S. Ramakrishnan's Blog, page 132
May 13, 2021
கலைஞனின் காத்திருப்பு
கைதட்டுகள் போதும் – சிறுகதை வாசிப்பனுபவம்
தயாஜி – மலேசியா

கதை தொடங்கிய இடத்திலேயே முடிகிறது. அதற்குள் ஒரு கலைஞனின் இழப்புகளை பதிவு செய்துள்ளார் எஸ்.ரா. ‘கைதட்டுகள் போதும்’ என்று தலைப்பை வாசித்து கதைக்குள் நுழைந்தேன். ஆனால், ‘கைதட்டல் போதுமா?’ என்கிற கேள்வியோடு சிறுகதையை வாசித்து முடித்தேன்.
கலை மீதான ஆர்வம் ஏதோ ஒரு வயதில் எவருக்கும் ஏற்படக்கூடியதுதான். சிலர் அதற்காகவே பிறந்தவர்கள் போலவும் பிரகாசிப்பார்கள். சிலர் துரதிஷ்டவசமாக காணாமல் போய்விடுவார்கள். இப்படி பிரகாசிப்பவர்களும் காணாமல் போகிறவர்களும் சரி, தத்தம் குடும்ப வாழ்வில் எத்தனையோ இழப்புகளை சந்திக்கும்படி ஆகிறது. கலையின் வெற்றி பலரையும் அனாதையாக்கியிருக்கிறது. நாம் நேசிக்கும், நாம் நம்பும் கலை உலகில் ஏதோ ஒரு மூலையில் இருந்து யாரோ ஒருவரை நமக்கருகில் அழைத்து வருகிறது. ஆனால் நம் பக்கத்தில் இருக்கும் பலரையும் தொலைத்து விடுகிறது.
இக்கதை அப்படியான கலையில் ஈடுபாடு காட்டி கைதட்டலில் கிரங்கிய மனிதனை பேசுகிறது. அவனை கிரங்கடித்த கைதட்டல்களால் அவன் இழந்தது அவனது வாழ்க்கையை.
ரங்கசாமி வீட்டில் கதவுகள் இல்லை என்றும் அதற்கான அவசியம் இல்லை என்றும் கதை தொடங்குகின்றது. யார் இந்த ரங்கசாமி என்கிற கேள்விக்கு அடுத்தடுத்து பதில்களைக் கொடுத்து கதையை நகர்த்துகின்றார்.
சர்க்கஸில் வேலை செய்த ரங்கசாமியிடம் இப்போது ஒற்றைச் சக்கரம் கொண்ட சைக்கிள் மட்டுமே இருக்கிறது. இந்த ஒற்றை சக்கர சைக்கிள் ரங்கசாமியின் வாழ்க்கையை பிரதிபலிப்பும் குறியீடாகவே பார்க்கிறேன். சர்க்கஸில் இருக்கும் வரைதான் அந்த சைக்கிளுக்கு பாராட்டுகள், பார்ப்பவருக்கு பரவசங்கள் எல்லாம். ஆனால் அதுவே வீட்டு வாசலில் சாய்ந்துக் கிடந்தால் யாருக்குத்தான் பரவசத்தைக் கொடுக்கும், யார்தான் வந்து பாராட்டிவிட்டுப் போவார்கள். யோசிக்கையில் சர்க்கஸில் கூட இதைவிட சாகசம் காட்டும் வேறொரு சைக்கிள் வந்துவிட்டால் இந்த ஒற்றை சக்கர சைக்கிளுக்கு மதிப்பேது. அதன் எல்லை அதை விட அதிகம் பரவசமூட்டும் வேறொரு சைக்கிள் வருவரைதானே.
ஊரில் வேலை இல்லாமல் வெளியேறிய ரங்கசாமி சர்க்கஸில் சேர்கிறார். அங்கு ரங்கா என்ற பெயரில் பல சாகசங்களைச் செய்கிறார். தனித்து அறியப்படுகின்றார். அவரை மையப்படுத்தியே விளம்பரங்களும் செய்யப்படுகின்றன. பதினெட்டு வயதிலேயே திருமணம் ஆகியிருந்தது. குழந்தையும் பிறந்தது. தன் அம்மாவின் பெயரையே குழந்தைக்கும் வைத்து மகிழ்கிறார். இருந்தும் வேலை ஏதுமில்லாமல் அங்கு இருக்கு முடியாமல்தான் யாருக்கும் தெரியாமல் வெளியேறினார். சர்க்கஸில் அவருக்கான முக்கியத்துவமும் அவருக்கு கிடைத்த கைதட்டல்களும் அவரை அதில் முழுமையாக ஈடுபட வைக்கிறது. ஆண்டுகள் கடக்கின்றன.
அதற்கிடையில் ரங்காவை ஒரு மருத்துவர் சந்தித்து விருந்துக்கு அழைக்கின்றார். அங்கு மருத்துவரின் மகள் ரங்காவைப் பார்த்து உற்சாகமாகிறார். அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார். அங்கு நடந்தது ரங்காவிற்கு அவரின் மனைவி பிள்ளையை நினைவுப்படுத்துகிறது.
இருந்தும் சந்தர்ப்ப சூழலால் ஒரு மாதம் கழித்தே சொந்த ஊர் செல்கிறார். அங்கே மனைவியும் மகளும் இல்லை. அவர்கள் ஊருக்கு சென்று மூன்றாண்டுகளுக்கு மேலாகிறது என தெரிந்துக் கொள்கிறார். அவர்கள் சென்றிருக்கும் ஊருக்கு ரங்காவும் செல்கிறார். இவரைப் பார்த்ததும் யாரும் மகிழ்ச்சியடையவில்லை. வெறுப்பையே காட்டுகிறார்கள். மனைவி மட்டுமல்ல மகளும்தான். அவருக்கு அவர்களுடன் வாழ்வதற்கு வாய்ப்பு இருக்கவில்லை. மன கவலையுடன் மீண்டும் சர்க்கஸ்க்கு செல்கிறார். அவரால் பழையபடி எந்த சாகசத்திலும் ஈடுபாடு காட்ட முடியவில்லை. மனைவியும் மகளும் தன்னை வெறுத்து ஒதுக்கியதையே மீண்டும் மீண்டும் நினைக்கிறார். அவரை இதுநாள் வரை அங்கு நிறுத்தி வைத்த கைதட்டல்களும் பாராட்டுகளும் அவருக்கு வெறுமையைக் கொடுக்கின்றன. சர்க்கஸ்க்கு விடைகொடுத்து அந்த ஒற்றை சக்கர சைக்களுடன் ஊர் திரும்புகிறார்.
தினமும் மனைவி மகள் கண்ணில் படும்படி ஏதேதோ செய்கிறார். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. இனியும் அவர்களை தொல்லை செய்ய கூடாது என முடிவெடுக்கின்றார்.
எதனால் தன் மனைவியும் மகளும் தன்னை வெறுக்கிறார்கள் என முழுமையாக உணர்ந்து வருந்துகின்றார். என்றாவது அவர்கள் மனம் மாறும் எனவும் ஒரு நாள் அவர்கள் தன்னைத் தேடி வருவார்கள் எனவும் நம்புகிறார். அவர்கள் வரும் போது கதவு மூடியிருக்கக்கூடாது என்றே கதவை பிடுங்கியும் வைக்கிறார்.
காத்திருப்பு மட்டுமே காயங்களை மறக்கச்செய்யும் , உறவுகளை சேர்த்து வைக்கும் என்கிற நம்பி நாட்களை கடக்கிறார்.
நாம் எதை நம்புகிறோம். எதில் மயங்குகிறோம். எதையெல்லாம் இழக்கிறோம் என்கிற கேள்விகளை வாசகர்களுக்கு ஏற்படுத்துகிறது. அதையொட்டிய ஒரு எச்சரிக்கையையும் இக்கதை கொடுக்கின்றது.
**
May 12, 2021
ஆனந்த விகடனில்
இன்று வெளியாகியுள்ள ஆனந்த விகடனில் காருகுறிச்சி அருணாசலம் அவர்கள் குறித்த சிறப்புக் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறேன்.
ஹெமிங்வேயின் முகங்கள்
ஹெமிங்வேயின் மூன்று நாவல்களும் பதினைந்து சிறுகதைகளும் தமிழில் வெளியாகியுள்ளன. அவரது Death in the Afternoon A Moveable Feast கட்டுரைத் தொகுப்பு மற்றும் The Sun Also Rises. Green Hills of Africa போன்ற நாவல்கள் இதுவரை தமிழில் வெளியாகவில்லை. ஐம்பதுகளில் ஹெமிங்வே பற்றிய கவனமும் உரையாடலும் தமிழ் இலக்கிய வெளியில் அதிகமிருந்தது. சி.சு.செல்லப்பா தோற்காதவன் என்ற ஹெமிங்வே குறுநாவலை மொழியாக்கம் செய்திருக்கிறார்.
இன்றைய தமிழ்ச் சூழலில் ஹெமிங்வேயை நினைவு கொள்பவர்கள் குறைவு. ஆனால் சர்வதேச அளவில் இன்றும் அவர் ஒரு மாஸ்டராகவே கொண்டாடப்படுகிறார். ஆண்டுத் தோறும் புதிய பதிப்புகள் வெளியாகின்றன. அவரது கதைகளைப் பல்வேறு மொழிகளில் திரைப்படமாக எடுக்கிறார்கள். கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், லோசா, முரகாமி உள்ளிட்ட பலரும் தங்களின் ஆசான் என்று கொண்டாடுகிறார்கள்.
[image error]சமீபத்தில் ஹெமிங்வே பற்றிய ஆவணப்படத்தொடரைப் பார்த்தேன். கென் பர்ன்ஸ் மற்றும் லின் நோவிக் இணைந்து இயக்கிய ஆவணப்படமான ஹெமிங்வே மூன்று பகுதிகள் கொண்டது., ஆறு மணி நேரம் ஓடக்கூடியது. ஒரு எழுத்தாளரை எப்படி ஆவணப்படுத்த வேண்டும் என்பதற்குச் சிறந்த உதாரணம் இந்தப்படம். இதற்கு முன்பாக ஹெமிங்வே பற்றிய சில ஆவணப்படங்களையும் முழுநீள திரைப்படங்களையும் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தத் தொடரைப் போல அவரது வாழ்க்கையை முழுமையாகப் பதிவு செய்த படம் கிடையாது
ஏன் தலைமுறைகளைக் கடந்து மீண்டும் மீண்டும் ஹெமிங்வே பேசப்படுகிறார். அவரது எழுத்துகள் வாசிக்கப்படுகின்றன என்பதற்கான பதிலாகவே இந்த ஆவணப்படம் அமைந்திருக்கிறது. ஹெமிங்வேயின் காலம் துவங்கி இன்று வரை அவரது எழுத்தின் பாதிப்பில்லாத படைப்பாளிகளை அமெரிக்காவில் காணமுடியாது என்கிறார் விமர்சகர் எட்மண்ட். அமெரிக்கச் சிறுகதையின் வடிவத்தையும் சொல் முறையினையும் மாற்றியதில் ஹெமிங்வேயிற்கு முக்கியப் பங்கு இருக்கிறது.
[image error]சிறிய நிகழ்ச்சிகளின் வழியே தான் அவர் கதையை எழுதுகிறார். மரச்சிற்பம் செய்வது போல மொழியைச் செதுக்கிச் செதுக்கி கதையை உருவாக்குகிறார். அவரது கையெழுத்துப் பிரதிகளைக் காட்டுகிறார். எவ்வளவு திருத்தங்கள். பெரும்பான்மை கதைகளில் மதுவிடுதி இடம்பெறுகிறது. குடிக்கிறார்கள். பேசுகிறார்கள். காத்திருக்கிறார்கள். அல்லது வேட்டையாடுகிறார்கள். அமெரிக்காவின் அன்றாட வாழ்க்கையை அவரது கதைகளில் காணமுடியாது. மாறாக அவர் சாகசக்காரனின் வாழ்க்கையைத் தான் விவரிக்கிறது. இந்தச் சாகசம் வேட்டையாக இருக்கலாம் அல்லது காதலாகவும் இருக்கலாம்.
அவரது சிறுகதைகளில் உள்ள கச்சிதம் மற்றும் தேர்ந்த உரையாடல்கள் கதையை மிகச் சிறந்த அனுபவமாக மாற்றுகின்றன. தன் சொந்தவாழ்க்கையின் நிகழ்வுகளிலிருந்தே ஹெமிங்வே அதிகக் கதைகளை எழுதியிருக்கிறார். அவருக்கு விருப்பமான ஓவியரான செசான் போலவே ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்ப முனைந்திருக்கிறார். செசானின் இயற்கைக் காட்சிகள் மற்றும் பழங்களின் சித்திரங்கள் ஒரு காட்சியை வேறுவேறு கோணத்தில் அணுகுகின்றன. அது தான் எனது எழுத்தின் அடிப்படை என்கிறார் ஹெமிங்வே.

நிக் ஆடம்ஸ் கதைகள் யாவும் ஹெமிங்வேயின் சொந்த அனுபவங்கள். தனது தந்தை பற்றிய நினைவுகளைச் சில கதைகளில் அழகாகப் பதிவு செய்திருக்கிறார். ஹெமிங்வேயின் தந்தை கண்டிப்பானவர். மனநலப்பிரச்சனை கொண்டவர். அவரது மனநிலை எப்போது உக்கிரமாகும் என்று தெரியாது. ஆகவே அது போன்ற நேரத்தில் பிள்ளைகளைக் கடுமையாக அடிப்பார். கோவித்துக் கொள்வார். அம்மா தான் அவரது ஒரே ஆதரவு.
அவரையும் அவரது சகோதரியினையும் ஒன்று போல உடை உடுத்தி ஒன்று போல விளையாடச் செய்திருக்கிறார் அம்மா. பழைய புகைப்படங்களில் இருவரும் ஒன்று போலவே தோன்றுகிறார்கள். சிறுவயதிலே வேட்டையாடுவதற்காகத் துப்பாக்கியுடன் நிற்கிறார் ஹெமிங்வே. அவருக்கு எதைப்பற்றியும் ஒரு போதும் பயம் கிடையாது. சிறுவயது முதலே அப்படித் தான் இருந்தார் என்கிறார்கள்.
பால்ய வயதில் நீங்கள் எப்படி உருவாகிறீர்கள் என்பது படைப்பாளிக்கு முக்கியமானது. ஹெமிங்வேயின் ஆளுமை உருவாக்கத்தில் அவரது பால்யம் மிக முக்கியப் பங்கினை வகித்திருக்கிறது.

படத்தில் ஹெமிங்வேயின் அம்மா, சகோதரிகள். அவரது பால்ய கால அடையாளங்கள் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. . ஹெமிங்வேயின் சிரித்த முகமுள்ள புகைப்படங்களில் கூட அவர் எதையோ மறைத்துக் கொண்டிருப்பது போலவே இருக்கிறது.
குடி, வேட்டை. பெண்கள் இந்த மூன்றும் தான் ஹெமிங்வேயின் உலகம். இந்த மூன்றும் அவரை எப்படித் தீவிரமாக ஆட்கொண்டன என்பதைப் படத்தில் விரிவாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.
இளமையில் ராணுவத்தில் சேர விரும்பிய ஹெமிங்வே ரெட் கிராஸ் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இத்தாலியப் போர்முனையில் காயம் பட்டவர்களை மீட்கும் பணியது. அப்படி ஒரு நாள் போர்க்களத்தில் இருந்தபோது குண்டுவெடிப்பிற்கு உள்ளாக்கி பலத்த காயம் அடைந்தார்.
அமெரிக்கச் செஞ்சிலுவைச் சங்க மருத்துவமனையில் ஹெமிங்வே சிகிட்சை செய்ய அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் ஆறு மாதங்கள் கழித்தார் அங்கே பணியாற்றிய ஆக்னஸ் என்ற நர்ஸைக் காதலித்தார். அவளும் ஹெமிங்வேயை விரும்பினார். அந்தக் காதலே அவரது போரே நீ போ நாவலின் மையம்.
[image error]ஆனால் அக் காதல் கைகூடவில்லை. அவரை விலக்கி ஆக்னஸ் வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த ஏமாற்றம் அவரைப் பெருங்குடிகாரராக மாற்றியது. தோற்றுப் போன காதலின் விளைவு அவரது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது. அவர் நான்கு திருமணங்கள் செய்து கொண்ட போதும் எந்த உறவிலும் முழுமையான பற்று ஏற்படவில்லை. தனது உடல் இச்சைக்காகவே அவர் பெண்களை நாடினார் காதலித்தார். அவசரமாகத் திருமணம் செய்து கொண்டார் என்கிறார்கள்.
இந்த ஆவணப்படத்தில் அமெரிக்காவின் முக்கிய எழுத்தாளர்களான டோபியாஸ் வுல்ஃப் உள்ளிட்ட பலரும் ஹெமிங்வே பற்றிய மதிப்பீடுகளைப் பகிர்ந்திருக்கிறார்கள்.
ஹெமிங்வே தன்னைப் பற்றிய பிம்பத்தைத் தானே உருவாக்கினார். அந்தக் கட்டுக்கதைகள் மதுக்கூடங்களில் புகழ் பெறத்துவங்கின. ஒரு கட்டத்தில் அக்கதைகளை அவரே நம்ப ஆரம்பித்தார். அது போலவே நடக்கவும் செய்தார். இந்தப் பிம்ப உருவாக்கம் தன்னை மறைத்துக் கொள்ளச் செய்த தந்திரம். ஊடகங்களின் முன்பு அவர் நடித்தார். தன்னைப் பற்றிய பிம்பத்தைப் பெருக்கிக் கொள்ளும் எல்லா வழிகளையும் அவர் நன்றாக அறிந்திருந்தார். அவரது படைப்புகளில் வெளிப்படும் ஹெமிங்வே வேறு அவர் உருவாக்கிய பிம்பம் வேறு. இந்தப் பிம்ப உருவாக்கம் அவரை நிகரற்ற நாயகன் போல உருக்கொள்ளச் செய்தது. அதை வலிந்து அவரே உருவாக்கிக் கொண்டார்
[image error]ஏராளமான பணமும் பெயரும் புகழும் கிடைத்த போதும் அதை அவர் தனது பிம்பத்தைக் கைவிடவில்லை. இந்தக் கட்டுக் கதைகள் முழுவதும் பொய்யானவையில்லை. நிஜமாகவே சிங்க வேட்டைக்குப் போவதும் திமிங்கல வேட்டைக்குப் போவதுமாக இருந்த ஹெமிங்வே தன் கதைகளைப் போல விசித்திரமான நிகழ்வுகளைச் சொந்த வாழ்க்கையிலே நிகழ்த்தினார் அவரைப் போல விபத்துகளைச் சந்தித்த மனிதரில்லை.
அவரது காதல் திருமணங்களைப் பற்றியும் நண்பர்கள் மற்றும் பிள்ளைகளுடன் அவர் நடந்து கொண்ட விதம் பற்றியும் இந்த ஆவணப்படம் நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறது.
யுத்தகாலத்தில் அவர் களத்தில் எவ்வாறு பணியாற்றினார். போர் முடிந்த போது அவர் எப்படி வெற்றி ஊர்வலத்தில் கலந்து கொண்டார் என்பதையும் காட்டுகிறார்கள்
இது போலவே காளைச் சண்டையில் அவருக்கு இருந்த ஈடுபாடு. குத்துச்சண்டையில் உருவான ஆர்வம். சிங்க வேட்டையில் காட்டிய வேகம் போன்றவற்றையும் குறிப்பிட்டுப் பதிவு செய்திருக்கிறார்கள்.
அவரது காதலும் திருமணங்களும் விசித்திரமானவை. அவசரமான காதல் அவசரமான திருமணம், எதிர்பார்த்த விவாகரத்து என்கிறார் ஆண்டர்சன். அது உண்மையே.

சிகாகோவில் ஹாட்லி ரிச்சர்ட்சனை சந்தித்த முதல் நாளிலே அவரைத் தீவிரமாகக் காதலிக்கத் துவங்கிவிட்டார். ஹாட்லி ஹெமிங்வேயை விட எட்டு வயது மூத்தவர். அவரைப் போலவே தந்தையின் குணமூர்க்கத்தால் பாதிக்கப்பட்டவர். வசதி படைத்த ஹாட்லியை ஹெமிங்வே தொடர்ந்து பேசி சம்மதிக்க வைத்துத் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் கலைஞர்களாக வாழ்வதற்காகப் பாரிஸுற்கு சென்றார்கள்.
[image error]பாரீஸில் வசித்த நாட்களில் அங்கே இருந்த முக்கிய ஓவியர்கள். கலைஞர்கள். எழுத்தாளர்களுடன் நட்பு கொண்டார். வூடி ஆலனின் மிட் நைட் இன் பாரீஸ் திரைப்படம் பாருங்கள். அதில் இந்த நண்பர்கள் வட்டம் மிக அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
.எழுத்தாளர் ஜேம்ஸ் ஜாய்ஸ், ஓவியர் பிகாசோ போன்றவர்களின் நட்பு அப்போது தான் உருவானது.
1927 இல் ஹாட்லியை விவாகரத்து செய்த ஹெமிங்வே மே மாதத்தில் பவுலின் பிஃபரை மணந்தார். அவரும் ஒரு பத்திரிக்கையாளரே,
ஹெமிங்வேயின் எழுதும் முறையைப் பற்றிச் சொல்லும் அவரது மகன் அவர் எழுத்தாளர்களுக்காகச் சொன்ன ஆலோசனை எதையும் பின்பற்றியதில்லை. பல நாட்கள் தூங்கி எழுந்தவுடன் எழுத துவங்கிவிடுவார். நிறைய நாட்கள் காலை துவங்கி இரவு வரை குடித்துக் கொண்டேயிருப்பார். அவருக்குச் சொந்தமாக ஒரு படகு இருந்தது. அதில் நண்பர்களுடன் கடலுக்குள் சென்று நாள் முழுவதும் குடித்துக் கொண்டேயிருப்பார். தனது பழைய நினைவுகளால் தான் அவர் வழிநடத்தப்பட்டார். அவரது கதைகள் யாவும் நினைவின் வெளிப்பாடே என்கிறார்
1939 ஆம் ஆண்டின் முற்பகுதியில் கியூபா சென்ற ஹெமிங்வே ஒரு விடுதியில் தங்கி எழுதி வந்தார். இந்த நாட்களில் மார்தா கெல்ஹோனுடன் காதல் உருவானது. இருவரும் ஒன்றாகக் காதல் வாழ்க்கையை மேற்கொண்டார்கள். அவர்கள் ஹவானாவிலிருந்து பதினைந்து மைல் தொலைவிலிருந்த “ஃபின்கா விகா” என்ற மாளிகைக்குக் குடிபெயர்ந்தார்கள். மிக அழகான வசிப்பிடம். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அங்கே ஹெமிங்வே வசித்திருக்கிறார்.
இரண்டாம் உலக யுத்த செய்தியாளராக ஹெமிங்வே லண்டனுக்கு வந்தபோது, டைம் பத்திரிகை நிருபர் மேரி வெல்ஷை சந்தித்தார், அவருடன் புதிய காதல் ஏற்பட்டது. இருவரும் ஒன்றாகச் செய்தி சேகரித்தார்கள். பயணம் செய்தார்கள். கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையிலிருந்த ஹெமிங்வேயை உடனிருந்து கவனித்துக் கொண்டார் மேரி.
இத்தனை காதல் திருமணங்கள் நடந்த போதும் அவர் வாழ்க்கையில் வெறுமையைத் தான் அதிகம் உணர்ந்தார். அவரது முக்கிய நாவல்கள் யாவும் திரைப்படமாக்கப்பட்டன. நிறையப் பணம் கிடைத்தது. நோபல் பரிசு உள்ளிட்ட அத்தனை கௌரவங்களும் கிடைத்தன. ஆனால் சொந்த வாழ்க்கையில் அவர் நிம்மதியை அடையவில்லை. தீராத மனக்கொந்தளிப்புடன் இருந்தார். விரக்தியும் அலைக்கழிப்பும் குடியை அதிகப்படுத்தியது. இதற்காக மனநலச்சிகிட்சை எடுத்துக் கொண்டார். ஏப்ரல் 1961 இல் ஹெமிங்வே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது கதைகளைப் போல எதிர்பாராத முடிவது.
தனது இறுதி ஆண்டுகளில் ஹெமிங்வேயின் செயல்பாடுகள் யாவும் அவரது தந்தையைப் போலவே இருந்தன என்கிறார்கள். தந்தையும் தற்கொலை செய்து கொண்டு தான் இறந்து போனார்.

இந்த ஆவணப்படத்தின் வழியே நாம் ஹெமிங்வேயின் தனித்துவத்தை, பலவீனங்களை, திறமையை, தீவிர செயல்பாட்டினை, உல்லாசத்தை, வீழ்ச்சியை அறிந்து கொள்கிறோம்.
ஒரு எழுத்தாளனின் வாழ்க்கையை இவ்வளவு விரிவாக ஆவணப்படுத்தும் போது தான் நம்மால் அவரது ஆளுமையை முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது
கிழவனும் கடலும் நாவலில் வரும் மீனவன் சாண்டியாகோ மீன்பாடுகள் கிடைக்காத போது பொறுமையாகக் காத்திருக்கிறான். ஆனால் அவனைப் போல ஹெமிங்வே ஒரு போதும் வாழ்க்கையில் எதற்காகவும் காத்திருந்ததில்லை. அவர் மோபிடிக்கை தேடிச் செல்லும் கேப்டன் அஹாப் போலவே தானிருந்தார். சில நேரங்களில் அவரே மோபிடிக் எனும் திமிங்கிலமாகவும் இருந்தார். அதுவே அவரது தனிச்சிறப்பு
••
படோல் பாபு – திரை நட்சத்திரம்
சத்யஜித் ரே நூற்றாண்டினை முன்னிட்டு அவரது மிகச்சிறந்த சிறுகதையை மீள்பிரசுரம் செய்கிறேன். இந்தக் கதை நாடகமாகவும் குறும்படமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இதைச் சிறப்பாக தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் ஸ்ரீதர் நாராயணன். பதாகை இணைய இதழில் இந்த கதை வெளியாகியுள்ளது.
•••

படோல் பாபு – திரை நட்சத்திரம்
– சத்யஜித் ரே – (தமிழாக்கம்: ஸ்ரீதர் நாராயணன்)
நன்றி : பதாகை
நிஷிகாந்தா பாபு தெருவிலிருந்து அழைக்கும்போது படோல் பாபு சாமான்கள் நிறைந்த பையை தனது தோளில் மாட்டிக்கொண்டிருந்தான். ‘படோல், இருக்கிறீர்களா?’
‘இதோ, வருகிறேன்.’
நேபாள் பட்டாச்சார்ஜி தெருவில் படோல் பாபுவின் வீட்டிலிருந்து மூன்று வீடுகள் தள்ளி நிஷிகாந்த கோஷ் குடியிருந்தான். வெகு கலகலப்பான ஆள்.
சாமான்கள் பையுடன் வெளிப்போந்த படோல் பாபு கேட்டார். ‘என்னாச்சு? சீக்கிரமே எழுந்துவிட்டாயா?’
‘கவனி. நீ எப்போது திரும்புவாய்?’
‘இன்னும் ஒரு மணி நேரத்தில். ஏன்?’
‘நீ திரும்பவும் வெளியே போக மாட்டாய் அல்லவா? எப்படியிருந்தாலும் இன்று தாகூரின் பிறந்தநாள் வேறு. நேற்று நான் என் மனைவியின் தம்பியை நேதாஜி மருந்துக்கடையில் சந்தித்தேன். அவன் திரைப்படங்களில் வேலை செய்கிறான் – நடிகர்களை ஏற்பாடு செய்வது. ஒரு திரைப்பட காட்சிக்கு ஆள் தேவை என்று சொன்னான். அவன் வேண்டுவது என்ன தெரியுமா – ஐம்பது வயதான, குள்ள, வழுக்கைத்தலை – போன்றதொரு ஆசாமியை. உடனே உன்னைப்பற்றித்தான் நினைத்தேன். அதனால் அவனிடம் உன்னைப் பற்றி சொன்னேன். உன்னிடம் நேரடியாக பேசும்படி அவனிடம் சொல்லியிருக்கிறேன். இங்கே பத்துமணி வாக்கில் இருப்பேன் என்று சொன்னான். உனக்கொண்ணும் பிரச்னை இல்லையே? அவர்களுடைய கணக்குக்கு ஏற்றப்படி சம்பளம் தந்துவிடுவதாக சொன்னான்…’
அவ்வளவு அதிகாலையில் அப்படியான ஒரு குறிப்பை படோல் பாபு நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. அவரைப்போன்ற சாதாரண ஆசாமிக்கு ஐம்பத்திரெண்டு வயதில் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்ப்பது கடினம். உண்மையில் நம்பமுடியாதது.
‘சரி. முடிவாகச் சொல். ஆமாமா? இல்லையா? முன்பு எப்போதோ நீ நடித்தவன்தானே?
‘ஆமாம். நான் ஏன் ‘இல்லை’ எனச் சொல்லப்போகிறேன்? அவன் வரட்டும். விவரங்களை தரட்டும். உனது மச்சானின் பெயர் என்னவென்று சொன்னாய்?’
‘நரேஷ். நரேஷ் தத்தா. உயரமாக, நல்ல ஆகிருதியுடன் முப்பது வயது பக்கம் இருப்பான். அவன் பத்துக்கும் பத்தரைக்கும் இடையே வருவதாக சொன்னான்.’
படோல்-பாபு தனது மனைவியின் ஆணைகளை குழப்பிக்கொண்டு கடுகுக்கு பதில் மிளகாயை வாங்கினார். கல் உப்பை முற்றிலும் மறந்துபோனார். அவர் அவ்வளவு ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஒருகாலத்தில் படோல்-பாபு நடிப்பதில் மிகுந்த ஆர்வத்தோடு நாட்டம் கொண்டிருந்தார். அது வெறும் நாட்டமில்லை, ஆனால் பெரும் விருப்பமாக இருந்தது. ஜாத்ரா நிகழ்வுகளில், அமெச்சூர் மேடை நாடகங்கள், பண்டிகைகள், உள்ளூர் மன்ற கொண்டாட்டங்கள் என்று தொடர்ந்து நடித்தார். விளம்பர நோட்டீஸ்களில் படோல் பாபுவின் பெயர் பலமுறை தோன்றியிருக்கிறது. உண்மையில் ஒரு முறை, நோட்டீஸின் கீழே தனித்து, கொட்டை எழுத்துகளில் – பராசரராக சித்தாலகந்த ராய் (படோல் பாபு) என்று போட்டிருந்தது. அவருடைய புகழுக்காக மட்டும் டிக்கெட்டுகள் விற்ற காலம் கூட உண்டு.
எனினும் அப்போது அவர் காஞ்ச்ரபரத்தில், ரயில்வே தொழிற்சாலையில் ஒரு வேலையில் இருந்தார். ஹட்சன் & கிம்பர்லியில் படோல்-பாபுவிற்கு சற்று அதிக-சம்பள வேலையும், நேபாள் பட்டாச்சார்ஜி தெருவில் வீடும் கிடைத்ததால் தன் மனைவியுடன் 1934ல் கல்கத்தாவிற்கு இடம்மாறினார். ஆரம்பத்தில் சில வருடங்கள் சந்தோஷமாக கழிந்தன. அலுவலகத்தில், படோல்-பாபுவின் முதலாளி அவர் மேல் மிகவும் பிரியமாக இருந்தார். ஆனால் 1943ல், படோல்-பாபு தன்னுடைய அண்டை அயலில் ஒரு நாடகக்குழுவை அமைக்கும் முயற்சியின் விளிம்பில் இருந்தபோது, அவருடைய போர்-தாக்கிய நிறுவனம் ஆட்குறைப்பை தொடங்க, அவருடைய பாதுகாப்பான வேலை காற்றில் கரைந்து போனது.

அன்றிலிருந்து, பிழைப்புக்கு வழிகள் தேடியே படோல்-பாபுவின் எல்லா நாட்களும் கழிந்தன. அவர் ஒரு பலசரக்குக் கடை வைத்துப் பார்த்தார், ஆனால் ஐந்தாண்டுகளுக்கு மேல் அது தாக்குப்பிடிக்கவில்லை. அப்புறம், ஒரு பெங்காலி நிறுவனத்தில் குமாஸ்தாவாக சிலகாலம் வேலை செய்தார், ஆனால் பெங்காலி ஆங்கிலேயரான மிஸ்டர். மிட்டரின் ஆணவமும், முன்கோப தாக்குதலும் பொறுக்க முடியாமல் ராஜினாமா செய்தார். அதற்கப்புறம் பத்து ஆண்டுகளுக்கு, காப்பீடுகள் விற்பதிலிருந்து படோல்-பாபு முயற்சி செய்யாத வேலைகள் இல்லை.. ஆனால் அவர் எப்போதும் கைக்கு வாய்க்கும் போதாமல் வாழும் பரம ஏழையாகவே இருந்தார். சமீபமாக, ஒரு பழைய இரும்புக்கடையில் நடமாடிக்கொண்டிருந்தார்; அவருடைய பங்காளி ஒருவர் அங்கு ஒரு வேலைக்கு உறுதி அளித்திருந்தார்.
நடிப்பு? அது வேறொரு வாழ்நாளுக்கு உரியதானது போலிருந்தது. மங்கிய நினைவு, எதிர்பாராமல் வெளியேறும் பெருமூச்சு – அவ்வளவுதான். படோல்-பாபுவிற்கு நல்ல நினைவாற்றல் இருந்து வந்ததால், அவருடைய பழைய வேடங்களிலிருந்து கலக்கலான வசனங்களின் துணுக்குகளை அவர் ஞாபகபடுத்திக் கொண்டார். “கேளீர்! அந்த தெய்வீக வில் மீண்டும் உயிர்பெறுகிறது. நேசநாடுகள் போர்க்களத்திற்கு அணிவகுக்கின்றன. கர்ஜிக்கும் காற்றோடு, ஏவுகணை மலையென இடிமுழக்கமிடுகிறது ‘ ஓ! அந்த நினைவே அவரை மயிர்கூச்செரிய வைத்தது.
நரேஷ் தத்தா சரியாக பன்னிரெண்டரைக்கு வந்தான். படோல்-பாபு கிட்டத்தட்ட நம்பிக்கையை இழந்து, குளிக்க கிளம்பியபோது கதவு தட்டும் ஓசை கேட்டது.
‘உள்ளே வாருங்கள்!’ கதவைத் திறந்த படோல்-பாபு வெளியாளை கிட்டத்தட்ட உள்ளே இழுத்துப் போட்டு, கையுடைந்த நாற்காலியைக் காட்டி ‘தயவுசெய்து அமருங்கள்.’ என்றார்.
‘ஓ, இல்லை. நேரமில்லை. நிஷிகந்தா-பாபு என்னைப் பற்றி சொல்லியிருப்பார்….’
‘ஆம். அவர் சொன்னார். ஆனாலும் நான் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனேன். இவ்வளவு காலம் கழித்து….’
‘உங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லையே?’
படோல்-பாபு கூச்சத்தோடு தரையை நோக்கி கண்களைத் தாழ்த்திக்கொண்டார்.
‘ஆனால்… அஹ்… நான் அப்படி சொல்வேனா?’
படோல்-பாபுவை மேலும் கீழும் தீர்க்கமாக பார்த்த நரேஷ்-பாபு ‘உண்மையில் நீங்கள் சரியாகவே பொருந்துவீர்கள். கவனிங்கள், நாளைக்குத்தான்’
‘நாளைக்கா? ஞாயிற்றுக் கிழமையா?’
‘ஆமாம்… ஆனால் ஸ்டூடியோவில் இல்லை. எங்கு என்று சொல்கிறேன். மிஷன் தெரு மற்றும் பென்டிங்க் தெரு சந்திப்பில் ஃபாரடே வீடு தெரியும் இல்லையா? ஏழு மாடி கட்டிடம். அங்கே எட்டு மணிக்கு வந்துவிடுங்கள். எட்டரைக்காவது. அங்கேதான் படப்பிடிப்பு நடத்துகிறோம். மதியத்திற்குள் உங்களை திருப்பி அனுப்பிவிடுகிறேன்’
நரெஷ்-பாபு புறப்பட்டான். சற்று கவலையுற்ற படோல்-பாபு சொன்னார். ‘நீங்கள் பாத்திரத்தைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே’
‘உங்களது பாத்திரம்…. ஒரு பாதசாரி. வழிபோக்கன். கவனமில்லாத முன்கோபி பாதசாரி. ஆமாம், உங்களிடம் கழுத்துவரை பட்டன்களிட்ட கோட் இருக்கிறதா?’
‘இருக்கு என நினைக்கிறேன்’
‘அதை அணிந்து கொள்ளுங்கள். கருமையான வண்ணம் என நம்புகிறேன்’
‘பழுப்பு. எனினும் கதகதப்பாக இருக்கும்’
‘அது சரி. நமது காட்சி குளிர்காலத்தில் அமைக்கபெற்றது. அது நன்றாகப் பொருந்தும்… காலை எட்டரை மணி. ஃபாரடே வீடு’
மற்றொரு முக்கிய கேள்வி படோல்-பாபுவின் தலையில் உதித்தது.
‘அந்த பாத்திரத்திற்கு வசனம் உண்டு என நினைக்கிறேன். நான் ஏதும் சொல்ல வேண்டியிருக்கும். இல்லையா?’
‘பின்னே! வசனப் பகுதிதான். நீ முன்னர் நடித்திருக்கிறாய், இல்லையா?’
‘ம்ம்ம்… கொஞ்சம்…’
‘அப்ப சரி. சும்மா யாராவது காமிரா முன்னால் கடந்து போக வேண்டும் என்றால் நான் ஏன் உன்னிடம் வரப்போகிறேன்? பாதையோரத்தில் இருந்த யாரையாவது தேர்ந்தெடுத்திருப்பேன். நிச்சயம் வசனம் இருக்கிறது. நாளைக்கு நீ வந்தவுடன் உன்னிடம் கொடுக்கப்படும். சரிதானே அப்ப…’
நரேஷ்-பாபு சென்றதும், படோல்-பாபு தன் மனைவியிடம் சென்று எல்லாவற்றையும் சொன்னான்.
‘எனக்குத் தெரிந்தவரை, இதொன்றும் பெரிய பாத்திரமில்லை; சம்பளம் உண்டுதான். ஆனால் அதுவும் முக்கியமில்லை. விஷயம் என்னவென்றால் – மேடையில் என்னுடைய முதல் பாத்திரம் நினைவிருக்கிறதா உனக்கு? செத்துப்போன படைவீரன். கண்களை மூடியபடி, வாயைத் திறந்துக்கொண்டு மேடையில் படுத்துக் கிடக்க வேண்டும். அப்புறம் மற்றதெல்லாம் ஏதோ சொல்வார்களே, அது போல வரலாறு. மிஸ்டர் வாட்ஸ் என்னுடைய கைபற்றி குலுக்கியது நினைவிருக்கிறதா உனக்கு? நமது முனிசிபாலிட்டி சேர்மன் சாரு பிஸ்வாஸிடமிருந்து பதக்கம்? இல்லையா? இது ஏணியின் முதல்படிதான். சரிதானே? பொழைச்சுக் கிடந்தால், பொண்டாட்டியே, மரியாதை, பெயர், புகழ், மதிப்பு அத்தனையையும் ஜெயித்துவிடுவேன்.’
ஐம்பத்திரெண்டு வயது படோல்-பாபு, திடீரென காற்றில் எம்பிக் குதித்தான். ‘நீ என்ன செய்கிறாய் என்று தெரிந்துதான் செய்கிறாயா?’ கேட்டார் அவர் மனைவி.
‘கவலைப்படாதே! எழுபது வயதில் சாணக்கியராக நடித்த ஸிஸிர் பாதுரி எப்படி துள்ளிக் குதிப்பார் என்று நினைவிருக்கிறதா உனக்கு? பால்யம் திரும்பிவிட்டது எனக்கு’
‘நினைப்புதான். நீ ஒன்றுமில்லாதவனாக இருப்பதில் ஆச்சரியமில்லை’
‘விரைவில் ஹீரோ ஆகிவிடுவேன்! நினைவுக்கு வருகிறது – மதியம் ஒரு கப் டீ குடிக்கப்போகிறேன். சரியா? இஞ்சிச்சாறு சேர்த்து… இல்லையென்றால் என் குரல்…’
~~~~~~~~
மறுநாள் காலை, படோல்-பாபு நகர சதுக்கத்தை அடைந்தபோது மெட்ரோபாலிட்டன் கட்டிடத்தின் கடிகாரத்தில் எட்டடித்து ஏழு நிமிடங்கள் ஆகியிருந்தது. மிஷன் தெரு மற்றும் பென்டிங்ட் தெரு சந்திப்பில் இருக்கும் ஃபாரடே வீட்டை அடைய இன்னுமொரு பத்து நிமிடம் ஆனது.

அலுவலகத்தின் கதவுக்கு முன்னால் ஏகப்பட்ட தடபுடல் ஆக இருந்தது. மூன்று நான்கு கார்கள், அதில் ஒன்று மிகப் பெரியது – ஏறத்தாழ ஒரு பேருந்து அளவிலானது – அதன் தலைமேல் ஏகப்பட்ட தளவாடங்கள் இருந்தன. சாலையோரக்கல் மீது மூன்று காலுடைய கருப்பு சாதனம் ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருக்க, சுற்றிலும் பலர் சுறுசுறுப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். நுழைவாயிலில், மூன்று கால் நிறுத்தம் மேல் இரும்பு கம்பியை குறுக்கே போட்டிருக்க, மேலே தேன்கூடு மாதிரி ஒன்று தொங்கியது. சுமார் முப்பது பேர் பரவியிருக்க, படோல்-பாபு சில வங்காளியர்-அல்லாதரையும் கவனித்தார். ஆனால், அவர்கள் அங்கே என்ன செய்து கொண்டிருந்தார் என்று அவருக்கு தெரியவில்லை.
சரி. நரேஷ்-பாபு எங்கே? படோல்-பாபுவை வேறு யாரையும் தெரியாது.
இருதயம் அதிர, கதவை நோக்கி முன்னேறினார் படோல்-பாபு.
அது மே மாதம்; கழுத்துவரை பொத்தானிட்ட கோட் வெகு கனமாக இருந்தது. படோல் பாபு கழுத்தை சுற்றி வியர்வையை உணர்ந்தார்.
‘இங்கே, அதுல்-பாபு. இந்தவழியில்’
அதுல்-பாபு? படோல்-பாபு திரும்பிப் பார்த்தால், அலுவலகத்தின் தாழ்வாரத்தில் இருந்த தூணின் பக்கத்தில் நின்றபடி நரேஷ்-பாபு அவரை கூப்பிட்டுக் கொண்டிருந்தான். அவர் பெயரை குழப்பிக்கொண்டுவிட்டான். ஆச்சரியம் இல்லை. அவர்கள் ஒருமுறைதான் சந்தித்திருந்தனர். வணக்கம் சொன்ன படோல்-பாபு, ‘என் பெயரை சரியாக கவனித்திருக்க மாட்டாய். சித்தலகந்தா ராய். ஆனால் எல்லோருக்கும் நான் படோல்-பாபுதான். அப்படித்தான் என்னை நாடகங்களிலும் அழைத்தனர்’
‘அது சரி. நீங்கள் நேரம் தவறாமல் சரியாக வந்துவிட்டீர்கள் என்று கவனித்தேன்’
படோல்-பாபு புன்னகைத்தார்.
‘ஹட்ஸன்-கிம்பர்லியில் 9 வருடங்கள் – ஒருநாள் கூட தாமதம் செய்ததில்லை. ஒரு நாள் கூட’
‘பிரமாதம். நான் என்ன சொல்கிறேன் என்றால் – அந்த நிழலில் கொஞ்சம் காத்திருக்கிறீர்களா? அதற்குள் நாங்கள் வேலைகளை தொடங்கிவிடுகிறோம்.’
‘நரேஷ்’ அந்த முக்காலி சாதனத்தின் பக்கத்திலிருந்து கூப்பிட்டார்.
‘சார்?’
‘அவர் உன் ஆட்களில் ஒருவரா?’
‘ஆமாம் சார். அவர்தான்… உங்களுக்கு தெரியுமே… அந்த மோதல்….’
‘அப்படியா. சரி. இப்போது இடத்தை காலி செய். ஒரு ஷாட்டுக்கு போகிறோம்’
அலுவலகத்தின் அருகில் இருந்த வெத்திலைபாக்கு கடையின் மறைப்புக்கு கீழே படோல்-பாபு நின்றுகொண்டார். பயாஸ்கோப் படமாக்கப்படுவதை அவர் பார்த்ததேயில்லை. அவருக்கு எல்லாம் புதுமையாக இருந்தது. நாடகத்துக்கும் அதற்கும் சம்பந்தமேயில்லை. இவர்கள் எல்லாம் எவ்வளவு கடினமாக உழைக்கிறார்கள். இருபத்தியோரு, இருபத்தியிரெண்டு வயதான இளைஞன் ஒருவன் மிகவும் கனமானதொரு சாதனத்தை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு தூக்கிச் சென்றுகொண்டிருந்தான். அது இருபது இருபத்தைந்து கிலோ எடையாவது இருக்க வேண்டும்.
ஆனால், அவருடைய வசனம் எங்கே? அதிகம் நேரமில்லை. ஆனாலும் படோல்-பாபுவிற்கு இன்னமும் அவர் என்ன சொல்ல வேண்டும் என்று தெரியாது.
அவர் சட்டென பதட்டமாக உணர்ந்தார். அவர் அவர்களிடம் போய் கேட்கலாமா? அங்கே நரேஷ்-பாபு இருந்தான்; அவர் அவனிடம் பேச வேண்டாமா? அது சின்ன பாத்திரமோ, பெரிய பாத்திரமோ, அதை சரியாக செய்ய வேண்டுமென்றால் அவர் தயார் செய்துகொள்ள வேண்டும். அத்தனை பேர் முன்னிலையிலும் அவருடைய வசனங்களை குளறுபடி செய்து முட்டாளாகி நின்றால் என்னாவது? இருபது ஆண்டுகளாக அவர் நடிக்கவே இல்லை வேறு.
முன்னேற நினைத்த படோல்-பாபு யாரோ கத்துவதை கேட்டு நின்றார்.
‘சைலன்ஸ்!’
அப்புறம் நரேஷ்-பாபுவின் குரல் கேட்டது ‘இப்போது ஒரு காட்சி படமாக்கப் போகிறோம். எல்லோரும் தயவுசெய்து அமைதியாக இருங்கள். பேசாதீர்கள், நகராதீர்கள், கேமராவை அணுகாதீர்கள்’
இப்போது முதலில் கேட்ட குரல் மீண்டும் கேட்டது. ‘சைலன்ஸ்! டேக்கிங்!’ படோல்-பாபு அவரைப் பார்க்க முடிந்தது. அந்த முக்காலி-சாதனத்திற்கு அருகே சுமாரான குண்டான மனிதர் நின்றுகொண்டிருக்க, அவர் கழுத்து சங்கிலியில் பைனாகுலர் போன்ற ஏதோ தொங்கிக் கொண்டிருந்தது. அவர்தானா இயக்குநர்? என்ன விந்தை, அவர் அந்த இயக்குநரின் பெயர் கூட தெரிந்துகொள்ளவில்லை.
தொடர்ச்சியாக இன்னும் சில கூச்சல்களை கேட்டார் படோல்-பாபு. ‘ஸ்டார்ட் சவுண்ட்! ரன்னிங்! ஆக்ஷன்!’
‘ஆக்ஷன்’ என்று கூறியதும், கார் ஒன்று வந்து அலுவலகத்தின் முன்னால் நின்றது. சூட்டு அணிந்த ஒரு இளைஞன் முகம் முழுவதும் சாயம் பூசியதுபோலிருக்க, காரிலிருந்து உதிர்ந்து அலுவலக வாயில் வரை நடந்து போய் நின்றான். அடுத்த நொடி, படோல்-பாபு ‘கட்!’ என்ற கூச்சல் கேட்க, உடனே கூட்டம் அமைதியை கிழித்துக் கொண்டு கூட்டம் ஆரவாரித்தது.
‘அந்த ஆளைத் தெரிகிறதா?’ படோல்-பாபுவின் பக்கத்திலிருந்தவர், அவரை நோக்கிக் கேட்டான்.
‘எனக்கு தெரியவில்லையே’ என்றார் படோல்-பாபு.
‘சஞ்சல்குமார்!’ பதிலளித்தான் பக்கத்திலிருந்தவன். ‘உதயமாகும் நட்சத்திரம். ஒரே சமயத்தில் நான்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்’
படோல்-பாபு அபூர்வமாக பயோஸ்கோப்பிற்கு செல்பவர். ஆனால், இந்த சஞ்சல்குமாரின் பெயரை சிலமுறைகள் கேட்ட நினைவு. இந்த இளைஞனைத்தான் அன்று கோடி-பாபு புகழ்ந்து கொண்டிருந்தார். சொல்லப்போனால் அவன் மேக்-அப் நன்றாகவே இருந்தது. அந்த மேற்கத்திய சூட்-உடைக்கு பதிலாக வேட்டி இருந்து, ஒரு மயில் மேல் அவனை உட்கார்த்தி வைத்தால் – கார்த்திகேயன் போலவே கச்சிதமாக இருப்பான். காஞ்ச்ரபரத்தில், சீனு என்கிற மோனோதோஷ் இதே மாதிரிதான் இருப்பான். சீனு பெண் பாத்திரங்களில் பிரமாதமாக இருப்பான்.
மீண்டும் பக்கத்திலிருந்தவன் பக்கம் சாய்ந்து, படோல்-பாபு கிசுகிசுப்பாக கேட்டார்.’அந்த இயக்குநர் பெயர் என்ன?’
‘உங்களுக்கு தெரியாதா?’ ஆச்சரியத்துடன் கேட்டான் அவன். ‘அது பாரன் முல்லிக். – தொடர்ந்து மூன்று வெற்றிகள்”
நல்லவேளை. தேவையான விவரங்களை எல்லாம் சேகரித்துக் கொண்டார். இல்லையென்றால்,அவர் மனைவி, யாருடைய படத்தில் யாருடன் நடித்தார் என்று கேட்டால் பிரச்னையாகி இருக்கும்.
நரேஷ் படோல்-பாபுவிற்கு ஒரு கோப்பை தேநீர் கொண்டுவந்தான்.
‘இதோ. இது உங்கள் தொண்டையை சீராக்கும். எந்த நிமிடமும் உங்களைக் கூப்பிடுவோம்’
படோல்-பாபு பொறுக்கமுடியாமல் விஷயத்திற்கு வந்தார்.
‘என்னுடைய வசனத்தை இப்போது நீ கொடுத்தால்….’
‘வசனம்? என்னுடன் வாருங்கள்’
படோல்-பாபு தொடர நரேஷ் அந்த மூன்று-கால்கள் சாதனத்தை நோக்கி நடந்தான்,
‘சசாங்கா!’
அரைக்கை சட்டையுடன் ஓரிளைஞன் அவர்களை அணுகினான். நரேஷ் அவனிடம் ‘இவர் வசனம் பற்றி கேட்கிறார். ஒரு காகிதத்துண்டில் எழுதிக்கொடுக்கிறாயா? அந்த மோதல் விஷயம்…’
‘என்னோடு வாங்க அண்ணே….. ஜோதி உங்க பேனாவை ஒரு நிமிடம் கொடுக்க முடியுமா. அண்ணனுக்கு வசனம் எழுதனும்’
ஜோதி என்றழைக்கப்பட்ட இளைஞன் தன் பையிலிருந்த சிவப்பு பேனாவை சசாங்கனிடம் கொடுக்க, நோட்டுபுத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தை கிழித்து, அதில் ஏதோ எழுதிவிட்டு, படோல்-பாபுவிடம் கொடுத்தான்.
அதில் ஒரே ஒரு வார்த்தை மட்டும் எழுதியிருப்பதை படோல்-பாபு கண்டான் – ‘ஆ!’.
ஆ?
படோல்-பாபுவிற்கு திடீரென அவர் தலை சுற்றுவது போலிருந்தது அவருக்கு அந்த கோட்டை கழட்ட முடியாதா என்றிருந்தது. உஷ்ணம் தாங்கமுடியவில்லை.
‘அண்ணே, நீங்க தொந்தரவாக உணர்கிறீர்களோ,’ கேட்டான் சசாங்கன். ‘ரொம்ப கடினமோ?’
அவர்கள் அவரை கிண்டல் செய்கிறார்களா? மொத்த விஷயமும் ஏதோ பெரும் பகடியோ? பரபரப்பான நகரத்தின் பரபரப்பானதொரு தெருவில், சாதாரண, பாதகமில்லாதொரு மனிதனை ஏய்க்கப்பார்க்கிறார்களா? இப்படியும் கொடூரமாக மனிதர்கள் இருக்கமுடியுமா?
‘எனக்கு சரியாகப் புரியவில்லை’ தொண்டை வரள படோல்-பாபு சொன்னார்.
‘ஏன் புரியவில்லை?’
‘வெறும் ‘ஆ!’? வேறு வசனங்கள் இல்லையா?’
புருவங்களை உயர்த்தியபடி சசாங்கன் சொன்னான். ‘என்ன சொல்றீங்க அண்ணே? இது ஒன்றுமில்லைன்னு நினைக்கறீங்களா? இது முறையான வசனம் பேசும் பாத்திரம். பாரன் முல்லிக்கின் படத்தில் ஒரு வசனம் பேசும் பாத்திரம் – நம்பமுடிகிறதா? நீங்கள் அதிர்ஷ்டசாலி என்பேன். குறைந்தபட்சம் நூற்றைம்பது பேராவது இந்தப் படத்தில் வசனமில்லாமல் நடித்திருக்கிறார்கள் தெரியுமா? வெறுமனே காமிரா முன்னால் நடந்து போனார்கள். சிலர் நடக்கக் கூட இல்லை. ஓரிடத்தில் வெறுமனே நின்றார்கள். சொல்லப்போனால் அவர்கள் எல்லாருடைய முகமும் தெரியாது. இன்று கூட, அந்த விளக்கு கம்பத்தின் பக்கத்தில் நிற்கும் மக்களைப் பாருங்கள். அவர்கள் எல்லாரும் இன்றைய காட்சியில் உண்டு. ஆனால், ஒருவருக்கும் வசனம் கிடையாது. ஏன், நமது கதாநாயகர் சஞ்சல்குமாருக்கே வசனம் கிடையாது. நீங்கள் ஒருவர்தான் பேசுகிறிர்கள்’
இப்போது அந்த ஜோதி என்ற பெயர்கொண்ட இளைஞன் படோல்-பாபுவிடம் வந்து, தோளில் கைபோட்டு சொன்னான். ‘கவனிங்க அண்ணே – நான் விளக்குகிறேன். இந்த அலுவலகத்தில் சஞ்சல்குமார் ஒரு மூத்த மேலாளர். ஒரு திருட்டைப் பற்றிக் கேள்விபட்டதும் அவர் அலுவலகத்திற்கு அவசரமாக வருவதைத்தான் இந்த காட்சியில் காட்டுகிறோம். அப்போதுதான் நீங்கள் அவர் வழியில் குறுக்கே வருகிறீர்கள் – பாதசாரியாக – சரிதானா? அவர் மேல் மோதுகிறீர்கள் – சரிதானா? மோதியதும், நீங்கள் ‘ஆ!’ என்கிறீர்கள். ஆனால் சஞ்சல் உங்கள் மேல் எந்த கவனமும் செலுத்தாமல் அவசரமாக போய்விடுகிறார். உங்களை உதாசீனபடுத்துவது அவருடைய மனநிலையை காட்டுகிறது. சரிதானா? இந்த் மொத்த விஷயங்களும் எவ்வளவு முக்கியமானது என்று உங்களுக்கு தெரிகிறதா?
சசாங்கன் அவரிடம் மீண்டும் வந்தான். ‘இப்ப உங்களுக்கு தெரிஞ்சிடுச்சு. அந்த பக்கமாக காத்திருக்க முடியுமா? இங்கே கூட்டம் கூட்ட வேண்டாம். உங்களை கூப்பிடுவதற்கு முன்னால் இன்னும் சில ஷாட்டுகள் இருக்கிறது’
படோல்-பாபு மீண்டும் வெத்திலைபாக்கு கடை நோக்கி சென்றார். அதன் மறைப்புக்கு கீழே நின்றவர், தன்னுடைய கையிலிருந்த துண்டு காகிதத்தின் மேல் ஒரு பக்கவாட்டு பார்வையை ஓட்டியவர், தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்று சோதித்து கொண்டு அந்த காகிதத்தை பந்தாக சுருட்டி சாக்கடையில் விட்டெறிந்தார்.
‘ஆ!’
இதயபூர்வமான பெருமூச்சை வெளியிட்ட்டார்.
ஒரே ஒரு சொல் – ஒரு சொல் கூட இல்லை, ஒரு சத்தம் – ஆ!
வெயில் தாங்க முடியாததாக இருந்தது. கோட்டு மிகவும் எடை கூடியதாக ஆகிவிட்டது. அவரால் நிற்கவே முடியவில்லை. கால்கள் கனத்துவிட்டிருந்தன.
வெத்திலைபாக்கு கடையின் மறுபுறம் இருந்த மாடிப்படிகள் பக்கம் சென்று அமர்ந்து கொண்டார். ஒன்பதரை. கரளி-பாபு ஞாயிறு காலைகளில் வீட்டில் பக்தி பாடல்கள் பாடுவார் – படோல்-பாபு வழக்கமாக போய்க்கொண்டிருந்தார். அங்கே அவர் மகிழ்ச்சியாக இருந்தார். இப்போது போகலாமா? என்ன கேடு வந்துவிடப் போகிறது? இந்த வெறுப்பான, மேலோட்டமான மக்களுடன் ஞாயிறு காலையை விரயம் செய்வதில் என்ன பயன்? இங்கு இருப்பதால் அவமானத்தின் வலியை வேறு தாங்கிக் கொள்ள வேண்டும்.
‘சைலன்ஸ்!’
போதும் உங்க சைலன்ஸ் எல்லாம். எல்லாம் வெறும் பேச்சு மட்டும்தான். மிகக் கொஞ்சமாக வேலை செய்கிறார்கள். நாடகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால்….
நாடகம்…. நாடகம்….
கடந்தகாலத்திலிருந்து மெல்லிய நினைவு ஒன்று அவர் மனதில் எழுந்தது. ஆழமான, கட்டுப்பாடான ஆனால் இனிமையான குரலில் அவருக்களிக்கப்பட்ட அறிவுரை: ‘நினைவில் கொள் படோல். சிறிய பாத்திரங்கள் செய்வதில் எவ்வித அவமானமும் இல்லை. முக்கியமற்ற பாத்திரத்திலிருந்தும், சாத்தியமான இறுதிச்சொட்டு உணர்வுவரை பிழிந்தெடுத்து, வெற்றிகரமான நிகழ்த்துதலாக மாற்றுவதே ஒரு கலைஞனாக உன்னுடைய சாதனை, நாடகம் என்பது குழு முயற்சி. ஒவ்வொரு தனிநபரின் வெற்றி மீதுதான் ஒட்டுமொத்த நாடகத்தின் வெற்றியும் கட்டமைக்கப்பட்டது.
பக்ராஷி-மோஷாய் தான் அவருக்கு இந்த அறிவுரையை வழங்கியவர். ககன் பக்ராஷி. படோல்-பாபுவின் நாடகமேடை குரு. ககன் பக்ராஷி அபாரமான நடிகர் என்றாலும் ஒரு துளி கூட திமிர் இல்லாதவர். சாந்தமானவர். கலைஞர்களிடையே பிரமாதமான கலைஞர்.
பக்ராஷி-மோஷாய் இன்னொன்றும் வழக்கமாக சொல்வார். ‘நாடகத்தில் ஒவ்வொரு வரி வசனமும் மரத்திலிருந்து தொங்கும் கனி போன்றது. எல்லோருக்கும் எட்டிவிடக்கூடியது அல்ல. அதை பறிக்கிறவர்களுக்கு கூட அதை எப்படி உரிப்பது என்று தெரியாது. அது உன் பொறுப்பு – நடிகனின் பொறுப்பு. அந்த பழத்தை எப்படி பறிப்பது, எப்படி உரிப்பது, அதிலிருந்து பிழிந்து சாறு எடுத்து மக்களுக்கு பரிமாறுவது பற்றி நீ அறிந்திருக்க வேண்டும்.
பக்ராஷி-மோஷாயைப் பற்றி நினைவுகூர்ந்ததும், படோல்-பாபு தன்னையறியாமலே மரியாதையாக வணங்கினார்.
அவருடைய இன்றைய பாத்திரம் உண்மையிலும் பொருளற்றதா? அவர் ஒரு சொல்லைத்தான் சொல்ல வேண்டும் – ஆ. ஆனால் ஒரே ஒரு சொல் என்பதற்காக அந்த வசனத்தை புறந்தள்ள முடியுமா?
ஆ, ஆ, ஆ, ஆ – அந்த சொல்லை பல்வேறு வழிகளில், பல்வேறு தொனிகளில் படோல்-பாபு உச்சரித்தார். அப்படி செய்யும்போது, அவர் அபாரமானதை கண்டறிந்தார். அந்த ஒரு சொல், பல்வேறு வழியில் வெளிப்படுத்தப்படும்போது பல்வேறு மனநிலையை வெளிக்கொண்டு வந்தது. லேசாக கிள்ளும்போது சொல்லக்கூடிய ‘ஆ!’, கோடைநாளில் ஒரு குளிர்பானத்தை அருந்தியதும் சொல்லும் ‘ஆ’வை விட முற்றிலும் வேறானது. காதில் கூச்சம் காட்டும்போது வேறொருவகையான ‘ஆ’ வெளிப்படும். அது போல நிறைய ‘ஆ’க்கள், பெருமூச்சு, இழித்தல் அல்லது வேதனை; விரைவான ‘ஆ’ அல்லது நீண்ட ‘ஆஆஆஆ’; சத்தமாக அல்லது மென்மையாக, உரத்த தொனியில் அல்லது தாழ்ந்த தொனியில், தாழ்ந்த தொனியில் தொடங்கி உரக்க முடியும் ஒன்று. நம்பமுடியவில்லை! அந்த ஒரு சொல்லை வைத்துக் கொண்டு ஓர் அகராதியே செய்துவிட முடியும் என்று படோல்-பாபு எண்ணினார்.
அவர் ஏன் மனமுடைந்து போனதாக உணர்ந்தார்? இந்த சொல் ஒரு தங்கச்சுரங்கம். ஒரு தகுதியுள்ள நடிகன் இந்த ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு ஜாக்பாட்டே ஜெயிக்கலாம்.
‘சைலன்ஸ்!’
இயக்குநர் மீண்டும் உறுமினார். அவரருகில் ஜோதி கூட்டத்தை விலக்கிக் கொண்டிருப்பதை பார்த்தார் படோல்-பாபு. அவனிடம் சொல்ல அவருக்கு விஷயமிருந்தது. படோல்-பாபு அவனருகே சென்றார்.
‘இன்னும் எவ்வளவு நேரம் பையா?’
‘ஏன் பொறுமையில்லாமல் இருக்கிறீர்கள் அண்ணே? இந்த விஷயங்களில் விரைவுபடுத்த முடியாது. இன்னும் அரைமணி பொழுது காத்திருங்கள்’
‘சரி. சரி. நான் இங்கே அருகேதான் இருப்பேன்’
‘ஓடிப்போய்விடாதீர்கள். சரியா?’
ஜோதி சென்றுவிட்டான்.
‘ஸ்டார்ட் சவுண்ட!’
எந்த சத்தமும் எழுப்பாமல், படோல்-பாபு சாலையின் மறுபுறமிருந்த தனித்த, அமைதியான சந்துக்கு போனார். ஷாட்டுக்கு முன் சிறிது நேரம் கிடைத்ததில் அவருக்கு திருப்தி. இவர்கள் ஒத்திகை பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள் என்பதால், அவர் தன்னுடைய பாத்திரத்தை தானே பயிற்சி செய்துகொண்டார். அந்த சந்து ஆளரவமற்று இருந்தது. இது வணிக பகுதி. அப்படியென்றால், குடித்தனக்காரர்கள் அதிகம் கிடையாது. மேலும், அது ஒரு ஞாயிற்று கிழமை. இங்கு வசிக்கும் வெகு சிலரும் ஃபாரடே வீட்டுக்கு படபிடிப்பு பார்க்க போயிருப்பார்கள்.
தன் தொண்டையை சரிசெய்து கொண்டு, அந்த சிறப்பான காட்சியின் சிறப்பான வசனத்தில் நிபுணத்துவம் பெற முயன்றார் படோல்-பாபு. கண்ணாடி ஜன்னலில் தெரிந்த பிம்பத்தை பார்த்து தன்னுடைய நடிப்பின் பல்வேறு விஷயங்களை கச்சிதப்படுத்தினார் – அந்த மோதலுக்கு அப்புறம் அவருடைய முகம் எவ்வளவு சுளித்திருக்க வேண்டும், தோள்கள் எவ்வளவு பின்னால் போயிருக்க வேண்டும், எந்த கோணத்தை அவை அடைய வேண்டும், விரல்கள் எவ்வளவு அகலமாக விரிந்திருக்க வேண்டும், மற்றும் பாதங்கள் எந்த நிலையில் இருக்க வேண்டும்.
சரியாக அரைமணி நேரம் கழித்து படோல்-பாபு அழைக்கப்பட்டார்; அவர் ஊக்கம் குறைந்தவராக இல்லை இப்போது. அவருடைய சஞ்சலம் கூட மறைந்து, அடக்கிக்கொண்ட கிளர்ச்சியும், குறுகுறுப்புமாக – இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் நாடக மேடையில் முக்கிய காட்சியில் தோன்றும் உணர்வுடன் – இருந்தார்.
படோல்-பாபுவை பார்த்து கையசைத்த பாரன் முல்லிக், ‘நீங்கள் காட்சியை புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்’ என்றார்.
‘ஆம் சார்’
‘நல்லது. முதலில் நான், ‘ஸ்டார்ட் சவுண்ட்!’ என சொல்வேன். ‘ஒலிப்பதிவாளர் பதிலுக்கு ‘ரன்னிங்’ என்பார். உடனே காமிரா ஓட ஆரம்பிக்கும். அப்புறம் நான் ‘ஆக்ஷன்!’ என்பேன். நீங்கள் உடனே, அந்த தூணிலிருந்து இந்த திசையில் நடக்கத் தொடங்க வேண்டும், நமது கதாநாயகரும் காரிலிருந்து வெளிப்பட்டு அலுவலக வாசல் நோக்கி நடப்பார். நடைபாதையில் இந்த இடத்தில் மோதல் நிகழ வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். உங்களை புறக்கணித்தபடி கதாநாயகர் அலுவலக வாசலைக் கடந்து போவார், நீங்கள் ‘ஆ!’ என்று வலியில் சொல்லிவிட்டு தொடர்ந்து நடக்க வேண்டும். எல்லாம் சரிதானா?’
‘ஓர் ஒத்திகை….’ படோல்-பாபு முன்மொழிந்தார்.
‘ஓ, இல்லை! இடைமறித்தார் பாரன்-பாபு. ‘மேகமூட்டமாகி வருகிறது. ஒத்திகைக்கு அவகாசம் இல்லை. சூரியன் இருக்கும்போதே ஷாட்டை எடுக்க வேண்டும்’
‘அது வந்து…’
‘இப்ப என்ன?’
சந்தில் ஒத்திகை பார்க்கும்போது படோல்-பாபுவிற்கு ஒரு யோசனை தோன்றியது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அதைப் பற்றி சொன்னார்.
‘நான் என்ன நினைக்கிறேன் என்றால்…. வந்து… நான் செய்தித்தாள் ஒன்றை கையில் பிடித்துக்கொண்டு, மோதும்போது படித்துக் கொண்டிருப்பது போலிருந்தால்… கவனமில்லாத உணர்வை சரியாக வெளிப்படுத்தலாம்…’
அவர் முடிக்கும் முன்னரே பாரன் முல்லிக் ‘பிரமாதம்…. ஏய் உன்னைத்தான்! உன்னோட செய்தித்தாளை இந்த கனவானுக்கு கொடுக்க முடியுமா…. சரி. இப்பொழுது அங்கிருக்கும் தூண் பக்கமாக உங்கள் இடத்துக்கு போங்கள். சஞ்சல் தயாரா?’
‘ஆமாம், சார்’ காருக்கு பக்கத்திலிருந்த ஸ்டார் பதிலளித்தார்.
‘நல்லது. சைலன்ஸ்!’
பாரன் முல்லிக் கையை உயர்த்தி, உடனே அடுத்த நொடியில் கீழிறக்கினார். ‘ஒரு நிமிடம். கேஷ்டோ, இவருக்கு ஒரு மீசை கொடு சீக்கிரமாக. அந்த பாத்திரம் சரியாக பொருந்தவில்லை’
‘எந்த மாதிரி சார்? அடர்த்தியாக, கைப்பிடி, பட்டாம்பூச்சி மீசை? எல்லா வகையும் இருக்கிறது’
‘பட்டாம்பூச்சி. சீக்கிரம். நேரமாக்காதே’
படோல்-பாபுவை நெருங்கிய
தலையை பின்னோக்கி வாரிக்கொண்டிருந்த, கரிய, குட்டை மனிதன் படோல்-பாபுவை நெருங்கி, ஒரு தகரப்பெட்டியிலிருந்து எடுத்த சிறிய கரிய பொய்மீசையை அவர் மூக்குக்கு கீழே ஒட்டிவிட்டான்.
‘மோதலினால் கீழே விழுந்துவிடாது என நம்புகிறேன்’ என்றார் படோல்-பாபு.
‘மோதலைப் பற்றி கவலைப்படாதீர்கள்,’ சிரித்தபடி சொன்னான் அந்த இளைஞன், ‘நீங்கள் தாராசிங்குடன் மல்யுத்தம் செய்தால் கூட இது கீழே விழாது’
அவன் ஒரு கண்ணாடியை பிடித்துக் கொண்டிருந்தான். படோல்-பாபு அதில் தன்னை நன்றாக பார்த்துக் கொண்டார். ஆம் – அது அவருக்கு அருமையாக பொருந்தி இருந்தது. இயக்குநரின் பார்வையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
‘சைலன்ஸ்! சைலன்ஸ்!’
அவருக்கு மீசை ஒட்டும்போது பார்வையாளர்களிடையே சற்று சலசலப்பு எழுந்தது. பாரன்-பாபுவின் உறுமலில் எல்லாம் அடங்கியது.
அங்கு சேர்ந்திருந்த பார்வையாளர்களில் பலரும் அவரைப் பார்ப்பதை படோல்-பாபு கவனித்தார்.
‘ஸ்டார்ட் சவுண்ட்!’
படோல்-பாபு தொண்டையை கனைத்துக் கொண்டார். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து…. அந்த குறித்து வைக்கப்பட்ட இடத்திற்கு போக படோல்-பாபுவிற்கு குத்துமதிப்பாக ஐந்து தப்படிகள் வேண்டும். சஞ்சல்குமாருக்கு நான்குதான் தேவைப்படும். அதனால், இருவரும் ஒரே சமயத்தில் கிளம்பினால், படோல்-பாபு சற்று விரைவாக நடக்க வேண்டும், இல்லையென்றால்….
‘ரன்னிங்!’
செய்தித்தாளை தன் முகத்துக்கு நேரே பிடித்துக் கொண்டார் படோல்-பாபு. ‘ஆ!’ சொல்லும்போது அறுபது சதவீத எரிச்சலும், நாற்பது சதவீத திகைப்புமாக கலந்து சொல்ல முடிந்தால்…
‘ஆக்ஷன்!’
கடவுளுக்கு வணக்கம்.!
க்ளாம்ப் க்ளாம்ப் க்ளாம்ப் க்ளாம்ப் க்ளாம்ப்
May 10, 2021
அன்னையின் பாலில் ஊறியவை
உடன்பிறந்தவளின் திட்டுகள் உடன்பிறந்தவர்களைப் பாதிப்பதில்லை! அவை அன்னையின் பாலில் ஊறியவை. என்றொரு வரியை எழுத்தாளர் இஸ்மத் சுக்தாய் எழுதிய பச்சோ அத்தை சிறுகதையில் படித்தேன். அற்புதமான வரியது. அக்கா அல்லது தங்கையின் கோபம் அல்லது திட்டு அண்ணன் தம்பிகளைப் பாதிப்பதில்லை. அந்தக் கோபம் அன்பின் வெளிப்பாடு. உடன்பிறந்தவளின் திட்டுகள் என்பது உரிமையில் வெளிப்படும் சொற்கள். ஒற்றைப் பிள்ளையாக வளரும் இன்றைய குழந்தைகளுக்கு இந்தக் கோபம் அறியாமல் இருக்கக் கூடும்.

ஆனால் கடந்த காலங்களில் வீட்டிற்கு நான்கு ஐந்து பிள்ளைகள் இருந்த நாட்களில் சகோதரிகளின் கோபம் அல்லது திட்டு கேட்காதவர் இருக்க மாட்டார்கள். அதுவும் சகோதரிகளுக்குள் ஒருவரையொருவர் திட்டிக் கொள்வது சண்டையிட்டுக் கொள்வதெல்லாம் சில மணி நேரத்தில் கரைந்து போய்விடும்.
இந்தக் கதையில் வரும் பச்சோ அத்தை அப்படித் தன்னுடைய அண்ணன் ரஹ்மானைத் தொடர்ந்து திட்டுகிறாள் வசவும் சாபமும் தருகிறாள்.அத்தையின் உருவம், நிறம் எல்லாம் தத்ரூபம் அப்பா அச்சு. அவர் தான் மீசையை எடுத்துவிட்டுத் துப்பட்டா போர்த்திக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாரோ என்று தோன்றும் என்றொரு வரியை சுக்தாய் எழுதியிருக்கிறார். எவ்வளவு அழகான வரியது.
இப்படியான சில பெண்களை நானே கண்டிருக்கிறேன். அப்படியே தந்தையை உரித்து வைத்தது போலத் தோற்றம் கொண்டிருப்பார்கள். குரலும் அப்பாவின் குரலைப் போல ஓங்கி ஒலிக்கும்.
கதை முழுவதும் அத்தை கோபத்தில் திட்டிக் கொண்டேயிருக்கிறாள். அவள் வாயிலிருந்து எரிமலைக் குழம்பு போல வார்த்தைகள் சீறிப் பாய்கின்றன. அந்தக் கோபத்தை யாராலும் அடக்கமுடியவில்லை. பல நேரங்களில் வேண்டும் என்றே அவளைச் சீண்டி கோபம் கொள்ளச் செய்கிறார்கள், அவள் வெடிக்கிறாள். அண்ணன் வீட்டுப் படி ஏற மாட்டேன் என்று சபதம் செய்கிறாள்.
ஒரு நாள் அவளது அண்ணனுக்குப் பாரிசவாயு தாக்குகிறது. உயிருக்குப் போராடும் நிலைக்கு உள்ளாகிறார். அப்போது கடைசி முறையாகத் தங்கையைக் காண வேண்டும் என்று ஆசைப்படுகிறார்

சுக்தாயின் கதை இப்படி நீளுகிறது
”பாதுஷாஹீ கானம்! என் இறுதி நாள் நெருங்கிவிட்டது. உள்ளத்து ஆசையை நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமென்றால், உடனே புறப்பட்டு வா!” அந்தச் செய்தியில் என்ன அம்பு எங்கு ஒளிந்திருந்ததோ? அண்ணா விட்ட அந்தச் சொல் அம்பு. தங்கையின் உள்ளத்தில் தராசு முள்ளெனத் தைத்துக் கொக்கிப் போட்டு இழுத்து விட்டது. தளர்ந்த தன் மார்பில் ‘பொட்டுப் பொட்டு’ என்று போட்டுக்கொண்டு, வெள்ளை மலை ஒன்று பூகம்பத்தில் பறந்து வருகிறாற்போல், பாதுஷாஹீ கானம் வந்து சேர்ந்தாள். பல்லாண்டுகளாகப் படி ஏறாத கால்கள் இன்று ஏறி வந்தன.
பாதுஷாஹீ! உன் ஆசீர்வாதம் நிறைவேறுகிறது!” அத்தனை கஷ்டத்திலும் அப்பா சிரித்தார். அவருடைய கண்களில் அதே இளமை பளிச்சிட்டது.
பாதுஷாஹீ அத்தை அத்தனை நரையிலும் அவருக்குச் சின்னஞ் சிறு ‘பச்சோ’வாகத்தான் தோன்றினாள். பிள்ளைப் பருவத்தில் முறண்டு பிடித்துத் தன் சொல்லையே நிறைவேற்றிக்கொண்டவளாயிற்றே! சிங்கத்தை நிகர்த்த அவளது பொல்லாக் கண்கள் ஆட்டுக்குட்டியின் பேதை விழிகளைப்போலப் பயந்து கலங்கிப் போயிருந்தன. பெரிய பெரிய கண்ணீர்த் துளிகளாக அவளது சலவைக்கல் போன்ற கன்னங்களில் வழிந்து கொண் டிருந்தன.
என்னைத் திட்டு, பச்சோ கண்ணு!” அப்பா அன்போடு கூறினார். என் அம்மாவும் விகசித்தவாறே பாதுஷாஹீ சித்தியிடம் வசவுப் பிச்சைக்குக் கையேந்தி நின்றாள்.
யா அல்லாஹ்! யா அல்லாஹ்!’ அவள் கர்ஜனை புரியத்தான் நினைத்தாள். ஆனால் நடுநடுங்கிப் போனாள். ‘யா-யா-யா- அல்லாஹ்! என் வயதை என் அண்ணனுக்குக் கொடேன். யா-மெளலா! என் தெய்வமே! ரசூலே! எனக்குப் பிச்சை …” பாடம் நினைவுக்கு வராத குழந்தையைப்போல் எரிந்து விழுந்து
அழத் தொடங்கிவிட்டாள்.
எல்லாருடைய முகங்களும் வெளிறிவிட்டன. அப்பாவின் கால்கள் உணர்வற்று ஓய்ந்து தொங்கின. ஆண்டவனே! இன்று ஏன் அத்தையின் வாயிலிருந்து அண்ணனுக்கு ஒரு வசவு கூடக் கிட்டவில்லை?
அவள் வசவுகளைக் கேட்டு என்றும் சிரிப்பது போல், அப்பா அன்றும் சிரித்துக்கொண்டிருந்தார்!
உண்மை ! உடன்பிறந்தவளின் திட்டுகள் உடன்பிறந்தவர்களைப் பாதிப்பதில்லை! அவை அன்னையின் பாலில் ஊறியவை.
கதையை வாசித்துமுடிக்கும் போது அத்தையின் மீதான நமது கோபம் மறைந்து அவளது அன்பையும் கண்ணீரையும் உணருகிறோம். இயலாமை தான் இப்படிக் கோபமாக வெளிப்படுகிறது. கோபத்தின் வழியாகவே தன்னை ஆற்றுப்படுத்திக் கொள்கிறாள் அத்தை. அவள் கோபத்தினுள் உண்மையிருக்கிறது. கோபத்தில் சில வார்த்தைகளைக் கூடுதலாகப் பேசியபோது அதை உணர்ந்து அவளைத் தன்னைத் திட்டிக் கொள்கிறாள்.

உலகின் கண்களில் பச்சோ அத்தை போன்றவர்கள் மோசமானவர்கள். ஆனால் நிஜத்தில் அப்படியில்லை. வாழ்க்கை நெருக்கடி அவர்களை அப்படி உருமாற்றி வைத்திருக்கிறது. நாக்கில் நெருப்பை வைத்துக் கொண்டிருப்பவர்கள் மனதில் வேறு ஏதோ ஏக்கம் இருக்கிறது. எதையோ இழந்து விட்டு இப்படிக் கோபம் கொள்கிறார்கள். அன்பை வெளிக்காட்டிக் கொள்ளத் தெரியாதவர்கள் அதிகம் கோபம் கொள்ளுகிறார்கள்.
அன்னையில் பாலில் ஊறிய சொற்கள் என்பது எத்தனை அழகான பிரயோகம். சுக்தாய் இந்தியாவின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகக் கொண்டாடப்படுவது இது போன்ற வெளிச்சமிக்க வரிகளை, அபூர்வமான மனிதர்களை எழுதியதால் தான்.
இந்தியக்குடும்பங்களுக்குள் ஓராயிரம் கதைகள் புதைந்து போயிருக்கின்றன. எவ்வளவு எழுதினாலும் எத்தனை மொழிகளில் எழுதினாலும் இந்தக் கதைகளின் விசித்திரமும் புதிரும். விநோதமும் குறைவதேயில்லை. கதைகளைத் தேடி இந்திய எழுத்தாளர் எங்கும் பயணிக்க வேண்டியதில்லை. குடும்ப விருட்ஷத்தின் வேர்களை. கிளைகளை, நிழலை அறிந்து கொள்ளத் துவங்கினாலே போதும்.
••
அரூ சிறப்பிதழ்
சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் அரூ இணைய இதழ் எனது விரிவான நேர்காணலை வெளியிட்டுள்ளது. அத்தோடு எனது படைப்புகள் குறித்த கட்டுரைகளைக் கொண்ட சிறப்பு பகுதியும் வெளியிட்டுள்ளது. இந்தச் சிறப்பிதழை முன்னெடுத்த அரூ நண்பர்களுக்கும் கட்டுரையாளர்கள் பிருந்தா சாரதி, பு. பிரியதர்சினி, ராம் தங்கம் ,வினோத், கணேஷ் பாபுக்கும் எனது மனம் நிரம்பிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு நேர்காணலை எடுப்பதற்காக ஆறு மாதங்களுக்கும் மேலாக எனது புத்தகங்களைப் படித்து கேள்விகளைத் தயாரித்து தொகுத்து அனுப்பி வைத்தார்கள். பதில்கள் கிடைத்தவுடன் மறுபடியும் துணைக்கேள்விகள் வந்தன. அவற்றுக்கும் பதில் எழுதினேன். முழு நேர்காணைலையும் உரிய முறையில் எடிட் செய்து சிறப்பாக வெளியிட்டிருக்கிறார்கள் . இந்த உழைப்பும் ஆர்வமும் பாராட்டுக்குரியது. இது போலவே எனது படைப்புகளை முழுமையாகப் படித்து உரிய கட்டுரையாளர்களை அணுகி கட்டுரைகள் பெற்றிருக்கிறார்கள். பெருந்தொற்றுக் காலம் என்பதால் பலரால் எழுத இயலாமல் போய்விட்டது. மிகுந்த ஈடுபாட்டுடன் இணைய இதழை நடத்தி வரும் ராம், பாலா, சுஜா. கணேஷ்பாபு மற்றும் நண்பர்கள் அனைவரையும் மனம் நிறையப் பாராட்டுகிறேன்.




இணைப்பு
இதழ் 11அரூ இணைய இதழ்
ஒரே கிராமத்தினர்
ரஷ்யச்சிறுகதை
வாலென்டின் காத்தயேவ்
தமிழில் பாஸ்கரன்

“பெண்கள் என்னைக் காதலிக்கின்றனர்” என்று சிலிர்த்த தலை மயிரையுடைய கட்டையான அழகிய சிப்பாய் ஒருவன் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் தனது சகாக்களிடம் கூறினான்.
அவன் அந்தக் குடிசையின் நடுவில் நின்று கொண்டிருந்தான். அவனைத் தவிர அங்கே மூன்று நோயாளிகள் இருந்தனர். மக்கிப்போன வைக்கோல் நாரினால் கட்டப்பட்ட அகன்ற அட்டைகளில் அவர்கள் படுத்திருந்தார்கள். அதில் இருவர் அசிரத்தையாக கூரையைப் பார்த்தவண்ணமிருந்தனர். மூன்றாவது ஆசாமி மூலையில் படுத்தவாறே கிழிந்த துணிகளினால் பெண்ணைப் போல் சுற்றிக் கொண்டிருந்தான். அவன் பனியால் விறைத்துப் போயிருந்தான.
அழுத்தமாகக் கவிந்திருந்த ஆர்க்டிக் பனிக்காலம். அங்கே மரப்பலகையிலான குடிசைகளும், பென்சிலைப்போல் நெட்டுக்குத்தாக பிர் மரங்களுமிருந்தன. என்ஜினிலிருந்து வந்த புகைமண்டலம் ரயில் நிலையத்திற்கு மேலே தெரிந்தன. காக்கைக் கூட்டங்கள் தாழ்ந்து பறந்து கொண்டிருந்தன. செஞ்சிலுவையிட்ட கூட்ஸ் வண்டிகளில், புள்ளி விழுந்த பிர்ச் கட்டைகளிருந்தன.
நோயாளிச் சிப்பாய்கள் வேலையில்லாமையால் ரொம்பக் களைத்துப் போய்ச் சோர்ந்திருந்தார்கள் என்றாலும் கூட, தங்கள் பட்டாளத்தோடு சேர்ந்துகொள்ள அவர்கள் விரும்பவில்லை. ஏனெனில், அங்கே உத்திரவிற்குக் கீழ்ப்படிய வேண்டும். குழிகளைத் தோண்ட வேண்டும். அதோடு மட்டுமின்றி, எதிரிகளினால் ஆபத்து வேறு இருக்கிறது. ஒருவனுக்கு கீல்வாதம் இன்னொருவனுக்கு கால் முழுதும் கட்டிகள் கந்தலைச் சுற்றிக் கொண்டு படுத்திருப்பவனுக்கு கடுமையான டைபாய்டு வந்திருக்கிறது. சிலிர்த்த தலை மயிரையுடைய அந்த சிப்பாய்க்கு கெட்ட நடத்தை காரணமாக ஏற்பட்ட நோய்.
“பெண்கள் என்னைக் காதலிக்கின்றார்கள்” என்று அவன் மெதுவாகக் கூறினான். “நான் பொய் சொல்கின்றேன் என்று எண்ணுகின்றீர்களோ? கடவுள் சத்தியமாகச் சொல்கின்றேன். இது உண்மை! ஏன் அவர்கள் என்னைக் காதலிக்கிறார்கள்? அது சாத்தானுக்குத்தான் தெரியும். பெண்களுடன் எப்படி பழகுவது என்பது எனக்குத் தெரியும். அதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், காலத்தினால் பெண்களை வசப்படுத்த முடியாது. எப்படி அவர்களை வசப்படுத்துவது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஆமாம் அதுதான்! ஏனென்றால், எல்லாப் பெண்களும் கர்வத்தை மதிப்பதில்லை. ஆனாலும் சிலர், இருக்கத்தான் செய்கிறார்கள். அதைப்பற்றி நான் எதிர்த்து ஒன்றும், கூறப்போவதில்லை. அதில் பிரயோசனமுமில்லை.

ஒரு நல்ல பெண்ணோடு இருப்பதென்றால், ரொம்பக் கௌரவமாக இருக்க வேண்டும். அவள் உங்களைப் பார்த்து ஆமாம் என்பாள். நீங்கள் அவளைப் பார்த்து ஆமாம் எனக் கூற வேண்டும். அவள் இல்லையென்றால், நீங்களும் இல்லை யென்றால், நீங்களும் இல்லை என்றே கூற வேண்டும். அவள் இல்லையென்றால், நீங்களும் இல்லை என்றே கூற வேண்டும். அதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்; ஆமாம். அவ்வளவுதான்! நான் ஒரு காலத்தில் காப்டன் விரெனிடம் உண்மையாக உழைத்துக் கொண்டிருந்தேன்.
காப்டன் விரென் சுயேச்சையானவர். அங்கே ஒருத்தி வேலை செய்து வந்தாள். அவள்தான் வீட்டுவேலைக்காரி. அவள் ரொம்ப சுத்தமாக இருப்பாள். அவள் இளமையானவள்தான். அவளுடைய பண்புகளைக் குறை கூறுவதற்கில்லை. ஆரம்பத்தில் அவளை கர்வத்தின் மூலம் கவர்ந்துவிடலாம் என எண்ணினேன். அதனால் ஒன்றும் பயனில்லை. பின்னர் வேறு வழிகளைக் கையாண்டேன். அவள் ஆமாம் என்றால் நானும் ஆமென்பேன். அவள் இல்லையென்றால், நானும் இல்லையென்பேன். அவளோடு நான் எல்லா இடங்களுக்கும் செல்வேன். நாடகக் கொட்டகைகளுக்குச் செல்வேன். அவளுக்கு நான் சாக்லெட் கூட வாங்கித் தருவேன். எனக்கென ஒரு வழியுண்டு. அவள் இந்தப் பக்கமும், அந்தப்பக்கமும் செல்வாள்-ஆனால், காலம் தாழ்ந்துவிட்டது. நான் ஒவ்வொரு நாள் இரவிலும் அவளைச் சந்திக்கச் செல்வேன்…. ஆமாம். நான் களைப்படைந்துவிட்டேன். அதுதான் உண்மை. பெண்கள் என்னைக் காதலிக்கின்றார்கள்- அப்படித்தான் எல்லோரும் சொல்கிறார்கள்
உதவி டாக்டர் கையில் ’தர்மாமீட்டர்’ எடுத்துக் கொண்டு அறைக்குள் வந்தார்.
“ஆமாம். கிராமத்தார்களே, பெண்கள் உங்களைக் காதலிக்கின்றார்கள் என்ற கயிறை இன்னும் திரித்துக் கொண்டுதானிருக்கிறீர்களோ?” என்று கேட்டார். “சரி பொய் சொல்லிக் கொண்டிருங்கள்! இதிலிருந்தே பெண்கள் உங்களை எப்படிக் காதலிப்பார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது”
அவர் தனது கண்ணைச் சிமிட்டினார்.
“உண்மைதான். உனக்குத்தான் அன்பளிப்பு தந்திருக்கிறார்களே!”
“ஆ, அந்தப் பெண்கள்!”- கவலையற்றவனைப் போல பாசாங்கு செய்தபடி முன்னவன் கூறினான்: “அவர்கள் நாசமாகப் போகட்டும் என்று மூன்று முறை கூறுகின்றேன். அவர்கள் எனது வாழ்க்கையைக் கெடுத்துவிட்டார்கள் என்பது உண்மைதான்.”
கந்தைத் துணிகளைச் சுற்றிக் கொண்டு படுத்திருந்தவன் தோளைப் பிடித்தார் டாக்டர்.
“என்னப்பா! தூங்குகின்றீர்களா? எழுந்திருங்கள். மாட்டீர்களா? நான் இப்பொழுது ‘டெம்பரேச்சர்’ பார்க்க வேண்டும். என்ன இவ்வளவு நடுங்குகின்றீர்களே! ஜுரம் 104, 105 டிகிரி இருக்கும்போலிருக்கிறதே!”
“நான் ஏதாவது குடித்தால் தேவலாம் என்று எண்ணுகிறேன்…..“ என்று வலியால் அவஸ்தைப்படும் சிப்பாய் அமைதியாகக் கூறினான்.
“இந்த ‘தர்மாமீட்டரை’ உன் கட்கத்திற்குள் வைத்துக்கொள்”
நோயாளிச் சிப்பாய், கீழ்ப்படிதலோடு அந்தத் ‘தர்மாமீட்ட’ரை எடுத்து வைத்துக்கொண்டு மௌனமானான். அவனுக்கு ரொம்ப உஷ்ணமாகவும், அசௌகரியமாகவுமிருந்தது.
குடிசைக்குள் இருள் பரவத் தொடங்கியது. டாக்டர் வெளியே போய்விட்டு ஒரு கோப்பை, சிம்னி இல்லாத விளக்கு இவற்றோடு திரும்பி வந்தார். அந்தச் சிறிய விளக்கு சிகப்புப் புகையைக் கக்கியது. டாக்டர் அதை ரொட்டியடுப்பின்மீது வைத்தார். உடனே ஜன்னல்களெல்லாம் நீல நிறமாகத் தெரிய ஆரம்பித்தன. அறையில் வெளிச்சம் பரவியதும் அந்த அறை நெருக்கமாகவும், அழுக்காகவும் தோன்றியது.
“உனக்கு ரொம்ப கடுமையாக இருக்கிறதா?” என்று கேட்டார் டாக்டர்.
“ஆமாம்.”
“நான் பெரிய டாக்டரிடம் சொல்லுகிறேன்”
அரைமணி நேரத்திற்குள்ளாக அந்த சிறிய விளக்கும், சிகப்ப் புகையும் அவர்களுக்குப் பழக்கமாகி விட்டது. மீண்டும் எரிச்சல் சூழ்ந்தது. கீல்வாதமுள்ள சிப்பாய் சொரிந்து கொண்டான். ஏதோ பூச்சிகள் அவனைக் கடித்தன.
“அவை நாசமாகப் போகட்டும்! அந்தச் சனியன்கள் மீண்டும் கடிக்கின்றன. அதனால்தான் எனக்கு மின்ஸ்க் மாகாணம் பிடிப்பதில்லை. அவை இல்லாத ஒரு வீடு கூட அங்கே கிடையாது.”
“அவன் அமைதியின்றி தவித்தான். பைக்குள்ளிருந்து ஏதோ ஒரு எண்ணெய்ப் பசையுள்ள பெட்டியை எடுத்து நெருப்புக்குச்சியைக் கிழித்து, சுவற்றில் காட்டிக் கொண்டிருந்தான்.
“அவற்றை மறுபடியும் எரிக்கிறாயா?” என்று, கட்டிகளுள்ள சிப்பாய் கேட்டான்.
“ஆமாம். நான் அவற்றை எரிக்கிறேன். என்னை எவ்வளவு துன்புறுத்துகின்றன, தெரியுமா?”
“இந்தக் குடிசையைக் கொளுத்தி விடாமல் பார்த்துக் கொள்”
“ ஒன்றும் பயப்படாதே!”
நீண்ட நேரம் மௌனம் நிலவியது.
“அவ்வளவுதான்-பெண்கள் என்னைக் காதலிக்கிறார்கள்” என்றான் அந்தச் சிப்பாய் மீண்டும். “அவர்கள் ஏன் என்னைக் காதலிக்கிறார்கள். அதை என்னால் சொல்ல முடியவில்லை. என்னை எதிர்த்து நிற்க முடியவில்லை. கடவுள் சத்தியமாக அது உண்மைதான். சென்ற வருடம் நான் விடுமுறையிலிருந்த பொழுது பெண்களின்றி என்னால் இருக்கவே முடியவில்லை. அவர்கள் எல்லாரும் சிப்பாய்களின் மனைவிமார்கள். நீங்கள் நம்பவே மாட்டீர்கள்!”
“சிப்பாய்களின் மனைவிகள் என்றால் அது உண்மைதான்!” என்றான், பூச்சிகளை எரித்துக் கொண்டிருந்தவன்.
“அதை நீங்கள் நம்பமாட்டீர்கள்! என்றாலும் அது எல்லோருக்கும் தெரியும். கணவன்மார்கள்தான் வீடுகளிலில்லையே.”
“அவர்கள் எதற்காகப் பயப்பட வேண்டும்?” என்று ஆத்திரத்தோடு கூறினான் கட்டிகளுள்ள சிப்பாய், “புருஷர்களோ பதுங்குக்குழிகளில் இருக்கின்றனர். அதுவும் ரொம்ப தூரத்திற்கப்பால்! ஆண்கள் இல்லாமல், வாழ்வது ரொம்புவம் கஷ்டம்! ஹும்! நமது வாழ்க்கையெல்லாம், கடுங்காவல் தண்டனை அனுபவிப்பது போலத்தான். என் மனைவி மட்டும் அப்படிச் செய்கிறாள் என்பதை நான் கண்டுபிடித்து விட்டால் அவ்வளவுதான்! நான் அவளைக் கொன்று விடுவேன். ஆமாம் கடவுள் சாட்சியாக நான் கொன்றுவிடுவேன்.”
“ரொம்ப சரி! இருந்தாலும் நீ ஒன்றும் அப்படிச் செய்யமாட்டாய்!” என்றான் மற்றொரு சிப்பாய்.
“நான் கூறியதைப் போல விடுமுறையில் அங்கே சென்றிருந்தேன். எல்லோருமே என்னைக் கண்டதும் தலைவணங்குகிறார்கள்! ஆமாம். அந்த விடுமுறை ரொம்ப உல்லாசமாகத்தான் கழிந்தது.

பெண்களுக்காக அங்கே அலைய வேண்டியதில்லை. எனக்கு அப்படிப்பட்ட பெண்கள் வேண்டியதில்லை. எனக்கு வேண்டியது இளமங்கை; சொகுசானவள். நான் தங்கியிருந்த அந்தக் கிராமத்தில் கடைசியிலிருந்த மூன்றாவது குடிசையில் அப்படிப்பட்ட இளமங்கை ஒருத்தி இருந்தாள். அவளும் ஒரு சிப்பாயின் மனைவிதான். அவளை தாஷா என்றழைத்தார்கள். அதாவது தார்யா என்று அர்த்தம். அவள் நல்ல பெண். ஆமாம்; நான் அவளை விரும்பினேன். ஆரம்பத்தில் ஒன்றுமில்லை. அவள் தன் போக்கிலே சென்றாள். எதையும் கேட்கவில்லை. நான் கர்வத்தோடிருந்து பார்த்தேன். பயனில்லை. கௌரவமாகப் பழகிப் பார்த்தேன். அதிலும் பலனேற்படவில்லை. அவளை வசப்படுத்துவது ரொம்புவம் கஷ்டமான காரியம்தான் என்று எண்ணினேன்.
எப்படி எல்லாமோ அவளை முயற்சித்துப் பார்த்தேன்- அவள் வழிக்கு வரவில்லை. தினசரி அவளைத் தொடர்ந்து நடந்து பார்த்தேன்- பயனில்லை. ‘இன்றிரவு நான் வருகிறேன்’ என்று சொல்லுவேன். அவள் முகமெல்லாம் அடுப்பைப்போல் வெண்மை படர உட்கார்ந்திருப்பாள். அவள் கொஞ்சம் சிரித்தால் போதும். ஆனால், அதுதானே இல்லை! என்னைப் பார்த்து ஜனங்கள் சிரித்தார்கள். ஆனால், அவள் சிறிதும் அசையவே இல்லை! ஒருநாள் அவளே என்னிடம் வந்தாள். ‘என் புருஷனின்றி என்னால் இனிமேல் இருக்கவே முடியாது’ என்று கூறினாள். அவள் அழுதாள்: ஏனெனில், அவள் புருஷனைக் கண்டு இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. நான் அவளை இதமாக முத்தமிட்டேன். அவள் கைகளை என் கைகளால் பிடித்துக்கொண்டேன். அந்த விடுமுறைக் காலம் பூராவும் என் மனைவியுடன் வாழ்வதைப் போலவே, அவளோடு வாழ்ந்து வந்தேன்.
மாலை வேளைகளில் அவளைப் பார்க்க வருவேன் எனது பூட்ஸ்களைக் கழற்றுவாள்; உடலெல்லாம் நடுங்கிக் கொண்டிருக்கும். அது எவ்வளவு அற்புதமாகவிருந்தது! நான் எங்கெல்லாம் சென்றோனோ அங்கெல்லாம் அவள் நிழலைப்போலவே என்னைத் தொடர்ந்தாள். அவள் அவ்வளவு நல்லவள். ரொம்ப அருமையான பெண். அதில் முக்கியம் என்னவெனில், வேறு இளைஞன் யாரேனும் அவளிடம் சென்றிருந்தாலும் அவள் ஒன்றும் இணங்கியிருக்கமாட்டாள். ஆனால் என்னைப் பொறுத்தவரையிலோ, அது வேறு விஷயம். பெண்கள் என்னைக் காதலிக்கின்றனர். அது உண்மைதான்!”
“உன்னுடைய மாகாணம் எது?” என்று கேட்டான் கட்டிலிலுள்ள சிப்£ய் சந்தேகக்குறிப்போடு.
“அனான்யேவ்ஸ்கி ஜில்லாவிலுள்ள கெர்ஸன். நாம் ஒரே ஊரைச் சேர்ந்தவர்களா என்ன?”
“இல்லை. நான் தாவ்ரிசெஸ்க்கைச் சேர்ந்தவன்”
“ஆமாம். அவள் மிக அருமையானவள். அந்த தாஷாதான். சுருக்கமாகச் சொல்வதென்றால் ரொட்டியுடன் சேர்ந்த தேநீரைப் போன்றவள். அவளை நினைத்தாலே போதும்…..“
பின்னர் நீண்டநேரம் மௌனம் நிலவியது.
“என்ன? உன்னுடைய கிராமம் எது?” என்று திடீரெனக் கேட்டான். கந்தல் துணி சுற்றியிருப்பவன் பலவீமான குரலில்.
எல்லோரும் அவனைப் பார்த்துத் திரும்பினர். அங்கே இருண்ட மூலையிலிருந்து ஒரு கண் கவனமாகப் பார்த்தபடி மின்னியது.
“நான் நிகோலெவ்ஸ்காவைச் சேர்ந்தவன். ஆமாம் அனான்யெவ்ஸ்கி ஜில்லாதான். நாம் சந்தர்ப்பவசமாக ஒரு ஊரோ?”
“ஆமாம். நாம் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.”
கந்தல் துணி சுற்றியிருந்தவன் கூறினான் “நானும் கூட அனான் யேவ்ஸ்கியைச் சேர்ந்தவன்தான்”
“ஆ! அப்படியானால் அந்தச் சிப்பாயின் மனைவி தாஷாவை உனக்குத் தெரியுமென்று சொல்” என்று உணர்ச்சி மேலிட்டுக் கத்தினான் அவன்.
“அவளை எனக்குத் தெரியும்!” என்றது அந்த மெல்லிய குரல்.
“அவள் என் மனைவி”
“ஆமாம். நாம் எல்லாம் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தான்!”
அவர்கள் எல்லோரும் மௌனத்தில் ஆழ்ந்தனர். ஐந்து மைல் தூரத்துக்கப்பால் வெடித்த குண்டுகளின் சப்தம் கூட ரொம்பத் தெளிவாகக் கேட்டது. கட்டிகளுள்ள சிப்பாய் இருமினாள்.
“எனக்கு ஏதாவது குடிப்பதற்கு மட்டும் இருந்தால்….“ என்றான் கந்தல் துணி போர்த்தியவன்.
மீண்டும் அவனுக்கு குளிர் கண்டது. ரொம்பக் கஷ்டப்பட்டாள். தான் எதையுமே பார்க்க முடியாமலும் கேட்க முடியாமலும் இருக்க வேண்டுமென்று விரும்பினான். ஜுரம் கூட தனக்குத் தெரியக்கூடாது என விரும்பினான். அங்கே யுத்தமிருப்பதாகவோ, அது ஒரு புதிய இடமென்றோ, அங்கு குட்டையான சிப்பாய் நிற்கின்றானென்றோ அவனுக்குத் தோன்றவில்லை. அவன் தனது குடிசைக்குள்ளேயே இருப்பதாக நினைத்தான்-இவைகளெல்லாம் ஏதோ ஒரு பயங்கரமான கனவுபோல் அவனுக்குத் தோன்றியது.
••
May 9, 2021
ஆல்பெர் காம்யுவின் அம்மா
ஆல்பெர் காம்யு எழுதிய முதல் நாவல் அந்நியன். ( Albert Camus’s ‘The Stranger’) வெ.ஸ்ரீராம் மொழிபெயர்ப்பில் க்ரியா பதிப்பக வெளியீடாகத் தமிழில் வெளியாகியுள்ளது. இந்த நாவல் 1942-ல் எழுதப்பட்டது.

“இன்று அம்மா இறந்துவிட்டாள். ஒருவேளை நேற்றாகவும் இருக்கலாம்; எனக்குத் தெரியாது” என்று ‘மெர்சோ’சொல்வதிலிருந்து நாவல் துவங்குகிறது.
என் கல்லூரி நாட்களில் எழுத்தாளர் சுந்தர ராமசாமியைக் காணச் சென்றிருந்த போது அவர் இந்த நாவல் குறித்து வியந்து பேசிக் கொண்டிருந்தார். மெர்சோவைப் பற்றிய அவரது அவதானிப்பு மறக்கமுடியாதது.
கரிசலின் வெக்கை கொப்பளிக்கும் எனது கிராமத்திலிருந்தபடியே அந்த நாவலை நான் வாசித்தபோது சூரியனின் தகிப்பைப் பற்றிய வரிகளை மெய்யாக உணர்ந்தேன்.
இந்த நாவலில் வரும் மெர்சோ தாயின் மரணத்தை எளிதாக எடுத்துக் கொள்கிறான். உண்மையில் காம்யு தன் தாயின் மீது மிகுந்த அன்பு கொண்டவர். நினைவு தெரிவதற்கு முன்பாகவே தந்தையை இழந்தவர் என்பதால் தாயின் அன்பு தான் அவரை வளர்த்தது. பிரெஞ்சு வம்சாவழியினைச் சேர்ந்தவர் என்ற போதும் அவரது தந்தை பிரான்சின் ஆதிக்கத்திலிருந்த அல்ஜீரியாவிற்குச் சென்று குடியேறியவர். அவரது அன்னை கடைசி வரை அங்கேயே தான் வசித்தார்.

காம்யுவையும் நாவலில் வரும் அம்மாவைப் பற்றிய பிம்பத்தையும் புரிந்து கொள்வதற்கு அவரது சொந்த வாழ்க்கையை அறிந்து கொள்வது அவசியம்
நேற்று Camus 2010 என்ற பிரெஞ்சுப் படத்தைப் பார்த்தேன் தொலைக்காட்சிக்காக Laurent Jaoui இயக்கியது. காம்யுவின் கடைசிப் பத்து ஆண்டுகளைப் படம் விவரிக்கிறது. இந்தப் படம் காம்யுவைப் புரிந்து கொள்வதற்கு மிகச்சிறந்த வழிகாட்டியாக உள்ளது
படத்தின் நான்கு முக்கியக் காட்சிகளைச் சொல்லியாக வேண்டும்
வறுமையின் காரணமாகப் பணம் கட்டி படிக்க வைக்க முடியாத குடும்பச் சூழலில் காம்யுவின் ஆசிரியர் ஜெர்மைன் அவருக்காக ஸ்காலர்ஷிப் கிடைக்க ஏற்பாடு செய்கிறார். காம்யுவை படிக்க அனுப்பி வைக்கும்படி வீட்டில் வந்து பேசுகிறார். அவரது பாட்டி படிக்க வைக்கப் பணமில்லை. அவன் வேலைக்குப் போகட்டும் என்கிறார். ஆசிரியர் பேசி சம்மதிக்க வைக்கிறார். தன்னால் ஒரு ரூபாய் கூடச் செலவு செய்யமுடியாது என்று பாட்டி உறுதியாகச் சொல்கிறார். ஆறு ஆண்டுகளும் உதவித் தொகை கிடைக்கும் என்று ஆசிரியர் உறுதி மொழி கொடுத்துப் படிக்க அனுமதி பெறுகிறார். இப்படிப் படித்து உருவானவர் தான் ஆல்பெர் காம்யு. இதனால் வாழ்நாள் முழுவதும் அவர் பணம் எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்ந்திருந்தார். தனக்காக எதையும் செலவு செய்யக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்திருக்கிறார்.
அல்ஜீரியாவில் வசிக்கும் தாயைக் காணச் செல்லும் காம்யு தன்னோடு பாரீஸிற்கு வந்துவிடும்படி அம்மாவை அழைக்கிறார். அம்மா வரமறுத்து இரண்டு காரணங்களைச் சொல்கிறார்

ஒன்று நீ குடியிருக்கும் வீதி மிகவும் அமைதியாக இருக்கிறது. அது எனக்குப் பிடிக்கவில்லை. இரண்டாவது அங்கே அரேபியர்களைக் காண முடியாது.
இந்தப் பதில் அவர் எந்த அளவு அரேபியர்களுடன் நெருங்கிப் பழகி நட்பு கொண்டிருந்தார் என்பதன் அடையாளம். காம்யுவின் நினைவுகளிலும் இது போன்ற பந்தமே மேலோங்கியிருந்தது. அது போலவே நகரவாழ்க்கை எல்லோருக்கும் பிடித்தமானதில்லை என்பதும் வெளிப்படுகிறது.
தனது 44 வயது வயதில் காம்யு நோபல் பரிசு பெற்றபோது பத்திரிக்கையாளர்கள் அவரது அம்மாவைத் தேடிப் போய் இந்தச் சந்தோஷத்தை எப்படி உணருகிறீர்கள் என்று கேட்கிறார்கள். அம்மாவிற்கு அது என்ன பரிசு. எதற்காக வழங்கப்பட்டிருக்கிறது என்று எதுவும் தெரியவில்லை. அவர் கேமிராவைப் பார்த்து காம்யு சிறுவயதிலிருந்து நிறையப் படிக்கக் கூடியவன் என்கிறாள். உங்களுக்கு இந்தப் பரிசு மகிழ்ச்சி தருகிறதா எனக்கேட்டதற்கு அவனது ஆசிரியருக்கு மகிழ்ச்சி தரக்கூடும் என்கிறாள். அது உண்மை. காம்யுவை படிக்க வைக்க உதவியர் அவர் தானே
நோபல் பரிசினை பெற்றபிறகு தனது ஆசிரியர் ஜெர்மைனுக்கு உணர்ச்சிப்பூர்வமான நன்றிக்கடிதம் ஒன்றை காம்யு எழுதியிருக்கிறார். தந்தை இறந்த போது காம்யு வெறும் 11 மாத பையன். அவரது தாய் செவித்திறன் குறைந்தவர். பாட்டி தான் அவர்களை வளர்த்தார். வறுமையான சூழல். ஆனால் காம்யு பள்ளியில் நன்றாகப் படித்தார். பிரகாசித்தார், அவரது அன்பான ஆசிரியர் ஜெர்மைன், வழங்கிய ஊக்கத்திற்கு அளவேயில்லை. இந்த நன்றியை நினைவுபடுத்தும் விதமாகவே அந்தக் கடிதம் எழுதப்பட்டிருந்தது.
என் இதயத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு நன்றி சொல்கிறேன். நோபல் பரிசு பெற்ற செய்தியைக் கேட்டபோது, என் அம்மாவிற்குப் பிறகு உங்களையே நினைத்துக் கொண்டேன். என்னைப் போன்ற ஒரு ஏழைச் சிறுவனுக்கு நீங்கள் அளித்த போதனையும் உதவிகளும் இல்லாமல் இது நடந்திருக்காது. என்றும் உங்களின் நன்றியுள்ள மாணவனாகவே இருப்பேன் என்று உணர்ச்சிப்பூர்வமாக அந்தக் கடிதத்தில் காம்யு எழுதியிருக்கிறார் காம்யுவின் ஆசிரியர் ஜெர்மைன்,போன்றவர்களே இந்த உலகின் ஒளியாக இருக்கிறார்கள்.
நோபல் பரிசு பெற்றபிறகு பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கிறார் காம்யு அப்போது ஒருவன் நீங்கள் அல்ஜீரிய விடுதலைக்காக ஏன் குரல் கொடுப்பதில்லை என்று கோபமாகக் கேட்கிறான். தான் இரண்டு இனங்களும் இணைந்து வாழ வேண்டும் என விரும்புவதாகச் சொல்கிறார். அது நடக்காத விஷயம். நீங்கள் அல்ஜீரியா போராட்டக்குழுவிற்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். அதன்விடுதலை இயக்கங்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்கிறான். ஆயுதம் தாங்கிய போராட்டத்தைத் தான் ஏற்பதில்லை. வெடிகுண்டு ஒரு போதும் தீர்வாக இருக்காது. அது தான் உங்கள் வழி என்றால் நான் அதை ஏற்கமாட்டேன். டிராமில் நீங்கள் குண்டு வைப்பதாக இருந்தால் நான் என் அம்மாவைக் காப்பாற்றவே முயல்வேன் என்கிறார்

அவரது அம்மா ஒரு குறியீடு. அல்ஜீரியாவில் தலைமுறைகளுக்கு முன்பே குடியேறி வசிக்கும் பிரெஞ்சு இனத்தின் அடையாளம். அம்மா அதிகம் பேசுவதில்லை. ஆனால் மௌனமாக எதையும் உணர வைக்கிறார். காம்யுவின் கடைசிப் பயணத்தில் கூட அவர் அம்மாவைத் தான் நினைவு கொள்கிறார். அம்மா ஏன் இத்தனை கொந்தளிப்புகளுக்கு இடையிலும் அல்ஜீரியாவில் வசிக்கிறார் என்றே கேள்வி முக்கியமானது.
நாவலில் வரும் மெர்சோ காம்யுவின் இன்னொரு வடிவம் என்றே சொல்ல வேண்டும்
காம்யுவின் புகைப்படங்களைக் காணும் போது அவர் ஸ்டைலாகச் சிகரெட் பிடித்தபடியே தான் போஸ் கொடுத்திருப்பார். அந்தச் சிகரெட் தான் அவரது வாழ்க்கையை அழித்தது . காசநோயற்ற போதும் செயின் ஸ்மோக்கராக அவர் பிடித்த சிகரெட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக அவரது நுரையீரலை அழித்தன. சிகரெட்டை கைவிட்டால் மட்டுமே உயிர்வாழ முடியும் என்ற நிலை உருவானது. அப்போதும் அவர் சிகரெட்டினை விடவில்லை. கார்விபத்தில் மரணமடைவதற்கு முன்பும் கூட அவர் புகைத்துக் கொண்டிருந்திருக்கிறார்.

காம்யுவின் முதல் மனைவி ஒரு போதை அடிமை. அறிந்தே அவளைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்தத் திருமணம் நீடிக்கவில்லை. இரண்டாவது மனைவி பிரான்சின் ஒரு இசைக்கலைஞர். கணிதத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். காம்யுவிற்குப் பல்வேறு பெண்களுடன் இருந்த தொடர்பும் அவரது காதல் லீலைகளும் பிரான்சினை மனச்சிதைவிற்கு உள்ளாக்கியது. அவள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்று காப்பாற்றபட்டாள். மனநலச்சிகட்சை அளிக்கப்பட்டது. படம் அவரது திருமண வாழ்வின் குழப்பங்களை, பிரச்சனைகளை. பிரான்சின் கைவிடப்பட்டதை. அவளது மறுவாழ்வினை வலிமையாக வெளிப்படுத்துகிறது. பிரான்சின் வீட்டை விட்டு வெளியே போவதே கிடையாது. இரவில் உறங்குவதுமில்லை. நள்ளிரவில் எழுந்து இசை வாசிக்கிறாள். சரியாக வாசிக்க முடியாத போது கண்ணீர் விட்டு அழுகிறாள் காம்யு தனி அறையில் எழுதிக் கொண்டேயிருக்கிறார். அவரது உலகம் வேறு. நாடக இயக்குநராகச் செயல்பட்ட போது மரியா என்ற நடிகையைக் காதலித்தார். அவளுடன் பதினாறு ஆண்டுகள் நெருக்கமாக இருந்திருக்கிறார். திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த உறவு ஏற்படுத்திய கசப்பு தான் பிரான்சினை நோயுறச் செய்தது.
ஒரு காட்சியில் பிரான்சின் அம்மா, தங்கை இருவரும் காம்யுவிடம் எங்களுக்கு ஒரு தனி வீடு ஏற்பாடு செய்து கொடுத்துவிடுங்கள். அப்புறம் நீங்கள் உங்கள் விருப்பம் போல எந்தப் பெண்ணுடன் சுற்றுங்கள் என்கிறார்கள். காம்யு அவளைப் பிரிவதை விரும்பவில்லை. இந்தக் குழப்பங்கள். சிக்கல்களுக்குள் சிக்கி மனவேதனை அடைகிறார். அவரால் எழுத இயலவில்லை. ஆறு ஆண்டுகள் எதையும் எழுதாமல் இருந்தார்
நீண்ட கால நண்பராக இருந்த சார்த்தருடன் கருத்து வேறுபாடு. தன் படைப்புகளை விமர்சனம் செய்கிறவர்களுடன் சண்டையிடுவது என்று வீழ்ந்து கொண்டேயிருந்தார் காம்யு. ஆனால் பொதுமக்கள் அவரைக் கொண்டாடினார்கள். எங்கே சென்றாலும் அவரை அடையாளம் கண்டு கொண்டு வாழ்த்தினார்கள்.
படம் புத்தாண்டு கொண்டாட்டத்தினை இணைந்து மேற்கொள்ளக் காம்யுவைத் தேடி அவரது நண்பரும் பதிப்பாளருமான மைக்கேல் காலிமார்ட் தன் மனைவியோடு வருவதில் துவங்குகிறது. நண்பர்களுடன் புத்தாண்டினைக் கொண்டாடுகிறார். கடந்த கால நிகழ்வுகள் இடைவெட்டி வந்து போகின்றன

மெர்சோ’ அந்நியன் நாவலில் திருமணம் செய்து வாழுவது அல்லது திருமணம் செய்யாமல் பழகுவது இரண்டும் ஒன்றெனக் கருதுகிறான். இது காம்யுவின் சொந்த வாழ்வின் நிலைப்பாடே.
படத்தின் பிற்பகுதியில் தற்செயலாகச் சந்திக்கும் டேனிஷ் இளம்பெண் மீது காதல் கொள்ளும் காம்யு நள்ளிரவில் அவள் வீடு தேடிச் சென்று அவளுடன் படுக்கையைக் கழிக்கிறார். பெண்களுடன் அவருக்கு இருந்த நட்பும் காதலுமே அவரது குடும்ப வாழ்வின் முக்கியப் பிரச்சனையாக மாறியது.
அவரது புதிய நாவல் எதைப் பற்றியது என்று மைக்கேல் காலிமார்ட் கேட்கும் போது காம்யு வாயை திறப்பதில்லை. இரவு உணவிற்குப் பிறகு அவராகத் தான் காதலைப் பற்றி எழுத இருப்பதாகச் சொன்ன போது அவர் மனைவி கோபத்துடன் காதலை உணராத நீங்கள் எப்படி அதைப்பற்றி எழுத இயலும் என்று கேட்கிறாள். படம் முழுவதும் அவர்களின் உறவு விசித்திரமாக இருக்கிறது. விலகிப்போகவும் முடியாமல். ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் தடுமாறுகிறார் காம்யு
இலக்கிய உலகில் அவருக்கு உருவான எதிரிகள். மறுபுறம் அல்ஜீரியா பிரச்சனை குறித்த அவரது நிலைப்பாடு காரணமாக எழுந்த அரசியல் பிரச்சனைகள் என அவரது மனநிம்மதி முற்றிலும் அழிந்து போகிறது.
மேதையின் வாழ்க்கை எப்போதும் புதிரானது என்பதற்குக் காம்யு ஒரு உதாரணம்.
படத்தின் ஒரு காட்சியில் அவரும் சார்த்தரும் பேசிக் கொண்டு நடக்கிறார்கள். அதில் சார்த்தர் அவர் மீது வைக்கும் விமர்சனமும் அதை ஏற்றுக் கொள்ளாமல் காம்யு மறுப்பதும் அழகாக வெளிப்படுகிறது.

கார்விபத்தில் இறப்பதற்கு முன்பு காம்யுவின் மனைவியும் குழந்தைகளும் பாரிஸுக்கு ரயிலில் திரும்பி செல்ல திட்டமிட்டிருந்தனர், அவரும் மனைவி பிள்ளைகளுடன் ரயில் பயணம் மேற்கொள்ளவே முடிவு செய்தார். ரயிலில் ஏறிவிடுகிறார். ஆனால் அவரது மனைவி எங்களுக்காக நீங்கள் உடன் வர வேண்டாம். எங்களைத் தனியே வாழ விடுங்கள். உங்களுக்குப் பிடித்தமான வாழ்க்கையை நீங்கள் மேற்கொள்ளுங்கள். அது தான் இருவருக்கும் நல்லது என்று சொன்னாள். உடனே காம்யு ரயிலை விட்டு இறங்கிவிடுகிறார்.
பின்பு மைக்கேல் காலிமார்ட் குடும்பத்துடன் காரில் பாரீஸ் புறப்படுகிறார். பயண வழியில் அவரது முதல்நாவலைப் பற்றிப் பேச்சு வருகிறது. மிக வேகமாகச் சென்ற கார் கட்டுப்பாட்டினை இழந்து மரத்தில் மோதுகிறது. சம்பவ இடத்திலே காம்யு மரணமடைகிறார். அவரது நாவலில் பிரதிகள் சிதறிக்கிடக்கின்றன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது நண்பர் ஐந்து நாட்களுக்குப் பிறகு மரமணடைகிறார். முதல் மனிதன் என்ற காம்யுவின் கடைசி நாவல் அவரது மரணத்தின் பின்பே வெளியிடப்பட்டது
ஒரு காட்சியில் காம்யு விலை உயர்ந்த புத்தாண்டு பரிசுகளைத் தன் பிள்ளைகளுக்கு நண்பர் காலிமார்ட் வழங்கியதைக் கண்டிக்கிறார். பணத்தின் மதிப்பு அவர்களுக்குத் தெரியாமல் போய்விடும் என்கிறார். படம் முழுவதும் பிள்ளைகளுடன் அவரது உறவு நெருக்கமாகவேயில்லை. இன்னொரு காட்சியில் இளம்பெண் ஒருத்தியுடன் நாடக ஒத்திகைக்குக் காம்யு வந்திருப்பதைக் கண்ட அவரது காதலியான நடிகை கோபம் கொள்கிறாள். ஆத்திரத்தில் கத்துகிறாள். அவளைச் சமாதானப்படுத்துகிறார் காம்யு. மனைவி காதலி என இருவரும் துரத்திவிடுகிறார்கள். தனியறையில் இருட்டில் தற்கொலை எண்ணத்துடன் இருப்பவரை மைக்கேல் காலிமார்ட் தான் காப்பாற்றுகிறார்.
அவர்கள் இருவரும் மழைநாள் ஒன்றில் ஒரே குடைக்குள் நடந்து சென்றபடியே உரையாடுவது மிக அழகான காட்சி. மைக்கேல் காலிமார்ட் காம்யுவை மிகவும் நேசித்தார். இன்னொரு காட்சியில் அவர் சிகரெட் பிடித்தால் உயிர்வாழ முடியாது என்று மைக்கேலின் மனைவி கண்டிக்கிறார். இதைப் பிடிக்காமல் காம்யு காரை விட்டு இறங்கி நடக்க ஆரம்பிக்கிறார். தன் இறுதி ஆண்டுகள் முழுவதும் மனக்கொந்தளிப்புடன் காம்யு காணப்பட்டதைப் படம் துல்லியமாகச் சித்தரித்துள்ளது

தனது பால்யகாலத்தின் நினைவுகளுக்கே காம்யு இறுதியில் சென்று சேருகிறார். அவரது கடைசி நாவல் அதைப்பற்றியதே. அவரது மரணச் செய்தியை அம்மாவிற்கு எப்படித் தெரிவிப்பது எனத் தயங்கி அவரது சகோதரி மூலம் தெரியப்படுத்துகிறார்கள். காம்யுவின் அம்மா கண்ணீரை அடக்கிக் கொண்டு அவனுக்கு வயது ஒன்று அதிகமில்லையே என்று சொல்கிறார். அவ்வளவு தான் மகனது மரணம் பற்றிச் சொன்ன வார்த்தைகள்.
அம்மாவின் மௌனத்தைத் தான் காம்யு தனது படைப்பின் ஆதாரமாகக் கொண்டிருக்கிறார். நாவலில் வரும் மெர்சோ அம்மாவின் மரணத்தைத் தனது பால்யத்தின் முற்றுப்புள்ளியாக நினைக்கிறான். அவன் விரும்பாத, ஒரு போதும் இழக்கக்கூடாது என்று நினைத்த உறவு துண்டிக்கப்படுகிறது. அந்தத் துயரம் தான் அவனை வெறுமைக்குள் தள்ளுகிறது.
இந்த நாவலில் வரும் மெர்சோவின் கொலையைக் கண்டித்து. அல்ஜீரியாவின் நிலைப்பாட்டினை விளக்கும் வகையில் புதிய நாவல் ஒன்று வெளியானது. மெர்சோவின் விசாரணை என்ற நாவலை காமெல் தாவுத் எழுதியிருக்கிறார். இதனையும் க்ரியா பதிப்பகம் தமிழில் வெளியிட்டுள்ளது. இந்த நாவல் அந்நியன் நாவல் அளவிற்கு என்னைக் கவரவில்லை.
நோபல் பரிசை ஏற்றுக் கொண்டு அறைக்குத் திரும்பிய காம்யுவிடம் அவர் மனைவி கண்ணீர் மல்க நான் உங்களை மிகவும் சிரமப்படுத்திவிட்டேன் மன்னியுங்கள் என்கிறார். அவர் நெகிழ்ந்து போகிறார். கடந்தகாலக் கசப்புகளை மறந்த அவர்கள் ஒன்று சேருகிறார்கள். ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அவர்களுக்குள் இருந்த மனவேறுபாடு கடைசிவரை மறையவேயில்லை.
காம்யு தன் அம்மாவையும் நீதியினையும் ஒரே புள்ளியில் வைக்கிறார். நீதியின் அடையாளமாகவே அம்மாவைக் காணுகிறார். அம்மா எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்துப் பழகியவள். ஏழைகளுக்குள் எளிதாக உறவு ஏற்பட்டுவிடும் என்று அவரது அம்மா ஒரு காட்சியில் சொல்கிறாள். அல்ஜீரியாவில் காம்யு உரையாற்றும் போது அவரைக் கண்டித்து வெளியே மக்கள் ஆவேசமாகக் கூச்சலிடுகிறார்கள்.

அல்ஜீரியா நீண்டகாலமாகவே பிரெஞ்சு அரசின் ஆதிக்கத்திலிருந்தது. பிரெஞ்சு அரசுக்கு எதிராக 1945-ம் ஆண்டு மே 8-ந்தேதி அல்ஜீரிய மக்கள் வீதிகளில் இறங்கி போரட்டத்தைத் துவங்கினார்கள் இதில் ஏற்பட்ட கலவரத்தில் ஆறாயிரம் பேருக்கும் மேலாக இறந்து போனார்கள். . இந்தச் சம்பவம் அல்ஜீரியா மக்களிடையே பிரெஞ்சு அரசாங்கத்தின் மீது கடுமையான வெறுப்பை ஏற்படுத்தியது. அல்ஜீரிய விடுதலைக்கான அமைப்புகள் தீவிரமாகச் செயல்படத்துவங்கின. பிரெஞ்சு அரசாங்கத்தைத் துரத்தியடிக்க அவர்கள் துப்பாக்கி ஏந்தி போராடினார்கள்
இந்தச் சூழ்நிலையில் தான் காம்யு தனது முதல்மனிதன் நாவலை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரெஞ்சு அரசாங்கம் 1962ல் அல்ஜீரியா மக்களிடையே பொது வாக்கெடுப்பு நிகழ்த்தியது. இதில் 6 மில்லியன் மக்கள் அல்ஜீரியா விடுதலைக்காகத் தங்கள் வாக்குகளை அளித்தார்கள். அதன் காரணமாக அதிபர் டிக்காலே அல்ஜீரியாவுக்கு விடுதலை அளிக்கும் பத்திரத்தில் கையெழுத்திட்டார். அப்படித் தான் அல்ஜீரியா விடுதலை பெற்றது
இந்த வரலாற்று உண்மைகளுடன் இணைத்து வாசிக்கும் போது தான் காம்யுவின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் அவரது இலக்கியப் பங்களிப்பினை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்
காம்யு தனது இருபது வயதில் தஸ்தாயெவ்ஸ்கியை படிக்கத் துவங்கினார். ஆன்மாவை உலுக்கும் அனுபவமாக இருந்தது என்று அதைப்பற்றிக் குறிப்பிடுகிறார். தஸ்தாயெவ்ஸ்கியின் The Possessed நாவலை காம்யு நாடகமாக்கி நிகழ்த்தியிருக்கிறார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காம்யுவின் மனைவி காற்றில் விரல்களை அசைத்து அசைத்து இசையை உருவாக்கிக் கொண்டிருப்பார். அவரது பதற்றம் குழப்பம் பயம் கவலைகள் எல்லாமும் ஒன்று சேர்ந்து வெளிப்படும் காட்சியது
மனைவி பிள்ளைகளைப் பிரிந்து காலி அறை ஒன்றினைத் தேடி தனது பெட்டியை இழுத்துக் கொண்டு வந்து மூச்சிரைக்க வெற்றிடத்தை வெறித்தபடியே காம்யு தனக்குத் தானே பேசிக் கொள்ளும் காட்சி ஒன்றிருக்கிறது. அந்தக் காட்சி அவரது ஒட்டு மொத்த வாழ்க்கையின் சாட்சியம் போலவே இருக்கிறது
**
May 8, 2021
வான் நோக்கும் கண்கள்
புகைப்படக்கலை அறிமுகமாவதற்கு முன்னால் மன்னர்களும் பிரபுக்களும் ஓவியர்களை வரவழைத்து தனது உருவத்தை வரைந்து கொள்வதை விருப்பமாகக் கொண்டிருந்தனர். இதனால் உருவப்படம் வரையும் திறமையான ஓவியர்களுக்குப் பெரிய கிராக்கியிருந்தது. இதில் ஏராளமான பணமும் கிடைத்தது. ஆனால் உருவப்படம் வரைவதில் திறமைசாலிகளாக இருந்தவர்களில் பெரும்பான்மையினர் ஆண்கள். அதுவும் மூத்த ஓவியர்கள். அவர்களை மீறிப் புதிதாக ஒரு இளம் ஓவியருக்கு வாய்ப்புக் கிடைப்பது அபூர்வம். அதுவும் ஒரு பெண் ஓவியராக இருந்தால் வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது. இந்தத் தடைகளை மீறி ஓவிய உலகில் தனக்கெனத் தனி அடையாளத்தை உருவாக்கியவர் எலிசபெத் லூயிஸ் வைஸ் லெபே என்ற பிரெஞ்சு ஓவியர்.

மேடம் விஜே லெப்ரூன் என அழைக்கப்பட்ட எலிசபெத் பதினெட்டாம் நூற்றாண்டின் முக்கிய ஓவியராக விளங்கினார். இவரது தந்தை ஒரு ஓவியர். அதுவும் உருவப்படம் வரைவதில் திறமைசாலி. ஐந்து வயது முதலே தந்தையிடம் ஓவியம் வரையக் கற்றுக் கொண்டார் எலிசபெத்.
தன் வாழ்நாளில் 600க்கும் மேற்பட்ட உருவப்படங்களையும் 200 நிலக்காட்சி ஓவியங்களையும் வரைந்திருக்கிறார். இதில் பாதி மன்னர்களின் உருவப்படங்கள். மற்றும் பிரபுக்கள், அமைச்சர்கள். கலைஞர்களின் உருவச்சித்திரங்களே.
பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை ஒவியக்கல்லூரிகளில் பெண்களைச் சேர்க்க அனுமதியில்லை. பெண்கள் நிர்வாணமாகப் போஸ் கொடுக்கலாம். ஆனால் அவர்கள் நிர்வாண உடல்களை வரைய அனுமதி கிடையாது. புகழ்பெற்ற ஓவியர்கள் எவரும் தனது சீடர்களாகப் பெண்களைச் சேர்த்துக் கொள்ளவில்லை. இந்தச் சூழ்நிலையில் தான் எலிசபெத் ஓவியராக விரும்பினார்.
அவரது காலகட்டத்தில் ஆண்களுக்கு மட்டுமே வீட்டில் ஆசிரியர்களை வைத்துப் பாடம் நடத்தும் வழக்கமிருந்தது. பெண்பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித் தர ஆசிரியர்கள் கிடைக்க மாட்டார்கள். ஆகவே பெண்களைக் கான்வென்ட் பள்ளிக்கு அனுப்பிப் பூத்தையல், சமையல் மற்றும் குடும்பத்திற்குத் தேவையான கணக்கு மற்றும் எழுத்து கொண்ட கல்வி புகட்டப்பட்டது. எலிசபெத்தும் அப்படி ஒரு கான்வென்டில் ஐந்து ஆண்டுகள் தங்கிப் படித்திருக்கிறார். படிப்பை முடித்தவுடன் திருமணம் ஏற்பாடு செய்வதே அந்த நாளைய வழக்கம். ஆனால் ஓவியத்தில் ஆர்வம் கொண்ட எலிசபெத் உடனடியாகத் திருமணத்தை ஏற்கவில்லை. ஒரு நாள் அவர் தந்தையின் வண்ணங்களை எடுத்து தனது தம்பியின் உருவப்படத்தை அழகாக வரைந்து காட்டினார் எலிசபெத்.

அந்த ஓவியத்தினை கண்ட ஆர்ட் டீலர் ஒருவர் அவருக்கான புதிய வேலை ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்தார். பன்னிரண்டு வயதுகளிலே ஓவியம் வரைந்து சம்பாதிக்கத் துவங்கினார் எலிசபெத். அவரது நுட்பமான அவதானிப்பும், தேர்ந்த நிறத்தேர்வும் துல்லியமான தோற்ற வடிவமும் அவரைச் சிறந்த உருச்சித்திர ஓவியராக்கியது.
கலையுலகில் அவருக்குத் துணையாக இருந்த தந்தை இறந்துவிடவே எலிசபெத் மனம் உடைந்து போனார். அவரது தாய் மறுமணம் செய்து கொண்டார். மாற்றாந் தந்தையை எலிசபெத்திற்குப் பிடிக்கவில்லை. அவரோ ஓவியம் வரைவதன் வழியே எலிசபெத்திற்குக் கிடைக்கும் பணம் முழுவதையும் தனதாக்கிக் கொண்டார்.
தானே சுயமாக ஓவியம் கற்றுக் கொண்டவர் என்பதால் எலிசபெத் தனது திறமையை மேம்படுத்திக் கொள்வதற்காக ஓவிய மேதைகளின் ஓவியங்களைக் காண ஆர்ட் கேலரி மற்றும் ம்யூசியங்களுக்குச் சென்று பார்ப்பதில் ஈடுபாடு கொண்டார் அத்தோடு. அவற்றை நகலெடுத்துப் பயிற்சி செய்வதிலும் ஈடுபட்டார். இந்தப் பயிற்சி அவருக்குக் கூடுதல் பலத்தையும் தெளிவினையும் கொடுத்தது. குறிப்பாக ரூபன்ஸின் ஒவியங்களை அவர் மிகவும் விரும்பினார். அவரது வாரிசாகவே தன்னை உணர்ந்தார்.
அந்த நாட்களில் ஓவியம் வரைந்து விற்பனை செய்வதற்கு முறையான உரிமை பெற வேண்டும். இல்லாவிட்டால் தடை செய்துவிடுவார்கள். அப்படிச் சுயமாக ஓவியம் வரைந்து வந்த எலிசபெத்தின் ஸ்டுடியோவை தடை செய்துவிட்டார்கள். அந்த நாட்களில் இரண்டே நிறுவனங்கள் தான் அதற்கான உரிமத்தைக் கொடுத்தன. அதில் ராயல் அகாதமியில் தன்னைச் சேர்க்கமாட்டார்கள் என உணர்ந்த எலிசபெத் செயிண்ட் லூக் அகாதமியில் தன்னை பதிவு செய்து கொண்டார். அவரது ஓவியங்களைப் பரிசீலனை செய்த அமைப்பு அவரை உடனடியாக அங்கீகரித்து உரிமை வழங்கியது. இதனால் அவர் தொழில்முறை ஓவியராகச் செயல்படத் துவங்கினார்
இளம்பெண் என்பதால் தான் படம் வரையும் ஆண்களின் கண்களிலிருந்து தப்புவதற்காக அவர்களின் வான் நோக்கிப் பார்ப்பது போல அமர வைத்துப் படம் வரைவது அவரது வழக்கம். ஏதோ கனவுகளுடன் இருப்பது போல உயர்த்திய பார்வை கொண்ட அவரது உருவச்சித்திரங்கள் தனித்துவமாக அறியப்பட்டன. அவரது உருவச்சித்திரங்கள் யாவிலும் கண்கள் மிகச்சிறப்பாக வரையப்பட்டிருக்கின்றன.

இவரது புகழை அறிந்த ஓவியர் மற்றும் கலை வணிகரான ஜீன்-பாப்டிஸ்ட்-பியர் லு ப்ரூன் அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். எலிசபெத்திற்கு இதில் விருப்பமில்லை. ஆனால் அவரது அம்மாவின் வற்புறுத்தல் காரணமாக அவரைத் திருமணம் செய்து கொண்டார். இருவரும் இணைந்து கலை உலகில் புகழ்பெறத் துவங்கினார்கள். எலிசபெத்தின் கணவர் அரச குடும்பத்தோடு நெருக்கமாக இருந்தவர் என்பதால் அவளைத் தேடி நிறைய வாய்ப்புகள் வந்து குவிந்தன
மன்னர் குடும்பச் சித்திரங்களை வரைந்து கொடுத்து நிறையப் பணம் சம்பாதித்தார். கண் பார்வையிலே துல்லியமாகத் தோற்றத்தைக் கணித்துவிடுவதுடன் துல்லியமாக அதைத் திரையில் வரைந்து காட்டும் திறமை கொண்டிருந்தார் எலிசபெத். இதனால் அவருக்கு நிறைய வாடிக்கையாளர்கள் உருவானார்கள்.
அவரது காலத்தின் முன்னணி ஓவியர்களைப் போல நான்கு மடங்கு அதிகம் ஊதியம் பெற்றார் எலிசபெத். அது ஓவியர்களிடம் பொறாமையை ஏற்படுத்தியது. வசதியான வாழ்க்கை. ஏராளமான வேலைகள் எனப் பரபரப்பாக இருந்தார் எலிசபெத்
இந்நிலையில் கணவருடன் இணைந்து நெதர்லாந்திற்குப் பயணம் செய்து ஒவியக்கூடங்களைப் பார்வையிட்டார். முக்கிய ஓவியர்களைச் சந்தித்து உரையாடினார். ஓவிய உலகில் ஒரு இளம்பெண் இத்தனை புகழ் பெற்று வருகிறாளே எனப் பலரும் வியந்தார்கள். எலிசபெத்திற்கு முதல் குழந்தை பிறந்தது. ஜூலி என்று பெயரிடப்பட்ட அந்த மகளை மிகவும் ஆசையாக வளர்த்தார் எலிசபெத்
1787 ஆம் ஆண்டில், மகள் ஜூலியுடன் (1787) தன்னுடைய சுய உருவப்படம் ஒன்றை வரைந்து காட்சிக்கு வைத்தார். அது பெரிய வரவேற்பினைப் பெற்றது.

இதற்கிடையில் பிரான்சின் மகாராணி மேரி அன்டோனெட் மற்றும் அவரது குழந்தைகள் ஓவியம் வரைவதற்காக எலிசபெத் அழைக்கப்பட்டார். ராணி தன்னிடம் காட்டிய அன்பும் நட்பும் மறக்க முடியாதது. ஒரு போதும் அவர் தன்னைக் கோவித்துக் கொள்ளவில்லை. காக்க வைக்கவில்லை. தனக்காக நேரம் ஒதுக்கிச் சிறப்பாக ஒத்துழைப்புச் செய்தார். கலைஞர்களை மதிக்கும் அவரது மனது தன்னை மிகவும் கவர்ந்துவிட்டது என்று எலிசபெத் தனது குறிப்பேட்டில் எழுதியிருக்கிறார்.
ராணி மற்றும் அவரது குடும்பத்தினரின் 30க்கும் மேற்பட்ட உருவப்படங்களை எலிசபெத் வரைந்திருக்கிறார் அதில் ஒன்றே மேரி அன்டோனெட்டின் அதிகாரப்பூர்வ உருவப்படமாக அங்கீகரிக்கப்பட்டது.
தனது குழந்தைகளுடன் மேரி அமர்ந்திருக்கும் காட்சியில் அவர் ஒரு மஸ்லின் உடை அணிந்திருக்கிறார். அவரது ஓவியத்தின் பின்புலத்தில் பெரிய நகைப்பெட்டி காணப்படுகிறது. வைர வைடூரியங்களை விடவும் குழந்தைகள் முக்கியமானவர்கள் என்பதைக் குறிக்கும் விதமாக மகாராணி குழந்தைகளை அணைத்தபடியே இருப்பது போல ஓவியம் வரைந்திருந்தார் எலிசபெத். ஓவியத்தின் வலதுபுறத்தில் ஒரு வெறும் தொட்டில் காட்டப்படுகிறது. காரணம் அது மகாராணி சமீபத்தில் ஒரு குழந்தையை இழந்ததைக் குறிக்கிறது, பிரான்சின் மகாராணி என்பதைவிடவும் ஒரு தாயாக மேரி-அன்டோனெட்டின் பங்கை மேலும் வலியுறுத்துவது போல அந்த ஓவியம் வரையப்பட்டிருக்கிறது.
அவர் வரைந்த ஓவியம் ஒன்றில் ராணி பருத்தி உடையில் இருப்பது போல வரைந்திருக்கிறார். அது அரண்மனையில் கடுமையான சர்ச்சையை உருவாக்கியது. அந்த ஒவியத்தை அழித்துவிட வேண்டும் என்றும் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் எலிசபெத் அதை ஏற்கவில்லை
மகாராணியின் அன்புக்குப் பாத்திரமானதால் அவரை ராயல் அகாதமியின் நிதி நல்கை பெறுபவர்களில் ஒருவராக அறிவித்தார் மகாராணி. அதை அகாதமி உறுப்பினர்கள் ஏற்கவில்லை. ஆனால் அரசரின் வற்புறுத்தல் காரணமாக ஏற்றுக் கொண்டார்கள். இரண்டு ஆண்டுகள் அவர் நிதிநல்கையைப் பெற்றுக் கொண்டு ஓவியங்கள் வரைந்தார். ஆனால் அவர் வரைந்த ஓவியங்களை ராயல் அகாதமி தனது பெருமைக்குரியதாகக் கருதவில்லை என்று கூறி நிராகரிப்பு செய்தது.

பிரெஞ்சுப் புரட்சியின் காரணமாக மன்னராட்சி அகற்றப்பட்டது. இதனால் தனக்கும் ஆபத்து நேரிடக்கூடும் என நினைத்த எலிசபெத் தனது மகளுடன் நாட்டை விட்டு வெளியேறினார். பன்னிரண்டு ஆண்டுகள் அவர் வேறு தேசங்களில் வாழ்ந்தார்.
இத்தாலி, ஜெர்மன். ரஷ்யா என அவர் சுற்றியலைந்தார். அந்தக் கால கட்டத்தில் நிறைய நிலக்காட்சி ஓவியங்களை வரைந்திருக்கிறார். ஆல்ப்ஸ் மலைத்தொடரின் அழகில் மயங்கி அவர் வரைந்த நிலக்காட்சி ஓவியங்கள் அற்புதமானவை.
முடிவில்லாத பயணத்தின் இடையிலும் அவர் வரைந்த ஓவியங்களின் எண்ணிக்கை வியப்பூட்டக்கூடியது.
உருவச்சித்திரத்தை வரையும் போது அவர் ஆடைகளை மிகத் துல்லியமாக, பேரழகுடன் வரைந்தார். அது பெண்ணால் மட்டுமே வரையக்கூடிய பாணி என்று தனது சுயசரிதையில் குறிப்பிடுகிறார். .
ஆடையின் நிறங்களைத் தேர்வு செய்வதில் துவங்கி அதன் மடிப்புகளை வரைவது வரை மிகவும் கவனமாக இருப்பேன். இதற்கு எனது மாடல்கள் பெரும் ஒத்துழைப்புத் தந்தார்கள். அவர்களின் நம்பிக்கையைப் பெறுவது முக்கியமான வேலை. பகட்டான ஆடம்பரத்திற்கு மாற்றாக இயல்பான அழகினை உருவாக்க முயன்றேன். இது ரபேல் மற்றும் டொமினிச்சினோவின் ஓவிய முறைகளைப் பின்பற்றி உருவாக்கிக் கொண்ட பாணியாகும். என்றும் குறிப்பிடுகிறார்
1786 ஆம் ஆண்டில், ராணியை ஓவியம் வரைந்தபோது அவருடைய தலைமுடியை நெற்றியின் முன்விழும்படி செய்யுமாறு கெஞ்சினேன். அதைக் கேட்ட ராணி “எனது பெரிய நெற்றியை மறைக்க நான் இதை ஏற்றுக்கொண்டேன் என்று மக்கள் சொல்வதை நான் விரும்பவில்லை என்று மறுத்தார்
மகாராணி மேரி அன்டோனெட் நல்ல உயரமும் கட்டான உடலும் கொண்டிருந்தார். அவரது கைகள் மிக அழகாக இருந்தன. அவரது கால்கள் நடனமங்கையின் கால்களைப் போலிருந்தன. அவளது தலையலங்காரம் பகட்டாகயில்லை. ஆனால் கம்பீரமாக இருந்தது. அவளது முகத்தின் இனிமை தனியே ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவரது கண்கள் பெரிதாக இல்லை; நிறத்தில் அவை கிட்டத்தட்ட நீல நிறத்திலிருந்தன, அவை ஒரே நேரத்தில் மகிழ்ச்சியாகவும் கனிவாகவும் இருந்தன. அவளுடைய மூக்கு மெல்லியதாகவும் அழகாகவும் இருந்தது, உதடுகள் தடிமனாக இருந்தபோதிலும் அவளுடைய வாய்ப் பெரிதாக இல்லை. ஆனால் அவளுடைய முகத்தைப் பற்றி மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் அவளுடைய நிறத்தின் அற்புதம். அவரைப் போன்ற புத்திசாலித்தனமான ஒருவரைப் பார்த்ததில்லை, புத்திசாலித்தனமான வார்த்தை, ஏனென்றால் அவளுடைய சருமம் அத்தனை மிருதுவாக இருந்தது. அதன் ஒளிர்வை வரைவதற்கு என்னிடம் வண்ணங்கள் இல்லை, அவளது உடலின் மென்மையான நிறம் என்னை மயக்கியது. அப்படி ஒரு பெண்ணை அதுவரை நான் கண்டதேயில்லை என்கிறார் எலிசபெத்

ஒன்பது அடி உயரமுள்ள அந்தப் பெரிய உருவப்படம் கம்பீரமாக இருந்தது.. ராணி அணிந்துள்ள ஆடம்பரமான சிவப்பு கவுன் அவரது அதிகாரத்தின் குறீயிடாக உள்ளது. ஹால் ஆஃப் மிரர்ஸை ஒட்டிய ஒரு அறையில் அவள் தனது குழந்தைகளால் சூழப்பட்டிருக்கிறாள்., அவள் மடியில் வைத்திருக்கும் மகள் தாயை ஏறிட்டு அழகாகப் பார்க்கிறாள். இந்த ஓவியத்தில் கன்னிமேரியின் சாயல் எழுகிறது.
ஓவியர் ரூபன்ஸின் தலைசிறந்த படைப்புகளைக் காண எலிசபெத் ஃப்ளாண்டர்ஸுக்குத் சென்றார். பிளெமிஷ் தேவாலயங்களிலிருந்த ஓவியங்களை ரசித்துப் பார்த்தார். ரூபன்ஸ் ஓவியத்தில் வருவது போலவே தலையில் ஒரு வைக்கோல் தொப்பி, ஒரு இறகு, மற்றும் காட்டுப் பூக்களின் மாலையை வைத்துக் கொண்டு காட்சி அளித்தார் ரூபன்ஸின் ஓவியங்களில் இருந்து தான் நிறையக் கற்றுக் கொண்டதாகக் கூறும் எலிசபெத் முகபாவங்களை வரைவதிலும். மலர்களை வரைவதிலும் அவரது பாணியை அப்படியே தான் பின்பற்றியதாகக் கூறுகிறார்

இங்கிலாந்தின் அரச குடும்பத்தினரை ஓவியம் வரைவதற்காக எலிசபெத் அழைக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் அங்கே வசிக்கத் திட்டமிட்டிருந்தார் ஆனால் ஓவியர்களுக்குள் இருந்த போட்டி பொறாமை மற்றும் அவர்கள் செய்த சதிவேலைகள் காரணமாக இங்கிலாந்தை விட்டு அகன்று பாரீஸ் திரும்பினார்
அவரது ஆசை மகள் ஜுலி தன் விருப்பம் போலத் திரிந்து வேசையாகி உடல் நலிவுற்று மேகநோய் தாக்கி மரணப்படுக்கையில் கிடக்கிறாள் என்று அறிய வந்தபோது எலிசபெத் துடித்துப் போனார்.
மகளைக் காணுவதற்காக அவள் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றார். மகளை வளர்ப்பதில் தான் பெரிய தவறு செய்துவிட்டதாக உணர்ந்தார். மகள் மரணப்படுக்கையில் தாயைக் கண்டபோதும் அவளுடன் மனம் விட்டுப் பேசவில்லை. அவள் புகழ்பெற்ற ஓவியரின் மகளாக இருப்பதற்காக வருந்துகிறேன் என்று சொன்னாள். அது எலிசபெத்தை ஆழமாகக் காயப்படுத்தியது. மகளின் மரணமும் அதைத் தொடர்ந்த வெறுமையும் எலிசபெத்தை முடக்கியது
சில ஆண்டுகள் அவர் ஓவிய உலகை விட்டு ஒதுங்கி வாழ்ந்தார். பின்பு கவிதை மற்றும் இலக்கியத்தின் மீது தீவிர ஈடுபாடு கொண்டு கலைஞர்களுடன் நெருங்கிப் பழகினார். நிறைய வாசித்தார்.தனது சுயசரிதையை எழுதினார். மூன்று தொகுதிகளாக அவை வெளியாகின.
லேடி ஹாமில்ட்டனை வரைந்த அவரது ஓவியம் அவருக்குப் புதிய பணிகளை ஏற்படுத்தித் தந்தது . அந்த ஓவியம் அவளது தனித்துவமிக்க அடையாளமாகவே மாறியது
பொதுவாகப் பெண்கள் கையில் பெரிய புத்தகம் ஒன்றை வைத்திருப்பது போலவே உருவச்சித்திரம் வரைவது மரபாக இருந்தது. அதை எலிசபெத் விரும்பவில்லை. அவரது ஓவியங்களில் பெண்கள் வெறும் அழகுப் பதுமையாகச் சித்தரிக்கப்படவில்லை.
மன்னர் குடும்பத்தினரை ஓவியம் வரைவதில் உள்ள சிக்கல் அவர்கள் விரும்பும் நேரம் மட்டுமே படம் வரைய முடியும். அவர்களுக்கு உத்தரவிட முடியாது. அவர்கள் விரும்பும் படி தான் அமர்ந்திருப்பார்கள். பெரும்பான்மை அரசர்களின் உடல் பருமனாக இருக்கும். முகம் பருத்துவீங்கிப் போயிருக்கும். அவற்றை அழகான உடற்கட்டு இருப்பது போல வரைய வேண்டும். ஆடைகள் நகைகள் எனப் பகட்டாக அலங்காரம் செய்து கொண்டிருப்பார்கள். தேவையற்ற அலங்காரத்தை அகற்றச் செய்ய வேண்டும். பாதி வரைந்து கொண்டிருக்கும் போது மன்னருக்குக் கோபம் வந்துவிடும். அவர் மனம் அறிந்து நடக்க வேண்டும். ஒரு அமைச்சரின் படத்தை அவள் வரைந்த போது தனது கால்கள் குட்டையாக வரையப்பட்டிருப்பதாக அந்த அமைச்சர் அவள் மீது கோபம் கொண்டு அவளைச் சிறைக்கு அனுப்பப் போவதாக மிரட்டினார். இன்னொரு ஓவியத்தில் மகாராணி பற்களைக் காட்டி சிரித்துக் கொண்டிருக்கிறார். இது அவமானப்படுத்தும் செயல் எனப் புகார் சொன்னார்கள். மன்னரின் இரட்டை குழந்தைகளை அவள் ஓவியமாக வரைந்த போது அந்தக் குழந்தைகள் முகத்தில் மகிழ்ச்சியில்லை என்ற விமர்சனம் உருவானது. இத்தனை தடைகளைத் தாண்டி அவள் சிறந்த ஓவியராகப் பெயர் எடுத்தார். தன் காலகட்டத்தின் அத்தனை பெரிய மனிதர்களையும் வரைந்திருக்கிறாள். ராணியின் விருப்பத்திற்குரிய உருவப்படக் கலைஞராக இருந்திருக்கிறார்.
ஒரு பெண்ணாக அவர் ஓவிய உலகில் சந்தித்த தடைகள் பிரச்சனை ஏராளம். ஆனால் அவற்றைத் தனது ஒவியத்திறமையால் வென்று காட்டியதுடன் தனித்துவமிக்கக் கலைஞராகப் பெயர்பெற்றிருக்கிறார்.

எலிசபெத்தின் ஓவியங்களை இன்று நாம் காணும்போது அந்த உருவங்களின் கண்களும் உதடுகளும் உயிர்ப்புடன் இருப்பதை உணருகிறோம். உடைகளை அத்தனை நேர்த்தியாகத் துல்லியமாக வரைந்திருப்பதைக் கண்டுவியக்கிறோம். நிழலும் ஒளியும் மாயத்தன்மையை உருவாக்குவதைக் கண்டு பிரமிக்கிறோம். அரச குடும்பத்து மனிதர்கள் என்ற போதும் அவர்கள் மனதிலுள்ள கவலையை ,தனிமையை, வெளிப்படுத்த முடியாத வேதனையை அந்த ஓவியத்தில் பதிவு செய்திருப்பதைக் காணுகிறோம். உருவத்தை மட்டுமின்றி ஆன்மாவையும் எலிசபெத் ஆழ்ந்து உணர்ந்து வரைந்திருக்கிறார்
தனது சுய உருவ ஓவியத்தில் எலிசபெத் கண்களில் கனவு மிதக்கிறது. அவள் உறுதியாக, நம்பிக்கையுடன் தோற்றம் தருகிறாள். அந்தக் கண்கள் நம்மை நேராக எதிர்கொள்கின்றன. நம்மிடம் எதையோ சொல்வது போலிருக்கின்றன.
காலத்தால் நமது உடல் அழகு பறித்துக் கொள்ளப்படும் என்ற போதும் அதை அழியாத சித்திரமாக மாற்றிப் பாதுகாத்துக் கொள்ளவே மனிதர்கள் ஆசைப்படுகிறார்கள். மன்னர்களின் அதிகாரம் இன்று பறிபோய்விட்டது. அவர்களின் உருவச்சித்திரங்கள் காலத்தின் அடையாளமாக மிச்சமிருக்கின்றன.
எலிசபெத் ஒரு நூற்றாண்டின் கொந்தளிப்பான நிகழ்வுகளுக்குச் சாட்சியமாக இருந்திருக்கிறார். வெளியுலகம் அறியாமல் அரண்மனைக்குள் வாழ்ந்து மடிந்த அரச குடும்பத்துப் பெண்களின் அந்தரங்கங்களை அறிந்திருக்கிறார். தன் அழகைப் பிறர் பாராட்ட வேண்டும் என்ற ஆசை மன்னர் முதல் சாமானிய மனிதர் வரை இருப்பதை உணர்ந்திருக்கிறார். வண்ணங்களை அவர் உபயோகித்துள்ள விதமும் நேர்த்தியும் நிகரற்ற கலைப்படைப்புகளை உருவாக்கியவராக அவரைக் கொண்டாடச் செய்கின்றன
••
எழுத்தாளர்களின் உலகம்
‘எனதருமை டா ல் ஸ்டாய் ’ – வாசிப்பனுபவம்
முனைவர் ப . சரவணன் , மதுரை

மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர்கள் முனைவர் சாமுவேல் சுதானந்தா அவர்களும் முனைவர் பிரபாகர் வேதமாணிக்கம் அவர்களும் வகுப்பறையில் ‘நாவல் இலக்கியம்’ பாடத்தை நடத்தினார்கள்.
அவர்கள் பிற ஆசிரியர்களைப் போலக் ‘கதைச்சுருக்கம்’ கூறுபவர்கள் அல்லர்; தம்மோடு மாணவர்களையும் இணைத்துக்கொண்டு, அந்த நாவலின் வழியாக அந்தப் படைபாளரின் படைப்பு மனத்தைப் பின்தொடர்பவர்கள். நாவலையும் சிறுகதையையும் பல கோணத்தில் புரிந்துகொள்ளவும் ஆராயவும் கற்றுக்கொடுத்தவர்கள்.
கி. ராஜநாராயணனையும் தி. ஜானகிராமனையும் த. ஜெயகாந்தனையும் புதுமைப்பித்தனையும் சுந்தர ராமசாமியையும் என்னால் அவர்களின் நுட்பமான வழிகாட்டுதல்களின் வழியாகவே அறிந்துகொள்ள முடிந்தது.
ஒரு நாவல் அல்லது ஒரு சிறுகதை “புரியவில்லை” என்று யாராவது பேராசிரியர் முனைவர் பிரபாகர் வேதமாணிக்கம் அவர்களிடம் கூறினால், உடனே அவர், “தமிழ் தெரியும் என்பதாலேயே ஒருவரால் தமிழில் எழுதப்படும் எல்லாவற்றையும் படித்துப் புரிந்துகொள்ள முடியாது” என்பார்.
அந்த வாக்கியம் எவ்வளவு தூரம் உண்மை என்பதை எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ள ‘எனதருமை டால்ஸ்டாய்’ புத்தகத்தைப் படித்ததும் எனக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டது.
தமிழ் மட்டுமல்ல, எந்த மொழியை அறிந்திருந்தாலும் ‘அந்த மொழியில் எழுதப்படும் அனைத்தையும் புரிந்துகொள்வது’ என்பது, இயலாத செயல்தான் போல. காரணம், ‘படைப்புமொழி’. அது, உலக அளவில் தனித்துவமானது. அதைப் படித்துப் புரிந்துகொள்ள கடுமையான பயிற்சி தேவை. குன்றாத ஆர்வமும் இடைவிடாத தேடலுமே நம்மைப் ‘படைப்புமொழி’யின் அருகில் கொண்டுசென்று நிறுத்தும்.
எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ள ‘எனதருமை டால்ஸ்டாய்’ என்ற இந்தப் புத்தகம் டால்ஸ்டாயைப் பற்றியது மட்டுமல்ல; டால்ஸ்டாயைப் பின்பற்றி எழுதத் தொடங்கிய உலக எழுத்தாளர்களைப் பற்றியது. அப்படியெனில், எதற்காக இந்தப் புத்தகத்துக்கு இந்தத் தலைப்பு? என்ற கேள்வி எழும்.
ரஷ்ய இலக்கியத்தின் முன்னோடியாக டால்ஸ்டாய் இருப்பதால், அவரைத் தொடர்ந்து எழுத வந்த ரஷ்ய எழுத்தாளர்கள் அனைவருக்கும் அவரே ஆதர்ஷனமாகிவிட்டார். ரஷ்யா மட்டுமல்ல உலகம் முழுக்கவுமே மனிதகுலத்தை நேசித்து, எளியோர் மீது இரக்கம் கொண்ட எழுத்து வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் அவரே ஆதர்ஷனம்.
இது ஒரு குருமரபுபோலத்தான். இந்தப் புத்தகம் உலக எழுத்தாளர்களைப் பற்றிப் பேசினாலும் டால்ஸ்டாயைத் தன் தலைப்பாகக் கொண்டதற்கு ஒரேயொரு காரணம், ‘குருவுக்கு அளிக்கும் எளிய காணிக்கை அது’ என்றுதான் நான் நினைக்கிறேன்.
எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் இந்தப் புத்தகத்தில், உலக எழுத்தாளர்கள் தங்களின் படைப்புகளை உருவாக்கப் பின்புலமாக இருந்தவற்றைப் பற்றியே விரிவாகப் பேசியுள்ளார். ‘படைப்பு எழுந்த சூழல்’ – இதுதான் இந்தப் புத்தகத்தின் மையம். ஒரு படைப்பு எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறதோ, அதைவிடப் பல மடங்கு சுவாரஸ்யமாகவே அந்தப் படைப்பு எழுந்த சூழலும் உள்ளது.
ஓர் எழுத்தாளரின் படைப்புகளையும் அந்த எழுத்தாளரைப் பற்றிய தகவல்களை நம்மால் சேகரித்துப் படித்துவிட முடியும்தான். ஆனால், ஓர் எழுத்தாளர் ஒரு படைப்பினை உருவாக்கப் பின்புலமாக இருந்தது எது? அதை அவர் தன் அகத்தால் எப்படி உள்வாக்கி, புறத்தால் எவ்வாறு படைப்பாக உருமாற்றினார் என்பதைப் பற்றி எங்குத் தேடி நம்மால் கண்டடைய முடியும்?
‘ஓர் எழுத்தாளர் ஒரு படைப்பினை எந்தச் சூழ்நிலையில் எழுதினார்’ என்பது பற்றி ஓர் எழுத்தாளர் எழுதிய புத்தகம் இது. அந்த வகையில், ‘எனதருமை டால்ஸ்டாய்’ என்ற இந்தப் புத்தகம் மிக முக்கியத்துவம் பெறுகிறது.
டால்ஸ்டாய் ‘புத்துயிர்ப்பு’ என்ற நாவலை எழுதினார் என்பதை அனைவரும் அறிவோம். ‘அவர் எதற்காக அந்த நாவலை எழுதினார்?’ என்பதை எத்தனை பேர் அறிவோம்?. டுகோபார்ஸ் (DUKHOBORS) இன மக்கள் ஏன் டால்ஸ்டாயை இயேசு கிறிஸ்துவுக்கு இணையாக வைத்து வணங்குகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டால்தான், அவர் எதற்காகப் ‘புத்துயிர்ப்பு’ என்ற நாவலை எழுதினார்?’ என்ற வினாவுக்குரிய விடையை நம்மால் அறிய முடியும்.
டால்ஸ்டாய் எவ்வாறு மகாத்மா காந்தியடிகளுக்கும் மகாகவி தாகூருக்கும் ஆதர்ஷனமானார்? டுகோபார்ஸ் இனக்குழு மக்களிடமிருந்த அகிம்சைக் கொள்கையும் அறவழிப்போராட்டமும் எவ்வாறு டால்ஸ்டாய் வழியாக மகாத்மா காந்தியடிகளுக்கு வந்தது? ‘காந்தியம்’ மரமெனில், அதன் வேர் ‘டுகோபார்ஸியம்’தான் என்பதை நாம் புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் நமக்குப் பேருதவிபுரிகிறது.
ஆன்டன் செகாவுக்கும் புதுமைப்பித்தனுக்கும் இடையே என்ன தொடர்பு இருக்கிறது? ஓர் எழுத்தாளர் எவ்வாறு உலக எழுத்தாளராகிறார்? ஒரு நாவல் எவ்வாறு வாழ்க்கையை நமக்கு உணர்த்துகிறது? என்ற வினாக்களுக்கெல்லாம் இந்தப் புத்தகத்தில் தெளிவான விடைகள் இருக்கின்றன.
‘ஒரு நாவலை நாம் எவ்வாறு படிக்க வேண்டும்?’ என்ற வினாவுக்கு விடையாக எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள்,
“எல்லா நாவலினுள்ளும் சில திறப்புகளும் சில முடிச்சுகளும் இருக்கின்றன. நாவலின் கதையை மட்டும் தொடர்ந்து செல்லும் வாசகர் பலவேளைகளில் இந்தச் சாவித்துளையை அடையாளம் கண்டுகொள்ளாமலே கடந்து போய்விடுவான். அதனால் அனுபவிக்க முடியாமல் போய்விடுகிறது. ஒரு நாவலின் நோக்கம் கதையைச் சொல்வது மாத்திரமில்லை. எழுத்தாளன் கதையின் வழியாக விவாதங்கள், சந்தேகங்கள், அனுமானங்கள், கேள்விகள், நம்பிக்கைகள், கண்டுபிடிப்புகள், ஆதங்கங்கள் எனப் பல்வேறு தளங்களை வெளிப்படுத்துகிறான். நாவல் ஒரு கூட்டு வடிவம். ஒரு சிம்பொனி இசையைப் போல அதற்குள் பல எழுச்சிகளும் தாழ்நிலைகளும் இருக்கின்றன” என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல, எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தஸ்தாயெஸ்கி எழுதிய, ‘குற்றமும் தண்டனையும்’ நாவலில் உள்ள ஒரு திறப்பினைப் பற்றி மிக விரிவாக விளக்கியுள்ளார். ‘ஒரு நாவலை எவ்வாறு வாசிக்க வேண்டும்?’ என்பதற்குச் சரியான சான்று இந்த விரிவான விளக்கம்.
இதுவரை நாம் மேற்கொண்டுவந்த ‘படைப்புவாசிப்புமுறை’யைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது இந்த விளக்கம். இனிமேல், ‘நமது ‘படைப்புவாசிப்புமுறை’ எத்தகைய முறையில் இருக்க வேண்டும்?’ என்பது பற்றியும் ‘ஒரு படைப்பினை நாம் எந்த வகையில் அணுக வேண்டும்?’ என்பது குறித்தும் ஒரு தெளிவினை இந்த விரிவான விளக்கம் நமக்கு அளிக்கிறது.
‘எனதருமை டால்ஸ்டாய்’ என்ற இந்தப் புத்தகம் உலக இலக்கியம் பற்றி மட்டுமல்ல, இந்திய இலக்கியம் பற்றியும் தன்னுடைய பார்வையை முன்வைத்துள்ளார் எழுத்தாளர். மன்னர் மகேந்திர வர்மர் எழுதிய ‘மத்தவிலாச பிரகசம்’ பற்றியும் குர் அதுல் ஐன் ஹைதர் எழுதிய ‘அக்னிநதி’ குறித்தும் நிகோஸ் கசான்ஸ்சாகிஸ் எழுதிய ‘ஜோர்பா தி கிரேக்’ பற்றியும் விரிவாக இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
விமர்சகர்கள், சக படைப்பாளர்கள் போன்றோரால் படைப்பில் உள்ள பரிமாணங்களுள் சிலவற்றை மட்டுமே வெளிப்படுத்த முடியும். ஒரு படைப்பின் பல்வேறு பரிமாணங்களை வாசகரே கண்டடைய வேண்டும். ஒரு வாசகர் குறிப்பிட்ட வயதில் படித்த ஒரு படைப்பினைப் பின்னாளில் படிக்கும்போது புதிய கண்டடைதல்களை அடைய முடியும் அல்லது அந்தப் படைப்பு பற்றித் தாம் முன்பு அடைந்திருந்த பரவசங்கள் அழியத் தொடங்கும். படிப்போரின் வயதுக்கும் அனுபவத்துக்கும் ஏற்ப படைப்பு தன்னை உருமாற்றிக்கொண்டே இருக்கிறது. இந்த உண்மையைத் தன்னுடைய சுய அனுபவத்தின் வழியாகக் குறிப்பிட்டுள்ளார் எழுத்தாளர்.
உலக எழுத்தாளர்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள் ஆகியோரின் மனைவிமார்கள் பற்றிய ஒரு கட்டுரை இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. நாமறிந்த கலைஞர்களின் மனைவிமார்கள் தம் கணவர்மார்களின் மீது கொண்ட வெறுப்புக்குப் பின்புலமாக இருந்திருக்கும் யதார்த்த வாழ்க்கைதந்த அழுத்தம் பற்றி எழுத்தாளர் விவரித்துள்ளார்.
உலக இலக்கியத் தரத்தில் எழுதப்பட்ட தமிழ்ப் படைப்புகள், இந்திய மொழிப் படைப்புகள் வாசகரிடம் ஏன் வரவேற்பு பெறாமல் இருக்கின்றன என்பதற்கு முழுக்காரணம், ‘நுட்பமான வாசிப்புத்திறன் வாசகருக்கு இல்லாமையே’ என்பதுதான். அத்தகைய நுட்பமான வாசிப்புத் திறனை ஊட்டும் வகையில்தான் எழுத்தாளர் இந்த ‘எனதருமை டால்ஸ்டாய்’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார்.
இந்தப் புத்தகத்தின் ஓர் இடத்தில், எழுத்தாளர்களைப் பற்றிய ஒரு வரையறையைக் குறிப்பிட்டுள்ளார்.
“ வாழ்வின் ஆதார விஷயங்களைப் பற்றிக் கவலைப்பட்டிருக்கிறார்கள் . ஆழ்ந்து விவாதிக்கிறார்கள் . மனித மனத்தை ஊடுருவி ஆராய்ச்சி செய்கிறார்கள் . கடவுள் , மதம் குறித்து நிறைய கேள்விகளைக் கேட்டவர்கள் எழுத்தாளர்களே ! அதிகாரத்திற்கு எதிராக அவர்களின் குரல் ஒலித்திருக்கிறது . எழுத்தாளர்கள் சமூகத்தின் மனசாட்சி போல இருந்திருக்கிறார்கள் . எழுதிப் பணம் சேர்ப்பது அல்ல அவர்களது நோக்கம் . மக்கள் வாழ்வை மேம்படுத்துவதே ! தினசரி வாழ்வின் நெருக்கடி , துர்மரணம் , ஏமாற்றம் , பேராசை , நிர்க்கதி , புறக்கணிப்பு போன்றவற்றைப் பார்க்கும்போது வாழ்க்கை ஏன் இப்படி இருக்கிறது என்ற கேள்வி பிறக்கிறது . இந்தக் கேள்விக்கான பதிலை ஆராய்வதுதான் எழுத்தாளரின் வேலை . மனித மனம் விசித்திரமானது . அதைப் புரிந்துகொள்வது எளிதல்ல . அதன் ரணங்களை , வலிகளை , நினைவுகளை எழுத்தாளர்கள் சரியாகப் புரிந்துகொள்கிறார்கள் .”
‘ஏன் படிக்க வேண்டும்?’, ‘ஏன் எழுத வேண்டும்’ என்ற வினாக்களுக்குரிய ஆத்மார்த்தமான விடையாகவே இது உள்ளது. நிச்சயமாக, ஒவ்வொரு வாசகரும் இளம் எழுத்தாளர்களும் தன் மனத்தில் பதித்துக்கொள்ள வேண்டியது இது.
இந்தப் புத்தகத்தில் உள்ள சிறிதும் பெரிதுமாக 20 கட்டுரைகள் உள்ளன. இவற்றுள் சில இந்த எழுத்தாளர் மேடைகளில் ஆற்றிய உரைகள். அதனால், இந்தப் புத்தகம் முழுக்க முழுக்க எளிய தமிழ் நடையில்தான் எழுதப்பட்டுள்ளது. இளந்தலைமுறை வாசகர்களின் மனத்தில், ‘படைப்பிலக்கியங்களை எப்படி நுட்பமாக வாசிக்க வேண்டும்?’ என்பதனை விதைக்க, இந்தப் புத்தகம் பெரிதும் பயன்படும்.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

