S. Ramakrishnan's Blog, page 39
March 28, 2024
முப்பது வயதுச் சிறுவன்
புதிய சிறுகதை.
சேதுராமனின் அப்பா கனவில் வந்திருந்தார்.
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த மனிதர் இப்போது ஏன் கனவில் தோன்றினார் என்று முரளிதரனுக்கு வியப்பாக இருந்தது.

கண்விழித்த பிறகும் அவரைப் பற்றிய நினைவே மேலோங்கியது. படுக்கை அருகேயிருந்த இரவு விளக்கைப் போட்டார். ஆரஞ்சு வெளிச்சம் பரவியது. சுவரில் இருந்த கடிகாரம் மணி மூன்றரை என்று காட்டியது.
இப்போது இந்தியாவில் பகல்நேரம். டென்வரில் பின்னிரவு. விடிவதற்கு இன்னும் நேரமிருக்கிறது.
முதுமையில் தான் பள்ளி பற்றிய கனவுகள் நிறைய வருகின்றன. அதிலும் பரிட்சை எழுதிக் கொண்டிருக்கும் போது எழுதக் கைவராமல் போவது போன்ற குழப்பமான கனவுகள்.
அந்தக் காலத்தில் இவ்வளவு புகைப்படங்கள் எடுக்கப்படவில்லை. தனது பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கையின் சாட்சியமாக ஐந்தே புகைப்படங்கள் அவரிடமிருந்தன. ஒன்றோ இரண்டோ அதிகம் எடுத்திருக்கக் கூடும். அவை தொலைந்துவிட்டிருந்தன.
எவ்வளவு காலம் மாறினாலும் சிலரது முகம் மறப்பதேயில்லை. அப்படியான ஒருவர் தான் சேதுராமனின் அப்பா. அவரது பெயர் செல்வம்.
மொட்டைநாக்கு என்பதால் அதைச் சொலவம் என்றே எப்போதும் சொல்வார்.
சேதுராமன் அவருடன் ஐந்தாம் வகுப்பில் படித்தான். ஆறாம் வகுப்பிலிருந்து முரளிதரன் ஊர் மாறிவிட்டார்.. ஆகவே சேதுராமனை சந்திக்கவேயில்லை. இப்போது உயிருடன் இருக்கிறானா என்று தெரியவில்லை. தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அவருக்கில்லை. ஆனால் அப்படி அவனது அப்பாவைப் பற்றி நினைக்க முடியவில்லை.
••
முரளிதரன் படித்த பள்ளி மிகவும் பழமையானது. சிவப்பு நிறக் கட்டிடம் கொண்டது. பெரிய வகுப்பறைகள். தரையில் பதிக்கப்பட்ட உறுதியான மரபெஞ்சுகள். பேரின்பதாஸ் அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தார்.
அப்பாவின் இடமாற்றத்தால் அவர்கள் மதுரைக்குப் புதிதாக வந்திருந்தார்கள். ஐந்தாம் வகுப்பில் அவரது பக்கத்துப் பெஞ்சில் சேதுராமன் அமர்ந்திருந்தான்.
ஆசிரியர் கேட்கும் எந்தக் கேள்விக்கும் சரியான பதில் சொல்ல மாட்டான். அப்படிச் சொல்வது கூடத் தவறு. பதிலே சொல்லமாட்டான். தரையை வெறித்துப் பார்த்தபடி நின்றிருப்பான்.
“வாயில என்ன கொழக்கட்டையா வச்சிருக்கே.. தடிமாடு“ என்று ஆசிரியர் திட்டுவார். ஒரே வசையை ஏன் அத்தனை ஆசிரியர்களும் பயன்படுத்துகிறார்கள் என்று புரியாது.
சொக்கலிங்கம் சார் திட்டும் போது வகுப்பில் சிரிப்பொலி எழும். ஆனால் சேதுராமன் தலைகவிழ்ந்தபடியே நின்றிருப்பான்.
ஆசிரியரின் கோபமான பிரம்படிக்குப் பின்னால் தயங்கித் தயங்கி தவறான பதிலைச் சொல்வான். மீண்டும் அடி விழும். அப்படி அடிவாங்கியதற்காகச் சேதுராமன் ஒரு நாளும் அழுததில்லை.
ஆனால் அவனது அப்பாவை யாராவது கேலி செய்தால் உடனே அழுதுவிடுவான். அதுவும் ஏதாவது ஆசிரியர் பிச்சைக்கார பய என்று சொல்லிக்காட்டிவிட்டால் தேம்பித்தேம்பி அழுவான்.
••
சேதுராமனின் அப்பாவிற்கு மனநிலை பேதலித்திருந்தது. அதை அவரது கண்களைப் பார்க்கும் போது மட்டுமே உணர முடியும். முப்பது வயதிருக்கும். ஐந்தடிக்கும் குறைவான உயரம். சிக்குப்பிடித்த தாடி. அழுக்கான வேஷ்டி. கோடு போட்ட சட்டை. அதில் இரண்டு பொத்தான் இருக்காது. ஒரு பொத்தானை மாற்றிப் போட்டிருப்பார். கழுத்தை ஒரு பக்கமாகச் சாய்ந்து கொண்டு நிற்பார்.. சில சமயம் தெருவில் கிடக்கும் மண்ணை அள்ளி தன்னுடைய தலையில் போட்டுக் கொள்வார். கேட்டால் மண்குளியல் என்பார்.
அவர் தினமும் காலை பதினோறு மணிக்கு பள்ளி இடைவேளை விடும் போது இரண்டாவது கேட்டில் வந்து நிற்பார். அந்த இரும்புக் கதவின் இடைவெளி வழியாகப் பாட்டி விற்கும் இலந்தைபழம். நெல்லிக்காய். குச்சிமிட்டாயை மாணவர்கள் முண்டியடித்துக் கெண்டு வாங்குவார்கள். இனிப்பு வடை மற்றும் கார வடை விற்கும் காதர்பாயிடம் வடை வாங்கித் தின்பார்கள்.
சைக்கிளில் ஐஸ் பெட்டியுடன் வந்து நிற்கும் இன்பசேகரிடம் “இன்பாண்ணே, சேமியா ரெண்டு. பால்ஐஸ் ஒண்ணு“ என்று மாறி மாறி கைநீட்டி வாங்குவார்கள்.
சேதுராமனின் அப்பா அதே இடைவெளி வழியாகத் தனது மயிர் அடர்ந்த கையை நீட்டி மாணவர்களிடம் காசு கேட்பார். பையன்கள் காசு தரமாட்டார்கள். காசு… காசு என்று சொல்லியபடியே கையை ஆட்டிக் கொண்டேயிருப்பார்.
அப்படி யாசிக்கும் போது அவரது முகத்தைப் பார்க்க பரிதாபமாக இருக்கும். மாணவர்களில் எவராவது சில்லறைக் காசு கொடுப்பதுண்டு. அதை இன்பசேகரிடம் நீட்டி “எனக்குச் சேமியா குடு“ என்று வாங்கிக் கொள்வார்
வாயில் எச்சில் ஒழுக அவர் ஐஸைச் சப்பிச் சப்பிச் சாப்பிட்டிக் கொண்டிருப்பதை முரளிதரன் கண்டிருக்கிறார்.
தாடையில் வழியும் ஐஸை அப்படியே இடதுகையால் முகத்தில் தடவிவிட்டுக் கொண்டு சில்லுனு இருக்கு என்று சிரிப்பார் சேதுராமனின் அப்பா.
••
ஒரு நாள் கூட இடைவேளையின் போது சேதுராமன் வகுப்பைவிட்டு வெளியே வந்ததில்லை. அவனது அப்பா கைநீட்டிக் காசு கேட்பதை அவன் அறிவான். அதைப்பற்றி மாணவர்கள் கேலி செய்யும் போது கோபம் கொள்வான். சில நேரம் அது மல்லுக்கட்டு சண்டையாகியும் விடும்.
பள்ளிக்குப் புதிதாக வந்து சேர்ந்திருந்த கணித ஆசிரியர் பழனிச்சாமி ஒரு முறை அவனிடம் கேட்டார்
“உங்க அப்பா என்னடா லூசா“
“அதெல்லாமில்லை சார்“
“பிச்சைக்காரன் மாதிரி ஸ்கூல்கேட்டுல கையை நீட்டி காசு கேட்குறார்“
“அது அவரு இஷ்டம். உங்க கிட்ட ஒண்ணும் காசு கேட்கலையே“ என்று கோபமாகச் சொன்னான் சேதுராமன்
“நான் வேற அந்த லூசுக்கு காசு தரணுமா.. நாளைல இருந்து உங்கப்பா ஸ்கூல் கேட்ல வந்து நிக்கக் கூடாது, சுத்த நியூசென்ஸ். “
“நான் சொன்னா அவரு கேட்கமாட்டாரு. “
“அப்போ நானே போலீஸ்ல பிடிச்சி குடுத்துருவேன் பாத்துக்கோ“
“எங்கப்பாவை போலீஸ் பிடிக்காது சார்“ என்று உறுதியாகச் சொன்னான் சேதுராமன்
ஏன் அப்படிச் சொன்னான் என்று புரியவில்லை. ஆனால் சேதுராமனின் அப்பா பள்ளிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை.
சில நேரம் மாணவர்கள் காசு கொடுப்பதற்குப் பதிலாக உடைந்த ஓட்டுத்துண்டினை அவரிடம் கொடுத்து “இதுல ஐஸ் வாங்கிக்கோ“ என்று கேலி செய்வார்கள். அப்போது அவர் கெட்டவார்த்தையால் அவர்களைத் திட்டுவார். கோபத்தில் எச்சில் துப்புவார்.
அதை ஜெயந்தி டீச்சர் பார்த்திருக்கிறாள். அசிங்கமாகப் பேசும் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி தலைமை ஆசிரியரிடம் புகாரும் செய்திருக்கிறாள். ஆனால் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
••

அன்றாடம் காலையில் சேதுராமனைப் பள்ளிக்குக் கொண்டு வந்துவிடுவதும் மாலையில் திரும்ப அழைத்துக் கொண்டு வருவதும் அவரது வேலை.
மாலை நாலரை மணிக்கு பள்ளிவிடும் போது சேதுராமனின் அப்பா மெயின்கேட்டில் வந்து நின்றிருப்பார். அவன் படியிறங்கி வந்தவுடன் அவனது புத்தகப்பையை வாங்கிக் கொள்வார். தனது தோளில் போட்டுக் கொண்டு நடப்பார். இவரும் சந்து சந்தாகச் சுற்றிக் கொண்டு வீட்டிற்குப் போவார்கள். அப்போதெல்லாம் சேதுராமனின் அப்பா பள்ளியில் படிக்கிறவர் போலவே தோன்றுவார்.
இவ்வளவு பொறுப்பாக மகனை பள்ளிவிட்டு அழைத்துக் கொண்டு போகிறவர் எப்படி மனநிலை பேதலித்தவராக இருக்க முடியும்.
சேதுராமனின் வீடு தம்புராயன் தெருவில் இருந்தது. அதே தெருவில் தான் முரளிதரனும் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார். ஒன்றிரண்டு முறை அரைத்த கோதுமை மாவைக் கொடுப்பதற்காக சேதுராமனின் அப்பா அவர்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார்.
காந்தி சிலையை ஒட்டி சேதுராமனின் தாத்தாவிற்குச் சொந்தமான மாவுமில் இருந்தது. சிவப்பு கொல்லத்து ஒடு போட்ட கட்டிடம். முன்னால் ஒற்றை வேப்பமரம். அந்த மில்லை சேதுராமனின் அம்மா சாந்தி நடத்திவந்தாள். அவர்கள் வீடு. மாவுமில் உள்ளிட்ட சொத்து முழுவதும் சேதுராமனின் அப்பாவிற்கு உரியது என்றும் அதைச் சொல்லியே அவனது அம்மாவை திருமணம் செய்து வைத்தார்கள் என்று பேசிக் கொண்டார்கள்.
சேதுராமனின் அம்மா எப்போதும் சோகமான முகத்துடனே இருப்பார். அவளது சேலையில் மாவு படிந்து போயிருக்கும். தலையில் புறங்கையில் கூட மாவு திட்டாகப் படிந்திருக்கும்.
தினமும் காலையில் சேதுராமனை பள்ளியில் விட்டவுடன் அவனது அப்பா மாவுமில்லிற்கு வந்து சுத்தமாகத் தரையைக் கூட்டுவார். பின்பு பிளாஸ்டிக் குடத்தைக் கொண்டு போய் அடிபம்பில் தண்ணீர் அடித்துக் கொண்டு வருவார். சாமி படத்திற்கு மணியடித்துச் சூடம் காட்டுவார். பிறகு சப்தமாக “சாந்தி.. நான் வீட்டுக்கு போகட்டுமா“ என்று கேட்பார்.
“வீட்டுக்கதவை திறந்து போட்டுட்டு ஸ்கூலுக்குப் போயிராதே. உனக்கு ஐஸ் வாங்க காசு வேணும்னா நான் தர்றேன்“ என்று சொல்லுவாள் சாந்தி
“அதெல்லாம் நான் பாத்துகிடுவேன்“ என்று சொல்லுவார். அது நான் பாத்துகிதுவேன் என்பது போலவே கேட்கும்
சில நாட்கள் மாவு மில்லில் இருந்து வீட்டிற்குக் கிளம்பும் அவரது கையில் நாலணாவைக் கொடுத்து “ஐஸ் வாங்க வச்சிக்கோ“ என்பாள் சாந்தி
அந்தக் காசை பெரும்பாலும் வீதியில் வீசி எறிந்துவிடுவார். ஒருமுறை தெருநாயின் முன்பாக நீட்டி வடைவாங்கித் தின்னு என்று சொன்னார். அதற்கும் சாந்தி கோவித்துக் கொண்டாள்.
அன்றாடம் அவர் பள்ளி மாணவர்களிடம் காசு கேட்டு வாங்குவதை யாராலும் தடுக்க முடியவில்லை. இதற்காக அவருக்கு இரண்டு முறை அவரது காலில் சூடு வைத்திருக்கிறாள்
அப்போது வலி தாங்க முடியாமல் புறங்கையால் கண்ணீரை துடைத்தபடி “சாந்தி நீ சரியில்லை“ என்றார். தன்னைக் கோவித்துக் கொள்ளவும் தெரியாத அந்த மனிதனைப் பார்த்து சாந்தி அழுவாள்.
“பாத்தியா நீ அழறே. இதுக்குத் தான் எனக்குச் சூடு போட வேணாம்னு சொன்னேன்“ என்றார் சேதுராமனின் அப்பா.
அவரும் சிறுவயதில் எல்லோரையும் போல தான் இருந்திருக்கிறார். வீட்டிற்கு ஒரே பையன். ஒரு நாள் பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பவில்லை. மகனை காணோம் என்று அவரது அம்மா தேடியிருக்கிறாள். பள்ளியின் கழிப்பறைக்குள் அமர்ந்திருந்த அவரைக் கண்டுபிடித்து வாட்ச்மேன் இரவில் வீட்டு அழைத்துக் கொண்டு வந்தான். மறுநாள் முதல் அவர் இப்படி ஆகிவிட்டார் என்றார்கள்.
பள்ளியில் என்ன நடந்தது என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை. அவரும் எதையும் சொன்னதில்லை. ஏதோ ஒரு அதிர்ச்சி இப்படியாக்கிவிட்டது என்று பேசிக் கொண்டார்கள்.
சில நேரங்களில் ஹபா, ஹபா . ஹபா என ஒரே சொல்லைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டேயிருப்பார். திடீரென ஆடை எதுவும் இல்லாமல் அம்மணமாகப் படுத்துக்கிடப்பார். சில நாட்கள் அகோரப்பசியில் பொங்கி வைத்த மொத்த சோற்றையும் ஒரே ஆளாகச் சாப்பிட்டுவிடுவார்.
யாராவது அவரிடம் சேதுராமனை காட்டி “இது யாரு“ என்று கேட்டால் “எங்க அய்யா“ என்று சொல்லுவார்.
சேதுராமனை எப்போதும் “சேதய்யா“ என்றே அழைப்பார்.
சேதுவிற்குத் தன் அப்பா ஏன் இப்படி இருக்கிறார் என்று வருத்தமாக இருந்தது. அதே நேரம் மற்ற பையன்களின் அப்பா போலத் தன்னிடம் அவர் கோவித்துக் கொள்வதில்லை, கைநீட்டி அடித்ததில்லை. ஆனால் அவர் ஏன் சிறுவனாகவே இருக்கிறார் நடந்து கொள்கிறார்.
தினமும் அப்பாவும் அவனும் ஒன்றாக ஊர் சுற்றுவார்கள். கிட்டி விளையாடுவார்கள். அவனைப் போலவே அப்பாவும் ஒரு பம்பரம் வைத்திருந்தார். அவனோடு ஒன்றாக விளையாடினார். ஆனாலும் சேதுராமன் மற்ற அப்பாக்களைப் போலத் தன்னுடை அப்பா இருக்க வேண்டும் என்றே விரும்பினான்.
ஒருமுறை அப்பாவிடம் கோபமாகச் சொன்னான்
“நீ ஏன் கண்டவன்கிட்டயும் காசு கேட்குறே“
“ஸ்கூல் பசங்க கிட்ட தானே காசு கேட்குறேன்“
“அது தப்புப்பா. உனக்குச் சொன்னா புரிய மாட்டேங்கு“
“உனக்கு தான் புரிய மாட்டேங்கு. நான் ஐஸ் வாங்கத் தானே காசு கேட்குறேன்“
“அதை நான் தர்றேன். நீ யார் கிட்டயும் கேட்கக் கூடாது“
“உன் காசு எனக்கு வேண்டாம். அவங்க காசு தான் வேணும்“
“நீ இப்படிப் பேசுனா. நான் பள்ளிக்கூடத்துக்கே போகமாட்டேன் பாத்துக்கோ“
“நான் ஸ்கூலுக்குப் போவேன். எனக்கு ஐஸ் வாங்கித் திங்கணும்“
“பசங்க எல்லாம் உன்னைப் பிச்சைக்காரன்னு சொல்றாங்க“
“நல்லா சொல்லட்டும் எனக்கென்ன“
“கை நீட்டி காசு வாங்கினா நீ பிச்சைக்காரன் தான்“ என்று கோபமாகச் சொன்னான்
“மில்லுல சாந்தி கூடக் கையை நீட்டி தான் காசு வாங்குறா. அவ பிச்சைக்காரியா“
“அது நம்ம காசுப்பா. “
“இதுவும் நம்ம காசுதான்“
எனச் சிரித்தார். அவருக்கு எப்படிச் சொல்லி புரியவைப்பது என்று தெரியாமல் சேதுராமன் விழித்தான்
••
அவரைக் கட்டுப்படுத்த முடியாமல் ஐஸ்காரனிடம் அவர் கேட்டால் ஐஸ் தர வேண்டாம் என்று சொல்லி வைத்தார்கள். அன்றைக்குக் காசை கையில் நீட்டியபடி அவர் ஐஸ் கேட்டபோது இன்பா தர மறுத்துவிட்டான்.
கையில் காசுடன் அவர் அழுத அழுகையைக் கண்டு இன்பசேகர் கலங்கிப் போய்விட்டான். ஒன்றுக்கு இரண்டாகச் சேமியா ஐஸ் கொடுத்தான். அதன்பிறகு அவர் காசு கொடுக்காமல் கைநீட்டினாலும் ஐஸ் கொடுப்பதை வழக்கமாக்கி கொண்டான்.
ஒருமுறை சேதுராமன் மஞ்சள்காமாலை வந்து மிகவும் அவதிப்பட்டான். பள்ளிக்குப் போகவில்லை. ஆனால் அவனது அப்பா எப்போதும் போல அவனது புத்தகப்பையைத் தனது தோளில் போட்டுக் கொண்டு பள்ளிக்கு சென்றார். அவனது வகுப்பு மாணவர்களிடம் சேதய்யா இடத்துல வச்சிருங்க என்றார். மாலையில் அந்தப் பையை ஒரு மாணவன் எடுத்து வந்து கொடுத்த போது திரும்ப வாங்கிக் கொண்டு போனார்.
இந்தச் செயலுக்குப் பிறகு ஆசிரியர் எவரும் அவரைக் கேலி செய்யவில்லை.
சித்ரா டீச்சர் ஒரு நாள் பள்ளி இடைவேளையின் போது கம்பி வழியாக நீட்டிய அவரது கையில் காசு கொடுத்தாள். அவர் உற்சாகமாக இரண்டு சேமியா ஐஸ் வாங்கிவந்து டீச்சர் உங்க ஐஸ் என்று அதே கேட் வழியாக நீட்டினார்.
“இதுவும் உங்களுக்குத் தான்“
“ரெண்டு ஐஸ் தின்னா பல் விழுந்துரும்“ என்று சொல்லி சிரித்தார் சேதுராமனின் அப்பா. அதை டீச்சர் வகுப்பில் வந்து சொன்ன போது அவளது கண்கள் கலங்கியிருந்தன.
••
முரளிதரன் ஐந்தாம் வகுப்பின் கோடை விடுமுறைக்குப் போத்தனூரில் இருந்த பாட்டி வீட்டிற்குப் போனார். அந்த விடுமுறை முடிவதற்குள்ளே அவரது அப்பாவிற்குக் கோவைக்கு மாறுதல் வந்திருந்தது. அதன் பிறகு சேதுராமனையோ, அவனது அப்பாவையோ பார்க்கவேயில்லை.
கோவை, சென்னை, ஜெர்மன் எனப்படித்து அமெரிக்காவில் வேலை செய்யத் துவங்கி இங்கேயே செட்டில் ஆகிவிட்டார். எப்போதாவது தனது பள்ளி நாட்களை நினைத்துக் கொள்வார். அப்படி கூட அவர் சேதுராமனின் அப்பாவை நினைத்ததேயில்லை.
இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பு இன்றைய கனவில் ஏன் சேதுராமனின் அப்பா தோன்றினார் என்று புரியவேயில்லை.
அந்தக் கனவு விநோதமாக இருந்தது. திருவிழாக் கூட்டம். அங்கே பொருட்காட்சி நடக்கிறது. முரளிதரன் ஜெயிண்ட்வீல் ராட்டினத்தின் பெட்டியில் அமர்ந்திருக்கிறார். ராட்டினம் சுழலத் துவங்குகிறது. திடீரென அவரருகில் சேதுராமனின் அப்பா உட்கார்ந்திருக்கிறார். அவர் எப்படி அருகில் வந்தார் என்று புரியவில்லை.
ராட்டினம் மிக வேகமாகச் சுழலும் போது சேதுராமனின் அப்பா உற்சாகமாகச் சப்தமிட்டபடி கையைக் காற்றில் வீசினார். அவரது கையிலிருந்து பொற்காசுகள் தெறித்து விழுந்தன. ஆம். பொற்காசுகளே தான்.
திருவிழாக் கூட்டம் அந்தப் பொற்காசுகளைப் பொறுக்க முண்டியடித்தது. சேதுராமனின் அப்பா அவரிடம் ஏதோ சொல்ல முயன்றார். அதற்குள் கனவு கலைந்துவிட்டது.
விழிப்பு வந்து கண்ணைத் திறந்தபிறகும் அவரது கையிலிருந்து தங்க காசுகள் தெறித்து விழுந்தது மறக்கவேயில்லை.
என்ன கனவிது.
கனவு எதையோ உணர்த்தும் என்பார்களே. இக்கனவு எதை உணர்த்துகிறது.
யோசனையோடு எழுந்து சமையல் அறைக்குச் சென்று ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு வந்தார்.
படுக்கையில் கிடந்த போது தோன்றியது.
அவர் பள்ளியில் ஒரு நாள் கூடச் சேதுராமனின் அப்பாவிற்கு காசு கொடுத்ததில்லை.
எத்தனையோ நாள் அவரை வேடிக்கை பார்த்திருக்கிறோம். ஏன் அவருக்கு ஒருமுறை கூட காசு தரவில்லை என்று யோசனையாக இருந்தது.
திடீரென அது குற்றவுணர்வாக மாறியது.
அந்தக் குற்றவுணர்வு தான் கனவாக வந்திருக்கிறதோ என்று நினைத்துக் கொண்டார். ஆணி அடிக்கும் போது சுத்தியல் விரலில் பட்டு ஏற்படும் வலி போன்ற ஒரு உணர்வு அவருக்குள் உருவானது. இதை என்ன செய்வது.
சிறுவயதின் தவறுகளை இப்போது எப்படிச் சரி செய்வது என்று அவருக்குப் புரியவில்லை.
March 27, 2024
ஒரு நாத்திகனின் பிரார்த்தனை
பிரவீன் துளசி என்ற பெயரில் எழுதிவரும் பிரவீன் சந்திரசேகரன் முறையாகப் பிரெஞ்சு பயின்றவர்.
சென்னை அலியான் பிரான்சேஸ் நடத்திய மொழிபெயர்ப்புப் போட்டியில் பரிசு பெற்றிருக்கிறார்.

இவர் ஒனோரே தெ பல்சாக்கின் இரண்டு நெடுங்கதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.
ஒரு நாத்திகனின் பிரார்த்தனை நூலை வம்சி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பால்சாக் பற்றி விரிவான உரை நிகழ்த்தியிருக்கிறேன்.
இந்த நூலை பிரவீன் எனக்குச் சமர்பணம் செய்திருக்கிறார். அவருக்கு மனம் நிறைந்த நன்றி.
March 25, 2024
பேசும் கை
.
ஜப்பானிய எழுத்தாளர் யசுநாரி கவபத்தாவிற்கு1968ம் ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அந்த விருது பெற்றபிறகு அவர் எதையும் எழுதவில்லை. பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு. நேர்காணல்கள் எனத் தொடர்ந்து பொதுநிகழ்வுகளில் கலந்து கொண்ட போதும் இலக்கியப் படைப்புகள் எதையும் அவரால் எழுத இயலவில்லை. 1972ம் ஆண்டு கவபத்தா தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார்.

அவரது கடைசிக்கதை One Arm. இந்தச் சிறுகதையில் ஒரு பெண் தனது வலது கையைக் கழட்டி ஒரு ஆணிடம் தருகிறாள். அவனுக்கு முப்பது வயதிருக்கலாம். தனியாக வாழுகிறான் அவனது கடந்தகாலம் பற்றிய குறிப்புகள் எதுவும் கதையில் இல்லை. ஆனால் அவனது நிகழ்காலம் கடந்தகாலத்தின் நீட்சியாக இருப்பதை உணர முடிகிறது
அந்த மனிதன் துண்டிக்கப்பட்ட வலதுகையைத் தனது வீட்டிற்குக் கொண்டு போகிறான். கை அவனுடன் பேசுகிறது. பெண்ணின் கையை அணைத்துக் கொண்டு உறங்குகிறான். கதையின் முடிவில் அவளது கையிற்குப் பதிலாகத் தனது கையைக் கழட்டி தர முன்வருகிறான்.
வியப்பூட்டும் இந்தக் கதை House Of Sleeping Beauties And Other Stories தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

உறங்கும் அழகிகளின் இல்லம் நாவலின் தொடர்ச்சியாகவே இந்தக் கதையைக் கருதவேண்டும். ஒருவகையில் அந்த நாவலில் இடம்பெறாத. ஆனால் இடம்பெறத் தகுதியான இன்னொரு அத்தியாயம்.
சர்ரியலிசத்தன்மை கொண்ட இந்தச் சிறுகதையைக் கவபத்தா நிஜமான நிகழ்வைப் போலத் துல்லியமாக. கவித்துவமாக எழுதியிருக்கிறார்.
ஒரு எழுத்தாளரின் முதற்கதை போலவே அவனது கடைசிக்கதையும் முக்கியமானதே.
அந்தப் பெண் ஏன் தனது வலதுகையைக் கழட்டி தர முன்வருகிறாள் என்பதற்குக் கதையில் எந்தக் குறிப்பும் இல்லை. அவளுக்குப் பெயர் கிடையாது. ஆனால் அவள் ஒரு கன்னிப்பெண் என்பதைப் பற்றி ஒரு குறிப்புக் காணப்படுகிறது. அவளிடம் கையைப் பெறுகிற மனிதனுக்கும் பெயரில்லை. அவளுடன் இரவைக் கழிக்க வந்தவன் போலவே கதையில் சித்தரிக்கப்படுகிறது.
’I can let you have one of my arms for the night,’ என்ற பெண்ணின் வாசகம் கருணையா, அன்பா, அல்லது சலிப்பில் உருவானதா. தன்னைப் பொம்மை போலத் தான் அந்தப் பெண் உணருகிறாளா. இதுவரை எந்த ஆணும் பெறாத அரிய பரிசு தான் துண்டிக்கபட்ட கையா.

இந்தப் புள்ளியை கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் சரியாக அடையாளம் கண்டு கொண்டு அதனை விரித்துத் தனது நாவலாக எழுதியிருக்கிறார்.
Memories of My Melancholy Whores என்ற அந்த நாவலில் கவபத்தாவிற்கு நன்றி சொல்லியிருக்கிறார்.
கவபத்தாவின் உறங்கும் அழகிகள் நாவலில் வரும் முதியவர்களைப் போலின்றி மார்க்வெஸ் தனது நாவலில் 90வது பிறந்தநாளைக் கொண்டாடும் முதியவரின் கதையைச் சொல்கிறார். அந்தக் கிழவர் தனது பிறந்தநாள் பரிசாக இளம் கன்னியுடன் ஒரு இரவைக் கழிக்க விரும்புகிறார்.
பண்பாடு மற்றும் வாழ்க்கை குறித்த புரிதலில் கவபத்தாவின் முதியவரும் மார்க்வெஸின் முதியவரும் வேறுபடுகிறார்கள். மார்க்வெஸின் நாவலில் வரும் முதியவர் தனது 90வது வயதில் முதன்முறையாகக் காதலை உணருகிறார். அந்த உறவைத் தொடர முனைகிறார். ஆனால் கவபத்தாவின் நாவலில் வரும் முதியவர் மரணத்தை ஒரு பெண்ணாகக் கருதுகிறார். அவரது உறக்கம் ஒரு குறியீடே,
கவபத்தா நாவலில் “for an old man who was no longer a man, to keep company with a girl who had been put to sleep was ‘not a human relationship.’” என்ற வரி இடம்பெற்றுள்ளது. இது தான் கதையின் மையப்புள்ளி. மார்க்வெஸ் நாவல் உறவைத் தொடர விரும்பும் கிழவரின் கதையாக நீளுகிறது.
ஒரு கை சிறுகதையில் அந்தப் பெண் தனது வலதுகையைக் கழட்டித்தர ஒரு சிரமமும் அடையவில்லை. தான் அணிந்துள்ள உடையைக் கழட்டுவது போல எளிதாகக் கையைக் கழட்டி தருகிறாள். அந்தக் கையை அடையாளம் காணுவதற்காகத் தனது மோதிரம் ஒன்றை அணிவிக்க விரும்புகிறாள். ஆகவே இடது கையில் அவள் அணிந்துள்ள மோதிரத்தைக் கழட்டி துண்டிக்கபட்ட வலதுகையில் மாட்ட நினைக்கிறாள். அதைச் செய்ய அவளால் முடியவில்லை. கிழவர் அதற்கு உதவி செய்கிறார்.
அந்த மோதிரம் அவளது கன்னித்தன்மையின் அடையாளம். அதைப் பற்றிக் கதையில் அவள் பேசுகிறாள். தனது அன்னையின் நினைவாகத் தான் அணிந்து கொண்டுள்ள மோதிரம் என்கிறாள். துண்டிக்கப்பட்ட கையைத் தனது மடியில் வைத்துக் கொள்கிறான் அந்த மனிதன். தனது கோட்டினுள் மறைத்து கையை வீட்டிற்கு எடுத்துக்கொண்டு போகிறான். அப்போது வழியில் மாட்டிக் கொள்ளக் கூடுமோ என்று பயப்படுகிறான். ஆகவே நடந்தே செல்கிறான்.
அவள் தனது கையை ஒரு இரவிற்கு அவனுக்குத் தருவதற்கும் பணம் எதையும் பெறவில்லை. அவள் யார். எதற்காக இப்படி ஒரு நாடகம். கையைத் துண்டிக்கும் போது ஒரு துளி ரத்தம் சிந்தப்படவில்லையே.
செயற்கை கையைக் கழட்டித் தருவது போல இயல்பாகத் துண்டித்துவிடுகிறாள். அவள் இப்படி நடந்து கொள்வது இது தான் முதல்முறை என்பது போலவும் தெரியவில்லை.
அந்தக் கை தன்னுடன் பேசுமா என்று அந்த மனிதன் கேட்கிறான். அது ஒரு கையாக மட்டுமே இருக்கும் என்கிறாள். ஒரு வேளை அந்தக் கை பேசும் என்றால் நான் பயப்படுவேன் என்றும் சொல்கிறாள். வலது கை அவளுடன் முன்னதாகப் பேசியிருக்கிறதா. அவள் அறிந்தே பேசும் கையை அவனிடம் தருகிறாளா. வாசிப்பவனின் மனதில் கதை விரிந்து கொண்டே செல்கிறது
அந்த மனிதனுக்குப் பெண்ணின் கையே போதுமானதாக இருக்கிறது. கதையில் துண்டிக்கப்பட்ட. கை பேசுகிறது.. அந்தப் பெண்ணின் நினைவுகள் எதுவும் கையிடமில்லை. கதையின் முடிவில் அவன் தனது கையைப் பெண்ணின் கைக்கு மாற்றாகத் தர விரும்புகிறான். ஒரு கை ஆணாகவும் ஒரு கை பெண்ணாகவும் வாழ விரும்புகிறான் என்று வைத்துக் கொள்ளலாம்.
அப்படி வாழும் ஒருவனைப் பற்றி நினைத்துப் பாருங்கள். அது இன்னொரு வியப்பூட்டும் கதையாக உருவாகிறது.
ரோடின் செய்த கை சிற்பத்தைக் கவபத்தா ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றைக் கண்டிருக்கிறேன். அந்தக் கை தான் இந்தக் கதையை எழுதக் காரணமாக இருந்திருக்கும். ஓவியம் மற்றும் சிற்பங்களின் மீது கவபத்தா தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது நாவல் ஒன்றில் மார்க் சாகல் ஓவியத்தைத் தீவிரமாக ரசிக்கும் நெசவாளர் தனது ஆடைவடிவமைப்பில் சாகலின் ஓவியப்பாணியைக் கொண்டு வருவார். அதே செயலாகவே இந்தச் சிறுகதையைப் புரிந்து கொள்கிறேன்.
கோகலின் மூக்கு கதையில் இது போல ஒரு மனிதனின் மூக்கு தொலைந்து போகிறது. அதை தேடி ஒருவன் அலைகிறான். அது குறியீட்டு கதை என்பதை நேரடியாக உணரமுடிகிறது. ஆனால் கவபத்தா கதையில் கையை துண்டித்து அந்த பெண்ணே தருகிறாள். நாட்டுப்புறக்கதை ஒன்றில் பஞ்சகாலத்தில் ஒரு தாய் தனது விரல்களை துண்டித்து பிள்ளைகளுக்கு உணவாக கொடுத்தாள் என்று படித்திருக்கிறேன். அது துயரத்தின் வெளிப்பாடு. கோவில்களில் கை, கண்மலர் என்று பொம்மை செய்து வேண்டுதல் வைப்பார்கள். அது நேர்ச்சை. இந்தக் கதையில் இடம்பெறுவது அது போன்ற சடங்கும் இல்லை.
தனக்குப் பதிலாக தனது கையை அந்தப் பெண் அவனுடன் இரவை கழிக்க அனுப்பி வைக்கிறாள். அவனது இரவு கதையில் விவரிக்கபடுகிறது. ஆனால் ஒற்றை கையுடன் உள்ள அவளது இரவு கதையில் இல்லை. வாசிப்பவனே அதை உணருகிறான். அவளது கையின் அழகு பற்றி அவளுக்கே பெருமையிருக்கிறது. அதையும் கதையின் ஒரு வரி உணர்த்துகிறது.
கவபத்தாவின் கதைகளில் இப்படி சிதறும் பெண் உடலை திரும்ப திரும்பக் காண முடிகிறது.
கதையின் துவக்கத்தில் அந்தப் பெண் தனது துண்டிக்கப்பட்ட கையை முத்தமிடுகிறாள். கதையின் முடிவில் அந்த மனிதன் அதே கையை முத்தமிடுகிறான். இரண்டும் முத்தங்களும் ஒன்றில்லை.
“When I’m with a man, I’m always sizing myself up- weighing the part of me that wants to become a woman against the part of me that is afraid to. Then I fell miserable and even more lonely” என்று அவரது The Scarlet Gang of Asakusa நாவலில் ஒரு பெண் குறிப்பிடுகிறாள். ஒரு கை சிறுகதை இதே மனநிலையின் வெளிப்பாடுதான்.
மிகக் குறைவான சித்தரிப்பின் மூலம் ஒரு சிறுகதையை எவ்வளவு கச்சிதமாக, விநோதமாக உருவாக்கிவிட முடியும் என்பதற்கு இக் கதை சிறந்த உதாரணம். ரோடின் செய்த சிற்பம் போல எழுத்தில் உருவாக்கபட்ட சிற்பம் என்றே இக்கதைச் சொல்வேன்.
••
March 24, 2024
பக்கத்து இருக்கை
புதிய குறுங்கதை
பத்தொன்பது ஆண்டுகளாக அவன் டயரி எழுதி வருகிறான். அவற்றை ஒரு மரப்பெட்டியில் பாதுகாத்தும் வருகிறான். அவனது டயரியில் ஒரு நாளில் என்ன நடந்தது என்பதைப் பற்றி எழுதவில்லை. மாறாக எங்கே சென்றாலும் அவனது பக்கத்து இருக்கையில் யார் அமர்கிறார்கள் என்பதைப் பற்றி மட்டுமே எழுதி வந்தான்.

பக்கத்து இருக்கையில் யார் அமர்ந்திருக்கிறார்கள் என்பது பலருக்கும் பொருட்டேயில்லை. ஆனால் அவனுக்கு அது முக்கியமானது. தன்னருகில் அமர்ந்திருப்பவர் சில நிமிஷங்களோ, சில மணி நேரமோ தன்னுடன் அவரது வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்கிறார். அது தற்செயல் நிகழ்வில்லை. விநோத விதி.
அதுவும் சினிமா தியேட்டரில். மருத்துவமனையில், ரயிலில், பேருந்தில். அரசு அலுவலகக் காத்திருப்பு வரிசையில் அடுத்து அமர்ந்திருப்பவர் கதையில் வரும் கதாபாத்திரம் போலவே இருக்கிறார். நடந்து கொள்கிறார்.
சினிமா தியேட்டரில் ஒரு முறை அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் படம் துவங்கியது முதல் முடியும் வரை ஜெபித்துக் கொண்டேயிருந்தார். வங்கியில் அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்த கிழவரின் கையில் பாப்பா என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. விமானநிலையத்தில் பக்கத்தில் அமர்ந்திருந்த இளம்பெண் ஒரே விரலில் இரண்டு மோதிரம் அணிந்திருந்தாள்.
மருத்துவமனையில் பக்கத்து இருக்கையில் அமர்ந்த சிறுமி ஊசி போடுவார்களா என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தாள். ஒருமுறை அவனது பக்கத்துச் சீட்டில் பூனை அமர்ந்திருந்தது.
இன்னொரு முறை ஒருவன் விரல் ஒடிந்து ரத்தம் வழிய அமர்ந்திருந்தான். வேறு ஒரு நாள் பக்கத்து இருக்கைப் பெண் தனது டிபன் பாக்ஸை திறந்து உலர்ந்த இட்லியை சீனி தொட்டு சாப்பிட்டாள். ஊட்டி பயணம் ஒன்றில் அடுத்த இருக்கைப் பையன் செல்போனில் தனது காதலிக்கு முத்தம் கொடுத்தபடியே வந்தான்.
சினிமா தியேட்டரில். விமானத்தில். ரயிலில் பக்கத்து இருக்கையில் யார் வந்து அமரப்போகிறார்கள் என்று தெரியாமல் கற்பனை செய்வது சுகமானது. ஒரு போதும் அவனது கற்பனை நினைவானதில்லை. இதை விடவும் அறியாத ஒரு நபர் இரண்டு முறை அவனருகில் அமர்ந்ததேயில்லை. அது மட்டுமின்றி இதுவரை ஒரு வெள்ளைக்காரன் கூட அவனருகில் அமர்ந்ததில்லை. பக்கத்து இருக்கை என்பது ஒரு புதிர். பயணத்தின் போது யாரும் வராமல் காலியாகவே உள்ள பக்கத்து இருக்கை ஏன் இவ்வளவு மகிழ்ச்சியைத் தருகிறது.
ஒருமுறை பெங்களூர் ரயிலில் அவனது பக்கத்துச் சீட்டில் இருந்தவர் எழுந்து அடுத்த கம்பார்ட்மெண்டில் இருந்த நண்பருடன் பேச சென்ற போது இருக்கையில் தனது புத்தகத்தை வைத்துவிட்டுப் போனார். பெங்களூர் வரை அவனது பக்கத்துச் சீட்டில் ஒரு புத்தகம் மட்டுமே பயணம் செய்தது. அதனுடன் எப்படிப் பேசுவது என்று தெரியவில்லை. இருவரும் மௌனமாகப் பயணம் செய்தார்கள்.
திருமணம் செய்து கொண்ட பிறகு அவனது பயணத்தில்,சினிமா அரங்கில். ஹோட்டலில் மனைவியோ மகளோ அமர்ந்து கொள்கிறார்கள். பக்கத்துச் சீட்டில் அவர்கள் அமர்ந்தவுடன் அந்த இடம் வீடு போலாகிவிடுகிறது.
ஒருமுறை ஹோட்டலில் பக்கத்துச் சீட்டில் அமர்ந்தவர் அவன் சாப்பிடுகிற அதே ரவாதோசையை ஆர்டர் செய்தார். அவன் இரண்டாவதாகச் சொன்ன சப்பாத்தியை அவரும் ஆர்டர் செய்தார். அவனைப் போலவே டிகாசன் அதிகமாகக் காபியும் குடித்தார். தானே இரண்டு நபராகச் சாப்பிடுவது போல அவனுக்குத் தோன்றியது.
தனியே இருக்கும் சமயங்களில் தனது பழைய டயரிகளைப் புரட்டி பக்கத்தில் அமர்ந்தவர்களைப் பற்றிப் படித்துப் பார்ப்பான். அவன் படித்த எந்த நாவலிலும் அப்படியான கதாபாத்திரங்கள் வந்து போனதில்லை. வியப்பாக இருக்கும். தனது பக்கத்து இருக்கை மனிதர்களில் ஒருவரேனும் தன்னைப் போல இப்படி நாட்குறிப்பு எழுதுகிறவராக இருப்பாரா, தன்னைப் பற்றி ஏதாவது எழுதியிருப்பாரா என்று யோசிப்பான். ஏமாற்றமே மிஞ்சும். அப்போது விசித்திரமானது உலகம் என்று தனக்குத் தானே முணுமுணுத்துக் கொள்வான்.
March 23, 2024
சீனாவில் தாகூர்
சீனாவின் கடைசிப் பேரரசர் பு யி வுடன் மகாகவி ரவீந்திரநாத் தாகூர் நிற்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பார்த்தேன்.

இந்தப் பேரரசர் பற்றித் தான் The Last Emperor திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. கண்ணாடி அணிந்த மன்னர் என்ற பிம்பம் என் மனதில் ஆழப்பதிந்துவிட்டது.
1924 இல் தாகூர் சீனாவிற்கு வருகை தந்தார். அப்போது எடுக்கபட்ட புகைப்படமிது. Forbidden city எனப்படும் பீஜிங் அரண்மனை வளாகத்தில் இப்புகைப்படம் எடுக்கபட்டிருக்கிறது.
1924 மற்றும் 1928 எனத் தாகூர் இரண்டு முறை சீனா சென்றிருக்கிறார். சீனாவில் தாகூர் அளவிற்குப் புகழ்பெற்ற இந்தியா எழுத்தாளர் எவருமில்லை.
நாம் இன்று ஆசையாக லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களை, கவிஞர்களை மொழிபெயர்த்துப் படித்துக் கொண்டிருக்கிறோம். அங்கோ அவர்கள் தாகூரை கொண்டாடுகிறார்கள். தாகூர் கவிதைகளின் பெருந்தொகுப்பு ஸ்பானிய மொழியில் வெளியாகியுள்ளது.
ரவீந்திரநாத் தாகூருக்கும் அர்ஜென்டினா எழுத்தாளர் விக்டோரியா ஒகாம்போவுக்கும் இடையே ஆழ்ந்த நட்பிருந்தது. ஒகாம்போவின் விருந்தினராகச் சென்று அர்ஜென்டினாவில் தாகூர் தங்கியிருக்கிறார். அவள் கிழக்கிலிருந்து வந்த ஞானக் குருவாகத் தாகூரைப் பார்த்தாள். தாகூரின் ஓவியத் திறமைகளை வெளிக்கொணர்ந்த பெருமை ஒகாம்போவுக்கு உண்டு. அவள் கொடுத்த உத்வேகமே அவரைத் தொடர்ந்து ஓவியம் வரையச் செய்தது. அவளே பாரீஸில் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்தாள்.
சீனாவில் தாகூருக்கு அளிக்கபட்ட வரவேற்பும் அவரது உரையை ஒட்டி எழுந்த விவாதங்களும் இன்றும் பேசப்படுகின்றன.
தாகூர் 1913 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார். ஆங்கில இலக்கிய உலகில் அவரது புகழ் உயர்ந்திருந்த்து. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட அவரது கவிதைகளை அமெரிக்கா மற்றும் ஜப்பானில் பயிலும் கல்லூரி மாணவர்கள் ஆசையாகப் படித்தார்கள். புத்தகம் கிடைக்காத காரணத்தால் கவிதைகளை நகலெடுத்து விநியோகம் செய்தார்கள்.
தாகூருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட செய்தி சீனாவை எட்டியவுடன் அவரைச் சீனாவின் முக்கிய இலக்கியவாதிகள் பலரும் புகழ்ந்து பாராட்டினார்கள். 1915 ஆம் ஆண்டிலேயே கீதாஞ்சலி சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்தப் புகழின் காரணமாக அவரைச் சீனாவிற்கு வந்து உரையாற்றும்படியாகப் பீஜிங் விரிவுரை சங்கம் கேட்டுக் கொண்டது. இந்த அமைப்பின் சார்பில் வெளிநாட்டு அறிஞர்கள் சீனாவிற்கு வருகை தந்து உரையாற்றுவது வழக்கம்.
பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் இப்படிச் சீனா சென்று உரையாற்றியிருக்கிறார். அது சீன அறிவுஜீவிகளிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆகவே அவர்கள் 1923 இல் தாகூரை சீனாவில் ஒரு தொடர் உரையாற்ற அழைப்பு விடுத்தார்கள்.
இந்த அழைப்பை ஏற்றுச் சீனா புறப்பட்டார் தாகூர். கல்கத்தாவிலிருந்து கப்பலில் பயணம் மேற்கொண்டு ஷாங்காய் சென்றார். அங்கே அவருக்குப் பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்பு அங்கிருந்து சீனா சென்றார். அவருடன் ஓவியர் நந்தலால் போஸ். சமஸ்கிருத அறிஞர் மோகன் சென், உதவியாளர் எல்ம்ஹிர்ஸ்ட் உள்ளிட்ட ஐந்து பேர் உடன் சென்றார்கள்.

1924 ஏப்ரலில் சீனா வந்த தாகூர் பல மாதங்கள் அங்கே தங்கியிருந்தார். அவரது சீன மொழிபெயர்ப்பாளராக லின் ஹூயின் பணியாற்றினார்
1924மே 8 அன்று பீஜிங்கில் தனது 64வது பிறந்த நாளைத் தாகூர் கொண்டாடினார். இதனை முன்னிட்டு அவரது சித்ரா நாடகம் ஆங்கிலத்தில் நிகழ்த்தப்பட்டது. அவரது வருகைக்கு முன்பாகவே “தி கிரசண்ட் மூன்” மற்றும் “சித்ரா” போன்ற படைப்புகள் சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன.
தாகூரின் சீனவருகையை அங்கிருந்த இடதுசாரி இளைஞர்கள் விரும்பவில்லை. அவரது வருகையை கடுமையாக எதிர்த்தார்கள். அவரது உரைகள் அறிவியலுக்கு எதிரானது என்று விமர்சனம் செய்தார்கள். இதனால் தாகூர் மனவருத்தம் அடைந்தார். அவர் உரை நிகழ்த்திய அரங்கில் இளைஞர்கள் எதிர்ப்புப் பிரசுரங்களை விநியோகம் செய்தார்கள்.
இந்த எதிர்ப்பிற்கு முக்கியக் காரணம் அவரை அழைத்த வந்த அமைப்பும் அதன் நிர்வாகிகளுமே என்கிறார்கள்.
அவர்களுடன் இருந்த கருத்துவேறுபாட்டினை தாகூரிடம் இளைஞர்கள் காட்டினார்கள். இதில் தாகூரை சீனாவில் மொழிபெயர்ப்பு செய்த மொழிபெயர்ப்பாளர் சிலரும் இணைந்து கொண்டது அவருக்கு மனவருத்தம் அளித்தது.
“இரண்டு நாகரிகங்களுக்கிடையில் மீண்டும் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத் தொடர்புகளை ஏற்படுத்துவதே எனது நோக்கம். நான் ஞானியில்லை. கவிஞன். நான் கேட்பது அரியணையில்லை. உங்கள் இதயத்தில் சிறியதொரு இடம் “என்றே தாகூர் உரையை துவக்கியிருக்கிறார்.
தாகூரின் உரைகளில் சில தற்போது அச்சில் வாசிக்கக் கிடைக்கின்றன. அவரது பயணத்தில் உடன் சென்றவர்கள் இது குறித்து விரிவாக எதையும் எழுதவில்லை. ( அவற்றை வெளியிட வேண்டாம் என்று தாகூரை தடை செய்துவிட்டார் என்கிறார்கள் ). தாகூர் கசப்பான உணர்வுகளுடன் சீனாவை விட்டு வெளியேறினார். அங்கிருந்து கிளம்பி ஜப்பான். கொரியா எனப் பயணம் மேற்கொண்டார்
சீனாவில் இருந்த நாட்களில் அவர் கடைசி மன்னர் பு யி தங்கியிருந்த அரண்மனையைப் பார்க்க விருப்பம் தெரிவித்தார்.
இதை அறிந்த மன்னர் பு யி தாகூரையும் அவருடன் வந்த ஆறு பேரையும் தேநீர் விருந்திற்கு அழைத்தார். அந்தச் சந்திப்பின் போது அறிவியல் மற்றும் கவிதைகள் குறித்து மன்னர் உரையாடினார். சீனாவும் இந்தியாவும் சகோதரர்கள். இரண்டின் பண்பாடு மற்றும் செவ்வியல் கவிதைகள் சிறப்பானவை என்று தாகூர் புகழ்ந்து பேசினார்.
தாகூரின் பல படைப்புகள் சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்ற போதும், அவர் சீனாவில் ஆற்றிய உரைகளைக் கொண்ட நூல் இன்றுவரை சீன மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை. காரணம் யார் செய்தது சரி என்ற சர்ச்சையை அது மீண்டும் கிளறிவிடும் என்பதே.
புதிய காணொளித் தொடர்
அன்றாடம் எனக்கு வருகின்ற மின்னஞ்சலில் பாதிக்கும் மேல் கேள்விகளே. அதிலும் புத்தகங்கள். எழுத்தாளர்கள், அயல் சினிமா மற்றும் பயணம் குறித்த கேள்விகளே அதிகம். பெரும்பான்மைக் கேள்விகளுக்குப் பதில் எழுதுவேன்.
ஒவ்வொரு ஆண்டும் சென்னை புத்தகக் கண்காட்சியின் போது வெளியிடப்படும் எனது புத்தகப் பரிந்துரை காணொளிகள் நிறையப் பேருக்கு உதவிகரமாக இருந்ததை அறிவேன்.
தேசாந்திரி யூடியூப் சேனல் வழியாக சென்னையும் நானும் என்ற காணொளித் தொடர் உருவாக்கப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றது
இந்த சேனலில் நூறுக்கும் மேற்பட்ட எனது உரைகள் காணக் கிடைக்கின்றன
https://www.youtube.com/@desanthiripathippagam/?sub_confirmation=1
எஸ்.ராவிடம் கேளுங்கள் என்ற புதிய காணொளித் தொடரை தேசாந்திரி யூடியூப் சேனல் உருவாக்குகிறது.

இதில் உங்கள் கேள்விகளுக்கு நான் பதில் அளிக்க இருக்கிறேன்.
இலக்கியம், புத்தகங்கள். உலகசினிமா, பயணம், வரலாறு, பண்பாடு, எழுதும்கலை சார்ந்து உங்கள் கேள்விகள் இருந்தால் மகிழ்ச்சி அடைவேன்.
ஒருவர் ஐந்து கேள்விகள் வரை அனுப்பலாம்.
உங்கள் பெயர் மற்றும் ஊர், மின்னஞ்சல் முகவரியோடு கேள்விகளை அனுப்பி வையுங்கள்.
தேர்வு செய்யப்படும் கேள்விகள் நிகழ்ச்சியில் இடம் பெறும்.
எஸ்.ராவிடம் கேளுங்கள் குறித்த காணொளி இணைப்பில் உள்ளது.
March 21, 2024
இருமொழிப் புத்தகம்
புதிய குறுங்கதை
அவன் கையிலிருந்தது இருமொழிப்புத்தகம். அவனுக்கு அந்த இரண்டு மொழிகளும் தெரியாது. ஆனாலும் அப்புத்தகத்தை அவன் ஆசையாக வைத்திருக்கிறான். அடிக்கடி புரட்டிப் பார்க்கிறான். அது ஒரு கவிதைத் தொகுதி என்பதை வடிவத்தை வைத்துத் தெரிந்து கொண்டான்.

ஒரு பக்கம் கவிஞனின் மூலமொழியிலும் மறுபக்கம் மொழியாக்கம் செய்யப்பட்ட மொழியிலும் அச்சிடப்பட்டிருந்தது.
அவனைப் போன்றவர்களுக்கு இருபுறமும் தெரிவது சொல்வடிவு கொண்ட கோடுகளே. கிழே கிடந்த கூழாங்கல்லை கையில் எடுத்து உருட்டும் போது கிடைக்கும் சந்தோஷம் போல மொழி அறியாத சொற்களுக்கு அவனே பொருள் தருகிறான். அதைத் தனது இஷ்டம் போல உச்சரித்துக் கொள்கிறான்..
உண்மையில் அவன் முன்னே இருப்பது மௌனத்தின் வரிசை. அந்த மௌனத்தைப் பல நேரம் அப்படியே விழுங்கிக் கொள்கிறான். சில நேரம் தனக்குப் பிடித்த சொல்லாக்கி விளையாடுகிறான். கவிதை எழுதுவது என்பதே இருமொழி விளையாட்டு தானே.
தாய்மொழி தவிர வேறு அறியாதவனுக்கு உலகின் எல்லா மொழிச்சொற்களும் அழகான கோட்டுருவங்களே.
அந்த நூலை அவன் ஒரு பழைய புத்தகக் கடையில் பத்து ரூபாயிற்கு வாங்கினான். கடைக்காரனுக்கும் அது என்ன புத்தகம் என்று தெரியாது. ஆனால் ஒரு வெளிநாட்டுக்காரன் லாட்ஜில் விட்டுப் போன புத்தகம் என்று மட்டும் தெரிந்திருந்த்து. வெளிநாட்டுக்காரன் படித்த புத்தகம் என்பதாலே அதன் விலை அதிகம்.
மொழி அறியாத புத்தகத்தை வாங்கும் போது அது ஒரு சிற்பம் போலாகி விடுகிறது. சிற்பத்தை நாம் விரும்பியபடி ரசிக்கலாம். பொருள் கொள்ளலாம்.

வீட்டிற்கு எடுத்துச் சென்ற போது அந்தப் புத்தகத்தை எப்படிப் படிக்க வேண்டும் என்று அவனுக்குத் தெரியவில்லை. எந்தப் பக்கத்திலிருந்து ஆரம்பித்தாலும் ஒரே மௌனம் தானே. ஆயினும் முதற்பக்க மௌனமும் கடைசிப்பக்க மௌனமும் ஒன்றாக இருக்காதே. அவன் மனதில் ஒரு எண்ணை நினைத்துக் கொண்டு அந்தப் பக்கத்தைப் புரட்டினான். முப்பத்தி நான்காவது மௌனம் என்பது அவனுக்குப் பிடித்திருந்தது.
அந்தப் பக்கத்தில் ஒரேயொரு தமிழ் சொல்லை எழுதினால் போதும் மௌனம் கலைந்துவிடும். ஆனால் அப்படிச் செய்ய அவன் விரும்பவில்லை.
பள்ளிப் படிப்போடு அவனது கல்வி முடிந்துவிட்டது. ஆயினும் அவன் நூலகத்திற்குச் சென்று விருப்பமான புத்தகங்களைப் படித்தான் முப்பது நாற்பது புத்தகங்களுக்கும் மேலாக விலைக்கு வாங்கியும் வைத்திருக்கிறான். குளத்தில் நீந்திக் குளிக்கும் போது உடல் எடையற்றுப் போவது போலவே வாசிக்கும் போதும் உடல் எடையற்றுப் போய்விடுகிறது என்பதை உணர்ந்திருந்தான்.
அவனிடமிருந்த ஒரே இருமொழிப் புத்தகம் அது மட்டுமே. இரண்டு அறியாத மொழிச் சொற்களில் எந்த இருசொற்கள் போலிக்கிறது என்று தேடிப்பார்த்து விளையாடுவான்.
புத்தகத்தைக் கையில் கொண்டு செல்லும் போது இரண்டுதேசங்களைச் சுமந்து செல்வது போல உணருவான். சில வேளைகளில் அவனுக்கு இருமொழிப் புத்தகம் படிப்பது போலவே நம்மைச் சுற்றிய இயற்கையை உணருகிறோம் என்றும் தோன்றியது.
இரண்டு மொழிகளின் மௌனம் ஒன்று போல இருக்காது என்று நினைத்தான். ஆனால் அதை யாரிடமும் சொல்ல அவன் விரும்பவில்லை.
மதராஸ் நினைவுகள்
கரிம்புமண்ணில் மத்தாய் ஜார்ஜ் எனப்படும் டாக்டர். கே.எம். ஜார்ஜ் 1914 ஆம் ஆண்டு பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிறந்தார். 1940 களில் மலையாளத்தில் எழுத்த்துவங்கிய இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். சிறந்த ஆங்கில இலக்கிய விமர்சகர், தேர்ந்த மொழிபெயர்ப்பாளர்.

ஜவகர்லால் நேருவால் தேர்வு செய்யப்பட்டுச் சாகித்ய அகாதமியில் பணியாற்றியவர். Masterpieces of Indian Literature என்ற இந்திய இலக்கியங்களின் மிகப்பெரிய தொகுப்பு நூலை எடிட் செய்தவர்.
ஜார்ஜின் சுயசரிதையான AS I SEE MYSELF நூலை சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ளது.
ஜார்ஜ் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் கணிதம் பயின்றிருக்கிறார். 1941 இல் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் மலையாள இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார்.
சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் நீண்டகாலம் விரிவுரையாளராக வேலை செய்திருக்கிறார்.
அவரது . சென்னை வாழ்க்கை மற்றும் கிறிஸ்துவக் கல்லூரி நினைவுகளை விரிவாக இந்த நூலில் பகிர்ந்துள்ளார்.
குறிப்பாக மலையாள விரிவுரையாளர் பணிக்காகக் கல்லூரியில் நடைபெற்ற நேர்காணல், அதற்கு அளிக்கபட்ட பரிந்துரைக் கடிதம், நேர்காணலை அவர் சந்தித்த விதம், அந்தக் கால ஆசிரியரின் சம்பளம். கல்லூரி வளாகத்தினுள் குடியிருந்தது, மாத செலவுகள் எனத் தனது நினைவுகளைத் துல்லியமாக எழுதியிருக்கிறார்
சாகித்ய அகாதமியின் தென் மண்டல செயலாளர் வேலைக்கு ஜார்ஜ் விண்ணப்பம் செய்த போது நேர்காணல் நடத்தியவர் நேரு. வெளிநாட்டுப் பயணத்திற்குத் தயராகிக் கொண்டிருந்த அவரைச் சந்தித்துப் பேசியது. நேரு கேட்ட கேள்விகள். . அன்றைய குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனை சந்தித்துப் பேசியது எனத் தனது டெல்லி வாழ்க்கை அனுபவங்களையும் சுவைபடப் பதிவு செய்துள்ளார்
1964 ஆம் ஆண்டில், அவர் ஃபுல்பிரைட் பயண மானியத்தைப் பெற்று அமெரிக்கா சென்ற ஜார்ஜ் சிகாகோ பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் வேலை செய்திருக்கிறார். சோவியத் யூனிய்ன் அழைப்பில் ரஷ்யா சென்று வந்து அது குறித்துப் பயணநூல் எழுதியிருக்கிறார்.
கேரள அரசின் சார்பில் கலைக்களஞ்சியம் தயாரிக்கப்பட்ட போது அதன் தலைமை எடிட்டராக ஜார்ஜ் தேர்வு செய்யப்பட்டார். அந்தப் பணியில் பெற்ற அனுபவங்களையும், உடன் பணியாற்றியவர்கள் குறித்தும் தனி அத்தியாயம் எழுதியிருக்கிறார். இது போன்ற பணிகளுக்கு அன்றைய கேரள அரசு அளித்த ஆதரவு மற்றும் ஊதியத்தை மிகவும் பாராட்டியிருக்கிறார். தனது வீட்டு நூலகத்தை ஒரு விட்டு இன்னொரு ஊருக்கு எப்படிக் கொண்டு சென்றார் என்று எழுதியிருப்பது சிறப்பானது.
தனது திருமணம் மற்றும் பிள்ளைகள் பற்றிச் சிறிய அத்தியாயங்களை மட்டுமே எழுதியிருக்கிறார்.
அவரது இலக்கியச் செயல்பாடுகள், கல்விப்புலங்களில் பணியாற்றிய அனுபவம். அதில் சந்தித்த மனிதர்கள். பயணத்தில் ஏற்பட்ட அனுபவங்கள், கேரள வாழ்க்கை. அதன் அரசியல், மும்பை வாழ்க்கை என தனது பொதுவாழ்வு குறித்தே அதிகம் எழுதியிருக்கிறார்.
இந்தியாவின் பல்வேறு மொழி எழுத்தாளர்களுடன் நெருங்கிப் பழகியவர் ஜார்ஜ். அதைப்பற்றிய பதிவுகள் இதில் குறைவே.
March 20, 2024
மழையின் கறுப்புக் கோடுகள்
மாங்கா என்பது ஜப்பானின் புகழ்பெற்ற சித்திரக்கதை வடிவம். வயது வாரியாக மாங்கா வெளியிடப்படுகிறது. புகழ்பெற்ற மாங்கா நூல்கள் லட்சக்கணக்கில் விற்பனையாகின்றன.

ஏன் ஜப்பானியர்கள் சித்திரங்களுடன் படிக்க விரும்புகிறார்கள். அது அவர்களின் பண்பாடு. வாசிப்பின் பிரதான முறை.
படக்கதை என்பதை ஆரம்ப வாசிப்பு என்றே இந்தியாவில் நினைக்கிறார்கள். அதனால் பெரியவர்கள் காமிக்ஸ் படிப்பதை ஒவ்வாத விஷயமாக நினைக்கிறார்கள். ஆனால் இப்போது படக்கதை என்பது தனி வகைமையாக உருக்கொண்டதோடு அதற்கான பெரிய சந்தையும் உருவாகியுள்ளது.
ஜப்பானில் மாங்கா வரைவதற்கும் எழுதுவதற்கும் பயிற்சிப் பள்ளிகள் இருக்கின்றன. அவற்றில் படித்து வெளியே வரும் இளைஞர்கள் புதிய கருப்பொருளில் புதிய டிஜிட்டல் முறையில் ஓவியம் வரைகிறார்கள்.

ஜப்பானிய அனிம் மற்றும் மாங்கா உலக அளவில் தனிக்கவனம் பெற்றுள்ளது. ஹாலிவுட் அனிமேஷன் படங்களுடன் ஒப்பிடும் போது ஜப்பானிய அனிம் பல மடங்கு சிறப்பானது. ஹயாவோ மியாசாகிக்கு இணையாக ஹாலிவுட்டில் ஒருவரும் இல்லை.
ஜப்பான் தவிரப் பிற நாடுகளில் மாங்கா அவ்வளவு புகழ்பெறவில்லை. ஆனால் இதற்கு இணையாகப் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் கிராபிக் நாவல் மற்றும் காமிக்ஸ் புத்தகங்கள் வெளியாகின்றன. கொண்டாடப் படுகின்றன.
காமிக்ஸ் அல்லது மாங்கா போன்றவை சிறார்களுக்கானது என்ற எண்ணம் இன்று மாறி வருகிறது. நீங்கள் எதைப்பற்றிப் படிக்கவிரும்பினாலும் அதன் சித்திர வடிவம் நூலாகக் கிடைக்கிறது.
ரகசியமாக ஒளித்து வைத்துப் படிக்கப்பட்ட பாலின்பக்கதைகள் கூடத் தனிவகை மாங்காவாக ஜப்பானில் வெளியிடப்படுகின்றன.
பெரியவர்களுக்கான GEKIGA மாங்கா வடிவத்தை உருவாக்கிய யோஷிஹிரோ தட்சுமியினைப் பற்றிய Tatsumi திரைப்படத்தைச் சிங்கப்பூரைச் சேர்ந்த இயக்குநர் எரிக் கூ உருவாக்கியுள்ளார்.

மாங்கா ஸ்டைலிலே முழுப்படத்தை உருவாக்கியுள்ளது சிறப்பு. திரையில் கோடுகள் உயிர்பெற்று அசைகின்றன. செபியா வண்ணம் கடந்தகாலத்தை நிஜமாக்குகின்றன.
ஒவ்வொரு கதையும் ஒருவண்ணத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அன்றைய அச்சுமுறை, மாங்காவின் வண்ணத்தேர்வுகளை மனதில் கொண்டே இதை உருவாக்கியிருக்கிறார்கள்.
வான்கோவிடம் காணப்படும் உன்மத்தம் போலவே தட்சுமியிடமும் பித்து நிலை காணப்படுகிறது. அவரது கோடுகள் தனது கோபத்தையும் விரக்தியையும் தவிப்பையும் வெளிப்படுத்துகின்றன. பரவும் நெருப்பென கோடுகள் அலைபாய்கின்றன.
தட்சுமி புகழ்பெற்ற ஓவியரான ஒசாமு தெசூகாவின் தீவிர வாசகர். தெசூகாவின் பாதிப்பில் தான் ஓவியம் வரையத் துவங்கியிருக்கிறார்.
தட்சுமி ஒரு முறை ஒசாமு தெசூகாவை அவரது வீட்டில் சந்தித்து உரையாடியிருக்கிறார். அந்த மறக்க முடியாத நிகழ்ச்சி படத்திலும் இடம்பெற்றுள்ளது.

தட்சுமியின் வாழ்க்கையினையும் அவர் எழுதிய ஐந்து சிறுகதைகளையும் இணைத்து உருவாக்கப்பட்டதே இப்படம்.
இப்படத்தின் ஆதாரநூல் A Drifting Life என்ற அவரது மாங்கா.
ஒசாமு தெசூகாவின் இறுதி ஊர்வலத்துடன் படம் தொடங்குகிறது. இனி மாங்காவின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வியைப் படம் எழுப்பி அதற்கான விடையாகத் தட்சுமியை முன்வைக்கிறது.

தட்சுமி இரண்டாம் உலகப் போர் சூழலில் வளர்ந்தவர். அன்றைய ஜப்பானில் கடுமையான உணவுக்கட்டுப்பாடு மற்றும் நெருக்கடி நிலை இருந்தது. ஹிரோஷிமாவில் அமெரிக்கா அணுகுண்டு வீசியதால் ஏற்படுத்திய பாதிப்பு ஜப்பானை உலுக்கியது. அதன் தாக்கத்தைத் தட்சுமியின் படைப்புகளில் காண முடிகிறது.
படத்தின் முதல்கதை Hell ஒரு புகைப்படக்கலைஞரைப் பற்றியது., அவர் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட நாளில் இறந்துகிடப்பவர்களையும் இடிபாடுகளையும் புகைப்படங்கள் எடுக்கிறார்.
ஒரு வீட்டில் அம்மாவிற்கு மகன் முதுகு பிடித்துவிட்டுக் கொண்டிருக்கிறான். அந்த நேரம் அணுகுண்டு வீசப்பட்டதால் அவர்கள் உருவம் அப்படியே நிழலோவியம் போலச் சுவரில் பதிந்து போகிறது. இருவரும் கரிக்கட்டைகளாக எரிந்து கிடக்கிறார்கள்.
துயர நிகழ்வின் சாட்சியம் போன்ற நிழலோவியத்தைப் புகைப்படம் எடுக்கிறான். நீண்ட காலம் அந்தப் புகைப்படத்தை வெளியிடாமல் பாதுகாத்து வருகிறான். பின்பு தனது வறுமையின் காரணமாக அதைப் பதிப்பாளர் ஒருவரிடம் விற்றுவிடுகிறான்.
புகைப்படம் வெளியாகி ஜப்பானில் பரபரப்பை ஏற்படுத்துகிறது. அந்தத் தாயும் மகனும் யார் என்ற உண்மையைக் கண்டறிந்து வெளியிடுகிறார்கள். அவர்களுக்கு நினைவுச்சின்னம் உருவாக்கப்படுகிறது.
இந்த நிலையில் இறந்து போனதாகக் கருதப்படும் மகன் ஒரு நாள் உயிரோடு வருகிறான். அவன் யாரும் எதிர்பாராத புதிய கதையைச் சொல்கிறான். அந்த அதிர்ச்சி புகைப்படக்கலைஞனை உறையச் செய்துவிடுகிறது
ஐந்து கதைகளில் ஓய்வு பெறப்போகும் நாளில் தனக்கு விருப்பமான பெண்ணுடன் இரவை கழிக்க முற்படும் வயதானவர் பற்றிய கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அவரை இச்சை கொள்ள வைப்பது, இளமையாக உணர வைப்பது கைவிடப்பட்ட பீரங்கி. அதைக் கண்டே அவர் தனது இளமையை உணருகிறார். எந்தப் பெண்ணுடன் இரவைக் கழிக்க ஆசைப்பட்டாரோ அவளுடன் இரவைக் கழிக்கிறார். ஆனால் அந்தப் பீரங்கி எதன் குறியீடு என்ற உண்மையை அதன்பிறகு அறிந்து கொள்கிறார்
இது போல இன்னொரு கதையில் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒருவன் ஒரு குரங்கை வளர்க்கிறான். அந்தக் குரங்கு அவனது மனசாட்சியைப் போல அறையில் நடப்பவற்றைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறது. சுவரில் வரையப்பட்ட பெண் சித்திரத்துடன் பேசிக் கொண்டு இசை கேட்டுக் கொண்டு தனியாக வசிக்கிறான். ஆயினும் அவனால் தனிமையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
தொழிற்சாலையில் நடந்த ஒரு விபத்தில் அவனது ஒரு கை துண்டிக்கபடுகிறது. இதனால் வேலை பறி போகிறது. கையில்லாதவனுக்குப் புதிய வேலை கிடைக்கவில்லை. முடிவில் அவன் தான் வளர்த்த குரங்கை மிருகக் காட்சி சாலை ஒன்றில் கொண்டு போய்விடுகிறான். அங்கே நடப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
ஐந்து கதைகளிலும் அதிர்ச்சியான நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. தனிமையை உணருகிறவர்களே முக்கிய கதாபாத்திரமாக இருக்கிறார்கள். அவர்கள் காமத்தால் அலைக்கழிக்கப்படுகிறார்கள். மகிழ்ச்சியை தேடி அலையும் அவர்கள் கசப்பையே அருந்துகிறார்கள். குடும்பம் அவர்களை புரிந்து கொள்ளவில்லை. தனது வாழ்வின் அர்த்தம் என்பதே துயரங்கள் தான் என உணருகிறார்கள். படத்தில் ஹிரோஷிமாவின் மீது மழையின் கறுப்புக் கோடுகள் வந்து போவது , கீறல்கள் மற்றும் கறை படிந்திருக்கும் காட்சிகள். குரங்கு அமர்ந்துள்ள அறை, துண்டிக்கபட்ட கை உள்ளவனின் நாட்கள் என ‘பேரழிவின் சாட்சியமாகவே காட்சிகள் தோன்றி மறைகின்றன.
துப்பறியும் கதைகளையும் குற்றநிகழ்வுகளையும் முதன்மையாகக் கொண்ட காமிக்ஸ்களைப் படித்து வந்த நமக்கு தட்சுமி காட்டும் உலகம் வேறானது. உண்மைக்கு நெருக்கமானது. அதைப் படம் சரியாக அடையாளப்படுத்தியிருக்கிறது
நீண்ட வாக்கியம்
இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற நார்வேஜிய எழுத்தாளரான ஜான் ஃபோஸ்ஸே தனது எழுத்துமுறையை Slow Prose என்கிறார்.

எழுத்தை அதன் சொந்த வேகத்தில் செல்ல அனுமதிக்க வேண்டும். தேவையற்ற பரபரப்பு. வேகத்தை நாமாக உருவாக்க வேண்டியதில்லை என்கிறார் ஜான் ஃபோஸ்ஸே
இந்த எழுத்துமுறை கவிதையைப் போல ஒவ்வொரு சொல்லும் முக்கியம் கொண்டதாக, நுணுக்கமான விவரிப்புகள் கொண்டதாக, ஆழ்ந்து வாசித்துப் புரிந்து கொள்ள வேண்டியதாக இருக்கும் என்பது அவரது வாதம்.
சொற்களின் தாளம் மற்றும் வாக்கியக் கட்டமைப்பில் முழுமையை கொண்டு வர மெதுவான எழுத்துமுறை அவசியம்.
அவரது ஏழு தொகுதியான ‘செப்டாலஜி’ நாவல் ஒரே நீண்ட வாக்கியம் கொண்டது. ஆம். முற்றுப்பெறாத ஒரு நீண்ட வாக்கியமாகத் தனது ஏழு நாவல்கள் கொண்ட தொகுதியை எழுதியிருக்கிறார்.
மனித வாழ்க்கை என்பது முற்றுப்பெறாத ஒரு நீண்ட வாக்கியம். மரணம் தான் முற்றுப்புள்ளியை ஏற்படுத்துகிறது.
நீண்டவாக்கியங்கள் கொண்ட உரைநடையை வாசிப்பது பலருக்கும் கடினமானதே. ஆனால் அப்படி எழுதுவது தவறு என்று நாம் வாதிட முடியாது.
மிக வேகமான இன்றைய வாழ்க்கையின் வேதனையும் பாடுகளுமே மெதுவான, நிதானமான, ஆழ்ந்த பார்வை கொண்ட உரைநடையின் தேவையை உருவாக்குகிறது. இன்று புதிய எழுத்தின் தேவை குறித்து உலகெங்கும் விவாதிக்கிறார்கள்.. நாவல் மற்றும் சிறுகதைகளின் வடிவம் மற்றும் மொழி புதியதாக மாறியிருக்கிறது.
திரைப்படங்களில் இன்று சிங்கிள் ஷாட்டில் ஒரு நிகழ்வு முழுவதையும் படமாக்குகிறார்கள். அந்த அனுபவம் புதியதாக இருக்கிறதே. அதற்கு இணையானதே நீண்ட வாக்கியங்களையும் உள்மடிப்புகளையும் கொண்ட Slow Prose. இதில் வாசகன் அவசரமாக, மேலோட்டமாகக் கதையைப் படித்துப் போய்விட முடியாது. நுண்ணோவியங்கள் அளவில் சிறியவை, மிகுந்த நுட்பமாக உருவாக்கபட்டவை. நுண்ணோவியம் போல எழுத்துமுறையும் முழுமையான கவனத்துடன், கச்சிதமாக மாற வேண்டும்.
பொதுவாக நாவல் என்பதை உரையாடல்களின் வழியே கதையை விவரித்துக் கொண்டே போவது என்று நினைக்கிறார்கள் . அதிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை அடுக்கிக் கொண்டே சென்று அதன் வழியே கதாபாத்திரங்களின் உணர்ச்சி வெளிப்பாடு மற்றும் அகக்கொந்தளிப்புகளையும், நாடகீயமான தருணங்களையும் நாவல் உருவாக்குகிறது என்று நம்புகிறார்கள்.
சம்பிரதாயமான நாவல்கள் இதையே செய்கின்றன. ஆனால் நோபல் பரிசு பெற்ற நாவல்களை வாசித்துப் பாருங்கள். அது கதைசொல்லல் மற்றும் நாவலின் வடிவம்,உள்ளடக்கம் என மூன்றிலும் கவனம் கொண்டிருக்கிறது.
சாமுவேல் பெக்கெட்டின் நாவல்கள். ஹெஸ்ஸேயின் நாவல்கள். மார்க்வெஸின் நாவல்கள் சரமாகோவின நாவல்கள். பாமுக்கின் நாவல்கள் அனைத்தும் நோபல் பரிசு பெற்ற படைப்புகள் என்றாலும் அவற்றை ஒரே தட்டில் வரிசைப்படுத்த முடியாது.
இந்த நாவல் ஒவ்வொன்றும் தனித்துவமான கதைக்களனும் கதாபாத்திரங்களும் கதை சொல்லும் முறையில் புதுமையும், வடிவ ரீதியாகத் தனித்துவமும் கொண்டிருக்கின்றன.

ஜான் ஃபோஸ்ஸே நாவலில் நடக்கும் உரையாடல்கள் தனித்து எழுதப்படவில்லை. விவரிப்பின் பகுதியாகவே எழுதப்பட்டிருக்கிறது. அவற்றைத் தனிமொழி போலவே எழுதியிருக்கிறார்.
ஓவியரான ஆஸ்லே ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் வாழுவதே நாவலின் மையக்கதை. நாம் அனைவரும் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் வாழவே ஆசைப்படுகிறோம். கிராமத்தில் வாழுகிறவருக்கு நகரவாழ்க்கையின் மீது ஆசையாக இருக்கிறது. நகரவாசிகளுக்குக் கிராமம் சொர்க்கமாகத் தெரியாது. ஆனால் நடைமுறையில் இரு இடங்களிலும் ஒருவர் வாழ முடியாது. புனைவில் இது சாத்தியம்
ஓவியர் ஆஸ்லே பிஜோர்க்வினுக்கு வடக்கே உள்ள டில்க்ஜாவில் தனியாக வசிக்கிறார், மற்றொரு ஆஸ்லே பிஜோர்க்வின் நகரில் வசிக்கிறார், ஒரே பெயர் கொண்ட இருவர் இருவேறு இடங்களில் வாழுகிறார்கள்.
இருவரும் ஒருவர் தானா. அல்லது ஒரே பெயரில் ஒரே பணியைச் செய்யும் இருவர் வசிக்கிறார்களா என்பது தான் புனைவின் சிறப்பு.
ஒருவர் இருவராகிவிடுவது நாவலின் பழைய உத்தி. டாக்டர் ஜெகில் மற்றும் மிஸ்டர் ஹைடில் ஒருவர் இருவராகிறார்கள். ஆனால் அது நன்மையும் தீமையுமான இரண்டு வடிவங்கள். ஒரே நபரின் இரண்டு வெளிப்பாடுகள் இருவராக அறியப்படுகின்றன. ஆனால் ஜான் ஃபோஸ் தனது நாவலை டாப்பல்கெஞ்சர் வகையாகச் சொல்கிறார். அதாவது ஒரே மாதிரியிருக்கும் இரட்டை நபர்கள் பற்றியது.
இடம் மாறும் போது நிகழ்ச்சியின் இயல்பும் கனமும் மாறிவிடுகின்றன. அனுபவம் திரளுவதும் கலைவதும் உருமாறிவிடுகிறது. ஆஸ்லே தனது கடந்த கால வாழ்க்கையை நண்பரிடம் நினைவு கூறுகிறார். நாவலின் ஊடாக ஓவியம், கலையின் நோக்கம். கடவுள் நம்பிக்கை, தனிமையின் துயரம் எனப் பல்வேறு விஷயங்கள் பேசப்படுகின்றன. மனதின் நீரோட்டம் போல வாக்கியம் நீண்டு சென்றபடியே இருக்கிறது.
நீண்ட ஒற்றை வாக்கியம் கொண்ட இந்த நாவல்வரிசை முப்பது மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு, தீவிரமாக வாசிக்கபட்டு வெற்றி அடைந்திருக்கிறது. இன்று ஜான் ஃபோஸ்ஸேயிற்கு நோபல் பரிசும் கிடைத்துள்ளது. இதனைப் புதிய எழுத்துமுறைக்குக் கிடைத்த உயரிய அங்கீகாரமாகவே கருதுகிறேன்.
இவ்வளவு கடினமான நாவலையும் சிறப்பாக மொழியாக்கம் செய்யும் மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலத்திற்கு நெருக்கமான மொழிபெயர்ப்பை உருவாக்குகிறார்கள் என்பது பாராட்டிற்குரியது
நார்வேயின் புகழ்பெற்ற நாடகாசிரியர் ஜான் ஃபோஸ்ஸே. அவரை இப்சனுக்கு இணையாகக் கொண்டாடுகிறார்கள். அவருக்குத் தற்போது அறுபது வயதாகிறது. கடந்த நாற்பது ஆண்டுகளாக எழுதி வருகிறார்.
ஆண்டுக்கு ஒரு நாடகம் எழுதும் ஜான் போஸ் மற்ற மாதங்களில் பயணம் செய்கிறார். புத்தக வெளியீடுகள், கல்விப்புல நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். கவிதை, கட்டுரை, சிறார்களுக்கான கதைகள் என்று நிறைய எழுதியிருக்கிறார் ஜான் ஃபோஸ்
“வலி, துக்கம், மனச்சோர்வு ஆகியவையும் ஒரு பரிசு தான்“. “எழுதும் போது நான் அனுபவிப்பது வாழ்க்கையில் நான் அனுபவிப்பதை விடப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எழுதுவது என்பது விழித்தபடியே கனவு காண்பது “ என்று ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார்.
நாடக வாழ்க்கை போதும் என்று விலகி அவர் நாவல் எழுதத் துவங்கினார். அது தான் ’செப்டாலஜி’. அவரே ஒரு ஓவியர் என்பதால் ஆஸ்லே கதாபாத்திரத்தை எளிதாக எழுத முடிந்திருக்கிறது.
நாவலின் வேலை அனுபவங்களைத் தொகுத்து தருவதில்லை. அது தனிமனிதனின் ஆசைகள். உறவுகள், பயம். வெற்றி தோல்விகளை ஆராய்வதுடன். கலை, தத்துவம். அறிவியல். சமயம், வரலாறு. அரசியல் எனப் பல்வேறு விஷயங்களை விவாதிக்கவும் மாற்றுபார்வைகளை முன்வைக்கவும் இடம் தருகிற வடிவம்.
டால்ஸ்டாயும் தஸ்தாயெவ்ஸ்கியும் தாமஸ் மன்னும் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை மட்டும் நாவலாக எழுதியவர்களில்லை. அவர்கள் புறவாழ்வின் மாற்றங்களை, சமூக அரசியல் போராட்டங்களை, தனிமனிதனின் கனவுகள். ஆசைகள். வெற்றிதோல்விகளை எழுதியவர்கள். அதன் தொடர்ச்சியாகவே தனது படைப்புகளையும் உருவாக்குகிறேன் என்கிறார் ஜான் ஃபோஸ்.
வடிவரீதியாக ஜான் ஃபோஸ்ஸேயின் எழுத்து செவ்வியல் நாவலாசிரியர்களிடமிருந்து வேறுபட்டது. குறிப்பாக அவரது மொழி பனிஉருகுவது போல நிசப்தமாக உருகியோடிக் கொண்டிருக்கிறது. இவரது நாவலை ஜேம்ஸ் ஜாய்ஸ் மற்றும் லாஸ்லோ கிராஸ்னஹோர்காய் நாவலோடு ஒப்பிடலாம்.
வாசிக்கக் கடினமாக உள்ள இந்த நாவல்கள் உலக அரங்கில் மிகப்பெரிய வரவேற்பையும் அங்கீகாரத்தையும் பெற்றிருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது. உலகம் புதிய எழுத்திற்காகக் காத்திருக்கிறது என்பதையே இது நினைவுபடுத்துகிறது.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

