S. Ramakrishnan's Blog, page 139

March 28, 2021

ஆங்கிலத்தில்

சாகித்ய அகாதமி நடத்தும் Indian literature இதழில் எனது சிறுகதை The Betel Leaf parrot  வெளியாகியுள்ளது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 28, 2021 18:58

சித்ரலேகாவின் வகுப்பறைகள்

புதிய சிறுகதை

அன்றோடு இருபத்தைந்து வருஷம் துவங்கியிருந்தது.

சித்ரலேகா டீச்சராக வேலைக்குச் சேர்ந்து இருபத்தைந்து வருஷங்களாகி விட்டது. இந்த நாளை எப்படிக் கொண்டாடுவது என்று தெரியவில்லை.

புதுச்சேலையை எடுத்துக் கட்டிக் கொண்டு கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். அவளது கணவருக்கோ, பிள்ளைகளுக்கோ அந்த நாள் முக்கியமானதில்லை. யாரும் நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவளால் அந்த நாளை எப்படி மறக்க முடியும்.

வேலைக்கு ஆர்டர் வாங்கிக் கொண்டு முதல்நாள் சென்ற போதும் இப்படிப் புதுப்புடவையைத் தான் கட்டிக் கொண்டாள். வேலை கிடைத்தால் கட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே மாம்பழக்கலர் சேலை ஒன்றை வாங்கி வைத்திருந்தாள்.

இன்று அதே நிறத்தில் புதுச்சேலையை உடுத்தியிருந்தாள். காலம் மாறினால் விருப்பம் மாறிவிடுகிறதா என்ன.

அன்றைக்குத் தலையில் இப்படி நரைமயிர் தோன்றியிருக்கவில்லை. முகமும் உடலும் அவ்வளவு பொலிவாக இருந்தது. ஆனால் இப்போது முகம் விரிந்து போயிருக்கிறது. புருவங்கள் தடித்துக் கண்களின் அடியில் தொங்கு சதை பெரியதாகிவிட்டது. அதிலும் கண்ணாடி அணிந்த பிறகு அவள் முகத்தை அவளுக்கே பிடிக்கவில்லை.

பழைய புகைப்படங்களை எடுத்துப் பார்க்கும் போது அதில் எவ்வளவு ஒல்லியாக இருந்திருக்கிறோம் என்று ஆதங்கப்பட்டுக் கொள்வாள். இந்த மாற்றங்களைத் தவிர மனது பெரியதாக மாறிவிடவில்லை.

கல்லூரியில் படிக்கப் போவதற்கு முன்பாகவே அவள் டீச்சராகத் தான் வேலைக்குப் போக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். அவளது சித்தி சித்தப்பா இருவரும் டீச்சர்கள். அவர்கள் பிள்ளைகளும் டீச்சர்கள். ஆகவே தானும் பிஎட் படித்து டீச்சராக வேண்டும் என்று தான் ஆசை கொண்டிருந்தாள்

இதற்காகவே பிஎட் படிக்கச் சேலம் சென்று விடுதியில் தங்கிப் படித்துவந்தாள். சி.கே.எம் பள்ளியில் ஆசிரியராக வேலை கிடைத்து அவள் சேர்ந்த போது வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் போய்வருவதற்காகச் சைக்கிள் வாங்கிக் கொண்டாள். ஆனால் திருமணத்திற்குப் பிறகு அவள் சைக்கிளில் பள்ளிக்குப் போகவில்லை. அவளது கணவரே பைக்கில் கொண்டு போய்விட்டு வந்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகப் புது ஸ்கூட்டி ஒன்று வாங்கிக் கொண்டாள். அதில் தான் இப்போது பள்ளிக்கு போய் வருகிறாள்.

நேற்று தான் டிரைனிங் முடித்து வேலைக்கு ஆர்டர் வாங்கியது போலிருக்கிறது. காலம் கரைந்தோடி விட்டது. வேலைக்குச் சேர்ந்த நாட்களில் சித்ரலேகாவிற்குள் இருந்த தயக்கம் பயம் கவலை எதுவும் இப்போதில்லை. பள்ளிக்கூடம் இல்லாத நாட்கள் தான் வெறுமையாக இருந்தன. கற்றுக் கொடுப்பது எவ்வளவு ஆனந்தமானது என்பதை அவள் நன்றாக உணர்ந்திருந்தாள்.

சிகேஎம் பள்ளியை தாமோதர முதலியார் அறக்கட்டளை நடத்தி வந்தது. அது இருபாலர் பள்ளி. தமிழ் வழிக் கல்வி பயிற்றுவித்தார்கள். பத்தாம் வகுப்பு வரையிருந்தது. ஐநூறு மாணவர்களுக்கும் மேலாகப் படித்தார்கள். பெரும்பாலும் சுற்றியிலுள்ள கிராமப்புறத்திலிருந்து வந்து படிக்கும் பிள்ளைகள். மற்ற பள்ளிகளைப் போல இங்கே அதிகக் கட்டணம் கிடையாது. ரிசல்ட் சதவீதமும் அதிகம்.

அவள் வேலைக்கு வந்து சேர்ந்த போது இரண்டே கட்டிடங்கள் தான் இருந்தன. விளையாட்டு மைதானமும் சிறியது. தற்போது புதிதாக நான்கு கட்டிடங்கள் உருவாகியிருக்கின்றன. மைதானத்தையும் பெரியது பண்ணி சுற்றுச்சுவர் எழுப்பியிருக்கிறார்கள். சைக்கிள் நிறுத்துமிடம், பிரேயர் ஹால் எல்லாமும் புதியதாகக் கட்டியதே. அமெரிக்காவில் வசிக்கும் ஒருவர் கொடுத்த கொடையால் கம்ப்யூட்டர் பிளாக் புதிதாகக் கட்டப்பட்டிருக்கிறது.

அவளுடன் வேலைக்கு வந்து சேர்ந்த டீச்சர்களில் இரண்டு பேர் மட்டுமே அங்கே பணியாற்றுகிறார்கள். மற்றவர்கள் அரசு வேலை கிடைத்துப் போய்விட்டார்கள். சிலர் அதிகச் சம்பளம் கிடைக்கிறது என ஆங்கிலப் பள்ளிகளுக்குச் சென்றுவிட்டார்கள். ஆனால் சித்ரலேகாவிற்கு அந்தப் பள்ளியைப் பிடித்துப் போய்விட்டது

வழக்கமாகக் காலை எட்டு முப்பதிற்குத் தான் அவள் பள்ளிக்குச் செல்வாள். இன்று ஏனோ எட்டுமணிக்கே போய்விடலாம் என்று தோன்றியது.

ஒருமுறை அவளைத் தலைமை ஆசிரியர் பொறுப்பிற்குக் கூடச் சிபாரிசு செய்தார்கள். அவள் தான் அந்த வேலையை ஏற்க முடியாது என்று பள்ளி நிர்வாகியிடம் மறுத்துவிட்டாள். அதில் அவள் கணவருக்குக் கூடக் கோபம். தலைமை ஆசிரியராக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டால் வகுப்பு எடுக்க முடியாது. நிர்வாக வேலைகளைக் கவனிக்கவே நேரம் போதாது. அந்தப் பணி உயர்வு தனக்கு வேண்டாம் என்று சித்ரலேகா உறுதியாக இருந்தாள்

அவளது பள்ளியில் தான் அவள் மகள் ரோஷினியும் படித்தாள். அவளுக்கு வகுப்பு எடுக்கும் போது சித்ரலேகாவிற்கு என்னவோ போலிருந்தது. ஒரு போதும் மகளின் கண்களை ஏறிட்டு பார்க்க மாட்டாள். வகுப்பறையில் மகளிடம் பேச மாட்டாள். அவளது பரிட்சைப் பேப்பரைத் திருத்தும் போது கூடக் கூச்சமாகவே இருக்கும். தாயாக நடந்து கொள்வதா அல்லது கண்டிப்பான ஆசிரியராகப் பேப்பரை திருத்த வேண்டுமா என்று தடுமாறுவாள். சில நேரம் அவள் பரிட்சை பேப்பரில் செய்துள்ள தவறுகளைத் திருத்த கைகள் துடிக்கும். ஆனால் திருத்த மாட்டாள். உரிய மதிப்பெண்ணை மட்டுமே வழங்குவாள்.

தன் மகள் ஏன் படிப்பில் ஆர்வம் காட்டவேயில்லை. ஒரு வகுப்பில் கூட முதல்மாணவியாக வரவில்லையே என்ற ஆதங்கம் அவளுக்குள் இருந்தது.

சராசரியான மதிப்பெண் எடுத்து பொறியியல் கல்லூரி ஒன்றில் பணம் கொடுத்துச் சீட் வாங்கிப் படித்து இப்போது சென்னையில் வேலை செய்யத் துவங்கிவிட்ட மகளை இந்தக் காலையில் நினைத்துக் கொண்டாள். மகன் அரவிந்த் தற்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அவனை மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தான் படிக்க வைத்தார்கள். அது கணவரின் விருப்பம். அவள் அதைத் தடுக்கவில்லை.

தன் வாழ்வின் அதிகபட்ச மணித்துளிகளை வகுப்பறைக்குள் தான் செலவழித்திருக்கிறோம் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வாள்.

படிக்கும் நாட்களிலும் சரி வேலை செய்யும் போதும் சரி வகுப்பறை என்பது அவளுக்குப் பிடித்தமான உலகம். ஆசிரியரின் செல்லப்பிள்ளையாகவே அவள் படித்தாள். வகுப்பில் சிலரின் பெயரைச் சொல்லி டீச்சர் பாராட்டும் போது கிடைக்கும் சந்தோஷம் அலாதியானது. அப்படி அவள் பெயரை டீச்சர்கள் சொல்லிப் பாராட்டும் போது தரையில் கால்கள் நிற்காது. வானில் பறப்பது போலிருக்கும்.

அவள் டீச்சரான பிறகு மாணவிகளுக்குக் காய்ச்சல் என்ற தொட்டுப்பார்ப்பாள். அவர்களின் தலையைத் தடவிவிடுவாள். தண்ணீர் கொடுப்பாள். சில நேரம் மாணவிகளைத் தானே ஸ்கூட்டில் அழைத்துக் கொண்டு போய் வீட்டில் விட்டு வருவதும் உண்டு.

பள்ளிக் கூடத்தில் அவளது பிரச்சனை மாணவர்கள் அல்ல. உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள். அவர்கள் ஏன் இப்படிப் பொறாமையோடும் ஆத்திரத்தோடும் நடந்து கொள்கிறார்கள். வாய்க் கூசாமல் பொய் சொல்லுகிறார்கள். வம்பு பேசுகிறார்கள் என்று கவலையாக இருக்கும். இதற்காகவே அவள் யாருடனும் பழகமாட்டாள்.

ஸ்டாப் ரூமிற்குள் போவது என்றாலே அச்சமாக இருக்கும். இதற்காகவே அவள் ஸ்டாப் ரூமில் அவளது நாற்காலியை ஜன்னலை ஒட்டிப் போட்டிருந்தாள்..

அவளுக்கு ஏதாவது சிறு உதவி தேவை என்றால் கூட ஹெச்எம்மிடம் போய்த் தான் கேட்பாள். அவர் ரொம்பவும் தன்மையான மனிதர். அவளுக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார்.

அந்தப் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை செய்த பிரான்சிஸ் மற்றும் விளையாட்டு ஆசிரியராக வேலை செய்த சரவணன் இருவரும் நெருக்கமான நண்பர்கள். ஒன்றாகத் தான் சாப்பிடுவார்கள். தோளில் கைபோட்டு பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் இருந்தவரை சில நேரம் அவர்களுடன் பேசுவாள். வீட்டில் ஏதாவது செய்து எடுத்து வந்தால் அவர்களுக்கும் சாப்பிடக் கொடுப்பாள். ஆனால் அவர்களும் வம்புப் பேச்சிற்கு உள்ளாகி பள்ளியை விட்டுப் போய்விட்டார்கள்.

வேலையை விட்டு போகும் போது பிரான்சிஸ் அவளிடம் சொன்னார்

“டீச்சர் உங்களை என் சிஸ்டர் மாதிரி நினைச்சி சொல்றேன். நல்ல ஸ்கூலா பாத்து போயிடுங்க. இங்கே மனுசன் வேலை செய்ய முடியாது“

அவளுக்கு அந்த ஸ்கூலை விட்டு போக விருப்பமில்லை. எங்கே போனாலும் இதே பொறாமையும் வம்புப் பேச்சும் புறணியும் போய்விடாது தானே.

••

அவள் பள்ளிக்குள் ஸ்கூட்டியில் நுழைந்தபோது எதிர்ப்பட்ட மாணவர்கள் குட்மார்னிங் சொன்னார்கள். அந்த வணக்கம் அவளைச் சந்தோஷப்படுத்தியது. அவள் மரத்தடியை ஒட்டி தனது ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு ஸ்டாப ரூமிற்குள் சென்றாள்

வேலைக்குச் சேர்ந்து இருபத்தைந்து வருஷமாகிவிட்டதை யாரிடமாவது சொல்லலாமா என்று நினைத்தாள். பிறகு ஏன் சொல்ல வேண்டும் என்று நினைத்து தனது டிபன் பாக்ஸையும் நோட்டு புத்தகங்களையும் தனது மேஜை மீது வைத்தபடியே வெளியே விளையாடிக் கொண்டிருக்கும் மாணவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இந்த உற்சாகம் நிகரற்றது. எவ்வளவு ஆனந்தமாக விளையாடுகிறார்கள். துள்ளித் திரிகிறார்கள். காலம் விரைவில் இவற்றை அவர்களிடமிருந்து பறித்துக் கொள்ளப்போகிறது. அதைப் பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள்.

சித்ரலேகா அன்றைக்கு என்ன பாடம் எடுக்க வேண்டும். வகுப்பறையில் என்ன பேச வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் வீட்டிலே திட்டமிட்டுக் கொள்வாள்

தமிழ்பாடத்தில் இடம்பெற்றுள்ள கவிதைகளை வெறும் மனப்பாடம் செய்யாமல் மனதில் ஆழமாகப் பதியும் படி பாட வேண்டும் என்று நினைப்பாள். இதற்காக வகுப்பறையில் அவள் பாடுவதும் உண்டு. ஆனால் அதையும் ஒரு முறை புகார் செய்திருந்தார்கள். மரகதவள்ளி டீச்சர் தான் புகார் செய்தவள். அவள் வகுப்பிற்கு இடையூறாக இருக்கிறது என்று சொன்னாள்.

மரகதவள்ளி டீச்சர் வகுப்பறைக்கு வந்தாலே தலைவலி தைல வாசனை வரும். எந்நேரமும் தலைவலி என்று தைலம் தடவிக் கொண்டிருப்பவள். அவளுக்குச் சித்ரலேகா பாடியது பிடிக்கவில்லை. ஹெச்எம் அதன் பிறகு வகுப்பறையில் பாடக்கூடாது என்று உத்தரவிட்டார்.

சில நேரம் அவள் பாடம் நடத்தி முடித்தபிறகு மாணவர்களுடன் பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பாள். சொந்த வாழ்வின் கஷ்டங்களைக் கூட மாணவர்கள் சொல்வதுண்டு.

ஒருமுறை மாணவி ஒருத்தியின் வீட்டுக்கஷ்டத்திற்காக ஐநூறு ரூபாய் பணம் கொடுத்து உதவினாள். அந்த மாணவியின் அம்மா சில நாட்களுக்குப் பிறகு மார்க்கெட்டில் அவளைச் சந்தித்துக் கைகூப்பி நன்றி சொன்னாள். அடுத்தச் சில வாரங்களுக்குப் பிறகு அந்த மாணவி தான் கடன் வாங்கிய ஐநூறு ரூபாயை திருப்பிக் கொடுத்தாள்.

அதைக் கவனித்துவிட்ட ஒரு டீச்சர் மாணவிகளிடம் அவள் பணம் பறிக்கிறாள் என்று ஒரு புகாரைச் சுமத்தினாள். இதற்கு விசாரணை எல்லாம் நடந்த்து. அந்த மாணவியை மட்டுமின்றி அவள் அம்மாவையும் அழைத்து விசாரணை செய்தார்கள். முடிவில் இது போல மாணவர்களுக்கு டீச்சர் கடன் கொடுத்து உதவி செய்யக்கூடாது என்று பொது உத்தரவு பிறப்பிக்கபட்டது.

ஒருவரின் கஷ்டத்தைக் கேள்விபட்டபிறகு எப்படி உதவி செய்யாமல் இருப்பது. ஆனால் இந்த உத்தரவிற்குப் பயந்து சித்ரலேகா சம்பந்தப்பட்ட மாணவரை தன் வீட்டிற்கு வரச்சொல்லி உதவி செய்வதை வழக்கமாக்க கொண்டிருந்தாள்.

அந்தப் பள்ளியில் வேலாயுதம் சார் அவரது மனைவி கோமளா இருவரையும் கண்டு மற்ற ஆசிரியர்கள் பயந்தார்கள். காரணம் எவரோடும் வம்பு சண்டையிட்டு பெரிதாக்கிவிடுவார்கள். வேலாயுதம் சாருக்கு ஊரின் பெரிய மனிதர்களுடன் நெருக்கமான தொடர்பு இருந்தது. அதைவிடவும் பள்ளி நிர்வாகிகளே அவரைக் கண்டு பயந்தார்கள்.

ஆகவே வேலாயுதம் சாரோ, கோமளா டீச்சரோ பள்ளிக்கு வரவில்லை என்றால் கூட யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள். வகுப்பறையிலும் அவர்கள் அக்கறையாகப் பாடம் நடத்துவதில்லை. அதுவும் வேலாயுதம் சார் வட்டி பிசினஸ் துவங்கிய பிறகு அவரது கவனம் முழுவதும் அதிலேயே போய்விட்டது

அவரது வகுப்பினையும் சேர்த்துச் சித்ரலேகா பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இத்தனை நெருக்கடிகள். பொறாமை, வம்பு வழக்குகள் இருந்தபோதும் மாணவர்கள் அவளைச் சந்தோஷப்படுத்தினார்கள். வகுப்பில் அவளுக்குப் பிடித்தமான சில மாணவர்கள் இருந்தார்கள். அவர்கள் நன்றாகப் படிப்பதைக் கண்டு அவள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். சிலருக்கு பேனா, ஸ்கூல் பேக் போன்றவற்றை வாங்கித் தந்திருக்கிறாள்.

படிக்கவே  மாட்டார்கள் என்று  கடைசி பெஞ்சில் ஒதுக்கி வைத்திருக்கிற மாணவர்கள் கூட அவளது அக்கறையால் படித்தார்கள். அது போல மாணவர்களை அவள் ஒருபோதும் மோசமாக திட்டவோ அடிக்கவோ மாட்டாள். வகுப்பில் கோபம் அதிகம் வந்தால் சாக்பீஸை உடைத்துப் போடுவாள். அவ்வளவு தான் அவளது கோபத்தின் வெளிப்பாடு.

ஒருமுறை அவளது திருமண நாளை ஒட்டிய ஞாயிற்றுகிழமையில் ஆறாம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தன் வீட்டிற்கு அழைத்துப் பிரியாணி செய்து கொடுத்தாள். அந்தப் பிள்ளைகள் முகத்தில் தான் எவ்வளவு சந்தோஷம். அவர்கள் எல்லோரும் ஒன்றாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அந்த நாளை அவளால் மறக்க முடியவேயில்லை

அவளிடம் படித்த மாணவிகள் வெளியே எங்கே அவளைச் சந்தித்தாலும் டீச்சர் டீச்சர் என்று அன்பை வெளிப்படுத்தினார்கள். ஒருமுறை பேருந்தில் சந்தித்த சாரதா என்ற மாணவி தன் கைக்குழந்தையை அவளிடம் கொடுத்து ஆசி கேட்டாள். மூக்கு ஒழுக குட்டிப்பெண்ணாகப் பள்ளிக்கு வந்த சாரதா வளர்ந்து படித்துத் திருமணமாகி கைக்குழந்தைக்குத் தாயாகிவிட்டாள் என்ற வியப்போமு அந்தக் குழந்தைக்கு ஆசி கொடுத்து அதன் கையில் ஒரு நூறு ரூபாயை திணித்துவிட்டாள்.

சாரதா நெகிழ்ச்சியோடு இருக்கட்டும் டீச்சர் இதெல்லாம் எதுக்கு என்று மறுத்தாள். அந்தக் குழந்தையை நீண்ட நேரம் சித்ரலேகா தன் மடியிலே வைத்துக் கொண்டுவந்தாள். பெற்றபிள்ளைகளை விடவும் மாணவர்கள் காட்டும் அன்பு உயர்வானது தான் போலும்.

இன்னொரு முறை அவள் தாலுகா அலுவலகத்தில் ஒரு வேலையாகப் போன போது அங்கே வேலைக்கு இருந்த அவளது மாணவி பத்மப்ரியா ஒடிவந்து கையைப் பிடித்துக் கொண்டு சேரில் அமர வைத்து டீ வாங்கிக் கொடுத்து ஐந்து நிமிசத்தில் வேலையை முடித்துக் கொடுத்துவிட்டதோடு தன்னோடு வேலை பார்க்கிறவர்களிடம் எல்லாம் எங்க டீச்சர் என்று பெருமையோடு சொல்லிக் கொண்டிருந்தாள். இது தானே இந்த வேலையில் கிடைத்த பரிசு. மகிழ்ச்சி

கடந்தகாலத்தின் நினைவுகளில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சித்ரலேகாவை விழிப்படையச் செய்வது போலப் பள்ளிக்கூட மணி அடித்தது. தன் வகுப்பறைக்குள் நுழையும் போது மாணவர்களிடம் தான் வேலைக்குச் சேர்ந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆனதைச் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்

••

வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் அவளை அறியாமலே பாடப்புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பாடம் நடத்த துவங்கிவிட்டாள். ஒரேயொரு மாணவி அவள் புதுச்சேலை கட்டியிருப்பதைக் கண்டுபிடித்துவிட்டவள் போலச் சக மாணவியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். அவர்கள் ரகசியமாக அதைப் பற்றிப் பேசிக் கொண்டார்கள்.

அரைமணி நேரம் வகுப்பு எடுத்தபிறகு புத்தகத்தை மூடி மேஜையில் வைத்தபடி மாணவர்களைப் பார்த்து சிரித்தபடியே சொன்னாள்

“இன்னைக்கு ஒரு சந்தோஷமான நாள். என்ன சொல்லுங்க“

“உங்க கல்யாண நாளா டீச்சர்“

“இல்லை“

“ரிடயர்ட் ஆகப்போறீங்களா டீச்சர்“ என ஒரு மாணவன் கேலியாகக் கேட்டான்

“இல்லை“

“நீங்களே சொல்லுங்க டீச்சர்“ என்றாள் ஒரு மாணவி.

“இன்னைக்கோட நான் வேலைக்குச் சேர்ந்து 25 வருஷம் ஆகுது“

மாணவர்கள்“ ஹே“ என்று உற்சாகமாகச் சப்தமிட்டார்கள். ஒரு மாணவி எழுந்து நின்று சொன்னாள்

“டீச்சர் உங்க புதுப்புடவை நல்லா இருக்கு“

“ஸ்நேகா மாதிரி இருக்கீங்க டீச்சர்“ என்றான் ஒருவன்

இதைக்கேட்டு மற்ற மாணவர்கள் சப்தமாகச் சிரித்தார்கள். வகுப்பறையின் இறுக்கம் கலைந்து மெல்ல சிரிப்பும் வேடிக்கையும் பீறிடத்துவங்கியது.

“எப்போ ட்ரீட் தரப்போறீங்க டீச்சர்“ என்று ஒருவன் கேட்டான்

“சாக்லேட் கூடக் குடுக்கலை“ என்று ஒரு மாணவி ஆதங்கப்பட்டாள்

மாணவர்கள் உற்சாகமாகப் பேசுவது அவளை மகிழ்ச்சிப்படுத்தியது.

“என்ன ட்ரீட் வேணும்“ எனக்கேட்டர்ள்

“அசன் கடையில பரோட்டா. டீச்சர் நாம எல்லோரும் ஒண்ணா ஹோட்டல்ல போயி சாப்பிடுவோம். சூப்பரா இருக்கும்“

“எங்க வீட்ல பரோட்டா கடையில போய்ச் சாப்பிட விடமாட்டாங்கப்பா“ என்றாள் ஒரு மாணவி

“பரோட்டா. சுக்கா வறுவல். ஆம்லேட். சிக்கன் எல்லாம் வாங்கித் தரணும்“ என்று கேட்டான் ஒரு மாணவன்

இதுவரை அப்படி ஒருமுறை கூட மாணவர்களை ஒன்றாக ஒரு ஹோட்டலுக்கு அழைத்துக் கொண்டு போய்ச் சாப்பிட வைத்தது இல்லையே. அந்த ஏக்கம் மாணவர்களிடம் இருந்த்து. அதைச் செய்தால் என்ன என்று சித்ரலேகா யோசித்தாள்.

பள்ளிமுடிந்தபிறகு அவர்களை அழைத்துக் கொண்டு போவதற்குப் பள்ளிக்கூடத்திடம் ஏன் அனுமதி கேட்க வேண்டும்.

அடுத்த வாரம் நாம அசன் கடைக்குப் போய்ச் சாப்பிடுவோம் என்றாள் சித்ரலேகா

அதைக்கேட்ட மறுநிமிஷம் கைதட்டுப் பறந்தது. மாணவர்கள் உற்சாகமாகச் சப்தமிட்டார்கள் வகுப்பு முடிந்து வராண்டாவில் நடந்து கொண்டிருந்தபோதும் மாணவர்கள் வெளிப்படுத்த கைதட்டினை நினைத்தபடியே நடந்தாள். ஸ்டாப் ரூமில் ஒருவரிடமும் தான் வேலைக்குச் சேர்ந்து இருபத்தைந்து வருஷம் ஆனதைப் பற்றிச் சொல்லிக் கொள்ளவில்லை. அவர்களும் அவளைக் கண்டுகொள்ளவேயில்லை

••

அன்று மதியம் சாப்பிட்டு முடித்து மதிய வகுப்பிற்கான குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்த போது ஹெச்எம் ஸ்ரீனிவாசன் அவளைத் தன்னுடைய அறைக்கு அழைத்து வாழ்த்து சொன்னார்

“இந்த ஸ்கூல்ல உங்களுக்குப் பின்னாடி தான் நானே வேலைக்குச் சேர்ந்தேன். உங்க கூடச் சேர்ந்ததுல கணேசன் சாரும் பவானி டீச்சரும்  நீங்களும் தான் சீனியர். “

“எங்களுக்கு வேற போக்கிடம் கிடையாது சார் “என்று சொல்லி சிரித்தாள் சித்ரலேகா

“அப்படிச் சொல்லாதீங்க. மெஜஸ்டிக் ஸ்கூல் ஆரம்பிச்சப்ப கூட உங்களை வேலைக்குக் கூப்பிட்டாங்க. நீங்க தான் போகலை“

“எனக்கு இந்தப் பள்ளிக்கூடமே போதும்னு தோணுது சார்“

“உங்க சர்வீஸை பாராட்டு சின்னதா ஒரு டீபார்ட்டி தரலாம்னு நினைச்சேன். ஆனா நம்ம ஸ்கூலை பத்தி தான் தெரியுதே. எதைத் தொட்டாலும் பாலிடிக்ஸ்“.

“எனக்கு எதுக்குப் பாராட்டு பார்ட்டி. நீங்க கூப்பிட்டு பேசினதே போதும்“ என்று சித்ரலேகா தன் வகுப்பறைக்குக் கிளம்பினாள்

ஏழாம் வகுப்பினை கடந்த போது அந்த வகுப்பிற்கு ஆசிரியர் வரவில்லை என்று தெரிந்தது. கோமளா டீச்சர் வகுப்பது. மாணவர்கள் உரத்து சப்தமிட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு மாணவி எதற்கோ அழுது கொண்டிருந்தாள். அந்த வகுப்பினை கடந்து போக முடியாமல் உள்ளே நுழைந்த சித்ரலேகா அழுது கொண்டிருக்கும் மாணவியிடம் என்ன நடந்தது என்று விசாரித்தாள்.

மீனா  என்ற அந்த மாணவி தன்னை ஒரு மாணவன் மிக ஆபாசமாகத் திட்டியதாகச் சொல்லி அழுதாள்.

அந்த மாணவன் மீது வேறு சில மாணவிகளும் புகார் சொன்னார்கள்

வெடித்த உதடுகளை கொண்ட அந்த மாணவனை எழுப்பி விசாரித்தபோது அவன் முறைத்தபடியே சொன்னான்

“.நீங்க யாரு என்னைக் கேட்குறதுக்கு. நான் ஒண்ணும் உங்க கிளாஸ்ல படிக்கலை“

“இப்படிப் பேசுறது தப்பு“

“நான் அப்படித்தான் பேசுவேன். என்ன பண்ணுவே“ என்று அவளை முறைத்தான்.

அவளுக்குள் கோபம் பீறிட்டது. அந்தப் பையனிடம் அதைக் காட்டிக் கொள்ளாமல் சொன்னாள்

“மீனா கிட்ட மன்னிப்பு கேளு“

“கேட்க முடியாது. என்ன பண்ணுவீங்க“

“அப்போ என் கூடவா, ஹெச்எம்மை பாப்போம்“

“வரமுடியாது“

“நீயா வரலைன்னா. பசங்களை விட்டு இழுத்துட்டு போக வேண்டியதாகியிருக்கும்“

“என் மேல கையை வைக்கசொல்லு. பல்லை உடைச்சிருவேன்“ என்று அந்தப் பையன் கோபத்துடன் சொன்னான்.

அந்தப் பையனை எப்படிக் கையாளுவது எனப்புரியாமல் சித்ரலேகா திகைத்தபடியே அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்

அப்போது கலைந்த தலையோடு கோமளா டீச்சர் வகுப்பறைக்குள் நுழைந்தாள். பாதித் தூக்கத்தில் எழுந்து வந்தவள் போலிருந்தது அவளது முகம். ஐந்தடிக்குள் உயரம். பளபளவென்னும் மின்னும் ஊதா நிற சேலை. மிகவும் டைட்டான ஜாக்கெட் அகலமான மூக்கு கண்ணாடி. கை நிறைய தங்க வளையல்கள் கழுத்தில் இரட்டைவடச் சங்கிலி. கால்களை சற்றே அகட்டி நகட்டக்கூடியவள்.  வகுப்பிற்குள் வந்து நின்றபோது அவளுக்கு பெருமூச்சு வாங்கியது.

அவள் கடுத்த முகத்துடன் “இங்க என்ன பண்ணுறே. இது உன் கிளாசா“ என்று கேட்டாள்

“கிளாஸ்ல ஒரே கலாட்டாவா இருந்துச்சி. அதான் வந்தேன்“

“நான் என்ன செத்தா போயிட்டேன். என் கிளாஸ்ல என்னைக் கேட்காம வந்து என்கொயரி பண்ணிட்டு இருக்கே “

“இந்தப் பொண்ணு அழுதுகிட்டு இருந்துச்சி. நீங்க கிளாஸ்ல இல்லே அதான்“ என்று மீனாவை கையைக் காட்டினாள்

“அதை எல்லாம் நான் விசாரிச்சிகிடுவேன். நீ வெளியே போ“.

“அந்தப் பையன் ரொம்ப திமிரா பேசுறான். அவன் முதல்ல மன்னிப்பு கேட்கணும்“

“போன்னு சொன்னா.. போவியா.. என்ன ஒவரா பேசிகிட்டே போற. வெளியே போடீ “என்று சப்தமாகச் சொன்னாள்.

ஏன் இப்படி கத்துகிறாள் என குழப்பமானவளாக சித்ரலேகா சொன்னாள்.

“ஏன் இப்படிப் பேசுறீங்க. அப்படி நான் என்ன தப்புப் பண்ணிட்டேன்“

“ஊமை கோட்டான் மாதிரி இருந்துகிட்டு நீ என்னவெல்லாம் பண்ணிகிட்டு இருக்கேனு எனக்குத் தெரியாதா. யோக்கிய மயிரு மாதிரி பேச வந்துட்டா.  “

“மரியாதையா பேசுங்க டீச்சர்“

“யாருக்கு என்ன மரியாதை கொடுக்கணும்னு எனக்குத் தெரியும். நீ வெளியே போ“.

“ஏன் கத்துறீங்க நான் வெளியே போக முடியாது “

“ இந்த ராங்கிதனத்தை எல்லாம் வேற இடத்துல வச்சிக்கோ.. தலைமயித்தை பிடிச்சி வெளியே தள்ளிருவேன் பாத்துக்கோ“ என்று கோமளா டீச்சர் கத்தினாள். அவளது உரத்த சப்தம் அடுத்த வகுப்பிற்குக் கேட்டிருக்கக் கூடும். அந்த வகுப்பில் இருந்த கணேசன் சார் வெளியே வந்து எட்டிப் பார்த்தார். ஆனால் அவர்கள் சண்டையில் தலையிடவில்லை.

சித்ரலேகா உறுதியான குரலில் சொன்னாள்

“நம்ம சண்டையைப் பிறகு வச்சிகிடுவோம். இந்தப் பையன் மீனாவை கெட்டவார்த்தையில பேசியிருக்கான். அவன் மன்னிப்பு கேட்கணும்“

“தேவையில்லாத விஷயத்துல நீ ஏன் தலையிடுறே. உன் கிளாஸ்ல உள்ள பசங்க எல்லாம் யோக்கியமா. “

“எது தேவையில்லாத விஷயம். அந்தப் பையன் என்னையே எவ்வளவு பேசினான் தெரியுமா“

“உன் பஞசாயத்தைக் கொண்டு கிட்டு ஹெச்எம்கிட்ட போ, நான் ,இப்போ கிளாஸ் எடுக்கவா, வேணாமா.. வெளியே கிளம்பு“

“அப்போ ஸ்கூல்ல என்ன தப்பு நடந்தாலும் கண்ணை மூடிகிட்டு நான் போயிட்டு இருக்கணுமா“

“போடீனு சொல்றேன். ஊர் நியாயம் பேசிகிட்டு இருக்கே“ என்று மிக மோசமாகத் திட்டத் துவங்கினாள் கோமளா

சித்ரலேகா காதை பொத்திக் கொண்டாள். அது கோமளாவின் ஆத்திரத்தை மேலும் அதிகப்படுத்தியிருக்க வேண்டும். அவள் சித்ரலேகாவின் கையைப் பிடித்து இழுத்தாள். அவள் நகர மறுக்கவே வேகமாகப் பிடித்துத் தள்ளினாள்.

சித்ரலேகா தடுமாறி கதவின் மீது விழுந்தாள். இடது தொடைப்பக்கம் அடிபட்டது. அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. கதவைப்பிடித்தபடியே தரையில் உட்கார்ந்து கொண்டாள். அவளது செருப்பு விலகிப் போய் கிடந்தது. கை நடுங்குவதை மறைத்துக் கொண்டாள்.

“என்னடீ நாடகம் ஆடுறே“ என்று கோமளா டீச்சர் மோசமாகக் கத்திக் கொண்டிருந்தாள்.

அவளின் குரல் கேட்டு ஆசிரியர்கள் வகுப்பறையின் வெளியே ஒன்று திரண்டிருந்தார்கள். தலைமை ஆசிரியரும் வந்திருந்தார். இதற்குள் சி பிளாக்கில் இருந்து வந்து சேர்ந்த வேலாயுதம் சார் என்ன நடந்தது என்று எதையும் கேட்காமல் கண்டபடி சித்ரலேகாவை பேச ஆரம்பித்தார்.

“எதுவா இருந்தாலும் ஸ்கூல் முடிஞ்சபிறகு விசாரிச்சிகிடலாம்“ என்று அவரைச் சமாதானப்படுத்தினார் தலைமை ஆசிரியர்

சித்ரலேகா தன் இடத்தை விட்டு நகரமாட்டேன் என்பதில் பிடிவாதமாக இருந்தாள்.

“டீச்சர் எழுந்து வாங்க. பேசிகிடலாம் “என்றார் ஸ்ரீனிவாசன்.

அவள் எழுந்து கொள்ளவேயில்லை

பள்ளி நிர்வாகி ராமசுப்ரமணியத்தை அழைத்துவருவதாக ஒரு ஆசிரியர் கிளம்பிச் சென்றிருந்தார். அந்த வகுப்பு மாணவர்கள் சண்டையை வேடிக்கை பார்த்தபடியே இருந்தார்கள்

அன்று பள்ளிக்கூடமே மூன்றரை மணியோடு முடிந்து போனதாகப் பெல் அடித்தார்கள். மாணவர்கள் போனபிறகு சித்ரலேகாவை சமாதானம் செய்யும் விதமாகத் தலைமை ஆசிரியர் “நீங்க எந்திரிச்சி என் ரூமூக்கு வாங்க. நான் விசாரிக்கிறேன் “என்றார்

“கோமளா டீச்சர் மன்னிப்பு கேட்குற வரைக்கும் இந்தக் கிளாஸை விட்டு வரமாட்டேன் “என்றாள் சித்ரலேகா

“மன்னிப்பு கேட்க முடியாது. உன்னாலே ஆனதை பாரு“ என்று வேலாயுதம் கத்திக் கொண்டிருந்தார். பள்ளி ஆசிரியர்கள் சமாதானம் பேசியும் அவள் எழுந்து கொள்ளவில்லை. அவளை என்ன செய்வது எனத் தெரியாமல் தலைமை ஆசிரியர் குழம்பிப் போயிருந்தார்

கோமளாவை அழைத்துக் கொண்டு வேலாயுதம் பைக்கில் கிளம்பிப் போனார். ஒருவேளை நிர்வாகி வீட்டிற்குத் தான் போகிறார்களோ என்னவோ.

ஏன் தனது இருபத்தைந்தாவது ஆண்டுத் துவக்க நாள் அன்று இப்படி நடக்க வேண்டும். இந்த வேலையை இன்றோடு விட்டுவிடலாமா. ஒரு டீச்சர் இப்படியா சண்டைபோடுவார். தன் மீது அவர்களுக்கு என்ன கோபம். தன்னை ஏன் வெறுக்கிறார்கள். அவமானப்படுத்துகிறார்கள்.   அவளுக்கு நினைக்க நினைக்க வருத்தமாகவும் குழப்பமாகவும் இருந்தது.

ஆசிரியரும் மாணவனும் இப்படி மோசமாக நடந்து கொள்வதைக் கண்டிக்காமல் விட்டால் பிறகு டீச்சர் வேலை செய்து என்ன தான் பயன். விருப்பமில்லாதவர்கள் ஏன் ஆசிரியர் பணிக்கு வர வேண்டும். அவளால் கோமளா டீச்சரையும் அந்த மாணவனையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை. இருவருமே தண்டிக்கபட வேண்டியவர்கள் என்று நினைத்துக் கொண்டாள்

மாணவர்களும் ஆசிரியர்களும் கலைந்து போனபிறகு பள்ளியெங்கும் நிசப்தம் நிரம்பத்துவங்கியிருந்தது.

வகுப்பறையின் கதவுகளை மூடுவதற்காக வந்த ப்யூன் கூட அவள் உட்கார்ந்திருந்த வகுப்பை விட்டுவிட்டு மற்ற வகுப்பறைகளை மூடிக் கொண்டு போனான். பள்ளி நிர்வாகிக்காகத் தலைமை ஆசிரியர் காத்துக் கொண்டிருந்தாள். மாணவர்கள் வெளியேறிப் போன பிறகு பள்ளி வேறுரூபம் கொண்டுவிடுகிறது. வேப்பமரத்தில் ஒரு காகம் உட்கார்ந்து தனியே கரைந்து கொண்டிருந்தது.

வழக்கமாக இந்த நேரம் அவள் வீட்டிற்குப் போயிருப்பாள். இத்தனை ஆண்டுகளில் இன்று தான் பள்ளி முடிந்த பிறகும் அவள் வகுப்பறையில் இருக்கிறாள். ஆண்டுவிழாவின் போது பள்ளியில் இரவு நேரம் இருந்திருக்கிறாள். அன்று ஒரே உற்சாகமாக இருக்கும். இன்று திருவிழா முடிந்து போன மைதானம் போல வெறுமையாக இருந்தது.

மாலை மயங்கி இருள் வரத்துவங்கிய போது அவள் இருந்த வகுப்பறையில் மின்விளக்குக் கிடையாது என்பதை முதன்முறையாக உணர்ந்தாள். அந்த வகுப்பறையில் மின்விசிறிக் கிடையாது. மின்விளக்குக் கிடையாது. இந்த இருட்டிற்குள் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருப்பது. யாரோ விளையாடி வீசி எறிந்துவிட்ட பொம்மையைப் போலத் தன்னை உணர்ந்தாள்.

திடீரெனப் பள்ளி சுருங்கி சிறிய நத்தைக்கூடு போலாகிவிட்டதாகத் தோன்றியது. தலைமை ஆசிரியர் அறையில் வெளிச்சம் தெரிந்தது. அவர் தனியே காத்திருந்தார்.  இருட்டில் வேப்பமரங்களின் சலசலப்பை கேட்க விநோதமாக இருந்த்து. பள்ளியை ஒரு போதும் அவள் இப்படிப் பார்த்ததில்லை.

ஒருவேளை பள்ளி நிர்வாகியை அழைத்துக் கொண்டுவராவிட்டால் என்ன நடக்கும் என்று யோசித்தாள். யாரும் வராவிட்டாலும் இங்கேயே இரவு முழுவதும் தங்கிவிட வேண்டியது தான். வகுப்பறையில் ஒரு இரவைக் கழிப்பதை விட வேறு என்ன வேண்டியிருக்கிறது.

தன் வகுப்பறை என்பது ஒரு எல்லையா. அதைத் தாண்டி எதையும் தான் கண்டுகொள்ளக் கூடாதா. இது என்ன கட்டுபாடு.

யோசிக்க யோசிக்க அவளுக்கு வருத்தம் அதிகமாகிக் கொண்டே போனது.  இப்படியான ஆசிரியர்களால் தான் மாணவர்கள் படிப்பை விட்டு பாதியில் நின்றுவிடுகிறார்கள்.

வகுப்பில் படிக்கும் மாணவர்களில் யார் எதிர்காலத்தில் என்ன ஆவார்கள் என்று யாராலும் சொல்ல முடியாது. ஒருமுறை அவள் வகுப்பில் படித்த ஒரு மாணவி சாலை விபத்தில் இறந்துவிட்டாள். அவள் உடலை காணுவதற்காகப் பள்ளியே திரண்டு போயிருந்த்து. அந்த மாணவியின் உடலை பார்த்தபோது சித்ரலேகா அழுத அழுகைக்கு அளவேயில்லை.

இது எல்லாம் ஏன் இந்த இரவில் நினைவில் வருகிறது என்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் நம்பிக்கை தான் ஆசிரியர்களின் ஒரே துணை. நல்ல நினைவுகளின் சந்தோஷம் தான் மீண்டும் மீண்டும் பாடம் நடத்த வைக்கிறது என்பதை அவள் உணர்ந்திருந்தாள்.

பள்ளியை ஒட்டிய கட்டிடத்திலிருந்து வரும் வெளிச்சம் லேசாக ஊர்ந்து வராந்தா வரை வந்து கொண்டிருந்தது. எங்கோ கிணற்றுக்குள் இருப்பது போல உணர்ந்தாள். இரவுப்பூச்சிகள் எங்கிருந்தோ சப்தமிட்டுக் கொண்டிருந்தன. பள்ளியை ஒட்டிய வீட்டில் ஒடும் தொலைக்காட்சி பாடலின் சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

அவளைத் தேடி அவளது கணவர் பள்ளிக்கு வந்திருந்தார். நடைச் சப்த்த்திலே அவர் வகுப்பறையை நோக்கி வருவது கேட்டது

“என்ன சித்ரா இது. சின்னபுள்ளையாட்டாம். உன்னை யாரு அவங்க கூடச் சண்டை போட சொன்னது. உனக்கு எதுக்கு வேண்டாத வேலை“

“அந்த டீச்சர் என்ன பேச்சு பேசுனாங்க தெரியுமா“

“எல்லாம் ஹெச்எம் சொன்னாரு.. யாரு எக்கேடு கெட்டா உனக்கென்ன. நீ ஏன் ஒவரா ரியாக்ட் ஆகுறே“.

அவரிடம் சித்ரலேகாவால் விளக்கம் சொல்ல முடியவில்லை. சப்தமாக அழுதாள்.

நீண்ட நேரம் பேசி சமாதானம் செய்து அவளை வகுப்பறையிலிருந்து எழுந்து கொள்ளச் செய்தார். அவர்கள் வராண்டாவில் நடந்து வரும்போது தலைமை ஆசிரியர் சித்ரலேகாவின் கணவரை தனியே அழைத்துக் கொண்டு போய் ஏதோ பேசினார். பிறகு சித்ரலேகா தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது பள்ளியை பார்த்தாள்.

மிகவு

1 like ·   •  1 comment  •  flag
Share on Twitter
Published on March 28, 2021 01:55

March 26, 2021

செய்தியின் நிறம்.

புதிய சிறுகதை

தொலைவில் மஞ்சள் நிற வெளிச்சம் தெரிந்தது.

கண்ணாடியைச் சரி செய்தபடியே திவாகர் காருக்கு வெளியே பார்த்தான். ஒருவேளை அது உணவகமாக இருக்கக்கூடும்.

கடிகாரத்தைப் பார்த்தபோது பத்தரையைக் கடந்திருந்தது. இரவு ஏழு மணிக்கே அவனுக்குப் பசித்தது. ஆனால் வக்கீல் ஷியாம்பிரசாத்தை காணப் போக வேண்டும் என்பதால் சமோசா மட்டுமே சாப்பிட்டான். ஷியாம்பிரசாத் வீட்டில் மசாலா டீ கொடுத்தார்கள். மாலையிலிருந்து மூன்று நான்குமுறை டீ குடித்தாகிவிட்டது. அது நாக்கில் புளிப்புச் சுவையை உருவாக்கியிருந்தது.

பர்காம்புரா போவதற்கு இன்னும் ஒன்றரை மணி நேரமாகிவிடும். மழைநாளாக இருப்பதால் வழியில் உணவு கிடைக்குமா என்பது சந்தேகமே. நிச்சயம் அந்த மஞ்சள் வெளிச்சம் ஒரு தாபாவாகத் தான் இருக்ககூடும். ஏதாவது ரொட்டியை சாப்பிட்டுவிட்டுக் கண் அயர்ந்தால் பனிரெண்டிற்குள் அறைக்குப் போய்ச் சேர்ந்துவிடலாம். காலை ஏழு மணிக்கு எஸ்பி அதுல் பாண்டேயை சந்திக்க வருவதாகச் சொல்லியிருந்தான்.

சாலையில் வாகனங்களேயில்லை. புதிய பாலம் வேலை நடப்பதால் இந்த ரோடு வழியாக வாகனங்கள திரும்பிவிட்டிருந்தார்கள். இது தான் பர்காம்புரா செல்லும் பழைய பாதை. நாற்கரச் சாலை வந்தபிறகு இதைப் பயன்படுத்துகிறவர்கள் குறைந்துவிட்டார்கள். பிரதான சாலையில் இணைவதற்கு இன்னமும் பதினைந்து கிலோ மீட்டர் போக வேண்டும். வெகு தூரத்தில் இருண்ட வானில் தெரிந்த மங்கலான ஒளியைப் பார்த்துக் கொண்டிருந்தான். பசியில் சுரந்த அமிலம் வயிற்றை வலிக்கச் செய்து கொண்டிருந்தது.

பத்திரிக்கையாளர் வேலையில் அவன் சந்தித்த முக்கியப் பிரச்சனை. நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிடுவது. உறங்குவது இரண்டுமே. நிதானமாக, ருசித்து எப்போது சாப்பிட்டோம் என்று நினைவிலே இல்லை. அது போலத் தான் உறக்கமும் ஆழ்ந்து உறங்கி பல ஆண்டுகள் போய்விட்டன. கல்லூரி நாட்களில் ஹாஸ்டலில் இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கிக் கிடப்பான். பல நாட்கள் வகுப்பிற்கே போனதில்லை. உறக்கம் அவ்வளவு சுகமாக இருக்கும். சில ஞாயிற்றுகிழமைகளில் பகலில் கட்டிலை விட்டு எழுந்திருக்கவே மாட்டான். அந்தச் சுகமெல்லாம் மறைந்து போய்விட்டன. இப்போது அசதியில், களைப்பில் தான் உறங்கப்போகிறான். அதுவும் கெட்டகனவுகள் துரத்துகின்றன. பல நாட்கள் கனவில் சபதமிட்டு அலறியிருக்கிறான். சில நேரம் கனவில் கூட யாரிடமோ கேள்விகள் கேட்டபடியே இருப்பான்.

ஏன் ஆங்கிலப் பத்திரிக்கையாளர் பணியைத் தேர்வு செய்தோம். எதற்காக இப்படிச் செய்திகளைத் துரத்திக் கொண்டு அலைகிறோம். மாயமானை போலச் செய்திகள் வசீகரமாகயிருக்கின்றன. ஆனால் துரத்திப் போனால் மிஞ்சுவது ஏமாற்றமே..

அவனது வார இதழின் எடிட்டர் அன்வர் அலி, இந்தியாவின் மூத்த பத்திரிக்கையாளர், சராசரியான உயரம். வழுக்கை விழுந்த தலை. கறுப்புப் பிரேம் போட்ட கண்ணாடி. சற்றே பெரிய மூக்கு. முக்கால்கை சட்டை. கதர் பேண்ட். கையில் ஒரு பழைய குடையுடன் தான் அலுவலகம் வந்து போவார். மைப்பேனா மட்டுமே பயன்படுத்துவார். லண்டனில் படித்தவர் என்ற அடையாளமே கிடையாது. சாதாரண ரப்பர் செருப்புகள். சட்டை பையில் ஒரு சிவப்புப் பென்சில். துண்டு காகிதங்களில் தான் எழுதுவார்.

அவர் தொலைபேசியில் பேசும் போது அருகிலிருந்து திவாகர் அவரையே கவனித்துக் கொண்டிருப்பான். எதிரில் பேசுகிறவர் அவரை மிரட்டும் போதும் அன்வர் அலியிடமிருந்து ஒரு கடுஞ்சொல் வராது.

மிக மெல்லிய குரலில் தனது தரப்பை அவர் அழுத்தமாகச் சொல்லிக் கொண்டிருப்பார். அவரது கட்டுரைகளும் அப்படித் தான் இருந்தன. உண்மையைச் சொல்வதற்கு அவர் பயந்ததேயில்லை. துணிச்சல், தைரியம், உறுதியான நம்பிக்கை இவற்றையே அவர் இளம் பத்திரிக்கையாளர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.

திவாகர் அவரிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டிருந்தான். அவனது முதல் கட்டுரைத் தொகுப்பு வெளியான போது அதை அன்வர் அலிக்கே சமர்ப்பணம் செய்திருந்தான். அந்தக் கட்டுரை நூலை பிரஸ்கிளப்பில் வெளியிட்ட இரவில் அன்வர் அலி சொன்னார்

“திவா.. சர்க்கஸில் பார் விளையாடுபவனைப் போலத் தாவித்தாவி செல்லும் மொழி நடை உனக்குக் கைவந்திருக்கிறது. அது இளைஞர்களுக்குப் பிடிக்கும். இப்போது யார் விரிவாகவும் நுட்பமாகவும் எழுதுவதைப் படிக்கிறார்கள். பத்திரிக்கையாளனின் வேலை மீன்பிடிப்பது போன்றது. தூண்டிலை வீசி விட்டுப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். எந்த மீன் தூண்டிலில் மாட்டும் என்று யாருக்குத் தெரியும். சில நேரம் உன் தூண்டிலில் திமிங்கிலமும் மாட்டக்கூடும். அப்போது நீ தான் சாண்டியாகோ, திமிங்கிலத்துடன் சமர் செய்ய வேண்டியது வரும். ஹெமிங்வே நாவலில் சாண்டியாகோ தன் கைகளுடன் பேசுவான். பத்திரிக்கையாளனும் தன் கைகளும் பேச வேண்டியவனே.“

அவரது வீட்டில் இறக்கிவிடும்வரை அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டேவந்தான். வீட்டின் முன்பு டாக்சியை விட்டு இறங்கும் போது தன் பையிலிருந்த சிவப்பு பென்சிலை அவனிடம் கொடுத்து இது தான் எனது பரிசு என்றார். அந்தப் பென்சிலை தன் வாழ்நாளில் கிடைத்த பெரும் பரிசாக வைத்திருந்தான் திவாகர்.

••

சாலையின் இடப்புறம் எருமையொன்று படுத்து கிடப்பது போலத் தோன்றியது. கார் அதைக்கடந்த போது எருமையில்லை. கைவிடப்பட்ட தார்டின் கவிழ்ந்துகிடக்கிறது என்று தெரிந்தது. தோற்ற மயக்கங்கள் உண்மையில்லை. அதைப் பிரித்தரிய தெரிந்திருக்க வேண்டும். கண்ணுக்குத் தெரிகின்ற யாவும் கூட உண்மையாக இருக்க வேண்டும் என்றில்லை. தோற்றத்தைக் கடந்து உண்மை ஒளிந்திருக்கக் கூடும். அதற்கு ஆராய வேண்டும். கண்ணை மட்டுமே நம்பக்கூடாது.

கார் சீராகச் சாலையில் சென்று கொண்டிருந்தது. திவாகர் எத்தனையே இரவுகளை இப்படிக் காரில் பயணித்துக் கடந்திருக்கிறான். காரிலே உறங்கியிருக்கிறான். ஒருமுறை ஆப்கானிஸ்தானில் செய்தி சேகரிக்கச் சென்ற இரவில் அவன் கண்முன்னால் பாம் ஒன்று வெடித்துச் சிதறியது. நூறு அடி தூரத்தில் நின்றிருந்த வேனும் மனிதர்களும் சிதறிப்போனார்கள். பிய்த்து எறியப்பட்ட இரும்புத்துண்டு ஒன்று அவர்கள் காரின் கண்ணாடியில் விழுந்து கண்ணாடி சிதறியது. எங்கும் ஒலம். காரில் வெளிச்சத்தில் துண்டிக்கப்பட்டுக் கிடந்த கை ஒன்றைக் கண்டான். கண்ணாடி வளையல்கள் அணிந்த இளம்பெண்ணின் கையது. அந்தப் பெண் என்ன ஆனாள் எனத்தெரியவில்லை. ஆனால் அவளது கை துண்டிக்கப்பட்டுத் தனியே கிடந்தது. அந்தக் காட்சி மனதை நடுங்கச் செய்தது. சைரன் ஒலிகளுடன் வாகனங்கள் வரத்துவங்கின. ராணுவம் அந்த இடத்தைச் சுற்றிவளைத்துக் கொண்டது. காரில் அறைக்குத் திரும்பியதும் திவாகர் தன்னை மீறி அழுதான்.

திவாகர் மன உளைச்சல் அதிகமான நேரத்தில் யாருமற்ற இடம் தேடி நேபாளத்திற்குப் போயிருக்கிறான். மனிதர்களின் நடமாட்டமேயில்லாத பள்ளத்தாக்கில் ஒற்றை ஆளாகக் கூடாரம் அடித்துத் தங்கியிருக்கிறான். பரபரப்பிலிருந்து விடுபட்டு விடலாம் ஆனால் நினைவுகளிலிருந்து எப்படி விடுபடுவது. யாருமற்ற இடத்திலும் நினைவின் வழியே மனிதர்கள் மீண்டு எழுந்துவிடுகிறார்கள். கடந்தகாலத்தின் நினைவுகள் வழிநடத்தாத மனிதர்கள் எவரேனும் உண்டா என்ன.

ஏனோ அன்றைய இரவில் அன்வர் அலியை பார்க்க வேண்டும் போலத் தோன்றியபடியே இருந்தது..

••

டிரைவர் காரை ஒட்டியபடியே “அது ஒரு தாபா“ என்று சொன்னான்

“நாம் நிறுத்தி சாப்பிட்டுவிடுவோம். திரும்ப மழை வரும் போல இருக்கிறது“

“இரவில் பெய்யும் மழை நிற்காது“ என்றான் டிரைவர்

அவன் சொல்வது நிஜம். கடந்த சில நாட்களாகவே விட்டுவிட்டு மழை பெய்து கொண்டேதானிருக்கும்.

மழைக்காலத்தில் ஒரு நாள் என்பது மிகவும் சிறியதாகிவிடுகிறது. மழையில் வீடுகள். வீதிகள் சுருங்கிப்போகின்றன. மனிதர்களை விளையாட்டுப் பொருளைப் போல உருமாற்றுகிறது மழை. மழைக்கு ஒராயிரம் வேலையிருக்கிறது. மரத்தில் சிக்கிக் கொண்ட பட்டம் ஒன்றை மழை தன்விரலால் எடுத்து விடுகிறது. இன்னொரு இடத்தில் கழுவப்படாத சிலையை மழை சுத்தம் செய்கிறது. வேறு இடத்தில் மழை கல்உரல் ஒன்றைப் புரட்டிப் போடுவது போலச் சுற்றிவந்து கொண்டிருக்கிறது.

வாழை மரத்தில் மழை பெய்யும் போது பார்த்திருக்கிறீர்களா. மழையிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டுவிடுகிறது வாழை. தலை நிமிர்ந்து மழையைப் பார்ப்பதுமில்லை. வாழை இழையில் மழையின் துளிகள் சறுக்கி விளையாடுகின்றன. சில நேரம் இலையிலிருந்து எகிறி பூமியை நோக்கித் தாவும். அது ஒரு மாயநடனம். ஆம், மழை இயற்கையின் பெருநடனம்.

கடந்த பத்துநாட்களாகவே திவாகர் பர்காம்புராவை சுற்றிக் கொண்டேயிருந்தான். பர்காம்புரா குண்டுவெடிப்பு தொடர்பான கட்டுரை எழுதுவதற்காக உண்மையைச் சேகரித்துக் கொண்டிருந்தான். டெல்லியில் வேலை என்றாலும் மாசத்தில் பத்து நாள் இப்படி ஏதாவது ஒரு மாநிலத்தில் சுற்றிக் கொண்டிருக்க வேண்டியது தான்.

சிறந்த புலனாய்வு கட்டுரை எழுதியதற்காக இரண்டு முறை பிரஸ் கவுன்சில் விருதுகளையும் பெற்றிருக்கிறான். ஒரு முறை ஜப்பானிய அரசு அவனுக்குத் தங்கப் பேனா விருது அளித்துக் கௌரவித்திருக்கிறது. அவனுடன் பணியாற்றிய பலரும் அதிக ஊதியம் கிடைக்கிறது எனத் தொலைக்காட்சிகளுக்குப் போய்விட்டார்கள். அவனுக்குக் காட்சி ஊடகத்தை விடவும் அச்சு ஊடகமே பிடித்திருந்தது.

••

கார் அந்த மஞ்சள் வெளிச்சதை நெருங்கியது.

அது ஒரு பஞ்சாபி தாபா

டிரைவரை நிறுத்த சொல்லிவிட்டு தலையைக் கோதிவிட்டுக் கொண்டான். கார் பிரதான சாலையை விட்டு கிழே இறங்கியது. மண்சாலையது. ஈரத்தில் சேறும் சகதியுமாக இருந்தது. பழைய ஹிந்திபாடல் ஒன்றை ஒலிக்கவிட்டுக் கொண்டிருந்தார்கள். இரண்டு டியூப் லைட்டுகள் எரிந்து கொண்டிருந்தன. தகரக் கொட்டகை ஒன்றினுள். நாலைந்து கயித்துக் கட்டில் போட்டு வைத்து இருந்தார்கள், கட்டில் நடுவே ஒரு பலகை இருந்தது. கட்டிலில் இரண்டு பக்கமும் இருவர் அமர்ந்து கொண்டு சாப்பிடும் படி அமைந்திருந்தார்கள்.

காலியாகக் கிடந்த ஒரு கட்டிலில் அமர்ந்தபடியே சாப்பிட என்னகிடைக்கும் எனக்கேட்டான். சர்வர் வரிசையாக ஒப்புவித்துக் கொண்டிருந்த போது பரோட்டாவும் ஆலு சப்ஜியும் ஆர்டர் செய்தான். ஒரு கட்டில் அடியில் பூனை ஒன்று படுத்துகிடந்தது. அதை நோக்கி கையை அசைத்தான். பூனை அவனைக் கண்டுகொள்ளவேயில்லை.

•••

கடந்த பத்து நாட்களுக்குள் அவன் பர்காம்புரா குண்டுவெடிப்பு குறித்து நிறைய ரகசியங்களைக் கண்டுபிடித்திருந்தான். சில தகவல்கள் அவனுக்கே அதிர்ச்சியாக இருந்தன. குண்டுவெடிப்பு என்ற ஒற்றைச் செயலுக்குள் எத்தனையோ மனிதர்கள் பதுங்கியிருக்கிறார்கள்.

ஒருமுறை அன்வர் அலியிடம் திவாகர் கேட்டான்

“அதிகாரத்திலிருப்பவர்களுக்கு மனசாட்சியே கிடையதா குற்றவுணர்ச்சி அவர்களைக் கொல்லாதா. ஏன் இப்படி உண்மையைக் கொன்று புதைக்கிறார்கள்“.

அன்வர் அலி சிரித்தபடியே சொன்னார்

. “சிறுவனைப் போலப் பேசுகிறாய். மனசாட்சி என்ன டெல்லி ரேடியோவா எந்நேரமும் எதையாவது சொல்லிக் கொண்டேயிருக்க. அவர்களின் மனசாட்சி கல்லறையைப் போன்றது. அதனுள் முணுமுணுப்பேயில்லை, சலனமேயில்லை. உண்மையை ஆழத்தில் புதைத்து வைத்திருக்கிறார்கள். நாம் தான் மனசாட்சிக்கு பயப்பட வேண்டியிருக்கிறது“

அன்வர் அலி சொன்னது உண்மை.

உண்மையை அறிந்து கொள்வது கடினமானது. அதை விடவும் கடினமானது அதைப் பத்திரிக்கையில் வெளியிடச் செய்வது. அன்வர் அலி எடிட்டராக இருந்தவரை அவன் தைரியமாக உண்மையை எழுதிக் கொடுப்பான். ஆனால் புதிய எடிட்டராக ஷர்மிளா பாண்டே வந்தபிறகு அப்படி எழுத முடியவில்லை. ஒருவேளை எழுதிக் கொடுத்தாலும் அவள் வெளியிட மாட்டாள். ஷர்மிளா பாண்டே அமெரிக்காவில் படித்தவள். முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரின் மருமகள். அவளுக்குப் பத்திரிக்கை ஆசிரியர் வேலை என்பது அலங்காரமான பதவி மட்டுமே.

••

சம்பளத்தை விடவும் தன்னைச் சுதந்திரமாக எழுத அனுமதிக்கிறார்கள் என்பதால் திவாகர் பத்திரிக்கையிலே இருந்தான். இந்தியா முழுவதும் அவனுக்கென வாசகர்கள் இருந்தார்கள். அரசியல் தலைவர்கள் பலரும் அவனது கட்டுரைகளை வாசித்துப் பாராட்டியிருக்கிறார்கள். அவனது சில கட்டுரைகள் ஒரே நேரம் ஆறு மொழிகளில் மொழியாக்கம் செய்து வெளியிடப்படுவதும் உண்டு.. .

திவாகர் தனது பத்திரிக்கையுலக அனுபவத்தில் ஒன்றேயொன்றை உறுதியாகக் கற்றுக் கொண்டிருந்தான். எந்தச் செய்தியையும் நம்பக்கூடாது. சந்தேகிக்க வேண்டும். செய்தியினுள் மறைந்துள்ள புலப்படாத விஷயங்களை, மனிதர்களை அடையாளம் காண வேண்டும். அவற்றில் எதைக் கவனப்படுத்த வேண்டுமோ அதைக் கவனப்படுத்த வேண்டும். உண்மையைத் தேடிக்கண்டறிவதே தனது பணி.

எல்லாத் தினசரி செய்தித் தாள்களும் மரண ஓலைகளே. ஒரு நாளில் வாசகன் எத்தனை மரணச் செய்திகளை வாசிக்கிறான். கொலையைத் தன் வாழ்நாளில் ஒருமுறை கூடக் கண்டிராத பொதுமக்கள் அன்றாடம் பத்திரிக்கைகள் வழியாகக் கொடூரமான கொலைகாரர்களைப் பற்றி அறிந்து கொள்கிறார்கள். கொலையாளி பெண்ணா இருந்தால் அவளை ரசிக்கிறார்கள். அவளைப் பற்றித் திரைப்படம் உருவாக்குகிறார்கள்.

மக்கள் பத்திரிக்கைகளை நம்புகிறார்கள். பத்திரிக்கையாளன் என்பவன் உண்மையைக் கண்டறிந்து சொல்பவன் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அரசு, அதிகாரம் எதற்கும் பயப்படாதவன் என நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதை மெய்ப்பிக்கும் விதமாகச் செயல்படுகிற பத்திரிக்கையாளர்கள் ஒரு சிலரே. திவாகர் இதுவரை அப்படி தானிருந்தான். அவனுக்கு எவரையும் பற்றிப் பயமில்லை. எந்த மிரட்டலாலும் அவனது எழுத்தை ஒடுக்கமுடியவில்லை.

பத்திரிக்கையாளனாக அவன் சிறப்பாகவே செயல்பட்டான் ஆனால் ஒரேகுறை தனது உடல்நலத்தைக் கவனிக்கவே முடியவில்லை. இந்த முப்பத்தியாறு வயதிற்குள் அல்சர் வந்துவிட்டது. சமீபமாக ரத்தக்கொதிப்பும் உருவாகியுள்ளது. மூக்குக் கண்ணாடியின் பவர் அதிகமாகிவிட்டது. சாமானிய மனிதர்களைப் போல வார விடுமுறை கிடையாது. வாடகை வீட்டில் தான் குடியிருக்கிறான். வீடெங்கும் புத்தகங்கள். இசை தட்டுகள்.

சொந்த ஊரிலிருந்து யாரும் அவனைத் தேடி வருவதில்லை. அவனும் ஊருக்குப் போவதில்லை. வங்கிக் கணக்கில் இரண்டரை லட்சம் உள்ளது. அவ்வளவு தான் இத்தனை ஆண்டுக்கால சேமிப்பு. நல்லவேளையாக அவன் திருமணம் செய்து கொள்ளவில்லை. தன்னால் ஒரு பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என வேடிக்கையாகச் சொல்லிக் கொள்வான்.

திவாகரின் சொந்த ஊர் உடுமலைப்பேட்டை. சிறிய நகரம். அங்கே பள்ளி இறுதி வரை படித்தான். கோவையிலுள்ள கல்லூரியில் ஆங்கில இலக்கியம் முடித்தான். சட்டப்படிப்பை டெல்லியில் படிக்கலாம் என அண்ணன் சொன்ன காரணத்தால் டெல்லிக்குச் சென்றான். டெல்லி வாழ்க்கை அவனை முற்றிலுமாக மாற்றிவிட்டது. அவனோடு சட்டம் படித்த நண்பர்கள் கலக்காரர்களாக இருந்தார்கள். அவர்களுடன் ஒன்றாகச் சுற்றவும் போராட்டங்களில் கலந்து கொள்ளவும் செய்தான். மெல்ல அவனுக்குள் இருந்த சிறுநகர மனிதன் தொலைந்து போனான்.

மெட்ரோ மனிதர்களில் தானும் ஒருவன் என்பதை உணர்ந்தான். சமூகப் போராட்டங்களில் தீவிரமாகக் கலந்து கொண்டான். ஒரு வருஷத்திற்குள் அவனது பேச்சும் நடவடிக்கைகளும் மாறியிருந்தன. அப்போது அவன் எழுதிய கட்டுரைகள் ஆங்கில நாளிதழ்களில் வெளியாகின. அதன் பிறகே அவன் வக்கீல் படிப்பைக் கைவிட்டு பத்திரிக்கையாளன் ஆவது என முடிவு செய்தான்.

திவாகர் அன்றாடம் காலை டீ குடித்தவுடன் எல்லாச் செய்தி தாள்களையும் வாசித்து விடுவான். எப்போதாவது ஓய்வாக இருந்தால் ஓவியம் வரைவான். பள்ளிநாட்களில் இருந்து தொடரும் பழக்கமது. ஒவியம் வரைவதற்குப் பழகியதாலோ என்னவோ சின்னஞ்சிறு விஷயங்கள் கூட அவன் கவனத்தில் வந்துவிடுகின்றன. முகங்களை நினைவு கொள்வது எளிதாகயிருந்தது.

••

டெல்லியில் பத்திரிக்கையாளராக வேலைக்குச் சேர்ந்த நாள் முதல் நேற்று வரை ஆயிரம் பார்ட்டிகளுக்கு மேல் போயிருப்பான். தினமும் ஏதாவது ஒரு பார்ட்டி. யாராவது வம்பு வளப்பார்கள். பார்ட்டிக்கு போக வேண்டியது பத்திரிக்கையாளனின் வேலை. அங்கே தான் தனிப்பட்ட விஷயங்கள் எளிதாகக் கிடைக்கும். அரசியல்வாதிகளுடன் எளிதாகப் பேச முடியும். போதையேறியதும் பலரும் ரகசியங்களை எளிதாகப் பகிர்ந்து கொள்ளத்துவங்கிவிடுவார்கள். அவன் வெளியிட்ட பல செய்திகள் பார்டியில் கிடைத்தவையே. ஆனால் பார்ட்டி என்பது ஒரு புதைகுழி, அதற்குள் சிக்கிவிடாமல் காலூன்றுவது பெரிய சவால்.

அன்றிரவு பார்ட்டியில் திவாகரை கண்டதும் நிவாஸ் கைதூக்கி பெரிய கும்பிடு போட்டான். அது மிகவும் செயற்கையாக இருந்தது. எதற்கு ஒரு பத்திரிக்கையாளன் இப்படி நடிக்க வேண்டும். திவாகர் அவனைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் கையில் மதுவோடு நிவாஸ் அவன் அருகில் வந்து நின்று கேட்டான்

“உங்கள் பத்திரிக்கையின் துணை ஆசிரியர் அமைச்சருடன் ரோம் போகிறாராமே..“.

“இருக்கலாம் “என்றான் திவாகர்

“பட்டியலை பார்த்துவிட்டேன். அவரது பெயரும் இருக்கிறது. நானும் போகிறேன். ஒரு விஷயம் சொன்னால் ஆச்சரியப்படுவாய். முகர்ஜியும் வருகிறார். அவர் தான் குழுவின் தலைவர்“

“ முகர்ஜியா“ என வியப்போடு கேட்டான் திவாகர்

“ஏன் ஆச்சரியப்படுகிறாய். எல்லா மனிதர்களும் பலவீனமானவர்கள் தான். முகர்ஜியின் மகன் லண்டனில் ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொண்டுவிட்டான். அமைச்சர் தலையிட்டு பிரச்சனையை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டார். இனி முகர்ஜி எப்படிப் பேனாவை உயர்த்துவார். அவ்வளவு தான் அவரது வீராவேச எதிர்ப்பு அத்தியாயம் முடிந்துவிட்டது. இப்போது அரசின் புகழ்பாடும் பத்திரிக்கையாளர் அணிக்குத் தலைவராகிவிட்டார். உடனடி பலன் ரோம் பயணம்“

“பாவம் முகர்ஜி“ என்றான் திவாகர்.

“உன் நண்பனாகச் சொல்கிறேன். உன் பிடிவாதமான கொள்கைகளைத் தூக்கி எறிந்துவிட்டு நான் சொல்வது போலக் கட்டுரைகள் எழுது. இந்தப் பயணத்தில் உன் பேரையும் சேர்க்கச் சொல்லிவிடுகிறேன்“

“அதற்குப் பதிலாக ரோட்டில் பிச்சை எடுப்பேன்“ என்றான் திவாகர்

“கண்டிப்பாக ஒரு நாள் அந்த நிலைக்கு நீ தள்ளப்படுவாய். எனக்கு நன்றாகத் தெரியும். நீயில்லை. உன்னைப் போலப் பலமுட்டாள்களை உருவாக்கிய அன்வர் அலிக்கு என்ன நடந்தது தெரியும் தானே. ஒரு பத்திரிக்கையும் அவரைக் காப்பாற்றவில்லை. எத்தனை நீதிமன்ற வழக்குகள். அலைக்கழிப்பு. பாவம் அந்தக் கிழவர்“

“அன்வர்அலியை பற்றிப் பேசுவதற்கு உனக்கு யோக்கியதை கிடையாது“ என்றான் திவாகர்

“நல்லவேளை அவரிடம் நான் வேலை செய்யவில்லை. இல்லாவிட்டால் என் மூளையும் கெட்டுப்போயிருக்கும்“

“அவரிடம் நீ வேலைக்குச் சென்றிருந்தால் உன்னைக் கழுதையைப் போல நடத்தியிருப்பார்“. எனச் சிரித்தபடியே சொன்னான்

நிவாஸின் முகம் மாறியது. அவன் கோபத்துடன் இன்னொரு பெக் மதுவை எடுப்பதற்காகச் சென்றான். அப்போது அருகில் வந்த கமல்நாத் கேட்டான்

“அவனுடன் ஏன் வம்பு வழக்கிறாய். மிக மோசமான ஆள்“

“இவனை இப்படியே விடக்கூடாது“ என்று கோபமாகச் சொன்னான் திவாகர்

அன்று திவாகர் ஆறு ரவுண்ட் குடித்தான். போதையின் உச்சத்தில் அவன் நிவாஸை தேடிப் போனான்.

நிவாஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். தட்டில் கோழிக்கறியும் பிரியாணியும் சாலட்டும் இருந்தன. அப்படியே அந்தத் தட்டினை கீழே தட்டிவிட்டான் திவாகர், அத்துடன் பரிகாசமான குரலில் சொன்னான்

“தட்டில் வைத்துச் சாப்பிடுவது நாயின் பழக்கமில்லை, தரையில் சிந்தியதை நக்கி சாப்பிடு“

அதைக்கேட்ட நிவாஸ் அவனை அடிக்கக் கையை ஓங்கினான். திவாகர் விலகிக் கொள்ளவே காற்றில் கை வீசினான். ஆத்திரம் அதிகமாகவே மோசமான வசைகளைப் பொழிய ஆரம்பித்தான்.

திவாகர் அவன் மீது யாரோ குடித்து வைத்த மிச்சமதுவை ஊற்றினான். இருவரும் கட்டி உருண்டார்கள். யார் விலக்கிவிட்டது எனத்தெரியவில்லை.

எப்படி அறைக்கு வந்தான். எப்போது உறங்கினான் எதுவும் நினைவில் இல்லை

ஆனால் காலை பத்தரை மணிக்குக் கண்விழித்தபோது தலை கனமாக இருந்தது. அவன் மீது போலீஸில் புகார் கொடுத்திருந்தான் நிவாஸ். அன்வர் அலி தான் தலையிட்டு அவனைக் கேசிலிருந்து விடுவித்தார்.

••

பரோட்டா வந்தது. கூடவே சூடான சப்ஜி. பசியாக இருந்ததாலோ என்னவோ உணவின் ருசி அபாரமாக இருந்தது. சிறிய உணவகங்கள் ஏமாற்றுவதில்லை. பெரிய ஹோட்டல்களைத் தான் நம்பி சாப்பிடப் போக முடியவில்லை. அவன் ரொட்டியை அவசரமாகப் பிய்த்துச் சாப்பிட்டான். இன்னொரு மூலையில் டிரைவர் சாப்பிட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. தொலைவில் இடி இடிக்கும் ஓசை கேட்டது.. மழை வரக்கூடும். அதற்குள் விடுதி அறைக்குப் போய்விட்டால் நல்லது.

அவன் சாப்பிடுவதைக் கண்ட பூனை அருகில் வந்து நின்றது. ஒரு துண்டு ரொட்டியைப் பிய்த்துப் போட்டான். அதை முகர்ந்து பார்த்துவிட்டு வாலாட்டியபடியே சாப்பிடாமல் கடந்து போனது

என்ன எதிர்ப்பார்த்து வந்தது அந்தப் பூனை.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவனது செல்போன் அடித்தது. மறுமுனையில் ஷர்மிளா பாண்டே தான் பேசினாள்.

“உடனடியாகக் குவாலியர் போய் மேத்தா பாய் தனது நாய்களுக்கு ஆடம்பர திருமணம் செய்து வைப்பது பற்றிக் கவர் ஸ்டோரி எழுத வேண்டும்“ என்றாள்

“பர்காம்புரா குண்டுவெடிப்பு என்னாவது“ என்று கோபமாகக் கேட்டான் திவாகர்

“அதைவிடு. எல்லாப் பத்திரிக்கைகளும் எழுதி ஒய்ந்துவிட்டன. இனி யாரும் அதைப் படிக்க ஆர்வம் காட்டமாட்டார்கள். “

“உண்மையான குற்றவாளி யார் என்று நான் கண்டுபிடித்துவிட்டேன். ஆதாரங்கள் இருக்கிறது“ என்றான் திவாகர்.

“அதை அப்படியே தூக்கிப்போடு. நமது வேலை குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதி விசாரணை செய்வதில்லை. அது போலீஸ் டிபார்ட்மெண்ட் வேலை. நம் வேலை சுவாரஸ்யத்தைத் தருவது. ஊதிப்பெருக்கினால் தான் பலூனிற்கு அழகு. வெறும் பலூனைப் பார்க்கச் சகிக்காது “

“பின் எதற்காகப் பைத்தியக்காரன் போல நான் அலைந்து திரிய வேண்டும்“ என்று கோபமாகக் கேட்டான் திவாகர்

“நீ அன்வர் அலியின் தயாரிப்பு. இப்படித்தானிருப்பாய். உன்னோடு விவாதம் செய்ய விரும்பவில்லை. மேத்தா பாய் நாய்களுக்குத் திருமணம் செய்து வைக்கபோவது வேடிக்கையாக இருக்கும். நாய்களுக்குத் தனியே அலங்கார நகைகள் தயாரிக்கப்படுகிறதாம். நீ உடனே போய் மேத்தா பாயை இண்டர்வியூ எடு. நாய்களை நல்ல புகைப்படங்களாக எடுத்து அனுப்பு. சுவாரஸ்யத்தை உருவாக்கு திவா. “

“என்னால் போக முடியாது. “

“உன் விருப்பம் முக்கியமானதில்லை இது உத்தரவு.. “ என்று கறாரான குரலில் சொன்னாள் ஷர்மிளா

“நான் வேலையை ரிசைன் செய்துவிடுகிறேன்“ என்றான் திவாகர்

“சந்தோஷம்“ என்று ஏளனமாகச் சொன்னபடியே போனை வைத்தாள் ஷர்மிளா.

திவாகருக்கு ஆத்திரமாக வந்தது. பர்காம்புரா குண்டுவெடிப்பில் தான் சேகரித்த உண்மைகளை என்ன செய்வது. ஏன் ஒடி ஒடி உண்மைகளைக் கண்டறிந்தோம். உயிருள்ளவர்களுக்கே நீதி கிடைக்காத காலத்தில் இறந்தவர்களுக்காக யார் நீதி கேட்கப் போகிறார்கள். அநீதி தான் நம் காலத்தின் அடையாளமா.

வேலை போனதை விடவும் தன்னை ஒரு கரப்பான் பூச்சியைப் போல ஷர்மிளா நடத்தியதைத் தாங்க முடியவில்லை.

யாரோ ஒரு பணக்காரன் தனது நாய்களுக்குத் திருமணம் நடத்துவதைத் தன்னைப் போல ஒருவன் தேடிப் போய்க் கட்டுரை எழுத வேண்டுமா. எவ்வளவு இழிவான உத்தரவு. வேலை போனால் போகட்டும். பேசாமல் கொஞ்ச நாட்கள் ஊரில் போய் இயற்கை விவசாயம் செய்து பிழைக்கலாம் என்று யோசித்துக் கொண்டான்.

தொடர்ந்து சாப்பிட முடியவில்லை.

பரோட்டாவை அப்படியே வைத்துவிட்டு எழுந்து கொண்டான். வெளியே மழை துவங்கியிருந்தது. மனதிலிருந்த ஆத்திரம் அடங்கவில்லை.

வாசலில் வந்து நின்று ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டான்.

செய்திகளைத் துரத்திக் கொண்டேயிருப்பது அலுப்பாக இருந்தது. உண்மை யாருக்குத் தேவை. உண்மையைப் புதைப்பதற்குத் தான் எவ்வளவு ஏற்பாடுகள். தந்திரங்கள். அறிந்தே தான் மாயமானை துரத்திக் கொண்டிருக்கிறோம். செய்திகளின் பேராறு மக்களை அடித்துப் போகிறது. மரக்கட்டைகள் தண்ணீரில் செல்வது போல மக்கள் நடந்து கொள்கிறார்கள். சிறியதோ, பெரியதா எவரும் தன் தவறுகளை ஒப்புக்கொள்வதில்லை. அதை மறைப்பதற்காக எவ்வளவு பொய்யும் சொல்லத் தயார் ஆகிவிட்டார்கள். அச்சிடப்பட்ட பொய்கள். காட்சிகளாக மாறும் பொய்கள். நாம் அலங்கரிக்கப்பட்ட பொய்களை நம்புகிறோம். பொய்களை விற்கிறார்கள். தானும் அதற்கு ஒரு மறைமுக உடந்தையே.

யோசிக்க யோசிக்க மனதில் குழப்பமும் ஆற்றாமையும் தான் கூடிக் கொண்டிருந்தது.

அப்போது தாபாவை நோக்கி ஒரு அம்பாசிடர் கார் வருவது போலத் தெரிந்தது. சாரலின் ஊடே அந்தக் கார் தெளிவற்றுத் தெரிந்தது.

அந்தக் காரிலிருந்து மூன்று பேர் இறங்கினார்கள். அதில் ஒருவனை வக்கீல் ஷியாம் பிரசாத் வீட்டில் பார்த்தது போல இருந்தது. அவன் தானா எனச் சரியாகத் தெரியவில்லை. திவாகர் சிகரெட்டை ஊதியபடியே தனது காரை நோக்கி நடந்தான். அவர்கள் தன்னை நோக்கித்தான் வருகிறார்கள் என்று அவன் அறியவில்லை. தனது டிரைவரை அழைப்பதற்காகத் திவாகர் திரும்பிப் பார்த்தான்.

ஷியாம்பிரசாத் வீட்டில் பார்த்தவனின் கையில் பெரிய உருட்டுக்கட்டை ஒன்றிருப்பது கண்ணில் பட்டது.

ஏதோ நடக்கப்போகிறது எனத் திவாகர் சுதாரிப்பதற்குள் அவன் மீது உருட்டுக்கட்டையால் ஒருவன் தாக்கினான். தலையில் பலமாக அடி விழுந்தது. திவாகர் ரத்தம் வடிவதை உணர்ந்து ஓட முயன்றான். ஆனால் அவர்கள் சுற்றிலும் வளைந்து கொண்டார்கள். திவாகர் கூக்குரலிட்டபோது மூன்று பேரும் அவனைப் பலமாகத் தாக்க ஆரம்பித்திருந்தார்கள். திவாகர் போராடினான். ஒருவன் பியர் பாட்டிலை உடைத்து அவன் அடிவயிற்றில் சொருகினான். திவாகரால் வலியைத் தாங்கமுடியவில்லை. பலமாக ஓலமிட்டான்.

திவாகரின் குரல் மழைக்குள் கரைந்து ஒடிக் கொண்டிருந்தது

•••

.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 26, 2021 18:38

கதை சொல்லும் புகைப்படங்கள்.

To me taking pictures means discovering rhythms, lines in reality. The eye does the framing, and the camera does the work. You see a photograph all at once, like the painting. – Henri Cartier-Bresson

உலகப்புகழ் பெற்ற புகைப்படக்கலைஞர் ஹென்றி கார்டியர்-ப்ரெஸன் குறித்த impassioned eye என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன்.

நம் எல்லோர் கையிலும் செல்போன் உள்ளது. அதைப் பயன்படுத்தி நாள் முழுவதும் புகைப்படம் எடுத்தபடியே இருக்கிறோம். ஒரு நாளில் கோடிக்கணக்கான புகைப்படங்கள் எடுக்கபடுகின்றன. அதுவும் செல்பி எடுத்துக் கொள்ளும் மோகம் அதிகமான பிறகு தன்னை தானே ரசிக்கத்துவங்கி தினமும் பல புகைப்படங்களை எடுத்து வைத்துக் கொள்கிறார்கள். புகைப்படம் எனும் அரிய கலை மலினப்படுத்தபட்டுவிட்டது. இணையத்தில் ஒரு நாளில் இரண்டு கோடி புகைப்படங்கள் பதிவேற்றப்படுகின்றன என்கிறார்கள்.

முந்தைய காலம் போல இன்று ஸ்டுடியோக்கள் கிடையாது. லேப் கிடையாது. எடுத்த புகைப்படத்தைக் கழுவி காயவைத்து பிரிண்ட் போட காத்திருக்க வேண்டியதில்லை. பிரபலமான பிலிம்ரோல் தயாரிக்கும் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. டிஜிட்டில் வந்தபிறகு புகைப்படம் எடுப்பது செலவில்லாத வேலையாகிவிட்டது. ஆனாலும் மிகச்சிறந்த புகைப்படக்கலைஞர்கள் இன்றும் அரிய புகைப்படங்களை எடுக்கிறார்கள். இதற்காக நாட்கணக்கில் மெனக்கெடுகிறார்கள். சிறந்த புகைப்படங்களை எடுக்க காத்துக்கிடக்கிறார்கள். சர்வதேச அளவில் விருதும் அங்கீகாரமும் பெறுகிறார்கள்.

கேமிரா பொய் சொல்லாது என்பது மறைந்து போய் கேமிரா தான் அதிகம் பொய் சொல்கிறது என்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சென்ற தலைமுறையின் அரிய புகைப்படக்கலைஞர்கள் எடுத்த புகைப்படங்களே இன்று வரலாற்றின் சாட்சியங்களாக உள்ளன. அது குடும்ப வரலாறாக இருந்தாலும் தேசத்தின் வரலாறாக இருந்தாலும் ஒன்று தான். புகைப்படம் எடுத்துக் கொள்வது ஏழை எளியவர்களுக்கு இயலாத காரியம் என்பதை டிஜிட்டல் மாற்றியிருக்கிறது என்பது உண்மையே. டிஜிட்டல் கேமிரா என்பது தொழில் நுட்ப வளர்ச்சி. அதன் பின்னுள்ள கலைஞனும் அவனது ஈடுபாடுமே முக்கியமானது.

நாளிதழ்கள் வார இதழ்கள் ஒரு காலத்தில் புகைப்படக்கலைஞர்களை தான் பெரிதும் நம்பியிருந்தன. அந்த நாட்களில் மிகச்சிறந்த புகைப்படக்கலைஞர்கள் உருவானார்கள். சாமானிய மக்களை அழகாகப் படம் பிடித்தார்கள். அன்றாட வாழ்வின் தருணங்களைப் பதிவு செய்தார்கள் இதில் முக்கியமானவர் ஹென்றி கார்டியர்-ப்ரெஸன்

இந்த ஆவணப்படத்தில் அவர் காந்தியைச் சந்தித்த நிகழ்வினைப் பற்றிக் கூறுகிறார். காந்தி சுடப்பட்டு இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்புப் ப்ரெஸன் அவரைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தார். இந்தியப்பிரிவினைத் தொடர்ந்து ஏற்பட்ட மதக்கலவரம் பற்றி நேரடி செய்தி சேகரிப்பிற்காக மேக்னம் ஏஜென்சி ப்ரெஸனை இந்தியாவிற்கு அனுப்பி வைத்திருந்தது.

அவரது மனைவி ரத்னா மோகினி நேருவின் தங்கை விஜயலட்சுமி பண்டிட்டின் தோழியாக இருந்த காரணத்தால் அவரால் உடனடியாகக் காந்தியைச் சந்தித்துப் பேச முடிந்தது.

அவர் பிர்லா மாளிகையில் காந்தியைச் சந்தித்து உரையாடியதோடு தனது புகைப்படங்களின் தொகுப்பினை அவரிடம் காட்டினார். மறுநாள் காந்தியைப் புகைப்படம் எடுப்பதாகத் திட்டம்.

ப்ரெஸன் காட்டிய ஆல்பத்தில் இருந்த ஒரு புகைப்படத்தைக் காந்தி வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தார். பின்பு ப்ரெஸனிடம் இந்தப் புகைப்படத்திற்கு என்ன அர்த்தம் என்று கேட்டார். ப்ரெஸன் அந்தப் புகைப்படம் எங்கே எடுக்கப்பட்டது. என்ன பொருள் என்று விளக்கியபோது அதைப் புரிந்து கொண்ட காந்தி மரணம் பற்றி உரையாடினார். அது தான் காந்தி பேசிய கடைசி உரையாடல். பின்பு ப்ரெஸனிடம் விடைபெற்றுக் கொண்டு காந்தி பிரார்த்தனைக்குச் சென்றார். அங்கே அவர் சுடப்பட்டார். தன்னுடைய மரணத்தை முன்னறிந்து கொண்டவர் போலக் காந்தி தன்னிடம் பேசினார் என்கிறார் ப்ரெஸன்.

காந்தியின் இறுதி நிகழ்வுகளை முழுமையாகப் ப்ரெஸன் புகைப்படம் எடுத்திருக்கிறார். காந்தியின் உடல் வைக்கப்பட்டிருந்த அறையை, அங்கு நடந்த நிகழ்வுகளைத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார். காந்தியின் கடைசி ஊர்வலத்திற்குத் திரண்டு வந்த மக்கள் திரளை. அவர்களின் உணர்ச்சிப்பூர்வமான அழுகையை ஆவணப்படுத்தியிருக்கிறார். காந்தியின் சிதைக்குத் தீயூட்டப்பட்டபோது அந்த நெருப்பு தன் விரலில் படும் அளவு நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்திருக்கிறார். காந்தி அஸ்தியைக் கங்கையில் கரைந்த போதும் ப்ரெஸன் புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். அவை மறக்கமுடியாத புகைப்படங்கள். இந்த ஆவணப்படத்தில் அந்த அபூர்வமான தருணத்தை நினைவு கொள்கிறார் ப்ரெஸன்

காந்தியின் மரணம் குறித்து நேரு அறிவிக்கும் தருணத்தை ப்ரெஸன் புகைப்படம் எடுத்திருக்கிறார். அதி அற்புதமான புகைப்படமது.

1947ல் துவங்கி ஆறுமுறை இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ப்ரெஸன் எட்வினா மவுண்ட்பேட்டனுடன் நேரு நெருக்கமாகச் சிரித்தபடியே நிற்கும் புகைப்படத்தை எடுத்துப் பரபரப்பை ஏற்படுத்தினார். திருவண்ணாமலைக்கு வந்து ரமணரைப் புகைப்படம் எடுத்துள்ளார் ப்ரெஸன். இந்த ஆவணப்படத்தில் ரமணரின் கடைசி நிமிஷங்கள் பற்றிய பதிவும் இடம்பெற்றுள்ளது.

ப்ரெஸன் எடுத்த புகைப்படங்கள் வரலாற்றின் சாட்சியமாகத் திகழுகின்றன. இந்தப் புகைப்படங்களைக் காணும் போது ஓவியத்தின் மீது ப்ரெஸனுக்கு இருந்த ஆர்வமும் ஈடுபாடுமே அவரை மிகச்சிறந்த புகைப்படக்கலைஞராக மாற்றியிருக்கிறது என்பதை உணர முடிகிறது.

தன் முதுமையில் அவர் புகைப்படம் எடுப்பதை விட்டுவிட்டு முழுநேரமாக ஓவியம் வரைவதிலே ஈடுபட்டார்.

இந்த ஆவணப்படத்தினைக் காணும்போது ப்ரெஸன் எத்தனை நாடுகளைச் சுற்றியிருக்கிறார். எவ்வளவு மாறுபட்ட மனிதர்களைச் சந்தித்திருக்கிறார். இந்த நூற்றாண்டின் அத்தனை பிரபலங்களையும் நேரில் சந்தித்துப் புகைப்படம் எடுப்பது எவ்வளவு அதிர்ஷ்டம் என வியப்பு ஏற்படுகிறது.

தனது கேமிரா எல்லா மொழிகளும் பேசக்கூடியது. காரணம் அது மௌனமானது என்று வேடிக்கையாகச் சொல்கிறார் ப்ரெஸன்

மெக்சிகோ, அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா, ஆப்ரிக்கா ஆசியா, ஐரோப்பா என அவர் பயணித்து எடுத்த புகைப்படங்கள் அந்தத் தேசத்தின் சமூகப் பண்பாட்டு அடையாளங்களை, அதன் உண்மையான நெருக்கடிகளை, கொந்தளிப்புகளைப் பதிவு செய்திருக்கிறது. மறைக்கப்பட்ட,விலக்கப்பட்ட உண்மைகளின் தொகுப்பு போலவே அவரது புகைப்படங்கள் இருக்கின்றன.

இந்த ஆவணப்படத்தில் வயதான ப்ரெஸன் தன் இளமைக்கால நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார். அவர் எடுத்த புகைப்படங்களைக் காட்டி அதை எங்கே எப்போது எடுத்தேன் என்பதை நினைவுகூறுகிறார். அவரது புகைப்படங்கள் குறித்துச் சக புகைப்படக்கலைஞர்களின் நேர்காணல்களும் நாடக ஆசிரியர் ஆர்தர் மில்லரின் நேர்காணலும் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

பிரபலமான கலைஞர்கள், எழுத்தாளர்கள், நடனக் கலைஞர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள், நாடக எழுத்தாளர்களைப் புகைப்படம் எடுத்துள்ள ப்ரெஸன் அவர்களின் நெருக்கமான நண்பராகவும் இருந்திருக்கிறார்.

ஆல்பர்ட் காம்யூ, ட்ரூமன் கபோட், மர்லின் மன்றோ போன்றவரை ப்ரெஸன் எடுத்துள்ள புகைப்படங்கள் அபரமானவை.

இந்தியாவைப் பற்றி ப்ரெஸன் எடுத்துள்ள புகைப்படங்களில் அன்றைய இந்தியாவின் நிஜமான சித்திரம் பதிவாகியிருக்கிறது. குறிப்பாக அகதி முகாம்களைப் பற்றி அவரது புகைப்படங்கள் வரலாற்றின் அரிய ஆவணங்கள் என்றே சொல்வேன்.

பிரபல நாடக ஆசிரியர் ஆர்தர் மில்லர் தனது போருக்குப் பிந்தைய புகைப்படங்களைப் பற்றி எழுதும் போது ப்ரெஸன் எடுத்துள்ள புகைப்படங்கள் நம்மைக் கேள்வியைக் கேட்கின்றன: இந்தத் தேசத்தின் அடுத்த அத்தியாயம் என்னவாக இருக்கும்? அடுத்து எங்கே போவோம்? என்ற கேள்வியை எழுப்புகின்றன. அமெரிக்காவின் மனசாட்சியை நோக்கி இந்தக் கேள்வியை எழுப்பியது தான் ப்ரெஸனின் தனித்துவம் என்கிறார்.

கார்டியர்-ப்ரெஸனின் தாத்தா ஒரு தொழிலதிபர்; ஆகவே அவர் வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். ஒரு கத்தோலிக்கப் பள்ளியில் படித்தார். பின்பு கல்லூரி படிப்பின் போது தொடர்ந்து தோல்வியடைவே ஓவியக் கலைஞராக மாற முடிவு செய்தார். ஓவியம் பயிலுவதற்கான ஆண்ட்ரே லாட்டின் மாணவரானார், அவர் கிராஃபிக் வடிவங்களைப் ப்ரெஸனிற்குக் கற்றுக் கொடுத்தார்.

1929 இல் சர்ரியலிசம் மேலோங்கியிருந்த பாரீஸ் நகரில் அந்த ஓவியர்களுடன் இணைந்து கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார் ப்ரெஸன் அமெரிக்கக் கவிஞர் ஹாரி கிராஸ்பி தான் அவரைப் புகைப்படக்கலையை நோக்கி தூண்டியவர். புகைப்படங்கள் எடுக்க துவங்கி அதில் தீவிரமாகச் செயல்பட்ட ப்ரெஸன் ஒரு ஆண்டுக் காலம் மெக்ஸிகோவில் கழித்தார், அங்கேயுள்ள விபச்சார விடுதிகளையும் தெரு வாழ்க்கையையும் படமாக்கினார். அவரது புகைப்படங்கள் புகழ்பெறத் துவங்கின.

உன் கண்களைக் காப்பாற்றிக் கொள் என்று அவர் ஒரு புகைப்படக்கலைஞருக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார். அது என்றைக்கும் பொருத்தமான அறிவுரையே

புகைப்படக்கலையில் புகழ்பெற்ற பிறகு திரைக்கலையின் மீது ஈடுபாடு வந்து எடிட்டிங் கற்றுக் கொண்டு திரைத்துறையில் பணியாற்றத் துவங்கினார். ஜாவாவைச் சேர்ந்த நடனக்கலைஞரான ரத்னா மோகினியின் அழகில் மயங்கி அவரைக் காதலித்த ப்ரெஸன் பின்பு அவரையே மணந்து கொண்டார்.

மே 1940 இல், அவர் பிரெஞ்சு இராணுவத்தில் சேர்ந்தார், ஒரு மாதத்திற்குப் பிறகு ஜெர்மானியர்களால் கைது செய்யப்பட்டார். அவர் அடுத்த மூன்று ஆண்டுகளை நாஜி முகாம்களில் கழித்தார், பின்பு அங்கிருந்து தப்பிப் போலி ஆவணங்களைப் பயன்படுத்திப் பாரீஸில் வாழ்ந்தார், வாழ்நாள் முழுவதுமே நான் ஒரு தப்பியோடிய கைதியாகவே உணருகிறேன் என்று ப்ரெஸன் கூறுகிறார்

போர்க் கைதிகள் மற்றும் கட்டாய உழைப்புக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் பற்றிய ஆவணப்படத்தைப் படமாக்க 1945ல் நீண்ட பயணத்தை ப்ரெஸன் மேற்கொண்டார். அதில் எடுத்த சிறந்த புகைப்படங்களை இந்த ஆவணப்படத்தில் விளக்கிச் சொல்லுகிறார்.

ப்ரெஸன் தன் காதல் மனைவி ரத்னாவை அழைத்துக் கொண்டு பின்னர்ப் பாகிஸ்தான், மியான்மார், மலாயா, சீனா ஆகிய நாடுகளுக்குச் சென்று புகைப்படங்கள் எடுத்திருக்கிறார்.

நல்ல புகைப்படம் என்பது கதை சொல்லக்கூடியது. அதைக் காணும் ஒவ்வொருவரும் தானாகக் கதை சொல்லத்துவங்கிவிடுவார்கள். அப்படியான புகைப்படங்களைத் தான் ப்ரெஸன் எடுத்திருக்கிறார் என்கிறார் எலியட் எர்விட்

இந்த ஆவணப்படத்தில் பாக், மொஸார்ட், ராவலின் இசை கூடவே ஒலித்துக் கொண்டிருக்கிறது. இசையோடு இணைந்தே தனது எண்ணங்களை ப்ரஸன் வெளிப்படுத்துகிறார்.

1954 ஆம் ஆண்டில், ஸ்டாலின் இறந்த பிறகு ரஷ்யாவிற்குள் செல்ல, அனுமதி பெற்ற முதல் வெளிநாட்டுப் பத்திரிகையாளர் கார்டியர்-ப்ரெஸன் மட்டுமே,

நான் ஒரு பூனை ஆம். ஒரு நாயைக் கீழ்ப்படிய வைக்கமுடியும் ஆனால் பூனை எந்த அதிகாரத்திற்கும் கட்டுப்படாது, பூனைகளை அடக்க முடியாது. பூனைகள் தன் விருப்பத்தின் பாதையில் சுற்றியலைக்கூடியவை என்கிறார் ப்ரெஸன்

புகைப்படம் எடுக்கவுள்ளவருக்குத் தன் முன்னே கேமிரா இருக்கிறது என்ற உணர்வு தோன்றாதபடி புகைப்படக்கலைஞர் செயல்பட வேண்டும். அப்போது தான் நல்ல புகைப்படத்தை எடுக்க முடியும் என்கிறார்.

மனதையும் கண்ணையும் ஒரே கோட்டில் ஒன்றிணைக்கும் போது தான் சிறந்த புகைப்படம் உருவாகிறது. படப்பிடிப்பின் போது நீங்கள் ஒருபோதும் சிந்திக்க வேண்டியதில்லை. அதற்கு முன்னும் பின்னும் நீங்கள் சிந்திக்க வேண்டும். நிறையப் புகைப்படம் எடுக்க வேண்டிய அவசியமில்லை. புகைப்படம் நிறைய எடுத்து வீணாக்காதீர்கள். அதிகமாகச் சாப்பிடுவது வாந்தி எடுக்கவே வைக்கும்

கேமிரா என்பது உங்கள் கழுத்தில் தொங்கும் அழகான மற்றும் விலையுயர்ந்த பதக்கம் அல்ல. உங்கள் கேமிரா உங்களுடைய உடலின் ஒரு பகுதியாகும். மனதின் ஒரு பகுதியாகும். அதை ஒரு போதும் மறக்காதீர்கள். என்கிறார் ப்ரெஸன்

விலை உயர்ந்த கேமிரா கையில் இருப்பதால் மட்டும் நல்ல புகைப்படத்தை எடுத்துவிட முடியாது. ப்ரெஸன் 1932 முதல் மற்றும் அவரது படைப்பு வாழ்க்கை முழுவதும், 50 மிமீ லென்ஸுடன் சிறிய, எளிய லைக்கா 35 மிமீ கேமிரா மூலம் படப்பிடிப்பு நடத்தி வந்திருக்கிறார். அவரது கறுப்பு வெள்ளைப் புகைப்படங்கள் அபாரமானவை.

ஒரு தீர்க்கமான தருணத்தைக் கைப்பற்றுவதே புகைப்படக்கலைஞரின் இலக்கு. அதற்காகப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். அப்படியான தருணங்களையே தனது சிறந்த புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன என்கிறார்.

பிரபலங்களையும் எளிய மனிதர்களையும் ஒன்று போலத் தான் ப்ரெஸன் படமாக்கியிருக்கிறார். உணர்வுப்பூர்வமான வெளிப்பாடு தான் அவரது தனித்துவம்.

இந்த ஆவணப்படத்தில் ஒவியக்கூடத்திற்குச் சென்று தான் சிறுவயதில் பார்த்து ரசித்த ரூபனின் ஓவியங்களை ரசித்து வியக்கிறார் ப்ரெஸன். அத்துடன் ஓவியம் வரைவதற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் மற்றும் அவர் தீட்டிய நீர்வண்ண ஓவியங்களைக் காணுகிறார். புகைப்படத்தால் ஒரு போதும் ஓவியத்தை வெல்லமுடியாது என்று ஒரு காட்சியில் சொல்கிறார் ப்ரெஸன்.

I think photographs should have no caption, just location, and date. Date is important because things change. என ப்ரெஸன் சொல்வது உண்மையான விஷயம்.

வண்ணப்புகைப்படங்களை விடவும் கறுப்பு வெள்ளையைத் தான் அதிகம் விரும்புகிறேன். நம் நினைவுகளின் நிறம் அதுவே என்கிறார் ப்ரெஸன். இலக்கியத்திலும் ஓவியத்திலும் தீவிர ஈடுபாடு கொண்டவரால் தான் இப்படிப் பேச முடியும்.

••

2 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 26, 2021 05:58

March 24, 2021

ஏனுகுல வீராசாமி

காசி யாத்திரை என்ற1832இல் வெளியான நூலே தமிழின் முதல் பயண இலக்கியமாகக் கருதப்படுகிறது. இதை எழுதியவர் ஏனுகுல வீராசாமி . இவர் சென்னையில் வசித்தவர்.

1830ம் வருஷம் மே மாதம் 18ம் தேதி இவர் மதராஸிலிருந்து காசி யாத்திரைக்குப் புறப்பட்டார். ஒரு வருஷம் மூன்று மாதங்கள் நீண்ட இந்தப் பயணம் செப்டம்பர் 1831ல் முடிவு பெற்றது. தனது பயண அனுபவத்தை அவர் குறிப்பேட்டிலும் கடிதங்கள் வழியாகவும் எழுதி வந்தார். தெலுங்கில் இவர் எழுதிய குறிப்புகளைப் பனையூர் வெங்குமுதலி தமிழாக்கம் செய்திருக்கிறார்கள். இந்தப் பயண நூலின் ஆங்கிலப் பிரதி தற்போது கிடைக்கிறது. ஆனால் தமிழ் பிரதியைக் கண்டறியமுடியவில்லை. ஒருவேளை பழைய நூலகம் எதிலாவது இருக்ககூடும்

ஏனுகுல வீராசாமியின் தந்தை கிழக்கிந்திய கம்பெனியில் வேலை செய்தவர். வீராசாமியின் ஒன்பது வயதில் அவரது தந்தை இறந்து போனார். தாய் தான் அவரை வளர்த்து படிக்க வைத்தார். பனிரெண்டு வயது வரை படித்த வீராசாமி சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, ஆங்கில மொழிகளில் சிறப்பாகப் பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டார். இவரது பன்மொழிப்புலமையால் துபாஷி வேலை கிடைத்தது. திருநெல்வேலி கலெக்டரிடன் துபாஷியாகச் சில காலம் வேலை செய்திருக்கிறார். பின்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக வேலை கிடைத்து அதில் பணியாற்றி வந்தார்.

இவரது சிறப்பான சேவையைப் பாராட்டி ஆங்கில அதிகாரி ஒருவர் வீராசாமிக்குத் தங்கத்தில் பொடி டப்பா செய்து பரிசளித்திருக்கிறார். குண்டூர் பஞ்சம் வந்தபோது இவர் தினமும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் அளித்து உதவியிருக்கிறார். மதராஸில் வசித்த இவர் கல்விப்பணியினை முன்னெடுப்பதில் அதிகக் கவனம் செலுத்தியிருக்கிறார். செல்வந்தரான இவர் தண்டையார்பேட்டையில் வசித்திருக்கிறார்

தெலுங்கில் எழுதப்பட்ட இந்தப் பயணநூல் தமிழில் தான் முதலில் வெளியாகியிருக்கிறது. பின்பு மராத்தியில் வெளியாகியிருக்கிறது. அதன் பிறகே இந்த நூல் தெலுங்கில் வெளிவந்துள்ளது. ஆங்கிலத்தில் அவரே சில அத்தியாயங்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். ஆனால் அதை முடிக்க முடியவில்லை. தற்போது சீதாபதி மற்றும் புருஷோத்தம் இணைந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்.

இவரது காசி யாத்திரை நூலின் வழியே 1830 காலகட்டத்தில் வாழ்க்கை முறையினைத் துல்லியமாக அறிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாகப் பயண வழிகளில் உள்ள இடர்கள், பயண ஏற்பாடுகள். ஆலயங்களின் சிறப்பு. உணவு வகைகள். கலைகள். மற்றும் பண்பாட்டுச் சிறப்புகள், சந்தை மற்றும் சுங்கச்சாவடிகள் குறித்துச் சிறப்பாக எழுதியிருக்கிறார்.

இவருடன் பயணத்தில் அவரது குடும்பம் மற்றும் உறவினர்களும் உடன் சென்றிருக்கிறார்கள். இரண்டு பல்லக்கில் அவர்கள் செல்ல பின்னால் நான்கு மாட்டுவண்டிகளில் சுமைகள் ஏற்றப்பட்டு வந்திருக்கின்றன. பயணத்தில் தனது பாதுகாப்பிற்காகப் பத்துபேரை வேலைக்கு வைத்திருக்கிறார் வீராசாமி. அவர்களுக்கு மாதம் ஏழு ரூபாய் சம்பளம். இவர்களுடன் கூடாரம் அமைக்க நாலு தனி ஆட்கள். சுமைகளை ஏற்றிச் செல்ல ஆறு மாடுகள். அதைப் பராமரிக்க இரண்டு ஆட்கள். காட்டுவழியில் பயணம் செய்யும் போது வழிகாட்டுவதற்காகப் போஸ்டல் ரன்னர் ஒருவர், வழிப்பறிக் கொள்ளையர்களுக்குப் பயந்து ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்களையும் தனி ஊதியம் கொடுத்து வேலைக்கு வைத்திருக்கிறார். இப்படி ஒரு பட்டாளமே ஒன்று சேர்ந்து பயணம் செய்திருக்கிறார்கள்.

வழியில் கூடாரம் அமைத்துத் தங்கிக் கொள்ளத் தேவையான பொருட்களையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்றிருக்கிறார். சுகமாகப் படுத்து உறங்க மடக்கு கட்டிலையும் கூட மாட்டு வண்டியில் கொண்டு போயிருக்கிறார் வீராச்சாமி.

பல்லக்கிலும் மாட்டுவண்டியிலும் சில இடங்களில் குதிரை வண்டியிலும் பயணம் செய்த வீராசாமி மதராஸிலிருந்து புறப்பட்டுத் திருப்பதி, கடப்பா அகோபிலம், ஹைதராபாத், நாக்பூர், ஜபல்பூர், பிரயாக், காசி, பாட்னா, கயா ராஜ்மகால், கிருஷ்ணாநகர், கல்கத்தா, கோபால்பூர், கட்டக். பூரி, சில்கா ஏரி கஞ்சம், பெர்காம்பூர், ஸ்ரீகாகுளம் ,நெல்லூர், சூளுர்பேட்டை, பொன்னேரி வழியாக மதராஸ் திரும்பி வந்திருக்கிறார்.

இந்தப் பயணத்திற்கு எவ்வளவு பணம் செலவு செய்திருக்கிறார் என்ற தகவல் இதில் இடம்பெறவில்லை. ஆனால் போகிற இடமெல்லாம் காசை தண்ணீராகச் செலவு செய்திருக்கிறார். கோவில்களுக்கு நன்கொடை கொடுத்திருக்கிறார். நகைகள். பட்டு உடைகள் வாங்கித் தானம் அளித்திருக்கிறார். கோவிலில் முன்னுரிமை பெறுவதற்காகப் பூசாரிகளுக்குக் கைநிறைய பணம் கொடுத்திருக்கிறார். போகும் இடத்திற்கு முன்பே ஆட்களை அனுப்பித் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வைத்திருக்கிறார். சிலரை இதற்காக ஒப்பந்தம் செய்து கொண்டும் பணி அமர்த்தியிருக்கிறார். நீதிமன்றத்தில் பணியாற்றியவர் என்பதால் பல இடங்களில் நீதிபதிகள் இவருக்கு உதவி செய்திருக்கிறார்கள். ஜமீன்தார்களின் மாளிகைகளில் தங்கியிருக்கிறார். பயண வழியில் சிலருக்கு உடல் நலம் சீர்கெட்டிருக்கிறது. பல்லக்குத் தூக்கிகள் சிலருக்குக் குளிரால் காய்ச்சல் கண்டிருக்கிறது. அவர்களுககு நாட்டுமருந்து கொடுத்து அவரே குணமாக்கியிருக்கிறார்

மாட்டுவண்டிக்காரன் ஒருவனுக்கு மேகநோய் வந்திருக்கிறது. அவனை மட்டும் அவரால் குணப்படுத்த முடியவில்லை. வழியிலே அவனை நிறுத்தி ஊர் திரும்ப வைத்திருக்கிறார்கள்.

வழியில் மலேரியா தாக்கி பலரும் நோயுற்றார்கள். இருவர் இறந்து போனார்கள். தனது பயணத்தின் போது கிடைத்த அனுபவத்தைக் கடிதங்களாக நண்பருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அந்தக் கடிதங்களைத் தொகுத்தே இந்த நூலை உருவாக்கியிருக்கிறார்கள்

தனது பயண அனுபவத்தில் திருடன் கூடப் பண்புள்ளவனாக நடந்து கொண்டிருக்கிறான். பெரிய மனுசன் போன்ற தோற்றம் கொண்டவன் தான் நிறைய இடங்களில் சூது செய்து ஏமாற்றியிருக்கிறான் என்கிறார் வீராசாமி.

பாட்னாவில் காகங்களுக்குப் பயந்து ஆட்கள் சுற்றிலும் காவலுக்கு நில்லாமல் மக்கள் பொதுஇடத்தில் சாப்பிட முடியாது. வானில் நூற்றுக்கணக்கான காகங்கள் வட்டமிட்டுக் கொண்டேயிருக்கும். ஏமாந்த நேரம் உணவைக் கவ்விக் கொண்டுபோய்விடும். ஆகவே சாப்பிடுகிறவர் இலையை ஒட்டி ஒரு ஆள் கையில் கோலோடு நின்று கொண்டிருப்பார். அவரது வேலை காக்கா விரட்டுவது என்று ஒரு இடத்தில் வீராசாமி குறிப்பிடுகிறார்.

பயண வழியில் இவரது பல்லக்குத் தூக்குகளுக்கு மோசமான தண்ணீரைக் குடித்துச் சளி இருமல் வந்திருக்கிறது. அவர்களுக்கு வைத்தியம் செய்து நலமாகும் வரை ஒரே இடத்தில் தங்கியிருக்கிறார்.

அந்த நாட்களில் திருப்பதி எப்படி இருந்தது என்பதை வாசிக்க வியப்பாக இருக்கிறது. 1830களில் இருநூறு ரூபாய் கொடுத்துச் சிறப்புப் பூஜை செய்திருக்கிறார் வீராசாமி.

அன்றைய ஹைதராபாத் நிஜாமில் வேறு பணம் புழக்கத்திலிருந்தது. மதராஸின் ஒரு ரூபாய் அங்கே ஐம்பது பைசா மட்டுமே. பணம் கொடுத்துச் சில்லறை வாங்கினால் ரூபாய்க்கு பத்து காசு கமிஷனாக எடுத்துக் கொள்ளும் பழக்கமிருந்தது. ஹைதராபாத்தில் வெள்ளைக்காரர்கள் மட்டும் பயன்படுத்தும் சாலையிருந்தது. அதில் இந்தியர்கள் செல்ல அனுமதி கிடையாது.

காய்கறிகள் பழங்கள் யாவும் ஹைதராபாத்தில் விலை மிக அதிகம். மாட்டுவண்டிகளில் விறகு ஏற்றிக் கொண்டு போனால் கூட அதற்குச் சுங்கம் வசூலிக்கிறார்கள் என்கிறார் வீராசாமி.

வீராசாமியின் விவரிப்பில் வழியெல்லாம் மரங்கள் அடர்ந்த சாலையின் பிம்பமே மனதில் ஆழமாகப் பதிகிறது. அது போலவே சிறிய கிராமங்களின் எளிய வீடுகள். ஏழைகளின் நிலை, அடர்ந்த காடுகள். மழையில் பெருகிய வெள்ளம் வடியும் வரை ஆற்றைக் கடக்க முடியாமல் காத்திருக்க வேண்டிய நிலை. கரடுமுரடான பாதையில் செல்லும் பயணம். இதமான மாலை நேரக்காற்று. குடிநீருக்கான போராட்டம் இவை மிக அழகாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. பயண வழியில் நல்ல வெற்றிலை கிடைக்கவில்லை என்று புலம்பியிருக்கிறார் வீராசாமி

மதராஸ் ராணுவம் நாக்பூருக்கு வரும் வரை அங்கிருந்தவர்களுக்குப் புளியை உணவில் சேர்த்துக் கொள்ளும் பழக்கம் கிடையாது. புளிப்புக்கு தயிரை தான் சேர்த்துக் கொள்வார்கள். மதராஸ் ராணுவத்தினருக்காகவே புளியை உணவில் சேர்த்துச் செய்யும் பழக்கம் உருவானது. இதுபோலவே இரவில் மோர் குடிக்கப் பயப்படுவார்கள். ஜலதோஷம் பிடித்துக் கொள்ளும் என்பதே காரணம். தனது பல்லக்கு வழியில் உடைந்து போனதால் புதிய பல்லக்கு ஒன்றை விலைக்கு வாங்கியிருக்கிறார் வீராசாமி. அதன் விலை நூறு ரூபாய்.

அன்றைக்குச் சென்னையிலிருந்த வீடுகளிலே மிகப்பெரியது அய்யாபிள்ளையின் வீடு. இது போலவே ஆங்கிலேயர்களின் குடியிருப்பில் மிகப்பெரியது ஜே.மூரத்தின் மாளிகை என்கிறார் வீராசாமி. இருவருமே இன்று நினைவிலிருந்து மறைந்து போய்விட்டார்கள். மதராஸ் சின்னஞ்சிறிய கிராமங்களை உள்ளடக்கியதாக வெளிப்படும் சித்தரிப்பு அழகாக உள்ளது..

வீராசாமியின் பயணத்தின் வழியே அன்றைய கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரிகளுக்கு இருந்த செல்வாக்கும் அதிகாரமும் துல்லியமாக வெளிப்பட்டுள்ளது. போகிற இடத்தில் எல்லாம் அவருக்கு வெள்ளை அதிகாரிகள் உதவி செய்கிறார்கள். துணையாட்களை அனுப்பி வைக்கிறார்கள். அவரும் கம்பெனி அதிகாரிகளுக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறார். ராணுவ அதிகாரிகளுக்குப் பரிசுகள் வழங்கியிருக்கிறார்.

அன்று நிலவிய சாதியக் கட்டுப்பாடுகள். ஒடுக்குமுறைகள் பற்றியும் இந்தப் பயணத்தின் ஊடாக நிறைய அறிந்து கொள்ள முடிகிறது.

இன்றிருப்பது போலப் பயணவழியில் தங்குமிடங்களோ, உணவகங்களோ வாகன வசதிகளோ இல்லாத காலத்தில் இப்படி ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டிருப்பது புதிய அனுபவத்தையே நமக்கு அறிமுகம் செய்கிறது.

கிழக்கிந்திய கம்பெனி எப்படி இந்தியாவைச் சுரண்டி வாழ்ந்திருக்கிறது என்பதற்கு அவர்களின் சுங்கசாவடிகள். ராணுவ தலையீடுகள். ஆட்சி முறை பற்றிய தகவல்களே சாட்சி. ஏனுகுல வீராசாமி சித்தரிக்கும் பயண வழிகள். இடங்கள் யாவும் காலத்தில் மறைந்தும் மாறியும் விட்டன. 190 ஆண்டுகளுக்கு முன்னுள்ள இந்திய வாழ்க்கையின் எளிமை மட்டுமில்லை அதன் அறியாமைகளும் சேர்ந்தே இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 24, 2021 19:01

சுவர் தோறும் ஓவியங்கள்

தேனுகா

••

திருப்பரங்குற்றத்து முருகப்பெருமானை வழிபடும் மக்கள் அதன் அருகில் உள்ள சித்திரக் கூடத்தில் உள்ள ஓவியங்களை கண்டு ரசிக்காமல் வருவதில்லை. ரதி, மன்மதன், பூனை உருவம் கொண்டு ஓடும் இந்திரன், கௌதம முனிவன் முதலிய ஓவியங்களை கண்டவர்கள் இது என்ன, அது என்ன, இவர் யார், அவர் யார் என்று ஒருவருக்கொருவர் கேட்டு மகிழ்வுரும் காட்சியை நப்பண்ணனார் என்னும் புலவர் கூறுகிறார்.

சித்திரை மாடத்து ஓவியங்களை பார்த்துக் கொண்டே உயிர் நீத்த பாண்டிய மன்னனை, ‘சித்திர மாடத்து துஞ்சிய பாண்டியன் நன்மாறன்’ என்று தமிழின ஓவிய மரபை கூறும் புறனானூற்று வரிகளில் நம் மனம் தோயாமல் எப்படி இருக்க முடியும்.

முதலாம் ராஜராஜன் தான் உருவாக்கிய பிரமாண்டமான தஞ்சை பெரிய கோயிலில், ஆடல் மகளிரின் முத்திரை அபிநயத்தோடு அற்புத ஆட்டங்களை, ஓவியங்களாக வரைந்துள்ளார். சிவபாதசேகரனான ராஜராஜன் சிவனின் வியத்தகு திருவிளையாடல்களின் பல்வேறு காட்சிகளை தத்ரூபமான சுவரோவியங்களாகினார். அவை இன்று சிதிலம் அடைந்த நிலையிலும் காணக்கிடைக்காத காட்சிகளாகத் தோன்றுகிறன.

சுவாமி வீதியுலாவின் போது ஆடல் மகளிரின் அபிநயத்தோடுதான் வெளிவரவேண்டும் எனும் ராஜராஜனின் விருப்பம், ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் வரை நிறைவேறியுள்ளது. கும்பகோணத்தை அடுத்த திருநல்லம் எனப்படும் கோனேரிராஜபுரத்து கோயில் ஓவியங்கள் இன்று சாட்சியாக உள்ளன. திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் பதிகம் பாடிய இக்கோயிலில் வீற்றிருக்கும் ஆடல்வல்லான் ஐம்பொன் சிலை பிரமாண்டத்திலும், பேரழகிலும் புகழ்பெற்ற சிற்பமாக விளங்குகிறது. இக்கோயிலின் விதானம், மற்றும் சுவரில் தோற்றும் ஓவியங்கள் வரலாற்று சிறப்புமிக்கவையாகும். ஆங்கில அதிகாரிகளை மாலையிட்டு வரவேற்க ஆடல் மகளிரும், நட்டுவாங்க மேதைகளும், இசை விற்பன்னர்கள் குழாமோடு வரவேற்கும் இக்காட்சி அரிதான ஒன்றாகும்.

இக்கோயிலின் உற்சவ மூர்த்தியான உமாமகேஸ்வரர் சுவாமி, பத்து நாட்கள் வீதியுலாவரும்போது இடும்பன், இடும்பி, யானை, சிங்கம், அன்னபட்சி, ஆட்டுகடா போன்ற வாகனங்களில் உலாவருகிறார். ருக்மணி எனும் ஆடல் மகளிர் அழகிய ஜடை உடை அலங்காரத்துடன் வீதியில் நடனமாடுகிறார், அதற்கு சின்னபக்கிரி குழுவினரின் நாதஸ்வர தவில் இன்னிசை நிகழ்த்துகின்றனர்.

அதனைக் கண்டுகளித்து இன்புரும் சிவ வைணவ பேதமற்ற பெருமக்களையும் காட்சிப்படுத்துகிறது இச்சுவரோவியம். சிலப்பதிகாரத்திலிருந்து சோழர்காலத்துக்கு பின் ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் வரை ஆடற்கலை அழியாமல் பாதுகாக்கப்பட்டதை காட்டும் வரலாற்று புகழ்மிக்க சுவரோவியமாகும்.

ஒரு ஓவியத்தில் வெவ்வேறு உருவங்கள், விதவிதமான வடிவங்கள், கருப்பு, சிவப்பு, மஞ்சள், வெள்ளை போன்ற வண்ணங்களால், மேநாட்டவரும் வியக்கும் உருவங்களின் கட்டமைப்பு (composition) அழகோடு தமிழகமெங்கும் காணப்படும் இவ்வோவிய மரபு, பட்டி விக்ரமாதிதன் கதை புத்தகத்தின் மர அச்சு ஓவியங்களாகவும், தற்போது கலங்காரி என்னும் துணி ஓவியங்களாக சிக்க நாயக்கன்பேட்டையில் தொடர்வது மகிழ்ச்சியைத் தருகிறது

நன்றி

தேனுகா பக்கங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 24, 2021 02:30

தேசாந்திரி – மலையாளத்தில்

எனது தேசாந்திரி கட்டுரைத் தொகுப்பு மலையாளத்தில் வெளியாகிறது.

மொழியாக்கம் செய்திருப்பவர் மனோகரன்.

பேபியன் புக்ஸ் இதனை வெளியிடுகிறது

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 24, 2021 02:15

March 22, 2021

ஆங்கிலத்தில் குறுங்கதைகள்

பிரண்ட்லைன் இதழில் எனது கர்னலின் நாற்காலி தொகுப்பிலிருந்து இரண்டு குறுங்கதைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

இந்தக் கதைகளை மொழியாக்கம் செய்திருப்பவர் மாலினி சேஷாத்ரி.

மினி கிருஷ்ணன் இதைத் தேர்வு செய்து அறிமுகம் செய்திருக்கிறார்.   

Thanks

Frontline

Mini Krishnan

Malini Seshadri

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 22, 2021 07:10

March 20, 2021

இந்தியன் குக்

புதிய சிறுகதை

அந்த வனவிடுதியில் கிளாவெல்லைத் தவிர வேறு எவரும் தங்கியிருக்கவில்லை அது விருந்தினர்களுக்கான விடுதி என்ற போதும் வால்டர் கிளாவெல் வனத்துறை அதிகாரியாக வந்தபிறகு அதைத் தன்வசமாக்கி வைத்துக் கொண்டான். வேட்டைக்கு வரும் ஜமீன்களுக்குக் கூட அந்த விடுதியில் தங்க இடம் கிடைப்பதில்லை.

இங்கிலாந்திலிருந்து 1845ல் இந்தியாவிற்கு வந்த வால்டர் கிளாவெல் வன அதிகாரியாக அஸ்ஸாமில் தான் பணியில் அமர்த்தப்பட்டான். ஏழு வருஷஙகள் அங்கே பணியாற்றியபிறகே தென்வனம் எனப்படும் அந்தக் காட்டினை நிர்வாகம் செய்ய அனுப்பி வைக்கபட்டான். அது கேரள எல்லைப் பகுதியை ஒட்டிய காடு.

நூறு மைலுக்கும் மேல் பரந்து விரிந்திருந்த அந்தக்காடு முழுவதும் வால்டர் கிளாவெல் கட்டுப்பாட்டில் தானிருந்தது. அவன் தன்னைக் காட்டின் அரசனாகவே உணர்ந்தான். அவனது மூர்க்கமான செயல்கள் காட்டினுள் வசித்த பழங்குடியினரை பயமுறுத்தின. அவர்கள் கிளாவெல்லின் கண்ணில் படாமல் மறைந்து நடமாடிக் கொண்டிருந்தார்கள்.

கிளாவெல் வந்தபிறகு அந்தக் காட்டினை விட்டுப் பழங்குடிகள் எவரும் வெளியே போகக் கூடாது என்று சட்டம் விதித்தான். தட்டாம்பாறை ஒட்டியிருந்த பழங்குடிகளின் குடிசைகளை மொத்தமாகத் தீவைத்து எரித்துவிட்டு அவர்களை மேகவளைவு என்ற பக்கத்தில் குடியேறச் செய்தான்.

பழங்குடி பெண்களில் சிலரை அவன் தூக்கிச் சென்று நாட்கணக்கில் அருவிக்கரையில் கூடாரம் அமைத்து அதற்குள் நிர்வாணமாக வைத்திருந்தான். அந்தப் பெண் பின்னிரவில் தப்ப ஒட முயன்றபோது பிடித்துத் தலைகீழாக அவர்களை மரத்தில் கட்டி தொங்கவிட்டிருந்தான். மூன்று பெண்கள் அதில் இறந்துபோனார்கள். இறந்த உடல்களை அருவியில் தூக்கி வீசும்படி செய்திருந்தான்.

கிளாவெல் வந்தபிறகு காட்டின் இயல்பு முற்றிலும் மாறியிருந்தது. அடிபட்ட புலி காட்டிற்குள் மூர்க்கமாக அலைவது போல அவன் அலைந்து கொண்டிருந்தது.

நல்லவேளையாகக் கல்கத்தாவிலிருந்து அவனது மனைவி லாராவும் இரண்டு மகள்களும் அவனுடன் வசிப்பதற்காகத் தென்வனத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வந்தபிறகே வனவிடுதியை அவன் தனதாக்கிக் கொண்டான்.

கிளாவெல்லின் வனவிடுதியில் ஞாயிறு தோறும் பார்ட்டி நடப்பது வழக்கம். இதில் முப்பது பேருக்கும் மேலாக வந்து போவதுண்டு. அதில் மேலையூர் ஜமீன்தார் உள்ளிட்ட சிலரும் அடக்கம். சிலவேளைகளில் அவர்கள் துப்பாக்கியோடு வனவேட்டைக்குப் போய் வருவார்கள். வேட்டையப்பட்ட முயல்களையும், காட்டுபறவைகளையும் மான்களையும் சமைக்க வேண்டியது முலாக்கின் வேலை. சில நேரம் ஆற்றிலிருந்து மீன் பிடித்து வந்து சபேசன் சமைக்கவும் செய்வான்.

மூன்று சமையற்காரர்களுக்கும் வெளியே தெரியாத வெறுப்பும் இனம்புரியாத கசப்புணர்வும் இருந்தது. அதிலும் ஜுலியனுக்கு இந்தியர்களைப் பிடிக்கவேயில்லை. முலாக்கை அவன் சகித்துக் கொண்டதற்குக் காரணம் முலாக் தயாரித்துத் தரும் நாட்டுசாராயத்திற்குத் தான்.

முலாக் அதை எப்படிக் காச்சுகிறான். எங்கே வைத்துக் காய்ச்சி எடுக்கிறான் என்று எதுவும் தெரியாது. ஆனால் அவன் கொண்டு வந்து சாராயத்தின் போதையை எந்த விஸ்கியும் தந்ததில்லை

சபேசன் அதிகாலையில் எழுந்து காட்டாற்றில் சென்று குளித்துவிட்டு திருநீறு பூசிக் கொள்வான். ஒருநாள் அதைப்பற்றி லாரா அவனிடம் கேட்டாள்.

திருநீற்றை ஆங்கிலத்தில் எப்படிச் சொல்வது எனப் புரியாமல் சபேசன் கையெடுத்து வணங்கிவிட்டு நெற்றியில் கோடு போடுவது போலச் சைகை காட்டினான்.

லாராவிற்க்கு அது புரிந்தது போலச் சிரித்துவிட்டு இந்தக் குளிரிலும் பச்சை தண்ணீரிலா குளிக்கிறாய் என்று ஆங்கிலத்தில் கேட்டாள்.

சபேசன் தலையசைத்தபடியே “ரிவர் வாட்டர் வெரி கோல்ட். இட்ஸ் குட்“ என்று சொன்னான்.

லாராவிற்கு. வனத்துறைக்குச் சொந்தமான அந்தப் பாரஸ்ட் பங்களாவும் அதைச் சுற்றிய மரங்களும் அவருக்கு மிகவும் பிடித்துப் போயின. கிளாவெல் அஸ்ஸாமில் பணியாற்றியபோது அவனுக்குச் சமையல் செய்வதற்காக நியமிக்கபட்ட முலாக்கையும் அவர்கள் உடன் அழைத்து வந்திருந்தார்கள்.

லாரா வந்தபிறகும் கிளாவெல் காட்டிற்குள் தான் சுற்றிக் கொண்டிருந்தான். அவள் தனது தனிமையைப் போக்கிக் கொள்ள விருந்து நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தாள். அப்போது வருகை தரும் ஜமீன்தார்களுக்குச் சமைப்பதற்கென்றே ஒரு இந்தியன் குக்கை ஏற்பாடு செய்யும்படி சொல்லியிருந்தார்.

சபேசன் அப்படித்தான் கிளாவெல்லிடம் வேலைக்குச் சேர்ந்தான். அவன் வந்து சேர்ந்த முதல்நாளே கிளாவெல்லின் கோபத்திற்கு ஆளாகினான். காரம் அதிகமாக கோழி இறைச்சியை சமைத்துவிட்டான் என்று அவன் மீது காறி துப்பினான் வால்டர். அத்தோடு அவன் செய்திருந்த உணவில் மூத்திரம் பெய்தான். அப்படியும் கோபம் அடங்கவில்லை  சூட்டுக்கோலை காயவைத்து அவனது முதுகில் மூன்று கோடுகள் போட்டுவிட்டான். நாயை போலத் தன் உத்தரவிற்குப் பணிந்து நடக்க வேண்டும் என்று சப்தமிட்டான்

சபேசனுக்கு அந்த காயம் ஆற இரண்டு வாரங்களானது. காட்டு மூலிகைகளை கொண்டு அவனே சுய வைத்தியம் செய்து கொண்டான்.

கிளாவெல் காட்டிற்குள் சென்றுவிடும் நாட்களில் லாரா அவன் செய்து தரும் சைவ உணவுகளை விரும்பிச் சாப்பிட்டாள். குறிப்பாக அவன் செய்து தரும் இனிப்பு வகைகள் மிகவும் பிடித்திருந்தது.  பால் பாயாசத்தை பிள்ளைகளும் விரும்பி சாப்பிட்டார்கள். ஆனால் கிளாவெல் இருக்கும் நாட்களில் ஒரு போதும் அந்த இனிப்பை சபேசன் செய்வதில்லை.

லாரா அவனை இந்தியன் குக் என்றே அழைத்தாள். துரையிடம் வேலைக்கு வந்த ஆறு மாதங்களில் சபேசன் அறைகுறையாக இங்கிலீஷ் கற்றுக் கொண்டுவிட்டான். அந்தப் பாரஸ்ட் பங்களாவில் அவனைப் போல இன்னும் இரண்டு சமையற்காரர்கள் இருந்தார்கள். அதில் ஒருவன் கிழக்கு வங்காளத்தைச் சேர்ந்தவன் அவனது பெயர் முலாக். மற்றவன் இங்கிலாந்தில் இருந்து மேடம் லாராவுடன் வந்தவன். அவனது பெயர் ஜுலியன். அவன் தான் இங்கிலீஷ் பிரேக்பாஸ்ட்  தயாரிப்பவன்.

ஜூலியனும் முலாக்கும் வனவிடுதியினுள் இருந்த சிறிய அறை ஒன்றில் ஒன்றாகத் தங்கிக் கொண்டார்கள். அவர்களுடன் சேர்ந்து இருக்கச் சபேசனுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே. சமையலறைக்குள்ளே சிறிய அவன் தங்கிக் கொண்டான்.

சபேசன் ஒரு நாள் லாராவிற்காகப் பலாப்பழ இனிப்பு இலை அடை செய்து கொடுத்தான்.

“எதற்காக இந்தியர்கள் இவ்வளவு இனிப்பு சாப்பிடுகிறார்கள்“ என்று அவள் கேட்டாள்.

“இனிப்பு தான் நாக்கை விழிக்க வைக்ககூடியது. நாக்கில் இனிப்பு பட்டதும் மனதில் சந்தோஷம் வந்துவிடும்“ என்று சொன்னான் சபேசன். அதைக்கேட்டு லாரா சிரித்தாள்.

இங்கிலாந்தில் அவள் சாப்பிட்டிருந்த இனிப்பு வகைகளுக்கும் இந்திய இனிப்பிற்கும் நிறைய வித்தியாசமிருந்தது. குறிப்பாக இந்திய இனிப்பு வகைகள் நாக்கில் பட்டதும் சுவை உடலில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்திவிடுகிறது. அதிலும் பாலில் செய்யப்படும் இனிப்பு வகைகள் தரும் சுவைக்கு நிகரேயில்லை.

சபேசன் சைவ உணவு வகைகள் மட்டுமின்றி மீன் கோழி இரண்டினையும் மிக ருசியாகச் சமைத்துக் கொடுத்தான். அவன் சமையலின் காரம் லாராவிற்குக் கண்ணீர் வரவழைத்தது. ஆனால் வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் ரசித்துச் சாப்பிட்டார்கள். அது லாராவிற்குப் பெருமையாக இருந்தது.

சபேசன் தன் அறையில் தேவையான பலசரக்குப் பொருட்களை வாங்கி வைத்துக் கொண்டான். மண்பாத்திரங்கள். வெண்கலப் பாத்திரங்கள். கண்ணாடிப் பாத்திரங்கள் என விதவிதமான பாத்திரங்களைத் தேர்வு செய்து வைத்துக் கொண்டான். திருகையும் அம்மியும் உரலையும் பின்வாசலில் போட்டு வைத்துக் கொண்டான். சமையலுக்கென மழைத்தண்ணீரை ஒரு அண்டாவில் பிடித்து வைத்துக் கொண்டிருந்தான்.

அது எதற்காக என லாரா கேட்டபோது “மழைத்தண்ணீரின் ருசி கிணற்று தண்ணீருக்கு கிடையாது“ என்றான்.

சபேசனிடமிருந்து இந்திய இனிப்பு வகைகளைச் செய்வதற்கு லாரா கற்றுக் கொண்டாள். அதைச் சிறிய நோட்டில் குறிப்புகளாகவும் எழுதிவைத்துக் கொண்டாள்.

சபேசன் ஒரு நாள் சொன்னான்

“சமைப்பவர் மனதிலிருந்துதான் உணவிற்கு ருசி வருகிறது. சமைப்பவன் மனது கசந்து போனால் உணவில் அது வெளிப்படவே செய்யும்“

லாரா அதை உணர்ந்திருக்கிறாள். அவள் கோபத்தில் செய்த கேக் எதுவும் ருசியாக இருந்ததில்லை

ஒரு நாள் அவள் சபேசனிடம் கேட்டாள்

“நீ ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை“

“பிரம்மச்சாரிக்கு தான் கைமணம் அதிகமிருக்கும். “

“அதற்காகத் திருமணம் செய்து கொள்ளாமலா இருப்பாய்“

“சமையலை விட்டுவிட்டால் திருமணம் செய்து கொள்வேன்“ என்று சொல்லி சிரித்தான்.

சமையல் நேரங்களைத் தவிர மற்றவேளைகளில் முலாக்கை அந்த வீட்டில் காணவே முடியாது. காட்டிற்குள் சுற்றியலைந்து கொண்டிருப்பான். பழங்குடி பெண் ஒருத்தியின் பின்னால் அவன் சுற்றுவதைச் சபேசனே ஒரு நாள் பார்த்தான்.

வால்டர் கிளாவெல் துரையின் வீட்டுவேலையாட்கள். குதிரைவண்டி ஒட்டுகிறவன். தபால் கொண்டு போகிறவன். புல்வெட்டுகிறவன், ஆயா மற்றும் இரவுக்காவல் செய்பவர்கள் அத்தனை பேருக்கும் தனிச் சமையல். அந்தச் சமையல் வீட்டிற்கு வெளியே தனியே நடந்தது.

சபேசன் காலையில் வெறும் எலுமிச்சை சாறு மட்டும் தான் குடிப்பான். மதியம் சோறு. குழம்பு வெறும் அப்பளம். இரவில் மோர்விட்ட சாதம். வடுமாங்காய். இவ்வளவே அவனது சாப்பாடு. இத்தனை ருசியாகச் சமைத்தும் அவன் ஒருபோதும் இனிப்பு சாப்பிடுவதில்லை. ஆசையாக எந்த உணவினையும் செய்து சாப்பிடுவதில்லை.

கிளாவெல்லிடம் பணியாற்ற வந்தபிறகு சபேசன் ஒரேயொரு விஷயத்தைப் புதிதாகக் கற்றுக் கொண்டிருந்தான். அது குடிப்பது. அவன் பார்ட்டியில் மீதமாகிப்போட்ட புட்டிகளைச் சேகரித்து வைத்திருப்பான். இரவானதும் அதைக் குடிக்க ஆரம்பிப்பான்.

அந்தக் காட்டு பங்களாவின் பின்புறம் விரிந்து கிடந்தது தென்வனம் இரவில் காட்டுப்பூச்சிகளின் இரைச்சலும் மின்மினிகளின் பறத்தலுமிருக்கும். வீட்டின் பின்புறமிருந்த கோட்டைச்சுவர் பாதி உடைந்து கிடந்தது. அதற்கு அப்பால் ஒரே புதர் செடிகள்.

வனவிடுதியில் மின்சார வசதி கிடையாது. பதினாறு எண்ணெய் விளக்குகளும் ஆறு பெரிய மெழுகுவர்த்திகளும் தினசரி ஏற்றப்பட்டன. இங்கிலாந்தில் இருந்து கொண்டு வந்திருந்த மெழுகுவர்த்திகளையும் மேடம் லாரா தன் அறையில் மட்டுமே பயன்படுத்தினாள். கொசுவை விரட்டுவதற்காக மாலை நேரம் காய்ந்த வேப்பிலை பொடியை தூவி புகை போடுவார்கள். அப்போது லாராவும் அவளது மகளும் அறையின் ஜன்னல்களை மூடி உள்ளே பதுங்கிக் கொள்வார்கள்.

பாரஸ்ட் பங்களாவில் இருந்து மேற்கே நடந்தால் மரப்பாலம் ஒன்று காணப்பட்டது. அதைக்கடந்து மேலேறினால் காட்டாறு ஒ. அந்த ஆற்றின் கரையில் இரண்டு பெரிய பாறைகள் யானை படுத்துகிடப்பதை போல உயர்ந்திருந்தன. அந்தப் பாறையின் மீதேறி நின்றபடி மாலை நேரத்தில் மேடம் லாரா தொலை தூரத்து அருவியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பாள். சில நாட்கள் வானவில் தென்படும். ஒரு சிறுமியை போல வியந்து ரசித்தபடியே இருப்பாள். . பருத்து உயர்ந்து நின்ற மரங்களும் புதர்செடிகளும் காட்டுக்கொடிகளும் நிரம்பிய அந்த மேற்குபாதையில் அவள் தனியே நடந்து செல்வாள். சில வேளைகளில் காட்டுகோழிகள் வழியில் எதிர்படுவதுண்டு..

லாரா இங்கிலாந்தில் இருந்து கப்பலில் வந்த போது அவளது வயது பதினெட்டு. அவள் வந்த கப்பல் முழுவதும் இளம் பிரிட்டீஷ் அதிகாரிகளைத் திருமணம் செய்து கொள்வதற்காக இளம்பெண்கள் இந்தியா வந்திருந்தார்கள். அரசு செலவிலே அப்படியான ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

லாராவின் துணைக்கு அவளது அத்தை உடன் வந்திருந்தாள். மூன்று மாத காலத்தில் அவர்கள் இந்தியாவில் ஒரு இங்கிலீஸ்காரனைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும். ஒருவேளை சரியான மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்று இங்கிலாந்து திரும்புவதாக இருந்தால் அவர்கள் சொந்த செலவில் தான் செல்ல வேண்டும்.

இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் அதிகாரி ஒருவனைத் திருமணம் செய்து கொண்டுவிட்டால் கர்ப்பிணியானதும் இங்கிலாந்து திரும்பி போய்விடலாம். அதன்பிறகு அவளது அத்தனை செலவுகளையும் அரசே ஏற்றுக் கொள்ளும். அப்படித் தான் லாரா கிளாவெல்லை திருமணம் செய்து கொண்டாள்.

திருமணத்திற்குப் பிறகே அவனது மூர்க்கமான செயல்களும் மிதமிஞ்சிய குடியும் அவளுக்குத் தெரிய வந்தன. போதையில் பலமுறை அவளை அடித்திருக்கிறான். ஒருமுறை அவளது வலதுகை உடைந்தும் போயிருக்கிறது. கர்ப்பிணியானவுடன் அவள் இங்கிலாந்து போய்விடலாம் என்று கனவு கண்டாள். ஆனால் வால்டர் கிளாவெல் அவளை அனுப்பி வைக்கவில்லை. மாறாக இனி அவள் எப்போதும் இங்கிலாந்து போகமுடியாது என்றும் அறிவித்தான். லாராவிற்கு வேறுவழியில்லை. அவள் கிளாவெல்லை சகித்துக் கொண்டு அவனோடு வாழ்ந்து வந்தாள்.

தென்வனத்திலிருந்த பழங்குடிகள் கிளாவெல்லை கடவுளைப் போலவே நடத்தினார்கள். மதுவேறிச் சிவந்த கண்களுடன் ஒற்றை ஆளாக அவன் குதிரையில் சுற்றியலைந்து கொண்டிருந்தான்.

அருவியை ஒட்டிய மரத்தில் அமைத்த பரண்வீடு ஒன்றில் வால்டர் கிளாவெல் தங்கிக் கொண்டான். இரவெல்லாம் குடித்தான். புகைத்தான். பழங்குடி பெண்களை அனுபவித்தான். சில நாட்கள் அவன் நிர்வாணமாகக் காட்டில் அலைவதுண்டு. இரையெடுக்க அலையும் ஒநாய் போலவே அவன் நடந்து கொண்டான். காட்டின் தனிமை அவன் மூர்க்கத்தை அதிகமாக்கியது. அதுவும் மழைபெய்யும் நாட்களில் அவன் மிகுந்த உக்கிரம் கொள்வான். இடியை விடச் சப்தமாகக் கத்துவான். மழையின் ஊடாகவே காட்டில் அலைந்து திரிவான். காட்டுக்குரங்குகள் அவனைக்கண்டு பயந்து அலறின. காட்டில் அவன் வைத்தது தான் சட்டம். சுள்ளி பொறுக்க வந்த ஆட்களை அடித்து விரட்டினான்

இரண்டு ஆண்டுகளுக்குள் அந்தக் காட்டினை உள்ளங்கையின் ரேகைகளைப் போலத் துல்லியமாக அறிந்திருந்தான்.

ஒரு நாள் மதராஸிலிருந்து அவனுக்கு ஒரு தந்தி வந்திருந்தது. கென்னிங் பிரபுவும் அவரது மனைவியும் புலிவேட்டைக்காகத் தென்வனத்திற்கு வருகிறார்கள். அவர்களுக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்து தரவேண்டும் என்று தந்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கிளாவெல்லே திருநெல்வேலி ரயில் நிலையத்திற்குப் போய்க் கென்னிங் பிரபுவையும் அவரது மனைவியினையும் வரவேற்று அழைத்துவந்தான். டோரதிக்கு முதல்பார்வையிலே கிளாவெல்லை பிடிக்கவில்லை. அவர்களைத் தனது காரில் அழைத்துச் செல்லும் போது கிளாவெல். டோரதியை விழுங்குவது போலப் பார்த்துக் கொண்டிருந்தான்.

கென்னிங்கின் மனைவி டோரதி பேரழகியாக இருந்தாள். தலையில் அவள் கட்டியிருந்த சிவப்பு ரிப்பனும் அவள் உடலில் பூசியிருந்த வாசனை தைலமும் அவனைக் கிறக்கமடையச் செய்தன.

.கென்னிங் பருத்த தொப்பைகள் கொண்ட குள்ள உருவமாக இருந்தார். சர்ச்சலின் சுருட்டைப் போல ஒன்றை பிடித்துக் கொண்டிருந்தார். கென்னிங்கிற்காகக் காட்டிற்குள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூடாரம் ஒன்றில் அவர்களைத் தங்க வைத்தான் கிளாவெல்.

மறுநாள் காலை அவன் டோரதியை சந்தித்துக் காட்டில் பறித்துக் கொண்டுவரப்பட்ட பூக்கள் எனச் சிவப்பும் மஞ்சளுமான பூக்களைக் கொடுத்தான். அதைக் கையில் வாங்கும் போது அவளுக்கு அச்சமாக இருந்தது.

கென்னிங் பிரபுவை அருவியில் குளிப்பதற்காக அழைத்துப் போகவதாகச் சொன்னார்

“அவ்வளவு தூரம் என்னால் நடக்கமுடியாது “என்றார் கென்னிங்

“உங்களை டோலியில் வைத்துத் தூக்கிக்கொண்டு போவார்கள்“ என்றான் கிளாவெல்

அதன்படியே கென்னிங் பிரபுவை நான்கு பேர் அருவி வரை மூங்கில் இருக்கை ஒன்றில் உட்காரவைத்து தூக்கிக் கொண்டு போனார்கள். கென்னிங் அருவியில் குளித்தபடியே குடித்தார். நிர்வாணமாக நடனமாடினார். அவருக்குக் கிளாவெல்லை மிகவும் பிடித்துப் போனது.

திரும்பி வரும்போது வெள்ளிகிழமை காலையில் புலி வேட்டைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகச் சொன்னான் . டோரதி தனக்கு ஒரு புலிக்குட்டி உயிருடன் வேண்டும். பிடித்துத் தரமுடியுமா எனக்கேட்டாள். நிச்சயம் அவள் காட்டினை விட்டுப் போவதற்கு ஒரு புலிக்குட்டியை பிடித்துத் தருவதாகச் சொன்னான்.

புலிவேட்டைக்கு முரசு அடித்து விரட்டுபவர்கள். துணையாட்கள். வில்லாளிகள், துப்பாக்கி ஏந்திய சிப்பாய்கள் சகிதமாகக் கென்னிங் பிரபு யானை மீதேறி வேட்டைக்குக் கிளம்பினார். அவர்களுக்கு முன்பாகவே கிளாவெல் காட்டிற்குள் போயிருந்தான்.

காடு விடிகாலையில் புதுமணம் கொண்டுவிடுகிறது. சூரிய வெளிச்சம் படுவதற்கு முன்பு ஒளிரும் காட்டின் அழகு வியப்பூட்டக்கூடியது. டோரதி இளம்பச்சை நிற கவுன் அணிந்திருந்தாள். தலையில் வெள்ளை தொப்பி. காட்டிற்குள் உதிர்ந்து கிடந்த பறவையின் இறகுகளை அவளுக்காகச் சேகரித்துக் கொடுத்தார்கள். அதைக் கையில் ஏந்தியிருந்தாள். காட்டிற்குள் இருந்த குளிர்ச்சி இங்கிலாந்தில் இருப்பது போலவே உணரச்செய்தது. புலி எங்கே மறைந்திருக்கும். எந்த இடத்தில் வேட்டை நடக்கப் போகிறது என ஆர்வமாகக் கேட்டபடியே வந்தாள்.

கென்னிங் பிரபு முந்தைய இரவில் நிறையக் குடித்திருந்தார். அவரது கண்பிதுங்கி வெளியே வருவது போலப் பெரியதாகியிருந்த்து. கண்ணுக்குக் கிழேயுள்ள பை சரிந்து தொங்குவது போலிருந்தது. அவர் யானையின் மீது அமர்ந்திருந்தார். இன்னொரு யானையில் டோரதி வந்து கொண்டிருந்தாள். யானையின் முன்னால் ஈட்டி ஏந்திய வீர்ர்கள் நடந்து கொண்டிருந்தார்கள். யானை ஆடி அசைந்து நடந்து கொண்டிருந்தது

அவர்கள் ஆற்றின் கரைக்கு வந்து சேர்ந்த போது கிளாவெல்லைக் காணவில்லை. எங்கிருந்தோ அவனது சப்தம் மட்டும் கேட்டது. அடுத்தச் சில நிமிஷங்களுக்குப் பிறகு புலி ஒன்று ஒடிவருவது தெரிந்தது. சிகாரிகள் கென்னிங் பிரபுவிடம் புலி அவர்களை நோக்கி வந்து கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்

கென்னிங் பிரபு தனது வேட்டை துப்பாக்கியை உயர்த்திக் குறி வைத்தார். புதர்செடிகள் அசைய ஆரம்பித்தன. கென்னிங் பிரபு அந்தப் புதரை நோக்கி சுட்டார். ஏதோவொரு விலங்கு அடிபட்டு ஒடுவது போலத் தெரிந்த்து. கென்னிங் அந்த விலங்கை நோக்கி யானையைச் செலுத்த ஆரம்பித்தார். யானை வேகமாக நடந்தது. சரிவு ஒன்றில் யானை இறங்கும் போது மரத்தின் உயரத்தில் நின்றிருந்த கிளாவெல் தனது துப்பாக்கியால் குறிபார்த்துக் கென்னிங்கை சுட்டான். யானை மீது இருந்து கென்னிங் சரிந்து விழுந்தபோது அடிவயிற்றில் இருந்து ரத்தம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.

வெடிச்சப்தம் கேட்ட யானை புதர்களை மிதித்து நசுக்கியபடியே வேகமாக ஒடியது.

கிளாவெல் செத்துகிடந்த கென்னிங் அருகில் வந்து நின்று காலால் அவர் உடலைப் புரட்டிப்பார்த்தான். பிறகு தனது துப்பாக்கியை வானிற்கு உயர்த்திச் சுட்டான். இப்போது அவன் வேட்டைக்கு ஏற்பாடு செய்திருந்த ஆட்கள் அனைவரும் டோரதி இருந்த யானையை அப்படியே விட்டுவிட்டு விலகிப் போக ஆரம்பித்தார்கள். எங்கே போகிறார்கள் எனப்புரியாமல் டோரதி சப்தமிட்டாள். அந்த யானை மேற்கு நோக்கி நடக்க ஆரம்பித்தது. டோரதி யானையின் மீதிருந்து குதித்துவிட முயன்றாள்.

பாகன் அதை அனுமதிக்கவில்லை. அவள் பாகனை மீறி யானையின் மீதிருந்து கிழே இறங்க முயன்றபோது கிளாவெல் அருகில் வந்திருந்தான். அவன் யானையை நிறுத்தச்சொல்லி அவளைக் கிழே இறக்கிவிட்டான். கென்னிங் பிரபுவிற்கு அடிபட்டுவிட்டது. புலி அவனைத் தாக்கிவிட்டதால் ரத்தவெள்ளத்தில் மிதக்கிறார். வாருங்கள் எனத் தன்னோடு அழைத்துக் கொண்டு போனான்.

அவள் பயமும் குழப்பமுமாகக் கிளாவெல்லை பின்தொடர்ந்தாள். கிளாவெல் மரத்தில் கட்டியிருந்த பரண் வீட்டிற்குள் அவளை அழைத்துச் சென்றபோது அங்கே யாருமில்லை

அவள் கோபத்துடன் “கென்னிங் எங்கே“ எனக்கேட்டாள்

வானை நோக்கி கையைக் காட்டியபடியே கிளாவெல் சிரித்தான். அவளுக்குப் புரிந்துவிட்டது. கிளாவெல் தன்னை அடைவதற்காகவே கென்னிங்கை கொன்றிருக்கிறான். கிளாவெல் அவளை நோக்கி நெருங்கி வந்து அவளது தோளை தனது வலிமையான கைகளால் பற்றிக் கொண்டபடியே சொன்னான்

“நீ காட்டை விட்டு போகமுடியாது. “

அவள் கிளாவெல்லின் கைகளைத் தள்ளிவிலக்க முயன்றாள். கிளாவெல் சிரித்தபடியே சொன்னான்

“புலிக்குட்டி வேண்டும் என்று கேட்டாயே.. நான் ஒரு புலி என்னையே தருகிறேன் “

அவள் ஒங்கி அடிப்பது போலக் கைகளை உயர்த்தினாள். தனது அகன்ற கைகளால் அவள் முகத்தில் ஒங்கி அறைந்த கிளாவெல். அவளைத் தரதரவெனத் தனது வெட்டவெளியை நோக்கி இழுத்துக் கொண்டு போனான். உடைகளைக் கிழித்து அவளுடன் கூடியதை புணர்ச்சி எனச் சொல்லமுடியாது. கொல்லப்பட்ட மானின் சதையைப் புலி பிய்த்து தின்னுவது போன்ற வேட்டையது.

தொடைகள் கிழிந்துபோக மார்பில் நகம் பதிந்து கீறல் விழ, வீங்கிய உதடுகளும் நடுங்கும் கால்களுடன் டோரதி கட்டிலில் கிடந்தாள். கிளாவெல் அவள் அருகில் உட்கார்ந்தபடியே தன் நாவால் அவள் உடலை நக்க ஆரம்பித்தான். ரத்தம் ருசிக்கும் மிருகத்தின் செயல். டோரதி அலறினாள். அந்த இரவில் காட்டில் அவளது கூக்குரல் தனியே கேட்டுக் கொண்டேயிருந்தது. ஆறு இரவு பகல்கள் அந்த மரவீட்டிற்குள்ளாகவே டோரதி நிர்வாணமாகக் கிடந்தாள். கிளாவெல் குடிப்பதும் அவளுடன் கூடுவதுமாகவே இருந்தான்.

ஏழாம் நாளின் காலையில் அவளை நிர்வாணமாக நடத்தி ஆற்றின் கரைக்கு அழைத்துப் போனான். அவளை ஆற்று நீரில் இறங்கச் செய்து வேடிக்கை பார்த்தான். பிறகு பாறை ஒன்றில் ஏறி நிற்க சொன்னான். குளிரில் ஜில்லிட்ட உடலுடன் அவள் கைகூப்பி வணங்கினாள். அவளைத் திரும்பி நிற்கச் சொன்னான் கிளாவெல். ஈரம் சொட்டும் முதுகுடன் அவள் நின்றிருந்தாள். கிளாவெல் தனது ரிவால்வாரை எடுத்து அவளது முதுகில் சுட்டான். அறுபட்ட வாழைமரம் போல விழுந்தாள் டோரதி. காலால் அவள் உடலை காலால் எத்திவிட்டாள். ஆற்றில் மிதந்து சென்றாள் டோரதி.

கிளாவெல் சந்தோஷ மிகுதியில் ஒடும் தண்ணீரை நோக்கி ஒரு முறை சுட்டான்.

கென்னிங்பிரபுவும் அவனது மனைவியும் காட்டுபுலியால் வேட்டையாடப்பட்ட நிகழ்வை அவன் ரிப்போர்ட் செய்த போது கம்பெனி அதைப்பற்றித் துளி சந்தேகத்தையும் எழுப்பவில்லை.

ஆனால் இதை லாராவால் மன்னிக்க முடியவில்லை. அவள் நடந்த விஷயங்களைக் கேள்விபட்டபிறகு கிளாவெல்லுடன் ஒன்றாகப் படுப்பதற்குக் குற்றவுணர்வு கொண்டாள். அவனை என்ன செய்வது என அவளுக்குப் புரியவேயில்லை.

மழைக்காலத்தின் நடுவே ஒரு நாள் கிளாவெல் குதிரையிலிருந்து தவறி விழுந்தான். இடுப்பு எலும்பில் சிறிய முறிவு ஏற்பட்டிருந்தது. ஆகவே அவன் மூலிகை வைத்துக் கட்டி நாற்பத்தியெட்டு நாட்கள் ஒய்வெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டான்

வேறு வழியின்றி நாற்பத்தியெட்டு நாட்களும் அவன் வனவிடுதியில் இருக்க வேண்டிய கட்டாயமானது.

அந்த நாட்களில் அவன் சதா குடித்தபடியே இருந்தான். போதையில் முலாக் மீது மதுவை ஊற்றி நெருப்பு வைத்தான். முலாக் அலறியபடியே ஒடும்போது லாரா பயந்து போனாள். அதன்பிறகு தான் கிளாவெல் சபேசனுடன் நெருக்கமாகத் துவங்கினான்.

குறிப்பாக வலியை மறப்பதற்காகச் சபேசன் செய்து கொடுத்த இனிப்பு அடையைத் தின்றவுடன் உடல் வலி மறையத் துவங்கியதோடு விசித்திரமான கனவுகள் வரவும் துவங்கின.

அந்தக் கனவுகளிலிருந்து அவனால் விழித்துக் கொள்ளமுடியவில்லை. ஒரு நாள் கிளாவெல்லின் கனவில் அருவி அவன் வீட்டிற்குள் விழுந்து கொண்டிருந்தது. யானைகள் வானில் பறந்து கொண்டிருந்தன. உடல் எடையற்றுப் போனது.

அந்த இனிப்பு அடைக்காகக் கிளாவெல் ஏங்க ஆரம்பித்தான். அதைத் தயாரிக்கத் தாமதமான போது கைகள் நடுங்க காத்திருந்தான்.

அந்த அடையைக் கிளாவெல்லிற்காக மட்டுமே தயாரிப்பதாகவும் அதை வேறு எவரும் சாப்பிடக் கூடாது என்றும் சபேசன் சொன்னான்.

லாரா அதில் ஒரு துண்டினை சாப்பிடக் கேட்டபோதும் அவன் மறுத்துவிட்டான்

இந்த இனிப்பினை சாப்பிட்டு பழகிய கிளாவெல் சதா கனவுகளிலே மிதந்தான்.

பதினெட்டு நாட்கள் தொடர்ந்து இனிப்பு அல்வாவை தின்று கனவுகளில் சஞ்சரித்த கிளாவெல் பத்தொன்பதாம் நாள் காலை படுக்கையில் இருந்தபடியே கத்தினான்

அவனது குரல் அடிபட்ட விலங்கு கத்துவது போலிந்தது. பொதுவாக அவன் கோபத்தில் சப்தம் போட்டவுடன் லாரா மதுப்புட்டியை கொண்டு போய் வைப்பது வழக்கம். ஆனால். அன்றைக்கும் லாரா போன போது கிளாவெல் உடல் முழுவதும் கொப்பளித்து வீங்கியிருந்தது.

ஏதோ பூச்சி கடித்திருக்கிறது. மருத்துவர் ஹாமில்டன்னை அழைத்துக் கொண்டு வரச்சொல் என்று கத்தினான். லாரா தலையசைத்தபடியே அறையை விட்டு வெளியே சென்றாள்

ஹாமில்டன் வந்து பரிசோதனை செய்வதற்கு உடல் முழுவதும் கொப்பளங்கள் பெருகியிருந்தன. ஹாமில்டனுக்கு அது என்ன நோய் என்று புரியவில்லை. அந்தக் கொப்பளங்களிலிருந்து ரத்தம் கசிந்து கொண்டேயிருந்தது.

கிளாவெல் வலி தாங்கமுடியாமல் கத்தினான். பித்தேறியவன் போல ஒலமிட்டான். அவன் குரல் அடங்கவேயில்லை.

லாராவிற்கு என்ன நோய் இது என்று புரியவில்லை. அவள் பயந்து போயிருந்தாள்

சபேசன் ஒரு இரவு அவளிடம் வந்து சொன்னான்

“இனி என்னால் இங்கே வேலை செய்ய முடியாது. நான் ஊருக்குக் கிளம்புகிறேன். நீங்களும் இங்கிலாந்து கிளம்புங்கள். இனி கிளாவெல்லால் பிழைக்க முடியாது. அவனுக்காக நான் செய்து கொடுத்த இனிப்பு அவன் உடலை நஞ்சாக்கிவிட்டது. அவன் மூன்று நாட்களில் இறந்துவிடுவான். இறப்பதற்கு முன்பு வலியின் உச்சத்தை அவன் அனுபவிப்பான். கதறுவான். ஒலமிடுவான். அந்தக் குரலை இந்தக் காடு கேட்கட்டும். சமையல் என்பது ஒரு கலை. அது உடலை வளர்ப்பதற்கு மட்டும் உதவி செய்வதில்லை. உடலை அழிப்பதற்கும் தான். கிளாவெல்லை போன்றவர்களை வேறு வழியில் அழிக்க முடியாது. இந்த இனிப்பிற்காக நான் தேடிச்சேகரித்த எல்லா மூலிகைகளும் இந்தக் காட்டில் விளைந்தது தான். கிளாவெல் காட்டைத் தன் அதிகாரத்தில் வைத்திருந்தான். ஆனால் காடு எவர் அதிகாரத்திற்கும் கட்டுப்பட்டதில்லை. அதைக் காடு என் வழியாக நிரூபித்திருக்கிறது. “

சபேசன் சொன்னது போலவே மூன்றாம் நாளை அழுது புலம்பி ஊளையிட்டு கிளாவெல் இறந்து கிடந்தான். லாராவும் அவள் பிள்ளைகளும் விநோதமான நோய் தாக்கி கிளாவெல் இறந்துவிட்டான் என்ற அறிக்கையில் கையெழுத்திட்டு விட்டு லண்டன் புறப்பட்டார்கள்.

இங்கிலாந்தில் வசித்த போது லாரா எப்போதாவது தனது நோட்புக்கை பார்த்து இந்திய இனிப்பு வகைகளைச் செய்து பார்ப்பாள். அப்போதெல்லாம் அவள் சபேசனை நினைத்துக் கொள்வாள். கூடவே தென்வனக்காட்டினையும் கிளாவெல்லின் ஒலத்தையும் சேர்த்தே நினைத்துக் கொள்வாள்.

இனிப்பு சந்தோஷத்தை மட்டும் நினைவுபடுத்துவதில்லையே

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 20, 2021 11:00

March 19, 2021

கறுப்பு ரத்தம்

புதிய சிறுகதை

நர்மதா லிப்டை விட்டு வெளியே வந்தபோது இரண்டு கார்களுக்கும் நடுவில் இருந்த இடைவெளியில் அந்தக் கிழவர் தன் பேத்தியுடன் நிற்பதைக் காணமுடிந்தது.

மூன்று நாட்கள் முன்பாக அந்தக் கிழவர் அவள் வேலை செய்யும் சேனலிற்கு வந்து தன்னுடைய பேத்தியின் கல்லூரிப் படிப்பிற்குத் தேவையான பண உதவி வேண்டி டிவி செய்தியில் ஒளிபரப்பும்படி கேட்டார்.

அப்படிச் செய்யமுடியாது என அவர்கள் மறுத்துப் பேசியதை அவர் கேட்டுக்கொள்ளவேயில்லை.

கிழவருக்கு எழுபது வயதிருக்கும். தோளைவிட இறங்கிய கைகள் கொண்ட பெரிய சட்டை. அது மிக அழுக்காக இருந்தது. தோளில் வெளிறிய துண்டு ஒன்றைப் போட்டிருந்தார். கைகளில் வயதின் சுருக்கம். பேத்திக்கு பதினாறு வயதிருக்கும். இளமஞ்சள் நிற சுடிதார் அணிந்திருந்தாள். பொருத்தமில்லாத ரோஸ் வண்ண துப்பட்டா. காலில் ரப்பர் செருப்பு. கையில் ரப்பர் வளையல்கள். அவள் கையில் ஒரு செல்போன் இருந்தது.

கிழவர் பிடிவாதமான குரலில் சொன்னார்

“என் பேத்தி முகத்தை டிவியில பாத்தா கட்டாயம் உதவி செய்வாங்க.”

செய்திப் பிரிவில் வேலை செய்யும் ஆனந்த் அது இயலாத விஷயம் என்று சொல்லி அவரை வெளியே அழைத்துக்கொண்டு போனான். வேண்டுமானால் ஆபீஸில் வேலை செய்கிறவர்கள் முடிந்த பணத்தை அவருக்குக் கொடுத்து உதவலாம் என்று சொன்னார் நியூஸ் எடிட்டர் சாரதி.

கிழவர் அன்று முழுவதும் சேனலின் வாசல்படிக்கட்டை ஒட்டி நின்றுகொண்டிருந்தார். இரவில் அவள் கிளம்பும் போதும் பார்த்தாள். தலைகவிழ்ந்து நின்றிருந்தார்கள். இருவரும் சாப்பிட்டார்களா என்று கூடத்தெரியாது. அதன் மறுநாளும் அவர்கள் காலையிலே சேனல் வாசலில் வந்து நின்றிருந்தார்கள். ஒருவேளை பக்கத்து பிளாட்பாரத்திலே தங்கிவிட்டார்களோ என்னவோ.

இந்த முறை அவர்களை உள்ளே காவலாளி விடவேயில்லை. கிழவர் சேனல் செயல்பட்டு வந்த அடுக்குமாடி அலுவலகத்தின் வாசல்படியை ஒட்டி நாள் முழுவதும் நின்றிருந்தார். அவரது பேத்தி நிமிர்ந்துகூட எவரையும் பார்க்கவில்லை.

நர்மதாவிற்கு அவர்களுக்கு எப்படி உதவி செய்வது எனத்தெரியவில்லை. ஒருமுறை அவர்களிடம் பேசிப் பார்த்தபோதும் டிவி நியூஸ்ல காட்டுனா உதவி செய்வார்கள் என்று திரும்பத் திரும்பக் கிழவர் சொல்லிக்கொண்டேயிருந்தார். அது நர்மதாவால் இயலாத காரியம். மூன்றாம் நாளில் அந்தக் கிழவரை சேனலில் ஒருவரும் பொருட்டாக நினைக்கவேயில்லை. ஆயிரம் பரபரப்புகளுக்குள் அவரை யார் கண்டுகொள்ளப்போகிறார்கள்.

நர்மதா சேனலின் செய்திப்பிரிவில் வேலை செய்துகொண்டிருந்தாள். வாரம் புதன்கிழமை இரவு ஒளிபரப்பாகும் “உண்மையின் குரல்“ என்ற நிகழ்ச்சியை அவள்தான் தயாரித்து வந்தாள். சமூகப்பிரச்சனைகளைப் பேசும் அந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இரண்டு முறை அந்த நிகழ்ச்சிக்காக அவள் மீது நீதிமன்ற வழக்குத் தொடரப்பட்டது. பலமுறை போனில் முகம் தெரியாத ஆட்கள் மிரட்டியிருக்கிறார்கள். இந்த மிரட்டலும் வழக்கும் அவளது செயல்பாட்டினை மிகவும் வேகமாக்கியது. அவளும் அவளது குழுவினர்களும் மிகுந்த போர்குணத்துடன் மறைக்கபட்ட விஷயங்களை வெளிப்படுத்தினார்கள்.

புதன்கிழமை இரவு ஒன்பது மணிக்கு அவளது நிகழ்ச்சி ஒளிபரப்பானவுடன் போனை அணைத்து வைத்துவிடுவாள். இல்லாவிட்டால் இரவெல்லாம் வசைகளைக் கேட்க நேரிடும். ஆரம்பத்தில் அவளும் பதிலுக்குப் பதில் சண்டையிட்டாள். இப்போது அது வீண் வேலை என்று புரிந்திருந்தது. தான் நிறையப் பேரின் கோபத்தை, பகையைச் சம்பாதித்து வருவதைப் பற்றி அவள் கவலைப்படவேயில்லை.

கேண்டினில் சாப்பிடச் செல்லும் சில நேரம் கணேஷ் கேலியாக “இந்த வாரம் பாம்பு யாரைக் கொத்தப்போகிறது” என்று கேட்பான். நர்மதா சிரித்தபடியே “இந்த விஷம் எல்லாம் அவங்களை ஒண்ணும் பண்ணாது. பாம்புக்கு நாக்கு மட்டும்தான் விஷம். அவங்களுக்கு உடம்பு பூராமே விஷம் தான்,” என்பாள்.

அதைக் கேட்டு கணேஷ் சிரிப்பான். அந்த அலுவலகத்தில் அவளுக்கு இரண்டே நண்பர்கள் இருந்தார்கள். பலருக்கும் அவளைப் பிடிக்கவில்லை. அவளும் விலகியே இருந்தாள். வேலையில் காட்டும் ஆர்வத்தை விடவும் வம்பளப்பதில் அதிக அக்கறை காட்டுகிறவர்களுடன் எப்படி நட்புப் பாராட்ட முடியும்.

ஒவ்வொரு வாரமும் வியாழன் காலையில் அவள் நிகழ்ச்சி குறித்த எதிர்வினைகளைப் பற்றிக் குழு விவாதம் நடைபெறும். அன்று அதன் நிறைகுறைகளைப் பற்றி விரிவாகப் பேசுவார்கள். அடுத்த நிகழ்ச்சி பற்றி விவாதிப்பார்கள். ஆகவே வியாழக்கிழமை காலை எட்டுமணிக்கெல்லாம் அலுவலகம் வந்துவிடுவாள். அன்று மதியச் சாப்பாட்டில்கூட அக்கறை காட்டமாட்டாள். ஆகவே இரவுச் சாப்பாட்டிற்காக அவளுக்கு விருப்பமான தாபா எக்ஸ்பிரஸிற்குப் போவது வழக்கம்.

இன்றும் வியாழன் என்பதால் வழக்கம்போலவே நாள்முழுவதும் கூட்டம், விவாதம் என்று களைத்துப் போயிருந்தாள். தாபா எக்ஸ்பிரஸ் கிளம்புவதற்கு முன்பு அவளது தோழி ஷிவானிக்கு போன் பண்ணி ஏழு மணிக்கு அவளை வந்துவிடும் படி சொல்லியிருந்தாள். வழியில் பேக்கரியில் பிரட் பாக்கெட் வாங்கிக்கொள்ள வேண்டும். அதுதான் அவளது தினசரி காலை உணவு. தனியறையில் வசிக்கும் அவளுக்குச் சமைக்க நேரமிருப்பதில்லை. ஆகவே மெக்ரெனட் பேக்கரி கடையில் பிரெட் வாங்கிக்கொண்டு தாபா எக்ஸ்பிரஸ் போக வேண்டும் என நினைத்தபடியே லிப்டிலிருந்து வெளியே வந்தாள்.

அந்தக் கிழவரைக் கடந்து போகையில் அவர் ஏதோ கேட்க நினைப்பவர்போல அவளைத் திரும்பி பார்த்தார். ஒரு நிமிஷம் அவளும் நின்றாள். கிழவர் பரிதாபமான முகத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

நர்மதா அவரைப் பார்த்து தலையசைத்தபடியே படியை விட்டுக் கீழே இறங்கி நடந்தாள்.

அவளது ஸ்கூட்டி பின்பக்கமிருந்த பார்க்கிங்கில் நின்றிருந்தது. அதை நோக்கி நடந்தபோது முதுகு தெரிய ஒரு ஆள் நிற்பது தெரிந்தது. அந்த ஆள் அணிந்திருந்த சட்டையின் முதுகில் H எனப் பெரிதாக எழுதப்பட்டிருந்தது. அந்த ஆளைக் கடந்து நர்மதா நடந்தபோது அவன் திரும்பி நர்மதாவைப் பார்த்தான். இருபத்தைந்து வயதிருக்கும். கோரையான தாடி. மஞ்சள் படிந்த கண்கள். தலையில் அடர்பச்சை வண்ண தொப்பி.

“நர்மதா” என அவன் சப்தமாக அழைப்பது கேட்டது.

நடந்துகொண்டிருந்த அவள் நின்று திரும்பி பார்த்தாள். அவன் வேகமாக அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான். நர்மதா அவன் தன்னுடைய கையில் எதையோ வைத்திருப்பதைக் கவனித்தாள். என்ன செய்யப்போகிறான் என்று அவளுக்குப் புரிவதற்குள் அவன் தான் வைத்திருந்த மைப்புட்டியை அப்படியே அவள் முகத்தின் மீது அடித்தான்.

கறுப்பு மை அவளது முகத்தில் வழிந்தோடியது. தலைமயிரில், காதுநுனியில் கழுத்தில் மை வழிந்தோடியது. தன் மீது ஆசிட் அடித்துவிட்டானோ என நினைத்து நர்மதா அலறினாள். ஆனால் அது ஆசிட் இல்லை மை என அவள் உணர்வதற்குள் அவன் மிக ஆபாசமான வசையொன்றை உதிர்த்தபடியே நடந்து சென்று தன் பைக்கை எடுத்து வெளியே சென்றுவிட்டான்.

நர்மதா முகத்தில் மை வழிய நின்று கொண்டிருந்தாள். அவள் உடல் நடுங்கியது. இப்போது என்ன செய்வது. இதே கோலத்தில் சேனலில் போய் நின்று தன் மீதான தாக்குதலைப் பற்றிச் செய்தி ஒளிரப்ப வேண்டும் போலிருந்தது.

அந்த ஆள் யார். எதற்காக தன் மீது கறுப்பு மையை அடித்திருக்கிறான். நேற்றைய நிகழ்ச்சியின் விளைவுதானா. இல்லை. யாரோ தூண்டிவிட்டு வந்தவனா. எதுவும் தெரியவில்லை. மை வழிந்து அவளது உடைக்குள் இறங்கியது.

அப்படியே அவள் வேகமாக லிப்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். படியோரம் நின்றிருந்த கிழவர் அவளது கோலத்தைக் கண்டு அதிர்ந்தவராக “என்ன பாப்பா ஆச்சு. ரத்தம் வருதா,” என்று கேட்டார். நர்மதா பதில் பேசவில்லை. அவள் சேனல் அலுவலகத்தினுள் சென்றபோது செய்திப் பிரிவில் வேலை செய்தவர்கள் அவளுக்கு ஏதோ விபத்து நடந்துவிட்டது போலப் பதற்றமானார்கள்.

ஒரு கேமிராமேனை அழைத்து அவளைப் படமாக்கும்படி சொன்னார் செய்தி ஆசிரியர். வாசலில் இருந்த செக்யூரிட்டிகள் அழைக்கப்பட்டார்கள். கேமிராவில் அந்த ஆள் உருவம் பதிவாகியிருக்கும் என்பதால் கேமிராவை ஆராய ஒருவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

மை வழியும் முகத்துடன் நர்மதா நின்றுகொண்டிருந்தாள். அந்த அதிர்ச்சி உள்ளூற நடுக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சேனல் வரலாற்றில் இதுவரை யார் மீதும் இப்படி மையை வீசியதில்லை. என்ன கோபம். எதற்காக இந்தத் தாக்குதல் என ஆளுக்கு ஆள் பேசிக் கொண்டார்கள்.

யாராவது மை அடிக்கும்போது வீடியோ எடுத்திருக்கிறார்களா என்று கேட்பதற்காக ஆனந்த் வேகமாகக் கீழே சென்றான்.

வந்தவன் எப்படியிருந்தான். என்ன சொன்னான் என ஒவ்வொன்றாக விசாரிக்க ஆரம்பித்தார் சாரதி. அவளால் பேசமுடியவில்லை. நாக்கு உலர்ந்துபோனது போலிருந்தது. இது என்ன எச்சரிக்கையா, அல்லது தண்டனையா. இத்தனை வருஷ பத்திரிகையாளர் வேலையில் இப்படி ஒரு சம்பவத்தை அவள் எதிர்கொண்டதில்லை.

நர்மதா கேமிரா முன்பு நின்றபடியே வெளியே நடந்த விஷயங்களை வரிசையாகச் சொன்னாள். பிறகு தன் முகத்தைக் கழுவிக்கொண்டு வருவதற்காக ரெஸ்ட்ரூமை நோக்கிச் சென்றாள். கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தபோது அழுகை வருவது போலிருந்தது. கண்விழிக்குள்கூட மை கலந்திருந்தது. ஆகவே கண் எரிச்சலாக வந்தது. எவ்வளவு தண்ணீரை ஊற்றி முகத்தைக் கழுவினாலும் மைக்கறை போகவில்லை.

ஒருவேளை மையோடு வேறு எதையாவது கலந்துவிட்டார்களா. அவளுக்குக் குழப்பமாக இருந்தது. முகத்தை அழுத்தித் துடைத்தாள்.

அவளது உடையில் இருந்த மைக்கறையை என்ன செய்வது. இது தான் உண்மையைக் கண்டறிய முயன்றதன் பரிசா. அவள் கண்ணாடியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். தன் முகத்தைப் பார்க்க அவளுக்கே வேதனையாக இருந்தது.

அவளுக்கு நடந்த தாக்குதலை அலுவலகத்தில் சிலர் கேலி செய்து சிரித்துக்கொண்டிருப்பார்கள் என்று மனதில் தோன்றியது. அற்ப ஜந்துகள் என்று மனதிற்குள் திட்டிக்கொண்டாள். திடீரெனக் கண்ணைக் கட்டிக்கொண்டு மயக்கம் வருவது போலிருந்தது. தண்ணீரை முகத்தில் அடித்துக் கொண்டாள். தலைமயிரில் படிந்திருந்த மை வழிந்தது.

கோழை. எதற்காக இப்படி மை அடிக்கிறான் என தாக்கியவனைத் திட்டினாள் நர்மதா

அவள் மீது நடந்த தாக்குதலை டிவியில் ஒளிபரப்பப் போகிறார்களா எனத் தெரியவில்லை. ஒளிபரப்பினால் ஊரிலிருக்கும் அப்பா, அம்மா பயந்து போவார்கள். அவளது அண்ணனுக்கு இந்தப் பத்திரிகையாளர் வேலை பிடிக்கவேயில்லை. எதற்காக இப்படிக் கோவில்மாடு போலத் திரிகிறாள் என்று சண்டையிட்டிருக்கிறான். அவனுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரிந்தால் வீட்டை ரெண்டு பண்ணிவிடுவான்.

செய்தி தெரிந்தால் ஒருவேளை இரவோடு கிளம்பி அப்பா, அம்மா வந்துவிடவும் கூடும். அடுத்து நடக்கப்போகும் விஷயங்களை நினைத்தால் தலை சுற்றியது.

அவள் ரெஸ்ட்ரூமை விட்டு வெளியே வருவதற்குள் செக்யூரிட்டி கேமிராவில் இருந்த அந்த இளைஞனின் உருவத்தைக் கண்டறிந்திருந்தார்கள். அவன் முகம் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அவன் பைக் நம்பர் நன்றாகத் தெரிந்தது. அவன் தானா என உறுதிபடுத்தும்படி நியூஸ் எடிட்டர் கேட்டுக்கொண்டார். அவள் அந்த உருவத்தை உற்று நோக்கிப் பார்த்து தலையாட்டினாள்.

அவன் சத்தமாக நர்மதா எனக்கூப்பிட்ட குரல் அவள் காதில் ஒலித்துக்கொண்டேயிருந்தது. அவன் இன்றைக்குத்தான் முதன்முறையாக வந்திருப்பவன் போலத் தெரியவில்லை. ஒருவேளை பல நாட்கள் அவளைப் பின்தொடர்ந்து வந்தவனாக இருக்கக்கூடும்.

எதற்காக அலுவலக வாசலில் தாக்குதலில் ஈடுபட்டான். தனியாகத்தான் வந்தானா. அல்லது வெளியே வேறு யாரும் நின்றிருந்தார்களா. எதுவும் அவளுக்குப் புரியவில்லை.

இதற்குள் அவள் தாக்கபட்ட விஷயம் பற்றிய செய்தியை ஒளிபரப்புச் செய்ய வேண்டாம் என்றும் தாக்குதல் குறித்துப் போலீஸில் புகார் செய்தால் போதும் என்றும் நிர்வாகத்திலிருந்து பதில் வந்ததாகப் பேசிக்கொண்டார்கள். அது நர்மதாவிற்கு மேலும் கோபத்தை அதிகப்படுத்தியது.

எடிட்டர் அவளிடம் “பத்திரிகையாளர் சங்கத்தில் அவள் உறுப்பினராக இருக்கிறாளா” எனக்கேட்டார்.

“இல்லை,” என்றாள் நர்மதா

“மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துவிட்டு அப்படியே காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்துவிடலாம்,” என்று சொன்னார் எடிட்டர்.

“டாக்டரைப் பார்க்கத் தேவையில்லை,” என்றாள் நர்மதா

“இல்லை. நாளைக்குக் கோர்ட்டுக்குப் போனா தேவைப்படும். நம்ம மோகன் டாக்டர்கிட்ட போகலாம். நான் பேசிட்டேன்,” என்றார்

அவள் வேறுவழியின்றி ஒத்துக்கொண்டாள். அவளுடன் நிவாஸை அனுப்பி வைத்தார்கள். அவன் காரில் நர்மதா ஏறிக்கொண்டபோது வாசலில் காத்துகிடந்த கிழவரை யாரோ திட்டி துரத்திக் கொண்டிருந்தார்கள். இனி அலுவலக வளாகத்திற்கு எவரையும் எளிதாக நுழைய விடமாட்டார்கள்.

கார் சாலையில் செல்லும்போது திடீரென அந்த நகரம் அந்நியமாகிப் போனதைப்போல உணர்ந்தாள். அவளுக்கென யாருமில்லையோ என்று தோன்றியது. ஷிவானிக்கு போன் செய்து தாபா எக்ஸ்பிரஸ் வரவேண்டாம் எனச் சொல்லிவிட வேண்டும் என நினைத்துக்கொண்டாள். நிவாஸ் யாரிடமோ போனில் நடந்த தாக்குதல் பற்றிச் சொல்லிக்கொண்டு வந்தான்.

டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்துவிட்டு பின்பு காவல்நிலையத்தில் சென்று புகார் அளித்தார்கள். அவளுக்குப் பசி மிக அதிகமாக இருந்தது. வழியில் எங்காவது சாப்பிடலாமா என நினைத்தாள். ஆனால் இந்தக் கோலத்தில் எப்படிச் சாப்பிடுவது. அவர்கள் அலுவலகம் திரும்பிய போது எடிட்டர் அவளுக்கு இரண்டு நாள் விடுமுறை அளிப்பதாகவும் இந்த வாரத்தின் நிகழ்ச்சியைப் பிரதீப் பார்த்துக்கொள்வான் என்றும் சொன்னார்.

“இல்லை நானே பாத்துகிடுறேன்,” என்றாள் நர்மதா

“உனக்குப் போலீஸ் என்கொயரி இருக்கும். ஷோவை பிரதீப் பாத்துகிடுவான்,” என்றார்.

அவளால் மறுக்கமுடியவில்லை. அறைக்குப் போய்க் குளித்துவிட்டு வேறு உடைகளை மாற்றிக் கொண்டு சாப்பிடப் போக வேண்டும் போலிருந்தது.

“நான் கிளம்பவா சார்,” என்று கேட்டாள்

“வெயிட் பண்ணு. இன்ஸ்பெக்டர் என்கொயரிக்கு வர்றேனு சொல்லியிருக்காரு,” என்றார் எடிட்டர்.

அவள் தன் இருக்கையில் அமர்ந்தபடியே நடந்த விஷயங்களை நினைவுகொள்ள ஆரம்பித்தாள். நினைக்க நினைக்கப் பயமும் குழப்பமும் அதிகரிக்க ஆரம்பித்தது. அதை அவள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

நிர்வாகம் ஏன் இதனை ஒளிபரப்பவில்லை. தன் மீது நடந்த தாக்குதலை ஏன் அற்ப விஷயமாக நினைக்கிறது. இவர்கள் சம்பாதிக்கத் தான் ஏன் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து கொண்டிருக்கிறேன். இது அபத்தமானதில்லையா என்று யோசித்தாள்.

ஷிவானி போன் செய்து அவளுக்கு உடல்நலமில்லையா என விசாரித்துக்கொண்டிருந்தாள். அவளிடம் உண்மையைச் சொல்லவா, வேண்டாமா எனக் குழப்பமாக இருந்தது. ஷிவானியிடம் தனக்குத் தலைவலி என்று மட்டும் சொன்னாள்.

ஊரிலிருந்த அப்பா, அம்மாவிடம் பேசலாமா என்றும் தோன்றியது. என்ன பேசுவது. எதற்காகப் பேசுவது. இந்தப் பயத்தை வளரவிட்டால் இந்த நகரில் வேலை செய்ய முடியாது. என்ன நடந்தாலும் சந்திக்க வேண்டும். பயந்து ஓடக்கூடாது என்று முடிவு செய்துகொண்டாள்.

நீண்ட காத்திருப்பின் பிறகு இன்ஸ்பெக்டர் இரண்டு காவலர்களுடன் விசாரணைக்காக வந்திருந்தார். அவர்களிடம் லிப்டை விட்டு இறங்கி நடந்த நிமிஷம் முதல் நடந்தவற்றைச் சொல்லி வந்தாள்.

“மைபாட்டிலை அவன் கையில் வைத்திருந்தானா,” என ஒரு காவலர் கேட்டார். ஆமாம் எனத் தலையாட்டினாள்.

“இதுக்கு முன்னாடி அந்த ஆளை எங்காவது பார்த்திருக்கிறாளா” என இன்னொரு காவலர் கேட்டார்.

“இல்லை,” என்றாள்.

“யார் மேலயாவது சந்தேகமிருக்கா,” எனக் கேட்டார் இன்ஸ்பெக்டர்.

யாரைச் சொல்வது எனத்தெரியவில்லை. ஒன்றரை மணி நேர விசாரணைக்குப் பிறகு அவர்கள் கிளம்பிப் போனார்கள். நைட் ஷிப்டிற்கு வருபவர்கள் ஒவ்வொருவராக அலுவலகம் வரத் துவங்கியிருந்தார்கள். காலியான இருக்கைகளைக் கடந்து தன் கேபினுக்குள் சென்றாள் நர்மதா. எடிட்டர் அலுவலகம் விட்டுப் போவதற்குப் பதினோரு மணியாகிவிடும். அதுவரை காத்திருக்கமுடியாது. ஆகவே அவரிடம் சொல்லிக்கொண்டு லிப்டை நோக்கி நடந்தபோது திடீரெனப் பசி காதை அடைத்தது.

அறைக்குத் திரும்பியபோது உடையை மாற்றத் தோன்றவில்லை. அப்படியே படுக்கையில் விழுந்தாள். பெரும்பாரம் தன்னுடைய உடல் மீது இறங்குவதுபோல உணர்ந்தாள். குளிக்க வேண்டும் போலவும் இருந்தது. கால்களில் சக்தியில்லாமல் முடங்கிவிட்டது போலவும் உணர்ந்தாள். கண்களை மூடிக்கொண்டாள். குழப்பமான சிந்தனைகள். தன்னை அறியாமல் அவள் உறங்கிப்போனாள்.

விழிப்பு வந்தபோது மணி மூன்றைக் கடந்திருந்தது. உடைகளைக் களைந்துவிட்டு குளிர்ந்த தண்ணீரில் குளித்தாள். மீதமிருந்த பிரெட்டை பிய்த்து சாப்பிட்டாள். ஒரு கோப்பைக் காபியை சூடாகக் கையில் எடுத்தபடியே டிவியை ஆன் செய்து தனது சேனலில் ஏதாவது செய்தி வருகிறதா எனப் பார்த்தாள். இப்படி ஒரு நிகழ்வு நடந்த சுவடேயில்லை. சேனலை மாற்றிக்கொண்டே வந்தாள். ஒரு சேனலில் ஆயிரக்கணக்கான வண்ண மீன்கள் கடலில் நீந்திக்கொண்டிருந்தன. அதைப் பார்த்தபடியே இருந்தாள்.

குளித்துத் திரும்பிய போதும் மைக்கறை முற்றிலும் மறையவில்லை. அது மனதை உறுத்திக் கொண்டேயிருந்தது. இனி என்ன நடக்கும். அந்த ஆளை கைது செய்வார்களா. நிச்சயம் அது நடக்காது என்றே தோன்றியது. அவன் இந்நேரம் தப்பிப் போயிருப்பான்.

இந்தக் கோபம் அவனுடையதில்லை. அவன் ஒரு அம்பு. ஒருவேளை அவனைக் கைது செய்தாலும் உடனே விடுவிக்கப்பட்டு விடுவான். நாளையே அவனை வழியில் எங்காவது சந்திக்கவும்கூடும். அதுதான் சூது நிரம்பிய இந்த மாநகரின் வாழ்க்கை.

அதிகாரம் எல்லாவற்றையும் ஒடுக்கி முடக்கப் பார்க்கிறது. விலை போகமுடியாத விஷயங்களை அது அனுமதிப்பதில்லை. உண்மையும் இங்கே ஒரு விற்பனைப் பொருள். அதை எப்படி வியாபாரம் ஆக்குகிறார்கள் என்பது முக்கியம்.

நர்மதாவிற்குக் களைப்பாக இருந்தது. அவள் டிவியை அணைத்துவிட்டுப் பால்கனியில் வந்து நின்று வீதியைப் பார்க்க ஆரம்பித்தாள். ஆள் நடமாட்டமில்லாத வீதியில் சோடியம் விளக்கின் வெளிச்சம் பிரகாசமாக ஒளிர்ந்துகொண்டிருந்தது.

இரண்டு நாட்கள் அலுவலகம் போகவேண்டியதில்லை. அறையில் அடைந்து என்ன செய்வது. ஊருக்குப் போய் வரலாமா. அல்லது வேறு ஏதாவது வெளியூர் போகலாமா.

அவள் மீது தாக்குதல் நடத்தியவன் இந்நேரம் நன்றாக உறங்கிக்கொண்டிருப்பான். அவன் நிச்சயம் குடித்திருப்பான். நிறையச் சாப்பிட்டிருப்பான். அவனுக்கு ஒரு குற்றவுணர்வும் கிடையாது.

நர்மதா கண்ணாடி முன்பாக நின்று தன் முகத்தைப் பார்த்துக்கொண்டாள். நர்மதா என அவன் அழைப்பது போலவே கேட்டது.

திரும்பிப் பார்த்தாள். அவன் வீசிய மை முகத்தில் மட்டுமில்லை. ரத்தத்தினுள் கலந்துவிட்டிருக்கிறது. தன் உடம்பில் கறுப்பு ரத்தம் ஒடுகிறது. அதைத் துடைத்தெறிவது எளிதானதில்லை.

திடீரென அந்தக் கிழவர் பற்றி நினைப்பு வந்தது. அந்தக் கிழவர் ஊருக்கு திரும்பி போயிருப்பாரா. அவரது வேண்டுகோளை ஏன் ஒருவரும் புரிந்துகொள்ளவேயில்லை. எத்தனையோ கோடி ரூபாய்களைப் பொழுதுபோக்கிற்காக வீணடிக்கிறார்கள். ஆனால் நியாயமான தேவைகளுக்குக் கூட உதவ மறுக்கிறார்கள். அவளுக்குத் தன் மீதும் கோபமாக வந்தது.

மறுபடியும் டிவியைப் போட்டு ஏதோ பாடல்காட்சியைப் பார்த்தாள். மனது அதில் கவியவில்லை. விடிகாலை வரை அவள் நாற்காலியில் சாய்ந்தபடியே கிடந்தாள். நீண்டகாலத்தின் பின்பு தனது ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு கடற்கரைக்குச் சென்றாள்.

கடற்கரையில் வாக்கிங் போகிறவர்களின் உற்சாகமாக நடை அவளையும் இணைந்து கொள்ளச் செய்தது. தன் மீது நடந்த தாக்குதலை இப்படியே விட்டுவிடக்கூடாது. சேனல் செய்தி ஒளிபரப்பாமல் இருக்கலாம். அதற்காக நாம் பின்வாங்ககூடாது. பிரஸ் கிளப்பிற்குப் போய்ப் பத்திரிகையாளர் முன்பு நடந்த விஷயத்தைச் சொல்ல வேண்டும். ஒருவேளை இதற்காக சேனல் நடவடிக்கை எடுத்தால் கவலையில்லை. இந்த மைக்கறை நிறைய விஷயங்களைப் புரிய வைத்துவிட்டது. தோற்றுப் பின்வாங்கினால் தாக்குதல் செய்தவன் ஜெயித்து விடுவான். அதை அனுமதிக்ககூடாது. அவள் வேகமாக நடக்க ஆரம்பித்தாள். மூச்சு வாங்கியது. வியர்த்து வழிய நின்றபோது அவள் புத்துணர்வாக உணர்ந்தாள்.

கடற்கரை மணலில் பந்து விளையாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் அக்கா பந்து என்று சப்தமிட்டார்கள்.

தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த கால்பந்தை அவள் ஒங்கி ஒரு உதைவிட்டாள். அது காற்றில் பறந்து கொண்டிருந்தது.

***

பிரஸ் கிளப்பிற்குப் போன் செய்து விக்டரைப் பிடித்தாள். அவன் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்வதாகச் சொன்னான். அதற்கு முன்பு அவள் மீது நடந்த தாக்குதல் பற்றிய புகைப்படங்களை அவள் ஐம்பது பிரிண்ட் போட்டு வைத்துக்கொள்ளவேண்டும். சிறிய அறிக்கை ஒன்றை எழுதி அதையும் ஐம்பது பிரதிகள் கொண்டு வர வேண்டும் என்றான்.

செல்போனிலிருந்த அவளது மை வழியும் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டாள். அது அவளில்லை. யாரோ ஒரு ஒருத்தி. ஸ்கூட்டியில் ரத்னா ஸ்டுடியோவிற்குச் சென்று தன் செல்போனிலுள்ள புகைப்படத்தைப் பிரிண்ட் போட்டு தர வேண்டும் என்றாள். அவளது போனில் உள்ள புகைப்படத்தை மெயிலில் அனுப்பி வைக்கும்படி சொன்னான் அங்கிருந்த இளைஞன். அவள் புகைப்படத்தை அனுப்பி வைத்தாள்.

அவன் புகைப்படத்தைக் கம்ப்யூட்டர் திரையில் பார்த்தபடியே ஆக்சிடெண்டா எனக்கேட்டான்.

அவனிடம் நர்மதா பதில் சொல்லவில்லை.

ஒரு மணி நேரம் கழித்து வரும்படி சொல்லியபடியே அவள் புகைப்படத்தைப் போட்டோ ஷாப்பில் சரிசெய்ய ஆரம்பித்தான்.

எங்கே உட்கார்ந்து நடந்த விஷயத்தை அறிக்கையாக எழுதுவது என யோசித்தபடியே காபிடேக்கு சென்றாள். மூலையில் இருந்த மேஜைக்குப் போய் உட்கார்ந்து கொண்டபடியே செல்போனில் எழுத ஆரம்பித்தாள். இடையில் எழுந்து போய் ஒரு காபி வாங்கிக்கொண்டு வந்தாள். கோர்வையாக எழுத இயலவில்லை. எழுதியதை திருத்தி மாற்றி எழுதினாள். காபியை ஒரு வாய் கூடக் குடிக்கவில்லை. எழுதிய விஷயத்தை நேரில் சொல்லப்போகிறோம் தானே என்று தோன்றியது. அதையும் பிரிண்ட் அவுட் எடுக்க ஜெராக்ஸ் கடை ஒன்றுக்குச் சென்றாள்.

புகைப்படமும் அறிக்கையும் அவள் கைக்கு வந்தபோது மணி இரண்டாகியிருந்தது. யாரையும் உடன் அழைத்துக் கொண்டு போகவேண்டாம் என முடிவு செய்தவளாகப் பிரஸ் கிளப் நோக்கி சென்றாள். நான்கு மணிக்கு இன்னும் நேரமிருந்தது. வழியில் இருந்த ஹோட்டலில் தயிர்சாதம் மட்டும் சாப்பிட்டாள். நாக்குக் கசந்தது. தண்ணீர் கூட ருசியற்றுப் போனது போலிருந்தது.

ஆறு பத்திரிகையாளர்கள் மட்டுமே வந்திருந்தார்கள். விக்டர் மற்றவர்கள் வரும் வரை காத்திருப்போம் என்றான். ஐந்து மணிக்குச் சந்திப்புத் துவங்கியபோது எட்டுப் பேர் இருந்திருந்தார்கள். நடந்த விஷயத்தை நர்மதா சுருக்கமாகச் சொன்னாள். ஒருவரும் குறிப்பு எடுத்தது போலவே தோன்றவில்லை.

ஒரு நிருபர் மட்டும் அவளிடம் “எந்தக் கட்சி மேல சந்தேகம்?” எனக்கேட்டான்.

அவள் “தெரியவில்லை,” என்றாள்.

இதற்குள் பின்வரிசையில் இருந்த சந்தன நிற ஜிப்பா அணிந்த பத்திரிகையாளர் எழுந்து “இது உங்க லவ் மேட்டர்னு கேள்விபட்டேன். அதை ஏன் அரசியலாக்குறீங்க?” என்றார்.

அவளுக்குச் சுரீரெனக் கோபம் வந்தது.

“யார் சொன்னது லவ் மேட்டர்னு. லவ் மேட்டர்ல இப்படி முகத்துல மை அடிப்பாங்களா?”

“அதான்மா கேட்குறேன். ஆசிட் அடிச்சா. அது பொலிடிக்கல் அட்டாக். இது மையைத்தானே ஊற்றியிருக்கான். அதுவும் நீங்களே சொல்லுறீங்க இளைஞன்னு. உங்க ஆபீஸ்ல விசாரிச்சா உங்களுக்கு நிறையப் பாய்பிரண்ட் உண்டுனு சொல்றாங்க.”

“என் வேலை அப்படி சார். கூட வேலை செய்றவங்ககூடப் பேசினா அது பாய்பிரண்டுனு அர்த்தமா. இது யாரோ ஒரு கிரிமினல் என் மேல மையை அடிச்சிருக்கான்.”

“அவன் உங்க லவ்வரா இல்லையானு நீங்கதான் சொல்லணும்,“ என நமுட்டு சிரிப்புடன் சொன்னார் ஜிப்பா ஆள்.

“உங்க பொண்ணா இருந்தா இப்படிக் கேட்பீங்களா சார்?” என்று கோபமாகக் கேட்டாள் நர்மதா.

“என் பொண்ணு இப்படி இத்தனை பசங்ககூட சுத்துனா நான் சும்மா இருக்கமாட்டேன்லே?” என்றார் ஜிப்பா அணிந்த ஆள்.

அவளால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பேசினால் வெடித்துவிடுவோம் என்பதால் அமைதியாக அவரை முறைத்தபடியே இருந்தாள்.

வேறு ஒரு பத்திரிகையாளர் அவளிடம் கேட்டார்.

“நாலு வருசத்துல ஆறு இடத்துல வேல பாத்து இருக்கீங்க. இதுல நீங்க சண்டை போடாத ஆளே இல்லே. நீங்க குடியிருந்த வீட்டு ஹவுஸ் ஒனர்கூட உங்க மேலே போலீஸ் கம்ப்ளெயிண்ட் பண்ணியிருக்கார். இதுல யார் வேணும்னாலும் உங்க மேல இங்க் அடிச்சிருக்கலாம்லே?”

“வீட்டு ஒனர் நைட் பத்து மணிக்கு மேல லைட் போடக்கூடாதுன்னு சொன்னார். நான் வேலைவிட்டு வீட்டுக்கு பதினோரு மணிக்குதான் வருவேன். அதான் சண்டைபோட்டேன். அந்த ஆள் தப்பா பேசினான். நானும் கெட்டவார்த்தையில திட்டுனேன். போலிஸ் கம்ப்ளெயிண்ட் குடுத்தான். அதுக்கு இந்த அட்டாக்கிற்கும் என்ன சார் சம்பந்தம். ஏன் தேவையில்லாமல் பிரச்சனையை திசை திருப்புறீங்க?”

“மேடம் நாங்க எல்லாத்தையும் விசாரிச்சி பாத்துதான் நியூஸ் போடுவோம்.”

“நானும் பத்திரிகையாளர்தான். அதை மறந்துராதீங்க.”

ஜிப்பா அணிந்த ஆள் இன்னும் கேலியாகக்கேட்டார்

“சினிமா ஸ்டார் மாதிரி அழகா இருக்கீங்க. உங்களை ஆபீஸ்ல நாலு பசங்க லவ் பண்ணியிருப்பாங்க.  இந்த இங்க் அடிச்சவன் உங்களுக்கு எத்தனாவது லவ்வர்?”

“அப்படி ஒரு மயிரும் கிடையாது. அந்த நாயி என்மேல இங்கை அடிச்சிருக்கான். அதைப் புரிஞ்கிடாமல் கேள்விகேட்டா எப்படிச் சார். கிசுகிசு எழுதுற உங்களை எல்லாம் கூப்பிட்டதுக்கு என் புத்தியை செருப்பாலே அடிக்கணும்.”

“மரியாதையா பேசும்மா. நான் ஒண்ணும் பொய் சொல்லலை. உன் ஆபீஸ்ல விசாரிச்சிட்டு தான் சொல்றேன்.”

“யாரு சொன்னானு ஆளை சொல்லுங்க சார். இப்போவே கேட்ருவோம்,” எனக் கோபமாகக் கத்தினாள்.

“அதை எப்படிச் சொல்லமுடியும். பப்ளிசிட்டிக்காக நீ போடுற டிராமா தானேம்மா இது.”

“எனக்கு எதுக்கு சார் ப்பளிசிட்டி. சும்மா உளறாதீங்க.”

விக்டர் அவளைச் சமாதானப்படுத்த முயன்றான். இதற்குள் நாலைந்து பத்திரிகையாளர்கள் வெளியேறியிருந்தார்கள். அவள் எடுத்து வந்த பிரிண்ட் அவுட் மற்றும் புகைப்படங்களைத் தரையில் வீசி எறிந்தாள்.

அவர்கள் வெளியேறி போனபிறகு விக்டர் “உனக்குப் பேசத் தெரியலை நர்மதா. உன் கோபத்தைக் காட்ட இவங்கதான் கிடைச்சாங்களா,” எனக்கேட்டான்.

நர்மதாவிற்கு விக்டர் மீதும் கோபம் வந்தது. அவள் முறைத்தபடியே ஒரு வார்த்தை பதில் பேசாமல் வெளியே வந்தாள். ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு கடற்கரைச் சாலையில் சென்ற போது அவளுக்கு இந்த நகரம் தன்னைப் பெருங்கரத்தால் இறுக்கி மூச்சுமுட்டச் செய்வதைப் போல உணர்ந்தாள்.

இரவு பத்தரை வரை அவள் வீதி விதியாகச் சுற்றினாள். எதற்காக இப்படி அலைகிறோம் என்று புரியவேயில்லை. அறைக்குத் திரும்பியபோது ஊருக்கே திரும்பிப் போய்விடலாமா என்றும் தோன்றியது.

பதினோரு மணிக்கு அவளது சேனலின் எடிட்டர் போன் பண்ணி பிரஸ் கிளப்பிற்குப் போன விஷயம் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.

“நான்தான் போலீஸ் விசாரிச்சிகிட்டு இருக்குனு சொன்னனே. அதுக்குள்ளே நீதி கேட்டுப் பிரஸ் கிளப் போயிட்டயாக்கும்.”

“நம்ம சேனல்ல என் மேல நடந்த தாக்குதல பற்றி ஒரு வார்த்தை வரலையே சார்,” என்றாள் நர்மதா.

“இது சின்ன விஷயம் நர்மதா. இதை ஏன் பெருசு பண்றே?”

“எது சார் சின்ன விஷயம். அவன் ஆசிட் அடிச்சிருக்கணுமா, இல்லை கொலை பண்ணியிருக்கணுமா?”

“இது உன்னோட லவ் மேட்டர்னு பசங்க சொல்றாங்க. நிஜமா?”

“நம்ம ஆபீஸ்ல எந்த நாயோ இப்படிக் கிளப்பிவிட்டுகிட்டு இருக்கான்.”

“உன் நல்லதுக்காகச் சொல்றேன் நர்மதா. நடந்ததை இப்படியே விட்ரு.”

“ஏன் சார். விடச்சொல்லி யாராவது மிரட்டுறாங்களா?”

“என் மேலயே சந்தேகப்படுறயா?”

“எல்லோர் மேலேயும் சந்தேகப்படுவேன். என் வலி எனக்குத்தானே தெரியும்.”

“விசாரிச்சா உண்மை எதுனு தெரியப்போகுது.”

“அப்போ நான் பொய் சொல்றேனு சொல்றீங்க.”

“பொய்யோ, உண்மையோ. நீ இதோட விட்டுட்டா பிரச்சனை இல்லே. பெரிசு பண்ணினா. விளைவுகளை நீதான் சந்திக்கணும். உன் வேலைகூடப் போயிடும் பாத்துக்கோ.”

“வேலை போனா போகட்டும். சேனலுக்கு இத்தனை நாள் உழைச்சதுக்குக் கிடைச்ச பலனை பாத்துகிட்டுதானே இருக்கேன்.”

“பெரிய சம்பளத்தோட வேற சேனலுக்கு வேலைக்குப் போக இதெல்லாம் நீ போடுற டிராமாவா இருக்குமோனு எனக்கே சந்தேகமா இருக்கு.”

“ஆமா. டிராமாதான். போதுமா. இந்தச் சேனல் மயிரு இல்லேன்னா… நான் செத்துப்போயிற மாட்டேன் சார்.”

மறுமுனையில் எடிட்டர் போனை வைத்துவிட்டதை உணர்ந்தாள். தான் பேசியது சரியா, தவறா என அவளால் உணரமுடியவில்லை. ஆனால் ஏன் தன்னைச் சந்தேகப்படுகிறார்கள். தன்னை மறுபடியும் அவமானப்படுத்துகிறார்கள். இந்த வேலையைவிட்டு அவர்கள் நீக்குவதற்கு முன்பு நாமே விலகிக்கொண்டாள் என்ன.

தனக்கு இழைக்கப்பட்ட அநீதி அவ்வளவுதானா. அதற்கு நியாயம் கிடைக்காதா. இந்தத் தாக்குதலே ஒரு நாடகம்தானா. சேனலின் உள்ளே இருக்கும் யாரோ தான் இதை நடத்துகிறார்களா. யோசிக்க யோசிக்கத் தலைவலிக்க ஆரம்பித்தது.

அவள் ஷிவானிக்கு போன் செய்தாள். ஷிவானி போனை எடுக்கவில்லை. வேலையை விட்டுவிடலாம் என முடிவு செய்தபடியே அவள் ஒரு தூக்க மாத்திரையைப் போட்டுக்கொண்டு உறங்கினாள்.

கனவில் H என்ற எழுத்துப் பொறித்த சட்டை மிகப்பெரியதாக வானில் பறந்து கொண்டிருந்தது. அந்தச் சட்டை அவளைத் துரத்தி வருவதாகக் கனவுகண்டாள்.

மறுநாள் காலை இரண்டு பத்திரிகைகளில் காதல் விவகாரத்தில் அவள் மீது மைஊற்றப்பட்டதாகச் செய்தி வெளியாகியிருந்தது. எடிட்டர் கணேஷ் அதை வாட்ஸ்அப்பில் அனுப்பியிருந்தான். பேப்பரில் அவளது புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்கள். அதைப் பார்த்தவுடன் கோபம் பொங்கியது. இனி சண்டையிட்டு ஒன்றும் ஆகிவி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 19, 2021 11:00

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.