S. Ramakrishnan's Blog, page 33

May 2, 2024

சஞ்சாரம் / திறனாய்வுக் கூட்டம்

நாளை ( 04.05.24) இரவு ஏழு மணிக்கு இணைய வழியாக சஞ்சாரம் நாவலுக்கான திறனாய்வு நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் சஞ்சாரம் குறித்து முனைவர் சு.விநோத் உரையாற்றுகிறார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 02, 2024 23:33

இந்து தமிழ் திசை நிகழ்ச்சி

நாளை (04.04.24 )காலை இந்து தமிழ் திசை சார்பில் அண்ணா பல்கலைகழக வளாகத்தில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 02, 2024 23:24

எஸ்.ராவிடம் கேளுங்கள்- 3

தேசாந்திரி யூடியூப் சேனல் சார்பாக வெளியாகும் எஸ்.ராவிடம் கேளுங்கள் பகுதி- 3

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 02, 2024 23:20

May 1, 2024

தனிமையின் நூறு ஆண்டுகள்

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் தனிமையின் நூறு ஆண்டுகள் நாவல் நெட்பிளிக்ஸில் தொடராக வெளிவரவுள்ளது.

அதற்கான முன்னோட்டம் வெளியாகியுள்ளது.

நாவலின் மறக்க முடியாத துவக்க வரிகள் திரையில் காட்சியாக விரிவது அற்புதமாகவுள்ளது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 01, 2024 20:50

April 30, 2024

Frontline இதழில்

இம்மாத Frontline இதழில் எனது சிறுகதையின் மொழிபெயர்ப்பு வெளியாகியுள்ளது

நன்றி :

மினி கிருஷ்ணன்

பிரபா ஸ்ரீதேவன்

Frontline இதழ்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 30, 2024 23:49

சிகரெட் பிடிக்கும் குரங்கு

புதிய குறுங்கதை

சிம்பன்சிக் குரங்கு சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தது

மிருகக்காட்சி சாலையில் இருந்த அந்தச் சிம்பன்சிக் குரங்கிற்குச் சிகரெட் பிடிக்கும் பழக்கம் எப்படி உருவானது என்று தெரியவில்லை. ஆனால் அது கடந்த சில வாரங்களாகச் சிகரெட் பிடிக்கத் துவங்கியிருந்தது.

சிகரெட் புகையை ஊதியபடியிருக்கும் சிம்பன்சியின் புகைப்படம் நியூஸ்பேப்பரில் வெளியான பிறகு அதைக் காணுவதற்காக ஏராளமானவர்கள்  மிருகக் காட்சிசாலைக்கு வரத் துவங்கினார்கள்.

சிகரெட்டினை பற்ற வைத்து குரங்கின் முன்னால் நீட்டினார்கள். சிம்பன்சி ஸ்டைலாகச் சிகரெட் பிடித்துக் காட்டியது. மனிதர்களின் செயலை குரங்கு செய்யும் போது ஏன் விநோதமாக இருக்கிறது என்று அவர்களுக்குப் புரியவில்லை.

குரங்கு சிகரெட் பிடிப்பதை அனுமதிக்கக் கூடாது என்று முடிவு செய்த மிருகக் காட்சியின் தலைமை நிர்வாகி எவரும் குரங்கிற்குச் சிகரெட் கொடுக்கக் கூடாது என்ற அறிவிப்பு பலகையைக் கூண்டின் முன்பாக வைத்தார், ஆனாலும் எப்படியோ குரங்கிற்குச் சிகரெட் கிடைத்து வந்தது.

பணியாளர்களில் எவரோ குரங்கிற்குச் சிகரெட் கொடுக்கிறார்கள் என்று நிர்வாகி. சந்தேகப்பட்டார் சிகரெட் பிடிக்கத் துவங்கிய பிறகு குரங்கிடம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன

சிகரெட்டுடன் ஏதோ யோசனை செய்வது போல அமர்ந்திருந்தது. சில நேரங்களில் நடந்தபடியே சிகரெட் பிடித்தது. அப்போது எதையோ புரிந்து கொண்டது போலத் தலையசைத்தது. பெண்களின் முன்னால் சிகரெட் பிடிக்கும் போது அதன் முகபாவம் மாறியது. செயின் ஸ்மோக்கர்கள் போல ஒரு சிகரெட் முடிந்தவுடன் அடுத்தச் சிகரெட்டிற்குக் கையை நீட்டியது சிம்பன்சி.

இதனைக் கட்டுப்படுத்தவேண்டி மிருகக் காட்சி சாலைக்குள் சிகரெட் கொண்டுவருவதற்குத் தடை விதித்தார்கள். சிகரெட் கிடைக்காத நாட்களில் சிம்பன்சி ஆவேசமாகி கத்தியது. அங்குமிங்கும் தாவியது கையில் கிடைக்கும் பொருட்களை வீசி அடித்தது. குரங்கின் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் இப்படிப் பதற்றமாக நடந்து கொள்ளும் என்றார் மருத்துவர்.

ஒரு நாளைக்கு இரண்டு சிகரெட் கொடுப்பது என முடிவு செய்தார்கள். முன்பு போலக் கூண்டின் அருகே வந்து சிகரெட் பிடிக்காமல் தள்ளி நின்று கூண்டிற்கு முதுகைக் காட்டிக் கொண்டு குரங்கு சிகரெட் பிடித்தது.

சிம்பன்சியின் சிகரெட் பழக்கத்தை நிறுத்துவதற்காக நடத்தை பயிற்சியாளர் ஒருவரை சிங்கப்பூரிலிருந்து வரவழைத்தார்கள். ஐம்பது வயதான அந்தச் சீனர் சிம்பன்சி இருந்த கூண்டின் முன்பாக முக்காலி போட்டு அமர்ந்து அதன் நடவடிக்கையை ஆராய்ந்தார்.

“ஏன் சிம்பன்சி சிகரெட் பிடிக்க விரும்புகிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்“ என்றார்.

“மனிதர்களைப் போலவே குரங்குகளும் வெறுமையை உணருகின்றன. தொடர்ந்து தான் பார்க்கப்படுவதை சிம்பன்சி விரும்பவில்லை. அது எவர் கண்ணிலும் படாமல் இருக்க விரும்புகிறது. அந்தச் சூழ்நிலை கிடைக்காத போது சிகரெட் பிடிக்கிறது“என்றார் சீனர்

மிருகக்காட்சி நிர்வாகம் அவரது வேண்டுகோளை மறுத்தது.

“சிம்பன்சி புகையை ரசிக்கிறது. அதற்காகவே சிகரெட் பிடிக்கிறது. புகையைப் போலத் தானும் காற்றில் கலந்துவிட விரும்புகிறது “என்றார் சீனர்.

“சிம்பன்சி சிகரெட் பிடிக்க ஆயிரம் காரணம் இருக்கலாம். அது எங்களுக்குத் தேவையற்றது. அதை உடனடியாக நிறுத்த வேண்டியது உங்கள் வேலை. அதைச் செய்துகாட்டுங்கள்“ என்றார் நிர்வாகி

சில நாட்களுக்குப் பிறகு அவர் சிம்பன்சி சிகரெட் பிடிக்கும் நேரம் தானும் ஒரு சிகரெட் பிடித்தார். சிம்பன்சி அவரைக் கண்டுகொள்ளவில்லை.

“புதிய பழக்கம் ஒன்றை ஏற்படுத்தும் போது சிம்பன்சி சிகரெட் பிடிப்பதை விட்டுவிடும்“ என்று சீனர் நம்பினார். இதற்காகக் கூண்டின் முன்னால் அமர்ந்து விசில் அடித்தார். சோப்பு நுரைகளை வைத்து விளையாடினார். புத்தகம் படித்தார். கால்பந்து விளையாடினார். பபிள்கம்மை மென்று பலூன் ஊதினார். தண்ணீர் வாளியை தலையில் ஊற்றி ஆடினார். எதுவும் சிம்பன்சிக்கு பிடிக்கவில்லை.

ஒரு நாள் பள்ளிமாணவன் ஒருவன் பச்சை நிற ஊதுகுழலை ஊதியபடி சிகரெட் பிடிக்கும் குரங்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

குரங்கு சிகரெட் புகையை அவனை நோக்கி ஊதியது.

வியப்போடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் தான் வைத்திருந்த ஊதுகுழலை அதன் முன்பாக நீட்டி சிகரெட்டை கொடு என்று கேட்டான்.

மறுநிமிஷம் சிம்பன்சி தனது சிகரெட்டை அவனிடம் நீட்டியது. சிறுவன் தனது ஊதுகுழலை அதனிடம் தர மறுத்தான். சிம்பன்சி பாய்ந்து பிடுங்க முயன்றது. அவன் கூண்டினை விட்டு விலகி நின்று கொண்டான். சிம்பன்சி கூண்டின் இரும்புக் கம்பியை பிடித்து ஆவேசமாக ஆட்டியது.

புதிய டிரம்பட் ஒன்றை சிறுவனுக்கு அளிப்பதாகச் சொல்லி அவனது ஊதுகுழலை சிம்பன்சியிடம் கொடுத்துவிடச் சொன்னார் நடத்தை பயிற்சியாளர். கையில் கிடைத்த ஊதுகுழலை எப்படி ஊதுவது என்று தெரியாமல் சிம்பன்சி ஆட்டிக் கொண்டிருந்தது. ஆனால் அன்று மாலை அது இரண்டாவது சிகரெட்டிற்காகக் கூண்டின் முன்பு வந்து நிற்கவில்லை.

இரண்டு நாட்களுக்குப் பிந்தைய இரவில் சிம்பன்சி ஊதுகுழலை வாசித்துக் கொண்டிருக்கும் சப்தம் மிருகக் காட்சி சாலை முழுவதும் கேட்டது. அதன்பிறகு நாள் முழுவதும் சிம்பன்சி ஊதுகுழலை வாசித்தபடி இருந்தது. அதன் முகத்தில் முன்பு காணாத சந்தோஷம் வெளிப்பட்டது.

சிம்பன்சி ஊதுகுழல் வாசிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. ஆனால் அந்தச் சிறுவன் ரகசியமாகப் பள்ளியின் கழிப்பறையில் சிகரெட் பிடிக்கத் துவங்கியிருப்பதை எவரும் அறிந்திருக்கவில்லை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 30, 2024 20:23

April 29, 2024

மே 3 – நிகழ்ச்சி

மே 3 வெள்ளிக்கிழமை மாலை கவிக்கோ மன்றத்தில் நடைபெறும் எனது புத்தக அறிமுகவிழாவிற்கான அழைப்பிதழ்.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 29, 2024 22:19

April 28, 2024

நூல் அறிமுக விழா மற்றும் சிறப்புப் புத்தக விற்பனை

ஓரியண்ட் பிளாக்ஸ்வான் எனது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கத்தை The Man Who Walked Backwards and Other Stories என வெளியிட்டுள்ளது. இந்த நூலை நீதிபதி பிரபாஸ்ரீதேவன் மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார்.

இதற்கான அறிமுக விழா மே 3 வெள்ளிக்கிழமை மாலை நடைபெறுகிறது.

ஆங்கில எழுத்தாளர் அபர்ணா கார்த்திகேயன் அறிமுகவுரை நிகழ்த்துகிறார்.

நீதிபதி பிரபாஸ்ரீதேவன் தனது மொழிபெயர்ப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

கதையாகும் நினைவுகள் என்ற தலைப்பில் நான் சிறப்புரை ஆற்றுகிறேன்.

இந்த விழாவோடு தேசாந்திரி பதிப்பகத்தின் சிறப்புப் புத்தக விற்பனையும் நடைபெறுகிறது.

சென்னை வெள்ளத்தில் தேசாந்திரி பதிப்பகத்தின் குடோனில் வைக்கப்பட்டிருந்த எனது புத்தகங்கள் நிறையச் சேதமடைந்தன. நெருக்கடியான அந்தச் சூழ்நிலையின் போது நிறைய வாசகர்கள், அன்பர்கள் ஆதரவுக் கரம் நீட்டினார்கள். அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி.

ஈரத்தில் நனைந்து போன புத்தகங்களை உலர வைத்து மீட்டிருக்கிறோம். இந்தப் புத்தகங்களை மிகக் குறைவான விலையில் விற்பதற்காகச் சிறப்பு விற்பனை ஒன்றினை மே 3 வெள்ளிக்கிழமை மாலை மேற்கொள்கிறோம்

நனைந்த புத்தகங்களை விலையில்லாமல் வாசகர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்றே விரும்பினேன். ஆனால் அச்சிட்ட பணமாவது கிடைத்தால் மட்டுமே நஷ்டத்தைச் சரி செய்ய முடியும். ஆகவே ரூபாய் நூறு, ரூபாய் இருநூறு என இரண்டு விலை வைத்துள்ளோம். எந்த நூலையும் இந்த விலையில் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

நாள் : மே 3 வெள்ளிக்கிழமை

நேரம் : மாலை 5 மணி முதல் 9 வரை.

இடம்:

கவிக்கோ மன்றம்

இரண்டாவது பிரதானச்சாலை

சிஐடி காலனி, மைலாப்பூர். சென்னை 4

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 28, 2024 21:17

மழையை வரைபவர்கள்

கியோமிசு கோவிலில் பெய்யும் மழை என்ற ஹசுய் கவாஸின் (Hasui Kawase) ஓவியத்தைக் கண்ட போது ரஷோமான் திரைப்படத்தின் முதற்காட்சி நினைவில் எழுந்தது .

Kiyomizu Temple in Rain

ரஷோமான் நுழைவாயிலில் மழை பெய்வதில் தான் படம் துவங்குகிறது. கற்படிக்கட்டுகளில் வழிந்தோடும் மழையைக் காணுகிறோம். மழைக்கு ஒதுங்கிய இருவரைக் காணுகிறோம்.

மழைக்குள்ளாக நினைவு கதையாக மாறுகிறது. அவர்களில் ஒருவர் எனக்குப் புரியவில்லை என்று சொல்வதில் தான் படம் துவங்குகிறது. புரியவில்லை என்று அவர் சொல்வது மனிதர்களின் செயலை, கண்முன்னே நடந்தேறிய நிகழ்வுகளை.

அந்தச் சொல்லின் பின்னே ஒளிந்துள்ள கதையைத் தான் படம் விவரிக்கிறது. மழையில்லாமல் அக் காட்சி உருவாக்கப்பட்டிருந்தால் இத்தனை நெருக்கம் தந்திருக்காது. அந்தக் காட்சியில் மழை நம்மையும் கதை கேட்கத் தூண்டுகிறது.

ஜப்பானிய ஓவியர்கள் இயற்கைக் காட்சிகளை, கடலை, மழையை, பனி பெய்வதை, மலர்களை நிறைய வரைந்திருக்கிறார்கள். இயற்கை ஜப்பானிய கலைமரபில் நிரந்தரம் மற்றும் நிலையற்ற தன்மையின் அடையாளமாக கருதப்படுகிறது. ஆகவே பருவ காலங்களை வரைவதும் எழுதுவதும் கலைஞர்களின் முதன்மைச் செயல்பாடாக விளங்கியிருக்கிறது.

உண்மையும் அழகும் ஒன்று சேருவதே கலையின் அடிப்படை என ஜப்பானியர்கள் நம்புகிறார்கள். உண்மை என்பது தோற்றம் தரும் அனுபவமில்லை. ஆகவே மலர்களை வரையும் போது முழுமையின் அடையாளமாக, நிரந்தரமின்மையின் குறியீடாக வரைகிறார்கள். இயற்கை கடந்தகாலத்தை நினைவு வைத்திருப்பதில்லை. அது எப்போதும் நிகழ்காலத்திலே வாழுகிறது. அந்த நிகழ்காலத்தில் வாழ்வதைத் தான் பௌத்தம் சுட்டிக்காட்டுகிறது. அந்த வகையில் இயற்கையை அறிவதும் பௌத்த ஞானமரபே. ஓவியர்கள் இயற்கைக் காட்சியை வெறுமனே வியப்பதில்லை. மாறாக அதன் தனித்துவ அழகினை அடையாளம் காட்டுகிறார்கள்.

ஹசுய் கவாஸ்

மழையை வரைவது எளிதானதில்லை. ஒரு மரம் மழையை எதிர்கொள்ளும் விதமும் மனிதர்கள் எதிர்கொள்வதும் ஒன்றானதில்லை. ஆகவே மழையின் வழியே உருமாறும் தினசரி வாழ்க்கையை, உடலின் இயக்கத்தை. காட்சிகளின் விநோத அழகை வரைந்து காட்டுகிறார்கள்.

ஜப்பானியர்களுக்கு மழை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது, மழையைக் குறிப்பதற்கு ஜப்பானிய மொழியில் குறைந்தபட்சம் 50 வார்த்தைகள் உள்ளன . ஜப்பானிய மரச்செதுக்கு ஓவியங்களில் மழை முக்கியக் கருப்பொருளாக உள்ளது. பாரம்பரிய மழை சடங்குகள் இன்றும் தொடர்கின்றன

ஹசுய் கவாஸ் ஓவியத்தில் கியோமிஸு கோவிலில் குடைபிடித்தபடி ஓருவர் மழையை ரசிக்கிறார். இது திடீர் மழையில்லை. அவரது உடையைக் காணும் போது மழைக்காலத்தின் ஒரு நாளை ஓவியர் வரைந்திருக்கிறார் என்பதை உணருகிறோம்.

தொலைதூரத்து மலையும், காற்றின் சீரான வேகமும் அடர்ந்து பெய்யும் மழையும் நேர்த்தியாக வரையப்பட்டிருக்கின்றன. மழைக்காட்சியை வரையும் போது மழை ஏற்படுத்தும் புற அனுபவத்தைத் தான் பதிவு செய்ய முயலுகிறார்கள். இந்த ஓவியத்தில் மழைத்துளிகள் துல்லியமாக வரையப்படவில்லை. மழையின் வேகம் ஓராயிரம் அம்புகள் பாய்வது போலிருக்கிறது.

மழை இனிது என்கிறார் பாரதியார்.

சட்டச்சட சட்டச்சட டட்டா-என்று

தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்;

தக்கை யடிக்குது காற்று-தக்கத்

தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட

எனக் காற்றோடு இணைந்து மழை உருவாக்கிய இசையைப் பதிவு செய்திருக்கிறார். இதே உணர்வு நிலையைத் தான் ஓவியமும் வெளிப்படுத்துகிறது

கண்டோம் கண்டோம் கண்டோம்-இந்தக்

காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்! என்று பாரதியின் கவிதை முடிகிறது. காலத்தின் கூத்து தான் மழை.

கியோமிசு, ஜப்பானின் கிழக்குக் கியோட்டோவில் அமைந்துள்ள ஒரு புத்த ஆலயமாகும். இக்கோவில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கியோமிசு என்றால் தூய நீர் என்று பொருள். ஒடோவா நீர்வீழ்ச்சியிலிருந்து வரும் தண்ணீர் அந்தக் கோவில் குளத்தில் விழுகிறது

இந்தக் கோவிலின் முழுக் கட்டுமானத்திலும் ஒரு ஆணி கூடப் பயன்படுத்தப்படவில்லை. ஹிகாஷியாமா மலைத்தொடரிலுள்ள இந்தக் கோவிலின் மேடை மீதிருந்து தாவிக்குதித்தால் விரும்பியது நிறைவேறும் என்றொரு நம்பிக்கை இருந்தது. இப்படித் தாவிய சிலர் உயிர் இழந்திருக்கிறார்கள். பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தத் தாவுதல் தடைசெய்யப்பட்டுவிட்டது.

இந்த வளாகத்தினுள் பல கோவில்கள் உள்ளன, அதில் இரண்டு “காதல் கற்கள்” உள்ளன. காதலுற்ற ஒருவர் கண்களை மூடிக்கொண்டு நடந்து மற்றொரு கல்லைத் தொட்டுவிட்டால் அவரது காதல் நிறைவேறிவிடும் என்பது நம்பிக்கை.

இந்தத் தகவல்களை அறிந்து கொண்டபிறகு ஓவியத்தின் காட்சி வேறாகிவிடுகிறது. தொன்மையான கியோமிசு ஆலயத்தில் மழை பெய்யும் போது காலம் விழித்துக் கொள்கிறது. மழையை வேடிக்கை காணுகிறவர் காலத்தின் கூத்தினையே காணுகிறார்.

ஜப்பானில் ட்சுயு எனப்படும் பருவமழை , ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஆறு வாரங்கள் பெய்கிறது. சூறாவளி, பெருமழைக்காலம் பொதுவாக இலையுதிர் காலத்தில் நிகழ்கிறது.

ஜப்பானிய ஓவியர்கள் மழையின் சீற்றத்தையே அதிகம் வரைந்திருக்கிறார்கள். அதிக எண்ணிக்கையிலான மெல்லிய இருண்ட இணையான கோடுகளைப் பயன்படுத்தி மழை சித்தரிக்கப்படுகிறது

ஓஹாரா கோசன் வரைந்துள்ள ஒரு மழை இரவில் நிற்கும் நாரையின் ஓவியத்தில் அடர் கருப்புப் பின்னணியில் ஒற்றைக் காலை தூக்கி நிற்கிறது நாரை. பிரகாசமான வெள்ளை உடல், அதன் கண்கள் மிக அழகாக வரையப்பட்டிருக்கின்றன. நாரையின் கால்களில் காணப்படும் மஞ்சள் நிறம் வழக்கமான நீலம் அல்லது சாம்பல் நிறத்திற்கு மாற்றாக உள்ளது கவனிக்கத்தக்கது-

நாரை தன்னை முழுமையாக மழையிடம் ஒப்புக் கொடுத்து நிற்கிறது. அக்ககாட்சி மழையினுள் நாரை தியானம் செய்வது போலிருக்கிறது. நாரையின் வெண்மை மின்னல் வெளிச்சம் போலத் தனித்து ஒளிருகிறது. ஜப்பானிய ஓவியர்கள் தங்கள் ஓவியத்தில் முதன்மையாக சித்தரிக்க விரும்பும் பொருளை அளவை விடவும் பெரிதாக வரைகிறார்கள். இந்த நாரையும் அது போன்றதே. .

Utagawa Hiroshige

உதகாவா ஹிரோஷிகேயிடம்(Utagawa Hiroshige) ஓவியங்களை இயற்கையின் கவிதை வடிவம் என்கிறார்கள். உதகாவா ஹிரோஷிகே மழையை வரைந்திருக்கிறார். அதுவும் எதிர்பாராமல் பெய்யும் மழையினை வரைந்திருக்கிறார்.

Sudden Shower at Shōno ஓவியத்தில் பல்லக்கு தூக்குபவர்களும் கிராமவாசிகளும் மழைக்குள்ளாக ஓடுகிறார்கள், தனித்துவமான சாய்ந்த கோடுகளுடன் மழை குறிப்பிடப்படுகிறது. கிராமவாசிகளின் உடை, அவர்கள் வைத்துள்ள குடை காற்றில் மடங்குவது, பல்லக்கு தூக்குபவரின் இடுப்புத் துணியின் நீல நிறம். சாலை மற்றும் மரங்களின் சித்தரிப்பு எனப் படம் மழைக்காட்சியை அற்புதமாகச் சித்தரிக்கிறது.

JP41

Ukiyo e ஓவிய மரபில் திடீர் மழை என்பது முக்கியமான கருப்பொருளாகும், Sudden Shower over Shin-Ōhashi Bridge ஓவியத்தில் பாலம் வலதுபுறத்தில் இருந்து கீழ் இடதுபுறமாக நீண்டுள்ளது, பின்னணியில் உள்ள அடிவானக் கோடு இடமிருந்து வலமாகக் கீழ்நோக்கி சாய்ந்துள்ளது. பாலத்தில், மூன்று சிறிய உருவங்கள் முன்னோக்கிச் சாய்ந்து, இடதுபுறமாக, தங்கள் உடலை மழையில் நனையாமல் மறைக்க, தலைக்கு மேல் குடைகளைப் பிடித்தபடி செல்கிறார்கள், எதிர் திசையில் நகரும் மூன்று உருவங்கள் பகிரப்பட்ட ஒரே குடையின் கீழ் செல்கிறார்கள்.. தொலைதூரக் கரை சாம்பல் நிறமாக உள்ளது, நேரான கருப்பு கோடுகளாக மழை விழுகிறது. பாலம் ஒரு பிரகாசமான வடிவமாகத் தோன்றுகிறது, அவர்களின் வைக்கோல் தொப்பிகள், மரக்குடைகள் அழகாக வரையப்பட்டிருக்கின்றன. பாலத்தின் மஞ்சள் நிறம், பாலத்தின் அடியிலுள்ள நீரின் நீலவண்ணம், விரைந்து ஓடுபவர்களின் வாளிப்பான கால்கள். காற்றின் வேகம் என ஓவியம் மிகவும் நேர்த்தியாக வரையப்பட்டிருக்கிறது

ஆற்றில் கட்டுமரம் செல்கிறது. கட்டுமரத்தைச் செலுத்துகிறவன் மழையைப் பொருட்படுத்தவில்லை. ஆற்றின் தொலைதூரக் கரையில், அரசாங்கக் கப்பலான அட்டகேமரு நிற்பது தெரிகிறது.

இந்த ஓவியத்தினை வான்கோ மிகவும் ரசித்திருக்கிறார். இதன் நகல் ஒன்றை அவரே வரைந்துமிருக்கிறார். ஜப்பானிய ஓவியங்களின் தாக்கம் வான்கோவிடமிருந்தது. அவர் ஒருமுறை கூட ஜப்பானுக்குச் சென்றதில்லை. ஆனால் ஜப்பானிய பிரிண்ட்டுகள் மூலம் முக்கியமான ஜப்பானிய ஓவியங்களை ஆழ்ந்து ரசித்திருக்கிறார்.

ஹிரோஷிகேயின் ஓவியங்கள் இயற்கையைப் பற்றிய நுட்பமான உணர்வைத் தருகின்றன. 1858 ஆம் ஆண்டில் காலரா காரணமாக ஹிரோஷிகே இறந்து போனார். அசகுசாவில் உள்ள ஜென் புத்த கோவிலில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.

ஜென் கவிதையொன்றில் மழையைக் காதுகளால் பார்க்கிறோம் என்ற வரி இடம்பெற்றிருக்கிறது. உண்மை தான். மழைச்சத்தம் மழையினை மனதில் காட்சியாக உருமாற்றிவிடுகிறதே.

டைட்டோ கொகுஷி என்ற கவிஞர் எழுதிய கவிதை இது.

காதுகளால் பார்த்தாலும்,

கண்களால் கேட்கும் போதும்,

முத்து போன்ற மழைத்துளிகள்

நான்தான்

என்பதில் சந்தேகமில்லை .

நான் எனும் தன்னுணர்வு அன்றாடம் பல்வேறு நிகழ்வுகளால் துளியாகச் சிதறுகிறது. மழை அதன் புறவடிவம் போலிருக்கிறது.

விழிப்புணர்வு கொண்டவர்கள் புறநிகழ்வுகளை நேராகக் காணுவதில்லை. அவற்றை.தலைகீழாகப் பார்க்கிறார்கள். தங்களைத் தாங்களே இழந்து, விஷயங்களைப் பின்தொடர்கிறார்கள் என்கிறார் ஜிங்கிங்

இந்தக் கண்ணோட்டத்தில் ஜென்துறவிகள் மழையை ஆராதிப்பதில்லை. அதன் பயன்களைப் பற்றி யோசிப்பதில்லை. மாறாக அவர்களே மழையாகிறார்கள்.

ஜப்பானிய ஓவியர்கள் மழையை வரைவதன் மூலம் தளர்வு மற்றும் எதிர்பாராத மாற்றத்தை வரைந்திருக்கிறார்கள். மழை சீரற்ற இயக்கத்தின் குறியீடாக அமைகிறது.

ஐரோப்பிய மழைக்காட்சி ஓவியங்களில் மழையின் ஈரமும் குடைபிடித்தபடி செல்லும் பெண்களின் நிதான நடையும் சித்தரிக்கப்படுகிறது. இந்திய நுண்ணோவியம் ஒன்றில் பெண்ணின் மீது மழை சிறுதுளிகளாக வீழ்வதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது நேரடி அனுபவத்தின் வெளிப்பாடாக உள்ளது. ஆனால் இந்த இரண்டிலிருந்து வேறுபட்டு ஜப்பானிய ஓவியர்கள் வரைந்துள்ள மழைக்காட்சிகள் திடீர் மழையை மட்டுமின்றிக் காலமாற்றம் எனும் பேருணர்வையும் நமக்குள் ஏற்படுத்துகின்றன.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 28, 2024 06:24

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.