S. Ramakrishnan's Blog, page 147
January 27, 2021
குரலின் ஈரம்.
ஷெரீப் எஸ். எல்முசா (Sharif Elmusa ) அமெரிக்காவில் வாழும் பாலஸ்தீனக் கவிஞர். பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவரது கவிதைகள் அரபு அமெரிக்கன் கவிதைகளுக்கான இதழில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அவரது மகளின் பெயர் கர்மா. I am Palestinian by birth, American by citizenship, Egyptian at heart. எனத் தன்னைப் பற்றிச் சொல்கிறார் எல்முசா.
Flawed Landscape என்ற அவரது கவிதைத் தொகுப்பினை வாசித்தேன்.. மூன்று பகுதிகளாக உள்ள தொகுப்பிது.

இதில் ஒரு கவிதை குட்டி இளவரசனைப் பற்றியது. ஆகாய ஆகாயத்திலிருந்து குண்டு போடும் விமானப்படை குண்டு வீச்சாளரிடம் சில கேள்விகள் என்பதாக இந்தக் கவிதை வெளிப்படுகிறது.
பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளின் மீது ஏன் குண்டு போடுகிறீர்கள் என்ற கேள்விக்கு விமானப்படை குண்டு வீச்சாளர் தான் குழந்தைகளைக் குறிவைத்து குண்டு போடவில்லை என்கிறார்.
தேன்கூட்டில் வசிக்கும் தேனீக்களைப் போல நகரெங்கும் குழந்தைகள் வசிக்கிறார்கள். அவர் மீது தானே உங்கள் குண்டு விழுகிறது எனப் பதில் கேள்வி கேட்கப்படுகிறது.
நான் குறிவைப்பது “கட்டிடத்தில் மறைந்திருந்த அரக்கர்களை” கொல்ல என்கிறான் விமானப்படை குண்டுவீச்சாளர்.
குண்டு வீச்சாளரின் தர்க்கத்தை ஏற்கமுடியாத குட்டி இளவரசன், பெரியவர்கள் சொல்லும் காரணங்கள் அபத்தமானவை என்று சொல்வதாகக் கவிதை நிறைவு பெறுகிறது.
இன்னொரு கவிதையில் அகதிகள் முகாமிற்குப் பெயரில்லை என்ற வரி இடம்பெறுகிறது. அதைக் கடந்து செல்ல முடியாமல் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டேயிருந்தேன். போரும் போரின் விளைவாக அழிந்த ஊர்களின் நினைவுகளுமே அவரது கவிதைகளில் பிரதானமாக வெளிப்படுகின்றன.
காஸா என்பது திறந்த வெளிச்சிறைச்சாலை. அது ஒரு மாபெரும் கூண்டு என நீளும் கவிதையில் சீனக்கவிஞன் தொலைதூர நிலவையும் குரங்கினையும் பார்த்துக் கொண்டிருப்பது போலக் காஸாவின் அகதிகள் முகாமை பார்த்துக் கொண்டிருப்பதாக எழுதுகிறார்.
என் தந்தையின் கண்ணுக்குள்
ஒரு நீர்த்தேக்கம் இருந்தது
அதை அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை
ஆனால் நான் அவரது குரலின் வழியே
கண்ணீர் சொட்டுவதைக் கேட்டேன்
சரியாக மூடப்படாத குழாயிலிருந்து சொட்டும்
நீர்த்துளியினை போல
முப்பது ஆண்டுகளாக
நான் அவற்றைக் கேட்டேன்.
என ஒரு கவிதையை எழுதியிருக்கிறார். குரலின் வழியே கண்ணீர் சொட்டுகிறது என்ற வரி அற்புதமானது. மிக அழகாக எழுதியிருக்கிறார்.
சொந்த ஊர் என்பது நம் பெயர்களைச் சரியாக உச்சரிக்கக் கூடிய இடம் என்றொரு மேற்கோளை ஒரு கவிதையின் முகப்பில் எழுதியிருக்கிறார். எவ்வளவு உண்மை.
” நீங்கள் தனிமையில் இருக்கும்போது
சூரியனுடன் நண்பராகிறீர்கள் ” என இத்தாலியிருந்த நீட்சே ஒரு நண்பருக்கு எழுதினார் என ஒரு கவிதை துவங்குகிறது

பொருட்கள் எப்படி இடம் மாறிப் போகின்றன என்பதைக் குறித்த கவிதையில், சிறிய மூடிகள், கரண்டிகள் ஏன் தன்னை மறைத்துக் கொள்வது போல இடம் மாறிப் போகின்றன என்ற கேள்வியை எழுப்புகிறார். முதுகில்லாத சின்னஞ்சிறு பொருட்கள் ஏன் ஒளிந்து கொள்கின்றன என்ற கேள்வி முக்கியமானது. இது தனது அகதி வாழ்வின் துயரைப் போன்றதே என்றும் உணருகிறார்.
குறைபாடுள்ள நிலப்பரப்பு என்பது பாலஸ்தீனத்தின் அடையாளம். ஒரு பக்கம் பாலஸ்தீனத்தின் யுத்தம், அழிவு என்ற சூழல் நிலவுகிறது. இன்னொரு பக்கம் அடுத்த வேளை உணவிற்கு என்ன சாப்பிடலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் அமெரிக்க சுகவாசிகளின் வாழ்க்கை. இந்த இரண்டு நிலைகளுக்கும் நடுவில் எல்முசாவின் கவிதை ஒலிக்கிறது.

ஆலிவ் மற்றும் பேரீச்சம்பழம் கடந்தகால வாழ்வின் அடையாளமாக மாறுகின்றன. தன் தந்தையின் நினைவில் இருந்த பத்து ஆலீவ் மரங்களைப் பற்றி ஒரு கவிதையில் எழுதியிருக்கிறார்.
நாடு கடந்தவர்கள் காலம் மற்றும் வெளி ஆகிய இரண்டு தளங்களிலும் பாதிக்கப்படுகிறார்கள். ஜப்பானிய ஹைக்கூ கவிதை ஒன்றில் கியோத்தோ நகரில் இருக்கும் ஒருவன் கியோத்தோவை நினைத்து ஏங்குகிறான். அவன் ஏங்குவது பால்யத்தில் அவன் கண்ட ஊரை. உடல்ரீதியாக அவன் கியோத்தோவில் இருக்கிறான். ஆனால் மனம் வேறு காலத்தில் வாழுகிறது. இது போன்றது தான் அகதியின் வாழ்க்கை. அவன் புகலிடத்தில் பிழைப்பிற்காக வாழுகிறான். அவன் மனதோ சொந்த தேசத்தை, சொந்த ஊரையே சுற்றிக் கொண்டிருக்கிறது.
கடந்தகாலத்தை நினைவுகொள்ளுவது ஒரு சுகம். தற்கால நெருக்கடிகளிலிருந்து தப்பிக்க இந்த நினைவுகொள்ளுதல் தேவைப்படுகிறது. அதை தன் கவிதைகளில் காணமுடிகிறது என்றும் எல்முசா, பாலைவனத்தைப் பற்றி ஒருவன் அறிந்து கொள்வதற்குப் பாலைநிலம் முழுக்க அலைந்து திரிய வேண்டியதில்லை. அதைப்பற்றி வாசித்தாலும் போதுமானது. சொற்களின் வழியே சூரியன் ஒளிர்வதைக் காணமுடியும். மணலின் நாட்டியத்தை அறிய முடியும். கவிதையும் அது போன்றது தான் என்கிறார்.
போரில் அழிந்து போன கிராமங்களின் சரித்திரத்தைத் தொகுத்து எழுதும் பணியில் தற்போது ஈடுபட்டிருக்கும் எல்முசா நினைவின் பாடல்களையே ஒலித்துக் கொண்டிருக்கிறார்
••
January 26, 2021
சொல்லின் வலிமை.
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் பல்வேறு தருணங்களில் ஆற்றிய உரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது I’m Not Here to Give a Speech.
தலைப்பு அவரது சிறுகதையான I Only Came to Use the Phoneயை நினைவுபடுத்துகிறது.

அவர் ஸ்பானிஷில் நிகழ்த்திய உரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். பெரும்பான்மையான உரைகள் சிறியவை.. இதன் எழுத்துவடிவத்தை மார்க்வெஸ் உருவாக்கியிருக்கிறார். எழுதி வைத்த உரைகளைச் சில தருணங்களில் அப்படியே வாசித்திருக்கிறார்.
மேடைப்பேச்சு குறித்த தனது பயத்தையும் தயக்கத்தையும் ஒரு உரையில் பகிர்ந்து கொள்கிறார். உரையாற்றுவதற்காக விசேச உடைகளை அணிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. தனித்துவமான தலைப்பைத் தேர்வு செய்வதுடன், மேற்கோள்களை மனப்பாடம் செய்து கொள்ளத் தேவைப்படுகிறது. மேடையில் நின்று பேசுவது மிகவும் அசௌகரியமானது என்கிறார்.
இதில் 21 உரைகள் இடம்பெற்றுள்ளன. இதில் சில விருதுகளுக்கான ஏற்புரைகள். அதில் ஒன்று நோபல் பரிசு பெற்ற போது ஆற்றிய உரை. அது தான் அவரது உரைகளில் அளவில் பெரியது. அந்த உரையில் தனது ஆசான் வில்லியம் பாக்னர் தனது நோபல் பரிசு உரையில் பேசியதை நினைவு கொள்கிறார்.

மார்க்வெஸின் எழுத்தைப் போல முற்றுப்புள்ளியில்லாத நீண்ட ஒற்றை வாக்கியம் போலவே பேசியிருக்கிறார். முதல் உரை பல்கலைக்கழகத்தில் ஆற்றியது. நட்பினைப் பற்றியது. பெரிதாக ஒன்றுமேயில்லை.
அடுத்த உரை தான் எவ்வாறு எழுதத் துவங்கினேன் என்பதைப் பற்றியது. அதில் தன்னுடைய கல்லூரி நாட்களை நினைவுகூறுகிறார். எல் ஸ்பெக்டடார் இதழின் இலக்கிய ஆசிரியர் எட்வர்தோ சலேமியா போர்தோ இன்றுள்ள இளைஞர்களுக்கு எழுத்தில் ஆர்வமே கிடையாது. இளம் படைப்பாளிகளைக் காணுவது அரிதாகிவிட்டது. ஆகவே தான் இதழில் தொடர்ந்து புகழ்பெற்ற எழுத்தாளர்களை வெளியிடுகிறோம் என்று பகிரங்க சவால் விடுத்திருந்தார். அவரது வாயை மூடும்படியாகவே தான் முதற்கதையை எழுதியதாக மார்க்வெஸ் சொல்கிறார்.
அடுத்த இதழிலே அவரது சிறுகதை வெளியானதுடன் தான் நினைத்தது தவறு என்று எட்வர்தோ சலேமியா ஒரு குறிப்பும் எழுதியிருந்தார். அப்படித்தான் மார்க்வெஸின் இலக்கியப் பிரவேசம் நடந்தேறியிருக்கிறது.
தன்னுடைய எழுத்து ஒருவேளை அங்கீகரிக்கப்படாமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும் எனக் கேள்வி எழுப்பும் மார்க்வெஸ், எழுத்து பிரசுரமாவதைப் பற்றி எழுத்தாளன் கவலைப்படத் தேவையில்லை. தொடர்ந்து அவன் எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும். தீவிரமான எழுத்து தானே அதற்கான அங்கீகாரத்தை உருவாக்கிக் கொள்ளும் என்கிறார்.
எழுதுவதற்கான விஷயம் கிடைத்தவுடன் அவசரமாக அதை எழுதிவிடுவது கிடையாது. கதைக்கருவை மனதிற்குள் வளர்த்துக் கொண்டேயிருந்து சரியான நேரத்தில் எழுதுவதே தனது வழக்கம் எனும் மார்க்வெஸ். தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலை எழுதுவதற்கான விதை மனதில் விழுந்து 19 ஆண்டுகளுக்குப் பிறகே அதை நாவலாக எழுதினேன் என்கிறார்.

ஒரு கதையை உட்கார்ந்து எழுதுவது சிரமமான வேலை. அலுப்பாகிவிடும். ஆனால் கதையை மனதிற்குள் வளர்த்துக் கொண்டேயிருப்பது சுவாரஸ்யமானது. கதையைப் பின்னி வளர்ப்பது சுகமானது. எழுத்தாளனாக அதையே அதிகம் நேசிக்கிறேன் என்றும் குறிப்பிடுகிறார்
புதிய லத்தீன் அமெரிக்கன் சினிமாவின் அடித்தளத்தை உருவாக்குவது பற்றிய காஸ்ட்ரோவின் விருப்பத்தை ஏற்றுக் கியூபாவில் நடைபெற்ற ஒரு விழாவில் மார்க்வெஸ் லத்தீன் அமெரிக்கச் சினிமாவிற்கான நிறுவனம் உருவாவதை பெருமையாக குறிப்பிடுகிறார்
ஐந்து அவரது கதைகளை ஐந்து லத்தீன் அமெரிக்க இயக்குநர்கள் தொலைக்காட்சிக்கான திரைப்படமாக உருவாக்க இருப்பதைப் பற்றியும் விவரித்திருக்கிறார்
செயின்ட்-ஜான் பெர்ஸ் தனது நோபல் பரிசு ஏற்புரையில் குறிப்பிடுவதை இரண்டு உரைகளில் மார்க்வெஸ் நினைவுபடுத்துகிறார். இரண்டும் ஒரு சமூகத்தில் கவிதை மற்றும் கவிஞனின் இடம்பற்றியது.

“poetry is first and foremost a mode of life - and of integral life. The poet existed in the caveman, he will exist in the man of the atomic ages because he is an irreducible part of man. From the poetic requirement, the spiritual requirement, religions themselves were born, and through poetic grace, the spark of the divine lives forever in the human flint. When mythologies collapse, it is in poetry that the divine finds refuge; maybe even his relay. And even in the social and immediate human order, when the Bread Carriers of the ancient procession give way to the Torchbearers, it is to the poetic imagination that the lofty passion of the peoples still lights up. quest for clarity.“
தனது நண்பரான கொலம்பிய கவிஞர் அல்வாரோ முட்டிஸ் ஜராமில்லோ பற்றிய அவரது சிறிய உரை அழகானது. கேலியும் கிண்டலும் கொண்டது. அதில் நாங்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளும் முன்பு சந்திக்க வேண்டியது அவசியம் தானா எனக் கேட்டுக் கொள்வோம். மிக அவசியமானது என்றால் மட்டுமே சந்திப்போம். அந்த இடைவெளியும் புரிதலும் முக்கியமானது. ஒரேயொரு முறை இந்தக் கட்டுப்பாட்டினை நான் மீறியிருக்கிறேன் என்றும் வேடிக்கையாகச் சொல்கிறார் மார்க்வெஸ்
இன்னொரு உரையில் எழுத்தாளர்கள் ஹூலியோ கோர்த்தசார், கார்லோஸ் ஃபியூண்டஸ் உடன் தான் பாரீஸிலிருந்து மேற்கொண்ட ரயில் பயணத்தை நினைவுகூறும் மார்க்வெஸ், மூவரும் விமானத்தில் பயணம் செய்யப் பயந்தவர்கள் என்கிறார். அன்றிரவு கோர்த்தசார் ப்யானோ எப்படி ஜாஸ் இசையில் இடம்பெற்றது என்பது பற்றிய ஆற்றிய உணர்ச்சிபூர்வ உரையை ஆச்சரியத்துடன் குறிப்பிடுவதுடன், கோர்த்தசாரின் ஆயுதம் அவரது குரல். தன்னுடைய குரலில் அவர் தனது கதையை வாசிக்கக் கேட்டிருக்கிறேன் என்கிறார்
தன் பனிரெண்டாவது வயதில் ஒரு நாள் சாலையில் நடந்து செல்கையில் எதிர்பாராமல் ஒரு சைக்கிள் மோத வந்தது. திடீரென ஒரு பாதிரியார் கவனிக்கவும் என உரத்துச் சப்தம் எழுப்பினார். அந்தக் குரல் கேட்டு நான் விலகிக் கொண்டேன். சைக்கிள்காரன் தரையில் விழுந்து உருண்டான். அன்று அந்தப் பாதிரியார் ‘இப்போது நீ வார்த்தையின் சக்தியை உணருகிறாயா என்று என்னை நோக்கிக் கேட்டார் அன்று தான் வார்த்தைகளின் வலிமையை நான் கண்டுபிடித்தேன் என்று ஒரு உரையை மார்க்வெஸ் துவக்குகிறார். ஒரு சிறுகதையைப் போல உரையை ஆரம்பித்திருப்பது தனித்துவமானது
தனது தனிமையின் நூறு ஆண்டுகள் நாவல் பத்து லட்சம் பிரதிகள் விற்பனையானதை ஒட்டிய நிகழ்வில் ஆற்றிய உரையில், எங்கோ ஒரு அறையில் தனித்திருந்து எழுதிய ஒரு நாவலைப் பத்து லட்சம் பேர் தேடிப் படித்திருக்கிறார்கள் என்றால் அது வியப்பானது. இதைக் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை என்கிறார்.
தனது உரையில் தட்டச்சு செய்த பெண்ணைப் பற்றி மார்க்வெஸ் குறிப்பிடுவது முக்கியமானது.
எஸ்பெரான்சா அராய்சா என்ற பெண்ணை மறக்கமுடியாது, அவள் தான் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் கையெழுத்துப்பிரதியைத் தட்டச்சு செய்தவர். கார்லோஸ் ஃபியூண்டஸ் நாவலை அவர் தான் தட்டச்சுச் செய்தார். யுவான் ருல்போ நாவலை தட்டச்சுச் செய்திருக்கிறார். அவர் தான் எனது நாவலின் கையெழுத்துப் பிரதியினையும் தட்டச்சு செய்து கொடுத்தார்
தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலில் முதல் வடிவம் கறுப்பு மை பேனாவில் எழுதப்பட்டது. இரண்டாவது வடிவத்தைச் சிவப்பு மையில் எழுதினேன். மூன்றாவது முறை அது தட்டச்சுச் செய்யப்பட்டது. உடனிருந்து நானே வாசித்துத் திருத்தங்களைச் செய்தேன். ஒரு நாள் எஸ்பெரான்சா தட்டச்சு செய்த நாவலின் இறுதி வடிவத்துடன் பயணம் செய்த போது அவற்றைத் தவறவிட்டுவிட்டார். நாவலின் பக்கங்கள் காற்றில் பறந்தன. வீதியில் பறந்த அவற்றை ஒடியோடி சேகரித்திருக்கிறார். பல பக்கங்கள் ஈரமாகிவிட்டன. அவற்றை உலரச் செய்வதற்காகத் தானே ஒவ்வொரு பக்கமாக அயர்ன் பாக்ஸை வைத்துத் தேய்த்திருக்கிறார். அதை அன்று அவர் என்னிடம் தெரிவிக்கவில்லை. ஆனால் நீண்ட காலத்தின் பிற்கு நடந்ததை ஒப்புக் கொண்டார்
கையில் காசில்லாத நிலையில் தபாலில் இந்த நாவலை அனுப்பி வைக்கவே போதுமான பணமின்றிக் கஷ்டப்பட்டேன். என் மனைவி தான் வீட்டுச் செலவிற்காக வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொடுத்து உதவினார். தபாலில் நாவல் அனுப்பி வைக்கப்பட்டது. பின்பு நடந்தது வரலாறு என்று நெகிழ்ச்சியுடன் நினைவு கொள்கிறார் மார்க்வெஸ்
மார்க்வெஸின் புனைவில் காணப்படும் கவித்துவம் மற்றும் மாயங்கள் எதையும் இந்த உரைகளில் காணமுடியவில்லை. பத்திரிக்கையாளரான மார்க்வெஸின் நிலைப்பாடே பெரிதும் வெளிப்படுகிறது. மார்க்வெஸ் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் பட்டியலைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. அவர் எப்போதும் புகழின் உச்சத்திலே இருந்திருக்கிறார். புகழ் வெளிச்சத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் பேச்சு எவ்வளவு எளிமையாக இருந்தாலும் உடனே அங்கீகாரம் பெற்றுவிடும். அதிக வெளிச்சத்தில் சொற்கள் அர்த்தம் இழந்துவிடுகின்றன.
புனைவில் வெளிப்பட்ட மார்க்வெஸின் சாயலை மட்டுமே அவரது உரைகளில் காணமுடிகிறது. இந்த உரைகளை வாசித்து முடித்தவுடன் இணையத்திலுள்ள அவரது காணொளிகளைப் பார்த்தேன். மெல்லிய குரலில் தான் பேசுகிறார். ஸ்பானிய மொழி புரியாத போதும் அவரது கண்களை, முகபாவனைகளை, பேசும் விதத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
தன்னுடைய புகழை அவர் நன்கு அறிந்து கொண்டவராகத் தோன்றுகிறார். அதை ரகசியமாக ரசித்தபடியே தான் பேசுகிறார்
••
திறப்பு விழா
ஜனவரி 28 காலை ஒன்பதரை மணிக்கு ஹரியின் White Knights நிறுவனத்தை திரு. ராஜீவ் மேனன், திரு. பார்த்திபன். திரு. சீனுராமசாமி, திரு. ஆனந்த் சங்கர் ஆகியோர் இணையவழியாக துவக்கி வைத்து வாழ்த்துகிறார்கள்.




தொடர்பு கொள்ள :
Instagramhttps://instagram.com/whiteknights_creativeagency?igshid=19mo8wijzaqsn
Twitterhttps://twitter.com/white_knightsof?s=20
Contact number:+91-8939329251
January 25, 2021
கடவுளின் எட்டாம் நாள்
சமகால ஆர்மீனிய எழுத்தாளரான வில்லியம் மிகைலின் எழுதிய ஒரு குறுங்கதையை வாசித்தேன். இவர் ஒரு முக்கிய கவிஞர். மூன்று கவிதை தொகுப்புகளும் இரண்டு கட்டுரைத் தொகுதிகளும் ஒரு நாவலும் எழுதியிருக்கிறார். பகடி எழுத்திற்கு சிறந்த உதாரணம் போலிருக்கிறது இக் கதை.

***
உலகைச் சிருஷ்டித்து சலித்துப் போன கடவுள் எட்டாம் நாளில் ஒரு டெலிவிஷனை உருவாக்கினார். கொஞ்ச நேரம் அதைப் பார்த்து கொண்டிருந்தார். பிறகு சே.. சகிக்கமுடியலே மோசம் என்று அதை அணைத்துவிட்டு உறங்கிவிட்டார். அவர் உறங்கி எழுந்த போது அங்கிருந்த டிவியைக் காணவில்லை.
எங்கே போனது என்று தெரியாமல் குழம்பி போனார். இதனால் என்ன விளைவுகள் உருவாகப் போகிறதோ தெரியவில்லையே என்று ஆதங்கபட்டார்.
அது நிஜம். சாத்தான் அந்த டிவியைத் திருடிக் கொண்டு போய், என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்த ஆதாம் ஏவாளிடம் விற்று விட்டான். அதுவும் ஆதாம் இல்லாத நேரமாகப் பார்த்து ஏவாளிடம் பேரம் பேசி மயக்கி அதை விற்றிருந்தான்.

அப்பாவி ஆதாம், விலங்குகளுக்குப் பெயர் வைத்து முடித்துவிட்டு பசியோடு வீடு திரும்பி வந்து, என்ன சாப்பாடு என்றபடியே ஏவாளை சமையல் அறையில் தேடினான். அவளை அங்கே காணவில்லை. அவள் வெளிச்சம் மினுமினுங்கும் ஒரு பெட்டியின் முன்னால் ஒய்யாரமாகச் சாய்ந்தபடியே உட்கார்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதைக் கண்டான்.
என்ன அது கேட்டபடியே அருகில் போய் நின்றான்.
அவள் நிமிர்ந்து பார்த்துவிட்டு பதில் சொல்லாமல் டிவியில் ஒடும் காட்சிகளை ஆசையோடு பார்த்து கொண்டிருந்தாள் ,
டிவியில் தோன்றிய கவர்ச்சியான விளம்பரங்களைக் காட்டி, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று ஆதாம் கேட்டான். எனக்கும் தெரியவில்லை ஆனால் வசீகரமாகயிருக்கிறது என்றாள் ஏவாள்.
அவள் அருகில் எப்படி ஒரு பாப்கார்ன் பாக்கெட் வந்தது என்று ஆதாமிற்குப் புரியவேயில்லை. அவன் தானும் ஒரு கை நிறைய பாப்கார்ன் எடுத்துமென்றபடியே பசியை மறந்து டிவி பார்க்கத் துவங்கினான்.
டிவி அவனுக்குள் இச்சையை தூண்டியது. அவன் ஏவாளை வியப்போடு உற்றுப் பார்க்கத் துவங்கினாள். அப்படி என்ன பார்க்கிறாய் என்று ஏவாள் கேட்டாள். இத்தனை நாட்கள் விலங்குகளுக்குப் பெயர்வைக்கப் போகிறேன் என்று வெட்டியாக அலைந்து திரிந்ததில் உன்னுடைய அழகை ரசிக்கத் தவறிவிட்டேன். உண்மையில் நீ ஒரு பேரழகி என்றான்.
ஆஹா, தன்னை ஆதாம் இவ்வளவு ரசிக்கிறானே என்று பெருமிதம் கொண்டாள் ஏவாள்.
அவர்கள் இருவரும் தங்களை மறந்து டிவி பார்த்து கொண்டிருந்தார்கள்.
கடவுள் படைத்த உடலுக்கு நிறைய வேலை இருக்கிறது என்பதை டிவி வழியாகவே அவர்கள் அறிந்து கொண்டார்கள்.
அத்துடன் விளம்பரத்தில் வந்த பல்வேறு வீட்டு உபயோகப்பொருட்களை தாங்கள் உடனடியாக வாங்க வேண்டும் என்று ஆசை கொண்டார்கள்.
அன்றிரவு புகைபிடிப்பதற்காக ஆதாமின் பண்ணை வீட்டுபக்கம் நடந்துபோன கடவுள், என்ன வாழ்க்கையிது என்று புலம்பியபடியே ஆதாமின் வீட்டைக் கவனித்தார்.
ஏதோ வெளிச்சம் பீறிட்டுக் கொண்டிருந்தது. ரகசியமாக ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்
அவரால் நம்பவே முடியவில்லை. டிவி ஒடிக்கொண்டிருந்தது. அதன் முன்னே ஆதாமும் ஏவாளும் ஒருவரையொருவர் கட்டிபிடித்து முத்தமிட்டபடியே மல்யுத்தம் போல ஒருவர்மீது மற்றவர் ஏறி அமர்ந்து இறுக்கிப்பிடித்து உருண்டு கொண்டிருந்தார்கள்.
நிச்சயம் இது தனது எதிரியான அந்த சாத்தானின் வேலை தான் என்று கடவுளுக்குத் தெரிந்து போனது.
திருட்டுப்பயல், நம்ம பிள்ளைகளை இப்படிக் கெடுத்துவிட்டானே என்று சாத்தான் மீது கடுமையான கோபம் வந்தது.
ஒரு வாரம் கஷ்டப்பட்டு நாம உருவாக்கியதை மோசம் செய்து விட்டானே, எனப் புலம்பியபடியே கதவை ரகசியமாகத் திறந்து உள்ளே போய் டிவியை அணைத்தார்.
திடுக்கிட்டு எழுந்த ஆதாம் ஏவாளைப் பார்த்து, இந்தத் தவறுக்காக நீங்கள் தண்டிக்கப்படப் போகிறீர்கள் என்று கோபத்துடன் சொன்னார்.
இருவரும் தங்களின் பாவச்செயலுக்காக மன்னிப்புக் கேட்டார்கள். ஆனாலும் கடவுள் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆதாமே, நீயும் உன் வாரிசுகளும் இனிவாழ்நாள் முழுவதும் கேபிள் டிவி இணைப்பிற்காக மாதமாதம் பணம் செலவழித்து சீரழிந்து போவீர்கள்.
ஏவாளே, இனி நீ பிள்ளைகளை வளர்க்கும் பிரச்சனையுடன் பகல் முழுவதும் டிவி பார்த்து உன் நேரத்தைச் செலவழிக்க நேரிடும் என்ற தண்டனையைத் தருகிறேன் என்றார்.
அத்துடன் சாத்தானின் வீட்டை நோக்கிச் சென்று, மோசக்காரனே உன்னை என்ன செய்கிறேன் பார் என்று கத்தினார்.
சாத்தான் ,முடிந்தால் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என்று ஏளனம் செய்தான்.
ஆத்திரமான கடவுள் உலகை அழிப்பதற்கான மஹாபிரளயத்தை உருவாக்கினார். பகலிரவாக மழை கொட்டியது. வெள்ளம் உலகெங்கும் நிரம்பியது . முப்பத்தி ஒன்பது நாட்கள்பெருமழை பெய்தது. நாற்பதாம் நாள் கடவுளின் கோபம் தணிந்தது.
வெள்ளம் வடிந்த பிறகு கடவுள், நோவாவின் கப்பல் என்னவானது என்று காண்பதற்காகச் சென்றார். அது அரராத் மலையில் தட்டி நின்றிருந்தது.
அங்கே நோவா எதையோ பார்த்துக் கொண்டிருந்தான். என்ன அது என்று கடவுள் நெருங்கிப் போய் கண்ட போது அவன் முன்னே இரண்டு டிவிகள் ஒடிக் கொண்டிருந்தன.
எப்படி இரண்டு டிவி வந்தது என்று புரியாமல் கடவுள் கோபபடவே , உலகில் உள்ள ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியை காப்பாற்ற வேண்டும் நீங்கள் தானே கட்டளை தந்தீர்கள். அதனால் இரண்டு டிவிகள் காப்பாற்றபட்டன என்றான்.
கடவுளுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை

அதன் பிறகு நோவாவின் வாரிசுகளும் வாரிசுகளின் வாரிசுகளும் பெரிய பெரிய டிவிகளைப் பார்க்கத் துவஙகினார்கள். அரசியல், விளையாட்டு. வானிலை, அன்றாடச் செய்திகள், சினிமா, சமூகப்பிரச்சனைகள் என்று சேனல் மாற்றி மாற்றிச் சலிக்காமல் பார்த்து தொலைக்காட்சியின் அடிமைகளானார்கள்.
மனிதர்களைத் தன்னால் திருத்தமுடியாது என்று ஒய்வு பெற்ற கடவுளும் பொறுப்பை தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டு தனியாக முதுமையை கழிக்க ப்ளேராரிடா மாநிலத்தில் உள்ள தனது பண்ணை வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
சமீபமாக அவரை தொலைக்காட்சி சேனலுக்காக நேர்காணல் செய்த போது, ஒருவேளை தன்னுடைய சிருஷ்டியைத் திருத்திக் கொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்தால் கட்டாயம் டிவியை உருவாக்கமல் தவிர்த்துவிடுவேன் என்றார்.
இது விளம்பரத்திற்காக அவர் அடித்த ஸ்டண்ட் என்றே பலரும் நினைத்தார்கள்.
••••
மீள்பிரசுரம்.
January 24, 2021
புதிய நிறுவனம்
எனது மகன் ஹரி பிரசாத் White Knights என்ற Creative Agency ஒன்றினை ஜனவரி 28 வியாழன் அன்று துவக்குகிறான்.

ஹரியும் அவனது நண்பர்களும் ஒன்றிணைந்து இந்த நிறுவனத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அனைவரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் மீடியா சயின்ஸ் பயின்றவர்கள்.

பிராண்டிங் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கிற்கான இந்த நிறுவனம் தனிநபர் மற்றும் நிறுவனங்களின் விளம்பரம் மற்றும் வடிவமைப்புப் பணிகள் அனைத்தையும் மேற்கொள்ளும்.
குறிப்பாகப் பிராண்டிங், அனிமேஷன், லோகோ டிசைனிங், சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்வது, போட்டோ ஷுட், இணையதள வடிவமைப்பு, வீடியோ, மின்னஞ்சல் பிரச்சாரங்கள், மொபைல் வழியான மார்க்கெட்டிங் போன்ற பணிகளை முதன்மையாக மேற்கொள்ள இருக்கிறார்கள்.
இந்தப் புதிய நிறுவனத்திற்கு உங்கள் வாழ்த்துகளையும் ஆதரவினையும் வேண்டுகிறேன்
https://www.facebook.com/White-Knights-Creative-Agency-104357408321130/
••
January 23, 2021
நூலக மனிதர்கள் 32 ரகசிய விளையாட்டு.
நூலகரை முக்கியக் கதாபாத்திரமாகக் கொண்டு தமிழில் ஏதாவது நாவல் எழுதப்பட்டிருக்கிறதா, அல்லது திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறதா என ஒரு வாசகர் மின்னஞ்சலில் கேட்டிருந்தார்.
நான் அறிந்தவரை நூலகக் காட்சிகள் சினிமாவில் இடம்பெற்றிருக்கின்றன. நூலகர் ஒரு கதாபாத்திரமாக நாவலில். சினிமாவில் வந்திருக்கிறார். நூலகரின் வாழ்க்கையை விவரிக்கும் நாவல் எதையும் வாசிக்கவில்லை. ஆங்கிலத்தில் ஏராளம் இருக்கின்றன. ஹாலிவுட் படங்களில் நூலகரை மையக் கதாபாத்திரமாகக் கொண்டு நிறையப் படங்கள் வெளியாகியுள்ளன. நியூயார்க் பொது நூலகம் நிறையப் படங்களில் காட்டப்பட்டிருக்கிறது. ஹாரிபோட்டரில் வரும் நூலகம் போல விசித்திரமான நூலகங்களை மையமாகக் கொண்டு படங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
சினிமாவில் காட்டப்படும் நூலகங்கள் போல நிஜ நூலகம் இருப்பதில்லை.

நான் வேலை செய்த ஒரு சினிமா படப்பிடிப்பின் போது கதாநாயகி வீட்டு அலமாரியில் நிறையப் புத்தகங்களை ஆர்ட் டிபார்ட்மெண்ட் அடுக்கியிருந்தார்கள். என்ன புத்தகம் என்று பார்ப்பதற்காக அதைக் கையில் எடுத்தேன். அவை உண்மையான புத்தகங்களில்லை. புத்தகம் போல அட்டையில் செய்யப்பட்டவை. புத்தகத்தின் ரேப்பர்களை மட்டும் அதில் ஒட்டியிருக்கிறார்கள்.
ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் செலவு செய்து படப்பிடிப்பு நடத்துகிறவர்கள் ஏன் உண்மையான புத்தகங்களைக் காட்சியில் வைக்கலாமே என்று கேட்டதற்கு இது போல அட்டையில் செய்து வைத்துவிட்டால் எந்தப் படத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்கள்.
சினிமாவில் நூலகம் காதலர்கள் சந்தித்துக் கொள்ளும் இடம். அல்லது துப்பறியும் நிபுணர் ரகசியம் ஒன்றைத் தேடி வரும் இடம். சில நேரங்களில் பேராசிரியராக வரும் கதாபாத்திரம் நூலகத்தில் மிகப் பெரிய சைஸ் புத்தகம் ஒன்றைப் புரட்டி ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார். கல்லூரி கதை என்றால் நூலகத்திற்குக் காதல் கடிதம் கொடுக்கக் கதாநாயகன் வருவான். நூலகத்தின் உண்மையான மதிப்பை வெளிப்படுத்தும் ஒரு காட்சியைக் கூடத் திரையில் கண்டதாக நினைவில்லை.
சினிமா படப்பிடிப்பின் போது கையில் ஒரு புத்தகம் வைத்துப் படித்துக் கொண்டிருந்தால் உங்களை அறிவாளி என்று நினைப்பார்கள். பல நேரங்களில் உங்களைத் தீண்டத்தாகத ஒருவரைப் போலவே நடத்துவார்கள். அதிலும் ஆங்கிலப் புத்தகங்களைத் தான் படித்துக் கொண்டிருக்க வேண்டும். தமிழ்ப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தால் மதிப்புக் குறைவு.
சினிமா நடிகர்கள் புத்தகம் படிக்கிறார்கள் என்பதை இன்றும் வியப்பாகப் பார்க்கிறார்கள். அது ஏன் என்று புரியவில்லை. நான் அறிந்தவரை ஆழ்ந்து வாசிக்கக்கூடிய திரைக்கலைஞர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் சேமிப்பில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இருப்பதை நானே நேரில் கண்டிருக்கிறேன்.

நூலகம் சார்ந்த நினைவுகள் ஒவ்வொருவருக்கும் ஒருவிதமாக மனதில் பதிந்திருக்கிறது. ஒருமுறை புத்தகக் கண்காட்சிக்கு வந்த பெண் தனது சிறுவயதில் அப்பா நூலகத்திலிருந்து எடுத்து வந்த புத்தகங்களைப் படித்துக் காட்டுவார். அல்லது அந்தக் கதையைச் சொல்லுவார். அப்பா சொல்லிக்கேட்ட கதைகளைத் திரும்ப வாசிப்பதற்காக அந்தப் புத்தகங்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். நிறையப் புத்தகங்கள் இப்போது கிடைக்கவில்லை. கிடைத்த புத்தகத்தைப் புரட்டி வாசித்தால் அதில் அப்பாவின் குரல் கேட்கிறது. இன்று அப்பா எங்களை விட்டு மறைந்து போய்விட்டார். ஆனால் அவர் வாசித்த புத்தகத்தைப் புரட்டும் போது அவரது குரல் கேட்கிறது. கண்ணீருடன் தான் படிக்கிறேன் என்றார்.
தந்தை நூலகத்திற்குச் சென்று எடுத்து வந்த புத்தகங்கள் மகளை எவ்வளவு பாதித்திருக்கிறது பாருங்கள். இப்படி நூறு நூறு அனுபவங்கள் நூலகம் சார்ந்து இருக்கின்றன.
சிறார் புத்தகம் ஒன்றில் கம்பளிப்பூச்சி ஒன்று நூலகராக இருக்கும். அந்த நூலகத்திற்கு விலங்குகள் சென்று புத்தகங்கள் எடுத்துவரும். ஒரு எலி மனிதர்களிடம் தங்களை எப்படிக் காப்பாற்றிக் கொள்வது என்று புத்தகத்தைப் படிக்க எடுத்துக் கொண்டு போகும். யார் அதை எழுதினார்கள் என்று அந்தக் கதையில் இடம்பெறவில்லை. ஆனால் பத்துவயதில் படித்த போதும் இன்றும் மறக்கமுடியவில்லை கண்ணாடி அணிந்த கம்பளிபூச்சியின் முகம் மனதில் ஒளிர்ந்தபடியே இருக்கிறது
பள்ளி வயதில் நூலகத்தில் ஒரு பையனைப் பார்த்தேன். அவன் பெயர் பாஸ்கர். பதிமூன்று வயதிருக்கும். பாஸ்கர் வண்ணப்படமுள்ள புத்தகமாகத் தான் வாசிக்க எடுப்பான். அந்தப் புத்தகத்தினை ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிப் படிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்வான். உண்மையில் ஒரு பக்கத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பான். அப்படி என்ன பார்க்கிறான் என்று புரியாது. ஒருமுறை அவனிடம் கேட்டபோது ஓவியத்திலுள்ள மாயக்கம்பளம் எங்கே கிடைக்கும் என யோசித்துக் கொண்டிருந்ததாகச் சொன்னான்.
பாஸ்கர் தான் ஒரு நாள் என்னிடம் கால இயந்திரம் பற்றிய சிறார் கதை ஒன்றிலிருந்த படத்தைக் காட்டி ஏன் வட்டமாக இயந்திரம் இருக்கிறது என்று கேட்டான். எனக்குப் புரியவில்லை. ஏன் கால இயந்திரம் வட்டமாக இருக்கிறது என்று நானும் அவனிடம் கேட்டேன். காலம் வட்டமானது. அதனால் கால இயந்திரம் வட்டமாக இருக்கிறது என்றான். அவன் சொன்ன பதில் அப்போது புரியவில்லை.
ஆனால் ஒரு புத்தகத்தை வாசிக்கத் துவங்கும் ஒருவன் அதில் என்ன கண்டறிகிறான் என்று எவராலும் புரிந்து கொள்ள முடியாது என்பதை அறிந்து கொண்டேன். அதே புத்தகத்தை நானும் படித்திருக்கிறேன். எனக்கு அந்தச் சந்தேகம் வரவில்லை. கேள்வி எழவில்லை.

விசித்திரமாக யோசிக்கிறான் என்பதாலே பாஸ்கரை எனக்குப் பிடித்துப் போனது. ஒரு நாள் அவன் நான் ஒரு விளையாட்டை உருவாக்கியிருக்கிறேன். இங்கே விளையாடுவோமா என்று கேட்டான். என்ன விளையாட்டு என்று கேட்டேன்.
நூலகத்தில் உள்ள ஒரு புத்தகத்தில் தான் பலூன் படம் ஒன்றை வரைந்து வைத்துள்ளதாகவும் அது எந்தப் புத்தகம் என்று கண்டுபிடித்துக் கொண்டு வரவேண்டும் என்றான். கண்டுபிடித்துவிட்டால் என்ன தருவாய் என்று கேட்டேன். அவன் தான் பாக்கெட்டிலிருந்து சிறிய விசில் ஒன்றை எடுத்து இதைத் தந்துவிடுகிறேன் என்றான்.
வேகமாக நூலக அடுக்கினுள் ஒடி எந்தப் புத்தகத்தினுள் அவன் பலூன் வரைந்திருக்கிறான் என்று வேகவேகமாகப் புரட்டிப் பார்த்தேன். கண்டுபிடிக்க முடியவில்லை. நூலகர் ஏன் புத்தகங்களைத் தள்ளிவிடுகிறேன் என்று கோவித்துக் கொண்டார். ஒரு மணி நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. நூலக நேரம் முடிந்து போன காரணத்தால் நாளை தேடுவோம் என்று பிரிந்து சென்றோம்
மறுநாள் நூலகம் திறந்தவுடனே உள்ளே நுழைந்து விளையாட்டினைத் தொடர்ந்தேன். அன்று மதியம் வரை தேடியும் கண்டுபிடிக்கமுடியவில்லை. முடிவில் அந்தப் பையன் தானே எடுத்து வருவதாகச் சொல்லி ஒரு பெரிய புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்தான். அதில் ஒரு பக்கம் பென்சிலில் பலூன் வரையப்பட்டிருந்தது.
“இது பெரியவர்கள் படிக்கும் புத்தகம்“ என்றேன்
“நான் இதுல இருக்கிற போட்டோக்களைப் பார்ப்பேன்“ என்றான் பாஸ்கர்.
அன்று முதல் நூலகத்தில் இது போலப் புதிய விளையாட்டுகளை விளையாட ஆரம்பித்தோம்.
நூலின் தலைப்பின் நடுவே ஒரு வார்த்தையைப் புதிதாகச் சேர்த்துவிடுவேன். அதாவது இரும்புக்கோட்டை ரகசியம் என்று தலைப்பு இருந்தால் இரும்புக் கோட்டை இட்லி ரகசியம் என மாற்றிவிடுவேன். அவன் அதைக் கண்டுபிடிக்க வேண்டும். அவன் கண்ணில் படாதபடி புத்தகத்தை ஏதாவது இடுக்கில் ஒளித்து வைத்துவிடுவேன். ஆனால் அவன் எப்படியோ கண்டுபிடித்து எடுத்து வந்துவிடுவான்
பாஸ்கர் சில புத்தகங்களில் குறிப்பிட்ட வார்த்தைகளை அடிக்கோடு போட்டுவிடுவான். அந்த வார்த்தைகளைக் கண்டறிந்து அதை ஒன்று சேர்த்து என்ன வாக்கியம் எனக் கண்டுபிடிக்க வேண்டும். அதை என்னால் ஒரு போதும் முழுமையாகச் செய்ய முடியவே முடியாது. அவன் தான் ஜெயிப்பான். நூலகம் இப்படி விளையாட்டுக் களமாக மாறியதை ஒரு நாள் நூலகர் கண்டுபிடித்துவிட்டார். அதன் பிறகு எங்களை நூலக அடுக்கிற்குள் நுழைய அனுமதிக்கவேயில்லை.
நாளிதழ்களில் பாஸ்கர் இது போலவே ஒரு விளையாட்டினை உருவாக்கினான். குறிப்பிட்ட சொல் எந்தப் பேப்பரில் உள்ள எந்தச் செய்தியில் வெளியாகியிருக்கிறது என்று கண்டறிய வேண்டும். நாளிதழை முழுவதுமாகப் புரட்டிப் படித்தால் மட்டுமே அதைக் கண்டுபிடிக்க முடியும். ஆழ்ந்த வாசிப்பை அவன் விளையாட்டாக மாற்றியது வியப்பாக இருந்தது.
நிறையப் புதிய சொற்களை அதன்வழியே கற்றுக் கொண்டேன். நூலகத்தில் இப்படி அறிவு சார்ந்த விளையாட்டுகளை ஏன் அனுமதிக்கக் கூடாது என்று இன்று தோன்றுகிறது. வெறும் வாசிப்பை விடவும் வாசிப்பு சார்ந்த விளையாட்டுகள். நாடகங்கள். கூடி வாசித்தலுக்கான களமாக நூலகத்தை நாம் மாற்றி அமைக்க வேண்டும். அதற்கெனச் சிறப்பு வசதிகள் உருவாக்கப்பட்டால் சிறார்கள் அதிகப் பயன் அடைவார்கள்
பாஸ்கர் நூலகத்தை விந்தைகளின் உலகமாக அடையாளம் காட்டினான். ஒரு நாள் அவன் ஒரு புத்தகத்திலிருந்த வண்ணப்படம் ஒன்றை காட்டினான். அதில் கனவுகளைப் பதிவு செய்யும் இயந்திரம் ஒன்று இருப்பதாகவும் அதைத் தலையில் மாட்டிக் கொண்டுவிட்டால் நம் கனவுகளைப் பதிவு செய்துவிடும் என்றும் சொன்னான்
கேட்கவே அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. எத்தனை விநோதமான கனவுகள் காலை எழுந்தவுடன் மறந்து போய்விடுகின்றன. அந்த இயந்திரம் எங்கேயிருக்கிறது என்று கேட்டேன். தானே அதைப் போன்ற ஒன்றைச் செய்ய இருப்பதாகச் சொன்னான். எப்படி எனப் புதிராகக் கேட்டேன். அதைப்பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறேன் என்றான்.
விசித்திரங்களை நோக்கிய அவனது தேடலும் முயற்சியும் பிரமிப்பூட்டியது. ஒருநாள் நூலகத்திலிருந்த புத்தகம் ஒன்றிலிருந்து மேப் ஒன்றைக் கிழித்துத் தன் பையில் வைத்திருந்தான் என அவனைப் பிடித்துவிட்டார்கள்.
இனி பாஸ்கரை நூலகத்திற்குள் அனுமதிக்க முடியாது என்று தடுத்துவிட்டார் நூலகர். அதன்பிறகு பாஸ்கரைப் பார்க்கவேயில்லை. ஆனால் இறுகி உறைந்து போயிருந்த புத்தகங்களைக் கலைத்துப் போட்டு சுவாரஸ்யமான விளையாட்டினை உருவாக்கிய அவனது செயலை மறக்க முடியவில்லை.
புத்தகத்தின் அட்டையைப் பார்த்துப் புத்தகத்தை எப்படி முழுமையாகப் புரிந்து கொள்ளமுடியாதோ அது போலத் தான் நூலகத்திற்கு வரும் மனிதர்களும். அவர்களின் தோற்றதை வைத்து அவர்கள் என்ன படிப்பார்கள். எதில் ஆர்வம் காட்டுவார்கள் என்று கண்டறியமுடியாது.
ஒருவர் புத்தகம் படிக்கும் போது அதன் பக்கங்களின் வழியே என்ன உணருகிறார். என்ன பார்க்கிறார் என்று எவராலும் கண்டறிய முடியாது. வாசிப்பு எளிமையானது போலத் தோன்றினாலும் அது ரகசியமான செயல்பாடே.
••
கன்னிமாரா நூலகத்தில்
சென்னை கன்னிமாரா நூலகத்தினுள் புதுப்பிக்கபட்ட நிரந்தர புத்தகக் கண்காட்சி நேற்று துவங்கப்பட்டது. பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன் இதனைத் தொடங்கி வைத்தார்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் சார்பில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி பதிப்பகத்திற்கெனத் தனி ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது.

எனது நூல்கள் யாவும் அங்கே விற்பனைக்கு கிடைக்கின்றன.
January 22, 2021
காலைக்குறிப்புகள் 28 தனிமையும் கனவுகளும்
எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் தனது நேர்காணல் ஒன்றில் அன்றாடம் தனக்கு வரும் கனவுகளை ஒரு நோட்டில் குறித்து வைத்துக் கொண்டு வருவதாகச் சொல்கிறார். அவற்றை என்ன செய்வார் என்று சொல்லவில்லை. கனவுகளிலிருந்து எழுதுவதற்கான கருவைப் பெறுவதாக எழுத்தாளர்கள் பலரும் சொல்லியிருக்கிறார்கள். ரஸ்கின் பாண்டிற்கும் கனவு வழிகாட்டவே செய்கிறது.
திப்புசுல்தான் தனது கனவுகளை இது போலத் தொடர்ந்து பதிவு செய்து வந்ததோடு அவற்றிற்கு விளக்கம் என்னவென்று ஆராய்ந்துமிருக்கிறார். அவை தனி நூலாக வெளிவந்துள்ளன.

ரஸ்கின் பாண்டின் சிறார்கதைகைள் தலைமுறைகள் தாண்டி இன்றும் வாசிக்கப்பட்டு வருகின்றன. பள்ளி பாடப்புத்தங்களில் இடம்பெற்ற இவரது சிறுகதைகளைப் படிக்காத இந்திய மாணவர்களே இருக்கமாட்டார்கள். நானும் என் பள்ளி நாட்களில் படித்திருக்கிறேன்.
தனது நேர்காணலில் ரஸ்கின் பாண்ட். எழுபது ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன் என்கிறார். நீண்டகாலமது. எழுத்து தான் அவரது நினைவாற்றலைத் தக்கவைத்திருக்கிறது. துல்லியமாகத் தன்னால் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை எழுதமுடியும். அதற்கு நினைவாற்றலே காரணம் என்கிறார்.
இயற்கையோடு இணைந்து வாழுகிறவர் என்பதால் அவரது கதைகளில் பறவைகளும் விலங்குகளும் குளிரும் பனியும் மழையும் ஒன்று சேர்ந்து வெளிப்படுகிறது.
எப்படி இன்றும் கதைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறீர்கள் என்று கேட்டதற்கு உணவு உண்பது, தண்ணீர் குடிப்பது போல எழுத்தும் அன்றாடச் செயல்பாடாக மாறிவிட்டது. எழுதுவதற்கு முன்பு கதையை முழுவதுமாக மனதில் உருவாக்கிக் கொண்டே எழுத அமருவேன். எழுதுகிற வேலை என்பது மனதிலிருப்பதைப் பிரதியெடுப்பது மட்டுமே என்கிறார்.
ஒவ்வொரு எழுத்தாளருக்கும் இப்படி ஒரு பாணி இருக்கிறது. எவரும் எவரையும் பின்பற்றமுடியாது.

ரஸ்கின் பாண்டின் வீடு மிசோரியில் உள்ளது. வீட்டின் ஜன்னலைத் திறந்தால் தூரத்து மலைகள் சுற்றிலும் அடர்ந்த மரங்கள். மலைநகர வாழ்க்கை தன்னைச் சுதந்திரமாக உணர வைக்கிறது. எழுத வைக்கிறது என்கிறார்.
சிறார்களுக்கான புத்தகங்களை மட்டுமே எழுதி ஒருவர் இத்தனை பேரும் புகழும் பெற்றிருப்பது ஆச்சரியமானது. ஆங்கிலத்தில் எழுதியதால் அவரால் எழுத்தை நம்பி வாழ முடிந்திருக்கிறது. பென்குவின் போன்ற பதிப்பகங்கள் அவரைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டன. பத்திரிக்கைகளில் பத்திகள் எழுதினார். அரசின் சார்பாகப் பல்வேறு திட்டப்பணிகளையும் மேற்கொண்டிருக்கிறார்.
அவரது சில கதைகள் திரைப்படமாகியிருக்கின்றன. பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியிருக்கிறது. ஆகவே தனித்துச் சுதந்திரமாக வாழும் அளவிற்கு வசதியாகவே இருக்கிறேன் என்கிறார் ரஸ்கின் பாண்ட்.
ரஸ்கின் பாண்ட் என்ற பெயரைப் பற்றி நேர்காணல் செய்கிறவர் கேட்டபோது தான் பிரிட்டிஷ் வம்சாவளியைச் சார்ந்தவர். பஞ்சாப் மாநிலத்தின் கசௌலியில் பிறந்தவன். தன் தந்தை அலெக்சாண்டர் பாண்ட் ஜாம்நகர் அரசரின் மகளுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் பணியைச் செய்துவந்தார். ஆகவே குடும்பம் ஜாம்நகரில் வசித்தது. என்று பதில் சொல்கிறார்
அவரது நினைவுகள் கடந்தகாலத்தினுள் பறக்கத்துவங்குகிறது. தனது பழைய புகைப்படங்களைப் புரட்டி வாழ்வின் கடந்து போன பக்கங்களை நினைவு கொள்கிறார்.
ரஸ்கின் மற்றும் அவரது சகோதரி எலன் இருவரும் ஆறு வயது வரை ஜாம்நகரில் வாழ்ந்தனர். பின்னர் ரஸ்கினின் தந்தை பிரிட்டிஷ் விமானப்படையில் சேரவே அவரும் சகோதரியும் அம்மாவுடன் பாட்டி வீடான டெஹ்ராடூனிற்கு இடம்மாறினார்கள். முசோரியில் உள்ள போர்டிங் ஸ்கூலில் ஆரம்பக் கல்வியைப் பயின்றார். கல்லூரி படிப்பே கிடையாது.
ரஸ்கின் பாண்டிற்கு எட்டுவயதான போது அவரது அம்மா ஒரு பஞ்சாபியைத் திருமணம் செய்து கொண்டுவிட்டார். அது குடும்பத்தில் பெரிய பிரச்சனையை உருவாக்கியது.

அம்மா வேறு திருமணம் செய்து கொண்டுவிடவே ரஸ்கின் தந்தையுடன் வசிக்கப் புதுதில்லிக்குச் சென்றார். தந்தையின் நேசமே தன்னை உருவாக்கியது என உணர்ச்சிப்பூர்வமாகச் சொல்கிறார் பாண்ட். இந்த அன்பு நீடிக்கவில்லை. இரண்டு ஆண்டுகளில் எதிர்பாராமல் தந்தை இறக்கவே ரஸ்கின் நிலைகுலைந்து போனார்.
மீண்டும் தாயோடு சேர்ந்து வாழ டெஹ்ராடூனிற்கே சென்றார். அன்பிற்கான ஏக்கம். தனிமை, தந்தையில்லாத வருத்தம் எனச் சொந்த வாழ்க்கையின் துயரம் அவரை எழுதும்படி தூண்டியது. 1951 இல் தனது பதினாறாவது வயதில் எழுதத் துவங்கிய ரஸ்கின் பாண்ட் இன்றுவரை எழுதிக் கொண்டேயிருக்கிறார்.
சொந்த வாழ்வின் துயரங்களை எழுத்தாளன் கலையாக மாற்றிவிடுகிறான். அந்தப் படைப்பில் துயரத்தின் சாயலே இல்லை. பதின்வயதின் கனவுகளும் சந்தோஷமும் ஏக்கமும் மட்டுமே வெளிப்படுகிறது. பதின்வயதில் ஏற்பட்ட காதல் தோல்வியும், பிரிவும் தன் படைப்பில் சோகத்தை உருவாக்கியது உண்மை என்றாலும் விரைவில் அதிலிருந்து விடுபட்டுவிட்டேன் என்கிறார் ரஸ்கின் பாண்ட்
குழந்தைகளுக்காக அவர் எழுதிய உலகம் வண்ணமயமானது. சுவாரஸ்யமானது. சிறார்களின் மனதைத் துல்லியமாகச் சித்தரித்த கதைகள் அவை. அவர் ஒருபோதும் சிறார்களுக்கு அறிவுரை சொல்வதில்லை. ஒருமுறை பள்ளி ஒன்றுக்குச் சிறப்பு ஆசிரியராக ஒரேயொரு வகுப்பு எடுக்க அவரை அழைத்திருந்தார்கள். மாணவர்களின் விளையாட்டுத்தனத்தையும் குறும்பினையும் கண்டிக்க மனமின்றிச் சுதந்திரமாக அனுமதித்தார். வகுப்பில் ஒரே களேபரம் ஏற்பட்டுத் தலைமை ஆசிரியர் தலையிட்டு வகுப்பை அமைதிப்படுத்தியிருக்கிறார். தன்னால் சிறுவர்களின் விளையாட்டுத்தனத்தைக் கண்டிக்கமுடியாது. அது உற்சாகமான மனதின் வெளிப்பாடு. அதை ஏன் தடுக்க வேண்டும் என்று கேட்கிறார் ரஸ்கின் பாண்ட். இந்த மனநிலை தான் அவர் குழந்தைகளுக்காக எழுதுவதன் முக்கியக் காரணி.
முப்பது வயதில் காமன்வெல்த் பரிசை பெற்றபிறகே அவருக்கான இலக்கிய இடம் உறுதியானது. தனது புத்தகங்களுக்கான பதிப்பாளரைத் தேடி லண்டன் சென்ற பாண்ட் அங்கே சில காலம் வசித்தார். பின்பு இந்தியா திரும்பி 1963 முதல் முசோரியில் வசிக்கத் துவங்கினார்.
திருமணம் செய்து கொள்ளாத ரஸ்கின் பாண்ட் தனது வளர்ப்புப் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். மாதம் ஒருமுறை முசோரியிலுள்ள புத்தகக் கடை ஒன்றுக்கு வருகை தந்து தன் புத்தகங்களில் கையெழுத்துப் போடுகிறார். வாசகர்களுடன் உரையாடுகிறார்.
ஜேம்ஸ் பாண்ட் புகழ்பெறுவதற்கு முன்பே எழுத ஆரம்பித்த பாண்ட் நான் தான். ஆகவே எனக்கு ஜேம்ஸ்பாண்டால் ஒரு பிரச்சனையுமில்லை என வேடிக்கையாகச் சொல்கிறார்.
பலரும் அவரை வெளிநாட்டவர் என்றே இன்றும் நினைக்கிறார்கள். அவரோ நான் இந்தியாவில் பிறந்தவன். இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறவன் என்கிறார். சாகித்ய அகாதமி விருது, பத்மபூஷண் விருது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார் ரஸ்கின் பாண்ட்.
The Room on the Roof இவரது முக்கியமான நாவல். இது ரஸ்டி என்ற ஆங்கிலோ இந்தியச் சிறுவனைப் பற்றியது. ரஸ்கின் பாண்டின் சொந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பாகவே இந்தக் கதை எழுதப்பட்டிருக்கிறது. ரஸ்கினின் காதல் நிகழ்வுகளே மீனாவின் மீதான ரஸ்டியின் காதலாக வெளிப்படுகிறது.
தன்னை எவரும் புரிந்து கொள்ளவில்லை. அன்புகாட்டவில்லை என்ற ரஸ்கினின் குழந்தைப்பருவ ஏக்கம் அவரது கதைகளில் தொடர்ந்து வெளிப்படுகிறது.
சிறுவர்கள் ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது அதன் அர்த்தங்களைப் பற்றிக் கவலைப்படாமல் வாசிக்கிறார்கள். அர்த்தங்களை முழுமையாகப் புரிந்து கொள்வது மிக அபூர்வமாகவே காணப்படுகிறது. நிகழ்வுகளின் சுவாரஸ்யமும் விநோதமுமே அவர்களைத் தொடர்ந்து படிக்க வைக்கிறது.
ஒருவன் தன் பத்து வயதில் அணிந்து கொண்ட சட்டை அவனுடைய இருபதாம் வயதில் அவனுக்குப் பொருந்துவதில்லை. ஆனால் அவன் பத்து வயதில் படித்த புத்தகம் அவனுக்கு எண்பது வயது ஆகும் போதும் பிடித்தமானதாகவே இருக்கிறது. கூடவே வளர்ந்து கொண்டிருக்கிறது. அது தான் நல்ல புத்தகத்தின் அடையாளம்.
எழுத்து வாசகனுக்கு மட்டும் மீட்சியளிப்பதில்லை. எழுத்தாளனுக்கும் சொந்த வாழ்க்கையின் துயரங்களிலிருந்து விடுபட்டு மீட்சி அளிக்கவே செய்கிறது.
January 21, 2021
காலைக்குறிப்புகள் -27 தன்னை இழந்தவர்கள்
லாக்டவுன் நாட்களில் அரசு உயரதிகாரியாக உள்ள எனது நண்பர் தனது பிள்ளைகளுடன் கேரம் விளையாடத் துவங்கினார். ஆரம்பத்தில் மதிய நேரம் மட்டுமே விளையாடிக் கொண்டிருந்தவருக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகமாகிவிடவே இரவு பதினோறு மணி வரை சலிக்காமல் விளையாட ஆரம்பித்தார். மகனுக்கோ, மகளுக்கோ விருப்பமில்லை என்று எழுந்து கொள்ள முயன்றால் கோபம் கொண்டுவிடுவார். அவருக்காக மனைவி நீண்ட நேரம் துணையாக விளையாட வேண்டியிருந்தது.

இது போலவே காலை ஆறுமணிக்கெல்லாம் கையில் காபியுடன் மகளை விளையாட அழைக்க ஆரம்பித்துவிடுவார். இதனால் அவரது குடும்பமே எரிச்சலானது. ஆனால் அவரால் கேரம் விளையாடுவதை நிறுத்த இயலவில்லை.
லாக்டவுன் என்பதால் அலுவலகம் போகவில்லை. வெளியே யாரையும் சந்திக்கவும் முடியாது என்பதால் சதா விளையாடிக் கொண்டேயிருந்தார். சில நாட்கள் இரவில் யாரும் விளையாட வராத போது தானே தனியாக விளையாடுவார். மாறி மாறி இரண்டு பக்கமும் எழுந்து உட்கார்ந்து காய்களைச் சிதறடிப்பார்.
அது ஒரு விளையாட்டு என்பதே அவருக்கு மறந்து போக ஆரம்பித்தது. விளையாடுவதற்கு ஆட்கள் வேண்டும் என்பதற்காகவே மனைவி பிள்ளைகளை அழைத்துக் கொண்டு காஞ்சிபுரத்தை அடுத்த சொந்த ஊருக்குக் கிளம்பிப் போனார். அங்கே அவரது பூர்வீக வீடு இருந்தது. வீட்டில் நிறைய ஆட்கள் இருந்தார்கள். ஆகவே ஊருக்குப் போன சில நாட்களில் அவருடன் விளையாட எப்போதும் துணையிருந்தார்கள். ஆனால் அவர்களும் நாள் முழுவதும் கேரம் ஆடுவது என்றால் எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.

முகத்திற்கு நேராகச் சொல்லிவிட்டாலும் அவரால் கேரம் விளையாடுவதை நிறுத்திக் கொள்ளமுடியவில்லை. அவரது கைவிரல்கள் சிவந்து வீக்கம் கொண்டுவிட்டன. ஏதோ கேரம் விளையாட்டில் சாம்பியன் ஆக முயன்றவர் போல வெறியோடு விளையாடிக் கொண்டிருந்தார். மனைவியும் பிள்ளைகளும் பயந்து போனார்கள். அவரைத் திசைதிருப்புவதற்காக வேறு விளையாட்டுகளை விளையாட அழைத்தார்கள். அவர் எதிலும் கலந்து கொள்ளவில்லை. அவர் பகலிரவாக விளையாடினார். திடீரென ஒரு நாள் மதியம் பாதி விளையாட்டில் எழுந்து கொண்டு கேரம்போர்டினைத் தூக்கி கிணற்றில் போட்டுவிட்டார்.
எதற்காக அப்படிச் செய்தார். என்ன நடந்தது என்று எவருக்கும் தெரியவில்லை. ஆனால் அதன்பிறகு அவர் கேரம் விளையாடவேயில்லை. அதைப் பற்றி யாராவது பேசினாலும் கோபம் கொள்ள ஆரம்பித்தார்.
சூதாட்டத்தில் தான் இப்படி நடக்கும் என்பார்கள். சூதில் மட்டுமில்லை. தனக்கு விருப்பமான விஷயம் எதிலும் ஆழ்ந்து ஈடுபட ஆரம்பித்துவிட்டால் பின்பு அதைக் கைவிடுவது எளிதானதில்லை. இந்த நண்பருக்குக் கேரம் விளையாடுவது பொழுதுபோக்கிற்கானது என மறந்து போய்விட்டது.
மற்றவர்களைப் பற்றி அவர் பொருட்படுத்தவேயில்லை. தனது வெற்றியை மிகப்பெரிய விஷயமாகக் கருதினார். குடும்பத்தினரின் கஷ்டங்கள். கேலிப்பேச்சுகள் எதையும் அவர் கண்டுகொள்ளவில்லை. ஏன் இப்படி ஆனது. மனம் ஏன் திடீரென இத்தனை மூர்க்கமாகிவிடுகிறது. என ஒருவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை
இந்த ஒரு விஷயத்தைத் தவிர அவரது வழக்கமான செயல்பாடுகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இனிமையாகப் பேசினார். நடந்து கொண்டார்.
தீவிரமான வெறியோடு விளையாடிக் கொண்டிருந்தவர் எப்படி ஒரு புள்ளியில் அதிலிருந்து வெளியே வந்தார் என்பது குடும்பத்தினருக்குப் புதிராக இருந்தது. அவருக்கும் அது திடீர் ஞானமாகத் தோன்றியிருக்கக் கூடும்.
லாக்டவுன் நெருக்கடி ஒருவரை எந்த அளவு மூர்க்கம் கொள்ள வைக்கும் என்பதற்கு இவரே ஒரு உதாரணம்.

இரண்டு நாட்களுக்கு முன்பாக லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான பெர்னான்டோ ஸோரன்டினோ. (Fernando Sorrentino) எழுதிய The Horn Player சிறுகதையை வாசித்தேன். இதே பித்து நிலையின் மாற்று வடிவம் போல அந்தக் கதை எழுதப்பட்டிருந்தது. வாசிக்க வாசிக்க என் நண்பரின் முகமே கண்ணில் வந்து கொண்டிருந்தது.
வங்கி ஒன்றில் வேலை செய்யும் ஊழியர் ஒருவருக்குத் திடீரென ஹார்ன் இசைக்கருவியை வாசிப்பதில் ஆர்வம் உண்டாகிறது. ஆரம்பத்தில் அவர் தட்டுத்தடுமாறி வாசிக்கிறார். குளியல் அறையில் யாரும் அறியாமல் வாசித்துக் கொண்டிருக்கிறார். மெல்ல அந்தப் பழக்கம் தீவிரமடைய ஆரம்பிக்கிறது. பக்கத்து வீட்டுக்காரரைப் பற்றிய கவலையின்றி அவர் சப்தமாக ஹார்ன் வாசிக்கிறார். பகலிரவாக வாசிக்கிறார். ஞாயிறு வெளியே கூடச் செல்வதில்லை. மனைவி தொல்லை தாங்கமுடியாமல் காதில் பஞ்சு அடைத்துக் கொள்கிறாள். எங்கே சென்றாலும் ஹார்ன்னை உடன் கொண்டு செல்லுகிறார்.

ஒரு நாள் அலுவலகத்திற்கு இசைக்கருவியைக் கொண்டு செல்லும் அவர் ஓய்வு நேரத்தில் தனியே வாசிக்க ஆரம்பிக்கிறார். தன்னை மறந்து அதிகச் சப்தமாக அவர் வாசிக்கிறார். கழிப்பறை வாசலில் அலுவலகமே திரண்டு நிற்கிறது. மேலாளர் அவரைக் கோவித்துக் கொள்கிறார். ஆனால் தான் ஒரு தவறும் செய்யவில்லை. ஹார்ன் வாசிப்பது தனது விடுதலை உணர்வின் வெளிப்பாடு என்பது போலவே நினைக்கிறார்.
அலுவலக ஊழியர்கள் கேலி செய்கிறார்கள். அதை அவர் கண்டுகொள்ளவில்லை. அலுவலகத்திற்கு இனி ஹார்ன் கொண்டு வரக்கூடாது என்று எச்சரிக்கப்படுகிறார். இதனால் அடிக்கடி ஏதாவது ஒரு பொய்க் காரணத்தைச் சொல்லிக் கொண்டு வீட்டுக்கு ஒடி ஹார்ன் வாசிக்கத் துவங்குகிறார். கணவரின் இந்த விபரீத செயலைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவரது மனைவி அவரை விட்டு விலகிப் போய்விடுகிறாள்.
ஒரு நாள் அவரது வங்கியில் கடன் கேட்டு ஒரு வணிகர் வருகிறார். அவரது பேச்சு வங்கி ஊழியருக்கு எரிச்சலூட்டுகிறது. தன்னுடைய வீட்டிற்கு அவசரமாகப் போய் ஹார்ன் எடுத்து வருகிறார். அந்த மனிதரின் முகத்திற்கு எதிராக ஹார்ன் வாசிக்கிறார். அது ஒரு எச்சரிக்கை போல , மிரட்டல் போல, எதிர்ப்புணர்வு போல அமைகிறது. அலுவலகம் ஒன்று திரண்டு தடுத்தபோதும் அவர் இசைப்பதை நிறுத்தவில்லை. அவரது வாசிப்பின் வேகம் அதிகமாகிறது
மேனேஜர் அவர் மீது பாய்ந்து ஹார்ன் இசைக்கருவியைப் பிடுங்கமுயற்சிக்கிறார். ஊழியர் விலகிக் கொள்ளவே மேலாளர் கீழே விழுந்து அடிபடுகிறார். தான் செய்யும் காரியத்தின் விபரீதத்தைப் புரிந்து கொள்ளாமல் ஹார்ன் வாசித்தபடியே இருக்கிறார். முடிவில் அவரது வேலை போகிறது. தனக்கு விருப்பமான ஹார்னுடன் வெளியேறுகிறார்
அப்போது தான் தான் ஒரு மனச்சுழலில் சிக்கிக் கொண்டிருப்பது அவருக்குப் புரிகிறது. ஹார்னை தூக்கி எறிகிறார். அவரது எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடுகிறது.
இந்தக் கதையில் வரும் நிகழ்வுகள் அபத்தமாகத் தோன்றினாலும் மனிதர்கள் அறிந்தே இப்படியான பித்துக் கொள்கிறார்கள் எனத் தோன்றுகிறது
என் நண்பர் கேரம் விளையாடி போது ஏற்பட்ட தீவிர ஈடுபாடும் இந்த ஹார்ன் இசைப்பவரின் செயலும் ஒன்று தான். லாக்டவுன் நண்பரைச் செயலற்றவராக மாற்றியிருந்தது. அலுவலகம், அதிகாரம், பரபரப்பு என இருந்தவருக்கு அந்த உலகம் தன்னை விட்டு பறிக்கப்பட்டதும் விளையாட்டில் தனது அதிகாரத்தை, வேகத்தைக் காட்டத் துவங்கிவிட்டார்.
இதே நெருக்கடி தான் வங்கி ஊழியருக்குக் கதையில் நடக்கிறது. அவர் வங்கி வேலையில் சலிப்படைந்து போயிருக்கிறார். வாடிக்கையாளர்கள் இல்லாத மதிய நேரங்களில் வங்கி ஊழியர்கள் வெட்டி அரட்டை அடிக்கிறார்கள். வம்புப் பேச்சு பேசுகிறார்கள் என்று எரிச்சல் அடைகிறார். ஆனால் அவர்களுடன் தான் வேலை செய்ய வேண்டும். அதிலிருந்து தப்பவே அவர் ஹார்ன் இசைக்க ஆரம்பிக்கிறார். அவர் ஒரு இசைக்கலைஞரில்லை. ஆனால் அவருக்கு ஒரு புதிய வெளிப்பாடு தேவைப்படுகிறது. அதை ஹார்ன் பூர்த்தி செய்துவிட்டது
ஹார்ன் வாசிப்பவர் வேலை போன காரணத்தால் இசையிலிருந்து விலகிப்போகிறார். என் நண்பருக்கோ தானே அது நடந்துவிட்டது. கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணீர் ஒரு நிலையில் ஆவியாகி மறைந்துவிடுவது போன்ற நிலையது
இந்தக் கதையை வாசிக்கும் ஒருவருக்கு இப்படி எல்லாம் நடக்குமா. மிகை கற்பனை என்று தான் தோன்றக்கூடும். ஆனால் இந்த லாக்டவுன் கால வாழ்க்கையானது இது இயல்பான வெளிப்பாடு தான் என அடையாளம் காட்டிவிட்டது.
பொருளாதார நெருக்கடிகள் ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் இது போன்ற புதிய மனநெருக்கடிகளை லாக்டவுன் காலத்தில் பலரும் சந்தித்திருக்கிறார்கள்.
சிலர் ஒரு நாளில் ஏழெட்டு முறை சாப்பிட்டிருக்கிறார்கள். சிலர் அதிகமான நேரம் உடற்பயிற்சி செய்து கைகால் வலி ஏற்பட்டுச் சிகிச்சை எடுத்திருக்கிறார்கள். சிலருக்கு இரவில் உறக்கம் வரவேயில்லை. சிலர் ஒரு நாளில் ஐந்து சினிமா பார்த்திருக்கிறார்கள். ஒன்றிரண்டு பேர் புதிய கலைகளைக் கற்றுக் கொள்ள முயன்று உடனிருப்பவர்களின் பொறுமையைச் சோதித்திருக்கிறார்கள். தோட்டவேலைகள். மீன் வளர்ப்பது, பொம்மை செய்வது, சமைக்கக் கற்றுக் கொள்வது, என ஏதேதோ வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். வெளியுலகம் என்பது எத்தனை ஆயிரம் பற்சக்கரங்கள் கொண்டது என்பதை ஊரடங்கு காலத்தில் தான் முழுமையாக அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது

நெருக்கடி காலங்களில் மனிதர்கள் ஏன் விசித்திரமாக நடந்துகொள்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளப் பெர்னான்டோ ஸோரன்டினோவின் கதை உதவுகிறது.
சூதாட்டக்கூடத்தில் அறிந்தே தஸ்தாயெவ்ஸ்கி தோற்றிருக்கிறார். வெளியே மனைவி தனக்காகக் காத்திருக்கிறாள் என்று உணர்ந்த போதும் அவரால் வெளியே போக முடியவில்லை. சூது அவரை இழுத்துக் கொண்டிருந்தது. வங்கி ஊழியர் தன் சந்தோஷத்தைக் கண்டறிகிறார். அதை நீடிக்க விரும்புகிறார். உலகம் அதைப்பற்றி என்ன நினைக்கிறது எனத் தஸ்தாயெவ்ஸ்கிக்கோ, வங்கி ஊழியருக்கோ, என் நண்பருக்கோ முக்கியமில்லை. காரணம் அவர்கள் தனியுலகில் சஞ்சரிக்கிறார்கள். விடுபட்ட பிறகே அதன் அபத்தத்தை உணருகிறார்கள். இழப்பை நினைத்து வருந்துகிறார்கள்.
இலக்கியமே இந்தப் புதிரான மனநிலையை அவிழ்த்துக்காட்டுகிறது. உலகிற்குப் புரிய வைக்கிறது.
••
January 20, 2021
வாழ்க்கை பொன்னிறமாகயில்லை
பெங்களூருவிலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கோலார் தங்கவயல். KGF எனப்படும் கோலார் தங்கவயலின் வரலாற்றை விளக்கும் ஆவணப்படமான After the gold பார்த்தேன். Youtubeல் இப்படியான அபூர்வமான படங்களும் இருக்கின்றன. தேடிப்பார்க்கிறவர் குறைவு. இந்த ஆவணப்படத்தை ஜானகி நாயர் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு. ஆர்.வி.ரமணி. மிக முக்கியமான ஆவணப்படமிது.

KGF திரைப்படத்தில் கோலார் தங்கவயல் அடிமைகளின் உலகமாகச் சித்தரிக்கப்பட்டது. அந்தப் படத்திற்கு நிஜவரலாற்றிற்கும் சம்பந்தமில்லை. அது ஒரு கற்பனைக் கதை. ஆனால் ஜானகி நாயரின் ஆவணப்படம் கோலார் தங்க வயல் எப்படி உருவானது என்பதில் துவங்கி அங்கே வேலைக்காகச் சென்ற தமிழ் மக்கள் எவ்வளவு இன்னல்களை அனுபவித்தார்கள். கோலாரின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு உருவானது என்பதை விரிவாக, முறையான சான்றுகளுடன் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.
சுரங்கத்தினுள் செல்லும் தொழிலாளர்களுடன் கேமிரா கூடவே பயணிக்கிறது. தங்க சுரத்தினுள் அவர்கள் வேலை செய்யும் விதம். அவர்களின் குடியிருப்பு. முப்பது நாற்பது ஆண்டுகள் வேலை செய்து ஓய்வு பெற்றவர்களின் அனுபவங்கள். தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள். தலித் மக்கள் சந்தித்த சாதிக் கொடுமைகள். புத்த சங்கம் உருவான விதம். திராவிட இயக்கம் வேரூன்றியது. அங்கே நடைபெற்ற ஸ்ட்ரைக். இன்று கோலார் கைவிடப்பட்ட நிலையிலுள்ள அவலம் என ஒட்டுமொத்தமான சித்திரம் ஒன்றை ஆவணப்படம் அளிக்கிறது.

1800 ஆங்கிலேயர் கோலாரைக் கைப்பற்றிய போது பழைய மாரிக்குப்பம் பகுதி இளைஞர்களைச் சேர்த்துக்கொண்டு தங்கச்சுரங்க வேலைகளை ஆரம்பித்தார்கள். தங்கம் கிடைப்பது உறுதியானதும் சுரங்கம் தோண்டும் வேலைக்காக வட ஆற்காடு, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர் பகுதியிலிருந்த தலித் மக்களை அழைத்துக் கொண்டு போனார்கள். தமிழகத்திலிருந்து மட்டுமின்றி ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்திலிருந்தும் பெருவாரியான மக்கள் வரவழைக்கப்பட்டார்கள். இவர்கள் சுரங்கத்திற்கு அருகிலேயே முகாம் அமைத்துத் தங்க வைத்துச் சுரங்கப்பணியில் ஈடுபத்தபட்டார்கள். பின்பு தட்டி வீடுகள் எனப்படும் சிறிய குடியிருப்புகள் உருவாகின.

கோலார் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்துகளில் இறந்தவர்கள் பற்றிய பதிவேட்டில் உள்ள தகவல்களை ஒரு காட்சியில் காட்டுகிறார்கள். கண்ணீர் வரவழைக்கும் காட்சியது. நாலாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சுரங்க விபத்தில் இறந்து போயிருக்கிறார்கள். தூசியும் வெடிமருந்து புகையும் ஒன்று சேர்ந்து தொழிலாளர்களின் நுரையீரலைப் பாதித்த காரணத்தால் பலரும் காசநோய் வந்து இறந்து போயிருக்கிறார்கள்.
கொத்தடிமைகளைப் போல இவர்களைப் பிரிட்டிஷ் அரசு நடத்தியிருக்கிறது. உழைப்பிற்கு ஏற்ப ஊதியம் கேட்டுப் போராடி சங்கம் அமைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகச் சம்பள உயர்வு பெற்றிருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தோழர்களின் நேர்காணல் கோலாரின் போராட்ட வரலாற்றைச் சொல்கிறது
கோலாரில் ஜான் டெய்லர் அண்ட் சன்ஸ் ஆங்கிலேய நிறுவனம்தான் ஆரம்பத்தில் சுரங்கம் தோண்டத் தொடங்கியது. அடிப்படை வசதிகள் இன்றித் தொழிலாளர்கள் சுரங்க பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். சுரங்க விபத்தில் இறந்தவர்களின் முகத்தைக் கூடப் பார்க்கமுடியாது. பெட்டியில் அடைத்துக் கொண்டுவந்து புதைத்துவிடுவார்கள் என்று ஒருவர் நேர்காணலில் குறிப்பிடுகிறார்.
ராபர்ட்சன்பேட், ஆண்டர்சன்பேட் என்ற ஆங்கிலேய அதிகாரிகளின் பெயரால் அங்கே குடியிருப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன. வெள்ளைக்கார அதிகாரிகளுக்கான கோல்ஃப் கோர்ஸ், டென்னிஸ் கோர்ட், கிளப், பார்கள் மற்றும் மாளிகைகள் உருவாக்கப்பட்டன. அவர்களின் வழிபாட்டிற்காகத் தேவாலயம் ஒன்றும் உருவாக்கப்பட்டிருக்கிறது

இன்னொரு புறம் சாதிக் கொடுமையால் அவதிப்பட்ட மக்களை மீட்கப் பௌத்த சங்கம் இயங்கியிருக்கிறது. இவர்கள் உதவியால் அயோத்திதாசர் கொண்டு வந்த தமிழன் இதழ் பற்றியும் அதில் வெளியான கட்டுரைகள் குறித்தும் ஆவணப்படம் விரிவாக விளக்குகிறது
1929 வரை சுரங்கத் தொழிலாளர்களுக்குப் பொழுது போக்கு வசதிகள் எதுவும் கிடையாது. ஆனால் வெள்ளைக்காரர்கள் தங்களுக்கான கிளப்பில் உல்லாசமாகக் குடித்து நடனமாடிக் கொண்டிருந்தார்கள். இந்தநிலையில் மக்கள் தலைவர் பூசாமி முயற்சியால், 1930 இல் நியூ இம்பீரியல் ஹாலை ஆங்கிலேயர்களிடமிருந்து குத்தகைக்கு எடுத்துத் தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. குத்தகையை நீடிக்க ஆங்கிலேய நிர்வாகம் மறுத்த காரணத்தால் அங்கே ஜுபிலி ஹால்’ என்ற புதிய திரையரங்கே கட்டியிருக்கிறார்கள். நந்தனார் திரைப்படம் தலித் மக்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ளது. அதைத் திரையிட அனுமதிக்கமாட்டோம் என மக்கள் போராடி அந்தப் படத்தைத் திரையிடாமல் தடுத்திருக்கிறார்கள். அதைப் பற்றிய பதிவும் இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

கோவிந்தன் என்ற தொழிற்சங்க தலைவரின் மகள் காலப்போக்கில் கோலார் எவ்வாறு மாறிவிட்டது என்பதை பற்றி அழகாக பேசியிருக்கிறார். கோலாரில் தனது தந்தை இன்றும் எவ்வளவு நேசிக்கப்படுகிறார், நினைவுகூரப்படுகிறார் என்பதைப் பற்றி உணர்ச்சிப்பூர்வமாக பேசியிருக்கிறார் பேசுகிறார்கே.ஜி.எஃப் இல் முதல் இடதுசாரி தொழிற்சங்கத்தை ஏற்பாடு செய்வதில் கோவிந்தன் முக்கிய பங்கு வகித்தார். அதைத் தொடர்ந்து. தொழிற்சங்கங்களை ஒழுங்கமைக்கத் தொடங்கிய முதல் இளம் தலைவர் வாசன் ஆவார், பின்னர் அவருடன் கோவிந்தன் மற்றும் எம். சி. நரசிம்மன் ஆகியோர் இணைந்து செயல்பட்டார்கள். அவர்கள் சிவப்பு முக்கோணம் என்று அடையாளப்படுத்தபட்டார்கள். இவர்களின் முயற்சியால் தான் சுரங்கத் தொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் உரிமைகளையும் கிடைத்தன.வருங்கால வைப்பு நிதி, டிஏ மற்றும் பிற போன்ற சலுகைகளுக்கான கோரிக்கையை வலியுறுத்தி கேஜிஎஃப் வரலாற்றில் 78 நாட்கள் நீண்ட வேலைநிறுத்தம் நடைபெற்றது.
கோலாரிலுள்ள கல்வி நிறுவனங்கள். வழிபாட்டு ஸ்தலங்கள். கல்லூரியில் படிப்பவர்களின் எதிர்கால வாழ்க்கை குறித்த கவலைகள், மார்வாடிகள் எப்படிக் கோலாருக்கு வந்தார்கள். வட்டிக்கடைகள். வணிக நிறுவனங்கள் எவ்வாறு உருவாகின. இந்திய அரசு இந்தச் சுரங்கத்தை ஏற்று நடத்தத் துவங்கிய பிறகு உருவான மாற்றங்கள். எனக் கோலார் தங்கவயலின் அகபுற விஷயங்களை அழுத்தமாகப் படம் பதிவு செய்திருக்கிறது.
தங்கம் எடுப்பதற்கான தயாரிப்புச் செலவினங்கள் அதிகமான காரணத்தாலும் 2001ல் சுரங்கத்தில் தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டன. 140 ஆண்டுக்கால சுரங்கப்பணி அத்தோடு முடிவிற்கு வந்தது.
இன்று மலைமலையாகக் குவித்துக் கிடக்கும் குப்பைகளுக்குள் நிலக்கரி தேடிப் பொறுக்குகிறார்கள். மணல்துகளில் கலந்துள்ள தங்கத்தை அலசி எடுக்கிறார்கள். சுரங்கம் மூடப்பட்ட காரணத்தால் பெருவாரியான தமிழர்கள் பிழைப்பைத் தேடி பெங்களூருக்குக் குடிபெயர்ந்தார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோலார் தங்கவயல் டவுன்ஷிப்பிற்குப் போயிருந்தேன். இன்றைய அதன் வாழ்க்கை கடந்தகாலத்திலிருந்து மாறுபட்டது. கோலார் பற்றி எழுதப்பட்ட புத்தகங்களைப் படித்திருக்கிறேன். அதில் கிடைக்காத அனுபவம் இந்த ஆவணப்படத்தில் கிடைக்கிறது. அந்த வகையில் இந்த ஆவணப்படம் கோலார் குறித்த ஒட்டுமொத்தமான ஒரு பார்வையை உருவாக்கிவிடுகிறது என்பேன்.
என் நண்பர் வேலூர் லிங்கம் கோலாரில் வசித்தவர். தன் பால்ய நாட்களைக் கோலாரில் கழித்தவர். அது குறித்து நிறையச் சொல்லியிருக்கிறார். இந்த ஆவணப்படம் பார்த்த போது அவர் தனது கோலார் வாழ்க்கை நினைவுகளைப் பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியது.
•••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

