S. Ramakrishnan's Blog, page 25
October 3, 2024
நிசார் கப்பானியின் காதல் கவிதைகள்
கவிஞர் நிசார் கப்பானியின் (Nizar Qabbani) அராபிய காதல்கவிதைகள் தொகுப்பினை வாசித்தேன். மிகச்சிறந்த காதல்கவிதைகள்.

காதலிப்பவர்களுக்கு வழக்கிலுள்ள சொற்கள் போதுமானதாகயில்லை. புதிய சொற்களை தேடுவதை விடவும் சொற்கள் இல்லாமல் காதலிக்க முயலுகிறார்கள் என்கிறார் கப்பானி.
இவரது கவிதைகள் எளிமையானவை. ஆனால் வியப்பூட்டுபவை. காதலின் பித்து கவிதையாக மலருகிறது. குறிப்பாக முட்டாள் பெண்ணின் கடிதம் போன்ற கவிதையில் வரலாற்று நினைவுகளின் வழியே காதலைப் பேசுகிறார்.
விளக்கை விடவும் வெளிச்சம் முக்கியம்,
குறிப்பேடினை விடவும் அதில் எழுதப்பட்ட
கவிதை முக்கியம்,
உதடுகளை விடவும் முத்தம் முக்கியம்.
நான் எழுதிய கடிதங்கள்
நம் இருவரையும் விட முக்கியமானது. சிறப்பானது
உனது அழகையும் எனது பைத்தியக்காரத்தனத்தையும்
மக்கள் கண்டறியும் ஆவணங்கள்
அவை மட்டுமே
என்கிறது கப்பானியின் காதல்கவிதை.
••

வழக்கறிஞரான நிசார் கப்பானி சிரியாவில் பிறந்தவர்
அவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை மத்திய கிழக்கு நாடுகளுக்கு வெளியே வாழ்ந்திருக்கிறார்.
மனதிற்கு பிடிக்காத ஒருவரை கட்டாயத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என குடும்பத்தினர் வற்புறுத்தியதால் அவரது சகோதரியின் தற்கொலை செய்து கொண்டார். அந்த பாதிப்பு கப்பானியின் மனதில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தியது . அவரது கவிதைகளில் அந்த துயரம் வழிந்தோடுகிறது.
••
கோடையில்,
நான் கடற்கரையில் கிடந்தபடி
உனைப் பற்றி நினைக்கிறேன்,
நான் உணர்ந்தவற்றை
கடலிடம் சொன்னால் ,
அது தன் கரையையும், சிப்பிகளையும், மீனையும் விட்டுவிட்டு
என்னைப் பின்தொடர்ந்திருக்கும்.
என்ற கப்பானியின் கவிதை எளிமையானது. ஆனால் அது கடலையும் பொறாமை கொள்ள வைக்கும் காதலைப் பேசுகிறது.
••
காதலன் என்னிடம் கேட்கிறான்:
“எனக்கும் வானத்திற்கும் என்ன வித்தியாசம்?”
வித்தியாசம் என்னவென்றால் அன்பே,
நீ சிரிக்கும்போது,
நான் வானத்தை மறந்து விடுகிறேன்.
என்கிறது இன்னொரு கவிதை.
•••
என் மகன் தனது வண்ணப் பெட்டியை
என் முன்னே வைத்து
அவனுக்காக ஒரு பறவையை
வரையச் சொல்கிறான்.
சாம்பல் நிறத்தில் நான் தூரிகையை நனைத்து
பூட்டுகள் மற்றும் கம்பிகளுடன் ஒரு சதுரத்தை வரைகிறேன்.
திகைப்பு அவன் கண்களை நிரப்புகிறது:
“…ஆனால் இது ஒரு சிறைச்சாலை, அப்பா ,
பறவையை எப்படி வரைய வேண்டும் என்று
உங்களுக்குத் தெரியாதா?”
நான் அவனிடம் சொன்னேன்:
“மகனே, என்னை மன்னிக்கவும்.
பறவைகளின் வடிவங்களை நான் மறந்துவிட்டேன்.”
••
அடுக்கடுக்காக நீண்டு செல்லும் இக்கவிதை இப்படி முடிகிறது .
••
என் மகன் எனது படுக்கையின் விளிம்பில்
அமர்ந்து ஒரு கவிதையை வாசிக்கச் சொன்னான்,
என் கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர்
தலையணை மீது விழுந்தது.
“அப்பா இது கண்ணீர், கவிதை அல்ல!” என்றான் மகன்
நான் அவனிடம் சொன்னேன்
” மகனே, நீ வளர்ந்து,
அரேபியக் கவிதைகளை படிக்கும்போது,
வார்த்தையும் கண்ணீரும் இரட்டையர்கள் என்பதை அறிவாய்
அரபுக் கவிதை என்பது விரல்களால் அழும் கண்ணீர்
என்பதை தெரிந்து கொள்வாய்
••
விருதுநகர் புத்தகத் திருவிழாவில்
விருதுநகர் புத்தகத் திருவிழாவில் அக்டோபர் 5 சனிக்கிழமை மாலை உரையாற்றுகிறேன்.
தலைப்பு : காண் என்றது இயற்கை.
October 2, 2024
இளையராஜா திரைப்படம்.
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் பணியாற்றுகிறேன்.

அதன் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் மூன்று மாதங்களுக்கு முன்பாக அழைத்திருந்தார். திரைப்படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் பணியாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து திரைக்கதை உருவாக்கப் பணியில் இணைந்து கொண்டேன்.

இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரத்திற்கு இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர்களுடன் சென்று அவரது சொந்த வீடு, அவர் படித்த பள்ளிக்கூடம், அவர் விளையாடி மகிழ்ந்த இரட்டை ஆலமரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களைக் கண்டோம். அத்துடன் ஊர்மக்களைச் சந்தித்து உரையாடினோம்.
இளையராஜாவின் பழைய நேர்காணல்கள், பத்திரிக்கைச் செய்திகள் அவரது பழைய புகைப்படங்கள், காணொளிகள் எனச் சேகரித்துக் கொண்டேன். அவர் குறித்து வெளியான தகவல்கள் மற்றும் தொடர் கட்டுரைகளைத் தேடித்தேடி வாசித்தேன். அவர் கடந்து வந்த பாதை வலியும் வேதனையும் நிரம்பியது. தமிழ் திரையிசையில் அவரது சாதனைகள் நிகரற்றவை. இசையின் மானுட வடிவமே இளையராஜா.
அருண் மாதேஸ்வரனுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியான அனுபவம். இப்படம் அவரது திரைவாழ்வில் மிக முக்கியப் படமாக அமையும்.
இரண்டு மாத கால தொடர் விவாதங்களுக்குப் பிறகு திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் வசன வடிவை எழுதி இயக்குநருக்குக் கொடுத்துள்ளேன். அவரது திருத்தம் மற்றும் மாற்றங்களுக்குப் பின்பு திரைக்கதையின் இறுதி வடிவம் உருவாகும்.
இளையராஜாவின் இசை கேட்டு வளர்ந்த எனக்கு அவரது படத்தில் பணியாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது பெருமகிழ்ச்சியைத் தருகிறது.
விருதுநகரில்
விருதுநகரில் எனது நண்பரும் தொழில் அதிபருமான அம்பாள் முத்துமணி தனது அம்பாள் ராமசாமி புஷ்பமணி அறக்கட்டளை சார்பில் சிறுகதைப் போட்டி ஒன்றினை நடத்துகிறார்


இதன் பரிசளிப்பு விழா அக்டோபர் 6 மாலை விருதுநகர் அம்பாள் ராமசாமி புஷ்பமணி அரங்கில் நடைபெறுகிறது
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பரிசுகளை வழங்குவதுடன் வரலாற்றின் வெளிச்சம் என்ற தலைப்பில் உரையாறறுகிறேன்.
திருச்சி புத்தகத் திருவிழாவில்
திருச்சி நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் அக்டோபர் 4 வெள்ளிக்கிழமை மாலை மகத்தான இந்திய நாவல்கள் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன்.

திருச்சி புத்தகத் திருவிழாவில் அரங்கு எண் 26 மற்றும் 27ல் எனது அனைத்து நூல்களும் விற்பனைக்கு கிடைக்கின்றன.
மலேசியப் பயணம்
ஒரு வார கால மலேசியப் பயணம் முடித்து இன்று சென்னை திரும்பினேன். பினாங்கு துவங்கி கூலிம், சுங்கைசிப்புட் ரிஞ்சிங், மலாக்கா என ஐந்து நிகழ்ச்சிகள். கோலாலம்பூரிலிருந்து பினாங்கு வரையான நீண்ட தூரக் கார் பயணம். அதுவும் மழையோடு பயணம் செய்தது மறக்க முடியாத அனுபவம். எல்லா நிகழ்ச்சிகளிலும் அரங்கு நிரம்பிய கூட்டம். எனது மலேசியப் பயணத்தை நண்பர் பி.எம். மூர்த்தி சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார். இவர் மலேசிய கல்வி அமைச்சகத்தின் தேர்வு வாரிய அதிகாரியாகப் பணியாற்றியவர். சிறந்த கல்வியாளர். எனது நீண்டகால நண்பர்.

கச்சிதமாகத் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள். நல்ல அறை. சுவையான உணவு. நண்பர்கள் சந்திப்பு. கலந்துரையாடல் என மூர்த்தி அனைத்தையும் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். அவரது துணைவியாரும் பயணம் முழுவதும் உடனிருந்து அன்பாக கவனித்துக் கொண்டார்கள். அவர்களுக்கு எனது மனம் நிறைந்த அன்பும் நன்றியும். எங்களது பயணத்தில் உடன்வந்து உதவிகள் செய்த நாடகக் கலைஞரும் ஆசிரியருமான விஸ்வா மற்றும் அவரது துணைவியாருக்கும் நன்றி

சுங்கை சிப்புட்டில் சகோதரி செண்பகவள்ளி தனது வீட்டில் சிறப்பான விருந்து ஏற்பாடு செய்திருந்தார். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அன்பும் நன்றியும்.



நிகழ்வுகளுக்கு இடையில் பினாங்கின் புதிய பாலம், ஜார்ஜ் டவுனில் உள்ள இந்திய மியூசியம். புத்தர் கோவில், தைப்பிங்கில் உள்ள லேக் கார்டன்ஸ், கோலக்கங்சாரிலுள்ள முதல் ரப்பர் மரம், சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலை, விக்டோரியா பாலம், ஈவூட் புதிய தமிழ்ப்பள்ளி என நிறைய இடங்களுக்கும் சென்று வந்தேன்.
எழுத்தாளர் புண்ணியவான், பாலமுருகன், பச்சைபாலன், தயாஜி எனப் படைப்பாளிகள் பலரையும் சந்தித்து உரையாடியது மகிழ்ச்சி அளித்தது. கூலிம் நவீன இலக்கியக் களம் சார்பில் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி ஒரு இலக்கிய உரையினையும் ஏற்பாடு செய்திருந்தார். அன்று காலை நண்பர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெற்றது. குமாரசாமி இதனை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்து கொடுத்தார். சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி.










மலாக்காவில் நடைபெற்ற நிகழ்வில் எனக்கு நவீன இலக்கியச் செம்மல் என்ற விருதினை வழங்கினார்கள். இதற்கான பதக்கமும் சான்றிதழும் அளிக்கப்பட்டன.

September 25, 2024
ரொட்டியில் எழுதப்பட்ட கவிதை
பிரிட்டிஷ் கவிஞர் வெர்னான் ஸ்கேன்னல் (Vernon Scannell ) ரொட்டியில் கவிதை எழுதும் கவிஞரைப் பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.

காகிதத்திற்குப் பதிலாக ரொட்டியில் ஒருவர் கவிதை எழுத விரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது.
அதில் கவிதை உண்ணப்படும் பொருளாக மாறுகிறது.
ரொட்டியில் எழுதுவதற்கான மையாக ஜாமை மாற்றுகிறார் கவிஞர். அதுவும் விரலால் ஜாமைத் தொட்டு ரொட்டி மீது சிறிய கவிதை எழுதுவதாகச் சொல்கிறார். கவிதை எழுதுவது குழந்தை விளையாட்டு போல மாறுகிறது.
ரொட்டி மீது எழுதப்பட்ட கவிதையை தனக்கு விருப்பமானவர் எவராவது படிக்க வேண்டும் எனவும் ஆசைப்படுகிறார். ஒரு வேளை படிக்க விரும்பாவிட்டால் அந்த ரொட்டியைச் சாப்பிட்டுவிடுங்கள் என்றும் ஆலோசனை சொல்கிறார்.
கவிதையின் கடைசி வரி சிறப்பானது. கவிதையோ, ரொட்டியோ தேவைப்படாதவனை என்ன செய்வது என்று கேட்கும் கவிஞன் அவன் வாழ்வில் மோசமான வழியில் செல்கிறான் என்பதைத் தவிர என்று முடிக்கிறார்.
கவிதையும் ரொட்டியும் இரு எதிர்நிலைகள் இல்லை. இரண்டு வாழ்வின் ஆதாரங்கள் என்கிறது இக்கவிதை.
கவிதைகளை உண்பது போல வேறு எதுவும் மக்களை மகிழ்ச்சியடையச் செய்யாது என்று மார்க் ஸ்ட்ராண்ட் ஒரு கவிதையில் சொல்கிறார். கவிதையை உண்ணுபவனின் வாயில் மை வழிவதாக அக்கவிதை துவங்குவதாக நினைவு.
September 24, 2024
காதலின் சாவி.
கிரேக்கத் தொன்மத்தில் வரும் பிரமஸ் மற்றும் திஸ்பேவின் (Pyramus and Thisbe) காதல் கதையின் பாதிப்பில் தான் ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் நாடகம் எழுதப்பட்டிருக்கிறது. இரண்டும் பகையான குடும்பத்திற்குள் நடக்கும் காதலையே பேசுகின்றன. ரோமானிய கவிஞர் ஓவிட் இக்கதையைத் தனது மெட்டாமார்போசிஸில் சிறப்பாக எழுதியிருக்கிறார்.

கிழக்குப் பாபிலோனில், ராணி செமிராமிஸ் நகரத்தில், அடுத்தடுத்த வீட்டில் வசித்துவரும் பிரமஸ் மற்றும் திஸ்பேவின் பெற்றோர்கள் நீண்டகாலமாக வெறுப்பும் பகையும் கொண்டிருந்தார்கள். ஆனால் காதலர்களான பிரமிஸ் மற்றும் திஸ்பே இரண்டு வீட்டிற்கும் பொதுவாக இருந்த சுவரிலிருந்த துளை வழியாக ரகசியமாகப் பேசிக் கொள்கிறார்கள். பெற்றோர்களின் கண்டிப்பு பற்றிப் புகார் சொல்கிறார்கள். ஒவ்வொரு நாளும் இரவு பிரியும் போது சுவரை முத்தமிட்டுக் கொண்டு பிரிகிறார்கள். இப்படியாக அவர்கள் காதல் வளர்க்கிறது. அவர்கள் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார்கள், ஆனால் பெற்றோர் சம்மதிக்கவில்லை. இனியும் பொறுக்க முடியாது என வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ளலாம் என்று ஒருநாள் முடிவு செய்கிறார்கள்
நகர வாயில்களுக்கு வெளியே, நினஸ் மன்னரின் கல்லறைக்கு அருகில் உள்ள ஒரு மல்பெரி மரத்தடியில் இரவு சந்திக்கத் திட்டமிடுகிறார்கள்.

அதன்படி, திஸ்பே மாறு வேடமிட்டு வீட்டை விட்டு வெளியேறி வருகிறாள். நினஸின் கல்லறைக்கு அருகில் உள்ள மல்பெரி மரங்களின் தோட்டத்திற்கு வந்து சேருகிறாள். அந்த இடம் வெறிச்சோடியிருந்தது. மங்கிய நிலவொளி. பிரமஸ் எங்கேயிருக்கிறான் எனத் தெரியாமல் அவனைத் தேடுவதற்காகத் தனது முகத்திரையை அகற்றுகிறாள். அப்போது அங்குள்ள குளத்தில் தண்ணீர் குடிப்பதற்காக ஒரு சிங்கம் வந்திருந்தது. அச்சிங்கம் அவளைத் தாக்க முற்படவே தப்பியோடி பாறைகளுக்கு இடையே ஒளிந்து கொள்கிறாள்.
வெறி கொண்ட சிங்கம் இரத்தம் தோய்ந்த தாடையால் அவளது முகத்திரையைக் கிழித்து எறிகிறது. அங்கு வந்த பிரமஸ் கிழிந்துகிடந்த இரத்தக் கறை படிந்த முகத்திரையைப் பார்க்கிறான் அது திஸ்பேயின் முகத்திரை என அறிந்து அதிர்ச்சி அடைகிறான். சிங்கம் அவளைக் கொன்றுவிட்டதாக நினைத்து வருந்தி தனது வாளால் தற்கொலை செய்து கொள்கிறான்.
திஸ்பே அவனைத் தேடி வருகிறாள். அங்கே பிரமஸ் இறந்துகிடப்பதைக் கண்டு அதே வாளால் தன்னையும் மாய்த்துக் கொண்டு இறந்து போகிறாள். இதை அறிந்த அவர்கள் பெற்றோர்கள் உடலைக் கைப்பற்றுகிறார்கள். பின்பு காதலர்கள் ஒரே கல்லறையில் ஒன்றாக அடக்கம் செய்யப்படுகிறார்கள். இந்தக் காதலர்களின் ஒப்பற்ற காதலின் நினைவாகக் கடவுள் வெள்ளையாக இருந்த மல்பெரி மரத்தின் பழங்களைச் சிவப்பாக மாற்றினார் என்கிறார்கள். அது முதலே மல்பெரி பழம் சிவப்பாக உள்ளது என்கிறது கிரேக்கக் கதை.
கிரேக்கப் புராணங்களில் இது போல மலரின், பழங்களின் நிறம் மாறுவது தொடர்ந்து குறிப்பிடப்படுகிறது. நர்சிசஸ் இறந்துவிடுகிறான் அவனது இரத்தத்திலிருந்து நார்சிசஸ் மலர் முளைத்ததாகச் சொல்கிறார்கள். இது போலவே அடோனிஸின் இரத்தக் கறை படிந்த வெள்ளை ரோஜாக்கள் காரணமாகவே பூமியில் சிவப்பு ரோஜாக்கள் உருவானதாகச் சொல்லப்படுகிறது.

இந்தக் கதையில் இடம் பெற்றுள்ள பிரமஸ் மற்றும் திஸ்பேவின் வீட்டுத் துளையின் பார்வையில் அர்ஜென்டினா எழுத்தாளர் என்ரிக் ஆண்டர்சன் எம்பெர்ட் குறுங்கதை ஒன்றினை எழுதியிருக்கிறார். இவர் குறுங்கதைகளை எழுதுவதில் முன்னோடியான எழுத்தாளர். Woven on the Loom of Time என அவரது குறுங்கதைகளின் தொகுப்பு வெளியாகியுள்ளது.

அவரது குறுங்கதையில் பாபிலோனில் இரண்டு பழைய வீடுகளுக்கு இடையே இருந்த சுவர் ஒன்றில் சிறிய துளை விழுகிறது. சில வாரங்களில் அந்தத் துளை வாய் போன்ற வடிவம் கொள்கிறது. நாளடைவில் அது காது போன்ற வடிவத்தை எடுத்துக் கொள்கிறது. பின்பு கண் வடிவமாகிறது.
இரண்டு பக்கம் நடப்பதையும் ஆசையாகக் கவனிக்கத் துவங்குகிறது. காதலர்கள் ரகசியமாகச் சந்தித்துக் கொள்ள மாட்டார்களா என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. பயனற்ற காத்திருப்பு எனப் புரிந்து கொள்கிறது. பிரமஸ் மற்றும் திஸ்பே பற்றி ஒருபோதும் அறியாத அந்தத் துளையைக் காலவோட்டத்தில் சிலந்தி வலை படர்ந்து மூடிவிடுகிறது.
எம்பெர்ட் சுவரில் விழுந்த துளையால் வசீகரிக்கப்படுகிறார். அதை ஒரு கதாபாத்திரமாக உருவாக்குகிறார். தனது சிறிய கதையின் வழியே கிரேக்க தொன்மத்தை நோக்கி நம்மை பயணிக்கச் செய்கிறார். குறுங்கதை என்பது ஒருவகை நினைவூட்டல். ஒரு மறு உருவாக்கம்.
நான் பிரமஸ் மற்றும் திஸ்பேவின் கதையை சிங்கம் வழியாகவே எழுத விரும்புவேன். அது தான் கதையின் முடிச்சு. சிங்கம் இல்லாவிட்டால் அவர்கள் காதல் கதை மகிழ்ச்சியாக முடிந்திருக்கும். சிங்கம் நிஜமாக வந்திருக்குமா என்பதே கேள்வி தான். அப்படி நம்ப வைத்திருக்கலாம்.
பிரமஸ் மற்றும் திஸ்பே கதையை படிக்கும் போது பஷீரின் மதிலுகளில் வரும் சிறைச்சாலைச் சுவர் நினைவிற்கு வருகிறது. பெண் கைதியின் காதலும் அதைப் பஷீர் சொன்னவிதமும் அழகானது. அதிலும் மலரே காதலின் சாட்சியமாகிறது. அவர்கள் சுவரை முத்தமிட்டுக் கொள்கிறார்கள்.
பெற்றோரின் பகை சுவரை எழுப்பி அவர்களின் காதலைத் தடுக்கிறது. ஆனால் துளை காதலின் சாவியைப் போல அவர்கள் உரையாட வழியை உருவாக்குகிறது. காதல் எப்போதும் ஒரு வழியைக் கண்டுபிடிக்கும். அது தான் சுவரிலிருந்த துளை.
வாய், கண் காது எனத் துளை உருக் கொள்வது கதையின் சிறப்பு. இக்கதையை வாசிக்கும் போது சர்ரியலிச ஓவியம் ஒன்றைப் பார்த்த அனுபவம் உருவாகிறது.
September 21, 2024
குயிங் மிங் திருவிழாவின் போது
மாங்குடி மருதன் எழுதிய மதுரைக்காஞ்சியை மிக நீண்ட ஒற்றை ஓவியமாக யாரேனும் வரைந்திருந்தால் எப்படியிருக்கும் என யோசித்திருக்கிறேன்.
அப்படியான ஒரு ஓவியம் தான் ALONG THE RIVER DURING THE QINGMING FESTIVAL. பனிரெண்டாம் நூற்றாண்டில் வரையப்பட்ட இந்த ஓவியம் சீனாவின் தலைசிறந்த பத்து ஓவியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பெய்ஜிங்கில் உள்ள அரண்மனை அருங்காட்சியகத்தில் இந்த ஓவியம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
நிலப்பரப்பை வரைவது சீன ஓவியத்தின் மிக உயர்ந்த கலைவடிவமாகக் கருதப்படுகிறது. , மிகத் துல்லியமாக விவரங்களை வரையறுக்கும் கோடுகள் மற்றும் தூரிகையின் பயன்பாடு இதன் சிறப்பாகும். இந்த வகை ஓவியத்தை மௌனமான கவிதை என்று சொல்கிறார்கள்.




இது போன்ற சுருள் ஓவியங்களைத் தோக்கியோ அருங்காட்சியகத்தில் கண்டிருக்கிறேன். சுவற்றில் மாட்டப்பட்டுள்ள ஓவியங்களை ரசிப்பது போலச் சுருள் ஓவியங்களை ரசிக்க முடியாது. அதற்குக் கூடுதல் நேரமும் கவனமும் பொறுமையும் தேவைப்படுகிறது. ஓவியத்தினைப் புரிந்து கொள்வதற்கான கையேடு ஒன்றையும் தருகிறார்கள். அதன் உதவியோடு நாம் நிதானமாகப் பார்வையிட்டால் ஓவியத்தின் சிறப்பை புரிந்து கொள்ளலாம்.
கிங்மிங் திருவிழாவின் போது ஆற்றங்கரையில் காணப்படும் காட்சிகளை ஓவியர் ஜாங் செதுவான் சுருள் ஓவியமாக வரைந்திருக்கிறார். மடக்குவிசிறி போல அடுக்கடுக்காக விரியக்கூடியது இந்த ஓவியம்.
12ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட இந்த ஓவியம் அதன் துல்லியமான சித்தரிப்பு மற்றும் பிரம்மாண்டமான காட்சிப்படுத்துதலுக்காகப் புகழ் பெற்றுள்ளது.
இன்றுள்ள சினிமா தொழில்நுட்ப வசதியால் சிங்கிள் ஷாட்டில் முழுபடத்தையும் உருவாக்க முடிகிறது. அது போன்ற ஒரு பாணியே இந்தத் தொடர் சுருள் ஓவியம். தலைநகரான பியான்ஜிங்கில் வசித்த மக்களின் அன்றாட வாழ்க்கையையும் நிலப்பரப்பையும் ஓவியம் மிக அழகாகச் சித்தரிக்கிறது
அந்தக் காலகட்ட ஆடைகள் மற்றும் வாகனங்கள். ஆற்றங்கரை நெடுகிலும் காணப்படும் பல்வேறு மக்களின் தோற்றம் மற்றும் செயல்பாடுகள். பாலங்கள், அகழிகள் மற்றும் பாதைகள், வீடுகள் போன்றவற்றை ஜாங் செதுவான் சிறப்பாக வரைந்திருக்கிறார், கயிறுகள் மற்றும் கொக்கிகள் கட்டும் விதம் கூடத் தெளிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது
இந்தச் சுருள் ஓவியம் 10.03 அங்குல உயரமும் 17.22 அடி அகலமும் கொண்டது. இது பட்டுத் துணியில் ஒரே வண்ணமுடைய மையில் வரையப்பட்டிருக்கிறது, இதில் சித்தரிக்கப்பட்டுள்ள நகரம் கைஃபெங், அந்த நகரத்தின் தெருக்கள், வீடுகள் மிகத் துல்லியமாகச் வரையப்பட்டுள்ளன
Zhang Zeduan .இந்த ஓவியம் சாங் வம்ச சீனாவின் நகர்ப்புற வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை விளக்குவதற்கும் சீனாவின் செழிப்பான வணிக நடவடிக்கையின் சாட்சியமாகவும் கருதப்படுகிறது.

இந்த ஓவியத்தில் 1695 மனிதர்கள், 28 படகுகள், 60 க்கும் மேற்பட்ட கால்நடைகள் 30 கட்டிடங்கள், 20 வாகனங்கள், 9 நாற்காலிகள் மற்றும் 170 மரங்கள், இரண்டு பாலங்கள் இருப்பதாகச் சொல்கிறார். பேராசிரியர் வலேரி ஹேன்சன்.
ஓவியம் ஐந்து பெரிய பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள்ளது. . முதலாவது அமைதியான இயற்கைக்காட்சிகளைக் கொண்டுள்ளது, அதைத் தொடர்ந்து வானவில் பாலத்தை மையமாகக் கொண்ட ஒரு பகுதி, அது சந்தைக் காட்சியுடன் காணப்படுகிறது. மூன்றாவது பகுதி நகர வாயிலுக்கு அருகில் காணப்படும் பரபரப்பான செயல்பாட்டை விவரிக்கிறது, நான்காவது பகுதியில் ஆற்றின் இருபுறமும் இயற்கைக்காட்சிகளுடன் காணப்படுகிறது. அதில் ஒரு பெரிய மரப்பாலம் ஒன்றும் சித்தரிக்கபடுகிறது. கடைசிப் பகுதியில் ஏரியின் அழகிய நீர்பரப்பு சித்தரிக்கப்பட்டுள்ளது.
“கிங்மிங் திருவிழா” என்பது கல்லறை துடைக்கும் திருநாளாகக் கருதப்படுகிறது. ” இந்த விழாவின் போது குடும்ப உறுப்பினர்கள் தங்கள் மூதாதையர்களின் கல்லறைகளைத் துடைப்பதன் மூலம் அவர்களுக்கான மரியாதையைச் செய்கிறார்கள். மூதாதையர் வழிபாடு எப்போதுமே சீன நாகரிகத்தின் தனித்துவமிக்க அங்கமாக இருந்து வருகிறது,

நகரவாழ்வின் உன்னதங்களாகக் கட்டிடங்கள் சித்தரிக்கபட்டுள்ளன. குறிப்பாக இரண்டு மாடி உள்ள வீடுகள். அதன் அழகான முகப்புகள். இன்றிருப்பது போலக் கட்டிடங்களின் முன்பகுதியில் கடைகள் செயல்படுகின்றன. பின்பகுதி குடியிருப்பாகப் பயன்படுத்தபட்டிருக்கிறது. குடியிருப்புக் கட்டிடங்கள் நாற்கரமாக உள்ளன. கடைகளுக்கான அடையாளமாகக் கொடிகள், சின்னங்கள் காணப்படுகின்றன.
இதில் அதிகாரிகள், விவசாயிகள், வணிகர்கள், மருத்துவர்கள், மந்திரவாதிகள், துறவிகள், தாவோயிஸ்டுகள், காவல் வீரர்கள், பெண்கள், குழந்தைகள், படகோட்டிகள், மரம் வெட்டுபவர்கள், தண்ணீர் சுமப்பவர்கள் எனப் பலரும் காணப்படுகிறார்கள். .வானவில் பாலத்தின் மீதும் ஆற்றங்கரையோரங்களிலும் உள்ள மக்கள் படகை நோக்கிக் கூச்சலிட்டுச் சைகை செய்கிறார்கள். ஆற்றில் மீன்பிடி படகுகள் மற்றும் பயணிகளை ஏற்றிச் செல்லும் படகுகள் நிரம்பியுள்ளன, வீதியில் சிறுவர்கள் ஒடியாடுகிறார்கள். கோவேறு கழுதைகள் மற்றும் பிற கால்நடைகள் காணப்படுகின்றன. குடிப்பது, அரட்டை அடிப்பது, படகுகளைத் தள்ளுவது போன்ற செயல்கள் நேர்த்தியாக வரையப்பட்டிருக்கின்றன. சிலர் மூடுபல்லக்கினைச் சுமந்து செல்கிறார்கள். கடைகளின் முன் எரியும் விளக்குகள். வணிகர்களின் கூச்சல், கடந்து செல்லும் ஒட்டகங்கள் என அந்தக் காலத்தினைக் கேமிராவில் பதிவு செய்து ஆவணப்படுத்தியிருப்பது போலத் துல்லியமாக வரைந்திருக்கிறார் ஜாங் செதுவான்

Along the River during the Qingming Festival ஓவியத்தின் Animated Version இணையத்தில் காணக்கிடைக்கிறது. அதில் திருவிழாக் காட்சிகள் நம் கண்முன்னே விரிகின்றன. உறைந்து போன மனிதர்கள் இயக்கம் கொள்கிறார்கள். படகுகள் நீரில் அசைகின்றன. குடையோடு நதிக் கரை நோக்கி மக்கள் நடக்கிறார்கள். 800 ஆண்டுகளைக் கடந்த இந்த ஓவியம் நிகரற்ற கலைப்படைப்பாக மட்டுமின்றி முக்கியமான வரலாற்று சின்னமாகவும் கொண்டாடப்படுகிறது.
••
September 20, 2024
கற்பனையின் இனிமை
ஹயாவோ மியாசாகியின் தி பாய் அண்ட் தி ஹெரான் அனிமேஷன் படத்தின் உருவாக்கம் குறித்த ஆவணப்படமே Hayao Miyazaki and the Heron. இரண்டு மணி நேரம் ஒடக்கூடியது.

2013 இல் மியாசாகி திரையுலகிலிருந்து ஓய்வுபெறும் தனது முடிவை அறிவித்தார். அவர் இப்படி அறிவிப்பது புதிதில்லை. திரும்பவும் புதிய படம் ஒன்றைத் துவங்கிவிடுவார் என்று அவரது நண்பர்கள் கேலி செய்தார்கள். அதை உண்மையாக்குவது போலவே சில மாதங்களுக்குப் பின்பாக ஹெரான் கதையினைப் படமாக்கும் ஆசையை வெளிப்படுத்தினார் மியாசாகி.
அதிலிருந்து துவங்கி பத்து ஆண்டுகள் இந்தக் கனவு எப்படி நனவாகிறது என்பதை ஆவணப்படமாக எடுத்திருக்கிறார்கள்
மியாசாகியின் சொந்த வாழ்வில் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் கோவிட் தொடர்பான தாமதங்களை எதிர்கொண்டது, படத்தின் இறுதிகட்டப் பணிகளில் ஏற்பட்ட தாமதம் என அவரது வாழ்வையும் சினிமாவையும் ஒரு சேர ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.
படத்தில் யதார்த்தத்திற்கும் கற்பனைக்கும் இடையில் மியாசாகி பயணிக்கிறார், மேலும் அவற்றைப் பிரிக்கும் கோட்டினை அழித்தும் விடுகிறார். வானில் இடி இடிப்பதைக் காணும் போது இறந்து போன தனது நண்பன் இடியாக மாறிவிட்டதாகச் சொல்கிறார் மியாசாகி. இப்படி அன்றாட வாழ்க்கையைக் கற்பனையால் அளவிடும் அவரது பார்வைகளும் செயல்பாடுகளும் புதிதாக இருக்கின்றன.
எண்பது வயதிலும் சினிமாவின் மீது மியாசாகி கொண்டுள்ள ஈடுபாடு வியப்பளிக்கிறது. அவரது ஸ்டுடியோ கிப்லி செயல்படும்விதம். அங்குள்ள இளம் வரைகலை ஓவியர்கள் எப்படிப் பணியாற்றுகிறார்கள் என்பதையும் இந்த ஆவணப்படம் விரிவாக விளக்குகிறது.
அனிமேஷன் படங்கள் என்பது வெறும் கற்பனையில்லை. அதற்குள் சொந்த வாழ்வின் பிரதிபலிப்புகள் மறைந்திருக்கின்றன என்பதை இப்படம் சிறப்பாக உணர்த்துகிறது.

ஒரு திரைக்கதையுடன் தொடங்குவதற்குப் பதிலாக, மியாசாகி ஒரு ஓவியத்துடன் தனது படத்தைத் துவங்குகிறார், பின்னர் படத்திற்கான முழுமையான ஸ்டோரி போர்டுகளை உருவாக்கி, அதைக் கொண்டு இறுதி திரைவடிவத்தை உருவாக்குகிறார். கையால் வரைந்த பின்பே கணிணி உதவி கொண்டு படமாக்குகிறார். படம் அவரது பணி நெறிமுறைகளைப் துல்லியமாக விளக்குகிறது. அனிமேஷன் படத்தில் ஐந்து வினாடிகள் இடம்பெறும் காட்சியை முடிக்க அவர்களுக்கு ஒரு வாரம் தேவைப்படுகிறது.
சிறுவயதிலிருந்தே மியாசாகி தாயின் அன்பிற்காக ஏங்கியவர். நோய்வாய்ப்பட்ட அவர் 10 வயதுக்கு மேல் வாழ மாட்டார் என்று மருத்துவர் கணித்தார்கள். ஆனால் எப்படியோ பிழைத்துக்கொண்டார். தனது வாழ்விற்கான நோக்கமே ஓவியம் வரைவது தான் என்று நம்பினார். அந்த எண்ணம் அவரது எண்பது வயதிலும் அப்படியே உறுதியாக வெளிப்படுகிறது.
ஒரு தாவரம் வளர்வது போல நிதானமாக, கண்ணுக்குத் தெரியாமல் தி பாய் அண்ட் தி ஹெரான் படமும் வளர்க்கிறது. இதற்கிடையில் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் இறந்து போகிறார்கள். உடன் பணியாற்றிய கலைஞர்கள் இறந்து போகிறார்கள். நீண்டகாலம் வாழ்வதன் வேதனையை அவர் அனுபவிக்கிறார். இத் துயரம் அவரை முடக்கிப் போடுகிறது. இதிலிருந்து விடுபடுவதற்கு மீண்டும் சினிமாவிற்குள் கரைந்து போகிறார்.
அவரது மேஜையின் அடியில் வரைந்து திருப்தியில்லாமல் கிழித்துப் போட்ட காகிதங்கள் குவிந்துகிடக்கின்றன. அது வெறும் சலிப்பில்லை. முழு திருப்தி வராமல் எதையும் செய்யக்கூடாது என்பதன் அடையாளம்
படம் முழுவதும் மியாசாகியின் உதட்டில் ஒரு சிகரெட் இருக்கிறது. பென்சிலும் சிகரெட்டும் தான் அவரது பிரிக்க முடியாத பொருட்கள். அவரது பிறந்தநாளைச் சிறுவர்கள் ஒன்று கூடிக் கொண்டாடுகிறார்கள். எண்பது வயதிலும் நல்ல ஆரோக்கியத்துடன் உடல்வலிமையோடு இருக்கிறார். விறகு உடைக்கும் காட்சிகளில் அவரது உடல்வலிமை சிறப்பாக வெளிப்படுகிறது. அவரது வேகமான நடைப்பயிற்சி மற்றும் அந்திச் சூரியனை ரசிக்கும் மனநிலை, வெந்நீர் குளியல், நண்பர்களுடன் பயணம் செய்வது என உடல் அளவிலும் மனதளவிலும் அவர் உற்சாகமாகவே இருக்கிறார். ஆனாலும் மரணம் குறித்த எண்ணம் அவரை ஆட்டுவிக்கிறது.
மியாசாகி மற்றும் அவரது மறைந்த நண்பர் இசாவோ தகாஹாட்டாவிற்கும் இடையேயான உறவை படம் ஆழமாக ஆராய்கிறது
இசாவோவின் மரணம் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து விடுபட முடியாமல் திண்டாடுகிறார். அவரோடு பழகிய இனிய நாட்களை நினைவு கொள்கிறார். இருவரும் ஒன்றாக வளர்ந்திருக்கிறார்கள். ஒன்றாகத் திரைத்துறையில் பணியாற்றியிருக்கிறார்கள். தனது நெருக்கமான நண்பன் என்று அவரைக் குறிப்பிடுகிறார். இந்த நினைவுகளைத் திரட்டி படத்தின் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றாக மியாசாகி மாற்றுகிறார்.

தி பாய் அண்ட் தி ஹெரான் படத்தின் பல காட்சிகள் அவரது சொந்த வாழ்வில் நடந்தவை. அதைப் புரிந்து கொள்வதற்கான கையேடு போல இந்த ஆவணப்படம் உள்ளது.
அவருடன் நீண்டகாலமாகப் பணியாற்றும் தயாரிப்பாளர் மற்றும் ஓவியர்களின் துணையும் நட்பும் படத்தில் மிகச்சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தி பாய் அண்ட் தி ஹெரான் படம் தியேட்டர்களில் வெளியாகும் நாளின் போதான அவரது மனநிலை. ஆஸ்கார் விருதை வென்ற தருணம். தொலைக்காட்சியில் அதை நேரடியாகக் கூட மியாசாகி காண்பதில்லை. அறிவிப்பு வரும் போது அவர் கழிப்பறையில் இருக்கிறார். ஆஸ்கார் விருது வென்ற செய்தி அவரை மகிழ்ச்சிப்படுத்துகிறது. தனது வேலை முடிந்துவிட்டது என்பதைப் போலச் சிரிக்கிறார்.
இந்த ஆவணப்படத்தைப் பார்த்த பிறகு மூன்றாம் முறையாகத் தி பாய் அண்ட் தி ஹெரான் படத்தைப் பார்த்தேன். இப்போது படம் மிகவும் சோகமாகவும் ஆழ்ந்த தத்துவார்த்த வெளிப்பாடு கொண்ட படமாகவும் உணர்ந்தேன். முதன்முறையாக இப்படத்தை ஐமாக்ஸ் திரையில் பார்த்த போது அடைந்த மகிழ்ச்சியை இப்போது அடைய முடியவில்லை. மாறாக ஒரு கலைஞன் தனது சொந்தவாழ்வின் துயரங்களை எப்படிக் கலையாக உருமாற்றுகிறான். எப்போது அது உன்னதமாக மாறுகிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.

படத்தின் ஒரு காட்சியில் அவர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரைந்த ஒவியங்களைக் கொண்டு வந்து காட்டி வியக்கிறார்கள். ஆனால் மியாசாகியிடம் அந்த வியப்பு இல்லை. அவருக்கு இப்போது செய்து கொண்டிருக்கும் பணியின் மீது மட்டுமே கவனம் குவிந்திருக்கிறது. தான் விரும்பியபடி கதாபாத்திரத்தை உருவாக்கப் போராடுகிறார். தூக்கத்திலும் அதே சிந்தனையில் உழலுகிறார். அவரது விருப்பத்தை உடன் பணியாற்றுகிறவர்கள் புரிந்து கொள்கிறார்கள். சிறப்பாகத் துணை செய்கிறார்கள்.
படத்தின் உருவாக்கத்தில் ஏற்பட்ட தடைகள் குறித்த என மியாசாகி வருந்தும் போது அவரது தோற்றத்தை மாற்றினால் புறஉலகிலும் மாற்றம் வந்துவிடும் என்கிறார் நண்பர். உடனே தனது தாடி, மீசையைச் சவரம் செய்துவிட்டு புதிய தோற்றத்தில் வருகிறார் மியாசாகி. அந்த முகத்தில் முதுமையின் ரேகைகள் அழுத்தமாகப் படிந்திருக்கின்றன. தன்னையே ஒரு கதாபாத்திரமாக மாற்றிக் கொள்கிறார் மியாசாகி. அது தான் அவரது வெற்றியின் அடையாளம்.
மேதைகளுக்கு ஒய்வு கிடையாது. அவர்கள் தனது முந்தைய படைப்பை விடவும் சிறப்பான ஒன்றை செய்துவிட முடியும் எனப் போராடுகிறார்கள். முடிவில் வெற்றியும் பெறுகிறார்கள். அதன் சாட்சியமே மியாசாகி.
மியாசாகியின் 80 வயதை நாம் பார்க்கிறோம். அவரது கைகள் நடுங்கத் தொடங்குகின்றன. ஆனால் அவர் ஒய்வை விரும்பவில்லை. புதிய முயற்சிகளில் இறங்குகிறார். வேலையே அவரை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
தி பாய் அண்ட் தி ஹெரான் இசையமைப்பாளர் கென்ஷி யோனேசு தனது சிறுவயதிலிருந்து ஆதர்ச நாயகனாக உள்ள மியாசாகியை சந்தித்து உரையாடும் போது அவரை ஒரு துருவ நட்சத்திரம் என்று குறிப்பிடுகிறார். அது உண்மையான பாராட்டு.
குழந்தைகளுடன் விளையாடும் போது மியாசாகி மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். மாறும் பருவகாலங்களை ரசிப்பது. தனது அலுவலகத்தில் வளர்ந்து நிற்கும் மரத்தை வியந்து பார்ப்பது, கொரோனா காலத்தில் யாரும் இல்லாத விளையாட்டு மைதானத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது. மழைக்குள் குடையோடு வேகமாக நடப்பது என அழகான தருணங்களால் நிரம்பியிருக்கிறது இந்த ஆவணப்படம்.
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

