமானவர்கள். கோபம் அதிகமிருக்கும். ஆனால் அதைவிடப் பாசம் அதிகமிருக்கும்.

பத்தாயிரம் இருபதாயிரம் பேர் வேலைசெய்யும் பெரிய தொழிற்சாலைகள் மதுரையில் குறைவு. டெக்ஸ்டைல் மில்லை விட்டால் வேறு பெரிய தொழிற்சாலைகள் இல்லை. ஆகவே மதுரை இன்றும் விவசாயத்தைச் சார்ந்தே இயங்குகிறது. கூலவணிகம் எனப்படும் தானிய வணிகம் இன்றும் மதுரையின் முக்கியத் தொழில்.
உண்மையில் மதுரை சிறு வணிகர்களின் சொர்க்கம். ஆயிரமாயிரம் சிறுவியாபரிகள் இருக்கிறார்கள். நூறு ரூபாய் முதலீட்டில் நடக்கும் வணிகம் துவங்கி ஒரு லட்சம் வரை அன்றாடம் முதலீடு செய்து தொழில் நடத்துகிறார்கள்.
இன்றைக்கு இந்தக் காட்சிகள் நமக்குப் பழகிப்போய்விட்டன. ஆனால் ஆயிரம் வருஷங்களுக்கு முன்பும் மதுரை இப்படித் தான் இருந்திருக்கிறது.
மதுரையின் அடையாளம் அது கோவில் நகரம் என்பதே. மதுரைக்காஞ்சி காட்டும் மதுரையில் மீனாட்சியம்மன் கோவில் இல்லை. நகரில் நிறைய ஆலயங்கள் இருந்திருக்கின்றன. சிவனை வழிபட்டிருக்கிறார்கள். ஆனால் மதுரையை ஆளும் மீனாட்சியைப் பற்றி மதுரைக்காஞ்சி சிறப்பாக எதையும் சொல்லவில்லை. சிலப்பதிகாரத்திலும் காளி கோவிலே பேசப்படுகிறது.
மதுரை சுற்றுக்கோட்டைகள் கொண்ட நகரம். அழகான வீதிகள். பல்வேறு உயர்ந்த மாடங்களைக் கொண்ட வீடுகள். வணிகர்களுக்கான தனிவீதி, கோட்டை வாயிலைக் காக்கும் தெய்வம். மதில் காவலுக்கு நிற்கும் வீரர்கள். பெரிய அகழி. என அதன் சித்திரத்தை முழுமையாக நமக்குக் காட்டுகிறது மதுரைக்காஞ்சி.

கோட்டை மதில் கொண்ட மதுரையின் உருவத்தைப் பழைய சித்திரங்களில் காணமுடிகிறது. மதுரைக்காஞ்சியில் வரும் காஞ்சி என்பது ஊரைக் குறிக்கும் சொல் கிடையாது. நிலையாமையைக் குறிக்கும் சொல்லே காஞ்சி. மாங்குடி மருதன் அரச சபை கவிஞராக இருந்தவர். இந்தப் பாடலை மருதன் எந்த வயதில் எழுதினார் என்ற சந்தேகம் வந்தது. இதற்கெல்லாம் விடைகாணுவது எளிதானதில்லை.
இப்போதும் மாங்குடி என்ற கிராமம் இருக்கிறது. அங்கே மருதனாருக்கு நினைவு தூண் வைத்திருக்கிறார்கள். நானே நேரில் சென்று பார்த்திருக்கிறேன். அந்தக் கிராமம் ராஜபாளையம் அருகே உள்ளது.

பத்துப்பாட்டுள் மிகவும் நீண்ட பாட்டான மதுரைக்காஞ்சி 782 அடிகளைக் கொண்டிருக்கிறது. இன்றுள்ள நீள் கவிதையைப் போன்றது. தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை நாயகனாகக் கொண்டு பாடப்பட்டிருக்கிறது.
போரில் மகத்தான வெற்றிகளைப் பெற்ற மன்னவனுக்கு வாழ்வின் நிலையாமையை விளக்கவே மருதனார் முற்படுகிறார். உண்மையில் அதிகாரத்திலிருப்பவர்களுக்கு அறிவுரைகள் சொன்னால் பிடிக்காது. அதுவும் போரின் வெற்றிகளைப் பெரிதாகப் புகழ்ந்து சொல்லிவிட்டு போரின் அழிவுகளையும் சுட்டிக்காட்டினால் யார் கேட்டுக் கொள்வார்கள். ஆனால் மருதனார் இரண்டினையும் வெளிப்படையாகப் பேசுகிறார். ஒரே வித்தியாசம் வெற்றியை விரிவாகப் பேசுகிறார். போதும் போதும் எனப் புகழாரம் சூட்டுகிறார். லேசாகக் குத்திக்காட்டுவது போலப் போரின் அழிவுகளைச் சொல்லிச் செல்கிறார். தேடிச்சென்று சண்டையிடுவது வீரமில்லை என்பதே மருதனின் கருத்து.
மதுரைக்காஞ்சியில் 354 அடிகள் மதுரையைப் பற்றிச் சிறப்பித்துக் கூறுகிறது. நூலில் பாதி மதுரையின் சிறப்பு தான். சென்னையைப் பற்றி விரிவாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. மதுரையைப் பற்றி ஒன்றிரண்டு நூல்கள் வந்திருந்த போதும் விரிவாக ஆய்வு செய்து அதன் வரலாற்றைப் பேசும் புத்தகம் இன்னும் எழுதப்படவில்லை
பாக்தாத் நகரை அரபு இலக்கியங்கள் கொண்டாடுகின்றன. ஆயிரத்தோரு அராபிய இரவுகளில் பாக்தாத் மையமாக விளங்குகிறது. அப்படி மதுரையைப் பற்றியும் சொல்வதற்கு ஆயிரத்தோரு பகல் கதைகளும் ஆயிரதோரு இரவுக்கதைகளும் இருக்கின்றன. டவுன் ஹால் ரோட்டின் கதையை எழுதலாம் என்ற எண்ணம் நீண்டகாலமாகவே எனக்கிருக்கிறது.
மதுரை காஞ்சி சிறப்பிக்கும் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் ஒரு கவிஞன். புறநானூற்றில் உள்ள 72-ஆம் பாடல் நெடுஞ்செழியன் பெயரில் உள்ளது. அதனால் தான் மாங்குடி மருதனின் அறிவுரைகளைக் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறான்.
யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை என்ற சேரமன்னனுடன் தலையாலங்கானம் என்ற இடத்திலே பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் போர் செய்து அவனை வென்று சிறைப்படுத்தியிருக்கிறான் . இதனால் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்ற பெயர் பெற்றுள்ளான். மதுரையில் இன்றும் செழியன் என்ற பெயர் அதிகமிருக்கிறது.
ரீகல் தியேட்டரில் நாவலர் நெடுஞ்செழியனின் சொற்பொழிவினைக் கேட்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அந்த அளவு அவர் பேச்சினை மதுரை மக்கள் ரசித்துக் கேட்டார்கள். இந்த நினைவு ஏனோ குறுக்கிடுறது.
மதுரை விளம்பரத்திற்குப் பெயர்போன ஊர். வித்தியாசமான சுவர் விளம்பரங்கள், பதாகைகள். வினைல் பேனர்களை மதுரையில் தான் காணமுடியும். ரசிகர் மன்றங்கள் துவக்குவதில் மதுரை தான் முன்னோடி. ஒரு நடிகருக்கு மதுரையில் ரசிகர் மன்றம் துவங்கிவிட்டால் அவர் நிலைபெற்றுவிட்டார் என்று அர்த்தம்.
புரூஸ் லீ, ஜாக்கி சான், ஜேம்ஸ்பாண்ட் ரோஜர்மூருக்கும் கூட ரசிகர் மன்றம் கூட இருந்திருக்கிறது. இவ்வளவு ஏன் இந்தி இசையமைப்பாளர் பப்பி லகரிக்கு ரசிகர் மன்றம் உருவாக்கப்பட்டது. அவரையே மதுரைக்கு அழைத்து வந்து சிறப்புச் செய்தார்கள்.
சினிமா பார்ப்பதில் மதுரை ரசிகர்களுக்கு இணையில்லை. பிடித்த படத்தைக் கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள். டிக்கெட் கிடைக்காத புதுப்படத்திற்கு டிக்கெட் வாங்கச் சாப்பாடு கட்டிக் கொண்டு வந்து வரிசையில் நின்றவர்கள் மதுரையில் இருக்கிறார்கள். தமிழ்ப் படம் மட்டுமில்லை. ஆங்கிலம், இந்தி மலையாளப் படங்களும் மதுரையில் வெற்றிகரமாக ஓடியிருக்கின்றன.
சினிமா தியேட்டர் வாசலில் ஆங்கிலப்படத்தின் கதைச்சுருக்கத்தை எழுதி வைத்திருப்பார்கள். இப்படி ஒரு விளம்பர யுத்தி மதுரையில் தான் அறிமுகமானது.
மதுரைக்காஞ்சியிலும் இப்படி விளம்பரத்திற்காகப் பறந்த விதவிதமான கொடிகளைப் பற்றி மருதனார் விரிவாகச் சொல்கிறார். விழாக் கொடி, வெற்றிக் கொடி, வணிகர்களின் விளம்பரக் கொடி எனப் பலவகையான கொடிகள் மதுரை நகரிலே பறந்து கொண்டிருந்தன என்றும் குறிப்பிடுகிறார். இதில் மதுவகைகள் கிடைக்கும் கடைகளுக்குக் கூடக் கொடி பறந்திருக்கிறது. மதுரையின் பார்கள், மதுவிற்பனை கடைகள். அதன் மனிதர்களைப் பற்றித் தனியே எழுத வேண்டும். அது ஒரு தனியுலகம்.

மதுரையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பௌத்தப் பள்ளிகள் சமணர் பள்ளிகள் இருந்திருக்கின்றன. இன்று எண்பெருங்குன்றத்திலும் சமணப்பள்ளிகளைக் காணமுடிகிறது. ஆனால் பௌத்த அடையாளங்கள் அழிந்து போய்விட்டிருக்கின்றன.
மதுரைக்காஞ்சியில் நன்னனின் பிறந்தநாளை மக்கள் கொண்டாடிய செய்தி இடம்பெற்றிருக்கிறது. மாங்குடி மருதன் இதனை நன்னாள் என்று குறிப்பிடுகிறார். பிறந்தநாள் கொண்டாட்டமாகக் குரவைக் கூத்து நடந்திருக்கிறது. ஆட்டமும் பாட்டமுமாக மக்கள் இதனைக் கொண்டாடியிருக்கிறார்கள்.
பிறந்தநாளைக் குறிப்பதற்கு வெள்ளணி நாள் என்ற சொல்லைச் சிலப்பதிகாரத்தில் காணமுடிகிறது. வெண் துகில் அணிவது பிறந்த நாளின் வழக்கம் போலும்.
சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவனின் பிறந்த நாள் அன்று மாடுகள் உழவு வேலை செய்யவில்லை. தேசமெங்கும் விழா கொண்டாடப்பட்டிருக்கிறது. அன்று மன்னன் வீரமறவர்களுக்குப் பொன்னாலாகிய பரிசுகளை அளித்திருக்கிறான்.
ஆனால் தலைவனோ, தலைவியோ தனது பிறந்தநாளைக் கொண்டாடியதாகத் தெரியவில்லை. பிறந்த நாளின் போது காதலியைச் சந்தித்துப் பரிசுகள் தருவது போன்ற காட்சி எதையும் காணமுடியவில்லை.
நான் அறிந்தவரை இன்றும் கிராமப்புறத்தில் பிறந்தநாள் கொண்டாட மனிதர்கள் இருக்கிறார்கள். பிறந்த நாள் தெரியாதவர் நிறையவே இருக்கிறார்கள். பிறந்த நாள் கொண்டாட்டம் இந்த ஐம்பது ஆண்டுகளில் தான் அதிகமாகியுள்ளது.
பிறந்த நாளில் கேக் வெட்டி கொண்டாடுவது ஐரோப்பிய மரபு. பிறந்த நாளின் போது ஆசிவாங்குவதும் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்வதும் தான் பொது வழக்கமாக இருந்தது. இன்று பிறந்தநாளைக் கொண்டாடுவது மிகப்பெரிய நிகழ்வாக மாறியிருக்கிறது.
மதுரைக்காஞ்சியில் மன்னரின் வெற்றிப்பெருமையை விளக்கும் விதமாக இடியின் வேகத்தை ஒப்புமை செய்கிறார் மருதனார்.
அதில் இடியின் வேகம் மரத்தைத் தின்னக்கூடியது. அதாவது மரத்தை அழித்துவிடக்கூடியது .அது மட்டுமின்றி இடியானது வரை உதிர்க்குமாம். அதாவது மலைகளை நொறுக்கி விழச்செய்யுமாம். இப்படி மரத்தை தின்று மலையை நொறுக்கி விழச்செய்யும் இடியினைப் போன்றவனே என்கிறார்
மரத்தை இடி தின்னுகிறது என்ற பிரயோகம் மிக அழகானது. கவிதையின் வழியாக இடியின் உக்கிரத்தை நாம் கண்ணால் காணமுடிகிறது. இதே பாடலில் அம்பு உமிழ் என்ற அழகான சொல்லாட்சி வருகிறது.
மரம் தின்னூஉ வரை உதிர்க்கும்
நரை உருமின் ஏறு அனையை!
அருங்குழு மிளை குண்டு கிடங்கின்
உயர்ந்து ஓங்கிய நிரைப் புதவின்
மதுரையைப் பல்வேறு ஓசைகள் பெருகிய ஊர் என்கிறார் மருதனார். ஏற்றம் இறைப்பவர்களின் ஓசை. கடா விடுபவர் எருதுகளுக்குப் பூணும் மணியின் ஓசை, பறவைகளைக் கடிந்து விரட்டும் ஓசை என்றும் பல்வேறு ஓசைகள் மலிந்த ஊர் என்கிறார். சங்க காலத்திலும் மதுரை தூங்கா நகராய் விளங்கியதை மருதனார் சிறப்பாகக் குறிப்பிடுகிறார்.
உண்மையில் அந்த மதுரையினைப் போலவே தான் இன்றும் மதுரையிருக்கிறது.
விடிகாலை நேரமோ மாலை நேரமோ நீங்கள் மதுரையை ஒரு சுற்று சுற்றி வாருங்கள். எத்தனையோ விதமான ஓசைகளை, பாடல்களை, வேறுபட்ட குரல்களைக் கேட்கலாம். ஆறு கிடந்தாற் போன்று அகன்ற நெடிய தெருவில் பல வேறுபட்ட குழுவினரின் ஓசை எழுந்து ஒலிப்பதைக் கேட்கலாம். பின்னிரவிலும் ஓசை அடங்காத ஊர் மதுரை. உண்மையில் இந்த ஓசைகள் யாவும் ஒன்று சேர்ந்த மகத்தான சங்கீதம் ஒன்றைப்போல ஒலிக்கின்றன.
பேருந்தில் நீங்கள் உறங்கிக் கொண்டு வந்தாலும் மதுரையை வந்து சேர்ந்தவுடன் இந்தச் சேர்ந்திசையைக் கேட்க இயலும்.

பண்ணியம் பகர்நர் என ஒருவரைப் பற்றி மதுரைக்காஞ்சி கூறுகிறது. இவர் வெளிநாட்டு வணிகரா அல்லது பலகாரம் விற்பவரா எனத் தெரியவில்லை. கடைகளில் பொருட்களை வாங்குவதற்காகக் கடல் அலை போல வந்துபோகும் மக்களின் பசியைப் போக்க உணவு கடைகள் இருந்திருக்கின்றன.
அதை விற்றவர்கள் தான் பண்ணியம் பகர்நரா என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. பருப்புமாவும் அரிசி மாவும் கொண்டு செய்த பண்ணியங்கள் எனப்படும் சிற்றுண்டி வகைகளை அந்தக்காலத்தில் விரும்பி உண்டிருக்கிறார்கள்.
சேறும் நாற்றமும் பலவின் சுளையும்
வேறு படக் கவினிய தேம் மாங்கனியும்
பல்வேறு உருவின் காயும் பழனும்
கொண்டல் வளர்ப்பக் கொடி விடுபு கவினி .
மென்பிணி அவிழ்ந்த குறு முறி அடகும்
அமிர்து இயன்றன்ன தீம்சேற்றுக் கடிகையும்
புகழ்படப் பண்ணிய பேர் ஊன் சோறும்
கீழ் செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும்
இன்சோறு தருநர் பல்வயின் நுகர
என ருசிமிக்க உணவு வகைகளை விவரிக்கிறது மதுரைக்காஞ்சி. இன்று மலையாளத்தில் வெளியாகும் திரைப்படங்களில் கதை எந்த ஊரில் நடக்கிறதோ, அதன் சிறப்பு மிக்க உணவு வகைகளைப் படத்தின் ஊடாகக் காட்டுகிறார்கள். எந்த உணவினை விரும்பி மக்கள் சாப்பிடுகிறார்கள் என்பதையும் அது சமைக்கப்படும் விதம் பற்றியும் படம் பதிவு செய்கிறது. அங்கமாலி டைரீஸ் மலையாளப் படத்தில் தான் எத்தனை விதமான உணவுவகைகள்.
இதற்கெல்லாம் முன்னோடியாக என்றைக்கோ மருதனார் மதுரையைப் பற்றிச் சொல்லும் போதும் அதன் விசேச உணவு வகைகளை, ஐநிலத்தில் விளைந்த காய்கறிகள். பழங்கள். தானியங்கள். மீன், இறைச்சி எனச் சகலத்தையும் விவரித்திருக்கிறார்.
பெருவணிகர்கள் செய்த வணிகம், சிறு வணிகர்கள் செய்த வணிகம் இரண்டினையும் மதுரைக்காஞ்சி தனியே வகைப்படுத்திக் காட்டுகிறது. மதுரையில் தான் முதன்முறையாக ஜவுளிக்கடல் என்ற சொல்லை ஒரு கடையின் விளம்பரத்தில் பார்த்தேன். அது வெறும் விளம்பரச்சொல்லில்லை. உண்மை.
முத்து, ரத்தினம், நறுமணப் பொருட்களின் விற்பனைக்கூடமாக மையமாக மதுரை திகழ்ந்திருக்கிறது. உழவு, நெசவு, தச்சு, இரும்பு, சிற்பம், ஓவியம் கூத்து எனப் பல்வேறு வேலைகள் செய்த மக்கள் தனித்தனி வீதிகளில் வசித்திருக்கிறார்கள். மதுரையில் செயல்பட்டு வரும் கல்வி நிலையங்களின் வரலாறு விரிவாக எழுதப்பட வேண்டியது. அரசியல் மற்றும் பண்பாட்டுச் செயல்பாட்டின் முக்கிய மையமாக மதுரை என்றும் விளங்கியிருக்கிறது.மதுரைக்காட்சி ஒரு விரிவான ஆவணப்படம் போல மதுரையினைக் காட்சிப்படுத்தியிருக்கிறது. இசையும் நடனமும் ஆரவாரமும் சந்தைக்காட்சிகளும் வீதிகளும் யானையின் வருகையும் நம்மை மெய்மறக்கச் செய்கின்றன.
மருதனாரின் கண்கள் மிகக்கூர்மையானவை. கேலியும் கிண்டலும் கொண்ட அவரது பார்வை பாடலில் அழகாக வெளிப்பட்டிருக்கிறது.
வயதான பெண்கள் சீவிமுடிந்து போட்டிருக்கிற வெண்ணிற கூந்தலானது கரிய கடலில் மிதக்கும் வெண்மையான சங்கினைப் போலிருக்கிறதாம்.
இருங் கடல் வான் கோடு புரைய, வாருற்றுப்
பெரும் பின்னிட்ட வால் நரைக் கூந்தலர்
செந் நீர்ப் பசும் பொன் புனைந்த பாவை 410
செல் சுடர்ப் பசு வெயில் தோன்றியன்ன
செய்யர், செயிர்த்த நோக்கினர், மடக் கண்,
ஐஇய கலுழும் மாமையர், வை எயிற்று
வார்ந்த, வாயர், வணங்கு இறைப் பணைத் தோள்,
சோர்ந்து உகுவன்ன வயக்குறு வந்திகை
பசும்பொன்னால் செய்யப்பட்ட பாவையைப் போன்ற தோற்றமுடைய அழகான பெண்கள். மாலைவெயிலினை ஒத்த சிவந்த நிறத்தையுடையவராக இருக்கிறார்கள்., ஆண்களை வருத்துகிற பார்வையைக் கொண்ட அவர்கள் ஆங்காங்கே விடலைப் பையன்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறது மதுரைக்காஞ்சி
காட்சிகளை அடுக்கிக் கொண்டே சென்று மதுரையை ஒரு மலர் விரிவதைப் போல இதழ் இதழாக மலரச் செய்து காட்டுகிறது மதுரைக்காஞ்சி. அந்த மதுரையும் இன்றிருக்கும் மதுரையும் ஒன்றில்லை. அந்த மதுரையில் வைகை ஆற்றினை ஒட்டி திருப்பரங்குன்றமிருக்கிறது. பரங்குன்றத்தைப் பற்றி மதுரைக்காஞ்சி விவரிக்கும் காட்சிகள் தனித்துவமானவை.

மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டங்களைக் கேட்டவர்களுக்கு மாங்குடி மருதனார் மன்னரைப் புகழ்ந்து பாடும் போது இவரே இன்றைய வீரவுரைகளுக்கு முன்னோடி என்பது புரியும்.
மதுரையில் தான் முதன்முதலாக வீரவாளை மேடையில் பரிசாகத் தரும் பழக்கம் தோன்றியது என நினைக்கிறேன். வீரத்தினைக் கொண்டாடத் துவங்கிவிட்டால் அந்தத் தலைவனைப் போற்றிச் சொல்வதில் மதுரைக்காரனுக்கு நிகரே கிடையாது. விசுவாசத்திலும் அப்படித் தான்.
மதுரைக்காஞ்சி விவரிக்கும் உணவு வகைகளைத் தயாரித்து விற்பனை செய்ய இன்று ஏதாவது மதுரை உணவகம் ஒன்று முயற்சி செய்யலாம்.
இன்றும் எங்கள் கிராமத்திலிருந்து மதுரைக்குப் போய் வருவதென்றால் மதுரைக்குப் போய்விட்டு வயிறு முட்டச் சாப்பிட்டுத் திரும்புவது என்றே அர்த்தம். மதுரைக்குப் போய்விட்டுச் சாப்பிடாமல் வருவார்களா என நக்கலாகக் கேட்பார்கள்.
ஒருமுறை இரண்டு வெள்ளைக்கார நண்பர்களை மதுரையிலுள்ள ஒரு மெஸ்ஸிற்குச் சாப்பிட அழைத்துக் கொண்டு போயிருந்தேன். அசைவ உணவுவகைளை ஒரு தட்டில் கொண்டு வந்து ஒரு ஊழியர் காட்டினார். அத்தனையும் தனக்கு வேண்டும் என்றார் வெள்ளைக்கார நண்பர். கொண்டுவரச் சொன்னேன். காரத்தைத் தாங்கமுடியாமல் கண்ணில் நீர்வழிய ருசித்துச் சாப்பிட்டார்கள். மூன்று அவ்வளவு சாப்பிட்டும் மொத்த ரூபாய் ஆயிரத்திற்குள் தான் வந்தது. அவர்களால் நம்பமுடியவில்லை. ஒரு வாரம் மதுரையில் அவர்கள் விதவிதமாகச் சாப்பிட்டார்கள். ஒரு மாத காலம் சாப்பிடுவதற்காகவே மதுரைக்கு வருவேன் என்று சொல்லிவிட்டு இங்கிலாந்து புறப்பட்டுப் போனார்கள்.
அன்று தினம் ஒரு ஹோட்டல் எனச் சாப்பிட்டாலும் மதுரை ருசி அலுக்கவேயில்லை. இன்று மதுரையில் நல்ல ஹோட்டலை கண்டுபிடித்துச் சாப்பிடுவது அரிதாகிவிட்டது.
புகழ்பெற்ற அசைவ உணவகங்களில் தரமான உணவு கிடைப்பதில்லை. ருசியும் மாறிவிட்டது. ஆனால் சிறிய கடைகளில் நம்பி சாப்பிடலாம். அதைக் கண்டுபிடிப்பது தான் கஷ்டம்.
சினிமா பாடல்களை மதுரையில் கேட்கிற விதமே அலாதி. மிகச் சப்தமாகப் பாட்டுக் கேட்டால் தான் பிடிக்கும். ஒலிபெருக்கிகளுக்குத் தடைவிதித்து விட்டால் மதுரையில் கொந்தளிப்பு உருவாகிவிடும். அதை நேரம் பாடகர்களைக் கொண்டாடுவார்கள். பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் மதுரைக்காரர் என்பதால் அவர் மீது தனிப்பாசமும் உண்டு.
மதுரையில் நடிகர் சங்கமிருக்கிறது. அந்தச் சங்கத்தில் போய்ப் பார்த்தால் எந்த நடிகருடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று நடிகைகள் எழுதிக் கொடுத்திருப்பதைக் காணமுடியும். வள்ளியாக நடிப்பவர்களுக்கு இன்றைக்கும் தனிப்புகழும் பெயருமிக்கிறது.
மதுரை தியாகராஜா கல்லூரியில் சில காலம் பேராசிரியராகப் பணியாற்றிக் கவிஞர் ஏ.கே.ராமானுஜம் வைகை ஆற்றின் வறண்ட காட்சியினை ஆங்கிலக் கவிதையாக எழுதியிருக்கிறார். இன்றும் ஆண்டில் பெரும்பகுதி வைகை ஆற்றில் வெயில் தான் ததும்பி வழிகிறது. ஆற்றில் அழகர் இறங்கும் போது தண்ணீர் விடுவார்கள். எதிர்சேவை நடக்கும். அழகர் பவானி வருவார். சென்ற ஆண்டும் அதுவும் நடைபெறவில்லை. வைகை ஆற்றினைப் பற்றி மதுரைக்காஞ்சி குறிப்பிடுவதைக் காணும் போது காசியில் பார்த்த கங்கையே நினைவில் வந்து போகிறது
மதுரையிலும் அதைச் சுற்றியும் வசித்த ஒவ்வொருவர் மனதிலும் மதுரை ஒரு அழியாச்சித்திரமாக இடம்பெற்றிருக்கிறது. கவிஞர் ஜெயபாஸ்கரன் மதுரையில் வசிக்கிறார். அவரும் ஒரு வணிகர். அவர் கவிதைகளில் வெளிப்படும் மதுரை தனித்துவமானது. சுரேஷ் குமார இந்திரஜித் கதைகளில் சித்தரிக்கப்படும் மதுரையின் சித்திரங்கள் அலாதியானவை. ஜி. நாகராஜனும், சிங்காரமும் மதுரையினை அழகாகச் சித்தரித்திருக்கிறார்கள். மதுரையில் டெய்லராக வசித்த கர்ணன் கதையில் மதுரை காட்சிகள் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் சாமுவேல் சுதானந்தா மதுரைக்காஞ்சிக்கு அழகான விளக்கவுரை எழுதியிருக்கிறார். இளம் வாசகர்களுக்கு அதுவே சரியான வழிகாட்டி நூலாகும்.
எனது கதை ஒன்றில் கண்ணகியை எரித்த நெருப்பின் மிச்சம் மதுரையின் ஒரு இடத்தில் ரகசியமாக இன்றும் எரிந்து கொண்டிருப்பதாக எழுதியிருக்கிறேன். அந்த நெருப்பு மதுரைக்காரர்களின் மனதில் தான் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.
மதுரையின் ஒவ்வொரு கல்லிலும் சரித்திரமிருக்கிறது. நினைவுகளின் பெரும் விளைநிலமாக உள்ளது மதுரை. அதனாலே மதுரைக்காஞ்சியை வாசிக்கும் போது நெருக்கமாக உணரமுடிகிறது
••
.
திரைக்குப் பின்னால்
Mank என்ற டேவிட் பிஞ்சர் இயக்கிய படத்தைப் பார்த்தேன். இந்த ஆண்டு ஆஸ்கார் பரிந்துரை பட்டியலில் இருக்கிறது. நிச்சயம் விருது பெறும் என்றே நம்புகிறேன். கறுப்பு வெள்ளையில் மிகச் சிறப்பாகப் படமாக்கியிருக்கிறார்கள்.

ஆர்சன் வெல்ஸ் இயக்கிய சிட்டிசன் கேன் ஹாலிவுட் சினிமா வரலாற்றில் சாதனைப்படமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் படத்தை இயக்கியபோது ஆர்சன் வெல்ஸிற்கு 24 வயது.
படத்திற்குச் சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருது அறிவிக்கபட்ட போது அதைப் பெற்றுக்கொள்ள வெல்ஸ் நேரில் செல்லவில்லை. படத்தின் திரைக்கதையை அவர் பெயரையும் போட்டுக் கொண்டார். உண்மையில் அந்தத் திரைக்கதையை எழுதியவர் ஹெர்மன் மான்கிவிச்.
அவரது பெயரும் திரைக்கதை ஆசிரியர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மான்கிவிச்சும் ஆஸ்கார் விழாவில் கலந்து கொள்ளவில்லை. வீட்டிலிருந்தபடியே தான் விருது நிகழ்ச்சியினைத் தெரிந்து கொண்டார். சிட்டிசன் கேனைப் பற்றிப் பேசும் எவரும் மான்கிவிச்சை பற்றிப் பேசுவதில்லை. மகத்தான திரைக்கதை ஒன்றை எழுதிய எழுத்தாளன் ஏன் இருட்டடிக்கப்படுகிறான். ஏன் தான் எழுதாத திரைக்கதையில் ஆர்சன் வெல்ஸ் தன் பெயரை போட்டுக் கொண்டார். இதற்காக அவரும் மான்கிவிச்சும் எப்படிச் சண்டையிட்டுக் கொண்டார்கள் என்ற. மறைக்கப்பட்ட இந்த உண்மைகளை வெளிச்சமிட்டுக்காட்டியிருக்கிறார் டேவிட் பிஞ்சர்.

படுக்கையில் கிடந்தபடியே மான்கிவிச் எப்படி ஒரு திரைக்கதையை எழுதினார் என்பதை மிகச்சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். கேரி ஒல்ட்மேன் மான்கிவிச்சாகப் பிரமாதமாக நடித்திருக்கிறார்.
1940 ஆம் ஆண்டில் படம் நடக்கிறது. படத்தின் துவக்கத்தில் ஒரு கார் விபத்தில் சிக்கிய கால் முறிந்து தொலைதூர பண்ணை வீட்டின் படுக்கையில் கிடக்கும் மான்கிவிச்சை தனது புதிய படத்திற்கான திரைக்கதையை எழுதுவதற்காக ஆர்சன் வெல்ஸ் நியமிக்கிறார்.
பத்திரிக்கையாளரான மான்கிவிச் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே ஹாலிவுட் ஸ்டுடியோவிற்குள் எழுத்தாளராக நுழைந்தவர். கதை இலாக்காவில் அவரையும் ஒருவராக இணைத்துக் கொள்கிறார்கள். மிதமிஞ்சிய குடியும் ஞானமும் ஒன்று சேர்ந்த அவரை ஸ்டுடியோவால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் நடிகர்களின் நட்பு கிடைக்கிறது.
ஹாலிவுட் ஸ்டுடியோ என்பது மிகப்பெரிய தொழிற்சாலை. அங்கே நடிப்பது, எழுதுவது, படம் எடுப்பது எல்லாமும் வேலைகள் தான். எதிலும் சுதந்திரமாக, கலாப்பூர்வமாக ஈடுபடமுடியாது. பணம் மட்டுமே ஸ்டுடியோவின் குறிக்கோள். முந்தைய படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதே பார்மூலாவில் படம் எடுப்பதே ஸ்டுடியோ பாணி. அவர்கள் மாதசம்பளத்திற்கு ஆட்களை வைத்திருந்தார்கள். பகலிரவாக வேலை செய்ய வேண்டிய சூழல். சூதாட்டக்கூடம் போல அதிர்ஷடம் இருந்தால் பணத்தை அள்ளிக் கொண்டு போகலாம் என்ற நிலையே அன்றிருந்தது.
படத்தின் இயக்குநரால் சுதந்திரமாகச் செயல்பட முடியாது. தயாரிப்பாளர் தான் படத்தின் இறுதி வடிவை முடிவு செய்வார். தேவையான மாற்றங்களை அவரே வேறு ஒரு இயக்குநரை வைத்து எடுத்துக் கொள்வார். ஆகவே படம் வெளியாகி திரையரங்கில் ஓடும்வரை இயக்குநர் தலைக்கு மேலே கத்தி தொங்கிக் கொண்டுதானிருக்கும்.
ஸ்டுடியோ உலகின் நிஜத்தை படம் துல்லியமாகச் சித்தரித்துள்ளது, எழுத்தாளர்களின் அறையும் அங்கே நடக்கும் விவாதங்களும் ஸ்டுடியோ முதலாளிகள் ஊழியர்களை நடத்திய விதத்தையும் படத்தில் உண்மையாகக் காட்டியிருக்கிறார்கள்.
சிட்டிசன் கேன் திரைக்கதையை வில்லியம் ராண்டால்ஃப் ஹியர்ஸ்ட் என்ற தொழிலதிபரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டே உருவாக்கியிருக்கிறார்.

குறிப்பாகச் சிட்டிசன் கேனில் வரும் சார்லஸ் ஃபாஸ்டர் கேன் கதாபாத்திரம் ராண்டால்ஃப் சாயலில் தான் உருவாக்கப்பட்டிருக்கிறார். ஹியர்ஸ்ட் பத்திரிக்கை உலகில் நுழைந்த விதம். குற்றம் மற்றும் பாலியல் சார்ந்த விஷயங்களைத் தலைப்பு செய்திகளாக வெளியிட்டுப் பரபரப்பாகச் செய்தித்தாளை விற்றவிதம். நாடு முழுவதும் தனது பத்திரிக்கை அலுவலகங்களை உருவாக்கியது. மேயர் தேர்தலில் போட்டியிட்டது. அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட காதல் மற்றும் மனைவியின் காரணமாக உருவான பிரச்சனைகள். போன்றவற்றை மான்கிவிச் அப்படியே தனது திரைக்கதையில் மறு உருவாக்கம் செய்திருக்கிறார்
படம் முழுவதும் மான்கிவிச்சின் பேச்சு ரசிக்கும்படியாக உள்ளது. நினைவிலிருந்து அவர் இலக்கியமேற்கோட்களை அடிக்கடி வெளிப்படுத்துகிறார். ஆழ்ந்த படிப்பும் புரிதலும் கொண்டவர் என்பதை அழகாகக் காட்டுகிறார்கள்
குடிபோதையில் அவர் தனது அன்றாட வாழ்வின் கஷ்டங்களை மறக்க முயலுகிறார். போதை கலையும் நேரங்களில் மட்டுமே எழுதுகிறார். அவரைக் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் திரைக்கதை எழுத வைப்பது பெரிய சவால். ஆனால் அதைத் துணித்து முயற்சிக்கிறார் ஆர்சன் வெல்ஸ்.
மான்கிவிச்யை எழுத வைப்பதற்காகப் பெட்டிபெட்டியாக விஸ்கி பாட்டில்களை அனுப்பி வைக்கிறார் ஆர்சன் வெல்ஸ்.
மான்கிவிச் சொல்லச் சொல்ல டைப் செய்வதற்காக ரீட்டா என்ற பெண் உதவிக்கு இருக்கிறாள். பெருங்குடிகாரரான மான்கிவிச் எப்படித் திரைக்கதையை எழுதும் போதே அவரது கடந்தகால நினைவுகள் பீறிடுகின்றன. முன்பின்னாகச் செல்லும் கதைப்போக்குப் படத்திற்குத் தனிசுவாரஸ்யத்தைத் தருகிறது.
இந்தப்படத்திற்கான ஸ்கிரிப்ட்டை டேவிட் பிஞ்சரின் தந்தை ஜாக் பிஞ்சர் 1990களில எழுதியிருக்கிறார். அதை உடனடியாகப் படமாக்க முடியாத டேவிட் பிஞ்சர் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது படமாக்கியிருக்கிறார்

மாங்க் படத்தில் எம்ஜிஎம் ஸ்டுடியோ எப்படி இயங்கியது என்பதைத் துல்லியமாகச் சித்தரித்திருக்கிறார்கள்.
லூயிஸ் பி. மேயரின் பிறந்தநாள் விழாவில் நடக்கும் நிகழ்வுகளும் அங்கே மான்கிவிச் கலந்து கொண்டு போதையில் பேசுவதும் தேர்தலில் போட்டியிடும் அப்டன் சிங்ளேர் பற்றிச் சொல்வதும் அழகான காட்சி.
எம்.ஜி.எம். ஸ்டுடியோ நிர்வாகிகள் அப்டன் சிங்ளேருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கிறார்கள். இதற்காகப் பிரச்சாரப்படங்களைத் தயாரிக்கிறார்கள். ஆனால் அவர்கள் முயற்சி பலிக்கவில்லை.
அந்த நாட்களில், எழுத்தாளர்களை ஸ்டுடியோக்கள் சொற்ப பணத்தைக் கொடுத்து எழுதி வாங்கிவிடுவார்கள். படத்தின் டைட்டிலில் அவர்கள் பெயர் இடம்பெறாது. கதை இலாக்கா என்பதே இந்த இருட்டடிப்பிற்கான கவசம் தான்.
மான்கிவிச் அப்படிப் பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு தி விஸார்ட் ஆஃப் ஓஸ் எழுதுவதில் துணை செய்திருக்கிறார். ஆனால் தான் தீவிரமாக உழைத்து எழுதிய சிட்டிசன் கேன் கதையை அப்படிப் பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு ஒதுங்கிவிட மனமின்றி அவர் ஆர்சன் வெல்ஸிடம் தன்னுடைய பெயர் படத்தில் இடம்பெற வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.
இதை ஆரம்பத்தில் வெல்ஸ் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் மான்கிவிச்சின் பிடிவாதம் காரணமாக அவரது பெயரை தன்பெயரோடு சேர்ந்து திரைக்கதை என டைட்டிலில் போடுகிறார்.
பல்வேறு பிரிவுகளில் அந்தப்படம் ஆஸ்கார் விருதுக்குப் போட்டியிட்டபோதும் சிறந்த திரைக்கதைக்காக மட்டுமே விருது பெற்றது. ஆனால் அதைப் பெற இருவருமே நேரில் செல்லவில்லை
ஹாலிவுட் ஸ்டுடியோக்களின் மான்கிவிச் அடைந்த அனுபவங்களைத் தான் அந்தப்படத்தில் காட்சிகளாக்கியிருக்கிறார். இதைப் படமாக்கிய விதத்தில் தன் மேதைமையை ஆர்சன் வெல்ஸ் நிரூபித்திருக்கிறார். ஆனால் அவரைப் போன்ற பெருங்கலைஞரும் கூடத் தான் எழுதாத கதைக்குத் தன் பெயரைப் போட்டுக் கொள்ள ஏன் முன்வருகிறார்கள் என்பது புதிரான விஷயமே.
சிட்டிசன் கேனிற்குப் பிறகு மான்கிவிச் முக்கியமான படம் எதையும் எழுதவில்லை. குடியும் மனச்சோர்வு மிக்க வாழ்க்கையும் அவரை முடக்கிவிட்டது. ஆனால் இந்த ஒரேபடம் என்றைக்கும் அவரது பெயரை ஹாலிவுட்டில் உச்சரிக்கவைத்துக் கொண்டேயிருக்கிறது
இந்தப்படத்தைக் கறுப்பு வெள்ளையில் உருவாக்கியதே தனிச்சிறப்பு. கறுப்பு வெள்ளை சினிமா இன்றில்லை. ஆனால் அந்த நினைவுகள் நமக்குள் அழியாமல் இருக்கின்றன. இப்போதும் கூட ஹாலிவுட்டின் புகழ்பெற்ற கறுப்பு வெள்ளை படங்களைக் காணும் போது வியப்பாகவே இருக்கிறது
மான்க் போராடி தனது பெயரை திரையில் இடம்பெறச் செய்துவிட்டார். ஆனால் எத்தனையோ எழுத்தாளர்களால் தனது திரைக்கதை வேறு யாரோ பெயரில் வெளியான போதும் ஒன்றுமே செய்ய இயலவில்லை. இன்றும் அமெரிக்காவில் திரைக்கதையைப் பதிவு செய்யும் அமைப்புகள் தீவிரமாகச் செயல்படுகின்றன. இப்படி ஏமாற்றிவிட முடியாது. முறையான ஒப்பந்தம் இன்றி ஒரு படமும் உருவாக்கப்படுவதில்லை.
ஆஸ்கார் போட்டியில் இந்த முறை பெரும்பாலும் பீரியட் படங்களே அதிகமுள்ளன. சமகாலப் பிரச்சனைகளை விட்டு ஒதுங்கி ஏன் இப்படி நூற்றாண்டுகளுக்கு முந்தைய உலகை நோக்கி ஹாலிவுட் திரும்பியிருக்கிறது என்பதிலும் வணிகம் தவிர வேறு நோக்கம் எதுவுமில்லை.
இன்று வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் வசூலில் பெரிய வெற்றி பெறுகின்றன. நூறு ஆண்டுகளுக்கு முந்தைய சமூகப்பிரச்சினைகளைத் திரையில் காண மக்கள் விரும்புகிறார்கள். போரையும், மதத்தையும் வைத்து ஆண்டுக்கு ஒரு வெற்றிபடம் கொடுக்கும் ஹாலிவுட் வணிகம் தற்போது மாறத்துவங்கியிருக்கிறது.
அமெரிக்கச் சினிமாவில் வேறு தேசத்தின் இயக்குநர்கள் முதன்மையான இடம்பெறத் துவங்கிவிட்டார்கள். சென்ற ஆண்டு Parasite வெற்றி பெற்றது அதன் துவக்கம் மட்டுமே.
இந்த ஆஸ்கார் பட்டியலில் Nomadland, News of the World. Sound of Metal. The Trial of the Chicago 7போன்ற படங்கள் சிறப்பாக உள்ளன. இந்தப்படங்கள் நிச்சயம் விருதுகளைப் பெறக்கூடும்.
••
February 7, 2021
ரஸ்கோல்நிகோவ்வின் ட்வீட்
உலகம் முழுவதும் தஸ்தாயெவ்ஸ்கியை எப்படி எல்லாம் படிக்கிறார்கள். எப்படி எல்லாம் கொண்டாடுகிறார்கள் என்பது வியப்பளிக்கிறது.

1866ல் குற்றமும் தண்டனையும் (Crime and Punishment ) நாவல் தொடராக 12 மாதங்கள் வெளியானது. பின்பு 1867ல் அந்த நாவல் முழுமையான ஒரே நூலாக வெளியானது. அன்று முதல் இன்றுவரை எவ்வளவு பிரதிகள் இந்த நாவல் விற்றுள்ளது என்று துல்லியமாக எவராலும் சொல்ல முடியாது. நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியிருக்கிறது.

1867 முதல் 2021 வரை எத்தனை தலைமுறை அந்த நாவலை வாசித்திருக்கிறது என்று நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
குற்றமும் தண்டனையும் தொடராக வெளிவந்து கொண்டிருந்த நாட்களில் தான் டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நாவலும் தொடராக வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
1885ல் முதல் ஆங்கில மொழியாக்கம் வெளியானது அதன்பிறகு இன்று வரை பதினைந்து வேறுவேறு மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளன. இதுமட்டுமின்றி 25 முறை திரைப்படமாக வெளியாகியிருக்கிறது. மேடை நாடகமாகவும், இசைநாடகமாகவும் இதனை நிகழ்த்தியிருக்கிறார்கள். காமிக்ஸ் புத்தகம் துவங்கி தற்போதைய கிராபிக் நாவல் வரை உருமாற்றம் கொண்டிருக்கிறது.
நூற்றுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் பாடமாகக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த நாவலை ஆய்வு செய்து பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை 3127 என்கிறது ஒரு புள்ளிவிவரம். இத்தனை பேர் இந்த நாவலைப் பற்றி ஆராய்ந்து டாக்டர் பட்டம் உள்ளிட்ட பல்வேறு பட்டங்களைப் பெற்றிருக்கிறார்கள். உலகின் மிகச்சிறந்த புத்தகப்பட்டியலில் சிறந்த ஐம்பது நூல்களில் ஒன்றாக இடம்பெற்றிருக்கிறது. உலகம் முழுவதும் சேர்ந்து ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ஐந்து லட்சம் பிரதிகள் விற்பனையாகிறது என்கிறார்கள்
செப்டம்பர் 1865ல் ஃபியோதர் தஸ்தாயெவ்ஸ்கி ஜெர்மனியின் வைஸ்பேடனில் தங்கியிருந்த போது அவரால் அறைக்கான வாடகையைத் தர முடியவில்லை. சூதாட்டத்தில் ஈடுபட்டு தனது பணம் முழுவதையும் இழந்திருந்தார். சூதாட்ட வெறி அவரை ஆட்டுவித்தது. இதைப்பற்றிச் சூதாடி என்ற நாவலில் மிக அழகாக எழுதியிருக்கிறார்.
தனது வீட்டு உரிமையாளருக்குத் தர வேண்டிய பாக்கி அதிகமாகிவிட்டதால் தனக்கு முன்பணம் அனுப்பித் தரமுடியுமா என ரஷ்ய ஹெரால்டின் ஆசிரியரான மிகைல் கட்கோவுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அதில் தான் ஒரு புதிய நாவலை எழுத திட்டமிட்டுள்ளதால் அந்த நாவலுக்கான முன்தொகையாக 300 ரூபிள் தந்து உதவும்படி கேட்டுக் கொண்டிருந்தார். குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கைபிரதியை அனுப்பி வைக்கவேண்டும் என்ற நிபந்தனையோடு மிகைல் கட்கோ முன்பணம் அனுப்பி வைத்தார். அப்படிக் கடனை தீர்ப்பதற்காகப் பெற்ற பணத்திற்காக எழுதிய நாவல் தான் குற்றமும் தண்டனையும்.

நாவல் தொடராக வெளியான நாட்களில் இளைஞர்கள் இதைக் கொண்டாடினார்கள். இன்றும் உலகெங்கும் இளைஞர்கள் இந்த நாவலைக் கொண்டாடுகிறார்கள்.
1881 ஆம் ஆண்டு ரஷ்யாவில் அலெக்சாண்டர் II படுகொலை செய்யப்பட்டார். இந்த நிகழ்வு தஸ்தயேவ்ஸ்கியின் நாவலில் வரும் கொலையின் சாயலிலிருந்த காரணத்தால் தஸ்தாயெவ்ஸ்கியின் தீர்க்கதரிசனம் முன்னதாகவே வெளிப்பட்டதாக வாசகர்கள் கருதினார்கள். .
இந்த 155 ஆண்டுகளில் உலகில் எத்தனையோ விஷயங்கள் மாறியிருக்கின்றன. ரஷ்யாவில் புரட்சியை ஏற்பட்டது. சோவியத் யூனியன் உருவாகி வளர்ந்து முடிவில் அது உடைந்தும் போய்விட்டது. உலகில் இரண்டு பெரிய யுத்தங்கள் நடந்து முடிந்திருக்கின்றன. புதிய தொழில்நுட்பத்தின் வருகை. நகரமயமாக்கம், மக்கள்தொகை பெருக்கம், என எவ்வளவோ மாற்றங்கள். அத்தனையும் தாண்டி இந்த நாவல் தொடர்ந்து வாசிக்கபடுகிறது. கொண்டாடப்படுகிறது.
குற்றமும் தண்டனையும் நாவல் வெளியாகி 150 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு 2016ம் ஆண்டில் ஒரு புதிய முயற்சி நடைபெற்றது.

இந்த நாவலின் நாயகன் ரஸ்கோல்நிகோவ் தன் பார்வையில் நாவலின் நிகழ்வுகளை விவரிக்கும் விதமாகத் தினம் ஒரு ட்வீட் வெளியிட்டிருக்கிறார்கள்.
ரஸ்கோல்நிகோவின் ட்வீட்டுகள் இந்த நாவலுக்குப் புதிய தோற்றத்தை உருவாக்கியது. ரஸ்கோல்நிகோவ்விற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் தங்கள் கருத்துகளை ட்வீட் செய்திருக்கிறார்கள்.
ஒரு நாவலை இப்படி ட்வீட் செய்வது இன்று புதிய பாணியாக வளர்ந்து வருகிறது. வட அமெரிக்கத் தஸ்தாயெவ்ஸ்கி சங்கம் சார்பில் சாரா ஹட்ஸ்பித் இந்த ட்வீட்களைச் செய்திருக்கிறார். பிரிட்டனில் வசிக்கும் இவர் ஒரு பேராசிரியர். மற்றும் தஸ்தாயெவ்ஸ்கி குறித்து ஆய்வுகள் செய்து வருபவர்
இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தஸ்தாயெவ்ஸ்கியை கொண்டாட வேண்டும் என நினைத்த சாரா டுவிட்டரில் இப்படி ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்.
இதற்கு முன்பு இந்த நாவலில் தஸ்தாயெவ்ஸ்கி விவரித்துள்ள வீதிகள். இடங்கள், பாலம் மற்றும் காவல்நிலையம் போன்ற முக்கியத் தொடர்புகளை மேப்பிங் பீட்டர்ஸ்பர்க் என்ற திட்டத்தின் கீழே கூகிள் உதவியோடு அடையாளப் படுத்தியிருக்கிறார். இதனால் நாவலின் முக்கிய இடங்களை வாசகர்கள் நேரடியாகக் கண்டுணர முடியும்
குற்றமும் தண்டனையும் நாவலுக்கு இப்படி ஒரு புதுப் பரிமாணத்தை உருவாக்கியதால் இதனைப் பயன்படுத்திக் கல்லூரி மாணவர்கள் பலர் நாவலுடன் ஒரு பயணம் என்று பீட்டர்ஸ்பெர்க் வீதிகளில் தஸ்தாயெவ்ஸ்கியின் உலகைக் கண்டிருக்கிறார்கள். பல்கலைக்கழகங்களில் நாவல் கற்பித்தலுக்கு இது புதுவகைக் கருவியாக மாறியிருக்கிறது.
நாவலை ட்வீட் செய்வதற்கு முன்னதாக இந்த நாவலின் பின்புலம் மற்றும் தஸ்தாயெவ்ஸ்கி இதை எழுதிய விதம் பற்றிய அறிமுகத்தைச் சாரா தந்திருக்கிறார். அதன்பிறகு ரஸ்கோல்நிகோவ் பெயரில் ஒரு ட்வீட் கணக்கைத் துவங்கி அவன் பார்வையில் அந்த நாவலின் உலகை விவரிக்கும் விதமாகத் தொடர்ந்து ட்வீட் செய்திருக்கிறார்.
இளந்தலைமுறையினருக்கு இந்த ட்வீட்கள் வசீகரமாக இருக்கவே உடனடியாக எதிர்வினை அளித்திருக்கிறார்கள். பிற கதாபாத்திரங்களோடு ரஸ்கோல்நிகோவ்விற்கு உள்ள உறவை வெளிப்படுத்தும் விதமாகச் சாராவின் நண்பர்கள் ஒன்று சேர்ந்து அந்தப் பகுதிகளை ட்வீட் செய்திருக்கிறார்கள். தஸ்தாயெவ்ஸ்கியின் வாசகங்களைக் கொண்டே இந்த ட்வீட்டுகள் வெளியாகியிருக்கின்றன
ரஸ்கோல்நிகோவ் தானே ட்வீட் செய்வதால் அவனுக்கு நேரடியாக அறிவுரைகள் சொல்லும்விதமாகப் பலரும் ட்வீட் செய்திருந்தார்கள். இது இந்த நாவலுக்குப் புதியதொரு தளத்தை உருவாக்கியது.
இந்த ட்வீட்களைத் தொகுத்துத் தற்போது சிறிய நூலாக வெளியிட்டிருக்கிறார்கள்
ட்வீட்டர் உலகில் ரஸ்கோல்நிகோவ் யார். அவனது உலகம் இன்றுமிருக்கிறதா. அல்லது அவன் வெறும் கற்பனை மனிதன் மட்டும் தானா என்ற கேள்வி நமக்கு எழுகிறது.
அவன் நாவலின் நாயகன் மட்டுமில்லை. அவன் ஒரு அடையாளம். உலகிலிருந்து ஒதுங்கி வாழும் பகற்கனவு காணும் இளைஞனுக்குள் ரஸ்கோல்நிகோவ் ஒளிந்திருக்கிறான். எந்த ஊராக இருந்தாலும் வட்டிக்குப் பணம் வாங்க கையேந்தி நிற்கும் மனிதனுடன் அவன் தோழனைப் போலத் துணை நிற்கிறான். புறக்கணிக்கப்பட்ட மனிதனின் நிழல் தான் ரஸ்கோல்நிகோவ்.
பிரிட்டிஷ் கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான டேவிட் மெக்டஃப் குற்றமும் தண்டனை நாவலுக்குப் புதிய ஆங்கில மொழியாக்கத்தை வெளியிட்டிருக்கிறார். இது போலவே ரிச்சர்ட் பேவர் மற்றும் லாரிசா வோலோகான்ஸ்கி – இணைந்து புதிய மொழியாக்கம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்த இரண்டு புதிய மொழியாக்கங்களும் நுட்பமான அளவில் வேறுபடுகின்றன. பேவரின் மொழியாக்கம் சிறப்பாக உள்ளது. இந்த இரண்டினையும் விடக் கான்ஸ்டன்ஸ் கார்னெட்டின் மொழியாக்கம் எளிமையானது. பலநேரம் அது தரும் நெருக்கத்தைப் புதிய மொழியாக்கம் தரவில்லை என்பதே உண்மை. கார்னெட் தானே சுயமாக ரஷ்யமொழி கற்றுக் கொண்டவர்.

ஜார்ஜ் பாட்டனின் மகளான கார்னெட் இங்கிலாந்தின் பிரைட்டனில் பிறந்தவர், கேம்பிரிட்ஜில் உள்ள நியூன்ஹாம் கல்லூரியில் லத்தீன் மற்றும் கிரேக்க மொழியைப் படித்தவர்.
1883 ஆம் ஆண்டில் அவர் லண்டனுக்குக் குடிபெயர்ந்தார், அங்கு அரண்மனை நூலகத்தில் நூலகராகவும் பணியாற்றத் தொடங்கினார். அந்த நாட்களில், பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் காப்பாளராக இருந்த டாக்டர் ரிச்சர்ட் கார்னெட்டின் மகன் எட்வர்ட் கார்னெட்டையும் சந்தித்தார். அவருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தார். அந்தக் காதல் திருமணமாக மாறியது.
ஆகஸ்ட் 31, 1889 இல் பிரைட்டனில் எட்வர்ட் கார்னெட்டினை திருமணம் செய்து கொண்டார். 1891 ஆம் ஆண்டு அரசியல் காரணங்களுக்காக நாடு கடத்தப்பட்டு லண்டனில் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்ட ஃபெலிக்ஸ் வோல்கோவ்ஸ்கியின் அறிமுகம் ஏற்பட்டது. அவரிடமே ரஷ்ய மொழியைக் கற்றுக் கொண்டார். தனது சொந்த விருப்பத்தின் காரணமாகவே அவர் ரஷ்ய இலக்கியங்களை மொழிபெயர்ப்புச் செய்யத் துவங்கினார்.
1894 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அவர் ரஷ்யாவிற்குத் தனது முதல் பயணத்தை மேற்கொண்டபோது நேரடியாக டால்ஸ்டாயை தேடிச் சென்று சந்தித்தார். துர்கனேவுடன் நெருக்கமான நட்பு இருந்தது. ரஷ்ய எழுத்தாளர்களின் முக்கியப் படைப்புகள் அனைத்தையும் இவர் மொழியாக்கம் செய்திருக்கிறார்.
1920 களின் பிற்பகுதியில், தொடர்ந்து படித்தும் மொழிபெயர்ப்பு செய்தும் வந்த கார்னெட் கண்பாதிப்பிற்கு உள்ளாகி எதையும் படிக்க இயலாத நிலைக்கு உள்ளானார். எழுபது தொகுதிகள் ரஷ்ய இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார் என்பது இவரது பெருந்சாதனையாகும்.
தஸ்தாயெவ்ஸ்கி பயன்படுத்திச் சில வார்த்தைகளை நேரடியாக அர்த்தம் கொள்ள முடியாது. அந்த வார்த்தைகளுக்குச் சொந்த வரலாறு இருக்கிறது. அதைத் தஸ்தாயெவ்ஸ்கி கவனமாகவும் விசேசமாகவும் பயன்படுத்தியிருக்கிறார்.
குற்றமும் தண்டனையும் நாவலில் மட்டுமின்றி The Idiot, The Possessed, and The Brothers Karamazov ஆகிய மூன்று நாவல்களிலும் கொலை முக்கியப் பங்கினை வகிக்கிறது. கொலையை ஒரு லென்ஸை போலவே தஸ்தாயெவ்ஸ்கி கையாளுகிறார். அந்த லென்ஸ் வழியாகக் கொலையாளியின் மனதை ஊடுருவி ஆராய்வதுடன் மற்றவர்களின் அகபுற வாழ்க்கையினையும் ஆய்வு செய்கிறார். குற்றவாளியே துப்பறியும் நிபுணராக மாறும் விநோதம் தஸ்தாயெவ்ஸ்கியிடம் காணப்படுகிறது. வழக்கமான திரில்லர் நாவல்களில் கொலைகாரனைக் கண்டறிவதே நாவலின் முக்கிய நோக்கமாக இருக்கும். ஆனால் தஸ்தாயெவ்ஸ்கி கொலைக்கான காரணத்தையே ஆராய்கிறார். கொலைகாரன் யார் என்று வாசகனுக்கு முதலிலே தெரிந்துவிடுகிறது. குற்றம் பற்றி ரஸ்கோல்நிகோவ் எழுதிய கட்டுரையைப் போலீஸ் இன்ஸ்பெக்டர் படித்திருக்கிறார். அதில் சாமானியனுக்கும் அசாதாரண மனிதனுக்குமான வேறுபாட்டினை ரஸ்கோல்நிகோவ் சுட்டிக்காட்டுகிறான். தன்னை அசாதாரண மனிதனாகக் கருதுகிறான். அதை நிரூபிக்கவே அவன் கொலை செய்கிறான்.
ரஸ்கோல்நிகோவின் ட்வீட்களில் நாம் அவன் தன் முடிவுகளை எப்படி எடுக்கிறான். எவ்வளவு உணர்ச்சிப்பூர்வமாக நடந்து கொள்கிறான். எப்படித் தன்னைத் தானே சுயவிசாரணை செய்து கொண்டிருக்கிறான் என்பதைத் தெளிவாக அறியமுடிகிறது
வாசிப்பை புதிய தளத்திற்குக் கொண்டுபோவதற்கு இது போன்ற முயற்சிகள் பெரிதும் துணை செய்கின்றன. தமிழில் பல்லாயிரம் பேர் ட்வீட் செய்கிறார்கள். சினிமா, அரசியல் கிரிக்கெட், சமூகப்பிரச்சனைகள் மட்டுமே அவர்களின் உலகம். அதைத் தாண்டி இது போலத் தனக்குப்பிடித்த தமிழ் நாவல். சிறுகதை, கவிதைகள் குறித்த ட்வீட்களை உருவாக்கி அதன் வழியே வாசிப்பினை மேம்படுத்தலாம் தானே.
எங்கோ பிரிட்டனிலிருந்தபடியே ரஷ்ய இலக்கியத்தினை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் சாராவை போலத் தமிழகத்தில் பத்து பேர் முயன்றால் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கான புதிய வெளியினை உருவாக்க முடியும். எல்லாத் தொழில்நுட்பங்களும் வெறும் பொழுதுபோக்கிற்கானது மட்டுமில்லை. நாம் அதை உணருவதேயில்லை.
•••
February 4, 2021
கதைகளின் வேட்டைக்காரன்.
எடுவர்டோ காலியானோ லத்தீன் அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளர். வரலாற்றாசிரியர். இவரது வரலாறு என்னும் கதை மணற்கேணி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதனை ரவிக்குமார் தமிழாக்கம் செய்திருக்கிறார்.

காலியானோவின் லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்த நாளங்கள் என்ற வரலாற்று நூலும் தமிழில் வெளியாகியுள்ளது.
காலியானோ வரலாற்றின் மையப்புள்ளிகளை, முக்கிய இயக்கங்களை, அறியப்படாத உண்மைகளை, பண்பாட்டு விநோதங்களைச் சிறிய துண்டுகளாகப் பதிவு செய்கிறார். அவை மின்மினிப்பூச்சியிடமிருந்து வெளிப்படும் வெளிச்சம் போன்றது.
சர்வதேச அரசியல் மற்றும் பண்பாட்டு வரலாற்றை ஆழ்ந்து வாசித்த ஒருவரால் மட்டுமே இப்படி ஒரு தொகுப்பினை செய்ய இயலும். உடைந்த கண்ணாடி சில்லுகளைப் போன்ற இந்தப் பதிவுகள் தன்னளவில் முழுமையானவை. அவற்றைக் காலியானோ பொருத்திக்காட்டும் விதமும் அதைத் தொடர்ந்து எழுப்பும் கேள்வியும் முக்கியமானவை.
கதை சொல்லுதலின் மீது தீவிர ஈடுபாடு கொண்ட காலியானோ பல்வேறு நாடுகளின் கதைமரபுகளை, பழங்குடி மக்களின் கதைகளை ஆராய்ந்திருக்கிறார். அவற்றை அவரது பதிவுகளில் நிறையவே காணமுடிகிறது.

இவரது கடைசி நூலாக வெளிவந்துள்ளது Hunter of Stories. காலியானோவின் மறைவிற்குப் பிறகு வெளியான இந்த நூல் அவரது முந்தைய வரலாற்றுச் சுவடுகளைப் போலவே பண்பாடு மற்றும் வரலாற்றின் முக்கியத் தருணங்களை, உண்மைகளை, நம்பிக்கைகளை வெளிப்படுத்துகிறது
கதைசொல்லிகள் அழிந்த நினைவுகளின் காலச்சுவடுகளை கண்டறியக்கூடியவர்கள் காதலும் வலியும் மறைந்து போயிருக்கலாம். ஆனால் ஒரு போதும் அழிந்து போய்விடாது என்றொரு குறிப்பை எழுதியிருக்கிறார்
சீனாவின் பருவகால மாற்றங்களை முன்னறிந்து சொல்கிறவர்களை”காற்றின் கண்ணாடிகள்” என்று அழைத்தார்கள் என்கிறார். காற்றின் கண்ணாடி என்பது அழகான பிரயோகம்.
ஆசிய நாடுகளில் அரிசி முக்கிய உணவு. நெல் பயிடுகிறவர்கள் அறுவடைக்குப் பிறகு வைக்கோலைச் சேகரித்துப் பாதுகாத்துக் கொள்வார்கள். அப்படிச் செய்யாவிட்டால் தீவினையின் காற்று நெல்லின் ஆன்மாவைக் கொண்டு போய்விடும் என்றொரு நம்பிக்கையிருக்கிறது என்கிறார்.
சாக்லேட் அறிமுகமான காலத்தில் அது தடைசெய்யப்பட்ட பொருளாக இருந்தது. சாக்லேட் பானத்தைக் குடித்துவிட்டுத் தேவாலயத்தில் பிரார்த்தனைக்கு வருவதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது என்றொரு குறிப்பும் காணப்படுகிறது.
அமெரிக்காவின் பூர்வ குடி இந்தியர்களில் ஒருவருக்குக் கூட வழுக்கை கிடையாது என்ற விசித்திர தகவலும் இதில் இருக்கிறது.
எத்தியோப்பியாவில் தான் காபி முதலில் தோன்றியது வக்கா கடவுளின் கண்ணீர் தான் காபியாக மாறியது. என்ற அந்த மக்கள் நம்புகிறார்கள்.
நினைவுகள் தான் பண்பாட்டின் விதை. அதை இழக்க அனுமதிக்கக் கூடாது என்ற குரலை நூல் முழுவதும் கேட்கமுடிகிறது
வரலாற்றை விரிவாகப் பக்கம் பக்கமாக எழுதுவதை விடவும் அதன் சுளைகளை அடையாளப்படுத்தி நாமாக வரலாற்று உண்மைகளை ஆராயச் செய்வதே காலியானோவின் எழுத்துமுறை.
அது கதைகளின் வேட்டைக்காரனிலும் சிறப்பாகவே வெளிப்பட்டுள்ளது.
••
புத்தரின் சொற்கள்.
தீக நிகாயம் என்ற பௌத்த மறைநூலை மு.கு.ஜகந்நாத ராஜா மொழியாக்கம் செய்திருக்கிறார். திரிபிடகங்களில் ஒன்றான சுத்தபீடகத்திலுள்ள தீக நிகாயம் புத்தரின் போதனைகளை விரிவாக உணர்த்துகிறது.

இராஜபாளையத்தில் வசித்து வந்த மு.கு.ஜகந்நாத ராஜா அவர்களை நேரில் சந்தித்துப் பழகியிருக்கிறேன். அவரது நூலகத்திற்குச் சென்று பௌத்தம் தொடர்பான நூல்களை வாசித்திருக்கிறேன். மணிமேகலை மன்றம் அமைப்பை நடத்தி வந்த மு.கு.ஜகந்நாத ராஜா சமஸ்கிருதம், பிராகிருதம். பாலி மொழிகளைக் கற்றவர். மணிமேகலையை ஆழ்ந்து படிப்பதற்காகவே தான் பாலி மொழியினைக் கற்றுக் கொண்டதாகக் கூறினார்.
ஆந்திர நாட்டு அகநானூறு எனப்படும் கதாசப்தகதியிலிருந்து தேர்வு செய்த பாடல்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். அமுக்தமால்யதா என்ற தெலுங்கு கவிதைகளின் நூலினையும் இவர் மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார். பௌத்தம் தொடர்பாக அவரது நூலகத்திலிருந்த அளவிற்கு அரிய நூல்களை நான் வேறு எங்கும் கண்டதில்லை. தேடித்தேடி படித்து ஆய்வுகள் செய்தவர். இவரைச் சந்திப்பதற்காகவே ராஜபாளையம் செல்வேன். அவரிடம் பேசிக் கொண்டிருந்தால் அருவியாகக் கொட்டுவார். ஆழ்ந்த படிப்பாளி.

பழகுவதற்கு மிகவும் எளிமையானவர். மிக அரிய நூல்களைச் சேகரித்து வைத்திருந்தவர். அவரது மறைவிற்குப் பின்பு மு.கு.ஜகந்நாத ராஜா இலக்கிய, தத்துவ ஆய்வு மற்றும் மொழிபெயர்ப்பு நிறுவன அறக்கட்டளை’என்ற பெயரில் தற்போதும் இந்த நூலகம் ராஜபாளையத்தில் இயங்கிவருகிறது.
பிடகம் என்றால் கூடை என்று பொருள். ஞானத்தை ஒரு தலைமுறையினரிடமிருந்து இன்னொரு தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கும் நூல்கள் என்பதால் இதனைப் பிடகம் என்று குறிப்பிடுகிறார்கள்.
தென்மொழிகளில் தமிழில் தான் புத்த நூல்கள் அதிகமுள்ளன என்றொரு குறிப்பை ஜகந்நாதராஜா முகவுரையில் குறிப்பிடுகிறார்.

புத்தரைச் சந்திக்கும் மகத மன்னன் அஜாதசத்ரு துறவியாவதால் ``இந்த உலகியல் வாழ்க்கையில் என்ன நன்மை கிடைக்கிறது என்ன பலன் கிடைக்கிறது“ என்ற கேள்வியைக் கேட்கிறான். அதற்குப் புத்தர் “இந்தக் கேள்வியை இதற்கு முன்னர் நீ ஏதாவது ஒரு துறவியிடம் கேட்டிருக்கிறாயா“ என்று வினவுகிறார்.
“நான் பலரிடம் கேட்டிருக்கிறேன். அவர்கள் சொன்ன பதில் ஏற்புடையதாக இல்லை. மா மரத்தைப் பற்றிக் கேட்டால் பலா மரத்தைப் பற்றிச் சொல்வதைப் போலிருக்கிறது. நீங்கள் என் சந்தேகத்தை விளக்க முடியுமா“ என்று கேட்கிறான் அஜாதசத்ரு.
இதற்குப் புத்தர் “நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். முதலில் அதற்குப் பதில் சொல். உன்னிடத்தில் வேலைக்காரனாக உள்ள ஒருவன் உனக்கு முன்னால் எழுந்து உனக்குத் தேவையான எல்லாப் பணிவிடைகளும் செய்து நீ உறங்கிய பிறகு உறங்குகிறான். அவன் ஒரு நாள் நீயும் மனிதன் நானும் மனிதன். நீ அரசனாக இருக்கிறாய். நான் ஏன் வேலைக்காரனாகக் கஷ்டப்படுகிறேன் என நினைத்து தன் வேலையைத் துறந்து வனத்திற்குச் சென்று துறவியாகிவிடுகிறான். அவன் நீ திரும்பச் சந்திக்க வேண்டியது வந்தால் துறவி என மதிப்பாயா அல்லது உன் பழைய வேலைக்காரன் தான் என்று நினைப்பாயா“ என்று கேட்கிறார்.
இதைக் கேட்ட அஜாதசத்ரு“ நிச்சயம் அவனைக் கௌரவமாக நடத்துவேன். எழுந்து மரியாதை செய்து சம ஆசனத்தில் அமரச்செய்வேன். அவனைப் பாதுகாக்கவும் ஏற்பாடு செய்வேன்“ என்றான்
இதைக் கேட்ட புத்தர் சொன்னார்
“துறவியாதலினால் இவ்வுலகில் கிடைக்கும் முதல் பயன் இதுவாகும். துறவியானவன் எல்லா நியமங்களையும் கடைப்பிடித்து ஒழுக்கமுடையவனாக, நீக்கவேண்டியவற்றை நீக்கி உடலாலும் உள்ளத்தாலும் தூயவனாக வாழுகிறான். அவன் உயிர்க்கொலை புரிவதில்லை. ஆயுதம் எடுப்பதில்லை. இரக்கமுள்ளவனாக இருக்கிறான். பொய், களவு சூது தவிர்த்து சத்திய சந்தனாக வாழுகிறான். வன்சொல் பேசுவது கிடையாது. வீண் பேச்சுகளைத் தவிர்த்துவிடுகிறான்.
ஒரு வேளை மட்டுமே உண்ணுகிறான். பறவைக்குப் பறக்கும் போது இறக்கைகள் தேவைப்படுவது போலத் துறவு வாழ்க்கைக்கு அடிப்படையாக உள்ள துறவாடை, திருவோடு கொண்டவனாக இருக்கிறான். ஆசைகள் அற்ற மனதைக் கொண்ட அவன் ஊற்றிலிருந்து நீர் வற்றாமல் சுரப்பது போலத் தியானத்தின் வழியே அன்பினைச் சுரக்கச் செய்கிறான். புலன்களை ஒடுக்கி எது துக்கம் என்ற மெய்ப்பொருளை அறிகிறான். துக்க ஆதார நிலையை அறிகிறான்.துக்கம் வராமல் தடுப்பதைப் பற்றி யோசிக்கிறான். அவனிடம் ஞானம் பிறக்கிறது. இவை துறவியாதலின் தெளிவான பயன்கள்“ என்கிறார் புத்தர்.
ஞானமொழியைக் கேட்ட அஜாதசத்ரு தன் தந்தையைத் தான் கொன்றது பாவம் என்பதை உணருகிறான்.
புத்தர் பல்வேறு ஊர்களில் ஆற்றிய உரைகளையும் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளையும் சந்தேகங்களையும் விளக்குகிறது இந்நூல். புத்தர் தன் காலத்தில் எவ்வாறு பழிக்கப்பட்டார். கேலி பேசப்பட்டார். அவரையும் அவரது புத்த சங்கத்தையும் எப்படி நடத்தினார்கள் என்பதை விரிவாக அறிந்து கொள்ள முடிகிறது.
ஒவ்வொரு அத்தியாயத்திலும் புத்தரை இழிவுபடுத்தும் கடுஞ்சொல்லை எப்படி எதிர்கொள்வது என்று அவரது சீடர்கள் கேட்கிறார்கள். புத்தர் அவற்றைக் கண்டுகொள்ள வேண்டாம். அவர்களுக்கு எதிராகக் கோபம் கொண்டு நம் மனதையும் உடலையும் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்கிறார். புத்தரின் போதனைகளில் எளிய உதாரணங்களை அவர் மேற்கோளாகக் காட்டுகிறார்.
தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதிலைத் தருவதை விடவும் கூடுதலாகக் கேள்விகளைக் கேட்டு அவர்களின் மூலமே பதிலைக் கண்டடையச் செய்கிறார்.
புத்தர் புளியமரங்களுக்கு நடுவிலும், மாமரங்களுக்கு நடுவிலும் தங்கியிருந்திருக்கிறார். அயராமல் நடந்து அலைந்திருக்கிறார் என்பதை இதிலுள்ள குறிப்புகள் தெளிவாகக் காட்டுகின்றன.
தீக நிகாயத்தில் சேதோ விமுக்தி, பிரக்ஞா விமுக்தி என இருவகையான முக்திநிலைகளை புத்தர் விவரித்துச் சொல்கிறார்
ஐநூறு சீடர்களுடன் அவர் பயணம் செய்யும் காட்சியினை மிக அழகாக விவரித்திருக்கிறார்கள். புத்தரின் இறப்பும் அதையொட்டி நடந்த இறுதி நிகழ்வுகளும் மகா பரிநிர்வாண சூத்திரம் என்ற பகுதியில் மிகச் சிறப்பாக விவரிக்கபட்டிருக்கிறது.
பன்மொழிப்புலவர் மு.கு.ஜகந்நாத ராஜாவின் மொழிபெயர்ப்பு படிப்பதற்கு அத்தனை சரளமாகவும் தெளிவாகவுமிருக்கிறது. அரிய நூல்களை மொழிபெயர்ப்பதிலும் ஆய்வு செய்வதிலும் அவர் காட்டிய அக்கறையும் ஈடுபாடும் என்றும் போற்றப்பட வேண்டியதாகும்
••
February 3, 2021
போர்ஹெஸின் பயணம்.
அமெரிக்க எழுத்தாளரான ஜெய் பரினி இதுவரை எட்டு நாவல்களை எழுதியுள்ளார், டால்ஸ்டாய் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இவர் எழுதிய தி லாஸ்ட் ஸ்டேஷன் நாவல் திரைப்படமாக வெளிவந்துள்ளது.
நாவல் மற்றும் திரைப்படம் இரண்டும் மிகச்சுமாரானவை என்றே சொல்வேன். இரண்டிலும் டால்ஸ்டாயின் ஆளுமையும் வாழ்க்கை நிகழ்வுகளும் சரியாக வெளிப்படவில்லை.
ஸ்டீன்பெக், வில்லியம் பாக்னர், ராபர்ட் பிராஸ்ட் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாற்றை ஜெய் பரினி எழுதியிருக்கிறார். தகவல் துணுக்குகள் என்பதைத் தாண்டி இந்த வாழ்க்கை வரலாற்று நூல்களில் அசலான பார்வைகளோ, மதிப்பீடுகளோ எதுவுமில்லை.

இவர் எழுதிய Borges and Me: An Encounter என்ற புத்தகத்தைச் சமீபத்தில் வாசித்தேன். போர்ஹெஸ் பற்றிய புதிய நூல் என்பதோடு அவரது ஸ்காட்லாந்து பயணம் பற்றிய முக்கியமான பதிவு என்று இலக்கிய இதழ் ஒன்றில் பாராட்டு வெளியாகியிருந்தது. ஆகவே இதைப் படிப்பதற்கான ஆசை கொண்டு உடனே வாங்கினேன்.
ஜெய் பரினி ஸ்காட்லாந்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்த நாட்களில் போர்ஹெஸைச் சந்தித்து ஒன்றாகப் பயணம் செய்திருக்கிறார். அந்த அனுபவத்தை இதில் விவரித்திருக்கிறார்

போர்ஹெஸின் தாய்வழி பாட்டி ஒரு ஆங்கிலப் பெண்மணி. ஆகவே அவரது வம்சாவளியில் ஆங்கிலப் பராம்பரியமுள்ளது. போர்ஹெஸ் பள்ளியில் சேர்க்கப்பட்ட போது கூட ஆங்கிலம் தான் முதலில் படித்திருக்கிறார். தனது குடும்ப, மற்றும் இலக்கிய வேர்களைத் தேடிக்காண வேண்டும் என்ற போர்ஹெஸின் விருப்பம் அவரை ஸ்காட்லாந்திற்குப் பயணம் செய்த வைத்தது.
கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான அலீஸ்டர் ரீட் அழைப்பின் பெயரில் போர்ஹெஸ் விருந்தினராக வந்திருந்தார்.
1970களில் தனது முனைவர் பட்டட ஆய்விற்காக ஸ்காட்லாந்தில் வசித்த ஜெய் பரினி நண்பரான ரீடின் அழைப்பின் பெயரில் போர்ஹெஸை சந்தித்து உரையாடியிருக்கிறார். முதல் சந்திப்பின் போது அவருக்குப் போர்ஹெஸ் குறித்து எதுவும் அறிந்திருக்கவில்லை. ஸ்பானிய இலக்கியம் குறித்தோ, போர்ஹெஸின் கவிதைகள். கதைகள் குறித்தோ எதுவும் அறியாத பரினி அவரைச் சந்தித்து உரையாடுகிறார்.
முதல் சந்திப்பிலே போர்ஹெஸ் அவரது பெயரிலுள்ள பரினி என்பது கியூசெப் பரினி என்ற இத்தாலியக் கவிஞரின் பெயர் என்பதை நினைவுபடுத்துவதோடு நியோகிளாசிக் காலத்தின் கவிஞரான பெரினியின் கவிதைகளை மனப்பாடமாகச் சொல்கிறார். பெரினிக்கு இந்தக் கவிதைகள் எதுவும் தெரியவில்லை என்பதிலிருந்தே அவரது இலக்கிய ஈடுபாடு எந்த அளவானது என்பது நமக்குப் புரிந்துவிடுகிறது.
பரினியோடு போர்ஹெஸ் முதல் சந்திப்பிலே நிறையப் பேசுகிறார். படித்த புத்தகங்களை நினைவு கொள்கிறார். கவிதையினைக் கொண்டாடுகிறார். மொழி ஆராய்ச்சி செய்கிறார். இதை வெறுமனே வேடிக்கை பார்த்தபடியே இருக்கிறார் பரினி. இவ்வளவிற்கும் அவர் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் மேற்கொள்கிறவர். ஒரு கவிஞர். பாவம் போர்ஹெஸ் என்றே தோன்றியது.

தனது குடும்பத்தில் ஏற்பட்ட அவசர வேலை காரணமாக அலீஸ்டர் ரெய்ட் லண்டனுக்குப் போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் அவர் திரும்பி வரும் வரை போர்ஹெஸை கவனித்துக் கொள்ளுமாறு பரினியிடம் வேண்டுகிறார். அதை ஏற்றுக் கொண்ட பரினி போர்ஹெஸின் பாதுகாவலராக அவருடன் சேர்ந்து தங்குகிறார் இருவரும் சாலைவழியாக ஸ்காட்லாந்தின் மலைப்பிரதேசத்தைக் காணச் செல்கிறார்கள். இந்தப் பயணச்செலவு முழுவதையும் தானே ஏற்றுக் கொள்வதாகப் போர்ஹெஸ் சொல்கிறார். பரினியின் காரில் அவர்கள் நீண்ட பயணம் மேற்கொள்கிறார்கள்
வழியில் இருவருக்குள்ளும் நடந்த இலக்கிய உரையாடல்கள். போர்ஹெஸ் தங்கிய விடுதி. அவரது நண்பரைச் சந்திக்கச் சென்ற நிகழ்ச்சி. ஸ்காட்லாந்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைக் கண்ட அனுபவம் யாவற்றையும் தொகுத்து பரினி எழுதியிருக்கிறார்
புத்தகம் முழுவதும் பரினியின் கற்பனையால் எழுதப்பட்டிருக்கிறது. இதில் வரும் போர்ஹெஸ் வாய் ஓயாமல் பேசும் கிழவராகச் சித்தரிக்கப்படுகிறார். தோற்றுப்போன நடிகர்கள் தனது கடந்தகாலத்தை நினைவுபடுத்தி நாடகமேடை வசனங்களைப் பேசிக்காட்டுவது போல அவரது உரையாடல்களைப் பரினி எழுதியிருக்கிறார்.
மொத்த உரையாடலும் பரினி நினைவிலிருந்து எழுதியது என்று பின்னுரையில் குறிப்பிடுகிறார். ஆனால் இது போர்ஹெஸின் பல்வேறு நேர்காணல்கள் மற்றும் கட்டுரைகளை வாசித்துவிட்டு அவற்றையெல்லாம் தன்னிடம் போர்ஹெஸ் பேசினார் என்பது போலக் கற்பனையாக எழுதப்பட்டிருக்கிறது என்பதை எளிதாக அறியமுடிகிறது. பரினி ஒரு திறமையில்லாத மூன்றாம் நிலை எழுத்தாளர். அவரது கவிதைகளும் நாவலும் கூட அத்தகையதே. அதன் வெளிப்பாடே இந்த நூலின் அசட்டுத்தனங்கள்.
போர்ஹெஸிற்கு உலக அளவில் உள்ள புகழைப் பயன்படுத்திக் கொள்ள இப்படியொரு கற்பனையான நினைவுகொள்ளுதலை பரினி மேற்கொண்டிருக்கிறார். வெறும் விற்பனை தந்திரம் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை
அவர் ஜோர்ஜ் லூயி போர்ஹெஸ் உடன் ஒருவார காலப்பயணம் மேற்கொண்டது உண்மை. அந்தப் பயணத்தில் அவர்கள் தங்கிய இடங்கள் யாவும் உண்மை. ஆனால் போர்ஹெஸ் அவரிடம் பேசிய விஷயங்கள் யாவும் பரினியின் கற்பனை.
போர்ஹெஸிற்கு விருப்பமான ஆங்கிலோ சாக்சன் கவிதைகள். மொழியியல் ஆய்வு. செர்வாண்டிஸ். ஆர். எல். ஸ்டீவன்சன், ஷேக்ஸ்பியர். அரேபியன் நைட்ஸ், வழிப்பறிக்கொள்ளையர்களின் கதை, என்சைக்ளோபீடியா மீதான தீவிர ஈடுபாடு இவற்றையெல்லாம் சாதுர்யமாகத் தனது உரையாடலுக்குள் பொருத்தியிருக்கிறார் பரினி. அது செயற்கையாக இருக்கிறது

போர்ஹெஸிடம் வெளிப்படும் ஞானமோ, கவித்துவமான வெளிப்பாடோ எதுவும் இந்த நூலில் காணப்படவில்லை. Borges at eighty என்ற அவரது நேர்காணல்களின் தொகுப்பினையோ அல்லது Osvaldo Ferrarri நிகழ்த்திய நேர்காணல் தொகுப்பான Conversations – 3 volumes, வாசித்தவர்களுக்குப் போர்ஹெஸ் உரையாடும் முறையும் அவரது மொழியும் எளிதாக அடையாளம் காணமுடியும்.

போர்ஹெஸை நினைவு கொள்ளும் இந்தப் புத்தகத்தில் முதல் நூறு பக்கங்கள் பரினி தனது சொந்தவாழ்க்கையினை நினைவு கூர்ந்திருக்கிறார். இந்த நூலுக்குத் தேவையற்ற விஷயங்கள். பரினி வாழ்க்கையில் சொல்லிக் கொள்ளும்படி எதுவும் நடக்கவுமில்லை. பத்தாவது அத்தியாயத்தில் தான் போர்ஹெஸை சந்திக்கிறார்.
புத்தகம் முழுவதும் போர்ஹெஸ் பார்வையற்றவர் என்பதைத் தேவையற்று பல இடங்களில் வலிந்து குறிப்பிடுகிறார். நிறைய நேரங்களில் பார்வையின்மையைக் கேலி செய்வது போலவும் எழுதியிருக்கிறார். அது உறுத்தும்படியாக உள்ளது.
இரவில் மூத்திரம் பெய்வதற்காக அடிக்கடி போர்ஹெஸ் எழுந்து சென்றது அவர்கள் தங்கிய வீட்டு உரிமையாளரான பெண்ணிற்கு எவ்வளவு இடையூறாக இருந்தது என்பதைப் பெரிய நகைச்சுவை சம்பவம் போல விரிவாக எழுதியிருக்கிறார். இது பரினியின் அசட்டுத்தனம் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை
போர்ஹெஸின் உரையாடல்களில் பரினி பங்குபெறவேயில்லை. மொத்த புத்தகத்தை வாசித்து முடிக்கும் போது பரினி ஆழ்ந்த இலக்கிய வாசிப்பு எதுவுமின்றி வெறும் பெயர்களை உதிர்க்கும் மனிதர் என்பதைத் தெளிவாக உணர முடிகிறது
போர்ஹெஸ் நூலகத்திற்குச் செல்லும் பகுதி ஒன்று தான் படித்தவரை நன்றாக இருந்தது. அதில் கடவுள் தான் உலகின் முதல் நூலகர் என்கிறார் போர்ஹெஸ். தான் அர்ஜென்டினா நூலகத்தின் இயக்குநராகப் பணியாற்றிய நாட்களை நினைவுகூறுகிறார்.
போர்ஹெஸ் பற்றிய புதிய நூல் என்பதால் இதை வாசிக்க ஆர்வம் கொண்டு வாங்கியிருந்தேன். ஏமாற்றமான அனுபவத்தையே தந்தது. போர்ஹெஸ் பற்றிய செய்தி துணுக்குகளைத் தவிர வேறு உருப்படியாக எதுவுமில்லை.

இந்தப் புத்தகம் படித்த சலிப்பிற்குப் பிராயச்சித்தமாக எழுத்தாளர் பெர்னான்டோ சொரண்டினோ போர்ஹெஸை நேர்காணல் செய்த Seven Conversations with Jorge Luis Borges – Fernando Sorrentino எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். மிகச்சிறப்பான நேர்காணல்களின் தொகுப்பிது.
Before I ever wrote a single line, I knew, in some mysterious and therefore unequivocal way, that I was destined for literature.
What I didn’t realize at first is that besides being destined to be a reader, I was also destined to be a writer, and I don’t think one is less
important than the other.
என இந்த நேர்காணலில் போர்ஹெஸ் குறிப்பிடுகிறார். வாசகராகவும் எழுத்தாளராகவும் அவர் நம்மை எப்போதும் வியக்க வைக்கிறார் என்பதே நிஜம்.
••
February 2, 2021
சிரிப்பு பாதி அழுகை பாதி
எங்க வீட்டுப் பெண் படத்தில் இடம்பெற்ற சிரிப்பு பாதி அழுகை பாதிச் சேர்ந்ததல்லவோ மனித ஜாதி பாடல் திடீரெனக் காலையில் நினைவிற்கு வந்தது. பழைய பாடல்களில் எந்தப் பாடல் எப்போது நினைவில் கிளர்ந்து எழும் என்று சொல்ல முடியாது.
அந்த நாள் முழுவதும் அந்தப் பாடல் மனதில் ஒடிக் கொண்டேயிருக்கும். கே.வி.மகாதேவன் இசையில் கண்ணதாசன் எழுதிய பாடல்.. : P.B.ஸ்ரீநிவாஸ் அற்புதமாகப் பாடியிருப்பார்.
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.

இந்தப் பாடலில் நாகையா மெய்யுருகப் பாடுகிறார். சாது போன்ற அவரது தோற்றமும் இசைக்கும் பாவமும் அமர்ந்து கேட்கும் மக்களின் ஆழ்ந்த முகமும் மனதைக் கவ்வுகிறது. காலத்தின் குரல் தான் இந்தப் பாடலைப் பாடுகிறதோ எனும்படியாகப் பிபிஎஸ் பாடியிருக்கிறார். பசித்த வயிற்றில் உணவு தெய்வம் , கொட்டு மழையில் கூரை தெய்வம். கோடை வெயிலில் நிழலே தெய்வம் என்று எத்தனை எளிமையாக வாழ்வினைப் புரிய வைக்கிறது பாடல்.
எங்கிருந்தோ இப்படி ஒரு சாது ஊருக்கு வருவதும் அவர் மடத்தில் அமர்ந்து பாடுவதையும் என் சிறுவயதில் கண்டிருக்கிறேன். ஆனால் அந்த உலகம் இன்றில்லை. இன்று கிராமப்புறங்களில் கூட வீட்டுக்கு வெளியே உலகமில்லை.
ஊர் ஊராக நடந்து திரியும் மனிதர்களை எங்கேயும் காணமுடியவில்லை.
எனக்கு பத்து வயதிருக்கும் போது ஒரு வடநாட்டுக் குடும்பம் இப்படி என் ஊருக்கு வந்திருந்தது.
ஒரு வயதானவர் அவரது மகன், மகனின் மனைவி அவர்களின் மூன்று பிள்ளைகள் கொண்ட குடும்பமது. செருப்பு அணியாத கால்கள். புழுதிபடிந்த அழுக்கான உடை. சோர்ந்து போன முகங்கள். கிழவர் கையில் துந்தனா இசைத்தபடியே ஹிந்தியில் பாடிக் கொண்டு வந்தார். அந்தப் பெண் கையில் ஒரு நார்கூடையை ஏந்தியபடியே வீடுவீடாக வந்தாள். அவர்கள் வீதிகளில் பாடியபடி யாசகம் கேட்டார்கள். அவர்கள் பேசிய மொழி புரியாத போதும் ஊர்மக்கள் அவர்களுக்கு உணவளித்து உடைகளும் தானியங்களும் தந்து நாலைந்து நாட்கள் கிராமத்திலே தங்க வைத்தார்கள்.
அவர்கள் எதற்காக இப்படிக் கரிசலின் சிறிய கிராமத்திற்கு வந்தார்கள் என்று நினைவில்லை. ஆனால் அந்தப் பெண் கையில் தேளினை பச்சை குத்தியிருந்தது மனதில் பசுமையாக இருக்கிறது.
உலகமே வீடு என வாழ்ந்த மனிதர்கள் மறைந்து போய்விட்டார்கள்.
பாரதக்கதை பாடியபடியே ஊருக்கு வரும் தாசரிகளைக் காணமுடியவில்லை. பூம்பூம்மாட்டுக்காரன் இப்போதெல்லாம் கனவில் கூட வருவதில்லை.
ஊர் ஊராக நடந்து வந்து பல்வேறு விதமான கத்தியை வாயினுள் சொருகிக் காட்டி வித்தைக்காட்டுபவன் எங்கே மறைந்து போனான். இரவுபகலாக சைக்கிள் சுற்றுகிறவன், நரைமயிர்களை கருமையாக்கும் தைலம் விற்பவன். புனுகு விற்க வருபவன். தோளில் தையல் இயந்திரத்தை சுமந்தபடி கிராமத்திற்கு வரும் டெய்லர், கிணற்றில் தூர் எடுக்கும் கிழவர், காலில் சலங்கை கட்டியபடி வீடுவீடாக அக்னி சட்டி எடுத்து வந்து காணிக்கை கேட்கும் சாமியாடி என எல்லோரும் காலத்தின் திரைக்குப் பின்னே மறைந்துவிட்டார்கள்.
இந்த பாடல் அவர்களை ஏன் நினைவுபடுத்துகிறது.
தண்ணீரின் மீது எறிந்த கல்லைப் போன்றது தானா பாடலும்.
சிரிப்பையும் அழுகையினையும் பற்றி எத்தனையோ பாடல்கள் தமிழ் சினிமாவில் இடம்பெற்றிருக்கின்றன . வேறு மொழிகளில் இப்படி சிரிப்பு மற்றும் அழுகை பற்றி இவ்வளவு சினிமா பாடல்கள் இருக்கிறதா எனத்தெரியவில்லை.
சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் சிந்திய கண்ணீர் மாறியதாலே என்ற சீர்காழியின் பாடலை எப்படி மறக்கமுடியும்.
பிறக்கும்போதும் அழுகின்றான் இறக்கும்போதும் அழுகின்றான் என்று ஜே. பி சந்திரபாபு ஞானகுருவைப் போல அல்லவா பாடுகிறார்.
வாழ்வின் அர்த்தத்தை இந்தப் பாடல்களைப் போல நினைவுபடுத்திக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது.
எவ்வளவு முறை எத்தனை பேர் சொல்லிக் கேட்டாலும் உபதேச மொழிகள் மனதைத் தொடவே செய்கின்றன.
சிரிப்பு பாதி அழுகை பாதிச் சேர்ந்ததல்லவோ மனிதஜாதி என்ற வரியில் அல்லவோ என்ற சொல்லை போட்டது தான் கண்ணதாசனின் தனிச்சிறப்பு. மனிதஜாதி என்பதை பிபிஎஸ் எவ்வளவு அழகாகப் பாடுகிறார். சோகம் இழையோடும் இந்தப் பாடல் மனதைக் கரைந்து போகவே செய்கிறது
•••
February 1, 2021
காதலின் ஆயிரம் ஆண்டுகள்
அது ஆயிரம் ஆண்டாக இருக்கலாம்
அல்லது நேற்று தானா
நாங்கள் பிரிந்தது.
இப்போது கூட , என் தோளில் ,
உன் நேசமான கையை உணர்கிறேன்

என்ற கவிதையின் வழியே தான் யோசனோ அகிகோ அறிமுகமானார். ஜென் கவிதைகளை போன்ற வரிகளால் ஈர்க்கப்பட்டு RIVER OF STARS -Selected Poems of Yosano Akiko என்ற அவரது கவிதை தொகுப்பினை வாசித்தேன். கவிதை என்பது உண்மையான உணர்வுகளின் சிற்பம். என்கிறார் அகிகோ
அவரது ஒரு கவிதையில் வெந்நீர் குளியலுக்குப் பின்பு உடைமாற்ற உயரமான கண்ணாடி முன்பு நிற்கும் ஒரு பெண் தன் உடலைப் பார்த்துத் தானே புன்னகை செய்கிறாள்.
அந்த நிமிஷத்தில் நீண்டகாலத்தின் பின்பு அவளது வெகுளித்தனம் வெளிப்படுகிறது.

தன் உடலைத் தானே பார்த்து வியக்கும் அந்த நிமிஷம் அழகானது. கவிதையில் உயரமான கண்ணாடி என்ற சொல் தான் அந்த அழகின் முழுமையை நமக்குக் காட்டுகிறது.
இதமான குளியலுக்குப் பிறகு தூய தனது உடலை அவள் ஒரு சிற்பத்தைப் போலவே காணுகிறாள். ஏன் புன்னகை என்பது முக்கியமானது.
அந்த உடல் அவளுடையது என்றாலும் அது காதலனால் துய்க்கப்பட்டிருக்கிறது. ஒரு இசைக்கருவியை மீட்டுவது போல அந்த உடலை மீட்டியிருக்கிறான். உடலின் வனப்பும் நளினமும் அழகும் அவளுக்குள் நினைவுகளை எழுப்புகிறது. சொல்லப்படாத இன்பத்தின் வெளிப்பாடாக அந்தச் சிரிப்பு வெளிப்படுகிறது.
தன் உடலை ஏதோ ஒரு நாளில் ஏதோ ஒரு தருணத்தில் தான் இப்படிப் பெண்ணால் உணர முடிகிறது என்பதே இதன் தனித்துவம்.
இன்னொரு கவிதையில் தாகம் கொண்ட ஆட்டுக்குட்டியின் கண்களைப் போன்றது தனது கண்கள் என்கிறார் யோசனோ.
எவ்வளவு அழகான வெளிப்பாடு.
காதல் என்பது தாகம் தானே. அந்தத் தாகம் தீரக்கூடியதில்லை. ஆட்டுக்குட்டிக்குத் தனது தாகத்தைத் தீர்த்துக் கொள்ள வழி தெரியாது. அவளும் அப்படி தானிருக்கிறாள். அவன் தான் அதைப் புரிந்து கொண்டு தீர்த்து வைக்க வேண்டும். அவள் நேரடியாக எதையும் கேட்பதில்லை. ஆனால் சுட்டிக்காட்டுகிறாள். சங்ககவிதைகளில் இது போன்ற வெளிப்பாடினைக் காணமுடியும்.
அகிகோ மற்றும் அவளது கணவர் இருவரும் கவிஞர்கள். அவளைப் பிரிந்து கணவர் வெளிநாடு சென்றுவிட்டார். தனிமையின் ஏக்கத்தில். பிரிவின் தவிப்பில் அவளுக்குச் சொற்கள் போதுமானதாகயில்லை. அவள் தன்னுடைய மனதை இப்படி வெளிப்படுத்துகிறாள்.
எங்களுக்குக் கவிதை எழுதும் திறமையில்லை
நாங்கள் சிரிக்கிறோம்
இந்த அன்பு இருபதாயிரம் ஆண்டுகள் நீடிக்கும்
அது நீண்ட காலமா
அல்லது சுருக்கம் தானா.
நீண்டகாலம் அல்லது ஒரு நிமிஷம் இரண்டு காதலர்களுக்கு ஒரே அளவு கொண்டது. காலத்தை அவர்கள் உலகம் அளவிடுவது போல அளப்பதில்லை. அவர்கள் உணர்ச்சிகளின் வழியே காலத்தை அறிகிறார்கள். கடந்து போகிறார்கள்.

இன்னொரு கவிதையில் அகிகோ சொல்கிறார்
என் பளபளப்பான கறுப்புத் தலைமுடி
சீர்குலைந்து ,
ஆயிரம் சிடுக்குகள் ,
உங்கள் மீதான என் அன்பின்
ஆயிரம் சிக்கலான எண்ணங்களைப் போல
சிக்கலான காதலின் எண்ணங்களைப் போலத் தானே சிடுக்காகிக் கொண்டிருக்கிறது தலைமயிர். அதைச் சீவி சரிசெய்வது போலச் சந்திப்பும் அணைப்பும் கூடுதலும் தேவைப்படுகிறது. இங்கேயும் அவளாகவே தான் குழப்பத்திற்கு ஆளாகிறாள். கொதிக்கும் தண்ணீரைப் போலவே காதலின் எண்ணங்கள் குமிழிடுகின்றன.

அவரது நீள் கவிதை ஒன்றில் அகிகோ சொல்கிறார்
பிரபஞ்சத்தினுள் பிறந்து
பிரபஞ்சத்தினுள் வளர்ந்த போதும்
எப்படியோ நான் பிரபஞ்சத்திலிருந்து விலகி இருக்கிறேன்.
ஆம் , நான் தனிமையில் இருக்கிறேன்.
உங்களுடன் இருந்தாலும் நான் தனிமையிலிருக்கிறேன் ,
ஆனால் சில நேரங்களில்
நான் மீண்டும் பிரபஞ்சத்திற்குத் திரும்புகிறேன்.
நான் தான் பிரபஞ்சமா ,
எனக்குத் தெரியவில்லை
அல்லது பிரபஞ்சம் எனக்குள் இருக்கிறதா.
என் இதயம் பிரபஞ்சத்தின் இதயம் ;
என் கண்கள் பிரபஞ்சத்தின் கண்கள் ;
நான் அழும்போது ,
எல்லாவற்றையும் மறந்து அழுகிறேன்.
என நீள்கிறது அவரது கவிதை.
ஜப்பானிய கவிதையுலகின் தனித்துவமிக்கக் குரலாக ஒலிக்கிறார் அகிகோ.

இவர் ஒசாகாவின் புறநகரில் வசித்த இனிப்புப் பண்டங்கள் தயாரிப்பவரின் மகளாகப் பிறந்தவர். . ஜப்பானின் சர்ச்சைக்குரிய பெண் கவிஞராகவும் எழுத்தாளராகவும் அறியப்பட்டவர். , எழுபத்தைந்து புத்தகங்களை வெளியிட்டுள்ளார்
இதில் இருபது தொகுதிகள் கவிதைகள் இதில் பதினேழாயிரம் டாங்கா எனும் குறுங்கதைகள் இடம்பெற்றிருந்தன. கவிதையின் ராணி என்று அவளைக் கொண்டாடுகிறார்கள்.
முரசாகி சீமாட்டியின் செஞ்சிகதையின் புதிய மொழியாக்கம் ஒன்றையும் அகிகோ வெளியிட்டிருக்கிறார்.
ஆண் குழந்தை பிறக்கும் என நினைத்த அவரது தந்தை அகிகோ பெண்ணாகப் பிறந்துவிட்ட காரணத்தால் அவளை வளர்க்கும்படி அத்தையிடம் கொடுத்துவிட்டார். மூன்று ஆண்டுகள் அத்தை வீட்டில் தான் அகிகோ வளர்ந்தார். ஆண்பிள்ளைகள் வரிசையாகப் பிறந்த காரணத்தால் பின்பு அகிகோவை அவளது பெற்றோர் தாங்களே வளர்ப்பதாக அழைத்துக் கொண்டார்கள். பள்ளி வயதிலே இலக்கியத்தின் மீது தீவிர ஈடுபாடு கொண்டு புத்தகங்களை வாசிக்கத் துவங்கினார்.
தனது பத்தொன்பது வயதில் , அவர் தனது முதல் டாங்காவை வெளியிட்டார் அந்தக் கவிதை வாசகர்களின் மிகுந்த பாராட்டினைப் பெற்றது
யோசனோ ஹிரோஷி என்ற கவிஞரால் கண்டறியப்பட்டு அவரது இலக்கியவட்டத்தினுள் முக்கியக் கவியாக அறிமுகம் செய்யப்பட்டார் அகிகோ. யோசனோ டெக்கன் என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதிவந்தார். அவர் ஒரு பௌத்த மதகுருவின் மகன்
வசதியான ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டிருந்தார். மனைவி வழியாகக் கிடைத்த சொத்தில் அவர் ஒரு இலக்கிய இதழை நடத்தி வந்தார். அந்த இதழில் அகிகோ தொடர்ந்து எழுதினார். அதன் காரணமாக அவர் யோசனோ ஹிரோஷிவுடன் நெருக்கமாகப் பழக ஆரம்பித்தார். அவர்களுக்குள் காதல் உருவானது. .
தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு அகிகோவை திருமணம் செய்து கொள்வதாக அவர் வாக்குறுதி அளித்தார். தன்னை யோசனோ ஏமாற்றிவிடக்கூடும் என நினைத்த அகிகோ தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டி கடிதம் அனுப்பினார். இந்தக் கடிதம் யோசனோவின் மனைவி கையில் கிடைத்தது யோசனோவின் மனைவி அகிகோவிற்குக் கடிதம் எழுதி எச்சரித்தார்.
யோசனோ ஹிரோஷியால் தன் காதலி அகிகோவை மறக்கமுடியவில்லை. தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு அகிகோவை திருமணம் செய்து கொண்டார். டோக்கியோவில் அவர்கள் வாழ்ந்தார்க்ள். போதுமான வருவாய் இல்லாத காரணத்தால் கடன் சுமை ஏற்பட்டது. கையில் பணமில்லாத போது யோசனோ ஹிரோஷி விவாகரத்து செய்த மனைவியிடம் மன்றாடி பணம் பெற்று வந்தார்.
தன் கவிதைகளின் மூலம் அகிகோ புகழ்பெற ஆரம்பித்தார். இந்நிலையில் மூன்றாண்டு பயணமாக யோசனோ பாரீஸிற்குப் பயணம் மேற்கொண்டார். ஆறுமாதத்தின் பின்பு அகிகோவும் அந்தப் பயணத்தில் இணைந்து கொண்டார். அவர்கள் ஜெர்மனி, ஹாலந்து இங்கிலாந்து எனச் சுற்றியலைந்தார்கள்
ஜப்பானிய வரலாற்றில் மன்னரைப் பகிரங்கமாகக் கண்டித்து எழுதிய ஒரே கவிஞர் அகிகோ மட்டுமே. மன்னருக்கு எதிராக நடந்த புரட்சியாளர்களைத் தூக்கிலிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் வெளிப்படையாகப் பேசினார் இதன் காரணமாக அவரது வீடு கல்லெறியப்பட்டது.
தனது பாலின்ப வேட்கையினை நேரடியாகப் பேசியவர் அகிகோ. உடலைக் கொண்டாடும் அவரது கவிதைகள் காமத்தையும், தனிமையினையும் காத்திருப்பின் வலியினையும் பெண்ணின் நோக்கில் துல்லியமாக வெளிப்படுத்தின. இதன் காரணமாக அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
சீனா மற்றும் அமெரிக்காவின் அதிகாரத்திற்கு எதிராகக் கவிதைகள் எழுதியவர் அகிகோ. பெண்களுக்கான இலக்கிய இதழ் ஒன்றையும் அவர் நடத்தி வந்தார்.
1942 இல் தனது அறுபத்து மூன்று வயதில் பக்கவாதத்தால் அகிகோ இறந்தார். டோக்கியோவின் புறநகரில் உள்ள தமா ரெய்னின் கல்லறையில் அகிகோ யோசானோவின் கல்லறை அமைந்துள்ளது
•••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
