S. Ramakrishnan's Blog, page 25
September 3, 2024
இரவின் உருவம்
காலண்டரில் உள்ள நாட்களையும் கடிகாரம் காட்டும் நேரத்தையும் நம்பியே உலகம் இயங்குகிறது. ஆனால் கலைஞர்கள் நாளையும் நேரத்தையும் தனது கற்பனையின் வழியே மாற்றிக் கொள்கிறார்கள் புதிய தோற்றம் கொள்ளச் செய்கிறார்கள். தங்கள் விருப்பம் போலக் கலைத்துப் போட்டு அனுபவிக்கிறார்கள். கடந்தகாலம் என்ற சிறுசொல் எவ்வளவு பெரிய வாழ்க்கையை உள்ளடக்கியது என உலகம் உணரவில்லை. ஆனால் கலைஞர்கள் உணர்ந்திருக்கிறார்கள். காலம் தான் கலைஞனின் முதன்மையான கச்சாப்பொருள்.
கண்ணாடியில் நாம் காணுவது நமது தோற்றத்தை மட்டுமில்லை. வயதையும் தான் என்று கவிஞர் தேவதச்சன் ஒருமுறை சொன்னார். அது உண்மை. பத்து வயதில் கண்ணாடியில் பார்த்த என் முகமும் இன்று கண்ணாடியில் காணும் என் முகமும் ஒரே மனிதனின் வேறுவேறு வயதின் அடையாளங்கள் தானே. காலம் காட்டும் கடிகாரம் போலவே கண்ணாடியும் செயல்படுகிறது. கடிகாரம் கடந்து செல்லும் காலத்தின் நகர்வை உணர வைக்கிறது. ஆனால் கண்ணாடி அந்தக் காலநகர்வு நமக்குள் ஏற்படுத்தும் மாற்றங்களை அடையாளப்படுத்துகிறது.

கிரேக்கப் புராணத்தின் படி ஹெமேரா என்பது நாளின் உருவகமாகும் . ஹெமேராவைப் பகலின் கடவுளாக் கருதுகிறார்கள். இது போலவே இரவின் உருவகம் மற்றும் கடவுளாகக் கருதப்படுகிறவர் நிக்ஸ். இந்திய மரபிலும் , நிஷா இரவோடு தொடர்புடைய தெய்வம். அவள் விடியலின் உருவமாக இருக்கும் உஷையின் சகோதரி. பகலையும் இரவையும் விடியலையும் அந்தியினையும் வியந்து ஏராளமான கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. செவ்வியல் கவிதைகளில் இந்த உருவகங்கள் மிகச்சிறப்பாகவே கையாளப்பட்டிருக்கின்றன.
நான் பகலை விடவும் இரவை ஆராதிப்பவன். இரவை மயக்கும் வாசனைத் திரவியம் என்று நினைப்பவன். அதனால் தான் யாமம் என்ற நாவலை எழுதியிருக்கிறேன். உண்மையில் இரவு என்பது எழுதுபவர்களுக்கான மேஜை. இரவு என்பது காலத்தின் திரைச்சீலை. அதில் நாம் விரும்பியதை வரைந்து கொள்ளலாம்.
பகல் நம்மை இழுத்துச் செல்கிறது. பொருளியல் வாழ்க்கைக்குள் சுழல வைக்கிறது. இரவோ நம்மை விடுவிக்கிறது. கனவுகளையும் மகிழ்ச்சியினையும் கொடுத்து ஆற்றுப்படுத்துகிறது. கனவுகளைத் துரத்துபவர்களுக்கு இரவு தான் புகலிடம்.


பகலிரவை இரண்டு சிற்பங்களாக வடித்திருக்கிறார் மைக்கேலாஞ்சலோ. அது போலவே விடியலையும் அந்தியினையும் இரண்டு சிற்பங்களாக உருவாக்கியுள்ளார். இதில் இரவும் விடியலும் பெண்ணாகவும் பகலும் அந்தியும் ஆணாகவும் சித்தரிக்கபட்டிருக்கிறது.
மிகுந்த கலைநேர்த்தியுடன் உருவாக்கப்பட்ட இச்சிற்பங்களின் அழகும் துல்லியமும் வியக்க வைக்கிறது. குறிப்பாக உடலின் சதைகள் மற்றும் விரல்களை மைக்கேலேஞ்சலோ மிகவும் அற்புதமாகச் செதுக்கியிருக்கிறார். நிஜமான கைகளை. கால்மடிப்பினைக் காணுவது போல உயிரோட்டத்துடன் உள்ளது.
இந்த நான்கு சிற்பங்களில் இரவைத்தான் மைக்கேலேஞ்சலோ முதலில் செதுக்கியிருக்கிறார். நான்கில் மிகப்புகழ்பெற்ற சிற்பமும் இதுவே.

மைக்கேலேஞ்சலோ பற்றிய திரைப்படமான The Agony and the Ecstasyல் பெரிய பளிங்குப்பாறை ஒன்றை வெட்டியெடுத்து மாட்டுவண்டியில் கொண்டு வருவார்கள். அந்தப் பாறையைப் பார்த்தவுடன் மைக்கேலேஞ்சலோ அதற்குள் மோசஸ் ஒளிந்திருக்கிறார் என்று சொல்லி மகிழ்ச்சி அடைவார். தனது பணி கல்லிற்குள் உள்ள உருவத்தை வெளிக்கொணர்வது மட்டுமே என்றும் தெரிவிப்பார்.
மோசஸ் தனது நிகரற்ற படைப்பு என்பதை மைக்கேலேஞ்சலோ நன்றாக உணர்ந்திருந்தார். ஆகவே சிற்ப வேலை முடிந்ததும், “இப்போது பேசுங்கள் மோசஸ்!” என்று கட்டளையிட்டு அவரது வலது முழங்காலில் சுத்தியலால் அடித்தார் என்று சொல்கிறார்கள். பளிங்குச் சிற்பத்திற்கு உயிர் கொடுக்கும் செயலாக அந்நிகழ்வு கருதப்பட்டது. மைக்கேலேஞ்சலோவின் சுத்தியல் பட்ட அடையாளமாக மோசஸ் முழங்காலில் ஒரு வடு உள்ளது.
போப் கியுலியானோ டெல்லா ரோவரே, மைக்கேலேஞ்சலோவை ரோமுக்கு வரவழைத்து, சிஸ்டைன் தேவாலயத்தின் விதானத்தில் ஓவியங்கள் வரையும்படி கட்டளையிட்டார். The Agony and the Ecstasy திரைப்படம் அந்த நிகழ்வை விரிவாக விளக்குகிறது. அதில் மைக்கேலேஞ்சாவின் கஷ்டங்கள் மற்றும் கலைத்திறமையை நாம் முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது.
இர்விங் ஸ்டோனின் நாவலை மையமாகக் கொண்டே அப்படத்தை உருவாக்கியிருப்பார்கள். Michelangelo – Infinito என்றொரு திரைப்படம் 2017ல் வெளியானது. அதுவும் மைக்கேலேஞ்சலோவின் வாழ்வினை சிறப்பாகச் சித்தரித்திருந்தது.
ஓவியர்கள் மற்றும் எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாற்றை நாவலாக எழுதி மிகப்பெரிய வெற்றி கண்டவர் இர்விங் ஸ்டோன். மைக்கேலேஞ்சலோ வான்கோ, பிசாரோ பற்றிய இவரது நாவல்களுக்காகத் தீவிரமான கள ஆய்வினை மேற்கொண்டிருக்கிறார். மைக்கேலேஞ்சலோவைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள இரண்டு ஆண்டுகள் இத்தாலியில் வாழ்ந்தார் என்கிறார்கள்
பளிங்குக் கல்லில் செய்யப்பட்ட இரவுச்சிற்பம் மிகுந்த புகழ்பெற்றது. இத்தாலியின் புளோரன்ஸ் நகரிலுள்ள டி சான் லோரென்சோவிலுள்ள சாக்ரெஸ்டியா நுவாவினுள் இச்சிற்பம் இடம்பெற்றுள்ளது
கியுலியானோ டி லோரென்சோ மெடிசியின் கல்லறை சர்கோபகஸின் இடதுபுறத்தில் இதனைக் காணலாம்.

“இந்தக் கல்லில் வாழ்க்கை தூங்குகிறது; நீங்கள் சந்தேகப்பட்டால் அதைத் தொடவும், அது உங்களிடம் பேசத் தொடங்கும்“ என்று கார்லோ ஸ்ட்ரோஸி எழுதியிருக்கிறார். இவர் புளோரண்டைன் வரலாற்றின் பல குறிப்பிடத்தக்க புத்தகங்களை எழுதியவர்.
மைக்கேலேஞ்சலோவும் லியோனார்டோ டாவின்சியும் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள். ஆனால் இருவருக்குள் நெருக்கம் இருந்ததில்லை. டாவின்சி மீதான தனது வெறுப்பை மைக்கேலேஞ்சலோ வெளிப்படையாகக் காட்டியிருக்கிறார்.
இரவு, பகல், விடியல் மற்றும் அந்தி ஆகியவற்றை இது போலச் சிற்பங்களாக யாரும் அதற்கு முன்பாகச் செதுக்கியதில்ல. ஆகவே முன்மாதிரி இல்லாமல் உருவாக்கபட்ட சிற்பங்களாகும்.



மைக்கேலேஞ்சலோ ஒவ்வொரு சிலையிலும் உணர்வுகளையே முதன்மையாக வெளிப்படுத்தியிருக்கிறார். இரவு பெண் முகத்தில் தூக்கத்தின் அமைதியைக் காண முடிகிறது. அவளது மடித்த கைகள் தலையைத் தாங்கிக் கொண்டிருந்திருக்கக் கூடும். அந்தக் கைகளிலிருந்த தலை நழுவியது போலிருக்கிறது. அவளது வயிற்று மடிப்புகள். பெரிய தொடைகள் ஆண்களின் உடலமைப்பு போன்ற சாயலைக் கொண்டிருக்கிறது. விந்தையான நிலையில் உள்ள அவளது மார்பகங்கள், அதில் மலர்மொக்கு போன்று செதுக்கபட்டுள்ள மார்க்காம்புகள். அவள் சந்திரன் மற்றும் நட்சத்திரத்தால் அலங்கரிக்கப்பட்ட தலைக்கவசத்தை அணிந்திருக்கிறாள் அவளது தொடையின் கீழே ஒரு ஆந்தை காணப்படுகிறது. துர்கனவைச் சுட்டுவது போன்ற முகமூடியும் செதுக்கபட்டிருக்கிறது. இரவின் ஆழ்ந்த அமைதியினை உணர்த்துவதாக இச்சிற்பம் காணப்படுகிறது.

இரவோடு ஒப்பிட்டால் பகலின் தோற்றம் அவ்வளவு சிறப்பாக இல்லை. உறுதியான உடல் கொண்ட ஆணின் தோற்றம், தலை மற்றும் முகத்தின் கரடுமுரடான நிலை, மைக்கேலேஞ்சலோ அதில் இன்னமும் கூடுதலாக வேலை செய்ய வேண்டும என நினைத்திருந்தார். ஆனால் கால அவகாசம் கிடைக்கவில்லை என்கிறார்கள். இந்தச் சிற்ப வரிசையில் அவர் பகலின் சிற்பத்தையே கடைசியாகச் செய்து முடித்திருக்கிறார்.

இரவு, பகல் இரண்டின் கால்விரல்களே என்னை அதிகம் வசீகரித்தன. அந்த விரல்களின் நளினம். மிருது. மடங்கிய நிலையிலுள்ள அதன் வசீகரம். உறக்கம் கால்களின் வழியே தான் உடலுக்குள் ஊடுருவுகிறது. கால்கள் ஒய்வெடுப்பதை உடலின் முக்கியத் தேவை. தலையும் காலும் கொண்டுள்ள இணைவே உடலின் பிரதான இயக்கம்.

பகலெனும் ஆணின் உடல் உறுதியானது பகல்நேரத்தின் பல்வேறு பணிகளுக்கு உரிய ஆற்றல் கொண்டதாக அந்த உருவம் செதுக்கபட்டிருக்கிறது. கம்பீரமான, முறுக்கேறிய அந்தத் தொடைகள் வலிமையின் சான்றாக உள்ளன. பகலின் முகம் முழுமையாக முடிக்கப்படாமலிருக்கிறது
இரவுப் பெண்ணை விடவும் விடியல் மிக அழகாகச் செதுக்கபட்டிருக்கிறாள். இரவைச் செதுக்கியதற்குப் பின்னால் இதனைச் செதுக்கியிருக்கிறார் என்கிறார்கள். அவளது வசீகரமான உடலமைப்பு. கால்களை உயர்த்தியுள்ள விதம். அவளது தூக்கம் கலையாத முகம். இரவின் நெகிழ்வான வடிவத்துடன் ஒப்பிடும்போது விடியலின் முகத்தில் இனம் புரியாத சோகம் படிந்திருக்கிறது.
அந்தியின் தோற்றம் அவனது பெண் இணைவை விட மிகக் குறைவான உணர்ச்சியைக் காட்டுகிறது. ஆழ்ந்த சிந்தனையுடன் கல்லறையைப் பார்க்கும் நிலையில் சிற்பமுள்ளது. இந்த நான்கு சிற்பங்களையும் பளிங்கு வடிக்கப்பட்ட கவிதைகள் என்றே அழைக்கிறார்கள்

மைக்கேலேஞ்சலோவின் பகலிரவுச் சிற்பங்கள் இத்தாலிய மறுமலர்ச்சிகாலக் கலையின் உன்னதங்கள் என்றால் அதே பகலிரவை நவீன யுகத்தின் சால்வடார் டாலி, இரண்டு வெண்கலச் சிற்பங்களாக உருவாக்கியுள்ளார். அதில் செவ்வியல் கூறுகள் இல்லை. பாடிபில்டர்களின் உடல்வாகை போன்ற இரண்டு உருவங்களே காணப்படுகின்றன. உடலின் பகுதிகள் செதுக்கபட்ட விதம். நிற்கும் நிலை. முகபாவம் எல்லாவற்றிலும் நவீன மனதின் வெளிப்பாடே காணப்படுகிறது.

கியோகோ நாகசே என்ற ஜப்பானியப் பெண்கவிஞர் இரவைப் பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அதில் இரவு என்பதை இன்றைக்கும் நாளைக்கும் இடையே நான் தனியாகச் செல்லும் ஒரு அமைதியான பாதை என்று குறிப்பிடுகிறார். அது போலவே பட்டுப்புழு தனது கூட்டை தானே உருவாக்கிக் கொள்வது போலத் தனக்கான இரவை தானே உருவாக்கிக் கொள்வதாகவும் அந்த இரவிற்குச் சின்னஞ்சிறு விளக்கு போதும் அது சிறிய முட்டை போன்ற சிறியதொரு உலகை தனக்கு உருவாக்கி தந்துவிடும் என்கிறார்.
மைக்கேலேஞ்சலோவும் இதே உணர்வை தான் கொண்டிருந்திருப்பார். அவரும் ஒரு கவிஞரே. கியோகோ நாகசே சொற்களால் உருவாக்கியதை தான் மைக்கேலேஞ்சலோ பளிங்கில் செதுக்கி கலையின் உன்னத வடிவமாக்கியிருக்கிறார்.
September 2, 2024
அனாவின் வகுப்பறை
ஹங்கேரியின் சிறிய நகரமென்றில் பள்ளி ஆசிரியராக இருக்கிறாள் அனா பாஷ். 150 வருடப் பாரம்பரியம் கொண்டது அப்பள்ளி. அங்கே இலக்கியம் பயிற்றுவிக்கும் அவளுக்கு நாடகம், கவிதையில் ஆர்வம் அதிகம். தனது வகுப்பறையில் மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் போது உறுதுணையாக உள்ள திரைப்படங்கள் மற்றும் பாடல்களையும் அறிமுகப்படுத்துகிறாள். பதின்ம வயதினரின் புரிதல்களை விரிவுபடுத்துவதிலும், ஆளுமையை வளர்ப்பதிலும் தனித்துவமிக்க ஆசிரியராகச் செயல்பட்டு வருகிறாள்.

ஒரு முறை தனது வகுப்பறையில் புகழ்பெற்ற கவிஞர் ஆர்தர் ரைம்போவின் கவிதைகளை அறிமுகம் செய்யும் அனா அவரைப் பற்றிய திரைப்படமான Total Eclipse யைப் பார்க்கும்படி சிபாரிசு செய்கிறாள். அதுவும் விருப்பமானவர்கள் பார்த்தால் போதும் இது வீட்டுப்பாடமில்லை என்றும் சொல்கிறாள்.
அவளது வகுப்பில் பயிலும் கூச்ச சுபாவமுள்ள விக்டர் என்ற மாணவன் இப்படத்தைத் தனது வீட்டில் ரகசியமாகப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட அவனது தந்தை இது மோசமான திரைப்படம். யார் உன்னைப் பார்க்கச் சொன்னது என்று விசாரிக்கிறார்.
ஆசிரியர் பரிந்துரை செய்தார் என்று விக்டர் சொன்னதும் ஆத்திரமான விக்டரின் தந்தை பள்ளிக்கு வருகை தந்து அனா மீது ஒரு புகார் அளிக்கிறார்.

அந்தப் புகாரில் ஒரினச்சேர்க்கையாளர்களைப் பற்றிய அந்தத் திரைப்படத்தை மாணவர்களுக்குச் சிபாரிசு செய்தது மன்னிக்க முடியாத குற்றம். அதற்காக அவள் தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார்.
அனாவைத் தனது அறைக்கு வரவழைத்த பள்ளியின் முதல்வரான ஈவா நடந்தவற்றை விசாரணை செய்கிறாள். ரைம்போவின் கவிதைகளைப் புரிந்து கொள்வதற்காகவே அவரது வாழ்க்கையைப் பற்றிய திரைப்படத்தைப் பார்க்கச் சொன்னேன். இதில் தவறு ஒன்றுமில்லை என்று வாதிடுகிறாள் அனா.
அப்படியே இருந்தாலும் பெற்றோர் தலையிட்டுப் புகார் அளித்துள்ளதால் அவள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார் முதல்வர். அனா அதை ஏற்க மறுக்கிறாள்.
இந்தப் பிரச்சனை மெல்லப் பெரியதாகிறது. பல்வேறு மாணவர்களின் பெற்றோர்களும் இதில் ஒன்று சேர்கிறார்கள். அனா மீது நிர்வாகத்தின் விசாரணை நடைபெறுகிறது. அவளுக்கு எதிராகச் சக ஆசிரியர்கள் ஒன்று சேருகிறார்கள். அவள் தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறாள்.
தனது நோய்வாய்ப்பட்ட தாயைப் பராமரிக்கும் அனா தனியே வாழுகிறாள். வெளிநாட்டில் வசிக்கும் அவளது காதலன் அவளையும் அங்கே வந்துவிடும்படி அழைக்கிறான். ஆனால் அவளுக்குப் பள்ளி ஆசிரியர் வேலை பிடித்துள்ளதால் அதை விட்டுப் போக மனமின்றித் தொடருகிறாள்.
மாணவனின் தந்தையின் மூலம் உருவான பிரச்சனையைப் பற்றி அறிந்த அனாவின் காதலன் வேலையை விட்டுவிட்டு தன்னோடு வந்துவிடும்படி அழைக்கிறான். ஆனால் அதை அனா ஏற்கவில்லை.

பிரச்சனை மேலும் மேலும் சிக்கலாகி வருவதைத் தாங்க முடியாமல் அனா ஒரு நாள் விக்டரின் தந்தையைத் தேடி அவர்களின் வீட்டிற்குச் செல்கிறாள். நடந்த உண்மைகளை நேரடியாக விளக்க முற்படுகிறாள்.ஆனால் விக்டரின் தந்தை அதைப் புரிந்து கொள்ளவில்லை. அவள் ஒழுக்கமீறலுக்குத் துணை நிற்கிறாள் என்று சண்டைபோடுகிறார்.
அனாவின் மீதான விசாரணை எவ்வாறு முடிந்தது என்பதையே படம் இறுதிப்பகுதி விவரிக்கிறது.
ஆசிரியர்களின் மீதான அடக்குமுறையைப் பற்றிப் பேசும் இப்படம் ஹங்கேரியின் இன்றைய கல்விச்சூழல் எப்படியிருக்கிறது என்பதைத் தெளிவாக அடையாளம் காட்டுகிறது.
அனா வகுப்பறையில் கவிதை கற்றுத்தருவதில் படம் துவங்குகிறது. மாணவர்களுக்குப் பிடித்தமான ஆசிரியராக இருக்கிறாள். வகுப்பறையில் மாணவர்கள் நடந்து கொள்ளும்விதம் மிக இயல்பாக, உண்மையாகச் சித்தரிக்கபட்டுள்ளது. பிரச்சனை துவங்கியதும் மெல்ல சிலந்தி வலைக்குள் சிக்கிக் கொண்ட பூச்சியைப் போலாகிறாள் அனா. அவளைப் புரிந்து கொண்டு அவளுக்காகக் குரல் கொடுக்கும் ஆசிரியர் கதாபாத்திரம் சிறப்பானது.
“You’re paid to teach values. To set the right standards,” என்று ஒரு காட்சியில் ஆசிரியரைப் பார்த்து சொல்கிறார் விக்டரின் தந்தை. எந்த மதிப்பீடுகளைப் பற்றிச் சொல்லுகிறீர்கள். உங்களின் மோசமான, பிற்போக்குத்தனமான ஒழுக்கமதிப்பீடுகளை அவர்களும் பின்பற்ற வேண்டுமா, சுதந்திரமான, கலையுணர்வுமிக்க. உண்மையான சிந்தனை கொண்டவர்களாக உங்கள் பிள்ளைகள் வளர வேண்டாமா என்று அனா கேட்கிறாள். அதை விக்டரின் தந்தை புரிந்து கொள்ளவில்லை.
அவர் மட்டுமில்லை. தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் இந்தப் பிரச்சனையைத் தங்களின் சுயலாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கின்றன. உண்மை அறியாத நகர மேயர் பள்ளிக்கான நிதி உதவியை நிறுத்திவிடுகிறார்.
பள்ளிக்குள் ரகசியமாகப் போதை மருந்து விற்பனை நடக்கிறது. அதைத் தடுக்க எவரும் முன்வரவில்லை. ஆனால் மாணவன் சுதந்திரமாகக் கவிதை அல்லது கவிஞனைப் பற்றித் தெரிந்து கொள்ள முற்படும் போது கலாச்சாரத் தணிக்கையாளராக அவனது தந்தையும் அவரைப் போன்ற பெற்றோர்களும் வந்து நிற்கிறார்கள்.
அனா தனது வேலையை இழப்பதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை ஆனால் தன் மீதான குற்றசாட்டு தவறானது. அது ஆசிரியர்களின் செயல்பாட்டினை முடக்கக்கூடியது என்பதாலே தொடர்ந்து போராடுகிறாள்.
அனாவைச் சக ஆசிரியர்கள் நடத்தும் விதம். அவள் மீதான வெறுப்பு. விசாரணையின் போது முதல்வர் நடந்து கொள்ளும் முறை. விசாரணையில் அனா சொல்லும் பதில்கள் எனக் காட்சிகள் நிஜமாக உருவாக்கபட்டுள்ளன.
அனா தனது செயலில் தவறில்லை என்பதால் கடைசிவரை உறுதியாக இருக்கிறாள். விசாரணையை எதிர்கொள்கிறாள். தனது தரப்பினை தெளிவாக எடுத்துச் சொல்கிறாள். ஆனால் அவளை மட்டுமின்றி அவளை நேசிக்கும் மாணவர்களையும் பழிவாங்க முற்படுகிறது பள்ளி நிர்வாகம்
2017 இல் ருமேனியாவில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக் கொண்டு இப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் காடலின் மால்டோவாய், András Táborosi இன் நேர்த்தியான ஒளிப்பதிவும் Ágnes Krasznahorkaiன் நடிப்பும் சிறப்பானது.
வகுப்பறை சுதந்திரத்தின் விதிகளை யார் வரையறுப்பது என்ற கேள்வியை எழுப்புகிறது இப்படம். அது ஹங்கேரிக்கு மட்டுமான கேள்வியில்லை.
••
September 1, 2024
மகிழ்ச்சியின் இசைத்தட்டு
புதிய சிறுகதை. செப்டம்பர் 1 , 2024
புதன்கிழமையோடு ஜெயசங்கரி அலுவலகத்திலிருந்து ஓய்வு பெறுகிறாள். அதற்கான பிரிவு உபசார விழா விழாவை எப்படி நடத்துவது என்பதைப் பற்றி அலுவலகத்தில் பேசிக் கொண்டார்கள். விழாவைப் புதுமையாக நடத்த வேண்டும் என்றாள் விமலா. ஆனால் என்ன புதுமை. அதை எப்படிச் செயல்படுத்துவது என்று ஒருவருக்கும் தெரியவில்லை.
ஜெயசங்கரி பற்றிய புகைப்படக் கண்காட்சி ஒன்று வைக்கலாம் என்ற யோசனையைச் சொன்னது மதுரவன். அவரே அலுவலக விழாக்களில் எடுக்கபட்ட பழைய புகைப்படங்களைத் தேடி அதில் ஜெயசங்கரி உள்ளதாகத் தேர்வு செய்து காட்சிப்படுத்துவதாகச் சொன்னார்.
இந்த யோசனையை எல்லோரும் வரவேற்றார்கள். ஆனால் ஜெயசங்கரி மட்டும் வேண்டாம் என்றாள். பழைய புகைப்படங்களைப் பார்த்தால் குற்றவுணர்வு ஏற்படும் என்று நினைத்தாள். ஆனால் அவளது மறுப்பை அவர்கள் ஏற்கவில்லை.

ஜேஎம்டி டெக்ஸ்டைல் மில்லின் நிர்வாக அலுவலகத்தில் நூற்று முப்பத்தியாறு பேர் வேலை செய்தார்கள். அது மூன்று மில்களுக்கும் சேர்ந்து ஒரே தலைமை நிர்வாக அலுவலகமாக இயங்கியது. அங்கே வேலை செய்த பலரும் மில் ஆரம்பித்த காலத்திலிருந்து பணியாற்றுகிறார்கள். ஆகவே ஆண்டுக்கு இருவரோ மூவரோ ஒய்வு பெற்றுவந்தார்கள்.
சென்ற ஆகஸ்டில் மஹாலிங்கம் ஓய்வு பெற்ற போது மில் நிர்வாகம் சார்பில் அவருக்குத் தங்கக்காசு வழங்கினார்கள். ஆனால் மில்லின் முதலாளி பெரியவர் ராஜேந்திரன் ஜனவரியில் இறந்து போன பின்பு சின்னவர் பிரபாகரன் தங்க நாணயம் வழங்குவதை நிறுத்திவிட்டார். மில் சார்பாக விழா எடுப்பதும் நின்று போனது. ஆகவே ஊழியர்கள் தங்களுக்குள்ளாக விழா ஏற்பாடு செய்து கொண்டார்கள்.
ஜெயசங்கரிக்குக் குழந்தைகள் இல்லை என்பதால் அவளது வீட்டில் எந்த விசேசமும் நடைபெற்றதில்லை. எதற்காகவும் அலுவலக ஊழியர்கள் அழைக்கப்படவில்லை. ஆனால் அவள் அலுவலக ஊழியர்கள் வீட்டுக் கல்யாணங்களில், கிரகப்பிரவேசத்தில் வந்து மொய் செய்திருக்கிறாள். பரிசுப் பொருட்கள் வாங்கித் தந்திருக்கிறாள். ஆகவே அவள் ஓய்வு பெறும் நாளில் பெரிய பரிசு ஒன்றை அளிக்க வேண்டும் என்று அலுவலகத்தில் முடிவு செய்தார்கள்.
அவளிடமே “என்ன வேண்டும்“ என்று கேட்டாள் மாலதி. ஜெயசங்கரிக்கு என்ன கேட்பது என்று தெரியவில்லை. யோசித்துச் சொல்வதாகச் சொன்னாள்.
தெற்கு பஜாரில் புதிதாகத் துவங்கப்பட்டுள்ள ராஜகீதம் உணவகத்திலிருந்து கேரட் அல்வாவும் மைசூர் போண்டா காபியும் ஆர்டர் செய்வதென முடிவு செய்தார்கள்.
முதல் நாள் இரவே வந்து அலுவலகத்தின் இரண்டு சுவர்களிலும் வரிசையாக ஜெயசங்கரியின் பழைய புகைப்படங்களைக் கண்காட்சி போலத் தொங்கவிட்டிருந்தார் மதுரவன். அந்தப் புகைப்படங்களில் அலுவலகத்தில் இருந்த பலரும் இளமையாக இருந்தார்கள். ஒரு கூட்டுக்கனவைப் போலிருந்தது அக்கண்காட்சி.

ஓய்வு பெறும் நாளில் ஒருவர் தனது அலுவலகத்தில் வேலை செய்ய வேண்டுமா எனத் தெரியவில்லை. ஆனால் ஜெயசங்கரி தீவிரமாக வேலை செய்தாள். என்றைக்கும் போலவே வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வந்திருந்தாள். அன்றைக்கு அவள் பட்டுச்சேலை கட்டிக் கொண்டு வருவாள் என்று நினைத்தார்கள். ஆனால் அவள் எப்போதும் போல அவளுக்குப் பிடித்தமான இளம்பச்சை நிறக் காட்டன் சேலை தான் கட்டியிருந்தாள்.
மதிய உணவின் போது அவளிடம் அன்னமுகப்பு உள்ள வெண்கலக் குத்துவிளக்கு பரிசாக வாங்கியுள்ளதாக மீனாட்சி சொன்னாள். ஜெயசங்கரி “இதெல்லாம் எதுக்கு“ என்று மட்டுமே கேட்டாள்.
அவள் ஆர்வமாக எவ்வளவு பெரியது எனக் கேட்பாள் என மீனாட்சி நினைத்தாள். ஆனால் அப்படிக் கேட்காதது மாலதிக்கு சற்றே வருத்தமளித்தது. ஒருவேளை ஓய்வு பெறுவதை முன்னிட்டு மனதிற்குள் கவலைப்படுகிறாளோ என்று நினைத்துக் கொண்டாள்.
ஓய்வு பெறும்நாளில் மட்டும் மில்லிற்குச் சொந்தமான காரில் கொண்டு போய் வீட்டில் விட்டு வருவார்கள். அதையும் ஜெயசங்கரி வேண்டாம் என்று மறுத்துவிட்டாள். தான் கோவிலுக்குப் போய்க் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு பிறகு வீட்டிற்குப் போக நினைப்பதாகச் சொன்னாள்.
இத்தனை வருஷங்களாக அவள் வசந்தம் நகரிலுள்ள தனது வீட்டிலிருந்து நடந்து தான் மில்லிற்கு வந்தாள். அதுவும் ஒரே பாதையில் தான் நடந்து வருவாள். வீட்டிலிருந்து புறப்பட்டால் பனிரெண்டு நிமிஷத்தில் மில்லிற்கு வந்துவிடலாம். மெயின் கேட் வழியாக அவள் நுழைய மாட்டாள். மரங்கள் அடர்ந்த சைடுகேட் வழியாகவே உள்ளே செல்வாள். இரண்டாவது மாடியில் இருந்தது அலுவலகம். லிப்ட் இருந்தாலும் படியேறியே செல்வாள். அவளது இருக்கை ஜன்னலை ஒட்டி இருந்தது. பெரிய மரமேஜை. எஸ் டைப் நாற்காலி. மேஜையில் முகத்தை மறைக்கும் அளவிற்குக் கணக்கு நோட்டுகள். பைல்கள். அலுவலகத்தில் கம்ப்யூட்டர் இருந்தாலும் கணக்கு நோட்டுகள் மறைந்து போகவில்லை.
எப்போதெல்லாம் அலுவலகத்திற்கு விடுமுறை எடுக்கிறாளோ அதன் மறுநாள் ஒரு மணி நேரம் முன்னதாக அவள் அலுவலகத்திற்குச் சென்றுவிடுவாள். அது என்ன பழக்கம் என்று அவளுக்கே புரியவில்லை. ஊழியர்கள் யாரும் வராமல் ஒற்றை ஆளாக அலுவலகத்தில் அமர்ந்திருப்பது அவளுக்குப் பிடிக்கும்.
அவள் ஓய்வு பெறும் நாள் குறித்த கடிதத்தை அவளிடம் ஒப்படைத்த ஸ்டீபன் “தனக்குத் தெரிந்த இடம் ஒன்றில் அவளுக்கு வேலை கிடைக்கும். விரும்பினால் சேர்ந்து கொள்ளலாம், ஆனால் சம்பளம் குறைவு“ என்றான்.
“வேலை பார்த்தது எல்லாம் போதும். வீட்ல சும்மா இருக்கப் போறேன்“ என்றாள் ஜெயசங்கரி
“இருந்து பாருங்க. கஷ்டம் புரியும்“ என்று கேலியாகச் சொன்னான் ஸ்டீபன்
அதுவும் உண்மை தான். பகல் என்பது அலுவலகத்திற்கானது. ஞாயிற்றுகிழமை ஒரு நாள் பகலை என்ன செய்வதென்றே அவளுக்குத் தெரியவில்லை. அவளது கணவர் பள்ளி ஆசிரியர் என்பதால் அவர் எப்போதும் தனது அறையில் ஏதாவது படித்துக் கொண்டோ, டிவி பார்த்துக் கொண்டோ இருப்பார். நான்கு ஆண்டுகள் முன்பே அவர் பணிஓய்வு பெற்றுவிட்டார். அவருக்கென ஓய்வுபெற்றவர்களின் வட்டம் உருவாகியிருந்தது. அவர்கள் நூலகத்தில் சந்தித்துக் கொண்டார்கள். பூங்காவில் ஒன்றாக வாக்கிங் சென்றார்கள். வாட்ஸ்அப் குரூப் வைத்துக் கொண்டிருந்தார்கள்.
ஓய்வு பெறுவதைப் பற்றி அவள் பெரிதாகக் கவலைப்படவில்லை. ஊரிலுள்ள எல்லாக் கோவில்களுக்கும் போய் வந்தால் நேரம் போய்விடும் என்று மட்டும் நினைத்துக் கொண்டாள். மகிழ்ச்சியின் இசைத்தட்டை நாமாகத் தான் ஒடவிட வேண்டும். அது தானாக இசைக்காது என்று அவளுக்குப் புரிந்தது.
ஓய்விற்குப் பிறகு காலை தாமதமாக எழுந்து கொள்ளலாம். டெய்லரிங் மிஷின் சும்மாவே கிடக்கிறது. ஏதாவது டெய்லரிங் செய்யலாம். மதியம் வீட்டில் சமைத்துச் சாப்பிடலாம். தென்காசியில் உள்ள அக்கா வீட்டிற்குப் போய்ப் பத்து நாள் இருந்து வரலாம், நீண்டகாலமாகக் காசிக்குப் போய் வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதை நிறைவேற்றலாம் என்பது போன்ற சிறிய யோசனைகள் அவளிடமிருந்தன.

ஓய்வு பெறும் நாளில் அவள் வீட்டிலிருந்து புறப்படும் போது வாட்ச் கட்டிக் கொண்டு போக வேண்டாம் என்று நினைத்தாள். அது போலவே வழக்கமாகச் செல்லும் பாதை வழியாகச் செல்லாமல் திலகர் ஸ்கூல் பாதை வழியாகப் போகலாம் என்று நடந்தாள்.
அந்தப் பாதையில் ஒரு டீக்கடை வாசலில் சூடாகச் சமோசா போட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த வாசனையை நுகர்ந்தபடியே நடந்தாள். செக்கடி முக்கைத் தாண்டும் போது பழைய வீடு ஒன்றை இடித்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். ஒரு பக்கச் சுவர் மட்டுமே மிஞ்சிய வீட்டைப் பார்க்க வருத்தமாக இருந்தது.
வழியில் ஒருவர் தோள்மீது மற்றவர் கைபோட்டபடி பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும் இரண்டு சிறுமிகளைக் கண்டாள். அப்படி அவள் தோள் மீது கைபோட்டு உறவாடிய ஸ்நேகிதியின் நினைவு வந்தது. சரளா இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள். அவளும் தன்னைப் போல ஓய்வு பெற்றிருப்பாளோ என்று நினைத்துக் கொண்டாள்.
அவளது தலையை உரசுவது போல இரண்டு குருவிகள் தாழ்வாகப் பறந்து சென்றன. அதன் விளையாட்டினை ரசித்தபடியே நடந்தாள். பறவைகளுக்கும் வயதாகிறது. ஆனால் அதன் சிறகுகள் நரைப்பதில்லை. இனி வானில் பறக்க வேண்டாம் மரமே போதும் என ஒரு பறவையும் நினைப்பதில்லை. பறவைகளிடம் உள்ள உற்சாகத்தை மனிதர்களால் ஒரு போதும் அடைய முடியாது என்றே அவளுக்குத் தோன்றியது.
வழக்கத்தை விட நிதானமாக நடந்து முன் கேட் வழியாக அன்று அலுவலகம் வந்தாள். படியேறும் போது ஒவ்வொரு படியிடமும் இனி நான் வரமாட்டேன் என்று மனதிற்குள் சொல்லியபடியே நடந்தாள். அந்தப் படிகளில் அவளது வயது உதிர்ந்து கிடந்தது. இளம்பெண்ணாக அந்தப் படிகளில் ஏறத் துவங்கியவள் இன்று ஒய்வு பெறும் வயதை அடைந்துவிட்டாள். மில்லினுள் காற்றில் பறக்கும் பஞ்சு போல அவளது இளமைப்பருவம் அங்கே கொஞ்சம் கொஞ்சமாகப் பறந்து போய்விட்டது.
அவள் அலுவலகத்தில் சேர்ந்த காலத்தில் எல்லோரும் மைப்பேனாவைப் பயன்படுத்தினார்கள். அவளும் வேலைக்குச் சேர்ந்த நாளில் நேவி பேனா ஒன்றை புதிதாக வாங்கிக் கொண்டிருந்தாள். இன்றைக்கு மைப்பேனாக்கள் மறைந்துவிட்டன. ஊதா ஜெல்பேனாக்களைப் பயன்படுத்துகிறாள். அதுவும் அலுவலகமே கொடுக்கிறது. பழைய மைப்பேனா ஒன்று அவள் மேஜை டிராயரில் இருந்தது. பயன்படுத்தாத போதும் அதை வீசி எறிய அவளுக்கு மனமில்லை.
வழக்கத்தை விடவும் அன்றைக்குக் கூடுதலாக வேலை செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டபடி அவள் சரிபார்க்க வேண்டிய கணக்குகள். போட வேண்டிய கையெழுத்துகளை வேகவேகமாகச் செய்தாள். மதியம் சாப்பிடும் போது சோறு தொண்டையை அடைத்தது. அவள் சமைத்த சாப்பாடு தான். ஆனால் ருசியே இல்லாதது போலிருந்தது.
அலுவலகத்திற்கு என்று தனியே எந்தக் கொண்டாட்டமும் கிடையாது. இது போல அவர்களாக ஏதாவது கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டியது தான். அன்றைக்கு ஐந்து மணிக்கு அலுவலகம் முடிந்தவுடன் பிரிவு உபச்சார விழா துவங்கியது.
அக்கவுண்ட்ஸ் மேனேஜர் சங்கரலிங்கம் தான் தலைமை தாங்கினார். அலுவலகத்தின் மேஜைகளை ஒரமாக நகர்த்தியிருந்தார்கள். புறண்டு படுத்த மனிதனைப் போல அலுவலகம் உருமாறியிருந்தது. மேற்குச் சுவரையொட்டி நான்கு மேஜைகளை ஒன்றாக வைத்து வரிசையாகச் சேர்களைப் போட்டு நிகழ்ச்சி நடத்தினார்கள். ஜெயசங்கரி நடுவில் உட்காருவதற்குக் கூச்சப்பட்டாள். அது அவளது முகத்தில் துல்லியமாகத் தெரிந்தது. சங்கரலிங்கம் ஜெயசங்கரியின் நேரந்தவறாமை, கடின உழைப்பு பற்றி வியந்து பேசி சந்தன மாலை ஒன்றை அணிவித்தார். அவள் வாங்கிக் கொண்டு நாற்காலியின் ஓரமாக அதை வைத்தாள். அது போன்ற சந்தனமாலையைக் கதர்கடையில் பார்த்திருக்கிறாள். இன்றைக்குத் தான் கைகளில் தொடுகிறாள்.
அலுவலக ஊழியர்கள் நான்கு பேர் பாராட்டுரை வழங்கினார்கள். ஆயுதபூஜை விழா ஏற்பாடுகளை எப்படி ஜெயசங்கரி ஒடியோடி செய்வாள் என்பதைப் பற்றிப் பரமசிவம் உணர்ச்சிபூர்வமாகப் பேசினார். பழனிக்குமார் தான் எழுதிய வாழ்த்துப்பாடல் ஒன்றை வாசித்தார். யார் ஒருவர் பணி ஓய்வு பெறும்போதும் அவரது வாழ்த்து மடல் நிச்சயம் இடம்பெறும். மகேந்திரன் மட்டும் அலுவலகத்திற்குள் ஒரு நாள் பாம்பு வந்த போது ஜெயசங்கரி பயந்து போன நிகழ்ச்சியை வேடிக்கையாக நினைவூட்டினார். அனைவரும் சிரித்தார்கள். ஆனால் அப்படி ஒரு நிகழ்வு நடந்ததே ஜெயசங்கரிக்கு மறந்து போயிருந்தது.
அலுவலக ஊழியர்கள் ஒன்று சேர்ந்து அவளுக்கு வெண்கலக் குத்துவிளக்கை பரிசாக அளித்தார்கள். அதைக் கையால் தூக்க முடியவில்லை. நல்ல கனமாக இருந்தது. ஜெயசங்கரி பேச வேண்டும் என்று அனைவரும் சொன்னார்கள். அவளுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை.
இதுவரை அந்த அலுவலகத்தில் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. அவற்றில் பார்வையாளராக இருந்திருக்கிறாளே அன்றி மைக் முன்னால் நின்றதில்லை. ஓய்வு பெறும் நாளில் இது என்ன கஷ்டம் என நினைத்தபடியே வேண்டாம் என்று மறுத்தாள்.
ஆனால் சங்கரலிங்கம் விடவில்லை. வேலைக்கு வந்த முதல்நாளில் யாரும் தன்னை வரவேற்கவோ, இப்படி உபசரிக்கவோ இல்லை என்று பழைய நினைவு வந்து போனது . நாளை தன்னைப் பற்றி அவர்கள் நினைப்பார்களா என்று கூடத் தெரியாது. ஆனால் இது ஒரு சம்பிரதாயம். பேசித்தான் ஆக வேண்டும்
அவள் பள்ளியில் படித்த வயதிலிருந்து அன்று வரை ஒருமுறை கூட மைக் முன்னால் நின்றதில்லை. என்ன பேசுவது எப்படிப் பேசுவது என்று தெரியவில்லை. ஆகவே அவள் நாற்காலியை விட்டு எழுந்து கொள்ளும் போது கால்களில் தசைபிடித்துக் கொண்டதைப் போல உணர்ந்தாள். நாக்கு வறண்டு போய் உதட்டை ஈரமாக்கிக் கொண்டாள். திடீரென தான் குள்ளமாகிவிட்டதைப் போல உணர்ந்தாள்.
தனக்குப் பதிலாக யாராவது பேசினால் நன்றாக இருக்குமே என்று கூடத் தோன்றியது. தன் மனதில் பேசுவதற்கு ஒன்றுமில்லையே. என்ன பேசுவது என்று தெரியவில்லை.
அவள் எழுந்து கொள்ளும் போது ஒரமாக நின்றிருந்த அலுவலக ப்யூன் வேலாயுதம் கண்ணில் பட்டார். அவரது கண்கள் லேசாகக் கலங்கியிருந்தன. ஏன் அவர் வருத்தப்படுகிறார் என்று புரியாமல் தன் இருக்கையில் நின்றபடியே வேலாயுதம் பேசட்டும். அப்புறம் நான் பேசுறேன் என்று சொன்னாள்.
இதுவரை நடந்த எந்த நிகழ்ச்சியிலும் யாரும் ப்யூன் வேலாயுதத்தைப் பேச அழைத்ததேயில்லை. உண்மையில் அவர் அங்கே வேலை செய்த அனைவரையும் விட வயதில் மூத்தவர். ஓய்வு பெறும் வயதைக் கடந்தும் குடும்பச் சூழல் காரணமாகப் பணியில் தொடருகிறார். அவருக்கு இரண்டு மகள். இரண்டு மகன்கள். எப்படியோ எல்லோரையும் படிக்க வைத்துத் திருமணம் செய்து கொடுத்து பேரன் பேத்தி எடுத்துவிட்டார்.
வேலாயுதம் தன்னை ஜெயசங்கரி பேச அழைத்ததை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தார். அப்படி ஒரு நாள் தன்னையும் பேச அழைப்பார்கள் என்று காத்திருந்தவர் போல நிதானமாக அவர் மைக்கை நோக்கி நடந்து சென்றார்.
வேலாயுதம் பேச முடியாமல் திணறுவார் என்று அங்கிருந்தவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் மைக் முன்னால் நின்று கண்களை மூடிக் கொண்டு பாரதிதாசனின் வரியை உணர்ச்சிப்பூர்வமாகச் சொல்ல ஆரம்பித்தார்
“கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர் !
தமிழ் வாழ்க. தமிழர் நலம் பெருக. “ என்று அழுத்தமாகச் சொன்னார். அலுவலகத்தில் எடுபிடி வேலைகள் செய்து கொண்டிருந்த வேலாயுதம் எப்படி இவ்வளவு அழகாகக் கவிதை சொல்கிறார். தமிழ் வாழ்க என்கிறார் என அனைவரும் வியந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
வேலாயுதம் கண்களைத் திறந்து கொண்டு அவையைப் பார்த்து வணங்கியபடியே சொன்னார்
“என்னையும் ஒரு ஆளா நினைச்சி. இப்படிப் பேசச் சொல்லி கௌரவப்படுத்தின சங்கரி அம்மாவுக்கு நன்றி. உங்க எல்லோருக்கும் என்னோட வணக்கம். இந்த மில்ல எத்தனையோ பெரிய பெரிய நிகழ்ச்சி எல்லாம் நடந்துருக்கு. அதை எல்லாம் எட்ட இருந்து வேடிக்கை பார்த்திருக்கேன். கைதட்டியிருக்கேன். ஆனா இப்படி உங்க முன்னாடி வந்து நின்னு பேசுவேனு நினைச்சி கூடப் பாத்தது கிடையாது. மனசுக்குள்ளே பேசுறதுக்கு எவ்வளோ இருக்கு. ஆனா கேட்க தான் ஆள் கிடையாது.
இந்த ஆபீஸ்ல சங்கரியம்மா ஒரு ஆள் தான் என்னை ஒரு நா கூடக் கோபமா திட்டுனது இல்லே. என் பொறந்த நாள் என்னைக்குனு இந்த அம்மா ஒரு ஆளுக்குத் தான் தெரியும். அன்னைக்கு அவங்க வீட்ல இருந்து பால்பாயாசம் வச்சி கொண்டு வந்து எனக்குக் குடுப்பாங்க.. சங்கரியம்மா மனசு அப்படி.
என் ரெண்டு பையன்களை நான் படிக்க வச்சேன். மத்த ரெண்டு பொம்பளை புள்ளைகளையும் இந்தம்மா தான் பீஸ் கட்டி படிக்க வச்சாங்க. அதுவும் காலேஜ் வரைக்கும். அதை வெளியே சொன்னதேயில்லை. என்னை இவங்க சொல்லவிட்டதுமில்லை. ஆனா இன்னைக்கும் சொல்லாம போனா நான் நன்றிகெட்டவனா ஆகிடுவேன்.
எத்தனையோ தடவை அவங்க கிட்ட நூறு இருநூறு கைமாத்து வாங்கியிருக்கேன். ஒண்ணு ரெண்டு தடவை தான் திருப்பிக் கொடுத்திருக்கேன். நிறைய பணம் கொடுக்க முடியலை. அதை இந்தம்மா கேட்டதேயில்லை.
இவங்க ரிடயர்ட் ஆகிப்போயிட்டா எனக்குத் தான் கஷ்டம். என்னை விடச் சங்கரியம்மாவுக்கு வயசு கம்மிதான். ஆனா என்னைப் பெத்த தாயா நினைச்சி இவங்களைக் கையெடுத்துக் கும்பிடுறேன்“
என்று அவர் சாமி கும்பிடுவது போல கைகளை உயர்த்திக் கும்பிட்டார். அலுவலக ஊழியர்கள் உறைந்து போய் அமர்ந்திருந்தார்கள். இதை எல்லாம் ஏன் வெளியே சொல்கிறார் என்பது போல ஜெயசங்கரி தலைகவிழ்ந்திருந்தாள்.
யாரும் எதிர்பாராதபடி வேலாயுதம் உரத்த குரலில் “கோயில் என்பதும் ஆலயமே, குடும்பம் என்பதும் ஆலயமே, நாணயம் என்பதும் ஆலயமே நன்றியும் இறைவன் ஆலயமே“ என்ற சினிமா பாடலை பாட ஆரம்பித்தார். அந்தப் பாடலை ஜெயசங்கரி ரேடியோவில் கேட்டிருக்கிறாள். ஆனால் வேலாயுதம் பாடும் போது அவளை அறியாமல் கண்ணீர் பீறிட்டது.
எவ்வளவு இனிமையான குரல். எவ்வளவு ஆழ்ந்து பாடுகிறார். ஏன் இத்தனை ஆண்டுகளில் ஒருவர் கூட வேலாயுதத்தைப் பாடச் சொல்லிக் கேட்கவில்லை. எத்தனை பேரின் திறமைகள் இப்படிக் கண்டுகொள்ளாமல் போயிருக்கின்றன. வேலாயுதம் பாடிமுடித்தபின்பும் கைகளைக் கூப்பி அவளுக்கு நன்றி சொல்லிக் கொண்டேயிருந்தார்.
அவரது குரல். ஆலயம் என்பதை அவர் உச்சரித்த விதம், அவர் நன்றி சொன்னவிதம் அவளது மனதிற்குள் ஆழமாக ஊடுருவியது. அவள் இனி தன்னால் பேச முடியாது என்பதைச் சைகை காட்டியபடியே எழுந்து அலுவலகத்தை விட்டு நடக்க ஆரம்பித்தாள். மாலதி அவளிடம் ஏதோ சொல்வது கேட்டது. அதைக் கண்டுகொள்ளாமல் வேகமாகப் படியிறங்கி நடக்க ஆரம்பித்தாள்.
தான் ஓய்வு பெற்றுவிட்டோம் என்பதைப் படியிறங்கும் போது ஜெயசங்கரி முழுமையாக உணர்ந்தாள்.
அவளுக்கு அளிக்கப்பட்ட வாழ்த்துமடல், சந்தனமாலை, வெண்கல குத்துவிளக்கைத் தூக்கிக் கொண்டு வேலாயுதம் படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தார். வீடு வரை அவர் நிச்சயம் வருவார் என்று மட்டும் ஜெயசங்கரிக்குத் தோன்றியது.
••••
August 30, 2024
திருடன் படித்த புத்தகம்
சில நாட்களுக்கு முன்பு ரோமில் ஆள் இல்லாத ஒரு வீட்டிற்குள் புகுந்த திருடன் அங்கிருந்த பொருட்களைத் திருடிக் கொண்டு வெளியேறும் போது புத்தகம் ஒன்றைக் காணுகிறான். இத்தாலிய எழுத்தாளர் Giovanni Nucci எழுதிய The Gods at Six O’Clock என்ற புத்தகத்தை வாசிக்கத் துவங்கி தன்னை மறந்து வாசித்துக் கொண்டிருக்கவே வீட்டின் உரிமையாளர் வந்துவிடுகிறார். தப்பியோட முயன்றவனைப் பிடித்துக் காவலர்களிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள்

தனது குற்றச்செயலை மறந்து திருடன் ஒரு புத்தகத்தில் ஆழ்ந்து போயிருந்த நிகழ்வை இணைய இதழ்களும் சமூக ஊடகங்களும் பெரிதாக விவாதித்து வருகின்றன.
தனது புத்தகத்தைத் திருடன் மெய் மறந்து வாசித்துக் கொண்டிருந்த செய்தியை அறிந்த எழுத்தாளர் ஜியோவானி நுச்சி அவன் தனது புத்தகத்தை முழுமையாகப் படிக்க முடியாமல் போய்விட்டது வருத்தமளிக்கிறது. ஆகவே தனது சார்பில் ஒரு புத்தகத்தைச் சிறைச்சாலைக்கு அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறார்
இந்த நிகழ்வை ஒட்டி இத்தாலிய இலக்கிய உலகில் ஒருவன் தன்னை மறந்து படிக்கக் கூடிய புத்தகம் எது என்ற விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் விமர்சகர்கள். எழுத்தாளர்கள். வாசகர்கள் கலந்து கொண்டு பதில் அளிக்கிறார்கள். இந்தச் செய்தியை மலையாள நாளிதழ்களில் கூடப் பெரிதாக வெளியிடப்பட்டிருக்கிறார்கள்

ஜியோவானி நுச்சியின் புத்தகம் ஹோமரைப் பற்றியது. திருடன் ஏன் ஹோமரை வாசிக்க ஆர்வம் கொண்டான். அவன் முன்பே ஹோமரை வாசித்தவனா. அல்லது அந்தத் தலைப்பு வாசிக்கத் தூண்டியதா என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். அத்தோடு இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பும் ஹோமர் விரும்பி வாசிக்கப்படுகிறார். ஆகவே கிளாசிக் புத்தகங்களே ஒருவரை மெய் மறந்து வாசிக்கவைக்கின்றன என்றொரு வாதமும் முன்வைக்கப்படுகிறது
இந்த நூற்றாண்டில் தன்னை மறந்து வாசிக்கக் கூடிய புத்தகம் எழுதப்படவில்லை என்றொரு குற்றச் சாட்டினையும் முன்வைக்கிறார்கள்.
திருடப் போன இடத்தில் ஒருவன் புத்தகம் வாசிக்கிறான் என்பது ஏன் இவ்வளவு முக்கியமான செய்தியாகிறது.
இதற்கு முன்பு இது போலத் திருடப்போன வீட்டில் உள்ள உணவைச் சாப்பிடுகிற. அவர்கள் படுக்கையில் உறங்குகிற, அந்த வீட்டிலுள்ள அழுக்கு துணிகளைத் துவைத்துப் போடுகிற வேடிக்கையான திருடர்களைப் பற்றிய செய்தியை வாசித்திருக்கிறேன். ஆனால் அவர்களிலிருந்து வேறுபட்டவன் புத்தகம் வாசிக்கும் திருடன். திருடர்கள் படிப்பறிவில்லாதவர்கள். மூடர்கள். என்ற பொதுப்புத்தியே இந்தச் செய்தியின் பின்னால் வெளிப்படுகிறது.
திருடன் ஏன் புத்தக அலமாரியால் வசீகரிக்கப்பட்டான். ஹோமர் போர்க் களத்திலிருந்து வீடு திரும்புவதைப் பற்றி எழுதியதால் தனது வீடு திரும்புதல் குறித்த ஏக்கத்தில் தான் இந்த நூலைப் படிக்க முயன்றானா என்ற கேள்வி எழுகிறது.
புத்தகம் என்பது ஒரு வகையான குற்றத் தடுப்புச் சாதனம் என்று ஒருவர் எழுதியிருக்கிறார். சிறை அறையில் படிக்க அவனுக்கு நிறைய நேரம் கிடைக்கும். இங்கே நல்ல நூலகம் இருக்கிறதா எனத் தெரியவில்லை என்றொரு வாசகர் பதில் எழுதியிருக்கிறார்.
திருடன் படித்த புத்தகத்தை உடனடியாகப் படிக்க வேண்டும் என இத்தாலி வாசகர்கள் தேடித்தேடி நூலை வாங்குகிறார்கள். இது நோபல் பரிசு கிடைத்தால் உருவாகும் கவனத்தைப் போன்றது என்கின்றன பத்திரிக்கைகள்.
உங்களை மறந்து எந்தப் புத்தகத்தைப் படித்தீர்கள். எப்போது படித்தீர்கள் என்பதைப் பகிர்ந்து கொள்ளும்படியாக இன்னொரு அலையை இந்த நிகழ்வு எழுப்பியிருக்கிறது. பலரும் இதற்குப் பதில் சொல்லி வருகிறார்கள்.
உங்கள் வீட்டிலுள்ள விலை மதிக்க முடியாத பொருட்களில் ஒன்றே புத்தகம். அதன் மதிப்பைத் திருடன் உணர்ந்திருக்கிறான். பொதுச் சமூகம் உணரவில்லை என்றொரு பேராசிரியர் பதில் எழுதியிருக்கிறார்.
வீட்டில் திருடப்புகுந்த திருடனிடமிருந்து புத்தகத்தை ஏன் காவல்துறையினர் பறித்தார்கள். அது அனுமதிக்கக்கூடிய செயலா. என்றொரு துணை விவாதமும் நடந்து வருகிறது.
ஹெர்ம்ஸ் என்ற கிரேக்க கடவுள் திருடர்களை, பொய்யர்களைப் பாதுகாக்கக் கூடியவர். இவரே கவிதைக்குமான கடவுள். அப்பல்லோவின் கால்நடைகளைத் திருடியதற்காகப் புகழ் பெற்றவர் ஹெர்மஸ். ஆகவே திருடர்களின் கடவுளாகக் கருதப்படுகிறார். சிறகுகள் கொண்ட செருப்பு அணிந்த இவர் பாதாள உலகத்திற்குள் தடையின்றி நுழைந்து வெளியேறக்கூடிய ஒரே கடவுளாகச் சித்தரிக்கப்படுகிறார்.
திருடன் படித்துக் கொண்டிருந்த அத்தியாயம் இந்த ஹெர்மஸ் பற்றியது. கிரேக்கப் புராணங்களைப் படிப்பதில் இன்றும் ஆர்வம் குறைந்துவிடவில்லை என்பதன் சாட்சியமாக இந்நிகழ்வினைக் குறிப்பிடுகிறார்கள்.
ஜியோவானி நுச்சி ஒரு இத்தாலியக் கவிஞர் மற்றும் எழுத்தாளர். இவரது The Gods at Six O’Clock இன்னமும் ஆங்கிலத்தில் வெளியாகவில்லை. ஆனால் இப்போதைய பரபரப்புக் காரணமாக உடனடியாக இந்நூல் ஆங்கிலத்தில் வெளிவர இருக்கிறது. ஒரு திருடன் எழுத்தாளர் நுச்சியை உலக அரங்கிற்கு உயர்த்திவிட்டான் என்கிறார்கள் பதிப்பாளர்கள். உங்கள் புகழை உலகிற்கு எடுத்துச் சொல்ல ஒரு திருடன் தேவை என்றொரு கேலியான குறிப்பையும் வாசித்தேன்.

கடவுள்களின் கண்ணோட்டத்தில் இலியட் பற்றி எழுதியிருக்கிறார் ஜியோவானி நுச்சி. இவர் கிரேக்கப் புராணங்கள் மீது ஆர்வம் கொண்டவர். அவற்றை புதிய கண்ணோட்டத்தில் எழுதி வருகிறார்.
புத்தகம் படித்துக் கொண்டிருந்த திருடனின் வயது என்ன என்ற கேள்வியை எனக்குள் முதலில் எழுந்தது அவனது வயது முப்பத்தியெட்டு. அந்த நூலை வீட்டில் வைத்திருந்தவர் எழுபது வயதான முதியவர். அவர் தனியே வசித்து வந்திருக்கிறார். ஒரு புத்தகம் யாரால் எப்போது வாசிக்கப்படப் போகிறது என்பது புதிரான விதி.
தனது குற்றச் செயலை மறந்து புத்தகம் வாசிக்கும் மனநிலை திருடனுக்கு எப்படி உருவானது. அந்த மனநிலை ஏன் நமக்கு இல்லை என்றும் விவாதிக்கிறார்கள். அது போலவே குற்றம் உருவாக்கும் அவசரங்கள் என்றொரு பட்டியலையும் வெளியிட்டிருக்கிறார்கள். வரி ஏய்ப்பாளர்களில் பலரும் புத்தகம் படிக்கக் கூடியவர்களே. அவர்களை இந்த நிமிஷத்தில் நினைவு கொள்கிறேன் என ஒரு வாசகர் பதில் எழுதியிருக்கிறார். திருடனால் ஒரு நல்ல புத்தகம் அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது. அவனுக்கு நன்றி எனவும் வாசகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
திருடனின் பெயர் என்னவென்று தெரியவில்லை. அவன் திருடச் சென்று புத்தகம் படித்துக் கொண்டிருந்த அதே வீதியில் தான் எழுத்தாளர் ஜியோவானி நுச்சியும் வசிக்கிறார். பல நேரங்களில் நிஜநிகழ்வுகளின் விசித்திரம் கற்பனைக்கு அப்பாற்பட்டதே.
••
August 29, 2024
சந்தையின் இரவுக்காட்சி
பெல்ஜிய ஓவியர் பெட்ரஸ் வான் ஷெண்டல் (Petrus van Schendel) வரைந்த சந்தையின் இரவுக்காட்சி ஓவியங்களில் எரியும் மெழுகுவர்த்திகளுக்கு நடுவே காய்கறி, மீன், மற்றும் பழங்களின் விற்பனை நடக்கிறது.

ஒளி எப்போதும் கருணையின், அன்பின் அடையாளமாகவே கருதப்படுகிறது. புனிதர்களின் கையிலிருந்து ஒளி பிறக்கும் காட்சியை ஓவியங்களில் கண்டிருக்கிறேன். ஒளி பேதமறியாதது. ஒளி ஒவ்வொன்றின் தனித்தன்மையை நமக்கு புலப்படவும் புரியவும் வைக்கிறது. ஒளிரும் பொருட்களை, ஒளி படும் விதத்தை யாவரும் விரும்புகிறார்கள். எல்லா சமயங்களும் ஒளியைப் புனிதமாகவே கருதுகின்றன. இருள் என்பது குறைந்த ஒளி என்கிறார் பாரதி.

பகலில் ஒரு போதும் இவ்வளவு அழகுடன் சந்தையைக் காண இயலாது. சந்தை என்றதும் நம் நினைவில் பச்சை காய்கறிகளின் வாசனை, அழுகிப்போன காய்கறிகள். பழங்களின் குப்பைகள். பேரம் பேசும் குரல்கள், ஒருவரையொருவர் இடித்துத் தள்ளிக் கொண்டு செல்லும் மனிதர்கள் தான் வருகிறார்கள். சந்தை நடைபெறும் இடமும் நேரமும் தான் மாறுகிறதேயன்றி உலகெங்கும் சந்தையின் இயல்பு ஒன்று போலவே இருக்கிறது.
சந்தையில் வணிகம் செய்யும் சிறு வணிகர்களுக்கு என்றே ஒரு முகபாவமிருக்கிறது. பலருக்கும் அலாதியான குரல். அலை சட்டென மேல் எழுந்து வருவது போலச் சந்தையின் இயக்கம் திடீரென வேகம் கொள்ளும். பின் மதியத்தில் சந்தைக்குள் சென்றால் நாம் காணுவது கிழட்டுக் குதிரையொன்று ஓய்வெடுப்பது போன்ற காட்சியே. உருளைக்கிழங்கு மூட்டையில் தலை வைத்து உறங்கும் மனிதனையும் கேரட்டுகளை உருட்டி விளையாடும் நாய்களையும், முட்டைகோஸ்களுக்குத் தண்ணீர் தெளித்துக் கொண்டிருக்கும் பெண்களையும் கண்டிருக்கிறேன்.
மின்விளக்குகளின் கண்கொள்ளாத பிரகாசம் ஜொலிக்கும் இன்றைய நகர அங்காடிகளுக்கும் இந்தக் காட்சிக்கும் இடையில் இருநூறு ஆண்டு இடைவெளியிருக்கிறது.

மதுரைக்காஞ்சி நாளங்காடி. அல்லங்காடி என இருவகை வணிகத்தைக் குறிப்பிடுகிறது. இரவில் நடக்கும் வணிகத்தைக் குறிக்கும் அல்லங்காடியில் ஷெண்டல் வரைந்துள்ளது போலத் தான் பந்தங்கள் எரிந்து கொண்டிருக்கக் கூடும். மதுரையின் இரவுக்காட்சியினை விரிவாக இலக்கியம் பதிவு செய்துள்ளது. ஆனால் அக்கால ஓவியம் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை.
ஷெண்டலின் ஓவியத்திற்குத் தனித்துவம் தருவது அதில் வெளிப்படும் ஒளி மற்றும் துல்லியமான முகங்கள். மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் விற்பனை செய்யும் பெண்ணும் வாங்குபவரும் விநோதமான அழகுடன் தோன்றுகிறார்கள்.தெரு விளக்கின் வியப்பூட்டும் அழகு. சந்தை நடக்கும் இடத்தின் பின்னுள்ள வானில் கலங்கிய நிலவு, கலைந்த மேகம் தென்படுகிறது. அந்தக் கால எடைக்கருவிகள். பேரம் பேசும் முகங்கள், மரமேஜைகள். விற்பவர், வாங்குபவர் இருவரின் உடைகள். அவர்கள் வைத்துள்ள கூடை, பின்புறத்தே தெரியும் பெரிய குடியிருப்புகள். நிழல் தோற்றங்களாகத் தெரியும் தொப்பி அணிந்த பிரபுக்கள். என நாம் காணும் காட்சி மாய உலகமாக விரிகின்றது.
இந்த இரவுக்காட்சி ஓவியங்களில் பெரும்பாலும் வீட்டுப்பணியாளர்களே சந்தைக்கு வருகை தந்து பொருட்களை வாங்குகிறார்கள். அதிலும் குறிப்பாக இளம் மற்றும் நடுத்தர வயது பெண்கள். அவர்கள் சமையல் வேலையிலும் வீட்டு பராமரிப்பிலும் பணியாற்றுகிறவர்கள். வழக்கமான வாடிக்கையாளர்கள் என்பது அவர்கள் நிற்கும் தோரணையிலும் முகபாவனையிலும் வெளிப்படுகிறது. கடைப்பெண்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை சற்றே காது கொடுத்தால் கேட்டுவிடலாம் என்பது போல ஓவியம் வரையப்பட்டிருக்கிறது.
சந்தையில் காய்கறி பழங்கள் விற்பனை செய்வதும் பெண்களே. ஷெண்டல் ஹேக்கின் இரவுச் சந்தை, வெள்ளிக் கிழமை காலையில் கூடும் காஸ்மார்க் அல்க்மார் போன்றவற்றை வரைந்திருக்கிறார். காஸ்மார்க் சந்தை வெண்ணெய் விற்பனைக்குப் பெயர்போனது. அங்கே . வெண்ணெய் வர்த்தகம் 1365 இல் தொடங்கியிருக்கிறது. மிகப்பெரிய வெண்ணெய் கட்டிகளைக் கொண்டு வருவதற்கென்றே மரவண்டிகள் இருந்தன .வெண்ணெய் வாங்க விரும்புகிறவர்கள் சைகையால் தான் விலை பேசுவார்கள். அந்தக் காட்சியினையும் ஷெண்டல் சிறப்பாக வரைந்திருக்கிறார்.

இந்த ஓவியம் ஹேக்கில் உள்ள டி க்ரோட் மார்க்கின் ஒரு மூலையை சித்தரிக்கிறது. இடதுபுறத்தில் ஒரு கோழி வியாபாரி மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இரண்டு பெண்களிடம் விற்பனை செய்கிறான் . வலது புறத்தில் உள்ள கடையில், பழங்கள் வாங்குபவருக்கு முன்னால் மெழுகுவர்த்தி சுடர் அசைகிறது. இரண்டு ஸ்டால்களுக்கு இடையில் பெட்டிகளை ஏற்றிய சக்கர வண்டியை தள்ளுவதற்கு ஒரு ஆள் அமர்த்தப்பட்டிருக்கிறார் பின்னணியில், மக்கள் சந்தைக்குள் நடந்து செல்கிறார்கள், அதே நேரத்தில் ஓவியத்தின் வலதுபக்கம் ஒரு விளக்கு வீடுகளின் முகப்புகளையும் தெருவின் நுழைவாயிலையும் ஒளிரச் செய்கிறது.
அவரது ஓவியங்களில் விடிகாலையில் நடக்கும் சந்தையை விவரிக்கும் ஓவியமும் இருக்கிறது. ஏதோ கனவில் காண்பது போன்ற காட்சியது. உணர்ச்சிகளின் மொழியாக ஓளியை வரைந்திருக்கிறார் ஷெண்டல்.
அந்தக் காலத்தில் ஒளியின் பிரதான வடிவங்கள் மெழுகுவர்த்திகள் மற்றும் எண்ணெய் விளக்குகளே. அவற்றிலிருந்து வரும் வெளிச்சத்தின் அடர்த்தி மற்றும் பரப்பளவு குறைவானதே.

மெழுகுவர்த்தி அல்லது நிலவில் ஒளிரும் சந்தை காட்சிகள் ‘நாக்டர்ன்கள்’ என்று அழைக்கப்படுகின்றன இந்த வகை 17 ஆம் நூற்றாண்டில் ரெம்ப்ராண்டின் மாணவர் ஜெரார்ட் டூ (1613-1675) என்பவரால் பிரபலமடைந்தது மைக்கேலேஞ்சலோ, காரவாஜியோவின் (1573-1610) ஓவியங்களில் காணப்படும் மாயத்தன்மையான ஒளியின் பயன்பாட்டினால் இவர்கள் ஈர்க்கப்பட்டனர். அந்த மரபின் அடுத்த கண்ணியாகவே ஷெண்டல் அறியப்படுகிறார்.
பொருள்கள் மற்றும் மனிதர்கள் மீது ஒளி படும் விதம். அதன் பிரதிபலிப்பு. அதனால் ஏற்படும் உணர்வுநிலை மாற்றங்கள் இவற்றையே ஓவியங்கள் முதன்மையாகக் கொண்டிருக்கின்றன மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தின் இளம் பெண்ணின் வெதுவெதுப்பான மென்மையான மற்றும் ஒளி ஊடுருவக்கூடிய தோல் மினுமினுப்படைந்து காணப்படுகிறது.
1318ல் உலகிலே முதன்முறையாகப் பாரிஸ் நகரில் தான் தெரு விளக்குகள் அறிமுகமாகின. அப்போது தெருவிளக்கிலும் மெழுகுவர்த்தியே பயன்படுத்தப்பட்டது. 1829 இல் பாரிஸ் கேஸ் லைட் எனப்படும் எரிவிளக்குகளை நிறுவியது, இந்த விளக்குள் ஒவ்வொன்றும் பத்து மெழுகுவர்த்திகளுக்குச் சமமான ஒளியை வழங்கியது. 1870 வாக்கில், பாரிஸ் முழுவதும் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட கேஸ் லைட்கள் அமைக்கப்பட்டன. ஷெண்டல் ஓவியம் ஒன்றில் சந்தையின் ஒரு பகுதியில் புனிதரின் பெயரில் யாசகம் கேட்கும் ஒருவருக்கு காணிக்கை தருகிறாள் ஒரு இளம்பெண். இரவுக்காட்சிக்குள் தான் எத்தனை மடிப்புகள்.

பணக்காரர்கள் மட்டுமே தங்கள் வீடுகளில் மெழுகுவர்த்திகள் நிறைந்த சரவிளக்குகளை வாங்கிப் பயன்படுத்தினார்கள். உலகின் பல நகரங்களில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கூட, மெழுகுவர்த்திகளே வெளிப்புற நிகழ்வுகளை ஒளிரச் செய்யப் பயன்படுத்தப்பட்டன அதன் சாட்சியமாகவே ஷெண்டலின் ஓவியங்கள் உள்ளன.
ஷெண்டலின் ஓவியங்களில் வெளிப்படும் ஒளியின் அழகு நம்மை மயக்குகிறது. அவரது ஓவியத்திலுள்ள பெண்களும் அவர்களின் உடையும் வெர்மீரின் பெண்களை நினைவூட்டுகின்றன

இரவு எப்போதும் பகலை விட மர்மமானது, மேலும் எந்த நேரத்திலும் அணைந்துவிடக்கூடிய ஒளிரும் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில், பொருட்களின் இயல்பு மறைந்து மாயத்தன்மை கூடிவிடுகிறது. ஒளி எவ்வளவு விலைமதிப்பற்றது என்பதையே ஷெண்டலின் ஓவியங்கள் புரிய வைக்கின்றன.
•••
August 27, 2024
உடலும் உணர்வும்
சீன எழுத்தாளரான ஷாங் சியான் லியாங்கின் இரண்டு கதைகளை உடலும் உணர்வும் என்ற பெயரில் கணேஷ் மொழியாக்கம் செய்திருக்கிறார். சவுத் ஆசியன் புக்ஸ் 1992ல் வெளியிட்டுள்ளது.
இதில் கைப்பு ஊற்று என்றொரு சிறுகதையிருக்கிறது. அக்கதை லாரி ஒட்டுநரால் சொல்லப்படுகிறது. பத்திரிக்கையாளர் ஒருவர் பாலைவனத்தினைக் கடந்து செல்லும் பயணத்தின் போது லாரியில் பயணிக்கிறார். அப்போது லாரியின் ஒட்டுநர் தனது கடந்தகாலக் கதையைச் சொல்லத் துவங்குகிறார். நீண்ட தூரப் பயணங்களின் போது லாரி ஒட்டுநர்கள் பேச்சுத்துணைக்கு ஏங்குவதைப் பற்றியும் அவர்கள் மனம் திறந்து தனது கடந்தகாலத்தை வெளிப்படுத்துவதையும் கதை சிறப்பாகச் சித்தரிக்கிறது.

லாரி டிரைவர் ஹேனான் பகுதியைச் சேர்ந்தவர். தனது இளமைக்காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை விவரிக்கிறார். அதில் அவர் சந்தித்த இரண்டு பெண்களைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார். அது அவரது காதல் கதையாக மாறுகிறது. தனது காதலை அவர் உணர்ச்சிப்பூர்வமாகச் சொல்லும் விதம் அழகாக உள்ளது.
கதையின் முடிவில் எந்த சுகத்தையும் தராத தன்னை காதலித்த பெண்ணைப் பற்றிச் சொல்லும் போது கைப்பு ஊற்றைப் பருகியவர் பாக்கியசாலிகள். என் மனைவி அப்படியானவள் என்கிறார். கதையின் ஒரு இடத்தில் மனைவி நம் வாழ்க்கையில் எப்படியிருக்கிறோம் என்பதை விடவும் யாருடன் இருக்கிறோம் என்பது முக்கியமானது என்கிறாள். நம்மை நேசிப்பவருடன் வாழும் வாழ்க்கை மகத்தானது என்பதை ஒட்டுநரின் பதிலால் அறிந்து கொள்கிறோம்.
எழுதப்படாத தனது காதல் நினைவுகளை தனது மகன் ஒரு கதையாக எழுத விரும்புவதாகவும் ஒட்டுநர் தெரிவிக்கிறார். இந்தக் கதை திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. இந்தத் தொகுப்பிலுள்ள முதல் கதை குறுநாவல் போலச் சற்றே பெரியது. தந்தைக்கும் மகனுக்குமான உறவைப் பேசும் கதையது. இரண்டும் சிறப்பான கதைகளே.
August 26, 2024
இசையும் வெளிச்சமும்
எத்தனை முறை பார்த்தாலும் வியப்புக் குறையாத படம் சத்யஜித்ரேயின் ஜல்சாகர் (Jalsaghar) . அவரது திரை இதிகாசமாகவே இப் படத்தைக் கருதுகிறேன்.

ஜல்சாகரில் வரும் இசைக்கூடத்தில் தொங்கும் சரவிளக்குகள் நிலப்பிரபுத்துவத்தின் கடைசி அடையாளமாக விளங்குகின்றன. பணியாளர்களில் ஒருவரான அனந்தா அந்த விளக்குகளைச் சுத்தம் செய்து ஏற்றுவதை விருப்பத்துடன் செய்கிறார். அவரது சிரிப்பு அலாதியானது.
ஜமீன்தார் பிஸ்வாம்பரர் இசையினையும் வெளிச்சத்தையும் விரும்புகிறார். இசைக்கூடத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டவுடன் அது வீட்டின் பகுதியாக இல்லாமல் கலையரங்கமாக மாறிவிடுகிறது. இசைகேட்பதற்காக வரும் பார்வையாளர்கள் அந்த அறைக்குள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த அறைக்குள் மட்டுமே பிஸ்வாம்பரர் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார். அவர் கையில் மல்லிகைப்பூ சுற்றியிருக்கிறார். வெண்ணிற உடை. கருவளையம் கொண்ட கண்கள். யோசனை படிந்த முகம்.
ஜமீன்தார்களின் வீடுகளிலிருந்த இசை அறையைப் போல நமக்குள்ளும் ஒரு இசையறை இருக்கிறது. நமது விருப்பம் தான் அந்த அறையின் சரவிளக்கு. நமக்கு விருப்பமான இசையைக் கண்ணை மூடிக் கொண்டு கேட்கும் போது நாம் அந்த அறையில் தானிருக்கிறோம். நான் அதை முழுமையாக உணர்ந்திருக்கிறேன்.

19 ஆம் நூற்றாண்டு வங்காளத்தில் செழித்தோங்கிய நிலப்பிரபுக்களின் வரிசையில் கடைசியாக இருந்தவர் பிஸ்வாம்பரர்;ஜமீன் என்பது பாரசீக மொழிச் சொல்லாகும். முகலாயர்கள் மூலம் அது இந்தியாவில் அறிமுகமானது.
18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த ஜமீன்தார்களை நில உரிமையாளர்களாக மாற்றியதோடு வரி வசூல் செய்து ஒப்படைக்கும் பொறுப்பினையும் வழங்கியது.
17 ஆம் நூற்றாண்டில் கிழக்கு வங்காளத்தில் பன்னிரண்டு ஜமீன்தார் குடும்பங்களின் கூட்டமைப்பு செயல்பட்டு வந்தது. அதில் முஸ்லிம் மற்றும் இந்து ஜமீன்தார் குடும்பங்கள் அடங்கும். வங்காளத்தின் ஜமீன்தார்கள் கலைகளின் சிறந்த புரவலர்களாக விளங்கினார்கள். பிரிட்டிஷ் ஆட்சியில் பல நூலகங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் ஜமீன்தார்களால் நிறுவப்பட்டன. ஆனால் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவர்களின் அதிகாரம் குறைக்கப்பட்டது. நேரடி நிர்வாக முறை அறிமுகமானதால் ஜமீன்தார்களின் வருவாய் மற்றும் வாழ்க்கை நிலை மாறியது..
ஜமீன்தார்களின் ஆடம்பரமான வாழ்க்கையும் அதிகாரமும் மறைந்து வருவதைப் பிஸ்வாம்பரர் நன்றாக உணர்ந்திருக்கிறார். அவர் தனது பொருளாதார வீழ்ச்சியைப் பெரிதாக நினைக்கவில்லை. மாறாகத் தனது ரசனையும் விருப்பங்களும் அதனால் பாதிக்கப்படுவதை ஏற்க மறுக்கிறார்
கையிருப்பிலிருந்த கடைசிப்பணத்தையும் அவர் இசைக்காகச் செலவு செய்கிறார். கடனாளியாக இருப்பதைப் பற்றி அவர் கவலை கொள்வதில்லை. இசை நிகழ்ச்சியின் போது அவர் மனம் உருக ரசிக்கிறார்.

இசை நிகழ்ச்சி முடிந்தபிறகு அவர் தனது மனைவியோடு உரையாடும் காட்சியில் அவரது முகத்தில் இசைகேட்ட மயக்கம் படர்ந்திருக்கிறது. அவரது கண்களில் அதைக் காணமுடிகிறது.பத்மா நதிக்கரையை ஒட்டிய சிற்றூரில் ஜமீன்தார் வசிக்கிறார். அந்த உலகம் நகர வாழ்விலிருந்து துண்டிக்கப்பட்டது. மதுபானங்களை நகரிலிருந்து வரவழைக்கிறார்கள். வெளியிலிருந்து வரும் டிரக் ஒன்றைத் தவிரப் புற உலகின் அடையாளமே அங்கில்லை. மாளிகையின் பெரிய தூண்கள் நம் நினைவில் மாறாத பிம்பமாகப் பதிந்து போகின்றன.
படத்தின் துவக்க காட்சியில் வயதான ஜமீன்தார் பிஸ்வம்பர் ராய் தனது அரண்மனையின் மேற்கூரையில் மரநாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவரது பார்வை எங்கோ நிலைகுத்தியுள்ளது. அவருடைய வேலைக்காரன் அனந்தா சர்பத் கொண்டு வருகிறான். அதைத் தனது ஹூக்காவுக்கு அருகில் வைக்கிறார்.
‘இது எந்த மாதம்?’ என்று ராய் கேட்கிறார். அந்தக் கேள்வி அவர் தன்னைக் கடந்து செல்லும் நாட்களைக் கவனம் கொள்வதில்லை என்பதைச் சுட்டவில்லை. மாறாக வெளியே கேட்கும் ஷெனாய் இசை விழாக்காலம் துவங்கிவிட்டதை நினைவூட்டுவது போல அவருக்குத் தோன்றுகிறது. அதிலிருந்தே அக்கேள்வி பிறக்கிறது. அந்த இசை புதுப்பணக்காரன் மஹின் வீட்டில் நடக்கும் விசேசத்தில் வாசிக்கபடுவதை அறியும் போது அவருக்குத் தனது சொந்த மகனின் நினைவு வருகிறது
பிஸ்வம்பரின் நினைவுகளின் வழியே அவரது ஆடம்பரமான கடந்த காலம் காட்டப்படுகிறது. பிரம்மாண்டமான வானவேடிக்கைக்குப் பிறகு, கம்பீரமான, தூண்கள் கொண்ட இசை அறையில் இசை ஒரு பெண் இனிமையாகப் பாடுகிறாள். அந்த இசையினைத் தன்னை மறந்து ரசிக்கிறார். அவருக்கு இசை இல்லாத நாள் என்பது விளக்கு ஏற்றப்படாத இரவு போன்றதே
இசைக் கூடத்தில் உள்ள அவரது மூதாதையர்களின் படங்கள் அலங்காரத்திற்காக மட்டும் மாட்டப்படவில்லை. அவர் யார் என்பதை அவருக்கு நினைவூட்டுவதற்காகவே மாட்டப்பட்டிருக்கின்றன. இசைக்கூடத்திற்குள் வந்த பிறகு அவர் ஜமீன்தாரில்லை. இசைரசிகர் மட்டுமே அதுவும் தேர்ந்த ரசிகர்.

ஜல்சாகர் தாராசங்கர் பந்தோபாத்யாய எழுதிய சிறுகதை. அவரும் ஜமீன் குடும்பத்தில் பிறந்தவர். ஜமீன்களின் வீழ்ச்சிக்குப் பின்னால் கல்கத்தாவிற்குக் குடியேறி வாழ்ந்தவர். ஆகவே தான் பிஸ்வாம்பர்ரின் இசைரசனையை மனப்போக்கினை சிறப்பாக எழுத முடிந்திருக்கிறது.
புதுப்பணக்காரனான மஹிம் கங்குலி அவரை விடத் தேர்ந்த இசை ரசிகன் போலக் காட்டிக் கொள்கிறான். அந்தப் போலித்தனத்தை அவர் விரும்பவில்லை. ஆகவே தான் அவனது அழைப்பை நிராகரிக்கிறார்.
மஹிம் முன்னால் அவனை விடச் சிறந்த இசை ரசிகன் எனக் காட்டிக் கொள்ள வேண்டியே இசை அறையை மீண்டும் திறக்கிறார். அவர்களுக்குள் நடக்கும் உரையாடல் அதில் வெளிப்படும் பிஸ்வாம்பரரின் முகபாவங்கள் அபாரம். மஹிம் பொய்யான பணிவுடன் நடந்து கொள்கிறான். தற்பெருமை பேசுகிறான். அவன் புதிதாக வாங்கிய மின்சார ஜெனரேட்டரின் சத்தம் அவரை எரிச்சல் படுத்துகிறது.
பிஸ்வாம்பரர் வீட்டில் மின்சாரமில்லை. சரவிளக்குகளே எரிகின்றன. அவர் காரில் பயணம் செய்வதில்லை. குதிரையில் தான் செல்கிறார். ஒரு காட்சியில் யானையைக் கடந்து செல்லும் டிரக் புழுதி எழுப்பியபடி செல்வதைப் பிஸ்வாம்பர்ர் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் விரும்பாத மாற்றம் அவரைக் கடந்து செல்கிறது.
படத்தில் மூன்று இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதன் உச்சமான நிகழ்வே கதக் நடனம்
கதக் நிகழ்வின் போது இசைக்கலைஞருக்கு முதல் சன்மானம் தருவது தனது உரிமை என்று பிஸ்வாம்பரர் சொல்வது முக்கியமானது கடைசிப் பொற்காசுகளை அவர் தரும் போது மஹிமை வென்றுவிட்டதாகவே உணருகிறார்.
அவரது இசைரசனையை வீட்டின் பணியாளர்கள் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களும் இசைஅறையின் பதுமைகளே. வேலைக்காரன் அனந்தா அபூர்வமான கதாபாத்திரம்.

பிஸ்வாம்பரரின் பிரச்சனை இரவுகள். அதுவும் இது போல இசையும் மதுவும் மகிழ்ச்சியும் நிரம்பிய இரவுகள் அவரைவிட்டுப் போய்விட்டன. ஆகவே அவர் வெறுமையான பகலில் தனித்திருக்கிறார். பகல் அவரது தோல்வியைச் சுட்டிக்காட்டுகிறது வெறுமையைப் புரிய வைக்கிறது. ஆகவே விடியும் வரை அவர் இசைகேட்க விரும்புகிறார். . இரவில் அவர் தான் தோற்றுப்போனவனில்லை என்பதை நிரூபணம் செய்கிறாஅவரிடம் இப்போது எஞ்சியிருப்பது இரண்டு விசுவாசமான வேலைக்காரர்கள், பாழடைந்த அரண்மனை மற்றும் நினைவில் சுடராக ஒளிர்ந்து கொண்டிருக்கும் இசைக்கூடம். அவரது மனைவியும் மகனும் இறந்துவிட்டார்கள். பெண்கள் இல்லாத அந்த வீட்டில் இசை தான் பெண்ணின் அன்பை, அரவணைப்பை அவருக்கு அளிக்கிறது
தனது மகனை அரண்மனையின் வாரிசு என்பதை விடவும் இசையின் வாரிசு என்றே பிஸ்வாம்பரர் உணருகிறார். அவனுக்கு இசை கற்றுத்தரும் காட்சியே அதற்குச் சாட்சி. மனைவியும் மகனும் ஊருக்குப் புறப்படும் நேரத்தில் கூட அவர் இசைக்கருவியை வாசித்தபடியே தானிருக்கிறார். மனைவி அவருக்கு அறிவுரை சொல்லும் காட்சி அழகானது.
ஒரு காட்சியில் குடிபோதையில், அவர் தனது சொந்த உருவப்படத்தில் ஒரு சிலந்தி ஊர்ந்து செல்வதைப் பார்க்கும் போது பதற்றமாகிறார். அந்தச் சிலந்தி ஒரு குறியீடு.
இசை அறையில் மூதாதையர்களின் உருவப்படங்களுக்கு நடுவே இரவு முழுவதும் மது அருந்துகிறார், அப்போது மெழுகுவர்த்தியின் சுடர்கள் மெல்ல மெல்ல மங்கத் தொடங்கி அணையப்போவது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதைக் காப்பாற்ற நினைக்கிறார்.

பொழுது விடிந்துவிட்டதாகவும், அதனால் மெழுகுவர்த்திகளைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்று வேலைக்காரன் சொல்கிறான்.
அது மெழுகுவர்த்தியின் சுடர்களில்லை. அவரது ஆசையின் கடைசிச் சுடர்கள். அவை அணைந்து போவதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. படத்தின் மிக உன்னதமான காட்சியது.
விருந்தினர்கள் அனைவரும் சென்ற பிறகு, வெறிச்சோடிய இசை அறையில் அவர் தனது கடந்தகாலத்துடன் உரையாடுகிறார். இறந்து போன மூதாதையர்களுடன் தனது மதுக்கோப்பையை உயர்த்துகிறார். மற்ற சித்திரங்களைப் போல அவரும் ஒரு நிழல் உருவம் தானா. விடிகாலை வந்துவிட்டதெனப் பணியாளர் திரைச்சீலைகளை இழுக்கிறார். அதை அவரால் ஏற்க முடியவில்லை. பிஸ்வாம்பரராகச் சபி பிஸ்வாஸின் நடிப்பு நிகரற்றது. அலங்கார உடையில் அவர் கண்ணாடி முன்பாக நிற்கும் பார்க்கும் காட்சி அபாரம்.
இசைக்கூடம் தயாராகும் விதம் முக்கியமானது. அங்குள்ள ஆள் உயரக் கண்ணாடி, அதில் தெரியும் காட்சிகள். இசைக்கூடத்தை ரே மிக அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக அங்கே விரிக்கபடும் கம்பளம். மதுபான வகைகள். ஹூக்கா குழாய்கள். பார்வையாளர்களின் முகபாவங்கள், மஹிமின் போலியான ரசனை. பிஸ்வாம்பரர் இசைக்கூடத்திற்குக் கம்பீரமாக நடந்து வருவது. இசைக்கருவிகளை வாசிப்பவர்களின் அபூர்வ முகபாவங்கள். இசை தரும் எழுச்சி, சரவிளக்கின் மாயவெளிச்சம் என அந்த இசைக்கூடம் பேரழகுடன் சித்தரிக்கப்படுகிறது. சொந்த வாழ்வின் துயரங்களிலிருந்து அவரை இசை மீட்கிறது. தன்னைக் கடந்து செல்லும் காலமாற்றத்துடன் விரும்பிக் கைகுலுக்க வைக்கிறது. இசையிடம் அவர் சரணடைகிறார்.
கடைசி நிகழ்ச்சியில் சுழன்றாடும் கதக் நடனக்காரியின் பாதங்கள் நம்மை மெய்மறக்கச் செய்கின்றன.

பிஸ்வாம்பரர் கடைசியில் தனது குதிரையின் மீது ஏறி பயங்கரமான வேகத்தில் சவாரி செய்யத் தொடங்கி எதிர்பாராமல் தடுமாறி விழுகிறார். அவரது முடிவை அவரே தேடிக் கொள்கிறார்.
சுப்ரதா மித்ராவின் நிகரில்லாத ஒளிப்பதிவு, விலாயத் கானின் சிறந்த இசை. துலால் தத்தாவின் சிறந்த படத்தொகுப்பு, பன்சி சந்திர குப்தாவின் கலை உருவாக்கம், ரேயின் மேதமையான இயக்கம் என இந்திய சினிமாவின் என்றைக்குமான பெருமைகளில் ஒன்றாக விளங்குகிறது ஜல்சாகர்.
பிஸ்வாரம்பர் தான் அந்த மாளிகையின் இசையாக விளங்குகிறார். அவரது வாழ்க்கை என்பது இசைக்கூடத்தில் எரியும் சரவிளக்கின் வெளிச்சமே.
August 23, 2024
உதிர்ந்த பற்கள்.
மைக்கேல் ஜோஷெங்கோ (Mikhail Zoshchenko) ரஷ்யாவின் புகழ்பெற்ற நகைச்சுவை எழுத்தாளர். அரசியல் நையாண்டிக் கதைகள் எழுதியவர். இதன் காரணமாக ரஷ்ய எழுத்தாளர் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்.

1895ல் உக்ரேனில் பிறந்தவர். அவரது தந்தை ஒரு ஓவியர். அம்மா நாடக நடிகை. ஏழு வயதிலே ஜோஷெங்கோ கவிதைகள் எழுத துவங்கினார்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தவர். முதல் உலகப்போரின் காரணமாகத் தனது படிப்பைப் பாதியில் கைவிட்டு ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார். போரின் போது விஷவாயு தாக்கியதால் இவரது உடல் நலம் மோசமாகப் பாதிக்கபட்டது. அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட இதயக் கோளாறு காரணமாக ராணுவத்திலிருந்து விடுவிக்கபட்டார்.
ஜோஷ்செங்கோ பூட்மேக்கர் முதல் இரவுக்காவலாளி வரை பல்வேறு சிறிய வேலைகளைச் செய்திருக்கிறார்.இவர் எழுத்தாளராக மாறியது தற்செயலே

கலை வெளிப்பாட்டின் மீதான அரசின் கட்டுப்பாடுகளை எதிர்த்த ஜோஷ்செங்கோ தனது கண்டனத்தை நகைச்சுவையோடு வெளிப்படுத்தினார். அவரது சில சிறுகதைகள் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளன.
தன்னைப் பற்றி அவர் எழுதிய குறிப்பு வேடிக்கையானது.
நான் எங்குப் பிறந்தேன் என்று கூட எனக்குத் தெரியாது. பொல்டாவாவில் என்று. ஒரு ஆவணம் ஒன்று சொல்கிறது , இல்லை பீட்டர்ஸ்பர்க்கில் என மற்றொரு ஆவணம் சொல்கிறது , இரண்டு ஆவணங்களில் ஒன்று போலியானது. எது போலியானது என்பதைக் கண்டுபிடிப்பது கடினம் , ஏனென்றால் அவை இரண்டும் மிகவும் மோசமாக உருவாக்கப்பட்டதே ,. ஆண்டுகள் கூடக் குழப்பம் உள்ளது. ஒரு ஆவணம் 1895 என்றும் , மற்றொன்று 1896 என்றும் கூறுகிறது இரண்டையும் நம்ப முடியாது .
அதிகாரத்தின் அர்த்தமற்ற சட்டங்களாலும் கெடுபிடிகளாலும் சாமானியர்கள் எவ்வாறு கஷ்டப்பட்டார்கள் என்பதைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். ஆன்டன் செகாவின் கதைகளை நினைவூட்டும் எழுத்துமுறை.

அரசு எதிர்ப்புக் கதைகள் காரணமாக ஆட்சியாளர்களின் கோபத்திற்கு உள்ளானார். அவரது புத்தகங்கள் வெளியாவதில் தடை ஏற்பட்டது.
அவரது கதை ஒன்றில் வீடு கிடைக்காத தம்பதிகள் ஒரு வீட்டின் குளியல் அறையில் வசிக்கிறார்கள். இன்னொரு கதையில் குண்டுவீச்சில் மிருக்காட்சியில் இருந்த குரங்கு தப்பி நகரில் அலைகிறது. வரிசையில் காத்திருக்கிறது. மனிதர்களின் போலித்தனமான செயல்களைக் கேலி செய்யும் ஜோஷெங்கோ ஸ்டாலின் ஆட்சியின் போது மிகுந்த மனச்சோர்விற்கு உள்ளானார்.
அவரது இந்தப் பல் விவகாரம் சிறுகதையில் எகோரிச் என்பவருக்குத் திடீரென ஒரு பல் விழுந்துவிடுகிறது. ஒரு பல் தானே போனால் போகட்டும் என்று நினைக்கிறார். ஆனால் ஒரே வருஷத்துக்குள் ஆறு பற்கள் விழுந்துவிடுகின்றன. பயந்து போன அவர் உடனடியாகப் பல்மருத்துவமனைக்குச் செல்கிறார். அவர் ஏற்கனவே இன்சூரன்ஸ் செய்து வைத்துள்ளார். ஆகவே இலவசமாகப் பல்செட் பொருத்திவிடலாம் என்கிறார்கள்.
ஆனால் ஒரு நிபந்தனை அவருக்கு எட்டுப் பற்கள் விழுந்திருந்தால் மட்டுமே இலவசமாகப் பல்செட் பொருத்தமுடியும். என்கிறது மருத்துவமனை. அவருக்கோ ஆறு பற்கள் தான் விழுந்திருக்கிறது.
இது என்ன முட்டாள்தனமான சட்டம் என்று கோவித்துக் கொள்கிறார்.
இன்னும் இரண்டு பற்கள் விழுந்தவுடன் வாருங்கள். அதிர்ஷடமிருந்தால் விரைவில் விழுந்துவிடும் என்று இனிமையாகப் பேசி மருத்துவமனையினர் அனுப்பி வைக்கிறார்கள்
அடுத்தசில மாதங்களில் இன்னும் இரண்டு பற்கள் விழுகின்றன. இப்போது எட்டுப் பற்கள் இல்லாத காரணத்தால் உடனே பல்செட் பொருத்திவிட வேண்டும் என மருத்துவமனைக்குப் போகிறார்
மருத்துவமனை அவரை வரவேற்கிறது. இன்ஷுரன்ஸ் பேப்பர்களைச் சரிபார்க்கிறது
“காம்ரேட் ஒரே வரிசையில் எட்டுப் பற்கள் விழுந்தால் மட்டுமே புதிய பல்செட் பொருத்த சட்டம் அனுமதிக்கிறது “என்கிறார்கள்.
அப்படி விழவில்லை என்கிறார் எகோரிச்.
“அப்படியா? நாங்கள் ரொம்ப வருத்தப்படுகிறோம். எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கையை விரித்துவிடுகிறார்கள்.
இப்போது அவர் திரவபானம் மட்டுமே ஆகாரமாகக் கொள்கிறார். அத்தோடு தினசரி மூன்று முறை பல்விளக்கவும் ஆரம்பித்துவிட்டார் என்று கதை முடிகிறது
சோவியத் சிஸ்டம் மட்டுமில்லை. உலகெங்குமே இன்சூரன்ஸ் கம்பெனிகள் வைத்திருக்கும் சட்டங்களையும் நடைமுறையினையும் நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது. எகோரிச் போல இருக்கும் பற்களைக் காப்பாற்றிக் கொள்வது தான் ஒரே தீர்வு.
••
.
August 21, 2024
வகுப்பறை
காரைக்கால் கீழையூர் அரசுப்பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் விசாகன் மாணவர்களுக்கான புத்தக அறிமுக நிகழ்வில் டோட்டோ சான் பற்றிய எனது உரையை வகுப்பறையில் ஒளிபரப்பியிருக்கிறார். யூடியூப்பில் உள்ள எனது காணொளியை இது போல வகுப்பறையில் ஒளிபரப்பியது பாராடிற்குரிய முயற்சி.
இந்நிகழ்வில் நூறு மாணவர்களும் எட்டு ஆசிரியர்களும் அமர்ந்து கேட்டிருக்கிறார்கள்.
இந்தக் காட்சியைக் காணும் போது சந்தோஷமாகயிருக்கிறது. விசாகனுக்கு எனது அன்பும் நன்றியும்




August 20, 2024
கவிஞனின் ஒரு நாள்
அகழ் இணைய இதழில் என்னுடைய ஒரு நாள் என்று மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணனின் கட்டுரை வெளியாகியுள்ளது. தமிழாக்கம் செய்திருப்பவர் அழகிய மணவாளன். சரளமான, நேர்த்தியான மொழியாக்கம். கல்பற்றா நேரடியாகத் தமிழில் எழுதியது போலிருக்கிறது.

நான் கல்பற்றா நாராயணன் கவிதைகளை மொழிபெயர்ப்பில் வாசித்திருக்கிறேன். அவரது கவிதைகளை மிகவும் பிடிக்கும். மலையாளத்தின் முக்கியக் கவிஞர் என்பதாக மட்டுமின்றிச் சர்வதேச அளவிலான முக்கியக் கவிஞர்களில் ஒருவராகவே அவரைக் கருதுகிறேன்.
அவரது இத்ரமாத்ரம் நாவல் சுமித்ரா என ஷைலஜா மொழியாக்கத்தில் தமிழில் வெளியான போது அதற்கு ஒரு அணிந்துரை எழுதியிருக்கிறேன். கவிஞர்கள் புனைவு எழுதும் போது உரைநடை பாதரசம் போலாகி விடுகிறது. அப்படியான நாவல் தான் சுமித்ரா.

தனது கவிதைகளைப் போலவே கட்டுரையிலும் கல்பற்றா ஒளிருகிறார். அவரது மொழிநடை நிகரற்றது. இந்தக் கட்டுரை அவரது ஒரு நாளைப் பதிவு செய்துள்ளது. அதற்குள் எத்தனை மடிப்புகள். வியப்புகள்.
கிரிக்கெட் பற்றிய ஆர்வம். கவிதை வாசிப்பு. தாவோ, காலை நடை, பேரனுக்கு மொழி கற்றுத்தருவது. தோசையின் ருசி. ஒளப்பமண்ண கவிதை என மலர் விரிவது போலத் தன்னியல்பாக அவரது அன்றாடம் விரிகிறது. இக்கட்டுரையின் ஒரு இடத்தில் பேரன் இருக்கிறான் என்றால் அந்த இரவில், காவலாளிகள் உறங்கினால்கூடச் சித்தார்த்தனால் வீட்டைவிட்டு வெளியேற முடிந்திருக்காது. என்றொரு வரியை கல்பற்றா எழுதியிருக்கிறார். யோசிக்கவும் வியக்கவும் வைத்த உண்மையான வரியது.
விளையாட்டுவீரர்களும், அவர்களின் உறவினர்களும் இறந்துவிட்டால் அந்தத் தகவல் செய்தித்தாளின் விளையாட்டு பக்கத்தில்தான் வருகிறது என்பது வாழ்க்கை ஒரு விளையாட்டு என்று நினைக்கும் என்னை மயிர்க்கூச்செறிய வைக்கிறது என்றொரு அவதானிப்பை கல்பற்றா வைக்கிறார்.
விளையாட்டுப் பக்கம் என்பது கவிதையைப் போல முழுமையான தனியுலகம். அங்கே விளையாட்டுவீரனின் வெற்றி தோல்வி மட்டுமில்லை. அவனது சுகதுக்கங்களும் பேசப்படுவது சரியானது தான்.
வெறும் கையுடன் காலை நடை சென்றுவிட்டு கவிதையுடன் திரும்பி வரும் அனுபவத்தை இவரைப் போலவே மேரி ஆலிவரும் எழுதியிருக்கிறார். கவிதை எங்கோ நாம் அறியாத மரத்தில் பழத்துத் தொங்கிக் கொண்டிருக்கிறது போலும். கவிஞர்கள் மட்டுமே அதைக் காணுகிறார்கள். பறித்துக் கொள்கிறார்கள்.
காலை எழுந்தவுடன் கவிதை. இரவில் கதைகள் என்ற கல்பற்றாவின் வாசிப்பைத் தான் நானும் பல ஆண்டுகளாகப் பின்பற்றி வருகிறேன். அந்த வகையில் அவர் எனக்குத் தோழன்.

அழகிய மணவாளன் சமீபமாக மலையாளத்திலிருந்து செய்து வரும் மொழியாக்கங்கள் சிறப்பாக உள்ளன. குறிப்பாக அவர் தேர்வு செய்யும் படைப்புகள். அதன் கவித்துவம் குறையாமல் மொழியாக்கம் செய்ய முயலும் விதம் பாராட்டிற்குரியது. அகழ் இதழில் வெளியாகியுள்ள அவரது பிற மொழிபெயர்ப்புகளையும் தேடி வாசித்தேன். மிக முக்கியமான மொழியாக்கங்கள்.
தேர்ந்த படைப்புகளை வெளியிட்டு வரும் அகழ் இணைய இதழிற்கும் அழகிய மணவாளனுக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.
இணைப்பு
என்னுடைய ஒரு நாள்- கல்பற்றா நாராயணன்
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
