S. Ramakrishnan's Blog, page 140

March 18, 2021

காற்றில் பறக்கும் மலர்

புதிய சிறுகதை

கரணின் டீசர்டை அபர்ணா துவைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. இப்படிக் காலை ஐந்து மணிக்கு பாதி உறக்கத்திலிருந்து எழுந்து வந்து அவனது டீசர்டை ஏன் துவைத்துக் கொண்டிருக்கிறாள் என வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

பின்கதவு பாதித் திறந்திருந்தது. வாழைமரத்தில் அசைவில்லை. அதன் விநோதநிழல் சரிந்து விழுந்த, மஞ்சள் வெளிச்சத்தில் இப்படி அபர்ணாவைப் பார்க்க கலக்கமாகவே இருந்தது.

கலைந்த கூந்தலுடன் சேலையை இடுப்பில் தூக்கி சொருகியபடியே அவள் துணியினைக் கசக்கிக் கொண்டிருந்தாள். அருகிலிருந்த பிளாஸ்டிக் வாளியில் சோப் நுரையுடன் கரணின் நீல நிற பேண்ட் தொங்கிக் கொண்டிருந்தது.

கரண் வீட்டை விட்டு ஒடிப்போய் ஒன்பது மாதங்களாகிவிட்டது. நாங்கள் எவ்வளவோ தேடிப்பார்த்துவிட்டோம். அவனைப் பற்றி ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்பு கூட நானும் அபர்ணாவும் அவனைத் தேடி கொடைக்கானல் வரை போயிருந்தோம். அங்கே அவனைப் பார்த்ததாக ஸ்டீபன் சார் சொன்னார்.

எதற்காக இந்தக் குளிர்காலத்தில் கொடைக்கானல் போயிருக்கிறான் என்று புரியவில்லை. ஆனால் நாங்கள் கொடைக்கானல் முழுவதும் தேடியும் அவனைக் கண்டறியமுடியவில்லை. கைவிடப்பட்ட குதிரையொன்றை வழியில் கண்டேன். கரண் ஞாபகம் அதிகமானது

ஒருவேளை அங்கிருந்து வெளியேறிவிட்டானோ என்னவோ, கயிறு அறுந்து போன பட்டம் காற்றில் தன்னிஷ்டம் போலப் பறந்து போலக் கரண் சுற்றிக் கொண்டிருந்தான். பட்டம் சுதந்திரமாகத் தன்னை உணரக் கூடும். ஆனால் கையில் பிடித்திருந்த வெற்றுக்கயிற்றுடன் தனியே அலையும் பட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஆளின் வேதனையை எப்படிப் பகிர்ந்து கொள்வது. அந்தத் துயரம் யாருக்கும் வரக்கூடாது.

வழக்கமாகக் கரண் காலையில் மைதானத்திற்குக் கிளம்பிப் போகும் போது இந்தப் பேண்டினையும் டீசர்டினையும் தான் போட்டுக் கொண்டு போவான். அவனுக்கு எந்த விளையாட்டிலும் ஈடுபாடு கிடையாது. ஆனால் அதிகாலையிலே மைதானத்திற்குப் போய்விடுவான். காதில் இயர்போன் மாட்டியபடியே தனியே அவன் நடந்து போய்க் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

நடைப்பயிற்சிக்குப் போகிறவர்களிடம் காணப்படும் வேகம் அவனிடம் கிடையாது. மரத்திலிருந்து உதிரும் இலை காற்றில் அலைந்தாடுவது போல மெதுவாக நடப்பான். யாரையும் நிமிர்ந்து கூடப் பார்ப்பதில்லை. அதே மைதானத்தில் தான் நானும் நடக்கிறேன். ஆனால் ஒருமுறை கூட என்னிடம் அவன் பேசியதில்லை. என்னைக் கண்டுகொண்டது போலத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டான்

அந்த மைதானத்தில் காலை ஆறுமணிக்கெல்லாம் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வாக்கிங் போய்க் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களில் ஒருவருடன் கூடக் கரணுக்கு நட்பு உருவாகவில்லை. அவன் நண்பர்களே இல்லாமல் இருந்தான். வீட்டிலும் கூட அவன் யாருடனும் பேசுவதில்லை. அபூர்வமாக அவனைத் தேடி உடன்படித்த மாணவன் திவாகர் வருவான். அவனுடன் கூட ஐந்து நிமிசத்திற்கு மேல் பேசமாட்டான். அவசரமாக அனுப்பி வைத்துவிடுவான்.

எதற்காகப் பதினேழு வயதில் ஒருவன் இவ்வளவு தனிமையாக உணருகிறான். மௌனத்தின் குகைக்குள் தன்னை அடைத்துக் கொண்டிருக்கிறான்.

கோபம் தானா, இல்லை குழப்பமா, அல்லது வெறுப்பா, என்னவென்று எனக்கும் புரியவில்லை.

சில நேரங்களில் அவனை நினைத்து அபர்ணா அழுவாள். நீயே பேசு அபர்ணா என்பேன்.

என்ன பேசுவாள் என்று தெரியாது. ஆனால் அவளால் அவனது மௌனத்தைக் கலைக்க முடியவில்லை. காலில் ஒட்டிக் கொண்ட தார் போல மௌனம் அவனைப் பிடித்திருந்தது.

பதினேழு வயதில் கறுப்பு மேகங்கள் போலப் பல்வேறு குழப்பங்கள் மனதில் உலவத் துவங்குகின்றன. திடீரென அவன் நனைந்த பஞ்சினைப் போலாகிவிடுகிறான். அல்லது பின்னிகரவில் அதிகப் பிரகாசமாக எரியும் தெருவிளக்கினைப் போல ஒளிர ஆரம்பிக்கிறான். சில நேரங்களில் கரண் முகத்தைக் காணும்போது அதில் இந்த உலகம் தனக்கு ஒரு பொருட்டேயில்லை என்பது போலிருக்கும். சில வேளைகளில் இவ்வளவு துயரங்களை நான் ஏன் சுமந்து கொண்டிருக்க வேண்டும் என்பது போல வேதனை கவ்வியதாகயிருக்கும்.

கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணீரை கையாளுவது போலப் பதினேழு வயது பையனை கையாள வேண்டியிருக்கிறது.

உண்மையில் இது எதுவும் அவனது பிரச்சனையில்லை. வயதின் பிரச்சனை. ஆனால் அந்த வயதை நானும் கடந்து வந்திருக்கிறேன். இப்படி நடந்து கொள்ளவேயில்லை என்றும் தோன்றியது.

எனக்குள்ளும் அந்த வயதில் கோபமிருந்தது. ஆனால் அதை நேரடியாகக் காட்டி பழக்கபட்டிருந்தேன். சாப்பிடாமல் சண்டைபோட்டிருக்கிறேன். தாடி வளர்ந்திருக்கிறேன். வீட்டில் தன் ஆசைகளை வெளிப்படுத்த ஏன் இத்தனை தயக்கம். பெற்றவர்களின் கோபம் அவ்வளவு வலிமையானதா என்ன. ஏன் விலகிக் கொண்டேயிருக்க வேண்டும்.

கரண் கோவத்தில் ஒரு முறை கூடச் சாப்பிடாமல் இருந்ததேயில்லை. அவன் கோபத்தை வெளியே காட்டுவதேயில்லை. அவனது கோபம் வெறுப்பு யாவும் உறைந்து விநோத சுடர் ஒன்று எரிவது போல மாறியிருக்கிறது.. அந்த வெளிச்சம் அவன் முகத்தில் பரவியிருப்பதைக் கண்டிருக்கிறேன்.

மதியவேளையில் நிம்மதியற்ற அணில் ஒன்று தண்ணீர் குழாயின் மீது வேகவேகமாக ஏறி இறங்கி ஒடுவதைக் கண்டிருக்கிறேன். அந்த அணிலின் மனநிலை போலத் தான் கரணுக்கும் இருந்தது. ஆனால் அணிலின் வேகமில்லை. அவன் தன் செயல்களின் இயல்பை மாற்றிக் கொண்டுவிட்டான். ஒருவன் மெதுவாகச் சாப்பிடுவது என்பது கூடக் கோபத்தின் அடையாளம் தான் என்பதை அவனிடமிருந்தே புரிந்து கொண்டேன்.

கரணுக்கு என்ன பிடிக்கவில்லை. யார் மீது கோபம். எதற்காகத் தன்னை இப்படி வருத்திக் கொள்கிறான். ஒருவேளை படிப்பில் ஆர்வமில்லையா, அல்லது வேறு எதையோ நினைத்து பயப்படுகிறானா.

அவனுடன் சிலவேளைகளில் பேசிப் பார்த்திருக்கிறேன். அப்போது கரண் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருப்பான்.. பலநேரம் வெறுமனே தலையசைத்து இல்லை என்று சொல்லுவான். சில நேரம் ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லுவான். சொற்களில்லாமல் கோபத்தைக் காட்டுகிற ஒருவனை எப்படிக் கையாளுவது என எனக்குப் புரியவில்லை.

கரண் தலைசீவிக் கொள்ளமாட்டான். தேய்த்து வைத்த உடைகளைப் போட்டுக் கொள்ளமாட்டான். படுக்கையைச் சுத்தம் செய்துவம் கிடையாது. வேண்டுமென்றே சூடான உணவினை ஆறவிட்டுச் சாப்பிடுகிறான். நாள் கிழமை தேதி எதுவும் தெரியாது. பாலைநிலத்திற்குள் வந்துவிட்ட பனிக்கரடியை போல அவன் தன்னை அந்நியமாக உணர்ந்தான்.

கரணுக்காக நாங்கள் எங்களை மாற்றிக் கொண்டோம். அவன் கேட்காமலே பணம் கொடுத்தோம். அவனோ தன் மௌனத்தை வீடு முழுவதும் நிரப்பிக் கொண்டிருந்தான்.

ஆனால் இப்படி வீட்டை விட்டு ஒடுவான் என்று நாங்கள் நினைக்கவேயில்லை.

எது ஒருவனை வீட்டை விட்டுத் துரத்துகிறது. நாங்கள் அவன் மீது அன்பு காட்டுகிறோம் தானோ, அவனுக்குத் தேவையான வசதிகளை, விருப்பமான பொருட்களை வாங்கித் தந்திருக்கிறோம் தானே. பின் ஏன் அவன் வீட்டை விட்டு ஒடினான். என்ன குறை. என்ன கோபம். யார் மீது வெறுப்பு.

நாமாகப் புலம்பிக் கொண்டிருக்க வேண்டியது தானா. குற்றவுணர்ச்சி ஏன் இப்படி விஸ்வரூபம் எடுத்துக் கொண்டேயிருக்கிறது. பிள்ளைகளை நீர்குமிழி போல நினைப்பது தவறானது தானா. அவர்கள் எரிகற்கள் போன்றவர்களா.

காற்றில் கரங்களால் பறித்துச் செல்லப்படும் மலரை காற்று எவ்வளவு தூரம் கொண்டு செல்லும். தரையில் வீழ்ந்த மலரின் கதி தான் என்ன. மலர்கள் ஏன் இப்படிப் பறக்க ஆசைப்படுகின்றன.

கரணால் நான் அதிகம் குழப்பத்திற்கு உள்ளானேன். அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். குழப்பம் என்பது சேற்றுநிலம் போல. அதில் காலை வைத்து நடக்கத் துவங்கிவிட்டால் எளிதாக வெளியேற முடியாது. ஒரு அடி வைப்பது கூட எளிதானதில்லை.

கரண் இப்படி ஒரு விடிகாலையில் தான் வீட்டை விட்டு ஒடிப்போனான். அவன் கிளம்பிப் போன விஷயமே எங்களுக்குத் தெரியாது. ஆறரை மணிக்கு அபர்ணா கேட்டில் இருந்த பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு யாரோ திருடன் இரவில் வந்து பூட்டை உடைத்திருக்கிறான்எனப் பயந்து என்னை அழைக்குனும் வரை அவளுக்கும் கரண் வெளியேறிப் போனது தெரியாது

எதற்காகப் பூட்டை உடைத்துப் போட்டிருக்கிறான் என்று தெரியவில்லை. அவன் உடைகள் எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. அவனது செல்போன் கூட வீட்டில் தானிருந்தது. சைக்கிள் ஒரமாக நின்றிருந்தது. வெறும் கையோடு போயிருக்கிறான். திடீரென முடிவு செய்து கிளம்பிப் போனது போலவே இருந்தது.

ஒருவேளை மைதானத்திற்குப் போயிருப்பான் என நினைத்துக் கொண்டு வேகமாக மைதானத்திற்குச் சென்றேன். ஆனால் அவனைக் காணவில்லை. திடீரென மைதானம் மிகப்பெரியதாகிவிட்டது போல அச்சமாக இருந்தது. கைகள் நடுங்க அவசரமாக வீடு திரும்பினேன். அபர்ணா அழுது கொண்டிருந்தாள். பக்கத்துவீட்டுப் பெண் அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.

கரணை எங்கே போய்த் தேடுவது என்று தெரியவில்லை. இருவருமாகப் பேருந்து நிலையம் வரை போய்ப் பார்த்துவந்தோம். விடிகாலையில் அப்படி ஒருவன் வந்தானா எனப் பெட்டிக்கடைகளில் விசாரித்தோம். ஒருவர் கண்ணிலும் கரண் படவில்லை. எங்கே போயிருப்பான். அபர்ணா பேருந்து நிலையத்தில் நின்றபடியே சப்தமாக அழுதாள். அவள் அழுகையை ஒருவரும் கண்டுகொள்ளவேயில்லை

அவளை ஆறுதல்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்தேன். அன்றிலிருந்து மூன்று நாட்கள் தெரிந்தவர்கள் வீடு. அவனது நண்பர்கள். ஆசிரியர்கள். எனப் பலரையும் விசாரித்துப் பார்த்துவிட்டோம். எங்கும் அவனைப் பற்றி ஒரு தகவலும் இல்லை. ஒருவேளை அவனாக வீடு திரும்பி வந்துவிடக்கூடும் என்பதற்காக இரவில் வீட்டின் முன்தவை பூட்டவேயில்லை. அன்றாடம் அவனுக்காக இரவு உணவை தனியே எடுத்து வைத்தாள் அபர்ணா. அவன் அறையைச் சுத்தம் செய்து வைத்தாள்.

இப்படிச் சில நாட்கள் விடிகாலையில் எழுந்து துவைத்து தேய்த்து வைத்த அவனது உடைகளை மீண்டும் தண்ணீரில் ஊற வைத்து துவைத்து வந்தாள் அவளும் தன் கோபத்தைத் தான் இப்படிக் காட்டுகிறாளா. அல்லது வேதனையைக் கட்டுபடுத்த முடியவில்லையா

ஒருவன் வீட்டை விட்டுப் போய்விடுகிறான் என்பது எளிய விஷயமில்லை. தனது பதினேழு வருஷ கடந்தகாலத்தை அவன் விட்டுச் செல்கிறான். எத்தனை நினைவுகள். எவ்வளவு கனவுகள். பெற்றோர்களைத் தண்டிப்பதில் ஏன் பிள்ளைகள் இத்தனை ஆனந்தம் கொள்கிறார்கள்

ஒருவேளை கரணின் பக்கமிருந்து பார்த்தால் இதுவெல்லாம் இயல்பான விஷயமாக இருக்குமோ என்னவோ. வீட்டை விட்டு ஒடுவதென்பது மரத்தில் இருந்து திடீரெனப் பறவை விடுபட்டு வானத்தில் பறந்து போய்விடுவது போல எளிதான விஷயம் தானா. பறவைகளுக்கு எளிதாகக் கூட இருக்கலாம். மரமாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது

கரணைத் தேடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றவில்லை. எனது வேலைக்கு லீவு போட்டுவிட்டுச் சுற்றியலைந்தேன். சில சமயம் நானும் அபர்ணாவும் ஒன்றாகத் தேடினோம். கரண் கிடைக்காமல் வீடு திரும்பும் நாட்களில் அபர்ணா வேறு யாரோ ஒரு பெண்ணைப் போலிருந்தாள். அவள் முகத்திலிருந்த வேதனை மனதை மிகவும் கலக்கமடையச் செய்தது.

கரண் வீட்டை விட்டு ஒடியதற்குத் தானே காரணம் என அழுவாள். சில நேரம் நான் தான் காரணம் என்று சண்டையிடுவாள். பல நேரம் அவனுக்குப் படிக்கப் பிடிக்கவில்லை. வேறு நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்த்திருக்கலாம் என்று ஆதங்கப்படுவாள்.

ஒருவன் காணாமல் போனவுடன் ஆயிரம் காரணங்கள் கிளைவிடத் துவங்கிவிடுகின்றன. எல்லாமும் நியாயமாகவும் தோன்றுகின்றன.

கரண் வீட்டில் இருந்தாலும் அவன் அறையை விட்டு வெளியே வர மாட்டான். பள்ளிக்கு போகும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அறைக்குள்ளே இருந்தான். அதன் ஜன்னல்களையும் திறக்க மாட்டான். பல நேரம் லைட் போட்டுக் கொள்வது கூடக் கிடையாது. ஒருவனால் எப்படி இருட்டிற்குள் அமர்ந்திருக்க முடிகிறது. அபர்ணா தான் அவன் அறையில் எப்போதும் லைட்டை போட்டு விடுவாள். சில வேளைகளில் இரவில் லைட்டை அணைக்கவே மாட்டான். இரவெல்லாம் எரிந்து கொண்டேயிருக்கும் பகலிலும் அது எரிவதை கண்டிருக்கிறேன். பகலில் எதற்காக இப்படி லைட் எரிகிறது என்று கோபம் கொண்டிருக்கிறேன். அது அவன் தெரியாமல் செய்த விஷயமில்லை. தெரிந்தே அந்த விளக்கினை எரிய விடுகிறான்.

கோபம் இப்படியும் வெளிப்படுமா என்ன,

கரணுக்குப் படிப்பில் விருப்பமில்லை. விளையாட்டில் விருப்பமில்லை. சாப்பாட்டில் விருப்பமில்லை. நல்ல உடைகளில் விருப்பமில்லை. அவனுக்கு எதிலோ விருப்பமிருந்தது. அதை எங்களால் கண்டறிய முடியவில்லை.

அபர்ணா அவனை ச்துரங்கம் கற்றுக் கொள்ள அனுப்பி வைத்தாள். இரண்டு மாதங்கள் சென்று வந்தான். பிறகு ஒரு நாள் அவன் சதுரங்கம் ஆடப்பிடிக்கவில்லை என்று நிறுத்திக் கொண்டுவிட்டான். சில செடிகள் வளரும் போது திடீரென வளைந்து கொண்டுவிடுகின்றன. அவற்றை எப்படி நேர் செய்தாலும் அவை வளைந்து நிற்கவே விரும்புகின்றன. கரண் அப்படித்தானிருந்தான்.

வீட்டை விட்டு ஒடுகிறவனுக்கு வெளிப்படையான காரணங்கள் தேவையில்லையோ என்னவோ. உண்மையில் அவன் எங்களைத் தண்டிக்க விரும்பியிருக்கிறான். அந்தத் தண்டனை எளிதானதில்லை. ஒன்பது மாதங்களாக அன்றாடம் நாங்கள் அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறோம். இரவில் அவன் வந்துவிடுவானோ என்று கதவை பார்த்தபடியே இருந்தேன். பாதி உறக்கத்தில் கதவு தள்ளப்படும் சப்தம் கேட்பது போலத் தோன்றியது

கரண் இல்லாத அவனது படுக்கையைக் காண்பது மனதை ரணப்படுத்தியது. குளியல் அறையில் கரணின் சோப்பை கையில் எடுத்து முகர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன பைத்தியக்காரத்தனமிது. ஆனால் அந்தச் சோப்பினுள் கரணின் வாசனை கலந்திருக்கிறது.

கரண் இப்போது என்ன செய்து கொண்டிருப்பான். யாருடன் தங்கியிருப்பான். அவனது கஷ்டங்களை நாங்கள் நினைத்து நினைத்து வருந்திக் கொண்டிருந்தோம். அந்த வருத்தம் சமயத்தில் கோபமாக மாறிவிடும். எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் மேலும் மனச்சோர்வை அதிகமாக்கிவிடும்.

கரண் காணாமல் போனது இது மூன்றாம் முறை.

அவனது ஆறு வயதில் குற்றாலத்திற்குப் போயிருந்தோம். என்னோடு தான் அருவில் குளிப்பதற்காக வந்திருந்தான். பேரோசையுடன் கொட்டும் அருவியைக் கண்டு பயந்து ஒரமாக நின்றிருந்தான். மெலிந்த அவன் கைகளைப் பிடித்து அருவிக்குள் இழுத்தேன். வெற்றுடம்பில் தண்ணீர்பட்டு தெறிக்க விலகி ஒடினான். தண்ணீரை வாறி அவன் மீது அடித்தேன். அதன் குளிர்ச்சி தாங்க முடியாதவன் போல நடுங்கினான்

ஒண்ணும் செய்யாது கரண். வா. குளிக்கலாம் என்று அவனை மறுபடியும் இழுத்தேன்.

அவன் தயங்கி தயங்கி அருவிக்குள் வந்தான். சிறுகிளை போல விரிந்து வழியும் தண்ணீரில் அவனைக் குளிக்கச் செய்தேன். ஒரு நிமிஷம் கூட நிற்கவில்லை. அவசரமாக வெளியேறி ஒடினான்.

சிரித்தபடியே நான் பேரருவியினுள் நுழைந்து தலையைக் கொடுத்தேன். அருவிக்குள்ளும் என் கண்கள் கரணை பார்த்தபடியே இருந்தன. ஆனால் தண்ணீரின் வேகத்தில் கரண் புலப்படவில்லை. கூட்டம் வேறு இடித்துத் தள்ளியது. அருவியை விட்டு வெளியேறி வந்தபோது கரணைக் காணவில்லை.

எங்காவது தனியே உட்கார்ந்து கொண்டிருப்பான் என நினைத்து அங்குமிங்கும் தேடினேன். ஒரு வேளை அபர்ணா வந்து அவனை அழைத்துக் கொண்டு போய்விட்டாளா. அல்லது அவனே அவளைத் தேடிப் போய்விட்டானா எனக்குழம்பியபடியே அபர்ணா குளித்துக் கொண்டிருந்த பெண்கள் பக்கம் போவதற்கு முயன்றேன். அங்கிருந்த காவலர்கள் என்னை அனுமதிக்கவில்லை.

அபர்ணா தன்னை மறந்து அருவியில் குளித்துக் கொண்டிருந்தாள். அவள் பெயரை சொல்லி சப்தமிட்டேன். அது அருவிச் சப்தத்தினுள் கேட்கவில்லை. ஒரு பெண்ணிடம் அவளை அழைக்கும்படி சொன்னேன்

அபர்ணா ஈரம் சொட்டும் உடையுடன் வந்து நின்று கரண் எங்கே என்று கேட்டாள்

“இங்கே வரலையா“ என்று கேட்டேன்

“என்ன சொல்றீங்க. உங்க கூடத் தானே வந்தான்“ என்று பதற்றமாகக் கேட்டாள்

“அவனைக் காணோம்“ என்றேன்

அவ்வளவு தான் அபர்ணா சப்தமாக அழ ஆரம்பித்தாள். இதைக் கேட்டு அங்கிருந்த காவலர் ஒருவர் விசாரிக்க ஆரம்பித்தார். நாங்கள் மூவருமாகக் கரண்யை தேட ஆரம்பித்தோம்.

திடீரென அந்த அருவியும் இளவெயிலும் அருவிக்கரையில் மோதி வழியும் மனிதர்களும் அச்சமூட்டினார்கள். கரண் கரண் என்று கத்தியபடியே இங்குமங்கும் ஒடினோம். காவலர் உதவி மையத்தில் ஒலிபெருக்கியில் கூட அறிவித்தார்கள்.

எங்கே போயிருப்பான் கரண். ஒருவேளை ஒடும் தண்ணீரில் விழுந்துவிட்டானா. அல்லது கடைவீதிகளுக்குள் போயிருப்பானா. அபர்ணா கடைவீதியில் தனியே அலைந்தாள். நான் ஒருபக்கம் சுற்றி அலைந்தேன். சிறுவர்களின் முதுகு ஒன்று போலவேயிருப்பதை அன்று தான் கவனித்தேன்.

அபர்ணா கரடிபொம்மைகள் விற்பவனிடம் விசாரித்துக் கொண்டிருந்தாள். யாரும் கரணைப் பார்த்திருக்கவில்லை. மனம் விபரீதமான விஷயங்களைக் கற்பனை செய்து கொண்டிருந்தது. மதியம் இரண்டு மணி வரை அருவியைச் சுற்றிய இடங்களில் தேடி அலைந்தோம். பூங்காவிற்குக் கூடப் போய்ப் பார்த்து வந்தேன்.

அபர்ணா மறுபடியும் அருவிக்கரைக்கு ஒடினாள். ஆண்கள் பகுதியினுள் தனியே சுற்றி அலைந்தாள். யாரோ அவளைக் கோவித்துக் கொண்டார்கள். எதையும் அவள் கண்டுகொள்ளவேயில்லை.

வழிந்தோடும் தண்ணீரில் அமர்ந்தபடியே அபர்ணா அழுது கொண்டிருந்தாள் எனக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. அவளை ஆறுதல் படுத்த முயன்று தோற்றுப் போனேன்.

மதியம் மூன்றுமணி வரை கோவில் முன்பாகவே நின்று கொண்டிருந்தோம். இதற்குள் அபர்ணா நான்கு தடவைகள் சாமி கும்பிட்டு திரும்பி வந்தாள். வேண்டுதல் உடனே பலித்துவிடுமா என்ன.

நாலரை மணிக்கு ஒரு குடும்பம் குளிப்பதற்காக வந்தார்கள். எண்ணெய் வழியும் பருத்த வயிறுடன் ஒரு பெண்ணும் இரண்டு சிறுமிகளும் நடந்து வந்தார்கள். அந்தச் சிறுமியோடு கரணும் வந்து கொண்டிருந்தான். அவர்களுடன் எப்படிப் போனான் என்று தெரியவில்லை ஆனால் அபர்ணா தொலைவிலே அவனைக் கண்டுபிடித்துவிட்டாள்.

ஒடிப்போய் அவனைக் கட்டிக் கொண்டு அழுதாள்.

அந்த ஆள் உங்க பையனா. காலையில் குளிச்சிட்டு கிளம்பும் போது எங்க கூட வந்துட்டான். கேட்டா பதிலே பேசலை. ரூம்க்கு கூட்டிட்டு போயிட்டோம்.

கரணை அபர்ணா அடித்தாள். அவளை அடிக்க வேண்டாம் என்று நான் தடுத்தேன். கரண் அடிவாங்கிக் கொண்டு சலனமேயில்லாமல் நின்றிருந்தான். அந்தக் குடும்பம் அருவியை நோக்கிச் சென்றது. சிறுமிகள் திரும்பி பார்த்தபடியே நடந்தார்கள்.

கரணின் கைகளைப் பிடித்துக் கோவிலுக்குள் இழுத்துக் கொண்டு போனாள் அபர்ணா. திரும்பி வரும்போது இருவர் நெற்றியிலும் திருநீறு இருந்தது. அடுத்த அரைமணி நேரத்தில் நாங்கள் அறையைக் காலி செய்து பேருந்தில் ஏறியிருந்தோம்

எதற்காக யாரோ ஒரு குடும்பத்துடன் கரண் போனான் என்று புரியவில்லை. வீடு வந்து சேர்ந்தவுடன் அபர்ணாவிற்குக் காய்ச்சல் வந்துவிட்டது. நான் கரணிடம் எவ்வளவோ விசாரித்துப் பார்த்தும் அவன் ஒரு வார்த்தை பதில் சொல்லவில்லை

அதன் பிறகு நாங்கள் பயணம் போவதற்கே தயங்கினோம். அபர்ணா எப்போதும் அவனைத் தன் பொறுப்பிலே வைத்துக் கொண்டாள். டிவியில் குற்றால அருவியைக் காட்டினால் கூட எனக்குக் கரண் காணாமல் போய்த் தேடியது தான் நினைவில் வந்து போனது

இது நடந்து ஆறுமாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் அபர்ணா சொன்னாள்

“நீங்க தான் பிள்ளையை அருவிக்குள்ளே தள்ளிவிட்டு இருக்கீங்க. அந்தக் கோபத்தில தான் அவங்க கூடப் போயிருக்கான்“

“இல்லை அபி.. நான் கையைப் பிடிச்சி குளிக்கத் தான் கூட்டிட்டு போனேன்“

“அருவியில குளிக்காட்டி என்ன குறைஞ்சா போயிடும். அதான் அவன் பயப்படுறான்லே“

“நான் கையைப் பிடிச்சிட்டு தான் இருந்தேன்“

“அவங்க அருவிக்குக் கூட்டிகிட்டு வர்றப்போ நல்லவேளையா கோவில் வாசல்ல நின்னுகிட்டு இருந்தோம். இல்லாட்டி நம்ம பிள்ளை அவ்வளவு தான்“

என்று சொல்லி முடிப்பதற்குள் கண்ணீர் பொங்கிக் கொண்டு வந்தது

“அதான் வந்துட்டான்லே“

“அவனை இனிமேல் எதுக்கும் கட்டாயப்படுத்தாதீங்க“

சரியென்று தலையாட்டினேன்

அதன்பிறகு நான் அவன் கைகளைப் பிடிக்கும் போதெல்லாம் குற்றவுணர்வு கொண்டேன். அவன் எங்களுடன் சேர்ந்து சாப்பிடாத போதும் கூட நான் கோவித்துக் கொள்ளவில்லை.

அவனை வேறு பள்ளிக்கு அபர்ணா மாற்றிபோதும் நான் கோவித்துக் கொள்ளவில்லை. ஆனால் கரண் சப்தமில்லாமல் தான் விரும்பியதை செய்யக்கூடியவன் என்பதை நன்றாக உணர ஆரம்பித்திருந்தேன். அதன்பிறகு நாங்கள் மூவரும் வெளியே போவதாக இருந்தால் எங்கள் கவனம் முழுவதும் கரணின் மீதே இருந்தது.

கரண் பள்ளிவிட்டு திரும்பி வர அரைமணி நேரம் தாமதமானாலும் உடனே அபர்ணா கிளம்பி போய்விடுவாள். கரணுக்கு போட்டோ எடுத்துக் கொள்ளப்பிடிக்காது. ஆகவே அவனது பத்து பனிரெண்டு வயது புகைப்படங்கள் ஒன்று கூட என்னிடம் கிடையாது. உறவினர்கள் திருமண வீட்டிற்குப் போனாலும் கரண் சாப்பிடமாட்டான். கூட்டத்துடன் அமர்ந்து சாப்பிட அவனுக்குப் பிடிக்காது. அபர்ணா அவனுக்காக வீட்டில் சமைத்து வைத்திருப்பாள். அல்லது வழியில் ஹோட்டலில் அவனை மட்டும் சாப்பிடச் சொல்லுவாள்

ஹோட்டலி அத்தனை பேர் முன்னாலும் சாப்பிட முடிகிறவனுக்குக் கல்யாண வீட்டில் சாப்பிட மட்டும் ஏன் பிடிக்கவில்லை என்று ஆத்திரமாக வரும். ஆனால் காட்டிக் கொள்ள மாட்டேன்

கரணுக்கு எதில் ஆர்வமிருந்தது என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. வீட்டில் ஒடாமல் கிடந்த கடிகாரம் ஒன்றை தானே ஒரு நாள் கரண் சரிசெய்து கொடுத்தான். அத்தோடு அந்தக் கடிகாரத்தின் எண்கள் இருளில் ஒளிரும்படி செய்திருந்தான். எங்கே கற்றுக் கொண்டான் என்று தெரியவில்லை. ஆனால் அவனுக்குக் கடிகாரங்களை உருவாக்குவதில் விருப்பம் இருந்தது. அபர்ணாவின் கைக்கடிகாரத்தைப் புதிய வடிவில் உருமாற்றிக் கொடுத்தான்

“கடிகாரம் செய்வதற்கு ஏதாவது படிப்பு இருந்தால் அவனைப் படிக்க வைக்கலாம் “என்றாள் அபர்ணா

“அப்படி ஒரு படிப்பும் கிடையாது. “ என்றேன்

“என் வாட்சை எவ்வளவு அழகாக மாத்திட்டான்“ என்று பெருமையாகச் சொன்னாள் அபர்ணா

கடிகாரம் செய்வதற்கு என்ன படிப்பு இருக்கிறது. எந்தக் கல்லூரி இருக்கிறது என்று தேட ஆரம்பித்தேன். எவருக்கும் அதைப்பற்றித் தெரியவில்லை

இரண்டாம் முறையாகக் கரண் காணாமல் போனது அவனது பதினைந்தாம் வயதின் பிறந்த நாளின் போது. அன்றைக்குச் சைக்கிளில் வெளியே போனான். கேக் வாங்கிக் கொண்டு வரப்போவதாக அபர்ணா சொன்னாள். பத்து மணிக்கு வெளியே போனவன் மதியம் இரண்டு மணியாகியும் வகரண்ல்லை. நான் பைக்கில் ஒவ்வொரு பேக்கரியாக அலைந்து தேடினேன். கரணைக் காணவில்லை

ஒருவேளை ஏதாவது ஆக்சிடெண்ட் ஆகியிருக்குமா எனப்பயந்து அபர்ணா பொதுமருத்துவமனைக்குப் போய்த் தேடி வருவோம் என்றாள். நாங்கள் பயந்தது போல ஒரு தகவலும் இல்லை. இரவு வரை காத்திருந்தும் கரண் வீடு திரும்பி வரவில்லை

சைக்கிளில் ஒருவன் எங்கே போயிருப்பான். கரணோடு படிக்கும் அஸ்வின் ஹைவே ரோட்டில் அவன் போவதைப் பார்த்ததாகச் சொன்னான்.

ஹைவேயில் எங்கே போனான் என்று தெரியவில்லை. பைக்கில் நானும் மாரிமுத்து சாரும் ஒன்றாகத் தேடி அலைந்தோம். பெட்ரோல் பங்க் பையன் மட்டும் அப்படி ஒருவன் கடந்து போனதைக் கண்டதாகச் சொன்னான். எவ்வளவு தூரம் போவது எனப்புரியாமல் பைக்கில் போய்க் கொண்டேயிருந்தோம். வீடு திரும்பிய இகரண்ல் அபர்ணா தரையில் சுருண்டு படுத்துகிடப்பதைக் கண்டேன். லைட்டைக் கூடப் போடவில்லை. அழுது அழுது கண்கள் வீங்கியிருந்தன. அவளை எழுப்பிக் கரணைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றேன்

பிறந்த நாளும் அதுவுமா எங்க போனான் என்று அவள் மறுபடியும் விசும்பத் துவங்கினாள்

இரவில் கரண்யைப் பற்றி நினைத்தபடியே உறக்கமற்று கிடந்தோம். இரண்டு நாட்கள் கரணைத் தேடியும் கிடைக்கவில்லை. ஆனால் மூன்றாம் நாள் காலை அவன் சைக்கிள் வீட்டுவாசலில் நின்றிருந்தது. கரண் வீடு திரும்பியிருந்தான் தலையில் ஒரு ஒலைத்தொப்பி.

அபர்ணா அவனிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. கரண் தன் அறைக்குப் போய் உறங்கத் துவங்கிவிட்டான்

ஒரு வாரத்தின் பிறகு அபர்ணா சொன்னாள்

“கன்யாகுமரி வரைக்கும் சைக்கிள்ல போயிருந்தானாம்“

“சொல்லிட்டு போகலாம்லே“

“திடீர்னு தோணுச்சாம்“

எனக்குள் கோபம் பீறிட்டது. ஆனால் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. அந்த ஒலைத்தொப்பியை காணும் போதெல்லாம் அது என்னைப் பரிகாசம் செய்வது போலவே தோன்றியது

இரண்டாம் முறை காணாமல் போய்த் திரும்பி வந்தபிறகு கரணிடம் ஒரு மாற்றத்தை கண்டேன். அவன் படிப்பில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தான். கணிதபாடத்தில் அவன் முதல்மதிப்பெண் பெற்றிருக்கிறான் என்று அபர்ணா சந்தோஷமாகச் சொன்னாள்

ஒரு நாளில் இரண்டு டியூசன் படிக்கப் போய்வந்தான். இரவெல்லாம் கண்விழித்துப் படித்தான். ஆனால் இந்த மாற்றம் மூன்று மாதங்களில் வடிந்து போனது. பரிட்சை நாளில் பள்ளிக்குப் போகாமல் வீட்டிலே இருந்தான். அபர்ணா எவ்வளவு திட்டியும் அவன் பள்ளிக்கு போகவில்லை. என்ன நடக்கிறது அவனுக்குள் , ஏன் திடீரெனத் தன்னைச் சுருக்கிக் கொண்டுவிட்டான்

ஒரு நாள் அபர்ணா சொன்னாள்

“அவனுக்குப் படிக்கப் பிடிக்கலையாம்“

“என்ன செய்யப்போறானாம்“

“சைக்கிள்லயே இந்தியா பூரா போகப்போறானாம்“

“லூசாடி அவன். சைக்கிள்ல ஊர் சுத்துனா வயிறு நிரம்பிடுமா“

“அவன் கிட்ட நீங்க தான் பேசுங்க“

“பேசுனா வாயை திறக்கமாட்டாங்கிறேன்“

“என்கிட்டயும் தான் பேசமாட்டேங்குறான். அதுக்காக அப்படியே விட்றமுடியுமா“

“என்ன செய்யச் சொல்றே“

“நீங்க கண்டிக்கத்தான் வேணும்“

நான் கரணைக் கண்டிக்கவில்லை. ஆனால் அவன் சைக்கிள் பயணம் போகும் எண்ணத்தைத் தானே கைவிட்டுவிட்டான். அதையும் அபர்ணாவிடம் தான் சொல்லியிருக்கிறான்

கரண் மூன்றாம்முறை காணாமல் போவான் என்று நாங்கள் நினைக்கவேயில்லை. இந்த முறை அவன் ஒன்பது மாதங்கள் கடந்தும் வீடு திரும்பவில்லை. அவன் சைக்கிள் கூட வீட்டில் தானிருக்கிறது. பேரலை ஒன்று அவனை இழுத்துக் கொண்டு போய்விட்டது போல உணர்ந்தேன்.

தேடிச் சோர்ந்த நாட்களில் நாங்கள் இருவரும் இரவெல்லாம் விளக்கை எரிய விட்டு உட்கார்ந்தேயிருந்தோம். திடீரெனக் கரணின் ஐந்து வயதில் நடந்த விஷயங்களை அபர்ணா சொல்ல ஆரம்பிம்மாள். நான் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருப்பேன்

பிரிவு என்பது எவ்வளவு சிறிய சொல். எவ்வளவு பெரிய வலி. அதை ஏன் கரண் புரிந்து கொள்ளவில்லை. ஒடிப்போனவர்கள் நினைவுகளையும் எடுத்துக் கொண்டு போய்விட வேண்டியது தானே

சில நாட்கள் அபர்ணாவின் கனவில் கரண் வந்தான். விடிந்து எழுந்தவுடன் அதைப்பற்றிச் சொல்லிக் கொண்டிருப்பாள். ஆனால் ஒருமுறை கூட என் கனவில் கரண் வகரண்ல்லை.

கொஞ்சம் கொஞ்சமாக நானும் அபர்ணாவும் பித்தேறியவர்கள் போல நடந்து கொள்ள ஆரம்பித்தோம். கரண் எங்களுடன் இருப்பது போலவே கற்பனை செய்து கொள்ள ஆரம்பித்தோம். அதை உறுதிப்படுத்துவது போலக் கரண்க்குப் பிடித்த பிளம்கேக்கை பேக்கரியில் இருந்து வாங்கி வர ஆரம்பித்தேன். அபர்ணா அவனது அறையில் இகரண்ல் விளக்கை எரிய விட்டாள். மின்விசிறிறை சுழல விட்டாள்.

கரண் என்ற சொல்லை எங்கே கேட்டாலும் அது எங்கள் கரணை மட்டுமே குறிப்பதாக மாறியது.

வீட்டை துறந்து சென்றவர்கள் நினைவில் பெற்றோர்களின் வாடிய முகங்கள் வந்து போகுமா. தான் இல்லாத வீட்டின் வெறுமை எத்தகையது என அவர்கள் உணர்வார்களா, தன் கோபத்தை உலகம் மீது காட்ட இயலாமல் தான் வீட்டின் மீது காட்டுகிறார்களா.

அபர்ணா காத்திருக்கத் துவங்கிவிட்டாள். பெண்களால் எத்தனை ஆண்டுகளுக்கும் காத்திருக்க முடியும். கண்ணீரை உறையச் செய்துவிட முடியும். ஆனால் என்னால். ஒவ்வொரு நாளின் காத்திருப்பும் தோளில் பெரும்பாரமாக இறங்குகிறது

என் இயலாமையை எப்படி வெளிப்படுத்துவது. எதைக் கொண்டு என் கண்ணீரை மறைத்துக் கொள்வது

அபர்ணா துணியைக் கொடியில் காயப்போட்டுவிட்டு வந்தாள். என்னைக் கடந்து போகையில் அவள் எதையோ கேட்க விரும்பியது போல நின்றாள். ஆனால் கேட்கவில்லை.

எனக்கும் அவளிடம் எதையோ சொல்ல வேண்டும் போலிருந்தது. சமையல் அறையில் இருந்த கரணின் சாப்பாடு தட்டை வேண்டுமென்றே எடுத்து கீழே போட்டேன்

அது தரையில் விழுந்து சப்தம் எழுப்பியதை அவள் கேட்காதவள் போல நின்று கொண்டிருந்தாள். எனக்கோ அது எங்கோ தொலைவில் சப்தம் எழுப்பியதைப் போலக் கேட்டது.

தலைகீழாகக் கிடந்த தட்டின் முதுகினைக் காணும் போது கரண் நினைவு மிகவும் அதிகமானது எனக்கு மட்டும் தான்

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 18, 2021 11:00

March 17, 2021

கிணற்றின் வயது

புதிய சிறுகதை

அவர்கள் மூன்று பேர் வந்திருந்தார்கள்.

மூவரில் உயரமாக இருந்தவருக்கு வயது எழுபதிற்கும் மேலிருக்கும். ஈட்டி போன்ற உறுதியான உடற்கட்டு கொண்டிருந்தார். தோளில் ஒரு துண்டு. அழுக்கடைந்த வேஷ்டி. உடன் வந்திருந்த இரண்டு பேரும் இளைஞர்கள். பெரியவர் கையில் ஒரு மஞ்சள் பையிருந்தது. அதில் ஏதோ ஒரு பொருளைச் சுற்றி வைத்திருந்தார்.

வீட்டின் பின்புறமிருந்த கிணற்றடிக்கு அவர்கள் போய் நின்றபோது விசாலாட்சி பூக் கட்டிக் கொண்டிருந்தாள். அவளுக்கு எழுபது வயது நடந்து கொண்டிருந்தது. தலையில் ஒரு கறுப்பு முடி கூடக் கிடையாது. மற்றவர்களைப் போல அவள் தலைக்குக் கறுப்பு மை பூசிக்கொள்வதுமில்லை. செங்கல் நிற சுங்கடி புடவை உடுத்தியிருந்தாள். அவளது ஜாக்கெட் தொளதொளவென இருந்தது.

“இன்னைக்கு வெள்ளிக்கிழமையாக இருக்கு. பூஜையை மட்டும் முடிச்சிடுகிவோம். கிணற்றை மூடுறதை நாளைக்குச் செய்யலாம்“ என்றார் பெரியவர்

விசாலாட்சி வருத்தம் தோய்ந்த முகத்துடன் அதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கு வீட்டுக்கிணற்றை மூடுவதில் விருப்பமில்லை. எவ்வளவோ சண்டையிட்டுப் பார்த்துவிட்டாள். வீட்டில் அவளது மகன் பிரசாத் மருமகள் பாவனா பேரன் பேத்தி என எல்லோரும் கிணற்றை மூட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்கள்

“ஒரு தட்டுல வெத்திலை பாக்கு, வெல்லம், தேங்காய் பழம், பூ வச்சி கொண்டுட்டு வாங்க“ என்றார் பெரியவர்

விசாலாட்சி பூஜை அறைக்குள் சென்று ஒரு தட்டில் அவர் கேட்ட பொருட்களை எடுத்துக் கொண்டு வந்தாள். திடீரென அவள் கட்டிய பூ மாலையைச் சாமிக்குப் போடுவதற்குப் பதிலாகக் கிணற்றுக்கே போடலாமே என்று தோன்றியது. அதையும் தட்டில் வைத்தாள். கூடவே 101 ரூபாய் பணத்தையும் வைத்து எடுத்துக் கொண்டு வந்தாள்

இதற்குள் வந்தவர்கள் கிணற்றடியைச் சுத்தம் செய்து வைத்திருந்தார்கள். இளைஞன் வாழையிலை ஒன்றை வெட்டி படையலுக்காக விரித்து வைத்திருந்தான்.

அந்தப் பெரியவர் தன் பையிலிருந்து சிறிய வெண்கலப்பதுமை ஒன்றை வெளியே எடுத்து இலையின் முன்னால் வைத்தார். விசாலாட்சி கொண்டு வந்திருந்த பூஜை பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து இலையில் பரப்பி வைத்தார்

பிறகு அவளிடம் “ஒரு நாழி நிறைய அரிசியும் நிறை விளக்கும் கொண்டுகிட்டு வாங்க“ என்றார்

“நாழியை எங்கேபோய்த் தேடுவது“ என ஒரு நிமிஷம் யோசித்தாள். மரக்கால் உறி, மண்கலயம், வெண்கலப் பானைகள். எல்லாம் மறைந்து போய் எத்தனை ஆண்டுகளாகிவிட்டது. அவரிடமே கேட்டாள்

“சின்ன உழக்கு தான் இருக்கு கொண்டுட்டு வரவா “

“அப்போ ஒரு சொளகு நிறையப் பச்சரிசி கொண்டுகிட்டு வாங்க“ என்றார் அந்தப் பெரியவர்

சமையல் அறைக்குள் போய்ப் பச்சரிசியைத் தேடினாள். சமையல் மருமகள் வசமானபிறகு எந்தப் பொருள் எங்கேயிருக்கிறது என்று தெரியாது. சில பாக்கெட்டுகளைக் காணும் போது அது என்ன பொருள் என்று கூட அவளுக்குத் தெரியாது. சமையல் அறையே மாறிவிட்டது. மீனாம்பாள் இருந்தவரைக்கும் சமையல் அறையில் அவளைத் தவிர வேறு எவரும் ஒரு உப்புக்கல்லைக் கூட எடுக்க முடியாது. மாமியார் இல்லாத குறையைத் தீர்க்க வந்த மகராசி, அவளும் போய் சேர்ந்துவிட்டாள் என்று நினைத்துக் கொண்டபடியே பச்சரிசியைச் சொளகில் கொண்டு போய்க் கொடுத்தாள்

அவர்கள் வாழை இலையில் அரிசியைப் பரப்பினார்கள். பூ மாலையைக் கிணற்றுக்குச் சூடினார்கள். உருளையில் பூவைக் கிள்ளி சொருகினான் இளைஞன்.

ஐந்து முகம் கொண்ட விளக்கினை ஏற்றினார் அந்தப் பெரியவர்.

“சூடம் காட்டுற தட்டும் மணியும் வேணும் “என்று இளைஞன் கேட்டான்

விசாலாட்சி வீட்டிற்குள் அதை எடுக்கப்போனபோது மருமகள் டிவி பார்த்துக் கொண்டிருந்தபடியே “காசு எதுவும் குடுக்காதீங்க. காண்டிராக்டர்கிட்ட ஏற்கனவே அட்வான்ஸ் குடுத்து இருக்கோம் “ என்றாள்

“சூடம் காட்டுற தட்டு வேணுமாம்“

விசாலாட்சியின் பேரன் நந்து கேட்டான்

“பாட்டி. கிணற்றை எதை வச்சி மூடுவாங்க. ஸ்டோனா. இல்ல டோரா “

அவள் பதில் சொல்லவில்லை. சூடம் காட்டுகிற தட்டையும் மணியையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தவள் திரும்பி பேரனிடம் சொன்னாள்

“சாமி கும்புட வா. நந்து“

“போ பாட்டி. நான் வரலை. அந்தக் கிணறு ரொம்ப டர்ட்டி. அது கிட்ட போகக் கூடாதுனு மம்மி சொல்லியிருக்காங்க“

“நாளைக்குக் கிணற்றை மூடப்போறாங்கடா“

“புது கார்ஷெட் கட்டப்போறோம். மம்மி சொல்லிட்டாங்க“

பேரபிள்ளைகளும் இப்படியாகிவிட்டார்களே என்று விசாலாட்சிக்கு ஆதங்கமாக இருந்தது. இந்தக் கிணற்றடியில் வைத்து எத்தனை நாட்கள் மகனுக்குக் கதை சொல்லியிருக்கிறோம். விடுமுறைக்காகச் சேலத்திலிருந்து வந்த உறவினர்பிள்ளைகள் அத்தனையும் இந்தக் கிணற்றடியைச் சுற்றித் தானே விளையாடினார்கள். கதை பேசினார்கள். குளித்தார்கள்.

அவள் சூடம்காட்டும் தட்டினையும் மணியினையும் அந்த இளைஞனிடம் கொடுத்தாள்.

இதற்குள் பெரியவர் தன் மேல்சட்டையைக் கழட்டிவிட்டு இடுப்பில் துண்டைக் கட்டியபடியே மந்திரம் சொல்பவர் போல எதையே முணுமுணுத்தபடியே இலையின் முன்னால் அமர்ந்திருந்தார்.

என்ன வணங்குகிறார்கள் எனப்புரியாமல் அந்தப் பெரியவரைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பெரியவர் விளக்கைத் தூண்டி விட்டார். இளைஞன் மணி ஆட்டினான்

பெரியவர் கைபிடி நிறைய அரிசையை எடுத்து ஏதோ சொல்லி கிணற்றில் கொண்டு போய்ப் போட்டுவந்தார். பின்பு நான்கு திசைகளை நோக்கியும் பூப்போட்டு வணங்கினார். தேங்காய் உடைத்துத் தீபராதனை காட்டினார். இளைஞன் வேகமாக மணியை அடித்தான்

 அவளிடம் “கும்பிட்டுக்கோங்க “என்றார்.

அவள் கிணற்றை இருகரம் கூப்பி வணங்கினாள். பின்பு கோவிலை வலம் வருவது போலக் கிணற்றைச் சுற்றி வந்து வணங்கினாள்

“வீட்டில இருந்து ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டுவந்து கிணற்றில் ஊற்றுங்க “என்றார் அந்தப் பெரியவர்

விசாலாட்சி வீட்டிற்குள் போய் ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டுவந்து பெரியவரிடம் நீட்டினாள்

“நீங்களே ஊற்றுங்க“ என்றார்

மரணப்படுக்கையில் கிடப்பவர்களுக்குக் கடைசியாகப் பால் ஊற்றுவது நினைவிற்கு வந்து போனது. கிணற்றில் அந்தத் தண்ணீரை ஊற்றினாள். எவ்வளவு தண்ணீரை இந்தக் கிணறு நமக்குத் தந்திருக்கிறது. இன்று அந்தக் கிணறுக்கு நாம் ஒரு டம்ளர் தண்ணீர் பதிலுக்குத் தருகிறோம். இரண்டும் ஒன்று தானா

அவளை அறியாமல் கண்கள் கலங்கின

“வீட்டுல இருக்கிற எல்லோரும் வந்து கும்பிட்டுக்கோங்க“ என்றார் பெரியவர்

தன்னைத் தவிர எவருக்கும் கிணறு வேண்டியதில்லை என்று அவரிடம் எப்படிச் சொல்வது. அவள் கிணற்றைக் கைகூப்பி வணங்கினாள்.

“ராத்திரி முழுக்க இந்த விளக்கு எரியட்டும். காலையில் நாங்க வந்து கிணற்றை மூடுற வேலையை ஆரம்பிச்சிடுறோம்“

சரியெனத் தலையாட்டினாள்

அவர் தனது பையில் உடைத்த தேங்காய் பழம் வெற்றிலை அரிசி வெல்லம் உள்ளிட்ட பொருட்களை எடுத்துப் போட்டுக் கொண்டார். பிறகுத் தன் சட்டையை அணிந்தபடியே சொன்னார்

“சாந்தி செய்யாமல் கிணற்றை மூடக்கூடாதும்மா. “

அவளுக்கு அது புரிந்தேயிருந்தது.

“கிணற்றுக்குள்ளே ஒரு ஆமை இருக்கு“ என்றாள் விசாலாட்சி

“நாளை கிணற்றுக்குள்ளே இறங்கி அதை வெளியே எடுத்துவிட்ருவோம் “என்றான் இளைஞன்

“அது எங்கே போகும்“ என்று கேட்டாள் விசாலாட்சி

“நாங்களே கொண்டு போய் ராஜாஊரணியில விட்ருறோம்“ என்றான்

இதுவரை அந்த ஆமை வெளிஉலகினை கண்டதேயில்லை. நாளைக்குத் தான் முதன்முறையாக வெளியுலகினை காணப்போகிறது

“மறக்காமல் ஆமையை வெளியே எடுத்துவிடணும்“ என்று சொன்னாள் விசாலாட்சி.

பெரியவர் தலையாட்டிக் கொண்டார்

ஒரு இளைஞன் வாளி கயிறை உருவி தனியே எடுத்தான். இரும்பு உருளையைக் கழட்டினான்.

“இதை எடுத்து உள்ளே வச்சிக்கோங்க“ என்றான் ஒருவன்

“இனிமே இது எதுக்கு“ எனக்கேட்டாள் விசாலாட்சி

“நாங்க எடுத்துகிடவா“ என்று கேட்டான் மற்ற இளைஞன்

விசாலாட்சி தலையாட்டினாள். அவன் அந்த வாளி கயிறை கையில் எடுத்துக் கொண்டான்

பெரியவர் மீண்டும் ஒரு முறை கிணற்றை வலம் வந்து வணங்கினார். பின்பு கிளம்புவதற்கு முன்பு சொன்னார்

“கிணறு அமையுறது ஒரு பாக்கியம். அதுவும் நல்ல தண்ணீர் கிடைக்குதுன்னா ரொம்பப் புண்ணியம் பண்ணியிருக்கோம்னு அர்த்தம். பெரிய அய்யா இருக்கிறப்போ அடிக்கடி உங்க வீட்டுக்கு வருவேன். இந்தக் கிணற்று தண்ணியைக் குடிச்சிருக்கேன். சக்கரையா இனிக்கும். இன்னைக்கு அப்படித் தண்ணீ ஏது.  இப்போ தண்ணிய பாக்கெட்டுல அடிச்சி விக்குறான். இந்தக் கர்மத்தை எல்லாம் பாக்குறதுக்குளே பெரிய அய்யா செத்துப்போயிட்டார். ஒரு கிணற்று தண்ணியைக் குடிச்சி வளர்ந்தா எந்த நோயும் வராதுனு சொல்வாங்க. இன்னைக்குச் சம்பாதிக்கிறதுல பாதியை ஹாஸ்பிடல்காரனுக்குத் தான் குடுக்க வேண்டியிருக்கு. தண்ணியை மொத்தமா சீரழிச்சிப்புட்டாங்க“

என்றபடியே அவர் தன்னோடு வந்தவர்களை அழைத்துக் கொண்டு புறப்படத் துவங்கினார்

கிணற்றடியில் எரியும் விளக்கைப் பார்த்தபடியே விசாலாட்சி அமர்ந்திருந்தாள். இறந்த கணவனின் உடல் முன்னால் அமர்ந்திருந்த நாள் நினைவில் வந்து போனது. கிணற்றை இழப்பதும் மனிதரை இழப்பதும் வேறுவேறா என்ன.

••

இரண்டு முறை புதிதாகக் கிணறு வெட்டி அவள் பார்த்திருக்கிறாள். அவளுக்கு ஏழு வயதான போது கிருஷ்ணமூர்த்தி மாமா தோட்டத்தில் கிணறு வெட்டினார்கள். ஊற்றுமுகம் தென்பட்டதும் பெண்கள் குலவையிட்டார்கள். ஊற்றின் கண்திறந்து தண்ணீர் பீய்ச்சியடித்தபோது மாமா பூமியைக் கைகூப்பி வணங்கினார். அந்தத் தண்ணீரை கைநிறைய வாங்கிக் குடித்தார். இன்னொரு முறை கோவிலை ஒட்டிய நந்தவனத்தில் பழைய கிணறு தூர்ந்துவிட்டது என்று புதிய கிணறு தோண்டினார்கள். நாற்பது அடியில் நல்ல தண்ணீர் வந்துவிட்டது. கோவிலே ஆரவாரம் செய்தது. ஆனால் கிணற்றை மூடப்போவதை தன் வாழ்நாளில் இன்றைக்குத் தான் முதன்முறையாகப் பார்க்கிறாள். அதுவும் தன் வீட்டுக்கிணற்றை மூடுவதைக் காணுவது எத்தனை துயரமானது.

கோடை காலத்தில் கிணற்றுத் தண்ணீர் வற்றிப்போய்விடும்.. அப்போது காற்றுக் கிணற்றில் புகுந்து வெளியேறும் போது விநோதமான சப்தம் வரும். கைவிடப்பட்ட தாயின் அழுகையைப் போன்ற ஒலியது. மழைக்காலத்தில் கிணறு பிள்ளைத்தாய்ச்சியின் வயிற்றைப் போலாகிவிடும். அதைக் காணவே அத்தனை மகிழ்ச்சியாக இருக்கும்.

கிணற்றுக்கு எப்படித் தண்ணீர் வந்து சேருகிறது. எப்படி மறைந்து போகிறது என்பது புதிரானது. தண்ணீர் நம் கண்ணில் படாத ஒரு பயணத்தை மேற்கொள்கிறது. ஒருவேளை அதற்கும் தாய்வீடு இருக்குமோ என்னவோ.

அவள் திருமணமாகி வந்து இந்த ஆண்டுடன் ஐம்பத்திரெண்டு வருஷங்களாகி விட்டது. இத்தனை வருஷங்களாக இந்தக் கிணறு தான் அவளது உற்ற தோழி. துணை. எத்தனையோ நாட்கள் கிணற்றிடம் தன் கவலைகளைச் சொல்லியிருக்கிறாள். அழுதிருக்கிறாள். கிணற்றுத் தண்ணீர் அவளைச் சாந்தப்படுத்தியிருக்கிறது.

அதுவும் மார்கழி மாத குளிரில் இந்தக் கிணற்றுத் தண்ணீரை இறைத்துத் தலையில் ஊற்றிக் கொண்டவுடன் உடம்பில் அதுவரை இருந்த கசடுகள் எல்லாம் கரைந்துபோய் ஆள் புதுமனுஷியாகிவிட்டது போலிருக்கும். அவள் அந்தக் கிணற்றுக்கும் ஒரு பெயர் வைத்திருக்கிறாள். ரகசியமாக அதைச்சொல்லி அழைப்பாள்.

வீட்டுக் குளியலறை ஒருபோதும் கிணற்றடி தந்த சுகத்தை நினைவுகளைத் தர இயலாது.

கிணற்றை மூடி அந்த இடத்தில் கார்ஷெட் கட்ட வேண்டும் என்று அவளது மகன் நீண்டகாலமாகவே சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால் விசாலாட்சி அதை அனுமதிக்கவில்லை. வீட்டில் இரண்டு கார்கள் வந்தபிறகு அதை வாசலில் நிறுத்த இடமில்லை என்பதால் கிணற்றை மூடி ஷெட் கட்ட வேண்டும் என்பதில் மருமகள் பாவனா தீவிரமாக இருந்தாள்.

என்ன பெண்ணிவள். கிணற்றை மூடச் சொல்கிறாளே என்று விசாலாட்சிக்கு அவள் மீது பெருங்கோபம் வந்தது. அவளுடன் நேருக்கு நேராகவே பேசி சண்டையிட்டிருக்கிறாள்

“அந்த கிணற்றை நாம இப்போ யூஸ் பண்ணுறதுல்ல. அதுல இருந்து கெட்ட நாற்றம் அடிக்குது. அதை மூடுனா என்ன தப்பு“

“மழைக்காலத்துல கிணறு நிறைஞ்சப்போ அந்தத் தண்ணியைத் தானே செடிகளுக்கு யூஸ் பண்ணுறோம்“ என்றாள் விசாலட்சி

“அது நல்ல தண்ணியில்லை “

“அந்த தண்ணியில தான் நான் குளிச்சேன். உன் புருஷன் காலேஜ் போற வரைக்கும் குளிச்சான். அதைத் தான் நாங்க இருபது முப்பது வருஷமாகக் குடிச்சிட்டு இருந்தோம்“

“பழைய கதைய பேசி ஆகப்போறதில்லை. இப்போ குழாய்ல வர்ற தண்ணிய குடிக்கவே பயமா இருக்கு. மினரல் வாட்டர் குடிச்சிகிட்டு இருக்கோம். இதுல எங்களைக் கிணற்று தண்ணீரை குடிக்கச் சொல்றீங்களா“

“நான் கிணற்று தண்ணியைக் குடிக்கச் சொல்லலை. ஆனா கிணறை மூட வேண்டாம்னு சொல்றேன்“

“அப்போ நாங்க வேற வீடு பாத்து போய்கிடுறோம். எனக்குக் கார் நிறுத்த இடம் வேணும். நீங்களே உங்க கிணற்றைக் கட்டிகிட்டு அழுங்க “

இந்தச் சண்டையின் போதெல்லாம் விசாலாட்சி தான் மனம் உடைந்து போனாள். சில நாட்கள் ஆற்றாமையில் அழுவாள். மகனிடம் தனியே பேசிப் பார்ப்பாள். அவனும் பிடிவாதமாகக் கிணற்றை மூட வேண்டும் என்றே சொன்னான்

ஒருவேளை அவள் கணவர் உயிரோடு இருந்திருந்தால் அவளுக்குத் துணையாகப் பேசியிருப்பாரோ என்னவோ. அவருக்கு வெளியே போய்விட்டு வந்தால் எந்த இரவிலும் கிணற்றில் போய்த் தண்ணீர் இறைத்து குளிக்க வேண்டும். தன் வாழ்நாளில் ஒரு நாள் கூட வெந்நீரில் அவர் குளித்தது கிடையாது. பச்சைத் தண்ணீர் தான் அதுவும் இந்தக் கிணற்றுத் தண்ணீர் தான். சில நாட்கள் வெளியூர் பயணம் போய்விட்டு இரவு திரும்பி வந்தால் கூடப் பையை வைத்த மறுநிமிடம் கிணற்றடிக்குப் போய்விடுவார். தானே இறைத்து இறைத்து வாளி தண்ணீரைத் தலையில் ஊற்றிக் குளிப்பார்.

மாமனாருக்குத் தண்ணீர் இறைத்து வைக்க வேண்டும். நாலு அண்டா தண்ணீர் குளிப்பார். ஒரு அண்டா தண்ணீர் வெதுவெதுப்பாக இருக்க வேண்டும். அடுத்தது நல்ல சூடு கலந்த தண்ணீர். மூன்றாவது லேசாக வெதுவெதுப்பு. நாலாவது பச்சைத்தண்ணீர். இத்தனையும் அவள் தான் ரெடி பண்ண வேண்டும். அவரும் ஒரு நாளில் இரண்டு முறை குளிக்கும் பழக்கம் கொண்டவர். வயதான காலத்தில் அவர் உட்கார்ந்து குளிப்பதற்காக ஒரு முக்காலி ஒன்றைச் செய்து வைத்திருந்தார்கள். அதில் உட்கார்ந்து கொண்டு தான் குளிப்பார்.

இரண்டு வருஷங்கள் மழையில்லாமல் போய்க் கிணறு முற்றிலும் வற்றியபோது வீட்டில் போரிங் போட்டு மேல்நிலை தொட்டி கட்டி தண்ணீரை ஏற்றினார்கள். அதன்பிறகு கிணற்றில் தண்ணீர் இறைக்கும் வேலை குறைந்து போனது. ஆனாலும் துவைப்பதற்குக் கிணற்றுத் தண்ணீர் தான். அந்தத் தண்ணீரில் எவ்வளவு அழுக்காக இருந்தாலும் போய்விடும்.

அவளது மாமனார் காலத்தில் தான் அந்த வீட்டைக் கட்டினார்கள். வக்கீல் கோசல்ராம் என்றால் அந்த ஊரில் தெரியாதவர்கள் கிடையாது. அந்தக் காலத்திலே ஆயிரம் ரூபாய் பீஸ் வாங்கிய பெரிய வக்கீல். ஜமீன்தார்கள் வண்டி போட்டு வந்து வீட்டுவாசலில் காத்து கிடப்பார்கள்..

அவர் கட்டிய வீடு என்பதால் மிகப்பெரியதாக இருந்தது. விசாலமான ஹால். அதில் ஒரு ஊஞ்சல் போட்டிருந்தார்கள். லட்சுமி விலாஸம் என அவர் தன் தாயின் பெயரைத் தான் வீட்டிற்கு வைத்திருந்தார். பத்து பனிரெண்டு அறைகள். அவர் கட்சிக்காரர்களைச் சந்தித்துப் பேச தனி அறை. மாடியில் அவரது நூலகம். படிப்பறை. மாடியிலும் இரண்டு படுக்கை அறைகள். இத்தனை இருந்த போதும் வீட்டிற்குள் கழிப்பறை கிடையாது.. வீட்டின் பின்புறம் இருந்த வெளியில் ஒரு ஓரமாக ஓடு வேய்ந்த கழிப்பறை அமைத்திருந்தார்கள். வீட்டின் பக்கம் நிறையக் காலி இடம் கிடந்தது. அதில் ஒரு மாமரமும் தென்னை மரங்களும் அவள் வந்து தான் வைத்தாள். இன்று அந்த மரங்கள் உயர்ந்தோங்கி நிற்கின்றன.

வீட்டின் பின்பக்கமிருந்த கிணற்றை யார் வெட்டியது என்றோ, அதற்கு எத்தனை வயது என்றோ யாருக்கும் தெரியாது. கிணற்றுக்குக் கூட யூகமாக வயதைச் சொல்லிவிடலாம் ஆனால் தண்ணீருக்கு ஏது வயது. அந்தக் கிணற்றை ஒட்டி துவைகல் ஒன்றினைப் போட்டிருந்தார்கள்.

இரண்டு வாழை மரங்களையும் பூச்செடிகளையும் விசாலாட்சி தான் வைத்தாள். கிணற்றடியில் பெரிய கல்தொட்டி வைத்திருந்தார்கள். அதில் எப்போதும் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருக்கும். தண்ணீர் இறைக்க இரும்பு வாளியினை நார்கயிற்றில் கட்டியிருப்பார்கள். இரும்பு உருளையில் கயிறு இழுபடும் போது விநோதமாகச் சப்தமிடும். அது ஒரு சங்கீதம்.. யார் கிணற்றடியில் நிற்கிறார்கள் என்பது அந்தச் சப்தத்தை வைத்து அவளால் தெரிந்து கொள்ள முடியும். ஆளுக்கு ஒரு விதமாகத் தான் அந்த உருளை சப்தமிடுகிறது.

வக்கீலின் பிள்ளையாக இருந்த போதும் விசாலாட்சியின் கணவர் நாராயணன் அளந்து பேசக் கூடியவர். அவர் ஒரு போட்டோகிராபர். பஜாரில் அவர் தனியாகப் போட்டோ ஸ்டுடியோ துவங்கியதை அவரது தந்தை விரும்பவில்லை. ஆனால் தன்விருப்பத்தின் படியே தான் அவர் செயல்பட்டார். காலை ஏழு மணிக்கு ஸ்டுடியோவிற்குப் போனால் மதியம் மூன்று மணிக்குச் சாப்பிட வருவார். பின்பு ஸ்டுடியோவை மூடி விட்டு அவர் வீடு வந்து சேருவதற்கு இரவு பத்தரையாகிவிடும்.

அவர்களுக்கே சொந்தமாகப் போட்டோ ஸ்டுடியோ இருந்த போதும் அவர் விசாலாட்சியை நிறையப் புகைப்படம் எடுத்ததில்லை. ஆனால் மகன் பிரசாத்தையும் மகள் செல்வியையும் நிறையப் போட்டோ எடுத்திருக்கிறார். அவரும் அவரது தந்தையும் இருப்பது போல வீட்டில் ஒரு போட்டோ கூடக் கிடையாது. பெரும்பாலும் தந்தையின் முன்னால் அவர் நின்று பேசவே மாட்டார். ஏதாவது சொல்லவேண்டும் என்று கோசல்ராம் நினைத்தால் கூட மருமகளிடம் தான் சொல்லுவார்

கோசல்ராமின் மனைவி பிரசவமான ஆறாம் நாள் இறந்து போனவள். ஆகவே பிள்ளையை வளர்க்க உதவியாக அவரது அத்தை மீனாம்பாளை அழைத்துக் கொண்டு வந்திருந்தார். அவள் தான் நாராயணனை வளர்த்தாள். அவளுக்கும் விசாலத்திற்கும் ஆகவேயில்லை. எப்போதும் சண்டை. அவள் விசாலத்திடம் குறை கண்டுபிடித்துக் கொண்டேயிருந்தாள்.

அத்தை குளிப்பதற்காகக் கிணற்றடியை ஒட்டி சிறிய ஒற்றை அறை ஒன்றை கோசல்ராம் கட்டிக் கொடுத்தார். அந்த அறையில் அவள் ஒருத்தியைத் தவிர வேறு எவரும் குளிக்கக் கூடாது.

விசாலாட்சி கிணற்றடியில் ஒரு அண்டாவை வைத்திருந்தாள். அந்த அண்டாவில் தண்ணீரை நிரப்பி மெதுவாகக் குளிப்பாள். சில நாட்கள் அவள் குளிப்பதை ஒரு காகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். சில நேரத்தில் குளித்து முடித்தபிறகும் அவள் கிணற்றடியிலே ஈரக்கூந்தலை உணர்த்தியபடியே நின்றிருப்பாள். வெயில் ஏறிய நாட்களில் கிணற்றடியில் நிற்கும் போது விநோதமான குளிர்ச்சியை உணர முடியும்.

அந்தக் கிணற்றில் இறைத்த தண்ணீரை வடிகட்டி அதைத் தான் குடித்தார்கள். சமையலுக்குப் பயன்படுத்தினார்கள். வக்கீல் வீடு என்பதால் கட்சிக்காரர்கள் குடிப்பதற்கென்றே பெரிய மண்பானை வெளியே வைக்கப்பட்டிருந்தது. கூடவே ஒரு அலுமினிய டம்ளர். அதில் நாலைந்து டம்ளர் தண்ணீர் மோந்து குடித்துவிட்டு தேனா இனிச்சிகிடக்கு என்று சொன்னவர்கள் உண்டு.

அந்தத் தண்ணீரை மருமகள் பாவனா கேவலமாகப் பேசுகிறாள். அவள் நகரத்தில் பிறந்து வளர்ந்தவள். ஆறு, குளம். கிணறு எல்லாம் அவளுக்குத் தேவையில்லாத விஷயங்கள். அவள் அறிந்து வைத்திருப்பதெல்லாம் தண்ணீர் வீட்டுக்குழாயில் வரும். அல்லது தண்ணீர் லாரியில் வரும் பிடித்துக் கொள்ள வேண்டும். அதுவும் பெங்களூரில் ஹாஸ்டலில் தங்கி படித்தவள். அங்கே தண்ணீர் பிரச்சனையே கிடையாது.

தன் வாழ்நாளில் ஒருமுறை கூடப் பாவனா கிணற்றில் தண்ணீர் இறைத்தது கிடையாது கிணற்றடியில் குளித்தது கிடையாது. அவளுக்கு எப்படிக் கிணற்றின் அருமை தெரியும் என நினைத்துக் கொள்வாள் விசாலாட்சி

மருமகள் சொன்னது போலக் கடந்த ஐந்து வருஷங்களாக அவர்கள் கிணற்று தண்ணீரைக் குடிக்கப் பயன்படுத்தவில்லை. வீட்டுக்குழாயில் வரும் தண்ணீரை மினரல் வாட்டர் பிளாண்ட் மூலம் சுத்தகரிப்புச் செய்து தான் குடிக்கிறார்கள். குளிப்பதற்கும் துவைப்பதற்கும் கூடக் குழாய் தண்ணீர் தான்.விசாலாட்சி மட்டும் கிணற்றுத் தண்ணீரில் பிடிவாதமாகக் குளித்து வந்தாள். ஆனால் ஒருமுறை காய்ச்சல் கண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது டாக்டர் அவள் கிணற்றுத் தண்ணீரில் குளிக்கக் கூடாது என்றார். அதை மகன் பிடித்துக் கொண்டுவிட்டான். அத்தோடு அவள் கிணற்றடியில் குளிப்பது நிறுத்தப்பட்டது. ஆனால் கிணற்றில் தண்ணீர் இறைத்துச் செடிகளுக்கு ஊற்றுவாள். மழைக்காலத்தில் கிணற்றில் எவ்வளவு தண்ணீர் உயர்ந்திருக்கிறது என்று பார்த்துக் கொள்வாள். கோடையில் கிணறு வற்றிய போது கையளவு தண்ணீரில் கிடக்கும் ஆமையை வேடிக்கை பார்த்தபடியே இருப்பாள்.

அந்த ஆமை சில நேரம் தலையை எட்டிப்பார்க்கும். வெயில் படுவதைக் கண்டதும் வெளியே பார்ப்பதற்கு என்ன இருக்கிறது என்பது போலத் தலையை ஒட்டிற்குள் இழுத்துக் கொண்டுவிடும்.

விசாலாட்சியும் அப்படித்தானிருந்தாள். அவளுக்கும் வீடு தான் உலகம். அதுவும் கணவர் இறந்தபிறகு வெளியூர் போவதை பெரும்பாலும் தவிர்த்துவிட்டாள். வீட்டில் இருக்கும் நேரங்களில் கூடத் தன் அறைக்குள்ளாகவே இருப்பாள். பேரன் பேத்திகளுடன் பேசுவது மட்டுமே அவளுக்கான ஒரே ஆறுதல்

அவர்களும் கூட இந்தக் கிணற்றை மூடுவதற்குத் துணையாக இருக்கிறார்களே என்று விசாலாட்சிக்கு வருத்தமாக இருந்தது.

பூஜை முடிந்து பெரியவர் போனபிறகும் அவள் கிணற்றடியிலே இருந்தாள். கிணற்றின் முன்னே எரியும் விளக்கினை பார்த்தபடியே இருந்தாள். அவளே எத்தனையோ முறை இப்படிக் கிணற்றடிக்கு விளக்கு வைத்திருக்கிறாள். திருக்கார்த்திகை அன்று கிணற்றைச் சுற்றிலும் அகல் விளக்கு வைத்திருக்கிறாள். எவ்வளவு அழகான காட்சியது. நினைவில் அழியாமல் பதிந்து போயிருக்கிறது.

இன்றைக்கு எரியும் சுடர்களைக் காணும் போது அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டுவந்தது.

எத்தனையோ பொருட்கள் கைவிட்டுப் போய்விட்டன. நேசித்த மனிதர்கள் பூமியை விட்டுப் போய்விட்டார்கள். இந்த வீடே எத்தனையோ முறை மாற்றிக் கட்டப்பட்டுவிட்டது. அது போல இந்தக் கிணறும் போகட்டும். மனிதர்களால் தான் நேசித்தவற்றைக் காப்பாற்றி வைத்துக் கொள்ள முடியாது. இழக்க வேண்டியதை இழந்து தான் ஆக வேண்டும்.

இருட்டிய பிறகு பின் வாசல் கதவைத் தள்ளித் திறந்து வந்த பேரன் நந்து சப்தமாகச் சொன்னான்

“பாட்டி கொசு உள்ளே வருது. மம்மி பின்கதவை மூடச்சொன்னாங்க“

“நீ மூடிட்டு போ“

“நீங்க உள்ளே வரலையா“

“நான் கொஞ்ச நேரம் நேரம் கழிச்சி வர்றேன்“

“அப்போ என்னைக் கூப்பிடு. கதவை திறந்துவிடுறேன்“ என்று பெரிய மனுஷன் போல நந்து சொன்னான்

அவன் பின்கதவை மூடும் சப்தம் கேட்டது.அந்தக் கிணற்றடிக்கு காலை நேரம் வரும் வெயில் அத்தனை அழகானது. அந்த இளவெயிலில் நின்றபடி ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என அவளுக்குள் ஒரு ஆசையிருந்தது. ஆனால் அதைக் கணவரிடம் கேட்கவேயில்லை. சொந்த கணவராக இருந்தாலும் மனதில் தோன்றும் ஆசைகளை எல்லாம் கேட்டுவிட முடியுமா என்ன. ஒருவேளை அப்படி ஒரு புகைப்படம் எடுக்கபட்டிருந்தால் அதில் இந்தக் கிணறும் பதிவாகியிருக்கும். அந்த வீட்டோடு இப்படி ஒரு கிணறு இருந்தது என்பதற்குப் புகைப்படம் எதுவும் கிடையாது. அதன் சாட்சியாக உள்ள தன்னையும் மகனையும் தவிர வேறு எவர் நினைவிலும் அது இனி இருக்காது.

ஒருவேளை தன் காலத்தின் பின்பு மகனும் கிணற்றை மறந்துவிடுவான். அப்படித் தானே நடக்க முடியும். பெற்றவர்கள் மறைவையே பிள்ளைகள் சில மாதங்களில் மறந்துவிடுகிறார்களே. முந்தைய காலம் போலத் துக்கம் இப்போது நீண்டதில்லை. எல்லா வருத்தங்களும் துயரங்களும் நாட்கணக்கில் மணிக்கணக்கில் முடிந்துவிடுகின்றன.

தன் கணவர் இறந்த அன்று அவரது உடலை ஹாலில் கிடத்தியிருந்த இரவில் விசாலாட்சி இப்படித் தான் உணர்ந்தாள். “இனி பேசிக் கொள்ள எதுவுமில்லை. நடந்த விஷயங்களை நினைத்துக் கொள்ள வேண்டியது தான். ஆழ்ந்த மௌனம் கொண்டவர்களைப் புரிந்து கொள்வது கடினம். “

நீண்டநேரம் அந்தக் கிணற்றடியிலே விசாலாட்சி உட்கார்ந்திருந்தாள். தான் வேறு ஒரு காலத்தில், வேறு ஒரு உலகில் இருப்பது போலவே தோன்றியது.

வீடு திரும்பிய மகன் பின்கட்டு லைட்டைப் போட்டு கதவை திறந்து வெளியே வந்த போது கோபமாகக் கேட்டான்

“பாம்பு கீம்பு கிடக்கப்போகுதும்மா. இங்கே என்ன பண்ணுறே“

“நாளைக்குக் கிணற்றை மூடப்போறாங்கடா“ என்றாள் அம்மா

அவன் பதில் சொல்லவில்லை. குற்றவுணர்வோடு தலைகவிழ்ந்திருந்தான்

பிறகு உறுதியான குரலில் சொன்னான்

“கிணறு தானேம்மா“

அது சரி. கிணறு தானே. அதற்கு எதற்குத் தான் இத்தனை உணர்ச்சிவசப்படுகிறோம். கிணறு என்றால் வெறும் கிணறு மட்டும் தானா. அதன் கொடையும் கருணையும் ஒன்றுமில்லைதானா. பெற்ற பிள்ளைகளும் உறவுகளும் ஒன்றுமில்லாமல் போய்விட்ட உலகில் தண்ணீரின் கருணையை யார் நினைக்கப் போகிறார்கள்

“இந்த விளக்கை உள்ளே எடுத்துக்கிட்டு போம்மா“ என்றான் மகன்

“எரியுற வரைக்கும் எரியட்டும் பிரசாத்“ என்றாள்

அவன் அம்மா எழுந்து கொள்வதற்காகக் கையைப் பிடித்துத் தூக்கிவிட்டான். வீட்டிற்குள் போகும் போது நாளைக்கு உபவாசமிருக்க வேண்டும் என்று தோன்றியது. கால்களை அசைக்க முடியவில்லை. மிக மெதுவாக நடந்தாள். உடம்பில் அதிகக் கனம் கூடிவிட்டது போலிருந்தது.

படுக்கையில் வந்து படுத்துக் கொண்டபோதும் மனது அடங்கவில்லை. மனம் பெரும் பாரமாக இருந்தது. மனதின் துயரம் தான் உடலின் எடையாக மாறிவிடுகிறதோ.

நாளைக் கிணற்றை மூடுவதைத் தான் பார்க்கக் கூடாது என்று முடிவு செய்து கொண்டவளாக அவள் கண்களை மூடிக் கொண்டாள்.

•••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 17, 2021 00:39

March 16, 2021

நிழல் கலைஞன்

புதிய சிறுகதை

“பிகாசோ வெளியே வாருங்கள்“ என்று சப்தமாக அழைத்தாள் ஜாக்குலின்

அவர் குளிப்பதற்காக வெற்றுடம்புடன் அரைக்கால் டிராயர் மட்டும் அணிந்தபடியே நின்றிருந்தார். அவரது காலை நேரம் மிகத் தாமதமாகவே துவங்குவது வழக்கம்.

பல நாட்கள் இரவில் நண்பர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு மிதமிஞ்சிய போதையில் வீடு திரும்புவதற்குப் பின்னிரவாகிவிடும்.

சில இரவுகளில் அவர் கடற்கரைக்குச் சென்று தனியே நடப்பதும் உண்டு. விருந்தில் வெளிப்படும் பகட்டும் போலியான உரையாடல்களும் அவரைச் சலிப்படையச் செய்திருந்தன. மனிதர்களின் பொய்யான சிரிப்பு அருவருப்பூட்டுகிறது.

விடுமுறைக்காக அவர் கடற்கரை கிராமத்திலிருந்த வில்லாவில் தங்கியிருந்தார். இங்கே வந்த நாளிலிருந்து ஓவியம் வரையும் தூண்டுதல் ஏற்படவேயில்லை. குடி, இசை, நடனம், விளையாட்டு என நாட்கள் கடந்து போய்க் கொண்டிருந்தன. அவரைத் தேடி வெளியாட்கள் எவரும் வருவதில்லை. அன்றாடம் தபால் கொண்டுவருகிறவரையும் பணியாட்களையும் விட்டுவிட்டுவிட்டால் வேறு எவரும் அவர் வீட்டுக்குள் வருவதேயில்லை. அவருக்கும் அந்நியர்களை அனுமதிக்க விருப்பமும் இல்லை.

விடுமுறைக்காக வந்து தங்கியிருந்த இந்தப் பிரெஞ்ச் வில்லாவும் அதையொட்டிய மணற்பரப்பும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தன. சில நாட்கள் காலை எழுந்தவுடனே கடலில் நீந்தச் சென்றுவிடுவார். சோம்பேறித்தனமாக உணரும் நாட்களில் காலை அவரே சமைக்க ஆரம்பித்துவிடுவார். ஓவியம் வரைவதில் கிடைக்கும் அதே சந்தோஷம் சமைப்பதிலும் கிடைத்தது. சமைக்கும் போது வண்ணங்கள் மாறிக் கொண்டேயிருப்பதைக் கவனிப்பார். நறுக்கப்பட்ட காய்கறிகள், இறைச்சி மீனின் நிறத்தை ஆராய்ந்தபடியே இருப்பார். சமையல் பாத்திரங்கள் யாவும் நவீன சிற்பங்களாகவே அவருக்குத் தோன்றின.

முந்தைய இரவும் ஒரு விருந்திற்குச் சென்றுவிட்டுப் பின்னிரவில் தான் வீடு திரும்பியிருந்தார். சரியான தூக்கமில்லை. ஆகவே புருவங்கள் வீங்கியிருந்தன. கெண்டைக்கால் சதை பிடித்துக் கொண்டது போலிருந்தது.

ஜாக்குலின் திரும்பும் அவரைச் சப்தமாக அழைத்தாள். தோளில் போட்டிருந்த துண்டினை தூக்கி எறிந்துவிட்டு அவர் வாசலை நோக்கி நடந்தார்.

இந்த நேரம் யார் வந்திருப்பார்கள். எதற்காக இத்தனை உற்சாகமாக அழைக்கிறாள் என்று புரியாமல் அவர் நடந்தார்

ஜாக்குலின் வாசற்கதவைப் பிடித்தபடியே நின்றிருந்தாள். அவர்களின் கார் மதிற்சுவரை ஒட்டி நின்றிருந்தது

“பாப்லோ.. இதை எப்போது வரைந்தீர்கள்“ என்று உற்சாகமாக் கேட்டாள்

“எதை“ என்றபடியே அவர் காரை திரும்பிப் பார்த்தார். அவரது காரின் நிறம் பாதி நீலமும் பாதி ரோஸ் நிறமாகவும் மாற்றப்பட்டிருந்தது. அதில் அவரது கோடுகள் போலவே கோடுகள் கொண்ட உருவங்கள் வரையப்பட்டிருந்தன. யார் வரைந்திருப்பார்கள்.

பின்னிரவில் காரை நிறுத்திவிட்டுப் போனபிறகு யாராவது வந்திருப்பார்களா. அவர் தன் ஓவியங்களின் அதே ரோஸ் மற்றும் அடர் நீல வண்ணங்களை அப்படியே யாரோ காரிக்குப் பூசியிருக்கிறார்களே என வியந்தபடியே காரில் வரையப்பட்ட ஓவியங்களைப் பார்த்தார்

அவரது ஓவியத்தில் வரையப்பட்ட அதே உருவங்கள். ஆனால் வேறு அசைவுகளில் வேறு நிலைகளில் வரையப்பட்டிருந்தன. அந்த ஓவியங்களை ரசித்தபடியே சொன்னார்

“நான் இதை வரையவில்லை. இது நம் காரில்லை“

“போதையில் மறந்திருப்பீர்கள். தன் காரை இப்படிக் கலைப்பொருளாக மாற்ற உங்கள் ஒருவரால் தான் முடியும். “

“இல்லை ஜாக்குலின் இது யாரோ ஒரு ரசிகனின் வேலை“

“நம் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்ட காரை யார் வந்து வரைந்திருக்கக் கூடும்“

“சுற்றுலாப் பயணிகளில் எவனோ ஒரு தீவிர ரசிகன். அதுவும் தேர்ந்த ஓவியன் வரைந்திருக்கக் கூடும். நேற்றிரவு விருந்தில் அப்படி நிறைய இளம் ஒவியர்களைப் பார்த்தேன். அவர்களில் ஒருவனாக இருக்கக் கூடும்“

“அச்சு அசலாக உங்களை நகலெடுத்திருக்கிறான். இந்தக் கோடுகளைப் பாருங்கள். “

“அது தான் வியப்பாக இருக்கிறது. கோடுகளின் வளைவு கூட எனது பாணியிலே இருக்கிறது“

“இனி இந்தக் காரை சாலையில் எங்கே கண்டாலும் பிகாசோ போகிறார் என்று மக்கள் கூச்சலிடுவார்கள்“

“எனது அந்தரங்கம் முற்றிலும் பறிக்கபட்டுவிடும். இனி நான் வானில் பறந்து போக வேண்டியது தான்“

“உங்களால் இறக்கைகளைச் செய்ய முடியும் தானே“

“எனக்குத் தனியே பறக்கப் பிடிக்காது“

“நம் பூனையைக் கூடப் பறக்கக் கூட்டிக் கொள்ளுங்கள்“ என்று சொல்லிச் சிரித்தாள்

பிகாசோ ஓவியம் வரையப்பட்டிருந்த காரை சுற்றி வந்து பார்த்தார். கச்சிதமாக வரையப்பட்டிருந்தது

காரின் முன்னால் நீங்கள் நிற்கும்படி ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும். அப்படியே இருங்கள் என்று ஜாக்குலின் வேகமாக வீட்டிற்குள் ஒடி கேமிராவை எடுத்து வந்தாள்

அவளது ஆசைகள் விநோதமானவை. அவளது அழகைப் போலவே புரிந்து கொள்ள முடியாத வசீகரமது.

ஜாக்குலின் பிகாசோவை வண்ணக்காருடன் புகைப்படம் எடுத்தாள். பிறகு அவள் கார் முன்பாக நின்று கொண்டாள். பிக்காசோ பல கோணங்களில் அவளைப் புகைப்படம் எடுத்தார்

அன்று மாலை செய்திதாளில் பிகாசோவின் காரைப் பற்றிச் செய்தி அவள் எடுத்த புகைப்படத்துடன் வெளியாகியிருந்தது. நிறையத் தொலைபேசி அழைப்புகள். உள்ளூர் கேலரி அதைக் காட்சிக்கு வைக்க விரும்பியது.

ஆனால் பிகாசோவிற்குக் காரில் ஒவியங்களை வரைந்தவன் யார் என்ற யோசனை மனதில் ஒடிக் கொண்டேயிருந்தது.. அன்று மாலை பிகாசோவைத் தேடி வந்திருந்த ஆர்ட் டீலர் ஹாப்கின்ஸ் கூட அந்தக் காரை ஏலத்தில் விட்டால் மிகப்பெரிய பணம் கிடைக்கும் என்று சொன்னார்.

“இனி நான் அந்தக் காரை பயன்படுத்த முடியாது. அது ஒரு கலைப்பொருளாகிவிட்டது“

“பிகாசோவின் கார் என்றால் தன்விசேசம் தானே“ என்று கண்சிமிட்டினார் ஹாப்கின்ஸ்

அத்துடன் அவர் ஜாக்குலினை சந்தோஷப்படுத்துவதற்காகப் பிகாசோ தான் தன் காரை இப்படி ஓவியங்களுடன் உருமாற்றியிருக்கிறார் என்றும் உள்ளூற நம்பினார். இளம்பெண்களுக்காகப் பிகாசோ எதையும் செய்யக்கூடியவர். ஜாக்குலின் மீதான காதலில் அவளுக்காகப் பீங்கான் கோப்பைகளில் ஓவியம் வரைந்து தந்திருக்கிறார். ஒரு முறை அவளது முதுகில் கூட ஓவியம் ஒன்றை வரைந்திருந்தார். அதைப் போட்டோ எடுக்கும்படி ஜாக்குலின் சொன்னாள். அந்தப் புகைப்படத்தைப் பெரியதாக அச்சிட்டு தன் அறையில் பிரேம் போட்டு மாட்டிக் கொண்டாள்.

ஒரு இரவு அவள் பிகாசோவை முத்தமிட்டபடியே சொன்னாள்

“நீங்கள் ஒரு ஓவியத்தை முத்தமிடுகிறீர்கள்“

“அப்படியானால் உன் உதட்டில் ஒரு படம வரைகிறேன். தூரிகையால் அல்ல. எனது நாவினால்“ என்றார் பிகாசோ

அவள் அதை அனுமதித்தாள். கலைஞனின் விசித்திரம் காதலில் தான் முழுமையாக வெளிப்படுகிறது

ஓவியம் வரையப்பட்ட காரை காண்பதற்காகப் பிகாசோ வீட்டிற்கு நிறைய நண்பர்கள் வரத்துவங்கினார்கள். அது பிகாசோவை எரிச்சல் படுத்தியது. மறுநாளே அந்தக் காரை வீட்டின் பின்புறமுள்ள ஷெட்டில் வைத்துப் பூட்டிவிட்டார். இது நடந்த மறுநாள் காலை கடற்கரைக்குக் குளிப்பதற்குக் கிளம்பும் போது மறுபடியும் ஜாக்குலின் கூச்சலிட்டாள்

“எத்தனை அழகான செருப்பு. இதைக் கூடவா சித்திரங்களால் அலங்கரித்திருப்பீர்கள்“

“எங்கே“ எனக் கேட்டார் பிகாசோ

வாசலில் கழட்டி விடப்பட்டிருந்த அவரது ஒரு ஜோடி செருப்புகளும் வண்ணம் தீட்டப்பட்டிருந்தன. ஒரு செருப்பில் ஆண் உருவமும் மறு செருப்பில் பெண் உருவமும் வரையப்பட்டிருந்தது. அசலான ஒவியங்கள். அவரே வரைந்தது போன்ற வெளிப்பாடு

“இதையும் நீங்கள் வரையவில்லை என்று சொல்லிவிடாதீர்கள்“ என்றாள் ஜாக்குலின்

“இதுவும் அதே ரசிகனின் வேலை தான். நான் இந்தக் காலணிகளைச் சில நாட்களாக அணியவேயில்லை. சில நாட்களுக்கு முன்பு தானே புதிய செருப்புகளை வாங்கினேன்“

“பழைய செருப்புகளைக் கலைப்பொக்கிஷமாக்கிவிட்டான்“

“அவனை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. விசித்திரமாக இருக்கிறது அவனது செயல்கள்“.

“ஓவியத்தில் உங்களுக்கு ஒரு வாரிசு உருவாகிவிட்டான் “

“வாரிசில்லை . நகலெடுப்பவன் உருவாகிவிட்டான்.. இந்த ஓவியத்தில் என்னைக் கேலி செய்வது தான் வெளிப்படுகிறது“

“யாரோ உங்களுடன் விளையாடுகிறார்கள்“

“ஓவியர் வெர்மீரை நகல் எடுப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். அப்படி யாரோ தோற்றுப் போன ஓவியன் என்னையும் நகலெடுக்கத் துவங்கியிருக்கிறான்“

“இதை ஏன் உங்கள் மீது அவன் காட்டும் அன்பு என நினைக்கக் கூடாது“

“அன்பு காட்டுகிறவன் பின்னிரவில் திருடன் போல வருவதில்லை. இப்படி ரகசியமாக ஓவியம் வரைந்து போவதில்லையே“

பிகாசோ பழைய செருப்புகளை வீட்டினுள் எடுத்துச் சென்று சிற்பங்களுடன் சேர்த்து வைத்தார். பின்பு புதிய காலணியை அணிந்து கொண்டபடியே கடற்கரைக்குச் சென்றார். அன்று கடற்கரை மணலில் ஒரு ஜோடி செருப்புகளைச் சிற்பமாகச் செய்தார். பிறகுத் தன் உடைகளைக் களைந்து மணலில் வைத்து விட்டுக் கடலில் நீண்ட நேரம் நீந்திக் களித்தார். தொலைவில் நீந்துகிறவர்கள் உற்சாகமாகச் சப்தமிட்டுக் கொண்டிருந்தார்கள்

ஈர உடலுடன் கரையேறி தன் மேல் அங்கியை அணிந்து கொள்ள முற்பட்ட போது அங்கியின் பாக்கெட்டில் ஒரு சிகரெட் பாக்கெட் இருப்பதைக் கண்டார். இது போன்ற சிகரெட்டினை தான் புகைப்பதில்லையே. பின் எப்படி இது தனது பாக்கெட்டில் வந்தது என்று குழப்பத்துடன் அதைத் திறந்து பார்த்தார். நான்கு சிகரெட்டுகள் உள்ளே இருந்தன. ஒவ்வொன்றும் ஒரு வண்ணம். எல்லாச் சிகரெட்டிலும் சிறிய பறவையின் உருவம் வரையப்பட்டிருந்தது

அதே ஆளின் வேலை தான். அவன் தன்னைக் கடற்கரையிலும் பின்தொடர்ந்திருக்கிறான். ஒருவேளை தொலைவில் நீந்திக் கொண்டிருந்தவர்களில் அவனும் ஒருவன் தானே என்னவோ. அந்தச் சிகரெட்டினை கையில் எடுத்துப் பார்த்தார். சிவப்பு மஞ்சள் ஊதா வண்ணங்களில் சிகரெட்டினை காண வியப்பாக இருந்தது. பறவையை மிக நேர்த்தியாக வரைந்திருந்தான்.

அவனைக் காண வேண்டும் என்ற ஆவல் பிகாசோவிடம் உருவானது. அவர் கடற்கரையில் மணலில் அவனைத் தேடி நடக்க ஆரம்பித்தார். யார் அந்த மனிதன். இளைஞனா, முதியவரா, அல்லது இளம்பெண்ணா, யாராக இருக்கக் கூடும். கடற்கரை மணலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவர்கள் பிகாசோவை கண்ட மகிழ்ச்சியில் கையசைத்தார்கள். அவரும் உற்சாகமாகக் கையசைத்தபடியே நடந்தார்.

மணல்மேடு ஒன்றில் பத்து பதினைந்து சிறுவர்கள் ஒன்று சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். வானில் பட்டங்கள் பறந்து அலைந்தபடியே இருந்தன. திடீரென மேற்குவானில் ஒரு பட்டம் பறப்பது அவரது கண்ணில் பட்டது. அந்தப் படத்தில் அவரது Le Rêve ஓவியம் அப்படியே பட்டமாக உருமாற்றப்பட்டிருந்தது. அந்தப் பட்டம் பறக்கும் திசையை நோக்கி பிகாசோ வேகமாக நடக்க ஆரம்பித்தார். மணல்மேட்டில் நடப்பது சிரமமாக இருந்தது. அந்தப் பக்கம் வானில் சுழன்றபடியே இருந்தது.

அதை அவர் நெருங்கிப் போகும் போது பட்டம் அறுந்து வானில் தனியே பறக்கத் துவங்கியது. பட்டம் பறக்கவிடப்பட்ட கயிறு ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்தது. அப்போது தான் யாரோ அந்தக் கயிரை அறுத்துவிட்டிருக்கிறார்கள்

இது என்ன கண்ணாமூச்சி ஆட்டம். எதற்காக அந்த மனிதன் தன்னோடு இப்படி விளையாடுகிறான். தன் மீதான அன்பிலா. அல்லது நான் உன்னை விடவும் பெரியவன் என்று காட்டிக் கொள்ளவா. அவர் அந்த மரத்தடியில் நின்றபடி இருந்தார். மணலில் அந்த மனிதனின் கால்தடங்கள் பதிந்து போயிருந்தன. குனிந்து அந்தக் கால்தடங்களைப் பார்த்தார். அது உயரமான ஆளின் கால்கள் என்பது நன்றாகத் தெரிந்தது. ஒரு சிறிய குச்சியால் அந்தக் கால்தடத்தினைச் சுற்றிலும் கோடு வரைந்தார் பிகாசோ பிறகு அந்தக் கால்கள் இடுப்பு வயிறு தலை என அந்த மனிதன் மணலில் தோன்ற ஆரம்பித்தான்.

இப்படித்தான் அவன் இருக்கக் கூடும் என்று தோன்றியது. தான் வரைந்த கோடுகளைத் தானே அழித்துவிட்டு அவர் தன் வீட்டிற்குத் திரும்ப ஆரம்பித்தார்.

ஜாக்குலினால் இதை நம்ப முடியவில்லை. ஆனால் இப்படியான வெறிபிடித்த ரசிகர்களை அவள் அறிவாள். ஒரு பெண் தன்னை நிர்வாணமாக வரையும் படி அவரது வீட்டின் முன்பு வாரக்கணக்கில் காத்து கிடந்திருக்கிறாள். ஒரு கல்லூரி மாணவன் தச்சன் போல நடித்து அவரது வீட்டிற்குள் வந்து பிகாசோவிடம் ஆட்டோகிராப் வாங்கிப் போயிருக்கிறான். ஒரு கிழவர் தனது தங்கப்பல் ஒன்றை அவருக்குப் பரிசாக அனுப்பி வைத்திருந்தார். ஒரு குடிகாரன் பிகாசோவின் வளர்ப்பு பூனையைத் திருடிக் கொண்டு போயிருக்கிறான். இப்படி எத்தனையோ விசித்திரங்கள். ஆனால் இப்படிச் செருப்பை, சிகரெட்டினை, காரை ஓவியமாக மாற்றும் ஒருவனை அவள் இதன் முன்பு அறிந்திருக்கவில்லை

பிகாசோ அந்த மனிதன் தன்னைப் பின்தொடர்கிறான் என்பதை நன்றாக உணர்ந்திருந்தார். ஆகவே வெளியே எங்கேயும் போகாமல் வீட்டிலே இருந்தார். சில நாட்கள் இரவில் கண்விழித்து யாராவது வாசலில் நடமாடுகிறார்களா என்று ஒளிந்து பார்த்ததும் நடந்தேறியது. அந்த ஆள் யார் எனக் கண்டறிய முடியவில்லை

இது நடந்த ஒரு வாரத்திற்கு அந்த மனிதனிடமிருந்து எந்தப் பரிசும் வரவில்லை. அதன்பிறகு யாரோ ஒரு கூடை ஆரஞ்சு பழங்களை வாசலில் வைத்துப் போயிருக்கிறார்கள் என்று பணிப்பெண் சொன்னபோது “அதை என்னிடம் கொண்டுவா“ எனச் சப்தமாகச் சொன்னார் பிக்காசோ

அவள் அந்தப் பழக்கூடையை அவர் முன்னால் கொண்டுவந்து வைத்தார். அவர் நினைத்தது போலவே அத்தனை ஆரஞ்சு பழங்களிலும் படம் வரையப்பட்டிருந்தது. அதுவும் மெல்லிய காகிதம் ஒன்றில் படம் வரைந்து பழத்தின் மீது ஒட்டப்பட்டிருந்தது. அந்த ஆரஞ்சு பழங்களை மேஜையின் மீது வைத்து அவர் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

யாரோ ஒருவன் ஒரு பெண்ணைக் காதலிப்பது போலத் தன்னைக் காதலிக்கிறான். தன் அன்பை வெளிப்படுத்துகிறான் என்பது புரிந்தது.

ஆனால் அவன் தனக்குப் புதிய சவாலை எழுப்பியிருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டவரைப் போல முற்றிலும் புதிய பாணியில் புதிய வண்ணங்களுடன் ஓவியம் வரைய ஆரம்பித்தார். அந்த மனிதனையே ஒரு கருப்பொருளாகக் கொண்டும் ஓவியம் வரைந்தார். பித்தேறியது போல அவர் ஓவியத்தினுள் மூழ்கியிருந்தார். ஜாக்குலின் மட்டும் தனியே இரவு விருந்திற்குச் சென்று வந்தாள்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் தூக்கம் கலைந்து ஓவியம் வரைவதற்கான உந்துதல் ஏற்படவே படம் வரையும் அறைக்குள் சென்றார். திடீரென அவரது உள்ளுணர்வு வெளியே யாரோ தனக்காகக் காத்திருப்பது போல உணர்த்தியது. சப்தம் எழுப்பாமல் அவர் வீட்டின் பின்கதவைத் திறந்து இருட்டிற்குள்ளாகவே நடந்து வெளியே வந்தார். அவரது கையில் சிறிய டார்ச் இருந்தது.

அவர் நினைத்தது சரி. அவர் எதிர்பார்த்திருந்த மனிதன் அவர் வீடு இருந்த வீதியை முற்றிலும் ஒவியங்களால் வரைந்து அழகுபடுத்திக் கொண்டிருந்தான். விடிந்து பார்த்தால் அந்தச் சாலையே ஓவியத்தால் ஒளிர்ந்து கொண்டிருக்கும். அவர் வீடு இருந்த வீதி மிகச்சிறியது. அதன் முனைவரை அவன் ஓவியம் வரைந்துவிட்டுத் திரும்பும் போது பிகாசோ நிற்பதைக் கண்டவன் போலத் தனது தொப்பியை எடுத்து வணங்கினான்

பிக்காசோ தனது டார்ச் ஒளியை அவன் மீது அடித்தார்

அவன் காகித முகமூடி அணிந்திருந்தான். அந்த முகமூடி பிகாசோவின் தோற்றத்தில் இருந்தது. அவன் உற்சாகமான குரலில் சொன்னான்

“மாஸ்டர் நாம் சந்தித்துக் கொள்ள வேண்டாம். இந்த விளையாட்டினை இன்றோடு நிறுத்திக் கொண்டுவிடுகிறேன்“

“நீ யார்“ என்று சப்தமாகக் கேட்டார் பிக்காசோ

“சிறுவயது முதலே உங்களால் வழிநடத்தப்படுகிறவன். உங்களைப் பார்த்து ஓவியம் வரைய ஆசை கொண்டவன். . நான் ஒரு தோற்றுப் போன ஓவியன். என் ஓவியங்களில் உங்களில் சாயல் தெரிகிறது என்று நிராகரித்துவிட்டார்கள். அது எனக்குப் பெருமை தான். உண்மையில் நான் உங்கள் நிழல். உங்கள் நிழல் ஓவியம் வரைவதை நீங்கள் காண வேண்டாமா அதற்காகத் தான் இப்படி உங்களுடன் விளையாடினேன். மாஸ்டர். உங்களைத் தொந்தரவு செய்திருந்தால் மன்னித்துவிடுங்கள். “

“நான் உன்னைக் காண வேண்டும்“ என்று டார்ச் லைட்டை உயர்த்தியபடியே அவனை நோக்கி நடந்தார் பிகாசோ

“வேண்டாம் மாஸ்டர். அங்கேயே நில்லுங்கள். அசல் ஒரு போதும் நகலுடன் கைகுலுக்கக் கூடாது“.

பிகாசோ அப்படியே நின்றுவிட்டார். அந்த மனிதன் உரத்த குரலில் சொன்னான்

“சில பூச்சிகளுக்கு இரவு தான் பிடித்தமானது. அவை இருளுக்குள் பிறந்து இருளுக்குள் வாழக்கூடியவை. அதன் சப்தத்தை மட்டுமே உலகம் கேட்கிறது. அந்தப் பூச்சியை நேரில் கண்டாலும் யாருக்கும் பிடிக்காது. நான் அப்படி ஒரு இரவுப்பூச்சி. என் குரல் உங்களுக்கு எட்டியது எனக்கு மகிழ்ச்சி. குட் நைட் மாஸ்ட்ரோ “என்றபடியே அவர் இருட்டில் தாவி மறைந்தான்.

பிகாசோ அவன் வரைந்த ஓவியங்களின் முன்பாக விடியும் வரை அமர்ந்திருந்தார். மறுநாள் காலை தனது வீதியை ஒவியத்தால் நிரப்பியிருக்கிறார் பிகாசோ என மக்கள் திரண்டு வந்து பார்த்தார்கள்.

அந்த மனிதன் அணிந்திருந்த முகமூடியை தன் கையில் எடுத்து வைத்துக் கொண்டபடியே பிகாசோ வீடு திரும்பினார்.

பிகாசோ அதன் பிறகு அந்த இளைஞனை தன் வாழ்நாளில் சந்திக்கவே இல்லை. அவன் பெயரோ, ஊரோ எதையும் அறிந்து கொள்ள முடியவுமில்லை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 16, 2021 00:26

March 15, 2021

நானுமொரு திராட்சை

கீறல் பிரதிகளின் தனிமை என்ற கவினின் கவிதைத் தொகுப்பு சமீபமாக வெளியாகியுள்ளது. இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளைப் படித்து வியந்து அவரைப் பாராட்டுவதற்காகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.

தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றும் கவினின் இரண்டாவது கவிதை தொகுதி இது என்றார். பாஷோ என்ற கவிதை இதழ் ஒன்றினையும் கொண்டுவந்திருக்கிறார். அவற்றை நான் பார்த்திருக்கிறேன்.

கீறல் பிரதிகளின் தனிமையில் கவிஞர் தேவதச்சனின் பாதிப்பு நிறையவே இருக்கிறது என்றாலும் அசலான தருணங்களை, தனித்துவமான கவிமொழியில் கவின் எழுதியிருக்கிறார். அது பாராட்டிற்குரியது.

வடிவ ரீதியாகவும் மொழியைக் கையாளுவதிலும் கவினின் கவிதையினைச் சங்க கவிதைகளிலிருந்து தொடரும் நவீன கவிதைகள் எனலாம். இந்த நூலில் இடம்பெற்றுள்ள ஒவியங்கள் சிறப்பாக, மிகப்பொருத்தமாக வரையப்பட்டிருக்கின்றன.

பெரும்பான்மைக் கவிதைகளில் இருப்பும் இன்மையும் விவாதிக்கப்படுகின்றன. இருப்பு இன்மை பற்றிப் பேசும் இந்தக் கவிதைகளில் தண்ணீரில் வெயில் ஊர்ந்து போவது போல அபூர்வமான தருணங்கள் வெளிப்பட்டு மறைகின்றன.

உதிர்தல் நிமித்தம்

அன்றாடத்தின் ஒளியை

மிக எளிமையாக உள்வாங்கி

ஈரம் சொட்டிக்

குப்புறக் கிடக்கும்

வெண்ணிற மலர்கள்

பூமிக்குச் சொல்வதென்ன?

இவ்வளவு பெரிய பூமிக்கு

சின்னஞ்சிறிய

பூவொன்றுக்குச்

சொல்ல இவ்வளவு இருக்கிறது

மிக அழகான கவிதை. அன்றாடத்தின் ஒளியை மிக எளிமையாக உள்வாங்கி ஈரம் சொட்டக் கிடக்கின்றன மலர்கள். உதிர்தல் என்பது மலர்தல் போல இயல்பானது தான். பூமியோடு பூக்கள் உரையாடுகின்றன என்பதில் தான் கவித்துவம் துவங்குகிறது. என்ன பாஷையது. எது குறித்து உரையாடுகிறது. ஒரு பூவிற்குப் பிரம்மாண்டமான பூமியின் பரப்பு தேவையில்லை. அது இலையளவு நிலத்தைத் தானே கேட்கிறது. உதிர்ந்த பூக்கள் செடியோடு பேசுவதை விட்டு ஏன் பூமியோடு பேசுகின்றன. உண்மையில் கவிதை சொல்ல நிறைய இருப்பதை நமக்குப் புரிய வைக்கிறது. பூக்களின் மௌனமும் பூமியும் மௌனமும் மகத்தான உரையாடலின் பகுதிதான் என்பதைக் கவிதை புரிய வைக்கிறது

குடுகுடுப்பைக்காரன் படம் இருக்கும்

அறையிலிருந்து கவிதை எழுதுகிறேன்

சமயத்தில் வார்த்தைகளை மாற்றிப் போடுவது

உடுக்கை அடிப்பது போலவே இருக்கிறது

ஆமாம் என்று வேறு சொல்கிறது இரண்டாம் ஜாமம்

சொற்களை இசையாக மாற்றும் கவிதையின் அபூர்வமான தருணத்தை இந்தக் கவிதை விவரிக்கிறது. குடுகுடுப்பைக்காரன் ஏற்படுத்தும் அச்சம் என்பது தற்காலிகமானது. ஆனால் ஆழமானது. அவன் எதிர்காலத்தைச் சொல்கிறான். ஆனால் நிகழ்காலத்தில் யாசிக்கிறான். இந்த இருநிலையும் கொண்டது தானே கவிதை.

எனக்குத் திராட்சைகள் புளிப்பதில்லை

நான் அவற்றோடே பிறந்திருக்கிறேன்

ஓடியாடி வளர்ந்திருக்கிறேன்

குடும்பத்தில் ஒருவனாய்

நானுமொரு திராட்சையாய்

திகழ்ந்திருக்கிறேன்

புளிப்புச் சுவையை நான்

அறிந்திருந்தாலும் எப்போதுமே எப்போதுமே

எனக்குத் திராட்சைகள் புளிப்பதில்லை

இந்தக் கவிதை தன்னைத் திராட்சையாக அறிந்த ஒருவனின் வெளிப்பாடு. சுவையில் வேறுபட்டாலும் அவனும் ஒரு திராட்சை தானே.

ஓவியத்தில், சிற்பத்தில் திராட்சை இடம் பெறும்போது அது ஒரு குறியீடாகிறது. அதாவது சிற்றின்பம் அல்லது செழிப்பு. பாலியல் வேட்கை போன்றவற்றைக் குறிக்கவே திராட்சையை அடையாளப்படுத்துகிறார்கள். இந்தக் கவிதையில் வரும் திராட்சையும் ஒரு குறியீடே.

எனக்குத் திராட்சைகள் புளிப்பதில்லை என்று துவங்கும் கவிஞனின் குரல் சுவையைத் தாண்டி திராட்சையை அறியும் ஒரு வழிகாட்டுதலை முன்வைக்கிறது. அதில் நான் திராட்சைகளுடன் பிறந்தேன் எனும் போது திராட்சை உறவின் வெளிப்பாடாக மாறிவிடுகிறது. திராட்சை இனிப்பாக இருந்தாலும் புளிப்பாக இருந்தாலும் கனிவின் வெளிப்பாடு தானே.

கவினின் கவிதைகளில் வெளிப்படும் சந்தம் தனித்துவமானது. அன்றாட வாழ்க்கையின் அனுபவங்களை அவர் கவிதைகளில் கலைத்துப் போட்டு விளையாடுகிறார். கேலியும் கிண்டலும் கலந்த இந்தக் கவிதைகள் கிளையிலிருந்து சட்டென வான் நோக்கி எழும் பறவைகள் போல இரண்டு மூன்றாவது வரியில் பறத்தலை மேற்கொள்ளத் துவங்கிவிடுகின்றன. அதுவே இந்தத் தொகுப்பின் விசேசம். கவினுக்கு என் வாழ்த்துகள்

புத்தகத்தில் ஆசிரியர் குறிப்பு, புகைப்படம். முன்னுரை என எதுவுமில்லை. தன்னை மறைத்துக் கொண்டு தனது கவிதைகளை மட்டும் முன்வைக்கும் கவினின் தனித்துவமே இந்த நூலை உடனே வாசிக்கும்படி என்னைத் தூண்டியது. இது வெறும் அடக்கம் மட்டுமில்லை. ஒரு மரபு என்றே சொல்லத் தோன்றுகிறது.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 15, 2021 23:23

ஐந்து வருட மௌனம்

புதிய சிறுகதை

பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. அந்த முசாபரி பங்களாவின் வெளியே அதிகாலையில் இவ்வளவு பேர் கூடிவிடுவார்கள் என்று ராஜன் எதிர்பார்க்கவில்லை. காந்தியைக் காண்பதற்காகக் கிராமவாசிகள் திரண்டிருந்தார்கள். தினசரி காலை நான்கு மணிக்குப் பிரார்த்தனை செய்வது காந்தியின் வாழ்க்கையில் என்றும் மாறாத பழக்கமாக இருந்தது.

இன்னமும் சூரியன் உதயமாகவில்லை. இருளுக்குள்ளாகவே நடந்து கிராமவாசிகள் வந்திருந்தார்கள். இரண்டாயிரம் பேருக்கும் மேலிருக்கும். அதில் பாதிக்கும் மேல் பெண்கள்.

அவர்கள் முதன்முறையாகக் காந்தியோடு ஒன்றாகப் பிரார்த்தனை செய்கிறார்கள். யாருக்காக அந்தப் பிரார்த்தனை, என்ன வேண்டுகிறார் என்று அவர்களுக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் காந்தியின் அருகில் இருப்பதைக் கடவுளின் அருகில் இருப்பதைப் போலவே உணர்ந்தார்கள்.

“பிரார்த்தனை தான் ஒவ்வொரு நாளையும் திறக்கும் திறவுகோல்“ என்றார் காந்தி.

அந்தப் பங்களாவில் பொதுவாக வெள்ளைக்கார அரசு அதிகாரிகளோ மேல்மலைக்கு வேட்டைக்கு வரும் ஜமீன்தார்களோ தான் தங்கியிருப்பார்கள். ஆகவே அதற்குள் கிராமவாசிகள் வந்தது கிடையாது. ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பாகக் காந்தி தனது பயணத்தின் போது இரவு அந்த முசாபரி பங்களாவில் தங்கப்போகிறார் என்ற செய்தி கிடைத்தவுடன் மக்கள் அவரது வருகையை எதிர்பார்த்துத் திரண்டு விட்டார்கள்

காந்தி தனது பயணத்திலும் நேர ஒழுங்கை மாற்றிக் கொள்ளவில்லை. விடிகாலை மூன்றரை மணிக்கு எழுந்து கொண்டுவிட்டார். வெற்றுடம்புடன் அவர் பங்களாவின் பின்புறமிருந்த பாதையில் நடைபயிற்சி சென்றார். அவரது வேகத்திற்கு ஈடு கொடுக்கமுடியாதவர்கள் பின்தங்கிப்போனார்கள். நடைப்பயிற்சியின் போது ஒரு வார்த்தை கூட எவரோடும் பேசவில்லை.

மாமரங்கள் அடர்ந்த பாதையில் நடந்து கொண்டிருந்தார். பாதை தெரிய வேண்டும் என்பதற்காகக் கையில் ஒரு அரிக்கேன் விளக்குகளுடன் கணபதி கூட நடந்து சென்றார். அந்த வெளிச்சம் பாம்பு போலச் சாலையில் ஊர்ந்து சென்றபடி இருந்தது. காந்தி குளிர்காற்றினை ஆழ்ந்து சுவாசித்தபடியே வேகமாக நடந்தார். வழியில் கிடந்த ஒரு மயிலிறகு ஒன்றைக் குனிந்து கையில் எடுத்து வைத்துக் கொண்டார். அதில் ஒரு சிறுவனின் ஆர்வம் வெளிப்பட்டது.

பனிக்காலம் முடிந்த போதும் குளிர் விலகவில்லை. இரண்டு வாரங்களாகவே அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார். நாளொன்றுக்கு சராசரியாக 150 கிமீ பயணிப்பது அவரது திட்டம்.

அவரைக் காண வழியெல்லாம் மக்கள் திரண்டிருந்தார்கள். அவரது காரை வழிமறித்துக் கோஷமிட்டார்கள். பூக்களைத் தூவி வழிபட்டார்கள். கருப்பட்டி, வாழைத்தார், தேன், வேர்க்கடலை, பலாப்பழம் தேங்காய் எனத் தாங்கள் விரும்பிய பொருட்களை எல்லாம் அவருக்காகக் கொண்டு வந்து காணிக்கையாகக் கொடுத்தார்கள்.

தேர் நகர்வது போல அவரது கார் ஜனத்திரளினுள் மெதுவாக நகர்ந்தது. காந்தியைத் தொட்டுவிட ஆசை கொண்டவர்கள் கூட்டத்தினுள் முண்டியடித்து அவரை நோக்கி கைகளை நீட்டினார்கள். இவர் தான் காந்தியா என்ற ஆச்சரியம் அந்த முகங்களில் பிரதிபலித்து. வழியெங்கும் கூப்பிய கரங்கள். கசிந்த விழிகள். வாழ்த்தொலிகள். பதினாயிரக்கணக்கான கண்கள் அவரைப் பார்த்தபடியே இருந்தன புன்னகை மாறாத முகத்துடன் அவர் மக்களை நோக்கி கைகளை அசைத்தபடியே வந்தார்.

சில வேளைகளில் காரை விட்டு இறங்கி மக்களோடு மக்களாக நடந்தார். ஏழை எளியவர்களின் குடிசைக்குள் சென்றார். அவர்களுடன் உணவு உட்கொண்டார். ஊர்மக்களைச் சேர்த்துக் கொண்டு மண்வெட்டினார். குப்பைகளை அள்ளி அகற்றினார். எங்கும் பாதுகாப்பு அதிகாரிகள் என எவருமில்லை. மக்கள் தான் அவரது பாதுகாப்பு அரண். அவரது பயணத்தைப் புகைப்படம் எடுக்க வந்திருந்த அமெரிக்கப் பத்திரிக்கையாளர் எட்வினுக்கு அந்தக் கிழவரின் மனவுறுதி வியப்பாக இருந்தது. அவர் மக்களில் ஒருவராகவே தன்னை நினைக்கிறார். மக்களுடன் கைகோர்த்து நடப்பதையே விரும்புகிறார் என்பதை எட்வின் உணர்ந்திருந்தார்

காந்தியிடம் ஒருமுறை எட்வின் கேட்டார்

“நீங்கள் மக்கள் கூட்டத்தில் எதையோ தேடுகிறீர்கள். என்ன உங்கள் தேடல்“

“எதைத் தேடி தண்ணீர் வேகமாகச் செல்கிறது.“ எனக் கேலியாகக் கேட்டார் காந்தி

“சாந்தியை“ என்றார் பத்திரிக்கையாளர்

“நானும் அதையே தேடுகிறேன். தேசத்தின் சாந்தியை, சுதந்திரத்தை, அதை அடைவதற்கான வழிகளை நான் தேடிக் கொண்டிருக்கிறேன்“

“உங்களைக் கடவுளின் பிரதிநிதியாகவே மக்கள் நினைக்கிறார்கள்“

“நாம் ஒவ்வொருவரும் கடவுளின் பிரதிநிதிகள் தான். அதில் என்ன சந்தேகமிருக்கிறது. உண்மையில் நான் கடவுளின் சேவகன். அதுவும் கடைக்கோடி சேவகன்.“

“இந்தப்பயணத்தில் என்ன அறிந்து கொண்டீர்கள்“

உண்மையான நேர்மையான செயல்களை மக்கள் புரிந்து கொள்கிறார்கள். ஆதரவு அளிக்கிறார்கள். சுதந்திரத்திற்கான போராட்டம் என்பது வெளியில் நடந்தால் மட்டும் வெற்றிபெற முடியாது. அது ஒவ்வொருவர் மனதிலும் நடந்தேற வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன். நான் இவர்களை வழிநடத்தவில்லை. அவர்களே எனக்கு வழிகாட்டுகிறார்கள்“ என்று சொல்லி காந்தி சிரித்தார்

“அது உண்மை“. என்று எட்வினும் பதிலுக்குச் சிரித்தார். நாள் முழுவதும் காரில் பயணம். வழியில் கூட்டம். நிதி அளிப்பு நிகழ்ச்சி. இராட்டை வழங்கும் விழா. சேவா சங்க பிரதிநிதிகளின் சந்திப்பு. என ஓயாத அலைச்சல். பகலில் வெயில் மிகவும் உக்கிரமாகவும் காற்று அனல் போலிருந்தது. ஆனாலும் காந்தி ஓய்வெடுத்துக் கொள்ளவில்லை. அவருடன் வந்தவர்கள் களைத்துப் போயிருந்தார்கள்.

ஒவ்வொரு நாள் இரவும் காந்தியின் உடலைப் பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர் சௌரி அவரது ரத்த அழுத்தம் உயர்ந்து கொண்டேயிருப்பதை அறிந்தார். காந்திக்கு நல்ல ஓய்வு தேவை என்பதை வலியுறுத்தினார். காந்தி அந்த மருத்துவரிடம் உங்கள் மருந்தை விடவும் மக்களின் முகங்களே எனக்கு உண்மையான மருந்து. அவர்களின் அன்பு என்னைப் புத்துணர்வு கொள்ள வைத்துவிடும் என்று மெதுவான குரலில் சொன்னார்.

காந்தியின் வருகையைப் பற்றி அறிந்திருந்திருந்த கிராமவாசிகள் தங்கள் ஊர்களிலிருந்து மாட்டுவண்டி மூலமும் நடந்தும் வந்து கொண்டேயிருந்தார்கள். இரவெல்லாம் சாலையோரம் காத்துகிடந்தவர்களும் உண்டு.

அதிலும் வெள்ளிக்கிழமை மதியம் திடீரென மழை பிடித்துக் கொண்ட போது அந்த மழைக்குள்ளும் மக்கள் அசையாமல் அப்படியே காத்திருந்ததைக் காந்தி கண்டார். அவர் காரை விட்டு இறங்கிய போது குடையை நீட்டியவரிடம் அதை விலக்கிவிட்டு காந்தியும் மழைக்குள்ளாக நடந்தார். மழையின் சப்தத்தை விடவும் மக்களின் வாழ்த்தொலி அதிகமாகயிருந்தது. அந்த முகங்களில் தென்படும் எதிர்பார்ப்பினை நம்பிக்கையைக் காந்தி நெருக்கமாக உணர்ந்தார். அவர்களின் கண்கள் தன்னிடம் பேசுவதை நன்றாகவே அறிந்தார்.

மழைக்குள்ளாகவும் சில பெண்கள் அவரது காலில் விழுந்து வணங்கினார்கள். அவர்களை ஒரு சகோதரனைப் போல ஆற்றுப்படுத்தினார். இந்த மழைத்துளியைப் போல அவர்கள் வற்றாத நம்பிக்கையை அளித்தபடியே இருக்கிறார்கள். துளிகள் ஒன்று சேர்ந்து திரண்டிருப்பது தானே சமுத்திரம்.

அவர் சேவா சங்க ஊழியர்களில் மூத்தவரான சுதர்சனை அழைத்து அந்தக் கடிதத்தைப் படிக்கச் சொன்னார். அவரும் கடிதத்தைப் படித்துவிட்டு பெருமூச்சோடு சொன்னார்

“கதர்கொடி கிட்டுவை எனக்கே தெரியும். ஐந்து வருஷமா சுயநினைவு இல்லாமல் படுக்கையில் கிடக்கார். போலீஸ் தலையில அடிச்ச அடியிலே நினைவு போயிருச்சி. விருதுபட்டி வட்டாரத்தில அவரைத் தெரியாதவர் இல்லை. பெரிய தியாகி. லட்சுமியாபுரத்தில் தான் வீடு.

அவருக்குக் காந்தி தான் தெய்வம். காந்தி உருவத்தைக் கையில் பச்சை குத்தியிருப்பார். காந்திஜி மாதிரியே மேல்சட்டை கிடையாது. எந்தப் போராட்டம்னாலும் கதர்கொடியை உயர்த்திப் பிடிச்சிகிட்டு முன்னால் போய் நிற்பார். மனசில பயமே கிடையாது.

அவர் மனைவி சின்னவயசுல இறந்துட்டாங்க. ஒரே மகள் அந்தப் பொண்ணும் காந்தியோட தொண்டர் தான்.

கிட்டு. ஆளும் காந்தியைப் போலத் தான் இருப்பார். நல்ல உசரம். எங்கே போனாலும் நடை தான். கால்ல செருப்புக் கிடையாது. எப்பவும் கையில் கதர்கொடியை வச்சிகிட்டு இருப்பார்.

புதூர்ல நடந்த கள்ளுகடை போராட்டத்தில போலீஸ் அடிச்ச அடியில ஆள் சுருண்டுவிழுந்துட்டார். அப்புறம் எழுந்திருக்கவேயில்லை. மகள் பார்வதி தான் ஐந்து வருஷமா பீ மோத்திரம் அள்ளி பணிவிடை செய்து பார்த்துகிட்டு இருக்கா.

தன் வாழ்நாள்ல ஒரு தடவையாவது காந்தியை பாத்து சேவிக்கணும்னு ஆசைபட்டுகிட்டு இருந்த மனுசன். ஆனா பாவம் குடுத்து வைக்கலே“.

ராஜன் அந்தக் கடிதத்ததைக் காந்தி பிரார்த்தனை முடித்துவந்தவுடன் படித்துக் காட்ட வேண்டும் என்று பையிலே வைத்துக் கொண்டார். அன்றைய பிரார்த்தனையில் ஒரு பெண் எங்கும் நிறைந்தவனே என்ற பாடலை மனம் உருகப்பாடினாள். அவளது குரலின் வசீகரம் மக்களை மெய்மறக்க செய்திருந்திருந்தது. காந்தியும் கூடக் கண் கலங்கிப் போயிருந்தார். அந்தப் பெண் காந்தியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள். அவளை ஊர் ஊராகப் போய்க் கதர் வெற்றிக்காகப் பாடும்படி காந்தி கேட்டுக் கொண்டார்

பிரார்த்தனை முடிந்தபோதும் மக்கள் கலைந்து போகவில்லை. காந்தி எழுந்து நடக்க ஆரம்பித்தபோது மக்கள் அவரை நடக்கவிடாமல் தள்ளினார்கள். காந்தி தன் அறைக்குள் சென்று அன்றைய பயணத்திற்குத் தயாராக முனைந்து கொண்டிருந்த போது ராஜன் அவரிடம் சென்று கடிதத்தை நீட்டினார்

காந்தி அதைக் கையில் வாங்கியபடியே என்ன கடிதம் என்று கேட்டார். ராஜன் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொண்டு வேகமாகக் கதர்கொடி கிட்டுவைப் பற்றி;r சொன்னார்.

அதைக் கேட்டு முடித்தபோது காந்தியின் கண்கள் மூடியிருந்தன. அவர் ஆழ்ந்த மௌனத்தில் உறைந்து போயிருந்தார். பிறகு அவராக அந்தக் கடிதத்தைப் புரட்டிப் பார்த்தார்

“எங்கே இருக்கு லட்சுமியாபுரம்“ என்று ராஜனிடம் கேட்டார்

“இங்கேயிருந்து பனிரெண்டு மைல் தூரம். குக்கிராமம்னு வெங்கட்ராமன் சொன்னார்.“

“நம்ம சுற்றுப்பயணம் கிளம்புறதுக்கு முன்னாடி அங்கே போயிட்டு வந்துரலாமா“

“அந்த ஊருக்குக் கார் போற அளவுக்கு ரோடு கிடையாது. மண்ரோடு. அதுவும் வயல் வழியாகத் தான் போகணுமாம்“

“அப்போ நடந்து போவோம்“

“அவ்வளவு தூரம் நடக்கணுமே“

“பனிரெண்டு மைல் பெரிய தூரமில்லை. கூட வேற யாரும் வரவேண்டாம். நாம ரெண்டு பேர் போவோம்“.

“சுதர்சனுக்குத் தான் கிட்டுவோட வீடு தெரியும்“

“அப்போ அவரை அழைச்சிகிடுவோம். யாருக்கும் சொல்ல வேண்டாம். “

“உங்களுக்குக் காலை ஆறரை மணிக்கு எஸ்.எஸ். கந்தசாமி ரெட்டியாரோட சந்திப்பு இருக்கு. எட்டுமணிக்கு மூதூர்ல கூட்டம். சிறுகுடியில சேவாசங்க நிகழ்ச்சி இருக்கு“

“அதுக்குள்ளே வந்துரலாம்“.

காந்தி முடிவு எடுத்துவிட்டார் என்றால் அதை எளிதாக மாற்ற முடியாது என ராஜனுக்குத் தெரியும். அவருக்கும் கதர்கொடி கிட்டுவை நேரில் காண வேண்டும் போலவே இருந்தது.

சுதர்சன் அழைத்துவரப்பட்டார். அவரால் நம்பமுடியவில்லை. நினைவு அழிந்து கிடக்கும் கதர்கொடி கிட்டுவைக் காண காந்தி போகப்போகிறார். அவர் உணர்ச்சிப்பெருக்கில் காந்தியை கையெடுத்து வணங்கினார்

“நாம புறப்படலாமா “என்று காந்தி சுதர்சனை நோக்கி கேட்டார்

“பாபூ, நடந்து போற வழியில் உங்களைப் பார்த்தா கூட்டம் திரண்டிரும். அதைச் சமாளிக்கிறது கஷ்டம் “

“என்ன செய்யலாம்“

“ஒரு கூண்டுவண்டி ஏற்பாடு பண்ண சொல்றேன். அதுல போய்ச் சத்திரம் விலக்குல இறங்கி கிடலாம். அங்கே இருந்து வயல் வரப்புல குறுக்கே நடந்து போயிரலாம்“

“அது உங்க இஷ்டம். ஆனால் தாமதாமாகக் கூடாது, உடனே நாம கிளம்பணும். “

சுதர்சன் அவசரமாக ஒரு ஆளை பிடித்து ஒரு கூண்டுவண்டியை ஏற்பாடு செய்திருந்தார். அதில் காந்தியும் ராஜனும் சுதர்சனும் ஏறிக் கொண்டார்கள். காந்தி தன் அறையில் ராட்டை நூற்றுக் கொண்டிருப்பதாக வெளியே தகவல் சொல்லி வைத்திருந்தார் ராஜன். கூட்டம் காந்திக்காக முசாபரி பங்களா வெளியே காத்துக் கொண்டிருந்தது.

அவர்கள் வண்டி வடக்கே செல்லத் துவங்கும் போது சூரியன் உதயமாக ஆரம்பித்திருந்தது. சிறிய மண்சாலையில் வண்டி குலுங்கி குலுங்கி பயணம் செய்தது.

அந்தக் கடிதம் கொண்டு வந்த இளைஞன் யார் என்று அப்போது தான் காந்தி கேட்டார்

“கிட்டுவின் தம்பி மகன்“ என்றார் சுதர்சன்.

“அந்த பையனையும் நான் சந்திக்க வேண்டும்“ என்றார் காந்தி

“வரச்சொல்லிவிடுகிறேன்“ என்றார் சுதர்சன்

தூரத்துக் குன்றினைப் பார்த்தபடியே வந்தார் காந்தி. ஆடு ஒட்டிச் செல்கிறவர்கள் தொலைவில் போய்க் கொண்டிருந்தார்கள். மூங்கில் கூடை ஒன்றை தலையில் வைத்தபடியே ஒரு கிழவி தனியே வரப்பில் நடந்து போய்க் கொண்டிருந்தாள். பறவைகள் கூட்டமாக வானில் போய்க் கொண்டிருந்தன.

மண்பாதை சீரற்றிருந்தது. அதில் கூண்டுவண்டி ஏறி இறங்கும் போது மாடுகள் திணறின. பனைமரங்களைத் தாண்டி அவர்கள் வண்டி சென்றபடியே இருந்தது. அரை மணி நேரப்பயணத்தின் பிறகு அவர்கள் இடிந்துகிடந்த சத்திரம் ஒன்றின் முன்பாக வந்து நின்றார்கள். வண்டியிலிருந்து சுதர்சன் இறங்கியபடி தொலைவில் தெரியும் ஊரைக் காட்டிச் சொன்னார்

“அது தான் லட்சுமியாபுரம்“

காந்தி விடுவிடுவென அந்த ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தார். வழியில் அவரைக் கடந்து போனவர்களுக்கு அது காந்தி என்றோ அவரைக் காணத்தான் மக்கள் இரவெல்லாம் காத்துகிடந்தார்கள் என்றோ தெரியாது. அவர்கள் வழக்கம் போலத் தங்கள் விவசாய வேலைகளுக்குக் கிளம்பிப் போய்க் கொண்டிருந்தார்கள்.

வயல்வரப்பில் காந்தி நடந்து போவது வீடு திரும்பும் விவசாயி ஒருவரைப் போலவே தோற்றமளித்தது. சுதர்சன் அவருக்கு முன்பாகப் போக வேண்டும் என்பதற்காக வயலினுள் இறங்கி வேகமாக முன்னே போகத்துவங்கினார்.

யாரும் அவர்களைக் கவனிக்கவில்லை

நூறு வீடுகளுக்குள் இருக்கும் மிகச்சிறிய கிராமம். வீதியில் ஒரு பெண் கோழியை விரட்டிக் கொண்டிருந்தாள். வீட்டு அடுப்பிலிருந்து வெளிப்படும் புகை காற்றில் சுழன்றபடியே இருந்தது. ஒன்றிரண்டு ஒட்டுவீடுகளைத் தாண்டி பெரும்பான்மை குடிசை வீடுகள். சாக்கடை வழிந்து ஒடும் சிறிய தெருக்கள். கழுதை ஒன்று சுவரை ஒட்டி அசையாமல் நின்றிருந்தது

சுதர்சன் காந்தியின் முன்னே நடந்து போய்க் கொண்டிருந்தார். தெருநாய்கள் குலைத்தபடியே அவர்களைப் பின்தொடர்ந்தன. ஊரின் தென்புறமாக இருந்த தெருவைக் கடந்து அவர்கள் நடந்தார்கள். வைக்கோல் படப்பு ஒன்றினை ஒட்டி சிறிய குடிசை வீடு தென்பட்டது. அருகிலே ஒரு மாட்டுத்தொழுவம். அதையொட்டி ஒரு வேப்பமரம். வழியெங்கும் ஆட்டுப்புழுக்ககைள்.

புகைமூட்டமான அடுப்பில் வெந்நீர் போட்டுக் கொண்டிருந்த கிட்டுவின் மகள் பார்வதி கண்களைக் கசக்கியபடிய யாரோ வீட்டுக்கதவை தள்ளி உள்ளே வருவதைப் பார்த்தாள்.

“அது சுதர்சன் மாமா“.

அவர் ஏன் இந்த அதிகாலையில் வந்திருக்கிறார் என்று புரியாதவள் போல அவள் சேலையால் முகத்தைத் துடைத்தபடியே எழுந்து கொண்டாள்

சுதர்சனைத் தொடர்ந்து காந்தியும் அந்தக் குடிசைக்குள் நுழைந்தார். அவளால் நம்பமுடியவில்லை

“அது காந்தி. ஆம் காந்தியே தான்“.

அவளுக்குக் காந்தியை நேரில் பார்த்தவுடன் கைகள் நடுங்கத்துவங்கியது. அவள் தன் நடுக்கத்தை மறைத்தபடியே சாஷ்டாங்கமாக அவரது காலில் விழுந்தாள். காந்தி அவளை எழச்செய்து ஆசி கொடுத்தார்.

வெளிச்சம் வராத மூலையில் இருந்த ஒரு கயிற்றுகட்டிலில் கிட்டுப் படுத்துகிடந்தார். ஒடுங்கிய முகம். அவரது வேஷ்டி விலகிக்கிடந்தது. மெலிந்து வற்றிப்போன உடல். துருத்திக் கொண்டிருக்கும் கழுத்து எலும்புகள். குச்சியான கை கால்கள். நீண்டகாலம் படுக்கையிலே கிடந்து உடம்பு சருகு போலாகியிருந்தது.

காந்தி அமர்வதற்காக ஒரு முக்காலியை கொண்டு வந்து போட்டாள் பார்வதி. காந்தி அதில் அமர்ந்தபடியே கதர்கொடி கிட்டுவைப் பார்த்தார். கண்கள் பாதித் திறந்திருப்பது போலிருந்தது. தலையிலிருந்த நரைமயிர்கள் ஒட்டிப்போயிருந்தன. இறுக்கமான புருவத்தில் ஒரு மயிர் நீட்டிக் கொண்டிருந்தது. அழுந்திப்படுத்த காரணத்தால் காது மடல் மடங்கியிருந்தது.

“அய்யா.. அய்யா“ என்று பார்வதி கிட்டுவை எழுப்ப முயன்றாள்

கயிற்றுக்கட்டிலை ஒட்டி ஒரு இராட்டை ஒரமாகத் தென்பட்டது. பார்வதி கையைக் கட்டிக் கொண்டு காந்தி அருகில் ஒரு மாணவி போல நின்றிருந்தாள்

காந்தி மெதுவான குரலில் “கிட்டு.. கிட்டு“ என்று அழைத்தார். கிட்டுவிடம் சலனமேயில்லை.

“தன்னுசார் கிடையாது. யாரையும் அடையாளம் தெரியாது. ஐந்து வருஷமா இப்படியே தான் இருக்கார். ஒரு வார்த்தை பேசலை. சூரங்குடி வைத்தியர் வந்து மருந்து அரைச்சி தருகிறார். ஆனா நினைப்பு வரவேயில்லை. உசிரு மட்டும் தான் ஒட்டிகிட்டு இருக்கு“ என்றாள்

காந்தி குனிந்து கிட்டுவின் கைகளைத் தடவினார். வெறித்த அந்தக் கண்களைப் பார்த்தபடியே இருந்தார்.

பார்வதி நெகிழ்ச்சியில் தழுதழுத்த குரலோடு தன் தந்தைக்கு நடந்தவற்றைச் சொல்ல துவங்கினான்.

“புதூர்ல நிறையக் கள்ளுகடை இருக்கு. அதை எதிர்த்து அய்யா போராட்டம் பண்ணினாரு கள்ளுகடைக்குக் குடிக்க வர்றவங்கள தடுத்து நிறுத்தி “வேண்டாம் ஐயா! கள் குடிக்காதீங்க கையெடுத்து கும்பிடுறேன்”னு கேட்டுக்கிட்டு இருந்தாரு. ஒரு ஆள் அய்யா முகத்திலே எச்சில் துப்பினான். அப்பவும் அய்யாவுக்குக் கோபம் வரலை. உங்க கால்ல விழுந்து கேட்குறேன்னு சொல்லிட்டு இருந்தார் திடீரென்று போலீஸ்காரங்க ஒரு வந்து இறங்கி தொண்டர்களைத் தடியாலே அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அய்யா இடத்தை விட்டு நகரவேயில்லை. அவருக்குத் தலையில் சரியான அடி. ரத்தம் கொட்டுது. ஆனா கதர்கொடியை விடவேயில்லை. உங்க பேரை தான் சொல்லிகிட்டே இருந்தார்.

ஒரு போலீஸ்காரன் கதர்கொடியை பிடிச்சிருந்த கையிலே லத்தியாலே அடிச்சான். இன்னொருத்தன் அய்யா வேஷ்டியை உருவி அம்மணமாக்கினான். நாலு போலீஸ்காரங்க ஒண்ணு சேர்ந்து அவரை அடிச்சாங்க. அதுல மயங்கினவரு தான் எழுந்திருக்கவேயில்லை “

அவள் பேசியதை ராஜன் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க துவங்கியதும் காந்தி வேண்டாம் என்றபடியே அவள் சொல்வது தனக்குப் புரிகிறது என்று வழியும் அவளது கண்ணீரைக் காட்டினாள்

காந்தி வந்திருக்கிறார் என்ற செய்தி இதற்குள் ஊர் முழுவதும் பரவிவிட்டது. கிட்டுவின் குடிசைக்கு வெளியே மக்கள் திரண்டிருந்தார்கள். காந்திக்குக் கடிதம் கொடுத்த இளைஞனான முத்துக் கூட்டத்தை விலக்கிவிட்டு குடிசைக்குள் வந்தான்

அவனால் நம்பமுடியவில்லை.

காந்தி ஒரு எளிய தொண்டரைத் தேடி வந்திருக்கிறார். அதுவும் சுயநினைவு இல்லாமல் இருக்கும் ஒருவரை காண வந்திருக்கிறார். தன் பெரியப்பா எவ்வளவு பாக்கியம் செய்தவர்.

அவனும் காந்தியை வணங்கிக் காலைத் தொட்டு நமஸ்கரித்தான்

“நீ தான் கடிதம் எழுதிக் கொடுத்ததா“ என்று காந்தி கேட்டார்

ஆமாம். எங்க பெரியப்பாவுக்கு எல்லாமே நீங்கள் தான். அவரை நீங்கள் தெரிஞ்சிகிடணும்னு தான் லெட்டர் எழுதி குடுத்தேன். நீங்க வீடு தேடி வருவீங்கன்னு எதிர்பார்க்கலை என்று தட்டுத்தடுமாறி ஆங்கிலத்தில் பதில் சொன்னான் முத்து

“என்ன வேலை செய்கிறாய்“ என்று அவனிடம் காந்தி கேட்டார்

“ஸ்கூல் டீச்சர் “என்றான் முத்து

கிட்டுவிற்குத் தானே பணிவிடைகள் செய்யப்போவதாகச் சொல்லி காந்தி வெந்நீரையும் ஒரு துணியையும் கொண்டுவரும்படி சொன்னார்

பார்வதி மறுத்தபடியே அய்யா வேணாம் நான் பாத்துகிடுறேன் என்றாள். ,இத்தனை ஆண்டுகளாக அவள் தான் தந்தையைக் குளிக்க வைத்து உடை உடுத்தி உணவு கொடுத்து உறக்கதிலும் அருகிலிருந்து விசிறி விட்டு அவரைப் பராமரித்து வருகிறாள். அவளுக்கென்று தனி வாழ்க்கை எதுவுமில்லை.

காந்தி தானே அடுப்பை நோக்கி செல்லத்துவங்கியதும் அவள் காயவைத்திருந்த வெந்நீரை எடுத்து ஒரு இரும்பு வாளியில் ஊற்றினாள். அந்த வாளியை காந்தியே தூக்கிக் கொண்டு வந்தார். அவள் கிழிந்த துணி ஒன்றை அவரிடம் கொடுத்தாள்.

காந்தி அங்கே நின்றிருந்தவர்களை வெளியே செல்லும்படியே சொன்னார்

அறையில் பார்வதியும் காந்தியும் மட்டுமே இருந்தார்கள்.

நீண்ட பயணமும் நடையும் கூட்டங்களில் தொடர்ந்து உரையாற்றுவதும் காந்தியைக் களைத்துப் போகச் செய்திருந்தது. சில நாட்கள் அவரது கால்கள் வீங்கியிருந்தன. ஆனால் எதற்காகவும் அவர் தனது பயணத்திட்டத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அன்றாடம் எந்த வழியில் பயணம் செய்கிறோம். எங்கே பேசுகிறோம். யாரைச் சந்திக்கிறோம். எங்கே நிதி அளிக்கப் போகிறார்கள் என்பதைப் பற்றிக் கேட்டு அறிந்து கொண்டிருந்தார். இதற்குள் ராட்டை நாற்பது. பத்திரிக்கையாளர்களைச் சந்திப்பது. கடிதம் எழுதுவது, மண்குளியல் என எதையும் மாற்றிக் கொள்ளவில்லை.

பெண்கள் அதிகம் திரண்டுவந்த இடங்களில் அவரது கார் தானே நின்றது. பெண்களுக்கென்றே தனியான கூட்டத்தை நடத்த வேண்டும் என்பதைக் கறாராகச் சொல்லிக் கொண்டிருந்தார். அன்றாடம் அவர் படுக்கைக்குப் போகு முன்பாகச் சுற்றுப்பயணத்தில் வசூலான தொகைகளின் கணக்கைப் பார்ப்பது வழக்கம். இரவு எவ்வளவு நேரமானாலும் அதைப் பார்த்து முடித்துக்கொண்டுதான் உறங்கப் போவார். ஸ்ரீ வைகுண்டத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி ஒன்றை அங்கேயே ஏலத்தில் விட்டு அந்தப் பணத்தை அரிஜன் நிதிக்காகச் சேர்த்துக் கொள்ளும்படி செய்தார். காந்தியிடம் ஆட்டுக்குட்டியை ஏலத்தில் எடுத்த பொன்னி நாயக்கர் அந்த ஆட்டுக்குட்டியை வணங்கினார். அந்த ஆடு கிராமத்தில் இனி தனிச்சிறப்பு பெற்றுவிடும்.

காந்தியோடு கூடவே பயணம் செய்து கொண்டிருந்த ராஜனுக்கு அன்பின் மிகுதியால் மக்கள் காந்தியைத் தொல்லை செய்கிறார்கள். இனிப்புப் பண்டத்தைப் பிய்த்து எடுப்பது போலப் பிய்த்து எடுக்கிறார்கள் என்று தோன்றியது. பயணத்திட்டத்தில் முன்னர் நிச்சயம் செய்யாத இடங்களில் அவரது கார் நிற்கும் போதெல்லாம் ராஜன் பதற்றமாகினார். மூடப்பட்ட ரயில்வே கேட் முன்பு ஆயிரம் பேர் காரை சுற்றி நின்று கொண்டால் அவர் என்ன தான் செய்வார்.

விருதுநகரில் நடந்த கூட்டத்திற்குள் கதர் சட்டை வேஷ்டி அணிந்த ஒரு இளைஞன் காந்தியிடம் ஒரு கடிதம் ஒன்றைக் கொடுப்பதற்காகப் போராடிக் கொண்டிருந்தான். அவனால் காந்தியை நெருங்கமுடியவில்லை. அவன் தன் கையிலிருந்த கடிதத்தை ராஜனிடம் கொடுத்துக் காந்தியிடம் ஒப்படைக்கச் சொன்னார். அன்றாடம் இப்படிப் பல நூறு கடிதங்கள். வாழ்த்து மடல்கள். கவிதைகள் தரப்படுகின்றன. அவற்றை எல்லாம் காந்தி படித்துப் பதில் தருவது என்றால் அதற்கே நாள் முழுவதும் போய்விடும். ஆனால் ராஜன் அவற்றைக் கவனமாக வாசித்தார். முக்கியமான தகவலோ செய்தியோ இருந்தால் அதை மட்டும் காந்தி ராட்டை நூற்றுக் கொண்டிருக்கும் தருணத்தில் அவரிடம் தெரிவிப்பார். சில வேளைகளில் அந்தக் கடிதத்தைக் காந்தி படிக்கச் சொல்லிக் கேட்பதுண்டு. உடனே பதிலை டிக்டேட் செய்வதும் உண்டு.

அப்படித் தான் அந்த இளைஞன் கொடுத்த கடிதத்தை ராஜன் முகாமிட்டிருந்த இடத்தில் இரவு வாசித்தார். அதிலிருந்த விஷயங்களை படிக்கப் படிக்க அவரை அறியாமல் கண்ணீர் பெருகியது. இது நிஜம் தானா.

ஒரு தொண்டன் இப்படி எல்லாம் காந்திய வழியினை முன்னெடுத்து அடியும் உதையும் பட்டு உருக்குலைந்து போயிருக்கிறானா. எவ்வளவு பெரிய தியாகமது.

அதுவும் நோயுற்றுப் படுக்கையில் கிடந்த நிலையிலும் எவரது உதவியும் ஏற்றுக் கொள்ளாது வறுமையில் வாடுவது என்பது எளிதான விஷயமா என்ன.

காந்தி ஒரு தாதியைப் போல வெந்நீரில் துணியை முக்கிச் சூடு பொறுக்கும்படி பார்த்துவிட்டு மெதுவாகக் கிட்டுவின் பாதங்களைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தார். வெடிப்பேறிப் போன கால்கள். எவ்வளவு நடந்து அலைந்திருக்கும். இந்த அலைச்சல் எதற்காக, தான் முன்னெடுத்த அஹிம்சாவழிக்கான போராட்டத்திற்குத் தானே.

அவர் அந்தப் பாதங்களைச் சீராகத்துடைத்தார். பார்வதி இதற்குள் தந்தையின் வேஷ்டியினை அரையோடு சேர்த்துச் சுருட்டிவிட்டாள். காந்தி அந்த மனிதரின் உடல் தன் உடலைப் போலவே மெலிந்து ஒடுங்கி இருப்பதைக் கண்டார்.

மிகக் கவனமாக, சிரத்தையாகக் கிட்டுவின் உடலைக் காந்தி துடைத்துத் தூய்மை செய்தார். வயிற்றில் காந்தியின் கை பட்டபோது லேசான சூடு தெரிந்தது. கிட்டுவின் நரைமயிர் அடர்ந்த மார்பினை துடைக்கும் போது மலர் கொண்டு தொடுவது போல மெதுவாகத் துடைத்தார். வலது கையில் தன் உருவத்தைக் கிட்டுப் பச்சை குத்தியிருப்பதைக் கண்டார். அந்த உருவத்தைத் தன் விரலால் தொட்டுத் துடைத்தார்.

பின்பு கிட்டுவின் முகத்தைத் தன் கைகளால் தடவிவிட்டார். கண்களைத் துடைத்தபடியே அதிலிருந்து கண்ணீர் கசிவதை உணர்ந்தார்.

கிட்டுவிற்குத் தான் வந்திருப்பது தெரிகிறதா. அவர் தன்னை உணர்கிறதா என்பது போலக் கிட்டுவின் முகத்தைப் பார்த்தபடியே இருந்தார். அதில் சலனமேயில்லை. நெற்றியினைத் துடைத்து காது மடல் வரை சுத்தம் செய்துவிட்டு அவருக்கு என்ன உணவு கொடுக்கிறாய் என்று பார்வதியிடம் ஆங்கிலத்தில் கேட்டார்

“பழைய கஞ்சி“ என்றாள்

அதைக் கொண்டுவரும்படி காந்தி சொன்னார்

அவள் ஒரு கலயத்தில் பழைய கஞ்சியைக் கொண்டுவந்து கொடுத்தாள்.

அந்தக் கஞ்சியினையும் அவரே கிட்டுவிற்குப் புகட்டிவிட்டார். வழியும் உதட்டினை தனது வேஷ்டி நுனியாலே துடைத்துவிட்டார். கிட்டுவினால் இரண்டு வாயிற்கு மேல் குடிக்கமுடியவில்லை

மீதமான கஞ்சியைக் காந்தி குடித்தார்.

இதற்குள் குடிசைக்கு வெளியே திரண்ட மக்கள் காந்திக்கு வாழ்த்து சொல்லி குரல் எழுப்பத் துவங்கியிருந்தார்கள்.

வெளியே நிற்பவர்களை உள்ளே வரும்படி சொன்னார் காந்தி

அந்தக் குடிசை முழுவதும் ஆட்கள் நிரம்பியிருந்தார்கள். கட்டிலைச் சுற்றிலும் ஆட்கள் அமர்ந்து கொண்டார்கள்.

காந்திஜி தணிவான குரலில் சொன்னார்

“நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கிட்டுவிற்காகப் பிரார்த்தனை செய்வோம்“

அனைவரும். கைகூப்பியபடியே நின்றார்கள்.

சுதர்சன் பாடத்துவங்கினார். கண்களை மூடி கிட்டுவிற்காகக் காந்தி பிரார்த்தனை செய்தார். பின்பு மெல்லிய குரலில் சொன்னார்

“கிட்டுவை தாக்கிய போலீஸ்கார்கள் நலனிற்காகவும் நாம் பிரார்த்தனை செய்வோம். “

அதைக் கிராமவாசிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் காந்தியை வெறித்துப் பார்த்தபடியே இருந்தார்கள். காந்தி மீண்டும் தன் கண்களை மூடிக் கொண்டு பிரார்த்திக்கத் துவங்கினார். சுதர்சனுடன் கிட்டுவின் மகள் பார்வதி மட்டுமே பிரார்த்தனை செய்தாள்.

பிரார்த்தனை முடிந்தபிறகு காந்தி அந்த ஊர்மக்களை நோக்கிச் சொன்னார்

“கடவுள் நல்லவர்களைக் கைவிடுவதில்லை. கிட்டுவும் என் சகோதரர் தான். அவரைப் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் அனைவரின் பொறுப்பு“

மக்கள் தலையாட்டி ஏற்றுக் கொண்டார்கள்.

விடைபெற்றுக் கொள்ளும்முன்பு காந்தி முக்காலியில் அமர்ந்தபடியே கட்டிலில் கிடந்த கிட்டுவின் கைகளை எடுத்து அதில் எதையோ எழுதினார். என்ன எழுதினார் என்று அவர்களால் கண்டறிய முடியவில்லை. ஆனால் கிட்டுவின் புருவங்கள் நெகிழ்ந்து தளர்வதைக் காந்தி கண்டார்.

பின்பு காந்தி சுவர் ஓரமாக வைக்கப்பட்டிருந்த கிட்டுவின் ராட்டையை எடுத்து நூல் நூற்றார். விடைபெறும் போது பார்வதியிடம் காந்தி சொன்னார்

“உன் தந்தையிடம் நான் பேச வேண்டியதை எல்லாம் பேசிவிட்டேன். அவருக்கு நான் சொன்னது புரிந்திருக்கும். உனக்கு ஏதாவது உதவி தேவை என்றால் எனக்கு ஒரு தபால் அட்டை எழுது. நீயும் இனி என் மகள் தான். “

அவள் தன்னைக் கட்டுபடுத்த முடியாமல் கண்ணீர் சிந்தினாள். அவளை ஆறுதல் படுத்திய பின்பு காந்தி அங்கிருந்து விடைபெற்றார்

வயல் வரப்பில் நடந்து வரும் போது ராஜனிடம் காந்தி சொன்னார்

“இந்த தேசம் கிட்டுவைப் போன்றவர்களுக்கு நிறையக் கடமைப்பட்டிருக்கிறது. “

“நினைவுகள் இல்லாத வெற்றுடலாக வாழுவது பெரும் சோகம்“ என்றார் ராஜன்

“அதிகாரத்தின் கோரத்திற்கு இதை விட என்ன சாட்சியம் வேண்டும். கிட்டு தன்னை பலிகொடுத்திருக்கிறார். நாம் செய்யப்போகும் செயல்கள் தான் கிட்டுவிற்கான நீதி. “ என உறுதியான குரலில் சொன்னார் காந்தி

அந்தக் குரலில் அவர் எதையோ மனதிற்குள் திட்டமிடத் துவங்கியிருக்கிறார் என்பது புரிந்தது. பின்னாளில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதற்கான விதை அன்று தான் காந்தி மனதில் உருவானது.

வயலைத் தாண்டும் போது காந்தி திரும்பிப் பார்த்தார். அமைதி ஊர்வலம் போல மொத்த கிராமமும் அவரது பின்னால் திரண்டு வந்து கொண்டிருந்தது.

செய்தாக வேண்டிய வேலைகள் அவருக்காகக் காத்துக்கொண்டிருந்ததை உணர்ந்தவராக அவர் கூண்டு வண்டியை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தார்.

•••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 15, 2021 03:08

March 14, 2021

காலி நாற்காலி

பண்டிட் ரவிசங்கரின் இசை குறித்த தேடுதலின் போது இணையத்தில் தற்செயலாக A Chairy Tale என்ற குறும்படத்தைப் பார்த்தேன். நார்மன் மெக்லாரன் என்ற கனேடிய அனிமேஷன் இயக்குநர் உருவாக்கிய படம். இதற்கு ரவி சங்கர் இசையமைத்திருக்கிறார்.. அற்புதமான இசை. சதுர்லாலுடன் இணைந்து இந்த இசைக்கோர்வையை உருவாக்கியிருக்கிறார் ரவிசங்கர். பரவசமூட்டுகிறது இசை

ஒன்பது நிமிஷங்கள் ஓடும் இந்தக் குறும்படம் 1957ல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதிற்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

ஒரு நாற்காலியில் அமருவதற்காக ஒரு இளைஞன் முயல்கிறான். ஆனால் நாற்காலி நகர்ந்து போய்க் கொண்டேயிருக்கிறது. அவனால் உட்கார முடியவில்லை. அவன் நாற்காலியோடு போராடுகிறான். நாற்காலி அவனை அனுமதிக்க மறுக்கிறது. அவன் நாற்காலியை எப்படிக் கையாளுவது என்று தெரியாமல் தடுமாறுகிறான். வழக்கமான முறைகள் எதுவும் பலிக்கவில்லை. ஆகவே நாற்காலி வேண்டாம் என முடிவு செய்து தரையில் அமருகிறான். தரையில் அவன் அமர்ந்த காட்சியில் பூமியே ஒரு நாற்காலி போலத் தோன்றுகிறது. ஒரே வித்தியாசம் கையில்லாத நாற்காலியது. ஆனால் அந்த இருக்கை அவனுக்கு வசதியாக இல்லை.

இப்போது நாற்காலியை எப்படித் தன்வசமாக்குவது எனப் புரியாமல் குழப்பமடைகிறான். அவன் ஒதுங்கியதும் நாற்காலியே அவனைத் தேடி வருகிறது. அவனை நெருங்குகிறது. அவன் நாற்காலியோடு ஒரு நடனமாடுகிறான்.

நாற்காலியின் விருப்பம் வேறு என்பதைப் புரிந்து கொண்டவன் போல நாற்காலி தன் மீது அமருவதற்கு அவன் இடமளிக்கிறான். இப்போது நாற்காலியும் அவனும் தோழமை கொண்டுவிடுகிறார்கள். நாற்காலி அதன்பிறகு அவனை உட்கார அனுமதிக்கிறது.

காலி இருக்கை என்பது ஒரு குறியீடு. ஒரு முறை கூட்டத்தில் என் முன்னே இருந்த காலி இருக்கையைச் சுட்டிக்காட்டி இது போலக் காலி இருக்கைகளில் எனக்கு விருப்பமானவர்களை மனதளவில் உட்கார வைத்துக் கொள்வேன் என்று பேசினேன். உண்மையில் காலி இருக்கைகள் எப்போதும் காலியானவையில்லை. யார் அதிலிருந்து எழுந்து போனார்கள். அல்லது எழுப்பிவிடப்பட்டார்கள். இயல்பாக நடந்ததா, அல்லது துரத்தப்பட்டாரா. காலி இருக்கை எப்போதும் யாருக்கோ தயாராகக் காத்திருக்கிறது.

ஒரு நாற்காலியில் யார் அமரப்போகிறார்கள் என்பது பெரும் புதிரே. கர்னலின் நாற்காலி என்ற எனது குறுங்கதை காலனிய ஆட்சியில் நாற்காலி சுமப்பவன் கதையைச் சொல்கிறது. அப்படி நாம் எஜமானர்களின் நாற்காலிகளை சுமந்து அலைந்தவர்கள். இன்றும் அரூபமாக அவர்களின் நாற்காலியை சுமந்து கொண்டுதானிருக்கிறோம்.

ஒரு நாற்காலியில் அமர்ந்தவுடன் அதிகாரம் நம் வசம் வந்துவிட்டது போல உணருகிறோம். நாற்காலியில் அமர்ந்தபிறகு சும்மா இருக்க நம்மால் முடியாது. திரையரங்கில் நடப்பது போல ஏதோ ஒன்று நம்மைக் களிப்பூட்டச் செய்ய வேண்டும். அல்லது நாம் அதிகாரத்தைக் காட்டத் துவங்கிவிடுவோம்.

கிராமங்களில் சில வீடுகளில் நாற்காலி கிடையாது. விருந்தினர் வந்தால் இரவலாக நாற்காலி பெற்று வருவார்கள். கிராமத்தில் திருவிழாவில் நடக்கும் நாடகம் பார்க்க நாற்காலி போடப்பட்டிருக்காது. தரையில் தான் அமர வேண்டும். தரையில் அமரும் போது வேற்றுமை தெரிவதில்லை. ஆனால் பெரிய நாற்காலிகள். சிம்மாசனங்கள் தான் வேற்றுமையை உருவாக்குகின்றன.

எந்த நாற்காலியும் எவரையும் அமர அழைப்பதில்லை. எளிதாகக் கிடைத்துவிடுவதுமில்லை. காலி இருக்கைகளை எதையோ உணர்த்தியபடியே இருக்கின்றன.

ஆசிரியர்களின் நாற்காலியில் அமர்ந்தவுடன் மாணவன் ஆசிரியன் போலாகிவிடுகிறான். ஆசிரியர் இல்லாத நேரத்திலும் அவரது நாற்காலி அவரது இருப்பை வெளிக்காட்டிக் கொண்டேயிருக்கிறது

இந்தக் குறும்படத்தில் நடப்பது நாற்காலியோடு ஒருவன் ஆடும் நடனமே. முடிவில் அவன் நாற்காலியைப் புரிந்து கொள்கிறான். நாற்காலியும் அவனைப் புரிந்து கொள்கிறது. அந்த நிமிஷத்தில் படம் நாற்காலியை பற்றியதல்ல என்பது ஆழமாக மனதில் பதிந்துவிடுகிறது

எந்த ஒன்றும் மற்றதை அனுமதிப்பது எளிதானதில்லை.

இந்தத் தேர்தல் காலத்தில் நாற்காலியைப் பற்றிய குறும்படம் நிறைய அர்த்தங்களைத் தருகிறது என்பதால் அவசியம் இதனைக் காண வேண்டும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 14, 2021 07:09

தாகூரின் கூப்பிய கரங்கள்

மகாகவி தாகூரின் வாழ்க்கை குறித்துச் சத்யஜித் ரே எழுதி இயக்கிய ஆவணப்படம் Rabindranath Tagore. 1961 ஆம் ஆண்டுத் தாகூரின் நூற்றாண்டில் வெளியிடப்பட்டது.

சத்யஜித் ரே, சாந்தி நிகேதனிலுள்ள விஸ்வபாரதியில் பயின்றவர். தலை சிறந்த இயக்குநராக மட்டுமின்றிச் சிறந்த இசையமைப்பாளராகவும் ஓவியராகவும் எழுத்தாளராகவும் வடிவமைப்பாளராகவும் விளங்கியவர். இந்தப் பன்முகத்தன்மை சாந்தி நிகேதனிலிருந்துதான் உருவானது.

நேருவின் ஆலோசனைப்படியே இந்த ஆவணப்பட உருவாக்கம் திட்டமிடப்பட்டது. நேருவின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படமாக்க வேண்டும் என்ற எண்ணம் ரேயிற்கு இருந்தது. இதற்காக நேருவைச் சந்தித்து உரையாடியிருக்கிறார். ஆனால் அன்றிருந்த அரசியல் நெருக்கடிகள் காரணமாக நேரு அதை விரும்பவில்லை என்று ஆண்ட்ரூ ராபின்சன் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

தாகூரைப் பற்றிய ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அதில் நிறைய வேறுபாடுகள், தகவல் பிழைகள் இருந்தன. இதிலிருந்து மாறுபட்டு அதிகாரப்பூர்வமாக அவரைப் பற்றி ஓர் ஆவணப்படத்தை இந்திய அரசு உருவாக்க வேண்டும் என்று விரும்பியது. இதற்கான பொறுப்பு சத்யஜித்ரே வசம் ஒப்படைக்கப்பட்டபோது அவர் இதை மரபான ஆவணப்படங்களைப்போல உருவாக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்

இந்த ஆவணப்படப் பணியைக் கண்காணிக்க அரசு ஒரு குழுவை ஏற்படுத்தியது. அவர்களின் வழிகாட்டுதலின் படியேதான் படம் உருவாக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காதம்பரி தேவியின் தற்கொலை குறித்தோ, காந்தியோடு ஏற்பட்ட பிணக்குகள் பற்றியோ, முசோலினியைப் பாராட்டியதைப் பற்றியோ, எந்தத் தகவலும் இந்த ஆவணப்படத்தில் இடம்பெறக்கூடாது. சர்ச்சைக்குரிய விஷயங்களைப் படத்தில் அனுமதிக்கமுடியாது என்று கண்காணிப்புக் குழு உறுதியாகச் சொன்னது.

தாகூரை மகாகவியாகச் சித்திரிக்கவே விரும்புகிறேன். அவரது ஆளுமையின் உருவாக்கம். அவரது கவிதைகள், அரசியல் சமூகச் செயல்பாடுகள், சாந்தி நிகேதன் உருவாக்கம், இந்திய விடுதலை இயக்கத்தில் அவரது பங்கு இவற்றையே முதன்மைப்படுத்த இருப்பதாக ரே தெரிவித்தார்.

இந்த ஆவணப்படத்திற்காக ஒரு திரைக்கதையைச் சத்யஜித் ரே எழுதினார். அதை வைத்துக்கொண்டு தேவையான இடங்களில் மறுஉருவாக்கம் செய்வது, தேவையான இடங்களில் சித்திரங்கள் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்திக்கொள்வது என்று முடிவு செய்தார்.

பல்வேறு நாடுகளுக்கும் தாகூர் பயணம்செய்து உரை நிகழ்த்தியிருந்தபோதும் எங்கும் அவரது காணொளிப் பதிவு கிடைக்கவில்லை. அது பெரும் குறையாக அமைந்தது.

இந்தப் படத்தை உருவாக்கும் முன்பாகவே படத்தில் தாகூரின் கவிதைகளைத் திரையில் வாசிக்கப்போவதில்லை என்று ரே முடிவு செய்துவிட்டார். ஆகவே படத்தில் தாகூரின் கவிதைகள் பற்றிக் குறிப்பிடப்படுகிறதே அன்றி அவரது கவிதைகள் எதுவும் வாசிக்கப்படவில்லை. மாறாகக் கவிதைகள் எழுதப்பட்ட விதம், அது ஆங்கில உலகிற்கு அறிமுகமானது, நோபல் பரிசுபெற்ற பின்புலம் இவையே விளக்கப்படுகின்றன.

தாகூருக்குச் செலுத்தப்பட்ட மிகச்சிறந்த காணிக்கை என்றே இப்படத்தைச் சொல்வேன். காணிக்கை என்பதன் முழு அர்த்தமும் இந்தப் படைப்பினுள் காணமுடிகிறது. இந்த ஆவணப்படம் தாகூரின் வாழ்க்கையை மட்டும் சித்திரிக்கவில்லை. மாறாக வங்காளத்தின் பண்பாட்டு, அரசியல் வரலாற்றையும் சேர்த்தே சித்திரிக்கிறது.

எழுத்தாளர்களைப் பற்றிய ஆவணப்படங்களில் பெரும்பாலும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், ஆய்வாளர்களின் நேர்காணல்களே அதிகம் இடம்பெறுவது வழக்கம். இந்த ஆவணப்படத்தில் அப்படியான ஒரு நேர்காணல்கூடக் கிடையாது. கவனமாக அதைச் சத்யஜித்ரே தவிர்த்திருக்கிறார்.

தாகூர் வம்சாவளியில் துவங்கி அவரது பால்யகாலம், இளமைப்பருவம், சாந்திநிகேதன் உருவான விதம். நோபல் பரிசு பெற்றது. ஜாலியன் வாலா பாக் படுகொலை, விஸ்வபாரதி பல்கலைக்கழக உருவாக்கம், இந்திய விடுதலைப்போராட்ட நாட்கள் எனத் தாகூர் வாழ்வின் விரிந்த பக்கங்களை அழகான கோட்டுச் சித்திரம்போல ரே உருவாக்கிக் காட்டியிருக்கிறார்.

தாகூரின் குடும்ப வரலாறும் சத்யஜித்ரேயின் குடும்ப வரலாறும் பல்வேறு விதங்களில் ஒன்றுபோலவே இருக்கிறது. இரண்டு குடும்பங்களிலும் படித்தவர்கள் அதிகம். நுண்கலைகள், பத்திரிக்கை, இசை, நாடகம்மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்கள். இங்கிலாந்து சென்று கல்வி பயின்றிருக்கிறார்கள்.

ரவீந்திரநாத் தாகூர் என்ற இந்த ஆவணப்படத்தின் துவக்கப் பணி 1958 ஆம் ஆண்டின் முற்பகுதியில் துவங்கியது. கறுப்பு வெள்ளையில் படமாக்கப்பட்ட இந்தப் படத்தின் தனிச்சிறப்பு இசை. தாகூரின் ஆன்மாவை உணரும் வண்ணம் இசை நம்மைக் கரையச் செய்கிறது. கறுப்பு வெள்ளைக் காட்சிகளுடன் தனித்துவமான இசை இணைந்து ஒலிக்கும்போது மனதில் உணர்ச்சிகள் கொந்தளிக்கின்றன.

தாகூரைப் பற்றிப் பலரும் அறிந்த விஷயங்களைப் பெரும்பாலும் ரே தவிர்த்திருக்கிறார். அவரை ஒரு பிம்பமாக மாற்றுவதற்குப் பதிலாகச் சிறந்த கவியாக, கலைஞனாக, குருவாக அடையாளப்படுத்தவே ரே முயன்றிருக்கிறார்.

இன்று புதிதாய்ப் பிறந்தேன் என்ற மிருணாள் சென் எழுதிய நூலில் தாகூரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி குறிப்பிடப்படுகிறது. இளைஞரான மிருணாள் சென் அந்த ஊர்வலத்தினை நேரில் கண்டதை விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். பெருந்திரளான மக்கள் செல்லும் இறுதி ஊர்வலத்தில் காவலர்கள் கூட்டத்தினைப் பிடித்துத் தள்ளி வழியை உண்டாக்கினார்கள். எங்கும் புழுதி பறந்தது. ஒரு கவிஞனுக்கு இதைவிடச் சிறந்த அஞ்சலி செலுத்த முடியாது, அபூர்வமான காட்சியது என்கிறார்.

அதுபோன்ற காட்சி ஒன்றிலிருந்துதான் ரேயின் ஆவணப்படம் துவங்குகிறது. 7 ஆகஸ்ட் 1941ல் தாகூர் இறந்தார். அவரது இறுதி ஊர்வலம் கல்கத்தா வீதியில் மிகப் பிரம்மாண்டமாகச் சென்றது. அந்த ஊர்வலக் காட்சிகளை ரே ஆவணப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார். கண்ணீர் சிந்தும் மக்களின் ஊடாகத் தாகூரின் உடல் எடுத்துச் செல்லப்படுகிறது. தாகூரின் அழியாப் புகழுக்கான அடையாளமது. அங்கிருந்துதான் தாகூரின் குடும்ப வரலாற்றை விவரிக்க ஆரம்பிக்கிறார் சத்யஜித் ரே.

குறைவான காட்சிகளின் வழியே நூற்றாண்டுகளின் வரலாற்றைச் சொல்லி விடுகிறார். கல்கத்தா நகரம் எப்படி உருவாக்கப்பட்டது என்பதில் துவங்கி தாகூரின் வம்சாவழி விவரிக்கப்படுகிறது.

தாகூரின் குடும்பம் வசதியானது. கல்வியில் மிகத் தேர்ச்சி பெற்றது. கல்கத்தாவிலுள்ள ஜோராசாங்கோ மாளிகையை அவர்கள் உருவாக்கிய விதம்பற்றிச் சொல்லும் ரே, அந்த ஜோராசாங்கோவில்தான் தாகூர் 1861 ஆண்டுப் பிறந்தார் என்பதைக் குறிப்பிடுகிறார்.

இன்று அந்த மாளிகை நினைவகமாக உள்ளது. அதன் பழைய தோற்றமும் பிரம்மாண்டமும் மதுரை திருமலைநாயக்கர் மகாலை நினைவுபடுத்துகிறது.

தாகூர் குழந்தையாக இருந்தபோதே அவரது தாய் இறந்துவிட்டார். தாயின் அன்பிற்கான ஏக்கம் வாழ்நாள் முழுவதும் அவருக்குள் இருந்தது. தாகூரின் குடும்பம் முன்னோடியானது. வங்காளத்தில் நடந்த முக்கிய அரசியல் மாற்றங்கள். வங்காள மறுமலர்ச்சி இயக்கங்கள் ஜோராசாங்கோ மாளிகையில்தான் திட்டமிடப்பட்டன.

அந்த மாளிகையின் நினைவுகளில் எத்தனையோ ரகசியங்கள் புதையுண்டு இருக்கின்றன. அங்கு வாழ்ந்த ஆண்களின் உலகம் வேறு. பெண்களின் உலகம் வேறு. ஆண்களின் உலகம் கொண்டாட்டத்தையும் சுதந்திரத்தையும் முதன்மைப்படுத்தியது. பெண்களின் உலகமே துயரமும் தனிமையும் கொண்டிருந்தது. ஜோராசாங்கோவின் பெண்கள் உலகின் கண்களிலிருந்து விலகியவர்கள். அவர்களின் உண்மையான வாழ்க்கை எப்படியிருந்தது என்று இன்றும் எவராலும் அறிந்து கொள்ளமுடியவில்லை. அதே நேரம் அந்த வீட்டிற்குள்ளிருந்துதான் முதற்பெண் நாவலாசிரியர் உருவானார். பெண் விடுதலை குறித்த வாதங்கள் துவங்கின. ஒரு நாளில் இருளும் வெளிச்சமும் பாதிப் பாதியாக இருப்பதுபோல அந்த வீட்டிற்கும் இரண்டு முகங்கள் இருந்தன.

துவாரகநாத் தாகூரின் மூத்த மகன் தேபேந்திரநாத் தாகூர் ஒரு சீர்திருத்தவாதி. ராஜாராம் மோகன்ராயுடன் நெருக்கமான நட்புக்கொண்டிருந்தார். ஆகவே அவரது வீடு எப்போதும் அரசியல் மற்றும் பண்பாடு குறித்த விவாதக்கூடமாக விளங்கியது.

தாகூரின் பால்ய வயது, குறைவான காட்சிகள் வழியே அழகாகக் காட்டப்படுகிறது. ரோபி என்று செல்லமாக அழைக்கப்பட்ட தாகூர் ஒரு காட்சியில் பயில்வானிடம் மல்யுத்தம் பயிலுகிறார். பெரிய பயில்வான் முன்பாகச் சோட்டாவாக நிற்கிறார். பயில்வான் ஒரு மலரைக் கையில் ஏந்துவதுபோலத் தாகூரை ஏந்துகிறார். தரையில் வீழ்த்துகிறார்.

இன்னொரு காட்சியில் தந்தையின் ஏற்பாட்டில் துருபத் இசைக் கலைஞர் ஒருவர் சங்கீதம் கற்றுத் தருகிறார்.

ஏழு வயதில் ரோபி பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். தலையில் தொப்பி அணிந்து சாரட் வண்டியில் ஏறும் தாகூரின் தோற்றம் அவ்வளவு அழகாகியிருக்கிறது. பள்ளியில் வகுப்பறை பிடிக்காமல் வெளியே சப்தமிடும் பறவைகளின் ஒலியை, இயற்கையின் வனப்பை ரசித்தபடியே அமர்ந்திருக்கிறான். அழகான புல்லாங்குழல் இசையோடு அந்தக் காட்சி காட்டப்படுகிறது. கனவு காணும் கண்கள்கொண்ட சிறுவனாகத் தாகூர் சித்திரிக்கப்படுகிறார். இன்னொரு காட்சியில் எலும்புக்கூடு ஒன்றைக் கையால் தொட்டுப்பார்த்து வியக்கிறான்.

பள்ளிக்கூடப் படிப்புப் பிடிக்காமல் வீட்டிலே பாடம் கற்கத் துவங்குகிறான் ரோபி. சகோதரர் ஹேமேந்திரநாத்திடம் நீச்சல், மலையேற்றம், ஜூடோ குத்துச்சண்டை ஆகியவற்றைக் கற்றுக்கொள்கிறார். . ஓவியம் வரைதல், உடற்கூறியல், புவியியல், வரலாறு, இலக்கியம், கணிதம், சமஸ்கிருதம், ஆங்கிலம் போன்றவற்றையும் வீட்டிலிருந்தே கற்றுக்கொண்டார்.

தாகூர் தனது 12வது வயதில் தந்தையுடன் வட இந்தியப் பயணம் ஒன்றினை மேற்கொள்கிறார். அந்தப் பயணத்தின்போது இமயச் சிகரத்தின்முன் நின்றபடியே எதிரொலிப்பைக் கேட்டு மகிழும் தாகூரின் பால்வடியும் முகம் அத்தனை அழகாகயிருக்கிறது.

ராபி தொலைதூர சிகரங்களின் அழகினையும் பனிமூட்டத்தையும் ரசிக்கிறான். தன்னை மறந்து பாடுகிறான். அவனது தந்தை மௌனமாக அந்தப் பாடலைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். மிகக் கவித்துவமான காட்சியது.

தாகூரின் பால்ய வயதின் காட்சிகள் பதேர் பாஞ்சாலியில் வரும் அபுவை நினைவுபடுத்துகின்றன. அபு பள்ளிக்குப் போவதும், பாடம் கற்றுக் கொள்வதும், வீட்டில் படிப்பதும், வளர்ந்த பையனாக உயர்கல்வி படிப்பதும் அப்படியே தாகூரின் காட்சிகளாக மாறியிருக்கின்றன. பதேர்பாஞ்சாலியில் நடித்த அதே பையன்தான் இதில் தாகூராகவும் நடித்திருக்கிறான்.

தாகூர் தனது பதினேழு வயதில், உயர்கல்விக்காக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். அந்தப் பகுதியில் தாகூருக்கு மேற்கத்திய இசையும் ஷேக்ஸ்பியரின் நாடகங்களும் மட்டுமே பிடித்திருந்ததை ரே முதன்மையாகக் குறிப்பிடுகிறார்,

சத்யஜித்ரேயும் மேற்கத்திய இசையில் விற்பன்னர். அவர் இசையமைத்த படங்களில் இந்திய இசையும் மேற்கத்திய இசையும் மிக அழகாக ஒன்றிணைவதைக் காணமுடியும். மெர்சண்ட் ஐவரி தயாரிப்பில்1965ல் வெளியான ஷேக்ஸ்பியர் வாலா திரைப்படத்திற்குச் சத்யஜித்ரே இசையமைத்துள்ளார். இதன் இசைக்கோர்வைகளைக் கேட்டுப் பாருங்கள். அவர் எவ்வளவு சிறந்த இசையமைப்பாளர் என்பது புரியும்.

தாகூரின் முதல் இசை நாடகம், வால்மீகி பிரதிபா, இதில் மேற்கத்தியச் சங்கீதமும் இந்தியச் சங்கீதமும் இணைந்து ஒலித்தது. இந்த நாடகத்தில் தாகூர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தாகூரின் தோற்றமும் அவரது உடைகளும் மிக அழகானவை. இளவயது தாகூரின் புகைப்படங்களைப் பார்த்தால் அவர் நிகரற்ற அழகன் என்பது புலப்படும்.

கிழக்கு வங்காளத்திலிருந்த தனது பண்ணையைப் பராமரிப்பு செய்வதற்காகத் தாகூர் அங்கே இடம்பெறுகிறார். படத்தின் மிக அழகான பகுதியது. அங்கே படகில் அமர்ந்தபடியே கவிதைகள் எழுதுகிறார். இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்தபடியே சிறுகதைகள். கட்டுரைகள் என எழுதித் தள்ளுகிறார். மயக்கும் இசையோடு அமைந்த காட்சிகள்.

தாகூரின் மூத்த சகோதரர் விஜேந்திரநாத் ஒரு தத்துவ அறிஞர் மற்றும் கவிஞர், மற்றொரு சகோதரர் சத்யேந்திரநாத் முதல் இந்தியக் குடிமைப் பணியாளர் ஆவார். மற்றொரு சகோதரரான ஜோதிர்ந்திரநாத் இசையமைப்பாளர் மற்றும் நாடக ஆசிரியர். இவரின் சகோதரி சுவர்ண குமாரி முதல் பெண் நாவலாசிரியர் மற்றும் பத்திரிகை ஆசிரியர்.

ஜோதிர்ந்திரநாத்தின் மனைவி காதம்பரி தேவி, தாகூரைவிட வயதில் சற்று மூத்தவர். தாகூர்மீது மிகுந்த அன்பு செலுத்தியவர். இவர்களின் உறவைப் பற்றியே சத்யஜித்ரே சாருலதா என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இதுவும் தாகூரின் நாவலின் திரைவடிவமே.

காதம்பரி தேவி தாகூரின் கவிதைகளுக்கு முதல் வாசகராகவும் விமர்சகராகவும் இருந்தவர். அவர்களுக்குள் ரகசியக் காதல் இருந்தது. தாகூர் 1883 ஆம் ஆண்டில் மிருணாளினி தேவியினைத் திருமணம் செய்துகொண்டார். இதனால் மனமுடைந்த காதம்பரி தேவி 1884 ஆம் ஆண்டில் திடீரெனத் தற்கொலை செய்துகொண்டார். இந்தத் துயரம் தாகூரை ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது என்கிறார்கள். இவை ஆவணப்படத்தில் கவனமாகத் தவிர்க்கப்பட்டிருக்கின்றன.

தாகூரைத் திருமணம் செய்துகொண்டபோது மிருணாளினி தேவிக்கு வயது 9. அவர் குல்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர், அங்கு அவரது தந்தை தாகூரின் பண்ணையில் பணிபுரிந்தார். கல்கத்தாவிலிருந்த ஜோராசாங்கோ மாளிகையில் பிரம்ம சமாஜ முறைப்படி அவர்களின் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது தாகூருக்கு இருபத்தி இரண்டு வயது.

தாகூருக்கு ஐந்து பிள்ளைகள். தன்னுடைய பிள்ளைகள் மரபான கல்விக்கு மாற்றாகச் சுயசிந்தனையுள்ள, கலைகளுடன் இணைந்த புதிய கல்வியைப் பெறவேண்டும் என்று விரும்பினார். இதற்காகத் தனது சாந்திநிகேதனில் ஒரு பள்ளியைத் துவங்க முற்பட்டார். இதற்குத் தேவையான நிதி திரட்ட முயன்றபோது அவரது மனைவி தனது நகைகளை விற்றுப் பணம் கொடுத்தார் என்பதை ரே அழுத்தமாகச் சித்திரிக்கிறார்.

பதேர்பாஞ்சாலி திரைப்படம் எடுக்க முயன்றபோது சத்யஜித்ரேயின் மனைவி தனது நகைகளை விற்றுப் பணம் கொடுத்தார் என்பதும் இந்தக் காட்சியினுள் மறைமுகமாக எதிரொலிக்கவே செய்கிறது.

சாந்தி நிகேதனில் இருந்த வீட்டில் தாகூர் குடியிருக்கத் துவங்கினார். அங்கே 1902ல் மிருணாளினி தேவி எதிர்பாராத விதமாக நோயுற்றார். அவருக்குச் சிகிச்சை அளிப்பதற்காகச் சாந்திநிகேதனில் இருந்து கல்கத்தாவுக்குக் குடும்பம் இடம்மாறியது. தொடர் மருத்துவச் சிகிச்சைகள் பலன் தரவில்லை. இதனால் ஒரு ஹோமியோபதி மருத்துவர் அழைக்கப்பட்டார். அவரது சிகிச்சையும பலன் அளிக்கவில்லை. நவம்பர் 23 இரவு, மிருணாளினி தேவி இறந்துபோனார்.

இதன் சில மாதங்களிலே அவரது மகனும் விஷக்காய்ச்சலில் இறந்து போனான். அடுத்தடுத்த இழப்புகள் தாகூரைத் துயரத்தில் ஆழ்த்தின.

கவிதையும் இசையும் கலைகளும்தான் அவருக்கான மீட்சியாக இருந்தன. இந்த ஆவணப்படத்தில் தாகூரின் சொந்தவாழ்க்கை மிகக் குறைவாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவரது கலைவாழ்க்கையும் பொதுவாழ்க்கையுமே முதன்மையாகப் பேசப்படுகின்றன.

ஒரு கவிஞரைப் பற்றிய ஆவணப்படம் என்பதால் கவித்துவமாக இருக்க வேண்டும் என்று சத்யஜித்ரே விரும்பினார். படத்தைக் காணும்போது பார்வையாளர்களால் அதை நன்றாகவே உணரமுடிகிறது.

காந்தியின் அரசியல் பிரவேசம், அவருடன் தாகூருக்கு ஏற்பட்ட நட்பு, மாற்றுக் கல்விமீதான தாகூரின் ஈடுபாடு. கலைகள் பயிலுவதற்கான கலாபவனை உருவாக்கியது போன்ற முக்கிய நிகழ்வுகளையும் சத்யஜித்ரே சிறப்பாக ஆவணப்படுத்தியிருக்கிறார்.

1912 ஆம் ஆண்டில் தாகூரின் இங்கிலாந்துப் பயணத்தை விவரிக்கும் ஆவணப்படம், அங்கு கீதாஞ்சலியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள் ஆங்கில ஓவியர் வில்லியம் ரோதன்ஸ்டைனுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன என்பதைக் குறிப்பிடுகிறார்.

ரோதன்ஸ்டைன் அந்தக் கவிதைகளை ஐரிஷ் கவிஞர் டபிள்யூ. பி. யேட்ஸுக்குக் காட்டினார். அவற்றை வாசித்த யேட்ஸ் இவை மிக உன்னதமான கவிதைகள் என்று போற்றி அதனை இங்கிலாந்தில் வெளியிடுவதற்கு உதவி செய்தார். அப்படித்தான் கீதாஞ்சலி ஆங்கிலத்தில் வெளியானது. அதன் தொடர்ச்சியாக 1913 இல் தாகூர் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார் என்பதையும் ரே சுட்டிக்காட்டுகிறார்.

தாகூருக்கு யேட்ஸ் வழியாகக் கிடைத்த இந்த அங்கீகாரம் போன்ற ஒன்று பாரதிக்குக் கிடைக்கவில்லை. பாரதியும் தாகூரும் ஒருமுறைகூடச் சந்தித்துக்கொண்டதில்லை. ஆனால் பாரதி தொடர்ந்து தாகூரின் படைப்புகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். தாகூர் சென்னைக்கு வந்திருந்தபோதுகூடப் பாரதி அவரைச் சந்திக்கவில்லை

நோபல் பரிசின் மூலம் கிடைத்த பணத்தைக்கொண்டு விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தைத் தாகூர் உருவாக்கினார். அத்தோடு புதிய கல்விமுறைகள் பற்றி அறிந்துகொள்ள உலகப்பயணம் மேற்கொண்டார்.

தாகூர் கலந்துகொண்ட நிகழ்வுகளின் புகைப்படங்களைக் காணும்போது அவர் ஒரு ஞானகுரு போலவே காட்சி தருகிறார். முக்கிய ஆளுமைகள், படைப்பாளிகள் பலருடன் நெருக்கமாகத் தாகூர் உள்ள புகைப்படங்களில் தாகூரின் கண்களில் அன்பு கசிவதைக் காணமுடிகிறது. 1915 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் அரசின் உயரிய கௌரவமான நைட்ஹூட் தாகூருக்கு அளிக்கப்பட்டது. 1919 ஜாலியன்வாலாபாக் படுகொலைக்குப் பிறகு அவர் அந்தப் பட்டத்தைத் துறந்தார்.

தாகூரின் கடிதங்கள், கவிதை வரிகள், புகைப்படங்கள், தாகூர் வாழ்ந்த இடங்கள், அவர் உருவாக்கிய சாந்தி நிகேதன், தாகூரின் உலகப் பயணக் காட்சிகள் என்று தேர்வுசெய்து சத்யஜித்ரே மிக அழகாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

நாம் போர்ஹெஸை வியந்து படிப்பதுபோல அர்ஜெண்டினாவில் தாகூரை நிகரற்ற கவிஞராகக் கொண்டாடுகிறார்கள். அவரது கவிதைகளின் ஸ்பானிய மொழியாக்கம் இன்றுவரை தொடர்ந்து வாசிக்கவும் கொண்டாடப்படவும் செய்யும் கவிதைத் தொகுப்பாக உள்ளது.

1924 இல் ரவீந்திரநாத் தாகூர் ப்யூனஸ் அயர்ஸ்க்குச் சென்றார். அப்பொழுது பெண் கவிஞரான விக்டோரியா ஒகாம்போவின் தொடர்பும் நட்பும் கிடைத்தது. விக்டோரியா தாகூரின் கீதாஞ்சலியின் ஸ்பானிய மொழி பெயர்ப்பைப் படித்து இருந்தார். ஆகவே உடல்நலம் குன்றி இருந்த தாகூரை தன்னுடைய இல்லத்தில் தங்க வைத்துக் கவனித்துக்கொண்டார். அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு அன்பு மயமானது. தனது சுயவரலாற்று நூலில் தாகூரைப் பற்றி விக்டோரியா நிறைய எழுதியிருக்கிறார். தாகூருக்கும் விக்டோரியாவிற்குமான நட்பினை மையமாகக்கொண்டு Thinking of Him என்ற திரைப்படம் 2018ல் வெளியாகியுள்ளது.

சுனில் கங்கோபாத்யாயா தனது நேர்காணல் ஒன்றில், “தாகூரின் நிழல் விழாமல் எந்த வங்கப் படைப்பாளியாலும் எழுத இயலாது. இளைஞனாக இருந்த எங்களைப் போன்றவர்களுக்குத் தாகூரைத் தாண்டிப் போவதுதான் முக்கியமான இலக்காக இருந்தது” என்று குறிப்பிடுகிறார்.

அதே நேர்காணலில் “நாங்கள் ஒன்றுகூடும் நேரமெல்லாம் தாகூரைக் கடந்து செல்வதைப் பற்றி விவாதித்தோம். தாகூர் ஒரு காலத்தின் குரல். நம் இன்றைய வாழ்க்கை அவரிடமிருந்து மாறுபட்டது. நாம் தாகூர்மீதான மரியாதையை, அன்பை ஒருபோதும் கைவிடத் தேவையில்லை. ஆனால் அவரை விமர்சிக்கவும், ஆராய்ந்து விவாதிக்கவும் முற்படுகிறோம். தாகூரைக் கடவுளைப்போல நினைத்து ஆராதனை செய்பவர்களுக்கு அது கோபத்தை உருவாக்கவே செய்யும். அதுதான் எங்களின் நோக்கம்” என்றும் சொல்கிறார்.

First Light நாவலில் தாகூரைப்பற்றிச் சுனில் கங்கோபாத்யாயா எழுதியிருக்கிறார். அதில் காதம்பரி தேவியோடு அவருக்கு இருந்த காதலைப்பற்றியும் இளங்கவியாக இருந்த தாகூரின் லட்சிய வேட்கையினையும் குறிப்பிடுகிறார்.

சுனில் கங்கோபாத்யாயாபோல வங்காளத்திலிருந்த இலக்கியவாதிகளில் ஒரு தலைமுறையே தாகூரைக் கடந்து போகமுயன்றது. இன்றைய நவீன வாழ்க்கை சிக்கல்களை, பன்னாட்டு வாழ்வின்மூலம் உருவான புதிய நெருக்கடிகளைப் பேசும் புதிய வங்க நாவல்களின் வழியே தாகூரைத் தாண்டிய படைப்பாளிகள் உருவாகவே செய்தார்கள். ஆனால் இந்த வருகையால் தாகூரின் இடம் பறிபோய்விடவில்லை. அவர் எப்போதும் வழிகாட்டும் வெளிச்சம்போல ஒளிர்ந்துகொண்டேதான் இருக்கிறார்.

சத்யஜித்ரேயின் ஆவணப்படத்தைக் காணும்போது இந்த உண்மையை ரே நன்றாக உணர்ந்திருக்கிறார். காண்பவர்களையும் இதை உணரச்செய்ய முற்படுகிறார் என்றே தோன்றுகிறது.

இந்த ஆவணப்படத்தில் தனக்குத் தேவையான இடங்களில் ரே மறுஉருவாக்கம் செய்திருக்கிறார். அதன் வழியே புகைப்படத்தைத் தாண்டிய நெருக்கத்தை உருவாக்க முயலுகிறார்.

கடந்த காலத்தை மறுஉருவாக்கம் செய்யும் சவாலில் கலை இயக்குநருடன் இணைந்து மிகக் கவனமாகச் செயல்பட்டிருக்கிறார். குறிப்பாக உடைகள். அரங்க அமைப்புகள். மிகத் துல்லியமாக மறுஉருவாக்கம் பெற்றுள்ளன.

தாகூரின் ஓவியங்களில் மனிதர்கள், பறவைகள், மீன் மற்றும் விலங்குகள் ஒன்று சேர்ந்திருக்கின்றன. விசித்திரமான கனவுபோலவே ஓவியம் வரையப்பட்டிருக்கிறது. தாகூர் வரைந்துள்ள பெண் உருவங்களில் உடற்கூறியல் துல்லியமாக இல்லை. ஆனால் உணர்ச்சிகள் துல்லியமாக வெளிப்படுகின்றன. அதுவும் துயரார்ந்த முகங்களைக் காணும்போது அது நிறைய உணர்த்துகிறது என்கிறார் சத்யஜித்ரே.

தாகூரின் இறுதி ஊர்வலத்தில் துவங்கும் ஆவணப்படம் கைகூப்பி நின்று பிரார்த்தனை செய்யும் தாகூருடன் நிறைவுபெறுகிறது. அந்த வேண்டுதலின்போது தாகூரின் கூப்பிய கரங்கள் எதைப் பிரார்த்திக்கின்றன, தாகூர் என்ன வேண்டுகிறார் என்று தெரியவில்லை.

இந்தியாவின் விடுதலையைத் தாகூர் காணவில்லை. அவர் ஒரு லட்சிய உலகைக் கனவு கண்டார். கலைகளின் வழியே மனிதர்கள் மீட்சி அடைய முடியும் என்று நம்பினார். வன்முறையால் இந்தியப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கமுடியாது என்று அறிந்திருந்தார். அதேநேரம் ஒடுக்குமுறைகளைத் தொடர அனுமதிப்பது அநீதியானது என்றும் உணர்ந்திருந்தார். அவரது கூப்பிய கைகளுக்குப் பின்னே இந்த எண்ணங்கள்தான் வேண்டுதலாக மாறியிருக்குமா?

தாகூரின் கவிதைகளைவிடவும் இன்று அவரது சிறுகதைகளும் நாவல்களும் அதிகம் வாசிக்கப்படுகின்றன. டெலிவிஷன் தொடராகவும் திரைப்படமாகவும் வெளியாகின்றன. இன்று தாகூரை வாசிக்கும் ஒருவன் அவரது தேசபக்தி மற்றும் சீர்திருத்த விஷயங்களைப் பெரிதாக நினைப்பதில்லை. புனைவில் அவரது தனித்துவம் மற்றும் அவர் உருவாக்கிய கதாபாத்திரங்களுக்காகவே அவரை வாசிக்கிறான். பாராட்டுகிறான். ரவீந்திர சங்கீதம் இன்றும் வங்கத்தில் ஒலிக்கிறது. ஆனால் அது ஒரு பக்திமார்க்கமாக மாறியிருக்கிறது.

இன்று தாகூரின் காதலும் அவரது மனைவிக்கும் அவருக்குமிருந்த இடைவெளியும், விக்டோரியா ஒகம்போவின் நட்பும் நெருக்கமும் அதிகம் விவாதிக்கப்படுகிறது. அவை இந்த ஆவணப்படத்தில் இல்லை. ஒருவகையில் இந்த ஆவணப்படத்தில் எதைத் தவிர்க்கச் சொன்னார்களோ, அல்லது விடுபட்டதோ அவையே இன்று முக்கியமாக மாறியிருக்கின்றன..

தாகூரைக் கொண்டாடும் விதமாக அவரது கதைகளை மையமாகக்கொண்டு Stories by Rabindranath Tagore என்று அனுராக் பாசு இயக்கத்தில் 2015ல் தொலைக்காட்சி தொடர் வெளியானது. அந்தத் தொடரைக் காணும்போது இந்த ஆவணப்படத்தில் உருவாகும் தாகூரின் பிம்பம் தோன்றவேயில்லை. அந்தக் கதைகளின் வழியே தாகூர் மகத்தான எழுத்தாளராகவே ஒளிருகிறார்.

காலம் விசித்திரமானது. அது தரும் அடையாளம் மாறிக்கொண்டே இருக்கிறது. இடைவெளிகளை வாசித்துப் பழகிய நமக்குத் தாகூரின் வாழ்க்கையிலும் மறைக்கப்பட்ட, விலக்கப்பட்ட பக்கங்களைப் பற்றி அறிந்து கொள்வதிலேதான் ஆர்வம் அதிகமாகயிருக்கிறது.

தாகூரின் குரலை நாம் படத்தில் கேட்பதில்லை. ஆனால் அவரது மௌனமான பார்வை நிறையவே உணர்த்திவிடுகிறது. அதைச் சாத்தியமாக்கியதே சத்யஜித்ரேயின் பெருமை.

நன்றி :

சொல்வனம் வங்காளச் சிறப்பிதழ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 14, 2021 05:59

March 13, 2021

ஓம் முத்துமாரி

இணையத்தில் தற்செயலாகப் பாவலர் ஓம் முத்துமாரி நடத்திய கிராமிய நிகழ்ச்சி ஒன்றின் காணொளியைப் பார்த்தேன். அவரது பாடல் பழைய நினைவுகளைக் கிளரச் செய்துவிட்டது.

கோவில்பட்டியிலிருந்து ராஜபாளையம் செல்லும் வழியிலுள்ள திருவேங்கடத்தில் வசித்து வந்தார் பாவலர் ஒம் முத்துமாரி. பெண் வேடமிட்டு நடிப்பதில் மிகச்சிறந்தவர். சிறந்த கூத்துக்கலைஞர். தானே பாடல்களைப் புனைந்து பாடுபவர். அவர் கொலை சிந்து பாடினால் உக்கிரம் கொப்பளிக்கும். அவரைச் சந்திப்பதற்காக நானும் கோணங்கி நாலைந்து முறை திருவேங்கடம் சென்றிருக்கிறோம்.

டவுனிலிருந்து தன்னைத் தேடி வந்திருக்கிறார்கள் என்று ஆசையாக வரவேற்றுப் பேசிக் கொண்டிருப்பார்.

கல்குதிரை இதழ் ஒன்றில் அவரது பாடல்களைக் கோணங்கி வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொரு முறை அவரைத்தேடிப் போகும் போது புதிது புதிதாக நாட்டு நடப்புகளைப் பாடலாகப் புனைந்து பாடுவார். கம்யூனிஸ்ட் இயக்க மேடை தோறும் பாடியவர் ஓம் முத்துமாரி. தோழர் பி. ராமமூர்த்திக்காகத் தேர்தல் பிரச்சாரத்தில் பாடியிருக்கிறார். இவருக்குப் பாவலர் என்ற பட்டத்தைத் தந்தவர் மூக்கையாத் தேவர். ஒரு காலத்தில் பார்வேர்ட் பிளாக் மேடை தோறும் முத்துமாரி பாடியிருக்கிறார்.

எனது ஆசான் எஸ். ஏ.பெருமாள் தான் அவரை உற்சாகப்படுத்திக் களப்பணியில் வழிகாட்டியவர். கலை இலக்கிய இரவுகளிலும் கட்சி நிகழ்ச்சிகளிலும் கிழவியாக வேடமணிந்து வந்து முத்துமாரி பேசும் அரசியல் நையாண்டி வெகு சிறப்பானது.

ஒம் முத்துமாரியோடு ஒரு முறை பேசிக் கொண்டிருக்கும் போது எஸ்ஏபெருமாள் இருக்கும் திசையைப் பார்த்து கும்பிட்டுகிடுறேன் என்று கையை உயர்த்திக் கும்பிட்டு அவருக்கு நன்றி செலுத்தினார். அந்த அளவு பற்று கொண்டவர்.

ஒம் முத்துமாரி நிகழ்ச்சிகளுக்குக் கிராமங்களில் பெரிய வரவேற்பு இருந்தது. அவரது நவீன கூத்து நிகழ்வுகளை மக்கள் ரசித்துக் கொண்டாடினார்கள். கட்டபொம்மன் நாடகத்தில் அவர் இங்கிலீஷ் பேசி துரையாக நடிப்பது அவ்வளவு இனிமையாக இருக்கும்.

வறுமை நமக்கு மாமன் முறை

சிறுமை நமக்குத் தம்பி முறை

பொறுமை நமக்கு அண்ணன் முறை

பசியும் பட்டினியும் பிள்ளைகள் முறை

எத்தனை சொந்தங்கள் நமக்கிருக்குது பாத்தீகளா

என்ற அவரது பாடல் மிகவும் பிரபலமானது. ஒவ்வொரு முறை அவரைச் சந்திக்கப் போகும் போது அதைப்பாடிக் காட்டும்படி கேட்டுக் கொள்வோம். அவரும் உற்சாகமாகப் பாடுவார். அவரது குரல் தனித்துவமானது.

எவ்வளவு எளிய சொற்களில் வாழ்க்கை யதார்த்தத்தைப் பேசுகிறார் பாருங்கள். ஓம் முத்துமாரி ஏழு வயசிலேயே நான் காங்கிரஸ் மேடைகளில் ஏறிப் பாட ஆரம்பித்துவிட்டவர். ஆரம்பக் கல்வியைக் காங்கிரஸ் பள்ளிக்கூடத்தில் படித்தவர். முக்கூடல் சொக்கலால் பீடிக் கம்பெனி விளம்பரத்திற்காகக் கிராமம் தோறும் சென்று கூத்து நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். பீடி கம்பெனி விளம்பரத்திற்கு என்றாலும் புகைபிடிப்பதை ஆதரித்துப் பாடமாட்டார். சமூக விமர்சனம் தான் பாட்டில் வெளிப்படும்.

அருவா வேலு, தங்கையா போன்ற கொள்ளையர்கள் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்ட போது அவர்கள் வாழ்க்கையைக் கொலைச் சிந்தாகப் பாடியிருக்கிறார்.

பார்வையாளர்கள் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் கொடுத்து விருப்பமான பாடலைப் பாடச்சொன்னால் தன்மானத்துடன் மறுத்துவிடுவார். மேடையில் அவரது ஆளுமையின் வீச்சு முழுமையாக வெளிப்படும்.

இந்தக் காணொளியில் பெண் வேடமிட்டிருக்கும் இரண்டு கலைஞர்களையும் பாருங்கள். இவர்களைப் போன்ற அசலான கலைஞர்கள் நம்மிடமிருந்து மறைந்து கொண்டு வருகிறார்கள்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை ஓம் முத்துமாரி நிகழ்த்தியிருக்கிறார். அவை முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை. அவரது காணொளிகள் கிடைக்கவில்லை. ஆவணப்படம் எடுக்க விரும்பும் இளைஞர்கள் இவரது வாழ்க்கையை ஒரு ஆவணப்படமாக எடுக்க வேண்டும். அது இந்தக் கலைஞனுக்குச் செய்யும் பெரிய மரியாதையாக இருக்கும்

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 13, 2021 00:23

March 12, 2021

காலைக் குறிப்புகள் 31 கோமாளியின் துயரம்.

சொற்களை விடவும் கோடுகள் மூலம் தன்னை எளிதாக வெளிப்படுத்த முடியும் என்று சிலர் நம்புகிறார்கள். அப்படித் தான் இயக்குநர் பெலினி செயல்பட்டார்.  அவர் பேச நினைத்தவற்றை ஒவியங்களாக வரைந்தார். அசையும் ஓவியங்களாகவே அவர் திரைப்படங்களை உருவாக்கினார்.

பெலினியின் வாழ்க்கையை விவரிக்கும் I, Fellini என்ற Charlotte Chandler புத்தகத்தை வாசித்தேன். அதில் “Dreams are the only reality.” என  பெலினி  குறிப்பிடுகிறார். அவரது திரைப்படங்கள் அவரது கனவுகளின் வெளிப்பாடு போலவே உருவாக்கப்பட்டன. தன் வாழ்வில் உண்மையாக நடந்த விஷயங்களை விடவும் அதைத் தான் எவ்வாறு நினைவு வைத்துள்ளேன் என்பதைத் தான் முக்கியமாக நினைப்பதாகக் கூறும் பெலினி பால்ய வயதின் நினைவுகள் முழுக்கனவு போலவே இருக்கின்றன. அதன் விசித்திரங்களை ஒரு போதும் மறக்கமுடியவில்லை என்கிறார்.

பருத்த உடல் கொண்ட பெண்களை, உயரமான குள்ளமான ஆண்களைப் பெலினி தனது படங்களில் அதிகம் பயன்படுத்தியிருக்கிறார். உலகம் அவர்களைக் கேலி செய்வதற்கு மாற்றாக இது போன்ற உடல் கொண்டவர்களின் தனித்துவத்தைத் தான் படத்தில் வெளிப்படுத்துவதாகக் கூறுகிறார்.

தன் வாழ்க்கை நினைவுகளை எவராலும் வரிசை மாறாமல் நினைவு வைத்துக் கொள்ள முடியாது. முன்பின்னாகவும் நிறைய விடுபடல்களுடனும் மட்டுமே நினைவு கொள்ள முடியும். அந்த வகையில் ஒரு ஒவியம் போலச் சித்தரிக்கப்படுவதும் விடுபட்டதும் இணைந்தே புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

சிறுவயதின் வசீகரம் பொய்களே. ஒரு சிறுவனோ, சிறுமியைப் பொய் சொல்லவே ஆசைப்படுகிறார். அந்தப் பொய்யை அவர் உருவாக்கும் அழகு தனித்துவமானது. எவர் தான் சொல்லும் பொய்யை முழுமையாக நம்பிவிடுகிறார்களோ அவர்களிடம் பொய் சொல்லச் சிறுவர்கள் தயங்குகிறார்கள். காரணம் பொய்யை ஒருவர் சந்தேகிக்க வேண்டும். அதைத் தன் பேச்சின் மூலம் உறுதியான உண்மையைப் போல நம்ப வைக்க வேண்டும் எனச் சிறார்கள் விரும்புகிறார்கள்.

பெரியவர்களால் தான் சிறுவர்கள் பொய் சொல்வதற்குத் தூண்டப்படுகிறார்கள். உண்மையில் பெரியவர்களுக்குச் சிறுவர்கள் சொல்லும் உண்மையான காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. ஒரு சிறுவன் தெருவில் நின்று நாயை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் என்று உண்மையைச் சொன்னால் அவனது அம்மா கோவித்துக் கொள்கிறார். ஆகவே அந்தச் சிறுவன் தெருவில் ஒரு விசித்திரமான பிச்சைக்காரனைப் பார்த்ததாகப் பொய் சொல்கிறான். உண்மையில் தனது மறுப்பை வெளிப்படுத்தும் விதமாகவே சிறார்கள் பொய் சொல்கிறார்கள். அதைப் பெரியவர்கள் புரிந்து கொள்வதில்லை.

தான் சொல்வதைப் பொறுமையாகப் பெரியவர்கள் கேட்பதில்லை என்பதைச் சிறார்கள் உணர்ந்துவிடுகிறார்கள். ஆகவே அவர்கள் பொய்யின் மூலம் கவனத்தைக் கவர முயல்கிறார்கள்.

பெலினியை மிகவும் கவர்ந்தது சர்க்கஸ். குறிப்பாகச் சர்க்கஸின் வரும் கோமாளி. சர்க்கஸை அவர் ஒரு கனவு வெளியாகக் கருதினார். சர்க்கஸில் அடுத்து என்ன நடக்கும் என்று எவராலும் கண்டறிய முடியாது. வியப்பூட்டும் நிகழ்வுகள் அடுத்தடுத்து நடக்கின்றன. பார்வையாளர்கள் அந்த நிகழ்வுகளால் சந்தோஷம் அடைகிறார்கள். ஆனால் சர்க்கஸ் கலைஞர்களின் வாழ்க்கை. பொருளாதாரக் கஷ்டங்களும் போட்டி பொறாமையும் கொண்டதாகவே இருக்கிறது. சர்க்கஸை பற்றிச் சிறுவயதில் தொடர்ந்து கனவு கண்டு வந்ததாகவும் அந்தக் கனவில் தவறாமல் ஒரு யானை இடம்பெற்றது என்றும் பெலினி நேர்காணலில் தெரிவிக்கிறார்.

சினிமாவையும் அவர் ஒரு சர்க்கஸ் போலவே கருதினார். ஒருவகையில் அது உண்மையும் கூடத்தான். சர்க்கஸில் சேருவதற்காக வீட்டை விட்டு ஓடிப்போக முயன்றார். எட்டு வயதில் சர்க்கஸ்காரர்களுடன் செல்வதற்காக முயன்றபோது சர்க்கஸ் ஒரு பெரிய குடும்பம் என்பதைக் கண்டுகொண்டார். சர்க்கஸில் அவரால் சேர இயலவில்லை. ஆனால் தான் அந்தக் குடும்பத்தின் உறுப்பினர் என்ற எண்ணம் மனதில் ஆழமாகப் பதிந்து போனது.

கோமாளிகள் எல்லோரும் சந்தோஷமாக இருப்பதில்லை. கூட்டத்தைச் சிரிக்க வைப்பது என்பது தீவிரமான விஷயம். கோமாளிகளின் துயரத்தை உலகம் அறிவதுமில்லை. புரிந்து கொள்வதுமில்லை. கோமாளிகள் கௌரவமாக இருப்பது போல நடிக்கிறார்கள். உண்மையில் அவர்கள் மோசமாகவே நடத்தப்பட்டார்கள்

சர்க்கஸ் பற்றிய தனது ஆர்வத்தை வீட்டில் எவரும் புரிந்து கொள்ளவேயில்லை. அதைப்பற்றிப் பேசத்துவங்கினாலே திட்டும் அடியும் கிடைத்தது. வீட்டில் மற்றவர்கள் எழுந்து கொள்ளும் முன்பு நான் தூங்கி எழுந்துவிடுவேன். படுக்கையில் கிடந்தபடியே அன்று கண்ட கனவை நினைத்துக் கொண்டிருப்பேன். முகம் கழுவினால் கனவு மறந்துபோய்விடும் என்று நம்பினேன் என்கிறார் பெலினி.

பெலினியின் Variety Lights திரைப்படத்தில் நாடகமேடையில் கிடைக்கும் கைதட்டுகள் மற்றும் புகழுக்காக ஏங்கும் ஒருபெண் அந்த நாடக்குழுவினர்களுடன் இணைந்து பயணிக்கிறாள். எப்படியாவது தன்னையும் ஒரு நடிகையாகச் சேர்த்துக் கொள்ளும்படி மன்றாடுகிறாள். நாடக மேடைக்குள் வந்தபிறகு அதன் போட்டி பொறாமைகளை அறிந்து கொள்கிறாள். தனக்குக் கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவள் அடுத்த நிலைக்குப் போய்க் கொண்டேயிருக்கிறாள். இந்தப் பெண்ணைப் போலக் கலையின் வழியே தன்னை உயர்த்திக் கொண்டே செல்பவர்கள் சிலரே. பெரும்பான்மையினர் இந்த மாயவெளிச்சத்திற்குள் மூழ்கியபடியே தன் வாழ்க்கையைக் கரைத்துக் கொண்டுவிடுகிறார்கள்.

உண்மையில் ஒவ்வொருவரும் ஒரு கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலரே அதை உணர்ந்து கொள்கிறார்கள். மற்றவர்களுக்கு அது ஒரு ரகசிய சஞ்சாரம். தனக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கை போதும் என ஒருவரும் நினைப்பதில்லை. மாறாக அதிலிருந்து விடுபட்டு ரகசியமாக மனதிற்குள் வேறு வாழ்க்கையை , வேறு நிலைகளை வாழ்ந்து பார்க்கிறார்கள். இந்தக் கற்பனை தான் வாழ்க்கையின் சுவாரஸ்யம். உலகம் தராத அங்கீகாரத்தைத் தனக்குத் தானே வழங்கிக் கொள்கிறார்கள்.

அதிலும் தனிமையை உணரும் மனிதர்கள் அதிலிருந்து விடுபடுவதற்காகக் கற்பனையின் நீரூற்றை உருவாக்கிக் கொள்கிறார்கள். அந்த நீரூற்று பொங்கி வழியும் போது அவர்கள் தன்னை மறந்து சந்தோஷம் அடைகிறார்கள். தனிமையை ஆழ்ந்து உணர்கிறவர்களே படைப்பாளியாக மாறுகிறார்கள். தனிமையைப் புரிந்து கொள்ளாதவர்கள் ஏதாவது ஒரு செயலை வரிந்து ஏற்றுக் கொண்டு வாழப்பழகிவிடுகிறார்கள்.

நீண்ட தனிமையை உணருகிறவர்கள் தனக்குள்ளாக அழுகிறார்கள். சிலர் தனிமையின் உச்சத்தில் களிப்பெய்துகிறார்கள். தனக்குள் சிரிப்பதும் தனக்குள் அழுவதும் இயல்பானது தான். அதைத் தவறான செயல் என ஏன் நினைக்கிறார்கள் என்று தான் புரிவதில்லை.

சப்தத்தைக் கண்டு சிறுவர்கள் பயப்படுவதில்லை. ஆனால் நிசப்தத்தைக் கண்டு பயப்படுகிறார்கள். அதுவும் ஆழ்ந்த நிசப்தம் அவர்களை அதிகம் பயமுறுத்துகிறது. குரல் கொடுப்பதும் குரலைக் கேட்பதும் உறுதுணையாக உணருகிறார்கள். நிசப்தம் நீர்நிலையின் மேற்பரப்பு போலச் சலனமற்றிருக்கிறது. ஆனால் அதன் ஆழம் எவராலும் கண்டறிய முடியாதது.

பதின் வயதில் நிசப்தத்தை விரும்பத் துவங்கும் ஆணோ பெண்ணோ அதற்குள்ளாகவே மூழ்கிக் கிடக்க விரும்புகிறார்கள். நிறைய இளம்பெண்கள் பதின்வயதில் விசித்திர கனவுகளில் சஞ்சரிக்கிறார்கள். அப்போது ஒரு நிஜ உலகிற்கும் கனவிற்கும் இடையில் ஊஞ்சலாடுகிறார்கள்.

சிறுவயதிலே பொம்மைகளைச் செய்து பொம்மலாட்டம் நிகழ்த்துவதில் பெலினிக்கு மிகுந்த விருப்பமிருந்தது. பொம்மைகள் எந்த எதிர்ப்பினையும் தெரிவிப்பதில்லை என்று பெலினி குறிப்பிடுகிறார். தன்னை உலகம் கையாளுவதைப் போலத் தான் பொம்மைகளைக் கையாண்டதாகவும் குறிப்பிடுகிறார்.

இது போலவே காமிக்ஸ் புத்தகங்களில் வரையப்பட்டிருந்த மனிதர்களுடன் விலங்குகளுடன் தான் பேசத்துவங்கியதாகவும் அவர்கள் தன்னைப் புரிந்து கொள்கிறார்கள் என்று உணர்ந்ததாகவும் கூறுகிறார்.

எளிதில் புரிந்து கொள்ள முடியாத பால்யத்தின் குழப்பங்கள். கனவுகள் தான் ஒருவரை பெருங்கலைஞனாக மாற்றுகிறது. பெலினிக்குள் சர்க்கஸ் சார்ந்த நினைவுகள் மறையவேயில்லை. அவர் சினிமாவை மிகப்பெரிய சர்க்கஸ் நிகழ்ச்சியைப் போல மாற்றிக் காட்டினார்.

பெலினிக்குள் இருந்த சிறுவன் தான் அவரை வழிநடத்தியிருக்கிறான். அவனது விருப்பங்களைத் தான் பெலினி கலையின் வழியே பூர்த்தி செய்திருக்கிறார்.

நடந்ததை விவரிக்கும் போது நடக்காத விஷயங்களையும் சேர்த்துச் சொல்வது எனது பழக்கம் என்கிறார் பெலினி. இது தான் எழுத்தின் சூத்திரம். அதைப் பெலினி எளிதாகக் கையாண்டிருக்கிறார். அதுவே அவரது வெற்றிக்குக் காரணமாகயிருந்தது.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 12, 2021 05:25

வாழ்த்துகள்

இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் இமையத்திற்கு  செல்லாத பணம் நாவலுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 12, 2021 04:25

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.