S. Ramakrishnan's Blog, page 35
April 16, 2024
இரண்டாவது நிழல்
புதிய சிறுகதை
என் பெயர் ராமசேஷன். இதே தலைப்பில் எழுத்தாளர் ஆதவன் நாவல் எழுதியிருப்பதை அறிவேன். எனது கல்லூரி நாட்களில் நான் ஆதவனை விரும்பிப் படித்திருக்கிறேன்.

எனக்கு இந்தப் பெயரை வைத்த என்னுடைய தந்தை ஆதவனைப் படித்ததில்லை. தாத்தாவின் பெயர் என்பதால் எனக்கு வைத்துவிட்டார்.
சொல்லப் போனால் நானும் ஆதவன் போலவே நடுத்தரவயது கொண்ட, விருப்பமில்லாத அரசுத்துறை ஒன்றில் பணியாற்றுகிறவன்.
எனக்குச் சில புத்திசாலித்தனமான கிறுக்குத்தனங்கள் உண்டு. அதில் ஒன்று நானாக எதையும் கற்பனை செய்து கொள்வது. ரோட்டில் ஆம்புலன்ஸ் போகிற சப்தம் கேட்டால் அதில் யார் போகிறார் என்று நானே கற்பனை செய்து கொள்வேன். பக்கத்துவீடு பூட்டப்பட்டிருந்தால் என்ன காரணமாக இருக்கும் என்று கற்பனை செய்வேன்.
இப்படி நிஜத்தை எதிர்கொள்வதை விடவும் கற்பனையில் சஞ்சரிப்பது எனக்கு பிடித்தமானது. இதனை உலகம் முட்டாள்தனம் என்கிறது. மனைவியும் பிள்ளைகளும் கூட அப்படியே நினைக்கிறார்கள். எல்லா முட்டாள்தனங்களையும் நாம் கைவிட்டுவிட முடியாது. சில முட்டாள்தனங்கள் தேவைப்படுகின்றன. சந்தோஷம் தருகின்றன.
இந்த நகரம் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு விநோதமானது. இங்கு நடக்கும் குற்றங்களும் அப்படியானதே. சிறியதோ, பெரியதோ குற்றம் நடக்காத நாளேயில்லை. அதில் முதன்மையானது திருட்டு. விதவிதமான திருட்டுகள். விதவிதமான திருடர்கள். நிறையத் திருட்டுகள் வெளியே பேசப்படுவதேயில்லை. புகார் அளிக்கபடுவதில்லை. தண்டிக்கப்படாத குற்றவாளிகள் பெருகிய இடம் நகரம்.
சாலையோரம் நிறுத்திவைக்கபட்டிருந்த ரோடு ரோலரை யாரோ திருடிக் கொண்டு போய்விட்டதாக நேற்று தொலைக்காட்சிச் செய்தியில் சொன்னார்கள், ரோடு ரோலரை எப்படி யாரும் அறியாமல் திருடிக் கொண்டு போக முடியும். அதைத் திருடி என்ன செய்வார்கள். யாரிடம் விற்பார்கள். ஆனாலும் ரோடுரோலர் திருடன் இருக்கத்தான் செய்கிறான்.
நான் சொல்லப் போவதும் ஒரு திருடனைப் பற்றியது தான்.
அவனைக் கடந்த இரண்டு வாரங்களாகப் பின்தொடர்ந்து வருகிறேன். பின்தொடர்ந்து வருகிறேன் என்றதும் என்னைத் துப்பறியும் நிபுணர் என்று நினைத்துவிடாதீர்கள். அவனைப் பற்றிய செய்திகளைப் பின்தொடருகிறேன். சில நேரங்களில் அவன் சென்ற இடங்களுக்குப் போய் வருகிறேன். சில இடங்களுக்கு அவன் வரக் கூடும் என்று சென்றிருக்கிறேன். அந்த வகையில் நான் திருடனின் இரண்டாவது நிழல்.
•••
இரண்டு வாரங்களுக்கு முன்பாக எனக்குத் தெரிந்த ஈ.என்.டி டாக்டர் பழனியப்பன் இறந்து போய்விட்டார். எங்கள் பகுதியில் இருந்த ஒரே ஈ.என்.டி கிளினிக் அவருடையது.
இடதுகாதில் ஏற்பட்ட வலிக்காக அவரிடம் சென்றிருக்கிறேன். இரண்டு முறையும் அவர் நான் எங்கே வசிக்கிறேன், என்ன சினிமா பார்த்தேன் என்பதைப் பற்றியே கேட்டுக் கொண்டிருந்தார். அதை விடவும் என்னைப் பரிசோதனை செய்தபடியே அவர் இரண்டுமூன்று ஜோக்குகளைச் சொன்னார். அவற்றுக்கு என்னால் சிரிக்க முடியவில்லை. ஆனால் ஒரு டாக்டர் இப்படி ஜோக் அடிப்பது பிடித்திருந்தது.
காதில் விட்டுக் கொள்ளச் சொட்டு மருந்தும் ஒரு வார காலத்திற்கு மாத்திரைகளும் எழுதிக் கொடுத்தார். சில நாட்களில் எனது காதுவலி சரியாகிவிட்டது. எங்கள் பகுதியில் அவரைக் கைராசியான டாக்டர் என்றார்கள்.
அவ்வளவு கைராசியான டாக்டர் ஏன் இவ்வளவு சிறிய இடத்தில் மருத்துவமனை நடத்துகிறார் என்று எனக்குப் புரியவில்லை. இரண்டாவது முறை அவரிடம் சென்ற போது டாக்டர் மருத்துவமனையில் இல்லை. மெல்லிசை குழு ஒன்றில் அவர் டிஎம்எஸ் குரலில் பாடக்கூடியவர் என்பதால் கச்சேரிக்குப் போய்விட்டார் என்றார்கள்.
டாக்டர் எப்போது வருவார் என்று தெரியாமல் நிறைய நோயாளிகள் காத்திருந்தார்கள். நானும் அந்த வரிசையில் காத்திருந்தேன். டாக்டர் இரவு பத்து மணிக்கு வந்தார். அன்றைக்கு டாக்டர் மிகவும் உற்சாகமாக இருந்தார். என்ன படம் பார்த்தீர்கள் என்று வழக்கம் போலவே கேட்டார். புதிதாக ஜோக் அடித்தார். பின்பு “அன்புள்ள மான்விழியே“ பாடலை முணுமுணுத்தபடியே ஜெய்சங்கர் படம் என்றார். அது தான் அவரைக் கடைசியாகப் பார்த்தது.
நான் வாசித்த பகுதியில் பழனியப்பனுக்குச் செல்வாக்கு இருந்தது என்பதால் வீதியெங்கும் அஞ்சலி சுவரொட்டிகளை ஒட்டியிருந்தார்கள். அதில் கையில் மைக்குடன் டாக்டர் நின்றிருந்தார்.

டாக்டரின் வீடு எங்கேயிருக்கிறது என்பதை விசாரித்துச் சென்றபோது மண்டிஹவுஸ் என்று நாங்கள் அழைத்த பெரிய வீடு அவருடையது என்பதைத் தெரிந்து கொண்டேன். நிறைய மாமரங்கள் கொண்ட அந்தப் பங்களா மினர்வா தியேட்டர் நோக்கி திரும்பும் சாலையில் இருந்தது.
அந்தப் பங்களாவை இடித்துவிட்டு ஷாப்பிங் மால் கட்டப்போகிறார்கள் என்று பலகாலமாகப் பேசிக் கொண்டார்கள். ஒருவேளை இனிமேல் அப்படி நடக்குமோ என்னவோ.
இளமஞ்சள் நிறத்தில் இரண்டு பெரிய தூண்கள் கொண்ட டாக்டர் வீட்டின் நுழைவாசலை ஒட்டி பத்து பதினைந்து பிளாஸ்டிக் சேர்களைப் போட்டு வைத்திருந்தார்கள். அதில் ஒரு நாற்காலியின் கால் உடைந்து போயிருந்தது. கைப்பிடியில் எறும்புகள் ஊர்ந்து கொண்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்த நபர் நியூஸ் பேப்பரை பாதி மடித்த நிலையில் படித்துக் கொண்டிருந்தார். வீட்டிற்குள் அழுகை சப்தம் எதுவும் கேட்கவில்லை.
ஒரு கிழவர் பிளாஸ்க் ஒன்றினை கையில் எடுத்துக் கொண்டு டீ வாங்குவதற்காக வெளியே போய்க் கொண்டிருந்தார். யாரோ அவசரத்தில் ஒரு செருப்பை வீசி எறிந்து போயிருந்தார்கள். அது ஹோண்டா பைக் அடியில் கிடப்பது தெரிந்தது.
வீட்டின் ஹாலில் டாக்டரின் உடல் கண்ணாடி பெட்டிக்குள் வைக்கபட்டிருந்தது. ரோஜாப்பூ மாலை அணிவித்திருந்தார்கள். இறந்தவர் சபாரி சூட் அணிந்து அப்போது தான் பார்க்கிறேன். ஏன் அந்த உடையை அணிவித்தார்கள் என்று புரியவில்லை. டாக்டர் எங்கோ பயணம் புறப்படுகிறவர் போலிருந்தார்.
சரி தான், மரணமும் ஒரு வகைப் பயணம் தானே என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன். யாரிடம் துக்கம் விசாரிப்பது என்று தெரியவில்லை. சாவு வீடு என்றவுடன் மனதில் எழுவது செவ்வந்திப்பூக்களும் ஊதுபத்திவாசனையும் தான். ஆனால் டாக்டர் வீட்டில் அப்படி ஊதுபத்தி வாசனை வரவில்லை.
கண்ணுக்குத் தெரியாத ஈரம் சாவுவீடு முழுவதும் பரவி யாவரின் உடையினையும் நெகிழச் செய்திருந்தது. தளர்வான உடைகள் சோகத்தை அதிகப்படுத்துகின்றன.
அங்கிருந்த பெண்களில் டாக்டரின் மனைவி யார் என்று தெரியவில்லை. நாலைந்து பெண்கள் சுவரோரம் அமர்ந்திருந்தார்கள். சுடிதார் அணிந்த ஒரு பெண் தூக்கம் கலையாத கண்களுடன் நின்று கொண்டிருந்தாள். சாவு வீட்டில் பெண்களின் தோற்றம் விநோதமாகி விடுகிறது. அதிகப்படியான சோகம் கொண்டவர்களாகக் காணப்படுவது ஏன் என்பதை யோசித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது தான் வீட்டில் சிறுவர்களே இல்லை என்பது புரிந்தது. ஒருவேளை மாடியில் விளையாடிக் கொண்டிருப்பார்களோ. திண்டுக்கல்லில் கணபதி மாமா இறந்த போது தானும் அக்காவும் பக்கத்துவீட்டில் இருந்த பையன்களுடன் கேரம் ஆடியது நினைவில் வந்து போனது.
எவ்வளவு நேரம் இறந்த உடலை பார்த்துக் கொண்டே நிற்பது என்று புரியாமல் நின்று கொண்டிருந்தேன். சாவு வீட்டில் தெரிந்தவர், தெரியாதவர் என்று பேதமில்லை. யாரைப் பார்த்து சிரிக்கவும் முடியாது. கொட்டாவி விட முடியாது. டாக்டருக்கு தெரிந்த சினிமா நடிகர் ஒருவர் நாலைந்து ஆட்களுடன் வந்து மாலை அணிவித்தார். பிரேமா எங்கே என ஒருவர் கேட்டுக் கொண்டிருந்தார். யார் பிரேமா என்று தெரியவில்லை.
அமைதியாக வெளியே வந்து பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்து கொண்டேன். பக்கத்தில் அமர்ந்திருப்பவரும் டாக்டரிடம் வந்து போன நோயாளி தானா. எப்படிக் கேட்பது என்று புரியவில்லை.
டாக்டரின் சொந்த ஊர் விருத்தாசலம் என்று பேசிக் கொண்டார்கள். அவர் மனைவி ரெஜினா மகப்பேறு மருத்துவர். விக்டோரியா ஹாஸ்பிடலில் வேலை செய்கிறார். மினர்வா தியேட்டர் டாக்டரின் அப்பா கட்டியது, அவர் அந்தக் காலத்தில் நிறைய ரேஸ் குதிரைகள் வைத்திருந்தார் என நிறையப் புதிய தகவல்களைத் தெரிந்து கொண்டேன்.
டாக்டர் உயிரோடு இருக்கும் போது இதில் ஒன்றை பற்றிக் கூட நான் கேள்விபட்டதில்லை. அறிந்து கொள்ள வேண்டும் ஆர்வமும் எனக்கில்லை. அது ஏன் என்றும் புரியவில்லை.
எனது நாற்காலியை நோக்கி இரண்டு கட்டெறும்புகள் வேகமாக வந்து கொண்டிருந்தன. வெயிலில் ஊரும் எறும்புகள் பித்தேறியது போல நடந்து கொள்கின்றன.
ஒரு வேன் நிறைய ஆட்கள் விருத்தாசலத்திலிருந்து வந்திருந்தார்கள். அவர்கள் ஒரே இடத்தில் செருப்பைக் கழட்டிவிட்டது வியப்பளித்தது. ஆட்டோவிலும், பைக்கிலும் கையில் மாலையோடு ஆட்கள் வந்தபடியே இருந்தார்கள்.
வெயில் ஏற ஏற சாவு வீட்டின் துக்கம் வடிந்துவருவதை உணர்ந்தேன். வெக்கை தாளமுடியால் கசகசப்பும் வியர்வையுமாக ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். ஒருவர் துண்டுபேப்பர் ஒன்றை விசிறி போல வீசிக் கொண்டிருந்தார். அவர் முகத்திற்கே அந்தக் காற்று போதவில்லை.
வீட்டிற்குப் போகலாம் என நான் கிளம்பி வெளியே வரும் போது சிவப்பு நிற உடை அணிந்த பேண்ட் வாசிப்பவர்கள் டாக்டர் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். வீடு திரும்பி வந்த போது டாக்டரைப் போலச் சினிமா பாட்டு பாட வேண்டும் என்ற ஆசை எழுந்தது.
குளியல் அறையில் நான் அன்புள்ள மான்விழியே பாடுவதைக் கேட்டு எனது மனைவி குழப்பமடைந்தாள்.
••
அடுத்தநாள் காலை நியூஸ் பேப்பரில் வந்திருந்த செய்தியை மாசிலாமணி காட்டினான்
“சாவு வீட்டில் மோதிரம், பைக் திருட்டு“.
அந்தச் செய்தி டாக்டர் பழனியப்பன் பற்றியதே. டாக்டர் கையில் அணிந்திருந்த நவரத்தினக்கல் மோதிரத்தை யாரோ திருடிவிட்டார்கள். அத்தோடு வெளியே நிறுத்தப்பட்டிருந்த யமஹா பைக் ஒன்றையும் காணவில்லை. திருடனை போலீஸ் தேடி வருகிறது என்று செய்தி வெளியாகியிருந்தது
அந்தத் திருடன் எப்போது சாவு வீட்டிற்கு வந்திருப்பான். ஒருவேளை நான் போன போது அவனும் அங்கேயிருந்தானா. டாக்டர் இப்படி ஒரு மோதிரம் அணிந்திருந்தது என் கண்ணில் படவேயில்லையே. அதை எப்படி அவன் திருடியிருப்பான். இப்படி நானாக எதை எதையோ யோசித்துக் கொண்டிருந்தேன். அப்படி நினைப்பது சுவாரஸ்யமாக இருந்தது.
சாவு வீட்டில் திருடுகிற நபர் எப்படியிருப்பான் என மனதிற்குள்ளாக ஒரு சித்திரம் வரைந்து கொண்டிருந்தேன்.
அதன்பின்பு அதே போலச் சாவு வீட்டில் திருடுகிறவனைப் பற்றி நாலைந்து செய்திகளைப் பேப்பரில் படித்துவிட்டேன். அவன் நகரில் எங்கோ வசிக்கிறான். எங்கே சாவு நடந்தாலும் போய்விடுகிறான். துக்கம் கேட்பவர்களில் ஒருவனாக அங்கே இருக்கிறான். விலையுயர்ந்த பொருட்களைத் திருடிக் போகிறான்.
சாவு வீட்டில் ரகசிய காதல் புரிகிறவர் இருக்கும் போது திருடன் இருக்கக் கூடாதா என்ன.
சாவு வீட்டில் திருட்டு நடந்தால் எவரும் உடனே புகார் கொடுக்க மாட்டார்கள் என்று அவன் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறான்.
சாவு வீட்டில் பொருட்கள் அதன் மதிப்பை இழந்துவிடுகின்றன. கடிகாரம் திடீரென மெதுவாகிவிடுகிறது. நடைசப்தம் உரத்துக் கேட்கிறது. துக்கம் கேட்க வருகிற அவசரத்தில் ஒருவர் தனது மூக்கு கண்ணாடியை வீட்டிலே வைத்து மறந்து வந்துவிடுகிறார். செத்துகிடப்பவரின் முகத்தை அவரால் காண முடியவில்லை.
வேறு ஒருவர் டாக்டர் பானிபூரி விரும்பி சாப்பிடுவார் என்று பேசிக் கொண்டிருந்தார். மனிதர்கள் சாவு வீட்டிற்குள் குழப்பமான மனநிலையே கொண்டிருக்கிறார்கள். எதைப்பற்றிப் பேசுவது என்று தெரியாமல் உளறுகிறார்கள். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.
சாவு என்பதே திருட்டு தான். உரிமையாளனுக்குத் தெரியாமல் உயிரை திருடிக் கொண்டு போகும் கள்வன் வந்து போன இடம் தானே சாவு வீடு. என்று தத்துவார்த்தமாக நினைத்துக் கொண்டேன். சாவைப் பற்றி எப்போது யோசித்தாலும் தத்துவம் தானே வந்துவிடுகிறது. தத்துவம் என்ற பழையதுணியை வைத்து பிடிக்காவிட்டால் உண்மையின் சூட்டை தாங்க முடியாதில்லையா.
••
சாவு வீட்டில் திருடுகிறவனை ஒருமுறை நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை எனக்குள் உருவானது.
இதற்காகவே எனக்குப் பழக்கமே இல்லாத இறந்த வீடுகளுக்குப் போய் வரத் துவங்கினேன். அங்கே வந்து போகிறவர்களில் யார் திருடனாக இருப்பான் என்று கவனித்துக் கொண்டேயிருப்பேன்.
சாவு வீடு என்பது திருடுவதற்கு உகந்த சூழல் என்பதால் எவரும் திருடராகி விடுகிறார்களா என்பதும் புரியவில்லை. எல்லாச் சாவு வீட்டிலும் இறந்தவருக்கு உரிய பொருட்களை. பணத்தை, நகையை, சொத்தை உறவினர்களே திருடிக் கொள்கிறார்கள் என்பதை மட்டும் நன்றாக உணர முடிந்தது.
••
சாவு வீட்டில் திருடுகிறவனுக்கு நானாக ஒரு பெயரை வைத்தேன். அவன் பெயர் மர்மன். அவனுக்கு முப்பது வயதிருக்கக் கூடும் என்று வயதையும் உருவாக்கிக் கொண்டேன். அவன் வழக்கமான திருடர்களில் ஒருவனில்லை. அவனுக்கு என்று சில விதிமுறைகள் இருந்தன என நானே அவற்றைப் பட்டியலிட்டேன்.

பூட்டப்பட்டிருந்த எந்த வீட்டிலும் அவன் திருட மாட்டான். இரவில் ஒரு போதும் திருட மாட்டான். இறந்தவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் முறையில் ஒரு போதும் நடந்து கொள்ள மாட்டான். திருடிய வீட்டில் தனது நினைவாகப் பச்சை நிற ஹவாய் செருப்பைக் கழட்டி போட்டுவந்துவிடுவான். (திருடன் ஏன் பச்சை நிற ஹவாய் செருப்பை அணிகிறான் என்ற கேள்வி வராமல் இல்லை).
சாவு வீட்டில் திருடுகிறவன் பற்றிய எனது கற்பனையை அலுவலக நண்பர்களிடம் பகிர்ந்து கொண்ட போது அவற்றை உண்மை என்றே நம்பினார்கள். நாலைந்து பேரிடம் இதைப் பகிர்ந்து கொண்டபிறகு நானே அது உண்மையாக இருக்கக் கூடும் என்று நம்ப ஆரம்பித்தேன்.
திருடனைப் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்காக எனது நண்பனின் தந்தையான ஒய்வு பெற்ற கான்ஸ்டபிள் முத்துமாணிக்கத்தைச் சந்தித்துப் பேசினேன்.
`இது போன்ற திருடர்கள் ஊரை மாற்றிக் கொண்டேயிருப்பார்கள். அந்தத் திருடன் ஒரு நாள் சாவு வீட்டில் வைத்தே பிடிபடுவான் பாருங்கள்“ என்றார்
சாவு நடக்காத ஊரேயில்லை. அவன் எங்கே போனாலும் பிழைத்துக் கொள்வான். அவன் சாவு வீட்டில் வைத்தே பிடிபடுவான் என்பது விதியா, அல்லது சாபமா
அப்படி நடக்கும் போது மக்கள் ஒன்று சேர்ந்து அவனை அடிப்பார்களா. அல்லது அமைதியாகக் காவலர்களிடம் ஒப்படைத்துவிடுவார்களா
சாவு வீட்டில் உறவினர்களுக்குள் சண்டை வந்து பார்த்திருக்கிறேன். கடன்காரன் கூச்சலிடுவதையும், உடலை எடுத்துக் கொண்டு போக முடியாமல் தடுப்பதையும் கூடக் கண்டிருக்கிறேன். ஆனால் ஒரு திருடன் பிடிபட்டு அவனை ஆட்கள் அடித்தார்கள் என்று கேள்விபட்டதேயில்லை.
••
சாவு வீட்டில் திருடுகிறவனைப் பற்றி நியூஸ்சேனலில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பினார்கள்.
அதில் அந்தத் திருடன் சாவு வீடு ஒன்றிலிருந்து தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதோடு முதுகு சொறிய வைத்திருந்த மரக்கை ஒன்றையும் திருடிக் கொண்டு போனான் என்றார்கள். கேட்கும் போது வேடிக்கையாக இருந்தது.
தொடர்ந்து காவல்துறைக்குச் சவால்விடும் அவனைப் பிடிக்கத் தனிப்படை அமைத்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்கள்
தனிப்படை ஒவ்வொரு சாவு வீட்டிற்கும் செல்லுமா, சாவு வீட்டை கேமிராவில் கண்காணிப்பார்களா, அல்லது மாறுவேஷத்தில் இருப்பார்களா. அவர்கள் துக்கம் அனுஷ்டிப்பது போலத் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பது சிரமம் இல்லையா. இப்படி எனக்குள் நிறையச் சந்தேகங்கள் எழுந்தன. ஆனால் அந்தத் தனிப்படையில் நானும் ஒருவனாக வேலை செய்ய ஆசைப்பட்டேன்.
••
சாவு வீட்டில் திருடுகிறவனைப் பற்றிய புதிய செய்தி ஏதேனும் வெளியாகிறதா என்பதை அறிந்து கொள்வதற்காக எல்லா நாளிதழ்களையும் வாசித்தேன்.
நண்பர்களுடன் உரையாடும் போது வேண்டும் என்றே திருடனைப் பற்றிய பேச்சை எடுப்பேன். அநேகமாக எல்லோருக்கும் சாவு வீட்டில் திருட்டு போன கதை ஒன்று தெரிந்திருக்கிறது. அதைப் பற்றிச் சொல்லும் போது மகிழ்ச்சி அடைகிறார்கள். அதிலும் ஞானதிரவியம் சொன்ன நிகழ்ச்சி தான் நம்ப முடியாதது போலிருந்தது.
ராயபுரத்தில் அந்தத் திருடன் இறந்தவரின் அஸ்தி வைத்திருந்த கலசத்தைத் திருடிக் கொண்டு போய்விட்டான். அஸ்தியை மட்டும் தந்துவிடும்படி வீட்டோர் பேப்பரில் விளம்பரம் கொடுத்தார்களாம். ஞானதிரவியம் உறுதியாக அது நடந்த விஷயம் என்றான்.
சாவு வீட்டில் திருடுகிறவனைப் பற்றி அறிந்து கொள்ள முனைந்த நாளிலிருந்து எனக்குள் மாற்றங்கள் உருவாக ஆரம்பித்தன. குறிப்பாகச் சிறுவயதிலிருந்து சாவு வீடு குறித்து இருந்த பயம் கலைந்து போனது. சாவு வீடு என்பது ஒரு நாடகம். அதில் நாமும் நடிக்க வேண்டும். சில நேரம் அதில் உணர்ச்சிமிகுந்து அழுவார்கள். சில நேரம் அபத்தமான நிகழ்வுகள் அரங்கேறும்.
சாவின் முன்னிலையில் எப்படி நடந்து கொள்வது என்று மனிதர்கள் இன்றுவரை பழகவேயில்லை. இறந்தவரால் கோவித்துக் கொள்ள முடியாது என்பதால் எவ்வளவு அபத்தங்கள் அவரைச் சுற்றி நடக்கின்றன. சாவுச்சடங்குகளை உன்னிப்பாகக் கவனித்தால் நாம் எந்த நூற்றாண்டில் வசிக்கிறோம் என்று சந்தேகம் வந்துவிடுகிறது.

ஒரு நாள் என்னிடம் ஞானதிரவியம் வாட்ஸ்அப் வீடியோ ஒன்றைக் காட்டினான். அதில் சாவு வீட்டில் திருடும் பெண் மந்தைவெளியில் பிடிபட்டாள் என்று காட்டினார்கள்.
அந்தப் பெண்ணின் பெயர் நடனா அலைஸ் நடனசுந்தரி. அந்தப் பெயர் அவளோடு ஒட்டவேயில்லை.
அவளுக்கு இருபத்தைந்து வயதிருக்கும். மஞ்சள் வண்ண ஷிபான் சேலை கட்டியிருந்தாள். பஃப் வைத்த ஜாக்கெட் சுருட்டை முடி கொண்டிருந்தாள். நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு. நான்கு வயது மகளுடன் நடனா சாவு வீடுகளுக்குச் செல்வது வழக்கம். அங்கே துக்கம் கேட்பவள் போலப் பெண்களுடன் உறவாடி பொருட்களைத் திருடிச் சென்றுவிடுவாள் என்று வீடியோவில் காட்டினார்கள்.
“இவ புருஷன் தான் நம்ம ஊர்ல திருடுறவன்“ என்றான் ஞானதிரவியம்
“அது எப்படித் தெரியும்“ எனக்கேட்டேன்.
“யூகம் தான்“ என்றான் ஞானதிரவியம். பின்பு பிடறியை சொறிந்தபடியே “ஆளு அம்சமா இருக்கா“ என்றான்.
குற்ற செய்திகள் பபிள்கம் போன்றதே. அதைச் சுவைக்கச் சுவைக்க இழுபட்டுக் கொண்டேயிருக்கும். உலகின் கற்பனையால் தான் குற்றம் சுவாரஸ்யமாகிறது.
மர்மனின் மனைவி பெயர் நடனா. அவர்களுக்கு நான்கு வயது மகள் இருக்கிறாள் என்று மனதிற்குள் குறித்துக் கொண்டேன்.
அன்று வீடு திரும்பிய பிறகு அந்த வீடியோவை நாலைந்து முறை பார்த்தேன். நடனாவும் அவளது கணவன் மர்மனும் எந்த ஆண்டு எங்கே திருமணம் செய்து கொண்டார்கள் என்று தெரியவில்லை.
அவர்கள் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்கள் என்று நானாகக் கற்பனை செய்தேன். இளம் தம்பதிகளாக அவர்கள் சென்னைக்கு வந்தார்கள். வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டார்கள். பலராலும் ஏமாற்றப்பட்டார்கள். முடிவில் ஒரு நாள் இறந்தவர்கள் உடலை வைக்கும் ஐஸ் பெட்டி சப்ளை செய்யும் நிறுவன ஊழியர் மார்டின் சாவு வீட்டில் திருடும் யோசனையை அவர்களுக்குச் சொன்னான். அவன் வழியாகவும் மின்மயானத்தில் வேலை செய்யும் தனபால் உதவியோடும் அவர்கள் இறந்தவர்கள் பற்றிய விபரங்களைச் சேகரித்தார்கள். எந்த வீட்டிற்குத் தனியே போவது. எந்த வீட்டிற்கு மனைவியோடு செல்வது என்று மர்மன் திட்டமிடுவான்.
அவர்கள் சாவு வீட்டில் உறவினர் போலப் பழகுவார்கள். ஓடியோடி வேலைகள் செய்வார்கள். சில நேரம் மர்மன் இறந்தவரிடம் தான் திருட வந்திருக்கிறேன் என்று உண்மையை மெதுவான குரலில் சொல்வான்.
பெரிய மனிதர்கள் யாராவது இறுதி அஞ்சலி செலுத்த வரும் போது அவர்கள் எழுந்து திருடுவதற்கு ஆயுத்தம் ஆகிவிடுவார்கள். சாவு வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் போவது மரபு என்பதால் திருடிய பொருட்களுடன் ரகசியமாக வெளியேறி போய்விடுவார்கள். அவர்கள் மாட்டிக் கொண்டதேயில்லை.
இப்படி அவர்களைப் பற்றிய முழுக்கதை ஒன்றை நானாக மனதில் உருவாக்கிக் கொண்டேன்..
அந்த வாரம் வெள்ளிகிழமை இரவுஎட்டு மணிச் செய்தியில் “சாவு வீட்டில் திருடுகிறவன் பிடிபட்டான்“ என்று தலைப்புச் செய்தியில் காட்டினார்கள். நான் கற்பனை செய்த விஷயங்களிலிருந்து இரண்டு வித்தியாசங்கள் அதிலிருந்தன
ஒன்று பிடிபட்ட திருடனுக்கு வயது ஐம்பதுக்கும் மேலிருந்தது. இரண்டாவது வித்தியாசம் நடனா அவரது மனைவியில்லை மகள். தந்தையும் மகளும் சேர்ந்து திட்டமிட்டுத் திருடியிருக்கிறார்கள். நான்கு வயது சிறுமி அவரது பேத்தி. அவளை ஏன் அழைத்துக் கொண்டு போனார்கள் என்று புரியவில்லை.
இந்தத் திருட்டுக் குடும்பம் திருமழிசையில் தனிவீடு எடுத்து வசித்திருக்கிறார்கள். வீட்டு உரிமையாளர் அவர்கள் மாதவாடகையைச் சரியாகக் கொடுத்தார்கள் என்றார். பக்கத்துவீட்டுகாரர்களுடன் இனிமையாகப் பழகியிருக்கிறார்கள். நடனா பிரியாணி செய்யும் நாளில் தங்களுக்கு மறக்காமல் கொடுத்துவிடுவாள் என்று தொலைக்காட்சியில் பக்கத்துவீட்டுப் பெண் சொன்னாள்.
அவர்கள் ஏன் சாவு வீட்டில் திருடத் துவங்கினார்கள் என்று எவருக்கும் தெரியவில்லை. காவல்துறை தெரிவித்த காரணங்கள் வழக்கமானவையாக இருந்தன.
எல்லோரும் ஒரு விஷயத்தை மறக்காமல் சொன்னார்கள்
“அவர்களைப் பார்த்தால் திருடர்கள் போலத் தெரியவேயில்லை. ஆளை பார்த்து நம்பி விட்டோம். “
எந்தத் திருடனையும் தோற்றத்தை வைத்து கண்டுபிடிக்கவே முடியாது. அது தான் மாநகரின் சிறப்பு. நடனாவும் அவளது தந்தையும் இணைந்து நிற்கும் புகைப்படத்தை நாளிதழில் வெளியிட்டிருந்தார்கள். அதைத் துண்டித்து எனது பர்ஸில் வைத்துக் கொண்டேன்
ஒரு வேளை எனது பர்ஸை யாராவது பிக்பாக்கெட் அடித்தால் அவன் இந்தப் புகைப்படத்தைப் பார்த்து என்ன நினைப்பான் என்று கற்பனை செய்ய ஆரம்பித்தேன்.
மனதில் அது இன்னொரு கதையாக விரிவு கொள்ளத் துவங்கியது.
கற்பனை செய்ய முடியாதவர்களால் நகரில் வசிக்க முடியாது. நிஜம் நம்மை நகரை விட்டுத் துரத்திவிடும்.
***
April 15, 2024
முகலாய வேட்டைக்காட்சிகள்
வேட்டையை வரைவதென்பது மனிதர்கள் குகையில் வசித்த காலத்திலிருந்து உருவான பழக்கம். குகை ஓவியங்களில் விலங்குகளே பிரதானமாக வரையப்பட்டிருக்கின்றன. மான் கூட்டத்தை அல்லது எருதை நேர் நின்று வேட்டையாடும் காட்சிகள் அதிகம் வரையப்பட்டிருக்கின்றன. இவற்றில் விலங்கிற்கும் மனிதனுக்குமான இடைவெளியை வரைந்தது முக்கியமானது. வேட்டையாடுபவர்களின் உடல்மொழி அழகாக வரையப்பட்டிருக்கிறது.

ஐரோப்பிய ஓவியர்கள் 13ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து விலங்குகளை வரைவதிலும், வேட்டைக்காட்சிகளை வரைவதிலும் ஆர்வம் காட்டினார்கள். இது தனித்த வகைமையாக வளர்ச்சி அடைந்தது. வேட்டைக்காட்சி ஓவியங்கள் அரசர்கள் மற்றும் பிரபுக்களின் வனமாளிகைச் சுவரை அலங்கரித்தன.
ஓவியர் பீட்டர் பால் ரூபன்ஸ்(Peter Paul Rubens) விலங்குகளை வரைவதில் திறமையானவர். குதிரைகள், சிங்கங்கள், நீர்யானைகள் மற்றும் முதலைகளை ரூபன்ஸ் சிறப்பாக வரைந்திருக்கிறார். அதன் துல்லியமும் வண்ணங்களும் வியப்பளிக்கின்றன. 1616 ஆம் ஆண்டில், பவேரியாவின் இளவரசர் மாக்சிமிலியன் நான்கு வேட்டை ஓவியங்களை வரைந்து தரும்படி ரூபன்ஸை பணித்தார். அந்த ஓவியங்களில் வேட்டை மிகவும் ஆவேசமாகவும் போர்க்களத்தின் உன்மத்தம் கொண்டதாகவும் காணப்படுகின்றன. சிங்கம் வீழ்ந்து பாய்வது உயிரோட்டத்துடன் வரையப்பட்டிருக்கிறது.

பதினைந்தாம் நூற்றாண்டினைச் சேர்ந்த பிளெமிஷ் ஓவியர் பிரான்ஸ் ஸ்னிஜ்டர்ஸ்(Frans Snijders) சந்தைக்காட்சிகளையும், வேட்டையினையும் வரைவதில் தனித்துவமானவர். அறுபதுக்கும் மேற்பட்ட வேட்டை ஓவியங்களை வரைந்திருக்கிறார். அவர் வேட்டைக் காட்சியில் இருந்து மனிதனை விலக்கி வரைந்திருக்கிறார்.
இவரது புகழ்பெற்ற காட்டுப்பன்றி வேட்டை ஓவியத்தில் பன்றியைத் தாக்கும் நாய்களின் ஆவேசத்தையும் பன்றியின் கண்களில் வெளிப்படும் வேதனையினையும் காண முடிகிறது.

நாயின் வண்ணமும் அது உடலை வளைத்து இரையைக் கவ்வ முயற்சிக்கும் விதமும் அபாரமான அழகுடன் வரையப்பட்டிருக்கின்றன. நாயின் பற்கள் மற்றும் ஒளிரும் கண்கள் நம்மை ஈர்க்கின்றன. பன்றிவேட்டையின் பின்புலமாக வரையப்பட்ட இருண்ட மேகங்களும் மரத்தின் சலனமற்ற இலைகளும் மயக்கமூட்டுகின்றன. கழுத்துப்பட்டி அணிந்த இந்த நாய்கள் வேட்டைக்காரனால் அழைத்து வரப்பட்டவை. ஓவியத்தில் வேட்டைக்காரன் இடம்பெறவில்லை. ஆனால் அவனே நாய்களை ஏவிப் பன்றியை வேட்டையாடுகிறான்.
இதே காலகட்டத்தில் வரையப்பட்ட முகலாய மன்னர்களின் வேட்டைக்காட்சிகளுடன் பிரான்ஸ் ஸ்னிஜ்டர்ஸ் ஓவியங்களையும் ஒப்பிடும் போது அவரது சிறப்பை புரிந்து கொள்வதுடன் முகலாய ஓவியங்களின் தனித்துவத்தையும் அறிந்து கொள்ள முடிகிறது.
வேட்டையாடுதல் முகலாய மன்னர்களின் முக்கியமான பொழுதுபோக்காக இருந்தது. இவை போர்க்களத்தில் எதிரியைக் குறிவைப்பதற்குப் பயிற்சி களமாகக் கருதப்பட்டது. ஆகவே பாபர் முதல் தாரா ஷிகோ வரை வேட்டையாடுவதில் ஆர்வமாகப் பங்கேற்றார்கள். ஓளரங்கசீப் விலங்குகளை வேட்டையாடுவதில் ஆர்வம் காட்டவில்லை. அவர் மனிதர்களைத் துரத்தி துரத்தி வேட்டையாடினார் என்பது வேறு கதை.

வேறுவேறு காலகட்டங்களில் வயைரப்பட்ட முகலாய மன்னர்களின் வேட்டை ஓவியங்களில் சில பொதுத்தன்மைகளைக் காண முடிகிறது. பொதுவாக வேட்டைக்களம் அடர்ந்த காட்டுப்பகுதியாக அல்லாமல் நீர்நிலைக்கு அருகே அமைந்திருக்கிறது. விலங்குகள் ஒன்று கூடும் இடமாகக் காணப்படுகிறது. வளர்ப்பு மிருகங்களைக் கொண்டு வேட்டையை நிகழ்த்தியிருக்கிறார்கள். காலனிய ஓவியங்களில் காணப்படுவது போல அதிகமான ஆட்களோ, ஆயுதங்களோ முகலாய ஓவியத்தில் காணப்படவில்லை.

மன்னர் வேட்டைக்கு வருவதற்கு முன்பாக ஷிகாரிகள் காட்டிற்குள் வந்து தேவையான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள். இதனை விவரிக்கும் ஓவியத்தில் ஷிகாரி இருவரும் பச்சை வண்ண உடை அணிந்திருக்கிறார்கள். இலைகளைக் கொண்டு தன்னை மறைத்தபடியே ஒளிந்திருக்கிறார்கள். அவர்கள் அருகே மான்களின் நடமாட்டம் காணப்படுகிறது. தொலைவில் யானையில் மன்னர் வருவதும் உடன் வேட்டையாடிகள் வருவதும் சித்தரிக்கபட்டுள்ளது.
பிரான்ஸ் ஸ்னிஜ்டர்ஸின் ஓவியத்திலுள்ள நாயின் ஆவேசத்தையும் முகலாய வேட்டை நாய்களின் வேகத்தையும் பார்க்கும் போது பிரான்ஸ் ஸ்னிஜ்டர்ஸின் தூரிகை வீச்சு வியப்பளிக்கிறது.



முகலாய வேட்டைக்காட்சியில் மான்கள் வியப்பூட்டும் அழகுடன் வரையப்பட்டிருக்கின்றன. குறிப்பாக அதன் கண்களைப் பாருங்கள். தனியழகு கொண்டிருக்கிறது. அது போலவே மாட்டுவண்டியில் பூட்டப்பட்ட காளையின் கண்கள். பதுங்கியிருக்கும் முயல்கள். வேட்டைக்குப் பயன்படுத்தப்படும் யானையின் கம்பீரம். அது சிங்கத்தைத் தாக்கும் வேகம். ஓவியத்தினுள் காணப்படும் இயக்கம் வேட்டையின் வேகத்தை உணர்த்துகின்றன.
ஜஹாங்கீர் வேட்டையாடும் ஓவியம் ஒன்றில் சிறுத்தையின் கண்கள் கட்டப்பட்டிருக்கின்றன. அது பழக்கப்படுத்தபட்ட சிறுத்தை, அதைக் கொண்டு மான்வேட்டையை நிகழ்த்தியிருக்கிறார்கள்.
காட்டுவிலங்குகளைப் பிடித்து வந்து பழக்கி அவற்றை வேட்டைக்கு அழைத்துச் செல்வது அன்றைய வழக்கம்.

ஜஹாங்கீர் தனது பனிரெண்டு வயது முதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார் என்கிறார்கள். அவர் வனவேட்டைக்காகவே லாகூரை அடுத்தக் காட்டில் ஹிரன் மினார் என்று மாளிகை ஒன்றை கட்டியிருக்கிறார். தனது வளர்ப்பு மானின் நினைவாக அந்தப் பெயரை வைத்துள்ளார்.
ஜஹாங்கீர் தனது பத்து வயதில் போர்களத்திற்கு அனுப்பபட்டார். அங்கே அவரது விளையாட்டுத் தோழனாக ஒரு மான் இருந்தது. அதை ஒருமுறை எதிரிகள் பிடித்துக் கொண்டு போய்விடவே தனி ஒருவராக எதிரியின் முகாமுக்குள் நுழைந்து மானைக் காப்பாற்றியிருக்கிறார். அவ்வளவு ஆசையாக வளர்ந்த மான் இறந்து போகவே அதன் நினைவாக வனமாளிகைக்கு ஹிரன் மினார் எனப் பெயரிட்டார் என்கிறார்கள் .

அக்பர் காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுத்தைகள் காட்டிலிருந்து பிடித்து வரப்பட்டுப் பழக்கப்பட்டிருக்கின்றன. இதற்கென தனி வளாகம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். அங்கே சிறுத்தைகளைப் பழக்குவதற்கும் பராமரிப்பதற்கும் ஊழியர்கள் நியமிக்கபட்டிருந்தார்கள். அக்பர் தனது செல்லபிராணியான சிறுத்தைக்கு மதன்காளி என்று பெயர் சூட்டியிருக்கிறார்.
பள்ளம் தோண்டிப் பிடிக்கும் போது குழிக்குள் விழும் சிறுத்தையின் கால்கள் முறிந்துவிடக்கூடும் என்பதால் அதற்கு மாற்றான பொறிக்கதவு ஒன்றை அக்பர் உருவாக்கியிருக்கிறார்.
பிடிபட்ட சிறுத்தைகளுக்குக் கழுத்துப்பட்டி அணிவிக்கபடுவதுடன் அதற்குச் சிறப்புப் பெயரும் சூட்டியிருக்கிறார்கள். பிடிபட்ட சிறுத்தைகளை எட்டுவகையாகப் பிரித்து வகைப்படுத்தியிருக்கிறார்கள். இந்தச் சிறுத்தைகள் இணை சேர அனுமதிக்கபடுவதில்லை.
சிறுத்தைகளுக்கு மூன்று மாதகாலம் பயிற்சி அளிக்கபடுவதுண்டு. இதற்கெனப் சிறப்புப் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டிருந்தார். இந்தப் பயிற்சிகளை அக்பரே நேரில் பார்வையிடுவார் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

ஜஹாங்கீர் காலத்தில் தான் வரிக்குதிரை அறிமுகமாகியிருக்கிறது. அதை ஓவியர் மன்சூர் அழகாக வரைந்திருக்கிறார்
பெர்சியாவிலிருந்து ஓவியர்கள் மீர் சயீத் அலி மற்றும் அப்த் அஸ்-சமத் ஆகியோரை ஹுமாயூன் மீண்டும் தனது அரண்மனைக்கு அழைத்து வந்தார். அவர்கள் அரண்மனை ஓவியர்களாக நியமிக்கபட்டார்கள்.
ஷெர்ஷாவின் மரணத்திற்குப் பிறகு புராணகிலா கோட்டையைக் கைப்பற்றிய ஹுமாயூன், ஷேர் மண்டலை தனது நூலகமாகவும் வானவியல் கண்காணிப்பகமாகவும் மாற்றினார். அரண்மனையில் செலவிட்ட நேரத்தினை விடவும் இந்த நூலகத்திலே ஹுமாயூன் அதிகம் நேரம் செலவிட்டார். அன்றாடம் வானவியல் அறிஞர்களுடன் உரையாடினார்.

ஜனவரி 24, 1556 அன்று மாலை தனது நூலகத்தில் மன்னர் ஹுமாயூன் அறிஞர் சிலருடன் பேசிக்கொண்டிருந்தார், பிரார்த்தனைக்கு நேரமாகிவிட்டது என எழுந்து படிக்கட்டுகளில் இறங்கியபோது தடுமாறி கீழே விழுந்தார். அதில் அவரது மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தபெருக்கானது. ஜனவரி 26, 1556 அன்று ஹுமாயூன் காலமானார். பெரும் யுத்தகளங்களைக் கண்டு உயிர் பிழைத்த ஹுமாயூன் நூலகத்தின் படிக்கட்டில் விழுந்து இறந்து போனது புதிரானதே
அக்பர் அரியணைக்கு வந்தபோது அவரது வயது பதின்மூன்று. அவர் மரபுரிமையாகப் பெற்ற கிதாப்கானா எனும் நூலகம் மிகப்பெரியது. தனது போர் வெற்றிகளின் மூலம் பெறப்பட்ட ஏராளமான புத்தகங்களை அங்கே சேர்த்து வைத்திருந்தார்.
அக்பர் எழுதப்படிக்கத் தெரியாதவராக இருந்த போதிலும், புத்தகங்கள் மற்றும் ஓவியத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அவரிடம் இருபத்தைந்தாயிரத்திற்கும் அதிகமான புத்தகங்கள் கொண்ட நூலகம் இருந்தது. அவை துறை வாரியாகப் பட்டியலிடப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டிருந்தன.
அன்றாடம் புத்தகம் வாசிக்கச் சொல்லி கேட்பது அவரது வழக்கம். அறிஞர்கள் கொண்டு வந்து படிக்கும் புத்தகங்களை ஆரம்பம் முதல் இறுதி வரை ஆர்வத்துடன் கேட்பார் என அயின்-இ-அக்பரி குறிப்பிடுகிறது.

முகலாயப் பேரரசர்கள் ஏன் வேட்டையாடுவதை ஒவியமாக வரைந்திருக்கிறார்கள். அந்தக் காலத்தில் வேட்டையாடுவது அரசனின் கடமையாகக் கருதப்பட்டது. இளவரசர் மற்றும் இளவரசிகளுக்குப் போர் பயிற்சி தரும் போது அதில் வேட்டையும் ஒரு பகுதியாகக் கற்றுத் தரப்பட்டிருக்கிறது.
பாபரும் அக்பரும் ஜஹாங்கீரும் தாங்கள் நிகரற்ற ஆட்சியாளர்கள் மற்றும் அஞ்சாத வீரர்கள் என்பதைக் காட்ட வேண்டும் என்பதற்காக வன வேட்டையை ஓவியம் வரையச் செய்திருக்கிறார்கள்.

வேட்டையாடுதல் என்பது அச்சுறுத்தும் எதிரிகளைக் கட்டுப்படுத்துவதன் அடையாளம். பேரரசரின் வலிமை மற்றும் திறனை வெளிப்படுத்தும் செயலாகக் கருதப்பட்டது. வேட்டையாடுதல் என்பது சமூகப் படிநிலை மற்றும் அரசியல் வலைப்பின்னல் கொண்ட திறந்த வெளி நாடகம் என்றே சொல்ல வேண்டும். யார் யாரெல்லாம் மன்னருடன் வேட்டைக்கு வர வேண்டும். வேட்டையாடிய மிருகங்களை யார் கொண்டு செல்வது. முகாம் அமைப்பது எவர் பொறுப்பு. எந்த நாளில் வேட்டை துவங்குவது என்பதை விரிவாகத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஜஹாங்கீர் தனது தாயிற்குச் செய்து கொடுத்த சத்தியம் காரணமாக வெள்ளிக்கிழமை வேட்டையாட மாட்டார் என்கிறது ஜஹாங்கீர் நாமா.
மன்னரின் வேட்டையில் ஒரு விலங்கு தப்பிச் சென்றுவிட்டால் அது மோசமான சகுனமாகக் கருதப்பட்டது. மன்னருக்கு தீங்கு வரப்போவதன் அடையாளமாக அதைக் கருதுவார்கள். ஆகவே அதற்குப் பரிகாரங்கள் செய்யப்படுவதும் உண்டு.
அக்பரை போல ஜஹாங்கீர் தனது வேட்டைக்காட்சி ஓவியங்களில் விலங்குகளின் ஓட்டத்தையோ, தாக்குதலையோ முதன்மைப்படுத்தவில்லை. அவர் வேட்டையாடும் மனிதர்களின் முகபாவங்களை, விலங்குகளின் முகபாவங்களையே துல்லியமாக வரையச் செய்திருக்கிறார்.

வேட்டையாட குதிரை மீது அமர்ந்திருக்கும் மன்னர் முகத்தில் ஆவேசமில்லை. அவர் தியானத்திலிருப்பவர் போல அமைதியாகக் காணப்படுகிறார்கள். வேட்டைக்காட்சிகளில் இயற்கையை வரையும் போது இயல்பாக வரைய வேண்டும் என்றிருக்கிறார்கள். ஆகவே முறிந்த மரங்களையோ, நசுங்கிய மலர்களையோ நாம் காண முடிவதில்லை.

ஜஹாங்கிருக்கு இயற்கையை அவதானிப்பதில் இருந்த பேரார்வம் அவற்றைச் சிறந்த ஓவியங்களாக வரையச் செய்திருக்கிறது. காஷ்மீரில் அவர் பார்த்த பூக்களின் அழகையும் அரிய பறவைகளையும் ஓவியமாக வரையச் செய்திருக்கிறார்.
போர்களக்காட்சியைப் போலவே வனவேட்டையை வரைந்திருக்கிறார்கள். அடர் சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள்- போன்ற அடர்வண்ணங்களை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்கள். மரங்கள் மற்றும் செடிகளின் இலைகளை விநோத அழகுடன் வரைந்திருக்கிறார்கள். விலங்குகளின் உடற்கூறியியலை ஆராய்வதற்காக ஓவியர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கபட்டிருக்கின்றன. வேட்டைக்களத்திற்கே ஓவியர்களை அழைத்துச் சென்றும் அவதானிக்கச் செய்திருக்கிறார்கள்.
ஒருமுறை ஜஹாங்கீருக்கு இரண்டு கொக்குகள் பரிசாக அளிக்கபட்டன. அதற்கு லைலா, மஜ்னு எனப் பெயரிட்டு தனது வளர்ப்பு பறவைகளாக வைத்துக் கொண்டார் . அவர் தர்பாருக்கு வரும் போது அந்தக் கொக்குகளும் உடன் வரும் என்கிறார்கள். இரண்டு கொக்குகளுடன் மன்னர் நடந்து வரும் காட்சியை நினைத்துப் பார்த்தேன். வேடிக்கையாக இருந்தது.
ஜஹாங்கீர் அரியணையில் அமர்ந்திருக்கும் ஓவியம் ஒன்றை மனோகர் மிக அழகாக வரைந்திருக்கிறார். அப்துஸ் சமத், மிர் சையது அலி, பஸ்வான். கேசு தாஸ். தஸ்வந்த் போன்ற ஒவியர்கள் வனவேட்டையை வரைந்திருக்கிறார்கள்.

மன்னருக்கு மிகவும் பிடித்த ஓவியர்கள் பட்டியலில் பிஷந்தாஸ், மன்சூர் இருவரும் முக்கியமானவர்கள். பிஷந்தாஸ் அந்தப்புரக்காட்சிகளை வரைவதில் தனித்திறன் கொண்டிருந்தார். மன்சூர் விலங்குகள் பறவைகள் மற்றும் இயற்கை காட்சிகளைத் துல்லியமாக வரையக் கூடியவர். அவர் வரைந்துள்ள பருந்தின் ஓவியம் நிகரற்றது.

அக்பர் துப்பாக்கிகளை உருவாக்குவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். சிறந்த துப்பாக்கி தயாரிப்பாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களை வெளிநாடுகளில் இருந்து அழைத்து வந்திருந்தார்.
வெடிமருந்தினை நிரப்பிச் சுடும் “மேட்ச்லாக்” துப்பாக்கிகளே அன்று பயன்படுத்தபட்டன. வேட்டையாடுபவர் மரத்தின் கிளைகளில் ஒளிந்து கொண்டு விலங்குகளைத் துப்பாக்கியால் சுடுவதை ஓவியத்தில் காணமுடிகிறது.
அக்பரின் சொந்தத் துப்பாக்கி சங்கராம் என்று அழைக்கப்பட்டது. அவரது ஆயுதக் கிடங்கில் மிகப்பெரிய துப்பாக்கிகளை வைத்திருந்தார், அதில் ஒரு துப்பாக்கி “ஜஹாங்கீர்” என்று பெயரிடப்பட்டிருந்தது.
வேட்டையாடிய விலங்குகளை இறைச்சிக்காகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். விலங்குகளின் தோலிலிருந்து விரிப்புகள், தோலாடைகள் செய்திருக்கிறார்கள்.

ஜஹாங்கீர் தனது வாழ்நாளில் 17167 விலங்குகளை வேட்டையாடிக் கொன்றிருக்கிறார் என்று துசுக்-இ-ஜஹாங்கிரியின் தொகுதி I குறிப்பிடுகிறது இதில் 1677 மான்கள். 889 காட்டெருமைகள். 86 சிங்கங்கள் 64 காண்டாமிருகங்கள்,13964 பறவைகள் பத்து முதலைகள் அடங்கும் .
முகலாய , ராஜஸ்தானிய, வட இந்திய ஓவியங்களில் காணப்படுவது போலச் சேர சோழ பாண்டிய மன்னர்களின் வேட்டைக்காட்சிகள் வரையப்பட்டதாகத் தெரியவில்லை.

இந்தியாவின் பல்வேறு கோவிற்சிற்பங்களில் புலிவேட்டை சித்தரிக்கபட்டிருக்கிறது. ஆனால் இப்படித் துப்பாக்கி ஏந்திய மன்னரின் ஓவியம் எதையும் தென்னிந்தியாவில் நான் கண்டதில்லை.
பிரிட்டிஷ் வருகைக்குப் பிறகு வேட்டைகாட்சிகள் அதிகம் வரையப்பட்டிருக்கின்றன. குறிப்பாகக் கவர்னர்கள். மற்றும் ஜமீன்தார்களின் வேட்டைக்காட்சிகள் ஓவியமாக வரையப்பட்டிருக்கின்றன.
கேமிரா அறிமுகப்பட்டதும் இதே வேட்டைக்காட்சிகளைப் புகைப்படமாக எடுத்திருக்கிறார்கள். கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளின் வேட்டைபுகைப்படங்கள் நிறைய காணக்கிடைக்கின்றன.

டோடோ என்ற அழிந்துபோன பறவையை மன்சூரின் ஓவியத்தில் காண முடிகிறது. இன்று அந்தப் பறவையினம் இல்லை. சூரத்தில் இருந்த ஜஹாங்கீரின் மிருகக்காட்சிசாலையில் அவை வாழ்ந்திருக்கலாம் என்கிறார்கள்.
மறதியெனும் இருளுக்குள் வரலாற்று உண்மைகள் மறைந்து போய் விடுகின்றன. ஆனால் கலை அவற்றை வெளிச்சமிட்டுக் காட்டுவதுடன் வரலாற்று சாட்சியமாகவும் தன்னை வெளிப்படுத்துகின்றன.
முகலாய மன்னர்களின் அரசவை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கலைஞர்களை உள்ளடக்கியது. அவர்கள் வரைந்த ஓவியங்களில் இந்திய, பாரசீக மற்றும் மேற்கத்திய பாணிகளின் கலவையைக் காணமுடிகிறது.
இந்தப் பன்மைத்துவமும் புதிய வெளிப்பாட்டு முறைகளும் கலையின் வளர்ச்சிக்கு முக்கியமானவை. முகலாய வேட்டைக்காட்சிகள் இவற்றின் சாட்சியமாக இருப்பதாலே இன்றும் பேசப்படுகின்றன.
April 13, 2024
புதுச்சேரியில்
ஏப்ரல் 11 வியாழக்கிழமை புதுச்சேரி சென்றிருந்தேன். பேராசிரியர் ரவிக்குமார், சீனுதமிழ்மணி இருவரையும் சந்தித்து உரையாடினேன். ரவிக்குமார் கல்பனாவுடன் இணைந்து மணிப்பூரிக் கவிதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். அந்த நூலை எனக்கு அளித்தார்.

மாலையில் பேராசிரியர் ஜெயசீல ஸ்டீபன் அவர்களைச் சந்தித்தேன்..

வரலாற்று அறிஞரான ஜெயசீல ஸ்டீபன் சாந்திநிகேதனில் பணியாற்றியவர். டச்சு, போர்த்துகீஸ். பிரெஞ்சு உள்ளிட்ட ஆறு மொழிகள் அறிந்தவர். 16 முதல் 19 நூற்றாண்டு வரையிலான டச்சு, போர்த்துகீஸ், பிரெஞ்சு காலனிய வரலாற்றை ஆராய்ந்து சிறப்பான நூல்களை எழுதியிருக்கிறார். தமிழர்களின் மரபு அறிவியல், பருவநிலை மாற்றம் குறித்து ஆராய்ந்து விரிவான நூல் எழுதியிருக்கிறார்.





அடிமை வணிகம், அச்சுப்பண்பாடு, இலக்கணம், இதழ்களின் தோற்றம். காலனிய நாட்குறிப்புகளை பதிப்பித்தல் என்று பரந்த தளத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். அவ்வகையில் தமிழக வரலாற்றை சர்வதேச அளவில் கவனப்படுத்தி வருகிறார் . அவருடன் பேசிக் கொண்டிருந்தது நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.
அவரது 17 நூல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. சீனு தமிழ்மணி இதில் சில நூல்களை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். அபூர்வமான அந்த சந்திப்பிற்கு உதவிய சீனு தமிழ்மணிக்கு நன்றி.



அன்று மதியம் மொழிபெயர்ப்பாளர் சு. ஆ. வெங்கட சுப்புராய நாயகர் அவர்களைச் சந்தித்து உரையாடினேன். பிரெஞ்சு மொழித்துறை தலைவராக புதுவைப் பல்கலைகழகத்தில் பணியாற்றுகிறார். சிறந்த மொழிபெயர்ப்பாளர். மொழிபெயர்ப்பிற்கான ரோமன் ரோலந்து விருதை பிரான்ஸ் அரசிடம் பெற்றிருக்கிறார். அவர் தனது நூல்களை எனக்கு அளித்தார்.
அவரது மொழிபெயர்ப்பில் வெளியான அப்பாவின் துப்பாக்கி – ஹினர் சலீம், சூறாவளி – லெகிளெஸியோ உல்லாசத்திருமணம் – தாஹர் பென் ஜீலோவ்ன் நூல்களை முன்பே படித்திருக்கிறேன். சிறப்பான மொழியாக்கங்கள்.

வெள்ளிக்கிழமை காலை நண்பரும் புகைப்படக்கலைஞருமானஇளவேனில் புகைப்படம் எடுப்பதற்காக அழைத்தார். புதுவை வீதிகள் காலை நேரத்தில் அவ்வளவு அழகாக இருக்கின்றன. நடந்து சுற்றி நிறைய புகைப்படங்கள் எடுத்தோம். இளவேனிலுக்கு எனது மனம் நிறைந்த அன்பும் நன்றியும்.



எஸ்.ராவிடம் கேளுங்கள் -1
எஸ்.ராவிடம் கேளுங்கள் காணொளித் தொடர் நேற்று யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. உங்கள் கேள்விகளை இதில் காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.
நன்றி
நேற்று (13.04.24) எனது பிறந்த நாள். காலை முதலே நண்பர்கள், வாசகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கத் துவங்கினார்கள்.

ஊரிலிருந்து அம்மாவும் அப்பாவும் வாழ்த்துச் சொன்னார்கள். தங்கைகளின் வாழ்த்து அதைத் தொடர்ந்து வந்தது. கவிஞர் தேவதச்சன் வாழ்த்துச் சொல்லியதோடு பிறந்தநாளை எப்படி உணருகிறீர்கள் என்று கேட்டார்.

மீனா அலெக்சாண்டர் கவிதை ஒன்றில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இருவர் சந்தித்துக் கொள்வார்கள். அப்போது அவர்களுக்கு என்ன பேசுவது என்று தெரியாது. ஆனால் அவர்கள் இளமையின் குருவி எங்கிருந்தோ சப்தமிடுவதைக் கேட்பதாக உணருவார்கள்.
நானும் இப்போது அந்த குருவியின் சப்தத்தை கேட்கத் துவங்கியிருக்கிறேன் என்று சொன்னேன். எங்கள் உரையாடல் நீண்டு போனது.
ஒவ்வொரு நாளும் விழித்து எழுந்தவுடன் சிறுவனாக என்னை உணருவேன். பகலும் இரவும் கொஞ்சம் கொஞ்சமாக எனது வயதை உருவாக்குகிறது. பள்ளிவயதில் பிறந்த நாள் எப்போது வரும் என்று நாட்களை எண்ணிக் கொண்டேயிருப்பேன். காரணம் புத்தாடை கிடைக்கும். இப்போது அந்த உற்சாகமில்லை. வயது என்பதே ஒரு புத்தாடை தான். இந்த ஆண்டு முழுவதும் நான் அந்த வயதை அணிந்து கொண்டிருப்பேன் என்றேன்.
கவிஞர் தேவதச்சன், ஆசான் எஸ். ஏ. பெருமாள் இருவரும் என்னை உருவாக்கியவர்கள். அவர்களின் ஆசியைப் பெற்றது மகிழ்ச்சி தந்தது.


அயல்நாட்டிலிருந்து வாசகர்கள் பலரும் தொடர்பு கொண்டு வாழ்த்துச் சொன்னார்கள். தூத்துக்குடியில் நூலக மனிதர்கள் இயக்கம் சார்பில் பொன்.மாரியப்பன். ஜெயபால். முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட நண்பர்கள் இணைந்து ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டியிருப்பதை அறிந்தேன். பொன்.மாரியப்பன் எனது நூல்களை வாங்கி பலருக்கும் பரிசளித்திருக்கிறார். எனது சொந்த ஊரான மல்லாங்கிணரிலும் பிறந்தநாள் போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். வேறுவேறு ஊர்களில் எனது கதைகளை வாசித்து பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார்கள். இவர்களின் அன்பிற்கு மனம் நிறைந்த நன்றி. தூத்துக்குடி நண்பர்களுக்கு எனது தீராத அன்பும் நன்றியும்.

சமூக ஊடகங்கள், தொலைபேசி, மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப்பிலும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றி. உங்கள் அன்பும் ஆசியுமே என்னை இயக்குகிறது.
மாலை தேசாந்திரி பதிப்பகத்தின் அலுவலகத்தில் சிறிய கொண்டாட்டம் நடைபெற்றது. அதில் நண்பர்கள் அகரமுதல்வன். செந்தில் ஜெகனாதன், வாசுமுருகவேல். ஆனந்த், மணிகண்டன், ஹரிஹரன், அன்புக்கரன்,கபிலா காமராஜ்,சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.
April 10, 2024
கதை சொல்லும் சிலை
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் மார்ஜியானாவின் யோசனைப்படி எண்ணெய் பீப்பாய்க்குள் ஒளிந்துள்ள திருடர்களை மலையுச்சியிலிருந்து அருவியில் தள்ளிவிட்டுக் கொல்லுவார்கள். எண்ணெய் வணிகராக வந்துள்ளது திருடர்களின் தலைவன் அபு ஹுசேன் என அறிந்த அலிபாபா அவனுடன் சண்டையிட்டு வீழ்த்துவான்.

பீப்பாயினுள் ஒளிந்துள்ள திருடர்களைத் தள்ளிவிடுவதற்குப் பதிலாகச் சூடான எண்ணெய்யைக் காய்ச்சி ஊற்றிக் கொன்றதாகக் கதையில் உள்ளது. அந்தக் காட்சியைப் பாக்தாத் நகரில் ஒரு சிற்பமாகச் செய்து வைத்திருக்கிறார்கள்.

அந்தச் சிற்பத்தைச் செய்தவர் ஈராக்கிய சிற்பி முகமது கானி ஹிக்மத். இவர் ஆயிரத்தோரு இரவுகளில் மன்னர் ஷாரியார் முன்பு ஷஹ்ராசாத் கதை சொல்வதையும் சிலையாக வடித்திருக்கிறார். இந்தச் சிலையும் பாக்தாத் நகரிலுள்ளது.

ஆயிரத்தோரு இரவுகள் மூலப்புத்தகத்தில் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதையே கிடையாது. அது பிற்சேர்க்கை என்கிறார்கள்.
குறிப்பாகப் பிரெஞ்சுக்காரரான அந்த்வான் கெலோன் தனது மொழியாக்கத்தின் போது இந்தக் கதையைச் சேர்த்துவிட்டார் என்கிறார்கள். இவரது மொழிபெயர்ப்பு 12 பாகங்கள் கொண்டது. 1704ல் வெளியானது. அதன்பிறகு அலிபாபா கதை உலகெங்கும் பரவிப் புகழ்பெற்றுவிட்டது. ஆகவே இன்றும் 1001 இரவுகளின் ஒரு பகுதியாகவே அறியப்படுகிறது.

சினிமாவில் நடனக்காரி மார்ஜியானாவை அலிபாபா காதலிக்கிறான். அபு ஹுசேன் முன்னால் அவள் நடனமாட விரும்பும் போது அலிபாபா அனுமதிக்க மறுக்கிறான். முடிவில் அவனுக்கு உதவி செய்யவே அவள் அப்படி நடந்து கொண்டாள் என்பதை உணருகிறான். ஆனால் அரபு வடிவத்தில் அலிபாபாவிற்கு ஏற்கனவே மனைவியிருக்கிறாள். மார்ஜியானவை அலிபாபா காதலிப்பதில்லை.
அவர்கள் வீட்டிலிருந்த பணிப்பெண் கஹ்ரமானா. அவள் அலிபாபாவைக் கொல்வதற்காக வந்துள்ள அபு ஹுசேன் திட்டத்தை அறிந்து கொள்கிறாள். அதனை முறியடிக்கப் பீப்பாய்க்குள் ஒளிந்துள்ள திருடர்களைக் கொல்லத் திட்டமிடுகிறாள். இதற்காக எண்ணெய்யைக் காய்ச்சி ஊற்றுகிறாள்.
கஹ்ரமானா நீரூற்று என்று அழைக்கப்படும் அந்தச் சிலையில் அவளைச் சுற்றி நாற்பது ஜாடிகள் காணப்படுகின்றன. அரபு மொழியில் கஹ்ரமானா என்பதற்கு “கதாநாயகி” என்று பொருள்.
கஹ்ரமானா தனது உயிரைக் காப்பாற்றினாள் என்பதற்கு நன்றிக்கடனாகத் தனது மகனுக்கு அவளைத் திருமணம் செய்து வைத்தார் அலிபாபா என்கிறது அரபு வடிவம். மார்ஜியானா தான் கஹ்ரமானா என்றும் சொல்கிறார்கள். கஹ்ரமானாவின் தந்தை உணவகம் ஒன்றை நடத்திவந்தவர். இந்தக் கதை அலிபாபாவிற்கு முந்தியது என்றும் சொல்லப்படுகிறது.
கஹ்ரமானா இன்று ஒரு பண்பாட்டு அடையாளம். அவளது கையிலுள்ள ஜாடியிலிருந்து தண்ணீர் வழிந்து கொண்டிருக்கும் வரை கதைகள் சொல்லப்பட்டுக் கொண்டேயிருக்கும் என்கிறார்கள் பாக்தாத்வாசிகள்.
April 9, 2024
எஸ்.ராவிடம் கேளுங்கள்
தேசாந்திரி யூடியூப் சேனல் சார்பாக தயாரிக்கப்பட்டுள்ள எஸ்.ராவிடம் கேளுங்கள் காணொளித்தொடர் ஏப்ரல் 13 மாலை வெளியாகிறது.

April 6, 2024
நடைக்கூலி
புதிய குறுங்கதை
இது நடந்தது 1814ல்.
சுமேர்பூரில் முகாமிட்டிருந்த கிழக்கிந்திய கம்பெனி அதிகாரி ஜான் சாமுவேலிடம் கடிதம் பெறுவதற்காக அந்த ஆள் வெளியே காத்திருந்தார். ஆறடி அடிக்கும் மேலான உயரம். தலையில் பெரிய தலைப்பாகை. அடர்ந்து நரைத்த மீசை. தாடி. பழுப்பு நிறமான கண்கள். கூர்மையான மூக்கு. தோளில் போர்வை போன்றதொரு ஒரு துண்டு. பலானா கிராமத் தலைவருக்கு எழுதப்பட்ட அந்தக் கடிதத்தை ஒப்படைக்கும் போது சாமுவேல் அவரது பெயரைக் கேட்டார்
“சாப்பன்“ என்று சொன்னார்.
ராஜஸ்தானிய கிராமங்களில் பலருக்கும் வயது தெரியாது. பஞ்சகாலத்தினை நினைவூட்டும் விதமாகவே பெயர் வைத்திருந்தார்கள். கடிதத்தை உறையிலிட்டு நீட்டியபடியே ராம்சிங்கிடம் அவருக்கு அரையணா தரச் சொன்னார்

சாப்பன் கடிதத்தை மட்டுமே பெற்றுக் கொண்டு காசை ஏற்க மறுத்துவிட்டார். கடிதம் கொண்டு செல்கிறவருக்கு வழக்கமாக அளிக்கப்படும் நடைக்கூலி தான் என சொன்னபோதும் சாப்பன் ஏற்கவில்லை.
சாமுவேல் ஏன் என்று புரியாமல் உதவியாளர் ராம்சிங்கிடம் விளக்கம் கேட்டார்.
ராம்சிங் சிரித்தபடியே சொன்னார்
“சாப்பன் ஊருக்கு பொதுவானவன். இவனைப் போன்றவர்கள் எந்த வேலைக்கும் காசு வாங்க மாட்டார்கள்.. ராஜஸ்தான் கிராமங்களில் இப்படி ஊர் காரியங்களைக் கவனித்துக் கொள்வதற்காகச் சிலரைப் பொதுமனிதராக விட்டுவிடுவார்கள். அவர்கள் தனது குடும்பத்திற்காகச் சம்பாதிக்க மாட்டார்கள். அவரது வீட்டிற்குத் தேவையான தானியங்களை ஊரே கொடுத்துவிடும். “
இது நிஜமா என்று யோசித்தபடியே சாப்பனிடம் “எத்தனை வருஷங்களாகக் கடிதம் கொண்டு போகிறாய்“ என்று கேட்டார் சாமுவேல்.
“வருஷம் தெரியாது. சிறுவனாக இருந்த போதிலிருந்து கடிதம் கொண்டு போகிறேன். இது வரை ஒரு கடிதத்தைக் கூடத் தொலைக்கவில்லை. பறி கொடுக்கவில்லை. அதிகாலையில் வீட்டைவிட்டுக் கிளம்பிவிடுவேன். மாலைக்குள் ஊர் திரும்பி விடுவேன்“. என்றார் சாப்பன்.
சாப்பன் சொல்வது உண்மை. பாலைவனத்தில் அதிகமான வழிப்பறிகள் நடந்து வந்த காலமது. சாமுவேலிற்கு அந்த மனிதனைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. அன்றாடம் அவர் சந்திக்கும் வணிகர்கள். கிராமசபைத் தலைவர்கள் காசிற்காக எதையும் செய்யக்கூடியவர்கள். பேராசை கொண்டவர்கள். பேச்சில் கள்ளத்தனமிருக்கும். ஆனால் சாப்பன் அப்படியில்லை.
பலானாவிலிருந்து சுமேர்பூரிற்கு இருபத்திமூன்று மைல். தினமும் நடந்து வருகிறார். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கடிதம் கொண்டு சென்றாலும் அதற்காகக் கூலி எதுவும் வாங்கியதேயில்லை. இங்கிலாந்தில் இப்படி ஒருவரைப் பார்க்க முடியாது என்று சாமுவேலிற்குத் தோணியது.
தனது பாராட்டின் அடையாளமாக அந்த அரையணாவை பெற்றுக் கொள்ளும்படி சொன்னார் சாமுவேல்,
“நான் இதுவரை கையில் காசைத் தொட்டதேயில்லை. அது பிசாசு. அதன் பின்னால் நம்மைக் கூட்டிக் கொண்டு போய்விடும். நடப்பதற்காக யாராவது கூலி வாங்குவார்களா என்ன“. என்றபடி சாப்பன் புறப்படத் துவங்கினார்.
சாமுவேல் வியப்புடன் சாப்பனைப் பார்த்துக் கொண்டிருந்தார். பின்பு இந்தியர்களைப் புரிந்து கொள்ள முடியாது என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார்.
••
April 5, 2024
“உறுபசி” – நமக்குள் இருக்கும் தீமை
முனைவர். வ. இரமணன்
தமிழ் நாடு தடய அறிவியல் துறை.

பிரபஞ்சத்தின் சிதறம் (entropy) எப்போதும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்கிறது வெப்பவியக்கவியலின் இரண்டாம் விதி. அதாவது ஒழுங்கின்மை அல்லது சிதறிக்கிடப்பதுதான் பிரபஞ்சத்தின் இயல்பு. எந்த ஒரு ஒழுக்கமும் இயற்கைக்கு எதிரானது. என்று ஆதிமனிதன் வாழத்தலைப்பட்டானோ அன்றே இயற்கையை எதிர்க்கத்துணிந்து விட்டான். இன்றுவரை மனிதன் இயற்கையை எதிர்த்துக்கொண்டேதான் இருக்கிறான்.
நாம் நமக்கென்று சட்டதிட்டங்கள் வகுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவை இல்லையென்றால் மனிதன் வாழ்வது கடினமாகிவிடும். ஒரு கட்டற்ற வாழ்க்கையை மனிதன் மேற்கொள்ள நினைத்தால் சமூகம் மதிக்கும்படி அவனால் வாழமுடியாது. சமூகம் அவனைத் துடைத்தெறிந்துவிடும். அவ்வாறு துடைத்தெறியப்பட்ட ஒருவனின் அவலம்தான் “உறுபசி”.
சம்பத் என்ற மனிதனை நாம் கதைநெடுக ஒரு கட்டற்றவனாகவே காண்கிறோம். பறவைகள் போல, விலங்குகள் போல. அவன் வெளிகளைப் பிரிக்கும் சுவர்களை மனிதனின் கண்டுபிடிப்புகளிலேயே கொடுமையானது என்கிறான். ஒரு பெண்ணுடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டுமானால் ஒருவன் வேலைக்குச்சென்று சம்பாதிக்க வேண்டுமென்பது எவ்வளவு பெரிய அநீதி என்கிறான். இவை கட்டற்ற விலங்குகளின் குணங்கள். விலங்குகளைப்போல அவனும் கால்போன போக்கில் சுற்றித்திரிகிறான். அடுத்த நிமிடத்தைப் பற்றிச் சிந்திக்காதவனாக, நிகழ்காலத்தில் மட்டும் வாழ்பவனாக. உயிர்களின் அபரிமிதமான ஆதாரசக்தியான காமத்தால் அலைக்கழிக்கப்படுகிறான். அதனை மனவடக்கமெனும் மத்தகம் கொண்டு அடக்கத்தெரியாதவனாக அல்லலுறுகிறான்.
எஸ்.ரா அவர்கள் சம்பத்தின் வாழ்க்கையை ஒரு தீக்குச்சியின் வாழ்க்கையுடன் ஒப்பிடுகிறார் போலும். அதனாலேயே அவனைத் தீப்பெட்டிகளின்மீது விருப்பம் கொண்டவனாகச் சித்தரிக்கிறார் என எண்ணுகிறேன். எப்படித் தீக்குச்சியானது தொடக்கத்தில் அதிபிரகாசமாக எரிகிறதோ அப்படியே சம்பத்தின் இளமைக்காலம் அவனை ஒரு சிந்தனையாளனாக, போராளியாக, அஞ்சானாக, பெரும் அரசியல் எதிர்காலம் வாய்க்கப்பெறக்கூடிய ஒரு மேடைப்பேச்சாளனாக, புரட்சியாளனாகப் பிரகாசமாக அடையாளம் காட்டுகிறது. பிரகாசமாக எரிந்த தீக்குச்சியின் ஒளி அதன் தலையில் தரித்திருந்த பாஸ்பரஸ் ஆவியானதும் சட்டென்று வலுவிழப்பதைப்போல ஒரே நாளில் அவனது இயல்பான கட்டற்ற தன்மையால் அவனது அரசியல் எதிர்காலம் அஸ்தமிக்கிறது. பிறகு அவனது வாழ்க்கை, தீக்குச்சியின் ஆதரவில் இயல்பாக எரியும் ‘சவலைத்தீ’யானது, வீசும் காற்றுக்கு அஞ்சி அதிர்ச்சிக்குள்ளாகி இப்போது அணையுமோ எப்போது அணையுமோ என்று தழலாட்டம் ஆடித்தத்தளிப்பதைப்போலாகிறது.
நான் கவனித்தவரை, மகிழ்ச்சியளிக்கக்கூடிய புத்தகங்களை நாடும் அல்லது வாழ்க்கையின் இயல்பான சலிப்புகளிலிருந்து சிறிது ஓய்வுபெற புத்தகங்களில் அடைக்கலம் புகுந்து மகிழ்ச்சியை நாடும் வாசகர்களுக்கு “உறுபசி” ஏமாற்றம் அளித்துள்ளது. மாறாக இலக்கியத்தேடல் கொண்ட வாசகர்கள் உறுபசியைப் புரிந்துகொள்கிறார்கள். எஸ்.ரா அவர்களின் நேர்மையான எழுத்துக்கள் சிலசமயங்களில் வாசகர்களை அசௌகர்யமாக்குகின்றன. மருத்துவமனைச் சூழலிலும் ஜெயந்தியின் விலகிய மாராப்பைப் பார்த்துக்கொண்டிருந்த அழகரும், இறந்த கணவனுக்காக ஈரப்புடவையுடன் நீர்மாலை சுமந்துவரும் ஜெயந்தியை விழிகளால் பருகிக்கொண்டிருந்த ஆண்களும், மாரியப்பனின் பால்யகால ஓரினச்சேர்க்கை சம்பவமும், சம்பத்தின் காமவேட்கையும், இன்னபிறவும் வாசகனை அசௌகர்யமாக்கியிருக்கலாம். ஒருவேளை அந்நிகழ்வுகளில் வாசகன் அவனையேகூடப் பார்த்திருக்கலாம். அந்தக்குற்றவுணர்ச்சி அவனை அசௌகர்யமாக்கியிருக்கலாம்.
சம்பத்தின் நடத்தைக் கோணல்களையும் தாண்டி, அவன் நண்பர்களும், ஜெயந்தியும், யாழினியும் அவனை விரும்புகிறார்கள். நாம் எப்போதும் இயற்கையின் தன்னியல்பையும், கட்டிலா ஆற்றலையும், இயக்கத்தையும் கண்டு வியக்கிறோம். அதேபோன்ற இயல்புகள் கொண்ட சம்பத்தையும் அவன் நண்பர்கள் பல கருத்து வேறுபாடுகளையும், கசப்புகளையும் தாண்டி விரும்புகிறார்கள். அவனாக வாழமுடியவில்லையே என்ற உள்மன ஏக்கம் அவர்களுக்குள் இருந்திருக்கலாம்.
கட்டற்ற தன்மை கொண்ட சம்பத்தால் கட்டுப்பாடுகளே நியதியான இச்சமூகத்தில் தன்னைப்பொருத்திக்கொள்ள இயலவில்லை. ஒரு மேடைப்பேச்சாளனாக, அச்சக ஊழியனாக, விற்பனைப் பிரதிநிதியாக, பத்திரிகையில் பிழை திருத்துபவனாக, பூச்செடிகள் விற்பவனாக அவன் இச்சமூகத்தில் பொருந்திவாழ முயற்சிக்கிறான். அவனுடைய கட்டற்ற தன்மையாலும், இயற்கையான அறஉணர்வினாலும் அவனால் அவ்வேலைகளில் ஊன்றமுடியவில்லை. ஒவ்வொரு இடத்திலிருந்தும் பெயர்ந்துகொண்டே இருக்கிறான்.
அவனுடைய இயற்கையான கோணல் நடத்தையினால் சிறுவயதில் அவனது தங்கை சித்ராவின் மரணத்திற்கு அவனும் ஒரு காரனமாகிறான். அதுமுதல் குடும்பத்தினர் குறிப்பாக அவனது அக்கா அவனை வெறுக்கிறாள். அக்கா அவளது மகளுக்குச் சித்ரா என்று பெயர் சூட்டியிருப்பது தன் தங்கையிடம் அவளுக்குள்ள அன்பைக்காட்டுகிறது. தங்கையைத் தான் பார்த்துக்கொள்ளாமல் சம்பத்தின் பொறுப்பில் விட்டோமே என்ற குற்றஉணர்ச்சி கூடக் காரணமாக இருக்கலாம். சம்பத்தின் தந்தைக்கு இந்நிகழ்வுடன் சேர்ந்து அவனது பொறுப்பற்ற தன்மையும் கோபத்தை ஏற்படுத்துகிறது. அவனுக்கும், குடும்பத்தினருக்கும் நடுவில் ஒரு கட்புலனாகாத சுவர் எழுகிறது. அவன் தனிமைப்படுத்தப்படுகிறான். தங்கையின் மரணம் ஏற்படுத்திய குற்றஉணர்ச்சியும், குடும்பத்தினரின் புறக்கணிப்பும், தனிமையும், பாதுகாப்பின்மையும் சேர்ந்து அவனை முரடனாக்குகின்றன. எங்கும் அடிதடிகளில் இறங்குகிறான். தகப்பனிடம் அடிவாங்குகிறான். தகப்பனை அடிக்கிறான். மாமனிடமும், அக்காளிடமும் வசவு வாங்குகிறான். யாழினியால் இயல்பான வாழ்க்கைக்கு ஆகாதவனென நிராகரிக்கப்படுகிறான். தன் தோல்விகளையும், மனக்குமுறல்களையும் தனித்துக்கொள்வதற்காக ஜெயந்தியுடன் ஓயாமல் உறவில் ஈடுபடுகிறான். வாழ்க்கை முழுவதும் நிராகரிக்கப்பட்டு, துரத்தப்பட்டு, ஓடிக்களைத்து, மரணத்திற்கு விரும்பி, தீக்குச்சியின் கடைசி நொடித்துளிகள் போல் மங்கி ஒளியிழந்து கட்டுப்பாடுகளால் நிறைந்த இவ்வுலகை விட்டு கட்டற்ற வெளியுடன் கலக்கிறான்.
“நாமெல்லாம் பிராடுடா, சம்பத்தாண்டா வாழ்க்கைய உண்மையா வாழ்ந்தவன்” எனும் ராமதுரையின் வரிகள் யோசிக்க வைக்கின்றன. ஆம். உண்மையில் நாம் அனைவரும் நமக்குள் இருக்கும் தீமையை வெளியில் காட்டாமல் வேஷம் போட்டுக்கொண்டுதான் இருக்கிறோம், இச்சமுதாயத்தில் இருந்து துடைத்தெறியப்பட்டுவிடாமல் இருக்கும் பொருட்டு.
“அவன கொஞ்சம் பொறுத்துப்போயிருந்தா அவனும் வாழ்ந்துருப்பாண்டா” என்னும் ராமதுரையின் ஆதங்கம் அவனைச் சம்பத்தின் உண்மையான தோழனாக அடையாளம் காட்டுகிறது. சம்பத்தின்மீது எப்போதும் கோபப்பட முடியாத ஜெயந்தியின் பாத்திரவார்ப்பு விசித்திரமானது. இலக்கியத்தேவை கருதி நிச்சயம் வாசிக்கப்பட வேண்டியது நூல்தான் “உறுபசி”.
****
April 4, 2024
எம்.எஃப் ஹுசைன்
Through the Eyes of a Painter – ஓவியர் எம்.எஃப் ஹுசைன் இயக்கிய திரைப்படம். 18 நிமிஷங்கள் கொண்ட இந்தப் படம் ஓவியனின் பார்வையில் ராஜஸ்தானின் மூன்று கிராமங்களை மிகுந்த அழகுணர்வுடன் சித்தரிக்கிறது.

இசையும் காட்சிப்படிமங்களும் இணைந்து புதிய அனுபவத்தைத் தருகின்றன.
படத்தில் உரையாடல் கிடையாது
காட்சிக்கோர்வைகளின் வழியே காலமும் கலைகளும் உருவாக்கிய மாற்றங்களை அடையாளப்படுத்துகிறார்.
மணிகௌலின் ஆவணப்படங்களைப் போன்ற அழகியலைக் கொண்டிருக்கிறது.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
