S. Ramakrishnan's Blog, page 138

April 3, 2021

நூல் பேசுவோம்

மஞ்சுநாத் எழுதியுள்ள கர்னலின் நாற்காலி குறித்த சிறிய அறிமுகம்.

***

நூல் பேசுவோம் – கர்னலின் நாற்காலி

பூங்காவிற்குள் நுழைந்தவுடன்  ஊஞ்சலில்  அமர்ந்தாடும் சிறுமியின் மகிழ்ச்சிக்கு ஒப்பீடாக சொல்லியிருக்கலாம்

கை நிறைய கலர் மிட்டாய்கள்  வைத்திருக்கும் சிறுவனின்  கொண்டாட்டத்திற்கு  ஈடாக சொல்லியிருக்கலாம்

ஆபூர்வ வைரக்கற்கள் கண்டடைந்த  பூரிப்பை முகத்தில் காட்டியிருக்கலாம், வியாபாரியாக இருந்திருந்தால்

என்றைக்குமில்லாமல் பாதி பூக்களுடன் திரும்பி செல்லும் பூக்காரம்மாவிற்கு இன்று ஒரே ஒரு மனிதன் முழுவதையும் சொன்ன விலைக்கு பேரம் பேசாமல் வாங்கி கொண்டால், அந்த நிம்மதியான மகிழ்ச்சி போலிருந்தது என்று சொல்லியிருப்பேன் ஒரு வேளை பூ  விற்றுக்கொண்டிருந்தால்

வயதானவர்கள் தங்கள் வாழ்வியல் நினைவலைகளை  காற்றிடம்  மட்டுமே பகிர்ந்து கொள்கிறார்கள். அந்த தனிமையின் வெறுமை சில சமயம்  யாரோ ஒரு தோழமையால்  நிரம்பி விடும்போது நிலவைக் கண்ட குழந்தை போல் குதூகலமாகிறது. நான் முதுமைக்கு செல்லும் போது  சொல்கிறேன்.

பதின்பருவ இளைஞனுக்கு தனது முதல் காதலியின் முதல் பார்வை, முதல் குரல், முதல் ஸ்பரிசம் தந்த இரசயாண வெடிப்பின் தெறிப்பு போலிருந்தது என்று சொல்லலாம்.., ஆனால் நமக்கு கேள்வி ஞானம் மட்டுமே.

இந்த புத்தகம் எனக்குள் ஏற்படுத்திய வர்ணஜாலத்தின் ஓவியத்தை எப்படி உங்களுக்கு காட்டுவது.. ?

ஒரு முறை இமயத்தில் துங்கநாத் மலை ஏறிக் கொண்டிருந்த போது வழி தவறி ஒரு சரிவின் விளிம்பிற்கு வந்து விட்டேன்.

பள்ளத்தாக்கின் முடிவில்லாத ஆழம்  மலையின் பிரமாண்டத்தை உணர்த்தியது. எனது மூச்சுக்காற்று எதிரொலித்தது. அந்த பேரமைதி அதுவரை உணராதது .

அந்த சமயம் எதிரே இருந்த பனிமலை முகட்டில் சூரிய ஒளிகள் பட்டு

ஒரு தங்க ஜுவாலையாக மின்னியது. மனதில் மிகப் பெரிய ஆனந்த தாண்டவம்.

அந்த தனிமை, அமைதி, குளிர்ந்தக்காற்று அனைத்தும் பேரானந்தத்தின் உச்சம். அது வார்த்தைகள் கடந்த அனுபவம்.

வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட எஸ்.ரா வின் இந்த கர்னலின் நாற்காலி  கூட அது போலத்தான்.மகிழ்ச்சிக்கு எந்த ஒப்புவமையை  தர முடியும். மாட்டு வண்டி வாங்கியவன் மகிழ்ச்சியும் விலையுயர்ந்த சொகுசு கார் வாங்கியவன் மகிழ்ச்சியும் ஒரே மாதிரி தான் . அதில்  எந்த வித்தியாசமும் கிடையாது.

தொகுப்பில் மொத்தம் 125 குறுங்கதைகள்.

வாசிப்பின் துவக்கத்தில் ஒவ்வொரு கதைக்கும் சிறு விமர்ச்சனக் குறிப்பு எழுதி வந்தேன். ஒன்றைக் கூட தவிர்க்க முடியாது. 125 கதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். ஆனால் அது புத்தக விமர்சனத்தில்  சாத்தியமில்லை.

இது ஒரு சிறுவனின் கையில் இருக்கும் பூந்தி போன்றது . ஒவ்வொரு பூந்தி துனுக்கின் சுவைப் பற்றி தனித்தனியே  கூறமுடியாது .அதை அப்படியே  அள்ளி முழுவதுமாய் வாயில் போட்டுக்கொண்டால் அதன் சுகமே அலாதிதான்.

ஒரு வாசகன் உள்ளீடற்ற  வேய்ங்குழலாய்  மாற்றிக் கொள்ளும் போது  எஸ் ரா என்கிற  எழுத்தாளனின் உயிர் காற்று பெரும் மாயாஜாலத்தை வாசித்து விடுகிறது.

இன்பம், துன்பம், ஆசை ,நிராசை,  கோபம், தாபம், போராட்டம், புரட்சி,தோல்வி, வெற்றி, ஏக்கம், அரவனைப்பு, புகழ், மாயை, அழுகை, சிரிப்பு, இழப்பு,உணர்வு, உணர்ச்சி, காமம், காதல், திண்டாட்டம்,திகைப்பு,  தெய்வீகம், கலை, கொண்டாட்டம், அமைதி, தியானம்.., என முடிவில்லாத பயணத்தின் திறவுகோலாய் இத்தொகுப்பு இருக்கிறது.

வறுத்த வேர்கடலையின் சுவை ஒரு கொழுப்பு படலமாய் நாவில் ஒட்டிக் கொண்டு அடுத்தடுத்து என வேர்க்கடலையை நோக்கியே நமது கையை நகர்த்தும். ஒவ்வொரு கதையும் அடுத்த கதையின் சுவைக்கு நம்மை இப்படித்தான் நகர்த்துகிறது.

எஸ்.ரா சொல்கிறார் *”புத்தகம் என்பது வாசிப்பவரின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது அதில் எந்த எழுத்தாளனும் தலையிட முடியாது.”* என்று

ஆனால் இந்த புத்தகம் வாசகனை தன் வசமாக்கி கொள்கிறது.

இனி எப்போதும் நீண்ட  பயணங்களில் என்னை  அமர்த்தி  கொள்ள கர்னலின் நாற்காலியை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

நன்றியும் வாழ்த்துகளும்.

அன்புடன்

மஞ்சுநாத்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 03, 2021 20:40

இரவின் சிறுபாடல்

புதிய சிறுகதை

கடைசிப் பஸ்ஸைத் தவறவிட்டிருந்தான் ரகுபதி.

வேலை தேடிச் சுற்றியலைகிறவன் சரியான நேரத்திற்கு வீட்டிற்குப் போய் என்ன ஆகப்போகிறது என்ற அவனது நினைப்பு தான் பேருந்தைத் தவறவிட முக்கியக் காரணம்.

இனி காலை ஐந்தரை மணிக்கு தான் அவனது கிராமத்திற்குச் செல்லும் பேருந்து வரும். அதுவரை இந்தப் பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டியது தான்.

என்ன செய்வது எனத் தெரியவில்லை. நேரத்தை கழிக்க வேண்டும். நெருக்கடியான சூழலில் காலம் நீண்டுபோய்விடக்கூடியது. அன்றைக்கும் அப்படித்தான். இப்போது தான் மணி பத்து பத்து என்று காட்டியது அவனது கைக்கடிகாரம். விடியும் வரை என்ன செய்வது.

பேருந்து நிலையத்தை ஒரு சுற்றுச் சுற்றிவரலாம் என எண்ணி நடந்தான்.

••

அவனது கிராமத்திற்கு ஒரு நாளில் ஆறு முறை டவுன் பஸ் வந்து போனது. அவனது ஊர் தான் கடைசி. வழியில் உள்ள கிராமங்களைச் சுற்றிவந்து அவனது ஊரின் மைதானத்தில் பஸ் நின்றுவிடும். இந்த வசதி கூடப் பத்து வருஷங்களுக்குள் தான் உருவானது. அதன் முன்பு வரை மாட்டுவண்டி, சைக்கிள் அல்லது நடை தான். வசதியான ஒன்றிரண்டு பேர் பைக் வைத்திருந்தார்கள்.

பேருந்து வந்து போக ஆரம்பித்த போதும் பேருந்து நிலையம் என்ற ஒன்று அவனது ஊரில் கிடையாது. மைதானத்திலுள்ள கொடிக்கம்பத்தை ஒட்டி பேருந்தை நிறுத்திவிட்டு டிரைவரும் கண்டக்டரும் பெட்டிக்கடையில் போய் உட்கார்ந்து கொள்வார்கள்.

பள்ளி மாணவர்களின் போக்குவரத்திற்காகவும் மருத்துவமனைக்குப் போய் வருகிறவர்களுக்காகவுமே அந்தப் பேருந்து முதன்மையாக இயக்கபட்டது. அதுவும் சில நாட்கள் வழியில் ரிப்பேராகி நின்றுவிடுவதுண்டு. இரவு ஒன்பது நாற்பதுக்குக் கடைசிப் பஸ். அதைத் தவறவிட்டால் காலை வரை காத்திருக்க வேண்டியது தான்

ரகுபதிக்கு இப்படி நடப்பது ஒன்றும் புதிய விஷயமில்லை. எத்தனையோ முறை இப்படிப் பஸ்ஸை தவறவிட்டுக் காத்திருக்கிறான். சில நாட்கள் யாராவது நண்பர்களைத் தேடிப் போய் அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் உறங்கி எழுந்து காலை ஊருக்குப் போவதுண்டு. இன்றைக்கு யாரையும் தேடிப் போய்ப் பார்த்து உதவி கேட்க மனசில்லாமல் இருந்தது

பேருந்து நிலையத்தின் புத்தகக் கடையை மூடிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கடை அவன் நினைவு தெரிந்த நாள் முதலே இருக்கிறது. வார இதழ்கள். நியூஸ் பேப்பர்கள் அங்கே கிடைக்கும். அந்தக் கடையில் இருப்பவர் எப்போதும் சந்தன நிறத்தில் தான் ஜிப்பா அணிந்திருப்பார். காலையில் நெற்றியில் வைத்த திருநிறு இரவிலும் அழியாமல் இருக்கும். மென்மையான குரலில் பேசுவார்.

அந்தக் கடையை ஒட்டி ஒரு காலத்தில் சிறிய கேண்டியன் ஒன்றிருந்தது. அங்கே நல்ல காபி கிடைக்கும். அதை எப்போதோ மூடிவிட்டார்கள். அந்த இடத்தில் இப்போது ஒரு சலூனும், டீக்கடையும் வந்துவிட்டது. அந்தக் கடைகளை இரவு எட்டு மணிக்கெல்லாம் எடுத்து வைத்துவிடுவார்கள். இரவில் யார் சவரம் செய்யப் போகிறார்கள்.

பழைய லாட்டரி சீட்டுக் கடையை ஒட்டிய ஆவின் ஸ்டால் மட்டும் பத்து மணி வரை திறந்திருக்கும். அந்தக் கடையை நெருங்கும் போதே பால்கவிச்சி அடிக்கும். தரையில் பால் சிந்திய பிசுபிசுப்பு மாறாதிருக்கும்.

அந்தக் கடையில் ஒரு தட்டில் பால்கோவா பாக்கெட்டுகளை அடுக்கி வைத்திருப்பார்கள். எப்போதும் ஒரே போல அந்தப் பாக்கெட்டுகள் வைக்கபட்டிருக்கும். அதை யாரும் வாங்கிப்போகிறார்களா எனத் தெரியாது.

பேருந்து நிலையத்தின் கிழக்குப் பகுதியில் உடைந்து கிடந்த சுவரோடு உள்ளது மூத்திரப்பிறை. அங்கே பெய்யப்படும் மூத்திரம் தாரை தாரையாக வழிந்து பேருந்து நிலையத்தில் ஒடிக்கொண்டிருக்கும். மூக்கைப்பிடித்துக் கொண்டு கடந்து போவார்களே அன்றி ஒருவரும் புகார் செய்யமாட்டார்கள். சிலர் அவரசமாக நடந்தபடியே மூத்திரம் பெய்வதைக் கண்டிருக்கிறான்.

பேருந்து நிலையத்தினுள்  ஒரேயொரு வேப்பமரம் நின்றிந்தது. எப்படி அந்த வேப்பமரத்தை விட்டு வைத்திருக்கிறார்கள் என்று ரகுபதி யோசித்திருக்கிறான். பெரும்பாலும் கிராமவாசிகள் தான் அந்த மரத்தடியில் உட்கார்ந்திருப்பார்கள். நகரவாசிகளில் ஒருவரும் பேருந்து நிலையத்தின் தரையில் உட்கார்ந்து அவன் கண்டதில்லை. அந்த வேப்பமரம் மூத்திரம் குடித்து வளர்ந்ததால் தானோ என்னவோ அதன் காற்று கூட நாற்றமடிக்கும்.

வெளியூர் பேருந்துகள் வந்து நிற்பதற்கு மேற்கில் வரிசையாகத் தளம் அமைத்திருந்தார்கள். காலியாக நிற்கும் பேருந்துகளில் ஏறி விளையாடுவது சிறார்களுக்குப் பிடித்தமானது. அவன் சிறுவயதில் அப்படி விளையாடியிருக்கிறான்.

பங்குனித் திருவிழா நாட்களில் தான் அந்தப் பேருந்து நிலையம் புதிய அழகு கொள்ளும். அன்றைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருப்பார்கள். பேருந்து நிலையத்தினுள் வண்ண விளக்குகள் அமைத்திருப்பார்கள். பலூன் வியாபாரிகள். கொட்டு அடிப்பவர்கள். அக்னிச் சட்டி ஏந்திய பெண்கள். குரங்காட்டி. பாம்பாட்டி, சவுக்கால் அடித்துக் கொள்பவன் என விசித்திரமான ஆட்கள். விடிய விடிய பொருட்காட்சி பார்த்துவிட்டு வந்து அலுப்போடும் பேருந்து நிலையத்தில் உறங்கும் குடும்பம் என விநோத காட்சியாக இருக்கும்.

••

இன்றைய இரவில் பேருந்து நிலையம் தன் நீண்டகால அசதியில் தூங்கி வழிவது போலப்பட்டது. மனிதர்களைப் போலவே இடங்களுக்கும் முதுமை ஏற்படவே செய்கிறது. பார்த்துப் பழகிய இடங்களைப் போலச் சலிப்பு தருவது வேறு எதுவுமில்லை. அன்றாடம் பேருந்து நிலையத்திற்கு வந்து போகிறவர்களுக்குப் பேருந்து நிலையத்தின் வாசலில் பூ விற்கும் பெண் கண்ணில் படுவதேயில்லை. அவர்கள் பார்வை முழுவதும் ஏற வேண்டிய பேருந்தின் மீது மட்டுமேயிருக்கும்.

அந்தப் பேருந்து நிலையம் கட்டி ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் என்றார்கள். பஸ் ஸ்டாண்ட் பிள்ளையார் கோவிலை ஒட்டி சிறிய கல்வெட்டு இருக்கிறது. அதை யார் படிக்கப்போகிறார்கள். இரவில் எல்லாப் பேருந்து நிலையங்களும் ஒன்று போலவே இருக்கின்றன. மனிதர்கள் வடியத்துவங்கிவிட்ட பேருந்து நிலையங்களுக்கு கிழட்டு நோயாளி போன்ற தோற்றம் வந்துவிடுகிறது. ரகுபதி அதை உணர்ந்திருக்கிறான்.

பேருந்து நிலையத்தின் மேற்கில் ஒரு சைக்கிள் மற்றும் பைக் ஸ்டாண்ட் இருந்தது. அது ஒன்று தான் இரவிலும் இயங்கிக் கொண்டிருக்கும். யாராவது செகண்ட் ஷோ சினிமா விட்டு கூடச் சைக்கிளை எடுக்க வந்து நிற்பார்கள். சிவப்பு நிற பனியன் அணிந்த ஒரு ஆள் தான் எப்போதும் ஸ்டாண்டில் இருக்கிறார். அவரது கழுத்தில் எம்ஜிர் படம் போட்ட டாலர் தொங்கிக் கொண்டிருக்கும். சைக்கிளை வரிசையாக அடுக்கி வைப்பதில் அவர் கில்லாடி. ஒரு சைக்கிள் கூட முன்பின்னாக நிற்காது. அத்தனை ஒழுங்காக அடுக்கி வைத்திருப்பார்.

பேருந்து நிலையத்தின் நுழைவாயிலை ஒட்டி வடை, போண்டா, அதிசரம், சமோசா விற்பவர்கள் கடையிருக்கும். அங்கே பகலில் சிறிய அடுப்பில் எப்போதும் வடையோ, பஜ்ஜியோ வெந்து கொண்டிருப்பது வழக்கம். அந்தக் கடைகளில் நல்ல கூட்டமிருக்கும். அதுவும் வெளியேறும் வாசலை ஒட்டிய தள்ளுவண்டிக்கடையில் எப்போதும் ஆட்கள் நின்று எதையாவது சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். பேருந்து நிலையத்தினுள் விற்கபடும் உணவு ஏனோ ருசியற்றுப் போய்விடுகிறது. அது பசிக்கான உணவு. அதுவும் அவசரமான பசிக்கானது

பேருந்து நிலையத்தின் இரண்டு வாசலை ஒட்டியும் இரண்டு சினிமாத் தியேட்டர்கள். யார் இந்த ஏற்பாட்டினை செய்தது எனத் தெரியவில்லை. ஆனால் பெரும்பான்மை ஊர்களில் பேருந்து நிலையத்தின் அருகில் தான் சினிமா தியேட்டர்கள் இருக்கின்றன. புதுப்படம் ரீலிஸ் ஆகும் நாட்களில் பேருந்திலிருந்து இறங்கி அப்படியே தியேட்டரை நோக்கி ஒடுவார்கள்.

சினிமா தியேட்டரின் வடபுறத்தை ஒட்டி இரண்டு பரோட்டா கடைகள். ஒரு உரக்கடை. ஒரு மருந்துக்கடை, மாத தவணையில் பொருட்கள் விற்கும் பர்னிச்சர் கடை. அதை ஒட்டி ஒரு எலக்ட்ரிக்கல் கடை. இது போலவே தென்புறத்தை ஒட்டிச் சேவு மிக்சர் விற்கும் மிட்டாய்கடைகள். சைவ உணவகம், இரண்டு பெட்டிக்கடைகள். சைக்கிள் வாடகைக்கு விடும் கடை. வரிசையாகப் பூக்கடைகள். முனியாண்டி விலாஸ் ஹோட்டல். முன்பு அதன் எதிரில் நிறைய ரிக்சாக்கள் இருந்தன. இப்போது ஒரு ரிக்சா கூட கிடையாது. ஆட்டோ ஸ்டாண்ட் தியேட்டரை ஒட்டியிருந்தது. பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் விநோதமான ஒரு வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. அதில் எத்தனையோ மனிதர்கள். எத்தனையோ விதமான வணிகங்கள்.

பேருந்து நிலையத்தினுள் விசித்திரமான குரல்களைக் கேட்கலாம். குறிப்பாக அலுமினியத் தட்டில் சமோசா வைத்துக் கொண்டு விற்பவனின் குரலைப் போன்ற ஒன்றை வேறு எங்கும் இதுவரை கேட்டதேயில்லை. இது போலவே பூவிற்கும் சிறுமியின் குரல். அது ஒரு வேண்டுதல் போலவே ஒலிக்கும். கண்தெரியாத பிச்சைக்காரன் பாடும் பாடல், கண்டக்டர்களின் அழைப்பொலி என விசித்திரமான குரல்கள்.

சிலநாட்கள் பேருந்து நிலையத்திற்குள் யானையை அழைத்துக் கொண்டு வந்துவிடுவார்கள். யானை பேருந்தினுள் தும்பிக்கையை நுழைத்துக் காசு கேட்கும். யானை நுழைந்தவுடன் பேருந்து நிலையத்தின் இயல்பு மாறிவிடுகிறது. யானை பேருந்தின் டிரைவர்களை ஆசிர்வாதம் செய்யும். பிள்ளையார் கோவிலில் யானைக்கு வாழைப்பழம் கொடுப்பார்கள். சில நேரம் யானைப்பாகன் ஆவின் கடையில் ஒசியில் தரப்படும் பாலை சூடு ஆற்றி மெதுவாகக் குடிப்பான். அதுவரை யானை பேருந்து நிலையத்தை வேடிக்கை பார்த்தபடியே நின்றிருக்கும்.

இந்த இரவில் ரகுபதி அந்த யானையை நினைத்துக் கொண்டான். அந்த நகரில் ஒரேயொரு யானை மட்டுமே இருந்தது. அதுவும் கோவில்யானை. மனிதர்களைப் போலத் தன் தனிமையைப் பற்றி யானை நினைக்குமா என்ன.

பேருந்து நிலையத்தினை ஒட்டியிருந்த பிள்ளையார் புழுதியும், தூசியும் அப்பியிருந்தார். அதிகாலை நகரப்பேருந்துகள் கிளம்பும் முன்பு அந்தப் பிள்ளையாரைத் தான் கண்டக்டர்கள். டிரைவர்கள் வணங்குகிறார்கள். பேருந்து நிலையத்தில் காணப்படும் குப்பைகளைத் தினமும் அள்ளிக் கொண்டுபோவதில்லை. சுத்தமான பேருந்து நிலையம் என ஒன்றை அவன் தன் வாழ்நாளில் கண்டதில்லை.

பேருந்து நிலையத்திற்கென்ற சில நாய்கள் இருக்கின்றன. அவை இரவிலும் வெளியேறிப் போவதில்லை. அவை பேருந்தின் டயர்களுக்கு நடுவே உலவுவதுண்டு. பேருந்து நிழலில் உறங்குவதும் உண்டு.

கடைகள் அடைத்து சாத்திவிட்ட பேருந்து நிலையத்தில் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது என ரகுபதிக்கு எரிச்சலாக வந்தது

••

பரோட்டா கடையின் வாசலில் உள்ள பெஞ்சில் இருவர் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். பேசாமல் செகண்ட் ஷோ சினிமாவிற்குப் போய்விடலாம் என்று தோன்றியது. இரண்டு தியேட்டரில் ஒடும் படங்களும் அவன் பார்த்தது தான். ஆனால் நேரத்தைக் கொல்வதற்காக ஏதாவது ஒரு படத்திற்குப் போய்த் தான் ஆக வேண்டும்.

இரவுக்காட்சி பத்தரை மணிக்குத் துவங்குவார்கள் என்றாலும் பதினோறு மணி வரை டிக்கெட் கொடுப்பார்கள். அவன் தியேட்டருக்குள் போன போது படம் துவங்கியிருந்தது. இருட்டிற்குள்ளாக ஒரு இருக்கையைத் தேடி அமர்ந்தான். தியேட்டரில் கூட்டமேயில்லை. பேசாமல் கண்களை மூடிக் கொண்டு தூங்கிவிடலாமா என்று யோசித்தான். அப்படி முயன்றபோது படம் ஒடும் சப்தம் தொந்தரவாக இருந்தது.

சரி படத்தைப் பார்க்கலாம் எனக் கொஞ்ச நேரம் படம் பார்த்தான். படத்தோடு ஒட்டவே முடியவில்லை. எழுந்து திறந்து கிடந்த கதவைத் தாண்டி வெளிக்காற்றை நுகர்ந்தபடியே நின்றிருந்தான். அவன் சிகரெட் புகைக்க நிற்கிறான் என்பது போல ஒருவர் அருகில் வந்து அவனிடம் தீப்பெட்டி கேட்டார். அவன் தன்னிடமில்லை என்றான். அவர் தீப்பெட்டி கேட்பதற்காக வாட்ச்மேனைத் தேடி நடந்தார்.

என்ன செய்தாலும் நேரம் போகவேயில்லை. இடைவேளையின் போது தெரிந்த முகம் ஏதாவது தென்படுகிறதா என்று பார்த்தான். ஒருவருமில்லை. அப்படியே வெளியே போய்விடலாமா என்று நினைத்தான். பேருந்து நிலையத்தில் காத்திருப்பதை விடவும் இது மோசமான விஷயமில்லை என்று தோன்றியது. படம் போட்டபிறகு மெதுவாக உள்ளே நடந்து போனான்.

செகண்ட் ஷோ விட்டு வெளியே வந்தபோது. பரோட்டா கடைகளும் மூடியிருந்தன. பேருந்து நிலையத்தினை ஒட்டிய சாலையில் நடமாட்டமேயில்லை

விட்டுவிட்டு மினுக்கும் டியூப் லைட் வெளிச்சத்தில் பேருந்து நிலையம் ஒடுங்கியிருந்தது. அவனைப் போலப் பேருந்தை தவறவிட்ட சிலர் மட்டுமே தென்பட்டார்கள். பேருந்து நிலையத்தின் இருட்டும் கூடக் கலங்கியே இருந்தது. தூக்கம் அப்பிய முகத்துடன் ஒருவர் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தார். அவரது அருகில் துணிப்பை ஒன்று காணப்பட்டது.

எங்கோ கோவிலுக்குப் போய்விட்டு திரும்பிய ஒரு குடும்பம் சேலையை விரித்துப் படுத்திருந்தது. சந்தனம் உலர்ந்த மொட்டை தலையுடன் ஒரு ஆள் உறங்கிக் கொண்டிருப்பதை வியப்பாகக் கண்டான் ரகுபதி.

இரண்டு போலீஸ்காரர்கள் கையில் டார்ச் லைட்டுடன் சைக்கிளை உருட்டிக் கொண்டு பேருந்து நிலையத்தினுள் வந்தார்கள். அங்கே இருந்தவர்கள் ஒவ்வொருவராக அழைத்து விசாரித்தார்கள். ரகுபதி தனது சினிமா டிக்கெட்டினைக் காட்டினான். வேறு எதையும் அவர்கள் கேட்டுக் கொள்ளவில்லை.

பேருந்து நிலையத்தில் வசிக்கும் பிச்சைக்காரன் ஆவின் பூத்தை ஒட்டிய குழாயடியில் குளித்துக் கொண்டிருந்தான். தண்ணீர் ஒடும் சப்தம் தெளிவாகக் கேட்டது.

ரகுபதி காலியாகக் கிடந்த ஒரு பெஞ்சில் போய் உட்கார்ந்து கொண்டான். அப்போது மணிக்கூண்டினை ஒட்டி ஒரு குடும்பம் நியூஸ் பேப்பரைத் தரையில் விரித்துப் படுத்துக்கிடப்பதை கண்டான். அதுவும் ஒரு பெண்ணின் கொலுசு கண்ணில் பட்டவே கூர்ந்து கவனித்தான். இளம்பச்சை நிற சேலை கட்டிய பெண் சுருண்டு உறங்கிக் கொண்டிருந்தாள். அருகில் அவளது கணவன் காலை அகலமாக விரித்துத் தன்னை மறந்து உறங்கியிருந்தான். அவனை ஒட்டி ஆறு வயது பையன். நடுவில் இரண்டு கட்டைபைகள். ஒரு லெதர்பேக். அந்தப் பெண்ணின் சேலை விலகி அவளது கெண்டைக்கால் சதையும் அணிந்திருந்த கொலுசும் தெரிந்தன. எங்கோ நீண்ட தூரம் பயணம் போய்விட்டு வருகிறவர்களா இருக்கக் கூடும். அதனால் தான் இப்படி ஆழ்ந்து தூங்குகிறார்கள்.

உறங்கும் பெண்ணை அவதானிப்பது சந்தோஷம் அளிப்பதாக இருந்தது. அதிகாலை நேரத்தில் பேருந்து நிலையத்தினுள் ஈரத்தலையுடன் நெற்றியில் சந்தனம் துலங்க வரும் இளம்பெண்களைக் கண்டிருக்கிறான். அவர்கள் முகத்தைப் பார்த்தால் போதும் அந்த நாளே மகிழ்ச்சியுடையதாக இருக்கும். அந்தப் பெண் தூங்கத்திலே தன்னை உணர்ந்தவள் போலக் கால்களில் விலகிய புடவையைச் சரிசெய்து கொண்டாள். ரகுபதி தலையே வேறு பக்கம் திருப்புவது போல நடித்தான்.

பேருந்து நிலையத்திலிருந்து வானத்தைப் பார்ப்பது அன்று தான் முதன்முறை. பேருந்து நிலையத்திற்குள்ளும் வானம் தெரியுமா என வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான். அவனைப் போலவே வழி தவறிப்போன ஒற்றை நட்சத்திரம் தனியே மினுங்கிக் கொண்டிருந்தது. கலங்கிய மேகங்களுக்குள் நிலவு மறைந்திருந்தது.

கையிலிருந்த கடிகாரத்தில் மணியைப் பார்த்தான். இரண்டு நாற்பது. இன்னும் விடிவதற்கு நேரமிருக்கிறது. என்ன செய்வது. எப்படி நேரத்தை கடத்துவது என்று புரியவில்லை. தூக்கம் அவனையும் அழுத்த ஆரம்பித்தது. சைக்கிளில் டீக் கொண்டு வருகிறன் தென்படுகிறானா எனப் பார்க்க வெளிவாசல் வரை நடந்து வந்தான். தெருவிளக்கும் அணைந்து போய்ச் சாலை தெரியாத இருட்டு.

அவன் திரும்பி வந்தபோது அந்தப் பெண் உறக்கம் கலைந்தவள் போல எழுந்து உட்கார்ந்திருந்தாள். பெஞ்சில் அமர்ந்தபோது அவளது முகம் தெளிவாகத் தெரிந்தது. வெண்கலச்சிற்பம் போன்ற உடல். இருபத்தைந்து வயதிற்குள் தானிருக்கும். வட்டமான முகம். காதில் சிறிய கம்மல். கையில் கண்ணாடி வளையல்கள். தூக்கம் கலையாத முகம் என்றாலும் தனி வசீகரமிருந்தது. தான் அவளைப் பார்க்கிறோம் என்பதை அறிந்து கொண்டவளைப் போல அவள் புடவையைச் சரிசெய்து கொண்டாள். மறுபடியும் படுத்துக் கொண்டுவிடுவாள் என்று ரகுபதிக்கு தோன்றியது. ஆனால் அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். ரகுபதி மெலிதாகச் சிரித்தான். அவள் அதைக் கண்டுகொண்டவளாகத் தெரியவில்லை

சைக்கிளில் டீ கொண்டுவருகிறவன் பேருந்து நிலையத்தினுள் வரும் சப்தம் கேட்டது. அவன் ரகுபதி அருகே சைக்கிளை நிறுத்தி டீ வேண்டுமா எனக்கேட்டான். ரகுபதி தலையசைக்கவே அவன் டீயை கேனிலிருந்து பிடித்துக் கொடுத்தான்

அந்தப் பெண் டீக்குடிக்க விரும்புகிறவள் போல அங்கிருந்தபடியே “டீ எவ்வளவு“ என்று கேட்டாள்

எட்டு ரூபாய் என்றான் டீவிற்பவன். அவள் துணிப்பைக்குள் காசை துழாவினாள். கணவனின் பேண்ட் பாக்கெட்டில் அவன் பர்ஸ் இருப்பதை அறிந்தவளாக அதை எப்படி எடுப்பது எனப் புரியாமல் அமர்ந்திருந்தாள். அவளுக்கு டீக்குடிக்க வேண்டும் போலிருந்தது. வேறு எங்காவது காசு இருக்கிறதா எனப் பார்க்க அவள் உறங்கும் பையன் டவுசர் பையில் கூடத் தேடினாள்.

ரகுபதி சப்தமாகக் கேட்டான்

“டீ வேணுங்களா“

அவள் வேண்டும் என்று தலையாட்டினாள்

டீ விற்பவன் அவளுக்கும் ஒரு டீ கொண்டு போய்க் கொடுத்தான். ரகுபதி இரண்டு டீக்குமான காசை அவனிடம் கொடுத்தான்.

அவள் டீயைக் கையில் வாங்கிக் கொண்டு ஊதி ஊதி குடித்தாள்.

டீவிற்பவன் சைக்கிளை உருட்டிக் கொண்டு வெளியேறிப் போனான். டீக்கோப்பையின் கடைசிச் சொட்டுவரை ரகுபதி குடித்தான். அவளும் டீயை ரசித்துக் குடித்தபடியே இருப்பதைக் கண்டான்

பிறகு அவள் டீ குடித்த காலி பேப்பர் கப்பை நசுக்கி வீசி எறிந்தாள். அவளைப் போலவே ரகுபதியும் செய்தான். இனி தூக்கம் வராது என்பவள் போல அவள் எழுந்து சோம்பல் முறித்துக் கொண்டாள்

அவளிடம் ஏதாவது பேசலாமா. என்ன பேசுவது எனப் புரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் மறுபடியும் தன் கணவன் படுத்திருந்த இடத்தருகே வந்து உட்கார்ந்து கொண்டாள்.

“எந்த ஊருக்கு போகணும் “என்று ரகுபதி சப்தமாகக் கேட்டான்

அவள் பதில் சொல்லவில்லை. மாறாகச் சிரிப்பது கேட்டது

எதற்காகச் சிரிக்கிறாள். தன்னைக் கேலி செய்கிறாளா. ரகுபதி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் விரல்களை மடக்கி ஏதோ விளையாடிக் கொண்டிருந்தாள். பிறகு மெல்லிய குரலில் கண்ணன் வருவான். கதை சொல்லுவான் என்ற பாடலை அவள் முணுமுணுக்கத் துவங்கினாள். அந்தப் பாடலை எத்தனையோ முறை ரேடியோவில் கேட்டிருக்கிறான். ஆனால் இந்த இரவில் அவள் பாடும்போது பாடலின் வழியே பிரகாசமான வெளிச்சம் ஒளிர்வதாக உணர்ந்தான். பாடலின் நாலைந்து அடிகள் பாடியிருப்பாள். பிறகு பாட்டைத் தனக்குள்ளாகவே அடக்கிக் கொண்டு அவள் படுத்துக் கொண்டாள்

என்ன விளையாட்டு இது. இந்தப் பாடல் தனக்கானது தானா. ஏன் இந்த இரவில் இந்தப் பாடலை பாடினாள். எழுந்து அவள் அருகில் போனால் என்னவென்று தோன்றியது. ஆனால் தைரியம் வரவில்லை. அவள் தன் கால்களை அசைத்துக் கொண்டிருந்தாள். ஒருவேளை மனதிற்குள் மீதப்பாடலை பாடிக் கொண்டிருக்கிறாளோ என்னவோ

அவளின் நாடகத்தை ரசித்தபடியே ரகுபதி அமர்ந்திருந்தான். ரோந்து சுற்றும் போலீஸார் திரும்பவும் வந்தார்கள். தொலைவில் அவர்களைக் கண்டதும் சிமெண்ட் பெஞ்சில் ரகுபதி படுத்துக் கொண்டான். அவர்கள் யாரையும் விசாரிக்கவில்லை. வீடு திரும்பும் சோர்வில் நடந்து கொண்டிருந்தார்கள்

அவர்கள் போனபிறகு அந்தப் பெண்ணைக் காணுவதற்காக எழுந்து உட்கார்ந்து கொண்டான். அவள் வேண்டுமென்றே தன் முகம் தெரியாமல் சேலையால் மூடிக் கொண்டாள். தனக்கும் அவளுக்குமான ஒரு அடி இடைவெளி ஏதோ கடக்க முடியாத தூரம் போல உணரச் செய்தது.

அவள் நடிக்கிறாள். உறங்குவது போல நடிக்கிறாள். இது ஒரு விளையாட்டு. தன்னிடமிருந்து தப்பிக்கும் விளையாட்டு. தன் மீது கோபம் கொண்டிருந்தால் இப்படி நடந்து கொள்ள மாட்டாள். அவன் பார்வையிலிருந்து தன்னை மறைத்துக் கொள்ள ஆசைப்பட்டவள் போல ஒரு பையை எடுத்து முன்னால் வைத்துக் கொண்டாள். இப்போது அவள் முகம் தெரியவில்லை.

திடீரென நேரம் வேகமாக ஒடிவிட்டது போலிருந்தது. பால்கொண்டுவருகிற ஆளின் மணிச்சப்தமும் அதைத் தொடர்ந்து முதல்பேருந்தின் வெளிச்சமும் பேருந்து நிலையத்தை விழிக்க வைத்தது. அந்தப் பெண்ணின் கணவன் எழுந்து தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரைக் கையில் ஊற்றி முகம் கழுவி கொண்டிருந்தான். அந்தப் பெண் பையிலிருந்து துண்டு ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்தாள். ஒன்றின் பின் ஒன்றாகப் பேருந்துகள் வரத் துவங்கியிருந்தன. அந்த வெளிச்சம் பேருந்து நிலையத்தைத் துயில் எழுப்பிக் கொண்டிருந்தது.

அந்தக் கணவனும் குழந்தையும் அந்தப் பெண்ணும் தங்கள் பொருட்களை எடுத்துக் கொண்டு ஒரு பேருந்தை நோக்கிப் போவதைக் கண்டான். தானும் அந்தப் பேருந்தில் ஏறி அவர்கள் போகிற ஊருக்கே போய்வரலாமா என்று தோன்றியது. ஆனால் அவன் அசைவற்று அவர்கள் போவதை பார்த்துக் கொண்டிருந்தான்

காலியாக இருந்த பேருந்தில் அவர்கள் ஏறி அமர்ந்து கொண்டார்கள். அந்தப் பெண் அவனைப் பார்ப்பது போலவே அமர்ந்திருந்தாள். அவள் தன்னிடம் ஏதோ சொல்கிறாள். மௌனமான உரையாடலது. பேருந்து கிளம்பும் போது அவள் திரும்பி பார்ப்பாள் என்று தோன்றியது. ஆனால் அவள் திரும்பவில்லை. பேருந்து வெளிவாசலைத் தாண்டிப் போனபிறகு ரகுபதி எழுந்து கொண்டான். தூக்கமில்லாத அலுப்பும் கசகசப்பும் எப்போது தன் ஊருக்கு போகும் பேருந்து வரும் என எரிச்சலை ஏற்படுத்தியது.

அவனது ஊருக்குச் செல்லும் பேருந்து வந்து அதில் ஏறிக் கொண்டபோது பேருந்து நிலையம் உயிர்பெறத் துவங்கியிருந்தது. யாரும் காணாமல் இரவில் பூக்கும் சில மலர்கள் இருப்பதாக அவன் கேள்விப்பட்டிருக்கிறான். அப்படியான ஒரு பூ தான் இந்த இரவில் மலர்ந்ததோ என நினைத்தபடியே கண்களை மூடிக் கொண்டான். நினைவில் அந்தப் பெண் பாடிய பாடல் மெதுவாகக் கேட்கத் துவங்கியது.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 03, 2021 07:01

April 2, 2021

சுழலும் பார்வைகள்-1

மராத்தி எழுத்தாளர் சரண்குமார் லிம்பாலேவிற்கு 2020ற்கான சரஸ்வதி சம்மான் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது டாடா நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்டது. பதினைந்து லட்ச ரூபாய் விருதுத் தொகை தருகிறார்கள். லிம்பாலே மராத்தியின் முக்கிய தலித் எழுத்தாளர். அவரது நான்கு நூல்கள் தமிழில் வெளியாகியுள்ளன. அவருக்கு எனது மனம் நிரம்பிய வாழ்த்துகள்

தமிழ் இலக்கிய உலகிலிருந்து இந்த விருதினை இந்திரா பார்த்தசாரதி மற்றும் பேராசிரியர் மணவாளன் இருவரும் பெற்றுள்ளார்கள்.

••

எழுத்தாளர் உம்பர்த்தோ ஈகோவின் நூலகம் என்றொரு வீடியோவைப் பார்த்தேன். அரிய நூல்களைத் தேடித்தேடிச் சேகரித்தவர் உம்பர்த்தோ ஈகோ என்ற அறிவேன். ஆனால் அவரது சொந்த நூலகம் இத்தனை பெரியது என்பது வியப்பளிக்கிறது. ஒரு நூலகத்தினுள் தான் அவர் வசிக்கிறாரோ எனும்படியாக மனிதர் நடந்து போய்க் கொண்டேயிருக்கிறார். வீடு முழுவதும் புத்தகங்கள். இத்தனை அறைகள் முழுவதும் புத்தகங்கள் கொண்ட ஒரு வீட்டினை நாம் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது. தான் விரும்பிய ஒரு புத்தகத்தை அவர் தேடி எடுத்து வரும் இந்த வீடியோவில் ஈகோவின் பரந்து பட்ட வாசிப்பும் மேதமையும் எங்கிருந்து உருவானது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

••

The Tale of the Horse:Yashaswini Chandra என்ற யஜஸ்வினி சந்திரா புத்தகம் இந்திய வரலாற்றில் குதிரையின் பங்கினை விரிவாக ஆவணப்படுத்தியுள்ளது. குதிரையைப் பற்றிய சிற்பங்கள். ஓவியங்கள் கதைகள். போர் களத்தில் குதிரைகளின் பங்கு, குதிரைகளைப் பற்றிய கதைப்பாடல் வரை பல்வேறு தளங்களில் இந்த நூலில் குதிரையின் வழியே இந்திய சரித்திரம் மீள்பார்வைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது

••

பதினைந்தாம் நூற்றாண்டில் மால்வாவின் ஆட்சியாளராக இருந்த ஹர்சுனிட் கியாத் ஷா ஒரு கலாரசிகன். அவரது ஆட்சியின் போது இசை, நடனம் மற்றும் ஓவியம் செழித்து வளர்ந்தது, கியாத் ஷா ஒரு சாப்பாட்டுப் பிரியர். விதவிதமான உணவு வகைகளை ருசிப்பதில் தீவிர அக்கறை காட்டியவர் அவர் தனக்குப் பிடித்தமான உணவுவகைகள் பற்றி ஒரு சமையல் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார். சிறந்த ஓவியங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சமையல் புத்தகத்தின் பெயர் நிமட்னாமா(Nimatnama)

நிமட்னாமா உருது மற்றும் ஃபார்ஸியில் எழுதப்பட்டுள்ளது. இதில் 50 அற்புதமான நுண்ணோவியங்கள் இடம்பெற்றுள்ளன. பல்வேறு உணவு வகைகளின் சிறப்புகளை விளக்குவதுடன் அதன் செய்முறை விளக்கமும் இடம்பெற்றுள்ளது.

500 ஆண்டுகளுக்கு முன்பு பிரபலமாக இருந்த அன்றாட உணவுவகைகளைப் பற்றிச் சொல்கிறது நிமட்னாமா. இதில் வடை சமோசா, அல்வா வகைகள் மற்றும் சிற்றுண்டிகள் அந்த நாட்களில் எவ்வளவு புகழ்பெற்றிருந்த என்பதையும் இன்று ராஜஸ்தானில் விரும்பி குடிக்கப்படும் லஸ்ஸியின் பல்வேறு வகைகள் பற்றியும் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிமட்னாமாவின் வழியாக இந்த உணவு வகைகள் கால மாற்றத்தில் எப்படி மாறியிருக்கிறது என்ற வரலாற்றையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. சமோசா எப்படி அறிமுகமானது என்பதோடு பல்வேறுவகையான சமோசா வகைகளைப் பற்றியும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது இன்று பிரபலமாக உள்ள நான் பூரி சப்பாத்தி ரொட்டி யாவும் நிமட்னாமாவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆனால் இதில் பரோட்டா கிடையாது. அது பிற்காலத்தில் உருவாகியிருக்கக்கூடும். அது போலவே உருளைக்கிழங்கு பற்றியும் ஒரு குறிப்பும் கிடையாது. பதினேழாம் நூற்றாண்டுக்குப் பிறகே இந்தியாவில் உருளைக்கிழங்கு அறிமுகமாகி புகழ்பெறத்துவங்கியது. தக்காளி. முந்திரிப்பருப்பு. மிளகாய். கொய்யாப்பழம், பப்பாளிப்பழம், அன்னாசிப்பழம் போன்றவை இதன் பிறகே இந்தியாவில் அறிமுகமாகின.

அன்று கிச்சடி புகழ்பெற்ற உணவாக இருந்திருக்கிறது. விதவிதமான கிச்சடி பற்றிக் குறிப்புகள் உள்ளன. ஆனால் இதில் புலாவ் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

பாரசீக உணவு வகைகளிலிருந்து சூப். கபாப், பிரியாணி போன்றவை எப்படி உருவாக்கப்பட்டன என்பதையும் இதில் அறிந்து கொள்ள முடிகிறது.

மன்னர் எளிமையான உணவு சாப்பிட ஆசைப்படுகிறார் என்றால் அவருக்கா உருவாக்கப்பட்ட அரிசிக் கஞ்சி சோளக்கஞ்சி பற்றியும் குறிப்பிடும் இந்நூல் பயணத்திலும் வேட்டையின் போதும் என்ன உணவு வகைகள் தயாரிக்கப்பட வேண்டும் எதை விலக்க வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது. இதில் மான்கறியைக் கொண்டு சமோசா எப்படித் தயாரிப்பது என்ற குறிப்புக் காணப்படுகிறது.

இந்தப் புத்தகம் கரப்பான் பூச்சிகளின் அரசனுக்குத் தான் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது கரப்பான்பூச்சிகளின் அரசனுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்ட ஏட்டினை கரப்பான்பூச்சிகள் அரிக்காது என்றொரு நம்பிக்கை அந்தக் காலத்தில் இருந்தது. அதுவே இந்தச் சமர்ப்பணத்திற்கான காரணம்.

இன்று இந்த நூலின் பிரதி லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது

**

பிரபல கவிஞர் டிலான் தாமஸ் பற்றிய திரைப்படம் Set Fire to the Stars. இது அவரது கவிதை ஒன்றின் வரியே. இந்தப் படத்தில் போதையின் உச்சத்திலிருக்கும் டிலான் தாமஸைக் கவிதை வாசிக்கத் தயார்ப்படுத்துகிறார்கள். அவரால் எழுந்து நிற்கமுடியவில்லை. தடுமாறுகிறார். மேடைக்குப் போக முடியவில்லை. எப்படியோ சமாளித்து மைக் முன்னால் போய் நிற்கிறார். கூட்டம் ஆரவாரம் செய்கிறது. அவர் தனது கவிதையை வாசிக்க ஆரம்பிக்கிறார். மறுநிமிடம் சபை நிசப்தமாகிறது. டிலான் தாமஸ் தன்னை மறந்து கவிதை பாடுகிறார். போதையின் சுவடேயில்லை. நீருற்று போலக் கவிதை பொங்கி எழுகிறது.

டிலான் தாமஸின் அமெரிக்கச் சுற்றுப்பயணத்தினைப் படம் விவரிக்கிறது. படம் முழுவதும் டிலான் தாமஸ் குடித்துக் கொண்டேயிருக்கிறார். அவரை வைத்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்கிறவர் பாவம். தாமஸைச் சமாளிக்க முடியாமல் தடுமாறிப்போகிறார். “you’re scared of your talent என்ற ஒரு காட்சியில் பிரின்னின் தாமஸிடம் சொல்கிறார். அது உண்மைதானோ எனும்படியாக படம் முழுவதும் தாமஸ் நடந்து கொள்கிறார்

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 02, 2021 21:42

April 1, 2021

இந்திய இலக்கியத்தின் முகம்

.ரஷ்ய இலக்கியங்களையும் உலகின் சிறந்த படைப்புகளையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வரும் நீங்கள் ஏன் இந்திய இலக்கியங்களை அறிமுகம் செய்யவில்லை என்று நர்மதா என்ற இளம் வாசகி மின்னஞ்சலில் கேட்டிருந்தார்.

நேஷனல் புக் டிரஸ்ட் மற்றும் சாகித்ய அகாதமி மூலம் நிறைய இந்திய நாவல்கள், சிறுகதைகள் மொழியாக்கம் செய்யப்பட்டு மலிவு விலையில் வெளியிடப்பட்டுள்ளன. இதில் மிகச்சிறந்த சில நாவல்களுக்கு ஒரு விமர்சனம் கூட வெளியானதில்லை என்பது வருத்தமான விஷயமே

என் கல்லூரி நாட்களில் எந்த எழுத்தாளரைச் சந்திக்கச் சென்றாலும் வங்க நாவல் குறித்தோ, நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்ட புத்தகங்கள் பற்றியே விசாரிப்பார்கள். விவாதிப்பார்கள். குறிப்பாக அக்னி நதி, ஆரோக்கிய நிகேதனம், நீலகண்ட பறவையைத் தேடி நாவல் பற்றி விரிவாகப் பேசுவார்கள். மறைந்த தா.மணி அவர்களுடன் இநத நாவல்களைப் பற்றி மணிக்கணக்கில் பேசியது நினைவில் பசுமையாக உள்ளது.

இந்திய நாவல்களில் முக்கியமானதாகக் கருதப்படும்.அக்னி நதி, ஆரோக்கிய நிகேதனம், நீலகண்ட பறவையைத் தேடி,பொலிவு இழந்த போர்வை, அழிந்த பிறகு. கங்கைப்பருந்தின் சிறகுகள். கினுகோனார் சந்து. நீலமலை, கவி, இலட்சிய இந்து ஹோட்டல். காகிதமாளிகை, பன்கர்வாடி, வெண்குருதி, மண்ணும் மனிதர்களும், சிக்கவீர ராஜேந்திரா, பதேர்பாஞ்சாலி, கரையான், விடியுமா, நான், வனவாசி, கறுப்பு மண், பொம்மலாட்டம், கோரா, சோரட் உனது பெருகும் வெள்ளம், விஷக்கன்னி, கயிறு, பாத்துமாவுடைய ஆடும் இளம் பருவத் தோழியும், அரை நாழிகை நேரம், தர்பாரி ராகம் ,கிராமாயணம், முதலில்லாததும் முடிவில்லாததும் ,ஒரு குடும்பம் சிதைகிறது ,உயிரற்ற நிலா ,வாழ்க்கை ஒரு நாடகம், உம்மாச்சு, துளியும் கடலும், பாணபட்டன், சிப்பியின் வயிற்றில் முத்து, செம்மீன், சாம்பன், இது தான் நம் வாழ்க்கை, இயந்திரம், கங்கைத்தாய், கடைசியில் இது தான் மிச்சம், கடந்தகாலம், கங்கவ்வா கங்காமாதா, சோறு தண்ணீர், சூரியகாந்திப்பூவின் கனவு, தன் வெளிப்பாடு, துருவ நட்சத்திரங்கள். மங்கியதோர் நிலவினிலே, மித்ரவந்தி, வானம் முழுவதும், மறைந்த காட்சிகள் போன்றவற்றை ஒருவர் வாசித்து முடித்தால் போது நவீன இந்திய இலக்கியத்தினைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

எழுதத் துவங்கிய நாட்களில் இந்தப் புத்தகங்களைத் தேடி அலைந்து படித்தேன். கிடைக்காத புத்தகங்களுக்காகப் பயணம் மேற்கொண்டேன். இன்று இந்த நூல்கள் யாவும் என் நூலகத்தில் இருக்கின்றன. இந்த நாவல்களை நான் மட்டுமில்லை என் குடும்பமே படித்திருக்கிறது. இன்றைக்கும் வெளியூர் பயணம் என்றால் இதில் ஏதாவது சில நாவல்களை எடுத்துக் கொள்வதே எனது வழக்கம்.

இந்திய இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகளைக் கொண்டாடும் விதமாக நிலவழி என்ற நூலை எழுதியிருக்கிறேன்.

இந்திய இலக்கியத்தில் முக்கியப் படைப்பாளியாகக் கருதப்படும்அஸ்ஸாமிய எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமி, உருது எழுத்தாளர் ஜோகிந்தர் பால், இஸ்மத் சுக்தாய்,மணிப்பூரி எழுத்தாளர் பிநோதினி, இந்தி எழுத்தாளர் பபானி பட்டாசார்யா, ஒரிய எழுத்தாளர் ரிஷிகேஷ் பாண்டா, தெலுங்கு எழுத்தாளர் கேசவ ரெட்டி, மராத்தி எழுத்தாளர் விலாஸ் சாரங், கன்னட எழுத்தாளர் திவாகர், மலையாள எழுத்தாளர் என்.எஸ். மாதவன் ஆகியோரின் படைப்புகள் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகள் நிலவழியில் உள்ளன.

குறிப்பாக வடகிழக்கு இந்தியாவின் இலக்கிய உலகமும் அதன் தனித்துவமும் இந்த நூலில் சிறப்பாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நூல் வெளியாகி இது வரை மூன்று பதிப்புகள் வந்துள்ளன

நிலவழி

தேசாந்திரி பதிப்பகம்

விலை ரூ 100

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 01, 2021 23:58

உலோக விலங்குகள்

ஒவ்வொரு நாய்க்கும் அதன் இரவென்பதுண்டு

-அய்யப்ப பணிக்கர்

அவனது வீட்டின் வரவேற்பறை விலங்குகளால் நிரம்பியிருக்கிறது.

விலங்குகள், வெண்கலம், எஃகு, பித்தளையில் வார்க்கப்பட்டவை..

அமைதியாக இருக்க அவை பழக்கப்படுத்தப்பட்டிருப்பினும்,

நேற்றிரவில் பெரும் அமளியை ஏற்படுத்திவிட்டன.

நேற்று நாய்களின் முறை.

ஒன்றின் குரைப்பு மற்றவைகளைத் தூண்டிவிட்டது.

அதைக் கேட்டு நரிகள் அமைதியற்று ஊளையிடத் தொடங்குகின்றன.

பித்தளைச் சிங்கம் கர்ஜிக்க எழுந்தது.

பாடப் புத்தகங்களில் கர்ஜனை என்பதே சொல்;

முயற்சித்து, ஆனால் சளியிருப்பதால், கைவிட்டுத்

தானாகவே கூண்டுக்குத் திரும்பிவிட்டது.

கச்சேரி முடிந்து பாடகர்கள் அமைதியான போது

நானும் கண்ணயர்ந்து விட்டேன்,

ஆனால் குரைக்க முடியவில்லை.

இப்போதைக்கு இவ்வளவுதான், இது போதாதா.

அய்யப்ப பணிக்கரின் இந்த மலையாளக் கவிதையை  ஆங்கிலம் வழியாக தி.இரா.மீனா மொழியாக்கம் செய்திருக்கிறார். பதாகை இணைய இதழில் வெளியாகியிருக்கிறது.

வரவேற்பறைப் பொருட்களாக உள்ள விலங்குகள் அசைவுறும் தருணமொன்றைக் கவிதை பதிவு செய்துள்ளது. உண்மையில் இது உறைந்து போனவற்றை உயிர்ப்பிக்கும் செயல்பாடு. எல்லாவற்றுக்கும் ஒரு விழிப்புணர்வு உண்டு தானே.

வரவேற்பறையில் உள்ள கலைப்பொருட்கள் யாவும் இப்படிக் காலத்தில் ஆழ்ந்து உறைந்திருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பாக ஜப்பானிலிருந்து ஒரு தவளை பொம்மையை வாங்கி வந்திருந்தேன். பாஷோவின் நினைவாக அந்த் தவளைக்கே பாஷோ என்று பெயர் வைத்திருந்தேன். தாவும் நிலையிலுள்ள தவளைப் பொம்மை. மிக அழகாகச் செய்திருந்தார்கள் வரவேற்பறை அலமாரியின் கண்ணாடிக்குள் அந்தத் தவளை உறைந்து போயிருந்தது. சமீபமாக அதை வெளியே எடுத்துத் துடைக்கும் போது அதன் கண்கள் அசைவது போல உணர்ந்தேன். அதே உணர்வினைத் தான் இந்தக் கவிதையை வாசிக்கும் போது ஏற்பட்டது.

இந்த உலோக விலங்குகள் அமைதியாக இருக்க பழக்கபடுத்தபட்டிருக்கின்றன என்கிறார் பணிக்கர். இது செயற்கையான நிசப்தம்.

குழந்தைகள் கைப்பட்டவுடன் இது போன்ற பொம்மைகள் கண்விழித்துக் கொள்வது வழக்கம். சிறார்களால் பொம்மைகளுடன் உரையாடவும் விளையாடவும் முடியும். பெரியவர்களுக்கு அது வெறும் காட்சிப்பொருள் மட்டுமே

கவிதையில் எதிர்பாராத ஒரு கணத்தில் இந்த விலங்குகள் குரல் எழுப்பி அடங்குகின்றன. அதிலும் சிங்கம் பாவம் சளிப் பிடித்திருப்பதால் கர்ஜிக்க முடியவில்லை. அதிகாரமில்லாத நிலையைத் தான் அது வெளிப்படுத்துகிறது. கவிதை சொல்பவன் தன்னால் குரைக்க முடியவில்லை என்கிறான். இந்த அங்கதம் தான் கவிதையின் தனித்துவம்.

நாய்குரைப்பு ஒரு பழக்கம். எதிர்வினை. பசுவய்யா நடுநசி நாய்கள் என்றொரு கவிதை எழுதியிருக்கிறார். அதிலும் இந்த குரைப்பின் தொடர்ச்சி சுட்டிக்காட்டப்படுகிறது.

அகிரா குரசேவாவின் ட்ரீம்ஸ் படத்தில் இது போலப் பதுமைகள் உயிர்பெற்று வரும் காட்சியிருக்கிறது. இந்தக் கவிதையினை வாசிக்கும் போது அந்தக் காட்சி மனதில் தோன்றி மறைந்தது.

தி.இரா.மீனா மிக அழகாக மொழியாக்கம் செய்திருக்கிறார். அவருக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 01, 2021 05:14

சுபமங்களா இதழில்

சுபமங்களா இதழில் வெளியான எனது சிறுகதைகள் குறித்து வண்ணநிலவன் எழுதியுள்ள இந்தக் குறிப்பு சுபமங்களா நாட்களை நினைவுபடுத்தியது. கோமலின் அன்பு மறக்கமுடியாதது. சுபமங்களா இதழின் பங்களிப்பு பற்றி வெளியான சிறப்பு மலரில் இந்தக் கட்டுரையை வண்ணநிலவன் எழுதியிருக்கிறார். சுபமங்களா இதழ்கள் யாவும் இணையத்தில் வாசிக்க கிடைக்கிறது.

https://www.subamangala.in/

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 01, 2021 04:25

March 31, 2021

ஒளியை வாசிக்கிறவன்

அட்சரம் இதழில் வெளியான சிறுகதை – மீள்பிரசுரம்.

அந்த அறையில் அவனும் திமிங்கிலத்தையும் தவிர வேறு யாருமேயில்லை. கடலைவிட்டு வெளியேறி நாற்பதாண்டுகளாகி, உரு அழிந்து எலும்பு பொறியென நீண்டு நிசப்தித்திருக்கும் அந்தத் திமிங்கலத்தை எப்போது காணும் போதும் பிரம்மாண்டம் குறைவதேயில்லை. கோபாலராவ் திரும்பவும் அதன் வால் அருகே நின்றவனாக மொத்த திமிங்கலத்தையும் ஒருமுறை பார்த்தான். கண்களில் அடங்காத உருவம். மீனின் அடிவயிறு ஊஞ்சலென ஆடிக்கொண்டிருந்தது. இந்தத் திமிங்கலம் தன்னை விழுங்கியிருந்தால் இதே விலாவின் இரு எலும்புகளை பற்றியபடி ஊஞ்சலாடியிருக்கலாமல்லவா. அந்த ஒரு அறை முழுக்க திமிங்கலம் மட்டுமேயிருந்தது. கோபால்ராவ் அதன் எலும்புகளில் தனது உள்ளங்கையை உரசினான். உப்பும் பாசியும் கலந்ததொரு சொரப்பு. விரிந்த தாடை அசையாத போதும் கடல் அலைவீசி உள் செல்வதும், செவுளின் துவாரங்களில் நீர் பீச்சுவது போல புலப்பட்டது. இப்போது திமிங்கலம் திரும்பவும் கடலை நோக்கி;ப் புறப்பட்டுவிட்டால் தான் அதன் வாலைப் பற்றிக் கொண்டு கூடவே கருமையின் அடியாழத்தில் குமிழ்விடும் சிப்பிகளின் முகத்துவாரத்திற்கு போய் ஒடுங்கி கொள்ளலாம்.

திமிங்கலம் இந்தக் கட்டிடம் விட்டு வெளியேறும் போது மாடிப்படிகள் அதிர்வுறும். வாசலில் மரமேஜையில் கைகளை ஊன்றி அமர்ந்திருக்கும் பெண் திடுக்கிட்டு கத்தக்கூடும். சுவரில் மாட்டப்பட்ட கடிகாரங்கள் உதிர்ந்து சிதறவும், உக்கிரப் பெருவழுதியின் யுத்தகேடயங்கள், நர்த்தன மூர்த்திகளின் பிரதிமைகள் புரளவும், கண்ணாடி உறையிலுள் அடங்கிய முத்துமாலைகளில் சில தாடையில் சிக்கி ஒளிரவும், மரக்கதவுகள், பார்வையாளர் இருக்கைகள் மிதிபடவும் அறையை விட்டு நீந்தி திமிங்கலம் வெளியேறிபோகும் போது சாலையில் செல்லும் வாகனங்கள், சைக்கிள்காரர்கள், ஒன்றிரண்டு மாட்டு வண்டிகள் யாவும் புரியாமையில் உறைந்துவிடக்கூடும். யோசிக்க யோசிக்க இவையாவும் ஸ்டுவெர்ட் சினோராவின் படத்தில் வரும் காட்சிகள் போல முடிவற்று நீள்வதாக இருந்தது.

தாழ்ந்த வெயில் அசைந்த இந்த நாளில் அவன் காலையிலே மியூசியத்தின் இரண்டாம் தளத்திற்கு வந்திருந்தான். படிக்கட்டுகளில் யாரும் வராத நிசப்தம் மேலேறிக் கொண்டிருந்தது. குளுமையான காற்றும் மனதில் படியும் வெயிலும், சிரிப்புமாக சாவதற்கு இனிமையான நாள் இது என அவனாகவே சொல்லிக் கொண்டான். ம்யூசியத்தின் உள்ளே வளரும் மரங்கள் கூட காலத்தின் தொலைவிற்குச் சென்று விடுகின்றன. கோபாலராவ் பழுத்த இலையொன்று ஜன்னல் வழியே திமிங்கலத்தை பார்த்துக் கொண்டிருப்பதாகக் கண்டான். வெளிச்சம் தத்திக் கொண்டிந்த மாடியின் செங்கல் சுவரில் இருந்த அணில் ஒன்று வேகமாக ஓடி வால் சுழற்றி திமிங்கலத்தின் வயிற்று எலும்புகளில் தாவித் தாவி ெசன் ற து. கோபால ராவ் அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அணில் விலா எலும்பின் சாரத்தில் தனது வாலைப் புரட்டியபடி தலை கீழாக நடனமாடுவது போல குதூகல மடைந்தது. திமிங்கலத்திடமிருந்து ஆழ்ந்த பெருமூச்சு வருவது போல் காற்று சுழன்றது. அணில் திமிங்கலத்திடமிருந்து தாவி இரும்புக் கம்பிகளில் நடந்து உயரத்தில் தாவி மரஉத்திரங்களில் ஏறி நின்று திமிங்கலத்தைக் கண்டது. உடலை புரண்டு படுப்பதுபோல் காற்றில் எலும்புகள் அசைந்தன. ஒரு பாய்ச்சலில் அணில் திரும்பவும் உத்திரதுளையினுள் பதுங்கி மறைந்தது. கோபாலராவ் மற்ற நாட்களை விடவும் இன்று மிக அதிக சந்தோஷம் கொண்டான்.

மூன்று மாடியுள்ள அந்த ம்யூசியத்தின் படிகளில் மேலேறி நடக்கத் துவங்கினான். அவனுக்கு நாற்பது வயதே முடிந்திருந்தது. கறுப்பு கரை வேஷ்டியும் லாங்மி ல் சட்டையும் அணிந்திருந்தான். அவனது சட்டை பையில் நேற்று மிஞ்சிப்போன ஒரு வெற்றிலை மட்டும் காய்ந்து போயிருந்தது. தலையை கோரையாக விட்டிருந்தான். படியேறும் போது பழுப்புநிற சுவரில் வெயில் புரளும்போது நிற ஜாலம் துள்ளுவதை கண்டான். மிக மெதுவாக மூன்றாவது தளத்தை விட்டு மேலேறி கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு வந்தான். கருப்பேறி, உலர்ந்த அந்த தளத்தில் ம்யூசியத்தின் சிதைந்த பொருட்கள் குவிக்கப்பட்டிருந்தன. மார்பு கவசங்கள், தலையறுந்த பிரதிமைகள், நிறம் வெளிறிய ஓர் ஆல் இலை கிருஷ்ண சித்திரம் நகரம் தொலைவு வரை விரிந்து கிடந்தது. நீர் தொட்டி எஞ்ஜினையும் அதற்கு ஏறிச் செல்லும் இரும்பு படிக்கட்டுகளையும் கோபாலராவ் பார்த்தான். காற்று ஆளை வளைத்து வீழ்த்திவிடுவது போல வேகம் கொண்டிருந்தது. வெயில் ஏறுவதால் நகரின் தொலைவு பச்சை நிறம் மாறி மஞ்சள் திட்டில் தெரிந்தது. குப்பையில் கிளறி ஒரு தலைக் கவசமும் துருவேறிய ஒரு எக்காளத்தையும் குனிந்து எடுத்தான். அதை கையில் ஏந்திக் கொண்டு நடக்கும்போது சுய எள்ளல் பீறிட்டது. நீர் தொட்டியிருக்கும் இரும்பு படிகளில் ஏறி தொட்டியின் ஒற்றைச் சுவரில் நின்று பார்த்தபோது நகரம் இரைச்சலற்று பேரமைதியில் இருந்தது. குனிந்து நீர்த் தொட்டியினுள் கண்டான். பாதி மஞ்சள் வெயிலும், தப்பியலையும் ஒற்றை கொக்கு ஒன்றும் நீரினுள் கடந்தன. பின்பு கோபாலராவ் மிக மெதுவாக அந்தக் காட்சிகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, சுவரைவிட்டு மெதுவாக வானை நோக்கி இரண்டு அடி முன் வைத்தபோது, உடல் விசை கொண்டு கீழ் இறங்க, அந்தரத்தில் துருவேறிய எக்காளம் கையிலேந்தியபடி தரையை நோக்கி வீழ்ந்து கொண்டிருந்தபோது அவனுக்கு பிடித்தமான இத்தாலிய இயக்குனரான கிரேசியாவின் ‘மிலனில் ஒரு கோடைக்காலம்’ என்ற படத்தில் வரும் தலைகீழாக சுழலும் கட்டிடங்கள், உதிரும் மலர்கள், பாதசாரிகளின் காட்சி நினைவிற்கு வந்தது. அந்தப்படம் மூவிலேண்டில் திரையிடப்பட்ட போது அவனைத் தான் தேடிப் பிடித்திருந்தார்கள்.

அந்தப்படத்தின் முதல் காட்சி துவங்கும்போது ஒரு குடை காற்றில் விடுபட்டு போகும். கவிதையின் சில வரிகள் ஒளிரத் துவங்கும்.

“கோடை ஞாபகத்தின் ஒப்பனைக்கூடம், விதவிதமான கட்டிடங்கள், வாசனைகள், கேளிக்கை, சிரிப்பு, ஒரு கோப்பை மதுவை பகிர்ந்து கொள்ளும் சூரியன்.”

இந்தச் சொற்கள் காற்றில் குமிழ்விட்டன. கோபாலராவ் சாவை நோக்கி விரைந்து கொண்டிருந்தான்.

தயங்கி தயங்கி வந்துகொண்டிருந்த சிறுவன் குறுகலான அந்தச் சந்தில் ஒரு வாழை இலைக்காக நாயும் பசுவும் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை கண்டு ஒதுங்கி நின்றான். பசு இலையைத் தாடையால் பறித்து இழுத்தபடி சுவரில் முகத்தை தேய்த்துக் கொண்டு நகர்ந்தது. நாய் அவசரமாக இன்னொரு இலை தேடி ஓடியது. மலபார் கபேயின் பின்புற சந்தது. சிறுவன் சிதறிக்கிடக்கும் எச்சில் உணவில் கால்பட்டு விடாமல் தாவி சந்தின் முனைக்கு வந்தபோது எட்டு வயது சிறுமியொருத்தி வாசலில் நின்று குளித்துக் கொண்டிருந்தாள். அந்த குடித்தனத்தினுள் நடந்தபோது புகைமூட்டமும், தோசை சுடும் வாசமும், கற்பூர ஆராதனையும் கலந்து கொண்டிருந்தது. சிறுவன் மரப்படிகள் வழியாக மேலேறி ஒற்றை மரக்கதவு கொண்ட அறையை ‘டாக்கிராவ்’ டாக்கிராவ்’ என தட்டியபோது உள்ளே கோபாலராவ் தூங்கிக் கொண்டிருந்தான். குரலை உயர்த்தி சிறுவன் கதவைத் தட்டிய பிறகு கோபாலராவ் கதவைத் திறந்துவிட்டபடி திரும்பவும் படுக்கையில் வீழ்ந்து கொண்டான். அறையின் ஜன்னல் மூடப்பட்டிருந்தது. சிறுவன் கட்டிலில் கிடக்கும் புத்தகங்களையும் கிராமபோன் ரிக்கார்டுகளையும் கண்டவனாக, கிராமபோன் பெட்டி அருகே சென்று, கைப்பிடியை சுற்றி ஒரு இசைத்தட்டை சுழல விட்டான்.

“லோபதா… லோபதா…” என புரியாத பாட்டாகயிருந்தது. கோபாலராவ் புரண்டு படுத்துக் கொண்டபடியே சிறுவனிடம் கிராம போனை அணைக்கச் சொன்னான். அறையில் திரும்பவும் நிசப்தமேறியது. சிறுவன் சுவரோரமாக கிடந்த ஒரு பிலிம்கேனை உருட்டி விளையாடினான். கோபாலராவ் ஜன்னலைத் திறக்க சொன்ன போது சிறுவன் கட்டிலுக்கு கீழே ஒரு பூனைக்குட்டி படுத்திருப்பதை பார்த்துச் சிரித்தான். அகலமான இரட்டை ஜன்னலை திறந்ததும் அறை வெளிச்சத்தில் நிரம்பியது. கோவிலின் வடக்கு ரத வீதியில் யானை அசைந்து வந்து கொண்டிருப்பது தெரிந்தது. சிறுவன் உற்சாகமாக சொன்னான்.

“யானை வருது”

பாயில் படுத்தபடியே கோபாலராவ் கேட்டான்.

“என்ன படம் வந்திருக்கு”

“வெள்ளைக்காரங்க படம்… நாலு ரீல்… உன்னை முதலியார். உடனே கூப்பிட்டு வரச் சொன்னார்.”

கோபாலராவ் யானையை பார்க்க விருப்பமற்று புரண்டு படுத்துக் கொண்டான். வெள்ளிக்கிழமை தான் மூவிலேண்டில் பிக்சர் மாற்றுவார்கள். கோபாலராவ் குளித்து விட்டு வரும் வரை சிறுவன் பூனையோடு விளையாடிக் கொண்டிருந்தான். பிறகு இருவரும் மூவிலேண்ட் கொட்டகைக்கு டிராமில் போய் இறங்கியபோது தாத்தையா முதலியார் வந்திருந்தார். கோபாலராவ் புக்கிங் அறைக்குள் போன போது பூஜை நடந்து கொண்டிருந்தது. படப் பெட்டிக்கு சூடம் காட்டிய ஆபரேட்டர் மனோன்மணி முதலியாரிடம் தீபாராதனை காட்டினான். கோபாலராவ் தானும் கண்ணில் ஒற்றிக் கொண்டான். முதலியார் எப்போதும் மாறாத சிடுசிடுப்போடு அவனைப் பார்த்துச் சொன்னார்.

“பிரிட்ஜ் ஆன் த ரிவர்” னு வார்பிக்சர்… நாலுரீல்… பார்த்திடு… ஸ்பெஷல் ஷோ ரெண்டு இன்னிக்கு இருக்குது.”

அவன் பதில் பேசவேயில்லை. மனோன்மணி பெட்டியை எடுத்துக்கொண்டு புரொஜெக்ஷன் அறைக்குப் போனான். அவனும் உடனே நடந்து போனான். படப்பெட்டியை திறந்ததும் உள்ளே சில விளம்பரங்கள், கறுப்பு வெள்ளை ஸ்டில்கள் சில இருந்தன. கோபாலராவ் அதை எடுத்துக் கொண்டு கொட்டகையினுள் வந்து உட்கார்ந்தான். மர இருக்கைகள் உறைந்திருந்தன. அவன் மட்டும் தனியே அமர்ந்திருப்பது பழகிவிட்டது. பெப்கோபிலிம்ஸில் இருந்து பெட்டி கப்பலில் வந்திருக்கிறது. ஒளி திரையில் சிதறி, சிதறி சட்டென படம் ஓடத்துவங்கியது.

அவனுக்குப் பரிச்சயமான இயக்குநர் எல்.மாத்யூ டெல்டன். திரையில் மெளனகாட்சிகள் ஓடத் துவங்கின. ராணுவ லாரிகள் காட்டினுள் சென்று கொண்டிருந்தன. வீரர்களின் இறுகிய முகங்கள், மரத்தில் சாடும் குரங்குகள், வழியில் குறுக்கிடும் சிற்றோடைகள். காட்சிகள் மடிந்து மடிந்து போய்க் கொண்டேயிருந்தன. கோபாலராவின் மனம் வார்த்தைகளை பின்னத் துவங்கியது.

***

முந்நூறு பேர் நிரம்பியிருந்தார்கள். கோபாலராவ் மெலிதான ஜிப்பா அணிந்து கொண்டு, வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தான். இருக்கைகளில் கூச்சல் அதிகமாகிக் கொண்டிருந்தது. மைக்கை எடுத்துக் கொண்டு நடந்து போனபோது வித விதமான முகங்கள். அவன் திரையின் வலது பக்கம் போடப்பட்டிருந்த உயரமான ஸ்டூலின் மீது ஏறி நின்று கொண்டான். மனோன்மணியிடமிருந்து வந்த சிறுவன் கூட்டத்தைக் கண்டு குதூகலம் அடைந்தவனாக கோபாலராவ் அருகில் வந்து சொன்னான்.

“ஒரு ஷோவில் ரெண்டு படம் போடப் போறாங்களாம். இன்னொரு படம் பிரின்ஸ் ஆப் ராஜ்புட்”

சரியாக படப் பெயரை சொல்லிவிட்ட சந்தோஷத்தில் கோபாலராவை பார்த்த போது அவன் ஏதோ யோசனையிலிருந்தான். விளக்குகள் அணைக்கப்பட்டன. நீண்ட நிசப்தம், திரையில் ஒளி காட்சிகளை வரையத் துவங்கியது. ராணுவ வீரர்களின் வாகனங்கள் தரையில் ஊர்ந்து கொண்டிருந்தன. கோபாலராவின் குரல் உயர்ந்தது.

“ஜென்டில்மேன்… உலக யுத்தத்தின் போது ராணுவ வீரர்கள் ஷரா ஆற்றுப் பாலத்தை கைப்பற்ற செல்கிறார்கள். அதோ… செதுக்கப்பட்ட மூக்கு, சிற்பம் போல் நிமிர்ந்த உடல், ஊடுருவும் கண்கள், அவர்தான் கேப்டன் ப்யூபர்.”

அக்குரல் நிமிஷத்துக்கு நிமிஷம் மாறிக் கொண்டேயிருக்கிறது. குரலின் வழி ராணுவ வீரர்களின் இரும்புநடை, குரங்குகளின் சண்டை, காதலியின் ஞாபகம், பாலத்தின் பிரம்மாண்டம், ஆற்றின் வெள்ளப்பெருக்கு, குண்டடிபட்டு மரணிக்கும் மனிதனின் கடைசி வார்த்தைகள், இரவின் ஆழ்ந்த தனிமை என மயக்க மூட்டும் சொற்கள் பின்னிப்பின்னி மறைகின்றன. கடைசி இருக்கை வரை நாவின் துடிப்பு பரவுகிறது.

கோபாலராவ் திரையை கவனித்தபடியே இருக்கிறான். முகத்தில் சலனமேயில்லை. குரல் மட்டும் சிரிக்கிறது. துயரமடைகிறது. பரிதவித்து மெலிதாக விம்முகிறது. இருளில் யாவரும் தனது குரலின் மென் நரம்புகளால் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது பெருமிதமாக இருக்கிறது. அவன் குரல் துக்கத்தின் குமிழை பரவ விட யாரோ ஒரு பெண் அரங்கில் அழும் ஓசை. கண்ணீரை மீறிய பெருமூச்சு.

அடுத்த படத்திற்கான இடை வெளியில் கோபாலராவ் மேடையைவிட்டு விட்டு இறங்கி போகும் போது, அந்தப் பெண்ணைக் கண்டான். அவளது கண்கள் வீங்கியிருந்தன. கடந்து போய்விட்ட பின்பும் காட்சியின் துயரம் கலையாத முகம். அவளின் இளம் கணவன் கேலி செய்து கொண்டிருந்தான். எலுமிச்சை நிறத்தில் புடவையும், சிவப்பு வெல்வெட் சட்டையும் போட்டிருந்தாள். அவள் திரையை நிமிர்ந்து பார்க்கவேயில்லை. வெளியே வந்து நின்று, திரும்பவும் வெற்றிலை போட்டபடியே தான் பலமுறை டாக்கி கொடுத்திருந்த பிரின்ஸ் ஆப் ராஜ்புத் படத்தை பற்றிய நினைவிலிருந்தான் கோபால்ராவ்.

அந்தப்படத்தில் இடம் பெறும் புலிவேட்டைதான் சிறப்பான காட்சி. அது துவங்கியதுமே அவனறியாமல் உடம்பினுள் முறுக்கேறி விடும். புலியை துரத்திச் செல்லும் மனிதனின் தோற்றம் வன்மமாகயிருக்கும். தானே பட்டாளத்துடன் புலியை வேட்டையாடுவது போல அந்தக் காட்சியை கோபாலராவ் விவரிப்பான். சில நிமிஷமே திரையில் ஒளிரும் அப்புலியின் கண்கள் வனத்தின் உக்கிரத்தை உமிழ்வதாகயிருக்கும். இலைகளின் இடை வெளியிலிருந்து அது வேட்டைக்காரனின் நிழலை கண்டபடியிருக்கும். வேட்டையாடுபவனின் முக மூர்க்கம் மிக வன்மையாகி, இருளில் கண்களை துழாவிக் கொண்டிருக்க. புலி இலைகளை அறுத்துக் கொண்டு பின்னங்கால் விசையேற, காற்றில் பாய்ந்து மேல் எழும்பும் போது துப்பாக்கி விசை விடுபட, ரத்த துளியொன்று சிதறி குமிழென வெடித்து தெறிக்கும் போது ஏற்படும் துயரம் கோபாலராவால் தாங்க முடியாதது. ஒரு கனவை விவரிப்பது போலவே திரையில் ஒளிரும் மெளன படக்காட்சிகளை விவரித்துக் கொண்டிருப்பான்.

மணி ஒலிக்க துவங்கி திரும்பியபோது அந்தப் பெண்ணின் இருக்கை காலியாகயிருந்தது. எழுந்து போயிருக்க கூடும். துயரமான அந்தப் பெண் முகம் அவள் இல்லாத போதும் மனதை கலக்கமடைய செய்தது. தனது இருளினுள் அமர்ந்து கொண்டபோது திரையில் குதிரைகள் அணிவகுத்து வரத்துவங்கின.

இரவு அவன் வீடு திரும்பும் போது தெருவில் நடமாட்டமேயில்லை. கோவிலையொட்டிய வீதிகளில் மட்டும் ஏதோ உற்சவத்திற்காக பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். யானை அலங்கரிக்கப்பட்டு திருக்குளத்தின் அருகே நின்று கொண்டிருந்தது. பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் தனியே யானை நிற்பதை பார்க்கும் போது விநோத காடு புலப்பட்டது. அவன் அதன் அருகில் சென்று பார்த்துக் கொண்டே இருந்தான். யானை தான் வனத்தின் தாழியினுள் காட்டாற்றின் நீரை பீச்சியடித்துக் கொண்டும், தென்னை ஓலைகள், காட்டு கரும்புகளை தின்று அலைந்த தனது பூர்வீகத்தினை நினைவில் கொண்டிருக்குமா? விளக்கை தூக்க வந்த பெண் தலைச் சுமை மீது பெட்ரோமாக்ஸ் ஏறியதும் யானையின் நிழல் குளத்து நீரில் அலைவுறத் துவங்கியது. தேவியின் அலங்காரம் முடிந்திருக்கவில்லை போலும். சப்பரங்கள் சாத்தியிருந்தன. தம்பதி சமேதராக கடவுள் திருவீதி உலாவரப் போகிறார். குளத்துப் படிகளில் அமர்ந்து கொண்டபின். வானில் இன்றைக்கும் எண்ணமுடியாத நட்சத்திரங்கள். யானை தனது துதிக்கையை அசைக்கத் துவங்கியது. பெட்ரோமேக்ஸ் தூக்கிய பெண் ஓரிடத்தில் நில்லாது முன்பின்னாக நடந்து கொண்டேயிருக்கிறாள். யானையின் நிசப்தம் மிகப் பிரம்மாண்டமானது. அது எப்போதாவது கத்தியிருக்கிறதா? நீரைப் பார்த்தபடி யோசித்தான். தனது குரலை மறந்து போயிருக்கும் யானையது. பூச்சரம் சரிய நடந்து வந்த பெண்கள் யானையை வணங்கி போனார்கள். ஆலயத்தினுள் மணிகள் முழங்கின. வாத்திய கருவிகள் புறப்பட்டு விட்டன. அவன் குளத்தின் இருள் படிகளுக்குள் இறங்கி உட்கார்ந்து கொண்டு விட்டான். யானை புறப்படத் துவங்கியது. தெருவின் நிழல் தள்ளாடி ஊர்கிறது. ஏனோ அவனுக்கு கிரிபித்தின் நினைவு வந்தது.

தோமைய்யர் பள்ளியில் கணிதம் கற்பிக்கும் கிரிபித்திற்கு பள்ளி நாட்கள் தவிர மற்ற நேரங்களில் காகங்களை பற்றிய புகைப்படம் எடுப்பதில் மிகவும் ஆசை அதிகம். அவர் தனது சிறிய புகைப்படக் கருவியோடு சாலையோரங்களில், வேப்ப மரத்தடியில் அலைந்து கொண்டிருப்பதை கோபாலராவ் கண்டிருக்கிறான். அவர் தன்னை எப்படி உதவிக்கு அடையாளம் கண்டு கொண்டார் என இப்போதும் அவனுக்கு புரியவில்லை. கிரிபித் அவனை தான் செல் லுமிடங்களுக்கு எல்லாம் கூட்டிப் போக துவங்கினார். காகங்களை ஏதோ உலகில் இதுவரை பார்த்தேயறியாத பறவையை காண்பதைப் போல வியப்போடுதான் அவர் ஒவ்வொரு முறையும் புகைப்படம் எடுக்கிறார். விதவிதமான காகங்கள். கிரிபித் அவனுக்கு காகங்கள் பரிச்சயத்துடன் ஆங்கிலத்தையும் பரிச்சயபடுத்தினார். கிரிபித்தின் மூன்று வயது பையன் பேசுவது போல் தன்னால் ஆங்கிலம் பேச முடியவில்லையே என கோபால்ராவ் அழுதிருக்கிறான். அவனிடம் கிரிபித் மணிக்கணக்கில் காகங்களை பற்றி பேசியிருக்கிறார். அவர்கள் இருவரும் ஒரு இரவில் ஆற்று மணல் திட்டில் படுத்துக் கொண்டபோது கிரிபித் அவனிடம் கேட்டார்,

“உனக்கு சாவைப் பற்றி பயமாக இருக்கிறதா”

அவன் பதில் பேசவேயில்லை. அவர் அதே கேள்வியை திரும்பவும் கேட்டார். அவன் தயக்கத்துடன் ஆமாம் என்றான். கிரிபித் அது தன்னை சதா நடுக்கமுறச் செய்வதாகவும், சாவின் துர்வாடை தனக்கு நெருக்கமாக வீசுவதாகவும் சொன்னார். கோபலராவ் மெளனமாக கேட்டுக் கொண்டான்.

“ஒவ்வொரு காகமும் தனியானது, ஒன்றுபோல் ஒன்றிருப்பதில்லை, சாவைப்போல’ எனச் சொன்னார்.

என்ன பதில் சொல்வதென தெரியாமல் ஆழ்ந்திருந்தான். அவர் பெரு மூச்சிட்டபடியே சொன்னார்.

“காகங்கள் பறவைகள் தானா என்றே சந்தேகமாகயிருக்கின்றது. அவை இந்த உலகம் கடந்து எங்கோ சென்றுவருகின்றன. காகம் எப்போதும் மனிதர்களைவிட்டு போவதேயில்லை.”

கிரிபித் வீட்டுக்கு அதன்பிறகு அவன் போவதற்கே பயமாக இருந்தது. காகங்களின் ஆயிரக்கணக்கான புகைப்படங்கள், கோட்டு ஓவியங்கள் வைத்திருந்த அவர் ஒரு நாள் கோபாலராவிடம் சொன்னார்.

“நேற்று எனது கனவில் மழைத்துளிபோல காகங்கள் வானிலிருந்து எண்ணிக்கையற்று உதிர்ந்து பறந்தன. கனவில் அவை கரைச்சல் இடுவதில்லை.”

கிரிபித்தின் ஸ்நேகம் கோபாலராவை படிப்பதிலிருந்து மெல்ல துண்டித்து விட்டது. அவனும் கிரிபித்தைப் போலவே மனதில் அடங்காத ஒரு பயமும் தேற்றமும் கூடிய வானாக சுற்றத் துவங்கினான். கிரிபித் அவனுக்கு தனது ஜெர்மன் கேமிராவை தந்து காகங்களை படம் எடுக்கச் சொன்னபோது, அவன் ஒரு மாட்டுவண்டியை படம் பிடித்தான். கிரிபித் அந்த புகைப்படத்தினை பற்றி அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மனத்துயரோடு அவன் வீட்டிலே அடங்கி கிடந்தான். பிறகு கிரிபித்தை சந்திக்க விருப்பம் கொள்ளவேயில்லை, ஆனாலும் காகங்கள் எப்போதாவது கூட்டமாக கத்தி கரையும் போது அவனறியாமல் கிரிபித்தின் கனவும், சாவைப் பற்றிய பயமும் அவனுக்குள் எழுந்து பிடித்துக் கொள்ளும்.

மினர்வாவில் நாலு காட்சிகள், மூவிலேண்டில் ஆறு காட்சிகள் டாக்கி கொடுப்பதற்காக வாரம்தோறும் ஒப்புக் கொண்டிருந்தான் கோபாலராவ். யாவும் கறுப்பு – வெள்ளை துண்டுப்படங்கள். எப்போதவது ஒரு மணி நேர சாகச படம் வரக்கூடும். விசேச நாட்களில் புராணப்படங்கள் வருவதுமுண்டு.

கோபாலராவ் பாட்டு கத்திருந்தான். தஞ்சாவூரில் அக்காவீட்டில் இருந்த நாட்களில் கற்றுக் கொண்ட பாடங்கள். மச்சவாதாரம் என்ற படம் திரையிடப்பட்ட போது அவன் தினமும் பதினெட்டு பாடல்களையும் மூன்று ஷோவிலும் பாட வேண்டியதிருக்கும். அவனைப் போல டாக்கிகள் ஒன்றிரண்டு பேர் தானிருந்தார்கள். அதிலும் ஆங்கிலத்தில் டாக்கி தருவதற்கு அவனும் திருலோகமும் தானிருந்தார்கள். அவனை முதலியார் டாக்கிராவ் என்றே கூப்பிடதுவங்கியிருந்தார்.

***

மாதத்தின் இரண்டாவது வெள்ளிதோறும் தவறாமல் கோபால்ராவ் டிராமில் ஏறி பிராட்வேயில் இருக்கும் கல்கத்தா கார்னருக்கு போய் இறங்குவான். அங்கே தான் ஒரியண்டல் கிராமபோன் கம்பெனியிருந்தது. அவனது வருமானத்தில் கால் பாதியை ரெக்காடுகள் வாங்க செலவழித்து விடுவான். ஓரியண்டல் கிராமபோன் கம்பெனியில் அவனை பலருக்கும் நன்றாக தெரிந்திருந்தது. கங்குபாய், லட்சுமிபாய் சகோதரிகளின் இசைத்தட்டும், சிம்போனி 13ம் வாங்கிக் கொண்டு, அவன் காத்திருந்த போது மலேயாவிலிருந்து கப்பலில் வந்த இருவர் தனியே பேசிக் கொண்டிருந்தர்கள்.

மலேயா ஜூப்ளி ஹாலில் அவர்கள் பேசும் படம் பார்த்தார்கள் என்றும், அதற்கு டாக்கி தேவையேயில்லை, நடிகர்களே பேசுகிறார்கள், பாடுகிறார்கள் என வியப்பை தூண்டிக் கொண்டிருந்தார்கள். கடைச் சிப்பந்தி ஆர்வம் தாளாமல் கேட்டுக்கொண்டிருந்தான். இது வரை ஆறு ஷோதான் நடந்திருந்திருக்கிறது என சொன்னதை கேட்டு சிப்பந்தி ஆச்சிரியமாக பார்த்தான்.

கோபாலராவ் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. அவன் மனம் கங்குபாயின் குரலின் ஈரப்பாதைகளில் நகர்ந்து சென்று கொண்டிருந்தது.

***

கல்கத்தா மெயிலுக்கு தாத்தையா முதலியார் புறப்பட்ட அன்று மாலை கோபாலராவும், ரயில்வே ஸ்டேஷன் வந்திருந்தான். முதலியார் இந்த வாரமும் கொட்டகையில் படம் கிடையாது, ஏதோ கட்டிட வேலை நடக்கப் போவதாகச் சொன்னார். இதையே மனோன்மணி ரெண்டு நாளின் முன்பாகவே தனியே அழைத்துப் போய் சொன்னான்.

“முதலியார் ஏதோ புதுமையான கனவில் இருக்கார்… கொட்டகையில் புது மிஷின் வரப்போகுது”.

அவன் ஆர்வம் காட்டவேயில்லை. முதலியார் ரயில் வருவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே ஸ்டேஷன் வந்து விடுபவர். அவர் கோபாலராவை அருகில் உட்காரச் சொல்லியபடி கேட்டார்.

“மினர்வாவில் என்ன படம் போடுறான்”

“டைம் பார் டைம்”

முதலியார் ஏதோ யோசனைக்குப் பிறகு கேட்டார்.

“உனக்கு ஆபரேட்டர் வேலை தெரியுமா?”

இல்லையென தலையாட்டினான்.

“மனோன்மணி கிட்டே கத்துக்கோ. பிரயோசனமா இருக்கும். கல்கத்தாவில் இருந்து பேசும் படம் கொண்டு வரப் போறேன். அதுக்கு டாக்கி வேண்டிருக்காது. அது தானா பேசுற, பாடுற பிக்சர்.”

அவன் கேட்டுக் கொண்டிருந்தான்.

“இத்தனை நாள் பழகின தோஷத்துக்கு ஆபரேட்டரா கூட இருந்துக்கோ. மாச்சம்பளம் போட்டு தர்றேன்.”

கோபாலராவ் அவரைவிட்டு விலகி வந்து தண்டவாளத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். மரக்கிளையில் ஒரு காகம் மட்டும் கரைந்து கொண்டிருந்தது. ரயில் வருவதற்கு முன்பே அவன் வெளியேறி போயிருந்தான்.

பேசும் படத்தை பார்ப்பதற்காக கூட்டம் நிரம்பிக் கொண்டிருந்தது. மூவிலேண்டை புதுசாக மாற்றியிருந்தார்கள். நடிகர்களின் முகமும் பாட்டும் திரையில் ஒன்றாக தோன்றி மறையும் போது அரங்க இருளில் மயக்கம் பிடித்தது போலதொரு மவுனம். பாடும் நிழல் உருவங்களை திரும்ப திரும்ப பார்ப்பதற்காக வந்து கொண்டேயிருந்தார்கள். கோபாலராவ் தனது அறையை விட்டு வெளியேறவேயில்லை. ஒரு அதிகாலை அவன் வீதியில் யானை நடந்து வந்தது. குளித்து விட்டு திரும்பி வரக்கூடும். கோபால்ராவ் அதன் எதிரே, நேராக நின்றான். யானையின் துதிக்கை அவன் சிரசின் மேல் பட்டு அலையாடியது. யானையின் கண்களின் ஆழத்தினை பார்த்துக் கொண்டிருந்தான். சப்தமாக கத்தி அழ வேண்டும் போலிருந்தது. குடம் ஏந்தியபடி வரும் பெண்கள் யானையை கடந்து போனார்கள். சப்தமற்ற யானை தெருவில் தனது மணியோசையை படர விட்டபடி கோவிலை நோக்கி போனதும், அவன் தனது அறைக்கு ஒடி படுத்துக் கொண்டான். அன்றிரவில் அவனுக்கு சொப்பனங்கள் அறை இடுக்குகளிருந்து அடர்ந்து ஊடுருவின. காகங்கள், வேட்டையாடும் புலி, யானை, பெட்ரோமாக்ஸ், சப்தமான பெய்யும் மழை. அவன் பிதற்றத்துவங்கிய மறுநாள் காய்ச்சல் பீடித்திருந்தது.

***

நீங்கள் யாரென எனக்குத் தெரியாது. என்னிடம் அறிமுகம் செய்து கொள்ள வேண்டும் என ஒரு போதும் உங்களுக்கு தோன்றவேயில்லை. ஒரு வேளை உங்களுக்கு தயக்கமாக இருந்திருக்கலாம். அல்லது விருப்பமற்று போயிருக்கலாம். எனக்கு உங்களைப் பற்றிய அறிமுகம், நீங்கள் பார்வையாளர்கள். அதுவும் ஒரு சலனக்காட்சியை காண வந்தவர்கள். நீங்கள் வருவதற்கு முன்பாக இந்த இருக்கைகள் கொண்டிருந்த நிசப்தம் நீங்கள் அதில் அமர்ந்த பிறகு உங்களிடமும் நிரம்பிவிடுகிறது. உங்கள் கண்கள் எதிரேயிருக்கும் வெண்திரையை பார்த்துக்கொண்டிருக்கிறன. கூச்சத்துடனோ ஆர்வம் மிகுந்தோ ஒன்றிரண்டு ஸ்திரிகள் உட்கார்ந்திருப்பதை பார்த்துக் கொள்கிறீர்கள்.

விளக்கு அணைக்கப்படுகிறது. மௌனக் காட்சிகள் திரையில் ஓடுகின்றன. உங்களுக்கு அறிமுகம் இல்லாத நான், உங்களுக்கு அதன் கதையைச் சொல்கிறேன். நீங்கள் எனது குரலை நம்புகிறீர்கள். என் குரலின் வழியே காட்சிகளை குடிக்கிறீர்கள். என் குரல் ஒரு பாவனை. நான் குரலை என் விருப்பப்படி மாற்றி உங்களை ஈர்ப்பு கொள்கிறேன். எனது உருவம் உங்களுக்கு முக்கியமில்லை. நான் இதோ ஒரு கடற்கொள்ளைக்காரனாக உங்கள் முன் குதிக்கிறேன். நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள். உங்கள் இதயத்தின் முன் எனது வாளின் நுனி சுழிக்கிறேன். நீங்கள் பயப்படுகிறீர்கள். உங்கள் இதயம் படபடக்கிறது, மூச்சு நடுங்கிறது. இதோ நான் இப்போது பிரின்ஸ் ஆப் ராஜ்புத், எனது தங்ககோப்பையை உங்களுக்கு எதிரில் உயர்த்தி குடிக்கிறேன். உங்கள் உதடுகள் சுவைக்கின்றன வெறுமையை.

நான் சர்க்கஸின் கோமாளி, நான் ஸ்ரீகிருஷ்ணன், நானே ஹம்சன், நானே கெளசிகரிஷி, நானே தப்பியலையும் புலி.

நீங்கள் காட்சிகளை இருக்கையிலிருந்து பறித்து உண்ணுங்கள். என் குரல் அதில் சுவையின் சாற்றை தடவட்டும். நீங்கள் களைப்படைந்து விடுகிறீர்கள். உங்கள் இதயம் பயத்தாலும், சில வேளை மோகத்தாலும் மினுங்குகிறது. திரை அமைதி கொள்கிறது. அரங்க இருள் கலைய பெருமூச்சிட்டபடியே நீங்கள் வெளியேறுகிறீர்கள்.

திரையில் இதுவரை நடமாடிய ஒளியுருவங்களின் சிறு சுவடு கூட இல்லை. ஒரு சிறுவன் அரங்கைச் சுத்தம் செய்கிறான். சொற்கள் எங்கும் இறைந்து கிடக்கின்றன.”

காய்ச்சல் மிதமிஞ்சிப் போக பிதற்றல் நிற்காத கோபால்ராவ் அறைக்கு கீழ்வீட்டுப் பெண் வந்த போது அவன் தொடர்பற்று ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான்.

***

ஒரு மாத காலம் தஞ்சாவூருக்கு போக வேண்டியதாகியது. ஊரைவிட்டு வந்து பல வருஷங்களுக்குப் பிறகு அக்கா வீட்டில் நோயாளியாக படுத்திருப்பது கோபாலராவிற்கு வேதனையாக இருந்தது.

கட்டிலில் வெளுத்த வேஷ்டியை அக்கா விரித்து அவனை தூக்கி படுக்க வைப்பதும், கஞ்சி டம்ளரை அவளே கைகளில் ஏந்திக் கொண்டு, ஒவ்வொரு மடக்காக குடிக்க செய்வதும் தாளாத துக்கமேற்றியது. அவன் படுத்திருந்த அறை ஜன்னலின் வெளியே சிறுவர்கள் விளையாண்டு கொண்டிருந்தார்கள். நகரின் தேவாலய மணி சப்தம் எப்போதாவது கேட்கும். இரவில் விநோத பூச்சிகளின் இரைச்சல். நோயுற்ற நாளில் அவன் “லோபதா, லோபதா” என புரியாத பாட்டை புலம்பி கொண்டிருப்பதை கண்ட அக்கா அவனுக்கு சாந்தி வரும்படியாக அந்த அறையில் பகலினுள் இரண்டு விளக்குகளை சுடர் விட்டு எரிய விட்டிருந்தாள்.

திரும்பி நகரம் வந்த போது பூக்கடை சந்தில் தற்செயலாக திருலோகத்தை கண்டான். திருலோகம் கையில் சிறிய துந்தனாவை ஏந்தியபடி உடலெங்கும் அரிதாரம் பூசியவனாக நின்று கொண்டிருந்தான். அவன் கோபாலராவை பார்த்ததும் அருகில் வந்து பேசினான். கோபால்ராவ் பொய்கேசத்துடன் நிற்கும் திருலோகத்தை பார்த்துக் கொண்டேயிருந்தான். திருலோகம் சிரித்தபடியே சொன்னான்.

“ராவணன் தர்பார் படத்தில் நாரதரா நடிக்கிறேன்” கோபாலராவ் ஆங்கிலத்தில் பிரமாதமாக பாக்கி கொடுக்கும் திருலோகம் சிவப்பு அரிதாரத்துடன் நிற்பதை கண்டவனாக எதையும் கேட்டுக் கொள்ள முடியாமல் தலை குனிந்து கொண்டான். திருலோகம் அவன் தோளைப் பிடித்தபடி சொன்னான்.

“பிழைக்கணுமில்லையா…”

சக நடிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். திருலோகம் அவசரமாக அவனோடு சேர்ந்து கொண்டான். மனக்கூச்சத்துடன் அறைக்கு திரும்பிய கோபாலராவ் அன்றிரவு சுவரில் தெரியும் நிழல்களை பார்த்தபடி வெகு நேரமிருந்தான்.

***

தன்னிடமிருந்த கிராமபோன் ரிக்காடுகளை விற்பதற்காக ரிச்சி தெருவிற்கு போய் திரும்பி வரும்போது தாத்தையா முதலியார் கோபால்ராவை பார்த்துவிட்டார். புதிதாக வாங்கியிருந்த மோரிஸ் மைனரில் அவனை ஏற்றிக்கொண்டு தனது கொட்டகைக்கு கூட்டிப்போனார். பேசும் படத்தை உள்ளே போய் பார்க்கச் சொன்னார்.

இருளில் அவன் நுழைந்த போது தேவலோகம் மின்னிக் கொண்டிருந்தது. இந்திரன் சபையில் இரு பெண்கள் நடனமாடிக் கொண்டிருந்தார்கள். திடீரென இந்திரனே எழுந்து பாடத்துவங்கினான். காட்சிகள் மாறமாற சப்தமும் மாறியது. அந்த குரலின் நடமாட்டம் அரங்கில் எதிரொலித்தது. ஒரு நிழல் மி ருகம் தனது பொய்க் குரலால் யாவரையும் மயக்கி தனது நாவால் ருசிப்பது போல அந்த இயந்திரகுரலைக் கேட்டுக் கொண்டிருந்தான், அந்த இருளில் அவன் எப்போதும் நிற்குமிடம் காலியாகயிருந்தது.

முதலியார் வெளியே வந்த அவனிடம் மிலிட்டரி கேம்பில் ஒரு ரீல் மெளன படம் ஒன்று காட்டபடுவ தாகவும், அதற்கு பாக்கி தர அவனைத் தேடிக் கொண்டிருப்பதாகவும் கையில் உடனே காசு வாங்கி தந்து விடுவாதாகச் சொன்னார்.

யோசனையின்றி தன்னால் இனி டாக்கி கொடுக்க முடியாது என சொல்லியவனாக அரங்கைவிட்டு வெளியேறினான் கோபாலராவ்.

சில வாரங்கள் வெளியே எங்கும் போகாமல் தனது அறையிலே கிடந்தான். யானையை பார்த்து வருவது மட்டுமே எப்போதாவது நடந்தேறியது. அவனைத் தேடி வருபவர்கள் எவருமேயில்லை. மாலையில் எதிர்வீட்டு துணிகாயும் கம்பிக்கு வரும் குருவிகளைத் தவிர வேறு ஸ்நேகமற்றுப் போனது.

அறையை மூடியபடியே உள்ளேயே இருந்தான். ஒரு பகலில் சிறுவர்கள் இருவர் அவன் அறை சாவித்துவாரம் வழியே பார்த்தபோது அவன் சுவரில் வித விதமான எக்ஸ் ரே படங்களை இரட்டை மெழுகுவர்த்தியின் ஒளியில் சுவரில் பிரதிபலிக்க செய்து, ஒளிரும் எக்ஸ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 31, 2021 03:26

கூண்டிற்கு வெளியே

கூண்டிற்குள் அடைக்கபட்ட விலங்குகளை ஏன் வேடிக்கை பார்க்கிறோம். அண்ணா உயிரியல் பூங்காவிற்குச் செல்லும் போதெல்லாம் அங்கே வரும் மனிதர்களின் விசித்திரமான செயல்களை, நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். விலங்குகளை விட மேம்பட்டவனாக கருதப்படும் மனிதன் தான் உண்மையில் வேடிக்கை பார்க்கப்பட வேண்டியவன்.

வீட்டு விலங்குகள் அவனது அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு வாழ்கின்றன. காட்டுவிலங்குகளோ அவனை பொருட்டாக கருதுவதேயில்லை. ஆகவே தன் அதிகாரத்திற்குள் விலங்குகளை அடக்கி ஒடுக்கச் செய்யும் முயற்சியே மிருகக்காட்சி சாலைகள். இயற்கையான வாழ்விடத்தில் மிருகங்களைக் காணுவதும் மிருகக் காட்சி சாலையில் காணுவதும் வேறுவகையான அனுபவம்.

பெர்ட் ஹான்ஸ்ட்ரா 1962ம் ஆண்டு இயக்கிய குறும்படமான ZOO மிகச்சிறந்த கலைப்படைப்பாகும். கேரளாவில் நடைபெற்ற ஆவணப்பட விழாவில் ஒன்றில் இந்தப் படத்தை 1990ம் வருஷம் முதன்முறையாகப் பார்த்தேன். மறக்கமுடியாத படம்.

திரைப்படப் பயிற்சி முகாம்களில் தவறாமல் திரையிடப்படும் குறும்படமிது. நெதர்லாந்தைச் சேர்ந்த பெர்ட் ஹான்ஸ்ட்ரா ஒரு குறிப்பிட்ட சூழலில், குறிப்பிட்ட பின்னணியில் மனிதர்களின் நடவடிக்கைகள் எவ்விதம் மாறுகின்றன என்பதை அடையாளப்படுத்தவே இந்தக் குறும்படத்தை உருவாக்கியிருக்கிறார்.

இணையத்தில் இதன் நல்ல பிரதியைக் காண முடிகிறது.

மறைக்கப்பட்ட கேமிராக்கள் மூலம் மிருகக்காட்சிசாலையின் பல்வேறு இடங்களை, நிகழ்வுகளைப் படமாக்கியிருக்கிறார்கள். கோணங்களை மாற்றுவதன் மூலமும் எடிட்டிங் மூலமும் எப்படி மாறுபட்ட இரண்டு காட்சித்துண்டுகளை இணைத்து புதிய கருத்தினை உருவாக்க முடியும் என்பதற்கு இந்த படம் சிறந்த உதாரணம்.

ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலையில் நடைபெறும் இந்தப் படம், மனிதர்கள் மற்றும் விலங்குகளின் பல்வேறு வெளிப்பாடுகளை வேடிக்கையாகச் சித்தரிக்கிறது.

உண்மையில் யார் யாரை வேடிக்கை பார்க்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. அது தான் பெர்ட் ஹான்ஸ்ட்ராவின் நோக்கம்.

வெவ்வேறு கோணங்களில் தொலைவுகளில் படமாக்கப்பட்ட காட்சிகள் மூலம் பார்வையாளராக நாமும் கூடவே மிருகக்காட்சி சாலையினுள் செல்வது போலவே இருக்கிறது.

வெவ்வேறு வகையான விலங்கினங்கள் போலவே வெவ்வேறு வயதில் உள்ள மனிதர்கள். அவர்களின் பல்வேறு செயல்பாடுகள். உணர்ச்சிகள், ஆர்வம் மற்றும் குரூரத்தைப் படம் பதிவு செய்திருக்கிறது. அந்தவகையில் தொடர்பில்லாத தருணங்களைத் துண்டித்து லயத்துடன் ஒருங்கிணைப்பதன் மூலம் புதியதொரு அனுபவத்தை உருவாக்குகிறார் .

கூண்டிற்குள் அடைக்கப்பட்ட விலங்குகளைப் போலவே தான் மனிதர்களும் மிருகக்காட்சி சாலையினுள் நடந்து கொள்கிறார்கள். பசி தான் இருவரையும் வழிநடத்துகிறது. மனிதர்களின் அபத்தமான சில செயல்பாடுகளை அப்படியே பிரதிபலிக்கின்றன விலங்குகள். அல்லது விலங்குகளின் செயல்களை நகலெடுப்பது போலவே மனிதன் நடந்து கொள்கிறான். சில காட்சிகளில் வெளிப்படும் நகைச்சுவை அசலானது.

11 நிமிஷங்கள் ஓடக்கூடிய இந்தக் குறும்படத்தினைக் காணும் போது நாமே நாள் முழுவதும் மிருகக்காட்சி சாலையினுள் சுற்றியலைவது போலவே இருக்கிறது.

மிருகக் காட்சி சாலையைப் பார்ப்பதற்காக நுழைந்த பள்ளி குழந்தைகள் மிருகங்களை வேடிக்கை பார்ப்பதை இடைவெட்டி ஒட்டகச்சிவிங்கி மற்றும் நெருப்புக்கோழி அவர்களை வேடிக்கை பார்க்கும் காட்சியோடு இணைக்கிறார். யார் யாரை வேடிக்கை பார்க்கிறார்கள் என்ற வியப்பு உருவாகிறது. இது போலவே குழந்தைகள், வயதான பெண்கள், ஒரு இளம் ஜோடி, ஒரு வயதான தம்பதியினர் நடைப்பயிற்சி செய்யும் காட்சியைக் காணுகிறோம், அதை அடுத்து பெங்குவின்களின் அணிவகுப்பு நடை அதற்கு நிகராகவே உள்ளது.

ஒரு தந்தை தனது மகனைத் தோளில் சுமந்து செல்லும் ஒரு ஷாட் உள்ளது, அதைத் தொடர்ந்து ஒரு குரங்கு குட்டி தன் பெற்றோரின் தோளில் அமர்ந்திருக்கும் ஷாட் வருகிறது.

பிம் ஜேக்கப்பின் ஜாஸ் இசையே படத்தின் சிறப்பிற்கு முக்கியத் துணை. பெரியவர்களுடன் சிறார்கள் அவசியம் காண வேண்டிய குறும்படமிது

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 31, 2021 02:58

March 30, 2021

மீட்கப்பட்ட சிறுமி.

News of the World என்ற டாம் ஹாங்க்ஸ் நடித்த திரைப்படம் இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் இடம்பெற்றுள்ளது. அந்தப்படத்தினை நேற்றிரவு பார்த்தேன்

அதில் கேப்டன் ஜெபர்சன் என்ற கதாபாத்திரத்தில் டாம் ஹாங்க்ஸ் நடித்திருக்கிறார். நாளிதழில் வந்துள்ள முக்கியமான செய்திகளைத் திரட்டி அவற்றைத் தொலைதூரங்களில் வசிக்கும் மக்களுக்கு அறிவிப்பு செய்யும் நியூஸ் ரீடர் கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். அந்தக் காலத்தில் மக்கள் கட்டணம் கொடுத்து செய்தி வாசிப்பினைக் கேட்டிருக்கிறார்கள்.

என் பத்துவயதுகளில் ராணுவத்தில் வேலைக்குப் போய் திரும்பி வருகிறவர்கள் இப்படி விசித்திரமான செய்திகளைப் பகிர்ந்து கொள்வதைக் கண்டிருக்கிறேன்

குறிப்பாக இந்திய சீன யுத்தம் பற்றி இது போன்ற விசித்திரமான செய்திகளை ராணுவ வீரர்களிடம் கேட்டிருக்கிறேன். இந்தப்படத்தில் டாம் ஹாங்க்ஸ் வைத்திருப்பது போல ஹிந்து உருது செய்தி தாட்களின் துண்டுச் செய்திகளை வைத்திருப்பார்கள். அதை வாசிக்கும் போது வியந்து ஊரே வியந்து கேட்டுக் கொண்டிருக்கும். தொலைக்காட்சி வருவதற்கு முன்பு செய்தியைத் தெரிந்து கொள்ள நாம் காத்துகிடக்கவே வேண்டியிருந்தது.

ரேடியோவில் செய்திகள் ஒலிபரப்பாகும் போது சுற்றி நின்று கேட்பார்கள். இதற்காகவே பஞ்சாயத்து அலுவலகத்தில் ரேடியோ ஒன்றிருக்கும். அதை இயக்கும் பொறுப்பு ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அவர் குறித்த நேரத்திற்கு ரேடியோவை ஆன் செய்து செய்தியை வைப்பார். செய்தியைக் கேட்டு முடித்தவுடன் மக்கள் கலைந்து போய்விட மாட்டார்கள். அதைப்பற்றி விவாதிப்பார்கள். தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வார்கள்

பாவை கூத்து நடத்துகிறவர்கள் கிராமம் கிராமமாகச் சென்று வருவதால் அவர்கள் ஒரு ஊரின் சிறப்புகளை, செய்திகளை மற்ற ஊருக்கு எடுத்துச் செல்வார்கள். இவர்கள் மட்டுமின்றி கப்பலில் வேலை செய்து திரும்பியவர்கள். வெளிநாட்டிற்குப் போய் வந்தவர்கள் என அவர்கள் சொல்லும் செய்தியின் வழியாகவே உலகில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள முடிந்தது. நிறைய செய்திகளை அறிந்து வைத்திருப்பவரை பெரிய அறிவாளியாக நினைத்தார்கள்.

இந்த நினைவுகள் முழுவதும் இப்படம் பார்க்கும் போது மனதில் எழுந்தபடியே இருந்தது.

நமது கையிலுள்ள செல்போனில் நிமிஷத்துக்கு நிமிஷம் உலகெங்கும் நடக்கும் விஷயங்களை செய்தியாக வந்து கொண்டேயிருக்கின்றன. இது தவிரச் செய்தி சேனல்கள். டுவிட்டர் பேஸ்புக் ஆன்லைன் இதழ்கள் எனச் செய்திகள் அருவியாகக் கொட்டப்படுகின்றன. இதில் மூச்சுத்திணறிப்போய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இந்தச் சூழலுக்குள் நாட்டுநடப்புகளை அறிந்து கொள்ளாமல் சிறிய வட்டத்திற்குள் வாழும் மனிதர்களையும் அவர்களின் இருண்ட உலகையும் பேசுகிறது என்ற விதத்தில் இந்தப் படம் தனித்துவமாக உள்ளது

படத்தின் கதை1870 இல் டெக்சாஸ் மாகாணத்தில் நடக்கிறது. அந்த நாட்களில் இப்படிக் காசு கொடுத்துத் தான் மக்கள் செய்தித் தாளின் தொகுப்பினை அறிந்து கொண்டார்கள்.

உள்நாட்டுப் போரில் கலந்து கொண்ட ராணுவவீரரான கேப்டன் ஜெபர்சன் கிட் ஊர் ஊராகப் பயணித்துச் செய்தி அறிவிப்புப் பணியினை மேற்கொள்கிறார். எது போன்ற செய்திகளை அவர் தேர்வு செய்து வாசிக்கிறார் என்பது தான் முக்கியமானது.

உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும், டெக்சாஸின் பெரும்பகுதி முழுவதும் விரோதப் போக்கு நிலவுகிறது. இந்த நெருக்கடியான சூழலின் ஊடாகப் பயணம் செய்யும் கேப்டன் கிட் தற்செயலாக ஜோஹன்னா என்ற சிறுமியைக் காப்பாற்றுகிறார்.

அவளை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்காகக் கிட் மேற்கொள்ளும் பயணமே இந்தப் படம். ஜோஹன்னா ஜெர்மன் விவசாயி ஒருவரின் மகள். அவள் கியோவா பழங்குடியினரால் கடத்தப்பட்டு வளர்க்கப்படுகிறாள். அவளுக்கு ஆங்கிலம் தெரியாது. பழங்குடியினரின் மொழி மட்டும் தான் தெரியும்.

உண்மையில் அவள் ஒரு தனியுலகம். கேப்டன் கிட் ஒரு உலகம். இரண்டு உலகிற்குள்ளும் நடக்கும் பரிவர்த்தனையும் புரிதலும் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.

ஆங்கிலம் தெரியாத அந்தச் சிறுமிக்கு மொழி கற்றுத் தருகிறார். அவளை வெகு தொலைவில் உள்ள அவளது மாமா வீட்டிற்கு அழைத்துப் போக முயல்கிறார். வழியில் ஏற்படும் தடைகள் பிரச்சனைகளை அவர்கள் எவ்வாறு இணைந்து எதிர்கொள்ளுகிறார்கள். மீளுகிறார்கள் என்பதை நேர்த்தியாக விவரிக்கிறார்கள்..

சிறுமியை விலைக்குக் கேட்பவர்களைக் கேப்டன் கிட் எதிர்கொள்ளும் விதமும் அவர்கள் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தும் போது பதில் தாக்குதல் நடத்துகிற முறையும் சிறப்பாக உள்ளது.

எந்தச் செய்தியை உலகம் அறிய வேண்டும். எந்தச் செய்தியை மக்கள் அறிந்து கொள்ளக்கூடாது என்று அதிகாரத்திலிருப்பவர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள். குறிப்பாக நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் முன்பு கேப்டன் கிட் செய்தி வாசிப்பதில் ஏற்படும் பிரச்சனையும் அதை அவர் கையாளும் விதமும் அழகானது.

கிட் மற்றும் ஜோஹன்னா இறுதியில் மாமாவின் பண்ணை நிலத்தை அடைகிறார்கள், அழிவின் சாட்சியமாக அந்த இடம் உள்ளது. கிட் தயக்கத்துடன் ஜோஹன்னாவை அவர்களுடன் விட்டுவிட்டு, சான் அன்டோனியோவுக்குத் திரும்புகிறார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல ஜோஹன்னாவிற்குப் புது வாழ்க்கை அமையவில்லை . முடிவு என்னவாகிறது என்பதே படத்தின் மீதக்கதை.

வழக்கமான வெஸ்டர்ன் பட நாயகர்களின் வடிவம் போலவே கேப்டன் கிட்டும் உருவாக்கப்பட்டிருக்கிறார். ஒரே வித்தியாசம் அவர் செய்தி வாசிப்பவராகச் செயல்படுவது மட்டுமே. ஆனால் ஜோஹன்னாவை மீட்டு தன்னோடு அழைத்துச் செல்ல துவங்கியதும் அவரது செயல்பாடுகளும் நோக்கமும் மாறிவிடுகின்றன. கற்றுத்தருவதோடு அவளிடமிருந்து கற்றுக் கொள்ளவும் துவங்குகிறார் கேப்டன் கிட். வெஸ்டர்ன் திரைப்பட நாயகர்களைப் போலவே மிகக் குறைவாகப் பேசுகிறார். நீண்ட தொலைவு பயணம் செய்கிறார். திரைக்கதையில் பெரிய திருப்பங்கள் எதுவும் கிடையாது.

ஹாங்க்ஸ் பல ஆண்டுகளாக இதுபோன்ற நுட்பமான நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களாகத் தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்தப் படத்திலும் அவர் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.

யாரோ ஒருவரின் பிள்ளையைக் காப்பாற்றி வளர்த்துத் தன்னைத் தந்தையைப் போல அடையாளப்படுத்திக் கொள்ளும் கதாபாத்திரங்களைச் சாப்ளின் நடித்த தி கிட் முதல் இன்று வரை தொடர்ந்து பார்த்து வருகிறோம். அதே கதைக்கரு. கதாபாத்திரங்களின் பின்புலத்தை மாற்றி மாற்றி அந்தக் கதையை வெற்றியடையச் செய்கிறார்கள்.

எளிமையான படம். அதைச் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்கள்.. James Newton Howard இசையும் Darius Wolski ஒளிப்பதிவும் சிறப்பாக உள்ளன.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2021 06:23

March 29, 2021

புறக்கணிப்பின் நிலக்காட்சிகள்

“கடவுள் விடுகிற மூச்சைப்போல் காற்று வீசும் கரிசல்வெளி

வெயிலின் சமுத்திரத்தில் யாவும் முங்கிய நிசப்தம்

கருஞ்சாம்பல் மண்பரப்புக்குள் மெல்ல முனகும் சிருஷ்டிகரம்“

எனக் கவிஞர் தேவதச்சனின் கவிதை ஒன்று துவங்குகிறது.

இந்தக் கவிதையில் இடம்பெற்றுள்ள கடவுள் விடுகிற மூச்சைப் போலக் காற்றுவீசும் நிலப்பரப்பைத் திரையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்பிரான்செஸ்கோ ரோஸி. அந்தப்படம் Christ Stopped at Eboli (1979)

இத்தாலிய இயக்குநரான பிரான்செஸ்கோ ரோஸி இயக்கிய Christ Stopped at Eboli (1979), இத்தாலியின் புகழ்பெற்ற எழுத்தாளரான கார்லோ லெவியின் நினைவுக் குறிப்பினை அடிப்படையாகக் கொண்டது, இந்த நூல் 1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின் முடிவில் வெளியாகி இத்தாலிய இலக்கியத்தின் மகத்தான படைப்பாகக் கொண்டாடப்பட்டது

இத்தனை அழகாக நிலப்பரப்பினை இதுவரை எந்தத் திரைப்படமும் காட்சிப்படுத்தியதில்லை. கதாபாத்திரத்தின் தனிமையும் மனநெருக்கடியும் நிலவெளியாக உருமாறுகின்றன. புறக்கணிக்கப்பட்ட மனிதனும் புறக்கணிக்கப்பட்ட நிலமும் ஒன்று தான் என இந்தத் திரைப்படம் சுட்டிக்காட்டுகிறது.

படத்தின் துவக்கக் காட்சி மிக அழகானது. லெவியின் நீண்ட பயணம் கிட்டத்தட்ட பதினெட்டு நிமிடங்கள் ஒடுகின்றன: இரண்டு ரயில் சவாரிகள்; பஸ்ஸில் ஒன்று. அதில் அவரோடு ஒரு நாயும் உடன் வருகிறது. அந்தப் பேருந்தில் கோழிகள் ஏற்றப்பட்டிருக்கின்றன. இறுதியாக ஒரு கார் மூலம் செல்கிறார்கள். தீவிர தனிமை மற்றும் வெளி உலகத்துடனான தொடர்பின்மை ஆகியவற்றை இந்தப் பயணம் காண்பிப்பதோடு மட்டுமல்லாமல், பார்வையாளரைப் முற்றிலும் புதிய கதையுலகிற்கு அழைத்துச் செல்வதாக உள்ளது. அந்த நிலப்பரப்பு புதிரும் வசீகரமும் ஒன்றுசேர்ந்தது

1935 மற்றும் 1936 க்கு இடையில், லெவி பாசிச அரசாங்கத்தால் தெற்கு இத்தாலிய மாகாணமான லூகானியாவிற்கு நாடுகடத்தப்பட்டார்

கலைஞர்கள் மற்றும் புரட்சியாளர்களை ஒடுக்குவதற்காக இப்படி உள்நாட்டிற்குள்ளே நாடுகடத்தி முடக்கினார்கள். உண்மையில் இவர்கள் அரசியல் கைதிகள். ஆனால் சிறையில் அடைக்கபடாமல் கண்ணுக்குத் தெரியாத ஒரு இடத்தில் பொதுவெளியில் வாழ அனுமதிக்கப்பட்டார்கள்.

வசிப்பிடத்தில் அவர்கள் ஒவ்வொரு நாளும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பில் வாழ வேண்டும். அன்றாடம் காவல் நிலையத்திற்குச் சென்று கையெழுத்திட வேண்டும்.

தீவிர அரசியல் செயல்பாட்டிலிருந்து ஒருவனை முடக்குவதற்கு அவனது குடும்பத்திடமிருந்தும் உறவுகள் மற்றும் நண்பர்களிடமிருந்தும் அவனை விலக்கி வெகுதூரம் அப்புறப்படுத்தித் தனிமைப்படுத்துவதை நடைமுறையாக வைத்திருந்தது பாசிச அரசு.

மருத்துவரான லெவி அரசியல் இயக்கங்களில் தீவிரமாகப் பங்கு பெற்ற காரணத்தால் மருத்துவத் தொழிலை மேற்கொள்ளவில்லை. பாசிச எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக நாடுகடத்தப்பட்ட லெவி காக்லியானோவிற்கு வந்து சேர்ந்தபோது அது முற்றிலும் அந்நியமான உலகமாக இருந்தது.

தற்காலிக வசிப்பிடம் ஒன்றில் தங்கிக் கொள்கிறார். அதுவும் ஒரு நிலவறை போலிருக்கிறது. இரண்டு படுக்கைகள் அங்கேயிருக்கின்றன. ஜன்னலை ஒட்டிய காலியான படுக்கையினைத் தேர்வு செய்து கொள்கிறார்.

வளர்ச்சியடையாத, தனிமைப்படுத்தப்பட்ட, விசித்திரமான அந்த ஊரும் அதன் புறவெளியும் நம்மை வசீகரிக்கின்றன. கனவில் நாம் காணும் மாயநிலம் போலவே அந்த நிலப்பரப்புக் காணப்படுகிறது. விவசாயிகள். தொழிலாளர்கள் வாழும் அந்த ஊர் வேறு ஒரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. லெவியைப் போலவே நாடுகடத்தப்பட்ட சிலர் அங்கே இருக்கிறார்கள். அவர்களையும் லெவி சந்திக்கிறார்.

அந்த நகரை ஒரு திறந்தவெளிச் சிறை போலவே லெவி ஆரம்பத்தில் நினைக்கிறார். அவர் எங்கே சென்றாலும் காவலர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கடந்து போகக் கூடாது என்று தடைவிதிக்கிறார்கள்.

லெவி சுற்றியலைந்து காணும் காட்சிகளின் வழியே அந்த ஊரில் மிகக் குறைவானவர்களே வசிப்பது நமக்குத் தெரிகிறது. அந்த ஊரிலிருந்த தேவாலயமும் அதன் பாதிரியும் அவரைக்கேலி செய்யும் சிறுவர்களும் கண்ணில்படுகிறார்கள். விசித்திரமான நம்பிக்கைகள் கொண்ட அந்த ஊர் மக்களை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அந்த நிலம் கிறிஸ்துவின் வருகைக்கு முந்திய உலகமாகத் தோற்றம் தருகிறது. மலேரியா மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மருத்துவச் சேவை செய்ய வேண்டிய கட்டாயம் லெவிக்கு ஏற்படுகிறது.

தான் மருத்துவம் படித்திருந்தாலும் மருத்துவராக வேலை செய்யவில்லை என்று அவர் மறுக்கிறார். ஆனால் மக்கள் அதைக் கேட்டுக் கொள்ளவில்லை. மெல்ல அவர் மருத்துவம் செய்ய ஆரம்பிக்கிறார்.

மருத்துவப்பரிசோதனைக்காக அவர் ஒரு வீட்டிற்குச் செல்லும் காட்சியும் நெற்றியில் நாணயத்தை வைத்து தன் மனைவியைக் குணமாக்க முயலும் ஒருவரின் வாழ்க்கையும் விசித்திரமாக உள்ளது.

அந்த ஊரிலிருந்த இரண்டு மருத்துவர்களும் திறமையற்றவர்கள். காசு பறிக்கக்கூடியவர்கள் என்று மக்கள் கருதுகிறார்கள். அவர்களை விடத் தங்கள் மீது அன்பும் அக்கறையும் காட்டும் லெவியை அவர்கள் நேசிக்கிறார்கள். காரணம் அவர் மருத்துவத்திற்காகக் கட்டணம் எதையும் வசூலிப்பதில்லை

படம் முழுவதிலும் நாம் கேட்கும் நேர்த்தியான இசை நம்முடைய மனதில் ஆழமான ஏக்க உணர்வை உருவாக்குகிறது கடந்த கால நினைவுகளை விவரிப்பதன் வழியே தான் படம் துவங்குகிறது. லெவியின் வாழ்க்கையில் நடந்த இந்த நிகழ்வுகள் பாசிச அரசின் கெடுபிடி எப்படி எங்கோ ஒரு மூலை வரை பரவியிருந்தது என்பதை அடையாளப்படுத்துகிறது.

மூன்றரை மணி நேரத்திற்கும் அதிகமாக ஓடக்கூடிய இந்தப் படம் பிரான்செஸ்கோ ரோஸியின் மாஸ்டர் பீஸ் என்றே சொல்வேன். கியான் மரியா வோலோன்டே முக்கியக் கதாபாத்திரமான லெவியாக நடித்திருக்கிறார். அவரது முகத்தில் வெளிப்படும் உணர்வுகள் மிகத் துல்லியமானவை. அபாரமான நடிப்பு.

காக்லியானோவின் மேயரான டான் லூய்கி மாகலோனுடன் லெவி நெருக்கமாகப் பழகுகிறார். அவரும் லெவியைப் புரிந்து கொள்கிறார். டூரினில் உள்ள தனது குடும்பத்தினருக்கு லெவி எழுதும் கடிதங்கள் அனைத்தையும் அதிகாரப்பூர்வ தணிக்கைகளுக்கு அனுப்புவதற்கு முன்பு அவர் படிக்கிறார்.

ஒரு கட்டத்தில், அவர் ஒரு குறிப்பிட்ட கடிதத்தை அனுப்ப வேண்டாம் என்று லெவிக்கு அறிவுறுத்துகிறார், இது தண்டனையை அதிகப்படுத்திவிடும் என்று எச்சரிக்கிறார்.இதைப் பற்றி விவாதிக்கும் போது அவர்கள் பாசிச அரசின் இயல்பு பற்றி உரையாடுகிறார்கள்.,

காக்லியானோவின் விவசாயிகள் பாசிச அரசால் பாதிக்கப்படுகிறார்கள். நேரடி அரசியலில் ஈடுபடாத அந்த மக்களும் கூட உள்ளுற அச்சம் கொண்டிருக்கிறார்கள். மரங்களைப் பாதுகாக்கும் வழிமுறையாக ஆடுகளுக்கு வரி விதிக்க அரசு முடிவு செய்கிறது இது அவர்களுக்கு முட்டாள்தனமான யோசனையாக உள்ளது. அதை எதிர்க்கிறார்கள்.

My name is Barone. May he who finds me care for me எனக் கழுத்தில் அட்டையுடன் கைவிடப்பட்ட ஒரு நாயைப் படத்தின் துவக்ககாட்சியில் லெவி காணுகிறார். அது அவரின் மாற்று நிலையைப் போலவே உணர்த்தப்படுகிறது. அந்த நாயை தன்னோடு அழைத்துக் கொள்கிறார். கைவிடப்பட்ட மனிதர்களுக்குக் கைவிடப்பட்ட ஒருவரே துணையாக இருப்பார் என்ற படத்தின் மையக்கதை இந்த உறவின் வழியாக அழகாகச் சுட்டப்படுகிறது

லெவி அந்த ஊரைச்சுற்றிப் பார்க்கும் போது பாதைகள் வளைந்து வளைந்து செல்வதைக் காணுகிறார். எந்தப் பாதையும் வெளியேறிப் போகும் வழியில்லை. அது சுழல்வழி போலப் புதிரானது என்பதை உணருகிறார். இன்னொரு காட்சியில் கைவிடப்பட்ட தேவாலயம் பற்றிப் பாதிரியார் அவரிடம் பேசுகிறார். பாதிரியார் மீது மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அந்தப் பாதிரியாரைக் காணும் போது செல்மா லாகெர்லாவ் எழுதிய மதகுரு நாவலில் வரும் கெஸ்டா பெர்லிங் பாதிரி நினைவிற்கு வந்து போனார். ஒரே வார்ப்பில் உள்ள இரண்டு கதாபாத்திரங்கள்

இன்னொரு காட்சியில் லெவி மயானத்திலிருந்த ஒரு குழியில் போய்ப் படுத்துக் கொள்கிறார். அது தான் தொந்தரவு இல்லாத இடம் என்கிறார். அங்கேயும் காவலர்கள் அவரைப் பின்தொடருகிறார்கள்.

வரி வசூல் செய்யும் ஆளின் வருகையும் அவர் தனது சொந்த வாழ்க்கை பற்றிப் பேசுவதும் லெவிற்கு உதவி செய்ய முற்படுவதும் அழகானதொரு காட்சி.

லெவியின் சகோதரி லூயிசா பல மாதங்களுக்குப் பிறகு அவரைப் பார்க்க வருகை தருகிறாள். அவளும் ஒரு மருத்துவரே. அவள் தங்கியிருந்த சில நாட்களில் அவள் வழியாக அந்த ஊரிலுள்ள பெண்களின் நிலை மற்றும் அவர்களின் நம்பிக்கைகள் வெளிப்படுத்தப்படுகின்றன. உண்மையில் அவளது வருகையும் அவளது ஆலோசனைகளுமே லெவியை மாற்றுகின்றன.

இதற்கிடையில் ஆப்பிரிக்காவில் நடைபெறும் போர் குறித்த பாசிச பிரச்சாரத்தின் குரல்கள் ரேடியோக்கள் மற்றும் ஒலிபெருக்கிகளில் ஒலிக்கின்றன. அந்த அச்சம் மக்கள் கண்களில் பிரதிபலிக்கிறது

அந்த ஊரில் ஒரேயொருவர் மட்டுமே கார் வைத்திருக்கிறார். அவரது உதவியால் மட்டுமே வெளியூர்களுக்குப் போய்வர முடியும். அதை வைத்து அவர் சம்பாதிக்கிறார். அந்தக் காரில் தான் லெவி ஆரம்பத்தில் வருகை தருகிறார். அந்தக் கார் ஒரு குறியீடு. நெருக்கடிகளை வைத்தும் சம்பாதிக்க முடியும் என்பதன் அடையாளம்.

லெவி படத்தின் முடிவில் ஊரைவிட்டு வெளியேறும் போது அந்த மக்களை நன்றாகப் புரிந்து கொள்கிறார். அவர்களும் அன்போடு விடை தருகிறார்கள். படம் முழுவதும் லெவி தனக்குத் தானே பேசிக் கொள்கிறார். யோசனை செய்தபடியே இருக்கிறார். நினைவிலிருந்த மனிதர்களை ஓவியமாக வரைகிறார்.

தலைமறைவு வாழ்க்கையில் இருக்கும் மனிதர்கள் பெரும்பாலும் கடந்தகால நினைவுகளுக்கும் எதிர்காலக் குழப்பங்களுக்கும் இடையில் சஞ்சரிக்கக் கூடியவர்கள். அதுவும் இது போன்ற தண்டிக்கப்பட்ட நிலையில் உள்ள ஒருவனுக்குத் தனது தண்டனைக்காலம் எப்போது முடியும் என்று தான் யோசனையாக இருக்கும். லெவியும் அப்படித்தானிருக்கிறார்.

ஆனால் பெரிய அலையொன்று உள்ளே இழுத்துக் கொள்வது போல அங்குள்ள வாழ்க்கை அவரை உள்ளே இழுத்துக் கொள்கிறது. பங்குபெற வைக்கிறது. கைதியாக உள்ள அவர் மருத்துவம் பார்க்க நகரின் மேயர் அனுமதி தருகிறார். உண்மையில் அது ஒரு சலுகை. சட்டப்பூர்வமாக அதை அனுமதிக்க முடியாது என்றே மேயர் சொல்கிறார்.

காக்லியானோவில் காலம் உறைந்து போயிருக்கிறது. யுவான் ரூல்போவின் பெத்ரோ பரோமா நாவலில் வரும் அழிந்து போன ஊரேயே இந்த நிலவெளி ஞாபகப்படுத்துகிறது. இறந்தவர்கள் வாழும் நகரம் போன்றது தான் காக்லியானோ. அங்கே மனிதர்கள் மிகக்குறைவாகப் பேசுகிறார்கள். வீட்டுக்கதவுகள் மூடியே இருக்கின்றன. சிதிலமடைந்து போன குடியிருப்புகள். பசுமையே இல்லாத புறவெளி. அந்த ஊரில் தங்கள் பிள்ளைகளுக்கு யாரும் ஞானஸ்தானம் கூடச் செய்வதில்லை. மதகுருவோ ஒரு குடிகாரர். முதியவர்கள் கண்களில் விவரிக்கமுடியாத துயரம் பீறிடுகிறது.

கைவிடப்பட்ட மனிதர்களின் துயரவாழ்க்கையை இறுதியில் லெவி புரிந்து கொள்கிறார். தன் வாழ்க்கை நெருக்கடிகளை விடவும் அவர்களின் துயரம் அதிகமானது என்பதை நன்றாக உணருகிறார். தன்னுடைய அகத்தில் லெவி மேற்கொள்ளும் பயணமும் மீட்சியுமே படத்தின் தனித்துவம் என்பேன்.

தொலைக்காட்சிக்காக உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் நிறைய long takes உள்ளன. அது கதையை நகர்த்திச் செல்ல மிகச் சிறப்பாக உதவி செய்திருக்கிறது. மிகத்தேர்ந்த ஒளிப்பதிவும் இசையும் படத்தொகுப்பும் சிறந்த கலை அனுபவத்தை உருவாக்குகின்றன.

அரசியல் கைதியாகச் சைபீரியாவிற்கு நாடுகடத்தபட்டு முகாமில் தங்கிய அனுபவத்தைத் தஸ்தாயெவ்ஸ்கி விரிவாக எழுதியிருக்கிறார். அந்தக் குறிப்புகளில் காணப்படும் அதே உக்கிரமான அனுபவத்தைத் திரையின் வழியே உணர வைக்கிறார் ரோசி. அந்த வகையில் இப்படம் ஒரு மகத்தான கலைப்படைப்பு.

ஒரு படத்தில் எத்தனை லேயர்கள் என்று வியப்பாக இருக்கிறது. ஒவியங்கள் வழியே தனது நினைவுகளை மீட்கும் லெவியின் முயற்சி ஒரு தளம். கைவிடப்பட்ட நகரம் அங்கு வாழும் மக்களின் உலகம் ஒரு தளம். லெவி மருத்துவராகப் பணியாற்றும் அனுபவம் அவரது நோயாளிகள் இன்னொரு தளம். நகரத்தின் மேயர் அவரது சொந்தவாழ்க்கை, அரசியல் நெருக்கடிகள் இன்னொரு தளம். ஊரின் விசித்திரமான நம்பிக்கைகள். தேவாலயம் பாதிரி சிறார்கள் இன்னொரு தளம். லெவி தங்கியுள்ள வீடு. அவருக்கு உணவும் உறைவிடமும் தந்த பெண். அவருடன் தங்கும் பயணி இன்னொரு தளம். இப்படி லேயர் லேயராகக் கதாபாத்திரங்கள் பின்னப்பட்டிருக்கிறார்கள். அத்தனையும் கச்சிதமாக, நுட்பமாக உருவாக்கப்பட்டிருப்பதே பிரான்செஸ்கோ ரோஸியின் வெற்றி என்பேன்

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 29, 2021 00:24

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.