S. Ramakrishnan's Blog, page 138

March 15, 2021

ஐந்து வருட மௌனம்

புதிய சிறுகதை

பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. அந்த முசாபரி பங்களாவின் வெளியே அதிகாலையில் இவ்வளவு பேர் கூடிவிடுவார்கள் என்று ராஜன் எதிர்பார்க்கவில்லை. காந்தியைக் காண்பதற்காகக் கிராமவாசிகள் திரண்டிருந்தார்கள். தினசரி காலை நான்கு மணிக்குப் பிரார்த்தனை செய்வது காந்தியின் வாழ்க்கையில் என்றும் மாறாத பழக்கமாக இருந்தது.

இன்னமும் சூரியன் உதயமாகவில்லை. இருளுக்குள்ளாகவே நடந்து கிராமவாசிகள் வந்திருந்தார்கள். இரண்டாயிரம் பேருக்கும் மேலிருக்கும். அதில் பாதிக்கும் மேல் பெண்கள்.

அவர்கள் முதன்முறையாகக் காந்தியோடு ஒன்றாகப் பிரார்த்தனை செய்கிறார்கள். யாருக்காக அந்தப் பிரார்த்தனை, என்ன வேண்டுகிறார் என்று அவர்களுக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் காந்தியின் அருகில் இருப்பதைக் கடவுளின் அருகில் இருப்பதைப் போலவே உணர்ந்தார்கள்.

“பிரார்த்தனை தான் ஒவ்வொரு நாளையும் திறக்கும் திறவுகோல்“ என்றார் காந்தி.

அந்தப் பங்களாவில் பொதுவாக வெள்ளைக்கார அரசு அதிகாரிகளோ மேல்மலைக்கு வேட்டைக்கு வரும் ஜமீன்தார்களோ தான் தங்கியிருப்பார்கள். ஆகவே அதற்குள் கிராமவாசிகள் வந்தது கிடையாது. ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பாகக் காந்தி தனது பயணத்தின் போது இரவு அந்த முசாபரி பங்களாவில் தங்கப்போகிறார் என்ற செய்தி கிடைத்தவுடன் மக்கள் அவரது வருகையை எதிர்பார்த்துத் திரண்டு விட்டார்கள்

காந்தி தனது பயணத்திலும் நேர ஒழுங்கை மாற்றிக் கொள்ளவில்லை. விடிகாலை மூன்றரை மணிக்கு எழுந்து கொண்டுவிட்டார். வெற்றுடம்புடன் அவர் பங்களாவின் பின்புறமிருந்த பாதையில் நடைபயிற்சி சென்றார். அவரது வேகத்திற்கு ஈடு கொடுக்கமுடியாதவர்கள் பின்தங்கிப்போனார்கள். நடைப்பயிற்சியின் போது ஒரு வார்த்தை கூட எவரோடும் பேசவில்லை.

மாமரங்கள் அடர்ந்த பாதையில் நடந்து கொண்டிருந்தார். பாதை தெரிய வேண்டும் என்பதற்காகக் கையில் ஒரு அரிக்கேன் விளக்குகளுடன் கணபதி கூட நடந்து சென்றார். அந்த வெளிச்சம் பாம்பு போலச் சாலையில் ஊர்ந்து சென்றபடி இருந்தது. காந்தி குளிர்காற்றினை ஆழ்ந்து சுவாசித்தபடியே வேகமாக நடந்தார். வழியில் கிடந்த ஒரு மயிலிறகு ஒன்றைக் குனிந்து கையில் எடுத்து வைத்துக் கொண்டார். அதில் ஒரு சிறுவனின் ஆர்வம் வெளிப்பட்டது.

பனிக்காலம் முடிந்த போதும் குளிர் விலகவில்லை. இரண்டு வாரங்களாகவே அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார். நாளொன்றுக்கு சராசரியாக 150 கிமீ பயணிப்பது அவரது திட்டம்.

அவரைக் காண வழியெல்லாம் மக்கள் திரண்டிருந்தார்கள். அவரது காரை வழிமறித்துக் கோஷமிட்டார்கள். பூக்களைத் தூவி வழிபட்டார்கள். கருப்பட்டி, வாழைத்தார், தேன், வேர்க்கடலை, பலாப்பழம் தேங்காய் எனத் தாங்கள் விரும்பிய பொருட்களை எல்லாம் அவருக்காகக் கொண்டு வந்து காணிக்கையாகக் கொடுத்தார்கள்.

தேர் நகர்வது போல அவரது கார் ஜனத்திரளினுள் மெதுவாக நகர்ந்தது. காந்தியைத் தொட்டுவிட ஆசை கொண்டவர்கள் கூட்டத்தினுள் முண்டியடித்து அவரை நோக்கி கைகளை நீட்டினார்கள். இவர் தான் காந்தியா என்ற ஆச்சரியம் அந்த முகங்களில் பிரதிபலித்து. வழியெங்கும் கூப்பிய கரங்கள். கசிந்த விழிகள். வாழ்த்தொலிகள். பதினாயிரக்கணக்கான கண்கள் அவரைப் பார்த்தபடியே இருந்தன புன்னகை மாறாத முகத்துடன் அவர் மக்களை நோக்கி கைகளை அசைத்தபடியே வந்தார்.

சில வேளைகளில் காரை விட்டு இறங்கி மக்களோடு மக்களாக நடந்தார். ஏழை எளியவர்களின் குடிசைக்குள் சென்றார். அவர்களுடன் உணவு உட்கொண்டார். ஊர்மக்களைச் சேர்த்துக் கொண்டு மண்வெட்டினார். குப்பைகளை அள்ளி அகற்றினார். எங்கும் பாதுகாப்பு அதிகாரிகள் என எவருமில்லை. மக்கள் தான் அவரது பாதுகாப்பு அரண். அவரது பயணத்தைப் புகைப்படம் எடுக்க வந்திருந்த அமெரிக்கப் பத்திரிக்கையாளர் எட்வினுக்கு அந்தக் கிழவரின் மனவுறுதி வியப்பாக இருந்தது. அவர் மக்களில் ஒருவராகவே தன்னை நினைக்கிறார். மக்களுடன் கைகோர்த்து நடப்பதையே விரும்புகிறார் என்பதை எட்வின் உணர்ந்திருந்தார்

காந்தியிடம் ஒருமுறை எட்வின் கேட்டார்

“நீங்கள் மக்கள் கூட்டத்தில் எதையோ தேடுகிறீர்கள். என்ன உங்கள் தேடல்“

“எதைத் தேடி தண்ணீர் வேகமாகச் செல்கிறது.“ எனக் கேலியாகக் கேட்டார் காந்தி

“சாந்தியை“ என்றார் பத்திரிக்கையாளர்

“நானும் அதையே தேடுகிறேன். தேசத்தின் சாந்தியை, சுதந்திரத்தை, அதை அடைவதற்கான வழிகளை நான் தேடிக் கொண்டிருக்கிறேன்“

“உங்களைக் கடவுளின் பிரதிநிதியாகவே மக்கள் நினைக்கிறார்கள்“

“நாம் ஒவ்வொருவரும் கடவுளின் பிரதிநிதிகள் தான். அதில் என்ன சந்தேகமிருக்கிறது. உண்மையில் நான் கடவுளின் சேவகன். அதுவும் கடைக்கோடி சேவகன்.“

“இந்தப்பயணத்தில் என்ன அறிந்து கொண்டீர்கள்“

உண்மையான நேர்மையான செயல்களை மக்கள் புரிந்து கொள்கிறார்கள். ஆதரவு அளிக்கிறார்கள். சுதந்திரத்திற்கான போராட்டம் என்பது வெளியில் நடந்தால் மட்டும் வெற்றிபெற முடியாது. அது ஒவ்வொருவர் மனதிலும் நடந்தேற வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன். நான் இவர்களை வழிநடத்தவில்லை. அவர்களே எனக்கு வழிகாட்டுகிறார்கள்“ என்று சொல்லி காந்தி சிரித்தார்

“அது உண்மை“. என்று எட்வினும் பதிலுக்குச் சிரித்தார். நாள் முழுவதும் காரில் பயணம். வழியில் கூட்டம். நிதி அளிப்பு நிகழ்ச்சி. இராட்டை வழங்கும் விழா. சேவா சங்க பிரதிநிதிகளின் சந்திப்பு. என ஓயாத அலைச்சல். பகலில் வெயில் மிகவும் உக்கிரமாகவும் காற்று அனல் போலிருந்தது. ஆனாலும் காந்தி ஓய்வெடுத்துக் கொள்ளவில்லை. அவருடன் வந்தவர்கள் களைத்துப் போயிருந்தார்கள்.

ஒவ்வொரு நாள் இரவும் காந்தியின் உடலைப் பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர் சௌரி அவரது ரத்த அழுத்தம் உயர்ந்து கொண்டேயிருப்பதை அறிந்தார். காந்திக்கு நல்ல ஓய்வு தேவை என்பதை வலியுறுத்தினார். காந்தி அந்த மருத்துவரிடம் உங்கள் மருந்தை விடவும் மக்களின் முகங்களே எனக்கு உண்மையான மருந்து. அவர்களின் அன்பு என்னைப் புத்துணர்வு கொள்ள வைத்துவிடும் என்று மெதுவான குரலில் சொன்னார்.

காந்தியின் வருகையைப் பற்றி அறிந்திருந்திருந்த கிராமவாசிகள் தங்கள் ஊர்களிலிருந்து மாட்டுவண்டி மூலமும் நடந்தும் வந்து கொண்டேயிருந்தார்கள். இரவெல்லாம் சாலையோரம் காத்துகிடந்தவர்களும் உண்டு.

அதிலும் வெள்ளிக்கிழமை மதியம் திடீரென மழை பிடித்துக் கொண்ட போது அந்த மழைக்குள்ளும் மக்கள் அசையாமல் அப்படியே காத்திருந்ததைக் காந்தி கண்டார். அவர் காரை விட்டு இறங்கிய போது குடையை நீட்டியவரிடம் அதை விலக்கிவிட்டு காந்தியும் மழைக்குள்ளாக நடந்தார். மழையின் சப்தத்தை விடவும் மக்களின் வாழ்த்தொலி அதிகமாகயிருந்தது. அந்த முகங்களில் தென்படும் எதிர்பார்ப்பினை நம்பிக்கையைக் காந்தி நெருக்கமாக உணர்ந்தார். அவர்களின் கண்கள் தன்னிடம் பேசுவதை நன்றாகவே அறிந்தார்.

மழைக்குள்ளாகவும் சில பெண்கள் அவரது காலில் விழுந்து வணங்கினார்கள். அவர்களை ஒரு சகோதரனைப் போல ஆற்றுப்படுத்தினார். இந்த மழைத்துளியைப் போல அவர்கள் வற்றாத நம்பிக்கையை அளித்தபடியே இருக்கிறார்கள். துளிகள் ஒன்று சேர்ந்து திரண்டிருப்பது தானே சமுத்திரம்.

அவர் சேவா சங்க ஊழியர்களில் மூத்தவரான சுதர்சனை அழைத்து அந்தக் கடிதத்தைப் படிக்கச் சொன்னார். அவரும் கடிதத்தைப் படித்துவிட்டு பெருமூச்சோடு சொன்னார்

“கதர்கொடி கிட்டுவை எனக்கே தெரியும். ஐந்து வருஷமா சுயநினைவு இல்லாமல் படுக்கையில் கிடக்கார். போலீஸ் தலையில அடிச்ச அடியிலே நினைவு போயிருச்சி. விருதுபட்டி வட்டாரத்தில அவரைத் தெரியாதவர் இல்லை. பெரிய தியாகி. லட்சுமியாபுரத்தில் தான் வீடு.

அவருக்குக் காந்தி தான் தெய்வம். காந்தி உருவத்தைக் கையில் பச்சை குத்தியிருப்பார். காந்திஜி மாதிரியே மேல்சட்டை கிடையாது. எந்தப் போராட்டம்னாலும் கதர்கொடியை உயர்த்திப் பிடிச்சிகிட்டு முன்னால் போய் நிற்பார். மனசில பயமே கிடையாது.

அவர் மனைவி சின்னவயசுல இறந்துட்டாங்க. ஒரே மகள் அந்தப் பொண்ணும் காந்தியோட தொண்டர் தான்.

கிட்டு. ஆளும் காந்தியைப் போலத் தான் இருப்பார். நல்ல உசரம். எங்கே போனாலும் நடை தான். கால்ல செருப்புக் கிடையாது. எப்பவும் கையில் கதர்கொடியை வச்சிகிட்டு இருப்பார்.

புதூர்ல நடந்த கள்ளுகடை போராட்டத்தில போலீஸ் அடிச்ச அடியில ஆள் சுருண்டுவிழுந்துட்டார். அப்புறம் எழுந்திருக்கவேயில்லை. மகள் பார்வதி தான் ஐந்து வருஷமா பீ மோத்திரம் அள்ளி பணிவிடை செய்து பார்த்துகிட்டு இருக்கா.

தன் வாழ்நாள்ல ஒரு தடவையாவது காந்தியை பாத்து சேவிக்கணும்னு ஆசைபட்டுகிட்டு இருந்த மனுசன். ஆனா பாவம் குடுத்து வைக்கலே“.

ராஜன் அந்தக் கடிதத்ததைக் காந்தி பிரார்த்தனை முடித்துவந்தவுடன் படித்துக் காட்ட வேண்டும் என்று பையிலே வைத்துக் கொண்டார். அன்றைய பிரார்த்தனையில் ஒரு பெண் எங்கும் நிறைந்தவனே என்ற பாடலை மனம் உருகப்பாடினாள். அவளது குரலின் வசீகரம் மக்களை மெய்மறக்க செய்திருந்திருந்தது. காந்தியும் கூடக் கண் கலங்கிப் போயிருந்தார். அந்தப் பெண் காந்தியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள். அவளை ஊர் ஊராகப் போய்க் கதர் வெற்றிக்காகப் பாடும்படி காந்தி கேட்டுக் கொண்டார்

பிரார்த்தனை முடிந்தபோதும் மக்கள் கலைந்து போகவில்லை. காந்தி எழுந்து நடக்க ஆரம்பித்தபோது மக்கள் அவரை நடக்கவிடாமல் தள்ளினார்கள். காந்தி தன் அறைக்குள் சென்று அன்றைய பயணத்திற்குத் தயாராக முனைந்து கொண்டிருந்த போது ராஜன் அவரிடம் சென்று கடிதத்தை நீட்டினார்

காந்தி அதைக் கையில் வாங்கியபடியே என்ன கடிதம் என்று கேட்டார். ராஜன் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொண்டு வேகமாகக் கதர்கொடி கிட்டுவைப் பற்றி;r சொன்னார்.

அதைக் கேட்டு முடித்தபோது காந்தியின் கண்கள் மூடியிருந்தன. அவர் ஆழ்ந்த மௌனத்தில் உறைந்து போயிருந்தார். பிறகு அவராக அந்தக் கடிதத்தைப் புரட்டிப் பார்த்தார்

“எங்கே இருக்கு லட்சுமியாபுரம்“ என்று ராஜனிடம் கேட்டார்

“இங்கேயிருந்து பனிரெண்டு மைல் தூரம். குக்கிராமம்னு வெங்கட்ராமன் சொன்னார்.“

“நம்ம சுற்றுப்பயணம் கிளம்புறதுக்கு முன்னாடி அங்கே போயிட்டு வந்துரலாமா“

“அந்த ஊருக்குக் கார் போற அளவுக்கு ரோடு கிடையாது. மண்ரோடு. அதுவும் வயல் வழியாகத் தான் போகணுமாம்“

“அப்போ நடந்து போவோம்“

“அவ்வளவு தூரம் நடக்கணுமே“

“பனிரெண்டு மைல் பெரிய தூரமில்லை. கூட வேற யாரும் வரவேண்டாம். நாம ரெண்டு பேர் போவோம்“.

“சுதர்சனுக்குத் தான் கிட்டுவோட வீடு தெரியும்“

“அப்போ அவரை அழைச்சிகிடுவோம். யாருக்கும் சொல்ல வேண்டாம். “

“உங்களுக்குக் காலை ஆறரை மணிக்கு எஸ்.எஸ். கந்தசாமி ரெட்டியாரோட சந்திப்பு இருக்கு. எட்டுமணிக்கு மூதூர்ல கூட்டம். சிறுகுடியில சேவாசங்க நிகழ்ச்சி இருக்கு“

“அதுக்குள்ளே வந்துரலாம்“.

காந்தி முடிவு எடுத்துவிட்டார் என்றால் அதை எளிதாக மாற்ற முடியாது என ராஜனுக்குத் தெரியும். அவருக்கும் கதர்கொடி கிட்டுவை நேரில் காண வேண்டும் போலவே இருந்தது.

சுதர்சன் அழைத்துவரப்பட்டார். அவரால் நம்பமுடியவில்லை. நினைவு அழிந்து கிடக்கும் கதர்கொடி கிட்டுவைக் காண காந்தி போகப்போகிறார். அவர் உணர்ச்சிப்பெருக்கில் காந்தியை கையெடுத்து வணங்கினார்

“நாம புறப்படலாமா “என்று காந்தி சுதர்சனை நோக்கி கேட்டார்

“பாபூ, நடந்து போற வழியில் உங்களைப் பார்த்தா கூட்டம் திரண்டிரும். அதைச் சமாளிக்கிறது கஷ்டம் “

“என்ன செய்யலாம்“

“ஒரு கூண்டுவண்டி ஏற்பாடு பண்ண சொல்றேன். அதுல போய்ச் சத்திரம் விலக்குல இறங்கி கிடலாம். அங்கே இருந்து வயல் வரப்புல குறுக்கே நடந்து போயிரலாம்“

“அது உங்க இஷ்டம். ஆனால் தாமதாமாகக் கூடாது, உடனே நாம கிளம்பணும். “

சுதர்சன் அவசரமாக ஒரு ஆளை பிடித்து ஒரு கூண்டுவண்டியை ஏற்பாடு செய்திருந்தார். அதில் காந்தியும் ராஜனும் சுதர்சனும் ஏறிக் கொண்டார்கள். காந்தி தன் அறையில் ராட்டை நூற்றுக் கொண்டிருப்பதாக வெளியே தகவல் சொல்லி வைத்திருந்தார் ராஜன். கூட்டம் காந்திக்காக முசாபரி பங்களா வெளியே காத்துக் கொண்டிருந்தது.

அவர்கள் வண்டி வடக்கே செல்லத் துவங்கும் போது சூரியன் உதயமாக ஆரம்பித்திருந்தது. சிறிய மண்சாலையில் வண்டி குலுங்கி குலுங்கி பயணம் செய்தது.

அந்தக் கடிதம் கொண்டு வந்த இளைஞன் யார் என்று அப்போது தான் காந்தி கேட்டார்

“கிட்டுவின் தம்பி மகன்“ என்றார் சுதர்சன்.

“அந்த பையனையும் நான் சந்திக்க வேண்டும்“ என்றார் காந்தி

“வரச்சொல்லிவிடுகிறேன்“ என்றார் சுதர்சன்

தூரத்துக் குன்றினைப் பார்த்தபடியே வந்தார் காந்தி. ஆடு ஒட்டிச் செல்கிறவர்கள் தொலைவில் போய்க் கொண்டிருந்தார்கள். மூங்கில் கூடை ஒன்றை தலையில் வைத்தபடியே ஒரு கிழவி தனியே வரப்பில் நடந்து போய்க் கொண்டிருந்தாள். பறவைகள் கூட்டமாக வானில் போய்க் கொண்டிருந்தன.

மண்பாதை சீரற்றிருந்தது. அதில் கூண்டுவண்டி ஏறி இறங்கும் போது மாடுகள் திணறின. பனைமரங்களைத் தாண்டி அவர்கள் வண்டி சென்றபடியே இருந்தது. அரை மணி நேரப்பயணத்தின் பிறகு அவர்கள் இடிந்துகிடந்த சத்திரம் ஒன்றின் முன்பாக வந்து நின்றார்கள். வண்டியிலிருந்து சுதர்சன் இறங்கியபடி தொலைவில் தெரியும் ஊரைக் காட்டிச் சொன்னார்

“அது தான் லட்சுமியாபுரம்“

காந்தி விடுவிடுவென அந்த ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தார். வழியில் அவரைக் கடந்து போனவர்களுக்கு அது காந்தி என்றோ அவரைக் காணத்தான் மக்கள் இரவெல்லாம் காத்துகிடந்தார்கள் என்றோ தெரியாது. அவர்கள் வழக்கம் போலத் தங்கள் விவசாய வேலைகளுக்குக் கிளம்பிப் போய்க் கொண்டிருந்தார்கள்.

வயல்வரப்பில் காந்தி நடந்து போவது வீடு திரும்பும் விவசாயி ஒருவரைப் போலவே தோற்றமளித்தது. சுதர்சன் அவருக்கு முன்பாகப் போக வேண்டும் என்பதற்காக வயலினுள் இறங்கி வேகமாக முன்னே போகத்துவங்கினார்.

யாரும் அவர்களைக் கவனிக்கவில்லை

நூறு வீடுகளுக்குள் இருக்கும் மிகச்சிறிய கிராமம். வீதியில் ஒரு பெண் கோழியை விரட்டிக் கொண்டிருந்தாள். வீட்டு அடுப்பிலிருந்து வெளிப்படும் புகை காற்றில் சுழன்றபடியே இருந்தது. ஒன்றிரண்டு ஒட்டுவீடுகளைத் தாண்டி பெரும்பான்மை குடிசை வீடுகள். சாக்கடை வழிந்து ஒடும் சிறிய தெருக்கள். கழுதை ஒன்று சுவரை ஒட்டி அசையாமல் நின்றிருந்தது

சுதர்சன் காந்தியின் முன்னே நடந்து போய்க் கொண்டிருந்தார். தெருநாய்கள் குலைத்தபடியே அவர்களைப் பின்தொடர்ந்தன. ஊரின் தென்புறமாக இருந்த தெருவைக் கடந்து அவர்கள் நடந்தார்கள். வைக்கோல் படப்பு ஒன்றினை ஒட்டி சிறிய குடிசை வீடு தென்பட்டது. அருகிலே ஒரு மாட்டுத்தொழுவம். அதையொட்டி ஒரு வேப்பமரம். வழியெங்கும் ஆட்டுப்புழுக்ககைள்.

புகைமூட்டமான அடுப்பில் வெந்நீர் போட்டுக் கொண்டிருந்த கிட்டுவின் மகள் பார்வதி கண்களைக் கசக்கியபடிய யாரோ வீட்டுக்கதவை தள்ளி உள்ளே வருவதைப் பார்த்தாள்.

“அது சுதர்சன் மாமா“.

அவர் ஏன் இந்த அதிகாலையில் வந்திருக்கிறார் என்று புரியாதவள் போல அவள் சேலையால் முகத்தைத் துடைத்தபடியே எழுந்து கொண்டாள்

சுதர்சனைத் தொடர்ந்து காந்தியும் அந்தக் குடிசைக்குள் நுழைந்தார். அவளால் நம்பமுடியவில்லை

“அது காந்தி. ஆம் காந்தியே தான்“.

அவளுக்குக் காந்தியை நேரில் பார்த்தவுடன் கைகள் நடுங்கத்துவங்கியது. அவள் தன் நடுக்கத்தை மறைத்தபடியே சாஷ்டாங்கமாக அவரது காலில் விழுந்தாள். காந்தி அவளை எழச்செய்து ஆசி கொடுத்தார்.

வெளிச்சம் வராத மூலையில் இருந்த ஒரு கயிற்றுகட்டிலில் கிட்டுப் படுத்துகிடந்தார். ஒடுங்கிய முகம். அவரது வேஷ்டி விலகிக்கிடந்தது. மெலிந்து வற்றிப்போன உடல். துருத்திக் கொண்டிருக்கும் கழுத்து எலும்புகள். குச்சியான கை கால்கள். நீண்டகாலம் படுக்கையிலே கிடந்து உடம்பு சருகு போலாகியிருந்தது.

காந்தி அமர்வதற்காக ஒரு முக்காலியை கொண்டு வந்து போட்டாள் பார்வதி. காந்தி அதில் அமர்ந்தபடியே கதர்கொடி கிட்டுவைப் பார்த்தார். கண்கள் பாதித் திறந்திருப்பது போலிருந்தது. தலையிலிருந்த நரைமயிர்கள் ஒட்டிப்போயிருந்தன. இறுக்கமான புருவத்தில் ஒரு மயிர் நீட்டிக் கொண்டிருந்தது. அழுந்திப்படுத்த காரணத்தால் காது மடல் மடங்கியிருந்தது.

“அய்யா.. அய்யா“ என்று பார்வதி கிட்டுவை எழுப்ப முயன்றாள்

கயிற்றுக்கட்டிலை ஒட்டி ஒரு இராட்டை ஒரமாகத் தென்பட்டது. பார்வதி கையைக் கட்டிக் கொண்டு காந்தி அருகில் ஒரு மாணவி போல நின்றிருந்தாள்

காந்தி மெதுவான குரலில் “கிட்டு.. கிட்டு“ என்று அழைத்தார். கிட்டுவிடம் சலனமேயில்லை.

“தன்னுசார் கிடையாது. யாரையும் அடையாளம் தெரியாது. ஐந்து வருஷமா இப்படியே தான் இருக்கார். ஒரு வார்த்தை பேசலை. சூரங்குடி வைத்தியர் வந்து மருந்து அரைச்சி தருகிறார். ஆனா நினைப்பு வரவேயில்லை. உசிரு மட்டும் தான் ஒட்டிகிட்டு இருக்கு“ என்றாள்

காந்தி குனிந்து கிட்டுவின் கைகளைத் தடவினார். வெறித்த அந்தக் கண்களைப் பார்த்தபடியே இருந்தார்.

பார்வதி நெகிழ்ச்சியில் தழுதழுத்த குரலோடு தன் தந்தைக்கு நடந்தவற்றைச் சொல்ல துவங்கினான்.

“புதூர்ல நிறையக் கள்ளுகடை இருக்கு. அதை எதிர்த்து அய்யா போராட்டம் பண்ணினாரு கள்ளுகடைக்குக் குடிக்க வர்றவங்கள தடுத்து நிறுத்தி “வேண்டாம் ஐயா! கள் குடிக்காதீங்க கையெடுத்து கும்பிடுறேன்”னு கேட்டுக்கிட்டு இருந்தாரு. ஒரு ஆள் அய்யா முகத்திலே எச்சில் துப்பினான். அப்பவும் அய்யாவுக்குக் கோபம் வரலை. உங்க கால்ல விழுந்து கேட்குறேன்னு சொல்லிட்டு இருந்தார் திடீரென்று போலீஸ்காரங்க ஒரு வந்து இறங்கி தொண்டர்களைத் தடியாலே அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அய்யா இடத்தை விட்டு நகரவேயில்லை. அவருக்குத் தலையில் சரியான அடி. ரத்தம் கொட்டுது. ஆனா கதர்கொடியை விடவேயில்லை. உங்க பேரை தான் சொல்லிகிட்டே இருந்தார்.

ஒரு போலீஸ்காரன் கதர்கொடியை பிடிச்சிருந்த கையிலே லத்தியாலே அடிச்சான். இன்னொருத்தன் அய்யா வேஷ்டியை உருவி அம்மணமாக்கினான். நாலு போலீஸ்காரங்க ஒண்ணு சேர்ந்து அவரை அடிச்சாங்க. அதுல மயங்கினவரு தான் எழுந்திருக்கவேயில்லை “

அவள் பேசியதை ராஜன் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க துவங்கியதும் காந்தி வேண்டாம் என்றபடியே அவள் சொல்வது தனக்குப் புரிகிறது என்று வழியும் அவளது கண்ணீரைக் காட்டினாள்

காந்தி வந்திருக்கிறார் என்ற செய்தி இதற்குள் ஊர் முழுவதும் பரவிவிட்டது. கிட்டுவின் குடிசைக்கு வெளியே மக்கள் திரண்டிருந்தார்கள். காந்திக்குக் கடிதம் கொடுத்த இளைஞனான முத்துக் கூட்டத்தை விலக்கிவிட்டு குடிசைக்குள் வந்தான்

அவனால் நம்பமுடியவில்லை.

காந்தி ஒரு எளிய தொண்டரைத் தேடி வந்திருக்கிறார். அதுவும் சுயநினைவு இல்லாமல் இருக்கும் ஒருவரை காண வந்திருக்கிறார். தன் பெரியப்பா எவ்வளவு பாக்கியம் செய்தவர்.

அவனும் காந்தியை வணங்கிக் காலைத் தொட்டு நமஸ்கரித்தான்

“நீ தான் கடிதம் எழுதிக் கொடுத்ததா“ என்று காந்தி கேட்டார்

ஆமாம். எங்க பெரியப்பாவுக்கு எல்லாமே நீங்கள் தான். அவரை நீங்கள் தெரிஞ்சிகிடணும்னு தான் லெட்டர் எழுதி குடுத்தேன். நீங்க வீடு தேடி வருவீங்கன்னு எதிர்பார்க்கலை என்று தட்டுத்தடுமாறி ஆங்கிலத்தில் பதில் சொன்னான் முத்து

“என்ன வேலை செய்கிறாய்“ என்று அவனிடம் காந்தி கேட்டார்

“ஸ்கூல் டீச்சர் “என்றான் முத்து

கிட்டுவிற்குத் தானே பணிவிடைகள் செய்யப்போவதாகச் சொல்லி காந்தி வெந்நீரையும் ஒரு துணியையும் கொண்டுவரும்படி சொன்னார்

பார்வதி மறுத்தபடியே அய்யா வேணாம் நான் பாத்துகிடுறேன் என்றாள். ,இத்தனை ஆண்டுகளாக அவள் தான் தந்தையைக் குளிக்க வைத்து உடை உடுத்தி உணவு கொடுத்து உறக்கதிலும் அருகிலிருந்து விசிறி விட்டு அவரைப் பராமரித்து வருகிறாள். அவளுக்கென்று தனி வாழ்க்கை எதுவுமில்லை.

காந்தி தானே அடுப்பை நோக்கி செல்லத்துவங்கியதும் அவள் காயவைத்திருந்த வெந்நீரை எடுத்து ஒரு இரும்பு வாளியில் ஊற்றினாள். அந்த வாளியை காந்தியே தூக்கிக் கொண்டு வந்தார். அவள் கிழிந்த துணி ஒன்றை அவரிடம் கொடுத்தாள்.

காந்தி அங்கே நின்றிருந்தவர்களை வெளியே செல்லும்படியே சொன்னார்

அறையில் பார்வதியும் காந்தியும் மட்டுமே இருந்தார்கள்.

நீண்ட பயணமும் நடையும் கூட்டங்களில் தொடர்ந்து உரையாற்றுவதும் காந்தியைக் களைத்துப் போகச் செய்திருந்தது. சில நாட்கள் அவரது கால்கள் வீங்கியிருந்தன. ஆனால் எதற்காகவும் அவர் தனது பயணத்திட்டத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அன்றாடம் எந்த வழியில் பயணம் செய்கிறோம். எங்கே பேசுகிறோம். யாரைச் சந்திக்கிறோம். எங்கே நிதி அளிக்கப் போகிறார்கள் என்பதைப் பற்றிக் கேட்டு அறிந்து கொண்டிருந்தார். இதற்குள் ராட்டை நாற்பது. பத்திரிக்கையாளர்களைச் சந்திப்பது. கடிதம் எழுதுவது, மண்குளியல் என எதையும் மாற்றிக் கொள்ளவில்லை.

பெண்கள் அதிகம் திரண்டுவந்த இடங்களில் அவரது கார் தானே நின்றது. பெண்களுக்கென்றே தனியான கூட்டத்தை நடத்த வேண்டும் என்பதைக் கறாராகச் சொல்லிக் கொண்டிருந்தார். அன்றாடம் அவர் படுக்கைக்குப் போகு முன்பாகச் சுற்றுப்பயணத்தில் வசூலான தொகைகளின் கணக்கைப் பார்ப்பது வழக்கம். இரவு எவ்வளவு நேரமானாலும் அதைப் பார்த்து முடித்துக்கொண்டுதான் உறங்கப் போவார். ஸ்ரீ வைகுண்டத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி ஒன்றை அங்கேயே ஏலத்தில் விட்டு அந்தப் பணத்தை அரிஜன் நிதிக்காகச் சேர்த்துக் கொள்ளும்படி செய்தார். காந்தியிடம் ஆட்டுக்குட்டியை ஏலத்தில் எடுத்த பொன்னி நாயக்கர் அந்த ஆட்டுக்குட்டியை வணங்கினார். அந்த ஆடு கிராமத்தில் இனி தனிச்சிறப்பு பெற்றுவிடும்.

காந்தியோடு கூடவே பயணம் செய்து கொண்டிருந்த ராஜனுக்கு அன்பின் மிகுதியால் மக்கள் காந்தியைத் தொல்லை செய்கிறார்கள். இனிப்புப் பண்டத்தைப் பிய்த்து எடுப்பது போலப் பிய்த்து எடுக்கிறார்கள் என்று தோன்றியது. பயணத்திட்டத்தில் முன்னர் நிச்சயம் செய்யாத இடங்களில் அவரது கார் நிற்கும் போதெல்லாம் ராஜன் பதற்றமாகினார். மூடப்பட்ட ரயில்வே கேட் முன்பு ஆயிரம் பேர் காரை சுற்றி நின்று கொண்டால் அவர் என்ன தான் செய்வார்.

விருதுநகரில் நடந்த கூட்டத்திற்குள் கதர் சட்டை வேஷ்டி அணிந்த ஒரு இளைஞன் காந்தியிடம் ஒரு கடிதம் ஒன்றைக் கொடுப்பதற்காகப் போராடிக் கொண்டிருந்தான். அவனால் காந்தியை நெருங்கமுடியவில்லை. அவன் தன் கையிலிருந்த கடிதத்தை ராஜனிடம் கொடுத்துக் காந்தியிடம் ஒப்படைக்கச் சொன்னார். அன்றாடம் இப்படிப் பல நூறு கடிதங்கள். வாழ்த்து மடல்கள். கவிதைகள் தரப்படுகின்றன. அவற்றை எல்லாம் காந்தி படித்துப் பதில் தருவது என்றால் அதற்கே நாள் முழுவதும் போய்விடும். ஆனால் ராஜன் அவற்றைக் கவனமாக வாசித்தார். முக்கியமான தகவலோ செய்தியோ இருந்தால் அதை மட்டும் காந்தி ராட்டை நூற்றுக் கொண்டிருக்கும் தருணத்தில் அவரிடம் தெரிவிப்பார். சில வேளைகளில் அந்தக் கடிதத்தைக் காந்தி படிக்கச் சொல்லிக் கேட்பதுண்டு. உடனே பதிலை டிக்டேட் செய்வதும் உண்டு.

அப்படித் தான் அந்த இளைஞன் கொடுத்த கடிதத்தை ராஜன் முகாமிட்டிருந்த இடத்தில் இரவு வாசித்தார். அதிலிருந்த விஷயங்களை படிக்கப் படிக்க அவரை அறியாமல் கண்ணீர் பெருகியது. இது நிஜம் தானா.

ஒரு தொண்டன் இப்படி எல்லாம் காந்திய வழியினை முன்னெடுத்து அடியும் உதையும் பட்டு உருக்குலைந்து போயிருக்கிறானா. எவ்வளவு பெரிய தியாகமது.

அதுவும் நோயுற்றுப் படுக்கையில் கிடந்த நிலையிலும் எவரது உதவியும் ஏற்றுக் கொள்ளாது வறுமையில் வாடுவது என்பது எளிதான விஷயமா என்ன.

காந்தி ஒரு தாதியைப் போல வெந்நீரில் துணியை முக்கிச் சூடு பொறுக்கும்படி பார்த்துவிட்டு மெதுவாகக் கிட்டுவின் பாதங்களைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தார். வெடிப்பேறிப் போன கால்கள். எவ்வளவு நடந்து அலைந்திருக்கும். இந்த அலைச்சல் எதற்காக, தான் முன்னெடுத்த அஹிம்சாவழிக்கான போராட்டத்திற்குத் தானே.

அவர் அந்தப் பாதங்களைச் சீராகத்துடைத்தார். பார்வதி இதற்குள் தந்தையின் வேஷ்டியினை அரையோடு சேர்த்துச் சுருட்டிவிட்டாள். காந்தி அந்த மனிதரின் உடல் தன் உடலைப் போலவே மெலிந்து ஒடுங்கி இருப்பதைக் கண்டார்.

மிகக் கவனமாக, சிரத்தையாகக் கிட்டுவின் உடலைக் காந்தி துடைத்துத் தூய்மை செய்தார். வயிற்றில் காந்தியின் கை பட்டபோது லேசான சூடு தெரிந்தது. கிட்டுவின் நரைமயிர் அடர்ந்த மார்பினை துடைக்கும் போது மலர் கொண்டு தொடுவது போல மெதுவாகத் துடைத்தார். வலது கையில் தன் உருவத்தைக் கிட்டுப் பச்சை குத்தியிருப்பதைக் கண்டார். அந்த உருவத்தைத் தன் விரலால் தொட்டுத் துடைத்தார்.

பின்பு கிட்டுவின் முகத்தைத் தன் கைகளால் தடவிவிட்டார். கண்களைத் துடைத்தபடியே அதிலிருந்து கண்ணீர் கசிவதை உணர்ந்தார்.

கிட்டுவிற்குத் தான் வந்திருப்பது தெரிகிறதா. அவர் தன்னை உணர்கிறதா என்பது போலக் கிட்டுவின் முகத்தைப் பார்த்தபடியே இருந்தார். அதில் சலனமேயில்லை. நெற்றியினைத் துடைத்து காது மடல் வரை சுத்தம் செய்துவிட்டு அவருக்கு என்ன உணவு கொடுக்கிறாய் என்று பார்வதியிடம் ஆங்கிலத்தில் கேட்டார்

“பழைய கஞ்சி“ என்றாள்

அதைக் கொண்டுவரும்படி காந்தி சொன்னார்

அவள் ஒரு கலயத்தில் பழைய கஞ்சியைக் கொண்டுவந்து கொடுத்தாள்.

அந்தக் கஞ்சியினையும் அவரே கிட்டுவிற்குப் புகட்டிவிட்டார். வழியும் உதட்டினை தனது வேஷ்டி நுனியாலே துடைத்துவிட்டார். கிட்டுவினால் இரண்டு வாயிற்கு மேல் குடிக்கமுடியவில்லை

மீதமான கஞ்சியைக் காந்தி குடித்தார்.

இதற்குள் குடிசைக்கு வெளியே திரண்ட மக்கள் காந்திக்கு வாழ்த்து சொல்லி குரல் எழுப்பத் துவங்கியிருந்தார்கள்.

வெளியே நிற்பவர்களை உள்ளே வரும்படி சொன்னார் காந்தி

அந்தக் குடிசை முழுவதும் ஆட்கள் நிரம்பியிருந்தார்கள். கட்டிலைச் சுற்றிலும் ஆட்கள் அமர்ந்து கொண்டார்கள்.

காந்திஜி தணிவான குரலில் சொன்னார்

“நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கிட்டுவிற்காகப் பிரார்த்தனை செய்வோம்“

அனைவரும். கைகூப்பியபடியே நின்றார்கள்.

சுதர்சன் பாடத்துவங்கினார். கண்களை மூடி கிட்டுவிற்காகக் காந்தி பிரார்த்தனை செய்தார். பின்பு மெல்லிய குரலில் சொன்னார்

“கிட்டுவை தாக்கிய போலீஸ்கார்கள் நலனிற்காகவும் நாம் பிரார்த்தனை செய்வோம். “

அதைக் கிராமவாசிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் காந்தியை வெறித்துப் பார்த்தபடியே இருந்தார்கள். காந்தி மீண்டும் தன் கண்களை மூடிக் கொண்டு பிரார்த்திக்கத் துவங்கினார். சுதர்சனுடன் கிட்டுவின் மகள் பார்வதி மட்டுமே பிரார்த்தனை செய்தாள்.

பிரார்த்தனை முடிந்தபிறகு காந்தி அந்த ஊர்மக்களை நோக்கிச் சொன்னார்

“கடவுள் நல்லவர்களைக் கைவிடுவதில்லை. கிட்டுவும் என் சகோதரர் தான். அவரைப் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் அனைவரின் பொறுப்பு“

மக்கள் தலையாட்டி ஏற்றுக் கொண்டார்கள்.

விடைபெற்றுக் கொள்ளும்முன்பு காந்தி முக்காலியில் அமர்ந்தபடியே கட்டிலில் கிடந்த கிட்டுவின் கைகளை எடுத்து அதில் எதையோ எழுதினார். என்ன எழுதினார் என்று அவர்களால் கண்டறிய முடியவில்லை. ஆனால் கிட்டுவின் புருவங்கள் நெகிழ்ந்து தளர்வதைக் காந்தி கண்டார்.

பின்பு காந்தி சுவர் ஓரமாக வைக்கப்பட்டிருந்த கிட்டுவின் ராட்டையை எடுத்து நூல் நூற்றார். விடைபெறும் போது பார்வதியிடம் காந்தி சொன்னார்

“உன் தந்தையிடம் நான் பேச வேண்டியதை எல்லாம் பேசிவிட்டேன். அவருக்கு நான் சொன்னது புரிந்திருக்கும். உனக்கு ஏதாவது உதவி தேவை என்றால் எனக்கு ஒரு தபால் அட்டை எழுது. நீயும் இனி என் மகள் தான். “

அவள் தன்னைக் கட்டுபடுத்த முடியாமல் கண்ணீர் சிந்தினாள். அவளை ஆறுதல் படுத்திய பின்பு காந்தி அங்கிருந்து விடைபெற்றார்

வயல் வரப்பில் நடந்து வரும் போது ராஜனிடம் காந்தி சொன்னார்

“இந்த தேசம் கிட்டுவைப் போன்றவர்களுக்கு நிறையக் கடமைப்பட்டிருக்கிறது. “

“நினைவுகள் இல்லாத வெற்றுடலாக வாழுவது பெரும் சோகம்“ என்றார் ராஜன்

“அதிகாரத்தின் கோரத்திற்கு இதை விட என்ன சாட்சியம் வேண்டும். கிட்டு தன்னை பலிகொடுத்திருக்கிறார். நாம் செய்யப்போகும் செயல்கள் தான் கிட்டுவிற்கான நீதி. “ என உறுதியான குரலில் சொன்னார் காந்தி

அந்தக் குரலில் அவர் எதையோ மனதிற்குள் திட்டமிடத் துவங்கியிருக்கிறார் என்பது புரிந்தது. பின்னாளில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதற்கான விதை அன்று தான் காந்தி மனதில் உருவானது.

வயலைத் தாண்டும் போது காந்தி திரும்பிப் பார்த்தார். அமைதி ஊர்வலம் போல மொத்த கிராமமும் அவரது பின்னால் திரண்டு வந்து கொண்டிருந்தது.

செய்தாக வேண்டிய வேலைகள் அவருக்காகக் காத்துக்கொண்டிருந்ததை உணர்ந்தவராக அவர் கூண்டு வண்டியை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தார்.

•••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 15, 2021 03:08

March 14, 2021

காலி நாற்காலி

பண்டிட் ரவிசங்கரின் இசை குறித்த தேடுதலின் போது இணையத்தில் தற்செயலாக A Chairy Tale என்ற குறும்படத்தைப் பார்த்தேன். நார்மன் மெக்லாரன் என்ற கனேடிய அனிமேஷன் இயக்குநர் உருவாக்கிய படம். இதற்கு ரவி சங்கர் இசையமைத்திருக்கிறார்.. அற்புதமான இசை. சதுர்லாலுடன் இணைந்து இந்த இசைக்கோர்வையை உருவாக்கியிருக்கிறார் ரவிசங்கர். பரவசமூட்டுகிறது இசை

ஒன்பது நிமிஷங்கள் ஓடும் இந்தக் குறும்படம் 1957ல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதிற்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

ஒரு நாற்காலியில் அமருவதற்காக ஒரு இளைஞன் முயல்கிறான். ஆனால் நாற்காலி நகர்ந்து போய்க் கொண்டேயிருக்கிறது. அவனால் உட்கார முடியவில்லை. அவன் நாற்காலியோடு போராடுகிறான். நாற்காலி அவனை அனுமதிக்க மறுக்கிறது. அவன் நாற்காலியை எப்படிக் கையாளுவது என்று தெரியாமல் தடுமாறுகிறான். வழக்கமான முறைகள் எதுவும் பலிக்கவில்லை. ஆகவே நாற்காலி வேண்டாம் என முடிவு செய்து தரையில் அமருகிறான். தரையில் அவன் அமர்ந்த காட்சியில் பூமியே ஒரு நாற்காலி போலத் தோன்றுகிறது. ஒரே வித்தியாசம் கையில்லாத நாற்காலியது. ஆனால் அந்த இருக்கை அவனுக்கு வசதியாக இல்லை.

இப்போது நாற்காலியை எப்படித் தன்வசமாக்குவது எனப் புரியாமல் குழப்பமடைகிறான். அவன் ஒதுங்கியதும் நாற்காலியே அவனைத் தேடி வருகிறது. அவனை நெருங்குகிறது. அவன் நாற்காலியோடு ஒரு நடனமாடுகிறான்.

நாற்காலியின் விருப்பம் வேறு என்பதைப் புரிந்து கொண்டவன் போல நாற்காலி தன் மீது அமருவதற்கு அவன் இடமளிக்கிறான். இப்போது நாற்காலியும் அவனும் தோழமை கொண்டுவிடுகிறார்கள். நாற்காலி அதன்பிறகு அவனை உட்கார அனுமதிக்கிறது.

காலி இருக்கை என்பது ஒரு குறியீடு. ஒரு முறை கூட்டத்தில் என் முன்னே இருந்த காலி இருக்கையைச் சுட்டிக்காட்டி இது போலக் காலி இருக்கைகளில் எனக்கு விருப்பமானவர்களை மனதளவில் உட்கார வைத்துக் கொள்வேன் என்று பேசினேன். உண்மையில் காலி இருக்கைகள் எப்போதும் காலியானவையில்லை. யார் அதிலிருந்து எழுந்து போனார்கள். அல்லது எழுப்பிவிடப்பட்டார்கள். இயல்பாக நடந்ததா, அல்லது துரத்தப்பட்டாரா. காலி இருக்கை எப்போதும் யாருக்கோ தயாராகக் காத்திருக்கிறது.

ஒரு நாற்காலியில் யார் அமரப்போகிறார்கள் என்பது பெரும் புதிரே. கர்னலின் நாற்காலி என்ற எனது குறுங்கதை காலனிய ஆட்சியில் நாற்காலி சுமப்பவன் கதையைச் சொல்கிறது. அப்படி நாம் எஜமானர்களின் நாற்காலிகளை சுமந்து அலைந்தவர்கள். இன்றும் அரூபமாக அவர்களின் நாற்காலியை சுமந்து கொண்டுதானிருக்கிறோம்.

ஒரு நாற்காலியில் அமர்ந்தவுடன் அதிகாரம் நம் வசம் வந்துவிட்டது போல உணருகிறோம். நாற்காலியில் அமர்ந்தபிறகு சும்மா இருக்க நம்மால் முடியாது. திரையரங்கில் நடப்பது போல ஏதோ ஒன்று நம்மைக் களிப்பூட்டச் செய்ய வேண்டும். அல்லது நாம் அதிகாரத்தைக் காட்டத் துவங்கிவிடுவோம்.

கிராமங்களில் சில வீடுகளில் நாற்காலி கிடையாது. விருந்தினர் வந்தால் இரவலாக நாற்காலி பெற்று வருவார்கள். கிராமத்தில் திருவிழாவில் நடக்கும் நாடகம் பார்க்க நாற்காலி போடப்பட்டிருக்காது. தரையில் தான் அமர வேண்டும். தரையில் அமரும் போது வேற்றுமை தெரிவதில்லை. ஆனால் பெரிய நாற்காலிகள். சிம்மாசனங்கள் தான் வேற்றுமையை உருவாக்குகின்றன.

எந்த நாற்காலியும் எவரையும் அமர அழைப்பதில்லை. எளிதாகக் கிடைத்துவிடுவதுமில்லை. காலி இருக்கைகளை எதையோ உணர்த்தியபடியே இருக்கின்றன.

ஆசிரியர்களின் நாற்காலியில் அமர்ந்தவுடன் மாணவன் ஆசிரியன் போலாகிவிடுகிறான். ஆசிரியர் இல்லாத நேரத்திலும் அவரது நாற்காலி அவரது இருப்பை வெளிக்காட்டிக் கொண்டேயிருக்கிறது

இந்தக் குறும்படத்தில் நடப்பது நாற்காலியோடு ஒருவன் ஆடும் நடனமே. முடிவில் அவன் நாற்காலியைப் புரிந்து கொள்கிறான். நாற்காலியும் அவனைப் புரிந்து கொள்கிறது. அந்த நிமிஷத்தில் படம் நாற்காலியை பற்றியதல்ல என்பது ஆழமாக மனதில் பதிந்துவிடுகிறது

எந்த ஒன்றும் மற்றதை அனுமதிப்பது எளிதானதில்லை.

இந்தத் தேர்தல் காலத்தில் நாற்காலியைப் பற்றிய குறும்படம் நிறைய அர்த்தங்களைத் தருகிறது என்பதால் அவசியம் இதனைக் காண வேண்டும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 14, 2021 07:09

தாகூரின் கூப்பிய கரங்கள்

மகாகவி தாகூரின் வாழ்க்கை குறித்துச் சத்யஜித் ரே எழுதி இயக்கிய ஆவணப்படம் Rabindranath Tagore. 1961 ஆம் ஆண்டுத் தாகூரின் நூற்றாண்டில் வெளியிடப்பட்டது.

சத்யஜித் ரே, சாந்தி நிகேதனிலுள்ள விஸ்வபாரதியில் பயின்றவர். தலை சிறந்த இயக்குநராக மட்டுமின்றிச் சிறந்த இசையமைப்பாளராகவும் ஓவியராகவும் எழுத்தாளராகவும் வடிவமைப்பாளராகவும் விளங்கியவர். இந்தப் பன்முகத்தன்மை சாந்தி நிகேதனிலிருந்துதான் உருவானது.

நேருவின் ஆலோசனைப்படியே இந்த ஆவணப்பட உருவாக்கம் திட்டமிடப்பட்டது. நேருவின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படமாக்க வேண்டும் என்ற எண்ணம் ரேயிற்கு இருந்தது. இதற்காக நேருவைச் சந்தித்து உரையாடியிருக்கிறார். ஆனால் அன்றிருந்த அரசியல் நெருக்கடிகள் காரணமாக நேரு அதை விரும்பவில்லை என்று ஆண்ட்ரூ ராபின்சன் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

தாகூரைப் பற்றிய ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அதில் நிறைய வேறுபாடுகள், தகவல் பிழைகள் இருந்தன. இதிலிருந்து மாறுபட்டு அதிகாரப்பூர்வமாக அவரைப் பற்றி ஓர் ஆவணப்படத்தை இந்திய அரசு உருவாக்க வேண்டும் என்று விரும்பியது. இதற்கான பொறுப்பு சத்யஜித்ரே வசம் ஒப்படைக்கப்பட்டபோது அவர் இதை மரபான ஆவணப்படங்களைப்போல உருவாக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்

இந்த ஆவணப்படப் பணியைக் கண்காணிக்க அரசு ஒரு குழுவை ஏற்படுத்தியது. அவர்களின் வழிகாட்டுதலின் படியேதான் படம் உருவாக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காதம்பரி தேவியின் தற்கொலை குறித்தோ, காந்தியோடு ஏற்பட்ட பிணக்குகள் பற்றியோ, முசோலினியைப் பாராட்டியதைப் பற்றியோ, எந்தத் தகவலும் இந்த ஆவணப்படத்தில் இடம்பெறக்கூடாது. சர்ச்சைக்குரிய விஷயங்களைப் படத்தில் அனுமதிக்கமுடியாது என்று கண்காணிப்புக் குழு உறுதியாகச் சொன்னது.

தாகூரை மகாகவியாகச் சித்திரிக்கவே விரும்புகிறேன். அவரது ஆளுமையின் உருவாக்கம். அவரது கவிதைகள், அரசியல் சமூகச் செயல்பாடுகள், சாந்தி நிகேதன் உருவாக்கம், இந்திய விடுதலை இயக்கத்தில் அவரது பங்கு இவற்றையே முதன்மைப்படுத்த இருப்பதாக ரே தெரிவித்தார்.

இந்த ஆவணப்படத்திற்காக ஒரு திரைக்கதையைச் சத்யஜித் ரே எழுதினார். அதை வைத்துக்கொண்டு தேவையான இடங்களில் மறுஉருவாக்கம் செய்வது, தேவையான இடங்களில் சித்திரங்கள் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்திக்கொள்வது என்று முடிவு செய்தார்.

பல்வேறு நாடுகளுக்கும் தாகூர் பயணம்செய்து உரை நிகழ்த்தியிருந்தபோதும் எங்கும் அவரது காணொளிப் பதிவு கிடைக்கவில்லை. அது பெரும் குறையாக அமைந்தது.

இந்தப் படத்தை உருவாக்கும் முன்பாகவே படத்தில் தாகூரின் கவிதைகளைத் திரையில் வாசிக்கப்போவதில்லை என்று ரே முடிவு செய்துவிட்டார். ஆகவே படத்தில் தாகூரின் கவிதைகள் பற்றிக் குறிப்பிடப்படுகிறதே அன்றி அவரது கவிதைகள் எதுவும் வாசிக்கப்படவில்லை. மாறாகக் கவிதைகள் எழுதப்பட்ட விதம், அது ஆங்கில உலகிற்கு அறிமுகமானது, நோபல் பரிசுபெற்ற பின்புலம் இவையே விளக்கப்படுகின்றன.

தாகூருக்குச் செலுத்தப்பட்ட மிகச்சிறந்த காணிக்கை என்றே இப்படத்தைச் சொல்வேன். காணிக்கை என்பதன் முழு அர்த்தமும் இந்தப் படைப்பினுள் காணமுடிகிறது. இந்த ஆவணப்படம் தாகூரின் வாழ்க்கையை மட்டும் சித்திரிக்கவில்லை. மாறாக வங்காளத்தின் பண்பாட்டு, அரசியல் வரலாற்றையும் சேர்த்தே சித்திரிக்கிறது.

எழுத்தாளர்களைப் பற்றிய ஆவணப்படங்களில் பெரும்பாலும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், ஆய்வாளர்களின் நேர்காணல்களே அதிகம் இடம்பெறுவது வழக்கம். இந்த ஆவணப்படத்தில் அப்படியான ஒரு நேர்காணல்கூடக் கிடையாது. கவனமாக அதைச் சத்யஜித்ரே தவிர்த்திருக்கிறார்.

தாகூர் வம்சாவளியில் துவங்கி அவரது பால்யகாலம், இளமைப்பருவம், சாந்திநிகேதன் உருவான விதம். நோபல் பரிசு பெற்றது. ஜாலியன் வாலா பாக் படுகொலை, விஸ்வபாரதி பல்கலைக்கழக உருவாக்கம், இந்திய விடுதலைப்போராட்ட நாட்கள் எனத் தாகூர் வாழ்வின் விரிந்த பக்கங்களை அழகான கோட்டுச் சித்திரம்போல ரே உருவாக்கிக் காட்டியிருக்கிறார்.

தாகூரின் குடும்ப வரலாறும் சத்யஜித்ரேயின் குடும்ப வரலாறும் பல்வேறு விதங்களில் ஒன்றுபோலவே இருக்கிறது. இரண்டு குடும்பங்களிலும் படித்தவர்கள் அதிகம். நுண்கலைகள், பத்திரிக்கை, இசை, நாடகம்மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்கள். இங்கிலாந்து சென்று கல்வி பயின்றிருக்கிறார்கள்.

ரவீந்திரநாத் தாகூர் என்ற இந்த ஆவணப்படத்தின் துவக்கப் பணி 1958 ஆம் ஆண்டின் முற்பகுதியில் துவங்கியது. கறுப்பு வெள்ளையில் படமாக்கப்பட்ட இந்தப் படத்தின் தனிச்சிறப்பு இசை. தாகூரின் ஆன்மாவை உணரும் வண்ணம் இசை நம்மைக் கரையச் செய்கிறது. கறுப்பு வெள்ளைக் காட்சிகளுடன் தனித்துவமான இசை இணைந்து ஒலிக்கும்போது மனதில் உணர்ச்சிகள் கொந்தளிக்கின்றன.

தாகூரைப் பற்றிப் பலரும் அறிந்த விஷயங்களைப் பெரும்பாலும் ரே தவிர்த்திருக்கிறார். அவரை ஒரு பிம்பமாக மாற்றுவதற்குப் பதிலாகச் சிறந்த கவியாக, கலைஞனாக, குருவாக அடையாளப்படுத்தவே ரே முயன்றிருக்கிறார்.

இன்று புதிதாய்ப் பிறந்தேன் என்ற மிருணாள் சென் எழுதிய நூலில் தாகூரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி குறிப்பிடப்படுகிறது. இளைஞரான மிருணாள் சென் அந்த ஊர்வலத்தினை நேரில் கண்டதை விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். பெருந்திரளான மக்கள் செல்லும் இறுதி ஊர்வலத்தில் காவலர்கள் கூட்டத்தினைப் பிடித்துத் தள்ளி வழியை உண்டாக்கினார்கள். எங்கும் புழுதி பறந்தது. ஒரு கவிஞனுக்கு இதைவிடச் சிறந்த அஞ்சலி செலுத்த முடியாது, அபூர்வமான காட்சியது என்கிறார்.

அதுபோன்ற காட்சி ஒன்றிலிருந்துதான் ரேயின் ஆவணப்படம் துவங்குகிறது. 7 ஆகஸ்ட் 1941ல் தாகூர் இறந்தார். அவரது இறுதி ஊர்வலம் கல்கத்தா வீதியில் மிகப் பிரம்மாண்டமாகச் சென்றது. அந்த ஊர்வலக் காட்சிகளை ரே ஆவணப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார். கண்ணீர் சிந்தும் மக்களின் ஊடாகத் தாகூரின் உடல் எடுத்துச் செல்லப்படுகிறது. தாகூரின் அழியாப் புகழுக்கான அடையாளமது. அங்கிருந்துதான் தாகூரின் குடும்ப வரலாற்றை விவரிக்க ஆரம்பிக்கிறார் சத்யஜித் ரே.

குறைவான காட்சிகளின் வழியே நூற்றாண்டுகளின் வரலாற்றைச் சொல்லி விடுகிறார். கல்கத்தா நகரம் எப்படி உருவாக்கப்பட்டது என்பதில் துவங்கி தாகூரின் வம்சாவழி விவரிக்கப்படுகிறது.

தாகூரின் குடும்பம் வசதியானது. கல்வியில் மிகத் தேர்ச்சி பெற்றது. கல்கத்தாவிலுள்ள ஜோராசாங்கோ மாளிகையை அவர்கள் உருவாக்கிய விதம்பற்றிச் சொல்லும் ரே, அந்த ஜோராசாங்கோவில்தான் தாகூர் 1861 ஆண்டுப் பிறந்தார் என்பதைக் குறிப்பிடுகிறார்.

இன்று அந்த மாளிகை நினைவகமாக உள்ளது. அதன் பழைய தோற்றமும் பிரம்மாண்டமும் மதுரை திருமலைநாயக்கர் மகாலை நினைவுபடுத்துகிறது.

தாகூர் குழந்தையாக இருந்தபோதே அவரது தாய் இறந்துவிட்டார். தாயின் அன்பிற்கான ஏக்கம் வாழ்நாள் முழுவதும் அவருக்குள் இருந்தது. தாகூரின் குடும்பம் முன்னோடியானது. வங்காளத்தில் நடந்த முக்கிய அரசியல் மாற்றங்கள். வங்காள மறுமலர்ச்சி இயக்கங்கள் ஜோராசாங்கோ மாளிகையில்தான் திட்டமிடப்பட்டன.

அந்த மாளிகையின் நினைவுகளில் எத்தனையோ ரகசியங்கள் புதையுண்டு இருக்கின்றன. அங்கு வாழ்ந்த ஆண்களின் உலகம் வேறு. பெண்களின் உலகம் வேறு. ஆண்களின் உலகம் கொண்டாட்டத்தையும் சுதந்திரத்தையும் முதன்மைப்படுத்தியது. பெண்களின் உலகமே துயரமும் தனிமையும் கொண்டிருந்தது. ஜோராசாங்கோவின் பெண்கள் உலகின் கண்களிலிருந்து விலகியவர்கள். அவர்களின் உண்மையான வாழ்க்கை எப்படியிருந்தது என்று இன்றும் எவராலும் அறிந்து கொள்ளமுடியவில்லை. அதே நேரம் அந்த வீட்டிற்குள்ளிருந்துதான் முதற்பெண் நாவலாசிரியர் உருவானார். பெண் விடுதலை குறித்த வாதங்கள் துவங்கின. ஒரு நாளில் இருளும் வெளிச்சமும் பாதிப் பாதியாக இருப்பதுபோல அந்த வீட்டிற்கும் இரண்டு முகங்கள் இருந்தன.

துவாரகநாத் தாகூரின் மூத்த மகன் தேபேந்திரநாத் தாகூர் ஒரு சீர்திருத்தவாதி. ராஜாராம் மோகன்ராயுடன் நெருக்கமான நட்புக்கொண்டிருந்தார். ஆகவே அவரது வீடு எப்போதும் அரசியல் மற்றும் பண்பாடு குறித்த விவாதக்கூடமாக விளங்கியது.

தாகூரின் பால்ய வயது, குறைவான காட்சிகள் வழியே அழகாகக் காட்டப்படுகிறது. ரோபி என்று செல்லமாக அழைக்கப்பட்ட தாகூர் ஒரு காட்சியில் பயில்வானிடம் மல்யுத்தம் பயிலுகிறார். பெரிய பயில்வான் முன்பாகச் சோட்டாவாக நிற்கிறார். பயில்வான் ஒரு மலரைக் கையில் ஏந்துவதுபோலத் தாகூரை ஏந்துகிறார். தரையில் வீழ்த்துகிறார்.

இன்னொரு காட்சியில் தந்தையின் ஏற்பாட்டில் துருபத் இசைக் கலைஞர் ஒருவர் சங்கீதம் கற்றுத் தருகிறார்.

ஏழு வயதில் ரோபி பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். தலையில் தொப்பி அணிந்து சாரட் வண்டியில் ஏறும் தாகூரின் தோற்றம் அவ்வளவு அழகாகியிருக்கிறது. பள்ளியில் வகுப்பறை பிடிக்காமல் வெளியே சப்தமிடும் பறவைகளின் ஒலியை, இயற்கையின் வனப்பை ரசித்தபடியே அமர்ந்திருக்கிறான். அழகான புல்லாங்குழல் இசையோடு அந்தக் காட்சி காட்டப்படுகிறது. கனவு காணும் கண்கள்கொண்ட சிறுவனாகத் தாகூர் சித்திரிக்கப்படுகிறார். இன்னொரு காட்சியில் எலும்புக்கூடு ஒன்றைக் கையால் தொட்டுப்பார்த்து வியக்கிறான்.

பள்ளிக்கூடப் படிப்புப் பிடிக்காமல் வீட்டிலே பாடம் கற்கத் துவங்குகிறான் ரோபி. சகோதரர் ஹேமேந்திரநாத்திடம் நீச்சல், மலையேற்றம், ஜூடோ குத்துச்சண்டை ஆகியவற்றைக் கற்றுக்கொள்கிறார். . ஓவியம் வரைதல், உடற்கூறியல், புவியியல், வரலாறு, இலக்கியம், கணிதம், சமஸ்கிருதம், ஆங்கிலம் போன்றவற்றையும் வீட்டிலிருந்தே கற்றுக்கொண்டார்.

தாகூர் தனது 12வது வயதில் தந்தையுடன் வட இந்தியப் பயணம் ஒன்றினை மேற்கொள்கிறார். அந்தப் பயணத்தின்போது இமயச் சிகரத்தின்முன் நின்றபடியே எதிரொலிப்பைக் கேட்டு மகிழும் தாகூரின் பால்வடியும் முகம் அத்தனை அழகாகயிருக்கிறது.

ராபி தொலைதூர சிகரங்களின் அழகினையும் பனிமூட்டத்தையும் ரசிக்கிறான். தன்னை மறந்து பாடுகிறான். அவனது தந்தை மௌனமாக அந்தப் பாடலைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். மிகக் கவித்துவமான காட்சியது.

தாகூரின் பால்ய வயதின் காட்சிகள் பதேர் பாஞ்சாலியில் வரும் அபுவை நினைவுபடுத்துகின்றன. அபு பள்ளிக்குப் போவதும், பாடம் கற்றுக் கொள்வதும், வீட்டில் படிப்பதும், வளர்ந்த பையனாக உயர்கல்வி படிப்பதும் அப்படியே தாகூரின் காட்சிகளாக மாறியிருக்கின்றன. பதேர்பாஞ்சாலியில் நடித்த அதே பையன்தான் இதில் தாகூராகவும் நடித்திருக்கிறான்.

தாகூர் தனது பதினேழு வயதில், உயர்கல்விக்காக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். அந்தப் பகுதியில் தாகூருக்கு மேற்கத்திய இசையும் ஷேக்ஸ்பியரின் நாடகங்களும் மட்டுமே பிடித்திருந்ததை ரே முதன்மையாகக் குறிப்பிடுகிறார்,

சத்யஜித்ரேயும் மேற்கத்திய இசையில் விற்பன்னர். அவர் இசையமைத்த படங்களில் இந்திய இசையும் மேற்கத்திய இசையும் மிக அழகாக ஒன்றிணைவதைக் காணமுடியும். மெர்சண்ட் ஐவரி தயாரிப்பில்1965ல் வெளியான ஷேக்ஸ்பியர் வாலா திரைப்படத்திற்குச் சத்யஜித்ரே இசையமைத்துள்ளார். இதன் இசைக்கோர்வைகளைக் கேட்டுப் பாருங்கள். அவர் எவ்வளவு சிறந்த இசையமைப்பாளர் என்பது புரியும்.

தாகூரின் முதல் இசை நாடகம், வால்மீகி பிரதிபா, இதில் மேற்கத்தியச் சங்கீதமும் இந்தியச் சங்கீதமும் இணைந்து ஒலித்தது. இந்த நாடகத்தில் தாகூர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தாகூரின் தோற்றமும் அவரது உடைகளும் மிக அழகானவை. இளவயது தாகூரின் புகைப்படங்களைப் பார்த்தால் அவர் நிகரற்ற அழகன் என்பது புலப்படும்.

கிழக்கு வங்காளத்திலிருந்த தனது பண்ணையைப் பராமரிப்பு செய்வதற்காகத் தாகூர் அங்கே இடம்பெறுகிறார். படத்தின் மிக அழகான பகுதியது. அங்கே படகில் அமர்ந்தபடியே கவிதைகள் எழுதுகிறார். இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்தபடியே சிறுகதைகள். கட்டுரைகள் என எழுதித் தள்ளுகிறார். மயக்கும் இசையோடு அமைந்த காட்சிகள்.

தாகூரின் மூத்த சகோதரர் விஜேந்திரநாத் ஒரு தத்துவ அறிஞர் மற்றும் கவிஞர், மற்றொரு சகோதரர் சத்யேந்திரநாத் முதல் இந்தியக் குடிமைப் பணியாளர் ஆவார். மற்றொரு சகோதரரான ஜோதிர்ந்திரநாத் இசையமைப்பாளர் மற்றும் நாடக ஆசிரியர். இவரின் சகோதரி சுவர்ண குமாரி முதல் பெண் நாவலாசிரியர் மற்றும் பத்திரிகை ஆசிரியர்.

ஜோதிர்ந்திரநாத்தின் மனைவி காதம்பரி தேவி, தாகூரைவிட வயதில் சற்று மூத்தவர். தாகூர்மீது மிகுந்த அன்பு செலுத்தியவர். இவர்களின் உறவைப் பற்றியே சத்யஜித்ரே சாருலதா என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இதுவும் தாகூரின் நாவலின் திரைவடிவமே.

காதம்பரி தேவி தாகூரின் கவிதைகளுக்கு முதல் வாசகராகவும் விமர்சகராகவும் இருந்தவர். அவர்களுக்குள் ரகசியக் காதல் இருந்தது. தாகூர் 1883 ஆம் ஆண்டில் மிருணாளினி தேவியினைத் திருமணம் செய்துகொண்டார். இதனால் மனமுடைந்த காதம்பரி தேவி 1884 ஆம் ஆண்டில் திடீரெனத் தற்கொலை செய்துகொண்டார். இந்தத் துயரம் தாகூரை ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது என்கிறார்கள். இவை ஆவணப்படத்தில் கவனமாகத் தவிர்க்கப்பட்டிருக்கின்றன.

தாகூரைத் திருமணம் செய்துகொண்டபோது மிருணாளினி தேவிக்கு வயது 9. அவர் குல்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர், அங்கு அவரது தந்தை தாகூரின் பண்ணையில் பணிபுரிந்தார். கல்கத்தாவிலிருந்த ஜோராசாங்கோ மாளிகையில் பிரம்ம சமாஜ முறைப்படி அவர்களின் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது தாகூருக்கு இருபத்தி இரண்டு வயது.

தாகூருக்கு ஐந்து பிள்ளைகள். தன்னுடைய பிள்ளைகள் மரபான கல்விக்கு மாற்றாகச் சுயசிந்தனையுள்ள, கலைகளுடன் இணைந்த புதிய கல்வியைப் பெறவேண்டும் என்று விரும்பினார். இதற்காகத் தனது சாந்திநிகேதனில் ஒரு பள்ளியைத் துவங்க முற்பட்டார். இதற்குத் தேவையான நிதி திரட்ட முயன்றபோது அவரது மனைவி தனது நகைகளை விற்றுப் பணம் கொடுத்தார் என்பதை ரே அழுத்தமாகச் சித்திரிக்கிறார்.

பதேர்பாஞ்சாலி திரைப்படம் எடுக்க முயன்றபோது சத்யஜித்ரேயின் மனைவி தனது நகைகளை விற்றுப் பணம் கொடுத்தார் என்பதும் இந்தக் காட்சியினுள் மறைமுகமாக எதிரொலிக்கவே செய்கிறது.

சாந்தி நிகேதனில் இருந்த வீட்டில் தாகூர் குடியிருக்கத் துவங்கினார். அங்கே 1902ல் மிருணாளினி தேவி எதிர்பாராத விதமாக நோயுற்றார். அவருக்குச் சிகிச்சை அளிப்பதற்காகச் சாந்திநிகேதனில் இருந்து கல்கத்தாவுக்குக் குடும்பம் இடம்மாறியது. தொடர் மருத்துவச் சிகிச்சைகள் பலன் தரவில்லை. இதனால் ஒரு ஹோமியோபதி மருத்துவர் அழைக்கப்பட்டார். அவரது சிகிச்சையும பலன் அளிக்கவில்லை. நவம்பர் 23 இரவு, மிருணாளினி தேவி இறந்துபோனார்.

இதன் சில மாதங்களிலே அவரது மகனும் விஷக்காய்ச்சலில் இறந்து போனான். அடுத்தடுத்த இழப்புகள் தாகூரைத் துயரத்தில் ஆழ்த்தின.

கவிதையும் இசையும் கலைகளும்தான் அவருக்கான மீட்சியாக இருந்தன. இந்த ஆவணப்படத்தில் தாகூரின் சொந்தவாழ்க்கை மிகக் குறைவாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவரது கலைவாழ்க்கையும் பொதுவாழ்க்கையுமே முதன்மையாகப் பேசப்படுகின்றன.

ஒரு கவிஞரைப் பற்றிய ஆவணப்படம் என்பதால் கவித்துவமாக இருக்க வேண்டும் என்று சத்யஜித்ரே விரும்பினார். படத்தைக் காணும்போது பார்வையாளர்களால் அதை நன்றாகவே உணரமுடிகிறது.

காந்தியின் அரசியல் பிரவேசம், அவருடன் தாகூருக்கு ஏற்பட்ட நட்பு, மாற்றுக் கல்விமீதான தாகூரின் ஈடுபாடு. கலைகள் பயிலுவதற்கான கலாபவனை உருவாக்கியது போன்ற முக்கிய நிகழ்வுகளையும் சத்யஜித்ரே சிறப்பாக ஆவணப்படுத்தியிருக்கிறார்.

1912 ஆம் ஆண்டில் தாகூரின் இங்கிலாந்துப் பயணத்தை விவரிக்கும் ஆவணப்படம், அங்கு கீதாஞ்சலியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள் ஆங்கில ஓவியர் வில்லியம் ரோதன்ஸ்டைனுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன என்பதைக் குறிப்பிடுகிறார்.

ரோதன்ஸ்டைன் அந்தக் கவிதைகளை ஐரிஷ் கவிஞர் டபிள்யூ. பி. யேட்ஸுக்குக் காட்டினார். அவற்றை வாசித்த யேட்ஸ் இவை மிக உன்னதமான கவிதைகள் என்று போற்றி அதனை இங்கிலாந்தில் வெளியிடுவதற்கு உதவி செய்தார். அப்படித்தான் கீதாஞ்சலி ஆங்கிலத்தில் வெளியானது. அதன் தொடர்ச்சியாக 1913 இல் தாகூர் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார் என்பதையும் ரே சுட்டிக்காட்டுகிறார்.

தாகூருக்கு யேட்ஸ் வழியாகக் கிடைத்த இந்த அங்கீகாரம் போன்ற ஒன்று பாரதிக்குக் கிடைக்கவில்லை. பாரதியும் தாகூரும் ஒருமுறைகூடச் சந்தித்துக்கொண்டதில்லை. ஆனால் பாரதி தொடர்ந்து தாகூரின் படைப்புகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். தாகூர் சென்னைக்கு வந்திருந்தபோதுகூடப் பாரதி அவரைச் சந்திக்கவில்லை

நோபல் பரிசின் மூலம் கிடைத்த பணத்தைக்கொண்டு விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தைத் தாகூர் உருவாக்கினார். அத்தோடு புதிய கல்விமுறைகள் பற்றி அறிந்துகொள்ள உலகப்பயணம் மேற்கொண்டார்.

தாகூர் கலந்துகொண்ட நிகழ்வுகளின் புகைப்படங்களைக் காணும்போது அவர் ஒரு ஞானகுரு போலவே காட்சி தருகிறார். முக்கிய ஆளுமைகள், படைப்பாளிகள் பலருடன் நெருக்கமாகத் தாகூர் உள்ள புகைப்படங்களில் தாகூரின் கண்களில் அன்பு கசிவதைக் காணமுடிகிறது. 1915 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் அரசின் உயரிய கௌரவமான நைட்ஹூட் தாகூருக்கு அளிக்கப்பட்டது. 1919 ஜாலியன்வாலாபாக் படுகொலைக்குப் பிறகு அவர் அந்தப் பட்டத்தைத் துறந்தார்.

தாகூரின் கடிதங்கள், கவிதை வரிகள், புகைப்படங்கள், தாகூர் வாழ்ந்த இடங்கள், அவர் உருவாக்கிய சாந்தி நிகேதன், தாகூரின் உலகப் பயணக் காட்சிகள் என்று தேர்வுசெய்து சத்யஜித்ரே மிக அழகாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

நாம் போர்ஹெஸை வியந்து படிப்பதுபோல அர்ஜெண்டினாவில் தாகூரை நிகரற்ற கவிஞராகக் கொண்டாடுகிறார்கள். அவரது கவிதைகளின் ஸ்பானிய மொழியாக்கம் இன்றுவரை தொடர்ந்து வாசிக்கவும் கொண்டாடப்படவும் செய்யும் கவிதைத் தொகுப்பாக உள்ளது.

1924 இல் ரவீந்திரநாத் தாகூர் ப்யூனஸ் அயர்ஸ்க்குச் சென்றார். அப்பொழுது பெண் கவிஞரான விக்டோரியா ஒகாம்போவின் தொடர்பும் நட்பும் கிடைத்தது. விக்டோரியா தாகூரின் கீதாஞ்சலியின் ஸ்பானிய மொழி பெயர்ப்பைப் படித்து இருந்தார். ஆகவே உடல்நலம் குன்றி இருந்த தாகூரை தன்னுடைய இல்லத்தில் தங்க வைத்துக் கவனித்துக்கொண்டார். அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு அன்பு மயமானது. தனது சுயவரலாற்று நூலில் தாகூரைப் பற்றி விக்டோரியா நிறைய எழுதியிருக்கிறார். தாகூருக்கும் விக்டோரியாவிற்குமான நட்பினை மையமாகக்கொண்டு Thinking of Him என்ற திரைப்படம் 2018ல் வெளியாகியுள்ளது.

சுனில் கங்கோபாத்யாயா தனது நேர்காணல் ஒன்றில், “தாகூரின் நிழல் விழாமல் எந்த வங்கப் படைப்பாளியாலும் எழுத இயலாது. இளைஞனாக இருந்த எங்களைப் போன்றவர்களுக்குத் தாகூரைத் தாண்டிப் போவதுதான் முக்கியமான இலக்காக இருந்தது” என்று குறிப்பிடுகிறார்.

அதே நேர்காணலில் “நாங்கள் ஒன்றுகூடும் நேரமெல்லாம் தாகூரைக் கடந்து செல்வதைப் பற்றி விவாதித்தோம். தாகூர் ஒரு காலத்தின் குரல். நம் இன்றைய வாழ்க்கை அவரிடமிருந்து மாறுபட்டது. நாம் தாகூர்மீதான மரியாதையை, அன்பை ஒருபோதும் கைவிடத் தேவையில்லை. ஆனால் அவரை விமர்சிக்கவும், ஆராய்ந்து விவாதிக்கவும் முற்படுகிறோம். தாகூரைக் கடவுளைப்போல நினைத்து ஆராதனை செய்பவர்களுக்கு அது கோபத்தை உருவாக்கவே செய்யும். அதுதான் எங்களின் நோக்கம்” என்றும் சொல்கிறார்.

First Light நாவலில் தாகூரைப்பற்றிச் சுனில் கங்கோபாத்யாயா எழுதியிருக்கிறார். அதில் காதம்பரி தேவியோடு அவருக்கு இருந்த காதலைப்பற்றியும் இளங்கவியாக இருந்த தாகூரின் லட்சிய வேட்கையினையும் குறிப்பிடுகிறார்.

சுனில் கங்கோபாத்யாயாபோல வங்காளத்திலிருந்த இலக்கியவாதிகளில் ஒரு தலைமுறையே தாகூரைக் கடந்து போகமுயன்றது. இன்றைய நவீன வாழ்க்கை சிக்கல்களை, பன்னாட்டு வாழ்வின்மூலம் உருவான புதிய நெருக்கடிகளைப் பேசும் புதிய வங்க நாவல்களின் வழியே தாகூரைத் தாண்டிய படைப்பாளிகள் உருவாகவே செய்தார்கள். ஆனால் இந்த வருகையால் தாகூரின் இடம் பறிபோய்விடவில்லை. அவர் எப்போதும் வழிகாட்டும் வெளிச்சம்போல ஒளிர்ந்துகொண்டேதான் இருக்கிறார்.

சத்யஜித்ரேயின் ஆவணப்படத்தைக் காணும்போது இந்த உண்மையை ரே நன்றாக உணர்ந்திருக்கிறார். காண்பவர்களையும் இதை உணரச்செய்ய முற்படுகிறார் என்றே தோன்றுகிறது.

இந்த ஆவணப்படத்தில் தனக்குத் தேவையான இடங்களில் ரே மறுஉருவாக்கம் செய்திருக்கிறார். அதன் வழியே புகைப்படத்தைத் தாண்டிய நெருக்கத்தை உருவாக்க முயலுகிறார்.

கடந்த காலத்தை மறுஉருவாக்கம் செய்யும் சவாலில் கலை இயக்குநருடன் இணைந்து மிகக் கவனமாகச் செயல்பட்டிருக்கிறார். குறிப்பாக உடைகள். அரங்க அமைப்புகள். மிகத் துல்லியமாக மறுஉருவாக்கம் பெற்றுள்ளன.

தாகூரின் ஓவியங்களில் மனிதர்கள், பறவைகள், மீன் மற்றும் விலங்குகள் ஒன்று சேர்ந்திருக்கின்றன. விசித்திரமான கனவுபோலவே ஓவியம் வரையப்பட்டிருக்கிறது. தாகூர் வரைந்துள்ள பெண் உருவங்களில் உடற்கூறியல் துல்லியமாக இல்லை. ஆனால் உணர்ச்சிகள் துல்லியமாக வெளிப்படுகின்றன. அதுவும் துயரார்ந்த முகங்களைக் காணும்போது அது நிறைய உணர்த்துகிறது என்கிறார் சத்யஜித்ரே.

தாகூரின் இறுதி ஊர்வலத்தில் துவங்கும் ஆவணப்படம் கைகூப்பி நின்று பிரார்த்தனை செய்யும் தாகூருடன் நிறைவுபெறுகிறது. அந்த வேண்டுதலின்போது தாகூரின் கூப்பிய கரங்கள் எதைப் பிரார்த்திக்கின்றன, தாகூர் என்ன வேண்டுகிறார் என்று தெரியவில்லை.

இந்தியாவின் விடுதலையைத் தாகூர் காணவில்லை. அவர் ஒரு லட்சிய உலகைக் கனவு கண்டார். கலைகளின் வழியே மனிதர்கள் மீட்சி அடைய முடியும் என்று நம்பினார். வன்முறையால் இந்தியப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கமுடியாது என்று அறிந்திருந்தார். அதேநேரம் ஒடுக்குமுறைகளைத் தொடர அனுமதிப்பது அநீதியானது என்றும் உணர்ந்திருந்தார். அவரது கூப்பிய கைகளுக்குப் பின்னே இந்த எண்ணங்கள்தான் வேண்டுதலாக மாறியிருக்குமா?

தாகூரின் கவிதைகளைவிடவும் இன்று அவரது சிறுகதைகளும் நாவல்களும் அதிகம் வாசிக்கப்படுகின்றன. டெலிவிஷன் தொடராகவும் திரைப்படமாகவும் வெளியாகின்றன. இன்று தாகூரை வாசிக்கும் ஒருவன் அவரது தேசபக்தி மற்றும் சீர்திருத்த விஷயங்களைப் பெரிதாக நினைப்பதில்லை. புனைவில் அவரது தனித்துவம் மற்றும் அவர் உருவாக்கிய கதாபாத்திரங்களுக்காகவே அவரை வாசிக்கிறான். பாராட்டுகிறான். ரவீந்திர சங்கீதம் இன்றும் வங்கத்தில் ஒலிக்கிறது. ஆனால் அது ஒரு பக்திமார்க்கமாக மாறியிருக்கிறது.

இன்று தாகூரின் காதலும் அவரது மனைவிக்கும் அவருக்குமிருந்த இடைவெளியும், விக்டோரியா ஒகம்போவின் நட்பும் நெருக்கமும் அதிகம் விவாதிக்கப்படுகிறது. அவை இந்த ஆவணப்படத்தில் இல்லை. ஒருவகையில் இந்த ஆவணப்படத்தில் எதைத் தவிர்க்கச் சொன்னார்களோ, அல்லது விடுபட்டதோ அவையே இன்று முக்கியமாக மாறியிருக்கின்றன..

தாகூரைக் கொண்டாடும் விதமாக அவரது கதைகளை மையமாகக்கொண்டு Stories by Rabindranath Tagore என்று அனுராக் பாசு இயக்கத்தில் 2015ல் தொலைக்காட்சி தொடர் வெளியானது. அந்தத் தொடரைக் காணும்போது இந்த ஆவணப்படத்தில் உருவாகும் தாகூரின் பிம்பம் தோன்றவேயில்லை. அந்தக் கதைகளின் வழியே தாகூர் மகத்தான எழுத்தாளராகவே ஒளிருகிறார்.

காலம் விசித்திரமானது. அது தரும் அடையாளம் மாறிக்கொண்டே இருக்கிறது. இடைவெளிகளை வாசித்துப் பழகிய நமக்குத் தாகூரின் வாழ்க்கையிலும் மறைக்கப்பட்ட, விலக்கப்பட்ட பக்கங்களைப் பற்றி அறிந்து கொள்வதிலேதான் ஆர்வம் அதிகமாகயிருக்கிறது.

தாகூரின் குரலை நாம் படத்தில் கேட்பதில்லை. ஆனால் அவரது மௌனமான பார்வை நிறையவே உணர்த்திவிடுகிறது. அதைச் சாத்தியமாக்கியதே சத்யஜித்ரேயின் பெருமை.

நன்றி :

சொல்வனம் வங்காளச் சிறப்பிதழ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 14, 2021 05:59

March 13, 2021

ஓம் முத்துமாரி

இணையத்தில் தற்செயலாகப் பாவலர் ஓம் முத்துமாரி நடத்திய கிராமிய நிகழ்ச்சி ஒன்றின் காணொளியைப் பார்த்தேன். அவரது பாடல் பழைய நினைவுகளைக் கிளரச் செய்துவிட்டது.

கோவில்பட்டியிலிருந்து ராஜபாளையம் செல்லும் வழியிலுள்ள திருவேங்கடத்தில் வசித்து வந்தார் பாவலர் ஒம் முத்துமாரி. பெண் வேடமிட்டு நடிப்பதில் மிகச்சிறந்தவர். சிறந்த கூத்துக்கலைஞர். தானே பாடல்களைப் புனைந்து பாடுபவர். அவர் கொலை சிந்து பாடினால் உக்கிரம் கொப்பளிக்கும். அவரைச் சந்திப்பதற்காக நானும் கோணங்கி நாலைந்து முறை திருவேங்கடம் சென்றிருக்கிறோம்.

டவுனிலிருந்து தன்னைத் தேடி வந்திருக்கிறார்கள் என்று ஆசையாக வரவேற்றுப் பேசிக் கொண்டிருப்பார்.

கல்குதிரை இதழ் ஒன்றில் அவரது பாடல்களைக் கோணங்கி வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொரு முறை அவரைத்தேடிப் போகும் போது புதிது புதிதாக நாட்டு நடப்புகளைப் பாடலாகப் புனைந்து பாடுவார். கம்யூனிஸ்ட் இயக்க மேடை தோறும் பாடியவர் ஓம் முத்துமாரி. தோழர் பி. ராமமூர்த்திக்காகத் தேர்தல் பிரச்சாரத்தில் பாடியிருக்கிறார். இவருக்குப் பாவலர் என்ற பட்டத்தைத் தந்தவர் மூக்கையாத் தேவர். ஒரு காலத்தில் பார்வேர்ட் பிளாக் மேடை தோறும் முத்துமாரி பாடியிருக்கிறார்.

எனது ஆசான் எஸ். ஏ.பெருமாள் தான் அவரை உற்சாகப்படுத்திக் களப்பணியில் வழிகாட்டியவர். கலை இலக்கிய இரவுகளிலும் கட்சி நிகழ்ச்சிகளிலும் கிழவியாக வேடமணிந்து வந்து முத்துமாரி பேசும் அரசியல் நையாண்டி வெகு சிறப்பானது.

ஒம் முத்துமாரியோடு ஒரு முறை பேசிக் கொண்டிருக்கும் போது எஸ்ஏபெருமாள் இருக்கும் திசையைப் பார்த்து கும்பிட்டுகிடுறேன் என்று கையை உயர்த்திக் கும்பிட்டு அவருக்கு நன்றி செலுத்தினார். அந்த அளவு பற்று கொண்டவர்.

ஒம் முத்துமாரி நிகழ்ச்சிகளுக்குக் கிராமங்களில் பெரிய வரவேற்பு இருந்தது. அவரது நவீன கூத்து நிகழ்வுகளை மக்கள் ரசித்துக் கொண்டாடினார்கள். கட்டபொம்மன் நாடகத்தில் அவர் இங்கிலீஷ் பேசி துரையாக நடிப்பது அவ்வளவு இனிமையாக இருக்கும்.

வறுமை நமக்கு மாமன் முறை

சிறுமை நமக்குத் தம்பி முறை

பொறுமை நமக்கு அண்ணன் முறை

பசியும் பட்டினியும் பிள்ளைகள் முறை

எத்தனை சொந்தங்கள் நமக்கிருக்குது பாத்தீகளா

என்ற அவரது பாடல் மிகவும் பிரபலமானது. ஒவ்வொரு முறை அவரைச் சந்திக்கப் போகும் போது அதைப்பாடிக் காட்டும்படி கேட்டுக் கொள்வோம். அவரும் உற்சாகமாகப் பாடுவார். அவரது குரல் தனித்துவமானது.

எவ்வளவு எளிய சொற்களில் வாழ்க்கை யதார்த்தத்தைப் பேசுகிறார் பாருங்கள். ஓம் முத்துமாரி ஏழு வயசிலேயே நான் காங்கிரஸ் மேடைகளில் ஏறிப் பாட ஆரம்பித்துவிட்டவர். ஆரம்பக் கல்வியைக் காங்கிரஸ் பள்ளிக்கூடத்தில் படித்தவர். முக்கூடல் சொக்கலால் பீடிக் கம்பெனி விளம்பரத்திற்காகக் கிராமம் தோறும் சென்று கூத்து நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். பீடி கம்பெனி விளம்பரத்திற்கு என்றாலும் புகைபிடிப்பதை ஆதரித்துப் பாடமாட்டார். சமூக விமர்சனம் தான் பாட்டில் வெளிப்படும்.

அருவா வேலு, தங்கையா போன்ற கொள்ளையர்கள் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்ட போது அவர்கள் வாழ்க்கையைக் கொலைச் சிந்தாகப் பாடியிருக்கிறார்.

பார்வையாளர்கள் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் கொடுத்து விருப்பமான பாடலைப் பாடச்சொன்னால் தன்மானத்துடன் மறுத்துவிடுவார். மேடையில் அவரது ஆளுமையின் வீச்சு முழுமையாக வெளிப்படும்.

இந்தக் காணொளியில் பெண் வேடமிட்டிருக்கும் இரண்டு கலைஞர்களையும் பாருங்கள். இவர்களைப் போன்ற அசலான கலைஞர்கள் நம்மிடமிருந்து மறைந்து கொண்டு வருகிறார்கள்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை ஓம் முத்துமாரி நிகழ்த்தியிருக்கிறார். அவை முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை. அவரது காணொளிகள் கிடைக்கவில்லை. ஆவணப்படம் எடுக்க விரும்பும் இளைஞர்கள் இவரது வாழ்க்கையை ஒரு ஆவணப்படமாக எடுக்க வேண்டும். அது இந்தக் கலைஞனுக்குச் செய்யும் பெரிய மரியாதையாக இருக்கும்

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 13, 2021 00:23

March 12, 2021

காலைக் குறிப்புகள் 31 கோமாளியின் துயரம்.

சொற்களை விடவும் கோடுகள் மூலம் தன்னை எளிதாக வெளிப்படுத்த முடியும் என்று சிலர் நம்புகிறார்கள். அப்படித் தான் இயக்குநர் பெலினி செயல்பட்டார்.  அவர் பேச நினைத்தவற்றை ஒவியங்களாக வரைந்தார். அசையும் ஓவியங்களாகவே அவர் திரைப்படங்களை உருவாக்கினார்.

பெலினியின் வாழ்க்கையை விவரிக்கும் I, Fellini என்ற Charlotte Chandler புத்தகத்தை வாசித்தேன். அதில் “Dreams are the only reality.” என  பெலினி  குறிப்பிடுகிறார். அவரது திரைப்படங்கள் அவரது கனவுகளின் வெளிப்பாடு போலவே உருவாக்கப்பட்டன. தன் வாழ்வில் உண்மையாக நடந்த விஷயங்களை விடவும் அதைத் தான் எவ்வாறு நினைவு வைத்துள்ளேன் என்பதைத் தான் முக்கியமாக நினைப்பதாகக் கூறும் பெலினி பால்ய வயதின் நினைவுகள் முழுக்கனவு போலவே இருக்கின்றன. அதன் விசித்திரங்களை ஒரு போதும் மறக்கமுடியவில்லை என்கிறார்.

பருத்த உடல் கொண்ட பெண்களை, உயரமான குள்ளமான ஆண்களைப் பெலினி தனது படங்களில் அதிகம் பயன்படுத்தியிருக்கிறார். உலகம் அவர்களைக் கேலி செய்வதற்கு மாற்றாக இது போன்ற உடல் கொண்டவர்களின் தனித்துவத்தைத் தான் படத்தில் வெளிப்படுத்துவதாகக் கூறுகிறார்.

தன் வாழ்க்கை நினைவுகளை எவராலும் வரிசை மாறாமல் நினைவு வைத்துக் கொள்ள முடியாது. முன்பின்னாகவும் நிறைய விடுபடல்களுடனும் மட்டுமே நினைவு கொள்ள முடியும். அந்த வகையில் ஒரு ஒவியம் போலச் சித்தரிக்கப்படுவதும் விடுபட்டதும் இணைந்தே புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

சிறுவயதின் வசீகரம் பொய்களே. ஒரு சிறுவனோ, சிறுமியைப் பொய் சொல்லவே ஆசைப்படுகிறார். அந்தப் பொய்யை அவர் உருவாக்கும் அழகு தனித்துவமானது. எவர் தான் சொல்லும் பொய்யை முழுமையாக நம்பிவிடுகிறார்களோ அவர்களிடம் பொய் சொல்லச் சிறுவர்கள் தயங்குகிறார்கள். காரணம் பொய்யை ஒருவர் சந்தேகிக்க வேண்டும். அதைத் தன் பேச்சின் மூலம் உறுதியான உண்மையைப் போல நம்ப வைக்க வேண்டும் எனச் சிறார்கள் விரும்புகிறார்கள்.

பெரியவர்களால் தான் சிறுவர்கள் பொய் சொல்வதற்குத் தூண்டப்படுகிறார்கள். உண்மையில் பெரியவர்களுக்குச் சிறுவர்கள் சொல்லும் உண்மையான காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. ஒரு சிறுவன் தெருவில் நின்று நாயை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் என்று உண்மையைச் சொன்னால் அவனது அம்மா கோவித்துக் கொள்கிறார். ஆகவே அந்தச் சிறுவன் தெருவில் ஒரு விசித்திரமான பிச்சைக்காரனைப் பார்த்ததாகப் பொய் சொல்கிறான். உண்மையில் தனது மறுப்பை வெளிப்படுத்தும் விதமாகவே சிறார்கள் பொய் சொல்கிறார்கள். அதைப் பெரியவர்கள் புரிந்து கொள்வதில்லை.

தான் சொல்வதைப் பொறுமையாகப் பெரியவர்கள் கேட்பதில்லை என்பதைச் சிறார்கள் உணர்ந்துவிடுகிறார்கள். ஆகவே அவர்கள் பொய்யின் மூலம் கவனத்தைக் கவர முயல்கிறார்கள்.

பெலினியை மிகவும் கவர்ந்தது சர்க்கஸ். குறிப்பாகச் சர்க்கஸின் வரும் கோமாளி. சர்க்கஸை அவர் ஒரு கனவு வெளியாகக் கருதினார். சர்க்கஸில் அடுத்து என்ன நடக்கும் என்று எவராலும் கண்டறிய முடியாது. வியப்பூட்டும் நிகழ்வுகள் அடுத்தடுத்து நடக்கின்றன. பார்வையாளர்கள் அந்த நிகழ்வுகளால் சந்தோஷம் அடைகிறார்கள். ஆனால் சர்க்கஸ் கலைஞர்களின் வாழ்க்கை. பொருளாதாரக் கஷ்டங்களும் போட்டி பொறாமையும் கொண்டதாகவே இருக்கிறது. சர்க்கஸை பற்றிச் சிறுவயதில் தொடர்ந்து கனவு கண்டு வந்ததாகவும் அந்தக் கனவில் தவறாமல் ஒரு யானை இடம்பெற்றது என்றும் பெலினி நேர்காணலில் தெரிவிக்கிறார்.

சினிமாவையும் அவர் ஒரு சர்க்கஸ் போலவே கருதினார். ஒருவகையில் அது உண்மையும் கூடத்தான். சர்க்கஸில் சேருவதற்காக வீட்டை விட்டு ஓடிப்போக முயன்றார். எட்டு வயதில் சர்க்கஸ்காரர்களுடன் செல்வதற்காக முயன்றபோது சர்க்கஸ் ஒரு பெரிய குடும்பம் என்பதைக் கண்டுகொண்டார். சர்க்கஸில் அவரால் சேர இயலவில்லை. ஆனால் தான் அந்தக் குடும்பத்தின் உறுப்பினர் என்ற எண்ணம் மனதில் ஆழமாகப் பதிந்து போனது.

கோமாளிகள் எல்லோரும் சந்தோஷமாக இருப்பதில்லை. கூட்டத்தைச் சிரிக்க வைப்பது என்பது தீவிரமான விஷயம். கோமாளிகளின் துயரத்தை உலகம் அறிவதுமில்லை. புரிந்து கொள்வதுமில்லை. கோமாளிகள் கௌரவமாக இருப்பது போல நடிக்கிறார்கள். உண்மையில் அவர்கள் மோசமாகவே நடத்தப்பட்டார்கள்

சர்க்கஸ் பற்றிய தனது ஆர்வத்தை வீட்டில் எவரும் புரிந்து கொள்ளவேயில்லை. அதைப்பற்றிப் பேசத்துவங்கினாலே திட்டும் அடியும் கிடைத்தது. வீட்டில் மற்றவர்கள் எழுந்து கொள்ளும் முன்பு நான் தூங்கி எழுந்துவிடுவேன். படுக்கையில் கிடந்தபடியே அன்று கண்ட கனவை நினைத்துக் கொண்டிருப்பேன். முகம் கழுவினால் கனவு மறந்துபோய்விடும் என்று நம்பினேன் என்கிறார் பெலினி.

பெலினியின் Variety Lights திரைப்படத்தில் நாடகமேடையில் கிடைக்கும் கைதட்டுகள் மற்றும் புகழுக்காக ஏங்கும் ஒருபெண் அந்த நாடக்குழுவினர்களுடன் இணைந்து பயணிக்கிறாள். எப்படியாவது தன்னையும் ஒரு நடிகையாகச் சேர்த்துக் கொள்ளும்படி மன்றாடுகிறாள். நாடக மேடைக்குள் வந்தபிறகு அதன் போட்டி பொறாமைகளை அறிந்து கொள்கிறாள். தனக்குக் கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவள் அடுத்த நிலைக்குப் போய்க் கொண்டேயிருக்கிறாள். இந்தப் பெண்ணைப் போலக் கலையின் வழியே தன்னை உயர்த்திக் கொண்டே செல்பவர்கள் சிலரே. பெரும்பான்மையினர் இந்த மாயவெளிச்சத்திற்குள் மூழ்கியபடியே தன் வாழ்க்கையைக் கரைத்துக் கொண்டுவிடுகிறார்கள்.

உண்மையில் ஒவ்வொருவரும் ஒரு கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலரே அதை உணர்ந்து கொள்கிறார்கள். மற்றவர்களுக்கு அது ஒரு ரகசிய சஞ்சாரம். தனக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கை போதும் என ஒருவரும் நினைப்பதில்லை. மாறாக அதிலிருந்து விடுபட்டு ரகசியமாக மனதிற்குள் வேறு வாழ்க்கையை , வேறு நிலைகளை வாழ்ந்து பார்க்கிறார்கள். இந்தக் கற்பனை தான் வாழ்க்கையின் சுவாரஸ்யம். உலகம் தராத அங்கீகாரத்தைத் தனக்குத் தானே வழங்கிக் கொள்கிறார்கள்.

அதிலும் தனிமையை உணரும் மனிதர்கள் அதிலிருந்து விடுபடுவதற்காகக் கற்பனையின் நீரூற்றை உருவாக்கிக் கொள்கிறார்கள். அந்த நீரூற்று பொங்கி வழியும் போது அவர்கள் தன்னை மறந்து சந்தோஷம் அடைகிறார்கள். தனிமையை ஆழ்ந்து உணர்கிறவர்களே படைப்பாளியாக மாறுகிறார்கள். தனிமையைப் புரிந்து கொள்ளாதவர்கள் ஏதாவது ஒரு செயலை வரிந்து ஏற்றுக் கொண்டு வாழப்பழகிவிடுகிறார்கள்.

நீண்ட தனிமையை உணருகிறவர்கள் தனக்குள்ளாக அழுகிறார்கள். சிலர் தனிமையின் உச்சத்தில் களிப்பெய்துகிறார்கள். தனக்குள் சிரிப்பதும் தனக்குள் அழுவதும் இயல்பானது தான். அதைத் தவறான செயல் என ஏன் நினைக்கிறார்கள் என்று தான் புரிவதில்லை.

சப்தத்தைக் கண்டு சிறுவர்கள் பயப்படுவதில்லை. ஆனால் நிசப்தத்தைக் கண்டு பயப்படுகிறார்கள். அதுவும் ஆழ்ந்த நிசப்தம் அவர்களை அதிகம் பயமுறுத்துகிறது. குரல் கொடுப்பதும் குரலைக் கேட்பதும் உறுதுணையாக உணருகிறார்கள். நிசப்தம் நீர்நிலையின் மேற்பரப்பு போலச் சலனமற்றிருக்கிறது. ஆனால் அதன் ஆழம் எவராலும் கண்டறிய முடியாதது.

பதின் வயதில் நிசப்தத்தை விரும்பத் துவங்கும் ஆணோ பெண்ணோ அதற்குள்ளாகவே மூழ்கிக் கிடக்க விரும்புகிறார்கள். நிறைய இளம்பெண்கள் பதின்வயதில் விசித்திர கனவுகளில் சஞ்சரிக்கிறார்கள். அப்போது ஒரு நிஜ உலகிற்கும் கனவிற்கும் இடையில் ஊஞ்சலாடுகிறார்கள்.

சிறுவயதிலே பொம்மைகளைச் செய்து பொம்மலாட்டம் நிகழ்த்துவதில் பெலினிக்கு மிகுந்த விருப்பமிருந்தது. பொம்மைகள் எந்த எதிர்ப்பினையும் தெரிவிப்பதில்லை என்று பெலினி குறிப்பிடுகிறார். தன்னை உலகம் கையாளுவதைப் போலத் தான் பொம்மைகளைக் கையாண்டதாகவும் குறிப்பிடுகிறார்.

இது போலவே காமிக்ஸ் புத்தகங்களில் வரையப்பட்டிருந்த மனிதர்களுடன் விலங்குகளுடன் தான் பேசத்துவங்கியதாகவும் அவர்கள் தன்னைப் புரிந்து கொள்கிறார்கள் என்று உணர்ந்ததாகவும் கூறுகிறார்.

எளிதில் புரிந்து கொள்ள முடியாத பால்யத்தின் குழப்பங்கள். கனவுகள் தான் ஒருவரை பெருங்கலைஞனாக மாற்றுகிறது. பெலினிக்குள் சர்க்கஸ் சார்ந்த நினைவுகள் மறையவேயில்லை. அவர் சினிமாவை மிகப்பெரிய சர்க்கஸ் நிகழ்ச்சியைப் போல மாற்றிக் காட்டினார்.

பெலினிக்குள் இருந்த சிறுவன் தான் அவரை வழிநடத்தியிருக்கிறான். அவனது விருப்பங்களைத் தான் பெலினி கலையின் வழியே பூர்த்தி செய்திருக்கிறார்.

நடந்ததை விவரிக்கும் போது நடக்காத விஷயங்களையும் சேர்த்துச் சொல்வது எனது பழக்கம் என்கிறார் பெலினி. இது தான் எழுத்தின் சூத்திரம். அதைப் பெலினி எளிதாகக் கையாண்டிருக்கிறார். அதுவே அவரது வெற்றிக்குக் காரணமாகயிருந்தது.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 12, 2021 05:25

வாழ்த்துகள்

இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் இமையத்திற்கு  செல்லாத பணம் நாவலுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 12, 2021 04:25

காலத்தின் தேவை

சென்னையில் ஆங்கில நாடகங்களை நிகழ்த்துவதற்கெனத் தனியான நாடகக்குழுக்கள் இயங்குகின்றன. The Madras Players போன்ற புகழ்பெற்ற நாடகக் குழுக்கள் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நடந்து வருகின்றன. இவர்களின் நாடகங்களை ம்யூசியம் தியேட்டர்களில் தொடர்ந்து பார்த்திருக்கிறேன். சில சமயம் ம்யூசிக் அகாதமி போன்ற பெரிய அரங்கிலும் இவர்கள் நாடகம் நடத்துவதுண்டு.

இந்த நாடகங்களுக்கு இருநூறு முதல் இரண்டாயிரம் வரை கட்டணம். ஆனால் எந்த நாடகமாக இருந்தாலும் அரங்கு நிரம்பிவிடுவது வழக்கம். சென்னையில் ஆங்கில நாடகங்கள் பார்ப்பதற்கென்றே தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக ஷேக்ஸ்பியர் நாடகங்களுக்கெனத் தனிப் பார்வையாளர்கள் இருக்கிறார்கள். ஒருமுறை பிரிட்டனிலிருந்து வந்த குழுவினர் நடித்த ஷேக்ஸ்பியர் நாடகம் ஒன்றைச் சென்னையில் பார்த்தேன். மிகப்பிரம்மாண்டமான மேடை ஒளியமைப்பு. சிறந்த நாடக உருவாக்கம்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வைக்கம் முகமது பஷீரின் சிறுகதைகளை இணைத்து ஆங்கில நாடகமாக்கியிருந்தார்கள். சிறந்த தயாரிப்பு. நேர்த்தியான நடிப்பு. இந்த நாடகம் இந்தியா முழுவதும் நடத்தப்பட்டிருக்கிறது.

முன்பு ஒருமுறை Mahatma vs Gandhi என்ற மகாத்மா காந்தி பற்றிய ஆங்கில நாடகம் ஒன்றினை காண ம்யூசிக் அகாதமி சென்று டிக்கெட் கிடைக்காமல் திரும்பினேன். இரண்டு நாட்கள் நடைபெற்றது. இரண்டு நாட்களிலும் டிக்கெட் கிடைக்கவில்லை. காந்தியாக நஸ்ருதீன் ஷா நடித்திருந்தார். ஆங்கில நாளிதழ்கள் இந்த நாடகத்தைக் கொண்டாடி எழுதியிருந்தார்கள். ஆனால் நவீனத் தமிழ் நாடகங்கள் பற்றி ஆங்கில நாளிதழ்களில் ஒருவரி இடம்பெறாது. இது ஒரு வகைத் தீண்டாமை.

நூறு வருஷங்களுக்கும் மேலாகவே சென்னையில் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒரு காலத்தில் அது மேல்தட்டு வர்க்கத்தினருக்கான நாடகமாகக் கருதப்பட்டது. ஆகவே பம்மல் சம்பந்த முதலியார் தமிழ்ப்படுத்தி எளிய மக்களும் பார்க்கும்படி நாடகமாக்கினார்.

பெரும்பான்மை கல்லூரி விழாக்களில் இன்றும் ஆங்கில நாடகம் நிகழ்த்துவது மரபு மீறாமல் நடந்து வருகிறது. அதுவும் இப்சன் அல்லது ஷேக்ஸ்பியர், மார்லோ இவர்களின் நாடகங்களைத் தான் நடத்துகிறார்கள். மதுரைக்கல்லூரி ஒன்று ஒருமுறை கிரீஷ் கர்னாடின் துக்ளக் நாடகத்தை நிகழ்த்தினார்கள். அந்த விழாவில் நான் கலந்து கொண்டேன். ஐந்து நிமிஷங்களுக்கும் மேல் நாடகத்தைப் பார்க்க முடியவில்லை. அந்த நாடகத்தைத் தொடர்ந்து காதலோ காதல் என்ற ஒரு நாடகம் நடத்த இருப்பதாக அறிவிப்புச் செய்தார்கள். நல்லவேளை அதற்குள் கல்லூரியை விட்டு வெளியேறியிருந்தேன்.

சென்னையில் இயங்கும் நாடகக்குழுக்களின் முக்கியப் பிரச்சனை ஒத்திகை பார்க்க இடம் கிடைக்காமல் திண்டாடுவதே. ஒரு மாத கால ஒத்திகை அவசியம் எனும் போது யார் வீட்டிலாவது அல்லது தெரிந்த பள்ளிக்கூட மைதானம், திருமண மண்டபம் எதிலாவது ஒத்திகை செய்வது வழக்கம். நடிகர்கள் பலரும் அலுவலகம் முடிந்து மாலை ஒன்று கூடுவார்கள். சிலர் குழந்தைகளுடன் வருவதும் உண்டு. நாடக ஒத்திகையைக் காணுவது நல்ல அனுபவமாக இருக்கும்.

நாடக ஒத்திகையை மையமாக் கொண்டே Tonight We Improvise என்ற நாடகத்தை லூயி பிராண்டலோ எழுதியிருக்கிறார். அவர் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர். கவிஞர். சிறுகதையாசிரியர். 1934 ஆம் ஆண்டு அவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

Six Characters in Search of an Author என்ற பிராண்டலோவின் நாடகம் மிகப்புதுமையானது. நாடக ஆசிரியரைத் தேடி வரும் அவரது கதாபாத்திரங்கள் நாடகத்தில் தங்களின் பங்கு பற்றி விவாதிப்பது சுவாரஸ்யமானது.

இந்த நாடகத்தையும் சென்னையில் அரங்கேற்றியிருக்கிறார்கள். அதைப் பார்த்திருக்கிறேன். பிரெக்ட்டின் நாடகங்களை ஒருமுறை மாக்ஸ் முல்லர் பவனில் நிகழ்த்தினார்கள். வித்தியாசமான நாடகமாக்கம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சூடாமணியின் சிறுகதைகளை மையப்படுத்திச் சென்னை ம்யூசியம் தியேட்டரில் நாடகம் நிகழ்த்தினார்கள். நல்ல வரவேற்பு கிடைத்தது.

நடனக்கலைஞர் சந்திரலேகாவின் Spaces என்ற கலைமையம் பெசன்ட் நகரில் உள்ளது. கடற்கரையில் அமைந்துள்ள வீடு. அங்கே தொடர்ந்து நாடகங்கள் நடந்து வருகின்றன. மேஜிக் லேண்டன் நாடகக் குழுவின் சார்பில் அல்லயன்ஸ் பிரான்சே அரங்கில் சிறந்த நாடகங்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

எனது அரவான் நாடகத்தைக் கேரளாவில் ஆங்கிலத்தில் நிகழ்த்தியிருக்கிறார்கள். அதை நான் நேரில் பார்க்கவில்லை. ஆனால் ஆங்கில நாளிதழ்களில் அதைப் பாராட்டிய எழுதியிருப்பதை அனுப்பி வைத்திருந்தார்கள்.

அசோகமித்திரன் பரிக்ஷாவின் நவீன நாடகத்தில் நடித்திருக்கிறார். மேடையில் அவர் எப்படியிருந்திருப்பார் என்ற யூகிக்கவே முடியவில்லை. அவரது நாடக அனுபவம் பற்றி எதுவும் எழுதியிருப்பதாகவும் தெரியவில்லை. அவரது நாடக புகைப்படம் எதுவும் கிடைக்கவுமில்லை. இலக்கியக் கூட்டங்களிலே ரகசியம் பேசுவது போல மென்மையாக, தணிந்த குரலில் பேசும் அசோகமித்திரன் நாடகத்தில் எப்படிப் பேசியிருப்பார் என்று தெரியவில்லை.

எழுத்தாளர் கோணங்கி வீதி நாடகங்களில் நடித்திருக்கிறார். கோவில்பட்டியில் நடந்த நாடகம் ஒன்றில் அவர் நடிப்பதைக் கண்டிருக்கிறேன். எழுத்தாளர் வேல. ராமமூர்த்திச் சிறந்த நாடக நடிகர். நிறைய வீதி நாடகங்களில் நடித்திருக்கிறார். இன்று சினிமாவிலும் தனித்துவமிக்க நடிகராக விளங்குகிறார்.

மு.ராமசாமி மிகச்சிறந்த நாடக நடிகர். இயக்குநர். மதுரையில் இவர் நிகழ்த்திய நாடகங்கள் மிகச்சிறப்பானவை. இவரது துர்க்கிர அவலம் மறக்கமுடியாத நாடகமாக்கம். திரையுலகிலும் தனியிடம் பிடித்துள்ளார்.

கல்கத்தா விஸ்வநாதன் என்ற திரைப்பட நடிகரை ஒருமுறை படப்பிடிப்பு ஒன்றில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது அவர் வங்காள நாடகங்களில் நடித்த அனுபவங்களைப் பேசிக் கொண்டிருந்தார். தத்துவத்தில் ஆழ்ந்த ஞானம் கொண்டவர் என்பதை அவரது உரையாடலில் அறிந்து கொள்ள முடிந்தது. மூன்றுமுடிச்சுப் படத்தில் ஸ்ரீதேவியின் கணவராக நடித்த அனுபவத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். அந்தக் கதாபாத்திரத்தை இன்றும் பலர் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்று சந்தோஷப்பட்டுக் கொண்டார்.

75 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ராஜதானியில் 250 நாடக நிறுவனங்கள் இருந்தன. ஊர் ஊராகச் சென்று நாடகங்கள் நிகழ்த்தினார்கள். புதிது புதிதாக நிரந்தர நாடக அரங்குகள் கட்டப்பட்டன. சென்னை மிண்ட் பகுதியில் இருந்த ஒத்த வாடை நாடக அரங்கு முக்கியமான செயல்பாட்டு மையமாகத் திகழ்ந்தது.

அறிவொளி இயக்கம் தமிழகம் முழுவதும் தீவிரமாகச் செயல்பட்டு வந்த போது நிறைய வீதி நாடக இயக்கங்கள் உருவாகின. அறிவொளி இயக்கத்திற்காக நாடகங்களை எழுதி நடித்தார்கள். இது போலவே தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பிலும் நாடகங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன

எனது நண்பர் வெளி ரங்கராஜன் நாடகத்திற்கென்றே நாடக வெளி என்ற இதழைக் கொண்டுவந்தார். அதில் நிறைய நாடகப்பிரதிகள் வெளியாகின. நாடக நிகழ்வுகள் குறித்தும். நாடக அனுபவம் குறித்தும் நிறையக் கட்டுரைகளும் வெளியாகியிருக்கின்றன. நாடக வெளி இதழில் நிறைய எழுதியிருக்கிறேன். தற்போது வெளி ரங்கராஜன் தொடர்ந்து நவீன நாடகங்களை இயக்கி வருகிறார்.

திருப்பத்தூர் கல்லூரியில் பணியாற்றிவரும் பார்த்திப ராஜா தொடர்ந்து நவீன நாடகங்களைச் சிறப்பாக நடத்தி வருகிறார். அத்தோடு ஆண்டுதோறும் ஒரு நாடகவிழா ஒன்றினையும் மிகப்பெரியதாக நடத்திவருகிறார். அவரது நாடகப்பங்களிப்பு மிகுந்த பாராட்டிற்குரியது

இது போலவே தியேட்டர் லேப் சார்பில் ஜெயராவ் தொடர்ந்து நடிப்புப் பயிற்சி அளித்து வருவதுடன் புதுமையான நாடகங்களைத் தனது மாணவர்களைக் கொண்டு நடத்தி வருகிறார். எனது நான்கு நாடகங்களை இவர்கள் மேடையேற்றியிருக்கிறார்கள்.

சிறுவர்களுக்கான நாடகங்களை உருவாக்கித் தொடர்ந்து மேடையேற்றி வருவதில் வேலு சரவணன், ரவி, காந்திமேரி மூவரும் குறிப்பிடத்தக்கவர்கள். முருகபூபதி அரூபமும் குறியீடுகளும் சங்கேதங்களும் கொண்ட புதிய நாடக மொழியைக் கொண்ட நாடகங்களை நிகழ்த்தி வருகிறார்கள்.

தற்போது கோமல் சுவாமிநாதனின் மகள் தாரிணி தனது தந்தையின் நாடகங்களைத் திரும்ப மேடையேற்றி வருவதுடன் சுஜாதாவின் சிறுகதைகள். ஜானகிராமன் சிறுகதைகளையும் நாடகமாக்கிச் சிறப்பாகப் பங்களித்து வருகிறார். அவருக்கும் என் வாழ்த்துகள்.

சென்னை மதுரை கோவை போன்ற பெரிய நகரங்களில் நவீன நாடகங்கள் அவ்வப்போது நடக்கின்றன. சிறிய நகரங்கள் எதிலும் நாடகம் நிகழ்த்தப்படுவதில்லை. அவர்கள் அறிந்ததெல்லாம் திருவிழாக்களில் நடத்தப்படும் மேடை நாடகங்கள் மட்டுமே.

எனது புத்தக வெளியீட்டுவிழாவினை முன்னிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்றை ஒருமணி நேரமாகத் தியேட்டர் லேப் நடித்தார்கள். நானே அதன் நாடகப்பிரதியை எழுதிக் கொடுத்தேன். நான் அறிந்தவரை தமிழில் தஸ்தாயெவ்ஸ்கி வாழ்க்கையை விவரிக்கும் முதல் நாடகம் அதுவே. ஆனால் அந்த நாடகத்தை நிகழ்த்தும் படி வேறு எவரும் அழைக்கவேயில்லை. அது போன்ற நாடகங்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட வேண்டும்.

நண்பன் கருணா பிரசாத் சிறந்த நடிகர். எனது அரவான் என்ற தனிநபர் நாடகத்தைச் சிறப்பாக மேடையேற்றினான். ஒரு நடிகர் மேடையில் ஒரு மணி நேரம் தொடர்ந்து நடித்துப் பல்வேறு உணர்ச்சி நிலைகளை வெளிப்படுத்துவது சவாலான விஷயம். அதை மிகச்சிறப்பாகச் செய்து காட்டினார். அந்த நாடகம் மிகுந்த வரவேற்பினைப் பெற்றது.

சென்னை புத்தகக் கண்காட்சி போன்ற பெரிய நிகழ்வுகளில் தினசரி மாலை ஒரு நவீன நாடகத்தை நிகழ்த்தச் செய்யலாம். மதுரை, கோவை ஈரோடு போன்ற நகரங்களில் இனிமேல் தான் புத்தகக் கண்காட்சிகள் நடத்த இருக்கிறார்கள். அவர்கள் நவீன நாடகத்திற்கு ஆதரவு தர வேண்டும்.

ந.முத்துசாமி மிக உறுதியான நம்பிக்கையோடு, தீவிரமான கலைவேட்கையோடு கூத்துப்பட்டறையின் மூலம் நவீன நாடகங்களை நிகழ்த்தினார். சிறந்த நடிகர்களை உருவாக்கினார். மிக முக்கியமான நாடகங்களை மேடையேற்றினார். இன்றும் கூத்துப்பட்டறை அந்த முன்னெடுப்புகளைத் தொடரவே செய்கிறது. பிரளயன். ஞாநி, மங்கை மூவரும் சமூகப்பிரச்சினைகளை மையமாக் கொண்ட வீதி நாடகங்களைச் சிறப்பாக நிகழ்த்தினார்கள். இன்றும் அந்த மேடையேற்றங்கள் தொடர்கின்றன.

புதுவைப் பல்கலைக்கழக நாடகத்துறை மூலம் சிறந்த நாடகங்கள் மேடையேற்றப்படுகின்றன. புதிய நாடக இயக்குநர்கள் நடிகர்கள் உருவாகி வருகிறார்கள். சுகுமார் போன்ற இளம் இயக்குநர்கள் மிகச்சிறப்பான நாடகங்களை உருவாக்கி வருகிறார்கள். இந்த ஆண்டுத் தேசிய நாடக விழாவிலும் சுகுமாரின் நாடகம் இடம்பெற்றிருந்தது. நல்ல வரவேற்பினைப் பெற்றது

நவீன தமிழ் நாடக வளர்ச்சியில் சங்கீத நாடக அகாதமியின் ஊக்குவிப்பு திட்டங்களும் நிதி உதவியும் முக்கியமானது. அதில் எனது உருளும் பாறைகள் போன்ற நாடகம் தேர்வு செய்யப்பட்டு நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

பேராசிரியர் செ.ரவீந்திரன், புது டெல்லியில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நவீன நாடகங்களுக்கு ஒளியமைப்பு செய்வதில், அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகிறார். நாடக ஒளியமைப்பு குறித்த விவரங்களை ஒன்றுதிரட்டி அவர் தொகுத்த ‘ஒளியின் வெளி’ என்ற புத்தகம் மிகவும் குறிப்பிடத்தக்கது

கோமல் சுவாமிநாதன் தமிழகம் முழுவதும் நாடக விழாக்களைச் சுபமங்களா சார்பில் ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தினார். இது போலவே சென்னையில் நாரத கான சபா , ம்யூசிக் அகாதமி மினி ஹாலில் நிறைய நவீன நாடகவிழாக்கள் நடைபெற்றிருக்கின்றன. இன்றும் அது போல ஒரு நாடகவிழாவிற்கான தேவையிருக்கிறது. இதைத் தி இந்து தமிழ் நாளிதழ் போன்றவர்கள் முன்னெடுப்புச் செய்ய வேண்டும்

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 12, 2021 00:40

March 11, 2021

இலக்கியச் சிந்தனை விருது

மாதந்தோறும் தமிழில் வெளியான சிறந்த கதைகளை வாசித்து அதில் ஒரு கதையை அந்த மாதத்தின் சிறந்த கதையாக இலக்கியச்சிந்தனை தேர்வு செய்து வருகிறது.

இந்த 12 கதைகளில் ஆண்டின் சிறந்த கதையாக ஒன்றை நடுவர் குழு தேர்வு செய்து விருதும் ஐந்தாயிரம் ரொக்கப்பணமும் வழங்குகிறது.

சென்ற வருஷம் இலக்கியச்சிந்தனையின் ஆண்டின் சிறந்த கதையாகச் சிற்றிதழ் என்ற எனது கதை தேர்வு செய்யப்பட்டது.

பெருந்தொற்றுக் காரணமாக ஏற்பட்ட ஊரடங்கால் விருது வழங்கும் விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு ஏப்ரல் 14 ம் தேதி இலக்கியசிந்தனை நடத்தும் விழாவில் அந்த விருது எனக்கு வழங்கப்பட இருக்கிறது.

சென்னை ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் இந்த விழா நடைபெறுகிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 11, 2021 22:39

மகா பிரஜாபதி

.

தேரி கதா எனப்படும் பௌத்த பெண் துறவிகளின் பாடல்களைக் கொண்ட தொகுப்பினை வாசித்தேன்.

புத்தர் வாழ்ந்த காலத்தில் பாலி மொழியில் உருவாக்கப்பட்டுப் புத்தர் மறைவுக்குப்பின் 1905 இல் திருமதி ரைஸ் டேவிட்ஸ் பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

இந்தத் தொகுப்பில் புத்தரின் தாயான மகா பிரஜாபதி கௌதமியின் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது. இவரே புத்தரை வளர்த்தவர். இவர் புத்தரின் தாயான மாயாவின் தங்கை.

புத்தர் பிறந்த ஏழாம் நாளில் அவரது தாய் இறந்துவிடவே பிரஜாபதியே அவரை வளர்த்தார். இரண்டு குழந்தைகளின் தாயான பிரஜாபதியின் தனது சொந்த மகன் நந்தனை தாதியிடம் வளர்க்கச் சொல்லிவிட்டு புத்தரை வளர்ப்பதிலே தன் வாழ்வினை செலவிட்டார். பிரஜாபதியின் மகன் நந்தன் பின்னாளில் புத்தரின் சீடர்களில் ஒருவனாக மாறினான்.

பிரஜாபதி பௌத்த சமயத்தின் முதல் பெண் துறவியாகக் கருதப்படுகிறார். ஐநூறு பெண்களுடன் இவர் புத்தரிடம் தீட்சை பெற்றுக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இவரைப் பிக்குணியாக ஏற்றுக் கொள்ளும் போது பௌத்த சங்கத்தில் பெண்களை ஏற்றுக் கொள்வது குறித்துப் பலத்த வாக்குவாதம் நடைபெற்றது. ஆரம்பத்தில் புத்தர் அவரைத் துறவியாக ஏற்கவில்லை. ஆனால் தானே தலைமுடியை மழித்துக் கொண்டு மஞ்சள் துறவாடை உடுத்தி துறவு ஒழுக்கத்துடன் வாழத்துவங்கிய பிரஜாபதி புத்தரைத் தேடி சகதுறவிகளுடன் வைஷாலிக்கு 150 மைல் நடந்தே பயணம் மேற்கொண்டார். இந்த மனவுறுதியைக் கண்டு வியந்த புத்தர் பின்பு தீட்சை வழங்கினார்.

புத்த பிக்குணிகளில் மூத்தவர்களான ஐம்பது பேர்களின் பாடல்கள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இவர்களில் பெரும்பான்மையினர் தனது குழந்தையின் இறப்பு காரணமாகவே துறவு வாழ்க்கைக்கு வந்திருக்கிறார்கள். மரணத்தை அவர்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. பிரஜாபதியும் தன் கணவரின் மரணத்திற்குப் பிறகே பிக்குணியாக மாறுகிறார்.

ஐம்பது பிக்குணிகளில் முப்பத்திரண்டு பேர் திருமணம் செய்து கொள்ளாமல் துறவு வாழ்க்கையை மேற்கொண்டு ஞானம் அடைந்தவர்கள். பதினெட்டுப் பெண்கள் திருமணமானவர்கள். பின்பு துறவியாக மாறியிருக்கிறார்கள். சுமா அனுபமா சுமேதா ஆகிய மூன்று பெண்கள் வசதியான வீட்டில் பிறந்தவர்கள்.

பௌத்தப் பிக்குணிகளின் பாடல் அவர்கள் எப்படித் துறவு வாழ்வினை மேற்கொண்டார்கள் என்பதை விவரிக்கிறது.

இந்தப் பாடலில் மகாபிரஜாபதி சொல்கிறார்

முன்பு நான் தாய், மகன், தந்தை, சகோதரர் மற்றும் பாட்டி;

எனச் சம்சாரத்தில் பயணம் செய்தேன்.

முடிவில் நான் உண்மையை அறிந்தேன்

இது என் கடைசி உடல்.

எனது பிறப்பின் நீள் பயணம் நீக்கப்பட்டது

இதுவே எனது கடைசி உடல் என்ற அவரது பிரயோகம் நிறைய யோசிக்க வைக்கிறது. நோய் மற்றும் மரணத்தால் உடல் பாதிக்கப்படுகிறது. உடலைக் கையாளுவது தான் வாழ்க்கையா, பிக்குணிகள் யாவரும் இது தங்களின் கடைசி உடல் என்றே கூறுகிறார்கள். மனதாலும் புலன்களாலும் தான் உடலைப் பாதுகாத்து வருவதாகவும் சொல்கிறார்கள்.

மகாபிரஜாபதியின் மௌனம் ஆழமானது. அவர் புத்தரை வளர்க்கும் போது கண்ட கனவுகள் யாவை. அவற்றை எப்போதாவது வெளிப்படுத்தியிருக்கிறாரா. புத்தர் அரண்மனையை விட்டு வெளியேறிய மறுநாள் மகாபிரஜாபதி எப்படி உணர்ந்தார். அவரது வேதனையைப் புத்தர் அறிவாரா. புத்தரை மட்டுமின்றி அவரது மகன் ராகுலனையும் பிரஜாபதியே வளர்க்கிறார். ராகுலனுக்குக் கதைகள் சொல்கிறார். அவரது நினைவுகள் செஞ்சுடராக அவருக்குள்ளே எரிந்து அடங்கிவிட்டது.

வீட்டினை, உறவுகளை, பிள்ளைகளை விலக்கிவந்த மனநிலையை அறியாமையிலிருந்து விடுபட்டுத் தெளிவு கொண்ட நிலை போலவே பிக்குணிகள் விளக்குகிறார்கள்.

பழுக்கக் காய்ச்சிய இரும்பினை தண்ணீரில் குளிரவைத்தால் அது சப்தமிடும். ஆனால் பின்பு அதன் சூடு முற்றிலும் அடங்கிவிடும். அப்படித் தான் தனது காமமும் ஆசைகளும் ஆரம்பத்தில் ஓலமிட்டன. பின்பு தானே முற்றிலுமாக அடங்கிவிட்டது என்கிறார் ஒரு பிக்குணி.

புத்தரின் முற்பிறப்பு கதைகளைப் போலவே பிரஜாபதிக்கு முற்பிறப்புக் கதைகள் கூறப்படுகின்றன. அதில் அவர் முற்பிறவி ஒன்றில் மிகப்பெரிய செல்வந்தரின் மகளாகப் பிறந்து துறவிகளுக்கான தங்குமிடம் ஒன்றை கட்டி எழுப்பினார். அங்கே வரும் துறவிகளுக்கு உணவு வழங்கினார் என்கிறது அக்கதை.

இன்னொரு கதையில் புத்தரிடமிருந்து தனது பார்வையை விலக்கக் கூடாது என்பதற்காகப் பின்பக்கமாகவே பிரஜாபதி நடந்து சென்றார். அவரது பார்வை எப்போதும் புத்தரை நோக்கியே இருந்தது என்றொரு குறிப்புக் காணப்படுகிறது.

இயேசுவின் அன்னையான மரியாள் வணங்கப்படுவது போலப் புத்தரின் அன்னையான பிரஜாபதி வணங்கப்படவில்லை. ஆனால் பிக்குணிகளில் மூத்தவராக, ஞானவாணியாக அறியப்படுகிறார்.

வீட்டைப் பிரிந்து செல்கிறவர்கள் தரும் துயரத்தைப் பெண்கள் காலம் காலமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். பிரிந்தவர்களுக்காக மௌனமாகக் கண்ணீர்விடுகிறார்கள். காத்திருக்கிறார்கள். அது புத்தனாக இருந்தாலும் சரி, கூலி வேலைக்காக வெளிநாடு போன மகனாக இருந்தாலும் சரி தாயின் கண்ணீர் ஒன்று தானே.

அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தில் வீட்டைவிட்டு ஓடிப்போன கணவர் சாமியராகத் திரும்பி வருவதைச் சுஜாதாவின் தாய் மகிழ்ச்சியோடு வரவேற்பார். இத்தனை ஆண்டுகளாக அவர் தங்களைக் கஷ்டத்தில் விட்டுப்போய்விட்டாரே எனச் சுஜாதா கோவித்துக் கொள்ளும்போது என்ன இருந்தாலும் அவர் உன்னோட அப்பா என்று அவரது அன்னை பதில் சொல்லுவார். அதைத்தான் சுஜாதாவால் தாங்கிக் கொள்ளமுடியாது

வீட்டைவிட்டு ஓடிப்போய் குடும்பத்தை நடுத்தெருவில் விட்டவர்களை எப்படிப் பெண்கள் மன்னித்து ஏற்றுக் கொள்கிறார்கள். நடிகை சோபியா லாரன் ஹாலிவுட்டில் நடித்துக் கொண்டிருந்த போது நடிகர் கேரி கிராண்டைக் காதலித்தார். இருவரும் மிக நெருக்கமாக பழகினார்கள். ஒன்றாக நடித்தார்கள். சிறந்த ஜோடி என சினிமா உலகம் அவர்களைக் கொண்டாடியது.

புகழின் உச்சியிலிருந்த கேரி கிராண்ட்டை திருமணம் செய்து கொள்வதா, அல்லது இத்தாலியினரான கார்லோ பாண்டி என்ற தன்னை விடப் பலவயது மூத்தவரைத் திருமணம் செய்வதா என்ற குழப்பம் சோபியா லாரனுக்கு ஏற்பட்டது. அவர் இத்தாலியப் பண்பாடு தெரியாத கேரி கிராண்டினை திருமணம் செய்வதை விடவும் தனது தந்தையின் வயதை ஒத்த கார்லோ பாண்டியைத் திருமணம் செய்வது என முடிவு செய்தார்.

சோபியாவின் நெருங்கிய தோழிகள் இது தவறான முடிவு என்றார்கள். ஆனால் சோபியா லாரன் ஒவ்வொரு நாளும் வீடு திரும்பும் போது ஒரு அமெரிக்கரை மணந்து கொண்டிருக்கிறேன் என்ற நினைப்பு வரக்கூடாது. இத்தாலிய உணவை, இத்தாலியப் பண்பாட்டினை அவருக்குப் பாடம் நடத்திக் கொண்டே இருக்க முடியாது. ஆகவே கார்லோ பாண்டியைத் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்றார்.  அப்படியே திருமணமும் செய்து கொண்டார். கேரி கிராண்டிற்கு இது பெரிய ஏமாற்றமாகவே இருந்தது. 

சோபியாவின் திருமண வாழ்க்கை நீண்டகாலம் இனிமையாகவே தொடர்ந்தது. இப்படித் தான் பெண்கள் முடிவு எடுக்கிறார்கள். கேரி கிராண்டினை திருமணம் செய்து கொண்டிருந்தால் புகழின் உச்சத்திற்குப் போயிருக்கலாம். மிக வசதியான வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம். ஆனால் தந்தையின் அன்பை போன்ற ஒன்றையே அவர் தேர்வு செய்தார். இது போல பெண்கள் எடுக்கும் முடிவுகள் விசித்திரமானதே.

பிரஜாபதியும் இப்படியான ஒரு முடிவினை தான் எடுத்தார். அவர் தனது சொந்தப்பிள்ளைகளைத் தாதியின் வளர்ப்பில் விட்டுவிட்டார். சித்தார்த்தனை மட்டுமே தனது பிள்ளையாகக் கருதினார். தாயன்பினை அவருக்கு முழுமையாக அளித்தார். கடைசி வரை புத்தரின் கூடவே நிழல் போல இருந்தார்.

பிள்ளைகள் தாயை விலக்கக் கூடும். பிரிந்து போகக்கூடும். தாயால் ஒரு போதும் பிள்ளைகளை வெறுக்கவோ, விலக்கவோ முடியாது. பிள்ளைகள் எங்கேயிருந்தாலும் அவர்களுக்காகத் தாய் கவலைப்பட்டுக் கொண்டேதானிருப்பார்.

புத்தருக்கும் அவரது மனைவி யசோதராவிற்க்கும் ஒரே வயது. அந்தக் காலத்தில் எப்படி ஒரே வயதுள்ள இருவர் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது வியப்பானதே. யசோதராவிற்கும் மகாபிரஜாபதிக்குமான உறவு எப்படியிருந்தது. தன் மருமகளைப் பிரஜாபதி எப்படி நடத்தினார் என்பதெல்லாம் நிழலான விஷயங்களே.

யசோதரா குதிங்கால் வரை தொடும் நீண்ட தலைமயிரைக் கொண்டிருந்தார் என்கிறார்கள். அவர் சித்தார்த்தனைத் திருமணம் செய்து கொண்ட போது வயது பதினாறு. அவளை அடைவதற்காக சித்தார்த்தன் வில்வித்தை, குதிரையேற்றம் என பல போட்டிகளில் வென்றிருக்கிறார். பிரிந்த கணவனை யாரோ ஒருவரைப் போல ஒரு பெண் சந்திக்கும் தருணம் விநோதமானது. அப்படி ஒரு தருணத்தை ஆன்டன் செகாவ் தனது கதை ஒன்றில் எழுதியிருக்கிறார். அந்தப் பெண் தனது ஏக்கத்தை மறைத்தபடியே பேசிக் கொண்டிருப்பாள். ஆனால் யசோதரா தனது மனதின் ஆசைகளை ஒருபோதும் புத்தரிடம் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. அவள் கணவன் சித்தார்த்தன். புத்தர் அவள் அறியாத மாமனிதர். யசோதராவின் கடைசி நாட்கள் எப்படியிருந்தன. எந்த நினைவுகளில் அமிழ்ந்து கிடந்தாள்.  கணவரை மகனைப் பிரிந்த அவள் தனிமையில் ஒரு பிக்குணி போலவே வாழ்ந்தாள்.

புத்தர் மீதான யசோதராவின் அன்பு நிகரற்றது. தனது 78 வயதில் யசோதரா இறந்து போனாள். அப்போது புத்தர் என்ன நினைத்திருப்பார். எப்படி அதை எதிர்கொண்டார் என்ற குறிப்புகளை அறிய இயலவில்லை. ஆனால் எழுத்தாளன் என்ற முறையில் அது அழகான கதைக்கான கரு என்பதை அறிவேன்.

தேரி காதையின் ஒரு பாடலில் ஒரு பெண் சால் மரத்தின் அடியில் நிற்கிறாள். மரம் பூத்துக் குலுங்குகிறது. மரத்திற்கு இத்தனை பூக்கள் துணையிருக்கின்றன. உனக்கு யார் இருக்கிறார்கள் என்று காற்று அவளிடம் கேட்பது போல உணருகிறாள்.

பௌத்த பிக்குணியாக மாறிய போதும் அவர்கள் தாய்மை உணர்விலிருந்து விடுபடவில்லை. ஒரே மாற்றம் சொந்தக் குழந்தைகளுக்குப் பதிலாக அனைவரையும் தனது பிள்ளையாகக் கருதும் மனநிலைக்கு அவர்கள் மாறியதே.

ஏழு வயது வரை ராகுலன் தனது தந்தையை அறியவில்லை. முதன்முறையாகப் புத்தரைச் சந்தித்தபோது ராகுலன் உங்களின் நிழல் கூட எனக்குச் சந்தோஷம் அளிக்கிறது என்றான்

ராகுலன் துறவு வாழ்க்கையை ஏற்றபோது புத்தரின் தந்தை அவரிடம் வேண்டுகோள் வைத்தார். பிள்ளைகள் இப்படித் துறவியாக மாறுவது தந்தையின் மனதை வேதனைப்படுத்தக்கூடியது. பிள்ளைகளின் பிரிவைத் தந்தையால் ஏற்றுக் கொள்ளமுடியாது. ஆகவே துறவியாவதற்குத் தந்தையின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற ஒரு விதியை உங்கள் சங்கத்தில் உருவாக்குங்கள் என்றார். மன்னர் சுத்தோதனார் கண்ணோட்டத்தில் அவரது மகன், மனைவி, மருமகன் பேரன் பேத்தி என அனைவரும் பௌத்த துறவியாகிவிட்டார்கள். அது எளிதாக ஏற்றுக்கொள்ள முடிகிற விஷயமா என்ன.

சாரிபுத்தன் மற்றும் மொகல்லானா இருவரும் ராகுலனின் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். இதில் சாரிபுத்தன் ராகுலனுக்குத் தம்மத்தைப் பற்றிய அறிவைக் கற்பித்தார் மொகல்லானா ராகுலனின் நடத்தையினை ஒழுங்குபடுத்தினார்.

ஒவ்வொரு காலையிலும் ராகுலன் எழுந்து கைபிடி நிறைய மண்ணை எடுத்துக் காற்றில் வீசிவிட்டு “இன்று நான் எனது ஆசிரியர்களிடமிருந்து இந்த மணற்துகளைப் போல நிறைய அறிவுரைகளையும் அறிவுறுத்தலையும் பெறுவேன் என்று கூறுவானாம். அந்தக் காட்சி மனதில் தனித்துவமானதாக ஒளிர்கிறது.

ஒரு நாள் புத்தர் ஒரு கண்ணாடியை ராகுலனிடம் காட்டி இது எதற்காகப் பயன்படுகிறது என்று கேட்டார். பிரதிபலிப்பதிற்காக என்று ராகுலன் பதிலளித்தான். அதைக் கேட்ட புத்தர் சொன்னார்: “இதைப்போல், ராகுலா, நீயும் எதையும் சொல்வதற்கு அல்லது செய்வதற்கு முன்பு உனக்குள் பிரதிபலிக்கவும். உனது பேச்சு அல்லது செயல் மற்றவர்களுக்கும் உனக்கும் எவ்வளவு நன்மை அளிக்கும் என்பதை யோசிக்கவும்.

ஒருவேளை உன் செயல் மற்றவர்களுக்கும் நன்மை அளிக்காது என்று நீ உணர்ந்தால் அதைச் சொல்வதிலிருந்தும் செய்வதிலிருந்தும் விலகு

ஒருவேளை அச்செயல் மற்றவர்களுக்கு முழுமையாக நன்மை பயக்கும் என்று உணர்ந்தால் அச் செயலை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும் என்றார்.

அது ராகுலினுக்காகச் சொன்ன பாடம் மட்டுமில்லை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 11, 2021 05:11

March 10, 2021

அன்பான நன்றி

புத்தகக் கண்காட்சி நேற்றோடு நிறைவு பெற்றது. இந்த 14 நாட்களில் எத்தனையோ விதமான வாசகர்களைச் சந்தித்தேன். உரையாடினேன். கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன். ஆசையாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். ஒரு எழுத்தாளன் மீது வாசகர்கள் காட்டும் அன்பை முழுமையாக உணரக்கூடிய தருணமிது.

காலை 11 மணிக்கு தேசாந்திரி அரங்கிற்கு வந்து மாலை ஐந்துமணிக்கு நான் வரும் வரை காத்திருந்த வாசகருக்கு எப்படி நன்றியை வெறும் வார்த்தைகளால் சொல்வது.

என்னிடம் ஒரு கையெழுத்து வாங்குவதற்காக மட்டுமே பெங்களூரில் இருந்து பயணம் செய்து வந்த குடும்பத்தினர் காட்டிய நேசம் உன்னதமானது.

எனது நலனுக்காக திருப்பதிக்குப் போய் வேண்டுதல் செய்து பிரசாதம் கொண்டு வந்த வாசகர் நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இருக்கணும் என்று மனதார வாழ்த்தினார். அது தான் உண்மையான அங்கீகாரம்.

80 வயதான தாத்தா என்னைக் காண வேண்டும் என சொன்னதால் அவரைச் சக்கர நாற்காலியில் உட்கார வைத்து புத்தகக் கண்காட்சிக்கு அழைத்து வந்திருந்தார் அவரது பேத்தி.

அந்த தாத்தா மனம் நிறைந்த அன்போடு எனக்கு ஆசி அளித்தார். அந்த நிமிஷத்தில் கண்கலங்கிப் போனேன்.

நான் படிப்பதற்காக புத்தர் தொடர்பான நூல்களை பரிசாக அளித்த நண்பருக்கும். என்னை அழைத்துக் கொண்டு போய் வேண்டிய புத்தகம் எல்லாம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று பைநிறைய புத்தகங்கள் வாங்கிக் கொடுத்த வாசகிக்கும். என் பெயரை தனது பையனுக்கு வைத்துள்ள இளம் தம்பதிக்கும் தீராத நன்றிகள்.

இப்படி நூறு நூறு மறக்கமுடியாத நினைவுகள். அற்புதமான வாசகர்கள்.

தேசாந்திரி பதிப்பகத்திற்கான உங்கள் ஆதரவுக்கும் அன்பிற்கும் என் மனம் நிரம்பிய நன்றி.

புத்தகக் கண்காட்சியில் உறுதுணை செய்த நண்பர்களுக்கும் ,ஸ்ருதி டிவி கபிலன், சுரேஷ், மணிகண்டன். அகரமுதல்வன், அன்புகரன், சண்முகம், கல்கி, தினமணி, தி இந்து தமிழ், விகடன், மற்றும் அனைத்து பத்திரிக்கை, ஊடக நண்பர்களுக்கும் அன்பும் நன்றியும்.

4 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 10, 2021 02:23

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.