S. Ramakrishnan's Blog, page 34

April 26, 2024

சிறகுள்ள புலி

புதிய நெடுங்கதை.

அந்த வழக்கில் தீர்ப்பு வருவதற்குப் பதினாறு ஆண்டுகள் ஆகியிருந்தது. இன்று அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்போகிறார்கள் என்று தெரிவித்தார்கள்.

பூமாலை கொல்லப்பட்ட போது வெயிலானுக்கு வயது ஆறு. அந்த வழக்கில் எதிரிகளில் ஒருவராகக் குற்றம் சாட்டப்பட்ட தனுக்கோடி நாலு ஆண்டுகளுக்கு முன்பாக இறந்து போய்விட்டார். முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட தங்கமாரியப்பன் இப்போது நகராட்சி துணைத் தலைவராகிவிட்டார். அவரது இரண்டாவது மகன் ஆனந்த் உள்ளூரிலே வக்கீல் , அடுத்தவன் பிரபு பைபாஸ் ரோட்டில் பெரிய ஹோட்டல் வைத்திருக்கிறான்.

“இந்த நேரம் காசைக் கொடுத்துத் தீர்ப்பை மாற்றியிருப்பார்கள். ஒருத்தனையும் கோர்ட் தண்டிக்காது. இத்தனை வருஷம் கேஸ் நடத்த காசு செலவானது வேஸ்ட்“ என்று நினைத்துக் கொண்டான் வெயிலான். அவனுக்கு அப்பாவைப் பிடிக்காது. அம்மாவை இரண்டாம் தாரமாக கட்டிக் கொண்டதோடு அவளை நடுத்தெருவில் தவிக்க விட்டுப் போனவர் என்பதால் தீராத ஆத்திரமிருந்தது.

வீட்டிலிருந்த தந்தையின் புகைப்படத்தைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்குக் கோபமாக வரும். “இவருக்கு எதுக்குப் புலி போடுற ஆசை. ஒழுங்கா படம் வரைஞ்சிட்டு நாலு காசை பாத்துகிட்டு இருக்க வேண்டியது தானே. புலி போடப்போயி தானே இத்தனை வில்லங்கமும்“ என்று நினைத்துக் கொள்வான். ஆனால் அவனது அப்பாவைப் பற்றி அம்மா எப்போதும் பெருமையாகச் சொல்வாள்

“அவரு கைபட்டா சோதா பய கூடப் புலியாகிருவான். கோவில் சுவத்துல இருக்கே ஆள் உயர மாரியம்மன் படம். அதை வரைஞ்சது அவரு தானே. அவரு வரைஞ்ச படத்தைத் தானே இன்னைக்கும் சாமியா கும்பிடுறாங்க. அந்தச் சாமி நமக்கு நல்ல வழியைக் காமிக்கும் வெயிலா“ என்பாள் சிந்தாமணி

அவனுக்கு நம்பிக்கையில்லை. கோவிலை ஒட்டிய கிணற்றில் அப்பா முகம் வீங்கி செத்து மிதந்த காட்சி அவன் மனதிலிருக்கிறது. அது கொலை தான். சந்தேகமில்லை. ஆனால் எதற்காகக் கொன்றார்கள் என்று புரியவேயில்லை. வீறாப்பிற்காக அப்பா புலி போட்டு செத்துப் போனார். இனிமேல் அவர்களைத் தண்டித்து என்ன ஆகப்போகிறது. செத்துப்போனவருக்கு என்ன தண்டனை தந்துவிட முடியும்

அவன் வேலை செய்யும் பரோட்டா கடைக்கு ஒன்றிரண்டு தடவை தனுக்கோடி சாப்பிட வந்திருக்கிறார். போதையில் தள்ளாடியபடி வந்து அமர்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருப்பார். அப்போது மனதிற்குள் கோபம் கொப்பளிக்கும். வேண்டுமென்றே அவருக்குப் போடுகிற கொத்துப் புரோட்டாவில் எச்சில் துப்பிக் கொத்துவான். அதற்கு மேல் என்ன செய்துவிட முடியும்.

••

“நான் கோர்ட்க்கு கிளம்புறேன். நீயும் வந்துரு“ என்றாள் வெயிலானின் அம்மா சிந்தாமணி

“நான் வரலை. அங்கே போயி யாரு காத்துக் கிடக்கிறது. “

“அதுக்காகத் தீர்ப்பு சொல்ற அன்னைக்கு நாம போக வேண்டாமா“

“நீதி நியாயம் எல்லாம் நமக்குக் கிடைக்காது. அப்படியே கிடைச்சாலும் அதை வச்சி என்ன செய்யப்போறே“

“அவிங்க அத்தனை பேரும் ஜெயிலுக்குப் போகணும். அப்போ தான் என் மனசு ஆறும்“

“ நீ எப்படியோ போய்த் தொலை.. எனக்கு வேலையிருக்கும்மா… இந்த ஆளை மாதிரி வெறிச்சிகிட்டு இருந்தா வெட்டியா சாக வேண்டியது தான்“

“உங்கப்பாவை பற்றி இப்படிப் பேசாதேனு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்“

“அப்படிதான் பேசுவேன். இந்த ஆளு கெட்ட கேடுக்கு ரெண்டு பொண்டாட்டி வேற. அதைக் கேட்க உனக்குத் துப்பு இல்லை“

“அது என்பாடு. நான் பாத்துகிடுவேன். நீ போறதுன்னா போடா. நான் சாரதி கூடப் போய்கிடுவேன்“

“அந்த நாயி இந்த வீட்ல காலை வச்சா. வெட்டிப்புடுவேன் பாத்துக்கோ. நீ ஏன் அவன் கால நக்கிட்டு கிடக்கே“

“அவனும் உங்கப்பனுக்குப் பிறந்தவன் தானே. உனக்கு அண்ணன் தானே. “

“அண்ணே கிண்ணேனு சொல்லாதே. அவனைக் கண்டாலே எனக்குப் பிடிக்காது“.

“சண்டைபோட்டுக்க வேண்டிய பொம்பளை ரெண்டு பேரும் ஒண்ணா போயிட்டோம். உங்களுக்கு என்னடா கோபம்“

“எனக்கு மானம் ரோசம் இருக்கு.. உப்பு போட்டு திங்குறேன். அதான்“

“இந்த ரோசம் தான் உங்கப்பனை புலி போட வச்சது“

“அந்தக் கதை எல்லாம் வேணாம். நான் கிளம்புறேன்“

என்று தனது பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பினான் வெயிலான். அவன் வேலை செய்யும் பரோட்டா கடை பைபாஸ் ரோட்டில் இருந்த்து. மாலையில் தான் வேலை. இரவு இரண்டு மணி கடை திறந்திருக்கும். ஆகவே அவன் வீடு திரும்ப இரவு மூன்று மணியாகிவிடும். பெரும்பான்மை நாட்கள் பகலில் உறங்கிவிடுவான். மதியம் இரண்டு மணிக்கு எழுந்து குளிப்பான்.மதிய சாப்பாடு சாப்பிட நான்கு மணியாகிவிடும்.

நட்சத்திர வடிவத்தில் ஸ்டார் பரோட்டா என்று அவன் அறிமுகம் செய்து வைத்த பரோட்டா பலருக்கும் பிடித்துப் போய்விட்டது. ஆகவே அதைச் சாப்பிடுவதற்கென்றே நிறைய இளைஞர்கள் கடைக்கு வந்தார்கள். அவன் போடுற கொத்துப் பரோட்டாவில் என்ன சேர்க்கிறான் என்று கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அதன் ருசி நிகரில்லாதது.

••

தங்க மாரியப்பனின் கார் அருப்புக்கோட்டை கோர்ட் வளாகத்தினுள் நுழைந்த்து. மரத்தடியில் காத்துக் கொண்டிருந்த சிலர் காரை நோக்கி வந்தார்கள். வக்கீல் தனபால் யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தார். தங்க மாரியப்பன் அவரை நோக்கி நடந்தார்

“தீர்ப்பு எத்தனை மணிக்கு வாசிப்பாங்க“ என்று கேட்டார் தங்க மாரியப்பன்

“பனிரெண்டரை ஆகிரும். நீங்க நம்ம ரூம்ல வந்து உட்காருங்க. நீங்க பயப்படுற மாதிரி ஒண்ணும் ஆகாது“

“அவங்க பக்கம் தீர்ப்பு வந்தா ஹைகோர்ட் இருக்கு பாத்துகிடுவோம்“ என்றார் தங்க மாரியப்பன்.

“அதுக்கெல்லாம் தேவையே இருக்காது“ என்று உறுதியாகச் சொன்னார் தனபால். தங்க மாரியப்பன் தனது மேல்சட்டைப் பையினுள் கையை விட்டு ஐநூறு ரூபாய்களை எடுத்தார். அதில் பாதியை எண்ணாமல் அப்படியே தனபால் கையில் கொடுத்தார்.

“நீ வச்சிக்கோ. என் கூட வந்துருக்கப் பசங்க ஒருத்தனும் சாப்பிடலை. ஏதாவது பாத்து வாங்கிக் குடு“

தனபால் பவ்வியமாகப் பணத்தை வாங்கிக் கொண்டார். இதற்குள் தங்க மாரியப்பன் போன் அடிக்கத் துவங்கியது. அவர் விலகி நின்று யாருடனோ பேச ஆரம்பித்தார்.

••

“புலி வேஷமிட்ட பூமாலை கிணற்றில் தவறி விழுந்து இறந்து போனது தற்செயல் நிகழ்வு. அது திட்டமிட்டுச் செய்யப்பட்ட கொலை இல்லை“ என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மூன்று குற்றவாளிகளும் அனைத்துக் குற்றசாட்டுகளில் இருந்தும் விடுவிக்கபட்டார்கள்.

தங்கமாரியப்பன் வியர்த்து ஈரமாகி உடலோடு ஒட்டியிருந்த வெள்ளைசட்டையை உதறிக் கொண்டபடியே வெளியே வந்தார். இத்தனை ஆண்டுகள் இழுவையாக இழுந்த வழக்கு தன் பக்கம் முடிந்து போனது மகிழ்ச்சி அளித்த்து.

அந்தச் சந்தோஷத்துடன் காரை நோக்கி நடக்கத் துவங்கினார். அவர் கண்ணில் மண்விழுந்தது போலிருந்த்து. மண்ணைத் துடைப்பதற்காகக் கைகளை முகத்தில் வைத்தபோது யாரோ அவர் மீது வெட்டுவதற்குப் பாய்வது போலிருந்த்து. தன்னை அறியாமல் சப்தமிட்டபடியே அவர் தரையில் விழுந்தார். கோர்ட் வாசலில் நின்றிருந்த காவலர்கள் ஒடி வந்தார்கள். கையில் அருவாளுடன் ஒரு இளைஞன் ஆவேசமாக நிற்பது அவரது கண்ணில் தெரிந்த்து. அந்த இளைஞனை காவலர்கள் பிடித்து இழுத்துக் கொண்டு போனார்கள். தரையில் விழுந்ததால் கையில் சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. வேஷ்டி முழுவதும் புழுதி. எழுந்து கையைத் துடைத்துக் கொண்டு கோபத்துடன் “எங்கடா போய்த் தொலைஞ்சீங்க“ என்று உடன் வந்தவர்களை நோக்கிக் கத்தினார். அவர்கள் பதில் சொல்வதற்குள் “அந்த நாயி யாரு“ என்று கேட்டார். அவரது தோளில் ஏற்பட்ட வெட்டுக்காயத்தில் ரத்தம் கசிந்து சட்டையில் பட்டது. சட்டையைக் கழட்டி உதறியபடியே ஏதோ சொல்ல முயன்று சுயஉணர்வின்றி மயங்கி விழுந்தார்.

••

பூமாலையின் தாத்தா பெயர் சிகிலன். வெள்ளைக்காரர்கள் காலத்திலே புலி வேஷம் வரைவதில் பெயர் பெற்றவர். இவரது திறமையைக் கண்டு வியந்து டி லா ஹே என்ற வெள்ளைக்காரன் தன்னோடு மதராஸிற்கு அழைத்துக் கொண்டு போனான் என்கிறார்கள்.

அவனுடன் சிகிலன் நிற்கும் புகைப்படம் ஒன்று பூமாலை வீட்டிலிருந்தது. பரம்பரையாக அவர்கள் வண்ணக்காரர்கள். அதாவது வண்ணம் தீட்டுகிறவர்கள். கோவில் வேலைகளும் அலங்கார பொம்மைகளும் செய்வது வழக்கம்.

பூமாலை தனது குடும்ப வரலாற்றைப் பற்றிய சில கதைகளைக் கேட்டிருக்கிறார். அவற்றைப் பற்றி எப்போது நினைத்துக் கொண்டாலும் அவரது மனது கனத்துவிடும். எப்பேர்பட்ட ஆட்கள் என்று சொல்லிக் கொள்வார். தனது தாத்தா சிகிலனை மனதில் வணங்கியே எந்தக் காரியத்தையும் செய்ய ஆரம்பிப்பார்.

••

நியூவிங்டன் பள்ளி முதல்வரும் சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரரும், புலிவேட்டையில் ஆர்வம் கொண்டவருமான கிளெமென்ட் டி லா ஹேயின் கொலை வழக்கினைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள்.

இந்தக் கொலை 1919 அக்டோபர் 15ம் தேதி நடந்தது. டி லா ஹேய் தனது படுக்கையில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது தலையின் வலது பக்கத்தில் தோட்டா தாக்கியதில் மரணம் ஏற்பட்டது.

ஜமீன்தார்களின் ‘மைனர்’ வாரிசுகளைப் பாதுகாக்க பிரிட்டிஷ் அரசு நியூவிங்டன் பள்ளியை உருவாக்கியது. தேனாம்பேட்டையிலிருந்த அந்த இடத்தை மக்கள் மைனர் பங்களா என்று அழைத்தார்கள்.

இந்தக் கொலை வழக்குச் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து பம்பாய் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது கொலைக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் இறுதியில் சாட்சியங்கள் இன்றி விடுவிக்கப்பட்டார்கள். இந்த வழக்கு இன்று வரை தீர்க்கப்படாமலே உள்ளது.

டி லா ஹேயின் மனைவி டோரதியோடு கள்ள உறவில் இருந்த ஒருவர் இந்தக் கொலையைச் செய்தார் என்றும், டி லா ஹேயின் இனவெறியை தாங்க முடியாத ஜமீன்தார்களே சதி செய்து கொன்றார்கள் என்றும் சொல்கிறார்கள். ஆனால் இந்த வழக்கோடு நேரடியாகத் தொடர்பு இல்லாத, ஆனால் டி லா ஹேயின் வீட்டில் பணியாளராக இருந்த ஒருவனைப் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை.

டி லா ஹே ஒருமுறை தென்மலைக்குச் சென்றிருந்த போது புலிக்கலி நடனத்தைக் கண்டார். முப்பது நாற்பது ஆட்கள் புலி வேஷம் அணிந்து சாஸ்தா கோவிலின் முன்பாக நடனமாடியது வியப்பளித்தது. அதைப்பற்றிக் கிழக்கிந்திய கம்பெனி சர்வேயர் ரிச்மண்டிடம் விசாரித்த போது இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு கொச்சி மகாராஜா  ராமவர்மா சக்தன் தம்புரான் இதனை அறிமுகப்படுத்தினார் என்றார்.

புலிவேஷமிட்டவர்கள் தாளத்திற்கு ஏற்ப துள்ளி ஆடிவந்தார்கள். டி லா ஹேயின் அருகில் வந்த போது அவரை வணங்கி மரியாதை செய்தார்கள். நிஜமான புலிகள் தன்னை வணங்குவதைப் போலவே அவர் உணர்ந்தார். அன்று அவரது மனதில் விசித்திரமானதொரு எண்ணம் உருவானது.

ஊர் திரும்பியதும் டி லா ஹே விசித்திரமான காரியம் ஒன்றில் ஈடுபடத் துவங்கினார். புலி வேஷம் தீட்டுகிறவரில் சிறந்தவர் யாரென விசாரிக்கத் துவங்கினார். யானையடி என்ற கிராமத்தை சேர்ந்த சிகிலனுக்கு நிகராக யாருமில்லை. அவன் சிறகுள்ள புலியை உருவாக்குகிறவன் என்றார்கள்

“சிறகுள்ள புலியா“ என்று டி லா ஹே வியந்து போனார். அப்படி ஒன்றைப் பற்றிக் கற்பனை செய்யவே வியப்பாக இருந்தது. ஆள் அனுப்பி அவனை மதராஸிற்கு அழைத்து வரச் சொன்னார்.

சிகிலன் வர மறுத்ததோடு “வெள்ளைக்காரனால் ஒரு போதும் புலியாக முடியாது“ என்று சொல்லி அனுப்பினான்.

டி லா ஹே தனது பள்ளியில் பயிலும் மேக்கரை ஜமீன்தாரை அழைத்துக் கொண்டு யானையடியில் வசித்த சிகிலனைக் காணச் சென்றார்.

சிகிலன் கற்சிற்பம் போல உறுதியான உடல் கொண்டிருந்தான். அழுக்கடைந்த அரைக்கச்சு. திறந்த மேல் உடம்பு. இடது காலில் செம்பு வளையம், அவன் வருஷத்தில் பத்து நாட்கள் மட்டுமே புலி வேஷம் வரைபவன். மற்ற நாட்களில் மண்பொம்மைகள் செய்து வண்ணமடித்து விற்பது வழக்கம்.இதற்காக அருகிலுள்ள புளிக்கரை சந்தைக்கு வாரம் ஒருமுறை போய்வருவான். சில நேரம் குதிரையெடுப்பிற்கு மண் குதிரை செய்து தருவதும் உண்டு.

சிறிய கூரைவீட்டில் வசித்த அவனைத் தேடி சென்ற டி லா ஹே உட்கார ஆசனம் எதுவும் இல்லை என்பதை அறிந்து கொண்டு நின்றபடியே கேட்டார்

“நீ சிறகுள்ள புலியை உருவாக்குவாய் என்கிறார்களே. அது நிஜமா“

“எல்லாப் புலிவேஷம் போடுகிறவனுக்கும் ரெக்கை கிடையாது. ரெக்கையுள்ள புலியாக இருப்பவன் காளிங்கன். அவன் ஒருத்தனுக்கு மட்டுமே ரெக்கை வரைவேன். அவன் இப்போது புலியாடுவதில்லை. “ என்றான் சிகிலன்.

“நான் ரெக்கையுள்ள புலியாடுவதைப் பார்க்க வேண்டும். ஏற்பாடு செய்ய முடியுமா“ என்று கேட்டார் டி லா ஹே.

“அதற்கென்ன நாளைக்கு ஏற்பாடு பண்ணிவிடுவோம்“ என்றார் மேக்கரை ஜமீன்தார்

மறுநாள் அவர்கள் ஐம்பது வயதான காளிங்கனை அழைத்து வந்தார்கள். உடல்நலமற்று கால் வீங்கி காணப்பட்ட காளிங்கன் அவர்களை வணங்கிச் சொன்னான்

“உத்தரவு இல்லாமல் புலி போட முடியாதுங்க சாமி“

“யாரு உத்தரவு கேட்கணும்“

“தென்மலையான் கோவில்ல உத்தரவு கேட்கணும்“

“அதெல்லாம் கேட்டுகிடலாம். துரை பாக்கணும்னு ஆசைப்படுறார். புலி போட்டு ஆடுறா“

“இந்தக் காலை வச்சிகிட்டு என்னாலே ஆட முடியாதுங்க. “

“என்னவோ நீ ஒருத்தன் தான் ரெக்கையுள்ள புலினு சிகிலன் சொன்னான். நீ நொண்டிபுலியால்லே இருக்கே. “ என்று ஏளனம் செய்தார் மேக்கரை ஜமீன்

காளிங்கனுக்கு ஆத்திரம் வந்த்து, அவன் வேஷம் போடுவது என்று தீர்மானம் செய்தான். சிகிலனுக்கு அதில் சம்மதமில்லை. என்றாலும் காளிங்கனுக்காகப் புலிவேஷம் போட்டுவிடுவது என்று முடிவு செய்தான்.

மாந்தோப்பின் உள்ளே வைத்து காளிங்கன் உடலில் புலிவரையத் துவங்கினான். புலியின் கோடுகள் உடலில் தோன்றியதும் காளிங்கனின் முகம் இறுக்கமடைய ஆரம்பித்தது. சாக்குதுணியில் ரெக்கை போல வரைந்து கொக்கிகளுடன் தோளில் மாட்டிக் கொள்வது போல ஏற்பாடு செய்தான். புலிவேஷமிட்ட காளிங்கன் சிவந்த தனது கண்களுடன் மேக்கரை ஜமீன் பங்களாவின் முற்றத்தில் ஆட ஆரம்பித்தான்.

வேட்டையில் தப்பிய புலியின் ஆவேசம் கொண்டது போலிருந்தது அந்த ஆட்டம். அந்தக் கண்களில் வெளிப்படும் வெறுப்பு. வெறியை கண்ட டி லா ஹே எங்கே தன்னைப் புலி பாய்ந்து கொன்றுவிடுமோ என்று பயந்தான். பாய்ச்சலின் உச்சத்தில் இரண்டு ரெக்கைகளையும் தனது தோளில் மாட்டிக் கொண்ட காளிங்கன் வௌவால் ரெக்கையை அடிப்பது போலச் சடசடப்புக் காட்டினான். உண்மையில் ரெக்கையுள்ள புலியை நேரில் வந்துவிட்டது போலிருந்த்து. டி லா ஹேவால் நம்ப முடியவில்லை. பயமும் ஆச்சரியமுமாக ரெக்கையடிக்கும் புலியை பார்த்துக் கொண்டிருந்தான். தரையை விட்டு நாலு அடி உயரத்திற்குத் தாவி சிறகை அடித்து எம்பி பறந்தான் காளிங்கன். காலில் ரத்தம் வழிந்து சொட்டியது. மேக்கரை ஜமீன்தார் சில்லறை காசுகளை அவன் மீது வீசி எறிந்தார். இடமும் வலமுமாகப் பாய்ந்து பறந்து போக்கு காட்டிய காளிங்கன் முன்னால் ஆட்டுகுட்டி ஒன்றை கொண்டு வந்து நிறுத்தினார்கள். அதைப் பாய்ந்த வேகத்தில் பல்லால் கடித்து இழுத்துக் கொண்டு பறந்தான். ஆட்டின் உயிர்பயமான குரல். தெறிக்கும் ரத்தம். ஆவேசமான காளிங்கனின் பாய்ச்சல் டி லா ஹேவை பிரமிக்க வைத்தது.

ஆட்டம் போதும் என மேக்கரை ஜமீன் கையை உயர்த்தி நிறுத்தினார். ஆனால் காளிங்கன் நிறுத்தவில்லை. அவன் ஆடிக் கொண்டேயிருந்தான். அந்தப் புலியாட்டம் பித்தேறியதாக இருந்த்து. காணும் மனிதர்களைக் கடித்துத் துப்பிவிடப் போவது போல ஆவேசமாக ஆடினான். மேக்கரை ஜமீன் கோபத்தில் எழுந்து நின்று சப்தமிட்டார். அவரை நோக்கி பாய்ந்தான் காளிங்கன். புலி நகங்கள் அவரது பட்டுச்சட்டையைக் கிழித்தது. அவர் தடுமாறிப் பின்னால் விழுந்தார்.

டி லா ஹே பயத்தில் எழுந்து விலகி நின்று கொண்டார். கிழே விழுந்த மேக்கரை ஜமீன் ஆவேசமாக வீட்டிற்குள் சென்றார். வெளியே வந்த போது அவர் கையில் வேட்டைத்துப்பாக்கி இருந்தது. அதை உயர்த்திக் காளிங்கனை சுட்டார். துப்பாக்கி குண்டு துளைத்த போதும் காளிங்கன் ஆட்டத்தை நிறுத்தவில்லை. கண்மயங்கி விழும்வரை ஆடிக் கொண்டிருந்தான். பின்பு சரிந்து விழுந்து இறந்து போனான்.

ரெக்கையுள்ள புலியின் ஆட்டத்தையும் காளிங்கனின் முடிவையும் கண்டு பிரமித்துப் போன டி லா ஹே செத்துக்கிடந்த காளிங்கன் உடலைத் தொட்டுப் பார்த்தார். நிஜப்புலியை தொடுவதைப் போலவே இருந்த்து. ஒரு மனிதனை இப்படிப் புலி போல நிஜமாக மாற்ற முடிவது எவ்வளவு பெரிய கலை. அதுவும் ரெக்கையடிக்கும் புலியாக மாற்றிப் பாய்ச்சல் காட்டுவது நினைத்துப் பார்க்க முடியாத கற்பனை.

அவர் சிகிலனை தன்னோடு கூடவே வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார். மேக்கரை ஜமீன் மூலம் பேசி அவனது குடும்பத்திற்கு ஒரு மா நிலமும், நான்கு பசுக்களும், இரண்டு பொற்காசுகளும் கொடுப்பதாகப் பேசி முடிவு செய்தார்கள். தன்னால் பட்டணத்திற்கு வர முடியாது என்று சிகிலன் மறுத்தான். ஆனால் அவனால் ஜமீன் உத்தரவை மீற முடியவில்லை.

••

மதராஸ் பட்டணத்தில் யார் புலி வேஷம் போடப்போகிறார்கள். எந்தக் கோவிலில் புலி ஆடப்போகிறது என்று தெரியவில்லை. டி லா ஹேயின் வீட்டில் பணியாளர் போல வசித்து வந்த சிகிலனுக்கு நல்ல சாப்பாடும் தேவையான சௌகரியங்களும் கிடைத்தன. ஆனால் அவன் மனது யானையடியில் இருந்த வீட்டையே நினைத்துக் கொண்டிருந்தது. எப்படியாவது துரையிடமிருந்து விலகி ஊருக்குப் போய்விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தான். அன்றாடம் அவனுக்குச் சீமையிலிருந்து கெண்டுவரப்பட்ட மதுபோத்தலில் கொஞ்சம் குடிப்பதற்குத் தரப்ப்ட்டது. அப்படியான மதுவை அவன் குடித்ததேயில்லை. ஆகவே ஆசையாகக் குடித்தான்.

மதுவின் பொன்னிறம். அதன் விநோத மணம். நாவில் ஏற்படுத்தும் ருசி. உடலில் ஏற்படுத்தும் மயக்கம் அவனை ஆட்கொண்டது.

மழைக்காலம் முழுவதையும் மதராஸில் வெறுமனே கழிக்க வேண்டியதாக இருந்த்து. பனிக்காலத்தின் துவக்கத்தில் ஒரு நாள் டி லா ஹே தன்னோடு வரும்படி அழைத்துக் கொண்டு போனார். ரயிலில் பயணம் செய்தார்கள். ஓடிசாவின் சுந்தர்கரில் கருஞ்சிறுத்தையை வேட்டையாட வந்திருக்கிறார்கள் என்பதைப் பயணத்தின் போது சிகிலன் அறிந்து கொண்டான். துரைமார்கள் வேட்டையாட போகும் எதற்காகத் தன்னை அழைத்துக் கொண்டு போகிறார்கள் என்று அவனுக்குப் புரியவில்லை.

சுந்தர்கரில் அவர்கள் முகாமிட்டார்கள். வேட்டைக்குக் கிளம்பும் நாளில் டி லா ஹே தனக்குப் புலி வேஷம் போடும்படியாகச் சொன்னார்.

“தெய்வம் அனுமதிக்காது துரை. என்னை மன்னிச்சிருங்க“ என்றான் சிகிலன்

“நான் தான் உனக்குத் தெய்வம். எனக்குப் புலிவேஷம் போடணும்னு ஆசை“. என்று துப்பாக்கியை அவனை நோக்கி நீட்டினார்

“என்னாலே முடியாது. என்னை விட்ருங்க“ என்று மன்றாடினான் சிகிலன்

“இந்தச் சாமி உத்தரவு கொடுத்தா புலிவேஷம் வரைவியா“ என்று கேட்டபடியே மது போத்தல் ஒன்றை அவன் முன்னால் நீட்டினார் டி லா ஹே.

அதை ஆசையாகக் கையில் வாங்கும் போது சிகிலன் மனதில் செத்துகிடந்த காளிங்கன் முகம் வந்து போனது. காரணமில்லாத அச்சம். போதையின் விருப்பு. இரண்டும் ஒன்று சேர்ந்து கொண்டன. சிகிலன் தனது வண்ணங்களைக் குழைக்க ஆரம்பித்தான்.

புலி வரைந்து முடித்த போது டி லா ஹேவால் நம்பமுடியவில்லை. தான் ஒரு புலி. வெள்ளைப்புலி. காளிங்கன் தன் முன்னே ஆடியது போல அவர் கைகளை நீட்டி முன்னால் பாய்ந்து ஆடினார். சிகிலன் அவரைக் கவனிக்காமல் குடித்துக் கொண்டிருந்தான்.

அன்றைக்குத் தன்னுடைய உடல் முழுவதும் புலி போல மாற்றிக் கொண்ட டி லா ஹே இரட்டைக் குழல் துப்பாக்கியை உயர்த்தியபடி காட்டிற்குள் வேட்டையாடச் சென்றார். இது என்ன பித்து என்று உடன் வந்தவர்களுக்குப் புரியவில்லை. ஆனால் அன்று டி லா ஹே ஆவேசத்துடன் கருஞ்சிறுத்தை ஒன்றை வேட்டையாடினார்.

கொன்ற சிறுத்தையின் மீது அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அன்றிரவு அவரும் சிகிலனும் ஒன்றாகக் குடித்தார்கள். அவர் சிகிலனின் கைகளை முத்தமிட்டு சொன்னார்

“உன்னை இங்கிலாந்துக்குக் கொண்டு போகப் போகிறேன். லண்டனின் வீதியில் நான் புலியாக நடமாடப் போகிறேன். “

போதையிலும் அந்தச் சொற்கள் அவனைக் கலக்கமடையச் செய்தன. ஒரு வேளை தான் இனிமேல் யானையடிக்கு திரும்பவே முடியாதோ என்று தோன்றியது. மறுநாளும் அவர்கள் வேட்டையைத் தொடர்ந்தார்கள். வேட்டையாடிய விலங்குகளை மாட்டுவண்டி ஒன்றில் ஏற்றிக் கொண்டு சென்றார்கள். டி லா ஹே தனது பரிசாகத் தங்கசங்கிலி ஒன்றை சிகிலனுக்கு அணிவித்தான்.

எப்படியாவது டி லா ஹேவிடமிருந்து தப்பிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். ஊர் வந்த மறுநாள் சிகிலனுக்குக் காய்ச்சல் கண்டது. விஷக்காய்ச்சல் என்று சொன்ன மருத்துவர் கொய்னா எடுத்துக் கொள்ளும்படி கொடுத்தார். உறக்கத்தில் ஏதோ உளறிக் கொண்டிருந்தான் சிகிலன். காய்ச்சல் குணமாகாத காரணத்தால் அவனை ஊருக்கு அனுப்பி வைப்பது என்று டி லா ஹே முடிவு செய்தார். அவன் புறப்பட்ட நாளின் இரவில் தான் டி லா ஹே படுக்கையறையில் கொல்லப்பட்டார். அவர் இறந்து போன தகவல் இரண்டு வாரங்களுக்குப் பிறகே சிகிலனுக்குத் தெரிய வந்தது. துரை தனது பரிசாகக் கொடுத்து அனுப்பிய பொருட்களில் அவரோடு எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றும், இரண்டு வெள்ளிக்கிண்ணங்களும் கொஞ்சம் பணமும் இருந்தன.

நல்ல வேளை டி லா ஹே இறந்து போனார். இல்லாவிட்டால் கப்பலேறி லண்டன் போயிருக்க வேண்டுமே என்று நினைத்துக் கொண்ட சிகிலன் எங்கே தன்னைத் தேடி துரையின் ஆட்கள் திரும்ப வந்துவிடுவார்களோ என்று பயந்து எந்த உறவும் இல்லாத ஊரில் வாழ்வது என்று அருப்புக்கோட்டைக்கு வந்து சேர்ந்தார். அங்கேயே குடும்பத் தொழிலான பொம்மை செய்வதை மேற்கொள்ள ஆரம்பித்தார். ஆனால் அதன்பிறகு அவர் புலி வேஷம் போடவேயில்லை

••

பூமாலை தனது அப்பாவிடமிருந்தே வரையக் கற்றுக் கொண்டார். கோவில் சுவர்களில் புராணக் கதைகளை ஓவியம் வரைவார்கள். அப்போதெல்லாம் சிரட்டையில் தான் வண்ணங்களைக் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். வண்ணக்கட்டிகளை வாங்கி வந்து உடைத்து வண்ணம் தயாரிக்க வேண்டும். அப்பாவிற்குச் சாமி படம் தவிர வேறு எதையும் வரையப் பிடிக்காது. ஆனால் பூமாலைக்கு மனிதர்களைத் தத்ரூபமாக வரைவது பிடிக்கும். அது போலவே புலி வேஷம் வரைவதும் பிடித்தமானது. ஆனால் வீட்டில் புலி வேஷமிடும் வேலையைச் செய்ய அனுமதிக்க மாட்டார்கள். கைச்செலவிற்காக ரகசியமாகச் செய்வது வழக்கம்.

அந்த ஊரில் இரண்டு சினிமா தியேட்டர்கள் இருந்தன. அதில் எந்தப் புதுப்படம் வந்தாலும் பூமாலையைத் தான் வரையக் கூப்பிடுவார்கள். பூமாலை அந்த ஊரின் புகழ்பெற்ற பேனர் ஆர்டிஸ்ட்டாக மாறினார்..

சினிமா பேனர்கள் என்றாலும் நிஜமாக நடிகர்கள் நேரில் நிற்பது போல வரைந்துவிடுவார். ஆட்கள் சினிமா தியேட்டரின் வாசலில் அவரது பேனரை வியந்து பார்ப்பதை அருகிலுள்ள டீக்கடையில் அமர்ந்து பூமாலை ரசித்துக் கொண்டிருப்பார்.

சில நாட்கள் அவரது அப்பாவைப் போலவே கோவில் சுவரில் படம் வரைவதும் உண்டு. ஒருமுறை சினிமா தியேட்டர் முன்பாக அவர் வரைந்து வந்த அம்மன்  படத்திற்கான பேனரை சூடம் காட்டி கும்பிடுகிறார்கள் என்று கேள்விபட்டபோது மனம் மகிழ்ந்து போனார்.

வருஷத்தில் ஒரு வாரம் மட்டும் அவர் புலி வேஷம் வரைவது உண்டு. உண்மையில் அது தங்கள் குடும்பத்தை வாழ வைத்த கருப்பு கோவிலுக்குச் செய்கிற காணிக்கை என்றே நினைத்துக் கொள்வார்.

••

செந்தடி கருப்பு கோவிலுக்குப் போவதற்குக் காசியாபுரம் செல்லும் செம்மண் சாலையில் போக வேண்டும். வெட்டவெளியில் இருந்த காட்டுக்கோவிலது. அருகில் ஒரு வேப்பமரம் . தண்ணீர் தொட்டி. கோவில் பொருட்களை வைத்துக் கொள்ளச் சிறிய அறை. ஊர்கூடி தண்ணீர் பம் போட்டிருந்தார்கள். மின்வசதி செய்து வைத்திருந்தார்கள். கருப்புக் கோவில் பூசாரி பரமசிவம் லட்சுமியாபுரத்திலிருந்தார்.

செந்தடி கருப்புக் கோவிலில் மாசித் திருவிழா மிகவும் பிரபலமானது. அந்தத் திருவிழாவின் போது கோவிலைச் சுற்றி பந்தல் போடுவார்கள். நூறு கிடாக்களும் மேலாக வெட்டப்படும். திருவிழாவை முன்னிட்டு ஐந்து ஊர்களிலிருந்தும் ஆட்கள் புலி வேஷம் போட்டு ஆடி வருவார்கள். அடிவானம் வரை விரிந்து கிடக்கும் வெட்டவெளியில் செம்மண் புழுதிபறக்க புலிகள் ஆடிவருவதைக் காண விநோதமாக இருக்கும்.

இரண்டு சாதிக்காரர்கள் மட்டுமே புலி போட முடியும். அதுவும் வீதிக்கு ஒரு புலி தான் அனுமதிக்கபடும். அதுவும் வீமன் வாத்தியார் சொல்கிற ஆள் தான் புலி போட முடியும்.

வீமன் வாத்தியார் அந்த வட்டாரத்தில் புகழ்பெற்ற புலி வேஷக்காரர். பிறவியிலே பார்வையில்லாதவர். ஆனால் சிலம்பு. மான்கொம்பு சுற்றுவது எனத் துவங்கி புலி போடுவது வரை அவரை மிஞ்ச ஆள் கிடையாது. வீமன் வாத்தியார் மனைவி தான் லட்சுமியாபுரத்தின் பஞ்சாயத்து தலைவர். அவர்களுக்குத் திருமணமாகி முப்பது வருஷங்கள் கடந்து போனது. ஆனால் குழந்தைகள் இல்லை. அந்தக் கவலை தெரியாமல் இருப்பதற்காகவே தனது தங்கை சிவகாமி குடும்பத்தைத் தன்னோடு வைத்துக் கொண்டார் வீமன். பூமாலையை அவருக்கு ரொம்பவும் பிடிக்கும். காரணம் பூமாலை தான் வீமனை புலிவேஷம் போடவைத்து பெரிய ஆட்டக்காரனாக்கியது.

“கண்தெரியாத தன்னால் எப்படிப் புலி போட முடியும்“ என்று வீமன் தயங்கிய போது பூமாலை தான் சொன்னார்

“சிலம்பு வரிசை படிச்சிருக்கீங்கள்ளே. அதே அடிமுறை தான். சிவக்கண்ணுவை கூட வச்சிக்கிட்டா புலிப்பாய்ச்சலை பழக்கிவிட்ருவான். நான் புலி வரைந்து விடுறேன். உங்க திறமை உங்களுக்கே தெரியாது“

அப்படிச் சொன்னதோடு புலி வேஷம் வரைந்து தன்னைப் புலியாக்கி காட்டியவன் பூமாலை. அந்த வருஷ விழாவில் அவரும் ஆவேசம் வந்த புலி போல ஆடினார். அந்த நினைப்பு அவரது மனதில் அழியாமல் இருக்கிறது.

வீமன் வாத்தியார் புலி போடுவதில் நிறையக் கட்டுபாடுகளைக் கொண்டு வந்தார். புலி வேஷம் கட்டுகிறவன் விரதமிருக்க வேண்டும். குடி பொம்பளை சகவாசம் கூடாது. ஊர் கட்டுப்பாட்டினை மீறி எவரும் புலி போடக்கூடாது. வீமன் வாத்தியார் கட்டுப்பாட்டினை மீறிய பரமகுரு என்ற லட்சுமியாபுரத்து இளைஞனுக்குப் புலி வேஷம் போடுவதற்குத் தடை விதித்தார் வீமன் வாத்தியார்

அவன் “முடிந்தால் தடுத்துப் பாரு“ என்று வீமன் வாத்தியாரிடம் சவால் விட்டான்.

“அவன் புலி வேஷம் கட்டி வந்தால் உயிரோடு வீடு திரும்ப முடியாது“ என்றார் வீமன் வாத்தியார்.

வீமன் வாத்தியாரின் எச்சரிக்கையை மீறி பரமகுரு புலி போட்டான். செந்தடி கருப்பு கோவிலை சுற்றி நிறையப் போலீஸை குவித்திருந்தார்கள். நீண்ட பல வருஷத்திற்குப் பின்பு வீமன் வாத்தியாரும் புலி போடுவது என்றுமுடிவு செய்தார். அவர் களத்தில் இறங்கினால் நிச்சயம் வெட்டுகுத்து நடக்கும் எனப் பயந்த லட்சுமியாபுரவாசிகள் பரமகுருவை தடுத்து நிறுத்தியதோடு ஊரைவிட்டும் அனுப்பி விட்டார்கள்.

ஆனால் இது நடந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஆமத்தூர் ஜோசியரைப் பார்த்து வருவதற்காகக் காரில் சென்ற வீமன் வாத்தியாரும் உடன் சென்றவர்களும் விபத்தில் இறந்து போனார்கள். அது விபத்தில்லை. பரமகுரு தான் லாரியை விட்டு அடித்துக் கொன்றுவிட்டான் என்று பேசிக் கொண்டார்கள். ஆனால் வீமன் வாத்தியாரின் மரணத்திற்குப் பிறகு புலி போடுவதில் எந்தக் கட்டுபாடும் இல்லாமல் போனது. புலி சுற்றி வருவதில் அடிதடி நடந்தது. புலிவேஷமிட்ட ரெங்கனின் வலது கையை வெட்டிவிட்டார்கள். இதனால் போலீஸ் தலையிட்டு இனிமேல் எவரும் புலிவேஷம் போடக்கூடாது என்று தடை விதித்தார்கள்

இதனை எதிர்த்து காசியாபுரத்துக்கார்ர்கள் கோர்டிற்குச் சென்று அனுமதி பெற்று வந்தார்கள். அப்போதிலிருந்து யார் புலி வேஷம் போடுவது என்றாலும் காவல்துறையிடம் விண்ணப்பம் செய்து அனுமதி பெற வேண்டும். அதுவும் எந்த ஊரிலிருந்து புலி எத்தனை மணிக்கு புறப்பட வேண்டும். எந்த வழியே வர வேண்டும் என்பது தீர்மானிக்கபட்டது.

••

அந்த வரும் காசியாபுரம் பஞ்சாயத்து தலைவர் தங்க மாரியப்பனின் கடைசி மகன் எழில் புலி போடுவதாக இருந்தான். அவன் மைனர் போலச் சுற்றி அலைபவன். அவனுக்குப் புலி வரைவதற்காகப் பூமாலையை அழைத்து வந்திருந்தார்கள்.. கையில் சிகரெட் புகைய புலி போடுவதற்காக அமர்ந்திருந்தவனைக் கண்டதும் பூமாலைக்குக் கோபம் வந்தது. எழில் மிதமிஞ்சிய போதையில் இருப்பது அவனின் கண்களிலே தெரிந்தது.

“இப்படிக் குடிச்சிட்டு மட்டு மரியாதை இல்லாம நிக்குறவனுக்கு எல்லாம் நான் புலி போட மாட்டேன்“ என்றார் பூமாலை

“குடுக்குற காசை வாங்கிட்டுப் பெயிண்ட் அடிச்சிவிடுறா. பெரிய பருப்பு மாதிரி பேசுறே“ என்றார் தனுக்கோடி

“,இது சாமி காரியம். அப்படி எல்லாம் செய்ய முடியாது. அதுக்கு வேற ஆளை பாருங்க“

“பெடதிலே நாலு போட்டுச் செய்ய வைப்பியா. இவன்கிட்ட போயி பேசிகிட்டு இருக்கே“ என்றார் சின்னராமு.

பூமாலைக்குக் கோபம் வந்தது.

“அதுக்கு எல்லாம் பயந்த ஆள் நானில்லை. “

“அந்த விறகு கட்டை எடுறா“ என்று தனுக்கோடி ஆவேசமானார். அவர்கள் ஐந்து பேரும் சேர்ந்து பூமாலையைத் தாக்கினார்கள். மணிக்கட்டிலே அடித்துக் கையை உடைத்தார்கள். “இந்தக் கை இருந்தா தானே பெயிண்ட் அடிப்பே“ என்று சொல்லிச் சொல்லி அடித்தார்கள்.

வலது கை மணிக்கண்டு உடைந்து பூமாலை இரண்டு மாதங்கள் சிகிட்சை எடுத்துக் கொண்டார். சோற்றை அள்ளி சாப்பிடுவதற்குக் கூட முடியவில்லை. தனுக்கோடி ஆட்கள் மீது போலீஸில் புகார் கொடுத்தும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

அந்த வருஷத்தோடு அவரைப் புலிவேஷம் வரைவதற்கு எவரும் கூப்பிடுவதுமில்லை. மதுரையிலிருந்து ஆள் கூட்டிவரத் துவங்கினார்கள். பூமாலையை வைத்து எவரும் புலி வரையக்கூடாது என்றும் ஊர் தடை உருவாக்கினார்கள்.

இந்த அவமானத்தை எல்லாம் அனுபவித்த போது பூமாலை மனதில் ஒரு வெறி தோன்றி மறைந்தது. “இத்தனை வருஷம் எவன் எவனுக்கோ புலி போட்டு விட்ருக்கேன். ஆனால் என் மரியாதை இவங்களுக்குத் தெரியலை. இந்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 26, 2024 20:35

April 25, 2024

கவனிக்க மறந்த மனிதர்கள்

 (கிதார் இசைக்கும் துறவி சிறுகதைத் தொகுப்பு குறித்த வாசிப்பனுபவம்)

டாக்டர் இரா.மௌலிதரன்

கிதார் இசைக்கும் துறவி இந்த வருடம் வெளியான பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சிறுகதைத் தொகுப்பு , அதற்குக் காரணம் அதன் ஆசிரியர் . எஸ் ரா அவர்கள் சிறுகதையில் ஒரு மாஸ்டர் என்றுதான் சொல்ல வேண்டும் . இத்தனை வருடங்களுக்குப் பிறகும் இத்தனை கதைகளுக்குப் பிறகும் அவருக்கு எழுதுவதற்கு ஒரு சிறுகதையாக என்ன மிஞ்சியிருக்கிறது என்ற கேள்வியே என்னை இந்தப் புத்தகத்தை நோக்கிய பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது . இப்படி மாஸ்டர் களின் சம காலப் புதிய படைப்புகளைத் திறக்கும் முன் எனக்குள் ஒரு அசரீரி போல ஒலிப்பது அ .முத்துலிங்கம் அவர்களின் ஒரு வாக்கியம் தான் . ” நூறு நாற்காலிகளைச் செய்த ஒரு தச்சனுக்கு 101 ஆவது நாற்காலி செய்வது மிகச் சுலபம் , அதுவே 100 சிறுகதைகளை எழுதிய ஒரு எழுத்தாளனுக்கு 101 ஆவது சிறுகதை எழுதுவது தன் முதல் கதையை எழுதுவதை விட மிக மிகக் கடினமான ஒன்று “.இந்த வாக்கியம் எந்த அளவுக்கு உண்மை என்பதை எஸ் ரா அவர்கள் போன்ற மாஸ்டர்கள் கூறினால்தான் நமக்குத் தெரியும் .

இந்தத் தொகுப்பில் மொத்தம் 18 சிறுகதைகள் உள்ளன .கதைகளுக்குள் செல்லும் முன் என்னை வெகுவாகக் கவர்ந்தது அக்கதைகளின் தலைப்புகள் தான் . மிகவும் மாறுபட்ட , கவித்துவமான , புதுமையான தலைப்புகள் . தலைப்புகளே தங்கள் கதைகளை வாசிக்க அழைக்கின்றன . குறிப்பாக இந்தப் புத்தகத்தின் பெயரான “கிதார் இசைக்கும் துறவி ” என்ற தலைப்பு எவ்வளவு மாறுபட்ட , புதுமையான ஒரு தலைப்பு . ஒரு மொட்டை தலையுடன் ,காவி அங்கியுடன் ஒரு பௌத்த துறவி ஏன் கிதார் போன்ற ஒரு நவீன இசைக்கருவியை வாசிக்க வேண்டும் ? அதுவும் ஒரு நாளில் வெறும் 7 நிமிடம் மட்டுமே வாசிக்கும் அவரை வேடிக்கை பார்க்க ஏன் அவ்வளவு கூட்டம் திரள வேண்டும் ? இப்படி ஒரு வாசகனாக யோசிக்கும் வேளையில் கதை அந்தத் துறவியைப் பற்றியோ , கிதார் பற்றியோ அல்ல மாறாக ஒரு தந்தைக்கும் அவருடைய இளம் பருவ மகளுக்கும் இடையே சுருங்கி விரியும் உறவை பற்றியது என்பது கதையை வாசிக்கும்பொழுதுதான் நமக்குப் புரிகிறது .

எஸ்.ரா இந்தத் தொகுப்பில் பல புதுமையான பரிசோதனைகளைத் தன் சிறுகதைகள் மூலம் நிகழ்த்தி பார்த்திருக்கிறார் . இந்த வேட்கைதான் இத்தனை வருடமாக எஸ் ரா வை தொடர்ந்து எழுதவைத்துக்கொண்டிருக்கிறது . அவருக்கு மிகவும் ஆதர்சமான செகாவை பற்றி ஒரு கதை { செகாவின் துப்பாக்கி } , காஃப்கா வின் உருமாற்றம் போல – பனிக்கரடியாக உருமாறும் ஒரு அரசு அதிகாரி { பனிக்கரடியின் கனவு } , ஒரு எழுத்தாளன் வீட்டின் கதவை தட்டி கவிதைகளை மட்டுமே பிடிக்கும் உனக்கு ஏன் கதைகளைப் பிடிப்பதில்லை என்று கேள்வி கேட்கும் கதைகள் { கதவை தட்டும் கதைகள் } , ஹெர்மன் மெல்வில் உடைய MOBY -DICK கதையைக் களமாகக் கொண்டு ஒரு கல்லூரி ஆசிரியருக்கும் – மாணவிக்கும் இடையே நிகழும் ஒரு புரிதலின் போராட்டம் { வகுப்பறையில் திமிங்கலம் } . இப்படிப் பல் வேறு வகையில் அவர் தமிழ் சிறுகதைக்கு ஒரு புதிய பாதைக்கான தேடலில் தன்னையும் தன் வாசகர்களையும் கைகோர்த்து அழைத்துச்செல்கிறார் .

எப்பொழுதும் இந்த உலகம் கண்டுகொள்ளாத ஒருவனை இலக்கியம் மட்டும் தான் உற்றுநோக்கும் . இலக்கியவாதியின் கண்களுக்கு மட்டும்தான் அவன் தெரிவான் . இவனும் இந்த உலகத்தில் நம்மோடு உருவத்தால் மட்டுமே மனிதன் என்று இந்த உலகம் அடையாளப்படுத்தும் ஒரு அவல நிலையை அகற்றி அவனும் பசி , சிரிப்பு, துக்கம் , காதல் , அன்பு , கண்ணீர் , ஏக்கம் ,கோபம் , ரௌத்ரம் என அனைத்து உணர்வுகளும் கொண்ட ஒரு சராசரி மனிதன் தான் என்பதை உணர்த்துவதுதான் இலக்கியம் . அந்த வகையில் ” இரவு காவலாளியின் தனிமை ” ” முகமது அலியின் கையெழுத்து ” ஆகிய இரு கதைகளும் நம் அன்றாட வாழ்வில் நாம் எளிதில் கடந்து சென்று கவனிக்க மறந்த இரு உன்னதமான உயிர்களைப் பற்றிய கதைகளே .

இந்தத் தொகுப்பில் என்னைப் பெரிதும் பாதித்த ஒரு கதை என்றால் ” தலைகள் இரண்டு ” என்ற கதைதான் . ஒரு மருத்துவனாக இறந்த மனித உடல்களைக் கூறுபோட்டும் , பிறவி குறைபாடு காரணத்தால் இறந்த சிசுக்களைக் கண்ணாடி குடுவையில் அடைத்துப் பாடம் படித்துப் பழகிய எனக்கு அந்த இரட்டை தலை கொண்ட சிசுவுக்கு ஒரு அன்னை இருப்பாள் , அந்தச் சிசுவுக்கு ஒரு அண்ணனோ , அக்காவோ இருப்பாள் , அவர்கள் குடும்பத்தில் இன்றும் அந்தச் சிசு அவர்களின் நினைவுகளில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பான் என்றோ நாங்கள் எண்ணிப்பார்த்ததே இல்லை . இது தான் ஒரு இலக்கியவாதியின் பார்வைக்கும் ஒரு சராசரி மனிதன் அவன் மருத்துவனாகவே இருந்தாலும் அவனுடைய பார்வைக்கும் உள்ள வேறுபாடு .

தன் அன்னை சொல்லி கேட்டு , தன் நினைவுகளில் மட்டுமே இருந்த தம்பியை முதல் முதலில் கண்ணாடி குடுவையில் கண்டவுடன் அவன் ஓடோடி தன் அன்னையிடம் கூறி , இருவரும் அந்த நினைவு அலைகளால் கரையொதுக்கப்பட்டுத் தம்பிக்கு ஏன் நாம் பெயர் வைக்கவில்லை என்று வினவுகின்றனர் ? உயிருள்ளவருக்குத்தான் , உயிருள்ளவரைதான் இங்கு எல்லாமே , இறந்த பின் இங்கு அனைவரும் வெறும் உடல்கள் மட்டுமே . ஆனால் , கதையின் முடிவில் தாய் மனம் கொள்ளாமல் தன் உயிரின் ஒரு பாதியை அதுவும் இரட்டை பாதியை நேரில் சென்று கண்டு அதற்கு ஒரு பெயர் அல்ல இரண்டு பெயர்கள் சூட்டுவது இலக்கியத்தின் உச்சம் .

இரண்டு தலைகள் உள்ளதால் அவர்கள் இரண்டு மகன்கள் அதனால் இரண்டு பெயர்கள் . இனி அந்த அருங்காட்சியகத்திற்குத் தவறாமல் ஒரு பார்வையாளர் வருவார் , வெறும் பார்வையாளராக மட்டுமல்லாமல் ஒரு தாயாக அதுவும் இரண்டு மகன்களின் தாயாக . இத்தனை அன்பு நிறைந்த அம்மாக்களின் இதயம் வெறும் ரத்தமும் சதையும் மட்டுமே கொண்டு இயங்குகிறது என்பதை நம்புவது சற்று கடினமான ஒன்று தான் .

***

புத்தரின் கையில் எனது சிறுகதைத் தொகுப்பான கிதார் இசைக்கும் துறவியை அளித்த டாக்டர் மௌலிதரனுக்கு நன்றி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 25, 2024 05:19

April 24, 2024

துப்பாக்கி ஏந்திய துறவி

2006 இல் பூட்டான் ஜனநாயக நாடாக மாற விரும்பியது. அதுவரை நடைபெற்று வந்த மன்னராட்சி முடிவுக்கு வரவே பொதுத்தேர்தலை நடத்த முடிவு செய்தார்கள்.

தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாதிரி தேர்தல் ஒன்று ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்தப் பின்புலத்தில் உருவாக்கப்பட்ட படமே The Monk and the Gun.

2023 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தைப் பாவோ சோய்னிங் டோர்ஜி இயக்கியுள்ளார். இப்படம் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதிற்குப் போட்டியிட்டது

கதை மூன்று சரடுகளைக் கொண்டிருக்கிறது. தேர்தலை விரும்பாத லாமா மேற்கொள்ளும் முயற்சிகள். அவர் தனக்கு ஒரு துப்பாக்கி வேண்டும் என்கிறார். எதற்காகத் துப்பாக்கி கேட்கிறார் என்று தெரியாமலே அதைத் தேடி அலைகிறான் இளந்துறவி தாஷி

இரண்டாவது சரடு மாதிரி தேர்தல் நடத்துவதற்கான ஆயுத்தப்பணிகளை மேற்கொள்ளும் தேர்தல் அதிகாரி ஷேரிங்கின் பயணம். மூன்றாவது சரடு பழங்கால ஆயுதங்களை வாங்கி விற்கும் அமெரிக்கரான ரான் கோல்மனின் பூட்டான் வருகை.

இந்த மூன்று சரடுகளும் ஒன்றையொன்று தொட்டும் விலகியும் சென்று படத்தின் இறுதியில் ஒன்றுசேருகின்றன.

விவசாயி ஒருவரிடமுள்ள பழங்காலத் துப்பாக்கி ஒன்றைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதை வாங்குவதற்காகப் பூட்டான் வருகிறான் ரான். வழிகாட்டி ஒருவனுடன் காரில் பயணம் செய்கிறான். ரான் கோல்மன் தீவிரவாதச் செயல்களில் தொடர்பு கொண்டவனோ எனச் சந்தேகம் கொண்டு காவல்துறை அவனைப் பின்தொடர்கிறது.

நீண்டகாலமாக துப்பாக்கியைப் பாதுகாத்து வரும் விவசாயி வீட்டிற்குப் போகிறார்கள். அந்தத் துப்பாக்கிக்கு 75 ஆயிரம் டாலர் தருவதாகச் சொல்கிறான் ரான். பெரியவரோ அவ்வளவு தொகை தேவையற்றது. நான் என்ன வைரத்தையா விற்கிறேன் என்று மறுக்கிறார். அதிகப் பணம் வேண்டாம் என்று சொல்லும் ஒருவரைக் கண்டு ரான் வியப்படைகிறான். பரவாயில்லை. வைத்துக் கொள்ளுங்கள், உங்கள் கடனை அடையுங்கள் என்று வழிகாட்டி பென்ஜி சொல்கிறான். ஆனால்  உரிய பணம் கொடுத்தால் போதும் என்கிறார் விவசாயி . அவர்கள் பணத்தைத் திரட்டி வர நகருக்குச் செல்கிறார்கள்

ரேடியோவின் மூலம் தேர்தல் பற்றிய அறிவிப்பினைக் கேள்விப்பட்ட லாமா வரவிருக்கும் பௌர்ணமிக்கு முன் இரண்டு துப்பாக்கிகளைக் கொண்டு வருமாறு தாஷியிடம் கேட்டுக்கொள்கிறார். விவசாயி வீட்டில் துப்பாக்கி இருப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டு அங்கே வரும் தாஷி வெற்றிலைபாக்கிற்கு ஈடாகத் துப்பாக்கியைப் பெற்றுக் கொள்கிறான். ஒரு புத்தபிக்கு துப்பாக்கி ஏந்தி நடக்கும் காட்சி விநோதமாகவுள்ளது.

ஆத்திரமான ரான் எப்படியாவது புத்தபிக்குவிடமிருந்து துப்பாக்கியை வாங்கிவிட முயலுகிறான். இந்த முயற்சி என்னவானது என்பதையே படம் விவரிக்கிறது

அதுவரை தேர்தலைப் பற்றிக் கேள்விப்பட்டிராத பூட்டானிய மக்கள் எப்படி வாக்களித்தார்கள் என்பதைப் படம் வேடிக்கையாகச் சித்தரிக்கிறது.

படத்தில் தொலைக்காட்சி பார்ப்பதற்காக ஒரு பெட்டிக்கடையில் கிராமத்து மக்கள் திரண்டிருக்கிறார்கள். ஜேம்ஸ்பாண்ட் படத்தை ஆசையாகப் பார்க்கிறார்கள். கோக்கைக் கறுப்புத் தண்ணீர் என்று தாஷி சொல்வதைக் கேட்க வேடிக்கையாக இருக்கிறது.

பூட்டானிய சமுதாயத்தில் துப்பாக்கி அரிதான பொருள். தாஷி துப்பாக்கி தேடியும் போது ஒரு இளம் பெண் தான் இதுவரை துப்பாக்கியை நேரில் கண்டதேயில்லை என்கிறாள்.

ஜனநாயக நடவடிக்கையை விரும்பாத லாமா படத்தின் இறுதிக்காட்சியில் ஒரு சடங்கு செய்கிறார். அது சமாதானத்தின் அடையாளம்

வேறு ஒரு காட்சியில் பெட்டிக்கடை சிறுமி சிறுமி. ஜேம்ஸ்பாண்ட் படத்தை ஆசையாக ஒட்டுகிறாள். தாஷி தனக்கு இரண்டு ஏ.கே.47 துப்பாக்கிகள் வேண்டும் என்கிறான். பூட்டானில் துப்பாக்கி விற்பனை ரகசியமாக நடைபெறுவதைப் படம் சித்தரிக்கிறது.

பூட்டானின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தொலைக்காட்சி முக்கியப் பங்கு வகிக்கிறது. தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றில் நிலவில் தரையிறங்கும் காட்சிகள் மெதுவாக MTV யின் லோகோவாக மாறுகின்றன. ஜேம்ஸ் பாண்ட் 007யை மக்கள் விரும்புகிறார்கள். தேர்தல் அறிவிப்புகள் தொலைக்காட்சி வழியாகக் கிராமத்து மக்களைச் சென்றடைகின்றன. பசு மாட்டினை விற்றுவிட்டு விவசாயி புது டிவி வாங்குகிறான். CNN, BBC மற்றும் அல்-ஜசீரா போன்ற சர்வதேச ஊடகங்கள் தேர்தலைப் பார்வையிட வருகின்றன.

தேர்தல் அதிகாரியும் தாஷி பயணம் செய்யும் காட்சி. விவசாயி வீட்டில் ரானுடன் நடைபெறும் உரையாடல். பள்ளி சிறுமியும் அம்மாவும் பேசிக் கொள்ளும் காட்சி. ஸ்தூபியின் முன்பு நடைபெறும் இறுதிக்காட்சி போன்றவை மறக்க முடியாதவை. மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளன.

பூட்டானிய விவசாயி ஏன் அதிகப் பணம் வேண்டாம் என்று மறுக்கிறார். அது தான் பௌத்தம் கற்றுத்தந்த பாடம். எளிய வாழ்க்கை போதும் என்று நினைக்கிறார் விவசாயி. அவர் சாப்பிடும் காட்சி அதற்கு ஒரு உதாரணம். பை நிறையப் பணத்துடன் அலையும் ரானை விடவும் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். தனக்குத் தேவை ஒரு அழிரப்பர். தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு உடனடியாக வேண்டும் என்று பள்ளிச்சிறுமி கேட்கிறாள். அது தான் பூட்டான் மக்களின் குரல்.

ரானுடன் தேர்தல் அதிகாரி உரையாடும் போது அவன் ஆர்வம் காட்டுவதில்லை. அவனது நோக்கம் வேறு. பூட்டான் குறித்த அமெரிக்காவின் நிலைப்பாடு இத்தகையதே. அதையே ரானின் மூலம் காட்டுகிறார்கள்.

பூட்டானிய கிராமப்புறங்களின் அழகைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்கள். படத்தின் கிளைக்கதை போல விரியும் பள்ளிச்சிறுமியின் கதை மொத்த படத்திற்குமான குறியீடு போல உருவாக்கப்பட்டிருக்கிறது.

பூட்டானியர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த மாற்றம் ஊடகங்களால் உருவாக்கப்படுகிறது. பூட்டானியர்களால் மன்னரை, பௌத்த சமயத்தைக் கைவிட முடியாது. அதே நேரம் மரபான வாழ்க்கை முறையிலிருந்து விடுபட்டு நவீன நுகர்வு கலாச்சாரத்தில் வாழ விரும்புகிறார்கள். இந்த இரட்டை மனநிலையின் அடையாளமே துப்பாக்கி ஏந்திய துறவி.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 24, 2024 05:13

April 22, 2024

தமிழக ஓவிய மரபுகள்

நாளை செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் நடைபெறவுள்ள தமிழக ஓவிய மரபுகள் குறித்த பயிலரங்கில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 22, 2024 20:57

உலகப் புத்தக தினம்

நாளை ஏப்ரல் 23 உலகப் புத்தக தினம். யுனெஸ்கோ 1995 ம் ஆண்டு முதல் ஏப்ரல் 23 ம் தேதியை உலக புத்தக மற்றும் காப்புரிமை தினமாக கொண்டாடி வருகிறது.

இந்த தினம் ஷேக்ஸ்பியர் மற்றும் செர்வாண்டஸின் நினைவுநாளாகும்.

உலகம் முழுவதும் புத்தக தினக் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.

வாசகர்கள். சக படைப்பாளிகள் , பதிப்பாளர்கள். புத்தக விற்பனையாளர்கள். நூலகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உலகப் புத்தக தின வாழ்த்துகள்.

தேசாந்திரி பதிப்பகம் இதனைக் கொண்டாடும் விதமாக எனது அனைத்து நூல்களுக்கும் 15 சதவீத தள்ளுபடி அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலமோ, நேரிலோ புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

தேசாந்திரி பதிப்பகம்

டி1, கங்கை குடியிருப்பு

எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 22, 2024 03:26

எஸ்.ராவிடம் கேளுங்கள் -2

தேசாந்திரி யூடியூப் சார்பாக வெளியாகும் எஸ்.ராவிடம் கேளுங்கள் பகுதி இரண்டு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 22, 2024 00:34

April 20, 2024

நீலச்சக்கரம் / கடிதம்

எனது சிறார் நூலான நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்தினை வாசித்து தங்ககோபி என்ற பள்ளிச்சிறுவன் எழுதிய கடிதம். மாணவர்கள் மத்தியில் புத்தக வாசிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். இன்று பல்வேறு பள்ளிகளில் அதற்கான முயற்சிகளை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 20, 2024 20:19

April 19, 2024

வளைந்து செல்லும் வாக்கியங்கள்

சொல்வனம் இதழில் நம்பி கிருஷ்ணன் மாடலென்களும் டீயும் அல்லது ப்ரூஸ்டின் “In Search of Lost Time” என்றொரு கட்டுரையை எழுதியிருக்கிறார்.

பிரெஞ்சு எழுத்தாளர் மார்சல் ப்ரூஸ்டினை இதைவிடச் சிறப்பாக எவராலும் அறிமுகம் செய்துவிட முடியாது. அபாரமான கட்டுரை. தலைசிறந்த பேராசிரியர் வகுப்பில் உரையாற்றுவதைப் போலத் தனது வாசிப்பின் ஆழத்தை, ஞானத்தைக் கட்டுரையில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். நம்பி கிருஷ்ணனின் கட்டுரைகள் தமிழுக்குக் கிடைத்த கொடை என்றே சொல்வேன்.

மார்சல் ப்ரூஸ்டின் பெயரை எனது ஆங்கிலப் பேராசிரியர் ஜோசப் வகுப்பறையில் சொன்ன நாள் நினைவிலிருக்கிறது. அப்படி ஒருவரை ஆங்கில இலக்கியம் படிக்கும் எவரும் கேள்விபட்டதேயில்லை. ஆனால் ஜோசப் தனது வகுப்பில் வாசிக்க வேண்டிய சிறந்த எழுத்தாளர்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வைப்பார். அப்படி ப்ரூட்ஸை இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த எழுத்தாளர் என்று வியந்து சொல்லியதோடு அவரைப் படிப்பது எளிதானதில்லை. காலத்தின் அடுக்குகளில் சுழன்று கொண்டேயிருக்கும் தன்னிச்சையான நினைவாற்றல் கொண்ட எழுத்து அவருடையது. தோல்வியுற்ற காதலைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். ப்ரூஸ்ட் பகலில் உறங்கி இரவு முழுவதும் எழுதக் கூடியவர். நோயாளியாக நான்கு ஆண்டுகள் படுக்கையிலே கிடந்தார். நினைவின் சஞ்சாரத்தை அவரை விடச் சிறப்பாக எழுதிவிட முடியாது என்று அறிமுகம் செய்தார்.

அந்த நாட்களில் நான் ரஷ்ய எழுத்தாளர்களின் பின்னால் சென்று கொண்டிருந்தேன். ஆகவே ப்ரூஸ்டினை வாசிக்கத் தோணவில்லை. அதன் சில ஆண்டுகளுக்குப் பின்பு டெல்லியில் நடைபெற்ற திரைப்பட விழாவில் Swann in Love திரைப்படத்தைப் பார்த்தேன். அது மார்சல் ப்ரூஸ்டின் நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கபட்டது. அந்தப் படம் எனக்குப் பிடித்திருந்தது. ஆகவே ப்ரூஸ்டினைப் படிப்பது என்று முடிவு செய்து, டெல்லியின் பழைய புத்தகக் கடைகளில் தேடி அவரது In Search of Lost Time தொகுதி ஒன்றினை வாங்கினேன். அது தான் படத்தின் கதை.

ப்ரூஸ்டின் மொழி நடை வாசிக்கச் சிரமமாக இருந்தது. வெட்டுக்கிளி தாவிச் செல்வது போல ஆங்காங்கே சில பக்கங்களைப் படித்தேன். தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. Time Regained திரைப்படத்தை இரண்டாயிரத்தில் பார்த்தபோது ப்ரூஸ்டினை ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது. அந்த ஆர்வத்தில் மும்பை பழைய புத்தகக் கடைகளில் தேடி மார்சல் ப்ரூஸ்டின் ஆறு தொகுதிகளையும் வாங்கினேன். இன்று வரை எதையும் முழுமையாகப் படிக்கவில்லை.

பிரெஞ்சு இலக்கியத்தில் பால்சாக், பிளாபெர், அந்துவான்த் செந்த் எக்ச்பெரி ,மார்க்ரெட் யூரிசனார் போன்றவர்களே எனது விருப்பத்திற்குரியவர்கள். ஆகவே மார்சல் ப்ரூஸ்டின் மேதமையை அறிந்திருந்தாலும் அவரை விரும்பிப் படிக்கவில்லை.

நேற்று நம்பி கிருஷ்ணனின் கட்டுரையைப் படித்து முடித்த போது உடனே மார்சல் ப்ரூஸ்டினை படிக்க வேண்டும் என்ற ஆசை உருவானது. மார்சல் ப்ரூஸ்டின் வாழ்க்கை, அவரது நாவல்வரிசை, அவரைப் பற்றிய புத்தகங்கள். திரைப்படங்கள், அவரை நம்பி படிக்க முனைந்த அனுபவம் என யாவும் இந்த ஒரே கட்டுரையில் இணைத்து எழுதப்பட்டிருக்கிறது.

மலையேற்றத்தில் ஈடுபடுகிறவர்கள் ஒவ்வொரு சிகரமாக ஏறுவார்கள். அதற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்வார்கள். ஒவ்வொரு சிகரத்தின் உச்சியினைத் தொடும் போதும் அளவற்ற ஆனந்தம் கொள்வார்கள். அது போன்ற ஒரு வாசிப்பு முறையை நம்பி கிருஷ்ணன் கொண்டிருக்கிறார். வாசிக்கக் கடினமான இலக்கியவாதிகளை அவர் ஆழ்ந்து படித்து எளிமையாக, நுட்பமாக அறிமுகம் செய்து வைக்கிறார்.

அவரது மொழிநடை பாதரசம் போல வசீகரமானது. புதிய தமிழ்சொற்களையும் சொற்சேர்க்கைகளையும் அழகாக வெளிப்படுத்துகிறார். இந்தக் கட்டுரையில் மலைச்சாலையைப் போல் வளைந்து செல்லும் வாக்கியங்களை எழுதியவர் ப்ரூஸ்ட் என்று ஒருவரியை எழுதியிருக்கிறார். ப்ரூஸ்டினை வாசிக்கும் போது இதை உணர்ந்திருக்கிறேன். நம்பியால் துல்லியமாக ப்ரூஸ்டின் மொழியை, அகஉணர்வுகளைச் சொல்லிவிட முடிகிறது.

டி.எஸ். எலியட் பற்றிய அவரது புத்தகம் படித்தபோது வியந்து போனேன். சமீபத்தில் அவரது கட்டுரைகளின் தொகுப்பு நரி முள்ளெலி டூயட் வெளியாகியுள்ளது. சர்வதேச இலக்கியம். சினிமா, கவிதை, குறித்து எழுதப்பட்ட சிறந்த தொகுப்பு.

பனிச்சறுக்கு விளையாட்டினை ஒருவருக்குக் கற்றுத் தருவது எளிதில்லை. அதுவும் உறைபனியே இல்லாத நிலத்தில் வசிப்பவருக்குச் சொல்லித்தருவது என்றால் எவ்வளவு சிரமம் என்று எண்ணிப்பாருங்கள். அப்படியான முயற்சி தான் ப்ரூஸ்ட் பற்றிய கட்டுரை.

நம்பியால் எங்கேயிருப்பவருக்கும் எளிதாகப் பனிச்சறுக்கு கற்றுதந்துவிட முடிகிறது. அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். தொடர்ந்து உலக இலக்கியத்தினைச் சிறப்பாக அறிமுகம் செய்துவரும் சொல்வனம் இதழுக்கு எனது வாழ்த்துகள்.

இணைப்பு

மாடலென்களும் டீயும் அல்லது ப்ரூஸ்டின் “In Search of Lost Time”
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 19, 2024 20:50

April 18, 2024

கவிதையினுள் மறைந்த கதை.

இந்திய ஆங்கிலக் கவிஞர் மீனா அலெக்சாண்டர் (Meena Alexander) ஒரு நேர்காணலில் தான் கதைகள் எழுத விரும்புகிறேன். ஆனால் அதைக் கவிதையாக எழுதிவிடுகிறேன் என்கிறார். அதே நேர்காணலின் இன்னொரு பதிலில் எனது கவிதையில் உப்புத் தண்ணீரில் கரைந்திருப்பது போலக் கதை கலந்திருக்கிறது என்றொரு விளக்கத்தையும் சொல்கிறார்.

கதை எனச் சிறுகதையாசிரியர்கள் சொல்வதும் மீனா அலெக்சாண்டர் சொல்வதும் ஒன்று தானா.

கதை என்று சொல்லப்படுவது நிகழ்வுகளா. அல்லது அனுபவங்களின் திரட்சியா. இது தான் கதை என்று  எவராலும் வரையறை செய்ய முடியவில்லை. மாறாக இவையெல்லாம் இணைந்து கதையை உருவாக்குகிறது என்று அதன் கச்சாப்பொருட்களை விவரிக்கிறார்கள்.

கவிதைகளில் கதை ஒளிந்திருப்பதை நானும் அறிவேன்.

இன்றுள்ள பெரும்பான்மை சிறுகதையாசிரியர்கள் கவித்துவமாக எழுதுவதற்கே விரும்புகிறார்கள். அவர்களுக்கு வெறும் கதை போதுமானதாகயில்லை. கவிதையின் மொழியில் கதைகள் எழுதவே விரும்புகிறார்கள். இதற்கு எதிர்நிலையாகக் கவிஞர்களோ கவிதையை நேரடியாக, உரைநடை போலக் கதாபாத்திரங்களுடன் எழுத முற்படுகிறார்கள்.

ஜென்கவிதைகளையும் ஜென் கதைகளையும் வாசிக்கும் போது இரண்டும் ஒரே நாணயத்தின் இருபக்கங்களைப் போலவே இருக்கின்றன. ஜென் கதைகளில் வரும் குருவிற்குப் பெரும்பாலும் பெயர் கிடையாது

ஜென் கதைகளில் குற்றத்திற்கு இடமில்லை. ஆகவே கதை எடையற்றதாக இருக்கிறது. குற்றம் தான் கதைக்கு எடையை, வேகத்தை உருவாக்க கூடியது. ஜென் கதைகளில் சிறுவர்களில்லை. ஜென்னில் வயது என்பது ஒரு கற்பிதமே. ஆகவே சிறுவனைப் போலக் குரு நடந்து கொள்கிறார். பைனாக்குலர் மூலம் தொலைதூரத்தில் ஒளிரும் நிலவை அண்மையில் காண்பதைப் போன்ற அனுபவத்தையே ஜென் கவிதைகள் ஏற்படுத்துகின்றன. சில நேரம் தொலைநோக்கி போலவும் சில நேரம் நுண்ணோக்கி போலவும் செயல்படுகிறது.

கவிஞர் தேவதச்சனுடன் உரையாடும் போது அவர் கவிதையின் நுட்பங்களை விடவும் கதையின் அழகியல் மற்றும் நுட்பங்களைக் குறித்தே அதிகம் உரையாடுவார். விவரிப்பார். அவரது கவிதையினுள்ளும் கதையிருக்கிறது. அன்றாட நிகழ்வுகளை அவர் கோர்த்து கதையாக்குவதில்லை மாறாக அவற்றை ஆழ்ந்து அவதானித்து இந்த நிகழ்வுகள் நடைபெறும் காலம் மற்றும் இடம் குறித்த பார்வையை முன்வைக்கிறார்.

மீனா அலெக்சாண்டரின் ஆங்கிலக் கவிதைகள் தனித்துவமானவை. கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட மீனா லண்டனில் படித்திருக்கிறார். அவரது தந்தை ஜார்ஜ் அலெக்சாண்டர் சூடானில் வானிலை நிபுணராகப் பணியாற்றியவர். ஆகவே சூடானில் சில காலம் வசித்திருக்கிறார். பதினைந்து வயதில் மேரி எலிசபெத் என்ற தனது பெயரை மீனா என்று மாற்றிக்கொண்டார்

டெல்லியிலும் ஹைதராபாத்திலும் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். பின்பு அமெரிக்காவிற்குச் சென்று ஆங்கிலத்துறை பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவச் சிகிச்சை பெற்று வந்த மீனா தனது 67வது வயதில் அமெரிக்காவில் காலமானார்

அவரது கவிதை ஒன்றில் அம்மாவிற்குத் தெரியாமல் மகள் பரணில் வைத்திருந்த தேனைத் திருடி அடிவாங்குகிறார். அது கதைக்கான கரு. அதைக் கவிதையில் வெளிப்படுத்தும் போது தேனும் அடிவாங்குவதும் எதிரெதிர் விஷயங்களாக மாறிவிடுகின்றன.

நினைவில் உறைந்து போனவிஷயங்களைக் கதையாக்கும் போது நினைவு புனைவுடன் இணைந்து உருமாற்றம் கொண்டுவிடுகிறது. அதே நினைவுகள் கவிதையில் வெளிப்படும் போது உணர்வு எழுச்சிகளே முதன்மையாக இருக்கின்றன.

ஜப்பானிய கவிதைகளில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த மீனா அலெக்சாண்டர் அவரது ஜப்பானிய கவிதை வாசிப்பு அனுபவத்தைத் தனது கவிதையின் பகுதியாக மாற்றிவிடுகிறார். புத்தகம், பயணம் இரண்டும் அவரது கவிதைகளில் தொடர்ந்து குறியீடாக இடம்பெறுகிறது.

நவீன ஓவியவகையான கொலாஜ் போல இவரது கவிதைகளில் வேறுவேறு நகரங்கள், வரலாற்று நிகழ்வுகள். சந்தித்த மனிதர்கள். மறக்க முடியாத நினைவுகள் ஒன்றிணைகின்றன. பல்வேறு பண்பாடுகளின் துண்டினை தனது கவிதையில் ஒன்றிணைக்கிறார் என்கிறார்கள்.

கவிதைகள் எழுதுவது எனக்கான தங்குமிடத்தை உருவாக்கும் முயற்சியாகும். இல்லையெனில், நான் எங்கும் இருக்க முடியாது என்று உணர்ந்தேன். வார்த்தைகளால் வசிப்பிடத்தை உருவாக்கும் பழக்கம் எனக்கிருந்தது. அந்த வகையில் கவிதைகளே எனது வசிப்பிடம். என்கிறார் மீனா அலெக்சாண்டர்

பம்பாய் துறைமுகத்தில் அலைகள் இருட்டாக இருந்தன என்று காந்தி தனது சுயசரிதையில் எழுதியிருக்கிறார். எழுதுவது என்பதே சத்திய சோதனை என்றொரு கவிதை வரியை மீனா அலெக்சாண்டர் எழுதியிருக்கிறார்.

பாஷோ எங்கே போனார்?
அவர் ஒரு மேகத்திற்குள் நுழைந்து, மறுபுறம் வெளியே வந்தார்:

••
என் ஆசை மேகம் போல அமைதியாக இருக்கிறது

என்பது போன்ற அழகாக வரிகளை கொண்டிருக்கிறது மீனாவின் கவிதைகள்.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 18, 2024 04:20

April 17, 2024

அரசனின் தனிமை

நிக்கோலஸ் அண்ட் அலெக்ஸாண்ட்ரா திரைப்படம் மூன்று சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது.

ஒன்று ரஷ்யாவின் கடைசி ஜார் மன்னர் நிக்கோலஸ் II ன் திருமணம் மற்றும் அரசாட்சியைப் பற்றியது. இரண்டாவது லெனின் ரஷ்யப்புரட்சியை உருவாக்கிய நிகழ்வுகளை விவரிக்கிறது. மூன்றாவது இளவரசனின் நோயை குணப்படுத்துவதாக அரண்மனைக்கு வந்து அலெக்சாண்ட்ராவின் அன்பை பெற்று ரஷ்ய அரசை ஆட்டுவைத்த மதகுரு ரஸ்புடின் பற்றியது.

இந்த மூன்று ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்ட சரடுகள். இவை இணைந்து கதைப்பின்னலை உருவாக்குகின்றன. பிரிட்டிஷ் தயாரிப்பில் உருவான படம் என்பதால் ரஷ்யாவின் மீதான வெறுப்பு ரகசியமாக மறைந்திருப்பதை உணர முடிகிறது. இப்படம் இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்றிருக்கிறது.

1971 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை ஃபிராங்க்ளின் ஜே. ஷாஃப்னர் இயக்கியுள்ளார்.

ரஷ்யாவின் ஜார் நிக்கோலஸ் II ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்ஸாண்ட்ராவைத் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அவள் ஒரு புராட்டஸ்டன்ட். இந்தத் திருமணம் நிக்கோலஸின் அன்னைக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் திருமண நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு அலெக்ஸாண்ட்ரா ஆர்வத்துடன் ரஷ்ய மொழியைக் கற்கத் தொடங்கினாள், காலப்போக்கில்  அவள் நன்றாக ரஷ்ய மொழி பேச கற்றுக்கொண்டாள்.

எல்லாக் குடும்பங்களிலும் நடப்பது போலவே மாமியார் மருமகள் சண்டை அரண்மனையிலும் நடந்தது. ஜெர்மானிய பழக்கவழக்கங்களை அரண்மனையில் கொண்டுவந்துவிட்டாள் என்று மாமியார் குற்றம் சாட்டினார். தன்னை அரண்மனையில் எவரும் மதிப்பதில்லை என்று அலெக்ஸாண்ட்ரா ஃபெத்ரோவ்னா குற்றம் சாட்டினார். அலெக்ஸாண்ட்ராவை ரஷ்ய மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று நிக்கோலஸின் அன்னை உறுதியாக நம்பினார்

இந்த இருவருக்கும் இடையில் ஜார் மன்னர் சிக்கிக் கொண்டிருந்தார். குடும்ப விவகாரங்கள் ஒரு தேசத்தின் தலைவிதியை எப்படி மாற்றி அமைக்கிறது என்பதற்கு ஜார் மன்னரின் கதை ஒரு உதாரணம்.

ஜார் மன்னரின் பிடிவாதம். மற்றும் நிர்வாகத்திறமையின்மை ஏற்படுத்திய நெருக்கடிகள். குழப்பங்கள், ரஷ்யாவை வீழ்ச்சியில் தள்ளின. மக்கள் வறுமையில் அவதிப்பட்டார்கள்.

ருஸ்ஸோ-ஜப்பானியப் போரில் தொடர்ந்து சண்டையிடுவதால் ராணுவ வீர்ர்கள் சோர்ந்து போய்விட்டார்கள். இனியும் சண்டை வேண்டாம் என்று மன்னரிடம் ஆலோசகர் கவுண்ட் செர்ஜியஸ் சொல்கிறார்.

மன்னரோ தனக்குப் பெருமையும் கௌரவமும் வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து சண்டையிடச் சொல்கிறார். இதில் லட்சக்கணக்கான ராணுவ வீர்ர்கள் இறந்து போகிறார்கள்.

நிக்கோலஸின் மாமா, நிக்கோலாஷா என்ற புனைப்பெயர் கொண்ட கிராண்ட் டியூக் நிக்கோலஸ், போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருமாறு வேண்டுகோள் வைக்கிறார். மேலும் ரஷ்ய மக்கள் பாராளுமன்ற ஜனநாயகத்திற்காக ஏங்குகிறார்கள். அதை அனுமதிக்க வேண்டியது மன்னரின் கடமை என்கிறார். இதே கருத்தை ஜார் மன்னரின் அன்னையும் சொல்கிறார். ஆனால் ஜார் அதனை ஏற்கவில்லை.

1904 ஆம் ஆண்டில், அலெக்சாண்ட்ரா தனது மகன் அலெக்ஸியைப் பெற்றெடுத்தார். அவனுக்குப் பிறப்பிலே ஹீமோபிலியா (ரத்தக்கசிவு நோய் ) இருப்பதைக் கண்டறிகிறார்கள். உடலில் சிறிய காயம் ஏற்பட்டால் கூட ரத்தப்பெருக்கு அதிகமாகி விடுகிறது. ஆகவே அவனது உயிரைக் காப்பாற்றுவது கடினம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

ரஷ்யாவின் மாமன்னராக இருந்தாலும் மகனின் உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் முன்னால் மன்றாட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இந்த நிலையில் அலெக்சியின் உயிரைத் தன்னால் காப்பாற்ற முடியும் என்று அரண்மனைக்கு வருகிறார் மதரு கிரிகோரி ரஸ்புடின். இதற்காகச் சிறப்புப் பிரார்த்தனைகளை மேற்கிறார். அலெக்ஸின் உடல் நலம் தேறுகிறது. இந்த அற்புதத்தைக் கண்ட அலெக்ஸாண்ட்ரா தனது குருவாக ரஸ்புடினை ஏற்றுக் கொள்கிறாள்.

மிதமிஞ்சிய குடி, விருந்து, பெண்கள் என உல்லாசமான வாழ்க்கையை அனுபவிக்கும் ரஸ்புடின் அரண்மனை விவகாரங்களில் தலையிடுகிறான். ராணியைப் பதுமையைப் போல ஆட்டி வைக்கிறான். இதை ஜார் மன்னர் விரும்பாத போதும் ராணியின் பொருட்டு அனுமதிக்கிறார்.

ஃபாதர் ஜார்ஜி கபோன் போராடும் மக்களைக் குளிர்கால அரண்மனையை நோக்கி அழைத்து வருகிறார். அமைதியான வழியில் போராட முயன்ற மக்களின் மீது காவலர்கள் துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள். ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொண்ட அந்த நிகழ்வை ஜார் மன்னர் அறிந்திருக்கவேயில்லை என்று படத்தில் காட்டுகிறார்கள்.

குளிர்கால அரண்மனையை நோக்கி மக்கள் திரண்டு வரும் காட்சி படத்தில் மிகச்சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பணியாற்றிய பலரும் இயக்குநர் டேவிட் லீனின் குழுவைச் சேர்ந்தவர்கள். ஆகவே சில காட்சிகள் டேவிட் லீன் படத்திலிருப்பது போலவே உருவாக்கபட்டுள்ளது.

ரஷ்யாவின் இந்தக் கொந்தளிப்பான அரசியல் சூழ்நிலையைப் புரிந்து கொண்ட லெனின் தனது தோழர்களுடன் புரட்சிக்கான திட்டமிடுதலை மேற்கொள்கிறார். படத்தில் டிராட்ஸ்கிக்கும் லெனினுக்குமான கருத்துவேறுபாடுகளும் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. ரஷ்ய பாராளுமன்றமான டூமாவில் நடைபெறும் நிகழ்வுகள் சிறப்பாகக் காட்சிப்படுத்தபட்டுள்ளன.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நிக்கோலஸ் தனது குடும்பத்துடன் லிவாடியா அரண்மனையில் விடுமுறையைக் கழிக்கிறார். அப்போது அலெக்ஸி விளையாட்டுச்சிறுவன். அவன் உயரமான இடத்தில் ஏறி நிற்பதைக் கண்ட மன்னர் எங்கே கிழே விழுந்து மறுபடி ரத்தக்கசிவு ஏற்பட்டுவிடுமோ என்று பயந்து சப்தமிடுகிறார். அலெக்ஸியை பாதுகாப்பாகக் கிழே இறங்க வைக்கிறார்கள்.

ரஸ்புடினின் நடவடிக்கைகள் பற்றிய ரகசிய அறிக்கையை ஜார் மன்னர் வாசிக்கிறார். அவரை அரண்மனையை விட்டுத் துரத்திவிடும்படியாக உத்தரவிடுகிறார். அதன்படி ரஸ்புடினை மிரட்டி அரண்மனையை விட்டு வெளியே துரத்துகிறார்கள். அவன் தனது சொந்த ஊரான சைபீரியாவிற்குப் புறப்படுகிறான்.

எதிர்பாராத விதமாக மீண்டும் அலெக்ஸிக்கு இரத்தப்போக்கு ஏற்படுகிறது. இப்போது ரஸ்புடினால் மட்டுமே அவனைக் காப்பாற்ற முடியும் என்று அலெக்ஸாண்ட்ரா நம்புகிறார். உடனடியாக ரஸ்புடினை திரும்ப அழைத்து வரும்படி உத்தரவிடுகிறாள். ஆனால் அதை ஜார் மன்னர் விரும்பவில்லை.

1913 ஆம் ஆண்டு ரோமானோவ் குடும்பத்தின் முந்நூறு ஆண்டுகால ஆட்சியைக் கொண்டாட்ட ரஷ்யா முழுவதும் மன்னரும் ராணியும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள். வழிமுழுவதும் மக்கள் உற்சாகமாக வரவேற்கிறார்கள்.

முதலாம் உலகப் போர் தொடங்கும் போது , ஜெர்மன் எல்லையில் இம்பீரியல் ரஷ்ய இராணுவத்தை முழுமையாக அணிதிரட்டும்படியாக ஜார் கட்டளையிடுகிறார். குடும்ப ரீதியாக ஜெர்மனி அரசு உறவு கொண்டது என்பதால் நட்புக்கரம் நீட்டுகிறார். ஆனால் ஜெர்மனி போரைப் பிரகடனம் செய்வதன் மூலம் பதிலடி கொடுக்கிறது. ராணி அலெக்சாண்ட்ராவை ஒரு ஜெர்மன் உளவாளி என்று பொதுமக்கள் நம்புவதாக ராணியின் அன்னை தெரிவிக்கிறார்.

அலெக்ஸாண்ட்ராவை தனது பிடியில் வைத்துக் கொண்ட ரஸ்புடின் சுகபோகங்களை அனுபவிக்கிறான். ரஸ்புடினின் மோசமான செயல்களைப் பற்றி அறிந்த கிராண்ட் டியூக் டிமிட்ரி மற்றும் இளவரசர் பெலிக்ஸ் யூசுபோவ் இணைந்து மதுவில் விஷம் கலந்து ரஸ்புடினை குடிக்க வைத்து கொலை செய்கிறார்கள். இந்த மரணம் அலெக்ஸாண்ட்ராவின் மனநிலையைப் பாதிக்கிறது. 1917ல் ரஷ்யப்புரட்சி நடைபெறுகிறது. ஜார் ஆட்சி வீழ்கிறது.

ஜார் மன்னர் தனது குடும்பத்துடன் சைபீரியாவில் உள்ள டோபோல்ஸ்கிற்கு நாடுகடத்தப்படுகிறார் அவர் இங்கிலாந்திடம் அரசியல் தஞ்சம் வேண்டுகிறார். ஜார் மன்னரும் அவரது மகள்களும் டன்ட்ராவில் ஒரு விவசாயி வீட்டில் எளிய வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள். வெளியே காவல் இருக்கும் வீர்ர்கள் இளரவசியைக் கேலி செய்கிறார்கள். இதைத் தடுக்க முயன்ற அலெக்ஸியை தாக்குகிறார்கள். ஜார் மன்னர் மற்றும் அரச குடும்பத்திற்கு என்ன ஆனது என்பதே படத்தின் இறுதிப்பகுதி.

ஜார் மன்னர் நல்லவர் போலவும் பராம்பரிய பெருமையைக் காப்பாற்றவே தவறான செயல்களை மேற்கொண்டது போலவும் படம் சித்தரிக்கிறது. அது உண்மையில்லை. வரலாறு சித்தரிக்கும் ஜாரின் கதை வேறுவிதமானது. அது போலவே ரஷ்யப்புரட்சியைத் தற்செயல் விளைவு போலவே படம் சித்தரிக்கிறது. அதுவும் உண்மையில்லை.

ஆடம்பரமான வாழ்க்கையை அரண்மனையில் வாழ்ந்த போதும் மன்னரும் அவரது குடும்பமும் உண்மையான அன்பு கிடைக்காமல் ஏங்குகிறார்கள். அதை வெளியே காட்டிக் கொள்வதில்லை. படத்தின் முடிவில் அவர்கள் எளிய விவசாய குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் நாட்களில் தான் பரஸ்பர அன்பை உணருகிறார்கள்.

படத்தின் இறுதிக் காட்சியில் ஜார் மன்னரிடம் அவரது தவறான முடிவுகளால் எவ்வளவு பேர் இறந்து போனார்கள் தெரியுமா என்று விசாரணை அதிகாரி கேட்கிறார். அவரால் பதில் சொல்ல முடியவில்லை. தான் செய்த குற்றங்களைப் பற்றி எதுவும் அறிந்திராமல் இருப்பது மோசமானது. ஏழு மில்லியன் மக்களைக் கொன்றிருக்கிறீர்கள். அது மன்னிக்க முடியாத பெருங்குற்றம் என்று கூறி அவருக்குத் தண்டனை விதிக்கிறார்கள்.

அரண்மனை விருந்தில் தன்னை அவமதிக்கிறார்கள் என்று உணர்ந்த அலெக்சாண்ட்ரா தனியே அமர்ந்திருக்கும் காட்சியும், மகன் பிழைத்துக் கொண்டான் என்பதை அறிந்து அவனைக் காண வரும் ஜார் மன்னரின் காட்சியும். அரண்மனை வாழ்க்கை இழந்த நிலையில் இளவரசிகள் சைபீரியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபடும் காட்சியும் மறக்க முடியாதவை.

அலெக்ஸாண்ட்ராவாக ஜேனட் சுஸ்மான் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த வேஷத்தில் முதலில் ஆட்ரி ஹெப்பன் நடிப்பதாக இருந்தது என்கிறார்கள். ஆட்ரியிடம் காணப்படும் வெகுளித்தனம் இதற்குப் பொருந்தாது என்றே தோன்றுகிறது.

A strong man has no need of power, and a weak man is destroyed by it. என்று ஒரு காட்சியில் ஜார் மன்னர் சொல்கிறார். அது அவருக்கே பொருந்தமானது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 17, 2024 01:37

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.