S. Ramakrishnan's Blog, page 30
July 23, 2024
அநீதியிலிருந்து தப்பித்தல்
ஷேக்ஸ்பியரின் வெனிஸ் நகரவணிகன் நாடகத்தில் நீதி சொல்வதற்காகப் போர்ஷியா ஆண் உருவம் கொள்கிறாள். ஷைலாக்கிற்கு நீதி உரைக்கிறாள். வீடு திரும்பிய பின்பே அவளது கணவனுக்கு உண்மை தெரியவருகிறது. நெருக்கடியின் போது பெண் ஆணாக உருக் கொள்வதை இலக்கியத்தில் நிறையவே காணமுடிகிறது.

Prayers for the Stolen படத்தில் போதைப் பொருள் கும்பலிடமிருந்து தனது மகளைக் காப்பாற்றிக் கொள்ள ரீட்டா அவளது தலைமுடியை வெட்டி ஆணைப் போல வளர்க்கிறாள். அனா என்ற அந்தச் சிறுமியின் பார்வையில் ஒபியம் விளையும் மலைக்கிராம வாழ்க்கையும் அங்கே நடைபெறும் வன்முறையும் சித்தரிக்கப்படுகின்றன.
ஜெனிஃபர் கிளெமென்ட்டின் நாவலை மையமாகக் கொண்டு டாட்டியானா ஹியூஸோ படத்தை உருவாக்கியுள்ளார் Tempestad என்ற ஆவணப்படத்தின் மூலம் சர்வதேச திரையுலகின் கவனத்தைப் பெற்ற ஹியூஸோ இயக்கிய முதல் படமிது.
இப்படத்தின் கதை உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது. – மெக்சிகோ மலைக்கிராமங்களில் காணாமல் போகும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்குப் போதைப் பொருள் கும்பலே முக்கியக் காரணம் என்கிறார்கள்

அம்மாவும் மகளும் தங்களுக்கான சவக்குழியைத் தோண்டுவதில் படம் ஆரம்பிக்கிறது. குறியீட்டுதன்மையான காட்சியது. இறப்பிற்கான அடையாளமாக இல்லாமல் தப்பித்தலுக்கான வழிமுறையாகச் சவக்குழி மாறுகிறது. போதைக் கடத்தல் கும்பலின் வாகன ஓசை கேட்டதும் அனா ஒளிந்து கொள்ள ஒடத்துவங்குகிறாள். தப்பித்து வாழ்வதன் வலியை அவள் முழுமையாக வெளிப்படுத்துகிறாள்.
மெக்சிகோவிலுள்ள ஓபியம் விளையும் மலைப்பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது போதைப்பொருள் விற்பனைக் கும்பல். அவர்கள் துப்பாக்கி முனையில் மலையை ஆட்சி செய்கிறார்கள். அங்குள்ள இளம்பெண்களைக் கடத்திக் கொண்டு போய் இன்பம் அனுபவிக்கிறார்கள். பின்பு கொன்று வீசி விடுகிறார்கள்
மலைக்கிராமப் பெண்கள் ஓபியத் தோட்டங்களில் வேலை செய்து உயிர்வாழ வேண்டிய கட்டாயம். அந்தப் பகுதியில் அரசாங்கம் அடிக்கடி சோதனை நடத்துகிறது. கார்கள் சீறிப்பாய்கின்றன. ஆனால் அவர்களால் ஓபியம் விளைவிப்பர்களுக்கு எதிராக எதையும் செய்ய முடியவில்லை. பலநேரம் காவல்துறையினர் கடத்தல்காரர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள். மலைகிராமப்பள்ளியில் பணியாற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளூர் கார்டெல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறார்கள். ஓபியம் உற்பத்தியைத் தடுக்க இராணுவம் ஹெலிகாப்டர் மூலம் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கிறது. அதில் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
ஆரம்பக் காட்சியில் எட்டு வயதான அனா வெளியூரில் பணியாற்றும் தனது தந்தையோடு செல்போனில் பேச முயல்கிறாள். தந்தை அந்த அழைப்பை ஏற்கவில்லை. செல்போன் சிக்னல் கிடைப்பதற்காக ஊரே மலையின் உச்சியில் நின்று கொண்டு டவர் தேடும் காட்சி மிக அழகானது.

அனா பயிலும் பள்ளிக்கூடம். வகுப்பறைக்காட்சிகள். அவளது ஆசிரியரின் அக்கறை. ஓபியத்தோட்டத்தில் வேலை செய்யும் பெண்களின் நிலை. ஓபியக்களிம்பை எடை போட்டு கூலி நிர்ணயம் செய்வது. அருகிலுள்ள குவாரியில் வேலை செய்பவர்களின் வாழ்க்கை எனப் படம் தொலைதூர மலைக்கிராம வாழ்க்கையைக் கண்முன்னே விரிக்கிறது.
ஆண் போலத் தலைமயிர் வெட்டப்பட்டிருந்தாலும் மூன்று சிறுமிகளும் ஆசையாக உதட்டுச்சாயம் பூசிக்கொள்கிறார்கள். ஒருவர் மனதில் இருப்பதை அடுத்தவர் கண்டுபிடிக்கும் டெலிபதி விளையாட்டினை விளையாடுகிறார்கள். கிழிந்த உதடு கொண்ட சிறுமியின் சிரிப்பு அலாதியானது. அவளுக்கு அறுவை சிகிச்சை நடக்கும் நாளில் அனா செல்வதும் அறுவை சிகிச்சை முடிந்தபின்பு அவளுடன் உரையாடுவதும் சிறப்பான காட்சிகள்.
அனாவின் தாய் ரீட்டா தனித்துவமான கதாபாத்திரம். அவளது மனவுறுதி மற்றும் மகளைப் பாதுகாக்கும் போராட்டம் படத்தில் அழுத்தமாக வெளிப்படுகிறது. படத்தில் ஒரேயொரு இடத்தில் தான் அவள் சிரிக்கிறாள். பள்ளி ஆசிரியரை விருந்துக்கு அழைக்கும் போதும் அவருக்காக உணவு தயாரிக்கும் போதும் தான் அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாள். ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிப்பதில்லை.
போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பல் அவளது வீடு தேடிவந்து மகளைப் பற்றிக் கேட்கும் காட்சியில் ரீட்டா ஆவேசமாக நடந்து கொள்ளும் விதம் மற்றும் அனாவின் எதிர்ப்பை கட்டுப்படுத்தும் முயற்சி அபாரமானது.
அனா, மரியா மற்றும் பவுலா ஆகிய மூன்று சிறுமிகளின் விளையாட்டுத்தனம் மற்றும் ரகசிய ஆசைகள் படத்தில் மிகுந்த கவித்துவமாக வெளிப்படுகிறது.

அனாவின் கண்களால் தான் அந்த உலகத்தைப் பார்க்கிறோம். ஐந்து வருடங்களில் அவளிடம் ஏற்படும் மாற்றம் மற்றும் முதிர்ச்சியைப் படம் நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறது.
போதைப் பொருள் கும்பலுக்குப் பயந்து அனா மறைவிடத்தில் ஒளிந்தபடியே தன்னைச் சுற்றி நடப்பதைக் காணுகிறாள். ஒளிந்து பார்க்கும் காட்சிகள் படத்தில் குறியீடு போலவே காட்டப்படுகிறது.
அனா தனது காதலன் மார்கரிட்டோவுடன் நடனமாடும் அந்த மாய இரவு. அதில் கிடைக்கும் சந்தோஷம். வீடு திரும்பும் போது புதரோரம் கிடக்கும் பெண்ணின் உடலைக் கண்டு அலறுவது. மூன்று சிறுமிகளும் ஆற்றில் நீந்தச் செல்வது, மார்கரிட்டோ அவளுக்குத் துப்பாக்கிச் சுடப் பயிற்சி அளிப்பது என அவளது உலகம் தனக்கான மகிழ்ச்சியையும் தவிர்க்க முடியாத நெருக்கடியினையும் கொண்டிருக்கிறது.
பள்ளி மூடப்படும் செய்தியை அறியும் போதும், இன்னொரு பெண் காணாமல் போனதைப் பற்றிக் கேள்விப்படும் போதும் அவர்கள் அதிர்ச்சி அடைவதில்லை. மாறாகத் தங்களைச் சுற்றி நடக்கும் உண்மையைப் புரிந்து கொண்டவர்களாக இயல்பான தங்கள் விளையாட்டு உலகிற்குத் திரும்புகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் டாரியேலா லுட்லோ மிகச்சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வெடிவைத்துக் குவாரியில் பாறை சரியும் காட்சி. செல்போன் டவர் தேடும் பெண்கள். இடிபாடுகளுக்குள் சிறுமிகள் சுற்றியலைவது. மலைப்பாதைகள். மரத்தில் ஊஞ்சலாடும் காட்சி. காளைச்சண்டை நடக்குமிடம். இரவு நடனக்காட்சி என டெரன்ஸ் மாலிக்கின் பாணியில் எடுக்கப்பட்ட காட்சிகள் மிகவும் அழகானவை.
மலைக்கிராமத்தில் வசிப்பவர்களையே படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். மூன்றுமுக்கிய கதாபாத்திரங்களையும் மிகப் பொருத்தமாகத் தேர்வு செய்திருக்கிறார்கள். குறிப்பாகப் பருவ பெண் அனாவாக நடித்துள்ள மரியா மெம்ப்ரெனோ சரியான தேர்வு.
காணாமல் போனவர்களின் கைவிடப்பட்ட வீடுகளைப் படம் துயரின் அடையாளச் சின்னமாகக் காட்டுகிறது. அந்தக் காட்சி ஏற்படுத்தும் மனப்பாதிப்பு ஆழமானது.
July 19, 2024
கோவை புத்தகக் கண்காட்சி
தேசாந்திரி பதிப்பகம் கோவை புத்தகக் கண்காட்சியில் அரங்கு அமைத்துள்ளது.
அரங்கு எண் 9.

ஜுலை 26 (26.07.2024) வெள்ளி முதல் 28 ஞாயிறு வரை கோவையில் இருப்பேன்.
சந்திக்க விரும்பும் வாசகர்கள், நண்பர்கள் தேசாந்திரி பதிப்பக அரங்கில் சந்திக்கலாம்.


புதிய வெளியீடுகள் :
 கெட்டி அட்டை பதிப்பு
கெட்டி அட்டை பதிப்பு

 புதிய பதிப்பு
புதிய பதிப்பு புதிய பதிப்பு
புதிய பதிப்பு புதிய பதிப்பு
புதிய பதிப்பு புதிய பதிப்பு
புதிய பதிப்பு
  பிபி.ஸ்ரீநிவாஸ் பாராட்டு
எனது விரும்பிக் கேட்டவள் சிறுகதை பி.பி.ஸ்ரீநிவாஸின் ரசிகையைப் பற்றியது. இந்தக் கதையை படித்துவிட்டு பி.பி.ஸ்ரீநிவாஸ் எனக்கு விருந்து கொடுத்துப் பாராட்டினார். விகடனில் வெளியான இக்கதையினை நூறு பிரதிகள் ஜெராக்ஸ் எடுத்து பலருக்கும் அனுப்பி வைத்தார். பின்பு அதனை சிறுவெளியீடாக அவரே வெளியிட்டார்
அதன்பிறகு அவரை அடிக்கடி சந்தித்து உரையாடினேன். திரையுலக அனுபவங்களை நிறைய பகிர்ந்து கொண்டார். அவர் ஒரு இசைமேதை. பத்து மொழிகள் அறிந்தவர்.
விரும்பிக் கேட்டவள் சிறுகதையை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
நேற்று வேறு எதையோ தேடும் போது அவர் அனுப்பி வைத்த பாராட்டுக் கடிதம் கிடைத்தது. பி.பி.ஸ்ரீநிவாஸைப் பற்றிய இனிய நினைவுகளில் ஆழ்ந்து போனேன்.
 
  July 16, 2024
அக்ஞேயாவின் முகங்கள்
புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர், கவிஞர் அக்ஞேயாவின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தேன்

அக்ஷயா முகுல் எழுதிய Writer, Rebel, Soldier, Lover: The Many Lives of Agyeya 800 பக்கங்கள் கொண்டது. விரிவாக ஆய்வு செய்து எழுதப்பட்ட நூல். இந்த நூலின் கடைசி 175 பக்கங்கள் பின்குறிப்புகள் மற்றும் உதவிய நூல்களின் பட்டியல் உள்ளது
இவ்வளவு பெரிய பட்டியலை இதற்கு முன்பு எந்த வாழ்க்கை வரலாற்று நூலிலும் கண்டதில்லை. அக்ஷயா முகுல் இந்நூலை எழுதுவதற்குச் சிறப்பு நிதிநல்கை பெற்றிருக்கிறார். இரண்டு ஆண்டுகள் பல்வேறு ஆவணக்காப்பகங்கள். தனிநபர் சேமிப்புகள். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பெற்ற தகவல்கள். கடிதங்கள். குறிப்பேடுகள் வழியாக இந்த நூலை உருவாக்கியுள்ளார்.

அக்ஞேயாவின் நமக்கு நாமே அந்நியர்கள் நாவல் தமிழில் சரஸ்வதி ராம்னாத்தால் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. கல்குதிரை அக்ஞேயாவிற்குச் சிறப்பிதழ் ஒன்றை 1994ல் வெளியிட்டிருக்கிறது. கவிஞர் சுகுமாரன் அவரது சில கவிதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். அக்ஞேயாவின் முக்கிய நாவலான சேகர் இன்று வரை தமிழில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. ஆங்கிலத்தில் வாசிக்கக் கிடைக்கிறது.

முகுல் அக்ஞேயாவை முன்வைத்து இந்தி இலக்கிய உலகம் மற்றும் அதன் முதன்மையான படைப்பாளிகள் குறித்த விரிவான சித்திரத்தை உருவாக்கியுள்ளார். அது போலவே அக்ஞேயாவின் சொந்த வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் ( உலகோடு பகிர்ந்து கொள்ளாத காதல் உறவுகள் குறித்தும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும்) பற்றியும் விரிவாக ஆய்வு செய்து எழுதியிருக்கிறார்.
அக்ஞேயாவின் இரண்டாவது மனைவியான கபிலா வாத்ஸ்யாயன் முகுலிடம் சொன்ன வார்த்தைகள் மறக்க முடியாதவை. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவின் முழுப்பரிமாணத்தையும் எவரும் தெரிந்து கொள்ள முடியாது. அது பகிர்ந்து கொள்ளத் தேவையில்லாத விஷயம். அவர் என்னைவிட்டுப் பிரிந்திருக்கலாம். ஆனால் அவரது நினைவுகள் பிரியவில்லை. அது என்னோடு மடியட்டும் என்கிறார் கபிலா.
கபிலா வாத்ஸ்யாயன் பாராளுமன்ற உறுப்பினராகவும் இந்தியப் பாரம்பரிய நடனம், கலை, கட்டிடக்கலை மற்றும் கலை வரலாறு ஆகியவற்றின் முன்னணி அறிஞராகவும் இருந்தவர்.

அக்ஞேயா என்ற புனைபெயரில் எழுதிய சச்சிதானந்த ஹிரானந்த வாத்ஸ்யாயன் உத்தரபிரதேசத்தில் குஷிநகருக்கு அருகிலுள்ள காசியாவில் பிறந்தவர். அவரது தந்தை ஹிரானந்த் சாஸ்திரி, தொல்பொருள் ஆராய்ச்சியாளர். புத்தர் இறந்த இடத்தைக் கண்டறிவதற்கான அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். அதற்காகக் காசியாவில் அவர்களின் குடும்பம் முகாமிட்டிருந்தது.அந்த முகாமில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி அக்ஞேயா பிறந்தார்.
தந்தையின் வேலை காரணமாக ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு , பாட்னா (1920), நாலந்தா (1921) மற்றும் ஊட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அவர்கள் மாறினார்கள். ஆகவே அக்ஞேயா பல்வேறு இந்திய மொழிகளைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்
ஜம்முவில் சிறப்பு ஆசிரியர்களால் அவருக்குச் சமஸ்கிருதம் மற்றும் பாரசீக மொழிகள் கற்பிக்கப்பட்டன. ஆங்கில வழி கல்வி பயின்றிருக்கிறார். லாகூரிலும் சில ஆண்டுகள் மதராஸ் கிறிஸ்துவக் கல்லூரியில் பயின்றிருக்கிறார்.
பகத் சிங்கால் ஏற்படுத்தப்பட்ட ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் ஆர்மி (HSRA) என்ற புரட்சிகர அமைப்பில் இணைந்து, இந்திய சுதந்திர போராட்ட நடவடிக்கைகளில் பங்கேற்றிருக்கிறார்
இதன் காரணமாகத் தேசத்துரோக குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற அக்ஞேயா நான்காண்டுகளை லாகூர், டெல்லி மற்றும் அமிர்தசரஸ் சிறையில் கழித்திருக்கிறார்.
இந்த நாட்களில், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் நாவல் எழுதியிருக்கிறார். அக்ஞேயா 1940 இல் சந்தோஷ் மாலிக்கை மணந்தார். அவர்களின் திருமணம் 1945 இல் விவாகரத்தில் முடிந்தது. அதன்பிறகு கபிலாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அந்த உறவும் நீடிக்கவில்லை
1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரில் இந்திய இராணுவத்தில் சேர்ந்து ராணுவ அதிகாரியாகக் கோஹிமா அனுப்பப்பட்டார். ஆனால் சில மாதங்களில் ராணுவத்திலிருந்து விலகிய அக்ஞேயா பத்திரிகையாளராகவும் இலக்கியப் பணிகளிலும் ஈடுபடத்துவங்கினார். மொழிபெயர்ப்பு மற்றும் கவிதைகளில் ஈடுபாடு காட்டி வந்தார்.1957-58 இல் ஜப்பானுக்குச் சென்ற அக்ஞேயா அங்கு அவர் ஜென் பௌத்தத்தைப் பற்றி அறிந்து கொண்டார், டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தின் இந்தி நாளிதழான நவ்பாரத் டைம்ஸின் தலைமை ஆசிரியராகச் சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களின் வருகை தரு பேராசிரியராகப் பணியாற்றிய அக்ஞேயா இந்தி கவிதை மற்றும் நவீன சிறுகதையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தியவராகக் கொண்டாடப்படுகிறார்
அக்ஞேயாவின் வாழ்க்கை வரலாற்றை எழுத முயன்ற முகுல் அதைப் புனைகதை போலவே விவரிக்கிறார். குறிப்பாக ஆரம்ப அத்தியாயங்கள் சிறுகதை போலவே எழுதப்பட்டிருக்கின்றன.

புத்தர் இறந்த இடத்தில் தனது மகன் பிறந்திருக்கிறார் என்று அக்ஞேயாவின் தந்தை பெருமைப்பட்டிருக்கிறார். பின்னாளில் பௌத்தம் தொடர்பான ஆர்வம் அக்ஞேயாவிற்கு உண்டான போது அது தந்தையின் வழியில் உருவான தேடலாகவே உணர்ந்திருக்கிறார்
ஒரு எழுத்தாளன் உலகிற்குத் தெரியப்படுத்தாமல் மறைத்தவற்றை அவனது வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறவர் வெளிப்படுத்த வேண்டுமா. அது நியாயமானதா என்ற கேள்வியை எழுப்பும் முகுல் அப்படி நடந்து கொள்ள வேண்டியதே சரி என்று குறிப்பிடுகிறார். இதில் அக்ஞேயாவிற்கும் கிருபா சென்னிற்குமான ரகசிய;க் காதலை ஆராயும் முகுல் அவர் எழுதிய கடிதங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பீகாரைச் சேர்ந்த மிகவும் புகழ்பெற்ற இந்தி நாவலாசிரியர், பணீஷ்வர்நாத் ரேணு அக்ஞேயாவுக்கு எழுதிய கடிதங்கள் வழியாக அவர்களுக்குள் இருந்த நட்பும் தேடலும் மிக அழகாக வெளிப்பட்டுள்ளது. குறிப்பாக ரேணுவின் கடைசி நாட்கள் துயரமானவை. அக்ஞேயாவிற்கும் சிஐஏவிற்குமான தொடர்பு. அவரது பத்திரிக்கையுலக அனுபவம். பல்கலைக்கழக அனுபவம். சுதந்திரப் போராட்ட நாட்கள் என்று அக்ஞேயாவின் பல்வேறு முகங்களைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் முகுல்.
லட்சியவாதமும் தேச நலனிற்காக பாடுபடுவதும் எழுத்துலகின் அடிப்படையாக இருந்த காலகட்டமது. சமூக மேம்பாட்டிற்காக எழுத்தாளர்கள் எவ்வளவு பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்பதை இதன் வழியே அறிந்து கொள்கிறோம்.
அக்ஞேயாவின் வாழ்க்கை மாற்றங்களால் நிரம்பியது. பேரலையின் ஊடாக நீந்துவது போல வாழ்க்கையை கடந்து சென்றிருக்கிறார். தாயின் மடியில் குழந்தையாக உள்ள அவரது புகைப்படம் ஒன்று முதல் அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளது. அதனைத் திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டேயிருந்தேன். அக்ஞேயா பிறந்தவுடன் அவரது எதிர்காலத்தை தந்தை கணித்துச் சொல்லிவிட்டார். அவர் சொன்னது போலவே வாழ்க்கையில் நடந்தது என்கிறார்கள்.
ஜென் பௌத்தம் அவர் மீது செலுத்திய தாக்கத்தை நமக்கு நாமே அந்நியர்கள் நாவலில் காணுகிறோம். அந்த நாவல் மௌனத்தின் எடையை விவரிக்ககூடியது.
இதனை வாசித்து முடிக்கும் போது தமிழ் எழுத்தாளர்கள் எவருக்கும் இவ்வளவு விரிவான வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டதில்லையே என்ற ஆதங்கம் மனதில் எழவே செய்கிறது.
அக்ஞேயாவின் கவிதைகள்
தமிழில் சுகுமாரன்
வீடுகள்
1
இரண்டு கதவுகளை ஒன்றிணைக்கும்
அறை என் வீடு
இரண்டு கதவுகளுக்கு இடையேயிருக்கும்
காலியிடம் என் வீடு
எப்படிப் பார்த்தாலும்
நீங்கள் வீட்டைக் கடந்து பார்க்கலாம்
மறு பக்கத்துக் காட்சியைப் பார்க்கலாம்
ஆனால் வீட்டைப் பார்க்க முடியாது
நான் தான் என் வீடு
என் வீட்டில் எவரும் வசிக்கவில்லை
என் வீட்டில் நான் வசிக்கிறேனா?
எப்படிப் பார்த்தாலும்…
2
உங்கள் வீடு
அங்கே சாலைமுடியுமிடத்தில்
ஆனால் நான் எப்போதும் போய்க்கொண்டேயிருக்க வேண்டும்
அப்படியானால் சாலை எங்கே முடிகிறது?
உங்கள் வீடு…
3
மற்றவர்களின் வீடுகள்
உள்நோக்கித் திறக்கின்றன
அவை வெளியிட முடியாத ரகசியங்களுக்குள் திறக்கின்றன
மற்றவர்களின் வீடுகள் நகரங்களில்
நகரங்கள் மற்றவர்களின் வீடுகளில்…
4
வீடுகள், நாம் செல்லும் வீடுகள் எங்கே?
வீடுகளைப் பற்றிய எல்லாப் பேச்சுக்களும்
வீடுகளைப் பொறுத்தவரை புதிர்கள்தாம்
பிறரிடம் நாம்
வீடுகளைப் பற்றிப் பேசுவதில்லை
பிறரிடம் நாம் பேசுவது
வீடுகளைப் பற்றியுமல்ல.
@
திசைகள்
என்றும் காலையில் கொஞ்ச நேரம்
நான் இறந்த காலத்தில் வாழ்கிறேன்
ஏனெனில்
என்றும் மாலையில் கொஞ்ச நேரம்
நான் எதிர் காலத்தில் சாகிறேன்.
(நன்றி : வாழ்நிலம் வலைப்பக்கம்)
July 12, 2024
ஒப்லோமோவின் கனவுகள்
A Few Days from the Life of I.I. Oblomov 1980 வெளியான ரஷ்யத் திரைப்படம். Nikita Mikhalkov இயக்கியது

இவான் கோன்சரோவ் எழுதிய ஒப்லோமோவ் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கபட்டுள்ளது. ரஷ்ய பிரபுத்துவத்தினைக் கேலி செய்யும் விதமாகவே இந்த நாவலை கோன்சரோவ் எழுதியிருக்கிறார்.
மேடை நாடகம் போலவே படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. காட்சி அமைப்புகள் மற்றும் நடிப்பு இரண்டும் மேடையில் காண்பது போலவே இருக்கிறது.

இலியா இலிச் ஒப்லோமோவ் முப்பது வயதுக்குக் குறைவானவர், நடுத்தர உயரம் மற்றும் இனிமையான வெளித்தோற்றம் கொண்டவர். தன்னைச் சுற்றி எந்த மாற்றமும் வந்துவிடக்கூடாது என்று நினைப்பவர். பாதுகாப்பான வளையத்திற்குள் வாழ விரும்புகிறவர்.
தனது கட்டிலின் அடியில் விழுந்த கைக்குட்டையை எடுப்பதற்குக் கூடப் பணியாளரை அழைப்பவர். படுசோம்பேறி. இரவு அங்கியிலே எப்போதுமிருப்பார். சதா படுக்கையில் தூங்கிப் பொழுதைக் கழிப்பதில் விருப்பமுள்ளவர்.
அவரைப் பற்றி விவரிக்கும் போது கோன்சரோவ் மிக அழகாக எழுதியிருக்கிறார்.
“திடீரென ஒரு எண்ணம் ஒரு பறவையின் சுதந்திரமான சிறகடிப்பை போல அவரது முகத்தில் அலைந்து திரிந்து, கண்களில் ஒரு கணம் படபடக்கும், பாதித் திறந்த உதடுகளில் குடியேறி, அவரது நெற்றியின் ரேகைகளில் ஒரு கணம் பதுங்கியிருக்கும். பின்னர் அது மறைந்துவிடும் “
போதுமான உடற்பயிற்சி இல்லாததால், அல்லது சுத்தமான காற்று இல்லாததால், அல்லது இரண்டும் இல்லாததால், அவர் வயதுக்கு மீறிய தோற்றம் கொண்டிருந்தார். சந்தேகம், அவநம்பிக்கை மற்றும் பயம் மூன்றும் அவரைச் சூழ்ந்திருந்தன. அவர் வீட்டில் இருக்கும் போதெல்லாம் – கிட்டத்தட்ட எப்போதும் அவர் வீட்டில் இருந்தார் – அவர் தனது கட்டிலில் படுத்துக் கொள்வதில் நேரத்தை செலவிட்டார்
19ம் நூற்றாண்டு ரஷ்ய பிரபுகளின் வாழ்க்கை இப்படியாகத் தானிருந்தது. அந்த வகையில் ஒப்லோமோவ் ஒரு உதாரண பாத்திரம்.
இவான் கோன்சரோவ் அரசு அதிகாரியாக இருந்தவர். வசதியான வணிகக் குடும்பத்தில் பிறந்தவர். கோன்சரோவ் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் செப்டம்பர் 15, 1891ல் பீட்டர்ஸ்பர்க்கில் இறந்தார்.
••

ஒப்லோமோவ் தனது அறை அல்லது படுக்கையை விட்டு வெளியேறுவது அரிது, அவருக்குத் தூங்குவதற்கும் தனது குழந்தைப் பருவ வீட்டைப் பற்றிக் கனவு காண்பதற்குமே நேரம் போய்விடுகிறது.
பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஒப்லோமோவின் வீட்டிலிருந்து படம் துவங்குகிறது. ஜாகர், ஜாகர் என்று வேலைக்காரனைச் சப்தமாகக் கூப்பிடுகிறார் ஒப்லோமோவ். பக்கத்து அறையில் உள்ள ஜாகருக்கு அந்த அழைப்பின் பொருள் புரிகிறது. ஒரு அவசரமும் இல்லாமல் மெதுவாக எஜமானரைக் காண வருகிறான். அந்த அறை தூசு படிந்திருக்கிறது. அழுக்கடைந்த இரண்டு சோஃபாக்கள், நாற்காலியின் கால் உடைந்து காணப்படுகிறது. எங்கும் குப்பை, தூசி. காலம் உறைந்துவிட்டது போலிருக்கிறது.
படுக்கையில் கிடந்தபடியே ஒப்லோமோவ் தனக்கு வந்த கடிதம் பற்றிக் கேட்கிறார். அதைப் படிக்கக் கூட அவர் எழுந்து உட்காருவதில்லை. அவரது பண்ணையில் அந்த வருடம் விளைச்சல் குறைவாக உள்ளது. நிதி நிலைமை மோசமடைந்து வருவதாகவும், சில முக்கிய முடிவுகளை எடுக்க அவர் நேரில் வருகை தர வேண்டும் என்றும் மேலாளர் எழுதியிருக்கிறார்.
அது ஒப்லோமோவிற்குக் கவலை அளிக்கிறது. நேரடியாகப் பண்ணைக்குச் சென்று விசாரித்து வர வேண்டும் என நினைக்கிறார் ஆனால் சோம்பேறித்தனம் வெளியே போவதைத் தடுக்கிறது
கசாப்புக் கடைக்காரன், காய்கறிக் கடைக்காரன், சலவைத் தொழிலாளி, பேக்கரி ஆகியோரால் அனுப்பப்பட்ட கணக்குகளைப் பார்த்துப் பணம் கொடுக்க வேண்டும். அது எரிச்சலை உருவாக்குகிறது.
சிறுவயதிலிருந்தே ஒப்லோமோவ் அப்படித்தான் வளர்க்கபட்டிருக்கிறார். வசதியான வீட்டுச்சூழல் அவரை முழுச் சோம்பேறியாக மாற்றியுள்ளது.

இப்படியே படுக்கையில் கிடந்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று ஜாகர் கேட்கிறான். தானும் மற்றவர்களும் ஒன்றில்லை எனக் கோவித்துக் கொள்ளும் ஒப்லோமோவ் அந்தக் கவலையில் மீண்டும் உறங்க ஆரம்பிக்கிறார்.
அரைமணி நேரத்தின் பின்பு அவரை எழுப்புகிறான் ஜாகர். ஆனால் எழுந்து கொள்ள மறுத்து அடம்பிடிக்கிறார் ஒப்லோமோவ்.
அவர் எப்போதும் படுக்கையில் தான் சாப்பிடுகிறார். படுக்கையில் கிடந்தபடியே தன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார். திடீரெனத் தனது குறைகளைப் பற்றி உணரும் அவர் அதை மாற்ற உடனே எழுந்து செயல்பட வேண்டும் என்றும் நினைக்கிறார். ஆனால் உடல் ஒய்வையே நாடுகிறது.
அவரைச் சுறுசுறுப்பாக வைக்கும் முயற்சியில் நண்பரான ஆண்ட்ரி இவனோவிச் ஸ்டோல்ட்ஸ் இறங்குகிறார். ஒப்லோமோவ் எழுந்து குளித்துப் புதிய உடை அணிந்து கொண்டு வெளியே செல்ல வேண்டும் என்று கட்டாயப்படுத்தித் தயார் படுத்துகிறார். வழக்கமாகத் தரப்படும் உணவிற்கு மாற்றாக எளிய காய்கறி மற்றும் பழத்துண்டுகளை உணவாகத் தருகிறார்
ஸ்டோல்ட்ஸின் தோழியான ஓல்கா என்ற இளம் பெண் ஒப்லோமோவிற்கு அறிமுகமாகிறாள். அவளது அழகில் மயங்குகிறார். ஸ்டோல்ட்ஸ் வணிகத்திற்காகப் பல்வேறு நாடுகளுக்குத் தொடர்ந்து பயணம் செய்கிறார். இந்நிலையில் ஓல்காவின் அருகிலே இருப்பதற்காக ஒப்லோமோவ் புதிய வீடு எடுத்துக்கொள்கிறார் அவளைக் காதலிக்கவும் துவங்குகிறார்.

அவளால் மாற்றத்திற்கு உள்ளாகிறார். ஆனால் மற்றவர்களைப் போல உலகியல் விஷயங்களில் அவரால் தீவிரமாக ஈடுபட முடியவில்லை. அவர் தன்னைச் சுற்றிய மனிதர்களிடமிருந்தும் சமூகத்திடமிருந்தும் விலகி இருக்கவே ஆசைப்படுகிறார். சிறிய பிரச்சனை என்றாலும் மனவருத்தம் கொண்டுவிடுகிறார், செயலற்ற தன்மை மற்றும் பயத்தின் அடையாளமாக விளங்கும் ஒப்லோமோவ் ஆமை தனது ஒட்டிற்குள் வாழ்வது போன்ற ஒரு வாழ்க்கையை விரும்புகிறார்.
ஒரே இடத்தில் நிலை கொண்டுவிட்ட தேரை ஒட வைப்பது போல அவரிடம் மாற்றத்தை ஏற்படுத்துகிறாள் ஓல்கா. ஆனால் அவரோடு சேர்ந்து வாழ முடியாது என உணர்ந்து திருமணம் செய்து கொள்ளவில்லை.

வாழ்வில் புதிய மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். ஆனால் மாற்றம் ஏற்படும் போது அதை ஏற்றுக் கொள்வதில்லை. புகார் சொல்கிறோம். தவிர்க்க முயலுகிறோம். நமக்குள் ஒரு ஒப்லோமோவ் எப்போதுமிருக்கிறார். அவர் உலகம் தன்னைக் கையைப் பிடித்து அழைத்துப் போய் வழிகாட்ட வேண்டும் என்று விரும்புகிறார். புதிய சூழலை, புதிய செயல்பாடுகளை மேற்கொள்ள முயன்று அதில் வெற்றிபெற முடியாமல் பழைய ஒப்லோமோவாகவே திரும்புகிறார்.
அவரது கவலைகள் அனைத்தும் ஒரு பெருமூச்சாக மாறியது அக்கறையின்மை தூக்கத்தில் கரைந்து போனது என்றே கான்சரோவ் குறிப்பிடுகிறார்.
கோன்சரோவ் மூன்று நாவல்கள் எழுதியிருக்கிறார். அவரது சொந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பு கொண்டதாகவே அந்த நாவல்கள் இருந்தன.
ஒப்லோமோவ் போன்றே பெலிகோவ் என்ற கதாபாத்திரத்தை ஆன்டன் செகாவ் எழுதியிருக்கிறார். அவரும் இப்படி வீட்டின் ஜன்னலை மூடிக் கொண்டு உள்ளே வாழும் ஒருவரே.
படத்தில் வேலைக்கார ஜாகர் சிறப்பாக நடித்துள்ளார். அவரும் ஒப்லமோவ் போன்ற சோம்பேறியே. ஆனால் தனது எஜமானன் மீது அதிக அன்பு கொண்டவர். இந்த இருவருமே செர்வாண்டஸின் டான் குவிக்ஸாட் சான்சோ பான்சாவை நினைவுபடுத்துகிறார்கள்.
ரஷ்யாவின் அன்றைய எழுத்தாளர்கள் உறுதியற்ற ஒப்லோமோவை ஒரு ரஷ்ய ஹாம்லெட்டாகக் கண்டனர் என்று குறிப்பிடுகிறார் லியோ டால்ஸ்டாய். அவருக்குப் பிடித்தமான நாவலது.
நான் வாழும் வாழ்க்கையை ஒருபோதும் புரிந்து கொள்ளவில்லை அல்லது அது எனக்கு ஒருபோதும் பொருந்தவில்லை என்று நாவலின் ஒரு இடத்தில் ஒப்லோமோவ் சொல்கிறார். அந்த வரியே அவரது வாக்குமூலம்.
எகிப்தில்
எனது தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகள் அரபு மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.


எகிப்தில் உள்ள பதிப்பகம் இதனை வெளியிடுகிறது
திருச்சியில்
நாளை திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளியில் நடைபெறும் கனவுமெய்ப்பட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.
 
  July 10, 2024
காஃப்கா பரிசுப்பொருட்கள்
நண்பர் ஆம்பூர் அசோகன் சமீபத்தில் பிராக் நகருக்குச் சென்றிருந்தார்.

காஃப்கா நூற்றாண்டுக் கொண்டாட்டங்களை நேரில் கண்டு மகிழ்ந்திருக்கிறார். காஃப்கா அருங்காட்சியம் மற்றும் நகரிலுள்ள காஃப்காவின் சுழலும் தலை, புத்தகக் கடைகள், நூலகம் குறித்து வியந்து புகைப்படங்களை அனுப்பி வைத்திருந்தார்





அங்கிருந்து எனக்காக சில பரிசுப்பொருட்களை வாங்கி வந்திருக்கிறார். இன்று அவற்றை அனுப்பி வைத்திருந்தார். அவருக்கு எனது அன்பும் நன்றியும்.

புதுடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பயின்ற அசோகன் தேர்ந்த இலக்கிய வாசகர். சர்வதேச இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர்.
எலியின் பாஸ்வேர்ட்/ ஆங்கிலத்தில்
எனது எலியின் பாஸ்வேர்ட் சிறார் நூலை மேகலா உதயசங்கர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.
இந்த நூல் கோவை புத்தகத் திருவிழாவில் வெளியாகிறது. தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது
 
  July 8, 2024
இந்து தமிழ் நாளிதழில்
இந்து தமிழ் நாளிதழில் (07.07.24) மகாபாரத நிகழ்வை மையமாகக் கொண்டு நான் எழுதிய சிறுகதை குறித்து சுப்பிரமணி இரமேஷ் தனது தொன்மம் தொட்ட கதைகளில் எழுதியிருக்கிறார்.
ஆழ்ந்து வாசித்துச் சிறப்பாக எழுதியுள்ள சுப்பிரமணி இரமேஷிற்கு மனம் நிறைந்த நன்றி.

S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers
 


