S. Ramakrishnan's Blog, page 33

June 2, 2024

எஸ்.ராவிடம் கேளுங்கள் / 8

தேசாந்திரி யூடியூப் சேனல் சார்பில் வெளியாகும் எஸ்.ராவிடம் கேளுங்கள் நிகழ்ச்சியின் எட்டாவது பகுதி வெளியாகியுள்ளது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 02, 2024 22:26

June 1, 2024

நிஜமில்லாத நிஜம்

நிஜமான பசு ஒன்று ஓவியத்திலிருக்கும் பசுவைப் பார்த்துக் கொண்டிருப்பது போல வரைந்திருக்கிறார் மார்க் டான்சி, The Innocent Eye Test என்ற அந்த ஓவியம் எது யதார்த்தம் என்ற கேள்வியை எழுப்புகிறது.

டச்சு ஓவியர் பவுலஸ் பாட்டர் வரைந்த பசுக்களின் ஓவியத்தைத் தான் இந்தப் பசுப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதே ஓவியத்தின் இடதுபுறத்தில் மோனெட்டின் வைக்கோல் போர் ஓவியம் காணப்படுகிறது.

“வெவ்வேறு யதார்த்தங்கள் ஒன்றுக்கொன்று எவ்வாறு தொடர்பு கொள்கின்றன” என்று ஆராய்வதில் ஆர்வம் கொண்டவர் மார்க் டான்சி.,

வரையப்பட்ட சித்திரம் என்பது தனியுலகம். அங்கே நாம் காண்பவை நிஜமில்லை. ஆனால் நிஜம் போன்று தோற்றம் அளிக்க கூடியவை. அங்கே காணப்படும் உருவங்கள். நிலப்பரப்பு, இயக்கம் யாவும் நிஜத்தை நினைவுபடுத்துகின்றன. ஆனால் கற்பனையான தளத்தையும் கொண்டிருக்கின்றன.

சீனக் கதை ஒன்றில் ஓவியத்தின் வழியாக இயற்கை மீது காதல் கொண்ட அரசன் குறிப்பிட்ட இயற்கைக் காட்சியை நேரடியாகக் காணும் போது அது ஓவியம் போலில்லை என்று கோவித்துக் கொள்கிறான். இயற்கையை ஓவியம் நகலெடுப்பதில்லை என்று ஓவியன் விளக்குகிறான். தனக்குக் கலையின் வழியே வெளிப்படும் இயற்கை தான் வேண்டும் என்கிறான் மன்னன். இந்தக் கதை விவரிப்பதையே மார்க் டாவின்சி தனது ஆய்வாகக் கொண்டிருக்கிறார்.

அவரது ஓவியத்தில் வரையப்பட்ட பசுவைச் சட்டகத்திற்கு வெளியே நிற்கும் பசு காணுகிறது. அந்தப் பசுவும் வரையப்பட்டது தான். ஆனால் உண்மையும் கற்பனையும் ஒன்றையொன்று சந்தித்துக் கொள்வது போல நாம் உணருகிறோம் ஓவியத்திலிருக்கும் பசுவைச் சட்டகத்திற்கு வெளியே நிற்கும் பசு நிஜமானதாக நினைக்குமா என்று அருகில் விஞ்ஞானிகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஓவியம் சித்தரிப்பது தான் “யதார்த்தமா, அல்லது சட்டகத்திற்கு வெளியே மாடு பார்த்துக் கொண்டிருப்பது தான் யதார்த்தமா என்ற கேள்வியை மார்க் எழுப்புகிறார்

கேலரியில் உள்ள ஓவியத்தை நாம் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பதை விலகி நின்று ஒருவர் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற அனுபவத்தையே ஓவியம் தருகிறது.

உண்மையில் ஒரு பசு, ஓவியத்திலுள்ள பசுவைக் காணும் போது என்ன நினைக்கும் , எப்படிப் புரிந்து கொள்ளும் என்று கேட்கிறார் மார்க். விலங்குகளின் கலையுணர்வு பற்றிப் பல்வேறு அறிவியல் பரிசோதனைகள் நடைபெற்றிருக்கின்றன. குரங்கினை வண்ணம் தீட்ட வைத்திருக்கிறார்கள். நாய்களுக்குப் பயிற்சி கொடுத்து படம் வரையச் செய்திருக்கிறார்கள். அந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை. விலங்குகளைக் குறியீடுகளாக, உருவகமாக இலக்கியம் மாற்றியது. பூமியில் வாழாத விலங்குகளைக் கற்பனையாக வரைந்திருக்கிறார்கள். விலங்குகளில் சில தெய்வீகத்தன்மை கொண்டதாகக் கருதப்படுகின்றன. கிரேக்க, சீன,இந்திய இலக்கியங்களில் விலங்குகளின் உருவம் எடுத்து கடவுள்கள் பூமிக்கு வருகிறார்கள். செயலாற்றுகிறார்கள். இன்று விலங்குகளின் கலைஉணர்வை புரிந்து பல்வேறு பரிசோதனைகள் நடைபெறுகின்றன. ஆயினும் எந்த முடிவையும் எட்ட முடியவில்லை.

மார்க் ஓவியத்திலுள்ள யதார்த்தம் பற்றி மட்டுமின்றிப் பொதுவாகக் கலைகளைப் புரிந்து கொள்வதிலுள்ள சிக்கலையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த ஓவியத்தை வரைந்திருக்கிறார். அந்த வகையில் இது மிகவும் தனித்துவமான கலைப்படைப்பாக கருதப்படுகிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 01, 2024 05:31

May 30, 2024

ரெயின்கோட்

குறுங்கதை

சம்பத் தனது ஏழு வயதில் முதன்முறையாக ரெயின்கோட் அணிந்த ஒருவரைக் கிராமத்தில் கண்டான். அடைமழைக்காலமது.

மண்வாசனையை அவனுக்கு மிகவும் பிடிக்கும். மழைபெய்யப்போகும் முன்பு எழும் வாசனை ஒருவிதம். மழை விட்ட பின்பு வெளிப்படும் வாசனை வேறுவிதமாக இருக்கும். அது மழை வாசனையில்லை. மண்வாசனை என்பார் தாத்தா. இருக்கட்டுமே. மண்ணை அவ்வளவு வாசனை மிக்கதாக மழையால் தான் முடியும்.

ஊரைச் சுற்றி மழைமேகம் கருகருவெனத் திரளுவதைக் காண அழகாக இருக்கும். மழைவட்டம் போட்டிருச்சி என்று மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். மழையின் முதல் துளி எங்கே விழுகிறது என்று யாரும் கண்டறிய முடியாது. ஆனால் மழைத்துளிகள் தபால் பெட்டியின் மீது விழுந்துவிட்டால் அது வேகமான மழை என்று அர்த்தம்.

பகலில் பெய்யும் மழையின் குணம் வேறு. இரவில் பெய்யும் மழையின் குணம் வேறு. இரவில் பெய்யும் மழை எளிதில் நிற்காது. மழை வரைந்த படத்தை மறுநாள் கோவில் சுவரில் காணலாம். மழையும் வெயிலும் சேர்த்துக் கொள்ளும் போது வானுலகில் கல்யாணம் நடப்பதாகச் சொல்வார்கள்.

மழைக்குள் நனைந்தபடி விவசாய வேலை செய்பவர்களையும், ஒடியோடி தூம்புவாயில் தண்ணீர் பிடித்துச் சேகரித்துக் கொள்ளும் பெண்களையும் சம்பத் பார்த்திருக்கிறான்.

ஆனால் இப்படி ஒருவர் மழைக்குள் நனையாமல் கைவீசியபடி நடந்து போவதைக் காண ஆச்சரியமாக இருந்தது. அவர் அணிந்திருந்த அடர் பச்சை நிற ஆடை தான் ரெயின் கோட் என்று அன்று தெரியவில்லை. வீட்டின் திண்ணையில் நின்றபடி அவர் தெருவில் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். நிலா வெளிச்சத்தில் நடந்து போகிறவர் போல நிதானமாக மழைக்குள் நடந்து சென்றார். தலை நனையாமல் இருக்கத் தொப்பி போல ரெயின்கோட்டை இழுத்துவிட்டிருந்தார்.

கிராமத்தில் மழை வேகமெடுக்கும் போது மக்கள் மரத்தடி, பம்ப்செட், அல்லது இடிந்துகிடக்கும் சத்திரம் என ஏதாவது இடத்தில் ஒதுங்கிக் கொள்வார்கள். சிலர் மழையைப் பொருட்படுத்துவதேயில்லை. ஆனால் இப்படி எவரும் ரெயின்கோட் போட்டுக் கொண்டு தெருவில் நடமாடியதில்லை.

அந்தக் காலத்தில் எல்லோர் வீட்டிலும் குடை கிடையாது. வண்ணக்குடைகள் வராத காலமது. பின்னாளில் மடக்குக் குடைகள் வந்த போது அதை மக்கள் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். வியந்தார்கள். ஆண்கள் மடக்குக் குடை வைத்துக் கொள்வதற்குக் கூச்சப்பட்டார்கள்.

ரெயின்கோட் அணிந்திருந்தவரின் பெயர் செல்லசாமி. அவர் ராணுவத்தில் பணியாற்றியவர். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். கிராமத்தில் அவரைப் போல நாலைந்து பேர் ராணுவத்தில் பணியாற்றினார்கள். விடுமுறையில் ஊருக்கு வரும் போது அவர்கள் டீக்கடையில் ஹிந்தியில் தான் பேசிக் கொள்வார்கள்.

அவர்கள் மூலமாகச் சிலர் டெல்லிக்குச் சென்று வேலை தேடிக் கொண்டார்கள். ஒன்றிரண்டு பேர் டெல்லியில் ஹோட்டல் பணியாளர்களாக மாறினார்கள். டெல்லியிலிருந்து கொண்டுவரப்பட்ட மண்ணெண்ணெய் அடுப்பு. அலுமினியப் பாத்திரங்கள், டார்ச்லைட், ஹிந்தி இசைத்தட்டுகள் ஊரில் வியப்பாகப் பார்க்கப்பட்டன. அந்தக் காலத்தில் எஸ்எஸ்எல்சி பரிட்சையில் பெயிலாகிப் போன பையன்கள் டெல்லிக்கு ஒடிப் போவது வழக்கமாக மாறியது.

அவர் அணிந்திருந்தது ரெயின்கோட் என்பதையும். அதை அணிந்து கொண்டுவிட்டால் மழையில் எங்கே வேண்டுமானாலும் நடக்கலாம். உடம்பு நனையாது என்பதையும் அவரது மகன் திரவியம் சொல்லித் தான் சம்பத் தெரிந்து கொண்டான்

அந்த ரெயின்கோட்டை செல்லச்சாமி டெல்லியில் வாங்கியிருக்கிறார். அடுத்த முறை அவனுக்கும் சிறியதாக ஒரு ரெயின்கோட் வாங்கி வரப்போகிறார் என்று திரவியம் சொன்னான்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த சம்பத்திற்கும் ரெயின்கோட் வாங்க வேண்டும் என்ற ஆசை உண்டானது. ஆனால் அதைக் காட்டிக் கொள்ளவில்லை.அந்த ரெயின்கோட்டை தொட்டுப் பார்ப்பதற்காக அவனையும் இரண்டு நண்பர்களையும் திரவியம் தனது வீட்டிற்கு அழைத்துப் போனான். ரெயின்கோட் பாம்புச்சட்டை போல வழுவழுப்பாக இருந்தது, அவ்வளவு பெரிய பொத்தான்களைச் சம்பத் அதற்கு முன்பு கண்டதில்லை. குடைத்துணியில் தைத்திருக்கிறார்கள் என்று அவனோடு வந்த பையன் சொன்னான். இல்லை. இது வெளிநாட்டுத் துணி என்று மறுத்துச் சொன்னான் திரவியம்.

ரெயின்கோட் பற்றிக் கிராமத்துப் பெண்கள் வியப்பாகப் பேசிக் கொண்டார்கள். பள்ளியில் ஆசிரியர்கள் கூட அதைப்பற்றித் திரவியத்திடம் விசாரித்தார்கள். தபால்காரர் தனக்கு அப்படி ஒரு ரெயின்கோட் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார்.

“மழையில் ஒன்றிரண்டு தடவை கூட நனையாமல் போய்விட்டால் மழை கோவித்துக் கொண்டு வராமல் போய்விடும். மழையில் நனைவதும் உடம்புக்குத் தேவை தான்“ என்று சொன்னார் கருப்பையா ஆசாரி.

திரவியத்தின் அப்பா ராணுவத்திற்குத் திரும்பிச் செல்லும் போது அந்த ரெயின்கோட்டை கொண்டுபோய்விடுவார் என்றே சம்பத் நினைத்தான். ஆனால் அதை அவரது வீட்டிலே விட்டுவிட்டுப் போயிருந்தார்.

தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பாக மழை துவங்கியது. அப்போது திரவியத்தின் அம்மா அந்த ரெயின்கோட்டை அணிந்து கொண்டு மழைக்குள் எருமை மாட்டை ஓட்டிக் கொண்டு வருவதைப் பார்த்தான். மழை தன்னை எதுவும் செய்துவிடாது என்ற புன்சிரிப்பு அவரது முகத்திலிருந்தது. ஊரில் ரெயின்கோட் அணிந்த முதற்பெண் திரவியத்தின் அம்மா தான். அது அவருக்குப் பெருமையாக இருந்தது. ஊரிலிருந்த பணக்கார முதலாளி எவரிடமும் ரெயின்கோட் கிடையாது. ஆகவே அவர்கள் அதைக் கண்டு எரிச்சல் பட்டார்கள்.

அதன் பிறகான நாட்களில் லேசான தூறல் விழும் போது கூடச் சோளக்கொல்லை பொம்மை போலப் பொருத்தமில்லாத ரெயின்கோட்டை அணிந்தபடி திரவியத்தின் அம்மா நடமாடிக் கொண்டிருப்பார். ஒரு ரெயின்கோட் அவர்களை வசதியானவர்கள் போல உணர வைத்துக் கொண்டிருந்தது.

பொங்கல்விடுமுறைக்குச் செல்லச்சாமி ஊருக்கு வந்த போது அவர் வாக்களித்தது போலத் திரவியத்திற்கு ஒரு ரெயின்கோட் வாங்கிவரவில்லை. அந்த ஏமாற்றத்தை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மைதானத்தில் இதைச் சொல்லிச் சொல்லி மாணவர்கள் கேலி செய்தார்கள். திரவியம் தான் பெரிய ஆள் ஆனதும் ராணுவத்திற்குப் போய் வேலைக்குச் சேர்ந்து கொண்டு ரெயின்கோட் வாங்குவேன் என்றான். தனது ஏமாற்றத்தை மறைத்து அவனால் அவ்வளவு தான் சொல்ல முடிந்தது.

திரவியத்தின் வீட்டிலிருந்த ரெயின்கோட்டை யார் கிழித்தது என்று தெரியவில்லை. கோடை மழை பெய்த நாளில் கிழிந்த மழைக்கோட்டை கொம்பில் இழுத்தபடி எருமை மாடு கண்மாய் கரையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. ஊரில் ரெயின்கோட் அணிந்த முதல் எருமை அது தான். அந்தப் பெருமையைப் பெரிதாக நினைக்காமல் அது நடந்து சென்றது.

மறுநாள் அவர்கள் கண்மாயில் மிதந்து கொண்டிருந்த கிழிந்த ரெயின்கோட்டை பார்த்தார்கள். யாரோ விநோதமான மனிதன் தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பது போலத் தோன்றியது. ஒரு தட்டான் கிழிந்த கையின் மீது அமர்ந்திருந்தது.

தட்டான் தூக்கிட்டு போகப்போகுது டோய் என்று கத்தினான் ஒருவன். டெல்லிக்கா என்று கேட்டான் இன்னொரு சிறுவன். சம்பத் அதைக் கேட்டுச் சிரித்தான். அவன் கண்முன்னே காற்று ரெயின்கோட்டை புரட்டி விளையாடிக் கொண்டிருந்தது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 30, 2024 06:12

May 29, 2024

நிழலின் இனிமை.

ஜப்பானிய எழுத்தாளர் ஜுனிச்சிரோ தனிசாகி எழுதிய In Praise of Shadows 1933 ஆம் ஆண்டு வெளியான ஆய்வுக்கட்டுரையாகும்.

இதில் ஜப்பானியப் பாரம்பரியத்தில் ஒளி மற்றும் இருளின் இடம் பற்றிய தனது அவதானிப்புகளை விரிவாக எழுதியுள்ளார். குறிப்பாக ஜப்பானிய வீடு மற்றும் கட்டிடங்களின் தனித்துவம், ஜப்பானிய நிகழ்த்துகலைகளில் பயன்படுத்தப்படும் குறைந்த வெளிச்சம் பற்றியும், மேற்கத்திய தொழில்நுட்பங்களுக்குப் பதிலாக சொந்த மண்ணிலிருந்து உருவாகும் அறிவியல் முயற்சிகள் பற்றியும் சிறப்பாக எழுதியிருக்கிறார்.

In Praise of Shadows வை ஒரு ஆவணப்படமாக எடுத்திருக்கிறார்கள். நேர்த்தியான காட்சிகள் நேர்காணல்களுடன் சிறப்பாக ஆவணப்படம் உருவாக்கபட்டுள்ளது.

ஆவணப்படத்தின் இணைப்பு

https://youtu.be/C42INHwTfDM?si=_QN_6pMP9ADAl1IC

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 29, 2024 06:38

May 26, 2024

லிடியா டேவிஸ் நேர்காணல்

தனது எழுத்துலகம் மற்றும் குறுங்கதைகள் குறித்துப் பேசுகிறார் எழுத்தாளர் லிடியா டேவிஸ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 26, 2024 23:59

உலகின் சமநிலை

அனிமேஷன் திரைப்படங்கள் நமக்கு வியப்பூட்டும் மாற்று உலகை அறிமுகம் செய்கின்றன. அந்த உலகம் விசித்திரமானது. அற்புதங்களால் நிரம்பியது. நம் அன்றாடத்தைப் போலவே அங்கும் ஒரு அன்றாட வாழ்க்கையிருக்கிறது. ஆனால் அந்த வாழ்க்கை மனிதர்களை மட்டுமே மையப்படுத்தியதில்லை.

ஒரு முயலின், நாரையின், மீனின் பார்வையில் உலகைக் காணுவது வியப்பானது. குழந்தைகளே அப்படிக் கற்பனை செய்கிறார்கள்.

ஆலீஸின் அற்புத உலகம் நாவலில் முயலைத் துரத்திக் கொண்டு செல்லும் ஆலீஸ் புதிய உலகைக் கண்டறிகிறாள். அந்த உலகின் முட்டாள்தனங்களும் அபத்தங்களும் அவளை எரிச்சல்படுத்துகின்றன. அவள் சிறுமியா, அல்லது வளர்ந்த பெண்ணா என்று கம்பளிப்புழுவிற்குச் சந்தேகம் வருகிறது. அவள் கண்ணீர் குளத்தில் நீந்துகிறாள். பூக்களுக்கு வண்ணம் அடிப்பவர்களை சந்திக்கிறாள். இந்த சாகசப்பயணத்தில் அவளது உடல் நீண்டும் சுருங்கியும் மாறிக் கொண்டேயிருக்கிறது. இந்தக் கதை சிறுவர்கள் படிக்கும் போது வேடிக்கை கதையாக இருக்கிறது. பெரியவர்கள் படிக்கும் போது மிகச்சிறந்த தத்துவார்த்த நாவலாக மாறிவிடுகிறது.

மியாசாகியின் The Boy and the Heron அனிமேஷன் படத்தை திரையரங்கில் பார்த்த போது Alice in Wonderland கதையே நினைவிற்கு வந்தது. தனது 83வது வயதில் மியாசாகி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்த ஆண்டின் சிறந்த அனிமேஷன் படத்திற்கான ஆஸ்கார் விருது பெற்றிருக்கிறது. இது போன்ற படத்தை திரையரங்கில் பார்ப்பது சிறந்த அனுபவம். சென்னையில் உள்ள திரையரங்கில் நான் காணச்சென்றிருந்த போது அரங்கு நிறைந்த கூட்டம்.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மியாசாகி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதுவே அவரது கடைசிப்படம் என்கிறார்கள். அவரது திரைப்பயணத்தில் இந்தப் படம் முக்கியமானது. அவரது வாழ்க்கை வரலாற்றின் சாயல்கள் கொண்டது என்கிறார்கள்.

இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில் மருத்துவமனை ஒன்றில் ஏற்படும் தீ விபத்தில் மஹிதோ என்ற சிறுவன் தனது தாயை இழக்கிறான். அவனது தந்தை ஷோய்ச்சி ஜப்பான் ராணுவத்திற்கான போர்விமானங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்துகிறார். மனைவியை இழந்த ஷோய்ச்சி நட்சுகோ என்ற இளம்பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார். அவள் மஹிதோ அம்மாவின் தங்கை.

சிற்றன்னையுடன் வாழ்வதற்காக டோக்கியாவோலிருந்து மஹிதோ ஒரு கிராமத்திற்குப் புறப்படுகிறான். அவனது பயணத்திலிருந்தே படம் துவங்குகிறது. சித்தி அவனை வரவேற்று வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போகிறாள். பயண அசதியில் வீட்டிற்கு வந்தவுடன் உறங்கிவிடுகிறான். கனவில் அம்மா நெருப்பில் எரியும் காட்சி வருகிறது. திடுக்கிட்டு எழுந்து கொள்கிறான்.

அவன் கிராமத்திலுள்ள வீட்டிற்கு வரும் போது வழியில் ஒரு நாரையைக் காணுகிறான். அந்தச் சாம்பல் நிற நாரை அவனது ஜன்னலைத் தட்டி எதையோ சொல்ல முற்படுகிறது. அவன் தனியே இருக்கும் நேரங்களில் அவன் கண்ணில் படுவது போலப் பறக்கிறது. அந்த நாரையைக் காணுவதற்காக வீட்டின் வெளியே செல்கிறான் மஹிதோ

. நாரை எதற்காகத் தன்னைச் சுற்றி வருகிறது என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை

கர்ப்பிணியாக உள்ள அவனது சிற்றன்னை நட்சுகோ அவன் மீது அன்பு செலுத்துகிறாள். பணியாளர்களாக அந்த வீட்டிலிருக்கும் முதியவர்களின் தோற்றமும் செயலும் வியப்பளிக்கிறது.

வீட்டின் அருகிலுள்ள இடிந்த கோபுரம் ஒன்றிற்குள் நாரை போய்விட்டதைக் காணும் மஹிதோ அதற்குள் செல்லுகிறான். கைவிடப்பட்ட நிலையிலுள்ள அந்தக் கோபுரத்தைப் பற்றிப் பணியாளர்கள் அச்சமூட்டும் கதையைச் சொல்கிறார்கள்

அருகிலுள்ள பள்ளியில் மஹிதோ சேர்க்கப்படுகிறான். அங்கே மாணவர்களுடன் நடக்கும் சண்டையில் அவமானப்படுத்தப்படுகிறான். தன்னை அடித்தவனைப் பழிவாங்க வேண்டுமென்று தன்னைத் தானே தாக்கிக் கொள்ளும் மஹிதோ வீட்டில் ஓய்வெடுக்கிறான்.

இந்த நாட்களில் அவனைத்தேடி வரும் நாரை அவனது அம்மா இறந்து போகவில்லை. அவளைக் கண்டுபிடிக்கத் தான் உதவி செய்வதாகச் சொல்கிறது. மஹிதோ பேசும் நாரையைக் கண்டு வியப்படைகிறான். ஆனால் அது சொல்வது உண்மையில்லை என்று வாதிடுகிறான். அந்த நாரை அவனைத் தாக்க முற்படுகிறது. பணியாளர்கள் அவனைத் தேடிவரவே நாரை பறந்து போய்விடுகிறது. ஆத்திரமான மஹிதோ நாரையை வீழ்த்துவதற்காக வில் அம்புகளைச் செய்து வேட்டையாட முயலுகிறான். அவனது அம்பு விசேசமானது. மந்திர சக்தி கொண்டது.

ஒரு நாள் வீட்டிலிருந்த சிற்றன்னையைக் காணவில்லை எனப் பணியாளர்கள் தேடுகிறார்கள். அவளைத் தேடி மஹிதோ கிளம்புகிறான். அவனுடன் கிரிகோ என்ற வயதான பெண்ணும் உடன் வருகிறாள். அவர்கள் இடிந்த கோபுரத்திற்குள் செல்கிறார்கள்.

அந்தப் பயணம் வியப்பூட்டும் இன்னொரு உலகிற்குள் அவர்களை அழைத்துச் சென்றுவிடுகிறது.

கடல் உலகில் நடக்கும் சாகசங்கள். கிளிகளின் படையை வழிநடத்தும் கிளி ராஜா, மற்றும் அவரது ராஜ்ஜியத்திற்குள் நடக்கும் விநோத நிகழ்வுகள். உலகத்தின் பாதுகாவலரைத் தேடிச் சென்று சந்திப்பது. குமிழ் வடிவத்தில் உயிர்கள் பிறப்பதற்காகப் பயணிப்பது எனக் கற்பனையின் உச்சமாக மியாசாகி உருவாக்கியுள்ள உலகம் நம்மைப் பிரமிக்க வைக்கிறது.

பிறப்பு, இறப்பு, உயிர்களின் தோற்றம், வாழ்க்கையின் அர்த்தம் எனத் தத்துவார்த்தமாகவும் படத்தின் சில காட்சிகளை மியாசாகி சித்தரித்துள்ளார்.

அனிமேஷன் படம் என்பது சிறார்களுக்கு மட்டுமானதில்லை. அது மாற்று மெய்மையின் சித்தரிப்பு. இயந்திரமயமாகிப் போன இன்றைய வாழ்க்கைக்கு மாற்றை உருவாக்க விரும்புகிறேன். நாட்டுப்புறக் கதைகளில் வருவது போல நிஜமும் மாயமும் ஒன்று கலந்த கதையைத் தான் எப்போதும் தேர்வு செய்கிறேன். இந்தப் படத்தில் வரும் நாரை படத்தின் ஆரம்பத்தில் ஆச்சரியப்படுத்தும் பறவையாக அறிமுகமாகிறது. பின்பு அது அச்சமூட்டும் பறவையாகிறது. பின்பு அதுவே வேடிக்கை செய்யும் பறவையாக மாறிவிடுகிறது. பார்வையாளரைச் சிரிக்க வைக்க ஒரு கதாபாத்திரத்தை உருவாக்குவதை விடவும் ஒரே கதாபாத்திரம் வேறுவேறு சூழல்களில் வேறுவிதமாக நடந்து கொள்ளச் செய்வதையே விரும்புகிறேன். பள்ளிச்சிறுவனாக அறிமுகமாகும் மஹிதோ இடிந்த கோபுரத்திற்குள் சிற்றனையைத் தேடிச் செல்வதிலிருந்து நாயகனாகிவிடுகிறான். அவனே பின்பு உலகின் மீட்பனாகவும் மாறுகிறது. உலகின் சமநிலை காப்பாற்றப்பட வேண்டும் என்பதையே படம் விளக்குகிறது என்கிறார் மியாசாகி.

மஹிதோ கிராமத்திலிருக்கும் தனது புதிய வீட்டிற்கு வரும் காட்சி மிகவும் அழகானது. பசுமையான மரங்கள். பழங்கால வீடு. வீட்டின் அருகில் குளம், வீட்டின் பின்புறமுள்ள மர்மமான இடிந்த கோபுரம், வீட்டிலுள்ள முதிய பணியாளர்கள். அவர்களின் குறும்புத்தனங்கள் எனக் கிராமப்புற வாழ்க்கை இனிதாகத் துவங்குகிறது. இது போலவே முதியவர்களின் உற்சாகம் மற்றும் ஆசைகள். கிளிகளின் அணிவகுப்பு மற்றும் கடல் வேட்டை காட்சிகள் அபாரமானவை.

படம் துவங்கும் போது தாயை இழந்த சிறுவனுக்குப் புதிய வாழ்க்கை ஆரம்பிக்கப் போவதாக நாமும் நம்புகிறோம். ஆனால் சிற்றன்னையைத் தேடிச் செல்வதிலிருந்து கதையின் போக்கு மாறிவிடுகிறது. தொடர் சாகசங்களால் ஆலீஸ் உருமாறுவது போல அவனும் மாறிக் கொண்டேயிருக்கிறான். முடிவில் தான் யார். தன் வாழ்விற்கு என்ன அர்த்தமிருக்கிறது. தான் செய்ய வேண்டிய கடமைகள் என்ன என்பதை மஹிதோ அறிந்து கொள்கிறான்.

ஜப்பானிய மரபில் நாரைகள் மரணம் மற்றும் இறுதிச் சடங்குகளுடன் தொடர்புடையவை. வெள்ளை நாரை நடனம் என ஒரு நடனச்சடங்கு ஜப்பானில் இன்றும் நிகழ்த்தப்படுகிறது. விண்ணுலகின் தூதுவன் போல அறிமுகமாகும் நாரை மெல்லத் தந்திரத்தின் அடையாளமாக மாறுகிறது. ஒரு காட்சியில் இந்த வாழ்க்கை நாங்கள் விரும்பி பெற்றதில்லை என்கிறது ஒரு பறவை.

இயற்கையின் பேரியக்கத்தையும் அதன் சமநிலையைப் பேணுவதற்காக மனிதர்கள் எடுக்க வேண்டிய முயற்சியினையும் மியாசாகி அழகாக வெளிப்படுத்துகிறார். மஹிதோவின் பயணம் என்பது இன்று நாம் இழந்துவிட்ட, மறந்துவிட்ட வாழ்க்கையைப் பற்றிய நினைவூட்டலாகும். கையால் வரையப்பட்ட ஓவியங்களைக் கொண்டு நம்மை அற்புத உலகிற்குள் அழைத்துச் செல்கிறார் மியாசாகி. அந்த வகையில் இது பிரமிக்க வைக்கும் திரைப்படமாகும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 26, 2024 06:25

தவற விட்ட மீச்சிறு தருணங்கள்

துணையெழுத்து- வாசிப்பனுபவம்

– கோபி சரபோஜி

எஸ். ராமகிருஷ்ணன் ஆனந்த விகடனில் தொடராக எழுதிய சமயத்தில் வாசித்தேன். அதன் பின் நூல் வடிவில் பல தடவை வாசித்தாயிற்று. சமீபத்தில் செய்திருந்த அறுவை சிகிச்சை முழு ஓய்வைத் தந்து கொண்டிருக்கிறது. அந்த நாட்களை நகர்த்தவும், வலியின் வேதனையைக் குறைக்கவும் வாசிப்பே ஆறுதலாய் இருக்கிறது. உறவினர்களும், நண்பர்களும் நலம் விசாரிக்க வந்து போவதைக் கண்ட போது துணை எழுத்தை வாசிக்கலாம் எனத் தோன்றியது. வாசிக்கும் ஒவ்வொரு முறையும் என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், பார்க்கும் மனிதர்கள் குறித்து அது புதிய கண்ணோட்டத்தைத் தந்து கொண்டே இருக்கும். எனக்கு மட்டுமல்ல வாசித்த ஒவ்வொருவரும் இதை உணர்ந்திருக்க முடியும்.

இந்தச் சமூகத்தை எப்பொழுதுமே அலட்சியமாக, சுயநலமாகப் பார்க்கப் பழகி விட்டோம். அந்தப் பழக்கம் வழக்கமாகி நம்முடைய வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து விட்டது. ஆனால், எஸ். ரா.வின் பார்வையின் வழியே கசியும் எழுத்து ஒவ்வொரு முறையும் நம்மை அந்தப் பிணைப்பில் இருந்து மீட்டுக் கொண்டே இருக்கிறது. அவர் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை, பார்க்கு இடங்களை, சந்திக்கும் மனிதர்களை, அவர்களின் துயரங்களை, வாழ்வியலை, அறத்தை, இயல்பை அணுகும் விதத்தில் நம்மை வேறு ஒரு மனவெளிக்குக் கொண்டு வந்து நிறுத்தும் போது நம் தோல்வியை மறுக்க முடியவில்லை.

இந்தத் தொகுப்பில் இருக்கும் பலவித கட்டுரைகளுக்கான சம்பவங்களை என் பால்யத்தில் கண்டிருக்கிறேன். காணாமல் போவது எப்படி? உள்ளிட்ட சிலவற்றிக்குச் சாட்சியாக இருந்திருக்கிறேன். ஆனால், அவைகளை அந்த வயதில் நான் கண்டு இரசித்த விதமும், எஸ்.ரா. கண்டு உணர்ந்த விதமும் மலைக்கும், மடுவுக்குமானதாக இருக்கிறது. அதனால் தானோ என்னவோ எதையும் மீட்டுருவாக்கம் செய்யும் படைப்பாளியாக அவரால் எப்பொழுதும் நம்மோடு பயணிக்க முடிகிறது என்று நினைக்கிறேன்.

ஒரு வீட்டிற்குள் நடக்கும் அந்தரங்கமான புரிதலின்மை, விரிசல்கள், நீர்த்துப் போன விருந்தோம்பல், மனிதர்களின் மனப்புழுக்கங்கள், எதிர்பார்ப்புகள், பெண்கள் படும் துயரங்கள், சாதிய நிலைகள், அறிந்தும் அறியாது கடந்து போன நம் அக்ரோஷ முகங்கள், கலைகளின் நசிவு, நினைக்க மறந்த படைப்பாளிகளின் நினை கூரல்கள், நண்பர்களின் ஸ்பரிசம், உறோடுடனான உறவு, இலக்கியங்கள் என வாழ்வின் நான்கு திசைக மனிதர்களையும், சம்பவங்களையும் ஓரிழையாக்கி ”இப்படி இருக்கிறோமே” என ஆதங்கமாய்ச் சொல்லி விட்டு ”இப்படி இருந்திருக்கலாமே” என அன்பின் பால் நம்மைத் திசை திருப்புகிறார். சக மனிதனிலிருந்து விலகிப் அதன் எல்லைகளை நாம் எட்டி விட்ட நிலையில் சகமனிதன் மீதான பார்வைகளை மாற்றிப் போட வைத்து விடுகிறார்.

பெரும் வன்முறை ஒன்று நிகழும் இடத்தில் கூட அதன் பின் அலைந்து திரியும் மனிதத் துயரங்களை நமக்குக் காட்டுகிறார். புத்தகங்களுடனான நெருக்கமும், வாசிப்பும் ஒரு மனிதனை எப்படியெல்லாம் அலைந்து திரிய வைக்கும் என்பதை வாசித்த போது தேசாந்திரியாய் அவர் இன்று எடுத்திருக்கும் அவதாரத்தின் ஆரம்ப வித்துப் புரிகிறது. மனித துயரங்களை மட்டுமல்ல தான் பார்க்கும் அனைத்தையுமே அதே கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறார். “கூழாங்கல்லின் குளிர்ச்சியை, அழகை உணரத் தெரிந்த நமக்கு அது தண்ணீருக்குள் அடைந்த வேதனையை மட்டும் ஏனோ பார்க்கத் தெரியாமல் போகிறது” என்ற வரிகள் எஸ். ரா.வின் உள்ளக்கிடக்கையைச் சொல்லி விடுகிறது.

வாழ்வை நேசித்தல் குறித்தும், இழப்புகள் குறித்த ஆதங்கம் பற்றியும், நன்றியுணர்வு சார்ந்தும், வாழ்தலின் அர்த்தம் காட்டியும் அவர் எழுதியிருக்கும் கட்டுரைகள் வாழ்தலின் மீதான பிடிப்பைத் தருகிறது. “மனுசன் மட்டும் தான் ஒவ்வொன்னுக்கும் கணக்குப் பார்த்துகிட்டு” என்ற ஒற்றை வரி சொல்லி விடுகிறது நம் இன்றைய வாழ்வின் லட்சணத்தை! ஒவ்வொரு கட்டுரைகளின் வழியாகவும் இமயமலையைக் கடத்தல் போன்ற அசாத்திய வாழ்வியலில் காணத் தவறி விட்ட மீச்சிறு தருணங்களைக் குருவிகளைப் போலக் கடந்து நமக்கு மீட்டுத் தருகிறார்.

துணையெழுத்து வழியாக நான் என் வாழ்வை அவிழ்த்து பார்த்துக் கொண்டேன் என எஸ்.ரா. குறிப்பிடுகிறார். அவர் மட்டுமல்ல. வாசிக்கின்ற நாம் ஒவ்வொருவரும் தான்!

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 26, 2024 04:24

May 23, 2024

அன்பின் வடிவம்.

இரா.ராஜசேகர்

தங்களின் மண்டியிடுங்கள் தந்தையே என்ற நாவலை படித்தேன். ஒரு சிறந்த நாவலை படித்ததில் பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

இந்நாவலை படிக்கும்பொழுது ரஷ்யாவில் வாழ்ந்தது போல உணர்ந்தேன். லியோடால்ஸ்டாய் தவறுகளைச் செய்யும் ஒரு சாதாரண மனிதராகவும் சக மனிதனை நேசிக்கும் ஒரு புனிதராகவும் என் கண் முன்னே நிற்கிறார்.

சோபியா தன் கணவனுக்கும் அவன் காதலிக்கும் நடுவே பாசப் போராளியாக நிமிர்ந்து நிற்கிறாள். அக்ஸின்யா தன் மகனுக்கும் காதலனுக்கும் நடுவே உரிமையில்லாத காதலியாக மகனே உலகம் எனும் அவலத் தாயாகப் புதைந்து கிடக்கிறாள்.

சோபியாவிற்கும் அக்ஸின்யாவிற்கும் இடையேயான உறவு அதிகார வர்க்கத்திற்கும் பாட்டாளி மக்களுக்குமான பெரும் இடைவெளியாக இருக்கிறது.

திமோஃபி தன் தந்தையின் பாசத்திற்கு ஏங்கும் உரிமை கோராத மகனாக மனதில் தங்கிவிடுகிறார். முட்டாள் டிமிட்ரி நமக்கு முட்டாள் இவானை நினைவுபடுத்துகிறார். அதிகாரம் ஒரு நன்மையையும் மக்களுக்குச் செய்யாது செய்பவனையும் விடாது என்பது எனக்குப் பிடித்தமான பதிவு.

மண்டியிடுங்கள் தந்தையே என்று நினைத்தவனை அவன் தாயின் முன் மண்டியிடச்செய்தது அழுத்தம்.

தங்களின் கலைப் பயணம் தொடர வாழ்த்துக்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 23, 2024 06:27

May 22, 2024

பசித்தவன்

எட்வர்ட் மன்ச் வரைந்த The Scream என்ற ஓவியத்தைக் காணும் போதெல்லாம் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான நட் ஹாம்சனின் பசி நாவலே நினைவிற்கு வருகிறது. ஒன்று, பசியால் துரத்தப்படும் எழுத்தாளனின் ஓலம். மற்றொன்று நகரவாழ்வின் நெருக்கடி உருவாக்கிய அலறல். மன்ச்சின் ஓவியத்திலிருப்பவன் தான் ஹாம்சன் நாவலில் எழுத்தாளனாக வருகிறான் என்றே நினைத்துக் கொள்கிறேன்.

The Scream

நட் ஹாம்சனின் பசி நாவல் 1890 இல் வெளியானது. இளம் எழுத்தாளனின் வாழ்க்கை போராட்டத்தை விவரிக்கும் இந்த நாவல் திரைப்படமாகவும் வந்துள்ளது.

நாவல் கிறிஸ்டியானியா நகரில் நடக்கிறது (இப்போது அந்த நகரின் பெயர் ஒஸ்லோ) நாவலில் கதாநாயகனுக்குப் பெயரில்லை. அவன் ஒரு அடையாளம் மட்டுமே. கிறிஸ்டியானியா என்ற நகரில் வசித்தவர்கள் அதன் நினைவுகளிலிருந்து விடுபட முடியாது. அதிசயமான நகரமது என்கிறார் ஹாம்சன்

எழுத்தாளனின் கடந்தகாலம் பற்றி நாவலில் அதிகமில்லை. அவனது நிகழ்காலமும் அவனைத் துரத்தும் பசியும் தான் நாவலாக விரிவு கொள்கின்றன. கிறிஸ்டியானியா நகரம் நாவலில் விரிவாகச் சித்தரிக்கப்படுகிறது. .

ஹாம்சனின் முன்னோர்கள் நார்வே நாட்டு விவசாயிகளாக இருந்தனர். அந்தப் பின்புலத்தைக் கொண்டே நிலவளம் நாவலை எழுதியிருக்கிறார். பசி நாவலின் நாயகன் போலவே ஹாம்சனும் அலைந்து திரியும் வாழ்க்கையைக் கொண்டிருந்தார். செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் பயிற்சி பெற்ற அவர், தனது சிறிய சேமிப்பைப் பயன்படுத்தி, தனது பதினெட்டாவது வயதில் சிறுநூல் ஒன்றைத் தானே வெளியிட்டார். அது இலக்கிய உலகில் கவனம் பெறவில்லை. பள்ளி ஆசிரியர், சாலைப்பணியாளர், சர்வேயர், கார் ஓட்டுநர், நிலக்கரி சுரங்கத்தில் வேலை எனப் பல்வேறு வேலைகளைச் செய்திருக்கிறார் ஹாம்சன்.

இந்த நாவல் முழுவதும் பசி எழுத்தாளனைத் துரத்திக் கொண்டேயிருக்கிறது. அவனை அவமானப்படுத்துகிறது. பொய் சொல்ல வைக்கிறது. எச்சிலை உணவாக விழுங்கி வாழச் செய்கிறது. பசியின் உச்சத்தில் அவன் வாந்தியெடுக்கிறான். தனது கைவிரல்களைத் தின்றுவிடலாமா என யோசிக்கிறான். கடித்துப் பார்க்கிறான். தீராப்பசியில் பித்தேறியவன் போல நடந்து கொள்கிறான்.

சிறிய அறை ஒன்றில் வசிக்கும் எழுத்தாளனின் குரலிலே நாவல் துவங்குகிறது. அவன் வேலை தேடுகிறான். தொடர்ந்த நிராகரிப்புகள், அரைகுறை வாக்குறுதிகள், ,ஏமாற்றப்பட்ட நம்பிக்கைகள் கொண்டதாக நீள்கின்றன அவனது நாட்கள். .ஏதேனும் அதிர்ஷ்டம் நடந்துவிடாதா என்று ஏங்குகிறான். நிச்சயம் நான் வெற்றி அடைவேன் என்று தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறான்.

அவனது பாக்கெட்டில் எப்போதும் ஓரு பேப்பரும் பேனாவும் இருக்கின்றன. புதிதாக யோசனை வந்தால் உடனே எழுதி வைத்துக் கொள்வான். எங்கே செல்வது எனத் தெரியாமல் இலக்கில்லாமல் கிறிஸ்டியானியாவின் தெருக்களில் அலைந்து திரிகிறான்.

வழியில் தெரிந்தவர் தென்படுகிறார். எங்கே அவன் கடன் கேட்டுவிடுவானோ என நினைத்து விலகிப் போகிறார். தனது மேல்கோட்டை அடகு வைத்து ரொட்டி வாங்குகிறான். பசியை அவனால் வெல்ல முடியவில்லை. ஆனாலும் அவனிடம் விளையாட்டுத்தனமிருக்கிறது. பொய் சொல்லி ஒருவரை நம்ப வைக்க முடிகிறது. பகற்கனவுகள் காண முடிகிறது.

இரவு எங்கே தங்குவது. நாளை என்ன செய்வது என்று தெரியாத நிலையிலும் அவன் சாலையில் செல்லும் அழகிகளை ரசிக்கிறான். அவர்களுடன் உரையாடுகிறான். அந்தப் பெண்கள் போதையில் இருப்பவனாக அவனை நினைத்துக் கொள்கிறார்கள்.

கையில் காசில்லாத அவனிடம் ஒருவன் ஐந்து ஷில்லாங் கடன் கேட்கிறான். அந்த நிலையை நினைத்து வியந்து கொள்கிறான். அவனது வயிறு பட்டினி கிடப்பதால் மூளை பட்டினி கிடப்பதில்லை. அது எதை எதையோ யோசிக்க வைக்கிறது. கிறுக்குத்தனங்களைச் செய்ய வைக்கிறது.

வாழ்க்கை நெருக்கடிகள் ஒருவனை முடக்கும் போது அவன் சமரசம் செய்து கொள்வதே உலக நியதி. ஆனால் இந்த நாவலின் நாயகன் அப்படிச் சமரசம் செய்து கொள்வதில்லை. எழுத்தாளாராக வேண்டும் என்று அவன் விரும்பினால் மட்டும் எழுத்தாளனாகி விட முடியாது. அதற்கான சந்தர்ப்ப சூழல் உருவாக வேண்டும். வாழ்க்கை எதையும் எளிதாக அனுமதித்துவிடுவதில்லை என்பதை அவன் நன்றாக உணர்ந்திருக்கிறான். ஆகவே காயங்களை விரும்பி ஏற்றுக் கொள்கிறான். கடந்து செல்கிறான்.

இந்த நாவலோடு ஆல்பெர் காம்யூவின் The Fall மற்றும் சீர்ஷேந்து முகோபாத்யாயவின் கரையான் நாவலையும் தொடர்ச்சியாக வாசிக்க வேண்டும். நகர்ப்புற வாழ்வின் அந்நியமாதலையே இந்த மூன்று நாவல்களும் பேசுகின்றன. .

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 22, 2024 06:25

May 21, 2024

தாராசங்கர் ஆவணப்படம்

சாகித்ய அகாதமி சார்பில் தயாரிக்கப்பட்ட எழுத்தாளர்களின் ஆவணப்படங்கள் இணையத்தில் காணக்கிடைக்கின்றன.

இன்று வங்காள எழுத்தாளர் தாராசங்கர் பந்தோபாத்யாய் பற்றிய ஆவணப்படத்தைப் பார்த்தேன்.

அவரது ஆரோக்கிய நிகேதனம். கவி போன்ற நாவல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.

தாராசங்கர் 65 நாவல்கள் எழுதியிருக்கிறார். இதில் பல திரைப்படமாக வெளியாகியுள்ளன. அவரே ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார். ராஜ்யசபாவின் நியமன எம்பியாகப் பணியாற்றியிருக்கிறார்.

தாராசங்கர் பந்தோபாத்யாயின் இல்லம் பிர்பூம் மாவட்டத்தின் லாப்பூரில் அமைந்துள்ளது. தாராசங்கரின் வீடு இன்று அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.

தாராசங்கர் பந்தோபாத்யாய் ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்தவர். ஜல்சாகர் என்ற அவரது சிறுகதையைத் தான் சத்யஜித்ரே திரைப்படமாக உருவாக்கினார். ஜல்சாகர் திரைப்படம் வங்காளத்தில் வசித்த பிஸ்வம்பர் ராய் என்ற நலிந்த ஜமீன்தாரின் இசை ஆர்வத்தையும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்ட போதும் குடும்பக் கௌரவத்தை நிலைநிறுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளையும் சித்தரிக்கிறது. இந்திய சினிமாவின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக இதனைக் கருதுகிறேன்.

தாராசங்கர் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றிருக்கிறார். அவரது காலத்துப் பத்திரிக்கையுலகம், அன்றைய அரசியல் சூழ்நிலை, வங்கப்பஞ்சம், பாரம்பரியத்துடன் நவீனத்துவத்தின் மோதல், தாராசங்கரின் ஓவியத்திறமை போன்றவையும் இந்த ஆவணப்படத்தில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 21, 2024 05:48

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.