S. Ramakrishnan's Blog, page 40

February 22, 2024

இன்பங்களின் தோட்டம்

நெதர்லாந்தின் புகழ்பெற்ற ஓவியரான ஹிரோனிமஸ் போஷ் வரைந்த The Garden of Earthly Delights நிகரற்ற கலைப்படைப்பாகும். மூன்று பகுதிகளாக உள்ள இவ்வோவியம் 1500களில் வரையப்பட்டது.

கார்டன் ஆஃப் எர்த்லி டிலைட்ஸ் என்ற தலைப்பு போஷ் வைத்ததில்லை என்கிறார்கள். நம்மை முதலில் வசீகரிப்பது அதன் கவித்துவமான தலைப்பே.

புவியிலுள்ள இன்பங்களின் பட்டியல் முடிவில்லாதது. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா எனப் பாரதியார் பாடுகிறார். சிற்றின்பங்களில் ஆழ்ந்துவிடும் மனிதன், பேரின்பங்களை மறந்துவிடுகிறான் என்று எல்லாச் சமயங்களும் எச்சரிக்கை செய்கின்றன.

ஆனால் வாழ்க்கை என்பதே இன்பங்களைத் தேடுவதும் அடைவதும் தான் எனப் பெரும்பான்மையினர் நினைக்கிறார்கள். நடந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு எத்தனை வயதானாதலும் சில இன்பங்களின் மீதான ஆசை முற்றுப் பெறுவதேயில்லை.

மனித இன்பங்களின் பட்டியல் மாறிக் கொண்டேயிருக்கிறது. ஓவ்வொரு நூற்றாண்டும் அதற்கான புதிய இன்பங்களை உருவாக்குகிறது.  உடலால் ஏற்படும் இன்பங்களை விடவும் மனதால் ஏற்படும் இன்பங்களின் எண்ணிக்கை அதிகமானது.

மகிழ்ச்சியின் தோட்டத்தைப் பற்றிய இந்த ஓவியம் திருச்சபைக்கு ஆதரவாக வரையப்பட்டிருக்கிறது. கடவுள் இல்லாத உலகில் எல்லா இன்பங்களும் அனுமதிக்கபடுகின்றன. அது பாவமான செயல் எனச் சுட்டிக்காட்டவே இதனைப் போஷ் வரைந்திருக்கிறார்.

இன்று நாம் அந்த ஓவியத்தைக் கொண்டாடுவது பாவம், நன்மை தீமை பற்றிய சித்தரிப்பு என்பதற்காக அல்ல. மாறாகக் கற்பனையின் மூலம் விநோத உலகை, இச்சையின் பெருநடனத்தைப் போஷ் எப்படிச் சித்தரித்துள்ளார் என்பதற்காகவே கொண்டாடப்படுகிறது. சிறந்த கலைப்படைப்பாக முன்வைக்கபடுகிறது

ஒரு ஓவியம் அது வயைரப்பட்ட காலத்தில் அடையும் மதிப்பீடும் காலமாற்றத்தில் ஏற்படும் மதிப்பீடும் வேறுவேறானது. ஓவியத்தின் முன் யார் நிற்கிறார்கள், என்ன மனநிலையில் நிற்கிறார்கள் என்பதற்கு ஏற்ப அதன் பொருள் கொள்ளுதல் மாறுபடவே செய்யும்.

போஷின் காலத்தில் இந்த ஓவியத்தை நீதிபோதனையாக எடுத்துக் கொண்டிருக்கவும் கூடும். ஆனால் இன்று இந்த ஓவியம் கலைப்பொருளாக மட்டுமே கருதப்படுகிறது. எல்லா சமயத்தினரும் அதைப் பார்வையிடுகிறார்கள்.  கலைப்பொருள் பேசும் விஷயத்தைவிடவும் அதை எப்படி வெளிப்படுத்துகிறது என்பதிலே தான் இன்றைய நாட்டம் அதிகமுள்ளது.

மேலும் போஷின் பாதிப்பு புரூகேல், டாலி போன்ற பிரபல ஓவியர்கள் வரைத் தொடர்கிறது என்பதால் கனவுநிலைக்காட்சிகளின் முன்னோடி ஓவியராக அவரைக் கருதுகிறார்கள். கொண்டாடுகிறார்கள்.

ஓவியத்தின் இடது பேனலில் ஆதாமும் ஏவாளும் கடவுளுடன் ஏதேன் தோட்டத்திலிருக்கிறார்கள். இதில் கடவுள் இளைஞராக இருக்கிறார். ஆடை அணிந்திருக்கிறார். ஆடைகளற்ற ஆண் பெண்ணாக ஆதாமும் ஏவாளும் இருக்கிறார்கள். ஆதாமிடம் ஒப்படைப்பதற்காக ஏவாளின் கரம் பற்றி நிற்கிறார் கடவுள். அவர்களை நோக்கும் ஆதாமின் பார்வை வியப்பளிக்கிறது. ஏவாள் ஆதாமைக் கவனிக்கவேயில்லை.

அடுத்த இரண்டு பேனல்கள் ஆதாமின் கனவைப் போலவே தோற்றம் தருகின்றன.

சொர்க்கம் எனத் தலைப்பிடப்பட்ட இந்த இடது பேனலில் பல அடுக்குகளான ஏதேன் தோட்டம் காணப்படுகிறது. அங்கே நீர்நிலைகள் குன்றுகள் உள்ளன. கூட்டமாகப் பறவைகள் பறந்தலைகின்றன. நீர்நிலையைச் சுற்றிலும் விலங்குகள் ஒன்றுகூடியிருக்கின்றன. ஒரு யானையும் ஒட்டகச்சிவிங்கியும் காணப்படுகிறது. பல்லியைக் கவ்வி செல்லும் பூனை. தவளையை விழுங்கும் பறவை. சிறகு முளைத்த மீன்களைக் காணுகிறோம். விநோத விலங்குகளின் தோட்டமாக இருக்கிறது ஏதேன். யானையின் முதுகில் குரங்கு ஒன்று அமர்ந்திருக்கிறது. இரையைக் கொன்று விழுங்கப் போகும் சிங்கம் காணப்படுகிறது. மரத்தைச் சுற்றி ஒரு பாம்பு காணப்படுகிறது.

மனிதன். இயற்கை. விலங்குகள் பறவைகள் யாவும் ஒத்திசைவோடு இருப்பதையே போஷ் வரைந்திருக்கிறார். நல்லுறவின் வலியுறுத்தலாகவே ஓவியம் காட்சியளிக்கிறது. அதே நேரம் விநோதத் தோற்றங்கள் கனவுநிலைப்பட்டது போலவும் உணர வைக்கிறது.

ஏதேன் தோட்டம் பாலின்பத்திற்கு முற்பட்டது. அங்கே பாலுறவு கிடையாது. விலக்கபட்ட கனியைப் புசித்தபின்பே காமம் துவங்கியது. காமத்திற்கு முந்தைய இந்தச் சொர்க்கம் மனிதனை மையமாகக் கொண்டதில்லை. அதன் இன்பங்கள் மனிதன் உருவாக்கிக் கொண்டதுமில்லை.

1450 முதல் 1516 வரை வாழ்ந்த டச்சு ஓவியரான ஹிரோனிமஸ் போஷின் வாழ்க்கைப் பற்றிக் குறைவான தகவல்ளே கிடைத்திருக்கின்றன. அவரது தந்தையும் தாத்தாவும் ஓவியர்கள். ஆகவே இளவயதிலே போஷ் ஓவியம் வரையக் கற்றுக் கொண்டிருக்கிறார். அவர்ப் பயன்படுத்தும் நிறங்களும் அதற்கான வண்ணக்கலவையும் மிக மெல்லிய தூரிகைகளும் குடும்ப ரகசியமாகத் தரப்பட்டவை.

கார்டன் ஆஃப் எர்த்லி டிலைட்ஸ் முதற்பகுதியில் உள்ள கடவுளின் நீல நிறக் கண்களைப் பாருங்கள். எவ்வளவு துல்லியம். குறிப்பாக விலங்குகளின் விந்தையான தோற்றம். அதன் உடலமைப்பை வரைந்துள்ள விதம் ஆச்சரியமளிக்கிறது. மனிதகுலத்தின் ஆசைகள் மற்றும் ஆழ்ந்த அச்சங்கள் பற்றிய ஆழமான நுண்ணறிவு கொண்டவராகப் போஷ் இருந்திருக்கிறார். அதே நேரம் ஆழ்ந்த கிறிஸ்துவ நம்பிக்கைக் கொண்டவராக இருப்பதை உணர முடிகிறது

இந்த ஓவியத்தை இன்பத்தின் பெருவெடிப்பு என்கிறார்கள் கலைவிமர்சகர்கள் ஓவியத்தின் மிகச்சிறந்த பகுதி நடுவிலுள்ள பேனல் தான். இன்று இணையத்தின் உதவியால் அதை விரித்துப் பெரியதாக்கிக் காணும் போது விந்தையுலகினுள் சஞ்சரிப்பது போலவேயிருக்கிறது.

பசியும் காமமும் மனிதனின் ஆதார இச்சைகள். அந்த ஆசைகள் எப்படியெல்லாம் தீர்த்துக் கொள்ளப்படுகின்றன என்பதன் சாட்சியம் போலவே விநோதத் தோற்றங்கள் வரையப்பட்டிருக்கின்றன. குறிப்பாகப் பழங்கள் மனிதர்களை உண்ணுகின்றன. பிரம்மாண்டமான ஸ்ட்ராபெர்ரியைப் பாருங்கள். மனிதர்கள் நிர்வாண உடல்களுடன் ஆசையின் உன்மத்தமேறியவர்களாகக் காணப்படுகிறார்கள்.

மனித உடல்களின் தலைகீழ் நிலையும் கூட்டியக்கமும் கட்டற்ற இன்பங்களின் தூய்ப்பாகவே காட்சி தருகின்றன.

பேனலின் நடுவில் குளம் காணப்படுகிறது. பழங்கள் பிரம்மாண்ட தோற்றம் தருகின்றன. பழம் என்பது இன்றின் குறியீடு. உச்சநிலையைப் பழம் என்றும் கருதலாம். நிர்வாண உடலும் பழமும் வேறில்லைத் தானே.

சிற்றின்பங்களின் விளைநிலம் போலவே நடுப்பகுதி காணப்படுகிறது. பறவைகள், விலங்குகள், கனிகள் மீன்கள். மற்றும் நிர்வாண மனிதர்கள் என யாவும் கட்டவிழ்த்துவிடப்பட்ட நிலையில் இணைந்தும் விலகியும் முயங்கியும் காணப்படுகின்றன. இதில் மனிதர்களை விடவும் பறவைகளும் விலங்களும் உக்கிரமாக இயங்குகின்றன. சிப்பி ஒன்றுக்குள் ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்கிறார்கள். கோளம் ஒன்றினுள் ஆணும் பெண்ணும் மயங்கிகிடக்கிறார்கள். இலைகளால் முடிசூட்டப்பட்ட ஒரு மனிதன் காணப்படுகிறான்

பல்வேறு விதங்களில் இன்பம் தேடும் நிர்வாண உருவங்கள் ஆங்காங்கே தெரிகின்றன. தலையில் மயில் ஏறியுள்ள கறுப்பினப் பெண். விநோத உயிரினங்களில் சவாரி செய்யும் மனிதர்கள். சிறகுகள் கொண்ட மீன்கள் தரையில் ஊர்ந்து போகின்றன.

டால்பின் வால் கொண்ட குதிரை ஒன்று சிறகுகள் கொண்ட மீனின் மீது பயணிக்கிறது. உடைந்த முட்டை வடிவம். மற்றும் மீன்களை அதிகம் காணுகிறோம். பறவைகள் மற்றும் விலங்குகள் சிற்றின்பக் களியாட்டத்தில் உற்சாகமாகக் கலந்து கொள்கின்றன

மனிதர்களை விலங்குகள் தண்டிப்பது போன்ற இந்தக் காட்சிகள் உலகியல் இன்பங்கள் குறித்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்குப் பதிலாகக் குழப்பத்தையும் அச்சத்தையுமே ஏற்படுத்துகின்றன. உயிரினங்கள் யாவும் காமத்தால் தூண்டப்பட்டுத் தன்னிசையாகச் செயல்படுவதையே இந்தப் பேனல் விளக்குகிறது.

இந்தக் கனவுநிலைப்பட்ட காட்சியில் வெளிப்படும் விநோதம் பார்க்கும் நம்மை பெரிதும் வசீகரிக்கிறது. இந்தக் காட்சிகள் ஒவ்வொன்றுக்கும் பின்னும் விவிலிய வாசகங்களும் கதையும் ஒளிந்திருக்கின்றன. இதிலுள்ள சில காட்சிகள் புனிதநூலுக்கு வரையப்பட்ட பக்க ஓவியங்களிலிருந்து பெறப்பட்டிருக்கின்றன. ஓவியத்தில் காணப்படும் இசைக்கருவிகள் நாட்டார் மரபைச் சார்ந்தவை. அது போலவே பழமொழிகளும் சமயவரலாறும் இதில் மாற்றுவடிவம் கொண்டிருக்கின்றன என்கிறார்கள். போஷின் ஓவியத்தில் கொந்தளிப்பான, கட்டுப்பாடற்ற, ஆழமான கற்பனை வீச்சினையே நாம் உணருகிறோம்.

வலதுபக்கப் பேனலில் நாம் காணும் நரக் காட்சிகள் அச்சமளிக்கின்றன.. இருள் சூழ்ந்த வெளி. வேதனையும் கொண்ட மனிதர்கள். தாந்தேயின் நரகத்தை நினைவுபடுத்துகின்றன. நரக வாயில்கள் மற்றும் ரத்தமாக மாறும் தண்ணீர் உடலுறுப்புகளின் கோரமான சிதைவு, பாவத்திற்கான தண்டனைத் தரும் இடமாக நரகம் காணப்படுவதையே உணர்த்துகிறது.

போஷின் இந்த ஓவியம் குறித்து விரிவான விளக்கவுரையை இணையத்தில் கேட்க முடிகிறது. அவை ஓவியத்தை விளக்க முற்படுகின்றன. நான் இந்த ஓவியத்தினை ஆராதிக்க விரும்புகிறவன். ஒவியங்கள் மட்டுமே உள்ள நாவலைப் படிப்பது போலவே இதனை நான் வாசிக்கிறேன். புரிந்து கொள்கிறேன்.

இந்த ஓவியத்தின் முதன்மையான அம்சம் இயல்பு திரிவதாகும். பறவை விலங்குகள் மனிதர்கள் என யாவரும் இயல்பு மாறி விநோத நிலையில் காணப்படுகிறார்கள். உடல் இச்சை அவர்களை அலைக்கழிக்கிறது. உணவைப் போல உடலைப் புசிக்கிறார்கள்.

சொர்க்கத்தில் வீடு என்பது கிடையாது. சொர்க்கம் என்பது பெரிய திறந்தவெளி. தோட்டம் எனச் சொர்க்கத்தை யார் முதலில் கற்பனைச் செய்தார்கள் எனத் தெரியவில்லை. ஏன் சொர்க்கம் ஒரு கடற்கரையாக இல்லை. கானகமாக இல்லை. தோட்டம் என்பதே கட்டுப்பாடுகளும் எல்லையும் கொண்டது தானே. சொர்க்கம் என்பது முழுமையானதில்லை.

போஷின் வேறு ஒவியங்களிலும் புனிதர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். அதிலும் இது போன்ற விசித்திரத் தோற்றங்கள் காணப்படுகின்றன.

பரிச்சயத்தன்மையையும் அதன் விளைவாக ஏற்படும் சலிப்புத்தன்மையையும் நீக்குவதற்கு, பார்வைப் புலன்களின் பிடியிலிருந்து விலகிய புதிய கற்பனையை உருவாக்க வேண்டியிருக்கிறது. அதைப் போஷின் ஓவியங்களில் காணமுடிகிறது என்கிறார்  போர்ஹெஸ். கார்டன் ஆஃப் எர்த்லி டிலைட்ஸ் ஓவியம் அதன் சாட்சியமாக உள்ளது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 22, 2024 02:26

February 21, 2024

கல்முகம்

மனித முகத்தைப் போல தோற்றமளிக்கும் கற்களைச் சேகரித்து ஜப்பானில் ஒரு மியூசியம் வைத்திருக்கிறார்கள். அது பற்றிய காணொளி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 21, 2024 18:48

February 20, 2024

எழுத்தே வாழ்க்கை

எஸ். ராவின் புத்தகத்தினூடே ஒரு பயணம் :

G. கோபி

எழுத்தாளர். எஸ். ராமகிருஷ்ணன் தமிழின் முக்கியப் புனைவு எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்த படைப்பாளுமை. உபபாண்டவம், நெடுங்குருதி, யாமம், இடக்கை, சஞ்சாரம், மண்டியிடுங்கள் தந்தையே போன்றவை அவரது முக்கியமான நாவல்கள். எனது இந்தியா, மறைக்கப்பட்ட இந்தியா போன்ற வரலாற்றுக் கட்டுரைகளும் அவசியம் வாசிக்க வேண்டியவை. மேலும் துணையெழுத்து, இலக்கற்ற பயணி, ரயில் நிலையங்களின் தோழமை, வீட்டில்லாத புத்தகங்கள், தேசாந்திரி போன்ற பயணக்கட்டுரைக்களும் வாசிப்பதற்கு அரிய தகவல்களும் வித்தியாசமான அனுபவங்களும் கொண்டவை.

எஸ். ராவின் புத்தகங்கள் போன்றே உரைகளும் கேட்பதற்கு அரிய பல இனிய தகவல்களையும் இலக்கியத்தின் சிறப்பையும் வெளிப்படுத்தியவை. அவரது உலக இலக்கியக் கட்டுரைகள், மூத்த எழுத்தாளர்களின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் குறித்தும் அவர் தொடர்ந்து உரையாற்றியும் இணையத்திலும் எழுதியும் வருகிறார். அது மட்டுமில்லாமில் சிறுவர்களுக்காக அவர் எழுதிய புத்தகங்களுள் சிரிக்கும் வகுப்பறை, ஆலீஸின் அற்புத உலகம் மொழி பெயர்ப்பு நூல் , குட்டி இளவரசன் நாவல் பற்றிய இலக்கிய உரை போன்ற செயல்பாடுகள் குழந்தைகளின் உளவியலையும் வாழ்க்கையின் நெருக்கடியையும் விவரிக்கக் கூடியது.

எனக்குத் தனிப்பட்ட முறையில் நிமித்தம் நாவல் மிக நெருக்கமானது. பல தடவை வாசித்திருக்கிறேன். சிறுவயதில் அப்பாவின் பாசமும் அன்பும் கிடைக்காத சிறுவனின் அகவுலகை எழுதியிருப்பார். அப்படியான சிறுவர்களைப் பள்ளியிலும் அன்றாட வாழக்கையிலும் சந்தித்திருக்கிறேன். ஆனால் இலக்கியத்தில் அதை இவ்வளவு ஆழமாகச் சொன்னது முக்கியமான பணி.

சிறுகதைகளில் தாவரங்களின் உரையாடல், சிவப்பு மச்சம், பெயரில்லாத ஊரின் பகல்வேளை, பதினெட்டாம் நூற்றாட்டாண்டின் மழை, நடந்து செல்லும் நீருற்று, காந்தியை சுமப்பவர்கள், அதிகதைகள் மற்றும் பௌத்தத்தை வெளிப்படுத்தும் சிறுகதைகளும் முக்கியமானவை மற்றும் நெருக்கமானவை. உறுபசியும், இடக்கை, சஞ்சாரம் என்னை மிகவும் பாதித்த நாவல்கள் .

இலக்கியம் பேச துணைஇல்லாமல் நண்பர்களில்லாமல் நான் சென்னையில் அறையில் அடைந்து கிடந்த நாட்களில் எஸ். ரா அவர்களின் வாசகபர்வம், இலக்கற்ற பயணி போன்ற புத்தகங்களை வாசித்து ஆறுதல் அடைந்திருக்கிறேன். புத்தகம் வாங்கி வாசிக்க முடியாத காசில்லாத தருணங்களில் வேலை கிடைக்காத நாட்களில், தஸ்தவேஸ்கி பற்றிய எஸ். ரா ஆற்றிய உரையைக் கேட்டது வாழ்வின் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைத்துள்ளது. தமிழ் இலக்கியத்தின் முக்கியமான வரலாற்று நிகழ்வாக அமையுமென வாழ்த்துகிறேன்.

வாழ்வின் மீதான குழப்பங்கள், பதற்றம், மனதின் வெறுமை, கசப்பு ஏற்படும் தருணங்களில் எஸ். ராவின் இலக்கிய உரைகள் கேட்பது நம்பிக்கை ஊட்டுபவையாக அமைந்தது. உலக இலக்கியத்தைப் பற்றித் தமிழ் இலக்கிய வாசகர்களுக்குத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருவது பெரும் பணி. இதன் மூலம் நிறையப் புத்தகங்கள் குறித்துத் தெரிந்து கொள்ள முடிந்தது.

எழுத்தே வாழ்க்கை புத்தகத்தில் எஸ். ரா அவர்களின் வாழ்க்கை நினைவுகளைக் குறித்துத் தெரிந்து கொள்ள முடிந்தது. பள்ளி வாழ்க்கை, காதல் நினைவுகள், இலக்கியத்திற்காகச் சுற்றி அலைதல், புத்தகங்கள் மீதான காதல் என்று வாசிப்பதற்குச் சுவாரஸ்யமாகவுள்ளது.

எஸ். ராவின் புனைவுலகம் தத்துவம் மற்றும் எளிய மனிதர்களின் உளவியல், நெருக்கடிகள் பிரச்சனைகள் மற்றும் பால்ய கால நினைவுகளையும் கொண்டது. குறிப்பாகப் பால்ய வயது நாட்களில் நாம் பார்த்த வெயில் ஒரு முக்கியக் கதாபாத்திரம். கவித்துவமான உரைநடையில் வாழ்வின் நினைவுகளின் கதை கூறும் வரலாற்று பின்னணியைக் கொண்ட பின் நவீனத்துவ எழுத்துக்களைக் கொண்டது. என்பது எனது தனிப்பட்ட பார்வை.

புதிய புதிய கதை கூறும் முறைகளைத் தனது எழுத்தில் கையாண்டு பல மாற்றங்களையும் செய்திருப்பது சிறப்பானது.

சாமானிய மனிதர்களின் வாழ்வை அவர்கிளைக்கப்படும் அநீதி அதிகாரத்தால் சுரண்டப்படும் அவல வாழ்க்கை குறிப்பாக ஆணாதிக்கத்தால் பாதிக்கப்படும் பெண்களின் வாழ்வை, மறை க்கப்பட்ட வரலாற்று உண்மைகள், பண்பாட்டு சிறப்புகளை வாழ்வின் மீட்டெடுப்பு, சிறார்கள் அடையும் நெருக்கடிகள் உளவியல் பாதிப்புகளைத் தொடர்ந்து தனது படைப்புகளில் எழுதி வருகிறார்.

சிறுவயதில் விரும்பியது கிடைக்காமல் ஏமாற்றப்பட்ட கசப்பை அனுபவித்த பால்ய காலத்தைக் கொண்ட சிறுவர்களின் கதையை நிமித்தம் நாவலில் நுட்பமாக விவரித்திருப்பார். பயணத்தின் வழியாக வாழ்வை புரிந்து கொண்ட எஸ். ரா, மனிதனுக்கு வீடுதான் முக்கியமான அங்கம். ஒரு மனிதனை வீடும் குடும்ப உறவுகளும் புரிந்து கொண்டாலே அவன் வாழ்க்கை மேம்படும் என்கிறார்.

கலைகளின் அவசியத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தும் அவருடைய எழுத்துக்கள் ஓவியம் சிற்பக் கலை, பண்பாட்டு விழுமியங்கள், தொல் சான்றுகள் சங்க இலக்கியப் படைப்புகளின் மீதான அவருடைய பார்வை எனத் தமிழ் பண்பாட்டு வெளியை அதன் இலக்கியத் தளத்தில் வளர்ச்சியடைய வைத்தது சிறப்பான பணி.

எஸ். ராவின் புத்தகங்கள் எதைப் பேசுகின்றன? அவரைத் தெரிந்து கொள்வதின் வழியாக நாம் எதைக் கற்றுக் கொள்கிறோம்? அவர் ஏன் இலக்கியத்திற்கும் வாசிப்பிற்கும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்? புத்தகங்கள் எழுதி இலக்கியம் சார்ந்து மட்டுமே பொருளாதார நெருக்கடி நிறைந்த வாழ்வை எப்படி எதிர் கொள்கிறார்? பயணம் செய்வதால் ஏற்படும் அனுபவங்கள் வழியாக வாழ்வின் மகத்துவம் என்ன? எஸ். ரா எழுதும் வரலாறு எதைப் பேசுகிறது? என்ற பல கேள்விகளை எழுத்தே வாழ்க்கை புத்தகம் எழுப்புகிறது.

பயணம் செய்வதால் நாம் அடையாளத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து விடுகிறோம். நம்முடன் பயணம் செய்கிறவர்களும் நாமும் ஒரு சக பயணிகளே. பயணம் மனிதர்களுக்கிடையே ஒற்றுமையையும் சமத்துவத்தையும் உண்டாக்குகிறது என்று எஸ். ரா சொல்கிறார். இலக்கியம் புத்தகம் வாசிப்பு இரண்டிற்க்காகவும் எஸ். ரா மேற்கொண்ட வாழ்வும் மிகுந்த அலைச்சலும் சிரமங்களும் நிறைந்தவொன்று.

புத்தகம் எழுதி வெளியிடுவதற்க்காக பணமில்லாமல் நண்பர்கள் உதவியோடு புத்தகம் எழுதி வெளியிட்ட சம்பவத்தை வாசித்தேன். தமிழ் சூழலில் அறிமுக எழுத்தாளர் முதல் புத்தகத்தை எழுதி வெளியிட எத்தகைய சிரமங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும் எழுதிய புத்தகங்களை ஒவ்வொரு பதிப்பகமாகச் சுமந்து கொண்டு தானே விற்பது சவாலான பணி. எழுத்தே வாழ்க்கையாகக் கொண்டு வாழ்வது எவ்வளவு சிரமமானது என்று தெரிந்தும் இலக்கியத்திற்கும் எழுத்திற்கும் தன்னை அர்ப்பணித்து வாழ்வது அவர் கொண்டுள்ள நம்பிக்கையையும் மன உறுதியையும் காட்டுகிறது. இலக்கியம் வாசிப்பது வழியாகச் சொந்த வாழ்வின் துயரங்களைக் கடந்து போகிறோம். புத்தகம் நமது சிந்தனையையும் ஆளுமையையும் தூண்டுவதின் வழியாக வாழ்வில் ஏற்படும் நெருக்கடிகளைப் பிரச்சனைகளைச் சமாளிக்கும் திறனையும் வளர்க்கிறது. மேலும் தன்னயறியாத குழப்பங்களைத் தெளிவு படுத்தி நமது நிறை குறைகளை நாமே சுயமாகப் பகுப்பாய்வு

செய்து சுய சார்புள்ள மனிதனாக வாழ உதவுகின்றன. வாழ்வின் உண்மைகளைப் புரிந்து கொள்ள உதவுகின்றன. புத்தகம் வாசிப்பவனுக்குத் தனிமையே கிடையாது என்று எழுத்தாளர் கி. ரா சொல்வது உண்மைதான்.

கூட்ஸ் வண்டியில் எஸ். ரா பயணித்த அனுபவத்தை வாசிக்கையில் மிகச் சுவாரஸ்யமாகஇருந்தது. நானும் பள்ளி வயதில் ஊருக்கு போகும் போது கடந்து சொல்லும் கூட்ஸ் வண்டியை பார்த்திருக்கிறேன். குறிப்பாகக் கடைசிப் பேட்டியில் வண்டி ஓட்டுநர் பச்சை கொடி ஆட்டியபடி போவார். ஆள் துணையே இல்லாமல் எப்படிப் போகிறார் என்று யோசிப்பேன். ஆனால் ஒருவர் அதில் பயணம் செய்திருப்பது வினோதமானது. அந்த நினைவுகளின் வழியாக நாமும் அந்த அனுபவத்திற்கு உட்படுகிறோம். கூட்ஸ் வண்டி ஓட்டுநர்கள் தனிமையும் பணிச் சுமை வெறுமையும் சொல்லப்படுகிறது.

ஜப்பான் பயணம் பல அரிய தகவல்களை எடுத்துரைக்கிறது. இரண்டாம் உலகப் போர் குறித்தும் ஹிரோஷிமா நாகசாஹியில் நிகழ்ந்த அணு குண்டு சோதனையும் அதன் சூழல் பற்றி விவிரிக்கிறது. லிட்டில் பாய் எனப்படும் அந்தப் பெயர் கொண்ட அணுகுண்டு வெடித்து ஹிரோசிமா தரைமட்டமானது. பள்ளி பாடப் புத்தகத்தில் உரைநடையில் பாடமாக அந்தச் சம்பவத்தைப் பற்றித் தெரிந்து கொண்டேன். ஜப்பான் மீது அணு குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட பின்னணியில் உள்ள வரலாறு பற்றிப் பேசுகிறது அந்தக் குறிப்புகள். ஜப்பானின் வன்முறை வெறியாட்டமும் அமெரிக்கவின் ஈவு இரக்கமற்ற செயலும் இதற்க்கிடையே எத்தனை அப்பாவி மக்கள் பாதிக்கப் பட்டனர் என்ற வரலாற்று நிகழ்வு மறக்க முடியாது. அந்தப் பாதிப்பிலிருந்து மீண்டு எப்படி முன்னேறினார்கள் என்பது பிரமிப்பாகயிருந்தது. ஜப்பான் மக்கள் வாழ்வில் அந்த நினைவு எப்படி உறைந்து போயுள்ளது. காலம்தான் தீர்வு தரும். மனிதர்கள் கடந்து போய்க்கொண்டே இருப்பதைத்தவிர வேறென்ன செய்ய முடியும். ஜப்பான் மக்களின் வாழ்க்கை முறை பற்றிப் பேசுகிறார். அவர்கள் ஒருவொருக்கொருவர் நன்றி தெரிவித்துக் கொள்கிறார்கள். பொது இடங்களில் அமைதியாக நடந்து கொள்கிறார்கள். புத்தகம் வாசிப்பதிலும் ருசியான உணவு முறைகளிலும் நாட்டம் கொண்டவர்கள் என்றாலும் அங்கே அதிகம் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பது முரணாகவுள்ளது.

காலம்தான் மனிதனை இயக்குகிறது அல்லது காலத்தைக் கண்டுபிடித்தது மனிதன்தான். அவன் இயங்குவதற்கு ஒரு குறியீடு தேவைப்படுகிறது. அதுதான் காலம். நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது வாழ்க்கையே அர்த்தமுள்ளதாக மாற்றும். காலத்தைக் கையாளத் தெரிந்தவனே மனிதன். ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் எழுதுவதாக எஸ். ரா தெரிவித்தார். எதையும் திட்டமிட்டு செய்யும் எஸ். ரா அதை 90 சதவீதம் பின்பற்றுவதாகச் சொன்னது நேரத்தை திட்டமிடுதல் பற்றிய அவசியத்தைத் தெளிவு படுத்தியது.

எழுத்தாளர் என்பவர் யார்? சமூக வளர்ச்சிக்கும் ஒவ்வொரு தனிமனித ஆளுமை வளர்ச்சிக்கும் அவருடைய பங்கென்ன? என்று சிந்தித்தால் நேரிடையாக, நீதிப் போராட்டம், சமூக முன்னேற்றம் அரசியல் புரட்சி என்று எழுத்தாளர்கள் பெரும் பங்காற்றியுள்ளார்கள். ஆனால் தனிமனித அவலங்களை உளவியல் பிரச்சனைகளை அவனுக்கு இழைக்கப்படும் அநீதிகளை ஆவணபடுத்தவும் இலக்கியத் தளத்தில் பதிவு செய்யவும் எல்லாக் காலக் கட்டத்திலும் தேவையிருக்கிறது. எஸ். ரா வை அந்த மாதிரி வகைப்படுத்தலாம் . புனைவின் வழியே அரசியல் அதிகாரத்துவத்தை இடக்கை போன்ற நாவல் விவரித்தாலும், நிமித்தம், சஞ்சாரம், நெடுங்குருதி போன்ற நாவல்கள் தனிமனித நெருக்கடிகளை எளிய தத்துவார்த்த உரைநடையில் பதிவு செய்துள்ளது. அதுவும் வரலாற்றினைப் புனைவின் வழியே சொல்லமுற்படுவது இலக்கியத்தில் முக்கியமான பணி.

அனைத்தையும் விடக் குடும்பம் தான் ஒரு மனிதனின் வாழ்வில் பெரும் பங்காற்றுகிறது. பெரும் ஆளுமைகள், சாதனையாளர்கள் உருவாகக் குடும்ப ஆதரவு முக்கியம். எஸ். ராவின் குடும்பத்தைப் பற்றிய அத்தியாயத்தில் எழுத்து சார்ந்தும் புத்தகம் பயணம் சார்ந்தும் குடும்ப உறவுகள் பெற்றோர்கள் தந்த சுதந்திரமும் அவர் முன்னேற எப்படி உதவியது என்ற ஊக்கமும் நாம் சிந்திக்க வேண்டிய விஷயம். ஆனால் அதே நேரம் மகத்தான படைப்பாளி உருவாவதை அவனைத் தவிர யாராலும் தடுக்க முடியாது என்று இலக்கிய உரை ஒன்றில் எஸ். ரா சொல்கிறார் .

கல்வி வியாபாரமும் விளம்பரமயமானதுமாக மாறி வருகிற பிம்பம் நிலவினாலும் ஒரு புறம் மார்க் மட்டுமே கல்வி கற்றலின் அளவீடாகக் கட்டமைக்கப்படுவது தவறான அணுகுமுறை. அதிலிருந்து மாறுபட்டு விரும்பிய கனவிற்காகவும் தனிமனித ஆளுமையை வளர்க்கும் விதமாக எழுத்தே வாழ்க்கை என்ற புத்தகம் எஸ். ராவின் வாழ்வை விவரிக்கிறது. குடும்பமும் பள்ளியும் எழுத்தாளனின் வாழ்வில் எப்படிப் பங்காற்றியுள்ளது என்பதற்கு எழுத்தே வாழ்க்கை ஒரு நல்ல சான்று.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 20, 2024 23:39

ஏழு பாடல்கள்

Attenborough’s Wonder of Song என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன்.

இதில் பிபிசியைச் சேர்ந்த டேவிட் அட்டன்பரோ தனக்குப் பிடித்தமான இயற்கையின் ஏழு பாடல்களை அறிமுகப்படுத்துகிறார்.

குறிப்பாக Indri Lemur,எனும் குரங்கின் பாடல். பறவைகளான Great Tit, Nightingale, Lyrebird, Fairy Wren, . Hawaiian ʻŌʻō பாடல் மற்றும் Humpback Whale எனப்படும் திமிங்கிலம் ஆழ்கடலில் ஏற்படும் ஓசை உள்ளிட்ட ஏழு பாடல்களை விவரிக்கிறார்.

அத்தோடு பறவைகள் ஏன் பாடுகின்றன. அதன் குரலின் இனிமைக்கு என்ன காரணம். ஆண் பறவைகள் மட்டும் தான் பாடுமா என்ற கேள்விகளுக்கும் விடையளிக்கிறார்.

இன்னொரு வகையில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கையை ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் அட்டன்பரோ தனது இளமைக்கால நினைவுகளையும் பகிர்ந்து கொள்கிறார்.

இந்த ஆவணப்படத்தில் அட்டன்பரோ இங்கிலாந்தில், கடந்த 60 ஆண்டுகளில் 38 மில்லியன் பறவைகள் வானிலிருந்து மறைந்துவிட்டதாகச் சொல்கிறார். காலநிலை மாற்றம் மற்றும் வாழ்விடச் சீரழிவு இதற்கான முக்கியக் காரணிகளாகும்.

ஒரு காலத்தில் லண்டன் நகரைச் சுற்றிக் கேட்டுக் கொண்டிருந்த நைட்டிங்கேலின் பாடலை இப்போது கேட்க முடியவில்லை. நைட்டிங்கேலின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது எனும் அட்டன்பரோ கீட்ஸின் Ode to a Nightingale கவிதையை வாசித்துக் காட்டி, அந்தப் பாடலை கீட்ஸ் ஹாம்ப்ஸ்டெட்டில் உள்ள ஸ்பானியார்ட்ஸ் தோட்டத்தில் எழுதினார் என விவரிக்கிறார். இன்று அந்தத் தோட்டமும் இல்லை. நைட்டிங்கேலின் பாடலும் இல்லை. லண்டன் மாநகரம் மிகப்பெரிய காங்கிரீட் காடாகிவிட்டது என்ற உண்மையை உணரவைக்கிறார்.

இன்றுள்ளது போல அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் எதுவும் இல்லாத 1960களில் இளைஞரான டேவிட் அட்டன்பரோ, மடகாஸ்கர் காடுகளுக்குள் பெரிய டேப்ரிக்கார்டர் ஒன்றைத் தூக்கிக் கொண்டு அபூர்வ வகைக் குரங்கினமான இந்திரியின் குரலைப் பதிவு செய்யச் செல்கிறார்.

இந்த வகைக் குரங்குகள் வாழ்நாளின் பெரும்பகுதியை மரங்களில் செலவிடுகின்றன. இந்திரியின் குரலைக் கேட்டு அதைப் பதிவு செய்கிறார். ஆனால் எங்கேயிருந்து அது குரல் கொடுக்கிறது என்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. தான் பதிவு செய்த அதன் குரலை ஒலிக்கவிடும் போது அது எதிராளி வந்துவிட்டதாக வந்துவிட்டதாக நினைத்து பதில் குரல் கொடுக்கிறது. இப்போது அதை அடையாளம் கண்டு படம் எடுக்கிறார் அட்டன்பரோ. இதன் பாடல் பாதுகாப்பு உணர்வு மற்றும் எதிராளிக்கு விடப்படும் எச்சரிக்கை என்பதையும் புரிந்து கொள்கிறார்.

ஒரு பறவை ஏன் பாடுகிறது என்பதற்கு இணையைத் தேர்வு செய்ய என்று பொதுவாகச் சொல்வார்கள். அதுவும் உண்மை தான். ஆனால் பறவைகளின் பாடல் என்பது அது சிறந்த தந்தையாக இருக்க முடியும் என்பதைக் காட்டிக் கொள்வதற்கான அடையாளம். எதிரிக்கான எச்சரிக்கை. தனது எல்லையை அடையாளப்படுத்தும் அறிவிப்பு. பெண் பறவையை வசீகரிக்கும் தந்திரம் என்று பல்வேறு காரணங்களைச் சொல்கிறார் டேவிட் அட்டன்பரோ.

முதன்முறையாக நைட்டிங்கேலின் குரலைப் பதிவு செய்து அத்துடன் செல்லோ இசையை இணைத்து வெளியிடப்பட்ட பிபிசியின் நிகழ்ச்சியைப் பற்றி நினைவு கொள்ளும் அட்டன்பரோ அந்தக் குரல் மக்களை எப்படி மயக்கியது என்பதை விவரிக்கிறார்.

படத்தின் ஒரு பகுதியாக ஆழ்கடலில் திமிங்கலம் எழுப்பும் ஓசையைப் பதிவு செய்து காட்டுகிறார்கள். கடற்கன்னிகளின் சங்கீதம் என்று ஒரு காலத்தில் நம்பப்பட்ட இந்த விநோத சங்கீதம் கேட்பவரை மெய்மறக்கச் செய்துவிடுகிறது. எதற்காக திமிங்கலம் இப்படி குரல் எழுப்புகிறது என்று புரியவில்லை. ஆனால் கடலின் ரகசியங்களை நான் முழுமையாக அறிந்தவன் என்று சொல்வது போல அதன் முணுமுணுப்பு, தவிப்பு இசையாக வெளிப்படுகிறது.

1970 ஆம் ஆண்டில் திமிங்கல இசையைப் பதிவு செய்து வெளியிட்டார்கள். இதன் காரணமாக உலகெங்கும் திமிங்கல வேட்டையைத் தடுக்கும் “சேவ் தி வேல்ஸ்” இயக்கம் உருவானது.

ஆஸ்திரேலிய லைர்பேர்ட்யின் பாடலைப் பற்றிய பகுதி வியப்பளிக்கிறது. அதன் வியப்பூட்டும் தோற்றம் மற்றும் விதவிதமாகக் குரல் எழுப்பிப் பாடும் முறை ஆச்சரியமளிக்கிறது இந்தப் பறவைக்கு மிமிக்ரி செய்யும் திறமை இருக்கிறது, 125 விதமாக அது குரலை எழுப்பும் என்கிறார்.

அதுவும் பெண் பறவையை வசீகரிக்க புதிது புதிதாகப் பாடுகிறது. போட்டிக்கு இன்னொரு ஆண் பறவை வந்துவிட்டால் பெரிய கச்சேரியே நடக்கிறது. எப்படியாவது பெண் பறவையை வசீகரித்துவிட வேண்டும் என அது உச்சநிலையில் பாடுகிறது. அதன் முயற்சி பலிக்கவில்லை. கடைசியில் அது தந்திரம் செய்ய முடிவெடுக்கிறது. , பெரிய ஆபத்து தன் எல்லைக்கு வெளியே இருப்பதாக பெண் பறவையை நம்ப வைக்க குரல் எழுப்புகிறது. அதற்குப் பயந்து பெண் பறவை ஆண் பறவையை ஏற்றுக் கொள்கிறது.

தான் ஒரு நல்ல தந்தையாக இருப்பேன் என்பதற்குச் சான்றாகவே லைர்பேர்ட்டின் பாடல் உள்ளது என அட்டன்பரோ விவரிக்கும் போது பறவையின் பாடலுக்குள் அழகான காதல்கதை ஒளிந்திருப்பதை உணர முடிகிறது.

பேராசிரியை நவோமி லாங்மோர் பெண் பறவைகளும் பாடுவதை அடையாளம் கண்டு ஆராய்ந்து டார்வினின் நிலைப்பாடு சரியானதில்லை என்று விளக்குகிறார்.

ஹவாய்யைச் சேர்ந்த ஓ’ஓ பறவை தனது துணையை அழைக்கப் பாடுகிறது, அந்தக் குரலில் வெளிப்படும் சோகம் நம்முடைய மனதைத் தொடுகிறது. ஓ’ஓ பறவை இனம் இன்று முற்றிலும் அழிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அதன் குரலை மட்டும் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.

இயற்கை தனது கடந்தகாலத்தை நினைவு வைத்துக் கொள்வதில்லை. திரும்பிப் பார்த்து ஏக்கம் கொள்வதில்லை. ஆனால் இயற்கையின் அதிசயங்களை இப்படி ஆவணப்படுத்தாமல் போனால் எதிர்கால தலைமுறைக்கு இயற்கை என்பதே தொட்டிச் செடியாக தான் மிஞ்சியிருக்கும்.

ஒராயிரம் பாடல்களை கொண்ட இயற்கையின் அழகினை விவரிக்கும் இந்த ஆவணப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். அதிலும் ஆசிரியர்கள் அவசியம் பார்க்க வேண்டும். பள்ளிதோறும் இதனை ஒளிபரப்புவது அவசியம். மாணவர்கள் தங்களின் பாடப்புத்தகங்களுக்கு வெளியே இது போன்ற ஆவணப்படங்களை காணும் போது தான் இயற்கை குறித்த ஆழ்ந்த புரிதலும் அதைப் பாதுகாப்பதற்கான புதிய ஆர்வமும் ஏற்படும்.

•••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 20, 2024 02:23

February 17, 2024

க.நா.சுவும் ரஷ்ய இலக்கியங்களும்

க.நா.சுவைப் போல உலக இலக்கியங்களைத் தேடித்தேடி படித்த இன்னொரு தமிழ் எழுத்தாளரைக் காண முடியாது. சர்வதேச படைப்பாளிகளை முறையாக அறிமுகம் செய்ததோடு அவர்களின் முக்கிய நாவல்களை மொழிபெயர்ப்பும் செய்திருக்கிறார்.

இவ்வளவு மொழிபெயர்ப்புகளை மேற்கொண்ட க.நா.சு ஏன் ரஷ்ய இலக்கியங்கள் எதையும் மொழிபெயர்ப்பு செய்யவில்லை. அவை பிடிக்கவில்லையா. அல்லது பலரும் மொழிபெயர்ப்புச் செய்கிறார்களே நாம் வேறு எதற்காக மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என நினைத்தாரா என்று தெரியவில்லை.

இவ்வளவிற்கும் க.நா.சுவின் காலத்தில் நிறைய ரஷ்ய இலக்கியங்கள் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டன. டால்ஸ்டாயின் நாவல்கள் சிறுகதைகள். கட்டுரைகள். ஆன்டன் செகாவ் சிறுகதைகள். மாக்சிம் கார்க்கி கதைகள், துர்கனேவ் நாவல்கள், புஷ்கின் கவிதைகள் என நிறைய ரஷ்ய மொழிபெயர்ப்புகள் வெளியாகியுள்ளன.

புதுமைப்பித்தன் அலெக்சாண்டர் குப்ரினை மொழியாக்கம் செய்திருக்கிறார். வல்லிக்கண்ணன் மாக்சிம் கார்க்கியை, டால்ஸ்டாயை மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார். ராமநாதன். பாஸ்கரன் மற்றும் தொமுசி ரகுநாதன் எனப் பலரும் ஆங்கிலம் வழியாக ரஷ்ய இலக்கியங்களை மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார்கள்.

மாஸ்கோவின் ராதுகா பதிப்பகம் மற்றும் முன்னேற்ற பதிப்பகம் ரஷ்ய மொழியிலிருந்து நேரடியாகத் தமிழுக்குப் புத்தகங்களை மொழிபெயர்ப்புச் செய்வதற்கு முன்பாகவே இவர்கள் மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறார் என்பது முக்கியமானது.

ரா.கிருஷ்ணையா, பூ.சோமசுந்தரம். முகமது ஷெரிபு நா. தர்மராஜன். போன்றவர்கள் அரசின் அழைப்பில் ரஷ்யாவிற்குச் சென்று தங்கி நேரடியாக ரஷ்ய மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார்கள். அந்த நினைவுகளை எவரும் விரிவாகப் பதிவு செய்யவில்லை என்பது வருத்தமளிக்கிறது

டால்ஸ்டாயின் புகழ்பெற்ற war and peace நாவலை தினமணி ஆசிரியர் டி.எஸ். சொக்கலிங்கம் தமிழில் போரும் வாழ்வும் என மொழியாக்கம் செய்திருக்கிறார். 1957ல் இந்த நாவல் சக்தி கோவிந்தனால் வெளியிடப்பட்டிருக்கிறது. இது மிகச்சிறப்பான மொழிபெயர்ப்பு.

இந்த மொழிபெயர்ப்பு எப்படி உருவானது என்பதைப் பற்றி இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் பொன் தனசேகரன்  எழுதிய. டி.எஸ். சொக்கலிங்கம் நூலில் அறிந்து கொள்ள முடிகிறது.

Louise Maude and Alymer Maude ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த War and Peace நூலை ஆக்ஸ்போர்ட் நிறுவனம் வெளியிட்டிருந்தது. இதனைத் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்ய விரும்பிய சக்தி வை. கோவிந்தன் ஆக்ஸ்போர்ட் பதிப்பகத்திடமிருந்து முறையான அனுமதியைப் பெற்றார்.

மிகப் பெரிய நாவல் என்பதால் யாரை மொழிபெயர்ப்புச் செய்யச் சொல்வது என்று அவருக்குத் தெரியவில்லை. அப்போது டி.எஸ். சொக்கலிங்கத்தின் நினைவு வந்த்து. உடனே பொறுப்பை அவரிடம் பொறுப்பு ஒப்படைத்தார்.

••

இங்கிலாந்தைச் சேர்ந்த அய்ல்மர் மௌட் மற்றும் லூயிஸா இருவரும் இணைந்து டால்ஸ்டாயின் முக்கியப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார்கள். 1890களில் இந்த மொழிபெயர்ப்புகள் வெளியாகி மிகுந்த வரவேற்பு பெற்றிருக்கின்றன.

மதகுருவின் மகனான அய்ல்மர் மௌட் 1874ம் ஆண்டுத் தனது பதினாறாவது வயதில் ரஷ்யாவிற்குச் சென்றார். சில ஆண்டுகள் மாஸ்கோவில் கல்வி பயின்றார். பின்பு ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். மாஸ்கோவில் வசித்த பிரிட்டிஷ் நகைக்கடைக்காரரின் மகளான லூயிஸாவை திருமணம் செய்து கொண்ட மௌட் வணிகத்தில் ஈடுபடத் துவங்கினார். மாஸ்கோவிலிருந்த அவர்களின் பல்பொருள் அங்காடி மிகவும் புகழ்பெற்றது.

லூயிஸாவும் இருமொழிப்புலமை கொண்டவர். அவரது சகோதரி மேரி டால்ஸ்டாயின் தொடர்கதைகளுக்கு ஒவியம் வரைந்திருக்கிறார். டால்ஸ்டாயின் பண்ணைக்குச் சென்று தங்குவதுடன அவருடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார் அய்ல்மர் மௌட். லூயிஸாவிற்கு டால்ஸ்டாய் படைப்புகள் மீது இருந்த தீராத ஆசையைத் தொடர்ந்து அவரை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்கான முக்கியக் காரணமாக இருந்த்து

வணிக வெற்றியின் காரணமாக ஏராளமான பணம் சம்பாதித்த மௌட் இங்கிலாந்து திரும்பி சில காலம் அங்கே வசித்திருக்கிறார். ரஷ்ய புரட்சியின் காரணமாக அவரது சொத்துகள் பறிபோயின. ஆயினும் புரட்சிக்குப் பின்பாகவும் அவர் ரஷ்யாவோடு இருந்த தொடர்பை துண்டித்துக் கொள்ளவில்லை.

டூகோபார் இன மக்களுக்கு உதவி செய்யும்படி டால்ஸ்டாய் அவருக்குக் கட்டளை இடவே புலம் பெயர்ந்த அவர்களுடன் தானும் கனடாவிற்குச் சென்றிருக்கிறார். டூகோபார்களைப் பற்றிய நேரடி அனுபவத்தை அய்ல்மர் விரிவான நூலாக எழுதியிருக்கிறார்.

••

தனது பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர் டி.எஸ். சொக்கலிங்கம். ஆஷ் கொலை வழக்கில் சொக்கலிங்கத்தின் சகோதரர் கைது செய்யப்பட்ட காரணத்தால் அவரது படிப்பை பாதியில் விட நேர்ந்தது. சில காலம் குடும்பத் தொழிலான மளிகை கடையை மேற்பார்வை செய்து வந்தார். 1917ல் சுதந்திர தாகம் கொண்டு காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் சேர்ந்தார். அவருடைய அம்மா நேரில் வந்து காந்தியிடம் பேசி தன்னுடைய பிள்ளையை ஊருக்குத் திரும்ப அழைத்துக் கொண்டு போனார்

தமிழ்நாடு இதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய சொக்கலிங்கம் 1934ல் தினமணி ஆசிரியராகப் பொறுப்பேற்றார். மணிக்கொடி இதழை உருவாக்கிய நவீன தமிழ் இலக்கியத்திற்கு விதை போட்டவர் இவரே. இவரது நவயுகப் பிரசுராலயம் மூலம் புதுமைபித்தன் சிறுகதைகளை வெளியிட்டார்.

டால்ஸ்டாயின் நாவல்கள் குறித்த அறிமுகத்தைச் சொக்கலிங்கத்திற்கு ஏற்படுத்தியவர் க.நா.சு. அதைப்பற்றிய குறிப்பு ஒன்றும் இந்த நூலில் காணப்படுகிறது.

“டால்ஸ்டாயின் போரும் அமைதியும் தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் பற்றிச் சமயம் கிடைக்கும் போதெல்லாம் என்னைப் பேசச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருப்பார் சொக்கலிங்கம்“ என்று க.நா.சு குறிப்பிடுகிறார்.

பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட டி.எஸ். சொக்கலிங்கம் ஆங்கிலத்தில் எவ்வளவு புலமை கொண்டிருந்தார் என்பதற்கும். டால்ஸ்டாயை எவ்வளவு ஆழ்ந்து புரிந்து கொண்டிருக்கிறார் என்பதற்கும் இந்த மொழிபெயர்ப்பு ஒரு சாட்சியம்.

இவ்வளவு ஆசையாக டால்ஸ்டாயை, தஸ்தாயெவ்ஸ்கியைக் கொண்டாடிய க.நா.சு ஏன் அவர்களது எந்தப் படைப்பையும் மொழியாக்கவில்லை என்பது வியப்பானதே.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 17, 2024 05:15

February 16, 2024

ஒகினமாரோ என்ற நாய்

ஜப்பானைச் சேர்ந்த செய் ஷோனகான் எழுதிய The Pillow Bookல் ஒரு நிகழ்ச்சி குறிப்பிடப்படுகிறது.

பேரரசரின் விருப்பமான பூனையின் பெயர் மையோபு. அதைக் கவனித்துக் கொள்ள ஒரு பணிப்பெண் இருந்தாள். அவளது பெயர் முமா.

ஒரு நாள் அந்தப் பூனை நீண்டநேரமாக வெயிலில் தூங்கிக் கொண்டிருந்தது, அதைக் கலைப்பதற்காக முமா அரண்மனை நாயை வேடிக்கையாக ஏவிவிட்டாள்.

ஒகினமாரோ என்ற அந்த நாய் பூனையின் மீது வேகமாகப் பாய்ந்தது. திடுக்கிட்டுப் போன பூனை பயத்தில் தப்பியோடியது.

மன்னர் அப்போது காலை உணவினைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்த அறைக்குள் பூனை ஒடிவரவே. ஏன் இப்படி ஒடிவருகிறது என்று விசாரித்தார். அரண்மனை நாய் துரத்தி வந்த செய்தியைச் சொல்கிறார்கள்.

பணிப்பெண்ணை அழைத்து,“ ஏன் நாயை ஏவி விட்டாய்“ என்று மன்னர் கோவித்துக் கொள்கிறார்.

அவளோ, “விளையாட்டுக்காகச் சொன்னதை நாய் புரிந்து கொள்ளவில்லை“ என்கிறாள்.

“நாயிற்கு உன் கட்டளையிலுள்ள விளையாட்டுதனம் எப்படிப் புரியும்“ எனக் கோவித்துக் கொண்ட மன்னர் உடனே அவளை வேலையை விட்டு நீக்குகிறார். அத்துடன் பூனையைத் துரத்தி வந்த ஒகினமாரோ நாயையும் தண்டிக்க விரும்பி அதை அடித்து நாடு கடத்த உத்தரவிடுகிறார்.

மூன்று மாதங்களுக்கு முன்பாக அந்த நாய் மலர்மாலை சூடப்பட்டு அலங்காரமாக அரண்மனையில் நடமாடியதை பணிப்பெண்கள் நினைவு கொள்கிறார்கள். அந்தச் சுகபோக வாழ்வு நொடியில் பறிபோகிறது

தண்டிக்கபட்டு நாடு கடத்தப்படும் நாய்களுக்கு என்றே ஒரு தீவு இருந்தது. அங்கே கொண்டு போக நாயை இழுத்துச் செல்கிறார்கள்.

அத்தீவில் ஒகினமாரோ தனது எஜமானியை நினைத்து அழுகிறது. உணவை உண்ண மறுக்கிறது.

பின்னொரு நாள் அங்கிருந்து தப்பி வந்த நாய் அரண்மனை அருகே வந்து ஊளையிடுகிறது. அதைக் கண்ட காவலர்கள் நாயை சுற்றிவளைத்து தடியால் அடிக்கிறார்கள். அரண்மனையில் பெண்கள் நாயின் ஒலத்தைக் கேட்டு பதறிப் போகிறார்கள்.

துணி துவைக்கும் பெண் தப்பி வந்த ஒகினமாரோவை தடியால் அடித்துக் கொல்கிறார்கள் என்கிறாள். ஒகினமாரோ இறந்துவிட்டது , வெளியே தூக்கி எறிந்துவிட்டார்கள் என்று பின்பு தெரிவிக்கிறார்கள்.

அன்றைய மாலையில் அவர்கள் ஒகினமாரோவை நினைத்து வருத்தப்படுகிறார்கள். ஆனால் எதிர்பாராத விதமாக அடிபட்டு வீங்கிய நிலையில் ஒகினமாரோ மீண்டும் அரண்மனைக்குள் நடந்து வருகிறது.

அது ஒகினமாரோ தானா என அவர்களுக்குச் சந்தேகம் வரவே. பெயர் சொல்லி அழைக்கிறார்கள். நாய் திரும்பிப் பார்க்கவில்லை.

உடனே பேரரசியிடம் தகவல் தெரிவிக்கிறார்கள். ஒகினமாரோ அவளது விருப்பத்திற்குரிய நாய். ஆகவே அவள் வேலை நீக்கம் செய்யப்பட்ட பணிப்பெண் முமாவை உடனே அழைத்து வா. அவள் நாயை அடையாளம் கண்டு சொல்வாள் என உத்தரவிடுகிறாள்.

அரண்மனையிலிருந்து துரத்தப்பட்ட பணிப்பெண்ணிற்கு மீண்டும் வேலை கிடைக்கிறது. அவள் இது ஒகினமாரோ தான் என்று உறுதியாகச் சொல்கிறாள். ஆனால் நாய் அவளது அழைப்பையும் ஏற்கவில்லை.

ஒருவேளை இது வேறு நாயாக இருக்குமோ என்று ராணி சந்தேகம் அடைகிறாள். மறுநாள் ராணி தனது அறையினுள் அலங்காரம் செய்து கொண்டிருக்கும் போது அதே நாயைக் காணுகிறாள். அடிபட்டு வீங்கிய நிலையில் ஒகினமாரோ ஏக்கத்துடன் அவளைப் பார்க்கிறது. அவள் பரிவுடன் நோக்கவே நாயின் கண்களில் கண்ணீர் வழிகிறது. அவள் நாயின் அன்பைப் புரிந்து கொள்கிறாள். உடனே நாயிற்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது. விஷயம் அறிந்த மன்னரும் நாயை ஏற்றுக் கொள்கிறார். ஒகினமாரோ மீண்டும் அரண்மனையில் வாழ ஆரம்பிக்கிறது.

“துயருற்ற மனிதர்கள் தன்மீது பரிவுகாட்டுகிறவர் முன்பாக அழுவது இயல்பு. ஆனால் இங்கே ஒரு நாய் அப்படி நடந்து கொள்கிறது“

அழகான சிறுகதையைப் போல நடந்த நிகழ்வை ஷோனகான் விவரிக்கிறார். இது அவரது தேர்ந்த எழுத்தாற்றலின் சான்று.

காரணமேயில்லாமல் அதிகாரத்தால் தண்டிக்கபடுவதும். இழந்த வாழ்க்கை திடீரென மீண்டும் கிடைப்பதும் இன்றும் தொடரவே செய்கிறது. தான் எந்தக் குற்றத்தையும் இழைக்கவில்லை என்பதை நாயால் எப்படித் தெரிவிக்க முடியும். கடைசியில் அதன் கண்ணீர் மொழியாகிறது. உண்மையைப் புரிய வைக்கிறது.

•••

Makura no sōshi எனப்படும் The Pillow Bookயை எழுதியவர் செய் ஷோனகான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஜப்பானில் வாழ்ந்தவர்.

ஜப்பானியப் பேரரசர் இச்சிஜோவின் மனைவி பேரரசி சடகோவின் அந்தப்புர உதவியாளராகப் பணியாற்றியிருக்கிறார்

அரண்மனை வாழ்க்கை குறித்தும் தனது கவிதை ரசனை மற்றும் தான் கண்ட மனிதர்கள். நிகழ்வுகள் குறித்தும் ஷோனகான் எழுதிய குறிப்புகளின் தொகுப்பே இந்நூல்.

இதனை அவர் உருவாக்கியுள்ள விதம் இன்றைய பின்நவீனத்துவப்பிரதி போலிருக்கிறது. குறிப்பாக அவரது விருப்பு வெறுப்புகளின் பட்டியல் தனித்துவமானது.

கியாத்தோவில் வசித்து வந்த ஷோனகானின் தந்தை பிராந்திய கவர்னராக இருந்தவர். ஷோனகானின் உண்மையான பெயர் நகிகோ என்கிறார்கள். தச்சிபானா நோரிமிட்சு என்பவரை தனது பதினாறாவது வயதில் மணந்திருக்கிறார். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான். அதன் பின்பே அரண்மனை பணிக்குச் சென்றிருக்கிறார் 24 வயதில் அரசி தனது பிரசவத்தில் இறந்து போகவே அரண்மனையை விட்டு வெளியேறினார் ஷோனகான், தனது கடைசி நாட்களில் மிகவும் வறுமையில் வாடி இறந்து போனார் என்றொரு குறிப்புக் காணப்படுகிறது.

பேரரசியின் உதவியாளராகப் பணியாற்றிய போது அவளுக்கு வயது இருபது. பேரரசி பயணம் செய்யும் போது துணையாகச் செல்வதும், கோடை மற்றும் வசந்தகாலங்களில் அவருடன் அரண்மனையில்இருப்பதும் ஷோனகானின் வேலை.

ஷோனகான் வசித்த அந்தப்புர வாழ்க்கை உலகம் அறியாதது. அரண்மனைக்குள் அது ஒரு ரகசிய உலகம். தங்கக் கூண்டில் அடைக்கபட்ட கிளியை போன்ற வாழ்க்கையது. விழா நாட்களிலும் பயணத்தின் போதும் மட்டுமே அவர்கள் சுதந்திரமாக இருந்தார்கள். மகிழ்ச்சியை அனுபவித்தார்கள்.

கவிதையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த ஷோனகான் மன்னரின் முன்பாகக் கவிதை பாடியிருக்கிறாள், தன்னைச் சுற்றிய வாழ்க்கையை நுட்பமாக அவதானித்து அவர் எழுதியுள்ள குறிப்புகள் யாவும் கவித்துவமாக உள்ளன.

இந்த நூலை எப்படி எழுதினார் என்பதற்கு ஒரு நிகழ்வை விவரிக்கிறார்

ஒரு நாள் அமைச்சர் கொரேச்சிகா ஒரு கட்டுக்காகிதத்தைப் பேரரசிக்கு பரிசாக வழங்கினார். அதில் என்ன எழுதுவது என்று தெரியாமல் காகிதக் கட்டினை ஷோனகானிற்கு அளித்தார் பேரரசி. அப்படிக் கையில் கிடைத்த காகிதங்களைக் கொண்டே ஷோனகான் குறிப்புகள் எழுதியிருக்கிறார். அந்தரங்கமான குறிப்புகள் என்ற பொருளில் தான் தலையணை புத்தகம் என அழைக்கபடுகிறது.

ஜப்பானில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஷோனோகான் போலப் பெண்கள் எழுதிய டைரிகள் மற்றும் குறிப்பேடுகள் பெரிதும் தனிப்பட்டஅனுபவங்களின் பதிவுகளாக இருக்கின்றன. இதே காலகட்டத்தைச் சேர்ந்த ஆண்களின் டயரிகள் மற்றும் குறிப்புகள் பயணம் மற்றும் அரசியல் சார்ந்த வரலாற்று பதிவுகளாகக் காணப்படுகின்றன. நாட்குறிப்பு என்ற வடிவம் அந்தக் காலத்தில் முதன்மையாக இருந்தது. தேதியற்ற நாட்குறிப்புகளைப் பெண்கள் எழுதியிருக்கிறார்கள். அதன் வழியே அவர்களின் அகநிலை மற்றும் உளவியல் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இவரது காலத்தில் தான் லேடி முரசாகி கெஞ்சிக்கதை என்ற நாவலை எழுதினார். அதுவே ஜப்பானின் முதல்நாவலாகக் கருதப்படுகிறது. லேடி முரசாகியின் போட்டியாளராக ஷோனகானைச் சொல்கிறார்கள்.

கோடை கால இரவின் நிலவொளியினையும், இலையுதிர்காலச் சூரியனையும், காட்டுவாத்துகள் செல்லும் ஆகாசத்தையும் ரசித்து எழுதியிருக்கிறார் . அந்தக் கால உடைகள் மற்றும் அலங்காரங்கள் பற்றி நுணுக்கமாக எழுதியிருக்கிறார். நினைவிலிருந்து இவ்வளவு துல்லியமாக எழுதியிருப்பது ஆச்சரியமளிக்கிறது..

பின் அறைகளில் கேட்கும் உரையாடலையும்,அரண்மனை பணியாளர்களின் மனநிலையினையும் அவர்களுக்குள் நடக்கும் போட்டி பொறாமைகளையும், மன்னரின் தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் கவிதை வாசிப்பையும் ஷோனகான் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார். .

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சமயசடங்குகள் மற்றும் திருவிழாக்கள் பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார். பயண வழிகள் குறித்தும் பருவகால மாறுதல்களின் அழகினை பற்றியும் மிகவும் ரசித்து எழுதியிருக்கிறார்.

ஒருவரை அதிகம் சந்தோஷம் கொள்ள வைக்கும் விஷயம் எது என்பதற்கு, யாரோ கிழித்துப் போட்ட கடிதத்தை மீண்டும் சரியாக ஒட்டவைத்துப் படிப்பது அலாதியான இன்பம் என்று ஷோனகான் எழுதியிருப்பது அவரது விளையாட்டுத் தனத்தையே காட்டுகிறது.

விருப்பத்திற்குரிய மலர்களைச் சேகரித்துத் தொடுப்பது போன்றது தான் தனது எழுத்து என்கிறார் ஷோனகான். உலகம் இதனை வாசிக்கப் போகிறது என்று அவர் நினைக்கவேயில்லை.

ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு நாம் இதனை வாசிக்கும் போது திரைச்சீலைக்குப் பின்னேயிருந்து ஷோனகான் பேசுவது கேட்கிறது. சொற்களின் வழியே அவர் தன்னை மட்டுமின்றித் தனது காலத்தையும் ஒளிரச் செய்கிறார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 16, 2024 06:17

February 15, 2024

பெயர் மறந்த மனிதன்

புகழ்பெற்ற ஸ்பானிஷ் இயக்குநரான விக்டர் எரிஸ் தனது ஐம்பது ஆண்டுகாலத் திரைவாழ்க்கையில் ஐந்து படங்களை மட்டுமே இயக்கியுள்ளார்.

அவர் கேன்ஸ் திரைப்பட விழா விருது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருதுகளைப் பெற்றவர். 31 வருஷங்களுக்குப் பிறகு விக்டர் எரிஸ் தனது புதிய திரைப்படமான Close Your Eyesயை வெளியிட்டிருக்கிறார். இப்போது அவரது வயது 83.

சினிமாவால் நமது நினைவுகளை மீட்டெடுக்கமுடியும். அது ஒரு வகை அருமருந்து எனக்கூறும் எரிஸ் இதையே தனது படத்தின் மையக்கருவாகவும் கொண்டிருக்கிறார்.

இதுவும் ஒருவகை துப்பறியும் படமே. ஆனால் இங்கே குற்றத்திற்கு பதிலாக மறந்து போன நினைவுகளை ஒருவர் தேடியலைகிறார்.

இயக்குநர் மிகைல் கேரே மாட்ரிட்டில் ஒரு தொலைக்காட்சி நேர்காணலுக்காக அழைக்கபடுகிறார். அவரது இரண்டாவது படமான The Farewell Gaze ல் நடித்த நடிகரும்,நெருக்கமான நண்பருமான ஜூலியோ அரேனாஸ் ஒரு நாள் படப்பிடிப்பின் போது காணாமல் போய்விடுகிறார். அவர் எங்கே போனார், என்ன ஆனார் என்ற தகவல் கிடைக்கவேயில்லை. இதனால் படம் பாதியில் நின்று போகிறது.

அதன்பிறகு வேறு திரைப்பட வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் மிகைல் கேரேவும் திரைத்துறையை விட்டு விலகி விடுகிறார். தற்போது ஸ்பானிய கடற்கரைக் கிராமம் ஒன்றில் தனியே வாழ்ந்து வருகிறார்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பாகக் காணாமல் போன நடிகர் ஜூலியோ அரேனாஸ் பற்றிய உண்மையைக் கண்டறியும் நிகழ்ச்சி ஒன்றை தொலைக்காட்சி ஏற்பாடு செய்கிறது. பணத்தேவைக்காக அதில் கலந்து கொள்ளச் சம்மதிக்கிறார் கேரே

இடைவெட்டாக மிகைல் கேரே எடுத்த திரைப்படத்தின் காட்சிகள் வந்து போகின்றன. 1940 களில் பிரான்சின் கிராமப்புறத்தில் வசிக்கும் பணக்கார யூதரான லெவி பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு தன்னை விட்டுப்பிரிந்து போய்த் தற்போது சீனாவில் வசிக்கும் தனது மகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியை ஜூலியோ அரேனாஸிடம் ஒப்படைக்கிறார். கேரே எடுத்த படத்தின் காட்சிகள் மிகுந்த கவித்துவமாக உருவாக்கபட்டுள்ளன.

தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது தன்னுடன் ஜூலியோ அரேனாஸ் கப்பற்படையில் வேலை செய்த நாட்களையும், பிராங்கோ ஆட்சிக்கு எதிராகப் போராடி சிறையில் அடைக்கபட்ட நிகழ்வினையும் பகிர்ந்து கொள்கிறார்.

நேர்காணல் செய்பவர் அவர்களது பழைய புகைப்படம் ஒன்றைக் காட்டி விளக்கம் கேட்கிறார். உணர்ச்சிவசப்படும் கேரே அந்தக் கால்பந்தாட்ட புகைப்படம் பற்றி நினைவு கொள்கிறார்.

ஜூலியோ அரேனாஸ் தற்கொலை செய்து கொண்டிருப்பாரா, அல்லது எங்காவது ரகசியமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாரா என்று நேர்காணல் செய்யும் பெண் கேட்கிறார். இத்தனை ஆண்டுகளாக அது தெரியாமல் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதைப்பற்றி நான் யூகிக்க விரும்பவில்லை என்கிறார் கேரே.

நிகழ்ச்சியின் முடிவில் தொலைக்காட்சி தயாரிப்பாளர் ஜூலியோ அரேனாஸின் மகளைத் தங்களின் நிகழ்ச்சிக்கு அழைத்து வர முடியுமா என்று கேட்கிறார்

அவளுடன் தனக்குத் தொடர்பு இல்லை எனக் கேரே மறுக்கும் போது, தன்னிடம் தொலைபேசி எண் இருப்பதாகத் தருகிறார்.

அன்றிரவு தனது திரைப்படங்களின் எடிட்டரான மேக்ஸைக் காணச் செல்கிறார் கேரே. படத்தின் மிகச்சிறந்த கதாபாத்திரம் மேக்ஸ். தன்னைச் சுற்றி சினிமா படப்பெட்டிகளுடன் வாழ்ந்து வரும் அவர் சினிமா டிஜிட்டல் மயமாகிவிட்டதை நினைத்து வருந்துகிறார். அவர்கள் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். உரிமையோடு மேக்ஸ் கேரேவைக் கண்டிக்கும் விதமும் அவரது சிரிப்பும் மறக்கமுடியாதது. சினிமாவை விட்டு ஒதுங்கி வாழும் இருவரும் இன்றும் அதே நட்புடன் அதே அன்போடு இருப்பது அழகாகக் காட்சிப்படுத்தபட்டுள்ளது.

ஜூலியோ அரேனாஸ் பல்வேறு பெண்களுடன் காதல் கொண்டிருந்ததையும். அவனது சொந்த வாழ்க்கையின் பிரச்சனைகளையும் பேசிக் கொள்கிறார்கள்.

மறுநாள் ஜூலியோ அரேனாஸின் மகள் அனா அரேனாஸைக் காண அவள் பணியாற்றும் அருங்காட்சியகத்திற்குச் செல்கிறார். நீண்ட காலத்திற்குப் பிறகு அவர்கள் சந்தித்துக் கொள்கிறார். தனது தந்தை காணாமல் போனபோது தனக்கு ஒரு வயது என்றும் அவரது முகம் நினைவில் இல்லை. ஆனால் குரல் அப்படியே மனதிலிருக்கிறது என்கிறார் அனா.

முன்னாள் காதலி லோலாவை சந்திக்கும் காட்சியும் அவர்களுக்குள் நடக்கும் உரையாடலும் மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது. குறிப்பாக அவளுக்குப் பரிசாக அளித்த தனது புத்தகம் ஒன்றை பழைய புத்தகக் கடையில் கண்டெடுக்கும் கேரே அதை அவளிடமே மறுபடியும் ஒப்படைக்கிறார். அப்போது அவள் அடையும் மகிழ்ச்சி அலாதியானது. அவருக்கு விருப்பமான பாடலை லோலா இசைத்துக் காட்டும் விதமும் பிரிந்து வாழ்ந்த போதும் அவர்களுக்குள் இருக்கும் காதலும் சிறப்பானது

காணாமல் போன நடிகரைக் கண்டறியும் முயற்சியின் ஊடாக இழந்து போன தனது உறவுகளை, திரையுலக வாழ்க்கையைக் கேரே மீண்டும் கண்டறிகிறார். இந்த முறை அவர் திரைப்படத்தை இயக்கவில்லை. ஆனால் அதைத் தனது வாழ்க்கையாக உருமாற்றுகிறார்.

இரவில் இளம் நண்பர்களுடன் குடித்தபடியே அவர் கிதார் இசைத்துப் பாடும் போது இன்னும் உற்சாகமான கலைஞராகவே இருப்பதைக் காண முடிகிறது. கடற்கரை கிராமத்தில் ஒரு நாயுடன் வசிக்கும் மிகைலின் பகலிரவுகள் அவர் தீராத தனிமையிலிருப்பதைக் காட்டுகின்றன.

இத்தனை ஆண்டுகளாக யாரும் கண்டறிய முடியாமல் போன ஜூலியோ அரேனாஸ் பற்றிய உண்மை வெளிப்பட்டபிறகு படத்தின் வேகம் அதிகமாகிறது.

நினைவுகள் அழிந்தாலும் சில செயல்களை, அடிப்படை உணர்வுகளை நாம் இழப்பதில்லை என்பதை ஜூலியோ அரேனாஸ் அடையாளப்படுத்துகிறார். படத்தின் இறுதிக்காட்சி அபாரமானது.

படம் இரண்டு வகை நினைவுகளைப் பேசுகிறது. ஒன்று திரைப்படத்தின் நினைவு மற்றது திரைக்கலைஞரின் நினைவு. இரண்டும் பிரிக்க முடியாதது. காணாமல் போன நடிகரின் கதை என்பது ஒரு குறியீடு. காலமாற்றத்தில் சினிமா அடைந்துள்ள வளர்ச்சி இது போன்ற நல்ல கலைஞர்கள் பலரை அடையாளமற்றுச் செய்துவிட்டது. அவர்கள் தானாக விலகியோ, ஒதுக்கி வைக்கபட்டோ, புறக்கணிக்கபட்டோ அவலநிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அந்தக் கதையைத் தான் எரிஸ் பேசுகிறார்.

பாதியில் முடிந்த படம், பாதியில் முடிந்த திரைவாழ்வு இரண்டு வேறில்லை தானே,

தனது தந்தையைக் காணுவதற்காக இரவில் அவரது அறைக்குத் தனியே செல்லும் அனா அரேனாஸின் முகத்தில் வெளிப்படும் தவிப்பு மிகவும் உண்மையானது. வெளிப்படுத்தமுடியாத அன்பை அவள் கண்களிலே காட்டுகிறாள்.

பிரிவு என்பது தான் படத்தின் மையக்குறியீடு. அது கேரே இயக்கும் படத்தின் கருவாகவும் இருக்கிறது. காணாமல் போன நடிகரின் வாழ்க்கையாகவும் இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாகச் சினிமாவை பிரிந்து வாழும் கேரேவின் கதையாகவும் இருக்கிறது. பிரிவு என்பது ஒரு புதிர்வட்டம். ஏன். எப்படி நடந்தது என்பதைத் தெளிவாகச் சொல்லிவிட முடியாத சுழலது. சொல்லப்படாத அவர்களின் கடந்தகால நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாகப் படத்தில் வெளிப்படுகிறது.

சினிமாவின் மேஜிக் என்பது அது தரும் பரவசம் மட்டுமில்லை. மாறாக அது நம் நினைவுகளை மீட்டும் இசைக்கருவி போன்றது என்பதை எரிஸ் படத்தில் சிறப்பாக உணர்த்துகிறார்.

படத்தின் கடைசிக்காட்சி சினிமா தியேட்டரில் வயதானவர்களுடன் நிறைவு பெறுகிறது, அவர்கள் யாவரும் தாங்கள் இழந்ததை மீண்டும் கண்டுபிடிப்பார்கள் என்று நம்புவது தான் கலையின் வெற்றி.

Cinema Paradiso வரிசையில் இன்னொரு தரமான கலைப்படைப்பு.

2 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 15, 2024 06:38

February 14, 2024

கோனேரி ராஜபுர ஓவியங்கள்

கோனேரி ராஜபுரம் சென்றிருந்தேன். திருநல்லம் என்பது அதன் பழைய பெயர். அங்குள்ள பஞ்சலோக நடராஜர் விக்கிரகம் மிகப்பெரியது. பேரழகு மிக்கது. செம்பியன் மாதேவி இக்கோவிலைக் கற்றளியாகக் கட்டினார் என்கிறார்கள். கோவிலிலுள்ள இறைவியின் பெயர் அங்கவள நாயகி. எவ்வளவு அழகான பெயர்.

கும்பகோணம் – காரைக்கால் பாதையில் எஸ்.புதூர் என்னும் ஊரைக் கடந்து தெற்கே வடமட்டம் செல்லும் சாலையில் பயணம் செய்தால் கோனேரி ராஜபுரம் அடையலாம். சாலைவழியெங்கும் நாணல் பூத்திருந்தன. இளவெயிலின் முணுமுணுப்பு. மண்சாலைகளுக்கு உள்ள நினைவு தார்ச் சாலைகளுக்குக் கிடையாது.

கோவிலின் முகப்பு மண்டப விதானத்தில் அழகான வண்ண ஓவியங்கள் காணப்படுகின்றன. இவை முறையான பராமரிப்பின்றி உதிர்ந்த நிலையில் உள்ளன. கோவில் சார்ந்த தொன்மம் மற்றும் புராணக் கதைகள், கோவிலின் விழாக்களைச் சித்தரிக்கும் காட்சிகள்  ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.

இந்த ஓவியங்களில் ஒன்றாக ஆங்கிலேய அதிகாரிகளை வரவேற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இப்படி ஒரு ஓவியத்தை வேறு கோவில் எதிலும் நான் கண்டதில்லை.

நான்கு ஆங்கிலேயர்கள் தலைதொப்பி அணிந்து நீண்டவாளுடன் நிற்கிறார்கள். அவர்களின் உடை மற்றும் கழுத்துப்பட்டி நேர்த்தியாக வரையப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு எதிரே தட்டில் சந்தனம், பன்னீர் சொம்பு, வெற்றிலை பாக்கு காணப்படுகின்றன. அவர்களை வரவேற்கும் விதமாகச் சதிராடும் பெண் ஒருத்தி நடனமாடுகிறார். தலைப்பாகை அணிந்தவர் முகவீணை வாசிக்க, இன்னொருவர் சின்னமேளம் அடிக்க, மற்றொருவர் கைத்தாளம் போடுகிறார்.

கோனேரிராஜபுரம் ஓவியங்களை 1916-ஆம் ஆண்டுத் திருவாரூர் வண்ணக்காரன் நடேசன் பிள்ளை தீட்டியதாகவும், பின்னர் 1935-ஆம் ஆண்டுத் திருவாவடுதுறை வர்ணக்காரர் மாசிலாமணி தீட்டியதாகவும் வரலாற்று ஆய்வாளர் இரா.நாகசாமி குறிப்பிடுகிறார்.

இக்கோவிலின் சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் குறித்து ஆய்வாளர் எழில்ஆதிரை செம்பியன் மாதேவி மலைக்கோயில்கள் என விரிவான ஆய்வு நூல் ஒன்றை எழுதியிருக்கிறார்.

வண்ணக்காரன் என்று ஓவியரை அழைப்பது பொருத்தமானது. டெம்பரா ஓவிய முறையில் வரையப்பட்ட இந்த ஓவியங்களில் தனித்துவமாக வண்ணங்களை உபயோகித்துள்ள விதமும் முகபாவங்களும் அபாரமான அழகுடன் காணப்படுகின்றன.

நடனமாடும் பெண் திருவிடைமருதூர் ருக்மணி என்றும், நாதஸ்வர வித்துவான்களாக அம்மாபேட்டை பக்கிரி மற்றும் மன்னார்குடி சின்ன பக்கிரி என்றும் இணையத்தில் செய்தி காணப்படுகிறது. உறுதியான தகவல் தானா என்று தெரியவில்லை.

நாயக்க மன்னர்களின் காலத்தில் தான் தமிழ்நாட்டில் டெம்பரா ஓவிய முறை அறிமுகம் ஆனது. சுண்ணாம்பு கொண்டு வெள்ளையடிக்கப்பட்ட சுவரில் இயற்கை வண்ண நீர் கலவையை முட்டையின் வெள்ளைக் கரு போன்ற ஏதாவது ஊடகத்தில் குழைத்து அதனைப் பயன்படுத்தி ஓவியங்கள் வரைந்திருக்கிறார்கள்.. சிவப்பு, மஞ்சள், கறுப்பு, , நீலம் போன்ற அடிப்படை வண்ணங்களே இதில் முதன்மையாகப் பயன்படுத்தப்படுகின்றன..

Around India with a Movie Camera என்றொரு ஆவணப்படத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தேன். அதில் இது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. புதுச்சேரி அருகிலுள்ள வில்லியனூர் கோவில் முன்பாக ஆங்கிலேய அதிகாரிக்கு வரவேற்பு கொடுப்பதற்காகச் சதிர் நடனம் ஏற்பாடு செய்யப்படுகிறது. சதிராடும் பெண்களின் கம்பீரமும் அதைக் காணும் கிராமவாசிகளும் , உள்ளூர் பிரமுகரின் பருத்த தோற்றமும், இந்த வரவேற்பை விநோதமாகக் காணும் பிரிட்டிஷ் குடும்பத்தின் இயல்பையும் அந்த ஆவணப்படத்தில் காண முடிந்தது. அதே நிகழ்வின் மறுவடிவம் போலவே கோனேரி ராஜபுர ஓவியம் காணப்படுகிறது. ஆங்கிலேயர்கள் கோவிலில் அளிக்கபடும் மரியாதையை ஏற்றுக் கொள்ளும் தோற்றத்தைக் காணும் போது அன்றைய உள்ளூர் பிரமுகர்கள் எவ்வளவு அடிபணிந்து போயிருக்கிறார்கள், அதிகாரிகளைச் சந்தோஷப்படுத்த என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

ஓவியத்தில் இடம்பெற்றுள்ளவர்களின் உடல் அமைப்பும் முகபாவமும் அதில் வெளிப்படும் உணர்ச்சிகளும் துல்லியமாக வரையப்பட்டுள்ளன. குறிப்பாகச் சதிராடும் பெண்ணின் பின்னால் உள்ள பெண்களின் வெறித்த பார்வையைப் பாருங்கள். சற்றே தலை தாழ்த்தி நிற்கும் ஆங்கிலேயர்களின் பாவனையைப் பாருங்கள். அபாரம்

ஓவியத்திலுள்ள கடிகாரம் என்னை மிகவும் கவர்ந்தது. கோவில் சுவரில் காணப்படும் அந்தக் கடிகாரம் காலமாற்றத்தின் அடையாளம். கோவிலுக்குள் எப்போதுமே காலமயக்கம் ஏற்படுகிறது. அல்லது காலம் கோவிலுள் நழுவி விடுகிறது. நாம் காணும் சிற்பங்களும் ஓவியங்களும் உடனடியாக நம்மைப் பின்னோக்கி நகர்த்திக் கடந்தகாலத்தினுள் நீந்தச் செய்கின்றன. கோவிலின் கோபுரம் என்பது காலமற்றது. அதன் நிழல் என்னை எப்போதும் வசீகரிக்கக்கூடியது.

அந்தக் கால முகங்களுக்கு என்று விசேச அழகிருக்கிறது. இந்தக் கோவிலில் காணப்படும் வேறு சில ஓவியங்களில் அப்படியான விசித்திர முகங்களைக் கண்டேன். பணிந்து கைகூப்பி நிற்கும் துறவியின் சித்திரத்தை விட்டுக் கண் அகலமுடியவில்லை.

தொலைதூரத்திலிருந்து கேட்கும் ரேடியோ பாடல் தற்காலத்திற்குள் என்னை இழுத்துக் கொண்டிருந்தது. மனம் வேறுகாலத்தில் வேறு உணர்வில் மயங்கிச் சரிந்து கொண்டிருந்தது. கலை தரும் மகிழ்ச்சியை வேறு எதனாலும் ஈடு செய்துவிட முடியாது. கோவில் ஒரே நேரத்தில் மூன்று நான்கு கால அடுக்குகள் கொண்டிருக்கிறது. சங்கீதமும் சிற்பங்களும் ஓவியங்களும் பிரிக்கமுடியாத இழையால் இணைக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தேன். அந்த உணர்வை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. வெறும் பாத்திரத்தில் பாலை நிரப்பியது போல என்றொரு வரி மனதில் தோன்றியது.

ஆமாம். அப்படி தானிருந்தேன்.

.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 14, 2024 05:44

February 13, 2024

சோமாவைப் பாடுதல்

சோமா என்ற “ஏ.கே.ராமானுஜனின் புதிய கவிதைத்தொகுப்பினை வாசித்தேன்.

ஆங்கிலக் கவிஞரும் நாட்டுப்புறவியல் ஆய்வாளருமான ஏ.கே.ராமானுஜனின் மறைவிற்குப் பிறகு அவரது கையெழுத்துப்பிரதிகள், நாட்குறிப்புகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தும் சிகாகோ பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பட்டு பாதுகாப்பட்டு வருகின்றன.

பெரும்பாலான சேகரிப்பு ஆங்கிலத்திலிருந்தாலும், தமிழ், கன்னட கையெழுத்து பிரதிகளும் அங்கே காணப்படுகின்றன. இதில் அவரது சான்றிதழ்கள் புகைப்படங்கள் மற்றும் கடிததொடர்புகள், நினைவுக்கட்டுரைகள் தனியே தொகுக்கப்பட்டிருக்கின்றன.

இதுவரை வெளியிடப்படாத அவரது ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பைச் சோமா என்ற பெயரில் தற்போது வெளியிட்டிருக்கிறார்கள். இந்தத் தலைப்பு ஏ.கே.ராமானுஜன் வைத்தது.

இந்தக் கவிதைகளைப் பற்றி ராமானுஜத்தின் மகன் ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார்

“1971 ஆகஸ்டில் ஒரு நாள் எனது தந்தை, ஏ.கே. ராமானுஜன், மெஸ்கலின் என்ற போதை மருந்து காப்ஸ்யூலை எடுத்துக் கொண்டார். அதில் மயக்கமாகி உறங்கிவிட்டார். . கண்விழித்த போது குழப்பமான மாயத்தோற்ற விளைவுகள் ஏற்பட்டன. அவர் மிகுந்த உணர்ச்சிகரமான மனநிலையைக் கொண்டிருந்தார். அந்த அனுபவத்தைத் துண்டு துண்டான கவிதைகளாக எழுதினார். ஆற்றில் கலக்கும் துணை நதிகள் போல அவரது எழுத்து தனக்கான ஒரு ரகசிய பாதையைக் கண்டுபிடித்தது, அப்படித் தான் சோமாவின் கருப்பொருளில் தொடர்ச்சியான கவிதைகளை எழுதத் துவங்கினார் “.

இந்தத் தொகுப்பில் அவரது நேர்காணல் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. 1982 இல் சிகாகோவில் மலையாளக் கவிஞர் கே. ஐயப்ப பணிக்கருக்கும் ஏ.கே.ராமானுஜனுக்கும் இடையே நடந்த நேர்காணலது. ஆடியோவில் பதிவு செய்யப்பட்ட இந்த நேர்காணல் நீண்டகாலமாகப் பணிக்கரின் பாதுகாப்பில் இருந்திருக்கிறது. அதைத் தேடி எடுத்து அச்சிட்டிருக்கிறார்கள்.

இந்த நேர்காணலில் இரண்டு மொழிகளில் எழுதுவது குறித்தும் அவரது ஆங்கிலக் கவிதைகள் குறித்தும் ராமானுஜன் மிகவும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். இந்தியாவிலிருந்தபடி ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகளுக்கும் அமெரிக்காவிலிருந்து கொண்டு ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகளுக்கும் வேறுபாடு உள்ளதா என்று பணிக்கர் கேட்கிறார். தான் அப்படி உணரவில்லை எனும் ராமானுஜன் அமெரிக்கா சென்ற பிறகுத் தனது கவிதைகளை நிறையத் திருத்தம் செய்து மேம்படுத்தியதாகச் சொல்கிறார்.

சோமா அவரது பரிசோதனைக் கவிதைகளின் தொகுப்பு. சோமா என்பது வானுலகின் தாவரம். அதிலிருந்தே சோமபானம் தயாரிக்கபடுகிறது. வேத இலக்கியங்கள் அமுதமான சோமாவைக் கொண்டாடுகின்றன சோமா மனதைக் கட்டுப்படுத்தும் மருந்தாக அறியப்படுகிறது. கடவுள்களின் மதுவான சோமா, புலன் மயக்கத்தையும் உச்சநிலை பரவசத்தையும் உருவாக்கக் கூடியது. சோமா அமரத்துவத்தைத் தர வல்லதாகவும் கருதப்படுகிறது

சோம பானம் எப்படித் தயாரிக்கப்படுகிறது என்பதைப் பற்றிச் சாம வேதத்தில் குறிப்புகள் காணப்படுகின்றன. அது போலவே ரிக்வேதம் 9ஆம் அத்தியாயம் முழுமையும், சோம பானம் தயாரிக்கும் முறையை விவரிக்கிறது/ இது போலவே சோமம் குறித்த பல்வேறு துதிப்பாடல்களையும் காண முடிகிறது.

ஏ.கே.ராமானுஜனின் சோமா கவிதைகள் எழுபதுகளில் எழுதப்பட்டவை . அவர் சோமாவை நவீன வாழ்வின் குறியீடாகக் கொள்கிறார். இதிலுள்ள 22 கவிதைகளும் சோமாவை வெவ்வேறு வழிகளில் அவருடன் தொடர்புபடுத்துகின்றன. குறிப்பாக இக்கவிதைகளில் சோமாவை அவர் அழைக்கும் விதமும் தொடர்பு படுத்தும் புள்ளியும் ஆச்சரியமளிக்கின்றன .நம்மாழ்வார் பாடலை தனது கவிதையுடன் அவர் இணைக்கும் விதம் அபாரமானது.

Soma, I said, is no Siva.

Yet Siva is sometimes Soma,

Soma, I said, is no Visnu

But Visnu can play Soma,

enter the nests of flesh

to make them sing…

தனது கட்டுரை ஒன்றில் இளமைப்பருவத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது ராமானுஜன் இப்படிக் குறிப்பிடுகிறார்

As we grew up Sanskrit and English were our father-tongues and Tamil and Kannadaour mother-tongues. The father-tongues distanced us from our mothers, from ourchildhoods, and from our villages and many of our neighbours in the cowherd colonynext door. And the mother-tongues united us with them. It now seems appropriate that our house had three levels: a downstairs for the Tamil world, an upstairs for the English and the Sanskrit, and a terrace on top that was open to the sky where our father could show us the stars and tell us their Sanskrit Names.

வெளிநாட்டில் வசிக்கும் போது தாய்மொழியில் எழுதுவதற்கான தூண்டுதலையும் தாய்மொழியில் கற்றத்தின் நினைவுகளையும் எழுப்புவதற்குச் சோமா துணை நிற்பதாக ராமானுஜன் கருதுகிறார். அந்த வகையில் இக்கவிதைகள் அவரது நினைவின் ஆழத்திலிருந்து வெளிப்படும் விசித்திர மலர்களே.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 13, 2024 00:30

February 9, 2024

காஞ்சிபுரம் புத்தகத் திருவிழாவில்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மைதானத்தில் புத்தகத் திருவிழா 09.02.2024 முதல் 19.02.2024 வரை 11 நாட்கள் நடைபெறவுள்ளது

இந்த விழாவில் 13 செவ்வாய்கிழமை மாலை உரையாற்றுகிறேன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 09, 2024 23:11

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.