S. Ramakrishnan's Blog, page 15

February 5, 2025

எதிர்பாராத முத்தம்

இலக்கிய விமர்சகர் ஜேம்ஸ் உட் தி கார்டியன் இதழின் தலைமை இலக்கிய விமர்சகராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர். பின்பு அமெரிக்காவிற்குச் சென்று தி நியூயார்க்கரில் வேலைக்குச் சேர்ந்து அங்கும் தொடர்ந்து இலக்கிய விமர்சனத்தை எழுதி வருகிறார்.

இவரது விமர்சனக் கட்டுரைகள் இலக்கியப் படைப்பின் நுட்பத்தை, சிறப்புகளை அழகாக எடுத்துக் காட்டக் கூடியவை. இவரது கட்டுரைகளின் தொகுப்பான SERIOUS NOTICING: SELECTED ESSAYS, 1997-2019 யை வாசித்தேன். 28 கட்டுரைகள் கொண்ட தொகுப்பு.

லியோ டால்ஸ்டாய், மெல்வில். பால்சாக், ஆன்டன் செகாவ், வி.எஸ் நைபால். வர்ஜீனியா வூல்ஃப், மர்லின் ராபின்சன், லாஸ்லோ க்ராஸ்னாஹோர்காய், பிரைமோ லெவி என உலக இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகள் பலரையும் பற்றி எழுதியிருக்கிறார்

ஜேம்ஸ் வுட் பாசாங்கான இலக்கியப் பிரதிகளைக் கடுமையாக விமர்சிக்கக் கூடியவர். செவ்வியல் இலக்கியங்களின் முக்கியத்துவம் குறித்தும், படைப்பில் எழுத்தாளன் கையாளும் மொழி மற்றும் எழுத்தாளனின் அகப்பார்வை எவ்வளவு முக்கியமானது என்பதைப் பற்றியும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

இசையில் தோய்ந்து போய் ரசிப்பவர்கள் அதைப்பற்றி எவ்வளவு பரவசத்துடன் பேசுவார்களோ அது போலவே தான் படித்த நாவல்களை, சிறுகதைகளைப் பேசுகிறார்

இந்தத் தொகுப்பில் ஆன்டன் செகாவின் சிறுகதையான முத்தம் குறித்து இரண்டு கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஒரு சிறுகதையை எப்படி வாசிக்க வேண்டும். கொண்டாட வேண்டும் என்பதற்கு இக் கட்டுரைகள் ஒரு உதாரணம்.

செகாவின் மீது மிகுந்த அபிமானம் கொண்டவர் ஜேம்ஸ் வுட். இந்தக் கட்டுரையில் செகாவ் எழுத்துகளின் அடிப்படை மற்றும் தனிச்சிறப்புகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார். ஓவியரைப் போலச் செகாவ் காட்சிகளைத் துல்லியமாக விவரிக்கும் முறையைப் பற்றியும், கதாபாத்திரங்களின் நுணுக்கமான சித்தரிப்பு மற்றும் உணர்ச்சிகளை ஆராயும் முறையைப் பற்றியும் விவரிக்கிறார்

முத்தம் என்ற சிறுகதை செகாவின் ஆகச்சிறந்த கதைகளில் ஒன்று எனக் குறிப்பிடும் ஜேம்ஸ் வுட் ஏன் அப்படிக் குறிப்பிடுகிறேன் என்பதற்கான விளக்கத்தையும் முன்வைக்கிறார்

ஜேம்ஸ்வுட் குறிப்பிடும் செகாவின் முத்தம் சிறுகதையை நான் முன்பே வாசித்திருக்கிறேன். அதைச் சாதாரணக் கதை என்றே கருதியிருந்தேன். ஜேம்ஸ்வுட் அந்தக் கதையைத் திறந்துகாட்டி அதில் வெளிப்படும் முக்கியமான உளவியல் தன்மையைப் பற்றியும், காலப் பிரக்ஞை எப்படி வெளிப்படுகிறது என்பதை அடையாளம் காட்டியதையும் கண்டு ஆச்சரியமடைந்தேன்.

ஜேம்ஸ் வுட்டை வாசித்த பிறகு அந்தக் கதையைத் திரும்பப் படித்துப் பார்த்தேன். ஆமாம். அது வைரமே தான்.

ஆன்டன் செகாவின் முத்தம் சிறுகதையில் படைப்பிரிவு ஒன்று முகாமிற்குச் செல்லும் வழியில் மைஸ்டெட்ச்கி கிராமத்தில் தங்குகிறார்கள். அங்கே ஒரு பணக்கார வீட்டில் விருந்து நடைபெறுகிறது. அதில் ரியாபோவிச் என்ற சிப்பாய் கலந்து கொள்கிறான்.

அவன் கூச்ச சுபாவம் கொண்டவன். விருந்தில் நிறைய இளம் பெண்கள் இருப்பதைக் காணுகிறான். பெண்களுடன் பேசவும் நடனமாடவும் தயங்குகிறவன் என்பதால் எந்தக் கொண்டாட்டத்திலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருக்கிறான். இந்த விருந்தில் பெண்கள் நடனமாடுகிறார்கள், மது அருந்துகிறார்கள், இது ரியாபோவிச்சிற்குச் சங்கடமான சூழ்நிலையை உருவாக்குகிறது.

விருந்து நடக்கும் மாளிகையின் இருண்ட அறை ஒன்றுக்குள் அவன் நடக்கும் போது எதிர்பாராத விதமாக ஒரு இளம்பெண் அவனைக் கட்டி அணைத்து முத்தமிடுகிறாள். அதை அவன் எதிர்பார்க்கவில்லை.

அந்தப் பெண் தவறான ஒருவரை முத்தமிட்டுவிட்டோம் என உணர்ந்து பதற்றமாக ஒடுகிறாள். யாரோ ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய முத்தத்தை ரியாபோவிச் பெற்றுவிடுகிறான்.

அந்த முத்தம் ரியாபோவிச்சை உலுக்கிவிடுகிறது. யார் அவள். எதற்காகத் தன்னை முத்தமிட்டாள். இதைத் தற்செயல் என்று எடுத்துக் கொள்வதா, அல்லது கடவுள் அளித்த பரிசா, ஒரு முத்தம் இவ்வளவு இன்பம் அளிக்கக் கூடியதா என்று அவனது மனதிற்குள் எண்ணங்கள் அலைமோதுகின்றன.

அந்தப் பெண் யார் எனக் கண்டுபிடிக்க வேண்டி இளம்பெண்கள் நடனமாடுகிற அறைக்குள் செல்கிறான். இருட்டில் வந்த பெண் யாரெனக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் மறக்க முடியாத அந்த முத்தம் அவனுக்குள் புதிய ஆசையை, கனவுகளை உருவாக்கிவிடுகிறது. அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறான்

விருந்துக்குப் பிறகான நாட்களில், அவன் முத்தத்தைப் பற்றித் தொடர்ந்து சிந்திக்கிறார், மேலும் ஒரு சிப்பாயின் அன்றாடச் செயல்கள் தரும் சலிப்பை கடந்து செல்ல அந்த இனிமையான நினைவு உதவுகிறது.

தனது நண்பர்களிடம் எதிர்பாரத முத்தம் பற்றிய நிகழ்வை கதையைப் போலச் சொல்லத் துவங்குகிறான். அப்படிப் பேசுவது கற்பனையான போதையைத் தருகிறது. அதுவரையான அவனது வாழ்க்கையில் என்ன குறைவு என்பதை அந்த முத்தமே காட்டிக் கொடுக்கிறது.

ரியாபோவிச்சின் தனிமையான மனநிலையினையும் எதிர்பாராத முத்தம் உருவாக்கிய மகிழ்ச்சியினையும் செகாவ் சிறப்பாக எழுதியிருக்கிறார். எதிர்பாராமல் கிடைத்த முத்தம் உண்மையில் அற்பமானது என்றும், அதைத் தீவிரமாகச் சிந்திப்பது முட்டாள்தனம் என்றும் ரியாபோவிச் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்ள முயலுகிறான். ஆனால் அந்த நினைவு மறையவில்லை. மாறாக அவனைக் காதலில் விழுந்தது போல் உணரவைக்கிறது. .

ஜேம்ஸ் வுட்டின் சிறப்பு அவரது உரைநடையில் வெளிப்படும் உணர்ச்சிகரமான தன்மை. இலக்கியக் கோட்பாடுகளை, சித்தாந்தங்களைச் சார்ந்து அவர் இலக்கிய விமர்சனம் செய்வதில்லை. மாறாக வாசிப்பில் தோய்ந்து போய் எழுத்தின் நுட்பங்களை, ரகசியங்களை வியந்து பாராட்டி எழுத்தாளனின் ஆளுமையை அடையாளம் காட்டுகிறார். அதே நேரம் எழுத்தில் வெளிப்படும் போதாமைகளை, குறைகளைச் சுட்டிக்காட்டவும் தயங்குவதில்லை. வி.எஸ். நைபாலை சந்தித்துப் பேசிய நிகழ்ச்சி பற்றிய கட்டுரை இதற்குச் சிறந்த உதாரணம்.

இன்றும் நம்மிடம் உள்ள இலக்கிய விமர்சகர்களில் ஜேம்ஸ் வுட்டே முதன்மையானவர். அவர் எழுத்தாளர்களின் புகழை வைத்து அவர்களின் புத்தகங்களை எடைபோடுவதில்லை. கறாராக, தங்கத்தை உரசிப்பார்த்து எடை போடுகிறவரைப் போல, தனது ஆழ்ந்தவாசிப்பின் மூலம் இலக்கியப் பிரதிகளை அணுகி மதிப்பீடு செய்கிறார். அது சில எழுத்தாளர்களுக்கு எரிச்சலை உருவாக்குகிறது. அவர்கள் ஜேம்ஸ் வுட்டை கடுமையாகத் திட்டுகிறார்கள். அவற்றைக் கடந்து தீவிரமாகவும், உண்மையாகவும் ஜேம்ஸ் வுட் தொடர்ந்து எழுதி வருகிறார் என்று பேட்ரிக் மேக்ஸ்வெல் குறிப்பிடுகிறார்.

இது சரியான மதிப்பீடு என்பதை SERIOUS NOTICING: SELECTED ESSAYS கட்டுரை தொகுப்பு உறுதி செய்கிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 05, 2025 04:33

February 4, 2025

தபால்துறை- சிறப்பு விழா

கடிதம் எழுதுவதன் முக்கியத்துவம் பற்றி நான் எழுதிய தபால்பெட்டி எழுதிய கடிதம் சிறார் நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் முதற்பதிப்பு சென்னைப் புத்தகத் திருவிழாவிலே விற்றுத் தீர்ந்துவிட்டது. நிறைய விமர்சனப்பதிவுகளும் காணொளிகளும் வெளியாகியுள்ளன. இந்நூல் விரைவில் ஆங்கிலத்தில் வெளியாகவுள்ளது.

இந்த நூலைக் கௌரவிக்கும் விதமாக தபால்துறை சிறப்பு விழா ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.

பிப்ரவரி 6 வியாழன் காலை பத்துமணிக்கு சென்னை அண்ணாசாலை தலைமை தபால்நிலையத்தில் நடைபெறும் நிகழ்வில் 100 தபால்காரர்களுக்கு இந்த நூல் பரிசாக வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்விற்கு முக்கியக் காரணமாக உள்ள போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஜி. நடராஜன் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 04, 2025 07:24

January 30, 2025

தென்னிந்தியச் சிறுகதை எழுத்தாளர் சந்திப்பு

சாகித்திய அகாதமி நடத்தும் தென்னிந்தியச் சிறுகதை எழுத்தாளர் சந்திப்பு பிப்ரவரி 3 திங்கள்கிழமை காலை சென்னை எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவன அரங்கில் நடைபெறுகிறது

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்துகிறேன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 30, 2025 23:54

கூண்டில் ஒருவர்.

ஃபெர்னான்டோ ஸோரன்டினோ, அர்ஜென்டினா எழுத்தாளர்களில் முக்கியமானவர். சிறுகதைகள் மட்டுமே எழுதுபவர். முப்பது ஆண்டுகளில் ஆறு சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

ஜோர்ஜ் லூயி போர்ஹெஸ் உடன் நீண்ட நேர்காணல் செய்து தனித்தொகுதியாக வெளியிட்டிருக்கிறார்.

re-entry into society என்றொரு சிறுகதையை ஸோரன்டினோ எழுதியிருக்கிறார்.

அதில் புதிதாகத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் தேனிலவிற்குச் சென்றுவிட்டு தங்களின் வீட்டிற்குத் திரும்புகிறார்கள்.

வீட்டில் அவர்களின் படுக்கை அறையில் பெரியதொரு கூண்டு காணப்படுகிறது. அதற்குள் ஒரு மனிதர் அமர்ந்திருக்கிறார்.

இந்தக் கூண்டினை வைப்பதற்காகப் படுக்கை அறையில் இருந்த பொருட்களை அகற்றியிருக்கிறார்கள். பக்கத்து அறையில் இந்தப் பொருட்களைத் திணித்து வைத்திருக்கிறார்கள்.

யார் இந்த ஆள். எதற்காகக் கூண்டில் இருக்கிறார். அதுவும் நமது வீட்டில் என அந்தக் கணவன் கோபமடைகிறான்.

அதற்குக் கூண்டில் இருந்த ஆள் நீங்கள் இன்றைக்கு வருவீர்கள் என்று சொல்லவில்லையே. நாளை வருவதாகத் தானே சொன்னார்கள் என்று கேட்கிறார்

ஆமாம் ஒரு நாளைக்கு முன்பாகவே வந்துவிட்டோம். நீங்கள் யார். எதற்காகக் கூண்டில் இருக்கிறீர்கள் என்று கோபமாகக் கேட்கிறாள் மனைவி சூசனா.

என்னை நீங்கள் கோவித்துக் கொள்ள முடியாது. அது சரியான முறையில்லை. தேனிலவிற்குச் செல்லும் அவசரத்தில் நீங்கள் குடியிருப்பு விதிகளைச் சரியாகப் படிக்கவில்லை. புதிய விதிகள் உருவாகியுள்ளன என்கிறார் கூண்டில் இருப்பவர்.

என்ன விதி என ஆத்திரத்துடன் கேட்கிறான் கணவன்.

சிறைச்சாலையில் உள்ள கைதிகளை இப்படிக் குடியிருப்பில் ஒரு உறுப்பினராகச் சேர்க்கலாம் என அரசு முடிவு செய்துள்ளது. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் புதிய குடியிருப்புகளுக்குக் கைதிகளை விநியோகிக்கின்றன, இதன் காரணமாக நல்ல இடமும் சரியான சூழலும் எங்களுக்குக் கிடைக்கும். இது புதிய வாழ்க்கைக்கான மறுபிரவேசமாக அமையும் என்கிறார் கூண்டில் இருப்பவர்

உங்களைக் கவனித்துக் கொள்வது எங்கள் வேலையில்லை என அவர்கள் திட்டுகிறார்கள்.

இது அரசாங்கத்தின் முடிவு. பழைய சிறைகளை இடித்துவிட்டார்கள். இனி எங்களைக் கைதி என்று கூட யாரும் அழைக்க முடியாது. நீங்கள் வழிகாட்டிகள். நாங்கள் புதிய வாழ்க்கையை விரும்புகிறவர்கள் என்கிறார். அத்தோடு இந்த வீட்டில் எனக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன. உணவு, உடை, மருத்துவம் மற்றும் உளவியல் உதவி என யாவும் நீங்கள் செய்து தர வேண்டும். நீங்கள் தரும் எந்த உணவையும் நான் சாப்பிடுவேன். எனக்குப் பெண் துணை தேவை. அதற்கும் சட்டம் வழி செய்திருக்கிறது.

மிஸ் குக்வி என்றொரு பெண் என்னைத் தேடி வருவாள் அவளுடன் இன்பம் அனுபவித்துக் கொள்வேன். அதற்கான கட்டணத்தை நீங்கள் தர வேண்டும். இது போல இசை, மது, நண்பர்கள் என அனைத்திற்கும் நீங்கள் தான் செலவு செய்ய வேண்டும் என்கிறார்.

அவர்களுக்கு இந்தத் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. அரசாங்க அதிகாரிகளின் மனிதாபிமான உணர்விற்கு நேர் எதிராக நீங்கள் நடந்து கொள்ள வேண்டாம் என்று கூறி அந்த ஆள் கூண்டின் கதவை திறக்க சொல்லி சாவகாசமாகக் குளிக்கச் செல்கிறார்

இன்னும் எவ்வளவு நாட்கள் நீங்கள் இங்கே இருப்பீர்கள் எனக் கணவன் கேட்கிறான்.

நான் ஆயுள்தண்டனை கைதி என்கிறார் கூண்டு மனிதன்.

••

ஃபெர்னான்டோ ஸோரன்டினோவின் கதைகள் வியப்பூட்டும் நிகழ்வுகளை, செய்தியைக் கொண்டிருப்பவை. அவற்றை இயல்பான, அன்றாட வாழ்க்கையின் நேரடியான களத்திற்குள் வைத்து எழுதுகிறார் என்பதே அவரது சிறப்பு.

“எனது சிறுகதைகள் கற்பனையும் நகைச்சுவையும் கலந்த ஒரு வினோதமான கலவை“ என்கிறார் ஸோரன்டினோ

காலத்தின் பின்னால் போய் அறியாத நிலப்பரப்பில் கதையை எழுதும் போது விந்தையான நிகழ்வுகளை எளிதாக நிஜமாக்கிவிட முடியும் என்கிறார் போர்ஹெஸ். இது எழுத்தின் ரகசியங்களில் ஒன்று.

ஆனால் ஸோரன்டினோ, தனக்குப் பழக்கமான சூழலை கதையின் களமாக வைத்துக் கொள்கிறார். ஆனால் கதையில் நடைபெறும் நிகழ்வுகள் வியப்பூட்டுகின்றன.

இந்தக் கதையில் வரும் கூண்டு மனிதன் காஃப்காவின் பட்டினிக்கலைஞனை நினைவுபடுத்துகிறான். அவனும் இப்படிக் கூண்டில் அடைபட்ட மனிதனே.

ஃபெர்னான்டோ ஸோரன்டினோ கதையில் அவர்கள் தேனிலவு முடிந்து புதிய வாழ்க்கையைத் துவக்குவதற்காக வருகிறார்கள். அவர்களைப் போலவே கூண்டு மனிதனும் புதிய வாழ்க்கையைத் துவங்குவதற்காக வந்திருக்கிறான். ஒன்று இயல்பானது. மற்றொன்று விநோதமானது

சிறைச்சாலைக்கு மாற்றாகக் கைதிகளை இப்படி வீட்டில் ஒப்படைப்பது என்ற அரசின் முடிவை கைதி பாராட்டுகிறார். அறிவார்ந்த செயல் என்கிறார். ஆனால் அது அபத்தமான செயல் என்பதைத் தம்பதிகள் மட்டுமே உணருகிறார்கள்.

கூண்டில் இருக்கும் மனிதன் சட்டத்தின் பெயரால் அந்த வீட்டிற்குள் நுழைந்திருக்கிறான். அவர்களின் வாழ்க்கையினுள் குறுக்கீடு செய்கிறான். புதிய பொறுப்புகளைச் சுமத்துகிறான். நமது வாழ்க்கையில் இனி இப்படி எல்லாம் நடக்கலாம் என்று எச்சரிக்கை செய்கிறார் சொரண்டினோ. இந்தக் கதை முழுவதும் வெளிப்படும் மெல்லிய கேலியை காஃப்காவிடம் காண முடியாது.

கூண்டில் இருந்த நபர் சிவப்பு நிற முடியுடன் காணப்படுகிறார். அழகான சூட் அணிந்திருக்கிறார். பொருத்தமான டை மற்றும் பளபளப்பான காலணிகள். தொப்பி. அவரது தோற்றம் கைதியைப் போல இல்லை. அவர் கோபம் கொள்வதில்லை. மாறாக உத்தரவிடுகிறார். அதுவும் அன்று சனிக்கிழமை என்பதால் தன்னைத் தேடி மிஸ் குக்வி வரக்கூடும். நீங்கள் எங்கள் அந்தரங்கத்தில் தலையிடாமல் வெளியே செல்லுங்கள் என்கிறார். உண்மையில் இளம்தம்பதிகள் தங்கள் வீடு எனும் கூண்டிற்குள் அகப்பட்டுக் கொள்கிறார்கள். அவர்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறார் கூண்டு மனிதர்.

உண்மையற்ற கதைக்கு உண்மையான சூழல் நுட்பமான விவரிப்பு தேவை என்கிறார் ஃபெர்னான்டோ ஸோரன்டினோ.

இந்தக் கதையில் வரும் புதுமணதம்பதிகள் யார். கணவன் என்ன வேலை செய்கிறான். இந்த வீட்டை எப்போது வாடகைக்குப் பிடித்தார்கள். அந்த வீட்டிற்குச் சூசனா முதன்முறையாக வருகிறாளா என்பது போன்ற எந்தத் தகவலும் கதையில் கிடையாது. அது தேவைப்படவும் இல்லை. கதையின் முதல் வரியில் அவர்கள் தேனிலவை தங்கள் வீட்டுப் படுக்கை அறையில் தொடர்வதற்காகப் பரிலோச்சியிலிருந்து புறப்பட்டுப் பியூனஸ் அயர்ஸுக்குத் திரும்புகிறார்கள். அதுவும் மாலை நேரத்தில். ஆனால் அவர்கள் எதிர்பாராத நிகழ்வு அவர்களின் இன்பத்தில் குறுக்கிடுகிறது. ஆனால் அதே இன்பத்தைக் கூண்டில் இருப்பவர் அனுபவிக்கப் போகிறார் என்று கதை முடிகிறது,

சிறை என்பதும் ஒரு கூண்டு தான். ஆனால் அது பறவை கூண்டு போல வட்டமானதில்லை. இப்போது அந்த மனிதர் பறவை கூண்டு போல உருவாக்கபட்ட வீட்டுச்சிறையில் இருக்கிறார். இந்த மாற்றமே அவருக்குப் போதுமானதாகயிருக்கிறது. அதிகாரத்துவத்தின் அபத்தத்தை மெல்லிய நகைச்சுவையாகச் சொல்கிறார் ஸோரன்டினோ. அதுவே கதையை மறக்க முடியாத ஒன்றாக்குகிறது.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 30, 2025 04:02

January 28, 2025

இணையாத தண்டவாளங்கள்

எகிப்திய இயக்குனரான யூசுப் சாஹின் இயக்கிய Cairo Station 1958ல் வெளியான திரைப்படம். முழுப்படமும் கெய்ரோ சென்ட்ரல் ஸ்டேஷனில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாளில் கதை நடைபெறுகிறது

ரயில் நிலையம் என்பது தனியொரு உலகம். பயணிகள் அதை முழுமையாக உணர்வதில்லை. நான் பல நாட்களை ரயில் நிலையத்தில் கழித்தவன் என்ற முறையில் இப்படம் சித்தரிக்கும் உலகை நன்றாக அறிவேன்.

கெய்ரோ சென்ட்ரல் ரயில் நிலையம், தலைநகரின் இதயம். ஒவ்வொரு நிமிடமும் ஒரு ரயில் புறப்படும் பரபரப்பான ரயில் நிலையமது. நூற்றுக்கணக்கில் ஆட்கள் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். நெரிசலான அந்த ரயில் நிலையத்தின் அதிகாரி. சிறுவணிகர்கள். காவலர்கள். போர்ட்டர்கள். மோசடி பேர்வழிகள். திருடர்கள். பெண்பித்தர்கள் என ரயில் நிலையம் விரிவாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

டிக்கெட் இல்லாத பயணத்தில் கெய்ரோ வந்து சேரும் ஏழையான கினாவி பசிமயக்கத்தில் ரயில் நிலையத்தில் கிடக்கிறான். அவனுக்கு உதவி செய்யும் நியூஸ்ஸ்டாண்ட் உரிமையாளர் மட்பௌலி செய்தி தாள் விற்பனை செய்பவனாக நியமிக்கிறான். அப்பாவியான கினாவி கால்களை இழுத்து இழுத்து நடக்கக் கூடியவன். சிறுவர்கள் கூட அவனைக் கேலி செய்கிறார்கள். கினாவி மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பலவீனமாக இருக்கிறான். சம்பாதித்துத் திருமணம் செய்து கொண்டு தனது சொந்த ஊருக்கு திரும்பி போய்விட வேண்டும் என ஆசைக் கொண்டிருக்கிறான்.

பிளாட்பாரத்தை ஒட்டிய ஒரு தகரகொட்டகை. அங்கே கினாவி உறங்கிக் கொள்கிறான். அவன் செய்தி தாளில் வரும் அழகிகளின் புகைப்படத்தை வெட்டி தனது அறை முழுவதும் ஒட்டி வைத்துக் கொள்கிறான். அழகான பெண்களைப் பற்றிக் கனவு கண்டபடி இருக்கிறான்

ரயில் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்குச் சம வாய்ப்பு மற்றும் சம ஊதியம் கிடைப்பதில்லை. ஒரு சுமைதூக்கும் தொழிலாளி விபத்திற்குள்ளாகிறான். அவனுக்கு நஷ்ட ஈடு தர மறுக்கிறார்கள். ஆகவே அபு செரிஹ் தலைமையில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.

ரயில் நிலையத்தினைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள அபு கேமல் தனது ஆட்களை வைத்து அவர்களை ஒடுக்குகிறான். இந்நிலையில் கினாவிக்கு அதே ரயில் நிலையத்தில் குளிர்பானங்கள் விற்கும் இளம்பெண் ஹன்னோ மீது காதல். அவளுக்கு அவனைப் பிடிக்கவில்லை. அவள் அபு செரிஹை காதலிக்கிறாள். அவனும் திருமணம் செய்து கொள்வதாகச் சொல்கிறான். இதை அறிந்த போதும் கினாவி ஹன்னோவிடம் நெருங்கிப் பழக முயலுகிறான்.

தனது அன்னையின் நகையை அவளுக்குப் பரிசாக அளிக்கிறான். ஹன்னோ அவனைக் கேலி செய்கிறாள். துரத்திவிடுகிறாள். அவளை அடைவதற்காகக் கினாவி எதையும் செய்ய முயற்சிக்கிறான். நிராகரிப்பை எதிர்கொள்ளும், கினாவியின் ஆவேசம் ஆபத்தானது. இணையாத இரண்டு தண்டவாளங்களைப் போல அவர்கள் உறவு நீளுகிறது. இக்கதையில் தனது காதலனுக்காக காத்திருக்கும் இளம்பெண்ணின் கதை கிளையாக விரிகிறது. அதுவும் முதன்மை கதையும் ஒரே நிகழ்வின் இருவேறுவடிவங்களாக மாறுகின்றன.

இதற்கிடையில் இந்த ரயில் நிலையத்தில் ஒரு பெண்ணின் பிரேதம் தலையற்ற நிலையில் கிடக்கிறது. யார் கொலையாளி எனத் தேடுகிறார்கள்.

அபு தொழிலாளர்களுக்கான சங்கத்தை உருவாக்க முயலுகிறான். அதைக் அபு கேமலின் ஆட்கள் தடுத்து நிறுத்துகிறார்கள்.

ரயில் நிலையத்திற்கு வரும் பிரபலங்களைக் காண பயணிகள் போட்டி போடுகிறார்கள். ரயில் நிலையத்தினுள் அனுமதி இன்றிக் குளிர்பானங்கள் விற்க கூடாது எனக் காவலர்கள் ஹன்னோவை விரட்டுகிறார்கள். அவள் ரயிலில் தாவி ஏறி விற்பனை செய்யும் விதமும் அவளது நடனமும் அழகானது.

பயணச்சீட்டு வாங்குவதற்கான இடத்தில் கிராமவாசிகள் வேடிக்கையாக நடந்து கொள்வது. கினாவி முறைத்துப் பார்த்துவிட்டதாகப் பெண் போடும் சண்டை. கணவன் மனைவிக்குள் வரும் சண்டை. பெண்கள் குழந்தைகளைத் திட்டுவது, காதலன் காதலி சந்திப்பு. ரயில் நிலையக்காவலர்கள் லஞ்சம் வாங்குவது. என ரயில் நிலைய வாழ்வினை படம் துல்லியமாகச் சித்தரித்துள்ளது. குறிப்பாகத் தாங்க முடியாத வெப்பத்தில் ரயில் வந்து நிற்பது குளிர்பானம் விற்கும் பெண்கள் தண்டவாளத்தில் ஒடி ரயிலில் உள்ள பயணிகளிடம் குளிர்பானம் விற்பது சிறப்பாகக் காட்சிப்படுத்தபட்டுள்ளது.

இத்தாலிய நியோ ரியலிச பாணியில் உருவாக்கபட்ட அழகான திரைப்படம். ஆல்விஸின் ஒளிப்பதிவு அபாரமானது குறிப்பாக இரவுக்காட்சிகள் மற்றும் ரயிலின் வருகை. ரயிலில் நடக்கும் குழு நடனம், அபுவும் ஹன்னோவும் சந்திக்கும் அறை. துடிதுடிக்கும் கண்களின் அதீத நெருக்கமான காட்சிகள் இருண்ட பிளாட்பாரத்தில் நடக்கும் நிகழ்வுகள் எனத் தேர்ந்த ஒளிப்பதிவு படத்திற்குத் தனிச்சிறப்பை உருவாக்குகிறது.

அரபு இலக்கியங்களில் வரும் கதாபாத்திரம் போலவே மட்பௌலியும் கினாவியும் உருவாக்கபட்டிருக்கிறார்கள். எகிப்தின் மாறிவரும் சமூகமாற்றதை ரயில் நிலையத்தின் வழியே படம் அழகாகச் சித்தரித்துள்ளது.

.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 28, 2025 23:31

காந்தியின் கடிதம்

இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள இங்கிலாந்து செல்வதற்கு முன்பாக, 1931 ஆகஸ்ட் 28 தேதியிட்டு இந்திய அரசின் உள்துறைச் செயலர் ஹெர்பர்ட் வில்லியம் எமர்சனுக்குக் காந்தியடிகள் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அது அவரது இடது கையால் எழுதப்பட்ட கடிதமாகும்.

இரண்டு கைகளாலும் காந்தியால் எழுத முடியும்.

இந்தக் கடிதம் இடது கையால் எழுதப்பட்டது என்ற தகவலை காந்தியே தெரிவிக்கிறார்.

இடது கையால் எழுதப்பட்ட போதும் எழுத்துக்கள் சரிவாகவோ, துண்டிக்கப்பட்டோ காணப்படவில்லை. வரிகளுக்கு இடையே சரியான இடைவெளியும் தெளிவான கையெழுத்தும் காணப்படுகிறது.

அழகான கையெழுத்தின் அவசியம் பற்றிக் காந்தி தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார்

“bad handwriting should be regarded as a sign of an imperfect education. I tried later to improve mine, but it was too late. I could never repair the neglect of my youth. Let every young man and woman be warned by my example, and understand that good handwriting is a necessary part of education. I am now of opinion that children should first be taught the art of drawing before learning how to write. Let the child learn his letters by observation as he does different objects, such as flowers, birds, etc., and let him learn handwriting only after he has learnt to draw objects. He will then write a beautifully formed hand.”

காந்தியைப் போலவே ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பெஞ்சமின் பிராங்க் ளின், லியோனார்டோ டாவின்சி, ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் ஆகியோர் இரண்டு கைகளிலும் சரளமாக எழுதக் கூடியவர்கள்.

மத்திய பிரதேசத்திலுள்ள புத்தேலா கிராமத்தில் உள்ள வீணா வந்தினி பள்ளியின் அனைத்து மாணவர்களும் இரு கைகளாலும் எழுத பயிற்சி பெற்றிருக்கிறார்கள் என்கிறது நாளிதழ் செய்தி.

Thanks : British Library Untold lives blog

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 28, 2025 03:55

January 27, 2025

எனது உரை

பெரம்பலூர் 9 வது புத்தகத் திருவிழாவில் பிப்ரவரி 1 சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு உரையாற்றுகிறேன்

தலைப்பு : காலம் சொல்லும் பதில்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 27, 2025 02:34

January 24, 2025

மாயநகரின் வாசல்

மங்கை செல்வம்

ஏழுதலை நகரம் பற்றிய விமர்சனம்.

கதவுகளில் செதுக்கப்பட்டிருக்கும் மீன்கள் நீந்துவதும் அதே கதவுகளில் உள்ள எழுத்துகள் இடம் மாறுவதும் நடக்குமா என்ன? யாருமே உள்ளே செல்ல முடியாத கண்ணாடிக்காரத் தெருவில் இவை எல்லாம் நடக்கும். உலகிலேயே வயதான பருத்த ஆமை எப்படி இருக்கும்? எலிகளுக்கு பள்ளிக்கூடம் உண்டா? அங்கே என்ன பாடம் கற்பிக்கப்படும்? கடவுள்களில் பெரிய கடவுள் என்றும் சிறிய கடவுள் என்றும் உண்டா?


மதரா என்ற மாய நகரமும், அதன் மேலே ஓடும் மாய நதியும், அதில் ஒரு பகுதியான கண்ணாடிக்காரத் தெருவும், காடன் கொண்டு வந்து தந்த மானீ என்ற பறவையும் ஞலி எலியும் உயிருடன் கண் முன்னே நிற்கின்றன. இது ஒரு மாய உலகம்; அதில் உலவும் உயிர்கள் இவை என்ற நினைவே எழவில்லை

சிறாருக்கு எழுதுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் விழி விரியும் கற்பனையும் காட்சிப்படுத்தும் மொழியும் எஸ் ராமகிருஷ்ணனுக்கு வசப்பட்டிருக்கிறது. கதையை படிக்கும் பிள்ளைகள், அசிதன் உலவும் மாய நகரத்தில் தாங்களும் சேர்ந்து உலவுவார்கள். அதைத் தவிர வேறு எந்த உள்ளுறை பொருளையும் தேடப் போவதில்லை.

அதே சமயம் நிறைய கதைகள் படித்துப் பழகிய பிள்ளைகள், சிறகுகளுடன் தோன்றும் சிறுவன் பிகாவைக் காணும் தருணம் பரிணாமத்தின் புதிர் பற்றியும், காடனுக்கே மானீயைப் பற்றி அதிகம் தெரியும் என்று அசிதன் சொல்லும் போது அதன் தொனிப்பொருள் என்ன என்றும் யோசிக்கவும் செய்யலாம்.


ஏழு நாட்களும் ஏழு நிறங்களில் தோற்றமளிக்கும் நகரமும், வான் குள்ளர்களும் பெருங்கரடியுமாகத் தோன்றும் விண்மீன்கள் கொஞ்சம் அறிவியலையும், வீட்டில் வசிப்பவர்களின் மனநிலைக்கேற்ப கதவுகளில் மாறிக் கொண்டே இருக்கும் எழுத்துகள் மனித உளவியலையும் துணைக்கழைத்துக் கொள்கிறதோ என்று தோன்றுகிறது. கதை முழுவதும் இதுபோன்ற கேலிகளும் கேள்விகளும், கதைசொல்லிகளின், அவர்கள் காலங்காலமாகக் கையளித்துச் செல்லும் கதைகளின் அழியாத்தன்மையும் அவற்றிலிருந்து கசியும் வெளிச்சமும் வெகு இயல்பாக விரவியிருக்கின்றன.


பெரியவர்கள் குழந்தைகளுக்கான கதையை எழுதினாலும் வாழ்வின் அனுபவங்களால் கிளைக்கும் கேள்விகளையும் பார்வைகளையும் தவிர்க்க இயலாதுதான். மில்னேயின் Winne the Pooh -வும் கென்னத் கிரகாமின் Wind in the Willows -ம் சிறாருக்காக மட்டுமே எழுதப்பட்டவையா என்ன

ஆனால், கதையின் வெவ்வேறு சம்பவங்களை இணைக்கும் மையச்சரடு பலவீனமாகத்தான் இருக்கிறது. அசிதனும், ஓரளவு மியோவும் மானீயும் தொடக்கத்திலிருந்து இறுதி வரை வருவது மட்டுமே கதையின் சம்பவங்களை இணைக்கப் போதுமானதாக இல்லை. இன்னொன்று, அசிதனை இன்னும் உற்சாகமான ஒருவனாகப் படைத்திருக்கலாமோ என்ற எண்ணம் வருவதையும் தவிர்க்க இயலவில்லை. கொஞ்சம் சிடுசிடுப்புடன் இருக்கும் ஒருவனாகவே பல சமயங்களில் இருக்கின்றான்.

வாசிக்கையில் இன்னொன்றும் புலப்பட்டது. ஆங்கிலம் கலக்காமல் எழுதியிருக்கும் மொழி நடை சரளமாகப் படிப்பதற்கு ஏதுவாக இருந்தது.

ஏழுதலை நகரம், எஸ் ராமகிருஷ்ணன்
ஓவியங்கள் மணிவண்ணன்
சிறார் நாவல், தேசாந்திரி பதிப்பகம்
விலை 200

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 24, 2025 18:44

நிழல் உண்பதில்லை

புதிய சிறுகதை. காலம் இதழில் வெளியானது. 2025

விமான நிலையத்திலிருந்த புத்தகக் கடைப்பெண் சலிப்பான குரலில் சொன்னாள்.

“கவிதைப் புத்தகங்களை யாரும் வாங்குவதில்லை. இரண்டு வருஷங்களாக இந்தக் கடையில் வேலைபார்க்கிறேன். நீங்கள் தான் கவிதைப் புத்தகம் கேட்ட முதல் ஆள்“.

“எனக்கு வானத்தில் கவிதைகள் வாசிக்கப் பிடிக்கும்“ என்றான் மதன்குமார்.

“நீங்கள் கவிஞரா“ என்று கேட்டாள் அப்பெண்

“இல்லை. கவிதை வாசகன். உங்களுக்குச் சாக்லேட் பிடிக்குமா. “

“ஆமாம்“ என்று தலையாட்டினாள்.

“நான் சாக்லேட்டிற்குப் பதிலாகக் கவிதைகளைச் சுவைக்கிறவன். உங்கள் கடையின் வலப்பக்க சுவரில் எழுதிப்போட்டிருக்கிறதே A thing of beauty is a joy for ever அது கூடக் கீட்ஸின் கவிதை வரி தான். “

“அது பொன்மொழியில்லையா“ எனக்கேட்டாள் கடைப்பெண்

“மொழியைப் பொன்னாக்குவது தான் கவிதை“ என்றான் மதன்குமார். அவன் குடித்துவிட்டு வந்திருக்கிறானோ எனச் சந்தேகப்படுவது போலப் பார்த்தாள் அந்தப் பெண். பின்பு எதையோ தேடுவது போலப் பாவனைச் செய்தபடியே திரும்பி நின்று கொண்டாள்.

அந்தப் புத்தகக் கடை மிகவும் சிறியது. முகப்பில் பெரிய ஸ்டேண்டில் பரபரப்பாக விற்பனையாகும் ஆங்கில நாவல்கள். அரசியல், சமூகக் கட்டுரைபுத்தகங்கள். வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்தி சினிமா நடிகர் திலீப்குமாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புத்தகத்தை ஒரு வரிசை முழுவதும் அடுக்கி வைத்திருந்தார்கள். அதைப் பார்க்கும் போது அவனுக்கு மொகலே ஆசாம் படம் நினைவிற்கு வந்து போனது. படம் முழுவதும் கவிதையாக வசனம் எழுதியிருப்பார்கள். சுயமுன்னேற்றப் புத்தகங்கள், வாழும்கலை பற்றிய புத்தகங்கள் இன்னொரு பக்கம் முழுவதும் அடுக்கி வைக்கபட்டிருந்தன. மலிவு விலை நாவல்களுக்கு இடையில் காமசூத்ராவின் அழகிய பதிப்பு ஒன்றும் காணப்பட்டது.

விமானநிலையத்திலிருக்கும் புத்தகக் கடைகள் யாவும் ஒன்று போலிருக்கின்றன. அவற்றில் கிடைக்கும் புத்தகங்களும் கூட.

கடையில் வேலைக்கு இருந்த பெண்ணிற்கு முப்பது வயதிருக்கக் கூடும். மெலிதான பிரேம் கொண்ட மூக்கு கண்ணாடி அணிந்திருந்தாள். சாம்பல் வண்ண காட்டன் சேலை. சற்றே துருத்திக் கொண்டிருந்த கழுத்து எலும்பு. கழுத்தில் ஒரு முத்துமாலை. கையில் சிவப்புக்கயிறு கட்டியிருந்தாள். அவளுக்குப் புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்குமா எனத் தெரியவில்லை.

பில்போடும் கம்ப்யூட்டர் அருகில் இலையோடு ஒரு கொய்யப்பழம் இருந்தது. அவள் வீட்டிலிருந்து பறித்துக் கொண்டுவந்திருக்கக் கூடும். கடையில் யார் இலையோடு கொய்யாப்பழம் விற்கிறார்கள். அந்தக் கொய்யாவைப் பார்த்தவுடன் I imagine the sun tastes like guava என்ற கவிதைவரி நினைவில் வந்து போனது. யாருடைய வரியது.

கடையை விட்டு அவன் வெளியேறிப் போய்விட்டால் நன்றாக இருக்கும் என்பது போல அந்தப் பெண் ஏறிட்டுப் பார்த்தாள். பேசிக் கொள்ள எதுவும் இல்லாத போது எரிச்சல் பீறிடத் துவங்கிவிடுகிறது. ஒருவரை வெறுக்க ஆரம்பிக்கிறோம். அதைப் புரிந்து கொண்டவன் போல மதன்குமார் அவளிடம் சொன்னான்

“இங்கிருக்கும் ஒவ்வொரு புத்தகமும் ஒரு எழுத்தாளின் நிழல். ஆவி..அந்த நிழல்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். “

அந்தக் கேலியை அவள் புரிந்து கொள்ளவில்லை.

“நீங்கள் பேராசிரியரா“ என்று கேட்டாள்

“இல்லை. மருந்துக் கம்பெனி நடத்துகிறேன் “.

மருந்துக் கம்பெனி நடத்துகிற ஒருவன் ஏன் கவிதைகளைத் தேடுகிறான் என்று அவளுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கக் கூடும். அதைக் காட்டிக் கொள்ளாமல் சொன்னாள்

“காலையில் இருந்து இரண்டு புத்தகங்கள் தான் விற்றிருக்கிறேன்“.

“நிச்சயம் நான் ஒரு புத்தகம் வாங்கிக் கொள்வேன். ஆனால் எதை வாங்குவது என்று தான் தெரியவில்லை“

“நீங்கள் கதைப்புத்தகம் படிக்க மாட்டீர்களா“ என ஆதங்கமாகக் கேட்டாள்

“நாவல்கள் படிப்பேன். ஆனால் குறைவாகக் கதை உள்ள நாவல்கள் பிடிக்கும்“

அவன் சொன்னது அவளுக்குப் புரியவில்லை

“சின்ன நாவல்களா“ எனக் கேட்டாள்

“அதை எப்படிச் சொல்வது எனத் தெரியவில்லை. நாவலில் நிறையக் கதை இருக்கிறது. தலைவாழை இலை சாப்பாடு போல. எனக்கு அவ்வளவு கதை தேவையில்லை. அல்மாண்ட் சாக்லேட் போல ஒரேயொரு பாதம் அதைச் சுற்றி நிறையச் சாக்லேட். அப்படியான நாவல் தான் எனக்குப் பிடிக்கும்“

அவளுக்கு முழுவதும் புரியாவிட்டாலும் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள். சில நாட்கள் மதியம் வரை ஒருவர் கூடக் கடைக்கு வராமல் வெறுமனே உட்கார்ந்திருக்கிறாள். அதை விடவும் இப்படி ஒருவருடன் பேசிக் கொண்டிருப்பது பரவாயில்லை என்றே அப்போது தோன்றியது

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது இரண்டு கைகளிலும் இரண்டு பையுடன் வந்த, பருத்த உடல் கொண்ட நடுத்தர வயது மனிதர் காலடியில் ஒரு பையை வைத்துக் கொண்டபடி அவளிடம் “புதிதாக ஏதாவது சமையல்புத்தகம் வந்திருக்கிறதா“ என்று கேட்டார்

“இடது கைப் பக்கம் பாருங்கள்“ என்று சொன்னாள்

அவர் இன்னொரு பையையும் தரையில் வைத்துவிட்டு இடுப்பை விட்டு கிழே இறங்கியிருந்த பேண்டினை உயர்த்திப் போட்டுக் கொண்டு குனிந்து அந்த அடுக்கில் இருந்த புத்தகங்களைப் புரட்டினார்.

Indian Cooking, Incredible India Cuisines, 1000 salads., book of bread, breakfast of Italy போன்ற புத்தகங்களைச் சலிப்போடு பார்த்தபடி “போலிகள் பெருகிவிட்டன“ என்று முணுமுணுத்துக் கொண்டார்.

ஏதோ கேட்கிறார் என்பது போலக் கடைப்பெண் எழுந்து அருகில் சென்று லக்னோ பிரியாணி பற்றிய புதிய புத்தகம் ஒன்றை அவரிடம் காட்டினார்.

அதை வேண்டாம் என மறுத்தபடியே “அல்வான்-இ-நேமட் புதிய மொழிபெயர்ப்பு வந்துள்ளதாகப் பேப்பரில் படித்தேன். அந்தப் புத்தகம் இருக்கிறதா“ எனக் கேட்டார்

அப்படி ஒரு பெயரைக் கூட அவள் கேள்விபட்டதில்லை. இல்லை என்று தலையாட்டினாள்

“அல்வான்-இ-நேமட் என்பது முகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் மற்றும் ராணி நூர் ஜெஹானிற்காகத் தயாரிக்கபட்ட உணவுவகைகள் பற்றிய பதினைந்தாம் நூற்றாண்டுப் புத்தகம். அதன் 1926ம் வருடப் பதிப்பு என்னிடமுள்ளது. புதிய பதிப்பில் பதினாறு பக்கம் கூடுதலாகச் சேர்க்கபட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அதற்காக வாங்க வேண்டும்“ என்றார்

ஒரு பக்கம் கவிதைக்கிறுக்கன் மறுபக்கம் சாப்பாட்டு ராமன், இப்படியான ஆட்களுக்கு இடையில் ஏன் மாட்டிக் கொண்டோம் என்பது போல அந்தப் பெண் அமைதியாக நின்றிருந்தாள்.

புத்தக அடுக்கின் கடைசியில் இருந்த ஒரு புத்தகத்தைக் குனிந்து எடுக்க முயன்றார். அவரது தொப்பை தடுத்தது.

“சிறிய ஸ்டூல் இருக்கிறதா“ எனக்கேட்டார்

“ஸ்டூல் கிடையாது. நானே எடுத்துத் தருகிறேன்“ என்றபடியே அருகில் வந்து குனிந்து அந்தப் புத்தகத்தை எடுத்து அவரது கையில் கொடுத்தாள்

“நவல் நஸ்ரல்லாவின் இந்தப் புத்தகத்தைப் படித்திருக்கிறேன். அவர் ஈராக்கிய உணவு வரலாற்றாசிரியர்“ என்றபடியே அவர் புத்தகத்தை அவளிடமே கொடுத்தார்.

அவருக்கு உதவி செய்வது போல அந்தப் பெண் சொன்னாள்

“நீங்கள் கேட்ட புத்தகம் ஆன்லைனில் கிடைக்கக் கூடும்“

அவர் எரிச்சலான குரலில் சொன்னார்

“நான் ஆன்லைனில் புத்தகம் வாங்குவது கிடையாது. புத்தகக் கடைக்குப் போய் விருப்பமான புத்தகத்தைக் கையில் எடுத்துப் புரட்டி நாலைந்து பக்கம் வாசித்த பின்பு தான் வாங்குவேன். ஆன்லைனில் புத்தகம் வாங்குவது என்பது புகைப்படத்திற்கு முத்தம் கொடுப்பது போலிருக்கிறது. நிஜமான நெருக்கமில்லை“.

அவரது தேர்ந்த ஆங்கிலத்தையும் அதிலிருந்த கேலியையும் ரசித்தபடியே மதன்குமார் நின்றிருந்தான். அந்தப் பெண் இருவரையும் விட்டு விலகி தனது இருக்கைக்குச் சென்று அருகிலிருந்த பச்சை நிற பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தாள். கம்ப்யூட்டரில் எதையோ தேடுவது போலப் பாவனைச் செய்தாள். பின்பு நெற்றியை வலதுகையால் அழுத்தித் தடவிக் கொண்டபடி பெருமூச்சிட்டாள்.

“நீங்கள் பதார்த்த குண சிந்தாமணி படித்திருக்கிறீர்களா“ என ஆங்கிலத்தில் கேட்டான் மதன்குமார்

தலையாட்டியபடியே “தேரையர் எழுதியது தானே. படித்திருக்கிறேன். பதார்த்த குண சிந்தாமணி மிகவும் நல்ல புத்தகம், நிறைய வியப்பூட்டும் செய்திகள் உள்ளன. அதில் தான் உறக்கத்தின் வகைகளைப் பற்றிப் படித்தேன். ஆயுர்வேத சம்ஹிதையிலும் இது போன்ற குறிப்புகள் இருக்கின்றன. நீங்கள் மருத்துவரா“ என்று கேட்டார் அந்த மனிதர்

“மருந்துக் கம்பெனி நடத்துகிறேன். என் பெயர் மதன்குமார்“ என்று சொன்னான்

“என்னை எப்படி அறிமுகம் செய்து கொள்வது என்று தெரியவில்லை. என் பெயர் முகமது கோயா, உணவைப் பற்றிப் பல வருஷங்களாக ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன். என் உடம்பை பார்த்தாலே நன்றாகச் சாப்பிடுகிறவன் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும்“ என்றார்

தன்னைக் கேலி செய்து கொள்கிறவர்களை அவனுக்குப் பிடிக்கும். ஆகவே அவன் அவரது நகைச்சுவையை ரசித்தபடியே கேட்டான்

“எந்தப் பல்கலைகழகத்தில் ஆய்வு செய்கிறீர்கள்“ என்று கேட்டான்

“சொந்தச் செலவில். அதுவும் பாட்டன்பூட்டன் சம்பாதித்த சொத்தில்“ என்று சொல்லி சிரித்தார்.

“ உங்களால் தமிழ் புத்தகத்தை எப்படிப் படிக்க முடிந்தது“

“என்னால் ஒன்பது மொழிகளில் வாசிக்க முடியும். நானாகக் கற்றுக் கொண்டேன். தமிழில் என்னால் நன்றாகப் படிக்க முடியும். சில சொற்களுக்கு அர்த்தம் புரிவது தான் சிரமம். “

“உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. நாம் இருவர் கேட்ட புத்தகங்களும் இந்தக் கடையில் இல்லை. விமான நிலையப்புத்தகக் கடைகள் ஏமாற்றம் அளிக்கின்றன“ என்றான் மதன்குமார்

“அப்படி சொல்லாதீர்கள். நான் கொச்சி விமானநிலையக்கடையில் அரியதொரு புத்தகம் வாங்கியிருக்கிறேன். அகஸ்டே எஸ்கோஃபியர் எழுதியது. அச்சில் இல்லாதது“.

“எனக்கு அப்படியான அதிர்ஷ்டம் கிடைத்ததில்லை. ஒருமுறை விமானத்தில் உடன் வந்த பயணி ஆச்சரியமாக ஆகா ஷாஹித் அலியின் கவிதைகளைப் படித்துக் கொண்டு வந்தார். சிறுவர்கள் வாசிப்பது போல ஒவ்வொரு வாக்கியமாக அவர் மெல்லிய சப்தத்தில் வாசித்துப் படித்தது எனக்குப் பிடித்திருந்தது. இடையில் ஒருமுறை என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டார். விமானத்தை விட்டு இறங்கும் போது அந்தப் புத்தகத்தை எனக்குப் பரிசாகத் தந்துவிட்டார்“.

“இப்படித்தான் நடக்கும். அரிய புத்தகங்கள் தானே தனக்கான வாசகனை தேடி வந்துவிடும்“ என்றார்

இருவரும் கடையில் நின்று கொண்டு தங்களுக்குள் ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருப்பதை ஏமாற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் கடைப்பெண்

“உணவைப் பற்றி என்ன ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்“ எனக்கேட்டான் மதன்குமார்

“உண்மையைச் சொன்னால் நான் உயிரைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன். அதை நேரடியாகச் செய்ய முடியாதல்லவா. அதனால் தான் உணவின் வழியே அதை நோக்கி செல்கிறேன். “

“மருத்துவம் உயிரைப் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறதே“

“அதை என்னால் முழுமையாக ஏற்க முடியவில்லை. அப்படிச் சொல்வது கூடத் தவறு. முழுமையாக நம்ப முடியவில்லை. உயிர் பற்றி இன்னும் நாம் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. “

“உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே’ என்கிறது திருமந்திரம். நீங்கள் திருமந்திரம் பற்றிக் கேள்விபட்டிருக்கிறீர்களா“ எனக் கேட்டான் மதன்குமார்

“என் ஆராய்ச்சியும் அது தான். உங்களுக்குக் கதை கேட்க விருப்பம் இருக்கிறதா.. எந்த ஊருக்குப் போகிறீர்கள். எத்தனை மணிக்கு விமானம்“

“சென்னை செல்கிறேன். நாலரை மணிக்கு விமானம்“

“நான் மும்பை செல்கிறேன். ஆறு மணிக்கு விமானம். நிறைய நேரமிருக்கிறது“

“இங்கே நாம் கதை பேச முடியாது. நீங்கள் எனக்காக ஒரு புத்தகம் சிபாரிசு செய்யுங்கள். அதை வாங்கிக் கொள்கிறேன். பிறகு நாம் அருகிலுள்ள ஸ்டார்பக்ஸிற்குப் போகலாம்“ என்றான் மதன்குமார்

“எனக்கும் அப்படிப் புத்தகம் நீங்கள் சொல்ல வேண்டும். “

அடுத்தச் சில நிமிடங்களில் ஆளுக்கு ஒரு புத்தகத்தைத் தேர்வு செய்து பில் போடுவதற்காகக் கொண்டு போய்க் கொடுத்தார்கள். அந்தப் பெண் புத்தகத்தின் விலையைத் தான் முதலில் பார்த்தாள். ஒன்றின் விலை ரூபாய் 750 மற்றொன்று ரூபாய் 1350. அவள் மகிழ்ச்சியோடு பில்போட்டபடியே கேஷா, கார்டா என்று கேட்டாள்

மதன்குமார் “கேஷ்“ என்றான். அவர் “கார்ட்“ என்றார்

அவள் “இரண்டையும் ஒரே பில்லாகப் போட்டுவிட்டேன்“ என்றாள்

“அப்படியானால் நானே பணம் தந்துவிடுகிறேன்“ என்றான் மதன்குமார்

“ஸ்டார்பக்ஸ் எனது செலவு“ என்று சொல்லிச் சிரித்தார் முகமது கோயா

நீண்ட காலம் பழகிய இரண்டு நண்பர்கள் திரும்பச் சந்தித்துக் கொண்டது போல அவர்கள் நடந்து கொண்டது ஆச்சரியமளித்தது.

`இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயை அவளிடம் நீட்டினான்

“சில்லறை இல்லை. நான் வாங்கி வருகிறேன்“ என்று அவள் எழுந்து கடையை விட்டு வெளியே நடந்தாள்

“சமையல் புத்தகங்களுக்கென்ற நான் ஒரு நூலகம் வைத்திருக்கிறேன். எனது சேமிப்பில் மூவாயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் இருக்கின்றன“ என்றார் கோயா

“சமையல் புத்தகம் எதையும் நான் படித்ததேயில்லை“ என்றான் மதன்குமார்

“அபூர்வமான சமையல்புத்தகங்களை எழுதியவர்கள் ஆண்கள். உணவுப்பண்டங்களின் பெயர்கள் எப்படி உருவானது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா. சப்பாத்தி என்ற சொல் அக்பரின் காலத்தில் எழுதப்பட்ட அயினி அக்பரியில் உள்ளது. இனிப்பு வகைகளுக்குப் பெயர் வைத்தவன் நிச்சயம் கவிஞனாகத் தானிருக்கக் கூடும். தி விண்டர்ஸ் டேல் நாடகத்தில் ஷேக்ஸ்பியர் அரிசி பற்றி எழுதியிருக்கிறார். ஷேக்ஸ்பியரின் காலத்தில், “சாலெட்” என்பது கலவையான கீரைகளின் உணவைக் குறிக்கும். அவர் நடிகர்களை வெங்காயம், பூண்டு சாப்பிட வேண்டாம் என்று சொல்கிறார். 15 ஆம் நூற்றாண்டில் லண்டனில் உள்ள பெரும்பாலான தெருக்கள் அங்கு விற்கபடும் பொருட்களின் பெயரால் அழைக்கபட்டன. கேக்குகளுக்குப் பெயர் பெற்ற வூட் ஸ்ட்ரீட் இன்றும் அதன் பெயரை மாற்றிக் கொள்ளவில்லை. மன்னர்களின் வரலாற்றைப் படித்தால் உணவில் விஷமிடப்பட்டுத் தான் நிறைய இறந்து போயிருக்கிறார்கள். உணவின் கதை என்பது வரலாற்றின் இனிப்புப் பண்டம் என்றே கருதுகிறேன். “

ஆர்வமிகுதியில் அவர் கடகடவெனப் பேசிக் கொண்டேயிருந்தது வியப்பளித்தது.

“பாப்லோ நெரூதா தக்காளிக்கு ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அதில் அடுப்பில் வதக்கப்படும் தக்காளி வெங்காயத்தைத் திருமணம் செய்து கொள்வதாக ஒரு வரி இருக்கிறது. “ என்றான் மதன்குமார்

“கவிஞர்களுக்கு உணவின் ரகசியம் தெரியும். மனிதன் பூமியில் வாழத் துவங்கி எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்பும் அன்புக்கும் உணவுக்கும் இடையே உள்ள பிணைப்பு மாறவேயில்லை“

“நீங்கள் உணவு பற்றிப் புத்தகம் எழுதலாமே“

“அப்படி எண்ணமேயில்லை. எனது கவனம் முழுவதும் பசியைப் புரிந்து கொள்வது தான்“

“சமையல்குறிப்புகளை ஏன் ஆவணப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு இரண்டு மணி நேர தூரத்துக்கும் இடையே உணவின் ருசியும் சமைக்கும் முறையும் மாறிவிடுகிறதே“ எனக்கேட்டான் மதன்குமார்

“இந்தியாவில் மட்டும் பல்லாயிரம் விதமான சமையல்முறைகள் இருக்கின்றன. அவற்றை எவராலும் முழுமையாகத் தொகுக்க முடியாது. உண்மையில் அது ஒரு ஞானம். சமையலின் வழியே அவர்கள் நிறையக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்தக் கால ராஜா ராணிகள் தனக்கெனத் தனியே சமையல் புத்தகம் வைத்திருந்தார்கள். அந்த ஏடுகளைப் பிறர் படிக்க முடியாது. அவை ஒரு தலைமுறையிடமிருந்து இன்னொரு தலைமுறைக்குப் பரிசாக அளிக்கபட்டன. உண்மையில் அவர்கள் நித்யத்தைக் கண்டறிய முயன்றிருக்கிறார்கள். அமரத்துவம் பற்றி உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா“

“இருக்கிற வாழ்க்கையைக் கடந்து செல்வதே பெரும் சவாலாக இருக்கிறது. இதில் அமரத்துவம் பற்றி என்ன நினைப்பது“ என்று கேட்டான் மதன்குமார்

“சமையல் புத்தகங்களுக்குள் அமரத்துவம் பற்றிய ரகசியங்கள் மறைந்திருக்கின்றன. நான் ஆராய்ந்து வருகிறேன். “

“இங்கே ஏதாவது கருத்தரங்கிற்காக வந்தீர்களா“ எனக்கேட்டான் மதன்குமார்

“ஒரு பெண்ணைச் சந்திப்பதற்காக வந்தேன். நீங்கள் பசவபுரா என்ற ஊரைப் பற்றிக் கேள்விபட்டிருக்கிறீர்களா“

“இல்லை“ என்று தலையாட்டினான்

“அங்கே ஒரு பெண் வசிக்கிறாள், அவளது பெயர் பார்கவி. அவளைப் பற்றி விரிவாகச் சொல்ல வேண்டும். நாம் ஸ்டார்பக்ஸிற்குப் போய்விடுவோம்“

புத்தகக் கடைப்பெண் சில்லறையோடு திரும்பி வந்திருந்தாள். மீதப்பணத்தை அவனிடம் கொடுத்துவிட்டு அந்தப் பெண் “அடுத்த முறை கடைக்கு வாருங்கள். கவிதை புத்தகம் வாங்கி வைத்திருப்பேன்“ என்றாள். மதன்குமார் அவளுக்கு நன்றி சொல்லியபடியே அவரது பைகளில் ஒன்றை தான் வாங்கிக் கொள்ள முயன்றான். அவர் தானே கொண்டுவருவதாகச் சொல்லி இரண்டையும் தூக்கிக் கொண்டார். அவருக்காக வாங்கிய புத்தகத்தைத் தானே கையில் எடுத்துக் கொண்டபடி கடையை விட்டு வெளியே வந்தான் மதன்குமார்

ஸ்டார்பக்ஸ் நோக்கி அவர்கள் நடந்தார்கள். கோயாவின் கையில் இருந்த ஒரு பை எடை அதிகமாக இருந்தது போலும். அதை அவரது நடையில் காண முடிந்தது. அவர் மூச்சுவாங்க ஸ்டார்பக்ஸில் காலியாக இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார். அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான் மதன்குமார்

“உங்களுக்கு என்ன காபி வேண்டும்“ எனக்கேட்டார் கோயா

“நான் குடிக்கும் பில்டர் காபி இங்கே கிடைக்காது. கேப்பச்சினோ சொல்லுங்கள்“ என்றான்

அவர் கவுண்டரை நோக்கி நடந்தார். இரண்டு கேப்பச்சினோவும் சிக்கன் சாண்ட்விட்ச்சும் வரும்வரை அவர் ஒரு வார்த்தை பேசவில்லை. நிதானமாகத் தனது சாண்ட்விட் சாப்பிட்டபடியே சொன்னார்

“நான் ஒரு பெண்ணைச் சந்திக்கச் சென்றதாகச் சொன்னேன் இல்லையா“..

“ஆமாம் பெயர் கூடப் பார்கவி. “

“உங்களுக்கு நல்ல ஞாபக சகத்யிருக்கிறது. அந்தப் பெண் சிமோகாவில் ஒரு கார்மெண்ட் பேக்டரியில் வேலை செய்கிறாள். அவள் கடந்த ஒன்பது வருடங்களாகச் சாப்பிடாமல் உயிர்வாழுகிறாள். அந்தச் செய்தி பேப்பரில் வெளியாகியிருக்கிறது. அவளைத் தான் சந்திக்கச் சென்றிருந்தேன்“

“சாப்பிடாமல் எப்படி அவளால் உயிர் வாழ முடிகிறது“

“அதை தெரிந்து கொள்ளத்தான் அவளைச் சந்தித்தேன். அவளுக்கு இது ஒன்றும் ஆச்சரியமான விஷயமாக இல்லை. பசிப்பதில்லை என்று மட்டும் சொல்கிறாள். அவள் வேலை செய்யும் கார்மெண்ட் பேக்டரிக்குச் சென்றிருந்தேன். அங்கே உள்ள பெண்கள் அவள் சாப்பிடுவதில்லை என்பதை உறுதி செய்தார்கள். நாலைந்து மருத்துவர்கள் அவளை மருத்துவப் பரிசோதனை செய்து பார்த்திருக்கிறார்கள். அவள் எதையும் சாப்பிடாமலே உயிர் வாழுகிறாள் என்று தான் ரிப்போர்ட் வந்திருக்கிறது. “

“அது எப்படிச் சாத்தியம்“ எனக்கேட்டான் மதன்குமார்

“நான் அவளிடம் இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. கேட்கமாட்டேன். அவளிடம் நீ வீட்டில் சமைக்கிறாயா என்று கேட்டேன்“

அவள் “ஆமாம். ஆனால் முன்பு போல எளிதாக இல்லை. மனதிற்குப் பிடிக்காமல் செய்கிறேன்“ என்றாள்

“ஏன் அப்படிச் சொல்கிறாள்“.

“அப்படிதான் ஆகிவிடும். நான் அவளை நம்புகிறேன். “

“என்னால் நம்ப முடியவில்லை“.

“அயர்லாந்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்று படித்திருக்கிறேன். அப்போது நானும் நம்பவில்லை. இப்போது நம்புகிறேன்“

“இது எப்படி நிஜமாக இருக்கும்“

“ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. குறைப்பிரவசம். பிறந்த குழந்தை போதுமான எடையில்லை. அத்தோடு அக்குழந்தை அழவேயில்லை. குழந்தை அழுதால் மட்டுமே உயிர்வாழும் என்று டாக்டர் சொல்லியிருக்கிறார். அந்தக் குழந்தையை எப்படி அழ வைப்பது என்று அவளுக்குத் தெரியவில்லை. அவளால் முயன்ற பல்வேறு வழிகளைச் செய்திருக்கிறாள். முடிவில் அந்தக் குழந்தை இறந்துவிட்டது. அதன் மறுநாளில் இருந்து அவளுக்குப் பசிக்கவில்லை. இந்த ஒன்பது வருஷங்களில் எதையும் அவள் சாப்பிடவில்லை, தான் வெறும் நிழல். நிழல் எதையும் உண்பதில்லை என்று சொன்னாள் “

“எதனால் அவளுக்குப் பசியற்றுப் போனது“

“நமது பசிக்கான முதல் உணவை தாயிடமிருந்தே பெறுகிறோம். அதை அவளால் தர இயலாத குற்றவுணர்வு தான் பசியற்றுப் போகச் செய்துவிட்டது“

“அறிவியல் பூர்வமாக அப்படி நடக்காதே“ என்றான்

“அறிவியல் பூர்வமாக விவரிக்க முடியாத நிகழ்வுகள் நம்மைச் சுற்றி நடக்கதானே செய்கின்றன. “

“அந்தப் பெண் இயல்பாகத் தனது அன்றாடக் காரியங்களைச் செய்து கொள்கிறாளா“. எனக்கேட்டான் மதன்குமார்

“அவளுக்குக் கனவுகளே வருவதில்லை என்று மட்டும் சொன்னாள். உணவில்லாவிட்டால் கனவு வராது “

என்றபடியே முகமது கோயா தனது சாண்ட்விட்சை தின்று முடித்துக் காபியை குடித்தார். மதன்குமார் பார்கவியைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான்.

அவர் எழுந்து கழிப்பறையை நோக்கி சென்றார். திரும்பி வந்த போது அவரது முகம் மாறியிருந்தது

“இதை கதை என நினைக்கிறீர்களா“ எனக் கேட்டார்

அவன் பதில் சொல்லவில்லை

“கதையே தான். இப்படிப் பேசி பொழுதைப் போக்கவில்லை என்றால் நேரத்தை எப்படிக் கொல்வது. இந்தக் கதையைப் பலரிடமும் சொல்லியிருக்கிறேன். எல்லோரும் ஏமாந்து போயிருக்கிறார்கள்“ என்று புன்சிரிப்புடன் சொன்னார்.

“நீங்கள் சொன்னது நிஜமில்லையா“ எனக்கேட்டான்

“நிஜமாகத் தோன்றுகிறதா. பேசாமல் ஆராய்ச்சி செய்வதை விட்டுவிட்டு கதை எழுதலாம் என்று நினைக்கிறேன். விமான நிலையத்தில் நேரத்தைக் கொல்வதற்கு இப்படி எதையாவது செய்யத் தானே வேண்டியிருக்கிறது “ என்று சொல்லி சிரித்தார்.

பின்பு அவன் தனக்காக வாங்கிக் கொடுத்த புத்தகத்தின் முகப்பில் தனதுபெயரை எழுதி பைக்குள் வைத்துக் கொண்டார். தனது விமானத்திற்கு நேரமாகிவிட்டது என மதன்குமார் புறப்பட்ட போது அவர் இன்னொரு சாண்ட்விட் சாப்பிடப்போவதாகச் சொன்னார்

அவன் தனது விமானம் புறப்படும் இடம் நோக்கி வந்தான்.

நீண்ட வரிசையில் ஆட்கள் நின்றிருந்தார்கள்.

விமானத்தில் ஏறி தனது இருக்கையில் அமர்ந்தபின்பு பார்கவி ஒன்பது வருஷங்கள் உணவில்லாமல் வாழும் பெண் சிமோகா என்று கூகிளில் தேடினான்.

பார்கவியின் புகைப்படம் தோன்றியது.

முகமது கோயா சொன்ன செய்தி உண்மையாக இருந்தது.

••

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 24, 2025 04:45

January 23, 2025

தெற்கின் காதல்

தான் விரும்பியவனை அடைய முடியாமல் போன பெண்ணைப் பற்றி எத்தனையோ கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் கான் வித் தி விண்ட் போல நிராகரிப்பின் வலியை, ஆழமாக, அழுத்தமாகத் தனது காலகட்ட சரித்திர நிகழ்வுகளுடன் சொன்ன கதை வேறு எதுவுமிலை.

Gone with the Wind திரைப்படத்தை ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு முறை பார்த்துவிடுவேன். எனக்குப் பிடித்த படங்களில் ஒன்று.

மார்க்ரெட் மிட்செல் எழுதிய இந்த நாவல் 1936ல் வெளியானது. அவரது சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளிலிருந்து இந்த நாவலை உருவாக்கியுள்ளார்.

அந்த நாட்களிலே இந்த நாவலை திரைப்படமாக்க ஐம்பதாயிரம் டாலர் பணம் கொடுத்து உரிமையைப் பெற்றிருக்கிறார் டேவிட் ஓ. செல்ஸ்னிக்.

மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இப்படம் மூன்றரை மணி நேரத்திற்கும் மேலாக ஒடக்கூடியது. ஹாலிவுட்டின் காவியம் என்றே இதனைக் குறிப்பிடுகிறார்கள். படத்தில் நான்கு இயக்குநர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். நான்காவது இயக்குநரான விக்டர் ஃப்ளெமிங் பெயரே திரையில் இடம்பெற்றுள்ளது.

மார்க்ரெட் மிட்செல் தனது வாழ்நாளில் இந்த ஒரேயொரு நாவலை மட்டுமே வெளியிட்டுள்ளார். சிறந்த நாவலுக்கான புலிட்சர் பரிசைப் பெற்ற அவர் தனது 48 வயதில் இறந்து போனார். அவரது மறைவிற்குப் பின்பு அவர் இளமையில் எழுதிய இன்னொரு நாவலும் அவரது வேறு எழுத்துகளும் வெளியிட்டப்பட்டன

There is no remedy for love but to love more என்கிறார் தோரூ. படம் முழுவதும் ஸ்கார்லெட் அதையே செய்கிறாள்.

அமெரிக்க உள்நாட்டுப் போரின் வரலாற்றையும் அழியாத காதல்கதையினையும் இணைந்து உருவாக்கபட்ட கான் வித் தி விண்ட் இன்றளவும் அமெரிக்கச் சினிமாவின் சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. படத்தில் ஸ்கார்லெட் ஓ’ஹாராவாக விவியன் லீயும், ரெட் பட்லராகக் கிளார்க் கேபிளும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்

அமெரிக்கச் சினிமாவின் மிகவும் பிரபலமான பெண் கதாபாத்திரமாக ஓ’ஹாராவைக் குறிப்பிடுகிறார்கள். அவள் தனது தந்தை வழியில் ஐரிஷ் வம்சாவளியைச் சார்ந்தவள். தாய் வழியில் பிரெஞ்சுப் பெண்.

1861 ஆம் ஆண்டு ஜார்ஜியா மாகாணத்தில் கதை நடக்கிறது. அப்போது ஸ்கார்லெட் ஓ’ஹாராவுக்குப் பதினாறு வயது. திருமணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கும் இளம்பெண். பணக்கார பெற்றோர்களின் ஆசை மகள். புத்திசாலிப் பெண். அவளது பக்கத்து பண்ணையைச் சேர்ந்த ஆஷ்லேயைக் காதலிக்கிறாள். அங்கே நடைபெறவுள்ள விருந்திற்காகத் தயராகிக் கொண்டிருக்கிறாள்.

அவளது இரண்டு சகோதரிகள் மற்றும் கறுப்பினத்தைச் சேர்ந்த வீட்டுப்பணிப்பெண், ஸ்கார்லெட்டின் தந்தை தாய் அவர்களின் வசதியான வாழ்க்கையைப் படம் ஆரம்பக் காட்சியாகச் சித்தரிக்கிறது. அதில் அனைவரும் ஸ்கார்லெட் மீது மிகுந்த அன்பு செலுத்துகிறார்கள். குறிப்பாகப் பணிப்பெண் அவரைச் சாப்பிட வைக்கும் காட்சி. அதில் வெளிப்படும் பொய் கோபம் அழகானது.

அழகியான ஸ்கார்லெட் விருந்தில் தனது காதலன் ஆஷ்லேயை சந்திக்கக் கவர்ச்சியான உடையணிந்து கொண்டு புறப்படுகிறாள்.

ஆஷ்லே அவளுடன் நட்பாகப் பழகுகிறான். ஆனால் காதலிக்கவில்லை. ஸ்கார்லெட் அவனை ஒருதலையாகக் காதலிக்கிறாள். எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறாள்.

விருந்தில் தனக்குப் பிடித்தமான மெலனி ஹாமில்டனைத் திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஆஷ்லே அறிவிக்கிறான். அதனை ஸ்கார்லெட்டால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வருத்தமடைகிறாள். கோபம் கொள்கிறாள்.

ஆஷ்லேயிடம் நேருக்கு நேராகச் சண்டையிடுகிறாள். அவளை விடவும் மெலனி ஒரு சிறந்த மனைவியாக இருப்பாள் என ஆஷ்லே குறிப்பிடுகிறான். அவர்கள் சண்டையை ரிட் பட்லர் என்ற ஒய்வு பெற்ற ராணுவ வீர்ர் ஒளிந்திருந்து கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர். மனைவியை இழந்த நடுத்தர வயது நபர்

எப்படியாவது ஆஷ்லேயின் திருமணம் நின்று போய்விடாதா என ஸ்கார்லெட் ஏங்குகிறாள். அந்தக் கோபத்தில் சார்லஸ் என்ற மெலனியின் சகோதரனை அவசரமாகத் திருமணம் செய்து கொள்கிறாள். ஆனாலும் அவளுக்கு ஆஷ்லேயின் மீதான காதல் மறையவேயில்லை.

தன்னை நிராகரித்த ஆஷ்லேயை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என அவனது குடும்பத்துடன் நெருங்கிப் பழகுகிறாள். மெலனியின் நெருக்கமான தோழியாகிறாள்.

திடீரென உள்நாட்டுப் போர் துவங்குகிறது. ஆஷ்லே போருக்குப் போகிறான். ஸ்கார்லெட் ஓ’ஹாராவின் கணவனும் போருக்குப் போகிறான். போரில் அவளது கணவன் இறந்து போகிறான். ஆஷ்லே என்ன ஆனான் என்று தெரியவில்லை.

யுத்தநிதி சேகரிக்கும் நடனநிகழ்வு ஒன்றில் விதவையான அவள் ரெட் பட்லரை மறுபடியும் சந்திக்கிறாள். அவர்கள் கைகோர்த்து நடனமாடுகிறார்கள். படத்தின் மிகச்சிறப்பான காட்சியது. அப்போது ரெட் பட்லர் அவளது அழகில் மயங்குகிறான். தனது காதலை வெளிப்படுத்துகிறான். அவனைத் தான் ஒரு போதும் ஏற்க முடியாது என்று மறுக்கிறாள் ஸ்கார்லெட்

ஆனாலும் அதன்பிறகான நாட்களில் ரெட் பட்லர் அவளுக்குத் தேவையான உதவிகளைச் செய்து தருகிறான். அவள் என்றாவது மனம் மாறுவாள் எனக் காத்திருக்கிறான்.

உள்நாட்டுப் போரில் தனது மகனை இழந்த பெற்றோரை ஸ்கார்லெட் ஓ’ஹாரா சந்திக்கும் காட்சி முக்கியமானது. இறந்து போனவர்களின் பட்டியல் வாசிக்கப்படுவது மற்றும் அந்த மைதானமெங்கும் காணப்படும் துயர முகங்கள். கேவல்கள். காயம்பட்டவர்களுக்கு அளிக்கபடும் சிகிட்சைகள். கைகால்கள் போனவர்களின் வலி. வேதனை எனப் போரின் அவலத்தைப் படம் அழுத்தமாகச் சித்தரித்துள்ளது.

போரின் காரணமாக ஏற்பட்ட தாக்குதல். இதன் காரணமான உயிர் இழப்பு என அவர்களின் இயல்பு வாழ்க்கை மாறுகிறது. பெற்றோரை இழந்து, வீட்டை இழந்து ஸ்கார்லெட் அகதி போலாகிறாள். ஆனாலும் ஆஷ்லே மீதான காதல் மறையவில்லை.

ஸ்கார்லெட்டின் வாழ்க்கை காற்றில் அடித்துச் செல்லப்பட்ட இறகைப் போலத் திசைமாறிப் போய்க் கொண்டேயிருக்கிறது. உள்நாட்டுப் போரில் அழிந்து போன தனது பண்ணைக்குத் திரும்பும் ஸ்கார்லெட் மீண்டும் பருத்தி விவசாயம் செய்வதும் இழந்த வாழ்க்கையை மீட்டுருவாக்கம் செய்வதும் சிறப்பான பகுதி. நிலம் எவரையும் கைவிடுவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

வசதியான வாழ்க்கையிலிருந்து எளிமையான விவசாய வாழ்க்கைக்கு ஸ்கார்லெட் திரும்புகிறாள். அவள் மனது மாறிவிட்டிருக்கும் என நாம் நினைக்கும் போது ஆஷ்லே வீடு திரும்புகிறான்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு காயம்பட்ட ஆஷ்லே வீடு திரும்புவது. படத்தின் நிகரற்ற காட்சியாகும். அதன்பிறகு ஆஷ்லே மாறிவிடுகிறான்.

ஆஷ்லே வீடு திரும்பியதால் மெலனியை விடவும் ஸ்கார்லெட் அதிகச் சந்தோஷம் கொள்கிறாள். ஆஷ்லேயுடன் திரும்பவும் பழக ஆரம்பிக்கிறாள். விதவையான தன்னை ஏற்றுக் கொள்ளும்படி மன்றாடுகிறாள். ஆனால் ஆஷ்லே அவளை ஏற்கவில்லை..

மெலனியின் பிரவசத்திற்காக மருத்துவரை அழைத்துவருவது. மரணப்படுக்கையில் மெலனியை சந்தித்துப் பேசுவது, ரெட் பட்லரிடம் உதவி கேட்பதற்காகச் செல்வது போன்ற காட்சிகளில் விவியன் லீ அபாரமாக நடித்திருக்கிறார்.

ஸ்கார்லெட் அவசரத்தில் எடுக்கும் முடிவுகள் அவளது வாழ்வை புரட்டிப் போடுகின்றன. ரெட் பட்லரின் திருமணம் மூலம் வசதியும் அந்தஸ்தும் கிடைக்கின்றன. ஆனால் மகிழ்ச்சி கிடைக்கவில்லை. அவர்களின் பிரம்மாண்ட வீடு. அதன் படிக்கட்டுகள். பலவந்தமாக ரெட் பட்லர் கொள்ளும் உடலுறவு. அடுத்த நாள் அவன் கேட்கும் மன்னிப்பு என அந்த வாழ்க்கை அவள் எதிர்பாராத்து. ரெட் பட்லர் விரும்பியது இது தானா என்று கேள்வி அவனுக்குள்ளாக எழுகிறது.

வெறுப்பிற்கும் நேசத்திற்கும் இடையில் ஸ்கார்லெட் ஊசலாடுகிறாள். அவளால் சரியாக முடிவு எடுக்க முடியவில்லை. வசதியால், ஆடம்பரங்களால் சந்தோஷத்தை ஏற்படுத்தித் தந்துவிட முடியாது என்பதை உணர்ந்து கொள்கிறாள்.

தன்னைப் பிரிந்து ரெட் பட்லருடன் போன ஆசைமகள் வீடு திரும்பும் போது ஸ்கார்லெட் காட்டும் அன்பு அபூர்வமானது. அது போல ரெட் பட்லர் அவளை நிராகரித்துப் போகும் போது காட்டும் கண்ணீரும் மறக்கமுடியாதது.

ஆஷ்லேயின் நிராகரிப்பு தான் ஸ்கார்லெட்டின் வாழ்க்கையை மாற்றுகிறது. பிடிவாதமான சிறுமியைப் போலவே கடைசிவரை நடந்து கொள்கிறாள். முடிவில் எது காதல் என்ற உண்மையை உணரும் போது எல்லோராலும் கைவிடப்படுகிறாள். மறுபடியும் ஸ்கார்லெட் காத்திருக்கத் துவங்குகிறாள்.

ஒன்று சேராத காதலின் ஊடாக அமெரிக்க வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகளைப் படம் விவரிக்கிறது. மூன்றரை மணி நேரம் ஒடும் திரைப்படத்தில். ஸ்கார்லெட்டின் முழுவாழ்க்கையினையும் காணுகிறோம்.

GONE WITH THE WIND (1939)
Clark Gable, Vivien Leigh

ஸ்கார்லெட் ஓ’ஹாரா தனது காலகட்டத்த பெண்களிலிருந்து மாறுபட்டவள். அவள் எதையும் வெளிப்படையாகப் பேசுகிறாள் . தனது உரிமைக்காகச் சண்டையிடுகிறாள். நெருக்கடியை தைரியமாக எதிர் கொள்கிறாள். ஆனால் காதலின் பித்து அவளைத் தடுமாற வைக்கிறது.

ஸ்கார்லெட் ஆஷ்லேயை காதலிப்பது போல மெலனி கூட அவனைக் காதலிக்கவில்லை. ஆனால் ஆஷ்லேயிற்கு மெலனியை தான் பிடித்திருக்கிறது. அது ஏன் என்று அவனிடமே ஸ்கார்லெட் கேட்கிறாள். அவனால் சரியான காரணத்தைச் சொல்ல முடியவில்லை.

மெலனியின் இடத்தில் தன்னை வைத்துக் கொள்ளும் ஸ்கார்லெட் ஆஷ்லேயிற்காகவே அவர்கள் குடும்பத்துடன் நெருங்கி பழகுகிறாள். உதவிகள் செய்கிறாள். . மெலனியே கூட அவளது மரணத்தின் பின்பு ஆஷ்லேயை அவள் கவனித்துக் கொள்ள வேண்டும் என வாக்குறுதியை பெறுகிறாள். . ஆனால் மெலனியின் மரணம் ஆஷ்லேயின் மனதில் ஆழமான வடுவை உருவாக்கிவிடுகிறது. அவன் தன்னால் ஒரு போதும் ஸ்கார்லெட்டை ஏற்க முடியாது என்கிறான்.

படத்தில் ஆஷ்லேவிற்குப் பல்வேறு வழிகளில் ஸ்கார்லெட் உதவுகிறாள். இதனை அறிந்தே ரெட் பட்லர் அவளைத் திருமணம் செய்து கொள்கிறான். உண்மையில் அவர்கள் திருமணம் ஒரு சமூக ஒப்பந்தம். ஆனால் ஸ்கார்லெட் கர்ப்பிணியாக இருப்பதை அறிந்தவுடன் அவனது மனது மாறிவிடுகிறது. ரெட் பட்லர் தனது மகளிடம் காட்டும் பாசம் மிகவும் அழகாகக் காட்சிப்படுத்தபட்டுள்ளது.

ஜார்ஜியாவில் உள்ள தாரா என்ற இடத்திலுள்ள அவர்களின் பண்ணை ஒரு குறியீடாகவே படத்தில் மாறுகிறது. கறுப்பின மக்களைப் படம் சரியாகச் சித்தரிக்கவில்லை என்றொரு விமர்சனத்தை இன்று இப்படம் எதிர்கொள்கிறது. தெற்கின் கதையைச் சொல்லும் இப்படத்தை இயக்கிய விக்டர் ஃப்ளெமிங் தெற்கைச் சேர்ந்தவர். ஆகவே தெற்கு கூட்டணியின் வெற்றியாகவே இப்படத்தைக் கருதுகிறார்கள்.

படத்தில் குழந்தை பருவத்திலிருந்தே ஸ்கார்லெட்டை வளர்த்து வரும் பணிப் பெண் கதாபாத்திரத்தில் நடித்த ஹாட்டி மெக்டேனியல் தனது நடிப்பிற்காக ஆஸ்கார் விருதை வென்றார். இந்த விருதைப் பெற்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி இவரே.

எர்னஸ்ட் ஹாலர் படத்திற்குச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார். நிலக்காட்சி ஓவியம் போலத் தோற்றமளிக்கும் பல காட்சிகள் இன்றளவும் தேர்ந்த ஒளிப்பதிவின் சாட்சியமாக உள்ளன.

பிரம்மாண்டமான அரங்க அமைப்பு. ஒப்பனை. அந்தக்கால உடைகள் என யாவும் கச்சிதமாக உருவாக்கபட்டிருக்கின்றன. குறிப்பாக நடனவிருந்து காட்சி மற்றும் போர்களக்காட்சிகள் சிறப்பானவை.

படத்தின் முதல்பாதி முடியும் போதே ஒரு முழுமையான படத்தைப் பார்த்த உணர்வை அடைந்துவிடுகிறோம். கதையின் அடுத்தப் பாகம் போலவே பிற்பகுதி அமைந்துள்ளது,

1940ல் வெளியான இப்படம் இன்றும் அதன் புத்துணர்வு மாறாமலிருக்கிறது.

போரும் வாழ்வும் என்ற தலைப்பு இந்தப் படத்திற்கே பொருத்தமானது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 23, 2025 03:45

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.