S. Ramakrishnan's Blog, page 29

July 3, 2024

காஃப்கா கடிதங்கள்

காஃப்கா எழுதிய கடிதங்கள் மற்றும் நாட்குறிப்புகள் குறித்து நாளை உரையாற்றுகிறேன். அனுமதி இலவசம். அனைவரும் கலந்து கொள்ளலாம். நுங்கம்பாக்கம் ஜெர்மன் பண்பாட்டு மையமது.

புனைவில் நாம் காணும் காஃப்கா வேறு. நாட்குறிப்பு மற்றும் கடிதங்களில் காணும் காஃப்கா வேறு. அவர் தஸ்தாயெவ்ஸ்கியிடமிருந்தே உருவாகியிருக்கிறார். அதற்கான சான்றுகளை அவரது நாட்குறிப்பு மற்றும் கடிதங்களில் காண முடிகிறது.

நீச்சலில் மிகுந்த விருப்பம் கொண்டிருந்த, உடல் நலத்தினைப் பேணுவதில் அக்கறை கொண்டிருந்த, தீவிரமாக வாசிக்க கூடிய, இசையில் ஆர்வமான காஃப்காவை இதில் காணுகிறோம். நகரில் நடைபெற்ற முக்கிய இசைநிகழ்ச்சிகள். நாடகங்கள். இலக்கிய நிகழ்வுகள் எனத் தேடித்தேடி சென்றிருக்கிறார். நிர்வாண முகாமில் தங்கியிருக்கிறார். எழுத்து, படிப்பு. கலையின் நோக்கம் குறித்து அவருக்கென இருந்த தனித்துவமான எண்ணங்களையும் அதற்கான காரணங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது.

காஃப்காவின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வதற்கு Reiner Stach’s Three Volume Biography of Kafka (trans.Shelley Frisch) . மிக முக்கியமான நூல்

நன்மை மற்றும் தீமை குறித்த அவரது எண்ணங்களை, புதிய பார்வைகளை அறிந்து கொள்ள Kafka’s Blue Octavo Notebooks அவசியம் படிக்க வேண்டும்.

1916-1917ம் ஆண்டின் குளிர்காலத்தில், காஃப்காவின் இளைய சகோதரி, ஓட்லா, பழைய ப்ராக் பகுதியில் உள்ள அல்கிமிஸ்டெங்காஸ்ஸில் சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார்.அவளுடன் தங்கியிருந்த காஃப்கா இந்த இடத்தின் அமைதியையும் தனிமையையும் மிகவும் விரும்பினார்

இங்கிருந்த நாட்களில் காஃப்கா எழுதிய குறிப்புகளே Blue Octavo Notebooks .

காஃப்காவின் மற்ற எழுத்துக்களிலிருந்து மாறுபட்டது இந்தக் குறிப்பேடு. இதன் சில பதிவுகளில் கேலியும் கிண்டலும் அழகாக வெளிப்படுகின்றன.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 03, 2024 05:43

July 1, 2024

கடலோடு சண்டையிடும் மீன்

கோவை புத்தகக் கண்காட்சிக்கான புதிய வெளியீடு -1

சிறார்களுக்காக எழுதப்பட்ட நான்கு கதைகளின் தொகுப்பு.

இதிலுள்ள லாலிபாலே, நீளநாக்கு, பம்பழாபம், கடலோடு சண்டையிடும் மீன் முன்பு சிறுநூலாக வெளிவந்துள்ளன.

அவற்றைத் தொகுத்து புதிய படங்களுடன் தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

விலை ரூ 130
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 01, 2024 22:59

June 30, 2024

இரண்டு பாதைகள்

இயக்குநர் மிருணாள் சென்னைப் பற்றிய திரைப்படம் Chalchitra Ekhon. அஞ்சன் தத் இயக்கியுள்ளார்.

1981ம் ஆண்டு மிருணாள் சென் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சல்சித்ரா, இப்படத்தில் அஞ்சன் தத் கதாநாயகனாக அறிமுகமானார். வெனிஸ் திரைப்படவிழாவில் அவருக்குச் சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது. சர்வதேச திரைப்பட விழாக்களில் சல்சித்ரா திரையிடப்பட்ட போதும் இந்தியாவில் திரையிடப்படவில்லை.

இந்தப் படத்தில் கிடைத்த புகழால் அஞ்சன் தத் தொடர்ந்து கலைப்படங்களில் நடிக்கத் துவங்கினார். இசையில் இருந்த ஆர்வம் காரணமாக இசையமைப்பாளராகவும் மாறினார். இன்று அவர் வங்காளத்தின் புகழ்பெற்ற திரைக்கலைஞர்.

நாடக உலகில் இருந்த தன்னைக் கண்டுபிடித்துச் சினிமாவில் அறிமுகம் செய்து நடிகராக்கிய மிருணாள்சென்னிற்கு நன்றி செலுத்தும் விதமாகத் தனது வாழ்க்கையில் நடந்தவற்றைத் திரைப்படமாக்கியிருக்கிறார் அஞ்சன் தத். இப்படம் மிருணாள் சென் நூற்றாண்டுவிழாவிற்கான சிறந்த அஞ்சலியாக உள்ளது.

மிருணாள் சென்னின் குடும்பம், அவரது திரையுலக வாழ்க்கை மற்றும் திரைப்பட உருவாக்கத்தைச் சல்சித்ரா எகோன் மிக அழகாக விவரிக்கிறது

இளம்பத்திரிக்கையாளன் ரஞ்சன் கொல்கத்தா நகரைப் பற்றிக் கட்டுரை எழுத விரும்பி இயக்குநர் மிருணாள் சென்னைச் சந்திக்கிறான்.

தனது படங்களை அவன் பார்த்திருக்கிறானா என்று கேட்கிறார் சென்.

ஒரேயொரு படத்தை மட்டுமே பார்த்துள்ளதாகச் சொல்கிறான். கொல்கத்தா நகரைப் பற்றிய அவரது முரண்பட்ட எண்ணங்களை அறிந்து கொள்கிறான் ரஞ்சன். அவனது தோற்றம். பேசும்விதம். மற்றும் அறிவுஜீவித்தனம் மிருணாள்சென்னை வசீகரிக்கிறது.

பெங்காலி அறிவுஜீவிகளில் ஒருவனான ரஞ்சன் நாடக இயக்குரான இருக்கிறான். கோதே இன்ஸ்டிட்யூட்டின் ஆதரவைப் பெற்று நாடகம் நிகழ்த்துகிறான். ஜெர்மனிக்குச் செல்ல வேண்டும் என்பதே அவனது கனவு. கல்கத்தா நகரை அவனுக்குப் பிடிக்கவில்லை. வங்காளத்தின் அப்போதைய ஆளும் இடதுசாரி ஆட்சியின் அலைக்கு எதிராக ரஞ்சன் குரல் எழுப்புகிறான்.

பீட்டர் வெய்ஸின் மராட்/சேட் நாடகத்திற்கான ஒத்திகையில் ஈடுபடும் அவனைத் தேடி வரும் மிருணாள் சென் தனது புதிய திரைப்படத்தில் நடிக்க விருப்பமா என்று கேட்கிறார். ரஞ்சன் சம்மதிக்கிறான். உடனே அவனைத் தனது வீட்டிற்கு அழைத்துவந்து தலைமயிரை வெட்டச்செய்து வேறு உடைகளை அணியவைத்து தனது கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருக்கிறானா என்று பரிசோதிக்கிறார் மிருணாள் சென்.

மிருணாள் சென் எப்படி ஒரு நடிகரை கையாளுவார் என்பதை இப்படத்தில் விரிவாகக் காட்டியிருக்கிறார்கள். அவர் மனதில் இருக்கும் காட்சிகளை நடிகர்களிடம் விவரிக்கிறார். நிஜமான சாலையில். நிஜமான இடத்தில் மக்களின் நடுவே படப்பிடிப்பு நடக்கிறது. டிராமில் ஏறிக் கொண்டு நிஜமாக டிக்கெட் வாங்கிப் பயணிக்கிறான் ரஞ்சன். அதைக் கேமிரா படம்பிடிக்கிறது. டிக்கெட்டை வாயிலிட்டு அவன் மென்று விழுங்கிவிடுவது அழகான காட்சி.

ஒரு திரைப்பட இயக்குநருக்கும் இளம்நடிகனுக்குமான உறவை வெளிப்படுத்தும் விதமாகவும், இரண்டு தலைமுறைகளுக்குள் ஏற்படும் இடைவெளியை, புரிதலை, ஆதர்சங்களை விவரிக்கும் திரைப்படமாகவும் சல்சித்ரா எகோன் உருவாக்கபட்டுள்ளது.

சென்னின் சல்சித்ரா படத்திலிருந்த காட்சிகளை மீண்டும் உருவாக்குவதன் மூலம் அஞ்சன் தத் அந்தக் காலகட்டத்தைச் சிறப்பாகக் கொண்டுவந்துள்ளார்

மிருணாள் சென் முக்கியமான இயக்குநரில்லை. போலித்தனமானவர் என்று அவரைப் பற்றிக் குறைகூறும் நாடக நடிகர்களிடம் சண்டையிடுகிறான் ரஞ்சன். இதன் காரணமாகக் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அவனது நாடகக்குழு பிரிந்து போகிறது.

சினிமாவில் அவன் நடித்துக் கொண்டிருக்கும் கதாபாத்திரத்திற்கும் அவனது நிஜ வாழ்விற்குமான ஒப்புமைகளை, நெருக்கத்தை உணருகிறான். அவனது வாழ்க்கையே படமாக மாறுவது போலிருக்கிறது.

ரஞ்சன் மீது மிருணாள் கொண்டிருந்த நம்பிக்கையும் அன்பும் படத்தில் நேர்த்தியாக வெளிப்படுத்தபடுகிறது. குறிப்பாக அவன் இரவில் வீடு திரும்பப் பணம் கொடுக்கும் காட்சி, வீட்டில் சாப்பிட்டுப் போகச் சொல்லும் காட்சி, படப்பிடிப்பின் போது அவனிடம் காட்டும் அன்பு என நிறைய நல்ல காட்சிகள் உள்ளன.

பத்திரிக்கை ஆசிரியரை சந்தித்துப் பேசும் காட்சி படமாக்கபடும் போது ரஞ்சன் படும் சிரமங்களும். அவனுக்கு நடிப்பு பற்றி மிருணாள் சென் சொல்லும் விளக்கமும் சிறப்பானது.

படப்பிடிப்பின் போது நடக்கும் நிகழ்வுகளின் வழியே ரஞ்சன் தன்னைப் பற்றியும், தனது மதிப்பீடுகள் பற்றியும் மறுபரிசீலனை செய்யத் துவங்குகிறான். முடிவில் அவன் தன்னை உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்திக் கொள்ளும் போது அவனது பாதை எதுவென முடிவாகிறது.

கொல்கத்தாவின் அரசியல். வங்காளிகளின் பண்பாடு, கலைஇலக்கியத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், பத்திரிக்கைச் சூழல். மாநகரவாழ்வின் நெருக்கடிகள் எனப் படம் மிக யதார்த்தமாக உருவாக்கபட்டிருக்கிறது.

சென்னின் ஒளிப்பதிவாளர் கே.கே.மஹாஜன் ரஞ்சனிடம் உரையாடும் காட்சிகள் சிறப்பானவை.

இந்தப் படத்தின் முக்கியக் கதாபாத்திரமாக இருப்பது கொல்கத்தா நகரம். அந்த நகரைப் பிடிக்காத ரஞ்சன் படத்தின் கடைசியில் கொல்கத்தா அருமையானது என்பதைப் புரிந்து கொள்கிறான்.

விரலுக்கு இடையில் சிகரெட் புகைந்தபடியே இருக்கும் மிருணாள் சென்னின் தோற்றம் மற்றும் அவரது நடையுடை பாவனைகளை மிக நுணுக்கமாகப் படத்தில் சித்தரித்துள்ளார்கள். கொல்கத்தா நகரையும் அதனைச் சிறப்பாகத் தனது படங்களில் சித்தரித்த மிருணாள் சென்னையும் ஒன்றுசேரக் கொண்டாடுகிறது இப்படம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 30, 2024 08:54

June 29, 2024

காஃப்கா உரை

காஃப்கா மறைந்து நூறு ஆண்டுகள் ஆகின்றன. இதனைக்குறிக்கும் வகையில் சென்னையிலுள்ள, Goethe-Institut சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

ஜூலை 4 மாலை ஆறுமணிக்கு காஃப்காவின் கடிதங்கள் மற்றும் நாட்குறிப்புகள் குறித்து உரை வழங்குகிறேன்.

அத்துடன் காஃப்கா குறித்த உரையாடலில் கலந்து கொள்கிறேன். இந்த நிகழ்வில் ப.சேரலாதன், ரம்யா ராமஸ்வாமி கலந்து கொள்கிறார்கள்.

அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

••

நாள் : 4. ஜூலை 2024

நேரம்: மாலை 6-7pm

இடம்: கோதே இன்ஸ்டிடியூட்

#4, ரட்லண்ட் கேட் 5th தெரு

நுங்கம்பாக்கம் சென்னை 600006

காஃப்கா பற்றிய எனது புத்தகம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 29, 2024 23:00

விருதுப்பட்டியலில்

2024 Valley of Words Book Awards இறுதிப்பட்டியலில் எனது சிறுகதைத் தொகுப்பு The Man Who Walked Backwards and Other Stories இடம் பெற்றுள்ளது.

இதனை ஓய்வு பெற்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் மொழியாக்கம் செய்திருக்கிறார். ஓரியண்ட் பிளாக்ஸ்வான் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

Valley of Words என்பது டேராடூனில்  நடைபெறும் சர்வதேச இலக்கிய விழாவாகும்.

3 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 29, 2024 05:34

June 27, 2024

சிறிய மச்சம்

கவாபத்தாவின் “The Mole” சிறுகதையில் கணவனைப் பிரிந்து வாழும் சயோகோ என்ற இளம் பெண் தனது மச்சத்தைப் பற்றிய நினைவுகளைக் கடிதமாக எழுதுகிறாள்.

நான் மச்சத்தைப் பற்றி ஒரு கனவு கண்டேன் எனக் கதை துவங்குகிறது

ஒருவர் ஏன் மச்சத்தைக் கனவு காண வேண்டும். என்ன கனவாக இருக்கும் என்று யோசிக்கையில் கதை கனவைப் பற்றியதாக இல்லாமல் மச்சம் உள்ள பெண் அதை எப்படி உணருகிறாள் என்பதைப் பற்றியதாக  விரிவு கொள்கிறது.

தனது தோள்பட்டைக்கு மேல் வலது பக்கத்தில் உள்ள அந்த மச்சத்தைச் சதா தடவி கொண்டேயிருப்பது அவளது பழக்கம். சிறுவயதில் இருந்து தொடரும் இந்தப் பழக்கத்தை அவளது அம்மா கண்டித்திருக்கிறாள். ஆனால் அவளால் அதைக் கைவிட முடியவில்லை.

அந்த மச்சத்தைத் தொடுவதன் மூலம் அவள் தனது பால்ய நாட்களுக்குத் திரும்புவது போல உணருகிறாள்.

திருமணத்திற்குப் பிறகு இந்தப் பழக்கத்தை அவளது கணவன் கண்டிக்கிறான். இந்தச் சிறிய விஷயம் காரணமாக அவர்களுக்குள் சண்டை வருகிறது.

அவனது கோபம் அவளுக்குத் திருமண வாழ்க்கை என்பது சுதந்திரமனதானதில்லை. தன் விருப்பத்திற்கு அங்கே இடமில்லை என்று எண்ணச் செய்கிறது. ஆகவே தன்னைத் திட்டும் கணவனை வெறுக்கிறாள். நேசிப்பவர்களின் கோபம் நம்மை அதிகம் வருத்தமடையச் செய்கிறது என்று கதையில் கவாபத்தா சொல்கிறார்.

அவளது இந்தப் பழக்கத்தின் மீதான கணவனின் வெறுப்பு நாளுக்கு நாள் அதிகமாகிறது. ஒரு நாள் கோபத்தில் அவளை அடித்துவிடுகிறான். அதை அவளால் ஏற்க முடியவில்லை. மணஉறவில் விரிசல் ஏற்படுகிறது. கணவனைப் பிரிந்து செல்கிறாள்.

பல ஆண்டுகளுக்குப் பின்பு கடிதம் எழுதுகிறாள். அதில் தனது கடந்த செயலை மறுபரிசீலனை செய்து கொள்கிறாள். ஆனால் மச்சத்தைத் தடவும் பழக்கத்தைத் தவறாக அவள் நினைக்கவேயில்லை. அது ஒரு சிறிய மகிழ்ச்சி. சுதந்திரம். அதை ஏன் தடுக்க நினைக்கிறார்கள் என்றே நினைக்கிறாள்.

அவளது மச்சம் குறித்து அவனுக்குக் குறை எதுவுமில்லை. மாறாக இந்தச் சிறிய பழக்கத்தை ஏன் மாற்றிக் கொள்ள மறுக்கிறாள் என்று தான் எரிசசல் அடைகிறான்.

திருமணம் என்பது பழக்கத்தைக் கைவிடவும் மாற்றிக் கொள்ளவும் வேண்டிய பந்தம். இதில் ஆண் பெண் இருவரும் பாதிக்கபடுகிறார்கள். ஏன் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கோபம் அடைகிறார்கள். கட்டாயத்தால் மாற்றிக் கொண்டபின்பும் அதைப் பற்றி மனக்குறை கொண்டிருக்கிறார்கள்.

கதையில் வரும் சயோகோவிற்கு அந்த மச்சம் அவளது தன்னுணர்வின் அடையாளம் போலிருக்கிறது. அவள் மச்சத்தைத் தொடும்போது மீண்டும் ஒரு குழந்தையாக மாறுவது போல் உணர்கிறாள் , அவளுடைய கணவனிடமிருந்து அதே அன்பு அவளுக்குத் தேவைப்படுகிறது. ஆனால் அது கிடைக்கவில்லை. கணவன் தனது மச்சத்தை தொட வேண்டும் என்று அவள் ஆசைப்படுகிறாள். அதை அவன் வெறுப்பது தன்னை வெறுப்பதாகவே நினைக்கிறாள்.

உடலைப் பற்றிய கவனமும் குற்றவுணர்வும் ஆண்களிடம் ஒருவிதமாகவும் பெண்களிடம் ஒருவிதமாகவும் வெளிப்படுகின்றன. தனது உடலின் குறையாக எதையோ ஒன்றை பெண் நினைக்கிறாள். அதைப் பற்றிச் சதா கவலை கொள்கிறாள். அதைப் பற்றிய பிறரது பேச்சினை கோவம் கொள்கிறாள்.

தனது அன்பை வெளிப்படுத்த தெரியாத ஒரு இளம் பெண்ணின் வெளிப்பாடாக மச்சத்தைத் தொடுதலைப் புரிந்து கொள்ளலாம்

கதையில் மச்சம் என்பது புரிந்து கொள்ள முடியாத, ஒரு மொழியாக மாறிவிடுகிறது.. குடும்ப உறவில் விரிசல் ஏற்படுத்த இது போன்ற சிறிய விஷயங்கள் கூடக் காரணமாகிவிடுகின்றன . அவளது தீர்க்கப்படாத வருத்தங்கள் தான் கடிதமாக மாறுகிறது.

யாசுனாரி கவாபத்தாவிற்கு இப்படி ஒரு மச்சம் இருந்திருக்கிறது. அதை அவர் மறைத்துக் கொள்ள விரும்பியிருக்கிறார். அவரது புனைவில் இப்படி மச்சம் உள்ள கதாபாத்திரங்கள் இடம்பெறுகின்றன.

நீர்வண்ண ஓவியம் போல கதையை எழுதியிருக்கிறார் கவாபத்தா. இந்தக் கதையை வாசிக்கும் போது இதில் என்ன இருக்கிறது என்றே ஒருவர் நினைக்க கூடும். ஆனால் சற்று யோசிக்கும் போது இது மச்சம் பற்றிய கதையில்லை. மாற்றிக் கொள்ள முடியாத பழக்கம் பற்றியது. தனக்கு மகிழ்ச்சி தருவது ஏன் பிறருக்கு வெறுப்பளிக்கிறது என்பதைப் பற்றியது எனப் புரியும்.  பெரிய லென்ஸ் ஓன்றின் மூலம் மச்சத்தைக் காணுவதைப் போன்ற அனுபவத்தைக் கதை தருகிறது.  நாம் காணுவது மச்சத்தை மட்டுமில்லை. திருமண உறவின் புதிரை. அதன் மிஞ்சியிருக்கும் நினைவுகளை.

***

‘’

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 27, 2024 05:54

June 24, 2024

பார்வையற்ற ஓவியர்

திறந்த ஜன்னல்கள் கொண்ட ஒரு அறையில், கடலை நோக்கியபடி மூன்று உருவங்கள் காணப்படுகின்றன. நீலம் மற்றும் சிவப்பு வண்ணங்கள் உபயோகப்பட்டுள்ள விதம் மற்றும் உருவங்களின் தனித்தன்மை நம்மை வசீகரிக்கிறது.

பிரிட்டிஷ் ஓவியர் சர்கி மான் (Sargy Mann) வரைந்த இந்த ஓவியத்தைக் காணும் போது இது பார்வையற்றவர் வரைந்த ஓவியம் என்று நினைக்கமுடியவில்லை. பொதுவாகப் பார்வையற்றவர்கள் என்றால் அவர்களால் நிறத்தை பிரித்து அறிந்து கொள்ள முடியாது என்றே பொதுப்புத்தியில் பதிந்து போயிருக்கிறது.

ஆனால் போர்ஹெஸ் போன்ற பார்வையற்ற எழுத்தாளர் தனக்கு மஞ்சள் நிறத்தின் மீது தனிவிருப்பம் என்று சொல்வதையும் நிறத்தை துல்லியமாகத் தனது எழுத்தில் வெளிப்படுத்துவதையும் காணும் போது வியப்பாக இருக்கிறது. சர்கி மான் திடீரெனப் பார்வை இழப்பிற்கு உள்ளானவர். ஆகவே மனதில் பதிந்துள்ள நிறத்தை ஓவியத்தில் துல்லியமாக வெளிப்படுத்துகிறார்.வண்ணங்களை அடையாளம் கண்டு கொள்வதற்காகச் சிறப்புப் புள்ளியை உருவாக்கியிருக்கிறார்.

இசைக்குறிப்புகள் போல இந்தக் குறிப்புகளை வைத்து அவரால் வண்ணங்களைப் பயன்படுத்த முடிகிறது. கேன்வாசில் தான் வரைய வேண்டிய உருவங்கள் மட்டும் நிலக்காட்சிகளையும் இப்படிக் குறியீடுகளாகப் பிரித்துக் கொண்டுவிடுகிறார். பின்பு அதை அடிப்படையாகக் கொண்டு படம் வரைகிறார்.ஒரான் பாமுக்கின் மை நேம் இஸ் ரெட் நாவல் நுண்ணோவியர்களின் உலகை விவரிக்கிறது.

மங்கலான மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தங்களுடைய வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்த ஒட்டோமான் மற்றும் பாரசீக நுண்ணோவியர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வை இழப்பு ஏற்பட்டு இறுதியில் முற்றிலும் பார்வை போய்விடும், அதைத் தங்கள் திறமைக்குக் கடவுள் அளித்த பரிசு என்றே ஓவியர்கள் கருதியிருக்கிறார்கள்.

ஒரு பார்வையற்ற நுண்ணோவியர் கலையின் உச்சத்தைத் தான் அடைந்துவிட்டதாகவே உணர்ந்திருக்கிறார். பார்வை போனனதைப் பற்றி அவருக்கு ஒரு புகாரும் இல்லை

துருக்கிய ஓவியர், Eşref Armağan பிறப்பிலேயே பார்வையற்றவர். வியப்பூட்டும் ஓவியங்களை வரைந்திருக்கிறார்.

மான் 1989 முதல் பார்வை இழப்பிற்கு உள்ளாக ஆரம்பித்து 2005 ஆம் ஆண்டிலிருந்து முற்றிலும் பார்வையற்றவராகவும் மாறியிருக்கிறார்

காட்சிகளை முழுவதுமாக உள்ளுணர்வின் வழியாகப் புரிந்து கொள்வதும் வெளிப்படுத்துவமாக இருக்கிறார் மான். அடர்வண்ணங்கள் இசையைப் போன்றவை. அவற்றைக் கையாளுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார் மான்.

பார்வையற்ற நிலையில் ஒரு ஓவியர் தனது நினைவாற்றலையும் அனுபவத்தையும் நம்பியே படம் வரைகிறார். ஓவியம் வரைவதற்குக் கண் தான் பிரதமானது என்ற எண்ணத்தையும் மாற்றுகிறார். கலை அவருக்கு மீட்சியாக அமைந்துவிடுவதைக் காண முடிகிறது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 24, 2024 20:24

June 20, 2024

இரண்டு பார்வைகள்

அப்பாவின் வருகை“ சிறுகதை குறித்த இருவரின் பார்வைகள்

கோ.புண்ணியவான். மலேசியா

அப்பாவின் வருகை சிறுகதையின் நுணுக்கத்தைப் புரிந்துகொள்ளும்போது அலாதியான வாசிப்பின்பம் உண்டாகிறது.

அப்பா எந்த முக்கியக் காரணமாகவும் சண்டிகார் வரவில்லை. தன் மகனைப் பார்க்கவே வருகிறார்.

இக்கதையில் அப்பா தன் மகனுக்குச் சிறு பிராயத்தில் என்னவெல்லாம் செய்தாரோ அதனையே மகனும் அப்பா தனக்குச் செய்ததற்கு ஈடான அன்போடு செய்கிறார். இந்த நுணுக்கம் தான் கதையைக் கலைநயமிக்கதாக்குகிறது.

அப்பாவின் வருகையை வேற்றிடத்தில் வேலை செய்யும் மகன்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை. தலைமுறை இடைவெளி, வாழும் சூழலுக்கு அப்பாக்கள் ஒத்துவரமாட்டாரகள் என்பதால். ஆனால் இக்கதை அப்பாவின் வருகையை அனுசரிக்கும் பண்பு நாடகத் தன்மை இல்லாமல் மிக யாதார்த்தமாகவே சொல்லப்பட்டிருக்கிறது.

கடைசி வரியில் ‘அப்படி அப்பா சொன்னவிதம் சிறுவயதில் அவன் சொன்னது போலவே இருந்தது’ என்று குறிப்பிடும்போது அப்பா மகனாகிறார், மகன் அப்பாவாகிவிடுகிறார். நேர்த்தியாகச் சொல்லப்பட்ட கதை.

**

பொன். மாரியப்பன். தூத்துக்குடி.

அப்பாவின் வருகை கதையில் குமாரின் அப்பா தன் மகனை பார்க்கத் தோன்றிய மறுகணமே சண்டிகர் வந்து விடுகிறார். பிரிவால் வாடும் தந்தைக்கு அவனைப் பற்றிய பழைய நினைவுகள் தான் துணை.

கதையில் சண்டிகர் பற்றி அழகாக விவரிப்பு செய்திருந்ததை வாசிக்கும் போது வாசகன் சண்டிகரில் வாழ்ந்த அனுபவத்தைப் பெறுகிறான்.

செல்போன் வந்து விட்ட பிறகு யாரும் கடிதம் எழுதுவதுமில்லை வரி, உண்மையானது.

எதிர்பாராத அப்பாவின் வருகை குமாரை மிகவும் மகிழ்ச்சிப்படுத்துகிறது. அவர்கள் சந்திப்பும் உரையாடலும் மிக இயல்பாக எழுதப்பட்டிருக்கிறது.

குமார் வேலைக்குச் சென்ற இடத்தில் தனியாக இருந்ததினால் சமைக்கக் கற்றுக் கொண்டிருக்கிறான். அப்பாவிற்காகக் குமார் சமைப்பதை பார்க்கும் போது உணவின் வழியே பாசம் வெளிப்படுவதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

“உன்னை விட்டு உங்க அப்பா எப்படி இருக்கப் போறாருன்னு தெரியல ” என்ற வரியை வாசிக்கும்போது எனக்குக் கண்ணீர் வந்துவிட்டது.

வளர்ந்த பிள்ளைகளிடம் வெளிப்படையாகப் பேசுவதற்கு எந்தத் தந்தையும் விரும்புவதில்லை. குமார் தனது தந்தையை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறான். நம்பிக்கையூட்டும் நல்ல சிறுகதை.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 20, 2024 03:09

June 19, 2024

கவிதா சொக்கலிங்கம் -75

கவிதா பதிப்பகம் சொக்கலிங்கம் அவர்களின் 75ம் ஆண்டு விழா சென்னையில் ஜுன் 22 மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறேன்

இடம் : முத்தமிழ் பேரவை, டி.என். ராஜரத்தினம் கலையரங்கம். இராஜா அண்ணாமலைபுரம். சென்னை. 28

நாள் : ஜுன் 22 சனிக்கிழமை மாலை 5 மணி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 19, 2024 02:07

June 18, 2024

காதலின் முடிவு

ஏதென்ஸில் நகரில் நடக்கும் மூன்று காதல்கதைகள். ஒன்று அகதி இளைஞனின் காதல். மற்றொன்று நடுத்தர வயதுக்காரனின் காதல். மூன்றாவது வயதான இருவரின் காதல். மூன்றும் ஒன்று சேரும் புள்ளி வியப்பளிக்கிறது. கதை இணையும் இடத்தை நாம் எதிர்பார்க்க முடியாது.

Worlds Apart 2015ல் வெளியான கிரேக்கத் திரைப்படமாகும் கிறிஸ்டோஃபோரோஸ் பாபகாலியாடிஸ் இயக்கியுள்ளார்

பல்கலைக்கழகத்தில் அரசியல் பாடம் பயிலும் டாப்னே இளம் பெண்ணுக்கும் சிரிய அகதி ஃபரிஸ்க்கும் இடையே ஏற்படும் காதலின் வழியே சமகால அரசியல் மற்றும் அகதிகளின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் பேசப்படுகின்றன.

ஃபரிஸ் தனது காதலிக்காகக் கிரேக்கச் சொற்களைக் கற்றுக் கொள்கிறான். அவர்களின் உரையாடலில் ஆங்கிலச் சொற்களைச் சரியாகக் கண்டுபிடிக்கும் போது அவன் அடையும் உற்சாகம் அலாதியானது.

ஏதென்ஸின் இரவு வாழ்க்கை படத்தில் மிகவும் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. திறந்தவெளி சினிமா அரங்கு. வீதியில் அமைந்துள்ள மதுவிடுதிகள். இசை நிகழ்ச்சிகள். இளைஞர்களின் உற்சாகமான ஆடல்பாடல்கள் ஒரு பக்கமும். விமான நிலையத்தைத் தாக்க வரும் கும்பல்.கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறை. சாலையோரம் பூமராங் விற்கும் அகதி. தனியே செல்லும் இளம்பெண்ணை மடக்கி வன்புணர்வு செய்ய முயலும் இளைஞர்கள். எனக் கிரேக்க வாழ்வின் மறுபக்கமும் ஒளிவு மறைவின்றிக் காட்டப்படுகின்றன.

நம் தேசம் ஏன் இப்படியானது. எல்லா நம்பிக்கைகளும் பொய்த்துவிட்ட பிறகு எப்படி வாழுவது. இதற்கு மாற்றமே கிடையாதா. அல்லது நாம் தான் மாற்றத்தைத் துவங்க வேண்டுமா என ஒரு காட்சியில் அன்டோனிஸ் கோபத்தில் கேட்கிறார். எளிய மனிதனின் இக்கோபம் கிரேக்கத்திற்கு மட்டும் உரியதில்லை.

கிரேக்கப் புராணக்கதை ஒன்று படத்தின் மையச் சட்டகம் போலக் கையாளப்படுகிறது.ஈரோஸ் (Eros) கிரேக்கக் காதற் கடவுளான அப்ரோடிட்டின் மகன், நம் ஊரின் மன்மதன் போல மக்கள் காதலில் விழுவதற்கு ஈரோஸ் ஒரு ஊக்கியாகச் செயல்படுகிறார், காதலின் சின்னமாக ஈரோஸ் கருதப்படுகிறான். அவன் ஆன்மாவின் வடிவமான சைக் என்ற பெண்ணைக் காதலிக்கிறான். அந்தக் காதல் கதையின் மறுவடிவம் போலவே ஃபரிஸின் காதல் கதை விவரிக்கப்படுகிறது. அதே தொன்மக் கதையின் மாறுபட்ட இரண்டு வடிவங்களாகவே மற்ற காதல்கதைகளும் இடம்பெற்றுள்ளன.

கைவிடப்பட்ட விமானத்தின் உட்புறத்தில் ஃபரிஸ் காதல் செய்வது அழகான காட்சி. இருப்பிடம் அற்றுப் போன அகதிக்கு விமானம் தான் வீடு. அந்த விமானம் ஒரு குறியீடு போலவே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

டாப்னேவின் தந்தையான அன்டோனிஸ் அகதிகளை நாட்டைவிட்டுத் துரத்தி அடிக்க வேண்டும் என்று ஆட்களைத் திரட்டி வன்முறையில் இறங்குகிறார். கைவிடப்பட்ட விமானத்தைத் தாக்க வரும் போது, அவர் டாப்னேவையும் அவளுடைய காதலனையும் பார்க்கிறார். அவரால் தனது மகளின் காதலை ஏற்க முடியவில்லை.

இரண்டாவது காதல்கதை பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக வேலை பறிபோகும் சூழலில் வசிக்கும் ஜியோர்கோஸ் என்ற நடுத்தரவயது சேல்ஸ்மேனிற்கும் அவனது அலுவலகத்திற்கு வருகை தரும் உயரதிகாரியான எலிஸிற்குமான காதலைச் சொல்கிறது..

ஜியோர்கோஸ் மன அழுத்தத்திற்காக மாத்திரை எடுத்துக் கொள்கிறான். அந்த மாத்திரை ஒரு குறியீடு. தன்னைப் போல ஒவ்வொரு நாளும் வேலை பறிபோய்விடுமோ எனப் பயந்து வாழும் தன்னைப் போன்றவர்களை அந்த மாத்திரை தான் காப்பாற்றி வைத்திருக்கிறது என்கிறான். அவனது அலுவலகத்தில் வேலை செய்யும் நபர் ஒரு நாள் தன்னை வேலையை விட்டுத் தூக்கப்போகிறார்கள். தனது மனைவி கர்ப்பிணியாக இருக்கிறாள். ஆகவே வேலையைக் காப்பாற்ற எப்படியாவது உதவி செய் என்று மன்றாடுகிறான்.

அதைப்பற்றி எலிஸிடம் ஜியோர் பேசுகிறான். ஆனால் அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. வேலையை விட்டு நீக்கிவிடுகிறாள். அந்த அதிர்ச்சியில் வேலை பறி போனவன் தற்கொலை செய்து கொள்கிறான் அதை ஜியோர்கோஸால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனம் உடைந்து போகிறான். படம் முழுவதும் ஜியோர்கோஸின் மனக்குழப்பம் சரியாக வெளிப்படுத்தப்படுகிறது. இந்தக் கதையில் காதல் வலி நிவாரணி போலவே சித்தரிக்கபடுகிறது.

மூன்றாவது காதல்கதை எனக்கு மிகவும் பிடித்திருந்த்து. செபாஸ்டியன் என்ற வயதான ஜெர்மன் பேராசிரியர் அறுபது வயதுக்கு மேற்பட்ட மரியா என்ற குடும்பத் தலைவியைச் சூப்பர் மார்க்கெட்டில் சந்திக்கிறார். அவர்களுக்குள் நட்பு உருவாகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர்கள் சந்தித்து உரையாடுகிறார்கள்ஒரு சந்திப்பில் இரண்டாவது வாய்ப்பு என்ற புத்தகத்தை அவளிடம் கொடுத்து வாசிக்கச் சொல்கிறார். அவளுக்கு இன்னொரு புது வாழ்க்கை இருக்கிறது. விரும்பினால் அதை அவள் தேர்வு செய்யலாம் என்பதை மரியா உணருகிறாள். ஆனால் தனது குடும்பத்தை விட்டு வெளியேற அவளால் முடியவில்லை.

மூன்று கண்ணிகளும் ஒன்று சேரும் இடத்தில் டாப்னே. மரியா ,ஜியோர்கோஸ் ஆகிய மூவரும் உண்மையில் யார் என்பதை அறிந்து கொள்கிறோம்.

கிரேக்கத்தின் இன்றைய சமூகப் பொருளாதார நெருக்கடிகளை படம் மிகவும் வெளிப்படையாகப் பேசுகிறது.

படத்தின் இறுதிக்காட்சியில் மரியா இந்தக் குற்றச்சாட்டுகளைக் கோபத்துடன் முன்வைக்கிறாள். அப்போது வன்முறையைக் கையில் எடுத்த அவளது கணவன் மௌனமாகத் தலைகுனிந்து நிற்கிறான்.

பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உருவாகி வரும் அரசியல் உணர்வு. பொது இடங்களை குறி வைத்து வன்முறை கும்பல்களின் தாக்குதல். பெண்கள் மீதான வன்முறைகள் என நகரவாழ்வின் சிக்கல்களை படம் அழுத்தமாகவே பேசுகிறது. தனித்துவிடப்பட்ட விமானநிலையத்தின் உட்புறம். கார்ப்பரேட் அலுவலக அறையில் நடக்கும் காட்சிகள். நகரின் இரவுக்காட்சிகள் என படத்தின் ஒளிப்பதிவு மிக நேர்த்தியாக உள்ளது. இசை அதற்கு கூடுதல் வலிமை சேர்க்கிறது.

படத்தின் இறுதிக்காட்சியில் நூலகத்தில் செபாஸ்ட்டியனைச் சந்தித்து மரியாவிற்கு அவர் கொடுத்த இரண்டாவது வாய்ப்பு என்ற புத்தகத்தை அவருக்கே திரும்ப அளிக்கிறார்கள். அவர் மகிழ்ச்சியோடே அதை ஏற்றுக் கொள்கிறார்.

பிரம்மாண்டமான அந்த நூலகம் இன்றைய நெருக்கடியான வாழ்க்கைக்கான மீட்சி இங்கே தானிருக்கிறது என்பது போலக் காட்சியளிக்கிறது.

காதலில் விழுவதால் எல்லாவற்றையும் மாற்ற முடியும் என்று நீங்கள் நம்பவில்லையா? என்று ஒரு காட்சியில் எலிஸிடம் ஜியோர் கேட்கிறான். அவள் இல்லை என்றே பதில் அளிக்கிறாள்.

அது போலவே செபஸ்டியன் எல்லாமே காதலிலிருந்து தொடங்குகிறது. எவ்வளவு வயதானாலும் பரவாயில்லை என்று மரியாவிடம் சொல்கிறார். அவள் மொழி புரியாவிட்டாலும் உணர்வை புரிந்து கொள்ள முடிகிறது என்கிறாள்.

மூன்று காதலிலும் ஆண்கள் உணர்வுப்பூர்வமாக நடந்து கொள்கிறார்கள். பெண்கள் அதை அறிவுப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு இயல்பாக முடிவு எடுக்கிறார்கள்.

பூமராங் போல அவரவர் செயல்கள் அவர்களுக்கே திரும்பி வருகின்றன. கிரேக்கப் புராணக்கதையான ஈரோஸ் மற்றும் சைக் காதலை நவீனப்படுத்திய விதத்தில் இப்படம் நிறையவே ஆச்சரியமளிக்கிறது.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 18, 2024 03:06

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.