S. Ramakrishnan's Blog, page 36
April 3, 2024
நிலத்தின் குரல்
ஒரு கனவைத் துரத்திச் செல்லும் மனிதனின் கதை தான் The Promised Land. பதினெட்டாம் நூற்றாண்டில் நடக்கிறது. Ida Jessen எழுதிய நாவலைத் தழுவி, நிகோலஜ் ஆர்செல் இயக்கியுள்ளார். லுட்விக் கஹ்லெனாகச் சிறப்பாக நடித்திருக்கிறார் மிக்கெல்சென்.

படத்தின் சில காட்சிகள் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நட் ஹாம்சன் எழுதிய நிலவளம் நாவலை நினைவூட்டுகிறது.
லுட்விக் கஹ்லென் ராணுவத்தில் கேப்டனாகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர், டென்மார்க்கில் மக்கள் வசிக்காத ஜுட்லாந்து நிலப்பகுதியை விவசாய நிலமாக மாற்ற விரும்புகிறார்
வடக்கில் கிரெனன் ஸ்பிட் முதல் தென்கிழக்கில் எல்பே மற்றும் சூட் சங்கமம் வரை ஜுட்லாந்து நீண்டுள்ளது.
ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று ஏழ்மையான வாழ்க்கையை நடத்தி வரும் கஹ்லெனுக்கு ஜுட்லாந்தை சீர்படுத்தி விவசாயம் செய்ய வேண்டும் என்பது நீண்டநாள் கனவு.
அதற்குக் காரணம் அவரது பிறப்பிலிருந்து தொடரும் களங்கம். கள்ளஉறவில் பிறந்த பையன் என்று அவரைச் சமூகம் கேலி செய்கிறது. இதிலிருந்து விடுபட்டு தானும் உயர்குடியைச் சேர்ந்த கனவான் என்று நிரூபணம் செய்வதற்காக இப்படி ஒரு திட்டத்தை முன்னெடுக்கிறார்.

இதற்காக, மன்னரின் அனுமதியைப் பெற அரண்மனைக்குச் செல்கிறார். நீதித்துறை அதிகாரிகள் அவரது விண்ணப்பதைக் கண்டு கேலி செய்கிறார்கள். உதவாத வேலை என்று அவமானத்தைப் படுத்துகிறார்கள். முடிவில் மன்னரை சந்தித்துத் தனது கோரிக்கையை முன்வைக்கிறார்.
விவசாய நிலமாக மாற்றிவிட்டால் தன்னைப் பிரபுவாக அங்கீகரித்துப் பட்டம் அளித்துக் கௌரவிக்கவும் சலுகைகள் தரவும் வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறார். இது ஒரு போதும் நடக்காத காரியம் என்பதால் போதையிலிருந்த மன்னரும் அனுமதி அளிக்கிறார். ஆனால் எந்த நிதி உதவியும் அளிக்க முடியாது என்கிறார்.
கஹ்லென் ஜுட்லாந்தை நோக்கி தனது பயணத்தைத் துவங்குகிறார். அந்த நிலப்பரப்பு வசீகரமானது. புதிரானது. உயிரைப் பறிக்கும் அழகோடு விளங்குகிறது.

ஜுட்லாந்தின் ஒரு பகுதியை தனதாக்கி வைத்துள்ள பணக்கார பிரபு ஃபிரடெரிக் டி ஷிங்கெல் தனது பணியாளர்களை அடிமைகள் போல நடத்துகிறான். தன்னை எதிர்ப்பவர்களை மிக மோசமாகத் தண்டிக்கிறான். கண்களில் கொடூரம் மினுங்க சைக்கோபாத் போல நடந்து கொள்ளும் ஷிங்கெல் பசித்த ஓநாயைப் போலவே காட்சியளிக்கிறான்.
லுட்விக் ஜுட்லாந்தில் விவசாயம் செய்வதற்கு அங்குள்ள இளம் போதகர் உதவி செய்கிறார். கையில் இருந்த பணத்தைக் கொண்டு சிறிய மரவீடு ஒன்றை அமைத்துக் கொள்கிறான். விவசாயப்பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். ஆள் கிடைக்கவில்லை. ஷிங்கெல்லிடமிருந்து தப்பியோடி வாழ்ந்து வரும் ஜோன்ஸ் மற்றும் அவனது மனைவி பார்பராவை வேலைக்கு வைத்துக் கொள்கிறான்.
மூவருமாக நிலத்தைச் சீர் செய்து விவசாயப் பணிகளை மேற்கொள்கிறார்கள். இதனை அறிந்த ஃபிரடெரிக் கஹ்லெனை விருந்திற்கு அழைக்கிறான். அங்கே அவனை நிலத்தைத் தன்னிடம் ஒப்படைத்துவிட்டு ஒடிவிடும்படி எச்சரிக்கை செய்கிறான். அந்தச் சந்திப்பில் கஹ்லெனின் பிடிவாதம் மற்றும் கனவு வெளிப்படுகிறது.
நார்வே அரச குடும்பத்தைச் சேர்ந்த எடேல் தன்னைத் திருமணம் செய்து கொள்வாள் என்று ஷிங்கெல் நம்புகிறான். அவளோ விருந்திற்கு வந்த கஹ்லெனின் மீது காதல் கொள்கிறாள். அவருக்குப் பல்வேறு விதங்களில் உதவி செய்கிறாள்.
இதனால் ஷிங்கெல் ஆத்திரம் கொள்கிறான். ஜுட்லாந்திலிருந்து கஹ்லெனைத் துரத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறான். புதுப்புதுப் பிரச்சனையாக முளைக்கிறது.
இதனிடையில் ஜிப்ஸி சிறுமி ஒருத்தி அவர்கள் வீட்டில் திருட வந்து பிடிபடுகிறாள். அவளைத் தனது மகளைப் போல வளர்க்க ஆரம்பிக்கிறான். விவசாயத்திற்கான பணியாட்கள் கிடைக்காத சூழலில் ஜிப்ஸிகளை அழைத்து வந்து வேலைக்கு வைத்துக் கொள்கிறான்.

விவசாய வேலைக்கு ஜிப்ஸிகளை வைத்துக் கொள்ளக்கூடாது என்று டென்மார்க்கில் சட்டமிருக்கிறது. ஆகவே அதைக் காரணம் காட்டி அவனைக் கைது செய்ய முயலுகிறான் ஷிங்கெல்.
முடிவில்லாத போராட்டங்களைத் தாண்டி உருளைகிழங்கு விவசாயம் செய்கிறான். இயற்கையும் அவனை வஞ்சிக்கிறது. கஹ்லென் பனிப்பொழிவினுள் உருளைக்கிழங்கினைக் காப்பாற்ற போராடும் காட்சி மறக்க முடியாதது
ஷிங்கெல் ஒரு நாள் ஜோன்ஸை பிடித்துவந்து கஹ்லென் கண்முன்னால் சித்ரவதை செய்கிறான். ஜோன்ஸ் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றி கதற விடுகிறான். கஹ்லெனால் தடுக்க முடியவில்லை. சட்டம் ஷிங்கெல் பக்கமிருக்கிறது.
கணவனை இழந்த பார்பராவை தனது துணையாக்கிக் கொள்கிறான் கஹ்லென். அவர்களுக்குள் ஏற்படும் நெருக்கமும் அவர்கள் இணைந்து வாழும் காட்சிகளும் அழகாக உருவாக்கபட்டுள்ளன.
கஹ்லென் தங்கள் நிலத்தில் விளைந்த உருளைக்கிழங்கினை மன்னருக்கு பரிசாக அனுப்பி வைக்கிறான்.
அவனுக்கு உதவி செய்ய ஆட்கள் அனுப்பி வைக்கபடுகிறார்கள். புதிய குடியிருப்புகள் உருவாகின்றன. ஆனால் ஜிப்ஸி சிறுமியை அவன் வீட்டில் வைத்திருக்கக் கூடாது. அவள் சாத்தானின் வடிவம் என்று வந்தவர்கள் நிபந்தனை விதிக்கிறார்கள். இதனைக் கஹ்லென் ஏற்க மறுக்கிறான். அப்படி என்றால் தாங்கள் அங்கே வசிக்க முடியாது என்று வந்தவர்கள் மிரட்டுகிறார்கள். இன துவேசத்தைக் கஹ்லென் எதிர்க்கிறான். ஆயினும் அவனால் மக்களின் மனதை மாற்ற முடியவில்லை.
மனித நடமாட்டமில்லாத நிலவெளி. ஊடுருவ முடியாத மூடுபனி , ஊளையிடும் காற்று. ஒளிரும் சூரியன், ஆபத்துகள் நிறைந்த இருண்ட விசித்திரக் காடு. ஷிங்கெல் வீட்டில் நடைபெறும் விருந்து. அந்த மாளிகையில் எரியும் நூற்றுக்கணக்கான மெழுகுவர்த்திகள், என Rasmus Videbæk இன் ஒளிப்பதிவு நிலப்பரப்பையும் அதன் மனிதர்களின் விசித்திர மனநிலையினையும் நேர்த்தியாக வெளிப்படுத்துகிறது. டான் ரோமரின் இசையமைப்பு மிகச்சிறப்பானது.
மிக்கெல்சென் போன்ற சிறந்த நடிகரை ஹாலிவுட் பயன்படுத்தும் விதமும் டேனிஷ் சினிமா பயன்படுத்தும் விதமும் எவ்வளவு மாறுபட்டது என்பதற்கு இப்படமே சாட்சி.
இப்படத்தைத் திரைவிமர்சகர் மாட் மஹ்லர் ஹாலிவுட்டிற்குச் சவால்விடும் சிறந்த கலைப்படைப்பு என்கிறார். அது சரியான மதிப்பீடே.
April 2, 2024
ஸ்ருதி டிவி / வாழ்த்துகள்
ஸ்ருதி டிவி ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர்களைத் தொட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

புத்தக வெளியீடுகள். இலக்கிய உரைகள், புத்தகத் திருவிழா என இலக்கிய நிகழ்வுகளை ஆவணப்படுத்தியதில் ஸ்ருதி டிவியின் பங்கு மிக முக்கியமானது.

ஸ்ருதி டிவியைச் சிறப்பாக நடத்திவரும் கபிலன், சுரேஷ் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக உள்ள குடும்பத்தினரை மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்
கால்வினோவின் ஆறு உரைகள்
எழுத்தின் நுட்பங்களைக் கற்றுக் கொள்வதற்கான கட்டுரைகள், நூல்கள் தமிழில் மிகக் குறைவாகவே எழுதப்பட்டிருக்கின்றன. ஆங்கிலத்தில் நிறைய நூல்கள் உள்ளன. ஆனால் பெருமளவு பல்கலைகழகப் பேராசிரியர்கள் எழுதியது. வகுப்பறைப் பாடமாகவோ, அல்லது பயிற்சிமுகாமிற்கான கையேடு போலவோ தயாரிக்கபட்டவை.
தனது படைப்புகள் மற்றும் படைப்பின் நுட்பங்கள் பற்றி எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களே நாம் வாசிக்க வேண்டியவை. இதே பொருளில் அவர்கள் ஆற்றிய உரைகளும் முக்கியமானதே.

ஹார்வர்ட் பல்கலைகழகத்தால் நடத்தப்படும் NORTON LECTURES வரிசையில் T .S. Eliot, Jorge Luis Borges, Czeslaw Milosz, Nadine Gordimer, Orhan Pamuk ஆற்றிய உரைகள் சிறப்பானவை. இதில் சில தனிநூலாகவும் வெளியாகியுள்ளன.
குறிப்பாக ஜோர்ஜ் லூயி போர்ஹெஸ் கவிதை குறித்து ஆறு உரைகள் நிகழ்த்தியிருக்கிறார். இதன் எழுத்துவடிவம் This Craft of Verse என்ற நூலாக வந்துள்ளது. இளம்கவிஞர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம். கவிதையை ஆழ்ந்து புரிந்து கொள்வதற்கும், அதன் சிறப்பியல்புகளை அறிந்து கொள்வதற்கும் இதனை இலக்கிய வாசகர்களும் வாசிக்க வேண்டும்.
இந்த உரையின் ஆடியோ தொகுப்பு இணையத்தில் கிடைக்கிறது. அதைக் கேட்கும் போது போர்ஹெஸின் வகுப்பறையில் நாமே அமர்ந்திருப்பதைப் போல உணரலாம்.

1985ம் ஆண்டு NORTON LECTURES வரிசையில் ஆறு உரைகளை நிகழ்த்துவதற்காக இதாலோ கால்வினோ அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் உரையாற்றும் முன்பாக அவர் காலமாகிவிட்டதால் உரைக்குறிப்புகள் Six Memos for the Next Millennium என்ற நூலாக வெளியாகியுள்ளது.
நாவலின் எதிர்காலம் என்ற பொதுதலைப்பில் இந்த உரைகளைத் தயாரித்திருக்கிறார். ஆறாவது உரை தயாரிக்கப்படவில்லை. ஆனால் எதைப்பற்றிப் பேச விரும்பினார் என்பதை நூலின் முன்னுரையில் காண முடிகிறது
புதிய நூற்றாண்டில் நாவல்கள் எப்படியிருக்க வேண்டும் என்பதைப் பற்றிய அவரது எண்ணங்களே இந்த உரைகளின் அடித்தளம். உண்மையில் நவீனத்துவத்திலிருந்து பின்நவீனத்துவத்தை நோக்கிய நகர்வையும். அதன் தேவையினையும் கால்வினோ உணர்ந்திருக்கிறார்.
கால்வினோ தனது உரைக்கான தயாரிப்பில் பெரும்பாலும் செவ்வியல் படைப்புகள் மற்றும் ஐரோப்பிய இலக்கியங்களை உதாரணமாகக் காட்டுகிறார். ஆனால் அவர் கவனப்படுத்தும் எழுத்தின் நுட்பங்கள் முக்கியமானவை.
LIGHTNESS (லேசான தன்மை), Quickness (விரைவுத்தன்மை), Exactitude (துல்லியம்) visibility (தெரிவு நிலை) Multiplicity (பன்முகத்தன்மை) consistency (நிலைத்தன்மை) என ஆறு கருப்பொருட்களைத் தேர்வு செய்திருக்கிறார். இவை ஒரு படைப்பாளிக்கு ஏன் தேவை என்பதை விரிவாக விளக்குகிறார்.
கால்வினோவின் ஆழ்ந்துபரந்த வாசிப்பு மற்றும் இலக்கிய வடிவங்கள் குறித்த புரிதல் வியப்பளிக்கிறது.
லேசான தன்மை என்பதை மேலோட்டமாக என்று புரிந்து கொண்டுவிடக்கூடாது, இது உணர்வின், புரிதலின், வெளிப்பாட்டின் இலகுத்தன்மை பற்றியது. பெரியதோ, சிறியதோ எல்லா நிகழ்வுகளும் உணர்வுகளும் அதற்கான எடையைக் கொண்டிருக்கின்றன. நினைவின் வழியே அவை பகிரப்படும் போது சில வேளை எடையற்றும் பல வேளை கூடுதல் எடையோடும் வெளிப்படுகின்றன. ஒரு வகையில் லேசானதன்மை என்பதை வாழ்க்கை குறித்த அறிவியலின் பார்வை என்று சொல்லலாம்.
துல்லியமே படைப்பிற்கான நம்பகத்தன்மையை உருவாக்குகிறது. செய்திகள் தரும் துல்லியம் வேறு. படைப்பில் வெளிப்படும் துல்லியம் வேறு. படைப்பில் துல்லியம் என்பது உணர்வாலும், உண்மையாலும், நிகழ்வு வெளிப்படும்முறையாலும் சாத்தியமாகிறது. பலநேரம் இவை யாவும் ஒன்றிணைந்தும் வெளிப்படுகின்றன. வாசகன் இந்தத் துல்லியத்தைக் கண்டு வியப்படைகிறான். நெருக்கம் கொள்கிறான்.
வேகம், அல்லது விரைவுத்தன்மை படைப்பில் எவ்வாறு வெளிப்படுகிறது என்பது முக்கியமானது. செயற்கையாக ஒரு விரைவுதன்மையைப் பொழுதுபோக்குப் படைப்புகள் உருவாக்குகின்றன. இலக்கியத்தில் விரைவுதன்மை என்பது காலம் மற்றும் வெளியை கையாளும் முறையில் உருவாகிறது.
இந்த நூலில் கால்வினோ இத்தாலிய நாட்டுபுறக்கதைகளிலிருந்து தான் கற்றுக் கொண்ட நுட்பங்களைப் பற்றியும் கூறுகிறார். அவரே இத்தாலிய நாட்டுப்புறக்கதைகளைத் தொகுத்திருக்கிறார். கதை சொல்லப்படும் முறையே அவரைக் கவருகின்றது. நாட்டுப்புறக்கதைகளில் மாயமும் யதார்த்தமும் இணைந்தே வெளிப்படுகின்றன.
கால்வினோ தனது உரையொன்றின் முடிவில் ஒரு சீனக்கதையினைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார். அது தத்துவவாதியும் ஓவியருமான சுவாங் சூவைப் பற்றியது.
சீன அரசன் ஒரு நாள் சுவாங் சூவிடம் நண்டு ஒன்றை வரையச் சொன்னான். அதற்கு அவர் தனக்கு ஐந்து ஆண்டுகள், ஒரு வீடு மற்றும் பன்னிரண்டு வேலைக்காரர்கள் தேவை என்று பதிலளித்தார்.
மன்னரும் அவர் கேட்டவற்றைக் கொடுத்துவிட்டுக் காத்திருந்தார். ஐந்து வருடங்கள் கடந்தும் சுவாங் சூ நண்டை வரையவில்லை.
இது பற்றிக் கேட்டதற்கு “எனக்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் தேவை,” என்று பதிலளித்தார். அதையும் மன்னர் ஏற்றுக் கொண்டார்.
பத்து வருடங்களின் முடிவில், சுவாங் சூ தனது தூரிகையை எடுத்து, ஒரு நொடியில், ஒரே வீச்சில், இதுவரை எவரும் கண்டிராத படி நண்டு ஒன்றை ஒவியமாக வரைந்து முடித்தார்.
இக்கதை வெளிப்பாட்டின் வேகம், மற்றும் படைப்பின் உச்சநிலையை வெளிப்படுத்துகிறது. சீனாவில் தேர்ந்த மாட்டுத்தரகர்கள் சந்தையில் மாடு விற்கப் போகும் போது மாட்டின் எடையைக் கண்ணால் பார்த்தே சொல்லிவிடுவார்களாம். அதுவும் துல்லியமாக. அது போன்ற வெளிப்பாட்டினையே எழுத்தும் வேண்டுகிறது.
கால்வினோவின் புலப்படாத நகரங்களை வாசிக்கும் போது அவர் முன்வைக்கும் எழுத்தின் நுட்பங்கள் எப்படி அவரது எழுத்தில் வெளிப்படுகின்றன என்பதை அறிய முடிகிறது.
இலக்கியத்தின் எல்லையற்ற ஆற்றல்களையும், அதன் எதிர்காலத்தையும் பற்றிய கனவுகளுடன் இந்த உரையை நிகழ்த்த கால்வினோ விரும்பியிருக்கிறார். ஆனால் காலம் அதை அனுமதிக்கவில்லை. எழுத்தின் நுட்பங்களில் ஒன்றாக இல்லாமல் விதியாக அமைவது, காலம் நம்மை எழுத அனுமதிக்க வேண்டும் என்பதே.
April 1, 2024
கதாவிலாசம் / விமர்சனம்
எனது கதாவிலாசம் கட்டுரைத் தொகுப்பின் ஆங்கில மொழியாக்கத்தை உலகின் மிகப்பெரிய பதிப்பாளர்களில் ஒருவரான டெய்லர் & பிரான்சிஸ் (Routledge )பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இந்தியப் பதிப்பு. அயல்நாட்டு பதிப்பு என இருவிதமாக இந்நூல் வெளியாகியுள்ளது.

அதற்கான விமர்சனம் இம்மாத thebookreviewindia இதழில் வெளியாகியுள்ளது.

முரளிதரன் கண்ட கனவு
P. பொன்மாரியப்பன்
தங்களது இணையதளத்தில் முப்பது வயதுச் சிறுவன் சிறுகதை வெளியாகியுள்ளதைக் கண்டு உடனடியாகக் கம்ப்யூட்டர் சென்டருக்குப் போய் கதையைப் பிரிண்ட் அவுட் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்.

எனக்கு 44 வயதாகிறது. எனக்குள் இருக்கும் முப்பது வயது சிறுவன் தான் இந்தச் சிறுகதையை வாசிக்கத் தூண்டினான் என்பேன்
கதையை வாசித்து முடித்தபோது என் கனவில் சேதுராமனின் அப்பா வந்தது போலவே இருந்தது. அவரை நேரில் பார்த்தது போல உணர்ந்தேன்.
ஆரம்பப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் நட்பு ஐந்தாம் வகுப்பு மேல் தொடர்வதில்லை. காலம் கடந்தும் பள்ளிக்கூட நட்பின் ஆழத்தை உணர்த்துவதற்காகத் தான் கனவுகள் வருகிறது என்பதைக் கதையில் வாசித்த போது நிஜம் என்று பட்டது.
முரளிதரன் கனவில் ஏன் சேதுராமனின் அப்பா தோன்ற வேண்டும்? சேதுராமனின் அப்பா நாம் தொலைத்துவிட்ட அப்பாவித்தனத்தைக் கொண்டிருக்கிறார். அதை நினைவூட்டவே கனவில் வருகிறார்.
அமெரிக்காவில் முரளிதரன் வாழ்க்கையில் வெற்றிபெற்ற மனிதராக இருக்கிறார். ஆனால் மகிழ்ச்சியாக இல்லை. அது தான் சேதுராமனின் அப்பாவைக் கனவில் வரவைக்கிறது.
எனது அம்மாவின் ஊர் உடையாம் புளி, சிறிய கிராமம். அந்தக் கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு வரை படித்த நண்பர்கள் நட்பும், கிராம மக்களின் அன்பும் இந்தச் சிறுகதை வாசிக்கும் போது எனக்குள் நினைவாக வந்தது.
எனது சிறுவயதில் இடது கண்ணில் பூ விழுந்த ஒளிமுத்து என்பவரைப் பார்த்திருக்கிறேன். அவரைச் சிறுவர்கள் கேலி செய்வார்கள். அவரும் கோபப்பட்டுக் கல் எரிந்து விடுவார். அந்த ஒளிமுத்துவை சேதுராமனின் அப்பா செல்வம் கதாபாத்திரம் நினைவூட்டியது.
பள்ளிக்கூடம் உருவாக்கிய பயம் வாழ்நாளில் போகாது. அந்தப் பயம் தான் சேதுராமனின் அப்பாவைப் பித்தனாக மாற்றியது என்பதைப் புரிந்து கொண்டேன்.
முரளிதரன் கண்ட கனவில் செல்வம் ராட்டினத்தில் உயரப் பறக்கிறார். மகிழ்ச்சி ஆரவாரத்தில் கையை வீசுகிறார். அவரது மகிழ்ச்சி தான் தங்கக் காசுகளாக மாறுகிறது. மிகவும் நல்ல சிறுகதை.
March 30, 2024
காலத்தின் மணல்
மணற்கடிகாரம் ஒன்றின் மீது முகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் அமர்ந்திருக்கும் ஓவியம் ஒன்றைக் கண்டேன். 1625ல் வரையப்பட்டது. புகழ்பெற்ற மொகலாய ஓவியர் பிசித்ர்(Bichitr) வரைந்தது. அவர் ஜஹாங்கீரின் அரசசபைக் கலைஞர்களில் ஒருவரான ஓவியர் அபுல் ஹசனின் சீடர்.

இந்த ஓவியத்தில் மன்னருடன் நான்கு பேரின் உருவம் காணப்படுகிறது. அதில் சூஃபி ஷேக் ஹுசைனுக்குப் புத்தகம் ஒன்றைப் பரிசளிக்கிறார் ஜஹாங்கீர்.
ஓவியத்தில் பேரரசர் ஜஹாங்கீரும். ஞானியும் இணையாக வரையப்பட்டிருக்கிறார்கள். மன்னரின் மெல்லிய உடை. அவர் அணிந்துள்ள முத்துமாலைகள், காதணி. கையிலுள்ள மோதிரங்கள், கைவிரல்கள் மிகவும் துல்லியமாக வரையப்பட்டிருக்கின்றன.

ஷேக் ஹுசைன் மன்னரிடமிருந்து புத்தகத்தைத் தனது கைகளில் பெறவில்லை. அதனைத் தனது மேலாடையில் ஏந்துகிறார். இச்செயல் புத்தகம் மதிப்புமிக்கக் காணிக்கையாக வழங்கப்படுவதைக் காட்டுகிறது.
மன்னரின் மரியாதையை ஏற்றுக் கொண்ட மகிழ்ச்சியை ஞானியின் முகம் வெளிப்படுத்துகிறது. அதே நேரம் அவரது கண்கள் வியப்படையவில்லை. அது ஏறிட்டே பார்க்கின்றன.
நோயுற்ற நிலையிலிருந்து ஜஹாங்கீர் மீண்டு வந்திருக்கிறார் என்பதன் அடையாளமாகவே அவரது முகத்தில் முழுமையான மகிழ்ச்சியில்லை. குறிப்பாக அவரது தாடை மற்றும் கண்கள் தளர்ந்திருக்கின்றன. மன்னரின் உடையைக் கவனிக்கும் போது இந்தச் சந்திப்புத் தனிப்பட்ட அவரது அறையில் நடக்கிறது என்பதை அறிய முடிகிறது.

நீண்டகாலமாகக் குழந்தை இல்லாத அக்பர் சிக்ரியில் வசித்த சூஃபி ஞானி சலீம் சிஷ்டியை வணங்கி, அரியணைக்கு ஆண் வாரிசு வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். சிஷ்டியும் அக்பரை ஆசீர்வதித்தார். அப்படிப் பிறந்தவர் தான் சலீம்.
நூர்-உத்-தின் முஹம்மது சலீம் எனும் ஜஹாங்கீர் தந்தையைப் போலவே சூஃபி ஞானிகளை வணங்கி மரியாதை செய்து வந்தார். அதன் வெளிப்பாடாகவே இந்த ஓவியம் வரையப்பட்டிருக்கிறது
துருக்கி சுல்தான் இந்த அருட்கொடையை வியந்து போற்றுவது போல வரையப்பட்டிருக்கிறார். அவருக்குக் கீழே இங்கிலாந்தின் மன்னர் ஜேம்ஸ்-I ன் உருவம் வரையப்பட்டிருப்பது வியப்பளிக்கிறது. அவர் எதற்காக இந்த நிகழ்வின் சாட்சியமாக இடம்பெற்றிருக்கிறார். ஜேம்ஸ்-I ன் கை வாளின் மீது இடம்பெறவில்லை என்பது முக்கியமானது.
1585 ஆம் ஆண்டில், எலிசபெத் I அக்பருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார். இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக உறவுகளை உருவாக்கும் முயற்சியில் எழுதப்பட்ட கடிதமது. அதில் இந்தியாவில் வணிகம் செய்வதற்குத் தேவையான உதவிகளைக் கேட்டிருந்தார்.

ஆங்கிலத் தூதரான சர் தாமஸ் ரோ அக்பரைச் சந்தித்துப் பரிசுகள் வழங்கியிருக்கிறார். அவரே இந்தியாவிற்கு வந்த முதல் ஆங்கிலேய வர்த்தகர் என்கிறார்கள்.
இங்கிலாந்தின் மன்னர் ஜேம்ஸ் உருவம் ஓவியர் ஜான் டி கிரிடிஸ் என்பவரால் வரையப்பட்டது. அதனை முகலாய அரசருக்குப் பரிசாக வழங்கியிருக்கிறார்கள். அதிலிருந்த ஜேம்ஸின் உருவத்தையே பிசித்ர் வரைந்திருக்கிறார்.

ஜஹாங்கீர் ஓவியத்தில் இரண்டு குதிரைகள் மற்றும் ஒரு யானையைக் காட்டும் ஒரு சிற்றோவியத்தை அவர் கையில் ஏந்தி பணிவுடன் காட்சி தருகிறார்.
இந்த ஓவியத்தில் என்னைப் பெரிதும் கவர்ந்தது அந்த மணற்கடிகாரமே. இந்தியாவில் நீர்கடிகை, சந்திரகடிகை, என்று பல்வேறு காலக்கருவிகள் இருந்தன. நீர்க் கடிகாரத்தின் மூலம் காதிஸ் எனப்படும் அலகுகளில் நேரம் அளவிடப்பட்டது. முகமது பின் துக்ளக் இந்த நீர் கடிகாரத்தையும் நேர அலகுகளையும் ஏற்றுக்கொண்டார், பாபர் முதல் பிற முகலாய ஆட்சியாளர்களும் இதனையே ஏற்றுக்கொண்டார்கள்.
இந்த நிலையில் மணற்கடிகாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தபட்ட போது அதை எப்படி ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்று புரியவில்லை.
காலத்தின் அதிபதியாக மன்னரைக் கொண்டாடுவது அன்றைய மரபே. ஆனால் அதற்கு இப்படி ஒரு மணற்கடிகாரத்தைத் தேர்வு செய்தது பிசித்ரின் தனித்துவமே

பொதுவாகக் காலத்தை அடையாளப்படுத்த இயற்கைக் காட்சிகளையோ, தெய்வீகச் சின்னங்களையோ தான் வரைவார்கள். நித்யத்துவத்தின் அடையாளமாக ரோஜாவை மொகலாய ஓவியங்கள் வரைவது வழக்கம். ஆனால் இங்கே நாம் காணுவது ஐரோப்பிய மணற்கடிகாரம். அதை மரபான இந்திய காலக் கடிகைகளுக்குப் பதிலாகத் தேர்வு செய்திருப்பது ஆச்சரியமளிக்கிறது.

14ம் நூற்றாண்டில் கடலோடிகளால் மணற்கடிகாரம் பயன்படுத்தபட்டதாகக் குறிப்புகள் உள்ளன, மெக்கல்லன் பயணப் பட்டியலில் மணற்கடிகாரம் இருக்கிறது. இந்தியாவிற்கு எப்போது அறிமுகமானது என்று தெரியவில்லை. முதன்முதலாக மணற்கடிகாரத்தை உருவாக்கியது யார் என்பதும் தெரியவில்லை. அக்பர் காலத்தில் மணற்கடிகாரம் இந்தியாவில் அறிமுகமாகியிருக்கக் கூடும் என்கிறார்கள்.
இந்த ஓவியத்தில் மணற்கடிகாரம் ஜஹாங்கீர் வாழ்க்கையின் குறியீடாகவும், காலத்தின் அதிபதியாக ஜஹாங்கீரைக் குறிப்பதாகவும் வரையப்பட்டிருக்கிறது.
வழக்கமான மொகலாய ஓவியங்களிலிருந்து பெரிதும் மாறுபட்டு ஐரோப்பிய மற்றும் இஸ்லாமிய கலை பாணிகளை இணைத்து வரையப்பட்டிருக்கிறது
தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை ஜஹாங்கீர் செலவழித்து விட்டிருக்கிறார். என்பதன் அடையாளமாக மணற்கடிகையின் கீழ்பகுதியில் மணல் சேர்ந்திருக்கிறது
மணல் கடிகாரத்தில் பாரசீக மொழியில் பேரரசர் ஆயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய பாணியில் வரையப்பட்ட மன்மத உருவங்களும் அழகான பூ வேலைப்பாடுகளும் தனித்த அழகைத் தருகின்றன. கடவுளுக்கு நிகரானவர் என்பதன் அடையாளமாக ஜஹாங்கீரின் தலையைச் சுற்றி ஒளிவட்டம் வரையப்பட்டிருக்கிறது.
ஜஹாங்கீர் என்ன புத்தகத்தைப் பரிசாகத் தருகிறார் என்று தெரியவில்லை. அச்சு இயந்திரங்கள் வராத காலத்தில் புத்தகங்களும் கலைப்பொருளாகவே கருதப்பட்டன. இதில் அவர் தருவதும் ஒரு கலைப்பொருளே.
இந்த ஓவியத்தைக் காணும் போது ஒரு பேரரசர், ஞானிக்கு அளிப்பதற்குப் புத்தகத்தைத் தவிர வேறு என்ன பெரிய பரிசு இருந்துவிட முடியும் என்றே தோன்றுகிறது.
March 29, 2024
ஆகஸ்ட் மாதக் காதல்
கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் புதிய நாவல் Until August யை வாசித்தேன், அவர் மறைந்து பத்து ஆண்டுகளுக்குப் பின்பு வெளியாகியுள்ளது.

2002ல், மார்க்வெஸிற்கு டிமென்ஷியா இருப்பது கண்டறியப்பட்டது. நினைவு மறத்தலுக்கு ஆளான மார்க்வெஸால் அதன்பிறகு எதையும் எழுத இயலவில்லை. அவரது கடைசி நாட்களில் குடும்ப உறுப்பினர்களையே அடையாளம் கண்டு கொள்ள முடியாதவராக இருந்தார் என்கிறார்கள்.
எழுத்தாளனின் ஒரே சொத்து நினைவுகள் தான். அது மறையத்துவங்கும் போது அவன் இறக்கத் துவங்குகிறான். மறதியோடு நடக்கும் போராட்டம் தான் எழுத்து.
மார்க்வெஸ் 1999 ஆம் ஆண்டு இந்த நாவலை எழுத துவங்கினார். 2003ல் இந்த நாவலின் முதல் அத்தியாயம் பத்திரிக்கையில் வெளியானது. பின்பு நாவல் சரியாக வரவில்லை என்று அவரே வெளியிட மறுத்துவிட்டார்.
2012ல் உடல் நலிவுற்று மரணப்படுக்கையில் இருந்த போது நாவலை ஒரு போதும் வெளியிடக்கூடாது என்றே குடும்பத்தினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் இன்று அவரது இரண்டு மகன்களும் நாவலை வெளியிட்டுள்ளார்கள். நாவலை வெளியிட வேண்டாம் என்று மார்க்வெஸ் எடுத்த முடிவு சரியே. அவரது மகன்கள் துரோகம் செய்துவிட்டார்கள் என்று மார்க்வெஸின் தீவிர வாசகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்
இது குறித்து நாவலின் முன்னுரையில் அவரது இரண்டு மகன்களும் விளக்கம் அளித்திருக்கிறார்கள். அத்தோடு தந்தையிடம் நாவலை வெளியிட்டதற்காக மன்னிப்பும் கேட்டிருக்கிறார்கள்.
பாவம் மார்க்வெஸ். இறந்தவரால் என்ன செய்துவிட முடியும். ஒருவேளை அவரது மனைவி உயிரோடு இருந்திருந்தால் இதனை அனுமதித்திருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது
அவரது தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலைத் திரைப்படமாக்க அமெரிக்க தயாரிப்பாளர்கள் முன்வந்த போது பெரும்பணம் கிடைக்கும் என்றாலும் வாசகர் மனதில் நாவல் ஏற்படுத்திய சித்திரத்தை மாற்ற விரும்பவில்லை என்று மார்க்வெஸ் மறுத்துவிட்டார். அது போன்றதே இந்த நாவல் வெளியாக வேண்டாம் என்பதற்கான காரணமும்.

ஒரு எழுத்தாளன் வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்தவற்றை அவன் மறைவிற்குப் பின்பு வெளியிடலாமா என்பது குறித்து வாதப்பிரதிவாதங்கள் நடந்து வருகின்றன. இரண்டு பக்கமும் நிறைய உதாரணங்களைக் காட்டுகிறார்கள்.
பதிப்பாளர்கள் தங்களுக்குச் சாதகமாகக் காஃப்காவை சொல்கிறார்கள். அவர் தனது மறைவிற்குப் பின்பு தனது கையெழுத்துபிரதிகள் யாவற்றையும் எரித்துவிடும்படி நண்பர் மாக்ஸ் பிராடிடம் சொல்லியிருந்தார். ஆனால் அதை மாக்ஸ் பிராட் காப்பாற்றவில்லை. அவரது படைப்புகள் அச்சாக்கபட்டு உலகின் கவனத்தைப் பெற்றதோடு காஃப்காவிற்கு அழியாப் புகழைத் தேடிக் கொடுத்தன. இது போல நபகோவ். டிக்கன்ஸ் எனப் பலரது படைப்புகள் அவரது மறைவிற்குப் பின்பும் வெளியாகியுள்ளன. படைப்பை வாசகர்கள் முடிவு செய்யட்டும். நாம் தடுக்க வேண்டாம் என்கிறார்கள் பதிப்பு துறையினர்..
காஃப்கா வெளியிட வேண்டாம் என்ற காரணமும் மார்க்வெஸ் வேண்டாம் என்று சொன்ன காரணமும் ஒன்றில்லை.
பொதுவாக நாவலாசிரியர்கள் எல்லோரிடமும் ஒன்றிரண்டு முடிக்கபடாத நாவல்கள் கைவசமிருக்கும். தான் விரும்பி எழுதிய படைப்பு என்ற போதும் ஒரு கட்டத்தில் பிடிக்காமல் போய்விடும் அல்லது முடித்தபிறகு திருப்தியின்மை ஏற்படும். அது போன்ற தருணங்களில் அவற்றை வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்துவிடுவார்கள். கடைசிவரை அதனை வெளியிடக் கூடாது என்பதிலும் கறாராக இருப்பார்கள்.
மார்க்வெஸ் உயிரோடு இருந்த வரை இந்த நாவலும் அப்படி உலகம் அறியாமல் தானிருந்தது. அவர் 2012ல் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த நாட்களில் ஸ்பானிய பத்திரிக்கைகள் புதிய நாவல் வெளியாகப் போவதாகச் செய்தி வெளியிட்டுப் பரபரப்பு ஏற்படுத்தின. ஆனால் மார்க்வெஸ் நலமடைந்து வீடு திரும்பியதும் அதை மறுத்துவிட்டார்.
மார்க்வெஸின் மறைவிற்குப் பிறகு அவரது கடிதங்கள், நாட்குறிப்புகள். புகைப்படங்கள், கையெழுத்துப்பிரதிகள் யாவும் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தால் கையகப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மார்க்வெஸ் வெளியிட வேண்டாம் என்று சொன்ன நாவலை ஏன் இப்போது வெளியிட்டிருக்கிறாகள்.
உலகெங்கும் உள்ள மார்க்வெஸின் தீவிர வாசகர்களின் விருப்பத்திற்காக என்று பதிப்பகம் சொல்கிறது அது உண்மையில்லை. புத்தகச் சந்தையில் இன்றும் மார்க்வெஸ் நட்சத்திர எழுத்தாளர். அவரது மறைவிற்குப் பிறகு இப்படி ஒரு நாவலை வெளியிடுவதன் மூலம் பெரும்பணம் சம்பாதித்துவிட முடியும். அதையே அவரது இரண்டு மகன்களும் செய்திருக்கிறார்கள்.
முழுமை அடையாத நாவல் என்பதைப் படித்தவுடன் உணர்ந்துவிடுகிறோம். பொதுவாகத் தனது நாவல்களை மார்க்வெஸ் நாலைந்து முறை திருத்தம் செய்வது வழக்கம். அது போலவே ஒரு நாவலை எழுதி முடிக்கப் பல ஆண்டுகளும் எடுத்துக் கொள்வார். இந்த நாவலில் அப்படியான திருத்தங்கள் நடக்கவில்லை.
மார்க்வெஸின் மொழி நடை மாறியுள்ளது. அவருக்கே உரித்தான சில கவித்துவ வாக்கியங்களும், தனித்துவமான நிகழ்வுகளையும் தவிர்த்தால் இந்த நாவல் ஒரு சராசரியான படைப்பே.
இதனைக் குறுநாவல் என்றே சொல்ல வேண்டும். ஆறே அத்தியாயங்கள். 46 வயதுள்ள அனா மக்தலேனா பாக் என்ற பெண்ணை மையமாகக் கொண்டே நாவல் எழுதப்பட்டிருக்கிறது. நாவலில் அவளது குடும்பமே இசையில் ஆர்வம் கொண்டது. இசைக்கலைஞர்களைக் கொண்டது- ஆகவே மார்க்வெஸ் இசைமேதை செபாஸ்டியன் பாக்கின் மனைவி பெயரை அவளுக்கு வைத்திருக்கிறார். பாடகி அனா மக்தலேனா பாக் தான் உண்மையில் பாக்கின் இசைக்கோர்வைகளை உருவாக்கினாள் என்றொரு சர்ச்சையும் நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஆகவே அந்தப் பெயர் புனைவின் சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது.

ஒரு பெண் கதாபாத்திரத்தை முதன்மைப்படுத்தி மார்க்வெஸ் நாவல் எதையும் எழுதியதில்லை. மார்க்வெஸ் சிறுகதைகளில் ஒன்றாகவே இதனை வகைப்படுத்த முடியும். அதிலும் ஒரு சிக்கல். இதே போன்று கல்லறைத் தோட்டத்திற்கு அஞ்சலி செலுத்த வரும் பெண்ணைப் பற்றி முன்பே எழுதியிருக்கிறார். வெளிப்படையான பாலுறவு நிகழ்வுகள் இதுவரை அவர் எழுதாதது.
கி.ராஜநாராயணன் தனது 98 வயதில் எழுதிய அண்டரெண்டப் பட்சி நாவலும் போன்று காமவேட்கையைத் தான் பேசுகிறது. உயிரினங்களின் காம வேட்கை எப்படி உருவானது என்பதையே கிரா விவரிக்கிறார்.
மார்க்வெஸின் முந்தைய நாவல்களில் இல்லாத சிறப்பு அம்சமாக இதில் நான் காணுவது அனா மக்தலேனா பாக் படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்கள். அவள் ஒரு இடத்தில் டிராகுலா நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறாள். இன்னொரு அத்தியாயத்தில் ஹெமிங்வே படிக்கிறாள். வேறு ஒரு இடத்தில் டேனியல் டீபோ படிக்கிறாள். மீமாயப்புனைவுகளை வாசிப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறாள். யதார்த்த வாழ்க்கை அவளுக்குப் போதவில்லை. அதிலிருந்து விடுபட விரும்புகிறாள். நாவலும் அதையே பேசுகிறது
நாவலை வாசித்தவுடன் மூன்று படைப்புகள் என் நினைவில் வந்து போயின. ஒன்று லூயி புனுவலின் Belle de Jour திரைப்படம். அதில் வரும் கதாநாயகி செவரினைப் போலவே அனா மக்தலேனா இருக்கிறாள். நடந்து கொள்கிறாள். இரண்டவாது ஆன்டன் செகாவின் (The Lady with the Dog )நாய்காரச் சீமாட்டி கதை. அதில் திருமண வாழ்வில் மகிழ்ச்சியற்ற அன்னா செர்ஜியேவ்னா யால்டாவிற்கு வருகிறாள். அங்கே டிமிட்டி குரோவ் என்ற முன்பின் அறியாத ஆணுடன் பழகுகிறாள். அவளது மனநிலையின் வெளிப்பாட்டினையும் அனா மக்தலேனாவிடம் காண முடிகிறது. மூன்றாவது யாசுனாரி கவபத்தாவின் Snow Country, இதில் வரும் சுகப்பெண்களைப் போலவே அனா உறவு கொள்ளும் ஆண்களுக்குப் பெயர் கிடையாது. இந்த மூன்றும் மார்க்வெஸிற்கு நெருக்கமான படைப்புகள். அவற்றின் மறைமுகப் பாதிப்பை நாவலில் உணர முடிகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி அனா மக்தலேனா தனது அன்னையின் கல்லறையில் மலர்கள் வைப்பதற்காகக் கரீபியத் தீவிற்கு ஒரு பயணத்தை மேற்கொள்கிறாள். அதில் தான் நாவல் துவங்குகிறது. அதே நாள் அதே படகு. அதே பூக்கடை அதே சூரியன் என எதுவும் மாறாது. தீவில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது அன்னையின் கடைசி ஆசை.
அப்படி ஒரு பயணத்தில் எதிர்பாராத விதமாக ஒரு ஆணைச் சந்திக்கிறாள். உரையாடுகிறாள். முடிவில் அவனுடன் உடலுறவு கொள்கிறாள். அந்த அனுபவம் அவளது உடலை விழித்துக் கொள்ள வைக்கிறது. ஊர் திரும்பிய பின்பும் அந்த நினைவுகளை மறக்க முடியவில்லை. இதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் புதிதாக ஒரு ஆணைத் தேடி உறவு கொள்ளத் துவங்குகிறாள். இந்த வேட்கையின் பயணத்தையே சிறுநாவலாக மார்க்வெஸ் எழுதியிருக்கிறார்.
நாவலில் வரும் அனாவின் கணவன். மகள் இருவரும் முழுமை பெறவில்லை. அன்னைக்கு செய்யப்படும் நினைவஞ்சலி என்பது இறந்தவருடன் நடக்கும் உரையாடல் என்றே மார்க்வெஸ் குறிப்பிடுகிறார். மரணத்தின் முன்னால் சொல்லப்பட்ட காதல்கதை என்றே இதனையும் சொல்வேன். ஆகஸ்ட் மாதம் என்பது இருவேறு பருவநிலைகள் ஒன்று கலந்த காலம். அதன் குறீயீடு போலவே அனா இருக்கிறாள்.
அவரது மாய யதார்த்தக் கூறுகள் எதுவும் நாவலில் கிடையாது. கவபத்தாவின் நாவலை நினைவுபடுத்தும் மொழிநடை. மார்க்வெஸின் முந்தைய நாவலான Memories of My Melancholy Whores வரும் முதியவரின் மறுஉருவாக்கம் போலவே அனா மக்தலேனா உருவாக்கபட்டிருக்கிறாள். மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வின் சலிப்பு ஆண் பெண்ணை என்ன செய்கிறது என்பதைப் பற்றி ஆன்டன் செகாவ் நிறையச் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அது போன்ற ஒரு முயற்சியாகவே இந்த நாவலைச் சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 16 அன்று புதிய ஆண் ஒருவனைத் தேடிக் கண்டுபிடித்து அவனுடன் உறங்கும் அனாவின் பயணம் ஒருவகையில் டிராகுலாவின் தேடலே. டிராகுலா தீண்டும் பெண்கள் நித்யமாகிவிடுகிறார்கள், டிராகுலாவின் காதல் பொய்யானதில்லை.
நாவலை வாசித்து முடிக்கும் போது கவபத்தாவின் உறங்கும் அழகிகள் இல்லம் நாவலில் வரும் ஒரு பெண்ணின் கதையை தான் மார்க்வெஸ் வேறுவகையில் எழுதியிருப்பதாகவே உணர்ந்தேன்.
மார்க்வெஸ் இந்த நாவலில் வேறு என்ன எழுத விரும்பினார் என்று தெரியவில்லை. வழக்கமாக அவரது நாவல்களில் காணப்படும் விநோத நிகழ்வுகள், அபூர்வமான கதாபாத்திரங்கள், கவித்துவ தருணங்கள் எதுவும் இதில் கிடையாது. ஒருவேளை அவற்றை எழுத முடியாமல் மறதி அவரை வென்றுவிட்டதோ என்னவோ.
.
March 28, 2024
முப்பது வயதுச் சிறுவன்
புதிய சிறுகதை.
சேதுராமனின் அப்பா கனவில் வந்திருந்தார்.
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த மனிதர் இப்போது ஏன் கனவில் தோன்றினார் என்று முரளிதரனுக்கு வியப்பாக இருந்தது.

கண்விழித்த பிறகும் அவரைப் பற்றிய நினைவே மேலோங்கியது. படுக்கை அருகேயிருந்த இரவு விளக்கைப் போட்டார். ஆரஞ்சு வெளிச்சம் பரவியது. சுவரில் இருந்த கடிகாரம் மணி மூன்றரை என்று காட்டியது.
இப்போது இந்தியாவில் பகல்நேரம். டென்வரில் பின்னிரவு. விடிவதற்கு இன்னும் நேரமிருக்கிறது.
முதுமையில் தான் பள்ளி பற்றிய கனவுகள் நிறைய வருகின்றன. அதிலும் பரிட்சை எழுதிக் கொண்டிருக்கும் போது எழுதக் கைவராமல் போவது போன்ற குழப்பமான கனவுகள்.
அந்தக் காலத்தில் இவ்வளவு புகைப்படங்கள் எடுக்கப்படவில்லை. தனது பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கையின் சாட்சியமாக ஐந்தே புகைப்படங்கள் அவரிடமிருந்தன. ஒன்றோ இரண்டோ அதிகம் எடுத்திருக்கக் கூடும். அவை தொலைந்துவிட்டிருந்தன.
எவ்வளவு காலம் மாறினாலும் சிலரது முகம் மறப்பதேயில்லை. அப்படியான ஒருவர் தான் சேதுராமனின் அப்பா. அவரது பெயர் செல்வம்.
மொட்டைநாக்கு என்பதால் அதைச் சொலவம் என்றே எப்போதும் சொல்வார்.
சேதுராமன் அவருடன் ஐந்தாம் வகுப்பில் படித்தான். ஆறாம் வகுப்பிலிருந்து முரளிதரன் ஊர் மாறிவிட்டார்.. ஆகவே சேதுராமனை சந்திக்கவேயில்லை. இப்போது உயிருடன் இருக்கிறானா என்று தெரியவில்லை. தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அவருக்கில்லை. ஆனால் அப்படி அவனது அப்பாவைப் பற்றி நினைக்க முடியவில்லை.
••
முரளிதரன் படித்த பள்ளி மிகவும் பழமையானது. சிவப்பு நிறக் கட்டிடம் கொண்டது. பெரிய வகுப்பறைகள். தரையில் பதிக்கப்பட்ட உறுதியான மரபெஞ்சுகள். பேரின்பதாஸ் அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தார்.
அப்பாவின் இடமாற்றத்தால் அவர்கள் மதுரைக்குப் புதிதாக வந்திருந்தார்கள். ஐந்தாம் வகுப்பில் அவரது பக்கத்துப் பெஞ்சில் சேதுராமன் அமர்ந்திருந்தான்.
ஆசிரியர் கேட்கும் எந்தக் கேள்விக்கும் சரியான பதில் சொல்ல மாட்டான். அப்படிச் சொல்வது கூடத் தவறு. பதிலே சொல்லமாட்டான். தரையை வெறித்துப் பார்த்தபடி நின்றிருப்பான்.
“வாயில என்ன கொழக்கட்டையா வச்சிருக்கே.. தடிமாடு“ என்று ஆசிரியர் திட்டுவார். ஒரே வசையை ஏன் அத்தனை ஆசிரியர்களும் பயன்படுத்துகிறார்கள் என்று புரியாது.
சொக்கலிங்கம் சார் திட்டும் போது வகுப்பில் சிரிப்பொலி எழும். ஆனால் சேதுராமன் தலைகவிழ்ந்தபடியே நின்றிருப்பான்.
ஆசிரியரின் கோபமான பிரம்படிக்குப் பின்னால் தயங்கித் தயங்கி தவறான பதிலைச் சொல்வான். மீண்டும் அடி விழும். அப்படி அடிவாங்கியதற்காகச் சேதுராமன் ஒரு நாளும் அழுததில்லை.
ஆனால் அவனது அப்பாவை யாராவது கேலி செய்தால் உடனே அழுதுவிடுவான். அதுவும் ஏதாவது ஆசிரியர் பிச்சைக்கார பய என்று சொல்லிக்காட்டிவிட்டால் தேம்பித்தேம்பி அழுவான்.
••
சேதுராமனின் அப்பாவிற்கு மனநிலை பேதலித்திருந்தது. அதை அவரது கண்களைப் பார்க்கும் போது மட்டுமே உணர முடியும். முப்பது வயதிருக்கும். ஐந்தடிக்கும் குறைவான உயரம். சிக்குப்பிடித்த தாடி. அழுக்கான வேஷ்டி. கோடு போட்ட சட்டை. அதில் இரண்டு பொத்தான் இருக்காது. ஒரு பொத்தானை மாற்றிப் போட்டிருப்பார். கழுத்தை ஒரு பக்கமாகச் சாய்ந்து கொண்டு நிற்பார்.. சில சமயம் தெருவில் கிடக்கும் மண்ணை அள்ளி தன்னுடைய தலையில் போட்டுக் கொள்வார். கேட்டால் மண்குளியல் என்பார்.
அவர் தினமும் காலை பதினோறு மணிக்கு பள்ளி இடைவேளை விடும் போது இரண்டாவது கேட்டில் வந்து நிற்பார். அந்த இரும்புக் கதவின் இடைவெளி வழியாகப் பாட்டி விற்கும் இலந்தைபழம். நெல்லிக்காய். குச்சிமிட்டாயை மாணவர்கள் முண்டியடித்துக் கெண்டு வாங்குவார்கள். இனிப்பு வடை மற்றும் கார வடை விற்கும் காதர்பாயிடம் வடை வாங்கித் தின்பார்கள்.
சைக்கிளில் ஐஸ் பெட்டியுடன் வந்து நிற்கும் இன்பசேகரிடம் “இன்பாண்ணே, சேமியா ரெண்டு. பால்ஐஸ் ஒண்ணு“ என்று மாறி மாறி கைநீட்டி வாங்குவார்கள்.
சேதுராமனின் அப்பா அதே இடைவெளி வழியாகத் தனது மயிர் அடர்ந்த கையை நீட்டி மாணவர்களிடம் காசு கேட்பார். பையன்கள் காசு தரமாட்டார்கள். காசு… காசு என்று சொல்லியபடியே கையை ஆட்டிக் கொண்டேயிருப்பார்.
அப்படி யாசிக்கும் போது அவரது முகத்தைப் பார்க்க பரிதாபமாக இருக்கும். மாணவர்களில் எவராவது சில்லறைக் காசு கொடுப்பதுண்டு. அதை இன்பசேகரிடம் நீட்டி “எனக்குச் சேமியா குடு“ என்று வாங்கிக் கொள்வார்
வாயில் எச்சில் ஒழுக அவர் ஐஸைச் சப்பிச் சப்பிச் சாப்பிட்டிக் கொண்டிருப்பதை முரளிதரன் கண்டிருக்கிறார்.
தாடையில் வழியும் ஐஸை அப்படியே இடதுகையால் முகத்தில் தடவிவிட்டுக் கொண்டு சில்லுனு இருக்கு என்று சிரிப்பார் சேதுராமனின் அப்பா.
••
ஒரு நாள் கூட இடைவேளையின் போது சேதுராமன் வகுப்பைவிட்டு வெளியே வந்ததில்லை. அவனது அப்பா கைநீட்டிக் காசு கேட்பதை அவன் அறிவான். அதைப்பற்றி மாணவர்கள் கேலி செய்யும் போது கோபம் கொள்வான். சில நேரம் அது மல்லுக்கட்டு சண்டையாகியும் விடும்.
பள்ளிக்குப் புதிதாக வந்து சேர்ந்திருந்த கணித ஆசிரியர் பழனிச்சாமி ஒரு முறை அவனிடம் கேட்டார்
“உங்க அப்பா என்னடா லூசா“
“அதெல்லாமில்லை சார்“
“பிச்சைக்காரன் மாதிரி ஸ்கூல்கேட்டுல கையை நீட்டி காசு கேட்குறார்“
“அது அவரு இஷ்டம். உங்க கிட்ட ஒண்ணும் காசு கேட்கலையே“ என்று கோபமாகச் சொன்னான் சேதுராமன்
“நான் வேற அந்த லூசுக்கு காசு தரணுமா.. நாளைல இருந்து உங்கப்பா ஸ்கூல் கேட்ல வந்து நிக்கக் கூடாது, சுத்த நியூசென்ஸ். “
“நான் சொன்னா அவரு கேட்கமாட்டாரு. “
“அப்போ நானே போலீஸ்ல பிடிச்சி குடுத்துருவேன் பாத்துக்கோ“
“எங்கப்பாவை போலீஸ் பிடிக்காது சார்“ என்று உறுதியாகச் சொன்னான் சேதுராமன்
ஏன் அப்படிச் சொன்னான் என்று புரியவில்லை. ஆனால் சேதுராமனின் அப்பா பள்ளிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை.
சில நேரம் மாணவர்கள் காசு கொடுப்பதற்குப் பதிலாக உடைந்த ஓட்டுத்துண்டினை அவரிடம் கொடுத்து “இதுல ஐஸ் வாங்கிக்கோ“ என்று கேலி செய்வார்கள். அப்போது அவர் கெட்டவார்த்தையால் அவர்களைத் திட்டுவார். கோபத்தில் எச்சில் துப்புவார்.
அதை ஜெயந்தி டீச்சர் பார்த்திருக்கிறாள். அசிங்கமாகப் பேசும் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி தலைமை ஆசிரியரிடம் புகாரும் செய்திருக்கிறாள். ஆனால் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
••

அன்றாடம் காலையில் சேதுராமனைப் பள்ளிக்குக் கொண்டு வந்துவிடுவதும் மாலையில் திரும்ப அழைத்துக் கொண்டு வருவதும் அவரது வேலை.
மாலை நாலரை மணிக்கு பள்ளிவிடும் போது சேதுராமனின் அப்பா மெயின்கேட்டில் வந்து நின்றிருப்பார். அவன் படியிறங்கி வந்தவுடன் அவனது புத்தகப்பையை வாங்கிக் கொள்வார். தனது தோளில் போட்டுக் கொண்டு நடப்பார். இவரும் சந்து சந்தாகச் சுற்றிக் கொண்டு வீட்டிற்குப் போவார்கள். அப்போதெல்லாம் சேதுராமனின் அப்பா பள்ளியில் படிக்கிறவர் போலவே தோன்றுவார்.
இவ்வளவு பொறுப்பாக மகனை பள்ளிவிட்டு அழைத்துக் கொண்டு போகிறவர் எப்படி மனநிலை பேதலித்தவராக இருக்க முடியும்.
சேதுராமனின் வீடு தம்புராயன் தெருவில் இருந்தது. அதே தெருவில் தான் முரளிதரனும் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார். ஒன்றிரண்டு முறை அரைத்த கோதுமை மாவைக் கொடுப்பதற்காக சேதுராமனின் அப்பா அவர்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார்.
காந்தி சிலையை ஒட்டி சேதுராமனின் தாத்தாவிற்குச் சொந்தமான மாவுமில் இருந்தது. சிவப்பு கொல்லத்து ஒடு போட்ட கட்டிடம். முன்னால் ஒற்றை வேப்பமரம். அந்த மில்லை சேதுராமனின் அம்மா சாந்தி நடத்திவந்தாள். அவர்கள் வீடு. மாவுமில் உள்ளிட்ட சொத்து முழுவதும் சேதுராமனின் அப்பாவிற்கு உரியது என்றும் அதைச் சொல்லியே அவனது அம்மாவை திருமணம் செய்து வைத்தார்கள் என்று பேசிக் கொண்டார்கள்.
சேதுராமனின் அம்மா எப்போதும் சோகமான முகத்துடனே இருப்பார். அவளது சேலையில் மாவு படிந்து போயிருக்கும். தலையில் புறங்கையில் கூட மாவு திட்டாகப் படிந்திருக்கும்.
தினமும் காலையில் சேதுராமனை பள்ளியில் விட்டவுடன் அவனது அப்பா மாவுமில்லிற்கு வந்து சுத்தமாகத் தரையைக் கூட்டுவார். பின்பு பிளாஸ்டிக் குடத்தைக் கொண்டு போய் அடிபம்பில் தண்ணீர் அடித்துக் கொண்டு வருவார். சாமி படத்திற்கு மணியடித்துச் சூடம் காட்டுவார். பிறகு சப்தமாக “சாந்தி.. நான் வீட்டுக்கு போகட்டுமா“ என்று கேட்பார்.
“வீட்டுக்கதவை திறந்து போட்டுட்டு ஸ்கூலுக்குப் போயிராதே. உனக்கு ஐஸ் வாங்க காசு வேணும்னா நான் தர்றேன்“ என்று சொல்லுவாள் சாந்தி
“அதெல்லாம் நான் பாத்துகிடுவேன்“ என்று சொல்லுவார். அது நான் பாத்துகிதுவேன் என்பது போலவே கேட்கும்
சில நாட்கள் மாவு மில்லில் இருந்து வீட்டிற்குக் கிளம்பும் அவரது கையில் நாலணாவைக் கொடுத்து “ஐஸ் வாங்க வச்சிக்கோ“ என்பாள் சாந்தி
அந்தக் காசை பெரும்பாலும் வீதியில் வீசி எறிந்துவிடுவார். ஒருமுறை தெருநாயின் முன்பாக நீட்டி வடைவாங்கித் தின்னு என்று சொன்னார். அதற்கும் சாந்தி கோவித்துக் கொண்டாள்.
அன்றாடம் அவர் பள்ளி மாணவர்களிடம் காசு கேட்டு வாங்குவதை யாராலும் தடுக்க முடியவில்லை. இதற்காக அவருக்கு இரண்டு முறை அவரது காலில் சூடு வைத்திருக்கிறாள்
அப்போது வலி தாங்க முடியாமல் புறங்கையால் கண்ணீரை துடைத்தபடி “சாந்தி நீ சரியில்லை“ என்றார். தன்னைக் கோவித்துக் கொள்ளவும் தெரியாத அந்த மனிதனைப் பார்த்து சாந்தி அழுவாள்.
“பாத்தியா நீ அழறே. இதுக்குத் தான் எனக்குச் சூடு போட வேணாம்னு சொன்னேன்“ என்றார் சேதுராமனின் அப்பா.
அவரும் சிறுவயதில் எல்லோரையும் போல தான் இருந்திருக்கிறார். வீட்டிற்கு ஒரே பையன். ஒரு நாள் பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பவில்லை. மகனை காணோம் என்று அவரது அம்மா தேடியிருக்கிறாள். பள்ளியின் கழிப்பறைக்குள் அமர்ந்திருந்த அவரைக் கண்டுபிடித்து வாட்ச்மேன் இரவில் வீட்டு அழைத்துக் கொண்டு வந்தான். மறுநாள் முதல் அவர் இப்படி ஆகிவிட்டார் என்றார்கள்.
பள்ளியில் என்ன நடந்தது என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை. அவரும் எதையும் சொன்னதில்லை. ஏதோ ஒரு அதிர்ச்சி இப்படியாக்கிவிட்டது என்று பேசிக் கொண்டார்கள்.
சில நேரங்களில் ஹபா, ஹபா . ஹபா என ஒரே சொல்லைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டேயிருப்பார். திடீரென ஆடை எதுவும் இல்லாமல் அம்மணமாகப் படுத்துக்கிடப்பார். சில நாட்கள் அகோரப்பசியில் பொங்கி வைத்த மொத்த சோற்றையும் ஒரே ஆளாகச் சாப்பிட்டுவிடுவார்.
யாராவது அவரிடம் சேதுராமனை காட்டி “இது யாரு“ என்று கேட்டால் “எங்க அய்யா“ என்று சொல்லுவார்.
சேதுராமனை எப்போதும் “சேதய்யா“ என்றே அழைப்பார்.
சேதுவிற்குத் தன் அப்பா ஏன் இப்படி இருக்கிறார் என்று வருத்தமாக இருந்தது. அதே நேரம் மற்ற பையன்களின் அப்பா போலத் தன்னிடம் அவர் கோவித்துக் கொள்வதில்லை, கைநீட்டி அடித்ததில்லை. ஆனால் அவர் ஏன் சிறுவனாகவே இருக்கிறார் நடந்து கொள்கிறார்.
தினமும் அப்பாவும் அவனும் ஒன்றாக ஊர் சுற்றுவார்கள். கிட்டி விளையாடுவார்கள். அவனைப் போலவே அப்பாவும் ஒரு பம்பரம் வைத்திருந்தார். அவனோடு ஒன்றாக விளையாடினார். ஆனாலும் சேதுராமன் மற்ற அப்பாக்களைப் போலத் தன்னுடை அப்பா இருக்க வேண்டும் என்றே விரும்பினான்.
ஒருமுறை அப்பாவிடம் கோபமாகச் சொன்னான்
“நீ ஏன் கண்டவன்கிட்டயும் காசு கேட்குறே“
“ஸ்கூல் பசங்க கிட்ட தானே காசு கேட்குறேன்“
“அது தப்புப்பா. உனக்குச் சொன்னா புரிய மாட்டேங்கு“
“உனக்கு தான் புரிய மாட்டேங்கு. நான் ஐஸ் வாங்கத் தானே காசு கேட்குறேன்“
“அதை நான் தர்றேன். நீ யார் கிட்டயும் கேட்கக் கூடாது“
“உன் காசு எனக்கு வேண்டாம். அவங்க காசு தான் வேணும்“
“நீ இப்படிப் பேசுனா. நான் பள்ளிக்கூடத்துக்கே போகமாட்டேன் பாத்துக்கோ“
“நான் ஸ்கூலுக்குப் போவேன். எனக்கு ஐஸ் வாங்கித் திங்கணும்“
“பசங்க எல்லாம் உன்னைப் பிச்சைக்காரன்னு சொல்றாங்க“
“நல்லா சொல்லட்டும் எனக்கென்ன“
“கை நீட்டி காசு வாங்கினா நீ பிச்சைக்காரன் தான்“ என்று கோபமாகச் சொன்னான்
“மில்லுல சாந்தி கூடக் கையை நீட்டி தான் காசு வாங்குறா. அவ பிச்சைக்காரியா“
“அது நம்ம காசுப்பா. “
“இதுவும் நம்ம காசுதான்“
எனச் சிரித்தார். அவருக்கு எப்படிச் சொல்லி புரியவைப்பது என்று தெரியாமல் சேதுராமன் விழித்தான்
••
அவரைக் கட்டுப்படுத்த முடியாமல் ஐஸ்காரனிடம் அவர் கேட்டால் ஐஸ் தர வேண்டாம் என்று சொல்லி வைத்தார்கள். அன்றைக்குக் காசை கையில் நீட்டியபடி அவர் ஐஸ் கேட்டபோது இன்பா தர மறுத்துவிட்டான்.
கையில் காசுடன் அவர் அழுத அழுகையைக் கண்டு இன்பசேகர் கலங்கிப் போய்விட்டான். ஒன்றுக்கு இரண்டாகச் சேமியா ஐஸ் கொடுத்தான். அதன்பிறகு அவர் காசு கொடுக்காமல் கைநீட்டினாலும் ஐஸ் கொடுப்பதை வழக்கமாக்கி கொண்டான்.
ஒருமுறை சேதுராமன் மஞ்சள்காமாலை வந்து மிகவும் அவதிப்பட்டான். பள்ளிக்குப் போகவில்லை. ஆனால் அவனது அப்பா எப்போதும் போல அவனது புத்தகப்பையைத் தனது தோளில் போட்டுக் கொண்டு பள்ளிக்கு சென்றார். அவனது வகுப்பு மாணவர்களிடம் சேதய்யா இடத்துல வச்சிருங்க என்றார். மாலையில் அந்தப் பையை ஒரு மாணவன் எடுத்து வந்து கொடுத்த போது திரும்ப வாங்கிக் கொண்டு போனார்.
இந்தச் செயலுக்குப் பிறகு ஆசிரியர் எவரும் அவரைக் கேலி செய்யவில்லை.
சித்ரா டீச்சர் ஒரு நாள் பள்ளி இடைவேளையின் போது கம்பி வழியாக நீட்டிய அவரது கையில் காசு கொடுத்தாள். அவர் உற்சாகமாக இரண்டு சேமியா ஐஸ் வாங்கிவந்து டீச்சர் உங்க ஐஸ் என்று அதே கேட் வழியாக நீட்டினார்.
“இதுவும் உங்களுக்குத் தான்“
“ரெண்டு ஐஸ் தின்னா பல் விழுந்துரும்“ என்று சொல்லி சிரித்தார் சேதுராமனின் அப்பா. அதை டீச்சர் வகுப்பில் வந்து சொன்ன போது அவளது கண்கள் கலங்கியிருந்தன.
••
முரளிதரன் ஐந்தாம் வகுப்பின் கோடை விடுமுறைக்குப் போத்தனூரில் இருந்த பாட்டி வீட்டிற்குப் போனார். அந்த விடுமுறை முடிவதற்குள்ளே அவரது அப்பாவிற்குக் கோவைக்கு மாறுதல் வந்திருந்தது. அதன் பிறகு சேதுராமனையோ, அவனது அப்பாவையோ பார்க்கவேயில்லை.
கோவை, சென்னை, ஜெர்மன் எனப்படித்து அமெரிக்காவில் வேலை செய்யத் துவங்கி இங்கேயே செட்டில் ஆகிவிட்டார். எப்போதாவது தனது பள்ளி நாட்களை நினைத்துக் கொள்வார். அப்படி கூட அவர் சேதுராமனின் அப்பாவை நினைத்ததேயில்லை.
இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பு இன்றைய கனவில் ஏன் சேதுராமனின் அப்பா தோன்றினார் என்று புரியவேயில்லை.
அந்தக் கனவு விநோதமாக இருந்தது. திருவிழாக் கூட்டம். அங்கே பொருட்காட்சி நடக்கிறது. முரளிதரன் ஜெயிண்ட்வீல் ராட்டினத்தின் பெட்டியில் அமர்ந்திருக்கிறார். ராட்டினம் சுழலத் துவங்குகிறது. திடீரென அவரருகில் சேதுராமனின் அப்பா உட்கார்ந்திருக்கிறார். அவர் எப்படி அருகில் வந்தார் என்று புரியவில்லை.
ராட்டினம் மிக வேகமாகச் சுழலும் போது சேதுராமனின் அப்பா உற்சாகமாகச் சப்தமிட்டபடி கையைக் காற்றில் வீசினார். அவரது கையிலிருந்து பொற்காசுகள் தெறித்து விழுந்தன. ஆம். பொற்காசுகளே தான்.
திருவிழாக் கூட்டம் அந்தப் பொற்காசுகளைப் பொறுக்க முண்டியடித்தது. சேதுராமனின் அப்பா அவரிடம் ஏதோ சொல்ல முயன்றார். அதற்குள் கனவு கலைந்துவிட்டது.
விழிப்பு வந்து கண்ணைத் திறந்தபிறகும் அவரது கையிலிருந்து தங்க காசுகள் தெறித்து விழுந்தது மறக்கவேயில்லை.
என்ன கனவிது.
கனவு எதையோ உணர்த்தும் என்பார்களே. இக்கனவு எதை உணர்த்துகிறது.
யோசனையோடு எழுந்து சமையல் அறைக்குச் சென்று ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு வந்தார்.
படுக்கையில் கிடந்த போது தோன்றியது.
அவர் பள்ளியில் ஒரு நாள் கூடச் சேதுராமனின் அப்பாவிற்கு காசு கொடுத்ததில்லை.
எத்தனையோ நாள் அவரை வேடிக்கை பார்த்திருக்கிறோம். ஏன் அவருக்கு ஒருமுறை கூட காசு தரவில்லை என்று யோசனையாக இருந்தது.
திடீரென அது குற்றவுணர்வாக மாறியது.
அந்தக் குற்றவுணர்வு தான் கனவாக வந்திருக்கிறதோ என்று நினைத்துக் கொண்டார். ஆணி அடிக்கும் போது சுத்தியல் விரலில் பட்டு ஏற்படும் வலி போன்ற ஒரு உணர்வு அவருக்குள் உருவானது. இதை என்ன செய்வது.
சிறுவயதின் தவறுகளை இப்போது எப்படிச் சரி செய்வது என்று அவருக்குப் புரியவில்லை.
March 27, 2024
ஒரு நாத்திகனின் பிரார்த்தனை
பிரவீன் துளசி என்ற பெயரில் எழுதிவரும் பிரவீன் சந்திரசேகரன் முறையாகப் பிரெஞ்சு பயின்றவர்.
சென்னை அலியான் பிரான்சேஸ் நடத்திய மொழிபெயர்ப்புப் போட்டியில் பரிசு பெற்றிருக்கிறார்.

இவர் ஒனோரே தெ பல்சாக்கின் இரண்டு நெடுங்கதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.
ஒரு நாத்திகனின் பிரார்த்தனை நூலை வம்சி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பால்சாக் பற்றி விரிவான உரை நிகழ்த்தியிருக்கிறேன்.
இந்த நூலை பிரவீன் எனக்குச் சமர்பணம் செய்திருக்கிறார். அவருக்கு மனம் நிறைந்த நன்றி.
March 25, 2024
பேசும் கை
.
ஜப்பானிய எழுத்தாளர் யசுநாரி கவபத்தாவிற்கு1968ம் ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அந்த விருது பெற்றபிறகு அவர் எதையும் எழுதவில்லை. பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு. நேர்காணல்கள் எனத் தொடர்ந்து பொதுநிகழ்வுகளில் கலந்து கொண்ட போதும் இலக்கியப் படைப்புகள் எதையும் அவரால் எழுத இயலவில்லை. 1972ம் ஆண்டு கவபத்தா தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார்.

அவரது கடைசிக்கதை One Arm. இந்தச் சிறுகதையில் ஒரு பெண் தனது வலது கையைக் கழட்டி ஒரு ஆணிடம் தருகிறாள். அவனுக்கு முப்பது வயதிருக்கலாம். தனியாக வாழுகிறான் அவனது கடந்தகாலம் பற்றிய குறிப்புகள் எதுவும் கதையில் இல்லை. ஆனால் அவனது நிகழ்காலம் கடந்தகாலத்தின் நீட்சியாக இருப்பதை உணர முடிகிறது
அந்த மனிதன் துண்டிக்கப்பட்ட வலதுகையைத் தனது வீட்டிற்குக் கொண்டு போகிறான். கை அவனுடன் பேசுகிறது. பெண்ணின் கையை அணைத்துக் கொண்டு உறங்குகிறான். கதையின் முடிவில் அவளது கையிற்குப் பதிலாகத் தனது கையைக் கழட்டி தர முன்வருகிறான்.
வியப்பூட்டும் இந்தக் கதை House Of Sleeping Beauties And Other Stories தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

உறங்கும் அழகிகளின் இல்லம் நாவலின் தொடர்ச்சியாகவே இந்தக் கதையைக் கருதவேண்டும். ஒருவகையில் அந்த நாவலில் இடம்பெறாத. ஆனால் இடம்பெறத் தகுதியான இன்னொரு அத்தியாயம்.
சர்ரியலிசத்தன்மை கொண்ட இந்தச் சிறுகதையைக் கவபத்தா நிஜமான நிகழ்வைப் போலத் துல்லியமாக. கவித்துவமாக எழுதியிருக்கிறார்.
ஒரு எழுத்தாளரின் முதற்கதை போலவே அவனது கடைசிக்கதையும் முக்கியமானதே.
அந்தப் பெண் ஏன் தனது வலதுகையைக் கழட்டி தர முன்வருகிறாள் என்பதற்குக் கதையில் எந்தக் குறிப்பும் இல்லை. அவளுக்குப் பெயர் கிடையாது. ஆனால் அவள் ஒரு கன்னிப்பெண் என்பதைப் பற்றி ஒரு குறிப்புக் காணப்படுகிறது. அவளிடம் கையைப் பெறுகிற மனிதனுக்கும் பெயரில்லை. அவளுடன் இரவைக் கழிக்க வந்தவன் போலவே கதையில் சித்தரிக்கப்படுகிறது.
’I can let you have one of my arms for the night,’ என்ற பெண்ணின் வாசகம் கருணையா, அன்பா, அல்லது சலிப்பில் உருவானதா. தன்னைப் பொம்மை போலத் தான் அந்தப் பெண் உணருகிறாளா. இதுவரை எந்த ஆணும் பெறாத அரிய பரிசு தான் துண்டிக்கபட்ட கையா.

இந்தப் புள்ளியை கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் சரியாக அடையாளம் கண்டு கொண்டு அதனை விரித்துத் தனது நாவலாக எழுதியிருக்கிறார்.
Memories of My Melancholy Whores என்ற அந்த நாவலில் கவபத்தாவிற்கு நன்றி சொல்லியிருக்கிறார்.
கவபத்தாவின் உறங்கும் அழகிகள் நாவலில் வரும் முதியவர்களைப் போலின்றி மார்க்வெஸ் தனது நாவலில் 90வது பிறந்தநாளைக் கொண்டாடும் முதியவரின் கதையைச் சொல்கிறார். அந்தக் கிழவர் தனது பிறந்தநாள் பரிசாக இளம் கன்னியுடன் ஒரு இரவைக் கழிக்க விரும்புகிறார்.
பண்பாடு மற்றும் வாழ்க்கை குறித்த புரிதலில் கவபத்தாவின் முதியவரும் மார்க்வெஸின் முதியவரும் வேறுபடுகிறார்கள். மார்க்வெஸின் நாவலில் வரும் முதியவர் தனது 90வது வயதில் முதன்முறையாகக் காதலை உணருகிறார். அந்த உறவைத் தொடர முனைகிறார். ஆனால் கவபத்தாவின் நாவலில் வரும் முதியவர் மரணத்தை ஒரு பெண்ணாகக் கருதுகிறார். அவரது உறக்கம் ஒரு குறியீடே,
கவபத்தா நாவலில் “for an old man who was no longer a man, to keep company with a girl who had been put to sleep was ‘not a human relationship.’” என்ற வரி இடம்பெற்றுள்ளது. இது தான் கதையின் மையப்புள்ளி. மார்க்வெஸ் நாவல் உறவைத் தொடர விரும்பும் கிழவரின் கதையாக நீளுகிறது.
ஒரு கை சிறுகதையில் அந்தப் பெண் தனது வலதுகையைக் கழட்டித்தர ஒரு சிரமமும் அடையவில்லை. தான் அணிந்துள்ள உடையைக் கழட்டுவது போல எளிதாகக் கையைக் கழட்டி தருகிறாள். அந்தக் கையை அடையாளம் காணுவதற்காகத் தனது மோதிரம் ஒன்றை அணிவிக்க விரும்புகிறாள். ஆகவே இடது கையில் அவள் அணிந்துள்ள மோதிரத்தைக் கழட்டி துண்டிக்கபட்ட வலதுகையில் மாட்ட நினைக்கிறாள். அதைச் செய்ய அவளால் முடியவில்லை. கிழவர் அதற்கு உதவி செய்கிறார்.
அந்த மோதிரம் அவளது கன்னித்தன்மையின் அடையாளம். அதைப் பற்றிக் கதையில் அவள் பேசுகிறாள். தனது அன்னையின் நினைவாகத் தான் அணிந்து கொண்டுள்ள மோதிரம் என்கிறாள். துண்டிக்கப்பட்ட கையைத் தனது மடியில் வைத்துக் கொள்கிறான் அந்த மனிதன். தனது கோட்டினுள் மறைத்து கையை வீட்டிற்கு எடுத்துக்கொண்டு போகிறான். அப்போது வழியில் மாட்டிக் கொள்ளக் கூடுமோ என்று பயப்படுகிறான். ஆகவே நடந்தே செல்கிறான்.
அவள் தனது கையை ஒரு இரவிற்கு அவனுக்குத் தருவதற்கும் பணம் எதையும் பெறவில்லை. அவள் யார். எதற்காக இப்படி ஒரு நாடகம். கையைத் துண்டிக்கும் போது ஒரு துளி ரத்தம் சிந்தப்படவில்லையே.
செயற்கை கையைக் கழட்டித் தருவது போல இயல்பாகத் துண்டித்துவிடுகிறாள். அவள் இப்படி நடந்து கொள்வது இது தான் முதல்முறை என்பது போலவும் தெரியவில்லை.
அந்தக் கை தன்னுடன் பேசுமா என்று அந்த மனிதன் கேட்கிறான். அது ஒரு கையாக மட்டுமே இருக்கும் என்கிறாள். ஒரு வேளை அந்தக் கை பேசும் என்றால் நான் பயப்படுவேன் என்றும் சொல்கிறாள். வலது கை அவளுடன் முன்னதாகப் பேசியிருக்கிறதா. அவள் அறிந்தே பேசும் கையை அவனிடம் தருகிறாளா. வாசிப்பவனின் மனதில் கதை விரிந்து கொண்டே செல்கிறது
அந்த மனிதனுக்குப் பெண்ணின் கையே போதுமானதாக இருக்கிறது. கதையில் துண்டிக்கப்பட்ட. கை பேசுகிறது.. அந்தப் பெண்ணின் நினைவுகள் எதுவும் கையிடமில்லை. கதையின் முடிவில் அவன் தனது கையைப் பெண்ணின் கைக்கு மாற்றாகத் தர விரும்புகிறான். ஒரு கை ஆணாகவும் ஒரு கை பெண்ணாகவும் வாழ விரும்புகிறான் என்று வைத்துக் கொள்ளலாம்.
அப்படி வாழும் ஒருவனைப் பற்றி நினைத்துப் பாருங்கள். அது இன்னொரு வியப்பூட்டும் கதையாக உருவாகிறது.
ரோடின் செய்த கை சிற்பத்தைக் கவபத்தா ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றைக் கண்டிருக்கிறேன். அந்தக் கை தான் இந்தக் கதையை எழுதக் காரணமாக இருந்திருக்கும். ஓவியம் மற்றும் சிற்பங்களின் மீது கவபத்தா தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது நாவல் ஒன்றில் மார்க் சாகல் ஓவியத்தைத் தீவிரமாக ரசிக்கும் நெசவாளர் தனது ஆடைவடிவமைப்பில் சாகலின் ஓவியப்பாணியைக் கொண்டு வருவார். அதே செயலாகவே இந்தச் சிறுகதையைப் புரிந்து கொள்கிறேன்.
கோகலின் மூக்கு கதையில் இது போல ஒரு மனிதனின் மூக்கு தொலைந்து போகிறது. அதை தேடி ஒருவன் அலைகிறான். அது குறியீட்டு கதை என்பதை நேரடியாக உணரமுடிகிறது. ஆனால் கவபத்தா கதையில் கையை துண்டித்து அந்த பெண்ணே தருகிறாள். நாட்டுப்புறக்கதை ஒன்றில் பஞ்சகாலத்தில் ஒரு தாய் தனது விரல்களை துண்டித்து பிள்ளைகளுக்கு உணவாக கொடுத்தாள் என்று படித்திருக்கிறேன். அது துயரத்தின் வெளிப்பாடு. கோவில்களில் கை, கண்மலர் என்று பொம்மை செய்து வேண்டுதல் வைப்பார்கள். அது நேர்ச்சை. இந்தக் கதையில் இடம்பெறுவது அது போன்ற சடங்கும் இல்லை.
தனக்குப் பதிலாக தனது கையை அந்தப் பெண் அவனுடன் இரவை கழிக்க அனுப்பி வைக்கிறாள். அவனது இரவு கதையில் விவரிக்கபடுகிறது. ஆனால் ஒற்றை கையுடன் உள்ள அவளது இரவு கதையில் இல்லை. வாசிப்பவனே அதை உணருகிறான். அவளது கையின் அழகு பற்றி அவளுக்கே பெருமையிருக்கிறது. அதையும் கதையின் ஒரு வரி உணர்த்துகிறது.
கவபத்தாவின் கதைகளில் இப்படி சிதறும் பெண் உடலை திரும்ப திரும்பக் காண முடிகிறது.
கதையின் துவக்கத்தில் அந்தப் பெண் தனது துண்டிக்கப்பட்ட கையை முத்தமிடுகிறாள். கதையின் முடிவில் அந்த மனிதன் அதே கையை முத்தமிடுகிறான். இரண்டும் முத்தங்களும் ஒன்றில்லை.
“When I’m with a man, I’m always sizing myself up- weighing the part of me that wants to become a woman against the part of me that is afraid to. Then I fell miserable and even more lonely” என்று அவரது The Scarlet Gang of Asakusa நாவலில் ஒரு பெண் குறிப்பிடுகிறாள். ஒரு கை சிறுகதை இதே மனநிலையின் வெளிப்பாடுதான்.
மிகக் குறைவான சித்தரிப்பின் மூலம் ஒரு சிறுகதையை எவ்வளவு கச்சிதமாக, விநோதமாக உருவாக்கிவிட முடியும் என்பதற்கு இக் கதை சிறந்த உதாரணம். ரோடின் செய்த சிற்பம் போல எழுத்தில் உருவாக்கபட்ட சிற்பம் என்றே இக்கதைச் சொல்வேன்.
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
