S. Ramakrishnan's Blog, page 19

January 8, 2025

நூல் வனம் வெளியீட்டு விழா

இன்று(09.01.2025) மாலை சென்னை புத்தகக் காட்சியில் நூல் வனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஏழு நூல்களை வெளியிடுகிறேன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 08, 2025 23:41

பாரோவின் அரியணை

த டென் கமாண்ட்மெண்ட்ஸ், பென்-ஹர் போன்ற ஹாலிவுட்டின் பிரம்மாண்டமான படங்கள் ஏற்படுத்திய பாதிப்பில் உருவாக்கபட்ட திரைப்படம் பாரோ.  போலந்து நாட்டில் தயாரிக்கபட்ட இப்படம் 1966ல் வெளியானது.

மூன்று ஆண்டுகள் பெரும்பொருட்செலவில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். படத்தில் வரும்  பாலைவனக் காட்சிகளுக்கு மட்டும் ஆயிரம் பேருக்கும் மேலான துணை நடிகர்கள் பயன்படுத்தபட்டிருக்கிறார்கள

இப்படத்திற்காக கலை இயக்குநர் 3000 விக்குள் மற்றும் 3000 ஜோடி காலணிகள், கிட்டத்தட்ட 9000 ஆயுதங்கள் மற்றும் 600  பாரம்பரிய ஆடைகளை உருவாக்கியிருக்கிறார். அது போலவே 4000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போன்ற ஒரு படகை மறுஉருவாக்கம் செய்திருக்கிறார்கள். கூடுதலாக ஒரு செயற்கை தீவினையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.  

ஹாலிவுட் படங்கள் போல அரங்கத்திற்குள்ளாகவே படமாக்கப்படாமல் உண்மையான நிலவெளியில் இப்படத்தை உருவாக்கியிருப்பது பாராட்டிற்குரியது.

ஹாலிவுட் பிரம்மாண்டங்களைத் தாண்டிய காட்சியப்படுத்துதல், மற்றும் கேமிரா, நடிப்புப் படத்தைத் தனித்துவமாக்குகிறது. ஜெர்சி கவாலெரோவிச் இதனை இயக்கியுள்ளார். போல்ஸ்லாவ் ப்ரூஸின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. போலந்து சினிமாவில் இப்படம் அடைந்த வெற்றி மற்றும் வசூல் செய்யத் தொகை இந்நாள் வரை முறியடிக்கபடவில்லை.

படத்தின் துவக்க காட்சியின் கண்முன்னே விரியும் பாலைநிலமும் அதில் நடைபெறும் போர்காட்சியும் வரலாற்றில் இப்படிதான் நடந்திருக்கும் என நம்மை நம்ப வைக்கிறது.

எகிப்தின் மன்னரான 13வது ராம்சேயின் கதையைச் சொல்லும் இப்படம் அக் காலத்தில் மதகுருக்கள் எவ்வளவு செல்வாக்குடன் விளங்கினார்கள். மதகுருவை எதிர்த்து மன்னரால் கூட எதுவும் செய்யமுடியாத நிலை எப்படி உருவானது என்பதை விவரிக்கிறது

பண்டைய எகிப்திய ஆட்சியாளர்களான, பாரோக்கள் மன்னராக மட்டுமின்றி மதத் தலைவராகவும் அறியப்பட்டார்கள். கடவுளின் பிரதிநிதியாகவே மக்கள் அவரைக் கருதினார்கள். அவர் எகிப்திய தெய்வங்களுக்குச் செய்ய வேண்டிய சடங்குகளை முன் நின்று நடத்துவது வழக்கம். அவரால் கலந்து கொள்ள முடியாத போது அவரது பிரதிநிதியாக மதகுரு ஒருவரை நியமிப்பது வழக்கம்.. மதகுருக்களுக்கெனத் தனிச் சபையிருந்தது. அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் தலையிடுவார்கள். சுகபோக வாழ்க்கையை மேற்கொண்டார்கள்.

பாலைவனத்தில் சண்டையிடச் சென்ற இளவரசன் ராம்சே தற்செயலாகச் சாரா என்ற அழகான யூதப் பெண்ணைச் சந்திக்கிறான். அவளைக் காதலிக்கிறான். திருமணம் செய்து கொள்கிறான். அதை மன்னர் ஏற்கவில்லை.

இளவரசன் ராம்சே மதகுரு ஹெர்ஹோரின் அதிகாரத்தை எதிர்க்கிறான். தான் மன்னராகப் பதவியேற்றால் மதகுருவின் அதிகாரத்தைப் பறித்துவிடுவேன் என்று வெளிப்படையாக அறிவிக்கிறான். அத்தோடு தனது தந்தை ஹெர்ஹோரின் பேச்சைக் கேட்டு நடப்பதைக் கண்டிக்கிறான்.

ராம்சேயின் காதல் மற்றும் திருமண வாழ்க்கையை விவரிக்கும் படம் அதற்குள் மதம் எப்படிக் குறுக்கிடுகிறது. சதி செய்கிறது என்பதை உண்மையாக விவரித்துள்ளது. குறிப்பாக யூத மனைவிக்குப் பிறந்த குழந்தையை ஏற்க முடியாது என ராம்சேயின் அன்னை வாதிடும் காட்சி மற்றும் ராம்சேயை மயக்க மதகுருக்கள் செய்யும் ஏற்பாடு. வழிபாடு செய்யச் சென்ற ராம்சேயின் முன்னால் தோன்றி மறையும் காமாவின் பிம்பம் எனத் தொடரும் காட்சிகள் சிறப்பாக உள்ளன

தேசத்தின் அனைத்து நிலங்களும் மன்னருக்கே சொந்தமாக இருந்தன. அவர் சட்டங்களை இயற்றினார், வரியை வசூலித்தார் மற்றும் படைத் தளபதியாகப் பணியாற்றினார். அத்தோடு கடவுளின் பிரதிநிதியாகவும் செயல்பட்டார். நைல் நதி விவசாயம் மற்றும் வணிகத்திற்குப் பேருதவியாக இருந்தது. மன்னர்களுக்கு இணையாக வணிகர்கள் விளங்கினார்கள்.

தந்தையின் இறப்பிற்குப் பின்பு மன்னராகப் பதவியேற்கும் ராம்சேயை செயல்பட விடாமல் மதகுருக்கள் தடுக்கிறார்கள். வன்முறையை ஏவிவிடுகிறார்கள். தங்கள் வசமுள்ள பொக்கிஷத்தை தரமறுக்கிறார்கள். இளம் பாரோ ராம்சே எகிப்தில் சீர்திருத்தம் செய்ய நினைக்கிறான். ஆனால் அதை மதகுருக்கள் விரும்பவில்லை. அவர்கள் சதி செய்து அவனை அகற்ற நினைக்கிறார்கள்

பாரோவின் கருவூலம் காலியாக இருக்கும் நேரத்தில் மதகுருக்கள் ரகசிய இடம் ஒன்றில் பெரும் பொக்கிஷங்களை வைத்திருப்பதை ராம்சே அறிந்து கொள்கிறான். அதை மீட்டு மக்களுக்குப் பயன்படுத்த நினைக்கிறான்.ஆனால் கடவுளின் சொத்தை விட்டுதர முடியாது என மதகுருக்கள் மறுக்கிறார்கள்.

இளவரசன் ராம்சே ஃபீனீசிய வணிகர் ஒருவரிடம் கடன் வாங்கும் காட்சி படத்தில் இடம்பெற்றுள்ளது. அந்தக் கால வணிகர்கள் பெற்றிருந்த செல்வாக்கு மற்றும் அவர்கள் மன்னரிடமே வட்டி வசூல் செய்யும் விதம் பற்றிப் படம் உண்மையாகச் சித்தரித்துள்ளது

படத்தில் பயன்படுத்தபட்டுள்ள உடைகள். மற்றும் கலைப்பொருட்கள் யாவும் வரலாற்றுபூர்வமாக ஆராயப்பட்டுச் சரியாகப் பயன்படுத்தபட்டிருக்கின்றன. குறிப்பாக மன்னரின் அரண்மனை, அவரது உடைகள். ராஜசபை. மதகுருக்களின் உடை மற்றும் கோவில்கள் துல்லியமாகச் சித்தரிக்கபட்டிருக்கின்றன. கிசா பிரமிடுகளின் பின்னணியில் சில காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்கள்.

நைல் நதியில் ராம்சே தனது மனைவி சாராவுடன் படகில் செல்லும் காட்சி மிக அழகானது. எகிப்திய ஒவியம் ஒன்று உயிர்பெற்றது போல அந்தக்காட்சி உருவாக்கபட்டிருக்கிறது. வேட்டையின் நடுவில் ராம்சே தனது அன்னையைச் சந்திக்கிறான். மகாராணி வரும் படகு. அதில் நிற்கும் அவளது தோரணை . அவளை எதிர்கொள்ள முடியாமல் சாரா அடையும் குற்றவுணர்வு மிக நேர்த்தியாகப் படமாக்கபட்டுள்ளது. அது போலவே காமா மீதான காதல் மற்றும் அவளது துரோகமும் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது.

புதிதாகக் கட்டப்பட்ட கால்வாயை போர் வீரர்கள் அழிக்கும் போது அதை உருவாக்கியவன் எழுப்பும் ஒலம் மறக்க முடியாதது. அவனால் அதிகாரத்திற்கு எதிராக எதுவும் செய்ய முடியவில்லை. ஆகவே தன்னைப் பலி கொடுத்துக் கொள்கிறான். அந்தக் காட்சி ராம்சேயின் மனதை வேதனைப்படுத்துகிறது.

கிரகணம் ஏற்படுவதை அறிந்த மதகுரு அதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் காட்சி முக்கியமானது. கதாபாத்திரங்களின் கூடவே செல்லும் கேமிரா மிக அழகான கோணத்தில் எதிர்பாராத நகர்வுகளுடன் காட்சியைப் பதிவு செய்துள்ளது.

படத்தில் பலரும் அந்தக் கால வழக்கப்படி இடுப்புத் துணிகளை மட்டுமே அணிந்திருக்கிறார்கள், மதகுருக்கள் மொட்டையடித்த தலையுடன் காணப்படுகிறார்கள். சாண வண்டுகள் மண் உருண்டையை உருட்டிச் செல்லும் துவக்க காட்சி உருவகம் போலக் காட்சியளிக்கிறது.

எகிப்திய அதிகாரப் படிநிலையினையும் அதற்குள் ஏற்படும் மோதல்களையும் படம் மிக நுட்பமாகச் சித்தரித்துள்ளது.

படம் பார்த்துக் கொண்டிருந்த போது நினைவில் மந்திரிகுமாரி திரைப்படம் வந்து போனது. அதிலும் மதகுருவிற்கும் மன்னருக்குமான அதிகார போட்டியே சித்தரிக்கபடுகிறது. மதகுருவாக நடித்துள்ள நம்பியார் பாரோவில் வரும் வில்லன் போலவே மொட்டையடித்த தலையுடன் சித்தரிக்கபட்டுள்ளார். ஆனால் மந்திரிகுமாரி பாரோவிற்கு முன்பாக உருவாக்கபட்ட திரைப்படம். 1950ல் வெளியானது.

ஹாலிவுட் படங்களில் இல்லாத நுண் சித்தரிப்பும் வரலாற்று உண்மையும் போலந்தின் நிகரற்ற படங்களில் ஒன்றாக இதனை வைத்திருக்கிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 08, 2025 00:02

January 6, 2025

மிலன் குந்தேரா நாவல்

செக் எழுத்தாளர் மிலன் குந்தேராவின் வாழ்வின் தாள முடியா மென்மை நாவலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இதனைப் புகழேந்தி மொழியாக்கம் செய்திருக்கிறார்.

இந்த நூலின் வெளியீட்டு விழா இன்று மாலை புத்தகத் திருவிழாவில் உள்ள காலச்சுவடு பதிப்பக அரங்கில் நடைபெறுகிறது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 06, 2025 23:34

January 2, 2025

உதவி தேவை

அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் ஒரு உதவி தேவைப்படுகிறது. டப்ளினில் வசிக்கும் நண்பர்கள் யாரேனும் இருந்தால் தொடர்பு கொள்ளவும்

எனது மின்னஞ்சல் முகவரி

writerramki@gmail.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 02, 2025 21:00

தேவதச்சன் கவிதைகள்

தேவதச்சனின் முழுக்கவிதை தொகுப்பினை தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது. இதில் 2016 வரையிலான அவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. 8ம் தேதி இந்த நூல் வெளியாகிறது. இதனை சென்னை புத்தகத் திருவிழால் உள்ள தேசாந்திரி பதிப்பக அரங்கில் பெற்றுக் கொள்ளலாம். கெட்டி அட்டைப் பதிப்பாக வெளியாகிறது.

கவிதை என்பது எதிரெதிர் உண்மைகளின் தழுவல் என்கிறார் கவிஞர் ஆக்டேவியோ பாஸ் அதனைத் தேவதச்சனின் கவிதைகளை வாசிக்கும் போது நன்றாக உணர முடிகிறது.

தண்ணீரைப் போல நிசப்தமாக, ரகசியமாக, தனக்கான பாதையைத் தானே உருவாக்கிக் கொண்டு செல்கின்றன அவரது கவிதைகள்.

அடையாளம் அழிந்த, வரிசை மனிதனாகிப் போன இன்றைய வாழ்வின் துயர்களை, குழப்பத்தைப் பேசும் இக்கவிதைகள் தினசரி நிகழ்வுகளை அதற்கு அப்பாற்பட்ட சாத்தியங்களாக மாற்றுகின்றன.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 02, 2025 19:19

January 1, 2025

எனது பரிந்துரை -2

அனைவருக்கும் எனது மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

சென்னைப் புத்தகத் திருவிழாவில் நேற்று நிறைய கூட்டம். பலரும் எனக்குப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். அவர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி.

புத்தகத் திருவிழாவில் உள்ள நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தின் கடையில் வங்கச் சிறுகதைகள். ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி போன்ற சிறந்த நூல்கள் கிடைக்கின்றன.

பறவையியலாளர் சாலிம் அலியின் வாழ்க்கை வரலாற்று நூல்

இவான் துர்கனேவின் தந்தையரும் தனயர்களும் நாவலின் சிறப்புப் பதிப்பை நூல் வனம் வெளியிட்டுள்ளது. சிறந்த ரஷ்ய நாவல். துர்கனேவின் எழுத்து நடை கவித்துவமானது. இந்த நாவல் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. நூல்வனம் அரங்கில் இந்த நாவல் கிடைக்கிறது

வைக்கம் முகமது பஷீரின் வாழ்க்கை வரலாற்று நூல். குறிஞ்சி வேலனின் சிறப்பான மொழியாக்கம்.

அகநி வெளியீடு

ஞானபீடம் பரிசு பெற்ற கன்னட எழுத்தாளர் சிவராம் காரந்தின் வாழ்க்கை வரலாற்று நூல். கவிஞர் சிற்பி சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார். மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் இதனை வெளியிட்டுள்ளது

கவிஞர் ஷங்கர ராமசுப்ரமணியனின் தேர்வு செய்யப்பட்ட கவிதைகள். எதிர் வெளியீடு. மிகச் சிறந்த கவிதைகள் உள்ள புத்தகம்.

க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ள பியரெத் ஃப்லுசியோ எழுதிய சிறந்த பிரெஞ்சு நாவல்.

மொழிபெயர்பாளர் வெ. ஸ்ரீராம் எழுதிய இலக்கியக் கட்டுரைகள். பிரெஞ்சு நாவல்கள் மற்றும் இலக்கியப் போக்குகள் குறித்த சிறந்த கட்டுரைகள் கொண்ட தொகுப்பு. பாதரசம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 01, 2025 22:22

December 29, 2024

புத்தகத் திருவிழாவில் எனது உரை

சென்னை புத்தகத் திருவிழாவில் ஜனவரி 3 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு கதைகளிடம் கற்போம் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன். புத்தகத் திருவிழா அரங்கில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

தேசாந்திரி பதிப்பகம் சென்னைப் புத்தகத் திருவிழாவில் அரங்கு அமைத்துள்ளது. ஔவையார் பாதை எனும் ஆறாவது நுழைவாயில் வழியாக வந்தால் அரங்கு எண் 334 மற்றும் 335.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 29, 2024 19:44

December 28, 2024

பெட்ரோ பராமோ

நண்பர் கார்த்திகைப் பாண்டியன் மொழியாக்கத்தில் வெளியாகியுள்ள பெட்ரோ பராமோ நாவலின் அறிமுகக் கூட்டம் ஜனவரி 6 திங்கள்கிழமை மாலை சென்னைப் புத்தகத் திருவிழா அரங்கிலுள்ள சிற்றரங்கில் நடைபெறுகிறது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.

ரூல்போவின் பெட்ரோ பரோமா மற்றும் எரியும் சமவெளி இரண்டு நூல்களையும் எதிர் வெளியீடு வெளியிட்டுள்ளார்கள்.

இந்த அறிமுக நிகழ்வில் பா. வெங்கடேசன் எரியும் சமவெளி சிறுகதை தொகுதி குறித்து உரை நிகழ்த்துகிறார். சுபத்ரா இந்த நூலை மொழியாக்கம் செய்துள்ளார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 28, 2024 22:14

December 27, 2024

எனது பரிந்துரை -1

சென்னை புத்தகத் திருவிழாவில் கிடைக்க கூடிய சில அரிய புத்தகங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்

ஜிலானி பானு எழுதிய கவிதாலயம் நாவல் மிகச்சிறப்பானது. ஒரு கூட்டுக்குடும்பத்தின் கதையை சுதந்திரப் போராட்ட கால வரலாற்றின் பின்புலத்தில் அற்புதமாக எழுதியிருக்கிறார். இந்த நூலின் குறைவான பிரதிகள் நேஷனல் புக் டிரஸ்ட் பதிப்பகத்தில் கிடைக்கின்றன. இந்தப் பதிப்பு தீர்ந்துவிட்டால் அவர்கள் மறுபதிப்பு வெளியிட பல ஆண்டுகள் ஆகும்.

பதேர் பாஞ்சாலி நாவலை எழுதிய விபூதிபூஷண் எழுதிய நாவல். நீண்ட காலத்திற்குப் பிறகு மறுபதிப்பு வெளியாகியுள்ளது. இந்த நாவல் இந்திய இலக்கியத்தின் முக்கிய நாவல்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது. நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ளது

மலையாள இலக்கியத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் கோவிலன் எழுதிய நாவல் தட்டகம். இதனை நிர்மால்யா சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ளது.

கிரண் நகர்க்கர் எழுதி சாகித்ய அகாதமி விருது பெற்ற நாவல் கனவில் தொலைந்தவன்

அக்களூர் இரவி மிக நேர்த்தியாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.

மேவார் ராஜ்ஜியத்தை பற்றிய வரலாற்று நாவல். சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ளது.

சீனாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் பாஜின் எழுதிய குடும்பம் நாவலை அலைகள் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

நாமக்கல் சுப்ரமணியம் இதனை மொழியாக்கம் செய்துள்ளார்.

உலகின் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது.

புகழ்பெற்ற எழுத்தாளர் பிரேம்சந்தின் கோதான் நாவல் இந்திய கிராம வாழ்வினை மிக உண்மையாகச் சித்தரித்துள்ளது. அன்னம் பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது. சரஸ்வதி ராம்நாத் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார்.

3 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 27, 2024 21:26

காருகுறிச்சி புத்தக வெளியீட்டு விழா

நாதஸ்வர மேதை காருகுறிச்சி அருணாசலம் குறித்து இசைவிமர்சகர், ஆய்வாளர் லலிதா ராம் எழுதிய காருகுறிச்சியைத் தேடி நூலின் வெளியீட்டு விழா நாளை மாலை நடைபெறுகிறது. ( டிசம்பர் 28 ).

சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்

இசையுலக இளவரசர் ஜி.என்.பி, பேரலையாய் ஒரு மென் ஷட்கம் என இரண்டு முக்கிய நூல்களை லலிதா ராம் எழுதியிருக்கிறார். நான் அவரது கட்டுரைகளை விரும்பி வாசிக்கக் கூடியவன். இசையின் வரலாறு குறித்தும் நிகரற்ற இசை ஆளுமைகள் பற்றியும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

நூலை ஜீரோ டிகிரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 27, 2024 06:24

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.