S. Ramakrishnan's Blog, page 31
May 29, 2024
நிழலின் இனிமை.
ஜப்பானிய எழுத்தாளர் ஜுனிச்சிரோ தனிசாகி எழுதிய In Praise of Shadows 1933 ஆம் ஆண்டு வெளியான ஆய்வுக்கட்டுரையாகும்.
இதில் ஜப்பானியப் பாரம்பரியத்தில் ஒளி மற்றும் இருளின் இடம் பற்றிய தனது அவதானிப்புகளை விரிவாக எழுதியுள்ளார். குறிப்பாக ஜப்பானிய வீடு மற்றும் கட்டிடங்களின் தனித்துவம், ஜப்பானிய நிகழ்த்துகலைகளில் பயன்படுத்தப்படும் குறைந்த வெளிச்சம் பற்றியும், மேற்கத்திய தொழில்நுட்பங்களுக்குப் பதிலாக சொந்த மண்ணிலிருந்து உருவாகும் அறிவியல் முயற்சிகள் பற்றியும் சிறப்பாக எழுதியிருக்கிறார்.

In Praise of Shadows வை ஒரு ஆவணப்படமாக எடுத்திருக்கிறார்கள். நேர்த்தியான காட்சிகள் நேர்காணல்களுடன் சிறப்பாக ஆவணப்படம் உருவாக்கபட்டுள்ளது.
ஆவணப்படத்தின் இணைப்பு
May 26, 2024
லிடியா டேவிஸ் நேர்காணல்
தனது எழுத்துலகம் மற்றும் குறுங்கதைகள் குறித்துப் பேசுகிறார் எழுத்தாளர் லிடியா டேவிஸ்
உலகின் சமநிலை
அனிமேஷன் திரைப்படங்கள் நமக்கு வியப்பூட்டும் மாற்று உலகை அறிமுகம் செய்கின்றன. அந்த உலகம் விசித்திரமானது. அற்புதங்களால் நிரம்பியது. நம் அன்றாடத்தைப் போலவே அங்கும் ஒரு அன்றாட வாழ்க்கையிருக்கிறது. ஆனால் அந்த வாழ்க்கை மனிதர்களை மட்டுமே மையப்படுத்தியதில்லை.

ஒரு முயலின், நாரையின், மீனின் பார்வையில் உலகைக் காணுவது வியப்பானது. குழந்தைகளே அப்படிக் கற்பனை செய்கிறார்கள்.
ஆலீஸின் அற்புத உலகம் நாவலில் முயலைத் துரத்திக் கொண்டு செல்லும் ஆலீஸ் புதிய உலகைக் கண்டறிகிறாள். அந்த உலகின் முட்டாள்தனங்களும் அபத்தங்களும் அவளை எரிச்சல்படுத்துகின்றன. அவள் சிறுமியா, அல்லது வளர்ந்த பெண்ணா என்று கம்பளிப்புழுவிற்குச் சந்தேகம் வருகிறது. அவள் கண்ணீர் குளத்தில் நீந்துகிறாள். பூக்களுக்கு வண்ணம் அடிப்பவர்களை சந்திக்கிறாள். இந்த சாகசப்பயணத்தில் அவளது உடல் நீண்டும் சுருங்கியும் மாறிக் கொண்டேயிருக்கிறது. இந்தக் கதை சிறுவர்கள் படிக்கும் போது வேடிக்கை கதையாக இருக்கிறது. பெரியவர்கள் படிக்கும் போது மிகச்சிறந்த தத்துவார்த்த நாவலாக மாறிவிடுகிறது.
மியாசாகியின் The Boy and the Heron அனிமேஷன் படத்தை திரையரங்கில் பார்த்த போது Alice in Wonderland கதையே நினைவிற்கு வந்தது. தனது 83வது வயதில் மியாசாகி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்த ஆண்டின் சிறந்த அனிமேஷன் படத்திற்கான ஆஸ்கார் விருது பெற்றிருக்கிறது. இது போன்ற படத்தை திரையரங்கில் பார்ப்பது சிறந்த அனுபவம். சென்னையில் உள்ள திரையரங்கில் நான் காணச்சென்றிருந்த போது அரங்கு நிறைந்த கூட்டம்.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மியாசாகி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதுவே அவரது கடைசிப்படம் என்கிறார்கள். அவரது திரைப்பயணத்தில் இந்தப் படம் முக்கியமானது. அவரது வாழ்க்கை வரலாற்றின் சாயல்கள் கொண்டது என்கிறார்கள்.
இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில் மருத்துவமனை ஒன்றில் ஏற்படும் தீ விபத்தில் மஹிதோ என்ற சிறுவன் தனது தாயை இழக்கிறான். அவனது தந்தை ஷோய்ச்சி ஜப்பான் ராணுவத்திற்கான போர்விமானங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்துகிறார். மனைவியை இழந்த ஷோய்ச்சி நட்சுகோ என்ற இளம்பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார். அவள் மஹிதோ அம்மாவின் தங்கை.

சிற்றன்னையுடன் வாழ்வதற்காக டோக்கியாவோலிருந்து மஹிதோ ஒரு கிராமத்திற்குப் புறப்படுகிறான். அவனது பயணத்திலிருந்தே படம் துவங்குகிறது. சித்தி அவனை வரவேற்று வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போகிறாள். பயண அசதியில் வீட்டிற்கு வந்தவுடன் உறங்கிவிடுகிறான். கனவில் அம்மா நெருப்பில் எரியும் காட்சி வருகிறது. திடுக்கிட்டு எழுந்து கொள்கிறான்.
அவன் கிராமத்திலுள்ள வீட்டிற்கு வரும் போது வழியில் ஒரு நாரையைக் காணுகிறான். அந்தச் சாம்பல் நிற நாரை அவனது ஜன்னலைத் தட்டி எதையோ சொல்ல முற்படுகிறது. அவன் தனியே இருக்கும் நேரங்களில் அவன் கண்ணில் படுவது போலப் பறக்கிறது. அந்த நாரையைக் காணுவதற்காக வீட்டின் வெளியே செல்கிறான் மஹிதோ
. நாரை எதற்காகத் தன்னைச் சுற்றி வருகிறது என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை
கர்ப்பிணியாக உள்ள அவனது சிற்றன்னை நட்சுகோ அவன் மீது அன்பு செலுத்துகிறாள். பணியாளர்களாக அந்த வீட்டிலிருக்கும் முதியவர்களின் தோற்றமும் செயலும் வியப்பளிக்கிறது.
வீட்டின் அருகிலுள்ள இடிந்த கோபுரம் ஒன்றிற்குள் நாரை போய்விட்டதைக் காணும் மஹிதோ அதற்குள் செல்லுகிறான். கைவிடப்பட்ட நிலையிலுள்ள அந்தக் கோபுரத்தைப் பற்றிப் பணியாளர்கள் அச்சமூட்டும் கதையைச் சொல்கிறார்கள்
அருகிலுள்ள பள்ளியில் மஹிதோ சேர்க்கப்படுகிறான். அங்கே மாணவர்களுடன் நடக்கும் சண்டையில் அவமானப்படுத்தப்படுகிறான். தன்னை அடித்தவனைப் பழிவாங்க வேண்டுமென்று தன்னைத் தானே தாக்கிக் கொள்ளும் மஹிதோ வீட்டில் ஓய்வெடுக்கிறான்.
இந்த நாட்களில் அவனைத்தேடி வரும் நாரை அவனது அம்மா இறந்து போகவில்லை. அவளைக் கண்டுபிடிக்கத் தான் உதவி செய்வதாகச் சொல்கிறது. மஹிதோ பேசும் நாரையைக் கண்டு வியப்படைகிறான். ஆனால் அது சொல்வது உண்மையில்லை என்று வாதிடுகிறான். அந்த நாரை அவனைத் தாக்க முற்படுகிறது. பணியாளர்கள் அவனைத் தேடிவரவே நாரை பறந்து போய்விடுகிறது. ஆத்திரமான மஹிதோ நாரையை வீழ்த்துவதற்காக வில் அம்புகளைச் செய்து வேட்டையாட முயலுகிறான். அவனது அம்பு விசேசமானது. மந்திர சக்தி கொண்டது.

ஒரு நாள் வீட்டிலிருந்த சிற்றன்னையைக் காணவில்லை எனப் பணியாளர்கள் தேடுகிறார்கள். அவளைத் தேடி மஹிதோ கிளம்புகிறான். அவனுடன் கிரிகோ என்ற வயதான பெண்ணும் உடன் வருகிறாள். அவர்கள் இடிந்த கோபுரத்திற்குள் செல்கிறார்கள்.
அந்தப் பயணம் வியப்பூட்டும் இன்னொரு உலகிற்குள் அவர்களை அழைத்துச் சென்றுவிடுகிறது.
கடல் உலகில் நடக்கும் சாகசங்கள். கிளிகளின் படையை வழிநடத்தும் கிளி ராஜா, மற்றும் அவரது ராஜ்ஜியத்திற்குள் நடக்கும் விநோத நிகழ்வுகள். உலகத்தின் பாதுகாவலரைத் தேடிச் சென்று சந்திப்பது. குமிழ் வடிவத்தில் உயிர்கள் பிறப்பதற்காகப் பயணிப்பது எனக் கற்பனையின் உச்சமாக மியாசாகி உருவாக்கியுள்ள உலகம் நம்மைப் பிரமிக்க வைக்கிறது.
பிறப்பு, இறப்பு, உயிர்களின் தோற்றம், வாழ்க்கையின் அர்த்தம் எனத் தத்துவார்த்தமாகவும் படத்தின் சில காட்சிகளை மியாசாகி சித்தரித்துள்ளார்.
அனிமேஷன் படம் என்பது சிறார்களுக்கு மட்டுமானதில்லை. அது மாற்று மெய்மையின் சித்தரிப்பு. இயந்திரமயமாகிப் போன இன்றைய வாழ்க்கைக்கு மாற்றை உருவாக்க விரும்புகிறேன். நாட்டுப்புறக் கதைகளில் வருவது போல நிஜமும் மாயமும் ஒன்று கலந்த கதையைத் தான் எப்போதும் தேர்வு செய்கிறேன். இந்தப் படத்தில் வரும் நாரை படத்தின் ஆரம்பத்தில் ஆச்சரியப்படுத்தும் பறவையாக அறிமுகமாகிறது. பின்பு அது அச்சமூட்டும் பறவையாகிறது. பின்பு அதுவே வேடிக்கை செய்யும் பறவையாக மாறிவிடுகிறது. பார்வையாளரைச் சிரிக்க வைக்க ஒரு கதாபாத்திரத்தை உருவாக்குவதை விடவும் ஒரே கதாபாத்திரம் வேறுவேறு சூழல்களில் வேறுவிதமாக நடந்து கொள்ளச் செய்வதையே விரும்புகிறேன். பள்ளிச்சிறுவனாக அறிமுகமாகும் மஹிதோ இடிந்த கோபுரத்திற்குள் சிற்றனையைத் தேடிச் செல்வதிலிருந்து நாயகனாகிவிடுகிறான். அவனே பின்பு உலகின் மீட்பனாகவும் மாறுகிறது. உலகின் சமநிலை காப்பாற்றப்பட வேண்டும் என்பதையே படம் விளக்குகிறது என்கிறார் மியாசாகி.
மஹிதோ கிராமத்திலிருக்கும் தனது புதிய வீட்டிற்கு வரும் காட்சி மிகவும் அழகானது. பசுமையான மரங்கள். பழங்கால வீடு. வீட்டின் அருகில் குளம், வீட்டின் பின்புறமுள்ள மர்மமான இடிந்த கோபுரம், வீட்டிலுள்ள முதிய பணியாளர்கள். அவர்களின் குறும்புத்தனங்கள் எனக் கிராமப்புற வாழ்க்கை இனிதாகத் துவங்குகிறது. இது போலவே முதியவர்களின் உற்சாகம் மற்றும் ஆசைகள். கிளிகளின் அணிவகுப்பு மற்றும் கடல் வேட்டை காட்சிகள் அபாரமானவை.

படம் துவங்கும் போது தாயை இழந்த சிறுவனுக்குப் புதிய வாழ்க்கை ஆரம்பிக்கப் போவதாக நாமும் நம்புகிறோம். ஆனால் சிற்றன்னையைத் தேடிச் செல்வதிலிருந்து கதையின் போக்கு மாறிவிடுகிறது. தொடர் சாகசங்களால் ஆலீஸ் உருமாறுவது போல அவனும் மாறிக் கொண்டேயிருக்கிறான். முடிவில் தான் யார். தன் வாழ்விற்கு என்ன அர்த்தமிருக்கிறது. தான் செய்ய வேண்டிய கடமைகள் என்ன என்பதை மஹிதோ அறிந்து கொள்கிறான்.
ஜப்பானிய மரபில் நாரைகள் மரணம் மற்றும் இறுதிச் சடங்குகளுடன் தொடர்புடையவை. வெள்ளை நாரை நடனம் என ஒரு நடனச்சடங்கு ஜப்பானில் இன்றும் நிகழ்த்தப்படுகிறது. விண்ணுலகின் தூதுவன் போல அறிமுகமாகும் நாரை மெல்லத் தந்திரத்தின் அடையாளமாக மாறுகிறது. ஒரு காட்சியில் இந்த வாழ்க்கை நாங்கள் விரும்பி பெற்றதில்லை என்கிறது ஒரு பறவை.
இயற்கையின் பேரியக்கத்தையும் அதன் சமநிலையைப் பேணுவதற்காக மனிதர்கள் எடுக்க வேண்டிய முயற்சியினையும் மியாசாகி அழகாக வெளிப்படுத்துகிறார். மஹிதோவின் பயணம் என்பது இன்று நாம் இழந்துவிட்ட, மறந்துவிட்ட வாழ்க்கையைப் பற்றிய நினைவூட்டலாகும். கையால் வரையப்பட்ட ஓவியங்களைக் கொண்டு நம்மை அற்புத உலகிற்குள் அழைத்துச் செல்கிறார் மியாசாகி. அந்த வகையில் இது பிரமிக்க வைக்கும் திரைப்படமாகும்
தவற விட்ட மீச்சிறு தருணங்கள்
துணையெழுத்து- வாசிப்பனுபவம்
– கோபி சரபோஜி

எஸ். ராமகிருஷ்ணன் ஆனந்த விகடனில் தொடராக எழுதிய சமயத்தில் வாசித்தேன். அதன் பின் நூல் வடிவில் பல தடவை வாசித்தாயிற்று. சமீபத்தில் செய்திருந்த அறுவை சிகிச்சை முழு ஓய்வைத் தந்து கொண்டிருக்கிறது. அந்த நாட்களை நகர்த்தவும், வலியின் வேதனையைக் குறைக்கவும் வாசிப்பே ஆறுதலாய் இருக்கிறது. உறவினர்களும், நண்பர்களும் நலம் விசாரிக்க வந்து போவதைக் கண்ட போது துணை எழுத்தை வாசிக்கலாம் எனத் தோன்றியது. வாசிக்கும் ஒவ்வொரு முறையும் என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், பார்க்கும் மனிதர்கள் குறித்து அது புதிய கண்ணோட்டத்தைத் தந்து கொண்டே இருக்கும். எனக்கு மட்டுமல்ல வாசித்த ஒவ்வொருவரும் இதை உணர்ந்திருக்க முடியும்.
இந்தச் சமூகத்தை எப்பொழுதுமே அலட்சியமாக, சுயநலமாகப் பார்க்கப் பழகி விட்டோம். அந்தப் பழக்கம் வழக்கமாகி நம்முடைய வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து விட்டது. ஆனால், எஸ். ரா.வின் பார்வையின் வழியே கசியும் எழுத்து ஒவ்வொரு முறையும் நம்மை அந்தப் பிணைப்பில் இருந்து மீட்டுக் கொண்டே இருக்கிறது. அவர் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை, பார்க்கு இடங்களை, சந்திக்கும் மனிதர்களை, அவர்களின் துயரங்களை, வாழ்வியலை, அறத்தை, இயல்பை அணுகும் விதத்தில் நம்மை வேறு ஒரு மனவெளிக்குக் கொண்டு வந்து நிறுத்தும் போது நம் தோல்வியை மறுக்க முடியவில்லை.
இந்தத் தொகுப்பில் இருக்கும் பலவித கட்டுரைகளுக்கான சம்பவங்களை என் பால்யத்தில் கண்டிருக்கிறேன். காணாமல் போவது எப்படி? உள்ளிட்ட சிலவற்றிக்குச் சாட்சியாக இருந்திருக்கிறேன். ஆனால், அவைகளை அந்த வயதில் நான் கண்டு இரசித்த விதமும், எஸ்.ரா. கண்டு உணர்ந்த விதமும் மலைக்கும், மடுவுக்குமானதாக இருக்கிறது. அதனால் தானோ என்னவோ எதையும் மீட்டுருவாக்கம் செய்யும் படைப்பாளியாக அவரால் எப்பொழுதும் நம்மோடு பயணிக்க முடிகிறது என்று நினைக்கிறேன்.
ஒரு வீட்டிற்குள் நடக்கும் அந்தரங்கமான புரிதலின்மை, விரிசல்கள், நீர்த்துப் போன விருந்தோம்பல், மனிதர்களின் மனப்புழுக்கங்கள், எதிர்பார்ப்புகள், பெண்கள் படும் துயரங்கள், சாதிய நிலைகள், அறிந்தும் அறியாது கடந்து போன நம் அக்ரோஷ முகங்கள், கலைகளின் நசிவு, நினைக்க மறந்த படைப்பாளிகளின் நினை கூரல்கள், நண்பர்களின் ஸ்பரிசம், உறோடுடனான உறவு, இலக்கியங்கள் என வாழ்வின் நான்கு திசைக மனிதர்களையும், சம்பவங்களையும் ஓரிழையாக்கி ”இப்படி இருக்கிறோமே” என ஆதங்கமாய்ச் சொல்லி விட்டு ”இப்படி இருந்திருக்கலாமே” என அன்பின் பால் நம்மைத் திசை திருப்புகிறார். சக மனிதனிலிருந்து விலகிப் அதன் எல்லைகளை நாம் எட்டி விட்ட நிலையில் சகமனிதன் மீதான பார்வைகளை மாற்றிப் போட வைத்து விடுகிறார்.
பெரும் வன்முறை ஒன்று நிகழும் இடத்தில் கூட அதன் பின் அலைந்து திரியும் மனிதத் துயரங்களை நமக்குக் காட்டுகிறார். புத்தகங்களுடனான நெருக்கமும், வாசிப்பும் ஒரு மனிதனை எப்படியெல்லாம் அலைந்து திரிய வைக்கும் என்பதை வாசித்த போது தேசாந்திரியாய் அவர் இன்று எடுத்திருக்கும் அவதாரத்தின் ஆரம்ப வித்துப் புரிகிறது. மனித துயரங்களை மட்டுமல்ல தான் பார்க்கும் அனைத்தையுமே அதே கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறார். “கூழாங்கல்லின் குளிர்ச்சியை, அழகை உணரத் தெரிந்த நமக்கு அது தண்ணீருக்குள் அடைந்த வேதனையை மட்டும் ஏனோ பார்க்கத் தெரியாமல் போகிறது” என்ற வரிகள் எஸ். ரா.வின் உள்ளக்கிடக்கையைச் சொல்லி விடுகிறது.
வாழ்வை நேசித்தல் குறித்தும், இழப்புகள் குறித்த ஆதங்கம் பற்றியும், நன்றியுணர்வு சார்ந்தும், வாழ்தலின் அர்த்தம் காட்டியும் அவர் எழுதியிருக்கும் கட்டுரைகள் வாழ்தலின் மீதான பிடிப்பைத் தருகிறது. “மனுசன் மட்டும் தான் ஒவ்வொன்னுக்கும் கணக்குப் பார்த்துகிட்டு” என்ற ஒற்றை வரி சொல்லி விடுகிறது நம் இன்றைய வாழ்வின் லட்சணத்தை! ஒவ்வொரு கட்டுரைகளின் வழியாகவும் இமயமலையைக் கடத்தல் போன்ற அசாத்திய வாழ்வியலில் காணத் தவறி விட்ட மீச்சிறு தருணங்களைக் குருவிகளைப் போலக் கடந்து நமக்கு மீட்டுத் தருகிறார்.
துணையெழுத்து வழியாக நான் என் வாழ்வை அவிழ்த்து பார்த்துக் கொண்டேன் என எஸ்.ரா. குறிப்பிடுகிறார். அவர் மட்டுமல்ல. வாசிக்கின்ற நாம் ஒவ்வொருவரும் தான்!
May 23, 2024
அன்பின் வடிவம்.
இரா.ராஜசேகர்

தங்களின் மண்டியிடுங்கள் தந்தையே என்ற நாவலை படித்தேன். ஒரு சிறந்த நாவலை படித்ததில் பெருமகிழ்ச்சி அடைந்தேன்.
இந்நாவலை படிக்கும்பொழுது ரஷ்யாவில் வாழ்ந்தது போல உணர்ந்தேன். லியோடால்ஸ்டாய் தவறுகளைச் செய்யும் ஒரு சாதாரண மனிதராகவும் சக மனிதனை நேசிக்கும் ஒரு புனிதராகவும் என் கண் முன்னே நிற்கிறார்.
சோபியா தன் கணவனுக்கும் அவன் காதலிக்கும் நடுவே பாசப் போராளியாக நிமிர்ந்து நிற்கிறாள். அக்ஸின்யா தன் மகனுக்கும் காதலனுக்கும் நடுவே உரிமையில்லாத காதலியாக மகனே உலகம் எனும் அவலத் தாயாகப் புதைந்து கிடக்கிறாள்.
சோபியாவிற்கும் அக்ஸின்யாவிற்கும் இடையேயான உறவு அதிகார வர்க்கத்திற்கும் பாட்டாளி மக்களுக்குமான பெரும் இடைவெளியாக இருக்கிறது.
திமோஃபி தன் தந்தையின் பாசத்திற்கு ஏங்கும் உரிமை கோராத மகனாக மனதில் தங்கிவிடுகிறார். முட்டாள் டிமிட்ரி நமக்கு முட்டாள் இவானை நினைவுபடுத்துகிறார். அதிகாரம் ஒரு நன்மையையும் மக்களுக்குச் செய்யாது செய்பவனையும் விடாது என்பது எனக்குப் பிடித்தமான பதிவு.
மண்டியிடுங்கள் தந்தையே என்று நினைத்தவனை அவன் தாயின் முன் மண்டியிடச்செய்தது அழுத்தம்.
தங்களின் கலைப் பயணம் தொடர வாழ்த்துக்கள்
May 22, 2024
பசித்தவன்
எட்வர்ட் மன்ச் வரைந்த The Scream என்ற ஓவியத்தைக் காணும் போதெல்லாம் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான நட் ஹாம்சனின் பசி நாவலே நினைவிற்கு வருகிறது. ஒன்று, பசியால் துரத்தப்படும் எழுத்தாளனின் ஓலம். மற்றொன்று நகரவாழ்வின் நெருக்கடி உருவாக்கிய அலறல். மன்ச்சின் ஓவியத்திலிருப்பவன் தான் ஹாம்சன் நாவலில் எழுத்தாளனாக வருகிறான் என்றே நினைத்துக் கொள்கிறேன்.


நட் ஹாம்சனின் பசி நாவல் 1890 இல் வெளியானது. இளம் எழுத்தாளனின் வாழ்க்கை போராட்டத்தை விவரிக்கும் இந்த நாவல் திரைப்படமாகவும் வந்துள்ளது.
நாவல் கிறிஸ்டியானியா நகரில் நடக்கிறது (இப்போது அந்த நகரின் பெயர் ஒஸ்லோ) நாவலில் கதாநாயகனுக்குப் பெயரில்லை. அவன் ஒரு அடையாளம் மட்டுமே. கிறிஸ்டியானியா என்ற நகரில் வசித்தவர்கள் அதன் நினைவுகளிலிருந்து விடுபட முடியாது. அதிசயமான நகரமது என்கிறார் ஹாம்சன்
எழுத்தாளனின் கடந்தகாலம் பற்றி நாவலில் அதிகமில்லை. அவனது நிகழ்காலமும் அவனைத் துரத்தும் பசியும் தான் நாவலாக விரிவு கொள்கின்றன. கிறிஸ்டியானியா நகரம் நாவலில் விரிவாகச் சித்தரிக்கப்படுகிறது. .

ஹாம்சனின் முன்னோர்கள் நார்வே நாட்டு விவசாயிகளாக இருந்தனர். அந்தப் பின்புலத்தைக் கொண்டே நிலவளம் நாவலை எழுதியிருக்கிறார். பசி நாவலின் நாயகன் போலவே ஹாம்சனும் அலைந்து திரியும் வாழ்க்கையைக் கொண்டிருந்தார். செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் பயிற்சி பெற்ற அவர், தனது சிறிய சேமிப்பைப் பயன்படுத்தி, தனது பதினெட்டாவது வயதில் சிறுநூல் ஒன்றைத் தானே வெளியிட்டார். அது இலக்கிய உலகில் கவனம் பெறவில்லை. பள்ளி ஆசிரியர், சாலைப்பணியாளர், சர்வேயர், கார் ஓட்டுநர், நிலக்கரி சுரங்கத்தில் வேலை எனப் பல்வேறு வேலைகளைச் செய்திருக்கிறார் ஹாம்சன்.
இந்த நாவல் முழுவதும் பசி எழுத்தாளனைத் துரத்திக் கொண்டேயிருக்கிறது. அவனை அவமானப்படுத்துகிறது. பொய் சொல்ல வைக்கிறது. எச்சிலை உணவாக விழுங்கி வாழச் செய்கிறது. பசியின் உச்சத்தில் அவன் வாந்தியெடுக்கிறான். தனது கைவிரல்களைத் தின்றுவிடலாமா என யோசிக்கிறான். கடித்துப் பார்க்கிறான். தீராப்பசியில் பித்தேறியவன் போல நடந்து கொள்கிறான்.
சிறிய அறை ஒன்றில் வசிக்கும் எழுத்தாளனின் குரலிலே நாவல் துவங்குகிறது. அவன் வேலை தேடுகிறான். தொடர்ந்த நிராகரிப்புகள், அரைகுறை வாக்குறுதிகள், ,ஏமாற்றப்பட்ட நம்பிக்கைகள் கொண்டதாக நீள்கின்றன அவனது நாட்கள். .ஏதேனும் அதிர்ஷ்டம் நடந்துவிடாதா என்று ஏங்குகிறான். நிச்சயம் நான் வெற்றி அடைவேன் என்று தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறான்.
அவனது பாக்கெட்டில் எப்போதும் ஓரு பேப்பரும் பேனாவும் இருக்கின்றன. புதிதாக யோசனை வந்தால் உடனே எழுதி வைத்துக் கொள்வான். எங்கே செல்வது எனத் தெரியாமல் இலக்கில்லாமல் கிறிஸ்டியானியாவின் தெருக்களில் அலைந்து திரிகிறான்.

வழியில் தெரிந்தவர் தென்படுகிறார். எங்கே அவன் கடன் கேட்டுவிடுவானோ என நினைத்து விலகிப் போகிறார். தனது மேல்கோட்டை அடகு வைத்து ரொட்டி வாங்குகிறான். பசியை அவனால் வெல்ல முடியவில்லை. ஆனாலும் அவனிடம் விளையாட்டுத்தனமிருக்கிறது. பொய் சொல்லி ஒருவரை நம்ப வைக்க முடிகிறது. பகற்கனவுகள் காண முடிகிறது.
இரவு எங்கே தங்குவது. நாளை என்ன செய்வது என்று தெரியாத நிலையிலும் அவன் சாலையில் செல்லும் அழகிகளை ரசிக்கிறான். அவர்களுடன் உரையாடுகிறான். அந்தப் பெண்கள் போதையில் இருப்பவனாக அவனை நினைத்துக் கொள்கிறார்கள்.
கையில் காசில்லாத அவனிடம் ஒருவன் ஐந்து ஷில்லாங் கடன் கேட்கிறான். அந்த நிலையை நினைத்து வியந்து கொள்கிறான். அவனது வயிறு பட்டினி கிடப்பதால் மூளை பட்டினி கிடப்பதில்லை. அது எதை எதையோ யோசிக்க வைக்கிறது. கிறுக்குத்தனங்களைச் செய்ய வைக்கிறது.
வாழ்க்கை நெருக்கடிகள் ஒருவனை முடக்கும் போது அவன் சமரசம் செய்து கொள்வதே உலக நியதி. ஆனால் இந்த நாவலின் நாயகன் அப்படிச் சமரசம் செய்து கொள்வதில்லை. எழுத்தாளாராக வேண்டும் என்று அவன் விரும்பினால் மட்டும் எழுத்தாளனாகி விட முடியாது. அதற்கான சந்தர்ப்ப சூழல் உருவாக வேண்டும். வாழ்க்கை எதையும் எளிதாக அனுமதித்துவிடுவதில்லை என்பதை அவன் நன்றாக உணர்ந்திருக்கிறான். ஆகவே காயங்களை விரும்பி ஏற்றுக் கொள்கிறான். கடந்து செல்கிறான்.
இந்த நாவலோடு ஆல்பெர் காம்யூவின் The Fall மற்றும் சீர்ஷேந்து முகோபாத்யாயவின் கரையான் நாவலையும் தொடர்ச்சியாக வாசிக்க வேண்டும். நகர்ப்புற வாழ்வின் அந்நியமாதலையே இந்த மூன்று நாவல்களும் பேசுகின்றன. .
May 21, 2024
தாராசங்கர் ஆவணப்படம்
சாகித்ய அகாதமி சார்பில் தயாரிக்கப்பட்ட எழுத்தாளர்களின் ஆவணப்படங்கள் இணையத்தில் காணக்கிடைக்கின்றன.

இன்று வங்காள எழுத்தாளர் தாராசங்கர் பந்தோபாத்யாய் பற்றிய ஆவணப்படத்தைப் பார்த்தேன்.
அவரது ஆரோக்கிய நிகேதனம். கவி போன்ற நாவல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.
தாராசங்கர் 65 நாவல்கள் எழுதியிருக்கிறார். இதில் பல திரைப்படமாக வெளியாகியுள்ளன. அவரே ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார். ராஜ்யசபாவின் நியமன எம்பியாகப் பணியாற்றியிருக்கிறார்.
தாராசங்கர் பந்தோபாத்யாயின் இல்லம் பிர்பூம் மாவட்டத்தின் லாப்பூரில் அமைந்துள்ளது. தாராசங்கரின் வீடு இன்று அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.
தாராசங்கர் பந்தோபாத்யாய் ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்தவர். ஜல்சாகர் என்ற அவரது சிறுகதையைத் தான் சத்யஜித்ரே திரைப்படமாக உருவாக்கினார். ஜல்சாகர் திரைப்படம் வங்காளத்தில் வசித்த பிஸ்வம்பர் ராய் என்ற நலிந்த ஜமீன்தாரின் இசை ஆர்வத்தையும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்ட போதும் குடும்பக் கௌரவத்தை நிலைநிறுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளையும் சித்தரிக்கிறது. இந்திய சினிமாவின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக இதனைக் கருதுகிறேன்.
தாராசங்கர் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றிருக்கிறார். அவரது காலத்துப் பத்திரிக்கையுலகம், அன்றைய அரசியல் சூழ்நிலை, வங்கப்பஞ்சம், பாரம்பரியத்துடன் நவீனத்துவத்தின் மோதல், தாராசங்கரின் ஓவியத்திறமை போன்றவையும் இந்த ஆவணப்படத்தில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
May 19, 2024
எஸ்.ராவிடம் கேளுங்கள் -6
தேசாந்திரி யூடியூப் சேனல் சார்பில் வெளியாகும் எஸ்.ராவிடம் கேளுங்கள் நிகழ்ச்சியின் ஆறாவது பகுதி வெளியாகியுள்ளது
May 18, 2024
திருடனின் மீது விழும் மழைத்துளி
மலையாள எழுத்தாளர் யு.கே. குமரன் எழுதிய இருட்டில் தெரியும் கண்கள் என்ற சிறுகதையில் தன்மீது விழும் மழைத்துளியால் திடுக்கிட்டுப் போகிறான் ஒரு திருடன்.

திருடனின் வாழ்க்கையை விவரிக்கும் அந்தக் கதையில் “இப்போதெல்லாம் யாரும் விலைமதிப்பு மிக்கப் பொருட்களை வீட்டில் வைப்பதில்லை. திருடச் சென்றால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஒரு திருடனால் இங்குக் கண்ணியமான வாழ்க்கை நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது“ என்கிறான் அத் திருடன்
பல நாட்களாகத் திருடச் செல்லாத திருடன் ஒரு இரவு சாலையில் நடந்து கொண்டிருக்கும் போது திடீரென ஒரு மழைத்துளி அவனது முகத்தில் விழுகிறது. அது வரவிருக்கும் மழைக்காலத்தை நினைவுபடுத்துகிறது.
மழை அவனுக்கெனச் சொந்த வீடில்லை என்பதை நினைவுபடுத்துகிறது. அடுத்த மழைக்காலத்திற்குள் தனக்கென சிறிய குடிசை வீடாவது உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று அவன் முன்பு நினைத்திருந்தான். அந்த முடிவை மழைத்துளி நினைவுபடுத்துகிறது
மழைக்காலம் வருவதற்குள் தான் ஒரு புதிய இடத்தில் வாழத் தொடங்க வேண்டும் என்று திருடன் நினைக்கிறான். ஆனால் அது எளிதான விஷயமில்லை.

பழைய பூட்டுகளைத் திறப்பது எளிது. இன்றைய பூட்டுகளை எளிதாகத் திறக்க முடியாது. உடைப்பதும் கடினம். இதனால் வீடுகளில் திருடுவது மிகவும் கடினமாகிவிட்டது என்கிறான் திருடன். அத்தோடு விலைமதிப்புமிக்கப் பொருட்களை வீட்டில் வைத்திருப்பது புத்திசாலித்தனமில்லை என்ற முதன்மைப் பாடத்தை அனைவரும் கற்றுக்கொண்டு விட்டார்கள் என்கிறான் திருடன்
புறநகர்ப் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட பல வீடுகள் பூட்டியே கிடப்பதைக் காணுகிறான். அவற்றின் உரிமையாளர்கள் துபாய் வாசிகள். அல்லது ஏதோ வெளிநாட்டில் வசிப்பவர்கள். பூட்டிய வீட்டில் மதிப்புமிக்க எந்தப் பொருளும் இருக்காது. ஒரு வீட்டில் நீண்ட காலம் வசிக்கும் போது தான் அதன் மீது பற்று ஏற்படுகிறது. வீடு நினைவின் பகுதியாக மாறுகிறது. ஆனால் இப்படிப் பூட்டப்பட்டுக் கிடக்கும் வீடுகள் சவப்பெட்டியை நினைவுபடுத்துகின்றன என்கிறான்.
சில வீடுகளில் விளக்கு எரிவது தெரிகிறது. வயதானவர்கள் விளக்கை அணைக்க மறந்து உறங்கிவிட்டார்கள். அல்லது பாதுகாப்பிற்காக எரிய விட்டிருக்கிறார்கள். இது போன்று வயதானவர்கள் தனியே வசிக்கும் வீட்டில் திருடுவதற்கு ஒன்றுமிருக்காது. அவர்களே ஆதரவற்ற நிலையில் இருப்பதால் அங்கே திருடச் செல்லக்கூடாது என நினைக்கிறான்.
எங்கே திருடச் செல்வது என்று தெரியாமல் சாலையில் நின்று கொண்டிருந்த போது தான் மழைத்துளி அவன் மீது விழுகிறது
அமைதியான அந்த இரவில் பூட்டிய வீடுகள் பேசுவதைப் பற்றி அவன் கற்பனை செய்கிறான். வீடுகளுக்கும் சொந்த மொழி இருக்கக் கூடும். அந்த வீடுகள் தங்களுக்கே உரித்தான மொழியில் ஒன்றோடு ஒன்று பேசிக் கொள்வதாக நினைக்கிறான்.
“இந்த வீட்டிற்குள் வா“ என்றொரு குரல் கேட்கிறது. எங்கிருந்து அக்குரல் வருகிறது என அவனுக்குத் தெரியவில்லை.
பூட்டிய வீடு திருடனை உள்ளே வரும்படி அழைக்கிறது
நீண்டகாலமாக மனித நடமாட்டத்தை அறியாத அந்த வீடு மனிதனின் காலடிச் சப்தத்திற்காக ஏங்குகிறது.
அந்த வீட்டிற்குள் நுழைய முற்பட்ட போது இன்னொரு துளி மழை அவனது முகத்தில் விழுகிறது. திருடன் அந்த வீட்டிற்குள் செல்கிறான். அலமாரியிலிருந்த பொருட்களைக் காணுகிறான். நகைப்பெட்டி எங்கே இருக்கிறது எனத் தேடுகிறான். அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அவனுக்குத் திடீரென்று மாடிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை வருகிறது. ஒருவேளை, அந்த வீடுதான் அப்படிச் செய்யும்படி வற்புறுத்துகிறது என்று அவன் நினைக்கிறான்
வீட்டின் அழகை ரசித்தபடி படிகளில் ஏறுகிறான். மேல் தளத்தை அடைந்ததும் சுற்றும் முற்றும் பார்க்கிறான். பின்பு அங்கிருந்த அறைக்குள் நடக்கிறான். ஒரு இடத்தை அடைந்ததும், யாரோ ரகசியமான குரலில் பேசுவதைக் கேட்கிறான். அது பக்கத்து வீட்டிலிருந்து வரும் சப்தம். யாரோ பேசிக் கொண்டிருக்கிறார்கள்
பக்கத்துவீட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறான். ஆகவே ஜன்னலில் ஏறி அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கிறான்.
அங்கே இரண்டு நாற்காலிகள் தெரிகின்றன. அதில் ஒரு வயதான ஆணும் ஒரு வயதான பெண்ணும் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் எதிரே இருவர் நின்று பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கையில் பயங்கர ஆயுதங்கள் இருந்தன.
என்ன செய்யப் போகிறார்கள்? என்று திருடனுக்குப் புரியவில்லை
“உங்கள் வாரிசுகள் வெளிநாட்டிலிருந்து வரமாட்டார்கள். அவர்களுக்கு இந்தச் சொத்தெல்லாம் வேண்டாம். மரியாதையாகச் சொத்தை எங்களுக்கு எழுதிக் கொடுத்துவிடுங்கள்.. இந்தப் பத்திரத்தில் கையெழுத்திட்டால் உங்களை உயிரோடு விட்டுவிடுவோம். இல்லாவிட்டால் உங்கள் கதை முடிந்துவிடும் என்று ஒருவன் மிரட்டிக் கொண்டிருந்தான்.

பயந்து போன முதியவர்கள் எங்கே கையெழுத்துப் போட வேண்டும் என்று நடுங்கும் குரலில் கேட்கிறார்கள்.
அந்த ஆள் அவர்கள் முன்பு பத்திரத்தை வைக்கிறான். இப்போது மழை வேகமாகப் பெய்யத் தொடங்குகிறது.. மழையின் இரைச்சலில் அவர்கள் பேசுவது சரியாகக் கேட்கவில்லை.
உள்ளே என்ன நடக்கிறது என்று திருடனுக்குத் தெரியவில்லை. மழை உரத்துப் பெய்ய ஆரம்பிக்கிறது. இருட்டிற்குள்ளாகவே உற்றுப் பார்க்கிறான். அந்த முதியவர்கள் கழுத்தை மேல்நோக்கி உயர்த்தி ஜன்னலை வெறித்துப் பார்த்தபடி இருப்பது தெரிகிறது. அவர்கள் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை அறிந்த திருடன் அச்சம் கொள்கிறான். அந்த முதியவர்களின் கண்கள் அவனிடம் எதையோ யாசிக்கின்றன. அந்தப் பார்வை அவனை முழுவதுமாக உலுக்குகிறது. குழப்பமான மனதுடன் அவசரமாக வீட்டை விட்டு வெளியேறி நடக்கிறான்.
அன்று அவன் எதையும் திருடவில்லை. ஆனால் அமைதியை இழந்திருந்தான். அவனால் அந்த நான்கு கண்களை மறக்க முடியவில்லை. எனக் கதை முடிகிறது
மழைத்துளி திருடனுக்குள் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. மனிதர்களின் நடமாட்டத்திற்கு வீடு ஆசைப்படுவது கதையின் அழகான பகுதி. கதை முடியும் போது அந்த முதிய கண்களை நாமும் காண்கிறோம். அவை இந்த உலகிடம் இது தானா வாழ்க்கை என்ற கேள்வியை எழுப்புகின்றன. அந்தக் கேள்வியைச் சந்திக்க முடியாமல் தான் திருடன் வெளியேறிப் போகிறான். அவனைப் போலவே குற்றவுணர்ச்சியுடன் நாமும் அமைதியை இழக்கிறோம்.
••
May 16, 2024
தந்தையின் காதலி
ஜப்பானிய எழுத்தாளர் சுடோமு மிசுகாமியின் நாவலை மையமாகக் கொண்டு 1963ல் உருவாக்கபட்ட திரைப்படம் Bamboo Doll of Echizen.

மூங்கில் பொம்மைகள் செய்யும் இளைஞனின் வாழ்க்கையை விவரிக்கிறது. ஜப்பானிய கறுப்பு வெள்ளைப்படங்கள் தனித்துவமான அழகியலைக் கொண்டிருக்கின்றன. மாறுபட்ட கதைகள். மறக்க முடியாத கதாபாத்திரங்கள். உணர்ச்சிப்பூர்வமான திரைமொழி, நேர்த்தியான இசை, மற்றும் கச்சிதமான படத்தொகுப்பு என ஜப்பானிய சினிமா அதற்கான கலைநேர்த்தியைக் கொண்டிருக்கிறது.
இப் படத்தின் இயக்குநர் கோசாபுரோ யோஷிமுரா. இவர் புகழ்பெற்ற இயக்குநர் யசுஜிரோ ஓசுவின் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். ஆகவே இப்படத்தில் ஓசுவின் சாயலைக் காண முடிகிறது. படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் கசுவோ மியாகாவா. இவர் ரஷோமோன் படத்தின் ஒளிப்பதிவாளர். ஜப்பானின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளராகக் கொண்டாடப்பட்டவர்.

எச்சிசன் மாகாணத்தின் டேகாமி என்ற சிறிய கிராமத்தில் வசிக்கும் கிசுகே உஜியே பொம்மைகள் செய்யும் கலைஞன். இவனது தந்தை புகழ்பெற்ற பொம்மைக்கலைஞர். தந்தையின் மரணத்திலிருந்தே படம் துவங்குகிறது. அவருக்கான நினைவுச் சடங்குகளை நடத்தி வைப்பதற்காகப் புத்த மதகுருவை அழைத்து வருகிறான். அவரும் பிரார்த்தனை செய்து சடங்குகளை நிகழ்த்துகிறார். பனிப்பொழிவின் ஊடாக நடைபெறும் இந்த நிகழ்வு அழகாகக் காட்சிப்படுத்தபட்டிருக்கிறது.
கிசுகேவின் தந்தை மறைந்ததைப் பற்றிக் கேள்விபட்டு தாமே என்ற அழகான இளம் பெண் அஞ்சலி செலுத்த வருகிறாள். அவள் யார் என்று கிசுகேயிற்குத் தெரியவில்லை. அவனது தந்தைக்குப் பழக்கமானவள் என்று சொல்கிறாள். பனியின் ஊடே நீண்ட தூரம் பயணம் செய்து வந்துள்ள அவளை வீட்டிற்குள் வரவேற்கிறான்.
குடையுடன் அவளைத் தந்தையின் நினைவிடத்திற்கு அழைத்துப் போகிறாள். அங்கே தாமே உணர்ச்சிவசப்பட்டவளாகப் பிரார்த்தனை செய்கிறாள். பின்பு தனது ரயிலுக்கு நேரமாகிவிட்டது என்று பனிக்காற்றின் ஊடே புறப்படுகிறாள். அவளது பெயரை அறிந்து கொண்ட, கிசுகே சில நாட்களுக்குப் பின்பு அவளைத் தேடிச் செல்கிறான்.
தாமே ஒரு விலைமாது, சட்டவிரோதமான இன்ப விடுதியில் வேலை செய்கிறாள் என்பதையும், அவனது தந்தை ஒரு காலத்தில் அவளுடைய வழக்கமான வாடிக்கையாளராக இருந்ததையும் அறிந்து கொள்கிறான்.
தாமேயின் அறையில் அவளுக்காகத் தந்தை செய்து கொடுத்த அழகான மூங்கில் பொம்மை ஒன்றைக் காணுகிறான். அப்படி ஒரு அழகான பொம்மையை அவன் கண்டதேயில்லை. தாமே அந்தப் பொம்மையை அவனுக்கே பரிசாக அளிக்கிறாள்.
சிறுவயதிலே தாயை இழந்து தந்தையால் வளர்க்கபட்ட கிசுகேவிற்குத் தாமேயின் மீது ஈர்ப்பு உண்டாகிறது. அடிக்கடி அவளைத் தேடிச் சென்று பார்க்கிறான். உரையாடுகிறான். பெரும்கடன் சுமையால் அவள் சிரமப்படுவதை அறிந்து தனது பணத்தைக் கொடுத்து அவளைக் கடனிலிருந்து மீட்கிறான்.
அவள் விரும்பினால் அந்த விடுதியிலிருந்து வெளியேறி வந்து தன்னுடன் கிராமத்தில் வசிக்கலாம் என்று அழைப்பு விடுக்கிறான். தாமே யோசிப்பதற்கு நேரம் வேண்டும் என்கிறாள்

பொம்மை செய்வதற்கான மூங்கில் வெட்ட காட்டிற்குள் கிசுகே சென்றிருந்த நாளில் தாமே கிராமத்திற்கு வந்து சேருகிறாள். அவள் குதிரை வண்டியில் வருவதைக் கேள்விபட்டு கிசுகே காட்டிற்குள் மூச்சிரைக்க ஒடிவருவது அழகான காட்சி. ஊர்மக்கள் அவளைப் புது மணப்பெண் என்று நினைத்துக் கொண்டு வரவேற்கிறார்கள். அவளை வீட்டிற்குள் அழைத்துச் சென்று தங்க வைக்கிறான். ஊரார் ஆசையைப் போலவே அவளும் கிசுகேயை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறாள். அவர்கள் திருமணம் எளிமையாக நடைபெறுகிறது

முதலிரவில் அவளுடன் உடலுறவு கொள்ளக் கிசுகே தயங்குகிறான். அவள் வற்புறுத்தவே அவளைத் தனது தாயாக நினைப்பதாகச் சொல்லி விலகிப் போகிறான். அதைத் தாமேயால் ஏற்க முடியவில்லை. அவனைக் கட்டாயப்படுத்த முடியாது என உணர்ந்த தாமே இந்த மனத்தடை நாளைடைவில் நீங்கிவிடும் என்று நம்புகிறாள்.
தந்தை பரிசாகச் செய்து கொடுத்த மூங்கில் பொம்மையைப் போலக் கிசுகே தானும் உருவாக்குகிறான். அவை சந்தையில் நல்ல விலைக்குப் போகின்றன. அவனுக்குப் பெயரும் புகழும் ஏற்படுகிறது. தாமே கிசுகேவின் மனைவியாக வீட்டுவேலைகளைச் செய்கிறாள். ஆனால் அவளது உடலின் தேவையை அவன் அறியவேயில்லை. தாமே ஏக்கத்தால் வாடுகிறாள். ஒரு நாள் தன்னைத் தேடி வரும் தோழியிடம் இதைப்பற்றிச் சொல்லிப் புலம்புகிறாள்.
இன்னொரு நாள் கியோட்டோவிலிருந்து அவர்களின் மூங்கில் பொம்மைகளை வாங்கிப் போவதற்காக விற்பனைபிரதிநிதி ஒருவன் வந்து சேருகிறான். அவன் தாமேயின் பழைய வாடிக்கையாளன். அவளுக்குத் திருமணமாகிவிட்டது என்ற போதும் அவளது ஏக்கத்தைப் புரிந்து கொண்டு கட்டாயப்படுத்தி அவளுடன் உடலுறவு கொள்கிறான். இதில் தாமே கர்ப்பமாகிறாள்.

கணவனுக்குத் தெரியாமல் கருக்கலைப்புச் செய்ய விரும்பிய தாமே கியோட்டோ நகருக்குச் செல்கிறாள். அங்கே தன்னை ஏமாற்றிய விற்பனைபிரதிநிதியைச் சந்திக்கிறாள். கணவனின் அனுமதியின்றிக் கருக்கலைப்புச் செய்வது சட்டவிரோதமானது என்பதால், அவனிடம் உதவி கேட்கிறாள். அவனோ உதவி செய்வதாக நம்ப வைத்து அவளைத் திரும்பவும் ஏமாற்றுகிறான்.
தாமே இறுதியில் தன் குழந்தையைத் தற்செயலாக இழக்கிறாள். நடந்த நிகழ்ச்சிகள் எதுவும் கிசுகேவிற்குத் தெரியாது. அப்பாவியான அவனை ஏமாற்றுகிறோம் என்ற குற்றவுணர்வில் பாதிக்கபடும் தாமே கொஞ்சம் கொஞ்சமாக நோயாளியாகிறாள். காசநோயின் பாதிப்பு அவளை முடக்குகிறது. கிசுகே உண்மையை அறிந்து கொள்வதே பிற்பகுதிக்கதை.
தாமேயை தேடி அவளது விடுதிக்கு கிசுகே செல்லும் காட்சி, அவளுடன் உறையாடும் காட்சிகள் அழகானவை. அமைதியான வாழ்க்கையை விரும்பி கிராமத்திற்கு வரும் தாமேக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கிறது. ஆனால் உடலின் தேவை அவளைப் பழைய வாழ்க்கைக்குத் திரும்ப வைக்கிறது. எதற்காக அவள் கிசுகேவின் தந்தைக்கு அஞ்சலி செலுத்த வந்தாள் என்ற காரணம் படத்தில் சொல்லப்படுவதில்லை. ஆனால் அந்த உறவு அவளுக்கு ஆறுதல் அளித்திருக்கிறது. கிசுகே தனது தந்தையை விடவும் அவள் மீது அதிக அன்பு செலுத்துகிறான். அவனை ஏமாற்றும் குற்றவுணர்வு தாமேவை நோய்மையுறச் செய்கிறது. கிசுகே தனது தந்தையின் மரணம் ஏற்படுத்திய வெறுமையைத் தாமேயைக் கொண்டு நிரப்பிக் கொள்கிறான். அவள் வந்தபிறகே அவனது வாழ்க்கை வளர்ச்சி அடைகிறது. தந்தையின் ஆசைநாயகியாக இருந்தவளை திருமணம் செய்து கொண்ட போதும் அவளை மனைவியாக அவனால் நினைக்க முடியவில்லை. இந்தச் சிக்கலை படம் அழகாக் கையாண்டிருக்கிறது
நாவலில் வரும் கிசுகேவைப் போலவே எழுத்தாளர் சுடோமு மிசுகாமியும் தச்சர் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது குடும்பம் மிகவும் ஏழ்மையானது, அவர் ஒன்பது வயதில் உள்ளூர் புத்தகோவிலில் எடுபிடி வேலைகள் செய்வதற்காக அனுப்பப்பட்டார், பின்னர் அவர் கியோட்டோவில் உள்ள ஷோகோகுஜி கோயிலுக்கு மாற்றப்பட்டார், அங்குச் சில காலம் ஹனாசோனோ உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்
வறுமையின் காரணமாகச் சிறு சிறு வேலைகளைச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் அவர் சீனாவிற்கும் மஞ்சூரியாவிற்கும் அனுப்பப்பட்டார், அங்குப் போர்க்களப் பணியாளர்களின் பொறுப்பாளராக வேலை செய்தார். ராணுவ சேவையிலிருந்து தப்பி வந்து தலைமறைவு வாழ்க்கையை நடத்திய காலத்தில் தான் மிசுகாமி எழுதுவதில் ஆர்வம் காட்டினார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அவர் தனது முதல் நாவல் வெளியானது. அதன்பிறகே அவர் திருமணம் செய்து கொண்டார், அவரது குழந்தை குறைவளர்ச்சியுடன் பிறந்தது. தனது மகளைக் காப்பாற்ற அவருக்கு நிறையப் பணம் தேவைப்பட்டது. இதற்காக மர்மக்கதைகள் எழுத ஆரம்பித்தார். அவரது மனைவிக்குக் குறைவளர்ச்சியான குழந்தையைப் பிடிக்கவில்லை. மிசுகாமியோடு தொடர்ந்து சண்டையிட்ட அவரது மனைவி பின்பு அவர்களைக் கைவிட்டு பிரிந்து போனார்.
மிசுகாமி தனது சிறுவயது மற்றும் இளமைக்கால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு Bamboo Doll நாவலை எழுதினார். இனவரைவியல் ஆவணம் போன்ற உணர்வைத் தரும் இந்த நாவல் ஜப்பானின் சிறந்த நாவல்களில் ஒன்றாக இன்றும் கொண்டாடப்படுகிறது.
படத்தின் கருப்பு வெள்ளை ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது, தாமேவாக நடித்துள்ள அயகோ வகாவோவின் சிறந்த நடிப்பும், சேய் இகெனோவின் இசையும் கச்சிதமான திரைக்கதையும் இப்படத்தை ஜப்பானின் கிளாசிக் படங்களில் ஒன்றாக வைத்திருக்கிறது.
**
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
