S. Ramakrishnan's Blog, page 29

August 11, 2024

காதலின் விதி

இந்தியாவில் காலண்டர் அச்சிடப்பட்ட வரலாறு குறித்து விரிவான ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் இந்தியாவில் காலண்டர் அச்சிடப்பட்டு விற்பனை பொருளாக மாறியது. அதிலும் கடந்த நூறு ஆண்டுகளில் தான் வீடு தோறும் காலண்டர் வாங்கி வைத்திருப்பது நடந்தேறியது. குறிப்பாக ஓவியர் ராஜா ரவிவர்மாவின் பங்களிப்பு மற்றும் கொண்டைய ராஜுவும் அவரது சீடர்களும் வரைந்த சாமிபடங்கள் பற்றிய ஆய்வின் மூலம் காலண்டர் கலையின் முக்கியத்துவம் மற்றும் சிறப்புகள் வெளிப்படுத்தபடுகின்றன.

1954 ஆம் ஆண்டில் வெளியான மிசோகுச்சியின் A Story from Chikamatsu திரைப்படம் காலண்டர் தயாரிக்கும் வேலையைப் பற்றியதே. அச்சுத் தொழிலில் ஈடுபடும் இஷூனை மையமாகக் கொண்டது.

மிசோகுச்சியின் புகழ்பெற்ற படங்களான Ugetsu, Sansho the Bailiff, Life of Oharu வரிசையில் வைத்து கொண்டாடப்பட வேண்டிய முக்கியமான திரைப்படமிது.

எடோ-கால ஜப்பானில் கியோட்டோவின் முக்கிய அச்சுக்கலைஞராக விளங்கியவர் இஷுன். நாடு முழுவதும் காலண்டர் அச்சிட்டு விநியோகம் செய்வதற்கான ஆணையை அவரது அச்சகம் பெறுகிறது. இதற்காக அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு விருந்து கொடுத்துத் தேவையான கையூட்டுகள் கொடுத்து ஆணையைப் பெறுகிறார். தனித்துவமிக்க ஒவியங்களைக் கொண்ட காலண்டரை உருவாக்கித் தருகிறான் மோஹே. அவனுக்கும் இஷுனின் மனைவிக்குமான காதலையும் அவர்கள் வீட்டைவிட்டு ஒடிய போது ஏற்பட்ட நெருக்கடிகளையும் இப்படம் விவரிக்கிறது

படத்தின் ஒளிப்பதிவு அபாரமானது. ஒளிப்பதிவாளர் கஸுவோ மியாகா கறுப்பு வெள்ளைக்காட்சிகளை நிகரற்ற ஒவியங்களாக உருவாக்கியுள்ளார். குறிப்பாகக் காதலர்கள் ஏரியில் படகில் செல்லும் காட்சி, அவர்கள் ஒளிந்து வாழும் மலைப்பகுதி,. இரவு தங்கும் விடுதி அறை. சிலுவையில் அறைவதற்காகக் குதிரையில் அழைத்துச் செல்லப்படும் ஊர்வலம் போன்ற காட்சிகள் நிகரற்றவை. பாரம்பரிய ஜப்பானிய இசையின் மாறுபாடுகளை இதில் மிசோகுச்சி சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார்

நான்கு இழைகளைக் கொண்ட கதை. இரண்டு தொழில்நிறுவனங்களுக்குள் நடக்கும் வணிகப் போட்டி, ஒவியன் மோஹேயை காதலிக்கும் பணிப் பெண்ணின் கதை, தனது சகோதரனின் கடனை அடைக்கப் பணஉதவி கேட்கும் இஷூனின் மனைவி ஓசனுக்கு ஏற்படும் சிக்கல்கள். அவளுக்கு உதவி செய்ய முயன்று வெளியேற்றப்பட்ட மோஹேயின் வாழ்க்கை. காதலர்களாக மாறிய ஓசன் மோஹே ஒளிந்து வாழ்வதும் தண்டிக்கப்படுவதும் என இந்த நான்கு இழைகளைக் கச்சிதமாகப் பின்னி திரைக்கதையை எழுதியிருக்கிறார்கள். மேடை நாடகமாக நிகழ்த்தப்பட்ட பிரதியை மிசோகுச்சி தனது திரைக்கதையால் தேர்ந்த கலைப்படைப்பாக மாற்றியிருக்கிறார்.

ஜப்பானில் முறை தவறிய உறவில் ஈடுபடும் ஆணும் பெண்ணும் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்கள் என்பது புதிய செய்தி.

தன்னை விடப் பல ஆண்டுகள் வயதில்மூத்த இஷூனை அவரது பணம் மற்றும் வசதிக்காகத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாள் ஓசுன். அந்தத் திருமண வாழ்க்கை இனிமையாக இல்லை. அவளது சகோதரன் வீடு தேடி வந்து உதவி கேட்கும் போது கணவனிடம் பணம் கேட்கிறாள் ஓசுன். ஆனால் இஷூன் அவளது குடும்பத்தை அவமானக பேசியதோடு பணம் தரவும் மறுக்கிறான்.

இந்நிலையில் அவளுக்கு உதவி செய்ய முன்வருகிறான் மோஹே. அவன் பொறுப்பில் தான் அச்சக பணமிருக்கிறது. அதை முறைகேடாகப் பயன்படுத்த நினைத்து சிக்கிக் கொள்கிறான். இஷூன் அவர்களுக்குள் ரகசிய காதல் இருப்பதாக நினைத்து மோஹேயை தண்டிக்கிறான். உண்மையில் அவர்கள் இஷூனின் நெருக்கடியால் தான் காதலர்களாக மாறுகிறார்கள். வீட்டைவிட்டு தப்பியோடி வாழுகிறார்கள். தனது மனைவி ஒடிப்போனதை மறைத்து வாழும் இஷூன் அவர்களைக் கண்டுபிடித்து மனைவியை மீட்க ஆட்களை அனுப்பி வைக்கிறான். அவர்கள் மோஹே இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து அவளை மீட்கிறார்கள். ஆனால் மோஹே திரும்ப வந்து அவளை மீண்டும் தன்னோடு அழைத்துச் சென்றுவிடுகிறான்.

ஒரு காட்சியில் இஷுன் தனது குடும்பப் பெயரைக் காக்க தற்கொலை செய்து கொள்ளும்படி அவரது மனைவியிடம் கத்தியை வீசி எறிகிறார். அதற்குப் பதிலாக அவள் மோஹேயை சந்திக்க வீட்டை விட்டு ஓடுகிறாள், அது போலவே தந்தையால் காட்டிக் கொடுக்கபடுகிறான் மோஹே. உறவுகளுக்குள் ஏற்படும் மோதல்கள் மற்றும் வெறுப்பைப் படம் சிறப்பாக வெளிப்படுத்துகிறது.

ஏரியில் குதித்துக் காதலர்கள் இறந்துவிட்டதாகத் தேடும் காட்சி அபாரமான அழகுடன் படமாக்கபட்டிருக்கிறது.

முடிவில் அரசாங்க அதிகாரிகளை ஏமாற்றியதற்காக இஷுனும் குற்றவாளியாக அறிவிக்கபடுகிறான். அவனது சொத்து பறிமுதல் செய்யப்படுகிறது கடைசி ஊர்வலத்தின் போது மொஹேயும் ஓசனும் முன்பை விட மகிழ்ச்சியாக இருப்பதை மக்கள் காணுகிறார்கள். அந்தக் காட்சி மறக்க முடியாதது.

சிக்கமட்சு பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த முக்கியமான நாடகக் கலைஞர். அவரது இந்த நாடகம் ஜப்பானிய நாடக வரலாற்றில் மிக முக்கியமான நாடகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது

தண்டிக்கபடுவதற்கு முன்பாக அவர்கள் ஒருவரையொருவர் கட்டிக்கொண்டு அழுகிறார்கள், , அந்த இரவு முடிவற்று நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதயமற்ற கோடைகாலத்தின் இரவு எப்போதும் போல் குறுகியது, அவசரமாக விடைபெற்றுப் போய்விடுகிறது. சோனேசாகியில் என்றோ நடந்த காதல் தற்கொலையை மிசோகுச்சி நிகரற்ற காதல் கதையாகத் திரையில் உருவாக்கிக்காட்டி சாதனை செய்திருக்கிறார்

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 11, 2024 21:14

உளவாளியின் மனசாட்சி

மாக்சிம் கார்க்கியை முக்கிய கதாபாத்திரமாகக் கொண்டு The Fall of a Titan என்ற நாவலை எழுதியிருக்கிறார் ரஷ்ய எழுத்தாளர் இகோர் கூஸெங்கோ.

இரண்டாம் உலகப்போரின் போது இவர் கனடாவில் ரஷ்ய உளவாளியாகப் பணியாற்றியவர். இந்த நாவலை 1955ம் ஆண்டுத் தமிழ்சுடர் பதிப்பகம் வீழ்ச்சி என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. கே.எம்.ரங்கசாமியும். ஜி. கிருஷ்ணமூர்த்தியும் இணைந்து மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்.. 492 பக்கங்கள் கொண்ட பெரிய நாவல். இப்போது இந்நூலின் பதிப்பு கிடைப்பதில்லை.

அமெரிக்க அரசு அணுஆயுதம் தயாரிப்பதை அறிந்த சோவியத் அரசு அது குறித்த ரகசியத் தகவல்களைச் சேகரிக்க முயன்றது. இதற்காக உளவுப்பிரிவு ஒன்றைக் கனடாவில் உருவாக்கியது.

கனடாவில் உள்ள சோவியத் தூதரகத்தில் செயல்பட்ட இந்தப் பிரிவில் ரகசியத் தகவல்களை டீகோட் செய்பவராக வேலை பார்த்தார் கூஸெங்கோ. ஒட்டாவாவில் மக்களோடு மக்களாகக் கலந்து வசிக்கும் படி கூஸெங்கோ அறிவுறுத்தப்பட்டார்.

கனேடிய அரசின் முக்கியச் செயல்பாடுகள் குறித்த தகவல்களைச் சேகரிப்பது, அமெரிக்க அணு ஆயுத சோதனையில் ஈடுபட்ட விஞ்ஞானிகளைக் கண்காணிப்பது மற்றும் ராணுவத்தின் ரகசிய அறிக்கைகள். திட்டமிடல்களைச் சேகரித்து அனுப்புவது இந்த உளவுப்பிரிவின் வேலை,

பெறப்படும் தகவல்களை ரகசிய குறியீடுகள் மூலம் ரஷ்யாவிற்கு அனுப்பி வைப்பதும். அங்கிருந்து தரப்படும் உத்தரவுகளை மொழியாக்கம் செய்வதும் கூஸெங்கோவின் பணி. இதற்காக அவர் பகலிரவாக வேலை செய்து வந்தார்.

உளவுப்பிரிவானர் தாங்கள் சேகரித்த ரகசியத் தகவல்களை ரஷ்யாவிற்கு அனுப்பியதும் மூல ஆவணங்களை எரித்துவிடுவது வழக்கம். சில நேரம் முக்கியமான ஆவணங்களைப் பாதுகாப்புப் பெட்டகம் ஒன்றில் பூட்டி வைத்திருப்பார்கள். அதைக் கையாளுவதும் கூஸெங்கோவின் வேலை

ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்கியதில் ஏற்பட்ட மோசமான பாதிப்பை அறிந்த கூஸெங்கோ இது போல ரஷ்ய அரசும் அணுகுண்டு தயாரித்துச் செயல்படுத்தினால் எவ்வளவு பெரிய நாசம் ஏற்படும் என உணர்ந்தார்,

அவரது மனைவி இந்த உளவுப்பணியின் விளைவுகள் குறித்து எச்சரிக்கை செய்ததோடு தாங்கள் ரஷ்யா திரும்பாமல் கனடாவிலே வசிக்கலாம் என்று ஆலோசனை சொன்னார்.

மனக்குழப்பமும் கவலையும் கொண்ட. கூஸெங்கோ முடிவில் தனது மனசாட்சிப்படி நடக்க முடிவு செய்தார்.

தனக்குக் கிடைத்த ரகசியத் தகவல்கள் மற்றும் தங்களின் உளவுப்பணி குறித்த109 ஆவணங்களைக் கனடா அரசிடம் ஒப்படைக்க முயன்றார். ஆனால் இவர் சொல்லும் உண்மையை நம்ப யாரும் தயாராகயில்லை.

இப்படி ஒரு உண்மை வெளியானால் உலக அரங்கில் ரஷ்யாவின் பெயர் கெட்டுவிடும் எனப் பயந்த சோவியத் ராணுவம் அவரைக் கொல்வதற்கு முயன்றது.

அவர்களிடமிருந்து தப்பியோடிய கூஸெங்கோ காவல்துறையின் உதவியை நாடினார். அவர்கள் ஆவணங்களைக் கைப்பற்றியதோடு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்று அவரது உயிரையும் காப்பாற்றினார்கள்.

கூஸெங்கோ அளித்த ஆவணங்களின் மூலம் ரஷ்யாவின் உளவு வேலைகள் வெளிச்சத்திற்கு வந்தது. விரிவான நீதி விசாரணை நடைபெற்று கனேடிய அரசின் ராணுவத்தலைவர்கள். உயர் அதிகாரிகள் பலரும் கைது செய்யப்பட்டார்கள்.

கூஸெங்கோ வேறு பெயரில் யாருக்கும் தெரியாத இடத்தில் வாழ்வதற்கான வசதிகளைச் செய்து கொடுத்தது கனேடிய அரசு. தனது இறுதி நாள் வரை கனடாவில் வசித்தார் கூஸெங்கோ. தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தோன்றும் கூஸெங்கோ தனது முகத்தை மறைத்துக் கொண்டு முகமூடி அணிந்திருக்கிறார். மரணத்தின் பின்பே அவர் எங்கே வசித்தார், எப்படி வாழ்ந்தார் என்ற உண்மை வெளியாகியது.

தலைமறைவாக வாழ்ந்த நாட்களில் கூஸெங்கோ இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அதில் ஒன்று தான் தி ஃபால் ஆஃப் எ டைட்டன், நாவல்

தனது சொந்த அனுபவங்களை முதன்மைப்படுத்தி எழுதிய போதும் தனது ஆதர்ச நாயகனாக இருந்த மாக்சிம் கார்க்கியின் கடைசிக் கால வாழ்வும் தனது வாழ்க்கை போலவே கசப்பாக மாறியதை குறியீடாகக் கொண்டு நாவல் எழுதியிருக்கிறார்.

கார்க்கியும் கூஸெங்கோவும் அன்றைய ஸ்டாலின் அரசை முழுமையாக நம்பினார்கள். விசுவாசிகளாக நடந்து கொண்டார்கள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக உண்மையை அறிந்து கொண்ட போது அவர்களால் அரசின் பிடியிலிருந்து வெளியேற முடியவில்லை. அநீதி மற்றும் அடக்குமுறைகளுக்கு ஆளானார்கள். சொந்த வாழ்க்கையில் நிறைய இழப்புகளைச் சந்தித்தார்கள். அந்த வீழ்ச்சி தான் இந்த நாவலின் மையப்பொருள்

டால்ஸ்டாய். தஸ்தாயெவ்ஸ்கி. துர்கனேவ். செகாவ் போன்றவர்களுக்கு விரிவான வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் மாக்சிம் கார்க்கிக்கு முழுமையான வாழ்க்கை வரலாறு எழுதப்படவில்லை. அந்த வகையில் இந்த நாவல் அவரது வாழ்வின் இருண்ட பகுதியை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

ரஷ்யாவிலிருந்து வெளியேறி கார்க்கி. சில காலம் ஐரோப்பாவில் வசித்தார் பின்பு ஸ்டாலினின் வற்புறுத்தலால் 1931 இல் ரஷ்யாவுக்குத் திரும்பினார். எழுத்தாளர் சங்கத்தின் தலைவரானார். உலக இலக்கியங்களை ரஷ்யாவில் கொண்டுவரும் பெரிய திட்டம் ஒன்றை செயல்படுத்த ஆரம்பித்தார். ஆனால் அரசியல் நெருக்கடிகள். அதிகாரத்தின் மீற முடியாத உத்தரவுகள் காரணமாக தான் விரும்பாத விஷயங்களை செய்ய வேண்டிய நிலை கார்க்கிக்கு ஏற்பட்டது. அவரது மகனின் மரணம் அவரை நிலைகுலைய வைத்தது. வீட்டுச்சிறையில் வைக்கபட்டது போல அவர் உணர்ந்தார். கார்க்கி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக இன்றும் வாதங்கள் தொடர்கிறது.

கூஸெங்கா மாஸ்கோவில் கல்வி பயின்றவர். தன்னோடு படித்த . நிறு ஸ்வெட்லானாவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். ராணுவத்தின் ரகசிய தகவல் பிரிவில் பணியாற்றியவர். அங்கே சிறப்பாகச் செயல்பட்ட காரணத்தால் கனடாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தி ஃபால் ஆஃப் எ டைட்டன் நாவலில் கோரின் என்ற பெயரில் மாக்சிம் கார்க்கி சித்தரிக்கபடுகிறார். பியோதர் நோவிகோவ் என்ற ராணுவ அதிகாரியின் பார்வையில் நாவல் சொல்லப்படுகிறது. நோவிகோவ் தனது பதினாறு வயதில் ரஷ்யப் புரட்சியைச் சந்திக்கிறார். அதில் தனது பெற்றோர்களை இழக்கிறார். பின்பு பல்கலைகழகத்தில் உளவுத்துறையின் சார்பில் சக மாணவர்களை உளவு பார்க்கும் வேலையில் ஈடுபடுகிறார். படித்து முடித்து கல்லூரி பேராசிரியராகிறார். கட்சியின் நம்பிக்கைக்கு உரியவராக மாறுகிறார். இந்நிலையில் இவருக்குக் கோரினை கண்காணிக்கும் வேலை தரப்படுகிறது. கோரினின் மகள் நினா போல நிஜ வாழ்க்கையில் கார்க்கிக்கு மகள் கிடையாது. கார்க்கியை நினைவுபடுத்தும் கதாபாத்திரம் கோரின் என்ற போதும் கூஸெங்கோவால் கார்க்கியின் ஆளுமையை முழுமையாக நாவலில் கொண்டுவர இயலவில்லை.

ஹாலிவுட்டில் கூஸெங்கோவின் வாழ்க்கை குறித்து The Iron Curtain என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கூஸெங்கோவின் உளவுப்பணி விரிவாகச் சித்தரிக்கப்படுகிறது. ஆரம்ப காட்சியில் கூஸெங்கோவின் தோற்றம் மற்றும் செயல்பாட்டில் கம்பீரம் வெளிப்படுகிறது. உண்மையை அறிந்த பின்பு அவரது தோற்றம் உருமாறுகிறது. குறிப்பாக அவருடன் பணியாற்றும் ராணுவ அதிகாரி குடித்துவிட்டு கடந்த கால உண்மைகளைப் பேசும் காட்சியில் கூஸெங்கோ விழிப்புணர்வு அடைகிறார். இரவில் தனியே அவரைத் தேடிச் சென்று சந்திக்கும் போது அவருக்கு தன்னிலை புரிந்துவிடுகிறது

தனது மனைவியை அழைத்துக் கொண்டு ரகசிய ஆவணங்களுடன் பத்திரிக்கை அலுவலகம். நீதித்துறை அமைச்சரின் அலுவலகம் என ஏறி இறங்குகிறார். எவரும் அவரைப் பொருட்படுத்தவில்லை. அந்தக் காட்சிகள் படத்தில் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கின்றன.

மாக்சிம் கார்க்கியின் கடைசி நாவல் The Life of Klim Samgin. நான்கு தொகுதிகள் கொண்டது. கார்க்கியின் கதைகள். கட்டுரைகள். நாவல்கள் தமிழில் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த நாவல் இதுவரை வெளியாகவில்லை.

•••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 11, 2024 08:58

August 8, 2024

குலேப் என்ற மலர்

குலேபகாவலி படம் பார்த்துக் கொண்டிருந்தேன். குலேப் என்ற மலரை தேடி பகாவலி நாட்டிற்கு மேற்கொள்ளும் இளவரசனின் சாகசபயணமே படம். அந்த மலரைக் கொண்டு வந்தால் மட்டுமே தந்தையின் பார்வையை மீட்க முடியும்.

இளவரசன் தாசன் குலேப் மலரைத்தேடி செல்லும் வழியில் சூதாடி இளவரசர்களை அடிமைப்படுத்தும் லக்பேஷா என்ற இளம்பெண்ணைப் பற்றி அறிந்து கொண்டு தந்திரமாக அவளை வெல்கிறான்

குலேப் என்ற சொல் படம் பார்த்து முடித்த நிமிஷத்திலிருந்து மனதில் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டேயிருந்தது. கண்பார்வையை மீட்கும் மாயமலரது. எங்கள் ஊர் மாரியம்மன் கோவிலில் இது போலக் கண் பார்வை குறைபாடுகளைச் சரிசெய்யக் கண்மலர் வாங்கிச் செலுத்துவார்கள். கோவில் முன்பாக நிறையக் கண்மலர்கள் இருப்பதைக் கண்டிருக்கிறேன்

ஆயிரத்து ஒரு அராபிய இரவுக்கதையில் ஒன்று குல்-இ-பகவாலி என்ற தான் இக்கதை. இது பஞ்சாபியில் முதலில் படமாக்கபட்டது. பின்பு தமிழ் தெலுங்கு இந்தி எனப் பல்வேறு மொழிகளிலும் வெளியாகியுள்ளது

மூலக்கதையைத் தமிழுக்கு ஏற்ப மாற்றியுள்ளது சுவாரஸ்யமானது.

மூன்று வேறுவேறு கதைசரடுகளை ஒன்று சேர்த்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். குல்-இ-பகவாலி தனக்கு மிகவும் பிடித்தமான கதை என்கிறார் வரலாற்று அறிஞர் ரொமிலா தாபர்

பகாவலி என்று அழைக்கப்படும் தேவதை இளவரசியால் பாதுகாக்கப்படும் அபூர்வ மலரைத் தேடி இளவரசன் செல்வதே மூலக்கதை

பெர்சியக் கதை ஒன்று தமிழில் வெற்றிகரமான திரைப்படமாக மாறியது வியப்பளிக்கிறது. டி.ஆர். ராமண்ணா மூன்று அரேபியக் கதைகளைப் படமாக்கியிருக்கிறார். அந்த ஆர்வம் எப்படி உருவானது என்று தெரியவில்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 08, 2024 20:57

கிழவர்களின் விளையாட்டு

புதிய குறுங்கதை.

இரண்டு கிழவர்களும் தினமும் பூங்காவில் சந்தித்துக் கொள்வார்கள். ஒருவர் கையில் சிவப்பு பிடி கொண்ட குடை வைத்திருப்பார். மற்றவர் பச்சை நிற கைப்பிடி கொண்ட குடை. ஒருவர் அடர்ந்து நரைத்த தாடியுடன் இருப்பார். மற்றவர் தினசரி முகச்சவரம் செய்து மீசையில்லாமல் இருப்பார். இருவரும் சரியாக மாலை நான்கு முப்பதுக்குப் பூங்காவிற்குள் நுழைவார்கள். அவர்களுக்கான அதே சிமெண்ட் இருக்கையில் அமர்வார்கள்

மீசையில்லாதவர் கொண்டு வந்த பிளாஸ்கில் இருந்து காபி ஊற்றி இருவரும் குடிப்பார்கள். பின்பு ஆளுக்கு ஒரு புத்தகம் எடுத்துக் கொண்டு படிப்பார்கள். பகல் வெளிச்சம் குறைந்து மின்விளக்குகள் எரிய ஆரம்பிக்கும் வரை படிப்பார்கள். பின்பு புத்தகத்தை மூடி வைத்துவிட்டு ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொள்வார்கள். குடும்ப விவகாரங்களைப் பற்றி மெல்லிய குரலில் பேசிக் கொள்வார்கள். செல்போன் பேசியபடியே நடைப்பயிற்சி செய்பவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். பின்பு மரம் தண்ணீரைப் பார்த்துக் கொண்டிருப்பது போல ஒருவரையொருவர் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

வீடு திரும்பப் புறப்படும் போது சிறிய விளையாட்டினை மேற்கொள்வார்கள். அதாவது மீசையில்லாத தாத்தா தான் வைத்திருந்த பச்சை குடையினைத் தாடி வைத்த தாத்தாவிடம் கொடுத்து அவரது குடையை வாங்கிக் கொள்வார். தாத்தாக்களின் குடை என்பது வெறும் பொருளில்லை. அது ஒரு ஆறுதல். உலகம் தராத பாதுகாப்பைக் குடை தந்துவிடும் என்ற நம்பிக்கை. நண்பனின் குடையோடு நடக்கத் துவங்கும் போது இரண்டு தாத்தாக்களும் சிறுவர்களாகி விடுவார்கள். நண்பனின் குடையை வீட்டிற்குக் கொண்டு செல்வது என்பது நண்பனை வீட்டிற்கு அழைத்துச் செல்வது போன்றது தானே.

மறுநாள் அவர்கள் அதே பூங்காவில் சந்தித்து அவரவர் குடையைப் பெற்றுக் கொள்வார்கள். அன்று பூங்காவிலிருந்து கிளம்பும் போது தாடி வைத்த தாத்தா தனது பர்ஸிலிருந்து ஐந்து ரூபாய் நாணயத்தை மீசையில்லாத தாத்தாவிடம் கொடுத்து அவரிடமிருந்த ஐந்து ரூபாய் நாண‘யத்தை வாங்கிக் கொள்வார். இதுவும் ஒரு விளையாட்டே.

இப்படியாக அவர்கள் ஒவ்வொரு நாளும் சின்னஞ்சிறியதாகத் தங்களுக்கான விளையாட்டை உருவாக்கிக் கொண்டார்கள். அதில் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

திருப்பித் தருவதற்கு ஏதாவது ஒன்றிருக்கும் வரை தான் வாழ்க்கையின் மீது விருப்பம் இருக்கும் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.

பெரிய உலகில் இது போன்ற சிறிய நிகழ்வுகள் தன் போக்கில் ஆனந்தமாக நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.

••

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 08, 2024 00:30

August 5, 2024

கிறுகிறுவானம்

எனது சிறார் நூலான கிறுகிறுவானம் பற்றி எம்.ஜே.பிரபாகர் சிறப்பான அறிமுகம் ஒன்றை எழுதியுள்ளார். அவருக்கு மனம் நிறைந்த நன்றி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 05, 2024 19:05

August 1, 2024

தாத்தாவின் புகைப்படங்கள்

தனது தாத்தாவிற்குச் சொந்தமான குடும்பத்தின் கோடைக்கால வீட்டில், பழைய உபகரணங்கள் மற்றும் கருவிகளுக்கு நடுவே இருந்த பை ஒன்றைக் கண்டுபிடிக்கிறான் இகோர்.

அதில் நிறையப் புகைப்படச்சுருள்கள் காணப்படுகின்றன. சிதைந்த நிலையிலுள்ள அந்தப் புகைப்படச்சுருளை இன்றுள்ள தொழில்நுட்பத்தைக் கொண்டு மீள் உருவாக்கம் செய்கிறான். அந்தப் புகைப்படங்கள் வியப்பளிக்கின்றன.

சோவியத் சினிமாவின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரான தனது தாத்தா லியோனிட் புர்லாகாவின் இளமைக்காலச் சாட்சியமாக உள்ள அந்தப் புகைப்படங்களை ஆராயத் துவங்குகிறான்.

அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு நினைவு அழிந்து போன தாத்தாவிடம் புகைப்படங்களைக் காட்டி விளக்கம் கேட்கிறான். அவருக்குத் தன்னை மட்டுமே தெரிகிறது. படம் பிடிக்கப்பட்ட இடம், மற்றும் படத்திலிருப்பவர் பற்றிய நினைவுகள் மறந்து விட்டன.

அந்தப் புகைப்படங்களைப் பாட்டி காணுகிறாள். இளமையான தாத்தாவைக் கண்டு எவ்வளவு அழகாக இருந்திருக்கிறீர்கள் என்று வியக்கிறாள். அந்த அழகு இப்போது எங்கே போய்விட்டது என்று கேலி செய்கிறாள்.

ஒரு புகைப்படத்தில் தாத்தா பைப் புகைக்கிறார். பாட்டி அதைப் பார்த்துவிட்டு நீங்கள் புகைப்பீர்களா.. இத்தனை வருஷம் தெரியாமல் போய்விட்டதே என்று கோவித்துக் கொள்கிறாள்.

புகைப்படங்கள் கால ஒட்டத்தில் ரசம் அழிந்து போவது போல மனித நினைவுகளும் அழிந்து போகின்றன என்கிறார் தாத்தா. அவரது நினைவிலிருந்த மனிதர்கள். இடங்களை அடையாளம் கண்டு கொள்ளும் பேரன் அவரது திரையுலக வாழ்வினையும் அவர் எடுத்த படங்களையும் ஒன்று திரட்டி ஆவணப்படுத்த முயலுகிறான்

இந்த முயற்சியின் விளைவே Fragile memory (2022) என்ற ஆவணப்படம். சோவியத் ஒன்றியத்தில் இயங்கிய திரைப்பட நிறுவனங்கள். இயக்குநர்கள். நடிகர்கள் குறித்தும். அன்றைய அரசு திரைத்துறையை எப்படித் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தியது என்பது பற்றியும் இகோர் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்

தனது தாத்தாவின் இளமையான தோற்றமும் தனது தோற்றமும் ஒன்று போல இருப்பதைக் கண்டு இகோர். மகிழ்ச்சி அடைகிறான்

எண்பது வயதான தாத்தாவின் அன்றாட வாழ்க்கை. காது கேளாத அவருடன் நடக்கும் உரையாடல். தாத்தாவோடு பணியாற்றிய இயக்குநர்களைத் தேடி பயணம் செய்து விபரங்களைச் சேகரிப்பது என இகோரின் தேடலும் ஆவணப்படுத்துதலும் சிறப்பாக உள்ளது

சோவியத் சினிமா பள்ளியில் ஒளிப்பதிவு பயின்று லியோனிட் புர்லாகா ஒடேசா ஃபிலிம் ஸ்டுடியோவில் 1964 முதல் 1999 வரை பணிபுரிந்திருக்கிறார். கவிஞர் ஜோச ப்ராட்ஸ்கியின் நண்பராக இருந்திருக்கிறார்.

படத்தின் ஒரு காட்சியில் பழைய திரைப்படங்களின் படச்சுருள்கள் கேன் கேனாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை யாரும் பராமரிக்கவில்லை. தூசி படிந்து சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. ஒரு சிற்பம் போலவோ, ஓவியம் போலவே சினிமா பாதுகாக்கப்படுவதில்லை. பல்வேறு அரிய திரைப்படங்களின் மூலச்சுருள்கள் அழிந்து போய்விட்டன.

தனது இளமைக்காலப் புகைப்படங்களையும் தான் எடுத்த திரைப்படங்களையும் பற்றி நினைவு கூறும் போது புர்லாகா முகத்தில் வெளிப்படும் மகிழ்ச்சி அபூர்வமானது. ஒரு காட்சியில் தாத்தாவால் தனது சொந்த மகளைக் கூட அடையாளம் காண முடியவில்லை. மரம் தனது உதிர்ந்த இலையை அடையாளம் கண்டு கொள்ளுமா. நினைவு வைத்திருக்குமா. நினைவற்ற நிலையில் மனிதர்கள் நிழல் போலாகி விடுகிறார்கள்.

இந்த ஆவணப்படத்தில் பழைய புகைப்படங்களின் வழியே காலம் மீட்டெடுக்கப்படுகிறது. நாம் எவரெவர் நினைவில் எப்படிப் பதிந்து போயிருக்கிறோம் என்ற தேடல் உருவாகிறது. கலைந்த மேகங்கள் போலப் புகைப்படத்தில் காணப்படும் சிதைவுகளைத் தாத்தா ரசிக்கிறார்.

படத்தில் தாத்தாவை விடவும் பாட்டி அதிக நினைவாற்றலுடன் இருக்கிறாள். பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறாள். இன்றைய தலைமுறை தாத்தாவை மதிப்பதில்லை. அவரது பிறந்தநாளில் கூட வாழ்த்து சொல்வதில்லை என்று ஆதங்கப்படுகிறாள். இது புர்லாகாவின் வருத்தம் மட்டுமில்லை. உலகெங்கும் உள்ள சிறந்த படைப்பாளிகள் முதுமையில் கைவிடப்பட்டவர்களாகத் தனிமையில் வாழுகிறார்கள். இறந்து போகிறார்கள்.

புர்லாகாவின் ஒளிப்பதிவு பாணி தனித்துவமாகயிருக்கிறது. இரண்டாம் உலகப்போரின் பின்புலத்தில் உருவாக்கப்பட்ட படங்களுக்கே அதிகம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

சோவியத் மற்றும் உக்ரேனிய சினிமாவின் 50 ஆண்டுகளையும், சோவியத் ஒன்றியத்தின் வாழ்க்கையையும் பின்னோக்கிப் பார்க்கும் விதமாக ஆவணப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 01, 2024 05:39

July 30, 2024

புதுக்கோட்டை புத்தகக் கண்காட்சியில்

புதுக்கோட்டைப் புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரியின் வெளியீடுகள் அனைத்தும் கடை எண் 81 & 82 சக்சஸ் புக் ஷாப் அரங்கில் கிடைக்கின்றன.

இன்று காலை புதுக்கோட்டைப் பகுதியை சேர்ந்த ஆசிரியர் முத்தரசன் எனக்கு தொலைபேசி செய்து நூறு சிறந்த சிறுகதைகள் தொகுதிகள் வேண்டும் எனக் கேட்டார். அவரை கண்காட்சியில் வாங்கிக் கொள்ளும்படி சொன்னேன்.

எனது அனைத்து நூல்களும் அங்கே விற்பனைக்கு கிடைக்கின்றன.

வாசகர்கள். நண்பர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 30, 2024 04:38

July 29, 2024

காஃப்காவின் சுழலும் தலை

காஃப்கா மறைந்து நூறு ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு உலகெங்கும் அவரது நினைவைக் கொண்டாடுகிறார்கள். காஃப்காவின் உலகை அறிமுகம் செய்யும் விதமாக நான் எழுதிய கட்டுரை தமிழ் இந்து நாளிதழில் வெளியாகியுள்ளது. (28.7.24) தமிழ் இந்து நாளிதழுக்கும் மண்குதிரைக்கும் மனம் நிறைந்த நன்றி.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 29, 2024 19:39

கோவை புத்தகத் திருவிழாவில்

கோவை புத்தகத் திருவிழாவில் மூன்று நாட்கள் இருந்தேன். நிறைய வாசகர்களைச் சந்தித்து உரையாடினேன். புத்தகங்களில் கையெழுத்து போட்டுக் கொடுத்தேன். சனி,ஞாயிறு இரண்டு நாட்களும் நிறையக் கூட்டம்.

விமானநிலையத்தின் அருகிலுள்ள மேரியட் ஹோட்டலில் ( Fairfield by Marriott) தங்கியிருந்தேன்.மேரியட் குழுமத்தின் தங்கும்விடுதிகள் இந்தியாவில் நிறைய இடங்களில் இருக்கின்றன. நானே தங்கியிருக்கிறேன்.

கோவையில் உள்ள விடுதி வெளித்தோற்றத்தில் மட்டுமே சிறப்பாக உள்ளது. உள்ளே எந்த வசதியும் கிடையாது. மிகச்சிறிய அறை. அவர்கள் போட்டுள்ள நாற்காலியை நகர்த்த இடம் கிடையாது. மின் இணைப்புகள் சரியாக வேலை செய்யவில்லை. காலை உணவுக்கு( 600 ரூபாய் + வரி ) கட்டணம் வைத்திருக்கிறார்கள். மதிய சாப்பாடு (1000 ரூபாய் + வரி ) பொதுவாக விடுதிகளில் காலை உணவு இலவசமாகவே வழங்குவார்கள். இவர்கள் அதற்கும் கட்டணம் வசூலித்துவிடுகிறார்கள்.

கோவையில் நல்ல சைவ உணவகங்கள் இருக்கின்றன. அதுவும் புத்தகக் கண்காட்சி நடைபெறும் பீளமேடு பகுதியிலே சிறந்த உணவகங்கள் இருப்பதால் மூன்று வேளையும் வெளியே தான் சாப்பிட்டேன்.

நண்பர் மூர்த்தி மூன்று நாட்களும் உடனிருந்து சிறப்பாகக் கவனித்துக் கொண்டார். அவருக்கு மனம் நிறைந்த நன்றி.

வெள்ளிகிழமை மாலை விஷ்ணுபுரம் அரங்கிற்குச் சென்றேன். அஜிதனைச் சந்தித்து அவரது எழுத்து குறித்த பாராட்டுகளைத் தெரிவித்தேன்.

விஷ்ணுபுரம்  அரங்கில் அமர்ந்து போகன்சங்கர், சுகுமாரன், கோகுல்பிரசாத் உடன் பேசிக் கொண்டிருந்தேன். தமிழ், மலையாளத் திரையுலகம். எழுத்தாளர்களின் சினிமா அனுபவங்கள், கு.அழகிரிசாமி கதைகள் எனச் சுவாரஸ்யமாக அமைந்த உரையாடல்.

சனிக்கிழமை காலை சிறுவாணி வாசகர் மையத்தின் அரங்கிற்குச் சென்றேன். சுரேஷ் வெங்கடாத்ரி , நாஞ்சில் நாடன், ஜி. ஆர்.பிரகாஷ் மற்றும் சிறுவாணி அமைப்பின் நண்பர்களைச் சந்தித்தேன். அவர்கள் வெளியிட்ட புதிய நூல்களை வாங்கினேன்.

கண்காட்சியில் சுற்றியலைந்து வரலாறு, கலை, பௌத்தம், கிராபிக் நாவல் என இருபது புத்தகங்கள் வாங்கினேன். அதில் பாதி ஆங்கில நூல்கள்.

தேசாந்திரி அரங்கிற்கு வந்திருந்த இரண்டு ஆங்கிலப் பேராசிரியர்கள் சமகால ஆங்கிலப் படைப்புகள் குறித்து நிறையக் கேள்வி கேட்டார்கள். தனது பிறந்த நாளை என்னுடன் கொண்டாட வேண்டும் என்று பெங்களூரிலிருந்து வாசகர் பஷீர் வந்திருந்தார்.

எனது படைப்புகளில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்ட மாணவி ரேணுகா தனது ஆய்வேடினைக் கொண்டுவந்து கொடுத்தார்.

கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் தேசாந்திரி பாடமாக வைக்கபட்டுள்ளது. ஆகவே நிறைய மாணவர்கள் அந்த நூலில் கையெழுத்து பெற்றுக் கொண்டார்கள்.

காவல்துறை ஆணையர் சேகர். டாக்டர் சந்திரமௌலி, எழுத்தாளர் வேணுகோபால், தொழில் அதிபர் ராமலிங்கம், கவிஞர் க.வை.பழனிச்சாமி, டாக்டர் அருண், என நண்பர்கள் பலரும் தேசாந்திரி பதிப்பக அரங்கிற்கு வந்து சிறப்பித்தார்கள்.

கோவையில் உலக இலக்கியம் குறித்த பேருரை ஒன்றை நான் நிகழ்த்த வேண்டும் என நண்பர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

வாசகர் சந்திப்பும் இரண்டு நாட்கள் இரண்டு உலக இலக்கியச் சொற்பொழிவுகளும் நடத்தத் திட்டமிடுகிறேன். விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியாகும்.

சங்க இலக்கியங்களை எப்படிப் பயிலுவது, வரலாற்றை ஏன் வாசிக்க வேண்டும். இன்றைய தமிழ் சினிமாவில் திரைக்கதை எப்படி உள்ளது. செவ்விலக்கியங்களின் முக்கியத்துவம். வெளிநாட்டு கவிதைகளை வாசிப்பதில் உள்ள சிக்கல்கள், புரியாமை என ஒவ்வொரு நாளும் இலக்கிய அமர்வு போலப் பத்து பனிரெண்டு இளைஞர்கள் கூடி அரங்க வாசலில் நின்றபடி விவாதித்தோம்.

சனிக்கிழமை இரவு ஹரிபிரசாத் மற்றும் மூர்த்தியுடன் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த வாசகர்கள் செல்லா , மதுநிகாவோடு நாகர்கோவில் ஆர்யபவனுக்கு இரவு உணவுக்குச் சென்றேன். இரவு பத்து மணிக்கும் ஜேஜே என்றிருந்தது. பிரம்மாண்டமான உணவகம். மிகச் சுவையான உணவு. இரவு 11.30 வரை உரையாடினோம். மறக்க முடியாத இனிமையான சந்திப்பு.

ஞாயிறு மாலை விஷ்ணுபுரம் பதிப்பக அரங்கிற்குச் சென்று ஜெயமோகன், அருண்மொழி, அஜிதன். ஈரோடு கிருஷ்ணன், செல்வேந்திரனைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். திருச்சூர் பயணத்திலிருந்து ஜெயமோகன் அன்று தான் திரும்பியிருந்தார். பேச்சில் எப்போதுமான உற்சாகம். அன்பு. மகிழ்ச்சியான சந்திப்பு.

இரவு எட்டரை மணிக்குக் கண்காட்சி நிறைவுபெற்றதாக அறிவிப்பு வந்த போதும் தேசாந்திரி அரங்க வாசலில் நின்று உரையாடிக் கொண்டிருந்த நண்பர்கள் கலைந்து போகவில்லை. மனமகிழ்வான மூன்று நாட்கள்.

தேசாந்திரி பதிப்பகத்திற்கு ஆதரவு தந்த வாசகர்கள். நண்பர்கள், பத்திரிக்கையாளர்கள். இணைய ஊடகர்கள், புத்தக விற்பனையாளர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி,

வாசகர்களின் மனதிலிருந்து வரும் உண்மையான வார்த்தைகள் தரும் மகிழ்ச்சிக்கு இணையே இல்லை. உங்கள் அனைவரின் அன்பே என்னைத் தொடர்ந்து எழுத வைக்கிறது.

தேசாந்திரி பதிப்பக அரங்கினை சிறப்பாக நிர்வாகம் செய்த அன்புகரன், உதவி புரிந்த கபிலன், துணை நின்ற நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 29, 2024 08:33

July 25, 2024

காந்தியின் கடைசி பயணம்

மகாத்மா காந்தியின் குண்டு துளைத்த உடலை The Last Journey Of Gandhi என்ற ஆவணப்படத்தில் காணும் போது மனம் கலங்கிவிட்டது. ரத்தக்கறை படிந்த காந்தியின் உடை மற்றும் அவரது உடலுக்கு செலுத்தப்பட்ட அஞ்சலிகளை இதில் காணலாம்

அவரது கடைசி நாளின் சாட்சியாக உருவாக்கபட்ட இந்த ஆவணப்படம் மிக முக்கியமானது.

பத்து நிமிஷங்கள் கொண்ட இந்த ஆவணப்படம் யூடியூப்பில் காணக்கிடைக்கிறது

The Last Journey Of Gandhi

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 25, 2024 00:30

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.