S. Ramakrishnan's Blog, page 30

June 17, 2024

தஸ்தாயெவ்ஸ்கி நாடகம்

பியோதர் தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல் மற்றும் அவரது வாழ்க்கையை மையப்படுத்தி மூன்று நாடகங்கள் எழுதியிருக்கிறேன்.

அவை புதுவை. சென்னை, திருச்சூரில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜெயராவ் தனது தியேட்டர் லேப் மூலம் தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்றை ஒரு மணி நேர நாடகமாக நிகழ்த்தினார்

தற்போது வெளி ரங்கராஜன் மரண வீட்டின் குறிப்புகள் நாடகத்தை கூத்துப்பட்டறையில் நிகழ்த்தியுள்ளார்.

தஸ்தாயெவ்ஸ்கியின் Notes from Underground நாவலின் முக்கிய நிகழ்வுகளைக் கொண்டு இந்த நாடகத்தை எழுதினேன்.

மரணவீட்டின் குறிப்புகள் நாடகம் புதுவை பல்கலைகழக நாடகத்துறையின் சார்பில் முருகபூபதி இயக்கத்தில் முன்பு நிகழ்த்தப்பட்டது. நாடகவெளி இதழில் இதன் பிரதி வெளியானது. நாடகத்தில் இடம்பெற்றுள்ள கவிதைகளை ரமேஷ் எழுதியிருக்கிறார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 17, 2024 23:44

அப்பாவின் வருகை.

புதிய சிறுகதை. 2024

சண்டிகரிலிருந்த அவனது வீட்டுப் படியில் அப்பா உட்கார்ந்திருந்தார்.

குமார் அவரை எதிர்ப்பார்க்கவில்லை. மதுரையில் இருந்த அப்பா எதற்காகத் திடீரென வந்து நிற்கிறார் என்று புரியவும் இல்லை.

தனது பைக்கை மரத்தடியில் நிறுத்திவிட்டு புன்சிரிப்புடன் அப்பாவை நோக்கி நடந்தான்.

அவனைப் பார்த்தவுடன் அப்பா எழுந்து கொண்டபடி கையில் வைத்திருந்த காய்ந்த கொய்யா இலையை வீசி எறிந்தார். ஒடிசலான உருவம். தலை முழுவதும் நரைத்துவிட்டது. எப்போதும் அணிவது போலக் கோடு போட்ட சட்டை. அடர்பச்சை நிற பேண்ட். கையில் அதே எச்.எம்.டி.வாட்ச். அகலமான பிரேம் கொண்ட மூக்கு கண்ணாடி.

“ஊர்ல இருந்து எப்போ வந்தீங்க. வர்றதாச் சொல்லவே இல்லை.. “

“ நாலுமணிக்கு வந்தேன்.. திடீர்னு தோணிச்சி.. கிளம்பி வந்துட்டேன். “

“ இங்க வந்தவுடனே எனக்குப் போன் பண்ணியிருக்கலாம்லே“

“வீடு பூட்டியிருந்தது. உனக்குப் போன் பண்ணி தொந்தரவு பண்ண வேணாம்னு. வாசல்லயே உட்கார்ந்துட்டேன். “

“ஏன்பா. கூப்பிட்டிருந்தா உடனே வந்துருப்பேனே. பக்கத்துல தான் பேக்டரி“

“அதனாலே என்னப்பா.. நேரம் போனதே தெரியலை. ஸ்கூல் விட்டு பசங்க சைக்கிள்ல போறதை பாத்துகிட்டே இருந்துட்டேன். எதிரே இருக்கக் காலனியில நிறைய வீடு இருக்கும் போல“

“நானூறு வீடு இருக்கு “

அப்பாவின் வலதுசெருப்பில் ஒருபக்கம் தேய்ந்து போயிருப்பது அவன் கண்ணில் பட்டது.

“ உள்ளே வாங்கப்பா“ என்றபடியே தனது வீட்டுக்கதவைத் திறந்தான். அவன் கெமிக்கல் என்ஜினியராக வேலை செய்து கொண்டிருக்கும் லோர்மா கம்பெனியே அந்த வீட்டை அவன் வசிப்பதற்காகக் கொடுத்திருந்தது.

அது ஜேம்ஸ் கார்ட்லிட்ஜ் என்ற பிரிட்டிஷ் அதிகாரி வசித்த பழங்காலத்துவீடு, வெண்கலக் குமிழ்கள் கொண்ட பெரிய கதவுகள் . சிவப்பு வண்ண சுவரில் பெயர் தெரியாத ஒவியன் வரைந்த குதிரை ஒவியம். பெல்ஜியம் லாந்தர் விளக்குகள். ஆறு அறைகள். அதில் இரண்டு அறைகளில் பெரிய கட்டில்கள் இருந்தன. சமையற்கட்டிற்குள் ஒரு குடும்பமே வசிக்கலாம். அவ்வளவு பெரியது. குளியல் தொட்டி கொண்ட குளியல் அறை. வீட்டைச் சுற்றி மலர் தோட்டம்.

அந்த வீட்டின் ஒரேயொரு அறையை மட்டும் தான் குமார் பயன்படுத்தினான். அந்த அறையில் யானை உருவம் செதுக்கப்பட்ட மரக்கட்டில். மடக்கு கைப்பிடிள்ள நாற்காலி. ஆறுஅடுக்குக் கொண்ட அலமாரி. பெரிய ஜன்னல்கள். அந்த வீட்டிற்குள் வந்தவுடன் சில நூற்றாண்டுகள் பின்னால் போய்விட்டது போலவே உணருவான்.

“இவ்வளவு பெரிய வீட்டில் ஏன் தனியா இருக்கிறாய். கல்யாணம் செய்து கொள்ள வேண்டியது தானே“ என்று அவனது உயரதிகாரி பிஸ்வாஸ் கேட்பது வழக்கம்.

“வீட்டில் நிறைய அறைகள் இருக்கிறது என்பதற்காக யாராவது கல்யாணம் செய்து கொள்வார்களா என்ன“.

உண்மையில் அவனுக்குக் கல்யாண ஆசையே வரவில்லை. என்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் நாட்களில் அவனோடு படித்த வசுந்தராவை ரகசியமாகக் காதலித்தான். அவளிடம் கடைசிவரை சொல்லவேயில்லை. மேற்படிப்பிற்காக அவள் அமெரிக்கா போய்விட்டாள். அங்கேயே ஒருவனைத் திருமணமும் செய்து கொண்டுவிட்டாள். அதைக் காதல் தோல்வி என்று சொல்ல முடியாது. நிராசை என்று வேண்டுமானால் சொல்லலாம்.

அதன்பிறகு எப்போதாவது அம்மா அவனது திருமணத்தைப் பற்றிக் கேட்பாள். அவன் “கொஞ்சம் டைம் குடும்மா. சொல்றேன்“ என்பதை நிரந்தரப் பதிலாக வைத்திருந்தான்

இன்றைக்கு அப்பாவை வீட்டுவாசலில் பார்த்தவுடன் ஒருவேளை தனது திருமணம் பற்றிப் பேசத்தான் வந்திருக்கிறாரோ என்றும் அவனுக்குத் தோன்றியது. யாராவது உறவினர் வீட்டுப் பெண்ணைப் பார்த்துவைத்திருப்பார்கள். நேரில் பேசி முடிவு செய்ய வந்திருக்ககூடும் என நினைத்துக் கொண்டான்.

பிரம்மாண்டமாக இருந்த கதவுகளைத் தள்ளித்திறந்து அப்பா ஒவ்வொரு அறையாகப் பார்த்துக் கொண்டிருந்தார்

“ரொம்பப் பெரிய பங்களாவா இருக்கு“..

“கம்பெனியோடது. “ என்றான் குமார்

அவனது பதவி. சம்பளம் பற்றி அப்பா கேட்பார் என்று குமார் எதிர்பார்த்தான். ஆனால் அப்பா எதையும் கேட்டுக் கொள்ளவில்லை.

இந்த இரண்டரை வருஷத்தில் ஊரிலிருந்து யாரும் அவனைத் தேடி வரவில்லை. செல்போன் வந்துவிட்டபிறகு யாரும் கடிதம் எழுதுவதுமில்லை. அம்மா தினமும் ஒருமுறை போன் செய்வாள். வருஷத்திற்கு ஒன்றிரண்டு முறை அவன் ஊருக்குப் போய்வருவான். மற்றபடி அவன் தன்னைச் சண்டிகர்வாசியாக நினைக்கத் துவங்கி நீண்ட நாட்களாகிவிட்டது

இன்றைக்கு அப்பாவின் எதிர்பாராத வருகை அவனை மகிழ்ச்சிப்படுத்தியது.

எதற்காக வந்திருக்கிறார் என்ற காரணத்தை அவரே சொல்லுவார் என்று காத்திருந்தான். ஆனால் அப்பா அதைப் பற்றிப் பேசவேயில்லை.

ஹாலில் இருந்த மரநாற்காலியில் அப்பா அமர்ந்து கொண்டபடியே

“வீட்டில டிவி இல்லையாப்பா“ என்று கேட்டார்.

“லேப்டாப் இருக்கிறதாலே டிவி தேவையில்லைப்பா“ என்றான்.

“பனிக்காலத்துல ரொம்பக் குளிரும்லே“ என்று கேட்டார்.

ஆமாம் என்று தலையாட்டினான்.

அப்பா தனது பையிலிருந்து கட்டம்போட்ட நீலநிற லுங்கி ஒன்றை வெளியே எடுத்து அணிந்து கொண்டார். அரைக்கை பனியனும் லுங்கியுமாக இருக்கும் அவரது தோற்றம் ஊரில் இருப்பது போன்ற நெருக்கத்தை ஏற்படுத்தியது. சட்டென மதுரையில் தனது வீட்டில் இருப்பது போலவே குமார் உணர்ந்தான்.

“டீ போடவா“ என்று கேட்டான் குமார்

அப்பா தலையசைத்தார். பிரிட்ஜில் இருந்த பால்பாக்கெட்டை எடுத்துக் கொண்டு சமையல் அறைக்குள் அவன் போவதை அப்பா பார்த்துக் கொண்டேயிருந்தார். இஞ்சி டீ தயார் செய்தான். அப்பா அதை ருசித்துக் குடித்தார்.

ஒருவேளை அம்மாவிற்கு ஏதாவது உடல்நலக்குறைவா. அதைப்பற்றிப் பேச தான் வந்திருக்கிறாரா, வீட்டில் ஏதாவது பணத்தேவையா, எதற்காக வந்திருக்கக் கூடும் என்று யோசித்தபடியே டீயைக் குடித்தான்

“நீ சண்டிகர் வந்து இரண்டு வருஷம் இருக்கும்லே“ என்று கேட்டார் அப்பா

“இரண்டரை வருஷம் ஆகுதுப்பா.. வேலையில ப்ரோமோஷன் வந்துருச்சி.. இங்கேயே செட்டில் ஆகிற வேண்டியது தான்“

“நல்ல ஊரா தான் இருக்கு.. எங்க பார்த்தாலும் மரங்கள். அமைதியான ஊர். அட்ரஸை சொன்னதும் ஆட்டோக்காரன் கரெக்டா வீட்டுவாசல்ல கொண்டு வந்துவிட்டுட்டான்.“என்றபடியே வெளிவாசலை ஒட்டி பளுப்பு நிற நாய் வந்து நிற்பதை பார்த்துக் கொண்டிருந்தார்.

“நைட் என்ன சாப்பிடுறீங்க.. சப்பாத்தி பண்ணவா“ என்று கேட்டான் குமார்

“நீயா சமைக்கிறே“ என்று வியப்போடு கேட்டார் அப்பா

“நைட் மட்டும் சமைச்சிகிடுறேன். மற்ற ரெண்டு வேளையும் ஆபீஸ் கேண்டியன்“.

“அம்மாவை வேணும்னா.. இங்கே அனுப்பி வைக்கவா“ என்று கேட்டார் அப்பா

“அப்போ நீங்க சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவீங்க. நானே சமாளிச்சிகிடுவேன். “

“காய்கறி எல்லாம் கிடைக்குதா“

“பக்கத்துல மார்க்கெட் இருக்கு. எல்லாக் காய்கறிகளும் கிடைக்கும். அவசரத்துக்குப் போன்ல ஆர்டர் பண்ணினா வீட்டுக்கே கொண்டுவந்து தருவாங்க “

அப்பா சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடக் கூடியவர். அம்மா அசைவம் சாப்பிடுவார். அம்மாவிற்காக மீனும் கோழியும் அப்பா வாங்கி வருவதுண்டு. சமைத்து தனியே சாப்பிட பிடிக்காமல் குமாரையும் அசைவம் சாப்பிட பழக்கிவிட்டாள் அம்மா.

“நான் போயி காய்கறி வாங்கிட்டு வரட்டா“ என்று கேட்டார் அப்பா

“நீங்க இருங்க. நான் போயிட்டு வர்றேன்“ என்றபடியே சமையல் அறைக்குள் போய்த் துணிப்பை ஒன்றை எடுத்துக் கொண்டான்.

அப்பாவிற்காகச் சமைக்கப் போகிறோம் என்பது விநோதமான உணர்வாக இருந்தது. இத்தனை வருஷங்களில் ஒரு முறை கூட அவன் அப்பாவிற்காகச் சமைத்ததில்லை. அம்மா திருப்பதிக்கு போன நாளில் கூட அவர்கள் ஹோட்டலில் தான் வாங்கிச் சாப்பிட்டிருக்கிறார்கள். அப்பாவிற்குச் சமைக்கத் தெரியாது.

இன்று அப்பாவிற்காகச் சமைப்பது என்பது அவனை மகிழ்ச்சிப்படுத்தியது. ஏதாவது இனிப்புச் செய்து கொடுக்கலாமே என்றும் மனதிற்குள் தோன்றியது.

பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்த போது அப்பா தானும் உடன் வருவதாக நின்றிருந்தார். பைக்கில் அவரையும் அழைத்துக் கொண்டு காய்கறி மார்க்கெட் நோக்கி செல்ல ஆரம்பித்தான். அவனது மனது அப்பாவிற்காகச் சமைத்தலைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது.

சமையல் அறையில் அம்மா முந்திரிபருப்பு. ஏலக்காய் டப்பாவை எடுக்கிறார் என்றால் வந்திருக்கும் விருந்தினர் முக்கியமானவர் என்று அர்த்தம். ரவா டப்பாவை எடுத்தால் அவசர விருந்தினர். காலையில் போய்விடுவார் என்று புரிந்து கொள்ள வேண்டும். இரண்டு வகைப் பாயாசம் செய்தால் அப்பாவின் பிறந்தநாள் என்று அர்த்தம். கொத்தவரங்காயும் துவையலும் என்றால் பிடிக்காதவர் வந்திருக்கிறார் என்று பொருள். இப்படி அம்மா தனது சமையலின் வழியே மனிதர்களை மதிப்பிட்டிருந்தாள்.விருப்பமானவர்களுக்கு ருசியான உணவை சமைத்து தருவதன் வழியே மட்டுமே தனது அன்பினை காட்ட முடியும் என அம்மா நம்பினாள்.

அம்மா எது சமைப்பதாக இருந்தாலும் அப்பாவிற்குப் பிடிக்குமா, பிடிக்காதா என்று யோசித்துவிட்டு தான் செய்வாள். அவளுக்காக அப்பா முட்டையும் மீனும் வாங்கித் தருவதை குற்றவுணர்வோடு தான் ஏற்றுக் கொள்வாள். அது ஏன் என்று குமாருக்குப் புரியாது.

இன்றைக்கு அப்பாவிற்குச் சமைக்கப்போகிறோம் என்றால் அம்மாவாக மாறிவிட்டோம் என்று குமார் நினைத்துக் கொண்டான். அம்மாவைப் போலவே தன்னாலும் அப்பாவைக் கவனித்துக் கொள்ள முடியும் என்று காட்ட வேண்டும். அவல் பாயாசம் செய்யலாம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

தந்தையிடம் மகள் கொள்ளும் நெருக்கம் போலப் பையன்களால் ஒரு போதும் நெருக்கமாக இருக்க முடியாது. ஆனால் சமைப்பதன் வழியே அந்த நெருக்கத்தைப் பையனாலும் உருவாக்க முடியும். உணவு என்பது ஒரு மொழி. உலகம் முழுவதும் புரிந்து கொள்ளப்படும் மொழி.

சிறுவனைப் போலச் சாலையில் இருந்த துணிக்கடைகளை அப்பா வேடிக்கை பார்த்தபடியே வந்தார். சாம்ராஜ் மார்க்கெட் இருந்த வீதியில் பைக் நிறுத்த முடியாது என்பதால் ஏடிஎம் ஒன்றின் அருகில் பைக்கை நிறுத்திவிட்டு அவர்கள் நடந்தார்கள்.

••

அவன் கோவையில் என்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்த நாட்களில் மாதம் ஒருமுறை அப்பா அவனைக் காணுவதற்காக ஹாஸ்டலுக்கு வருவார். அவனை நகருக்குள் அழைத்துக் கொண்டு போய்ச் சோப். டூத்பேஸ்ட், தின்பண்டங்கள் வாங்கித் தருவார். பின்பு ஜூனியர் குப்பண்ணா ஹோட்டலுக்கு அழைத்துப் போய்ச் சிக்கன் பிரியாணி, தந்தூரி சிக்கன் ஐஸ்கிரீம் வாங்கித் தருவார்.

“இதற்காக ஏன் ஊரிலிருந்து வர வேண்டும்“ என்று மறுத்து சொல்லி யிருக்கிறான்

“அது என் சந்தோஷத்துக்காக“ என்பார் அப்பா.

அப்பா அவனைத் திட்டியதோ, அடித்ததோ கிடையாது. ஞாயிற்றுகிழமைகளில் அவனை அழைத்துக் கொண்டு நூலகத்திற்குப் போவார். ஊரில் ஏதாவது இலக்கியக் கூட்டங்கள் நடந்தால் அழைத்துக் கொண்டு போய்க் கேட்க வைப்பார். வாரம் சனிக்கிழமை இரவு தவறாமல் அன்சாரி கடைக்கு அழைத்துப் போய்ப் பரோட்டா வாங்கித் தருவார். அவன் பேஸ்கட் பால் விளையாடுவதில் ஆர்வம் கொண்டிருந்த நாட்களில் அவர் நாலரை மணிக்கே எழுந்து அவனை எழுப்பிவிடுவார். விளையாடி முடித்து அவன் வீடு வருவதற்குள் மைதானத்திற்கே பிளாஸ்கில் ஹார்லிக்ஸ் கொண்டுவந்து நின்றிருப்பார்.

எட்டாம் வகுப்பு படிக்கும் போது அவனுக்காக ஒரு பர்ஸ் வாங்கிக் கொடுத்தார். அதில் நூறு ரூபாய் ஒன்றும் ஐந்து பத்து ரூபாய்களும் இருந்தன. அதன் பிறகான வருஷங்களில் அவன் அறியாமல் அடிக்கடி பர்ஸில் அப்பா பணம் வைத்து விடுவது உண்டு.

அம்மா தான் கணக்கு கேட்பாள். வீணாகச் செலவு செய்யாதே என்று கண்டிப்பாள். அம்மா சினிமா பார்க்க விரும்பாதவள். ஆகவே அவனும் அப்பாவும் தான் சினிமாவிற்குப் போவார்கள். படம் ஒடிக் கொண்டிருக்கும் போது அப்பா அவன் முகத்தைப் பார்த்தபடி இருப்பதை உணர்ந்திருக்கிறான். மழை நாளில் ஒருமுறை கூட அவன் நனைந்ததில்லை. ஸ்கூல் கேட்டில் அப்பா குடையோடு நின்றிருப்பார். அவனது நோட்டிற்குக் காக்கி அட்டை போட்டு தருவது. அறிவியல் நோட்டில் படங்கள் வரைந்து தருவது எல்லாமும் அப்பாவின் வேலை.

என்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு ஆறு மாத காலம் சென்னையில் வேலை செய்தான். பின்பு சண்டிகரில் வேலை கிடைத்துப் புறப்படத் தயார் ஆகும் நாளில் அம்மா சொன்னாள்

“உன்னைவிட்டுட்டு உங்கப்பா எப்படி இருக்கப்போறாருனு தெரியலை“

அது நிஜம். ஆனால் அப்பா தனது தவிப்பைக் காட்டிக் கொள்ளாமல் “நினைச்சா. பிளைட்ல வந்துறப்போறான். இல்லாட்டி நான் சண்டிகர் போயிடப் போறேன்“ என்று சொன்னார்.

அவன் சண்டிகர் போன நாளிலிருந்து அப்பா அம்மா இருவரையும் அங்கே வரும்படி அழைத்துக் கொண்டிருந்தான். ஆனால் அவர்கள் வரவில்லை. பொங்கல். ஊர் திருவிழா என்று அவன் இரண்டு மூன்று முறை ஊருக்கு வந்து போனான். அவன் சண்டிகர் வந்தபிறகு அப்பாவை, ஊரை மறந்து போனான் என்பதே உண்மை.

கெமிக்கல் பேக்டரியில் இருந்து வேலை முடிந்து வீடு திரும்பிய இரவுகளில் அம்மாவை நினைத்துக் கொள்வான். விடுமுறை நாளில் அம்மாவிற்குப் போன் பண்ணி நீண்ட நேரம் பேசுவான். அப்போதும் ஒன்றிரண்டு வார்த்தைகளுக்கு மேல் அப்பாவிடம் பேச எதுவுமிருக்காது. படித்து முடித்த கடிதம் ஒன்றைப் போல அப்பா இருப்பதாகத் தோன்றும்.

இன்று அப்பா திடீரெனச் சண்டிகர் வந்து நின்றது அவனுக்குப் பிடித்திருந்தது. பஜாரில் எரிந்து கொண்டிருந்த விளக்குகள் அவனது மகிழ்ச்சியின் வண்ணங்களைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தன.

••

காய்கறி மார்க்கெட்டில் அப்பா தனக்குப் பிடித்த வெண்டைக்காய்களை வாங்கினார்.

“சண்டிகர் வெண்டைக்காய் நம்ம ஊர் காய் மாதிரியே இருக்கு“ என்று வியந்தார்.

பெரிய வெங்காயம். காலிஃபிளவர், கேரட், உருளைகிழங்கு, பச்சைமிளகாய். தேங்காய். எனத் தேவையானவற்றை அவன் வாங்கிக் கொண்டான். அப்பா ஒரு கேரட்டை கடித்துத் தின்றபடியே நடந்து வந்தது அவனுக்கு மகிழ்ச்சி அளித்தது. சாலையைக் கடந்து எதிர்வரிசையில் இருந்த பலசரக்குக் கடையில் கோதுமை மாவு. சிவப்பு அவல், நெய், முந்திரி, ஏலக்காய் என வாங்கினான்.

அப்பா பணம் கொடுப்பதற்காகத் தனது பர்ஸை எடுத்தார். அதற்குள் முந்திக் கொண்டு அவன் பணம் கொடுத்தான். அதைப் பார்த்து அப்பா சிரித்துக் கொண்டார்.

திரும்பி வரும் போது வேறு பாதை வழியாகப் பைக்கை செலுத்தினான். அப்பா ஊரை ரசித்தபடியே வந்தார். வழியில் ஒரு கடையில் ஆனந்தவிகடன் கிடைக்கும் என்பதால் பைக்கை நிறுத்தி அப்பா படிப்பதற்காக விகடன் வாங்கினான்.

“நம்ம ஊர்காரங்க கடையா“ என்று அப்பா கேட்டார்

“ஆமாம்பா. திண்டுக்கல்காரங்க, இந்த ஏரியாவுல நிறைய தமிழ் குடும்பம் இருக்கு. “ என்றான்.

வீட்டிற்குள் வந்தவுடன் சப்பாத்திக்கு மாவு பிசைந்து வைத்தான்

கடாயில் நெய் ஊற்றி முந்திரி வறுத்தான். பின்பு அவலை வறுத்து தனியே வைத்தான். தண்ணீரை சுட வைத்துவிட்டு மிக்ஸியில் முந்திரி பருப்பினை பொடி பண்ணினான். சுட வைத்த தண்ணீரில் அவல் சேர்த்து கிளறி .மூன்று நிமிடம் கழித்துப் பால், சேர்த்து நன்கு கொதிக்க விட்டான். கடைசியாக முந்திரி, ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கும் போது வாசனை கமகமவென வந்தது. ஒரு ஸ்பூனில் பாயாசத்தை எடுத்து ருசி பார்த்தான். இனிப்பு குறைவாகத் தோன்றவே கொஞ்சம் சீனி சேர்த்துக் கொண்டான். பாயாசம் தயரானது. இன்னொரு அடுப்பில் கேரட். காலிபிளவர் மசாலா செய்ய ஆரம்பித்தான்.

அவன் சமைத்து முடிக்கும்வரை அப்பா வார இதழ் ஒன்றை படித்துக் கொண்டிருந்தார். அவனும் அப்பாவும் சாப்பிட உட்கார்ந்தபோது பாயாசத்தைக் கண்டதும் அப்பாவின் முகம் மலர்ந்தது.

“பாயாசம் எல்லாம் எதுக்குப்பா“ என்றார்

“திடீர் பாயாசம்“ என்று சொல்லிச் சிரித்தான் குமார்

“ஆபீஸ் விட்டுவந்த உன்னை ரெஸ்ட் எடுக்கவிடாம நிறைய வேலை கொடுத்துட்டேன்“ என்றார் அப்பா

“அதெல்லாமில்லைப்பா“ என்றபடியே பீங்கான் கிண்ணத்தில் பாயாசம் கொடுத்தான். அப்பாவிற்குப் பாயாசம் பிடித்திருப்பது அவரது முகத்திலே தெரிந்தது. மெலிதான சப்பாத்தி ஒன்றை அவரது தட்டில் போட்டான். கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து சாப்பிட்டபடியே “டேஸ்டா இருக்கு.. உங்கம்மாட்ட சொன்னா சந்தோஷப்படுவா“ என்றார்.

அப்பாவிற்காக அவன் சமைத்து தருவதை அம்மா பார்க்க வேண்டும் என்றே அவனும் விரும்பினான். அப்பா பச்சை வெங்காயம் சாப்பிடுவதில் விருப்பம் கொண்டவர் என்பதால் நிறைய ஆனியன் சிலைஸ் வெட்டி வைத்திருந்தான். அதை இனிப்பு சாப்பிடுவது போல ஆசையாக அப்பா கடித்துத் தின்றார்

“நம்ம ஊருக்கு வர்றது ஆந்திரா வெங்காயம். இது காரம் கம்மியா ருசியா இருக்கு“ என்றார்.

சாப்பிட்டு முடிந்த பிறகாவது அப்பா எதற்காக வந்திருக்கிறார் என்பதைச் சொல்லுவார் எனக் காத்திருந்தான். அவர் அதைப்பற்றிப் பேசவேயில்லை. ரயில் பயணத்தில் நடந்த நிகழ்வுகளைச் சொல்லிக் கொண்டிருந்தார்

“ஏதாவது முக்கியமான விஷயமாப்பா“ என்று நேரடியாகவே கேட்டான்.

“சும்மாதான்பா வந்தேன். வயசாகிருச்சில்லே. திடீர்னு மனசுல ஏதோ தோணுச்சி. கிளம்பி வந்துட்டேன். “

மனதிற்குள் எதையோ நினைக்கிறார். ஆனால் சொல்ல விரும்பவில்லை என்று புரிந்தது. வளர்ந்த பிள்ளைகளிடம் வெளிப்படையாக பேசுவதற்கு எந்த தந்தையும் விரும்புவதில்லை. அவர்களாக புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது எப்படி சாத்தியம். அம்மாவைப் போல நேரடியாக கேட்கவோ, கோபத்தை காட்டவோ வேண்டியது தானே. ஆனால் அப்பாவால் அப்படி நடந்து கொள்ள முடியாது.

“அம்மாவையும் கூட்டிட்டு வந்துருக்கலாம்லே“

“வந்திருந்தா.. உன் சாப்பாடு கிடைச்சிருக்காதுல்லே“ என்று சொல்லி புன்னகைத்தார். அந்தத் தருணத்தில் அப்பா யாரோ போலத் தெரிந்தார். அம்மா வந்திருந்தால் அவனைச் சமையற்கட்டின் பக்கம் விட்டிருக்கமாட்டாள்.

“உங்க ஹெல்த் எப்படிப்பா இருக்கு“ என்று கேட்டான்

“ரெகுலரா வாக்கிங் போறேன். பிரஷர் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு மாத்திரை போட்டுகிடுறேன்.. “ என்று சொன்னார் அப்பா.

“நீங்க ரெண்டு பேரும் இங்கேயே என்கூடவே வந்து இருக்கலாம்லே“

“அது சரிப்படாதுப்பா.. இது உன் ஊரு.. உன்வீடு. என் ஊரைவிட்டு என்னாலே வர முடியாது. ஒரே உடம்புன்னாலும் கை ரெண்டுக்கும் இடைவெளி இருக்குல்லே.. “ என்றார்

அப்பா படுப்பதற்காக ஒரு அறையில் இருந்த கட்டிலை தயார் செய்தான். அப்பா உறங்கும் போது வெறும் மேலோடு தான் படுத்துக் கொள்வார். இங்கே குளிராக இருக்கும் என்பதால் அப்படிப் படுக்கக் கூடாது, கம்பளியை போர்த்திக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னான்.

“நீ காலைல ஆபீஸ்க்கு எத்தனை மணிக்குப் போகணும்“ என்று கேட்டார் அப்பா

“ஆறரை மணிக்கு. நீங்க தூங்குங்க. நான் ஆபீஸ் போயிட்டு டிபன் கொடுத்து அனுப்புறேன். சாப்பிடுங்க. விஜயகுமார்னு எங்க ஆபீஸ்ல தஞ்சாவூர் பையன் வேலை செய்றான். அவனை அனுப்பி வைக்குறேன். அவன் ஊரை சுற்றிக்காட்டுவான். நான் சாயங்காலம் வந்துருறேன்“.

“அதெல்லாம் எதுக்குப்பா. நானா ஊரை சுற்றிபார்த்துகிடுவேன். யாரையும் அனுப்ப வேண்டாம். வீட்டு சாவியை எங்கே வச்சிட்டு போறதுனு மட்டும் சொல்லு“

“பூந்தொட்டிக்குள்ளே போட்டுட்டு போயிடுங்க“.

“ஊர்ல இருந்து உனக்காக ஒண்ணும் வாங்காம வந்துட்டேன். “ என்று வருத்தமான குரலில் சொன்னார் அப்பா

“நான் என்ன சின்னபையனா“ என்று கேட்டான் குமார்

அப்பா பதில் சொல்லவில்லை. ஆனால் அவர் தலையசைப்பில் சிறுவன் தான் என்பது போலிருந்தது.

••

அலாரம் வைத்து நாலு மணிக்கு குமார் எழுந்து கொண்டான். டீ தயார் செய்து குடித்தான். வெந்நீரில் குளித்துவிட்டு உடை மாற்றிக் கொண்டான். அப்பா படுத்திருந்த அறைக்கதவை லேசாகத் தள்ளி திறந்த போது கம்பளிக்குள் சுருண்டு அப்பா உறங்கிக் கொண்டிருந்தார். அப்பா செய்வது போலவே அவரது பர்ஸில் கொஞ்சம் பணத்தைச் சொருகி வைத்தான். பின்பு கதவை மூடிவிட்டு அவன் பைக்கை தள்ளிக் கொண்டு சாலைக்குப் போய் ஸ்டார்ட் செய்தான். பனிப்புகைக்குள் அவனது பைக் சென்றது

••

அன்று மாலை அவன் வீடு திரும்பி வரும் போது சிந்தி ஸ்வீட்ஸில் ஜிலேபி கராச்சி அல்வா வாங்கி வந்தான். அப்பா தனியாக ஊர் சுற்றிவிட்டுத் திரும்பியிருந்தார்.

“ரொம்ப அழகான ஊருப்பா. ராக் கார்டன் பார்த்தேன். இஸ்கான் மந்திர். பாலிகா பஜார், படேல் மார்க்கெட் எல்லாம் பார்த்தேன். சீக்கியர்கள் எல்லாம் அன்பா நடந்துகிடுறாங்க. “

இரண்டு ஆண்டுகளில் அவனே சண்டிகரின் ஒன்றிரண்டு இடங்களுக்குத் தான் போய்ப் பார்த்திருக்கிறான். மற்றபடி சினிமா பார்க்க மால்களுக்குப் போனதுண்டு. ஒருமுறை மொகல் கார்டன், பாலிகா பஜார் போயிருக்கிறான். ஆபீஸ். வீடு. ரயில் நிலையம் நண்பர்களின் வீடு என அவனது உலகம் சிறியதே.

“ நேத்து நைட் நல்லா தூங்கிட்டேன். மீனாட்சி அம்மன் கோவில் பிரகாரத்துல உன்னைக் கையைபிடிச்சி கூட்டிட்டுப் போறது மாதிரி ஒரு கனா. ஒவ்வொரு தூணா தொட்டுகிட்டே நீ ஒடுறே. பிரகாரத்துல ஒரு ஆள் கிடையாது.. உன் பின்னாடியே நான் ஒடி வந்தேன்… “

நேரில் நடந்த ஒன்றை விவரிப்பது போல ஆசையாக அப்பா விவரித்துக் கொண்டிருந்தார். அதைக்கேட்கும் அவனுக்குத் தான் சிறுவனாகிவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. அந்த நேரம் மனதில் தந்தை என்பதே நினைவுகளால் வாழும் மனிதன் தானோ என்று தோன்றியது.

அன்றிரவு அப்பாவும் அவனும் சாகர்ரத்னா என்ற பஞ்சாபி உணவகம் ஒன்றுக்கு சாப்பிடப் போனார்கள்.

“நீ நான்வெஜ் சாப்பிடுப்பா“ என்றார் அப்பா

“இது ரொம்பப் பாப்புலரான வெஜிடேரியன் ஹோட்டல். டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கும். “

அப்பா தன்முன்னே வைக்கபட்ட விதவிதமான உணவுவகைகளைக் கூச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்

“இவ்வளவு எதுக்குப்பா“ என்றார்.

“ஒவ்வொண்ணா டேஸ்ட் பண்ணி பாருங்க“ என்றான் குமார். தயக்கத்துடன் ஒவ்வொன்றிலும் கொஞ்சம் எடுத்து சாப்பிட ஆரம்பித்தார்

“நாம தான் எல்லாத்தையும் காலி பண்ணனும்“ என்றான் குமார். அதைக் கேட்டு அப்பா சிரித்தார்.

சிறுவயதில் அன்சாரி கடையில் அப்பா இப்படி அவனிடம் சொன்னது நினைவில் வந்து போனது. அதே சொற்கள்.

சாப்பிடும் போது குமார் அப்பாவிடம் கேட்டான்

“நீங்க ஏன்பா என்னைக் கோவிச்சிகிட்டதே கிடையாது“

“உன்னை எதுக்குப்பா கோவிச்சிகிடணும்“ என்று அப்பா பதிலுக்குக் கேட்டார்

“நான் நிறையத் தப்புப் பண்ணியிருக்கேன். பொய் சொல்லியிருக்கேன். “

“அதான் உனக்கே தெரியுதுல்லே. பிறகு நான் ஏன் கோவிச்சிகிடணும்“

“நீங்க என்னைப் பார்க்க சும்மா வந்தேனு சொன்னதை என்னாலே நம்ப முடியலை. ஏன்கிட்ட ஏதாவது சொல்லணுப்பா.. “ என நேரடியாக அவர் வந்த காரணத்தைக் கேட்டான்

“நான் சொல்றதுக்கு என்னப்பா இருக்கு. நீ என்ன சின்னப்பையனா.. “

“என் கல்யாணத்தைப் பற்றி அம்மா கேட்டுகிட்டே இருக்காங்க. “

“அவ அப்படித்தான்.. உனக்கு நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி பாக்கணும்னு ஆசை. ஆனா கல்யாணம் எல்லாம் உன் விருப்பபடி தான் நடக்கணும்.. உனக்கு எப்போ மனசு வருதோ. அப்போ பண்ணிக்கோ. “.

“நான் ஒரு பஞ்சாபி பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிடப் போறேனு அம்மா கிட்ட பொய் சொன்னேன். அம்மா கோவிச்சிகிட்டாங்க“

“அப்படி பண்ணிகிட்டாலும் தப்பு இல்லைப்பா.. உன் ஆசை தான் எங்களுக்கு முக்கியம்“.

“நீங்க என்னை ரொம்பச் சுதந்திரமா வளர்த்துட்டீங்க. அதனாலே உங்களை விட்டு நான் ரொம்ப விலகியிருக்கேன்பா. நிறைய விஷயங்களை உங்ககிட்ட பேச முடியலை“

“நீ சொல்லித் தான் தெரியணும்னு இல்லைப்பா. எனக்கே உன் மனசு புரியும்“ என்றார் அப்பா.

பேச்சிற்காகக் கூடவா ஆதங்கப்படவோ, சண்டையிடவோ கூடாது எதற்காக அப்பா இவ்வளவு நிதானமாக இருக்கிறார். நடந்து கொள்கிறார் எனக் குமாருக்கு எரிச்சலாக வந்தது

“உங்களுக்கு நான் ஏதாவது செய்யணும்னு நினைக்கிறேன். ஆனா என்ன செய்றதுனு தெரியலை“ என்றான் குமார்

“ இந்த மனசோட எப்பவும் இருந்தா போதும்பா.. எங்களுக்கு ஒண்ணும் செய்ய வேணாம். எனக்குத் தான் பென்சன் வருதே.. எங்களுக்கு என்ன செலவு சொல்லு“ என்றார்

“அம்மாவை அழைச்சிட்டு பத்ரிநாத், கேதாரிநாத் டூர் போயிட்டு வர்றீங்கன்னா சொல்லுங்க. ஏற்பாடு பண்ணுறேன்“

“அவளுக்கு முட்டிவலி ஜாஸ்தி ஆகிருச்சி. அவளைக் கூட்டிட்டு எங்க போறது. நாங்க இந்தியாவைச் சுற்றி பார்த்து என்ன ஆகப்போகுது.. எங்களுக்குப் பக்கத்துல இருக்கத் திருச்செந்தூர் கோவிலுக்குப் போறதுக்கே முடியலை“

“உங்களுக்கு எதுலயும் ஆசை கிடையாதாப்பா“

“ஒரே ஆசை தான் இருந்துச்சி நீ படிச்சி நல்லா வரணும்னு. அதான் நிறைவேறிருச்சில்லே“

“அம்மாவுக்கு ஆயிரம் ஆசை இருக்குப்பா.. பேரன் பேத்தி கல்யாணம் வரைக்கும் கனவு கண்டுகிட்டு இருக்காங்க. “

“அவ பாவம் “ என்றார் அப்பா

“மதுரைல அம்மாவும் நீங்களுமா தனியா இருக்கிறது கஷ்டமா இருக்கா“

“இத்தனை வருஷமா அப்படித் தானே இருந்தோம். இதுல என்ன கஷ்டம். உனக்குத் தான் தனியா இருக்கிறது கஷ்டம் “

“நான் சமாளிச்சிகிடுறேன். “

“அது எனக்கே தெரியும். “ என்று சொன்னார்.

பேச்சை எப்படித் தொடருவது எனத் தெரியாமல் அவரது தட்டில் இன்னொரு ரொட்டியை எடுத்து வைத்தான்

“எனக்கு போதும்பா. பிறகு நைட் தூக்கம் வராம போயிடும்“

“நாளைக்கு எங்க கெமிக்கல் பேக்டரியை பாக்க கூட்டிட்டு போறேன்“ என்றான் குமார்

“நானே கேட்கணும் நினைச்சிட்டு இருந்தேன்“ என்றார் அப்பா

கைகழுவுவதற்காகச் சென்ற போது அம்மாவிடம் பேச வேண்டும் போலக் குமாருக்கு தோன்றியது. வாஷ்பேஷின் அருகே நின்றபடியே அம்மாவிற்குப் போன் செய்தான். ஹோட்டலில் சாப்பிட்ட விதவிதமான உணவுவகைகளைப் பற்றி அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான்

அம்மா சிரித்தபடியே “உங்கப்பா சந்தோஷமா இருந்தா சரிப்பா“ என்றான்.

“நீயும் வந்துருக்கலாம்லே“ என்றான் குமார்

“அதுக்கென்ன உன் கல்யாணத்துக்கு வர்றேன்“ என்றாள் அம்மா. அதைக்கேட்டு குமார் சிரித்தான். இது போன்ற பெற்றோர்கள் தனக்குக் கிடைத்திருக்கிறார். இந்த உலகில் தான் ஒரு அதிர்ஷ்டசாலி என உணர்ந்தான் குமார்

போனை வைக்கும் முன்பாக அம்மா சொன்னாள்

“கொஞ்ச நாளாவே உங்கப்பா எதையோ நினைச்சி கவலைப்பட்டுகிட்டே இருக்காரு.. நான் கேட்டா சொல்ல மாட்டேங்குறார். “

“அப்படி எல்லாம் இல்லம்மா. சந்தோஷமா தான் இருக்கார்“

“அவர் மனசில இருக்கிற எதையும் வெளியே சொல்ல மாட்டார்றா.. நீ தான் என்னனு கேளு“

“ஒண்ணுக்குப் பத்து தடவை கேட்டுட்டேன். நல்லா தான் இருக்கேனு சொல்றார்“

“உன்னை பாத்தா அவருக்கு எல்லாம் சரியாகிரும். “.. என்று சொல்லி முடிக்கும் போது அம்மா அவளை அறியாமல் உடைந்து அழுதாள். அம்மாவை எப்படிச் சமாதானம் செய்வது எனத் தெரியவில்லை. அம்மா போனை வைத்துவிட்டாள். மறுபடியும் அவன் கையைக் கழுவினான். தண்ணீர் கையில் படும்போது ஏற்படும் குளிர்ச்சி மனதிற்கு ஆறுதல் அளிப்பதாக இருந்தது.

அப்பா எதை நினைத்து கவலைப்படுகிறார். ஏன் அதைச் சொல்ல மறுக்கிறார் என யோசித்தபடியே அப்பா அமர்ந்திருந்த இடத்தை நோக்கி சென்றான். அவன் வருவதற்குள் சாப்பாட்டிற்கான பணத்தை அப்பா கொடுத்திருந்தார்

“ஏன்பா நான் தருவேன்லே“ என்றான்

“அதனாலே என்னப்பா“ என்று அப்பா சிரித்தார். வெளியே வந்தபோது அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு நடக்க வேண்டும் போலிருந்தது. ஆனால் அப்படி நடக்கக் கூச்சமாகவும் இருந்தது. அப்பாவும் அவனும் பைக்கில் வீடு திரும்பி வரும்வரை பேசிக் கொள்ளவில்லை.

வீட்டிற்கு வந்தவுடன் அப்பா தனது படுக்கைக்குச் சென்றுவிட்டார். குமார் அலுவலக வேலையை லேப்டாப்பில் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அறைக்கதவை தள்ளும் சப்தம் கேட்டுத் திரும்பிய போது அப்பா நின்று கொண்டிருந்தார்

“என்னப்பா“

“நாளைக்கு நான் ஊருக்கு கிளம்புறேன். பஸ்ல டெல்லி போயி அங்கேயிருந்து டிரைன்ல சென்னைக்குப் போயிடுறேன்“. என்றார்

“அதுக்குள்ளே என்ன அவசரம். ஒரு வாரமாவது இருங்கப்பா. சிம்லா போயிட்டு வரலாம். “

“உன்னை பாக்கணும்னு தோணிச்சி. வந்தேன்.. பாத்துட்டேன். நான் கிளம்புறேன்“ என்றார்

“அப்போ கார்ல டெல்லி கொண்டு போய் விடச் சொல்றேன். அங்கேயிருந்து மதுரைக்குப் பிளைட் டிக்கெட் போடுறேன். “

“நிறைய செலவு ஆகும்பா.. எனக்கு எதுக்கு.. இவ்வளவு செலவு. நான் டிரைன்ல போயிடுறேன்“

அவனுக்குக் கோபம் வந்தது.

“நீங்க பிளைட்ல தான் போறீங்க..செலவை பற்றி நீங்க கவலைப்பட வேண்டாம். “

அப்பா அவனது கோபத்தைக் கண்டு சிரித்தார். பின்பு அவன் அருகில் வந்து நின்று “ டிக்கெட் போடுறதுல பாதிக் காசாவது நான் தர்றேன்“ என்றார்.

அவரை என்ன செய்வது என்று குமாருக்குப் புரியவில்லை.

“நீங்க படுத்துக்கோங்க.. லீவு போட்டுட்டு நானே டெல்லி கூட்டிட்டு போயி. உங்களைப் பிளைட்ல அனுப்பி வைக்குறேன்“

“சரிப்பா“ என்றார் அப்பா.

அப்படி அப்பா சொன்னவிதம் சிறுவயதில் அவன் சொன்னது போலவே இருந்தது.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 17, 2024 03:35

June 14, 2024

அம்பு துளைக்கப்பட்ட மான்

புகழ்பெற்ற ஓவியரான ஃபிரைடா காலோ வாழ்க்கையை விவரிக்கும் புதிய ஆவணப்படம் வெளியாகியுள்ளது. ஃபிரைடாவின் டயரி மற்றும் கடிதங்களைப் பயன்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஃபிரைடாவின் ஓவியங்கள் திரையில் உயிர்பெற்று இயங்குவது அழகானது. அனிமேஷன் மற்றும் ஆவணக்காட்சிகள் மூலம் ஃபிரைடா வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் சித்தரிக்கப்படுகின்றன.

இதற்கு முன்னதாகச் சல்மா ஹாயக் நடித்த ஃப்ரைடா திரைப்படம் 2002 ஆம் ஆண்டு ஜூலி டெய்மரால் இயக்கப்பட்டு வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த ஆவணப் படம் அதிலிருந்து நிறைய வேறுபடுகிறது.

குறிப்பாக ஃப்ரைடாவின் குடும்ப வரலாறு. பள்ளி நினைவுகள். அப்பா புகைப்படக்கலைஞராக இருந்தது. ஃப்ரைடாவின் ஓவியத்தில் தந்தையின் நினைவுகள் வெளிப்படுவது போன்றவை சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஃப்ரைடாவின் கணவரும் புகழ்பெற்ற ஓவியருமான ரிவேராவை சந்தித்துக் காதல் கொண்ட நாட்கள். அவர்களின் திருமணம். ஓவியக்கண்காட்சிக்காக 1931 ஆம் ஆண்டு மேற்கொண்ட முதல் அமெரிக்கப் பயணம். நியூயார்க்கில் நடைபெற்ற ஓவியக்கண்காட்சி. அதற்குக் கிடைத்த வரவேற்பு. பிரம்மாண்டமான விருந்து நிகழ்ச்சி போன்றவற்றையும் நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

பழங்குடியினரான ஜாபோடெக் மக்களின் தெஹுவானா ஆடைகளை ஃப்ரைடா தனது அன்றாட உடையாக ஏற்றுக்கொண்டார். அந்த உடையும் அவரது அணிந்துள்ள ஆபரணங்களும் வானுலகின் தேவதையைப் போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது.

அமெரிக்காவிலிருந்த நாட்களில் ஃப்ரைடா கர்ப்பமாகியிருந்தார். அந்தக் கருக் கலைந்து போன துயரத்தைப் படத்தில் பகிர்ந்து கொள்கிறார். சாலையோரம் அமர்ந்து ஓவியம் வரைவது. ரிவேரா ஃப்ரைடாவை மணவிலக்குச் செய்து விட்டு அவளது தங்கையைக் காதலித்து அவளுடன் வாழ ஆரம்பித்தார். அதை ஃப்ரைடா ஏற்றுக் கொள்ள முடியாமல் போனதைப் படம் உணர்ச்சிப்பூர்வமாகச் சித்தரித்துள்ளது

சர்ரியலிஸ்டுகளின் நட்பு. அவர்கள் நடத்திய கண்காட்சியில் கலந்து கொண்ட நினைவுகளைப் படத்தில் ஃப்ரைடா விரிவாகப் பகிர்ந்து கொள்கிறார். சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு முதுகெலும்பு முறிந்த நிலையில் படுத்து கிடந்த அவரது நாட்கள். அப்போது அனுபவித்த உச்சபட்ச வேதனை. அவற்றைத் தனது ஓவியங்களில் கனவு நிலைப்பட்டது போல ஃப்ரைடா வரைந்திருக்கிறார். தனது இருப்பை இரு நிலைகளில் இரண்டு பெண்ணாக வரைந்திருக்கிறார் ஃப்ரைடா. அவரது ஓவியத்தில் இடம்பெற்றுள்ள குரங்கும் கிளிகளும் ஆசையின் அடையாளமாக இருக்கின்றன.

ஃப்ரைடாவைப் அவரது கலையையும் புரிந்து கொள்ள, புரட்சிக்குப் பிந்தைய மெக்சிகோவின் வரலாற்றை அறிந்து கொண்டிருக்க வேண்டும். அவர் மெக்சிகோ புரட்சி தொடங்குவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர், புதிய அரசாங்கம் கலைகளின் மூலம் தனக்கான தேசிய அடையாளத்தை உருவாக்க முயன்ற காலத்தில் அதன் முக்கியப் படைப்பாளியாக இருந்தவர் ரிவேரா. அதுவே அவர் மீது ஃப்ரைடா காதல் கொள்ள முக்கியக் காரணியாக இருந்தது

ஃப்ரைடாவின் தனிமையே அவரை ஓவியராக்கியது. பிரிவும் ஏமாற்றமும் வலியும், ஒன்று சேர்ந்து அவரை முடக்கிய போது தனது கலைப்படைப்பின் வழியே அவர் தனக்கான மீட்சியை உருவாக்கிக் கொண்டார்.

ரிவேராவின் நிழலில் வாழ்ந்த வருடங்களில் அவர் தனது கலைத்திறனை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. பின்பு ஒரு சுயாதீன கலைஞராக வெளிப்பட்டு, 1938 இல் நியூயார்க்கில் தனது தனிக் கண்காட்சியை வைத்தபின்பே முழுமையான ஓவியராக அறியப்பட்டார்.

ஃப்ரைடாவை பற்றிப் புதிய தகவல்கள், உண்மைகளை அவரது சொற்களின் மூலம் அறிந்து கொள்ள வைக்கிறது இந்த ஆவணப்படம். அனிமேஷன் மூலம் ஓவியம் வரையும் காட்சிகளை உருவாக்கி, நேர்த்தியான இசையோடு அதைக் காட்சிப்படுத்தியிருப்பது ஆவணப்படத்திற்குப் புதிய முகத்தை உருவாக்கியுள்ளது

ஆவணப்படத்தின் முடிவில், இயக்குநர் ஃப்ரைடா மரணத்தை ஒரு உருவகமாக மாற்றுகிறார், அவரது மிகவும் பிரபலமான ஓவியங்களில் ஒன்றான The Wounded Deer ஓவியத்திலிருப்பது போல, ஒன்பது அம்புகளால் துளைக்கப்பட்ட மானின் உடலாக ஃப்ரைடா காட்சியளிக்கிறார்.

ஃப்ரைடாவின் வாழ்க்கை அனுபவங்களுக்கும் அவரது ஓவியங்களின் வளர்ச்சிக்கும் இடையே உள்ள தொடர்பை இந்த ஆவணப்படம் சிறப்பாகப் புரிய வைக்கிறது. அவ்வகையில் இப்படம் சிறந்த கலைப்படைப்பாக மாறுகிறது.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 14, 2024 05:54

June 10, 2024

ஸி.வி. ஸ்ரீராமனின் கதைகள்

மலையாள எழுத்தாளர் ஸி.வி. ஸ்ரீராமனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் தொகுப்பினை சாகித்ய அகாதமி வெளியிட்டிருக்கிறது. ஸ்ரீராமனின் இரண்டு சிறுகதைகளை அரவிந்தன் திரைப்படமாக்கியிருக்கிறார்.

ஸ்ரீராமன் கதைகள் இதுவரை நாம் அறியாத கதைப்பரப்பினைக் கொண்டிருக்கின்றன. பாண்டிச்சேரி. கடலூர். சென்னை எனத் தமிழ் வாழ்க்கையின் ஊடாகவும் ஸ்ரீராமன் கதைகள் எழுதியிருக்கிறார்.

குறிப்பாகப் பாண்டிச்சேரி அன்னை ஆசிரமம் பின்புலத்தில் எழுதப்பட்ட கதை சிறப்பானது. ஸ்ரீராமனின் கதைகள் நினைவுகளால் வழிநடத்தப்படும் மனிதர்களின் வாழ்க்கையை விவரிக்கின்றன.  

கவித்துவமான மொழியில் எழுதப்பட்ட சிறுகதைகளை  விஷ்ணுகுமாரன் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.

வாஸ்துஹாரா சிறுகதையினை வாசித்துவிட்டு அதன் திரைப்படத்தையும் பாருங்கள். கதையை அரவிந்தன் படமாக்கியுள்ள நேர்த்திப் புரியும்.  வங்க தேச அகதிகளை அந்தமானில் குடியமர்ந்தும் துறையில் ஸ்ரீராமன் அதிகாரியாக பணியாற்றியவர். அந்த அனுபவமே இக்கதையின் பின்புலமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

கதையின் முடிவில் வங்காளப் பெண் வீட்டில் அவர் சாப்பிடும் காட்சி அபாரம். மிகவும் உணர்ச்சிகரமான எழுதப்பட்டிருக்கிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 10, 2024 23:30

June 8, 2024

எழுத்தின் வலிமை

ஸ்டீபன் ஸ்வேக் (Stefan Zweig) ஆஸ்திரியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் 1930 களில், அவர் உலகில் மிகவும் பரவலாக மொழிபெயர்க்கப்பட்ட எழுத்தாளர்களில் ஒருவராக இருந்தார். குறிப்பாகச் சீனாவில் அவரது புத்தகங்கள் மிகவும் விரும்பி படிக்கப்பட்டன. அவரது முக்கியப் படைப்புகள் யாவும் சீனமொழியில் வெளியாகியுள்ளன. சீனாவின் பெஸ்ட் செல்லராக ஸ்வேக் அறியப்பட்டார்.

எதனால் ஸ்டீபன் ஸ்வேக்கை சீனர்கள் இவ்வளவு ஆர்வமாகப் படித்தார்கள் என்பதை ஆராய்ந்து ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அது ஸ்வேக்கின் கதைகள் உளவியல் ரீதியாகக் கதாபாத்திரங்களின் செயல்களை ஆராய்கின்றன. அதிகாரத்திற்கு எதிரான குரலை ஸ்வேக் தொடர்ந்து தனது படைப்புகளில் வெளிப்படுத்துகிறார். கவித்துவமான விவரிப்பு. மற்றும் தனித்துவமான கதாபாத்திரங்கள் காரணமாகச் சீன மக்களால் விரும்பி வாசிக்கப்பட்டார் என்கிறது இக்கட்டுரை.

தமிழில் ஸ்வேக்கின்  ராஜ விளையாட்டு, யாரோ ஒருத்தியின் கடிதம் ஆகிய இரண்டு நாவல்கள் வெளியாகியுள்ளன. நானே அவற்றைப் பற்றி எழுதியிருக்கிறேன். ஆனால் குறைவான வாசகர்களே அந்த நாவல்களைத் தேடி வாசித்திருக்கிறார்கள்.

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட வங்க நாவல்கள் விரும்பி வாசிக்கப்பட்ட அளவிற்கு வேறு இந்திய மொழி நாவல்கள் எதுவும் வாசிக்கப்படவில்லை. அது போலவே ரஷ்ய நாவல்களுக்குத் தமிழ் இலக்கிய உலகில் உள்ள இடம் பிரெஞ்சு இலக்கியத்திற்குக் கிடைக்கவில்லை.

நவீனத் தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்புகளில் சில ஐரோப்பிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை போதிய கவனம் பெறவில்லை. அது ஏன் என்று ஆராயப்படவுமில்லை.

90களில் லத்தீன் அமெரிக்க இலக்கியம் குறித்துத் தீவிரமான உரையாடல்கள் தமிழ்ச் சூழலில் நடைபெற்ற போதும் முக்கிய நாவல்களில் ஒரு சிலவே தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டன. அவையும் போதிய கவனம் பெறவில்லை.கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் தனிமையின் நூறு ஆண்டுகள் நாவல் உலகம் முழுவதும் விரும்பி வாசிக்கப்பட்டது ஆனாலும் பிரான்சில் அதற்குக் கிடைத்த வரவேற்பு இரண்டாம் நிலையானதே. காரணம் பிரெஞ்சு மக்கள் மார்க்வெஸின் மாய யதார்த்த கதை சொல்லலை விரும்பவில்லை. அவர்கள் I NOVEL எனப்படும் சுயவரலாற்றுத் தன்மை கொண்ட நாவல்களையே அதிகம் விரும்புகிறார்கள் என்று இந்தக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்கள்.

துருக்கி எழுத்தாளர் அய்ஃபர் டுன்ஷ் தனது நேர்காணல் ஒன்றில் இப்படிக் குறிப்பிடுகிறார்

“நீங்கள் ஆச்சரியப்படலாம் வெளிநாட்டில் எனது புத்தகங்கள் வெளியிடப்படுவதால் கிடைக்கும் அங்கீகாரத்தினை நான் உண்மையில் விரும்பவில்லை. நிச்சயமாகப் பிறமொழிகளில் புத்தகம் வருவது சந்தோஷமானதே. ஆனால் அது சர்வதேசச் சந்தையால் முன்னெடுக்கப்படும் செயல்பாடு. மேற்கத்திய வாசகர்கள் துருக்கியிலிருந்து வெளியாகும் படைப்புகளைச் சரியாகப் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் கீழை நாடுகள் குறித்து முன் தீர்மானத்துடன் இருக்கிறார்கள். அந்தக் கண்ணோட்டத்துடன் மட்டுமே இலக்கியப் படைப்புகளை அணுகுகிறார்கள். பதிப்பாளர்களும் அந்த விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் படைப்புகளையே பிறமொழிகளுக்குக் கொண்டு செல்கிறார்கள்

இது உண்மையில் துருக்கியைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கு மட்டுமே ஆன பிரச்சனையில்லை, சர்வதேச எழுத்தாளராக அறியப்பட்ட பலரும் தங்கள் சொந்த இலக்கிய அம்சங்களை விட்டுக் கொடுக்கிறார்கள். சந்தைக்காகப் பல்வேறு வகைகளில் சமரசம் செய்து கொள்கிறார்கள், இதன் விளைவாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படும் அனைத்து நாவல்களும் ஒன்று போலவே தோற்றமளிக்கின்றன

உண்மையில் சிறந்த இலக்கியம் என்பது வெறும் சந்தைப் பொருளாக இருக்க முடியாது. சந்தையால் முன்னெடுக்கப்படாமல் போவதால் நல்ல படைப்பிற்குப் பெரிய இழப்பு ஒன்றுமில்லை. எந்த மொழியில் எழுதப்பட்டதோ அங்கே அதன் முக்கியத்துவம் என்றைக்கும் இருக்கும்“ என்கிறார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 08, 2024 02:38

June 6, 2024

மிதக்கும் காதலர்கள்

மார்க் சாகலின் ஓவியங்கள் கதை சொல்லக் கூடியவை. அச்சிடப்பட்ட கதைகளை வாசிப்பதைப் போல அவரது ஓவியத்தில் மறைத்துள்ள கதைகளையும் நம்மால் படிக்க முடியும். அவை நினைவின் சிதறிய வடிவங்கள்.

மார்க் சாகலை மகிழ்ச்சியின் ஓவியன் என்றே சொல்வேன். பிராயத்தின் கனவுகள் போன்ற காட்சிகளையே தொடர்ந்து வரைந்திருக்கிறார். தனது நினைவுகளையும் கனவினையும் ஒன்று சேர்த்து ஓவியமாக்குகிறார்.

அவரது ஓவியத்தில் பசு நீலநிறமாக இடம்பெறுகிறது. ஆடு வயலின் வாசிக்கிறது. மனிதர்கள் வானில் பறக்கிறார்கள். ஆகாசமும் பூமியும் இடம் மாறியிருக்கின்றன. அவரது உலகம் மகிழ்ச்சியால் நிரம்பியிருக்கிறது.

நேரடியாக அவர் எதையும் காட்சிப்படுத்துவதில்லை. மாறாக உருவங்களை மிதக்கவிடுகிறார். துயரமும் நெருக்கடியும் கொண்ட சொந்த வாழ்க்கையை அனுபவித்த போது அவரது ஓவியங்களில் அவை வெளிப்படவில்லை. மாறாக உலகின் மீது பெரும் நம்பிக்கையும் காதலும் கொண்டதாகவே அவரது ஓவியங்கள் உள்ளன

ஒருவர் ஓவியத்தின் முன் நிற்கும் போது என்ன நடக்கிறது.

முதலில் அவர் உருவங்களையும் அது வரையப்பட்ட விதத்தையும் அதற்கு பயன்படுத்தபட்ட வண்ணத்தையும் காணுகிறார். பின்பு ஓவியத்தினுள் ஒரு இயக்கம் இருப்பதை உணருகிறார். ஓவியத்திலுள்ள அமைதி அவரைக் கவருகிறது. ஓவியத்தின் ஏதோ ஒரு இடம், அல்லது பொருள், மனிதர் அவருடன் ஒன்றிணைவதாக உணருகிறார். பின்பு ஓவியத்துடன் அவர் உரையாட ஆரம்பிக்கிறார். அது மொழி கடந்த உரையாடல். தனது கற்பனையின் துணையோடு ஓவியத்தினை மலர வைக்கிறார். அந்த விரிவு கொள்ளுதலில் அவரது மனமும் ஓவியமும் இணைந்து இயங்குகின்றன. அவருக்குள் மாற்றம் உருவாகிறது. திடீரென புறஉலகை அவர் வியப்போடு பார்க்க ஆரம்பிக்கிறார். காலமும் வெளியும் தான் ஓவியத்தின் பிரதான களங்கள் என்பதைப் புரிந்து கொள்கிறார். ஓளி தான் ஓவியத்தின் மாயத்திரவம் என அறிகிறார். இயற்கையை ஓவியங்கள் நகலெடுப்பதில்லை. மாறாக நுண்மையாக்குகின்றன. பிரம்மாண்டமானதாக்குகின்றன. பொருளின் தோற்றம் என்பதில் அதன் வடிவம் நிறம் ஒளியில் அது தெரியும் விதம். இன்னொரு பொருளுடன் கொண்டுள்ள உறவு என்று பலநிலைகள் இருப்பதை உணருகிறார். ஓவியம் அவருக்குக் கற்றுத் தருகிறது. ஓவியத்தின் உள்ளிருக்கும் இசையை அவர் கேட்க ஆரம்பிக்கிறார். ஓவியம் மாற்றுஉலககென உணருகிறார். அப்படி மார்க் சாகலின் ஓவியங்களைக் காணும் போது நாம் முதலில் உணருவது அவரது விளையாட்டுதனத்தை. அது மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவே எப்போதும் அமைகிறது.

சாகலின் பிறந்தநாள் ஓவியத்தில் நாம் காணுவது காதலுற்ற இருவரின் பறத்தலை. அந்தப் பெண்ணை முத்தமிடும் காதலன் பறந்த நிலையில் காணப்படுகிறான். அவர்கள் காதலின் சுழற்காற்றால் நிச்சயமற்ற முறையில் கொண்டு செல்லப்படுகிறார்கள். அவனது தலை சூரியகாந்திப் பூ போல வளைந்து திரும்பியிருக்கிறது. பரவசத்துடன் அவளை முத்தமிடுகிறான்.

பிறந்த நாள் கொண்டாடும் பெண் மகிழ்ச்சியோடு காணப்படுகிறாள். அவளது கையில் மலர்க்கொத்து உள்ளது. அந்த வீடு. உடைகள். காலணிகள் யாவும் துல்லியமாக வயைரப்பட்டுள்ளன.

ஓவியத்தில் காணப்படுவது மார்க் சாகலின் காதலி பெல்லா ரோசன்ஃபெல்ட்.,

காதல் புவியீர்ப்பு விசையைத் தாண்டியது. ஆகவே தான் இதில் காதலன் காற்றில் மிதக்கிறான்.

இந்த ஓவியத்திலுள்ள தருணம் பற்றிச் சாகல் சிறிய குறிப்பு ஒன்றை எழுதியிருக்கிறார்

“அந்தச் சிறிய அறையால் உன்னை அடக்க முடியாது என்பது போல் நீ ஒற்றைக் காலில் நின்றாய். உனது தலை என்னை நோக்கித் திரும்பியது, என்னுடைய தலை உனக்கானதாக மாறியது.. நாங்கள் பூக்கள், மூடப்பட்ட வீடுகள், கூரைகள், முற்றங்கள், தேவாலயங்கள் ஆகியவற்றின் மீது பறந்தோம்“

அவரது ஓவியத்தில் பெல்லா எப்போதும் வெள்ளை அல்லது கறுப்பு உடையே அணிந்திருக்கிறாள். அவளை வானுலகிலிருந்து தன்னை மீட்க வந்த தேவதையாகவே சாகல் சித்தரிக்கிறார். அவரும் பெல்லாவும் திருமணம் செய்து கொள்வதற்குச் சில வாரங்களுக்கு முன்பு இந்த ஓவியத்தை வரைந்திருக்கிறார்.

சாகல் தனது காதலி பெல்லாவை 25 ஜூலை 1915 அன்று திருமணம் செய்து கொண்டார். யூத கிராமத்தில் வளர்ந்த சாகல், தனது படைப்புலகின் ஆதாரமாக ஸ்லாவிக் மரபைக் கொண்டிருந்தார். இந்த மரபைத் தெரிந்து கொள்ளும் போது அவரது ஓவியங்களில் உள்ள வெவ்வேறு குறியீடுகளின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளலாம்.

உதாரணத்திற்கு ஒருவரின் வீட்டிற்கு விருந்தினராகச் செல்வது என்பது அந்த வீட்டிற்குள் பறப்பது என்றும் அர்த்தம் தொனிக்கும். அப்படியான மறைவான பொருள் இருக்கிறது. அதையே சாகல் தனது ஓவியத்தில் வெளிப்படுத்துகிறார்.

சாகல் தனது ஓவியங்களில் ஒரு கூட்டு வாழ்வினை உருவாக்கினார். அவரது ஓவியத்தில் இடம்பெற்றுள்ள கோழி, சேவல் மாடு, செம்மறி ஆடு, பன்றி ,குதிரை போன்ற விலங்குகள் யூத மக்களின் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடையவை மற்றும் ஆன்மீக குறியீடாகவும் அறியப்படுபவை.

அவரது ஓவிய பாணி கிழக்கு ஐரோப்பிய யூத கலாச்சாரத்தின் கதைசொல்லலிலிருந்து பிறந்தது.

ஹென்றி மேட்டிஸ்ஸேக்குப் பிறகு வண்ணங்களைச் சரியாகப் புரிந்துகொண்டு பிரயோகிக்கும் ஒரே கலைஞர் சாகல் மட்டுமே என்கிறார் பிக்காசோ.

அது உண்மை என்பதை அவரது நிறத்தேர்வே அடையாளப்படுத்தும். குறிப்பாகச் சாம்பல். நீலம், சிவப்பு. நிறங்களை அவர் பயன்படுத்துவது விதம் அழகானது. மனிதனின் அகநிலையின் வெளிப்பாடாகவே சாகல் வண்ணங்களைத் தேர்வு செய்கிறார்.

ரஷ்யாவின் வைடெப்ஸ்க் என்ற சிறிய நகரத்தில் வசித்த யூதக்குடும்பத்தில் பிறந்தவர் மார்க் சாகல், முதலாம் உலகப் போரின் வெடிப்பும் பின்னர் ரஷ்யப் புரட்சியும் அவரைப் பாதித்தன. அவர் நாட்டை விட்டு வெளியேறி பாரிஸ் மற்றும் பெர்லினில் வசித்திருக்கிறார். ஐரோப்பாவின் அரசியல் சூழ்நிலை காரணமாக, அவர் 1941 இல் நியூயார்க்கிற்குக் குடிபெயர்ந்தார்.

சாகலும் அவரது மனைவியும் 1923 இல் பாரிஸுக்குச் சென்றார்கள்.அங்கே, வளர்ந்து வரும் நாஜி அச்சுறுத்தல் மீண்டும் சாகலை நெருக்கடியின் விளிம்பிற்குத் தள்ளியது. அவரது ஐம்பதுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் நாஜிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் நான்கு சீரழிந்த கலையின் அடையாளமாக நாஜிகள் நடத்தி கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன. சாகலும் அவரது மனைவியும் ஐரோப்பாவில் யூதர்களுக்கு ஏற்பட்டு வரும் நெருக்கடியை உணர்ந்தார்கள். தாங்கள் கைது செய்யப்படுவோம் என்ற நிலையில் தான் அவர் இடம்பெற முடிவு செய்தார்.

அரசியல் நெருக்கடிகளால் அவரது வாழ்க்கை துரத்தப்பட்டது. ஆயினும் மகிழ்ச்சியின் தடயங்களையே அவர் வரைந்தார். சர்ரியலிஸ்டுகள் தங்கள் இயக்கத்தின் முன்னோடி என்று சாகலைக் குறிப்பிடுகிறார்கள். ஆனாலும் சாகல் தனது சொந்தக் கலாச்சாரம் மற்றும் பின்னணியிலிருந்தே தான் வரைவதாகவும், டாலி போன்ற சர்ரியலிஸ்டுகளிடமிருந்து தான் மிகவும் வேறுபட்டவர் என்றும் சொல்கிறார்

சர்க்கஸ் மீது தீவிர ஈடுபாடு கொண்டிருந்த சாகல் அதன் நினைவுகளை ஓவியமாக வரைந்திருக்கிறார். சர்க்கஸ் போலவே நமது தினசரி வாழ்க்கையினைச் சாகசக்காட்சிகளாக மாற்றிக் காட்டியிருக்கிறார்.

மொசார்ட் தனது இசையால் உலகை சந்தோஷப்படுத்துவது போல நான் வண்ணங்களால் உலகைச் சந்தோஷமாக்குகிறேன் என்கிறார் சாகல். அவரது பெரும்பான்மை ஓவியங்களில் காதலர்கள் ஒரு மர்மமான நீல நிறத்தால் சித்தரிக்கப்படுகிறார்கள். தனது வண்ணத்தேர்வு பற்றிச் சாகல் ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார்

In our life there is a single color, as on an artist’s palette, which provides the meaning of life and art. It is the color of love . . . If I create from the heart, nearly everything works; if from the head, almost nothing

நீல நிறம் பெரும்பாலும் அமைதி மற்றும் சோகத்துடன் தொடர்புடையது என்றாலும் சாகல் அந்த வண்ணத்தை முழுமையான மகிழ்ச்சி மற்றும் நிலையான அழகின் வண்ணமாக்கிவிடுகிறார். காதலின் நிறம் நீலம் என்கிறார் சாகல். அந்தத் தனித்துவமே அவரை நிகரற்ற கலைஞராகக் கொண்டாட வைக்கிறது.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 06, 2024 00:57

June 2, 2024

இசைக்குப் பின்னால்

கோ.புண்ணியவான் – மலேசியா

சஞ்சாரம் நாவல் வாசிப்பனுபவம்

நாவல் வடிவில் யாரும் எழுதிராத நாதஸ்வர தவில் கலைஞர்களின் கதையை ‘சஞ்சாரம்’ சொல்லிச் செல்கிறது. அச்சமூகத்தின் இந்த நூற்றாண்டின் வளர்சிதை மாற்றங்களை நேர்த்தியாகக் காட்சிப்படுத்திக்கொண்டே போகிறது நாவல். தற்காலக் கலைஞர்கள் எவ்வாறு நலிந்த சமூகமாகத் தள்ளிவைத்துப் பார்க்கப்பட்டார்கள் என்பதைத் தன் நுணுக்கமான கதைப்பின்னலால் சிக்கலில்லாமல் விவரித்துக்கொண்டே செல்கிறா எஸ் ரா. உண்மையிலேயே, பூ வேலைப்பாடு நன்கு தெரிந்த ஒரு பெண்ணின் கலைக் கைகள் நடத்துகின்ற பின்னல் நடனத்தை அழகு குறையாமல் செய்துகாட்டுதுபோல இந்நாவலிலும் அதன் சித்திரத்தை வரைந்து காட்டியிருக்கிறார் எஸ் ரா. முன்னும் பின்னுமாக நடந்த சம்பவங்களைக் கோர்த்துப் புனையும்போது வாசகனின் ஆர்வத்தை விடமால பற்றிக்கொள்கிறது.

ரெத்தினமும் பக்கிரியும் நாவலை நிகழ்த்திச் செல்லும் மையப் பாத்திரமாக வருகிறார்கள். ஒரு ஊருக்கு நாதஸ்வரம் வாசிக்க அழைக்கபட்ட இருவரையும் சாதியின் பொருட்டுத் தரங்குறைவாக நடத்துகிறார்கள். தன் இனத்தை மோசமாக நடத்தும்போதெல்லாம் பக்கிரி எதிர்த்துக் கேட்கிறான். அதனால் பக்கிரியையும் ரெத்தினத்தையும் அடித்து நொறுக்கி அந்த இரவு முழுதும் பட்டினி கிடக்கவைத்து கயிற்றால் கட்டிப்போட்டு விடுகிறார்கள் அவூர்க் காரர்கள். பக்கிரியும் ரெத்தினமும் கோயில் பூசாரியின் உதவியால் அங்கிருந்து தப்பித்து ஓடிவிடுகிறார்கள். தப்பி ஓடுவதற்கு முன்னர்ப் பக்கிரி திருவிழா கூடாரத்திற்குத் தீ வைத்துவிடுகிறான். பின்னர் அங்கிருந்து நடந்தே கிளம்பிவிடுகிறார்கள். கதை அந்த முதல் அத்தியாயத்திலேயே சூடு பிடிக்கத் துவங்கி இறுதி அத்தியாயம் வரை அதன் கனப்புத் தீராமல் வளர்கிறது.

தாங்கள் வாழ்நாளில் சம்பந்தப்பட்ட ஒவ்வோர் ஊராகச் சுற்றி அலைந்துகொண்டே இருக்கிறார்கள். அதற்கிடையே தீயிடப்பட்ட ஊரில் கலவரம் உண்டாகி போலிஸ் விசாரனைக்கு உட்படுகிறது. போலிஸ் பக்கிரியையும் ரெத்தினத்தையும் வலைபோட்டுத் தேடத் துவங்குகிறது. அவ்வாறு ஒவ்வொரு ஊராக அலையும்போது தங்களுக்கு முன்னர் வாழ்ந்த நாதஸ்வர இசைச் சமூகம் எவ்வாறு சமூக மதிப்போடும் கௌரவத்தோடும் வாழ்ந்தது என்று அவர்கள் தெரிந்துகொள்கிறார்கள். முன்னர்க் கொடுத்த மரியாதையும் மதிப்பும் ஏன் தற்காலத்தில் தற்காலச் சமூகத்துக்கு நீட்சிகாணவில்லை என்று ஒப்பிட்டு ஏங்குகிறார்கள். நாதஸ்வர் கலைஞர்கள் கொண்டாடப்பட்டதன் காரணமாகக் கர்வத்தோடு இருந்த நிலை தொழில்நுட்ப வளர்ச்சியாலும். சினிமா வருகையாலும், சினிமாப்பாடல்களின் கவர்ச்சியாலும் இச்சமூகப் பின்னடைவுக்குக் காரணமாக இருப்பதைச் சஞ்சாரம் மிக நேர்த்தியாக வரைந்து காட்டுகிறது. தன் இசையால் உலகை மயக்கிய தன்னாசி என்ற நாதஸ்வரக் கலைஞனின் கர்வம் பிறரைத் துன்புறுத்துவதாக இருந்தாலும் அதனை ஒரு பொருட்டாக மதியாத சமூகம் தன்னாசியைக் கொண்டாடி மகிழ்கிறது. தன்னாசி ஒரு மாபெரும் இசை வல்லுனன் என்பதால் அவரின் கொடுங்குணம் மன்னித்து ஏற்றுக்கொள்ளப்படுவதாக நாவல் ஊடாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

தற்கால நாதஸ்வரக் கலைஞர்களின் நலிந்த நிலையை விலாவாரியாகச் சித்தரிக்கப்பட்டாலும் நாதஸ்வரக் கலையின் மாண்பு குறையாமல் செதுக்கப்பட்ட சித்திரம் ‘சஞ்சாரம்’

••

நன்றி

கோ.புண்ணியவான்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 02, 2024 22:45

எஸ்.ராவிடம் கேளுங்கள் / 8

தேசாந்திரி யூடியூப் சேனல் சார்பில் வெளியாகும் எஸ்.ராவிடம் கேளுங்கள் நிகழ்ச்சியின் எட்டாவது பகுதி வெளியாகியுள்ளது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 02, 2024 22:26

June 1, 2024

நிஜமில்லாத நிஜம்

நிஜமான பசு ஒன்று ஓவியத்திலிருக்கும் பசுவைப் பார்த்துக் கொண்டிருப்பது போல வரைந்திருக்கிறார் மார்க் டான்சி, The Innocent Eye Test என்ற அந்த ஓவியம் எது யதார்த்தம் என்ற கேள்வியை எழுப்புகிறது.

டச்சு ஓவியர் பவுலஸ் பாட்டர் வரைந்த பசுக்களின் ஓவியத்தைத் தான் இந்தப் பசுப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதே ஓவியத்தின் இடதுபுறத்தில் மோனெட்டின் வைக்கோல் போர் ஓவியம் காணப்படுகிறது.

“வெவ்வேறு யதார்த்தங்கள் ஒன்றுக்கொன்று எவ்வாறு தொடர்பு கொள்கின்றன” என்று ஆராய்வதில் ஆர்வம் கொண்டவர் மார்க் டான்சி.,

வரையப்பட்ட சித்திரம் என்பது தனியுலகம். அங்கே நாம் காண்பவை நிஜமில்லை. ஆனால் நிஜம் போன்று தோற்றம் அளிக்க கூடியவை. அங்கே காணப்படும் உருவங்கள். நிலப்பரப்பு, இயக்கம் யாவும் நிஜத்தை நினைவுபடுத்துகின்றன. ஆனால் கற்பனையான தளத்தையும் கொண்டிருக்கின்றன.

சீனக் கதை ஒன்றில் ஓவியத்தின் வழியாக இயற்கை மீது காதல் கொண்ட அரசன் குறிப்பிட்ட இயற்கைக் காட்சியை நேரடியாகக் காணும் போது அது ஓவியம் போலில்லை என்று கோவித்துக் கொள்கிறான். இயற்கையை ஓவியம் நகலெடுப்பதில்லை என்று ஓவியன் விளக்குகிறான். தனக்குக் கலையின் வழியே வெளிப்படும் இயற்கை தான் வேண்டும் என்கிறான் மன்னன். இந்தக் கதை விவரிப்பதையே மார்க் டாவின்சி தனது ஆய்வாகக் கொண்டிருக்கிறார்.

அவரது ஓவியத்தில் வரையப்பட்ட பசுவைச் சட்டகத்திற்கு வெளியே நிற்கும் பசு காணுகிறது. அந்தப் பசுவும் வரையப்பட்டது தான். ஆனால் உண்மையும் கற்பனையும் ஒன்றையொன்று சந்தித்துக் கொள்வது போல நாம் உணருகிறோம் ஓவியத்திலிருக்கும் பசுவைச் சட்டகத்திற்கு வெளியே நிற்கும் பசு நிஜமானதாக நினைக்குமா என்று அருகில் விஞ்ஞானிகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஓவியம் சித்தரிப்பது தான் “யதார்த்தமா, அல்லது சட்டகத்திற்கு வெளியே மாடு பார்த்துக் கொண்டிருப்பது தான் யதார்த்தமா என்ற கேள்வியை மார்க் எழுப்புகிறார்

கேலரியில் உள்ள ஓவியத்தை நாம் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பதை விலகி நின்று ஒருவர் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற அனுபவத்தையே ஓவியம் தருகிறது.

உண்மையில் ஒரு பசு, ஓவியத்திலுள்ள பசுவைக் காணும் போது என்ன நினைக்கும் , எப்படிப் புரிந்து கொள்ளும் என்று கேட்கிறார் மார்க். விலங்குகளின் கலையுணர்வு பற்றிப் பல்வேறு அறிவியல் பரிசோதனைகள் நடைபெற்றிருக்கின்றன. குரங்கினை வண்ணம் தீட்ட வைத்திருக்கிறார்கள். நாய்களுக்குப் பயிற்சி கொடுத்து படம் வரையச் செய்திருக்கிறார்கள். அந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை. விலங்குகளைக் குறியீடுகளாக, உருவகமாக இலக்கியம் மாற்றியது. பூமியில் வாழாத விலங்குகளைக் கற்பனையாக வரைந்திருக்கிறார்கள். விலங்குகளில் சில தெய்வீகத்தன்மை கொண்டதாகக் கருதப்படுகின்றன. கிரேக்க, சீன,இந்திய இலக்கியங்களில் விலங்குகளின் உருவம் எடுத்து கடவுள்கள் பூமிக்கு வருகிறார்கள். செயலாற்றுகிறார்கள். இன்று விலங்குகளின் கலைஉணர்வை புரிந்து பல்வேறு பரிசோதனைகள் நடைபெறுகின்றன. ஆயினும் எந்த முடிவையும் எட்ட முடியவில்லை.

மார்க் ஓவியத்திலுள்ள யதார்த்தம் பற்றி மட்டுமின்றிப் பொதுவாகக் கலைகளைப் புரிந்து கொள்வதிலுள்ள சிக்கலையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த ஓவியத்தை வரைந்திருக்கிறார். அந்த வகையில் இது மிகவும் தனித்துவமான கலைப்படைப்பாக கருதப்படுகிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 01, 2024 05:31

May 30, 2024

ரெயின்கோட்

குறுங்கதை

சம்பத் தனது ஏழு வயதில் முதன்முறையாக ரெயின்கோட் அணிந்த ஒருவரைக் கிராமத்தில் கண்டான். அடைமழைக்காலமது.

மண்வாசனையை அவனுக்கு மிகவும் பிடிக்கும். மழைபெய்யப்போகும் முன்பு எழும் வாசனை ஒருவிதம். மழை விட்ட பின்பு வெளிப்படும் வாசனை வேறுவிதமாக இருக்கும். அது மழை வாசனையில்லை. மண்வாசனை என்பார் தாத்தா. இருக்கட்டுமே. மண்ணை அவ்வளவு வாசனை மிக்கதாக மழையால் தான் முடியும்.

ஊரைச் சுற்றி மழைமேகம் கருகருவெனத் திரளுவதைக் காண அழகாக இருக்கும். மழைவட்டம் போட்டிருச்சி என்று மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். மழையின் முதல் துளி எங்கே விழுகிறது என்று யாரும் கண்டறிய முடியாது. ஆனால் மழைத்துளிகள் தபால் பெட்டியின் மீது விழுந்துவிட்டால் அது வேகமான மழை என்று அர்த்தம்.

பகலில் பெய்யும் மழையின் குணம் வேறு. இரவில் பெய்யும் மழையின் குணம் வேறு. இரவில் பெய்யும் மழை எளிதில் நிற்காது. மழை வரைந்த படத்தை மறுநாள் கோவில் சுவரில் காணலாம். மழையும் வெயிலும் சேர்த்துக் கொள்ளும் போது வானுலகில் கல்யாணம் நடப்பதாகச் சொல்வார்கள்.

மழைக்குள் நனைந்தபடி விவசாய வேலை செய்பவர்களையும், ஒடியோடி தூம்புவாயில் தண்ணீர் பிடித்துச் சேகரித்துக் கொள்ளும் பெண்களையும் சம்பத் பார்த்திருக்கிறான்.

ஆனால் இப்படி ஒருவர் மழைக்குள் நனையாமல் கைவீசியபடி நடந்து போவதைக் காண ஆச்சரியமாக இருந்தது. அவர் அணிந்திருந்த அடர் பச்சை நிற ஆடை தான் ரெயின் கோட் என்று அன்று தெரியவில்லை. வீட்டின் திண்ணையில் நின்றபடி அவர் தெருவில் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். நிலா வெளிச்சத்தில் நடந்து போகிறவர் போல நிதானமாக மழைக்குள் நடந்து சென்றார். தலை நனையாமல் இருக்கத் தொப்பி போல ரெயின்கோட்டை இழுத்துவிட்டிருந்தார்.

கிராமத்தில் மழை வேகமெடுக்கும் போது மக்கள் மரத்தடி, பம்ப்செட், அல்லது இடிந்துகிடக்கும் சத்திரம் என ஏதாவது இடத்தில் ஒதுங்கிக் கொள்வார்கள். சிலர் மழையைப் பொருட்படுத்துவதேயில்லை. ஆனால் இப்படி எவரும் ரெயின்கோட் போட்டுக் கொண்டு தெருவில் நடமாடியதில்லை.

அந்தக் காலத்தில் எல்லோர் வீட்டிலும் குடை கிடையாது. வண்ணக்குடைகள் வராத காலமது. பின்னாளில் மடக்குக் குடைகள் வந்த போது அதை மக்கள் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். வியந்தார்கள். ஆண்கள் மடக்குக் குடை வைத்துக் கொள்வதற்குக் கூச்சப்பட்டார்கள்.

ரெயின்கோட் அணிந்திருந்தவரின் பெயர் செல்லசாமி. அவர் ராணுவத்தில் பணியாற்றியவர். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். கிராமத்தில் அவரைப் போல நாலைந்து பேர் ராணுவத்தில் பணியாற்றினார்கள். விடுமுறையில் ஊருக்கு வரும் போது அவர்கள் டீக்கடையில் ஹிந்தியில் தான் பேசிக் கொள்வார்கள்.

அவர்கள் மூலமாகச் சிலர் டெல்லிக்குச் சென்று வேலை தேடிக் கொண்டார்கள். ஒன்றிரண்டு பேர் டெல்லியில் ஹோட்டல் பணியாளர்களாக மாறினார்கள். டெல்லியிலிருந்து கொண்டுவரப்பட்ட மண்ணெண்ணெய் அடுப்பு. அலுமினியப் பாத்திரங்கள், டார்ச்லைட், ஹிந்தி இசைத்தட்டுகள் ஊரில் வியப்பாகப் பார்க்கப்பட்டன. அந்தக் காலத்தில் எஸ்எஸ்எல்சி பரிட்சையில் பெயிலாகிப் போன பையன்கள் டெல்லிக்கு ஒடிப் போவது வழக்கமாக மாறியது.

அவர் அணிந்திருந்தது ரெயின்கோட் என்பதையும். அதை அணிந்து கொண்டுவிட்டால் மழையில் எங்கே வேண்டுமானாலும் நடக்கலாம். உடம்பு நனையாது என்பதையும் அவரது மகன் திரவியம் சொல்லித் தான் சம்பத் தெரிந்து கொண்டான்

அந்த ரெயின்கோட்டை செல்லச்சாமி டெல்லியில் வாங்கியிருக்கிறார். அடுத்த முறை அவனுக்கும் சிறியதாக ஒரு ரெயின்கோட் வாங்கி வரப்போகிறார் என்று திரவியம் சொன்னான்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த சம்பத்திற்கும் ரெயின்கோட் வாங்க வேண்டும் என்ற ஆசை உண்டானது. ஆனால் அதைக் காட்டிக் கொள்ளவில்லை.அந்த ரெயின்கோட்டை தொட்டுப் பார்ப்பதற்காக அவனையும் இரண்டு நண்பர்களையும் திரவியம் தனது வீட்டிற்கு அழைத்துப் போனான். ரெயின்கோட் பாம்புச்சட்டை போல வழுவழுப்பாக இருந்தது, அவ்வளவு பெரிய பொத்தான்களைச் சம்பத் அதற்கு முன்பு கண்டதில்லை. குடைத்துணியில் தைத்திருக்கிறார்கள் என்று அவனோடு வந்த பையன் சொன்னான். இல்லை. இது வெளிநாட்டுத் துணி என்று மறுத்துச் சொன்னான் திரவியம்.

ரெயின்கோட் பற்றிக் கிராமத்துப் பெண்கள் வியப்பாகப் பேசிக் கொண்டார்கள். பள்ளியில் ஆசிரியர்கள் கூட அதைப்பற்றித் திரவியத்திடம் விசாரித்தார்கள். தபால்காரர் தனக்கு அப்படி ஒரு ரெயின்கோட் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார்.

“மழையில் ஒன்றிரண்டு தடவை கூட நனையாமல் போய்விட்டால் மழை கோவித்துக் கொண்டு வராமல் போய்விடும். மழையில் நனைவதும் உடம்புக்குத் தேவை தான்“ என்று சொன்னார் கருப்பையா ஆசாரி.

திரவியத்தின் அப்பா ராணுவத்திற்குத் திரும்பிச் செல்லும் போது அந்த ரெயின்கோட்டை கொண்டுபோய்விடுவார் என்றே சம்பத் நினைத்தான். ஆனால் அதை அவரது வீட்டிலே விட்டுவிட்டுப் போயிருந்தார்.

தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பாக மழை துவங்கியது. அப்போது திரவியத்தின் அம்மா அந்த ரெயின்கோட்டை அணிந்து கொண்டு மழைக்குள் எருமை மாட்டை ஓட்டிக் கொண்டு வருவதைப் பார்த்தான். மழை தன்னை எதுவும் செய்துவிடாது என்ற புன்சிரிப்பு அவரது முகத்திலிருந்தது. ஊரில் ரெயின்கோட் அணிந்த முதற்பெண் திரவியத்தின் அம்மா தான். அது அவருக்குப் பெருமையாக இருந்தது. ஊரிலிருந்த பணக்கார முதலாளி எவரிடமும் ரெயின்கோட் கிடையாது. ஆகவே அவர்கள் அதைக் கண்டு எரிச்சல் பட்டார்கள்.

அதன் பிறகான நாட்களில் லேசான தூறல் விழும் போது கூடச் சோளக்கொல்லை பொம்மை போலப் பொருத்தமில்லாத ரெயின்கோட்டை அணிந்தபடி திரவியத்தின் அம்மா நடமாடிக் கொண்டிருப்பார். ஒரு ரெயின்கோட் அவர்களை வசதியானவர்கள் போல உணர வைத்துக் கொண்டிருந்தது.

பொங்கல்விடுமுறைக்குச் செல்லச்சாமி ஊருக்கு வந்த போது அவர் வாக்களித்தது போலத் திரவியத்திற்கு ஒரு ரெயின்கோட் வாங்கிவரவில்லை. அந்த ஏமாற்றத்தை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மைதானத்தில் இதைச் சொல்லிச் சொல்லி மாணவர்கள் கேலி செய்தார்கள். திரவியம் தான் பெரிய ஆள் ஆனதும் ராணுவத்திற்குப் போய் வேலைக்குச் சேர்ந்து கொண்டு ரெயின்கோட் வாங்குவேன் என்றான். தனது ஏமாற்றத்தை மறைத்து அவனால் அவ்வளவு தான் சொல்ல முடிந்தது.

திரவியத்தின் வீட்டிலிருந்த ரெயின்கோட்டை யார் கிழித்தது என்று தெரியவில்லை. கோடை மழை பெய்த நாளில் கிழிந்த மழைக்கோட்டை கொம்பில் இழுத்தபடி எருமை மாடு கண்மாய் கரையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. ஊரில் ரெயின்கோட் அணிந்த முதல் எருமை அது தான். அந்தப் பெருமையைப் பெரிதாக நினைக்காமல் அது நடந்து சென்றது.

மறுநாள் அவர்கள் கண்மாயில் மிதந்து கொண்டிருந்த கிழிந்த ரெயின்கோட்டை பார்த்தார்கள். யாரோ விநோதமான மனிதன் தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பது போலத் தோன்றியது. ஒரு தட்டான் கிழிந்த கையின் மீது அமர்ந்திருந்தது.

தட்டான் தூக்கிட்டு போகப்போகுது டோய் என்று கத்தினான் ஒருவன். டெல்லிக்கா என்று கேட்டான் இன்னொரு சிறுவன். சம்பத் அதைக் கேட்டுச் சிரித்தான். அவன் கண்முன்னே காற்று ரெயின்கோட்டை புரட்டி விளையாடிக் கொண்டிருந்தது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 30, 2024 06:12

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.