S. Ramakrishnan's Blog, page 36
April 29, 2024
மே 3 – நிகழ்ச்சி
மே 3 வெள்ளிக்கிழமை மாலை கவிக்கோ மன்றத்தில் நடைபெறும் எனது புத்தக அறிமுகவிழாவிற்கான அழைப்பிதழ்.
 
  April 28, 2024
நூல் அறிமுக விழா மற்றும் சிறப்புப் புத்தக விற்பனை
ஓரியண்ட் பிளாக்ஸ்வான் எனது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கத்தை The Man Who Walked Backwards and Other Stories என வெளியிட்டுள்ளது. இந்த நூலை நீதிபதி பிரபாஸ்ரீதேவன் மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார்.

இதற்கான அறிமுக விழா மே 3 வெள்ளிக்கிழமை மாலை நடைபெறுகிறது.

ஆங்கில எழுத்தாளர் அபர்ணா கார்த்திகேயன் அறிமுகவுரை நிகழ்த்துகிறார்.

நீதிபதி பிரபாஸ்ரீதேவன் தனது மொழிபெயர்ப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
கதையாகும் நினைவுகள் என்ற தலைப்பில் நான் சிறப்புரை ஆற்றுகிறேன்.
இந்த விழாவோடு தேசாந்திரி பதிப்பகத்தின் சிறப்புப் புத்தக விற்பனையும் நடைபெறுகிறது.

சென்னை வெள்ளத்தில் தேசாந்திரி பதிப்பகத்தின் குடோனில் வைக்கப்பட்டிருந்த எனது புத்தகங்கள் நிறையச் சேதமடைந்தன. நெருக்கடியான அந்தச் சூழ்நிலையின் போது நிறைய வாசகர்கள், அன்பர்கள் ஆதரவுக் கரம் நீட்டினார்கள். அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி.

ஈரத்தில் நனைந்து போன புத்தகங்களை உலர வைத்து மீட்டிருக்கிறோம். இந்தப் புத்தகங்களை மிகக் குறைவான விலையில் விற்பதற்காகச் சிறப்பு விற்பனை ஒன்றினை மே 3 வெள்ளிக்கிழமை மாலை மேற்கொள்கிறோம்
நனைந்த புத்தகங்களை விலையில்லாமல் வாசகர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்றே விரும்பினேன். ஆனால் அச்சிட்ட பணமாவது கிடைத்தால் மட்டுமே நஷ்டத்தைச் சரி செய்ய முடியும். ஆகவே ரூபாய் நூறு, ரூபாய் இருநூறு என இரண்டு விலை வைத்துள்ளோம். எந்த நூலையும் இந்த விலையில் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

நாள் : மே 3 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 5 மணி முதல் 9 வரை.
இடம்:
கவிக்கோ மன்றம்
இரண்டாவது பிரதானச்சாலை
சிஐடி காலனி, மைலாப்பூர். சென்னை 4
மழையை வரைபவர்கள்
கியோமிசு கோவிலில் பெய்யும் மழை என்ற ஹசுய் கவாஸின் (Hasui Kawase) ஓவியத்தைக் கண்ட போது ரஷோமான் திரைப்படத்தின் முதற்காட்சி நினைவில் எழுந்தது .
 Kiyomizu Temple in Rain
Kiyomizu Temple in Rainரஷோமான் நுழைவாயிலில் மழை பெய்வதில் தான் படம் துவங்குகிறது. கற்படிக்கட்டுகளில் வழிந்தோடும் மழையைக் காணுகிறோம். மழைக்கு ஒதுங்கிய இருவரைக் காணுகிறோம்.
மழைக்குள்ளாக நினைவு கதையாக மாறுகிறது. அவர்களில் ஒருவர் எனக்குப் புரியவில்லை என்று சொல்வதில் தான் படம் துவங்குகிறது. புரியவில்லை என்று அவர் சொல்வது மனிதர்களின் செயலை, கண்முன்னே நடந்தேறிய நிகழ்வுகளை.
அந்தச் சொல்லின் பின்னே ஒளிந்துள்ள கதையைத் தான் படம் விவரிக்கிறது. மழையில்லாமல் அக் காட்சி உருவாக்கப்பட்டிருந்தால் இத்தனை நெருக்கம் தந்திருக்காது. அந்தக் காட்சியில் மழை நம்மையும் கதை கேட்கத் தூண்டுகிறது.
ஜப்பானிய ஓவியர்கள் இயற்கைக் காட்சிகளை, கடலை, மழையை, பனி பெய்வதை, மலர்களை நிறைய வரைந்திருக்கிறார்கள். இயற்கை ஜப்பானிய கலைமரபில் நிரந்தரம் மற்றும் நிலையற்ற தன்மையின் அடையாளமாக கருதப்படுகிறது. ஆகவே பருவ காலங்களை வரைவதும் எழுதுவதும் கலைஞர்களின் முதன்மைச் செயல்பாடாக விளங்கியிருக்கிறது.
உண்மையும் அழகும் ஒன்று சேருவதே கலையின் அடிப்படை என ஜப்பானியர்கள் நம்புகிறார்கள். உண்மை என்பது தோற்றம் தரும் அனுபவமில்லை. ஆகவே மலர்களை வரையும் போது முழுமையின் அடையாளமாக, நிரந்தரமின்மையின் குறியீடாக வரைகிறார்கள். இயற்கை கடந்தகாலத்தை நினைவு வைத்திருப்பதில்லை. அது எப்போதும் நிகழ்காலத்திலே வாழுகிறது. அந்த நிகழ்காலத்தில் வாழ்வதைத் தான் பௌத்தம் சுட்டிக்காட்டுகிறது. அந்த வகையில் இயற்கையை அறிவதும் பௌத்த ஞானமரபே. ஓவியர்கள் இயற்கைக் காட்சியை வெறுமனே வியப்பதில்லை. மாறாக அதன் தனித்துவ அழகினை அடையாளம் காட்டுகிறார்கள்.
 ஹசுய் கவாஸ்
ஹசுய் கவாஸ்மழையை வரைவது எளிதானதில்லை. ஒரு மரம் மழையை எதிர்கொள்ளும் விதமும் மனிதர்கள் எதிர்கொள்வதும் ஒன்றானதில்லை. ஆகவே மழையின் வழியே உருமாறும் தினசரி வாழ்க்கையை, உடலின் இயக்கத்தை. காட்சிகளின் விநோத அழகை வரைந்து காட்டுகிறார்கள்.
ஜப்பானியர்களுக்கு மழை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது, மழையைக் குறிப்பதற்கு ஜப்பானிய மொழியில் குறைந்தபட்சம் 50 வார்த்தைகள் உள்ளன . ஜப்பானிய மரச்செதுக்கு ஓவியங்களில் மழை முக்கியக் கருப்பொருளாக உள்ளது. பாரம்பரிய மழை சடங்குகள் இன்றும் தொடர்கின்றன
ஹசுய் கவாஸ் ஓவியத்தில் கியோமிஸு கோவிலில் குடைபிடித்தபடி ஓருவர் மழையை ரசிக்கிறார். இது திடீர் மழையில்லை. அவரது உடையைக் காணும் போது மழைக்காலத்தின் ஒரு நாளை ஓவியர் வரைந்திருக்கிறார் என்பதை உணருகிறோம்.
தொலைதூரத்து மலையும், காற்றின் சீரான வேகமும் அடர்ந்து பெய்யும் மழையும் நேர்த்தியாக வரையப்பட்டிருக்கின்றன. மழைக்காட்சியை வரையும் போது மழை ஏற்படுத்தும் புற அனுபவத்தைத் தான் பதிவு செய்ய முயலுகிறார்கள். இந்த ஓவியத்தில் மழைத்துளிகள் துல்லியமாக வரையப்படவில்லை. மழையின் வேகம் ஓராயிரம் அம்புகள் பாய்வது போலிருக்கிறது.
மழை இனிது என்கிறார் பாரதியார்.
சட்டச்சட சட்டச்சட டட்டா-என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்;
தக்கை யடிக்குது காற்று-தக்கத்
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட
எனக் காற்றோடு இணைந்து மழை உருவாக்கிய இசையைப் பதிவு செய்திருக்கிறார். இதே உணர்வு நிலையைத் தான் ஓவியமும் வெளிப்படுத்துகிறது
கண்டோம் கண்டோம் கண்டோம்-இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்! என்று பாரதியின் கவிதை முடிகிறது. காலத்தின் கூத்து தான் மழை.
கியோமிசு, ஜப்பானின் கிழக்குக் கியோட்டோவில் அமைந்துள்ள ஒரு புத்த ஆலயமாகும். இக்கோவில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கியோமிசு என்றால் தூய நீர் என்று பொருள். ஒடோவா நீர்வீழ்ச்சியிலிருந்து வரும் தண்ணீர் அந்தக் கோவில் குளத்தில் விழுகிறது
இந்தக் கோவிலின் முழுக் கட்டுமானத்திலும் ஒரு ஆணி கூடப் பயன்படுத்தப்படவில்லை. ஹிகாஷியாமா மலைத்தொடரிலுள்ள இந்தக் கோவிலின் மேடை மீதிருந்து தாவிக்குதித்தால் விரும்பியது நிறைவேறும் என்றொரு நம்பிக்கை இருந்தது. இப்படித் தாவிய சிலர் உயிர் இழந்திருக்கிறார்கள். பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தத் தாவுதல் தடைசெய்யப்பட்டுவிட்டது.
இந்த வளாகத்தினுள் பல கோவில்கள் உள்ளன, அதில் இரண்டு “காதல் கற்கள்” உள்ளன. காதலுற்ற ஒருவர் கண்களை மூடிக்கொண்டு நடந்து மற்றொரு கல்லைத் தொட்டுவிட்டால் அவரது காதல் நிறைவேறிவிடும் என்பது நம்பிக்கை.
இந்தத் தகவல்களை அறிந்து கொண்டபிறகு ஓவியத்தின் காட்சி வேறாகிவிடுகிறது. தொன்மையான கியோமிசு ஆலயத்தில் மழை பெய்யும் போது காலம் விழித்துக் கொள்கிறது. மழையை வேடிக்கை காணுகிறவர் காலத்தின் கூத்தினையே காணுகிறார்.
ஜப்பானில் ட்சுயு எனப்படும் பருவமழை , ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஆறு வாரங்கள் பெய்கிறது. சூறாவளி, பெருமழைக்காலம் பொதுவாக இலையுதிர் காலத்தில் நிகழ்கிறது.
ஜப்பானிய ஓவியர்கள் மழையின் சீற்றத்தையே அதிகம் வரைந்திருக்கிறார்கள். அதிக எண்ணிக்கையிலான மெல்லிய இருண்ட இணையான கோடுகளைப் பயன்படுத்தி மழை சித்தரிக்கப்படுகிறது

ஓஹாரா கோசன் வரைந்துள்ள ஒரு மழை இரவில் நிற்கும் நாரையின் ஓவியத்தில் அடர் கருப்புப் பின்னணியில் ஒற்றைக் காலை தூக்கி நிற்கிறது நாரை. பிரகாசமான வெள்ளை உடல், அதன் கண்கள் மிக அழகாக வரையப்பட்டிருக்கின்றன. நாரையின் கால்களில் காணப்படும் மஞ்சள் நிறம் வழக்கமான நீலம் அல்லது சாம்பல் நிறத்திற்கு மாற்றாக உள்ளது கவனிக்கத்தக்கது-
நாரை தன்னை முழுமையாக மழையிடம் ஒப்புக் கொடுத்து நிற்கிறது. அக்ககாட்சி மழையினுள் நாரை தியானம் செய்வது போலிருக்கிறது. நாரையின் வெண்மை மின்னல் வெளிச்சம் போலத் தனித்து ஒளிருகிறது. ஜப்பானிய ஓவியர்கள் தங்கள் ஓவியத்தில் முதன்மையாக சித்தரிக்க விரும்பும் பொருளை அளவை விடவும் பெரிதாக வரைகிறார்கள். இந்த நாரையும் அது போன்றதே. .
 Utagawa Hiroshige
Utagawa Hiroshigeஉதகாவா ஹிரோஷிகேயிடம்(Utagawa Hiroshige) ஓவியங்களை இயற்கையின் கவிதை வடிவம் என்கிறார்கள். உதகாவா ஹிரோஷிகே மழையை வரைந்திருக்கிறார். அதுவும் எதிர்பாராமல் பெய்யும் மழையினை வரைந்திருக்கிறார்.
Sudden Shower at Shōno ஓவியத்தில் பல்லக்கு தூக்குபவர்களும் கிராமவாசிகளும் மழைக்குள்ளாக ஓடுகிறார்கள், தனித்துவமான சாய்ந்த கோடுகளுடன் மழை குறிப்பிடப்படுகிறது. கிராமவாசிகளின் உடை, அவர்கள் வைத்துள்ள குடை காற்றில் மடங்குவது, பல்லக்கு தூக்குபவரின் இடுப்புத் துணியின் நீல நிறம். சாலை மற்றும் மரங்களின் சித்தரிப்பு எனப் படம் மழைக்காட்சியை அற்புதமாகச் சித்தரிக்கிறது.
 JP41
JP41Ukiyo e ஓவிய மரபில் திடீர் மழை என்பது முக்கியமான கருப்பொருளாகும், Sudden Shower over Shin-Ōhashi Bridge ஓவியத்தில் பாலம் வலதுபுறத்தில் இருந்து கீழ் இடதுபுறமாக நீண்டுள்ளது, பின்னணியில் உள்ள அடிவானக் கோடு இடமிருந்து வலமாகக் கீழ்நோக்கி சாய்ந்துள்ளது. பாலத்தில், மூன்று சிறிய உருவங்கள் முன்னோக்கிச் சாய்ந்து, இடதுபுறமாக, தங்கள் உடலை மழையில் நனையாமல் மறைக்க, தலைக்கு மேல் குடைகளைப் பிடித்தபடி செல்கிறார்கள், எதிர் திசையில் நகரும் மூன்று உருவங்கள் பகிரப்பட்ட ஒரே குடையின் கீழ் செல்கிறார்கள்.. தொலைதூரக் கரை சாம்பல் நிறமாக உள்ளது, நேரான கருப்பு கோடுகளாக மழை விழுகிறது. பாலம் ஒரு பிரகாசமான வடிவமாகத் தோன்றுகிறது, அவர்களின் வைக்கோல் தொப்பிகள், மரக்குடைகள் அழகாக வரையப்பட்டிருக்கின்றன. பாலத்தின் மஞ்சள் நிறம், பாலத்தின் அடியிலுள்ள நீரின் நீலவண்ணம், விரைந்து ஓடுபவர்களின் வாளிப்பான கால்கள். காற்றின் வேகம் என ஓவியம் மிகவும் நேர்த்தியாக வரையப்பட்டிருக்கிறது

ஆற்றில் கட்டுமரம் செல்கிறது. கட்டுமரத்தைச் செலுத்துகிறவன் மழையைப் பொருட்படுத்தவில்லை. ஆற்றின் தொலைதூரக் கரையில், அரசாங்கக் கப்பலான அட்டகேமரு நிற்பது தெரிகிறது.

இந்த ஓவியத்தினை வான்கோ மிகவும் ரசித்திருக்கிறார். இதன் நகல் ஒன்றை அவரே வரைந்துமிருக்கிறார். ஜப்பானிய ஓவியங்களின் தாக்கம் வான்கோவிடமிருந்தது. அவர் ஒருமுறை கூட ஜப்பானுக்குச் சென்றதில்லை. ஆனால் ஜப்பானிய பிரிண்ட்டுகள் மூலம் முக்கியமான ஜப்பானிய ஓவியங்களை ஆழ்ந்து ரசித்திருக்கிறார்.

ஹிரோஷிகேயின் ஓவியங்கள் இயற்கையைப் பற்றிய நுட்பமான உணர்வைத் தருகின்றன. 1858 ஆம் ஆண்டில் காலரா காரணமாக ஹிரோஷிகே இறந்து போனார். அசகுசாவில் உள்ள ஜென் புத்த கோவிலில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.
ஜென் கவிதையொன்றில் மழையைக் காதுகளால் பார்க்கிறோம் என்ற வரி இடம்பெற்றிருக்கிறது. உண்மை தான். மழைச்சத்தம் மழையினை மனதில் காட்சியாக உருமாற்றிவிடுகிறதே.
டைட்டோ கொகுஷி என்ற கவிஞர் எழுதிய கவிதை இது.
காதுகளால் பார்த்தாலும்,
கண்களால் கேட்கும் போதும்,
முத்து போன்ற மழைத்துளிகள்
நான்தான்
என்பதில் சந்தேகமில்லை .
நான் எனும் தன்னுணர்வு அன்றாடம் பல்வேறு நிகழ்வுகளால் துளியாகச் சிதறுகிறது. மழை அதன் புறவடிவம் போலிருக்கிறது.
விழிப்புணர்வு கொண்டவர்கள் புறநிகழ்வுகளை நேராகக் காணுவதில்லை. அவற்றை.தலைகீழாகப் பார்க்கிறார்கள். தங்களைத் தாங்களே இழந்து, விஷயங்களைப் பின்தொடர்கிறார்கள் என்கிறார் ஜிங்கிங்
இந்தக் கண்ணோட்டத்தில் ஜென்துறவிகள் மழையை ஆராதிப்பதில்லை. அதன் பயன்களைப் பற்றி யோசிப்பதில்லை. மாறாக அவர்களே மழையாகிறார்கள்.
ஜப்பானிய ஓவியர்கள் மழையை வரைவதன் மூலம் தளர்வு மற்றும் எதிர்பாராத மாற்றத்தை வரைந்திருக்கிறார்கள். மழை சீரற்ற இயக்கத்தின் குறியீடாக அமைகிறது.


ஐரோப்பிய மழைக்காட்சி ஓவியங்களில் மழையின் ஈரமும் குடைபிடித்தபடி செல்லும் பெண்களின் நிதான நடையும் சித்தரிக்கப்படுகிறது. இந்திய நுண்ணோவியம் ஒன்றில் பெண்ணின் மீது மழை சிறுதுளிகளாக வீழ்வதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது நேரடி அனுபவத்தின் வெளிப்பாடாக உள்ளது. ஆனால் இந்த இரண்டிலிருந்து வேறுபட்டு ஜப்பானிய ஓவியர்கள் வரைந்துள்ள மழைக்காட்சிகள் திடீர் மழையை மட்டுமின்றிக் காலமாற்றம் எனும் பேருணர்வையும் நமக்குள் ஏற்படுத்துகின்றன.
April 26, 2024
சிறகுள்ள புலி
புதிய நெடுங்கதை.
அந்த வழக்கில் தீர்ப்பு வருவதற்குப் பதினாறு ஆண்டுகள் ஆகியிருந்தது. இன்று அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்போகிறார்கள் என்று தெரிவித்தார்கள்.

பூமாலை கொல்லப்பட்ட போது வெயிலானுக்கு வயது ஆறு. அந்த வழக்கில் எதிரிகளில் ஒருவராகக் குற்றம் சாட்டப்பட்ட தனுக்கோடி நாலு ஆண்டுகளுக்கு முன்பாக இறந்து போய்விட்டார். முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட தங்கமாரியப்பன் இப்போது நகராட்சி துணைத் தலைவராகிவிட்டார். அவரது இரண்டாவது மகன் ஆனந்த் உள்ளூரிலே வக்கீல் , அடுத்தவன் பிரபு பைபாஸ் ரோட்டில் பெரிய ஹோட்டல் வைத்திருக்கிறான்.
“இந்த நேரம் காசைக் கொடுத்துத் தீர்ப்பை மாற்றியிருப்பார்கள். ஒருத்தனையும் கோர்ட் தண்டிக்காது. இத்தனை வருஷம் கேஸ் நடத்த காசு செலவானது வேஸ்ட்“ என்று நினைத்துக் கொண்டான் வெயிலான். அவனுக்கு அப்பாவைப் பிடிக்காது. அம்மாவை இரண்டாம் தாரமாக கட்டிக் கொண்டதோடு அவளை நடுத்தெருவில் தவிக்க விட்டுப் போனவர் என்பதால் தீராத ஆத்திரமிருந்தது.
வீட்டிலிருந்த தந்தையின் புகைப்படத்தைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்குக் கோபமாக வரும். “இவருக்கு எதுக்குப் புலி போடுற ஆசை. ஒழுங்கா படம் வரைஞ்சிட்டு நாலு காசை பாத்துகிட்டு இருக்க வேண்டியது தானே. புலி போடப்போயி தானே இத்தனை வில்லங்கமும்“ என்று நினைத்துக் கொள்வான். ஆனால் அவனது அப்பாவைப் பற்றி அம்மா எப்போதும் பெருமையாகச் சொல்வாள்
“அவரு கைபட்டா சோதா பய கூடப் புலியாகிருவான். கோவில் சுவத்துல இருக்கே ஆள் உயர மாரியம்மன் படம். அதை வரைஞ்சது அவரு தானே. அவரு வரைஞ்ச படத்தைத் தானே இன்னைக்கும் சாமியா கும்பிடுறாங்க. அந்தச் சாமி நமக்கு நல்ல வழியைக் காமிக்கும் வெயிலா“ என்பாள் சிந்தாமணி
அவனுக்கு நம்பிக்கையில்லை. கோவிலை ஒட்டிய கிணற்றில் அப்பா முகம் வீங்கி செத்து மிதந்த காட்சி அவன் மனதிலிருக்கிறது. அது கொலை தான். சந்தேகமில்லை. ஆனால் எதற்காகக் கொன்றார்கள் என்று புரியவேயில்லை. வீறாப்பிற்காக அப்பா புலி போட்டு செத்துப் போனார். இனிமேல் அவர்களைத் தண்டித்து என்ன ஆகப்போகிறது. செத்துப்போனவருக்கு என்ன தண்டனை தந்துவிட முடியும்
அவன் வேலை செய்யும் பரோட்டா கடைக்கு ஒன்றிரண்டு தடவை தனுக்கோடி சாப்பிட வந்திருக்கிறார். போதையில் தள்ளாடியபடி வந்து அமர்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருப்பார். அப்போது மனதிற்குள் கோபம் கொப்பளிக்கும். வேண்டுமென்றே அவருக்குப் போடுகிற கொத்துப் புரோட்டாவில் எச்சில் துப்பிக் கொத்துவான். அதற்கு மேல் என்ன செய்துவிட முடியும்.
••
“நான் கோர்ட்க்கு கிளம்புறேன். நீயும் வந்துரு“ என்றாள் வெயிலானின் அம்மா சிந்தாமணி
“நான் வரலை. அங்கே போயி யாரு காத்துக் கிடக்கிறது. “
“அதுக்காகத் தீர்ப்பு சொல்ற அன்னைக்கு நாம போக வேண்டாமா“
“நீதி நியாயம் எல்லாம் நமக்குக் கிடைக்காது. அப்படியே கிடைச்சாலும் அதை வச்சி என்ன செய்யப்போறே“
“அவிங்க அத்தனை பேரும் ஜெயிலுக்குப் போகணும். அப்போ தான் என் மனசு ஆறும்“
“ நீ எப்படியோ போய்த் தொலை.. எனக்கு வேலையிருக்கும்மா… இந்த ஆளை மாதிரி வெறிச்சிகிட்டு இருந்தா வெட்டியா சாக வேண்டியது தான்“
“உங்கப்பாவை பற்றி இப்படிப் பேசாதேனு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்“
“அப்படிதான் பேசுவேன். இந்த ஆளு கெட்ட கேடுக்கு ரெண்டு பொண்டாட்டி வேற. அதைக் கேட்க உனக்குத் துப்பு இல்லை“
“அது என்பாடு. நான் பாத்துகிடுவேன். நீ போறதுன்னா போடா. நான் சாரதி கூடப் போய்கிடுவேன்“
“அந்த நாயி இந்த வீட்ல காலை வச்சா. வெட்டிப்புடுவேன் பாத்துக்கோ. நீ ஏன் அவன் கால நக்கிட்டு கிடக்கே“
“அவனும் உங்கப்பனுக்குப் பிறந்தவன் தானே. உனக்கு அண்ணன் தானே. “
“அண்ணே கிண்ணேனு சொல்லாதே. அவனைக் கண்டாலே எனக்குப் பிடிக்காது“.
“சண்டைபோட்டுக்க வேண்டிய பொம்பளை ரெண்டு பேரும் ஒண்ணா போயிட்டோம். உங்களுக்கு என்னடா கோபம்“
“எனக்கு மானம் ரோசம் இருக்கு.. உப்பு போட்டு திங்குறேன். அதான்“
“இந்த ரோசம் தான் உங்கப்பனை புலி போட வச்சது“
“அந்தக் கதை எல்லாம் வேணாம். நான் கிளம்புறேன்“
என்று தனது பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பினான் வெயிலான். அவன் வேலை செய்யும் பரோட்டா கடை பைபாஸ் ரோட்டில் இருந்த்து. மாலையில் தான் வேலை. இரவு இரண்டு மணி கடை திறந்திருக்கும். ஆகவே அவன் வீடு திரும்ப இரவு மூன்று மணியாகிவிடும். பெரும்பான்மை நாட்கள் பகலில் உறங்கிவிடுவான். மதியம் இரண்டு மணிக்கு எழுந்து குளிப்பான்.மதிய சாப்பாடு சாப்பிட நான்கு மணியாகிவிடும்.
நட்சத்திர வடிவத்தில் ஸ்டார் பரோட்டா என்று அவன் அறிமுகம் செய்து வைத்த பரோட்டா பலருக்கும் பிடித்துப் போய்விட்டது. ஆகவே அதைச் சாப்பிடுவதற்கென்றே நிறைய இளைஞர்கள் கடைக்கு வந்தார்கள். அவன் போடுற கொத்துப் பரோட்டாவில் என்ன சேர்க்கிறான் என்று கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அதன் ருசி நிகரில்லாதது.
••
தங்க மாரியப்பனின் கார் அருப்புக்கோட்டை கோர்ட் வளாகத்தினுள் நுழைந்த்து. மரத்தடியில் காத்துக் கொண்டிருந்த சிலர் காரை நோக்கி வந்தார்கள். வக்கீல் தனபால் யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தார். தங்க மாரியப்பன் அவரை நோக்கி நடந்தார்
“தீர்ப்பு எத்தனை மணிக்கு வாசிப்பாங்க“ என்று கேட்டார் தங்க மாரியப்பன்
“பனிரெண்டரை ஆகிரும். நீங்க நம்ம ரூம்ல வந்து உட்காருங்க. நீங்க பயப்படுற மாதிரி ஒண்ணும் ஆகாது“
“அவங்க பக்கம் தீர்ப்பு வந்தா ஹைகோர்ட் இருக்கு பாத்துகிடுவோம்“ என்றார் தங்க மாரியப்பன்.
“அதுக்கெல்லாம் தேவையே இருக்காது“ என்று உறுதியாகச் சொன்னார் தனபால். தங்க மாரியப்பன் தனது மேல்சட்டைப் பையினுள் கையை விட்டு ஐநூறு ரூபாய்களை எடுத்தார். அதில் பாதியை எண்ணாமல் அப்படியே தனபால் கையில் கொடுத்தார்.
“நீ வச்சிக்கோ. என் கூட வந்துருக்கப் பசங்க ஒருத்தனும் சாப்பிடலை. ஏதாவது பாத்து வாங்கிக் குடு“
தனபால் பவ்வியமாகப் பணத்தை வாங்கிக் கொண்டார். இதற்குள் தங்க மாரியப்பன் போன் அடிக்கத் துவங்கியது. அவர் விலகி நின்று யாருடனோ பேச ஆரம்பித்தார்.
••
“புலி வேஷமிட்ட பூமாலை கிணற்றில் தவறி விழுந்து இறந்து போனது தற்செயல் நிகழ்வு. அது திட்டமிட்டுச் செய்யப்பட்ட கொலை இல்லை“ என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மூன்று குற்றவாளிகளும் அனைத்துக் குற்றசாட்டுகளில் இருந்தும் விடுவிக்கபட்டார்கள்.
தங்கமாரியப்பன் வியர்த்து ஈரமாகி உடலோடு ஒட்டியிருந்த வெள்ளைசட்டையை உதறிக் கொண்டபடியே வெளியே வந்தார். இத்தனை ஆண்டுகள் இழுவையாக இழுந்த வழக்கு தன் பக்கம் முடிந்து போனது மகிழ்ச்சி அளித்த்து.
அந்தச் சந்தோஷத்துடன் காரை நோக்கி நடக்கத் துவங்கினார். அவர் கண்ணில் மண்விழுந்தது போலிருந்த்து. மண்ணைத் துடைப்பதற்காகக் கைகளை முகத்தில் வைத்தபோது யாரோ அவர் மீது வெட்டுவதற்குப் பாய்வது போலிருந்த்து. தன்னை அறியாமல் சப்தமிட்டபடியே அவர் தரையில் விழுந்தார். கோர்ட் வாசலில் நின்றிருந்த காவலர்கள் ஒடி வந்தார்கள். கையில் அருவாளுடன் ஒரு இளைஞன் ஆவேசமாக நிற்பது அவரது கண்ணில் தெரிந்த்து. அந்த இளைஞனை காவலர்கள் பிடித்து இழுத்துக் கொண்டு போனார்கள். தரையில் விழுந்ததால் கையில் சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. வேஷ்டி முழுவதும் புழுதி. எழுந்து கையைத் துடைத்துக் கொண்டு கோபத்துடன் “எங்கடா போய்த் தொலைஞ்சீங்க“ என்று உடன் வந்தவர்களை நோக்கிக் கத்தினார். அவர்கள் பதில் சொல்வதற்குள் “அந்த நாயி யாரு“ என்று கேட்டார். அவரது தோளில் ஏற்பட்ட வெட்டுக்காயத்தில் ரத்தம் கசிந்து சட்டையில் பட்டது. சட்டையைக் கழட்டி உதறியபடியே ஏதோ சொல்ல முயன்று சுயஉணர்வின்றி மயங்கி விழுந்தார்.
••

பூமாலையின் தாத்தா பெயர் சிகிலன். வெள்ளைக்காரர்கள் காலத்திலே புலி வேஷம் வரைவதில் பெயர் பெற்றவர். இவரது திறமையைக் கண்டு வியந்து டி லா ஹே என்ற வெள்ளைக்காரன் தன்னோடு மதராஸிற்கு அழைத்துக் கொண்டு போனான் என்கிறார்கள்.
அவனுடன் சிகிலன் நிற்கும் புகைப்படம் ஒன்று பூமாலை வீட்டிலிருந்தது. பரம்பரையாக அவர்கள் வண்ணக்காரர்கள். அதாவது வண்ணம் தீட்டுகிறவர்கள். கோவில் வேலைகளும் அலங்கார பொம்மைகளும் செய்வது வழக்கம்.
பூமாலை தனது குடும்ப வரலாற்றைப் பற்றிய சில கதைகளைக் கேட்டிருக்கிறார். அவற்றைப் பற்றி எப்போது நினைத்துக் கொண்டாலும் அவரது மனது கனத்துவிடும். எப்பேர்பட்ட ஆட்கள் என்று சொல்லிக் கொள்வார். தனது தாத்தா சிகிலனை மனதில் வணங்கியே எந்தக் காரியத்தையும் செய்ய ஆரம்பிப்பார்.
••
நியூவிங்டன் பள்ளி முதல்வரும் சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரரும், புலிவேட்டையில் ஆர்வம் கொண்டவருமான கிளெமென்ட் டி லா ஹேயின் கொலை வழக்கினைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள்.
இந்தக் கொலை 1919 அக்டோபர் 15ம் தேதி நடந்தது. டி லா ஹேய் தனது படுக்கையில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது தலையின் வலது பக்கத்தில் தோட்டா தாக்கியதில் மரணம் ஏற்பட்டது.
ஜமீன்தார்களின் ‘மைனர்’ வாரிசுகளைப் பாதுகாக்க பிரிட்டிஷ் அரசு நியூவிங்டன் பள்ளியை உருவாக்கியது. தேனாம்பேட்டையிலிருந்த அந்த இடத்தை மக்கள் மைனர் பங்களா என்று அழைத்தார்கள்.
இந்தக் கொலை வழக்குச் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து பம்பாய் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது கொலைக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் இறுதியில் சாட்சியங்கள் இன்றி விடுவிக்கப்பட்டார்கள். இந்த வழக்கு இன்று வரை தீர்க்கப்படாமலே உள்ளது.
டி லா ஹேயின் மனைவி டோரதியோடு கள்ள உறவில் இருந்த ஒருவர் இந்தக் கொலையைச் செய்தார் என்றும், டி லா ஹேயின் இனவெறியை தாங்க முடியாத ஜமீன்தார்களே சதி செய்து கொன்றார்கள் என்றும் சொல்கிறார்கள். ஆனால் இந்த வழக்கோடு நேரடியாகத் தொடர்பு இல்லாத, ஆனால் டி லா ஹேயின் வீட்டில் பணியாளராக இருந்த ஒருவனைப் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை.
டி லா ஹே ஒருமுறை தென்மலைக்குச் சென்றிருந்த போது புலிக்கலி நடனத்தைக் கண்டார். முப்பது நாற்பது ஆட்கள் புலி வேஷம் அணிந்து சாஸ்தா கோவிலின் முன்பாக நடனமாடியது வியப்பளித்தது. அதைப்பற்றிக் கிழக்கிந்திய கம்பெனி சர்வேயர் ரிச்மண்டிடம் விசாரித்த போது இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு கொச்சி மகாராஜா ராமவர்மா சக்தன் தம்புரான் இதனை அறிமுகப்படுத்தினார் என்றார்.
புலிவேஷமிட்டவர்கள் தாளத்திற்கு ஏற்ப துள்ளி ஆடிவந்தார்கள். டி லா ஹேயின் அருகில் வந்த போது அவரை வணங்கி மரியாதை செய்தார்கள். நிஜமான புலிகள் தன்னை வணங்குவதைப் போலவே அவர் உணர்ந்தார். அன்று அவரது மனதில் விசித்திரமானதொரு எண்ணம் உருவானது.
ஊர் திரும்பியதும் டி லா ஹே விசித்திரமான காரியம் ஒன்றில் ஈடுபடத் துவங்கினார். புலி வேஷம் தீட்டுகிறவரில் சிறந்தவர் யாரென விசாரிக்கத் துவங்கினார். யானையடி என்ற கிராமத்தை சேர்ந்த சிகிலனுக்கு நிகராக யாருமில்லை. அவன் சிறகுள்ள புலியை உருவாக்குகிறவன் என்றார்கள்
“சிறகுள்ள புலியா“ என்று டி லா ஹே வியந்து போனார். அப்படி ஒன்றைப் பற்றிக் கற்பனை செய்யவே வியப்பாக இருந்தது. ஆள் அனுப்பி அவனை மதராஸிற்கு அழைத்து வரச் சொன்னார்.
சிகிலன் வர மறுத்ததோடு “வெள்ளைக்காரனால் ஒரு போதும் புலியாக முடியாது“ என்று சொல்லி அனுப்பினான்.
டி லா ஹே தனது பள்ளியில் பயிலும் மேக்கரை ஜமீன்தாரை அழைத்துக் கொண்டு யானையடியில் வசித்த சிகிலனைக் காணச் சென்றார்.
சிகிலன் கற்சிற்பம் போல உறுதியான உடல் கொண்டிருந்தான். அழுக்கடைந்த அரைக்கச்சு. திறந்த மேல் உடம்பு. இடது காலில் செம்பு வளையம், அவன் வருஷத்தில் பத்து நாட்கள் மட்டுமே புலி வேஷம் வரைபவன். மற்ற நாட்களில் மண்பொம்மைகள் செய்து வண்ணமடித்து விற்பது வழக்கம்.இதற்காக அருகிலுள்ள புளிக்கரை சந்தைக்கு வாரம் ஒருமுறை போய்வருவான். சில நேரம் குதிரையெடுப்பிற்கு மண் குதிரை செய்து தருவதும் உண்டு.
சிறிய கூரைவீட்டில் வசித்த அவனைத் தேடி சென்ற டி லா ஹே உட்கார ஆசனம் எதுவும் இல்லை என்பதை அறிந்து கொண்டு நின்றபடியே கேட்டார்
“நீ சிறகுள்ள புலியை உருவாக்குவாய் என்கிறார்களே. அது நிஜமா“
“எல்லாப் புலிவேஷம் போடுகிறவனுக்கும் ரெக்கை கிடையாது. ரெக்கையுள்ள புலியாக இருப்பவன் காளிங்கன். அவன் ஒருத்தனுக்கு மட்டுமே ரெக்கை வரைவேன். அவன் இப்போது புலியாடுவதில்லை. “ என்றான் சிகிலன்.
“நான் ரெக்கையுள்ள புலியாடுவதைப் பார்க்க வேண்டும். ஏற்பாடு செய்ய முடியுமா“ என்று கேட்டார் டி லா ஹே.
“அதற்கென்ன நாளைக்கு ஏற்பாடு பண்ணிவிடுவோம்“ என்றார் மேக்கரை ஜமீன்தார்
மறுநாள் அவர்கள் ஐம்பது வயதான காளிங்கனை அழைத்து வந்தார்கள். உடல்நலமற்று கால் வீங்கி காணப்பட்ட காளிங்கன் அவர்களை வணங்கிச் சொன்னான்
“உத்தரவு இல்லாமல் புலி போட முடியாதுங்க சாமி“
“யாரு உத்தரவு கேட்கணும்“
“தென்மலையான் கோவில்ல உத்தரவு கேட்கணும்“
“அதெல்லாம் கேட்டுகிடலாம். துரை பாக்கணும்னு ஆசைப்படுறார். புலி போட்டு ஆடுறா“
“இந்தக் காலை வச்சிகிட்டு என்னாலே ஆட முடியாதுங்க. “
“என்னவோ நீ ஒருத்தன் தான் ரெக்கையுள்ள புலினு சிகிலன் சொன்னான். நீ நொண்டிபுலியால்லே இருக்கே. “ என்று ஏளனம் செய்தார் மேக்கரை ஜமீன்
காளிங்கனுக்கு ஆத்திரம் வந்த்து, அவன் வேஷம் போடுவது என்று தீர்மானம் செய்தான். சிகிலனுக்கு அதில் சம்மதமில்லை. என்றாலும் காளிங்கனுக்காகப் புலிவேஷம் போட்டுவிடுவது என்று முடிவு செய்தான்.
மாந்தோப்பின் உள்ளே வைத்து காளிங்கன் உடலில் புலிவரையத் துவங்கினான். புலியின் கோடுகள் உடலில் தோன்றியதும் காளிங்கனின் முகம் இறுக்கமடைய ஆரம்பித்தது. சாக்குதுணியில் ரெக்கை போல வரைந்து கொக்கிகளுடன் தோளில் மாட்டிக் கொள்வது போல ஏற்பாடு செய்தான். புலிவேஷமிட்ட காளிங்கன் சிவந்த தனது கண்களுடன் மேக்கரை ஜமீன் பங்களாவின் முற்றத்தில் ஆட ஆரம்பித்தான்.
வேட்டையில் தப்பிய புலியின் ஆவேசம் கொண்டது போலிருந்தது அந்த ஆட்டம். அந்தக் கண்களில் வெளிப்படும் வெறுப்பு. வெறியை கண்ட டி லா ஹே எங்கே தன்னைப் புலி பாய்ந்து கொன்றுவிடுமோ என்று பயந்தான். பாய்ச்சலின் உச்சத்தில் இரண்டு ரெக்கைகளையும் தனது தோளில் மாட்டிக் கொண்ட காளிங்கன் வௌவால் ரெக்கையை அடிப்பது போலச் சடசடப்புக் காட்டினான். உண்மையில் ரெக்கையுள்ள புலியை நேரில் வந்துவிட்டது போலிருந்த்து. டி லா ஹேவால் நம்ப முடியவில்லை. பயமும் ஆச்சரியமுமாக ரெக்கையடிக்கும் புலியை பார்த்துக் கொண்டிருந்தான். தரையை விட்டு நாலு அடி உயரத்திற்குத் தாவி சிறகை அடித்து எம்பி பறந்தான் காளிங்கன். காலில் ரத்தம் வழிந்து சொட்டியது. மேக்கரை ஜமீன்தார் சில்லறை காசுகளை அவன் மீது வீசி எறிந்தார். இடமும் வலமுமாகப் பாய்ந்து பறந்து போக்கு காட்டிய காளிங்கன் முன்னால் ஆட்டுகுட்டி ஒன்றை கொண்டு வந்து நிறுத்தினார்கள். அதைப் பாய்ந்த வேகத்தில் பல்லால் கடித்து இழுத்துக் கொண்டு பறந்தான். ஆட்டின் உயிர்பயமான குரல். தெறிக்கும் ரத்தம். ஆவேசமான காளிங்கனின் பாய்ச்சல் டி லா ஹேவை பிரமிக்க வைத்தது.
ஆட்டம் போதும் என மேக்கரை ஜமீன் கையை உயர்த்தி நிறுத்தினார். ஆனால் காளிங்கன் நிறுத்தவில்லை. அவன் ஆடிக் கொண்டேயிருந்தான். அந்தப் புலியாட்டம் பித்தேறியதாக இருந்த்து. காணும் மனிதர்களைக் கடித்துத் துப்பிவிடப் போவது போல ஆவேசமாக ஆடினான். மேக்கரை ஜமீன் கோபத்தில் எழுந்து நின்று சப்தமிட்டார். அவரை நோக்கி பாய்ந்தான் காளிங்கன். புலி நகங்கள் அவரது பட்டுச்சட்டையைக் கிழித்தது. அவர் தடுமாறிப் பின்னால் விழுந்தார்.
டி லா ஹே பயத்தில் எழுந்து விலகி நின்று கொண்டார். கிழே விழுந்த மேக்கரை ஜமீன் ஆவேசமாக வீட்டிற்குள் சென்றார். வெளியே வந்த போது அவர் கையில் வேட்டைத்துப்பாக்கி இருந்தது. அதை உயர்த்திக் காளிங்கனை சுட்டார். துப்பாக்கி குண்டு துளைத்த போதும் காளிங்கன் ஆட்டத்தை நிறுத்தவில்லை. கண்மயங்கி விழும்வரை ஆடிக் கொண்டிருந்தான். பின்பு சரிந்து விழுந்து இறந்து போனான்.
ரெக்கையுள்ள புலியின் ஆட்டத்தையும் காளிங்கனின் முடிவையும் கண்டு பிரமித்துப் போன டி லா ஹே செத்துக்கிடந்த காளிங்கன் உடலைத் தொட்டுப் பார்த்தார். நிஜப்புலியை தொடுவதைப் போலவே இருந்த்து. ஒரு மனிதனை இப்படிப் புலி போல நிஜமாக மாற்ற முடிவது எவ்வளவு பெரிய கலை. அதுவும் ரெக்கையடிக்கும் புலியாக மாற்றிப் பாய்ச்சல் காட்டுவது நினைத்துப் பார்க்க முடியாத கற்பனை.
அவர் சிகிலனை தன்னோடு கூடவே வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார். மேக்கரை ஜமீன் மூலம் பேசி அவனது குடும்பத்திற்கு ஒரு மா நிலமும், நான்கு பசுக்களும், இரண்டு பொற்காசுகளும் கொடுப்பதாகப் பேசி முடிவு செய்தார்கள். தன்னால் பட்டணத்திற்கு வர முடியாது என்று சிகிலன் மறுத்தான். ஆனால் அவனால் ஜமீன் உத்தரவை மீற முடியவில்லை.
••
மதராஸ் பட்டணத்தில் யார் புலி வேஷம் போடப்போகிறார்கள். எந்தக் கோவிலில் புலி ஆடப்போகிறது என்று தெரியவில்லை. டி லா ஹேயின் வீட்டில் பணியாளர் போல வசித்து வந்த சிகிலனுக்கு நல்ல சாப்பாடும் தேவையான சௌகரியங்களும் கிடைத்தன. ஆனால் அவன் மனது யானையடியில் இருந்த வீட்டையே நினைத்துக் கொண்டிருந்தது. எப்படியாவது துரையிடமிருந்து விலகி ஊருக்குப் போய்விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தான். அன்றாடம் அவனுக்குச் சீமையிலிருந்து கெண்டுவரப்பட்ட மதுபோத்தலில் கொஞ்சம் குடிப்பதற்குத் தரப்ப்ட்டது. அப்படியான மதுவை அவன் குடித்ததேயில்லை. ஆகவே ஆசையாகக் குடித்தான்.
மதுவின் பொன்னிறம். அதன் விநோத மணம். நாவில் ஏற்படுத்தும் ருசி. உடலில் ஏற்படுத்தும் மயக்கம் அவனை ஆட்கொண்டது.
மழைக்காலம் முழுவதையும் மதராஸில் வெறுமனே கழிக்க வேண்டியதாக இருந்த்து. பனிக்காலத்தின் துவக்கத்தில் ஒரு நாள் டி லா ஹே தன்னோடு வரும்படி அழைத்துக் கொண்டு போனார். ரயிலில் பயணம் செய்தார்கள். ஓடிசாவின் சுந்தர்கரில் கருஞ்சிறுத்தையை வேட்டையாட வந்திருக்கிறார்கள் என்பதைப் பயணத்தின் போது சிகிலன் அறிந்து கொண்டான். துரைமார்கள் வேட்டையாட போகும் எதற்காகத் தன்னை அழைத்துக் கொண்டு போகிறார்கள் என்று அவனுக்குப் புரியவில்லை.
சுந்தர்கரில் அவர்கள் முகாமிட்டார்கள். வேட்டைக்குக் கிளம்பும் நாளில் டி லா ஹே தனக்குப் புலி வேஷம் போடும்படியாகச் சொன்னார்.
“தெய்வம் அனுமதிக்காது துரை. என்னை மன்னிச்சிருங்க“ என்றான் சிகிலன்
“நான் தான் உனக்குத் தெய்வம். எனக்குப் புலிவேஷம் போடணும்னு ஆசை“. என்று துப்பாக்கியை அவனை நோக்கி நீட்டினார்
“என்னாலே முடியாது. என்னை விட்ருங்க“ என்று மன்றாடினான் சிகிலன்
“இந்தச் சாமி உத்தரவு கொடுத்தா புலிவேஷம் வரைவியா“ என்று கேட்டபடியே மது போத்தல் ஒன்றை அவன் முன்னால் நீட்டினார் டி லா ஹே.
அதை ஆசையாகக் கையில் வாங்கும் போது சிகிலன் மனதில் செத்துகிடந்த காளிங்கன் முகம் வந்து போனது. காரணமில்லாத அச்சம். போதையின் விருப்பு. இரண்டும் ஒன்று சேர்ந்து கொண்டன. சிகிலன் தனது வண்ணங்களைக் குழைக்க ஆரம்பித்தான்.
புலி வரைந்து முடித்த போது டி லா ஹேவால் நம்பமுடியவில்லை. தான் ஒரு புலி. வெள்ளைப்புலி. காளிங்கன் தன் முன்னே ஆடியது போல அவர் கைகளை நீட்டி முன்னால் பாய்ந்து ஆடினார். சிகிலன் அவரைக் கவனிக்காமல் குடித்துக் கொண்டிருந்தான்.
அன்றைக்குத் தன்னுடைய உடல் முழுவதும் புலி போல மாற்றிக் கொண்ட டி லா ஹே இரட்டைக் குழல் துப்பாக்கியை உயர்த்தியபடி காட்டிற்குள் வேட்டையாடச் சென்றார். இது என்ன பித்து என்று உடன் வந்தவர்களுக்குப் புரியவில்லை. ஆனால் அன்று டி லா ஹே ஆவேசத்துடன் கருஞ்சிறுத்தை ஒன்றை வேட்டையாடினார்.
கொன்ற சிறுத்தையின் மீது அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அன்றிரவு அவரும் சிகிலனும் ஒன்றாகக் குடித்தார்கள். அவர் சிகிலனின் கைகளை முத்தமிட்டு சொன்னார்
“உன்னை இங்கிலாந்துக்குக் கொண்டு போகப் போகிறேன். லண்டனின் வீதியில் நான் புலியாக நடமாடப் போகிறேன். “
போதையிலும் அந்தச் சொற்கள் அவனைக் கலக்கமடையச் செய்தன. ஒரு வேளை தான் இனிமேல் யானையடிக்கு திரும்பவே முடியாதோ என்று தோன்றியது. மறுநாளும் அவர்கள் வேட்டையைத் தொடர்ந்தார்கள். வேட்டையாடிய விலங்குகளை மாட்டுவண்டி ஒன்றில் ஏற்றிக் கொண்டு சென்றார்கள். டி லா ஹே தனது பரிசாகத் தங்கசங்கிலி ஒன்றை சிகிலனுக்கு அணிவித்தான்.

எப்படியாவது டி லா ஹேவிடமிருந்து தப்பிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். ஊர் வந்த மறுநாள் சிகிலனுக்குக் காய்ச்சல் கண்டது. விஷக்காய்ச்சல் என்று சொன்ன மருத்துவர் கொய்னா எடுத்துக் கொள்ளும்படி கொடுத்தார். உறக்கத்தில் ஏதோ உளறிக் கொண்டிருந்தான் சிகிலன். காய்ச்சல் குணமாகாத காரணத்தால் அவனை ஊருக்கு அனுப்பி வைப்பது என்று டி லா ஹே முடிவு செய்தார். அவன் புறப்பட்ட நாளின் இரவில் தான் டி லா ஹே படுக்கையறையில் கொல்லப்பட்டார். அவர் இறந்து போன தகவல் இரண்டு வாரங்களுக்குப் பிறகே சிகிலனுக்குத் தெரிய வந்தது. துரை தனது பரிசாகக் கொடுத்து அனுப்பிய பொருட்களில் அவரோடு எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றும், இரண்டு வெள்ளிக்கிண்ணங்களும் கொஞ்சம் பணமும் இருந்தன.
நல்ல வேளை டி லா ஹே இறந்து போனார். இல்லாவிட்டால் கப்பலேறி லண்டன் போயிருக்க வேண்டுமே என்று நினைத்துக் கொண்ட சிகிலன் எங்கே தன்னைத் தேடி துரையின் ஆட்கள் திரும்ப வந்துவிடுவார்களோ என்று பயந்து எந்த உறவும் இல்லாத ஊரில் வாழ்வது என்று அருப்புக்கோட்டைக்கு வந்து சேர்ந்தார். அங்கேயே குடும்பத் தொழிலான பொம்மை செய்வதை மேற்கொள்ள ஆரம்பித்தார். ஆனால் அதன்பிறகு அவர் புலி வேஷம் போடவேயில்லை
••
பூமாலை தனது அப்பாவிடமிருந்தே வரையக் கற்றுக் கொண்டார். கோவில் சுவர்களில் புராணக் கதைகளை ஓவியம் வரைவார்கள். அப்போதெல்லாம் சிரட்டையில் தான் வண்ணங்களைக் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். வண்ணக்கட்டிகளை வாங்கி வந்து உடைத்து வண்ணம் தயாரிக்க வேண்டும். அப்பாவிற்குச் சாமி படம் தவிர வேறு எதையும் வரையப் பிடிக்காது. ஆனால் பூமாலைக்கு மனிதர்களைத் தத்ரூபமாக வரைவது பிடிக்கும். அது போலவே புலி வேஷம் வரைவதும் பிடித்தமானது. ஆனால் வீட்டில் புலி வேஷமிடும் வேலையைச் செய்ய அனுமதிக்க மாட்டார்கள். கைச்செலவிற்காக ரகசியமாகச் செய்வது வழக்கம்.
அந்த ஊரில் இரண்டு சினிமா தியேட்டர்கள் இருந்தன. அதில் எந்தப் புதுப்படம் வந்தாலும் பூமாலையைத் தான் வரையக் கூப்பிடுவார்கள். பூமாலை அந்த ஊரின் புகழ்பெற்ற பேனர் ஆர்டிஸ்ட்டாக மாறினார்..
சினிமா பேனர்கள் என்றாலும் நிஜமாக நடிகர்கள் நேரில் நிற்பது போல வரைந்துவிடுவார். ஆட்கள் சினிமா தியேட்டரின் வாசலில் அவரது பேனரை வியந்து பார்ப்பதை அருகிலுள்ள டீக்கடையில் அமர்ந்து பூமாலை ரசித்துக் கொண்டிருப்பார்.
சில நாட்கள் அவரது அப்பாவைப் போலவே கோவில் சுவரில் படம் வரைவதும் உண்டு. ஒருமுறை சினிமா தியேட்டர் முன்பாக அவர் வரைந்து வந்த அம்மன் படத்திற்கான பேனரை சூடம் காட்டி கும்பிடுகிறார்கள் என்று கேள்விபட்டபோது மனம் மகிழ்ந்து போனார்.
வருஷத்தில் ஒரு வாரம் மட்டும் அவர் புலி வேஷம் வரைவது உண்டு. உண்மையில் அது தங்கள் குடும்பத்தை வாழ வைத்த கருப்பு கோவிலுக்குச் செய்கிற காணிக்கை என்றே நினைத்துக் கொள்வார்.
••
செந்தடி கருப்பு கோவிலுக்குப் போவதற்குக் காசியாபுரம் செல்லும் செம்மண் சாலையில் போக வேண்டும். வெட்டவெளியில் இருந்த காட்டுக்கோவிலது. அருகில் ஒரு வேப்பமரம் . தண்ணீர் தொட்டி. கோவில் பொருட்களை வைத்துக் கொள்ளச் சிறிய அறை. ஊர்கூடி தண்ணீர் பம் போட்டிருந்தார்கள். மின்வசதி செய்து வைத்திருந்தார்கள். கருப்புக் கோவில் பூசாரி பரமசிவம் லட்சுமியாபுரத்திலிருந்தார்.
செந்தடி கருப்புக் கோவிலில் மாசித் திருவிழா மிகவும் பிரபலமானது. அந்தத் திருவிழாவின் போது கோவிலைச் சுற்றி பந்தல் போடுவார்கள். நூறு கிடாக்களும் மேலாக வெட்டப்படும். திருவிழாவை முன்னிட்டு ஐந்து ஊர்களிலிருந்தும் ஆட்கள் புலி வேஷம் போட்டு ஆடி வருவார்கள். அடிவானம் வரை விரிந்து கிடக்கும் வெட்டவெளியில் செம்மண் புழுதிபறக்க புலிகள் ஆடிவருவதைக் காண விநோதமாக இருக்கும்.
இரண்டு சாதிக்காரர்கள் மட்டுமே புலி போட முடியும். அதுவும் வீதிக்கு ஒரு புலி தான் அனுமதிக்கபடும். அதுவும் வீமன் வாத்தியார் சொல்கிற ஆள் தான் புலி போட முடியும்.
வீமன் வாத்தியார் அந்த வட்டாரத்தில் புகழ்பெற்ற புலி வேஷக்காரர். பிறவியிலே பார்வையில்லாதவர். ஆனால் சிலம்பு. மான்கொம்பு சுற்றுவது எனத் துவங்கி புலி போடுவது வரை அவரை மிஞ்ச ஆள் கிடையாது. வீமன் வாத்தியார் மனைவி தான் லட்சுமியாபுரத்தின் பஞ்சாயத்து தலைவர். அவர்களுக்குத் திருமணமாகி முப்பது வருஷங்கள் கடந்து போனது. ஆனால் குழந்தைகள் இல்லை. அந்தக் கவலை தெரியாமல் இருப்பதற்காகவே தனது தங்கை சிவகாமி குடும்பத்தைத் தன்னோடு வைத்துக் கொண்டார் வீமன். பூமாலையை அவருக்கு ரொம்பவும் பிடிக்கும். காரணம் பூமாலை தான் வீமனை புலிவேஷம் போடவைத்து பெரிய ஆட்டக்காரனாக்கியது.
“கண்தெரியாத தன்னால் எப்படிப் புலி போட முடியும்“ என்று வீமன் தயங்கிய போது பூமாலை தான் சொன்னார்
“சிலம்பு வரிசை படிச்சிருக்கீங்கள்ளே. அதே அடிமுறை தான். சிவக்கண்ணுவை கூட வச்சிக்கிட்டா புலிப்பாய்ச்சலை பழக்கிவிட்ருவான். நான் புலி வரைந்து விடுறேன். உங்க திறமை உங்களுக்கே தெரியாது“
அப்படிச் சொன்னதோடு புலி வேஷம் வரைந்து தன்னைப் புலியாக்கி காட்டியவன் பூமாலை. அந்த வருஷ விழாவில் அவரும் ஆவேசம் வந்த புலி போல ஆடினார். அந்த நினைப்பு அவரது மனதில் அழியாமல் இருக்கிறது.
வீமன் வாத்தியார் புலி போடுவதில் நிறையக் கட்டுபாடுகளைக் கொண்டு வந்தார். புலி வேஷம் கட்டுகிறவன் விரதமிருக்க வேண்டும். குடி பொம்பளை சகவாசம் கூடாது. ஊர் கட்டுப்பாட்டினை மீறி எவரும் புலி போடக்கூடாது. வீமன் வாத்தியார் கட்டுப்பாட்டினை மீறிய பரமகுரு என்ற லட்சுமியாபுரத்து இளைஞனுக்குப் புலி வேஷம் போடுவதற்குத் தடை விதித்தார் வீமன் வாத்தியார்
அவன் “முடிந்தால் தடுத்துப் பாரு“ என்று வீமன் வாத்தியாரிடம் சவால் விட்டான்.
“அவன் புலி வேஷம் கட்டி வந்தால் உயிரோடு வீடு திரும்ப முடியாது“ என்றார் வீமன் வாத்தியார்.
வீமன் வாத்தியாரின் எச்சரிக்கையை மீறி பரமகுரு புலி போட்டான். செந்தடி கருப்பு கோவிலை சுற்றி நிறையப் போலீஸை குவித்திருந்தார்கள். நீண்ட பல வருஷத்திற்குப் பின்பு வீமன் வாத்தியாரும் புலி போடுவது என்றுமுடிவு செய்தார். அவர் களத்தில் இறங்கினால் நிச்சயம் வெட்டுகுத்து நடக்கும் எனப் பயந்த லட்சுமியாபுரவாசிகள் பரமகுருவை தடுத்து நிறுத்தியதோடு ஊரைவிட்டும் அனுப்பி விட்டார்கள்.
ஆனால் இது நடந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஆமத்தூர் ஜோசியரைப் பார்த்து வருவதற்காகக் காரில் சென்ற வீமன் வாத்தியாரும் உடன் சென்றவர்களும் விபத்தில் இறந்து போனார்கள். அது விபத்தில்லை. பரமகுரு தான் லாரியை விட்டு அடித்துக் கொன்றுவிட்டான் என்று பேசிக் கொண்டார்கள். ஆனால் வீமன் வாத்தியாரின் மரணத்திற்குப் பிறகு புலி போடுவதில் எந்தக் கட்டுபாடும் இல்லாமல் போனது. புலி சுற்றி வருவதில் அடிதடி நடந்தது. புலிவேஷமிட்ட ரெங்கனின் வலது கையை வெட்டிவிட்டார்கள். இதனால் போலீஸ் தலையிட்டு இனிமேல் எவரும் புலிவேஷம் போடக்கூடாது என்று தடை விதித்தார்கள்
இதனை எதிர்த்து காசியாபுரத்துக்கார்ர்கள் கோர்டிற்குச் சென்று அனுமதி பெற்று வந்தார்கள். அப்போதிலிருந்து யார் புலி வேஷம் போடுவது என்றாலும் காவல்துறையிடம் விண்ணப்பம் செய்து அனுமதி பெற வேண்டும். அதுவும் எந்த ஊரிலிருந்து புலி எத்தனை மணிக்கு புறப்பட வேண்டும். எந்த வழியே வர வேண்டும் என்பது தீர்மானிக்கபட்டது.
••

அந்த வரும் காசியாபுரம் பஞ்சாயத்து தலைவர் தங்க மாரியப்பனின் கடைசி மகன் எழில் புலி போடுவதாக இருந்தான். அவன் மைனர் போலச் சுற்றி அலைபவன். அவனுக்குப் புலி வரைவதற்காகப் பூமாலையை அழைத்து வந்திருந்தார்கள்.. கையில் சிகரெட் புகைய புலி போடுவதற்காக அமர்ந்திருந்தவனைக் கண்டதும் பூமாலைக்குக் கோபம் வந்தது. எழில் மிதமிஞ்சிய போதையில் இருப்பது அவனின் கண்களிலே தெரிந்தது.
“இப்படிக் குடிச்சிட்டு மட்டு மரியாதை இல்லாம நிக்குறவனுக்கு எல்லாம் நான் புலி போட மாட்டேன்“ என்றார் பூமாலை
“குடுக்குற காசை வாங்கிட்டுப் பெயிண்ட் அடிச்சிவிடுறா. பெரிய பருப்பு மாதிரி பேசுறே“ என்றார் தனுக்கோடி
“,இது சாமி காரியம். அப்படி எல்லாம் செய்ய முடியாது. அதுக்கு வேற ஆளை பாருங்க“
“பெடதிலே நாலு போட்டுச் செய்ய வைப்பியா. இவன்கிட்ட போயி பேசிகிட்டு இருக்கே“ என்றார் சின்னராமு.
பூமாலைக்குக் கோபம் வந்தது.
“அதுக்கு எல்லாம் பயந்த ஆள் நானில்லை. “
“அந்த விறகு கட்டை எடுறா“ என்று தனுக்கோடி ஆவேசமானார். அவர்கள் ஐந்து பேரும் சேர்ந்து பூமாலையைத் தாக்கினார்கள். மணிக்கட்டிலே அடித்துக் கையை உடைத்தார்கள். “இந்தக் கை இருந்தா தானே பெயிண்ட் அடிப்பே“ என்று சொல்லிச் சொல்லி அடித்தார்கள்.
வலது கை மணிக்கண்டு உடைந்து பூமாலை இரண்டு மாதங்கள் சிகிட்சை எடுத்துக் கொண்டார். சோற்றை அள்ளி சாப்பிடுவதற்குக் கூட முடியவில்லை. தனுக்கோடி ஆட்கள் மீது போலீஸில் புகார் கொடுத்தும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
அந்த வருஷத்தோடு அவரைப் புலிவேஷம் வரைவதற்கு எவரும் கூப்பிடுவதுமில்லை. மதுரையிலிருந்து ஆள் கூட்டிவரத் துவங்கினார்கள். பூமாலையை வைத்து எவரும் புலி வரையக்கூடாது என்றும் ஊர் தடை உருவாக்கினார்கள்.
இந்த அவமானத்தை எல்லாம் அனுபவித்த போது பூமாலை மனதில் ஒரு வெறி தோன்றி மறைந்தது. “இத்தனை வருஷம் எவன் எவனுக்கோ புலி போட்டு விட்ருக்கேன். ஆனால் என் மரியாதை இவங்களுக்குத் தெரியலை. இந்
April 25, 2024
கவனிக்க மறந்த மனிதர்கள்
(கிதார் இசைக்கும் துறவி சிறுகதைத் தொகுப்பு குறித்த வாசிப்பனுபவம்)
டாக்டர் இரா.மௌலிதரன்

கிதார் இசைக்கும் துறவி இந்த வருடம் வெளியான பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சிறுகதைத் தொகுப்பு , அதற்குக் காரணம் அதன் ஆசிரியர் . எஸ் ரா அவர்கள் சிறுகதையில் ஒரு மாஸ்டர் என்றுதான் சொல்ல வேண்டும் . இத்தனை வருடங்களுக்குப் பிறகும் இத்தனை கதைகளுக்குப் பிறகும் அவருக்கு எழுதுவதற்கு ஒரு சிறுகதையாக என்ன மிஞ்சியிருக்கிறது என்ற கேள்வியே என்னை இந்தப் புத்தகத்தை நோக்கிய பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது . இப்படி மாஸ்டர் களின் சம காலப் புதிய படைப்புகளைத் திறக்கும் முன் எனக்குள் ஒரு அசரீரி போல ஒலிப்பது அ .முத்துலிங்கம் அவர்களின் ஒரு வாக்கியம் தான் . ” நூறு நாற்காலிகளைச் செய்த ஒரு தச்சனுக்கு 101 ஆவது நாற்காலி செய்வது மிகச் சுலபம் , அதுவே 100 சிறுகதைகளை எழுதிய ஒரு எழுத்தாளனுக்கு 101 ஆவது சிறுகதை எழுதுவது தன் முதல் கதையை எழுதுவதை விட மிக மிகக் கடினமான ஒன்று “.இந்த வாக்கியம் எந்த அளவுக்கு உண்மை என்பதை எஸ் ரா அவர்கள் போன்ற மாஸ்டர்கள் கூறினால்தான் நமக்குத் தெரியும் .

இந்தத் தொகுப்பில் மொத்தம் 18 சிறுகதைகள் உள்ளன .கதைகளுக்குள் செல்லும் முன் என்னை வெகுவாகக் கவர்ந்தது அக்கதைகளின் தலைப்புகள் தான் . மிகவும் மாறுபட்ட , கவித்துவமான , புதுமையான தலைப்புகள் . தலைப்புகளே தங்கள் கதைகளை வாசிக்க அழைக்கின்றன . குறிப்பாக இந்தப் புத்தகத்தின் பெயரான “கிதார் இசைக்கும் துறவி ” என்ற தலைப்பு எவ்வளவு மாறுபட்ட , புதுமையான ஒரு தலைப்பு . ஒரு மொட்டை தலையுடன் ,காவி அங்கியுடன் ஒரு பௌத்த துறவி ஏன் கிதார் போன்ற ஒரு நவீன இசைக்கருவியை வாசிக்க வேண்டும் ? அதுவும் ஒரு நாளில் வெறும் 7 நிமிடம் மட்டுமே வாசிக்கும் அவரை வேடிக்கை பார்க்க ஏன் அவ்வளவு கூட்டம் திரள வேண்டும் ? இப்படி ஒரு வாசகனாக யோசிக்கும் வேளையில் கதை அந்தத் துறவியைப் பற்றியோ , கிதார் பற்றியோ அல்ல மாறாக ஒரு தந்தைக்கும் அவருடைய இளம் பருவ மகளுக்கும் இடையே சுருங்கி விரியும் உறவை பற்றியது என்பது கதையை வாசிக்கும்பொழுதுதான் நமக்குப் புரிகிறது .
எஸ்.ரா இந்தத் தொகுப்பில் பல புதுமையான பரிசோதனைகளைத் தன் சிறுகதைகள் மூலம் நிகழ்த்தி பார்த்திருக்கிறார் . இந்த வேட்கைதான் இத்தனை வருடமாக எஸ் ரா வை தொடர்ந்து எழுதவைத்துக்கொண்டிருக்கிறது . அவருக்கு மிகவும் ஆதர்சமான செகாவை பற்றி ஒரு கதை { செகாவின் துப்பாக்கி } , காஃப்கா வின் உருமாற்றம் போல – பனிக்கரடியாக உருமாறும் ஒரு அரசு அதிகாரி { பனிக்கரடியின் கனவு } , ஒரு எழுத்தாளன் வீட்டின் கதவை தட்டி கவிதைகளை மட்டுமே பிடிக்கும் உனக்கு ஏன் கதைகளைப் பிடிப்பதில்லை என்று கேள்வி கேட்கும் கதைகள் { கதவை தட்டும் கதைகள் } , ஹெர்மன் மெல்வில் உடைய MOBY -DICK கதையைக் களமாகக் கொண்டு ஒரு கல்லூரி ஆசிரியருக்கும் – மாணவிக்கும் இடையே நிகழும் ஒரு புரிதலின் போராட்டம் { வகுப்பறையில் திமிங்கலம் } . இப்படிப் பல் வேறு வகையில் அவர் தமிழ் சிறுகதைக்கு ஒரு புதிய பாதைக்கான தேடலில் தன்னையும் தன் வாசகர்களையும் கைகோர்த்து அழைத்துச்செல்கிறார் .
எப்பொழுதும் இந்த உலகம் கண்டுகொள்ளாத ஒருவனை இலக்கியம் மட்டும் தான் உற்றுநோக்கும் . இலக்கியவாதியின் கண்களுக்கு மட்டும்தான் அவன் தெரிவான் . இவனும் இந்த உலகத்தில் நம்மோடு உருவத்தால் மட்டுமே மனிதன் என்று இந்த உலகம் அடையாளப்படுத்தும் ஒரு அவல நிலையை அகற்றி அவனும் பசி , சிரிப்பு, துக்கம் , காதல் , அன்பு , கண்ணீர் , ஏக்கம் ,கோபம் , ரௌத்ரம் என அனைத்து உணர்வுகளும் கொண்ட ஒரு சராசரி மனிதன் தான் என்பதை உணர்த்துவதுதான் இலக்கியம் . அந்த வகையில் ” இரவு காவலாளியின் தனிமை ” ” முகமது அலியின் கையெழுத்து ” ஆகிய இரு கதைகளும் நம் அன்றாட வாழ்வில் நாம் எளிதில் கடந்து சென்று கவனிக்க மறந்த இரு உன்னதமான உயிர்களைப் பற்றிய கதைகளே .
இந்தத் தொகுப்பில் என்னைப் பெரிதும் பாதித்த ஒரு கதை என்றால் ” தலைகள் இரண்டு ” என்ற கதைதான் . ஒரு மருத்துவனாக இறந்த மனித உடல்களைக் கூறுபோட்டும் , பிறவி குறைபாடு காரணத்தால் இறந்த சிசுக்களைக் கண்ணாடி குடுவையில் அடைத்துப் பாடம் படித்துப் பழகிய எனக்கு அந்த இரட்டை தலை கொண்ட சிசுவுக்கு ஒரு அன்னை இருப்பாள் , அந்தச் சிசுவுக்கு ஒரு அண்ணனோ , அக்காவோ இருப்பாள் , அவர்கள் குடும்பத்தில் இன்றும் அந்தச் சிசு அவர்களின் நினைவுகளில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பான் என்றோ நாங்கள் எண்ணிப்பார்த்ததே இல்லை . இது தான் ஒரு இலக்கியவாதியின் பார்வைக்கும் ஒரு சராசரி மனிதன் அவன் மருத்துவனாகவே இருந்தாலும் அவனுடைய பார்வைக்கும் உள்ள வேறுபாடு .
தன் அன்னை சொல்லி கேட்டு , தன் நினைவுகளில் மட்டுமே இருந்த தம்பியை முதல் முதலில் கண்ணாடி குடுவையில் கண்டவுடன் அவன் ஓடோடி தன் அன்னையிடம் கூறி , இருவரும் அந்த நினைவு அலைகளால் கரையொதுக்கப்பட்டுத் தம்பிக்கு ஏன் நாம் பெயர் வைக்கவில்லை என்று வினவுகின்றனர் ? உயிருள்ளவருக்குத்தான் , உயிருள்ளவரைதான் இங்கு எல்லாமே , இறந்த பின் இங்கு அனைவரும் வெறும் உடல்கள் மட்டுமே . ஆனால் , கதையின் முடிவில் தாய் மனம் கொள்ளாமல் தன் உயிரின் ஒரு பாதியை அதுவும் இரட்டை பாதியை நேரில் சென்று கண்டு அதற்கு ஒரு பெயர் அல்ல இரண்டு பெயர்கள் சூட்டுவது இலக்கியத்தின் உச்சம் .
இரண்டு தலைகள் உள்ளதால் அவர்கள் இரண்டு மகன்கள் அதனால் இரண்டு பெயர்கள் . இனி அந்த அருங்காட்சியகத்திற்குத் தவறாமல் ஒரு பார்வையாளர் வருவார் , வெறும் பார்வையாளராக மட்டுமல்லாமல் ஒரு தாயாக அதுவும் இரண்டு மகன்களின் தாயாக . இத்தனை அன்பு நிறைந்த அம்மாக்களின் இதயம் வெறும் ரத்தமும் சதையும் மட்டுமே கொண்டு இயங்குகிறது என்பதை நம்புவது சற்று கடினமான ஒன்று தான் .
***
புத்தரின் கையில் எனது சிறுகதைத் தொகுப்பான கிதார் இசைக்கும் துறவியை அளித்த டாக்டர் மௌலிதரனுக்கு நன்றி
—
April 24, 2024
துப்பாக்கி ஏந்திய துறவி
2006 இல் பூட்டான் ஜனநாயக நாடாக மாற விரும்பியது. அதுவரை நடைபெற்று வந்த மன்னராட்சி முடிவுக்கு வரவே பொதுத்தேர்தலை நடத்த முடிவு செய்தார்கள்.
தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாதிரி தேர்தல் ஒன்று ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்தப் பின்புலத்தில் உருவாக்கப்பட்ட படமே The Monk and the Gun.

2023 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தைப் பாவோ சோய்னிங் டோர்ஜி இயக்கியுள்ளார். இப்படம் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதிற்குப் போட்டியிட்டது
கதை மூன்று சரடுகளைக் கொண்டிருக்கிறது. தேர்தலை விரும்பாத லாமா மேற்கொள்ளும் முயற்சிகள். அவர் தனக்கு ஒரு துப்பாக்கி வேண்டும் என்கிறார். எதற்காகத் துப்பாக்கி கேட்கிறார் என்று தெரியாமலே அதைத் தேடி அலைகிறான் இளந்துறவி தாஷி
இரண்டாவது சரடு மாதிரி தேர்தல் நடத்துவதற்கான ஆயுத்தப்பணிகளை மேற்கொள்ளும் தேர்தல் அதிகாரி ஷேரிங்கின் பயணம். மூன்றாவது சரடு பழங்கால ஆயுதங்களை வாங்கி விற்கும் அமெரிக்கரான ரான் கோல்மனின் பூட்டான் வருகை.
இந்த மூன்று சரடுகளும் ஒன்றையொன்று தொட்டும் விலகியும் சென்று படத்தின் இறுதியில் ஒன்றுசேருகின்றன.

விவசாயி ஒருவரிடமுள்ள பழங்காலத் துப்பாக்கி ஒன்றைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதை வாங்குவதற்காகப் பூட்டான் வருகிறான் ரான். வழிகாட்டி ஒருவனுடன் காரில் பயணம் செய்கிறான். ரான் கோல்மன் தீவிரவாதச் செயல்களில் தொடர்பு கொண்டவனோ எனச் சந்தேகம் கொண்டு காவல்துறை அவனைப் பின்தொடர்கிறது.
நீண்டகாலமாக துப்பாக்கியைப் பாதுகாத்து வரும் விவசாயி வீட்டிற்குப் போகிறார்கள். அந்தத் துப்பாக்கிக்கு 75 ஆயிரம் டாலர் தருவதாகச் சொல்கிறான் ரான். பெரியவரோ அவ்வளவு தொகை தேவையற்றது. நான் என்ன வைரத்தையா விற்கிறேன் என்று மறுக்கிறார். அதிகப் பணம் வேண்டாம் என்று சொல்லும் ஒருவரைக் கண்டு ரான் வியப்படைகிறான். பரவாயில்லை. வைத்துக் கொள்ளுங்கள், உங்கள் கடனை அடையுங்கள் என்று வழிகாட்டி பென்ஜி சொல்கிறான். ஆனால் உரிய பணம் கொடுத்தால் போதும் என்கிறார் விவசாயி . அவர்கள் பணத்தைத் திரட்டி வர நகருக்குச் செல்கிறார்கள்

ரேடியோவின் மூலம் தேர்தல் பற்றிய அறிவிப்பினைக் கேள்விப்பட்ட லாமா வரவிருக்கும் பௌர்ணமிக்கு முன் இரண்டு துப்பாக்கிகளைக் கொண்டு வருமாறு தாஷியிடம் கேட்டுக்கொள்கிறார். விவசாயி வீட்டில் துப்பாக்கி இருப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டு அங்கே வரும் தாஷி வெற்றிலைபாக்கிற்கு ஈடாகத் துப்பாக்கியைப் பெற்றுக் கொள்கிறான். ஒரு புத்தபிக்கு துப்பாக்கி ஏந்தி நடக்கும் காட்சி விநோதமாகவுள்ளது.
ஆத்திரமான ரான் எப்படியாவது புத்தபிக்குவிடமிருந்து துப்பாக்கியை வாங்கிவிட முயலுகிறான். இந்த முயற்சி என்னவானது என்பதையே படம் விவரிக்கிறது
அதுவரை தேர்தலைப் பற்றிக் கேள்விப்பட்டிராத பூட்டானிய மக்கள் எப்படி வாக்களித்தார்கள் என்பதைப் படம் வேடிக்கையாகச் சித்தரிக்கிறது.

படத்தில் தொலைக்காட்சி பார்ப்பதற்காக ஒரு பெட்டிக்கடையில் கிராமத்து மக்கள் திரண்டிருக்கிறார்கள். ஜேம்ஸ்பாண்ட் படத்தை ஆசையாகப் பார்க்கிறார்கள். கோக்கைக் கறுப்புத் தண்ணீர் என்று தாஷி சொல்வதைக் கேட்க வேடிக்கையாக இருக்கிறது.
பூட்டானிய சமுதாயத்தில் துப்பாக்கி அரிதான பொருள். தாஷி துப்பாக்கி தேடியும் போது ஒரு இளம் பெண் தான் இதுவரை துப்பாக்கியை நேரில் கண்டதேயில்லை என்கிறாள்.
ஜனநாயக நடவடிக்கையை விரும்பாத லாமா படத்தின் இறுதிக்காட்சியில் ஒரு சடங்கு செய்கிறார். அது சமாதானத்தின் அடையாளம்
வேறு ஒரு காட்சியில் பெட்டிக்கடை சிறுமி சிறுமி. ஜேம்ஸ்பாண்ட் படத்தை ஆசையாக ஒட்டுகிறாள். தாஷி தனக்கு இரண்டு ஏ.கே.47 துப்பாக்கிகள் வேண்டும் என்கிறான். பூட்டானில் துப்பாக்கி விற்பனை ரகசியமாக நடைபெறுவதைப் படம் சித்தரிக்கிறது.

பூட்டானின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தொலைக்காட்சி முக்கியப் பங்கு வகிக்கிறது. தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றில் நிலவில் தரையிறங்கும் காட்சிகள் மெதுவாக MTV யின் லோகோவாக மாறுகின்றன. ஜேம்ஸ் பாண்ட் 007யை மக்கள் விரும்புகிறார்கள். தேர்தல் அறிவிப்புகள் தொலைக்காட்சி வழியாகக் கிராமத்து மக்களைச் சென்றடைகின்றன. பசு மாட்டினை விற்றுவிட்டு விவசாயி புது டிவி வாங்குகிறான். CNN, BBC மற்றும் அல்-ஜசீரா போன்ற சர்வதேச ஊடகங்கள் தேர்தலைப் பார்வையிட வருகின்றன.
தேர்தல் அதிகாரியும் தாஷி பயணம் செய்யும் காட்சி. விவசாயி வீட்டில் ரானுடன் நடைபெறும் உரையாடல். பள்ளி சிறுமியும் அம்மாவும் பேசிக் கொள்ளும் காட்சி. ஸ்தூபியின் முன்பு நடைபெறும் இறுதிக்காட்சி போன்றவை மறக்க முடியாதவை. மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளன.
பூட்டானிய விவசாயி ஏன் அதிகப் பணம் வேண்டாம் என்று மறுக்கிறார். அது தான் பௌத்தம் கற்றுத்தந்த பாடம். எளிய வாழ்க்கை போதும் என்று நினைக்கிறார் விவசாயி. அவர் சாப்பிடும் காட்சி அதற்கு ஒரு உதாரணம். பை நிறையப் பணத்துடன் அலையும் ரானை விடவும் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். தனக்குத் தேவை ஒரு அழிரப்பர். தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு உடனடியாக வேண்டும் என்று பள்ளிச்சிறுமி கேட்கிறாள். அது தான் பூட்டான் மக்களின் குரல்.
ரானுடன் தேர்தல் அதிகாரி உரையாடும் போது அவன் ஆர்வம் காட்டுவதில்லை. அவனது நோக்கம் வேறு. பூட்டான் குறித்த அமெரிக்காவின் நிலைப்பாடு இத்தகையதே. அதையே ரானின் மூலம் காட்டுகிறார்கள்.
பூட்டானிய கிராமப்புறங்களின் அழகைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்கள். படத்தின் கிளைக்கதை போல விரியும் பள்ளிச்சிறுமியின் கதை மொத்த படத்திற்குமான குறியீடு போல உருவாக்கப்பட்டிருக்கிறது.
பூட்டானியர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த மாற்றம் ஊடகங்களால் உருவாக்கப்படுகிறது. பூட்டானியர்களால் மன்னரை, பௌத்த சமயத்தைக் கைவிட முடியாது. அதே நேரம் மரபான வாழ்க்கை முறையிலிருந்து விடுபட்டு நவீன நுகர்வு கலாச்சாரத்தில் வாழ விரும்புகிறார்கள். இந்த இரட்டை மனநிலையின் அடையாளமே துப்பாக்கி ஏந்திய துறவி.
••
April 22, 2024
தமிழக ஓவிய மரபுகள்
நாளை செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் நடைபெறவுள்ள தமிழக ஓவிய மரபுகள் குறித்த பயிலரங்கில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறேன்.
 
  உலகப் புத்தக தினம்
நாளை ஏப்ரல் 23 உலகப் புத்தக தினம். யுனெஸ்கோ 1995 ம் ஆண்டு முதல் ஏப்ரல் 23 ம் தேதியை உலக புத்தக மற்றும் காப்புரிமை தினமாக கொண்டாடி வருகிறது.
இந்த தினம் ஷேக்ஸ்பியர் மற்றும் செர்வாண்டஸின் நினைவுநாளாகும்.
உலகம் முழுவதும் புத்தக தினக் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.

வாசகர்கள். சக படைப்பாளிகள் , பதிப்பாளர்கள். புத்தக விற்பனையாளர்கள். நூலகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உலகப் புத்தக தின வாழ்த்துகள்.
தேசாந்திரி பதிப்பகம் இதனைக் கொண்டாடும் விதமாக எனது அனைத்து நூல்களுக்கும் 15 சதவீத தள்ளுபடி அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலமோ, நேரிலோ புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

தேசாந்திரி பதிப்பகம்
டி1, கங்கை குடியிருப்பு
எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93
எஸ்.ராவிடம் கேளுங்கள் -2
தேசாந்திரி யூடியூப் சார்பாக வெளியாகும் எஸ்.ராவிடம் கேளுங்கள் பகுதி இரண்டு
April 20, 2024
நீலச்சக்கரம் / கடிதம்
எனது சிறார் நூலான நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்தினை வாசித்து தங்ககோபி என்ற பள்ளிச்சிறுவன் எழுதிய கடிதம். மாணவர்கள் மத்தியில் புத்தக வாசிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். இன்று பல்வேறு பள்ளிகளில் அதற்கான முயற்சிகளை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்


 
  S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers
 


