S. Ramakrishnan's Blog, page 38
March 15, 2024
என்டோனியின் கனவு
லுசினோ விஸ்காண்டியின் La Terra Trema 1948 ஆம் ஆண்டு வெளியானது. இத்தாலியின் மீனவ கிராமம் ஒன்றின் வாழ்க்கையை யதார்த்தமாக, கலைநேர்த்தியுடன் படமாக்கியிருக்கிறார் விஸ்காண்டி.

இப்படம் சிசிலியன் மீனவர்களின் வாழ்க்கையை நிஜமாகச் சித்தரிக்கிறது என்று வெனிஸ் திரைப்படவிழாவில் விருது பெற்றிருக்கிறது.
ஜியோவானி வெர்காவின் நாவலை அடிப்படையாகக் கொண்டு படம் உருவாக்கபட்டிருக்கிறது. தொழில்முறை சாராத நடிகர்களைப் பயன்படுத்தியிருக்கிறார் என்பதே படத்தின் பலம்..
மீனவர்கள் கலையாத இருளுக்குள் வலையோடு கடலுக்குச் செல்வது. மீனவ குடும்பத்தின் நெருக்கடிகள். உணவு தயாரிக்கும் விதம். குடியிருப்பின் நெருக்கடியான சூழ்நிலை. பிடித்துவரப்படும் மீனுக்கு விலையில்லாமல் போவது. இடைத்தரகர்கள் மீனவர்களை ஏமாற்றுவது என கடலோர வாழ்க்கையைப் ஆவணப்படம் போல துல்லியமாக சித்தரித்துள்ளது சிறப்பாகும்.
இத்தாலியின் சிசிலியின் கிழக்குக் கடற்கரையில் உள்ள சிறிய மீன்பிடி கிராமமான அசி ட்ரெஸாவில் கதை நடைபெறுகிறது. அங்குள்ள வாலாஸ்ட்ரோ குடும்பத்தின் கதையைச் சொல்கிறது.

இரண்டாம் உலகப் போரில் ராணுவ வீரனாகப் பணியாற்றிவிட்டு ஊர் திரும்புகிறான் என்டோனி. தனது குடும்பத் தொழிலான மீன்பிடிப்பதில் ஈடுபடுகிறான். உள்ளூரில் அவனுக்குக் காதலியிருக்கிறாள்.
என்டோனியின் தாத்தா அவர்கள் சம்பாதித்து வரும் பணத்தைச் சரியாகப் பங்குபிரித்துத் தருகிறார். எளிமையான அந்த வாழ்க்கையைச் சந்தோஷமாகவே என்டோனி அனுபவிக்கிறான்.
ஆனால் தங்களை வணிகர்கள் ஏமாற்றுகிறார்கள். மீனுக்கு உரிய விலையைத் தர மறுக்கிறார்கள் என்று உணர்ந்து கோபம் கொள்கிறான். அவர்களை எதிர்த்துச் சண்டை போடுகிறான்.
இதை என்டோனியின் தாத்தா கூட விரும்பவில்லை. அவர் என்டோனியிடம், “வணிகர்கள் எப்போதுமே சரியானவர்கள்” என்று சொல்கிறார். வெளிப்படையாக, பழைய தலைமுறையினர் தங்கள் அவலநிலையை விதியாக ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதை என்டோனி உணர்ந்து கொள்கிறான்.
மீனுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்று அறிந்த போதும் மீனவர்களால் வணிகர்களைப் பகைத்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் குறைந்த சம்பளத்தில் குடும்பத்தை நடத்த வேண்டும் என்பதுடன்,மோசமான வானிலையிலும் கூட, கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டும்.
ஒரு நாள் ஆத்திரம் அதிகமாகி வணிகர்கள் வைத்திருந்த தராசினை பிடுங்கி கடலில் வீசுகிறான். இதனால் மோதல் ஏற்படுகிறது. காவலர்கள் என்டோனியை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். அவன் மீனவர்களுக்குச் சங்கம் உருவாக்கபட வேண்டும் என்று வாதிடுகிறான். சுரண்டப்படுவதை எதிர்த்துப் போராட மீனவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அது ஒன்றே தீர்வு என்கிறான்.

என்டோனியின் சகோதரி லூசியா காதல் வசப்படுவது. அவளது காதலன் கட்டிட வேலை செய்தபடியே காதல்மொழி பேசுவது, என்டோனி தனது காதலி நெட்டாவைத் தேடிச் சென்று உரையாடுவது மிக அழகான காட்சிகள்
நெட்டாவின் பெற்றோர் தங்கள் திருமணத்திற்கு ஒப்புதல் தர வேண்டுமானால் தான் அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என என்டோனி உணர்ந்து கொள்கிறான். ஆகவே சொந்தமாக ஒரு படகு வாங்குவதற்காகக் குடியிருந்த வீட்டை அடமானம் வைக்கிறான். ஆரம்பத்தில் நிறைய மீன் கிடைக்கிறது. அவர்கள் சந்தோஷமாகக் கொண்டாடுகிறார்கள்.
ஆனால் எதிர்பாராத புயலில் அவனது படகு சிக்கிக் கொண்டுவிடுகிறது. காணாமல் போன அவர்களைக் குடும்பம் தேடுகிறது. புயலில் படகு பழுதடைகிறது. அதைச் சரி செய்ய அவர்களிடம் பணமில்லை.மீண்டும் பிறருக்காக வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இத்துடன் கடனும் சேர்ந்து கொள்ளவே அவனது கனவு தோற்றுப் போகிறது. வலஸ்ட்ரோ குடும்பத்தின் தோல்விகளுக்குப் பிறகு கிராம மக்கள் அவர்களை ஒதுக்கிய விதம் அதிர்ச்சிகரமானது.
புயலில் சிக்கிக் காணாமல் போன என்டோனியின் படகு திரும்பி வருகிறதா எனக் காணுவதற்காகக் கடற்கரையில் வலஸ்ட்ரோ பெண்கள் காத்திருக்கும் காட்சி மறக்கமுடியாதது.

வலஸ்ட்ரோ குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கிக் கொள்கிறது. ஊரைவிட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் அதில் என்டோனிக்கு விருப்பமில்லை. முடிவில் தனது தோல்வியை அவன் கசப்போடு ஏற்றுக் கொள்கிறான்.
இனவரைவியல்ஆவணம் போலக் கதை நிகழும் இடத்தையும் நிகழ்வுகளையும் ஒளிப்பதிவாளர் ஜி.ஆர். ஆல்டோவின் கேமிரா நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறது. அபாரமான காட்சிக் கோணங்கள். நகர்வுக்காட்சிகள். படத்தினை இன்றும் புதியதாக வைத்திருப்பது அதன் தேர்ந்த ஒளிப்பதிவு மற்றும் தொழில்முறை சாராத நடிகர்களின் உணர்ச்சி வெளிப்பாடேயாகும்.
March 14, 2024
குள்ளனும் டாவின்சியும்
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான பர்லாகர் க்விஸ்டின் குள்ளன் நாவலை தி.ஜானகிராமன் மொழியாக்கம் செய்திருக்கிறார். சிறப்பான மொழியாக்கம். நாவலின் கவித்துவமான வர்ணனைகள் மற்றும் தத்துவ எண்ணங்களை நேர்த்தியாகத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

The Dwarf நாவல் 1944ல் ஸ்வீடிஷ் மொழியில் வெளியானது. 1945ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. 1986 அக்டோபரில் சமுதாயம் பதிப்பகம் குள்ளன் நாவலை வெளியிட்டிருக்கிறது.

இந்த நாவலில் ஓவியர் லியோனார்டோ டாவின்சி முக்கியக் கதாபாத்திரமாக இடம்பெற்றுள்ளார். மிலன் பிரபுவான லுடோவிகோ ஸ்ஃபோர்சாவின் அழைப்பில் டாவின்சி மேற்கொண்ட கலைப்பணிகளையே நாவல் விவரிக்கிறது.
நாவலில் டாவின்சி கதாபாத்திரத்தின் பெயர் பெர்னார்டோ. இளவரசன் லியோனின் நண்பராகவும் ஆலோசகராகவும், குருவாகவும் சித்தரிக்கப்படுகிறார். டாவின்சியின் தோற்றம் , அறிவியலில் அவருக்குள்ள ஈடுபாடு, உடற்கூறியல் பற்றிய அவரது ஆய்வுகள். புதிய ஆயுதங்களை உருவாக்க முயன்ற நிகழ்வுகள், பிரான்ஸிஸ்கன் மடத்தின் சுவரில் டாவின்சி வரைந்த ஓவியம் போன்றவற்றைப் பர்லாகர் க்விஸ்ட் தனது நாவலில் குறிப்பிடுகிறார்

குள்ளன் எழுதிய நாட்குறிப்பு போலவே நாவல் விவரிக்கப்படுகிறது. ஒருவகையில் இது அவனது சுயசரிதை. . அவன் இளவரசன் லியோனின் விளையாட்டுத் துணையைப் போல அரண்மனையில் வசிக்கிறான். இளவரசன் போலவே உடை அணிந்திருக்கிறான்.
இரண்டரை அடி உயரம். நல்ல உடற்கட்டு. தைரியசாலி. குத்துச்சண்டையில் ஆர்வம் கொண்டவன். மற்ற குள்ளர்களைப் போல அவன் கோமாளியாக இருக்க விரும்பவில்லை. அப்படி யாராவது தன்னை நடத்த முயன்றால் கோவித்துக் கொள்கிறான். தன்னை ஒரு போர்வீரனாகக் கருதும் குள்ளன் இளவரசனுடன் போர்களத்திற்குச் செல்கிறான். சண்டையிடுகிறான். தன்னை போன்ற ஒரு குள்ளனைக் கொல்கிறான். குற்றவுணர்வே இல்லாமல் நடந்து கொள்கிறான்.
உருவத்தால் சிறியவராக இருப்பதால் தங்களைக் குழந்தைகளோடு விளையாடச் சொல்கிறார்கள். தனக்குக் குழந்தைகளைப் பிடிக்கவே பிடிக்காது என்கிறான் குள்ளன்.
அவமானத்தாலும் சிறுமைகளாலும் நிரம்பிய அவனது வாழ்க்கையை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவன் தனது இழிவான வாழ்வை வெறுக்கிறான். தன்னை அரவணைத்துக் காத்து வரும் இளவரசனையும் வெறுக்கிறான்.
யாவரையும் விட இளவரசியை அதிகம் வெறுக்கிறான். அதற்கு முக்கியக் காரணம். அவளது கள்ளக்காதல். மிகு காமம். அன்றாடம் அவள் தரும் காதற் கடிதங்களைக் கொண்டு செல்லும் பணி அவனுடையது. இந்த இழிந்த காரியத்தில் தன்னை ஏன் ஈடுபடுத்துகிறாள் என்ற கோபம் அவனுக்குள்ளிருக்கிறது. ஒருவேளை மன்னரால் கண்டுபிடிக்கபட்டால் தண்டிக்கப்படுவோமே என்ற பயமும் அவனிடம் இருக்கிறது. ஆனால் இளவரசியைப் போலவே அவனும் பாசாங்க நடந்து கொள்கிறான்
இளவரசிக்கு எப்படி இத்தனை காதலர்கள். அவள் ஏன் இப்படி சரசமாடுகிறாள் அதை ஏன் இளவரசன் கண்டு கொள்வதேயில்லை என்று மனதிற்குள் ஆத்திரமடைகிறான்.

குள்ளனை ஒரு விளையாட்டுப் பொம்மை போலவே இளவரசி நடத்துகிறாள். தனது அந்தரங்கம் யாவையும் பகிர்ந்து கொள்கிறாள். அவன் முன்னே ஆடைகள் நெகிழ நடக்கிறாள். படுக்கையில் ஆடையில்லாமல் கிடக்கிறாள். அது குள்ளனை எரிச்சல் படுத்துகிறது. தன்னை அவள் மனிதனாகவே நினைக்கவில்லை என்று உணருகிறான்.
குள்ளனுக்கு அவனைப் போலவே குள்ளமான ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வைக்க இளவரசி முயலுகிறாள். அதை அவனால் ஏற்க முடியவில்லை. அவனது கூற்றுப்படி, குள்ளர்கள் மலட்டுத்தன்மை கொண்டவர்கள். எனவே இனப்பெருக்கம் சாத்தியமற்றது ஆகவே அவர்களுக்குக் காதல் தேவையற்றது.
அரண்மனையின் போலித்தனங்களையும் அபத்தமான நடவடிக்கைகளையும் காணும் குள்ளன் தனக்குப் பிடிக்காதவர்களைக் கொல்ல விரும்புகிறான். சந்தர்ப்பம் கிடைக்கும் போது தனது கோபத்தை வெளிப்படுத்துகிறான்.
குள்ளர்களுக்கு அவன் ஞானஸ்நானம் செய்து வைக்கும் போது பித்தேறியவன் போல நடந்து கொள்கிறான். விருந்தினர்கள் பயந்து போகிறார்கள். அந்தக் காட்சி லூயி புனுவலின் திரைப்படம் காணுவது போன்ற அனுபவத்தை தருகிறது.
தவறான நடத்தை காரணமாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான். அப்போது அவனது கையில் மாட்டுவதற்கு ஏற்றார் போல விலங்கு இல்லை என்று தெரிய வருகிறது. இளவரசன் அவனுக்காக புதிய விலங்கு ஒன்றைச் செய்யச் சொல்கிறான். அது பின்னாளில் உபயோகமாகிறது.
மனித மனதின் விசித்திரங்களை குள்ளன் நன்றாக அறிந்திருக்கிறான். குறிப்பாக ஒருவரின் தீய எண்ணங்களைப் பார்வையிலே உணர்ந்துவிடுகிறான். இது அவனுக்குப் பலநேரம் நன்மையாகவும் சில நேரம் தீமையாகவும் முடிகிறது.
அவனால் புரிந்து கொள்ளப்பட முடியாத ஒரே மனிதர் ஞானியைப் போலிருந்த பெர்னார்டோ. அவர் ஓவியம் வரைகிறார். இறந்த உடலை ஆராய்ச்சி செய்கிறார். புதிய போர் கருவிகளை உருவாக்குகிறார். அவரும் இளவரசரும் பேசிக் கொள்வதைக் கேட்கும் போது குள்ளனுக்கு வியப்பாக இருக்கிறது.
இளவரசன் ஒரு மாணவன் போலப் பணிவாக நடந்து கொள்வதையும் பெர்னார்டோ உலகிலுள்ள சகல விஷயங்கள் குறித்தும் ஞானம் கொண்டிருப்பதையும் கண்டு குள்ளன் ஆச்சரியப்படுகிறான்.

ஒரு நாள் குள்ளனைத் தனது அறைக்கு வரவழைத்து அவனது உடைகளைக் களையச் சொல்லி படம் வரைகிறார் பெர்னார்டோ. குள்ளன் அதனை அத்துமீறிய செயலாக் கருதுகிறான். செத்த உடலை ஆராய்ச்சி செய்வது போலத் தன்னையும் அவர் ஆராய்ச்சி செய்வதாகக் கருதுவதாக நினைக்கிறான். தனது எதிர்ப்பை காட்ட உதைக்கிறான். ஆனால் பலவந்தமாக அவனது உடைகளைக் களைந்து அவனை ஓவியம் வரைகிறார்.
குள்ளனை வைத்தே தனது எதிரிகளுக்கு விஷம் கொடுக்கிறான் இளவரசன். அந்தப் பணியை விருப்பத்துடன் குள்ளன் மேற்கொள்கிறான். பழிவாங்குவதற்குத் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பம் என்றே நினைக்கிறான்.
டான் ரிக்கார்டோவின் மரணத்தின் விளைவாக இளவரசி மன உளைச்சலுக்கு ஆளாகிறாள். குள்ளனின் முன்பாக இளவரசி மண்டியிட்டு பாவமன்னிப்பு கேட்கிறாள். அவளது பாவங்களை மன்னிக்க முடியாது என்று குள்ளன் கூச்சலிடுகிறான். இளவரசி கண்ணீர் விட்டு தனது மனத்துயரை வடித்துக் கொள்கிறாள்.
குள்ளனால் எவரிடத்தும் அன்பு காட்ட முடியவில்லை. துரோகமும் போலித்தனமும் கொண்ட அரண்மனை வாழ்க்கையை அவன் வெறுக்கிறான்.
குள்ளனுக்கும் இளவரசிக்கும் இடையேயான உறவு தெளிவற்றது, அவள் மீது பொறாமை கொண்டிருக்கிறான். தன்னிடம் அவள் மன்றாடும் தருணத்தில் குள்ளன் மகிழ்ச்சி அடைகிறான். அந்த நிமிஷத்தில் அவன் தன்னைக் கடவுளைப் போல உணருகிறான்.
எந்த இளவரசரும் குள்ளன் இல்லாமல் இருக்க முடியாது. அவர்களுக்கு விளையாட்டு பொம்மைகளை விடவும் அவனைப் போன்ற மனிதர்களே தேவை என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறான்.
இளவரசர் லியோன் புத்திசாலி. அரசியலில் சாதுரியமாகக் காய் நகர்த்தத் தெரிந்தவன். மக்களின் மதிப்பைப் பெற எதையும் செய்பவன். இளவரசியைப் போலவே அவனும் கள்ளக்காதலில் திளைக்கிறான். அவன் காதலியோடு துயிலும் அறையைத் தேடிச் சென்று குள்ளன் ரகசியத் தகவலைச் சொல்லும் பகுதி நாவலில் முக்கியமானது.
குள்ளன் நாவலில் பெர்னார்டோ ஒரு மேதையாகச் சித்தரிக்கப்படுகிறார். அவர் நன்மை தீமை என இரண்டிற்கும் பங்களிக்கிறார். விஞ்ஞானமும் கலையும் பெர்னார்டோவால் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகின்றன

பர்லாகர் க்விஸ்ட் ஓவியம் வரையக் கூடியவர். ஆகவே இத்தாலிய மறுமலர்ச்சி கால வரலாற்றை தொட்டுச் செல்லும் தனது நாவலில் டாவின்சியை முக்கியக் கதாபாத்திரமாக உருவாக்கியிருக்கிறார். அறிவும் போதமும் குமிழிடும் தெளிந்த ஊற்றின் முன் அமர்ந்திருப்பது போல இளவரசன் நடந்து கொள்வதாக நாவலில் எழுதியிருக்கிறார். இது டாவின்சியைப் பற்றிய சரியான மதிப்பீடு
தங்கள் எதிரியான ஜியோவானி ஏஞ்சலிகாவுடன் உறங்குவதைக் குள்ளனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதை நள்ளிரவில் இளவரசரைனை தேடிச் சென்று அவனே வெளிப்படுத்துகிறான். அந்த வகையில் ஏஞ்சலிகாவின் தற்கொலைக்குக் குள்ளனே காரணமாக இருக்கிறான்.
தனது எந்த செயலையும் அவன் குற்றமாக நினைக்கவில்லை. அவற்றை விரும்பியே செய்கிறான். தண்டனையை ஏற்றுக் கொள்கிறான். தீமையின் மலரைக் கையில் ஏந்தியபடி நிற்கும் குள்ளன் கதாபாத்திரம் தனித்துவமானது.
மறுமலர்ச்சி கால இத்தாலியைப் பற்றிய இந்த நாவல் இன்று வாசிக்கப்படும் போது சமகாலத்தின் அரசியல் நிகழ்வுகளை. போருக்கான காரணங்களை, தனிமனித வீழ்ச்சியைப் பேசுவதாகவே உணர முடிகிறது.
“குள்ளர்களுக்குத் தாய்நாடு, பெற்றோர் என்று ஒன்றும் கிடையாது“ என்று நாவலின் ஒரு இடத்தில் குள்ளன் சொல்கிறான். அவனை இருபது பணத்திற்கு விற்றுவிட்டாள் அவனது அம்மா. அந்தப் பணத்தில் மூன்று முழத்துண்டும், ஆட்டு மந்தைக்கு ஒரு காவல் நாயும் வாங்கிக் கொண்டாள். இவ்வளவு தான் அவனது மதிப்பு.
“நட்சத்திரங்கள் தங்கள் சொந்த இருள் வழியே போய்க்கொண்டேயிருக்கின்றன“ என்று நாவலில் ஒரு வரி வருகிறது. அது தான் குள்ளனின் வாழ்க்கை.

பர்லாகர் க்விஸ்டிற்கு 19 51ல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட போது அவரது வீட்டு வாசலில் நூற்றுக்கணக்கான பத்திரிக்கையாளர்கள் திரண்டிருந்தார்கள். எவரையும் சந்திக்க மறுத்துவிட்ட பர்லாகர் க்விஸ்ட் தனது எழுத்தில் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிவிட்டேன். அதைத்தாண்டி பத்திரிக்கையாளர்களிடம் சொல்வதற்கு எதுவுமில்லை என்று அறிவித்தார்.
கடைசிவரை அவர் பத்திரிக்கை பேட்டிகள் எதையும் தரவில்லை. தனது சொந்தவாழ்க்கை பற்றிய எதையும் பத்திரிக்கைகளில் பகிர்ந்து கொள்ளவில்லை.
நன்மைக்கும் தீமைக்குமான மோதல்களையே தனது படைப்பின் மையப்பொருளாகக் கொண்டிருந்தார் பர்லாகர் க்விஸ்ட்.
பாரபாஸ் நாவலும் இதே கருவைக் கொண்டது தான். இயேசுவிற்குப் பதிலாக விடுதலை செய்யப்பட்ட திருடன் பாரபாரஸின் கண்ணோட்டத்தில் இயேசுவின் அற்புதங்களைப் பற்றி பேசும் நாவலது.
நோபல் பரிசுக்கு பர்லாகர் க்விஸ்ட் பெயரை ஒன்பது நாடுகள் பரிந்துரை செய்தன. பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தின் முக்கியப் படைப்பாளிகள் பலரும் அவருக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அவரது குள்ளன் நாவல் வெளியான போதே இந்தக் கோரிக்கை எழுந்தது. ஆனால் அப்போது விருது கிடைக்கவில்லை
பாரபாஸ் நாவல் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. ஆறு மாதங்களுக்குள் ஒன்பது மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதோடு ஐம்பதாயிரம் பிரதிகள் விற்பனையாகின. அதுவே நோபல் கமிட்டியின் கவனத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. 1951ம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படது.
பாரபாஸ் நாவல் தமிழில் அன்புவழி என்று க.நா.சுவால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது 1961ல் ரிச்சர்ட் பிளீஷர் இயக்கத்தில் பாரபாஸ் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது.
நமக்குள்ளிருக்கும் வன்முறையின் வடிவம் தான் குள்ளன். அவனைச் சிறையில் அடைப்பதால் எதுவும் மாறிவிடப்போவதில்லை. நாவலின் முடிவில் அதே இளவரசன் இன்னும் அரியணையில் இருக்கிறான். பகை அப்படியே இருக்கிறது. அதிகாரத்தின் சதிவலை விரிக்கப்பட்டேயிருக்கிறது. மீண்டும் யுத்தம் வரலாம், தான் விடுவிக்கப்படலாம் என்று குள்ளன் உணர்ந்திருக்கிறான். கடைசியில் அதை நினைத்தே அவனது முகத்தில் ஏளனச் சிரிப்பு வெளிப்படுகிறது.
••
March 13, 2024
ஹெர்சாக் சொல்கிறார்
தாமஸ் வான் ஸ்டெய்னேக்கர் இயக்கிய Werner Herzog: Radical Dreamer படத்தின் துவக்கத்தில் தன்னை A good soldier of cinema என ஹெர்சாக் அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

ஆம். போர்வீரனின் துணிச்சலும் தியாகமும் கொண்டவர் தான் வெர்னர் ஹெர்சாக். பதினாறு வயதில் துவங்கிய அவரது சினிமாக் கனவு நிறைய போராட்டங்களையும் தடைகளையும் சந்திக்கச் செய்தது. அவற்றை வெற்றிகரமாக வென்று காட்டி சாதனைகளை நிகழ்த்தியவர் ஹெர்சாக். இன்று சர்வதேச சினிமாவில் அவரது பெயர் ஒரு அடையாளம். நிகரற்ற திரைக்கலைஞராகக் கொண்டாடப்படுகிறார்.
இந்த ஆவணப்படத்தில் ஹெர்சாக் சச்ராங்கில் (Sachrang) அவர்கள் வசித்த பழைய வீட்டைக் காணச் செல்கிறார். அழகான மலைக்கிராமம். இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளின் குண்டுவெடிப்புத் தாக்குதலில் அவர்கள் வசித்த ஸ்டிபெடிக் நகரம் அழிக்கப்பட்டது. ஆகவே ஹெர்சாக்கின் அம்மா ஆல்ப்ஸ் மலைப்பகுதியிலுள்ள சச்ராங்கில் தஞ்சம் புகுந்தார்.

இப்போது அந்த பழைய வீடு உருமாறியிருக்கிறது. பூட்டப்பட்ட வீட்டினை. கண்ணாடி வழியாகப் பார்க்கிறார். அவரது நினைவின் கதவுகள் திறந்து கொள்கின்றன. தான் சிறுவனாக இருந்த போது அந்த வீடு எப்படியிருந்தது என்பதை விவரிக்கிறார். வீட்டிற்குள் போய்ப் பார்க்கலாமா என்று கேட்கிறார்கள். வேண்டாம் என மறுத்துவிடுகிறார். ஏதோ பழைய நினைவுகள் பீறிட அவரது கண்கள் கலங்கி விடுகின்றன.
அவருக்கு விருப்பமான அருவியைக் காணச் செல்கிறார்கள். வழிந்தோடும் காட்டருவியைப் பார்த்து மகிழும் ஹெர்சாக் அது நான் தான் என்று சொல்கிறார். அது வெறும் உணர்ச்சி வெளிப்பாடு மட்டுமில்லை. சில இடங்களை நாமாகவே உணருகிறோம். அதைத் தான் ஹெர்சாக் சொல்கிறார்.
அந்த அருவிக்குத் தண்ணீர் எங்கேயிருந்து வருகிறது என்று உடன் வந்த பெண் கேட்கிறார். தான் அதைத் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. அந்த மர்மம் அப்படியே நீடிக்கட்டும் என்கிறார்.
ஹெர்சாக்கின் பதில் எனக்குப் பிடித்திருந்தது. நதிமூலம் காண வேண்டாம் என்பது தான் நமது மரபு. சில மர்மங்கள் நீடித்திருப்பதே நல்லது.
அந்த அருவியைப் போலவே தன் போக்கில் வழிந்தோடிக் கொண்டிருக்கிறார் ஹெர்சாக்.
படத்தின் இறுதிக்காட்சியில் இந்த ஆண்டு இரண்டு புத்தகங்கள் எழுதிமுடித்திருக்கிறேன். புதிதாக ஒரு படம் இயக்கிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லும் போது அவர் குரலில் வெளிப்படும் சந்தோஷம் தான் அவரை இன்றும் இளமையாக வைத்திருக்கிறது
இளவயதின் ஹெர்சாக்கை விடவும் இப்போதுள்ள ஹெர்சாக்கின் தோற்றம். அதில் வெளிப்படும் கனிவு. ஞானம் பிடித்திருக்கிறது.
இளமையான ஹெர்சாக் நெருப்பைப் போன்றிருக்கிறார். சாத்தியமற்ற கனவுகளைச் சாத்தியமாக்கும் போராட்ட குணமும், அதற்காக உயிரையும் இழக்க முற்படும் தைரியமும் கொண்டிருக்கிறார்.
அவரது திரையுலகப் பயணத்தினையும் அதில் அடைந்துள்ள வெற்றிகளையும் காணும் போது ஹெர்சாக்கை தவிர வேறு யாருக்கும் இது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது

பெரிய கனவுகள் இல்லாத வாழ்க்கை என்பது அர்த்தமற்றது. ஒரு போதும் சாத்தியமில்லை என்று உலகம் சொல்லும் கனவுகளை நனவாக்கிக் காட்டுவதே வாழ்வின் உண்மையான சவால். அதை ஹெர்சாக் விரும்பி ஏற்றிருக்கிறார். வென்று காட்டியிருக்கிறார்.
உலகின் குரலை விடவும் தனக்குள்ளிருந்து ஒலிக்கும் குரலையே அவர் தொடர்ந்து கேட்கிறார். நம்புகிறார். மனசாட்சியின் வழிகாட்டுதலில் நடந்து செல்கிறார்.
படத்தின் இன்னொரு காட்சியில் “Even Dwarfs Started Small” படம் எடுத்த இடத்திற்கு ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்பு வந்து நிற்கிறார். ஆயினும் அவரது நினைவில் படப்பிடிப்பு நாட்களில் நடந்தவை துல்லியமாக வெளிப்படுகின்றன.

இது போலவே Aguirre, Wrath of god படம் உருவான விதம். படப்பிடிப்பில் சந்தித்த பல்வேறு பிரச்சனைகளையும் விவரிக்கும் போது ஹெர்சாக் தனது கனவைச் சாத்தியமாக்க எவ்வளவு போராடியிருக்கிறார் என்பது புரிகிறது. குறிப்பாகக் கிளாஸ் கின்ஸ்கியோடு அவருக்குள்ள நட்பு மற்றும் மோதலை கூடப் புன்னகையோடு தான் வெளிப்படுத்துகிறார்

பெருவியன் மலையின் மீது ஒரு நீராவிக் கப்பலைக் கொண்டு செல்வதைப் பற்றிப் படம் எடுப்பதாக ஒருவர் கனவு காணுகிறார் என்றால் அது எளிய விஷயமா என்ன. சினிமாவின் மீது ஹெர்சாக்கிற்குள்ள பித்து தான் இது போன்ற அசாதாரணப் படங்களை உருவாக்க செய்திருக்கிறது.
ஹெர்சாக்கின் சகோதரரும் அவரது தயாரிப்பாளருமான லக்கி ஸ்டிபெட்டிக்கின் நேர்காணல் சிறப்பாக உள்ளது. நிதானமாக, தனது பங்களிப்பை அவர் விவரிக்கும் விதம் அழகானது.
நோய்வாய்ப்பட்டு மரணப்படுக்கையிலிருந்த தனது வழிகாட்டியான லோட்டே ஈஸ்னரைப் பார்க்க முனிச்சிலிருந்து பாரீஸுக்கு ஹெர்சாக் ஒரு பாதயாத்திரையை மேற்கொண்டார் அந்த யாத்திரையைப் பற்றி அவரே ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அது குறித்து முன்பு நான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.
இந்த ஆவணப்படத்தில் லோட்டே ஈஸ்னரைப் பற்றி ஹெர்சாக் குறிப்பிடுவதுடன் அந்தப் பயணத்தில் எழுதிய குறிப்புகளையும் பகிர்ந்து கொள்கிறார்..
ஜெர்மானியத் திரையுலகில் புதிய அலை எப்படி உருவானது என்பது குறித்தும். ஹெர்சாக் படங்களின் அழகியல் குறித்தும் படம் விரிவாகப் பேசுகிறது.
நடிகர்கள் கிறிஸ்டியன் பேல், நிக்கோல் கிட்மேன், இயக்குநர் விம் வெண்டர்ஸ், இயக்குநர் வோல்கர் ஸ்க்லான்டோர்ஃப், நேர்காணல்கள் ஹெர்சாக்கின் சினிமா குறித்த நேர்மையான பார்வையினை முன்வைக்கின்றது.
தனது கடந்தகால வாழ்க்கையைப் பின்னோக்கி பார்க்கும் ஹெர்சாக் சுயபுலம்பல் எதுவும் இல்லாமல், தன்னைப் பற்றிய பெருமிதங்கள் எதையும் சொல்லாமல் தனக்கு விருப்பமான வேலையைப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்வதாகச் சொல்லும் போது அவர் மீதான மதிப்பு மிகவும் அதிகமாகிறது.
ஹெர்சாக்கிற்குள் ஒரு சிறுவன் துடிப்போடு இருக்கிறான். அவனது ஆசைகளும் ஆர்வமுமே அவரை வழிநடத்துகிறது. படத்தின் ஒரு காட்சியில் ஹெர்சாக் கடற்கரையில் கிடக்கும் வட்டவடிவமான கற்களை ஆசையாகப் பொறுக்கி கையில் வைத்துக் கொள்கிறார். அப்போது நாம் காண்பது அந்தச் சிறுவனையே.
ஹெர்சாக் நடத்தும் திரைப்பள்ளி. இளம் இயக்குநர்களுக்கு அவர் அளிக்கும் பயிற்சிகள். நடிகர்களைக் கையாளுவதில் அவர் காட்டும் தனித்துவம், அவரது ஆவணப்படங்களின் உருவாக்கம். அமெரிக்க வாழ்க்கை என இந்த ஆவணப்படம் ஹெர்சாக்கையும் அவரது திரை பங்களிப்பையும் நேர்மையாகப் பதிவு செய்துள்ளது.
March 11, 2024
ஒளி தரும் மகிழ்ச்சி
ஜப்பானுக்கு வெளியே அதிகம் கவனம் பெறாத எழுத்தாளர் யோகோ சுஷிமா (Yūko Tsushima). ஜப்பானியத்தனம் இல்லாத ஜப்பானிய படைப்பாளி என்பதால் மேற்குலகம் அவரைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. சர்வதேசப் பதிப்பாளர்கள் சிறந்த இலக்கியப் படைப்புகளை விடவும் புத்தகச்சந்தையில் விற்பனைக்கான அதிக சாத்தியமுள்ள படைப்புகளையே தேர்வு செய்கிறார்கள். அதற்கு ஜப்பானியதனம் அவசியமானது. அது முரகாமியிடம் இருக்கிறது. சுஷிமாவிடம் இல்லை. 2016ல் மறைந்துவிட்ட சுஷிமாவின் எழுத்துகள் தனித்து பேசப்பட வேண்டியவை.

ஜப்பானிய இலக்கிய உலகம் யோகோ சுஷிமாவைக் கொண்டாடுகிறது. அவர் பல்வேறு இலக்கியப் பரிசுகளைப் பெற்றிருக்கிறார்.. 1980களில் அவரது சில படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கபட்டு வெளியாகியுள்ளன. ஆனால் அதிகம் கவனம் பெறவில்லை.
ஜப்பானுக்கு வெளியே என்னைக் குறைவாகவே வாசிக்கிறார்கள். காரணம் நான் செர்ரி பூக்கள் மற்றும் கிரிஸான்தமம் பற்றி எழுதும் ஜப்பானியப் படைப்பாளியில்லை என்று வேடிக்கையாகச் சொல்கிறார் சுஷிமா
தனித்து வாழும் பெண்களின் வாழ்க்கையே அவரது கதையுலகம். அதிலும் ஒற்றைத் தாயாகக் குழந்தையைக் கவனித்துக் கொண்டு வாழும் பெண்ணைப் பற்றியே அதிகம் எழுதியிருக்கிறார்.
பிரசவம் மற்றும் குழந்தை வளர்ப்புக் குறித்த பெரும்பான்மை ஜப்பானியச் சொற்கள் ஆண்கள் உருவாக்கியவை. அவற்றை நான் மறுஉருவாக்கம் செய்திருக்கிறேன். என் படைப்பு உதிரக்கறை படிந்தது என்கிறார் சுஷிமா.
தனது வாழ்க்கை அனுபவங்களை முதன்மைப்படுத்தி எழுதும் அவர் தனது நாவலில் குழந்தைக்கு எப்போது பால் கொடுக்க வேண்டும். எவ்வளவு பால் குடிக்கும். குழந்தையின் அழுகைக்கு என்ன பொருள் என்பதற்கான அட்டவணை ஒன்றையும் தனது கதையோடு இணைத்து வெளியிட்டிருக்கிறார்.
நெரிசலான அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசிக்கும் பெண், தந்தையைப் பற்றிய அவளது நினைவுகள். சிணுங்கும் குழந்தை, புறஉலகின் யதார்த்தம் துரத்தும் போது அதிலிருந்து தப்பிக்கத் தானே உருவாக்கிக் கொள்ளும் மாற்று உலகம் இவையே அவரது கதைகளில் தொடர்ந்து இடம்பெறுகின்றன. ‘
அவரது கதை ஒன்றின் திடீரெனக் கடலைப் பற்றிய நினைவு வந்த பெண் தனது இரண்டு குழந்தைகளையும் கடலைக் காட்டுவதற்காக அழைத்துச் செல்கிறாள். அங்கே அவள் காணுவது கடலை அல்ல. திறந்தவெளி குப்பை மேடு போலிருக்கும் கடற்கரையை . அந்தக் கடலும் கடற்கரையும் பிள்ளைகளுக்குப் பிடிக்கவில்லை. அத்தோடு அவர்கள் சிறுநீர் கழிக்க வேண்டும், தொடர்ந்து நடக்க முடியாது. இந்த அவஸ்தைகள் அவளது ஆசையை அர்த்தமற்றுப் போகச் செய்கின்றன.
அவரது எழுத்து எப்படியிருக்கும் என்பதற்கு இந்த ஒரு பத்தியே சாட்சி
பிரவசத்திற்காக பொதுமருத்துவமனைக்கு செல்லும் பெண்ணின் உணர்ச்சிகளை விவரிக்கும் பகுதியிது.

“The pain made her think of the pressure of ocean depths. She had heard that when a deep-sea fish is hauled rapidly to the surface the change in pressure causes its body to blow up and burst like a balloon. She felt exactly as if such a deep-sea fish were in her belly. It seemed to want to bring all the surrounding pressure to bear on its small body until it hardened and sank, deeper and deeper. She must stay quite still and withstand the pressure or her own body would be sucked down by it too.” Takiko waits patiently until the pain leaves her, then she strides on. Within moments, she is repaid for her endurance with great beauty: “As she turned to the right, all of her was bathed in the direct light of the morning sun for the first time that day. It was a dazzling light. The city streets spread out at her feet and the dawn sky spread above, faintly pink . . . No one was aware of her joy at this instant—not her mother, not her father, not a soul. She didn’t think there could be any moment more luxurious than this
-from Woman Running in the Mountains
மகிழ்ச்சியான பெண்களைப் பற்றி நான் ஒருபோதும் எழுதவில்லை. மகிழ்ச்சிக்காக ஏங்கும் பெண்களைப் பற்றியே எழுதியிருக்கிறேன் என்கிறார் சுஷிமா.

Territory of Light மூன்று வயது மகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாழும் பெண்ணின் கதை. அதில் அந்த வீடு வெளிச்சமாக இருப்பதைப் பற்றி எழுதுகிறார்
the apartment was filled with light at any hour of the day. The kitchen and dining area immediately inside had a red floor, which made the aura all the brighter, I felt like giving myself a pat on the head for having managed to protect my daughter from the upheaval around her with the quantity of light. ஒளி தான் அவருக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துகிறது.
வெளிச்சம் பரவுவது போலவே நிதானமாக, மௌனமாகத் தனது எழுத்துக்களில் ஒளிர்கிறார் யோகோ சுஷிமா
மூன்று சிறுமிகள்
டச்சு ஓவியரான வாலி மோஸ் (Wally Moes)ஆம்ஸ்டர்டாமில் பிறந்தவர். ஆகஸ்ட் அலெபே மற்றும் ரிச்சர்ட் பர்னியர் ஆகியோரிடம் ஓவியம் பயின்றிருக்கிறார். உணர்ச்சிகரமான ஓவியங்களை வரைவதில் பெயர் பெற்றவர் வாலி மோஸ். அதிலும் குறிப்பாகக் குழந்தைகளை வரைவதில் தனித்துவம் கொண்டவர்.

1880ம் ஆண்டின் கோடையில் மோஸ், ஓவியர் தெரேஸ் ஸ்வார்ட்ஸை சந்தித்தார், அவர் வழியாக கலையுலகிற்கு அறிமுகமானார். ஜெர்மனியில் சிறிது காலம் தங்கிய மோஸ் பின்பு ஆம்ஸ்டர்டாமிற்குத் திரும்பினார். 1884 இல் பாரிஸுக்குச் சென்றார், அங்குள்ள கலைக்கூடங்களில் தனது ஓவியம் இடம்பெற வேண்டும் என்பதற்காக பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். அவரது ஒரேயொரு ஓவியம் மட்டுமே காட்சிக்கு வைக்கப்பட்டது. அதுவும் பெரிய வரவேற்பு பெறவில்லை. அவர் பாரீஸில் சில மாதங்களே வசித்தார். 1898 இல் அவர் லாரனுக்கு குடிபெயர்ந்தார். அங்கிருந்தபடி தொடர்ச்சியாக ஓவியம் வரைவதில் கவனம் செலுத்தினார்.
1908 ஆம் ஆண்டில் இடைவிடாத மூட்டுவலி காரணமாக அவரால் ஓவியம் வரைய முடியாமல் போனது. ஆகவே கதைகள் எழுத துவங்கினார். அதில் அவரால் வெற்றி பெற இயலவில்லை.

வாலி மோஸ் பின்னல் வேலை செய்யும் பெண்களைப் பற்றி மூன்று ஓவியங்களை வரைந்திருக்கிறார்.
1890 வரையப்பட்ட Knitting girls என்ற நீர்வண்ண ஓவியம் மிகச்சிறப்பானது இதில் மூன்று சிறுமிகள் நடந்தபடியே பின்னல் வேலை செய்கிறார்கள். அவர்களின் முகபாவங்களைப் பாருங்கள். சாந்தமும் அமைதியும் கொண்ட முகங்கள். அவர்கள் பின்னல்வேலையை புதிதாக கற்றுக் கொண்டவர்கள். அதில் மகிழ்ச்சி கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களின் ஈடுபாட்டிலே தெரிகிறது. அந்த சாலை மிகவும் அழகாக வரையப்பட்டிருக்கிறது. குறிப்பாக சாலையோர மலர். அதன் ஒளிர்வு. சிறுமிகளின் காலடியில் விழும் நிழல். அவர்கள் பயிற்சிபள்ளியிலிருந்து வீடு திரும்பும் பகல் நேரமது.
வலது மணிக்கட்டின் இயக்கம், கையில் நூலை வைத்திருக்கும் விதம். நூல் சுண்டு விரல் வழியாகச் செல்வது, இடதுகையின் பிடிமானம். என ஓவியம் மிகவும் நுட்பமாக வரையப்பட்டிருக்கிறது.
சிறுமிகளின் தோற்றம் அவர்கள் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. மூவரும் சமவயதுள்ளவர்கள் போலத் தெரியவில்லை. நடுவில் உள்ள பெண் கடைசியில் உள்ள பெண்ணின் சகோதரியைப் போலவே தெரிகிறாள். இருவரின் முகச்சாடையைப் பாருங்கள்.
சிறுமிகளின் எளிய உடையின் வண்ணமும் சாலையோரப் பூக்களும் அழகாக உள்ளன. உறக்க நடையாளர்களைப் போல அந்த சிறுமிகள் நடக்கிறார்கள்.
அவர்களுக்குள் போட்டி நடப்பது போலிருக்கிறது. யார் விரைவாகப் பின்னல் வேலையை முடிக்கப்போவது என்று போட்டியிடுகிறார்கள். அந்தப் பாதை அவர்கள் வழக்கமாக வந்து போகும் பாதை என்பதால் பின்னல் வேலையில் கவனம் செலுத்தியபடியும் அவர்களால் நடக்க முடிகிறது. சிறுமிகளின் கண்கள் நிலை கொண்டுள்ள விதம். அவர்களின் சற்றே சரிந்த முகம், நேர்த்தியாக வரையப்பட்டிருக்கிறது.
19ம் நூற்றாண்டு நெதர்லாந்தில் வீடு தோறும் பெண்கள் பின்னல் வேலை செய்தார்கள். பிள்ளைகளுக்கு வீட்டிலே பின்னல் கற்றுக் கொடுத்தார்கள். பின்னல் வேலையில் வித்தியாசமான ஸ்டைல்கள் உள்ளன. அதில் கான்டினென்டல் பின்னல் அப்போது பிரபலமாக இருந்தது.

வாலி மோஸின் Knitting school in Huizen ஓவியத்தில் பயிற்சி பள்ளியில் பெண்கள் மற்றும் சிறுமிகள் ஒன்றாக அமர்ந்து பின்னல் செய்துகொண்டிருக்கிறார்கள். அறைஜன்னலின் வழியாக வரும் ஒளி உடைகளில் பிரதிபலிக்கும் அழகு, மரத்தாலான தரையின் வண்ணம், வெளியே தெரியும் வெள்ளை துணியின் படபடப்பு அழகாக வரையப்பட்டிருக்கிறது. தியானம் செய்வது போல ஆழ்ந்த ஈடுபாட்டுடன் அவர்கள் பின்னலில் ஈடுபட்டிருக்கிறார்கள். சிறுமியின் கவனமும் அவளது முகபாவமும் உடைகளும் நேர்த்தியான வரையப்பட்டுள்ளன. தரையில் வைக்கப்பட்டுள்ள நூற்கண்டுள்ள கூடை தனித்த அழகைக் கொண்டிருக்கிறது. அறையிலுள்ள மௌனத்தை நம்மால் உணர முடிகிறது.
14 ஆம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பாவில் பின்னல் வேலை புகழ்பெறத் துவங்கியது. இங்கிலாந்தில், பின்னல் வேலை செய்த கம்பளித் தொப்பிகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இந்த தொப்பி அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
17 ஆம் நூற்றாண்டில் கையால் பின்னல்வேலை செய்வது பணக்கார பெண்களின் களமாக மாறியது. இதற்கென சிறப்புப் பள்ளிகள் துவங்கப்பட்டன. கையுறைகள், காலுறைகள் மற்றும் தொப்பிகள் செய்வதில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள்.
19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் அனாதை இல்லங்கள் மற்றும் ஏழை வீடுகளில் பின்னல்வேலை கற்பிப்பது அவர்களுக்கான வருவாய் தரும் பணியாக உருமாறியது. 19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பின்னல் வேலை கற்றுத்தரும் வீட்டுப் பள்ளிகள் நிறைய இருந்தன.
இந்த ஓவியமும் அப்படியான ஒரு வீட்டுப்பள்ளியில் பெண்கள் பின்னல் வேலை செய்வதையே சித்தரிக்கிறது. அந்த வகையில் அன்றாட வாழ்க்கையிலிருந்து ஒரு காட்சியை யதார்த்தமாகச் சித்தரிக்கிறது, 17 ஆம் நூற்றாண்டில் டச்சு ஓவியர்கள் இந்த வகை ஓவியங்களை சிறப்பாக உருவாக்கினார்கள். அதன் தொடர்ச்சியானதே வாலி மோஸின் ஓவியம்.
March 9, 2024
Usawa இதழில்
எனது புலிக்கட்டம் சிறுகதை ஜி.பரத்குமாரால் “Lambs and Tigers” என மொழியாக்கம் செய்யப்பட்டு Usawa Literary Review இதழில் வெளியாகியுள்ளது.

“Lambs and Tigers”, a short story by S Ramakrishnan, translated from the Tamil By G Bharath Kumar
நூல் கொள்முதல் கொள்கை 2024
தமிழ்நாடு அரசின் சார்பில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்கம் வெளிப்படைத் தன்மையான நூல் கொள்முதல் கொள்கை 2024யை வெளியிட்டுள்ளது

நூலகத்துறையின் எதிர்காலம் மற்றும் பதிப்புத்துறையின் வளர்ச்சி, வாசகர்களின் பன்முகப் பயன்பாடுகளுக்கான வழிகாட்டுதல்கள், நூலகங்களுக்கான நிதி ஒதுக்கீடு, நூல் தேர்விற்கான சிறப்புக் குழு, இணைய வழியாக விண்ணப்பம் செய்வது, நூல்களுக்கான விலையை முறையாக நிர்ணயம் செய்வது எனச் சிறந்த வழிகாட்டுதல்களைக் கொண்ட நிகரற்ற ஆவணமாகவே இதனைக் கருதுகிறேன்.
நூல் கொள்முதலை ஆண்டுமுழுவதும் செயல்படுத்தும் முயற்சி மிகுந்த பாராட்டிற்குரியது. அதிலும் வாசகர்கள் விரும்பும் நூல்களைக் கொள்முதல் செய்து நூலகத்தில் இடம்பெற வைக்க வேண்டும் என்பது சிறப்பானது. இது போன்ற நடைமுறை தான் உலகின் பல்வேறு நாடுகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிங்கப்பூர் நூலகம் இதற்குச் சிறந்த உதாரணம்.
இது போலவே நோபல் பரிசு, புக்கர் பரிசு மற்றும் சாகித்ய அகாடமி விருது பெற்ற புத்தகங்கள், சர்வதேச அளவில் அதிகம் விற்பனையாகும் புத்தகங்கள், அரசு வெளியீடுகள் மற்றும் ஆவணப் பதிப்புகள் உள்ளிட்டவை தேர்வுக்குப் பரிந்துரை செய்வது, ஒவ்வொரு நூலகத்திலும் உள்ள வல்லுநர்கள் குழு, நூலகர்கள், வாசகர் வட்டத்தினர் இணைந்து புத்தகங்களைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபடுவார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த ஆவணத்தின் மூலம் நூலகத்துறை தனது இலக்குகளைத் தெளிவாக வகைப்படுத்தியுள்ளது. தெளிவான, வெளிப்படையான இந்த ஆவணம் தனக்கான பிரதான இலக்குகளைச் சரியாக வரையறுத்துள்ளது. இந்தக் கொள்கை முழுமையாகச் செயல்படுத்தபட்டால் பதிப்புத்துறையும் நூலகத்துறையும் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என்பது உண்மை.
தமிழக நூலகத்துறையின் வரலாற்றில் இந்த ஆவணம் ஒரு மைல்கல் என்றே சொல்வேன்.
சிறப்பான இந்த ஆவணத்தை உருவாக்கியுள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் நூலகத்துறை இயக்குநர் இளம்பகவத் IASக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.
March 8, 2024
எழுத்தின் சிறகுகள்.
Shadows in the Sun 2005ல் வெளியான திரைப்படம். பிராட் மிர்மன் இயக்கியுள்ளார்

லண்டனில் வசிக்கும் ஜெர்மி டெய்லர் பதிப்பகம் ஒன்றில் எடிட்டராக வேலை செய்கிறான். ஒரு நாள் பதிப்பக உரிமையாளர் அவனிடம் “நீ வெல்டன் பாரிஷைப் படித்திருக்கிறாயா“ என்று கேட்கிறார்.
“மிகவும் நல்ல எழுத்தாளர். அவரது Shadow Dancer நாவலை விரும்பி படித்திருக்கிறேன். அவர் எழுத்துலகை விட்டு விலகி இத்தாலியின் கிராமப்புறம் ஒன்றில் வசிக்கிறார், யாரையும் சந்திப்பதில்லை “ என்கிறான் ஜெர்மி.
“நீ அவரைச் சந்தித்துப் பேசி எப்படியாவது நமது பதிப்பகத்துடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும்“ என்று உரிமையாளர் கட்டளையிடுகிறார்
தனது விருப்பத்திற்குரிய எழுத்தாளரைச் சந்திப்பதற்காக இத்தாலிக்குப் பயணம் மேற்கொள்கிறான் ஜெர்மி. இயற்கையின் தங்கரேகைகள் ஒளிரும் சின்னஞ்சிறிய இத்தாலிய கிராமம். அங்கே ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்குகிறான். வெல்டன் பாரிஷ் பற்றி யாரிடம் கேட்டாலும், தெரியவில்லை என்கிறார்கள். முடிவில் ஒரு நாள் தபால்காரனைப் பின்தொடர்ந்து வெல்டன் வீட்டினைக் கண்டுபிடித்துவிடுகிறான்.

வெல்டனின் மகள் இசபெல்லா தனது தந்தைக்குப் பத்திரிக்கையாளர் மற்றும் பதிப்பக எடிட்டர்களைப் பிடிக்காது. போய்விடுங்கள் என எச்சரிக்கை செய்கிறாள். அதையும் மீறி அவரைச் சந்திக்கச் செல்கிறான்.
வெல்டன் மனநலம் பாதிக்கபட்டவரைப் போல நடிக்கிறார். அதை உண்மை என்று நம்பி தனது அறைக்குத் திரும்பிவிடுகிறான். அன்றிரவு இது வெல்டனின் நாடகம் என்பது புரிகிறது. ஊரே அவரை நேசிக்கிறது. வெளியாட்களுக்கு அவரது இருப்பைக் காட்டிக் கொடுக்க மறுக்கிறது எனப் புரிந்து கொண்டு வெல்டனின் மகளின் உதவியோடு மீண்டும் அவரைச் சந்திக்கிறான். இந்த முறை அவர் நாயை ஏவிவிட்டு அவனைத் துரத்துகிறார்
அவமானத்துடன் அறைக்குத் திரும்புகிறான் ஜெர்மி. எதனால் வெல்டன் இப்படி நடந்து கொள்கிறார் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. இது குறித்துப் பலரிடம் விசாரிக்கிறான்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு வெல்டனின் மனைவி இறந்து போனார். அதிலிருந்து அவர் எதையும் எழுதுவதில்லை என்ற உண்மையை அறிந்து கொள்கிறான்.
திரும்பவும் வெல்டனைச் சந்தித்து அவருடன் நட்பாக மது அருந்துகிறான். இந்த முறையும் அவன் அவமானப்படுத்தபடுகிறான். ஜெர்மி உடனடியாக ஊரைவிட்டு போக வேண்டும் என்று வெல்டன் கட்டளையிடுகிறார். ஆனால் ஜெர்மி தனது விடாப்பிடியான முயற்சியால் வெல்டனின் அன்பைப் பெறுகிறான்.

இளம் எழுத்தாளரான ஜெர்மிக்கு வெல்டன் எழுத்தின் ரகசியங்களைப் போதிக்கிறார். அவை படத்தின் மிக அழகான காட்சிகள்
ஒரு எழுத்தாளன் தன் கண்முன்னே இருக்கும் காட்சியை எப்படி எழுத்தில் பதிவு செய்வது என்பதற்குச் சூரிய அஸ்தமனம் பற்றி வெல்டன் விவரிப்பது சிறப்பான பயிற்சிப் பாடம்.
வெல்டனும் ஜெர்மியும் எப்படி எழுதுவது என்பது குறித்து உரையாடும் காட்சிகள் யாவும் சிறப்பாக உள்ளன. அவற்றைத் தனியே தொகுத்தால் எழுத்தின் ஆரம்பப் பாடங்களாகக் கொள்ளலாம்.
ஒரு காட்சியில் லேப்டாப்பில் எழுதிக் கொண்டிருக்கும் ஜெர்மிக்கு ஒரு டைப்ரைட்டரைத் தந்து இதில் எழுது என்கிறார் வெல்டன். கம்ப்யூட்டரில் எழுதுவது எளிதானது என்கிறான் ஜெர்மி. எழுதுவதற்குக் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டும் என்று சொல்லிச் சிரிக்கிறார் வெல்டன். அப்போது அவர் சொல்லும் அறிவுரை இதுவே.
“Typewriters make you think about the words you choose more carefully, because you can’t erase them with the push of a button.“
அது போலவே ஜெர்மியின் கையெழுத்துப்பிரதியை வாசித்து விட்டு வெல்டன் அதை இன்னொரு முறை அப்படியே திருத்தி எழுது என்கிறார். ஜெர்மி தான் எழுதிய பக்கங்களை நெருப்பில் போட்டுவிட்டுப் புதிதாக எழுத முயற்சிக்கிறான். எளிதாக எழுத முடியவில்லை. ஏற்கனவே எழுதிய பக்கங்களை அப்படியே திரும்ப எழுத முடியாது என்பதை உணருகிறான்.. புதிதாக அதே விஷயத்தை எழுதும் போது புதிய மொழியும் பார்வையும் கிடைப்பதை அறிந்து கொள்கிறான்.
அவனும் வெல்டனும் ஒன்றாக ஊர் சுற்றுகிறார்கள். குடிக்கிறார்கள். பாதிரியாருடன் ஜெர்மி இனிய நட்பு கொள்கிறான். வெல்டனை உன்னால் எழுத வைக்க முடியும் என்று அவர் உற்சாகப்படுத்துகிறார்.
தோல்வி பயத்தை மறைக்கவே வெல்டன் தனது மனைவியின் மரணத்தினைக் காரணமாகச் சொல்கிறார் என ஜெர்மி உணருகிறான். இது குறித்து அவருடன் உரையாடுகிறான். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படுகிறது. வெல்டன் கோவித்துக் கொள்கிறார். ஆனால் அவன் சொன்னது சரி தானே என யோசிக்கிறார். வெல்டன் மீண்டும் எழுதத் துவங்கினாரா என்பதே படத்தின் இறுதிப்பகுதி.
எழுத்துலகைக் விட்டு ஒதுங்கி, தனித்து வாழும் எழுத்தாளனைத் தேடிச் செல்லும் கதைகள் ஹாலிவுட் சினிமாவில் நிறையவே வந்திருக்கிறது. அப்படி ஒரு படமாகவே இதுவும் துவங்குகிறது. ஆனால் இத்தாலிய கிராமப்புற வாழ்க்கை. அதன் வேறுபட்ட மனிதர்கள். வெல்டனின் நட்பு வட்டம். இசபெல்லாவின் காதல் வாழ்க்கை எனக் கொஞ்சம் கொஞ்சமாக படம் அழகு கொள்கிறது. அதிலும் ஜெர்மி- இசபெல்லாவின் காதல் காட்சிகள் நேர்த்தியாக உள்ளன, இசபெல்லாவிடம் ஜெர்மி இத்தாலிய மொழி கற்பது, பண்டிகை நாளில் அவர்கள் நடனமாடுவதும். ஜெர்மி முதன் முறையாகக் குதிரைப் பயணம் செய்வது, இசபெல்லா குதிரையில் ரயிலைத் தொடர்ந்து வரும் காட்சி போன்றவை அழகானவை.
இவை வெல்டனின் வசனங்கள்.
Anyone can use words. It’s called talking. But writers arrange them in a way so that they take on a beauty in their form. Think of words as colors, and paper as a canvas
••
Time is a precious thing, Jeremy. And the years teach much which the days never knew
••
••
Everybody needs a little lunacy. It’s what frees us from the pain of this world
டஸ்கனியின் அழகான நிலப்பரப்பு. வெல்டன் பாரிஷாக நடித்துள்ள Harvey Keitelன் சிறப்பான நடிப்பு, சில காட்சிகளின் உண்மையான உரையாடல்கள், இவை தவிர்த்தால் படம் முன்கூட்டியே யூகிக்க முடிந்த காட்சிகளுடன், அசட்டு நகைச்சுவையுடன் உருவாக்கபட்டுள்ளது.

இந்தப் படத்தின் சில காட்சிகளில் வெல்டன் நடந்து கொள்வது ஜோர்பாவை நினைவுபடுத்துகிறது. குறிப்பாக ஜோர்பாவின் காதல் மற்றும் அவனது கிறுக்குத்தனங்களை வெல்டனிடமும் காண முடிகிறது. ஆனால் ஜோர்பாவின் ஞானம் வெல்டனிடம் இல்லை.
.
சாகித்ய அகாதமி விழா
சாகித்ய அகாதமியின் நிறுவன நாள் விழா மார்ச் 12 மாலை சென்னையிலுள்ள சாகித்ய அகாதமி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.
இலக்கியத்தின் புதிய பாதைகள் என்ற தலைப்பில் சமகால உலக இலக்கியம் மற்றும் இந்திய இலக்கியத்தின் புதிய போக்குகள் குறித்து உரையாயாற்றுகிறேன்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள குணா பில்டிங்கின் இரண்டாம் தளத்தில் சாகித்ய அகாதமி அலுவலகம் இயங்கி வருகிறது. அங்கே தான் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்
March 7, 2024
ஒரு வரிக்கதை
லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான அகஸ்டோ மான்டெரோசோ (Augusto Monterroso) ஒரேயொரு வரியில் கதை எழுதியிருக்கிறார்.

டைனோசர் என்ற அந்தக் கதை பல்வேறு தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளது.
இதாலோ கால்வினோ அதனை நிகரற்ற கதை என்று புகழுகிறார். அந்தக் கதை குறித்துப் போர்ஹெஸ் தனது கட்டுரை ஒன்றிலும் வியந்து குறிப்பிடுகிறார்.

Cuando despertó, el dinosauro todavía estaba allí
(When he awoke, the dinosaur was still there )
என்பதே அகஸ்டோ மான்டெரோசோவின் கதை. ஆங்கிலமொழி பெயர்ப்பு எடித் கிராஸ்மனுடையது.
When I woke up, the dinosaur was still there என இதாலோ கால்வினோ இதே கதையை மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார். இது மட்டுமின்றி இதே கதைக்கு நாலைந்து வேறு மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன.
அவன் கண்விழித்துப் பார்த்தபோது டைனோசர் அங்கேயே இருந்தது.
என மொழியாக்கம் செய்யலாம். கதையில் வருவது அவனா, அவளா என மான்டெரோசா சுட்டவில்லை. கவனமாக அதைத் தவிர்த்து எழுதியிருக்கிறார் என்கிறார்கள். ஆனால் பெரும்பான்மை ஆங்கில மொழியாக்கத்தில் அவன் அல்லது அவன்/ அவள் என்றே குறிப்பிடுகிறார்கள்.
லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் மிகச்சிறிய கதை என்று இதனைக் கொண்டாடுகிறார்கள். கதையில் வருவது உண்மையான டைனோசரா. அல்லது சர்வாதிகாரம் தான் டைனோசராகச் சுட்டிக்காட்டப்படுகிறதா. எதிர்பாராத நிகழ்வு என்பதன் அடையாளமாக டைனோசரைக் குறிப்பிடுகிறாரா, கதாபாத்திரம் உறங்கும் போது என்ன நடந்தது என இக்கதை குறித்த நிறைய விளக்கங்களை இணையத்தில் காண முடிகிறது.
இக்கதை குறித்து அகஸ்டோ மான்டெரோசோவிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில்
it isn’t a short-story, it is actually a novel.
உண்மை தான். நாவலின் முதல் வாக்கியம் என்றே இதனைச் சொல்ல வேண்டும்.
உறக்கத்தில் கண்ட டைனோசர் விழித்த போது எதிரில் இருக்கிறது என்றொரு விளக்கத்தையும் படித்தேன். அப்படியும் நினைக்கலாம். டைனோசர் நம் காலத்தின் விலங்கில்லை. அது அழிந்து போன உயிரினம். அது எதிரே அமர்ந்திருப்பது இனப்படுகொலையின் சாட்சியம் போலவும் புரிந்து கொள்ள முடிகிறது.
ஹாலிவுட் சினிமாவில் டைனோசர் கொடூர உயிரினமாகச் சித்தரிக்கப்படுவதற்கு முன்பு வரை டைசோனர் குறித்த பிம்பம் வேறாக இருந்தது. குறிப்பாகப் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த அரிய உயிரினமாக மட்டுமே கருதப்பட்டது. உணவுத் தட்டுப்பாடு மற்றும் காலநிலை மாற்றத்தால் டைனோசர் இனம் அழிவைச் சந்தித்திருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
அகஸ்டோ மான்டெரோசோவின் கதையில் வரும் டைனோசர் வேட்டையாடக் காத்திருக்கிறது என்றே இன்றைய தலைமுறை புரிந்து கொள்வார்கள். சினிமா உருவாக்கிய தாக்கமது.
மான்டெரோசோவின் டைனோசரைப் போல நாம் விழித்து எழுந்திருக்கும் போதும் எதிர்பாராத சிக்கல் அல்லது அபாயம் நம் முன்னே அமர்ந்திருக்கக் கூடும். கதை என்பது வாசிப்பவனின் கற்பனையால் வளர்த்தெடுக்கபடுவது. அதற்கான சாத்தியங்களைக் கதை கொண்டிருக்கிறதா என்பதே முக்கியம்.
Gregory Samsa awoke one morning after a restless sleep to find himself in his bed, transformed into a monstrous insect. மான்டெரோசோவின் கதையை வாசிக்கும் போது எனக்குக் காஃப்காவின் உருமாற்றம் சிறுகதை நினைவிற்கு வந்து போனது.
தனித்துவமான குறுங்தைகள் மற்றும் சிறுகதைகளை அகஸ்டோ மான்டெரோசோ எழுதியிருக்கிறார். இவரது இன்னொரு கதையில் தவளை ஒன்று தான் தவளை தானா எனச் சந்தேகம் கொள்கிறது. இதனை உறுதிப்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறது. இதற்கு மற்றவர்களின் ஒப்புதல் தேவை என்பதை உணருகிறது. அவர்களைக் கவர கவர்ச்சியாக அலங்காரம் செய்து கொள்கிறது. தான் தவளை என்பதை எப்படி உணர வைப்பது என அதற்குத் தெரியவில்லை. முடிவில் தன்னையே உண்ணத் தருகிறது. அப்போது தவளைக்கால் போலவே இல்லை. மிகவும் சுவையாக இருக்கிறது என அவர்கள் புகழுகிறார்கள். தவளை தனது அங்கீகாரத்தைப் பெறுகிறது.
ஒரு தவளை ஏன் பிறரது அங்கீகாரத்திற்காக ஏங்குகிறது. அது தவளை தான் என்ற நம்பிக்கையை ஏன் இழந்து போனது. இந்தக் கேள்விகள் எழுந்தவுடன் இது தவளையைப் பற்றிய கதையில்லை என்பது புரிந்து விடுகிறது.
மனிதர்களின் பிரச்சனையைத் தவளைகளின் பிரச்சனையாக மாற்றியிருக்கிறார். அங்கீகாரத்திற்காக மனிதர்கள் மேற்கொள்ளும் எத்தனங்கள். அபத்தமான செயல்பாடுகளைக் கேலி செய்கிறார்.
அவரது HOW I GOT RID OF FIVE HUNDRED BOOKS என்ற கட்டுரையில் பழைய புத்தகக்கடைகளைப் பற்றியும் புத்தகங்களை வாங்கும் ஆசை பற்றியும் சிறப்பாக எழுதியிருக்கிறார். 1955 இல், அவர் பாப்லோ நெரூதாவை சந்திக்கச் சாண்டியாகோவில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றபோது அவரிடம் முப்பது நாற்பது புத்தகங்கள் மட்டுமே இருப்பதைக் கண்டு வியந்து போனார். தனது சேமிப்பிலிருந்த ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் பல்கலைக்கழகத்திற்குக் கொடுத்துவிட்டதாகவும் தற்போது இந்தப் புத்தகங்கள் மட்டுமே போதும் என நினைப்பதாகவும் நெரூதா கூறினார். அங்கிருந்தவை துப்பறியும் நாவல்கள் மற்றும் நெரூதாவின் சொந்த படைப்புகளின் பல்வேறு மொழி மொழிபெயர்ப்புகள் மட்டுமே..
அகஸ்டோ மான்டெரோசோவின் இன்னொரு கட்டுரை இப்படித் துவங்குகிறது
Direct acquaintance with writers is harmful. “A poet,” said Keats, “is the least poetic thing in the world.”
லத்தீன் அமெரிக்கச் சிறுகதையுலகில் அகஸ்டோ மான்டெரோசோ தனித்துவமானவர். அவரது கதைகள் விசித்திரமான கருப்பொருளைக் கொண்டிருக்கின்றன கவிதைக்கு நெருக்கமான மொழி நடையில் எழுதப்பட்ட இக்கதைகளின் ஊடாக மெல்லிய பகடி வெளிப்படுகிறது. ஒரு வரிக்கதை ஐம்பதுக்கும் மேற்பட்ட தொகுப்புகளில் இடம்பெற்றிருப்பதோடு இன்றும் தொடர்ந்து பேசப்பட்டு வருவது வியப்பானதே.
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
