S. Ramakrishnan's Blog, page 32

May 15, 2024

அகமெம்னானின் கனவு

கிரேக்கப் பழங்கால நூல்களை இன்றைய இலக்கியத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அவை எவ்வளவு விரிவான புனைவுப்பரப்பில் இயங்கி, ஆழமான உணர்வுகளை, புரிதல்களை ஏற்படுத்தியிருக்கின்றன என்று புரிகிறது.

மனிதர்களுக்குள் நடக்கும் மோதலை மட்டும் கிரேக்கக் கதையுலகம் விவரிக்கவில்லை. மாறாக மனிதனுக்கும் கடவுளுக்குமான மோதலை. கடவுளின் பழிவாங்குதலைப் பற்றிப் பேசுகிறது. பூமியைப் போலவே வானமும் அங்கே முக்கியக் கதைக்களமாக விளங்குகின்றன.

ஒரு கதாபாத்திரத்தின் விதியை வானிலிருக்கும் ஒரு கடவுள் முடிவு செய்கிறார். மனிதர்கள் கடவுளின் கைகளில் பகடைக்காய்களாக உருளுகிறார்கள். அதிகாரத்திற்கான போட்டி மற்றும் முடிவற்ற காதல் போட்டிகளைக் கிரேக்க இலக்கியங்கள் அளவிற்கு எவரும் பேசியதில்லை.

ஹோமரின் கதை செல்லும் வேகத்தை எந்த நவீன எழுத்தாளரிடம் நாம் காண இயலாது. இலியட்டில் நாம் காணுவது போர்க்களத்தை மட்டுமில்லை. போருக்குப் பிந்திய நிகழ்வுகளை, மரணச்சடங்குகளை, போர்களத்தில் பின்பற்ற வேண்டிய அறத்தை. ஹோமரின் மகத்தான கவித்துவம் போர்க்கள நிகழ்வுகளைப் பெரும் துயர நாடகமாக மாற்றுகிறது.

கிரேக்கக் கதையுலகில் பல்வேறு வியப்பூட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளன. அதில் ஒன்று கனவை உருவாக்குதல்.

ஒருமுறை மைசீனிய நாட்டின் அரசனும் கிரேக்கப் படையின் முதன்மைத் தளபதியுமான அகமெம்னான் கிரேக்க கடவுளான ஜீயஸை கோபம் கொள்ளச் செய்துவிட்டார்.

அவரைத் தண்டிக்க விரும்பிய ஜீயஸ் புதிய வழி ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அதாவது அகமெம்னான் தலைக்குள் ஒரு கனவைப் புகுத்திவிட்டால் அது தானே அவனை அழிவை நோக்கிக் கொண்டு சென்றுவிடும்.

அப்படியான ஒரு கனவை அகமெம்னான் தலையில் புகுத்துவதற்காகக் கனவுகளின் கடவுளான ஒனிரோஸை அனுப்பி வைக்கிறார் ஜீயஸ்.

அகமெம்னான் உறங்கிக் கொண்டிருக்கும் போது அவரது தலைக்குள் தண்ணீர் ஊற்றுவது போலக் கனவை ஊற்றுகிறார் ஒனிரோஸ். காலையில் விழித்தெழுந்த அகமெம்னான் தான் டிராய் நகரைத் தாக்கி டிரோஜன்களை அழிப்பது போலக் கனவு கண்டதாகச் சொல்கிறார். அந்தக் கனவு அவருக்குச் சந்தோஷம் அளிக்கிறது. அவர் ஆயிரம் கப்பல்களுடன் டிராய் மீது போர் தொடுக்கிறார். அந்தப் போர் பத்து ஆண்டுகளாக நீடிக்கிறது. முடிவில் அகமெம்னான் வெற்றி பெறுகிறார்.

ட்ரோஜன் போரில் வெற்றி பெற்ற பிறகு, அகமெம்னான் அழகியான கசாண்ட்ராவை தன்னுடன் அழைத்துக் கொண்டு நாடு திரும்புகிறார். அகமெம்னன் தனது சொந்த மகள் இபிஜீனியாவைக் கொல்ல முயன்றதையும், கசாண்ட்ராவுடன் திரும்பி வந்ததையும் ஏற்க முடியாத அவனது மனைவி கிளைடெம்னெஸ்ட்ரா அவளது காதலன் ஐகிஸ்தோஸுடன் சேர்ந்து அகமெம்னானைக் கொன்றார் என்கிறது கிரேக்க இலக்கியம்.

பாரீஸ் ஹெலென் மீது கொண்ட காதல் மட்டும் டிராய் யுத்தத்திற்குக் காரணமில்லை. இப்படியொரு காரணமும் ஒளிந்திருக்கிறது.

ஒருவரது தலைக்குள் கனவை விதைக்கும் இந்த நிகழ்வினை இன்றைக்கு வாசிக்கும் போதும் வியப்பாகவேயிருக்கிறது. கடவுள் அனுப்பி வைக்கும் செய்தி தான் கனவு. நமது கனவுகளை யாரோ உருவாக்குகிறார்கள் என்கிறது கிரேக்க இலக்கியம்.

அகமெம்னான் தன்னை ஜீயஸ் பழிவாங்கிவிட்டதை கடைசிவரை உணரவேயில்லை. கிரேக்க இலக்கியங்களில் நீதிக்கான குரல் தொடர்ந்து ஒலித்தபடி இருக்கிறது. சுதந்திரம், நீதி, அறம். காதல் குறித்துக் கிரேக்க இலக்கியத்தில் பேசப்பட்ட விஷயங்கள் இன்றைய சமூக,அரசியல் பண்பாட்டுச் சூழலுக்கும் பொருந்தமாகவே இருக்கின்றன.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 15, 2024 01:24

May 12, 2024

அபாய வீரன்

ராஜ்

குழந்தைகளுக்கான கதைகளை விளையாட்டு வடிவத்தில் நீங்கள் வடிவமைத்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுடன் வாங்கி அதை என் குழந்தைகளுக்குக் கொடுத்தேன். கூடவே பகடையும். மகிழ்ச்சியுடன் அவர்கள் நண்பர்களுடன் விளையாடினார்கள். கூடவே என்னையும் சேர்த்துக் கொண்டார்கள்.

 நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் குழந்தையாகி போனதில் நான் அடைந்த பேரானந்தத்தை எப்படி விவரிப்பது எனத் தெரியவில்லை. அவர்கள் தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருக்கிறார்கள் நான்கைந்து நாட்களாகச் செல்போன் பற்றிய ஞாபகமே அவர்களுக்குப் பெரிதாக வரவில்லை. புத்தகத்தில் படித்து விளையாடிய அந்த விளையாட்டை வைத்துப் புதிதாக அவர்களாக ஒரு விளையாட்டை உருவாக்கிக் கொண்டும் விளையாடுகிறார்கள்.

குறிப்பாகத் தினமும் கதை சொல்ல வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். இதனால் நானும் ஏதாவது தேடிப் பிடித்துப் படிக்க வேண்டியது உள்ளது. முதல் முறை விளையாட்டில் என் மகள் தான் ஜெயித்தாள். அவள் தான் அபாய வீரி .

இது போன்ற கதைகளும் விளையாட்டும் இன்றைய தலைமுறை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தே ஆக வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோரின் தலையாயக் கடமையாகும்.

தங்களுக்கும் தங்களின் அபாய வீரன் குழந்தைகள் விளையாட்டு கதைக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 12, 2024 20:34

எஸ்.ராவிடம் கேளுங்கள் -5

தேசாந்திரி யூடியூப் சேனல் சார்பில் வெளியாகும் எஸ்.ராவிடம் கேளுங்கள் நிகழ்ச்சியின் ஐந்தாவது பகுதி வெளியாகியுள்ளது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 12, 2024 20:13

May 11, 2024

பார்ட்ல்பியின் மறுப்பு

ஹெர்மன் மெல்வில்லின் நெடுங்கதையான Bartleby, the Scrivener முப்பது பக்கங்கள் கொண்டது. 1853 இல் வெளியானது.

நியூயார்க் நகரின் வால் ஸ்ட்ரீட்டில் உள்ள சட்ட அலுவலகத்தில் கதை நடக்கிறது. கதை சொல்பவர் ஒரு வயதான வழக்கறிஞர். அவரது அலுவலகத்தில் பணியாற்றிய பார்ட்ல்பி என்பவனைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்.

சட்ட ஆவணங்கள்- ஒப்பந்தங்கள், குத்தகைகள், உயில்கள் மற்றும் பிற ஆவணங்களைக் கையால் நகலெடுக்கும் எழுத்தர்களே ஸ்க்ரிவெனர் எனப் படுகிறார்கள். அவர்களின் வேலை ஆவணங்களை நகலெடுத்து மூலத்துடன் ஒப்பிட்டு சரிபார்த்துத் தருவதாகும்.

கதையைச் சொல்லும் வழக்கறிஞர் ஆரம்பத்திலே தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொள்கிறார். அவரது அலுவலகத்தில் துருக்கி, நிப்பர்ஸ் மற்றும் ஜிஞ்சர் நட் என மூவர் வேலை செய்கிறார்கள். இது அவர்களின் உண்மைப் பெயர்களில்லை, பட்டப்பெயர்கள்.

இதில் துருக்கிக்கு வயது அறுபதுக்கு மேலிருக்கும். குள்ளமானவர். அவர் தினமும் காலை நேரத்தில் சுறுசுறுப்பாக வேலை செய்வார். மதியத்தின் பின்பு அவரது இயல்பு மாறிவிடும். எதையும் கவனமாகச் செய்ய மாட்டார். பேனாவை மைப் புட்டியில் நனைப்பதில் கவனக்குறைவாக இருப்பார். ஆவணங்களைக் கறைபடிய செய்துவிடுவார். தப்பும் தவறுமாகப் பிரதியெடுப்பார். மிகவும் களைத்து போய்விடுவதுடன் எரிச்சலாகவும் நடந்து கொள்வார்.

ஆகவே காலை நேரம் மட்டுமே இவருக்கு முக்கியப் பணிகள் வழங்கப்பட்டன. சனிக்கிழமை மதியம் மிக மோசமான நபராக மாறிவிடுவார். வயதாகிவிட்டது தான் இதற்கெல்லாம் காரணம் என்று துருக்கி சமாதானம் சொல்லுவார்.

நிப்பர்ஸ் இளைஞன். இருபத்தைந்து வயதிருக்கும். அவன் அஜீரணக் கோளாறால் அவதிப்பட்டவன். ஆகவே காலை அலுவலகம் வரும் போதே எரிச்சலும் பதற்றமும் கொண்டவனாக இருப்பான். வயிற்றுப்பிரச்சனையால் எந்த வேலையும் கவனமாகச் செய்ய முடியாது. தனது மேஜையைச் சரிசெய்வதிலே காலை நேரத்தைப் போக்கிவிடுவான்., மதியத்தின் பின்பு அவனது வயிற்றுப்பிரச்சனை சரியாகிவிடும். அப்புறம் சுறுசுறுப்பாக வேலை செய்வான். மகிழ்ச்சியாக நடந்து கொள்வான். ஆகவே முக்கியமான பணிகளை மதியம் அவனிடம் ஒப்படைப்பார்கள்.

அந்த அலுவலகத்தின் மூன்றாவது நபர் ஜிஞ்சர் நட், 12 வயதுச் சிறுவன். எடுபிடி வேலைகளுக்காக வைத்திருந்தார்கள். அருகிலுள்ள பேக்கரிக்குப் போய்த் தின்பண்டங்களை வாங்கி வருவது, துப்புரவுப் பணிகளைச் செய்வது அவனது வேலை.

இந்த அலுவலகத்திற்குப் புதிதாக வேலைக்கு வந்தவன் தான் பார்ட்ல்பி. வழக்கறிஞர் கொடுக்கும் பணியை மிகுந்த கவனத்துடன் சிறப்பாகச் செய்து தருகிறான். சில நாட்கள் நகலெடுப்பு பணியைப் பார்ட்ல்பி பகலிரவாக மேற்கொள்வதை வழக்கறிஞர் கண்டிருக்கிறார். மற்ற ஊழியர்கள் போல அவன் சாப்பிட கூட வெளியே செல்வதில்லை. பசியை மறந்து வேலை செய்து கொண்டிருப்பான். இதனால் அவன் மீது நன்மதிப்பு ஏற்படுகிறது.

ஒரு நாள் முக்கியமான ஆவணம் ஒன்றை அவசரமாக நகலெடுக்க வேண்டும் என்பதால் வழக்கறிஞர் பார்ட்ல்பியை அழைத்து அந்தப் பணியை மேற்கொள்ளச் சொல்கிறார்

என்னால் செய்ய முடியாது என்று பார்ட்ல்பி மறுத்துவிடுகிறான். அவர் அதை எதிர்பார்க்கவில்லை.

ஏன் முடியாது என்று காரணம் கேட்கிறார். அவன் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கிறான். ஆகவே அந்தப் பணியை வேறு ஒருவருக்குக் கொடுத்துவிடுகிறார்.

அடுத்த நாள் அவன் நகலெடுத்துக் கொடுத்த வேறு ஆவணத்தை மூவரும் இணைந்து சரிபார்க்கலாம் என்று வழக்கறிஞர் அவனை அழைக்கிறார். அவன் வர மறுக்கிறான். அப்படி ஒருவர் படிக்க மற்றவர் சரிபார்ப்பது அலுவலக நடைமுறை என்று வழக்கறிஞர் விளக்குகிறார். ஆனாலும் பார்ட்ல்பி என்னால் முடியாது என்று பதில் தருகிறான்.

இந்தப் பதில் வழக்கறிஞரை மட்டுமின்றி மற்ற நகலெடுப்பவர்களையும் எரிச்சல்படுத்துகிறது. அவனை வேலையை விட்டுத் தூக்கிவிடுங்கள் என்று வழக்கறிஞரிடம் சொல்கிறார்கள்.

அன்றிலிருந்து எந்த வேலையைச் செய்யச் சொன்னாலும் பார்ட்ல்பி இதைச் செய்ய நான் விரும்பவில்லை என்று மறுக்கிறான்.

இப்படி ஒருவனை எதற்காக வேலைக்கு வைத்துக் கொள்ள வேண்டும். வேலையை விட்டுத் துரத்திவிடலாம் என்று வழக்கறிஞர் முடிவு செய்கிறார்.

அந்த வாரம் ஞாயிற்றுகிழமை வழக்கறிஞர் தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு அவசர வேலை ஒன்றின் காரணமாக அலுவலகம் செல்கிறார். அலுவலகத்தில் பார்ட்ல்பி இருப்பதைக் காணுகிறார். விடுமுறை நாளில் அவன் என்ன செய்கிறான் என்று சந்தேகம் கொண்டு விசாரிக்கிறார். அவன் பதில் சொல்ல மறுக்கிறான். அத்தோடு எதுவும் நடக்காதவன் போல வெளியேறிப் போய்விடுகிறான்

அவன் அந்த அலுவலகத்தில் குடியிருக்கிறான் என்ற உண்மையை அப்போது தான் வழக்கறிஞர் உணருகிறார்.

இதை ஏன் தன்னிடம் சொல்லவில்லை. அவனுக்குக் குடும்பம் இல்லையா. என்று யோசிக்கும் வழக்கறிஞர் அவனது மேஜையைத் திறந்து பார்க்கிறார். அதில் அவனது சேமிப்புப் பணத்தைக் காணுகிறார். பார்ட்ல்பியை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை

மறுநாள் அவனிடம் எந்த ஊரைச் சேர்ந்தவன். அவனது குடும்பம் எங்கேயிருக்கிறது என விசாரிக்கிறார். தன்னைப் பற்றிய விபரங்கள் எதையும் பார்ட்ல்பி சொல்ல மறுக்கிறான். அத்தோடு வெளியே உள்ள செங்கல் சுவரை வெறித்துப் பார்த்தபடியே நிற்கிறான். அவனது மறுப்பு வழக்கறிஞரின் ஆத்திரத்தை அதிகப்படுத்துகிறது.

அவனுக்குத் தர வேண்டிய சம்பள பணத்தைக் கொடுத்து வேலையை விட்டு அனுப்ப உத்தரவிடுகிறார். பணத்தை வாங்க மறுப்பதோடு தன்னால் வெளியேற முடியாது என்று பார்ட்ல்பி சொல்கிறான். ஆத்திரமான வழக்கறிஞர் அவனுக்கு ஒரு நாள் அவகாசம் தருகிறார். அப்படியும் பார்ட்ல்பி வெளியேறிப் போகவில்லை,

உடல் பலத்தைப் பயன்படுத்தவோ அல்லது காவல்துறையை அழைப்பதற்கோ அவருக்குத் தயக்கம், ஆகவே தனது அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்கிறார்.

பார்ட்ல்பி பழைய அலுவலகத்தை விட்டுப் போக மறுக்கிறான். அந்த இடத்தின் புதிய உரிமையாளர் பார்ட்ல்பியை வழக்கறிஞரின் உறவினர் என்று நினைத்துக் கொண்டு அவரிடம் புகார் அளிக்கிறார்.

அவன் தனது உறவினர் இல்லை. தேவையான நடவடிக்கை எடுத்துத் துரத்திவிடுங்கள் என்கிறார் வழக்கறிஞர். காவல்துறை உதவியோடு அவனை வெளியேற்றுகிறார்கள். சிறையில் அடைக்கப்படுகிறான். அங்கும் பிடிவாதமாகச் சாப்பிட மறுத்து, எதைச் செய்யச் சொன்னாலும் தனக்கு விருப்பமில்லை என்கிறான். முடிவில் சிறைச்சாலையில் பட்டினி கிடந்து சுவரைப் பார்த்தபடி இறந்து விடுகிறான்.

பார்ட்ல்பியின் பிடிவாதமான மறுப்பை எப்படிப் புரிந்து கொள்வது என்று வழக்கறிஞருக்குத் தெரியவில்லை.

மற்றவர்களைப் போலப் பணம் சேர்ப்பதிலோ, இன்பங்களை அனுபவிப்பதிலோ பார்ட்ல்பி ஆர்வம் காட்டவில்லை. பங்குச்சந்தை உலகம் என்பது பேராசையும் தந்திரங்களும் கொண்டது. ஆனால் அந்த உலகிற்குள் தனது ஆன்மாவின் துயரால் எதையும் செய்ய விரும்பாதவனாகத் துறவி போலப் பார்ட்ல்பி நடந்து கொள்கிறான்.

பார்ட்ல்பி செங்கல் சுவரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பது தான் கதையின் மையப்படிமம். அந்தச் சுவர் அவனது மறுப்பின் அடையாளம். கதையின் முடிவில் வக்கீல் அதைப் புரிந்து கொள்கிறார்

பார்ட்ல்பி ஒளிபுக முடியாத பொருளைப் போலிருக்கிறான் அவனால் மற்றவர்களைப் போலச் சமரசங்களுடன் வாழ்க்கையைத் தொடர முடியவில்லை.

பார்ட்ல்பியின் மறுப்பைக் கதை முழுவதும் காணுகிறோம். ஆனால் அவன் என்ன விரும்புகிறான் என்று ஒருபோதும் வழக்கறிஞர் கேட்பதில்லை.

கதையின் முடிவில் பார்ட்ல்பி பற்றிய சிறிய குறிப்பு இடம்பெறுகிறது. அதில் பார்ட்ல்பி யார், தற்போதைய கதை சொல்பவருக்கு அறிமுகம் ஆவதற்கு முன்பு அவன் எப்படிப்பட்ட வாழ்க்கை நடத்தினான் என்று எதுவும் விளக்கப்படவில்லை.

பார்ட்ல்பி வாஷிங்டனில் உள்ள டெட் லெட்டர் அலுவலகத்தில் ஒரு துணை எழுத்தராக வேலை செய்தான், நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் திடீரென நீக்கப்பட்டான் என்ற குறிப்பு காணப்படுகிறது.

சரியான முகவரி இல்லாத மற்றும் இறந்தவர்களுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் மூலம் வாழ்க்கையின் அர்த்தமின்மையைப் பார்ட்ல்பி புரிந்து கொண்டிருக்கிறான் என்கிறார்கள் விமர்சகர்கள்.

ஆனால் ஒரு மனிதனின் மறுப்பிற்கான உண்மையான காரணத்தை எவராலும் கண்டறிய முடியாது. மனதின் சிக்கலான அடுக்குகளுக்குள் அந்த முடிவு புதையுண்டு போயிருக்கும்.

கதையில் வரும் அலுவலக ஊழியர்கள் அனைவரும் பார்ட்ல்பியை வெறுக்கிறார்கள். ஆனால் அவன் எவரையும் வெறுக்கவில்லை. பட்டினி கிடப்பதன் வழியே அவன் தன்னைதானே தண்டித்துக் கொள்கிறான்.

பார்டில்பி எந்த மாற்றத்தை விரும்பவில்லை.. அவனால் தனது அந்தரங்க உலகத்தை விட்டு வெளியே செல்லவும் , தன்னைப் பற்றிய பொதுப் பிம்பத்தை உருவாக்கவும் முடியாது. ஆகவே தனது மறுப்பை அழுத்தமாக வெளிப்படுத்துகிறான். மற்றவர்களின் அனுதாபத்தைப் பார்டில்பி ஏற்பதேயில்லை.

அவன் ஒரு பைத்தியம் என்று கதையின் ஒரு இடத்தில் ஜிஞ்சர் நட் சொல்கிறான். மற்றவர்களைப் போல நடந்து கொள்ளாதவர்களை உலகம் எப்போதும் பைத்தியம் என்றே அழைக்கிறது. புரிந்து கொள்கிறது.

மெல்வில்

கதையில் மெல்வில் பசி மற்றும் அஜீரணக்கோளாறு பற்றிக் குறிப்பிடுகிறார். நல்ல உடைகளை அணிந்து கொள்ள வேண்டும் என்ற வழக்கறிஞரின் விருப்பத்தைச் சுட்டிக்காட்டுகிறார். துருக்கிக்குச் சாப்பிடுவதில் ஆர்வம். நிப்பர்ஸ் வயிற்றுப்பிரச்சனை கொண்டவன். இவர்களை எளிதாகச் சமூகம் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் விரும்பிப் பட்டினிகிடப்பவனைத் தான் சமூகம் சந்தேகிக்கிறது. கைவிடுகிறது.

கதையில் வரும் துருக்கியைப் போல நாளின் பாதிநேரம் சுறுசுறுப்பாக வேலை செய்கிறவர்கள் இன்றுமிருக்கிறார்கள். அவர்கள் மதிய நேரத்தில் ஆறிப்போன டீயைப் போல மாறிவிடுகிறார்கள்.

பார்ட்ல்பி அலுவலக நடைமுறைகளை ஏற்க மறுக்கிறான். உத்தரவுகளை மறுக்கிறான். பின்பு ஏன் வேலை செய்கிறான். அந்த அலுவலகம் அவனது புகலிடம். சிலந்தியைப் போலச் சிறிய அலுவலகத்தின் மூலைக்குள் ஒடுங்கிக் கொண்டுவிடுகிறான். ஆனால் சிலந்தியை யார் விரும்புவார்கள்.

பார்ட்ல்பி மனநோயாளியா, இல்லை. அவன் மறுப்பை மிக நேர்மையாக வெளிப்படுத்துகிறான். அதுவும் முகத்திற்கு நேராக வெளிப்படுத்துகிறான். அந்தத் தைரியம் முக்கியமானது. அலுவலக உத்தரவை எத்தனை பேரால் மறுக்க முடியும். அதே நேரம் கூடுதலாகத் தரப்படும் பணத்தை வேண்டாம் என்று மறுத்துவிடுவதும் முக்கியமானது,

பார்ட்ல்பி ஒரு மனிதனின் கதை மட்டுமில்லை. அது ஒரு குறியீடு. அவனது பாதிப்பில் தான் காஃப்கா பட்டினிக்கலைஞன் கதையை எழுதியிருக்கிறார். பின்நவீனத்துவப் படைப்பாளிகள் பலரும் இந்தக் கதையை வியந்து பாராட்டுகிறார்கள். அந்த வகையில் Bartleby, the Scrivener என்பது நவீன அமெரிக்காவின் உருவகக் கதையாகும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 11, 2024 06:15

May 10, 2024

டான்டூனின் கேமிரா – வாசிப்பனுபவம்

ந. பிரியா சபாபதி, மதுரை.

டான்டூன் எனும் கறுப்பு எறும்பின் வாழ்க்கை வழியே ஆசிரியர் மனிதர்களின் ஒட்டு மொத்த வாழ்க்கையைக் கண் முன்னே கொண்டு வருகிறார் என்றால் அது மிகையாது.

டான்டூன் சிந்தையானது அறிஞர்களின் சிந்தையாகவே உள்ளது. பிற எறும்புகள் அனைத்தும் ஒன்று சேரும் பொழுது பெரும்பாலும் உணவுகளைப் பற்றியே இருக்கும். ஆனால் இதன் சிந்தையானது பரந்து பட்ட சிந்தையாகத்தான் இருக்கும். இந்தப் பரந்த பட்ட சிந்தனைதான் சீரிய செயலுக்கு வழி வகுக்கும் என்பதைக் கூறிச் செல்கிறார்.

மனிதர்களுக்கு உள்ள வசதிகளைப் போல் தங்களுக்கும் அனைத்து வசதி கிடைத்தால் அருமையாக இருக்கும் என எண்ணுகிறது. அதன் அம்மாவானது தங்கள் இனத்திற்குப் பலமிருப்பதால் மனிதர்களுக்குத் தேவையான வசதி போன்று தேவையில்லை எனக் கூறுகிறது.

மனிதர்களின் சோம்பேறித்தனத்தை ஆசிரியர் சுட்டும் பொழுது நாம் வாழும் முறையையும் , மாற்றிக் கொள்ள முறையையும் ஆசிரியர் தெளிவாகச் சுட்டுகிறார். அதில் மறுப்பதற்கும் மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

டான்டூனின் சாகசப் பயணம் சிறுமியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தொடங்குகிறது. டான்டூனின் தாய் தன் மகன் தன் கணவனைப் போல் உயிரை விட்டுவிடுவானோ என்று பயம் கொள்கிறது. அதன் முயற்சிக்குத் தடை விதிக்கிறது. ஆனாலும் தன் மன உறுதியுடன் எதிர்கொள்கிறது.

புகைப்படக் கலைஞனாக மாறுவதில் எறும்பு எதிர்கொள்ளும் இன்னல்களைக் கூறும் இடத்தில் அதன் குழந்தைத்தனமும் , முயற்சியும் அழகாகப் பரிணமிக்கிறது.

உழைப்பே உயர்வு தரும் என்பதை ஆசிரியர் டான்டூனின் ஒவ்வொரு முயற்சியிலும் மனிதர்களான நமக்கு உணர்த்துகிறார்.

ஆசிரியரின் பல சிறார் நாவல்களில் இயற்கையைப் போற்றும் விதமாகவும், அதனைப் பல மனிதர்கள் பாழ்படுத்தும் விதத்தினையும் , பாதுகாக்கும் விதத்தினையும் அறிவுறுத்திக் கொண்டே உள்ளார்.

டான்டூனும், ஸாகரும் உரையாடும் இடம் மனிதர்களின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது.

கரும்பாக்கம் கடற்கரை நகரம் போன்று அனைத்துக் கடற்கரை நகரமிருந்தால் கடற்கரை நகரங்கள் மனிதர்களிடமிருந்து காப்பாற்றப்படும். வருங்காலத்தில் இவையெல்லாம் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சமும் நமக்குள் ஏற்படுகிறது.

டான்டூன் லைமான் உதவியுடன் கடற்பந்தாட்ட்த்தில் தன் குழுவினருடன் சிவப்பு எறும்பு கூட்ட்த்தை வெல்கிறது. தன் தந்தை போன்று சிறந்த புகைப்படக் கலைஞராகவும் தன் செயலால் வெளிப்படுத்தியது.

தன் எதிரியைக் கடற்பந்தாட்ட்த்தில் காப்பாற்றுகிறது. இவ்விடத்தில் உதவி செய்தல் குணத்தின் சிறப்பினையும் உணர முடிகிறது.

எறும்புகளையும் அதன் வாழ்க்கையையும் மையப்படுத்திய கதையாக இருந்தாலும் ஒவ்வொன்றிலும் நம்பிக்கை, உண்மை, அன்பு, நேர்மை, நட்பு, பெரியோரை மதித்தல் என மனிதன் மனிதனாக வாழ்வதற்குரிய குணங்களைப் பெற்றுக் கொள்ள இயல்கிறது.

மனிதன் இயற்கையைப் பாழ்படுத்தினால் இயற்கையின் தாக்கம் எவ்விதமாக இருக்கும் என்பதையும் கதையின் வழியே கூறுகிறார்.

கேமிரா நினைவுகளைப் பதிவு செய்து நமக்கு அளிப்பது போல் இந்நாவலில் ஆழ்ந்த கருத்துகளை எளிய வாக்கியங்களின் வழி நம் கைகளுக்குக் கொடுத்துள்ளார் ஆசிரியர்.

சிறுவர்கள் மட்டும் அல்லாது பெரியோர்களும் வாசிக்க வேண்டிய சிறந்த நூல் ஆகும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 10, 2024 20:30

புஷ்கினைத் தேடுகிறார்கள்

உலகின் பல்வேறு நூலகங்களிலிருந்தும் புஷ்கினின் முதற்பதிப்புகள் திருடு போவதாகச் செய்தி படித்தேன். டார்ட்டு பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் சமீபமாக இந்தத் திருட்டு நடைபெற்றிருக்கிறது

அரிய நூல்களை இப்படித் திருடிச் சென்றுவிற்கும் கூட்டம் பெருகிவிட்டது என்றும், இந்த முதற்பதிப்புகளுக்கு இன்றைய சந்தையில் விலை பல கோடி ரூபாய் என்றும் சொல்கிறார்கள்.

புகழ்பெற்ற எழுத்தாளர்களின் முதற்பதிப்புகளைச் சேகரிக்கும் வசதி படைத்தவர்கள் அதற்காக எவ்வளவு பணமும் செலவிடத் தயாராக இருக்கிறார்கள்.

அரிய புத்தங்களைச் சேகரிக்கும் இந்தப் பிப்லியோஃபைல்களின் உலகம் விசித்திரமானது. இதைப்பற்றி ஜீன் கிளாடே கேரியர் விரிவாக எழுதியிருக்கிறார். அவரும் அரிய நூல்களைச் சேகரிப்பவர்.

ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு புத்தகம் உங்களிடம் இருக்கிறது என்றால் அதை வாங்குவதற்குப் பெரிய போட்டியே நடக்கும் என்கிறார்கள்.

அருங்காட்சியகத்தில் கலைப்பொருட்களைத் திருடிப் போகிறவர்கள் போல நூலகங்களிலிருந்து அரிய புத்தகங்களைத் திருடி விற்கும் கும்பல் அதிகரித்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் அரிய நூல்களின் மதிபபை பெருபான்மையினர் அறியவில்லை. அதைப் பழைய குப்பை என்று நினைத்து எரித்துவிடுகிறார்கள். இப்படித் தீயிலிட்டும், குப்பையில் எறிந்தும் போனது தமிழ் நூல்கள் ஏராளம்.

ரஷ்ய அரசர் பீட்டர் தி கிரேட் ஆப்ரிக்கா மீது படையெடுத்து அபிசீனிய அரசனைத் தோற்கடித்தார். தோற்ற மன்னரால் ரஷ்ய அரசிற்குப் பெருந்தொகை தர முடியவில்லை. ஆகவே அவரது மகன் ஹனிபாலை பணயக்கைதியாகக் கொண்டு சென்றார்.

ரஷ்யாவிற்கு வந்த ஹனிபால் கிறிஸ்துவச் சமயத்தை ஏற்றுக் கொண்டார். ரஷ்யப் பெண் ஒருத்தியை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்குப் பிறந்த மகள் ஓசீப் போவ்னா.

அவள் செர்ஜி ல்வோவிச் புஷ்கின் என்ற வசதியான ரஷ்ய பிரபுவை திருமணம் செய்து கொண்டாள். அவர்களது மகன் தான் புஷ்கின். ஆகவே புஷ்கின் தோற்றத்தில் கறுப்பின மக்களின் சாயல் இருக்கும்.

புஷ்கின் பள்ளிவயதிலே கவிதைகள் எழுதத் துவங்கினார். தனது 15வது வயதில் தனது முதல் கவிதையை வெளியிட்டார். 18வது வயதில் வெளியுறவுத்துறையில் குமாஸ்தாவாக வேலைக்குச் சேர்ந்தார்

பிரபுக்களின் நட்பு காரணமாக. புஷ்கின் விருந்து குடி நடனம் என உல்லாசமாக வாழ்க்கையை அனுபவித்தார்.

தனது 21 வயதில் ரஸலான் அண்ட் லுதுமியா என்ற காவியத்தை எழுதி சாதனை செய்தார் புஷ்கின். அவரது கேலிப்பேச்சும் நையாண்டியான எழுத்தும் ஜார் மன்னருக்கு எதிராக உள்ளதாகப் புகார் அளித்தார்கள். ஆகவே அவர் மிக்லோவ்ஸ்கியா என்ற அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கபட்டார். இந்தத் தண்டனைக் காலத்தில் புஷ்கின் நிறைய எழுதினார். படித்தார்.

நடால்யா

நடால்யா என்ற அழகியை காதலித்தார் புஷ்கின். அவளையே திருமணம் செய்து கொண்டார். அவளது அழகில் ஜார் மன்னர் கூட மயங்கிப் போனார் என்கிறார்கள். ஒருமுறை ஜார்ஜ் டி’அந்தேஸ் என்ற பிரெஞ்சு ராணுவ வீரனை தனது வீட்டில் நடந்த விருந்திற்கு அழைத்திருந்தார் புஷ்கின்.

அந்த விருந்தில் ஜார்ஜ் டி’அந்தேஸ் நடாலியாவின் அழகில் மயங்கி மனதைப் பறிகொடுத்தான். அதிலிருந்து அவள் செல்லும் இடங்களுக்கெல்லாம் சென்றான். திருமணமானவள் என்று அறிந்தும் தன்னைக் காதலிக்கும்படி வற்புறுத்தினான். அத்தோடு விருந்து ஒன்றில் புஷ்கினை கேலி செய்து அவமானப்படுத்தினான் இதனால். புஷ்கினின் கோபம் பெரிதாகவே பரோனின் வளர்ப்பு தந்தை தனது மகன் உறவுப் பெண் ஒருத்தியை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார்.

ஜார்ஜ் டி’அந்தேஸின் காதல்விவகாரம் முடிந்து போனதாகப் புஷ்கின் நினைத்தார். ஆனால் பரோன் பொது இடங்களில் நடாலியாவோடு நெருக்கமாகப் பேசி சிரிப்பதும் கைகோர்த்து நடனமாடுவதையும் கண்ட புஷ்கின் அவனை நேருக்கு நேராகச் சண்டையிட சவால் விடுத்தார்.

டூயல் எனப்படும் அந்தத் துப்பாக்கி சண்டையில் இருவரும் நேருக்கு நேராக நின்று சுட்டுக் கொள்வார்கள். இருவரில் ஒருவர் மட்டுமே உயிர்பிழைக்க முடியும். புஷ்கினின் இந்தச் சவாலை ஜார்ஜ் டி’அந்தேஸ் ஏற்றுக் கொண்டான்.

குறிபிட்ட நாளில் பொதுமனிதர் முன்பாக உறைபனியில் துப்பாக்கி சண்டை நடைபெற்றது அதில் ஜார்ஜ் டி’அந்தேஸை புஷ்கினைச் சுட்டுவிட்டான. அடிவயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்து. தரையில் வீழ்ந்த புஷ்கின் தானும் ஆன்தீவ்ஸைச் சுட்டார். அவனுக்கும் காயம் ஏற்பட்டது.

ரத்தப்பெருக்கில் மயங்கிய புஷ்கினை குதிரை வண்டியில் மருத்துவரிடம் கொண்டு சென்றார்கள். நடாலியாவிற்கு இந்தச் சவால் பற்றி எதுவும் தெரியாது. அவள் மரணப்படுக்கையில் இருந்த புஷ்கினை காண ஒடோடி வந்தாள். அவளது கௌரவத்தைக் காக்கவே தான் சண்டையிட்டதாகச் சொன்னார் புஷ்கின். மருத்துவர்கள் புஷ்கினைக் காப்பாற்ற போராடினார்கள். ஆனால் அதிகமான குருதி இழப்புக் காரணமாக அவர் உயிர் துறந்தார். அப்போது புஷ்கினின் வயது 37

காதலும் சாகசமும் கொண்ட புஷ்கின் ரஷ்யாவின் புகழ்பெற்ற கவிஞராகக் கொண்டாடப்படுகிறார். அவரது கவிதைகள் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியுள்ளன.

1881ல் வெளியான அவரது முதற்பதிப்புகளை வாங்குவதற்காகப் பெரும்போட்டியிருக்கிறது. அதன் காரணமாகவே இந்தத் திருட்டு நடைபெறுகிறது என்கிறார்கள். கலைப்பொருட்களை மீட்பதற்காக உருவாக்கபட்ட சிறப்புப் பிரெஞ்சு போலீஸ் பிரிவு புஷ்கின் நூல்களை மீட்பதற்காக “ஆபரேஷன் புஷ்கின்” என்ற விசாரணையைத் துவங்கியிருக்கிறார்கள். நான்கு புத்தகத் திருடர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் புத்தகங்களை கைமாறிப் போய்விட்டது. அதை கண்டறிந்து மீட்பது எளிதானதில்லை என்கிறது காவல் துறை.

நூலகங்களுக்கு அதிநவீன பாதுகாப்பு வசதிகள் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் இதனுடன் எழுந்திருக்கிறது. புத்தக உலகின் மறுபக்கம் விசித்திரமானது. அது எழுதப்பட்ட எந்த துப்பறியும் கதையினையும் விட மர்மமானது என்கிறார் விமர்சகர் ஜார்ஜ் பீட். அது உண்மையே,.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 10, 2024 07:03

May 7, 2024

எஸ்.ராவிடம் கேளுங்கள் -பகுதி 4

தேசாந்திரி யூடியூப் சேனல் சார்பாக வெளிவரும் எஸ்.ராவிடம் கேளுங்கள் பகுதி 4 வெளியாகியுள்ளது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 07, 2024 20:14

May 5, 2024

பிரிவின் மஞ்சள் நிறம்

ஆயில் பெயிண்டிங் அனிமேஷன் முறையில் உருவாக்கப்பட்ட திரைப்படம் THE PEASANTS. இந்தப் படத்திற்காக 40,000 கையால் வரையப்பட்ட எண்ணெய் ஓவியங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான வ்ளாடிஸ்லா ரெய்மாண்ட் (Władysław Reymont ) நாவலை மையமாகக் கொண்டு படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. படத்தின் இயக்குநர் ஹக் வெல்ச்மேன், ஓவிய மேற்பார்வையாளர் பிஸ்கெர்கா பெட்ரோவிச்.

ஓவியர் வின்சென்ட் வான்கோவின் வாழ்க்கையைப் பற்றிய Loving Vincent திரைப்படத்தை இயக்கியவர் ஹக் வெல்ச்மேன். அதைவிடவும் சிறப்பாக இப்படத்தினை உருவாக்கியுள்ளார்.

நடிகர்களைக் கொண்டு காட்சிகளை நேரடியாகப் படமாக்கப்பட்ட பின்பு அதே பிரேம்களைத் தனித்தனி ஓவியமாக வரைவதே ஆயில் பெயிண்டிங் அனிமேஷனாகும்.

ஒரு பிரேமினை வரைவதற்குக் குறைந்தது 5 மணி நேரமாகும்.

போலந்து, செர்பியா, லிதுவேனியா மற்றும் உக்ரைனில் உள்ள நான்கு அனிமேஷன் ஸ்டுடியோக்களில் ஏறக்குறைய 100 ஓவிய அனிமேட்டர்கள் இதில் பணியாற்றியிருக்கிறார்கள்.

கொரோனா மற்றும் உக்ரேன் போர் காரணமாக நிறையப் பிரச்சனைகளைச் சந்தித்திருக்கிறார்கள். ஆயினும் இடைவிடாத உழைப்பின் காரணமாகச் சிறந்த கலைப்படைப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.

படம் நான்கு பருவகாலங்களைக் கொண்டிருக்கிறது. அதற்கு ஏற்ற வண்ணங்கள். காட்சிக் கோணங்கள். உடைகள் மற்றும் இயற்கைக் காட்சிகள் மாறுகின்றன. போலந்தின் புகழ்பெற்ற நிலக்காட்சி ஓவியங்களை முன்மாதிரியாகக் கொண்டு படத்தின் காட்சிகளை வரைந்திருக்கிறார்கள். திரையில் புகழ்பெற்ற ஓவியங்கள் உயிர்பெற்று இயங்குவதைக் காணுவது பரவசமளிக்கிறது

போலந்து கிராமமான லிப்ஸில் கதை நிகழ்கிறது. ஜக்னா என்ற இளம்பெண் மீது இருவர் ஆசைப்படுகிறார்கள். ஆன்டெக் என்ற திருமணமான விவசாயியை ஜக்னா காதலிக்கிறாள். கிராமத்தின் பணக்கார விவசாயியான ஆன்டெக்கின் தந்தை போரினா அவளை அடைய விரும்புகிறார். இதற்காக ஜக்னாவிற்கு மூன்று ஏக்கர் நிலம் பரிசாக அளிப்பதாக அவளது அம்மாவிடம் வாக்குறுதி அளிக்கிறார்.

ஜக்னாவிற்கு விருப்பம் இல்லாத போதும் அம்மாவின் கட்டாயத்தால் திருமணம் நடைபெறுகிறது.

இதனை விரும்பாத ஆன்டெக் தந்தையோடு சண்டையிடுகிறான். அவனை வீட்டைவிட்டுத் துரத்திவிடுகிறார் தந்தை.

திருமணத்திற்குப் பிறகும் ஆன்டெக் மீதான காதலை ஜக்னா தொடருகிறாள். போரினா இதனைக் கண்டிக்கிறார். ஆயினும் ரகசியமாக அவர்களின் உறவு தொடருகிறது.

இந்த நிலையில் மரம்வெட்டுவதில் ஏற்படும் பிரச்சனையின் போது போரினா வெளியாட்களால் தாக்கப்படுகிறார். அவரை ஆன்டெக் காப்பாற்றுகிறான். இந்தச் சண்டையில் தந்தையைத் தாக்க முயன்றவனை ஆன்டெக் கொன்றுவிடுகிறான். அவனைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்.

காயம்பட்ட போரினா படுக்கையில் நாட்களைக் கழிக்கிறார். அவர் தனது சொத்து முழுவதையும் மகளுக்கு அளித்துவிட்டு ஜக்னாவை வீட்டைவிட்டுத் துரத்திவிடுகிறார். ஆன்டெக் சிறையிலிருந்து திரும்பி வருகிறான். ஜக்னாவோடு ஒன்று சேருகிறான். ஆனால் ஊர்மக்கள் அதை விரும்பவில்லை. ஜக்னாவை ஊரைவிட்டுத் துரத்த முடிவு செய்கிறார்கள். இதன் தொடர்ச்சியான நிகழ்வுகளே படத்தின் கடைசிப்பகுதி.

ஜக்னாவைச் சுற்றியே கதை நடக்கிறது. போலந்து கிராமங்களின் பேரழகான இயற்கைக் காட்சிகளும், விவசாயக்குடும்பங்களின் வாழ்க்கை, சடங்குகள். விழாக்களைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்

குறிப்பாக ஜக்னாவின் திருமணத்தின் போது நடைபெறும் நடனக்காட்சி அபாரம். அது போலவே மதுவிடுதியில் ஆன்டெக்கோடு ஜக்னா நடனமாடும் காட்சி. அறுவடை நடப்பது, பனிக்காலத்தின் வருகை, ஜக்னா செய்யும் காகிதபறவைகள். அன்டக்கின் மனைவி ஹன்கா பசித்த தனது குழந்தைகள் பற்றிப் பேசுவது, குளிர்காலப் புயல் வருவது போல அழகான, மறக்க முடியாத காட்சிகள் உள்ளன.

போலந்து ஓவியர் ஜோசப் மரியன் செலோமோன்ஸ்கி, ஜீன்-பிரான்காயிஸ் மில்லட் மற்றும் பிரெஞ்சு இயற்கை ஓவியர் Jules Breton, வரைந்த ஓவியங்களை அப்படியே திரையில் மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள். குறிப்பாகப் பிரெட்டனின் காலிங் இன் தி க்ளீனர்ஸ் ஓவியம் திரையில் உயிர்பெற்று விரிவது அபாரமானது.

பருவ காலம் மாறுவது படத்தில் மிகவும் அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாகக் கோடையின் வருகை. அதன் மஞ்சள் வண்ணம். காட்சிக்கோணங்கள் மாறுவது சிறப்பாக உள்ளது. இது போன்ற ஆயில்பெண்டிங் அனிமேஷன் உருவாக்கத்தில் குளோசப் காட்சிகளைத் துல்லியமாக, வெகு கவனமாக வரைய வேண்டும். படத்தினை இதனைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்ட THE PEASANTS. முற்றிலும் புதிய அனுபவத்தைத் தருகிறது. சினிமாவின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதற்கான சாட்சியமாக உள்ளது.

ஜக்னாவின் அம்மா ஒரு காட்சியில் மகளிடம் சொல்கிறார்

“காதல் சில காலத்தின் பின்பு மறைந்துவிடும். ஆனால் நிலம் அப்படியில்லை. அது என்றைக்கும் அப்படியே இருக்கும்“

இது போலவே ஜக்னாவை காதலிக்கும் ஆன்டெக் அவளைப் புனித நிலம் என்றே அழைக்கிறான்.

ஒரு காட்சியில் அவர்கள் வைக்கோலுக்குள் ஒளிந்து கொண்டு காதலிக்கிறார்கள். அதை அறிந்த போரினா வைக்கோற்போருக்கு தீயிட்டுக் கொளுத்துகிறார், சுற்றிலும் எரியும் நெருப்பை மறந்து காதலர்கள் இன்பம் அனுபவிக்கிறார்கள். ஜக்னாவின் வண்ணமாகச் சிவப்பு நிறத்தைத் தேர்வு செய்துள்ளது தனிச்சிறப்பு.

படத்தைக் காணும் போது தாமஸ் ஹார்டி எழுதிய Tess of the d’Urbervilles நாவல் நினைவிற்கு வந்தது. இதே போன்ற கதைக்களன் கொண்ட நாவலது. 1979ல் ரோமன் போலன்ஸ்கி அதைச் சிறப்பான திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்.

1924 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் வ்ளாடிஸ்லா ரெய்மாண்ட் The peasants என்ற அவரது நாவல் நான்கு-தொகுதிகளுடன் ஆயிரம் பக்கங்கள் கொண்டது. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாவல் திரை உருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 05, 2024 23:02

May 4, 2024

மனித மனதின் குறியீடு

G. கோபி

சிகரெட் பிடிக்கும் குரங்கு சிறுகதை பல நினைவுகளைக் கிளறிவிட்டது.

எனது ஊர் கழுகுமலை. அங்குள்ள மலையில் உள்ள குரங்குகள் அங்கு வரும் மனிதர்கள் போடும் திண்பண்ட பொட்டலங்கள், கவர், வாட்டர் கேன், இவற்றை வைத்துக்கொண்டு விளையாடிக் கொண்டிருக்கும். பள்ளி படிக்கும் போது நண்பர்களோடு நான் அடிக்கடி போவேன். அப்போது சில நேரங்களில் அந்தக் குரங்குகள் யாரோ புகைத்து விட்டு போட்ட பீடி தூண்டுகளை எடுத்து பற்ற வைப்பது போலப் பாவனைச் செய்யும். ஆனால் காற்று அதிகம் இருப்பதால் அவற்றால் பற்ற வைக்க முடியாது. அது விளையாட்டு போல ஆச்சர்யமாக இருக்கும்.

ஆனால் சிகரெட் பற்ற வைத்து புகையை ஊதும் குரங்கை இந்தக் கதையைத் தவிர வேறெங்கும் கேள்வி பட்டதே இல்லை. விலங்குகள் மனிதர்கள் உடன் வாழ பழகி மனிதர்கள் செய்யும் அத்தனையும் செய்யப் பழகிக் கொள்கின்றன.

கதையில் ஏன் குரங்கு மனிதர்கள் செய்வதைச் செய்ய விரும்புகிறது? மேலும் மனிதர்கள் ஏன் சிகரெட் புகைப்பதின் மீது இவ்வளவு விருப்பம் கொண்டுள்ளார்கள்? சுற்றியுள்ள சமூகம் செய்யும் செயல்களையே சிறுவர்களும் உள்வாங்கிக் கொண்டு செய்கிறார்கள். ? இன்னொன்று ஒரு குரங்கை நாம் ஏன் இப்படி நடந்துகிறோம் என்ற பல கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது. சிகரெட் பிடிப்பதற்குப் பதிலாக நல்ல இசையைக் கேட்டு மகிழலாம் என்பதுதான் அந்த ஊதுகுழலை சிறுவன் குரங்கிடம் தருவது. மேலும் சிகரெட் பிடிக்கும் குரங்கு என்றதுமே அந்தக் காட்சி கண் முன்னே உடனே மின்னல் வெட்டு போலத் தெரிவது தான். பெரும்பாலும் காற்றில் படார் என்று அடிக்கும் ஜன்னலைப் போலக் குறுங்கதைகள் வாசிக்கும் போது நம்மைத் தாக்குகின்றன. நேரிடையாக நமது வியப்பை கூர்மை கொள்ளச் செய்கின்றன.

மிருகக் காட்சி சாலைகளைப் பார்த்ததும் நாம் ஏன் இப்படி விலங்கு பறவைகளை இப்படிச் சிறைபடுத்திக் காட்சிபடுத்து வைத்திருக்கிறார்கள் மனிதர்களுக்கு என்ன உரிமை உள்ளது? ஆனால் அதே சமயம் அது மனித சுபாவங்களைக் கற்றுக் கொள்ளவதும் வியப்புதான்.

ஒவ்வொரு குரங்கும் மனித மனதின் குறியீடுதான். மரம் விட்டு மரம் தாவுவதும் வித விதமான பழக்கங்களால் அதைச் சுமையேற்றி அசிங்கபடுத்தி வைத்திருப்பதும் நாம் தான். அதற்குப் புற சூழலான சமூகமும் ஒரு காரணம்தான். அப்படியான மனதை ஒழுங்குபடுத்திச் சீரமைக்கச் சிறுவன் குரங்கிடம் கொடுக்கும் பச்சை நிற ஊதுகுழல் ஏனும் கலை சார்ந்த விஷயங்கள் தேவைப் படுகிறது.

மனித துயரங்களையும், குழப்படிகளையும், பணி சுமைகள் மற்றும் நாம் உருவாக்கிக் கொண்ட கற்பிதங்களையும் கலை கொண்டு நாம் புரிந்து கொண்டு கடந்து போக முயற்சி செய்ய வேண்டும். ஆனால் அதுவுமே இன்னொரு பழக்கமே. மனிதர்கள் பழக்கங்களுக்கு உடனே ஆளாகிவிடுகிறர்வர்கள் என்பதும் உண்மை.

இசை, கலை சார்ந்த விஷயங்கள் மனிதனை உருமாற்றி நல்ல பழக்கங்களை உருவாக்கி விடுகின்றன. எளிய குறுங்கதை வாயிலாக நல்ல சிந்தனையைத் தூண்டிய எஸ். ரா சாருக்கு பாராட்டுக்கள் நல்ல கதையை எழுதியுள்ளீர்கள்.

•••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 04, 2024 20:42

நன்றி

மழையில் நனைந்த எனது புத்தகங்களுக்கான சிறப்பு விற்பனைக்கு ஆதரவு கரம் நீட்டிய அனைவருக்கும் நன்றி.

திரளாக வாசகர்கள் வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றார்கள். எனது ஆங்கில நூலிற்கான அறிமுகவிழாவும் சிறப்பாக நடைபெற்றது. அபர்ணா கார்த்திகேயன் உரையை முதன்முறையாகக் கேட்கிறேன். அற்புதமாகப் பேசினார். மேனாள் நீதிபதி பிரபாஸ்ரீதேவன் எனது கதைகளின் மொழிபெயர்ப்பு அனுபவங்களை மிகச்சிறப்பாக பகிர்ந்து கொண்டார். அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றி. எழுத்தாளர் அகரமுதல்வன் ஒருங்கிணைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. எழுத்தின் நுட்பங்கள் குறித்து அவர் கேட்ட கேள்விகள் முக்கியமானவை. அகரனுக்கு எனது அன்பும் நன்றியும்

கதையாகும் மனிதர்கள் என்ற தலைப்பில் எழுத்தாளனின் சவால்கள் குறித்துச் சிறப்புரை ஆற்றினேன். நிகழ்விற்கு வந்து புத்தகங்களை வாங்கிச் சென்ற அனைவருக்கும் தேசாந்திரி பதிப்பகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிறைய வாசகர்கள் முன்பதிவு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு மூன்று நாட்களில் புத்தகம் அனுப்பி வைக்கப்படும்

தனது சேது பாஸ்கரா கல்வி நிறுவனத்திற்காக மொத்தமாகப் புத்தகங்களை வாங்கி உதவிய டாக்டர் சேது குமணன் அவர்களுக்கு எங்களின் மனம் நிறைந்த நன்றி.

டாக்டர் சேது குமணன்

இந்த நிகழ்விற்கு உறுதுணையாக இருந்து உதவிய இயக்குநர் வசந்தபாலனுக்கு அன்பும் நன்றியும்.

நூலைச் சிறப்பாக வெளியிட்டுள்ள ஓரியண்ட் பிளாக்ஸ்வான் நிறுவனத்திற்கும் , அதன் ஆசிரியர் மொய்னா, நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றி.

தேசாந்திரி பதிப்பகத்தின் அன்புகரன். கண்ணகி, சண்முகம், ஹரிபிரசாத், கபிலா காமராஜ், நூல்வனம் மணிகண்டன், எடிட்டர் கௌதம், ஸ்ருதிடிவி கபிலன், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 04, 2024 20:38

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.