S. Ramakrishnan's Blog, page 139

March 9, 2021

உலகமே வீடு

இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் இடம்பெற்றுள்ள Nomadland திரைப்படத்தைப் பார்த்தேன்

இந்தப் படம் சென்ற ஆண்டு வெனிஸ் திரைப்படவிழாவில் சிறந்த படமாக விருது பெற்றுள்ளது. இந்த ஆண்டுக் கோல்டன் க்ளோப் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறது. ஆஸ்கார் பரிசும் இந்தப் படத்திற்கு நிச்சயம் கிடைக்கக்கூடும்.

கடந்த இரண்டு வாரங்களாக ஆஸ்கார் போட்டிக்கான படங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன். அதில் இதுவே மிகச்சிறந்த படம். சீன இயக்குநரான Chloé Zhao இதுவரை இரண்டே படங்களை இயக்கியுள்ளார். அவரது முதல் திரைப்படம் Songs My Brothers Taught Me விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றது. அடுத்த படமான The Rider சிறந்த இயக்குநருக்கான Independent Spirit Award பெற்றிருக்கிறது.

இன்று Nomadland வழியாக ஒட்டுமொத்த ஹாலிவுட்டையும் வியந்து பார்க்க வைத்திருக்கிறார். அதிலும் கோல்டன் க்ளோப் விருதுகளை இவர் வென்றபோது அமெரிக்கத் திரையுலகமே ஒன்று சேர்ந்து பாராட்டியது. இன்று அமெரிக்கச் சினிமா அமெரிக்கர்கள் கையில் இல்லை. சர்வதேச இயக்குநர்களே ஹாலிவுட்டின் புதிய சினிமாவை உருவாக்குகிறார்கள். கடந்த கால ஆஸ்கார் விருதுகளே இதற்குச் சாட்சி.

நாடோடி என்ற உடனே நம் மனதில் எழும் பொதுப்பிம்பம் ஆணாகும். ஆனால் நாடோடி வாழ்க்கையை வாழுவதற்கு ஆண் பெண் என்ற பால் பேதமில்லை என்பதையே நவீன வாழ்க்கை நிரூபிக்கிறது. பொருளீட்டுவது மட்டுமே வாழ்க்கை என நினைக்கும் அமெரிக்காவின் பரபரப்பான அன்றாட உலகிலிருந்து தங்களைத் துண்டித்துக் கொண்டு அவரவர் விரும்பிய பாதையில் நாடோடியாக வாழும் மனிதர்களைக் கொண்டாடுகிறது இந்தப்படம்.

படத்தில் நாம் நவீன நாடோடிகளின் வாழ்க்கையை மட்டும் உணருவதில்லை. அமெரிக்காவின் விநோதமான நிலக்காட்சிகளை, பல்வேறு வகைப்பட்ட பண்பாடுகளை அறிந்து கொள்கிறோம். ரோடு மூவி எனப்படும் பயணத்தை முதன்மையாகக் கொண்ட படங்களில் இந்தப்படம் போல நிலவியலின் ஊடே நீண்ட பயணத்தை மேற்கொண்ட படம் எதுவும் சமீபமாக வெளியாகவில்லை.

ஒரு ஆவணப்படம் காணுவது போலவே கதாபாத்திரத்தின் வாழ்க்கையை மிக உண்மையாக, நெருக்கமாக நாம் காணுகிறோம். படத்தின் ஒளிப்பதிவு அபாரம். மிகச்சிறப்பான படத்தொகுப்பு.

நாடோடி வாழ்க்கையை வாழும் ஃபெர்ன் கதாபாத்திரத்தில் பிரான்சிஸ் மெக்டார்மண்ட் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். இந்தப்படத்தின் கதை ஜெசிகா ப்ரூடர் எழுதி 2017ல் வெளியான Nomadland: Surviving America in the Twenty-First Century என்ற கட்டுரைத்தொகுப்பினை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது

அறுபது வயதான ஃபெர்ன் கணவரை இழந்தவர். அமெரிக்காவின் நெவாடாவில் உள்ள ஜிப்சம் தயாரிக்கும் ஆலை ஒன்றில் பணியாற்றியவர். 2011ல் அந்த ஆலை மூடப்பட்டதால் தனது வேலையை இழக்கிறார். தன் கைவசமிருந்த சேமிப்பினைக் கொண்டு ஒரு வேனை விலைக்கு வாங்கும் ஃபெர்ன் அதைத் தனது வீடாக மாற்றிக் கொண்டு நீண்ட பயணத்தைத் துவங்குகிறார். வேலை தேடிச் செல்வது போலத் துவங்கும் அந்தப் பயணம் உண்மையில் இலக்கற்றது. வழியில் அமேஸான் நிறுவனத்தின் விநியோகப் பிரிவில் தற்காலிகமாக வேலை செய்கிறாள்.

அங்கே உடன் பணியாற்றிய லிண்டாவோடு நட்பு கொள்கிறாள். ஒரு நாள் லிண்டா அரிசோனாவில் நடைபெறவுள்ள பாலைவன சந்திப்பைப் பார்வையிட ஃபெர்னை அழைக்கிறார், மெக்சிகோ எல்லையில் நடைபெறவுள்ள அந்தச் சந்திப்பினை பாப் வெல்ஸ் ஏற்பாடு செய்திருக்கிறார். அவர் நாடோடிகளுக்கான அமைப்பு ஒன்றினை நடத்தி வருகிறவர். அந்த அமைப்பு. நாடோடி வாழ்க்கையின் சுதந்திரத்தை முன்னெடுக்கிறது.

அந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளும் , ஃபெர்ன் தன்னைப் போல உலகமே வீடு என நினைத்துப் பயணிக்கும் சக நாடோடிகளைச் சந்தித்து எளிய வாழ்க்கையின் சிறப்புகளைக் கற்றுக் கொள்கிறாள். இருப்பதைக் கொண்டு வாழுவதற்கான அடிப்படை திறன்களைப் பெறுகிறாள்.

நீண்ட பயணம் அவளது வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது. நாடோடிகளுக்குள் உள்ள அற்புதமான நேசத்தையும் அன்பையும் உணர்ந்து கொள்கிறாள். பறவைகளைப் போலத் தான் விரும்பும் திசையில் அவர்கள் பயணிக்கிறார்கள். ஒரே மரத்தில் பறவைகள் ஒன்று கூடுவது போல வழியில் சந்தித்துக் கொள்கிறார்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்கிறார்கள்.

ஒரு நாள் ஃபெர்னின் வேன் டயர் வெடித்துப் போகிறது. அருகிலுள்ள நகருக்குச் சென்று மெக்கானிக்கை அழைத்துவருவதற்காக ஸ்வாங்கி என்ற நாடோடியிடம் உதவி கேட்கிறாள். இது போன்ற வேலைகளை நாமே செய்யப் பழக வேண்டும் என அறிவுரை கூறும் ஸ்வாங்கி அவளுக்குத் தேவையான உதவிகள் செய்கிறாள். அவர்களுக்குள் நல்ல நட்பு உருவாகிறது. புற்றுநோய் பாதித்து மரணத்தை எதிர்கொள்ளும் நிலையிலிருந்த ஸ்வாங்கித் தான் மருத்துவமனை கட்டிலில் கிடந்து உயிர்விடுவதை விடவும் விரும்பிய சாலைகளில் சுற்றியலைந்து வாழ்க்கையைக் கடைசி நிமிஷம் வரை அனுபவிக்க இருப்பதாகச் சொல்கிறாள்.

பின்னர் ஃபெர்ன் பேட்லாண்ட்ஸ் தேசிய பூங்காவில் தற்காலிகப் பணியாளராக வேலை செய்கிறார் அங்கே டேவிட் என்பவரைச் சந்தித்து நட்பு கொள்கிறார். அவர் திடீரென உடல்நலமற்றுவிடவே மருத்துவமனையில் அவரை அனுமதித்துக் கூடவே இருந்து பணிவிடைகள் செய்கிறாள். அவர்களின் உறவு படத்தில் மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தின் ஊடே கலிபோர்னியாவில் உள்ள தனது சகோதரியின் குடும்பத்தினரைச் சந்திக்கிறார். அது மறக்கமுடியாத காட்சி. ஃபெர்னிற்குத் தேவையான பணத்தை அவளது சகோதரி தருகிறாள். அவளிடமிருந்து விடைபெறும் ஃபெர்ன் டேவிட் மற்றும் அவரது குடும்பத்தினரைத் தேடிப் பயணிக்கிறார்.

டேவிட் வீட்டில் அவளை உற்சாகமாக வரவேற்கிறார்கள். அங்கேயே சில நாட்கள் தங்குகிறாள். டேவிட் அவள் நிரந்தரமாகத் தன்னோடு தங்கிவிடும்படி அவளை வற்புறுத்துகிறார். ஆனால் அவள் அங்கிருந்தும் விடைபெறுகிறாள்.

தனிமையை உணர்வது, புதிய நட்பைப் பெறுவது. கிடைக்கும் வேலையைக் கொண்டு அதில் வாழுவது. நண்பருக்காகப் பணிவிடைகள் செய்வது. தோழியின் இறப்பை உணருவது என இந்த நாடோடி வாழ்க்கை ஃபெர்னை முற்றிலும் மாற்றுகிறது.

நாடோடி சமூகத்தில் விடைபெறுவது இறுதியான விஷயமில்லை , காரணம் நாடோடிகள் எப்போதும் ஒருவரை ஒருவர் “சாலையில்” பார்ப்போம் என்று நம்புகிறார்கள். சாலை தான் அவர்களின் வசிப்பிடம். சாலையின் ஏதோ ஒரு புள்ளியில் அவர்கள் சந்தித்துக் கொள்கிறார்கள். நட்பினை புதுப்பித்துக் கொள்கிறார்கள். இணைந்து வாழுகிறார்கள்.

ஃபெர்ன் வழியாக அமெரிக்காவின் இன்னொரு முகத்தை இயக்குநர் அறிமுகம் செய்துவைக்கிறார். அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் வாகன நெருக்கடி மிகுந்தசாலைகளையும், கூட்டமான மின்சார ரயிலையும் கொண்ட பரபரப்பான வாழ்க்கையைப் பார்த்துப் பழகிய நமக்கு ஆளற்ற வெட்டவெளியும் பனிப்பிரதேசத்தின் இரவுகளும், இயற்கையின் விநோத தோற்றங்களாக விரியும் நிலவெளியும், வேனிற்குள்ளாகவே வாழும் எளிய வாழ்க்கையும் முற்றிலும் புதியதாக உள்ளன.

ஒரு காலத்தில் ஜிப்சிகள் இப்படித் தான் இசையும் நடனமும் எனக் கொண்டாட்டமான வாழ்க்கையை முன்னெடுத்தார்கள். ஆனால் இரண்டாம் உலகப்போரின் போது நாஜிகளால் அவர்கள் வேட்டையாடி கொல்லப்பட்டார்கள். அவர்களின் நாடோடி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்தப் படம் நவீன நாடோடிகளின் வாழ்க்கையை விவரிக்கிறது. இதில் ஒரு காட்சியில் ஃபெர்ன் ஒரு இளைஞனைச் சந்திக்கிறாள். உரையாடுகிறாள். அதில் வயது வேறுபாடின்றிச் சுதந்திரமான மனதோடு நாடோடிகள் பயணிப்பதை நாம் உணர முடிகிறது.

பனிச்சறுக்கு விளையாட்டு போலத் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. நீண்ட பனிப்பிரதேசத்தில் மேலும் கீழுமாகச் சறுக்கிச் செல்வது போலவே கதை நகருகிறது. பயணம் எப்போதும் விசித்திரமான மனிதர்களை அடையாளப்படுத்தக் கூடியது. அதை இந்தப் படத்தில் நிறையவே காணுகிறோம்.

வீடு, குடும்பம், பொருள்தேடுவது அதிகாரம் செய்வது என்று உலகம் செல்லும் திசைக்கு எதிரான திசையில் செல்லும் வாழ்க்கைமுறையை இந்தப்படம் உண்மையாக விவரிக்கிறது. வீடற்றவர்களுக்கு உலகமே வீடு என்பதைப் படம் அழகாகச் சுட்டிக்காட்டுகிறது.

ஒரு வேனிற்குள்ளாகத் தனக்குத் தேவையான அத்தனையும் ஃபெர்ன் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறாள். நத்தை தன் கூட்டினை முதுகிலே கொண்டு போவது போன்ற வாழ்க்கையது.

அறுபது வயதான ஃபெர்ன் ஏன் இப்படி ஒரு இலக்கற்ற பயணத்தை மேற்கொள்கிறாள். அவள் தன் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தைத் தேடிச் செல்கிறாள். அதைச் சாலையே அவளுக்கு உணர்த்துகிறது. நாம் அனைவரும் பயணிகளே. அவரவர் இடம்வந்தவுடன் பிரிந்து போய்விடுவோம். சாலையின் நினைவுகள் முடிவற்றவை. ஃபெர்ன் தன் சகோதரியின் வீட்டிலிருந்து விடைபெறுவது மிகச்சிறப்பான காட்சி. எல்லா உறவுகளையும் ஃபெர்ன் துண்டித்துக் கொள்கிறாள். இயற்கை தான் அவளது நிரந்தரத் துணைவன்.

ஒரு பெண் இயக்குநரால் மட்டுமே இத்தனை அழுத்தமான ஒரு பெண் கதாபாத்திரத்தை உருவாக்க இயலும். மனதிற்கு மிகவும் நெருக்கமான திரையனுபவத்தைத் தர இயலும். அந்த வகையில் Chloé Zhao ஆஸ்கார் வெல்வது தகுதியானதே.

**

2 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 09, 2021 00:02

March 7, 2021

புத்தகக் காட்சி தினங்கள்- 5

கடந்த இரண்டு நாட்களாகப் புத்தகக் கண்காட்சியில் நல்ல கூட்டம். நேற்று ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான வாசகர்கள் திரண்டிருந்தார்கள். அரங்கினுள் வெக்கை தாங்கமுடியவில்லை. வியர்த்து வழிய மக்கள் புத்தகங்களை வாங்கிச் சென்றார்கள். இத்தனை ஆயிரம் வாசகர்கள் ஒன்று சேர்ந்து பதிப்புத் துறைக்கு புதிய நம்பிக்கையை உருவாக்கித் தந்திருக்கிறார்கள். இனி மற்ற நகரங்களில் புத்தகக் கண்காட்சி சிறப்பாகத் தொடரும்.

ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்கள் சங்க இலக்கியம் குறித்து ஆற்றிவரும் உரைகளின் முதற்பத்து உரைகளின் நூல் வடிவினை நேற்று வெளியிட்டேன். சங்கச்சுரங்கம் என்ற இந்த தொடர் நிகழ்வு மிகப்பெரிய வரவேற்பினைப் பெற்றுள்ளது.

கடவுள் ஆயினும் ஆக நூலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.

நூல் வெளியீட்டில் ராஜேந்திரன் ஐஏஎஸ் எழுத்தாளர் தமிழ்செல்வன். டாக்டர் சங்கர சரவணன். .எழுத்தாளர் அப்பணசாமி, எழுத்தாளர் காமுத்துரை ஆகியோர் கலந்து கொண்டார்கள். பாரதி புத்தகாலயம் நாகராஜன் இதனை ஒருங்கிணைப்பு செய்தார்.

சாகித்ய அகாதமியில் பூமி என்ற ஆஷா பகே எழுதிய மராத்திய நாவலை வாங்கினேன். பி.ஆர். ராஜாராம் மொழியாக்கம் செய்திருக்கிறார். மும்பையில் வாழும் தமிழ் குடும்பத்தின் கதையை மராத்தியில் எழுதியிருக்கிறார். சாகித்ய அகாதமி பரிசு பெற்றுள்ள இந்த நாவல் மிகச்சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கிறது.

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஸெல்மா லாகர்லெவின் மதகுரு நாவலைப் பற்றி ஒரு சிறப்புரை நிகழ்த்துங்கள் என்றொரு கோரிக்கையை ஒரு வாசகி முன்வைத்தார். அவருக்கு மிகவும் பிடித்த நாவல் என்றார். எனக்கும் மிகவும் பிடித்த நாவலிது. உலகப்புகழ் பற்ற இந்த நாவல் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. புத்தகக் கண்காட்சியில் இந்த நாவல் விற்பனைக்கு கிடைக்கிறது

மதகுரு
ஸெல்மா லாகர்லெவ் (ஆசிரியர்), க.நா.சு. (தமிழில்) அன்னம் வெளியீடு

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 07, 2021 22:40

இரண்டு இளம் படைப்பாளிகள்

காளி பிரசாத்: ஆள்தலும் அளத்தலும்

மராத்திய எழுத்தாளர் விலாஸ் சாரங் எழுதிய தம்மம் தந்தவன் நாவலை மொழியாக்கம் செய்த எழுத்தாளர் காளிபிரசாத் ஆள்தலும் அளத்தலும் என்ற தனது முதல் சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார். பதாகை மற்றும் யாவரும் வெளியீடாக வந்துள்ளது.

இவரது கதைகளை முன்னதாகச் சொல்வனம் மற்றும் பதாகை இதழில் வாசித்திருக்கிறேன்.

இந்தத் தொகுப்பிலுள்ள ஆறு கதைகளை நேற்று படித்தேன். தினசரி வாழ்வின் நுண்தருணங்களைக் கதைகளாக எழுதுகிறார். சரளமான எழுத்து நடை.

பழனி கதையில் வரும் கதாபாத்திரச் சித்தரிப்பும் கதை சொல்லும் முறையும் மிகவும் பிடித்திருந்தது.

அவருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள்.

சுஷில்குமார் : மூங்கில்

சுஷில்குமார் சிறுகதைகளை யாவரும்.காம் மற்றும் பதாகையில் படித்திருக்கிறேன். அவரது முதல் சிறுகதை தொகுப்பு மூங்கில் யாவரும் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது

மூங்கில் ஒரு அற்புதமான கதை. மூங்கில் மேட் ஓவியங்கள் செய்யும் அப்பாவினைப் பற்றி மகள் வரையும் சித்திரங்களே கதை. புகழ்பெற்ற ஒவியக் குடும்பத்தில் வந்த அந்த மனிதர் தற்போது வயிற்றுப்பாட்டிற்காக ஒவியங்களை வரைந்து கொண்டிருக்கிறார். அப்பா தனி அறையில் ஒவியம் வரையும் காட்சி மிக அழகாக எழுதப்பட்டிருக்கிறது. வீட்டில் அம்மாவும் அக்காவும் கூடை பின்னிக் கொடுப்பதில் அவர்களின் வாழ்க்கை ஒடுகிறது. அந்தத் தந்தையின் வீழ்ச்சி காவிய சோகம் போலக் கதையில் அழுத்தமாக வெளிப்படுகிறது. மிக நல்ல கதை.  கதைகளில் வரும் உரையாடல்களை மிக அழகாக எழுதுகிறார் சுஷில்குமார்.

அவருக்கு எனது மனம் நிரம்பிய வாழ்த்துகள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 07, 2021 22:13

March 5, 2021

சர்வோத்தமன் சடகோபன்

தஸ்தாயெவ்ஸ்கியினைப் பற்றி மிகச்சிறப்பான கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார் சர்வோத்தமன் சடகோபன். இவரது பார்வையும் புரிதலும் அற்புதமானது. ஆங்கிலத்தில் இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டிருந்தால் நிச்சயம் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கும்.

பெங்களூரில் பணியாற்றிவரும் சர்வோத்தமன் தஸ்தாயெவ்ஸ்கியின் புத்தகச் சாலை என்ற வலைப்பக்கம் ஒன்றினையும் நடத்தி வருகிறார்.

http://sarwothaman.blogspot.com/

தற்போது முறையிட ஒரு கடவுள் என்ற அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. மணல்வீடு பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது.

தஸ்தாயெவ்ஸ்கி பற்றி இவர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட வேண்டும் என்று அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி வைத்தேன். இன்னும் சில கட்டுரைகள் எழுதிய பின்பு தொகுக்க இருப்பதாகப் பதில் அனுப்பியிருந்தார்.

நேற்று புத்தகக் கண்காட்சியில் அவரை நேரில் பார்த்தபோது அந்த வேண்டுகோளை மறுபடியும் நினைவூட்ட நினைத்தேன். கூட்டம் அதிகமிருந்த காரணத்தால் பேசிக் கொள்ள இயலவில்லை.

சர்வோத்தமன் எவரது அங்கீகாரம் பற்றியும் கவலையின்றித் தொடர்ந்து தனது படைப்புச் செயல்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இவரைப் போன்ற தனிக்குரல்களை நாம் கொண்டாட வேண்டும்.

புதிய சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டிருக்கும் சர்வோத்தமனுக்கு எனது மனம் நிரம்பிய வாழ்த்துகள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 05, 2021 18:37

எனது பரிந்துரைகள் -5 காந்திய நூல்கள்

காந்தி பற்றி தமிழில் வெளியாகியுள்ள முக்கியமான நூல்களைத் தொகுத்திருக்கிறேன். நேரடியாக தமிழில் எழுதப்பட்ட காந்திய நூல்களைத் தனியே பதிவிட இருக்கிறேன். இதில் பெரும்பான்மை மொழியாக்க நூல்களே.

1) காந்தி வாழ்க்கை

லூயி ஃபிஷர்

தமிழில் : தி.ஜ.ர.

பழனியப்பா பிரதர்ஸ்

பத்திரிக்கையாளரான லூயி ஃபிஷர் காந்தியோடு நேரில் பழகியவர். காந்தியின் வரலாற்றை லூயி ஃபிஷர் மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறார். இந்த நூலை அடிப்படையாகக் கொண்டே காந்தி திரைப்படம் உருவாக்கப்பட்டது

2)மகாத்மா காந்தியின் ஐந்து விநாடிகள்

வால்டெர் ஏரிஷ் ஷேபெர்

தமிழில் : ஜி. கிருஷ்ணமூர்த்தி

ஜெர்மன் ரேடியோவில் ஒலிபரப்புச் செய்யப்பட்ட நாடகம். கூத்துப்பட்டறை இந்த நாடகத்தைச் சென்னையிலும் நிகழ்த்தியுள்ளது. காந்தியின் கடைசி நிமிஷங்களை விவரிக்கும் சிறந்த நூல்

3)காந்திக் காட்சிகள்

காகா காலேல்கர்

தமிழ்நாடு காந்தி நினைவு நிதி வெளியீடு

காந்தியவாதியான காகா காலேல்கர் எழுதிய காந்தி குறித்த சிறந்த நூல். அற்புதமான நிகழ்வுகளையும் நினைவுகளைக் கொண்ட கட்டுரைகளின் தொகுப்பு

4) அன்புள்ள புல் புல்’ – கட்டுரைத் தொகுப்பு.

சுனில் கிருஷ்ணன். யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடு, 2018.

காந்தி இன்று (www.gandhitoday.in) இணையதளத்தில் காந்தி குறித்து வெளியான கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 18 கட்டுரைகளின் தொகுப்பு

காந்தி குறித்து முன்வைக்கப்படும் சில குற்றச்சாட்டுகளை மறுக்கும் அல்லது அன்றைய சூழலை முழுமையாக விளக்கும் விதமான ஆய்வுத்தன்மையு கொண்ட கட்டுரைகள் இதில் உள்ளன

5) காந்திஜி ஒரு சொற்சித்திரம்

பிரான்ஸிஸ் வாட்சன், மாரிஸ் பிரவுன்

தமிழில் : பி. வி. ஜானகி

‘Talking of Gandhiji’ என்ற நூலின் தமிழாக்கம்.

6)தமிழ்நாட்டில் காந்தி

அ.ராமசாமி

விகடன் வெளியீட்டு

காந்தியின் தமிழகப் பயணத்தை முழுமையாக விவரிக்கும் அரிய ஆவணத்தொகுப்பு 23.02.1934 முதல் 22.03.1934 வரை தமிழ்நாட்டில், மாட்டு வண்டி, கார், ரயில், என்று காந்தி பலவிதங்களில் பயணம் செய்திருக்கிறார். ஏறத்தாழ இரண்டு கோடி மக்கள் அவரை நேரில் பார்க்கவும், அவருடைய உரைகளைக் கேட்கவும் செய்திருக்கிறார்கள்

7) இந்திய சுயராஜ்யம்

மகாத்மா காந்தி

தமிழில்: ரா. வேங்கடராஜுலு

காந்திய இலக்கியச் சங்கம்

குஜராத்தி மூலநூல் 30,000 வார்த்தைகளைக் கொண்டது. 1909-இல் காந்திஜி இங்கிலாந்திலிருந்து தென்னாப்பிரிக்காவுக்குக் ‘கில்டோனன் காஸில்’ என்ற கப்பலில் திரும்புகையில், அப்பிரயாண காலத்தில் கப்பலில் கிடைத்த காகிதத்தைக் கொண்டே இதை எழுதி முடித்தார்.

8) காந்தி காட்டியவழி

:க.சந்தானம்

மணிவாசகர் பதிப்பகம்

9) காந்தி எனும் மனிதர்

மிலி கிரகாம் போலக்,

தமிழில்: க.கார்த்திகேயன்

சர்வோதய இலக்கியப் பண்ணை

காந்தி தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த போது அவரது உற்ற தோழனாக இருந்தவர் ஹென்றி போலக் என்னும் ஆங்கிலேயர். அவர் காந்தியின் வீட்டிலேயே தங்கியிருந்தார். ஹென்றி போலக்தைத் திருமணம் செய்துகொள்வதற்காக இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு வந்தவர் மிலி. காந்தி அவர்களுக்குத் திருமணம் நடத்தி வைத்தார். மிலியின் பார்வையில் காந்தியின் ஆளுமையும் அவரது செயல்பாடுகளும் அழகாக எழுதப்பட்டுள்ளன.

10) பாபூ அல்லது நானறிந்த காந்தி

ஜி. டி. பிர்லா

தமிழில்: அ. சுப்பையா

தொழிலதிபரான பிர்லா காந்தி மீது மிகுந்த பற்று கொண்டவர். அவர் காந்தியோடு பழகிய நாட்களை, நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இந்த நூல் இணையத்தில் இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளக்கிடைக்கிறது

11) வாழ்விக்க வந்த காந்தி

ரொமெய்ன் ரோலந்து

தமிழில்: ஜெயகாந்தன் (தமிழில்)

கவிதா வெளியீடு

எழுத்தாளர் ரோமன் ரோலந்து எழுதிய காந்தி நூலை ஜெயகாந்தன் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார்

12) மகாத்மா காந்தி

வின்சென்ட் ஷீன்

வ.உ.சி நூலகம்

13) யாவரும் சோதர

மகாத்மாவின் மணிமொழிகள்

தொகுப்பு கிருஷ்ண கிருபளானி.

சாகித்ய அகாதமி வெளியீடு

14) மகாத்மா காந்தி நினைவு மாலை

எஸ். அம்புஜம்மாள்

காந்தியை சென்னையில் சந்தித்துப் பழகிய அம்புஜம்மாள் அவரது ஆசிரமத்திற்குச் சென்று அங்கேயே தங்கி சேவை செய்தவர். அவரது நினைவுகளின் வழியே காந்தி ஒளிருகிறார்

15) காந்திஜியின் இறுதி 200 நாட்கள்

வி.ராமமூர்த்தி (ஆசிரியர்), கி.இலக்குவன் (தமிழில்)

பாரதி புத்தகாலயம்

16) தமிழ்நாட்டில் காந்தி

தி.சே.சௌ.ராஜன்

சந்தியா பதிப்பகம்.

17) தென்னாப்பிரிக்காவில் காந்தி

ராமச்சந்திர குஹா (ஆசிரியர்)

கிழக்குப் பதிப்பகம்

18) நவகாளி யாத்திரை

சாவி

1947-ஆம் வருஷம் பிப்ரவரி மாதத்தில் காந்தி மகான் நவகாளி ஜில்லாவில் கிராமம் கிராமமாக நடந்து போய்க் கொண்டிருந்தார்

அந்தப் பயணத்தில் கலந்து கொண்டு சாவி எழுதிய நேரடி அனுபவத் திரட்டு

19)அண்ணல் அடிச்சுவட்டில்

ஏ.கே.செட்டியார்

தமிழில் : ஆ.இரா.வேங்கடாசலபதி

காந்தியை பற்றிய ஆவணப்படத்தை உருவாக்க ஏ.கே. செட்டியார் எவ்வளவு தீவிரமாகச் செயல்பட்டிருக்கிறார். பயணம் செய்திருக்கிறார் என்பதைப் பற்றிய அரிய நூல்

20) பல ரூபங்களில் காந்தி

– அனு பந்தோபாத்யாயா

தமிழில் ராஜகோபாலன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 05, 2021 00:18

March 4, 2021

இரண்டு குறுங்கதை தொகுப்புகள்

.

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக குறுங்கதைகள் எழுதிவருகிறேன். எனது தாவரங்களின் உரையாடல் தொகுப்பிலே எட்டு குறுங்கதைகள் இடம்பெற்றுள்ளன. அதிலுள்ள பாதம் என்ற குறுங்கதை தற்போது ஆறாம்வகுப்பிற்கான பாடமாக வைக்கபட்டுள்ளது.

நகுலன் வீட்டில் யாருமில்லை எனும் குறுங்கதைகளின் தொகுப்பினை 2009ல் வெளியிட்டேன். இந்தத் தொகுப்பில் ஐம்பது கதைகள் இடம்பெற்றிருந்தன. இப்படிக் குறுங்கதைகளை மட்டுமே கொண்ட ஒரு தொகுப்பு அதன் முன்பு எவராலும் வெளியிடப்பட்டதில்லை. அந்த நூல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

தற்போது அதன் ஐந்தாவது பதிப்பைத் தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

உலகெங்கும் குறுங்கதை வடிவம் ஒரு தனித்த இலக்கிய வகைமையாக அறியப்படுகிறது. Modern Fables, Sudden Fiction. Flash Fiction. Modern Parables, Little Fable, Micro Stories, Fantasy tales எனப் பல்வகையிலும் குறுங்கதைகள் எழுதப்படுகின்றன.

உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்களான காஃப்கா, ஜோர்ஜ் லூயி போர்ஹெஸ், இதாலோ கால்வினோ, யாசுனாரி கவாபத்தா, எட்கர் கிரட், ஹென்ரிச் ப்யூல், மிரோஜெக், டொனால்டு பார்த்தல்மே போன்றவர்கள் மிகச்சிறந்த குறுங்கதைகளை எழுதியிருக்கிறார்கள். கவாபத்தாவின் Palm-of-the-Hand Stories Yasunari Kawabata மிகச்சிறந்த குறுங்கதைகளின் தொகுப்பு.

எனது நகுலனின் வீட்டில் யாருமில்லை தொகுப்பிலுள்ள ஒரு குறுங்கதைகளைக் குரங்கு பொம்மை படத்தின் இயக்குநர் நித்திலன் புன்னகை விற்பனைக்கு என்ற குறும்படமாக இயக்கியுள்ளார். அப்படம் நாளைய இயக்குநர் திரையிடலில் சிறந்த குறும்படத்திற்கான விருது பெற்றிருக்கிறது

இந்த ஆண்டு 125 குறுங்கதைகளை எழுதியிருக்கிறேன். அது கர்னலின் நாற்காலி என்ற பெயரில் தனி நூலாக வெளியாகியுள்ளது. அதிலுள்ள மூன்று குறுங்கதைகளை வேறுவேறு இளம் இயக்குநர்கள் குறும்படமாக உருவாக்கி வருகிறார்கள். இந்தப் புத்தகக் கண்காட்சியில் எனது புதிய புத்தகங்களில் இதுவே மிக அதிகம் விற்பனையாகியுள்ளது.

குறுங்கதைகளுக்கு வரையறைகள் கிடையாது. பலரும் பக்க அளவை வைத்துக் கொண்டு அதை முடிவு செய்கிறார்கள். உண்மையில் அது கவிதைக்கும் உரைநடைக்கும் இடையிலுள்ள வடிவம். மின்னல்வெட்டு போல அனுபவத்தின் வெடிப்பினை அடையாளப்படுத்தக் கூடியது. ஒரு தருணம் அல்லது ஒரு நிகழ்வின் அற்புதம் அல்லது மாயத்தை விவரிக்ககூடியது. பனித்துளியில் ஒளிரும் சூரியனைப் போன்றதே குறுங்கதை. மிகச்சிறந்த குறுங்கதைகள் உரைநடைக்கவிதை போலவே எழுதப்பட்டிருக்கின்றன. மேற்குலகில் நவீன வாழ்வின் அபத்தத்தை வெளிப்படுத்தும் குறுங்கதைகளும் எழுதப்படுகின்றன.

மேஜிகல் ரியலிச பாணியில் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு ஒன்று ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது. அதில் இந்த வகைமை கதைகள் உள்ளன.

எனது இரண்டு குறுங்கதைகளின் தொகுப்பினையும் புத்தகக் கண்காட்சியில் உள்ள தேசாந்திரி அரங்கு எண் 494 மற்றும் 495ல் பெற்றுக் கொள்ளலாம்

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 04, 2021 23:02

March 3, 2021

தீவிற்கு வரும் பறவை

புத்தக வாசிப்பாளர்களையும் இலக்கிய ஈடுபாட்டினையும் கொண்டாடும் திரைப்படங்கள் உலகெங்கும் வெளியாகியுள்ளன. ஹாலிவுட்டில் ஆண்டிற்கு ஒரு படம் இந்த வகைமையில் உருவாக்கபட்டு வெற்றியடைகிறது. இரண்டாயிர வருடப்பழமையான தமிழ் இலக்கியத்தில் அதன் முக்கிய நாவல்கள் காப்பியங்கள் இன்றும் திரைப்படமாக்கபடவில்லை. இந்த இலக்கியங்களைக் கொண்டாடுவதை வாழ்க்கையாகக் கொண்ட மனிதர்கள் பற்றியோ, இலக்கிய அமைப்புகள் பற்றியோ எவ்விதமான ஆவணப்பதிவுகளும் கிடையாது

இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆய்வுப்பணிக்காகத் தமிழகத்திலுள்ள இலக்கிய அமைப்புகளைத் தொகுக்க முற்பட்டேன். தொல்காப்பியம் திருக்குறள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், மணிமேகலை, போன்ற நூல்களைத் தொடர்ந்து பேசியும் விவாதித்தும் வரும் அமைப்புகள் நூற்றுக்கும் மேலிருக்கின்றன. பாரதி. பாரதிதாசன். பெயரில் நிறைய அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. நவீன இலக்கியத்தினைக் கூடி விவாதிக்கும் அமைப்புகளும் ஐம்பதுக்கும் மேலிருக்கின்றன. இவை மட்டுமின்றிக் கல்லூரி மற்றும் பல்கலைகழக அளவில் உள்ள இலக்கிய அமைப்புகள். நூலகத்தில் செயல்பட்டு வரும் வாசகர் வட்டம். திருவள்ளுவர் மன்றம், போன்றவையும் அறக்கட்டளைகள் மூலம் நடத்தப்படும் இலக்கிய நிகழ்வுகள். கருத்தரங்குகள் என அன்றாடம் ஏதாவது ஒரு இலக்கிய நிகழ்ச்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டேதானிருக்கின்றன. சனி ஞாயிறு என்றால் ஐந்தோ பத்தோ நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இப்படி ஆண்டு முழுவதும் இலக்கியம் பேசப்பட்டு வருவது தமிழ்நாட்டில் மட்டும் தான் நடக்கிறது என்பேன்.

இலக்கிய அமைப்புகளில் சில ஐம்பதாண்டுகள் நூறு ஆண்டுகள் பழமையானதாக இருக்கின்றன. அவர்கள் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். விருதளிக்கிறார்கள். இவர்களைப் பற்றிய முழுமையான பதிவுகள் நம்மிடமில்லை.

ஆனால் உலகம் முழுவதும் இலக்கிய அமைப்புகளின் செயல்பாடுகள் முறையாக ஆவணப்படுத்தபடுகின்றன. அது குறித்த நூல்களும், ஆவணப்படங்களும், திரைப்படங்களும் உருவாக்கப்படுகின்றன. அப்படியான ஒரு திரைப்படத்தை தான் நேற்று பார்த்தேன்.

The Guernsey Literary and Potato Peel Pie Society திரைப்படம் இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மன் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த கார்ன்சி தீவில் செயல்பட்டு வந்த ஒரு இலக்கிய அமைப்பின் கதையை விவரிக்கிறது.

மைக் நியூவெல் இயக்கிய டான் ரூஸ் மற்றும் டாம் பெசுச்சா ஆகியோரால் எழுதப்பட்ட இந்தத் திரைப்படம் ஒரு எழுத்தாளரின் வழியே கடந்தகால நிகழ்வுகளை விவரிக்கிறது.

1941 ஆம் ஆண்டில், கார்ன்சி தீவில் கதை துவங்குகிறது. அந்தத் தீவு, ஜெர்மன் ஆக்கிரமிப்பின் கீழுள்ளது. போர்காலம் என்பதால் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. ஒரு நாள் இரவு ஊரடங்கினை மீறியதற்காக நான்கு நண்பர்கள் ராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். அவர்களை ராணுவத்தினர் விசாரணை செய்யும் போது தாங்கள் ஒரு புக் கிளப்பை சேர்ந்தவர்கள். ஒன்று கூடி புத்தகம் பற்றி விவாதித்துவிட்டு வருவதாகச் சொல்கிறார்கள்.

உங்கள் புத்தக அமைப்பின் பெயரென்ன என்று கேட்கையில் மனதில் தோன்றிய ஒரு பெயரை சட்டெனச் சொல்கிறார்கள். அப்படி உருவானது தான் The Guernsey Literary and Potato Peel Pie Society . கைது செய்யப்படாமல் தவிர்ப்பதற்காக உருவாக்கபட்ட இந்த இலக்கிய அமைப்பு எப்படி வளர்ந்த்து என்பதைப் படம் விவரிக்கிறது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனவரி 1946 இல், எழுத்தாளர் ஜூலியட் ஆஷ்டன் அறிமுகமாகிறார் அவரது புதிய புத்தகம் அப்போது வெளியாகியிருக்கிறது. The Times Literary Supplement இதழுக்காக அவர் இலக்கியத்தின் நன்மைகள் குறித்து வாழ்வியல் கதைகள் எழுதி வருகிறார். இவரது கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்த Charles Lamb’s Essays of Elia மீது அபிமானம் கொண்ட டாவ்ஸி ஆடம்ஸிடமிருந்து அவளுக்கு ஒரு கடிதம் வருகிறது. அதில் தான் சார்ல்ஸ் லாம்ப்பின் இன்னொரு புத்தகத்தை வாங்க விரும்புவதாகவும் அது லண்டனில் எந்தப் புத்தக் கடையில் கிடைக்கும் என்று விசாரித்து எழுதப்பட்டிருக்கிறது. அந்தக் கடித்த்தில் வாரம் வெள்ளிக்கிழமை இரவு தங்கள் அமைப்பு ஒன்று கூடி படித்த புத்தகங்கள் பற்றி விவாதிப்பதாக டாவ்ஸி ஆடம்ஸ் எழுதியிருக்கிறார்.

இந்த இலக்கிய அமைப்பினை பற்றித் தெரிந்து கொள்ள ஜூலியட் ஆர்வம் காட்டுகிறாள். அத்தோடு டாவ்ஸி ஆடம்ஸ் கேட்டிருந்த புத்தகத்தை அவளே விலைக்கு வாங்கிப் பரிசாக அனுப்பி வைக்கிறாள். இதற்காக நன்றி தெரிவித்துப் பதில் கடிதம் எழுதுகிறான் டாவ்ஸி ஆடம்ஸ்.

கார்ன்சி என்பது பிரிட்டனின் நார்மண்டி கடற்கரையில் உள்ள சேனல் தீவுகளில் இரண்டாவது பெரியது ஆகும்.

கார்ன்சி தீவில் செயல்பட்டு வரும் புத்தக அமைப்பினை பற்றி எழுதுவதற்காக அந்தத் தீவிற்குப் பயணம் மேற்கொள்கிறார் ஜுலியட். இது அவளது பதிப்பாளருக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் அவன் ஏற்பாடுகளைச் செய்து தருகிறான். அவள் பயணம் துவங்கும் நாளில் மார்க் என்ற அமெரிக்கக் காதலன் அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகத் தெரிவிக்கிறான். அதை ஜுலியட் ஏற்றுக் கொள்கிறார்

கார்ன்சி தீவிற்கு வரும் ஜுலியட் அங்கே செயல்பட்டு வரும் புத்தக அமைப்பின் உறுப்பினர்களைச் சந்திக்கிறாள். தீவிற்கு வரும் புதிய பறவையை போலிருக்கிறது அவளது வருகை.

அவளை ஒரு நட்சத்திர எழுத்தாளர் போன்று நடத்துகிறார்கள். அங்கே டாவ்ஸி ஆடம்ஸ் மகளைச் சந்திக்கும் ஜுலியட் அவனுடன் ஒன்றாக அறைக்குத் திரும்புகிறாள். புத்தக அமைப்பினைப் பற்றி எழுதுவதை அமெலியா விரும்பவில்லை என்று அவளுக்குப் புதிராக இருக்கிறது

இந்நிலையில் இந்த அமைப்பினை உருவாக்கிய எலிசபெத் என்ற பெண் ஜெர்மானியர்களால் முகாமிற்குக் கொண்டு செல்லப்பட்ட விஷயத்தை ஜுலியட் அறிந்து கொள்கிறாள். அவளுக்கு என்ன நடந்த்து என்பதைப் பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறாள். எதிர்பாராத உண்மைகள் வெளிப்பட ஆரம்பிக்கின்றன. இதற்கிடையில் டாவ்ஸி ஆடம்ஸ் அந்தப் பெண்ணின் உண்மையான தந்தையில்லை என்பதும் அவளுக்குத் தெரிய வருகிறது.

The Guernsey Literary and Potato Peel Pie Society அமைப்பின் வரலாற்றை ஆராயத்துவங்கி ஜெர்மானிய ஆக்ரமிப்பின் போது நடைபெற்ற கசப்பான அனுபவங்களை, நினைவுகளை அறிந்து கொள்கிறாள். அவற்றை ஒரு நூலாக எழுத முற்படுகிறாள். இதற்கிடையில் தீவிற்கு வருகை தரும் காதலன் மார்க் அவள் திருமண நிச்சயதார்த்த மோதிரத்தை விரலில் அணிந்து கொள்ளவில்லை என்பதற்காகக் கோவித்துக் கொள்கிறான். அவள் மார்க்கை விட்டு விலகிப் போக ஆரம்பிக்கிறாள். அவள் அறிந்து கொண்ட உண்மைகளை அவளை எவ்விதமாகப் பாதித்தன என்பதைப் படம் அழகாக விவரிக்கிறது

படம் முடியும் போது நாம் உடனே சார்ல்ஸ் லாம்ப் கட்டுரைகளை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் உருவாகிறது. பள்ளி பாடப்புத்தகத்தில் லேம்ப்பின் கட்டுரைகளை நம்பில் பலரும் வாசித்திருப்போம். சிறந்த கட்டுரையாளர். நகைச்சுவையாக எழுதக்கூடியவர்

ஒரு சிறிய தீவில் உயிருக்குப் பயந்த சிலர் ஒன்றுகூடி நடத்தும் இலக்கிய அமைப்பு என்பது அவர்களுக்கான நம்பிக்கையின் வெளிச்சம் . புத்தக வாசிப்பு என்பது அவர்களுக்கான மீட்சி. வெள்ளிகிழமை இரவு தோறும் அவர்கள் ஒன்றுகூடுகிறார்கள். அது வெறும் சந்திப்பில்லை. மாறாகக் கூட்டு நம்பிக்கையின் அடையாளம்

இரண்டாம் உலகப்போரின் போது யூதர்களைக் கைது செய்து முகாமில் அடைத்து சித்ரவதை செய்தார்கள். அந்த நிலையிலும் சிலர் ரகசியமாக ஒன்று கூடி புத்தக வாசிப்பினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இரவில் நடக்கும் கதைவாசிப்பின் வழியே அவர்கள் உயிர்வாழ்வதற்கான நம்பிக்கையைப் பெற்றிருக்கிறார்கள்.

ஜூலியட் ஆஷ்டன் போரினால் பாதிக்கபட்டவள். அவளது பெற்றோர் போரில் மடிந்து போனார்கள். லண்டனின் உயர்தட்டு வாழ்க்கையினை வாழ்ந்து வரும் அவளுக்கு வரும் ஒரு கடிதம் அவள் வாழ்க்கையை மாற்றிவிடுகிறது. ஒத்தரசனை கொண்ட ஒருவரைப் புரிந்து கொள்ளும் ஆஷ்டன் அவனுக்காகத் தானே புத்தகத்தைத் தேடி வாங்குகிறாள். கார்ன்சி தீவிற்குச் செல்லும் அவள் ,

டாவ்ஸி ஆடம்ஸ் பற்றிய கற்பனையோடு செல்கிறாள். தனக்குத் திருமணம் நிச்சயமாகி விட்டதை அவள் மறைந்து கொள்கிறாள். டாவ்ஸி ஆடம்ஸ் அவளை வரவேற்கும் விதமும் பழகும் விதமும் மிக அழகாக உருவாக்கபட்டுள்ளது.

ஒவ்வொரு புத்தகமும் உண்மையில் ஒரு தீவே. அந்தத் தீவிற்குள் வாசகன் பயணம் செய்து புதிய மனிதர்களை அடையாளம் காணுகிறான். அவர்களின் கடந்தகாலத்தைப் புரிந்து கொள்கிறான். அவர்கள் மீது அன்பு காட்டுகிறான். பிரியும் தருணத்தில் அந்த உலகிலிருந்து எளிதாக விடுபடமுடியவில்லை. அப்படியான ஒரு அனுபவத்தைத் தான் மொத்த படமும் நமக்குத் தருகிறது

••

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 03, 2021 00:18

March 2, 2021

இந்தியக் கலைகள்

இந்தியக் கலைகள், நாடகம். நிகழ்த்துக் கலைகள், வரலாறு, அகழ்வாய்வு, இயற்கை வரலாறு, கட்டிடக்கலை, பண்பாடு குறித்த முக்கியக் கட்டுரைகளை வெளியிட்டு வரும் Marg இதழை நீண்டகாலமாகவே வாங்கி வாசித்து வருகிறேன்.

இது காலாண்டு இதழாக வெளிவருகிறது. ஒரு இதழின் விலை ரூ250. அழகான வண்ணப்படங்களுடன் சிறந்த கட்டுரைகளுடன் இதழ் வெளியாகிறது. மின்னிதழாகவும் இதை வாசிக்க இயலும்.

எழுத்தாளர் முல்க் ராஜ் ஆனந்த் 1946 ஆம் ஆண்டில் மார்க் பவுண்டேஷனை உருவாக்கினார். இந்தியக் கலைகள் குறித்த ஆய்வுமையமாக இது உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனமே மார்க் இதழை வெளியிடுகிறது.

ஒவ்வொரு இதழும் ஒரு குறிப்பிட்ட மையப்பொருளைக் கொண்டு உருவாக்கப்படுகிறது.

இந்தியக் கலைகள் குறித்த ஆய்வு நூல்களையும் மார்க் பவுண்டேஷன் வெளியிட்டு வருகிறது

https://marg-art.org/

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 02, 2021 23:14

பிரபஞ்சனின் நினைவு

இந்தப் புத்தகக் கண்காட்சி துவங்கிய நாளில் இருந்தே பிரபஞ்சனைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்கிறேன். அவர் இல்லாத வெறுமை மனதைப் பெருந்துயரம் கொள்ளச் செய்கிறது. எத்தனை அன்பான மனிதர். அவரோடு புத்தகக் கண்காட்சியில் சுற்றியலைந்த நாட்கள் மனதில் நிழலாடுகின்றன

அவரைப் பற்றி முன்பு எழுதிய கட்டுரையினை நேற்று திரும்பப் படித்துக் கொண்டிருந்தேன். மனதில் அவர் இல்லாத வலி மேலும் அதிகமாகியது

••

பிரபஞ்சனின் இணையற்ற தோழமை என்ற எனது கட்டுரையின் ஒரு பகுதி :

பிரபஞ்சன் என்றால் மனதில் தோன்றும் முதல் பிம்பம் சிரித்துக் கொண்டேயிருக்கும் அவரது முகம். இனிமையான குரலில் வரவேற்று நலம் விசாரிக்கும் பண்பு. கையில் காசேயில்லாமல் அறையில் அவர் தனித்துவிடப்பட்டிருந்த நாளில் கூடச் சந்தித்திருக்கிறேன். அப்போதும் அந்தச்சிரிப்பு மாறியதேயில்லை. அது வாழ்க்கையைப் பார்த்துச் சிரிக்கும் சிரிப்பு. நீ என்னைக் குப்புறத்தள்ளி விட்டதாக நினைக்கிறாய். நான் ஒரு எழுத்தாளன். பொருளாதாரக் கஷ்டங்களால் ஒரு போதும் விழுந்துவிடமாட்டேன் என இறுமாறுப்புடன் வெளிப்பட்ட புன்னகை.


தனது கஷ்டங்கள், உடல்நலப்பிரச்சனைகள் குறித்து ஒரு போதும் அவர் புலம்பியவரில்லை. எவரிடமும் கையேந்தி நின்றவரில்லை. அதே நேரம் தனது சந்தோஷங்களைத் தனித்துக் கொண்டாடியதேயில்லை. தன் மகிழ்ச்சியை நண்பர்களுக்கு பகிர்ந்து தருவதில் நிகரற்றவர். அவரது அறை எப்போதும் நண்பர்களுக்காக திறந்தேயிருந்தது. அதிலும் என்னைப் போல எழுத்தாளர் ஆக வேண்டும் என வேலையில்லாமல் அலைபவர்களுக்கு அந்த அறை நிரந்தரப் புகலிடமாகவே இருந்தது.


இளம் எழுத்தாளர்களை அவரைப் போல பாராட்டிக் கொண்டாடிய இன்னொருவரை நான் கண்டதில்லை. சில நேரங்களில் இவ்வளவு பெரிய வார்த்தைகளால் புகழ்கிறீர்களே என அவரிடமே கேட்டிருக்கிறேன்.

பாராட்டு தானே ராமகிருஷ்ணன் எழுத்தாளனை மகிழ்ச்சியடையச் செய்கிறது. ஆயிரம் ரூபாய் கொடுப்பதை விடவும் அவனது கதை கவிதை சிறப்பாக உள்ளது. நீ மிக நன்றாக எழுதுகிறாய் என்று பாராட்டு சொல்வதை தானே படைப்பாளி பெரியதாக நினைக்கிறான். நல்ல படைப்புகளை யார் எழுதினாலும் எந்தப் பத்திரிக்கையில் வந்தாலும் தேடிப் படித்து உடனே பாராட்டக்கூடியவன். அது எனது கடமை என்று சொன்னார் பிரபஞ்சன்.

இந்தப் பண்பு அவரை எப்போதும் இளந்தலைமுறை படைப்பாளியோடு தோழனாக இருக்க வைத்தது.


புதுச்சேரி மண்ணின் வரலாற்றையும் அவர் ஆழமாக அறிவார். இதை விரிவாக எழுதியும் இருக்கிறார் எழுத்து, இசை,கலை,பண்பாடு எல்லாம் மனிதர்களை ஒருவரோடு ஒருவரை இசைவிக்கத்தானே அன்றி வேறு எதற்கும் இல்லை. அன்பால் இணைந்து, அன்பால் புரிந்து கொண்டு அன்பே பிரதானமாக ஒரு உலகத்தை உருவாக்கும் தொழிலையே நான் செய்கிறேன் என்பதில் எனக்குப் பெருமிதம் உண்டு. மனித குலம் அன்பினால் மட்டுமே தழைக்கும், என்பதே என் செய்தி எனப் பிரபஞ்சனே தன்னைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அது முற்றிலும் உண்மை

புதுமைப்பித்தன் காலம் முதல் இன்று வரை தமிழ் எழுத்தாளர் எழுத்தை மட்டுமே நம்பி வாழமுடியாத நிலைதான் நிலவுகின்றது. பிழைப்பிற்காகவே பத்திரிக்கை துறையில் வேலை செய்தார். பத்திரிக்கைகள் தனக்கான உலகமில்லை என்று அறிந்து கொண்டபிறகு எழுத்தை மட்டுமே நம்பி வாழுவது என முடிவு செய்து கொண்டார். அதைப்பற்றி அவரிடம் கேட்டபோது. அது ஒரு தற்கொலை முயற்சி எனத் தெரிந்துமே அதில் ஈடுபட்டேன் என்று சிரித்தபடியே சொன்னார்.

1970களில் ‘இல்லஸ்டிரேடட் வீக்லி’ போல அழகான இலக்கியப் பத்திரிகை தமிழில் நடத்தவேண்டும் என்பது அவரது கனவாக உருவானது. இதற்காக புதுவையில் பாரதி அச்சகம்’ என்ற பெயரில் அச்சகம் ஒன்றைக் காந்தி வீதியில், சின்னப்பிள்ளையார் கோயில் பக்கத்தில் தொடங்கினார். மனைவியின் நகையை விற்று டிரடில் மெஷின் வாங்கினார். அதில் பாரதியாரின், ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற கவிதையைக் கம்போஸ் பண்ணி அச்சேற்றினார். ஆனால் அது முழுமையாக அச்சாகவில்லை.

அப்போது தான் அந்த மிஷின் உடைந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. தன்னை ஏமாற்றி விற்றிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தார்.. வேறுவழியின்றி அந்த அச்சகத்தைச் சொற்ப விலைக்கு விற்பனை செய்தார். சிறந்த பத்திரிக்கை ஒன்றை நடத்த வேண்டும் என்பது அவரது கனவுகளில் ஒன்றாக இருந்தது. ஆனால் அது கடைசி வரை நிறைவேறவேயில்லை

பிரபஞ்சன் ஒப்பனை செய்து கொள்வதிலும் நேர்த்தியாக உடைகள் அணிந்து கொள்வதிலும் அதிக ஈடுபாடு கொண்டவர். அழகான தோற்றம் கொண்டவர். உயர் ரக ஜிப்பா அணிந்து அவர் கூட்டங்களுக்கு வருவதைக் காண அத்தனை வசீகரமாகயிருக்கும். காபியை விரும்பிக் குடிப்பவர் என்பதால் அவருக்குச் சரவணபவன் காபி மீது கூடுதல் விருப்பம். அங்கே பணியாற்றுகிற அத்தனை பணியாளர்களையும் அவர் அறிவார். அவர்கள் குடும்ப நலன்களைக் கேட்டுக் கொள்வார். ஒருமுறை ஒரு சர்வருக்கு உடல் நலமில்லை என அறிந்து பைநிறைய ஆரஞ்சு பழங்களை வாங்கி அளிப்பதை நேரில் கண்டிருக்கிறேன். மகாகவி பாரதியிடம் இது போன்ற அன்பு இருந்த்தாகச் சொல்லியிருக்கிறார்கள். அதே அன்பு பிரபஞ்சனிடமும் இருந்தது.

புதுவையில் இருந்து சினிமாத்துறையில் பிரவேசிக்க வேண்டியே அவர் சென்னைக்கு வந்தார்.  ஆனால் அந்த ஆசை ஒன்றிரண்டு வருஷங்களிலே வடிந்துவிட்டது, காரணம் அவர் பட்ட அவமானங்களே. ஆனால் கரந்தை தமிழ் கல்லூரியில் முறையாக தமிழ் கற்றவர் என்பதால் பத்திரிக்கை துறையிலும் எழுத்து துறையிலும் தனது கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தார். பிரபஞ்சனின் கதைகள் அதிகமும் பெண்களின் துயரத்தை பேசின. எளிய மனிதர்களின் வாழ்க்கையை கவனத்துடன் அக்கறையுடன் அன்புடன் அவர் எழுதினார். 

தனது வம்சத்திலே பெண் பிள்ளைகள் கிடையாது. எல்லோருக்கும் ஆண்பிள்ளைகள் தான். எனக்கும் ஆண்பிள்ளைகள் தான். ஆகவே நான் சந்திக்கும் இளம்பெண்களை மகளைப் போல நினைத்துக் கொள்வேன் என்று ஒருமுறை பிரபஞ்சன் சொன்னார். அவரது மகள் போல நேசித்த பெண் படைப்பாளிகள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் நூலிற்கு முன்னுரை எழுதியிருக்கிறார். வெளியீட்டு விழாக்களில் பேசி அவர்களைக் கொண்டாடியிருக்கிறார். அவர்களின் சொந்த வாழ்க்கையில் துயரம் கவ்வும் போதெல்லாம் முடிந்த உதவிகளை செய்திருக்கிறார். அந்த வகையில் அவர் எத்தனையோ பெண் படைப்பாளிகளின் தந்தை என்றே சொல்வேன்

வரலாற்றை மீள்ஆய்வு செய்வதிலும் வரலாற்று உண்மைகளை உலகம் அறியச் செய்வதிலும் அதிக ஆர்வம் கொண்டவர். புதுவையின் வரலாற்றை விவரிக்கும் ஆனந்தரங்கம் பிள்ளை டயரியை முதன்மையாகக் கொண்டு அவர் உருவாக்கிய வானம் வசப்படும்,  மிகச்சிறப்பான வரலாற்று நாவல்.  அந்நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. அந்த விருது அறிவிக்கபட்ட நாளில் அவரைத் தேடிச் சென்று வாழ்த்துச் சொன்னேன். தமிழில் நல்ல வரலாற்று நாவல்கள் இல்லை என்று நீண்ட குறையிருந்து வந்தது. அந்தக்குறையை போக்கும் ஒரு நாவலை நான் எழுதியிருக்கிறேன் என்பது மகிழ்ச்சி என்று சொன்னார். அது வெறும் தற்பெருமையில்லை. இலக்கியவாதி தன் படைப்பின் மீது கொண்ட மரியாதை.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 02, 2021 22:48

இந்து தமிழ் நாளிதழில்

இன்றைய இந்து தமிழ் நாளிதழில் புதிய சிறார் நூல்களை அறிமுகம் செய்திருக்கிறார்கள். அதில் எனது சிறார் நூல்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்கள்.

மாறுபட்ட நூல்கள்

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ‘நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து’, ‘அபாய வீரன்’ ஆகிய சிறார் கதைத் தொகுப்புகள், ‘அண்டசராசரம்’ என்கிற நாவல் ஆகியவை வெளியாகியுள்ளன. (தேசாந்திரி வெளியீடு, தொடர்புக்கு: 9600034659).

நன்றி

இந்து தமிழ் நாளிதழ்

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 02, 2021 22:31

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.