S. Ramakrishnan's Blog, page 137

March 24, 2021

ஏனுகுல வீராசாமி

காசி யாத்திரை என்ற1832இல் வெளியான நூலே தமிழின் முதல் பயண இலக்கியமாகக் கருதப்படுகிறது. இதை எழுதியவர் ஏனுகுல வீராசாமி . இவர் சென்னையில் வசித்தவர்.

1830ம் வருஷம் மே மாதம் 18ம் தேதி இவர் மதராஸிலிருந்து காசி யாத்திரைக்குப் புறப்பட்டார். ஒரு வருஷம் மூன்று மாதங்கள் நீண்ட இந்தப் பயணம் செப்டம்பர் 1831ல் முடிவு பெற்றது. தனது பயண அனுபவத்தை அவர் குறிப்பேட்டிலும் கடிதங்கள் வழியாகவும் எழுதி வந்தார். தெலுங்கில் இவர் எழுதிய குறிப்புகளைப் பனையூர் வெங்குமுதலி தமிழாக்கம் செய்திருக்கிறார்கள். இந்தப் பயண நூலின் ஆங்கிலப் பிரதி தற்போது கிடைக்கிறது. ஆனால் தமிழ் பிரதியைக் கண்டறியமுடியவில்லை. ஒருவேளை பழைய நூலகம் எதிலாவது இருக்ககூடும்

ஏனுகுல வீராசாமியின் தந்தை கிழக்கிந்திய கம்பெனியில் வேலை செய்தவர். வீராசாமியின் ஒன்பது வயதில் அவரது தந்தை இறந்து போனார். தாய் தான் அவரை வளர்த்து படிக்க வைத்தார். பனிரெண்டு வயது வரை படித்த வீராசாமி சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, ஆங்கில மொழிகளில் சிறப்பாகப் பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டார். இவரது பன்மொழிப்புலமையால் துபாஷி வேலை கிடைத்தது. திருநெல்வேலி கலெக்டரிடன் துபாஷியாகச் சில காலம் வேலை செய்திருக்கிறார். பின்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக வேலை கிடைத்து அதில் பணியாற்றி வந்தார்.

இவரது சிறப்பான சேவையைப் பாராட்டி ஆங்கில அதிகாரி ஒருவர் வீராசாமிக்குத் தங்கத்தில் பொடி டப்பா செய்து பரிசளித்திருக்கிறார். குண்டூர் பஞ்சம் வந்தபோது இவர் தினமும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் அளித்து உதவியிருக்கிறார். மதராஸில் வசித்த இவர் கல்விப்பணியினை முன்னெடுப்பதில் அதிகக் கவனம் செலுத்தியிருக்கிறார். செல்வந்தரான இவர் தண்டையார்பேட்டையில் வசித்திருக்கிறார்

தெலுங்கில் எழுதப்பட்ட இந்தப் பயணநூல் தமிழில் தான் முதலில் வெளியாகியிருக்கிறது. பின்பு மராத்தியில் வெளியாகியிருக்கிறது. அதன் பிறகே இந்த நூல் தெலுங்கில் வெளிவந்துள்ளது. ஆங்கிலத்தில் அவரே சில அத்தியாயங்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். ஆனால் அதை முடிக்க முடியவில்லை. தற்போது சீதாபதி மற்றும் புருஷோத்தம் இணைந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்.

இவரது காசி யாத்திரை நூலின் வழியே 1830 காலகட்டத்தில் வாழ்க்கை முறையினைத் துல்லியமாக அறிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாகப் பயண வழிகளில் உள்ள இடர்கள், பயண ஏற்பாடுகள். ஆலயங்களின் சிறப்பு. உணவு வகைகள். கலைகள். மற்றும் பண்பாட்டுச் சிறப்புகள், சந்தை மற்றும் சுங்கச்சாவடிகள் குறித்துச் சிறப்பாக எழுதியிருக்கிறார்.

இவருடன் பயணத்தில் அவரது குடும்பம் மற்றும் உறவினர்களும் உடன் சென்றிருக்கிறார்கள். இரண்டு பல்லக்கில் அவர்கள் செல்ல பின்னால் நான்கு மாட்டுவண்டிகளில் சுமைகள் ஏற்றப்பட்டு வந்திருக்கின்றன. பயணத்தில் தனது பாதுகாப்பிற்காகப் பத்துபேரை வேலைக்கு வைத்திருக்கிறார் வீராசாமி. அவர்களுக்கு மாதம் ஏழு ரூபாய் சம்பளம். இவர்களுடன் கூடாரம் அமைக்க நாலு தனி ஆட்கள். சுமைகளை ஏற்றிச் செல்ல ஆறு மாடுகள். அதைப் பராமரிக்க இரண்டு ஆட்கள். காட்டுவழியில் பயணம் செய்யும் போது வழிகாட்டுவதற்காகப் போஸ்டல் ரன்னர் ஒருவர், வழிப்பறிக் கொள்ளையர்களுக்குப் பயந்து ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்களையும் தனி ஊதியம் கொடுத்து வேலைக்கு வைத்திருக்கிறார். இப்படி ஒரு பட்டாளமே ஒன்று சேர்ந்து பயணம் செய்திருக்கிறார்கள்.

வழியில் கூடாரம் அமைத்துத் தங்கிக் கொள்ளத் தேவையான பொருட்களையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்றிருக்கிறார். சுகமாகப் படுத்து உறங்க மடக்கு கட்டிலையும் கூட மாட்டு வண்டியில் கொண்டு போயிருக்கிறார் வீராச்சாமி.

பல்லக்கிலும் மாட்டுவண்டியிலும் சில இடங்களில் குதிரை வண்டியிலும் பயணம் செய்த வீராசாமி மதராஸிலிருந்து புறப்பட்டுத் திருப்பதி, கடப்பா அகோபிலம், ஹைதராபாத், நாக்பூர், ஜபல்பூர், பிரயாக், காசி, பாட்னா, கயா ராஜ்மகால், கிருஷ்ணாநகர், கல்கத்தா, கோபால்பூர், கட்டக். பூரி, சில்கா ஏரி கஞ்சம், பெர்காம்பூர், ஸ்ரீகாகுளம் ,நெல்லூர், சூளுர்பேட்டை, பொன்னேரி வழியாக மதராஸ் திரும்பி வந்திருக்கிறார்.

இந்தப் பயணத்திற்கு எவ்வளவு பணம் செலவு செய்திருக்கிறார் என்ற தகவல் இதில் இடம்பெறவில்லை. ஆனால் போகிற இடமெல்லாம் காசை தண்ணீராகச் செலவு செய்திருக்கிறார். கோவில்களுக்கு நன்கொடை கொடுத்திருக்கிறார். நகைகள். பட்டு உடைகள் வாங்கித் தானம் அளித்திருக்கிறார். கோவிலில் முன்னுரிமை பெறுவதற்காகப் பூசாரிகளுக்குக் கைநிறைய பணம் கொடுத்திருக்கிறார். போகும் இடத்திற்கு முன்பே ஆட்களை அனுப்பித் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வைத்திருக்கிறார். சிலரை இதற்காக ஒப்பந்தம் செய்து கொண்டும் பணி அமர்த்தியிருக்கிறார். நீதிமன்றத்தில் பணியாற்றியவர் என்பதால் பல இடங்களில் நீதிபதிகள் இவருக்கு உதவி செய்திருக்கிறார்கள். ஜமீன்தார்களின் மாளிகைகளில் தங்கியிருக்கிறார். பயண வழியில் சிலருக்கு உடல் நலம் சீர்கெட்டிருக்கிறது. பல்லக்குத் தூக்கிகள் சிலருக்குக் குளிரால் காய்ச்சல் கண்டிருக்கிறது. அவர்களுககு நாட்டுமருந்து கொடுத்து அவரே குணமாக்கியிருக்கிறார்

மாட்டுவண்டிக்காரன் ஒருவனுக்கு மேகநோய் வந்திருக்கிறது. அவனை மட்டும் அவரால் குணப்படுத்த முடியவில்லை. வழியிலே அவனை நிறுத்தி ஊர் திரும்ப வைத்திருக்கிறார்கள்.

வழியில் மலேரியா தாக்கி பலரும் நோயுற்றார்கள். இருவர் இறந்து போனார்கள். தனது பயணத்தின் போது கிடைத்த அனுபவத்தைக் கடிதங்களாக நண்பருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அந்தக் கடிதங்களைத் தொகுத்தே இந்த நூலை உருவாக்கியிருக்கிறார்கள்

தனது பயண அனுபவத்தில் திருடன் கூடப் பண்புள்ளவனாக நடந்து கொண்டிருக்கிறான். பெரிய மனுசன் போன்ற தோற்றம் கொண்டவன் தான் நிறைய இடங்களில் சூது செய்து ஏமாற்றியிருக்கிறான் என்கிறார் வீராசாமி.

பாட்னாவில் காகங்களுக்குப் பயந்து ஆட்கள் சுற்றிலும் காவலுக்கு நில்லாமல் மக்கள் பொதுஇடத்தில் சாப்பிட முடியாது. வானில் நூற்றுக்கணக்கான காகங்கள் வட்டமிட்டுக் கொண்டேயிருக்கும். ஏமாந்த நேரம் உணவைக் கவ்விக் கொண்டுபோய்விடும். ஆகவே சாப்பிடுகிறவர் இலையை ஒட்டி ஒரு ஆள் கையில் கோலோடு நின்று கொண்டிருப்பார். அவரது வேலை காக்கா விரட்டுவது என்று ஒரு இடத்தில் வீராசாமி குறிப்பிடுகிறார்.

பயண வழியில் இவரது பல்லக்குத் தூக்குகளுக்கு மோசமான தண்ணீரைக் குடித்துச் சளி இருமல் வந்திருக்கிறது. அவர்களுக்கு வைத்தியம் செய்து நலமாகும் வரை ஒரே இடத்தில் தங்கியிருக்கிறார்.

அந்த நாட்களில் திருப்பதி எப்படி இருந்தது என்பதை வாசிக்க வியப்பாக இருக்கிறது. 1830களில் இருநூறு ரூபாய் கொடுத்துச் சிறப்புப் பூஜை செய்திருக்கிறார் வீராசாமி.

அன்றைய ஹைதராபாத் நிஜாமில் வேறு பணம் புழக்கத்திலிருந்தது. மதராஸின் ஒரு ரூபாய் அங்கே ஐம்பது பைசா மட்டுமே. பணம் கொடுத்துச் சில்லறை வாங்கினால் ரூபாய்க்கு பத்து காசு கமிஷனாக எடுத்துக் கொள்ளும் பழக்கமிருந்தது. ஹைதராபாத்தில் வெள்ளைக்காரர்கள் மட்டும் பயன்படுத்தும் சாலையிருந்தது. அதில் இந்தியர்கள் செல்ல அனுமதி கிடையாது.

காய்கறிகள் பழங்கள் யாவும் ஹைதராபாத்தில் விலை மிக அதிகம். மாட்டுவண்டிகளில் விறகு ஏற்றிக் கொண்டு போனால் கூட அதற்குச் சுங்கம் வசூலிக்கிறார்கள் என்கிறார் வீராசாமி.

வீராசாமியின் விவரிப்பில் வழியெல்லாம் மரங்கள் அடர்ந்த சாலையின் பிம்பமே மனதில் ஆழமாகப் பதிகிறது. அது போலவே சிறிய கிராமங்களின் எளிய வீடுகள். ஏழைகளின் நிலை, அடர்ந்த காடுகள். மழையில் பெருகிய வெள்ளம் வடியும் வரை ஆற்றைக் கடக்க முடியாமல் காத்திருக்க வேண்டிய நிலை. கரடுமுரடான பாதையில் செல்லும் பயணம். இதமான மாலை நேரக்காற்று. குடிநீருக்கான போராட்டம் இவை மிக அழகாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. பயண வழியில் நல்ல வெற்றிலை கிடைக்கவில்லை என்று புலம்பியிருக்கிறார் வீராசாமி

மதராஸ் ராணுவம் நாக்பூருக்கு வரும் வரை அங்கிருந்தவர்களுக்குப் புளியை உணவில் சேர்த்துக் கொள்ளும் பழக்கம் கிடையாது. புளிப்புக்கு தயிரை தான் சேர்த்துக் கொள்வார்கள். மதராஸ் ராணுவத்தினருக்காகவே புளியை உணவில் சேர்த்துச் செய்யும் பழக்கம் உருவானது. இதுபோலவே இரவில் மோர் குடிக்கப் பயப்படுவார்கள். ஜலதோஷம் பிடித்துக் கொள்ளும் என்பதே காரணம். தனது பல்லக்கு வழியில் உடைந்து போனதால் புதிய பல்லக்கு ஒன்றை விலைக்கு வாங்கியிருக்கிறார் வீராசாமி. அதன் விலை நூறு ரூபாய்.

அன்றைக்குச் சென்னையிலிருந்த வீடுகளிலே மிகப்பெரியது அய்யாபிள்ளையின் வீடு. இது போலவே ஆங்கிலேயர்களின் குடியிருப்பில் மிகப்பெரியது ஜே.மூரத்தின் மாளிகை என்கிறார் வீராசாமி. இருவருமே இன்று நினைவிலிருந்து மறைந்து போய்விட்டார்கள். மதராஸ் சின்னஞ்சிறிய கிராமங்களை உள்ளடக்கியதாக வெளிப்படும் சித்தரிப்பு அழகாக உள்ளது..

வீராசாமியின் பயணத்தின் வழியே அன்றைய கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரிகளுக்கு இருந்த செல்வாக்கும் அதிகாரமும் துல்லியமாக வெளிப்பட்டுள்ளது. போகிற இடத்தில் எல்லாம் அவருக்கு வெள்ளை அதிகாரிகள் உதவி செய்கிறார்கள். துணையாட்களை அனுப்பி வைக்கிறார்கள். அவரும் கம்பெனி அதிகாரிகளுக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறார். ராணுவ அதிகாரிகளுக்குப் பரிசுகள் வழங்கியிருக்கிறார்.

அன்று நிலவிய சாதியக் கட்டுப்பாடுகள். ஒடுக்குமுறைகள் பற்றியும் இந்தப் பயணத்தின் ஊடாக நிறைய அறிந்து கொள்ள முடிகிறது.

இன்றிருப்பது போலப் பயணவழியில் தங்குமிடங்களோ, உணவகங்களோ வாகன வசதிகளோ இல்லாத காலத்தில் இப்படி ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டிருப்பது புதிய அனுபவத்தையே நமக்கு அறிமுகம் செய்கிறது.

கிழக்கிந்திய கம்பெனி எப்படி இந்தியாவைச் சுரண்டி வாழ்ந்திருக்கிறது என்பதற்கு அவர்களின் சுங்கசாவடிகள். ராணுவ தலையீடுகள். ஆட்சி முறை பற்றிய தகவல்களே சாட்சி. ஏனுகுல வீராசாமி சித்தரிக்கும் பயண வழிகள். இடங்கள் யாவும் காலத்தில் மறைந்தும் மாறியும் விட்டன. 190 ஆண்டுகளுக்கு முன்னுள்ள இந்திய வாழ்க்கையின் எளிமை மட்டுமில்லை அதன் அறியாமைகளும் சேர்ந்தே இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 24, 2021 19:01

சுவர் தோறும் ஓவியங்கள்

தேனுகா

••

திருப்பரங்குற்றத்து முருகப்பெருமானை வழிபடும் மக்கள் அதன் அருகில் உள்ள சித்திரக் கூடத்தில் உள்ள ஓவியங்களை கண்டு ரசிக்காமல் வருவதில்லை. ரதி, மன்மதன், பூனை உருவம் கொண்டு ஓடும் இந்திரன், கௌதம முனிவன் முதலிய ஓவியங்களை கண்டவர்கள் இது என்ன, அது என்ன, இவர் யார், அவர் யார் என்று ஒருவருக்கொருவர் கேட்டு மகிழ்வுரும் காட்சியை நப்பண்ணனார் என்னும் புலவர் கூறுகிறார்.

சித்திரை மாடத்து ஓவியங்களை பார்த்துக் கொண்டே உயிர் நீத்த பாண்டிய மன்னனை, ‘சித்திர மாடத்து துஞ்சிய பாண்டியன் நன்மாறன்’ என்று தமிழின ஓவிய மரபை கூறும் புறனானூற்று வரிகளில் நம் மனம் தோயாமல் எப்படி இருக்க முடியும்.

முதலாம் ராஜராஜன் தான் உருவாக்கிய பிரமாண்டமான தஞ்சை பெரிய கோயிலில், ஆடல் மகளிரின் முத்திரை அபிநயத்தோடு அற்புத ஆட்டங்களை, ஓவியங்களாக வரைந்துள்ளார். சிவபாதசேகரனான ராஜராஜன் சிவனின் வியத்தகு திருவிளையாடல்களின் பல்வேறு காட்சிகளை தத்ரூபமான சுவரோவியங்களாகினார். அவை இன்று சிதிலம் அடைந்த நிலையிலும் காணக்கிடைக்காத காட்சிகளாகத் தோன்றுகிறன.

சுவாமி வீதியுலாவின் போது ஆடல் மகளிரின் அபிநயத்தோடுதான் வெளிவரவேண்டும் எனும் ராஜராஜனின் விருப்பம், ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் வரை நிறைவேறியுள்ளது. கும்பகோணத்தை அடுத்த திருநல்லம் எனப்படும் கோனேரிராஜபுரத்து கோயில் ஓவியங்கள் இன்று சாட்சியாக உள்ளன. திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் பதிகம் பாடிய இக்கோயிலில் வீற்றிருக்கும் ஆடல்வல்லான் ஐம்பொன் சிலை பிரமாண்டத்திலும், பேரழகிலும் புகழ்பெற்ற சிற்பமாக விளங்குகிறது. இக்கோயிலின் விதானம், மற்றும் சுவரில் தோற்றும் ஓவியங்கள் வரலாற்று சிறப்புமிக்கவையாகும். ஆங்கில அதிகாரிகளை மாலையிட்டு வரவேற்க ஆடல் மகளிரும், நட்டுவாங்க மேதைகளும், இசை விற்பன்னர்கள் குழாமோடு வரவேற்கும் இக்காட்சி அரிதான ஒன்றாகும்.

இக்கோயிலின் உற்சவ மூர்த்தியான உமாமகேஸ்வரர் சுவாமி, பத்து நாட்கள் வீதியுலாவரும்போது இடும்பன், இடும்பி, யானை, சிங்கம், அன்னபட்சி, ஆட்டுகடா போன்ற வாகனங்களில் உலாவருகிறார். ருக்மணி எனும் ஆடல் மகளிர் அழகிய ஜடை உடை அலங்காரத்துடன் வீதியில் நடனமாடுகிறார், அதற்கு சின்னபக்கிரி குழுவினரின் நாதஸ்வர தவில் இன்னிசை நிகழ்த்துகின்றனர்.

அதனைக் கண்டுகளித்து இன்புரும் சிவ வைணவ பேதமற்ற பெருமக்களையும் காட்சிப்படுத்துகிறது இச்சுவரோவியம். சிலப்பதிகாரத்திலிருந்து சோழர்காலத்துக்கு பின் ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் வரை ஆடற்கலை அழியாமல் பாதுகாக்கப்பட்டதை காட்டும் வரலாற்று புகழ்மிக்க சுவரோவியமாகும்.

ஒரு ஓவியத்தில் வெவ்வேறு உருவங்கள், விதவிதமான வடிவங்கள், கருப்பு, சிவப்பு, மஞ்சள், வெள்ளை போன்ற வண்ணங்களால், மேநாட்டவரும் வியக்கும் உருவங்களின் கட்டமைப்பு (composition) அழகோடு தமிழகமெங்கும் காணப்படும் இவ்வோவிய மரபு, பட்டி விக்ரமாதிதன் கதை புத்தகத்தின் மர அச்சு ஓவியங்களாகவும், தற்போது கலங்காரி என்னும் துணி ஓவியங்களாக சிக்க நாயக்கன்பேட்டையில் தொடர்வது மகிழ்ச்சியைத் தருகிறது

நன்றி

தேனுகா பக்கங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 24, 2021 02:30

தேசாந்திரி – மலையாளத்தில்

எனது தேசாந்திரி கட்டுரைத் தொகுப்பு மலையாளத்தில் வெளியாகிறது.

மொழியாக்கம் செய்திருப்பவர் மனோகரன்.

பேபியன் புக்ஸ் இதனை வெளியிடுகிறது

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 24, 2021 02:15

March 22, 2021

ஆங்கிலத்தில் குறுங்கதைகள்

பிரண்ட்லைன் இதழில் எனது கர்னலின் நாற்காலி தொகுப்பிலிருந்து இரண்டு குறுங்கதைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

இந்தக் கதைகளை மொழியாக்கம் செய்திருப்பவர் மாலினி சேஷாத்ரி.

மினி கிருஷ்ணன் இதைத் தேர்வு செய்து அறிமுகம் செய்திருக்கிறார்.   

Thanks

Frontline

Mini Krishnan

Malini Seshadri

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 22, 2021 07:10

March 20, 2021

இந்தியன் குக்

புதிய சிறுகதை

அந்த வனவிடுதியில் கிளாவெல்லைத் தவிர வேறு எவரும் தங்கியிருக்கவில்லை அது விருந்தினர்களுக்கான விடுதி என்ற போதும் வால்டர் கிளாவெல் வனத்துறை அதிகாரியாக வந்தபிறகு அதைத் தன்வசமாக்கி வைத்துக் கொண்டான். வேட்டைக்கு வரும் ஜமீன்களுக்குக் கூட அந்த விடுதியில் தங்க இடம் கிடைப்பதில்லை.

இங்கிலாந்திலிருந்து 1845ல் இந்தியாவிற்கு வந்த வால்டர் கிளாவெல் வன அதிகாரியாக அஸ்ஸாமில் தான் பணியில் அமர்த்தப்பட்டான். ஏழு வருஷஙகள் அங்கே பணியாற்றியபிறகே தென்வனம் எனப்படும் அந்தக் காட்டினை நிர்வாகம் செய்ய அனுப்பி வைக்கபட்டான். அது கேரள எல்லைப் பகுதியை ஒட்டிய காடு.

நூறு மைலுக்கும் மேல் பரந்து விரிந்திருந்த அந்தக்காடு முழுவதும் வால்டர் கிளாவெல் கட்டுப்பாட்டில் தானிருந்தது. அவன் தன்னைக் காட்டின் அரசனாகவே உணர்ந்தான். அவனது மூர்க்கமான செயல்கள் காட்டினுள் வசித்த பழங்குடியினரை பயமுறுத்தின. அவர்கள் கிளாவெல்லின் கண்ணில் படாமல் மறைந்து நடமாடிக் கொண்டிருந்தார்கள்.

கிளாவெல் வந்தபிறகு அந்தக் காட்டினை விட்டுப் பழங்குடிகள் எவரும் வெளியே போகக் கூடாது என்று சட்டம் விதித்தான். தட்டாம்பாறை ஒட்டியிருந்த பழங்குடிகளின் குடிசைகளை மொத்தமாகத் தீவைத்து எரித்துவிட்டு அவர்களை மேகவளைவு என்ற பக்கத்தில் குடியேறச் செய்தான்.

பழங்குடி பெண்களில் சிலரை அவன் தூக்கிச் சென்று நாட்கணக்கில் அருவிக்கரையில் கூடாரம் அமைத்து அதற்குள் நிர்வாணமாக வைத்திருந்தான். அந்தப் பெண் பின்னிரவில் தப்ப ஒட முயன்றபோது பிடித்துத் தலைகீழாக அவர்களை மரத்தில் கட்டி தொங்கவிட்டிருந்தான். மூன்று பெண்கள் அதில் இறந்துபோனார்கள். இறந்த உடல்களை அருவியில் தூக்கி வீசும்படி செய்திருந்தான்.

கிளாவெல் வந்தபிறகு காட்டின் இயல்பு முற்றிலும் மாறியிருந்தது. அடிபட்ட புலி காட்டிற்குள் மூர்க்கமாக அலைவது போல அவன் அலைந்து கொண்டிருந்தது.

நல்லவேளையாகக் கல்கத்தாவிலிருந்து அவனது மனைவி லாராவும் இரண்டு மகள்களும் அவனுடன் வசிப்பதற்காகத் தென்வனத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வந்தபிறகே வனவிடுதியை அவன் தனதாக்கிக் கொண்டான்.

கிளாவெல்லின் வனவிடுதியில் ஞாயிறு தோறும் பார்ட்டி நடப்பது வழக்கம். இதில் முப்பது பேருக்கும் மேலாக வந்து போவதுண்டு. அதில் மேலையூர் ஜமீன்தார் உள்ளிட்ட சிலரும் அடக்கம். சிலவேளைகளில் அவர்கள் துப்பாக்கியோடு வனவேட்டைக்குப் போய் வருவார்கள். வேட்டையப்பட்ட முயல்களையும், காட்டுபறவைகளையும் மான்களையும் சமைக்க வேண்டியது முலாக்கின் வேலை. சில நேரம் ஆற்றிலிருந்து மீன் பிடித்து வந்து சபேசன் சமைக்கவும் செய்வான்.

மூன்று சமையற்காரர்களுக்கும் வெளியே தெரியாத வெறுப்பும் இனம்புரியாத கசப்புணர்வும் இருந்தது. அதிலும் ஜுலியனுக்கு இந்தியர்களைப் பிடிக்கவேயில்லை. முலாக்கை அவன் சகித்துக் கொண்டதற்குக் காரணம் முலாக் தயாரித்துத் தரும் நாட்டுசாராயத்திற்குத் தான்.

முலாக் அதை எப்படிக் காச்சுகிறான். எங்கே வைத்துக் காய்ச்சி எடுக்கிறான் என்று எதுவும் தெரியாது. ஆனால் அவன் கொண்டு வந்து சாராயத்தின் போதையை எந்த விஸ்கியும் தந்ததில்லை

சபேசன் அதிகாலையில் எழுந்து காட்டாற்றில் சென்று குளித்துவிட்டு திருநீறு பூசிக் கொள்வான். ஒருநாள் அதைப்பற்றி லாரா அவனிடம் கேட்டாள்.

திருநீற்றை ஆங்கிலத்தில் எப்படிச் சொல்வது எனப் புரியாமல் சபேசன் கையெடுத்து வணங்கிவிட்டு நெற்றியில் கோடு போடுவது போலச் சைகை காட்டினான்.

லாராவிற்க்கு அது புரிந்தது போலச் சிரித்துவிட்டு இந்தக் குளிரிலும் பச்சை தண்ணீரிலா குளிக்கிறாய் என்று ஆங்கிலத்தில் கேட்டாள்.

சபேசன் தலையசைத்தபடியே “ரிவர் வாட்டர் வெரி கோல்ட். இட்ஸ் குட்“ என்று சொன்னான்.

லாராவிற்கு. வனத்துறைக்குச் சொந்தமான அந்தப் பாரஸ்ட் பங்களாவும் அதைச் சுற்றிய மரங்களும் அவருக்கு மிகவும் பிடித்துப் போயின. கிளாவெல் அஸ்ஸாமில் பணியாற்றியபோது அவனுக்குச் சமையல் செய்வதற்காக நியமிக்கபட்ட முலாக்கையும் அவர்கள் உடன் அழைத்து வந்திருந்தார்கள்.

லாரா வந்தபிறகும் கிளாவெல் காட்டிற்குள் தான் சுற்றிக் கொண்டிருந்தான். அவள் தனது தனிமையைப் போக்கிக் கொள்ள விருந்து நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தாள். அப்போது வருகை தரும் ஜமீன்தார்களுக்குச் சமைப்பதற்கென்றே ஒரு இந்தியன் குக்கை ஏற்பாடு செய்யும்படி சொல்லியிருந்தார்.

சபேசன் அப்படித்தான் கிளாவெல்லிடம் வேலைக்குச் சேர்ந்தான். அவன் வந்து சேர்ந்த முதல்நாளே கிளாவெல்லின் கோபத்திற்கு ஆளாகினான். காரம் அதிகமாக கோழி இறைச்சியை சமைத்துவிட்டான் என்று அவன் மீது காறி துப்பினான் வால்டர். அத்தோடு அவன் செய்திருந்த உணவில் மூத்திரம் பெய்தான். அப்படியும் கோபம் அடங்கவில்லை  சூட்டுக்கோலை காயவைத்து அவனது முதுகில் மூன்று கோடுகள் போட்டுவிட்டான். நாயை போலத் தன் உத்தரவிற்குப் பணிந்து நடக்க வேண்டும் என்று சப்தமிட்டான்

சபேசனுக்கு அந்த காயம் ஆற இரண்டு வாரங்களானது. காட்டு மூலிகைகளை கொண்டு அவனே சுய வைத்தியம் செய்து கொண்டான்.

கிளாவெல் காட்டிற்குள் சென்றுவிடும் நாட்களில் லாரா அவன் செய்து தரும் சைவ உணவுகளை விரும்பிச் சாப்பிட்டாள். குறிப்பாக அவன் செய்து தரும் இனிப்பு வகைகள் மிகவும் பிடித்திருந்தது.  பால் பாயாசத்தை பிள்ளைகளும் விரும்பி சாப்பிட்டார்கள். ஆனால் கிளாவெல் இருக்கும் நாட்களில் ஒரு போதும் அந்த இனிப்பை சபேசன் செய்வதில்லை.

லாரா அவனை இந்தியன் குக் என்றே அழைத்தாள். துரையிடம் வேலைக்கு வந்த ஆறு மாதங்களில் சபேசன் அறைகுறையாக இங்கிலீஷ் கற்றுக் கொண்டுவிட்டான். அந்தப் பாரஸ்ட் பங்களாவில் அவனைப் போல இன்னும் இரண்டு சமையற்காரர்கள் இருந்தார்கள். அதில் ஒருவன் கிழக்கு வங்காளத்தைச் சேர்ந்தவன் அவனது பெயர் முலாக். மற்றவன் இங்கிலாந்தில் இருந்து மேடம் லாராவுடன் வந்தவன். அவனது பெயர் ஜுலியன். அவன் தான் இங்கிலீஷ் பிரேக்பாஸ்ட்  தயாரிப்பவன்.

ஜூலியனும் முலாக்கும் வனவிடுதியினுள் இருந்த சிறிய அறை ஒன்றில் ஒன்றாகத் தங்கிக் கொண்டார்கள். அவர்களுடன் சேர்ந்து இருக்கச் சபேசனுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே. சமையலறைக்குள்ளே சிறிய அவன் தங்கிக் கொண்டான்.

சபேசன் ஒரு நாள் லாராவிற்காகப் பலாப்பழ இனிப்பு இலை அடை செய்து கொடுத்தான்.

“எதற்காக இந்தியர்கள் இவ்வளவு இனிப்பு சாப்பிடுகிறார்கள்“ என்று அவள் கேட்டாள்.

“இனிப்பு தான் நாக்கை விழிக்க வைக்ககூடியது. நாக்கில் இனிப்பு பட்டதும் மனதில் சந்தோஷம் வந்துவிடும்“ என்று சொன்னான் சபேசன். அதைக்கேட்டு லாரா சிரித்தாள்.

இங்கிலாந்தில் அவள் சாப்பிட்டிருந்த இனிப்பு வகைகளுக்கும் இந்திய இனிப்பிற்கும் நிறைய வித்தியாசமிருந்தது. குறிப்பாக இந்திய இனிப்பு வகைகள் நாக்கில் பட்டதும் சுவை உடலில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்திவிடுகிறது. அதிலும் பாலில் செய்யப்படும் இனிப்பு வகைகள் தரும் சுவைக்கு நிகரேயில்லை.

சபேசன் சைவ உணவு வகைகள் மட்டுமின்றி மீன் கோழி இரண்டினையும் மிக ருசியாகச் சமைத்துக் கொடுத்தான். அவன் சமையலின் காரம் லாராவிற்குக் கண்ணீர் வரவழைத்தது. ஆனால் வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் ரசித்துச் சாப்பிட்டார்கள். அது லாராவிற்குப் பெருமையாக இருந்தது.

சபேசன் தன் அறையில் தேவையான பலசரக்குப் பொருட்களை வாங்கி வைத்துக் கொண்டான். மண்பாத்திரங்கள். வெண்கலப் பாத்திரங்கள். கண்ணாடிப் பாத்திரங்கள் என விதவிதமான பாத்திரங்களைத் தேர்வு செய்து வைத்துக் கொண்டான். திருகையும் அம்மியும் உரலையும் பின்வாசலில் போட்டு வைத்துக் கொண்டான். சமையலுக்கென மழைத்தண்ணீரை ஒரு அண்டாவில் பிடித்து வைத்துக் கொண்டிருந்தான்.

அது எதற்காக என லாரா கேட்டபோது “மழைத்தண்ணீரின் ருசி கிணற்று தண்ணீருக்கு கிடையாது“ என்றான்.

சபேசனிடமிருந்து இந்திய இனிப்பு வகைகளைச் செய்வதற்கு லாரா கற்றுக் கொண்டாள். அதைச் சிறிய நோட்டில் குறிப்புகளாகவும் எழுதிவைத்துக் கொண்டாள்.

சபேசன் ஒரு நாள் சொன்னான்

“சமைப்பவர் மனதிலிருந்துதான் உணவிற்கு ருசி வருகிறது. சமைப்பவன் மனது கசந்து போனால் உணவில் அது வெளிப்படவே செய்யும்“

லாரா அதை உணர்ந்திருக்கிறாள். அவள் கோபத்தில் செய்த கேக் எதுவும் ருசியாக இருந்ததில்லை

ஒரு நாள் அவள் சபேசனிடம் கேட்டாள்

“நீ ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை“

“பிரம்மச்சாரிக்கு தான் கைமணம் அதிகமிருக்கும். “

“அதற்காகத் திருமணம் செய்து கொள்ளாமலா இருப்பாய்“

“சமையலை விட்டுவிட்டால் திருமணம் செய்து கொள்வேன்“ என்று சொல்லி சிரித்தான்.

சமையல் நேரங்களைத் தவிர மற்றவேளைகளில் முலாக்கை அந்த வீட்டில் காணவே முடியாது. காட்டிற்குள் சுற்றியலைந்து கொண்டிருப்பான். பழங்குடி பெண் ஒருத்தியின் பின்னால் அவன் சுற்றுவதைச் சபேசனே ஒரு நாள் பார்த்தான்.

வால்டர் கிளாவெல் துரையின் வீட்டுவேலையாட்கள். குதிரைவண்டி ஒட்டுகிறவன். தபால் கொண்டு போகிறவன். புல்வெட்டுகிறவன், ஆயா மற்றும் இரவுக்காவல் செய்பவர்கள் அத்தனை பேருக்கும் தனிச் சமையல். அந்தச் சமையல் வீட்டிற்கு வெளியே தனியே நடந்தது.

சபேசன் காலையில் வெறும் எலுமிச்சை சாறு மட்டும் தான் குடிப்பான். மதியம் சோறு. குழம்பு வெறும் அப்பளம். இரவில் மோர்விட்ட சாதம். வடுமாங்காய். இவ்வளவே அவனது சாப்பாடு. இத்தனை ருசியாகச் சமைத்தும் அவன் ஒருபோதும் இனிப்பு சாப்பிடுவதில்லை. ஆசையாக எந்த உணவினையும் செய்து சாப்பிடுவதில்லை.

கிளாவெல்லிடம் பணியாற்ற வந்தபிறகு சபேசன் ஒரேயொரு விஷயத்தைப் புதிதாகக் கற்றுக் கொண்டிருந்தான். அது குடிப்பது. அவன் பார்ட்டியில் மீதமாகிப்போட்ட புட்டிகளைச் சேகரித்து வைத்திருப்பான். இரவானதும் அதைக் குடிக்க ஆரம்பிப்பான்.

அந்தக் காட்டு பங்களாவின் பின்புறம் விரிந்து கிடந்தது தென்வனம் இரவில் காட்டுப்பூச்சிகளின் இரைச்சலும் மின்மினிகளின் பறத்தலுமிருக்கும். வீட்டின் பின்புறமிருந்த கோட்டைச்சுவர் பாதி உடைந்து கிடந்தது. அதற்கு அப்பால் ஒரே புதர் செடிகள்.

வனவிடுதியில் மின்சார வசதி கிடையாது. பதினாறு எண்ணெய் விளக்குகளும் ஆறு பெரிய மெழுகுவர்த்திகளும் தினசரி ஏற்றப்பட்டன. இங்கிலாந்தில் இருந்து கொண்டு வந்திருந்த மெழுகுவர்த்திகளையும் மேடம் லாரா தன் அறையில் மட்டுமே பயன்படுத்தினாள். கொசுவை விரட்டுவதற்காக மாலை நேரம் காய்ந்த வேப்பிலை பொடியை தூவி புகை போடுவார்கள். அப்போது லாராவும் அவளது மகளும் அறையின் ஜன்னல்களை மூடி உள்ளே பதுங்கிக் கொள்வார்கள்.

பாரஸ்ட் பங்களாவில் இருந்து மேற்கே நடந்தால் மரப்பாலம் ஒன்று காணப்பட்டது. அதைக்கடந்து மேலேறினால் காட்டாறு ஒ. அந்த ஆற்றின் கரையில் இரண்டு பெரிய பாறைகள் யானை படுத்துகிடப்பதை போல உயர்ந்திருந்தன. அந்தப் பாறையின் மீதேறி நின்றபடி மாலை நேரத்தில் மேடம் லாரா தொலை தூரத்து அருவியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பாள். சில நாட்கள் வானவில் தென்படும். ஒரு சிறுமியை போல வியந்து ரசித்தபடியே இருப்பாள். . பருத்து உயர்ந்து நின்ற மரங்களும் புதர்செடிகளும் காட்டுக்கொடிகளும் நிரம்பிய அந்த மேற்குபாதையில் அவள் தனியே நடந்து செல்வாள். சில வேளைகளில் காட்டுகோழிகள் வழியில் எதிர்படுவதுண்டு..

லாரா இங்கிலாந்தில் இருந்து கப்பலில் வந்த போது அவளது வயது பதினெட்டு. அவள் வந்த கப்பல் முழுவதும் இளம் பிரிட்டீஷ் அதிகாரிகளைத் திருமணம் செய்து கொள்வதற்காக இளம்பெண்கள் இந்தியா வந்திருந்தார்கள். அரசு செலவிலே அப்படியான ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

லாராவின் துணைக்கு அவளது அத்தை உடன் வந்திருந்தாள். மூன்று மாத காலத்தில் அவர்கள் இந்தியாவில் ஒரு இங்கிலீஸ்காரனைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும். ஒருவேளை சரியான மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்று இங்கிலாந்து திரும்புவதாக இருந்தால் அவர்கள் சொந்த செலவில் தான் செல்ல வேண்டும்.

இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் அதிகாரி ஒருவனைத் திருமணம் செய்து கொண்டுவிட்டால் கர்ப்பிணியானதும் இங்கிலாந்து திரும்பி போய்விடலாம். அதன்பிறகு அவளது அத்தனை செலவுகளையும் அரசே ஏற்றுக் கொள்ளும். அப்படித் தான் லாரா கிளாவெல்லை திருமணம் செய்து கொண்டாள்.

திருமணத்திற்குப் பிறகே அவனது மூர்க்கமான செயல்களும் மிதமிஞ்சிய குடியும் அவளுக்குத் தெரிய வந்தன. போதையில் பலமுறை அவளை அடித்திருக்கிறான். ஒருமுறை அவளது வலதுகை உடைந்தும் போயிருக்கிறது. கர்ப்பிணியானவுடன் அவள் இங்கிலாந்து போய்விடலாம் என்று கனவு கண்டாள். ஆனால் வால்டர் கிளாவெல் அவளை அனுப்பி வைக்கவில்லை. மாறாக இனி அவள் எப்போதும் இங்கிலாந்து போகமுடியாது என்றும் அறிவித்தான். லாராவிற்கு வேறுவழியில்லை. அவள் கிளாவெல்லை சகித்துக் கொண்டு அவனோடு வாழ்ந்து வந்தாள்.

தென்வனத்திலிருந்த பழங்குடிகள் கிளாவெல்லை கடவுளைப் போலவே நடத்தினார்கள். மதுவேறிச் சிவந்த கண்களுடன் ஒற்றை ஆளாக அவன் குதிரையில் சுற்றியலைந்து கொண்டிருந்தான்.

அருவியை ஒட்டிய மரத்தில் அமைத்த பரண்வீடு ஒன்றில் வால்டர் கிளாவெல் தங்கிக் கொண்டான். இரவெல்லாம் குடித்தான். புகைத்தான். பழங்குடி பெண்களை அனுபவித்தான். சில நாட்கள் அவன் நிர்வாணமாகக் காட்டில் அலைவதுண்டு. இரையெடுக்க அலையும் ஒநாய் போலவே அவன் நடந்து கொண்டான். காட்டின் தனிமை அவன் மூர்க்கத்தை அதிகமாக்கியது. அதுவும் மழைபெய்யும் நாட்களில் அவன் மிகுந்த உக்கிரம் கொள்வான். இடியை விடச் சப்தமாகக் கத்துவான். மழையின் ஊடாகவே காட்டில் அலைந்து திரிவான். காட்டுக்குரங்குகள் அவனைக்கண்டு பயந்து அலறின. காட்டில் அவன் வைத்தது தான் சட்டம். சுள்ளி பொறுக்க வந்த ஆட்களை அடித்து விரட்டினான்

இரண்டு ஆண்டுகளுக்குள் அந்தக் காட்டினை உள்ளங்கையின் ரேகைகளைப் போலத் துல்லியமாக அறிந்திருந்தான்.

ஒரு நாள் மதராஸிலிருந்து அவனுக்கு ஒரு தந்தி வந்திருந்தது. கென்னிங் பிரபுவும் அவரது மனைவியும் புலிவேட்டைக்காகத் தென்வனத்திற்கு வருகிறார்கள். அவர்களுக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்து தரவேண்டும் என்று தந்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கிளாவெல்லே திருநெல்வேலி ரயில் நிலையத்திற்குப் போய்க் கென்னிங் பிரபுவையும் அவரது மனைவியினையும் வரவேற்று அழைத்துவந்தான். டோரதிக்கு முதல்பார்வையிலே கிளாவெல்லை பிடிக்கவில்லை. அவர்களைத் தனது காரில் அழைத்துச் செல்லும் போது கிளாவெல். டோரதியை விழுங்குவது போலப் பார்த்துக் கொண்டிருந்தான்.

கென்னிங்கின் மனைவி டோரதி பேரழகியாக இருந்தாள். தலையில் அவள் கட்டியிருந்த சிவப்பு ரிப்பனும் அவள் உடலில் பூசியிருந்த வாசனை தைலமும் அவனைக் கிறக்கமடையச் செய்தன.

.கென்னிங் பருத்த தொப்பைகள் கொண்ட குள்ள உருவமாக இருந்தார். சர்ச்சலின் சுருட்டைப் போல ஒன்றை பிடித்துக் கொண்டிருந்தார். கென்னிங்கிற்காகக் காட்டிற்குள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூடாரம் ஒன்றில் அவர்களைத் தங்க வைத்தான் கிளாவெல்.

மறுநாள் காலை அவன் டோரதியை சந்தித்துக் காட்டில் பறித்துக் கொண்டுவரப்பட்ட பூக்கள் எனச் சிவப்பும் மஞ்சளுமான பூக்களைக் கொடுத்தான். அதைக் கையில் வாங்கும் போது அவளுக்கு அச்சமாக இருந்தது.

கென்னிங் பிரபுவை அருவியில் குளிப்பதற்காக அழைத்துப் போகவதாகச் சொன்னார்

“அவ்வளவு தூரம் என்னால் நடக்கமுடியாது “என்றார் கென்னிங்

“உங்களை டோலியில் வைத்துத் தூக்கிக்கொண்டு போவார்கள்“ என்றான் கிளாவெல்

அதன்படியே கென்னிங் பிரபுவை நான்கு பேர் அருவி வரை மூங்கில் இருக்கை ஒன்றில் உட்காரவைத்து தூக்கிக் கொண்டு போனார்கள். கென்னிங் அருவியில் குளித்தபடியே குடித்தார். நிர்வாணமாக நடனமாடினார். அவருக்குக் கிளாவெல்லை மிகவும் பிடித்துப் போனது.

திரும்பி வரும்போது வெள்ளிகிழமை காலையில் புலி வேட்டைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகச் சொன்னான் . டோரதி தனக்கு ஒரு புலிக்குட்டி உயிருடன் வேண்டும். பிடித்துத் தரமுடியுமா எனக்கேட்டாள். நிச்சயம் அவள் காட்டினை விட்டுப் போவதற்கு ஒரு புலிக்குட்டியை பிடித்துத் தருவதாகச் சொன்னான்.

புலிவேட்டைக்கு முரசு அடித்து விரட்டுபவர்கள். துணையாட்கள். வில்லாளிகள், துப்பாக்கி ஏந்திய சிப்பாய்கள் சகிதமாகக் கென்னிங் பிரபு யானை மீதேறி வேட்டைக்குக் கிளம்பினார். அவர்களுக்கு முன்பாகவே கிளாவெல் காட்டிற்குள் போயிருந்தான்.

காடு விடிகாலையில் புதுமணம் கொண்டுவிடுகிறது. சூரிய வெளிச்சம் படுவதற்கு முன்பு ஒளிரும் காட்டின் அழகு வியப்பூட்டக்கூடியது. டோரதி இளம்பச்சை நிற கவுன் அணிந்திருந்தாள். தலையில் வெள்ளை தொப்பி. காட்டிற்குள் உதிர்ந்து கிடந்த பறவையின் இறகுகளை அவளுக்காகச் சேகரித்துக் கொடுத்தார்கள். அதைக் கையில் ஏந்தியிருந்தாள். காட்டிற்குள் இருந்த குளிர்ச்சி இங்கிலாந்தில் இருப்பது போலவே உணரச்செய்தது. புலி எங்கே மறைந்திருக்கும். எந்த இடத்தில் வேட்டை நடக்கப் போகிறது என ஆர்வமாகக் கேட்டபடியே வந்தாள்.

கென்னிங் பிரபு முந்தைய இரவில் நிறையக் குடித்திருந்தார். அவரது கண்பிதுங்கி வெளியே வருவது போலப் பெரியதாகியிருந்த்து. கண்ணுக்குக் கிழேயுள்ள பை சரிந்து தொங்குவது போலிருந்தது. அவர் யானையின் மீது அமர்ந்திருந்தார். இன்னொரு யானையில் டோரதி வந்து கொண்டிருந்தாள். யானையின் முன்னால் ஈட்டி ஏந்திய வீர்ர்கள் நடந்து கொண்டிருந்தார்கள். யானை ஆடி அசைந்து நடந்து கொண்டிருந்தது

அவர்கள் ஆற்றின் கரைக்கு வந்து சேர்ந்த போது கிளாவெல்லைக் காணவில்லை. எங்கிருந்தோ அவனது சப்தம் மட்டும் கேட்டது. அடுத்தச் சில நிமிஷங்களுக்குப் பிறகு புலி ஒன்று ஒடிவருவது தெரிந்தது. சிகாரிகள் கென்னிங் பிரபுவிடம் புலி அவர்களை நோக்கி வந்து கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்

கென்னிங் பிரபு தனது வேட்டை துப்பாக்கியை உயர்த்திக் குறி வைத்தார். புதர்செடிகள் அசைய ஆரம்பித்தன. கென்னிங் பிரபு அந்தப் புதரை நோக்கி சுட்டார். ஏதோவொரு விலங்கு அடிபட்டு ஒடுவது போலத் தெரிந்த்து. கென்னிங் அந்த விலங்கை நோக்கி யானையைச் செலுத்த ஆரம்பித்தார். யானை வேகமாக நடந்தது. சரிவு ஒன்றில் யானை இறங்கும் போது மரத்தின் உயரத்தில் நின்றிருந்த கிளாவெல் தனது துப்பாக்கியால் குறிபார்த்துக் கென்னிங்கை சுட்டான். யானை மீது இருந்து கென்னிங் சரிந்து விழுந்தபோது அடிவயிற்றில் இருந்து ரத்தம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.

வெடிச்சப்தம் கேட்ட யானை புதர்களை மிதித்து நசுக்கியபடியே வேகமாக ஒடியது.

கிளாவெல் செத்துகிடந்த கென்னிங் அருகில் வந்து நின்று காலால் அவர் உடலைப் புரட்டிப்பார்த்தான். பிறகு தனது துப்பாக்கியை வானிற்கு உயர்த்திச் சுட்டான். இப்போது அவன் வேட்டைக்கு ஏற்பாடு செய்திருந்த ஆட்கள் அனைவரும் டோரதி இருந்த யானையை அப்படியே விட்டுவிட்டு விலகிப் போக ஆரம்பித்தார்கள். எங்கே போகிறார்கள் எனப்புரியாமல் டோரதி சப்தமிட்டாள். அந்த யானை மேற்கு நோக்கி நடக்க ஆரம்பித்தது. டோரதி யானையின் மீதிருந்து குதித்துவிட முயன்றாள்.

பாகன் அதை அனுமதிக்கவில்லை. அவள் பாகனை மீறி யானையின் மீதிருந்து கிழே இறங்க முயன்றபோது கிளாவெல் அருகில் வந்திருந்தான். அவன் யானையை நிறுத்தச்சொல்லி அவளைக் கிழே இறக்கிவிட்டான். கென்னிங் பிரபுவிற்கு அடிபட்டுவிட்டது. புலி அவனைத் தாக்கிவிட்டதால் ரத்தவெள்ளத்தில் மிதக்கிறார். வாருங்கள் எனத் தன்னோடு அழைத்துக் கொண்டு போனான்.

அவள் பயமும் குழப்பமுமாகக் கிளாவெல்லை பின்தொடர்ந்தாள். கிளாவெல் மரத்தில் கட்டியிருந்த பரண் வீட்டிற்குள் அவளை அழைத்துச் சென்றபோது அங்கே யாருமில்லை

அவள் கோபத்துடன் “கென்னிங் எங்கே“ எனக்கேட்டாள்

வானை நோக்கி கையைக் காட்டியபடியே கிளாவெல் சிரித்தான். அவளுக்குப் புரிந்துவிட்டது. கிளாவெல் தன்னை அடைவதற்காகவே கென்னிங்கை கொன்றிருக்கிறான். கிளாவெல் அவளை நோக்கி நெருங்கி வந்து அவளது தோளை தனது வலிமையான கைகளால் பற்றிக் கொண்டபடியே சொன்னான்

“நீ காட்டை விட்டு போகமுடியாது. “

அவள் கிளாவெல்லின் கைகளைத் தள்ளிவிலக்க முயன்றாள். கிளாவெல் சிரித்தபடியே சொன்னான்

“புலிக்குட்டி வேண்டும் என்று கேட்டாயே.. நான் ஒரு புலி என்னையே தருகிறேன் “

அவள் ஒங்கி அடிப்பது போலக் கைகளை உயர்த்தினாள். தனது அகன்ற கைகளால் அவள் முகத்தில் ஒங்கி அறைந்த கிளாவெல். அவளைத் தரதரவெனத் தனது வெட்டவெளியை நோக்கி இழுத்துக் கொண்டு போனான். உடைகளைக் கிழித்து அவளுடன் கூடியதை புணர்ச்சி எனச் சொல்லமுடியாது. கொல்லப்பட்ட மானின் சதையைப் புலி பிய்த்து தின்னுவது போன்ற வேட்டையது.

தொடைகள் கிழிந்துபோக மார்பில் நகம் பதிந்து கீறல் விழ, வீங்கிய உதடுகளும் நடுங்கும் கால்களுடன் டோரதி கட்டிலில் கிடந்தாள். கிளாவெல் அவள் அருகில் உட்கார்ந்தபடியே தன் நாவால் அவள் உடலை நக்க ஆரம்பித்தான். ரத்தம் ருசிக்கும் மிருகத்தின் செயல். டோரதி அலறினாள். அந்த இரவில் காட்டில் அவளது கூக்குரல் தனியே கேட்டுக் கொண்டேயிருந்தது. ஆறு இரவு பகல்கள் அந்த மரவீட்டிற்குள்ளாகவே டோரதி நிர்வாணமாகக் கிடந்தாள். கிளாவெல் குடிப்பதும் அவளுடன் கூடுவதுமாகவே இருந்தான்.

ஏழாம் நாளின் காலையில் அவளை நிர்வாணமாக நடத்தி ஆற்றின் கரைக்கு அழைத்துப் போனான். அவளை ஆற்று நீரில் இறங்கச் செய்து வேடிக்கை பார்த்தான். பிறகு பாறை ஒன்றில் ஏறி நிற்க சொன்னான். குளிரில் ஜில்லிட்ட உடலுடன் அவள் கைகூப்பி வணங்கினாள். அவளைத் திரும்பி நிற்கச் சொன்னான் கிளாவெல். ஈரம் சொட்டும் முதுகுடன் அவள் நின்றிருந்தாள். கிளாவெல் தனது ரிவால்வாரை எடுத்து அவளது முதுகில் சுட்டான். அறுபட்ட வாழைமரம் போல விழுந்தாள் டோரதி. காலால் அவள் உடலை காலால் எத்திவிட்டாள். ஆற்றில் மிதந்து சென்றாள் டோரதி.

கிளாவெல் சந்தோஷ மிகுதியில் ஒடும் தண்ணீரை நோக்கி ஒரு முறை சுட்டான்.

கென்னிங்பிரபுவும் அவனது மனைவியும் காட்டுபுலியால் வேட்டையாடப்பட்ட நிகழ்வை அவன் ரிப்போர்ட் செய்த போது கம்பெனி அதைப்பற்றித் துளி சந்தேகத்தையும் எழுப்பவில்லை.

ஆனால் இதை லாராவால் மன்னிக்க முடியவில்லை. அவள் நடந்த விஷயங்களைக் கேள்விபட்டபிறகு கிளாவெல்லுடன் ஒன்றாகப் படுப்பதற்குக் குற்றவுணர்வு கொண்டாள். அவனை என்ன செய்வது என அவளுக்குப் புரியவேயில்லை.

மழைக்காலத்தின் நடுவே ஒரு நாள் கிளாவெல் குதிரையிலிருந்து தவறி விழுந்தான். இடுப்பு எலும்பில் சிறிய முறிவு ஏற்பட்டிருந்தது. ஆகவே அவன் மூலிகை வைத்துக் கட்டி நாற்பத்தியெட்டு நாட்கள் ஒய்வெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டான்

வேறு வழியின்றி நாற்பத்தியெட்டு நாட்களும் அவன் வனவிடுதியில் இருக்க வேண்டிய கட்டாயமானது.

அந்த நாட்களில் அவன் சதா குடித்தபடியே இருந்தான். போதையில் முலாக் மீது மதுவை ஊற்றி நெருப்பு வைத்தான். முலாக் அலறியபடியே ஒடும்போது லாரா பயந்து போனாள். அதன்பிறகு தான் கிளாவெல் சபேசனுடன் நெருக்கமாகத் துவங்கினான்.

குறிப்பாக வலியை மறப்பதற்காகச் சபேசன் செய்து கொடுத்த இனிப்பு அடையைத் தின்றவுடன் உடல் வலி மறையத் துவங்கியதோடு விசித்திரமான கனவுகள் வரவும் துவங்கின.

அந்தக் கனவுகளிலிருந்து அவனால் விழித்துக் கொள்ளமுடியவில்லை. ஒரு நாள் கிளாவெல்லின் கனவில் அருவி அவன் வீட்டிற்குள் விழுந்து கொண்டிருந்தது. யானைகள் வானில் பறந்து கொண்டிருந்தன. உடல் எடையற்றுப் போனது.

அந்த இனிப்பு அடைக்காகக் கிளாவெல் ஏங்க ஆரம்பித்தான். அதைத் தயாரிக்கத் தாமதமான போது கைகள் நடுங்க காத்திருந்தான்.

அந்த அடையைக் கிளாவெல்லிற்காக மட்டுமே தயாரிப்பதாகவும் அதை வேறு எவரும் சாப்பிடக் கூடாது என்றும் சபேசன் சொன்னான்.

லாரா அதில் ஒரு துண்டினை சாப்பிடக் கேட்டபோதும் அவன் மறுத்துவிட்டான்

இந்த இனிப்பினை சாப்பிட்டு பழகிய கிளாவெல் சதா கனவுகளிலே மிதந்தான்.

பதினெட்டு நாட்கள் தொடர்ந்து இனிப்பு அல்வாவை தின்று கனவுகளில் சஞ்சரித்த கிளாவெல் பத்தொன்பதாம் நாள் காலை படுக்கையில் இருந்தபடியே கத்தினான்

அவனது குரல் அடிபட்ட விலங்கு கத்துவது போலிந்தது. பொதுவாக அவன் கோபத்தில் சப்தம் போட்டவுடன் லாரா மதுப்புட்டியை கொண்டு போய் வைப்பது வழக்கம். ஆனால். அன்றைக்கும் லாரா போன போது கிளாவெல் உடல் முழுவதும் கொப்பளித்து வீங்கியிருந்தது.

ஏதோ பூச்சி கடித்திருக்கிறது. மருத்துவர் ஹாமில்டன்னை அழைத்துக் கொண்டு வரச்சொல் என்று கத்தினான். லாரா தலையசைத்தபடியே அறையை விட்டு வெளியே சென்றாள்

ஹாமில்டன் வந்து பரிசோதனை செய்வதற்கு உடல் முழுவதும் கொப்பளங்கள் பெருகியிருந்தன. ஹாமில்டனுக்கு அது என்ன நோய் என்று புரியவில்லை. அந்தக் கொப்பளங்களிலிருந்து ரத்தம் கசிந்து கொண்டேயிருந்தது.

கிளாவெல் வலி தாங்கமுடியாமல் கத்தினான். பித்தேறியவன் போல ஒலமிட்டான். அவன் குரல் அடங்கவேயில்லை.

லாராவிற்கு என்ன நோய் இது என்று புரியவில்லை. அவள் பயந்து போயிருந்தாள்

சபேசன் ஒரு இரவு அவளிடம் வந்து சொன்னான்

“இனி என்னால் இங்கே வேலை செய்ய முடியாது. நான் ஊருக்குக் கிளம்புகிறேன். நீங்களும் இங்கிலாந்து கிளம்புங்கள். இனி கிளாவெல்லால் பிழைக்க முடியாது. அவனுக்காக நான் செய்து கொடுத்த இனிப்பு அவன் உடலை நஞ்சாக்கிவிட்டது. அவன் மூன்று நாட்களில் இறந்துவிடுவான். இறப்பதற்கு முன்பு வலியின் உச்சத்தை அவன் அனுபவிப்பான். கதறுவான். ஒலமிடுவான். அந்தக் குரலை இந்தக் காடு கேட்கட்டும். சமையல் என்பது ஒரு கலை. அது உடலை வளர்ப்பதற்கு மட்டும் உதவி செய்வதில்லை. உடலை அழிப்பதற்கும் தான். கிளாவெல்லை போன்றவர்களை வேறு வழியில் அழிக்க முடியாது. இந்த இனிப்பிற்காக நான் தேடிச்சேகரித்த எல்லா மூலிகைகளும் இந்தக் காட்டில் விளைந்தது தான். கிளாவெல் காட்டைத் தன் அதிகாரத்தில் வைத்திருந்தான். ஆனால் காடு எவர் அதிகாரத்திற்கும் கட்டுப்பட்டதில்லை. அதைக் காடு என் வழியாக நிரூபித்திருக்கிறது. “

சபேசன் சொன்னது போலவே மூன்றாம் நாளை அழுது புலம்பி ஊளையிட்டு கிளாவெல் இறந்து கிடந்தான். லாராவும் அவள் பிள்ளைகளும் விநோதமான நோய் தாக்கி கிளாவெல் இறந்துவிட்டான் என்ற அறிக்கையில் கையெழுத்திட்டு விட்டு லண்டன் புறப்பட்டார்கள்.

இங்கிலாந்தில் வசித்த போது லாரா எப்போதாவது தனது நோட்புக்கை பார்த்து இந்திய இனிப்பு வகைகளைச் செய்து பார்ப்பாள். அப்போதெல்லாம் அவள் சபேசனை நினைத்துக் கொள்வாள். கூடவே தென்வனக்காட்டினையும் கிளாவெல்லின் ஒலத்தையும் சேர்த்தே நினைத்துக் கொள்வாள்.

இனிப்பு சந்தோஷத்தை மட்டும் நினைவுபடுத்துவதில்லையே

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 20, 2021 11:00

March 19, 2021

கறுப்பு ரத்தம்

புதிய சிறுகதை

நர்மதா லிப்டை விட்டு வெளியே வந்தபோது இரண்டு கார்களுக்கும் நடுவில் இருந்த இடைவெளியில் அந்தக் கிழவர் தன் பேத்தியுடன் நிற்பதைக் காணமுடிந்தது.

மூன்று நாட்கள் முன்பாக அந்தக் கிழவர் அவள் வேலை செய்யும் சேனலிற்கு வந்து தன்னுடைய பேத்தியின் கல்லூரிப் படிப்பிற்குத் தேவையான பண உதவி வேண்டி டிவி செய்தியில் ஒளிபரப்பும்படி கேட்டார்.

அப்படிச் செய்யமுடியாது என அவர்கள் மறுத்துப் பேசியதை அவர் கேட்டுக்கொள்ளவேயில்லை.

கிழவருக்கு எழுபது வயதிருக்கும். தோளைவிட இறங்கிய கைகள் கொண்ட பெரிய சட்டை. அது மிக அழுக்காக இருந்தது. தோளில் வெளிறிய துண்டு ஒன்றைப் போட்டிருந்தார். கைகளில் வயதின் சுருக்கம். பேத்திக்கு பதினாறு வயதிருக்கும். இளமஞ்சள் நிற சுடிதார் அணிந்திருந்தாள். பொருத்தமில்லாத ரோஸ் வண்ண துப்பட்டா. காலில் ரப்பர் செருப்பு. கையில் ரப்பர் வளையல்கள். அவள் கையில் ஒரு செல்போன் இருந்தது.

கிழவர் பிடிவாதமான குரலில் சொன்னார்

“என் பேத்தி முகத்தை டிவியில பாத்தா கட்டாயம் உதவி செய்வாங்க.”

செய்திப் பிரிவில் வேலை செய்யும் ஆனந்த் அது இயலாத விஷயம் என்று சொல்லி அவரை வெளியே அழைத்துக்கொண்டு போனான். வேண்டுமானால் ஆபீஸில் வேலை செய்கிறவர்கள் முடிந்த பணத்தை அவருக்குக் கொடுத்து உதவலாம் என்று சொன்னார் நியூஸ் எடிட்டர் சாரதி.

கிழவர் அன்று முழுவதும் சேனலின் வாசல்படிக்கட்டை ஒட்டி நின்றுகொண்டிருந்தார். இரவில் அவள் கிளம்பும் போதும் பார்த்தாள். தலைகவிழ்ந்து நின்றிருந்தார்கள். இருவரும் சாப்பிட்டார்களா என்று கூடத்தெரியாது. அதன் மறுநாளும் அவர்கள் காலையிலே சேனல் வாசலில் வந்து நின்றிருந்தார்கள். ஒருவேளை பக்கத்து பிளாட்பாரத்திலே தங்கிவிட்டார்களோ என்னவோ.

இந்த முறை அவர்களை உள்ளே காவலாளி விடவேயில்லை. கிழவர் சேனல் செயல்பட்டு வந்த அடுக்குமாடி அலுவலகத்தின் வாசல்படியை ஒட்டி நாள் முழுவதும் நின்றிருந்தார். அவரது பேத்தி நிமிர்ந்துகூட எவரையும் பார்க்கவில்லை.

நர்மதாவிற்கு அவர்களுக்கு எப்படி உதவி செய்வது எனத்தெரியவில்லை. ஒருமுறை அவர்களிடம் பேசிப் பார்த்தபோதும் டிவி நியூஸ்ல காட்டுனா உதவி செய்வார்கள் என்று திரும்பத் திரும்பக் கிழவர் சொல்லிக்கொண்டேயிருந்தார். அது நர்மதாவால் இயலாத காரியம். மூன்றாம் நாளில் அந்தக் கிழவரை சேனலில் ஒருவரும் பொருட்டாக நினைக்கவேயில்லை. ஆயிரம் பரபரப்புகளுக்குள் அவரை யார் கண்டுகொள்ளப்போகிறார்கள்.

நர்மதா சேனலின் செய்திப்பிரிவில் வேலை செய்துகொண்டிருந்தாள். வாரம் புதன்கிழமை இரவு ஒளிபரப்பாகும் “உண்மையின் குரல்“ என்ற நிகழ்ச்சியை அவள்தான் தயாரித்து வந்தாள். சமூகப்பிரச்சனைகளைப் பேசும் அந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இரண்டு முறை அந்த நிகழ்ச்சிக்காக அவள் மீது நீதிமன்ற வழக்குத் தொடரப்பட்டது. பலமுறை போனில் முகம் தெரியாத ஆட்கள் மிரட்டியிருக்கிறார்கள். இந்த மிரட்டலும் வழக்கும் அவளது செயல்பாட்டினை மிகவும் வேகமாக்கியது. அவளும் அவளது குழுவினர்களும் மிகுந்த போர்குணத்துடன் மறைக்கபட்ட விஷயங்களை வெளிப்படுத்தினார்கள்.

புதன்கிழமை இரவு ஒன்பது மணிக்கு அவளது நிகழ்ச்சி ஒளிபரப்பானவுடன் போனை அணைத்து வைத்துவிடுவாள். இல்லாவிட்டால் இரவெல்லாம் வசைகளைக் கேட்க நேரிடும். ஆரம்பத்தில் அவளும் பதிலுக்குப் பதில் சண்டையிட்டாள். இப்போது அது வீண் வேலை என்று புரிந்திருந்தது. தான் நிறையப் பேரின் கோபத்தை, பகையைச் சம்பாதித்து வருவதைப் பற்றி அவள் கவலைப்படவேயில்லை.

கேண்டினில் சாப்பிடச் செல்லும் சில நேரம் கணேஷ் கேலியாக “இந்த வாரம் பாம்பு யாரைக் கொத்தப்போகிறது” என்று கேட்பான். நர்மதா சிரித்தபடியே “இந்த விஷம் எல்லாம் அவங்களை ஒண்ணும் பண்ணாது. பாம்புக்கு நாக்கு மட்டும்தான் விஷம். அவங்களுக்கு உடம்பு பூராமே விஷம் தான்,” என்பாள்.

அதைக் கேட்டு கணேஷ் சிரிப்பான். அந்த அலுவலகத்தில் அவளுக்கு இரண்டே நண்பர்கள் இருந்தார்கள். பலருக்கும் அவளைப் பிடிக்கவில்லை. அவளும் விலகியே இருந்தாள். வேலையில் காட்டும் ஆர்வத்தை விடவும் வம்பளப்பதில் அதிக அக்கறை காட்டுகிறவர்களுடன் எப்படி நட்புப் பாராட்ட முடியும்.

ஒவ்வொரு வாரமும் வியாழன் காலையில் அவள் நிகழ்ச்சி குறித்த எதிர்வினைகளைப் பற்றிக் குழு விவாதம் நடைபெறும். அன்று அதன் நிறைகுறைகளைப் பற்றி விரிவாகப் பேசுவார்கள். அடுத்த நிகழ்ச்சி பற்றி விவாதிப்பார்கள். ஆகவே வியாழக்கிழமை காலை எட்டுமணிக்கெல்லாம் அலுவலகம் வந்துவிடுவாள். அன்று மதியச் சாப்பாட்டில்கூட அக்கறை காட்டமாட்டாள். ஆகவே இரவுச் சாப்பாட்டிற்காக அவளுக்கு விருப்பமான தாபா எக்ஸ்பிரஸிற்குப் போவது வழக்கம்.

இன்றும் வியாழன் என்பதால் வழக்கம்போலவே நாள்முழுவதும் கூட்டம், விவாதம் என்று களைத்துப் போயிருந்தாள். தாபா எக்ஸ்பிரஸ் கிளம்புவதற்கு முன்பு அவளது தோழி ஷிவானிக்கு போன் பண்ணி ஏழு மணிக்கு அவளை வந்துவிடும் படி சொல்லியிருந்தாள். வழியில் பேக்கரியில் பிரட் பாக்கெட் வாங்கிக்கொள்ள வேண்டும். அதுதான் அவளது தினசரி காலை உணவு. தனியறையில் வசிக்கும் அவளுக்குச் சமைக்க நேரமிருப்பதில்லை. ஆகவே மெக்ரெனட் பேக்கரி கடையில் பிரெட் வாங்கிக்கொண்டு தாபா எக்ஸ்பிரஸ் போக வேண்டும் என நினைத்தபடியே லிப்டிலிருந்து வெளியே வந்தாள்.

அந்தக் கிழவரைக் கடந்து போகையில் அவர் ஏதோ கேட்க நினைப்பவர்போல அவளைத் திரும்பி பார்த்தார். ஒரு நிமிஷம் அவளும் நின்றாள். கிழவர் பரிதாபமான முகத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

நர்மதா அவரைப் பார்த்து தலையசைத்தபடியே படியை விட்டுக் கீழே இறங்கி நடந்தாள்.

அவளது ஸ்கூட்டி பின்பக்கமிருந்த பார்க்கிங்கில் நின்றிருந்தது. அதை நோக்கி நடந்தபோது முதுகு தெரிய ஒரு ஆள் நிற்பது தெரிந்தது. அந்த ஆள் அணிந்திருந்த சட்டையின் முதுகில் H எனப் பெரிதாக எழுதப்பட்டிருந்தது. அந்த ஆளைக் கடந்து நர்மதா நடந்தபோது அவன் திரும்பி நர்மதாவைப் பார்த்தான். இருபத்தைந்து வயதிருக்கும். கோரையான தாடி. மஞ்சள் படிந்த கண்கள். தலையில் அடர்பச்சை வண்ண தொப்பி.

“நர்மதா” என அவன் சப்தமாக அழைப்பது கேட்டது.

நடந்துகொண்டிருந்த அவள் நின்று திரும்பி பார்த்தாள். அவன் வேகமாக அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான். நர்மதா அவன் தன்னுடைய கையில் எதையோ வைத்திருப்பதைக் கவனித்தாள். என்ன செய்யப்போகிறான் என்று அவளுக்குப் புரிவதற்குள் அவன் தான் வைத்திருந்த மைப்புட்டியை அப்படியே அவள் முகத்தின் மீது அடித்தான்.

கறுப்பு மை அவளது முகத்தில் வழிந்தோடியது. தலைமயிரில், காதுநுனியில் கழுத்தில் மை வழிந்தோடியது. தன் மீது ஆசிட் அடித்துவிட்டானோ என நினைத்து நர்மதா அலறினாள். ஆனால் அது ஆசிட் இல்லை மை என அவள் உணர்வதற்குள் அவன் மிக ஆபாசமான வசையொன்றை உதிர்த்தபடியே நடந்து சென்று தன் பைக்கை எடுத்து வெளியே சென்றுவிட்டான்.

நர்மதா முகத்தில் மை வழிய நின்று கொண்டிருந்தாள். அவள் உடல் நடுங்கியது. இப்போது என்ன செய்வது. இதே கோலத்தில் சேனலில் போய் நின்று தன் மீதான தாக்குதலைப் பற்றிச் செய்தி ஒளிரப்ப வேண்டும் போலிருந்தது.

அந்த ஆள் யார். எதற்காக தன் மீது கறுப்பு மையை அடித்திருக்கிறான். நேற்றைய நிகழ்ச்சியின் விளைவுதானா. இல்லை. யாரோ தூண்டிவிட்டு வந்தவனா. எதுவும் தெரியவில்லை. மை வழிந்து அவளது உடைக்குள் இறங்கியது.

அப்படியே அவள் வேகமாக லிப்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். படியோரம் நின்றிருந்த கிழவர் அவளது கோலத்தைக் கண்டு அதிர்ந்தவராக “என்ன பாப்பா ஆச்சு. ரத்தம் வருதா,” என்று கேட்டார். நர்மதா பதில் பேசவில்லை. அவள் சேனல் அலுவலகத்தினுள் சென்றபோது செய்திப் பிரிவில் வேலை செய்தவர்கள் அவளுக்கு ஏதோ விபத்து நடந்துவிட்டது போலப் பதற்றமானார்கள்.

ஒரு கேமிராமேனை அழைத்து அவளைப் படமாக்கும்படி சொன்னார் செய்தி ஆசிரியர். வாசலில் இருந்த செக்யூரிட்டிகள் அழைக்கப்பட்டார்கள். கேமிராவில் அந்த ஆள் உருவம் பதிவாகியிருக்கும் என்பதால் கேமிராவை ஆராய ஒருவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

மை வழியும் முகத்துடன் நர்மதா நின்றுகொண்டிருந்தாள். அந்த அதிர்ச்சி உள்ளூற நடுக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சேனல் வரலாற்றில் இதுவரை யார் மீதும் இப்படி மையை வீசியதில்லை. என்ன கோபம். எதற்காக இந்தத் தாக்குதல் என ஆளுக்கு ஆள் பேசிக் கொண்டார்கள்.

யாராவது மை அடிக்கும்போது வீடியோ எடுத்திருக்கிறார்களா என்று கேட்பதற்காக ஆனந்த் வேகமாகக் கீழே சென்றான்.

வந்தவன் எப்படியிருந்தான். என்ன சொன்னான் என ஒவ்வொன்றாக விசாரிக்க ஆரம்பித்தார் சாரதி. அவளால் பேசமுடியவில்லை. நாக்கு உலர்ந்துபோனது போலிருந்தது. இது என்ன எச்சரிக்கையா, அல்லது தண்டனையா. இத்தனை வருஷ பத்திரிகையாளர் வேலையில் இப்படி ஒரு சம்பவத்தை அவள் எதிர்கொண்டதில்லை.

நர்மதா கேமிரா முன்பு நின்றபடியே வெளியே நடந்த விஷயங்களை வரிசையாகச் சொன்னாள். பிறகு தன் முகத்தைக் கழுவிக்கொண்டு வருவதற்காக ரெஸ்ட்ரூமை நோக்கிச் சென்றாள். கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தபோது அழுகை வருவது போலிருந்தது. கண்விழிக்குள்கூட மை கலந்திருந்தது. ஆகவே கண் எரிச்சலாக வந்தது. எவ்வளவு தண்ணீரை ஊற்றி முகத்தைக் கழுவினாலும் மைக்கறை போகவில்லை.

ஒருவேளை மையோடு வேறு எதையாவது கலந்துவிட்டார்களா. அவளுக்குக் குழப்பமாக இருந்தது. முகத்தை அழுத்தித் துடைத்தாள்.

அவளது உடையில் இருந்த மைக்கறையை என்ன செய்வது. இது தான் உண்மையைக் கண்டறிய முயன்றதன் பரிசா. அவள் கண்ணாடியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். தன் முகத்தைப் பார்க்க அவளுக்கே வேதனையாக இருந்தது.

அவளுக்கு நடந்த தாக்குதலை அலுவலகத்தில் சிலர் கேலி செய்து சிரித்துக்கொண்டிருப்பார்கள் என்று மனதில் தோன்றியது. அற்ப ஜந்துகள் என்று மனதிற்குள் திட்டிக்கொண்டாள். திடீரெனக் கண்ணைக் கட்டிக்கொண்டு மயக்கம் வருவது போலிருந்தது. தண்ணீரை முகத்தில் அடித்துக் கொண்டாள். தலைமயிரில் படிந்திருந்த மை வழிந்தது.

கோழை. எதற்காக இப்படி மை அடிக்கிறான் என தாக்கியவனைத் திட்டினாள் நர்மதா

அவள் மீது நடந்த தாக்குதலை டிவியில் ஒளிபரப்பப் போகிறார்களா எனத் தெரியவில்லை. ஒளிபரப்பினால் ஊரிலிருக்கும் அப்பா, அம்மா பயந்து போவார்கள். அவளது அண்ணனுக்கு இந்தப் பத்திரிகையாளர் வேலை பிடிக்கவேயில்லை. எதற்காக இப்படிக் கோவில்மாடு போலத் திரிகிறாள் என்று சண்டையிட்டிருக்கிறான். அவனுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரிந்தால் வீட்டை ரெண்டு பண்ணிவிடுவான்.

செய்தி தெரிந்தால் ஒருவேளை இரவோடு கிளம்பி அப்பா, அம்மா வந்துவிடவும் கூடும். அடுத்து நடக்கப்போகும் விஷயங்களை நினைத்தால் தலை சுற்றியது.

அவள் ரெஸ்ட்ரூமை விட்டு வெளியே வருவதற்குள் செக்யூரிட்டி கேமிராவில் இருந்த அந்த இளைஞனின் உருவத்தைக் கண்டறிந்திருந்தார்கள். அவன் முகம் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அவன் பைக் நம்பர் நன்றாகத் தெரிந்தது. அவன் தானா என உறுதிபடுத்தும்படி நியூஸ் எடிட்டர் கேட்டுக்கொண்டார். அவள் அந்த உருவத்தை உற்று நோக்கிப் பார்த்து தலையாட்டினாள்.

அவன் சத்தமாக நர்மதா எனக்கூப்பிட்ட குரல் அவள் காதில் ஒலித்துக்கொண்டேயிருந்தது. அவன் இன்றைக்குத்தான் முதன்முறையாக வந்திருப்பவன் போலத் தெரியவில்லை. ஒருவேளை பல நாட்கள் அவளைப் பின்தொடர்ந்து வந்தவனாக இருக்கக்கூடும்.

எதற்காக அலுவலக வாசலில் தாக்குதலில் ஈடுபட்டான். தனியாகத்தான் வந்தானா. அல்லது வெளியே வேறு யாரும் நின்றிருந்தார்களா. எதுவும் அவளுக்குப் புரியவில்லை.

இதற்குள் அவள் தாக்கபட்ட விஷயம் பற்றிய செய்தியை ஒளிபரப்புச் செய்ய வேண்டாம் என்றும் தாக்குதல் குறித்துப் போலீஸில் புகார் செய்தால் போதும் என்றும் நிர்வாகத்திலிருந்து பதில் வந்ததாகப் பேசிக்கொண்டார்கள். அது நர்மதாவிற்கு மேலும் கோபத்தை அதிகப்படுத்தியது.

எடிட்டர் அவளிடம் “பத்திரிகையாளர் சங்கத்தில் அவள் உறுப்பினராக இருக்கிறாளா” எனக்கேட்டார்.

“இல்லை,” என்றாள் நர்மதா

“மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துவிட்டு அப்படியே காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்துவிடலாம்,” என்று சொன்னார் எடிட்டர்.

“டாக்டரைப் பார்க்கத் தேவையில்லை,” என்றாள் நர்மதா

“இல்லை. நாளைக்குக் கோர்ட்டுக்குப் போனா தேவைப்படும். நம்ம மோகன் டாக்டர்கிட்ட போகலாம். நான் பேசிட்டேன்,” என்றார்

அவள் வேறுவழியின்றி ஒத்துக்கொண்டாள். அவளுடன் நிவாஸை அனுப்பி வைத்தார்கள். அவன் காரில் நர்மதா ஏறிக்கொண்டபோது வாசலில் காத்துகிடந்த கிழவரை யாரோ திட்டி துரத்திக் கொண்டிருந்தார்கள். இனி அலுவலக வளாகத்திற்கு எவரையும் எளிதாக நுழைய விடமாட்டார்கள்.

கார் சாலையில் செல்லும்போது திடீரென அந்த நகரம் அந்நியமாகிப் போனதைப்போல உணர்ந்தாள். அவளுக்கென யாருமில்லையோ என்று தோன்றியது. ஷிவானிக்கு போன் செய்து தாபா எக்ஸ்பிரஸ் வரவேண்டாம் எனச் சொல்லிவிட வேண்டும் என நினைத்துக்கொண்டாள். நிவாஸ் யாரிடமோ போனில் நடந்த தாக்குதல் பற்றிச் சொல்லிக்கொண்டு வந்தான்.

டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்துவிட்டு பின்பு காவல்நிலையத்தில் சென்று புகார் அளித்தார்கள். அவளுக்குப் பசி மிக அதிகமாக இருந்தது. வழியில் எங்காவது சாப்பிடலாமா என நினைத்தாள். ஆனால் இந்தக் கோலத்தில் எப்படிச் சாப்பிடுவது. அவர்கள் அலுவலகம் திரும்பிய போது எடிட்டர் அவளுக்கு இரண்டு நாள் விடுமுறை அளிப்பதாகவும் இந்த வாரத்தின் நிகழ்ச்சியைப் பிரதீப் பார்த்துக்கொள்வான் என்றும் சொன்னார்.

“இல்லை நானே பாத்துகிடுறேன்,” என்றாள் நர்மதா

“உனக்குப் போலீஸ் என்கொயரி இருக்கும். ஷோவை பிரதீப் பாத்துகிடுவான்,” என்றார்.

அவளால் மறுக்கமுடியவில்லை. அறைக்குப் போய்க் குளித்துவிட்டு வேறு உடைகளை மாற்றிக் கொண்டு சாப்பிடப் போக வேண்டும் போலிருந்தது.

“நான் கிளம்பவா சார்,” என்று கேட்டாள்

“வெயிட் பண்ணு. இன்ஸ்பெக்டர் என்கொயரிக்கு வர்றேனு சொல்லியிருக்காரு,” என்றார் எடிட்டர்.

அவள் தன் இருக்கையில் அமர்ந்தபடியே நடந்த விஷயங்களை நினைவுகொள்ள ஆரம்பித்தாள். நினைக்க நினைக்கப் பயமும் குழப்பமும் அதிகரிக்க ஆரம்பித்தது. அதை அவள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

நிர்வாகம் ஏன் இதனை ஒளிபரப்பவில்லை. தன் மீது நடந்த தாக்குதலை ஏன் அற்ப விஷயமாக நினைக்கிறது. இவர்கள் சம்பாதிக்கத் தான் ஏன் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து கொண்டிருக்கிறேன். இது அபத்தமானதில்லையா என்று யோசித்தாள்.

ஷிவானி போன் செய்து அவளுக்கு உடல்நலமில்லையா என விசாரித்துக்கொண்டிருந்தாள். அவளிடம் உண்மையைச் சொல்லவா, வேண்டாமா எனக் குழப்பமாக இருந்தது. ஷிவானியிடம் தனக்குத் தலைவலி என்று மட்டும் சொன்னாள்.

ஊரிலிருந்த அப்பா, அம்மாவிடம் பேசலாமா என்றும் தோன்றியது. என்ன பேசுவது. எதற்காகப் பேசுவது. இந்தப் பயத்தை வளரவிட்டால் இந்த நகரில் வேலை செய்ய முடியாது. என்ன நடந்தாலும் சந்திக்க வேண்டும். பயந்து ஓடக்கூடாது என்று முடிவு செய்துகொண்டாள்.

நீண்ட காத்திருப்பின் பிறகு இன்ஸ்பெக்டர் இரண்டு காவலர்களுடன் விசாரணைக்காக வந்திருந்தார். அவர்களிடம் லிப்டை விட்டு இறங்கி நடந்த நிமிஷம் முதல் நடந்தவற்றைச் சொல்லி வந்தாள்.

“மைபாட்டிலை அவன் கையில் வைத்திருந்தானா,” என ஒரு காவலர் கேட்டார். ஆமாம் எனத் தலையாட்டினாள்.

“இதுக்கு முன்னாடி அந்த ஆளை எங்காவது பார்த்திருக்கிறாளா” என இன்னொரு காவலர் கேட்டார்.

“இல்லை,” என்றாள்.

“யார் மேலயாவது சந்தேகமிருக்கா,” எனக் கேட்டார் இன்ஸ்பெக்டர்.

யாரைச் சொல்வது எனத்தெரியவில்லை. ஒன்றரை மணி நேர விசாரணைக்குப் பிறகு அவர்கள் கிளம்பிப் போனார்கள். நைட் ஷிப்டிற்கு வருபவர்கள் ஒவ்வொருவராக அலுவலகம் வரத் துவங்கியிருந்தார்கள். காலியான இருக்கைகளைக் கடந்து தன் கேபினுக்குள் சென்றாள் நர்மதா. எடிட்டர் அலுவலகம் விட்டுப் போவதற்குப் பதினோரு மணியாகிவிடும். அதுவரை காத்திருக்கமுடியாது. ஆகவே அவரிடம் சொல்லிக்கொண்டு லிப்டை நோக்கி நடந்தபோது திடீரெனப் பசி காதை அடைத்தது.

அறைக்குத் திரும்பியபோது உடையை மாற்றத் தோன்றவில்லை. அப்படியே படுக்கையில் விழுந்தாள். பெரும்பாரம் தன்னுடைய உடல் மீது இறங்குவதுபோல உணர்ந்தாள். குளிக்க வேண்டும் போலவும் இருந்தது. கால்களில் சக்தியில்லாமல் முடங்கிவிட்டது போலவும் உணர்ந்தாள். கண்களை மூடிக்கொண்டாள். குழப்பமான சிந்தனைகள். தன்னை அறியாமல் அவள் உறங்கிப்போனாள்.

விழிப்பு வந்தபோது மணி மூன்றைக் கடந்திருந்தது. உடைகளைக் களைந்துவிட்டு குளிர்ந்த தண்ணீரில் குளித்தாள். மீதமிருந்த பிரெட்டை பிய்த்து சாப்பிட்டாள். ஒரு கோப்பைக் காபியை சூடாகக் கையில் எடுத்தபடியே டிவியை ஆன் செய்து தனது சேனலில் ஏதாவது செய்தி வருகிறதா எனப் பார்த்தாள். இப்படி ஒரு நிகழ்வு நடந்த சுவடேயில்லை. சேனலை மாற்றிக்கொண்டே வந்தாள். ஒரு சேனலில் ஆயிரக்கணக்கான வண்ண மீன்கள் கடலில் நீந்திக்கொண்டிருந்தன. அதைப் பார்த்தபடியே இருந்தாள்.

குளித்துத் திரும்பிய போதும் மைக்கறை முற்றிலும் மறையவில்லை. அது மனதை உறுத்திக் கொண்டேயிருந்தது. இனி என்ன நடக்கும். அந்த ஆளை கைது செய்வார்களா. நிச்சயம் அது நடக்காது என்றே தோன்றியது. அவன் இந்நேரம் தப்பிப் போயிருப்பான்.

இந்தக் கோபம் அவனுடையதில்லை. அவன் ஒரு அம்பு. ஒருவேளை அவனைக் கைது செய்தாலும் உடனே விடுவிக்கப்பட்டு விடுவான். நாளையே அவனை வழியில் எங்காவது சந்திக்கவும்கூடும். அதுதான் சூது நிரம்பிய இந்த மாநகரின் வாழ்க்கை.

அதிகாரம் எல்லாவற்றையும் ஒடுக்கி முடக்கப் பார்க்கிறது. விலை போகமுடியாத விஷயங்களை அது அனுமதிப்பதில்லை. உண்மையும் இங்கே ஒரு விற்பனைப் பொருள். அதை எப்படி வியாபாரம் ஆக்குகிறார்கள் என்பது முக்கியம்.

நர்மதாவிற்குக் களைப்பாக இருந்தது. அவள் டிவியை அணைத்துவிட்டுப் பால்கனியில் வந்து நின்று வீதியைப் பார்க்க ஆரம்பித்தாள். ஆள் நடமாட்டமில்லாத வீதியில் சோடியம் விளக்கின் வெளிச்சம் பிரகாசமாக ஒளிர்ந்துகொண்டிருந்தது.

இரண்டு நாட்கள் அலுவலகம் போகவேண்டியதில்லை. அறையில் அடைந்து என்ன செய்வது. ஊருக்குப் போய் வரலாமா. அல்லது வேறு ஏதாவது வெளியூர் போகலாமா.

அவள் மீது தாக்குதல் நடத்தியவன் இந்நேரம் நன்றாக உறங்கிக்கொண்டிருப்பான். அவன் நிச்சயம் குடித்திருப்பான். நிறையச் சாப்பிட்டிருப்பான். அவனுக்கு ஒரு குற்றவுணர்வும் கிடையாது.

நர்மதா கண்ணாடி முன்பாக நின்று தன் முகத்தைப் பார்த்துக்கொண்டாள். நர்மதா என அவன் அழைப்பது போலவே கேட்டது.

திரும்பிப் பார்த்தாள். அவன் வீசிய மை முகத்தில் மட்டுமில்லை. ரத்தத்தினுள் கலந்துவிட்டிருக்கிறது. தன் உடம்பில் கறுப்பு ரத்தம் ஒடுகிறது. அதைத் துடைத்தெறிவது எளிதானதில்லை.

திடீரென அந்தக் கிழவர் பற்றி நினைப்பு வந்தது. அந்தக் கிழவர் ஊருக்கு திரும்பி போயிருப்பாரா. அவரது வேண்டுகோளை ஏன் ஒருவரும் புரிந்துகொள்ளவேயில்லை. எத்தனையோ கோடி ரூபாய்களைப் பொழுதுபோக்கிற்காக வீணடிக்கிறார்கள். ஆனால் நியாயமான தேவைகளுக்குக் கூட உதவ மறுக்கிறார்கள். அவளுக்குத் தன் மீதும் கோபமாக வந்தது.

மறுபடியும் டிவியைப் போட்டு ஏதோ பாடல்காட்சியைப் பார்த்தாள். மனது அதில் கவியவில்லை. விடிகாலை வரை அவள் நாற்காலியில் சாய்ந்தபடியே கிடந்தாள். நீண்டகாலத்தின் பின்பு தனது ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு கடற்கரைக்குச் சென்றாள்.

கடற்கரையில் வாக்கிங் போகிறவர்களின் உற்சாகமாக நடை அவளையும் இணைந்து கொள்ளச் செய்தது. தன் மீது நடந்த தாக்குதலை இப்படியே விட்டுவிடக்கூடாது. சேனல் செய்தி ஒளிபரப்பாமல் இருக்கலாம். அதற்காக நாம் பின்வாங்ககூடாது. பிரஸ் கிளப்பிற்குப் போய்ப் பத்திரிகையாளர் முன்பு நடந்த விஷயத்தைச் சொல்ல வேண்டும். ஒருவேளை இதற்காக சேனல் நடவடிக்கை எடுத்தால் கவலையில்லை. இந்த மைக்கறை நிறைய விஷயங்களைப் புரிய வைத்துவிட்டது. தோற்றுப் பின்வாங்கினால் தாக்குதல் செய்தவன் ஜெயித்து விடுவான். அதை அனுமதிக்ககூடாது. அவள் வேகமாக நடக்க ஆரம்பித்தாள். மூச்சு வாங்கியது. வியர்த்து வழிய நின்றபோது அவள் புத்துணர்வாக உணர்ந்தாள்.

கடற்கரை மணலில் பந்து விளையாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் அக்கா பந்து என்று சப்தமிட்டார்கள்.

தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த கால்பந்தை அவள் ஒங்கி ஒரு உதைவிட்டாள். அது காற்றில் பறந்து கொண்டிருந்தது.

***

பிரஸ் கிளப்பிற்குப் போன் செய்து விக்டரைப் பிடித்தாள். அவன் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்வதாகச் சொன்னான். அதற்கு முன்பு அவள் மீது நடந்த தாக்குதல் பற்றிய புகைப்படங்களை அவள் ஐம்பது பிரிண்ட் போட்டு வைத்துக்கொள்ளவேண்டும். சிறிய அறிக்கை ஒன்றை எழுதி அதையும் ஐம்பது பிரதிகள் கொண்டு வர வேண்டும் என்றான்.

செல்போனிலிருந்த அவளது மை வழியும் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டாள். அது அவளில்லை. யாரோ ஒரு ஒருத்தி. ஸ்கூட்டியில் ரத்னா ஸ்டுடியோவிற்குச் சென்று தன் செல்போனிலுள்ள புகைப்படத்தைப் பிரிண்ட் போட்டு தர வேண்டும் என்றாள். அவளது போனில் உள்ள புகைப்படத்தை மெயிலில் அனுப்பி வைக்கும்படி சொன்னான் அங்கிருந்த இளைஞன். அவள் புகைப்படத்தை அனுப்பி வைத்தாள்.

அவன் புகைப்படத்தைக் கம்ப்யூட்டர் திரையில் பார்த்தபடியே ஆக்சிடெண்டா எனக்கேட்டான்.

அவனிடம் நர்மதா பதில் சொல்லவில்லை.

ஒரு மணி நேரம் கழித்து வரும்படி சொல்லியபடியே அவள் புகைப்படத்தைப் போட்டோ ஷாப்பில் சரிசெய்ய ஆரம்பித்தான்.

எங்கே உட்கார்ந்து நடந்த விஷயத்தை அறிக்கையாக எழுதுவது என யோசித்தபடியே காபிடேக்கு சென்றாள். மூலையில் இருந்த மேஜைக்குப் போய் உட்கார்ந்து கொண்டபடியே செல்போனில் எழுத ஆரம்பித்தாள். இடையில் எழுந்து போய் ஒரு காபி வாங்கிக்கொண்டு வந்தாள். கோர்வையாக எழுத இயலவில்லை. எழுதியதை திருத்தி மாற்றி எழுதினாள். காபியை ஒரு வாய் கூடக் குடிக்கவில்லை. எழுதிய விஷயத்தை நேரில் சொல்லப்போகிறோம் தானே என்று தோன்றியது. அதையும் பிரிண்ட் அவுட் எடுக்க ஜெராக்ஸ் கடை ஒன்றுக்குச் சென்றாள்.

புகைப்படமும் அறிக்கையும் அவள் கைக்கு வந்தபோது மணி இரண்டாகியிருந்தது. யாரையும் உடன் அழைத்துக் கொண்டு போகவேண்டாம் என முடிவு செய்தவளாகப் பிரஸ் கிளப் நோக்கி சென்றாள். நான்கு மணிக்கு இன்னும் நேரமிருந்தது. வழியில் இருந்த ஹோட்டலில் தயிர்சாதம் மட்டும் சாப்பிட்டாள். நாக்குக் கசந்தது. தண்ணீர் கூட ருசியற்றுப் போனது போலிருந்தது.

ஆறு பத்திரிகையாளர்கள் மட்டுமே வந்திருந்தார்கள். விக்டர் மற்றவர்கள் வரும் வரை காத்திருப்போம் என்றான். ஐந்து மணிக்குச் சந்திப்புத் துவங்கியபோது எட்டுப் பேர் இருந்திருந்தார்கள். நடந்த விஷயத்தை நர்மதா சுருக்கமாகச் சொன்னாள். ஒருவரும் குறிப்பு எடுத்தது போலவே தோன்றவில்லை.

ஒரு நிருபர் மட்டும் அவளிடம் “எந்தக் கட்சி மேல சந்தேகம்?” எனக்கேட்டான்.

அவள் “தெரியவில்லை,” என்றாள்.

இதற்குள் பின்வரிசையில் இருந்த சந்தன நிற ஜிப்பா அணிந்த பத்திரிகையாளர் எழுந்து “இது உங்க லவ் மேட்டர்னு கேள்விபட்டேன். அதை ஏன் அரசியலாக்குறீங்க?” என்றார்.

அவளுக்குச் சுரீரெனக் கோபம் வந்தது.

“யார் சொன்னது லவ் மேட்டர்னு. லவ் மேட்டர்ல இப்படி முகத்துல மை அடிப்பாங்களா?”

“அதான்மா கேட்குறேன். ஆசிட் அடிச்சா. அது பொலிடிக்கல் அட்டாக். இது மையைத்தானே ஊற்றியிருக்கான். அதுவும் நீங்களே சொல்லுறீங்க இளைஞன்னு. உங்க ஆபீஸ்ல விசாரிச்சா உங்களுக்கு நிறையப் பாய்பிரண்ட் உண்டுனு சொல்றாங்க.”

“என் வேலை அப்படி சார். கூட வேலை செய்றவங்ககூடப் பேசினா அது பாய்பிரண்டுனு அர்த்தமா. இது யாரோ ஒரு கிரிமினல் என் மேல மையை அடிச்சிருக்கான்.”

“அவன் உங்க லவ்வரா இல்லையானு நீங்கதான் சொல்லணும்,“ என நமுட்டு சிரிப்புடன் சொன்னார் ஜிப்பா ஆள்.

“உங்க பொண்ணா இருந்தா இப்படிக் கேட்பீங்களா சார்?” என்று கோபமாகக் கேட்டாள் நர்மதா.

“என் பொண்ணு இப்படி இத்தனை பசங்ககூட சுத்துனா நான் சும்மா இருக்கமாட்டேன்லே?” என்றார் ஜிப்பா அணிந்த ஆள்.

அவளால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பேசினால் வெடித்துவிடுவோம் என்பதால் அமைதியாக அவரை முறைத்தபடியே இருந்தாள்.

வேறு ஒரு பத்திரிகையாளர் அவளிடம் கேட்டார்.

“நாலு வருசத்துல ஆறு இடத்துல வேல பாத்து இருக்கீங்க. இதுல நீங்க சண்டை போடாத ஆளே இல்லே. நீங்க குடியிருந்த வீட்டு ஹவுஸ் ஒனர்கூட உங்க மேலே போலீஸ் கம்ப்ளெயிண்ட் பண்ணியிருக்கார். இதுல யார் வேணும்னாலும் உங்க மேல இங்க் அடிச்சிருக்கலாம்லே?”

“வீட்டு ஒனர் நைட் பத்து மணிக்கு மேல லைட் போடக்கூடாதுன்னு சொன்னார். நான் வேலைவிட்டு வீட்டுக்கு பதினோரு மணிக்குதான் வருவேன். அதான் சண்டைபோட்டேன். அந்த ஆள் தப்பா பேசினான். நானும் கெட்டவார்த்தையில திட்டுனேன். போலிஸ் கம்ப்ளெயிண்ட் குடுத்தான். அதுக்கு இந்த அட்டாக்கிற்கும் என்ன சார் சம்பந்தம். ஏன் தேவையில்லாமல் பிரச்சனையை திசை திருப்புறீங்க?”

“மேடம் நாங்க எல்லாத்தையும் விசாரிச்சி பாத்துதான் நியூஸ் போடுவோம்.”

“நானும் பத்திரிகையாளர்தான். அதை மறந்துராதீங்க.”

ஜிப்பா அணிந்த ஆள் இன்னும் கேலியாகக்கேட்டார்

“சினிமா ஸ்டார் மாதிரி அழகா இருக்கீங்க. உங்களை ஆபீஸ்ல நாலு பசங்க லவ் பண்ணியிருப்பாங்க.  இந்த இங்க் அடிச்சவன் உங்களுக்கு எத்தனாவது லவ்வர்?”

“அப்படி ஒரு மயிரும் கிடையாது. அந்த நாயி என்மேல இங்கை அடிச்சிருக்கான். அதைப் புரிஞ்கிடாமல் கேள்விகேட்டா எப்படிச் சார். கிசுகிசு எழுதுற உங்களை எல்லாம் கூப்பிட்டதுக்கு என் புத்தியை செருப்பாலே அடிக்கணும்.”

“மரியாதையா பேசும்மா. நான் ஒண்ணும் பொய் சொல்லலை. உன் ஆபீஸ்ல விசாரிச்சிட்டு தான் சொல்றேன்.”

“யாரு சொன்னானு ஆளை சொல்லுங்க சார். இப்போவே கேட்ருவோம்,” எனக் கோபமாகக் கத்தினாள்.

“அதை எப்படிச் சொல்லமுடியும். பப்ளிசிட்டிக்காக நீ போடுற டிராமா தானேம்மா இது.”

“எனக்கு எதுக்கு சார் ப்பளிசிட்டி. சும்மா உளறாதீங்க.”

விக்டர் அவளைச் சமாதானப்படுத்த முயன்றான். இதற்குள் நாலைந்து பத்திரிகையாளர்கள் வெளியேறியிருந்தார்கள். அவள் எடுத்து வந்த பிரிண்ட் அவுட் மற்றும் புகைப்படங்களைத் தரையில் வீசி எறிந்தாள்.

அவர்கள் வெளியேறி போனபிறகு விக்டர் “உனக்குப் பேசத் தெரியலை நர்மதா. உன் கோபத்தைக் காட்ட இவங்கதான் கிடைச்சாங்களா,” எனக்கேட்டான்.

நர்மதாவிற்கு விக்டர் மீதும் கோபம் வந்தது. அவள் முறைத்தபடியே ஒரு வார்த்தை பதில் பேசாமல் வெளியே வந்தாள். ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு கடற்கரைச் சாலையில் சென்ற போது அவளுக்கு இந்த நகரம் தன்னைப் பெருங்கரத்தால் இறுக்கி மூச்சுமுட்டச் செய்வதைப் போல உணர்ந்தாள்.

இரவு பத்தரை வரை அவள் வீதி விதியாகச் சுற்றினாள். எதற்காக இப்படி அலைகிறோம் என்று புரியவேயில்லை. அறைக்குத் திரும்பியபோது ஊருக்கே திரும்பிப் போய்விடலாமா என்றும் தோன்றியது.

பதினோரு மணிக்கு அவளது சேனலின் எடிட்டர் போன் பண்ணி பிரஸ் கிளப்பிற்குப் போன விஷயம் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.

“நான்தான் போலீஸ் விசாரிச்சிகிட்டு இருக்குனு சொன்னனே. அதுக்குள்ளே நீதி கேட்டுப் பிரஸ் கிளப் போயிட்டயாக்கும்.”

“நம்ம சேனல்ல என் மேல நடந்த தாக்குதல பற்றி ஒரு வார்த்தை வரலையே சார்,” என்றாள் நர்மதா.

“இது சின்ன விஷயம் நர்மதா. இதை ஏன் பெருசு பண்றே?”

“எது சார் சின்ன விஷயம். அவன் ஆசிட் அடிச்சிருக்கணுமா, இல்லை கொலை பண்ணியிருக்கணுமா?”

“இது உன்னோட லவ் மேட்டர்னு பசங்க சொல்றாங்க. நிஜமா?”

“நம்ம ஆபீஸ்ல எந்த நாயோ இப்படிக் கிளப்பிவிட்டுகிட்டு இருக்கான்.”

“உன் நல்லதுக்காகச் சொல்றேன் நர்மதா. நடந்ததை இப்படியே விட்ரு.”

“ஏன் சார். விடச்சொல்லி யாராவது மிரட்டுறாங்களா?”

“என் மேலயே சந்தேகப்படுறயா?”

“எல்லோர் மேலேயும் சந்தேகப்படுவேன். என் வலி எனக்குத்தானே தெரியும்.”

“விசாரிச்சா உண்மை எதுனு தெரியப்போகுது.”

“அப்போ நான் பொய் சொல்றேனு சொல்றீங்க.”

“பொய்யோ, உண்மையோ. நீ இதோட விட்டுட்டா பிரச்சனை இல்லே. பெரிசு பண்ணினா. விளைவுகளை நீதான் சந்திக்கணும். உன் வேலைகூடப் போயிடும் பாத்துக்கோ.”

“வேலை போனா போகட்டும். சேனலுக்கு இத்தனை நாள் உழைச்சதுக்குக் கிடைச்ச பலனை பாத்துகிட்டுதானே இருக்கேன்.”

“பெரிய சம்பளத்தோட வேற சேனலுக்கு வேலைக்குப் போக இதெல்லாம் நீ போடுற டிராமாவா இருக்குமோனு எனக்கே சந்தேகமா இருக்கு.”

“ஆமா. டிராமாதான். போதுமா. இந்தச் சேனல் மயிரு இல்லேன்னா… நான் செத்துப்போயிற மாட்டேன் சார்.”

மறுமுனையில் எடிட்டர் போனை வைத்துவிட்டதை உணர்ந்தாள். தான் பேசியது சரியா, தவறா என அவளால் உணரமுடியவில்லை. ஆனால் ஏன் தன்னைச் சந்தேகப்படுகிறார்கள். தன்னை மறுபடியும் அவமானப்படுத்துகிறார்கள். இந்த வேலையைவிட்டு அவர்கள் நீக்குவதற்கு முன்பு நாமே விலகிக்கொண்டாள் என்ன.

தனக்கு இழைக்கப்பட்ட அநீதி அவ்வளவுதானா. அதற்கு நியாயம் கிடைக்காதா. இந்தத் தாக்குதலே ஒரு நாடகம்தானா. சேனலின் உள்ளே இருக்கும் யாரோ தான் இதை நடத்துகிறார்களா. யோசிக்க யோசிக்கத் தலைவலிக்க ஆரம்பித்தது.

அவள் ஷிவானிக்கு போன் செய்தாள். ஷிவானி போனை எடுக்கவில்லை. வேலையை விட்டுவிடலாம் என முடிவு செய்தபடியே அவள் ஒரு தூக்க மாத்திரையைப் போட்டுக்கொண்டு உறங்கினாள்.

கனவில் H என்ற எழுத்துப் பொறித்த சட்டை மிகப்பெரியதாக வானில் பறந்து கொண்டிருந்தது. அந்தச் சட்டை அவளைத் துரத்தி வருவதாகக் கனவுகண்டாள்.

மறுநாள் காலை இரண்டு பத்திரிகைகளில் காதல் விவகாரத்தில் அவள் மீது மைஊற்றப்பட்டதாகச் செய்தி வெளியாகியிருந்தது. எடிட்டர் கணேஷ் அதை வாட்ஸ்அப்பில் அனுப்பியிருந்தான். பேப்பரில் அவளது புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்கள். அதைப் பார்த்தவுடன் கோபம் பொங்கியது. இனி சண்டையிட்டு ஒன்றும் ஆகிவி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 19, 2021 11:00

March 18, 2021

காற்றில் பறக்கும் மலர்

புதிய சிறுகதை

கரணின் டீசர்டை அபர்ணா துவைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. இப்படிக் காலை ஐந்து மணிக்கு பாதி உறக்கத்திலிருந்து எழுந்து வந்து அவனது டீசர்டை ஏன் துவைத்துக் கொண்டிருக்கிறாள் என வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

பின்கதவு பாதித் திறந்திருந்தது. வாழைமரத்தில் அசைவில்லை. அதன் விநோதநிழல் சரிந்து விழுந்த, மஞ்சள் வெளிச்சத்தில் இப்படி அபர்ணாவைப் பார்க்க கலக்கமாகவே இருந்தது.

கலைந்த கூந்தலுடன் சேலையை இடுப்பில் தூக்கி சொருகியபடியே அவள் துணியினைக் கசக்கிக் கொண்டிருந்தாள். அருகிலிருந்த பிளாஸ்டிக் வாளியில் சோப் நுரையுடன் கரணின் நீல நிற பேண்ட் தொங்கிக் கொண்டிருந்தது.

கரண் வீட்டை விட்டு ஒடிப்போய் ஒன்பது மாதங்களாகிவிட்டது. நாங்கள் எவ்வளவோ தேடிப்பார்த்துவிட்டோம். அவனைப் பற்றி ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்பு கூட நானும் அபர்ணாவும் அவனைத் தேடி கொடைக்கானல் வரை போயிருந்தோம். அங்கே அவனைப் பார்த்ததாக ஸ்டீபன் சார் சொன்னார்.

எதற்காக இந்தக் குளிர்காலத்தில் கொடைக்கானல் போயிருக்கிறான் என்று புரியவில்லை. ஆனால் நாங்கள் கொடைக்கானல் முழுவதும் தேடியும் அவனைக் கண்டறியமுடியவில்லை. கைவிடப்பட்ட குதிரையொன்றை வழியில் கண்டேன். கரண் ஞாபகம் அதிகமானது

ஒருவேளை அங்கிருந்து வெளியேறிவிட்டானோ என்னவோ, கயிறு அறுந்து போன பட்டம் காற்றில் தன்னிஷ்டம் போலப் பறந்து போலக் கரண் சுற்றிக் கொண்டிருந்தான். பட்டம் சுதந்திரமாகத் தன்னை உணரக் கூடும். ஆனால் கையில் பிடித்திருந்த வெற்றுக்கயிற்றுடன் தனியே அலையும் பட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஆளின் வேதனையை எப்படிப் பகிர்ந்து கொள்வது. அந்தத் துயரம் யாருக்கும் வரக்கூடாது.

வழக்கமாகக் கரண் காலையில் மைதானத்திற்குக் கிளம்பிப் போகும் போது இந்தப் பேண்டினையும் டீசர்டினையும் தான் போட்டுக் கொண்டு போவான். அவனுக்கு எந்த விளையாட்டிலும் ஈடுபாடு கிடையாது. ஆனால் அதிகாலையிலே மைதானத்திற்குப் போய்விடுவான். காதில் இயர்போன் மாட்டியபடியே தனியே அவன் நடந்து போய்க் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

நடைப்பயிற்சிக்குப் போகிறவர்களிடம் காணப்படும் வேகம் அவனிடம் கிடையாது. மரத்திலிருந்து உதிரும் இலை காற்றில் அலைந்தாடுவது போல மெதுவாக நடப்பான். யாரையும் நிமிர்ந்து கூடப் பார்ப்பதில்லை. அதே மைதானத்தில் தான் நானும் நடக்கிறேன். ஆனால் ஒருமுறை கூட என்னிடம் அவன் பேசியதில்லை. என்னைக் கண்டுகொண்டது போலத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டான்

அந்த மைதானத்தில் காலை ஆறுமணிக்கெல்லாம் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வாக்கிங் போய்க் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களில் ஒருவருடன் கூடக் கரணுக்கு நட்பு உருவாகவில்லை. அவன் நண்பர்களே இல்லாமல் இருந்தான். வீட்டிலும் கூட அவன் யாருடனும் பேசுவதில்லை. அபூர்வமாக அவனைத் தேடி உடன்படித்த மாணவன் திவாகர் வருவான். அவனுடன் கூட ஐந்து நிமிசத்திற்கு மேல் பேசமாட்டான். அவசரமாக அனுப்பி வைத்துவிடுவான்.

எதற்காகப் பதினேழு வயதில் ஒருவன் இவ்வளவு தனிமையாக உணருகிறான். மௌனத்தின் குகைக்குள் தன்னை அடைத்துக் கொண்டிருக்கிறான்.

கோபம் தானா, இல்லை குழப்பமா, அல்லது வெறுப்பா, என்னவென்று எனக்கும் புரியவில்லை.

சில நேரங்களில் அவனை நினைத்து அபர்ணா அழுவாள். நீயே பேசு அபர்ணா என்பேன்.

என்ன பேசுவாள் என்று தெரியாது. ஆனால் அவளால் அவனது மௌனத்தைக் கலைக்க முடியவில்லை. காலில் ஒட்டிக் கொண்ட தார் போல மௌனம் அவனைப் பிடித்திருந்தது.

பதினேழு வயதில் கறுப்பு மேகங்கள் போலப் பல்வேறு குழப்பங்கள் மனதில் உலவத் துவங்குகின்றன. திடீரென அவன் நனைந்த பஞ்சினைப் போலாகிவிடுகிறான். அல்லது பின்னிகரவில் அதிகப் பிரகாசமாக எரியும் தெருவிளக்கினைப் போல ஒளிர ஆரம்பிக்கிறான். சில நேரங்களில் கரண் முகத்தைக் காணும்போது அதில் இந்த உலகம் தனக்கு ஒரு பொருட்டேயில்லை என்பது போலிருக்கும். சில வேளைகளில் இவ்வளவு துயரங்களை நான் ஏன் சுமந்து கொண்டிருக்க வேண்டும் என்பது போல வேதனை கவ்வியதாகயிருக்கும்.

கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணீரை கையாளுவது போலப் பதினேழு வயது பையனை கையாள வேண்டியிருக்கிறது.

உண்மையில் இது எதுவும் அவனது பிரச்சனையில்லை. வயதின் பிரச்சனை. ஆனால் அந்த வயதை நானும் கடந்து வந்திருக்கிறேன். இப்படி நடந்து கொள்ளவேயில்லை என்றும் தோன்றியது.

எனக்குள்ளும் அந்த வயதில் கோபமிருந்தது. ஆனால் அதை நேரடியாகக் காட்டி பழக்கபட்டிருந்தேன். சாப்பிடாமல் சண்டைபோட்டிருக்கிறேன். தாடி வளர்ந்திருக்கிறேன். வீட்டில் தன் ஆசைகளை வெளிப்படுத்த ஏன் இத்தனை தயக்கம். பெற்றவர்களின் கோபம் அவ்வளவு வலிமையானதா என்ன. ஏன் விலகிக் கொண்டேயிருக்க வேண்டும்.

கரண் கோவத்தில் ஒரு முறை கூடச் சாப்பிடாமல் இருந்ததேயில்லை. அவன் கோபத்தை வெளியே காட்டுவதேயில்லை. அவனது கோபம் வெறுப்பு யாவும் உறைந்து விநோத சுடர் ஒன்று எரிவது போல மாறியிருக்கிறது.. அந்த வெளிச்சம் அவன் முகத்தில் பரவியிருப்பதைக் கண்டிருக்கிறேன்.

மதியவேளையில் நிம்மதியற்ற அணில் ஒன்று தண்ணீர் குழாயின் மீது வேகவேகமாக ஏறி இறங்கி ஒடுவதைக் கண்டிருக்கிறேன். அந்த அணிலின் மனநிலை போலத் தான் கரணுக்கும் இருந்தது. ஆனால் அணிலின் வேகமில்லை. அவன் தன் செயல்களின் இயல்பை மாற்றிக் கொண்டுவிட்டான். ஒருவன் மெதுவாகச் சாப்பிடுவது என்பது கூடக் கோபத்தின் அடையாளம் தான் என்பதை அவனிடமிருந்தே புரிந்து கொண்டேன்.

கரணுக்கு என்ன பிடிக்கவில்லை. யார் மீது கோபம். எதற்காகத் தன்னை இப்படி வருத்திக் கொள்கிறான். ஒருவேளை படிப்பில் ஆர்வமில்லையா, அல்லது வேறு எதையோ நினைத்து பயப்படுகிறானா.

அவனுடன் சிலவேளைகளில் பேசிப் பார்த்திருக்கிறேன். அப்போது கரண் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருப்பான்.. பலநேரம் வெறுமனே தலையசைத்து இல்லை என்று சொல்லுவான். சில நேரம் ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லுவான். சொற்களில்லாமல் கோபத்தைக் காட்டுகிற ஒருவனை எப்படிக் கையாளுவது என எனக்குப் புரியவில்லை.

கரண் தலைசீவிக் கொள்ளமாட்டான். தேய்த்து வைத்த உடைகளைப் போட்டுக் கொள்ளமாட்டான். படுக்கையைச் சுத்தம் செய்துவம் கிடையாது. வேண்டுமென்றே சூடான உணவினை ஆறவிட்டுச் சாப்பிடுகிறான். நாள் கிழமை தேதி எதுவும் தெரியாது. பாலைநிலத்திற்குள் வந்துவிட்ட பனிக்கரடியை போல அவன் தன்னை அந்நியமாக உணர்ந்தான்.

கரணுக்காக நாங்கள் எங்களை மாற்றிக் கொண்டோம். அவன் கேட்காமலே பணம் கொடுத்தோம். அவனோ தன் மௌனத்தை வீடு முழுவதும் நிரப்பிக் கொண்டிருந்தான்.

ஆனால் இப்படி வீட்டை விட்டு ஒடுவான் என்று நாங்கள் நினைக்கவேயில்லை.

எது ஒருவனை வீட்டை விட்டுத் துரத்துகிறது. நாங்கள் அவன் மீது அன்பு காட்டுகிறோம் தானோ, அவனுக்குத் தேவையான வசதிகளை, விருப்பமான பொருட்களை வாங்கித் தந்திருக்கிறோம் தானே. பின் ஏன் அவன் வீட்டை விட்டு ஒடினான். என்ன குறை. என்ன கோபம். யார் மீது வெறுப்பு.

நாமாகப் புலம்பிக் கொண்டிருக்க வேண்டியது தானா. குற்றவுணர்ச்சி ஏன் இப்படி விஸ்வரூபம் எடுத்துக் கொண்டேயிருக்கிறது. பிள்ளைகளை நீர்குமிழி போல நினைப்பது தவறானது தானா. அவர்கள் எரிகற்கள் போன்றவர்களா.

காற்றில் கரங்களால் பறித்துச் செல்லப்படும் மலரை காற்று எவ்வளவு தூரம் கொண்டு செல்லும். தரையில் வீழ்ந்த மலரின் கதி தான் என்ன. மலர்கள் ஏன் இப்படிப் பறக்க ஆசைப்படுகின்றன.

கரணால் நான் அதிகம் குழப்பத்திற்கு உள்ளானேன். அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். குழப்பம் என்பது சேற்றுநிலம் போல. அதில் காலை வைத்து நடக்கத் துவங்கிவிட்டால் எளிதாக வெளியேற முடியாது. ஒரு அடி வைப்பது கூட எளிதானதில்லை.

கரண் இப்படி ஒரு விடிகாலையில் தான் வீட்டை விட்டு ஒடிப்போனான். அவன் கிளம்பிப் போன விஷயமே எங்களுக்குத் தெரியாது. ஆறரை மணிக்கு அபர்ணா கேட்டில் இருந்த பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு யாரோ திருடன் இரவில் வந்து பூட்டை உடைத்திருக்கிறான்எனப் பயந்து என்னை அழைக்குனும் வரை அவளுக்கும் கரண் வெளியேறிப் போனது தெரியாது

எதற்காகப் பூட்டை உடைத்துப் போட்டிருக்கிறான் என்று தெரியவில்லை. அவன் உடைகள் எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. அவனது செல்போன் கூட வீட்டில் தானிருந்தது. சைக்கிள் ஒரமாக நின்றிருந்தது. வெறும் கையோடு போயிருக்கிறான். திடீரென முடிவு செய்து கிளம்பிப் போனது போலவே இருந்தது.

ஒருவேளை மைதானத்திற்குப் போயிருப்பான் என நினைத்துக் கொண்டு வேகமாக மைதானத்திற்குச் சென்றேன். ஆனால் அவனைக் காணவில்லை. திடீரென மைதானம் மிகப்பெரியதாகிவிட்டது போல அச்சமாக இருந்தது. கைகள் நடுங்க அவசரமாக வீடு திரும்பினேன். அபர்ணா அழுது கொண்டிருந்தாள். பக்கத்துவீட்டுப் பெண் அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.

கரணை எங்கே போய்த் தேடுவது என்று தெரியவில்லை. இருவருமாகப் பேருந்து நிலையம் வரை போய்ப் பார்த்துவந்தோம். விடிகாலையில் அப்படி ஒருவன் வந்தானா எனப் பெட்டிக்கடைகளில் விசாரித்தோம். ஒருவர் கண்ணிலும் கரண் படவில்லை. எங்கே போயிருப்பான். அபர்ணா பேருந்து நிலையத்தில் நின்றபடியே சப்தமாக அழுதாள். அவள் அழுகையை ஒருவரும் கண்டுகொள்ளவேயில்லை

அவளை ஆறுதல்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்தேன். அன்றிலிருந்து மூன்று நாட்கள் தெரிந்தவர்கள் வீடு. அவனது நண்பர்கள். ஆசிரியர்கள். எனப் பலரையும் விசாரித்துப் பார்த்துவிட்டோம். எங்கும் அவனைப் பற்றி ஒரு தகவலும் இல்லை. ஒருவேளை அவனாக வீடு திரும்பி வந்துவிடக்கூடும் என்பதற்காக இரவில் வீட்டின் முன்தவை பூட்டவேயில்லை. அன்றாடம் அவனுக்காக இரவு உணவை தனியே எடுத்து வைத்தாள் அபர்ணா. அவன் அறையைச் சுத்தம் செய்து வைத்தாள்.

இப்படிச் சில நாட்கள் விடிகாலையில் எழுந்து துவைத்து தேய்த்து வைத்த அவனது உடைகளை மீண்டும் தண்ணீரில் ஊற வைத்து துவைத்து வந்தாள் அவளும் தன் கோபத்தைத் தான் இப்படிக் காட்டுகிறாளா. அல்லது வேதனையைக் கட்டுபடுத்த முடியவில்லையா

ஒருவன் வீட்டை விட்டுப் போய்விடுகிறான் என்பது எளிய விஷயமில்லை. தனது பதினேழு வருஷ கடந்தகாலத்தை அவன் விட்டுச் செல்கிறான். எத்தனை நினைவுகள். எவ்வளவு கனவுகள். பெற்றோர்களைத் தண்டிப்பதில் ஏன் பிள்ளைகள் இத்தனை ஆனந்தம் கொள்கிறார்கள்

ஒருவேளை கரணின் பக்கமிருந்து பார்த்தால் இதுவெல்லாம் இயல்பான விஷயமாக இருக்குமோ என்னவோ. வீட்டை விட்டு ஒடுவதென்பது மரத்தில் இருந்து திடீரெனப் பறவை விடுபட்டு வானத்தில் பறந்து போய்விடுவது போல எளிதான விஷயம் தானா. பறவைகளுக்கு எளிதாகக் கூட இருக்கலாம். மரமாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது

கரணைத் தேடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றவில்லை. எனது வேலைக்கு லீவு போட்டுவிட்டுச் சுற்றியலைந்தேன். சில சமயம் நானும் அபர்ணாவும் ஒன்றாகத் தேடினோம். கரண் கிடைக்காமல் வீடு திரும்பும் நாட்களில் அபர்ணா வேறு யாரோ ஒரு பெண்ணைப் போலிருந்தாள். அவள் முகத்திலிருந்த வேதனை மனதை மிகவும் கலக்கமடையச் செய்தது.

கரண் வீட்டை விட்டு ஒடியதற்குத் தானே காரணம் என அழுவாள். சில நேரம் நான் தான் காரணம் என்று சண்டையிடுவாள். பல நேரம் அவனுக்குப் படிக்கப் பிடிக்கவில்லை. வேறு நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்த்திருக்கலாம் என்று ஆதங்கப்படுவாள்.

ஒருவன் காணாமல் போனவுடன் ஆயிரம் காரணங்கள் கிளைவிடத் துவங்கிவிடுகின்றன. எல்லாமும் நியாயமாகவும் தோன்றுகின்றன.

கரண் வீட்டில் இருந்தாலும் அவன் அறையை விட்டு வெளியே வர மாட்டான். பள்ளிக்கு போகும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அறைக்குள்ளே இருந்தான். அதன் ஜன்னல்களையும் திறக்க மாட்டான். பல நேரம் லைட் போட்டுக் கொள்வது கூடக் கிடையாது. ஒருவனால் எப்படி இருட்டிற்குள் அமர்ந்திருக்க முடிகிறது. அபர்ணா தான் அவன் அறையில் எப்போதும் லைட்டை போட்டு விடுவாள். சில வேளைகளில் இரவில் லைட்டை அணைக்கவே மாட்டான். இரவெல்லாம் எரிந்து கொண்டேயிருக்கும் பகலிலும் அது எரிவதை கண்டிருக்கிறேன். பகலில் எதற்காக இப்படி லைட் எரிகிறது என்று கோபம் கொண்டிருக்கிறேன். அது அவன் தெரியாமல் செய்த விஷயமில்லை. தெரிந்தே அந்த விளக்கினை எரிய விடுகிறான்.

கோபம் இப்படியும் வெளிப்படுமா என்ன,

கரணுக்குப் படிப்பில் விருப்பமில்லை. விளையாட்டில் விருப்பமில்லை. சாப்பாட்டில் விருப்பமில்லை. நல்ல உடைகளில் விருப்பமில்லை. அவனுக்கு எதிலோ விருப்பமிருந்தது. அதை எங்களால் கண்டறிய முடியவில்லை.

அபர்ணா அவனை ச்துரங்கம் கற்றுக் கொள்ள அனுப்பி வைத்தாள். இரண்டு மாதங்கள் சென்று வந்தான். பிறகு ஒரு நாள் அவன் சதுரங்கம் ஆடப்பிடிக்கவில்லை என்று நிறுத்திக் கொண்டுவிட்டான். சில செடிகள் வளரும் போது திடீரென வளைந்து கொண்டுவிடுகின்றன. அவற்றை எப்படி நேர் செய்தாலும் அவை வளைந்து நிற்கவே விரும்புகின்றன. கரண் அப்படித்தானிருந்தான்.

வீட்டை விட்டு ஒடுகிறவனுக்கு வெளிப்படையான காரணங்கள் தேவையில்லையோ என்னவோ. உண்மையில் அவன் எங்களைத் தண்டிக்க விரும்பியிருக்கிறான். அந்தத் தண்டனை எளிதானதில்லை. ஒன்பது மாதங்களாக அன்றாடம் நாங்கள் அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறோம். இரவில் அவன் வந்துவிடுவானோ என்று கதவை பார்த்தபடியே இருந்தேன். பாதி உறக்கத்தில் கதவு தள்ளப்படும் சப்தம் கேட்பது போலத் தோன்றியது

கரண் இல்லாத அவனது படுக்கையைக் காண்பது மனதை ரணப்படுத்தியது. குளியல் அறையில் கரணின் சோப்பை கையில் எடுத்து முகர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன பைத்தியக்காரத்தனமிது. ஆனால் அந்தச் சோப்பினுள் கரணின் வாசனை கலந்திருக்கிறது.

கரண் இப்போது என்ன செய்து கொண்டிருப்பான். யாருடன் தங்கியிருப்பான். அவனது கஷ்டங்களை நாங்கள் நினைத்து நினைத்து வருந்திக் கொண்டிருந்தோம். அந்த வருத்தம் சமயத்தில் கோபமாக மாறிவிடும். எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் மேலும் மனச்சோர்வை அதிகமாக்கிவிடும்.

கரண் காணாமல் போனது இது மூன்றாம் முறை.

அவனது ஆறு வயதில் குற்றாலத்திற்குப் போயிருந்தோம். என்னோடு தான் அருவில் குளிப்பதற்காக வந்திருந்தான். பேரோசையுடன் கொட்டும் அருவியைக் கண்டு பயந்து ஒரமாக நின்றிருந்தான். மெலிந்த அவன் கைகளைப் பிடித்து அருவிக்குள் இழுத்தேன். வெற்றுடம்பில் தண்ணீர்பட்டு தெறிக்க விலகி ஒடினான். தண்ணீரை வாறி அவன் மீது அடித்தேன். அதன் குளிர்ச்சி தாங்க முடியாதவன் போல நடுங்கினான்

ஒண்ணும் செய்யாது கரண். வா. குளிக்கலாம் என்று அவனை மறுபடியும் இழுத்தேன்.

அவன் தயங்கி தயங்கி அருவிக்குள் வந்தான். சிறுகிளை போல விரிந்து வழியும் தண்ணீரில் அவனைக் குளிக்கச் செய்தேன். ஒரு நிமிஷம் கூட நிற்கவில்லை. அவசரமாக வெளியேறி ஒடினான்.

சிரித்தபடியே நான் பேரருவியினுள் நுழைந்து தலையைக் கொடுத்தேன். அருவிக்குள்ளும் என் கண்கள் கரணை பார்த்தபடியே இருந்தன. ஆனால் தண்ணீரின் வேகத்தில் கரண் புலப்படவில்லை. கூட்டம் வேறு இடித்துத் தள்ளியது. அருவியை விட்டு வெளியேறி வந்தபோது கரணைக் காணவில்லை.

எங்காவது தனியே உட்கார்ந்து கொண்டிருப்பான் என நினைத்து அங்குமிங்கும் தேடினேன். ஒரு வேளை அபர்ணா வந்து அவனை அழைத்துக் கொண்டு போய்விட்டாளா. அல்லது அவனே அவளைத் தேடிப் போய்விட்டானா எனக்குழம்பியபடியே அபர்ணா குளித்துக் கொண்டிருந்த பெண்கள் பக்கம் போவதற்கு முயன்றேன். அங்கிருந்த காவலர்கள் என்னை அனுமதிக்கவில்லை.

அபர்ணா தன்னை மறந்து அருவியில் குளித்துக் கொண்டிருந்தாள். அவள் பெயரை சொல்லி சப்தமிட்டேன். அது அருவிச் சப்தத்தினுள் கேட்கவில்லை. ஒரு பெண்ணிடம் அவளை அழைக்கும்படி சொன்னேன்

அபர்ணா ஈரம் சொட்டும் உடையுடன் வந்து நின்று கரண் எங்கே என்று கேட்டாள்

“இங்கே வரலையா“ என்று கேட்டேன்

“என்ன சொல்றீங்க. உங்க கூடத் தானே வந்தான்“ என்று பதற்றமாகக் கேட்டாள்

“அவனைக் காணோம்“ என்றேன்

அவ்வளவு தான் அபர்ணா சப்தமாக அழ ஆரம்பித்தாள். இதைக் கேட்டு அங்கிருந்த காவலர் ஒருவர் விசாரிக்க ஆரம்பித்தார். நாங்கள் மூவருமாகக் கரண்யை தேட ஆரம்பித்தோம்.

திடீரென அந்த அருவியும் இளவெயிலும் அருவிக்கரையில் மோதி வழியும் மனிதர்களும் அச்சமூட்டினார்கள். கரண் கரண் என்று கத்தியபடியே இங்குமங்கும் ஒடினோம். காவலர் உதவி மையத்தில் ஒலிபெருக்கியில் கூட அறிவித்தார்கள்.

எங்கே போயிருப்பான் கரண். ஒருவேளை ஒடும் தண்ணீரில் விழுந்துவிட்டானா. அல்லது கடைவீதிகளுக்குள் போயிருப்பானா. அபர்ணா கடைவீதியில் தனியே அலைந்தாள். நான் ஒருபக்கம் சுற்றி அலைந்தேன். சிறுவர்களின் முதுகு ஒன்று போலவேயிருப்பதை அன்று தான் கவனித்தேன்.

அபர்ணா கரடிபொம்மைகள் விற்பவனிடம் விசாரித்துக் கொண்டிருந்தாள். யாரும் கரணைப் பார்த்திருக்கவில்லை. மனம் விபரீதமான விஷயங்களைக் கற்பனை செய்து கொண்டிருந்தது. மதியம் இரண்டு மணி வரை அருவியைச் சுற்றிய இடங்களில் தேடி அலைந்தோம். பூங்காவிற்குக் கூடப் போய்ப் பார்த்து வந்தேன்.

அபர்ணா மறுபடியும் அருவிக்கரைக்கு ஒடினாள். ஆண்கள் பகுதியினுள் தனியே சுற்றி அலைந்தாள். யாரோ அவளைக் கோவித்துக் கொண்டார்கள். எதையும் அவள் கண்டுகொள்ளவேயில்லை.

வழிந்தோடும் தண்ணீரில் அமர்ந்தபடியே அபர்ணா அழுது கொண்டிருந்தாள் எனக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. அவளை ஆறுதல் படுத்த முயன்று தோற்றுப் போனேன்.

மதியம் மூன்றுமணி வரை கோவில் முன்பாகவே நின்று கொண்டிருந்தோம். இதற்குள் அபர்ணா நான்கு தடவைகள் சாமி கும்பிட்டு திரும்பி வந்தாள். வேண்டுதல் உடனே பலித்துவிடுமா என்ன.

நாலரை மணிக்கு ஒரு குடும்பம் குளிப்பதற்காக வந்தார்கள். எண்ணெய் வழியும் பருத்த வயிறுடன் ஒரு பெண்ணும் இரண்டு சிறுமிகளும் நடந்து வந்தார்கள். அந்தச் சிறுமியோடு கரணும் வந்து கொண்டிருந்தான். அவர்களுடன் எப்படிப் போனான் என்று தெரியவில்லை ஆனால் அபர்ணா தொலைவிலே அவனைக் கண்டுபிடித்துவிட்டாள்.

ஒடிப்போய் அவனைக் கட்டிக் கொண்டு அழுதாள்.

அந்த ஆள் உங்க பையனா. காலையில் குளிச்சிட்டு கிளம்பும் போது எங்க கூட வந்துட்டான். கேட்டா பதிலே பேசலை. ரூம்க்கு கூட்டிட்டு போயிட்டோம்.

கரணை அபர்ணா அடித்தாள். அவளை அடிக்க வேண்டாம் என்று நான் தடுத்தேன். கரண் அடிவாங்கிக் கொண்டு சலனமேயில்லாமல் நின்றிருந்தான். அந்தக் குடும்பம் அருவியை நோக்கிச் சென்றது. சிறுமிகள் திரும்பி பார்த்தபடியே நடந்தார்கள்.

கரணின் கைகளைப் பிடித்துக் கோவிலுக்குள் இழுத்துக் கொண்டு போனாள் அபர்ணா. திரும்பி வரும்போது இருவர் நெற்றியிலும் திருநீறு இருந்தது. அடுத்த அரைமணி நேரத்தில் நாங்கள் அறையைக் காலி செய்து பேருந்தில் ஏறியிருந்தோம்

எதற்காக யாரோ ஒரு குடும்பத்துடன் கரண் போனான் என்று புரியவில்லை. வீடு வந்து சேர்ந்தவுடன் அபர்ணாவிற்குக் காய்ச்சல் வந்துவிட்டது. நான் கரணிடம் எவ்வளவோ விசாரித்துப் பார்த்தும் அவன் ஒரு வார்த்தை பதில் சொல்லவில்லை

அதன் பிறகு நாங்கள் பயணம் போவதற்கே தயங்கினோம். அபர்ணா எப்போதும் அவனைத் தன் பொறுப்பிலே வைத்துக் கொண்டாள். டிவியில் குற்றால அருவியைக் காட்டினால் கூட எனக்குக் கரண் காணாமல் போய்த் தேடியது தான் நினைவில் வந்து போனது

இது நடந்து ஆறுமாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் அபர்ணா சொன்னாள்

“நீங்க தான் பிள்ளையை அருவிக்குள்ளே தள்ளிவிட்டு இருக்கீங்க. அந்தக் கோபத்தில தான் அவங்க கூடப் போயிருக்கான்“

“இல்லை அபி.. நான் கையைப் பிடிச்சி குளிக்கத் தான் கூட்டிட்டு போனேன்“

“அருவியில குளிக்காட்டி என்ன குறைஞ்சா போயிடும். அதான் அவன் பயப்படுறான்லே“

“நான் கையைப் பிடிச்சிட்டு தான் இருந்தேன்“

“அவங்க அருவிக்குக் கூட்டிகிட்டு வர்றப்போ நல்லவேளையா கோவில் வாசல்ல நின்னுகிட்டு இருந்தோம். இல்லாட்டி நம்ம பிள்ளை அவ்வளவு தான்“

என்று சொல்லி முடிப்பதற்குள் கண்ணீர் பொங்கிக் கொண்டு வந்தது

“அதான் வந்துட்டான்லே“

“அவனை இனிமேல் எதுக்கும் கட்டாயப்படுத்தாதீங்க“

சரியென்று தலையாட்டினேன்

அதன்பிறகு நான் அவன் கைகளைப் பிடிக்கும் போதெல்லாம் குற்றவுணர்வு கொண்டேன். அவன் எங்களுடன் சேர்ந்து சாப்பிடாத போதும் கூட நான் கோவித்துக் கொள்ளவில்லை.

அவனை வேறு பள்ளிக்கு அபர்ணா மாற்றிபோதும் நான் கோவித்துக் கொள்ளவில்லை. ஆனால் கரண் சப்தமில்லாமல் தான் விரும்பியதை செய்யக்கூடியவன் என்பதை நன்றாக உணர ஆரம்பித்திருந்தேன். அதன்பிறகு நாங்கள் மூவரும் வெளியே போவதாக இருந்தால் எங்கள் கவனம் முழுவதும் கரணின் மீதே இருந்தது.

கரண் பள்ளிவிட்டு திரும்பி வர அரைமணி நேரம் தாமதமானாலும் உடனே அபர்ணா கிளம்பி போய்விடுவாள். கரணுக்கு போட்டோ எடுத்துக் கொள்ளப்பிடிக்காது. ஆகவே அவனது பத்து பனிரெண்டு வயது புகைப்படங்கள் ஒன்று கூட என்னிடம் கிடையாது. உறவினர்கள் திருமண வீட்டிற்குப் போனாலும் கரண் சாப்பிடமாட்டான். கூட்டத்துடன் அமர்ந்து சாப்பிட அவனுக்குப் பிடிக்காது. அபர்ணா அவனுக்காக வீட்டில் சமைத்து வைத்திருப்பாள். அல்லது வழியில் ஹோட்டலில் அவனை மட்டும் சாப்பிடச் சொல்லுவாள்

ஹோட்டலி அத்தனை பேர் முன்னாலும் சாப்பிட முடிகிறவனுக்குக் கல்யாண வீட்டில் சாப்பிட மட்டும் ஏன் பிடிக்கவில்லை என்று ஆத்திரமாக வரும். ஆனால் காட்டிக் கொள்ள மாட்டேன்

கரணுக்கு எதில் ஆர்வமிருந்தது என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. வீட்டில் ஒடாமல் கிடந்த கடிகாரம் ஒன்றை தானே ஒரு நாள் கரண் சரிசெய்து கொடுத்தான். அத்தோடு அந்தக் கடிகாரத்தின் எண்கள் இருளில் ஒளிரும்படி செய்திருந்தான். எங்கே கற்றுக் கொண்டான் என்று தெரியவில்லை. ஆனால் அவனுக்குக் கடிகாரங்களை உருவாக்குவதில் விருப்பம் இருந்தது. அபர்ணாவின் கைக்கடிகாரத்தைப் புதிய வடிவில் உருமாற்றிக் கொடுத்தான்

“கடிகாரம் செய்வதற்கு ஏதாவது படிப்பு இருந்தால் அவனைப் படிக்க வைக்கலாம் “என்றாள் அபர்ணா

“அப்படி ஒரு படிப்பும் கிடையாது. “ என்றேன்

“என் வாட்சை எவ்வளவு அழகாக மாத்திட்டான்“ என்று பெருமையாகச் சொன்னாள் அபர்ணா

கடிகாரம் செய்வதற்கு என்ன படிப்பு இருக்கிறது. எந்தக் கல்லூரி இருக்கிறது என்று தேட ஆரம்பித்தேன். எவருக்கும் அதைப்பற்றித் தெரியவில்லை

இரண்டாம் முறையாகக் கரண் காணாமல் போனது அவனது பதினைந்தாம் வயதின் பிறந்த நாளின் போது. அன்றைக்குச் சைக்கிளில் வெளியே போனான். கேக் வாங்கிக் கொண்டு வரப்போவதாக அபர்ணா சொன்னாள். பத்து மணிக்கு வெளியே போனவன் மதியம் இரண்டு மணியாகியும் வகரண்ல்லை. நான் பைக்கில் ஒவ்வொரு பேக்கரியாக அலைந்து தேடினேன். கரணைக் காணவில்லை

ஒருவேளை ஏதாவது ஆக்சிடெண்ட் ஆகியிருக்குமா எனப்பயந்து அபர்ணா பொதுமருத்துவமனைக்குப் போய்த் தேடி வருவோம் என்றாள். நாங்கள் பயந்தது போல ஒரு தகவலும் இல்லை. இரவு வரை காத்திருந்தும் கரண் வீடு திரும்பி வரவில்லை

சைக்கிளில் ஒருவன் எங்கே போயிருப்பான். கரணோடு படிக்கும் அஸ்வின் ஹைவே ரோட்டில் அவன் போவதைப் பார்த்ததாகச் சொன்னான்.

ஹைவேயில் எங்கே போனான் என்று தெரியவில்லை. பைக்கில் நானும் மாரிமுத்து சாரும் ஒன்றாகத் தேடி அலைந்தோம். பெட்ரோல் பங்க் பையன் மட்டும் அப்படி ஒருவன் கடந்து போனதைக் கண்டதாகச் சொன்னான். எவ்வளவு தூரம் போவது எனப்புரியாமல் பைக்கில் போய்க் கொண்டேயிருந்தோம். வீடு திரும்பிய இகரண்ல் அபர்ணா தரையில் சுருண்டு படுத்துகிடப்பதைக் கண்டேன். லைட்டைக் கூடப் போடவில்லை. அழுது அழுது கண்கள் வீங்கியிருந்தன. அவளை எழுப்பிக் கரணைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றேன்

பிறந்த நாளும் அதுவுமா எங்க போனான் என்று அவள் மறுபடியும் விசும்பத் துவங்கினாள்

இரவில் கரண்யைப் பற்றி நினைத்தபடியே உறக்கமற்று கிடந்தோம். இரண்டு நாட்கள் கரணைத் தேடியும் கிடைக்கவில்லை. ஆனால் மூன்றாம் நாள் காலை அவன் சைக்கிள் வீட்டுவாசலில் நின்றிருந்தது. கரண் வீடு திரும்பியிருந்தான் தலையில் ஒரு ஒலைத்தொப்பி.

அபர்ணா அவனிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. கரண் தன் அறைக்குப் போய் உறங்கத் துவங்கிவிட்டான்

ஒரு வாரத்தின் பிறகு அபர்ணா சொன்னாள்

“கன்யாகுமரி வரைக்கும் சைக்கிள்ல போயிருந்தானாம்“

“சொல்லிட்டு போகலாம்லே“

“திடீர்னு தோணுச்சாம்“

எனக்குள் கோபம் பீறிட்டது. ஆனால் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. அந்த ஒலைத்தொப்பியை காணும் போதெல்லாம் அது என்னைப் பரிகாசம் செய்வது போலவே தோன்றியது

இரண்டாம் முறை காணாமல் போய்த் திரும்பி வந்தபிறகு கரணிடம் ஒரு மாற்றத்தை கண்டேன். அவன் படிப்பில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தான். கணிதபாடத்தில் அவன் முதல்மதிப்பெண் பெற்றிருக்கிறான் என்று அபர்ணா சந்தோஷமாகச் சொன்னாள்

ஒரு நாளில் இரண்டு டியூசன் படிக்கப் போய்வந்தான். இரவெல்லாம் கண்விழித்துப் படித்தான். ஆனால் இந்த மாற்றம் மூன்று மாதங்களில் வடிந்து போனது. பரிட்சை நாளில் பள்ளிக்குப் போகாமல் வீட்டிலே இருந்தான். அபர்ணா எவ்வளவு திட்டியும் அவன் பள்ளிக்கு போகவில்லை. என்ன நடக்கிறது அவனுக்குள் , ஏன் திடீரெனத் தன்னைச் சுருக்கிக் கொண்டுவிட்டான்

ஒரு நாள் அபர்ணா சொன்னாள்

“அவனுக்குப் படிக்கப் பிடிக்கலையாம்“

“என்ன செய்யப்போறானாம்“

“சைக்கிள்லயே இந்தியா பூரா போகப்போறானாம்“

“லூசாடி அவன். சைக்கிள்ல ஊர் சுத்துனா வயிறு நிரம்பிடுமா“

“அவன் கிட்ட நீங்க தான் பேசுங்க“

“பேசுனா வாயை திறக்கமாட்டாங்கிறேன்“

“என்கிட்டயும் தான் பேசமாட்டேங்குறான். அதுக்காக அப்படியே விட்றமுடியுமா“

“என்ன செய்யச் சொல்றே“

“நீங்க கண்டிக்கத்தான் வேணும்“

நான் கரணைக் கண்டிக்கவில்லை. ஆனால் அவன் சைக்கிள் பயணம் போகும் எண்ணத்தைத் தானே கைவிட்டுவிட்டான். அதையும் அபர்ணாவிடம் தான் சொல்லியிருக்கிறான்

கரண் மூன்றாம்முறை காணாமல் போவான் என்று நாங்கள் நினைக்கவேயில்லை. இந்த முறை அவன் ஒன்பது மாதங்கள் கடந்தும் வீடு திரும்பவில்லை. அவன் சைக்கிள் கூட வீட்டில் தானிருக்கிறது. பேரலை ஒன்று அவனை இழுத்துக் கொண்டு போய்விட்டது போல உணர்ந்தேன்.

தேடிச் சோர்ந்த நாட்களில் நாங்கள் இருவரும் இரவெல்லாம் விளக்கை எரிய விட்டு உட்கார்ந்தேயிருந்தோம். திடீரெனக் கரணின் ஐந்து வயதில் நடந்த விஷயங்களை அபர்ணா சொல்ல ஆரம்பிம்மாள். நான் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருப்பேன்

பிரிவு என்பது எவ்வளவு சிறிய சொல். எவ்வளவு பெரிய வலி. அதை ஏன் கரண் புரிந்து கொள்ளவில்லை. ஒடிப்போனவர்கள் நினைவுகளையும் எடுத்துக் கொண்டு போய்விட வேண்டியது தானே

சில நாட்கள் அபர்ணாவின் கனவில் கரண் வந்தான். விடிந்து எழுந்தவுடன் அதைப்பற்றிச் சொல்லிக் கொண்டிருப்பாள். ஆனால் ஒருமுறை கூட என் கனவில் கரண் வகரண்ல்லை.

கொஞ்சம் கொஞ்சமாக நானும் அபர்ணாவும் பித்தேறியவர்கள் போல நடந்து கொள்ள ஆரம்பித்தோம். கரண் எங்களுடன் இருப்பது போலவே கற்பனை செய்து கொள்ள ஆரம்பித்தோம். அதை உறுதிப்படுத்துவது போலக் கரண்க்குப் பிடித்த பிளம்கேக்கை பேக்கரியில் இருந்து வாங்கி வர ஆரம்பித்தேன். அபர்ணா அவனது அறையில் இகரண்ல் விளக்கை எரிய விட்டாள். மின்விசிறிறை சுழல விட்டாள்.

கரண் என்ற சொல்லை எங்கே கேட்டாலும் அது எங்கள் கரணை மட்டுமே குறிப்பதாக மாறியது.

வீட்டை துறந்து சென்றவர்கள் நினைவில் பெற்றோர்களின் வாடிய முகங்கள் வந்து போகுமா. தான் இல்லாத வீட்டின் வெறுமை எத்தகையது என அவர்கள் உணர்வார்களா, தன் கோபத்தை உலகம் மீது காட்ட இயலாமல் தான் வீட்டின் மீது காட்டுகிறார்களா.

அபர்ணா காத்திருக்கத் துவங்கிவிட்டாள். பெண்களால் எத்தனை ஆண்டுகளுக்கும் காத்திருக்க முடியும். கண்ணீரை உறையச் செய்துவிட முடியும். ஆனால் என்னால். ஒவ்வொரு நாளின் காத்திருப்பும் தோளில் பெரும்பாரமாக இறங்குகிறது

என் இயலாமையை எப்படி வெளிப்படுத்துவது. எதைக் கொண்டு என் கண்ணீரை மறைத்துக் கொள்வது

அபர்ணா துணியைக் கொடியில் காயப்போட்டுவிட்டு வந்தாள். என்னைக் கடந்து போகையில் அவள் எதையோ கேட்க விரும்பியது போல நின்றாள். ஆனால் கேட்கவில்லை.

எனக்கும் அவளிடம் எதையோ சொல்ல வேண்டும் போலிருந்தது. சமையல் அறையில் இருந்த கரணின் சாப்பாடு தட்டை வேண்டுமென்றே எடுத்து கீழே போட்டேன்

அது தரையில் விழுந்து சப்தம் எழுப்பியதை அவள் கேட்காதவள் போல நின்று கொண்டிருந்தாள். எனக்கோ அது எங்கோ தொலைவில் சப்தம் எழுப்பியதைப் போலக் கேட்டது.

தலைகீழாகக் கிடந்த தட்டின் முதுகினைக் காணும் போது கரண் நினைவு மிகவும் அதிகமானது எனக்கு மட்டும் தான்

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 18, 2021 11:00

March 17, 2021

கிணற்றின் வயது

புதிய சிறுகதை

அவர்கள் மூன்று பேர் வந்திருந்தார்கள்.

மூவரில் உயரமாக இருந்தவருக்கு வயது எழுபதிற்கும் மேலிருக்கும். ஈட்டி போன்ற உறுதியான உடற்கட்டு கொண்டிருந்தார். தோளில் ஒரு துண்டு. அழுக்கடைந்த வேஷ்டி. உடன் வந்திருந்த இரண்டு பேரும் இளைஞர்கள். பெரியவர் கையில் ஒரு மஞ்சள் பையிருந்தது. அதில் ஏதோ ஒரு பொருளைச் சுற்றி வைத்திருந்தார்.

வீட்டின் பின்புறமிருந்த கிணற்றடிக்கு அவர்கள் போய் நின்றபோது விசாலாட்சி பூக் கட்டிக் கொண்டிருந்தாள். அவளுக்கு எழுபது வயது நடந்து கொண்டிருந்தது. தலையில் ஒரு கறுப்பு முடி கூடக் கிடையாது. மற்றவர்களைப் போல அவள் தலைக்குக் கறுப்பு மை பூசிக்கொள்வதுமில்லை. செங்கல் நிற சுங்கடி புடவை உடுத்தியிருந்தாள். அவளது ஜாக்கெட் தொளதொளவென இருந்தது.

“இன்னைக்கு வெள்ளிக்கிழமையாக இருக்கு. பூஜையை மட்டும் முடிச்சிடுகிவோம். கிணற்றை மூடுறதை நாளைக்குச் செய்யலாம்“ என்றார் பெரியவர்

விசாலாட்சி வருத்தம் தோய்ந்த முகத்துடன் அதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கு வீட்டுக்கிணற்றை மூடுவதில் விருப்பமில்லை. எவ்வளவோ சண்டையிட்டுப் பார்த்துவிட்டாள். வீட்டில் அவளது மகன் பிரசாத் மருமகள் பாவனா பேரன் பேத்தி என எல்லோரும் கிணற்றை மூட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்கள்

“ஒரு தட்டுல வெத்திலை பாக்கு, வெல்லம், தேங்காய் பழம், பூ வச்சி கொண்டுட்டு வாங்க“ என்றார் பெரியவர்

விசாலாட்சி பூஜை அறைக்குள் சென்று ஒரு தட்டில் அவர் கேட்ட பொருட்களை எடுத்துக் கொண்டு வந்தாள். திடீரென அவள் கட்டிய பூ மாலையைச் சாமிக்குப் போடுவதற்குப் பதிலாகக் கிணற்றுக்கே போடலாமே என்று தோன்றியது. அதையும் தட்டில் வைத்தாள். கூடவே 101 ரூபாய் பணத்தையும் வைத்து எடுத்துக் கொண்டு வந்தாள்

இதற்குள் வந்தவர்கள் கிணற்றடியைச் சுத்தம் செய்து வைத்திருந்தார்கள். இளைஞன் வாழையிலை ஒன்றை வெட்டி படையலுக்காக விரித்து வைத்திருந்தான்.

அந்தப் பெரியவர் தன் பையிலிருந்து சிறிய வெண்கலப்பதுமை ஒன்றை வெளியே எடுத்து இலையின் முன்னால் வைத்தார். விசாலாட்சி கொண்டு வந்திருந்த பூஜை பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து இலையில் பரப்பி வைத்தார்

பிறகு அவளிடம் “ஒரு நாழி நிறைய அரிசியும் நிறை விளக்கும் கொண்டுகிட்டு வாங்க“ என்றார்

“நாழியை எங்கேபோய்த் தேடுவது“ என ஒரு நிமிஷம் யோசித்தாள். மரக்கால் உறி, மண்கலயம், வெண்கலப் பானைகள். எல்லாம் மறைந்து போய் எத்தனை ஆண்டுகளாகிவிட்டது. அவரிடமே கேட்டாள்

“சின்ன உழக்கு தான் இருக்கு கொண்டுட்டு வரவா “

“அப்போ ஒரு சொளகு நிறையப் பச்சரிசி கொண்டுகிட்டு வாங்க“ என்றார் அந்தப் பெரியவர்

சமையல் அறைக்குள் போய்ப் பச்சரிசியைத் தேடினாள். சமையல் மருமகள் வசமானபிறகு எந்தப் பொருள் எங்கேயிருக்கிறது என்று தெரியாது. சில பாக்கெட்டுகளைக் காணும் போது அது என்ன பொருள் என்று கூட அவளுக்குத் தெரியாது. சமையல் அறையே மாறிவிட்டது. மீனாம்பாள் இருந்தவரைக்கும் சமையல் அறையில் அவளைத் தவிர வேறு எவரும் ஒரு உப்புக்கல்லைக் கூட எடுக்க முடியாது. மாமியார் இல்லாத குறையைத் தீர்க்க வந்த மகராசி, அவளும் போய் சேர்ந்துவிட்டாள் என்று நினைத்துக் கொண்டபடியே பச்சரிசியைச் சொளகில் கொண்டு போய்க் கொடுத்தாள்

அவர்கள் வாழை இலையில் அரிசியைப் பரப்பினார்கள். பூ மாலையைக் கிணற்றுக்குச் சூடினார்கள். உருளையில் பூவைக் கிள்ளி சொருகினான் இளைஞன்.

ஐந்து முகம் கொண்ட விளக்கினை ஏற்றினார் அந்தப் பெரியவர்.

“சூடம் காட்டுற தட்டும் மணியும் வேணும் “என்று இளைஞன் கேட்டான்

விசாலாட்சி வீட்டிற்குள் அதை எடுக்கப்போனபோது மருமகள் டிவி பார்த்துக் கொண்டிருந்தபடியே “காசு எதுவும் குடுக்காதீங்க. காண்டிராக்டர்கிட்ட ஏற்கனவே அட்வான்ஸ் குடுத்து இருக்கோம் “ என்றாள்

“சூடம் காட்டுற தட்டு வேணுமாம்“

விசாலாட்சியின் பேரன் நந்து கேட்டான்

“பாட்டி. கிணற்றை எதை வச்சி மூடுவாங்க. ஸ்டோனா. இல்ல டோரா “

அவள் பதில் சொல்லவில்லை. சூடம் காட்டுகிற தட்டையும் மணியையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தவள் திரும்பி பேரனிடம் சொன்னாள்

“சாமி கும்புட வா. நந்து“

“போ பாட்டி. நான் வரலை. அந்தக் கிணறு ரொம்ப டர்ட்டி. அது கிட்ட போகக் கூடாதுனு மம்மி சொல்லியிருக்காங்க“

“நாளைக்குக் கிணற்றை மூடப்போறாங்கடா“

“புது கார்ஷெட் கட்டப்போறோம். மம்மி சொல்லிட்டாங்க“

பேரபிள்ளைகளும் இப்படியாகிவிட்டார்களே என்று விசாலாட்சிக்கு ஆதங்கமாக இருந்தது. இந்தக் கிணற்றடியில் வைத்து எத்தனை நாட்கள் மகனுக்குக் கதை சொல்லியிருக்கிறோம். விடுமுறைக்காகச் சேலத்திலிருந்து வந்த உறவினர்பிள்ளைகள் அத்தனையும் இந்தக் கிணற்றடியைச் சுற்றித் தானே விளையாடினார்கள். கதை பேசினார்கள். குளித்தார்கள்.

அவள் சூடம்காட்டும் தட்டினையும் மணியினையும் அந்த இளைஞனிடம் கொடுத்தாள்.

இதற்குள் பெரியவர் தன் மேல்சட்டையைக் கழட்டிவிட்டு இடுப்பில் துண்டைக் கட்டியபடியே மந்திரம் சொல்பவர் போல எதையே முணுமுணுத்தபடியே இலையின் முன்னால் அமர்ந்திருந்தார்.

என்ன வணங்குகிறார்கள் எனப்புரியாமல் அந்தப் பெரியவரைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பெரியவர் விளக்கைத் தூண்டி விட்டார். இளைஞன் மணி ஆட்டினான்

பெரியவர் கைபிடி நிறைய அரிசையை எடுத்து ஏதோ சொல்லி கிணற்றில் கொண்டு போய்ப் போட்டுவந்தார். பின்பு நான்கு திசைகளை நோக்கியும் பூப்போட்டு வணங்கினார். தேங்காய் உடைத்துத் தீபராதனை காட்டினார். இளைஞன் வேகமாக மணியை அடித்தான்

 அவளிடம் “கும்பிட்டுக்கோங்க “என்றார்.

அவள் கிணற்றை இருகரம் கூப்பி வணங்கினாள். பின்பு கோவிலை வலம் வருவது போலக் கிணற்றைச் சுற்றி வந்து வணங்கினாள்

“வீட்டில இருந்து ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டுவந்து கிணற்றில் ஊற்றுங்க “என்றார் அந்தப் பெரியவர்

விசாலாட்சி வீட்டிற்குள் போய் ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டுவந்து பெரியவரிடம் நீட்டினாள்

“நீங்களே ஊற்றுங்க“ என்றார்

மரணப்படுக்கையில் கிடப்பவர்களுக்குக் கடைசியாகப் பால் ஊற்றுவது நினைவிற்கு வந்து போனது. கிணற்றில் அந்தத் தண்ணீரை ஊற்றினாள். எவ்வளவு தண்ணீரை இந்தக் கிணறு நமக்குத் தந்திருக்கிறது. இன்று அந்தக் கிணறுக்கு நாம் ஒரு டம்ளர் தண்ணீர் பதிலுக்குத் தருகிறோம். இரண்டும் ஒன்று தானா

அவளை அறியாமல் கண்கள் கலங்கின

“வீட்டுல இருக்கிற எல்லோரும் வந்து கும்பிட்டுக்கோங்க“ என்றார் பெரியவர்

தன்னைத் தவிர எவருக்கும் கிணறு வேண்டியதில்லை என்று அவரிடம் எப்படிச் சொல்வது. அவள் கிணற்றைக் கைகூப்பி வணங்கினாள்.

“ராத்திரி முழுக்க இந்த விளக்கு எரியட்டும். காலையில் நாங்க வந்து கிணற்றை மூடுற வேலையை ஆரம்பிச்சிடுறோம்“

சரியெனத் தலையாட்டினாள்

அவர் தனது பையில் உடைத்த தேங்காய் பழம் வெற்றிலை அரிசி வெல்லம் உள்ளிட்ட பொருட்களை எடுத்துப் போட்டுக் கொண்டார். பிறகுத் தன் சட்டையை அணிந்தபடியே சொன்னார்

“சாந்தி செய்யாமல் கிணற்றை மூடக்கூடாதும்மா. “

அவளுக்கு அது புரிந்தேயிருந்தது.

“கிணற்றுக்குள்ளே ஒரு ஆமை இருக்கு“ என்றாள் விசாலாட்சி

“நாளை கிணற்றுக்குள்ளே இறங்கி அதை வெளியே எடுத்துவிட்ருவோம் “என்றான் இளைஞன்

“அது எங்கே போகும்“ என்று கேட்டாள் விசாலாட்சி

“நாங்களே கொண்டு போய் ராஜாஊரணியில விட்ருறோம்“ என்றான்

இதுவரை அந்த ஆமை வெளிஉலகினை கண்டதேயில்லை. நாளைக்குத் தான் முதன்முறையாக வெளியுலகினை காணப்போகிறது

“மறக்காமல் ஆமையை வெளியே எடுத்துவிடணும்“ என்று சொன்னாள் விசாலாட்சி.

பெரியவர் தலையாட்டிக் கொண்டார்

ஒரு இளைஞன் வாளி கயிறை உருவி தனியே எடுத்தான். இரும்பு உருளையைக் கழட்டினான்.

“இதை எடுத்து உள்ளே வச்சிக்கோங்க“ என்றான் ஒருவன்

“இனிமே இது எதுக்கு“ எனக்கேட்டாள் விசாலாட்சி

“நாங்க எடுத்துகிடவா“ என்று கேட்டான் மற்ற இளைஞன்

விசாலாட்சி தலையாட்டினாள். அவன் அந்த வாளி கயிறை கையில் எடுத்துக் கொண்டான்

பெரியவர் மீண்டும் ஒரு முறை கிணற்றை வலம் வந்து வணங்கினார். பின்பு கிளம்புவதற்கு முன்பு சொன்னார்

“கிணறு அமையுறது ஒரு பாக்கியம். அதுவும் நல்ல தண்ணீர் கிடைக்குதுன்னா ரொம்பப் புண்ணியம் பண்ணியிருக்கோம்னு அர்த்தம். பெரிய அய்யா இருக்கிறப்போ அடிக்கடி உங்க வீட்டுக்கு வருவேன். இந்தக் கிணற்று தண்ணியைக் குடிச்சிருக்கேன். சக்கரையா இனிக்கும். இன்னைக்கு அப்படித் தண்ணீ ஏது.  இப்போ தண்ணிய பாக்கெட்டுல அடிச்சி விக்குறான். இந்தக் கர்மத்தை எல்லாம் பாக்குறதுக்குளே பெரிய அய்யா செத்துப்போயிட்டார். ஒரு கிணற்று தண்ணியைக் குடிச்சி வளர்ந்தா எந்த நோயும் வராதுனு சொல்வாங்க. இன்னைக்குச் சம்பாதிக்கிறதுல பாதியை ஹாஸ்பிடல்காரனுக்குத் தான் குடுக்க வேண்டியிருக்கு. தண்ணியை மொத்தமா சீரழிச்சிப்புட்டாங்க“

என்றபடியே அவர் தன்னோடு வந்தவர்களை அழைத்துக் கொண்டு புறப்படத் துவங்கினார்

கிணற்றடியில் எரியும் விளக்கைப் பார்த்தபடியே விசாலாட்சி அமர்ந்திருந்தாள். இறந்த கணவனின் உடல் முன்னால் அமர்ந்திருந்த நாள் நினைவில் வந்து போனது. கிணற்றை இழப்பதும் மனிதரை இழப்பதும் வேறுவேறா என்ன.

••

இரண்டு முறை புதிதாகக் கிணறு வெட்டி அவள் பார்த்திருக்கிறாள். அவளுக்கு ஏழு வயதான போது கிருஷ்ணமூர்த்தி மாமா தோட்டத்தில் கிணறு வெட்டினார்கள். ஊற்றுமுகம் தென்பட்டதும் பெண்கள் குலவையிட்டார்கள். ஊற்றின் கண்திறந்து தண்ணீர் பீய்ச்சியடித்தபோது மாமா பூமியைக் கைகூப்பி வணங்கினார். அந்தத் தண்ணீரை கைநிறைய வாங்கிக் குடித்தார். இன்னொரு முறை கோவிலை ஒட்டிய நந்தவனத்தில் பழைய கிணறு தூர்ந்துவிட்டது என்று புதிய கிணறு தோண்டினார்கள். நாற்பது அடியில் நல்ல தண்ணீர் வந்துவிட்டது. கோவிலே ஆரவாரம் செய்தது. ஆனால் கிணற்றை மூடப்போவதை தன் வாழ்நாளில் இன்றைக்குத் தான் முதன்முறையாகப் பார்க்கிறாள். அதுவும் தன் வீட்டுக்கிணற்றை மூடுவதைக் காணுவது எத்தனை துயரமானது.

கோடை காலத்தில் கிணற்றுத் தண்ணீர் வற்றிப்போய்விடும்.. அப்போது காற்றுக் கிணற்றில் புகுந்து வெளியேறும் போது விநோதமான சப்தம் வரும். கைவிடப்பட்ட தாயின் அழுகையைப் போன்ற ஒலியது. மழைக்காலத்தில் கிணறு பிள்ளைத்தாய்ச்சியின் வயிற்றைப் போலாகிவிடும். அதைக் காணவே அத்தனை மகிழ்ச்சியாக இருக்கும்.

கிணற்றுக்கு எப்படித் தண்ணீர் வந்து சேருகிறது. எப்படி மறைந்து போகிறது என்பது புதிரானது. தண்ணீர் நம் கண்ணில் படாத ஒரு பயணத்தை மேற்கொள்கிறது. ஒருவேளை அதற்கும் தாய்வீடு இருக்குமோ என்னவோ.

அவள் திருமணமாகி வந்து இந்த ஆண்டுடன் ஐம்பத்திரெண்டு வருஷங்களாகி விட்டது. இத்தனை வருஷங்களாக இந்தக் கிணறு தான் அவளது உற்ற தோழி. துணை. எத்தனையோ நாட்கள் கிணற்றிடம் தன் கவலைகளைச் சொல்லியிருக்கிறாள். அழுதிருக்கிறாள். கிணற்றுத் தண்ணீர் அவளைச் சாந்தப்படுத்தியிருக்கிறது.

அதுவும் மார்கழி மாத குளிரில் இந்தக் கிணற்றுத் தண்ணீரை இறைத்துத் தலையில் ஊற்றிக் கொண்டவுடன் உடம்பில் அதுவரை இருந்த கசடுகள் எல்லாம் கரைந்துபோய் ஆள் புதுமனுஷியாகிவிட்டது போலிருக்கும். அவள் அந்தக் கிணற்றுக்கும் ஒரு பெயர் வைத்திருக்கிறாள். ரகசியமாக அதைச்சொல்லி அழைப்பாள்.

வீட்டுக் குளியலறை ஒருபோதும் கிணற்றடி தந்த சுகத்தை நினைவுகளைத் தர இயலாது.

கிணற்றை மூடி அந்த இடத்தில் கார்ஷெட் கட்ட வேண்டும் என்று அவளது மகன் நீண்டகாலமாகவே சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால் விசாலாட்சி அதை அனுமதிக்கவில்லை. வீட்டில் இரண்டு கார்கள் வந்தபிறகு அதை வாசலில் நிறுத்த இடமில்லை என்பதால் கிணற்றை மூடி ஷெட் கட்ட வேண்டும் என்பதில் மருமகள் பாவனா தீவிரமாக இருந்தாள்.

என்ன பெண்ணிவள். கிணற்றை மூடச் சொல்கிறாளே என்று விசாலாட்சிக்கு அவள் மீது பெருங்கோபம் வந்தது. அவளுடன் நேருக்கு நேராகவே பேசி சண்டையிட்டிருக்கிறாள்

“அந்த கிணற்றை நாம இப்போ யூஸ் பண்ணுறதுல்ல. அதுல இருந்து கெட்ட நாற்றம் அடிக்குது. அதை மூடுனா என்ன தப்பு“

“மழைக்காலத்துல கிணறு நிறைஞ்சப்போ அந்தத் தண்ணியைத் தானே செடிகளுக்கு யூஸ் பண்ணுறோம்“ என்றாள் விசாலட்சி

“அது நல்ல தண்ணியில்லை “

“அந்த தண்ணியில தான் நான் குளிச்சேன். உன் புருஷன் காலேஜ் போற வரைக்கும் குளிச்சான். அதைத் தான் நாங்க இருபது முப்பது வருஷமாகக் குடிச்சிட்டு இருந்தோம்“

“பழைய கதைய பேசி ஆகப்போறதில்லை. இப்போ குழாய்ல வர்ற தண்ணிய குடிக்கவே பயமா இருக்கு. மினரல் வாட்டர் குடிச்சிகிட்டு இருக்கோம். இதுல எங்களைக் கிணற்று தண்ணீரை குடிக்கச் சொல்றீங்களா“

“நான் கிணற்று தண்ணியைக் குடிக்கச் சொல்லலை. ஆனா கிணறை மூட வேண்டாம்னு சொல்றேன்“

“அப்போ நாங்க வேற வீடு பாத்து போய்கிடுறோம். எனக்குக் கார் நிறுத்த இடம் வேணும். நீங்களே உங்க கிணற்றைக் கட்டிகிட்டு அழுங்க “

இந்தச் சண்டையின் போதெல்லாம் விசாலாட்சி தான் மனம் உடைந்து போனாள். சில நாட்கள் ஆற்றாமையில் அழுவாள். மகனிடம் தனியே பேசிப் பார்ப்பாள். அவனும் பிடிவாதமாகக் கிணற்றை மூட வேண்டும் என்றே சொன்னான்

ஒருவேளை அவள் கணவர் உயிரோடு இருந்திருந்தால் அவளுக்குத் துணையாகப் பேசியிருப்பாரோ என்னவோ. அவருக்கு வெளியே போய்விட்டு வந்தால் எந்த இரவிலும் கிணற்றில் போய்த் தண்ணீர் இறைத்து குளிக்க வேண்டும். தன் வாழ்நாளில் ஒரு நாள் கூட வெந்நீரில் அவர் குளித்தது கிடையாது. பச்சைத் தண்ணீர் தான் அதுவும் இந்தக் கிணற்றுத் தண்ணீர் தான். சில நாட்கள் வெளியூர் பயணம் போய்விட்டு இரவு திரும்பி வந்தால் கூடப் பையை வைத்த மறுநிமிடம் கிணற்றடிக்குப் போய்விடுவார். தானே இறைத்து இறைத்து வாளி தண்ணீரைத் தலையில் ஊற்றிக் குளிப்பார்.

மாமனாருக்குத் தண்ணீர் இறைத்து வைக்க வேண்டும். நாலு அண்டா தண்ணீர் குளிப்பார். ஒரு அண்டா தண்ணீர் வெதுவெதுப்பாக இருக்க வேண்டும். அடுத்தது நல்ல சூடு கலந்த தண்ணீர். மூன்றாவது லேசாக வெதுவெதுப்பு. நாலாவது பச்சைத்தண்ணீர். இத்தனையும் அவள் தான் ரெடி பண்ண வேண்டும். அவரும் ஒரு நாளில் இரண்டு முறை குளிக்கும் பழக்கம் கொண்டவர். வயதான காலத்தில் அவர் உட்கார்ந்து குளிப்பதற்காக ஒரு முக்காலி ஒன்றைச் செய்து வைத்திருந்தார்கள். அதில் உட்கார்ந்து கொண்டு தான் குளிப்பார்.

இரண்டு வருஷங்கள் மழையில்லாமல் போய்க் கிணறு முற்றிலும் வற்றியபோது வீட்டில் போரிங் போட்டு மேல்நிலை தொட்டி கட்டி தண்ணீரை ஏற்றினார்கள். அதன்பிறகு கிணற்றில் தண்ணீர் இறைக்கும் வேலை குறைந்து போனது. ஆனாலும் துவைப்பதற்குக் கிணற்றுத் தண்ணீர் தான். அந்தத் தண்ணீரில் எவ்வளவு அழுக்காக இருந்தாலும் போய்விடும்.

அவளது மாமனார் காலத்தில் தான் அந்த வீட்டைக் கட்டினார்கள். வக்கீல் கோசல்ராம் என்றால் அந்த ஊரில் தெரியாதவர்கள் கிடையாது. அந்தக் காலத்திலே ஆயிரம் ரூபாய் பீஸ் வாங்கிய பெரிய வக்கீல். ஜமீன்தார்கள் வண்டி போட்டு வந்து வீட்டுவாசலில் காத்து கிடப்பார்கள்..

அவர் கட்டிய வீடு என்பதால் மிகப்பெரியதாக இருந்தது. விசாலமான ஹால். அதில் ஒரு ஊஞ்சல் போட்டிருந்தார்கள். லட்சுமி விலாஸம் என அவர் தன் தாயின் பெயரைத் தான் வீட்டிற்கு வைத்திருந்தார். பத்து பனிரெண்டு அறைகள். அவர் கட்சிக்காரர்களைச் சந்தித்துப் பேச தனி அறை. மாடியில் அவரது நூலகம். படிப்பறை. மாடியிலும் இரண்டு படுக்கை அறைகள். இத்தனை இருந்த போதும் வீட்டிற்குள் கழிப்பறை கிடையாது.. வீட்டின் பின்புறம் இருந்த வெளியில் ஒரு ஓரமாக ஓடு வேய்ந்த கழிப்பறை அமைத்திருந்தார்கள். வீட்டின் பக்கம் நிறையக் காலி இடம் கிடந்தது. அதில் ஒரு மாமரமும் தென்னை மரங்களும் அவள் வந்து தான் வைத்தாள். இன்று அந்த மரங்கள் உயர்ந்தோங்கி நிற்கின்றன.

வீட்டின் பின்பக்கமிருந்த கிணற்றை யார் வெட்டியது என்றோ, அதற்கு எத்தனை வயது என்றோ யாருக்கும் தெரியாது. கிணற்றுக்குக் கூட யூகமாக வயதைச் சொல்லிவிடலாம் ஆனால் தண்ணீருக்கு ஏது வயது. அந்தக் கிணற்றை ஒட்டி துவைகல் ஒன்றினைப் போட்டிருந்தார்கள்.

இரண்டு வாழை மரங்களையும் பூச்செடிகளையும் விசாலாட்சி தான் வைத்தாள். கிணற்றடியில் பெரிய கல்தொட்டி வைத்திருந்தார்கள். அதில் எப்போதும் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருக்கும். தண்ணீர் இறைக்க இரும்பு வாளியினை நார்கயிற்றில் கட்டியிருப்பார்கள். இரும்பு உருளையில் கயிறு இழுபடும் போது விநோதமாகச் சப்தமிடும். அது ஒரு சங்கீதம்.. யார் கிணற்றடியில் நிற்கிறார்கள் என்பது அந்தச் சப்தத்தை வைத்து அவளால் தெரிந்து கொள்ள முடியும். ஆளுக்கு ஒரு விதமாகத் தான் அந்த உருளை சப்தமிடுகிறது.

வக்கீலின் பிள்ளையாக இருந்த போதும் விசாலாட்சியின் கணவர் நாராயணன் அளந்து பேசக் கூடியவர். அவர் ஒரு போட்டோகிராபர். பஜாரில் அவர் தனியாகப் போட்டோ ஸ்டுடியோ துவங்கியதை அவரது தந்தை விரும்பவில்லை. ஆனால் தன்விருப்பத்தின் படியே தான் அவர் செயல்பட்டார். காலை ஏழு மணிக்கு ஸ்டுடியோவிற்குப் போனால் மதியம் மூன்று மணிக்குச் சாப்பிட வருவார். பின்பு ஸ்டுடியோவை மூடி விட்டு அவர் வீடு வந்து சேருவதற்கு இரவு பத்தரையாகிவிடும்.

அவர்களுக்கே சொந்தமாகப் போட்டோ ஸ்டுடியோ இருந்த போதும் அவர் விசாலாட்சியை நிறையப் புகைப்படம் எடுத்ததில்லை. ஆனால் மகன் பிரசாத்தையும் மகள் செல்வியையும் நிறையப் போட்டோ எடுத்திருக்கிறார். அவரும் அவரது தந்தையும் இருப்பது போல வீட்டில் ஒரு போட்டோ கூடக் கிடையாது. பெரும்பாலும் தந்தையின் முன்னால் அவர் நின்று பேசவே மாட்டார். ஏதாவது சொல்லவேண்டும் என்று கோசல்ராம் நினைத்தால் கூட மருமகளிடம் தான் சொல்லுவார்

கோசல்ராமின் மனைவி பிரசவமான ஆறாம் நாள் இறந்து போனவள். ஆகவே பிள்ளையை வளர்க்க உதவியாக அவரது அத்தை மீனாம்பாளை அழைத்துக் கொண்டு வந்திருந்தார். அவள் தான் நாராயணனை வளர்த்தாள். அவளுக்கும் விசாலத்திற்கும் ஆகவேயில்லை. எப்போதும் சண்டை. அவள் விசாலத்திடம் குறை கண்டுபிடித்துக் கொண்டேயிருந்தாள்.

அத்தை குளிப்பதற்காகக் கிணற்றடியை ஒட்டி சிறிய ஒற்றை அறை ஒன்றை கோசல்ராம் கட்டிக் கொடுத்தார். அந்த அறையில் அவள் ஒருத்தியைத் தவிர வேறு எவரும் குளிக்கக் கூடாது.

விசாலாட்சி கிணற்றடியில் ஒரு அண்டாவை வைத்திருந்தாள். அந்த அண்டாவில் தண்ணீரை நிரப்பி மெதுவாகக் குளிப்பாள். சில நாட்கள் அவள் குளிப்பதை ஒரு காகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். சில நேரத்தில் குளித்து முடித்தபிறகும் அவள் கிணற்றடியிலே ஈரக்கூந்தலை உணர்த்தியபடியே நின்றிருப்பாள். வெயில் ஏறிய நாட்களில் கிணற்றடியில் நிற்கும் போது விநோதமான குளிர்ச்சியை உணர முடியும்.

அந்தக் கிணற்றில் இறைத்த தண்ணீரை வடிகட்டி அதைத் தான் குடித்தார்கள். சமையலுக்குப் பயன்படுத்தினார்கள். வக்கீல் வீடு என்பதால் கட்சிக்காரர்கள் குடிப்பதற்கென்றே பெரிய மண்பானை வெளியே வைக்கப்பட்டிருந்தது. கூடவே ஒரு அலுமினிய டம்ளர். அதில் நாலைந்து டம்ளர் தண்ணீர் மோந்து குடித்துவிட்டு தேனா இனிச்சிகிடக்கு என்று சொன்னவர்கள் உண்டு.

அந்தத் தண்ணீரை மருமகள் பாவனா கேவலமாகப் பேசுகிறாள். அவள் நகரத்தில் பிறந்து வளர்ந்தவள். ஆறு, குளம். கிணறு எல்லாம் அவளுக்குத் தேவையில்லாத விஷயங்கள். அவள் அறிந்து வைத்திருப்பதெல்லாம் தண்ணீர் வீட்டுக்குழாயில் வரும். அல்லது தண்ணீர் லாரியில் வரும் பிடித்துக் கொள்ள வேண்டும். அதுவும் பெங்களூரில் ஹாஸ்டலில் தங்கி படித்தவள். அங்கே தண்ணீர் பிரச்சனையே கிடையாது.

தன் வாழ்நாளில் ஒருமுறை கூடப் பாவனா கிணற்றில் தண்ணீர் இறைத்தது கிடையாது கிணற்றடியில் குளித்தது கிடையாது. அவளுக்கு எப்படிக் கிணற்றின் அருமை தெரியும் என நினைத்துக் கொள்வாள் விசாலாட்சி

மருமகள் சொன்னது போலக் கடந்த ஐந்து வருஷங்களாக அவர்கள் கிணற்று தண்ணீரைக் குடிக்கப் பயன்படுத்தவில்லை. வீட்டுக்குழாயில் வரும் தண்ணீரை மினரல் வாட்டர் பிளாண்ட் மூலம் சுத்தகரிப்புச் செய்து தான் குடிக்கிறார்கள். குளிப்பதற்கும் துவைப்பதற்கும் கூடக் குழாய் தண்ணீர் தான்.விசாலாட்சி மட்டும் கிணற்றுத் தண்ணீரில் பிடிவாதமாகக் குளித்து வந்தாள். ஆனால் ஒருமுறை காய்ச்சல் கண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது டாக்டர் அவள் கிணற்றுத் தண்ணீரில் குளிக்கக் கூடாது என்றார். அதை மகன் பிடித்துக் கொண்டுவிட்டான். அத்தோடு அவள் கிணற்றடியில் குளிப்பது நிறுத்தப்பட்டது. ஆனால் கிணற்றில் தண்ணீர் இறைத்துச் செடிகளுக்கு ஊற்றுவாள். மழைக்காலத்தில் கிணற்றில் எவ்வளவு தண்ணீர் உயர்ந்திருக்கிறது என்று பார்த்துக் கொள்வாள். கோடையில் கிணறு வற்றிய போது கையளவு தண்ணீரில் கிடக்கும் ஆமையை வேடிக்கை பார்த்தபடியே இருப்பாள்.

அந்த ஆமை சில நேரம் தலையை எட்டிப்பார்க்கும். வெயில் படுவதைக் கண்டதும் வெளியே பார்ப்பதற்கு என்ன இருக்கிறது என்பது போலத் தலையை ஒட்டிற்குள் இழுத்துக் கொண்டுவிடும்.

விசாலாட்சியும் அப்படித்தானிருந்தாள். அவளுக்கும் வீடு தான் உலகம். அதுவும் கணவர் இறந்தபிறகு வெளியூர் போவதை பெரும்பாலும் தவிர்த்துவிட்டாள். வீட்டில் இருக்கும் நேரங்களில் கூடத் தன் அறைக்குள்ளாகவே இருப்பாள். பேரன் பேத்திகளுடன் பேசுவது மட்டுமே அவளுக்கான ஒரே ஆறுதல்

அவர்களும் கூட இந்தக் கிணற்றை மூடுவதற்குத் துணையாக இருக்கிறார்களே என்று விசாலாட்சிக்கு வருத்தமாக இருந்தது.

பூஜை முடிந்து பெரியவர் போனபிறகும் அவள் கிணற்றடியிலே இருந்தாள். கிணற்றின் முன்னே எரியும் விளக்கினை பார்த்தபடியே இருந்தாள். அவளே எத்தனையோ முறை இப்படிக் கிணற்றடிக்கு விளக்கு வைத்திருக்கிறாள். திருக்கார்த்திகை அன்று கிணற்றைச் சுற்றிலும் அகல் விளக்கு வைத்திருக்கிறாள். எவ்வளவு அழகான காட்சியது. நினைவில் அழியாமல் பதிந்து போயிருக்கிறது.

இன்றைக்கு எரியும் சுடர்களைக் காணும் போது அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டுவந்தது.

எத்தனையோ பொருட்கள் கைவிட்டுப் போய்விட்டன. நேசித்த மனிதர்கள் பூமியை விட்டுப் போய்விட்டார்கள். இந்த வீடே எத்தனையோ முறை மாற்றிக் கட்டப்பட்டுவிட்டது. அது போல இந்தக் கிணறும் போகட்டும். மனிதர்களால் தான் நேசித்தவற்றைக் காப்பாற்றி வைத்துக் கொள்ள முடியாது. இழக்க வேண்டியதை இழந்து தான் ஆக வேண்டும்.

இருட்டிய பிறகு பின் வாசல் கதவைத் தள்ளித் திறந்து வந்த பேரன் நந்து சப்தமாகச் சொன்னான்

“பாட்டி கொசு உள்ளே வருது. மம்மி பின்கதவை மூடச்சொன்னாங்க“

“நீ மூடிட்டு போ“

“நீங்க உள்ளே வரலையா“

“நான் கொஞ்ச நேரம் நேரம் கழிச்சி வர்றேன்“

“அப்போ என்னைக் கூப்பிடு. கதவை திறந்துவிடுறேன்“ என்று பெரிய மனுஷன் போல நந்து சொன்னான்

அவன் பின்கதவை மூடும் சப்தம் கேட்டது.அந்தக் கிணற்றடிக்கு காலை நேரம் வரும் வெயில் அத்தனை அழகானது. அந்த இளவெயிலில் நின்றபடி ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என அவளுக்குள் ஒரு ஆசையிருந்தது. ஆனால் அதைக் கணவரிடம் கேட்கவேயில்லை. சொந்த கணவராக இருந்தாலும் மனதில் தோன்றும் ஆசைகளை எல்லாம் கேட்டுவிட முடியுமா என்ன. ஒருவேளை அப்படி ஒரு புகைப்படம் எடுக்கபட்டிருந்தால் அதில் இந்தக் கிணறும் பதிவாகியிருக்கும். அந்த வீட்டோடு இப்படி ஒரு கிணறு இருந்தது என்பதற்குப் புகைப்படம் எதுவும் கிடையாது. அதன் சாட்சியாக உள்ள தன்னையும் மகனையும் தவிர வேறு எவர் நினைவிலும் அது இனி இருக்காது.

ஒருவேளை தன் காலத்தின் பின்பு மகனும் கிணற்றை மறந்துவிடுவான். அப்படித் தானே நடக்க முடியும். பெற்றவர்கள் மறைவையே பிள்ளைகள் சில மாதங்களில் மறந்துவிடுகிறார்களே. முந்தைய காலம் போலத் துக்கம் இப்போது நீண்டதில்லை. எல்லா வருத்தங்களும் துயரங்களும் நாட்கணக்கில் மணிக்கணக்கில் முடிந்துவிடுகின்றன.

தன் கணவர் இறந்த அன்று அவரது உடலை ஹாலில் கிடத்தியிருந்த இரவில் விசாலாட்சி இப்படித் தான் உணர்ந்தாள். “இனி பேசிக் கொள்ள எதுவுமில்லை. நடந்த விஷயங்களை நினைத்துக் கொள்ள வேண்டியது தான். ஆழ்ந்த மௌனம் கொண்டவர்களைப் புரிந்து கொள்வது கடினம். “

நீண்டநேரம் அந்தக் கிணற்றடியிலே விசாலாட்சி உட்கார்ந்திருந்தாள். தான் வேறு ஒரு காலத்தில், வேறு ஒரு உலகில் இருப்பது போலவே தோன்றியது.

வீடு திரும்பிய மகன் பின்கட்டு லைட்டைப் போட்டு கதவை திறந்து வெளியே வந்த போது கோபமாகக் கேட்டான்

“பாம்பு கீம்பு கிடக்கப்போகுதும்மா. இங்கே என்ன பண்ணுறே“

“நாளைக்குக் கிணற்றை மூடப்போறாங்கடா“ என்றாள் அம்மா

அவன் பதில் சொல்லவில்லை. குற்றவுணர்வோடு தலைகவிழ்ந்திருந்தான்

பிறகு உறுதியான குரலில் சொன்னான்

“கிணறு தானேம்மா“

அது சரி. கிணறு தானே. அதற்கு எதற்குத் தான் இத்தனை உணர்ச்சிவசப்படுகிறோம். கிணறு என்றால் வெறும் கிணறு மட்டும் தானா. அதன் கொடையும் கருணையும் ஒன்றுமில்லைதானா. பெற்ற பிள்ளைகளும் உறவுகளும் ஒன்றுமில்லாமல் போய்விட்ட உலகில் தண்ணீரின் கருணையை யார் நினைக்கப் போகிறார்கள்

“இந்த விளக்கை உள்ளே எடுத்துக்கிட்டு போம்மா“ என்றான் மகன்

“எரியுற வரைக்கும் எரியட்டும் பிரசாத்“ என்றாள்

அவன் அம்மா எழுந்து கொள்வதற்காகக் கையைப் பிடித்துத் தூக்கிவிட்டான். வீட்டிற்குள் போகும் போது நாளைக்கு உபவாசமிருக்க வேண்டும் என்று தோன்றியது. கால்களை அசைக்க முடியவில்லை. மிக மெதுவாக நடந்தாள். உடம்பில் அதிகக் கனம் கூடிவிட்டது போலிருந்தது.

படுக்கையில் வந்து படுத்துக் கொண்டபோதும் மனது அடங்கவில்லை. மனம் பெரும் பாரமாக இருந்தது. மனதின் துயரம் தான் உடலின் எடையாக மாறிவிடுகிறதோ.

நாளைக் கிணற்றை மூடுவதைத் தான் பார்க்கக் கூடாது என்று முடிவு செய்து கொண்டவளாக அவள் கண்களை மூடிக் கொண்டாள்.

•••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 17, 2021 00:39

March 16, 2021

நிழல் கலைஞன்

புதிய சிறுகதை

“பிகாசோ வெளியே வாருங்கள்“ என்று சப்தமாக அழைத்தாள் ஜாக்குலின்

அவர் குளிப்பதற்காக வெற்றுடம்புடன் அரைக்கால் டிராயர் மட்டும் அணிந்தபடியே நின்றிருந்தார். அவரது காலை நேரம் மிகத் தாமதமாகவே துவங்குவது வழக்கம்.

பல நாட்கள் இரவில் நண்பர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு மிதமிஞ்சிய போதையில் வீடு திரும்புவதற்குப் பின்னிரவாகிவிடும்.

சில இரவுகளில் அவர் கடற்கரைக்குச் சென்று தனியே நடப்பதும் உண்டு. விருந்தில் வெளிப்படும் பகட்டும் போலியான உரையாடல்களும் அவரைச் சலிப்படையச் செய்திருந்தன. மனிதர்களின் பொய்யான சிரிப்பு அருவருப்பூட்டுகிறது.

விடுமுறைக்காக அவர் கடற்கரை கிராமத்திலிருந்த வில்லாவில் தங்கியிருந்தார். இங்கே வந்த நாளிலிருந்து ஓவியம் வரையும் தூண்டுதல் ஏற்படவேயில்லை. குடி, இசை, நடனம், விளையாட்டு என நாட்கள் கடந்து போய்க் கொண்டிருந்தன. அவரைத் தேடி வெளியாட்கள் எவரும் வருவதில்லை. அன்றாடம் தபால் கொண்டுவருகிறவரையும் பணியாட்களையும் விட்டுவிட்டுவிட்டால் வேறு எவரும் அவர் வீட்டுக்குள் வருவதேயில்லை. அவருக்கும் அந்நியர்களை அனுமதிக்க விருப்பமும் இல்லை.

விடுமுறைக்காக வந்து தங்கியிருந்த இந்தப் பிரெஞ்ச் வில்லாவும் அதையொட்டிய மணற்பரப்பும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தன. சில நாட்கள் காலை எழுந்தவுடனே கடலில் நீந்தச் சென்றுவிடுவார். சோம்பேறித்தனமாக உணரும் நாட்களில் காலை அவரே சமைக்க ஆரம்பித்துவிடுவார். ஓவியம் வரைவதில் கிடைக்கும் அதே சந்தோஷம் சமைப்பதிலும் கிடைத்தது. சமைக்கும் போது வண்ணங்கள் மாறிக் கொண்டேயிருப்பதைக் கவனிப்பார். நறுக்கப்பட்ட காய்கறிகள், இறைச்சி மீனின் நிறத்தை ஆராய்ந்தபடியே இருப்பார். சமையல் பாத்திரங்கள் யாவும் நவீன சிற்பங்களாகவே அவருக்குத் தோன்றின.

முந்தைய இரவும் ஒரு விருந்திற்குச் சென்றுவிட்டுப் பின்னிரவில் தான் வீடு திரும்பியிருந்தார். சரியான தூக்கமில்லை. ஆகவே புருவங்கள் வீங்கியிருந்தன. கெண்டைக்கால் சதை பிடித்துக் கொண்டது போலிருந்தது.

ஜாக்குலின் திரும்பும் அவரைச் சப்தமாக அழைத்தாள். தோளில் போட்டிருந்த துண்டினை தூக்கி எறிந்துவிட்டு அவர் வாசலை நோக்கி நடந்தார்.

இந்த நேரம் யார் வந்திருப்பார்கள். எதற்காக இத்தனை உற்சாகமாக அழைக்கிறாள் என்று புரியாமல் அவர் நடந்தார்

ஜாக்குலின் வாசற்கதவைப் பிடித்தபடியே நின்றிருந்தாள். அவர்களின் கார் மதிற்சுவரை ஒட்டி நின்றிருந்தது

“பாப்லோ.. இதை எப்போது வரைந்தீர்கள்“ என்று உற்சாகமாக் கேட்டாள்

“எதை“ என்றபடியே அவர் காரை திரும்பிப் பார்த்தார். அவரது காரின் நிறம் பாதி நீலமும் பாதி ரோஸ் நிறமாகவும் மாற்றப்பட்டிருந்தது. அதில் அவரது கோடுகள் போலவே கோடுகள் கொண்ட உருவங்கள் வரையப்பட்டிருந்தன. யார் வரைந்திருப்பார்கள்.

பின்னிரவில் காரை நிறுத்திவிட்டுப் போனபிறகு யாராவது வந்திருப்பார்களா. அவர் தன் ஓவியங்களின் அதே ரோஸ் மற்றும் அடர் நீல வண்ணங்களை அப்படியே யாரோ காரிக்குப் பூசியிருக்கிறார்களே என வியந்தபடியே காரில் வரையப்பட்ட ஓவியங்களைப் பார்த்தார்

அவரது ஓவியத்தில் வரையப்பட்ட அதே உருவங்கள். ஆனால் வேறு அசைவுகளில் வேறு நிலைகளில் வரையப்பட்டிருந்தன. அந்த ஓவியங்களை ரசித்தபடியே சொன்னார்

“நான் இதை வரையவில்லை. இது நம் காரில்லை“

“போதையில் மறந்திருப்பீர்கள். தன் காரை இப்படிக் கலைப்பொருளாக மாற்ற உங்கள் ஒருவரால் தான் முடியும். “

“இல்லை ஜாக்குலின் இது யாரோ ஒரு ரசிகனின் வேலை“

“நம் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்ட காரை யார் வந்து வரைந்திருக்கக் கூடும்“

“சுற்றுலாப் பயணிகளில் எவனோ ஒரு தீவிர ரசிகன். அதுவும் தேர்ந்த ஓவியன் வரைந்திருக்கக் கூடும். நேற்றிரவு விருந்தில் அப்படி நிறைய இளம் ஒவியர்களைப் பார்த்தேன். அவர்களில் ஒருவனாக இருக்கக் கூடும்“

“அச்சு அசலாக உங்களை நகலெடுத்திருக்கிறான். இந்தக் கோடுகளைப் பாருங்கள். “

“அது தான் வியப்பாக இருக்கிறது. கோடுகளின் வளைவு கூட எனது பாணியிலே இருக்கிறது“

“இனி இந்தக் காரை சாலையில் எங்கே கண்டாலும் பிகாசோ போகிறார் என்று மக்கள் கூச்சலிடுவார்கள்“

“எனது அந்தரங்கம் முற்றிலும் பறிக்கபட்டுவிடும். இனி நான் வானில் பறந்து போக வேண்டியது தான்“

“உங்களால் இறக்கைகளைச் செய்ய முடியும் தானே“

“எனக்குத் தனியே பறக்கப் பிடிக்காது“

“நம் பூனையைக் கூடப் பறக்கக் கூட்டிக் கொள்ளுங்கள்“ என்று சொல்லிச் சிரித்தாள்

பிகாசோ ஓவியம் வரையப்பட்டிருந்த காரை சுற்றி வந்து பார்த்தார். கச்சிதமாக வரையப்பட்டிருந்தது

காரின் முன்னால் நீங்கள் நிற்கும்படி ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும். அப்படியே இருங்கள் என்று ஜாக்குலின் வேகமாக வீட்டிற்குள் ஒடி கேமிராவை எடுத்து வந்தாள்

அவளது ஆசைகள் விநோதமானவை. அவளது அழகைப் போலவே புரிந்து கொள்ள முடியாத வசீகரமது.

ஜாக்குலின் பிகாசோவை வண்ணக்காருடன் புகைப்படம் எடுத்தாள். பிறகு அவள் கார் முன்பாக நின்று கொண்டாள். பிக்காசோ பல கோணங்களில் அவளைப் புகைப்படம் எடுத்தார்

அன்று மாலை செய்திதாளில் பிகாசோவின் காரைப் பற்றிச் செய்தி அவள் எடுத்த புகைப்படத்துடன் வெளியாகியிருந்தது. நிறையத் தொலைபேசி அழைப்புகள். உள்ளூர் கேலரி அதைக் காட்சிக்கு வைக்க விரும்பியது.

ஆனால் பிகாசோவிற்குக் காரில் ஒவியங்களை வரைந்தவன் யார் என்ற யோசனை மனதில் ஒடிக் கொண்டேயிருந்தது.. அன்று மாலை பிகாசோவைத் தேடி வந்திருந்த ஆர்ட் டீலர் ஹாப்கின்ஸ் கூட அந்தக் காரை ஏலத்தில் விட்டால் மிகப்பெரிய பணம் கிடைக்கும் என்று சொன்னார்.

“இனி நான் அந்தக் காரை பயன்படுத்த முடியாது. அது ஒரு கலைப்பொருளாகிவிட்டது“

“பிகாசோவின் கார் என்றால் தன்விசேசம் தானே“ என்று கண்சிமிட்டினார் ஹாப்கின்ஸ்

அத்துடன் அவர் ஜாக்குலினை சந்தோஷப்படுத்துவதற்காகப் பிகாசோ தான் தன் காரை இப்படி ஓவியங்களுடன் உருமாற்றியிருக்கிறார் என்றும் உள்ளூற நம்பினார். இளம்பெண்களுக்காகப் பிகாசோ எதையும் செய்யக்கூடியவர். ஜாக்குலின் மீதான காதலில் அவளுக்காகப் பீங்கான் கோப்பைகளில் ஓவியம் வரைந்து தந்திருக்கிறார். ஒரு முறை அவளது முதுகில் கூட ஓவியம் ஒன்றை வரைந்திருந்தார். அதைப் போட்டோ எடுக்கும்படி ஜாக்குலின் சொன்னாள். அந்தப் புகைப்படத்தைப் பெரியதாக அச்சிட்டு தன் அறையில் பிரேம் போட்டு மாட்டிக் கொண்டாள்.

ஒரு இரவு அவள் பிகாசோவை முத்தமிட்டபடியே சொன்னாள்

“நீங்கள் ஒரு ஓவியத்தை முத்தமிடுகிறீர்கள்“

“அப்படியானால் உன் உதட்டில் ஒரு படம வரைகிறேன். தூரிகையால் அல்ல. எனது நாவினால்“ என்றார் பிகாசோ

அவள் அதை அனுமதித்தாள். கலைஞனின் விசித்திரம் காதலில் தான் முழுமையாக வெளிப்படுகிறது

ஓவியம் வரையப்பட்ட காரை காண்பதற்காகப் பிகாசோ வீட்டிற்கு நிறைய நண்பர்கள் வரத்துவங்கினார்கள். அது பிகாசோவை எரிச்சல் படுத்தியது. மறுநாளே அந்தக் காரை வீட்டின் பின்புறமுள்ள ஷெட்டில் வைத்துப் பூட்டிவிட்டார். இது நடந்த மறுநாள் காலை கடற்கரைக்குக் குளிப்பதற்குக் கிளம்பும் போது மறுபடியும் ஜாக்குலின் கூச்சலிட்டாள்

“எத்தனை அழகான செருப்பு. இதைக் கூடவா சித்திரங்களால் அலங்கரித்திருப்பீர்கள்“

“எங்கே“ எனக் கேட்டார் பிகாசோ

வாசலில் கழட்டி விடப்பட்டிருந்த அவரது ஒரு ஜோடி செருப்புகளும் வண்ணம் தீட்டப்பட்டிருந்தன. ஒரு செருப்பில் ஆண் உருவமும் மறு செருப்பில் பெண் உருவமும் வரையப்பட்டிருந்தது. அசலான ஒவியங்கள். அவரே வரைந்தது போன்ற வெளிப்பாடு

“இதையும் நீங்கள் வரையவில்லை என்று சொல்லிவிடாதீர்கள்“ என்றாள் ஜாக்குலின்

“இதுவும் அதே ரசிகனின் வேலை தான். நான் இந்தக் காலணிகளைச் சில நாட்களாக அணியவேயில்லை. சில நாட்களுக்கு முன்பு தானே புதிய செருப்புகளை வாங்கினேன்“

“பழைய செருப்புகளைக் கலைப்பொக்கிஷமாக்கிவிட்டான்“

“அவனை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. விசித்திரமாக இருக்கிறது அவனது செயல்கள்“.

“ஓவியத்தில் உங்களுக்கு ஒரு வாரிசு உருவாகிவிட்டான் “

“வாரிசில்லை . நகலெடுப்பவன் உருவாகிவிட்டான்.. இந்த ஓவியத்தில் என்னைக் கேலி செய்வது தான் வெளிப்படுகிறது“

“யாரோ உங்களுடன் விளையாடுகிறார்கள்“

“ஓவியர் வெர்மீரை நகல் எடுப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். அப்படி யாரோ தோற்றுப் போன ஓவியன் என்னையும் நகலெடுக்கத் துவங்கியிருக்கிறான்“

“இதை ஏன் உங்கள் மீது அவன் காட்டும் அன்பு என நினைக்கக் கூடாது“

“அன்பு காட்டுகிறவன் பின்னிரவில் திருடன் போல வருவதில்லை. இப்படி ரகசியமாக ஓவியம் வரைந்து போவதில்லையே“

பிகாசோ பழைய செருப்புகளை வீட்டினுள் எடுத்துச் சென்று சிற்பங்களுடன் சேர்த்து வைத்தார். பின்பு புதிய காலணியை அணிந்து கொண்டபடியே கடற்கரைக்குச் சென்றார். அன்று கடற்கரை மணலில் ஒரு ஜோடி செருப்புகளைச் சிற்பமாகச் செய்தார். பிறகுத் தன் உடைகளைக் களைந்து மணலில் வைத்து விட்டுக் கடலில் நீண்ட நேரம் நீந்திக் களித்தார். தொலைவில் நீந்துகிறவர்கள் உற்சாகமாகச் சப்தமிட்டுக் கொண்டிருந்தார்கள்

ஈர உடலுடன் கரையேறி தன் மேல் அங்கியை அணிந்து கொள்ள முற்பட்ட போது அங்கியின் பாக்கெட்டில் ஒரு சிகரெட் பாக்கெட் இருப்பதைக் கண்டார். இது போன்ற சிகரெட்டினை தான் புகைப்பதில்லையே. பின் எப்படி இது தனது பாக்கெட்டில் வந்தது என்று குழப்பத்துடன் அதைத் திறந்து பார்த்தார். நான்கு சிகரெட்டுகள் உள்ளே இருந்தன. ஒவ்வொன்றும் ஒரு வண்ணம். எல்லாச் சிகரெட்டிலும் சிறிய பறவையின் உருவம் வரையப்பட்டிருந்தது

அதே ஆளின் வேலை தான். அவன் தன்னைக் கடற்கரையிலும் பின்தொடர்ந்திருக்கிறான். ஒருவேளை தொலைவில் நீந்திக் கொண்டிருந்தவர்களில் அவனும் ஒருவன் தானே என்னவோ. அந்தச் சிகரெட்டினை கையில் எடுத்துப் பார்த்தார். சிவப்பு மஞ்சள் ஊதா வண்ணங்களில் சிகரெட்டினை காண வியப்பாக இருந்தது. பறவையை மிக நேர்த்தியாக வரைந்திருந்தான்.

அவனைக் காண வேண்டும் என்ற ஆவல் பிகாசோவிடம் உருவானது. அவர் கடற்கரையில் மணலில் அவனைத் தேடி நடக்க ஆரம்பித்தார். யார் அந்த மனிதன். இளைஞனா, முதியவரா, அல்லது இளம்பெண்ணா, யாராக இருக்கக் கூடும். கடற்கரை மணலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவர்கள் பிகாசோவை கண்ட மகிழ்ச்சியில் கையசைத்தார்கள். அவரும் உற்சாகமாகக் கையசைத்தபடியே நடந்தார்.

மணல்மேடு ஒன்றில் பத்து பதினைந்து சிறுவர்கள் ஒன்று சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். வானில் பட்டங்கள் பறந்து அலைந்தபடியே இருந்தன. திடீரென மேற்குவானில் ஒரு பட்டம் பறப்பது அவரது கண்ணில் பட்டது. அந்தப் படத்தில் அவரது Le Rêve ஓவியம் அப்படியே பட்டமாக உருமாற்றப்பட்டிருந்தது. அந்தப் பட்டம் பறக்கும் திசையை நோக்கி பிகாசோ வேகமாக நடக்க ஆரம்பித்தார். மணல்மேட்டில் நடப்பது சிரமமாக இருந்தது. அந்தப் பக்கம் வானில் சுழன்றபடியே இருந்தது.

அதை அவர் நெருங்கிப் போகும் போது பட்டம் அறுந்து வானில் தனியே பறக்கத் துவங்கியது. பட்டம் பறக்கவிடப்பட்ட கயிறு ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்தது. அப்போது தான் யாரோ அந்தக் கயிரை அறுத்துவிட்டிருக்கிறார்கள்

இது என்ன கண்ணாமூச்சி ஆட்டம். எதற்காக அந்த மனிதன் தன்னோடு இப்படி விளையாடுகிறான். தன் மீதான அன்பிலா. அல்லது நான் உன்னை விடவும் பெரியவன் என்று காட்டிக் கொள்ளவா. அவர் அந்த மரத்தடியில் நின்றபடி இருந்தார். மணலில் அந்த மனிதனின் கால்தடங்கள் பதிந்து போயிருந்தன. குனிந்து அந்தக் கால்தடங்களைப் பார்த்தார். அது உயரமான ஆளின் கால்கள் என்பது நன்றாகத் தெரிந்தது. ஒரு சிறிய குச்சியால் அந்தக் கால்தடத்தினைச் சுற்றிலும் கோடு வரைந்தார் பிகாசோ பிறகு அந்தக் கால்கள் இடுப்பு வயிறு தலை என அந்த மனிதன் மணலில் தோன்ற ஆரம்பித்தான்.

இப்படித்தான் அவன் இருக்கக் கூடும் என்று தோன்றியது. தான் வரைந்த கோடுகளைத் தானே அழித்துவிட்டு அவர் தன் வீட்டிற்குத் திரும்ப ஆரம்பித்தார்.

ஜாக்குலினால் இதை நம்ப முடியவில்லை. ஆனால் இப்படியான வெறிபிடித்த ரசிகர்களை அவள் அறிவாள். ஒரு பெண் தன்னை நிர்வாணமாக வரையும் படி அவரது வீட்டின் முன்பு வாரக்கணக்கில் காத்து கிடந்திருக்கிறாள். ஒரு கல்லூரி மாணவன் தச்சன் போல நடித்து அவரது வீட்டிற்குள் வந்து பிகாசோவிடம் ஆட்டோகிராப் வாங்கிப் போயிருக்கிறான். ஒரு கிழவர் தனது தங்கப்பல் ஒன்றை அவருக்குப் பரிசாக அனுப்பி வைத்திருந்தார். ஒரு குடிகாரன் பிகாசோவின் வளர்ப்பு பூனையைத் திருடிக் கொண்டு போயிருக்கிறான். இப்படி எத்தனையோ விசித்திரங்கள். ஆனால் இப்படிச் செருப்பை, சிகரெட்டினை, காரை ஓவியமாக மாற்றும் ஒருவனை அவள் இதன் முன்பு அறிந்திருக்கவில்லை

பிகாசோ அந்த மனிதன் தன்னைப் பின்தொடர்கிறான் என்பதை நன்றாக உணர்ந்திருந்தார். ஆகவே வெளியே எங்கேயும் போகாமல் வீட்டிலே இருந்தார். சில நாட்கள் இரவில் கண்விழித்து யாராவது வாசலில் நடமாடுகிறார்களா என்று ஒளிந்து பார்த்ததும் நடந்தேறியது. அந்த ஆள் யார் எனக் கண்டறிய முடியவில்லை

இது நடந்த ஒரு வாரத்திற்கு அந்த மனிதனிடமிருந்து எந்தப் பரிசும் வரவில்லை. அதன்பிறகு யாரோ ஒரு கூடை ஆரஞ்சு பழங்களை வாசலில் வைத்துப் போயிருக்கிறார்கள் என்று பணிப்பெண் சொன்னபோது “அதை என்னிடம் கொண்டுவா“ எனச் சப்தமாகச் சொன்னார் பிக்காசோ

அவள் அந்தப் பழக்கூடையை அவர் முன்னால் கொண்டுவந்து வைத்தார். அவர் நினைத்தது போலவே அத்தனை ஆரஞ்சு பழங்களிலும் படம் வரையப்பட்டிருந்தது. அதுவும் மெல்லிய காகிதம் ஒன்றில் படம் வரைந்து பழத்தின் மீது ஒட்டப்பட்டிருந்தது. அந்த ஆரஞ்சு பழங்களை மேஜையின் மீது வைத்து அவர் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

யாரோ ஒருவன் ஒரு பெண்ணைக் காதலிப்பது போலத் தன்னைக் காதலிக்கிறான். தன் அன்பை வெளிப்படுத்துகிறான் என்பது புரிந்தது.

ஆனால் அவன் தனக்குப் புதிய சவாலை எழுப்பியிருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டவரைப் போல முற்றிலும் புதிய பாணியில் புதிய வண்ணங்களுடன் ஓவியம் வரைய ஆரம்பித்தார். அந்த மனிதனையே ஒரு கருப்பொருளாகக் கொண்டும் ஓவியம் வரைந்தார். பித்தேறியது போல அவர் ஓவியத்தினுள் மூழ்கியிருந்தார். ஜாக்குலின் மட்டும் தனியே இரவு விருந்திற்குச் சென்று வந்தாள்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் தூக்கம் கலைந்து ஓவியம் வரைவதற்கான உந்துதல் ஏற்படவே படம் வரையும் அறைக்குள் சென்றார். திடீரென அவரது உள்ளுணர்வு வெளியே யாரோ தனக்காகக் காத்திருப்பது போல உணர்த்தியது. சப்தம் எழுப்பாமல் அவர் வீட்டின் பின்கதவைத் திறந்து இருட்டிற்குள்ளாகவே நடந்து வெளியே வந்தார். அவரது கையில் சிறிய டார்ச் இருந்தது.

அவர் நினைத்தது சரி. அவர் எதிர்பார்த்திருந்த மனிதன் அவர் வீடு இருந்த வீதியை முற்றிலும் ஒவியங்களால் வரைந்து அழகுபடுத்திக் கொண்டிருந்தான். விடிந்து பார்த்தால் அந்தச் சாலையே ஓவியத்தால் ஒளிர்ந்து கொண்டிருக்கும். அவர் வீடு இருந்த வீதி மிகச்சிறியது. அதன் முனைவரை அவன் ஓவியம் வரைந்துவிட்டுத் திரும்பும் போது பிகாசோ நிற்பதைக் கண்டவன் போலத் தனது தொப்பியை எடுத்து வணங்கினான்

பிக்காசோ தனது டார்ச் ஒளியை அவன் மீது அடித்தார்

அவன் காகித முகமூடி அணிந்திருந்தான். அந்த முகமூடி பிகாசோவின் தோற்றத்தில் இருந்தது. அவன் உற்சாகமான குரலில் சொன்னான்

“மாஸ்டர் நாம் சந்தித்துக் கொள்ள வேண்டாம். இந்த விளையாட்டினை இன்றோடு நிறுத்திக் கொண்டுவிடுகிறேன்“

“நீ யார்“ என்று சப்தமாகக் கேட்டார் பிக்காசோ

“சிறுவயது முதலே உங்களால் வழிநடத்தப்படுகிறவன். உங்களைப் பார்த்து ஓவியம் வரைய ஆசை கொண்டவன். . நான் ஒரு தோற்றுப் போன ஓவியன். என் ஓவியங்களில் உங்களில் சாயல் தெரிகிறது என்று நிராகரித்துவிட்டார்கள். அது எனக்குப் பெருமை தான். உண்மையில் நான் உங்கள் நிழல். உங்கள் நிழல் ஓவியம் வரைவதை நீங்கள் காண வேண்டாமா அதற்காகத் தான் இப்படி உங்களுடன் விளையாடினேன். மாஸ்டர். உங்களைத் தொந்தரவு செய்திருந்தால் மன்னித்துவிடுங்கள். “

“நான் உன்னைக் காண வேண்டும்“ என்று டார்ச் லைட்டை உயர்த்தியபடியே அவனை நோக்கி நடந்தார் பிகாசோ

“வேண்டாம் மாஸ்டர். அங்கேயே நில்லுங்கள். அசல் ஒரு போதும் நகலுடன் கைகுலுக்கக் கூடாது“.

பிகாசோ அப்படியே நின்றுவிட்டார். அந்த மனிதன் உரத்த குரலில் சொன்னான்

“சில பூச்சிகளுக்கு இரவு தான் பிடித்தமானது. அவை இருளுக்குள் பிறந்து இருளுக்குள் வாழக்கூடியவை. அதன் சப்தத்தை மட்டுமே உலகம் கேட்கிறது. அந்தப் பூச்சியை நேரில் கண்டாலும் யாருக்கும் பிடிக்காது. நான் அப்படி ஒரு இரவுப்பூச்சி. என் குரல் உங்களுக்கு எட்டியது எனக்கு மகிழ்ச்சி. குட் நைட் மாஸ்ட்ரோ “என்றபடியே அவர் இருட்டில் தாவி மறைந்தான்.

பிகாசோ அவன் வரைந்த ஓவியங்களின் முன்பாக விடியும் வரை அமர்ந்திருந்தார். மறுநாள் காலை தனது வீதியை ஒவியத்தால் நிரப்பியிருக்கிறார் பிகாசோ என மக்கள் திரண்டு வந்து பார்த்தார்கள்.

அந்த மனிதன் அணிந்திருந்த முகமூடியை தன் கையில் எடுத்து வைத்துக் கொண்டபடியே பிகாசோ வீடு திரும்பினார்.

பிகாசோ அதன் பிறகு அந்த இளைஞனை தன் வாழ்நாளில் சந்திக்கவே இல்லை. அவன் பெயரோ, ஊரோ எதையும் அறிந்து கொள்ள முடியவுமில்லை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 16, 2021 00:26

March 15, 2021

நானுமொரு திராட்சை

கீறல் பிரதிகளின் தனிமை என்ற கவினின் கவிதைத் தொகுப்பு சமீபமாக வெளியாகியுள்ளது. இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளைப் படித்து வியந்து அவரைப் பாராட்டுவதற்காகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.

தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றும் கவினின் இரண்டாவது கவிதை தொகுதி இது என்றார். பாஷோ என்ற கவிதை இதழ் ஒன்றினையும் கொண்டுவந்திருக்கிறார். அவற்றை நான் பார்த்திருக்கிறேன்.

கீறல் பிரதிகளின் தனிமையில் கவிஞர் தேவதச்சனின் பாதிப்பு நிறையவே இருக்கிறது என்றாலும் அசலான தருணங்களை, தனித்துவமான கவிமொழியில் கவின் எழுதியிருக்கிறார். அது பாராட்டிற்குரியது.

வடிவ ரீதியாகவும் மொழியைக் கையாளுவதிலும் கவினின் கவிதையினைச் சங்க கவிதைகளிலிருந்து தொடரும் நவீன கவிதைகள் எனலாம். இந்த நூலில் இடம்பெற்றுள்ள ஒவியங்கள் சிறப்பாக, மிகப்பொருத்தமாக வரையப்பட்டிருக்கின்றன.

பெரும்பான்மைக் கவிதைகளில் இருப்பும் இன்மையும் விவாதிக்கப்படுகின்றன. இருப்பு இன்மை பற்றிப் பேசும் இந்தக் கவிதைகளில் தண்ணீரில் வெயில் ஊர்ந்து போவது போல அபூர்வமான தருணங்கள் வெளிப்பட்டு மறைகின்றன.

உதிர்தல் நிமித்தம்

அன்றாடத்தின் ஒளியை

மிக எளிமையாக உள்வாங்கி

ஈரம் சொட்டிக்

குப்புறக் கிடக்கும்

வெண்ணிற மலர்கள்

பூமிக்குச் சொல்வதென்ன?

இவ்வளவு பெரிய பூமிக்கு

சின்னஞ்சிறிய

பூவொன்றுக்குச்

சொல்ல இவ்வளவு இருக்கிறது

மிக அழகான கவிதை. அன்றாடத்தின் ஒளியை மிக எளிமையாக உள்வாங்கி ஈரம் சொட்டக் கிடக்கின்றன மலர்கள். உதிர்தல் என்பது மலர்தல் போல இயல்பானது தான். பூமியோடு பூக்கள் உரையாடுகின்றன என்பதில் தான் கவித்துவம் துவங்குகிறது. என்ன பாஷையது. எது குறித்து உரையாடுகிறது. ஒரு பூவிற்குப் பிரம்மாண்டமான பூமியின் பரப்பு தேவையில்லை. அது இலையளவு நிலத்தைத் தானே கேட்கிறது. உதிர்ந்த பூக்கள் செடியோடு பேசுவதை விட்டு ஏன் பூமியோடு பேசுகின்றன. உண்மையில் கவிதை சொல்ல நிறைய இருப்பதை நமக்குப் புரிய வைக்கிறது. பூக்களின் மௌனமும் பூமியும் மௌனமும் மகத்தான உரையாடலின் பகுதிதான் என்பதைக் கவிதை புரிய வைக்கிறது

குடுகுடுப்பைக்காரன் படம் இருக்கும்

அறையிலிருந்து கவிதை எழுதுகிறேன்

சமயத்தில் வார்த்தைகளை மாற்றிப் போடுவது

உடுக்கை அடிப்பது போலவே இருக்கிறது

ஆமாம் என்று வேறு சொல்கிறது இரண்டாம் ஜாமம்

சொற்களை இசையாக மாற்றும் கவிதையின் அபூர்வமான தருணத்தை இந்தக் கவிதை விவரிக்கிறது. குடுகுடுப்பைக்காரன் ஏற்படுத்தும் அச்சம் என்பது தற்காலிகமானது. ஆனால் ஆழமானது. அவன் எதிர்காலத்தைச் சொல்கிறான். ஆனால் நிகழ்காலத்தில் யாசிக்கிறான். இந்த இருநிலையும் கொண்டது தானே கவிதை.

எனக்குத் திராட்சைகள் புளிப்பதில்லை

நான் அவற்றோடே பிறந்திருக்கிறேன்

ஓடியாடி வளர்ந்திருக்கிறேன்

குடும்பத்தில் ஒருவனாய்

நானுமொரு திராட்சையாய்

திகழ்ந்திருக்கிறேன்

புளிப்புச் சுவையை நான்

அறிந்திருந்தாலும் எப்போதுமே எப்போதுமே

எனக்குத் திராட்சைகள் புளிப்பதில்லை

இந்தக் கவிதை தன்னைத் திராட்சையாக அறிந்த ஒருவனின் வெளிப்பாடு. சுவையில் வேறுபட்டாலும் அவனும் ஒரு திராட்சை தானே.

ஓவியத்தில், சிற்பத்தில் திராட்சை இடம் பெறும்போது அது ஒரு குறியீடாகிறது. அதாவது சிற்றின்பம் அல்லது செழிப்பு. பாலியல் வேட்கை போன்றவற்றைக் குறிக்கவே திராட்சையை அடையாளப்படுத்துகிறார்கள். இந்தக் கவிதையில் வரும் திராட்சையும் ஒரு குறியீடே.

எனக்குத் திராட்சைகள் புளிப்பதில்லை என்று துவங்கும் கவிஞனின் குரல் சுவையைத் தாண்டி திராட்சையை அறியும் ஒரு வழிகாட்டுதலை முன்வைக்கிறது. அதில் நான் திராட்சைகளுடன் பிறந்தேன் எனும் போது திராட்சை உறவின் வெளிப்பாடாக மாறிவிடுகிறது. திராட்சை இனிப்பாக இருந்தாலும் புளிப்பாக இருந்தாலும் கனிவின் வெளிப்பாடு தானே.

கவினின் கவிதைகளில் வெளிப்படும் சந்தம் தனித்துவமானது. அன்றாட வாழ்க்கையின் அனுபவங்களை அவர் கவிதைகளில் கலைத்துப் போட்டு விளையாடுகிறார். கேலியும் கிண்டலும் கலந்த இந்தக் கவிதைகள் கிளையிலிருந்து சட்டென வான் நோக்கி எழும் பறவைகள் போல இரண்டு மூன்றாவது வரியில் பறத்தலை மேற்கொள்ளத் துவங்கிவிடுகின்றன. அதுவே இந்தத் தொகுப்பின் விசேசம். கவினுக்கு என் வாழ்த்துகள்

புத்தகத்தில் ஆசிரியர் குறிப்பு, புகைப்படம். முன்னுரை என எதுவுமில்லை. தன்னை மறைத்துக் கொண்டு தனது கவிதைகளை மட்டும் முன்வைக்கும் கவினின் தனித்துவமே இந்த நூலை உடனே வாசிக்கும்படி என்னைத் தூண்டியது. இது வெறும் அடக்கம் மட்டுமில்லை. ஒரு மரபு என்றே சொல்லத் தோன்றுகிறது.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 15, 2021 23:23

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.