S. Ramakrishnan's Blog, page 136

April 1, 2021

உலோக விலங்குகள்

ஒவ்வொரு நாய்க்கும் அதன் இரவென்பதுண்டு

-அய்யப்ப பணிக்கர்

அவனது வீட்டின் வரவேற்பறை விலங்குகளால் நிரம்பியிருக்கிறது.

விலங்குகள், வெண்கலம், எஃகு, பித்தளையில் வார்க்கப்பட்டவை..

அமைதியாக இருக்க அவை பழக்கப்படுத்தப்பட்டிருப்பினும்,

நேற்றிரவில் பெரும் அமளியை ஏற்படுத்திவிட்டன.

நேற்று நாய்களின் முறை.

ஒன்றின் குரைப்பு மற்றவைகளைத் தூண்டிவிட்டது.

அதைக் கேட்டு நரிகள் அமைதியற்று ஊளையிடத் தொடங்குகின்றன.

பித்தளைச் சிங்கம் கர்ஜிக்க எழுந்தது.

பாடப் புத்தகங்களில் கர்ஜனை என்பதே சொல்;

முயற்சித்து, ஆனால் சளியிருப்பதால், கைவிட்டுத்

தானாகவே கூண்டுக்குத் திரும்பிவிட்டது.

கச்சேரி முடிந்து பாடகர்கள் அமைதியான போது

நானும் கண்ணயர்ந்து விட்டேன்,

ஆனால் குரைக்க முடியவில்லை.

இப்போதைக்கு இவ்வளவுதான், இது போதாதா.

அய்யப்ப பணிக்கரின் இந்த மலையாளக் கவிதையை  ஆங்கிலம் வழியாக தி.இரா.மீனா மொழியாக்கம் செய்திருக்கிறார். பதாகை இணைய இதழில் வெளியாகியிருக்கிறது.

வரவேற்பறைப் பொருட்களாக உள்ள விலங்குகள் அசைவுறும் தருணமொன்றைக் கவிதை பதிவு செய்துள்ளது. உண்மையில் இது உறைந்து போனவற்றை உயிர்ப்பிக்கும் செயல்பாடு. எல்லாவற்றுக்கும் ஒரு விழிப்புணர்வு உண்டு தானே.

வரவேற்பறையில் உள்ள கலைப்பொருட்கள் யாவும் இப்படிக் காலத்தில் ஆழ்ந்து உறைந்திருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பாக ஜப்பானிலிருந்து ஒரு தவளை பொம்மையை வாங்கி வந்திருந்தேன். பாஷோவின் நினைவாக அந்த் தவளைக்கே பாஷோ என்று பெயர் வைத்திருந்தேன். தாவும் நிலையிலுள்ள தவளைப் பொம்மை. மிக அழகாகச் செய்திருந்தார்கள் வரவேற்பறை அலமாரியின் கண்ணாடிக்குள் அந்தத் தவளை உறைந்து போயிருந்தது. சமீபமாக அதை வெளியே எடுத்துத் துடைக்கும் போது அதன் கண்கள் அசைவது போல உணர்ந்தேன். அதே உணர்வினைத் தான் இந்தக் கவிதையை வாசிக்கும் போது ஏற்பட்டது.

இந்த உலோக விலங்குகள் அமைதியாக இருக்க பழக்கபடுத்தபட்டிருக்கின்றன என்கிறார் பணிக்கர். இது செயற்கையான நிசப்தம்.

குழந்தைகள் கைப்பட்டவுடன் இது போன்ற பொம்மைகள் கண்விழித்துக் கொள்வது வழக்கம். சிறார்களால் பொம்மைகளுடன் உரையாடவும் விளையாடவும் முடியும். பெரியவர்களுக்கு அது வெறும் காட்சிப்பொருள் மட்டுமே

கவிதையில் எதிர்பாராத ஒரு கணத்தில் இந்த விலங்குகள் குரல் எழுப்பி அடங்குகின்றன. அதிலும் சிங்கம் பாவம் சளிப் பிடித்திருப்பதால் கர்ஜிக்க முடியவில்லை. அதிகாரமில்லாத நிலையைத் தான் அது வெளிப்படுத்துகிறது. கவிதை சொல்பவன் தன்னால் குரைக்க முடியவில்லை என்கிறான். இந்த அங்கதம் தான் கவிதையின் தனித்துவம்.

நாய்குரைப்பு ஒரு பழக்கம். எதிர்வினை. பசுவய்யா நடுநசி நாய்கள் என்றொரு கவிதை எழுதியிருக்கிறார். அதிலும் இந்த குரைப்பின் தொடர்ச்சி சுட்டிக்காட்டப்படுகிறது.

அகிரா குரசேவாவின் ட்ரீம்ஸ் படத்தில் இது போலப் பதுமைகள் உயிர்பெற்று வரும் காட்சியிருக்கிறது. இந்தக் கவிதையினை வாசிக்கும் போது அந்தக் காட்சி மனதில் தோன்றி மறைந்தது.

தி.இரா.மீனா மிக அழகாக மொழியாக்கம் செய்திருக்கிறார். அவருக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 01, 2021 05:14

சுபமங்களா இதழில்

சுபமங்களா இதழில் வெளியான எனது சிறுகதைகள் குறித்து வண்ணநிலவன் எழுதியுள்ள இந்தக் குறிப்பு சுபமங்களா நாட்களை நினைவுபடுத்தியது. கோமலின் அன்பு மறக்கமுடியாதது. சுபமங்களா இதழின் பங்களிப்பு பற்றி வெளியான சிறப்பு மலரில் இந்தக் கட்டுரையை வண்ணநிலவன் எழுதியிருக்கிறார். சுபமங்களா இதழ்கள் யாவும் இணையத்தில் வாசிக்க கிடைக்கிறது.

https://www.subamangala.in/

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 01, 2021 04:25

March 31, 2021

ஒளியை வாசிக்கிறவன்

அட்சரம் இதழில் வெளியான சிறுகதை – மீள்பிரசுரம்.

அந்த அறையில் அவனும் திமிங்கிலத்தையும் தவிர வேறு யாருமேயில்லை. கடலைவிட்டு வெளியேறி நாற்பதாண்டுகளாகி, உரு அழிந்து எலும்பு பொறியென நீண்டு நிசப்தித்திருக்கும் அந்தத் திமிங்கலத்தை எப்போது காணும் போதும் பிரம்மாண்டம் குறைவதேயில்லை. கோபாலராவ் திரும்பவும் அதன் வால் அருகே நின்றவனாக மொத்த திமிங்கலத்தையும் ஒருமுறை பார்த்தான். கண்களில் அடங்காத உருவம். மீனின் அடிவயிறு ஊஞ்சலென ஆடிக்கொண்டிருந்தது. இந்தத் திமிங்கலம் தன்னை விழுங்கியிருந்தால் இதே விலாவின் இரு எலும்புகளை பற்றியபடி ஊஞ்சலாடியிருக்கலாமல்லவா. அந்த ஒரு அறை முழுக்க திமிங்கலம் மட்டுமேயிருந்தது. கோபால்ராவ் அதன் எலும்புகளில் தனது உள்ளங்கையை உரசினான். உப்பும் பாசியும் கலந்ததொரு சொரப்பு. விரிந்த தாடை அசையாத போதும் கடல் அலைவீசி உள் செல்வதும், செவுளின் துவாரங்களில் நீர் பீச்சுவது போல புலப்பட்டது. இப்போது திமிங்கலம் திரும்பவும் கடலை நோக்கி;ப் புறப்பட்டுவிட்டால் தான் அதன் வாலைப் பற்றிக் கொண்டு கூடவே கருமையின் அடியாழத்தில் குமிழ்விடும் சிப்பிகளின் முகத்துவாரத்திற்கு போய் ஒடுங்கி கொள்ளலாம்.

திமிங்கலம் இந்தக் கட்டிடம் விட்டு வெளியேறும் போது மாடிப்படிகள் அதிர்வுறும். வாசலில் மரமேஜையில் கைகளை ஊன்றி அமர்ந்திருக்கும் பெண் திடுக்கிட்டு கத்தக்கூடும். சுவரில் மாட்டப்பட்ட கடிகாரங்கள் உதிர்ந்து சிதறவும், உக்கிரப் பெருவழுதியின் யுத்தகேடயங்கள், நர்த்தன மூர்த்திகளின் பிரதிமைகள் புரளவும், கண்ணாடி உறையிலுள் அடங்கிய முத்துமாலைகளில் சில தாடையில் சிக்கி ஒளிரவும், மரக்கதவுகள், பார்வையாளர் இருக்கைகள் மிதிபடவும் அறையை விட்டு நீந்தி திமிங்கலம் வெளியேறிபோகும் போது சாலையில் செல்லும் வாகனங்கள், சைக்கிள்காரர்கள், ஒன்றிரண்டு மாட்டு வண்டிகள் யாவும் புரியாமையில் உறைந்துவிடக்கூடும். யோசிக்க யோசிக்க இவையாவும் ஸ்டுவெர்ட் சினோராவின் படத்தில் வரும் காட்சிகள் போல முடிவற்று நீள்வதாக இருந்தது.

தாழ்ந்த வெயில் அசைந்த இந்த நாளில் அவன் காலையிலே மியூசியத்தின் இரண்டாம் தளத்திற்கு வந்திருந்தான். படிக்கட்டுகளில் யாரும் வராத நிசப்தம் மேலேறிக் கொண்டிருந்தது. குளுமையான காற்றும் மனதில் படியும் வெயிலும், சிரிப்புமாக சாவதற்கு இனிமையான நாள் இது என அவனாகவே சொல்லிக் கொண்டான். ம்யூசியத்தின் உள்ளே வளரும் மரங்கள் கூட காலத்தின் தொலைவிற்குச் சென்று விடுகின்றன. கோபாலராவ் பழுத்த இலையொன்று ஜன்னல் வழியே திமிங்கலத்தை பார்த்துக் கொண்டிருப்பதாகக் கண்டான். வெளிச்சம் தத்திக் கொண்டிந்த மாடியின் செங்கல் சுவரில் இருந்த அணில் ஒன்று வேகமாக ஓடி வால் சுழற்றி திமிங்கலத்தின் வயிற்று எலும்புகளில் தாவித் தாவி ெசன் ற து. கோபால ராவ் அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அணில் விலா எலும்பின் சாரத்தில் தனது வாலைப் புரட்டியபடி தலை கீழாக நடனமாடுவது போல குதூகல மடைந்தது. திமிங்கலத்திடமிருந்து ஆழ்ந்த பெருமூச்சு வருவது போல் காற்று சுழன்றது. அணில் திமிங்கலத்திடமிருந்து தாவி இரும்புக் கம்பிகளில் நடந்து உயரத்தில் தாவி மரஉத்திரங்களில் ஏறி நின்று திமிங்கலத்தைக் கண்டது. உடலை புரண்டு படுப்பதுபோல் காற்றில் எலும்புகள் அசைந்தன. ஒரு பாய்ச்சலில் அணில் திரும்பவும் உத்திரதுளையினுள் பதுங்கி மறைந்தது. கோபாலராவ் மற்ற நாட்களை விடவும் இன்று மிக அதிக சந்தோஷம் கொண்டான்.

மூன்று மாடியுள்ள அந்த ம்யூசியத்தின் படிகளில் மேலேறி நடக்கத் துவங்கினான். அவனுக்கு நாற்பது வயதே முடிந்திருந்தது. கறுப்பு கரை வேஷ்டியும் லாங்மி ல் சட்டையும் அணிந்திருந்தான். அவனது சட்டை பையில் நேற்று மிஞ்சிப்போன ஒரு வெற்றிலை மட்டும் காய்ந்து போயிருந்தது. தலையை கோரையாக விட்டிருந்தான். படியேறும் போது பழுப்புநிற சுவரில் வெயில் புரளும்போது நிற ஜாலம் துள்ளுவதை கண்டான். மிக மெதுவாக மூன்றாவது தளத்தை விட்டு மேலேறி கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு வந்தான். கருப்பேறி, உலர்ந்த அந்த தளத்தில் ம்யூசியத்தின் சிதைந்த பொருட்கள் குவிக்கப்பட்டிருந்தன. மார்பு கவசங்கள், தலையறுந்த பிரதிமைகள், நிறம் வெளிறிய ஓர் ஆல் இலை கிருஷ்ண சித்திரம் நகரம் தொலைவு வரை விரிந்து கிடந்தது. நீர் தொட்டி எஞ்ஜினையும் அதற்கு ஏறிச் செல்லும் இரும்பு படிக்கட்டுகளையும் கோபாலராவ் பார்த்தான். காற்று ஆளை வளைத்து வீழ்த்திவிடுவது போல வேகம் கொண்டிருந்தது. வெயில் ஏறுவதால் நகரின் தொலைவு பச்சை நிறம் மாறி மஞ்சள் திட்டில் தெரிந்தது. குப்பையில் கிளறி ஒரு தலைக் கவசமும் துருவேறிய ஒரு எக்காளத்தையும் குனிந்து எடுத்தான். அதை கையில் ஏந்திக் கொண்டு நடக்கும்போது சுய எள்ளல் பீறிட்டது. நீர் தொட்டியிருக்கும் இரும்பு படிகளில் ஏறி தொட்டியின் ஒற்றைச் சுவரில் நின்று பார்த்தபோது நகரம் இரைச்சலற்று பேரமைதியில் இருந்தது. குனிந்து நீர்த் தொட்டியினுள் கண்டான். பாதி மஞ்சள் வெயிலும், தப்பியலையும் ஒற்றை கொக்கு ஒன்றும் நீரினுள் கடந்தன. பின்பு கோபாலராவ் மிக மெதுவாக அந்தக் காட்சிகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, சுவரைவிட்டு மெதுவாக வானை நோக்கி இரண்டு அடி முன் வைத்தபோது, உடல் விசை கொண்டு கீழ் இறங்க, அந்தரத்தில் துருவேறிய எக்காளம் கையிலேந்தியபடி தரையை நோக்கி வீழ்ந்து கொண்டிருந்தபோது அவனுக்கு பிடித்தமான இத்தாலிய இயக்குனரான கிரேசியாவின் ‘மிலனில் ஒரு கோடைக்காலம்’ என்ற படத்தில் வரும் தலைகீழாக சுழலும் கட்டிடங்கள், உதிரும் மலர்கள், பாதசாரிகளின் காட்சி நினைவிற்கு வந்தது. அந்தப்படம் மூவிலேண்டில் திரையிடப்பட்ட போது அவனைத் தான் தேடிப் பிடித்திருந்தார்கள்.

அந்தப்படத்தின் முதல் காட்சி துவங்கும்போது ஒரு குடை காற்றில் விடுபட்டு போகும். கவிதையின் சில வரிகள் ஒளிரத் துவங்கும்.

“கோடை ஞாபகத்தின் ஒப்பனைக்கூடம், விதவிதமான கட்டிடங்கள், வாசனைகள், கேளிக்கை, சிரிப்பு, ஒரு கோப்பை மதுவை பகிர்ந்து கொள்ளும் சூரியன்.”

இந்தச் சொற்கள் காற்றில் குமிழ்விட்டன. கோபாலராவ் சாவை நோக்கி விரைந்து கொண்டிருந்தான்.

தயங்கி தயங்கி வந்துகொண்டிருந்த சிறுவன் குறுகலான அந்தச் சந்தில் ஒரு வாழை இலைக்காக நாயும் பசுவும் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை கண்டு ஒதுங்கி நின்றான். பசு இலையைத் தாடையால் பறித்து இழுத்தபடி சுவரில் முகத்தை தேய்த்துக் கொண்டு நகர்ந்தது. நாய் அவசரமாக இன்னொரு இலை தேடி ஓடியது. மலபார் கபேயின் பின்புற சந்தது. சிறுவன் சிதறிக்கிடக்கும் எச்சில் உணவில் கால்பட்டு விடாமல் தாவி சந்தின் முனைக்கு வந்தபோது எட்டு வயது சிறுமியொருத்தி வாசலில் நின்று குளித்துக் கொண்டிருந்தாள். அந்த குடித்தனத்தினுள் நடந்தபோது புகைமூட்டமும், தோசை சுடும் வாசமும், கற்பூர ஆராதனையும் கலந்து கொண்டிருந்தது. சிறுவன் மரப்படிகள் வழியாக மேலேறி ஒற்றை மரக்கதவு கொண்ட அறையை ‘டாக்கிராவ்’ டாக்கிராவ்’ என தட்டியபோது உள்ளே கோபாலராவ் தூங்கிக் கொண்டிருந்தான். குரலை உயர்த்தி சிறுவன் கதவைத் தட்டிய பிறகு கோபாலராவ் கதவைத் திறந்துவிட்டபடி திரும்பவும் படுக்கையில் வீழ்ந்து கொண்டான். அறையின் ஜன்னல் மூடப்பட்டிருந்தது. சிறுவன் கட்டிலில் கிடக்கும் புத்தகங்களையும் கிராமபோன் ரிக்கார்டுகளையும் கண்டவனாக, கிராமபோன் பெட்டி அருகே சென்று, கைப்பிடியை சுற்றி ஒரு இசைத்தட்டை சுழல விட்டான்.

“லோபதா… லோபதா…” என புரியாத பாட்டாகயிருந்தது. கோபாலராவ் புரண்டு படுத்துக் கொண்டபடியே சிறுவனிடம் கிராம போனை அணைக்கச் சொன்னான். அறையில் திரும்பவும் நிசப்தமேறியது. சிறுவன் சுவரோரமாக கிடந்த ஒரு பிலிம்கேனை உருட்டி விளையாடினான். கோபாலராவ் ஜன்னலைத் திறக்க சொன்ன போது சிறுவன் கட்டிலுக்கு கீழே ஒரு பூனைக்குட்டி படுத்திருப்பதை பார்த்துச் சிரித்தான். அகலமான இரட்டை ஜன்னலை திறந்ததும் அறை வெளிச்சத்தில் நிரம்பியது. கோவிலின் வடக்கு ரத வீதியில் யானை அசைந்து வந்து கொண்டிருப்பது தெரிந்தது. சிறுவன் உற்சாகமாக சொன்னான்.

“யானை வருது”

பாயில் படுத்தபடியே கோபாலராவ் கேட்டான்.

“என்ன படம் வந்திருக்கு”

“வெள்ளைக்காரங்க படம்… நாலு ரீல்… உன்னை முதலியார். உடனே கூப்பிட்டு வரச் சொன்னார்.”

கோபாலராவ் யானையை பார்க்க விருப்பமற்று புரண்டு படுத்துக் கொண்டான். வெள்ளிக்கிழமை தான் மூவிலேண்டில் பிக்சர் மாற்றுவார்கள். கோபாலராவ் குளித்து விட்டு வரும் வரை சிறுவன் பூனையோடு விளையாடிக் கொண்டிருந்தான். பிறகு இருவரும் மூவிலேண்ட் கொட்டகைக்கு டிராமில் போய் இறங்கியபோது தாத்தையா முதலியார் வந்திருந்தார். கோபாலராவ் புக்கிங் அறைக்குள் போன போது பூஜை நடந்து கொண்டிருந்தது. படப் பெட்டிக்கு சூடம் காட்டிய ஆபரேட்டர் மனோன்மணி முதலியாரிடம் தீபாராதனை காட்டினான். கோபாலராவ் தானும் கண்ணில் ஒற்றிக் கொண்டான். முதலியார் எப்போதும் மாறாத சிடுசிடுப்போடு அவனைப் பார்த்துச் சொன்னார்.

“பிரிட்ஜ் ஆன் த ரிவர்” னு வார்பிக்சர்… நாலுரீல்… பார்த்திடு… ஸ்பெஷல் ஷோ ரெண்டு இன்னிக்கு இருக்குது.”

அவன் பதில் பேசவேயில்லை. மனோன்மணி பெட்டியை எடுத்துக்கொண்டு புரொஜெக்ஷன் அறைக்குப் போனான். அவனும் உடனே நடந்து போனான். படப்பெட்டியை திறந்ததும் உள்ளே சில விளம்பரங்கள், கறுப்பு வெள்ளை ஸ்டில்கள் சில இருந்தன. கோபாலராவ் அதை எடுத்துக் கொண்டு கொட்டகையினுள் வந்து உட்கார்ந்தான். மர இருக்கைகள் உறைந்திருந்தன. அவன் மட்டும் தனியே அமர்ந்திருப்பது பழகிவிட்டது. பெப்கோபிலிம்ஸில் இருந்து பெட்டி கப்பலில் வந்திருக்கிறது. ஒளி திரையில் சிதறி, சிதறி சட்டென படம் ஓடத்துவங்கியது.

அவனுக்குப் பரிச்சயமான இயக்குநர் எல்.மாத்யூ டெல்டன். திரையில் மெளனகாட்சிகள் ஓடத் துவங்கின. ராணுவ லாரிகள் காட்டினுள் சென்று கொண்டிருந்தன. வீரர்களின் இறுகிய முகங்கள், மரத்தில் சாடும் குரங்குகள், வழியில் குறுக்கிடும் சிற்றோடைகள். காட்சிகள் மடிந்து மடிந்து போய்க் கொண்டேயிருந்தன. கோபாலராவின் மனம் வார்த்தைகளை பின்னத் துவங்கியது.

***

முந்நூறு பேர் நிரம்பியிருந்தார்கள். கோபாலராவ் மெலிதான ஜிப்பா அணிந்து கொண்டு, வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தான். இருக்கைகளில் கூச்சல் அதிகமாகிக் கொண்டிருந்தது. மைக்கை எடுத்துக் கொண்டு நடந்து போனபோது வித விதமான முகங்கள். அவன் திரையின் வலது பக்கம் போடப்பட்டிருந்த உயரமான ஸ்டூலின் மீது ஏறி நின்று கொண்டான். மனோன்மணியிடமிருந்து வந்த சிறுவன் கூட்டத்தைக் கண்டு குதூகலம் அடைந்தவனாக கோபாலராவ் அருகில் வந்து சொன்னான்.

“ஒரு ஷோவில் ரெண்டு படம் போடப் போறாங்களாம். இன்னொரு படம் பிரின்ஸ் ஆப் ராஜ்புட்”

சரியாக படப் பெயரை சொல்லிவிட்ட சந்தோஷத்தில் கோபாலராவை பார்த்த போது அவன் ஏதோ யோசனையிலிருந்தான். விளக்குகள் அணைக்கப்பட்டன. நீண்ட நிசப்தம், திரையில் ஒளி காட்சிகளை வரையத் துவங்கியது. ராணுவ வீரர்களின் வாகனங்கள் தரையில் ஊர்ந்து கொண்டிருந்தன. கோபாலராவின் குரல் உயர்ந்தது.

“ஜென்டில்மேன்… உலக யுத்தத்தின் போது ராணுவ வீரர்கள் ஷரா ஆற்றுப் பாலத்தை கைப்பற்ற செல்கிறார்கள். அதோ… செதுக்கப்பட்ட மூக்கு, சிற்பம் போல் நிமிர்ந்த உடல், ஊடுருவும் கண்கள், அவர்தான் கேப்டன் ப்யூபர்.”

அக்குரல் நிமிஷத்துக்கு நிமிஷம் மாறிக் கொண்டேயிருக்கிறது. குரலின் வழி ராணுவ வீரர்களின் இரும்புநடை, குரங்குகளின் சண்டை, காதலியின் ஞாபகம், பாலத்தின் பிரம்மாண்டம், ஆற்றின் வெள்ளப்பெருக்கு, குண்டடிபட்டு மரணிக்கும் மனிதனின் கடைசி வார்த்தைகள், இரவின் ஆழ்ந்த தனிமை என மயக்க மூட்டும் சொற்கள் பின்னிப்பின்னி மறைகின்றன. கடைசி இருக்கை வரை நாவின் துடிப்பு பரவுகிறது.

கோபாலராவ் திரையை கவனித்தபடியே இருக்கிறான். முகத்தில் சலனமேயில்லை. குரல் மட்டும் சிரிக்கிறது. துயரமடைகிறது. பரிதவித்து மெலிதாக விம்முகிறது. இருளில் யாவரும் தனது குரலின் மென் நரம்புகளால் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது பெருமிதமாக இருக்கிறது. அவன் குரல் துக்கத்தின் குமிழை பரவ விட யாரோ ஒரு பெண் அரங்கில் அழும் ஓசை. கண்ணீரை மீறிய பெருமூச்சு.

அடுத்த படத்திற்கான இடை வெளியில் கோபாலராவ் மேடையைவிட்டு விட்டு இறங்கி போகும் போது, அந்தப் பெண்ணைக் கண்டான். அவளது கண்கள் வீங்கியிருந்தன. கடந்து போய்விட்ட பின்பும் காட்சியின் துயரம் கலையாத முகம். அவளின் இளம் கணவன் கேலி செய்து கொண்டிருந்தான். எலுமிச்சை நிறத்தில் புடவையும், சிவப்பு வெல்வெட் சட்டையும் போட்டிருந்தாள். அவள் திரையை நிமிர்ந்து பார்க்கவேயில்லை. வெளியே வந்து நின்று, திரும்பவும் வெற்றிலை போட்டபடியே தான் பலமுறை டாக்கி கொடுத்திருந்த பிரின்ஸ் ஆப் ராஜ்புத் படத்தை பற்றிய நினைவிலிருந்தான் கோபால்ராவ்.

அந்தப்படத்தில் இடம் பெறும் புலிவேட்டைதான் சிறப்பான காட்சி. அது துவங்கியதுமே அவனறியாமல் உடம்பினுள் முறுக்கேறி விடும். புலியை துரத்திச் செல்லும் மனிதனின் தோற்றம் வன்மமாகயிருக்கும். தானே பட்டாளத்துடன் புலியை வேட்டையாடுவது போல அந்தக் காட்சியை கோபாலராவ் விவரிப்பான். சில நிமிஷமே திரையில் ஒளிரும் அப்புலியின் கண்கள் வனத்தின் உக்கிரத்தை உமிழ்வதாகயிருக்கும். இலைகளின் இடை வெளியிலிருந்து அது வேட்டைக்காரனின் நிழலை கண்டபடியிருக்கும். வேட்டையாடுபவனின் முக மூர்க்கம் மிக வன்மையாகி, இருளில் கண்களை துழாவிக் கொண்டிருக்க. புலி இலைகளை அறுத்துக் கொண்டு பின்னங்கால் விசையேற, காற்றில் பாய்ந்து மேல் எழும்பும் போது துப்பாக்கி விசை விடுபட, ரத்த துளியொன்று சிதறி குமிழென வெடித்து தெறிக்கும் போது ஏற்படும் துயரம் கோபாலராவால் தாங்க முடியாதது. ஒரு கனவை விவரிப்பது போலவே திரையில் ஒளிரும் மெளன படக்காட்சிகளை விவரித்துக் கொண்டிருப்பான்.

மணி ஒலிக்க துவங்கி திரும்பியபோது அந்தப் பெண்ணின் இருக்கை காலியாகயிருந்தது. எழுந்து போயிருக்க கூடும். துயரமான அந்தப் பெண் முகம் அவள் இல்லாத போதும் மனதை கலக்கமடைய செய்தது. தனது இருளினுள் அமர்ந்து கொண்டபோது திரையில் குதிரைகள் அணிவகுத்து வரத்துவங்கின.

இரவு அவன் வீடு திரும்பும் போது தெருவில் நடமாட்டமேயில்லை. கோவிலையொட்டிய வீதிகளில் மட்டும் ஏதோ உற்சவத்திற்காக பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். யானை அலங்கரிக்கப்பட்டு திருக்குளத்தின் அருகே நின்று கொண்டிருந்தது. பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் தனியே யானை நிற்பதை பார்க்கும் போது விநோத காடு புலப்பட்டது. அவன் அதன் அருகில் சென்று பார்த்துக் கொண்டே இருந்தான். யானை தான் வனத்தின் தாழியினுள் காட்டாற்றின் நீரை பீச்சியடித்துக் கொண்டும், தென்னை ஓலைகள், காட்டு கரும்புகளை தின்று அலைந்த தனது பூர்வீகத்தினை நினைவில் கொண்டிருக்குமா? விளக்கை தூக்க வந்த பெண் தலைச் சுமை மீது பெட்ரோமாக்ஸ் ஏறியதும் யானையின் நிழல் குளத்து நீரில் அலைவுறத் துவங்கியது. தேவியின் அலங்காரம் முடிந்திருக்கவில்லை போலும். சப்பரங்கள் சாத்தியிருந்தன. தம்பதி சமேதராக கடவுள் திருவீதி உலாவரப் போகிறார். குளத்துப் படிகளில் அமர்ந்து கொண்டபின். வானில் இன்றைக்கும் எண்ணமுடியாத நட்சத்திரங்கள். யானை தனது துதிக்கையை அசைக்கத் துவங்கியது. பெட்ரோமேக்ஸ் தூக்கிய பெண் ஓரிடத்தில் நில்லாது முன்பின்னாக நடந்து கொண்டேயிருக்கிறாள். யானையின் நிசப்தம் மிகப் பிரம்மாண்டமானது. அது எப்போதாவது கத்தியிருக்கிறதா? நீரைப் பார்த்தபடி யோசித்தான். தனது குரலை மறந்து போயிருக்கும் யானையது. பூச்சரம் சரிய நடந்து வந்த பெண்கள் யானையை வணங்கி போனார்கள். ஆலயத்தினுள் மணிகள் முழங்கின. வாத்திய கருவிகள் புறப்பட்டு விட்டன. அவன் குளத்தின் இருள் படிகளுக்குள் இறங்கி உட்கார்ந்து கொண்டு விட்டான். யானை புறப்படத் துவங்கியது. தெருவின் நிழல் தள்ளாடி ஊர்கிறது. ஏனோ அவனுக்கு கிரிபித்தின் நினைவு வந்தது.

தோமைய்யர் பள்ளியில் கணிதம் கற்பிக்கும் கிரிபித்திற்கு பள்ளி நாட்கள் தவிர மற்ற நேரங்களில் காகங்களை பற்றிய புகைப்படம் எடுப்பதில் மிகவும் ஆசை அதிகம். அவர் தனது சிறிய புகைப்படக் கருவியோடு சாலையோரங்களில், வேப்ப மரத்தடியில் அலைந்து கொண்டிருப்பதை கோபாலராவ் கண்டிருக்கிறான். அவர் தன்னை எப்படி உதவிக்கு அடையாளம் கண்டு கொண்டார் என இப்போதும் அவனுக்கு புரியவில்லை. கிரிபித் அவனை தான் செல் லுமிடங்களுக்கு எல்லாம் கூட்டிப் போக துவங்கினார். காகங்களை ஏதோ உலகில் இதுவரை பார்த்தேயறியாத பறவையை காண்பதைப் போல வியப்போடுதான் அவர் ஒவ்வொரு முறையும் புகைப்படம் எடுக்கிறார். விதவிதமான காகங்கள். கிரிபித் அவனுக்கு காகங்கள் பரிச்சயத்துடன் ஆங்கிலத்தையும் பரிச்சயபடுத்தினார். கிரிபித்தின் மூன்று வயது பையன் பேசுவது போல் தன்னால் ஆங்கிலம் பேச முடியவில்லையே என கோபால்ராவ் அழுதிருக்கிறான். அவனிடம் கிரிபித் மணிக்கணக்கில் காகங்களை பற்றி பேசியிருக்கிறார். அவர்கள் இருவரும் ஒரு இரவில் ஆற்று மணல் திட்டில் படுத்துக் கொண்டபோது கிரிபித் அவனிடம் கேட்டார்,

“உனக்கு சாவைப் பற்றி பயமாக இருக்கிறதா”

அவன் பதில் பேசவேயில்லை. அவர் அதே கேள்வியை திரும்பவும் கேட்டார். அவன் தயக்கத்துடன் ஆமாம் என்றான். கிரிபித் அது தன்னை சதா நடுக்கமுறச் செய்வதாகவும், சாவின் துர்வாடை தனக்கு நெருக்கமாக வீசுவதாகவும் சொன்னார். கோபலராவ் மெளனமாக கேட்டுக் கொண்டான்.

“ஒவ்வொரு காகமும் தனியானது, ஒன்றுபோல் ஒன்றிருப்பதில்லை, சாவைப்போல’ எனச் சொன்னார்.

என்ன பதில் சொல்வதென தெரியாமல் ஆழ்ந்திருந்தான். அவர் பெரு மூச்சிட்டபடியே சொன்னார்.

“காகங்கள் பறவைகள் தானா என்றே சந்தேகமாகயிருக்கின்றது. அவை இந்த உலகம் கடந்து எங்கோ சென்றுவருகின்றன. காகம் எப்போதும் மனிதர்களைவிட்டு போவதேயில்லை.”

கிரிபித் வீட்டுக்கு அதன்பிறகு அவன் போவதற்கே பயமாக இருந்தது. காகங்களின் ஆயிரக்கணக்கான புகைப்படங்கள், கோட்டு ஓவியங்கள் வைத்திருந்த அவர் ஒரு நாள் கோபாலராவிடம் சொன்னார்.

“நேற்று எனது கனவில் மழைத்துளிபோல காகங்கள் வானிலிருந்து எண்ணிக்கையற்று உதிர்ந்து பறந்தன. கனவில் அவை கரைச்சல் இடுவதில்லை.”

கிரிபித்தின் ஸ்நேகம் கோபாலராவை படிப்பதிலிருந்து மெல்ல துண்டித்து விட்டது. அவனும் கிரிபித்தைப் போலவே மனதில் அடங்காத ஒரு பயமும் தேற்றமும் கூடிய வானாக சுற்றத் துவங்கினான். கிரிபித் அவனுக்கு தனது ஜெர்மன் கேமிராவை தந்து காகங்களை படம் எடுக்கச் சொன்னபோது, அவன் ஒரு மாட்டுவண்டியை படம் பிடித்தான். கிரிபித் அந்த புகைப்படத்தினை பற்றி அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மனத்துயரோடு அவன் வீட்டிலே அடங்கி கிடந்தான். பிறகு கிரிபித்தை சந்திக்க விருப்பம் கொள்ளவேயில்லை, ஆனாலும் காகங்கள் எப்போதாவது கூட்டமாக கத்தி கரையும் போது அவனறியாமல் கிரிபித்தின் கனவும், சாவைப் பற்றிய பயமும் அவனுக்குள் எழுந்து பிடித்துக் கொள்ளும்.

மினர்வாவில் நாலு காட்சிகள், மூவிலேண்டில் ஆறு காட்சிகள் டாக்கி கொடுப்பதற்காக வாரம்தோறும் ஒப்புக் கொண்டிருந்தான் கோபாலராவ். யாவும் கறுப்பு – வெள்ளை துண்டுப்படங்கள். எப்போதவது ஒரு மணி நேர சாகச படம் வரக்கூடும். விசேச நாட்களில் புராணப்படங்கள் வருவதுமுண்டு.

கோபாலராவ் பாட்டு கத்திருந்தான். தஞ்சாவூரில் அக்காவீட்டில் இருந்த நாட்களில் கற்றுக் கொண்ட பாடங்கள். மச்சவாதாரம் என்ற படம் திரையிடப்பட்ட போது அவன் தினமும் பதினெட்டு பாடல்களையும் மூன்று ஷோவிலும் பாட வேண்டியதிருக்கும். அவனைப் போல டாக்கிகள் ஒன்றிரண்டு பேர் தானிருந்தார்கள். அதிலும் ஆங்கிலத்தில் டாக்கி தருவதற்கு அவனும் திருலோகமும் தானிருந்தார்கள். அவனை முதலியார் டாக்கிராவ் என்றே கூப்பிடதுவங்கியிருந்தார்.

***

மாதத்தின் இரண்டாவது வெள்ளிதோறும் தவறாமல் கோபால்ராவ் டிராமில் ஏறி பிராட்வேயில் இருக்கும் கல்கத்தா கார்னருக்கு போய் இறங்குவான். அங்கே தான் ஒரியண்டல் கிராமபோன் கம்பெனியிருந்தது. அவனது வருமானத்தில் கால் பாதியை ரெக்காடுகள் வாங்க செலவழித்து விடுவான். ஓரியண்டல் கிராமபோன் கம்பெனியில் அவனை பலருக்கும் நன்றாக தெரிந்திருந்தது. கங்குபாய், லட்சுமிபாய் சகோதரிகளின் இசைத்தட்டும், சிம்போனி 13ம் வாங்கிக் கொண்டு, அவன் காத்திருந்த போது மலேயாவிலிருந்து கப்பலில் வந்த இருவர் தனியே பேசிக் கொண்டிருந்தர்கள்.

மலேயா ஜூப்ளி ஹாலில் அவர்கள் பேசும் படம் பார்த்தார்கள் என்றும், அதற்கு டாக்கி தேவையேயில்லை, நடிகர்களே பேசுகிறார்கள், பாடுகிறார்கள் என வியப்பை தூண்டிக் கொண்டிருந்தார்கள். கடைச் சிப்பந்தி ஆர்வம் தாளாமல் கேட்டுக்கொண்டிருந்தான். இது வரை ஆறு ஷோதான் நடந்திருந்திருக்கிறது என சொன்னதை கேட்டு சிப்பந்தி ஆச்சிரியமாக பார்த்தான்.

கோபாலராவ் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. அவன் மனம் கங்குபாயின் குரலின் ஈரப்பாதைகளில் நகர்ந்து சென்று கொண்டிருந்தது.

***

கல்கத்தா மெயிலுக்கு தாத்தையா முதலியார் புறப்பட்ட அன்று மாலை கோபாலராவும், ரயில்வே ஸ்டேஷன் வந்திருந்தான். முதலியார் இந்த வாரமும் கொட்டகையில் படம் கிடையாது, ஏதோ கட்டிட வேலை நடக்கப் போவதாகச் சொன்னார். இதையே மனோன்மணி ரெண்டு நாளின் முன்பாகவே தனியே அழைத்துப் போய் சொன்னான்.

“முதலியார் ஏதோ புதுமையான கனவில் இருக்கார்… கொட்டகையில் புது மிஷின் வரப்போகுது”.

அவன் ஆர்வம் காட்டவேயில்லை. முதலியார் ரயில் வருவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே ஸ்டேஷன் வந்து விடுபவர். அவர் கோபாலராவை அருகில் உட்காரச் சொல்லியபடி கேட்டார்.

“மினர்வாவில் என்ன படம் போடுறான்”

“டைம் பார் டைம்”

முதலியார் ஏதோ யோசனைக்குப் பிறகு கேட்டார்.

“உனக்கு ஆபரேட்டர் வேலை தெரியுமா?”

இல்லையென தலையாட்டினான்.

“மனோன்மணி கிட்டே கத்துக்கோ. பிரயோசனமா இருக்கும். கல்கத்தாவில் இருந்து பேசும் படம் கொண்டு வரப் போறேன். அதுக்கு டாக்கி வேண்டிருக்காது. அது தானா பேசுற, பாடுற பிக்சர்.”

அவன் கேட்டுக் கொண்டிருந்தான்.

“இத்தனை நாள் பழகின தோஷத்துக்கு ஆபரேட்டரா கூட இருந்துக்கோ. மாச்சம்பளம் போட்டு தர்றேன்.”

கோபாலராவ் அவரைவிட்டு விலகி வந்து தண்டவாளத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். மரக்கிளையில் ஒரு காகம் மட்டும் கரைந்து கொண்டிருந்தது. ரயில் வருவதற்கு முன்பே அவன் வெளியேறி போயிருந்தான்.

பேசும் படத்தை பார்ப்பதற்காக கூட்டம் நிரம்பிக் கொண்டிருந்தது. மூவிலேண்டை புதுசாக மாற்றியிருந்தார்கள். நடிகர்களின் முகமும் பாட்டும் திரையில் ஒன்றாக தோன்றி மறையும் போது அரங்க இருளில் மயக்கம் பிடித்தது போலதொரு மவுனம். பாடும் நிழல் உருவங்களை திரும்ப திரும்ப பார்ப்பதற்காக வந்து கொண்டேயிருந்தார்கள். கோபாலராவ் தனது அறையை விட்டு வெளியேறவேயில்லை. ஒரு அதிகாலை அவன் வீதியில் யானை நடந்து வந்தது. குளித்து விட்டு திரும்பி வரக்கூடும். கோபால்ராவ் அதன் எதிரே, நேராக நின்றான். யானையின் துதிக்கை அவன் சிரசின் மேல் பட்டு அலையாடியது. யானையின் கண்களின் ஆழத்தினை பார்த்துக் கொண்டிருந்தான். சப்தமாக கத்தி அழ வேண்டும் போலிருந்தது. குடம் ஏந்தியபடி வரும் பெண்கள் யானையை கடந்து போனார்கள். சப்தமற்ற யானை தெருவில் தனது மணியோசையை படர விட்டபடி கோவிலை நோக்கி போனதும், அவன் தனது அறைக்கு ஒடி படுத்துக் கொண்டான். அன்றிரவில் அவனுக்கு சொப்பனங்கள் அறை இடுக்குகளிருந்து அடர்ந்து ஊடுருவின. காகங்கள், வேட்டையாடும் புலி, யானை, பெட்ரோமாக்ஸ், சப்தமான பெய்யும் மழை. அவன் பிதற்றத்துவங்கிய மறுநாள் காய்ச்சல் பீடித்திருந்தது.

***

நீங்கள் யாரென எனக்குத் தெரியாது. என்னிடம் அறிமுகம் செய்து கொள்ள வேண்டும் என ஒரு போதும் உங்களுக்கு தோன்றவேயில்லை. ஒரு வேளை உங்களுக்கு தயக்கமாக இருந்திருக்கலாம். அல்லது விருப்பமற்று போயிருக்கலாம். எனக்கு உங்களைப் பற்றிய அறிமுகம், நீங்கள் பார்வையாளர்கள். அதுவும் ஒரு சலனக்காட்சியை காண வந்தவர்கள். நீங்கள் வருவதற்கு முன்பாக இந்த இருக்கைகள் கொண்டிருந்த நிசப்தம் நீங்கள் அதில் அமர்ந்த பிறகு உங்களிடமும் நிரம்பிவிடுகிறது. உங்கள் கண்கள் எதிரேயிருக்கும் வெண்திரையை பார்த்துக்கொண்டிருக்கிறன. கூச்சத்துடனோ ஆர்வம் மிகுந்தோ ஒன்றிரண்டு ஸ்திரிகள் உட்கார்ந்திருப்பதை பார்த்துக் கொள்கிறீர்கள்.

விளக்கு அணைக்கப்படுகிறது. மௌனக் காட்சிகள் திரையில் ஓடுகின்றன. உங்களுக்கு அறிமுகம் இல்லாத நான், உங்களுக்கு அதன் கதையைச் சொல்கிறேன். நீங்கள் எனது குரலை நம்புகிறீர்கள். என் குரலின் வழியே காட்சிகளை குடிக்கிறீர்கள். என் குரல் ஒரு பாவனை. நான் குரலை என் விருப்பப்படி மாற்றி உங்களை ஈர்ப்பு கொள்கிறேன். எனது உருவம் உங்களுக்கு முக்கியமில்லை. நான் இதோ ஒரு கடற்கொள்ளைக்காரனாக உங்கள் முன் குதிக்கிறேன். நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள். உங்கள் இதயத்தின் முன் எனது வாளின் நுனி சுழிக்கிறேன். நீங்கள் பயப்படுகிறீர்கள். உங்கள் இதயம் படபடக்கிறது, மூச்சு நடுங்கிறது. இதோ நான் இப்போது பிரின்ஸ் ஆப் ராஜ்புத், எனது தங்ககோப்பையை உங்களுக்கு எதிரில் உயர்த்தி குடிக்கிறேன். உங்கள் உதடுகள் சுவைக்கின்றன வெறுமையை.

நான் சர்க்கஸின் கோமாளி, நான் ஸ்ரீகிருஷ்ணன், நானே ஹம்சன், நானே கெளசிகரிஷி, நானே தப்பியலையும் புலி.

நீங்கள் காட்சிகளை இருக்கையிலிருந்து பறித்து உண்ணுங்கள். என் குரல் அதில் சுவையின் சாற்றை தடவட்டும். நீங்கள் களைப்படைந்து விடுகிறீர்கள். உங்கள் இதயம் பயத்தாலும், சில வேளை மோகத்தாலும் மினுங்குகிறது. திரை அமைதி கொள்கிறது. அரங்க இருள் கலைய பெருமூச்சிட்டபடியே நீங்கள் வெளியேறுகிறீர்கள்.

திரையில் இதுவரை நடமாடிய ஒளியுருவங்களின் சிறு சுவடு கூட இல்லை. ஒரு சிறுவன் அரங்கைச் சுத்தம் செய்கிறான். சொற்கள் எங்கும் இறைந்து கிடக்கின்றன.”

காய்ச்சல் மிதமிஞ்சிப் போக பிதற்றல் நிற்காத கோபால்ராவ் அறைக்கு கீழ்வீட்டுப் பெண் வந்த போது அவன் தொடர்பற்று ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான்.

***

ஒரு மாத காலம் தஞ்சாவூருக்கு போக வேண்டியதாகியது. ஊரைவிட்டு வந்து பல வருஷங்களுக்குப் பிறகு அக்கா வீட்டில் நோயாளியாக படுத்திருப்பது கோபாலராவிற்கு வேதனையாக இருந்தது.

கட்டிலில் வெளுத்த வேஷ்டியை அக்கா விரித்து அவனை தூக்கி படுக்க வைப்பதும், கஞ்சி டம்ளரை அவளே கைகளில் ஏந்திக் கொண்டு, ஒவ்வொரு மடக்காக குடிக்க செய்வதும் தாளாத துக்கமேற்றியது. அவன் படுத்திருந்த அறை ஜன்னலின் வெளியே சிறுவர்கள் விளையாண்டு கொண்டிருந்தார்கள். நகரின் தேவாலய மணி சப்தம் எப்போதாவது கேட்கும். இரவில் விநோத பூச்சிகளின் இரைச்சல். நோயுற்ற நாளில் அவன் “லோபதா, லோபதா” என புரியாத பாட்டை புலம்பி கொண்டிருப்பதை கண்ட அக்கா அவனுக்கு சாந்தி வரும்படியாக அந்த அறையில் பகலினுள் இரண்டு விளக்குகளை சுடர் விட்டு எரிய விட்டிருந்தாள்.

திரும்பி நகரம் வந்த போது பூக்கடை சந்தில் தற்செயலாக திருலோகத்தை கண்டான். திருலோகம் கையில் சிறிய துந்தனாவை ஏந்தியபடி உடலெங்கும் அரிதாரம் பூசியவனாக நின்று கொண்டிருந்தான். அவன் கோபாலராவை பார்த்ததும் அருகில் வந்து பேசினான். கோபால்ராவ் பொய்கேசத்துடன் நிற்கும் திருலோகத்தை பார்த்துக் கொண்டேயிருந்தான். திருலோகம் சிரித்தபடியே சொன்னான்.

“ராவணன் தர்பார் படத்தில் நாரதரா நடிக்கிறேன்” கோபாலராவ் ஆங்கிலத்தில் பிரமாதமாக பாக்கி கொடுக்கும் திருலோகம் சிவப்பு அரிதாரத்துடன் நிற்பதை கண்டவனாக எதையும் கேட்டுக் கொள்ள முடியாமல் தலை குனிந்து கொண்டான். திருலோகம் அவன் தோளைப் பிடித்தபடி சொன்னான்.

“பிழைக்கணுமில்லையா…”

சக நடிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். திருலோகம் அவசரமாக அவனோடு சேர்ந்து கொண்டான். மனக்கூச்சத்துடன் அறைக்கு திரும்பிய கோபாலராவ் அன்றிரவு சுவரில் தெரியும் நிழல்களை பார்த்தபடி வெகு நேரமிருந்தான்.

***

தன்னிடமிருந்த கிராமபோன் ரிக்காடுகளை விற்பதற்காக ரிச்சி தெருவிற்கு போய் திரும்பி வரும்போது தாத்தையா முதலியார் கோபால்ராவை பார்த்துவிட்டார். புதிதாக வாங்கியிருந்த மோரிஸ் மைனரில் அவனை ஏற்றிக்கொண்டு தனது கொட்டகைக்கு கூட்டிப்போனார். பேசும் படத்தை உள்ளே போய் பார்க்கச் சொன்னார்.

இருளில் அவன் நுழைந்த போது தேவலோகம் மின்னிக் கொண்டிருந்தது. இந்திரன் சபையில் இரு பெண்கள் நடனமாடிக் கொண்டிருந்தார்கள். திடீரென இந்திரனே எழுந்து பாடத்துவங்கினான். காட்சிகள் மாறமாற சப்தமும் மாறியது. அந்த குரலின் நடமாட்டம் அரங்கில் எதிரொலித்தது. ஒரு நிழல் மி ருகம் தனது பொய்க் குரலால் யாவரையும் மயக்கி தனது நாவால் ருசிப்பது போல அந்த இயந்திரகுரலைக் கேட்டுக் கொண்டிருந்தான், அந்த இருளில் அவன் எப்போதும் நிற்குமிடம் காலியாகயிருந்தது.

முதலியார் வெளியே வந்த அவனிடம் மிலிட்டரி கேம்பில் ஒரு ரீல் மெளன படம் ஒன்று காட்டபடுவ தாகவும், அதற்கு பாக்கி தர அவனைத் தேடிக் கொண்டிருப்பதாகவும் கையில் உடனே காசு வாங்கி தந்து விடுவாதாகச் சொன்னார்.

யோசனையின்றி தன்னால் இனி டாக்கி கொடுக்க முடியாது என சொல்லியவனாக அரங்கைவிட்டு வெளியேறினான் கோபாலராவ்.

சில வாரங்கள் வெளியே எங்கும் போகாமல் தனது அறையிலே கிடந்தான். யானையை பார்த்து வருவது மட்டுமே எப்போதாவது நடந்தேறியது. அவனைத் தேடி வருபவர்கள் எவருமேயில்லை. மாலையில் எதிர்வீட்டு துணிகாயும் கம்பிக்கு வரும் குருவிகளைத் தவிர வேறு ஸ்நேகமற்றுப் போனது.

அறையை மூடியபடியே உள்ளேயே இருந்தான். ஒரு பகலில் சிறுவர்கள் இருவர் அவன் அறை சாவித்துவாரம் வழியே பார்த்தபோது அவன் சுவரில் வித விதமான எக்ஸ் ரே படங்களை இரட்டை மெழுகுவர்த்தியின் ஒளியில் சுவரில் பிரதிபலிக்க செய்து, ஒளிரும் எக்ஸ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 31, 2021 03:26

கூண்டிற்கு வெளியே

கூண்டிற்குள் அடைக்கபட்ட விலங்குகளை ஏன் வேடிக்கை பார்க்கிறோம். அண்ணா உயிரியல் பூங்காவிற்குச் செல்லும் போதெல்லாம் அங்கே வரும் மனிதர்களின் விசித்திரமான செயல்களை, நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். விலங்குகளை விட மேம்பட்டவனாக கருதப்படும் மனிதன் தான் உண்மையில் வேடிக்கை பார்க்கப்பட வேண்டியவன்.

வீட்டு விலங்குகள் அவனது அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு வாழ்கின்றன. காட்டுவிலங்குகளோ அவனை பொருட்டாக கருதுவதேயில்லை. ஆகவே தன் அதிகாரத்திற்குள் விலங்குகளை அடக்கி ஒடுக்கச் செய்யும் முயற்சியே மிருகக்காட்சி சாலைகள். இயற்கையான வாழ்விடத்தில் மிருகங்களைக் காணுவதும் மிருகக் காட்சி சாலையில் காணுவதும் வேறுவகையான அனுபவம்.

பெர்ட் ஹான்ஸ்ட்ரா 1962ம் ஆண்டு இயக்கிய குறும்படமான ZOO மிகச்சிறந்த கலைப்படைப்பாகும். கேரளாவில் நடைபெற்ற ஆவணப்பட விழாவில் ஒன்றில் இந்தப் படத்தை 1990ம் வருஷம் முதன்முறையாகப் பார்த்தேன். மறக்கமுடியாத படம்.

திரைப்படப் பயிற்சி முகாம்களில் தவறாமல் திரையிடப்படும் குறும்படமிது. நெதர்லாந்தைச் சேர்ந்த பெர்ட் ஹான்ஸ்ட்ரா ஒரு குறிப்பிட்ட சூழலில், குறிப்பிட்ட பின்னணியில் மனிதர்களின் நடவடிக்கைகள் எவ்விதம் மாறுகின்றன என்பதை அடையாளப்படுத்தவே இந்தக் குறும்படத்தை உருவாக்கியிருக்கிறார்.

இணையத்தில் இதன் நல்ல பிரதியைக் காண முடிகிறது.

மறைக்கப்பட்ட கேமிராக்கள் மூலம் மிருகக்காட்சிசாலையின் பல்வேறு இடங்களை, நிகழ்வுகளைப் படமாக்கியிருக்கிறார்கள். கோணங்களை மாற்றுவதன் மூலமும் எடிட்டிங் மூலமும் எப்படி மாறுபட்ட இரண்டு காட்சித்துண்டுகளை இணைத்து புதிய கருத்தினை உருவாக்க முடியும் என்பதற்கு இந்த படம் சிறந்த உதாரணம்.

ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலையில் நடைபெறும் இந்தப் படம், மனிதர்கள் மற்றும் விலங்குகளின் பல்வேறு வெளிப்பாடுகளை வேடிக்கையாகச் சித்தரிக்கிறது.

உண்மையில் யார் யாரை வேடிக்கை பார்க்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. அது தான் பெர்ட் ஹான்ஸ்ட்ராவின் நோக்கம்.

வெவ்வேறு கோணங்களில் தொலைவுகளில் படமாக்கப்பட்ட காட்சிகள் மூலம் பார்வையாளராக நாமும் கூடவே மிருகக்காட்சி சாலையினுள் செல்வது போலவே இருக்கிறது.

வெவ்வேறு வகையான விலங்கினங்கள் போலவே வெவ்வேறு வயதில் உள்ள மனிதர்கள். அவர்களின் பல்வேறு செயல்பாடுகள். உணர்ச்சிகள், ஆர்வம் மற்றும் குரூரத்தைப் படம் பதிவு செய்திருக்கிறது. அந்தவகையில் தொடர்பில்லாத தருணங்களைத் துண்டித்து லயத்துடன் ஒருங்கிணைப்பதன் மூலம் புதியதொரு அனுபவத்தை உருவாக்குகிறார் .

கூண்டிற்குள் அடைக்கப்பட்ட விலங்குகளைப் போலவே தான் மனிதர்களும் மிருகக்காட்சி சாலையினுள் நடந்து கொள்கிறார்கள். பசி தான் இருவரையும் வழிநடத்துகிறது. மனிதர்களின் அபத்தமான சில செயல்பாடுகளை அப்படியே பிரதிபலிக்கின்றன விலங்குகள். அல்லது விலங்குகளின் செயல்களை நகலெடுப்பது போலவே மனிதன் நடந்து கொள்கிறான். சில காட்சிகளில் வெளிப்படும் நகைச்சுவை அசலானது.

11 நிமிஷங்கள் ஓடக்கூடிய இந்தக் குறும்படத்தினைக் காணும் போது நாமே நாள் முழுவதும் மிருகக்காட்சி சாலையினுள் சுற்றியலைவது போலவே இருக்கிறது.

மிருகக் காட்சி சாலையைப் பார்ப்பதற்காக நுழைந்த பள்ளி குழந்தைகள் மிருகங்களை வேடிக்கை பார்ப்பதை இடைவெட்டி ஒட்டகச்சிவிங்கி மற்றும் நெருப்புக்கோழி அவர்களை வேடிக்கை பார்க்கும் காட்சியோடு இணைக்கிறார். யார் யாரை வேடிக்கை பார்க்கிறார்கள் என்ற வியப்பு உருவாகிறது. இது போலவே குழந்தைகள், வயதான பெண்கள், ஒரு இளம் ஜோடி, ஒரு வயதான தம்பதியினர் நடைப்பயிற்சி செய்யும் காட்சியைக் காணுகிறோம், அதை அடுத்து பெங்குவின்களின் அணிவகுப்பு நடை அதற்கு நிகராகவே உள்ளது.

ஒரு தந்தை தனது மகனைத் தோளில் சுமந்து செல்லும் ஒரு ஷாட் உள்ளது, அதைத் தொடர்ந்து ஒரு குரங்கு குட்டி தன் பெற்றோரின் தோளில் அமர்ந்திருக்கும் ஷாட் வருகிறது.

பிம் ஜேக்கப்பின் ஜாஸ் இசையே படத்தின் சிறப்பிற்கு முக்கியத் துணை. பெரியவர்களுடன் சிறார்கள் அவசியம் காண வேண்டிய குறும்படமிது

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 31, 2021 02:58

March 30, 2021

மீட்கப்பட்ட சிறுமி.

News of the World என்ற டாம் ஹாங்க்ஸ் நடித்த திரைப்படம் இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் இடம்பெற்றுள்ளது. அந்தப்படத்தினை நேற்றிரவு பார்த்தேன்

அதில் கேப்டன் ஜெபர்சன் என்ற கதாபாத்திரத்தில் டாம் ஹாங்க்ஸ் நடித்திருக்கிறார். நாளிதழில் வந்துள்ள முக்கியமான செய்திகளைத் திரட்டி அவற்றைத் தொலைதூரங்களில் வசிக்கும் மக்களுக்கு அறிவிப்பு செய்யும் நியூஸ் ரீடர் கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். அந்தக் காலத்தில் மக்கள் கட்டணம் கொடுத்து செய்தி வாசிப்பினைக் கேட்டிருக்கிறார்கள்.

என் பத்துவயதுகளில் ராணுவத்தில் வேலைக்குப் போய் திரும்பி வருகிறவர்கள் இப்படி விசித்திரமான செய்திகளைப் பகிர்ந்து கொள்வதைக் கண்டிருக்கிறேன்

குறிப்பாக இந்திய சீன யுத்தம் பற்றி இது போன்ற விசித்திரமான செய்திகளை ராணுவ வீரர்களிடம் கேட்டிருக்கிறேன். இந்தப்படத்தில் டாம் ஹாங்க்ஸ் வைத்திருப்பது போல ஹிந்து உருது செய்தி தாட்களின் துண்டுச் செய்திகளை வைத்திருப்பார்கள். அதை வாசிக்கும் போது வியந்து ஊரே வியந்து கேட்டுக் கொண்டிருக்கும். தொலைக்காட்சி வருவதற்கு முன்பு செய்தியைத் தெரிந்து கொள்ள நாம் காத்துகிடக்கவே வேண்டியிருந்தது.

ரேடியோவில் செய்திகள் ஒலிபரப்பாகும் போது சுற்றி நின்று கேட்பார்கள். இதற்காகவே பஞ்சாயத்து அலுவலகத்தில் ரேடியோ ஒன்றிருக்கும். அதை இயக்கும் பொறுப்பு ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அவர் குறித்த நேரத்திற்கு ரேடியோவை ஆன் செய்து செய்தியை வைப்பார். செய்தியைக் கேட்டு முடித்தவுடன் மக்கள் கலைந்து போய்விட மாட்டார்கள். அதைப்பற்றி விவாதிப்பார்கள். தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வார்கள்

பாவை கூத்து நடத்துகிறவர்கள் கிராமம் கிராமமாகச் சென்று வருவதால் அவர்கள் ஒரு ஊரின் சிறப்புகளை, செய்திகளை மற்ற ஊருக்கு எடுத்துச் செல்வார்கள். இவர்கள் மட்டுமின்றி கப்பலில் வேலை செய்து திரும்பியவர்கள். வெளிநாட்டிற்குப் போய் வந்தவர்கள் என அவர்கள் சொல்லும் செய்தியின் வழியாகவே உலகில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள முடிந்தது. நிறைய செய்திகளை அறிந்து வைத்திருப்பவரை பெரிய அறிவாளியாக நினைத்தார்கள்.

இந்த நினைவுகள் முழுவதும் இப்படம் பார்க்கும் போது மனதில் எழுந்தபடியே இருந்தது.

நமது கையிலுள்ள செல்போனில் நிமிஷத்துக்கு நிமிஷம் உலகெங்கும் நடக்கும் விஷயங்களை செய்தியாக வந்து கொண்டேயிருக்கின்றன. இது தவிரச் செய்தி சேனல்கள். டுவிட்டர் பேஸ்புக் ஆன்லைன் இதழ்கள் எனச் செய்திகள் அருவியாகக் கொட்டப்படுகின்றன. இதில் மூச்சுத்திணறிப்போய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இந்தச் சூழலுக்குள் நாட்டுநடப்புகளை அறிந்து கொள்ளாமல் சிறிய வட்டத்திற்குள் வாழும் மனிதர்களையும் அவர்களின் இருண்ட உலகையும் பேசுகிறது என்ற விதத்தில் இந்தப் படம் தனித்துவமாக உள்ளது

படத்தின் கதை1870 இல் டெக்சாஸ் மாகாணத்தில் நடக்கிறது. அந்த நாட்களில் இப்படிக் காசு கொடுத்துத் தான் மக்கள் செய்தித் தாளின் தொகுப்பினை அறிந்து கொண்டார்கள்.

உள்நாட்டுப் போரில் கலந்து கொண்ட ராணுவவீரரான கேப்டன் ஜெபர்சன் கிட் ஊர் ஊராகப் பயணித்துச் செய்தி அறிவிப்புப் பணியினை மேற்கொள்கிறார். எது போன்ற செய்திகளை அவர் தேர்வு செய்து வாசிக்கிறார் என்பது தான் முக்கியமானது.

உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும், டெக்சாஸின் பெரும்பகுதி முழுவதும் விரோதப் போக்கு நிலவுகிறது. இந்த நெருக்கடியான சூழலின் ஊடாகப் பயணம் செய்யும் கேப்டன் கிட் தற்செயலாக ஜோஹன்னா என்ற சிறுமியைக் காப்பாற்றுகிறார்.

அவளை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்காகக் கிட் மேற்கொள்ளும் பயணமே இந்தப் படம். ஜோஹன்னா ஜெர்மன் விவசாயி ஒருவரின் மகள். அவள் கியோவா பழங்குடியினரால் கடத்தப்பட்டு வளர்க்கப்படுகிறாள். அவளுக்கு ஆங்கிலம் தெரியாது. பழங்குடியினரின் மொழி மட்டும் தான் தெரியும்.

உண்மையில் அவள் ஒரு தனியுலகம். கேப்டன் கிட் ஒரு உலகம். இரண்டு உலகிற்குள்ளும் நடக்கும் பரிவர்த்தனையும் புரிதலும் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.

ஆங்கிலம் தெரியாத அந்தச் சிறுமிக்கு மொழி கற்றுத் தருகிறார். அவளை வெகு தொலைவில் உள்ள அவளது மாமா வீட்டிற்கு அழைத்துப் போக முயல்கிறார். வழியில் ஏற்படும் தடைகள் பிரச்சனைகளை அவர்கள் எவ்வாறு இணைந்து எதிர்கொள்ளுகிறார்கள். மீளுகிறார்கள் என்பதை நேர்த்தியாக விவரிக்கிறார்கள்..

சிறுமியை விலைக்குக் கேட்பவர்களைக் கேப்டன் கிட் எதிர்கொள்ளும் விதமும் அவர்கள் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தும் போது பதில் தாக்குதல் நடத்துகிற முறையும் சிறப்பாக உள்ளது.

எந்தச் செய்தியை உலகம் அறிய வேண்டும். எந்தச் செய்தியை மக்கள் அறிந்து கொள்ளக்கூடாது என்று அதிகாரத்திலிருப்பவர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள். குறிப்பாக நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் முன்பு கேப்டன் கிட் செய்தி வாசிப்பதில் ஏற்படும் பிரச்சனையும் அதை அவர் கையாளும் விதமும் அழகானது.

கிட் மற்றும் ஜோஹன்னா இறுதியில் மாமாவின் பண்ணை நிலத்தை அடைகிறார்கள், அழிவின் சாட்சியமாக அந்த இடம் உள்ளது. கிட் தயக்கத்துடன் ஜோஹன்னாவை அவர்களுடன் விட்டுவிட்டு, சான் அன்டோனியோவுக்குத் திரும்புகிறார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல ஜோஹன்னாவிற்குப் புது வாழ்க்கை அமையவில்லை . முடிவு என்னவாகிறது என்பதே படத்தின் மீதக்கதை.

வழக்கமான வெஸ்டர்ன் பட நாயகர்களின் வடிவம் போலவே கேப்டன் கிட்டும் உருவாக்கப்பட்டிருக்கிறார். ஒரே வித்தியாசம் அவர் செய்தி வாசிப்பவராகச் செயல்படுவது மட்டுமே. ஆனால் ஜோஹன்னாவை மீட்டு தன்னோடு அழைத்துச் செல்ல துவங்கியதும் அவரது செயல்பாடுகளும் நோக்கமும் மாறிவிடுகின்றன. கற்றுத்தருவதோடு அவளிடமிருந்து கற்றுக் கொள்ளவும் துவங்குகிறார் கேப்டன் கிட். வெஸ்டர்ன் திரைப்பட நாயகர்களைப் போலவே மிகக் குறைவாகப் பேசுகிறார். நீண்ட தொலைவு பயணம் செய்கிறார். திரைக்கதையில் பெரிய திருப்பங்கள் எதுவும் கிடையாது.

ஹாங்க்ஸ் பல ஆண்டுகளாக இதுபோன்ற நுட்பமான நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களாகத் தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்தப் படத்திலும் அவர் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.

யாரோ ஒருவரின் பிள்ளையைக் காப்பாற்றி வளர்த்துத் தன்னைத் தந்தையைப் போல அடையாளப்படுத்திக் கொள்ளும் கதாபாத்திரங்களைச் சாப்ளின் நடித்த தி கிட் முதல் இன்று வரை தொடர்ந்து பார்த்து வருகிறோம். அதே கதைக்கரு. கதாபாத்திரங்களின் பின்புலத்தை மாற்றி மாற்றி அந்தக் கதையை வெற்றியடையச் செய்கிறார்கள்.

எளிமையான படம். அதைச் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்கள்.. James Newton Howard இசையும் Darius Wolski ஒளிப்பதிவும் சிறப்பாக உள்ளன.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2021 06:23

March 29, 2021

புறக்கணிப்பின் நிலக்காட்சிகள்

“கடவுள் விடுகிற மூச்சைப்போல் காற்று வீசும் கரிசல்வெளி

வெயிலின் சமுத்திரத்தில் யாவும் முங்கிய நிசப்தம்

கருஞ்சாம்பல் மண்பரப்புக்குள் மெல்ல முனகும் சிருஷ்டிகரம்“

எனக் கவிஞர் தேவதச்சனின் கவிதை ஒன்று துவங்குகிறது.

இந்தக் கவிதையில் இடம்பெற்றுள்ள கடவுள் விடுகிற மூச்சைப் போலக் காற்றுவீசும் நிலப்பரப்பைத் திரையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்பிரான்செஸ்கோ ரோஸி. அந்தப்படம் Christ Stopped at Eboli (1979)

இத்தாலிய இயக்குநரான பிரான்செஸ்கோ ரோஸி இயக்கிய Christ Stopped at Eboli (1979), இத்தாலியின் புகழ்பெற்ற எழுத்தாளரான கார்லோ லெவியின் நினைவுக் குறிப்பினை அடிப்படையாகக் கொண்டது, இந்த நூல் 1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின் முடிவில் வெளியாகி இத்தாலிய இலக்கியத்தின் மகத்தான படைப்பாகக் கொண்டாடப்பட்டது

இத்தனை அழகாக நிலப்பரப்பினை இதுவரை எந்தத் திரைப்படமும் காட்சிப்படுத்தியதில்லை. கதாபாத்திரத்தின் தனிமையும் மனநெருக்கடியும் நிலவெளியாக உருமாறுகின்றன. புறக்கணிக்கப்பட்ட மனிதனும் புறக்கணிக்கப்பட்ட நிலமும் ஒன்று தான் என இந்தத் திரைப்படம் சுட்டிக்காட்டுகிறது.

படத்தின் துவக்கக் காட்சி மிக அழகானது. லெவியின் நீண்ட பயணம் கிட்டத்தட்ட பதினெட்டு நிமிடங்கள் ஒடுகின்றன: இரண்டு ரயில் சவாரிகள்; பஸ்ஸில் ஒன்று. அதில் அவரோடு ஒரு நாயும் உடன் வருகிறது. அந்தப் பேருந்தில் கோழிகள் ஏற்றப்பட்டிருக்கின்றன. இறுதியாக ஒரு கார் மூலம் செல்கிறார்கள். தீவிர தனிமை மற்றும் வெளி உலகத்துடனான தொடர்பின்மை ஆகியவற்றை இந்தப் பயணம் காண்பிப்பதோடு மட்டுமல்லாமல், பார்வையாளரைப் முற்றிலும் புதிய கதையுலகிற்கு அழைத்துச் செல்வதாக உள்ளது. அந்த நிலப்பரப்பு புதிரும் வசீகரமும் ஒன்றுசேர்ந்தது

1935 மற்றும் 1936 க்கு இடையில், லெவி பாசிச அரசாங்கத்தால் தெற்கு இத்தாலிய மாகாணமான லூகானியாவிற்கு நாடுகடத்தப்பட்டார்

கலைஞர்கள் மற்றும் புரட்சியாளர்களை ஒடுக்குவதற்காக இப்படி உள்நாட்டிற்குள்ளே நாடுகடத்தி முடக்கினார்கள். உண்மையில் இவர்கள் அரசியல் கைதிகள். ஆனால் சிறையில் அடைக்கபடாமல் கண்ணுக்குத் தெரியாத ஒரு இடத்தில் பொதுவெளியில் வாழ அனுமதிக்கப்பட்டார்கள்.

வசிப்பிடத்தில் அவர்கள் ஒவ்வொரு நாளும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பில் வாழ வேண்டும். அன்றாடம் காவல் நிலையத்திற்குச் சென்று கையெழுத்திட வேண்டும்.

தீவிர அரசியல் செயல்பாட்டிலிருந்து ஒருவனை முடக்குவதற்கு அவனது குடும்பத்திடமிருந்தும் உறவுகள் மற்றும் நண்பர்களிடமிருந்தும் அவனை விலக்கி வெகுதூரம் அப்புறப்படுத்தித் தனிமைப்படுத்துவதை நடைமுறையாக வைத்திருந்தது பாசிச அரசு.

மருத்துவரான லெவி அரசியல் இயக்கங்களில் தீவிரமாகப் பங்கு பெற்ற காரணத்தால் மருத்துவத் தொழிலை மேற்கொள்ளவில்லை. பாசிச எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக நாடுகடத்தப்பட்ட லெவி காக்லியானோவிற்கு வந்து சேர்ந்தபோது அது முற்றிலும் அந்நியமான உலகமாக இருந்தது.

தற்காலிக வசிப்பிடம் ஒன்றில் தங்கிக் கொள்கிறார். அதுவும் ஒரு நிலவறை போலிருக்கிறது. இரண்டு படுக்கைகள் அங்கேயிருக்கின்றன. ஜன்னலை ஒட்டிய காலியான படுக்கையினைத் தேர்வு செய்து கொள்கிறார்.

வளர்ச்சியடையாத, தனிமைப்படுத்தப்பட்ட, விசித்திரமான அந்த ஊரும் அதன் புறவெளியும் நம்மை வசீகரிக்கின்றன. கனவில் நாம் காணும் மாயநிலம் போலவே அந்த நிலப்பரப்புக் காணப்படுகிறது. விவசாயிகள். தொழிலாளர்கள் வாழும் அந்த ஊர் வேறு ஒரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. லெவியைப் போலவே நாடுகடத்தப்பட்ட சிலர் அங்கே இருக்கிறார்கள். அவர்களையும் லெவி சந்திக்கிறார்.

அந்த நகரை ஒரு திறந்தவெளிச் சிறை போலவே லெவி ஆரம்பத்தில் நினைக்கிறார். அவர் எங்கே சென்றாலும் காவலர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கடந்து போகக் கூடாது என்று தடைவிதிக்கிறார்கள்.

லெவி சுற்றியலைந்து காணும் காட்சிகளின் வழியே அந்த ஊரில் மிகக் குறைவானவர்களே வசிப்பது நமக்குத் தெரிகிறது. அந்த ஊரிலிருந்த தேவாலயமும் அதன் பாதிரியும் அவரைக்கேலி செய்யும் சிறுவர்களும் கண்ணில்படுகிறார்கள். விசித்திரமான நம்பிக்கைகள் கொண்ட அந்த ஊர் மக்களை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அந்த நிலம் கிறிஸ்துவின் வருகைக்கு முந்திய உலகமாகத் தோற்றம் தருகிறது. மலேரியா மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மருத்துவச் சேவை செய்ய வேண்டிய கட்டாயம் லெவிக்கு ஏற்படுகிறது.

தான் மருத்துவம் படித்திருந்தாலும் மருத்துவராக வேலை செய்யவில்லை என்று அவர் மறுக்கிறார். ஆனால் மக்கள் அதைக் கேட்டுக் கொள்ளவில்லை. மெல்ல அவர் மருத்துவம் செய்ய ஆரம்பிக்கிறார்.

மருத்துவப்பரிசோதனைக்காக அவர் ஒரு வீட்டிற்குச் செல்லும் காட்சியும் நெற்றியில் நாணயத்தை வைத்து தன் மனைவியைக் குணமாக்க முயலும் ஒருவரின் வாழ்க்கையும் விசித்திரமாக உள்ளது.

அந்த ஊரிலிருந்த இரண்டு மருத்துவர்களும் திறமையற்றவர்கள். காசு பறிக்கக்கூடியவர்கள் என்று மக்கள் கருதுகிறார்கள். அவர்களை விடத் தங்கள் மீது அன்பும் அக்கறையும் காட்டும் லெவியை அவர்கள் நேசிக்கிறார்கள். காரணம் அவர் மருத்துவத்திற்காகக் கட்டணம் எதையும் வசூலிப்பதில்லை

படம் முழுவதிலும் நாம் கேட்கும் நேர்த்தியான இசை நம்முடைய மனதில் ஆழமான ஏக்க உணர்வை உருவாக்குகிறது கடந்த கால நினைவுகளை விவரிப்பதன் வழியே தான் படம் துவங்குகிறது. லெவியின் வாழ்க்கையில் நடந்த இந்த நிகழ்வுகள் பாசிச அரசின் கெடுபிடி எப்படி எங்கோ ஒரு மூலை வரை பரவியிருந்தது என்பதை அடையாளப்படுத்துகிறது.

மூன்றரை மணி நேரத்திற்கும் அதிகமாக ஓடக்கூடிய இந்தப் படம் பிரான்செஸ்கோ ரோஸியின் மாஸ்டர் பீஸ் என்றே சொல்வேன். கியான் மரியா வோலோன்டே முக்கியக் கதாபாத்திரமான லெவியாக நடித்திருக்கிறார். அவரது முகத்தில் வெளிப்படும் உணர்வுகள் மிகத் துல்லியமானவை. அபாரமான நடிப்பு.

காக்லியானோவின் மேயரான டான் லூய்கி மாகலோனுடன் லெவி நெருக்கமாகப் பழகுகிறார். அவரும் லெவியைப் புரிந்து கொள்கிறார். டூரினில் உள்ள தனது குடும்பத்தினருக்கு லெவி எழுதும் கடிதங்கள் அனைத்தையும் அதிகாரப்பூர்வ தணிக்கைகளுக்கு அனுப்புவதற்கு முன்பு அவர் படிக்கிறார்.

ஒரு கட்டத்தில், அவர் ஒரு குறிப்பிட்ட கடிதத்தை அனுப்ப வேண்டாம் என்று லெவிக்கு அறிவுறுத்துகிறார், இது தண்டனையை அதிகப்படுத்திவிடும் என்று எச்சரிக்கிறார்.இதைப் பற்றி விவாதிக்கும் போது அவர்கள் பாசிச அரசின் இயல்பு பற்றி உரையாடுகிறார்கள்.,

காக்லியானோவின் விவசாயிகள் பாசிச அரசால் பாதிக்கப்படுகிறார்கள். நேரடி அரசியலில் ஈடுபடாத அந்த மக்களும் கூட உள்ளுற அச்சம் கொண்டிருக்கிறார்கள். மரங்களைப் பாதுகாக்கும் வழிமுறையாக ஆடுகளுக்கு வரி விதிக்க அரசு முடிவு செய்கிறது இது அவர்களுக்கு முட்டாள்தனமான யோசனையாக உள்ளது. அதை எதிர்க்கிறார்கள்.

My name is Barone. May he who finds me care for me எனக் கழுத்தில் அட்டையுடன் கைவிடப்பட்ட ஒரு நாயைப் படத்தின் துவக்ககாட்சியில் லெவி காணுகிறார். அது அவரின் மாற்று நிலையைப் போலவே உணர்த்தப்படுகிறது. அந்த நாயை தன்னோடு அழைத்துக் கொள்கிறார். கைவிடப்பட்ட மனிதர்களுக்குக் கைவிடப்பட்ட ஒருவரே துணையாக இருப்பார் என்ற படத்தின் மையக்கதை இந்த உறவின் வழியாக அழகாகச் சுட்டப்படுகிறது

லெவி அந்த ஊரைச்சுற்றிப் பார்க்கும் போது பாதைகள் வளைந்து வளைந்து செல்வதைக் காணுகிறார். எந்தப் பாதையும் வெளியேறிப் போகும் வழியில்லை. அது சுழல்வழி போலப் புதிரானது என்பதை உணருகிறார். இன்னொரு காட்சியில் கைவிடப்பட்ட தேவாலயம் பற்றிப் பாதிரியார் அவரிடம் பேசுகிறார். பாதிரியார் மீது மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அந்தப் பாதிரியாரைக் காணும் போது செல்மா லாகெர்லாவ் எழுதிய மதகுரு நாவலில் வரும் கெஸ்டா பெர்லிங் பாதிரி நினைவிற்கு வந்து போனார். ஒரே வார்ப்பில் உள்ள இரண்டு கதாபாத்திரங்கள்

இன்னொரு காட்சியில் லெவி மயானத்திலிருந்த ஒரு குழியில் போய்ப் படுத்துக் கொள்கிறார். அது தான் தொந்தரவு இல்லாத இடம் என்கிறார். அங்கேயும் காவலர்கள் அவரைப் பின்தொடருகிறார்கள்.

வரி வசூல் செய்யும் ஆளின் வருகையும் அவர் தனது சொந்த வாழ்க்கை பற்றிப் பேசுவதும் லெவிற்கு உதவி செய்ய முற்படுவதும் அழகானதொரு காட்சி.

லெவியின் சகோதரி லூயிசா பல மாதங்களுக்குப் பிறகு அவரைப் பார்க்க வருகை தருகிறாள். அவளும் ஒரு மருத்துவரே. அவள் தங்கியிருந்த சில நாட்களில் அவள் வழியாக அந்த ஊரிலுள்ள பெண்களின் நிலை மற்றும் அவர்களின் நம்பிக்கைகள் வெளிப்படுத்தப்படுகின்றன. உண்மையில் அவளது வருகையும் அவளது ஆலோசனைகளுமே லெவியை மாற்றுகின்றன.

இதற்கிடையில் ஆப்பிரிக்காவில் நடைபெறும் போர் குறித்த பாசிச பிரச்சாரத்தின் குரல்கள் ரேடியோக்கள் மற்றும் ஒலிபெருக்கிகளில் ஒலிக்கின்றன. அந்த அச்சம் மக்கள் கண்களில் பிரதிபலிக்கிறது

அந்த ஊரில் ஒரேயொருவர் மட்டுமே கார் வைத்திருக்கிறார். அவரது உதவியால் மட்டுமே வெளியூர்களுக்குப் போய்வர முடியும். அதை வைத்து அவர் சம்பாதிக்கிறார். அந்தக் காரில் தான் லெவி ஆரம்பத்தில் வருகை தருகிறார். அந்தக் கார் ஒரு குறியீடு. நெருக்கடிகளை வைத்தும் சம்பாதிக்க முடியும் என்பதன் அடையாளம்.

லெவி படத்தின் முடிவில் ஊரைவிட்டு வெளியேறும் போது அந்த மக்களை நன்றாகப் புரிந்து கொள்கிறார். அவர்களும் அன்போடு விடை தருகிறார்கள். படம் முழுவதும் லெவி தனக்குத் தானே பேசிக் கொள்கிறார். யோசனை செய்தபடியே இருக்கிறார். நினைவிலிருந்த மனிதர்களை ஓவியமாக வரைகிறார்.

தலைமறைவு வாழ்க்கையில் இருக்கும் மனிதர்கள் பெரும்பாலும் கடந்தகால நினைவுகளுக்கும் எதிர்காலக் குழப்பங்களுக்கும் இடையில் சஞ்சரிக்கக் கூடியவர்கள். அதுவும் இது போன்ற தண்டிக்கப்பட்ட நிலையில் உள்ள ஒருவனுக்குத் தனது தண்டனைக்காலம் எப்போது முடியும் என்று தான் யோசனையாக இருக்கும். லெவியும் அப்படித்தானிருக்கிறார்.

ஆனால் பெரிய அலையொன்று உள்ளே இழுத்துக் கொள்வது போல அங்குள்ள வாழ்க்கை அவரை உள்ளே இழுத்துக் கொள்கிறது. பங்குபெற வைக்கிறது. கைதியாக உள்ள அவர் மருத்துவம் பார்க்க நகரின் மேயர் அனுமதி தருகிறார். உண்மையில் அது ஒரு சலுகை. சட்டப்பூர்வமாக அதை அனுமதிக்க முடியாது என்றே மேயர் சொல்கிறார்.

காக்லியானோவில் காலம் உறைந்து போயிருக்கிறது. யுவான் ரூல்போவின் பெத்ரோ பரோமா நாவலில் வரும் அழிந்து போன ஊரேயே இந்த நிலவெளி ஞாபகப்படுத்துகிறது. இறந்தவர்கள் வாழும் நகரம் போன்றது தான் காக்லியானோ. அங்கே மனிதர்கள் மிகக்குறைவாகப் பேசுகிறார்கள். வீட்டுக்கதவுகள் மூடியே இருக்கின்றன. சிதிலமடைந்து போன குடியிருப்புகள். பசுமையே இல்லாத புறவெளி. அந்த ஊரில் தங்கள் பிள்ளைகளுக்கு யாரும் ஞானஸ்தானம் கூடச் செய்வதில்லை. மதகுருவோ ஒரு குடிகாரர். முதியவர்கள் கண்களில் விவரிக்கமுடியாத துயரம் பீறிடுகிறது.

கைவிடப்பட்ட மனிதர்களின் துயரவாழ்க்கையை இறுதியில் லெவி புரிந்து கொள்கிறார். தன் வாழ்க்கை நெருக்கடிகளை விடவும் அவர்களின் துயரம் அதிகமானது என்பதை நன்றாக உணருகிறார். தன்னுடைய அகத்தில் லெவி மேற்கொள்ளும் பயணமும் மீட்சியுமே படத்தின் தனித்துவம் என்பேன்.

தொலைக்காட்சிக்காக உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் நிறைய long takes உள்ளன. அது கதையை நகர்த்திச் செல்ல மிகச் சிறப்பாக உதவி செய்திருக்கிறது. மிகத்தேர்ந்த ஒளிப்பதிவும் இசையும் படத்தொகுப்பும் சிறந்த கலை அனுபவத்தை உருவாக்குகின்றன.

அரசியல் கைதியாகச் சைபீரியாவிற்கு நாடுகடத்தபட்டு முகாமில் தங்கிய அனுபவத்தைத் தஸ்தாயெவ்ஸ்கி விரிவாக எழுதியிருக்கிறார். அந்தக் குறிப்புகளில் காணப்படும் அதே உக்கிரமான அனுபவத்தைத் திரையின் வழியே உணர வைக்கிறார் ரோசி. அந்த வகையில் இப்படம் ஒரு மகத்தான கலைப்படைப்பு.

ஒரு படத்தில் எத்தனை லேயர்கள் என்று வியப்பாக இருக்கிறது. ஒவியங்கள் வழியே தனது நினைவுகளை மீட்கும் லெவியின் முயற்சி ஒரு தளம். கைவிடப்பட்ட நகரம் அங்கு வாழும் மக்களின் உலகம் ஒரு தளம். லெவி மருத்துவராகப் பணியாற்றும் அனுபவம் அவரது நோயாளிகள் இன்னொரு தளம். நகரத்தின் மேயர் அவரது சொந்தவாழ்க்கை, அரசியல் நெருக்கடிகள் இன்னொரு தளம். ஊரின் விசித்திரமான நம்பிக்கைகள். தேவாலயம் பாதிரி சிறார்கள் இன்னொரு தளம். லெவி தங்கியுள்ள வீடு. அவருக்கு உணவும் உறைவிடமும் தந்த பெண். அவருடன் தங்கும் பயணி இன்னொரு தளம். இப்படி லேயர் லேயராகக் கதாபாத்திரங்கள் பின்னப்பட்டிருக்கிறார்கள். அத்தனையும் கச்சிதமாக, நுட்பமாக உருவாக்கப்பட்டிருப்பதே பிரான்செஸ்கோ ரோஸியின் வெற்றி என்பேன்

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 29, 2021 00:24

March 28, 2021

ஆங்கிலத்தில்

சாகித்ய அகாதமி நடத்தும் Indian literature இதழில் எனது சிறுகதை The Betel Leaf parrot  வெளியாகியுள்ளது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 28, 2021 18:58

சித்ரலேகாவின் வகுப்பறைகள்

புதிய சிறுகதை

அன்றோடு இருபத்தைந்து வருஷம் துவங்கியிருந்தது.

சித்ரலேகா டீச்சராக வேலைக்குச் சேர்ந்து இருபத்தைந்து வருஷங்களாகி விட்டது. இந்த நாளை எப்படிக் கொண்டாடுவது என்று தெரியவில்லை.

புதுச்சேலையை எடுத்துக் கட்டிக் கொண்டு கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். அவளது கணவருக்கோ, பிள்ளைகளுக்கோ அந்த நாள் முக்கியமானதில்லை. யாரும் நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவளால் அந்த நாளை எப்படி மறக்க முடியும்.

வேலைக்கு ஆர்டர் வாங்கிக் கொண்டு முதல்நாள் சென்ற போதும் இப்படிப் புதுப்புடவையைத் தான் கட்டிக் கொண்டாள். வேலை கிடைத்தால் கட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே மாம்பழக்கலர் சேலை ஒன்றை வாங்கி வைத்திருந்தாள்.

இன்று அதே நிறத்தில் புதுச்சேலையை உடுத்தியிருந்தாள். காலம் மாறினால் விருப்பம் மாறிவிடுகிறதா என்ன.

அன்றைக்குத் தலையில் இப்படி நரைமயிர் தோன்றியிருக்கவில்லை. முகமும் உடலும் அவ்வளவு பொலிவாக இருந்தது. ஆனால் இப்போது முகம் விரிந்து போயிருக்கிறது. புருவங்கள் தடித்துக் கண்களின் அடியில் தொங்கு சதை பெரியதாகிவிட்டது. அதிலும் கண்ணாடி அணிந்த பிறகு அவள் முகத்தை அவளுக்கே பிடிக்கவில்லை.

பழைய புகைப்படங்களை எடுத்துப் பார்க்கும் போது அதில் எவ்வளவு ஒல்லியாக இருந்திருக்கிறோம் என்று ஆதங்கப்பட்டுக் கொள்வாள். இந்த மாற்றங்களைத் தவிர மனது பெரியதாக மாறிவிடவில்லை.

கல்லூரியில் படிக்கப் போவதற்கு முன்பாகவே அவள் டீச்சராகத் தான் வேலைக்குப் போக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். அவளது சித்தி சித்தப்பா இருவரும் டீச்சர்கள். அவர்கள் பிள்ளைகளும் டீச்சர்கள். ஆகவே தானும் பிஎட் படித்து டீச்சராக வேண்டும் என்று தான் ஆசை கொண்டிருந்தாள்

இதற்காகவே பிஎட் படிக்கச் சேலம் சென்று விடுதியில் தங்கிப் படித்துவந்தாள். சி.கே.எம் பள்ளியில் ஆசிரியராக வேலை கிடைத்து அவள் சேர்ந்த போது வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் போய்வருவதற்காகச் சைக்கிள் வாங்கிக் கொண்டாள். ஆனால் திருமணத்திற்குப் பிறகு அவள் சைக்கிளில் பள்ளிக்குப் போகவில்லை. அவளது கணவரே பைக்கில் கொண்டு போய்விட்டு வந்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகப் புது ஸ்கூட்டி ஒன்று வாங்கிக் கொண்டாள். அதில் தான் இப்போது பள்ளிக்கு போய் வருகிறாள்.

நேற்று தான் டிரைனிங் முடித்து வேலைக்கு ஆர்டர் வாங்கியது போலிருக்கிறது. காலம் கரைந்தோடி விட்டது. வேலைக்குச் சேர்ந்த நாட்களில் சித்ரலேகாவிற்குள் இருந்த தயக்கம் பயம் கவலை எதுவும் இப்போதில்லை. பள்ளிக்கூடம் இல்லாத நாட்கள் தான் வெறுமையாக இருந்தன. கற்றுக் கொடுப்பது எவ்வளவு ஆனந்தமானது என்பதை அவள் நன்றாக உணர்ந்திருந்தாள்.

சிகேஎம் பள்ளியை தாமோதர முதலியார் அறக்கட்டளை நடத்தி வந்தது. அது இருபாலர் பள்ளி. தமிழ் வழிக் கல்வி பயிற்றுவித்தார்கள். பத்தாம் வகுப்பு வரையிருந்தது. ஐநூறு மாணவர்களுக்கும் மேலாகப் படித்தார்கள். பெரும்பாலும் சுற்றியிலுள்ள கிராமப்புறத்திலிருந்து வந்து படிக்கும் பிள்ளைகள். மற்ற பள்ளிகளைப் போல இங்கே அதிகக் கட்டணம் கிடையாது. ரிசல்ட் சதவீதமும் அதிகம்.

அவள் வேலைக்கு வந்து சேர்ந்த போது இரண்டே கட்டிடங்கள் தான் இருந்தன. விளையாட்டு மைதானமும் சிறியது. தற்போது புதிதாக நான்கு கட்டிடங்கள் உருவாகியிருக்கின்றன. மைதானத்தையும் பெரியது பண்ணி சுற்றுச்சுவர் எழுப்பியிருக்கிறார்கள். சைக்கிள் நிறுத்துமிடம், பிரேயர் ஹால் எல்லாமும் புதியதாகக் கட்டியதே. அமெரிக்காவில் வசிக்கும் ஒருவர் கொடுத்த கொடையால் கம்ப்யூட்டர் பிளாக் புதிதாகக் கட்டப்பட்டிருக்கிறது.

அவளுடன் வேலைக்கு வந்து சேர்ந்த டீச்சர்களில் இரண்டு பேர் மட்டுமே அங்கே பணியாற்றுகிறார்கள். மற்றவர்கள் அரசு வேலை கிடைத்துப் போய்விட்டார்கள். சிலர் அதிகச் சம்பளம் கிடைக்கிறது என ஆங்கிலப் பள்ளிகளுக்குச் சென்றுவிட்டார்கள். ஆனால் சித்ரலேகாவிற்கு அந்தப் பள்ளியைப் பிடித்துப் போய்விட்டது

வழக்கமாகக் காலை எட்டு முப்பதிற்குத் தான் அவள் பள்ளிக்குச் செல்வாள். இன்று ஏனோ எட்டுமணிக்கே போய்விடலாம் என்று தோன்றியது.

ஒருமுறை அவளைத் தலைமை ஆசிரியர் பொறுப்பிற்குக் கூடச் சிபாரிசு செய்தார்கள். அவள் தான் அந்த வேலையை ஏற்க முடியாது என்று பள்ளி நிர்வாகியிடம் மறுத்துவிட்டாள். அதில் அவள் கணவருக்குக் கூடக் கோபம். தலைமை ஆசிரியராக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டால் வகுப்பு எடுக்க முடியாது. நிர்வாக வேலைகளைக் கவனிக்கவே நேரம் போதாது. அந்தப் பணி உயர்வு தனக்கு வேண்டாம் என்று சித்ரலேகா உறுதியாக இருந்தாள்

அவளது பள்ளியில் தான் அவள் மகள் ரோஷினியும் படித்தாள். அவளுக்கு வகுப்பு எடுக்கும் போது சித்ரலேகாவிற்கு என்னவோ போலிருந்தது. ஒரு போதும் மகளின் கண்களை ஏறிட்டு பார்க்க மாட்டாள். வகுப்பறையில் மகளிடம் பேச மாட்டாள். அவளது பரிட்சைப் பேப்பரைத் திருத்தும் போது கூடக் கூச்சமாகவே இருக்கும். தாயாக நடந்து கொள்வதா அல்லது கண்டிப்பான ஆசிரியராகப் பேப்பரை திருத்த வேண்டுமா என்று தடுமாறுவாள். சில நேரம் அவள் பரிட்சை பேப்பரில் செய்துள்ள தவறுகளைத் திருத்த கைகள் துடிக்கும். ஆனால் திருத்த மாட்டாள். உரிய மதிப்பெண்ணை மட்டுமே வழங்குவாள்.

தன் மகள் ஏன் படிப்பில் ஆர்வம் காட்டவேயில்லை. ஒரு வகுப்பில் கூட முதல்மாணவியாக வரவில்லையே என்ற ஆதங்கம் அவளுக்குள் இருந்தது.

சராசரியான மதிப்பெண் எடுத்து பொறியியல் கல்லூரி ஒன்றில் பணம் கொடுத்துச் சீட் வாங்கிப் படித்து இப்போது சென்னையில் வேலை செய்யத் துவங்கிவிட்ட மகளை இந்தக் காலையில் நினைத்துக் கொண்டாள். மகன் அரவிந்த் தற்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அவனை மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தான் படிக்க வைத்தார்கள். அது கணவரின் விருப்பம். அவள் அதைத் தடுக்கவில்லை.

தன் வாழ்வின் அதிகபட்ச மணித்துளிகளை வகுப்பறைக்குள் தான் செலவழித்திருக்கிறோம் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வாள்.

படிக்கும் நாட்களிலும் சரி வேலை செய்யும் போதும் சரி வகுப்பறை என்பது அவளுக்குப் பிடித்தமான உலகம். ஆசிரியரின் செல்லப்பிள்ளையாகவே அவள் படித்தாள். வகுப்பில் சிலரின் பெயரைச் சொல்லி டீச்சர் பாராட்டும் போது கிடைக்கும் சந்தோஷம் அலாதியானது. அப்படி அவள் பெயரை டீச்சர்கள் சொல்லிப் பாராட்டும் போது தரையில் கால்கள் நிற்காது. வானில் பறப்பது போலிருக்கும்.

அவள் டீச்சரான பிறகு மாணவிகளுக்குக் காய்ச்சல் என்ற தொட்டுப்பார்ப்பாள். அவர்களின் தலையைத் தடவிவிடுவாள். தண்ணீர் கொடுப்பாள். சில நேரம் மாணவிகளைத் தானே ஸ்கூட்டில் அழைத்துக் கொண்டு போய் வீட்டில் விட்டு வருவதும் உண்டு.

பள்ளிக் கூடத்தில் அவளது பிரச்சனை மாணவர்கள் அல்ல. உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள். அவர்கள் ஏன் இப்படிப் பொறாமையோடும் ஆத்திரத்தோடும் நடந்து கொள்கிறார்கள். வாய்க் கூசாமல் பொய் சொல்லுகிறார்கள். வம்பு பேசுகிறார்கள் என்று கவலையாக இருக்கும். இதற்காகவே அவள் யாருடனும் பழகமாட்டாள்.

ஸ்டாப் ரூமிற்குள் போவது என்றாலே அச்சமாக இருக்கும். இதற்காகவே அவள் ஸ்டாப் ரூமில் அவளது நாற்காலியை ஜன்னலை ஒட்டிப் போட்டிருந்தாள்..

அவளுக்கு ஏதாவது சிறு உதவி தேவை என்றால் கூட ஹெச்எம்மிடம் போய்த் தான் கேட்பாள். அவர் ரொம்பவும் தன்மையான மனிதர். அவளுக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார்.

அந்தப் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை செய்த பிரான்சிஸ் மற்றும் விளையாட்டு ஆசிரியராக வேலை செய்த சரவணன் இருவரும் நெருக்கமான நண்பர்கள். ஒன்றாகத் தான் சாப்பிடுவார்கள். தோளில் கைபோட்டு பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் இருந்தவரை சில நேரம் அவர்களுடன் பேசுவாள். வீட்டில் ஏதாவது செய்து எடுத்து வந்தால் அவர்களுக்கும் சாப்பிடக் கொடுப்பாள். ஆனால் அவர்களும் வம்புப் பேச்சிற்கு உள்ளாகி பள்ளியை விட்டுப் போய்விட்டார்கள்.

வேலையை விட்டு போகும் போது பிரான்சிஸ் அவளிடம் சொன்னார்

“டீச்சர் உங்களை என் சிஸ்டர் மாதிரி நினைச்சி சொல்றேன். நல்ல ஸ்கூலா பாத்து போயிடுங்க. இங்கே மனுசன் வேலை செய்ய முடியாது“

அவளுக்கு அந்த ஸ்கூலை விட்டு போக விருப்பமில்லை. எங்கே போனாலும் இதே பொறாமையும் வம்புப் பேச்சும் புறணியும் போய்விடாது தானே.

••

அவள் பள்ளிக்குள் ஸ்கூட்டியில் நுழைந்தபோது எதிர்ப்பட்ட மாணவர்கள் குட்மார்னிங் சொன்னார்கள். அந்த வணக்கம் அவளைச் சந்தோஷப்படுத்தியது. அவள் மரத்தடியை ஒட்டி தனது ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு ஸ்டாப ரூமிற்குள் சென்றாள்

வேலைக்குச் சேர்ந்து இருபத்தைந்து வருஷமாகிவிட்டதை யாரிடமாவது சொல்லலாமா என்று நினைத்தாள். பிறகு ஏன் சொல்ல வேண்டும் என்று நினைத்து தனது டிபன் பாக்ஸையும் நோட்டு புத்தகங்களையும் தனது மேஜை மீது வைத்தபடியே வெளியே விளையாடிக் கொண்டிருக்கும் மாணவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இந்த உற்சாகம் நிகரற்றது. எவ்வளவு ஆனந்தமாக விளையாடுகிறார்கள். துள்ளித் திரிகிறார்கள். காலம் விரைவில் இவற்றை அவர்களிடமிருந்து பறித்துக் கொள்ளப்போகிறது. அதைப் பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள்.

சித்ரலேகா அன்றைக்கு என்ன பாடம் எடுக்க வேண்டும். வகுப்பறையில் என்ன பேச வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் வீட்டிலே திட்டமிட்டுக் கொள்வாள்

தமிழ்பாடத்தில் இடம்பெற்றுள்ள கவிதைகளை வெறும் மனப்பாடம் செய்யாமல் மனதில் ஆழமாகப் பதியும் படி பாட வேண்டும் என்று நினைப்பாள். இதற்காக வகுப்பறையில் அவள் பாடுவதும் உண்டு. ஆனால் அதையும் ஒரு முறை புகார் செய்திருந்தார்கள். மரகதவள்ளி டீச்சர் தான் புகார் செய்தவள். அவள் வகுப்பிற்கு இடையூறாக இருக்கிறது என்று சொன்னாள்.

மரகதவள்ளி டீச்சர் வகுப்பறைக்கு வந்தாலே தலைவலி தைல வாசனை வரும். எந்நேரமும் தலைவலி என்று தைலம் தடவிக் கொண்டிருப்பவள். அவளுக்குச் சித்ரலேகா பாடியது பிடிக்கவில்லை. ஹெச்எம் அதன் பிறகு வகுப்பறையில் பாடக்கூடாது என்று உத்தரவிட்டார்.

சில நேரம் அவள் பாடம் நடத்தி முடித்தபிறகு மாணவர்களுடன் பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பாள். சொந்த வாழ்வின் கஷ்டங்களைக் கூட மாணவர்கள் சொல்வதுண்டு.

ஒருமுறை மாணவி ஒருத்தியின் வீட்டுக்கஷ்டத்திற்காக ஐநூறு ரூபாய் பணம் கொடுத்து உதவினாள். அந்த மாணவியின் அம்மா சில நாட்களுக்குப் பிறகு மார்க்கெட்டில் அவளைச் சந்தித்துக் கைகூப்பி நன்றி சொன்னாள். அடுத்தச் சில வாரங்களுக்குப் பிறகு அந்த மாணவி தான் கடன் வாங்கிய ஐநூறு ரூபாயை திருப்பிக் கொடுத்தாள்.

அதைக் கவனித்துவிட்ட ஒரு டீச்சர் மாணவிகளிடம் அவள் பணம் பறிக்கிறாள் என்று ஒரு புகாரைச் சுமத்தினாள். இதற்கு விசாரணை எல்லாம் நடந்த்து. அந்த மாணவியை மட்டுமின்றி அவள் அம்மாவையும் அழைத்து விசாரணை செய்தார்கள். முடிவில் இது போல மாணவர்களுக்கு டீச்சர் கடன் கொடுத்து உதவி செய்யக்கூடாது என்று பொது உத்தரவு பிறப்பிக்கபட்டது.

ஒருவரின் கஷ்டத்தைக் கேள்விபட்டபிறகு எப்படி உதவி செய்யாமல் இருப்பது. ஆனால் இந்த உத்தரவிற்குப் பயந்து சித்ரலேகா சம்பந்தப்பட்ட மாணவரை தன் வீட்டிற்கு வரச்சொல்லி உதவி செய்வதை வழக்கமாக்க கொண்டிருந்தாள்.

அந்தப் பள்ளியில் வேலாயுதம் சார் அவரது மனைவி கோமளா இருவரையும் கண்டு மற்ற ஆசிரியர்கள் பயந்தார்கள். காரணம் எவரோடும் வம்பு சண்டையிட்டு பெரிதாக்கிவிடுவார்கள். வேலாயுதம் சாருக்கு ஊரின் பெரிய மனிதர்களுடன் நெருக்கமான தொடர்பு இருந்தது. அதைவிடவும் பள்ளி நிர்வாகிகளே அவரைக் கண்டு பயந்தார்கள்.

ஆகவே வேலாயுதம் சாரோ, கோமளா டீச்சரோ பள்ளிக்கு வரவில்லை என்றால் கூட யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள். வகுப்பறையிலும் அவர்கள் அக்கறையாகப் பாடம் நடத்துவதில்லை. அதுவும் வேலாயுதம் சார் வட்டி பிசினஸ் துவங்கிய பிறகு அவரது கவனம் முழுவதும் அதிலேயே போய்விட்டது

அவரது வகுப்பினையும் சேர்த்துச் சித்ரலேகா பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இத்தனை நெருக்கடிகள். பொறாமை, வம்பு வழக்குகள் இருந்தபோதும் மாணவர்கள் அவளைச் சந்தோஷப்படுத்தினார்கள். வகுப்பில் அவளுக்குப் பிடித்தமான சில மாணவர்கள் இருந்தார்கள். அவர்கள் நன்றாகப் படிப்பதைக் கண்டு அவள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். சிலருக்கு பேனா, ஸ்கூல் பேக் போன்றவற்றை வாங்கித் தந்திருக்கிறாள்.

படிக்கவே  மாட்டார்கள் என்று  கடைசி பெஞ்சில் ஒதுக்கி வைத்திருக்கிற மாணவர்கள் கூட அவளது அக்கறையால் படித்தார்கள். அது போல மாணவர்களை அவள் ஒருபோதும் மோசமாக திட்டவோ அடிக்கவோ மாட்டாள். வகுப்பில் கோபம் அதிகம் வந்தால் சாக்பீஸை உடைத்துப் போடுவாள். அவ்வளவு தான் அவளது கோபத்தின் வெளிப்பாடு.

ஒருமுறை அவளது திருமண நாளை ஒட்டிய ஞாயிற்றுகிழமையில் ஆறாம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தன் வீட்டிற்கு அழைத்துப் பிரியாணி செய்து கொடுத்தாள். அந்தப் பிள்ளைகள் முகத்தில் தான் எவ்வளவு சந்தோஷம். அவர்கள் எல்லோரும் ஒன்றாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அந்த நாளை அவளால் மறக்க முடியவேயில்லை

அவளிடம் படித்த மாணவிகள் வெளியே எங்கே அவளைச் சந்தித்தாலும் டீச்சர் டீச்சர் என்று அன்பை வெளிப்படுத்தினார்கள். ஒருமுறை பேருந்தில் சந்தித்த சாரதா என்ற மாணவி தன் கைக்குழந்தையை அவளிடம் கொடுத்து ஆசி கேட்டாள். மூக்கு ஒழுக குட்டிப்பெண்ணாகப் பள்ளிக்கு வந்த சாரதா வளர்ந்து படித்துத் திருமணமாகி கைக்குழந்தைக்குத் தாயாகிவிட்டாள் என்ற வியப்போமு அந்தக் குழந்தைக்கு ஆசி கொடுத்து அதன் கையில் ஒரு நூறு ரூபாயை திணித்துவிட்டாள்.

சாரதா நெகிழ்ச்சியோடு இருக்கட்டும் டீச்சர் இதெல்லாம் எதுக்கு என்று மறுத்தாள். அந்தக் குழந்தையை நீண்ட நேரம் சித்ரலேகா தன் மடியிலே வைத்துக் கொண்டுவந்தாள். பெற்றபிள்ளைகளை விடவும் மாணவர்கள் காட்டும் அன்பு உயர்வானது தான் போலும்.

இன்னொரு முறை அவள் தாலுகா அலுவலகத்தில் ஒரு வேலையாகப் போன போது அங்கே வேலைக்கு இருந்த அவளது மாணவி பத்மப்ரியா ஒடிவந்து கையைப் பிடித்துக் கொண்டு சேரில் அமர வைத்து டீ வாங்கிக் கொடுத்து ஐந்து நிமிசத்தில் வேலையை முடித்துக் கொடுத்துவிட்டதோடு தன்னோடு வேலை பார்க்கிறவர்களிடம் எல்லாம் எங்க டீச்சர் என்று பெருமையோடு சொல்லிக் கொண்டிருந்தாள். இது தானே இந்த வேலையில் கிடைத்த பரிசு. மகிழ்ச்சி

கடந்தகாலத்தின் நினைவுகளில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சித்ரலேகாவை விழிப்படையச் செய்வது போலப் பள்ளிக்கூட மணி அடித்தது. தன் வகுப்பறைக்குள் நுழையும் போது மாணவர்களிடம் தான் வேலைக்குச் சேர்ந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆனதைச் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்

••

வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் அவளை அறியாமலே பாடப்புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பாடம் நடத்த துவங்கிவிட்டாள். ஒரேயொரு மாணவி அவள் புதுச்சேலை கட்டியிருப்பதைக் கண்டுபிடித்துவிட்டவள் போலச் சக மாணவியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். அவர்கள் ரகசியமாக அதைப் பற்றிப் பேசிக் கொண்டார்கள்.

அரைமணி நேரம் வகுப்பு எடுத்தபிறகு புத்தகத்தை மூடி மேஜையில் வைத்தபடி மாணவர்களைப் பார்த்து சிரித்தபடியே சொன்னாள்

“இன்னைக்கு ஒரு சந்தோஷமான நாள். என்ன சொல்லுங்க“

“உங்க கல்யாண நாளா டீச்சர்“

“இல்லை“

“ரிடயர்ட் ஆகப்போறீங்களா டீச்சர்“ என ஒரு மாணவன் கேலியாகக் கேட்டான்

“இல்லை“

“நீங்களே சொல்லுங்க டீச்சர்“ என்றாள் ஒரு மாணவி.

“இன்னைக்கோட நான் வேலைக்குச் சேர்ந்து 25 வருஷம் ஆகுது“

மாணவர்கள்“ ஹே“ என்று உற்சாகமாகச் சப்தமிட்டார்கள். ஒரு மாணவி எழுந்து நின்று சொன்னாள்

“டீச்சர் உங்க புதுப்புடவை நல்லா இருக்கு“

“ஸ்நேகா மாதிரி இருக்கீங்க டீச்சர்“ என்றான் ஒருவன்

இதைக்கேட்டு மற்ற மாணவர்கள் சப்தமாகச் சிரித்தார்கள். வகுப்பறையின் இறுக்கம் கலைந்து மெல்ல சிரிப்பும் வேடிக்கையும் பீறிடத்துவங்கியது.

“எப்போ ட்ரீட் தரப்போறீங்க டீச்சர்“ என்று ஒருவன் கேட்டான்

“சாக்லேட் கூடக் குடுக்கலை“ என்று ஒரு மாணவி ஆதங்கப்பட்டாள்

மாணவர்கள் உற்சாகமாகப் பேசுவது அவளை மகிழ்ச்சிப்படுத்தியது.

“என்ன ட்ரீட் வேணும்“ எனக்கேட்டர்ள்

“அசன் கடையில பரோட்டா. டீச்சர் நாம எல்லோரும் ஒண்ணா ஹோட்டல்ல போயி சாப்பிடுவோம். சூப்பரா இருக்கும்“

“எங்க வீட்ல பரோட்டா கடையில போய்ச் சாப்பிட விடமாட்டாங்கப்பா“ என்றாள் ஒரு மாணவி

“பரோட்டா. சுக்கா வறுவல். ஆம்லேட். சிக்கன் எல்லாம் வாங்கித் தரணும்“ என்று கேட்டான் ஒரு மாணவன்

இதுவரை அப்படி ஒருமுறை கூட மாணவர்களை ஒன்றாக ஒரு ஹோட்டலுக்கு அழைத்துக் கொண்டு போய்ச் சாப்பிட வைத்தது இல்லையே. அந்த ஏக்கம் மாணவர்களிடம் இருந்த்து. அதைச் செய்தால் என்ன என்று சித்ரலேகா யோசித்தாள்.

பள்ளிமுடிந்தபிறகு அவர்களை அழைத்துக் கொண்டு போவதற்குப் பள்ளிக்கூடத்திடம் ஏன் அனுமதி கேட்க வேண்டும்.

அடுத்த வாரம் நாம அசன் கடைக்குப் போய்ச் சாப்பிடுவோம் என்றாள் சித்ரலேகா

அதைக்கேட்ட மறுநிமிஷம் கைதட்டுப் பறந்தது. மாணவர்கள் உற்சாகமாகச் சப்தமிட்டார்கள் வகுப்பு முடிந்து வராண்டாவில் நடந்து கொண்டிருந்தபோதும் மாணவர்கள் வெளிப்படுத்த கைதட்டினை நினைத்தபடியே நடந்தாள். ஸ்டாப் ரூமில் ஒருவரிடமும் தான் வேலைக்குச் சேர்ந்து இருபத்தைந்து வருஷம் ஆனதைப் பற்றிச் சொல்லிக் கொள்ளவில்லை. அவர்களும் அவளைக் கண்டுகொள்ளவேயில்லை

••

அன்று மதியம் சாப்பிட்டு முடித்து மதிய வகுப்பிற்கான குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்த போது ஹெச்எம் ஸ்ரீனிவாசன் அவளைத் தன்னுடைய அறைக்கு அழைத்து வாழ்த்து சொன்னார்

“இந்த ஸ்கூல்ல உங்களுக்குப் பின்னாடி தான் நானே வேலைக்குச் சேர்ந்தேன். உங்க கூடச் சேர்ந்ததுல கணேசன் சாரும் பவானி டீச்சரும்  நீங்களும் தான் சீனியர். “

“எங்களுக்கு வேற போக்கிடம் கிடையாது சார் “என்று சொல்லி சிரித்தாள் சித்ரலேகா

“அப்படிச் சொல்லாதீங்க. மெஜஸ்டிக் ஸ்கூல் ஆரம்பிச்சப்ப கூட உங்களை வேலைக்குக் கூப்பிட்டாங்க. நீங்க தான் போகலை“

“எனக்கு இந்தப் பள்ளிக்கூடமே போதும்னு தோணுது சார்“

“உங்க சர்வீஸை பாராட்டு சின்னதா ஒரு டீபார்ட்டி தரலாம்னு நினைச்சேன். ஆனா நம்ம ஸ்கூலை பத்தி தான் தெரியுதே. எதைத் தொட்டாலும் பாலிடிக்ஸ்“.

“எனக்கு எதுக்குப் பாராட்டு பார்ட்டி. நீங்க கூப்பிட்டு பேசினதே போதும்“ என்று சித்ரலேகா தன் வகுப்பறைக்குக் கிளம்பினாள்

ஏழாம் வகுப்பினை கடந்த போது அந்த வகுப்பிற்கு ஆசிரியர் வரவில்லை என்று தெரிந்தது. கோமளா டீச்சர் வகுப்பது. மாணவர்கள் உரத்து சப்தமிட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு மாணவி எதற்கோ அழுது கொண்டிருந்தாள். அந்த வகுப்பினை கடந்து போக முடியாமல் உள்ளே நுழைந்த சித்ரலேகா அழுது கொண்டிருக்கும் மாணவியிடம் என்ன நடந்தது என்று விசாரித்தாள்.

மீனா  என்ற அந்த மாணவி தன்னை ஒரு மாணவன் மிக ஆபாசமாகத் திட்டியதாகச் சொல்லி அழுதாள்.

அந்த மாணவன் மீது வேறு சில மாணவிகளும் புகார் சொன்னார்கள்

வெடித்த உதடுகளை கொண்ட அந்த மாணவனை எழுப்பி விசாரித்தபோது அவன் முறைத்தபடியே சொன்னான்

“.நீங்க யாரு என்னைக் கேட்குறதுக்கு. நான் ஒண்ணும் உங்க கிளாஸ்ல படிக்கலை“

“இப்படிப் பேசுறது தப்பு“

“நான் அப்படித்தான் பேசுவேன். என்ன பண்ணுவே“ என்று அவளை முறைத்தான்.

அவளுக்குள் கோபம் பீறிட்டது. அந்தப் பையனிடம் அதைக் காட்டிக் கொள்ளாமல் சொன்னாள்

“மீனா கிட்ட மன்னிப்பு கேளு“

“கேட்க முடியாது. என்ன பண்ணுவீங்க“

“அப்போ என் கூடவா, ஹெச்எம்மை பாப்போம்“

“வரமுடியாது“

“நீயா வரலைன்னா. பசங்களை விட்டு இழுத்துட்டு போக வேண்டியதாகியிருக்கும்“

“என் மேல கையை வைக்கசொல்லு. பல்லை உடைச்சிருவேன்“ என்று அந்தப் பையன் கோபத்துடன் சொன்னான்.

அந்தப் பையனை எப்படிக் கையாளுவது எனப்புரியாமல் சித்ரலேகா திகைத்தபடியே அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்

அப்போது கலைந்த தலையோடு கோமளா டீச்சர் வகுப்பறைக்குள் நுழைந்தாள். பாதித் தூக்கத்தில் எழுந்து வந்தவள் போலிருந்தது அவளது முகம். ஐந்தடிக்குள் உயரம். பளபளவென்னும் மின்னும் ஊதா நிற சேலை. மிகவும் டைட்டான ஜாக்கெட் அகலமான மூக்கு கண்ணாடி. கை நிறைய தங்க வளையல்கள் கழுத்தில் இரட்டைவடச் சங்கிலி. கால்களை சற்றே அகட்டி நகட்டக்கூடியவள்.  வகுப்பிற்குள் வந்து நின்றபோது அவளுக்கு பெருமூச்சு வாங்கியது.

அவள் கடுத்த முகத்துடன் “இங்க என்ன பண்ணுறே. இது உன் கிளாசா“ என்று கேட்டாள்

“கிளாஸ்ல ஒரே கலாட்டாவா இருந்துச்சி. அதான் வந்தேன்“

“நான் என்ன செத்தா போயிட்டேன். என் கிளாஸ்ல என்னைக் கேட்காம வந்து என்கொயரி பண்ணிட்டு இருக்கே “

“இந்தப் பொண்ணு அழுதுகிட்டு இருந்துச்சி. நீங்க கிளாஸ்ல இல்லே அதான்“ என்று மீனாவை கையைக் காட்டினாள்

“அதை எல்லாம் நான் விசாரிச்சிகிடுவேன். நீ வெளியே போ“.

“அந்தப் பையன் ரொம்ப திமிரா பேசுறான். அவன் முதல்ல மன்னிப்பு கேட்கணும்“

“போன்னு சொன்னா.. போவியா.. என்ன ஒவரா பேசிகிட்டே போற. வெளியே போடீ “என்று சப்தமாகச் சொன்னாள்.

ஏன் இப்படி கத்துகிறாள் என குழப்பமானவளாக சித்ரலேகா சொன்னாள்.

“ஏன் இப்படிப் பேசுறீங்க. அப்படி நான் என்ன தப்புப் பண்ணிட்டேன்“

“ஊமை கோட்டான் மாதிரி இருந்துகிட்டு நீ என்னவெல்லாம் பண்ணிகிட்டு இருக்கேனு எனக்குத் தெரியாதா. யோக்கிய மயிரு மாதிரி பேச வந்துட்டா.  “

“மரியாதையா பேசுங்க டீச்சர்“

“யாருக்கு என்ன மரியாதை கொடுக்கணும்னு எனக்குத் தெரியும். நீ வெளியே போ“.

“ஏன் கத்துறீங்க நான் வெளியே போக முடியாது “

“ இந்த ராங்கிதனத்தை எல்லாம் வேற இடத்துல வச்சிக்கோ.. தலைமயித்தை பிடிச்சி வெளியே தள்ளிருவேன் பாத்துக்கோ“ என்று கோமளா டீச்சர் கத்தினாள். அவளது உரத்த சப்தம் அடுத்த வகுப்பிற்குக் கேட்டிருக்கக் கூடும். அந்த வகுப்பில் இருந்த கணேசன் சார் வெளியே வந்து எட்டிப் பார்த்தார். ஆனால் அவர்கள் சண்டையில் தலையிடவில்லை.

சித்ரலேகா உறுதியான குரலில் சொன்னாள்

“நம்ம சண்டையைப் பிறகு வச்சிகிடுவோம். இந்தப் பையன் மீனாவை கெட்டவார்த்தையில பேசியிருக்கான். அவன் மன்னிப்பு கேட்கணும்“

“தேவையில்லாத விஷயத்துல நீ ஏன் தலையிடுறே. உன் கிளாஸ்ல உள்ள பசங்க எல்லாம் யோக்கியமா. “

“எது தேவையில்லாத விஷயம். அந்தப் பையன் என்னையே எவ்வளவு பேசினான் தெரியுமா“

“உன் பஞசாயத்தைக் கொண்டு கிட்டு ஹெச்எம்கிட்ட போ, நான் ,இப்போ கிளாஸ் எடுக்கவா, வேணாமா.. வெளியே கிளம்பு“

“அப்போ ஸ்கூல்ல என்ன தப்பு நடந்தாலும் கண்ணை மூடிகிட்டு நான் போயிட்டு இருக்கணுமா“

“போடீனு சொல்றேன். ஊர் நியாயம் பேசிகிட்டு இருக்கே“ என்று மிக மோசமாகத் திட்டத் துவங்கினாள் கோமளா

சித்ரலேகா காதை பொத்திக் கொண்டாள். அது கோமளாவின் ஆத்திரத்தை மேலும் அதிகப்படுத்தியிருக்க வேண்டும். அவள் சித்ரலேகாவின் கையைப் பிடித்து இழுத்தாள். அவள் நகர மறுக்கவே வேகமாகப் பிடித்துத் தள்ளினாள்.

சித்ரலேகா தடுமாறி கதவின் மீது விழுந்தாள். இடது தொடைப்பக்கம் அடிபட்டது. அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. கதவைப்பிடித்தபடியே தரையில் உட்கார்ந்து கொண்டாள். அவளது செருப்பு விலகிப் போய் கிடந்தது. கை நடுங்குவதை மறைத்துக் கொண்டாள்.

“என்னடீ நாடகம் ஆடுறே“ என்று கோமளா டீச்சர் மோசமாகக் கத்திக் கொண்டிருந்தாள்.

அவளின் குரல் கேட்டு ஆசிரியர்கள் வகுப்பறையின் வெளியே ஒன்று திரண்டிருந்தார்கள். தலைமை ஆசிரியரும் வந்திருந்தார். இதற்குள் சி பிளாக்கில் இருந்து வந்து சேர்ந்த வேலாயுதம் சார் என்ன நடந்தது என்று எதையும் கேட்காமல் கண்டபடி சித்ரலேகாவை பேச ஆரம்பித்தார்.

“எதுவா இருந்தாலும் ஸ்கூல் முடிஞ்சபிறகு விசாரிச்சிகிடலாம்“ என்று அவரைச் சமாதானப்படுத்தினார் தலைமை ஆசிரியர்

சித்ரலேகா தன் இடத்தை விட்டு நகரமாட்டேன் என்பதில் பிடிவாதமாக இருந்தாள்.

“டீச்சர் எழுந்து வாங்க. பேசிகிடலாம் “என்றார் ஸ்ரீனிவாசன்.

அவள் எழுந்து கொள்ளவேயில்லை

பள்ளி நிர்வாகி ராமசுப்ரமணியத்தை அழைத்துவருவதாக ஒரு ஆசிரியர் கிளம்பிச் சென்றிருந்தார். அந்த வகுப்பு மாணவர்கள் சண்டையை வேடிக்கை பார்த்தபடியே இருந்தார்கள்

அன்று பள்ளிக்கூடமே மூன்றரை மணியோடு முடிந்து போனதாகப் பெல் அடித்தார்கள். மாணவர்கள் போனபிறகு சித்ரலேகாவை சமாதானம் செய்யும் விதமாகத் தலைமை ஆசிரியர் “நீங்க எந்திரிச்சி என் ரூமூக்கு வாங்க. நான் விசாரிக்கிறேன் “என்றார்

“கோமளா டீச்சர் மன்னிப்பு கேட்குற வரைக்கும் இந்தக் கிளாஸை விட்டு வரமாட்டேன் “என்றாள் சித்ரலேகா

“மன்னிப்பு கேட்க முடியாது. உன்னாலே ஆனதை பாரு“ என்று வேலாயுதம் கத்திக் கொண்டிருந்தார். பள்ளி ஆசிரியர்கள் சமாதானம் பேசியும் அவள் எழுந்து கொள்ளவில்லை. அவளை என்ன செய்வது எனத் தெரியாமல் தலைமை ஆசிரியர் குழம்பிப் போயிருந்தார்

கோமளாவை அழைத்துக் கொண்டு வேலாயுதம் பைக்கில் கிளம்பிப் போனார். ஒருவேளை நிர்வாகி வீட்டிற்குத் தான் போகிறார்களோ என்னவோ.

ஏன் தனது இருபத்தைந்தாவது ஆண்டுத் துவக்க நாள் அன்று இப்படி நடக்க வேண்டும். இந்த வேலையை இன்றோடு விட்டுவிடலாமா. ஒரு டீச்சர் இப்படியா சண்டைபோடுவார். தன் மீது அவர்களுக்கு என்ன கோபம். தன்னை ஏன் வெறுக்கிறார்கள். அவமானப்படுத்துகிறார்கள்.   அவளுக்கு நினைக்க நினைக்க வருத்தமாகவும் குழப்பமாகவும் இருந்தது.

ஆசிரியரும் மாணவனும் இப்படி மோசமாக நடந்து கொள்வதைக் கண்டிக்காமல் விட்டால் பிறகு டீச்சர் வேலை செய்து என்ன தான் பயன். விருப்பமில்லாதவர்கள் ஏன் ஆசிரியர் பணிக்கு வர வேண்டும். அவளால் கோமளா டீச்சரையும் அந்த மாணவனையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை. இருவருமே தண்டிக்கபட வேண்டியவர்கள் என்று நினைத்துக் கொண்டாள்

மாணவர்களும் ஆசிரியர்களும் கலைந்து போனபிறகு பள்ளியெங்கும் நிசப்தம் நிரம்பத்துவங்கியிருந்தது.

வகுப்பறையின் கதவுகளை மூடுவதற்காக வந்த ப்யூன் கூட அவள் உட்கார்ந்திருந்த வகுப்பை விட்டுவிட்டு மற்ற வகுப்பறைகளை மூடிக் கொண்டு போனான். பள்ளி நிர்வாகிக்காகத் தலைமை ஆசிரியர் காத்துக் கொண்டிருந்தாள். மாணவர்கள் வெளியேறிப் போன பிறகு பள்ளி வேறுரூபம் கொண்டுவிடுகிறது. வேப்பமரத்தில் ஒரு காகம் உட்கார்ந்து தனியே கரைந்து கொண்டிருந்தது.

வழக்கமாக இந்த நேரம் அவள் வீட்டிற்குப் போயிருப்பாள். இத்தனை ஆண்டுகளில் இன்று தான் பள்ளி முடிந்த பிறகும் அவள் வகுப்பறையில் இருக்கிறாள். ஆண்டுவிழாவின் போது பள்ளியில் இரவு நேரம் இருந்திருக்கிறாள். அன்று ஒரே உற்சாகமாக இருக்கும். இன்று திருவிழா முடிந்து போன மைதானம் போல வெறுமையாக இருந்தது.

மாலை மயங்கி இருள் வரத்துவங்கிய போது அவள் இருந்த வகுப்பறையில் மின்விளக்குக் கிடையாது என்பதை முதன்முறையாக உணர்ந்தாள். அந்த வகுப்பறையில் மின்விசிறிக் கிடையாது. மின்விளக்குக் கிடையாது. இந்த இருட்டிற்குள் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருப்பது. யாரோ விளையாடி வீசி எறிந்துவிட்ட பொம்மையைப் போலத் தன்னை உணர்ந்தாள்.

திடீரெனப் பள்ளி சுருங்கி சிறிய நத்தைக்கூடு போலாகிவிட்டதாகத் தோன்றியது. தலைமை ஆசிரியர் அறையில் வெளிச்சம் தெரிந்தது. அவர் தனியே காத்திருந்தார்.  இருட்டில் வேப்பமரங்களின் சலசலப்பை கேட்க விநோதமாக இருந்த்து. பள்ளியை ஒரு போதும் அவள் இப்படிப் பார்த்ததில்லை.

ஒருவேளை பள்ளி நிர்வாகியை அழைத்துக் கொண்டுவராவிட்டால் என்ன நடக்கும் என்று யோசித்தாள். யாரும் வராவிட்டாலும் இங்கேயே இரவு முழுவதும் தங்கிவிட வேண்டியது தான். வகுப்பறையில் ஒரு இரவைக் கழிப்பதை விட வேறு என்ன வேண்டியிருக்கிறது.

தன் வகுப்பறை என்பது ஒரு எல்லையா. அதைத் தாண்டி எதையும் தான் கண்டுகொள்ளக் கூடாதா. இது என்ன கட்டுபாடு.

யோசிக்க யோசிக்க அவளுக்கு வருத்தம் அதிகமாகிக் கொண்டே போனது.  இப்படியான ஆசிரியர்களால் தான் மாணவர்கள் படிப்பை விட்டு பாதியில் நின்றுவிடுகிறார்கள்.

வகுப்பில் படிக்கும் மாணவர்களில் யார் எதிர்காலத்தில் என்ன ஆவார்கள் என்று யாராலும் சொல்ல முடியாது. ஒருமுறை அவள் வகுப்பில் படித்த ஒரு மாணவி சாலை விபத்தில் இறந்துவிட்டாள். அவள் உடலை காணுவதற்காகப் பள்ளியே திரண்டு போயிருந்த்து. அந்த மாணவியின் உடலை பார்த்தபோது சித்ரலேகா அழுத அழுகைக்கு அளவேயில்லை.

இது எல்லாம் ஏன் இந்த இரவில் நினைவில் வருகிறது என்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் நம்பிக்கை தான் ஆசிரியர்களின் ஒரே துணை. நல்ல நினைவுகளின் சந்தோஷம் தான் மீண்டும் மீண்டும் பாடம் நடத்த வைக்கிறது என்பதை அவள் உணர்ந்திருந்தாள்.

பள்ளியை ஒட்டிய கட்டிடத்திலிருந்து வரும் வெளிச்சம் லேசாக ஊர்ந்து வராந்தா வரை வந்து கொண்டிருந்தது. எங்கோ கிணற்றுக்குள் இருப்பது போல உணர்ந்தாள். இரவுப்பூச்சிகள் எங்கிருந்தோ சப்தமிட்டுக் கொண்டிருந்தன. பள்ளியை ஒட்டிய வீட்டில் ஒடும் தொலைக்காட்சி பாடலின் சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

அவளைத் தேடி அவளது கணவர் பள்ளிக்கு வந்திருந்தார். நடைச் சப்த்த்திலே அவர் வகுப்பறையை நோக்கி வருவது கேட்டது

“என்ன சித்ரா இது. சின்னபுள்ளையாட்டாம். உன்னை யாரு அவங்க கூடச் சண்டை போட சொன்னது. உனக்கு எதுக்கு வேண்டாத வேலை“

“அந்த டீச்சர் என்ன பேச்சு பேசுனாங்க தெரியுமா“

“எல்லாம் ஹெச்எம் சொன்னாரு.. யாரு எக்கேடு கெட்டா உனக்கென்ன. நீ ஏன் ஒவரா ரியாக்ட் ஆகுறே“.

அவரிடம் சித்ரலேகாவால் விளக்கம் சொல்ல முடியவில்லை. சப்தமாக அழுதாள்.

நீண்ட நேரம் பேசி சமாதானம் செய்து அவளை வகுப்பறையிலிருந்து எழுந்து கொள்ளச் செய்தார். அவர்கள் வராண்டாவில் நடந்து வரும்போது தலைமை ஆசிரியர் சித்ரலேகாவின் கணவரை தனியே அழைத்துக் கொண்டு போய் ஏதோ பேசினார். பிறகு சித்ரலேகா தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது பள்ளியை பார்த்தாள்.

மிகவு

1 like ·   •  1 comment  •  flag
Share on Twitter
Published on March 28, 2021 01:55

March 26, 2021

செய்தியின் நிறம்.

புதிய சிறுகதை

தொலைவில் மஞ்சள் நிற வெளிச்சம் தெரிந்தது.

கண்ணாடியைச் சரி செய்தபடியே திவாகர் காருக்கு வெளியே பார்த்தான். ஒருவேளை அது உணவகமாக இருக்கக்கூடும்.

கடிகாரத்தைப் பார்த்தபோது பத்தரையைக் கடந்திருந்தது. இரவு ஏழு மணிக்கே அவனுக்குப் பசித்தது. ஆனால் வக்கீல் ஷியாம்பிரசாத்தை காணப் போக வேண்டும் என்பதால் சமோசா மட்டுமே சாப்பிட்டான். ஷியாம்பிரசாத் வீட்டில் மசாலா டீ கொடுத்தார்கள். மாலையிலிருந்து மூன்று நான்குமுறை டீ குடித்தாகிவிட்டது. அது நாக்கில் புளிப்புச் சுவையை உருவாக்கியிருந்தது.

பர்காம்புரா போவதற்கு இன்னும் ஒன்றரை மணி நேரமாகிவிடும். மழைநாளாக இருப்பதால் வழியில் உணவு கிடைக்குமா என்பது சந்தேகமே. நிச்சயம் அந்த மஞ்சள் வெளிச்சம் ஒரு தாபாவாகத் தான் இருக்ககூடும். ஏதாவது ரொட்டியை சாப்பிட்டுவிட்டுக் கண் அயர்ந்தால் பனிரெண்டிற்குள் அறைக்குப் போய்ச் சேர்ந்துவிடலாம். காலை ஏழு மணிக்கு எஸ்பி அதுல் பாண்டேயை சந்திக்க வருவதாகச் சொல்லியிருந்தான்.

சாலையில் வாகனங்களேயில்லை. புதிய பாலம் வேலை நடப்பதால் இந்த ரோடு வழியாக வாகனங்கள திரும்பிவிட்டிருந்தார்கள். இது தான் பர்காம்புரா செல்லும் பழைய பாதை. நாற்கரச் சாலை வந்தபிறகு இதைப் பயன்படுத்துகிறவர்கள் குறைந்துவிட்டார்கள். பிரதான சாலையில் இணைவதற்கு இன்னமும் பதினைந்து கிலோ மீட்டர் போக வேண்டும். வெகு தூரத்தில் இருண்ட வானில் தெரிந்த மங்கலான ஒளியைப் பார்த்துக் கொண்டிருந்தான். பசியில் சுரந்த அமிலம் வயிற்றை வலிக்கச் செய்து கொண்டிருந்தது.

பத்திரிக்கையாளர் வேலையில் அவன் சந்தித்த முக்கியப் பிரச்சனை. நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிடுவது. உறங்குவது இரண்டுமே. நிதானமாக, ருசித்து எப்போது சாப்பிட்டோம் என்று நினைவிலே இல்லை. அது போலத் தான் உறக்கமும் ஆழ்ந்து உறங்கி பல ஆண்டுகள் போய்விட்டன. கல்லூரி நாட்களில் ஹாஸ்டலில் இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கிக் கிடப்பான். பல நாட்கள் வகுப்பிற்கே போனதில்லை. உறக்கம் அவ்வளவு சுகமாக இருக்கும். சில ஞாயிற்றுகிழமைகளில் பகலில் கட்டிலை விட்டு எழுந்திருக்கவே மாட்டான். அந்தச் சுகமெல்லாம் மறைந்து போய்விட்டன. இப்போது அசதியில், களைப்பில் தான் உறங்கப்போகிறான். அதுவும் கெட்டகனவுகள் துரத்துகின்றன. பல நாட்கள் கனவில் சபதமிட்டு அலறியிருக்கிறான். சில நேரம் கனவில் கூட யாரிடமோ கேள்விகள் கேட்டபடியே இருப்பான்.

ஏன் ஆங்கிலப் பத்திரிக்கையாளர் பணியைத் தேர்வு செய்தோம். எதற்காக இப்படிச் செய்திகளைத் துரத்திக் கொண்டு அலைகிறோம். மாயமானை போலச் செய்திகள் வசீகரமாகயிருக்கின்றன. ஆனால் துரத்திப் போனால் மிஞ்சுவது ஏமாற்றமே..

அவனது வார இதழின் எடிட்டர் அன்வர் அலி, இந்தியாவின் மூத்த பத்திரிக்கையாளர், சராசரியான உயரம். வழுக்கை விழுந்த தலை. கறுப்புப் பிரேம் போட்ட கண்ணாடி. சற்றே பெரிய மூக்கு. முக்கால்கை சட்டை. கதர் பேண்ட். கையில் ஒரு பழைய குடையுடன் தான் அலுவலகம் வந்து போவார். மைப்பேனா மட்டுமே பயன்படுத்துவார். லண்டனில் படித்தவர் என்ற அடையாளமே கிடையாது. சாதாரண ரப்பர் செருப்புகள். சட்டை பையில் ஒரு சிவப்புப் பென்சில். துண்டு காகிதங்களில் தான் எழுதுவார்.

அவர் தொலைபேசியில் பேசும் போது அருகிலிருந்து திவாகர் அவரையே கவனித்துக் கொண்டிருப்பான். எதிரில் பேசுகிறவர் அவரை மிரட்டும் போதும் அன்வர் அலியிடமிருந்து ஒரு கடுஞ்சொல் வராது.

மிக மெல்லிய குரலில் தனது தரப்பை அவர் அழுத்தமாகச் சொல்லிக் கொண்டிருப்பார். அவரது கட்டுரைகளும் அப்படித் தான் இருந்தன. உண்மையைச் சொல்வதற்கு அவர் பயந்ததேயில்லை. துணிச்சல், தைரியம், உறுதியான நம்பிக்கை இவற்றையே அவர் இளம் பத்திரிக்கையாளர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.

திவாகர் அவரிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டிருந்தான். அவனது முதல் கட்டுரைத் தொகுப்பு வெளியான போது அதை அன்வர் அலிக்கே சமர்ப்பணம் செய்திருந்தான். அந்தக் கட்டுரை நூலை பிரஸ்கிளப்பில் வெளியிட்ட இரவில் அன்வர் அலி சொன்னார்

“திவா.. சர்க்கஸில் பார் விளையாடுபவனைப் போலத் தாவித்தாவி செல்லும் மொழி நடை உனக்குக் கைவந்திருக்கிறது. அது இளைஞர்களுக்குப் பிடிக்கும். இப்போது யார் விரிவாகவும் நுட்பமாகவும் எழுதுவதைப் படிக்கிறார்கள். பத்திரிக்கையாளனின் வேலை மீன்பிடிப்பது போன்றது. தூண்டிலை வீசி விட்டுப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். எந்த மீன் தூண்டிலில் மாட்டும் என்று யாருக்குத் தெரியும். சில நேரம் உன் தூண்டிலில் திமிங்கிலமும் மாட்டக்கூடும். அப்போது நீ தான் சாண்டியாகோ, திமிங்கிலத்துடன் சமர் செய்ய வேண்டியது வரும். ஹெமிங்வே நாவலில் சாண்டியாகோ தன் கைகளுடன் பேசுவான். பத்திரிக்கையாளனும் தன் கைகளும் பேச வேண்டியவனே.“

அவரது வீட்டில் இறக்கிவிடும்வரை அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டேவந்தான். வீட்டின் முன்பு டாக்சியை விட்டு இறங்கும் போது தன் பையிலிருந்த சிவப்பு பென்சிலை அவனிடம் கொடுத்து இது தான் எனது பரிசு என்றார். அந்தப் பென்சிலை தன் வாழ்நாளில் கிடைத்த பெரும் பரிசாக வைத்திருந்தான் திவாகர்.

••

சாலையின் இடப்புறம் எருமையொன்று படுத்து கிடப்பது போலத் தோன்றியது. கார் அதைக்கடந்த போது எருமையில்லை. கைவிடப்பட்ட தார்டின் கவிழ்ந்துகிடக்கிறது என்று தெரிந்தது. தோற்ற மயக்கங்கள் உண்மையில்லை. அதைப் பிரித்தரிய தெரிந்திருக்க வேண்டும். கண்ணுக்குத் தெரிகின்ற யாவும் கூட உண்மையாக இருக்க வேண்டும் என்றில்லை. தோற்றத்தைக் கடந்து உண்மை ஒளிந்திருக்கக் கூடும். அதற்கு ஆராய வேண்டும். கண்ணை மட்டுமே நம்பக்கூடாது.

கார் சீராகச் சாலையில் சென்று கொண்டிருந்தது. திவாகர் எத்தனையே இரவுகளை இப்படிக் காரில் பயணித்துக் கடந்திருக்கிறான். காரிலே உறங்கியிருக்கிறான். ஒருமுறை ஆப்கானிஸ்தானில் செய்தி சேகரிக்கச் சென்ற இரவில் அவன் கண்முன்னால் பாம் ஒன்று வெடித்துச் சிதறியது. நூறு அடி தூரத்தில் நின்றிருந்த வேனும் மனிதர்களும் சிதறிப்போனார்கள். பிய்த்து எறியப்பட்ட இரும்புத்துண்டு ஒன்று அவர்கள் காரின் கண்ணாடியில் விழுந்து கண்ணாடி சிதறியது. எங்கும் ஒலம். காரில் வெளிச்சத்தில் துண்டிக்கப்பட்டுக் கிடந்த கை ஒன்றைக் கண்டான். கண்ணாடி வளையல்கள் அணிந்த இளம்பெண்ணின் கையது. அந்தப் பெண் என்ன ஆனாள் எனத்தெரியவில்லை. ஆனால் அவளது கை துண்டிக்கப்பட்டுத் தனியே கிடந்தது. அந்தக் காட்சி மனதை நடுங்கச் செய்தது. சைரன் ஒலிகளுடன் வாகனங்கள் வரத்துவங்கின. ராணுவம் அந்த இடத்தைச் சுற்றிவளைத்துக் கொண்டது. காரில் அறைக்குத் திரும்பியதும் திவாகர் தன்னை மீறி அழுதான்.

திவாகர் மன உளைச்சல் அதிகமான நேரத்தில் யாருமற்ற இடம் தேடி நேபாளத்திற்குப் போயிருக்கிறான். மனிதர்களின் நடமாட்டமேயில்லாத பள்ளத்தாக்கில் ஒற்றை ஆளாகக் கூடாரம் அடித்துத் தங்கியிருக்கிறான். பரபரப்பிலிருந்து விடுபட்டு விடலாம் ஆனால் நினைவுகளிலிருந்து எப்படி விடுபடுவது. யாருமற்ற இடத்திலும் நினைவின் வழியே மனிதர்கள் மீண்டு எழுந்துவிடுகிறார்கள். கடந்தகாலத்தின் நினைவுகள் வழிநடத்தாத மனிதர்கள் எவரேனும் உண்டா என்ன.

ஏனோ அன்றைய இரவில் அன்வர் அலியை பார்க்க வேண்டும் போலத் தோன்றியபடியே இருந்தது..

••

டிரைவர் காரை ஒட்டியபடியே “அது ஒரு தாபா“ என்று சொன்னான்

“நாம் நிறுத்தி சாப்பிட்டுவிடுவோம். திரும்ப மழை வரும் போல இருக்கிறது“

“இரவில் பெய்யும் மழை நிற்காது“ என்றான் டிரைவர்

அவன் சொல்வது நிஜம். கடந்த சில நாட்களாகவே விட்டுவிட்டு மழை பெய்து கொண்டேதானிருக்கும்.

மழைக்காலத்தில் ஒரு நாள் என்பது மிகவும் சிறியதாகிவிடுகிறது. மழையில் வீடுகள். வீதிகள் சுருங்கிப்போகின்றன. மனிதர்களை விளையாட்டுப் பொருளைப் போல உருமாற்றுகிறது மழை. மழைக்கு ஒராயிரம் வேலையிருக்கிறது. மரத்தில் சிக்கிக் கொண்ட பட்டம் ஒன்றை மழை தன்விரலால் எடுத்து விடுகிறது. இன்னொரு இடத்தில் கழுவப்படாத சிலையை மழை சுத்தம் செய்கிறது. வேறு இடத்தில் மழை கல்உரல் ஒன்றைப் புரட்டிப் போடுவது போலச் சுற்றிவந்து கொண்டிருக்கிறது.

வாழை மரத்தில் மழை பெய்யும் போது பார்த்திருக்கிறீர்களா. மழையிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டுவிடுகிறது வாழை. தலை நிமிர்ந்து மழையைப் பார்ப்பதுமில்லை. வாழை இழையில் மழையின் துளிகள் சறுக்கி விளையாடுகின்றன. சில நேரம் இலையிலிருந்து எகிறி பூமியை நோக்கித் தாவும். அது ஒரு மாயநடனம். ஆம், மழை இயற்கையின் பெருநடனம்.

கடந்த பத்துநாட்களாகவே திவாகர் பர்காம்புராவை சுற்றிக் கொண்டேயிருந்தான். பர்காம்புரா குண்டுவெடிப்பு தொடர்பான கட்டுரை எழுதுவதற்காக உண்மையைச் சேகரித்துக் கொண்டிருந்தான். டெல்லியில் வேலை என்றாலும் மாசத்தில் பத்து நாள் இப்படி ஏதாவது ஒரு மாநிலத்தில் சுற்றிக் கொண்டிருக்க வேண்டியது தான்.

சிறந்த புலனாய்வு கட்டுரை எழுதியதற்காக இரண்டு முறை பிரஸ் கவுன்சில் விருதுகளையும் பெற்றிருக்கிறான். ஒரு முறை ஜப்பானிய அரசு அவனுக்குத் தங்கப் பேனா விருது அளித்துக் கௌரவித்திருக்கிறது. அவனுடன் பணியாற்றிய பலரும் அதிக ஊதியம் கிடைக்கிறது எனத் தொலைக்காட்சிகளுக்குப் போய்விட்டார்கள். அவனுக்குக் காட்சி ஊடகத்தை விடவும் அச்சு ஊடகமே பிடித்திருந்தது.

••

கார் அந்த மஞ்சள் வெளிச்சதை நெருங்கியது.

அது ஒரு பஞ்சாபி தாபா

டிரைவரை நிறுத்த சொல்லிவிட்டு தலையைக் கோதிவிட்டுக் கொண்டான். கார் பிரதான சாலையை விட்டு கிழே இறங்கியது. மண்சாலையது. ஈரத்தில் சேறும் சகதியுமாக இருந்தது. பழைய ஹிந்திபாடல் ஒன்றை ஒலிக்கவிட்டுக் கொண்டிருந்தார்கள். இரண்டு டியூப் லைட்டுகள் எரிந்து கொண்டிருந்தன. தகரக் கொட்டகை ஒன்றினுள். நாலைந்து கயித்துக் கட்டில் போட்டு வைத்து இருந்தார்கள், கட்டில் நடுவே ஒரு பலகை இருந்தது. கட்டிலில் இரண்டு பக்கமும் இருவர் அமர்ந்து கொண்டு சாப்பிடும் படி அமைந்திருந்தார்கள்.

காலியாகக் கிடந்த ஒரு கட்டிலில் அமர்ந்தபடியே சாப்பிட என்னகிடைக்கும் எனக்கேட்டான். சர்வர் வரிசையாக ஒப்புவித்துக் கொண்டிருந்த போது பரோட்டாவும் ஆலு சப்ஜியும் ஆர்டர் செய்தான். ஒரு கட்டில் அடியில் பூனை ஒன்று படுத்துகிடந்தது. அதை நோக்கி கையை அசைத்தான். பூனை அவனைக் கண்டுகொள்ளவேயில்லை.

•••

கடந்த பத்து நாட்களுக்குள் அவன் பர்காம்புரா குண்டுவெடிப்பு குறித்து நிறைய ரகசியங்களைக் கண்டுபிடித்திருந்தான். சில தகவல்கள் அவனுக்கே அதிர்ச்சியாக இருந்தன. குண்டுவெடிப்பு என்ற ஒற்றைச் செயலுக்குள் எத்தனையோ மனிதர்கள் பதுங்கியிருக்கிறார்கள்.

ஒருமுறை அன்வர் அலியிடம் திவாகர் கேட்டான்

“அதிகாரத்திலிருப்பவர்களுக்கு மனசாட்சியே கிடையதா குற்றவுணர்ச்சி அவர்களைக் கொல்லாதா. ஏன் இப்படி உண்மையைக் கொன்று புதைக்கிறார்கள்“.

அன்வர் அலி சிரித்தபடியே சொன்னார்

. “சிறுவனைப் போலப் பேசுகிறாய். மனசாட்சி என்ன டெல்லி ரேடியோவா எந்நேரமும் எதையாவது சொல்லிக் கொண்டேயிருக்க. அவர்களின் மனசாட்சி கல்லறையைப் போன்றது. அதனுள் முணுமுணுப்பேயில்லை, சலனமேயில்லை. உண்மையை ஆழத்தில் புதைத்து வைத்திருக்கிறார்கள். நாம் தான் மனசாட்சிக்கு பயப்பட வேண்டியிருக்கிறது“

அன்வர் அலி சொன்னது உண்மை.

உண்மையை அறிந்து கொள்வது கடினமானது. அதை விடவும் கடினமானது அதைப் பத்திரிக்கையில் வெளியிடச் செய்வது. அன்வர் அலி எடிட்டராக இருந்தவரை அவன் தைரியமாக உண்மையை எழுதிக் கொடுப்பான். ஆனால் புதிய எடிட்டராக ஷர்மிளா பாண்டே வந்தபிறகு அப்படி எழுத முடியவில்லை. ஒருவேளை எழுதிக் கொடுத்தாலும் அவள் வெளியிட மாட்டாள். ஷர்மிளா பாண்டே அமெரிக்காவில் படித்தவள். முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரின் மருமகள். அவளுக்குப் பத்திரிக்கை ஆசிரியர் வேலை என்பது அலங்காரமான பதவி மட்டுமே.

••

சம்பளத்தை விடவும் தன்னைச் சுதந்திரமாக எழுத அனுமதிக்கிறார்கள் என்பதால் திவாகர் பத்திரிக்கையிலே இருந்தான். இந்தியா முழுவதும் அவனுக்கென வாசகர்கள் இருந்தார்கள். அரசியல் தலைவர்கள் பலரும் அவனது கட்டுரைகளை வாசித்துப் பாராட்டியிருக்கிறார்கள். அவனது சில கட்டுரைகள் ஒரே நேரம் ஆறு மொழிகளில் மொழியாக்கம் செய்து வெளியிடப்படுவதும் உண்டு.. .

திவாகர் தனது பத்திரிக்கையுலக அனுபவத்தில் ஒன்றேயொன்றை உறுதியாகக் கற்றுக் கொண்டிருந்தான். எந்தச் செய்தியையும் நம்பக்கூடாது. சந்தேகிக்க வேண்டும். செய்தியினுள் மறைந்துள்ள புலப்படாத விஷயங்களை, மனிதர்களை அடையாளம் காண வேண்டும். அவற்றில் எதைக் கவனப்படுத்த வேண்டுமோ அதைக் கவனப்படுத்த வேண்டும். உண்மையைத் தேடிக்கண்டறிவதே தனது பணி.

எல்லாத் தினசரி செய்தித் தாள்களும் மரண ஓலைகளே. ஒரு நாளில் வாசகன் எத்தனை மரணச் செய்திகளை வாசிக்கிறான். கொலையைத் தன் வாழ்நாளில் ஒருமுறை கூடக் கண்டிராத பொதுமக்கள் அன்றாடம் பத்திரிக்கைகள் வழியாகக் கொடூரமான கொலைகாரர்களைப் பற்றி அறிந்து கொள்கிறார்கள். கொலையாளி பெண்ணா இருந்தால் அவளை ரசிக்கிறார்கள். அவளைப் பற்றித் திரைப்படம் உருவாக்குகிறார்கள்.

மக்கள் பத்திரிக்கைகளை நம்புகிறார்கள். பத்திரிக்கையாளன் என்பவன் உண்மையைக் கண்டறிந்து சொல்பவன் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அரசு, அதிகாரம் எதற்கும் பயப்படாதவன் என நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதை மெய்ப்பிக்கும் விதமாகச் செயல்படுகிற பத்திரிக்கையாளர்கள் ஒரு சிலரே. திவாகர் இதுவரை அப்படி தானிருந்தான். அவனுக்கு எவரையும் பற்றிப் பயமில்லை. எந்த மிரட்டலாலும் அவனது எழுத்தை ஒடுக்கமுடியவில்லை.

பத்திரிக்கையாளனாக அவன் சிறப்பாகவே செயல்பட்டான் ஆனால் ஒரேகுறை தனது உடல்நலத்தைக் கவனிக்கவே முடியவில்லை. இந்த முப்பத்தியாறு வயதிற்குள் அல்சர் வந்துவிட்டது. சமீபமாக ரத்தக்கொதிப்பும் உருவாகியுள்ளது. மூக்குக் கண்ணாடியின் பவர் அதிகமாகிவிட்டது. சாமானிய மனிதர்களைப் போல வார விடுமுறை கிடையாது. வாடகை வீட்டில் தான் குடியிருக்கிறான். வீடெங்கும் புத்தகங்கள். இசை தட்டுகள்.

சொந்த ஊரிலிருந்து யாரும் அவனைத் தேடி வருவதில்லை. அவனும் ஊருக்குப் போவதில்லை. வங்கிக் கணக்கில் இரண்டரை லட்சம் உள்ளது. அவ்வளவு தான் இத்தனை ஆண்டுக்கால சேமிப்பு. நல்லவேளையாக அவன் திருமணம் செய்து கொள்ளவில்லை. தன்னால் ஒரு பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என வேடிக்கையாகச் சொல்லிக் கொள்வான்.

திவாகரின் சொந்த ஊர் உடுமலைப்பேட்டை. சிறிய நகரம். அங்கே பள்ளி இறுதி வரை படித்தான். கோவையிலுள்ள கல்லூரியில் ஆங்கில இலக்கியம் முடித்தான். சட்டப்படிப்பை டெல்லியில் படிக்கலாம் என அண்ணன் சொன்ன காரணத்தால் டெல்லிக்குச் சென்றான். டெல்லி வாழ்க்கை அவனை முற்றிலுமாக மாற்றிவிட்டது. அவனோடு சட்டம் படித்த நண்பர்கள் கலக்காரர்களாக இருந்தார்கள். அவர்களுடன் ஒன்றாகச் சுற்றவும் போராட்டங்களில் கலந்து கொள்ளவும் செய்தான். மெல்ல அவனுக்குள் இருந்த சிறுநகர மனிதன் தொலைந்து போனான்.

மெட்ரோ மனிதர்களில் தானும் ஒருவன் என்பதை உணர்ந்தான். சமூகப் போராட்டங்களில் தீவிரமாகக் கலந்து கொண்டான். ஒரு வருஷத்திற்குள் அவனது பேச்சும் நடவடிக்கைகளும் மாறியிருந்தன. அப்போது அவன் எழுதிய கட்டுரைகள் ஆங்கில நாளிதழ்களில் வெளியாகின. அதன் பிறகே அவன் வக்கீல் படிப்பைக் கைவிட்டு பத்திரிக்கையாளன் ஆவது என முடிவு செய்தான்.

திவாகர் அன்றாடம் காலை டீ குடித்தவுடன் எல்லாச் செய்தி தாள்களையும் வாசித்து விடுவான். எப்போதாவது ஓய்வாக இருந்தால் ஓவியம் வரைவான். பள்ளிநாட்களில் இருந்து தொடரும் பழக்கமது. ஒவியம் வரைவதற்குப் பழகியதாலோ என்னவோ சின்னஞ்சிறு விஷயங்கள் கூட அவன் கவனத்தில் வந்துவிடுகின்றன. முகங்களை நினைவு கொள்வது எளிதாகயிருந்தது.

••

டெல்லியில் பத்திரிக்கையாளராக வேலைக்குச் சேர்ந்த நாள் முதல் நேற்று வரை ஆயிரம் பார்ட்டிகளுக்கு மேல் போயிருப்பான். தினமும் ஏதாவது ஒரு பார்ட்டி. யாராவது வம்பு வளப்பார்கள். பார்ட்டிக்கு போக வேண்டியது பத்திரிக்கையாளனின் வேலை. அங்கே தான் தனிப்பட்ட விஷயங்கள் எளிதாகக் கிடைக்கும். அரசியல்வாதிகளுடன் எளிதாகப் பேச முடியும். போதையேறியதும் பலரும் ரகசியங்களை எளிதாகப் பகிர்ந்து கொள்ளத்துவங்கிவிடுவார்கள். அவன் வெளியிட்ட பல செய்திகள் பார்டியில் கிடைத்தவையே. ஆனால் பார்ட்டி என்பது ஒரு புதைகுழி, அதற்குள் சிக்கிவிடாமல் காலூன்றுவது பெரிய சவால்.

அன்றிரவு பார்ட்டியில் திவாகரை கண்டதும் நிவாஸ் கைதூக்கி பெரிய கும்பிடு போட்டான். அது மிகவும் செயற்கையாக இருந்தது. எதற்கு ஒரு பத்திரிக்கையாளன் இப்படி நடிக்க வேண்டும். திவாகர் அவனைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் கையில் மதுவோடு நிவாஸ் அவன் அருகில் வந்து நின்று கேட்டான்

“உங்கள் பத்திரிக்கையின் துணை ஆசிரியர் அமைச்சருடன் ரோம் போகிறாராமே..“.

“இருக்கலாம் “என்றான் திவாகர்

“பட்டியலை பார்த்துவிட்டேன். அவரது பெயரும் இருக்கிறது. நானும் போகிறேன். ஒரு விஷயம் சொன்னால் ஆச்சரியப்படுவாய். முகர்ஜியும் வருகிறார். அவர் தான் குழுவின் தலைவர்“

“ முகர்ஜியா“ என வியப்போடு கேட்டான் திவாகர்

“ஏன் ஆச்சரியப்படுகிறாய். எல்லா மனிதர்களும் பலவீனமானவர்கள் தான். முகர்ஜியின் மகன் லண்டனில் ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொண்டுவிட்டான். அமைச்சர் தலையிட்டு பிரச்சனையை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டார். இனி முகர்ஜி எப்படிப் பேனாவை உயர்த்துவார். அவ்வளவு தான் அவரது வீராவேச எதிர்ப்பு அத்தியாயம் முடிந்துவிட்டது. இப்போது அரசின் புகழ்பாடும் பத்திரிக்கையாளர் அணிக்குத் தலைவராகிவிட்டார். உடனடி பலன் ரோம் பயணம்“

“பாவம் முகர்ஜி“ என்றான் திவாகர்.

“உன் நண்பனாகச் சொல்கிறேன். உன் பிடிவாதமான கொள்கைகளைத் தூக்கி எறிந்துவிட்டு நான் சொல்வது போலக் கட்டுரைகள் எழுது. இந்தப் பயணத்தில் உன் பேரையும் சேர்க்கச் சொல்லிவிடுகிறேன்“

“அதற்குப் பதிலாக ரோட்டில் பிச்சை எடுப்பேன்“ என்றான் திவாகர்

“கண்டிப்பாக ஒரு நாள் அந்த நிலைக்கு நீ தள்ளப்படுவாய். எனக்கு நன்றாகத் தெரியும். நீயில்லை. உன்னைப் போலப் பலமுட்டாள்களை உருவாக்கிய அன்வர் அலிக்கு என்ன நடந்தது தெரியும் தானே. ஒரு பத்திரிக்கையும் அவரைக் காப்பாற்றவில்லை. எத்தனை நீதிமன்ற வழக்குகள். அலைக்கழிப்பு. பாவம் அந்தக் கிழவர்“

“அன்வர்அலியை பற்றிப் பேசுவதற்கு உனக்கு யோக்கியதை கிடையாது“ என்றான் திவாகர்

“நல்லவேளை அவரிடம் நான் வேலை செய்யவில்லை. இல்லாவிட்டால் என் மூளையும் கெட்டுப்போயிருக்கும்“

“அவரிடம் நீ வேலைக்குச் சென்றிருந்தால் உன்னைக் கழுதையைப் போல நடத்தியிருப்பார்“. எனச் சிரித்தபடியே சொன்னான்

நிவாஸின் முகம் மாறியது. அவன் கோபத்துடன் இன்னொரு பெக் மதுவை எடுப்பதற்காகச் சென்றான். அப்போது அருகில் வந்த கமல்நாத் கேட்டான்

“அவனுடன் ஏன் வம்பு வழக்கிறாய். மிக மோசமான ஆள்“

“இவனை இப்படியே விடக்கூடாது“ என்று கோபமாகச் சொன்னான் திவாகர்

அன்று திவாகர் ஆறு ரவுண்ட் குடித்தான். போதையின் உச்சத்தில் அவன் நிவாஸை தேடிப் போனான்.

நிவாஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். தட்டில் கோழிக்கறியும் பிரியாணியும் சாலட்டும் இருந்தன. அப்படியே அந்தத் தட்டினை கீழே தட்டிவிட்டான் திவாகர், அத்துடன் பரிகாசமான குரலில் சொன்னான்

“தட்டில் வைத்துச் சாப்பிடுவது நாயின் பழக்கமில்லை, தரையில் சிந்தியதை நக்கி சாப்பிடு“

அதைக்கேட்ட நிவாஸ் அவனை அடிக்கக் கையை ஓங்கினான். திவாகர் விலகிக் கொள்ளவே காற்றில் கை வீசினான். ஆத்திரம் அதிகமாகவே மோசமான வசைகளைப் பொழிய ஆரம்பித்தான்.

திவாகர் அவன் மீது யாரோ குடித்து வைத்த மிச்சமதுவை ஊற்றினான். இருவரும் கட்டி உருண்டார்கள். யார் விலக்கிவிட்டது எனத்தெரியவில்லை.

எப்படி அறைக்கு வந்தான். எப்போது உறங்கினான் எதுவும் நினைவில் இல்லை

ஆனால் காலை பத்தரை மணிக்குக் கண்விழித்தபோது தலை கனமாக இருந்தது. அவன் மீது போலீஸில் புகார் கொடுத்திருந்தான் நிவாஸ். அன்வர் அலி தான் தலையிட்டு அவனைக் கேசிலிருந்து விடுவித்தார்.

••

பரோட்டா வந்தது. கூடவே சூடான சப்ஜி. பசியாக இருந்ததாலோ என்னவோ உணவின் ருசி அபாரமாக இருந்தது. சிறிய உணவகங்கள் ஏமாற்றுவதில்லை. பெரிய ஹோட்டல்களைத் தான் நம்பி சாப்பிடப் போக முடியவில்லை. அவன் ரொட்டியை அவசரமாகப் பிய்த்துச் சாப்பிட்டான். இன்னொரு மூலையில் டிரைவர் சாப்பிட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. தொலைவில் இடி இடிக்கும் ஓசை கேட்டது.. மழை வரக்கூடும். அதற்குள் விடுதி அறைக்குப் போய்விட்டால் நல்லது.

அவன் சாப்பிடுவதைக் கண்ட பூனை அருகில் வந்து நின்றது. ஒரு துண்டு ரொட்டியைப் பிய்த்துப் போட்டான். அதை முகர்ந்து பார்த்துவிட்டு வாலாட்டியபடியே சாப்பிடாமல் கடந்து போனது

என்ன எதிர்ப்பார்த்து வந்தது அந்தப் பூனை.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவனது செல்போன் அடித்தது. மறுமுனையில் ஷர்மிளா பாண்டே தான் பேசினாள்.

“உடனடியாகக் குவாலியர் போய் மேத்தா பாய் தனது நாய்களுக்கு ஆடம்பர திருமணம் செய்து வைப்பது பற்றிக் கவர் ஸ்டோரி எழுத வேண்டும்“ என்றாள்

“பர்காம்புரா குண்டுவெடிப்பு என்னாவது“ என்று கோபமாகக் கேட்டான் திவாகர்

“அதைவிடு. எல்லாப் பத்திரிக்கைகளும் எழுதி ஒய்ந்துவிட்டன. இனி யாரும் அதைப் படிக்க ஆர்வம் காட்டமாட்டார்கள். “

“உண்மையான குற்றவாளி யார் என்று நான் கண்டுபிடித்துவிட்டேன். ஆதாரங்கள் இருக்கிறது“ என்றான் திவாகர்.

“அதை அப்படியே தூக்கிப்போடு. நமது வேலை குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதி விசாரணை செய்வதில்லை. அது போலீஸ் டிபார்ட்மெண்ட் வேலை. நம் வேலை சுவாரஸ்யத்தைத் தருவது. ஊதிப்பெருக்கினால் தான் பலூனிற்கு அழகு. வெறும் பலூனைப் பார்க்கச் சகிக்காது “

“பின் எதற்காகப் பைத்தியக்காரன் போல நான் அலைந்து திரிய வேண்டும்“ என்று கோபமாகக் கேட்டான் திவாகர்

“நீ அன்வர் அலியின் தயாரிப்பு. இப்படித்தானிருப்பாய். உன்னோடு விவாதம் செய்ய விரும்பவில்லை. மேத்தா பாய் நாய்களுக்குத் திருமணம் செய்து வைக்கபோவது வேடிக்கையாக இருக்கும். நாய்களுக்குத் தனியே அலங்கார நகைகள் தயாரிக்கப்படுகிறதாம். நீ உடனே போய் மேத்தா பாயை இண்டர்வியூ எடு. நாய்களை நல்ல புகைப்படங்களாக எடுத்து அனுப்பு. சுவாரஸ்யத்தை உருவாக்கு திவா. “

“என்னால் போக முடியாது. “

“உன் விருப்பம் முக்கியமானதில்லை இது உத்தரவு.. “ என்று கறாரான குரலில் சொன்னாள் ஷர்மிளா

“நான் வேலையை ரிசைன் செய்துவிடுகிறேன்“ என்றான் திவாகர்

“சந்தோஷம்“ என்று ஏளனமாகச் சொன்னபடியே போனை வைத்தாள் ஷர்மிளா.

திவாகருக்கு ஆத்திரமாக வந்தது. பர்காம்புரா குண்டுவெடிப்பில் தான் சேகரித்த உண்மைகளை என்ன செய்வது. ஏன் ஒடி ஒடி உண்மைகளைக் கண்டறிந்தோம். உயிருள்ளவர்களுக்கே நீதி கிடைக்காத காலத்தில் இறந்தவர்களுக்காக யார் நீதி கேட்கப் போகிறார்கள். அநீதி தான் நம் காலத்தின் அடையாளமா.

வேலை போனதை விடவும் தன்னை ஒரு கரப்பான் பூச்சியைப் போல ஷர்மிளா நடத்தியதைத் தாங்க முடியவில்லை.

யாரோ ஒரு பணக்காரன் தனது நாய்களுக்குத் திருமணம் நடத்துவதைத் தன்னைப் போல ஒருவன் தேடிப் போய்க் கட்டுரை எழுத வேண்டுமா. எவ்வளவு இழிவான உத்தரவு. வேலை போனால் போகட்டும். பேசாமல் கொஞ்ச நாட்கள் ஊரில் போய் இயற்கை விவசாயம் செய்து பிழைக்கலாம் என்று யோசித்துக் கொண்டான்.

தொடர்ந்து சாப்பிட முடியவில்லை.

பரோட்டாவை அப்படியே வைத்துவிட்டு எழுந்து கொண்டான். வெளியே மழை துவங்கியிருந்தது. மனதிலிருந்த ஆத்திரம் அடங்கவில்லை.

வாசலில் வந்து நின்று ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டான்.

செய்திகளைத் துரத்திக் கொண்டேயிருப்பது அலுப்பாக இருந்தது. உண்மை யாருக்குத் தேவை. உண்மையைப் புதைப்பதற்குத் தான் எவ்வளவு ஏற்பாடுகள். தந்திரங்கள். அறிந்தே தான் மாயமானை துரத்திக் கொண்டிருக்கிறோம். செய்திகளின் பேராறு மக்களை அடித்துப் போகிறது. மரக்கட்டைகள் தண்ணீரில் செல்வது போல மக்கள் நடந்து கொள்கிறார்கள். சிறியதோ, பெரியதா எவரும் தன் தவறுகளை ஒப்புக்கொள்வதில்லை. அதை மறைப்பதற்காக எவ்வளவு பொய்யும் சொல்லத் தயார் ஆகிவிட்டார்கள். அச்சிடப்பட்ட பொய்கள். காட்சிகளாக மாறும் பொய்கள். நாம் அலங்கரிக்கப்பட்ட பொய்களை நம்புகிறோம். பொய்களை விற்கிறார்கள். தானும் அதற்கு ஒரு மறைமுக உடந்தையே.

யோசிக்க யோசிக்க மனதில் குழப்பமும் ஆற்றாமையும் தான் கூடிக் கொண்டிருந்தது.

அப்போது தாபாவை நோக்கி ஒரு அம்பாசிடர் கார் வருவது போலத் தெரிந்தது. சாரலின் ஊடே அந்தக் கார் தெளிவற்றுத் தெரிந்தது.

அந்தக் காரிலிருந்து மூன்று பேர் இறங்கினார்கள். அதில் ஒருவனை வக்கீல் ஷியாம் பிரசாத் வீட்டில் பார்த்தது போல இருந்தது. அவன் தானா எனச் சரியாகத் தெரியவில்லை. திவாகர் சிகரெட்டை ஊதியபடியே தனது காரை நோக்கி நடந்தான். அவர்கள் தன்னை நோக்கித்தான் வருகிறார்கள் என்று அவன் அறியவில்லை. தனது டிரைவரை அழைப்பதற்காகத் திவாகர் திரும்பிப் பார்த்தான்.

ஷியாம்பிரசாத் வீட்டில் பார்த்தவனின் கையில் பெரிய உருட்டுக்கட்டை ஒன்றிருப்பது கண்ணில் பட்டது.

ஏதோ நடக்கப்போகிறது எனத் திவாகர் சுதாரிப்பதற்குள் அவன் மீது உருட்டுக்கட்டையால் ஒருவன் தாக்கினான். தலையில் பலமாக அடி விழுந்தது. திவாகர் ரத்தம் வடிவதை உணர்ந்து ஓட முயன்றான். ஆனால் அவர்கள் சுற்றிலும் வளைந்து கொண்டார்கள். திவாகர் கூக்குரலிட்டபோது மூன்று பேரும் அவனைப் பலமாகத் தாக்க ஆரம்பித்திருந்தார்கள். திவாகர் போராடினான். ஒருவன் பியர் பாட்டிலை உடைத்து அவன் அடிவயிற்றில் சொருகினான். திவாகரால் வலியைத் தாங்கமுடியவில்லை. பலமாக ஓலமிட்டான்.

திவாகரின் குரல் மழைக்குள் கரைந்து ஒடிக் கொண்டிருந்தது

•••

.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 26, 2021 18:38

கதை சொல்லும் புகைப்படங்கள்.

To me taking pictures means discovering rhythms, lines in reality. The eye does the framing, and the camera does the work. You see a photograph all at once, like the painting. – Henri Cartier-Bresson

உலகப்புகழ் பெற்ற புகைப்படக்கலைஞர் ஹென்றி கார்டியர்-ப்ரெஸன் குறித்த impassioned eye என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன்.

நம் எல்லோர் கையிலும் செல்போன் உள்ளது. அதைப் பயன்படுத்தி நாள் முழுவதும் புகைப்படம் எடுத்தபடியே இருக்கிறோம். ஒரு நாளில் கோடிக்கணக்கான புகைப்படங்கள் எடுக்கபடுகின்றன. அதுவும் செல்பி எடுத்துக் கொள்ளும் மோகம் அதிகமான பிறகு தன்னை தானே ரசிக்கத்துவங்கி தினமும் பல புகைப்படங்களை எடுத்து வைத்துக் கொள்கிறார்கள். புகைப்படம் எனும் அரிய கலை மலினப்படுத்தபட்டுவிட்டது. இணையத்தில் ஒரு நாளில் இரண்டு கோடி புகைப்படங்கள் பதிவேற்றப்படுகின்றன என்கிறார்கள்.

முந்தைய காலம் போல இன்று ஸ்டுடியோக்கள் கிடையாது. லேப் கிடையாது. எடுத்த புகைப்படத்தைக் கழுவி காயவைத்து பிரிண்ட் போட காத்திருக்க வேண்டியதில்லை. பிரபலமான பிலிம்ரோல் தயாரிக்கும் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. டிஜிட்டில் வந்தபிறகு புகைப்படம் எடுப்பது செலவில்லாத வேலையாகிவிட்டது. ஆனாலும் மிகச்சிறந்த புகைப்படக்கலைஞர்கள் இன்றும் அரிய புகைப்படங்களை எடுக்கிறார்கள். இதற்காக நாட்கணக்கில் மெனக்கெடுகிறார்கள். சிறந்த புகைப்படங்களை எடுக்க காத்துக்கிடக்கிறார்கள். சர்வதேச அளவில் விருதும் அங்கீகாரமும் பெறுகிறார்கள்.

கேமிரா பொய் சொல்லாது என்பது மறைந்து போய் கேமிரா தான் அதிகம் பொய் சொல்கிறது என்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சென்ற தலைமுறையின் அரிய புகைப்படக்கலைஞர்கள் எடுத்த புகைப்படங்களே இன்று வரலாற்றின் சாட்சியங்களாக உள்ளன. அது குடும்ப வரலாறாக இருந்தாலும் தேசத்தின் வரலாறாக இருந்தாலும் ஒன்று தான். புகைப்படம் எடுத்துக் கொள்வது ஏழை எளியவர்களுக்கு இயலாத காரியம் என்பதை டிஜிட்டல் மாற்றியிருக்கிறது என்பது உண்மையே. டிஜிட்டல் கேமிரா என்பது தொழில் நுட்ப வளர்ச்சி. அதன் பின்னுள்ள கலைஞனும் அவனது ஈடுபாடுமே முக்கியமானது.

நாளிதழ்கள் வார இதழ்கள் ஒரு காலத்தில் புகைப்படக்கலைஞர்களை தான் பெரிதும் நம்பியிருந்தன. அந்த நாட்களில் மிகச்சிறந்த புகைப்படக்கலைஞர்கள் உருவானார்கள். சாமானிய மக்களை அழகாகப் படம் பிடித்தார்கள். அன்றாட வாழ்வின் தருணங்களைப் பதிவு செய்தார்கள் இதில் முக்கியமானவர் ஹென்றி கார்டியர்-ப்ரெஸன்

இந்த ஆவணப்படத்தில் அவர் காந்தியைச் சந்தித்த நிகழ்வினைப் பற்றிக் கூறுகிறார். காந்தி சுடப்பட்டு இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்புப் ப்ரெஸன் அவரைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தார். இந்தியப்பிரிவினைத் தொடர்ந்து ஏற்பட்ட மதக்கலவரம் பற்றி நேரடி செய்தி சேகரிப்பிற்காக மேக்னம் ஏஜென்சி ப்ரெஸனை இந்தியாவிற்கு அனுப்பி வைத்திருந்தது.

அவரது மனைவி ரத்னா மோகினி நேருவின் தங்கை விஜயலட்சுமி பண்டிட்டின் தோழியாக இருந்த காரணத்தால் அவரால் உடனடியாகக் காந்தியைச் சந்தித்துப் பேச முடிந்தது.

அவர் பிர்லா மாளிகையில் காந்தியைச் சந்தித்து உரையாடியதோடு தனது புகைப்படங்களின் தொகுப்பினை அவரிடம் காட்டினார். மறுநாள் காந்தியைப் புகைப்படம் எடுப்பதாகத் திட்டம்.

ப்ரெஸன் காட்டிய ஆல்பத்தில் இருந்த ஒரு புகைப்படத்தைக் காந்தி வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தார். பின்பு ப்ரெஸனிடம் இந்தப் புகைப்படத்திற்கு என்ன அர்த்தம் என்று கேட்டார். ப்ரெஸன் அந்தப் புகைப்படம் எங்கே எடுக்கப்பட்டது. என்ன பொருள் என்று விளக்கியபோது அதைப் புரிந்து கொண்ட காந்தி மரணம் பற்றி உரையாடினார். அது தான் காந்தி பேசிய கடைசி உரையாடல். பின்பு ப்ரெஸனிடம் விடைபெற்றுக் கொண்டு காந்தி பிரார்த்தனைக்குச் சென்றார். அங்கே அவர் சுடப்பட்டார். தன்னுடைய மரணத்தை முன்னறிந்து கொண்டவர் போலக் காந்தி தன்னிடம் பேசினார் என்கிறார் ப்ரெஸன்.

காந்தியின் இறுதி நிகழ்வுகளை முழுமையாகப் ப்ரெஸன் புகைப்படம் எடுத்திருக்கிறார். காந்தியின் உடல் வைக்கப்பட்டிருந்த அறையை, அங்கு நடந்த நிகழ்வுகளைத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார். காந்தியின் கடைசி ஊர்வலத்திற்குத் திரண்டு வந்த மக்கள் திரளை. அவர்களின் உணர்ச்சிப்பூர்வமான அழுகையை ஆவணப்படுத்தியிருக்கிறார். காந்தியின் சிதைக்குத் தீயூட்டப்பட்டபோது அந்த நெருப்பு தன் விரலில் படும் அளவு நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்திருக்கிறார். காந்தி அஸ்தியைக் கங்கையில் கரைந்த போதும் ப்ரெஸன் புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். அவை மறக்கமுடியாத புகைப்படங்கள். இந்த ஆவணப்படத்தில் அந்த அபூர்வமான தருணத்தை நினைவு கொள்கிறார் ப்ரெஸன்

காந்தியின் மரணம் குறித்து நேரு அறிவிக்கும் தருணத்தை ப்ரெஸன் புகைப்படம் எடுத்திருக்கிறார். அதி அற்புதமான புகைப்படமது.

1947ல் துவங்கி ஆறுமுறை இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ப்ரெஸன் எட்வினா மவுண்ட்பேட்டனுடன் நேரு நெருக்கமாகச் சிரித்தபடியே நிற்கும் புகைப்படத்தை எடுத்துப் பரபரப்பை ஏற்படுத்தினார். திருவண்ணாமலைக்கு வந்து ரமணரைப் புகைப்படம் எடுத்துள்ளார் ப்ரெஸன். இந்த ஆவணப்படத்தில் ரமணரின் கடைசி நிமிஷங்கள் பற்றிய பதிவும் இடம்பெற்றுள்ளது.

ப்ரெஸன் எடுத்த புகைப்படங்கள் வரலாற்றின் சாட்சியமாகத் திகழுகின்றன. இந்தப் புகைப்படங்களைக் காணும் போது ஓவியத்தின் மீது ப்ரெஸனுக்கு இருந்த ஆர்வமும் ஈடுபாடுமே அவரை மிகச்சிறந்த புகைப்படக்கலைஞராக மாற்றியிருக்கிறது என்பதை உணர முடிகிறது.

தன் முதுமையில் அவர் புகைப்படம் எடுப்பதை விட்டுவிட்டு முழுநேரமாக ஓவியம் வரைவதிலே ஈடுபட்டார்.

இந்த ஆவணப்படத்தினைக் காணும்போது ப்ரெஸன் எத்தனை நாடுகளைச் சுற்றியிருக்கிறார். எவ்வளவு மாறுபட்ட மனிதர்களைச் சந்தித்திருக்கிறார். இந்த நூற்றாண்டின் அத்தனை பிரபலங்களையும் நேரில் சந்தித்துப் புகைப்படம் எடுப்பது எவ்வளவு அதிர்ஷ்டம் என வியப்பு ஏற்படுகிறது.

தனது கேமிரா எல்லா மொழிகளும் பேசக்கூடியது. காரணம் அது மௌனமானது என்று வேடிக்கையாகச் சொல்கிறார் ப்ரெஸன்

மெக்சிகோ, அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா, ஆப்ரிக்கா ஆசியா, ஐரோப்பா என அவர் பயணித்து எடுத்த புகைப்படங்கள் அந்தத் தேசத்தின் சமூகப் பண்பாட்டு அடையாளங்களை, அதன் உண்மையான நெருக்கடிகளை, கொந்தளிப்புகளைப் பதிவு செய்திருக்கிறது. மறைக்கப்பட்ட,விலக்கப்பட்ட உண்மைகளின் தொகுப்பு போலவே அவரது புகைப்படங்கள் இருக்கின்றன.

இந்த ஆவணப்படத்தில் வயதான ப்ரெஸன் தன் இளமைக்கால நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார். அவர் எடுத்த புகைப்படங்களைக் காட்டி அதை எங்கே எப்போது எடுத்தேன் என்பதை நினைவுகூறுகிறார். அவரது புகைப்படங்கள் குறித்துச் சக புகைப்படக்கலைஞர்களின் நேர்காணல்களும் நாடக ஆசிரியர் ஆர்தர் மில்லரின் நேர்காணலும் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

பிரபலமான கலைஞர்கள், எழுத்தாளர்கள், நடனக் கலைஞர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள், நாடக எழுத்தாளர்களைப் புகைப்படம் எடுத்துள்ள ப்ரெஸன் அவர்களின் நெருக்கமான நண்பராகவும் இருந்திருக்கிறார்.

ஆல்பர்ட் காம்யூ, ட்ரூமன் கபோட், மர்லின் மன்றோ போன்றவரை ப்ரெஸன் எடுத்துள்ள புகைப்படங்கள் அபரமானவை.

இந்தியாவைப் பற்றி ப்ரெஸன் எடுத்துள்ள புகைப்படங்களில் அன்றைய இந்தியாவின் நிஜமான சித்திரம் பதிவாகியிருக்கிறது. குறிப்பாக அகதி முகாம்களைப் பற்றி அவரது புகைப்படங்கள் வரலாற்றின் அரிய ஆவணங்கள் என்றே சொல்வேன்.

பிரபல நாடக ஆசிரியர் ஆர்தர் மில்லர் தனது போருக்குப் பிந்தைய புகைப்படங்களைப் பற்றி எழுதும் போது ப்ரெஸன் எடுத்துள்ள புகைப்படங்கள் நம்மைக் கேள்வியைக் கேட்கின்றன: இந்தத் தேசத்தின் அடுத்த அத்தியாயம் என்னவாக இருக்கும்? அடுத்து எங்கே போவோம்? என்ற கேள்வியை எழுப்புகின்றன. அமெரிக்காவின் மனசாட்சியை நோக்கி இந்தக் கேள்வியை எழுப்பியது தான் ப்ரெஸனின் தனித்துவம் என்கிறார்.

கார்டியர்-ப்ரெஸனின் தாத்தா ஒரு தொழிலதிபர்; ஆகவே அவர் வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். ஒரு கத்தோலிக்கப் பள்ளியில் படித்தார். பின்பு கல்லூரி படிப்பின் போது தொடர்ந்து தோல்வியடைவே ஓவியக் கலைஞராக மாற முடிவு செய்தார். ஓவியம் பயிலுவதற்கான ஆண்ட்ரே லாட்டின் மாணவரானார், அவர் கிராஃபிக் வடிவங்களைப் ப்ரெஸனிற்குக் கற்றுக் கொடுத்தார்.

1929 இல் சர்ரியலிசம் மேலோங்கியிருந்த பாரீஸ் நகரில் அந்த ஓவியர்களுடன் இணைந்து கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார் ப்ரெஸன் அமெரிக்கக் கவிஞர் ஹாரி கிராஸ்பி தான் அவரைப் புகைப்படக்கலையை நோக்கி தூண்டியவர். புகைப்படங்கள் எடுக்க துவங்கி அதில் தீவிரமாகச் செயல்பட்ட ப்ரெஸன் ஒரு ஆண்டுக் காலம் மெக்ஸிகோவில் கழித்தார், அங்கேயுள்ள விபச்சார விடுதிகளையும் தெரு வாழ்க்கையையும் படமாக்கினார். அவரது புகைப்படங்கள் புகழ்பெறத் துவங்கின.

உன் கண்களைக் காப்பாற்றிக் கொள் என்று அவர் ஒரு புகைப்படக்கலைஞருக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார். அது என்றைக்கும் பொருத்தமான அறிவுரையே

புகைப்படக்கலையில் புகழ்பெற்ற பிறகு திரைக்கலையின் மீது ஈடுபாடு வந்து எடிட்டிங் கற்றுக் கொண்டு திரைத்துறையில் பணியாற்றத் துவங்கினார். ஜாவாவைச் சேர்ந்த நடனக்கலைஞரான ரத்னா மோகினியின் அழகில் மயங்கி அவரைக் காதலித்த ப்ரெஸன் பின்பு அவரையே மணந்து கொண்டார்.

மே 1940 இல், அவர் பிரெஞ்சு இராணுவத்தில் சேர்ந்தார், ஒரு மாதத்திற்குப் பிறகு ஜெர்மானியர்களால் கைது செய்யப்பட்டார். அவர் அடுத்த மூன்று ஆண்டுகளை நாஜி முகாம்களில் கழித்தார், பின்பு அங்கிருந்து தப்பிப் போலி ஆவணங்களைப் பயன்படுத்திப் பாரீஸில் வாழ்ந்தார், வாழ்நாள் முழுவதுமே நான் ஒரு தப்பியோடிய கைதியாகவே உணருகிறேன் என்று ப்ரெஸன் கூறுகிறார்

போர்க் கைதிகள் மற்றும் கட்டாய உழைப்புக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் பற்றிய ஆவணப்படத்தைப் படமாக்க 1945ல் நீண்ட பயணத்தை ப்ரெஸன் மேற்கொண்டார். அதில் எடுத்த சிறந்த புகைப்படங்களை இந்த ஆவணப்படத்தில் விளக்கிச் சொல்லுகிறார்.

ப்ரெஸன் தன் காதல் மனைவி ரத்னாவை அழைத்துக் கொண்டு பின்னர்ப் பாகிஸ்தான், மியான்மார், மலாயா, சீனா ஆகிய நாடுகளுக்குச் சென்று புகைப்படங்கள் எடுத்திருக்கிறார்.

நல்ல புகைப்படம் என்பது கதை சொல்லக்கூடியது. அதைக் காணும் ஒவ்வொருவரும் தானாகக் கதை சொல்லத்துவங்கிவிடுவார்கள். அப்படியான புகைப்படங்களைத் தான் ப்ரெஸன் எடுத்திருக்கிறார் என்கிறார் எலியட் எர்விட்

இந்த ஆவணப்படத்தில் பாக், மொஸார்ட், ராவலின் இசை கூடவே ஒலித்துக் கொண்டிருக்கிறது. இசையோடு இணைந்தே தனது எண்ணங்களை ப்ரஸன் வெளிப்படுத்துகிறார்.

1954 ஆம் ஆண்டில், ஸ்டாலின் இறந்த பிறகு ரஷ்யாவிற்குள் செல்ல, அனுமதி பெற்ற முதல் வெளிநாட்டுப் பத்திரிகையாளர் கார்டியர்-ப்ரெஸன் மட்டுமே,

நான் ஒரு பூனை ஆம். ஒரு நாயைக் கீழ்ப்படிய வைக்கமுடியும் ஆனால் பூனை எந்த அதிகாரத்திற்கும் கட்டுப்படாது, பூனைகளை அடக்க முடியாது. பூனைகள் தன் விருப்பத்தின் பாதையில் சுற்றியலைக்கூடியவை என்கிறார் ப்ரெஸன்

புகைப்படம் எடுக்கவுள்ளவருக்குத் தன் முன்னே கேமிரா இருக்கிறது என்ற உணர்வு தோன்றாதபடி புகைப்படக்கலைஞர் செயல்பட வேண்டும். அப்போது தான் நல்ல புகைப்படத்தை எடுக்க முடியும் என்கிறார்.

மனதையும் கண்ணையும் ஒரே கோட்டில் ஒன்றிணைக்கும் போது தான் சிறந்த புகைப்படம் உருவாகிறது. படப்பிடிப்பின் போது நீங்கள் ஒருபோதும் சிந்திக்க வேண்டியதில்லை. அதற்கு முன்னும் பின்னும் நீங்கள் சிந்திக்க வேண்டும். நிறையப் புகைப்படம் எடுக்க வேண்டிய அவசியமில்லை. புகைப்படம் நிறைய எடுத்து வீணாக்காதீர்கள். அதிகமாகச் சாப்பிடுவது வாந்தி எடுக்கவே வைக்கும்

கேமிரா என்பது உங்கள் கழுத்தில் தொங்கும் அழகான மற்றும் விலையுயர்ந்த பதக்கம் அல்ல. உங்கள் கேமிரா உங்களுடைய உடலின் ஒரு பகுதியாகும். மனதின் ஒரு பகுதியாகும். அதை ஒரு போதும் மறக்காதீர்கள். என்கிறார் ப்ரெஸன்

விலை உயர்ந்த கேமிரா கையில் இருப்பதால் மட்டும் நல்ல புகைப்படத்தை எடுத்துவிட முடியாது. ப்ரெஸன் 1932 முதல் மற்றும் அவரது படைப்பு வாழ்க்கை முழுவதும், 50 மிமீ லென்ஸுடன் சிறிய, எளிய லைக்கா 35 மிமீ கேமிரா மூலம் படப்பிடிப்பு நடத்தி வந்திருக்கிறார். அவரது கறுப்பு வெள்ளைப் புகைப்படங்கள் அபாரமானவை.

ஒரு தீர்க்கமான தருணத்தைக் கைப்பற்றுவதே புகைப்படக்கலைஞரின் இலக்கு. அதற்காகப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். அப்படியான தருணங்களையே தனது சிறந்த புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன என்கிறார்.

பிரபலங்களையும் எளிய மனிதர்களையும் ஒன்று போலத் தான் ப்ரெஸன் படமாக்கியிருக்கிறார். உணர்வுப்பூர்வமான வெளிப்பாடு தான் அவரது தனித்துவம்.

இந்த ஆவணப்படத்தில் ஒவியக்கூடத்திற்குச் சென்று தான் சிறுவயதில் பார்த்து ரசித்த ரூபனின் ஓவியங்களை ரசித்து வியக்கிறார் ப்ரெஸன். அத்துடன் ஓவியம் வரைவதற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் மற்றும் அவர் தீட்டிய நீர்வண்ண ஓவியங்களைக் காணுகிறார். புகைப்படத்தால் ஒரு போதும் ஓவியத்தை வெல்லமுடியாது என்று ஒரு காட்சியில் சொல்கிறார் ப்ரெஸன்.

I think photographs should have no caption, just location, and date. Date is important because things change. என ப்ரெஸன் சொல்வது உண்மையான விஷயம்.

வண்ணப்புகைப்படங்களை விடவும் கறுப்பு வெள்ளையைத் தான் அதிகம் விரும்புகிறேன். நம் நினைவுகளின் நிறம் அதுவே என்கிறார் ப்ரெஸன். இலக்கியத்திலும் ஓவியத்திலும் தீவிர ஈடுபாடு கொண்டவரால் தான் இப்படிப் பேச முடியும்.

••

2 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 26, 2021 05:58

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.