S. Ramakrishnan's Blog, page 21

December 12, 2024

எமர்சன் / சிறிய அறிமுகம்.

அமெரிக்கக் கவிஞர், இயற்கையியலாளர் ரால்ப் வால்டோ எமர்சன் பற்றிச் சிறப்புரை  நிகழ்த்த இருப்பதாக அறிவித்த நாளிலிருந்து பலரும் அவரைப் பற்றி ஏன் இப்போது சிறப்புரை ஆற்றுகிறீர்கள் எனக் கேட்கிறார்கள்

இன்றைய வாசகர்கள் பலருக்கும் ரால்ப் வால்டோ எமர்சன் அறிமுகமாகியிருக்கவில்லை.  அவர் 200 வருஷங்களுக்கு முற்பட்டவர். எமர்சனின் முக்கியப் படைப்புகள் தமிழில் மிகவும் குறைவாகவே மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.

வி.ஆர்.எம் செட்டியார் மொழியாக்கம் செய்த விதியும் தன்னம்பிக்கையும் (எமர்ஸன் கட்டுரைகள்) மற்றும் அறிமுகநூலான எமர்ஸன் சிந்தனைகள் ஜெயமோகன் மொழியாக்கம் செய்த இயற்கையை அறிதல் என்ற நூலும் மட்டுமே தமிழில் வாசிக்கக் கிடைக்கிறது.

ஆனால் ஆங்கிலத்தில் எமர்சன் எழுதிய படைப்புகள் 9 தொகுதிகளாக 4000 பக்கங்களும் மேலாக உள்ளன.

எமர்சனின் உரைகள் மற்றும் கட்டுரைகள் இன்றும் பேசுபொருளாக இருக்கின்றன. எமர்சனின் வழிகாட்டுதலிலே தோரூ உருவானார். வேர்ட்ஸ்வொர்த். கால்ட்ரிஜ், விட்மன் போன்ற கவிஞர்கள் அவரது தோழர்களாக இருந்தார்கள்.

எமர்சன் முன்வைத்த ஆழ்நிலைவாதம் மற்றும் தத்துவப் பார்வைகள் குறித்துப் போர்ஹெஸ் விரிவாக எழுதியிருக்கிறார். அவர் அமெரிக்காவின் நிகரற்ற கவி என்றே எமர்சனை மதிப்பீடு செய்கிறார்

எனது கல்லூரி நாட்களில் எமர்சனை வாசித்தேன். அவரை விடவும் தோரூவிடம் அதிக நெருக்கம் கொண்டேன். அமெரிக்கா சென்ற போது தோரூ வசித்த வால்டனுக்குச் சென்று வந்தேன். கடந்த சில ஆண்டுகளாக எமர்சனைத் திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருக்கிறேன். அவர் முன்வைக்கும் கருத்துகள். அவரது மொழிநடை மற்றும் கலை குறித்த பார்வை எனக்கு நெருக்கமாக உள்ளது.

அமெரிக்காவின் புகழ்பெற்ற கவிஞர் மேலி ஆலிவர் எமர்சன் பற்றி சிறப்பான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்.

அதில் எமர்சனின் முக்கிய அம்சம் அவர் இயற்கை மற்றும் சமூகப், பிரச்சினையின் எல்லாப் பக்கங்களையும் ஆராய்கிறார்: எளிய ஆலோசனைகளை வழங்குகிறார் – நாமே விஷயங்களைத் தேடச் சொல்கிறார். அவர் பிடிவாதமாக இருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், நாம் எதையும் ஆழ்ந்து பார்க்க வேண்டும் என்பதே என்கிறார் மேலி ஆலிவர்

நான் ஜென் வழியாக இயற்கை பற்றிய எனது புரிதலை விரிவுபடுத்திக் கொண்டவன். ஆகவே அந்த நோக்கில் எமர்சனை வாசிப்பது என அவரது முக்கியப்படைப்புகளை ஒருசேரப் படித்தேன்

எமர்சன் தனது காலகட்டத்தின் குரலாகவும் விளங்கியிருக்கிறார். ஒட்டுமொத்த மனிதவாழ்வு மற்றும் இயற்கை குறித்த ஆழ்ந்த தேடலில், ஆய்வில் ஈடுபட்டவராகவும் இருந்திருக்கிறார்

எமர்சன் எழுப்பிய கேள்விகள் முக்கியமானவை அவரது சில பதில்கள் எனக்கு ஏற்புடையதில்லை. ஆனால் இயற்கையியலாளர். சமூகப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசியவர். அறிவார்ந்த கவிதைகள் எழுதியவர். ஆன்மவிடுதலைப் பற்றிப் பேசியவர் என்ற அவரது பன்முகத்தன்மை என்னைக் கவர்ந்தது.

எமர்சன் ஒரு சிந்தனைப் பள்ளியை உருவாக்கியிருக்கிறார். அதன் தொடர்ச்சியை இன்றும் அமெரிக்காவில் காண முடிகிறது.

எமர்சனின் படைப்புகள் இயற்கை, சமயம், கலை, காலம், சுதந்திரம், மனித மதிப்பீடுகள் மற்றும் வாழ்வில் சுகதுக்கங்களை எதிர்கொள்வது. போன்றவற்றை முன்னிறுத்தி எழுதப்பட்டவை.

இயற்கையைப் பற்றிப் பேசும் போதெல்லாம் நாம் ஏன் கவித்துவ உணர்வு கொள்கிறோம் என்று கேட்கிறார் எமர்சன்.. பெரும்பாலான மக்கள் சூரியனை ஏறிட்டுப் பார்ப்பதில்லை. சூரியன் குழந்தைகளின் கண்களில் மட்டுமின்றி இதயத்திலும் ஒளிர்கிறான் என்கிறார் எமர்சன். இயற்கையைப் புரிந்து கொள்வதற்கு அகவுணர்வும் புறவுணர்வும் சரியாகப் பொருந்திப் போக வேண்டும் என்கிறார்.

நேற்று மகிழ்ச்சியைத் தந்த காட்சி இன்றைக்கு ஏன் மனச்சோர்வை உருவாக்குகிறது. அப்படியானால் வெளியே காணும் இயற்கைக் காட்சிகள் தன்னளவில் மகிழ்ச்சியை உருவாக்கவில்லையா. மனிதன் தான் அப்படி உணருகிறானா என்று எமர்சன் ஆராய்கிறார்.

பண்டைய கிரேக்கர்கள் உலகத்தை {kosmos}, அழகு என்று அழைத்தனர். இயற்கையைப் பற்றிப் பேசும் போதெல்லாம் அதன் அழகு தான் முதன்மையாகப் பேசப்படுகிறது. இயற்கை என்பதன் வரையறை என்ன. அழகு என்பது நிரந்தரமானதா எனக் கேட்கிறார் எமர்சன்

ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறை நட்சத்திரங்கள் தோன்றும் என்றால் மனிதர்கள் அதை இவ்வளவு விரும்புவார்களா என்று கேட்கிறார் எமர்சன்.

கட்டிடக்கலை என்பது இசையின் உறைந்தவடிவம் என்ற கதேயி.ன் கருத்தாக்கத்தைச் சுட்டிக்காட்டும் எமர்சன், கட்டிடக் கலைஞர் ஒரு இசைக்கலைஞராக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறார்

கவிதை மற்றும் கலைகள் பற்றிய எமர்சனின் பார்வை தனித்துவமானது. மொழியின் ஒவ்வொரு சொல்லும் கவிதையே. அகராதியை வாசிக்கும் போது அதை உணர முடியும் என்கிறார்.

டார்வினுக்கு முன்பாகவே எமர்சன் பரிணாமக்கோட்பாடு பற்றிப் பேசியிருக்கிறார். அறிவியல்பூர்வமாகச் சிந்தனை செய்திருக்கிறார். அடிமை வணிகத்திற்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கிறார். மனித வாழ்வில் மதம் மற்றும் கடவுளின் பங்கு பற்றி  விவாதித்திருக்கிறார்.

எமர்சன் பற்றிய எனது உரை இயற்கை பற்றிய நமது பார்வை எப்படி காலந்தோறும் மாறிக் கொண்டேயிருக்கிறது என்பதையும், கலையின் நோக்கம் மற்றும் செயல்பாடு இன்று எவ்வாறு மாறியுள்ளது என்பதையும் மையமாகக் கொண்டு ஹெராக்ளிடஸ் ஷேக்ஸ்பியர், தோரூ, கவிஞர் வேட்ர்ஸ்வொர்த் கவிஞர் மேரி ஆலிவர், தத்துவ அறிஞர் பியுங்-சுல் ஹான். ஜப்பானிய கலைஞர் ரிக்யூ மற்றும் ஒவியர் வான்கோ வழியான தேடலாக அமையும்.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 12, 2024 07:15

கரிசல் இலக்கியத் திருவிழா

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கரிசல் இலக்கியத் திருவிழா டிசம்பர் 14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாட்கள் சிவகாசியில் நடைபெறுகிறது. கரிசல் நிலத்தின் பண்பாடு மற்றும் இலக்கியங்கள் குறித்த கருத்தரங்குகளும் நிகழ்த்துகலைகளும் இணைந்த சிறப்பான விழாவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் துவக்கவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 12, 2024 05:56

December 10, 2024

தூதுவன்

காஃப்காவின் அரசனின் தூதுவன் என்ற குறுங்கதையில் சாவுப்படுக்கையில் உள்ள மன்னர் ஒரு ரகசிய செய்தியை தெரிவிக்கத் தூதுவன் ஒருவனை வரவழைக்கிறார். அவனை அருகில் மண்டியிடச்செய்து காதோடு காதாகச் செய்தியைச் சொல்கிறார்

அவன் தான் சொல்லியதை சரியாக உள்வாங்கிக் கொண்டிருக்கிறானா என மன்னர் கேட்டு உறுதிபடுத்திக் கொள்கிறார்.

அந்த அறையிலிருந்து தூதுவன் வெளியேறுவதற்குள் மன்னர் இறந்துவிடுகிறார்.

ரகசிய செய்தியோடு தூதுவன் தனது பயணத்தைத் துவங்குகிறான். அரண்மனையில் திரண்டிருந்த கூட்டத்தைத் தாண்டி வெளியேறி போக முடியவில்லை. முட்டிமோதி தனக்கான வழியை ஏற்படுத்தி வெளியே போக முயலுகிறான். அவனது அடையாள முத்திரையைக் காட்டி வழியை உண்டாக்கி கொள்கிறான். ஆனால் முடிவில்லாத மக்களின் கூட்டத்திலிருந்து அவனால் வெளியேறி போக முடியவில்லை.

முடிவில்லாத அறைகள். முடிவில்லாத மக்கள் கூட்டம் எனத் தடை நீண்டு போய்க் கொண்டேயிருக்கிறது.

தூதுவன் தனது பலத்தைப் பயன்படுத்தி அரண்மணையின் ஒவ்வொரு அறையாகக் கடந்து வெளியேறிக் கொண்டிருக்கிறான். ஆனால் கடைசி வழியை அடைய முடியவில்லை

இந்த வெளியேறும் பயணம் முடியவேயில்லை. ஆண்டுகளாக அவன் வெளியேறி போய்க் கொண்டேயிருக்கிறான். முக்கியமான செய்தியோடு செல்லும் அவன் தனக்கான பாதையைக் கண்டுபிடிக்கப் போராடுகிறான். அந்தப் பயணம் கடைசி வரை முடிவு பெறாமல் நீள்கிறது.

பேரரசர் சொன்ன ரகசிய செய்தி என்ன.

முடிவில்லாத தடைகளைத் தாண்டி அவன் யாருக்காக அந்தசெய்தியை கொண்டு செல்கிறான்.

எதுவும் கதையில் விளக்கபடவில்லை. ஆனால் புதிர்பாதை ஒன்றில் சிக்கிக் கொண்டுவிட்ட அந்தத் தூதுவனை நம் காலத்தின் மனிதனாகக் காஃப்கா அடையாளப்படுத்துகிறார்

அந்தப் பேரரசர் இடத்தில் கடவுளை வைத்துக் கொள்வோம் என்றால் கதை இன்னொரு விதமாகப் புரிய கூடும்.

அந்தத் தூதுவனுக்குப் பெயர் கிடையாது. மன்னருக்கும் பெயர் கிடையாது. காலம் உருண்டோடும் வரியில் தான் கதை தனது இறகை விரிக்கத் துவங்குகிறது. முடிவில்லாத பயணம் குறியீட்டுதன்மையை அடைகிறது.

மன்னர்கள் இல்லாத காலத்திலும் தூதுவர்கள் தனது பணியைத் தொடருகிறார்கள். இன்று நாம் யாரோ ஒருவரின் தூதுவராக மாறிக் கொண்டிருக்கிறோம். அல்லது செயல்படுகிறோம்.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 10, 2024 04:46

December 9, 2024

நான்கு புதிய நூல்கள்

எனது நான்கு புதிய நூல்கள் டிசம்பர் 25 மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் வெளியிடப்படவுள்ளன.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 09, 2024 02:49

December 6, 2024

கவளம்

எனது புதிய சிறுகதைத் தொகுப்பு கவளம் டிசம்பர் 25 மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் வெளியாகிறது.

இந்த நூல் குறித்த அறிமுகவுரையை நிகழ்த்துகிறார் ப. சேரலாதன்.

ஜெர்மன் மொழி ஆசிரியரும், மொழிபெயர்ப்பாளருமான சேரலாதன் சென்னையில் உள்ள கதே நிறுவத்தில் பணியாற்றுகிறார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 06, 2024 18:41

December 4, 2024

மதார் கவிதை நூல் வெளியீடு

கவிஞர் மதாரின் புதிய கவிதைத்தொகுப்பு மாயப்பாறை வெளியீட்டு விழா டிசம்பர் 18 மாலை சென்னை அண்ணா நூலக அரங்கில் நடைபெறுகிறது. இந்த நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறேன். அழிசி பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது,

அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 04, 2024 18:36

யாமம் – இணைய வழி கருத்துரை

நூல் வாசிப்பு முற்றம் சார்பாக இன்று இரவு ஏழு மணிக்கு இணைய வழியாக யாமம் நாவல் குறித்த கருத்துரை நிகழ்வு நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 04, 2024 18:27

வெற்றியின் பின்னால்

.

1952ல் வெளியான திரைப்படம் The Bad and the Beautiful. வின்சென்ட் மின்னெல்லி இயக்கியுள்ளார்.

இது சினிமாவைப் பற்றிய சினிமா. பொதுவாகச் சினிமா எடுப்பதைப் பற்றிய திரைப்படங்கள் வெற்றி பெறுவதில்லை.  Sunset Boulevard, Day for Night 8½ போல அபூர்வமாகச் சில படங்கள் பெரிய வரவேற்பையும் வெற்றியும் பெற்றிருக்கின்றன. அந்த வரிசையில் இடம்பெறும் படமிது.

1950களின் ஹாலிவுட் ஸ்டுடியோ இயங்கும் முறையினையும், அந்தக் காலத் தயாரிப்பாளர்களின் கெடுபிடிகள். மற்றும் நடிகர் நடிகைகளின் ஈகோ, சினிமா எடுப்பதன் பின்னுள்ள நிஜங்களை படம் சிறப்பாகப் பேசுகிறது.

Don’t worry. Some of the best movies are made by people working together who hate each other’s guts. ” என்றொரு வசனம் படத்திலுள்ளது. அது இன்றைய சில வெற்றிப்படங்களுக்கும் பொருந்தக்கூடியதே.

“மெமோரியல் டு எப் பேட் மேன்” என்ற சிறுகதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கபட்டிருக்கிறது. ஜொனாதன் ஷீல்ட்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கதாபாத்திரத்தில் கிர்க் டக்ளஸ் நடித்திருக்கிறார். அவரது திரைவாழ்வில் மறக்க முடியாத கதாபாத்திரமிது.

படத்தின் துவக்க காட்சியில் ஹாலிவுட் இயக்குனர் ஃப்ரெட் அமீல் வீட்டில் தொலைபேசி மணி ஒலிக்கிறது. மறுமுனையில் ஜொனாதன் ஷீல்ட்ஸ் பேசுகிறார். ஆனால் பிரெட் அவருடன் உரையாட விருப்பமின்றிப் போனை துண்டிக்கிறார். அதே அழைப்பு இப்போது நடிகை ஜார்ஜியா வீட்டில் ஒலிக்கிறது. அவளது பணிப்பெண் போனை எடுக்கிறாள். ஜார்ஜியா பேசவிருப்பமில்லை என்றதும் அழைப்பை துண்டிக்கிறாள்.

இப்போது ஜொனாதன் ஷீல்ட்ஸ் திரைக்கதை எழுத்தாளர் ஜேம்ஸ் லீ பார்ட்லோவிற்குப் போன் செய்கிறார். அவர் இணைப்பில் வருகிறார். ஆனால் உரையாடலை துவங்கும் முன்பு போன் இணைப்பு துண்டிக்கபட்டு விடுகிறது.

அந்த மூவரையும் திரைப்படத் தயாரிப்பாளர் ஹாரி ஸ்டுடியோவிற்கு வரவழைக்கிறார். ஒரு முக்கியமான விஷயம் குறித்து ஜொனாதன் ஷீல்ட்ஸ் அவர்களிடம் பேச விரும்புவதாகச் சொல்கிறார். மூவரும் விருப்பமில்லை என்று மறுக்கிறார்கள்.

அந்த மூவரின் கடந்தகாலமும் விவரிக்கபடுகிறது. ஜொனாதன் ஷீல்ட்ஸ் தான் அவர்கள் மூவரையும் உருவாக்கியவர். புகழ்பெற வைத்தவர். ஷீல்ட்ஸுடனான அவர்களின் நட்பு மற்றும் உறவு குறித்த கடந்தகால நினைவுகள் ஃப்ளாஷ்பேக்கில் விவரிக்கபடுகின்றன.

ஒரு புதுமுக நடிகை எப்படித் தேர்வு செய்யப்படுகிறார். எப்படித் திரைக்கதை உருவாகிறது. எப்படிப் படப்பிடிப்பை நடத்துகிறார்கள். படத்தின் இயக்குநர் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் நடிகர்களின் ஈகோ என அந்தக் கால ஹாலிவுட் ஸ்டுடியோ வாழ்க்கையைப் படம் அசலாகச் சித்தரித்துள்ளது.

போதைக்கு அடிமையாகி தனது தந்தையின் இடிந்த மாளிகை ஒன்றில் வாழ்ந்து கொண்டிருக்கும் இளம் பெண்ணான ஜார்ஜியா லொரிசனை தற்செயலாக ஒரு நாள் சந்திக்கிறார் ஷீல்ட்ஸ். சினிமாவில் துணை நடிகையாக அவள் பணியாற்றுகிறாள். அவளை தனது படத்தின் புதிய கதாநாயகியாக தேர்வு செய்து எப்படிப் புகழ்பெறச் செய்கிறார் என்பதே படத்தின் மையக்கதை.

துணை நடிகையாக வாழ்ந்து வரும் அவளுக்கே தனது வெற்றியின் மீது நம்பிக்கை கிடையாது. ஆனால் ஷீல்ட்ஸ் அவளது திறமையை நம்புகிறார். ஒரு நாள் அவள் குடித்துவிட்டு படப்பிடிப்பிற்கு வரவில்லை. அனைவரும் அவளைப் படத்திலிருந்து நீக்க வேண்டும் என்கிறார்கள். அவளைத் தேடிச் செல்லும் ஷீல்ட்ஸ் அவள் மீது தான் கொண்டுள்ள நம்பிக்கையை எடுத்துச் சொல்லி நடிக்க மறுக்கும் அவளைத் தேற்றுகிறார்.

‘When you’re on the screen, no matter who you’re with, what you’re doing, the audience is looking at you. That’s star quality. எனச் சொல்கிறார் ஷீல்ட்ஸ்.

அப்போது அவள் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி ஷீல்ட்ஸிடம் கேட்கிறாள். தனக்குத் தேவை நடிகை தானே தவிர மனைவியில்லை என்று மறுக்கிறார்.

ஒரே படம் அவளைச் சினிமா உலகின் ராணியாக மாற்றுகிறது. வெற்றியைக் கொண்டாடும் இரவில் அவள் கையில் மதுப்புட்டியோடு அந்த விழாவிற்கு வராமல் ஒதுங்கிய ஷீல்ட்ஸை காண அவரது வீட்டிற்கு வருகிறாள். மிகவும் அழகான காட்சியது. அதில் ஒரு படம் முடிந்தவுடன் ஏற்படும் வெறுமை குறித்து ஷீல்ட்ஸ் பேசுவது முக்கியமானது.

இது போலவே ஷீல்ட்ஸ் தற்செயலாகச் சந்தித்த பேராசிரியரான ஜேம்ஸ் லீயை ஹாலிவுட்டிற்கு வரவழைத்து திரைக்கதை எழுதுவதில் உறுதுணை செய்ய வைத்து அவரை புகழ்பெற்ற திரைக்கதையாசிரியராக மாற்றுகிறார் என்பதும் சிறப்பானதே

குறிப்பாக ஜேம்ஸ் லீயின் மனைவியான ரோஸ்மேரி ஒரு தனித்துவமிக்கக் கதாபாத்திரம். பணம், ஆடம்பரமான வீடு. வசதி என ஏங்கும் அவளது ஆசைகளைப் புரிந்து கொண்ட ஷீல்ட்ஸ் அவளைப் பயன்படுத்தி ஜேம்ஸ் லீயை ஹாலிவுட்டிற்கு வரவழைக்கிறார். தனது தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்.

தான் எழுதிய எதுவும் படத்தில் இடம்பெறவில்லை. திரைக்கதை எழுதுவது என்பதே தயாரிப்பாளரின் விருப்பத்தை எழுதிக் கொடுப்பது தான் என ஜேம்ஸ் லீ புரிந்து கொள்கிறார். ஜேம்ஸ் லீ கதாபாத்திரம் எழுத்தாளர் பிட்ஜெரால்ட்டின் சாயலில் உருவாக்கபட்டுள்ளார்

படத்தின் துவக்க காட்சியில் ஹாலிவுட் சினிமாவின் உடைகள் மற்றும் அரங்கப் பொருட்களைப் கேலி செய்யும் ஷீல்ட்ஸ் சினிமா தயாரிப்பாளராகும் தனது கனவை நோக்கி செல்லும் விதமும். அதில் அடையும் வெற்றிகளும் நிஜமாகச் சித்தரிக்கபட்டுள்ளன.

ஷீல்ட்ஸ் தனது புதிய படத்திற்கு நெருங்கிய நண்பரான இயக்குநர் ஃபிரெட்டிற்குப் பதிலாக புகழ்பெற்ற இயக்குநரை நியமிக்கிறார். படம் பெரிய வெற்றியை அடைய எதையும் செய்யலாம் என நினைக்கிறார். இதை ஏற்க முடியாத ஃபிரெட் முகத்திற்கு நேராகக் கோவித்துக் கொண்டு பிரிகிறார்.

ஷீல்ட்ஸ் படத்தின் இயக்குநருடன் படப்பிடிப்புத் தளத்தில் சண்டையிடுகிறார். அப்போது இயக்குநர் உங்கள் விருப்பப்படி நான் படம் எடுக்க முடியாது. வேண்டும் என்றால் நீங்களே படத்தை இயக்கிக் கொள்ளுங்கள் என்று விலகிவிடுகிறார். நெருக்கடியை சமாளிக்கத் தானே படத்தை இயக்குகிறார். ஆனால் அது எளிதான விஷயமில்லை என்பதைப் படம் எடுத்து முடித்தபின்பு உணருகிறார். தனது தோல்வியை ஷீல்ட்ஸ் ஒத்துக் கொள்ளும் இடம் பிரமாதமானது.

படத்தின் துவக்கத்தில் சூதாடி பணத்தைத் தோற்கிறார் ஷீல்ட்ஸ். வெற்றிக்கான அவரது வெறித்தனமான தேடலில் அந்தச் சூதாட்ட மனப்பான்மையே வெளிப்படுகிறது

சினிமா எடுப்பது வெறும் சூதாட்டமில்லை. அது ஒரு கலை, சிருஷ்டி என்பதை முடிவில் ஷீல்ட்ஸ் புரிந்து கொள்கிறார். கிர்க் டக்ளஸின் அற்புதமான நடிப்பு ஷீல்ட்ஸை மறக்க முடியாத கதாபாத்திரமாக்குகிறது.

‘She doesn’t speak. We move the camera in close on her. She opens her mouth to talk, but she can’t. And what she’s feeling we’ll leave for the audience to imagine. Believe me, Jim, they’ll imagine it better than any words you and I could ever write.’ என்று ஒரு காட்சியில் ஷீல்ட்ஸ் சொல்கிறார்.

அப்படிச் சொல்லாமல்விடப்பட்ட மௌனம் கொண்டிருப்பதே இதனைச் சிறந்த திரைப்படமாக இன்றும் பேசவைக்கிறது.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 04, 2024 01:58

December 3, 2024

பெயரும் முகமும்

குறுங்கதை

அந்த அரண்மனை இப்போது மியூசியமாக மாற்றப்பட்டிருந்தது. அதிலும் ஒரு பகுதியை அலுவலகமாக மாற்றியிருந்தார்கள்.

அலங்காரத்தையும், ஆடம்பரமான பொருட்களை இழந்த அரண்மனையைக் காணுவதற்கு யார் வரப்போகிறார்கள். ஒரு நாளுக்குப் பத்துப் பதினைந்து பார்வையாளர்கள் வருவதே அபூர்வம் என்றார்கள்.

மன்னர் குடும்பத்தின் வாரிசுகள் இப்போது அமெரிக்காவில் வசித்து வருவதாகச் சொன்னார்கள். முன்பு தர்பார் ஹாலாக இருந்த அறையை இப்போது ஓவியக் கூடமாக மாற்றியிருந்தார்கள். பல்வேறு ஐரோப்பிய ஒவியர்கள் மன்னர் குடும்பத்தை வரைந்திருக்கிறார்கள். சில ஓவியர்களைக் குடும்பத்துடன் வரவழைத்து அரண்மனையிலே தங்க வைத்திருக்கிறார்கள். அன்றாடம் மன்னர் குடும்பத்தை வரைவது அவர்களின் வேலை.

மன்னரின் பவனி. போர்களக் காட்சிகள் பெரிதாக வரையப்பட்டிருந்தன. மன்னரின் குதிரை, நாய், பூனை கூட வரையப்பட்டிருந்தது. அந்த ஓவியர்களின் பெயர்களைத் தவிர உருச்சித்திரம் எதுவும் அங்கே காணப்படவில்லை. ஒருவேளை அவர்கள் தன்னை வரைந்திருக்கவில்லையோ என்னவோ.

நான்கு வெள்ளைக்காரர்கள் வழிகாட்டியுடன் அந்த ஒவியக்கூடத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார்கள். வலது பக்கச் சுவர் முழுவதும் மன்னர்களின் உருவச் சித்திரங்கள். எதிர் சுவர் முழுவதும் ராணிகள், இளவரசிகளின் சித்திரங்கள். ஆனால் பெண்களின் சித்திரத்தில் அவர்களின் முகம் வரையப்படவில்லை. பதிலாக ரோஜாப் பூவை வரைந்திருந்தார்கள். கழுத்துவரை துல்லியமாக வரையப்பட்ட பெண்ணின் உருவம். முகத்திற்குப் பதிலாக ரோஜா இருப்பது விநோதமாக இருந்தது. எந்த அரசியின் பெயரும் குறிக்கபடவில்லை.

“ராணியின் முகத்தை வரையக்கூடாது . அவர்கள் பெயர்களைப் பிறர் உச்சரிக்கக் கூடாது என்பது மன்னர் காலக் கட்டுப்பாடு. இப்போது துணிக்கடை விளம்பரத்திற்காக வைக்கபடும் பெண் பொம்மைகள் தலையில்லாமல் இருக்கிறதே.. அது போலத் தான் இந்த ஓவியங்களும்“. என்று சிரித்தார் வழிகாட்டி.

ஆனால் அவர்கள் அணிந்துள்ள உடையும் நகைகளும் துல்லியமாக வரையப்பட்டிருந்தன.

“ஒவ்வொரு பெண்ணின் அந்தஸ்திற்கு ஏற்ப ரோஜா இதழ்களின் எண்ணிக்கை மாறுபட்டிருக்கும். நன்றாகப் பாருங்கள்“ என்றார் வழிகாட்டி.

ஒரு வெள்ளைக்காரப் பெண் அருகில் சென்று பார்த்துவிட்டு “ஒவியர் இந்த ராணிகளை நேரில் பார்த்து தானே வரைந்திருப்பார்`` என்று கேட்டார்.

அது வியப்பூட்டும் விஷயம். சாவித்துளை வழியாக மட்டுமே அவர் ராணியைப் பார்க்க முடியும். அதுவும் இந்த ஓவியத்தில் இருப்பது போலக் கழுத்துக்குக் கீழே தான் காண முடியும். ராணியின் முகம் திரையிடப்பட்டிருக்கும். நான்கைந்து ஒவியர்கள் வேறுவேறு காலகட்டத்தில் இந்த ஓவியங்களை வரைந்திருக்கிறார்கள். எவரும் எந்த ராணியின் முகத்தையும் நேரில் கண்டதில்லை.

வழிகாட்டி தனது குரலை தாழ்த்திக் கொண்டு ரகசியம் போல சொன்னார்

“இந்த ராணிகளில் சிலர் சந்தேகத்தின் பெயரால் கொல்லப்பட்டவர்கள். அதைக் குறிப்பதற்காக அவர்கள் இடது கையின் மோதிரவிரல் வரையப்பட்டிருக்காது பாருங்கள்“ என்றார். இரண்டு பெண்களின் மோதிரவிரல் வரையப்படவில்லை

“இந்த ஓவியங்களை ராணிகள் பார்த்திருக்கிறார்களா“ எனக்கேட்டார் வயதான வெள்ளைக்காரர்.

“ஒரு போதுமில்லை. நல்லவேளை மன்னர்கள் இல்லாத காலம் என்பதால் இப்படி ரோஜா முகம் கொண்ட ராணிகளை நாம் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறோம்“ என்று சொல்லிச் சிரித்தார் வழிகாட்டி.

அதைக் கேட்டு அங்கிருந்தவர்களில் எவரும் சிரிக்கவில்லை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 03, 2024 19:14

நீதியின் குரல்

.

மனித உரிமைகளுக்காக வாதிடும் வழக்கறிஞர் பிலிப் சாண்ட்ஸ் எழுதிய East West Street நூலைப் பற்றி நண்பர் சர்வோத்தமன் சடகோபன் இணையதளத்தில் தான் தெரிந்து கொண்டேன். அந்த நூலைப் பற்றி அவர் சிறப்பான அறிமுகத்தைக் கொடுத்திருந்தார். உடனே அதை இணையத்தின் வழியே வாங்கிப் படித்தேன். வியப்பூட்டும் தகவல்களுடன் உள்ள அரிய நூல். நீதித்துறை சார்ந்தவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம். உண்மையில் இது ஒரு பெரிய நாவலாக எழுத வேண்டிய கருப்பொருளைக் கொண்டது. பிலிப் சாண்ட்ஸ் தனது விரிவான ஆய்வின் மூலம் சிறப்பாக எழுதியிருக்கிறார்.

கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையில் ஊசலாடும் பல நிகழ்வுகள் வழியாக நாம் மனித உரிமைக்களுக்கான சட்ட வரைவுகளை உருவாக்கிய இரண்டு வழக்கறிஞர்களைப் பற்றித் தெரிந்து கொள்கிறோம். லிவீவ் நகரில் வசித்த இருவரும் நீதித்துறை வரலாற்றில் மிகவும் முக்கியமானவர்கள்.

ஒருவர் “இனப்படுகொலை” என்ற வார்த்தையை உருவாக்கிய ரஃபேல் லெம்கின் மற்றவர் “மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்” என்ற கருதுகோளை முன்வைத்த ஹெர்ஷ் லாட்டர்பேக்ட்.

இரண்டு வழக்கறிஞர்களும் மனித உரிமைகள் பற்றியே பேசுகிறார்கள். ஆனால் இரண்டு வேறுபட்ட கண்ணோட்டத்திலிருந்து. இருவர் முன் வைக்கும் வாதங்களும், அதற்கான காரணங்களும் சரியாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

பிலிப் சாண்ட்ஸின் தாத்தா உக்ரேனிலுள்ள லியான் லிவீவ் நகரத்தில் வசித்தவர். அதே நகரின் கிழக்கு மேற்கு தெருக்களில் லெம்கினும் ஹெர்ஷ் லாட்டர்பேக்ட்டும் வாழ்ந்திருக்கிறார்கள். ஒரே நகரின் இரண்டு வீதிகள் நீத்துறை வரலாற்றில் எவ்வாறு முக்கியமாக அடையாளமாக மாறியது என்பதைச் சாண்ட்ஸ் விவரிக்கிறார்.

ஒரு இனத்தின் மீது நடத்தப்படும் குற்றங்களே இனப்படுகொலையாகும். அதில் தனிநபரை விடவும் இன அடையாளம் தான் முதன்மையானது. ஆகவே யூதர்கள் மீது நடத்தப்பட்டது அப்பட்டமான இனப்படுகொலை என்கிறார் லெம்கின்.

ஆனால் நாம் அவர்கள் என்று இன அடையாளத்தின் படி இருவரை பிரிக்கும் போது எதிர்தரப்பில் உள்ள அப்பாவிகளை, குற்றமற்றவர்களையும் சேர்த்துப் பழிசுமத்துகிறோம். அது சரியானதில்லை. இனப்படுகொலையாக அறியப்பட்டாலும் அது தனிநபர்கள் மீது நிகழ்த்தப்பட்ட மோசமான குற்றங்களே என்கிறார் லாட்டர்பேகட்

அவர் முன்நிறுத்துவது தனிமனிதனை. அவனைக் கட்டுப்படுத்தித் தண்டிக்கும் அதிகாரத்தின் வரம்புகளை.

இருவரும் ஒரே பல்கலைக்கழகத்தில் படித்திருக்கிறார்கள். யூதர்கள் என்பதால் லாட்டர்பேக்டின் குடும்பத்தினர் இரண்டாம் உலகப்போரின் போது கொல்லப்பட்டார்கள். அவரே சட்டம் பயில முடியாமல் திண்டாடினார். போராடி சட்டம் பயின்ற அவர் யூதர்கள் கொல்லப்பட்டதை மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்றே வாதிடுகிறார். அப்படி வரையறை செய்யும் போது தான் குற்றவாளியின் மீது சரியான நடவடிக்கை எடுக்க முடியும் என்கிறார்.

இரண்டாம் உலகப்போருக்கு பிந்திய குற்றங்களை விசாரிக்கத் துவங்கப்பட்ட நியூரெம்பர்க் விசாரணையில் நாஜி போர்க்குற்றவாளிகளை எப்படி விசாரிக்க வேண்டும், ஜெர்மனி உருவாக்கிய சட்டங்கள் சரியானதா என்ற கேள்விகள் எழுந்தன. இனப்படுகொலை என்று குற்றம்சாட்டப்பட்டாலும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்ற ரீதியிலே பலரும் தண்டிக்கபட்டார்கள்

போலந்தின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஹான்ஸ் ப்ராங்க் .லட்சக்கணக்கான யூதர்களின் கொலைக்குக் காரணியாக இருந்தார். ஹிட்லரின் ஆணையைச் செயல்படுத்தினார் என்பதால் தனிநபராக ஹான்ஸ் ப்ராங்க் செய்தது குற்றம் கிடையாது. .ஆனால் அவரது ஆணையின் படி குரூரக்கொலைகள் நடந்திருக்கிறது என்பதால் அவை மனித குலத்திற்கு எதிரான குற்றங்களாகக் கருதப்படுகின்றன

லெம்கின் மற்றும் லாட்டர்பேக்ட் இருவரும் மனித சமுதாயத்தின் நலனையே முதன்மையாகக் கருதினார்கள். நீதியின் மீது மாறாத பற்றும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள். சாண்ட்ஸ் இந்த இரண்டு ஆளுமைகளின் வாழ்க்கை மற்றும் கோட்பாடுகளை விவரிப்பதுடன் தனது குடும்ப வரலாற்றையும் சிறப்பாக ஒன்றிணைத்துள்ளார்.

.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 03, 2024 02:24

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.