புயலின் கண்

The Eye of the Storm நோபல் பரிசு பெற்ற ஆஸ்திரேலிய எழுத்தாளர் பேட்ரிக் வொயிட் நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. 2011 வெளியான இப்படத்தை இயக்கியவர் ஃப்ரெட் ஸ்கெபிசி.

பறவைகள் சூழ கடற்கரையில் தனித்து நிற்கும் எலிசபெத்தின் நினைவுகளுடன் படம் அழகாகத் துவங்குகிறது. அந்தக் காட்சியில் கேமிரா அவளது மனநிலையைப் போலவே அமைதியாகச் சுழல்கிறது.

சிட்னியின் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் பணக்கார எலிசபெத் ஹண்டரின் இல்லம் தான் கதையின் களம். நோயுற்று நீண்டகாலமாகப் படுக்கையில் நாட்களைக் கழிக்கும் எலிசபெத் ஹண்டரைக் காண்பதற்காக அவளது மகனும் மகளும் வருகை தருகிறார்கள். அவர்களின் வருகைக்காகத் தன்னை அலங்கரித்துக் கொள்கிறாள் எலிசபெத். படுக்கையில் கிடந்த போதும் அவள் ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாகக் கழிக்க விரும்புகிறாள். அவளது வீட்டில் இரண்டு செவிலியர்கள், ஒரு பணிப்பெண் உடனிருக்கிறார்கள்.

எலிசபெத்தின் மகன் பேசில் ஒரு நாடக நடிகர். பிளேபாய், போகத்தில் திளைப்பவன். லண்டனில் வசிக்கிறான். மகள் டோரதி பிரான்ஸின் அரச குடும்பத்தில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டவள். திருமண உறவில் விரிசல் ஏற்பட்டுத் தனித்து வாழுகிறாள். மரணப்படுக்கையிலுள்ள தாயைக் காண விரும்பியதை விடவும் அவளது பெரும் செல்வங்களை அடைவதிலே அவர்கள் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். எலிசபெத்தின் குடும்ப வழக்கறிஞர் அர்னால்ட் அவள் மீது ரகசியக் காதல் கொண்டிருக்கிறார்.

எலிசபெத்தின் பணிப்பெண் லோட்டே அவளுக்காக தினமும் நடனமாடுகிறாள். விரும்பிய உணவுகளைச் சமைத்துத் தருகிறாள். அம்மா உடல்நலமற்றுப் படுக்கையில் இருப்பதால் வீட்டுப்பணிப்பெண் மற்றும் செவிலியர் பணத்தைக் கண்டபடி செலவு செய்கிறார்கள் என்று நினைக்கும் மகள் டோரதி இது குறித்து அம்மாவிடம் புகார் சொல்கிறாள். ஆனால் அதை எல்லாம் பற்றித் தனக்கு நன்றாகத் தெரியும் என்கிறாள் எலிசபெத். அம்மாவிற்கும் மகளுக்குமான விலகலும் வெறுப்பும் சில காட்சிகளில் அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது

தனது பணத்தைக் கொண்டு கடந்து போன நாட்களைத் திரும்ப வாங்க முடியாது என்பதை எலிசபெத் நன்றாக உணர்ந்திருக்கிறாள். மகனைப் போலவே அவளும் போகத்தில் திளைக்கும் வாழ்க்கையை அனுபவித்தவள். குறிப்பாக உடலுறவில் அதிக நாட்டம் கொண்டவள். அதை நிகரற்ற இன்பமாக நினைக்கிறாள். தாயும் மகளும் இதனைப் பற்றிப் பேசிக் கொள்ளும் காட்சியில் அவளது முகத்தில் வெளிப்படும் மகிழ்ச்சி அலாதியானது. கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையில் கதை தாவித்தாவிச் செல்கிறது

ஒரு முறை குயின்ஸ்லாந்து தீவில் ஏற்பட்ட புயலின் போது எலிசபெத் சிக்கிக் கொள்கிறாள். அன்று அனுபவித்த உணர்வுகள் அவள் மனதில் அழியாச் சுவடுகளாகப் பதிந்து போயிருக்கின்றன

சிட்னி நகரில் நடக்கும் உயர்குடி விருந்து நிகழ்வுகள். அங்கே டோரதி சந்திக்கும் மனிதர்கள். அவர்களின் போலியான பாவனைகள். பேசிலின் நாடக உலகம். அவரது ரகசிய ஆசைகள், தடுமாற்றங்கள் என உயர் தட்டு வாழ்வின் மினுமினுப்புகளுக்குள் மறைந்துள்ள ரகசியங்களை, அவஸ்தைகளை, பொய்யுரைகளை படம் அழகாக வெளிப்படுத்தியுள்ளது.

வர்ஜீனியா வூல்ஃப்பின் நாவலின் நாயகியைப் போலவே எலிசபெத் நடந்து கொள்கிறாள். நினைவும் நடப்பும் அவளுக்குள் மாறி மாறி விரிகின்றன. வீட்டின் படிக்கட்டில் அவளைத் தூக்கிச் செல்லும் காட்சியில் அவள் அடையும் வெட்கமும் மகிழ்ச்சியும் சிறப்பானது. படத்தின் ஒளிப்பதிவு மிகச்சிறப்பானது. குறிப்பாகக் கடற்கரைக்காட்சிகள்.

பேசில் வழக்கறிஞரை சந்தித்து உரையாடும் காட்சி முக்கியமானது. அதில் வழக்கறிஞர்  பேசிலின் அம்மாவைப் பற்றி சொல்வது மிகச்சரியானது. அது போலவே பேசிலும் அவரது சகோதரியும் அம்மா கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு உரையாடும் காட்சியும் சிறப்பாக உள்ளது.

எலிசபெத்தை நினைவுகளே வழிநடத்துகின்றன. அவள் கடந்து போன இன்பங்களை நினைத்து ஏங்குகிறாள். குறிப்பாக உடலின்பங்கள் மீதான அவளது நாட்டம் குறையவேயில்லை. அவளது உடையும் அலங்காரமும் உணவும் அதை தெளிவாக உணர்த்துகின்றன. உடலின்பம் பற்றி மிக வெளிப்படையாக பேசுகிறாள். கேலி செய்கிறாள்.

டோரதி உடலின்பத்தை வெறுக்கிறாள். அவளுக்குத் தேவை பணம் மட்டுமே. அதுவும் உயர்குடி வாழ்க்கையை அனுபவிக்க நிறைய பணம் தேவைப்படுகிறது. அதற்காக மட்டுமே அவள் அம்மாவை நேசிக்கிறாள்.

எலிசபெத்தின் கணவர் பற்றி மறைமுகமாகப் படம் பேசுகிறது. குறிப்பாக நூலகத்தில் அவரது புத்தகங்களை ஆராயும் போது பேசிலும் அவரது சகோதரியும் இது பற்றிப் பேசிக் கொள்கிறார்கள்.

எலிசபெத் தனது வாழ்க்கையில் கருணையின் அர்த்தத்தைப் புயலின் வழியே புரிந்து கொள்கிறாள். அதை அவளது பிள்ளைகளும் முடிவில் உணருகிறார்கள்.

life is a tale Told by an idiot, full of sound and fury, Signifying nothing.என மெக்பெத்தில் ஷேக்ஸ்பியர் சொல்கிறார். இப்படத்தி புயலின் தாக்கம் எலிசபெத்தை வாழ்வின் உண்மைகளை உணர வைக்கிறது. கடைசிவரைஅவள் தனது அமைதியை நிதானத்தைக் கைவிடுவதில்லை.

ஆஸ்திரேலியாவை விட்டு அவளது பிள்ளைகள் வெளியேறிப் போக விரும்புகிறார்கள். அவளோ தனது நினைவுகளுக்குள் ஆழ்ந்து நிலத்தில் ஒரு தாவரமாக மாறிவிட விரும்புகிறாள். அவளது வாழ்வின் தவறுகளை பெருமழை அழித்துவிடுகிறது. புயலே அவளது மீட்சியின் அடையாளம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 23, 2024 03:35
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.