S. Ramakrishnan's Blog, page 137
April 12, 2021
சிறப்பு சலுகை
தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு தேசாந்திரி பதிப்பகம் சிறப்பு சலுகையினை அறிவித்துள்ளது.
April 11, 2021
மன்னரின் மூக்குக் கண்ணாடி
The Last Emperor படத்தில் சீனாவின் கடைசி அரசர், புய் ஒரு அரசியல் கைதியாகவும், போர்க்குற்றவாளியாகவும் இருக்கிறார். அங்கே அவரை அடையாளம் கண்டு கொண்ட சிலர் மரியாதை செய்கிறார்கள். அது அவரை அதிகக் குற்றவுணர்வுக்கு ஆளாக்குகிறது. வீழ்ச்சியின் போது ஒரு மனிதன் தனது பழைய மரியாதையைப் பெறுவதை விலக்கவே முற்படுகிறான். ஆனால் அவனது வீழ்ச்சி தற்காலிகமானது என்பது போலவே மக்கள் பழைய மரியாதையை அளிக்க முற்படுகிறார்கள்.

படம் புய் தற்கொலை செய்ய முயல்வதிலிருந்து துவங்குகிறது. மன்னர்களில் தற்கொலை செய்து கொண்டவர்கள் குறைவே. போரில். வேட்டையில் அல்லது விஷமிட்டுக் கொல்லப்பட்டவர்கள் அதிகம். தோல்வியின் காரணமாகத் தன்னை மாய்த்துக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். ஆனால் புய் ஒரு நவீன மனிதன். அவனுக்குத் தனது அதிகாரம் பறிபோனதை விடவும் வீழ்ச்சியின் கடைசிக்கண்ணியாகத் தான் இருக்கிறோம் என்ற குற்றவுணர்வே மேலோங்கியிருக்கிறது

படத்தின் ஒரு காட்சியில் இளவரசர் புயிக்கு கண்பார்வையில் கோளாறு ஏற்படுகிறது. மருத்துவர் அவரைப் பரிசோதனை செய்கிறார். குறைபாட்டினை சரி செய்ய ஒரு கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். ஒரு மன்னர் கண்ணாடி அணிந்து கொள்வதா என்று ராஜகுடும்பம் எதிர்ப்புத் தெரிவிக்கிறது. ஆனால் புயி கண்ணாடி அணிந்து கொள்கிறார். கண்ணாடி அணிந்த மன்னர் என்பது தான் படத்தின் முக்கியமான குறியீடு.
ஒரு மன்னர் கண்ணாடி அணிந்து கொள்வது என்பது எளிய விஷயமில்லை. ஜப்பானிய மன்னர்கள் குடும்பத்தில் கண்ணாடி அணிவது தடைசெய்யப்பட்டிருந்த காரணத்தால் பார்வை பறி போன வரலாறு இருக்கிறது.

புயி மிக அழகான வட்டவடிவ கண்ணாடி அணிந்து கொள்கிறார். கண்ணாடி அணிந்த மன்னரின் முகம் என்பது நவீனத்துவத்தின் அடையாளம். உண்மையில் கண்ணில் பார்வைக்குறைபாடு ஏற்படுவது காலம் காலமாக இருந்து வரக்கூடியது. பார்வைக் குறைவுள்ள மன்னர்கள் யுத்தகளத்தில் எப்படிச் சண்டையிட்டிருப்பார். குதிரையேறி சவாரி செய்திருப்பார்கள். இன்றிருப்பது போல மூக்குக் கண்ணாடிகள் அந்தக் காலத்தில் கிடையாது- ஆனால் வைத்திய முறைகள் இருந்தன. அவற்றைக் கொண்டு கண்ணைச் சரி செய்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் மன்னர் என்பதால் ராஜகுடும்பத்தின் கட்டுப்பாடுகளை மீறி கண்ணாடி அணிந்து கொண்டுவிடுகிறார். இது ராணியாக இருந்திருந்தால் நிச்சயம் நடந்திருக்காது. மூக்குக் கண்ணாடி அணிந்த மகாராணி வரலாற்றில் இல்லை. இங்கிலாந்தின் ராஜகுடும்பத்திலே நீண்ட தயக்கம் விவாதங்களுக்குப் பிறகே ராணி கண்ணாடி அணிந்திருக்கிறார்
மன்னர் காலத்தைப் பற்றிய நமது பொதுப்பிம்பத்தின்படி அரசருக்கு வயதாகும் என்ற நினைப்பே ஏற்படாது. ஆனால் வரலாற்றில் சரும நோய்களால். உடல் பருமனாலும் பார்வைக்குறைபாடு மற்றும் ஆண்மையற்று போனதால் மன்னர்கள் செய்து கொண்ட சிகிச்சைகள் ஏராளம். கடைசி வரை குணப்படுத்த முடியாமல் இறந்து போயிருக்கிறார்கள்

இந்தப் படத்திலே இன்னொரு காட்சியில் மன்னர் சைக்கிள் ஒட்டுவார். அரண்மனையை விட்டுச் சைக்கிளில் வெளியே செல்ல முயற்சிப்பார். சைக்கிள் என்பது எளியோரின் வாகனம். அதை ஒரு மன்னர் ஒட்டுவது என்பது பெரிய மாற்றம். சைக்கிள் அறிமுகமான நாட்களில் டால்ஸ்டாய் சைக்கிள் ஒன்றை விலைக்கு வாங்கி பண்ணையினுள் ஒட்டிக் கொண்டு சென்றிருக்கிறார். அவரது பண்ணையாட்கள் அதை வியந்து பார்த்திருக்கிறார்கள்.
நவீன வாழ்க்கையின் அம்சங்கள் வரலாற்றுக் காலத்தில் எளிதாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இன்று நம் எல்லோர் கையிலும் வாட்ச் இருக்கிறது. மணி பார்க்க எவர் தயவும் தேவையில்லை. ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மன்னராக இருந்தாலும் காலத்தை அறிந்து கொள்ள ஆள் உதவி தேவை. மணற்கடிகாரம். சூரியக்கல். சந்திரக்கல். நீர்கடிகாரம் எனப் பல்வேறு வகையான கடிகாரங்கள் வழக்கிலிருந்தன. ஆனால் நாம் சொல்வது போலத் துல்லியமாக மணியைச் சொல்ல முடியாது. மன்னர்கள் காலத்தை விடவும் நாம் கூடுதல் வசதிகளுடன் வாழுகிறோம்
பைனாக்குலர் முதன்முறையாக இந்தியாவில் அறிமுகமான போது ஒரு மன்னருக்கு அதைப் பரிசாக அளித்திருக்கிறார்கள். அவரால் தொலைவில் உள்ள ஒரு பொருள் அண்மையாகத் தெரிவதை நம்பவே முடியவில்லை. ஏதோ ஒரு மாயாஜாலம் என்றே நினைத்திருக்கிறார்.
மன்னர்கள் காலம் முடிந்து மக்களாட்சியின் காலம் உருவானது போது ஏற்பட்ட மாற்றங்கள் முக்கியமானவை. முதன்முறையாக டெலிபோன் அறிமுகமான போது ராஜஸ்தானிலிருந்த ஒரு மன்னர் முதல் முறையாக போன் பேசுவதற்கு நாள் நட்சத்திரம் குறித்திருக்கிறார். விசேச பூஜை நடந்திருக்கிறது. அது மட்டுமின்றி யாரோடு மன்னர் பேசப்போகிறார் என்பதை ஜாதகத்தை வைத்துக் கணித்திருக்கிறார்கள்.

இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் சரண் அடைந்தது. அப்போது மன்னன் ஹிரோஹிட்டோவின் புகைப்படத்தை நாளிதழ்கள் வெளியிட்டிருந்தன. அதில் கண்ணாடி அணிந்த பேராசிரியர் போன்ற தோற்றம் கொண்ட மன்னரின் உருவம் வெளியானது. அமெரிக்கர்களால் அதை நம்ப முடியவில்லை. இவர் தான் மன்னரா, கிரீடமில்லை. பட்டாடைகள் இல்லை. பாதுகாவலர்கள் வாள் ஏந்தி நிற்கவில்லை. பத்திரிக்கையாளர் சந்திப்பில் மன்னர் மெல்லிய குரலில் பேசியது ஆச்சரியமாக இருந்தது. வரலாற்றில் இப்படித்தான் இருந்திருப்பார்கள். நமது கற்பனை தான் மன்னர் என்றால் வீராவேசமாகப் பேசுவார்கள் என்று பதிய வைத்திருக்கிறது
புகைப்படக்கலை அறிமுகமான நாட்களில் சமஸ்தானங்களை ஆண்ட அரசர்கள் ஆசையாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். ஆனால் அரசியைப் புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. நடனமாடும் பெண்கள். மற்றும் அந்தப்புர ஆசைநாயகிகளைப் புகைப்படம் எடுக்க அனுமதித்தார்கள். மன்னரின் ஆல்பத்தில் அவரது புகைப்படம் மட்டுமே ஒட்டப்பட்டிருக்கும். அவரது அரசியின் படத்திற்குப் பதிலாக ஒரு ரோஜா பூவின் படம் வரையப்பட்டிருக்கும். அரச குடும்பத்து புகைப்பட ஆல்பங்களில் அப்படியிருப்பதை நானே கண்டிருக்கிறேன்.
ஆங்கில அதிகாரிகள் பழங்குடி பெண்களை நிர்வாணமாக்கி புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். அதைப் போஸ்ட் கார்டுகளாக்கி விற்பனை செய்திருக்கிறார்கள். இந்த நிர்வாணப் புகைப்படங்களுக்கு லண்டனில் பெரிய கிராக்கியிருந்திருக்கிறது. இப்படி மலபாரில் மார்பகங்கள் தெரிய எடுக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்த கவிஞர் பூதலேர் To a Malabar Woman என்ற கவிதையை எழுதியிருக்கிறார்.

இன்றிருப்பது போல மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படாத மன்னர்கள் காலத்தில் தன் பிரஜைகளாக எவ்வளவு குடிமக்கள் இருக்கிறார்கள் என்ற தகவலே கூட மன்னருக்கு யூகமாகத் தான் தெரிந்திருக்கும். மன்னர்கள் வாங்கிய கடன். அதற்கு அவர்கள் ஈடாகக் கொடுத்த நிலம். நகைகள் பற்றி ஏராளமான தகவல்கள் வரலாற்றில் உள்ளன.
த லாஸ்ட் எம்பெரர் படத்தில் வருவது போல மன்னர்கள் குடும்பத்தின் கடைசி வாரிசுகள் வறுமையில் தனது பட்டாடைகளை விற்று வாழ்ந்த வரலாறெல்லாம் இந்தியாவில் இருக்கிறது. நாம் தான் இன்னமும் தங்கக் கீரிடம் அணிந்த மன்னர்களின் கற்பனை உலகிலிருந்து விடுபடவேயில்லை
April 10, 2021
இரண்டும் கப்பல் தான்.
புதிய சிறுகதை
சூயஸ் கால்வாயைத் தடுத்து நின்றிருந்த அந்தக் கப்பல் பிடிபட்ட திமிங்கலம் ஒன்றைப் போலிருந்தது

தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்தபடியே திரையில் தெரியும் அந்தக் கப்பலைப் பார்த்துக் கொண்டிருந்தார் கோபால் ரத்னம்.
மணி மூன்றைக் கடந்திருந்தது. பின்னிரவில் பாதி உறக்கத்திலிருந்து எழுந்து வந்து எதற்காக இப்படிச் சூயஸ் கால்வாயில் மாட்டிக் கொண்டிருந்த கப்பலைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என அவருக்கே புரியவில்லை.
ஆனால் அந்தக் கப்பல் அவரைச் சில நாட்களாகத் தொந்தரவு செய்து கொண்டேயிருந்தது. அதை எப்போது மீட்பார்கள். எப்போது அது மீண்டும் தனது பயணத்தைத் துவங்கும் எனக் காத்துக் கொண்டேயிருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனைவியைப் பற்றிக் கவலைப்படுவது போல அது நிஜமானதாக இருந்தது
எங்கோ ஒரு கப்பல் சிக்கிக் கொண்டது தன்னை ஏன் இப்படி அலைக்கழிக்கிறது. ஏன் சதா அதைப் பற்றியே ஏன் நினைத்துக் கொண்டிருக்கிறோம். தனக்கும் அந்தக் கப்பலுக்கும் ஒரு தொடர்பும் இல்லையே. பின் ஏன் இந்தப் பதற்றம்.
காரணங்கள் தெரியாத போதும் அவர் செவ்வாய்க்கிழமை முதல் எவர்கிரீன் கப்பலால் பாதிக்கப்பட்டார். கப்பல் நடுவழியில் சிக்கிக் கொண்டதைப் போல அவரும் அந்தச் செய்தியில் சிக்கிக் கொண்டுவிட்டார். கப்பல் மீட்கப்பட்டால் தான் அவராலும் அதிலிருந்து வெளியேற முடியும்
சப்தமேயில்லாமல் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அடுத்த அறையில் மகளும் மருமகனும் பேரனும் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தக் கப்பல் விபத்து பற்றிக் கவலையில்லை.
தொலைக்காட்சி வந்தபிறகு உலகம் மிகச்சிறியதாகிவிட்டது. சேனலை மாற்றும் போது தோன்றும் வேறுவேறு தேசங்களின் மனித முகங்கள். சாலைகள். இயற்கை காட்சிகள். விளையாட்டுகள் உலகைப் பற்றிய அவரது பயத்தை விலக்கியிருந்தன.
உலகம் ஒரு ஆரஞ்சு பழம் போன்றது. அதன் ஒரு சுளையினுள் தானிருக்கிறோம். மற்ற சுளைகளில் யாரோ வசிக்கிறார்கள். உலகைப் பற்றிய பயம் விலகி எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது.

சில நாட்கள் உறக்கமின்றி இரவெல்லாம் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்பார். வேறு வேறு பாஷைகள் காதில் விழும் ஏதாவது ஒரு நாட்டில் மக்கள் ஒன்றுகூடி ஆரவாரமாக மகிழ்ச்சியினைக் கொண்டாடுவார்கள்.. சிரிப்பும் அழுகையும் உலகெங்கும் ஒன்று போலதானிருக்கிறது. எந்த நாட்டில் மனிதர்கள் சிரித்தாலும் அது உடனே நம்மையும் உற்சாகம் கொள்ள வைத்துவிடுகிறது.
அது போலவே எங்காவது குண்டு வெடிப்பு நடந்திருக்கும். விமானத்தாக்குதல் நடக்கும். போலீஸார் தடியடி நடத்துவார்கள். மக்களின் ஆர்ப்பாட்டம் நடக்கும். அதைப் பார்க்கும் போது உலகம் பற்றி எரிந்து கொண்டிருப்பது போலத் தோன்றும்.
தன்னைப் போலச் சிறிய அறைக்குள் வாழும் மனிதர்களுக்கு எதற்கு இவ்வளவு பெரிய உலகம். இவ்வளவு பிரச்சனைகள். கடற்கரையில் கால் நனைய நிற்கும் சிறுவனை அலைகள் தன் போக்கில் இழுத்து விளையாடுவது போன்ற உணர்வினையே தொலைக்காட்சி ஏற்படுத்துகிறது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் காடுகள் தீப்பற்றி எரிவதைக் காட்டினார்கள். அந்தக் காட்சி அவரைத் தொந்தரவு செய்தது. அவ்வளவு நெருப்பை அதன்முன்பு கண்டதில்லை. அதுவும் கங்காரு குட்டிகள் நெருப்பிலிருந்து தப்பியோடும் காட்சியைக் காணும் போது கலக்கமாகவே இருந்தது.
காட்டுத்தீயின் உக்கிரமும் வான் நோக்கி எழும் கரும்புகையும் மனதை அழுத்தியது. உலகில் எங்கே எது நடந்தாலும் கேமிராவின் கண்களிலிருந்து
தப்ப முடியாது. கேமிரா தான் நம் காலத்தின் மிகப்பெரிய வேட்டைக்கருவி. துப்பாக்கியை விடவும் அச்சம் தரக்கூடியது. ஆனால் விளையாட்டாகவே பயன்படுத்துகிறார்கள்.
சூயஸ் கால்வாயினுள் சிக்கி நிற்கும் அந்தக் கப்பல் பற்றிய செய்தியை முதன்முறையாகப் பார்த்தபோது கோவத்தில் பிடிவாதமாகச் சுவரில் முகம் பதித்து நிற்கும் சிறுவனைப் போலவே தோன்றியது.
தான் அப்படித்தான் இருந்தோம். அப்பா ஏதாவது சொல்லிவிட்டால் உடனே சுவரை நோக்கித் திரும்பிக் கொண்டு யாரையும் பார்க்க மாட்டார். பேசமாட்டார். அம்மா முதுகில் அடித்து இழுத்தாலும் முகத்தை விலக்கவே மாட்டார். இந்த கப்பலும் அப்படிப் பிடிவாதமாக நிற்பது போலவே இருந்தது.
சின்ன வயதில் கால்பந்தாடும் போது சண்டையிட்ட முத்துராமனை ஒருநாள் அண்ணன் வீட்டிற்குக் கூட்டிவந்திருந்தான். அப்போது இப்படித்தான் இரண்டுகைகளால் கதவைப் பிடித்துக் கொண்டு உள்ளே விடமாட்டேன் என்று நின்றிருந்தார். பிடிவாதம் நம் உடலை மாற்றிவிடுகிறது. திருகாணிகளைக் காணும் போது அவை பிடிவாதத்தின் அடையாளம் போலவேயிருக்கிறது
முதல்நாள் செய்தியில் எவர் கிரீன் கப்பல் ஈபிள் கோபுரத்தை விடப் பெரியது என்றார்கள். படுத்திருக்கும் போது யானை பெரிதாகத் தெரிவதில்லை. அப்படித் தான் கோபுரமும் அது சாய்ந்துவிடடால் பிரம்மாண்டமாகத் தெரியாது.
அந்தக் கப்பலில் ஏற்றப்பட்டுள்ள பொருட்களின் மதிப்பைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவருக்கு அதை விடவும் அந்தக் கப்பல் சூயஸ் கால்வாயின் போக்குவரத்தை நிறுத்திவிட்டதைப் பற்றித் தான் அதிகக் கவலை கொண்டார்.
பள்ளி வயதிலிருந்தே கப்பலைப் பற்றி அறிந்து கொள்வதில் அவருக்கு ஆர்வம் அதிகமிருந்தது. அதுவும் புதையல் தேடிச் சென்ற கப்பல்கள். யாத்ரீகர்களின் சாகசக் கப்பல்கள். கொள்ளையர்களின் கப்பல்கள், கடலில் மூழ்கிய கப்பல்கள் என நிறையப் புத்தகங்களை நூலகத்திலிருந்து எடுத்து வாசித்திருக்கிறார்.

சூயஸ் கால்வாய் உருவான விதம். அதன்பிறகு உலக வர்த்தகத்தில் ஏற்பட்ட மாற்றம் பற்றியும் கூடப் படித்திருக்கிறார்.
வாழ்நாளில் என்றாவது ஒருமுறை சூயஸ் கால்வாயை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை கூட இருந்தது. ஆனால் இந்த எழுபது வயதிற்குப் பிறகு அது சாத்தியமேயில்லை. இப்படித்தான் நிறைய ஆசைகள் மனதில் தோன்றி மனதிலே முடிந்துவிடுகின்றன. இவ்வளவு தான் வாழ்க்கை.
சூயஸ் கால்வாயினைப் பற்றி ஒரு டாக்குமெண்டரி படத்தைப் பார்த்திருக்கிறார். உண்மையில் இக்கால்வாய் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பெரிய சாதனை தான். மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் அந்தக் கால்வாய் 1869 இல் திறக்கப்பட்ட காட்சி அந்தப் படத்தில் இருக்கிறது. .
சூயஸ் கால்வாயை வெட்டியவர் பிரெஞ்சுப் பொறியியல் நிபுணர் ஃபெர்டினார்ட் டி லெஸ்ஸிப்ஸ். பத்தாண்டுகள் கால்வாய் வெட்டும் பணி நடந்திருக்கிறது. லெஸ்ஸிப்ஸ் புகைப்படத்தைப் பார்க்கும் போது காலேஜ் பிரின்சிபால் போன்ற முகத்தோற்றமே இருந்தது. பெரிய சாதனைகளைச் செய்யும் மனிதர்கள் தனது தோற்றத்தில் எளியவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களின் கனவு தான் அவர்களுக்கான விஸ்வரூபத்தைத் தந்துவிடுகிறது
சூயஸ் கால்வாயினுள் ஓராண்டில் ஏறக்குறைய பதினைந்தாயிரம் கப்பல்கள் கடந்து செல்கின்றன. ஒவ்வொரு கப்பலும் இக்கால்வாயைக் கடக்க 16 மணி நேரம் வரை ஆகும் என்றார்கள்.
வரிசை வரிசையாகக் கப்பல்கள் சூயஸ் கால்வாயினுள் செல்லும் போது கரையோரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சிலர் கையசைப்பதைக் காட்டுவார்கள். தானும் அதில் ஒருவர் போலவே கருதுவார்
கப்பல் ஏன் இத்தனை வசீகரமாகயிருக்கிறது. நிறையப் பேருக்கு விமானப் பயணம் என்றால் ஆசையாக இருக்கும். அவருக்கு விமானம் பயணத்தில் பெரிய ஈடுபாடு இல்லை. நாலைந்து முறை பயணித்திருக்கிறார். பறக்கும் உணர்வை அது தரவேயில்லை. மாறாகக் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்கப்பட்ட ஆப்பிள் அசைவற்று இருப்பதைப் போலவே உணர்ந்தார். ஆனால் கப்பல்கள் அப்படியில்லை. அதில் ஏதோ ஒரு பிரம்மாண்டமும் வசீகரமும் இருக்கிறது.
இரவு நேரம் கடலில் செல்லும் கப்பலின் விளக்குகள் ஓராயிரம் கண்கள் கொண்ட விசித்திர விலங்கினைப் போலவே தோற்றம் தருகின்றன.
ஒரு முறை கப்பல் பயணம் பற்றிய ஒரு திரைப்படத்தில் ஒரு சுண்டெலி கப்பலில் பயணம் செய்வதைக் காட்டினார்கள். அந்த எலி யாரும் இல்லாத நேரம் வெளியே வந்து படியில் ஏறி மேற்தளத்திற்குப் போகும். அங்குமிங்கும் ஒடியலைந்துவிட்டு பின்பு மீண்டும் சமையல் கூடத்திற்குள் போய் ஒளிந்து கொள்ளும். ஒரு எலி கடலில் பயணம் செய்கிறது என்பதே அவருக்கு வேடிக்கையாக இருந்தது. ஆனால் அந்த எலிக்குத் தான் கடலில் செல்கிறோம் என்ற உணர்வே இருக்காது. அது ஒரு வீட்டில் இருப்பது போலத் தான் உணர்ந்திருக்கும். அந்தச் சிற்றெலியை போலத் தானும் ஒரு கப்பலில் ஓடியாடி மகிழ ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் அதை எவரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை

வணிகக் கப்பல்களின் பிரம்மாண்டத்தைக் காணும் போது அது பேராசையின் வடிவம் என்றே தோன்றும். சில லாரிகளில் இப்படித்தான் ஊதி பெருக்க வைக்கோல் ஏற்றிக் கொண்டு போவார்கள். அந்த லாரி ஒரு பக்கம் சாய்ந்து கொண்டே செல்லும். பெரிய வணிகக் கப்பல்களில் நூற்றுக்கணக்கான கார்கள் ஏற்றப்பட்டுச் செல்கின்றன. பெரிய பெரிய இயந்திரங்கள். இரும்பு பாளங்கள். தானியங்கள். எனப் பல்லாயிரம் பொருட்கள் ஏற்றப்படுகின்றன.
கடலில் தெரியும் கப்பலும் கரையில் காணும் கப்பலும் ஒன்றில்லை. உண்மையில் வணிகக் கப்பல் என்பது ராட்சச திமிங்கலம். எவர் கிரின் கப்பலும் அப்படியானது தான்.
கப்பல் எப்படிச் சூயஸ் கால்வாயினுள் மாட்டிக் கொண்டது. அதை எப்படி மீட்கப் போகிறார்கள் என்பதை உலகின் எல்லாத் தொலைக்காட்சிகளும் காட்டிக் கொண்டிருந்தன. அரபு சேனல் ஒன்றில் காட்டப்பட்டது போன்ற காட்சிகளை இந்திய சேனல்கள் எதுவும் காட்டவில்லை. எந்தச் சேனலும் கப்பலுக்குள் இருந்தவர்களைக் காட்டவில்லை. அந்தக் கப்பலில் இருபத்தைந்து இந்தியர்கள் இருப்பதாகச் செய்தியில் சொன்னார்கள். யார் அவர்கள். எந்த ஊரைச் சார்ந்தவர். அவர்களின் குடும்பம் இந்நேரம் எப்படியிருக்கும். வீட்டோர் கப்பலின் மீட்சிக்காகப் பிரார்த்தனை செய்வார்களா. ஏன் அவர்கள் திரையில் தோன்றி பேசவில்லை என்று யோசித்துக் கொண்டிருந்தார்.
இயந்திரங்கள் மனிதர்களின் கட்டுப்பாட்டினை எப்போது இழக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. சாதாரண மிக்சி ஒரு நாள் திடீரெனத் தீப்பற்றி எரிந்துவிட்டது. எப்படி என அவரால் அறியமுடியவில்லை. இவ்வளவு பெரிய கப்பலை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது எளிதானதில்லை. ஆனால் தொழிற்நுட்பம் வளர்ந்துவிட்டது. மனித தவறுகளை அது செய்வதில்லை. ஆனால் இயந்திரமும் தவறு செய்யவே நேரிடும்.
அந்தக் கப்பலின் உரிமையாளர் ஒரு ஜப்பானியர் என்றார்கள். ஜப்பானியர்கள் என்றாலே கறுப்புக் கோட் போட்ட குள்ளமான உருவம் தான் மனதில் தோன்றுகிறது. சட்டை அணியாத ஒரு ஜப்பானியரை கூட அவர் கண்டதில்லை.
கப்பலின் உரிமையாளர் ஷோயேய் தங்களால் ஏற்பட்ட இடையூறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டதாக ஒரு செய்தி வெளியானது. அது ஜப்பானியர்களின் இயல்பு. அவர்கள் தண்ணீரைப் போல மன்னிப்பை எளிதாகப் பயன்படுத்துகிறார்கள். நாம் மன்னிப்பு கேட்பதை மிகப்பெரிய காரியமாக நினைக்கிறோம்.
கப்பலை இயக்கும் தைவான் நிறுவனம் எவர்கிரீனை மீட்பதற்கான முயற்சிகளை விவரித்துக் கொண்டிருந்தார்கள்.
உடனடியாக மீட்க முடியாது என்பதை வல்லுநர்கள் உறுதியாகத் தெரிவித்தார்கள்.
சிறுவயதில் ஒருமுறை அவர் பொருட்காட்சியில் ஒரு நீராவிக் படகினை வாங்கி வந்தார். அதில் சிறிது மண்ணெண்ணெய் ஊற்றிப் பற்றவைத்துத் துணிகள் ஊற வைக்கும் பிளாஸ்டிக் டப்பில் தண்ணீரை நிரப்பி ஒட விட்டார். அந்தப் படகு புகையைக் கக்கிக் கொண்டு ஒடி டப்பின் வளைவில் திரும்பாமல் பறந்து வெளியே வந்து விழுந்துவிட்டது. சிறிய பொம்மைப் படகினைச் செலுத்துவதே எளிதாகயில்லை. எவர் கிரீன் எவ்வளவு பெரிய கப்பல்.
கப்பலை மீட்பதற்கான வழிகளைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். மனிதர்களால் தீர்க்கப்படமுடியாத பிரச்சனைகளே இல்லை. நெருக்கடி தான் மனிதனை மேம்படுத்துகிறது. புதிய வழிகளை உண்டாக்குகிறது. விண்வெளியில் உள்ள ராக்கெட்டின் பிரச்சனையே பூமியிலிருந்தபடியே சரிசெய்துவிடுகிறார்களே. இந்தக் கப்பலை மீட்காமலா போய்விடுவார்கள்.
எப்படிக் கப்பலை மீட்கப்போகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளப் பகலிரவாகத் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்றிரண்டு நிமிஷங்களுக்கு மேலே இதைப்பற்றிய செய்தியில்லை. ஆனால் சர்வதேச ஆங்கிலச் செய்திகளில் கப்பலை மீட்கும் பணிகள் விரிவாகக் காட்டப்பட்டுக் கொண்டிருந்தன.
கால்வாயின் குறுக்கே சிக்கிக் கொண்டிருந்த போதும் கப்பலின் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. கப்பலில் வேலை செய்பவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள். எல்லாப் பிரச்சனைகளுக்கு நடுவிலும் அவர்களுக்குப் பசிக்கும். சாப்பாடு தேவைப்படும். உறங்குவார்கள். போர்வீரனும் கூடச் சாப்பாட்டினை எடுத்துக் கொண்டுதானே போகிறான். கப்பலின் சமையற்காரனுக்கு நிச்சயம் ஓய்விருக்காது. அவனுக்குக் கப்பல் கால்வாயினுள் மாட்டிக் கொண்டது விஷயமேயில்லை. பதற்றமான நேரங்களில் மனிதர்களின் பசி அதிகமாகிவிடுகிறது. அந்தக் கப்பலிலிருந்தவர்களில் சிலர் நிச்சயம் அதிகம் சாப்பிட்டிருப்பார்கள். அப்படித் தானே நடந்து கொள்ள முடியும்.
எவர்கிரீன் கப்பலின் உரிமையாளர் ஷோயேய் கிசேன் இந்த நேரம் உறங்கிக் கொண்டிருப்பார். ஜப்பானியர்கள் அப்படித் தான். அவர்கள் புற உலகின் பிரச்சனையைத் தனதாக்கிக் கொள்ள மாட்டார்கள். அவர் வேலை செய்த தொழிற்சாலைக்கு வருகை தந்த ஜப்பானியர்கள் கூட இப்படித் தானே நடந்து கொண்டார்கள்.
மீட்புக்குழுவினர் வியாழக்கிழமை தங்கள் முயற்சியில் தோல்வியடைந்தனர். கால்வாயிலிருந்து கப்பலை திசைமாற்றம் செய்யப் புதிய வழிகளைத் திட்டமிடுகிறார்கள் என்று செய்தி சொன்னது. எவர்கிரீன் சிக்கிக் கொண்டதன் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல்கள் பயணம் செய்ய இயலாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
சாலையில் நடக்கும் போராட்டத்தால் தான் ஒருமுறை இரண்டுமணி நேரம் ரோட்டில் பைக்கில் நின்ற நாள் அவரது நினைவில் வந்து போனது. பெரிய அனுபவங்களின் வழியே சிறிய அனுபவங்கள் மீட்கப்படுகின்றன.
சூயஸ் கால்வாய் முடக்கபட்டதால் ஒரு மணி நேரத்திற்கு மூவாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. உலக வர்த்தகம் சரிந்து கொண்டிருக்கிறது. பங்கு சந்தை தடுமாறுவதாகச் சொன்னார்கள். வணிகக் கப்பல் என்பதால் தான் உலகம் இவ்வளவு கவலைப்படுகிறது. பயணிகள் கப்பல் என்றால் நடந்திருப்பது வேறு.
அவர்கள் சொல்லும் கோடிகளை அவரால் எழுதி கூடப் பார்க்க முடியாது. ஆஸ்திரேலியாவின் காட்டுத் தீ போலவே அந்தக் கப்பலின் பாதிப்பும் நீண்டு கொண்டே போனது.
இவ்வளவு பெரிய பாதிப்பினை ஏற்படுத்திய செய்தியைப் பற்றிச் சேனலில் விவாதிக்கும் ஒருவர் முகத்தில் கூடச் சிறு துயரமில்லை. அவர்கள் ஆபரேஷன் செய்யும் மருத்துவர் நோயாளியினைப் பற்றிப் பேசுவது போல இயல்பாக, எளிதாக, இவ்வளவு தான் விஷயம் என்பது போலப் பேசினார்கள். அதிலும் ஒரு பெண் மாலுமி புதிது புதிதாக யோசனைகளை சொல்லிக் கொண்டிருந்தார். அவள் ஒரு வணிகக் கப்பலைச் செலுத்துகிறாள்.

கப்பல் என்றாலே ஆண்களின் உலகம் என்று மனதில் இருந்த எண்ணம் அவளைப் பார்த்த மாத்திரம் மாறத்துவங்கியது. வருஷத்தில் எட்டுமாதங்கள் அவள் கடலில் வாழுகிறாள். இளம்பெண். தோளில் தலைமயிர் புரளுகிறது. கண்களில் அத்தனை உற்சாகம். தன் மகளின் வயது தானிருக்கும். ஆனால் தன் மகளுக்கு நீந்தக் கூடக் தெரியாது, கடற்கரையில் நிற்பதற்கே பயப்படுவாள். தன்னால் மகளைத் தைரியமாக வளர்க்க முடியவில்லை
இந்தப் பயம் குழப்பம் எல்லாம் அவரிடமிருந்து தானே அவளுக்கு வந்திருக்கும். மனதில் பல்வேறு வயதின் கவலைகள். பயங்கள் தரை தட்டி நிற்கின்றன. அவற்றை எளிதில் அகற்றிவிட முடியாது
எவர்கிரீன் கப்பலின் மீட்பு பணிகளை பார்வையிட ஒரு ஹெலிகாப்டர் வானில் சுற்றிக் கொண்டிருந்தது. பிரம்மாண்டமான ஒரு சிலை ஹெலிகாப்டரில் வைத்துத் தூக்கிக் கொண்டு பறப்பதை முன்பு டிவியில் பார்த்திருக்கிறார். கப்பலை அப்படித் தூக்கிக் கொண்டு பறந்துவிட முடியாதே. தரை தட்டி நிற்கும் கப்பலைப் பறவைகள் காண்பது போலதான் இதுவும். பறவைகளும் மரக்கிளையும் கப்பலும் ஒன்று தான். பிரம்மாண்டத்தைக் கண்டு பறவைகள் வியப்பதில்லை. ஒதுங்குவதில்லை.
கப்பலை மீட்கும் வழிகள் மாறிக் கொண்டேயிருந்தன. இந்தக் கவலையால் தானோ என்னவோ வழக்கமாகச் சூடாகச் சாப்பிடும் காபியை ஆறவைத்துக் குடித்தார். இரவில் சாப்பிட எடுத்து வைத்த வாழைப்பழத்தை தொடவேயில்லை. மகளும் மருமகனும் வேலைக்குப் போன பிறகு சப்தமாகச் செய்தியைக் கேட்டார். ஒரு காகிதத்தில் அந்தக் கப்பலைப் படம் வரைந்து கூடப் பார்த்தார். மகளின் கம்ப்யூட்டரில் அந்தக் கப்பல் பற்றிய தகவல்களை வாசித்தார். கனவிலும் இந்தக் காட்சிகள் வந்து போயின.
நான்காம் நாள் இதிலிருந்து விடுபடுவதற்காக மகளும் மருமகனும் வேலைக்குப் போன பிறகு வீட்டைப் பூட்டிக் கொண்டு மார்க்கெட் வரை நடந்து போய் வந்தார். அந்த நகரில் அவருக்குத் தெரிந்த மனிதர்களே இல்லை. யாரிடமாவது இதைப் பற்றிப் பேச வேண்டும் போலிருந்தது. பெங்களூரில் அவருக்கு ஒருவர் கூட நண்பர் கிடையாது. சென்னையில் இருந்திருந்தால் வாக்கிங் போகிற நண்பர்களிடம் இதைப்பற்றிப் பேசலாம்.
ஆனால் மகள் வீட்டிற்கு வந்தபிறகு தனது பழைய நண்பர்களைத் தொடர்பு கொள்ளவேயில்லை. அவர்களும் தன்னை நினைக்கவேயில்லை. யாரிடமிருந்தாவது போன் வரும் எனச் சில நாட்கள் நினைப்பதுண்டு. இந்த இரண்டு ஆண்டுகளில் ஒருவர் கூடப் போன் பேசவில்லை. இத்தனை ஆண்டுகள் ஒன்றாகப் பழகியிருக்கிறோம். தன்னைப் பற்றி ஏன் ஒருவரும் கவலைப்படவில்லை. ஒருவேளை தானும் இப்படித் தரை தட்டி நிற்கும் கப்பல் தானோ.
பழங்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பியதும் டிவியைப் போட்டார்.
கப்பலின் நின்ற கோலம் மாறவேயில்லை.. கரையிலிருந்த மணலை இயந்திரம் மூலம் அகற்றிக் கொண்டிருந்தார்கள் இன்னொரு சேனலில் போர் கப்பலை இயக்கிய இரண்டு மாலுமிகள் ஏதோ ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தார்கள். பிரிட்ஜிலிருந்து குளிர்ந்த தண்ணீரை எடுத்துக் குடித்தபடியே சோபாவில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டார்.
திடீரென அந்தக் கப்பலுக்கு என்ன வயது என்ற சந்தேகம் மனதில் தோன்றியது. மூன்று வருஷங்களே ஆனதாகக் கூகிள் சொன்னது. பொதுவாக இருபது வருஷம் தான் கப்பல் பயன்படுகிறது. அப்படியானால் பத்து வயது பையனைப் போன்றது தான் எவர்கிரீன் கப்பல் தான் நினைத்தது சரி தான் அவன் ஒரு விளையாட்டு பையனே தான்.
வேறு சேனலை மாற்றி எவர்கிரீன் மீட்பது பற்றி ஏதாவது புதிய செய்தி வந்திருக்கிறதா என்று தேடினார். அதே காட்சிகள். அதே மீட்பு முயற்சிகள். ஒரு சேனலில் கரை தட்டி நின்ற கப்பலை ஒட்டிய கரையில் ஒரு நண்டு ஒடிக் கொண்டிருந்தது. நண்டினை கேமிரா பின்தொடர்ந்தது. அது வேகமாக ஒடி வளையினுள் மறைந்துவிட்டது
அந்தக் காட்சி அவருக்குப் பிடித்திருந்தது. எத்தனை நாட்களுக்குத் தான் அதே கப்பலைக் காட்டிக் கொண்டிருப்பார்கள். நண்டினை படம் பிடித்த அந்தக் கேமிராமேனை மனதிற்குள் பாராட்டிக் கொண்டார்.
ஆறு நாட்களுக்குப் பிறகு எவர்கிரீன் கப்பல் மீட்கப்பட்டதாகச் செய்தி ஒளிபரப்பானது. அந்தக் கப்பல் திரும்பும் காட்சியை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார். கப்பல் அசைந்து திரும்புவதைக் காணும் போது கண்ணில் நீர் கசிந்தது. அவரை அறியாமல் கைதட்டினார். அவசரமாக எழுந்து போய் மூத்திரம் பெய்து வந்தார். அப்போது மிகவும் சந்தோஷமாக உணர்ந்தார்.
பேரன் பள்ளிக்கூடம் விட்டு வருவதற்குள் அவனுக்காக ஒரு வெள்ளைப் பேப்பரை மடித்து அழகான காகிதக் கப்பல் ஒன்றைச் செய்து டைனிங் டேபிள் மீது வைத்திருந்தார்.
மாலையில் பள்ளிவிட்டு வந்த பேரன் அகில் அவரைக் கண்டுகொள்ளவேயில்லை. நேராகப் பிரிட்ஜிற்குப் போய்ச் சாக்லெட் எடுத்துச் சாப்பிட்டான்.

காகிதக் கப்பலை கையில் எடுத்துக் கொண்டு போய் அவனிடம் நீட்டினார்
“பேப்பர் போட் எனக்குப் பிடிக்காது“ என்றான்
“இதை தண்ணியில விட்டா மிதக்கும்“ என்றார் கோபால் ரத்னம்
“பிளாஸ்டிக் பக்கெட்ல மிதக்க விடலாமா“ என்று கேட்டான் அகில்
தலையாட்டினார். அவன் பாத்ரூமில் இருந்த சிவப்பு வாளி நிறையத் தண்ணீரைப் பிடித்து அதில் காகிதக்கப்பலை மிதக்க விட்டான். கப்பல் நகரவேயில்லை
கோபத்தில் அதைக் கையால் அழுத்தி ஒட வைக்க முயன்றான். காகிதக்கப்பல் தண்ணீருக்குள் மூழ்கிப் போனது.
“இதை எடுத்து ஒட வை“ என்று தாத்தாவை நோக்கி கத்தினான்
“நனைஞ்சிட்டா அது ஒடாது“ என்றார்
“நீ ஒரு ஸ்டுபிட் தாத்தா“ என்றபடியே அவன் கோபத்துடன் ஹாலை நோக்கி நடந்தான்.
அவர் மௌனமாகப் பேரனை பார்த்துக் கொண்டிருந்தார்
தொலைகாட்சியில். எவர் கிரீன்கப்பல் மீது நீதி விசாரணை நடத்தப்பட்டு நஷ்ட ஈடு வசூலிக்கபடும். அந்தக் கப்பலில் பணியாற்றியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அடுத்தப் பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது. இது எளிதில் முடியாது. கப்பல் நிறுவனம் இனி இந்த வழக்கை ஆண்டுக்கணக்கில் இழுத்தடிப்பார்கள்
தொலைக்காட்சியை அணைத்துவிட்டுச் செய்தியில் காட்டப்பட்ட நண்டு தனது வளைக்குள் ஒடி ஒளிந்து கொள்வது போல அவர் தனது அறைக்குள் போய்த் தாழிட்டுக் கொண்டார்.
அந்த ஆறு நாட்களில் அவருக்கு அதிக வயதாகிவிட்டது போல ஏனோ தோன்றியது
••
.
April 8, 2021
கௌரிசங்கரின் கனவு
நாதஸ்வர மேதை காருகுறிச்சி அருணாசலம் நூற்றாண்டு விழா இந்த வருடம் ஏப்ரலில் துவங்குகிறது. இதற்காகச் சென்றவாரம் கோவில்பட்டி ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். எழுத்தாளர்கள், கலைஞர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்விற்கு என்னையும் அழைத்திருந்தார்கள். சொந்தவேலையின் காரணமாக அதில் கலந்து கொள்ள இயலவில்லை

ஆனால் 25ஆண்டுகளுக்கு முன்பாகக் கோவில்பட்டியில் காருகுறிச்சி அருணாசலம் அவர்களுக்கு ஒரு விழா நடைபெற்றது. அது எழுத்தாளர் கௌரிசங்கர் இயக்கிய காருகுறிச்சியார் பற்றிய ஆவணப்படத்தின் திரையிடல். அதில் நான் கலந்து கொண்டு பேசினேன்.
எழுத்தாளர் கௌரிசங்கருக்கு சினிமாவின் மீது ஈடுபாடு அதிகம். சுந்தர ராமசாமியின் ஜே,ஜே.சில குறிப்புகளை சினிமாவாக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்து சுற்றியலைந்தார். ஆனால் அவரால் படமாக்க இயலவில்லை. ஆனால் சினிமா உலகின் நிஜத்தை நன்றாக அறிந்து கொண்டிருந்தார். சென்னையில் சுற்றிய நாட்களில் அறிமுகமான திரைப்பட இயக்கம், மாற்றுசினிமா என அவர் மனது உலகச் சினிமாவின் தீவிர ஈடுபாடு கொள்ள வைத்திருந்தது

கேவில்பட்டியில் வசித்து வந்த கௌரிசங்கர் சிறந்த கவிஞர், சிறுகதை ஆசிரியர். இவரது மழை வரும்வரை கவிதைத்தொகுப்பும். முந்நூறு யானைகள் சிறுகதைத் தொகுப்பும் மிக முக்கியமானது. கோவில்பட்டியில் தாசில்தாராகப் பணியாற்றியவர். மிகச்சிறந்த இலக்கிய வாசகர்.
கோவில்பட்டியிலிருந்து உருவான எழுத்தாளர்களுக்குக் கௌரி சங்கரின் வழிகாட்டுதல் முக்கியமானது. நானும் கோணங்கியும் அவரை நிறைய முறை சந்தித்துப் பேசியிருக்கிறோம். தேவதச்சன் வீட்டின் அருகில் குடியிருந்தார் என்பதால் தேவதச்சனைக் காணச்செல்லும் போதெல்லாம் அவரையும் பார்ப்பேன். உரையாடுவேன்.
அவருக்கு இசையில் மிகுந்த ஈடுபாடு உண்டு. ஒரு நாள் தான் நாதஸ்வர மேதை காருகுறிச்சி அருணாச்சலம் குறித்த ஒரு டாகுமெண்டரி படத்தை எடுக்க இருப்பதாகச் சொன்னார். எப்படி எடுக்கப்போகிறீர்கள் என்று கேட்டவுடன் தனது கனவினை விவரிக்க ஆரம்பித்தார்.

காருகுறிச்சியோடு தொடர்புடைய கலைஞர்கள். அவரது குடும்பம், திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் வீடு. நட்பு. விளாத்திகுளம் சாமிகள். குறுமலை லட்சுமி, பற்றிய விஷயங்கள். காருகுறிச்சி மேற்கொண்ட இலங்கைப் பயணம். அவரது ரேடியோ கச்சேரிகள் திரைப்படப் பங்களிப்பு. அவருடன் நெருக்கமாகப் பழகிய ஜெமினி கணேசன். சிவாஜி கணேசனின் நேர்காணல். ஏபி நாகராஜனின் நட்பு. அவரது வாரிசுகளாகக் கருதப்படும் இசைக்கலைஞர்களின் நேர்காணல்கள் என்று சொல்லிக் கொண்டே போனார்.
இதற்குப் பெரிய பொருட்செலவு தேவைப்படுமே என்று கேட்டவுடன் அதைப் பற்றி இனிமே தான் யோசிக்கணும். யாரும் இதுக்கு உதவி செய்ய மாட்டார்கள் என்று விரக்தியாகச் சொன்னார். அது உண்மை, கோவில்பட்டியில் உட்கார்ந்து கொண்டு இவ்வளவு பெரிய டாகுமெண்டரியை எப்படி உருவாக்கப்போகிறார் என்று யோசித்தேன்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் எனக்குப் போன் செய்து பேசினார். டாகுமெண்டரி படங்களுக்குத் திரைக்கதை எழுத வேண்டுமா என்று விசாரித்தார். பின்பு NFDC இதற்கு நிதி உதவி அளிக்குமா என்று கேட்டார். நான் அறிந்தவரை அவர்கள் டாகுமெண்டரி தயாரிக்க நிதி உதவி அளிப்பதில்லை என்றேன்.
விளாத்திகுளம் சுவாமிகளுடன்அவராக உள்ளூர் வீடியோகிராபர் ஒருவர் துணையோடு காருகுறிச்சியாரோடு தொடர்பான இடங்கள். கலைஞர்கள், குடும்பத்தவர் எனப் பலரையும் படம்பிடித்தார். காருகுறிச்சியின் பழைய புகைப்படங்கள். செய்தித் தாளில் வெளியான தகவல்கள் என யாவையும் சேகரித்து வைத்திருந்தார்.
சில மாதங்களுக்குப் பிறகு ஒரு நாளிரவு கோவில்பட்டியிலிருந்த ஒரு வீடியோ எடிட்டிங் ரூமிற்கு அழைத்துக் கொண்டு போனார். சின்னஞ்சிறிய அறை. கல்யாண வீடியோ ஒன்றை ஒரு இளைஞர் எடிட் செய்து கொண்டிருந்தார். அந்த வேலையை நிறுத்திவிட்டு காருகுறிச்சியார் டாகுமெண்டரியை எடுக்கச் சொன்னார். காருகுறிச்சி பற்றி அவர்கள் எடுத்திருந்த காட்சிகளை ஓடவிட்டுக் காட்டினார். இன்னமும் முழுமையாக எடிட் பண்ணவில்லை. இன்னும் நிறையப் படப்பிடிப்பு இருக்கிறது என்றார். அவரது கைப்பணத்தில் தான் அதை உருவாக்கியிருக்கிறார் என்பது தெரிந்தது
அதன்பிறகு அவரைச் சந்தித்த போது காருகுறிச்சியார் டாகுமெண்டரி அப்படியே நிற்பதைப் பற்றிச் சொல்லுவார். சில சமயம் இதற்கு சினிமா நண்பர்களிடம் ஆலோசனை கேட்பதற்காகச் சென்னைக்குக் கிளம்பிப் போய்வந்தார். அவர் நினைத்தது போல டாகுமெண்டரியை எடுக்கப் பொருளாதார உதவி கிடைக்கவில்லை.
ஆகவே எடுத்த வரை எடிட் செய்து அதைத் திரையிடும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்

கவிஞர் தேவதச்சனின் அப்பா கோவில்பட்டியில் மிகப்பெரிய நகை வணிகர். சேது முதலாளி என்று தான் அவரை அழைப்பார்கள். சிறந்த பண்பாளர். அவருக்குக் காருகுறிச்சியாருடன் நல்ல நட்பு இருந்த்து. ஆகவே அவரை அழைத்துத் தனது டாகுமெண்டரிப் படத்தை வெளியிடச் செய்தார். வ.உ.சி.பூங்காவை ஒட்டிய ஒரு கல்யாண மண்டபத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்றைக்குக் கோவில்பட்டி செண்பகவள்ளியம்மன் கோவிலில் நாதஸ்வரம் வாசிக்கும் கலைஞர்களின் இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது.
கௌரிசங்கர் விழாவில் தேவதச்சனின் அப்பா காருகுறிச்சியார் பற்றி மிக நன்றாகப் பேசினார். கோவில்பட்டியில் வசித்த காருகுறிச்சியார் பற்றிய நினைவுகள் பலரது மனதிலும் பசுமையாகத் தங்கியுள்ளது. எனது தாத்தா காருகுறிச்சியாரை நெருக்கமாக அறிந்தவர். காருகுறிச்சியார் புது வீடு கட்டித் திறப்பு விழா செய்த போது அதில் என் தாத்தா குடும்பத்துடன் கலந்து கொண்டிருக்கிறார். ஆச்சி அந்த நினைவுகளைப் பலமுறை எங்களிடம் சொல்லியிருக்கிறார்.
அந்த நிகழ்ச்சி முடிந்த இரவில் கௌரிசங்கர் மிகுந்த சந்தோஷத்துடன் இருந்தார்.
“காருகுறிச்சி எப்பேர்பட்ட கலைஞன். அவனுக்கு நம்மாலே முடிஞ்ச சின்னக் காணிக்கை“ என்று சொன்னார். உண்மையில் அவர் நினைத்தது போலப் படத்தை எடுக்க முடியவில்லை என்ற ஆதங்கம் அவரிடமிருந்தது.
அந்தப் படத்தை டிசம்பர் ம்யூசிக் சீசன் போது சென்னையில் திரையிட வேண்டும் என்று முனைந்தார். இதற்காக இரண்டு முறை சென்னைக்கு வந்து என்னைச் சந்தித்தார்
நாங்கள் ம்யூசிக் அகாதமிக்குச் சென்று விசாரித்தோம். ஒருவரும் இதில் ஆர்வம் காட்டவில்லை. ஏதாவது தொலைக்காட்சியில் அதை ஒளிபரப்புச் செய்ய இயலுமா என விசாரித்து அலைந்தார். ஒளிபரப்பு அளவிற்கான தரமில்லை என மறுத்துவிட்டார்கள் என்றார்.
இரண்டு ஆண்டுகள் அந்த வீடியோவை கையில் வைத்துக் கொண்டு பலரையும் சந்தித்து வந்தார். பத்திரிக்கையில் செய்தி வெளியாக உதவும் படி கேட்டுக் கொண்டார். எதுவும் நடக்கவில்லை.
பின்பு அந்தப் படத்தை ஒரு இலக்கிய முகாமில் திரையிடும்படி ஏற்பாடு செய்து அவரிடம் கேட்டேன். அவர் கடைசி வரை அதன்பிரதியை அனுப்பி வைக்கவில்லை.
அதன் பிறகு அவர் தனது டாகுமெண்டரி பற்றிப் பேசுவதையே விட்டுவிட்டார். பல சந்தர்ப்பங்களில் வேறு வேறுவிஷயங்கள் பேசிய போதும் அவர் தனது ஆவணப்படத்தைப் பற்றி எதுவும் பேசமாட்டார். அதை என்ன செய்தார் என்றும் தெரியவில்லை. ஒருவேளை அவரது குடும்பத்தினரிடம் அதன் பிரதி ஏதாவது இருக்கக் கூடும்.
கௌரி சங்கர் ரஷ்ய இலக்கியங்களின் காதலர். அதிலும் குறிப்பாக இவான் துர்கனேவின் தீவிர வாசகர். மூன்று காதல்கதைகளைப் பற்றி அவர் பேசும் போது அவரது கண்களில் ஒளி மின்னும். துர்கனேவை அப்படி யாரும் பேசமுடியாது. அவ்வளவு ஆழ்ந்து படித்திருந்தார். இந்திய நாவல்கள். சர்வதேச நாவல்கள் எனத் தீவிரமாகப் படித்தவர். அதிலும் படித்த விஷயங்களை ஆராய்ந்து சொல்வதில் தேர்ந்தவர். எழுத்தாளர்கள் கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமியோடு நல்ல நட்பு கொண்டிருந்தார்.
கோவில்பட்டியிலிருந்து யார் புதிதாக எழுதத் துவங்கினாலும் கௌரி சங்கரிடம் கொடுத்து அபிப்ராயம் கேட்பது வழக்கம். தயவு தாட்சண்யமின்றி விமர்சனம் செய்வார். அதே நேரம் நல்ல கவிதை, நல்ல கதையாக இருந்தால் குளிரக் குளிரப் பாராட்டுவார். சிற்றிதழ்கள் ஏதாவது ஒன்றுக்கு அனுப்பி வைக்கும்படி சொல்வார். கோவில்பட்டியின் துர்கனேவ் என்று அவரைக் கேலி செய்வேன். அதை அவர் ரசித்தார்.
கோவில்பட்டியில் காருகுறிச்சியாருக்கு ஒரு சிலையிருக்கிறது. அவருக்கு ஒரு நினைவு மண்டபம் எழுப்ப வேண்டும். காருகுறிச்சியார் நூற்றாண்டினை அரசே நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை எழுத்தாளர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எழுப்பியிருக்கிறார்கள். அவசியம் செய்ய வேண்டிய காரியமது

எனது சஞ்சாரம் நாவலுக்குச் சாகித்ய அகாதமி விருது கிடைத்த போது காருகுறிச்சியாரின் குடும்பத்தினர் மற்றும் நாதஸ்வர இசைக்கலைஞர்கள் திருநெல்வேலியில் பெரிய பாராட்டு விழா நடத்தினார்கள். அதில் காருகுறிச்சியாரின் மனைவி எனக்குப் பொன்னாடை போர்த்தி ஆசி கொடுத்தார். அதை மிகப் பெரிய பேறு அன்று நாதஸ்வரக் கலைஞர்கள் என்னைக் கௌரவிக்கும் விதமாக இசை நிகழ்ச்சி நடத்தினார்கள். இது தான் எழுத்தில் எனக்குக் கிடைத்த பெரிய கௌரவம்.
ஒரு வேளை கௌரி சங்கர் நம்மோடு இருந்திருந்தால் காருகுறிச்சியார் நூற்றாண்டு விழாவை பெரியதாக நடத்த முன் நின்றிருப்பார்.
இசைமேதை காருகுறிச்சி அருணாசலம் பற்றிய அவரது டாகுமெண்டரி முழுமையாக எடுக்கப்படவில்லை. பாதியில் முடிந்த கனவது. ஆனால் கனவுகள் தான் ஒருவனை உயிர்த்துடிப்புடன் செயல்பட வைக்கிறது. கௌரிசங்கர் அப்படிக் கனவுகளின் ஊடாகவே வாழ்ந்து மறைத்துவிட்டார்.
கோவில்பட்டியின் அழியா நினைவில் காருகுறிச்சியாரோடு கௌரிசங்கரும் கலந்தேயிருக்கிறார்.
••
அதிர்ஷ்டத்தின் சுண்டுவிரல்
புதிய சிறுகதை
டாக்டர் மோகன் தங்கையா தனது ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு இரண்டாம் முறையாகப் பிள்ளையார் கோவில் தெரு வரை போய் வந்தார். ஆறு மாதங்களுக்கு முன்பு புதிதாகத் துவங்கியிருந்த அன்பரசன் கிளினிக் வெளியே முப்பது நாற்பது பேருக்கும் மேலாகக் காத்திருந்தார்கள்.
மணி ஐந்தாகியிருந்த போதும் இன்னமும் டாக்டர் வரவில்லை. ஒருவேளை ராயல் ஹாஸ்பிடலில் இருப்பாரோ என்னவோ.

பெட்டிக்கடையினை ஒட்டித் தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு மருத்துவமனை வெளியே காத்திருப்பவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்படி என்ன அன்பரசனிடம் யாரும் செய்யாத சிகிட்சை இருக்கிறது என இப்படிக் காத்துக்கிடக்கிறார்கள் என்று எரிச்சலாக வந்தது.
டாக்டர் அன்பரசன் எம்.டி என்ற அந்தப் பெயர் பலகையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். இவ்வளவு தான் விளம்பரம். இதுவே மக்களை இழுத்துக் கொண்டு வந்துவிட்டது.
அவர் முதன்முறையாக மேட்டுத் தெருவின் கடைசியில் கிளினிக் ஆரம்பித்தபோது இதைவிடவும் பெரிய பெயர்பலகை செய்து மாட்டியிருந்தார். கிளினிக் ஆரம்பித்த நாளில் இரண்டே பேஷண்டுகள். வெறும் எண்பது ரூபாய் வருவாய்.
இந்த முப்பது வருஷங்களில் அவர் ஆறு இடங்களுக்குக் கிளினிக்கை மாற்றிவிட்டார். ஆனால் அவரிடம் நோயாளிகள் வரவேயில்லை. ராசியில்லாத டாக்டர் என்ற பெயர் அவருக்கு நிலைத்துவிட்டது.
அன்பரசன் வெறும் பொடிப் பையன். கிளினிக் ஆரம்பித்து ஆறு மாதக்காலத்திற்குள் நோயாளிகள் வரிசை கட்டி நிற்கிறார்கள். எப்படியும் ஒரு நாளைக்கு முப்பதாயிரத்திற்கும் குறையாமல் வருமானம் வரும். இது தவிர இரண்டு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவராக வேறு வேலை செய்கிறான். சம்பாத்தியம் கொட்டத்தான் செய்கிறது. நிச்சயம் அடுத்த வருஷம் இவன் பெரிய கிளினிக் வைத்துவிடுவான் என்று அவருக்குப் பொறாமையாக இருந்தது
அந்தப் பொறாமையை அவர் மறைத்துக் கொள்ள விரும்பவில்லை. தெரிந்தவர்களிடம் வெளிப்படையாகவே பேசினார். வம்பு பேசுவதற்கு வயதா என்ன. ஆனால் வெறுமனே பொறாமைப்பட்டு என்ன ஆகிவிடப்போகிறது
இவனைப் போல இளம் மருத்துவர்கள் பலர் நகரில் முளைத்துவிட்டார்கள். மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் உருவாகிவிட்டன. டாக்டர்கள் தான் ஊரில் அதிக நிலத்தை, வீடுகளை விலைக்கு வாங்குகிறார்கள்.
ஆனால் தன்னைப் போல முப்பது ஆண்டுகாலமாக மருத்துவமனை நடத்திக் கொண்டிருக்கும் சாதாரண எம்பிபிஎஸ் டாக்டர்களின் கதி. ஒரு நாளைக்குப் பத்து நோயாளிகள் வந்தாலே அதிர்ஷடம். சில நாட்கள் காலை ஏழு மணிக்கு கிளினிக் வந்தால் பனிரெண்டு மணி வரை ஒரு ஆள் கூட வருவதில்லை. இதில் எதற்காகக் கிளினிக்கை திறந்து வைத்து உட்கார்ந்திருக்க வேணடும்.
நேரத்தை கடத்துவதற்காகவே நாலு நியூஸ் பேப்பர்கள் வாங்கிப்போடுவதை வழக்கமாக வைத்திருந்தார். காலை கிளினிக் வந்தவுடன் அந்தப் பேப்பர்களை வரி விடாமல் படிப்பார். நர்ஸ் மேகலா தன் அறையினுள் உட்கார்ந்து ஸ்ரீராமஜெயம் எழுதிக் கொண்டிருப்பாள். மருந்துக் கம்பெனி பிரநிதிகள் சிலர் அவரைத் தேடி வருவதுண்டு. அவர்களும் கூட அன்பரசனைப் பற்றித் தான் பெருமை பேசிக் கொண்டிருந்தார்கள்

நேற்று கூட ஒரு விற்பனை பிரதிநிதி அவரிடம் சொன்னான்
“ எக்ஸ் எம்எல்ஏ முத்துசாமி விஷயம் கேள்விபட்டீங்களா டாக்டர். அப்பல்லோ வரைக்குப் போய்க் கைவிட்ட கேஸ். ஆனால் அன்பரசன் நாலு நாள்ல குணமாக்கிட்டார். முத்துசாமியோட மகன் ஒரு தட்டு நிறைய ஐநூறு ரூபாயை வச்சி கொண்டுவந்து டாக்டர் கால்ல கொட்டியிருக்கானு சொல்றாங்க. எல்லாம் கைராசி“
“நல்ல டாக்டர்னு சொல்லு நான் ஏத்துகிடுறேன். அது என்ன கைராசி முகராசினு.. கைராசின்னா மருந்து குடுக்காமல் குணமாக்கச் சொல்லு பாப்போம். இதெல்லாம் வெறும் ஹம்பக்“.
“அப்படியில்லை டாக்டர். நீங்க ரொம்ப சீனியர். மெடிகல் ஜேர்னல்ல கூட ஆர்டிகிள் எழுதுறீங்க. ஆனா இங்கே கூட்டம் வருதா. நாம எவ்வளவு பெரிய டாக்டரா இருந்தாலும் அதிர்ஷடம் கூட இருக்கணும்“
“அதெல்லாம் முட்டாள்தனம். இந்த மக்களைத் திருத்த முடியாது“
“அன்பரசன் கிட்ட போயி குணமாகாதவங்களே கிடையாது. அதுக்கு என்ன சொல்றீங்க“
“அது எல்லாம் பொய். அவன் என்ன கடவுளா. பத்துப் பேருக்கு வைத்தியம் பாத்தால் ரெண்டு பேருக்குக் குணமாகாமல் தான் போகும். அது வெளியே தெரியாது. இதெல்லாம் வெறும் மவுத்டாக்“
“மவுத்டாக் சும்மா வந்துராது டாக்டர்.. அன்பரசனோட அப்பா நாடார் ஸ்கூல்ல வாத்தியாராம். அன்பரன் அக்காவும் டாக்டராம். லண்டன்ல வேலை பாக்குதாம் அன்பரசன் ரொம்ப சிம்பிளா பழகுறார் .“
“இதை எல்லாம் ஏன்கிட்ட ஏன்பா சொல்றே. நான் கேட்டனா. யாரு எப்படிப் போனா எனக்கு என்ன. “
“கோபால்சாமி டாக்டர் இடத்தைப் பிடிச்சிருவார்னு பேசிகிடுறாங்க“
“பிடிச்சா பிடிக்கட்டும்… நீ கிளம்பு“ என்று அந்த மருத்துவிற்பனை பிரதிநிதியை துரத்தி அனுப்பினார்
மருத்துவத்திற்கும் ராசிக்கும் என்ன தொடர்பிருக்கிறது. அன்பரசன் எழுதும் அதே மருந்தை தான் தானும் எழுதப்போகிறோம். ஆனால் அவனிடம் போகிறவர்கள் கைராசியான டாக்டர் என்கிறார்கள். தன்னைத் தேடி ஒருவரும் வருவதில்லை. இது என்ன முட்டாள்தனம்.
இவ்வளவிற்கும் தான் படித்த அதே மருத்துவக் கல்லூரியில் தான் அன்பரசனும் படித்திருக்கிறான். தன் மகள் வயது தானிருக்கும். இவன் வயதில தானே கனவுகளுடன் நாம் கிளினிக் துவங்கினோம். அவன் ஜெயிப்பது நம்மை ஏன் தொந்தரவு செய்கிறது.
அன்பரசனுக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்று அவருக்குத் தொடர்ந்து தோன்றியபடியே இருந்தது. அன்பரசன் கிளினிக் இருந்த ரோட்டில் பள்ளம் தோண்டி விட்டால் நோயாளிகள் வருவது குறைந்துவிடும் எனக் கிருஷ்ணதாஸ் மூலம் ஏற்பாடு செய்தார்.
தோண்டிப்போட்ட குழியைத் தாண்டி ஆட்கள் வர சிரமப்பட்டார்கள். அன்பரசனின் பைக் கூட வரமுடியவில்லை. அந்தக் குழியை மூடும்வரை தற்காலிகமாக ஏஞ்சல் லேப்பில் நோயாளிகளைப் பார்ப்பது என அன்பரன் முடிவு செய்யவே அங்கே கூட்டம் நிரம்பியது. லேபிற்கும் வருமானம் கூடியது. சில நாட்களில் கவுன்சிலர் தலையிட்டு உடனே அந்தக் குழியினை மூடியதோடு தார் போட்டு ரோட்டினையும் சரி செய்து கொடுத்துவிட்டார்
இதன்பிறகு அன்பரசன் கிளினிக் இருந்த இடத்து உரிமையாளரிடம் வாடகையை உயர்த்திக் கேட்க வைப்பது. முனிசிபாலிடிக்குப் புகார் அனுப்பி வைப்பது எனப் பலவிதங்களில் முயன்று பார்த்தார். எதுவும் அவனது வளர்ச்சியைத் தடுக்கவில்லை. அதிர்ஷ்டம் அவன் பக்கம் தான் எப்போதுமிருந்தது
••.

ஏதோ ஒரு சக்தி தனக்கு எதிராக வேலை செய்கிறது என்று மோகன் உறுதியாக நம்பினார். அது என்னவென்று தான் அறிந்து கொள்ள முடியவில்லை
அதிர்ஷடம் ஏன் தன்னை நெருங்கவேயில்லை. இத்தனை வருஷமாகக் காத்துகிடக்கிறோமோ, அதற்குக் கருணையே கிடையாதா.
ஏழு ஆண்டுகள் காத்திருந்தால் நிச்சயம் அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் என்பார்களே. தான் முப்பது ஆண்டுகளாகக் காத்திருந்தும் அதிர்ஷ்டத்தின் சுண்டுவிரல் கூடத் தன் மீது படவில்லையே என அவருக்குக் குழப்பமாக இருந்தது
••
மோகனின் சிறுவயதில் அந்த ஊரில் மொத்தமே நான்கு டாக்டர்கள் தான் இருந்தார்கள். அதிலும் கோபால்சாமி டாக்டர் தான் ரொம்பவும் பிரபலம்.. அவரது கிளினிக்கின் மரப்பெஞ்சில் எப்போதும் நோயாளிகள் காத்துகிடப்பார்கள். சுற்றிலும் இருந்த கிராமங்களிலிருந்து அவரைத் தேடியே வருவார்கள். அவரும் கிராமவாசிகளிடம் கறாராகப் பணம் கேட்பதில்லை. சிலருக்கு இலவசமாகவே அறுவை சிகிட்சை கூடச் செய்திருக்கிறார்.

கோபால்சாமி மருத்துவமனைக்குப் போனால் பூச்சிமருந்து குடித்தவர்களைப் பிழைக்க வைத்துவிடுவார் என்றொரு நம்பிக்கையிருநத்து. அது உண்மையும் தான். கணவனோடு சண்டையிட்டுக் கொண்டு பூச்சி மருந்து குடித்த பெண்கள். கடன் தொல்லையால் பாலிடால் குடித்தவர் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் காப்பாற்றியிருக்கிறார்.
ஐந்தே படுக்கைகள் கொண்ட அவரது மருத்துவமனை சில வருஷங்களில் நான்கு மாடி கொண்டதாக மாறிவிட்டது. காலை ஆறு மணி முதல் இரவு பத்தரை வரை கோபால்சாமி கிளினிக்கில் இருப்பார். இரவு கிளம்பும் போது அவரே தனது கறுப்பு நிற அம்பாசிடர் காரை ஒட்டிக் கொண்டு போவார். பிரௌண் கலர் லெதர் பை ஒன்றை கையில் கொண்டு எடுத்துக் கொண்டு வெளியே வருவார். அந்தப் பை நிறைய அன்றைய வருமானம் இருக்கும்.
ஒரு ரூபாய் நோட்டுகளைப் போட்டு வைக்கத் தனியே ஒரு மரப்பெட்டி வைத்திருத்தார் என்பார்கள். அது உண்மை. மோகனே பார்த்திருக்கிறார். டாக்டரின் நாற்காலியை ஒட்டி அந்த மரப்பெட்டி நிறைய ஒரு ரூபாய்கள் குவிந்து கிடக்கும்.
வஉசி நகரில் டாக்டர் டென்னிஸ் கோர்ட், நீச்சல் குளத்துடன் பெரிய பங்களா கட்டி திறப்பு விழா செய்தபோது ஊரே திரண்டு போனது.
அவரைப் பார்த்து தான் மோகனின் அய்யா தன் மகனை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்தார். அதற்காக ஒருதடவை கோபால்சாமியிடம் மகனை அழைத்துப் போய் ஆலோசனை கேட்டு வந்தார். மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவு மோகனுக்குள் அப்படித் தான் உருவானது. வேர்விடத் துவங்கியது.
மருத்துவக் கல்லூரி முடித்தவுடன் பயிற்சி காலத்தில் மட்டுமே பொதுமருத்துவமனையில் வேலை செய்தார். பின்பு ஒரு ஆண்டுக் காலம் கோபால்சாமி மருத்துவமனையிலே இளம் மருத்துவராக வேலை செய்தார். அதன்பிறகு தனியே கிளினிக் ஆரம்பித்துவிட்டார்
அந்த நாட்களில் மோகனுக்கு இந்த ஒரே கனவு தான் டாக்டர் கோபால்சாமியின் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பது. ஆனால் அது இத்தனை ஆண்டுகள் கடந்தும் நடக்கவில்லை. கோபால்சாமி இறந்து அவரது மகன் கிளினிக்கை நடத்த ஆரம்பித்து அவனாலும் அந்த இடத்தைத் தக்கவைக்க இயலவில்லை. இனி அப்படி ஒரு மருத்துவரால் மக்கள் மனதில் இடம்பிடிக்க முடியாது. அந்தக் காலம் இனி திரும்பி வராது.
••
இந்த முப்பது வருஷங்களில் ஊர் எவ்வளவோ மாறிவிட்டிருக்கிறது. புதிய அரசியல் தலைவர்கள் உருவாகிவிட்டார்கள். புதிது புதிதாகப் பள்ளிக்கூடங்கள் வந்துவிட்டன. பழைய சினிமா தியேட்டர் எதுவும் தற்போதில்லை. கார்களும் பைக்கும் மிக அதிகமாகிவிட்டது. அவரைப் போல அந்தக் கால எம்பிபிஎஸ் டாக்டர்கள் நாலைந்து பேர் மட்டுமே இன்றிருக்கிறார்கள்.
இப்போது யார் வெறும் எம்பிபிஎஸ் படித்துவிட்டு கிளினிக் நடத்துகிறார்கள். எல்லாம் எம்டி. எம்எஸ். இன்னும் எத்தனையோ வெளிநாட்டுப் படிப்புகள். நட்சத்திர விடுதிகளைப் போல அறைகள் கொண்ட மருத்துவமனைகள் வந்துவிட்டன. நோயாளிகள் முன்பை விடப் பெருகியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தன்னைப் போன்ற சாதாரண டாக்டர்களைத் தேடி வருவதில்லை. மதிப்பதில்லை.
புதிதாகக் கிளினிக் ஆரம்பித்த காலத்தில் விளம்பரத்திற்காகச் சினிமா தியேட்டரில சிலைடு போடச் செய்தார். காந்தி மைதானத்தில் பெரிய விளம்பரப் பலகை வைத்தார். பொருட்காட்சிக்கு வந்த சினிமா நடிகர் ஒருவரை நண்பர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வந்து போட்டோ எடுத்து மாட்டினார். இது எல்லாம் அவருக்கே வேடிக்கையாகத் தோன்றியது. ஆனால் இதனால் ஒரு பலனும் ஏற்படவில்லை.
ஒரு மருத்துவரின் விதியை அதிர்ஷடம் எழுதுவதை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்.
கிளினிக் புகழ்பெற வேண்டும் என்பதற்காக நாள் தவறாமல் முருகன் கோவிலுக்குப் போய் வந்தார். வாரம் ஒரு நாள் ஆஞ்சநேயரை வழிபட்டார். பல்வேறு ஜோதிடங்கள் பார்த்தார். பொட்டல்பட்டியில் ஒரு சித்தர் இருக்கிறார் என்று தேடிப்போய் அவரிடம் ஆசி பெற்று வந்தார். அவரது ஆலோசனையின் படி மருத்துவமனையில் கிழக்கு பார்த்த அறையில் அமர்ந்து கொண்டார். ஆனால் நோயாளிகள் அவரைத் தேடி வரவில்லை
டாக்டர் மோகனின் அய்யா காய்கறிமார்க்கெட்டில் தேங்காய் மண்டி வைத்திருந்தார். கம்பத்தில் நாலைந்து தென்னந்தோப்புகளைக் குத்தகைக்கு எடுத்திருந்தார். மகன் கிளினிக் வைத்தும் வருமானம் இல்லையே என்ற வேதனை அவருக்குள் அதிகமாக இருந்தது.
தன் மகனை டாக்டராகப் படிக்க வைத்த பணத்தைத் திரும்ப எப்படி எடுப்பது. என்ற கவலை அவரை அரித்துக் கொண்டிருந்தது எப்போது டாக்டர் கோபால்சாமி போலப் பங்களா கட்டுவது. எப்போது வீடு கடைகள் என்று வாங்கிப் போடுவது என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் கிளினிக் மூடும் நேரம் அவர் மருத்துவமனைக்கு வந்து அன்றைக்கு எவ்வளவு வருமானம் என்று மோகனிடம் கேட்பார்.
அதைச் சொல்வதற்கே மோகனுக்கு எரிச்சலாக இருக்கும். தயங்கி தயங்கிச் சொல்வார்.
“கரண்ட் செலவுக்குக் கூட உன்னாலே சம்பாதிக்க முடியலை. பேசாமல் துபாய்க்கு வேலைக்குப் போயிடு. நல்ல சம்பளமாவது கிடைக்கும்“ என்பார் அய்யா
அதைக்கேட்கும் போதெல்லாம் மோகனுக்குத் தனது தோல்வியின் கசப்பு தலைக்கு ஏறும்.
“கிளினிக்கை திறந்து வச்சித் தான் உட்கார முடியும். ரோட்டில நின்று போறவர்றவங்களை ஆள்பிடிக்க முடியாதுல்லே“ என்று கோபமாகச் சொல்லுவார்
“உனக்கு பின்னாடி ஆரம்பிச்ச லாரன்ஸ் டாக்டர் மகன் கிளினிக்ல கூட்டத்தைப் பாரு “
“அது ஆர்த்தோ கிளினிக்“
“அப்போ அதுக்குப் படிச்சிருக்க வேண்டியது தானே“
“நான் படிச்சதுக்கு வைத்தியம் செய்தால் போதும்“
“நான் உன்னை டாக்டருக்கு படிக்க வைச்சது சம்பாத்தியம் பண்ண. அதைச் செய்ய முடியலைண்ணா.. பேசாம இழுத்துமூடிட்டு என் கூடத் தேங்காய் மண்டிக்கு வந்து சேரு. அதுல இதை விட வருமானம் ஜாஸ்தி ‘“
என்று மோகனின் முகத்திற்கு நேராகவே அய்யா சொல்லுவார். அவர் அப்படித்தான். எதையும் மறைத்து பேசுவதேயில்லை.
திருமணம் செய்து கொண்டால் அவரது தோஷம் நீங்கி கிளினிக் புகழ்பெற்றுவிடும் என்ற யோசனையை யார் சொன்னது எனத்தெரியவில்லை. ஆனால் மோகனின் அய்யா அதை உறுதியாக நம்பினார். முடிந்தால் டாக்டர் மகளைத் தேடி திருமணம் செய்துவைத்துவிட வேண்டும் என்று அலைந்தார்.
டாக்டர் மகளை விடவும் பெரிய இடத்தில் பெண் கிடைத்தது. சாந்தாவின் அப்பா ஒரு பட்டாசுத் தொழிற்சாலை வைத்திருந்தார். ஒரே மகள். பத்தாம் வகுப்பு வரை படித்திருந்தாள். சிவகாசியில் அவர்களுக்குச் சொந்தமாக ஒரு கல்யாண மண்டபம் இருந்தது. இருநூறு பவுன் நகையும் அம்பாசிடர் காரும் கொடைக்கானலில் ஒரு வீடும், லட்ச ரூபாய் ரொக்கமும் தருவதாக ஒத்துக் கொண்டார்கள்.
“டாக்டருக்கு படிக்க வைத்ததிற்கு இது ஒன்று தான் பலன் “என்றார் மோகனின் அய்யா
மோகனுக்குத் தன்னோடு படித்த அழகான பெண்களோடு ஒப்பிடும் போது குள்ளமாக, தலையாட்டி பொம்மை போல உடல் கொண்டிருந்த சாந்தாவைப் பிடிக்கவில்லை. ஆனால் மாமனார் தயவிருந்தால் நிச்சயம் பெரிய மருத்துவமனை துவங்கிவிடலாம் என்று நினைத்துத் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார்
அவருக்குக் கோட் தைப்பதற்காக மெட்ராஸிற்கு விமானத்தில் அழைத்துக் கொண்டு போனார்கள். திருமண மண்டப வாசலில் சீதனமாகப் புதுக்கார் நின்றிருந்தது. அவரது திருமணத்தை மிகப்பெரியதாக நடத்தினார்கள்.
திருமண வாழ்க்கையால் அவரது உடம்பில் சதை போட்டதைத் தவிர வேறு பெரிய மாற்றம் எதுவும் உருவாகிவிடவில்லை. தனது புதுக்காரை கிளினிக் முன்னால் நிறுத்த இடமில்லை என்பதற்காகக் கிளினிக்கை இரண்டாவது கேட்டை ஒட்டிய வீதிக்கு மாற்றினார்.

புதிய மருத்துவமனைக்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் மாமனாரே செய்து கொடுத்தார். வாடகை கட்டிடம் என்றாலும் பெரிய பெரிய அறைகள் கொண்டதாக இருந்தது. மோகன் அமர்ந்து கொள்ளும் சுழல் நாற்காலியை விசேசமாகச் செய்திருந்தார்கள். நோயாளிகள் காத்திருக்கும் வரவேற்பறையில் கறுப்பு வெள்ளை டிவி கூட வாங்கிப் பொருந்தினார்கள். பெரிய மீன் தொட்டி ஒன்றும் வைக்கபட்டிருந்தது. வெளிச்சுவரில் என்னைப் பார். சிரி என்ற கழுதையின் படம கொண்ட திருஷ்டி போட்டோ ஒட்டப்பட்டிருந்தது.
கிளினிக் ஆரம்பித்த நான்காம் நாள் மாலை புதுக்குடியிலிருந்து ஒரு சிறுமியை ஆம்புலன்ஸில் கொண்டு வந்திருந்தார்கள்.. சிறுமி மூச்சிரைப்பில் துடித்துக் கொண்டிருந்தாள்
கிளினிக்கில் சிறுமியை பரிசோதனை செய்துவிட்டு உடனடியாக ஒரு நரம்பு ஊசி போட்டார். பின்பு ட்ரிப்ஸில் மருந்து கலந்து போட செய்தார். இரண்டு மணி நேரத்திற்குள் அந்தச் சிறுமி இறந்து விட்டாள்
கிளினிக்கில் ஏற்பட்ட முதல் மரணம். சிறுமியின் தாயும் தகப்பனும் அழுது கூச்சலிட்டார்கள். ஆட்களைக் கூட்டிக் கொண்டு வந்து சண்டையிட்டார்கள்.. டாக்டரின் தவறான சிகிட்சையே காரணம் என்று ஒருவர் சப்தமிட்டார். ஆத்திரத்தில் ஒருவன் கிளினிக்கில் இருந்த மீன்தொட்டியை உடைத்துப் போட்டான். அந்தச் சிறுமியின் உடலைப் பெற்றுக் கொள்வதற்கு முன்பு பெரிய பஞ்சாயத்தே நடந்தேறியது. அன்றிலிருந்து தான் அவர் ராசியில்லாத டாக்டர் என்ற பெயர் உருவாகத் துவங்கியது. அது எப்படியோ வளர்ந்து உறுதியாகிவிட்டது.
சிறுமியைக் காப்பாற்ற தன்னால் ஆன சிகிட்சைகளைச் சரியாகத் தானே செய்தோம். இதில் என்ன தவறு இருக்கிறது. எங்கே ராசி வந்து சேருகிறது என அவர் நிறைய நாட்கள் யோசித்திருக்கிறார்
ராசியில்லாத மருத்துவர் என்று பெயர் வாங்கிவிட்டால் அதை நீக்குவது எளிதானதில்லை போலும்.
••
இனி இந்த மக்கள் எக்கேடு கெட்டாலும் கெட்டுப் போகட்டும். தனக்குச் சாப்பாட்டு பிரச்சனையில்லை. மாமனார் கொடுத்த சொத்து இருக்கிறது. காரும் வசதியான வீடுமிருக்கிறது. இனி மருத்துவராகப் புகழ்பெறாமல் போனால் என்ன நஷ்டம் என்ற முடிவிற்கு வந்திருந்தார்
இதனால் சில நாட்கள் காலைக்காட்சி சினிமாவிற்குப் போய்விடுவார். ஒரு சில நாட்கள் தியானம் கற்பது எனத் தபோவனத்திற்குப் போய்த் தங்கி வருவார். நர்சரி கார்டனில் ஆர்வம் கொண்டு ஒரு இடத்தை வாங்கிச் செடி வளர்க்கச் செய்தார். எதைச் செய்த போதும் மனதில் அந்தக் கசப்பு குமட்டிக் கொண்டேயிருந்தது. தனது தோல்வியை அவரால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. தன்னால் பணத்தையும் சம்பாதிக்க முடியவில்லை. பெயரையும் சம்பாதிக்க முடியவில்லை.
தன்னால் முடியாத விஷயத்தை யார் யாரோ எளிதாகச் சாதித்துவிடுகிறார்கள். அது தான் தாங்கமுடியாத வெறுப்பாக உள்ளது. அதுவும் இந்த அன்பரசன் வந்தபிறகு அவரால் நிம்மதியாக இருக்கமுடியவில்லை. அங்கே எவ்வளவு நோயாளி வருகிறார்கள். எவ்வளவு வருமானம் வருகிறது என்பதைப் பற்றியே சதா நினைத்துக் கொண்டிருந்தார்.
பிடிக்காத விஷயம் மண்டைக்குள் புகுந்துவிட்டால் அதை வெளியேற்றுவது கஷ்டம். எந்த மாத்திரையாலும் மனதிலிருக்கும் பொறாமையை அகற்றமுடியாது தானே
••
நர்ஸ் மேகலா எட்டு மணிக்குக் கிளம்பிப் போன பிறகு மோகன் மட்டுமே கிளினிக்கில் இருந்தார். செல்போனில் வீடியோ கேம் ஆடுவது தான் நேரத்தைக் கொல்லும் வழி. சோன்பப்டி விற்பவன் வெளியே மணியோசையுடன் போகும் சப்தம் கேட்டது. வாங்கிச் சாப்பிடலாம் என்ற ஆசை தோன்றியது. ஆனால் வெளியே போக மனதின்றி வீடியோ கேம் ஆடிக் கொண்டிருந்தார். விளையாட்டில் அடையும் வெற்றித் தற்காலிமாக அவரை மகிழச் செய்து கொண்டிருந்தது.
இரவு பத்தரை மணிக்கு அவர் கிளினிக்கை மூடும் நேரம் வாசலில் யாரோ வந்து நிற்பது போலிருந்தது. திரைச்சீலையை விலக்கி வெளியே பார்த்தார்
வாசலில் டாக்டர் அன்பரன் நின்றிருந்தான். அவனது கையில் ஒரு கட்டைப் பை இருந்தது.
இவன் எதற்குத் தன்னைத் தேடி வந்திருக்கிறான் என்பது போலக் குழப்பத்துடன் ஏறிட்டு பார்த்துக் கொண்டிருந்தார்
“டாக்டர் கிளம்பியாச்சா“ எனப் புன்சிரிப்போடு கேட்டான்
அந்தச் சிரிப்புத் தன்னை ஏளனம் செய்வது போலவே மோகன் உணர்ந்தார்
“இல்லை. ஒரு பேஷண்ட் வீட்டுக்குப் போய்ச் செக் பண்ணணும்“ என்றார்
“எனக்கு ஐந்து நிமிசம் போதும்“ என்றபடியே தான் கொண்டு வந்திருந்த பையிலிருந்து ஒரு சில்வர்தட்டினை வெளியே வைத்தான். பிறகு பையிலிருந்த ஆப்பிள் ஆரஞ்சு பழங்களை எடுத்து வைத்து அதன்மீது. ஒரு ஸ்வீட் பாக்கெட்டினை வைத்தான். பிறகு மஞ்சள் தடவிய கல்யாணப் பத்திரிக்கை ஒன்றை அதன் மேல் வைத்து அவரிடம் நீட்டியபடியே சொன்னான்
“எனக்குக் கல்யாணம். மார்ச் 10, மதுரையில் வச்சிருக்கேன். நீங்க அவசியம் குடும்பத்துடன் வந்து வாழ்த்தணும் டாக்டர்“
அதை வாங்கிக் கொள்வதா, வேண்டாமா எனப் புரியாமல் திகைத்து நின்றார்
அவன் தட்டை நீட்டிக் கொண்டேயிருந்தான். அவர் அதைத் தன் கையில் வாங்கியதும் அவன் சாஷ்டாங்கமாக அவரது காலில் விழுந்து வணங்கினான்
மோகன் எதுவும் பேசவில்லை. அவனைத் தொட்டு எழுப்பி விட்டார்
அவன் மாறாத புன்முறுவலோடு “நீங்க எல்லாம் சீனியர். உங்களோட ஆசீர்வாதம் இருந்தா தான் நான் நல்லா வரமுடியும்“ என்றான்
எதுவும் தெரியாதவர் போல மோகன் கேட்டார்
“எப்படி போகுது கிளினிக்“
“பரவாயில்லை டாக்டர். உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னா.. எப்போ வேணும்னாலும் கூப்பிடுங்க. “
அந்தக் கல்யாணத்திற்குத் தன்னால் வரமுடியாது என்று முகத்திற்கு நேராகச் சொல்லவேண்டும் போலிருந்தது. ஆனால் அதை வெளிக்காட்ட முடியவில்லை. அன்பரசன் அவரிடமிருந்து விடைபெற்றுப் போனபிறகு அவர் கல்யாணப் பத்திரிக்கையைப் பிரித்துப் பார்க்காமலே கிழித்துப் போட்டார்.
பின்பு அந்தத் தட்டில் இருந்த ஸ்வீட் பாக்ஸ், பழங்களை அப்படியே எடுத்துக் கொண்டு வெளியே நடந்தார். சாலை இருண்டிருந்தது.
தந்திக் கம்பத்தை ஒட்டிய சாக்கடையில் கொண்டு போய் அந்தச் சில்வர் தட்டினை வீசி எறிந்தார். ஆப்பிள் பழங்கள் சாக்கடைகள் விழுந்தன. ஸ்வீட் பாக்ஸ் மட்டும் பாதித் திறந்து அதிலிருந்த சில லட்டுகள் வெளியே விழுந்துகிடந்தன
ஆத்திரத்துடன் அந்த லட்டினைக் காலால் ஒங்கி எத்தினார். புழுதியோடு லட்டுச் சிதறிப்போனது.
“கல்யாணம் ஒரு கேடு“ என்று சொல்லியபடியே சாக்கடையை நோக்கி காறி உமிழ்ந்தார்.
பிறகு தனது கிளினிக்கைப் பூட்டிக் கொண்டு வெளியே வந்தார். ஸ்கூட்டரில் வீடு போய்ச் சேரும்வரை அவரது மனதில் விவரிக்க முடியாத சந்தோஷம் நிரம்பியிருந்தது.
•••
April 7, 2021
டால்ஸ்டாயின் ஒவியம்
டால்ஸ்டாயின் உருவச்சிலையை முதன்முறையாக வடித்தவர் அவரது மனைவி சோபியா. அவர் தான் மார்பளவு சிலை ஒன்றை செய்து கொடுத்தார். Ilya Repin என்ற புகழ்பெற்ற ஒவியர் டால்ஸ்டாயை சிறப்பான ஒவியம் தீட்டியிருக்கிறார். டால்ஸ்டாயின் புகழ்பெற்ற ஒவியங்களை வரைந்தவர் லியோனிட் பாஸ்டர்நாக். இவரே. டால்ஸ்டாயின் தொடர்களுக்குச் சித்திரம் வரைந்தவர். இவரது மகன் தான் நோபல் பரிசு பெற்ற ரஷ்ய எழுத்தாளர் போரிஸ் பாஸ்டர்நாக்.

லியோனர்ட் பாஸ்டர்நாக் 1862 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி ஒடேஸாவில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார். , 15 ஆம் நூற்றாண்டின் யூத தத்துவஞானியான ஐசக் அப்ரபனெலில் வம்சாவழியில் வந்த குடும்பமது. இளவயதிலே ஒவியம் வரையத் துவங்கிய லியோனர்ட் ஒடேஸா கலைப்பள்ளியில் பயின்றார்.

1881 முதல் 1885 வரை, லியோனிட் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில், முதலில் மருத்துவத் துறையிலும், பின்னர்ச் சட்டத் துறையிலும் படித்தார்.பின்பு கலையில் முழுமையாக ஈடுபட வேண்டி ம்யூனிச்சிலிருந்த ராயல் அகாடமி ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸில் கல்வி பயின்றார். பட்டம் பெற்று ரஷ்யா திரும்பிய அவர் இரண்டு ஆண்டுகள் இம்பீரியல் ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றியிருக்கிறார்.
லியோனர்ட் தீவிரமான இலக்கிய வாசகர். இசை ரசிகர். லியோ டால்ஸ்டாயின் நெருக்கமான நண்பராக இருந்த காரணத்தால் அடிக்கடி டால்ஸ்டாயின் பண்ணைவீடான யஸ்னயா போல்யானாவிற்குப் போவதை வழக்கமாக வைத்திருந்தார். டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நாவல் தொடராக வந்த போது அதற்கு இவர் தான் சித்திரங்கள் வரைந்தார்.

டால்ஸ்டாயின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்ட பாஸ்டர்நாக் குடும்பம் அவர் மீது மிகுந்த அன்பும் பற்றும் கொண்டிருந்தது. டால்ஸ்டாய், கார்க்கி ரில்கே எனப் பல முக்கிய ஆளுமைகளை ஒவியம் தீட்டியிருக்கிறார் லியோனிட்.

தனது தந்தை டால்ஸ்டாயின் தொடருக்கு ஓவியம் வரைந்த அனுபவத்தைப் பாஸ்டர்நாக் ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார்.
“எனது அப்பா டால்ஸ்டாயை தனது ஆதர்சமாக் கொண்டவர். புத்துயிர்ப்பு நாவலை டால்ஸ்டாய் தொடராக எழுதிய போது அதற்கு எனது தந்தையே சித்திரங்கள் வரைந்தார். நீவா என்ற இதழில் நாவல் தொடராக வெளிவந்தது. அதன் பதிப்பாளர் பியோதர் மார்க்ஸ். நாவலுக்கு ஏற்றார் போல யதார்த்தமான சித்திரங்களாக இருக்க வேண்டும் என்பதற்காகக் கதை நடைபெறும் நீதிமன்றம், சிறைச்சாலை. போன்றவற்றிற்கு நேரில் பார்வையிட்டுத் துல்லியமாகப் படங்கள் வரைந்தார். அதை டால்ஸ்டாய் மிகவும் பாராட்டினார்.
நாவல் அச்சிற்குப் போகும்வரை டால்ஸ்டாய் திருத்தம் செய்து கொண்டேயிருப்பார், ஆகவே உரியப் படங்களை வரைந்து பீட்டர்ஸ்பெர்க்கில் உள்ள பதிப்பாளருக்கு அனுப்பி வைப்பது பெரிய சவால். இதற்குத் தீர்வு காண்பதற்கு ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் இதற்குப் பெரிய உதவி செய்தார்கள்
ரயில் புறப்படும் நிமிஷம் வரை அவர்கள் வெளியே தலையை எட்டியபடியே ஓவியங்கள் வந்து சேர காத்துக் கொண்டிருப்பார்கள், சுடச்சுடப் படம் வரைந்து ஒரு பாக்ஸில் போட்டு ஒட்டி சீல் வைத்து அதை எடுத்துக் கொண்டு ரயில் நிலையத்துக்கு அப்பா ஒடிப் போய் ஒப்படைத்து வருவார்.
டால்ஸ்டாய் மீதான அபிமானம் காரணமாக ரயில்வே டிக்கெட் பரிசோதகர்கள் இந்தப் பணிக்குப் பெருமளவு ஒத்துழைப்பு கொடுத்தார்கள் என்கிறார் போரிஸ் பாஸ்டர்நாக்.

1910ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறிய டால்ஸ்டாய் அஸ்தபோவ் ரயில் நிலையத்தில் உடல்நலமற்று மரணத்தருவாயில் கிடக்கிறார் என்பதை அறிந்த லியோனிட் அவரது இறுதிநிமிசங்களை ஒவியம் வரைவதற்காக அஸ்தபோவ் கிளம்பினார். அப்போது போரிஸ் பாஸ்டர்நாக்கையும் உடன் அழைத்துக் கொண்டு போனார்.
அஸ்தபோவ் ரயில் நிலையத்தில் மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்த டால்ஸ்டாயை லியோனிட் ஓவியம் வரைந்திருக்கிறார். அது தான் டால்ஸ்டாயின் கடைசி ஒவியம்.
April 6, 2021
தமிழ்க் கவிதையின் இடம்.
ஆங்கிலத்தில் வெளியாகும் பெரும்பான்மையான INDIAN POETRY ANTHOLOGY களில் தமிழ்க் கவிதையே இடம்பெறுவதில்லை. அபூர்வமாக இடம்பெற்றாலும் மிக மோசமான கவிதையாக உள்ளது. அதைப் படிக்கும் வாசகன் இவ்வளவு தானா தமிழ்க் கவிதையின் தரம் என நொந்துபோவான்.

சமீபத்தில் அப்படி இரண்டு கவிதைத் தொகுதிகளைப் படித்தேன். இரண்டிலும் தமிழ்க் கவிதைகள் இடம்பெறவில்லை. இன்று இந்திய அளவில் தமிழின் நவீன கவிதை மிகச் சிறந்த இடத்தைக் கொண்டிருக்கிறது. தமிழில் உள்ளது போலப் புதுக்குரல்கள். புதிய மொழி, புதிய கவிதையாக்கம் வேறு மொழிகளில் அதிகம் நடைபெறவில்லை.
தமிழ், மலையாளம் கன்னடம் அல்லது குஜராத்திக் கவிதையை ஆங்கிலத்தில் வாசிக்கும் போது அந்தக் கவிதையின் சாரத்தை மட்டுமே நாம் பெறுகிறோம். அதன் இசையை, தனித்துவமான மொழியமைப்பை, அர்த்த தளங்களை நாம் பெறுவதில்லை. தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்யப்பட்ட கவிதைகளில் மிகக் குறைவானவை தான் சிறந்த முறையில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.
கவிதையை மொழியாக்கம் செய்வது எளிதானதில்லை. அது ஒரு சவால். ஒரே கவிதையை எப்படி வேறுவேறு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார்கள் என்பதற்கு Eliot Weinberger எழுதிய Nineteen ways of looking at Wang Wei சிறந்த நூலாகும். அதை வாசித்துப் பாருங்கள். கவிதை மொழியாக்கத்தின் உண்மையான சவால்களை உணர்வீர்கள்.
பெரும்பான்மை ஆங்கில தொகுப்பாளர்களுக்குத் தமிழ் கவிதையுலகம் பற்றி எதுவும் தெரியாது. அவர்கள் தங்களின் நண்பர்களின் மூலம் தெரிந்த தமிழ் கவிஞர்களைத் தேர்வு செய்கிறார்கள். அவ்வளவே. பல நேரம் அந்த முயற்சியைக் கூட எடுப்பதில்லை.
தொகுப்பு நூலில் தான் அப்படி என்றால் இணையத்தில் நடைபெறும் இந்திய அளவிலான கவிதை வாசிப்பு. மற்றும் சர்வதேச கவிதைகள் விழா என எதிலும் தமிழ் கவிஞர்கள் அழைக்கப்படுவதில்லை. பங்குபெறுவதில்லை. அது போன்ற ஒரு உலகம் இயங்குவதே பல தமிழ் கவிஞர்களுக்கும் தெரியாது.
விதிவிலக்காகக் கவிஞர் சுகுமாரன். கவிஞர் சேரன், கவிஞர் சல்மா போன்றவர்கள் சில கவிதை நிகழ்வுகளில் அழைக்கப்படுகிறார்கள். சுகுமாரனின் கவிதைகள் முழுமையாக ஆங்கிலத்தில் வெளியாக வேண்டும். அவர் உலக அளவில் பேசப்பட வேண்டிய கவிஞர். சமீபத்தில் அவரது கவிதைகள் பற்றி மலையாளக் கவிஞர் ராமன் எழுதிய கட்டுரையைப் படித்தேன். சிறப்பாக எழுதியிருக்கிறார்.

சமகாலத் தமிழ் கவிதையுலகம் பற்றி ஆங்கிலத்தில் ஏதாவது எழுதப்பட்டிருக்கிறதா என்று தேடினால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. எம்.எஸ். ராமசாமி மொழிபெயர்ப்பில் முன்பு ஒரு தொகுப்பு ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. அதைத் தவிர இந்தியன் லிடரேசர் இதழில் தமிழ் கவிதைகள் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளன. நகுலன் தானே ஆங்கிலத் தொகுப்பினை வெளியிட்டிருக்கிறார். கல்கத்தாவிலுள்ள ரைட்டர்ஸ் வொர்க் ஷாப் அதை வெளியிட்டுள்ளது.
சர்வதேசக் கவிதைகளை வெளியிடும் இணையதளங்கள் ஐம்பதுக்கும் மேலிருக்கின்றன. அதில் நூற்றுக்கணக்கான நவீன சீனக்கவிதைகள். ஜப்பானியக் கவிதைகள். ஸ்பானியக் கவிதைகள் உள்ளன. ஆனால் எதிலும் தமிழ் கவிதைகளைக் காணமுடியாது. மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை என்கிறார்கள். அது ஒரு காரணம். இன்னொரு காரணம் அது போன்றவற்றில் கவிதைகளை கொண்டு செல்லும் முனைப்பு தமிழ் வெளியில் குறைவாக இருக்கிறது.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வரும் கவிஞர் தேவதச்சனின் கவிதைகளை ஒருவர் ஆங்கிலத்தில் வாசிக்க விரும்பினால் பத்துக்கும் குறைவான கவிதைகளே மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.
பிரெஞ்சிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட ழாக் பிராவர் கவிதைகளை நாம் கொண்டாடுகிறோம். இது போலத் தேவதச்சன் கவிதைகளைப் பிரெஞ்சில் மொழியாக்கம் செய்யப்பட்டால் அங்கே நிச்சயம் கொண்டாடப்படுவார்.
சங்க கவிதைகளை ஏ.கே. ராமானுஜன், வைதேகி ஹெபர்ட் ஆகியோர் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். தங்கப்பாவும் ஆ.ரா. வெங்கடாசலபதியும் இணைந்து Love Stands Alone: Selections from Tamil Sangam Poetry எனத் தொகுப்பினை கொண்டு வந்திருக்கிறார்கள். டாக்டர் கே. எஸ். நிறைய கவிதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். லதா ராமகிருஷ்ணன் தமிழின் முக்கியக் கவிஞர்களை மொழியாக்கம் செய்து FLEETING INFINITY என்ற தொகுப்பினைக் கொண்டு வந்திருக்கிறார். ஆனால் அவை பரந்த வாசிப்பிற்கும் ஆழ்ந்த கவனத்திற்கும் உள்ளாகவில்லை.
ஆற்றூர் ரவிவர்மா தமிழிலிருந்து புது நானூறு என முக்கியமான நவீனத் தமிழ்க் கவிதைகளை மலையாளத்திற்கு மொழியாக்கம் செய்திருக்கிறார். இது போல ஆங்கிலத் தொகுப்பு செய்யப்படுதல் அவசியம்.
சென்ற ஆண்டு மும்பையில் நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்து கொண்ட போது நிறைய இந்திய எழுத்தாளர்களுடன் உரையாடினேன். அவர்கள் திருக்குறள். கம்பன். பாரதியை தவிர வேறு எந்த நவீன தமிழ் கவியினையும் அறிந்திருக்கவில்லை. இவ்வளவிற்கும் அவர்கள் தீவிர வாசிப்பாளர்கள்.
இன்றும் தொடர்ந்து ஆங்கில நாளிதழ்களில் கவிஞர்கள் பத்தி எழுதுகிறார்கள். சமகால ஆங்கில கவிதைகள் பற்றி பக்கம் பக்கமாக செய்திகள் வெளியிடப்படுகின்றன. மலையாள, கன்னடக் கவிஞர்கள் நிறைய ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தபடுகிறார்கள். சர்வதேச பதிப்பகங்கள் அவர்களின் கவிதைகளை மொழியாக்கம் செய்து வெளியிடுகின்றன. தமிழ் தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் குகைக்குள் வாழ்ந்து கொண்டு சுவரோவியங்கள் வரைந்து கொண்டிருப்பதை போலவே இன்றைய நவீன தமிழ் கவிஞன் சமகால உலகினால் நடத்தப்படுகிறான். கவிதையைக் கொண்டாடாத சமூகம் மேம்படாது.
ஆங்கிலத்தில் மட்டுமின்றிப் பிற இந்திய மொழிகளிலும் சமகாலத் தமிழ்க் கவிதைகளின் தேர்வு செய்யப்பட்ட தொகுப்பு வெளியாக வேண்டும். அதுவே தமிழ் கவிதையின் இடத்தை உலகறியச் செய்யும்
••
April 5, 2021
சிரிப்பை மறந்த இருவர்
.

இத்தாலிய இயக்குநரான விட்டோரியா டி சிகா இயக்கிய two women 1960 ம் ஆண்டு வெளியான திரைப்படம். டி சிகாவின் மாஸ்டர் பீஸ் என்றே இதைச் சொல்ல வேண்டும். அவரது புகழ்பெற்ற பை சைக்கிள் தீவ்ஸ் படத்தினை விடவும் இப்படம் எனக்கு மிகவும் பிடித்தமானது. இதில் நடித்த சோபியா லாரன் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதினைப் பெற்றிருக்கிறார். நியோ ரியலிசப் படங்களில் முக்கியமான இப்படம் உலகச் சினிமாவின் காவியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

நியோ ரியலிச திரைப்படங்கள் இத்தாலியின் வாழ்வியலை மிக இயல்பாக வெளிப்படுத்தின. வறுமை, போரின் அவலங்கள். அகதி நிலை. பொருளாதாரச் சீரழிவு. வீடற்ற வாழ்க்கை, வேலையின்மை என அதன் கருப்பொருட்கள் அன்றைய காலத்தின் நிஜமான விஷயங்களாக இருந்தன. ஆடம்பரமான அரங்க அமைப்புகள். மிகை ஒப்பனைகள். பரபரப்புக் காட்சிகள் எதுவுமின்றி வாழ்க்கைக்கு நெருக்கமாக இந்தத் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன. அந்த வகையில் விட்டோரியா டி சிகா நியோ ரியலிச சினிமாவின் புதிய அலையை உருவாக்கிக் காட்டினார்
இரண்டு பெண்கள் திரைப்படம் ஒரு தாயையும் மகளையும் பற்றியது. இரண்டாம் உலகப் போரின்போது கதை நடைபெறுகிறது. ரோமில் ஒரு சிறிய மளிகை கடையை நடத்தி வரும் இளம் விதவை சிசிரா தனது மகள் ரொசெட்டாவுடன் வாழ்ந்து வருகிறாள். உலகப்போரின் காரணமாக ரோம் நகரின் மீது குண்டு வீசப்படுகிறது. இதனால் மகளுடன் நகரை விட்டு பாதுகாப்பாக வெளியேற நினைக்கும் சிசிரா பக்கத்தில் வசிக்கும் ஜியோவானியிடம் தனது கடையை ஒப்படைத்துவிட்டு வெளியேறுகிறாள்.
மத்திய இத்தாலியின் மலைப்பிரதேசமான சியோசீரியாவுக்குத் தப்பிச் செல்கிறார்கள். அவர்கள் செல்லும் ரயில் நடுவழியில் நின்றுவிடுகிறது. ஆகவே ரயிலில் இருந்து இறங்கி தலைச்சுமைகளுடன் தனது ஊரை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறார்கள்.
இரண்டு பெண்களும் தங்கள் உடைமைகளைத் தலைச்சுமையாகத் தூக்கிக் கொண்டு நடப்பதை மொத்த ரயிலும் வேடிக்கை பார்க்கிறது. மகள் தலையிலிருந்து பெட்டி நழுவி விடுமோ என்று அனைவரும் பதற்றம் அடைகிறார்கள்.
ரயிலில் மகளுக்கு உட்கார இடம் தேடுவதில் துவங்கி வெக்கையைச் சமாளிக்கமுடியாமல் சட்டை பொத்தானைத் திறந்துவிடும் நேரம் ஒரு ஆணின் கண்கள் தன் மார்பை நோக்குவதைக் கண்டு அவனை முறைத்தபடியே சட்டையைச் சரிசெய்து கொள்வது வரையான காட்சிகளில் சோபியா லாரன் பளிச்சிடச் துவங்குகிறார்
தனது தாயின் ஊருக்குச் செல்லும் சிசிரா அங்கே உறவினர்களுடன் ஒன்று சேருகிறாள். அப்போதும் மகளைச் சந்தோஷமாக வைத்துக் கொள்வது தான் அவளது ஒரே குறிக்கோள். அப்பாவியான அந்த மகளின் முகத்தில் வெளிப்படும் வெகுளித்தனமும் இயல்பான சிரிப்பும் அபாரம்.

மகள் மீதான தனது அன்பை சிசிரா வெகு அழகாக வெளிப்படுத்துகிறாள். ஒரு காட்சியில் மகளின் அருகில் படுத்துக் கொண்டு அவளது இடுப்பு சதையைக் கிள்ளிப் பார்த்துவிட்டு போதுமான சதை போடவில்லை என்று கவலைப்படுகிறாள். இன்னொரு காட்சியில் மகளுக்கு ஆசையாக ரொட்டியைப் பிய்த்துச் சாப்பிடத் தருகிறாள். வேறு ஒரு காட்சியில் மகளுக்குத் தலைவாறிவிடும் போது மகள் உன்னைப் போலவே எனக்குச் சிகை அலங்காரம் செய்து கொள்ள வேண்டும் என்கிறாள். அதற்கு இன்னும் கொஞ்சம் நீ வளர வேண்டும் என மகளைக் கொஞ்சுகிறாள். தாயும் மகளும் கண்களாலே பேசிக் கொள்கிறார்கள்.
ரோமை விட்டுச் செல்வதற்கு முந்திய நாள் சிசிரா தனது கணவரின் நண்பரும் நிலக்கரி வணிகனுமான ஜியோவானியுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்கிறாள். அது அவனது நீண்டநாள் ஆசை. அதை நிறைவேற்றிவிட்டே அவள் நகரை நீங்குகிறாள். அவள் இல்லாத நாட்களில் கடையைப் பாதுகாத்து வருவதற்குத் தரப்பட்ட சலுகை அது என்றே புரிகிறது.
சியோசீரியாவுக்கு வந்த பிறகு அங்கே ஜெர்மனியின் ராணுவ வீரர்களுக்கு மக்கள் பயந்து போயிருப்பதை உணருகிறாள். ஒரு நாள் அந்த ஊரில் இரண்டு ஆங்கில வீரர்கள் தஞ்சம் அடைகிறார்கள். அவர்களை ஏற்றுக் கொள்ள யாரும் தயாராக இல்லை. ஆனால் சிசிரா தன் வீட்டிற்கு அழைத்துப் போய் ரொட்டியும் ஒயினும் தருகிறாள். அந்தக் காட்சியில் அவள் ஒயின் குடிக்கும் அழகு நம்மைக் கிறக்குகிறது.
அறிவுஜீவியாக அறியப்படும் மைக்கேல் அவளது அழகில் மயங்கி சிசிராவைக் காதலிப்பதாகச் சொல்கிறான். ஆனால் அவள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. மகள் கூட மைக்கேலின் காதலைப் பற்றிச் சொல்ல கேலி செய்கிறாள். தன்னை விட வயதில் குறைந்த ஒருவனை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்கிறாள் சிசிரா
ஆனால் ரோசெட்டா மைக்கேலை தனது தந்தையின் மறுவடிவம் போலவே கருதுகிறாள். அவனும் அவளுடன் மிகுந்த பாசமாகப் பழகுகிறான். அவனுக்குப் பெரிய ரொட்டி ஒன்றை அவளுக்காக மறைத்து எடுத்து வந்து தருகிறான்.
ஒரு நாள் சிசிராவும் மைக்கேலும் உணவுப்பொருட்கள் வாங்கப் பக்கத்து ஊருக்குப் போகிறார்கள். அங்கே தன் பிள்ளைகளைப் போரில் இழந்த ஒரு பெண் தன் மார்பில் ஊறும் பாலை யார் வேண்டுமானாலும் குடித்துக் கொள்ளுங்கள் என்று மார்பினை திறந்துகாட்டி வேதனையில் புலம்புகிறாள். மறக்கமுடியாத காட்சியது. போரின் கொடூரத்தை இதைவிடச்சிறப்பாக யாரும் காட்டிவிட முடியாது.
அந்த ஊரின் பாதிரி வீட்டிற்குப் போகிறார்கள். அங்கே வரும் ஒரு ஜெர்மானிய அதிகாரி பாதிரியின் குடும்பத்தை மிரட்டுகிறான். அதைச் சகிக்க முடியாமல் சிசிரா அவனுடன் சண்டையிடுகிறாள். அந்த வீட்டிலிருந்து வெண்ணைய். ரொட்டி. மாவு போன்றவற்றைப் பை நிறைய எடுத்துக்கொண்டு கிளம்புகிறாள். அப்போது ராணுவம் துரத்தவே ஒடி ஒளிகிறார்கள். அந்த நெருக்கடியில் அவளை முத்தமிடுகிறான் மைக்கேல். அவளோ அவனை விலக்கி எழுகிறாள். நெருக்கடியிலும் அவனது காதல் தீ அணைவதேயில்லை.
பின்னொரு நாள் ஜெர்மானிய வீரர்களுக்கு மலைப்பாதையை வழிகாட்டுவதற்காக மைக்கேலை துப்பாக்கி முனையில் அழைத்துப் போகிறார்கள். அந்தக் காட்சியில் சிசிராவின் மகள் கலங்கிப்போகிறாள். மைக்கேலின் தந்தையும் தாயும் பரிதவிக்கிறார்கள். மிகவும் உணர்ச்சிப்பூர்வமான காட்சியது. மைக்கேல் உறுதியான குரலில் அவர்களிடமிருந்து விடைபெறுகிறான். அவனது இறப்பு ஒரு தகவலாக மட்டுமே பின்பு தெரிவிக்கப்படுகிறது.

நேச நாடுகள் ரோமைக் கைப்பற்றிய பிறகு, சிசிராவும் ரோசெட்டாவும் ரோம் திரும்ப முடிவு செய்கிறார்கள். கடந்து செல்லும் ராணுவ வண்டிகளைக் கண்டு கையசைக்கிறார்கள். உற்சாகமாக வாழ்த்து சொல்கிறார்கள். அவர்களின் பயண வழியில் ஒரு பாலத்தில் அமர்ந்தபடியே தாயும் மகளும் சாப்பிடும் காட்சி தனித்துவமானது.
படத்தின் மிகவும் அதிர்ச்சியான காட்சி தேவாலயத்தில் நடைபெறுவது. அப்போது குரூரமாக வீழ்த்தப்பட்ட சிசிரா வேதனையுடன் தன் மகளைக் காணுவதும், பிரேதம் போல கிடக்கும் மகளை கைதாங்கலாக அழைத்துக் கொண்டு போவதும் மகள் அவளை விட்டுவிலகி தன்னைத் தூய்மையாக்கிக் கொள்ள நீரோடையைத் தேடிப்போவதும் கண்ணீர் வரவழைக்கும் காட்சிகள். சோபியா லாரனின் நிகரற்ற நடிப்பு. மகளின் நடையில், கண்பார்வையில் வெளிப்படும் வேதனை. என அந்தக் காட்சி நிகரற்றது.
கடைசியில் தாயும் மகளும் ஒரு வாகனத்தில் ஏறி பக்கத்துக் கிராமத்தில் போய்த் தங்குகிறார்கள். அங்கே காலையில் எழுந்து மகளைக் காணாமல் சிசிரா பதற்றத்துடன் தேடுகிறாள். தவிக்கிறாள். ஆனால் மகள் ஒரு ஆளுடன் நடனமாடப்போய்விட்டுப் பட்டுக் காலுறையைப் பரிசாக வாங்கிவந்துள்ளதைக் கண்டு ஆத்திரமாகி அவளைக் கண்டபடி அடிக்கிறாள். அதற்கு ரொசெட்டா பதிலளிக்கவில்லை.
தாயிற்கும் மகளுக்கும் இடையில் இடைவெளி உருவாகிவிட்டது. மகள் சுயமாக முடிவு எடுக்க ஆரம்பித்துவிட்டாள். நடந்த அதிர்ச்சி அவளை ஒரே நாளில் உருமாற்றிவிட்டது. தாயிடம் மகள் பாதுகாப்பாகத் தங்கள் வீட்டிற்குப் போய் வாழுவதால் நடந்த விஷயங்கள் மாறிவிடுமா. நம் வாழ்க்கைக்கு இனி என்ன அர்த்தம் என்று கேட்கிறாள். தாயிடம் இதற்குப் பதில் இல்லை.
இதுவரை சிறுமியாக இருந்தவள் இப்போது மாறிவிட்டாள். அந்தத் தாயிற்கு அந்தச் சிறுமியின் முதிர்ச்சியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவள் மகளைக் கட்டிக் கொண்டு அழுகிறாள்

ஆல்பர்டோ மொராவியோவின் நாவலை டிசிகா படமாக்கியிருக்கிறார். Cesare Zavattini இதன் திரைக்கதையை எழுதியிருக்கிறார்
போருக்கு எதிரான படங்களில் யுத்தகளக் காட்சியின்றி. படுகொலைகள் இன்றி மனதைத் துவளச்செய்யும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் மூலமே போரின் பாதிப்பை அழுத்தமான புரிய வைத்திருப்பதே டிசிகாவின் சாதனை என்பேன்
படத்தின் துவக்கக் காட்சியில் தாயும் மகளும் சாலையில் நடந்து வரும் போது அவர்களைக் கடந்து செல்லும் சைக்கிள் காரன் மீது திடீரென்று வானிலிருந்து விமானத்தாக்குதல் நடைபெறுகிறது. அவன் அந்த இடத்திலே செத்துவிழுகிறான். தாயும் மகளும் சாலையில் விழுந்து உயிர் தப்புகிறார்கள். இந்தச் சைக்கிள்காரன் போல எந்தக் காரணமும் இன்றி அப்பாவிகள் கொல்லப்பட்டது தான் உலக யுத்தத்தின் குரூரம் என்பதைச் சிறப்பாகச் சித்தரித்திருக்கிறார்கள்.
போரின் குரூர நிழல் தன் மகள் மீது விழுந்துவிடக்கூடாது என்பதிலே ஆரம்பம் முதலே சிசிரா கவனமாக இருக்கிறாள். ஆனால் முடிவில் அவளும் மகளும் போரின் குரூரத்திற்குப் பலியாகிறார்கள். இடிந்த அந்தத் தேவாலயத்திலிருந்து வெளியேறிப் போன கடவுள் தான் அவர்களின் அவலத்திற்கான சாட்சி.
ஒரு படத்தில் எத்தனை ஊடு இழைகள். ஆரம்பக் காட்சியில் ரயிலில் வரும் ராணுவ வீரர்கள் கிறிஸ்துமஸிற்குள் ஊருக்குப் போய்விடுவதாகச் சொல்கிறார்கள். அவர்கள் ஒரு உலகில் வாழுகிறார்கள். தஞ்சம் புகும் தாயும் மகளும் சொந்த ஊர் திரும்புகிறார்கள். அங்கே அவர்களுக்கு வசிப்பிடமில்லை. உறவினர்கள் அவளிடமிருக்கும் பணத்திற்காகவே அவளை ஏற்றுக் கொள்கிறார்கள். அந்த வாழ்க்கை ஒரு தனி இழை.
அந்த ஊரில் வசிப்பவர்களுக்கு முசோலினியின் அரசியல் பற்றி எதுவும் தெரியவில்லை. ஆனால் அவர்கள் முசோலினையை ஆதரிக்கிறார்கள். உணவுப்பொருட்கள் கிடைக்காமல் கள்ளச் சந்தை உருவாகிறது. வெண்ணெய் வாங்குவதற்காக இடையனோடு அவள் பேசும் பேசும் காட்சி ஒரு உதாரணம். இது போலவே பாதிரியின் வீட்டில் நடக்கும் சம்பவம். இவை இன்னொரு இழை.
ஜெர்மானிய ராணுவ வீரர்களுக்கு ரொட்டி கொண்டு வரும் ரொசெட்டா அதைத் தரையில் வைத்தவுடன் அவர்களுக்குக் கோபம் கொப்பளிக்கிறது. துப்பாக்கியை உயர்த்துகிறான் ஒருவன். அது ஒரு தனியுலகம். இப்படிச் சிறியதும் பெரியதுமான ஊடு இழைகளைப் பின்னி படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சோபியா லாரனின் திரை வாழ்க்கையில் மிகச்சிறந்த படம் இதுவே.
யுத்தம் பெண்களின் உடலிலும் மனதிலும் ஆறாத வடுக்களை ஏற்படுத்தியிருக்கிறது. அதை அவர்களால் ஒரு போதும் மறக்கமுடியாது. பாதுகாப்பான இடம் தேடி அலையும் இரண்டு பெண்களும் எங்கேயும் பாதுகாப்பில்லை என்பதை முடிவில் உணர்ந்து கொள்கிறார்கள். அவள் யாசிப்பது சிறிய வெளியை. சிறிய வாழ்க்கையை. ஆனால் அதைக்கூட உலகம் வழங்கத் தயாராகவில்லை. இந்த அவலம் மாறாது இன்றும் தொடருவது தான் வேதனை.
திரைக்கும் நமக்குமான இடைவெளியை அழித்து ஒரு வாழ்க்கையின் சாட்சியமாக நம்மை உணரவைப்பதே டிசிகாவின் வெற்றி.
••
April 4, 2021
சென்னையும் நானும் – சீசன் 2
சென்னையும் நானும் காணொளித் தொடர் மிகுந்த வரவேற்பு பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்ற ஆண்டில் பெருந்தொற்றுக்கால ஊரடங்கின் காரணமாக அதைத் தொடர முடியாமல் போனது. தற்போது மீண்டும் அதன் இரண்டாம் பகுதி ஒளிபரப்பாக உள்ளது. இந்தப் பகுதியில் சென்னையில் நான் சந்தித்த எழுத்தாளர்கள், சினிமா உலக அனுபவங்கள். மற்றும் மறக்கமுடியாத கலை நிகழ்வுகள். ஆளுமைகள். சென்னையின் வரலாறு குறித்த விஷயங்கள் இடம்பெற உள்ளன
இந்தத் தொடரை உருவாக்குவது எனது மகன் ஹரி பிரசாத் , இதனை ஒளிப்பதிவு செய்பவர் கபிலா காமராஜ், வரைகலையாக்கம் விக்கி, மற்றும் ஹரியின் நண்பர்கள். இவர்களின் தொடர்ந்த ஆர்வமும் முழுமையான ஈடுபாடும் தான் இதனை சாத்தியத்தியமாக்கியுள்ளது. அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி.
சென்னையும் நானும் சீசன் 2ன் முன்னோட்டக் காட்சி
April 3, 2021
வராத ரயில்
புதிய சிறுகதை
அந்த ரயில் நிலையத்திற்கு மதுரை பாசஞ்சர் பத்தரை மணிக்கு வந்து நிற்பது வழக்கம். சின்னஞ்சிறிய ரயில் நிலையமது. ஸ்டேஷன் மாஸ்டர் அறை புறாக்கூண்டு போல இருக்கும். அருகில் சிறிய ஸ்டோர் ரூம். அதையொட்டி கல்லால் ஆன இரண்டு பெஞ்சுகள். மூன்று தூங்குமூஞ்சி மரங்கள். ஒரு தண்ணீர்தொட்டி. அதில் எப்போதும் குடிதண்ணீர் இருக்காது. சிவப்பு ஒடு வேய்ந்த கட்டிடமது.

சிவமணியை அழைத்துக் கொண்டு கிழவி அந்த ரயில் நிலையத்திற்கு வந்திருந்தாள். அவளை விட்டால் சிவமணிக்கு வேறு யார் இருக்கிறார்கள். சிவமணி அவளது உறவில்லை. ஆனால் அவள் தான் வளர்த்து வந்தாள்.
சிவமணியின் அம்மா உயிரோடு இருந்த நாட்களில் கிழவிக்கு நிறைய நாட்கள் சோறு போட்டிருக்கிறாள். ஒரு முறை கோவில் கொடைக்கு சேலை ஒன்று வாங்கித் தந்திருக்கிறாள். நாலைந்து முறை கைச்செலவுக்கும் பணம் தந்திருக்கிறாள். அந்த நன்றிக்கு தானோ என்னவோ கிழவி சிவமணியை தானே வளர்ப்பதென முடிவு செய்து கொண்டாள்
கிழவி நினைவு தெரிந்த நாள்முதலே வீட்டுவேலைகள் தான் பார்த்து வருகிறாள். எவ்வளவு குடம் தண்ணீர் தூக்கியிருப்பாள். எவ்வளவு மாவு திரித்திருப்பாள் என கணக்கேயில்லை. அவளது கையே துடைப்பம் போலாகியிருந்தது.
சிவமணிக்கு மூன்று வயதான போது அவனது அம்மா இறந்து போனாள். சிவமணி பிறக்கும் போதே மூளை வளர்ச்சி இல்லாமல் தான் பிறந்தான். நான்கு வயது வரை அவனால் எழுந்து நிற்கமுடியவில்லை. பேச்சு வரவில்லை. வீட்டுபடிக்கட்டில் தான் எப்போதும் உட்கார்ந்திருப்பான். சிவமணியின் அப்பா அவனைக் கவனிக்கவேயில்லை.
கிழவி தான் அவன் பசியறிந்து உணவு கொடுப்பாள். குளிக்க வைப்பாள். கிழவிக்கும் ஒரு துணை வேண்டும் தானே.
சிவமணியின் அப்பா ஒரு நாள் சொல்லிக் கொள்ளாமல் கேரளா கிளம்பிப் போய்விட்டார். அவர் போனதே சிவமணிக்குத் தெரியாது. யாரோ ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு போய்விட்டார் என்றார்கள். கிழவி அன்று முழுவதும் சிவமணியின் அப்பா கெட்டவார்த்தையால் திட்டினாள்
“பெத்த பிள்ளையை விட்டுட்டு போன நீ புழுத்துபோடுவே. கைகால் விழங்காம போயிரும்“. எனப் புலம்பினாள். உண்மையில் அதைக் கேட்டு சிவமணி சிரித்தபடியே இருந்தான்.
சிவமணி எப்போதும் எதையோ யோசித்துக் கொண்டே இருப்பான். இரவில் கூட அவனுக்குத் தூக்கம் வராது. வானில் தெரியும் நட்சத்திரங்களைப் பார்த்தபடியே இருப்பான். அவனுக்குத் தெரிந்தவை இரண்டே சொற்கள் தான். ஒன்று சோறு, மற்றொன்று எருமை.
வயிறு பசிக்க ஆரம்பித்துவிட்டால் வாய் ஓயாமல் சோறு சோறு என்று சொல்லிக் கொண்டேயிருப்பான். கிழவி சாப்பாடு கொண்டுவருவதற்குள் ஆயிரம் முறை சொல்லியிருப்பான். பசி அடங்கிவிட்டாலே எதிர் வீட்டில் கட்டப்பட்டிருக்கும் எருமையைப் பார்த்து ரசித்துக் கொண்டேயிருப்பான்..
எருமையை யாராவது அவ்வளவு ரசிப்பார்களா என்ன.
சிவமணி ரசிப்பான். அவனுக்கு எருமை உலகின் விசித்திரமான விலங்காக இருந்தது. தனக்கு ஏன் அதைப் போலக் கொம்புகள் இல்லை என்று யோசித்துக் கொண்டிருப்பான். எருமை வாயை அசைப்பதை போலத் தானும் அசைத்துக் கொண்டேயிருப்பான். எருமை எருமை என்று அதைக் கூப்பிட்டபடியே இருப்பான். கிழவி திட்டுவாள். பேசாமல் உனக்கு ஒரு எருமையைக் கட்டிவச்சிடுறேன். அது கூடவே வாழ்ந்து கோ என்பாள். சிவமணி புரிந்தவன் போலச் சிரிப்பான். இப்போது சிவமணினுக்குப் பதினைந்து வயது நடந்து கொண்டிருந்தது. ஆனாலும் ஐந்து வயது சிறுவன் போலவே இருந்தான். கிழவியைத் தவிர வேறு யார் எதைக் கொடுத்தாலும் சாப்பிட மாட்டான்

சில நாட்கள் கிழவி தான் இறந்து போய்விட்டாள் அவனை யார் கவனித்துக் கொள்வார்கள் என்று நினைத்து கவலை கொள்ளுவாள். சில நேரம் அவனை எங்காவது கொண்டு போய்விட்டுவிடலாமா என்று கூட யோசிப்பாள். ஆனால் அவள் மனது ஏன் உனக்கு ஈனப்பத்தி என்று கேட்கும்.
சிவமணியைப் போன்றவர்களை உலகம் வாழ விடாதே. கையும் காலும் திடமாக உள்ளவர்களையே உலகம் பாடாய்ப் படுத்துகிறது. இதில் சிவமணியை யார் கவனித்துக் கொள்வார்கள். யார் வேளை தவறாமல் உணவு தருவார்கள். கிழவி கரையாளர் வீட்டில் இப்போதும் வேலை செய்து வந்தாள் ஆகவே அவளால் சாப்பாடு போட முடிந்தது. அவள் முடங்கிவிட்டால் யார் வேளை வேளைக்குச் சிவமணிக்கு சோறு போட்டுக் காப்பாற்றுவார்கள்
இந்தக் கவலை கிழவிக்கு நெடுநாட்களாக இருந்தது. சில நாள் கனவில் அப்படியான காட்சிகள் கூட வந்து போயிருக்கிறது. அன்றைக்கெல்லாம் அவள் மனநிம்மதியற்று அவனைக் கட்டிக் கொண்டு அழுவாள்.
ஒருநாள் அவர்கள் ஊருக்குத் தடுப்பூசி போட வந்திருந்த ஆள் சொன்னான்
“சிவமணியைப் போன்றவர்களைப் பராமரிக்க மதுரையில் ஒரு ஹோம் இருக்கிறது. அங்கே கொண்டு போய் ஒப்படைத்துவிடு. அவர்கள் வைத்துக் காப்பாற்றுவார்கள். காசு பணம் எதுவும் தரத்தேவையில்லை“
“சோறு போடுவார்களா“ எனக்கேட்டாள் கிழவி
“மூணு வேளை வயிறுமுட்ட சோறு போடுவார்கள். வைத்தியம் செய்வார்கள் ஆனா அந்த ஹோமை விட்டு வெளிய போக விடமாட்டாங்க. ஆனா அநாதையா இருக்கணும்.“
சிவமணினுக்கு அப்பா இருக்கிறார். ஆனால் அவர் தான் கைவிட்டுவிட்டாரே , கிழவி அவன் அநாதை தான் என்று சொன்னாள்
“நாகமலை கிட்ட அந்த ஹோம் இருக்கு. கொண்டுபோய்ச் சேர்த்துட்டு வந்துரு “என்றான் தடுப்பூசி போடுகிறவன்
“அங்க சிவமணியை அடிப்பாங்களா“ எனக்கேட்டாள் கிழவி
“முரண்டுபிடிச்சா அடிக்க அடிக்கதான் செய்வாங்க. இவனை மாதிரி பசங்களுக்கு வலி தெரியாது.. ஒரு நாள் நான் அங்கே போனப்போ ஒரு பையனை முதுகு தோல் உரியுற வரைக்கும் அடிச்சாங்க. அவன் எந்நேரமும் முண்டகட்டையா திரிவானாம். அதுக்குத் தான் அந்த அடி“
`பாவம். அவனுக்குத் தன்னுசார் இருக்காதில்லே“ என்றாள் கிழவி
“அதுக்காக இப்படிக் குஞ்சாமணியை ஆட்டிகிட்டு இருந்தா பாத்துகிட்டு இருப்பாங்களா“.
“சிவமணியை அடிச்சா. அவன் ரொம்பச் சப்தம் போடுவான். அடக்க முடியாது“
“அதை எல்லாம் அவங்களே பாத்துகிடுவாங்க. நீ ஏன் கவலைப்படுறே“
“அந்த பிள்ளைக்கு என்ன விட்டா யாரு இருக்கா“
“ஊரான் பிள்ளையை எத்தனை நாளுக்கு உன்னாலே வச்சி பாக்க முடியும்“
“அப்படி சொல்லாதே. சிவமணி என் பேரன் தான்.“
“இந்த மாதிரி பையனுக்கு எல்லாம் ரெகுலரா வைத்தியம் பாக்கணும். இல்லே ரொம்ப மோசமாகி போயிடுவாங்க. கைகால் கூட வராமல் போயிடும்“.
“சிவமணி அப்படி ஒண்ணும் ஆகமாட்டான்“. என்றாள் கிழவி
“நீ யோசிக்காமல் காப்பகத்தில் கொண்டு போய் விட்ரு. நீ செத்துட்டா. ஊர்க்காரர்கள் இவனைப் பாடப்படுத்தி எடுத்துருவாங்க. அப்போ உதவிக்கு யாரும் இருக்கமாட்டாங்க பாத்துக்கோ“
“நாகமலையில் எங்க இருக்கு“ எனக்கேட்டாள் கிழவி
“அட்ரஸ் எழுதி தர்றேன்“ என ஒரு துண்டு காகிதத்தில் எழுதிக் கொடுத்தான் அந்த ஆள்.
கிழவி அதை வாங்கி வைத்துக் கொண்டாள். ஆனால் சிவமணியை அங்கே சேர்ப்பதில் அவளுக்குத் தயக்கமேயிருந்தது.
ஆனால் அதை விட்டால் வேறு வழியில்லை என்றும் கிழவிக்குத் தோன்றியது தன் காலம் முடிவதற்குள் அதைச் செய்து விட வேண்டும் என்று முடிவுசெய்து கொண்டாள். சிவமணிக்குத் தன்னைக் கிழவி இப்படி ஒரு காப்பகத்தில் கொண்டு போய்விடப்போகிறாள் என்று தெரியாது. அவன் எப்போதும் போலவே எருமை எருமை என்று கத்திக் கொண்டேயிருந்தான்
கிழவி சிவமணியை மதுரைக்கு அழைத்துப் போவதற்காகப் பணம் சேர்க்க ஆரம்பித்தாள். அவள் ஒருமுறை கூட மதுரைக்குப் போனதேயில்ல்லை.
கிழவி டவுனுக்குப் போவதை பற்றிப் பயம் ஒன்றுமில்லை. ஆனால் எங்கே காப்பகத்தில் சிவமணியைக் கொண்டு போய்விட்டு வந்தவுடன் அவன் கிழவியைப் பார்க்க வேண்டி அழுது கூப்பாடு போட்டால் என்ன செய்வது. அல்லது காப்பகத்தில் சிவமணினுக்குச் சாப்பாடு போடாமல் விட்டுவிட்டால் என்ன ஆவது. இப்படித் தான் கவலைகள் அவளுக்குள் முளைத்திருந்தன
இதைப்பற்றி யாருடனும் கலந்து பேசவும் அவளால் முடியவில்லை. இரவில் சிவமணி இருட்டில் உட்கார்ந்தபடியே எருமை எருமை என்று சொல்லிக் கொண்டேயிருப்பதைக் காணும் போது இந்த அப்பாவி பிள்ளையை ஏன் கொண்டு போய்க் காப்பகத்தில் விட வேண்டும் என்று ஆதங்கமாக இருக்கும். ஏன் இந்த உலகம் சிலரை இப்படிக் கைவிட்டுவிடுகிறது. யாரையும் சாராமல் ஒரு மரம் கூட வாழ்ந்துவிட முடிகிறது ஆனால் மனிதனால் அப்படி வாழ முடியாது.
யோசித்து யோசித்துக் களைந்துப் போய் முடிவில் ஞாயிற்றுகிழமை காலை சிவமணியைக் கூட்டிக் கொண்டு காப்பகத்தில் விட்டுவிடுவது என்று முடிவு செய்து கொண்டாள். சிவமணி எப்போதும் ஒரே காக்கி நிற டிராயரையும் ஆரஞ்சு வண்ண முண்டா பனியனையும் தான் அணிந்திருப்பான். வாயில் எச்சில் ஒழுகிக் கொண்டேயிருக்கும். இந்தக் கோலத்தில் அவனை ரயிலில் கூட்டிக் கொண்டு போக முடியாது என்று போஸ்ட்மாஸ்டர் வீட்டில் கேட்டு பழைய டிராயர் சட்டை இரண்டினை வாங்கி வந்திருந்தாள். அந்தச் சட்டையும் டிராயரும் சிவமணினுக்கு மிகவும் பெரியதாக இருந்தது. அதனால் என்ன. உடலை மறைத்தால் போதும் தானே.

சிவமணி ஆசையாக அந்த உடைகளை அணிந்து கொண்டான். கிழவி அவனிடம் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. வெயிலுக்கு முன்னால் நடந்து ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய்விட வேண்டும் என்று நினைத்தாள். சிவமணி மிக மெதுவாகவே நடப்பான். சில இடங்களில் அப்படியே தரையில் உட்கார்ந்து கொண்டுவிடுவான். ஆகவே அவனை அழைத்துக் கொண்டு ரயில்வே ஸ்டேஷன் போக ஒரு மணி நேரத்திற்கும் மேலானது.
சிவமணி ரயில்வே ஸ்டேஷனை வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்
கிழவி அவனிடம் ரயிலில் போகிறோம் என்று சொன்னாள்
சிவமணினுக்கு ஒன்றும் புரியாத போதும் உதடு விரிய சிரித்தான். கிழவியும் அவனும் கல்லால் ஆன பெஞ்சில் உட்கார்ந்து கொண்டார்கள்.
நீண்ட நேரம் அவர்கள் ரயில் நிலையத்தில் காத்திருந்தார்கள். துணிமூட்டைகளுடன் ஒரு ஆள் அவர்கள் அருகில் உட்கார்ந்திருந்தான். இரும்பு கம்பத்தைச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தான் சிவமணி.
ரயில் எப்போது வரும் என்று தெரியவில்லை. டிக்கெட் எங்கே எடுக்க வேண்டும். சிவமணினுக்கு ரயிலில் டிக்கெட் உண்டா எதுவும் புரியவில்லை. அவள் டிக்கெட் கவுண்டர் மூடியிருப்பதைக் கண்டாள். ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்குள் நிழல் போல அவர் நடந்து கொண்டிருப்பது தெரிந்தது. ஒருமுறை அந்த அறை வாசலில் போய் நின்று ரயில் எப்போது வரும் எனக்கேட்டாள்
அவர் பதில்சொல்லவில்லை. ஆனால் பரபரப்பாக ஏதோ வேலையில் இருந்தாள்
கிழவி திரும்பவும் சிவமணி இருந்த பெஞ்சிற்கு வந்து உட்கார்ந்து கொண்டாள்
சிவமணி வெயிலைப் பார்த்தபடியே “எருமை எருமை“ என்று கத்திக் கொண்டிருந்தான்
இங்கே எங்கே எருமையிருக்கிறது. எல்லாப் பொருளும் அவனுக்கு எருமை தானா
சிவமணியும் அவளும் வெயிலுக்குள்ளாகவே காத்துகிடந்தார்கள். கிழவி ரயில்வே தண்டவாளத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். தண்டவாளத்தின் மீது வெயில் நடந்து சென்று கொண்டிருந்தது.
நீண்ட காத்திருப்பின் பிறகு ஸ்டேஷன் மாஸ்டர்வெளியே வந்து சொன்னார்
“ மதுரை பாசஞ்சர் இன்னைக்கு வராது“
கிழவிக்குப் புரியவில்லை. “ என்ன ஆச்சு“ என்று கேட்டாள்
“பாம்பன்ல தண்டவாளம் ரிப்பேராம். … போயிட்டு நாளைக்கு வா“ என்றார் ஸ்டேஷன் மாஸ்டர்
சிவமணியைக் காப்பகத்தில் கொண்டுபோய்விடுவது கடவுளுக்கே பிடிக்கவில்லையே. இல்லாவிட்டால் ஏன் இப்படி ரயிலை தடுத்து நிறுத்தியிருப்பார். கிழவி சிவமணியிடம் வீட்டுக்குப் போகலாம் என்று அழைத்தாள்
அவன் “எருமை எருமை“ என்று சொல்லியபடியே பறந்து கொண்டிருக்கும் தட்டான்பூச்சிகளைக் காட்டினான்
“நாம வீட்டுக்கு போவோம் “என்றாள் கிழவி. அவன் தலையாட்டினான்
தான் உயிரோடு இருக்கும் வரை சிவமணியைக் காப்பாற்றுவோம். செத்துப்போய்விட்டால் பின்பு அவன் விதி. நாம் எதற்காக அவனைக் கொண்டுபோய் எங்கோ ஒரு இடத்தில் விட வேண்டும். அங்கே அடிவாங்கி அழுது கொண்டு ஏன் வாழ வேண்டும். நடக்கப்போவதை பற்றிக் கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது. தன்ன போல வேறு ஒருவர் அவனைக் கவனிக்கக் கிடைக்காமலா போய்விடுவார்.
கிழவி ரயில் வராமல் போனது நல்லதற்கே என்று நினைத்துக் கொண்டாள்.
“வீட்டுக்குப் போவோம்“ என்றாள் கிழவி
“ரயில் வரலை“ என்று கேட்டான் சிவமணி
“ரயில் வேண்டாம்“ என்றாள் கிழவி
“ரயிலை யாராவது தின்னுட்டாங்களா“ எனக்கேட்டான் சிவமணி
“ஆமாம்“ என்று தலையாட்டினாள் கிழவி
அவர்கள் ஸ்டேஷனை விட்டு நடக்க ஆரம்பித்தார்கள். கிழவியால் வெயிலை தாங்க முடியவில்லை.
புழுதி பறக்கும் சாலையில் திடீரென ஒரு இடத்தில் சிவமணி உட்கார்ந்து கொண்டான். அவனை எழுந்திருக்கச் சொல்லி திட்டினாள் கிழவி. சிவமணி சோறு சோறு என்று சப்தமிட்டான்
“வீட்டுக்கு வா சோறு போடுறேன்“ என்றாள் கிழவி
அவன் கேட்டுக்கொள்ளவில்லை. அவனை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் கிழவி “எருமை எருமை எருமை“ என்று சொல்லத்துவங்கினாள்
கிழவி இப்படிச் சொல்வதைக் கேட்டு சிவமணி சிரித்தான். கிழவி கண்ணீர் வழிய அவன் சிரிப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள்
“நீயும் உட்காரு“ என்று தரையைக் காட்டினான்
வெயிலில் கிழவியும் உட்கார்ந்து கொண்டாள். இருவரும் இரண்டு சிறுவர்களைப் போல மாறி மாறி எருமை சோறு எருமை சோறு என்று விளையாடிக் கொண்டிருந்தார்கள்
சைக்கிளில் போய்க் கொண்டிருந்த தபால்காரன் அவர்களைப் பார்த்துக் கேட்டான்
“மழையா பெஞ்சிகிட்டுஇருக்கு“
சிவமணி அவனைப் பார்த்துச் சொன்னான்
“எருமை. எருமை“.
கிழவி அதைக்கேட்டுச் சப்தமாகச் சிரித்தாள். பிறகு அவளும் சேர்ந்து “எருமை எருமை“ என்று சப்தமிட்டாள்.
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

