S. Ramakrishnan's Blog, page 44
December 28, 2023
ஹென்றி லாசன்/ உரை
எனது புத்தக வெளியீட்டு விழாவில் ஆஸ்திரேலிய எழுத்தாளர் ஹென்றி லாசன் குறித்து உரையாற்றினேன்
December 27, 2023
புத்தக வெளியீட்டு விழா.
எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிறைந்த கூட்டம்.
எனது அழைப்பை ஏற்று வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி.
நூல்களை வெளியிட்டுச் சிறப்பித்த தோழர் எஸ்.ஏ.பெருமாள். இயக்குநர் ராஜ்குமார், திரு. ஆறுமுகச்சாமிக்கு அன்பும் நன்றியும்
விழாவில் உரையாற்றியவர்கள் குறித்த நேரத்திற்குள் நூல் குறித்த சிறப்பான அறிமுகத்தை வழங்கினார்கள்.
அரங்கில் நிறைய இளைஞர்களைக் காண முடிந்தது மகிழ்ச்சி அளித்தது.
புத்தகங்களை நேர்த்தியாகத் தயாரித்து அளித்த மணிகண்டனுக்கும். நிகழ்வைச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்து பதிவேற்றம் செய்துள்ள ஸ்ருதிடிவி கபிலன் மற்றும் சுரேஷிற்கு மிகுந்த நன்றி.
நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த அன்புகரன், சண்முகம், குரு, கபிலா காமராஜ். அகரமுதல்வன், உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
எனது பணிகளில் தோள் கொடுத்து நிற்கும் அன்புமகன் ஹரி பிரசாத்திற்கும், விழாவைத் திட்டமிட்ட நாள் முதல் அனைத்து ஒருங்கிணைப்புகளையும் மேற்கொண்ட அன்பு மனைவி சந்திரபிரபாவிற்கும், இளைய மகன் ஆகாஷிற்கும் நிறைந்த அன்பும் நன்றியும்.



















புகைப்படங்கள்
நன்றி : ஸ்ருதி டிவி.
December 25, 2023
துறவியின் ஈரக்காலடிகள்
சீனாவில் வசித்த ஜென் துறவிகளின் கவிதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள். Clouds Thick,Where abouts Unknown என்ற இந்தக் கவிதைத் தொகுப்பில் தாங் வம்சம் (618–907) துவங்கி மிங் வம்சம் (1368–1644) வரையான 750 ஆண்டுக் காலக் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

துறவிகளின் ஈரக்காலடித்தடங்களைப் போன்றதே இக்கவிதைகள். வெளிப்புற தூண்டுதல்கள் துறவியின் அகத்தில் ஏற்படுத்தும் உணர்வுகளையே இக் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.,
மனதின் நுணுக்கங்களை முழுமையாக வார்த்தையில் வெளிப்படுத்திவிட முடியாது. ஆனால் வார்த்தைகளின் வழியே அடையாளம் காட்ட முடியும். என்கிறார் துறவி ஜுயிபேன். பௌத்த துறவிகள் கவிதை எழுதுவதன் நோக்கம் இதுவே.
குறைவாகச் சொல்வதன் வழியே நிறையப் புரிந்து கொள்ள வைக்கவே இந்தக் கவிதைகள் முயலுகின்றன.
துறவிக் கவிஞர்களாக அழைக்கப்படும் இவர்கள் வெறுமையின் வாள் ஏந்தியவர்கள். அதைக் கொண்டு புற உலகின் மாயையினை அகற்றுகிறார்கள். மனதின் ஆழ்நிலையை வெளிப்படுத்துகிறார்கள். கவிதையின் வழியே கவிஞரின் தனிப்பட்ட உணர்வு வடிவத்திலும் மொழியிலும் தடையின்றி இணைகிறது. கவிதை என்பது ஒரு இலைப்படகு என்று துறவி சொல்வது நினைவிற்கு வருகிறது.

நமது அன்றாடம் பொருளியல் வாழ்க்கையால் உருவானது. அவசரமும் வேகமும் அதனை இயக்குகின்றன. வெளிப்படைத்தன்மையை எதிர்பார்க்கும் நாம் ரகசியங்களை அதிகம் உருவாக்குகிறோம். பரிமாறுகிறோம். நம் காலத்தில் அழகு என்பது விற்பனை தந்திரம் மட்டுமே. நிரந்தர அழகு என்ற ஒன்றை இன்று யாரும் நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை. அழகு அகத்துடன் தொடர்பு கொண்டதாக இதுவரை கருதி வந்த எண்ணம் இன்று நுகர்வு பண்பாட்டால் மாற்றப்பட்டிருக்கிறது. அழகும் உன்னதமும் பிரிக்க பட்டுவிட்டன. அழகு என்பதைக் கவர்ச்சி என்ற பொருளிலே இன்று பயன்படுத்துகிறார்கள். ஆனால் இது போன்ற ஜென் கவிதைகள் நுகர்வுலகம் ஏற்படுத்திய மனப்பிம்பங்களுக்கு மாற்றாக, ஆழ்ந்த, உண்மையான, தெளிவான பார்வையை, புரிதலை ஏற்படுத்த முயலுகின்றன.
புத்தரின் ஞானம் முழுவதையும் தனக்குக் கற்றுத்தரும்படி கேட்கும் இளந்துறவிக்குப் பதில் தருகிறார் மூத்த துறவி. ஆற்றின் தண்ணீர் முழுவதையும் ஒரே மடக்கில் குடித்துவிட்டு வா. கற்றுத் தருகிறேன்.
தண்ணீர் அடிவரை தெள்ளத் தெளிவாக உள்ளது,
ஒரு மீன் சோம்பேறித்தனமாக நீந்துகிறது.
அடிவானம் வரை பரந்திருக்கிறது ஆகாசம்.
ஒரு பறவை வெகுதொலைவில் பறக்கிறது
என ஒரு துறவியின் பாடலில் குறிப்பிடப்படுகிறது. தெளிந்த நீரினுள் அலையும் சோம்பேறி மீன் போன்றதாகத் தனது துறவினைக் குறிப்பிடும் கவிஞர் எல்லையற்ற ஆகாசத்தில் தொலைவை நோக்கிப் பறக்கும் பறவையாகத் தன்னைக் கருதுகிறார்.
ஆகாசமும் தண்ணீரும் கதவுகள் அற்றது. அதை யாரும் பூட்டுவதுமில்லை. திறப்பதுமில்லை என்கிறது ஜென்.
மூன்று வகையான கவிதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ஒன்று இயற்கையை எழுதுதல். அதன் வழியே மலையும் காற்றும் மரங்களும் நதியும் தனித்த அழகுடன் காட்டப்படுகின்றன. இவை புறநிலை யதார்த்தத்தின் கலை சித்தரிப்பாக அமைகின்றன.
இரண்டாவது வகைக் கவிதைகள் உணர்ச்சிகளின் அடிப்படையில் உருவானவை. தனிமை, மகிழ்ச்சி. சோகம் பிரிவு போன்ற உணர்ச்சிகளின் வெளிப்பாடாக எழுதப்பட்டிருக்கின்றன. அகநிலை பதிலின் கலை வெளிப்பாடாக இதனைக் கருதலாம். மூன்றாவது வகைக் கவிதைகள் எண்ணத்தில் பிறப்பவை. அந்த எண்ணங்கள் பௌத்த சாரமாகவோ, சூத்திரமாகவோ, மெய்ஞானத்தேடலாகவோ இருக்கின்றன. அகம்புறம் கடந்த உயர்நிலையாக இவற்றைக் கருதுகிறார்கள்.
மலை மேகங்கள் என் கூடாரம்,
இரவு நிலவு எனது தூண்டில் முனை,
கல்லே எனது தலையணை
நான் ஏன் பிரபுக்கள் மீதும்
அரசர்கள் மீதும் பொறாமை கொள்ள வேண்டும்?
என ஒரு துறவி கேட்கிறார்.
ஒளிரும் நிலவு துறவிகளின் கவிதைகளில் தொடர்ந்து இடம்பெறுகிறது. பௌத்த ஞானம் தான் அந்த நிலவு என்றும் குளத்தில் பிரதிபலிக்கும் நிலவைப் போல ஞானத்தை அன்றாட வாழ்வின் வழியே நாம் காணுவதாகச் சொல்கிறார்கள். குளத்து நீரில் தெரியும் நிலவைக் கண்டு சிறுவர்கள் அதைக் கையில் பிடிக்க ஆசைப்படுகிறார்கள். ஆனால் வளர்ந்த மனிதனோ அது வெறும் பிம்பம் என நகைக்கிறான். துறவியோ ஒளிர்வதே நிலவு அது வானாக இருந்தாலும் நீராக இருந்தாலும் ஒன்றே என்கிறார்.
குளத்தில் ஒளிரும் நிலவு தண்ணீரை வானமாக்கிவிடுகிறது என்ற வரியின் வழியே கவிதை ஒளிரத் துவங்குகிறது.

இன்னொரு கவிதை மடாலயத்தில் வளர்க்கப்படும் பூனையைப் பற்றியது. அந்தப் பூனைக்கு எலி தெரியாது. காரணம் அங்கே எலிகள் கிடையாது. ஆகவே வேட்டையாட வேண்டிய அவசியமில்லை. அந்தப் பூனை ஒரு வண்ணத்துப்பூச்சி போலத் தாவிச் செல்கிறது என்று கவிதை விவரிக்கிறது.
பச்சை மலை வெள்ளை மேகத்தின் தந்தை;
வெள்ளை மேகம் பச்சை மலையின் மகன்.
நாள் முழுவதும் வெள்ளை மேகம் அருகிலே இருக்கும்;
ஆனால் பச்சை மலை எதையும் பார்க்கவில்லை
என்ற கவிதையில் மலையும் மேகமும் தந்தையும் தனையனுமாக மாறுகின்றன. அசையும் மேகமும் அசையாத மலையும் இருப்பின் இருவேறு நிலைகள். துறவி தன்னை வெள்ளை மேகமாகவே கருதுகிறான். ஞானம் தான் அவனது பச்சை மலை. சீன பாரம்பரியத்தில் குகைகள் மேகங்களின் பிறப்பிடமாகும்.
இரண்டு துறவிகள் சந்தித்துக்
கொள்ளும் போது பேசிக் கொள்வதில்லை
சிறிய புன்னகை புரிகிறார்கள்
என்ற கவிதையில் சிறிய வெளிப்பாடு முழுமையை உணரச் செய்கிறது.
ஒரு துறவிக்கவிஞன் குயிலைப் பழைய தோழன் என்று குறிப்பிடுகிறான். குயிலின் குரலில் உள்ள இனிமை எந்தக் காலமாற்றத்திலும் மாறிவிடுவதில்லை. கசப்பின் சிறுதுளி கூட அதில் கிடையாது. பருவகாலம் தனது வருகையைக் குயில்களின் மூலமே அறிவிக்கிறது. கோடைக்கால குயிலின் குரலைக் கேட்டுப்பாருங்கள். அது புரியும்.
மேகங்களிடம் தோழமை கொள்வதற்கு எளிய வழி கண்களை மூடிக் கொள்வது தான் என்கிறார் இன்னொரு துறவிக்கவி. மழைக்கால இரவில் பழம்பாடல்கள் சூடு தருவதாகச் சொல்கிறார் மற்றொருவர்.
வழிந்தோடும் மழை நீரைக் காணும் ஜென் துறவி தூய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்கிறார் வேறு கவி.
எந்த வாள் மரத்திலிருந்து இலைகளைத் துண்டிக்கிறது. எந்த வாள் மலர்களைக் கிளையிலிருந்து உதிரச் செய்கிறது. அந்த வாளை நான் தேடிக் கொண்டிருக்கிறேன் என்கிறார் துறவி ஹான்ஷி
துறவிகளின் இந்தக் கவிதைகளை வாசிக்கும் போது என்ன நடக்கிறது. நாம் ஒன்று சேர்த்து அனுபவிக்கும் காட்சியைத் தனித்தனியாக, மெதுவாக, ஆழமாகக் காணவும் உணரவும் வைக்கிறார்கள். வியத்தலைத் தாண்டி இயற்கையைப் புரிந்து கொள்ள வைக்கிறார்கள். மாறாத இயக்கத்தின் விசையை, இருப்பை அடையாளம் காட்டுகிறார்கள். ஓசையும் காட்சிகளும் மனதில் ஏற்படும் உணர்ச்சிகளைத் துல்லியமாகப் பிரித்துத் தருகிறார்கள். பொதுவாக இவை நினைவில் பட்டுப் பிரதிபலிப்பதையே அறிந்திருக்கிறோம். இந்தக் கவிதைகளில் நினைவுக்குக் குறைவான இடமே தரப்படுகின்றன. பார்த்த காட்சிகளுக்குப் பின்னே பார்க்காத விஷயங்களிருப்பது புலனாகிறது. அடையாளப்படுத்தப்பட்ட உலகை அடையாளமற்ற உலகமாக மாற்றுகின்றன இக்கவிதைகள். அதனாலே இவை பரவசமளிக்கின்றன.
December 23, 2023
ஹென்றி லாசன் சிறப்புரை
டிசம்பர் 26 மாலை நடைபெறுகிற எனது புத்தக வெளியீட்டு நிகழ்வில் ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஹென்றி லாசன் குறித்து சிறப்புரை ஆற்றுகிறேன். நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.
இடம் :. கவிக்கோ மன்றம். மைலாப்பூர். சென்னை
நாள் :. டிசம்பர் 26 செவ்வாய்கிழமை மாலை ஆறுமணி.

December 21, 2023
அழைப்பிதழ்
டிசம்பர் 26 செவ்வாய்கிழமை மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தர வேண்டுகிறேன்

ஆறு நூல்களும் சேர்ந்து சிறப்பு விலை ரூ1000 க்கு கிடைக்கும்
இந்த நிகழ்வில் ஆஸ்திரேலிய எழுத்தாளர் ஹென்றி லாசன் குறித்த சிறப்புரை நிகழ்த்துகிறேன்


கவிக்கோ மன்றத்திற்கான வழி இந்த இணைப்பில் உள்ளது
https://maps.app.goo.gl/xmo1Abpy1CYMTfG56
தொடர்புக்கு
அலுவலகம் : 044 -23644947
அலைபேசி : 9789825280
Desanthiripathippagam@gmail.com
December 18, 2023
டிசம்பர் 26 – புத்தக வெளியீட்டு விழா
டிசம்பர் 25ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த எனது புத்தக வெளியீட்டு விழா டிசம்பர் 26ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

தேசாந்திரி பதிப்பகம் சார்பில் நடைபெறும் இந்த நிகழ்வில் எனது ஆறு நூல்கள் வெளியிடப்படுகின்றன.

கிதார் இசைக்கும் துறவி – சிறுகதைத்தொகுதி

மாஸ்கோவின் மணியோசை – ரஷ்ய இலக்கியக் கட்டுரைகள்

தனித்த சொற்கள் – உலக இலக்கியக் கட்டுரைகள்

கவிஞனும் கவிதையும் – கவிதைகள் குறித்த கட்டுரைகள்

தோற்றம் சொல்லாத உண்மை – உலக சினிமாக் கட்டுரைகள

நகரங்களே சாட்சி – ஆசிய சினிமாக் கட்டுரைகள்.






ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரை வழங்குகிறார்கள்.



சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கிறார்கள்.
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஹென்றி லாசன் குறித்து சிறப்புரை நிகழ்த்துகிறேன்




.
நாள் : டிசம்பர் 26 / செவ்வாய்க்கிழமை.
நேரம் : மாலை ஆறுமணி
இடம் : கவிக்கோ மன்றம். சிஐடி நகர். மைலாப்பூர், சென்னை
அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அன்புடன் அழைக்கிறேன்
தொடர்புக்கு : 044 23644947 – 9789825280
December 14, 2023
கிதார் இசைக்கும் துறவி ஆங்கிலத்தில்
எனது கிதார் இசைக்கும் துறவி சிறுகதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு Borderless இணைய இதழில் வெளியாகியுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் சந்தானம். அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றி.

இந்தச் சிறுகதையை தலைப்பாகக் கொண்டே எனது புதிய சிறுகதைத் தொகுதி வெளியாகிறது.
விகடன் தீபாவளி மலரில் வெளியான இந்தக் கதை இரண்டு மாதங்களுக்குள் மூன்று மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இணைப்பு.
Borderless, December 2023
The Monk Who Played the Guitar, a story by S Ramakrishnan, has been translated from Tamil by T Santhanam
December 12, 2023
கோவையில்
உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் சார்பில் கோவையில் நூல் வெளியிடுதல் மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது.
டிசம்பர் 16 சனிக்கிழமை காலை நடைபெறும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.
இடம் : டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகம்
காளப்பட்டி சாலை. கோவை 641048

S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
