S. Ramakrishnan's Blog, page 146

February 4, 2021

புத்தரின் சொற்கள்.

தீக நிகாயம் என்ற பௌத்த மறைநூலை மு.கு.ஜகந்நாத ராஜா மொழியாக்கம் செய்திருக்கிறார். திரிபிடகங்களில் ஒன்றான சுத்தபீடகத்திலுள்ள தீக நிகாயம் புத்தரின் போதனைகளை விரிவாக உணர்த்துகிறது.

இராஜபாளையத்தில் வசித்து வந்த மு.கு.ஜகந்நாத ராஜா அவர்களை நேரில் சந்தித்துப் பழகியிருக்கிறேன். அவரது நூலகத்திற்குச் சென்று பௌத்தம் தொடர்பான நூல்களை வாசித்திருக்கிறேன். மணிமேகலை மன்றம் அமைப்பை நடத்தி வந்த மு.கு.ஜகந்நாத ராஜா சமஸ்கிருதம், பிராகிருதம். பாலி மொழிகளைக் கற்றவர். மணிமேகலையை ஆழ்ந்து படிப்பதற்காகவே தான் பாலி மொழியினைக் கற்றுக் கொண்டதாகக் கூறினார்.

ஆந்திர நாட்டு அகநானூறு எனப்படும் கதாசப்தகதியிலிருந்து தேர்வு செய்த பாடல்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். அமுக்தமால்யதா என்ற தெலுங்கு கவிதைகளின் நூலினையும் இவர் மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார். பௌத்தம் தொடர்பாக அவரது நூலகத்திலிருந்த அளவிற்கு அரிய நூல்களை நான் வேறு எங்கும் கண்டதில்லை. தேடித்தேடி படித்து ஆய்வுகள் செய்தவர். இவரைச் சந்திப்பதற்காகவே ராஜபாளையம் செல்வேன். அவரிடம் பேசிக் கொண்டிருந்தால் அருவியாகக் கொட்டுவார். ஆழ்ந்த படிப்பாளி.

பழகுவதற்கு மிகவும் எளிமையானவர். மிக அரிய நூல்களைச் சேகரித்து வைத்திருந்தவர். அவரது மறைவிற்குப் பின்பு மு.கு.ஜகந்நாத ராஜா இலக்கிய, தத்துவ ஆய்வு மற்றும் மொழிபெயர்ப்பு நிறுவன அறக்கட்டளை’என்ற பெயரில் தற்போதும் இந்த நூலகம் ராஜபாளையத்தில் இயங்கிவருகிறது.

பிடகம் என்றால் கூடை என்று பொருள். ஞானத்தை ஒரு தலைமுறையினரிடமிருந்து இன்னொரு தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கும் நூல்கள் என்பதால் இதனைப் பிடகம் என்று குறிப்பிடுகிறார்கள்.

தென்மொழிகளில் தமிழில் தான் புத்த நூல்கள் அதிகமுள்ளன என்றொரு குறிப்பை ஜகந்நாதராஜா முகவுரையில் குறிப்பிடுகிறார்.

புத்தரைச் சந்திக்கும் மகத மன்னன் அஜாதசத்ரு துறவியாவதால் ``இந்த உலகியல் வாழ்க்கையில் என்ன நன்மை கிடைக்கிறது என்ன பலன் கிடைக்கிறது“ என்ற கேள்வியைக் கேட்கிறான். அதற்குப் புத்தர் “இந்தக் கேள்வியை இதற்கு முன்னர் நீ ஏதாவது ஒரு துறவியிடம் கேட்டிருக்கிறாயா“ என்று வினவுகிறார்.

“நான் பலரிடம் கேட்டிருக்கிறேன். அவர்கள் சொன்ன பதில் ஏற்புடையதாக இல்லை. மா மரத்தைப் பற்றிக் கேட்டால் பலா மரத்தைப் பற்றிச் சொல்வதைப் போலிருக்கிறது. நீங்கள் என் சந்தேகத்தை விளக்க முடியுமா“ என்று கேட்கிறான் அஜாதசத்ரு.

இதற்குப் புத்தர் “நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். முதலில் அதற்குப் பதில் சொல். உன்னிடத்தில் வேலைக்காரனாக உள்ள ஒருவன் உனக்கு முன்னால் எழுந்து உனக்குத் தேவையான எல்லாப் பணிவிடைகளும் செய்து நீ உறங்கிய பிறகு உறங்குகிறான். அவன் ஒரு நாள் நீயும் மனிதன் நானும் மனிதன். நீ அரசனாக இருக்கிறாய். நான் ஏன் வேலைக்காரனாகக் கஷ்டப்படுகிறேன் என நினைத்து தன் வேலையைத் துறந்து வனத்திற்குச் சென்று துறவியாகிவிடுகிறான். அவன் நீ திரும்பச் சந்திக்க வேண்டியது வந்தால் துறவி என மதிப்பாயா அல்லது உன் பழைய வேலைக்காரன் தான் என்று நினைப்பாயா“ என்று கேட்கிறார்.

இதைக் கேட்ட அஜாதசத்ரு“ நிச்சயம் அவனைக் கௌரவமாக நடத்துவேன். எழுந்து மரியாதை செய்து சம ஆசனத்தில் அமரச்செய்வேன். அவனைப் பாதுகாக்கவும் ஏற்பாடு செய்வேன்“ என்றான்

இதைக் கேட்ட புத்தர் சொன்னார்

“துறவியாதலினால் இவ்வுலகில் கிடைக்கும் முதல் பயன் இதுவாகும். துறவியானவன் எல்லா நியமங்களையும் கடைப்பிடித்து ஒழுக்கமுடையவனாக, நீக்கவேண்டியவற்றை நீக்கி உடலாலும் உள்ளத்தாலும் தூயவனாக வாழுகிறான். அவன் உயிர்க்கொலை புரிவதில்லை. ஆயுதம் எடுப்பதில்லை. இரக்கமுள்ளவனாக இருக்கிறான். பொய், களவு சூது தவிர்த்து சத்திய சந்தனாக வாழுகிறான். வன்சொல் பேசுவது கிடையாது. வீண் பேச்சுகளைத் தவிர்த்துவிடுகிறான்.

ஒரு வேளை மட்டுமே உண்ணுகிறான். பறவைக்குப் பறக்கும் போது இறக்கைகள் தேவைப்படுவது போலத் துறவு வாழ்க்கைக்கு அடிப்படையாக உள்ள துறவாடை, திருவோடு கொண்டவனாக இருக்கிறான். ஆசைகள் அற்ற மனதைக் கொண்ட அவன் ஊற்றிலிருந்து நீர் வற்றாமல் சுரப்பது போலத் தியானத்தின் வழியே அன்பினைச் சுரக்கச் செய்கிறான். புலன்களை ஒடுக்கி எது துக்கம் என்ற மெய்ப்பொருளை அறிகிறான். துக்க ஆதார நிலையை அறிகிறான்.துக்கம் வராமல் தடுப்பதைப் பற்றி யோசிக்கிறான். அவனிடம் ஞானம் பிறக்கிறது. இவை துறவியாதலின் தெளிவான பயன்கள்“ என்கிறார் புத்தர்.

ஞானமொழியைக் கேட்ட அஜாதசத்ரு தன் தந்தையைத் தான் கொன்றது பாவம் என்பதை உணருகிறான்.

புத்தர் பல்வேறு ஊர்களில் ஆற்றிய உரைகளையும் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளையும் சந்தேகங்களையும் விளக்குகிறது இந்நூல். புத்தர் தன் காலத்தில் எவ்வாறு பழிக்கப்பட்டார். கேலி பேசப்பட்டார். அவரையும் அவரது புத்த சங்கத்தையும் எப்படி நடத்தினார்கள் என்பதை விரிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் புத்தரை இழிவுபடுத்தும் கடுஞ்சொல்லை எப்படி எதிர்கொள்வது என்று அவரது சீடர்கள் கேட்கிறார்கள். புத்தர் அவற்றைக் கண்டுகொள்ள வேண்டாம். அவர்களுக்கு எதிராகக் கோபம் கொண்டு நம் மனதையும் உடலையும் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்கிறார். புத்தரின் போதனைகளில் எளிய உதாரணங்களை அவர் மேற்கோளாகக் காட்டுகிறார்.

தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதிலைத் தருவதை விடவும் கூடுதலாகக் கேள்விகளைக் கேட்டு அவர்களின் மூலமே பதிலைக் கண்டடையச் செய்கிறார்.

புத்தர் புளியமரங்களுக்கு நடுவிலும், மாமரங்களுக்கு நடுவிலும் தங்கியிருந்திருக்கிறார். அயராமல் நடந்து அலைந்திருக்கிறார் என்பதை இதிலுள்ள குறிப்புகள் தெளிவாகக் காட்டுகின்றன.

தீக நிகாயத்தில் சேதோ விமுக்தி, பிரக்ஞா விமுக்தி என இருவகையான முக்திநிலைகளை  புத்தர் விவரித்துச் சொல்கிறார்

 ஐநூறு சீடர்களுடன் அவர் பயணம் செய்யும் காட்சியினை மிக அழகாக விவரித்திருக்கிறார்கள். புத்தரின் இறப்பும் அதையொட்டி நடந்த இறுதி நிகழ்வுகளும் மகா பரிநிர்வாண சூத்திரம் என்ற பகுதியில் மிகச் சிறப்பாக விவரிக்கபட்டிருக்கிறது.

பன்மொழிப்புலவர் மு.கு.ஜகந்நாத ராஜாவின் மொழிபெயர்ப்பு படிப்பதற்கு அத்தனை சரளமாகவும் தெளிவாகவுமிருக்கிறது. அரிய நூல்களை மொழிபெயர்ப்பதிலும் ஆய்வு செய்வதிலும் அவர் காட்டிய அக்கறையும் ஈடுபாடும் என்றும் போற்றப்பட வேண்டியதாகும்

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 04, 2021 03:51

February 3, 2021

போர்ஹெஸின் பயணம்.

அமெரிக்க எழுத்தாளரான ஜெய் பரினி இதுவரை எட்டு நாவல்களை எழுதியுள்ளார், டால்ஸ்டாய் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இவர் எழுதிய தி லாஸ்ட் ஸ்டேஷன் நாவல் திரைப்படமாக வெளிவந்துள்ளது.

நாவல் மற்றும் திரைப்படம் இரண்டும் மிகச்சுமாரானவை என்றே சொல்வேன். இரண்டிலும் டால்ஸ்டாயின் ஆளுமையும் வாழ்க்கை நிகழ்வுகளும் சரியாக வெளிப்படவில்லை.

ஸ்டீன்பெக், வில்லியம் பாக்னர், ராபர்ட் பிராஸ்ட் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாற்றை ஜெய் பரினி எழுதியிருக்கிறார். தகவல் துணுக்குகள் என்பதைத் தாண்டி இந்த வாழ்க்கை வரலாற்று நூல்களில் அசலான பார்வைகளோ, மதிப்பீடுகளோ எதுவுமில்லை.

இவர் எழுதிய Borges and Me: An Encounter என்ற புத்தகத்தைச் சமீபத்தில் வாசித்தேன். போர்ஹெஸ் பற்றிய புதிய நூல் என்பதோடு அவரது ஸ்காட்லாந்து பயணம் பற்றிய முக்கியமான பதிவு என்று இலக்கிய இதழ் ஒன்றில் பாராட்டு வெளியாகியிருந்தது. ஆகவே இதைப் படிப்பதற்கான ஆசை கொண்டு உடனே வாங்கினேன்.

ஜெய் பரினி ஸ்காட்லாந்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்த நாட்களில் போர்ஹெஸைச் சந்தித்து ஒன்றாகப் பயணம் செய்திருக்கிறார். அந்த அனுபவத்தை இதில் விவரித்திருக்கிறார்

போர்ஹெஸின் தாய்வழி பாட்டி ஒரு ஆங்கிலப் பெண்மணி. ஆகவே அவரது வம்சாவளியில் ஆங்கிலப் பராம்பரியமுள்ளது. போர்ஹெஸ் பள்ளியில் சேர்க்கப்பட்ட போது கூட ஆங்கிலம் தான் முதலில் படித்திருக்கிறார். தனது குடும்ப, மற்றும் இலக்கிய வேர்களைத் தேடிக்காண வேண்டும் என்ற போர்ஹெஸின் விருப்பம் அவரை ஸ்காட்லாந்திற்குப் பயணம் செய்த வைத்தது.

கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான அலீஸ்டர் ரீட் அழைப்பின் பெயரில் போர்ஹெஸ்  விருந்தினராக வந்திருந்தார்.

1970களில் தனது முனைவர் பட்டட ஆய்விற்காக ஸ்காட்லாந்தில் வசித்த ஜெய் பரினி நண்பரான ரீடின் அழைப்பின் பெயரில் போர்ஹெஸை சந்தித்து உரையாடியிருக்கிறார். முதல் சந்திப்பின் போது அவருக்குப் போர்ஹெஸ் குறித்து எதுவும் அறிந்திருக்கவில்லை. ஸ்பானிய இலக்கியம் குறித்தோ, போர்ஹெஸின் கவிதைகள். கதைகள் குறித்தோ எதுவும் அறியாத பரினி அவரைச் சந்தித்து உரையாடுகிறார்.

முதல் சந்திப்பிலே போர்ஹெஸ் அவரது பெயரிலுள்ள பரினி என்பது கியூசெப் பரினி என்ற இத்தாலியக் கவிஞரின் பெயர் என்பதை நினைவுபடுத்துவதோடு நியோகிளாசிக் காலத்தின் கவிஞரான பெரினியின் கவிதைகளை மனப்பாடமாகச் சொல்கிறார். பெரினிக்கு இந்தக் கவிதைகள் எதுவும் தெரியவில்லை என்பதிலிருந்தே அவரது இலக்கிய ஈடுபாடு  எந்த அளவானது என்பது நமக்குப் புரிந்துவிடுகிறது.

பரினியோடு போர்ஹெஸ் முதல் சந்திப்பிலே நிறையப் பேசுகிறார். படித்த புத்தகங்களை நினைவு கொள்கிறார். கவிதையினைக் கொண்டாடுகிறார். மொழி ஆராய்ச்சி செய்கிறார். இதை வெறுமனே வேடிக்கை பார்த்தபடியே இருக்கிறார் பரினி. இவ்வளவிற்கும் அவர் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் மேற்கொள்கிறவர். ஒரு கவிஞர். பாவம் போர்ஹெஸ் என்றே தோன்றியது.

தனது குடும்பத்தில் ஏற்பட்ட அவசர வேலை காரணமாக அலீஸ்டர் ரெய்ட் லண்டனுக்குப் போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் அவர் திரும்பி வரும் வரை போர்ஹெஸை கவனித்துக் கொள்ளுமாறு பரினியிடம் வேண்டுகிறார். அதை ஏற்றுக் கொண்ட பரினி போர்ஹெஸின் பாதுகாவலராக அவருடன் சேர்ந்து தங்குகிறார் இருவரும் சாலைவழியாக ஸ்காட்லாந்தின் மலைப்பிரதேசத்தைக் காணச் செல்கிறார்கள். இந்தப் பயணச்செலவு முழுவதையும் தானே ஏற்றுக் கொள்வதாகப் போர்ஹெஸ் சொல்கிறார். பரினியின் காரில் அவர்கள் நீண்ட பயணம் மேற்கொள்கிறார்கள்

வழியில் இருவருக்குள்ளும் நடந்த இலக்கிய உரையாடல்கள். போர்ஹெஸ் தங்கிய விடுதி. அவரது நண்பரைச் சந்திக்கச் சென்ற நிகழ்ச்சி. ஸ்காட்லாந்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைக் கண்ட அனுபவம் யாவற்றையும் தொகுத்து பரினி எழுதியிருக்கிறார்

புத்தகம் முழுவதும் பரினியின் கற்பனையால் எழுதப்பட்டிருக்கிறது. இதில் வரும் போர்ஹெஸ் வாய் ஓயாமல் பேசும் கிழவராகச் சித்தரிக்கப்படுகிறார். தோற்றுப்போன நடிகர்கள் தனது கடந்தகாலத்தை நினைவுபடுத்தி நாடகமேடை வசனங்களைப் பேசிக்காட்டுவது போல அவரது உரையாடல்களைப் பரினி எழுதியிருக்கிறார்.

மொத்த உரையாடலும் பரினி நினைவிலிருந்து எழுதியது என்று பின்னுரையில் குறிப்பிடுகிறார். ஆனால் இது போர்ஹெஸின் பல்வேறு நேர்காணல்கள் மற்றும் கட்டுரைகளை வாசித்துவிட்டு அவற்றையெல்லாம் தன்னிடம் போர்ஹெஸ் பேசினார் என்பது போலக் கற்பனையாக எழுதப்பட்டிருக்கிறது என்பதை எளிதாக அறியமுடிகிறது. பரினி ஒரு திறமையில்லாத மூன்றாம் நிலை எழுத்தாளர். அவரது கவிதைகளும் நாவலும் கூட அத்தகையதே. அதன் வெளிப்பாடே இந்த நூலின் அசட்டுத்தனங்கள்.

போர்ஹெஸிற்கு உலக அளவில் உள்ள புகழைப் பயன்படுத்திக் கொள்ள இப்படியொரு கற்பனையான நினைவுகொள்ளுதலை பரினி மேற்கொண்டிருக்கிறார். வெறும் விற்பனை தந்திரம் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை

அவர் ஜோர்ஜ் லூயி போர்ஹெஸ் உடன் ஒருவார காலப்பயணம் மேற்கொண்டது உண்மை. அந்தப் பயணத்தில் அவர்கள் தங்கிய இடங்கள் யாவும் உண்மை. ஆனால் போர்ஹெஸ் அவரிடம் பேசிய விஷயங்கள் யாவும் பரினியின் கற்பனை.

போர்ஹெஸிற்கு விருப்பமான ஆங்கிலோ சாக்சன் கவிதைகள். மொழியியல் ஆய்வு. செர்வாண்டிஸ். ஆர். எல். ஸ்டீவன்சன், ஷேக்ஸ்பியர். அரேபியன் நைட்ஸ், வழிப்பறிக்கொள்ளையர்களின் கதை, என்சைக்ளோபீடியா மீதான தீவிர ஈடுபாடு இவற்றையெல்லாம் சாதுர்யமாகத் தனது உரையாடலுக்குள் பொருத்தியிருக்கிறார் பரினி. அது செயற்கையாக இருக்கிறது

போர்ஹெஸிடம் வெளிப்படும் ஞானமோ, கவித்துவமான வெளிப்பாடோ எதுவும் இந்த நூலில் காணப்படவில்லை. Borges at eighty என்ற அவரது நேர்காணல்களின் தொகுப்பினையோ அல்லது Osvaldo Ferrarri நிகழ்த்திய நேர்காணல் தொகுப்பான Conversations – 3 volumes, வாசித்தவர்களுக்குப் போர்ஹெஸ் உரையாடும் முறையும் அவரது மொழியும் எளிதாக அடையாளம் காணமுடியும்.

போர்ஹெஸை நினைவு கொள்ளும் இந்தப் புத்தகத்தில் முதல் நூறு பக்கங்கள் பரினி தனது சொந்தவாழ்க்கையினை நினைவு கூர்ந்திருக்கிறார். இந்த நூலுக்குத் தேவையற்ற விஷயங்கள். பரினி வாழ்க்கையில் சொல்லிக் கொள்ளும்படி எதுவும் நடக்கவுமில்லை. பத்தாவது அத்தியாயத்தில் தான் போர்ஹெஸை சந்திக்கிறார்.

புத்தகம் முழுவதும் போர்ஹெஸ் பார்வையற்றவர் என்பதைத் தேவையற்று பல இடங்களில் வலிந்து குறிப்பிடுகிறார். நிறைய நேரங்களில் பார்வையின்மையைக் கேலி செய்வது போலவும் எழுதியிருக்கிறார். அது உறுத்தும்படியாக உள்ளது.

இரவில் மூத்திரம் பெய்வதற்காக அடிக்கடி போர்ஹெஸ் எழுந்து சென்றது அவர்கள் தங்கிய வீட்டு உரிமையாளரான பெண்ணிற்கு எவ்வளவு இடையூறாக இருந்தது என்பதைப் பெரிய நகைச்சுவை சம்பவம் போல விரிவாக எழுதியிருக்கிறார். இது பரினியின் அசட்டுத்தனம் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை

போர்ஹெஸின் உரையாடல்களில் பரினி பங்குபெறவேயில்லை. மொத்த புத்தகத்தை வாசித்து முடிக்கும் போது பரினி ஆழ்ந்த இலக்கிய வாசிப்பு எதுவுமின்றி வெறும் பெயர்களை உதிர்க்கும் மனிதர் என்பதைத் தெளிவாக உணர முடிகிறது

போர்ஹெஸ் நூலகத்திற்குச் செல்லும் பகுதி ஒன்று தான் படித்தவரை நன்றாக இருந்தது. அதில் கடவுள் தான் உலகின் முதல் நூலகர் என்கிறார் போர்ஹெஸ். தான் அர்ஜென்டினா நூலகத்தின் இயக்குநராகப் பணியாற்றிய நாட்களை நினைவுகூறுகிறார்.

போர்ஹெஸ் பற்றிய புதிய நூல் என்பதால் இதை வாசிக்க ஆர்வம் கொண்டு வாங்கியிருந்தேன். ஏமாற்றமான அனுபவத்தையே தந்தது. போர்ஹெஸ் பற்றிய செய்தி துணுக்குகளைத் தவிர வேறு உருப்படியாக எதுவுமில்லை.

இந்தப் புத்தகம் படித்த சலிப்பிற்குப் பிராயச்சித்தமாக எழுத்தாளர் பெர்னான்டோ சொரண்டினோ போர்ஹெஸை நேர்காணல் செய்த Seven Conversations with Jorge Luis Borges – Fernando Sorrentino எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். மிகச்சிறப்பான நேர்காணல்களின் தொகுப்பிது.

Before I ever wrote a single line, I knew, in some mysterious and therefore unequivocal way, that I was destined for literature.
What I didn’t realize at first is that besides being destined to be a reader, I was also destined to be a writer, and I don’t think one is less
important than the other.

என இந்த நேர்காணலில் போர்ஹெஸ் குறிப்பிடுகிறார். வாசகராகவும் எழுத்தாளராகவும் அவர் நம்மை எப்போதும் வியக்க வைக்கிறார் என்பதே நிஜம்.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 03, 2021 04:38

February 2, 2021

சிரிப்பு பாதி அழுகை பாதி

எங்க வீட்டுப் பெண் படத்தில் இடம்பெற்ற சிரிப்பு பாதி அழுகை பாதிச் சேர்ந்ததல்லவோ மனித ஜாதி பாடல் திடீரெனக் காலையில் நினைவிற்கு வந்தது. பழைய பாடல்களில் எந்தப் பாடல் எப்போது நினைவில் கிளர்ந்து எழும் என்று சொல்ல முடியாது.

அந்த நாள் முழுவதும் அந்தப் பாடல் மனதில் ஒடிக் கொண்டேயிருக்கும். கே.வி.மகாதேவன் இசையில் கண்ணதாசன் எழுதிய பாடல்.. : P.B.ஸ்ரீநிவாஸ் அற்புதமாகப் பாடியிருப்பார்.

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.

இந்தப் பாடலில் நாகையா மெய்யுருகப் பாடுகிறார். சாது போன்ற அவரது தோற்றமும் இசைக்கும் பாவமும் அமர்ந்து கேட்கும் மக்களின் ஆழ்ந்த முகமும் மனதைக் கவ்வுகிறது. காலத்தின் குரல் தான் இந்தப் பாடலைப் பாடுகிறதோ எனும்படியாகப் பிபிஎஸ் பாடியிருக்கிறார். பசித்த வயிற்றில் உணவு தெய்வம் , கொட்டு மழையில் கூரை தெய்வம். கோடை வெயிலில் நிழலே தெய்வம் என்று எத்தனை எளிமையாக வாழ்வினைப் புரிய வைக்கிறது பாடல்.

எங்கிருந்தோ இப்படி ஒரு சாது ஊருக்கு வருவதும் அவர் மடத்தில் அமர்ந்து பாடுவதையும் என் சிறுவயதில் கண்டிருக்கிறேன். ஆனால் அந்த உலகம் இன்றில்லை. இன்று கிராமப்புறங்களில் கூட வீட்டுக்கு வெளியே உலகமில்லை.

ஊர் ஊராக நடந்து திரியும் மனிதர்களை எங்கேயும் காணமுடியவில்லை.

எனக்கு பத்து வயதிருக்கும் போது ஒரு வடநாட்டுக் குடும்பம் இப்படி என் ஊருக்கு வந்திருந்தது.

ஒரு வயதானவர் அவரது மகன், மகனின் மனைவி அவர்களின் மூன்று பிள்ளைகள் கொண்ட குடும்பமது. செருப்பு அணியாத கால்கள். புழுதிபடிந்த அழுக்கான உடை. சோர்ந்து போன முகங்கள். கிழவர் கையில் துந்தனா இசைத்தபடியே ஹிந்தியில் பாடிக் கொண்டு வந்தார். அந்தப் பெண் கையில் ஒரு  நார்கூடையை ஏந்தியபடியே வீடுவீடாக வந்தாள். அவர்கள்  வீதிகளில் பாடியபடி யாசகம் கேட்டார்கள். அவர்கள் பேசிய மொழி புரியாத போதும் ஊர்மக்கள் அவர்களுக்கு உணவளித்து உடைகளும் தானியங்களும் தந்து நாலைந்து நாட்கள் கிராமத்திலே தங்க வைத்தார்கள்.

அவர்கள் எதற்காக இப்படிக் கரிசலின் சிறிய கிராமத்திற்கு வந்தார்கள் என்று நினைவில்லை. ஆனால் அந்தப் பெண் கையில் தேளினை பச்சை குத்தியிருந்தது மனதில் பசுமையாக இருக்கிறது.

உலகமே வீடு என வாழ்ந்த மனிதர்கள் மறைந்து போய்விட்டார்கள்.

பாரதக்கதை பாடியபடியே ஊருக்கு வரும் தாசரிகளைக் காணமுடியவில்லை. பூம்பூம்மாட்டுக்காரன் இப்போதெல்லாம் கனவில் கூட வருவதில்லை.

ஊர் ஊராக நடந்து வந்து பல்வேறு விதமான கத்தியை வாயினுள் சொருகிக் காட்டி வித்தைக்காட்டுபவன் எங்கே மறைந்து போனான். இரவுபகலாக சைக்கிள் சுற்றுகிறவன், நரைமயிர்களை கருமையாக்கும் தைலம் விற்பவன். புனுகு விற்க வருபவன். தோளில் தையல் இயந்திரத்தை சுமந்தபடி கிராமத்திற்கு வரும் டெய்லர், கிணற்றில் தூர் எடுக்கும் கிழவர், காலில் சலங்கை கட்டியபடி வீடுவீடாக அக்னி சட்டி எடுத்து வந்து காணிக்கை கேட்கும் சாமியாடி என எல்லோரும் காலத்தின் திரைக்குப் பின்னே மறைந்துவிட்டார்கள்.

இந்த பாடல் அவர்களை ஏன் நினைவுபடுத்துகிறது.

தண்ணீரின் மீது எறிந்த கல்லைப் போன்றது தானா பாடலும்.

 சிரிப்பையும் அழுகையினையும் பற்றி எத்தனையோ பாடல்கள் தமிழ் சினிமாவில் இடம்பெற்றிருக்கின்றன . வேறு மொழிகளில் இப்படி சிரிப்பு மற்றும் அழுகை பற்றி இவ்வளவு சினிமா பாடல்கள் இருக்கிறதா எனத்தெரியவில்லை.

சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் சிந்திய கண்ணீர் மாறியதாலே என்ற சீர்காழியின் பாடலை எப்படி மறக்கமுடியும்.

பிறக்கும்போதும் அழுகின்றான் இறக்கும்போதும் அழுகின்றான் என்று ஜே. பி சந்திரபாபு  ஞானகுருவைப் போல அல்லவா பாடுகிறார்.  

வாழ்வின் அர்த்தத்தை இந்தப் பாடல்களைப் போல நினைவுபடுத்திக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது.

எவ்வளவு முறை எத்தனை பேர் சொல்லிக் கேட்டாலும் உபதேச மொழிகள் மனதைத் தொடவே செய்கின்றன.

சிரிப்பு பாதி அழுகை பாதிச் சேர்ந்ததல்லவோ மனிதஜாதி என்ற வரியில் அல்லவோ என்ற சொல்லை போட்டது தான் கண்ணதாசனின் தனிச்சிறப்பு. மனிதஜாதி என்பதை பிபிஎஸ் எவ்வளவு அழகாகப் பாடுகிறார்.  சோகம் இழையோடும் இந்தப் பாடல் மனதைக் கரைந்து போகவே செய்கிறது

•••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 02, 2021 22:37

February 1, 2021

காதலின் ஆயிரம் ஆண்டுகள்

அது ஆயிரம் ஆண்டாக இருக்கலாம்

அல்லது நேற்று தானா

நாங்கள் பிரிந்தது.

இப்போது கூட , என் தோளில் ,

உன் நேசமான கையை உணர்கிறேன்

என்ற கவிதையின் வழியே தான் யோசனோ அகிகோ அறிமுகமானார். ஜென் கவிதைகளை போன்ற வரிகளால் ஈர்க்கப்பட்டு RIVER OF STARS -Selected Poems of Yosano Akiko என்ற அவரது கவிதை தொகுப்பினை வாசித்தேன். கவிதை என்பது உண்மையான உணர்வுகளின் சிற்பம். என்கிறார் அகிகோ

அவரது ஒரு கவிதையில் வெந்நீர் குளியலுக்குப் பின்பு உடைமாற்ற உயரமான கண்ணாடி முன்பு நிற்கும் ஒரு பெண் தன் உடலைப் பார்த்துத் தானே புன்னகை செய்கிறாள்.

அந்த நிமிஷத்தில் நீண்டகாலத்தின் பின்பு அவளது வெகுளித்தனம் வெளிப்படுகிறது.

தன் உடலைத் தானே பார்த்து வியக்கும் அந்த நிமிஷம் அழகானது. கவிதையில் உயரமான கண்ணாடி என்ற சொல் தான் அந்த அழகின் முழுமையை நமக்குக் காட்டுகிறது.

இதமான குளியலுக்குப் பிறகு தூய தனது உடலை அவள் ஒரு சிற்பத்தைப் போலவே காணுகிறாள். ஏன் புன்னகை என்பது முக்கியமானது.

அந்த உடல் அவளுடையது என்றாலும் அது காதலனால் துய்க்கப்பட்டிருக்கிறது. ஒரு இசைக்கருவியை மீட்டுவது போல அந்த உடலை மீட்டியிருக்கிறான். உடலின் வனப்பும் நளினமும் அழகும் அவளுக்குள் நினைவுகளை எழுப்புகிறது. சொல்லப்படாத இன்பத்தின் வெளிப்பாடாக அந்தச் சிரிப்பு வெளிப்படுகிறது.

தன் உடலை ஏதோ ஒரு நாளில் ஏதோ ஒரு தருணத்தில் தான் இப்படிப் பெண்ணால் உணர முடிகிறது என்பதே இதன் தனித்துவம்.

இன்னொரு கவிதையில் தாகம் கொண்ட ஆட்டுக்குட்டியின் கண்களைப் போன்றது தனது கண்கள் என்கிறார் யோசனோ.

எவ்வளவு அழகான வெளிப்பாடு.

காதல் என்பது தாகம் தானே. அந்தத் தாகம் தீரக்கூடியதில்லை. ஆட்டுக்குட்டிக்குத் தனது தாகத்தைத் தீர்த்துக் கொள்ள வழி தெரியாது. அவளும் அப்படி தானிருக்கிறாள். அவன் தான் அதைப் புரிந்து கொண்டு தீர்த்து வைக்க வேண்டும். அவள் நேரடியாக எதையும் கேட்பதில்லை. ஆனால் சுட்டிக்காட்டுகிறாள். சங்ககவிதைகளில் இது போன்ற வெளிப்பாடினைக் காணமுடியும்.

அகிகோ மற்றும் அவளது கணவர் இருவரும் கவிஞர்கள். அவளைப் பிரிந்து கணவர் வெளிநாடு சென்றுவிட்டார். தனிமையின் ஏக்கத்தில். பிரிவின் தவிப்பில் அவளுக்குச் சொற்கள் போதுமானதாகயில்லை. அவள் தன்னுடைய மனதை இப்படி வெளிப்படுத்துகிறாள்.

எங்களுக்குக் கவிதை எழுதும் திறமையில்லை

நாங்கள் சிரிக்கிறோம்

இந்த அன்பு இருபதாயிரம் ஆண்டுகள் நீடிக்கும்

அது நீண்ட காலமா

அல்லது சுருக்கம் தானா.

நீண்டகாலம் அல்லது ஒரு நிமிஷம் இரண்டு காதலர்களுக்கு ஒரே அளவு கொண்டது. காலத்தை அவர்கள் உலகம் அளவிடுவது போல அளப்பதில்லை. அவர்கள் உணர்ச்சிகளின் வழியே காலத்தை அறிகிறார்கள். கடந்து போகிறார்கள்.

இன்னொரு கவிதையில் அகிகோ சொல்கிறார்

என் பளபளப்பான கறுப்புத் தலைமுடி

சீர்குலைந்து ,

ஆயிரம் சிடுக்குகள் ,

உங்கள் மீதான என் அன்பின்

ஆயிரம் சிக்கலான எண்ணங்களைப் போல

சிக்கலான காதலின் எண்ணங்களைப் போலத் தானே சிடுக்காகிக் கொண்டிருக்கிறது தலைமயிர். அதைச் சீவி சரிசெய்வது போலச் சந்திப்பும் அணைப்பும் கூடுதலும் தேவைப்படுகிறது. இங்கேயும் அவளாகவே தான் குழப்பத்திற்கு ஆளாகிறாள். கொதிக்கும் தண்ணீரைப் போலவே காதலின் எண்ணங்கள் குமிழிடுகின்றன.

அவரது நீள் கவிதை ஒன்றில் அகிகோ சொல்கிறார்

பிரபஞ்சத்தினுள் பிறந்து

பிரபஞ்சத்தினுள் வளர்ந்த போதும்

எப்படியோ நான் பிரபஞ்சத்திலிருந்து விலகி இருக்கிறேன்.

ஆம் , நான் தனிமையில் இருக்கிறேன்.

உங்களுடன் இருந்தாலும் நான் தனிமையிலிருக்கிறேன் ,

ஆனால் சில நேரங்களில்

நான் மீண்டும் பிரபஞ்சத்திற்குத் திரும்புகிறேன்.

நான் தான் பிரபஞ்சமா ,

எனக்குத் தெரியவில்லை

அல்லது பிரபஞ்சம் எனக்குள் இருக்கிறதா.

என் இதயம் பிரபஞ்சத்தின் இதயம் ;

என் கண்கள் பிரபஞ்சத்தின் கண்கள் ;

நான் அழும்போது ,

எல்லாவற்றையும் மறந்து அழுகிறேன்.

என நீள்கிறது அவரது கவிதை.

ஜப்பானிய கவிதையுலகின் தனித்துவமிக்கக் குரலாக ஒலிக்கிறார் அகிகோ.

இவர் ஒசாகாவின் புறநகரில் வசித்த இனிப்புப் பண்டங்கள் தயாரிப்பவரின் மகளாகப் பிறந்தவர். . ஜப்பானின் சர்ச்சைக்குரிய பெண் கவிஞராகவும் எழுத்தாளராகவும் அறியப்பட்டவர். , எழுபத்தைந்து புத்தகங்களை வெளியிட்டுள்ளார்

இதில் இருபது தொகுதிகள் கவிதைகள் இதில் பதினேழாயிரம் டாங்கா எனும் குறுங்கதைகள் இடம்பெற்றிருந்தன. கவிதையின் ராணி என்று அவளைக் கொண்டாடுகிறார்கள்.

முரசாகி சீமாட்டியின் செஞ்சிகதையின் புதிய மொழியாக்கம் ஒன்றையும் அகிகோ வெளியிட்டிருக்கிறார்.

ஆண் குழந்தை பிறக்கும் என நினைத்த அவரது தந்தை அகிகோ பெண்ணாகப் பிறந்துவிட்ட காரணத்தால் அவளை வளர்க்கும்படி அத்தையிடம் கொடுத்துவிட்டார். மூன்று ஆண்டுகள் அத்தை வீட்டில் தான் அகிகோ வளர்ந்தார். ஆண்பிள்ளைகள் வரிசையாகப் பிறந்த காரணத்தால் பின்பு அகிகோவை அவளது பெற்றோர் தாங்களே வளர்ப்பதாக அழைத்துக் கொண்டார்கள். பள்ளி வயதிலே இலக்கியத்தின் மீது தீவிர ஈடுபாடு கொண்டு புத்தகங்களை வாசிக்கத் துவங்கினார்.

தனது பத்தொன்பது வயதில் , அவர் தனது முதல் டாங்காவை வெளியிட்டார் அந்தக் கவிதை வாசகர்களின் மிகுந்த பாராட்டினைப் பெற்றது

யோசனோ ஹிரோஷி என்ற கவிஞரால் கண்டறியப்பட்டு அவரது இலக்கியவட்டத்தினுள் முக்கியக் கவியாக அறிமுகம் செய்யப்பட்டார் அகிகோ. யோசனோ டெக்கன் என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதிவந்தார். அவர் ஒரு பௌத்த மதகுருவின் மகன்

வசதியான ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டிருந்தார். மனைவி வழியாகக் கிடைத்த சொத்தில் அவர் ஒரு இலக்கிய இதழை நடத்தி வந்தார். அந்த இதழில் அகிகோ தொடர்ந்து எழுதினார். அதன் காரணமாக அவர் யோசனோ ஹிரோஷிவுடன் நெருக்கமாகப் பழக ஆரம்பித்தார். அவர்களுக்குள் காதல் உருவானது. .

தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு அகிகோவை திருமணம் செய்து கொள்வதாக அவர் வாக்குறுதி அளித்தார். தன்னை யோசனோ ஏமாற்றிவிடக்கூடும் என நினைத்த அகிகோ தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டி கடிதம் அனுப்பினார். இந்தக் கடிதம் யோசனோவின் மனைவி கையில் கிடைத்தது யோசனோவின் மனைவி அகிகோவிற்குக் கடிதம் எழுதி எச்சரித்தார்.

யோசனோ ஹிரோஷியால் தன் காதலி அகிகோவை மறக்கமுடியவில்லை. தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு அகிகோவை திருமணம் செய்து கொண்டார். டோக்கியோவில் அவர்கள் வாழ்ந்தார்க்ள். போதுமான வருவாய் இல்லாத காரணத்தால் கடன் சுமை ஏற்பட்டது. கையில் பணமில்லாத போது யோசனோ ஹிரோஷி விவாகரத்து செய்த மனைவியிடம் மன்றாடி பணம் பெற்று வந்தார்.

தன் கவிதைகளின் மூலம் அகிகோ புகழ்பெற ஆரம்பித்தார். இந்நிலையில் மூன்றாண்டு பயணமாக யோசனோ பாரீஸிற்குப் பயணம் மேற்கொண்டார். ஆறுமாதத்தின் பின்பு அகிகோவும் அந்தப் பயணத்தில் இணைந்து கொண்டார். அவர்கள் ஜெர்மனி, ஹாலந்து இங்கிலாந்து எனச் சுற்றியலைந்தார்கள்

ஜப்பானிய வரலாற்றில் மன்னரைப் பகிரங்கமாகக் கண்டித்து எழுதிய ஒரே கவிஞர் அகிகோ மட்டுமே. மன்னருக்கு எதிராக நடந்த புரட்சியாளர்களைத் தூக்கிலிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் வெளிப்படையாகப் பேசினார் இதன் காரணமாக அவரது வீடு கல்லெறியப்பட்டது.

தனது பாலின்ப வேட்கையினை நேரடியாகப் பேசியவர் அகிகோ. உடலைக் கொண்டாடும் அவரது கவிதைகள் காமத்தையும், தனிமையினையும் காத்திருப்பின் வலியினையும் பெண்ணின் நோக்கில் துல்லியமாக வெளிப்படுத்தின. இதன் காரணமாக அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

சீனா மற்றும் அமெரிக்காவின் அதிகாரத்திற்கு எதிராகக் கவிதைகள் எழுதியவர் அகிகோ. பெண்களுக்கான இலக்கிய இதழ் ஒன்றையும் அவர் நடத்தி வந்தார்.

1942 இல் தனது அறுபத்து மூன்று வயதில் பக்கவாதத்தால் அகிகோ இறந்தார். டோக்கியோவின் புறநகரில் உள்ள தமா ரெய்னின் கல்லறையில் அகிகோ யோசானோவின் கல்லறை அமைந்துள்ளது

•••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 01, 2021 05:18

January 31, 2021

தேவதைகளின் தோழன்

ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் Andersen. Zhizn bez lyubvi என்ற ரஷ்யத் திரைப்படத்தைப் பார்த்தேன். இரண்டு பாகங்களாக வெளியாகியுள்ளது

சிறார்களுக்கான படமாக இதை உருவாக்கவில்லை. விசித்திரமான நிகழ்வுகளும் நிஜமான அனுபவங்களும் ஒன்று சேர்ந்த உளவியல் படைப்பாகவே படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆண்டர்சனின் நினைவுகளே படத்தை முன்னெடுக்கின்றன. சிறந்த ஒளிப்பதிவு மற்றும்  இசை படத்தின் தனித்துவமாகும்.

சிறுவர்களுக்கான தேவதை கதைகளை எழுதி உலகப் புகழ்பெற்றவர் ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன் .The Steadfast Tin Soldie, The Snow Queen, The Little Mermaid, Thumbelina), The Little Match Girl ,The Ugly Duckling போன்றவை இவரது புகழ்பெற்ற படைப்புகள். ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன் கதைகள் 150க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. இக் கதைகளைத் தழுவி திரைப்படங்களும், நாடகங்களும், நடன நிகழ்ச்சிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. உலக அளவில் அதிகம் மொழிபெயர்க்கபட்ட எழுத்தாளராக அறியப்படுகிறார்.

இந்தப்படத்தின் ஒரு காட்சியில் ஆண்டர்சன் நிகழ்த்தும் நாடகம் ஒன்றைக் காணுவதற்காக டேனிஷ் மன்னர் வருகை தருகிறார். நாடகம் முடிந்தவுடன் தனி அறையில் மன்னருக்கு உணவளிக்கப்படுகிறது. விதவிதமான உணவு வகைகளை மன்னர் ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஆண்டர்சன் அழைத்துவரப்படுகிறார். அவரையும் மன்னர் தன்னோடு சாப்பிடும்படி அழைக்கிறார். தனக்குப் பசியில்லை என்று ஆண்டர்சன் மறுக்கவே மன்னர் ஆச்சரியத்துடன் கேட்கிறார்

“பசித்த போது மட்டும் சாப்பிடுவதற்கு நீ என்ன விலங்கா?“

“என்னை விலங்கோடு ஒப்பிட்டதற்கு நன்றி , பசித்த வேளையில் மட்டும் தான் சாப்பிடுவேன்“ என்று பணிவாகப் பதில் சொல்கிறார் ஆண்டர்சன்

மன்னரின் கேள்வி அரசவாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை ஒரு வரியில் விளக்கிவிடுகிறது. விரும்பும் நேரமெல்லாம் சாப்பிட்டுக் கொண்டிருப்பது தான் மன்னரின் வாழ்க்கை. டேனிஷ் மன்னரோ குளியல் அறையில் குளித்தபடியே சாப்பிடுகிறார். உடை அணிந்தபடியே சாப்பிடுகிறார். பேசிக் கொண்டிருக்கும் போதும் எதையோ மென்றபடியே இருக்கிறார். சாப்பிடுவதற்காகவே வாழுவது தான் அவரது உலகம். ஆனால் ஆண்டர்சன் போன்ற ஏழைகளுக்குப் பசித்த வேளையில் கூட உணவு கிடைக்காது.

கிறிஸ்துமஸ் நாளில் சாப்பிட உணவின்றிக் கொட்டும் பனியில் தவிக்கும் போது தவறி விழுந்த ஒரு உருளைக்கிழங்கை எடுத்துச் சாப்பிடுகிறார் ஆண்டர்சன். குளிருக்கு ஒதுங்க இடமின்றி நாடக அரங்கினுள் அடைக்கலமாகிறார். யாரும் இல்லாத மேடையில் மண்டியிட்டுத் தான் ஒரு புகழ்பெற்ற நடிகனாக வேண்டும் என்று மன்றாடுகிறார். உணர்ச்சிப்பூர்வமான காட்சியது

இது போலவே அவரது குரலின் இனிமையைக் கேட்டு ரசித்த மக்கள் அவர் ஆணா பெண்ணா என்று சந்தேகம் கொள்கிறார்கள். ஆடை உருவி அவரது அடையாளத்தைக் காண முயல்கிறார்கள். அவர் தடுத்தபோது உடைகளை உருவி அசிங்கப்படுத்துகிறார்கள். அந்தக் கும்பலிடம் தப்பியோடுகிறார். கண்ணீருடன் புழுதியில் விழுந்து கிடக்கும் ஆண்டர்சனின் தோற்றம் கலங்க வைக்கிறது.

ஒரு நாள் அவரது சகோதரி அவருக்காக நோட்டு ஒன்றை திருடப்போய் அடிபடுகிறாள். அவளை அடித்த கடையின் மீது ஆண்டர்சன் கல் வீசுகிறார். அவள் வீட்டைவிட்டு ஒடிவிடுகிறாள். படத்தில் அவளுடன் ஆண்டர்சனுக்குள்ள அன்பு அலாதியானது.

ஆண்டர்சன் தன் வாழ்நாளில் அனுபவிக்காத கஷ்டமேயில்லை. எவரும் அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. மனிதர்கள் கைவிட்ட காரணத்தால் அவர் தேவதைகளைத் தனது உதவிக்கு அழைக்கத் துவங்கினார். தனது கண்ணீரைத் தான் அவர் மகிழ்ச்சியின் வாசனை திரவியமாக உருமாற்றினார். கதைகளை அவர் ஒரு போதும் வெறும் கற்பனையாகக் கருதவில்லை. அவற்றை மாற்று உலகமாகக் கருதினார்.

கால் உடைந்து போன போர்வீரன் பொம்மை ஒன்றை எப்போதும் ஆண்டர்சன் கூடவே வைத்திருந்தார். அந்தப் பொம்மை வீரனுக்குப் போரில் கால் உடைந்துவிட்டதாகக் கதை சொன்னார். உலகம் ஒருவனைக் கைவிடும் போது கதைகள் அவனைக் காப்பாற்ற முனைகின்றன. ஆற்றுப்படுத்துகின்றன. கனவுகளை உருவாக்கி நம்பிக்கை கொள்ள வைக்கின்றன.

ஆண்டர்சன் கதைகளின் பின்னால் இருப்பது அவரது சொந்த வாழ்வின் துயரங்களே. Ugly Duckling கதையில் வரும் வாத்து அவர் தான்.

சிறுவயதில் அவரது தோற்றம் மற்றும் கீச்சிடும் குரலுக்காக மற்றவர்களால் கேலி செய்யப்பட்டார். அந்தக் கிண்டல் அவரைத் தனிமைப்படுத்தியது, தன்னை ஒரு அசிங்கமான வாத்து என நினைத்துக் கொண்டார். புகழ்பெற்ற எழுத்தாளரான பிறகே அவர் அழகான அன்னமாக உருவெடுத்தார். இந்தக் கதையில் சொந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பினைக் காணமுடிகிறது

ஆண்டர்சன் டென்மார்க்கின் ஓடென்ஸ் நகரில் 1805ல் பிறந்தார். தந்தை செருப்புத் தைப்பவர். தாய் சலவை தொழிலாளி. சிறுவயதிலே தந்தையை இழந்தவர். தானே செய்த பொம்மைகளை வைத்து விளையாடத் துவங்கிய ஆண்டர்சன் கற்பனை உலகில் சஞ்சரிக்க ஆரம்பித்தார். கவிதைகள் எழுதவும் பாடவும் கூடிய திறமைசாலியாக இருந்த போதும் உலகம் அவரை அங்கீகரிக்கவில்லை. நாடகக்குழுவில் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பதற்காக ஊரைவிட்டு கோபன்ஹேகனுக்கு ஓடிப்போனவர். ஆனால் அவரது கனவு எளிதாக நிறைவேறவில்லை. அவரது அசாத்தியமான குரலில் மயங்கிப் பாடுவதற்கான வாய்ப்பினை உருவாக்கித் தந்தார்கள். தனது கதைகள் மற்றும் பாடல்கள் மூலம் ஆண்டர்சன் புகழ்பெறத் துவங்கினார்

அரண்மனையில் நடைபெறும் விருதளிப்பு நிகழ்வில் கலந்து கொள்ளும் ஆண்டர்சனிடம் உடனடியாக ஒரு கதை சொல்ல முடியுமா எனக்கேட்கிறாள் மகாராணி. புகழைப் பற்றிய கதையாக இருக்க வேண்டும் என்கிறார் மன்னர். உடனே புதிதாகக் கதை ஒன்றைச் சொல்லத் துவங்கினார். புகழுக்கு ஒரு உருவம் கொடுக்க ஆரம்பிக்கிறார். மிக உயரமான தோற்றம் கொண்ட புகழ் ஒருவரை தன் விரல்களால் தூக்கி மேலே கொண்டு போய்ப் பார்த்துவிட்டு கீழே எறிந்துவிடும் என்றொரு கதையைப் புனைந்து சொல்கிறார். கதையைக் கேட்டு அனைவரும் பாராட்டுத் தெரிவிக்கிறார்கள். எல்லாப் புகழும் தற்காலிகமானதே. புகழின் உச்சிக்குப் போனவர்கள் எவரும் அங்கே தங்கிவிட முடியாது என்பதை அழகான கதையின் மூலம் புரிய வைத்துவிடுவார் ஆண்டர்சன்.

கலையுலகில் புகழ்பெற வேண்டும் என்ற ஆசைக்கு அவர் கொடுத்த விலை மிக அதிகம். ஒரு காட்சியில் தான் பாடுவதைக் கேளுங்கள் என்று கால்களைப் பிடித்துக் கெஞ்சுகிறார். ஒரேயொரு வாய்ப்பு அவருக்குத் தரப்படுகிறது. ஆழ்மனதின் வேதனைகளை வெளிப்படுத்தும் விதமாகப் பாடுகிறார். அந்தப்பாடல் கேட்பவர்களுக்குக் கண்ணீரை வரவழைக்கிறது. இதன் காரணமாக மன்னரது டேனிஷ் நாடகக் குழுவில் இவரைச் சேர்த்துக்கொள்கிறார்கள் .

ஆண்டர்சன் கதைகள் தோற்ற அளவில் தேவதை கதைகளைப் போலத் தெரிந்தாலும் தன்னை நிரூபிக்கும் வரை ஒருவர் அடையும் அவமானங்களையும் புறக்கணிப்பையும் பற்றியதாகவே உள்ளது. மீட்சி தான் தேவதைகளால் ஏற்படுகிறது

அப்படியான மீட்சி ஆண்டர்சனுக்கும் காதலின் வழியே கிடைத்தது. அவர் நிகழ்த்திய நாடகம் ஒன்றைக் காணவரும் அழகான பெண்ணிடம் காதல் வசப்படுகிறார். அந்தப் பெண்ணை நாடக அரங்கில் அவர் நடத்தும் விதம் காதலின் அழகான தருணங்கள். காதலின் பொருட்டுத் தன்னைக் கடற்கன்னியாக மாற்றிக் கொண்ட தி லிட்டில் மெர்மிட் கதையிற்குப் பின்னாலும் அவரது சொந்தவாழ்க்கையின் நிழலே காணப்படுகிறது.

அரண்மனையில் நடத்தப்பட்ட நாடகத்தைப் பார்க்க வந்த தணிக்கை அதிகாரி இது போன்ற முட்டாள்தனமான, அரசு எதிர்ப்பு நாடகங்களை அனுமதிக்க முடியாது என்று எச்சரிக்கை செய்யும் போது உன்னால் முடிந்ததை செய்து கொள் என்று ஆண்டர்சன் கோபம் கொள்கிறார். அரச சபையினரால் ஆண்டர்சன் அவமதிக்கப்படுகிறார். அவருக்கு ஆதரவாக மன்னரே தனது அலங்கார ஆடையைக் கழட்டி வீசியதும் அனைவரும் ஆண்டர்சனுக்கு ஆதரவாகத் திரளுகிறார்கள். படத்தின் மிக முக்கியமான காட்சியது. இந்த மன்னரை மனதில் வைத்து தான் ஆண்டர்சன் மன்னரின் புதிய ஆடை என்ற கதையை எழுதியிருக்கிறார்

ஆண்டர்சன் பள்ளியில் படித்த நாட்களில் வறுமையின் காரணமாக மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார். அவரது ஆசிரியர் வீட்டிலே தங்கிச் சாப்பிட்டுக் கல்வி பயின்றிருக்கிறார். அந்த ஆசிரியர் அவரை ஒரு வேலைக்காரனைப் போலவே நடத்தியிருக்கிறார். அத்தோடு அவரது திறமைகளைக் கேலி செய்து முட்டாள் எனப் பட்டம் சூட்டியிருக்கிறார். இதனால் ஆண்டர்சன் மனவேதனை அடைந்திருக்கிறார்.

படத்தின் அந்தப்பகுதியில் ஆண்டர்சன் பிறந்தநாள் கொண்டாடுகிறார். அப்போது வேண்டுமென்றே மெழுகுவர்த்திகளை அணைக்க முற்படுகிறார் ஆசிரியர். ஆனால் மெழுகுவர்த்தியின் சுடர்கள் அணைய மறுக்கின்றன. தனியே காற்றில் மிதந்து நடனமாடுகின்றன. ஆண்டர்சன் அந்தச் சுடர்களைத் தன்னை நோக்கி அழைக்கிறார். அவை ஆண்டர்சனைச் சுற்றிலும் நடனமாடுகின்றன. மிக அழகான காட்சியது

இன்னொரு காட்சியில் வீடு தீப்பற்றி எரியும் போது அவர் ஒடியோடி தனது பொம்மைகளைக் காப்பாற்றுகிறார். அவரது செல்ல பிராணியான காகம் புகைக்கூண்டில் மாட்டிக் கொள்ளவே கூண்டிற்குள் நுழைந்து அதைக் காப்பாற்றுகிறார். அவர் நேசிக்காத விலங்குகளே இல்லை. ஆனால் நாயைக் கண்டு மட்டும் அவருக்குப் பயம். அதுவும் தெருநாய்கள் என்றால் ஒடத்துவங்கிவிடுவார்.

படத்தின் துவக்காட்சியில் கடவுள் அவர் முன்னே தோன்றி அவரை ஆசிர்வதிக்கிறார். அந்தக் காட்சியில் கடவுளின் தோற்றமும் அவரது உரையாடலும் ஒரு நடிகரைப் போலவே இருக்கிறது. அவர் கடவுளைச் சந்தித்த விஷயத்தை அம்மாவிடம் சொல்கிறார். அவளால் நம்பமுடியவில்லை. ஆனால் தன் மகன் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பது அவளுக்குச் சந்தோஷத்தைத் தருகிறது.

ஆண்டர்சன் தனது இலக்கிய ஆதர்சமாக எழுத்தாளட்ர சார்லஸ் டிக்கன்ஸை கருதினார். டிக்கன்ஸ் கதைகளைப் பித்துப்பிடித்தவர் போலப் படித்தார். 1847 இல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு விருந்தில் டிக்கன்ஸை சந்தித்தார். அவர்களுக்குள் நட்பு உருவானது. டிக்கன்ஸ் வீட்டில் ஒரு மாதகாலம் தங்கியிருந்தார் ஆண்டர்சன். அந்த நாட்களை மறக்கமுடியாது என்று டிக்கன்ஸ் எழுதியிருக்கிறார்.

ஆண்டர்சனின் கதைகள் எப்போதும் நமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன , எந்த வயதில் படித்தாலும் அந்தக் கதைகள் தரும் வியப்பு மாறுவதேயில்லை. அவரது பிறந்த நாளினை தான் சர்வதேச சிறுவர் புத்தகத் தினமாக இப்போது கொண்டாடுகிறார்கள்.

••

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 31, 2021 04:23

January 30, 2021

சென்னை புத்தகக் கண்காட்சி

44 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி துவங்குகிறது.

நந்தனம் YMCA மைதானத்தில் பிப்ரவரி 24 முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை 14 நாட்கள் நடைபெறுகிறது.

தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும் .

அரசு விதித்துள்ள பாதுகாப்புக் கட்டுப்பாடுகளுடன் இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளதாகப் பபாசி அறிவித்துள்ளது

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 30, 2021 21:38

மேகம் போல வாழ்க்கை

போலந்தில் வாழ்ந்த ஜிப்ஸி இனக்குழுவைச் சார்ந்த கவிஞர் பபுஸ்ஸாவின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் Papusza திரைப்படத்தைப் பார்த்தேன். 2013ல் வெளியான படமிது.

கறுப்பு வெள்ளையில் உருவாக்கப்பட்ட காவியம் என்றே இதைச் சொல்வேன். ஓவியங்களில் காணப்படுவது போல அகன்ற நிலக்காட்சியினை வெகு நேர்த்தியாகத் திரையில் பதிவு செய்திருக்கிறார்கள்.

முடிவற்ற நிலவெளியில் ஜிப்ஸிகள் குதிரைவண்டிகளில் பயணம் செய்வது, முகாமிட்டுத் தங்குவது. அவர்களின் இரவு வாழ்க்கை, நடனம், வாழ்க்கை நெருக்கடிகள். இரண்டாம் உலகப்போரின் போது உயிர்தப்பி அலைந்த போராட்டம் என ரோமா வாழ்க்கையைப் பேரழகுடன் படம்பிடித்திருக்கிறார்கள்.

இந்தியாவிலிருந்து 11ம் நூற்றாண்டில் அகதிகளாக மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குள் பரவிய ஜிப்ஸிகள் கட்டுப்பாடற்றவர்கள் என்ற காரணத்தால் கம்யூனிச நாடுகளின் ஆட்சியாளர்களால் சித்ரவதை செய்யப்பட்டார்கள். பாசிச ராணுவத்தால் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள் என்கிறார்கள்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட போது நான்காவது ஆணியை ஜிப்ஸிகள் திருடிச்சென்றுவிட்டார்கள் கிறிஸ்துவை வலியிலிருந்து காப்பாற்ற அது உதவியது என்றொரு கதையுமிருக்கிறது.

ஆடல், பாடல், இசை என உற்சாகமான வாழ்க்கையைக் கொண்டவர் ஜிப்ஸிகள். அவர்களுக்குக் கடந்தகாலத்தைப் பற்றிய ஏக்கம் கிடையாது. வருங்காலம் பற்றிய பயமும் கிடையாது.

சொந்தமாகப் பாடல் புனைந்து பாடும் திறமை கொண்டிருந்த போதும் ஜிப்ஸிகள் எழுதப்படிக்கக் கற்றுக் கொண்டதில்லை. அதிலும் குறிப்பாகப் பெண்களுக்குக் கல்வியறிவு பெறும் உரிமை கிடையாது. ஆணுக்கு நிகராகச் சண்டையிடவும் குதிரையேற்றம் செய்யவும் கூடிய ஜிப்ஸிப் பெண்கள் கூட கல்வி கற்றுக் கொள்ளவில்லை.

ஜிப்ஸி இனத்தை ரோமா என்று அழைக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தில் ருமேனியா மற்றும் பல்கேரியா ஆகியவை மிகப்பெரிய அளவில் ரோமா மக்களைக் கொண்டிருந்தன.

பபுஸ்ஸாவின் இயற்பெயர் ப்ரோனிசாவா வாஜ்ஸ், அவள் தன்னுடைய சிறுவயதில் கோழிகளை திருடி, அதைக் கட்டணமாகக் கொடுத்து யூத கடைக்கார பெண் ஒருத்தியிடம் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டாள். புத்தகம் படிக்கத் துவங்கினாள். ஒவ்வொரு எழுத்தாகக் கூட்டி அவள் படிக்கும் காட்சியில் அவள் முகத்தில் தோன்றும் சந்தோஷம் நிகரற்றது.

ப்ரோனிசாவா தனது குடும்பத்தினருடன் நாடோடி முறையில் வளர்ந்தவள். பேரழகி. தைரியமான பெண். பதினைந்து வயதில் அவளை விட இருபது ஆண்டுகள் வயதில் மூத்த டியோனிஸி வாஜ்ஸ் என்ற இசைக்கலைஞனுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுகிறாள்.

அந்தத் திருமணத்தில் அவளுக்கு விருப்பமில்லை. ஆனாலும் கட்டாயமாக மணம் செய்ய வேண்டிய சூழ்நிலை. ஒரு பையன் பிறக்கிறான். ஊர் ஊர்விட்டு மாறி போய்க் கொண்டேயிருக்கிறார்கள்.  சொந்த வாழ்க்கையின் நெருக்கடிகளிலிருந்து மீளுவதற்குப் பாடல்கள் எழுத ஆரம்பித்தார்

தனது தனிமை மற்றும் ஏக்கம் குறித்த வெளிப்பாடாக அந்தக் கவிதைகள் அமைந்தன. உண்மையில் அவருக்குக் கவிதையின் இலக்கணங்கள் எதுவும் தெரியாது. தானே எழுதித் தானே இசையமைத்துப் பாடினார்.

தண்ணீர் தன் கடந்தகாலத்தைத் திரும்பிப் பார்ப்பதில்லை என அவரது கவிதையொன்று துவங்குகிறது. பபுஸ்ஸா கவிதைகளின் கையெழுத்துப் பிரதியை வாசித்த போலந்து கவிஞர் ஜெர்சி ஃபிகோவ்ஸ்கி அவரை அங்கீகரித்து உடனடியாக அந்தக் கவிதைகள் வெளியாவதற்கு உதவிகள் செய்தார்.

ஒரு காட்சியில் ஃபிகோவ்ஸ்கி ஒரு பேனாவை அவளுக்குப் பரிசாக அளிக்கிறார். அதே பேனாவை பின்பு ஒரு நெருக்கடியான சூழலில் அடமானம் வைத்து குழந்தைக்கான மருந்துகளைப் பெறுகிறாள் பபுஸ்ஸா

ஹிட்லரின் நாஜி ராணுவம் யூதர்களைப் போலவே ஜிப்ஸிகளையும் வேட்டையாத் துவங்கியது. அவர்கள் இடம் விட்டு இடம் பயணம் செய்யத் தடை விதிக்கப்பட்டார்கள். அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வசிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டார்கள். மீறியவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது நாஜி ராணுவம்.

அது போலவே ஜிப்ஸிகளின் முகாம்களைத் தாக்கி பெண்களை வன்புணர்வு செய்தார்கள். அவர்கள் உடைமைகளைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். இந்தச் சூழ்நிலையில் கட்டாயத்தின் பெயரால் ஜிப்ஸிகள் வீடுகளில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது..

அதை டியோனிஸியால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அவரும் அவரது நண்பர்களும் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அங்கேயும் ஆடல் பாடல் என உற்சாகமாக இருந்தார்கள். வீட்டின் மீதான கோபத்தில் டியோனிஸி அதைக் கோடாரி கொண்டு உடைந்து சிதறடிக்க முயன்றதும் உண்டு.

இந்த நிலையில் ஜெர்சி ஃபிகோவ்ஸ்கி ரோமாக்களின் வரலாற்றை விவரிக்கும் புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டார். அவர் இரண்டு ஆண்டுகள் ஜிப்ஸிகளுடன் ஒன்றாக வாழ்ந்தவர் என்பதால் நேரடி அனுபவங்களைப் பதிவு செய்திருந்தார். அவரது தோழியாக விளங்கியவர் பபுஸ்ஸா. ஆகவே அவரையும் ஜிப்ஸிகளின் சமூகம் துரோகியாக என்று கருதத் தொடங்கியது,

ஜிப்ஸிகளின் மொழி, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் மற்றும் பொதுவான சட்டம் குறித்த விவரங்களை வெளிப்படுத்தியதாக அவர் மீது விசாரணை நடைபெற்றது. அதில் குற்றம் உறுதிப்படுத்தப்படவே பபுஸ்ஸா இனக்குழுவிலிருந்து விலக்கி வைக்கப்பட்டார். இந்த ஆத்திரத்தில் அவர் தான் எழுதி வைத்திருந்த கவிதைகளைத் தீயிட்டு எரித்துவிட்டதோடு எல்லா உறவுகளையும் விட்டு விலகி கணவருடன் ஒதுங்கி வாழ ஆரம்பித்தார்

கணவன்-மனைவியான ஜோனா கோஸ்-க்ராஸ் மற்றும் க்ரிஸ்ஸ்டோஃப் க்ராஸ் இயக்கியுள்ள இந்தப் படம் கோழியைத் திருடியதற்காகச் சிறையில் அடைக்கப்பட்ட பபுஸ்ஸா அவரது கவிதை நிகழ்விற்காகச் சிறையிலிருந்து வெளியே அழைத்து வரப்படுவதில் துவங்குகிறது

சிறையின் சாவித்துவாரம் வழியாகக் காட்டப்படும் ஒரு ஷாட் மிகப்பிரமாதமாகவுள்ளது. கேமிராகோணங்கள் படம் முழுவதும் வியப்பளிக்கின்றன. பபுஸ்ஸாவின் கடந்தகால வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாகப் பின்னோக்கி செல்ல ஆரம்பிக்கிறது.

1900 களின் முற்பகுதியில் போலந்து நாட்டில் ஜிப்ஸிகள் இலக்கற்று குதிரை வண்டிகளில் பயணித்தார்கள். ஜிப்ஸிகள் வெளியாட்களைத் தங்களுடன் சேர்த்துக் கொள்வதில்லை ,ஜிப்ஸி அல்லாதவர்களைக் காட்ஜோ என்கிறார்கள். ஊர் ஊராகச் சென்று ஆடல்பாடல் நிகழ்ச்சிகளை நடத்தி அதில் கிடைக்கும் பணத்தில் ஜிப்ஸிகள் வாழ்ந்தார்கள்.

பபுஸ்ஸா என்பதற்கு ரோமானிய மொழியில் “பொம்மை” என்று பொருள். மரப்பொந்தினுள் ஒளித்துவைக்கபட்ட லென்ஸ் மற்றும் பணத்தைச் சிறுமியான பபுஸ்ஸா ரகசியமாக எடுக்கும் காட்சி அழகானது. ஜிப்ஸிகளுடன் இணைந்து பயணித்த காட்ஜோவான ஃபிகோவ்ஸ்கி அவள் மீது அன்பு காட்டுகிறான். அவள் படிப்பதற்குப் புத்தகங்கள் தருகிறான். அவளைப் புரிந்து கொண்ட ஒரே ஆண் அவன் மட்டுமே

ஜிப்ஸிகளின் கூட்டத்தைப் பிரிந்து வார்ஸா செல்ல முயலும் ஃபிகோவ்ஸ்கியை ஒரேயொரு முறை தான் பபுஸ்ஸா முத்தமிடுகிறாள். அது தான் அவள் காதலின் அடையாளம். பபுஸ்ஸாவின் கவிதைகள் பத்திரிக்கையில் வெளியாகியிருப்பதைக் கண்ட அவளது மகன் சந்தோஷமாக வீட்டிற்குக் கொண்டு வருகிறான். பபுஸ்ஸா அதைக் கையில் வாங்கியபடியே ஒரு மரத்தடியில் அமர்ந்து கொள்கிறாள். அற்புதமான காட்சியது. ஜிப்ஸிகளின் உலகம் Krzysztof Ptak ஆல் அற்புதமாகப் படமாக்கப்பட்டுள்ளது

பபுஸ்ஸா கவிதைகள் எழுதுவதன் மூலம் பெற்ற பணத்தை அவள் கணவன் பிடுங்கிக் கொள்கிறான். குடித்துவிட்டுப் போதையில் அவளுடன் சண்டையிடுகிறான். அவன் கடைசி வரை பபுஸ்ஸாவைப் புரிந்து கொள்ளவில்லை. அவனது மரணத்தின் போது அமைதியாக அருகில் நின்று அந்த உடலை பபுஸ்ஸா வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். சொல்லப்படாத ஆயிரம் கதைகள் அவள் முகத்தில் தோன்றி மறைகின்றன.

முன்பின்னாக மாறிமாறிச் செல்லும் படத்தின் திரைக்கதை சுவாரஸ்யமானது. ஜிப்ஸிகளின் வாழ்க்கையை மிகவும் யதார்த்தமான வகையில் படம் சித்தரித்துள்ளது. குறிப்பாக ரோமா சமுதாயத்தின் ஆணாதிக்க இயல்பு ஜிப்ஸி பெண்கள் மற்றும் குழந்தைகள் யாசிப்பதற்காக நகரங்களுக்குச் செல்வது, ஆருடம் சொல்வது. திருட்டில் ஈடுபடுவது மற்றும் குதிரை வணிகம் செய்வது போன்றவை படத்தில் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.

வானத்தின் கீழுள்ள மொத்த உலகமும் தனக்கானது தான் என நினைத்த ஜிப்ஸிகள் சிறிய இருட்டறையில் அடைக்கப்பட்டு குற்றவாளிகளைப் போல வேட்டையாடப்பட்ட துயர வரலாற்றைப் படம் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது. சுதந்திர உணர்வின் வெளிப்பாடாக அவர்களின் இசை இருந்தது. இன்றும் அந்த இசையின் தொடர்ச்சியினைக் காணமுடிகிறது.

தங்களின் சந்தோஷத்தைக் கண்டு ஹிட்லருக்குப் பொறாமை, அதனால் தான் தங்களை வேட்டையாடுகிறான் என்று ஒரு காட்சியில் ஒரு ஜிப்ஸி சொல்கிறார். அது உண்மையே.

பொருள் தேடுவதை மட்டுமே வாழ்க்கை என நினைக்காமல் சுதந்திரமாக, சந்தோஷமாக இசையும் பாடலும் இன்பமுமாக வாழ்ந்த அவர்களின் வாழ்க்கையை அதிகாரத்தால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. கலை தரும் சுதந்திர உணர்வை வளரவிடாமல் தடுப்பது அதிகாரத்தின் இயல்பு. அது தான் ஜிப்ஸிகளின் விஷயத்திலும் நடந்தது.

பபுஸ்ஸா கவிதைகள் தற்போது தனி நூலாக வாசிக்கக் கிடைக்கின்றன. அவரது வாழ்க்கை வரலாற்றை ஒரு இனத்தின் வரலாற்றுச் சாட்சியமாக மாற்றியதே இயக்குநரின் வெற்றி என்பேன்

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 30, 2021 02:48

January 29, 2021

அஞ்சலி

ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடி படைப்பாளியான டொமினிக் ஜீவா மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

மல்லிகை இதழின் வழியே சிறந்த முற்போக்கு படைப்பாளிகளை உருவாக்கியவர். 1966 துவக்கபட்ட மல்லிகை 2012 வரை 401 இதழ்கள் வெளியாகியிருக்கிறது. இது தனித்துவமான சாதனையாகும்.

ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றில் டொமினிக் ஜீவா அவர்களின் பெயர் என்றும் நிலைத்திருக்கும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 29, 2021 18:19

January 28, 2021

ஆன்டன் செகாவ் பிறந்தநாள்.

இன்று ஆன்டன் செகாவின் பிறந்த நாள். 161 வது பிறந்த நாளிது. இந்த நாளில் அவரை மானசீகமாக வணங்குகிறேன்.

ரஷ்ய இலக்கியத்தின் மகத்தான படைப்பாளியான அவரது வாழ்க்கை வரலாற்றை செகாவ் வாழ்கிறார் என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டிருக்கிறேன். செகாவ் பற்றி விரிவான உரையும் நிகழ்த்தியிருக்கிறேன்.

செகாவின் பிறந்த நாளில் அவரது சிறுகதை தொகுப்பிலிருந்து ROTHSCHILD’S FIDDLE, THE BLACK MONK என்ற இரண்டு கதைகளை வாசித்தேன். இப்போது தான் எழுதி வெளியானது போல புத்துணர்வு. அலங்காரமில்லாத எளிமை. நேரடியாகக் கதைகளை சொல்லும் முறை. அழுத்தமான கதாபாத்திரங்கள். கச்சிதமான உணர்ச்சி வெளிப்பாடு.சிறுகதைகளின் பேரரசன் என்றே அவரைச் சொல்ல வேண்டும்.

நானூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளைச் செகாவ் எழுதியிருக்கிறார். அதில் இருபது முப்பது கதைகள் தமிழில் வந்திருக்கின்றன. புதிதாக நிறைய மொழிபெயர்ப்புகளும் நடந்து வருகின்றன. வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் செகாவ் அளவிற்கு மாறுபட்ட சிறுகதையை எழுதியவர்கள் குறைவே,

செகாவின் நாடகங்களை வாசித்தால் அதில் வரும் கதாபாத்திரங்கள் நாவலின் மனிதர்களைப் போலவே தோன்றுகிறார்கள். அவற்றைப் பெரிய நாவலாக எழுதியிருந்தால் இன்னும் கதை விஸ்வரூபம் கொண்டிருக்கக் கூடும்.

காதலைக் கொண்டாடியவர் செகாவ். சொந்த வாழ்விலும், படைப்பிலும் காதலே அவரது ஆதாரப்புள்ளி. காசநோய் முற்றிய நிலையில் சிகிட்சைக்காகப் பாடன்பாடனுக்குச் செல்ல திட்டமிட்ட செகாவ், மாஸ்கோ நகரை விட்டு நீங்கும் முன்பாகக் கடைசியாக ஒரு முறை மாஸ்கோ மிருககாட்சி சாலைக்குச் சென்றிருக்கிறார். அது அவருக்கு விருப்பமான இடம். இரவு முழுவதும் மாஸ்கோ வீதியில் சுற்றி அலைந்திருக்கிறார். நினைவுகளின் பாதையில் சென்ற பயணம் தானோ என்னவோ.

செகாவை நினைவு கொள்ளும் போதெல்லாம் அவரது நாய்கார சீமாட்டியும் நினைவில் வந்துவிடுகிறாள். எவ்வளவு அழகான சிறுகதை. The Lady with the Dog என்ற தலைப்பை விடவும் சீமாட்டி என்ற தமிழ் தலைப்பு தான் நெருக்கமாக இருக்கிறது.

டார்லிங் என்ற செகாவின் கதையை எப்படி மறக்கமுடியும். வேட்டைக்காரன் கதைகளில் அவனால் நேசிக்கப்படாத அவனது மனைவி தொலைவில் நின்று அவனை ஏக்கத்துடன் பார்க்கும் காட்சி மனதிலே நிற்கிறது. ஆறாவது வார்ட்டின் டாக்டர் நம் மனசாட்சியின் உருவம் போலவே இருக்கிறார்.

“இந்த பூமியில் மனிதனுக்குத் தேவை ஆறடி என்று சொல்வார்கள். இதை மறுத்து செகாவ் சொல்கிறார்

“சவத்திற்குத் தான் ஆறடி நிலம் வேண்டும், மனிதனுக்கு ஒட்டுமொத்த உலகமும் வேண்டியுள்ளது“

உயிருள்ள மனிதனின் தேவையும் இறந்தவர்களின் தேவையும் ஒன்றில்லை, செகாவ்வின் இந்த வாசகம் வாழ்வின் மீதான அவரது பற்றுதலின் வெளிப்பாடு.

செகாவின் மீதான அன்பில் My Dear chekhov  என்ற குறும்படத்தின் கதையை எழுதியிருக்கிறேன். அதை என் மகன் ஹரிபிரசாத் மிக அழகான குறும்படமாக இயக்கியிருக்கிறான். 

இலக்கிய விழாக்கள் தோறும் திரையிட்டு கொண்டாட வேண்டிய குறும்படமிது. சென்ற ஆண்டு சென்னைப் புத்தகத் திருவிழாவில்  இந்தக் குறும்படத்தைத் திரையிட்டார்கள். இணையத்தில் இந்த குறும்படம் காணக் கிடைக்கிறது.

செகாவ் பற்றிய எனது உரையை கேட்க விரும்புகிறவர்களுக்கான இணைப்பு

செகாவ் வாழ்கிறார் நூலை வாங்குவதற்கு

செகாவ் வாழ்கிறார்

விலை ரூ 150.00

https://www.desanthiri.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 28, 2021 22:48

நன்றி

எனது மகன் ஹரியின் White Knights Creative Agency நிறுவனத்தைத் துவக்கி வைத்து வாழ்த்திய திரு. ராஜீவ் மேனன், திரு. பார்த்திபன், திரு. சீனு ராமசாமி, திரு. ஆனந்த சங்கர் ஆகியோருக்கு எனது மனம் நிறைந்த நன்றி

இந்த நிகழ்வை வாழ்த்திய நண்பர்கள். வாசகர்கள். அன்பர்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும்

தொடர்புக்கு

https://www.whiteknights.in/

https://www.facebook.com/Whiteknightsofficial

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 28, 2021 03:56

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.