S. Ramakrishnan's Blog, page 44
January 30, 2024
கற்பனையும் நிஜமும்
Journalism is the profession that most resembles boxing, with the advantage that the typewriter always wins and the disadvantage that you’re not allowed to throw in the towel.
– Gabriel García Márquez.

கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் பற்றிய Gobo ஆவணப்படத்தில் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. மார்க்வெஸின் அம்மா அவரது கதையில் வரும் கதாபாத்திரங்கள் நிஜவாழ்க்கையில் யார் என்பதைக் கண்டறிந்து சொல்லிவிடுகிறார். அது கற்பனையில் எழுதியது என்று மார்க்வெஸ் சொல்வதை அம்மா ஒத்துக் கொள்வதேயில்லை.
இதைப்பற்றித் தனது நேர்காணலில் மார்க்வெஸ் வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார்
“நிஜத்தோடு கற்பனை கலந்து நான் கதாபாத்திரங்களை உருவாக்குகிறேன். அவரோ கதையிலிருந்து நிஜ மனிதர்களை மறு உருவாக்கம் செய்துவிடுகிறார்“
மார்க்வெஸ் சொல்வது நிஜம். தனது சொந்த வாழ்க்கையைத் தான் அவர் எழுத்திற்கான கச்சாப் பொருளாகக் கொண்டிருந்தார். அவரது முக்கிய சிறுகதைகள் அவரது வாழ்விலிருந்து உருவாக்கபட்டதே. இதனை அவரது வாழ்க்கை வரலாற்றை வாசிக்கும் போது தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் சொந்த வாழ்க்கையினை விந்தையான நிகழ்வுகளுடன், துல்லியமான நினைவுகளுடன் எழுதுகிறார் என்பதே அவரது எழுத்தின் விசேசம்.
சொந்த வாழ்க்கை என்பதே சமூக பண்பாட்டு நிகழ்வுகளும் வரலாறும் சமய நம்பிக்கைகளும் ரகசிய ஆசைகளும் விநோத கனவுகளும் கொண்டது தான் என்பதையும் உணர்ந்திருக்கிறார். தாத்தா பாட்டியால் வளர்க்கபட்டவர்கள் கதைகளின் மீது ஆர்வம் கொண்டிருப்பதில் வியப்பேதுமில்லை. மார்க்வெஸ் அப்படி வளர்க்கப்பட்டவரே.
மார்க்வெஸின் நாவல்கள் பேசப்பட்ட அளவிற்கு அவரது கட்டுரைகள் பேசப்படவில்லை. பத்திரிக்கையாளர் என்பதால் நிறையச் செய்திக்கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஹெமிங்வேயிற்கும் இது போன்றே நடந்தது. அன்றாடம் ஒரு செய்திக்கட்டுரை எழுதிக் கொடுக்க வேண்டிய கெடு ஹெமிங்வேயிற்கு இருந்தது. நிறைய எழுதித் தள்ளியிருக்கிறார். அந்தக் கட்டுரைகளை இன்று வாசிக்கும் போது புனைவிற்கான கச்சிதமான வடிவத்தையும் நேரடியாகச் சொல்லும் குரலையும் செய்திக்கட்டுரைகள் எழுதுவதன் வழியே அவர் பெற்றிருப்பதை அறிய முடிகிறது. அதே பயிற்சி தான் மார்க்வெஸிற்கும் நடந்திருக்கிறது. அவரது புகழ்பெற்ற நாவலுக்கான விதை. அவரது பல்வேறு சிறுகதைகளுக்கான முக்கிய நிகழ்வுகள் செய்திகளாக எழுதப்பட்டிருக்கின்றன.
The Scandal of the Century and other writings தொகுப்பில் அவரது ஐம்பது செய்திக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மார்க்வெஸ் நிறையச் சினிமா விமர்சனங்களை எழுதியிருக்கிறார். அது போலவே நகரில் நடக்கும் குற்ற நிகழ்வுகள் குறித்தும் சர்வதேச அரசியல் மற்றும் இலக்கியப் போக்குகள் குறித்தும் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.
உண்மையான நிகழ்வு ஒன்றை விவரித்துவிட்டு அதற்கு இணையாக கற்பனையான இன்னொரு நிகழ்வை எழுதுவதன் வழியே அவர் செய்தியைப் புனைகதையாக மாற்றிவிடும் சுவாரஸ்யத்தைக் காண முடிகிறது.
நோபல் பரிசு மூலம் தனக்குக் கிடைத்த பணத்தைக் கொண்டு Cambio என்ற பத்திரிக்கையை விலைக்கு வாங்கிப் புதிய ஆசிரியர் குழுவோடு நடத்தியிருக்கிறார். அவரது கடைசி நாட்கள் வரை அதில் பத்திக்கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.
இது போலவே 1994ல் Gabriel García Márquez Foundation என்ற அமைப்பைத் துவங்கி இளம் பத்திரிக்கையாளர்களுக்குப் பயிற்சி தரவும் பத்திரிக்கையாளர்களின் நலன்களைப் பேணவும் முயன்றிருக்கிறார். மார்க்வெஸின் மரணத்திற்குப் பிறகு கொலம்பிய அரசு அவரது நினைவாகக் கோபோ மையம் ஒன்றை உருவாக்கிய அதன் வழி பத்திரிக்கையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கான தேவையான உதவிகளை வழங்கி வருகிறது.
மார்க்வெஸின் கதைகளைப் போலவே அவரது செய்திக்கட்டுரைகளின் கடைசிவரியும் கச்சிதமாக எழுதப்பட்டிருக்கிறது. “Operator, connect me to public opinion.” என்பது ஒரு கட்டுரையின் கடைசி வரி.
.An Understandable Mistake கட்டுரை அவரது சிறுகதை போலவே துவங்குகிறது. போதையில் உயரமான கட்டிடம் ஒன்றிலிருந்து குதித்துக் காயமடைந்தவனைப் பற்றிய அக் கட்டுரையில் அவனது மிதமிஞ்சிய குடியும் தலைவலியும் குழப்பமான மனநிலையும் தெளிவாக விவரிக்கப்படுகின்றன. தான் எங்கே இருக்கிறோம். எனத் தெரியாத குழப்பத்தில் ஹோட்டல் அறை எப்படி இன்னொரு ஊருக்கு மாறியிருக்கும் என்று யோசிக்கிறான். கட்டுரையின் கடைசிபத்தியில் இடம் பெற்றுள்ள மீனைப் பற்றிய செய்தியை கட்டுரையை வேறு தளத்திற்குக் கொண்டு போய்விடுகிறது
A Man Arrives in the Rain என்ற அவரது கதையின் தலைப்பு அப்படியே ஹெமிங்வேயை நினைவுபடுத்துகிறது.
ஏதன் தோட்டத்திலிருந்து ஆதாமும் ஏவாளும் வெளியேற்றப்பட்டது தான் முதல் பரபரப்பு செய்தி என்கிறார் மார்க்வெஸ். இனி ஆதாமும் ஏவாளும் என்ன செய்யப்போகிறார்கள். எது அவர்களை வெளியேற்றக் காரணமாக இருந்தது. விலக்கப்பட்ட ஆப்பிளின் சிறப்பு என்ன என்று செய்தி பரபரப்பாக வெளியாகியிருக்கக் கூடும். இந்தச் செய்தி நடந்து எவ்வளவு காலம் கடந்து போயிருக்கிறது. அதற்குப் பதில் சொல்வது கடினம் என்று கட்டுரையில் எழுதுகிறார்
நகைச்சுவையாகத் தோன்றினாலும் செய்தியின் உலகம் இப்படித்தானே தோன்றியிருக்கும்
போப் விடுமுறைக்குச் சென்ற பயணம் பற்றிய கட்டுரை தனித்துவமான வடிவத்துடன் எழுதப்பட்டிருக்கிறது. அதில் கேமிரா பின்தொட்ர்வது போலவே போப்பினை எழுத்தில் பின்தொடருகிறார். கச்சிதமான சிறப்பாக எழுதப்பட்ட கட்டுரையது.
இது போலவே சோபியா லாரனின் திருமணம் பற்றிய செய்திக்கட்டுரையில் அதை ரஷ்யாவின் ஸ்புட்னிக் நிகழ்வோடு இணைத்து எழுதியிருப்பது சிறப்பு.
தனது நாவல்களைப் போலவே காலத்தைக் கலைத்துப் போட்டு எழுதும் முறையைக் கட்டுரைகளிலும் கையாண்டிருக்கிறார். துல்லியமான நேரவிபரம் மற்றும் சிறுசிறு நிகழ்வுகளை எழுதி அவற்றை ஒன்றோடு ஒன்று வேறுபடுத்தியும் இணைத்தும் காட்டும் விதம். வாசகர்களை உள்ளிழுத்துக் கொள்ளும் குறிப்புகள். மற்றும் நகைச்சுவையான விவரிப்பு, இந்தக் கட்டுரைகளைப் புனைவிற்கு நிகராக மாற்றுகின்றன.
இலக்கியம் சார்ந்து மார்க்வெஸ் மிக குறைவான கட்டுரைகளையே எழுதியிருக்கிறார். அவரது வாசிப்பு மற்றும் ஆதர்சமான எழுத்தாளர்கள் பற்றி நேர்காணலில் தான் குறிப்பிடுகிறார். Gabriel Garcia Marquez: The Last Interview நல்லதொரு தொகுப்பு.

தலைப்புக் கட்டுரை மிக விரிவானது. ஒரு இளம்பெண் காணாமல் போன செய்தியிலிருந்து துவங்கி ஒரு குற்றத்தின் முன்பின்னாக நகர்ந்து அதற்கு காரணமாக இருந்த நிகழ்வுகள் மனிதர்கள் அனுமானங்களை கட்டுரை விவரிக்கிறது. ஸ்பானிய சினிமா ஒன்றைப் பார்ப்பது போன்ற அனுபவத்தைத் தரும் கட்டுரையது.
January 29, 2024
நிமிடங்களின் மயில்தோகை
புதிய குறுங்கதை
அவளுக்கு இருபத்தைந்து வயதிருக்கும். கரும்பச்சை நிற சுடிதார் அணிந்திருந்தாள். சிவப்பு நிற ஸ்கூட்டியில் வந்திருந்தாள். அவள் ரகுவிடம் மணி கேட்டாள். மூன்று நாற்பது என்றான் அவள் மெல்லிய குரலில் மூன்று நாற்பதா என்று திரும்பக் கேட்டாள். மறுபடியும் கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு ஆமாம் என்றான் அவள் எதையோ நினைத்து பெருமூச்சிட்டுக் கொண்டாள்.
அவள் மழலையர் பள்ளியில் படிக்கும் தனது மகளை அழைத்துப் போவதற்காக வந்திருந்தாள். ரகுவும் தனது மகளுக்காகவே வந்திருந்தான்.

பள்ளிவிடுவதற்கு இன்னும் இருபது நிமிடங்கள் இருந்தன. அந்த நிமிடங்கள் மயில்தோகை போல அவளைச் சுற்றி விரிந்து கொண்டிருப்பதைக் கண்டான். ஸ்கூட்டியின் வேகத்தை அதிகரிப்பது போல அவளால் இந்த இருபது நிமிடங்களை மாற்றிவிட முடியாது.
இருபது நிமிடங்கள் என்பது இருபது நீண்ட குகைகள் போலத் தோன்றியது. மருத்துவமனையிலும், அரசாங்க அலுவலகத்தில் காத்திருக்கும் போதும் நிமிடங்கள் எடை கூடிவிடுகின்றன.
தன்னைப் போலவே பள்ளியின் முன்பாகக் காத்திருப்பவர்களை அவள் பார்த்தாள். காத்திருப்பவர்களுக்கு ஒரே முகசாடைதானிருக்கிறது. பள்ளியின் மதிற்சுவரில் ஒரு காகம் அமர்ந்திருப்பதைக் கண்டாள். யாருக்காகக் காத்திருக்கிறது என்று தெரியவில்லை
பின் மதிய வெயிலில் வேப்பமரங்கள் விநோத தோற்றம் கொண்டிருந்தன. இரும்பு கேட்டின் முன் அமர்ந்திருந்த அடர்நீல உடை அணிந்த காவலாளி நேரமிருக்கு என்று யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார்.
இரண்டு முதியவர்கள் ஒருவருக்கொருவர் தோளில் கைபோட்டபடி நின்றிருந்தார்கள். பருத்த உடல் கொண்ட பெண் நிற்கமுடியாமல் தரையில் அமர்ந்திருந்தாள். காத்திருக்கும் நிமிடங்கள் உயரமான மதிற்சுவர் போலாகியிருந்தன.
தன்வசமிருந்த நிமிடங்களை அவள் தானமளிக்க விரும்பினாள். செலவு செய்யாத மணித்துளிகளை, நாட்களை யார் வாங்கிக் கொள்வார்கள்.
எதிர்டீக்கடையில் ஒருவர் நிதானமாகப் பஜ்ஜி போட்டுக் கொண்டிருந்தார். எத்தனை பஜ்ஜிகள் போட்டு முடித்தால் இருபது நிமிடங்கள் போய்விடும் என யோசித்தாள். சாலையில் கிழிந்த சுவரொட்டியொன்று காற்றில் பறந்து கொண்டிருந்தது.
பள்ளியின் முன்பாகப் பெற்றோர்களின் கூட்டம் அதிகமாகிக் கொண்டே போனது. சென்ற நூற்றாண்டில் இப்படி ஒரு காட்சியே கிடையாது என்று ரகுவிற்குத் தோன்றியது. அவள் சலிப்பை வெளிப்படுத்துவது போல ஸ்கூட்டியின் கண்ணாடியைத் துடைத்துக் கொண்டாள். காத்திருக்கும் போது மனதின் நூறு சிற்றறைகள் திறந்து கொள்கின்றன.
இரவு விளக்குகள் பகலைக் கடப்பது போல என்றொரு வரி ரகுவின் மனதில் வந்து போனது. எங்கே படித்தான். யாருடைய வரி என்று தெரியவில்லை நேரத்தை எப்படிக் கொல்வது என்று தெரியாமல் அவளும் ரகுவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
அவள் மறுபடியும் மணி எவ்வளவு என்று கேட்டாள். இந்தக் கேள்வி வெறும் நேரம் தெரிந்து கொள்வதற்கானதில்லை. ஸ்கூல் விடப்போகுது என்று ரகு பதில் சொன்னான். அதைக் கேட்டு அவள் சிரித்தாள். ரகுவும் சிரித்துக் கொண்டான்.
பள்ளியின் இரும்பு கேட் திறக்கும் சப்தம் கேட்டது. கரையை நோக்கி வரும் சிற்றலைகளைப் போலச் சீருடை அணிந்த சிறுவர்கள் வாசலை நோக்கி விரைந்து கொண்டிருந்தார்கள். ரகுவும் அவளும் நழுவ விட்ட இருபது நிமிடங்கள் சுவடின்றி மறைந்திருந்தன.
January 27, 2024
குற்றத்தின் பாதை
The Delinquents 2023ல் வெளியான ரோட்ரிகோ மோரேனோ இயக்கிய அர்ஜென்டினா திரைப்படம். வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்ட கதையை முற்றிலும் மாறுபட்ட திரைக்கதையின் மூலம் கவித்துவமாக, செறிவாக எடுத்திருக்கிறார்கள். கிளைவிடும்கதைகள். இருவேறு நிலவெளிகள். இரண்டு முக்கியக் கதாபாத்திரங்கள். காதலும் குற்றமும் இணைந்தும் விலகியும் செல்லும் திரைக்கதை.

இப்படத்தின் ஒரு காட்சியில் அர்ஜென்டினாவின் புகழ்பெற்ற கவிஞரான Ricardo Zelarayán எழுதிய The Great Salt Flats என்ற கவிதையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். சிறைச்சாலையில் அந்தக் கவிதை வாசிக்கப்படுகிறது. உண்மையில் அது கதாபாத்திரத்தின் உருமாற்றத்தை, காலநகர்வை வெளிப்படுத்தவே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மொத்த படத்தின் மையக்குரல் போலவே அக் கவிதை ஒலிக்கிறது
புகழ்பெற்ற கவிதை ஒன்றை இப்படித் திரைப்படத்தில் யாரும் பயன்படுத்தியதில்லை. சினிமாவின் காட்சிமொழியும் திரைவடிவமும் மாறியிருப்பதற்கு இதுவே சான்று.

படம் பார்த்து முடித்தவுடன் இணையத்தில் தேடி The Great Salt Flats கவிதையைப் படித்தேன். அபாரம். குறிப்பாகத் தண்ணீர் துளியை கத்தரிக்கோல் துண்டிக்க முயன்ற வரியும், மர்மம் என்ற சொல்லை நசுக்க வேண்டும் என்ற வரியும் அற்புதம். கவிதையின் வேகம். சொற்கள் தாவிச் செல்லும் பாங்கு, அபாரமான கவித்துவப் பார்வை, சர்ரியலிச பாணியிலான காட்சியடுக்குகள் என இக்கவிதை ஆச்சரியமளிக்கிறது. இதை வாசிக்கும் போது மனதில் I AM CUBA படத்தின் காட்சிகள் வந்துபோயின
மோரன் துல்லியமாகத் திட்டமிட்டுத் தான் வேலை செய்யும் வங்கியிலிருந்து பணம் திருடுகிறான். திருடிய பணத்தைத் தன்னோடு வேலை செய்யும் நண்பன் ரோமனிடம் ஒப்படைத்துவிட்டுத் தானே போலீஸில் சரண் அடைந்து சிறை சென்றுவிடுகிறான். மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு வெளியே வந்து பணத்தைப் பெற்றுக் கொள்வதாக ஏற்பாடு.

கொள்ளையடித்த பணத்தைத் தனது வீட்டில் ரகசியமாக வைத்துள்ள ரோமன் எங்கே தான் கண்டுபிடிக்கப்பட்டு விடுவோமோ என்ற பயத்தில் வாழுகிறான். வங்கியில் விசாரணை நடைபெறுகிறது. அவன் மீதும் சந்தேகத்தின் நிழல் விழுகிறது. ஆகவே ரோமன் உறக்கமற்றுப் போகிறான். எப்படியாவது அந்தப் பணத்தைத் தனது வீட்டைவிட்டு அப்புறப்படுத்திவிட வேண்டும் என்று நினைக்கிறான். இந்தக் குழப்பம், தடுமாற்றம் அவனது தினசரி வாழ்க்கையைக் கலைத்துப் போடுகிறது.
இந்த நெருக்கடிவாழ்வின் மறுபக்கம் போல ரோமனுக்கு ஏற்படும் புதிய காதல். மற்றும் மோரனின் காதல் இரண்டும் விவரிக்கப்படுகிறது. இரண்டும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. சிறையில் மோரன் எதிர்கொள்ளும் நெருக்கடிகள். மற்றும் வீட்டில் ரோமன் சந்திக்கும் பிரச்சனைகள் அழகாகக் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. குறிப்பாக ரோமன் வீட்டில் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்கும் சிறுவனின் காட்சி
Money Heist போன்ற தொடர்கள் வங்கிக் கொள்ளையைப் பெரும் சாகசமாக அடையாளம் காட்டியுள்ள காலகட்டத்தில் அதே வங்கி கொள்ளை தனிமனிதனுக்கு ஏற்படுத்தும் நெருக்கடிகளை, உளவியல் சிக்கல்களைப் படம் வெளிப்படுத்துகிறது. அந்த வகையில் மிக முக்கியமான திரைப்படமிது.

படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களின் பெயர்கள் ஒன்றையொன்று பிரதிபலிப்பது போலவே வைக்கப்பட்டிருக்கின்றன. ரோமன், நார்மா காதல் காட்சிகள் அழகானவை. குறிப்பாக ரோமன் செல்லும் பேருந்தை நார்மா துரத்தி வரும் நீண்ட காட்சி கவித்துமானது.
சிறைச்சாலையில் மோரன் புத்தகங்களில் தஞ்சம் அடைகிறான் அவனுக்குப் புதிய உலகின் கதவுகள் திறக்கின்றன. அதன் தொடர்ச்சியாகவே The Great Salt Flats கவிதையை வாசிக்கிறான். இதனைக் காட்சிப்படுத்தியுள்ளவிதமும் கேமிராக் கோணங்களும் அபாரமானவை.
தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலின் நாயகன் போலவே மோரன் நடந்து கொள்கிறான். எதிர்காலம் பற்றிய அவனது கனவுகளும் அதைச் சார்ந்த திட்டமிடலும் துல்லியமாகச் சித்தரிக்கப்படுகின்றன. தன் வாழ்நாள் முழுவதும் நலமுடன் வாழப் போதுமான அளவிற்கு மட்டுமே அவன் பணம் திருடுகிறான். சிறைவாசம் பற்றிய அவனது கணிப்பு மட்டுமே மாறுகின்றது.

ரோமன் கட்டாயத்தின் பெயரால் தான் கொள்ளையில் இணைகிறான். அதனால் அவனது நிகழ்கால வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக சிக்கலாகிக் கலைந்து போகிறது. இரவில் உறக்கமற்றுப் போகும் ரோமன் ஷேக்ஸ்பியரின் மெக்பெத்தை போலாகிவிடுகிறான். மீட்சியைத் தேடி அலைகிறான். சிறையில் அவன் மோரனை சந்திக்கும் காட்சியும் அதைத் தொடர்ந்த உரையாடலும் அவனது மனநிலையின் தடுமாற்றத்தை வெளிப்படுத்துகின்றன. இருவரும் நகரில் அடைந்திராத மகிழ்ச்சியைச் சுதந்திரத்தை வனவாழ்க்கையில் அடைகிறார்கள். குறிப்பாக மோரனின் இரவுக்காட்சிகள் அவனது முழுமையான மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றன.
மோரனின் கடந்தகாலம் பற்றி படம் விவரிப்பதில்லை. ஆனால் அவன் வங்கிவேலையை சலிப்போடு மேற்கொள்கிறான். நிம்மதியான எதிர்காலம் தனக்கு தேவை என்று நினைக்கிறான். குற்றம் அவனது மனதில் வேர்விட்டு வளர்கிறது. அதை நிறைவேற்ற அவன் பெரிய சாகசங்கள் செய்வதில்லை. எளிதாகவே செய்து முடிக்கிறான். வெற்றிகரமாக கொள்ளை அடித்தபிறகே அவனது பதற்றம் துவங்குகிறது. தனது பணப்பையை அவன் ரோமனிடம் கையால் கொடுப்பதில்லை. காலால் தள்ளிவிடுகிறான். காவலர்களிடம் தன்னை ஒப்படைத்துக் கொள்ளும் போதும் அவன் திட்டமிட்டபடியே நடந்து கொள்கிறான்.

மோரனின் எண்ணங்களும் செயல்களும் துல்லியமானவை. ஆனால் அவனால் ரோமனின் வாழ்க்கை திசைமாறுவது தான் படத்தின் முக்கியச் சரடு. ரோமனின் மனைவி அவனைச் சந்தேகப்படுவதில்லை. ஆனால் ஏதோ தவறாக நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்கிறாள். அவனை வீட்டைவிட்டு வெளியேறிப் போக வைக்கிறாள். நார்மாவோ அவனது குற்றமனப்பாங்கிலிருந்து விடுவிக்கிறாள். அவர்கள் ஒன்றாக சினிமா பார்க்கிறார்கள். ஊர் சுற்றுகிறார்கள். மோரன் தனது கட்டுப்பாட்டில் ரோமனை மாற்றியது போன்றதே நார்மாவை தனது கட்டுப்பாட்டிற்குள் ரோமன் கொண்டுவந்ததும்.
மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஓடும் இப்படம் தேர்ந்த ஒளிப்பதிவும் சிறந்த இசையும் கொண்டிருக்கிறது. குற்றத்தின் விளைவுகளை விடவும் குற்றம் ஏற்படுத்தும் அதிர்வுகளை ஆராய்வதன் மூலம் படம் புதிய அழகியலை உருவாக்கியுள்ளது.
••
ஆங்கிலத்தில்
எனது கடைசி குதிரைவண்டி சிறுகதையை சதீஷ் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார்


இணைப்பு
https://www.usawa.in/issue-8/Translation/The-Last-Horse-Cart-R-Satish.html
பெயரின் அருகில்
புதிய குறுங்கதை
அவரது கையில் குரூப் போட்டோ இருந்தது. சி.எஸ். ஸ்கூலில் ஆறாம் வகுப்பில் எடுத்தது. அதிலிருந்தவர்களின் பெயர்களை நினைவிற்குக் கொண்டு வர முயன்றார். ஐந்தாறு பெயர்களைத் தவிர வேறு நினைவில் இல்லை.

எழுபத்தியெட்டு வயதிலிருந்து கொண்டு ஆறாம் வகுப்பில் படித்தவர்களின் பெயர்களை நினைவு கொள்வது எளிதான என்ன. பெயர் மறைந்து போன வகுப்புத்தோழர்கள் உதிர்ந்த சிறகுகளைப் போலிருந்தார்கள். சிறகை வைத்து எந்தப் பறவை உதிர்த்தது எனக் கண்டுபிடிக்க முடியாதே. புகைப்படத்தில் உள்ள யார் யாரை ஞாபகம் வைத்திருப்பார்கள் என்பது புதிரானது.
மாணவர்களுக்கு நடுவில் மர நாற்காலியில் அமர்ந்திருந்த ஆறாம் வகுப்பு ஆசிரியர் கே.வி.ரஞ்சனியின் பெயர் மறக்கவேயில்லை. இவ்வளவிற்கும் அவரைப் பிடிக்கவே பிடிக்காது. பிடித்தவர்களின் பெயர்கள் வேகமாக மறந்துவிடுவதும் பிடிக்காதவர்களின் பெயர்கள் நீண்டகாலம் நினைவிலிருப்பதும் விநோதமில்லையா.
நினைவின் பெட்டகத்தில் நிறைய ஒட்டை விழுந்திருக்கின்றன. அதில் நழுவிப் போனவை ஏராளம். கைக்கட்டிய படி நிற்கும் தனது உருவத்தையும் ஹேர்ஸ்டைலையும் பார்க்கும் போது வேடிக்கையாக இருந்தது.
குரூப் போட்டோவில் அவரது அருகில் நின்றிருப்பது ஜெயமாலா. எவ்வளவு அழகாக இருக்கிறாள். அவள் சூடியிருந்த கனகாம்பரம் வாடவேயில்லை. அவள் தான் வகுப்பின் முதல் மாணவி. அவளது கையெழுத்து அத்தனை அழகாக இருக்கும். அவளது பக்கத்தில் நிற்கும் போது இளவெயிலில் நிற்பது போல இதமாக இருக்கும்.
போட்டோ எடுக்கும் நாளில் அவள் பக்கத்தில் நிற்க வேண்டும் என்பதற்காகவே சி. முருகேசனை பின்னால் தள்ளிப் போகச் சொன்னார். அந்தக் கோபம் அவனது முகத்தில் உறைந்திருந்தது, புகைப்படத்தில் முருகேசன் ஓங்கி அடித்த ஆணி வளைந்து கொண்டிருப்பது போலிருந்தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முருகேசன் இறந்து போய்விட்டான் என்பதைக் கேள்விப்பட்டார். சிலரது மரணத்திற்குப் பின்பும் அவர்கள் கொண்டிருந்த கோபம் மறைவதில்லை போலும்.
இப்போது ஜெயமாலாவும் பாட்டியாகியிருப்பாள். ஒருவேளை இறந்தும் போயிருக்கலாம். ஆனால் இந்தப் புகைப்படத்தைக் காணும் போது அவளருகே ஒரு நிமிஷம் நிற்க வேண்டும் போல ஆசையாக இருந்தது.
ஜெயமாலா இப்போது எங்கேயிருப்பாள். மீண்டும் ஒரு முறை தன் அருகே வந்து நிற்பாளா. உலகம் ஏன் அபூர்வமான தருணங்களை இரண்டாம் முறை நிகழ அனுமதிப்பதில்லை. உதிர்ந்த இலை மரத்தைப் பார்த்து ஏங்குவதைப் போலப் புகைப்படத்தைப் பார்த்து ஏங்கினார். ஒரு முறைதான். ஒருமுறை மட்டும் தான் என்று முணுமுணுத்துக் கொண்டார்.
பின்பு ஏதோ யோசனை வந்தவரைப் போலச் சுவரின் ஒரு இடத்தில் ஜெயமாலா என்று எழுதினார். அதனருகில் போய் நின்று கொண்டார். தனது பேரன் விதார்த்தை அழைத்துத் தன்னை ஒரு போட்டோ எடுத்துத் தரும்படியாகச் செல்போனை நீட்டினார்.
அவன் வியப்போடு ஏன் தாத்தா சுவரை ஒட்டி நிக்குறே என்று கேட்டான்.
நீ போட்டோ எடு சொல்றேன் என்றார்.
அவன் நாலைந்து புகைப்படங்களை எடுத்துத் தந்தான். அதில் அவரருகே ஒரு பெயராக ஜெயமாலா இருந்தாள். பார்க்கப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அது போதும் என்றே அவருக்குத் தோன்றியது.
January 25, 2024
கற்பனைத் தீவுகள்
புதிய குறுங்கதை
சட்டைப்பையில் வைத்துக் கொள்ளக்கூடிய பாக்கெட் நோட் ஒன்றை அவன் வைத்திருந்தான். அந்த நோட்டில் அவன் கேள்விப்படுகிற தீவுகளின் பெயர்களை எழுதி வைத்துக் கொள்வான். அவனைப் பொறுத்தவரைத் தீவு என்பது அவனது ஆறாவது விரலைப் போன்றது. வரைபடத்தில் காணும் போது எல்லாத் தீவுகளும் மேஜையில் சிந்திய மைத்துளி போலவே தோற்றமளிக்கின்றன.

அவனுக்குத் தீவின் பெயர்களைச் சேகரிப்பது பிடித்தமான வேலை. அவன் சந்திக்கும் பலரிடமும் அவர்கள் கேள்விப்பட்ட தீவுகளைப் பற்றி விசாரிப்பான். நாளிதழ்களிலோ, புத்தகங்களிலோ, தொலைக்காட்சியிலோ தீவின் பெயரைக் காணும் போது ஆசையாகத் தனது பாக்கெட் நோட்டில் குறித்துக் கொள்வான். பெரிய தேசங்களை விடவும் சிறிய தீவுகளே வசீகரிக்கின்றன.
உண்மையில் சிறிய தீவுகளின் வரலாறு துயரமானது. ரத்தக்கறை படிந்தது. தீவின் மழையும் காற்றும் ரகசியங்களையும் தொல் நினைவுகளையும் எழுப்பக்கூடியது.
தீவு என்பது ஒரு பூனை. தோற்றத்தில் மட்டுமே அது மிருதுவானது. தேசத்திற்கு வயதாவது போலத் தீவுகளுக்கு வயதாவதில்லை. அல்லது வெளிப்படையாகத் தெரிவதில்லை. தீவின் பெயர்களைக் கொண்டே அது எப்படியிருக்கும் என அவன் கற்பனை செய்து கொள்வான்.
ஒவ்வொரு நாளும் இரவில் நோட்டிலிருந்த ஒரு தீவின் பெயரைத் தேர்வு செய்து அதைத் துண்டுப்பேப்பரில் எழுதி தனது தலையணைக்குள் வைத்துக் கொள்வான். கனவில் அந்தத் தீவிற்குப் போய்விடுவதாக நம்பினான்.
மனிதர்களே இல்லாத தீவுகளைப் பற்றி நிறையக் கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றை எழுதியவர்கள் எந்தத் தீவிற்குப் போனவர்களில்லை. உலகில் பல்வேறு தண்டனை தீவுகள் இருந்தன. அங்கே குற்றவாளிகள் மட்டுமே வசித்தார்கள். ஒரேயொரு குரங்கு வசித்த தீவு ஒன்றைப் பற்றி அவன் கேள்விப்பட்டிருக்கிறான். தீவு என்பதே விசித்திரத்தின் வெளி தான் போலும். உதட்டில் மச்சம் கொண்ட ஒரு பெண்ணைப் பேருந்தில் கண்ட போது அவள் உதட்டில் சிறிய தீவு முளைத்திருப்பதாகவே உணர்ந்தான்.
புதிய தீவுகளின் பெயர்கள் கிடைக்காமல் போகும் நாட்களில் அவனாக ஒரு பெயரை நோட்டில் எழுதிக் கொள்வான். அப்படி ஒரு தீவு அவனது கற்பனையில் உருவாவதை யார் தடுக்க முடியும். தானே உருவாக்கிய கற்பனைத் தீவுகளைப் பற்றிப் பிறரிடம் சொல்லும் போது அவர்கள் நம்பிவிடுவதையும், அங்கே விடுமுறைக்குப் போக விரும்புவதாகச் சொல்லும் போதும் அவன் மனதிற்குள் சிரித்துக் கொள்வான். அப்போது அவனுக்கு உலகிலுள்ள எல்லாப் பெயர்களும் ஒரு தீவு தான் என்று தோன்றும்.
கடலின் நகங்கள் தான் தீவுகள் என்று சிறுவயதில் படித்திருக்கிறான். அப்படி நினைக்க இன்றும் பிடித்தேயிருந்தது.
January 24, 2024
இணைய இதழில்
Medium என்ற இணைய இதழில் எனது சிறுகதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டிருப்பதை இன்று தான் பார்த்தேன்.


சிங்கப்பூரில் வசிக்கும் ராஜ் ஸ்வரூப் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக எனது தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருந்தார். சிறப்பான மொழிபெயர்ப்பு. தகுந்த ஆங்கிலப் பதிப்பாளர் கிடைக்காத காரணத்தால் அந்நூல் இன்னும் வெளியாகவில்லை.
The Eighty-Year Wait கதை அரிய பறவையான JERDON COURSER பற்றியது.
கதையின் இணைப்பு.
https://rs-writes-well.medium.com/the-eighty-year-wait-fd95a57b8fec
பெலிகோவின் குடை
ஆன்டன் செகாவின் “Man in a Case” சிறுகதையில் பெலிகோவ் என்றொரு ஆசிரியர் வருகிறார். அவர் பள்ளியில் கிரேக்க மொழி கற்பிக்கிறவர். வீட்டிலிருந்து எப்போது வெளியே புறப்பட்டாலும் கனத்த கோட்டும், குடையும் கலோஷேஸ். எனப்படும் காலணிகளைப் பாதுகாக்கும் நீண்ட உறையும் அணிந்து செல்வது அவரது வழக்கம்.

எவ்வளவு வெயில் அடித்தாலும் இதனைக் கைவிடமாட்டார். வாழ்க்கையில் எந்த மாற்றமும் நடந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பவர் பெலிகோவ். ஏதாவது வித்தியாசமாக நடந்தால், அதனால் ஏதாவது பிரச்சனைகள் வரலாம் என்ற பயப்படுவார்.
வகுப்பறையில் கூச்சலிடும் மாணவர்களை அவரால் சகித்துக் கொள்ள முடியாது. பள்ளிக்கூடம் ஏன் இவ்வளவு கெட்டுப்போய்விட்டது என்று மெதுவான குரலில் புலம்பிக் கொள்வார்.
அவர் எப்போதும் கடந்த காலத்தைப் புகழ்ந்தார். அவர் கற்பிக்கும் கிரேக்க மொழி கூட அவரது குடையும் காலணியும் போன்று தன்னைப் பாதுகாப்பதாக நினைத்தார்.
பள்ளியில் சக ஆசிரியர்கள் நடந்து கொள்ளும் முறை, சமூக வெளியில் மக்கள் செயல்படும்விதம் குறித்த பயமும் கவலையும் அவரிடமிருந்தன.
தனது வீட்டின் ஜன்னல்களை எப்போதும் பூட்டியே வைத்திருப்பார். தன்னுடைய வீட்டிற்குத் திருடன் வந்துவிடக்கூடும் என்று பயப்படுவார். நத்தை அல்லது நண்டு போலத் தனது வசிப்பிடத்திற்குள் ஒடுங்கிக் கிடக்கவே பெலிகோவ் ஆசைப்பட்டார்.
உரக்கச் சிரிக்கும் பெண்களை அவருக்குப் பிடிக்காது. எந்த விதமான விதிமீறல். விலகலையும் அவரால் அனுமதிக்க முடியாது.ஆகவே அரசாங்கம் எதை அனுமதித்துள்ளது. எதை அனுமதிக்கவில்லை என்பதைத் துல்லியமாக அறிந்து வைத்திருப்பார். இதைப் பற்றிய அரசின் சுற்றறிக்கைகளை ஆழ்ந்து வாசித்து மனதில் வைத்திருப்பார்.
அவர் வாழும் நகரம் கூட அவரது பயத்தின் நீட்சியாக இருந்தது. சலிப்பூட்டும் வாழ்க்கையை நடத்தி வரும் பெலிகோவிடம் சில விசித்திரமான பழக்கங்கள் இருந்தன. பள்ளியில் வேலை செய்யும் சக ஆசிரியரின் முன்னால் வந்து அமர்ந்து, எதையோ கவனமாகப் பார்ப்பது போல் ஒரு மணி நேரம் அவரை உற்று நோக்கியிருந்து விட்டு அமைதியாகப் புறப்படுவார். இதற்குப் பெயர் ‘சகாக்களுடன் நல்லுறவைப் பேணுதல்’ என்பார். அவரது விசித்திரமான நடவடிக்கைகளைக் கண்டு ஆசிரியர்கள் பயந்தார்கள்.

நகரில் நடக்கும் நாடகம் மற்றும் விருந்துகளில் கலந்து கொள்ளும் இளைஞர்களின் நடத்தைகள் பற்றி அவருக்குக் கோபமிருந்தது. ஆனால் அந்த எண்ணத்தை வெளியே காட்டிக் கொள்ளமாட்டார்.
தேவாலயத்திற்குத் தாமதமாகச் செல்பவர்களைக் கண்டால் அவர் கலக்கமடைவார். கடிதங்கள் அனுப்பவோ, மற்றவர்களுக்கு உதவி செய்யவோ கூட அவர் பயந்தார். ஊர் மக்கள் தன்னைப் பற்றித் தவறாக நினைக்கலாம் என்ற பயத்தில் அவர் ஒரு வேலைக்காரியை வைத்துக் கொள்ளவில்லை.
இப்படிப் பாதுகாப்புச் சுவர்களுடன் நடமாடும் பெலிகோவ் எப்படி ஒரு பெண்ணை விரும்பினார் என்ற கதையைச் செகாவ் அழகாக விவரிக்கிறார்.
பெலிகோவின் பள்ளிக்குப் புதிதாக வரலாறு மற்றும் புவியியல் கற்பிக்கக் கோவலென்கோ என்ற ஆசிரியர் நியமிக்கப்படுகிறார். அவர் தனது சகோதரி வாரிங்காவுடன் அந்த ஊருக்கு வந்து சேருகிறார்.
முப்பது வயதான வாரிங்கா உற்சாகமானவள். சிறிய விஷயத்திற்குக் கூட சப்தம் போட்டுச் சிரிக்கக்கூடியவள். சந்தோஷம் அதிகமானால் நடனமாடுவாள். அவளுக்குச் சொந்தமாக ஒரு பண்ணை இருந்தது.
திருமண ஆசையே இல்லாத பெலிகோவ் அவளது உற்சாகத்தில் மயங்கினார். அவளைப் பெலிகோவ் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பள்ளி ஆசிரியர்கள் விரும்பினார்கள். ஆனால் திருமணம் செய்து கொள்வதை நினைத்தால் அவருக்குக் கவலையும் மனச்சோர்வும் ஏற்பட்டது. ஆகவே வாரிங்காவிடம் திருமணத்தைப் பற்றிப் பேசவேயில்லை.
ஆரம்பம் முதலே கோவலென்கோவிற்குப் பெலிகோவைப் பிடிக்கவேயில்லை. அவரைச் சிலந்தி என்று கேலி செய்தான். தனது சகோதரிக்கு ஏற்றவர் இல்லை என்று நம்பினான்.
ஒரு நாள் அவர் வாரிங்காவுடன் வீதியில் நடந்து போவதைக் கண்ட குறும்புக்காரர்கள் அதைப் பற்றிக் கேலிச்சித்திரம் ஒன்றை வரைந்து விடுகிறார்கள். இந்தச் சித்திரம் பெலிகோவ் மனதை மிகவும் வேதனைப்படுத்துகிறது
வாரிங்காவின் சகோதரன் கோவலென்கோவை தேடிச் சென்று உரையாடுகிறார். அவர்களுக்குள் வாக்குவாதமாகிறது. தடுமாறி கீழே விழும் அவரைக் கண்டு வாரிங்கா பலமாகச் சிரித்துவிடுகிறாள். அந்த அவமானத்தைப் பெலிகோவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவசரமாக வீடு திரும்புகிறார். இதனை அடுத்து அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமாகி விடுகிறது.
இந்தக் கதையில் தனது அன்றாட வாழ்க்கையில் எந்த மாற்றமும் வந்துவிடக்கூடாது என்று பயப்படும் மனிதர்களின் அடையாளமாகப் பெலிகோவ்வை உருவாக்கியிருக்கிறார் செகாவ்.
நம்மைச் சுற்றி நிறையப் பெலிகோவ்கள் இருக்கிறார்கள். இதில் ஆண் பெண் என்ற வேறுபாடில்லை.
வெளி உலகத்தைப் பற்றிய இந்தப் பயம் நம் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுகிறது. பெலிகோவ் உண்மையில் ஒரு அனுதாபத்திற்குரிய கதாபாத்திரம். அவரது பயம் அனைவருக்குமானது. உணவு, உடை, உறவு, தொழில், அலுவலகம் என அனைத்திலும் மாற்றம் வந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறோம். சிறிய மாறுதல்களைக் கூட ஏற்க மறுக்கிறோம்.
உண்மையில் நம்மைச் சுற்றி வாழும் பெலிகோவ்கள் நம்மைப் பாதிக்கிறார்கள். இதனால் புதிய விஷயங்களை உருவாக்கவும் ஏற்கவும் ஆராயவும் இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது. பெலிகோவ்கள் தனித்துவத்தின் முக்கியத்துவத்தை ஒரு போதும் அனுமதிப்பதில்லை.

இந்தக் கதையின் நினைவாகப் பெலிகோவிற்கு ரஷ்யாவில் சிலை வைத்திருக்கிறார்கள். சிலையாக அல்ல நேரடியாகவே தினமும் நாம் பல்வேறு பெலிகோவ்களைக் காணுகிறோம். கடந்து போகிறோம். இலக்கியம் தான் இவர்களை அடையாளப்படுத்துகிறது. புரிந்து கொள்ள வைக்கிறது. இதனால் தான் ஆன்டன் செகாவ் இன்றும் உலகின் சிறந்த சிறுகதையாசிரியராக் கொண்டாடப்படுகிறார்.
January 23, 2024
புயலின் கண்
The Eye of the Storm நோபல் பரிசு பெற்ற ஆஸ்திரேலிய எழுத்தாளர் பேட்ரிக் வொயிட் நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. 2011 வெளியான இப்படத்தை இயக்கியவர் ஃப்ரெட் ஸ்கெபிசி.
பறவைகள் சூழ கடற்கரையில் தனித்து நிற்கும் எலிசபெத்தின் நினைவுகளுடன் படம் அழகாகத் துவங்குகிறது. அந்தக் காட்சியில் கேமிரா அவளது மனநிலையைப் போலவே அமைதியாகச் சுழல்கிறது.

சிட்னியின் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் பணக்கார எலிசபெத் ஹண்டரின் இல்லம் தான் கதையின் களம். நோயுற்று நீண்டகாலமாகப் படுக்கையில் நாட்களைக் கழிக்கும் எலிசபெத் ஹண்டரைக் காண்பதற்காக அவளது மகனும் மகளும் வருகை தருகிறார்கள். அவர்களின் வருகைக்காகத் தன்னை அலங்கரித்துக் கொள்கிறாள் எலிசபெத். படுக்கையில் கிடந்த போதும் அவள் ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாகக் கழிக்க விரும்புகிறாள். அவளது வீட்டில் இரண்டு செவிலியர்கள், ஒரு பணிப்பெண் உடனிருக்கிறார்கள்.
எலிசபெத்தின் மகன் பேசில் ஒரு நாடக நடிகர். பிளேபாய், போகத்தில் திளைப்பவன். லண்டனில் வசிக்கிறான். மகள் டோரதி பிரான்ஸின் அரச குடும்பத்தில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டவள். திருமண உறவில் விரிசல் ஏற்பட்டுத் தனித்து வாழுகிறாள். மரணப்படுக்கையிலுள்ள தாயைக் காண விரும்பியதை விடவும் அவளது பெரும் செல்வங்களை அடைவதிலே அவர்கள் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். எலிசபெத்தின் குடும்ப வழக்கறிஞர் அர்னால்ட் அவள் மீது ரகசியக் காதல் கொண்டிருக்கிறார்.

எலிசபெத்தின் பணிப்பெண் லோட்டே அவளுக்காக தினமும் நடனமாடுகிறாள். விரும்பிய உணவுகளைச் சமைத்துத் தருகிறாள். அம்மா உடல்நலமற்றுப் படுக்கையில் இருப்பதால் வீட்டுப்பணிப்பெண் மற்றும் செவிலியர் பணத்தைக் கண்டபடி செலவு செய்கிறார்கள் என்று நினைக்கும் மகள் டோரதி இது குறித்து அம்மாவிடம் புகார் சொல்கிறாள். ஆனால் அதை எல்லாம் பற்றித் தனக்கு நன்றாகத் தெரியும் என்கிறாள் எலிசபெத். அம்மாவிற்கும் மகளுக்குமான விலகலும் வெறுப்பும் சில காட்சிகளில் அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது
தனது பணத்தைக் கொண்டு கடந்து போன நாட்களைத் திரும்ப வாங்க முடியாது என்பதை எலிசபெத் நன்றாக உணர்ந்திருக்கிறாள். மகனைப் போலவே அவளும் போகத்தில் திளைக்கும் வாழ்க்கையை அனுபவித்தவள். குறிப்பாக உடலுறவில் அதிக நாட்டம் கொண்டவள். அதை நிகரற்ற இன்பமாக நினைக்கிறாள். தாயும் மகளும் இதனைப் பற்றிப் பேசிக் கொள்ளும் காட்சியில் அவளது முகத்தில் வெளிப்படும் மகிழ்ச்சி அலாதியானது. கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையில் கதை தாவித்தாவிச் செல்கிறது

ஒரு முறை குயின்ஸ்லாந்து தீவில் ஏற்பட்ட புயலின் போது எலிசபெத் சிக்கிக் கொள்கிறாள். அன்று அனுபவித்த உணர்வுகள் அவள் மனதில் அழியாச் சுவடுகளாகப் பதிந்து போயிருக்கின்றன
சிட்னி நகரில் நடக்கும் உயர்குடி விருந்து நிகழ்வுகள். அங்கே டோரதி சந்திக்கும் மனிதர்கள். அவர்களின் போலியான பாவனைகள். பேசிலின் நாடக உலகம். அவரது ரகசிய ஆசைகள், தடுமாற்றங்கள் என உயர் தட்டு வாழ்வின் மினுமினுப்புகளுக்குள் மறைந்துள்ள ரகசியங்களை, அவஸ்தைகளை, பொய்யுரைகளை படம் அழகாக வெளிப்படுத்தியுள்ளது.
வர்ஜீனியா வூல்ஃப்பின் நாவலின் நாயகியைப் போலவே எலிசபெத் நடந்து கொள்கிறாள். நினைவும் நடப்பும் அவளுக்குள் மாறி மாறி விரிகின்றன. வீட்டின் படிக்கட்டில் அவளைத் தூக்கிச் செல்லும் காட்சியில் அவள் அடையும் வெட்கமும் மகிழ்ச்சியும் சிறப்பானது. படத்தின் ஒளிப்பதிவு மிகச்சிறப்பானது. குறிப்பாகக் கடற்கரைக்காட்சிகள்.
பேசில் வழக்கறிஞரை சந்தித்து உரையாடும் காட்சி முக்கியமானது. அதில் வழக்கறிஞர் பேசிலின் அம்மாவைப் பற்றி சொல்வது மிகச்சரியானது. அது போலவே பேசிலும் அவரது சகோதரியும் அம்மா கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு உரையாடும் காட்சியும் சிறப்பாக உள்ளது.

எலிசபெத்தை நினைவுகளே வழிநடத்துகின்றன. அவள் கடந்து போன இன்பங்களை நினைத்து ஏங்குகிறாள். குறிப்பாக உடலின்பங்கள் மீதான அவளது நாட்டம் குறையவேயில்லை. அவளது உடையும் அலங்காரமும் உணவும் அதை தெளிவாக உணர்த்துகின்றன. உடலின்பம் பற்றி மிக வெளிப்படையாக பேசுகிறாள். கேலி செய்கிறாள்.
டோரதி உடலின்பத்தை வெறுக்கிறாள். அவளுக்குத் தேவை பணம் மட்டுமே. அதுவும் உயர்குடி வாழ்க்கையை அனுபவிக்க நிறைய பணம் தேவைப்படுகிறது. அதற்காக மட்டுமே அவள் அம்மாவை நேசிக்கிறாள்.
எலிசபெத்தின் கணவர் பற்றி மறைமுகமாகப் படம் பேசுகிறது. குறிப்பாக நூலகத்தில் அவரது புத்தகங்களை ஆராயும் போது பேசிலும் அவரது சகோதரியும் இது பற்றிப் பேசிக் கொள்கிறார்கள்.
எலிசபெத் தனது வாழ்க்கையில் கருணையின் அர்த்தத்தைப் புயலின் வழியே புரிந்து கொள்கிறாள். அதை அவளது பிள்ளைகளும் முடிவில் உணருகிறார்கள்.
life is a tale Told by an idiot, full of sound and fury, Signifying nothing.என மெக்பெத்தில் ஷேக்ஸ்பியர் சொல்கிறார். இப்படத்தி புயலின் தாக்கம் எலிசபெத்தை வாழ்வின் உண்மைகளை உணர வைக்கிறது. கடைசிவரைஅவள் தனது அமைதியை நிதானத்தைக் கைவிடுவதில்லை.
ஆஸ்திரேலியாவை விட்டு அவளது பிள்ளைகள் வெளியேறிப் போக விரும்புகிறார்கள். அவளோ தனது நினைவுகளுக்குள் ஆழ்ந்து நிலத்தில் ஒரு தாவரமாக மாறிவிட விரும்புகிறாள். அவளது வாழ்வின் தவறுகளை பெருமழை அழித்துவிடுகிறது. புயலே அவளது மீட்சியின் அடையாளம்.
உறங்கும் நாய்கள்
புதிய குறுங்கதை

மூன்று நாய்கள் ஒன்று சேர்ந்து ஒரு வட்டத்தை உருவாக்கியிருப்பதைக் கண்டேன். எனது குடியிருப்பின் படிக்கட்டை ஒட்டிய இடம் சாம்பல் நிற நாயுடையது. இப்போது அந்த இடத்தில் மூன்று நாய்கள் வளையம் போல உறங்கிக் கொண்டிருந்தன. காலில் ஒன்றை மடக்கி இன்னொரு காலை பின்னங்கால் மீதிட்டு வாலைத் தளர்த்தி ஒடுங்கிய முகத்துடன் உறங்கும் மூன்று நாய்களுக்கு நடுவே நீல நிற கிழிந்த துணியொன்று கிடந்தது விநோதமாகத் தோன்றியது. என்ன ஆயிற்று இந்த மூன்று நாய்களுக்கும். யாராவது படியை நோக்கி வரும் போது கறுப்பு நாய் லேசாகத் தலையைத் தூக்கி பார்த்தது. அப்போதும் அதன் உடலில் அசைவில்லை. கடந்த சில நாட்களாகவே மூன்று நாய்களும் தீராத உறக்கத்தால் பீடிக்கப்பட்டவை போலப் பகலிலும் தளர்ந்து கிடந்தன. அதன் காதுகள் உதிர்ந்த இலை காற்றில் அசைவது போல லேசாக அசைவதைக் கண்டேன். நாயின் பாதித் திறந்த கண்களுக்குள் பசியும் நோயின் வேதனையும் வெளிப்பட்டன. சாம்பல் நிற நாய் முதுமையை அடைந்துவிட்டது. அந்த நாய் ஒரு நாள் வாந்தியெடுப்பதைப் பார்த்திருக்கிறேன். சில ஆண்டுகளாகவே எங்கள் வீதியில் மூன்று நாய்களும் தெருவில் ஒன்றாக அலைவதைப் பார்த்திருக்கிறேன்.. தெரு நாய்களுக்கு பெயர்கள் கிடையாது. நிறம் தான் அதன் அடையாளம். ஒட்டமும் நடையுமாக இருக்கும் இந்த நாய்களில் ஒன்று சப்தமாகக் குரைத்தபடி வாகனங்களைத் துரத்தி ஓடக்கூடியது. காரை துரத்தியோடுவதால் என்ன கிடைக்கிறது என்று புரியவில்லை. நாய்களின் விசித்திரமது. சாம்பல் நிற நாய் சிறுவர்களைப் பார்த்தால் மட்டுமே குரைக்கக் கூடியது. அதற்கு என்ன கோபமே தெரியவில்லை. கறுப்பு நிற நாய் தொட்டிச்செடிகளுக்கு அருகே போய்த் தான் படுத்துக் கொள்ளும். அந்த நாய் சில நேரம் உதிர்ந்து கிடக்கும் பூக்களை முகர்ந்து பார்ப்பதையும் கண்டிருக்கிறேன். இரண்டு மூன்று நாட்களாக அந்த நாய்கள் ஒரே இடத்தில் கொடியிலிருந்து விழுந்த துணிகள் கிடப்பது போலிருந்தன. அவற்றின் மௌனம் என் மனதை வேதனைப்படுத்தியது. சாவை நெருங்கும் நாயிற்கு மற்ற இருநாய்களும் துணையிருப்பதாகவே உணர்ந்தேன். முதுமையடைந்த நாயின் முகபாவம் மனதில் உள்ளதைக் கேட்கத் தெரியாத சிறுமியின் சாடையை ஒத்திருந்தது.
வெள்ளிக்கிழமை காலையில் மூப்படைந்த நாய் இறந்து போயிருந்தது. அதன் அருகில் இரண்டு நாய்களும் முன்பு போலவே படுத்திருந்தன. குடியிருப்பின் காவலாளி இறந்துகிடந்த நாயின் முகத்தில் மொய்க்கும் ஈக்களை விரட்டியபடியே நாயை எங்கே புதைப்பது என்பதைப் பற்றிக் குடியிருப்பு நிர்வாகியிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.
இறந்த நாயின் முகத்தில் வெயில் விழுந்து கொண்டிருந்தது. அசைவற்ற நாயின் வாலைக் காணுவது மிகுந்த வருத்தமளித்தது அதுவரை உறங்கிக் கொண்டிருந்த இரண்டு நாய்களும் மெல்ல எழுந்து கொண்டன. சோம்பலான நடையுடன் அவை வீதியில் மெதுவாகச் சென்றன. தெருவைக் கடந்து மேற்கே செல்லும் போது எதையோ பறி கொடுத்தது போலத் திரும்பிப் பார்த்துக் கொண்டன. பின்பு அவற்றை எனது வீதியில் பார்க்கவேயில்லை.
•••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers
 


