S. Ramakrishnan's Blog, page 15
March 17, 2025
நீளும் கரங்கள்
சமீபத்தில் நான் படித்த சிறந்த புத்தகம் சஞ்சயன் செல்வமாணிக்கம் எழுதிய ஒட்டகச்சிவிங்கியின் மொழி. காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இலங்கையின் ஏறாவூரைச் சேர்ந்த சஞ்சயன் நோர்வேயில் வசிக்கிறார். கணினித்துறையில் பணியாற்றுகிறார்,

இதிலுள்ள கட்டுரைகள் அவரது சொந்த அனுபவத்திலிருந்து எழுதப்பட்டிருக்கின்றன. தான் நேசித்த மனிதர்களை. அவர்களின் தனித்துவத்தை, நட்பை, உறவை சிறப்பாக எழுதியிருக்கிறார்.
ஒவ்வொரு கட்டுரையும் ஒரு முழுநாவலாக எழுத வேண்டிய அளவு விஷயங்களைக் கொண்டிருக்கின்றது. ஆனால் அதை நான்கு அல்லது ஐந்து பக்க அளவிற்குள் கச்சிதமான வடிவில் சிறப்பாக எழுதியிருக்கிறார்.
இந்தக் கட்டுரைகளின் பலம் அதன் காட்சிப்பூர்வமான சித்தரிப்பு மற்றும் நுணுக்கமான மொழிநடை. கட்டுரை என்றாலும் அதில் வரும் மனிதர்கள் பேசிக் கொள்வதை நம்மால் கேட்க முடிகிறது. சஞ்சயனின் சுயபகடி மற்றும் சரியான உணர்ச்சி வெளிப்பாடு இக்கட்டுரைகளை மிகவும் நெருக்கம் கொள்ள வைக்கிறது.
“ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் கொடுக்ககூடிய அதியுயர்ந்த பரிசு சரிந்து அழுவதற்குத் தோளும், அழுது பிதற்றும் போது எதுவும் பேசாது கேட்டுக் கொண்டிருக்கும் காதுகளுமே. உங்களைச் சுற்றி இப்படியானவர்கள் இருப்பார்கள். அடையாளம் கொள்ளுங்கள் “என்கிறார் சஞ்சயன். இந்தத் தொகுப்பில் அவரே சிலரை அடையாளம் காட்டியிருக்கிறார்.

சஞ்சயனுக்கு நேர்ந்த அனுபவங்கள் என்றாலும் சில கட்டுரைகளை வாசித்து முடித்தவுடன் நாம் கண் கலங்கிவிடுகிறோம். இழப்பின் வலி நம்மையும் பற்றிக் கொள்கிறது
தீராத பேச்சுகள் கட்டுரையில் வரும் மனிதரின் கோபம் அசலானது. அவர் வாய் ஓயாத பேச்சின் வழியே தனது கடந்தகாலத் துயரங்களைக் கடந்து போக விரும்புகிறார். தன்னை மறைத்துக் கொள்ளவே பேச்சு பலநேரம் பயன்படுகிறது.
“கடலுக்கு அலைகள் வேண்டியிருப்பது போல மனிதனுக்குப் பேசிக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது. அலைகளை ஏற்றுக் கொள்ளும் கரைகளைப் போல நாம் ஏன் நடந்து கொள்வதில்லை“ என்று கேட்கிறார் சஞ்சயன்.
தோழமையின் தோள்கள் கட்டுரையில் முதல் சந்திப்பிலே பிறேமசிறி தனது நட்பின் கரங்களை நீட்டிவிடுகிறார். அவர் சஞ்சயனை வெறும் பயணியாகக் கருதவில்லை. சிலரோடு மட்டுமே பார்த்த முதல் நிமிஷத்திலிருந்து நம்மால் நெருக்கமாகி விட முடிகிறது.
அப்படியான பிறேமசிறியோடு சஞ்சயனின் நட்பு தொடர்கிறது. ராணுவ நெருக்கடிகளை எதிர் கொள்ளும் சூழலில் அவர் செய்யும் உதவிகள் பிறேமசிறியைச் சொந்த சகோதரனைப் போல உணர வைக்கிறது.
பல ஆண்டுகளுக்குப் பின்பாக வயோதிகத்தில் தனியே வாழும் பிறேமசிறியை தனது மகளுடன் சந்திக்கச் செல்கிறார் சஞ்சயன். அவரது மகள்களுக்குப் பிறேமசிறி ஆசி தரும் அந்த தருணம் உணர்ச்சிப்பூர்வமானது. உண்மையானது. கடைசிச் சந்திப்பிலும் சஞ்சயன் விரும்பிய ரொட்டி இடம்பெறுகிறது. ஆழமான உணர்ச்சிகளை வெளிப்படுத்த உணவால் மட்டுமே முடிகிறது போலும்.
கணிணி பழுதுபார்ப்பதற்காகச் சென்ற வீட்டில் சஞ்சயன் ஒரு முதியவரைக் காணுகிறார் அவர் பார்க்கின்சன் நோயால் அவதிப்படுகிறவர். கூடவே மறதியும் சேர்ந்து கொள்கிறது. மருத்துவமனை அவருக்கென விசேச கணிணி ஒன்றை உருவாக்கியிருக்கிறது. அதன் பழுதை நீக்குகிறார் சஞ்சயன். விடைபெறும் போது அந்த முதியவர் தனது குடும்பத்திற்கு எழுதிய கடிதம் ஒன்றைப் படிக்கத் தருகிறார். விசித்திரமான கடிதமது.
அந்தக் கடிதத்தில் தனது நோயைப் பற்றிக் குறிப்பிடும் முதியவர் தனது நடவடிக்கைகள் திடீரென மாறிப்போனதற்கு நோயே காரணம். இந்தப் புதிய வாழ்க்கைக்கு நான் பழகிக் கொள்ள வேண்டும். அதற்கு உங்கள் அனைவரின் உதவியும் தேவை, என்னை என் நோயுடன் நேசியுங்கள் என்று எழுதியிருக்கிறார்.
அந்த முதியவர் தான் ஒட்டகச்சிவிங்கியின் மொழியைப் பற்றிச் சொல்கிறார்.
“ ஒட்டகச்சிவிங்கி உலகத்திலேயே நீளமான கழுத்தையுடையதால் அதன் கண்கள் மிக உயரத்தில் இருக்கும். ஆதலால் எதையும் தெளிவாகப் பார்க்க முடிகிறது. ஒட்டகச்சிவிங்கியின் காதுகள் பெரியவை அவை நீ மற்றவர்கள் பேசுவதைக் கேட்க வேண்டும் என்று குறிக்கிறது. அனைத்து ஜீவராசிகளின் இதயங்களுடன் ஒப்பிடும் போது ஒட்டகச்சிவிங்கியின் இதயமே பெரியது. இது அன்பினைக் காட்டுகிறது என்கிறார்கள். “
இந்த முதியவரோடு நட்புடன் பழகியதைப் பற்றி எழுதும் சஞ்சயன் “நான் ஒட்டகச்சிவிங்கியின் மொழியைக் கற்றுக் கொண்டிருந்தேன்“ என்கிறார்.
அவர் மட்டுமில்லை. நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டியது ஒட்டகச்சிவிங்கியின் அன்பு மொழியே.
இந்தத் தொகுப்பிலுள்ள முஸ்தபாவின் ஆடு என்ற கட்டுரை நிகரற்றது. அதன் கடைசிப் பத்தியை வாசிக்கும் போது நானும் முஸ்தபாவின் கைகளைப் பற்றிக் கொண்டேன்.
பாலஸ்தீனத்தில் அவர் சந்தித்துப் பழகிய முகமட், சஞ்சயனின் இரண்டாம் தாயான எம்மி, முன்பின் தெரியாத மனிதரை தனது வீட்டிற்குள் வைத்து பல காலமாகப் பராமரிக்கும் பெண். வறுமையிலும் நோயிலும் சகமனிதனின் வலியை தனதாக நினைத்த ஓகோத் எனக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள பலரும் தனது தூய அன்பால் ஒளிருகிறார்கள்.
வாழ்க்கையைப் பற்றிய ஒராயிரம் புகார்களும் வெறுப்பு பேச்சுகளும் நிரம்பிய இன்றைய சூழலில் இது போன்ற அபூர்வ மனிதர்களைச் சஞ்சயன் அடையாளம் காட்டியிருப்பது முக்கியமானது. பாராட்டிற்குரியது.
“மொழி புரியாது விக்கிவிக்கி அழும் மனிதனின் மேல் இரக்கம் வந்தது. அவனது மொழி எனக்குப் புரியவில்லை. ஆனால் அந்த வலியின் மொழியினையும் வேதனையையும் புரியுமளவு எனக்கு மென்னுணர்வு இருந்தது“ என ஒரு கட்டுரையில் சஞ்சயன் எழுதியிருக்கிறார்.
அந்த மென்னுணர்வு தான் இந்த 28 கட்டுரைகளையும் எழுத வைத்திருக்கிறது. அதுவும் ஒட்டகச்சிவிங்கியின் மொழியில்.
•••
March 15, 2025
குற்றமுகங்கள் – 4 பெஜவாடா ரந்தேரி
அன்றைய மெட்ராஸ் ராஜஸ்தானி நான்கு மாநிலங்களை உள்ளடக்கியது. பெஜவாடா ரந்தேரி இதில் எந்த மாநிலத்தில் எந்த ஊரில் வசித்தான் என்று தெரியவில்லை. ஆனால் அவனது விளம்பரம் தமிழ் மற்றும் ஆங்கிலப் பத்திரிக்கைகளில் வெளியாவது வழக்கமாகயிருந்தது.

“வட இந்தியா யாத்ரா ஸ்பெஷல். இது எங்களுடைய 14 வது யாத்திரை. 1931ம் வருஷம் பிப்ரவரி முதல் வாரத்தில் மதராஸிலிருந்து புறப்படும். துங்கபத்ரா பண்டரிபுரம், நாசிக், பரோச், நர்மதை, அஹமதாபாத், மவுண்ட் அபு ,அஜ்மீர் ஜெய்பூர், ஆக்ரா, மதுரா, டெல்லி, குருசேத்திரம், ஹரித்துவார், லக்னோ பிரயாகை, அலஹாபாத், காசி, கயா, கல்கத்தா, பூரி, ஸிம்ஹாசலம், ராஜ் மஹேந்திரி வழியாக மதராசுக்குத் திரும்பி வரும். மூன்றாவது வகுப்புச் சார்ஜ். ரூ 90 இரண்டாவது வகுப்புச் சார்ஜ் ரூ 225
நூறு பேர்கள் மட்டுமே யாத்திரைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்பதால் முன்பதிவு அவசியம். தனி ரயிலில் பயணம் நடைபெறும். யாத்ரீகர்களுக்கெனக் கும்பகோணம் கணேசய்யர் சமையல். பயணத்தில் வெற்றிலை பாக்கு, முறுக்கு அதிசரம் இலவசமாக வழங்கப்படும், முன்பதிவிற்கு அணுகவும். பெஜவாடா ரந்தேரி கம்பெனி, நம்பர் 14, செகண்டு லைன் பீச். மதராஸ் “என விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது
அந்த அலுவலகத்தில் சேஷாசலம் என்ற குமாஸ்தா மட்டுமே இருந்தார். அவர் முன்பாகச் சிவப்பு பேரேடு ஒன்றிருந்தது. அதில் முன்பதிவு செய்பவர்களின் பெயர் முகவரி குறித்துக் கொள்ளப்பட்டது. வக்கீல் அச்சுதன் நாயர் முதல் டாக்டர் ராமதீர்த்தம் வரை பலரும் இந்த யாத்திரைக்குப் பதிவு செய்திருந்தார்கள். ராயங்குடி மிட்டாதார் தனது மனைவியுடன் பயணத்திற்குப் பதிந்திருந்தார்.
பயணத்தேதியன்று சில்வர் கூஜா, தலையணை. போர்வை, ஸ்வெட்டர். வெள்ளித்தட்டு டம்ளர், ஸ்பூன். சகிதமாக ரயில் நிலையத்திற்கு அனைவரும் வந்து காத்திருந்தார்கள். எந்தப் பிளாட்பாரத்திலிருந்து ரயில் புறப்படுகிறது என்று தெரியவில்லை. இரவு பனிரெண்டரை வரை பிளாட்பாரத்தில் காத்திருந்த பின்பு அப்படி ஒரு யாத்ரா ஸ்பெஷல் ரயில் மதராஸில் இருந்து புறப்படவேயில்லை என்பதையும், பெஜவாடா ரந்தேரி தங்களை ஏமாற்றி ஒடிவிட்டான் என்பதையும் அறிந்து அதிர்ச்சியடைந்தார்கள்.
மதராஸில் அவன் குறிப்பிட்டிருந்த முகவரியில் விசாரித்த போது இரண்டு மாத வாடகைக்கு அந்தக் கட்டிடத்தை எடுத்திருந்தான் என்றும் குமாஸ்தாவிற்குச் சம்பளம் பாக்கியுள்ளதாகவும் கண்டுபிடித்தார்கள். முன்பதிவு செய்த பணம் முழுவதையும் ஒரு இளம்பெண் வந்து வாங்கிக் சென்றாள் என்றும் அவள் ரந்தேரியின் மனைவியா, அல்லது காதலியா எனத் தெரியவில்லை என்றார்கள்.
ரந்தேரி ஒரு போதும் தனி ஒரு ஆளை ஏமாற்றவில்லை. அவன் கூட்டத்தை ஏமாற்றினான். அதுவும் படித்தவர்களை மட்டுமே ஏமாற்றினான். இந்த உலகில் புத்திசாலிகளே அதிகம் ஏமாறுகிறார்கள்.

உண்மையில் பெஜவாடா ரந்தேரி என்று ஒருவரேயில்லை. அது ஒரு ரகசிய அமைப்பு. அவர்கள் திட்டமிட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று காவல்துறை அதிகாரி ஜே.வி. நெல்சன் தனது புலனாய்வு அறிக்கையில் தெரிவித்தார்.
பெஜவாடா ரந்தேரி இப்படி மதராஸில் இருந்தவர்களை ஏமாற்றியது போலவே காசியில் இருந்து ராமேஸ்வரம், மதுரை உள்ளிட்ட தென்னாட்டு யாத்திரைக்கு அழைத்துப் போவதாக வட இந்தியர்களையும் ஏமாற்றியிருக்கிறான். கல்கத்தாவில் இருந்து துவாரகைக்கு யாத்திரை, ராஜஸ்தானிலிருந்து பூரி ஜெகனாதர் கோவில் யாத்திரை என்று பல்வேறு விதங்களில் விளம்பரம் கொடுத்து இந்தியா முழுவதையும் ஏமாற்றியிருக்கிறான்.
இந்திய ரயில்வே துறையே இந்த மோசடி பற்றி எச்சரிக்கையாக இருக்கும்படி பொது அறிவிப்பினை வெளியிட்டது. மோசடி நடைபெற்ற எல்லா இடங்களிலும் இதே போல ஒரு குமாஸ்தா இருந்திருக்கிறார். ஒரு இளம் பெண் தான் பணத்தைப் பெற்றுக் கொண்டு போயிருக்கிறாள்.
இதன்பிறகான நாட்களில் பேப்பரில் விளம்பரம் வெளியிடுகிறவர்கள் அத்தாட்சிச் சான்று தர வேண்டும் என்பதைப் பத்திரிக்கைகள் கட்டாயமாக்கினார்கள்.
யாத்திரை மோசடிகள் ஒடுக்கப்பட்டதன் பின்பாகப் பெஜவாடா ரந்தேரி மந்திர மை என்றொரு மோசடியைத் துவக்கினான். இதன்படி நகரின் முக்கியப் பிரமுகர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி வைத்தான்.
“ஐயா, உங்கள் கையெழுத்து நிமிர்ந்தும் தீர்க்கமாயுமிருப்பதால் சத்தியத்தில் பிரியமுள்ளவராயும் கபடற்றவராயுமிருப்பீர்கள். எக்காரியத்தையும் துணிந்து செய்ய வல்லவராக இருப்பீர்கள். ஆனால் கையெழுத்திலுள்ள அட்சரங்கள் சீராக அமையப்பெறாது ஒடுங்கியிருப்பதால் உங்களுக்குத் தொழிலிலும் குடும்பத்திலும் மிகப் பெரிய தீங்குகள் நேரிடக்கூடும். இதனால் பொருள்சேதமும் உயிர்சேதமும் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆகவே நாங்கள் அனுப்பும் மந்திரமையில் தொட்டு எழுதும்போது உங்கள் கையெழுத்து மந்திர எழுத்தாக மாறி சகல சுபீட்சங்களும் உங்களுக்கு வந்து சேரும். நீங்கள் குபேர சம்பத்து அடைவீர்கள் என்பது உறுதி.
இந்த மந்திரமையைப் பெறுவதற்கு ரூபாய் நூறு அனுப்பி வைத்தால் உங்கள் வீடு தேடி மைப்புட்டியும் விசேச பேனாவும் வந்து சேரும். உங்கள் தலையெழுத்தை மாற்றப்போகும் மையிற்காக நூறு ரூபாய் செலவு செய்யத் தயங்க வேண்டாம். இவண் லோகோபகாரி“ என்றிருந்தது.

ரந்தேரி குறிப்பிட்ட முகவரிக்குப் பணம் அனுப்பியவர்களுக்கு மைப்புட்டியும் பேனாவும் வந்து சேர்ந்தது. ஆனால் அந்த மைப்புட்டியும் பேனாவும் எட்டு அணாவிற்கு மேல் பெறாதது என்று அவர்கள் அறிந்த போது தங்கள் விரலில் தாங்களே சுத்தியலால் அடித்துக் கொண்டது போல உணர்ந்தார்கள்.
ரந்தேரியிடம் ஏமாந்தவர்களில் பதினாறு பேர் யாத்திரைக்குப் பதிவு செய்தும் மந்திர மை வாங்கியும் இரண்டு முறை ஏமாந்திருக்கிறார்கள். அதில் இரண்டு பேர் பி.ஏ. பட்டம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்று ஒன்பது வகையான மோசடிகளில் ஈடுபட்ட பெஜவாடா கும்பல் தெருநாய் ஒன்றால் மாட்டிக் கொண்டது விசித்திரமானது. காவல்துறையின் விசாரணையின் போது கனகம்மா என்ற பெண்ணும் அவளது இரண்டு சகோதரர்களும் இணைந்து இந்தக் குற்றங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.
கனகம்மாளும் அவளது சகோதரர்களும் ராமாயப்பட்டினத்தில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்கள். அந்த ஊரிலிருந்த நாய்கள் அவர்களை எங்கே பார்த்தாலும் வெறிக் கொண்டது போலக் குலைத்தன. எந்த வேஷத்தில் வந்தாலும் நாய்களிடமிருந்து தப்ப முடியவில்லை. சில நேரம் அவர்களின் பின்னால் நாய் கூட்டமே குரைத்தபடி பின்தொடர்ந்தன. தூக்கமின்மையால் அவதிப்பட்ட கனகம்மாவால் நாயின் இடைவிடாத குரைப்பொலியை தாங்க முடியவில்லை
இதற்காகவே அவர்கள் ரயிலிலே ஊர்விட்டு ஊர் சென்றபடியே இருந்தார்கள். ஆனால் எந்த ஊருக்குப் போய் இறங்கினாலும் அங்குள்ள நாய்கள் அவர்களை ஆவேசமாகக் குரைத்தன. துரத்தின.
ஒரு நாள் கனகம்மா தங்கியிருந்த வீட்டின் முன்பாகச் செம்பட்டை நிறத்திலிருந்த நாய் ஒன்று வானை நோக்கி தலையை உயர்த்தி ஊளையிட்டபடி நின்றிருந்தது. அவர்கள் ஆத்திரத்தில் கடுகும் மஞ்சளும் கலந்த தண்ணீரை அதன்மீது ஊற்றி விரட்டினார்கள். ஆனாலும் அந்த நாய் போக மறுத்தது. இரவிலும் அதன் குரலை அடக்க முடியவில்லை. எதற்காக நாய் இப்படிப் பகலிரவாக ஊளையிடுகிறது எனச் சந்தேகம் கொண்டு காவல்துறையினர் விசாரித்த போது பெஜவாடா கும்பல் வசமாகச் சிக்கிக் கொண்டது.
குற்றம் என்பது ஒரு பள்ளம். ஒரு விரிசல். அது நீதியால் நிரப்பபட்டுவிடும் என்கிறார்கள். கனகம்மா விஷயத்தில் அப்படித் தான் நடந்திருக்கிறது.
March 13, 2025
குற்ற முகங்கள் 3 உயரன் அவிபாதி
சுமார் 228 ஆண்டுகளுக்கு முன்பு மதராஸ் ஜார்ஜ் கோட்டையின் உள்ளே கொலை மற்றும் திருட்டிற்காக உயரன் அவிபாதி மற்றும் இரண்டு பிச்சைக்காரர்களுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதில் அவிபாதியின் கழுத்திற்கு ஏற்ப சிறிய தூக்கு கயிறு தயாரிக்கபட்டது. ஒன்பது கொலைகள் செய்ததாகக் கைது செய்யப்பட்ட அவிபாதி நான்கு அடி எட்டு அங்குல உயரம் கொண்டிருந்தான்.
தூக்கிலிடப்பட்ட போது அவனுக்கு வயது முப்பது. ஒவ்வொரு கொலையும் தனது உயரத்தை ஒரு அங்குலம் உயர்த்திவிட்டதாக அவன் நம்பினான்.
பிறப்பிலே குள்ளனாக இருந்த அவிபாதி தனது உயரம் குறித்து மிகுந்த தாழ்வுணர்வு கொண்டிருந்தான். பொது இடங்களில் அவனைப் பலரும் கேலி செய்வதால் கோபம் கொண்டான். இதற்காகவே பகலில் வீதியில் நடமாடாமல் ஒளிந்து வாழ்ந்தான்.
வசதியான குடும்பத்தில் பிறந்தவன் அவிபாதி. ஆனால் பணத்தால் தனது உயரத்தை அதிகமாக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்டிருந்தான்.
தரையில் நிற்கும் போது அவன் குள்ளமானவன் என்று தெரிவதால் தரையில் நிற்க மறுத்தான். இரவில் பூம்பூம்மாடு போல அலங்கரிக்கபட்ட காளை ஒன்றின் மீது அமர்ந்து பவனி வந்தான். பனைமர உயரத்தில் மரக்கோபுரம் அமைத்து அங்கே தங்கிக் கொண்டான். வில் வித்தையில் நிகரற்றவனாக இருந்தான். என்ன சாகசங்கள் செய்தாலும்.உலகம் அவனைக் குள்ளன் என்றே அழைத்தது.,
குற்றமே மனிதனின் உயரத்தை பெரிதாக்குகிறது என்று அவிபாதி கண்டுபிடித்தான். அதுவும் பட்டப்பகலில் சலவைத்துறையில் வைத்து வெங்குராவ் என்பவனை வெண்கலப் பூண் போட்ட தடியால் அடித்துக் கொலை செய்த போது அவிபாதி ஆறடிக்கும் மேலாக வளர்ந்து நிற்பதாக உணர்ந்தான். அவனது குரூர கொலையைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் அவன் விஸ்வரூபம் கொண்டது போலவே பயந்தார்கள்.
கொத்தவாலின் ஆட்களிடமிருந்து தப்பி ஒளிந்து கொண்டுவிட்ட அவனைக் கைது செய்வதற்காகக் காவல்படையினர் தேடுதலை மேற்கொண்டார்கள். தப்பி வாழும் போது உண்மையில் தான் விடுவிடுவென வளர்ந்து கொண்டிருப்பதாக அவிபாதி உணர்ந்தான். காவலர்களுக்குப் பயந்து பல்வேறு வேஷங்கள் புனைந்து கொண்டான். சில காலம் கரடி உருவம் கொண்டு சுற்றியலைந்தான் என்கிறார்கள்.
இந்த நாட்களில் அவன் தன்னை உயரன் அவிபாதி என்று அழைத்துக் கொண்டான். குட்டையான ஆண்களைப் பெண்கள் விரும்புவதில்லை என்பதை நினைத்து ஆத்திரம் கொண்டான் தனது உயரத்தை உலகிற்கு அடையாளம் காட்டுவது போல இரட்டையர்களான கோகிலா கோமளா இருவரையும் ஒரே மேடையில் வைத்துத் திருமணம் செய்து கொண்டான்.
அவர்கள் இருவரும் ஆறடிக்கு சற்று குறைவான உயரம் கொண்டிருந்தார்கள். மாநிறத் தோற்றம், அந்தத் திருமணத்திற்கு வரும் போது அவன் கட்டைக்காலில் நடந்து வந்தான் என்றார்கள். அதாவது உயரமான ஒரு மூங்கில் கழியில் குறுக்குக் கொம்பு ஒன்றைக் கட்டி அதன்மேல் ஏறிநின்று கைகளால் கழியைப் பற்றிக்கொண்டு தத்தித் தத்தி நடந்து வந்திருக்கிறான். தாலி கட்டும் போது மணப்பெண்கள் இருவரும் மண்டியிட்டு தான் அமர்ந்திருந்தார்கள். தன்னைப் போலப் பிள்ளை பிறந்துவிடக் கூடாது என்று நினைத்த அவிபாதி இரண்டு மனைவிகளையும் முத்தமிட மட்டுமே செய்தான் என்றும் சொல்கிறார்கள்.

இரண்டரை வருஷங்கள் தேடிச்சலித்து முடிவில் வெள்ளைக்கார அதிகாரி ஜான் ஆர். மெக்லேன் அவனைக் கைது செய்த போது இந்தக் குள்ளனா கொலையைச் செய்தவன் என்று நம்பமுடியாமல் திகைத்துப் போனார். அதை விடவும் அவன் இரண்டு பெண்களைத் திருமணம் செய்திருந்ததைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
நீதி விசாரணையின் முடிவில். அவனுக்கு விசித்திரமான தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி அவிபாதி மரத்தாலான சுழலும் பொறி ஒன்றினுள் நிறுத்தப்பட்டான். சூரிய வெளிச்சம் நேரடியாக அவன் கண்ணில் விழும்படி அந்தப் பொறி உருவாக்கபட்டிருந்தது. சூரியனின் நகர்விற்கு ஏற்ப அந்தப் பொறியும் இயங்கும் என்பதால் காலை முதல் சூரியன் மறைவது வரை அவனது கண்கள் சூரியனை பார்த்தபடியே இருக்க வேண்டும். தன்னை அறியாமல் அவன் கண்களை மூட முயன்றால் பொறியிலிருந்த ஊசி கண்ணுக்குள் சொருகிவிடும். ஆகவே அவன் இடைவிடாமல் சூரிய வெளிச்சத்தைப் பார்த்துக் கொண்டிருந்து ஒரே நாளில் குருடாகிப் போனான்.
இந்தத் தண்டனைக்குப் பின்பு அவிபாதி தான் ஒரு பற்குச்சியை விடவும் சிறியதாகிவிட்டது போல உணர்ந்தான். பழிவாங்க வேண்டும் என்ற ஒரேயொரு உணர்வு மட்டுமே அவனிடம் கொப்பளித்தது. தன்னை அவமானப்படுத்திய ஜான் ஆர். மெக்லேனின் மகள் மற்றும் மனைவியை இரண்டு பிச்சைக்காரர்களின் உதவியோடு கொலை செய்தான். அந்தக் கொலைகளின் காரணமாக அவன் மதராஸின் அச்சமூட்டும் பெயராக உருமாறினான்.
அதன் பின்பாக அவன் செய்த கொலைகள் எதற்கும் காரணம் கிடையாது. யாரை கொலை செய்தான் என்று கூட ஆள் அடையாளம் அவனுக்குத் தெரியாது. கொலைகளின் வழியே உயரமாகிக் கொண்டேயிருந்தான்.
கடந்தகால அவமானங்களின் கசப்பினை மனது உணரும் நாளில் அவன் திருட்டும் கொலைகளும் செய்திருக்கிறான். முடிவில் அவனையும் இரண்டு பிச்சைக்காரர்களையும் வேப்பேரி நாடக கொட்டகை ஒன்றில் வைத்து கைது செய்தார்கள்.
அதன் சில நாட்களிலே தூக்கு தண்டனையும் நிறைவேற்றப்பட்டது. இறந்த அவனது உடலை வெள்ளைக்காரர்களே புதைத்தார்கள். அவனது விருப்பப்படி உடலைப் புதைக்க ஆறடி குழி தோண்டப்படவில்லை. ஒரே குழியில் இரண்டு பிச்சைக்காரர்களுக்கு நடுவே நோயில் இறந்த சிறுவனின் உடலைப் போல அவிபாதியின் உடலும் சேர்த்துப் புதைக்கப்பட்டது.
சில மாதங்களின் பின்பு அந்தச் சமாதியின் மீது ஒற்றைப் புல் வளர்ந்து காற்றில் ஆடிக் கொண்டிருந்தது. அது ஏதோ சொல்லிக் கொண்டிருப்பது போலிருந்தது. அது உயரன் அவிபாதியின் கதை தானோ என்னமோ.
March 12, 2025
குற்றமுகங்கள்- 2 தங்கப்பல் மோனி
தங்கப்பல் மோனியின் பூர்வீகம் எதுவெனத் தெரியவில்லை. ஆனால் அவன் சீனத்தகப்பனுக்கும் தெலுங்குப் பெண்ணிற்கும் பிறந்தவன் என்றார்கள். சப்பை மூக்கும் சீனப் புருவமும் கொண்டிருந்தான். தொங்கு மீசை வைத்துவிட்டால் சீனனே தான். மசூலிப்பட்டினத்தின் துறைமுகத்தில் மோனி வளர்ந்தான். அந்த நாட்களில் சுவரின் வெடிப்பில் வளரும் செடியைப் போலிருந்தான்.

யார் யாரோ வீசி எறிந்த எச்சில் உணவுகளைச் சாப்பிட்டான். ஒரு கப்பலை விழுங்கி விடுமளவிற்கு அவனுக்குப் பசியிருந்தது. உணவு கிடைக்காத இரவுகளில் நட்சத்திரங்களைப் பறித்து உண்ண முயற்சித்தான். கோபம் தான் அவனை வளர்ந்தது. மௌனத்தைச் சிறிய கத்தியைப் போல மாற்றி வைத்துக் கொண்டான். அலட்சியத்தைத் தொப்பியாக அணிந்து கொண்டான்.
தனது பதினாறாவது வயதில் கப்பல் மாலுமியான சார்லஸ் ஃப்ரையட் என்பவனோடு மோனி சண்டையிட்டு ஒரு விரலை இழந்துவிட்டான். அதுவும் மோதிர விரல். ஆகவே மோனியின் வலது கையில் நான்கு விரல்களே இருந்தன. அது தான் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்தது என்று மோனி நம்பினான்.
அவனைக் கப்பல் எலி என்று அழைத்தார்கள். திருடுவதில் உள்ள சாமர்த்தியம் தான் காரணம். துறைமுகத்திற்கு எந்தக் கப்பல் வந்து நின்றாலும் அதிலிருந்த பொருட்களில் ஒருபகுதி காணாமல் போய்விடும். யார் திருடுகிறார்கள். எப்படித் திருடுகிறார்கள். கடலில் அதை எப்படிக் கொண்டு போகிறார்கள் என்று கண்டறிய முடியாது. ஆனால் அதை மோனி செய்திருப்பான். கடலைக் கூட்டாளியாகக் கொள்ளாமல் திருட முடியாது என்பது அவனது நம்பிக்கை.
இங்கிலாந்தில் பிளேக் நோய் பரவிய காலத்தில் புறப்பட்ட இம்பீரியல் என்ற கப்பல் மசூலிப்பட்டினம் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்திருந்தது. அந்தக் கப்பலில் வந்த அனைவரும் இறந்துவிட்டார்கள் என்றும் அதில் ஏற்றப்பட்டிருந்த பொருட்களைத் துறைமுகத்தில் இறக்கி வைத்தால் அங்கும் பிளேக் வந்துவிடும் என்று வெள்ளைக்காரர்கள் பயந்தார்கள்.
துர்நாற்றம் வீசிய அந்தக் கப்பலை ஏறிட்டுப் பார்த்தால் கூடக் கொள்ளைநோய் வந்துவிடும் என நம்பினார்கள்.

கைவிடப்பட்ட அந்தக் கப்பலில் இருந்த சரக்குகளை மோனி தனது ஆட்களோடு திருடுவதற்காகச் சென்றான். இறந்த உடல்களின் விரல்களைக் கருமித் தின்னும் எலிகள் அவர்களின் காலடியோசை கேட்டு ஒடின. கப்பலில் இருந்த பொருட்களைத் தனதாக்கிக் கொண்டு இறந்த உடல்களுடன் கப்பலை தீவைத்து எரித்தான். அன்றிரவு முழுவதும் மோனி உற்சாகமாக நடனமாடினான்.
பிளேக் கப்பலில் கிடைத்த பொருட்களை விற்ற பணம் தான் மோனியை பணக்காரனாக்கியது. அதன்பின்பு மோனி எப்போதும் பட்டு அங்கி அணியத் துவங்கினான். வெள்ளியில் செய்த பல்குச்சியை வைத்துக் கொண்டான். பாரசீக மதுவை அருந்தினான். முயல்கறியை விரும்பி சாப்பிட்டான்.
தன்னைக் கௌரவமான ஆளாகக் காட்டிக் கொள்ளத் தனது முன்பற்களில் இரண்டை அவனே உடைத்துக் கொண்டு தங்கப்பல் கட்டிக் கொண்டான். அதன்பிறகே அவனைத் தங்கப்பல் மோனி என்று அழைக்கத் துவங்கினார்கள்.
மோனிக்கு மூன்று காதலிகள் இருந்தார்கள். ஆனால் அவர்களில் எவரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. திருடனாக இருந்தாலும் அவன் இரவில் தனியே செல்ல பயப்பட்டான். அவனுடன் எப்போதும் ஏழெட்டு பேர் உடனிருந்தார்கள். அவன் காதலியை அணைத்தபடி உறங்கும் போது கூடக் கட்டிலை ஒட்டி இரண்டு அடியாட்கள் தரையில் உறங்குவார்கள்.
கிணற்றடியில் குளிக்கும் போது கூடத் துண்டை வைத்துக் கொண்டு ஒருவன் திரும்பி நின்றபடி இருக்க வேண்டும்.
மோனியிடம் திருடுவதில் கைதேர்ந்த முப்பது பேருக்கும் மேலாக இருந்தார்கள். அவர்கள் வெட்டுக்கிளிகள் போல ஒன்றாகச் செல்வார்கள். திருடுவார்கள். மோனி கொடுப்பதைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வார்கள். திருடச் செல்லும் போது எல்லோரும் ஊமையாகிவிட வேண்டும். ஒரு வார்த்தை கூட உதட்டிலிருந்து வெளிப்பட்டுவிடக்கூடாது என்பது அவனது நம்பிக்கை.
மசூலிப்பட்டினத்திலிருந்த கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளால் அவனை ஒடுக்க முடியவில்லை.
இந்நிலையில் மசூலிப்பட்டினத்தில் ஒரு செய்தி வேகமாகப் பரவியது. அதாவது தங்கப்பல் மோனி திருடனில்லை. அவன் முந்திய பிறவியில் பெரிய மகான். ஞானி. அவன் வணிகர்களிடமிருந்து எதைத் திருடிச் சென்றாலும் திருட்டுக் கொடுத்தவருக்கு அதிர்ஷ்டம் வந்துவிட்டதாக அர்த்தம். ஆகவே மோனி திருடியதற்காக எவரும் வருத்தமடைய வேண்டாம். அவன் திருடுவதற்கு அனுமதியுங்கள்.
யார் இதை உருவாக்கினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் வணிகர்கள் இதை நம்பத் துவங்கினார்கள். கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் இதைக் கேட்டு கேலி செய்தார்கள்.
அதன்பிறகு மோனி கப்பலிலோ, துறைமுகத்திலோ எதைத் திருடிச் சென்றாலும் வணிகர்கள் சந்தோஷப்பட்டார்கள். அதிர்ஷ்டத்தின் கை தங்களைத் தொடுவதாக உணர்ந்தார்கள். இதனால் மோனிக்குத் திருடுவதில் ஒரு தடையும் ஏற்படவில்லை.
சில நேரம் வணிகர்கள் தங்கள் இடத்திற்கு வந்து திருடும்படியாக மோனிக்கு அழைப்பு விடுத்தார்கள். துறைமுகம் வந்து சேரும் சரக்குக் கப்பலில் ஒரு பங்கு மோனிக்கு எனத் தனியே பிரித்து அளிக்கபட்டது.
திருடுவதில் தடைகள் இல்லாத போது திருடன் நனைந்த பஞ்சைப் போலாகி விடுகிறான். தன்னால் எந்த அதிர்ஷ்டமும் கிடைக்காது என்று தங்கப்பல் மோனி கூச்சலிட்ட போதும் எவரும் அதை ஏற்கவில்லை.
ஒரு நாள் தங்கப்பல் மோனிக்கு ஒரு விசித்திர கனவு வந்தது. அதில் அவன் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் மாட்டு வண்டியில் கொண்டு வரப்படுகிறான். சாலையில் வேடிக்கை பார்க்கும் ஆட்கள் அவனைக் கல்லால் எறிகிறார்கள். மோனியை தூக்கு மேடைக்கு அழைத்துப் போகிறார்கள். அப்போது கூட்டத்திலிருந்த ஒரு சிறுவன் தனக்கு மோனியின் தங்கப்பல் வேண்டும் என்று கேட்கிறான். தட்டி எடுத்துக் கொள் என ஒரு கல்லை கொடுத்து அனுப்புகிறார்கள். கைகள் கட்டப்பட்ட நிலையில் உள்ள மோனியின் தலையைப் பிடித்துக் கொண்டு அந்தச் சிறுவன் ரத்தம் சொட்ட சொட்ட இரண்டு பற்களையும் தட்டி எடுக்கிறான். வலி தாங்க முடியாமல் மோனி அலறுகிறான். அந்தப் பையன் மகிழ்ச்சியோடு கைகளை உயர்த்திக் காட்டுகிறான். அதில் இரண்டு தங்கப் பற்கள். கூட்டம் ஆரவாரம் செய்கிறது.
என்ன கனவு இது. இப்படி நடக்கக் கூடுமா. மோனி குழம்பிப் போனான். மசூலிபட்டனத்திலிருந்து உடனே வெளியேறி போய்விட வேண்டும் என்று முடிவு செய்தான். அதை யாரிடமும் அறிவிக்காமல் நள்ளிரவில் சிறிய படகில் புறப்பட்டுச் சென்றான்.
அந்த இரவில் கடலில் வைத்து மோனி கொல்லப்பட்டான். யார் அவனைக் கொன்றார்கள் என்று தெரியவில்லை. ஆனால் கொன்றவன் மோனியின் இரண்டு தங்கப்பற்களைப் பிடுங்கிச் சென்றிருந்தான்.
March 11, 2025
நிதானத்தின் பிரபஞ்சம்
கவிஞர் மணி சண்முகம் ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளின் மீது மிகுந்த விருப்பம் கொண்டவர்

ஹைக்கூவின் நால்வராக அறியப்படும் பாஷோ, பூசான், கோபயாஷி இஸ்ஸா, மசோகா ஷிகி ஆகியோரின் தேர்வு செய்யப்பட்ட கவிதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.
ஜப்பானிய ஹைக்கூ வரிசை என எட்டு நூல்களாக விஜயா பதிப்பகம் அழகிய வடிவில் வெளியிட்டுள்ளார்கள்.

ஹைக்கூ கவிதைகள் கூழாங்கற்கள் போன்றவை. அவற்றின் அழகும் தனித்துவமும் முழுமையும் வியப்பூட்டக்கூடியது, எளிய கவிதைகளைப் போலத் தோற்றம் தந்தாலும் இவற்றை மொழியாக்கம் செய்வது சவாலானது. மணி சண்முகம் சிறப்பாக, ஜப்பானியக் கவிதையின் கவித்துவம் மாறாமல் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.
அத்தோடு ஹைக்கூ கவிதையின் வரலாறு மற்றும் சிறப்புகள் குறித்து விரிவான முன்னுரையும் எழுதியிருக்கிறார்.
அவசர உலகிலிருந்து மீட்டு நிதானத்தின் பிரபஞ்சத்திற்கு உங்களைக் கொண்டு வருவதே ஹைக்கூவின் பயன்பாடு என்கிறார் மணி சண்முகம். இது மிகச்சரியான புரிதல்.
இயற்கையில் ஒரு அவசரமும் இல்லை. ஒரு புல் தான் வளர்வதற்கு எவ்வளவு காலம் தேவையோ அதையே எடுத்துக் கொள்கிறது. தன்னியல்பில் அது காற்றுடன் கைகோர்த்து நடனமிடுகிறது. புல்லின் நிமிர்வு தனித்துவமானது.
இயற்கையின் முடிவற்ற இயக்கம் மற்றும் இசைவு வியப்பூட்டக்கூடியது. ஹைக்கூ கவிஞர்கள் சொற்களை வண்ணங்களாக்கி இயற்கையின் சலனங்களை பதிவு செய்கிறார்கள். மின்னல்வெட்டு போல ஒரு பளிச்சிடல். ஒரு அதிர்வு அக்கவிதைகளில் வெளிப்படுகிறது.

மழையின் ஒரு துளி வாழை இலையில் பட்டு உருளும் போது ஏற்படும் அதிர்வு போலக் கவிதை நுண்மையை உணர வைக்கிறது. தண்ணீருக்குள் இறங்குவது போல எளிதாக, குளிர்ச்சியாக இந்தக் கவிதைகளுக்குள் நாம் பிரவேசிக்கிறோம். நீந்துகிறோம். ஆம். கவிதை வாசித்தல் என்பது ஒருவகை நீச்சலே.
இயற்கையை நாம் பயனுள்ளது, பயனற்றது, பெரியது, சிறியது எனப் பிரித்து வைத்திருக்கிறோம். ஹைக்கூ கவிதைகள் இந்த வேறுபாட்டினை அழிக்கின்றன. மாறிக் கொண்டேயிருக்கும் இயற்கையின் மாறாத தன்மைகளை, நிரந்தர வசீகரத்தை அடையாளம் காட்டுகின்றன.
குளிர்கால முதல்மழை
குரங்குக்கும் தேவைப்படுகிறது
வைக்கோல் அங்கியொன்று.
-பாஷோ
••
தாடைகளில்
செம்மலர்களை அடக்கிக் கொண்டு
பாடுகிறது வெட்டுக்கிளி
-இஸ்ஸா
••
எங்கும் நிறையும்
தவளையின் ஒசை
தன்னியல்பு பிறழாத நிலவு
-ஷகி
••
அறுவடைக்கால நிலவு
அங்கும் ஒரு பறவை இருக்கிறது
இருளைத் தேடிக் கொண்டு
-சியோ நி
••
வெற்றி பீரங்கி
ஒரு கமேலியா பூ விழுகிறது
அதனுள்
-ஷகி
••
இந்தக் கவிதைகளில் நாம் முன்பே அறிந்து வைத்துள்ள இயற்கை காட்சிகள் அறியாத கோணத்தில் அறியாத பார்வையுடன் வெளிப்படுகின்றன. பீரங்கியினுள் விழும் பூ மறக்க முடியாத காட்சிப்படிமம்.
ஹைக்கூ கவிதைகள் இயற்கையை உணர்வதற்கும் அதன் மாறாத அழகை, உண்மையை, ஒழுங்கை, ஒழுங்கின்மையைப் புரிந்து கொள்வதற்கும் உதவுகின்றன. அதே நேரம் நம்முடைய அகம் இயற்கையோடு இணையும் புள்ளியை, நமது இருப்பின் எடையை, எடையின்மையைப் புரிய வைக்கின்றன. அசைவின்மை குறித்தும் அசைவு குறித்தும் இந்தக் கவிதைகளின் வழியே ஆழமாகப் புரிந்து கொள்கிறோம்.
ஹைக்கூ கவிதைகள் மின்மினியின் மென்னொளியைப் போல வசீகரிக்கின்றன. இதம் தருகின்றன.
ஹைக்கூ கவிதைகளின் மீது மணிசண்முகம் கொண்டுள்ள ஆழ்ந்த ஈடுபாட்டிற்கும் அவரது சிறப்பான மொழியாக்கத்திற்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.
போரும் வாழ்வும் – கூட்டு வாசிப்பு
சீன எழுத்தாளரான யியுன் லி டால்ஸ்டாயுடன் எண்பத்தைந்து நாட்கள் என்றொரு நூலினை எழுதியிருக்கிறார். இது போரும் வாழ்வும் நாவலை வாசித்த கூட்டு அனுபவத்தைப் பற்றியது.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நண்பர்கள் பலரும் ‘ஒன்றாக ஒரு நாவலைப் படிக்க வேண்டும்’ என்ற எண்ணத்தினை உருவாக்கினார்கள். அதற்காக 1200 பக்கங்களுக்கும் மேலாக உள்ள போரும் வாழ்வும் நாவலை தேர்வு செய்தார்கள். இந்தத் தொடர்வாசிப்பு ஒரு புதிய நிலத்திற்குப் பயணம் செய்வது போன்ற அனுபவத்தை உருவாக்கியது.

ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரம் நாவலின் சில பக்கங்களைப் படிக்க வேண்டும். அது குறித்து யியுன் லி தனது கருத்துகளைப் பகிர்ந்து கொள்வார் என்பது ஏற்பாடு
மார்ச் 18, 2020 அன்று நாவலைப் படிக்கத் தொடங்கி, எண்பத்தைந்து நாட்களுக்குப் பிறகு, ஜூன் 10, 2020 அன்று, கடைசிப் பக்கங்களைப் படித்தார்கள். இந்தக் கூட்டுவாசிப்பு மகத்தான நாவல்களைப் புரிந்து கொள்ளவும் கொண்டாடவும் வழி செய்தது.
இந்த வாசிப்பின் போது டால்ஸ்டாய் எதனால் மகத்தான நாவலாசிரியராகக் கருதப்படுகிறார் என்பதற்கான சான்றுகளாக அவரது நாவலின் வரிகளைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.
டால்ஸ்டாயின் மேதமை பற்றிய பலரது பார்வைகளும் உள்ளடங்கிய இந்த நூல் கூட்டுவாசிப்பின் முக்கியத்துவத்தை அடையாளம் காட்டுகிறது.
டால்ஸ்டாயின் எழுத்து நுட்பங்களை வியந்து சொல்லும் யியுன் லி இந்த நூலின் முகப்பில் The art of writing depends on the art of reading என்ற மேற்கோளைத் தந்திருக்கிறார்.
நல்ல வாசகரால் தான் நல்ல எழுத்துப் பெருமை கொள்கிறது. அவரே எழுத்தின் நுட்பங்களை ஆழ்ந்து அறிந்து ரசிக்கிறார். சுட்டிக்காட்டுகிறார்.

குதிரைகள் பாலத்தைக் கடந்தன எனப் பொதுவாக டால்ஸ்டாய் எழுதுவதில்லை. பாலத்தைக் கடக்கும் குதிரைகளின் குளம்பொலி எப்படிக் கேட்கிறது என்பதை எழுதுகிறார். இந்தத் துல்லியமே அவரது எழுத்தின் சிறப்பு. காட்சிகளைப் போலவே ஒசையும் நாவலில் மிகத் துல்லியமாக விவரிக்கபடுகிறது.
கதாபாத்திரங்கள் கண்ணீர் வடிப்பதால் வாசிப்பவருக்குக் கண்ணீர் வந்துவிடாது. வாசிப்பவரை கண்ணீர் சிந்த வைப்பது எழுத்தாற்றலின் வெளிப்பாடு. டால்ஸ்டாய் கதாபாத்திரங்களின் உணர்வுகளைக் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார். இந்தக் கலைமேதமையின் காரணமாக வாசிக்கும் நாம் கதாபாத்திரங்களின் அகத்துயரைப் புரிந்து ஆழ்ந்து கொள்கிறோம். கண்ணீர் வடிக்கிறோம். என்கிறார் யியுன் லி.
டால்ஸ்டாய் ஒரு கதையைச் சொல்லும்போது, மலைவாழ்மக்கள் தங்களின் பூர்வீக மலையில் ஏறுவது போல மெதுவாக, சீரான மூச்சுக்காற்றுடன், படிப்படியாக, அவசரப்படாமல், சோர்வில்லாமல் நடந்து கொள்கிறார். அதன் காரணமாகவே அவரது எழுத்து நம்மை அதிகம் வசீகரிக்கிறது என்கிறார் எழுத்தாளர் ஸ்டீபன் ஸ்வேக்.
போரும் வாழ்வும் நாவல் ஒரு விருந்தில் துவங்குகிறது. அந்த விருந்தின் ஊடாக முக்கியக் கதாபாத்திரங்கள் அறிமுகமாகிறார்கள். பிரம்மாண்டமான அந்த விருந்தில் பரிமாறப்பட்ட உணவு வகைகள். அங்கு வந்தவர்களின் அந்தஸ்து, சமூகப் படிநிலைகள். அவர்கள் பேசும் வம்பு பேச்சுகள். பகட்டான. போலியான உரையாடல்கள். ரஷ்ய உயர்தட்டு வாழ்க்கையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை அந்த ஒரு காட்சியிலே டால்ஸ்டாய் விளக்கிவிடுகிறார்.
இந்த நாவலை ஹோமரின் காவியத்திற்கு ஒப்பிட வேண்டும். அந்த அளவு பிரம்மாண்டமானது என்றும் யியுன் லி குறிப்பிடுகிறார்.
நாவலில் இடம்பெற்றுள்ள சிறிய கதாபாத்திரங்கள் கூட முழுமையாகச் சித்தரிக்கபடுகிறார்கள். அவர்கள் நாவலின் வளர்ச்சிக்கு உரிய பங்கினை தருகிறார்கள். இதில் எந்தச் சிறுகதாபாத்திரத்தையும் நம்மால் நாவலை விட்டு விலக்கிவிட முடியாது. ஒன்றிரண்டு வரிகளில் சிறு கதாபாத்திரத்தின் இயல்பை டால்ஸ்டாய் விவரித்துவிடுகிறார்.
டால்ஸ்டாய் 1863 முதல் 1869 வரை போரும் வாழ்வும் நாவலை எழுதினார். இந்தக் காலகட்டத்திற்குள் அவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்துவிட்டார்கள். டால்ஸ்டாயின் மனைவி சோபியா குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு அவரது நாவலின் பிரதியை தனித்தனியாக ஏழு முறை நகலெடுத்து திருத்திக் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் இந்த நாவலுக்குப் பின்னே சோபியாவின் கரங்களும் மறைந்துள்ளன
போரைப் பற்றி எழுதும்போது, டால்ஸ்டாய் பீரங்கி குண்டுகள் மற்றும் போர் களத்தில் இறந்துகிடக்கும் உடல்களைப் பற்றி மட்டும் எழுதுவதில்லை. மாறாக, பீரங்கி குண்டுகள் மற்றும் இறந்த உடல்களைப் பொருட்படுத்தாமல் மக்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதையும் உண்மையாக எழுதுகிறார். அது தான் அவரது சிறப்பு.
Rereading a novel you love is always a special gift to yourself என்கிறார் யியுன் லி. அது முற்றிலும் உண்மையே.
March 10, 2025
ஒற்றைக்குரல்.
எலியா கசானின் வைல்ட் ரிவர் 1960ல் வெளியான திரைப்படம். ஹாலிவுட்டின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக இன்றும் கொண்டாடப்படுகிறது.

ஆவணப்படம் போல நிஜமான காட்சிகளுடன் வைல்ட் ரிவர் துவங்குகிறது. டென்னஸி ஆற்றில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்குக் காரணமாக நிறையப் பொருட்சேதங்கள் மற்றும் உயிர் இழப்பு ஏற்படுகிறது. அப்படி வெள்ளப்பெருக்கில் தனது குடும்பத்தை இழந்த ஒருவர் திரையில் தோன்றி உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுகிறார்.
இந்த ஆபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றத் தடுப்பணைகள் கட்டுவதோடு நீர்மின்சாரம் தயாரிக்கவும் அரசு திட்டமிடுகிறது. இதற்காக டென்னஸி பள்ளத்தாக்கு ஆணையம் என்ற நிறுவனத்தை உருவாக்குகிறார்கள். அந்த நிறுவனம் நிலத்தைக் கையகப்படுத்தும் முயற்சியில் இறங்குகிறது. பெரும்பான்மையான இடங்களைக் கையகப்படுத்தி விடுகிறார்கள். ஆனால் சிறிய திட்டு போல உள்ள கார்த் தீவை அவர்களால் வாங்க முடியவில்லை.

பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் தங்களின் பூர்வீக நிலத்தை விட்டுத் தர முடியாது என எல்லா கார்த்தின் குடும்பம் உறுதியாக இருக்கிறார்கள். அவர்கள் அரசாங்கத்தினர் உள்ளே நுழையக் கூடாது என்ற அறிவிப்பு பலகையைத் தீவின் நுழைவாயிலில் வைத்திருக்கிறார்கள்
கார்த் தீவை காலி செய்ய வைக்கும் பணிக்காக சக் குளோவர் அங்கே வருகிறார்.
முதன்முறையாக எல்லா கார்த்தைச் சந்திக்கிறார். அரசாங்கத்து நபர்களிடம் தான் பேச விரும்பவில்லை என அவள் துரத்தியடிக்கிறாள். எல்லாவின் மகன்களில் ஒருவன் கோபத்தில் அவரை ஆற்றில் தூக்கி வீசி எறிகிறான்.
காவல்துறையின் உதவியைக் கொண்டு அவர்களைக் காலி செய்துவிடலாம் என உயரதிகாரி ஆலோசனை சொல்கிறார். ஆனால் அப்படிச் செய்வதன் மூலம் பெரிய பிரச்சனையாக மாறிவிடும். ஆகவே பேச்சுவார்த்தையின் மூலம் அவர்களைத் தன்னால் வெளியேற்ற முடியும் எனக் குளோவர் நம்பிக்கையுடன் சொல்கிறார்.
அடுத்த முறை தீவிற்குச் செல்லும் போது அவரிடம் தவறாக நடந்து கொண்ட மகனை மன்னிப்பு கேட்க வைக்கிறார் எல்லா.

அத்தோடு குளோவரை அழைத்துச் சென்று தங்களின் குடும்பக் கல்லறைகளைக் காட்டுகிறார். இறந்தவர்களைத் தண்ணீரில் மூழ்கடித்துவிட்டு நாங்கள் வெளியேற வேண்டுமா எனக் கேட்கிறார்.
தேசத்தின் நலன் கருதியும் மக்களுக்கான மின்சார வசதியை ஏற்படுத்தித் தருவதற்காகவும் அவர்கள் நிலத்தை விட்டுத்தர வேண்டும் என்று சக் குளோவர் மன்றாடுகிறார். எல்லா அதனை ஏற்க மறுக்கிறாள். அவளது ஒற்றைக்குரலும் அதிலுள்ள நீதியுணர்வும் சிறப்பாக வெளிப்படுகிறது
ஒரு காட்சியில் எல்லாத் தனது பண்ணையடிமை வளர்க்கும் நாயை தனக்கு விலைக்கு வேண்டும் எனக் கேட்கிறாள். அவன் தர மறுக்கிறான். உன்னைக் கேட்டு உன் நாயை வாங்க வேண்டிய அவசியமில்லை. நான் உனது எஜமானி என்று உத்தரவிடுகிறாள்.
அந்த வேலையாள் எனது நாயை நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் விலைக்குத் தர மாட்டேன் என்று உறுதியாகச் சொல்கிறான். அதை ஏற்றுக் கொண்ட எல்லா இது போலத் தான் நானும் இந்தத் தீவை எதற்காகவும் விட்டுத் தர மாட்டேன் என்கிறாள். அவளது நியாயத்தை எல்லோரும் புரிந்து கொள்கிறார்கள்.
எல்லாவின் பேத்தியான கரோல் தனது கணவன் இறந்த பிறகு அந்தத் தீவுக்குத் திரும்பியிருக்கிறாள். அவளுக்கு இரண்டு பிள்ளைகள். அவள் சக்கிற்கு உதவி செய்வதற்கு முன்வருகிறாள். சக் அவளுடன் நெருங்கிப் பழகத் துவங்குகிறார். இந்த நட்பு ஒரு நாடகம் என நினைக்கும் எல்லாப் பேத்தியைக் கண்டிக்கிறாள்.

ஆனால் சக் தன்னை உண்மையாகக் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கரோல் தெரிவிக்கிறாள்.
எல்லாவிடம் வேலை செய்யப் பண்ணையாட்களைத் தீவை விட்டு வெளியேறச் செய்து புதிய வேலையும் வீடும் பெற்றுத் தருகிறான் சக். இதனால் எல்லா தனிமைப்படுத்தப்படுகிறாள்.
ஒரு நாள் காதலின் தீவிரத்தில் கரோல் சக்கை தீவிற்கு வெளியேயுள்ள தனது பழைய வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள். அங்கே அவர்கள் ஒன்றாக இரவைக் கழிக்கிறார்கள்.
சக் கறுப்பினத்தவரை வேலைக்கு வைப்பதை நகரின் மேயர் விரும்பவில்லை. அத்தோடு அவர்களை வேலைக்கு வைத்துக் கொண்டாலும் வெள்ளைக்காரர்களை விடவும் குறைவான சம்பளமே தரப்பட வேண்டும் என்கிறார். சக் இதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறான். இதனால் உள்ளூர் மக்களின் பல்வேறு அச்சுறுத்தல்களைச் சந்திக்கிறான்.
கரோலைத் திருமணம் செய்து கொள்ள முற்படும் சக்கை பெய்லி என்ற முரடன் தாக்கி காயப்படுத்துகிறான். அவரது காரை உள்ளூர் மக்கள் உடைத்து நொறுக்குகிறார்கள்.
எல்லா மனநலமற்றவள். ஆகவே அவளால் எதையும் சரியாக முடிவு செய்ய முடியாது என்று அறிவித்து நிலத்தை விற்பதற்கு அவளது பிள்ளைகளே முன்வருகிறார்கள். அதைச் சக் ஏற்கவில்லை.
முடிவில் எல்லாவை தீவிலிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்ற காவற்படை தயாராகிறது. இதற்கிடையில் தானாக முன்வந்து அவள் வெளியேறும்படியான இறுதி முயற்சிகளைச் சக் மேற்கொள்கிறான். அது எப்படி நடைபெற்றது என்பதே படத்தின் இறுதிப்பகுதி
தலைமுறையாகத் தாங்கள் வாழ்ந்து வந்த நிலத்தை விட்டுத்தரமுடியாது என்பதில் எல்லா காட்டும் மனவுறுதியும், அந்த நிலத்தை அரசாங்கத்திற்குப் பெற்றுத் தருவதற்காகச் சக் மேற்கொள்ளும் முயற்சிகளும் படத்தில் உண்மையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன இருவரது நியாயங்களையும் கசான் சரியாக வெளிப்படுத்துகிறார். அதிகாரமே முடிவில் வெல்கிறது. எல்லாத் தோற்றுப் போகிறாள். ஆனால் அந்தத் தோல்வியின் வலியை சக் புரிந்து கொள்கிறார்.
எலியா கசான் பிரச்சனைக்கான தீர்வை விடவும் அதில் தொடர்புடையவர்களின் உணர்வுகளை, வலியை நிஜமாகப் பதிவு செய்திருக்கிறார். எல்லாக் கார்த் தனது புதிய வீட்டின் தாழ்வாரத்தில் அமர்ந்திருக்கும் காட்சி மறக்க முடியாதது. அது போலவே வீடு எரியும் காட்சியும். எல்லாவாக ஜோ வான் ஃப்ளீட் சிறப்பாக நடித்திருக்கிறார். நியோ ரியலிச பாணியில் இப்படத்தை கசான் உருவாக்கியுள்ளார்.
வைல்ட் ரிவர் படத்தின் பாதிப்பை இன்றும் பல திரைப்படங்களில் காணமுடிகிறது.
கரோலின் கதாபாத்திரம் தனித்துவமானது. அவள் சக்கிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளக் கேட்கும் காட்சி சிறப்பானது. எல்லாவை தீவிலிருந்து வெளியேற்ற வந்த சக் அமைதியாக நடந்து கொள்கிறான். அவனது தரப்பை உறுதியாக வெளிப்படுத்துகிறான். அவன் காட்டும் மரியாதையை எல்லா புரிந்து கொள்கிறாள்.
ஆற்றின் குரலைக் கேட்டு வளர்ந்த எல்லாவிற்கு இன்னொரு இடத்தில் வாழுவது ஏற்புடையதாகயில்லை. படத்தின் முடிவு நம்மைக் கலங்கச் செய்துவிடுகிறது.
March 8, 2025
குற்றமுகங்கள்- 1 லான்சர் கீச்சான்.
(காலனிய ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற குற்றங்கள், குற்றவாளிகள், காவலர்களின் உலகம் பற்றிய விசித்திரப் புனைவுகளை எழுத வேண்டும் என்பது எனது நெடுநாளைய விருப்பம். குற்றமுகங்களைப் பற்றிய புனைகதைகளாக சிலவற்றை எழுதியிருக்கிறேன். இதில் புனைவும் உண்மையும் கலந்திருக்கின்றன. )

பிரிட்டிஷ் இம்பீரியல் போலீஸின் ஆவணக்குறிப்பு 1863 வி.12ல் இரண்டு முறையும் குறிப்பேடு எம்.16ல் நான்கு முறையும் குறிப்பிடப்பட்டுள்ள லான்சர் கீச்சான் என்ற மதராஸில் வாழ்ந்த பிக்பாக்கெட் உண்மையில் ஒரு ஆண் இல்லை. அவன் பகலில் பெண்ணாகவும் இரவில் ஆணாகவும் இருந்த திருடன் என்று மெட்ராஸ்காவல் துறையின் துணை ஆணையராகப் பணியாற்றிய தஞ்சை ராமச்சந்திர ராவ் குறிப்பிடுகிறார்.
தனது சர்வீஸில் அவனைப் பிடிப்பதற்காக ஏழு ஆண்டுகளைச் செலவழித்ததாகவும் ஆனால் கடைசி வரை அவனைப் பிடிக்க முடியவேயில்லை என்றும் குறிப்பிடுகிறார்.
இதில் அவர் வெட்கத்துடன் ஒத்துக் கொள்ளும் விஷயம் அவரிடமே இரண்டு முறை லான்சர் கீச்சான் பிக்பாக்கெட் அடித்திருக்கிறான் என்பதே. இரண்டு முறையும் அவரது பர்ஸிலிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு காலி பர்ஸினுள் டயமண்ட் குயின் சீட்டு ஒன்றை வைத்து ராமசந்திர ராவ் வீட்டு தோட்டத்திலே போட்டு வந்திருக்கிறான் என்பது அவரை மேலும் கோபம் கொள்ளச் செய்தது.
கீச்சான் பெரும்பாலும் வெள்ளைக்கார சீமாட்டி போலவே வேஷம் அணிந்து கொண்டிருந்தான். அவனை நிஜமான பெண் என நினைத்து நீதிபதி வொய்லியின் மனைவி கேதரின் நட்பாகப் பழகியிருக்கிறாள். அவளுடன் ஒன்றாகக் கீச்சான் நாடகம் பார்க்கச் சென்றிருக்கிறான் என்றும் சொல்கிறார்கள். வொய்லியின் மனைவியை ராமச்சந்திர ராவ் விசாரணை செய்தபோது அது வீண்சந்தேகம் என்றும் தனது தோழி இசபெல் ஒரு போதும் லான்சர் கீச்சானாக இருக்க முடியாது என்று உறுதியாகச் சொன்னாள். அத்துடன் இசபெல் கப்பலில் இங்கிலாந்து புறப்பட்ட போது தானே வழியனுப்பி வைத்ததாகவும் சொன்னாள்.
லான்சர் கீச்சானை பிடிப்பதற்காக ராமச்சந்திர ராவ் தானே இங்கிலாந்து புறப்பட்டுப் போக முயற்சி செய்தார். ஆனால் காவல் துறைஆணையராக இருந்த சார்லஸ் டெகார்ட் ஒரு பிக்பாக்கெட்டினைப் பிடிக்க லண்டன் போக வேண்டியதில்லை என்று அனுமதி தர மறுத்துவிட்டார்.
கீச்சான் பெண் வேஷமிடுகிறான் என்பது ராமச்சந்திர ராவ் உண்டாக்கிய கதை. உண்மையில் அவருக்குக் கீச்சான் யார் என்பதே தெரியாது. அவனை நேரில் கண்டவரில்லை. மதராஸின் ஆயிரமாயிரம் பொதுமக்களில் அவனும் ஒருவன். அவன் வெள்ளைக்காரர்களிடம் மட்டும் திருடினான் என்பதும் அவன் திருடியவர்களில் இருவர் நீதிபதிகள் என்பதும் ஆறு பேர் கிழக்கிந்திய கம்பெனியின் உயரதிகாரிகள் என்பதும் முக்கியமானது.
இந்தியர்கள் எவரும் கலந்து கொள்ள முடியாத விருந்தில் இந்தத் திருட்டு நடந்திருக்கிறது என்பதே அவன் பெண் வேஷமிட்டான் என்ற கதை உருவானதற்கான காரணமாக இருக்கக் கூடும்
பிடிபடாத திருடன் மெல்ல கதையாக மாறுவது காலத்தின் வழக்கம். லான்சர் கீச்சான் பற்றிய கதைகளும் அப்படித்தான் உருவானது. உண்மையில் இந்தக் கதைகளை உருவாக்கியதில் பிரிட்டிஷ்கார்களுக்கு முக்கியப் பங்கிருக்கிறது. அவர்கள் ஒன்று கூடும் போதெல்லாம் லான்சர் கீச்சானைப் பற்றிப் பேசினார்கள். பயந்தார்கள்.
விக்டோரியா கிளப்பில் பெண்களுக்கு அனுமதி கிடையாது. அங்கும் இரண்டு முறை கீச்சான் பிக்பாக்கெட் அடித்திருக்கிறான். அப்படியானால் அவன் பெண் வேஷமிட்டு வரவில்லை என்று தானே அர்த்தம் என்றார் ஹெபர்ட். ஒருவேளை அங்கு மட்டும் அவன் கப்பற்படை அதிகாரியின் தோற்றத்தில் வந்திருக்கக் கூடும் என்றார்கள். காரணம் திருட்டு நடந்த நாளில் நிறையக் கப்பற்படை அதிகாரிகள் வந்திருந்தார்கள்.
கீச்சானுக்கு எப்படி இது போன்ற விருந்துகள். நிகழ்ச்சிகள் நடப்பது தெரிகிறது. யார் அவன் பின்னால் இருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் காவல்துறை ஆணையர் விசாரிக்க ஆள் அனுப்பினார். ஆனால் அவர்களால் ஒரு தகவலையும் கண்டறியமுடியவில்லை
லான்சர் கீச்சானைப் பிடிப்பதற்காக ராமச்சந்திர ராவ் தானும் பெண்வேஷமிட்டுச் சுற்றியலைந்தார் என்றும் சொல்கிறார்கள். ஆனால் அதைப்பற்றிக் காவல்துறையில் எந்த ஆவணப்பதிவுமில்லை.
லான்சர் கீச்சான் எந்த ஊரில் பிறந்தான் என்றோ, அவனது பெற்றோர் யார் என்றோ தெரியவில்லை. ஆனால் அவன் எஸ்.எஸ். பாசில்டன் என்ற ஆங்கிலேயக் கப்பலில் மதுக்கோப்பைகள் மற்றும் சமையற்பாத்திரங்களைக் கழுவும் வேலையில் இருந்தான் என்றும். அந்தக் கப்பலில் இருந்த யாரோ ஒருவர் தான் அவனுக்குத் திருட்டுத் தொழிலை கற்றுத் தந்திருக்க வேண்டும் என்கிறார்கள்.
நிலத்தில் திருட்டுக் கற்றுக் கொள்பவர்களை விடவும் நீரில் திருடக் கற்றுக் கொள்பவர்கள் திறமைசாலிகள். அவர்களை எளிதில் பிடிக்க முடியாது என்பார்கள்.. கப்பலில் வரும் வணிகர்கள். பிரபுகள், ராணுவ அதிகாரிகளின் பர்ஸை திருடிவிட்டு கப்பலிலே ஒளிந்து கொள்வது எளிதானதில்லை. ஆனால் கீச்சான் ஒருமுறையும் பிடிபடவில்லை. அவன் எப்படித் திருடுகிறான் என்பதோ, திருடிய பணத்தை என்ன செய்தான் என்றே யாருக்கும் தெரியவில்லை
குற்றவாளிகள் தங்களுக்கென ஒரு ரகசிய மொழியை உருவாக்கிக் கொள்கிறார்கள். பயன்படுத்துகிறார்கள் அதைக் கண்டறிந்துவிட்டால் கீச்சானைப் பிடித்துவிடலாம் என ராமசந்திர ராவ் நம்பினார். இதற்காகப் பலவகையிலும் முயற்சி செய்தார். ரகசிய எழுத்துக்களை ஆராயத் துவங்கிய ராமசந்திர ராவிற்கு அது முடிவில்லாத புனைவுலகம் என்று தெரிந்திருக்கவில்லை. அது போலவே ரகசிய எழுத்துகளைத் தேடிய தான் எதற்காகத் தீவிரமான ஆன்மீக நாட்டம் கொள்ளத் துவங்கினோம் என்றும் புரியவில்லை. ராமசந்திர ராவ் திடீரென எண்களைக் கடவுளாகக் கருதத் துவங்கினார். உலகம் ஒரு ரகசிய கணக்கின்படி இயங்கிக் கொண்டிருப்பதாக உணர்ந்தார். கடவுள் என்பது யாரும் அறியாத ஒரு விநோத எண் என்று அவர் நினைத்ததை வெளியே சொல்ல முடியவில்லை..
கீச்சானைப் பற்றிய கதைகளை மக்கள் மிகவும் ரசித்தார்கள். உண்மையில் எவர் எங்கே பிக்பாக்கெட் அடித்தாலும் அது கீச்சானின் வேலையாகவே கருதப்பட்டது. இதனால் அவன் திருடர்களால் நேசிக்கப்பட்டான். அவனைக் குற்றத்தின் கடவுளாக வணங்கினார்கள். கீச்சானின் பெயரை சிலர் கைகளில் பச்சை குத்திக் கொண்டார்கள். தப்பிச்செல்லும் போது அவன் சிகரெட் புகையாக மறைந்துவிடக் கூடியவன் என்று மக்கள் நம்பினார்கள்.
கீச்சானின் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலம் அவனது கதையை முடித்துவிட முடியும் எனக் காவல்துறை நம்பியது. இதனால் அடையாளம் தெரியாத உடல் ஒன்றை கடலில் மிதக்கவிட்டு அது கீச்சானின் உடல் என்று அறிவித்தார்கள். கீச்சானை யார் கொன்றார்கள் என்று விசாரணை செய்வது போலப் போலீஸ் நாடகம் நிகழ்த்தினார்கள். ஆனாலும் லான்சர் கீச்சான் யார் என்று கடைசிவரை யாராலும் கண்டறிய முடியவில்லை.
அதன்பிறகான ஆங்கிலேயர்களின் ஆட்சியில் ஏதாவது ஒரு பொருள் தொலைந்து போனால் அதனைக் கீச்சான் என்று குறிப்பிடும் பழக்கம் உருவானது. கீச்சானின் பெயரை ஆங்கில அகராதியில் கூடச் சேர்ந்துவிட்டார்கள் என்கிறார்கள். கப்பலில் நடக்கும் விருந்தில் ஒரு இருக்கை காலியாக விடப்பட்டது. அது கீச்சானுக்கானது. அங்கே ஒரு குவளை மது வைக்கபடுவதும் வழக்கமானது.
நோரா அலெக்சாண்டர் என்ற ஆங்கிலேயப் பெண்மணி தனது இந்தியப் பயணம் பற்றிய நூலில் தான் கீச்சானின் காதலியாக இருந்தேன் என்று ஒரு அத்தியாயம் எழுதியிருக்கிறார். அதில் கீச்சான் ஒரு காஸனோவா போல விவரிக்கபடுகிறார். அவர் முத்தமிடுவதால் பெண்ணின் உதட்டு நிறம் மாறிவிடும் என்றும் குறிப்பிடப்படுகிறது. ஜே. எவிங் ரிச்சி எழுதிய தி நைட் சைட் ஆஃப் லண்டன் நூலில் கீச்சானைப் பற்றிய ஒரு குறிப்பும் காணப்படுகிறது. இதன் பிறகான காலத்தில் இங்கிலாந்தில் கீச்சான் ரகசியக் காதலன் கதாபாத்திரமாக மாறினான்.
காவல்துறை அதிகாரியான ராமசந்திர ராவ் ஓய்வு பெற்று ஞானதேசிகர் என்ற பெயரில் சாதுவாக வாழத் துவங்கிய போது சில நேரங்களில் அவரது மனதில் கீச்சான் என்பது குற்றத்தின் அழிவற்ற குமிழ் என்று தோன்றுவதுண்டு.
எப்படியோ, உலகம் கண்டிராத கீச்சான் ஒரு சொல்லாக நிலைபெற்றுவிட்டான். திருடனின் வாழ்க்கை என்பதே சொற்களாக மிஞ்சுவது தானே.
March 7, 2025
சாய்ந்து கிடக்கும் டம்ளர்
வீட்டில் உள்ளவர்கள் பகலில் உறங்கும் போது சிறுவர்கள் உறங்குவதில்லை. பெரியவர்கள் உறங்குகிற நேரத்தில் சிறார்கள் மிகுந்த சுதந்திரமாக உணருகிறார்கள்.

கையில் கிடைத்த துணியைப் போலப் பகலைச் சுருட்டி எறிந்து விளையாடுகிறார்கள். நிழலைப் போல வீட்டிற்குள் சப்தமில்லாமல் நடக்கிறார்கள்.
பிரிட்ஜை சப்தமில்லாமல் திறந்து குளிர்ந்திருந்த கேக்கை எடுத்து ஒரு கையால் வாயைப் பொத்திக் கொண்டு சாப்பிடுகிறார்கள். உறங்குகிறவர்களை ஏமாற்றுவது எவ்வளவு பெரிய சந்தோஷம்.
உறங்கும் போது பெரியவர்கள் சிறுவர்களாகி விடுகிறார்கள். குறிப்பாக அவர்களின் திறந்த வாய் பசித்த சிறுவர்களின் வாய்ப் போலிருக்கிறது.
தரையில் உறங்குபவர்களைத் தாண்டி நடப்பது ஆனந்தமானது. உறங்குகிறவர்களின் மீது அடிப்பது போல சிறார்கள் பொய்யாகக் கையை ஒங்குவது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.
உறங்குகிறவர்கள் ஏணியின் மீதேறி நிற்பவர்கள் போலிருக்கிறார்கள். விழிப்பு வந்தவுடன் கிழே வந்துவிடுவார்கள்.
பகல் நேர உறக்கத்திலிருக்கும் வீடு என்பது சாய்ந்து கிடக்கும் டம்ளர் போன்றது என்பது சிறுவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
••
இது போன்ற புனைவற்ற குறிப்புகளாக நிறைய எழுதி வைத்திருக்கிறேன்.
இதனை எப்படி வகைப்படுத்துவது எனத் தெரியவில்லை.
ஆங்கிலத்தில் Micro essays, Micro memoirs, Micro stories எனப் பல்வேறு வகைமைகள் இருக்கின்றன. அமெரிக்காவில் நிறைய இளம்படைப்பாளிகள் 100 சொற்களுக்குள் இந்த வகைமையில எழுதுகிறார்கள்.
தமிழில் இதை நுண்ணெழுத்து என்று சொல்லலாம்.
March 6, 2025
தூத்துக்குடியில் ஒரு விழா
எனது தபால் பெட்டி எழுதிய கடிதம் நூலிற்கான அறிமுகவிழா இன்று தூத்துக்குடியில் நடைபெற்றது

தூய மரியன்னை கல்லூரியின் தமிழ்துறையும் புத்தக வாசிப்பு நற்பணி மன்றமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
வாசிப்பு மன்ற பொறுப்பாளர் ரவி இதற்கு முக்கியக் காரணமாக இருந்தார்.




சலூன் நூலகம் மாரியப்பன், ஆசிரியர் ஜெயபால், ஆ. மாரிமுத்து, ப.சக்திவேல் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.



இந்த நிகழ்வில் ஆரோக்கியபுரம் தபால்காரர் காளிமுத்து கௌரவிக்கபட்டிருக்கிறார்.

நிகழ்வில் இருபது மாணவர்கள் தபால் பெட்டி எழுதிய கடிதம் குறித்த தங்களின் வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.


நூலை வாசித்து முடித்த 100 மாணவர்கள் எனக்குப் பாராட்டுக் கடிதம் எழுதி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
மாணவர்கள் ஆர்வத்துடன் புத்தகம் படித்துப் பாராட்டுக் கடிதம் எழுதுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
நிகழ்வு சிறக்க உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றி.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

