S. Ramakrishnan's Blog, page 144
February 19, 2021
கதையும் திரையும்
18வது சென்னைத் திரைப்படவிழாவில் நடைபெறும் மாஸ்டர் கிளாஸ் நிகழ்வில் நேற்று மதியம் திரைக்கதை எழுதுவது குறித்து உரை நிகழ்த்தினேன். அரங்கு நிரம்பிய கூட்டம். எண்பது சதவீதம் இளைஞர்கள்.
அந்த உரையில் இடம்பெற்ற சில விஷயங்கள் இவையே.

சிட் பீல்டின் திரைக்கதை எழுதுவது எப்படி என்ற புத்தகம் காலாவதியான ஒன்று. நமக்கு அதன் கட்டமைப்பு மற்றும் வடிவாக்க முறை பொருத்தமானதில்லை. சிட் பீல்ட் எந்தப் படத்திற்கும் திரைக்கதை எழுதியவரில்லை. அவர் ஒரு ஆய்வாளர். பயிற்சி வகுப்பு எடுப்பவர். ஹாலிவுட் சினிமா ஒன்றரை மணி நேரம் ஒடக்கூடியது. பாடல் கிடையாது. பண்பாட்டு அம்சங்கள் கிடையாது. ஆனால் நம் சினிமா நம் பண்பாட்டின் அடையாளம். தமிழ் வாழ்க்கையின் இயல்பும் வெளிப்பாட்டு முறைகளும் தனித்துவமானவை. சிட்பீல்ட் கதைகளின் அமைப்பை ஆராய்ந்த விதம் மிக பழமையானது. ஆனால் நம் ஆட்கள் சிட் பீல்டினை தனக்கேற்ப பொருத்திக் கொண்டு தேவையில்லாமல் கொண்டாடுகிறார்கள்.
Jean-Claude Carrière . Cesare Zavattini .Guillermo Arriaga. எம்.டி.வாசுதேவன் நாயர். பத்மராஜன் போன்றவர்களே நாம் பயில வேண்டியவர்கள்.
ஹாலிவுட் சினிமாவைத் தவிர வேறு எங்கும் சிட்பீல்ட் மதிக்கப்படுவதில்லை.
இந்தியா கதைகளின் தாயகம். நம் கதைமரபிலிருந்து நமக்கான திரைமொழியை நாம் உருவாக்க வேண்டும். அதற்குத் தேர்ந்த வாசிப்பும் ஆழ்ந்த பயிற்சியும் தேவை.

தமிழின் முக்கியப் படைப்பாளிகளை வாசியுங்கள். நிறைய கவிதைகள் படியுங்கள். தத்துவமும் இசையும் இல்லாமல் நல்ல திரைக்கதைய எழுத முடியாது என்கிறார் ஈரானிய இயக்குநர் மஹ்சன் மக்மல்பஃப்
உங்களுக்கு விருப்பமான ஒரு படத்தின் ஒலியைத் துண்டித்துவிட்டு அதன் காட்சிக்கான உரையாடலை எழுதிப்பாருங்கள். அப்போது உங்களுக்கு பலம், பலவீனம் புரியும்.
ஆங்கிலம் தெரியாமல் திரைக்கதை எழுத முடியாது என்ற அச்சம் இளைஞர்கள் பலருக்கும் இருக்கிறது. அது தேவையற்ற கற்பனை. தமிழில் நேரடியாகத் திரைக்கதை எழுதும் மென்பொருட்கள் வந்துவிட்டன. தமிழில் வாசிக்கவும் நிறைய இலக்கியங்கள், திரைக்கலை சார்ந்த நூல்கள் இருக்கின்றன. விருப்பமும் தீவிரமான உழைப்பும் தான் நமக்குத் தேவை.
உலகைச் சொற்களின் வழியே அனுபவமாக்குகிறது கதை. ஆனால் சொற்களை மீண்டும் காட்சிகளாக்கி புதிய அனுபவத்தைத் தருகிறது சினிமா. ஆகவே கதை எழுதுவது வேறு. திரைக்கதை எழுதும் முறை வேறு.
நிகழ்ச்சிகளை நிரப்பி வைத்தால் அது திரைக்கதை ஆகிவிடாது. மரத்துண்டு ஒன்றிலிருந்து சிற்பம் உருவாக்குவது போன்ற பணியது. மரமே சிற்பம் ஆகாது. அதில் நாம் கலைநுட்பத்துடன் உழைக்க வேண்டும். மரச்சிற்பம் செய்வது ஒருவிதக் கலை என்றால் கண்ணாடி சிற்பம் செய்வது வேறு கலை. மண் உருவங்கள் செய்வது வேறு பாணி. இப்படித் திரைக்கதை எழுதுவதிலும் நிறையப் பாணிகள். முறைகள் இருக்கின்றன.
கதை திரைக்கதை இரண்டிலும் அழுத்தமான கதாபாத்திரங்கள் உருவாக்கபட வேண்டும். நுண்மையான தகவல்கள் எழுதப்பட வேண்டும். உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமும் தனித்துவமான நிகழ்ச்சிகளும் முக்கியமானது.
ஒரு அறைக்குள் வாழ்ந்து கொண்டு அது மட்டும் தான் உலகம் என நினைப்பவருக்கு என்ன அனுபவம் இருக்கமுடியும். இரவு இரண்டு மணிக்கு அண்ணாசாலை எப்படியிருக்கிறது என்று ஒருமுறையாவது பார்த்திருக்கிறீர்களா. இமயமலை என்பதை வெறும் சொல்லாக அறிந்துள்ள ஒருவரால் எப்படி இமயத்தைப் பற்றி எழுத இயலும். ஜன்னலை மூடி வைத்துள்ள ஒருவனால் பறவைகளின் சங்கீதத்தை எப்படி எழுத்தில் கொண்டு வர இயலும்.
உங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளுங்கள். நிறையப் பயணம் செய்யுங்கள். படியுங்கள். நண்பர்களுடன் கூடி விவாதியுங்கள். ஒன்று சேர்ந்து பணியாற்றுங்கள்.
ஒரு திரைக்கதையை ஐந்து எழுத்தாளர்களுடன் தான் அகிரா குரசோவா எழுதினார். ஸ்பீல்பெர்க் தன் படத்தின் கதையைத் தான் எழுதுவதில்லை. அவர் நாவலை, பிறர் எழுதிய திரைக்கதையைத் தானே பயன்படுத்துகிறார். அந்த மனதும் புரிதலும் உங்களுக்கும் வேண்டும்.

திரைக்கதையை இப்படிதான் எழுத வேண்டும் என்று கறாரான விதிகள் கிடையாது. நீங்கள் யார். என்ன திரைப்படம் உருவாக்க முனைகிறீர்கள். உங்கள் அக்கறை என்ன. எவ்வளவு பொறுப்புணர்வு கொண்டவர் என்பதே உங்கள் திரைக்கதையைத் தீர்மானிக்கிறது. வாழ்க்கையில் அடிபட்டு மிதிபட்டு வலியை உணர்ந்த ஒருவன் தன் கோபத்தை வெளிப்படுத்தும் விதமும், சொகுசாகக் காரில் போய்வருகிறவன் தன் கோபத்தைக் காட்டுவதும் ஒன்றாக இருக்காது தானே. அப்படிக் கோபமோ, சந்தோஷமோ, பிரச்சனையோ எப்படி வெளிப்படுகிறது. அதன் தீவிரம் எப்படி வளருகிறது என்பதை யோசியுங்கள்.
திரைக்கதை எழுதுவதும் சமைப்பது போன்றது தான். ருசி எளிதில் பிடிபட்டுவிடாது. ஆனால் கவனமும் அக்கறையும் தொடர்முயற்சியும் கைகூடும் போது ருசி தானே உருவாகிவிடும்.
சென்னை நகரம் நண்பர்களால் நிரம்பியது. வேறு எந்த உறவின் ஆதரவினையும் விட நண்பர்களின் அழைப்பின் பேரில். உதவியின் பெயரில் இந்த நகருக்கு வருகிறவர்கள். வந்தவர்கள், வாழுகிறவர்கள் அதிகம். ஆகவே நல்ல நண்பர்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். அவர்களுடன் உங்கள் கதையை விவாதியுங்கள்.
புதிய கதைக்களம், புதிய கதை சொல்லும் முறை. நிஜமான காட்சிகள். நிஜமான உணர்வுகள். தனித்துவமிக்க கதாபாத்திரங்கள் தனித்துவமிக்க நிகழ்வுகள் உங்கள் திரைக்கதையில் இருக்கிறதா எனப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
45 நிமிட எனது உரையினைத் தொடர்ந்து நிறைய கேள்விகளைக் கேட்டார்கள். நேரம் குறைவாக இருந்த காரணத்தால் சிலரது கேள்விகளுக்கு மட்டுமே பதில் தர முடிந்தது
நேற்றைய மாலையை இனிமையாக்கியதற்காக அனைவருக்கும் எனது நன்றி
சிறப்பான இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த சென்னைத் திரைப்படவிழா அமைப்பாளர்களுக்கு அன்பும் நன்றியும்
••
ஸ்டான்லிக்கு ஆயிரம் வேலைகள்
நகைச்சுவை நடிகர் ஜெர்ரி லூயிஸ் படங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். சோர்வாக உணரும் நாட்களில் அவரது படங்களை மறுபடி பார்ப்பேன். உற்சாகம் தானே தொற்றிக் கொண்டுவிடும்

சில நாட்களுக்கு முன்பு ஜெர்ரி லூயிஸ் நடித்த The Bellboy திரைப்படத்தைப் பார்த்தேன். படத்தின் துவக்கக் காட்சியில் பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கற்பனையான நிர்வாகத் தயாரிப்பாளர் ஜாக் ஈ. முல்ச்சர் படத்தை அறிமுகப்படுத்துகிறார்
அப்போது இந்தப் படத்தில் கதை கிடையாது. திருப்பங்கள் எதுவும் கிடையாது. இது ஒரு கதாபாத்திரத்தின் சில வேடிக்கையான நிகழ்வுகளை விவரிக்கக்கூடியது மட்டுமே எனச் சொல்லிச் சிரித்தபடியே விடைபெறுகிறார்.
சிசில் பி டிமிலி தனது படங்களின் துவக்கத்தில் தோன்றி படத்தின் கதை பற்றியும் தாங்கள் அதை உருவாக்க எடுத்துக் கொண்ட சிரத்தைகள் பற்றியும் பேசுவதைக் கேலி செய்யும்விதமாக இந்த அறிமுகக்காட்சி இடம்பெற்றிருக்கிறது.
பிரபலமான தங்கும்விடுதி ஒன்றில் ஏவல் பணிகளைச் செய்யும் ஒருவனின் அன்றாடச் செயல்பாடுகளைப் படம் நகைச்சுவையாக விவரிக்கிறது.
ஜெர்ரி லூயிஸ் சாப்ளின் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் கொண்டவர். இந்தப் படத்தில் சாப்ளின் பாதிப்பு நிறையவே தெரிகிறது. ஆனால் காட்சிகளை உருவாக்குவதிலும் நகைச்சுவையை வெளிப்படுத்துவதிலும் ஜெர்ரி லூயிஸ் தனிப்பாணி கொண்டிருக்கிறார். காட்சிக்குக் காட்சி வெடித்துச் சிரிக்கும்படியான படம்

அமெரிக்காவின் மியாமி கடற்கரையிலுள்ள ஃபோன்டைன்லேவ் ஹோட்டலில் ஸ்டான்லி எடுபிடி ஆளாகப் பணியாற்றுகிறான். படம் முழுவதும் அவன் பேசுவதேயில்லை. கடைசிக் காட்சியில் மட்டுமே பேசுகிறான். இதுவரை தான் பேசுவதற்குச் சந்தர்ப்பமே கிடைக்கவில்லை என்று சொல்கிறான். காரணம் எப்போது அவன் பேச முயன்றாலும் யாராவது குறுக்கிட்டுத் தடுத்துவிடுகிறார்கள்.
கடைசிக்காட்சியில் நாம் ஜெர்ரி லூயிஸ் மீது பரிதாபம் கொள்கிறோம். பணியாளர்களை இயந்திரங்களைப் போல நிர்வாகம் நடத்துவதை உணருகிறோம்.
படத்தின் ஒரு காட்சியில் காரிலுள்ள பொருட்களை எல்லாம் அறைக்குக் கொண்டு வாருங்கள் என்று ஒருவர் ஸ்டான்லிக்கு உத்தரவு போடுகிறார். உடனே ஸ்டான்லி அவரது பயணப்பெட்டிகளை மட்டுமின்றிக் காரின் முழு என்ஜினையும் கழட்டி அவரது அறைக்குக் கொண்டு செல்கிறான். இது தான் ஜெர்ரி லூயிஸ் பாணி நகைச்சுவை.

திருமதி ஹார்ட்டுங் என்ற பணக்காரப் பெண் அந்த ஹோட்டலுக்கு வந்து தங்குகிறாள். தீவிரமான உணவுக்கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தித் தன் உடல் எடையை இழக்கிறாள் ஆனால் அவள் வீடு திரும்பும் நாளில் ஒரு சாக்லெட் பெட்டியை ஸ்டான்லி பரிசாக அளிக்கிறான். அத்தனையும் சாப்பிட்டு மறுபடி அதே உடல் எடைக்கு வந்துவிடுகிறாள்.
ஹோட்டலின் ஆடிட்டோரியத்தை நாற்காலிகள் போட்டு தயார் செய்து வைக்கும்படி ஸ்டான்லிக்கு உத்தரவிடப்படுகிறது. அந்த அரங்கின் பிரம்மாண்டமும் அங்குள்ள ஆயிரக்கணக்கான நாற்காலிகளையும் பார்த்தால் அதைச் செய்து முடிக்க ஐம்பது பேர் தேவை எனப் புரிகிறது. ஆனால் அந்தப் பணியை எந்த முகச்சுழிப்புமின்றி எளிதாகச் செய்து முடிக்கிறான் ஸ்டான்லி.
படத்தில் நடிகராகவும் ஜெர்ரி லூயிஸ் தோன்றுகிறார். அவரும் அவரது பட்டாளமும் ஹோட்டலுக்கு வரும் காட்சி நகைச்சுவையின் உச்சம்.

கைப்பிடி இல்லாத பெரிய பெட்டி ஒன்றை அறைக்குக் கொண்டு செல்ல ஸ்டான்லி முயற்சிக்கும் காட்சி சிறப்பான நகைச்சுவை. அவனது வாழ்க்கை கைப்பிடியில்லாத பெட்டியைப் போன்றதே
விமானி ஒருவர் மறந்துவிட்ட ஒரு பெட்டியை விமானத்தின் காக்பிட்டிலிருந்து மீட்டெடுத்து வரும்படி ஸ்டான்லியை திரு. நோவக் அனுப்பி வைக்கிறார். ஸ்டான்லி நேரடியாக விமானத்திற்குள் சென்று பெட்டியோடு ஹோட்டலை நோக்கிப் பறந்து வரத் துவங்கிவிடுகிறான். என்னவொரு கற்பனை.
ஒருமுறை ஸ்டான்லி தனியாக ஒதுங்கி மதிய உணவைச் சாப்பிட முயல்கிறான், கண்ணாடிச்சுவரின் மறுபக்கமிருந்து நீந்துகிறவர்கள் அதை வேடிக்கை பார்க்கிறார்கள். அவனுக்குத் தனிமை அனுமதிக்கப்படுவதில்லை.
இன்னொரு காட்சியில் ஒரு மனிதன் கண்ணுக்குத் தெரியாத ஒரு ஆப்பிளைச பாதிச் சாப்பிட்டுவிட்டு மீதத்தை, ஸ்டான்லியைச் சாப்பிடச் சொல்லித் தருகிறான். அதை அத்தனை ஆசையாக ஸ்டான்லி சாப்பிடுகிறான்.
ஸ்டான்லி ஒரு கோல்ஃ போட்டிக்குச் செல்கிறான், அங்கு அவரது கேமிராவின் ஒளிரும் விளக்கைத் தவறாகப் பயன்படுத்தவே விளையாட்டுவீரன் போட்டியில் தோல்வியை அடைகிறான். அவன் கோபத்தில் ஸ்டான்லி அடிக்கத் துரத்துகிறான்

ஒரு காட்சியில் தூங்கிக்கொண்டிருக்கும் மனிதனின் முகத்தை ஒரு துணியால் மூடி வெயிலைத் தடுக்கிறான் ஸ்டான்லி. துரதிர்ஷ்டவசமாக, ஸ்டான்லி பயன்படுத்திய துணியின் அச்சுவடிவங்கள் அவரது முகத்தில் பதிந்துவிடுகின்றன.
அதிகாலை 3:30 மணிக்கு, முழு நிலவின் புகைப்படத்தை எடுக்க ஸ்டான்லி வெளியே செல்கிறான். புகைப்படம் எடுத்தவுடன், சந்திரன் மறைந்து ஒரு சொடக்கில் பகல் தோன்றிவிடுகிறது. வசீகரமான மாயமது
ஒரே போலத் தோற்றம் கொண்ட இருவரால் ஏற்படும் குழப்பங்கள் இன்னும் சுவாரஸ்யமானது. இன்னொரு காட்சியில் விருந்தினர்களின் நாய்களைச் சமாளிக்கமுடியாமல் இழுபடுகிறான். இப்படிப் படம் முழுவதும் ஸ்டான்லியின் போராட்டங்கள் தொடர்கின்றன
ஒரு ஹோட்டலில் தங்குவதற்கு எவ்வளவு பெட்டிகளை, பொருட்களை எடுத்துக் கொண்டு வருகிறார்கள். எப்படி எல்லாம் உத்தரவு போடுகிறார்கள் என்ற உண்மையை நகைச்சுவையாகத் தெரிவிக்கிறார் லூயிஸ். பல காட்சிகளில் நமது அபத்தமான நடவடிக்கைகளை நமக்கே புரிய வைக்கிறார். ஒரே நேரத்தில் நான்கு வேலைகளைச் செய்யச்சொல்லி உத்தரவிடும் போது எதைச் செய்வது என்ற குழப்பம் ஏற்படுகிறது. ஹோட்டலுக்கு வரும் ஒவ்வொரு விருந்தினரும் தன்னை ஒரு அரசனைப் போலவே நினைத்துக் கொள்கிறார்கள். விசித்திரமான கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள்.
படம் முழுவதும் ஸ்டான்லி தனக்கு இடப்படும் உத்தரவுகளைச் சந்தோஷமாகவே ஏற்றுச் செயல்படுகிறான். விருந்தினர்கள் மீது நிஜமான அன்பு காட்டுகிறான். ஆனால் அவனது செயலின் தீவிரம் குழப்பத்தை ஏற்படுத்திவிடுகிறது.
விடுதியில் தங்க வரும் அத்தனை பேரையும் அன்பாகக் கவனித்துக் கொள்ளும் ஸ்டான்லியிடம் அன்பு காட்ட ஒருவருமில்லை. அவனால் நிம்மதியாகச் சாப்பிடக்கூட முடியவில்லை.
ஸ்டான்லி ஒரு போதும் கோபம் அடைவதில்லை. புகார் சொல்வதில்லை. புலம்புவதில்லை. கடைசிக்காட்சியில் தான் தனக்கும் ஒரு அடையாளமிருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறான்.
அப்பாவியான முகத்துடன் அசுர வேகமான செயல்பாட்டுடன் ஹோட்டலை சுற்றிவரும் ஜெர்ரி லூயிஸ் சாவி கொடுக்கப்பட்ட பொம்மையைப் போலவே இயங்குகிறார். அவரை அப்படி ஆக்கிவைத்திருக்கிறது ஹோட்டல் நிர்வாகம்.
அவரை ஒத்த மற்ற பணியாளர்கள் எவரும் அப்படி நடக்கவில்லை. அப்பாவிகளின் மீது தான் இந்த உலகம் சகல சுமைகளையும் இறக்கி வைக்கும் என்பதற்கு ஸ்டான்லி ஒரு உதாரணம்.

ஸ்டான்லிக்குள் ஒரு சிறுவனிருக்கிறான். அவன் வேடிக்கைகள் செய்ய விரும்புகிறான். புதிய விஷயங்களில் ஆர்வமாக ஈடுபடுகிறான். மற்றவர்களைப் பற்றிக் கவலையின்றித் தன் விருப்பங்களைச் செய்து பார்க்கிறான். அந்தச் சிறுவனை உலகம் புரிந்து கொள்வதில்லை என்பது தான் வருத்தமானது
சாப்ளின் படங்களில் எல்லாப் பிரச்சனைகளுக்கு நடுவிலும் ஒரு காதல் மலரும். சாப்ளின் காதலிக்கும் விதம் அலாதியாக இருக்கும். பலநாள் பசியில் கிடந்தவன் ஒரு ஆப்பிளைக் காணுவது போலவே அவர் அழகிகளைக் காணுவார். நாக்கை சுழற்றி சப்புக் கொட்டுவார். அவர்களுடன் நடனமாடும் போது அவரது வேகம் மிக அதிகமாகிவிடும். முத்தமிடுவது கூட வேகமாகதானிருக்கும்.
உலகம் கண்டுகொள்ளாத எளிய மனிதனை நேசிக்கவும் ஒரு பெண் இருப்பாள் என்பதைச் சாப்ளின் பார்வையாளருக்கு உணர வைத்துவிடுகிறார். படத்தில் தான் காதலிக்கும் பெண்ணிற்கு அவர் எல்லா விதங்களிலும் உதவி செய்வார். அதை அவள் புரிந்து கொள்ளாத போது கண்ணீர் வடிப்பார். அவளை ஒரு போதும் வெறுப்பதில்லை. ஜெர்ரி லூயிஸ் படங்களில் இது போன்ற தூய காதல் கிடையாது. பலூனை வைத்துவிளையாடும் சிறுவனைப் போன்றதே ஜெர்ரி லூயிஸின் காதல்.
சாப்ளின் பசியைத் துரத்துவது போன்றே ஜெர்ரியும் பசியைத் துரத்துகிறார். அநாகரீகம் என உலகம் நினைப்பதைத் துணிந்து செய்கிறார். ஜெர்ரி லூயிஸ் முகம் தான் அவரது பலம். அவர் காட்டும் பாவனைகள் அபாரம்.

உணவகத்தில் நமக்குப் பரிமாறும் சர்வர்களுக்குப் பெயரில்லை. அவர்கள் வயதைப் பற்றி எவரும் பொருட்படுத்துவதில்லை. எத்தனை பெரியவராக இருந்தாலும் ஒருமையில் தான் அழைக்கிறார்கள். லிப்ட் பாய். கூரியர் ஆள், பால்காரர் என நமக்குச் சேவை செய்யும் எவரது பெயர் விபரங்களையும் நாம் அறிந்து வைத்திருப்பதில்லை. அவர்களின் தனித்துவத்தை, அடையாளத்தை நமக்குப் புரிய வைக்கவே இது போன்ற படங்கள் முயல்கின்றன.
பல காட்சிகளில் இப்படம் Jacques Tati’s M. Hulot’s Holiday படத்தினை நினைவுபடுத்துகிறது. ஜெர்ரி லூயிஸ் இந்தத் திரைப்படத்தை நான்கு வாரங்களில் படமாக்கியிருக்கிறார். இப்படம் வசூலில் பெரிய சாதனையைப் புரிந்திருக்கிறது
தொழில்நுட்ப ரீதியாகப் பல்வேறு புதிய விஷயங்களைத் தனது படங்களில் செய்து பார்ப்பவர் ஜெர்ரி லூயிஸ். இந்தப்படத்திலும் நீச்சல்குளக்காட்சி அதற்குச் சிறந்த உதாரணம். மிகக்சிறந்த அரங்க அமைப்பு. மற்றும் கேமிராக் கோணங்களைக் கொண்டு படமாக்குவது அவரது தனித்துவம்.
அமெரிக்காவை விடவும் ஐரோப்பாவில் ஜெர்ரி லூயிஸ் அதிகம் கொண்டாடப்பட்டார். அவரை அமெரிக்காவின் மிக முக்கிய இயக்குநராகப் பிரெஞ்சு சினிமா உலகம் கொண்டாடுகிறது.
1960ல் வெளியான இந்தத் திரைப்படம் அறுபது ஆண்டுகளுக்குப் பிறகும் அதே மகிழ்ச்சியைப் பார்வையாளனுக்கு ஏற்படுத்துகிறது என்பதே இப்படத்தின் தனிச்சிறப்பு.
February 18, 2021
நைல் நதியில் ஒரு பயணம்
புகழ்பெற்ற நைல் நதியின் ஊடாக வரலாற்றுப்பேராசிரியர் பெத்தனி ஹியூஸ் ஆயிரம் மைல் நீண்ட பயணம் ஒன்றை மேற்கொண்டிருக்கிறார். இந்தப் பயணம் நான்கு பகுதிகள் கொண்ட ஆவணப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

The Nile: Egypt’s Great River with Bettany Hughes என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன்.
இதில் எகிப்தின் வரலாற்றையும் நைல் நதிக்கரை நாகரீகத்தையும் அழகாக, விரிவாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
பெத்தனியோடு நாமும் படகில் பயணம் செய்து பிரமிடுகளையும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களையும் பார்வையிடுகிறோம். விதவிதமான பாரம்பரிய உணவு வகைகளை, இசையை, நடனத்தைக் காணுகிறோம். நேரில் சென்றாலும் பார்க்கமுடியாத அரிய கல்லறைகள் பாதுகாக்கப்பட்ட இடங்கள், வரலாற்றுச் சின்னங்கள் பெத்தனிக்காகத் திறந்துவிடப்படுகின்றன. அவரோடு இணைந்து நாமும் பிரமிடின் உள்ளே நடக்கிறோம். புதையுண்ட மனிதர்களின் எலும்புக்கூடுகளைக் காணுகிறோம். பழைய எழுத்துருக்களை வாசிக்கிறோம்.

தொல்பொருள் ஆய்வில் இன்று புகழ்பெற்று விளங்கும் பெண் அறிஞர்கள் பலரையும் பெத்தனி சந்திக்கிறார். அதிலும் மம்மி ஒன்றின் பெட்டகத்தைத் திறந்து காட்டி அதனுள் உடல் எப்படிப் பதப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை விவரிக்கும் ஆய்வாளரின் கண்களில் தான் எத்தனை உற்சாகம். இரண்டாயிரம் வருஷத்தின் முந்திய வாசனையைத் தான் நுகருவதாகச் சொல்கிறார் பெத்தனி. வாசனைக்கு வயது உருவாகும் தருணத்தைக் கண்டேன்.
எகிப்தைப் பற்றி நாம் எவ்வளவு படித்திருந்தாலும் இது போன்ற நேரடியான காட்சிகள் தரும் கிளர்ச்சி அலாதியானது. லண்டன் ம்யூசியத்தில் பெத்தனி தனது சிறுவயதில் மன்னர் துட்டன்காமூனின் மம்மியை நேரில் கண்டிருக்கிறார். அது ஏற்படுத்திய ஆர்வம் எகிப்தின் வரலாற்றையும் பண்பாட்டினையும் பற்றிக் கற்றுக் கொள்ளவும் ஆய்வு செய்யவும் தூண்டியிருக்கிறது. இந்த ஆவணப்படம் முழுவதும் அவர் பரபரப்பாக ஓடிக்கொண்டேயிருக்கிறார். முப்பது ஆண்டுக்கால அவரது தேடலை நான்கு மணி நேரத்திற்குள் அடக்கிவிட முயல்கிறார். ஒரு பெரிய குழுவே இந்த ஆவணப்படத்திற்கான ஆய்வில் ஈடுபட்டிருக்கிறது.

1922 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆய்வாளர் ஹோவர்ட் கார்ட்டர் எகிப்தில் ஆய்வு செய்து பாரோவின் கல்லறைகளைக் கண்டுபிடித்தார். அவர் மூலமாகவே துட்டன்காமூனின் மம்மி கண்டுபிடிக்கப்பட்டது. தொல்பொருள் ஆய்வில் இது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. 1972 ஆம் ஆண்டுப் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் கண்காட்சிக்காக வைக்கப்பட்ட போது 1.6 மில்லியன் மக்கள் பார்வையிட்டார்கள். அப்போது தான் பெத்தனியும் இதைக் கண்டிருக்கிறார்.
எகிப்தில் மட்டும் லட்சக்கணக்கில் விலங்குகளின் மம்மிகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்ட பூனைகளின் பதப்படுத்த உடலாகும். இந்த ஆவணப்படத்தில் இறந்த பூனை ஒன்றின் உடலைப் பதப்படுத்திக் காட்டுகிறார்கள். இப்படித்தான் பண்டைய காலங்களில் உடல்களைப் பதப்படுத்தியிருப்பார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது
படகுவீடு ஒன்றில் தனது பயணத்தைத் துவங்கும் முன்பு பெத்தனி உலக வரலாற்றில் நைல் நதி நாகரீகத்தின் பங்கினை சுருக்கமாக விவரிக்கிறார். பிரமிடுகளையும் பிரம்மாண்டமான நகரங்களையும் உருவாக்கிய எகிப்தியர்களின் கலைத்திறனை வியந்து போற்றுகிறார்.
படகு நைல் நதியில் பயணிக்கத் துவங்குகிறது. நதி தன் கடந்தகாலத்தை நினைவு கொள்வதில்லை. மனிதர்களுக்குத் தான் கடந்தகாலம் முக்கியம். அதிலும் கடந்தகாலத்துயரத்தின் வடுக்களைத் திரும்பத் திரும்ப நினைவுகொண்டபடியே இருப்பது மனித இயல்பு. ஆனால் நைல் நதி தன்னுடைய வரலாற்று ஞாபகங்களை மறந்து தன் போக்கில் ஒடிக் கொண்டிருக்கிறது. மனித வாழ்க்கை என்பது அதன் சிறிய சுழிப்பு மட்டுமே. நதியில் பட்டும் ஒளிரும் வெயிலின் அழகு அத்தனை வசீகரமாகயிருக்கிறது.
நைல் எத்தனையோ கனவுகளை உருவாக்கியது. நைல் நதியில் வளர்ந்த ராஜ்ஜியங்கள் எல்லாமும் அதன் கனவுகள் தானே. நதியின் போக்கிற்கு எதிரான திசையில் தனது பயணத்தினைத் துவங்குகிறார் பெத்தனி. அவரது ஆய்வுக்குறிப்புகள். துணை நூல்கள் கூடவே இருக்கின்றன. கேமிரா அவரது நிழல் போல எங்குச் சென்றாலும் பின்தொடருகிறது.
நதிக்கரையோர வாழ்க்கை கால ஒட்டத்தில் மாறவேயில்லை. மீன்பிடிப்பவர்களும் ஆற்றில் குளிப்பவர்களும், குதிரைகளும் காலத்தில் உறைந்து போனவர்களைப் போலக் காணப்படுகிறார்கள் பெத்தனியின் படகில் பராம்பரியமான எகிப்தின் உணவு அவருக்கு அளிக்கப்படுகிறது. தேசமெங்கும் தான் ஒரு எகிப்தியன் என்பதில் மக்கள் பெருமிதம் கொள்கிறார்கள்.
ஒரு காட்சியில் பேரிச்சைமரங்களைத் தேடிச்சென்று நேரடியாகப் பழங்களைப் பறித்துச் சாப்பிடுகிறார். அதைப்பதப்படுத்தும் பணியினைப் பார்வையிடுகிறார். பேரீச்சை பழத்தில் தான் எத்தனை விதங்கள். இங்கே நாம் சாப்பிடும் பேரீச்சம்பழம் என்பது மலிவு ரகத்தைச் சேர்ந்தது. தேனில் ஊறவைத்த பேரீச்சை பழத்தை உணவோடு சேர்த்துச் சாப்பிடுகிறார் பெத்தனி.

பிரமிடுகளைத் தேடிய அவரது முதற்பாதியில் இன்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ள புதிய உண்மைகளையும் விளக்குகிறார். ஒரு காட்சியில் அவரது கண்முன்னே புதையுண்ட கற்படிவம் ஒன்று மீட்கப்பட்டு வாசிக்கபடுகிறது. பிரமிடு போன்ற கட்டுமானத்தை எப்படி உருவாக்கினார்கள். இதற்கு எவ்வளவு பொருட்செலவு செய்யப்பட்டது. எத்தனை ஆயிரம் வேலை செய்தார்கள். அவர்கள் என்ன சாப்பிட்டார்கள். எங்கே தங்கினார்கள் என்பதைத் தொல்பொருட்களின் உதவியோடு விளக்குகிறார்.
கிசா பிரமிடு காம்ப்ளக்ஸ், தஹ்ரீர் சதுக்கம், எகிப்திய அருங்காட்சியகம் போன்றவற்றைப் பார்வையிடும் பெத்தனி அரச குடும்பத்தைச் சார்ந்த மம்மிகள் அதற்குள் மறைத்துவைக்கபட்ட வைரம் மற்றும் தங்க நகைகளுக்காகக் கொள்ளையர்களால் எப்படிக் கொள்ளையடிக்கப்பட்டன என்பதையும் சுவாரஸ்யமாக விவரிக்கிறார்.
எகிப்திய கடவுள்கள் பற்றியும் அவர்களின் வாரிசாக மன்னர்கள் ஆட்சி செய்த விதம் பற்றியும் கூறும் பெத்தனி முதலை வடிவத்தில் உள்ள கடவுளின் சிலையை அடையாளம் காட்டி முதலைகள் எவ்வாறு வணங்கப்பட்டன என்பதை இன்னொரு காட்சியில் அறிமுகம் செய்கிறார்.
பண்டைய எகிப்தில் நைல் ஆற்றில் ஏற்படும். வெள்ளத்தைக் கண்காணிக்கத் தனியே அளவுமுறைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. ஒரு காட்சியில் அந்த அளவுகள் எவ்வாறு அமைக்கப்பட்டன. அதை எப்படிக் கண்காணித்தார்கள் என்பதை தானே நேரில் சென்று சுட்டிக்காட்டுகிறார்.

துட்டன்காமூன் எகிப்தின் புகழ்பெற்ற மன்னர். கிமு 1333 முதல் கிமு 1324 வரை இவர் ஆட்சிசெய்திருக்கிறார். துட்டன்காமூன் தனது ஒன்பதாவது வயதில் மன்னராகப் பதவி ஏற்றுக் கொண்டார். அமூன் என்ற கடவுளின் வாரிசு எனப்பொருள் தரும் விதமாகவே அவருக்குப் பெயரிடப்பட்டிருக்கிறது. அவரது கல்லறையை எப்படி கண்டுபிடித்தார்கள். எப்படி மீட்டார்கள் என்பதை கூறும் பெத்தனி துட்டன் காமனின் மலேரியா நோய் தாக்கி மரணம் அடைந்திருக்கக் கூடும் என்று இன்றைய ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளதாக கூறுகிறார்

கிளியோபாட்ரா பற்றி நமக்குள் இருக்கும் பொதுப்பிம்பம் தவறானது. உலகப்புகழ் பெற்ற அழகி என்ற பிம்பத்தைத் தாண்டி அவர் சிறந்த அறிவாளி. வானவியல் மற்றும் கணிதம் சார்ந்து ஆழ்ந்த ஞானம் கொண்டவர். எகிப்தின் காலக்கணிதம் முன்னோடியானது. ஒரு வருடத்தை நான்கு மாதங்கள் வீதமாக மூன்று பருவங்களாக மாற்றியதும், ஆண்டிற்கு 365 நாட்கள் எனக் கணக்கிட்டதும் எகிப்தின் காலண்டர் முறையே. கிளியோபாட்ரா ஏழு மொழிகளைச் சரளமாகப் பேசவும் எழுதவும் தெரிந்தவர். அவரது ஆட்சிக்காலத்தில் கலையும் அறிவியலும் மிகப்பெரிய வளர்ச்சிபெற்றிருந்தன எனக் கிளியோட்பாராவின் மறுபக்கத்தைப் பெத்தனி நமக்கு அறிமுகம் செய்துவைக்கிறார்
கிளியோபாட்ரா என்ற ஹாலிவுட் திரைப்படம் அவரை ஒரு கவர்ச்சிப்பதுமையாகவே அறிமுகம் செய்தது. ஆனாலும் அந்தப்படத்தின் ஒரு காட்சியில் அலெக்சாண்ட்ரியா நூலகம் எரிக்கப்படும் போது கிளியோபாட்ரா மிகுந்த கோபம் கொள்கிறார்.
அது ஒரு காட்டுமிராண்டித்தனம் என்று சீசரின் முகத்திற்கு நேராகச் சொல்கிறார். ஜூலியஸ் சீசருக்கு தான் நூலகத்தின் மதிப்பு தெரியவேயில்லை.
படத்தின் இதற்கு முந்திய காட்சியில் ஒரு அறிஞர் நூலகத்திலிருந்த அரிஸ்டாட்டிலின் கையெழுத்துப் பிரதிகள் உள்ளிட்ட அரிய நூல்கள் தீயில் எரிவதைத் தாங்க முடியாமல் புலம்பும் காட்சியும் இடம்பெற்றிருக்கிறது.

அலெக்சாண்ட்ரியா நூலகம் எகிப்தின் மிகப்பெரிய நூலகமாகும். இங்கே பாபிரஸ் எனப்படும் காகித சுருள் வடிவத்தில் புத்தகங்கள் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. ஆகவே தீப்பற்றியதும் பெருமளவு எரிந்து நாசமாகிவிட்டன. அறிவை சேகரித்து வைக்க வேண்டும். அதை முறையாகப் பயில வேண்டும் என்ற எண்ணம் எகிப்தில் நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. .
பெட்டனி தனது பயணத்தின் வழியே கிளியோட்பாரா உருவாக்கிய கலைக்கூடங்களை, அதன் தனிச்சிறப்புகளை, அவளது ஆட்சிக்காலத்தின் சிறப்புகளை விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். குறிப்பாகக் கிளியோபாட்ராவிற்கு விருப்பமான நீலத்தாமரைகள் இன்று எகிப்தில் அழிந்து போய்விட்டன. ஒரு காலத்தில் அது எகிப்தின் அடையாளம். இன்று அந்த நீலத்தாமரை மலர்களைக் காப்பாற்றி வளர்க்கும் ஒரு ஆய்வாளரைத் தேடிச்சென்று சந்தித்து நீலத்தாமரை மலரைப் பரிசாகப் பெறுகிறார். அந்த மலரின் அபூர்வ வாசனையை நுகர்ந்து பார்க்கிறார் பெத்தனி.

பாலைவனத்தின் ஊடே ஒரு பெண்மணி சிறிய குளத்தில் இப்படி நீலத்தாமரைகளை வளர்த்து வருவது அபூர்வமாகயிருக்கிறது.
இன்னொரு காட்சியில் பகலில் நேரம் கணிக்கப் பயன்படும் சூரியக்கடிகாரம் போல இரவில் நேரத்தைக் கணக்கிட உருவாக்கப்பட்ட நீர் கடிகாரம் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பெத்தனி தானே பரிசோதனை செய்து காட்டுகிறார். நீர்க்கடிகாரத்திலிருந்து தண்ணீர் சொட்டு சொட்டாகச் சொட்டி வெளியேறுவதை வைத்து இரவில் நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். எளிய, வியப்பான அணுகுமுறை.
பண்டைய நகரமான தீபஸ் தற்போது லக்சர் எனப்படுகிறது. தீப்ஸ் நகரை நூறு வாயில்களின் நகரம்” என்று அழைத்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் செல்வச்செழிப்பாக விளங்கிய இந்த நகரம் இன்று புதிய தோற்றம் கொண்டிருக்கிறது. லக்சரின் புராதன இடங்களைக் காண பெத்தனி செல்கிறார். அதே பழைய காரோட்டி. அதே பாதையில் மீண்டும் ஒரு பயணம் என மகிழ்ச்சி அடைகிறார்.
இந்த ஆவணப்படத்தில் கழுதைகளை எகிப்தியர்கள் எவ்வளவு முக்கியமாகக் கருதுகிறார்கள், கொண்டாடுகிறார்கள் என்பதைக் காட்டுகிறார்கள். அழகான கழுதை ஒன்றை பெத்தனி ஆசையாகக் கட்டிக் கொள்கிறார். சுமைகளை ஏற்றிச் செல்வதற்கு இன்றும் கழுதைகளைப் பயன்படுத்துகிறார்கள்.
எகிப்தின் பிரமிடுகளைக் கட்டியவர்களுக்கெனத் தனிக்குடியிருப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன. அங்கே குடும்பத்துடன் வசித்தார்கள். அவர்களுக்கான வழிபாட்டு ஸ்தலம். விளையாட்டுக்கூடம், நடனக்கூடங்கள் குடிநீர் விநியோகம் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அவர்கள் அணிந்த விதவிதமான அணிகலன்கள். பயன்படுத்திய சமையற்பாத்திரங்கள் இன்று தொல்பொருள் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன. இன்று அலுவலகப்பதிவேடு இருப்பது போலவே அந்தக் காலத்திலும் வேலைப்பதிவேடு இருந்திருக்கிறது. அதில் யார் யார் என்ன வேலை செய்தார்கள். என்றைக்கு விடுப்பு எடுத்தார்கள் என்பது குறிக்கப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி ஆய்வாளருடன் பேசும் போது பெத்தனி எதற்கெல்லாம் விடுப்பு எடுத்திருக்கிறார்கள் என்று கேட்கிறார். விழாக்கள் மற்றும் குடும்ப நிகழ்வுகளுக்காக விடுப்பு எடுத்திருக்கிறார்கள் என்று பதில் தருகிறார்.
எகிப்தியர்கள் கப்பல்களைக் கட்டும் தொழிலில் முன்னோடிகள். உள்நாட்டுப் பொருட்களைச் சந்தைப்படுத்தவும் கட்டுமானத் திட்டங்களுக்குத் தேவையான பொருட்களைக் கொண்டு செல்லவும் நைல் நதியே பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆவணப்படத்தின் ஒரு காட்சியில் படகில் துணிகள் கொண்டுவரும் வணிகர்கள் பெத்தனியிடம் வியாபாரம் செய்கிறார்கள். மிக அழகான சிவப்பு உடை ஒன்றை வாங்குகிறார்.
இந்த நான்கு பகுதித் தொடர் நைல் டெல்டாவில் தொடங்கி அஸ்வான் நகரத்திற்குச் செல்வது வரை பயணிக்கிறது. அஸ்வான் அணைக்கட்டினை பற்றிக் காமிக்ஸ் புத்தகம் ஒன்றில் முதன்முறையாகப் படித்தபோது அந்தச் சொல் மனதில் தங்கியிருந்தது. நேற்று அஸ்வான் அணையை, சுற்றியிருந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைக் காணும்போது மனதில் அந்தக் காமிக்ஸ் காட்சிகளும் சேர்ந்து ஓடின.
கிமு 1478 இல் எகிப்தினை ஆட்சி செய்த ஹட்செப்சுட் ராணியைக் கிளியோபாட்ராவை விடவும் சிறந்தவர் என்கிறார் பெத்தனி. எகிப்தின் வம்சத்தில் வேறு எந்தப் மன்னரையும் விட ஹட்செப்சூட் நீண்ட காலம் ஆட்சி செய்திருக்கிறார் என்கிறார்.
மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்து முழுவதும் நூற்றுக்கணக்கான பேராலயங்களையும் நினைவிடங்களையும் கட்டுமானம் செய்திருக்கிறார். இவை மிகப்பிரம்மாண்டமானவை. The Valley of the Kings எனப்படும் லக்சர் பள்ளத்தாக்கு முழுவதும் பாரோ மன்னர்களின் கல்லறைகள் அமைக்கபட்டுள்ளன. அதில் ஹட்செப்சூட் தனக்கான கல்லறை ஒன்றினையும் உருவாக்கியிருக்கிறார். பெரும்பாலான அரச கல்லறைகள் அமைந்துள்ள இந்தப் பள்ளத்தாக்கினுள் பயணம் செய்யும் பெத்தனி கொள்ளையர்களுக்குப் பயந்து இன்றும் அந்தக் கல்லறைகள் பாதுகாப்பாகப் பூட்டிவைக்கபட்டிருப்பதைத் தெரிவிக்கிறார்.
அகதா கிறிஸ்டி பயணம்செய்த கப்பலில் அவரது நினைவாக அதே அறையை அப்படியே பாதுகாத்து வருவதையும் Death on the Nile நாவல் எழுதிய மேஜையினையும் பெத்தனி பார்வையிடுகிறார். இது போல அஸ்வானில் சர்ச்சில் தங்கியிருந்த அறையைப் பெத்தனிக்கு ஒதுக்குகிறார்கள். எவ்வளவு ஆடம்பரமான அறை. அவரது பார்வையிலே தனக்கு ராஜஉபச்சாரம் நடக்கிறது என்பதைப் பெத்தனி வெளிப்படுத்துகிறார்
எகிப்தின் வரலாற்றுச்சின்னங்களைப் பார்வையிட உலகம் முழுவதுமிருந்து பயணிகள் வந்தவண்ணமிருக்கிறார்கள். வரலாறு அங்கே நினைவுபடுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. உடலைப் பதப்படுத்தி அழியாத வாழ்க்கையை மேற்கொள்ள நினைத்த பாரோ மன்னர்களின் ஆசை நிறைவேறவில்லை. ஆனால் அவர்கள் கட்டிய கட்டுமானங்கள். கலைக்கூடங்கள், பிரமிடுகள் காலத்தை வென்று அவர்கள் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
கலைகள் மட்டுமே காலத்தை வென்று நிலைக்கக் கூடியது என்பதையே இந்தப் படமும் நமக்கு உணர்த்துகிறது.
•••
காலைக் குறிப்புகள் 30 சிறப்பு மௌனம்.
நோபல் பரிசு பெற்ற பின்பு ஜப்பானிய எழுத்தாளரான கென்ஸாபுரோ ஒயி இனி தான் எழுதப்போவதில்லை. தன்னுடைய வேலை முடிந்துவிட்டது என்று ஒரு பேட்டி கொடுத்தார்.

ஏன் அப்படி சொல்கிறீர்கள் என பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு. என் எழுத்திற்கு அடிப்படையாக ஒரேயொரு காரணமிருந்தது அது என் மகன் ஹிக்காரி. மூளை வளர்ச்சியற்ற அவன் நலமடைய வேண்டும் என்பதற்காகவே எழுதினேன். அந்தப் பணியை சரியாக செய்துவிட்டதாக உணர்கிறேன். ஆகவே இனி எழுதத் தேவையில்லை என்று பதில் சொன்னார்
உங்கள் மகனுக்காக மட்டும் தான் இத்தனை ஆண்டுகள் எழுதினீர்களா என ஒரு பத்திரிக்கையாளர் கேட்டதற்கு, ஹிக்காரி மற்றும் ஹிரோஷிமா. இந்த இரண்டும் தான் என்னை எழுத வைத்தது என்று பதில் தந்தார்
அவர் சொன்னது உண்மை
அவரது வாழ்க்கையில் நடந்த உண்மைகளை அறிந்தால் இந்தப் பதில் எவ்வளவு நிஜமானது என்பதை உணரமுடியும்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாளில் மனச்சோர்விலிருந்து விடுபடுவதற்காகத் தனது புத்தகம் ஒன்றை எடுத்துப் படிக்கத் துவங்கினார் கென்ஸாபுரோ ஒயி.
படிக்கப் படிக்க மனதில் உற்சாகமோ, நம்பிக்கையோ எதுவும் ஏற்படவில்லை. தன்னுடைய புத்தகத்தால் தனக்குக் கூட மகிழ்ச்சி உருவாகவில்லையே. பின்பு எப்படி அது வாசகனுக்கு மகிழ்ச்சியை, நம்பிக்கையை உருவாக்கும் என்று கவலையோடு யோசித்தார். அதுவரை எழுதிய புத்தகங்களின் மீது பெரும் ஏமாற்றமும் வெறுப்பும் உருவானது.
தனது எழுத்தின் போக்கினை, மையத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அன்று தான் தீர்மானம் செய்தார். அதன் சில வாரங்களுக்குப் பிறகு பத்திரிக்கையாளராக ஹிரோஷிமாவிற்குப் பயணம் மேற்கொண்டார். அங்கே அணுவீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை செய்யும் மருத்துவரைச் சந்தித்து உரையாடினார்.
அந்த மருத்துவர் “அணுவீச்சின் பாதிப்புத் தலைமுறைகள் தாண்டியும் நீடிக்கக்கூடாது. இவர்களுக்கு என்னவிதமான உடற்பிரச்சனைகள் உருவாகும் என்று இப்போது துல்லியமாகக் கணிக்க முடியவில்லை. இவர்களில் பலரும் சாகக்கூடும். மரணத்தை என்னால் தடுக்கமுடியாது. ஆனாலும் மீட்சி உண்டு என்ற நம்பிக்கையை உறுதியாகக் கொண்டபடியே வேலை செய்து கொண்டிருக்கிறேன். இவர்களைப் பற்றி உலகம் கவலைப்படாமல் இருக்கலாம். இவர்களுக்கு நான் தேவை. அதை முழுமையாக உணர்ந்திருக்கிறேன். அப்படி உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் தேவை. அவர்கள் உங்களை மட்டுமே உலகமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்“ என்று சொன்னார்.
மருத்துவரின் பேச்சு கென்ஸாபுரோ ஒயி மனதில் புதிய வெளிச்சத்தை கொண்டுவந்தது. அதன்பிறகு அவரது எழுத்து மாறத்துவங்கியது.

நெருக்கடியான தருணத்தில் ஒரு எழுத்தாளர் தன்னுடைய புத்தகத்தை வாசிக்கும்போது அதிலிருந்து உண்மையான உத்வேகம் அடைவாரா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.
புத்தகம் ஒரு வாசகனுக்கு ஏற்படுத்தும் தாக்கம் வேறு எழுத்தாளன் அடையும் உணர்வுகள் வேறு.
எழுதும் நாட்களில் எழுத்தாளனுக்குச் சந்தோஷத்தையும் மீட்சியினையும் எழுத்துத் தரக்கூடியது. இருளிலிருந்து விடுபடுவதற்கான வெளிச்சம் போல எழுத்து செயல்பட்டிருப்பதாகப் பலரும் தெரிவித்திருக்கிறார்கள். சிலர் எழுதுவதன் வழியே மட்டுமே தனது வாழ்வின் துயரங்களைக் கடந்து வந்திருக்கிறார்கள்.
ஆனால் எழுதி முடிக்கப்பட்டுப் புத்தகமாக வெளியான பிறகு, அது எழுத்தாளனிடமிருந்து துண்டிக்கப்பட்டு விடுகிறது.
தனது காயங்களைத் திரும்பப் பார்த்துக் கொள்ளும் போர்வீரனைப் போன்றது தான் எழுத்தாளன் தன் புத்தகங்களைத் தானே படித்துப் பார்ப்பது. வலியே முதன்மையாகத் தெரியும்.
சுயபுகழ்ச்சியை விரும்பும் சிலரைத் தவிரப் பெரும்பான்மை எழுத்தாளர்கள் தன் புத்தகங்களைத் தானே எடுத்துப் படிக்க விரும்புவதில்லை. தன்னைத் தானே பாராட்டிக் கொள்வதில்லை. புகைப்படம் எடுக்கக் கையில் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும் போது கூச்சமடைகிறார்கள். காதல் கடிதத்தை கையாளுவது போல ரகசியமாக எடுத்துப் பார்க்கிறார்கள் ஆங்காங்கே படிக்கிறார்கள். ரகசியமாக வைத்துவிடுகிறார்கள்.
சிறுவயதில் அணிந்த ஆடையை வளர்ந்த பிறகு அணிந்து கொள்ள முடியுமா என்ன.
எழுத்தாளன் தன் புத்தகத்தைத் திரும்பப் படிக்கத்துவங்கியதும் அதன் குறைகளை, போதாமைகளை உணரத்துவங்குகிறான். அது குற்றவுணர்ச்சியைத் தான் வெளிப்படுத்துகிறது.
படகு செய்பவன் அதில் பயணிக்க விரும்புவதில்லை. அது பிறருக்கானது.
சிறந்த சமையற்காரன் சமையலின் போது ருசி பார்ப்பான். அதுவும் கண்ணில் பார்த்து ருசி சொல்லும் ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு போதும் பெரிய இலைபோட்டுத் தான் சமைத்த உணவைத் தானே ருசித்துச் சாப்பிடமாட்டான்.
மூளை வளர்ச்சி குன்றிய தனது மகனுக்கு ஹிக்காரி என்று பெயர் வைத்திருக்கிறார் கென்ஸாபுரோ ஒயி . அதன் பொருள் ‘வெளிச்சம்’.
அவன் குழந்தையாக இருந்தபோது மருத்துவப் பரிசோதனைக்காகப் பெரிய மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்துப் போயிருக்கிறார்கள். மருத்துவர் அவனுக்கு மூளையில் ஒரு அறுவை சிகிட்சை செய்ய வேண்டும். அதைச் செய்யாவிட்டால் அவனால் உயிர்வாழ முடியாது. ஒருவேளை அறுவை சிகிச்சை செய்தாலும் அவனது உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டுப் படுக்கையிலே வாழ்நாளைக் கழிக்க வேண்டியது வரும் என்றிருக்கிறார்.
பயந்து போன கென்ஸாபுரோ ஒயி ,இதைத் தவிர வேறு வழியில்லையா எனக்கேட்டதற்கு அந்த மருத்துவர். இந்த நிலையில் வைத்துக் கொண்டிருந்தால் அவன் உங்களுக்கு வீண்சுமை போலாகிவிடுவான் எனப் பேசியிருக்கிறார்.
தன் மகனை எப்படிக் காப்பாற்றி வளர்க்க வேண்டும் எனத் தனக்குத் தெரியும் எனக் கென்ஸாபுரோ ஒயி அன்றே முடிவு செய்து கொண்டார்.
அவரும் அவரது மனைவியும் ஹிக்காரியை தாங்களே கவனித்து வளர்ப்பதென முடிவு எடுத்தார்கள். இதற்கான நிறைய கவனம் எடுத்துக் கொண்டார்கள். காத்திருந்தார்கள்.
தன் மனைவியின் உறுதியான, நிதானமான, இடைவிடாத செயல்பாடும், ஆழ்ந்த நம்பிக்கையுமே தன் மகனை மீட்டெடுத்தது என்கிறார். கென்ஸாபுரோ ஒயி

பேச்சு வராத ஹிக்காரிக்கு ஆர்வம் உருவாக்குவதற்காக விதவிதமான பறவைகளின் குரலைக் கொண்ட ஒலிநாடாக்களை வீட்டில் ஒலிக்க விட்டிருக்கிறார்கள். அவன் பறவைகளின் குரல் வழியாகவே உலகை அறிந்திருக்கிறான்.
பறவைகளின் குரலைக் கேட்கும் போது அவன் சந்தோஷம் அடைவான். ஆனால் எந்த எதிர்வினையும் தர மாட்டான். இப்படி நாள்தோறும் புதுப்புது பறவைகளின் ஒலியை வீட்டில் ஒலிக்கச் செய்திருக்கிறார் ஒயி.
ஒவ்வொரு நாளும் தன் மகனின் மௌனம் தங்கள் மீது பெரும் பாரமாக இறங்கியது. அவன் ஏன் பேச மறுக்கிறான் என்று பல இரவுகள் அழுதிருப்பதாகச் சொல்கிறார்.
வேதனை தான் எழுத்தின் மூல ஊற்று. உலகம் அறியாத தந்தையின் கண்ணீர் தான் எழுத்தாக மாறி நோபல் பரிசு வரையான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது.
ஆறு வயதான ஹிக்காரியை அழைத்துக் கொண்டு கென்ஸாபுரோ ஒரு நாள் காட்டிற்குள் சென்றார். அங்கே ஒரு ஒரு பறவையின் குரலைக் கேட்டு எதிர்வினை தரும்விதமாகவே ஹிக்காரி நீர்க்கோழி என்ற முதல் வார்த்தையைப் பேசினான். அந்த மகிழ்ச்சிக்கு இணையே கிடையாது என்கிறார் ஒயி
தன் மகனின் மீட்சிக்கான நம்பிக்கையை உருவாக்கும் விதமாகவே தனது எழுத்து மாறியது. ஆகவே தன்னுடைய எழுத்தின் நோக்கம் குணப்படுத்துதல். இது என் மகனை மட்டுமில்லை அவனைப் போலத் தனிக்கவனம் செலுத்த வேண்டிய யாரோ ஒரு தந்தைக்கு, தாயிற்கு உதவி செய்யும் என்று நம்பினேன். அது தான் நடந்தது.
தன் படைப்புகள் வழியாக ஜப்பான் முழுவதும் மக்கள் ஹிக்காரியினையும் அவனை ஒத்த பிள்ளைகளையும் புரிந்து கொண்டார்கள் என்றும் சொல்கிறார் கென்ஸாபுரோ ஒயி
ஹிக்காரிக்கு பத்து வயதான போது அவனுக்கு மொசார்ட் பீதோவன் என உலகப்புகழ் பெற்ற இசைமேதைகளின் இசையை அறிமுகம் செய்திருக்கிறார். மொசார்ட்டின் எந்த இசைத்துணுக்கைக் கேட்டாலும் உடனே அவன் அது எந்த இசைக்கோர்வை என்று சொல்லிவிடுவான்.

வளர்ந்து பெரியவனாகி இன்று ஹிக்காரி ஒரு இசையமைப்பாளராக ஆகியிருக்கிறான். அவனது இசைத்தகடுகள் பல லட்சம் விற்பனையாகி சாதனை செய்திருக்கிறது.
இசையை ஆழ்ந்து கேட்கத் துவங்கிய பிறகு அவனுக்குப் பறவைகளின் குரல் மறந்து போய்விட்டது என்கிறார் ஒயி. இது ஆச்சரியமான விஷயம்.
ஹிக்காரியைப் போலவே தான் நமக்கும் உலகம் இயற்கையின் குரல் வழியாக அறிமுகமாகிறது. மூன்று வயதில் ஆட்டுக்குட்டிகளின் குரலை, அணிலின் கீச்சொலியை, குயிலின் பாடலை, வேப்பிலைகளின் ஒசையை கேட்டு வியந்து போயிருந்தேன். உலகம் ஒசைகளால் தான் நிரம்பியிருந்தது. புதிய புதிய குரல்கள். குரலை வைத்து உருவம் எப்படியிருக்கும் என கற்பனை செய்வேன். கிழே விழுந்தாலும் குரல் கொடுக்காத துணிகளுக்காக வருத்தப்படுவேன். வளரவளர உலகின் ஒசை பின்னுக்குப் போய் மனிதக்குரல்கள். அதிலும் உத்தரவுகள். ஆணைகள். ரகசியப்பேச்சுகள். கெடுபிடிகள் என கேட்டுக்கேட்டு பேச்சைக் கொண்டு தான் உலகை ஆள முடியும் என்பதைக் கற்றுக் கொண்டேன். இந்த மாற்றத்திற்குள் நுழையாத ஹிக்காரியின் உலகை தான் ஒயி எழுதுகிறார்.
சிறப்புக் கவனம் எடுக்க வேண்டிய குழந்தைகளை உலகம் ஏன் புறக்கணிக்கிறது. அவமதிக்கிறது. புரிந்து கொள்ள மறுக்கிறது. அந்தப் பெற்றோர்களின் அடக்கப்பட்ட கண்ணீரை, மனத்துயரை புரிந்து கொள்ளாமல் ஏன் பரிகாசம் செய்கிறார்கள். இந்த உலகின் மன்னிக்கமுடியாத குற்றம் இது போன்ற பெற்றோர்களை அவமதிப்பதாகும்.
ஹிக்காரியின் தாய் அவனை வளர்க்க மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். அவர் ஒருபோதும் சோர்ந்து போய்விடவில்லை. தவறான ஆலோசனைகள் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. அவன் இன்று அடைந்துள்ள வெற்றி என்பது தாயின் வெற்றியே.
வாழ்க்கையின் அர்த்தத்தை ஹிக்காரி தனக்குக் கற்றுக் கொடுத்தான். பறவையின் வழியே அவன் சொந்தக்குரலை மீட்டுக்கொண்டான். என்கிறார் ஒயி.
இயற்கையே தவிர வேறு சிறந்த மருத்துவர் எவர் இருக்க முடியும். தன் மகனுக்கான மீட்சியை ஒயி கண்டறிந்த விதம் முக்கியமானது. பறவைகளின் ஒலியைக் கொண்டு அவனை மீட்க முடியும் என்று அவர் நம்பினார். அதை ஆழமாகச் செயல்படுத்திப் பார்த்திருக்கிறார்.
இன்றும் ஹிக்காரி நூற்றுக்கும் குறைவான வார்த்தைகளை மட்டுமே பேசுகிறான். ஆனால் இசையின் வழியே ஆயிரமாயிரம் உணர்வுகளை வெளிப்படுத்துகிறான்.
வாழ்க்கையில் நுட்பமாக ஒன்றைக் கண்டறிய முடிந்தால் மட்டுமே எழுத்திலும் கண்டறிய முடியும் என்கிறார் ஓயி. இது தான் எழுத்தின் ரகசியம்.
கென்ஸாபுரோ ஒயி எழுதிய A PERSONAL MATTER மிகச்சிறந்த நாவல் அதுவும் Bird என்ற முதற்சொல்லில் தான் துவங்குகிறது. ஆனால் அது பறவையைக் குறிக்கவில்லை. ஒரு மனிதனின் பெயராக விளங்குகிறது.
சிறப்புக் கவனம் வேண்டுகிற குழந்தைகளின் மௌனம் என்பது தனித்துவமான மொழி. அதைப் புரிந்து கொண்ட பெற்றோர்களே அந்தப் பிள்ளைகளைச் சரியாக வளர்க்கிறார்கள். உருவாக்குகிறார்கள்.
நோயிலிருந்து குணப்படுத்த மருத்துவம் மட்டுமே உதவிசெய்வதில்லை. இயற்கையின் வழியிலும் நம்பிக்கையான சொற்களின் மூலமும் மீட்சியை உருவாக்க முடியும். அதைத் தான் தன்னுடைய படைப்புகளில் கென்ஸாபுரோ ஒயி செய்திருக்கிறார்.
••
February 16, 2021
காட்டு வாத்துடன் பறந்து செல்வேன்
– ஜப்பானிய எழுத்தாளர் கென்ஸாபுரோ ஒயி நோபல் பரிசு ஏற்புரையின் ஒரு பகுதி
தமிழில் எம்.எஸ்.
Rகுழப்பம் நிறைந்த முதல் உலக மகா யுத்தத்தின் போது நான் ஒரு சிறு பையனாயிருந்தேன். இங்கிருந்து ஆயிரக்கணக்கான மைல் தொலைவில், ஜப்பான் தீவுக்கூட்டத்தில் ஷிக்கோகு தீவின் தனிமையான மரங்களடர்ந்த பள்ளத்தாக்கில் வசித்து வந்தேன். அப்போது இரண்டு புத்தகங்கள் என்னைக் கவர்ந்திருந்தன. The Adventures of Huckleberry Finn மற்றும் The Wonderful Adventures of Nils.
இந்த உலகம் முழுவதையும் அப்போது பயங்கரம் அலையாக சூழ்ந்திருந்தது. இரவில் காட்டுக்குள் சென்று, வீட்டில் கிடைக்காத பாதுகாப்புடன் மரங்களிடையே உறங்கியதை என்னால் நியாயப்படுத்த முடிந்தது. The Adventures of Nilsன் முக்கிய பாத்திரம் ஒரு சிறிய பிராணியாக உருமாறிப் பல வீரதீரச் செயல்கள் புரிந்தது. பறவைகளின் மொழியை அது அறிந்திருந்தது. அந்தக் கதையிலிருந்து பலவிதமான மகிழ்ச்சியைப் பெற்றேன். முதலில், ஷிக்கோகு தீவில் அடர்ந்த காட்டில் வெகு காலத்திற்கு முன் என் முன்னோர்களை போல வாழ்ந்ததில் இந்த உலகமும் இந்த மாதிரி வாழ்க்கையும் உண்மையிலேயே விடுதலை அளிப்பதான ஒரு தோற்றத்தைத் தந்தது. இரண்டாவதாக, நில்ஸ் என்ற அந்த கதாபாத்திரம். ஸ்வீடனில் யாத்திரை செய்யும்போது காட்டு வாத்துக்களுடன் சேர்ந்து, அவைகளுக்காகப் போராடி, தன்னை ஒரு சிறுவனாக மாற்றிக் கொண்டு, அப்போதும் ஒன்றும் அறியாதவனாக, முழு நம்பிக்கையும் அமைதியும் கொண்டவனாய் இருந்த அந்தக் குறும்புக்காரச் சிறுவனிடம் நான் இரக்கப்பட்டதுடன், என்னை அவனாகவே உணரவும் செய்தேன். கடைசியில் தன் வீட்டுக்குத் திரும்பிய அந்தச் சிறுவன் நில்ஸ் தன் பெற்றோர்களிடம் போகிறான். அந்தக் கதையிலிருந்து நான் பெற்ற மகிழ்ச்சி அதன் மொழியில் இருந்துதான். ஏனெனில் நில்ஸுடன் சேர்ந்து பேசும் போது நானும் புனிதமடைந்ததாய், உயர்ந்து விட்டதாய் உணர்ந்தேன். அவனது பேச்சு இவ்வாறு இருந்தது:

“அப்பா, அம்மா! நான் ஒரு பெரிய பையனாகிவிட்டேன். நான் மீண்டும் மனிதனாகி விட்டேன்” என்று கத்தினான். குறிப்பாக “நான் மீண்டும் மனிதனாகி விட்டேன்” என்ற சொற்கள் என்னைக் கவர்ந்தன.
நான் வளர்ந்த பின்னர், வாழ்வின் பல்வேறு நிலைகளில், பல்வேறு கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது – குடும்பத்தில், ஜப்பானில் சமூகத்துடன் என் உறவில், பொதுவாக இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் என் வாழ்க்கை முறையில். எனது இந்த கஷ்டங்களை எனது நாவலில் இடம் பெறச் செய்ததன் மூலம் நான் உயிர் பெற்று விட்டேன். அப்படிச் செய்ததன் மூலம், ‘நான் மீண்டும் மனிதனாகி விட்டேன்’ என்பதைச் சற்று பெருமூச்சு விட்டபடியே, திரும்பத் திரும்பக்கூறிக் கொண்டேன்.
இம்மாதிரியெல்லாம் என்னைப் பற்றிக் கூறிக்கொள்வது இந்த இடத்துக்குப் பொருத்தமில்லாமல் இருக்கலாம். அதுவும் இந்த சந்தர்ப்பத்தில் இருந்தாலும், எனது எழுத்தின் அடிப்படைத் தன்மை எனது சொந்த விஷயத்தில் இருந்தே தொடங்குகிறது. பின்னர்தான் சமூகத்துடன் தொடர்புகொண்டு, அதன்பின் நாட்டுடனும் உலகத்துடனும் இணைகிறது. எனது சொந்த விஷயங்களை சற்று விரிவாகவே கூறுவதற்காக என்னை மன்னித்து விடுவீர்கள் என்று நம்புகிறேன்.
அரை நூற்றாண்டுக்கு முன், அந்த அடர்ந்த காட்டின் உள்ளே இருந்தபடி நான் The Adventures of Nils படித்தபோது இரண்டு தீர்க்கதரிசனங்களை உணர்ந்தேன். ஒன்று, நான் எப்போதாவது ஒருநாள் பறவைகளின் மொழியைப் புரிந்து கொள்வேன். இரண்டு, நான் எனது பிரியமான காட்டு வாத்துடன் பறந்து செல்வேன் – குறிப்பாக ஸ்கான்டிநேவியாவுக்கு.

எனக்குத் திருமணமாகி, பிறந்த முதல் குழந்தை மூளை வளர்ச்சி குன்றியிருந்தது. ஹிக்காரி என்று அதற்குப் பெயரிட்டிருந்தோம். ஜப்பானிய மொழியில் அதற்கு ‘ஒளி’ என்று பொருள். குழந்தையாயிருக்கும்போதே அவனுக்கு மனிதக் குரல்களை புரிந்து கொள்ளும் திறனற்றிருந்தது. ஆனால் பறவைகளின் ஒலியை நன்கு புரிந்து கொண்டான்.
அவனுக்கு ஆறு வயது இருக்கும் போது ஒரு கோடைக் காலத்தில் நாங்கள் எங்கள் கிராமத்துச் சிறிய வீட்டில் தங்கியிருந்தோம். ஒரு புதருக்கு அப்பால் ஏரியில் இரண்டு நீர்க்கோழிகள் தங்கள் இறக்கைகளை உதறும் ஒலியை அவன் கேட்டான்.
உடனே, “அது நீர்க்கோழி” என்றான் ஏதோ அறிவிப்பாளன் போல.
இதுதான் அவன் பேசிய முதல் வார்த்தைகள்.
அதன் பின்னர்தான் நானும் என் மனைவியும் எங்கள் மகனுடன் மனித மொழியில் பேசிக் கொள்ள ஆரம்பித்தோம்.
ஹிக்காரி இப்போது ஊனமுற்றோருக்கான தொழிற் பயிற்சி நிலையமொன்றில் பணிபுரிகிறான். ஸ்வீடனில் நாங்கள் கற்றுக்கொண்ட சில கருத்துக்களின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஒரு நிறுவனம் அது. இதற்கிடையில் அவன் இசையமைக்கத் தொடங்கியிருந்தான். மனிதருக்கான இசையை அமைப்பதில் அவனுக்குத் தூண்டுகோலாயிருந்தது பறவைகளே.
எப்போதாவது ஒருநாள் நான் பறவைகளின் மொழியை அறிந்து கொள்வேன் என்ற எனது பழைய தீர்க்கதரிசனம் என் சார்பாக அவன் நிறைவேற்றி வருகிறான்.
அத்துடன், என் மனைவியின் அளப்பரிய பெண் வலிமையும் அறிவும் இல்லாவிடில் எனது வாழ்க்கையே நாசமாகியிருக்கும் என்பதையும் நான் குறிப்பிட்டாக வேண்டும்.
நில்ஸின் காட்டு வாத்துக்களின் தலைவியான அக்காவின் மறுபிறவியே அவள். அவளுடன் நான் ஸ்டாக்ஹோமுக்குப் பறந்து வந்திருக்கிறேன்.
அதன் மூலம் என் இரண்டாவது தீர்க்க தரிசனமும் இப்போது நிறைவேறுகிறது.
February 15, 2021
நீலம் இதழில்
ஓர் எழுத்தாளனும் சில கதாபாத்திரங்களும் என்ற தலைப்பில் தொடர்கட்டுரைகளை நீலம் இதழ் வெளியிட்டு வருகிறது.
அதில் எனக்குப் பிடித்த தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனை நாவலின் நாயகன் ரஸ்கோல்நிகோவ் குறித்து எழுதியிருக்கிறேன்.
பிப்ரவரி 2021 நீலம் இதழில் வெளியாகியுள்ளது.
திரைப்படவிழாவில்
சென்னையில் நடைபெறும் சர்வதேசத் திரைப்படவிழாவின் மாஸ்டர் கிளாஸ் நிகழ்வில் பிப்ரவரி 19 மாலை மூன்று மணிக்கு உரையாற்றுகிறேன்.
சத்யம் திரையரங்கிலுள்ள சிக்ஸ் டிகிரி அரங்கில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
கற்றுத் தரும் உலகம்
பத்திரிக்கையாளரும் எனது நண்பருமான ஜென்ராம் புதிய யூடியூப் சேனல் ஒன்றினைத் துவக்கியுள்ளார்.
அந்தச் சேனலுக்காக ஜென் ராம் அவர்களுடன் Life in a day ஆவணப்படம் குறித்து உரையாடினேன்.
February 14, 2021
தாகூரைப் பற்றி
சொல்வனம் இணைய இதழ் சார்பில் வங்காள இலக்கியத்திற்கான சிறப்பிதழ் வெளியிட்டிருக்கிறார்கள்.

மிகச்சிரத்தையாக, விரிந்த தளத்தில் செறிவாகக் கொண்டுவந்திருக்கிறார்கள். ஒரு இளம்வாசகனுக்கு இந்தச் சிறப்பிதழ் பெரும்பொக்கிஷமாகவே அமையும்.
சொல்வனம் ஆசிரியர் குழு சிறப்பான முன்னெடுப்பினை மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சிக்குக் காரணமாக இருந்த பாஸ்டன் பாலா, நம்பிகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர் குழுவினர், பங்களித்த படைப்பாளிகள் அனைவருக்கும் மனம் நிரம்பிய பாராட்டுகள்.
இந்தச் சிறப்பிதழுக்காக அற்புதமான லோகோ அமைத்தவருக்கு என் தனிப்பட்ட வாழ்த்துகள்.

சொல்வனம் இதழில் சத்யஜித்ரே இயக்கிய தாகூர் பற்றிய ஆவணப்படம் குறித்து எழுதியிருக்கிறேன்.
தாகூரின் கூப்பிய கரங்கள்
ஜப்பான் நினைவுகள்
ஒரு புகைப்படத்தைத் தேடிக் கொண்டிருக்கும் போது 2014ல் ஜப்பான் பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் சேமிப்பு பழைய ஹார்ட் டிஸ்க் ஒன்றில் இருப்பதைக் கண்டேன். அவற்றை இரவில் பார்த்துக் கொண்டிருந்தேன். எத்தனை இனிமையான நாட்கள். இனிய நினைவுகள். எவ்வளவு அற்புதமான நண்பர்கள்.

ஜப்பானுக்குத் தனது வேலை நிமித்தம் சென்ற இளைஞர்களில் சிலர் ஒன்றுகூடி முழுமதி அறக்கட்டளை என்ற அமைப்பினை உருவாக்கி அதன்வழியே தமிழ் கற்றுத்தருவது, இலக்கிய நிகழ்ச்சிகள் செய்வது. தமிழகத்திலுள்ள கிராமப்புற கல்வி நிறுவனங்களுக்கு உதவி செய்வது. தமிழகத்தின் முக்கியப் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுப்பது என ஆரோக்கியமாகச் செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் அழைப்பின் பெயரால் தான் ஜப்பான் சென்றிருந்தேன்.
ஒரு சின்னஞ்சிறிய அமைப்பு தங்கள் கைப்பணத்தை செலவு செய்து ஆண்டுதோறும் எழுத்தாளர்களை ஜப்பானுக்கு வரவழைத்துப் பொங்கல் விழா கொண்டாடுவது பாராட்டிற்குரிய விஷயம்.

இன்று நினைத்துப் பார்க்கும் போதும் அவர்களின் வரவேற்பும் அன்பும் ஒருங்கிணைப்பு செய்த விதமும் அளவற்ற நேசத்தின் வெளிப்பாடாகவே உள்ளது. ஒவ்வொருவரும் என் நினைவில் பசுமையாகப் பதிந்து போயிருக்கிறார்கள்.

அருள், மணிமாறன், செந்தில்,துரைப்பாண்டி, பாலு, அவரது மனைவி, வேல்முருகன் அவரது துணைவியார், பாலா, சதீஷ் என அன்பான நண்பர்கள். தன் வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்த கோவிந்த் மற்றும் அவரது குடும்பத்தினர், ஜீவானந்தம் அவரது துணைவியார் சரஸ்வதி என நேசமான மனிதர்கள்.

கோவிந்த் எனது நண்பன் ராஜகோபாலின் மாமா. மிகச்சிறந்த இலக்கிய வாசகர். நீண்டகாலம் ஜப்பானில் வசிப்பவர். எனது நண்பர் ஜென் ராமின் சகோதரர். இன்றும் அவர் சென்னை வரும்போது நாங்கள் சந்தித்துக் கொள்கிறோம்.




ஜப்பானில் மிகச்சிறந்த உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார் நண்பர் குறிஞ்சில் பாலாஜி. சென்னையிலும் இவர்களின் உணவகம் மற்றும் தங்குமிடம் செயல்படுகிறது. மிகப் பாசமான மனிதர். ஜப்பான் பயணத்தின் போது சிறப்பான உணவு கொடுத்து உபசரித்த அவரது நேசத்தை மறக்க இயலாது

ஜப்பானுக்குச் சென்றிருந்த போது டோக்கியோ செந்தில் வீட்டிற்குச் சென்றிருந்தேன். மிகுந்த ஆர்வமாக இலக்கியம் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார். புத்தகக் கடைக்கு அழைத்துச் சென்றார். ஹிரோஷிமாவிற்கு ஒன்றாகப் பயணம் செய்தோம். இன்று அவர் எழுத்தாளராகியிருக்கிறார். இசூமியின் நறுமணம் என்ற புதிய சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டிருக்கிறார். அவருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள்.


முழுமதி நண்பர்கள் அனைவரையும் இந்த இரவில் நிறைந்த அன்போடு நினைத்துக் கொள்கிறேன். உங்கள் நற்செயல்கள் மேலும் வளர வாழ்த்துகிறேன்.
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

