S. Ramakrishnan's Blog, page 38

April 6, 2024

நடைக்கூலி

புதிய குறுங்கதை

இது நடந்தது 1814ல்.

சுமேர்பூரில் முகாமிட்டிருந்த கிழக்கிந்திய கம்பெனி அதிகாரி ஜான் சாமுவேலிடம் கடிதம் பெறுவதற்காக அந்த ஆள் வெளியே காத்திருந்தார். ஆறடி அடிக்கும் மேலான உயரம். தலையில் பெரிய தலைப்பாகை. அடர்ந்து நரைத்த மீசை. தாடி. பழுப்பு நிறமான கண்கள். கூர்மையான மூக்கு. தோளில் போர்வை போன்றதொரு ஒரு துண்டு. பலானா கிராமத் தலைவருக்கு எழுதப்பட்ட அந்தக் கடிதத்தை ஒப்படைக்கும் போது சாமுவேல் அவரது பெயரைக் கேட்டார்

“சாப்பன்“ என்று சொன்னார்.

ராஜஸ்தானிய கிராமங்களில் பலருக்கும் வயது தெரியாது. பஞ்சகாலத்தினை நினைவூட்டும் விதமாகவே பெயர் வைத்திருந்தார்கள். கடிதத்தை உறையிலிட்டு நீட்டியபடியே ராம்சிங்கிடம் அவருக்கு அரையணா தரச் சொன்னார்

சாப்பன் கடிதத்தை மட்டுமே பெற்றுக் கொண்டு காசை ஏற்க மறுத்துவிட்டார். கடிதம் கொண்டு செல்கிறவருக்கு வழக்கமாக அளிக்கப்படும் நடைக்கூலி தான் என சொன்னபோதும் சாப்பன் ஏற்கவில்லை.

சாமுவேல் ஏன் என்று புரியாமல் உதவியாளர் ராம்சிங்கிடம் விளக்கம் கேட்டார்.

ராம்சிங் சிரித்தபடியே சொன்னார்

“சாப்பன் ஊருக்கு பொதுவானவன். இவனைப் போன்றவர்கள் எந்த வேலைக்கும் காசு வாங்க மாட்டார்கள்.. ராஜஸ்தான் கிராமங்களில் இப்படி ஊர் காரியங்களைக் கவனித்துக் கொள்வதற்காகச் சிலரைப் பொதுமனிதராக விட்டுவிடுவார்கள். அவர்கள் தனது குடும்பத்திற்காகச் சம்பாதிக்க மாட்டார்கள். அவரது வீட்டிற்குத் தேவையான தானியங்களை ஊரே கொடுத்துவிடும். “

இது நிஜமா என்று யோசித்தபடியே சாப்பனிடம் “எத்தனை வருஷங்களாகக் கடிதம் கொண்டு போகிறாய்“ என்று கேட்டார் சாமுவேல்.

“வருஷம் தெரியாது. சிறுவனாக இருந்த போதிலிருந்து கடிதம் கொண்டு போகிறேன். இது வரை ஒரு கடிதத்தைக் கூடத் தொலைக்கவில்லை. பறி கொடுக்கவில்லை. அதிகாலையில் வீட்டைவிட்டுக் கிளம்பிவிடுவேன். மாலைக்குள் ஊர் திரும்பி விடுவேன்“. என்றார் சாப்பன்.

சாப்பன் சொல்வது உண்மை. பாலைவனத்தில் அதிகமான வழிப்பறிகள் நடந்து வந்த காலமது. சாமுவேலிற்கு அந்த மனிதனைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. அன்றாடம் அவர் சந்திக்கும் வணிகர்கள். கிராமசபைத் தலைவர்கள் காசிற்காக எதையும் செய்யக்கூடியவர்கள். பேராசை கொண்டவர்கள். பேச்சில் கள்ளத்தனமிருக்கும். ஆனால் சாப்பன் அப்படியில்லை.

பலானாவிலிருந்து சுமேர்பூரிற்கு இருபத்திமூன்று மைல். தினமும் நடந்து வருகிறார். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கடிதம் கொண்டு சென்றாலும் அதற்காகக் கூலி எதுவும் வாங்கியதேயில்லை. இங்கிலாந்தில் இப்படி ஒருவரைப் பார்க்க முடியாது என்று சாமுவேலிற்குத் தோணியது.

தனது பாராட்டின் அடையாளமாக அந்த அரையணாவை பெற்றுக் கொள்ளும்படி சொன்னார் சாமுவேல்,

“நான் இதுவரை கையில் காசைத் தொட்டதேயில்லை. அது பிசாசு. அதன் பின்னால் நம்மைக் கூட்டிக் கொண்டு போய்விடும். நடப்பதற்காக யாராவது கூலி வாங்குவார்களா என்ன“. என்றபடி சாப்பன் புறப்படத் துவங்கினார்.

சாமுவேல் வியப்புடன் சாப்பனைப் பார்த்துக் கொண்டிருந்தார். பின்பு இந்தியர்களைப் புரிந்து கொள்ள முடியாது என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார்.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 06, 2024 21:00

April 5, 2024

“உறுபசி” – நமக்குள் இருக்கும் தீமை

முனைவர். வ. இரமணன்

தமிழ் நாடு தடய அறிவியல் துறை.

பிரபஞ்சத்தின் சிதறம் (entropy) எப்போதும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்கிறது வெப்பவியக்கவியலின் இரண்டாம் விதி. அதாவது ஒழுங்கின்மை அல்லது சிதறிக்கிடப்பதுதான் பிரபஞ்சத்தின் இயல்பு. எந்த ஒரு ஒழுக்கமும் இயற்கைக்கு எதிரானது. என்று ஆதிமனிதன் வாழத்தலைப்பட்டானோ அன்றே இயற்கையை எதிர்க்கத்துணிந்து விட்டான். இன்றுவரை மனிதன் இயற்கையை எதிர்த்துக்கொண்டேதான் இருக்கிறான்.

நாம் நமக்கென்று சட்டதிட்டங்கள் வகுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவை இல்லையென்றால் மனிதன் வாழ்வது கடினமாகிவிடும். ஒரு கட்டற்ற வாழ்க்கையை மனிதன் மேற்கொள்ள நினைத்தால் சமூகம் மதிக்கும்படி அவனால் வாழமுடியாது. சமூகம் அவனைத் துடைத்தெறிந்துவிடும். அவ்வாறு துடைத்தெறியப்பட்ட ஒருவனின் அவலம்தான் “உறுபசி”.

சம்பத் என்ற மனிதனை நாம் கதைநெடுக ஒரு கட்டற்றவனாகவே காண்கிறோம். பறவைகள் போல, விலங்குகள் போல. அவன் வெளிகளைப் பிரிக்கும் சுவர்களை மனிதனின் கண்டுபிடிப்புகளிலேயே கொடுமையானது என்கிறான். ஒரு பெண்ணுடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டுமானால் ஒருவன் வேலைக்குச்சென்று சம்பாதிக்க வேண்டுமென்பது எவ்வளவு பெரிய அநீதி என்கிறான். இவை கட்டற்ற விலங்குகளின் குணங்கள். விலங்குகளைப்போல அவனும் கால்போன போக்கில் சுற்றித்திரிகிறான். அடுத்த நிமிடத்தைப் பற்றிச் சிந்திக்காதவனாக, நிகழ்காலத்தில் மட்டும் வாழ்பவனாக. உயிர்களின் அபரிமிதமான ஆதாரசக்தியான காமத்தால் அலைக்கழிக்கப்படுகிறான். அதனை மனவடக்கமெனும் மத்தகம் கொண்டு அடக்கத்தெரியாதவனாக அல்லலுறுகிறான்.

எஸ்.ரா அவர்கள் சம்பத்தின் வாழ்க்கையை ஒரு தீக்குச்சியின் வாழ்க்கையுடன் ஒப்பிடுகிறார் போலும். அதனாலேயே அவனைத் தீப்பெட்டிகளின்மீது விருப்பம் கொண்டவனாகச் சித்தரிக்கிறார் என எண்ணுகிறேன். எப்படித் தீக்குச்சியானது தொடக்கத்தில் அதிபிரகாசமாக எரிகிறதோ அப்படியே சம்பத்தின் இளமைக்காலம் அவனை ஒரு சிந்தனையாளனாக, போராளியாக, அஞ்சானாக, பெரும் அரசியல் எதிர்காலம் வாய்க்கப்பெறக்கூடிய ஒரு மேடைப்பேச்சாளனாக, புரட்சியாளனாகப் பிரகாசமாக அடையாளம் காட்டுகிறது. பிரகாசமாக எரிந்த தீக்குச்சியின் ஒளி அதன் தலையில் தரித்திருந்த பாஸ்பரஸ் ஆவியானதும் சட்டென்று வலுவிழப்பதைப்போல ஒரே நாளில் அவனது இயல்பான கட்டற்ற தன்மையால் அவனது அரசியல் எதிர்காலம் அஸ்தமிக்கிறது. பிறகு அவனது வாழ்க்கை, தீக்குச்சியின் ஆதரவில் இயல்பாக எரியும் ‘சவலைத்தீ’யானது, வீசும் காற்றுக்கு அஞ்சி அதிர்ச்சிக்குள்ளாகி இப்போது அணையுமோ எப்போது அணையுமோ என்று தழலாட்டம் ஆடித்தத்தளிப்பதைப்போலாகிறது.

நான் கவனித்தவரை, மகிழ்ச்சியளிக்கக்கூடிய புத்தகங்களை நாடும் அல்லது வாழ்க்கையின் இயல்பான சலிப்புகளிலிருந்து சிறிது ஓய்வுபெற புத்தகங்களில் அடைக்கலம் புகுந்து மகிழ்ச்சியை நாடும் வாசகர்களுக்கு “உறுபசி” ஏமாற்றம் அளித்துள்ளது. மாறாக இலக்கியத்தேடல் கொண்ட வாசகர்கள் உறுபசியைப் புரிந்துகொள்கிறார்கள். எஸ்.ரா அவர்களின் நேர்மையான எழுத்துக்கள் சிலசமயங்களில் வாசகர்களை அசௌகர்யமாக்குகின்றன. மருத்துவமனைச் சூழலிலும் ஜெயந்தியின் விலகிய மாராப்பைப் பார்த்துக்கொண்டிருந்த அழகரும், இறந்த கணவனுக்காக ஈரப்புடவையுடன் நீர்மாலை சுமந்துவரும் ஜெயந்தியை விழிகளால் பருகிக்கொண்டிருந்த ஆண்களும், மாரியப்பனின் பால்யகால ஓரினச்சேர்க்கை சம்பவமும், சம்பத்தின் காமவேட்கையும், இன்னபிறவும் வாசகனை அசௌகர்யமாக்கியிருக்கலாம். ஒருவேளை அந்நிகழ்வுகளில் வாசகன் அவனையேகூடப் பார்த்திருக்கலாம். அந்தக்குற்றவுணர்ச்சி அவனை அசௌகர்யமாக்கியிருக்கலாம்.

சம்பத்தின் நடத்தைக் கோணல்களையும் தாண்டி, அவன் நண்பர்களும், ஜெயந்தியும், யாழினியும் அவனை விரும்புகிறார்கள். நாம் எப்போதும் இயற்கையின் தன்னியல்பையும், கட்டிலா ஆற்றலையும், இயக்கத்தையும் கண்டு வியக்கிறோம். அதேபோன்ற இயல்புகள் கொண்ட சம்பத்தையும் அவன் நண்பர்கள் பல கருத்து வேறுபாடுகளையும், கசப்புகளையும் தாண்டி விரும்புகிறார்கள். அவனாக வாழமுடியவில்லையே என்ற உள்மன ஏக்கம் அவர்களுக்குள் இருந்திருக்கலாம்.

கட்டற்ற தன்மை கொண்ட சம்பத்தால் கட்டுப்பாடுகளே நியதியான இச்சமூகத்தில் தன்னைப்பொருத்திக்கொள்ள இயலவில்லை. ஒரு மேடைப்பேச்சாளனாக, அச்சக ஊழியனாக, விற்பனைப் பிரதிநிதியாக, பத்திரிகையில் பிழை திருத்துபவனாக, பூச்செடிகள் விற்பவனாக அவன் இச்சமூகத்தில் பொருந்திவாழ முயற்சிக்கிறான். அவனுடைய கட்டற்ற தன்மையாலும், இயற்கையான அறஉணர்வினாலும் அவனால் அவ்வேலைகளில் ஊன்றமுடியவில்லை. ஒவ்வொரு இடத்திலிருந்தும் பெயர்ந்துகொண்டே இருக்கிறான்.

அவனுடைய இயற்கையான கோணல் நடத்தையினால் சிறுவயதில் அவனது தங்கை சித்ராவின் மரணத்திற்கு அவனும் ஒரு காரனமாகிறான். அதுமுதல் குடும்பத்தினர் குறிப்பாக அவனது அக்கா அவனை வெறுக்கிறாள். அக்கா அவளது மகளுக்குச் சித்ரா என்று பெயர் சூட்டியிருப்பது தன் தங்கையிடம் அவளுக்குள்ள அன்பைக்காட்டுகிறது. தங்கையைத் தான் பார்த்துக்கொள்ளாமல் சம்பத்தின் பொறுப்பில் விட்டோமே என்ற குற்றஉணர்ச்சி கூடக் காரணமாக இருக்கலாம். சம்பத்தின் தந்தைக்கு இந்நிகழ்வுடன் சேர்ந்து அவனது பொறுப்பற்ற தன்மையும் கோபத்தை ஏற்படுத்துகிறது. அவனுக்கும், குடும்பத்தினருக்கும் நடுவில் ஒரு கட்புலனாகாத சுவர் எழுகிறது. அவன் தனிமைப்படுத்தப்படுகிறான். தங்கையின் மரணம் ஏற்படுத்திய குற்றஉணர்ச்சியும், குடும்பத்தினரின் புறக்கணிப்பும், தனிமையும், பாதுகாப்பின்மையும் சேர்ந்து அவனை முரடனாக்குகின்றன. எங்கும் அடிதடிகளில் இறங்குகிறான். தகப்பனிடம் அடிவாங்குகிறான். தகப்பனை அடிக்கிறான். மாமனிடமும், அக்காளிடமும் வசவு வாங்குகிறான். யாழினியால் இயல்பான வாழ்க்கைக்கு ஆகாதவனென நிராகரிக்கப்படுகிறான். தன் தோல்விகளையும், மனக்குமுறல்களையும் தனித்துக்கொள்வதற்காக ஜெயந்தியுடன் ஓயாமல் உறவில் ஈடுபடுகிறான். வாழ்க்கை முழுவதும் நிராகரிக்கப்பட்டு, துரத்தப்பட்டு, ஓடிக்களைத்து, மரணத்திற்கு விரும்பி, தீக்குச்சியின் கடைசி நொடித்துளிகள் போல் மங்கி ஒளியிழந்து கட்டுப்பாடுகளால் நிறைந்த இவ்வுலகை விட்டு கட்டற்ற வெளியுடன் கலக்கிறான்.

“நாமெல்லாம் பிராடுடா, சம்பத்தாண்டா வாழ்க்கைய உண்மையா வாழ்ந்தவன்” எனும் ராமதுரையின் வரிகள் யோசிக்க வைக்கின்றன. ஆம். உண்மையில் நாம் அனைவரும் நமக்குள் இருக்கும் தீமையை வெளியில் காட்டாமல் வேஷம் போட்டுக்கொண்டுதான் இருக்கிறோம், இச்சமுதாயத்தில் இருந்து துடைத்தெறியப்பட்டுவிடாமல் இருக்கும் பொருட்டு.

“அவன கொஞ்சம் பொறுத்துப்போயிருந்தா அவனும் வாழ்ந்துருப்பாண்டா” என்னும் ராமதுரையின் ஆதங்கம் அவனைச் சம்பத்தின் உண்மையான தோழனாக அடையாளம் காட்டுகிறது. சம்பத்தின்மீது எப்போதும் கோபப்பட முடியாத ஜெயந்தியின் பாத்திரவார்ப்பு விசித்திரமானது. இலக்கியத்தேவை கருதி நிச்சயம் வாசிக்கப்பட வேண்டியது நூல்தான் “உறுபசி”.

****

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 05, 2024 22:40

April 4, 2024

எம்.எஃப் ஹுசைன்

Through the Eyes of a Painter – ஓவியர் எம்.எஃப் ஹுசைன் இயக்கிய திரைப்படம். 18 நிமிஷங்கள் கொண்ட இந்தப் படம் ஓவியனின் பார்வையில் ராஜஸ்தானின் மூன்று கிராமங்களை மிகுந்த அழகுணர்வுடன் சித்தரிக்கிறது.

இசையும் காட்சிப்படிமங்களும் இணைந்து புதிய அனுபவத்தைத் தருகின்றன.

படத்தில் உரையாடல் கிடையாது

காட்சிக்கோர்வைகளின் வழியே காலமும் கலைகளும் உருவாக்கிய மாற்றங்களை அடையாளப்படுத்துகிறார்.

மணிகௌலின் ஆவணப்படங்களைப் போன்ற அழகியலைக் கொண்டிருக்கிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 04, 2024 00:39

April 3, 2024

நிலத்தின் குரல்

ஒரு கனவைத் துரத்திச் செல்லும் மனிதனின் கதை தான் The Promised Land. பதினெட்டாம் நூற்றாண்டில் நடக்கிறது. Ida Jessen எழுதிய நாவலைத் தழுவி, நிகோலஜ் ஆர்செல் இயக்கியுள்ளார். லுட்விக் கஹ்லெனாகச் சிறப்பாக நடித்திருக்கிறார் மிக்கெல்சென்.

படத்தின் சில காட்சிகள் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நட் ஹாம்சன் எழுதிய நிலவளம் நாவலை நினைவூட்டுகிறது.

லுட்விக் கஹ்லென் ராணுவத்தில் கேப்டனாகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர், டென்மார்க்கில் மக்கள் வசிக்காத ஜுட்லாந்து நிலப்பகுதியை விவசாய நிலமாக மாற்ற விரும்புகிறார்

வடக்கில் கிரெனன் ஸ்பிட் முதல் தென்கிழக்கில் எல்பே மற்றும் சூட் சங்கமம் வரை ஜுட்லாந்து நீண்டுள்ளது.

ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று ஏழ்மையான வாழ்க்கையை நடத்தி வரும் கஹ்லெனுக்கு ஜுட்லாந்தை சீர்படுத்தி விவசாயம் செய்ய வேண்டும் என்பது நீண்டநாள் கனவு.

அதற்குக் காரணம் அவரது பிறப்பிலிருந்து தொடரும் களங்கம். கள்ளஉறவில் பிறந்த பையன் என்று அவரைச் சமூகம் கேலி செய்கிறது. இதிலிருந்து விடுபட்டு தானும் உயர்குடியைச் சேர்ந்த கனவான் என்று நிரூபணம் செய்வதற்காக இப்படி ஒரு திட்டத்தை முன்னெடுக்கிறார்.

இதற்காக, மன்னரின் அனுமதியைப் பெற அரண்மனைக்குச் செல்கிறார். நீதித்துறை அதிகாரிகள் அவரது விண்ணப்பதைக் கண்டு கேலி செய்கிறார்கள். உதவாத வேலை என்று அவமானத்தைப் படுத்துகிறார்கள். முடிவில் மன்னரை சந்தித்துத் தனது கோரிக்கையை முன்வைக்கிறார்.

விவசாய நிலமாக மாற்றிவிட்டால் தன்னைப் பிரபுவாக அங்கீகரித்துப் பட்டம் அளித்துக் கௌரவிக்கவும் சலுகைகள் தரவும் வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறார். இது ஒரு போதும் நடக்காத காரியம் என்பதால் போதையிலிருந்த மன்னரும் அனுமதி அளிக்கிறார். ஆனால் எந்த நிதி உதவியும் அளிக்க முடியாது என்கிறார்.

கஹ்லென் ஜுட்லாந்தை நோக்கி தனது பயணத்தைத் துவங்குகிறார். அந்த நிலப்பரப்பு வசீகரமானது. புதிரானது. உயிரைப் பறிக்கும் அழகோடு விளங்குகிறது.

ஜுட்லாந்தின் ஒரு பகுதியை தனதாக்கி வைத்துள்ள பணக்கார பிரபு ஃபிரடெரிக் டி ஷிங்கெல் தனது பணியாளர்களை அடிமைகள் போல நடத்துகிறான். தன்னை எதிர்ப்பவர்களை மிக மோசமாகத் தண்டிக்கிறான். கண்களில் கொடூரம் மினுங்க சைக்கோபாத் போல நடந்து கொள்ளும் ஷிங்கெல் பசித்த ஓநாயைப் போலவே காட்சியளிக்கிறான்.

லுட்விக் ஜுட்லாந்தில் விவசாயம் செய்வதற்கு அங்குள்ள இளம் போதகர் உதவி செய்கிறார். கையில் இருந்த பணத்தைக் கொண்டு சிறிய மரவீடு ஒன்றை அமைத்துக் கொள்கிறான். விவசாயப்பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். ஆள் கிடைக்கவில்லை. ஷிங்கெல்லிடமிருந்து தப்பியோடி வாழ்ந்து வரும் ஜோன்ஸ் மற்றும் அவனது மனைவி பார்பராவை வேலைக்கு வைத்துக் கொள்கிறான்.

மூவருமாக நிலத்தைச் சீர் செய்து விவசாயப் பணிகளை மேற்கொள்கிறார்கள். இதனை அறிந்த ஃபிரடெரிக் கஹ்லெனை விருந்திற்கு அழைக்கிறான். அங்கே அவனை நிலத்தைத் தன்னிடம் ஒப்படைத்துவிட்டு ஒடிவிடும்படி எச்சரிக்கை செய்கிறான். அந்தச் சந்திப்பில் கஹ்லெனின் பிடிவாதம் மற்றும் கனவு வெளிப்படுகிறது.

நார்வே அரச குடும்பத்தைச் சேர்ந்த எடேல் தன்னைத் திருமணம் செய்து கொள்வாள் என்று ஷிங்கெல் நம்புகிறான். அவளோ விருந்திற்கு வந்த கஹ்லெனின் மீது காதல் கொள்கிறாள். அவருக்குப் பல்வேறு விதங்களில் உதவி செய்கிறாள்.

இதனால் ஷிங்கெல் ஆத்திரம் கொள்கிறான். ஜுட்லாந்திலிருந்து கஹ்லெனைத் துரத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறான். புதுப்புதுப் பிரச்சனையாக முளைக்கிறது.

இதனிடையில் ஜிப்ஸி சிறுமி ஒருத்தி அவர்கள் வீட்டில் திருட வந்து பிடிபடுகிறாள். அவளைத் தனது மகளைப் போல வளர்க்க ஆரம்பிக்கிறான். விவசாயத்திற்கான பணியாட்கள் கிடைக்காத சூழலில் ஜிப்ஸிகளை அழைத்து வந்து வேலைக்கு வைத்துக் கொள்கிறான்.

விவசாய வேலைக்கு ஜிப்ஸிகளை வைத்துக் கொள்ளக்கூடாது என்று டென்மார்க்கில் சட்டமிருக்கிறது. ஆகவே அதைக் காரணம் காட்டி அவனைக் கைது செய்ய முயலுகிறான் ஷிங்கெல்.

முடிவில்லாத போராட்டங்களைத் தாண்டி உருளைகிழங்கு விவசாயம் செய்கிறான். இயற்கையும் அவனை வஞ்சிக்கிறது. கஹ்லென் பனிப்பொழிவினுள் உருளைக்கிழங்கினைக் காப்பாற்ற போராடும் காட்சி மறக்க முடியாதது

ஷிங்கெல் ஒரு நாள் ஜோன்ஸை பிடித்துவந்து கஹ்லென் கண்முன்னால் சித்ரவதை செய்கிறான். ஜோன்ஸ் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றி கதற விடுகிறான். கஹ்லெனால் தடுக்க முடியவில்லை. சட்டம் ஷிங்கெல் பக்கமிருக்கிறது.

கணவனை இழந்த பார்பராவை தனது துணையாக்கிக் கொள்கிறான் கஹ்லென். அவர்களுக்குள் ஏற்படும் நெருக்கமும் அவர்கள் இணைந்து வாழும் காட்சிகளும் அழகாக உருவாக்கபட்டுள்ளன.

கஹ்லென் தங்கள் நிலத்தில் விளைந்த உருளைக்கிழங்கினை மன்னருக்கு பரிசாக அனுப்பி வைக்கிறான்.

அவனுக்கு உதவி செய்ய ஆட்கள் அனுப்பி வைக்கபடுகிறார்கள். புதிய குடியிருப்புகள் உருவாகின்றன. ஆனால் ஜிப்ஸி சிறுமியை அவன் வீட்டில் வைத்திருக்கக் கூடாது. அவள் சாத்தானின் வடிவம் என்று வந்தவர்கள் நிபந்தனை விதிக்கிறார்கள். இதனைக் கஹ்லென் ஏற்க மறுக்கிறான். அப்படி என்றால் தாங்கள் அங்கே வசிக்க முடியாது என்று வந்தவர்கள் மிரட்டுகிறார்கள். இன துவேசத்தைக் கஹ்லென் எதிர்க்கிறான். ஆயினும் அவனால் மக்களின் மனதை மாற்ற முடியவில்லை.

மனித நடமாட்டமில்லாத நிலவெளி. ஊடுருவ முடியாத மூடுபனி , ஊளையிடும் காற்று. ஒளிரும் சூரியன், ஆபத்துகள் நிறைந்த இருண்ட விசித்திரக் காடு. ஷிங்கெல் வீட்டில் நடைபெறும் விருந்து. அந்த மாளிகையில் எரியும் நூற்றுக்கணக்கான மெழுகுவர்த்திகள், என Rasmus Videbæk இன் ஒளிப்பதிவு நிலப்பரப்பையும் அதன் மனிதர்களின் விசித்திர மனநிலையினையும் நேர்த்தியாக வெளிப்படுத்துகிறது. டான் ரோமரின் இசையமைப்பு மிகச்சிறப்பானது.

மிக்கெல்சென் போன்ற  சிறந்த நடிகரை ஹாலிவுட் பயன்படுத்தும் விதமும் டேனிஷ் சினிமா பயன்படுத்தும் விதமும் எவ்வளவு மாறுபட்டது என்பதற்கு இப்படமே சாட்சி.

இப்படத்தைத் திரைவிமர்சகர் மாட் மஹ்லர் ஹாலிவுட்டிற்குச் சவால்விடும் சிறந்த கலைப்படைப்பு என்கிறார். அது சரியான மதிப்பீடே.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 03, 2024 02:36

April 2, 2024

ஸ்ருதி டிவி / வாழ்த்துகள்

ஸ்ருதி டிவி ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர்களைத் தொட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

புத்தக வெளியீடுகள். இலக்கிய உரைகள், புத்தகத் திருவிழா என இலக்கிய நிகழ்வுகளை ஆவணப்படுத்தியதில் ஸ்ருதி டிவியின் பங்கு மிக முக்கியமானது.

ஸ்ருதி டிவியைச் சிறப்பாக நடத்திவரும் கபிலன், சுரேஷ் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக உள்ள குடும்பத்தினரை மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 02, 2024 19:58

கால்வினோவின் ஆறு உரைகள்

எழுத்தின் நுட்பங்களைக் கற்றுக் கொள்வதற்கான கட்டுரைகள், நூல்கள் தமிழில் மிகக் குறைவாகவே எழுதப்பட்டிருக்கின்றன. ஆங்கிலத்தில் நிறைய நூல்கள் உள்ளன. ஆனால் பெருமளவு பல்கலைகழகப் பேராசிரியர்கள் எழுதியது. வகுப்பறைப் பாடமாகவோ, அல்லது பயிற்சிமுகாமிற்கான கையேடு போலவோ தயாரிக்கபட்டவை.

தனது படைப்புகள் மற்றும் படைப்பின் நுட்பங்கள் பற்றி எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களே நாம் வாசிக்க வேண்டியவை. இதே பொருளில் அவர்கள் ஆற்றிய உரைகளும் முக்கியமானதே.

ஹார்வர்ட் பல்கலைகழகத்தால் நடத்தப்படும் NORTON LECTURES வரிசையில் T .S. Eliot, Jorge Luis Borges, Czeslaw Milosz, Nadine Gordimer, Orhan Pamuk ஆற்றிய உரைகள் சிறப்பானவை. இதில் சில தனிநூலாகவும் வெளியாகியுள்ளன.

குறிப்பாக ஜோர்ஜ் லூயி போர்ஹெஸ் கவிதை குறித்து ஆறு உரைகள் நிகழ்த்தியிருக்கிறார். இதன் எழுத்துவடிவம் This Craft of Verse என்ற நூலாக வந்துள்ளது. இளம்கவிஞர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம். கவிதையை ஆழ்ந்து புரிந்து கொள்வதற்கும், அதன் சிறப்பியல்புகளை அறிந்து கொள்வதற்கும் இதனை இலக்கிய வாசகர்களும் வாசிக்க வேண்டும்.

இந்த உரையின் ஆடியோ தொகுப்பு இணையத்தில் கிடைக்கிறது. அதைக் கேட்கும் போது போர்ஹெஸின் வகுப்பறையில் நாமே அமர்ந்திருப்பதைப் போல உணரலாம்.

1985ம் ஆண்டு NORTON LECTURES வரிசையில் ஆறு உரைகளை நிகழ்த்துவதற்காக இதாலோ கால்வினோ அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் உரையாற்றும் முன்பாக அவர் காலமாகிவிட்டதால் உரைக்குறிப்புகள் Six Memos for the Next Millennium என்ற நூலாக வெளியாகியுள்ளது.

நாவலின் எதிர்காலம் என்ற பொதுதலைப்பில் இந்த உரைகளைத் தயாரித்திருக்கிறார். ஆறாவது உரை தயாரிக்கப்படவில்லை. ஆனால் எதைப்பற்றிப் பேச விரும்பினார் என்பதை நூலின் முன்னுரையில் காண முடிகிறது

புதிய நூற்றாண்டில் நாவல்கள் எப்படியிருக்க வேண்டும் என்பதைப் பற்றிய அவரது எண்ணங்களே இந்த உரைகளின் அடித்தளம். உண்மையில் நவீனத்துவத்திலிருந்து பின்நவீனத்துவத்தை நோக்கிய நகர்வையும். அதன் தேவையினையும் கால்வினோ உணர்ந்திருக்கிறார்.

கால்வினோ தனது உரைக்கான தயாரிப்பில் பெரும்பாலும் செவ்வியல் படைப்புகள் மற்றும் ஐரோப்பிய இலக்கியங்களை உதாரணமாகக் காட்டுகிறார். ஆனால் அவர் கவனப்படுத்தும் எழுத்தின் நுட்பங்கள் முக்கியமானவை.

LIGHTNESS (லேசான தன்மை), Quickness (விரைவுத்தன்மை), Exactitude (துல்லியம்) visibility (தெரிவு நிலை) Multiplicity (பன்முகத்தன்மை) consistency (நிலைத்தன்மை) என ஆறு கருப்பொருட்களைத் தேர்வு செய்திருக்கிறார். இவை ஒரு படைப்பாளிக்கு ஏன் தேவை என்பதை விரிவாக விளக்குகிறார்.

கால்வினோவின் ஆழ்ந்துபரந்த வாசிப்பு மற்றும் இலக்கிய வடிவங்கள் குறித்த புரிதல் வியப்பளிக்கிறது.

லேசான தன்மை என்பதை மேலோட்டமாக என்று புரிந்து கொண்டுவிடக்கூடாது, இது உணர்வின், புரிதலின், வெளிப்பாட்டின் இலகுத்தன்மை பற்றியது. பெரியதோ, சிறியதோ எல்லா நிகழ்வுகளும் உணர்வுகளும் அதற்கான எடையைக் கொண்டிருக்கின்றன. நினைவின் வழியே அவை பகிரப்படும் போது சில வேளை எடையற்றும் பல வேளை கூடுதல் எடையோடும் வெளிப்படுகின்றன. ஒரு வகையில் லேசானதன்மை என்பதை வாழ்க்கை குறித்த அறிவியலின் பார்வை என்று சொல்லலாம்.

துல்லியமே படைப்பிற்கான நம்பகத்தன்மையை உருவாக்குகிறது. செய்திகள் தரும் துல்லியம் வேறு. படைப்பில் வெளிப்படும் துல்லியம் வேறு. படைப்பில் துல்லியம் என்பது உணர்வாலும், உண்மையாலும், நிகழ்வு வெளிப்படும்முறையாலும் சாத்தியமாகிறது. பலநேரம் இவை யாவும் ஒன்றிணைந்தும் வெளிப்படுகின்றன. வாசகன் இந்தத் துல்லியத்தைக் கண்டு வியப்படைகிறான். நெருக்கம் கொள்கிறான்.

வேகம், அல்லது விரைவுத்தன்மை படைப்பில் எவ்வாறு வெளிப்படுகிறது என்பது முக்கியமானது. செயற்கையாக ஒரு விரைவுதன்மையைப் பொழுதுபோக்குப் படைப்புகள் உருவாக்குகின்றன. இலக்கியத்தில் விரைவுதன்மை என்பது காலம் மற்றும் வெளியை கையாளும் முறையில் உருவாகிறது.

இந்த நூலில் கால்வினோ இத்தாலிய நாட்டுபுறக்கதைகளிலிருந்து தான் கற்றுக் கொண்ட நுட்பங்களைப் பற்றியும் கூறுகிறார். அவரே இத்தாலிய நாட்டுப்புறக்கதைகளைத் தொகுத்திருக்கிறார். கதை சொல்லப்படும் முறையே அவரைக் கவருகின்றது. நாட்டுப்புறக்கதைகளில் மாயமும் யதார்த்தமும் இணைந்தே வெளிப்படுகின்றன.

கால்வினோ தனது உரையொன்றின் முடிவில் ஒரு சீனக்கதையினைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார். அது தத்துவவாதியும் ஓவியருமான சுவாங் சூவைப் பற்றியது.

சீன அரசன் ஒரு நாள் சுவாங் சூவிடம் நண்டு ஒன்றை வரையச் சொன்னான். அதற்கு அவர் தனக்கு ஐந்து ஆண்டுகள், ஒரு வீடு மற்றும் பன்னிரண்டு வேலைக்காரர்கள் தேவை என்று பதிலளித்தார்.

மன்னரும் அவர் கேட்டவற்றைக் கொடுத்துவிட்டுக் காத்திருந்தார். ஐந்து வருடங்கள் கடந்தும் சுவாங் சூ நண்டை வரையவில்லை.

இது பற்றிக் கேட்டதற்கு “எனக்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் தேவை,” என்று பதிலளித்தார். அதையும் மன்னர் ஏற்றுக் கொண்டார்.

பத்து வருடங்களின் முடிவில், சுவாங் சூ தனது தூரிகையை எடுத்து, ஒரு நொடியில், ஒரே வீச்சில், இதுவரை எவரும் கண்டிராத படி நண்டு ஒன்றை ஒவியமாக வரைந்து முடித்தார்.

இக்கதை வெளிப்பாட்டின் வேகம், மற்றும் படைப்பின் உச்சநிலையை வெளிப்படுத்துகிறது. சீனாவில் தேர்ந்த மாட்டுத்தரகர்கள் சந்தையில் மாடு விற்கப் போகும் போது மாட்டின் எடையைக் கண்ணால் பார்த்தே சொல்லிவிடுவார்களாம். அதுவும் துல்லியமாக. அது போன்ற வெளிப்பாட்டினையே எழுத்தும் வேண்டுகிறது.

கால்வினோவின் புலப்படாத நகரங்களை வாசிக்கும் போது அவர் முன்வைக்கும் எழுத்தின் நுட்பங்கள் எப்படி அவரது எழுத்தில் வெளிப்படுகின்றன என்பதை அறிய முடிகிறது.

இலக்கியத்தின் எல்லையற்ற ஆற்றல்களையும், அதன் எதிர்காலத்தையும் பற்றிய கனவுகளுடன் இந்த உரையை நிகழ்த்த கால்வினோ விரும்பியிருக்கிறார். ஆனால் காலம் அதை அனுமதிக்கவில்லை. எழுத்தின் நுட்பங்களில் ஒன்றாக இல்லாமல் விதியாக அமைவது, காலம் நம்மை எழுத அனுமதிக்க வேண்டும் என்பதே.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 02, 2024 05:54

April 1, 2024

கதாவிலாசம் / விமர்சனம்

எனது கதாவிலாசம் கட்டுரைத் தொகுப்பின் ஆங்கில மொழியாக்கத்தை உலகின் மிகப்பெரிய பதிப்பாளர்களில் ஒருவரான டெய்லர் & பிரான்சிஸ் (Routledge )பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இந்தியப் பதிப்பு. அயல்நாட்டு பதிப்பு என இருவிதமாக இந்நூல் வெளியாகியுள்ளது.

அதற்கான விமர்சனம் இம்மாத thebookreviewindia இதழில் வெளியாகியுள்ளது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 01, 2024 01:40

முரளிதரன் கண்ட கனவு

P. பொன்மாரியப்பன்

தங்களது இணையதளத்தில் முப்பது வயதுச் சிறுவன் சிறுகதை வெளியாகியுள்ளதைக் கண்டு உடனடியாகக் கம்ப்யூட்டர் சென்டருக்குப் போய் கதையைப் பிரிண்ட் அவுட் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்.

எனக்கு 44 வயதாகிறது. எனக்குள் இருக்கும் முப்பது வயது சிறுவன் தான் இந்தச் சிறுகதையை வாசிக்கத் தூண்டினான் என்பேன்

கதையை வாசித்து முடித்தபோது என் கனவில் சேதுராமனின் அப்பா வந்தது போலவே இருந்தது. அவரை நேரில் பார்த்தது போல உணர்ந்தேன்.

ஆரம்பப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் நட்பு ஐந்தாம் வகுப்பு மேல் தொடர்வதில்லை. காலம் கடந்தும் பள்ளிக்கூட நட்பின் ஆழத்தை உணர்த்துவதற்காகத் தான் கனவுகள் வருகிறது என்பதைக் கதையில் வாசித்த போது நிஜம் என்று பட்டது.

முரளிதரன் கனவில் ஏன் சேதுராமனின் அப்பா தோன்ற வேண்டும்? சேதுராமனின் அப்பா நாம் தொலைத்துவிட்ட அப்பாவித்தனத்தைக் கொண்டிருக்கிறார். அதை நினைவூட்டவே கனவில் வருகிறார்.

அமெரிக்காவில் முரளிதரன் வாழ்க்கையில் வெற்றிபெற்ற மனிதராக இருக்கிறார். ஆனால் மகிழ்ச்சியாக இல்லை. அது தான் சேதுராமனின் அப்பாவைக் கனவில் வரவைக்கிறது.

எனது அம்மாவின் ஊர் உடையாம் புளி, சிறிய கிராமம். அந்தக் கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு வரை படித்த நண்பர்கள் நட்பும், கிராம மக்களின் அன்பும் இந்தச் சிறுகதை வாசிக்கும் போது எனக்குள் நினைவாக வந்தது.

எனது சிறுவயதில் இடது கண்ணில் பூ விழுந்த ஒளிமுத்து என்பவரைப் பார்த்திருக்கிறேன். அவரைச் சிறுவர்கள் கேலி செய்வார்கள். அவரும் கோபப்பட்டுக் கல் எரிந்து விடுவார். அந்த ஒளிமுத்துவை சேதுராமனின் அப்பா செல்வம் கதாபாத்திரம் நினைவூட்டியது.

பள்ளிக்கூடம் உருவாக்கிய பயம் வாழ்நாளில் போகாது. அந்தப் பயம் தான் சேதுராமனின் அப்பாவைப் பித்தனாக மாற்றியது என்பதைப் புரிந்து கொண்டேன்.

முரளிதரன் கண்ட கனவில் செல்வம் ராட்டினத்தில் உயரப் பறக்கிறார். மகிழ்ச்சி ஆரவாரத்தில் கையை வீசுகிறார். அவரது மகிழ்ச்சி தான் தங்கக் காசுகளாக மாறுகிறது. மிகவும் நல்ல சிறுகதை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 01, 2024 00:02

March 30, 2024

காலத்தின் மணல்

மணற்கடிகாரம் ஒன்றின் மீது முகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் அமர்ந்திருக்கும் ஓவியம் ஒன்றைக் கண்டேன். 1625ல் வரையப்பட்டது. புகழ்பெற்ற மொகலாய ஓவியர் பிசித்ர்(Bichitr) வரைந்தது. அவர் ஜஹாங்கீரின் அரசசபைக் கலைஞர்களில் ஒருவரான ஓவியர் அபுல் ஹசனின் சீடர்.

இந்த ஓவியத்தில் மன்னருடன் நான்கு பேரின் உருவம் காணப்படுகிறது. அதில் சூஃபி ஷேக் ஹுசைனுக்குப் புத்தகம் ஒன்றைப் பரிசளிக்கிறார் ஜஹாங்கீர்.

ஓவியத்தில் பேரரசர் ஜஹாங்கீரும். ஞானியும் இணையாக வரையப்பட்டிருக்கிறார்கள். மன்னரின் மெல்லிய உடை. அவர் அணிந்துள்ள முத்துமாலைகள், காதணி. கையிலுள்ள மோதிரங்கள், கைவிரல்கள் மிகவும் துல்லியமாக வரையப்பட்டிருக்கின்றன.

ஷேக் ஹுசைன் மன்னரிடமிருந்து புத்தகத்தைத் தனது கைகளில் பெறவில்லை. அதனைத் தனது மேலாடையில் ஏந்துகிறார். இச்செயல் புத்தகம் மதிப்புமிக்கக் காணிக்கையாக வழங்கப்படுவதைக் காட்டுகிறது.

மன்னரின் மரியாதையை ஏற்றுக் கொண்ட மகிழ்ச்சியை ஞானியின் முகம் வெளிப்படுத்துகிறது. அதே நேரம் அவரது கண்கள் வியப்படையவில்லை. அது ஏறிட்டே பார்க்கின்றன.

நோயுற்ற நிலையிலிருந்து ஜஹாங்கீர் மீண்டு வந்திருக்கிறார் என்பதன் அடையாளமாகவே அவரது முகத்தில் முழுமையான மகிழ்ச்சியில்லை. குறிப்பாக அவரது தாடை மற்றும் கண்கள் தளர்ந்திருக்கின்றன. மன்னரின் உடையைக் கவனிக்கும் போது இந்தச் சந்திப்புத் தனிப்பட்ட அவரது அறையில் நடக்கிறது என்பதை அறிய முடிகிறது.

நீண்டகாலமாகக் குழந்தை இல்லாத அக்பர் சிக்ரியில் வசித்த சூஃபி ஞானி சலீம் சிஷ்டியை வணங்கி, அரியணைக்கு ஆண் வாரிசு வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். சிஷ்டியும் அக்பரை ஆசீர்வதித்தார். அப்படிப் பிறந்தவர் தான் சலீம்.

நூர்-உத்-தின் முஹம்மது சலீம் எனும் ஜஹாங்கீர் தந்தையைப் போலவே சூஃபி ஞானிகளை வணங்கி மரியாதை செய்து வந்தார். அதன் வெளிப்பாடாகவே இந்த ஓவியம் வரையப்பட்டிருக்கிறது

துருக்கி சுல்தான் இந்த அருட்கொடையை வியந்து போற்றுவது போல வரையப்பட்டிருக்கிறார். அவருக்குக் கீழே இங்கிலாந்தின் மன்னர் ஜேம்ஸ்-I ன் உருவம் வரையப்பட்டிருப்பது வியப்பளிக்கிறது. அவர் எதற்காக இந்த நிகழ்வின் சாட்சியமாக இடம்பெற்றிருக்கிறார். ஜேம்ஸ்-I ன் கை வாளின் மீது இடம்பெறவில்லை என்பது முக்கியமானது.

1585 ஆம் ஆண்டில், எலிசபெத் I அக்பருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார். இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக உறவுகளை உருவாக்கும் முயற்சியில் எழுதப்பட்ட கடிதமது. அதில் இந்தியாவில் வணிகம் செய்வதற்குத் தேவையான உதவிகளைக் கேட்டிருந்தார்.

ஆங்கிலத் தூதரான சர் தாமஸ் ரோ அக்பரைச் சந்தித்துப் பரிசுகள் வழங்கியிருக்கிறார். அவரே இந்தியாவிற்கு வந்த முதல் ஆங்கிலேய வர்த்தகர் என்கிறார்கள்.

இங்கிலாந்தின் மன்னர் ஜேம்ஸ் உருவம் ஓவியர் ஜான் டி கிரிடிஸ் என்பவரால் வரையப்பட்டது. அதனை முகலாய அரசருக்குப் பரிசாக வழங்கியிருக்கிறார்கள். அதிலிருந்த ஜேம்ஸின் உருவத்தையே பிசித்ர் வரைந்திருக்கிறார்.

ஜஹாங்கீர் ஓவியத்தில் இரண்டு குதிரைகள் மற்றும் ஒரு யானையைக் காட்டும் ஒரு சிற்றோவியத்தை அவர் கையில் ஏந்தி பணிவுடன் காட்சி தருகிறார்.

இந்த ஓவியத்தில் என்னைப் பெரிதும் கவர்ந்தது அந்த மணற்கடிகாரமே. இந்தியாவில் நீர்கடிகை, சந்திரகடிகை, என்று பல்வேறு காலக்கருவிகள் இருந்தன. நீர்க் கடிகாரத்தின் மூலம் காதிஸ் எனப்படும் அலகுகளில் நேரம் அளவிடப்பட்டது. முகமது பின் துக்ளக் இந்த நீர் கடிகாரத்தையும் நேர அலகுகளையும் ஏற்றுக்கொண்டார், பாபர் முதல் பிற முகலாய ஆட்சியாளர்களும் இதனையே ஏற்றுக்கொண்டார்கள்.

இந்த நிலையில் மணற்கடிகாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தபட்ட போது அதை எப்படி ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்று புரியவில்லை.

காலத்தின் அதிபதியாக மன்னரைக் கொண்டாடுவது அன்றைய மரபே. ஆனால் அதற்கு இப்படி ஒரு மணற்கடிகாரத்தைத் தேர்வு செய்தது பிசித்ரின் தனித்துவமே

பொதுவாகக் காலத்தை அடையாளப்படுத்த இயற்கைக் காட்சிகளையோ, தெய்வீகச் சின்னங்களையோ தான் வரைவார்கள். நித்யத்துவத்தின் அடையாளமாக ரோஜாவை மொகலாய ஓவியங்கள் வரைவது வழக்கம். ஆனால் இங்கே நாம் காணுவது ஐரோப்பிய மணற்கடிகாரம். அதை மரபான இந்திய காலக் கடிகைகளுக்குப் பதிலாகத் தேர்வு செய்திருப்பது ஆச்சரியமளிக்கிறது.

14ம் நூற்றாண்டில் கடலோடிகளால் மணற்கடிகாரம் பயன்படுத்தபட்டதாகக் குறிப்புகள் உள்ளன, மெக்கல்லன் பயணப் பட்டியலில் மணற்கடிகாரம் இருக்கிறது. இந்தியாவிற்கு எப்போது அறிமுகமானது என்று தெரியவில்லை. முதன்முதலாக மணற்கடிகாரத்தை உருவாக்கியது யார் என்பதும் தெரியவில்லை. அக்பர் காலத்தில் மணற்கடிகாரம் இந்தியாவில் அறிமுகமாகியிருக்கக் கூடும் என்கிறார்கள்.

இந்த ஓவியத்தில் மணற்கடிகாரம் ஜஹாங்கீர் வாழ்க்கையின் குறியீடாகவும், காலத்தின் அதிபதியாக ஜஹாங்கீரைக் குறிப்பதாகவும் வரையப்பட்டிருக்கிறது.

வழக்கமான மொகலாய ஓவியங்களிலிருந்து பெரிதும் மாறுபட்டு ஐரோப்பிய மற்றும் இஸ்லாமிய கலை பாணிகளை இணைத்து வரையப்பட்டிருக்கிறது

தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை ஜஹாங்கீர் செலவழித்து விட்டிருக்கிறார். என்பதன் அடையாளமாக மணற்கடிகையின் கீழ்பகுதியில் மணல் சேர்ந்திருக்கிறது

மணல் கடிகாரத்தில் பாரசீக மொழியில் பேரரசர் ஆயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய பாணியில் வரையப்பட்ட மன்மத உருவங்களும் அழகான பூ வேலைப்பாடுகளும் தனித்த அழகைத் தருகின்றன. கடவுளுக்கு நிகரானவர் என்பதன் அடையாளமாக ஜஹாங்கீரின் தலையைச் சுற்றி ஒளிவட்டம் வரையப்பட்டிருக்கிறது.

ஜஹாங்கீர் என்ன புத்தகத்தைப் பரிசாகத் தருகிறார் என்று தெரியவில்லை. அச்சு இயந்திரங்கள் வராத காலத்தில் புத்தகங்களும் கலைப்பொருளாகவே கருதப்பட்டன. இதில் அவர் தருவதும் ஒரு கலைப்பொருளே.

இந்த ஓவியத்தைக் காணும் போது ஒரு பேரரசர், ஞானிக்கு அளிப்பதற்குப் புத்தகத்தைத் தவிர வேறு என்ன பெரிய பரிசு இருந்துவிட முடியும் என்றே தோன்றுகிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2024 04:20

March 29, 2024

ஆகஸ்ட் மாதக் காதல்

கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் புதிய நாவல் Until August யை வாசித்தேன், அவர் மறைந்து பத்து ஆண்டுகளுக்குப் பின்பு வெளியாகியுள்ளது.

2002ல், மார்க்வெஸிற்கு டிமென்ஷியா இருப்பது கண்டறியப்பட்டது. நினைவு மறத்தலுக்கு ஆளான மார்க்வெஸால் அதன்பிறகு எதையும் எழுத இயலவில்லை. அவரது கடைசி நாட்களில் குடும்ப உறுப்பினர்களையே அடையாளம் கண்டு கொள்ள முடியாதவராக இருந்தார் என்கிறார்கள்.

எழுத்தாளனின் ஒரே சொத்து நினைவுகள் தான். அது மறையத்துவங்கும் போது அவன் இறக்கத் துவங்குகிறான். மறதியோடு நடக்கும் போராட்டம் தான் எழுத்து.

மார்க்வெஸ் 1999 ஆம் ஆண்டு இந்த நாவலை எழுத துவங்கினார். 2003ல் இந்த நாவலின் முதல் அத்தியாயம் பத்திரிக்கையில் வெளியானது. பின்பு நாவல் சரியாக வரவில்லை என்று அவரே வெளியிட மறுத்துவிட்டார்.

2012ல் உடல் நலிவுற்று மரணப்படுக்கையில் இருந்த போது நாவலை ஒரு போதும் வெளியிடக்கூடாது என்றே குடும்பத்தினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் இன்று அவரது இரண்டு மகன்களும் நாவலை வெளியிட்டுள்ளார்கள். நாவலை வெளியிட வேண்டாம் என்று மார்க்வெஸ் எடுத்த முடிவு சரியே. அவரது மகன்கள் துரோகம் செய்துவிட்டார்கள் என்று மார்க்வெஸின் தீவிர வாசகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்

இது குறித்து நாவலின் முன்னுரையில் அவரது இரண்டு மகன்களும் விளக்கம் அளித்திருக்கிறார்கள். அத்தோடு தந்தையிடம் நாவலை வெளியிட்டதற்காக மன்னிப்பும் கேட்டிருக்கிறார்கள்.

பாவம் மார்க்வெஸ். இறந்தவரால் என்ன செய்துவிட முடியும். ஒருவேளை அவரது மனைவி உயிரோடு இருந்திருந்தால் இதனை அனுமதித்திருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது

அவரது தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலைத் திரைப்படமாக்க அமெரிக்க தயாரிப்பாளர்கள் முன்வந்த போது பெரும்பணம் கிடைக்கும் என்றாலும் வாசகர் மனதில் நாவல் ஏற்படுத்திய சித்திரத்தை மாற்ற விரும்பவில்லை என்று மார்க்வெஸ் மறுத்துவிட்டார். அது போன்றதே இந்த நாவல் வெளியாக வேண்டாம் என்பதற்கான காரணமும்.

ஒரு எழுத்தாளன் வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்தவற்றை அவன் மறைவிற்குப் பின்பு வெளியிடலாமா என்பது குறித்து வாதப்பிரதிவாதங்கள் நடந்து வருகின்றன. இரண்டு பக்கமும் நிறைய உதாரணங்களைக் காட்டுகிறார்கள்.

பதிப்பாளர்கள் தங்களுக்குச் சாதகமாகக் காஃப்காவை சொல்கிறார்கள். அவர் தனது மறைவிற்குப் பின்பு தனது கையெழுத்துபிரதிகள் யாவற்றையும் எரித்துவிடும்படி நண்பர் மாக்ஸ் பிராடிடம் சொல்லியிருந்தார். ஆனால் அதை மாக்ஸ் பிராட்  காப்பாற்றவில்லை. அவரது படைப்புகள் அச்சாக்கபட்டு உலகின் கவனத்தைப் பெற்றதோடு காஃப்காவிற்கு அழியாப் புகழைத் தேடிக் கொடுத்தன. இது போல நபகோவ். டிக்கன்ஸ் எனப் பலரது படைப்புகள் அவரது மறைவிற்குப் பின்பும் வெளியாகியுள்ளன. படைப்பை வாசகர்கள் முடிவு செய்யட்டும். நாம் தடுக்க வேண்டாம் என்கிறார்கள் பதிப்பு துறையினர்..

காஃப்கா வெளியிட வேண்டாம் என்ற காரணமும் மார்க்வெஸ் வேண்டாம் என்று சொன்ன காரணமும் ஒன்றில்லை.

பொதுவாக நாவலாசிரியர்கள் எல்லோரிடமும் ஒன்றிரண்டு முடிக்கபடாத நாவல்கள் கைவசமிருக்கும். தான் விரும்பி எழுதிய படைப்பு என்ற போதும் ஒரு கட்டத்தில் பிடிக்காமல் போய்விடும் அல்லது முடித்தபிறகு திருப்தியின்மை ஏற்படும். அது போன்ற தருணங்களில் அவற்றை வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்துவிடுவார்கள். கடைசிவரை அதனை வெளியிடக் கூடாது என்பதிலும் கறாராக இருப்பார்கள்.

மார்க்வெஸ் உயிரோடு இருந்த வரை இந்த நாவலும் அப்படி உலகம் அறியாமல் தானிருந்தது. அவர் 2012ல் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த நாட்களில் ஸ்பானிய பத்திரிக்கைகள் புதிய நாவல் வெளியாகப் போவதாகச் செய்தி வெளியிட்டுப் பரபரப்பு ஏற்படுத்தின. ஆனால் மார்க்வெஸ் நலமடைந்து வீடு திரும்பியதும் அதை மறுத்துவிட்டார்.

மார்க்வெஸின் மறைவிற்குப் பிறகு அவரது கடிதங்கள், நாட்குறிப்புகள். புகைப்படங்கள், கையெழுத்துப்பிரதிகள் யாவும் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தால் கையகப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

மார்க்வெஸ் வெளியிட வேண்டாம் என்று சொன்ன நாவலை ஏன் இப்போது வெளியிட்டிருக்கிறாகள்.

உலகெங்கும் உள்ள மார்க்வெஸின் தீவிர வாசகர்களின் விருப்பத்திற்காக என்று பதிப்பகம் சொல்கிறது அது உண்மையில்லை. புத்தகச் சந்தையில் இன்றும் மார்க்வெஸ் நட்சத்திர எழுத்தாளர். அவரது மறைவிற்குப் பிறகு இப்படி ஒரு நாவலை வெளியிடுவதன் மூலம் பெரும்பணம் சம்பாதித்துவிட முடியும். அதையே அவரது இரண்டு மகன்களும் செய்திருக்கிறார்கள்.

முழுமை அடையாத நாவல் என்பதைப் படித்தவுடன் உணர்ந்துவிடுகிறோம். பொதுவாகத் தனது நாவல்களை மார்க்வெஸ் நாலைந்து முறை திருத்தம் செய்வது வழக்கம். அது போலவே ஒரு நாவலை எழுதி முடிக்கப் பல ஆண்டுகளும் எடுத்துக் கொள்வார். இந்த நாவலில் அப்படியான திருத்தங்கள் நடக்கவில்லை.

மார்க்வெஸின் மொழி நடை மாறியுள்ளது. அவருக்கே உரித்தான சில கவித்துவ வாக்கியங்களும், தனித்துவமான நிகழ்வுகளையும் தவிர்த்தால் இந்த நாவல் ஒரு சராசரியான படைப்பே.

இதனைக் குறுநாவல் என்றே சொல்ல வேண்டும். ஆறே அத்தியாயங்கள். 46 வயதுள்ள அனா மக்தலேனா பாக் என்ற பெண்ணை மையமாகக் கொண்டே நாவல் எழுதப்பட்டிருக்கிறது. நாவலில் அவளது குடும்பமே இசையில் ஆர்வம் கொண்டது. இசைக்கலைஞர்களைக் கொண்டது- ஆகவே மார்க்வெஸ் இசைமேதை செபாஸ்டியன் பாக்கின் மனைவி பெயரை அவளுக்கு வைத்திருக்கிறார். பாடகி அனா மக்தலேனா பாக் தான் உண்மையில் பாக்கின் இசைக்கோர்வைகளை உருவாக்கினாள் என்றொரு சர்ச்சையும் நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஆகவே அந்தப் பெயர் புனைவின் சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது.

ஒரு பெண் கதாபாத்திரத்தை முதன்மைப்படுத்தி மார்க்வெஸ் நாவல் எதையும் எழுதியதில்லை. மார்க்வெஸ் சிறுகதைகளில் ஒன்றாகவே இதனை வகைப்படுத்த முடியும். அதிலும் ஒரு சிக்கல். இதே போன்று கல்லறைத் தோட்டத்திற்கு அஞ்சலி செலுத்த வரும் பெண்ணைப் பற்றி முன்பே எழுதியிருக்கிறார். வெளிப்படையான பாலுறவு நிகழ்வுகள் இதுவரை அவர் எழுதாதது.

கி.ராஜநாராயணன் தனது 98 வயதில் எழுதிய அண்டரெண்டப் பட்சி நாவலும் போன்று காமவேட்கையைத் தான் பேசுகிறது. உயிரினங்களின் காம வேட்கை எப்படி உருவானது என்பதையே கிரா விவரிக்கிறார்.  

மார்க்வெஸின் முந்தைய நாவல்களில் இல்லாத சிறப்பு அம்சமாக இதில் நான் காணுவது அனா மக்தலேனா பாக் படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்கள். அவள் ஒரு இடத்தில் டிராகுலா நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறாள். இன்னொரு அத்தியாயத்தில் ஹெமிங்வே படிக்கிறாள். வேறு ஒரு இடத்தில் டேனியல் டீபோ படிக்கிறாள். மீமாயப்புனைவுகளை வாசிப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறாள். யதார்த்த வாழ்க்கை அவளுக்குப் போதவில்லை. அதிலிருந்து விடுபட விரும்புகிறாள். நாவலும் அதையே பேசுகிறது

நாவலை வாசித்தவுடன் மூன்று படைப்புகள் என் நினைவில் வந்து போயின. ஒன்று லூயி புனுவலின் Belle de Jour திரைப்படம். அதில் வரும் கதாநாயகி செவரினைப் போலவே அனா மக்தலேனா இருக்கிறாள். நடந்து கொள்கிறாள். இரண்டவாது ஆன்டன் செகாவின் (The Lady with the Dog )நாய்காரச் சீமாட்டி கதை. அதில் திருமண வாழ்வில் மகிழ்ச்சியற்ற அன்னா செர்ஜியேவ்னா யால்டாவிற்கு வருகிறாள். அங்கே டிமிட்டி குரோவ் என்ற முன்பின் அறியாத ஆணுடன் பழகுகிறாள். அவளது மனநிலையின் வெளிப்பாட்டினையும் அனா மக்தலேனாவிடம் காண முடிகிறது. மூன்றாவது யாசுனாரி கவபத்தாவின் Snow Country, இதில் வரும் சுகப்பெண்களைப் போலவே அனா உறவு கொள்ளும் ஆண்களுக்குப் பெயர் கிடையாது. இந்த மூன்றும் மார்க்வெஸிற்கு நெருக்கமான படைப்புகள். அவற்றின் மறைமுகப் பாதிப்பை நாவலில் உணர முடிகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி அனா மக்தலேனா தனது அன்னையின் கல்லறையில் மலர்கள் வைப்பதற்காகக் கரீபியத் தீவிற்கு ஒரு பயணத்தை மேற்கொள்கிறாள். அதில் தான் நாவல் துவங்குகிறது. அதே நாள் அதே படகு. அதே பூக்கடை அதே சூரியன் என எதுவும் மாறாது. தீவில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது அன்னையின் கடைசி ஆசை.

அப்படி ஒரு பயணத்தில் எதிர்பாராத விதமாக ஒரு ஆணைச் சந்திக்கிறாள்.  உரையாடுகிறாள். முடிவில் அவனுடன் உடலுறவு கொள்கிறாள். அந்த அனுபவம் அவளது உடலை விழித்துக் கொள்ள வைக்கிறது. ஊர் திரும்பிய பின்பும் அந்த நினைவுகளை மறக்க முடியவில்லை. இதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் புதிதாக ஒரு ஆணைத் தேடி உறவு கொள்ளத் துவங்குகிறாள். இந்த வேட்கையின் பயணத்தையே சிறுநாவலாக மார்க்வெஸ் எழுதியிருக்கிறார்.

நாவலில் வரும் அனாவின் கணவன். மகள் இருவரும் முழுமை பெறவில்லை. அன்னைக்கு செய்யப்படும் நினைவஞ்சலி என்பது இறந்தவருடன் நடக்கும் உரையாடல் என்றே மார்க்வெஸ் குறிப்பிடுகிறார். மரணத்தின் முன்னால் சொல்லப்பட்ட காதல்கதை என்றே இதனையும் சொல்வேன். ஆகஸ்ட் மாதம் என்பது இருவேறு பருவநிலைகள் ஒன்று கலந்த காலம். அதன் குறீயீடு போலவே அனா இருக்கிறாள்.

அவரது மாய யதார்த்தக் கூறுகள் எதுவும் நாவலில் கிடையாது. கவபத்தாவின் நாவலை நினைவுபடுத்தும் மொழிநடை. மார்க்வெஸின் முந்தைய நாவலான Memories of My Melancholy Whores வரும் முதியவரின் மறுஉருவாக்கம் போலவே அனா மக்தலேனா உருவாக்கபட்டிருக்கிறாள். மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வின் சலிப்பு ஆண் பெண்ணை என்ன செய்கிறது என்பதைப் பற்றி ஆன்டன் செகாவ் நிறையச் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அது போன்ற ஒரு முயற்சியாகவே இந்த நாவலைச் சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 16 அன்று புதிய ஆண் ஒருவனைத் தேடிக் கண்டுபிடித்து அவனுடன் உறங்கும் அனாவின் பயணம் ஒருவகையில் டிராகுலாவின் தேடலே. டிராகுலா தீண்டும் பெண்கள் நித்யமாகிவிடுகிறார்கள், டிராகுலாவின் காதல் பொய்யானதில்லை.

நாவலை வாசித்து முடிக்கும் போது கவபத்தாவின் உறங்கும் அழகிகள் இல்லம் நாவலில் வரும் ஒரு பெண்ணின் கதையை தான் மார்க்வெஸ் வேறுவகையில் எழுதியிருப்பதாகவே உணர்ந்தேன்.

மார்க்வெஸ் இந்த நாவலில் வேறு என்ன எழுத விரும்பினார் என்று தெரியவில்லை. வழக்கமாக அவரது நாவல்களில் காணப்படும் விநோத நிகழ்வுகள், அபூர்வமான கதாபாத்திரங்கள், கவித்துவ தருணங்கள் எதுவும் இதில் கிடையாது. ஒருவேளை அவற்றை எழுத முடியாமல் மறதி அவரை வென்றுவிட்டதோ என்னவோ.

.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 29, 2024 04:14

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.