S. Ramakrishnan's Blog, page 136
April 17, 2021
மழையின் கடவுள்
பாலுமகேந்திரா அவர்கள் எழுதிய இந்தக் கட்டுரையைத் திரும்ப வாசித்தேன். டேவிட் லீனைச் சந்தித்த நிகழ்வு அற்புதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதன்முறையாகச் சினிமா படப்பிடிப்பைப் பார்த்த நினைவு பலருக்குள்ளும் இப்படி வியப்பாகவே பதிந்து போயிருக்கும்.
••
சினிமாவும் நானும்.
பாலுமகேந்திரா

13 வயதில் தொடங்கிய எனது படிக்கும் பழக்கம், 16 வயதுக்குள் என்னை ஒரு வெறிகொண்ட வாசகனாக மாற்றியிருந்தது. தமிழில் ராஜம் ஐயரின் “கமலாம்பாள் சரிதம்” முதல் அந்தக் கால கட்டத்தில் வெளிவந்திருந்த அத்தனை நாவல்களையும் படித்துமுடித்திருந்தேன்.
எங்களூர் வாசகசாலையிலும் எனது உயர் நிலைப்பள்ளி லைபரேரியிலும் இருந்த அனைத்து ஆங்கில நாவல்களையும் கரைத்துக் குடித்திருந்தேன்.
அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அது ஒரு கிறிஸ்தவப் பள்ளிக்கூடம். இயேசு சபைப் பாதிரியார்களால் நடத்தப்பட்டு வந்தது. எங்கள் வகுப்பு ஆசிரியராக ஃபாதர் லோரியோ. அமெரிக்கர். மசேச்சுசேட்ஸ் மாகணத்தைச் சேர்ந்த பொஸ்டனைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.பயங்கர சினிமாப் பைத்தியம். சொந்தமாக ஒரு சினிமாப் புரஜெக்டர் வைத்திருந்தார். நன்றாகத் தமிழ் பேசுவார். A.R. ரஹ்மான் பாடல்களைப் போல, ஆங்கில நெடி கலந்த தமிழ்.
தனது 16 mm புரஜெக்டரில் ஒவ்வொரு வெள்ளியன்றும் எங்களுக்கு சினிமா காண்பிப்பார். அப்பொழுது பார்த்தவைதான் ‘Lushiyana story’, ‘The Glass’, ‘The Post’ , ‘ Bicycle Thieves’, ‘Battleship potemkin’ போன்ற படங்கள்.
எங்கள் ஆறாம் வகுப்புக் கும்பல், ஏழு, எட்டு என்று மேலே போகப் போக ஃபாதர் லோரியோவும் எங்களுடன் மாற்றப்பட்டுக் கொண்டிருந்தார். பன்னிரெண்டாம் வகுப்பு முடியும் வரை அவரே எங்கள் கிளாஸ் டீச்சர். அதுகாரணம் வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமை உலக சினிமா பார்ப்பது தொடர்ந்தது. கூடவே ஃபாதர் லோரியோவின் சினிமாப் பைத்தியம் எனக்கும் தொற்றிக் கொண்டது. வருடங்கள் உருள உருள என்னுள்ளே மொட்டாக முளைத்த அந்த சினிமாப் பைத்தியம் பூவாகி, காயாகி, கனியாகி, விதையாகி, விழுந்து முளைத்த செடியாகி, விரிந்து படர்ந்த விருட்சமாகி விட்டிருந்தது.
இதற்கிடையில் ஒரு முக்கியமான சம்பவம் நிகழ்ந்தது. ஆறாம் வகுப்பின் தொடக்கத்தில் ஃபாதர் லோரியோ எங்களை ஒரு சுற்றுலாவுக்கு அழைத்துப் போயிருந்தார். பள்ளிக்கூடப் பேருந்தில் ஃபாதர் லோரியோவுடன் நான்கு நாட்கள் ஊர் சுற்றியதை மறக்க முடியாது. ஸ்கூல் பஸ்ஸில் கை தட்டிப் பாட்டுப் பாடி கும்மாளம் போட்டுக் குதூகலிக்கும் நேரம் போக, சற்று ஓய்வான தருணங்களில் பள்ளிக்கூடத்தில் அவர் காண்பித்த சினிமாக்களைப் பற்றி ஃபாதர் லோரியோவுடன் அரட்டையடிப்பது எனக்கு வழக்கமாயிருந்தது. சினிமா பற்றிய எனது ஆர்வம் அவருக்குப் பிடித்திருந்தது. எனது தொடர் கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதில் சொல்லுவார்.
அன்று கண்டி என்ற ஊரில் முகாமிட்டிருந்தோம். கொழும்பிலிருந்து அறுபது மைல் தொலைவில் இருந்த அந்த மலை நகரம் பௌத்த மதத்தினரின்
புனிதத் தலங்களில் ஒன்று. நாங்கள் போன சமயம் அங்கு ஆங்கிலப் படமொன்றிற்கான படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. கேள்விப்பட்டதும் ஃபாதர் லோரியோ குஷியாகிவிட்டார்.அடுத்த நாள் காலை எங்கள் இருபது பேரையும் அழைத்துக்கொண்டு அந்தப் படப் பிடிப்பு நடக்கும் இடத்திற்குப் போயிருந்தார். அங்கு ஏகப்பட்ட வெள்ளைக்காரர்கள். இடையிலே ஒன்றிரண்டு நம் ஆட்கள். எல்லோரும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.
அனைவரையும் அதட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தவர் ஒரு வெள்ளைக்காரர். அரைக் காற்சட்டை, கையில்லாத பனியன், கேன்வாஸ் ஷூஸ் என்று படு கம்பீரமாக இருந்தார். அவ்வப்போது அவர் அருகே வந்து ஆளாளுக்கு ஏதோ கேட்டுப் போனார்கள். எல்லோரும் அவரை
டேவிட் என்று பெயர் சொல்லி அழைத்தார்கள். அந்தப் படப்பிடிப்புக் குழுவின் தலைவர் அவர்தான் என்றும் அவர் பெயர் டேவிட் என்றும் என் மனதில் எழுதிக் கொண்டேன்.

பின்னாளில் தான் தெரிந்தது – “டேவிட்” என்று அழைக்கப்பட்ட அந்த மனிதர்தான் “டாக்டர் ஷிவாகோ”, “லாரன்ஸ் ஆஃப் அரேபியா”,”ரையன்ஸ் டாட்டர்”, போன்ற திரைக் காவியங்களை இயக்கிய இங்கிலாந்து இயக்குனர் டேவிட் லீன் என்று! நாம் பார்க்கப்போயிருந்த படப்பிடிப்பு “Bridge on the River Kwai” என்ற அவரது படத்திற்கானது என்றும் தெரிந்தது.
டேவிட் நின்று கொண்டிருந்த இடத்திற்கு சற்றுத் தள்ளி மூன்று கால்களைக் கொண்ட ஒரு தினுசான ஸ்டாண்டில் எதோ ஒன்று.. கருப்புத் துனியால் மூடப்பட்ட நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே நின்று கொண்டிருந்த இன்னுமொரு வெள்ளைக்காரர் மூடியிருந்த கறுப்புத் துணியை நீக்க, உள்ளே நான் அது வரை பார்த்திராத ஒரு கருவி. அது தான் “மோஷன் பிக்சர் கெமரா” என்று ஃபாதர் லோரியோ எங்களுக்குத் தெரியப்படுத்தினார். எனது உடம்பு பூராவும் ஜிவ்வென்று ஏதோ ஒரு உணர்வு. அதைத் தொட்டுப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. கை குறுகுறுத்தது. மனசு ஏங்கியது. அசாத்தியமான ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எனது ஆசையை ஃபாதர் லோரியோவிடம் தெரிவித்தேன்.
” அவரைக் கேள் ” என்று டேவிட்டை சுட்டிக் காட்டினார். நான் கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவன். எல்லோரையும் விரட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்த அந்த வெள்ளைக்காரரிடம் பேசக் கூச்சமாக – இல்லை – பயமாக இருந்தது. எனது பயத்தைப் புரிந்து கொண்ட ஃபாதர் லோரியோ என் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு டேவிட் அருகே போகிறார். தன்னை அறிமுகம் செய்து கைகுலுக்கியபின் அவர் காதருகே ஏதோ பேசுகிறார். முடிவில் sure! why not..! என்ற டேவிட்டின் கம்பீரமான குரல் மட்டும் எனக்குக் கேட்கிறது. ஃபாதர் லோரியோ என்னைப் பார்த்து ” போ போய் தொட்டுப் பார் ” என்று சிரித்தபடி சைகை காண்பிக்கிறார்.
கெமிரா அருகே செல்கிறேன். அதன் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த வெள்ளைக்காரருக்கு என் விருப்பம் தெரிவிக்கப்படுகிறது. அவர் சற்று விலகிக் கொள்ள அந்தப் பெரிய கெமிராவை நான் தொட்டுத் தடவிப் பார்க்கிறேன். தொட்ட மாத்திரத்தில் என் உடல் பூராவும் ஒரு தடவை உதறிப் போடுகிறது.
எங்கள் வீட்டு வாழைத் தோட்டத்தின் மறைவில், என் பிரியப்பட்ட பால்ய சினேகிதி அன்னலட்சுமியின் இள மார்பகங்களைத் தொட்டு தடவிப்பார்த்த பொழுதும், பின்னொரு நாள் அதே வாழைத் தோட்ட மறைவில், அவளைப் படுக்கவைத்து, பாவாடை உயர்த்தி அவள் பிறப்புறுப்பைத் தொட்டுத் தடவிய பொழுதும் என் உடம்பில் ஏற்பட்ட அதே உதறல் – அதே புல்லரிப்பு…
காலையில் படப்பிடிப்புக்குச் சென்று, கறுப்புத் துணி நீக்கி, முதல் முதலாக எனது கெமராவைத் தொடும்பொழுது அந்த உடல் உதறலும் புல்லரிப்பும் இப்பொழுது கூடத் தொடர்கிறது. படப்பிடிப்பு பார்ப்பதற்கென்று நாங்கள் போயிருந்த நாள் ஒரு சாதாரண நாள். மேக மூட்டம் கூடக் கிடையாது.அதுவரை கசமுச என்று பேசிக் கொண்டும் அங்குமிங்கும் நடமாடிக்கொண்டுமிருந்த படப்பிடிப்புக் குழுவினர் அமைதியாகிறார்கள். நிசப்தம். Total silence…! அந்த இடத்திற்கான
குருவிச் சத்தங்களைத் தவிர வேறு எந்தச் சத்தமும் இல்லை. அதைப் பார்த்து நாங்களும் மௌனமாகிறோம். சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்த டேவிட் கெமிரா அருகே நின்றுகொண்டிருந்த அந்த வெள்ளைக்காரரைப் பார்த்து ஏதோ சைகை செய்கிறார். கெமிரா அருகே நின்றுகொண்டிருந்த வெள்ளைக்காரர் கெமிராவை on செய்கிறார்… Rolling…. என்று குரல் கொடுக்கிறார்.. டேவிட் ஒரு வினாடி
தாமதித்து உரத்த சத்தத்தில் – மிக உரத்த சத்தத்தில் ” RAIN ” ! என்று கத்துகிறார்… அந்தக் காட்டுக் கத்தல் என்னைத் திடுக்கிட வைக்கிறது… டேவிட் ” RAIN ” என்று கத்தியதும், மழை கொட்டுகிறது. பெரிய மழை….. ஆச்சரியத்தில் நான் உறைந்து போகிறேன். RAIN என்று கத்தியதுமே மழை பெய்கிறதென்றால், இந்த டேவிட் என்ற மனிதரிடம் எதோ கடவுள்தன்மை இருக்க வேண்டும்…!
ஆறாம் கிளாஸ் படிக்கும் போது கண்டியில் பார்த்த அந்தப் படப்பிடிப்பை, அந்த மழைக்காட்சியைப் பத்தாம் கிளாஸ் படிக்கும்போது எங்களூர் தியேட்டருக்கு வந்த BRIDGE ON THE RIVER KWAI என்ற ஆங்கிலப் படத்தில் பார்த்த போது எனக்குள்ளே ஒரு எண்ணம் வலுத்தது.
பெரியவனானதும் நான் சினிமா டைரக்டராகத்தான் வருவேன்…
” RAIN ” என்று நான் கத்தினால் மழை பெய்யும்…..!
••
அஞ்சலி
அன்பிற்குரிய நண்பரும் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகருமான விவேக் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இருபத்தைந்து ஆண்டுகளாக அவரை அறிவேன். சிறந்த பண்பாளர். அவரது மறைவு மிகுந்த துயரமளிக்கிறது. அவருக்கு எனது கண்ணீர் அஞ்சலி .
April 16, 2021
சென்னையும் நானும் -2
சென்னையும் நானும் காணொளித் தொடரின் இரண்டாம் சீசன் தற்போது வெளியாகியுள்ளது.
இதன் முதல் பகுதி இணைப்பு.
April 15, 2021
மை டியர் செகாவ்
எனது மகன் ஹரி பிரசாத் இயக்கிய மை டியர் செகாவ் குறும்படம் பூனேயில் நடைபெற்ற சர்வதேசக் குறும்படப் போட்டியின் இறுதிச் சுற்றில் கலந்து கொண்டு சிறப்புப் பரிசை பெற்றுள்ளது.


எழுத்தாளர் ஆன்டன் செகாவைத் தீவிரமாக வாசிக்கும் ஒரு வாசகரின் வாழ்வினைச் சொல்லும் இந்தத் திரைப்படம் கவனம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஹரி பிரசாத் மற்றும் அவனது குழுவினர்களுக்கு எனது அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்
கைகளின் மாயம்
Glass 1958ம் ஆண்டு வெளியான டச்சு ஆவணப்படமாகும். இயக்குநரும் தயாரிப்பாளருமான பெர்ட் ஹான்ஸ்ட்ராவின் இந்தப் படம் 1959 இல் சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்றுள்ளது.
சர்வதேச அளவில் நடைபெறும் சினிமா பயிலரங்குகளில் தவறாமல் இப்படம் இடம்பெறுகிறது. இதை ஒரு பாடமாகவே மாணவர்கள் பயிலுகிறார்கள். 60 ஆண்டுகளைக் கடந்த போதும் இந்தப் படத்தின் தனித்துவமும் ஈர்ப்பும் மறையவேயில்லை.
நெதர்லாந்தில் உள்ள கண்ணாடித் தொழிற்சாலையினைப் படமாக்கியிருக்கிறார்கள். கண்ணாடிப் பாட்டில்களை எப்படிக் கையால் தயாரிக்கிறார்கள் என்பது வியப்பளிக்கிறது. படத்தின் தனித்துவம் இதன் பின்னணி இசை. எத்தனை அழகாக ஜாஸ் இசை காட்சிகளுடன் ஒன்றிணைகிறது.

அன்றாடம் நாம் பயன்படுத்தும் கண்ணாடிப் பாட்டில்கள் கலைப்பொருள் போல உருமாறுவதைக் காணும் போது மகிழ்ச்சியளிக்கிறது
10 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆவணப்படம் மிக உயிரோட்டமாகத் தொழிற்சாலையில் நடைபெறும் பணிகளை ஆவணப்படுத்தியுள்ளது.
ராயல் லீர்டாம் கிளாஸ் ஒர்க்ஸ் நிறுவனத்திற்கான விளம்பர படம் எடுக்க வேண்டும் என்றே ஹான்ஸ்ட்ரா அழைக்கப்பட்டார். அவர் கண்ணாடித் தொழிற்சாலையைப் பார்வையிட்ட பிறகு இதை நேர்த்தியான ஒரு கலைப்படைப்பாக உருவாக்க முடியும் என்பதை அறிந்து கொண்டார். அப்படி உருவானது தான் இப்படம்
இந்த ஆவணப்படத்தைக் காணும் போது சார்லி சாப்ளினின் மாடர்ன் டைம்ஸ் நினைவிற்கு வருகிறது. அதில் தொழிற்சாலையில் ஏற்படும் சிறிய கோளாறு எப்படி மொத்த இயக்கத்தைப் பாதிக்கிறது என்பதைக் காட்டியிருப்பார். படம் நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கிறது. முதல் பகுதி தொழிற்சாலையில் உருகிய கண்ணாடியை ஊதி உருவத்தை அமைக்கிறார்கள். . அவர்களின் செயல்பாடு இசையுடன் இணையும் புதிய அனுபவம் உருவாகிறது.

இரண்டாம் பகுதியில். தொழிலாளர்கள் இல்லாத நிலையில் மொத்தமாக இயந்திரங்களால் பாட்டில்கள் தயாரிக்கப்படுகிறது.. ஒரு பாட்டில் பெல்ட்டில் சிக்கிக்கொள்வதால், வரிசையாகப் பாட்டில்கள் விழுந்து உடைகின்றன. மூன்றாவது பகுதி கண்ணாடி வேலைப்பாடுகள் மற்றும் இயந்திரங்களின் வேலைகளுடன் ஏற்படும் ஒருங்கிணைப்பாகும், ஜாஸ் இசையுடன் கண்ணாடி தயாரிக்கும் செயல்முறையின் நுணுக்கங்கள் காட்டப்படுகின்றன. நான்காவது மற்றும் கடைசிப் பகுதியில், இசை பிரதானமாகிறது. கண்ணாடி பாட்டில் தயாரிப்பவர்களின் கன்னங்கள், விரல்கள் மற்றும் அசைவுகள் இசையுடன் இணைந்து பரவசமளிக்கின்றன
பாட்டிலைப் பற்றிய இந்த கவிதை நினைவில் வந்து போகிறது.
The sand and the bottle
today I went to the beach
and filled an empty bottle
with sand
until it was overflowing
the bottle
represented me
the sand
represented my thoughts
and feelings
and then i stood
by the waves
and threw the filled bottle
into the water
the sand fell out
disappeared
and sunk to the bottom
eventually the bottle
copied
the bottle
still
represents me
the sand
still
represents my thoughts
and feelings
–chantelle
April 13, 2021
வாக்கியங்களின் சாலை
– வாசிப்பனுபவம்
முனைவர் ப . சரவணன் , மதுரை
உலக மொழிகளுள் எழுதப்பட்ட எந்த வகையான இலக்கியமானாலும் அது மனிதனின் அகமனவோட்டத்தை நிச்சயமாகக் காட்சிப்படுத்தத்தான் செய்யும். அந்த இலக்கியத்தைப் படிக்கும் ஒவ்வொரு வாசகரும் அந்த மனவோட்டங்களுள் ஏதாவது ஒன்றைத் தன் வாழ்வில் தனக்கு நிகழ்ந்த அனுபவத்தோடு பொருத்திப் பார்ப்பார். அப்போது அந்த இலக்கியப் படைப்பு அவருக்கு நெருக்கமானதாக அமைந்துவிடும்.

சில வாசகருக்குத் தன்னனுபவத்தோடு இலக்கியம் முன்வைக்கும் மனவோட்டத்தைப் பொருத்திப் பார்ப்பதில் பயிற்சி இருக்காது. அந்தப் பயிற்சியை அளிக்கும் ஒரு கையேடுதான் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ள ‘வாக்கியங்களின் சாலை’ என்ற புத்தகம்.
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் உலக இலக்கியங்களைத் தன்னுடைய சுய அனுபவப்பதிவுகளோடு மெல்ல உரசிப் பார்க்கிறார். அந்த உராய்வில் பிறக்கும் தீத்துளிகளின் ஒளியால் உலக இலக்கியம் நமக்குப் புதுவகை அனுபவத்தையும் புதிய புரிதல்களையும் புதுவிதமான மனவோட்டத்தையும் அளிக்கிறது.
‘வாக்கியங்களின் சாலை’ என்ற இந்தப் புத்தகம், உலக அளவில் எழுதப்பட்ட மிக முக்கியமான புனைவு, புனைவல்லாத இலக்கிய வகைகளைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் வகையில் எழுதப் பெற்ற 19 கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்.
இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரையும் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் நினைவலைகளின் வழியாகவே தொடங்குகின்றன. அவரின் ஒவ்வொரு நினைவலையும் ஒரு சிறுகதைக்குரிய அல்லது தன்வரலாற்றுப் புதினத்துக்குரிய பாய்ச்சலோடுதான் விரிகின்றன. அந்த நினைவலை வாக்கியங்களால் பெருக்கெடுக்கும் ஒரு சிற்றோடையாக மாறிவிடுகிறது.
வாசகர்கள் அந்த நினைவோடையில் மகிழ்ந்து, சறுக்கிக்கொண்டு செல்லும் போதே எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் ஓர் உலக எழுத்தாளுமையை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். பின்னர், அந்த எழுத்தாளர் படைத்த படைப்பினை விவரிக்கிறார். அந்தப் படைப்பு பற்றிய பல தகவல்களைப் பலகோணங்களில் நமக்குக் காட்டுகிறார். பின்னர் அந்தப் படைப்பினை நாம் எவ்வாறெல்லாம் புரிந்துகொள்ள சாத்தியக்கூறுகள் உள்ளன என்பது பற்றி நமக்குக் கற்பிக்கிறார். இறுதியாக அந்தப் படைப்பு குறித்த தன்னுடைய ஒட்டுமொத்த மனப்பதிவினை மிகச் சுருக்கமாக நம் முன் வைத்துவிட்டு, மெல்ல விலகிக்கொள்கிறார்.
அடுத்த விநாடியே வாசகர்களின் மனம் அந்தப் படைப்பின் பின்னாலும் அந்த எழுத்தாளுமையின் மீதும் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் சுய அனுபவத்தின் முன்னும் சென்று குவிந்து நிற்கிறது. பிறகென்ன? அந்த எழுத்தாளுமையின் முழுப் படைப்புகளையும் நாம் தேடி தேடிப் படிக்க வேண்டியதுதான்.
‘வாக்கியங்களின் சாலை’ என்ற இந்தப் புத்தகம், ‘உலக இலக்கியங்களை அறிமுகப்படுத்தும் புத்தகம்தானே?’ என்று கேட்கும் வாசகர்களுக்கு என்னுடைய பதில் ‘இல்லை’ என்பதுதான். இந்தப் புத்தகத்தை நூலறிமுகப்புத்தக வரிசையில் வைக்கலாமா? என்று கேட்கும் வாசகர்களுக்கு என்னுடைய பதில் ‘கூடாது’ என்பதுதான்.
இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்படும் அனைத்துப் புத்தகங்களும் தேர்ந்த வாசகரின் ‘அறிவுச்சிந்தனைப்பசி’க்கு நல்விருந்தாகக் கிடைக்கப் பெற்ற எத்தனையோ புத்தகங்களுள் இருந்து, தேர்ந்தெடுக்கப் பெற்றவையே. அந்தத் தேர்ந்த வாசகர் சிறந்த எழுத்தாளராகவும் இருப்பதால் அவரின் தேர்ந்தெடுப்பு மிகவும் சிறப்பாகவே அமைந்துவிட்டது.
‘இதனால் யாருக்கு லாபம்?’ என்று கேட்கும் வாசகர்களுக்கு என்னுடைய பதில் ‘எளிய தமிழ் வாசகர்கள் ஒவ்வொருவருக்குமே’ என்பதுதான் என்னுடைய அசைக்க முடியாத பதில். ‘அதெப்படி?’ என்றும் நீங்கள் கேட்கக்கூடும்.
எளிய தமிழ் வாசகர்களுக்குத் தமிழில் இதுவரை எழுதியுள்ள எண்ணற்ற மகத்தான ஆளுமைகளைப் பற்றி முழுமையாகத் தெரியாது. அவர்களின் படைப்புகளைப் பற்றியும் முழுதும் தெரியாது. இந்த நிலையில் அவர்களுக்கு உலக இலக்கிய ஆளுமைகளைப் பற்றி எத்தகைய புரிதல் இருக்கக்கூடும்?
அவர்கள் அறிந்த உலக இலக்கிய ஆளுமைகள் பெரும்பாலும் நமது இலக்கிய விமர்சகர்கள் நமது இலக்கிய ஆளுமைகளை உலக இலக்கிய ஆளுமைகளோடு ஒப்பிட்டு எழுதும் குறிப்புகளைக் கொண்டுதானே ஒழிய, உலக இலக்கிய ஆளுமைகளின் படைப்புகளைத் தமிழ் மொழியில் மொழிபெயர்த்து, வெளியிடப்பட்ட புத்தகங்களைப் படித்து அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
இன்றும்கூட உலகின் மிக முக்கியமான இலக்கிய ஆளுமைகளின் முழுப் படைப்புகளும் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை என்பதையும் நாம் மனத்தில் பதித்துக்கொள்ள வேண்டும். இத்தகைய நிலையில், சூழலிலிருந்துதான் நாம் இந்த ‘வாக்கியங்களின் சாலை’ என்ற இந்தப் புத்தகத்தை அணுக வேண்டும்.
இந்தப் புத்தகத்தின் வழியாக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எந்த உலக இலக்கிய ஆளுமைக்கும் ‘நன்நெறிச்சான்றிதழ்’ வழங்கவில்லை. அந்த ஆளுமைகளின் எந்தப் படைப்புக்கும் மதிப்பெண் இடவில்லை. அயல்மொழி இலக்கியப் படைப்புகளைப் பெருமைபட பேசும்போதும்கூட எந்தத் தருணத்திலும் நம் மொழிப் படைப்புகளை ஒப்பிடவுமில்லை. இந்த மூன்றுமே இந்தப் புத்தகத்தின் ‘தரமும் பலமும்’ என்பேன்.
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள், இந்த ‘வாக்கியங்களின் சாலை’ என்ற புத்தகத்தின் வழியாக, ‘நான் இந்த அயல் இலக்கியப் புத்தகத்தைப் படித்ததன் வழியாக, என்னுடைய சுய அனுபவமான ஒன்றினை நினைத்துப் பார்த்துக்கொண்டேன்’ என்றும் ‘இந்த அயல் எழுத்தாளரின் படைப்பாளுமையைப் புரிந்துகொள்வதன் வழியாக, நான் என்னுடைய வாசிப்பு அனுபவத்தையும் எழுத்தின் தரத்தையும் புத்தொளிகொள்ளச் செய்தேன்’ என்று தன்னுடைய தரப்பினை விரிந்த மனத்தோடு நம் முன் வைக்கின்றார்.
ஒரு புத்தகத்தைப் படிப்பதன் வழியாக நம் வாழ்வில் நாம் அடைந்த அனுபவங்களை எவ்வாறெல்லாம் மீண்டும் நினைத்துப் பார்த்துத் தொகுத்துக்கொள்ளலாம் என்பதையும் ஒரு படைப்பாளரை மனத்தளவில் அணுகுவதன் வழியாக நாம் நமது சிந்தனை விரிவையும் கற்பனைத் திறத்தையும் எவ்வாறு புதுமையாக்கிக் கொள்ளலாம் என்பதையும் நாம் இந்த ‘வாக்கியங்களின் சாலை’ என்ற புத்தகத்தைப் படிப்பதன் வழியாகக் கற்றுக்கொள்ளலாம்.
பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் ‘படைப்பாக்கத் திறன்’ சார்ந்த பாடத்திட்டத்தில் இந்தப் புத்தகத்தைத் துணைநூலாக அல்லது மேற்பார்வைநூலாக வைக்கலாம். அதற்குரிய முழுத்தகுதி இந்தப் புத்தகத்துக்கு உள்ளது.
தெலுங்கில்
” எம்பாவாய்” என்ற எனது சிறுகதையின் தெலுங்கு மொழியாக்கம் “neccheli.com என்ற மின் இதழில் வெளியாகி இருக்கிறது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் கௌரி கிருபானந்தன்.

அவருக்கு எனது மனம் நிரம்பிய நன்றி

இணைப்பு
అభిమానధనం (తమిళ అనువాదకథ)
சென்னையும் நானும் -2
சென்னையும் நானும் காணொளித் தொடரின் இரண்டாம் பகுதி ஏப்ரல் 16 முதல் துவங்குகிறது. வாரம் வெள்ளிதோறும் இந்தக் காணொளித் தொடர் வெளியாகும். தேசாந்திரி யூடியூப் பக்கத்தில் இதனைக் காணலாம்
அன்பு மொழி
நேற்று எனது பிறந்த நாள்.
இந்நாளில் எனக்குத் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் முகநூலிலும் வாழ்த்து தெரிவித்த நண்பர்கள். அன்பர்கள். வாசகர்கள் அனைவருக்கும் மனம் நிரம்பிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் குடும்பத்தில் ஒருவரது பிறந்த நாளைக் கொண்டாடுவது போல வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

உங்கள் நேசமும் வாழ்த்துக்களும் தான் என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கின்றன. இத்தனை நல்ல உள்ளங்களின் அன்பைப் பெற்றிருக்கிறேன் என்பது எனது பேறு.
அயல்நாட்டிலிருந்து மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் அழைத்துப் பேசி வாழ்த்து தெரிவித்தார்கள். அலைபேசித் தொடர்பு சீராக இல்லாத காரணத்தால் சிலரது அழைப்பை ஏற்கமுடியவில்லை. உங்கள் அழைப்பினையே வாழ்த்தாக எண்ணிக் கொள்கிறேன். காலை ஐந்து மணி துவங்கி இரவு பனிரெண்டு வரை மின்னஞ்சலில் வாழ்த்துச் செய்தி வந்தபடியே இருந்தது. வாட்ஸ்அப்பிலும் முகநூலிலும் நிறைய வாழ்த்துச் செய்திகள்.
எழுத்தாளர் கி.ராஜநாராயணன். வண்ணதாசன். கலாப்ரியா துவங்கி இலங்கையிலுள்ள சாந்தன். கருணகாரன் வரை முக்கிய எழுத்தாளர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். அவர்களுக்கு என் அன்பும் தீராத நன்றிகளும்.

எனது குடும்பம் என்பது ஆயிரமாயிரம் அன்பு உள்ளங்கள் தான்.
தமிழகத்தின் முக்கிய ஆளுமைகள். அரசியல்பிரமுகர்கள். திரைத்துறையினர், பத்திரிக்கையாளர்கள். மருத்துவர்கள். நீதியரசர்கள் ஐஏஎஸ் அதிகாரிகள். கல்வியாளர்கள். பதிப்பாளர்கள். என அவ்வளவு பேரும் வாழ்த்து சொன்னது எழுத்தையும் எழுத்தாளனையும் எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதன் அடையாளமாகவே நினைக்கிறேன்.
வழக்கமாகப் பிறந்தநாளை ஒட்டிச் சிறிய சந்திப்பு நடைபெறும். நேற்று பெருந்தொற்று முடக்கம் காரணமாக அதை ஏற்பாடு செய்ய இயலவில்லை. ஆனாலும் நெருக்கமான நண்பர்கள் என்னைச் சந்திக்க நேரில் வந்திருந்தார்கள். அவர்களுடன் பிறந்தநாளைக் கொண்டாடினேன்.
நேற்றைய நாளை மிகுந்த கொண்டாட்டமாக்கிய அனைவருககும் இதயப்பூர்வமான நன்றிகள்
••
April 12, 2021
கலையில் கண்கள்
இந்திய ஓவியங்களிலும் சிற்பங்களிலும் கண்ணை வடிவமைப்பது முக்கியமானது. இந்தியக் கலைஞர்கள் கண்ணின் வழியே உணர்ச்சிகளை மிகத் துல்லியமாகச் சித்தரித்துள்ளார்கள். இந்திய இலக்கியத்தில் கண்களைப் பற்றி எழுதப்பட்ட கவிதைகள் ஏராளம். கண்களே உணர்ச்சிகளின் ஜன்னலாக இருக்கிறது.

இந்திய ஓவியர்கள் கண்களை எப்படி வரைந்தார்கள். எத்தனை விதமான வடிவங்களில் கண்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. கடவுளின் கண் எப்படியிருக்க வேண்டும் என்பது போல இந்தியக் கலையுலகில் கண்ணின் முக்கியத்துவத்தை விவரிக்கும் “The Eye In Art” என்ற புத்தகத்தைப் பப்ளிகேஷன் டிவிசன் வெளியிட்டிருக்கிறது.
மிகச்சிறந்த இந்த நூலை ஐம்பது சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்கிறார்கள். 250 ரூபாயில் மிக முக்கியமான புத்தகம் கிடைக்கிறது. ஓவியம் பயிலும் மாணவர்கள் மற்றும் கலையின் மீது ஈடுபாடு கொண்டவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகமாகும்
An Andalusian Dog என்ற லூயி புனுவலின் திரைப்படத்தில் கண்ணை ஒரு பிளேடினைக் கொண்டு குறுக்காக வெட்டும் காட்சியிருக்கிறது. சர்ரியலிசத்தின் பாதிப்பால் உருவான காட்சியது. நம் பார்வை இறுக்கமடைந்து வரம்புகளுக்குள் உட்பட்டிருக்கிறது. அதை மாற்றியமைக்க வேண்டும். புதிய அழகியலை உருவாக்கக் கண்ணை விஸ்தாரணம் செய்ய வேண்டும் என்கிறார்கள்

ஓவியர் டாலி கலை இயக்குநராகப் பணியாற்றிய ஹிட்ச்காக் படத்தில் கண்ணின் விசித்திரமான வடிவங்களைக் கொண்டு ஒரு அரங்கினை உருவாக்கியிருப்பார்.
மேற்குலகம் கண்களைச் சித்தரிக்கும் விதமும் இந்தியக் கலைகள் கண்களைச் சித்தரிக்கும் விதமும் மாறுபட்டவை. குறிப்பாக இந்திய ஓவியங்களில் காணப்படும் வெட்கம். சாந்தம். கருணை, தனிமையை மேற்கத்திய ஓவியங்களில் காணமுடியாது. பண்டைய எகிப்திய கோவில்களில் அறிவின் பாதுகாவலராகப் பயன்படுத்தப்படும் ஹோரஸின் கண் மிகவும் தனித்துவமான அடையாளங்களில் ஒன்றாகும்.
ராஜேந்திர பாஜ்பாயின் “The Eye In Art” புத்தகம் ஒரு முன்னோடியான ஆராய்ச்சி நூலாகும். இதில் தொகுப்பில் பன்னிரண்டு அத்தியாயங்கள் உள்ளன. இந்தியாவின் கிளாசிக்கல் கால ஓவியர்கள் மேற்கொண்ட முயற்சிகளை மதிப்பிடும் அவர் அஜந்தா, ராஜஸ்தானி மற்றும் பஹாரி ஓவியங்களில் கண்களுக்குத் தரப்பட்ட முக்கியத்துவத்தைச் சிறப்பாக விளக்குகிறார்.
நவரசங்களையும் கண்ணின் வழியே வெளிப்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாகப் புத்தரின் கண்களைப் பாருங்கள். அதில் தான் எத்தனை சாந்தம். எவ்வளவு ஞானம். அஜந்தா ஓவியங்களில் காணப்படும் பெண்களின் கண்களையும் வெண்கலச் சிற்பங்களில் காணப்படும் கண்ணின் அழகினையும் காணும் போது இதற்கு நிகரேயில்லை என்றே தோன்றும்.

ராஜஸ்தானிய ஓவியம் ஒன்றில் யானையின் கண்களை அவ்வளவு அழகாக வரைந்திருப்பதைக் கண்டேன். உயிரோட்டமான அந்தக் கண்களே ஓவியத்தை பெரும் கலைப்படைப்பாக மாற்றுகின்றன. மீன் போன்ற கண்கள் தாமரை போன்ற கண்கள். வில்லின் வடிவத்தை ஒத்த கண்கள் போன்றவை மரபாக ஓவியங்களில் சித்தரிக்கப்படுகின்றன. Vishnudharmottar எனும் சித்திர சூத்திரம் கண்கள் எவ்வாறு வரையப்பட வேண்டும் என்பதைப் பற்றி விரிவாக விளக்குகிறது
மேற்கத்திய மற்றும் கிழக்கு மரபுகளில் கண்கள் எவ்வாறு சித்தரிக்கப்படுகின்றன என்பதுடன் ஒப்பிட்டு இந்தியக்கலைகளை ஆய்வு செய்திருக்கிறார். கலைவரலாற்றில் மிகுந்த தேர்ச்சியும் தீவிர ஈடுபாடும் கொண்டிருந்தால் மட்டுமே இது சாத்தியம்
லாஸ்லோ க்ராஸ்னஹோர்காய் எழுதிய Seiobo There Below நாவல் 2015ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசு பெற்றது. பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த கலைஞர்களின் கலைத்திறன் பற்றியது இந்நாவல். பல்வேறு துண்டுகளால் ஒன்றிணைந்த வடிவத்தைக் கொண்டிருக்கிறது.

இந்நாவலில் ஜப்பானிலுள்ள புத்த கோவில் ஒன்றில் பழங்காலப் புத்தரின் சிலையை எப்படி மறுசீரமைப்பு செய்கிறார்கள் என்பதைப் பற்றி ஒரு பகுதி எழுதியிருக்கிறார்.
ஜப்பானின் ஜெங்கன்-ஜி கோயிலில் உள்ள அமிதா புத்தரின் மரச் சிலை 14 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. இந்தச் சிலையின் சிறப்புப் பாதித் திறந்த விழிகளுடன் உள்ள புத்தரின் தோற்றம். கால ஒட்டத்தில் இந்தச் சிலை சிதைந்து வருவதை உணர்ந்த மடாதிபதி சிலையை அங்கிருந்து அகற்றி முறையாக மறுசீரமைப்புச் செய்ய முற்படுகிறார்.
இதற்காகப் பீடத்திலிருந்து புத்தர் சிலையை அகற்றும் சடங்கு நான்கு துறவிகளால் ரகசியமாகச் செய்யப்படுகிறது,
புஜிமோரி என்பவரால் நடத்தப்படும் மறுசீரமைப்பு பட்டறைக்குச் சிலையைக் கொண்டு போகிறார்கள். அங்கே மறுபடியும் உரியச் சடங்குகள் செய்யப்பட்டுச் சிலை சுத்தம் செய்யப்படுகிறது.
பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒன்று சேர்ந்து மறுசீரமைப்பு செய்கிறார்கள்.
சிலையின் பாதி மூடிய கண்களை மறுசீரமைப்பு செய்யும் வேலை கொய்னோமி ஷுன்சோ என்பவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர் கண்களைச் சரிசெய்வதற்குக் கவனமாக வேலை செய்கிறார். சிலையின் சிறப்பு அந்தக் கண்கள் தான் என்பதால் புஜிமோரி அடிக்கடி அந்தப் பணியைப் பார்வையிட்டுக் கவனமாக வேலை செய்யும்படி கடிந்து கொள்கிறார்
முடிவில் ஒரு நாள் கண்கள் சீரமைப்பு செய்யப்பட்டு விட்டதாகக் கொய்னோமி ஒப்படைக்கிறார். புஜிமோரி அவரது கலைத்திறன் கண்டு வியந்து போகிறார்.
மற்ற பணிகள் முடிந்து சிலை மீண்டும் மடாலயத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. இப்போது. புத்தர் சிலையை லாரி ஒன்றில் ஏற்றி புத்த கோவிலுக்குக் கொண்டு வருகிறார்கள். அங்கே புத்தர் சிலையை வரவேற்க பொதுச் சடங்கு நடைபெறுகிறது
மக்கள் ஒன்று கூடி சடங்குகளை நிகழ்த்துகிறார்கள். சடங்கின் உச்சக்கட்டத்தில், நின்று, மண்டியிட்டு, கோஷமிட்டு, பிரார்த்தனை செய்தபின், அமிதா புத்தர் மீண்டும் தெய்வச்சிலையாகிறார்.. கடைசியாக,கூட்டம் கலைந்துபோகிறது, யாருமில்லாத கோவிலில் மடாதிபதி தனியாகச் சோர்ந்து போய்ப் படிகளில் அமர்ந்தபடியே, வலம் வரும் ஒரு எறும்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
புத்தர் சிலை வெளியேறிச் செல்வதும் மடாலயம் திரும்புவதுமான நிகழ்வு காலமாற்றத்தில் ஜப்பான் அடைந்துள்ள நிலையின் குறியீடு போலவே உள்ளது. புத்தரின் கண்களை மறுசீரமைப்பு செய்யும் கொய்னோமி அடையும் உணர்வுகளும் மடாதிபதி முடிவில் யாருமற்ற மடாலயத்தில் எறும்பைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பதும் ஒரே மனநிலை தான். வேறுவேறு விதமாக வெளிப்படுகிறது. இப்போது அது பழைய புத்தர் சிலை தான். ஆனால் அது புதுப்பிறவி எடுத்துள்ளது. ஜப்பானியப் பண்பாட்டின் அடையாளமாகவே அந்தச் சிலை முன்வைக்கப்படுகிறது. கலையின் வழியாக அபூர்வமான தருணங்கள், நிகழ்வுகள் உருவாவதையே லாஸ்லோ இந்நாவலில் முதன்மைப்படுத்தியிருக்கிறார்
பாதித் திறந்த புத்தரின் கண்கள் என்பது ஒரு குறியீடு. அதைப் புரிந்து கொள்வதற்கு ராஜேந்திர பாஜ்பாயின் புத்தகம் போன்ற கலை ஆய்வுகளை வாசிப்பது அவசியமானது.
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

