S. Ramakrishnan's Blog, page 28
August 23, 2024
உதிர்ந்த பற்கள்.
மைக்கேல் ஜோஷெங்கோ (Mikhail Zoshchenko) ரஷ்யாவின் புகழ்பெற்ற நகைச்சுவை எழுத்தாளர். அரசியல் நையாண்டிக் கதைகள் எழுதியவர். இதன் காரணமாக ரஷ்ய எழுத்தாளர் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்.

1895ல் உக்ரேனில் பிறந்தவர். அவரது தந்தை ஒரு ஓவியர். அம்மா நாடக நடிகை. ஏழு வயதிலே ஜோஷெங்கோ கவிதைகள் எழுத துவங்கினார்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தவர். முதல் உலகப்போரின் காரணமாகத் தனது படிப்பைப் பாதியில் கைவிட்டு ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார். போரின் போது விஷவாயு தாக்கியதால் இவரது உடல் நலம் மோசமாகப் பாதிக்கபட்டது. அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட இதயக் கோளாறு காரணமாக ராணுவத்திலிருந்து விடுவிக்கபட்டார்.
ஜோஷ்செங்கோ பூட்மேக்கர் முதல் இரவுக்காவலாளி வரை பல்வேறு சிறிய வேலைகளைச் செய்திருக்கிறார்.இவர் எழுத்தாளராக மாறியது தற்செயலே

கலை வெளிப்பாட்டின் மீதான அரசின் கட்டுப்பாடுகளை எதிர்த்த ஜோஷ்செங்கோ தனது கண்டனத்தை நகைச்சுவையோடு வெளிப்படுத்தினார். அவரது சில சிறுகதைகள் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளன.
தன்னைப் பற்றி அவர் எழுதிய குறிப்பு வேடிக்கையானது.
நான் எங்குப் பிறந்தேன் என்று கூட எனக்குத் தெரியாது. பொல்டாவாவில் என்று. ஒரு ஆவணம் ஒன்று சொல்கிறது , இல்லை பீட்டர்ஸ்பர்க்கில் என மற்றொரு ஆவணம் சொல்கிறது , இரண்டு ஆவணங்களில் ஒன்று போலியானது. எது போலியானது என்பதைக் கண்டுபிடிப்பது கடினம் , ஏனென்றால் அவை இரண்டும் மிகவும் மோசமாக உருவாக்கப்பட்டதே ,. ஆண்டுகள் கூடக் குழப்பம் உள்ளது. ஒரு ஆவணம் 1895 என்றும் , மற்றொன்று 1896 என்றும் கூறுகிறது இரண்டையும் நம்ப முடியாது .
அதிகாரத்தின் அர்த்தமற்ற சட்டங்களாலும் கெடுபிடிகளாலும் சாமானியர்கள் எவ்வாறு கஷ்டப்பட்டார்கள் என்பதைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். ஆன்டன் செகாவின் கதைகளை நினைவூட்டும் எழுத்துமுறை.

அரசு எதிர்ப்புக் கதைகள் காரணமாக ஆட்சியாளர்களின் கோபத்திற்கு உள்ளானார். அவரது புத்தகங்கள் வெளியாவதில் தடை ஏற்பட்டது.
அவரது கதை ஒன்றில் வீடு கிடைக்காத தம்பதிகள் ஒரு வீட்டின் குளியல் அறையில் வசிக்கிறார்கள். இன்னொரு கதையில் குண்டுவீச்சில் மிருக்காட்சியில் இருந்த குரங்கு தப்பி நகரில் அலைகிறது. வரிசையில் காத்திருக்கிறது. மனிதர்களின் போலித்தனமான செயல்களைக் கேலி செய்யும் ஜோஷெங்கோ ஸ்டாலின் ஆட்சியின் போது மிகுந்த மனச்சோர்விற்கு உள்ளானார்.
அவரது இந்தப் பல் விவகாரம் சிறுகதையில் எகோரிச் என்பவருக்குத் திடீரென ஒரு பல் விழுந்துவிடுகிறது. ஒரு பல் தானே போனால் போகட்டும் என்று நினைக்கிறார். ஆனால் ஒரே வருஷத்துக்குள் ஆறு பற்கள் விழுந்துவிடுகின்றன. பயந்து போன அவர் உடனடியாகப் பல்மருத்துவமனைக்குச் செல்கிறார். அவர் ஏற்கனவே இன்சூரன்ஸ் செய்து வைத்துள்ளார். ஆகவே இலவசமாகப் பல்செட் பொருத்திவிடலாம் என்கிறார்கள்.
ஆனால் ஒரு நிபந்தனை அவருக்கு எட்டுப் பற்கள் விழுந்திருந்தால் மட்டுமே இலவசமாகப் பல்செட் பொருத்தமுடியும். என்கிறது மருத்துவமனை. அவருக்கோ ஆறு பற்கள் தான் விழுந்திருக்கிறது.
இது என்ன முட்டாள்தனமான சட்டம் என்று கோவித்துக் கொள்கிறார்.
இன்னும் இரண்டு பற்கள் விழுந்தவுடன் வாருங்கள். அதிர்ஷடமிருந்தால் விரைவில் விழுந்துவிடும் என்று இனிமையாகப் பேசி மருத்துவமனையினர் அனுப்பி வைக்கிறார்கள்
அடுத்தசில மாதங்களில் இன்னும் இரண்டு பற்கள் விழுகின்றன. இப்போது எட்டுப் பற்கள் இல்லாத காரணத்தால் உடனே பல்செட் பொருத்திவிட வேண்டும் என மருத்துவமனைக்குப் போகிறார்
மருத்துவமனை அவரை வரவேற்கிறது. இன்ஷுரன்ஸ் பேப்பர்களைச் சரிபார்க்கிறது
“காம்ரேட் ஒரே வரிசையில் எட்டுப் பற்கள் விழுந்தால் மட்டுமே புதிய பல்செட் பொருத்த சட்டம் அனுமதிக்கிறது “என்கிறார்கள்.
அப்படி விழவில்லை என்கிறார் எகோரிச்.
“அப்படியா? நாங்கள் ரொம்ப வருத்தப்படுகிறோம். எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கையை விரித்துவிடுகிறார்கள்.
இப்போது அவர் திரவபானம் மட்டுமே ஆகாரமாகக் கொள்கிறார். அத்தோடு தினசரி மூன்று முறை பல்விளக்கவும் ஆரம்பித்துவிட்டார் என்று கதை முடிகிறது
சோவியத் சிஸ்டம் மட்டுமில்லை. உலகெங்குமே இன்சூரன்ஸ் கம்பெனிகள் வைத்திருக்கும் சட்டங்களையும் நடைமுறையினையும் நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது. எகோரிச் போல இருக்கும் பற்களைக் காப்பாற்றிக் கொள்வது தான் ஒரே தீர்வு.
••
.
August 21, 2024
வகுப்பறை
காரைக்கால் கீழையூர் அரசுப்பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் விசாகன் மாணவர்களுக்கான புத்தக அறிமுக நிகழ்வில் டோட்டோ சான் பற்றிய எனது உரையை வகுப்பறையில் ஒளிபரப்பியிருக்கிறார். யூடியூப்பில் உள்ள எனது காணொளியை இது போல வகுப்பறையில் ஒளிபரப்பியது பாராடிற்குரிய முயற்சி.
இந்நிகழ்வில் நூறு மாணவர்களும் எட்டு ஆசிரியர்களும் அமர்ந்து கேட்டிருக்கிறார்கள்.
இந்தக் காட்சியைக் காணும் போது சந்தோஷமாகயிருக்கிறது. விசாகனுக்கு எனது அன்பும் நன்றியும்



August 20, 2024
கவிஞனின் ஒரு நாள்
அகழ் இணைய இதழில் என்னுடைய ஒரு நாள் என்று மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணனின் கட்டுரை வெளியாகியுள்ளது. தமிழாக்கம் செய்திருப்பவர் அழகிய மணவாளன். சரளமான, நேர்த்தியான மொழியாக்கம். கல்பற்றா நேரடியாகத் தமிழில் எழுதியது போலிருக்கிறது.

நான் கல்பற்றா நாராயணன் கவிதைகளை மொழிபெயர்ப்பில் வாசித்திருக்கிறேன். அவரது கவிதைகளை மிகவும் பிடிக்கும். மலையாளத்தின் முக்கியக் கவிஞர் என்பதாக மட்டுமின்றிச் சர்வதேச அளவிலான முக்கியக் கவிஞர்களில் ஒருவராகவே அவரைக் கருதுகிறேன்.
அவரது இத்ரமாத்ரம் நாவல் சுமித்ரா என ஷைலஜா மொழியாக்கத்தில் தமிழில் வெளியான போது அதற்கு ஒரு அணிந்துரை எழுதியிருக்கிறேன். கவிஞர்கள் புனைவு எழுதும் போது உரைநடை பாதரசம் போலாகி விடுகிறது. அப்படியான நாவல் தான் சுமித்ரா.

தனது கவிதைகளைப் போலவே கட்டுரையிலும் கல்பற்றா ஒளிருகிறார். அவரது மொழிநடை நிகரற்றது. இந்தக் கட்டுரை அவரது ஒரு நாளைப் பதிவு செய்துள்ளது. அதற்குள் எத்தனை மடிப்புகள். வியப்புகள்.
கிரிக்கெட் பற்றிய ஆர்வம். கவிதை வாசிப்பு. தாவோ, காலை நடை, பேரனுக்கு மொழி கற்றுத்தருவது. தோசையின் ருசி. ஒளப்பமண்ண கவிதை என மலர் விரிவது போலத் தன்னியல்பாக அவரது அன்றாடம் விரிகிறது. இக்கட்டுரையின் ஒரு இடத்தில் பேரன் இருக்கிறான் என்றால் அந்த இரவில், காவலாளிகள் உறங்கினால்கூடச் சித்தார்த்தனால் வீட்டைவிட்டு வெளியேற முடிந்திருக்காது. என்றொரு வரியை கல்பற்றா எழுதியிருக்கிறார். யோசிக்கவும் வியக்கவும் வைத்த உண்மையான வரியது.
விளையாட்டுவீரர்களும், அவர்களின் உறவினர்களும் இறந்துவிட்டால் அந்தத் தகவல் செய்தித்தாளின் விளையாட்டு பக்கத்தில்தான் வருகிறது என்பது வாழ்க்கை ஒரு விளையாட்டு என்று நினைக்கும் என்னை மயிர்க்கூச்செறிய வைக்கிறது என்றொரு அவதானிப்பை கல்பற்றா வைக்கிறார்.
விளையாட்டுப் பக்கம் என்பது கவிதையைப் போல முழுமையான தனியுலகம். அங்கே விளையாட்டுவீரனின் வெற்றி தோல்வி மட்டுமில்லை. அவனது சுகதுக்கங்களும் பேசப்படுவது சரியானது தான்.
வெறும் கையுடன் காலை நடை சென்றுவிட்டு கவிதையுடன் திரும்பி வரும் அனுபவத்தை இவரைப் போலவே மேரி ஆலிவரும் எழுதியிருக்கிறார். கவிதை எங்கோ நாம் அறியாத மரத்தில் பழத்துத் தொங்கிக் கொண்டிருக்கிறது போலும். கவிஞர்கள் மட்டுமே அதைக் காணுகிறார்கள். பறித்துக் கொள்கிறார்கள்.
காலை எழுந்தவுடன் கவிதை. இரவில் கதைகள் என்ற கல்பற்றாவின் வாசிப்பைத் தான் நானும் பல ஆண்டுகளாகப் பின்பற்றி வருகிறேன். அந்த வகையில் அவர் எனக்குத் தோழன்.
அழகிய மணவாளன்அழகிய மணவாளன் சமீபமாக மலையாளத்திலிருந்து செய்து வரும் மொழியாக்கங்கள் சிறப்பாக உள்ளன. குறிப்பாக அவர் தேர்வு செய்யும் படைப்புகள். அதன் கவித்துவம் குறையாமல் மொழியாக்கம் செய்ய முயலும் விதம் பாராட்டிற்குரியது. அகழ் இதழில் வெளியாகியுள்ள அவரது பிற மொழிபெயர்ப்புகளையும் தேடி வாசித்தேன். மிக முக்கியமான மொழியாக்கங்கள்.
தேர்ந்த படைப்புகளை வெளியிட்டு வரும் அகழ் இணைய இதழிற்கும் அழகிய மணவாளனுக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.
இணைப்பு
என்னுடைய ஒரு நாள்- கல்பற்றா நாராயணன்
August 19, 2024
சென்னையும் நாவல்களும்
சென்னையைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்கள் குறித்து தமிழ் இந்துவில் வெளியாகியுள்ள கட்டுரையில் யாமம் நாவல் குறித்து விபின் எழுதியுள்ளார். அவருக்கு எனது அன்பும் நன்றியும்.
August 18, 2024
பசித்தவர்
புதிய சிறுகதை
தரையில் வைக்கப்பட்டிருந்த அந்த ஐந்து அடுக்கு டிபன்கேரியரைப் பார்த்தபடியே இருந்தார் துரைக்கண்ணு.
நாற்பத்தியாறு வயதிற்குள் தலை முழுவதும் நரைத்துப் போய்விட்டது. எப்போதும் அணிவது போன்ற வெள்ளைச் சட்டை. பளுப்பு நிற பேண்ட். அகலமான பிரேம் கொண்ட கண்ணாடி. அவரது சட்டைபையில் ஒரு மொபைல் போன். கையில் ஒரு மொபைல் போன். சற்றே பெரிய காதுகள். இடது கண் ஓரம் சிறிய மச்சம். சமீபமாக யாராவது அதிர்ந்து பேசினால் கை நடுக்கம் வந்துவிடுகிறது. அரசாங்க விருந்தினர் விடுதியின் பொறுப்பாளராக இருந்தார் துரைக்கண்ணு.

பைபாஸ் ரோட்டில் இருந்த பழைய விடுதியில் இருந்தவர் என்பதால் காந்தி சிலையை ஒட்டி புதிதாகக் கட்டப்பட்ட இந்த விடுதிக்கும் அவரையே காப்பாளராக நியமித்திருந்தார்கள்.. அந்த விடுதிக்கு வந்து போன பல அதிகாரிகள் பாராட்டியதால் தானோ என்னவோ இதே வேலையில் பத்து வருஷங்களாக இருக்கிறார்.
அந்த விடுதியில் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட இரண்டு பெரிய அறைகள் இருந்தன. மிகவும் ஆடம்பரமான அறையது. கிங் சைஸ் பெட், சுவரில் 55′ இன்ச் ஸ்மார்ட் டிவி. பாத்டப் வசதியுள்ள குளியல் அறை. சிறிய டைனிங் ரூம். மினி பிரிட்ஜ், ரிம்லெஸ் வாஷ் பேசின் எனச் சகல வசதிகளுடன் இருந்தது
மாடியில் இரண்டு படுக்கை கொண்ட ஆறு அறைகள். விடுதியின் முகப்பில் தாமரை மலரிலிருந்து தண்ணீர் பீச்சுவது போன்ற நீருற்று. அதைச் சுற்றி பூந்தோட்டம். இரண்டு மகிழமரங்கள். பின்பக்கம் பத்துக் கார்கள் நிற்குமளவிற்கான இடம். ஆறடி உயர காம்பவுண்ட் சுவர்.
வரவேற்பறையின் பின் பக்கத்திலே அவர் வசித்துவந்தார். அறைகளைச் சுத்தப்படுத்தவும், எடுபிடி வேலைகள் செய்யவும் மூன்று பணியாளர்கள் இருந்தார்கள். ஒரு காவலாளியும் இருந்தார். இவர்களுக்கு அவர் தான் அதிகாரி.
••
டிபன் கேரியரில் இருந்த உணவை என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருந்தார். மணி பனிரெண்டைக் கடந்திருந்தது. காலை எட்டு மணிக்கு வாங்கி வைத்த டிபன், இன்னமும் டெப்டி செகரெட்டரி வந்து சேரவில்லை. ஒருவேளை காலை விமானத்தில் மதுரைக்கு வந்து அங்கிருந்து காரில் வருகிறாரோ என்னவோ.
எப்போது வருவார் என்று தெரிந்து கொள்ளாமல் எதற்காக இவ்வளவு டிபன் வாங்கி வைத்துக் காத்திருக்கிறார்கள் என்று புரியவில்லை.
நிச்சயம் அதிகாரி வழியிலே சாப்பிட்டிருப்பார். ஒருவேளை சாப்பிடாமல் வந்தாலும் ஆறிப்போன இந்த இட்லி தோசைகளைச் சாப்பிடுவாரா என்று தெரியாது.
எதற்காக ஒருவர் சாப்பிடுவதற்கு இட்லி, தோசை, பூரி, பொங்கல், கேசரி வடை இடியாப்பம் என இவ்வளவு உணவு வகைகளை வாங்குகிறார்கள். யாருடைய செலவு அது.
அதிகாரிகளில் எவரும் நிதானமாகச் சாப்பிட்டு அவர் கண்டதில்லை. செல்போன் பேசியபடியே, எதையோ நினைத்தபடியே அவரசமாகவே சாப்பிடுகிறார்கள். அதுவும் இலையில் வைத்ததில் பாதிக்கு மேல் வீணாகிவிடும். அவற்றைத் தெருநாய்களுக்குப் போட்டுவிடுவார். அரசாங்க விடுதிக்குள் தெருநாயை எப்படி அனுமதிக்கலாம் என்று அதற்கும் ஒரு அதிகாரி கோவித்துக் கொண்டார்.
அதிகாரி சாப்பிட்டது போக மீதமாகும் உணவை அப்படியே வேலைக்கார லட்சுமியிடம் கொடுத்து விடுவார். அவள் வீட்டிற்குக் கொண்டு போய்ப் பிள்ளைகளுடன் சாப்பிடுவாள். மாலை வரும் போது டிபன் கேரியரை கழுவி கொண்டுவந்து வைத்து விடுவாள்.
இன்றைக்கு அவளும் வேலையை முடித்துக் கொண்டு போய்விட்டாள். இந்த டிபனை யார் சாப்பிடுவது. காசு கொடுத்து வாங்கியதை குப்பையில் கொட்ட மனது வரவில்லை. நாமே கொண்டு போய் நாய்களுக்குப் போட்டுவிட்டு வந்துவிடலாமா என்று யோசித்தார்
எதற்கும் நாகராஜனை கேட்டுக் கொண்டு முடிவு செய்யலாம் என நினைத்து அவருக்குப் போன் செய்தார். ரிங் போய்க் கொண்டேயிருந்த்து. நாகராஜன் போனை எடுக்கவில்லை. டிபன் கேரியரின் ஒரு அடுக்கிலிருந்து வழிந்த சாம்பார் உறைந்து போயிருந்தது.
யாருக்காவது சாப்பிடக் கொடுத்துவிடலாம் என்றால் கூட அங்கே ஆள் கிடையாது. இப்அதிகாரிகளுக்குக் கொண்டுவரப்படும் உணவில் ஒரு வாய் கூட அவர் சாப்பிட்டது கிடையாது. அதைப் பிடிக்கவும் செய்யாது.
ஆகவே டிபன் கேரியரை என்ன செய்வது எனப்புரியாமல் மூர்த்திக்கு போன் செய்தார். அவனும் போனை எடுக்கவில்லை. கண்முன்னே இவ்வளவு உணவு வீணாகிப் போவது அவருக்கு ஆதங்கமாக இருந்தது.
••
காலை ஏழு மணிக்கு விடுதி வாசலில் அரசாங்க ஜீப் வந்து நின்று நாகராஜன் குரல் கொடுத்த போது துரைக்கண்ணு குளித்துக் கொண்டிருந்தார். அவரசமாகக் குளியலை முடித்துவிட்டு ஈரத்தலையைக் கூடத் துவட்டாமல் சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே வந்தார்
“இன்னும் அரைமணி நேரத்தில சென்னையில இருந்து டெப்டி செகரெட்டரி வந்துருவார். ரூம் ரெடியா இருக்குல்லே“ என்று கேட்டார் நாகராஜன்
“ஆறு மணிக்கே ரெடி பண்ணிட்டேன். பிளாஸ்க்கில காபியும் வாங்கி வச்சிட்டேன்“
“ஒன்பது மணிக்கு விசிட் கிளம்பிருவார். அதுக்குள்ளே டிபன் வாங்கி வைக்கணும். மூர்த்தி வருவான். நீங்க கேரியரைக் குடுத்து அனுப்புங்க. “
“தனலட்சுமில டிபன் வாங்கிக்கோங்க. வடை மட்டும் ரத்னாவில நல்லா இருக்கும்“ என்றார் துரைக்கண்ணு
“கிரீன் டீ பாக்கெட் இருக்கா.. இப்போ வர்ற அதிகாரிகள் எல்லாம் அதானே குடிக்கிறாங்க“
“வாங்கி வச்சிருக்கேன். தேனும் இருக்கும். சுதாகர் சார் வந்தப்போ.. வாங்கினது“
“ரூம் ஸ்பிரே அடிச்சிவிட்ருங்க. இப்பவே ஏசி போட்டு வச்சிருங்க“. எனச் சொல்லியபடியே யாருக்கோ போன் பண்ணத் துவங்கினார் நாகராஜன். தூக்கம் கலையாத அவரது முகம் ஏனோ துரைக்கண்ணுவிற்கு வருத்தத்தை ஏற்படுத்தியது
“நான் பாத்துகிடுறேன்.. மூர்த்தியை அனுப்பி வையுங்க“ என்றார் துரைக்கண்ணு
••

காலை டிபனுக்கு ஐந்து அடுக்கு கேரியர். மதியம் சாப்பாட்டிற்கு ஆறு அடுக்கு கேரியர். மாலையில் வடை பஜ்ஜி கேசரி வாங்கி வருவதற்கு மூன்று அடுக்கு கேரியர் எனத் துரைக்கண்ணு மூன்று கேரியர்கள் வைத்திருந்தார். காபி டீ வாங்கி வருவதற்காக சிறிய பிளாஸ்க் இரண்டு. பெரிய பிளாஸ்க் மூன்றும் வைத்திருந்தார்.
அரசாங்கத்தின் உயரதிகாரிகள் வந்து தங்குவதால் எப்போதும் அறைகள் சுத்தமாக இருக்க வேண்டும். சில அதிகாரிகள் தட்டில் சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு வாழை இலை வேண்டும். சிலர் வெள்ளிதட்டில் தான் சாப்பிடுவார்கள். இதற்கென மூன்று வெள்ளிதட்டுகள் வாங்கி அலமாரியில் பூட்டி வைத்திருக்கிறார். இது போலவே உப்பு. சக்கரை. எலுமிச்சம்பழம். சோடா, ஒம வாட்டர், பாக்கு, பல்குச்சி என அத்தனையும் வைத்திருந்தார். பொன்னிற ரேகைகள் கொண்ட பீங்கான் கோப்பைகள். சில்வர் ஸ்பூன்கள், முட்கரண்டிகள். கண்ணாடி டம்ளர்கள், சூப் கிண்ணங்கள் எனவும் ஒரு மரபீரோ நிறைய வைத்திருந்தார்.
எந்த இரவிலும் ஒரு அதிகாரி விடுதிக்கு வந்து சேரக்கூடும் என்பதால் அவர் அங்கேயே குடியிருந்தார். துரைக்கண்ணுவின் மனைவி ரேவதி பக்கத்திலிருந்த தேவனூர் கிராமத்தில் பள்ளி ஆசிரியராக இருந்தாள். அங்கேயே அவளும் மகள் உமாவும் வசித்து வந்தார்கள். துரைக்கண்ணு மாதத்தில் ஒரு நாள் அவர்களைப் போய்ப் பார்த்து வருவதுண்டு.

வீட்டுச்சாப்பாடு இல்லை. போதுமான தூக்கமில்லை. அதிகாரிகளின் உத்தரவுகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்ற படபடப்பு வேறு. இத்தனையும் சேர்ந்து கொண்டு அவருக்கு ரத்தக்கொதிப்பு மற்றும் சக்கரை நோயை உருவானது. அதற்குக் கோபாலன் டாக்டரிடம் காட்டி மருந்து எடுத்துக் கொண்டு வந்தார். ஆனாலும் அசதி குறையவில்லை.
இத்தனை வருட அனுபவத்தில் விதவிதமான அதிகாரிகளையும் அவர்களின் அதிகார தோரணைகளையும் பார்த்துவிட்டார். இப்போதெல்லாம் அது ஒரு நாடகம் போலவே தோன்றுகிறது. தன்னால் நன்றாக நடிக்கும் முடியும் என்று காட்டுவது போல உணர்ந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அங்கே தங்குவதற்காக வந்திருந்த அதிகாரி ஒருவர் தனது அறையில் இயேசு நாதரின் படம் மாட்டப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். அவர் அறைக்கு வந்தபோது இரவு மணி பத்தரையாகி இருந்தது. இந்நேரம் இயேசுநாதர் படத்திற்கு எங்கே போவது என்று புரியாமல் தோட்டவேலை செய்யும் மைக்கேலின் வீட்டிற்குப் போய் ஒரு இயேசு நாதர் படத்தை வாங்கிக் கொண்டு வந்து மாட்டினார்.
இன்னொரு அதிகாரி உப்பு புளி காரம் இல்லாத உணவு மட்டுமே சாப்பிடுவார் என்றதால் அவருக்கான சாப்பாட்டினை தானே சமைத்துக் கொடுத்தார். காலை காபியோடு பேரிச்சம் பழம் வேண்டும் என்று கேட்டார் வட இந்திய அதிகாரி. கிழக்கே தலை வைத்து தான் தூங்குவேன் என்று கட்டிலை திருப்பிப் போட சொன்னார் வேறு அதிகாரி. இப்படி விதவிதமான உத்தரவுகளைக் கேட்டுப் பழகியிருந்தார்.
ஒருவர் சாப்பிடும் உணவை வைத்து அவரது குணத்தைத் தெரிந்துவிட முடியும் என்பதைத் துரைக்கண்ணு அனுபவத்தில் உணர்ந்திருந்தார். மனிதனுக்கு மனிதன் பசியின் அளவு வேறுபடுவது வியப்பளித்து. சிலருக்கு எவ்வளவு சாப்பிட்டாலும் பசியடங்குவதில்லை. ஒட்டைப்பானை வயிறு என்று அவரது அம்மா சொல்லுவாள். விதவிதமான உணவு வகைளை சமைத்தாலோ, தினசரி பார்த்துக் கொண்டேயிருந்தாலோ முகத்தில் அடித்துவிடும். சாப்பிட மனசே வராது. அதனால் தான் சமையற்காரர்கள் வெறும் ரசம்சோறு சாப்பிடுகிறார்கள் போலும்.
நேரத்திற்குச் சாப்பிடாமல் விட்டு அவரது வயிறு சுருங்கிவிட்டிருந்தது. பள்ளிவயதில் வயிற்றின் குரலை கேட்டிருக்கிறார். இப்போது அது சப்தமிடுவதேயில்லை.
அதிகாரிகள் எதற்காகக் கோவித்துக் கொள்வார்கள் என்று தெரியாது. அவர்களிடம் எந்த விளக்கமும் தராமல் அமைதியாக இருப்பது தான் தீர்வு என்பதை அறிந்திருந்தார்.
••
பைக்கில் தயாளன் வருவது தெரிந்தது. அவன் பிளம்பிங் வேலை செய்பவன். மாடி அறையில் குழாய் அடைத்துக் கொண்டிருப்பதைச் சரி செய்வதற்காக வரச் சொல்லியிருந்தார். தயாளன் பைக்கை நிறுத்திவிட்டு துரைக்கண்ணு இருந்த வரவேற்பு அறையை நோக்கி வந்தான். அவன் கண்ணிலும் டிபன் கேரியர் தான் பட்டது
“இன்னும் ஆபீசர் வரலையா“ என்று கேட்டான்
“வரக்காணோம். இதை என்ன செய்றதுனு தெரியலை நீ சாப்பிடுறயா“
“எனக்கு வேணாம். நான் வீட்ல சாப்பிட்டேன்“
“அப்போ ஒண்ணு பண்ணு இந்த டிபனை கொண்டு போயி புளியமரத்தடியில போட்டுட்டு வந்தா நாயாவது திங்கும்“.
“போகும்போது எடுத்துட்டு போறேன். வையுங்க“ என்றபடியே படியேறினான் தயாளன்
“நீ இதைக் கொண்டு போய்ப் போட்டுட்டு வந்துருப்பா.. இப்பவே மணி பனிரெண்டுக்கு மேல ஆகிருச்சி. சட்னி எல்லாம் ஊசிப்போன வாடை வருது“
அவன் டிபன்கேரியரை கையில் எடுத்துக் கொண்டு வெளியே நடந்தான். துரைக்கண்ணுவிற்குக் கால்கள் சோகை பிடித்துக் கொண்டது போலிருந்தது. எழுந்து உதறிக் கொண்டார். திடீரென உடல் எடையற்றுப் போய்விட்டது போல உணர்ந்தார்.
காலையிலிருந்து அறையில் ஒடும் ஏசியை அணைத்துவிட வேண்டுமா, அல்லது அதிகாரி வந்துவிடுவாரா என்று தெரியவில்லை. எதற்கும் ஒரு முறை அறையைப் பார்த்துவிடுவோம் என்று நடந்தார். காலையிலிருந்து ஏசி ஒடிய குளிர்ச்சி அறையெங்கும் நிரம்பியிருந்தது. அந்தக் குளிர்ச்சி அவருக்குத் தூங்க வேண்டும் என்ற ஏக்கத்தைக் கொண்டு வந்தது. அதைக் காட்டிக் கொள்ளாமல் கதவை மூடி வெளியே வந்தார்.
தயாளன் குழாயில் காலியான டிபன்கேரியரை கழுவி கொண்டிருந்தான். மதிய உணவு எங்கே வாங்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. வந்தவுடன் கேரியர் கேட்பார்கள். அதை எடுத்து வெளியே வைத்துவிட வேண்டும் என்று நினைத்தபடியே வரவேற்பரையை நோக்கி நடந்தார். அவரது மேஜையிலிருந்த போன் அடித்தது. அவர் எடுப்பதற்குள் போன் கட்டாகிவிட்டது. யார் அழைத்தார்கள் என்று தெரியவில்லை. தயாளன் கழுவிய டிபன்கேரியரை வெயில் பட வைத்துவிட்டு மாடியேறிச் சென்றான்.
துரைக்கண்ணு மகிழமரத்திலிருந்து இறங்கி ஒடிய அணிலைப் பார்த்தபடி இருந்தார். அப்போது வாசலில் கார் ஹார்ன் கேட்டது. அவசரமாக எழுந்து வெளியே வருவதற்குள் அரசாங்க முத்திரை பதித்த காரும் பின்னாடியே இரண்டு ஜீப்புகளும் உள்ளே நுழைந்தன. காரை விட்டு இறங்கிய டெப்டி செகரெட்டரி நாற்பது வயதிற்குள் இருந்தார். ஒல்லியான தோற்றம். கோல்டன் பிரேம் போட்ட கண்ணாடி அணிந்திருந்தார். கறுப்பு ஷு. இடதுகையில் பச்சைக்கல் மோதிரம். அவரை நோக்கி கைகூப்பினார் துரைக்கண்ணு. அதை அவர் கண்டுகொள்ளாதது போல நடந்தார். நாகராஜன் அறைக்கதவை திறந்து உள்ளே அழைத்துக் கொண்டு சென்றார். அந்த அறையின் கதவு சாத்தப்பட்டது.
சில நிமிஷங்களுக்குப் பின்பு வெளியே வந்த நாகராஜன் “சார் இன்னும் சாப்பிடலை.. டிபன் எங்கே வச்சிருக்கே“ என்று கேட்டார்
“மணி இப்பவே பனிரெண்டரை ஆச்சு.. சாப்பாடு வாங்கிற வேண்டியது தானே“ என்றார் துரைக்கண்ணு
“அதுக்கு நேரம் இருக்கு.. கேரியரை எடுத்துட்டு வா.. நீயே பக்கத்துல இருந்து பரிமாறு“…
துரைக்கண்ணுவிற்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை.
“இளநீர் வாங்கிட்டு வரச்சொல்லவா“ என்று கேட்டார்
நாகராஜன் கோபத்துடன் “மூர்த்தி டிபன் வாங்கிட்டு வரலையா“ என்று கேட்டார்
“வந்தாப்லே.. ஆனா. மணி பனிரெண்டுக்கு மேல ஆச்சுனு நான் தான் நாய்க்கு போட சொன்னேன்“
“யாரைக் கேட்டு சொன்னே. எனக்கு அந்த டிபன் வந்தாகணும்“.
“நான் வேணும்னா.. தனலட்சுமில போய் வாங்கிட்டு வரவா“
“அந்த மயிரு எல்லாம் வேணாம். நான் வாங்கி வச்ச டிபன் தான் வேணும்“
இப்படிக் கேட்டால் என்ன செய்வது எனப்புரியாமல் துரைக்கண்ணு அமைதியாக இருந்தார்.
“உன் வேலை என்னவோ அந்த மசிரை மட்டும் பாக்க வேண்டியது தானே என் உசிரை ஏன்யா வாங்குறே“ என்று கையை நீட்டி பலமாகச் சப்தமிட்டார் நாகராஜன்.
பதில் சொல்ல வேண்டும் என்று மனது துடித்தது. ஆனால் வாயை மூடிக் கொண்டு நின்றிருந்தார். நாகராஜன் கண்ணில் கழுவி வைத்த டிபன் கேரியர் பட்டது. அவர் ஆத்திரத்துடன் ஏதோ திட்ட முயலும் போது அழைப்பு மணி ஒலிக்கும் சப்தம் கேட்டது. நாகராஜன் டெப்டி செகரெட்டரி இருந்த அறையை நோக்கி வேகமாக ஒடினார்.
தனலட்சுமி விலாஸ் ஹோட்டலுக்குப் போன் செய்து டிபன் இருக்கிறதா என்று கேட்டார் துரைக்கண்ணு
“மீல்ஸ் டயமாகிருச்சி.. டிபன் கிடையாது“ என்றார்கள்.
நாகராஜன் அவசரமாக வெளியே வந்து ஜீப்பை எடுக்கச் சொல்லி கிளம்பினார். எங்கே போகிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை டெப்டி செகரெட்டரி அவரைத் திட்டியிருப்பாரா. ஏதாவது டிபன் வாங்குவதற்குத் தான் நாகராஜன் போகிறாரா என எதுவும் தெரியவில்லை.
தானே அதிகாரி முன்பாகச் சென்று பதில் சொல்லிவிடுவது நல்லது எனத் தோன்றியது. ஆனால் அவர்களாக அழைக்காமல் நாமாக உள்ளே போனால் அதற்கும் கோவித்துக் கொள்வார்களே எனப் பயமாகவும் இருந்தது. வெளியே காத்திருக்கும் வேறு அலுவலர்கள் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துவிட்டவர்கள் போல அவரை முறைத்துக் கொண்டிருந்தார்கள்.
எதற்காக இப்படி நடந்து கொண்டோம். இப்போது என்ன சொல்லிச் சமாதானம் செய்வது எனக் குழப்பமாக இருந்தது. நாகராஜன் அதிகாரி வந்துவிட்டதாகப் போனில் சொல்லியிருந்தால் கேரியரை அப்படியே வைத்திருந்திருப்பேனே என்று நினைத்துக் கொண்டார்.
அவர்கள் தவறை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். மாட்டிக் கொண்டது நாம் தான் என முணுமுணுத்துக் கொண்டார். திடீரென ஊரில் உள்ள மனைவி மகளின் நினைவு வந்தது. தனது பசியைப் பற்றிக் கவலைப்படுகிறவர்கள் அவர்கள் இருவர் மட்டுமே என்று தோன்றியது.
நாகராஜன் வருவதற்குள் ஏதாவது சாப்பிடக் கொடுத்து அதிகாரியின் பசியைத் தணிக்க வேண்டியது தனது பொறுப்பு என்பது போல அவசரமாகக் கிரீன் டீ தயாரித்து ஒரு டிரேயில் நாலைந்து பிஸ்கட்களையும் வைத்து எடுத்துக் கொண்டு அறைக்கதவைத் தட்டினார். உள்ளே வரும்படி ஆங்கிலத்தில் பதில் வந்தது. அறையில் இருந்த சோபாவில் டெப்டி செகரெட்டரி சாய்ந்து உட்கார்ந்திருந்தார். அவரது சட்டைப்பொத்தானை மீறி இளந்தொப்பை தெரிந்தது.
டீயை அவர் முன்னால் இருந்த மரமேஜையில் வைத்தபோது வேண்டாம் என மறுத்தபடியே அவர் சொன்னார்
“மோர் இருந்தா குடுங்க.. இதெல்லாம் வேணாம்“
“சாரி சார்.. நீங்க சாப்பிடுறதுக்கு வாங்கி வச்சிருந்த டிபனை நேரமாகிருச்சின்னு நான் தான் நாய்க்கு போட சொன்னேன்“
இதைச் சொல்லும் போது அவர் அறியாமல் கைவிரல்கள் நடுங்கின.
“டிபன் எல்லாம் வேண்டாம்னு சொன்னனே.. எதுக்கு இப்படிப் பண்ணுறாங்க.. நாகராஜனைக் கூப்பிடுங்க“
“அவர் வெளியே போயிருக்கார்“.
“நான் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் செய்றவன். ஒரு நாள் சாப்பிட்டா மறுநாள் சாப்பிட மாட்டேன். உண்ணாவிரதம். அது அவருக்குத் தெரியாது“.
“என்னை மன்னிச்சிருங்க சார்“
“நீங்க என்ன தப்பு பண்ணுனீங்க.. தேவையில்லாமல் டிபன் வாங்கி வச்சது அவங்க தப்பு. நான் பாத்துகிடுறேன்“
“அவங்களைக் கோவிச்சிகிட வேண்டாம் சார். இது எப்பவும் நடக்குறது தான். நான் தான் இன்னைக்கு அவசரப்பட்டு நடந்துகிட்டேன்“
“இது உங்க யார் தப்பும் இல்லை. பழக்கம். ஐம்பது நூறு வருமா நடந்துகிட்டு வர்ற பழக்கம். இதை எல்லாம் மாத்துங்கன்னு சொன்னா.. யார் கேட்குறா.. ஆபீசர்ன்னா ஒரு வாய்க்குப் பதிலா பத்து வாய் இருக்குமா. இல்லை. எப்பவும் சாப்பிட்டுகிட்டே இருக்கணுமா.. விதவிதமா சாப்பிட குடுத்தா நாங்க சந்தோஷமாகிடுவோம்னு நினைக்கிறாங்க. நான் வந்திருக்கிறது வேலை பாக்க.. அதைக் கரெக்டா செய்தா போதும்.. என்ன சொல்றீங்க. “
ஒரு உயரதிகாரி இப்படி வெளிப்படையாகப் பேசுவது அவருக்கு ஆறுதலாக இருந்தது. அவர் சொன்னதை ஆமோதிப்பது போலத் தலையசைத்தார்
“. நிறைய ஹைஅபிசியல் கேம்ப் வர்றதே ஆசையா நினைச்சதை எல்லாம் சாப்பிடுறதுக்குத் தான். நம்மளை விட்டு பிரிட்டீஷ்காரங்க போயிட்டாங்க. ஆனா அவங்க ஏற்படுத்துன பழக்கம் எதுவும் போகலை. இவங்க போக விடவும் மாட்டாங்க “
என்றபடியே டீவைக்கப்பட்டிருந்த டிரேயை பார்த்தபடியே “நீங்க கிரீன் டீ குடிப்பீங்களா“ எனக்கேட்டார் அதிகாரி
“இல்லை“ எனத் தலையாட்டினார் துரைக்கண்ணு.
“ஏன் பிடிக்காதா“
“ஆமாம்“ என லேசாகத் தலையசைத்தார்
“உங்களுக்குப் பிடிக்காததை என் தலைல கட்டுறீங்க பாத்தீங்களா“ என வேடிக்கையாகச் சொன்னார் டெப்டி செகரெட்டரி. அந்தக் கேலி துரைக்கண்ணுவிற்குள் இருந்த நடுக்கத்தை நிறுத்தியது.
“ரூம் ரொம்ப நீட்டா இருக்கு.. நீங்க தான் பாத்துகிடுறீங்களா. குட் ஜாப்“ என்று பாராட்டினார்.
துரைக்கண்ணுவால் பதில் பேச முடியவில்லை. சிறிய அங்கீகாரங்கள் தரும் மகிழ்ச்சியை;ப போல உயர்வானது எதுவுமில்லை என்பது போலக் கைகூப்பி நன்றி சொன்னார்.
“நாகராஜன் லஞ்ச் ஏற்பாடு பண்ணப்போறார். வேணாம்னு சொல்லிடுங்க“ என்றார் அதிகாரி.
அதைச் சொன்னபோது அவரது முகத்தில் மெல்லிய சிரிப்பு வெளிப்பட்டது. டீ டிரேயை எடுத்துக் கொண்டு வெளியே வந்த போது வெயில் பிரகாசமாக இருப்பது போலத் தோன்றியது.
நாகராஜன் ஜீப்பில் வந்து இறங்கியிருந்தார். ஜீப்பிலிருந்து ஆறு அடுக்கு கேரியர் ஒன்றை இருவர் இறக்கிக் கொண்டிருந்தார்கள்.
“அமீன்ல இருந்து மட்டன் பிரியாணி. பிஷ்பிரை, சிக்கன்பிரை, கரண்டி ஆம்லெட், காடை ரோஸ்ட், லிவர் பிரை எல்லாம் வாங்கிட்டேன். நீ மறக்காம ஸ்வீட் பீடா நாலு வாங்கிட்டு வந்துரு“
என யாரிடமோ போனில் சொல்லிக் கொண்டிருந்தார் நாகராஜன்.
கேரியரை உள்ளே எடுத்துக் கொண்டு போவதைக் காண துரைக்கண்ணுவிற்கு வேடிக்கையாக இருந்தது.
நாகராஜனை அழைத்துச் சொல்லிவிடலாமா என்று நினைத்தார். ஆனால் அவராகத் தெரிந்து கொள்ளட்டும் என்று முடிவு செய்தபடியே அதிகாரியின் அறையை நோக்கி நாகராஜன் போவதை பார்த்துக் கொண்டிருந்தார்.
வெளியே வந்த நாகராஜன் முகம் வெளிறிப்போயிருந்தது. ஏமாற்றத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாதவரைப் போலத் துரைக்கண்ணுவைப் பார்த்து சொன்னார்
“காலை ஆறு மணில இருந்து ஒடிக்கிட்டே இருக்கேன். பல்லுல பச்சத்தண்ணி படலை. கொலைபட்டினி. நம்ம பசியை யாரு நினைச்சிப் பாக்குறா.. “
“சாப்பிட்டு வேலை பாக்க வேண்டியது தானே. அதான் கேரியர் நிறைய பிரியாணி, மட்டன் சிக்கன் எல்லாம் இருக்குல்ல.. என்றார் துரைக்கண்ணு
அப்படிச் சொன்னபோது அதில் கேலியிருந்தது.
“டெப்டி செகரெட்டரி தூங்குனதுக்கு அப்புறமாத் தான் சாப்பிடணும்.. பிரிட்ஜ்ல ஐஸ் வாட்டர் இருந்தா குடுங்க“ என்றார் நாகராஜன்
பழக்கத்தை மாற்றவே முடியாது என டெப்டி செகரெட்டரி சொன்னது துரைக்கண்ணுவின் நினைவில் வந்து போனது. தனக்குத் தானே சிரித்துக் கொண்டபடி குளிர்சாதனப்பெட்டியை நோக்கி நடந்தார் .
•••
August 16, 2024
கேமிராவின் சிறகுகள்
உலகின் பார்வையில் என்றோ முடிந்து போன நிகழ்வுகள் கூடத் திரையில் காணும் போது நமக்குள் பதைபதைப்பையும், மகிழ்ச்சியினையும் ஏற்படுத்துவதை உணர்ந்திருக்கிறீர்களா. அப்படியான அனுபவத்தை Tokyo Olympiad ஆவணப்படம் காணும் போது உணர்ந்தேன்.

1964ம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளைக் கோன் இச்சீகாவா ஆவணப்படமாக உருவாக்கியுள்ளார். விளையாட்டுப் போட்டிகளைப் பற்றிய ஆவணப்படங்களில் இதுவே தலைசிறந்தது என்கிறது பிபிசி. அது வெறும் புகழ்ச்சியில்லை.

கோன் இச்சிகாவா ஒலிம்பிக் போட்டிகளை வியப்பூட்டும் விதமாகப் படமாக்கியிருக்கிறார். எங்கிருந்து படமாக்கினார்கள். எப்படிப் படமாக்கினார்கள் என ஆச்சரியமாக இருக்கிறது. கேமிரா கோணங்கள். நகர்வுகள், காட்சி துணுக்குகளின் வேகம், லயம் எனப் பிரமிப்பு அதிகமாகிறது. குறிப்பாகப் பார்வையாளர்களின் கண்ணோட்டத்திலும். விளையாட்டுப் போட்டிகளுக்கு வெளியே வீர்ர்களின் அன்றாட நடவடிக்கைகளைப் படமாக்கியுள்ள விதம் சிறப்பானது. ஜூம் லென்ஸ்கள் மற்றும் குளோஸ்-அப் காட்சிகளின் மூலம் தனித்துவமான கலையுணர்வை உருவாக்கியுள்ளார் இச்சிகாவா. நூற்றுக்கும் மேற்பட்ட கேமிராக்கள், துணை உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் பட்டாளத்தையே இச்சிகாவா வைத்திருந்தார்.

.மழைக்கு ஊடாகப் போட்டி நடக்கிறது. கேமிரா வீரனையும் மழைத்துளியினையும் ஒன்றாகக் காட்டுகிறது. குடைபிடித்தபடியே பார்வையாளர்கள் விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துகிறார்கள். ஒலிம்பிக்கில் செய்யப்படும் சாதனைகள் யாவும் மனித உடலின் உச்சபட்ச சாத்தியங்களைக் காட்டுகின்றன. உடலிலுள்ள தசைநார்களின் அழகினை, உறுதியினை, இலயத்துடன் கூடிய இயக்கத்தை உண்மையாக, நேர்த்தியாக, படம்பிடிக்க விரும்பினேன் என்கிறார் இச்சிகவா. அதைப் படத்தில் நன்றாக உணர முடிகிறது. யோஷினோரி சகாய் ஒலிம்பிக்கின் தீபம் ஏற்றச் செல்லும் காட்சி மிக அழகானது
இந்த ஆவணப்படத்தின் சில க்ளோசப் காட்சிகள் செர்ஜியோ லியோன் திரைப்படத்தில் வருவது போன்ற அதே அழகியலுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஜப்பானில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளைப் படமாக்குவதற்காக முதலில் இயக்குநர் அகிரா குரசோவாவை அணுகினார்கள். அவர் ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க நாள் மற்றும் இறுதிநாள் நிகழ்வுகளையும் தானே படமாக்குவேன். அதற்கு ஒத்துக் கொண்டால் மட்டுமே ஒலிம்பிக் பற்றிய ஆவணப்படத்தை இயக்குவேன் என்று நிபந்தனை விதித்தார். ஜப்பான் ஒலிம்பிக் கமிட்டி அதை ஏற்கவில்லை. அவர்கள் குரசோவாவிற்குப் பதிலாகப் புகழ்பெற்ற இயக்குநர் கோன் இச்சிகாவாவைத் தேர்வு செய்தார்கள். இச்சிகாவா 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர்
வெற்றி தோல்வி குறித்த தகவல்கள், விருதுவழங்கும் நிகழ்வுகள் ஒலிம்பிக் சாதனைகளை மட்டுமே தான் படமாக்கவிரும்பவில்லை. சுதந்திரமாக, தனது விருப்பத்தின்படி படமாக்க அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார் கோன் இச்சிகாவா. அதைக் கமிட்டி ஏற்றுக் கொண்டது.
164 கேமராமேன்கள், 100 க்கும் மேற்பட்ட கேமராக்கள், 250 வெவ்வேறு லென்ஸ்கள், 57 ஒலிப்பதிவாளர்கள், 70 மணிநேர காட்சிகள். என ஆவணப்படத்தை உருவாக்கினார்.

அவர் 165 நிமிட ஆவணப்படத்தை முடித்துக் காட்டிய போது ஒலிம்பிக் கமிட்டி அதை ஏற்றுக் கொள்ளவில்லை. நிறையப் பகுதிகளைக் குறைக்கச் சொன்னார்கள். இன்று நாம் காணுவது இரண்டு மணி ஐந்து நிமிடப் படம் மட்டுமே. ஆனால் முழுமையான ஆவணப்படம் சிறப்புப் பதிப்பாகத் தனியே விற்பனைக்குக் கிடைக்கிறது.
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் முக்கிய நகரங்கள் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகின. ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசி தாக்கியது அமெரிக்கா. அதே ஹிரோஷிமாவினை மறுபடியும் விண்முட்டும் நகரமாக உருவாக்கி அங்கே ஒலிம்பிக்கின் துவக்க விழா நிகழ்வை ஜப்பான் ஏற்பாடு செய்திருந்தது. ஒருவகையில் மீண்டு எழுந்து வரும் ஜப்பானின் அடையாளமாக இந்த ஒலிம்பிக் கருதப்பட்டது
இந்த ஆவணப்படம் ஜப்பானியத் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மிக அதிக வசூல் செய்த படமாகச் சாதனை செய்தது. அதைத் தொடர்ந்து ஆங்கில வடிவத்தில் அமெரிக்காவிலும் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.டோக்கியோ ஒலிம்பிக்கில் தான் முதன்முறையாக நேரடி ஒளிபரப்பு நடைபெற்றது. செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தொலைக்காட்சி முதல் முறையாக உலகளாவிய பார்வையாளர்களுக்கு ஒலிம்பிக்கை ஒளிபரப்பியது.
இந்தப் போட்டியில் தான் புள்ளிவிவரங்களைப் பதிவுசெய்யக் கம்ப்யூட்டர்களின் பயன்பாடு அறிமுகமானது. அது போலவே துல்லியமாக நேரத்தைக் குறிக்கக் குவார்ட்ஸ் கடிகாரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இச்சிகாவாவின் ஆவணப்படம், சுட்டெரிக்கும் சூரியனுடன் துவங்குகிறது. அது ஜப்பானின் அடையாளம். பழைய டோக்கியோ கட்டிடங்கள் இடிக்கப்படுவதைக் கேமிரா காட்டுகிறது. அதைத் தொடர்ந்து பல்வேறு ஒலிம்பிக் போட்டிகளின் வரலாறு சுருக்கமாக விவரிக்கப்படுகிறது. ஒலிம்பிக் ஜோதியை ஏந்தி புறப்படும் நிகழ்ச்சியும். அதை உலகெங்கும் மக்கள் வரவேற்பதையும் காண்கிறோம். ஜப்பானின் ஃபுயூஜி எரிமலைக்கு முன்னால் ஜோதி ஏந்தியபடி ஒருவர் ஒடிச் செல்வதைக் காண்கிறோம். மிக அழகான காட்சியது.
பல்வேறு போட்டிகளுக்கு வீர்ர்கள் தயார் ஆவது. காத்திருப்பது. வெற்றி தோல்விக்குப் பின்பாக அவர்களின் மனநிலை. பார்வையாளர்களின் ஆரவாரம். எனக் கேமிரா அலைபாய்ந்தபடியே இருக்கிறது.
1960 ஆம் ஆண்டு ரோமில் வெறுங்காலுடன் ஓடி தங்கம் வென்ற எத்தியோப்பிய மராத்தான் ஓட்டப்பந்தய வீரர் அபே பிகிலா – வெள்ளைக் காலணிகளை அணிந்து ஜப்பான் மாரத்தானில் தங்கம் வென்றதைப் படத்தின் இறுதிக் காட்சிகள் காட்டுகின்றன . கேமிரா அவர் ஸ்லோ மோஷனில் ஸ்டேடியத்திற்குள் நுழைவதைக் காட்டுகிறது. மற்ற போட்டியாளர்களின் வெளிப்பாடுகளில் காணப்படும் அவசரம், பதற்றம் அவரிடமில்லை.
பத்திரிகையாளர் அறையில் வேகவேகமாகச் செயல்படும் தட்டச்சுப்பொறிகளின் வெறித்தனம், மைதானத்தில் காணப்படும் சிறுவர்களின் முகபாவங்கள். வீர்ர்களின் தனித்துவமான நம்பிக்கைகள் என மலரின் இதழ்களைப் போலக் கச்சிதமாகக் காட்சிகளை அடுக்கியிருக்கிறார் இச்சிகாவா.
டோக்கியோவில் ஒலிம்பிக் நடந்தாலும் படம் மாநகரை அதிகம் காட்சிப்படுத்தவில்லை. ஜப்பானிய வீர்ர்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தரப்படவில்லை. இந்த ஆவணப்படத்தில் விளையாட்டு வீரர்கள் – பார்வையாளர்கள் மற்றும் போட்டியை நடத்துபவர்கள் சமமான அளவில் கவனம் செலுத்தப்படுகிறார்கள். மைதானத்தில் நடைபெறும் சின்னஞ்சிறு நிகழ்வுகளை, உணர்ச்சிகளைப் படம் மிக நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறது. விளையாட்டுப் போட்டியினை இச்சிகாவா ஒருவித விசித்திரமான கவிதையாகக் காண்கிறார். அதன் கவித்துவத்துடனே படமாக்கியிருக்கிறார். ஐம்பத்தேழு ஆண்டுகளுக்குப் பின்பும் இந்த ஆவணப்படம் புதிதாகவே இருக்கிறது. உலகெங்கும் கொண்டாடவும் படுகிறது.
••
August 15, 2024
குளிர்மலைக்குச் செல்லும் வழி
மலையை நோக்கிச் செல்லும் பாதைகள் வசீகரமானவை. அவை அறியாத உலகை நோக்கி நம்மை அழைத்துச் செல்பவை. தொலைவிலிருந்து மலைப் பாதையைக் காணும் போது அது மலையின் நாக்கை போலவேயிருக்கிறது. உண்மையில் பாதைகள் காத்திருக்கின்றன. மனிதர்களைப் போலவே பாதைகளுக்கும் வாழ்நாளிருக்கிறது. சில பாதைகள் அற்ப ஆண்டுகளில் மறைந்து விடுகின்றன. பழைய பாதைகள் கதை சொல்லக் கூடியது என்கிறார்கள் ஆப்பிரிக்க மக்கள். அது உண்மையே.

பாதையை நம்முடைய தலை மறந்துவிடும் கடந்து சென்ற பாதங்கள் மறக்காது என்றொரு சீனப்பழமொழி இருக்கிறது. அதிவேக விரைவுபாதைகளை விரும்பும் இன்றைய வாழ்விற்குப் புறக்கணிக்கபட்ட பழைய பாதைகளைப் பற்றி என்ன கவலையிருக்கப் போகிறது சொல்லுங்கள்.
மலையின் உச்சிக்கு நம்மை அழைத்துச் சென்றுவிடும் என்பது போலப் பாதை தோற்றம் தருவது வெறும் மயக்கம் மட்டுமே. தலைவகிடு போலப் பாதியில் பாதையும் நின்றுவிடும். பாறைகளின் தயவும். காற்றின் அனுமதியும். சூரிய வெளிச்சத்தின் துணையும் மேகங்களின் வழிகாட்டலும் இருந்தால் மட்டுமே மலையின் உச்சியை அடைய முடியும். எளிதானது போலத் தோன்றும் கடினமான பயணமது.

துறவிகளும் கவிஞர்களும் எப்போதும் மலையைத் தேடிச் செல்கிறார்கள். கடற்கரையும், தீவுகளும், பசுமையான நிலவெளியும் வறண்ட, கைவிடப்பட்ட இடங்களும் கதாசிரியர்களை அதிகம் வசீகரிக்கின்றன. அவற்றை நோக்கியே தொடர்ந்து பயணிக்கிறார்கள். ஹம்பி தரும் நெருக்கத்தைச் சிம்லா தருவதில்லை என்பதை நானே உணர்ந்திருக்கிறேன்.
உரைநடை என்பதே சிறியதும் பெரியதுமான நிகழ்வுகளின் இயக்கம் தானே. கடற்கரையில் நடப்பதும் அது தான். ஆகவே கடலிடம் நெருக்கம் கொண்ட நாவலாசிரியர்கள் நிறைய இருக்கிறார்கள்.
பால்சாக் நாவல் எழுதுவதற்காகப் புதிய தீவுகளைத் தேடிச் செல்வார் என்கிறார்கள். ஜான் பான்வில் தன்னைக் கடலே எழுத வைக்கிறது என்கிறார். டால்ஸ்டாய் கடல் கடந்து பயணம் செய்திருக்கிறார். ஆனால் கடல்வாழ்க்கை சார்ந்த கதையை எழுதவில்லை. சீனாவிலும் ஜப்பானிலும் கவிஞர்கள் தொலைதூர மலைகளைத் தேடிச் சென்று தனிமையில் வாழ்ந்திருக்கிறார்கள். அங்கேயிருந்த பௌத்த மடாலயங்களில் தங்கி எழுதியிருக்கிறார்கள். ஜப்பானிய செவ்வியல் கவிதைகளில் மலையும் பனியும் மலர்களும் எழுதப்பட்ட அளவிற்குக் கடல் எழுதப்படவில்லை.

ரெட் பைன் பண்டைய சீனக் கவிஞர்கள் வாழ்ந்த மலைத்தொடர்களுக்குப் பயணம் செய்திருக்கிறார். அது குறித்து விரிவான ஆவணப்படம் ஒன்றையும் எடுத்திருக்கிறார். ரெட் பைன் போலவே கேரி ஸ்னைடர், ஆர்தர் வேலி,பர்டன் வாட்சன், எஸ்ரா பவுண்ட், பால் ரூசர் எனப் பலரும் சீனக்கவிதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்.
தமிழில் குளிர்மலையின் நூறு கவிதைகளைச் சசிகலா பாபு சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். கவிதைகளை எப்படித் தேர்வு செய்தார். மொழிபெயர்ப்பில் என்ன சிக்கல்களை எதிர்கொண்டார் என்று அவர் விரிவான கட்டுரை ஒன்றை எழுத வேண்டும்.
ரெட் பைன் ஹான்ஷான் வசித்த தியான்-டாய் மலைத்தொடருக்கு யாத்திரை ஒன்றை மேற்கொண்டிருக்கிறார். அதன் காணொளி இணையத்தில் காணக்கிடைக்கிறது.
ஹான்ஷானின் வாழ்க்கை பற்றித் தெளிவாக எதுவும் தெரியவில்லை. கவிதைகளிலிருந்தே அவரது வாழ்க்கையைக் கண்டறிகிறார்கள். அந்த வகையில் கவிதை தான் அவரது வாழ்க்கை ஆவணம்.
கவிதையிலிருந்து கவிஞனின் வாழ்க்கையைக் கண்டறிவது பலநேரங்களில் ஏமாற்றமளிக்கக் கூடியது. ஒரு போதும் பனிப்பிரதேசத்தில் வசிக்காத கவிஞன் பனியைப் பற்றிச் சிறப்பான கவிதையை எழுதிவிட முடியும். கவிதையில் பாலைவனம் வருவதால் அவன் அங்கே வசித்தவன் என்று அர்த்தமில்லை. கவிஞர்கள் தனது சொந்த அனுபவங்களை உரைகல்லாகவே பயன்படுத்துகிறார்கள்.
ஹான்ஷான் என்பவர் யார். துறவியா, அரசு அதிகாரியா, எதற்காகத் தியான்-டாய் மலைத்தொடருக்கு வந்தார் என்பது குறித்த சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. குளிர்மலையின் பெயரிலே அவரது கவிதைகள் அழைக்கபடுகின்றன. குளிர்மலை என்பது இடத்தின் பெயராக அன்றிக் குறிப்பிட்ட மனநிலையின் வடிவமாகவே குறிப்பிடப்படுகிறது. தமிழில் கூட இப்படிக் காளமேகம் என்று கவியைக் குறிப்பிடுகிறோமே.
ஹான்ஷான் கவிதைகளை அமெரிக்காவில் புகழ்பெறச் செய்தது பீட் இயக்கம். ஹிப்பிகளின் கட்டற்ற வாழ்வியலுக்கு ஏற்றார் போல ஹான்ஷான் அறிமுகம் செய்யப்பட்டார். அமெரிக்க எதிர் கலாச்சார இயக்கத்தை ஹான்ஷான் தூண்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பீட் ஜெனரேஷன் எழுத்தாளர் ஜாக் கெரோவாக்கின் The Dharma Bums நாவலில் குளிர்மலையின் கவிதைகளை மொழிபெயர்ப்பு செய்யும் ஜாஃபி ரைடர் என்ற கதாபாத்திரம் அறிமுகமாகிறது. அது கேரி ஸ்னைடரின் கற்பனையான உருவமே.

கெரோவாக் தன்னை ரே ஸ்மித்தாகக் கற்பனை செய்து கொள்கிறார். ஸ்மித்துக்கும் ரைடருக்கும் இடையில் ஹான்ஷான் பற்றியும் அவரது கவிதைகள் பற்றியுமான உரையாடல் நடக்கிறது. அதில் ஹான்ஷான் நிகரற்ற கவிஞராக முன்னிறுத்தப்படுகிறார். அது தான் அமெரிக்காவில் ஹான்ஷான் புகழ்பெறுவதற்கான முக்கியக் காரணம்.
சீன ஜப்பானிய கவிதைகளை மொழிபெயர்ப்பு செய்த மொழிபெயர்ப்பாளர்களில் சிலர் அந்தக் கவிதைகள் தந்த தூண்டுதலால் சொந்தமாகக் கவிதை எழுதியிருக்கிறார்கள். அவை பொன்னில்லை. காக்கைப் பொன்.
இன்றளவும் அமெரிக்கப் பல்கலைகழகம் மற்றும் இலக்கிய உலகில் சீன ஜப்பானிய செவ்வியல் கவிதைகளுக்கும் அதன் பின்புலமாக உள்ள பௌத்த மரபிற்குப் பெரிய வரவேற்பும் தனித்த நிதிநல்கைகளும் இருந்து வருகின்றன. அது ஒருவகைச் செயற்கை விருப்பம். ஆயிரம். இரண்டாயிரம் வருஷங்களைக் கடந்த பழைய கவிஞர்களை அரிய புதைபொருட்களை அகழ்வாய்வு செய்து கண்டுபிடித்துக் காட்டுவது போல அமெரிக்கப் பல்கலைகழகங்கள் ஆரவாரமாக வெளிப்படுத்துகிறார்கள். அதை ஆங்கிலப் பத்திரிக்கைகளும் கொண்டாடுகின்றன. இந்தியா போன்ற நாட்டில் கவிதை அதன் வயதால் முக்கியத்துவம் பெறுவதில்லை. இந்தியக் கவிதையின் பன்முகத்தன்மையை உலகம் இன்றும் அறிந்து கொள்ளவில்லை.
ஹான்ஷானின் கவிதைகளைச் சீனர் வாசிப்பதற்கும் ஒரு அமெரிக்கர் வாசிப்பதற்குமான வேறுபாடு முக்கியமானது. சீனர் அந்தக் கவிதைகளைப் பௌத்த சமயத்திற்குள் வைத்தும் விலக்கியும் ஒரே நேரத்தில் வாசிக்க முயலுகிறார். கவிதையைப் பொருள்கொள்ளும் போது அதன் அக்காலப் பொருள்கொள்ளுதலை கவனம் கொள்கிறார். ஆனால் பெரும்பான்மை அமெரிக்க வாசகர்களுக்கு ஹான்சானோ, லிபெய்யோ, தூபோவோ தத்துவச் சார்புள்ள செவ்வியல் கவிஞர்கள் மட்டுமே. அவர்களின் பௌத்த மரபு மற்றும் ஞானம் பொருட்டாகயில்லை.

ஹான்ஷான் கவிதைகளில் வெளிப்படும் குரல் பௌத்த மடாலயங்களில் காணப்படும் குருவின் குரலை ஒத்தேயிருக்கிறது. இளந்துறவியிடம் பேசுவது போலவே அவர் கவிதையில் தன்னை வெளிப்படுத்துகிறார். இன்மையைப் பற்றிப் பேசுவதற்காக இருப்பை முன்னிறுத்துகிறார். அசைவற்றது அசைவுள்ளது என்ற இருநிலையை அவரது கவிதைகள் பேசுகின்றன. கடந்து செல்வது, நிலைத்திருப்பது என இரண்டாக உலகைப் பிரிகின்றன. ஹான்ஷான் கவிதைகளில் வறுமையின் அவலமும், விமர்சகர்களின் புறக்கணிப்பும், தன்னைக் கைவிட்ட குடும்பத்தின் நினைவுகளும் வெளிப்படுகின்றன. தண்ணீரும் பனியும் போன்றதே வாழ்வும் மரணமும் என்கிறார். வெறுமையின் ஊடாகச் செல்லும் வெண்மேக பாதையை அடையாளம் காட்டுகிறார். நம்மையும் பறந்தலையும் குருவிகளைப் போல நடனமாடச் செய்கிறார்.
ஹான்ஷானின் கவிதைகளுக்கு ஜென் துறவியான ஹகுயின் விளக்கமளித்துள்ளார். அந்த உரை முக்கியமானது. பௌத்த துறவியிடமிருந்து கற்றுக் கொள்வதை விடவும் ஹான்சானிடமிருந்து அதிகம் பௌத்த ஞானத்தைக் கற்றுக் கொள்ள முடியும் என்கிறார் ஹகுயின்.
ரெட்பைன் தனது பயணத்தில் ஹான்ஷானின் இருப்பிடம் என்ற குகையைக் கண்டறிகிறார். கைவிடப்பட்ட நிலையில் உள்ள அந்த இடத்தைப் பற்றிப் பகடி செய்கிறார். அது அவரது ஏமாற்றத்தின் வெளிப்பாடு. ஹான்ஷான் கவிதைகள் குறித்த அவரது பல்கலைகழகச் சிறப்புரையில் அவர் கவிதைகளுக்குப் பொருள்கொள்ளும் விதம் மற்றும் அதை வெளிப்படுத்தும் விதம் இரண்டும் எனக்கு ஏமாற்றமே அளித்தன.

ஹான்ஷானின் கவிதைகள் இன்று ஒரே தொகுதியாக வாசிக்கக் கிடைக்கின்றன என்னிடம் மூன்று மாறுபட்ட மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. சில நேரங்களில் ஒரே கவிதையின் மூன்று வேறுபட்ட மொழியாக்கங்களை வாசிக்கிறேன். எந்த மொழியாக்கத்தில் படித்தாலும் மனதில் தமிழில் தான் ஒலிக்கிறது. சீன கவிதைகளை மொழிபெயர்ப்பது மிகவும் கடினம். காரணம் அதன் சித்திர எழுத்துக்கள். அது தரும் பல அர்த்தங்கள்.
கேரி ஸ்னைடர் இந்தக் கவிதைகளை மொழியாக்கம் செய்யும் போது பரபரப்பான பொருளியல் வாழ்விலிருந்து விடுபட்டு இயற்கையிடம் முழுமையாகத் தன்னை ஒப்படைத்துக் கொள்ள விரும்பும் ஒருவனுக்கான துணையாகவே இதனைச் செய்திருக்கிறார். இக்கவிதைகள் மகிழ்ச்சிக்கான புதிய பாதையை அடையாளம் காட்டுகிறது என்றே எதிர்கலாச்சாரத்தை உருவாக்கிய பீட் தலைமுறை புரிந்து கொண்டிருக்கிறார்கள். இன்று அந்தத் தலைமுறையும் இல்லை. இன்றைய இலக்கியத்தில் அவர்களின் பாதிப்பும் இல்லை.

இரண்டாயிரத்திற்குப் பின்பான உலகின் போக்கும் விருப்பங்களும் முற்றிலும் வேறானவை. உலகம் பற்றிய சித்திரம் இன்று மாறிவிட்டிருக்கிறது. எந்த ஆசைகளால், கனவுகளால் ஒருவர் வழிநடத்தப்படுகிறார் என்று புரியவில்லை. தனிமை, அழகு, மகிழ்ச்சி, கவலை போன்றவை கேலிப்பொருளாகிவிட்டன. மிருதுவான பொருட்கள். கையாள எளிதாக உள்ள விஷயங்கள், எடையற்ற நிகழ்வுகள் இவற்றையே மக்கள் விரும்புகிறார்கள். செய்திகளின் பேராறு நம்மை மூழ்கடிக்கிறது. அந்தரங்கத்தின் திரை விலகி யாவும் கேமிரா முன்பாக அரங்கேறுகின்றன. உலகெங்கும் அரசியல் மற்றும் அதிகார வேட்கை பெரும் அடக்குமுறையைக் கையாண்டு வருகிறது.
செல்போனும் இணையமும் நமது விருப்பங்களை உருவாக்குகின்றன. பெருக்குகின்றன. சந்தைக்குப் போய்த் தேவையான பொருட்களை வாங்கியது போய் இன்று நமது கைபேசியே சந்தையாகிவிட்டது. நாம் சதா சந்தைக்குள் குடியிருக்கிறோம். எந்த இரவிலும் எந்தப் பொருளையும் வாங்குகிறோம். வீதியில் நடமாடும் நேரத்தை விட இணைய அங்காடிகளில் சுற்றித்திரியும் நேரம் அதிகம். நாம் செல்லுமிடம், நமது செயல்கள் நமது உறக்கம் உள்ளிட்ட யாவும் கண்காணிக்கபடுகின்றன. பதிவு செய்யப்படுகின்றன. நினைவூட்டப்படுகின்றன. புகைப்படங்கள் பொய் சொல்லும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். செயற்கை அறிவால் வழிநடத்தப்படுகிறோம். இந்தச் சூழலுக்குள் இலக்கியத்தின் இடம் என்ன. தேவை என்ன என்று பேசவும் விவாதிக்கவும் வேண்டியிருக்கிறது. முந்தைய தலைமுறை இலக்கிய வாசகன் சந்திக்காத பிரச்சனைகளை இன்றைய வாசகன் சந்திக்கிறான். குழப்பமடைகிறான்.
இந்தச் சூழலுக்குள் ஒருவன் ஜென் கவிதைகளை, ஹான்சானை எப்படிப் புரிந்து கொள்வது என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்வி ஹான்ஷான் போன்ற செவ்வியல் கவிகள் அனைவருக்கும் பொதுவானதே.
குளிர்மலைக்குச் செல்லும் வழியை மக்கள்
கேட்கின்றனர்
குளிர்மலைக்கா ? அங்கு செல்ல எந்தச் சாலையும்
இல்லை
கோடைகாலத்திலும் கூட அங்கு உறைபனி
உருகி வழியாது
சூரியன் பிரகாசிக்கும் போதும் மூடுபனி கண்களை
மறைத்து நிற்கும்
என்னைப் பின்தொடர்வதன் மூலம் அங்கு சென்று
சேர்ந்துவிடலாம் என எங்ஙனம் நீ நம்பலாம்
உன்மனதும் என் மனதும் ஒன்றல்லவே
என்னுடையதைப் போன்றே உன் மனதும்
இருக்குமானால்
மலையின் மையப்பகுதிக்கே நீ சென்று சேர்ந்துவிடுவாய்.
( தமிழில் சசிகலா பாபு. )
இந்தக் கவிதையில் ஒரு உரையாடலைக் காண முடிகிறது. கேட்பவர் யார் என தெரியவில்லை. ஆனால் சொல்பவர் குளிர்மலையில் வசிப்பவர். கோடையிலும் பனி உருகாத வெளியது. அது உலக வாழ்வின் அடையாளம். என் மனது என ஹான்சான் குறிப்பிடுவது கவிஞனின் மனதையா, துறவியின் மனதையா. கவிதையில் துறவியின் குரலே கேட்கிறது.
ஹான்ஷானின் கவிதைகளை வாசிக்கும் போது ஒரு குரல் தன்னைச் சுற்றிய இயற்கையை, நேரடியாகவும் அரூபமாகவும் விளக்குவதை உணர முடிகிறது. சில கவிதைகளில் அக்குரலில் கேலி கலந்திருக்கிறது. அக்கவிதைகள் சின்னஞ்சிறு காட்சிகளைக் கொண்டு முழுமையான தோற்றம் ஒன்றை உருவாக்க முனைகின்றன.
இயற்கைக்குக் கடந்தகாலம் முக்கியமில்லை. அது நினைவு வைத்துக் கொள்வதுமில்லை. ஆகவே இந்தக் கவிதைகளில் வரும் மலையும் பனியும் காற்றும் நிலவும் என்றும் இருப்பவை.
பறவை வானைப் பற்றிச் சொல்வதைப் போல ஹான்ஷான் அவற்றை அறிமுகப்படுத்துகிறார். நட்சத்திரங்கள் இருளைப் புகழ்வது போலத் தனது இருப்பின் ஆதாரங்களை வியக்கிறார். வெள்ளை மேகங்களுக்கு அடியில் அமர்ந்திருப்பதன் அலாதிதன்மையைப் பகடியோடு வெளிப்படுத்துகிறார். பாயை பிடுங்கி சுருட்டி வைப்பது போலத் தனது மனவுறுதியை சுருட்டிவிட முடியாது என்கிறார்.

ஜென் கதைகளில் வரும் குரு சீடனின் கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் தருவதில்லை. ஆனால் மறைமுகமாக விளக்குவார். அது போலவே குளிரை, மலையை, காற்றை, வானை. நிலவை சுட்டிக்காட்டி ஹான்ஷான் விளக்குவது பௌத்த ஞானத்தையே.
ஹான்ஷான் சுவரில்லாத வீடு ஒன்றில் வசிக்கிறார். அதைக் குளிர்மலை என்கிறார்கள். மலைக்கும் கதவிருக்கிறது. அது திறப்பதும் மூடுவதுமாகயிருக்கிறது. உள்ளங்கைக்குள் தானியத்தை ஒளித்து வைத்துக் கொள்வதைப் போல அது துறவியைத் தனக்குள் மூடி வைத்துக் கொள்கிறது. பசியும் தூக்கமும் மட்டுமே அங்கே வசிப்பவரை வழிநடத்துகின்றன. குளிர்மலையில் நாட்களும் மாதங்களும் தண்ணீரைப் போல நழுவி செல்கின்றன, தனித்து வாழ்பவனைச் செயலற்றவனாக உலகம் கருதுகிறது. அது உண்மையில்லை. மனம் எல்லா எண்ணங்களிலிருந்தும் விடுபட்டால் அது குளிர்மலை போல அசைக்கவே முடியாததாக மாறிவிடும். மனதின் பாதை இருள்வதில்லை. அது எப்போதும் பிரகாசமாகவே இருக்கிறது. ஆசைகளும் ஏமாற்றங்களும் அதைப் பனிப்புகை போல மறைக்கின்றன.
உலகிடம் எதையும் எதிர்பார்க்காத மனிதனாக வாழ்வதே ஹான்ஷானின் விருப்பம். அவர் பாறையைப் போலப் பனியில் நனைகிறார். இலைகளைப் போலக் காற்றில் ஆடுகிறார். மலர்களைப் போலத் தான் நிரந்திரமில்லை என்பதை உணர்ந்திருக்கிறார்.
ஹான்ஷானின் காலத்திற்கும் நமக்கிற்குமான இடைவெளியை கவிதை அழிக்கிறது. என்றுமிருக்கும் வானைப் போல அது மர்மமாக, ரகசியமாக, ஆனந்தமாகத் தன்னைக் காட்டிக் கொள்கிறது.
என் வீட்டின் அருகில் ஏதோவொரு மரத்திலிருந்து குயில் பாடுகிறது. அந்தக் குரல் எனக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. குயிலை தேடிச் சென்று பார்க்க மனம் விரும்பவில்லை. மாறாக முகத்தில் தண்ணீர் பட்டது போன்ற மகிழ்ச்சி உருவாகிறது. ஹான்ஷானை வாசிக்கும் போதும் அந்த உணர்வே ஏற்படுகிறது
••
நன்றி
குளிர்மலை கவிதைகள் தமிழில் சசிகலா பாபு. எதிர்வெளியீடு.
August 14, 2024
சுதந்திர தின வாழ்த்துகள்
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.
கவிதையின் வெளிச்சம்
இயக்குநர் சீனு ராமசாமியின் புதிய கவிதைத்தொகுப்பு வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டேன். அண்ணா நூலக அரங்கில் நடைபெற்றது.

பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல் கவிதை நூலை நான் வெளியிட நடிகர் விஜய் சேதுபதி பெற்றுக் கொண்டார்.
இந்த நூல் குறித்து கவிஞர் நந்தலாலா சிறப்புரை ஆற்றினார். செறிவான உரை. கவிதையை சமகால நிகழ்வுகளுடன் பொருத்திக் காட்டிப் பேசியது சிறப்பு.
நிகழ்வில் தோழர் எஸ்.ஏ.பெருமாள், கவிதா சொக்கலிங்கம், இரா.தே. முத்து, பாரதி நாகராஜன் கலந்து கொண்டார்கள். அரங்கு நிறைந்த கூட்டம்.



இந்த நிகழ்வில் கவிதையின் தனித்துவங்கள் குறித்தும், சீனு ராமசாமியின் கவிதைகள் பற்றியும் உரையாற்றினேன்.
நன்றி
ஸ்ருதி டிவி.
August 12, 2024
ஜெர்மனியில்
எனது திருடனின் மூன்று அற்புதங்கள் சிறுகதை ஜெர்மனியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஹேம் மகேஷ் இதனை மொழியாக்கம் செய்துள்ளார்.

இக்கதை மலையாளம். தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் முன்பே மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் சிறுகதை தொகுப்பில் இக்கதை இடம்பெற்றுள்ளது.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

