S. Ramakrishnan's Blog, page 28

July 16, 2024

அக்ஞேயாவின் முகங்கள்

புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர், கவிஞர் அக்ஞேயாவின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தேன்

அக்ஷயா முகுல் எழுதிய Writer, Rebel, Soldier, Lover: The Many Lives of Agyeya 800 பக்கங்கள் கொண்டது. விரிவாக ஆய்வு செய்து எழுதப்பட்ட நூல். இந்த நூலின் கடைசி 175 பக்கங்கள் பின்குறிப்புகள் மற்றும் உதவிய நூல்களின் பட்டியல் உள்ளது

இவ்வளவு பெரிய பட்டியலை இதற்கு முன்பு எந்த வாழ்க்கை வரலாற்று நூலிலும் கண்டதில்லை. அக்ஷயா முகுல் இந்நூலை எழுதுவதற்குச் சிறப்பு நிதிநல்கை பெற்றிருக்கிறார். இரண்டு ஆண்டுகள் பல்வேறு ஆவணக்காப்பகங்கள். தனிநபர் சேமிப்புகள். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பெற்ற தகவல்கள். கடிதங்கள். குறிப்பேடுகள் வழியாக இந்த நூலை உருவாக்கியுள்ளார்.

அக்ஞேயாவின் நமக்கு நாமே அந்நியர்கள் நாவல் தமிழில் சரஸ்வதி ராம்னாத்தால் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. கல்குதிரை அக்ஞேயாவிற்குச் சிறப்பிதழ் ஒன்றை 1994ல் வெளியிட்டிருக்கிறது. கவிஞர் சுகுமாரன் அவரது சில கவிதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். அக்ஞேயாவின் முக்கிய நாவலான சேகர் இன்று வரை தமிழில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. ஆங்கிலத்தில் வாசிக்கக் கிடைக்கிறது.

முகுல் அக்ஞேயாவை முன்வைத்து இந்தி இலக்கிய உலகம் மற்றும் அதன் முதன்மையான படைப்பாளிகள் குறித்த விரிவான சித்திரத்தை உருவாக்கியுள்ளார். அது போலவே அக்ஞேயாவின் சொந்த வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் ( உலகோடு பகிர்ந்து கொள்ளாத காதல் உறவுகள் குறித்தும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும்) பற்றியும் விரிவாக ஆய்வு செய்து எழுதியிருக்கிறார்.

அக்ஞேயாவின் இரண்டாவது மனைவியான கபிலா வாத்ஸ்யாயன் முகுலிடம் சொன்ன வார்த்தைகள் மறக்க முடியாதவை. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவின் முழுப்பரிமாணத்தையும் எவரும் தெரிந்து கொள்ள முடியாது. அது பகிர்ந்து கொள்ளத் தேவையில்லாத விஷயம். அவர் என்னைவிட்டுப் பிரிந்திருக்கலாம். ஆனால் அவரது நினைவுகள் பிரியவில்லை. அது என்னோடு மடியட்டும் என்கிறார் கபிலா.

கபிலா வாத்ஸ்யாயன் பாராளுமன்ற உறுப்பினராகவும் இந்தியப் பாரம்பரிய நடனம், கலை, கட்டிடக்கலை மற்றும் கலை வரலாறு ஆகியவற்றின் முன்னணி அறிஞராகவும் இருந்தவர்.

அக்ஞேயா என்ற புனைபெயரில் எழுதிய சச்சிதானந்த ஹிரானந்த வாத்ஸ்யாயன் உத்தரபிரதேசத்தில் குஷிநகருக்கு அருகிலுள்ள காசியாவில் பிறந்தவர். அவரது தந்தை ஹிரானந்த் சாஸ்திரி, தொல்பொருள் ஆராய்ச்சியாளர். புத்தர் இறந்த இடத்தைக் கண்டறிவதற்கான அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். அதற்காகக் காசியாவில் அவர்களின் குடும்பம் முகாமிட்டிருந்தது.அந்த முகாமில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி அக்ஞேயா பிறந்தார்.

தந்தையின் வேலை காரணமாக ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு , பாட்னா (1920), நாலந்தா (1921) மற்றும் ஊட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அவர்கள் மாறினார்கள். ஆகவே அக்ஞேயா பல்வேறு இந்திய மொழிகளைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்

ஜம்முவில் சிறப்பு ஆசிரியர்களால் அவருக்குச் சமஸ்கிருதம் மற்றும் பாரசீக மொழிகள் கற்பிக்கப்பட்டன. ஆங்கில வழி கல்வி பயின்றிருக்கிறார். லாகூரிலும் சில ஆண்டுகள் மதராஸ் கிறிஸ்துவக் கல்லூரியில் பயின்றிருக்கிறார்.

பகத் சிங்கால் ஏற்படுத்தப்பட்ட ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் ஆர்மி (HSRA) என்ற புரட்சிகர அமைப்பில் இணைந்து, இந்திய சுதந்திர போராட்ட நடவடிக்கைகளில் பங்கேற்றிருக்கிறார்

இதன் காரணமாகத் தேசத்துரோக குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற அக்ஞேயா நான்காண்டுகளை லாகூர், டெல்லி மற்றும் அமிர்தசரஸ் சிறையில் கழித்திருக்கிறார்.

இந்த நாட்களில், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் நாவல் எழுதியிருக்கிறார். அக்ஞேயா 1940 இல் சந்தோஷ் மாலிக்கை மணந்தார். அவர்களின் திருமணம் 1945 இல் விவாகரத்தில் முடிந்தது. அதன்பிறகு கபிலாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அந்த உறவும் நீடிக்கவில்லை

1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரில் இந்திய இராணுவத்தில் சேர்ந்து ராணுவ அதிகாரியாகக் கோஹிமா அனுப்பப்பட்டார். ஆனால் சில மாதங்களில் ராணுவத்திலிருந்து விலகிய அக்ஞேயா பத்திரிகையாளராகவும் இலக்கியப் பணிகளிலும் ஈடுபடத்துவங்கினார். மொழிபெயர்ப்பு மற்றும் கவிதைகளில் ஈடுபாடு காட்டி வந்தார்.1957-58 இல் ஜப்பானுக்குச் சென்ற அக்ஞேயா அங்கு அவர் ஜென் பௌத்தத்தைப் பற்றி அறிந்து கொண்டார், டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தின் இந்தி நாளிதழான நவ்பாரத் டைம்ஸின் தலைமை ஆசிரியராகச் சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களின் வருகை தரு பேராசிரியராகப் பணியாற்றிய அக்ஞேயா இந்தி கவிதை மற்றும் நவீன சிறுகதையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தியவராகக் கொண்டாடப்படுகிறார்

அக்ஞேயாவின் வாழ்க்கை வரலாற்றை எழுத முயன்ற முகுல் அதைப் புனைகதை போலவே விவரிக்கிறார். குறிப்பாக ஆரம்ப அத்தியாயங்கள் சிறுகதை போலவே எழுதப்பட்டிருக்கின்றன.

புத்தர் இறந்த இடத்தில் தனது மகன் பிறந்திருக்கிறார் என்று அக்ஞேயாவின் தந்தை பெருமைப்பட்டிருக்கிறார். பின்னாளில் பௌத்தம் தொடர்பான ஆர்வம் அக்ஞேயாவிற்கு உண்டான போது அது தந்தையின் வழியில் உருவான தேடலாகவே உணர்ந்திருக்கிறார்

ஒரு எழுத்தாளன் உலகிற்குத் தெரியப்படுத்தாமல் மறைத்தவற்றை அவனது வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறவர் வெளிப்படுத்த வேண்டுமா. அது நியாயமானதா என்ற கேள்வியை எழுப்பும் முகுல் அப்படி நடந்து கொள்ள வேண்டியதே சரி என்று குறிப்பிடுகிறார். இதில் அக்ஞேயாவிற்கும் கிருபா சென்னிற்குமான ரகசிய;க் காதலை ஆராயும் முகுல் அவர் எழுதிய கடிதங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பீகாரைச் சேர்ந்த மிகவும் புகழ்பெற்ற இந்தி நாவலாசிரியர், பணீஷ்வர்நாத் ரேணு அக்ஞேயாவுக்கு எழுதிய கடிதங்கள் வழியாக அவர்களுக்குள் இருந்த நட்பும் தேடலும் மிக அழகாக வெளிப்பட்டுள்ளது. குறிப்பாக ரேணுவின் கடைசி நாட்கள் துயரமானவை. அக்ஞேயாவிற்கும் சிஐஏவிற்குமான தொடர்பு. அவரது பத்திரிக்கையுலக அனுபவம். பல்கலைக்கழக அனுபவம். சுதந்திரப் போராட்ட நாட்கள் என்று அக்ஞேயாவின் பல்வேறு முகங்களைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் முகுல்.

லட்சியவாதமும் தேச நலனிற்காக பாடுபடுவதும் எழுத்துலகின் அடிப்படையாக இருந்த காலகட்டமது. சமூக மேம்பாட்டிற்காக எழுத்தாளர்கள் எவ்வளவு பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்பதை இதன் வழியே அறிந்து கொள்கிறோம்.

அக்ஞேயாவின் வாழ்க்கை மாற்றங்களால் நிரம்பியது. பேரலையின் ஊடாக நீந்துவது போல வாழ்க்கையை கடந்து சென்றிருக்கிறார். தாயின் மடியில் குழந்தையாக உள்ள அவரது புகைப்படம் ஒன்று முதல் அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளது. அதனைத் திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டேயிருந்தேன். அக்ஞேயா பிறந்தவுடன் அவரது எதிர்காலத்தை தந்தை கணித்துச் சொல்லிவிட்டார். அவர் சொன்னது போலவே வாழ்க்கையில் நடந்தது என்கிறார்கள்.

ஜென் பௌத்தம் அவர் மீது செலுத்திய தாக்கத்தை நமக்கு நாமே அந்நியர்கள் நாவலில் காணுகிறோம். அந்த நாவல் மௌனத்தின் எடையை விவரிக்ககூடியது.

இதனை வாசித்து முடிக்கும் போது தமிழ் எழுத்தாளர்கள் எவருக்கும் இவ்வளவு விரிவான வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டதில்லையே என்ற ஆதங்கம் மனதில் எழவே செய்கிறது.

அக்ஞேயாவின் கவிதைகள்

தமிழில் சுகுமாரன்

வீடுகள்

1

இரண்டு கதவுகளை ஒன்றிணைக்கும்
அறை என் வீடு
இரண்டு கதவுகளுக்கு இடையேயிருக்கும்
காலியிடம் என் வீடு

எப்படிப் பார்த்தாலும்
நீங்கள் வீட்டைக் கடந்து பார்க்கலாம்
மறு பக்கத்துக் காட்சியைப் பார்க்கலாம்
ஆனால் வீட்டைப் பார்க்க முடியாது

நான் தான் என் வீடு
என் வீட்டில் எவரும் வசிக்கவில்லை
என் வீட்டில் நான் வசிக்கிறேனா?
எப்படிப் பார்த்தாலும்…

2

உங்கள் வீடு
அங்கே சாலைமுடியுமிடத்தில்

ஆனால் நான் எப்போதும் போய்க்கொண்டேயிருக்க வேண்டும்
அப்படியானால் சாலை எங்கே முடிகிறது?
உங்கள் வீடு…

3

மற்றவர்களின் வீடுகள்
உள்நோக்கித் திறக்கின்றன
அவை வெளியிட முடியாத ரகசியங்களுக்குள் திறக்கின்றன
மற்றவர்களின் வீடுகள் நகரங்களில்
நகரங்கள் மற்றவர்களின் வீடுகளில்…

4

வீடுகள், நாம் செல்லும் வீடுகள் எங்கே?
வீடுகளைப் பற்றிய எல்லாப் பேச்சுக்களும்
வீடுகளைப் பொறுத்தவரை புதிர்கள்தாம்
பிறரிடம் நாம்
வீடுகளைப் பற்றிப் பேசுவதில்லை
பிறரிடம் நாம் பேசுவது
வீடுகளைப் பற்றியுமல்ல.

@

திசைகள்

என்றும் காலையில் கொஞ்ச நேரம்
நான் இறந்த காலத்தில் வாழ்கிறேன்
ஏனெனில்
என்றும் மாலையில் கொஞ்ச நேரம்
நான் எதிர் காலத்தில் சாகிறேன்.

(நன்றி : வாழ்நிலம் வலைப்பக்கம்)

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 16, 2024 00:16

July 12, 2024

ஒப்லோமோவின் கனவுகள்

A Few Days from the Life of I.I. Oblomov 1980 வெளியான ரஷ்யத் திரைப்படம். Nikita Mikhalkov இயக்கியது

இவான் கோன்சரோவ் எழுதிய ஒப்லோமோவ் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கபட்டுள்ளது. ரஷ்ய பிரபுத்துவத்தினைக் கேலி செய்யும் விதமாகவே இந்த நாவலை கோன்சரோவ் எழுதியிருக்கிறார்.

மேடை நாடகம் போலவே படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. காட்சி அமைப்புகள் மற்றும் நடிப்பு இரண்டும் மேடையில் காண்பது போலவே இருக்கிறது.

இலியா இலிச் ஒப்லோமோவ் முப்பது வயதுக்குக் குறைவானவர், நடுத்தர உயரம் மற்றும் இனிமையான வெளித்தோற்றம் கொண்டவர். தன்னைச் சுற்றி எந்த மாற்றமும் வந்துவிடக்கூடாது என்று நினைப்பவர். பாதுகாப்பான வளையத்திற்குள் வாழ விரும்புகிறவர்.

தனது கட்டிலின் அடியில் விழுந்த கைக்குட்டையை எடுப்பதற்குக் கூடப் பணியாளரை அழைப்பவர். படுசோம்பேறி. இரவு அங்கியிலே எப்போதுமிருப்பார். சதா படுக்கையில் தூங்கிப் பொழுதைக் கழிப்பதில் விருப்பமுள்ளவர்.

அவரைப் பற்றி விவரிக்கும் போது கோன்சரோவ் மிக அழகாக எழுதியிருக்கிறார்.

திடீரென ஒரு எண்ணம் ஒரு பறவையின் சுதந்திரமான சிறகடிப்பை போல அவரது முகத்தில் அலைந்து திரிந்து, கண்களில் ஒரு கணம் படபடக்கும், பாதித் திறந்த உதடுகளில் குடியேறி, அவரது நெற்றியின் ரேகைகளில் ஒரு கணம் பதுங்கியிருக்கும். பின்னர் அது மறைந்துவிடும் “

போதுமான உடற்பயிற்சி இல்லாததால், அல்லது சுத்தமான காற்று இல்லாததால், அல்லது இரண்டும் இல்லாததால், அவர் வயதுக்கு மீறிய தோற்றம் கொண்டிருந்தார். சந்தேகம், அவநம்பிக்கை மற்றும் பயம் மூன்றும் அவரைச் சூழ்ந்திருந்தன. அவர் வீட்டில் இருக்கும் போதெல்லாம் – கிட்டத்தட்ட எப்போதும் அவர் வீட்டில் இருந்தார் – அவர் தனது கட்டிலில் படுத்துக் கொள்வதில் நேரத்தை செலவிட்டார்

19ம் நூற்றாண்டு ரஷ்ய பிரபுகளின் வாழ்க்கை இப்படியாகத் தானிருந்தது. அந்த வகையில் ஒப்லோமோவ் ஒரு உதாரண பாத்திரம்.

இவான் கோன்சரோவ் அரசு அதிகாரியாக இருந்தவர். வசதியான வணிகக் குடும்பத்தில் பிறந்தவர். கோன்சரோவ் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் செப்டம்பர் 15, 1891ல் பீட்டர்ஸ்பர்க்கில் இறந்தார்.

••

ஒப்லோமோவ் தனது அறை அல்லது படுக்கையை விட்டு வெளியேறுவது அரிது, அவருக்குத் தூங்குவதற்கும் தனது குழந்தைப் பருவ வீட்டைப் பற்றிக் கனவு காண்பதற்குமே நேரம் போய்விடுகிறது.

பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஒப்லோமோவின் வீட்டிலிருந்து படம் துவங்குகிறது. ஜாகர், ஜாகர் என்று வேலைக்காரனைச் சப்தமாகக் கூப்பிடுகிறார் ஒப்லோமோவ். பக்கத்து அறையில் உள்ள ஜாகருக்கு அந்த அழைப்பின் பொருள் புரிகிறது. ஒரு அவசரமும் இல்லாமல் மெதுவாக எஜமானரைக் காண வருகிறான். அந்த அறை தூசு படிந்திருக்கிறது. அழுக்கடைந்த இரண்டு சோஃபாக்கள், நாற்காலியின் கால் உடைந்து காணப்படுகிறது. எங்கும் குப்பை, தூசி. காலம் உறைந்துவிட்டது போலிருக்கிறது.

படுக்கையில் கிடந்தபடியே ஒப்லோமோவ் தனக்கு வந்த கடிதம் பற்றிக் கேட்கிறார். அதைப் படிக்கக் கூட அவர் எழுந்து உட்காருவதில்லை. அவரது பண்ணையில் அந்த வருடம் விளைச்சல் குறைவாக உள்ளது. நிதி நிலைமை மோசமடைந்து வருவதாகவும், சில முக்கிய முடிவுகளை எடுக்க அவர் நேரில் வருகை தர வேண்டும் என்றும் மேலாளர் எழுதியிருக்கிறார்.

அது ஒப்லோமோவிற்குக் கவலை அளிக்கிறது. நேரடியாகப் பண்ணைக்குச் சென்று விசாரித்து வர வேண்டும் என நினைக்கிறார் ஆனால் சோம்பேறித்தனம் வெளியே போவதைத் தடுக்கிறது

கசாப்புக் கடைக்காரன், காய்கறிக் கடைக்காரன், சலவைத் தொழிலாளி, பேக்கரி ஆகியோரால் அனுப்பப்பட்ட கணக்குகளைப் பார்த்துப் பணம் கொடுக்க வேண்டும். அது எரிச்சலை உருவாக்குகிறது.

சிறுவயதிலிருந்தே ஒப்லோமோவ் அப்படித்தான் வளர்க்கபட்டிருக்கிறார். வசதியான வீட்டுச்சூழல் அவரை முழுச் சோம்பேறியாக மாற்றியுள்ளது.

இப்படியே படுக்கையில் கிடந்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று ஜாகர் கேட்கிறான். தானும் மற்றவர்களும் ஒன்றில்லை எனக் கோவித்துக் கொள்ளும் ஒப்லோமோவ் அந்தக் கவலையில் மீண்டும் உறங்க ஆரம்பிக்கிறார்.

அரைமணி நேரத்தின் பின்பு அவரை எழுப்புகிறான் ஜாகர். ஆனால் எழுந்து கொள்ள மறுத்து அடம்பிடிக்கிறார் ஒப்லோமோவ்.

அவர் எப்போதும் படுக்கையில் தான் சாப்பிடுகிறார். படுக்கையில் கிடந்தபடியே தன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார். திடீரெனத் தனது குறைகளைப் பற்றி உணரும் அவர் அதை மாற்ற உடனே எழுந்து செயல்பட வேண்டும் என்றும் நினைக்கிறார். ஆனால் உடல் ஒய்வையே நாடுகிறது.

அவரைச் சுறுசுறுப்பாக வைக்கும் முயற்சியில் நண்பரான ஆண்ட்ரி இவனோவிச் ஸ்டோல்ட்ஸ் இறங்குகிறார். ஒப்லோமோவ் எழுந்து குளித்துப் புதிய உடை அணிந்து கொண்டு வெளியே செல்ல வேண்டும் என்று கட்டாயப்படுத்தித் தயார் படுத்துகிறார். வழக்கமாகத் தரப்படும் உணவிற்கு மாற்றாக எளிய காய்கறி மற்றும் பழத்துண்டுகளை உணவாகத் தருகிறார்

ஸ்டோல்ட்ஸின் தோழியான ஓல்கா என்ற இளம் பெண் ஒப்லோமோவிற்கு அறிமுகமாகிறாள். அவளது அழகில் மயங்குகிறார். ஸ்டோல்ட்ஸ் வணிகத்திற்காகப் பல்வேறு நாடுகளுக்குத் தொடர்ந்து பயணம் செய்கிறார். இந்நிலையில் ஓல்காவின் அருகிலே இருப்பதற்காக ஒப்லோமோவ் புதிய வீடு எடுத்துக்கொள்கிறார் அவளைக் காதலிக்கவும் துவங்குகிறார்.

அவளால் மாற்றத்திற்கு உள்ளாகிறார். ஆனால் மற்றவர்களைப் போல உலகியல் விஷயங்களில் அவரால் தீவிரமாக ஈடுபட முடியவில்லை. அவர் தன்னைச் சுற்றிய மனிதர்களிடமிருந்தும் சமூகத்திடமிருந்தும் விலகி இருக்கவே ஆசைப்படுகிறார். சிறிய பிரச்சனை என்றாலும் மனவருத்தம் கொண்டுவிடுகிறார், செயலற்ற தன்மை மற்றும் பயத்தின் அடையாளமாக விளங்கும் ஒப்லோமோவ் ஆமை தனது ஒட்டிற்குள் வாழ்வது போன்ற ஒரு வாழ்க்கையை விரும்புகிறார்.

ஒரே இடத்தில் நிலை கொண்டுவிட்ட தேரை ஒட வைப்பது போல அவரிடம் மாற்றத்தை ஏற்படுத்துகிறாள் ஓல்கா. ஆனால் அவரோடு சேர்ந்து வாழ முடியாது என உணர்ந்து திருமணம் செய்து கொள்ளவில்லை.

வாழ்வில் புதிய மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். ஆனால் மாற்றம் ஏற்படும் போது அதை ஏற்றுக் கொள்வதில்லை. புகார் சொல்கிறோம். தவிர்க்க முயலுகிறோம். நமக்குள் ஒரு ஒப்லோமோவ் எப்போதுமிருக்கிறார். அவர் உலகம் தன்னைக் கையைப் பிடித்து அழைத்துப் போய் வழிகாட்ட வேண்டும் என்று விரும்புகிறார். புதிய சூழலை, புதிய செயல்பாடுகளை மேற்கொள்ள முயன்று அதில் வெற்றிபெற முடியாமல் பழைய ஒப்லோமோவாகவே திரும்புகிறார்.

அவரது கவலைகள் அனைத்தும் ஒரு பெருமூச்சாக மாறியது அக்கறையின்மை தூக்கத்தில் கரைந்து போனது என்றே கான்சரோவ் குறிப்பிடுகிறார்.

கோன்சரோவ் மூன்று நாவல்கள் எழுதியிருக்கிறார். அவரது சொந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பு கொண்டதாகவே அந்த நாவல்கள் இருந்தன.

ஒப்லோமோவ் போன்றே பெலிகோவ் என்ற கதாபாத்திரத்தை ஆன்டன் செகாவ் எழுதியிருக்கிறார். அவரும் இப்படி வீட்டின் ஜன்னலை மூடிக் கொண்டு உள்ளே வாழும் ஒருவரே.

படத்தில் வேலைக்கார ஜாகர் சிறப்பாக நடித்துள்ளார். அவரும் ஒப்லமோவ் போன்ற சோம்பேறியே. ஆனால் தனது எஜமானன் மீது அதிக அன்பு கொண்டவர். இந்த இருவருமே செர்வாண்டஸின் டான் குவிக்ஸாட் சான்சோ பான்சாவை நினைவுபடுத்துகிறார்கள்.

ரஷ்யாவின் அன்றைய எழுத்தாளர்கள் உறுதியற்ற ஒப்லோமோவை ஒரு ரஷ்ய ஹாம்லெட்டாகக் கண்டனர் என்று குறிப்பிடுகிறார் லியோ டால்ஸ்டாய். அவருக்குப் பிடித்தமான நாவலது.

நான் வாழும் வாழ்க்கையை ஒருபோதும் புரிந்து கொள்ளவில்லை அல்லது அது எனக்கு ஒருபோதும் பொருந்தவில்லை என்று நாவலின் ஒரு இடத்தில் ஒப்லோமோவ் சொல்கிறார். அந்த வரியே அவரது வாக்குமூலம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 12, 2024 06:19

எகிப்தில்

எனது தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகள் அரபு மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

எகிப்தில் உள்ள பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 12, 2024 03:45

திருச்சியில்

நாளை திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளியில் நடைபெறும் கனவுமெய்ப்பட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 12, 2024 03:33

July 10, 2024

காஃப்கா பரிசுப்பொருட்கள்

நண்பர் ஆம்பூர் அசோகன் சமீபத்தில் பிராக் நகருக்குச் சென்றிருந்தார்.

காஃப்கா நூற்றாண்டுக் கொண்டாட்டங்களை நேரில் கண்டு மகிழ்ந்திருக்கிறார். காஃப்கா அருங்காட்சியம் மற்றும் நகரிலுள்ள காஃப்காவின் சுழலும் தலை, புத்தகக் கடைகள், நூலகம் குறித்து வியந்து புகைப்படங்களை அனுப்பி வைத்திருந்தார்

அங்கிருந்து எனக்காக சில பரிசுப்பொருட்களை வாங்கி வந்திருக்கிறார். இன்று அவற்றை அனுப்பி வைத்திருந்தார். அவருக்கு எனது அன்பும் நன்றியும்.

புதுடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பயின்ற அசோகன் தேர்ந்த இலக்கிய வாசகர். சர்வதேச இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 10, 2024 23:17

எலியின் பாஸ்வேர்ட்/ ஆங்கிலத்தில்

எனது எலியின் பாஸ்வேர்ட் சிறார் நூலை மேகலா உதயசங்கர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

இந்த நூல் கோவை புத்தகத் திருவிழாவில் வெளியாகிறது. தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 10, 2024 05:04

July 8, 2024

இந்து தமிழ் நாளிதழில்

இந்து தமிழ் நாளிதழில் (07.07.24) மகாபாரத நிகழ்வை மையமாகக் கொண்டு நான் எழுதிய சிறுகதை குறித்து சுப்பிரமணி இரமேஷ் தனது தொன்மம் தொட்ட கதைகளில் எழுதியிருக்கிறார்.

ஆழ்ந்து வாசித்துச் சிறப்பாக எழுதியுள்ள சுப்பிரமணி இரமேஷிற்கு மனம் நிறைந்த நன்றி.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 08, 2024 23:37

கன்னடத்தில்

எனது இடக்கை நாவல் கன்னடத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது. ஜனவரியில் வெளியாக கூடும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 08, 2024 23:26

July 7, 2024

கவிதை பிறக்கிறது

கவிதை எழுத வேண்டும் என்ற ஆசை இல்லாதவர்களே கிடையாது. ஆனால் எல்லோரும் கவிதை எழுதிவிடுவதில்லை.

ஒரு சிலர் ரகசியமாக டயரியில் கவிதை எழுதி வைத்துக் கொள்கிறார்கள். வேறு சிலர் மனதிலே கவிதை எழுதி அழித்துவிடுகிறார்கள். பறக்க ஆசைப்படுவதும் கவிதை எழுத ஆசைப்படுவதும் இயல்பான ஒன்றும் தான். எந்த வயதிலும் ஒருவர் கவிதை எழுதத் துவங்கலாம். சிறந்த கவிஞராக வெளிப்படலாம்.

சாங்-டாங் லீ இயக்கிய Poetry என்ற கொரியப்படத்தில் யாங் மி-ஜா என்ற 66 வயதான பெண் கவிதை எழுத விரும்புகிறார். இதற்காகக் கவிதைப் பள்ளி ஒன்றில் சேருகிறாள்

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட வசதியான முதியவரைப் பராமரித்து வரும் மிஜாவிற்குத் திடீரென ஒரு நாள் நினைவு இழப்பு ஏற்படுகிறது. இதற்காக மருத்துவரைக் காணச் செல்கிறாள். அவளுக்கு அல்சைமர் பாதிப்பு ஏற்பட்டுள்ளதைச் சொல்லும் மருத்துவர் தேவையான மருத்துவ ஆலோசனைகளைச் சொல்கிறார்.

தனது நினைவுகளைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பும் நிலையில் தான் யாங் மி-ஜா கவிதை வகுப்பில் இணைகிறாள்.

ஒரு மாதகாலப் பயிற்சி தரும் கவிதை பள்ளியது. அந்தப் பள்ளியில் கவிதை எழுத பயிற்சி அளிக்கும் ஆசிரியர் உங்களைச் சுற்றி நடக்கும் எதிலிருந்தும் கவிதை பிறக்கலாம். ஆகவே அவற்றை நுட்பமாகக் கவனியுங்கள் என்கிறார்.

யாங் மிஜா கையில் சிறிய குறிப்பேடு ஒன்றுடன் தன்னைச் சுற்றிய விஷயங்களைக் குறித்துக் கொள்ள ஆரம்பிக்கிறாள். பூக்களைப் பற்றிக் குறிப்பு எழுத ஆரம்பிக்கிறாள். திடீரென உலகம் புதிதாக மாறுகிறது. தரையில் விழுந்த பாதாம் பழங்களிலும் உருண்டோடும் ஆப்பிளிலும் எளிமையின் அழகைக் காண்கிறாள்

படத்தில் இடம்பெற்றுள்ள கவிதை குறித்த வகுப்பறைக் காட்சிகள் மிக அழகானவை. அவை கவிதையின் அடிப்படை இயல்புகளை விவரிக்கின்றன.

படத்தின் துவக்கக் காட்சியில் நதிக்கரையொன்றில் சிறார்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். தண்ணீரில் சீருடை அணிந்த ஆக்னஸ் என்ற மாணவியின் உடல் மிதந்து செல்கிறது. அந்த மாணவியின் மரணத்தைச் சுற்றியே கதை பின்னப்பட்டிருக்கிறது

யாங் மி ஜாவின் மகள் நகரில் கணவனைப் பிரிந்து வாழும் தனியே வாழுகிறாள். பேரன் ஜாங்-வூக்கை தன்னோடு வைத்துக் கொண்டு வளர்த்து வருகிறாள் மி ஜா. பேரன் ஜாங் வூக் பாட்டி சொல்வதைக் கேட்பதேயில்லை. அவள் தரும் உணவை விருப்பமில்லாமல் சாப்பிடுகிறான். எப்போதும் கதவைப் பூட்டிக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறான். பாட்டியால் அவனைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஜாங் வூக் பள்ளியில் பயின்ற மாணவி தான் இறந்து போனவள். அவளைப் பள்ளிச் சிறுவர்கள் ஒன்றுசேர்ந்து கூட்டு வன்புணர்வு செய்திருக்கிறார்கள் எனக் கேள்விப்படும் பாட்டி பேரனிடம் இதைப்பற்றி விசாரிக்கிறாள்

ஜாங்-வூக் அதைப்பற்றித் தனக்குத் தெரியாது என்று பொய் சொல்லுகிறான்.

இறந்து போன மாணவிக்காக நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில் பாட்டி கலந்து கொள்கிறாள். இதற்கிடையில் பேரனின் பள்ளியிலிருந்து அவளை நேரில் வரும்படி அழைக்கிறார்கள்.

அங்கே ஐந்து மாணவர்களின் பெற்றோர்கள் ஒன்று கூடியிருக்கிறார்கள். ஆக்னஸை கூட்டு வன்புணர்வு செய்தவர்களில் தனது பேரனும் ஒருவன் என அறிந்து மிஜா அதிர்ந்து போகிறாள். ஆக்னஸின் அம்மாவைப் பேசிச் சரிக்கட்டி பணம் கொடுத்துப் போலீஸ் கேஸ் ஆகாமல் பார்த்துக் கொள்வது எனப் பள்ளி நிர்வாகம் முடிவு செய்கிறது

இதை யாங் மி ஜா ஏற்க மறுக்கிறாள். ஆனால் மற்ற பெற்றோர்கள் தனது பிள்ளையின் தவற்றை மறைத்து. பணம் கொடுத்து வாயை அடைத்துவிடலாம் என்று எளிதாக நினைக்கிறார்கள்.

இறந்து போன ஆக்னஸின் அம்மாவைச் சந்தித்து அவளைச் சமாதானப்படுத்தி பணம் பெற்றுக் கொள்ள வைக்க யாங் மி ஜா செல்ல வேண்டும் என்கிறார்கள்.

கட்டாயத்தின் பெயரில் அவள் ஆக்னஸின் அம்மாவைக் காணச் செல்கிறாள்

அது படத்தின் மிக அழகான காட்சிகளில் ஒன்று. ஆக்னஸின் அம்மா வயலில் வேலை செய்வதைக் காண்கிறாள், அங்குள்ள பூக்கள், மரங்கள் மற்றும் பழங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறது என்பதைப் பற்றிப் பாட்டி பேசத் தொடங்குகிறாள். தான் வந்த நோக்கத்தைத் தெரிவிப்பதில்லை.

தனது பேரனைக் காப்பாற்ற நிறையப் பணம் வேண்டும் என்பதற்காக மி ஜா தான் வேலையும் வீட்டிலுள்ள பக்கவாதம் வந்த கிழவரின் ஆசையை நிறைவேற்றுகிறாள். ஆக்னஸுக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றிய உண்மையை அவள் அறிந்து கொள்வது போலவே அந்தக் காட்சி இடம்பெறுகிறது.

பணம் போதாது என்ற நிலையில் கிழவரை மிரட்டிப் பணம் பெறுகிறாள். இவ்வளவு செய்தும் அவளால் பேரனைக் காப்பாற்ற முடியவில்லை.

தனது சொல்ல முடியாத தவிப்பை, துயரை, வலியை அவள் கவிதையாக எழுதுகிறாள். அதை அவள் பயிலும் பள்ளியின் வகுப்பில் வாசிக்கிறார்கள்.

ஒருவர் ஏன் கவிதை எழுத விரும்புகிறார். எதைக் கவிதையாக எழுதுகிறார் என்பதற்கான சிறந்த அடையாளமாக அந்தக் கவிதை இடம் பெறுகிறது

மி-ஜாவின் குரலில் தொடங்கும் கவிதை, ஆக்னஸின் குரலில் இணைவது வியப்பளிக்கிறது. உண்மையில் அவர்கள் பேசிக் கொள்வது போன்றே கவிதை எழுதப்பட்டிருக்கிறது. இறந்தவளிடம் பாட்டி அவளது செயலை, வலிகளைப் புரிந்து கொண்டதாகத் தெரிவிக்கிறாள். செய்யத் துணியாத வாக்குமூலமாகவே கவிதை வெளிப்படுகிறது

கவிதை என்பது ஒருவகை வாக்குமூலம். உண்மையின் குரல் ஒரு விடுதலை உணர்வு. துயரத்தின் வடிகால்.. மனதிலிருந்து எழும் வானவில் தான் கவிதை. இதை யாங் மி-ஜா உணர்ந்து கொள்கிறாள்.

கவிதை வகுப்பில் இரட்டை அர்த்தம் தரும் கவிதைகளை வாசிக்கும் காவலர் தான் முடிவில் அவளது பேரனைக் கைது செய்ய வருகிறார். வீட்டின் வாசலில் போலீஸ் வந்து நின்று விசாரிப்பது, பேரனை விசாரணைக்காக அழைத்துச் செல்வது என அந்தக் காட்சி மிக இயல்பாக, நிஜமாகப் படமாக்கப்பட்டுள்ளது

குற்றவுலகையும் அதன் மறுபக்கமாகக் குற்றவாளியைக் காப்பாற்ற விரும்பும் பாட்டியின் குற்றவுணர்வையும் பற்றிய இந்தப் படத்தில் கவிதை சேர்ந்தவுடன் படம் புதியதாகிவிடுகிறது.

கவிதை எழுதுவதற்காகத் தன்னைச் சுற்றிய பொருட்களை. இயற்கையை ஆழ்ந்து அவதானிக்கத் துவங்கிய . யாங் மி-ஜா மெல்லத் தனது உறவுகளை, தன்னைச் சுற்றிய மனிதர்களை, அவர்களின் போலித்தனங்களை, குரூரங்களை அடையாளம் கண்டு கொள்கிறாள். கிடைத்த சந்தர்ப்பத்தைப் பக்கவாதம் வந்த கிழவர் பயன்படுத்திக் கொள்கிறார். தப்ப முடியும் சந்தர்ப்பத்தைப் பெற்றோர்கள் பயன்படுத்த நினைக்கிறார்கள். ஏமாற்ற முடியும் என்ற சந்தர்ப்பத்தை யாங் மிஜாவும் பயன்படுத்துகிறாள்.

ஆனால் நெருக்கடியான. மோசமான சூழ்நிலைகளில் நேர்மறையான விஷயங்களைக் கண்டறியவும் சரியான முடிவு எடுக்கவும் கவிதையே அவளுக்கு வழி காட்டுகிறது. அவளது மனசாட்சியின் வெளிப்பாடாகவே அந்தக் கவிதை எழுதப்பட்டிருக்கிறது.

யுன் ஜியோங்-ஹை பாட்டி யாங் மிஜாவாகச் சிறப்பாக நடித்துள்ளார். நேர்த்தியான ஒளிப்பதிவு. கவித்துவமான தருணங்கள் எனப் படம் சிறந்த கலை அனுபவத்தைத் தருகிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 07, 2024 04:11

July 4, 2024

மற்றொருவன்

புதிய குறுங்கதை.

அவன் கிரிகோர் சாம்சாவைப் போலவே சேல்ஸ்மேனாக அதே நிறுவனத்தில் வேலை செய்தான்.

அவர்களது நிறுவனம் துணிவிற்பனை செய்யக்கூடியது. அவனைப் போன்ற சேல்ஸ்மேன்களின் வேலை வாடிக்கையாளர்களுக்குக் காட்டுவதற்கான துணி சாம்பிள்களுடன் ஊர் ஊராகச் சுற்ற வேண்டியது.

அவர்களின் முதலாளி கருணையற்றவர். ஊழியர்களின் குரலை காது கொடுத்துக் கேட்காதவர். நிறுவன மேலாளரும் கண்டிப்பானவர்.  மாதச் சம்பளம் என்ற கடிவாளம் அவர்களை எதையும் பற்றி யோசிக்கவிடாமல் செய்திருந்தது.

கிரிகோர் சாம்சா சில நாட்களாக அலுவலகம் வரவில்லை. நிறுவன ஊழியர்கள் அவனைப் பற்றி தங்களுக்குள் ஏதோ  பேசிக் கொண்டார்கள். என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதில் அவன் ஆர்வம் காட்டவில்லை. விற்பனையை அதிகரித்தல் தொடர்பான கூட்டத்தில் ஒன்றிரண்டு முறை கிரிகோருடன் பேசியதைத் தவிர வேறு பழக்கமில்லை.

அவன் கேட்காமலே ஸ்டோர் நிர்வாகியாக இருந்த பெண் அவனிடம் சொன்னாள்

“கிரிகோர் சாம்சா கரப்பான் பூச்சியாக மாறிவிட்டானாம்“

அதைச் சொன்னவிதத்தில் பயமும் கேலியும் கலந்திருந்தது. அப்படியா என இயல்பாக அவன் கேட்டவிதம் அவளுக்கு ஏமாற்றம் அளித்திருக்ககூடும்.

அவள் மறுபடியும் “கரப்பான்பூச்சியாக“ என்று அழுத்தமாகச் சொன்னாள்

அந்தச் செய்தி அவனுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை. சேல்ஸ்மேனாக வேலை செய்கிறவர்கள் நிச்சயம் ஒரு நாள் கரப்பான்பூச்சியாக மாறிவிடுவார்கள் தான். இதில் என்ன ஆச்சரியமிருக்கிறது. அதுவும் கிரிகோர் சாம்சா போல எவருடனும் பேசிப்பழகாத, சதா யோசனையுடன், குழப்பத்துடன் இருப்பவர்கள் பூச்சியாக மாறியதில் வியப்பு எதுவுமில்லை.

இடைவிடாத பயணம், குறித்த நேரத்தில் ரயிலைப் பிடிக்க வேண்டிய கவலை, மோசமான மற்றும் ஒழுங்கற்ற உணவு, வெவ்வேறு நபர்களைச் சந்தித்துப் பொய்யாகச் சிரித்துப் பேசியாக வேண்டிய கட்டாயம் என சேல்ஸ்மேன்களின் வாழ்க்கை நெருக்கடிகளால் நிரம்பியது. மணல் கடிகாரத்தில் மேலிருந்து விழும் மணல் துகளைப் போலத் தன்விருப்பம் இல்லாமலே அவர்கள் வீழ்ந்து கொண்டிருந்தார்கள்.

கிரிகோர் சாம்சா செய்ய வேண்டிய விற்பனை பணிகள் அப்படியே இருந்தன. அவனது விடுப்பை எப்படிக் குறித்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. . மருத்துவ விடுப்பு என்றால் கூடக் கடிதம் தர வேண்டும். மருத்துவரின் பரிந்துரை அளிக்கபட வேண்டும். திடீரென கரப்பான்பூச்சியாக மாறிவிட்டேன் என்பதை எந்த அலுவலகமும் மருத்துவக் காரணமாக ஏற்றுக் கொள்ளாது தானே.

கடந்த ஐந்து வருடத்தில் கிரிகோர் சாம்சா ஒருமுறை கூட நோயுறவில்லை. பொய்யாகக் கூட மருத்துவ விடுப்பு எடுக்கவில்லை.  ஆனால் சலிப்புற்றிருந்தான். மோசமாக சலிப்புற்றிருந்தான்.  சலிப்பை நோய் என்று சொல்ல முடியுமா. சலிப்பு முற்றும் போது ஒருவன் நிலைகுலைந்து விடுகிறான். கண்ணாடி டம்ளர் மீது அமரும் ஈயால் அந்த டம்ளரைத் தூக்கிக் கொண்டு பறக்க முடியுமா என்ன.

கிரிகோர் சாம்சா வீட்டிற்கு நேரில் சென்று பார்த்து வந்த தலைமை எழுத்தர்  “கிரிகோர் அறையைப் பூட்டிக் கொண்டு உள்ளிருந்தே பதில் தருகிறான், அவனது குரல் மாறிவிட்டது, அவன் நம்மை ஏமாற்றுகிறான் “. என்றே  சொல்லியிருந்தார்

பனிக்காலத்தில் ஒருவன் உருமாறிவிடுவது இயல்பு தான். மந்தமான வானிலை மனிதர்கள் மீது சுமையாக படிந்துவிடுகிறது. உருமாறிய சாலைகள். உருமாறிய மரங்கள். நோயுற்ற சூரியன். நினைவுகளை கிளரும் இரவுகள்.   கடிகாரத்தால் துரத்தப்படும் மனிதனால் ஒரு போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.

பூச்சியாக மாறியதற்குப் பதிலாகக் கிரிகோர் சாம்சா ஒரு பறவையாகவோ, குதிரையாகவோ மாறியிருக்கலாம். ஆனால் சமையலறைக்குள் ஒளிந்து திரியும்  கரப்பான்பூச்சியாக ஏன் மாறினான். உலகை விட வீடு பாதுகாப்பானது என்பதால் தானா.

உலகின் கடைசி உயிரினம் கரப்பான்பூச்சி என்கிறார்களே. அது நிஜமா. ஒரு காலத்தில் பூமியை ஆண்ட டைனோசர்கள் தான் கரப்பான்பூச்சியாக உருமாற்றம் கொண்டுவிட்டதாக சொல்கிறார்களே. அப்படியும் இருக்குமா.

தேவதைகதைகளில் இப்படி இளவரசன் தவளையாக மாறிவிடுவதைப் பற்றிப் படித்திருக்கிறான். அதற்குக் காரணம் சாபம் . ஆனால் இந்த நகர வாழ்க்கையில் சாபம் என்பது நம்பக் கூடியதா.

பரபரப்பான சிக்னலில் காத்திருக்கும் கார்களின் குறுக்கே கடந்து செல்லும் போது நாம் கரப்பான்பூச்சி போல தானே உணருகிறோம். ரயிலைத் தவறவிட்டு காத்திருக்கும் போது கரப்பான்பூச்சியாக தானே மாறிவிடுகிறோம்.

ஒருவன் கரப்பான்பூச்சியாகிவிடும் போது உலகம் மாறிவிடுவதில்லை. அவன் மட்டுமே மாறிவிடுகிறான். உலகம் மனிதனை ஒருவிதமாகவும் கரப்பான்பூச்சியை இன்னொரு விதமாகவும் துரத்தக் கூடியது தானே,

இப்போது அவன் வெறும் கரப்பான்பூச்சியில்லை. கிரிகோர் சாம்சா என்ற பெயருள்ள கரப்பான்பூச்சி. சொந்த வீடு உள்ள கரப்பான்பூச்சி. எல்லாவற்றையும் விட படித்த சிந்திக்கிற சம்பாதிக்கிற கரப்பான்பூச்சி.

ஏன் கிரிகோர் சாம்சா பற்றி இவ்வளவு யோசிக்கிறோம் என்று அவனுக்கே புரியவில்லை.

அலுவலக ஊழியர்கள் கிரிகோர் சாம்சாவின் வீட்டிற்குப் போய் நலம் விசாரித்து வரப்போகிறார்களா எனத் தெரியவில்லை. உடல் நலமற்றவர்களை விசாரிக்கச் செல்வது போல உருமாற்றம் அடைந்தவனையும் தேடிச் சென்று பார்க்க வேண்டுமா என்ன.

கிரிகோர் சாம்சாவின் வீடு எங்கேயிருக்கிறது என்று கூடத் தெரியாது. அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் எவரையும் அவன் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதில்லை. யாருடனும் நட்பாகப் பழகியதில்லை

உண்மையில் தனது விருப்பங்களை வீடும், உலகமும் புரிந்து கொள்ளாத போது, விரும்பாத விஷயங்களைச் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்தும் போது ஒருவன் உருமாற்றம் அடைகிறான்.

கிரிகோர் சாம்சா கரப்பான்பூச்சியாக மாறியது போல அலுவலகத்தில் யார் யார் என்னவாக மாறப் போகிறார்கள் என்று ஒரு ஊழியன் வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்தான். பூச்சிகளாக மாறினாலும் முதலாளியிடம் சம்பள உயர்விற்குப் போராட வேண்டியதே வரும் என்று மற்றொருவன் உரத்த குரலில் சொன்னான்.

ஒரு மனிதனை கால்பந்து போல உருட்டி மிதித்து விளையாடுவது மிகவும் ஆனந்தமானது என்பதாக அவர்கள் நடந்து கொண்டார்கள்.

நிறுவன ஊழியர்களின் கேலியும் வெறுப்பும் தான் கிரிகோர் சாம்சாவை தேடிப் போய் பார்க்க வேண்டும் என்ற அவனது விருப்பத்தை அதிகப்படுத்தியது. அலுவலக ரிஜிஸ்தரில் இருந்த சாம்சாவின் முகவரியை குறித்துக் கொண்டான்.

அன்று மாலை கிரிகோர் சாம்சா குடியிருக்கும் பகுதிக்கு சென்றான். அந்த வீதி சோபை இழந்து காணப்பட்டது. அங்கிருந்த மரங்கள் கூட அசைவற்றிருந்தன.

பழைய ரயில்வே அட்டவணை புத்தகத்தைச் சலிப்போடு புரட்டிக் கொண்டிருந்த சாம்சாவின் தந்தை “ அலுவலகத்தில் ஏதேனும் பிரச்சனையா“ என்று கேட்டார்

“ இல்லை. நானாகவே வந்தேன்“ என்றான்

“ அவனைப் பற்றி அலுவலகத்தில் என்ன பேசிக் கொள்கிறார்கள்“ என்று கேட்டார்

என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை.

“ சிறுவயதிலிருந்தே இப்படித்தான் நடந்து கொள்கிறான். நெருப்புக் கோழி தலையை மண்ணுக்குள் புதைத்து வைத்துக் கொள்வது போலத் தேவையற்ற கற்பனைக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டிருக்கிறான். குழப்பவாதி. “

கிரிகோர் சாம்சா மட்டும் தான் அப்படியிருக்கிறானா என்ன.

எல்லாத் தந்தைகளும் ஒன்று போலவே நினைக்கிறார்கள். பேசுகிறார்கள். நடந்து கொள்கிறார்கள்.

கிரிகோர் சாம்சாவின் சகோதரி அவன் வந்திருக்கும் தகவலைச் சொல்வதற்காக மூடப்பட்டிருந்த அறைக் கதவின் முன் நின்றாள்.  

கதவைத் தட்டுவதற்கு முன்பு உள்ளே ஏதேனும் ஓசை கேட்கிறதா எனக் கவனித்தாள்.

பின்பு மெதுவாகக் கதவைத் தட்டியபடியே “ உன்னைக் காண அலுவலகத்திலிருந்து ஒருவர் வந்திருக்கிறார்“  என்றாள். உள்ளேயிருந்து பதில் வரவில்லை.

மூடிய கதவைப் பார்த்தபடியே நின்றிருந்தான்.  கிரிகோர் சாம்சாவின் அம்மா அவனிடம் ஆதங்கமாகச் சொன்னாள்

“அந்த அறைக்குள் போகவிடாமல் என்னை தடுக்கிறார்கள். பூச்சியாக மாறியிருந்தாலும் நான் தானே அவனது அம்மா. “

மறுபடியும் கதவை தட்ட வேண்டுமா என்ற தயக்கத்துடன் சகோதரி நிற்பதை கண்ட அவன் சொன்னான்.

“ என்னை அவருக்குத் தெரியாது. நான் கிளம்புகிறேன்“

அவன் புறப்படும் போது சாம்சாவின் சகோதரி “ ஏதேனும் தகவல் தெரிவிக்க வேண்டுமா“ என்று கேட்டாள்

“ எனது வாழ்த்துகளைத் தெரிவியுங்கள்“ என்றான்

எதற்காக வாழ்த்து எனப்புரியாதவள் போல குழப்பத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வெறுமனே வாழ்த்துச் சொன்னதற்குப் பதிலாக ஒரு மலர்க்கொத்து கொடுத்து  வாழ்த்து சொல்லியிருக்கலாம். கரப்பான்பூச்சிக்கு என்ன மலர் பிடிக்கும் என்று தெரியவில்லையே என யோசித்தபடியே அவன் வெளியே நடக்க ஆரம்பித்தான்.

•••

காஃப்கா நூற்றாண்டினை முன்னிட்டு அவரது புகழ்பெற்ற ‘The Metamorphosis’ சிறுகதையின் மாற்றுவடிவத்தை எழுத முயற்சித்தேன். கிரிகோர் சாம்சாவின் நிறுவனத்தில் வேலை செய்த இன்னொரு சேல்ஸ்மேன் பார்வையில் அதே நிகழ்வைக் இக்கதை விவரிக்கிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 04, 2024 03:33

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.